Category Archives: Uncategorized

வணக்கம் நண்பர்களே!

நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்.

ஒரே சமயத்தில் சொந்தத் தொழில் கணக்கு வழக்குகள், குடும்பம், இலக்கியம், புதிதாக ஏற்பாடு செய்துள்ள இலக்கிய அமைப்பென கவனத்தை செலுத்த கடினமாகத்தான் உள்ளது. இவற்றோடு கூடுதலாகக் காய்ச்சலும், கணினிப் பிரச்சினைகளும் சேர்ந்துகொண்டன. ஸ்விஸ் அருகில் ஒரு பணிபுரியும் இளையமகள் ஒவ்வொருவாரமும் வீட்டிற்கு வந்து விடுவாள், இவ்வாரம் அவள் காருக்குப்பிரச்சினை. எனவே நாங்கள் அங்கு செல்லவேண்டியதாயிற்று. எங்கள் ஊரிலிருந்து 145கி.மீட்டரில் அவ்வூர்இருக்கிறது. மகளுடன் நேரத்தை செலவிட்டதால் எல்லாபெற்றோர்களையும் போலவே இரண்டு நாட்களும் மகிழ்வாக இருந்து பொங்கலை எளிமையாகக் கொண்டாடிவிட்டுத் திரும்பினோம்.
————————————————-

2011 நல்ல வருடமாக அமைந்தது, பாரீஸிலிருக்கும் மகன், அமெரிக்காவிலிருக்கும் மகளென இரு தரப்பிலும் பேரப்பிள்ளைகள்- இளைய மகளுக்கு படிப்பை முடித்திருந்த கையோடு ஒரு நல்ல நிறுவனத்தில் வேலை- மாத்தாஹரி நாவலுக்கு கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை பரிசு என மகிழ்ச்சிக்குக்குறைவில்லை. இதற்கிடையில் சிங்கப்பூர் தமிழ் புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் மாநாட்டில் தமிழவன் வாசித்திருந்த கட்டுரையில் தமிழின் முக்கிய புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் பட்டியலில் ஈழ நண்பர்களோடு இந்திய புலம்பெயர்ந்தவர்களையும் கணக்கிற்கொண்டு காஞ்சனா தாமோதரனையும், என்னையும் அப்பட்டியலில் இணைத்து எங்கள் நூல்களைப்பற்றி விரிவாக அல்சி பாராட்டியிருந்தார். கட்டுரை அனுப்பிய நண்பர்கள் ரெ.கார்த்திகேசும், கோ. ராஜாராமும் அக்கட்டுரையை சிங்கப்பூர் மாநாட்டு தொகுப்பு நூல் வரும்வரை பிரசுரிக்கக்கூடாதென அன்புக்கட்டளையிட்டதால், நண்பர்கள் சில காலம் பொறுத்திருக்க வேண்டும்.

—————————————————————–

எனது மூன்று நூல்கள்:

இவ்வருடம் எனது மூன்று மொழிபெயர்ப்புகள் வந்திருக்கின்றன. சந்தியா பதிப்பகத்திலிருந்து “உலகங்கள் விற்பனைக்கு”, காலச்சுவடு பதிப்பகத்திலிருந்து உயிர்க்கொல்லி என்கிற சிறுகதைத் தொகுப்புகளும், ‘மார்க்¢ஸின் கொடுங்கனவு’ என்லிற மார்க்ஸியத்தைப்பற்றிய விமர்சன நூலும் வந்துள்ளன. இவற்றைப் பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் எழுதுகிறேன்.
——————————————

மொழிவது சுகம் டிசம்பர் 15

காந்திஎன்றகுறியீடு

கடந்த மாதம்(அக்டோபர்2) நான் வசிக்கின்ற Strasbourg நகரில் காந்தி சிலையை முதன்முதலாகத் திறந்தார்கள். 11-11-2011 அன்று பாரீஸ் நகர புறநகரொன்றில் மற்றொன்றை திறந்தார்கள். வொரெயால்(Voreyal) தமிழ்ச்சங்க தலைவர் இலங்கைவேந்தன் எனக்கு அறிமுகமானவர். வருடந்தோறும் தமிழ் நிகழ்ச்சிகளை நடத்தி அப்பகுதிவாழ் தமிழ்மக்களை ஒருங்கிணைத்து வருகிறவர். இவ்வமைப்பு தமிழ்பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறது. ஆர்வமுள்ள சிறுவர் சிறுமியர் தமிழ் கற்று வருகின்றனர். வொரெயால் தமிழ் அமைப்பு நடத்தும் பொங்கல் நிகழ்ச்சியில் தமிழ் படிக்கும் சிறுவர் சிறுமியர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் தவறாமல் இடம்பெறும். வெளிநாடுகளில் வாழும் தமிழர்களை பொறுத்தவரை தமிழ் கற்கும் வாய்ப்புகள் மங்கிய சூழலில் இதுபோன்ற வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருபவர்களை வணங்க வேண்டியிருக்கிறது. நண்பர் இலங்கைவேந்தன்,  பாரீஸில் காந்திக்கு சிலைவைக்க முயற்சிகளெடுத்து அதில் இன்று வெற்றியும் பெற்றிருக்கிறார். இருமாதங்களுக்கு முன்பு சிலை திறக்க யாரை அழைக்கலாமென என்னிடம் யோசனைக் கேட்டார். எனக்கு இன்றைய தேதியில் முன்னாள் இந்திய அதிபர் அப்துல் கலாமைக் காட்டிலும் பொருத்தமான வேறு நபர்கள்  இல்லை என்பதை வற்புறுத்தினேன் .  தமிழ்நாட்டில் நேர்மையானவர்கள் என நம்பப்படுகிறவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டேன். இந்தியா சென்றதும் அவர்களைச் சந்தித்து பேசுவதாக என்னிடத்தில் கூறினார். அவ்வாறு அவர் செய்யவில்லை, இந்தியாவிலிருந்து திரும்பியபிறகு என்னைச் சமாதானபடுத்தும் வகையில் சில காரணங்களைக் கூறினார். அதை நான் வேறுவிதமாக ஊகித்தேன்: காந்தி சிலையை நிறுவ உழைப்பு பொருள் இரண்டும் தேவைபட்டன. உழைப்பை தர முன் வரலாம்,  ஆனால் பொருட்தேவையை ஓரளவுதான் சுமக்க முடியுமென்ற நிலை. இது எல்லோருக்கும் நேர்வதுதான். மீன் விற்றாலென்ன காசு நாறாதில்லையா?  சுமையை பகிர்ந்துகொள்ளும் செல்வந்தர்களும் அரசியல்வாதிகளும் தேவையாக இருந்தனர். எனவே அவர்களை அழைக்க வேண்டிய நிர்ப்பந்தம். எது எப்படியிருப்பினும் காந்தி முதன் முறையாக சிலை வடிவில் பாரீஸ் மண்ணில் கால் பதிக்க நண்பர் எடுத்த பெருமுயற்சி நனவாகியுள்ளது. வேறு இந்தியர்கள் சாதிக்காதது, பாராட்டுக்கள்.

இன்று காந்தி என்ற சொல் வணிகமொழியில் சொல்வதெனில் ஒரு விற்பனை குறியீடு. காங்கிரஸில் ஆரம்பித்து கசாப்புகடைவரை அவரவர் சரக்கினை விற்க முதலீடற்ற விளம்பரமாக காந்தி உதவுகிறார். இந்தியாவுக்கு மட்டுமல்ல இந்தியா துணைக்கண்டத்தைச்சேர்ந்த பலருக்கும் காந்தி உபயோகமாகிறார். இந்தியர்களோடு, பாகிஸ்தானியரும், வங்காள தேசத்தினரும், இலங்கையரும் மேற்கத்திய நாடுகளில் காந்தியின் பெயரால் நடத்தும் ரெஸ்டாரெண்ட்டுகளில்  பிரியாணியும், முர்க்மசாலாவும், நான் கீமாவும், சிவப்பு ஒயினும், விஸ்கியும், பீரும் விலைபோகிக்கொண்டிருக்கின்றன.  அக்டோபர் 2ல் காந்தியை ஞாபகம் வைத்து சிலைக்கும் காந்தி சமாதிக்கும் தலைவர்கள் அஞ்சலி செய்ய மறப்பதில்லை.

நாம் இப்படியிருக்க அமெரிக்காவின் மார்ட்டின் லூதர்கிங்கில் ஆரம்பித்து தென் ஆப்ரிக்காவின் நெல்சன் மாண்டெலா, பர்மாவின் அவுன் சன் ஸ¥ கீ (Aung San Suu Kyi) போன்ற உலகறிந்த பெருமக்கள்- காந்தியைபோலவே பிறருக்காக தங்களை வருத்திக்கொள்கிறவர்கள் – காந்தியின் சீடர்களென சொல்லிக்கொள்வதில் நிறைவு காண்கிறார்கள். அன்னா ஹசாரே தம்மை காந்தியுடன் ஒப்பிடவேண்டாமென்கிறார்.  காந்தி இந்தியாவின் தேசிய அடையாளம், பாரம்பரிய சின்னம். காந்தியம் குறித்த விவாதங்கள் தேவைதான், ஆனால் காந்தி என்ற மனிதரின்  அப்பழுக்கற்ற நெறியும் அறத்தின் மீதான அவரது பிடிமானமும் விவாதங்களுக்கு அப்பாற்பட்டது. எதையும் சந்தேகித்தே பழக்கப்பட்டவர்களிடம் நாம் விவாதிக்க ஒன்றுமில்லை. இன்றைய உலகிற்கு காந்தியின் தேவை தவிர்க்கமுடியாததது. அவரது சாத்வீகமான அரசியல் மட்டுமல்ல, அடிதட்டு மக்களின் வளர்ச்சியில் அக்கறைகொண்ட வாழ்வாதார பொருளியலும் முன்னெப்போதும் கண்டிராத அளவிற்கு தேவையாகிறது.

புனைவும்நிஜமும்.

டேனி போயலின் Slumdog Millionaire தி ரை ப்படத்தில்வரும் சம்பவம் உண்மையாகியிருக்கிறது. சில நேரங்களில் எது புனைவு எது உண்மையென்று பிரித்துணரமுடியாமல் குழம்பிப்போகிறோம். இச்சம்பவம் அதற்கு ஓர் நல்ல உதாரணம். உண்மைசம்பவங்களின் அடிப்படையில் நாவல்களும், திரைப்படங்களும் வருவதுண்டு. ஆனால் புனைவு உண்மையாகுமா? நடந்திருக்கிறது நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் என்ற நிகழ்ச்சில் பங்குகொண்டு ஜெயித்திருக்கும் 26 வயது இளைஞனரான சுசில்குமார் என்ற இளைஞர் பீகார் மாநிலத்தைச்சேர்ந்த மோத்திஹரி என்ற சிறிய நகரத்தைச் சேர்ந்தவர். அரசாங்கத்தில் எழுத்தராக பணிபுரிகிறாராம். ஒரு ஏழை விவசாயின் மகன் என்கிறார்கள். அவரது முன்னும்பின்னுமான வாழ்க்கையும் திரைப்படத்தை ஒத்திருந்ததா ஒத்திருக்குமா என்பது தெரியவில்லை.

காலபைரவன்

அந்நிய மொழிகளில்வரும் படைப்புகளை முடிந்தவரை உடனுக்குடன் வாசிக்கும் பழக்கமுண்டு. வாங்கிய வேகத்தில் பத்து பக்கங்களுக்கு மேல் தொடர்ந்து படிக்க முடியாமற்போன நூல்களையும் நிறைய வைத்திருக்கிறேன். பிரெஞ்சிலும் ஆங்கிலத்திலும் வாசிக்கிறபோதெல்லாம் தமிழில் இதைக்காட்டிலும் நல்லவாசிப்புகளை சந்தித்திருக்கிறேன் என்ற பெருமிதமும் இடைக்கிடை வருவதுண்டு. தமிழின் முன்னணி எழுத்தாளர்கள் பலரின் படைப்புகள் உலகறிந்த எழுத்தாளர்களின் எழுத்துக்களைக்காட்டிலும் மீசுரமானவை. அக்டோபர் மாத உயிரெழுத்தில் ‘விஷம் தோய்ந்த நெடுங்கனவின் நகம்’ என்ற சிறுகதையை படித்தேன். காலபைரவன் என்ற இளைஞர் எழுதியிருக்கிறார். சொல்ல வார்த்தைகளில்லை. தமிழில் அண்மைக்காலத்தில் வெளிவந்த சிறுகதைகளுள் முக்கியமானதொரு படைப்பு. இக்கதையை மீண்டும் நினைவுகூரும்வகையில் நவம்பர் மாதம் 14ந்தேதி பிரெஞ்சு தினசரியில் மர்செய் என்ற பிரதேசத்துக்கருகே நடந்ததாக ஒரு சம்பவம். இந்தியக்குடும்பத்தைசேர்ந்த நாற்பது வயது பெண்மணி புத்தி சுவாதீனமற்ற 6 வயது மகனை கழுத்தை இறுக்கி கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டாள் என்பது செய்தி. காரணமும் காரியமும் நெருக்கமானவைதான் அந்த நெருக்கம நூலிழையாகவும் இருக்கலாம், பாரிய இடைவெளியாகவும் இருக்கலாம். முடிவின்றி காரணகாரியத்தை அறிவுகொண்டு புறத்தில் தேடுவது வானத்தைக் கைகொண்டு தொடும் முயற்சி. காலபைரவன் காரணகாரியத்தை மனித மனங்களுக்குள் தேடுகிறார்.

ஓடப்பரும்உதையப்பரும்..

1961ம் ஆண்டு அக்டோபர் 17 பிரான்சுநாட்டின் காலனிய வரலாற்றில் ஒரு கறைபடிந்த தேதி. பாரீஸ் மாநகரில் அமைதியாக ஊர்வலம்சென்ற அல்ஜீரிய மக்களில் பலர் பிரெஞ்சு காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை நினைபடுத்தும் தேதி அது. கடந்தமாதம் அதனுடையைய ஐம்பதாவது ஆண்டு தினம். பொதுவாக காலனிய வரலாறென்பது ஆதிக்க சக்திகளின் அதிகார அடக்குமுறைகளாலும்  அடிமைபட்டநாடுகளின் அபயக்குரல்களைக்கொண்டும் எழுதப்பட்டது. எஜமானர்கள் எஜமானர்களாகவே இருக்கவேண்டுமா என்ன? அடிமைப்பட்டுக்கிடந்தவர்கள் தலைநிமிர நினைக்கிறார்கள். அந்நியர் ஆதிக்கத்திற்கு எதிராகக் குரல்கள் ஒலிக்கின்றன. காற்று திசைமாறுகிறது. ஓடப்பராயிருந்தவர்கள் உதையப்பர்களாக மாறுகிறார்கள், அதற்கான விலையையும் அவர்கள் செலுத்தவேண்டியிருந்தது. பிரான்சுநாட்டின் காலனிகளில் ஒன்றாக இருந்து விடுதலைபெற முயன்ற அல்ஜீரிய மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் ஏராளம். அதுபோன்ற அநீதிகளின் சாட்சியாகவிருந்த நாட்களில் ஒன்றுதான் 1961ம் ஆண்டு அக்டோபர்மாதம் 17ந்தேதி. தேதியின் அடிப்படையில் பார்க்கிறபோது சம்பவம் ஒரு நாள் அடையாளத்தை பெற்றதைப்போல தோற்றம் தரினும் பின்புலத்தில் பல மாதங்களின் – அதாவது உண்மையில் ஆகஸ்டுமாதத்தின்  இறுதியில் தொடங்கிய பிரச்சினை அக்டோபர் இறுதிவரை நீடித்தது.

ஆப்ரிக்கக் கண்டத்தில் இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையினராகக்கொண்ட அல்ஜீரியாநாடு பிரெஞ்சு காலனியாக இருந்துவந்தது. இரண்டாம் உலகப்போருக்குப்பின் காலனிநாடுகள் பலவும் விடுதலைபெறவிரும்பியதைபோலவே அல்ஜீரியமக்களும் விடுதலை பெற விரும்பினர். அவர்களை வழி நடத்த இரண்டு விடுதலை இயக்கங்கள் தோன்றின. ஒன்று தேசிய விடுதலை முன்னணி (Front de Libération Nationale), மற்றொன்று அல்ஜீரிய தேசிய இயக்கம். இவை இரண்டினுள் முதல் இயக்கம் வன்முறையில் நம்பிக்கை வைத்திருந்ததால் பிரெஞ்சு அரசாங்கத்தின் ஆதரவு இரண்டாவது இயக்கத்திற்கு. இவ்விரண்டு அமைப்புகளுக்கும் பிரான்சுநாட்டில் குடியேறியிருந்த அல்ஜீரிய மக்களிடை அனுதாபிகளிருந்தனர். தாய்நாட்டில் இவர்களுக்குள் ஏற்பட்ட சகோதர யுத்தத்தை புலம்பெயர்ந்த நாட்டிலும் தொடர்ந்தனர். இச் சகோதரயுத்தத்தில் ஏறக்குறைய 4000பேர் கொல்லப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

ராஜபக்ஷேபோலவே பிரெஞ்சு அரசாங்கமும் இந்த சகோதரயுத்தத்தை மறைமுகமாக கூர்தீட்டி விளைவை சந்தோஷத்தோடு ரசித்தது தேசிய விடுதலை முன்னணியின் ஆதரவுபெற்ற ஆல்ஜீரியாவின் தற்காலிக அரசாங்கத்திற்கு வேண்டிய நிதியை அவ்வியக்கத்தின் பிரான்சு நாட்டின் கிளையும்  பிரான்சு நாட்டில் வசித்துவந்த அதன் அல்ஜீரிய உறுப்பினர்களும் உதவப்போக இதை தடுத்து நிறுத்த நினைத்த பிரெஞ்சு அரசாங்கம் தனது ஆதரவுபெற்ற தேசிய இயக்கத்தைக்கொண்டு இவர்களை கண்காணிக்க ஆரம்பித்தது. அல்ஜீரிய தேசிய முன்னணிக்கு எதிராக ஒர் பிரத்தியேக காவற் படையை ஏற்படுத்தியது. தேசிய விடுதலை முன்னணியின் அனுதாபிகளான ஆண்களும் பெண்களும் அவ்வப்போது இழுத்துசெல்லப்பப்பட்டு துன்புறுத்தப்பட்டனர். பிரெஞ்சு அரசாங்கத்தின் பிரத்தியேக காவற்படையுடன் நேரடித் தாக்குதலில் தேசிய முன்னணி இறங்க இருதரப்பிலும் பல உயிரிழப்புகள். பிரத்தியேக காவற்படையின் ஒரு பிரிவினரும் பிரெஞ்சு இனவாதிகளும் ஒன்றுகூடி அல்ஜீரிய மக்களை தண்டித்தாக வேண்டும் என்கிறார்கள். மாவட்ட தலைமை நிர்வாகி இதை மறைமுகமாக ஆதரித்தாரென்ற குற்றசாட்டு. ஒரு பக்கம் பிரெஞ்சு அரசாங்கத்தின் மூர்க்கமான காவல் படை, எதிரணியில் பிரான்சில் வாழ்ந்துவந்த எழுத்தறிவற்ற அல்ஜீரிய மக்கள். ‘வன்முறைக்கெதிராக’ என்று தமது நடவடிக்கைகளுக்கு சமாதானம் சொன்ன பிரெஞ்சு அரசாங்கம் வன்முறையாளர்களைக் கொல்லவில்லை அப்பாவி அல்ஜீரியர்களைகொன்றது. விசாரணை என்ற பெயரிலே சித்திரவதை செய்தது. அடித்துக் கொன்றது. காரணமின்றி திடீர் திடீரென்று ஆண்களும் பெண்களும் கைது செய்யப்பட்டனர். பலரை பிரான்சிலிருந்து வெளியேற்றியது. இக்காலங்களில்  அப்படிக்கொல்லபட்டவர்களின் எண்ணிக்கை மாத்திரம் 307பேரென்று சொல்கிறார்கள். அக்டோபர் 17 1961 அன்று பிரெஞ்சு அரசாங்கத்தின் மேற்கண்ட நடவடிக்கைகளை எதிர்ப்பு தெரிவித்து அல்ஜீரிய மக்களில் சுமார் இருபதாயிரம் மக்கள் ஊர்வலம் போகின்றனர் அவர்களுக்கு எதிராக பத்தாயிரம் போலிஸார் தாக்குதலில் இறங்கினர் ஆண்கள் பெண்கள் சிறுவர் சிறுமியரென எவரையும் பொலீஸார் விட்டுவைக்கவில்லை. அடிபட்டு வீழ்ந்தவர்கள் பல மணிநேரம் வீதிகளிலேயே கிடந்ததாக சொல்கின்றனர். சேன் நதியில் குதித்து தப்பியோடமுயன்ற்வர்கள் பலர் நதியில் மூழ்லிப்போனதாகவும் பிரெஞ்சு அரசாங்கம் இத்தாக்குதலில் 30லிருந்து 50 பேர் இறந்ததாச் சொல்கிறது பத்திரிகையாளர்கள் குறைந்தது 200பேராவது இறந்திருக்கலாமென எழுதியுள்ளார்கள். அப்பாவிகளுக்கு நீதிகிடைத்ததாக வரலாறில்லை.

 புக்கர் பரிசு

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆங்கில படைப்பிலக்கிய உலகில் புக்கர் பரிசு (மேன் குழுமம் சுவீகரித்தபிறகு மேன் புக்கர் பரிசு) முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. அதை மறைமுகமாக விமர்சித்தவர்கள் பலரும் அதன் அங்கீகாரத்திற்கு ஏங்கினதென்னவோ உண்மை. ஆனாலின்று அப்புக்கர் பரிசுக்கு எதிராக வெளிப்படையாக விமர்சனம் வந்திருக்கிறது. புக்கர் பரிசு தேர்வு குழு ஒரு படைப்பின் வாசிப்புத் தன்மையை(readability) பார்க்கிறதேயன்றி படைப்புத் திறனை பார்ப்பதில்லை என்பது இவர்கள் சொல்லும் குற்றச்சாட்டு.   போட்டி புக்கர் பரிசு ஒன்றை அடுத்த ஆண்டிலிருந்து நடத்த திட்டமிட்டுள்ளதாக இவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். புக்கர் பரிசுபோல காமன்வெல்த் நாடுகளிலிருந்து வெளிவரும் ஆங்கில படைப்புகளை மட்டும் கருத்தில் கொள்ளாமல்,  உலக நாடுகளில் ஆங்கிலத்தில் எழுதப்படும் எல்லா படைப்புகளையும் தங்கள் தேர்வு குழு போட்டிக்கு அனுமதிக்கும் என்கிறார்கள் புக்கர் பரிசு தேர்வுக்குழுவில் இலக்கியதுறை சார்ந்தவர்களும் அத்துறை சாராதவர்களும் இடம்பெற்றிருக்கிறார்களாம், ஆனால் இவர்கள் அமைக்கவிருக்கும் தேர்வுக் குழுவில் தொழில் முறை விமர்சர்கர்கள், எழுத்தாளர்கள், மொழிஅறிஞர்கள் மற்றும் இலக்கியதுறைசார்ந்தவர்கள் பங்குபெறுவார்களென்றும் இவர்கள் அனைவருக்கும் ஒரே ஒரு நோக்கம்தான் இருக்க முடியும் அந்நோக்கம் ‘தெளிவுடனும் எவருடனும் சமரசம் செய்துகொள்ளாமலும், மிகச்சிறந்த படைப்புகளை தேர்வு செய்தல்’ என்று சத்தியம் செய்கிறார்கள். இவர்களுக்கு போட்டியாக இன்னொரு புக்கர் பரிசு பிறக்காமலிருந்தால் சரி.

நன்றி: அம்ருதா டிசம்பர் இதழ்

—————————–

பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்-13:

நவம்பர் டிசம்பர் இரண்டுமாதங்களும் பிற நாடுகளைப்போலவே பிரான்சு நாட்டில் கிருஸ்துமஸ் கொண்டாட்டம். நகரங்கள் கிராமங்களென்ற பாகுபாடின்றி எங்கு பார்த்தாலும் விழாக்கால கோலாகலங்களில் பிரான்சு திளைக்கும். அக்காலங்களில் நவம்பர் கடைசிவாரத்தில் ஆரம்பித்து டிசம்பர் முடிய நடைபெறுகிற  கிருஸ்துமஸ் கடைகளும் பிரசித்தம். இப்போதெல்லாம் உலகில் எல்லா நாடுகளிலும் கிருஸ்துமஸ் பண்டிகைக்கால கடைகளைப் பரவலாக பார்க்கின்ற சந்தர்ப்பம் வாய்த்தாலும் ஸ்ட்ராஸ்பூர் நகர் கடைகளைபோல எங்கும் பார்த்திருக்கமாட்டீர்களென உறுதியாகச்சொல்வேன். இந்நகரமிருக்கும் அல்சாஸ் பிரதேசம் பல ஆண்டுகள் ஜெர்மன் நாட்டின் வசமிருந்தது ஒரு காரணம்.

ஸ்ட்ராஸ்பூர் கிருஸ்துமஸ் கடைகளுக்கு 500 வயது. அதாவது முதன் முதலாக உலகில் கிருஸ்துமஸ் பண்டிகைக்கால கடைகளென்று திறக்கபட்டது இங்கேதான். கி.பி 1570லிருந்து வருடம் தோறும் கிருஸ்துமஸ் காலத்தில் இக்கடைகள் இயங்குகின்றன. பண்டிகைக்குத் தேவையான அலங்காரப் பொருட்கள், பிரார்த்தனை பொருட்கள், வாசனை திரவியங்கள், உள்ளூர் கலை பொருட்கள் விசேடமான பிஸ்கட்டுகள், சாக்லேட்டுகள் ஆகியவை இக்கடைகளில் கிடைக்கும். கடந்த இருபது ஆண்டுகளாக வருடம்தோறும் நானும் ஒரு கடையை இங்கே திறந்து நடத்திவருகிறேன்.

பிரான்சின் பிற மாநிலங்களிலிருந்தும் ஐரோப்பாவின் பிற நாடுகளிலிருந்தும்  சுற்றுலா பயணிகள் ஏராளமாக இக்காலங்களில் ஸ்ட்ராஸ்பூர் வருகின்றனர். ஒளிவெள்ளத்தில் மூழ்கிய வீதிகளில் கூட்டத்தில் புகுந்து வெளிவருவது ஒரு சுகமான அனுபவம், நடுக்கும் குளிருக்கு இருக்கவே இருக்கிறது ‘Vin Chaud’ ம்   jus d’orange chaudம் (சூடான ஒயினும், சூடான ஆரஞ்சுபானமும்.)

——————————-

கதையல்ல வரலாறு -2-3

நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்

பதவி இறக்கப்பட்ட முன்னாள் கவர்னர் கியோம் எபேர் தாய் நாடு திரும்புகிறார்.  போனவர் எத்தனை நாளைக்குதான் மதுபாட்டில்களை திறந்து வைத்துகொண்டு உட்கார்ந்திருப்பது, உணவுண்ண உட்கார்ந்தால் சமையல்காரன் ம்ஸியே முதலில் மதாமை கவனித்து விட்டு வருகிறேன் என்கிறான்; ஒப்பேராவுக்கு போகும் மதாம் எபேரா சாரட்டில் நாய்க்கும் தனக்கும் மட்டுமே இடமிருக்கிறது நீங்கள் இருந்து வீட்டைபார்த்துக்கொள்ளுங்கள் என்கிறாள்; மாளிகைப் பணிப்பெண்கள்கூட தொட்டு பேசாதே என்கிறார்கள். ஆக ஏதாவது செய்தாக வேண்டும்; கொடுக்க வேண்டியதை கொடுத்து பிடிக்கவேண்டியவர்களை பிடித்து திரும்பவும் புதுசேரிக்குப் கவர்னராய் பொறுபேற்பதென்று கங்கணம் கட்டிக்கொண்டார். அன்று முதல் தினந்தோறும் புதுச்சேரி திரும்புவதற்கான முயற்சிகளில் இறங்கினார். மன்னரின் அமைச்சர்களை சென்று சந்தித்தார். மன்னரின் மனைவி துணைவிக¨ளை போய் பார்த்தார், அவரின் மகளைப் பார்த்தார், மகனைபார்த்தார். மன்னரின் வளர்ப்பு பூனையையும் நாயையும் தவிர வாய் திறந்து இவருக்கு யார் யாரெல்லாம் சிபாரிசு செய்ய முடியுமோ அவர்களிடமெல்லாம் முறையிட்டார். தம்மை கவர்னர் பொறுப்பிலிருந்து நீக்கியதற்கு எந்த முகாந்திரமுமில்லை என்றார். தான் மாசற்றவரென்றும் தன் பேரில் கொண்டுவரப்பட குற்றசாட்டுகள் ஆதாரமற்றவையென்றும் ஓலமிட்டார்.

மன்னருக்கு எபேர் பிரச்சினை பெரும் பிரச்சினையாகிவிட்டது. எங்கே போனாலும் எதை தொட்டாலும் எபேர் பேசுவதுபோல இருக்கிறது. மனைவி கூட எபேர் பிரச்சினையை தீர்த்துவிட்டு என்னைத் தொடுங்கள் என்கிறாள் -மன்னர் மனைவி எபேருக்கு உறவு முறையாக வேண்டும். எபேருக்கு மக்கள் காவலர் என்ற புதுபட்டத்தைக்கொடுத்து புதுச்சேரிக்கு அனுப்பி வைத்த பிரெஞ்சு முடியாட்சி அவர் மகனையும் புதுச்சேரி காலனி அரசாங்கத்தின் மேல்ஆலோசனை கூட்டத்தின் அங்கத்தினராக நியமித்தது. செத்த பிணம் பிழைத்தெழுந்தால் காலை எட்டிவைத்து நடக்குமாம் அப்படித்தான் அமைந்தது தந்தைக்கும் மகனுக்கும் வந்த வாழ்வு.

தந்தையும் மகனும் புதுச்சேரிக்கு வந்து இரண்டொரு மாதங்கள் ஆகியிருந்தன. தந்தை எபேரைக் காட்டிலும் மகன் எபேருக்கு கூடுதலாகவே புதுச்சேரியின் நிலமை புரிந்தது. முத்தியப்ப முதலியார், தம்மைத் தரகர் பதவியிலிருந்து எபேர் துரத்தினார் என்பதைக்காட்டிலும் நைநியப்பிள்ளை தமது உத்தியோகத்தைப் பறித்துக்கொண்டு நன்கு சம்பாதிக்கிறார் என்பது உறுத்தலாக இருந்தது. பிரான்சிலிருந்து வந்திறங்கிய எபேர் மகனை முத்தியப்ப முதலியார் சதித்தித்தார்.

– துரை உங்கள் தந்தையார் முதலில் நைநியப்பிள்ளை நன்கு கொழுத்துவிட்டான். உங்கள் தயவால் முன்னுக்கு வந்தவன், கேட்பதை கேளுங்கள் அவன் கொடுத்தாக வேண்டும்- என்றார்.

இரவுமுழுக்க உறக்கமில்லாமல் தவித்த எபேர் மகன் மறுநாள் காலை நைநியப்பிள்ளையைக் கூப்பிட்டனுப்பினார். அவரும் வந்தார்.

– என்ன நைநியப்பிள்ளை சௌக்கியமா?

– ஏதோ எஜமான்கள் தயவுலே குடிகள் நாங்கள் பிழைக்கிறோம்.

– நான் கேள்விபட்டது அப்படி இல்லையே. உம்மைப் பற்றி நிறைய பிராது வந்திருக்கிறது. என் தகப்பனார் உமக்குக்கொடுத்த சகல சுதந்திரங்களையும் நீர் தவறாக பயன்படுத்தி சம்பாதித்ததாகப் புதுச்சேரி முழுக்க பேச்சாமே.

– துரையின் காதுக்கு யாரோ தவறான செய்தியைக் கூறியிருக்கிறார்கள்..

– நான் சொல்வதைக்கேளும். என் தகப்பனார் உமக்குக்கொடுத்த தரகு வேலையில் 40000 வராகன் சம்பாதித்திருக்கிறீர் என்று கேள்வி, அதில் 10000 வராகன்களை என் தகப்பனாருக்குக் கொடுக்கவேண்டும்

– 10000 வராகனுக்கு நான் எங்குபோவேன்.

– சரி 5000 மாவது கொடுங்கள்.

– துரை மன்னிக்கவேண்டும். நீங்கள் கேட்கும் தொகையை நான் கொடுக்க சம்மதித்தால் செய்த குற்றத்தை ஒப்புக்கொள்கிறேன் என்று பொருள். உங்கள் பணத்தில் நீங்கள் நினைப்பதுபோல இலாபமொன்றும் பார்க்கவில்லை என்பது தான் உண்மை.

– பரவாயில்லை 3000 மாவது கொடுங்கள், உங்களை மன்னிக்கிறேன்.

– ஏற்கனவே கூறிய பதில்தான். உங்கள் தகப்பனாரை நான் ஏமாற்றவில்லை. எனவே என்னால் எதுவும் கொடுப்பதற்கில்லை.

மகன் எபேர் ¨நியப்பிள்ளைக்கு எதிரிகள் இருக்கிறார்களா என்று தேடினார். நைநியப்பிள்ளைமேல் புகார்தர அவர்கள் வற்புறுத்தப்பட்டார்கள். அவர்களுடைய புகார்களின் அடிப்படையில் நைநியப்பிள்ளை கைது செய்யபட்டு சிறையிலடைக்கப்பட்டார். குற்றவாளி நைநியப்பிள்ள வழக்கு நடந்தது. அவர் குற்றங்களை முழுவதுமாக மறுத்தார்.

1715ம் ஆண்டு ஜூன் மாதம் ஐந்தாம் தேதி பிரெஞ்சு கூட்டுறவு சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளும், மேல் ஆலோசனை சபையினரும் கூடியிருந்தனர்: குற்றவாளியாக அவர்கள் முன்னால் நிறுத்தப்பட்டிருந்தவர் நைனியப்பிள்ளை. கண் துடைப்புபோல நடந்தேறிய ஆலோசனைக் குழுவினரின் விசாரணைக்குப் பிறகு ஏற்கனவே எழுதிவைத்திருந்த தீர்ப்பு வாசிக்கப்பட்டது.

“குற்றவாளியான நைநியப்பிள்ளை 50 சவுக்கடிகள் தோளில் பெறவேண்டுமென்றும், மூன்று வருஷம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டுமென்றும், 8888 வராகன்களைப் பிரெஞ்சு கூட்டுறவு சங்கத்திற்கு (அப்போதெல்லாம் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில்லை) மான நஷ்டமாகக் கொடுக்க வேண்டுமென்றும், 4000 வராகன் அபராதம் கட்டவேண்டுமென்றும், மூன்று வருடம் சிறைதண்டனையை அனுபவித்த பிறகு பிள்ளை பிராஞ்சு எல்லையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டுமென்றும், மேற்படி தொகைகளைச் செலுத்தத் தவறினால் மூன்று வருஷ சிறைவாசத்துக்குப்பிறகு, மோரீஸ் தீவுக்கு அடிமையாய் அனுப்பபடவேண்டுமென்பதும்” தீர்ப்பின் சுருக்கம்.

அது தவிர நைநியப்பிள்ளைக்குப் பதிலாக, தரகர் முத்தியப்ப முதலியார் மகன் கனகராயமுதலியார் தரகராய் நியமிக்கப்பட்டார்.

1717ம் ஆண்டு ஆகஸ்டுமாதம் நைநியப்பிள்ளை சிறையிலேயே இறந்தார். நைநியபிள்ளைக்கு மூன்று மகன்கள்குருவப்பா, முத்தப்பா, வேங்கடாசலம். இவர்களில் மூத்தவர் குருவப்பாபிள்ளை. தமது தந்தைக்கு இழைக்கபட்ட அநீதிக்கு அரசாங்கம் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறதென நினைத்தார்.

“தம் தகப்பனார் மாசற்றவரென்றும், அநியாயமாய் தண்டிக்கப்பட்டாரென்றும், அவருக்கு விரோதமாய் வாக்கு மூலம் கொடுத்த சாட்சிகாரர்களெல்லாம் பலவந்தத்தாலும், பயத்தினாலும் அப்படி செய்தார்களென்றும், ஆகையால் நைநியப்பிள்ளை வழக்கை மறு விசாரணை செய்ய வேண்டுமென்றும்” பிரான்சு மன்னருக்கு எழுதினார். எழுதியதோடு அல்லாமல் அரசர் ஆலோசனை சபையிடம் நேரில் சென்று முறையிடுவது, தமது வழக்கை எடுத்துக்கூற பிரான்சில் ஒரு பிரதிநிதியை ஏற்பாடு செய்வதென்று முடிவு செய்து அதன்படி பாரீஸ¤க்கு நேரில் செல்கிறார்.

(தொடரும்)

அண்மையில் வாசித்த பதிவுகள் Déc.6:

பேரிசையின் பின்னணி: சொல்வனம்

சொல்வனம் இணைய இதழில் பேரிசையின் பின்னணி-தவில் கண்ட மாற்ரங்கள் என்ற தலைப்பில் ப. கோலப்பன் என்பவர் எழுதியுள்ள கட்டுரை கவனத்தைப்பெற்றது. எழுத்தாளர் நாஞ்சில் நாடன் மகள் திருமணத்தில் கலந்துகொண்ட கட்டுரையாளர் லயசுத்தமான ஒரு தவில் புராணமே படித்திருக்கிறார். நவீன தவில் ஓசையில் ஏற்பட்ட மாறுதலுக்கு வேணுகோபாலென்ற கலைஞர் காரணமென்பது என்னைப்போன்றவர்களுக்குப் புதிய செய்தி. ‘தவிலுக்கு வார் பிடிப்பது’ குறித்த தகவலும் சுவாரஸ்யமனாது. கட்டுரையாளர் குறிப்பிடும் தில்லானா மோகனாம்பாள் வாத்ய கோஷ்டியும் அவர்கள் எதிரே வைத்தியும் கண்முன்னே நிற்கிறார்கள்.  காதலியை அல்லது மனைவியை ஆரத் தழுவுபவர்கள் தயவு செய்து கட்டுரையாளர் சிபாரிசு செய்திருக்கிறாரென தவிலை நினைத்துக்கொள்ள வேண்டாம். தவிலுக்கு நல்லதோ இல்லையோ சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு நல்லது.

கணையாழி -மீண்டும் பாரதி

கணையாழியில்  இந்திரா பார்த்தசாரதியின் ‘மீண்டும் பாரதி’ தொடரை வாசித்தேன். பாரதியின் கவிதையில் தங்களுக்குள்ள ஈடுபாட்டைப் பலரும் சொல்லக்கேட்டிருக்கிறோம். ஆனால் அதை இ.பா. சொல்கிறபோது கூடுதலாக காதுகொடுக்க நேரிடுகிறது. மொழிபெயர்ப்பு பற்றிய அவரது கருத்தை மனமார வழிமொழிகிறேன். ஆயிரம் சொல்லுங்கள் மூலமொழியில் ஒரு படைப்புக்குள்ள முழுபாய்ச்சலையும் அம்மூல மொழியைத் தாய்மொழியாகக்கொண்டவர்கள் வாசித்துப் பெறும் இன்பத்தையும் அதன் மொழிபெயர்ப்பு வாசகர்களால் ஒருபோதும் பெறமுடியாதென்பது சத்தியம் சத்தியம். தமக்கு தமிழால் அறியவந்த பாரதி, ஆங்கிலத்தால் அறியப்பட்ட தாகூரைக்காட்டிலும் மேலானவர் என்பதற்கு பாரதியாரைத் தாம் தாய்மொழியில் வாசிக்க நேர்ந்தது காரணமெனச் சொல்லும் இ.பா., பாரதியின் கவிதை ஆற்றலைக் கொண்டாடவும் தயங்கவில்லை. ‘புல்லை நகையுறுக்கி பூவை வியப்பாக்கி’ என்பதற்கு ஈடான வரிகளை கம்ப சித்திரத்தில் மட்டுமே காணமுடியும் என்கிறார்.  குயில் பாட்டைப்பற்றிய ஒரு விரிவான ரசனை நூல் எழுதத் திட்டமிட்டிருப்பதாக இ.பா தெரிவிக்கிறார். காத்திருக்கிறோம் ஐயா!.

இதம் தரும் வங்கக் கதைகள்:

வணக்கத்திற்குரிய வே. சபாநாயகம் தமது வலைப்பூவில் அம்ருதா பதிப்பகத்தின் அண்மைக்கால வங்கச் சிறுகதைகள் என்ற நூலுக்கு மதிப்புரை எழுதியுள்ளார். ஆரவாரமின்றி மென்மையாய் சிலுசிலுத்து ஓடும் சிற்றோடையின் நளினமும் அழகும் வங்கத்கதைகளில் பொதுத்தன்மை  என்கிறார் வே.சபாநாயகம். தொகுப்பிலுள்ள 15 சிறுகதைகளை அவருக்கே உரித்தான் மொழியில் கதைப்பொருளை பகிர்ந்துகொள்கிறார். அலுப்புத் தட்டாமல் வாசிக்கவும் ரசிக்கவும் முடிகிற கதைகளென்ற உத்தரவாதம் தரப்படுகிறது. மொழிபெயர்ப்பாளர் வங்காளம் தமிழ் இருமொழிகளிலும் தேர்ச்சிபெற்றவரென்பதால், வங்கமொழிக்கேற்ப தமிழ்படுத்தியிருக்கும் நேர்த்தி தடையற்ற வாசிப்புக்கு உதவுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

ஆர். அபிலாஷ்

நண்பரது வலைத்தலத்தில் வந்துள்ள தமிழ் இலக்கியம் ஏன் பன்னாட்டுத் தளத்தை அடையவில்லை? என்ற கட்டுரை பற்றியும் குறிப்பிடவேண்டும். பிறமொழி படைப்புகள் சிலவற்றை ஒப்பிட்டு தமிழ் ஏன் அந்நிலையை எட்டவில்லையென கட்டுரையாளர் ஆதங்கப்படுகிறார். தமிழ் இலக்கியவாதிகள் வெகு சனங்கள் எனப்படுகிற பெருவாரியான மக்களிடமிருந்து விலகி நிற்பதும், வெகு சனப்பிரச்சினைகளில் கவனங்கொள்ளாததும் அவர் சொல்லும் காரணங்கள். அதை மறுக்கமுடியாது. அதற்காக புலம்பெயர்ந்த இந்திய இலக்கியவாதிகள் -அபிலாஷைபொறுத்தவரையில் ஆங்கிலத்தில் எழுதுபவர்கள்- எடுத்துள்ள நிலைபாட்டை இந்தியாவில் மாநில மொழிகளில் எழுதுகிறவர்களும் எடுக்கவேண்டுமென்பது அபத்தம். புலம்பெயர்ந்தவர்கள் எந்த மொழியில் எழுதினாலும் அவர்கள் சூழலைவத்துத்தான் எழுதமுடியும். அபிலாஷே சொல்வதுபோல அது வேரறுந்தநிலையாகக்கூட இருக்கலாம். ஆனால் அவை ஆங்கிலத்தில் எழுதப்படுவதால்தான் பலரும் அறிய நேர்ந்ததே தவிர அபிலாஷ் சொல்கிற அவர்களுடைய பண்பாட்டைத் துண்டித்துக்கொண்டது காரணமல்ல. சொல்லபோனால் அவர்களுடைய நூலிலும் இந்தியாவில் இன்றளவுமுள்ள சில சூட்சமங்களை சொல்லியே விலைபோகவேண்டியிருக்கிறது. மேலை நாடுகளில் பிரபலமான இந்திய எழுத்தாளர்களைத் தவிர்த்து காமா சோமாவென்று ஆங்கிலத்தில் வரும் நாவல்கள் விற்பனையாவது உள்ளே இருக்கும் சரக்கும் தரமானது என்பதாலல்ல நாவலின் அட்டைகளில் இன்றளவும் ஒரு ரிக்ஷாவோ, பத்து தலை நாகமோ, கையில் இரத்தம் சொட்டும் தலையுடன்கூடிய காளியோ இடம்பெற்றிருப்பதால் இருக்கலாம். அபிலாஷ் சொல்லும் ஸ்பானிய, துருக்கி நாவல்களைப்படித்தால் அங்கேயும் எழுத்தாளனின் மண் சார்ந்த கலாச்சாரமும் பண்பாடும் இருக்கத்தான் செய்கின்றன. பிறமொழிகளுக்குக் கொண்டு செல்கிறபோது பண்பாட்டளவில் வேற்று மொழிகாரர்களுக்கு புரியவைப்பது கடினமே. The Name of the Rose நூலில் பக்கத்திற்கு பக்கம் கிரேக்க மொழியோ லத்தீன் மொழியோ ஏராளமாக இருக்கும், ஆங்கில நாவல்களில் பிரெஞ்சு வாசகங்களோ, பிரெஞ்சு நாவலில் ஹீப்ரு மொழியோ நாவல் தன்மைகருதி சேர்க்கத்தான் செய்கிறார்கள். மேற்கத்தியர்கள் பண்பாடில் – காலனி ஆதிக்கம் -கலாச்சார ஆதிக்கம்- உலகாலவிய மயக்கமிருப்பதால் இக்குறைகளை சகித்துக்கொள்கிறோம். நாவலின் ஓட்டத்தில் வாசகன் அக்குறைகளை பொருட்படுத்துவதில்லை. நமக்கு நல்ல மொழி பெயர்ப்பாளர்கள் அமைவதில்லை என்பது உண்மையில் ஒரு குறை. தமிழ் படைப்புகளை இந்தியாவில் அவர் ஆங்கில இலக்கியத்தில் கரைத்துக் குடித்தவராகக்கூட இருக்கட்டும் அவர் ஆங்கிலம் பண்டித ஆங்கிலமாக இருக்குமே ஒழிய ஒரு படைப்புக்குரிய ஆங்கிலமாக இருக்கமுடியாதென்பது உண்மை. இங்கிலாந்திலோ அமெரிக்காவிலோ இருக்கும் ஆங்கிலம் வேறு இந்திய ஆங்கிலம் வேறு. தமிழ் நாவலை தமிழறிந்த ஆங்கிலேயரோ அமெரிக்கரோ மொழிபெயர்த்தாலன்றி நமது படைப்புகளுக்கு விமோசனங்களில்லை. அப்படி அமைந்தால் பண்பாட்டளவில் மற்றவர்களுக்கு கடினமாக இருக்குமென்று நம்பக்கூடியவைகளைகூட கொண்டுபோகமுடியும். ஒரு நல்ல மொழிபெயர்ப்பாக இருந்தால் நாவலின் கடைசிபக்கங்களில் கள்ளருக்கும் பிள்ளைமாருக்கும் சில விளக்கங்கள் கிடைக்குமானால் கண்டிப்பாக வாசகர்கள் கிடைப்பார்கள்.
———————————-

பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்-11

Strasbourg

 

Strasbourg (ஸ்ட்ராஸ்பூர் என்று உச்சரிக்கவேண்டும்)நான் வசிக்கின்ற நகரம். அல்ஸாஸ் என்ற பிரதேசத்தின் முதலாவது முக்கிய நகரம் மட்டுமல்ல, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைநகரமுங்கூட. பிரான்சுநாட்டின் கிழக்குப்பகுதியிலுள்ள இந்நகரம் மக்கட்தொகையில் ஏழாவது மிகப்பெரிய நகரம். 1949லிருந்தே ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைமைகேந்திரமாக இருப்பதோடு 1992லிருந்து ஐரோப்பிய கூட்டமைப்பின் பாராளுமன்றப் பீடமாகவுமுள்ளது. அதுபோலவே ஐரோப்பிய மனித உரிமை ஆணையத்தின் தலமையகம் மற்றும் ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றம் ஆகியவைகளும் இங்கு அமைந்துள்ளன.

 

ஐரோப்பாவின் அல்லது ஐரோப்பியர்களின் தலைநகரம் என்றபெருமைக்கு நகரத்தின் பூகோள இருப்பு காரணம். அல்ஸாஸ் பிரதேசம் ஜெர்மன், ஸ்விஸ் நாடுகளை எல்லைகளாகக் கொண்டுள்ளது, குறிப்பாக வடகிழக்கிலும், கிழக்கிலும். ஸ்ட்ராஸ்பூர் நகரிலிருந்து ஜெர்மன் நாட்டின் கேல் (Khel)நகரை பிரிப்பது  ரைன்(Rhin) நதி. பாலத்தை நடந்தே கடந்துவிடலாம். பிரபஞ்சன், கி.அ. சச்சிதானந்தன், இந்திரன், காலச்சுவடு கண்ணனென தமிழ் படைப்புலகமறிந்த ஒரு சிலர் பாலத்தைக் கடந்திருக்கிறார்கள். சுவிஸ் நாட்டின் பாசல் (Basale) நகரமும் அல்ஸாஸ் பிரதேசத்தின் எல்லையில்தானுள்ளது. ஸ்ட்ராஸ்பூரிலிருந்து 120 கி.மீ அல்லது அதிகபட்சமாக ஒரு மணிநேர பயணத்தில் சுவிஸ் நாடு அதுபோலவே இரண்டரை மணி நேர பயணத்தில் பிராங்பர்ட் அல்லது லக்ஸம்பர்க், நான்கு மணி நேர பயனத்தில் பிரஸ்ஸல்ஸ்(பெல்ஜியம்) சென்னையிலிருந்து மதுரைக்குப் போகும் நேரத்தில் பாதியை ஒதுக்கினால் இத்தாலியிலோ? கூடுதலாக ஒருமணிநேரத்தை ஒதுக்கினால் லண்டனிலோ இருக்கலாம். அல்சாஸ் மக்கள் அல்சாசியர்கள் எனப்படுவர். பேசும் மொழி ஜெர்மன் வாடைகொண்டது, பெயர் அல்ஸாஸியன். பிரெஞ்சு மொழி ஆதிக்கத்தால் தனது செல்வாக்கை இழந்திருந்த அல்ஸாஸ் மொழியை உயிர்ப்பிக்க எல்லா முயற்சிகளும் நடைபெறுகின்றன. நாடகங்கள், சினிமாக்கள், இலக்கியங்களென அல்ஸாஸ் மொழியில்  எல்லாமுண்டு.. அல்ஸாஸ் மக்கள் தங்களுக்குள் அல்ஸாஸ் மொழியை மட்டுமே பேசுவார்கள்.  அல்ஸாஸ் மொழியை அறியாத பிரான்சு நாட்டின் பிறபகுதி மக்கள் அல்ஸாஸ் கிராமங்களில் மருத்துவர்களாகவோ, கிராம ஊழியர்களாவோ பணியாற்றுவது கடினம். ஆனால் நகரமக்களும் இன்றைய தலைமுறையினரும்  இரண்டு மொழியிலும் தேர்ச்சிபெற்றிருப்பார்கள்.

 

அல்ஸாஸ் புராணத்தைவிட்டுவிட்டு மீண்டும் Strasbourg நகரத்திற்குவருகிறேன். My name is Rose நாவலின் கதைசொல்லி உலகின் கம்பீரமான தேவாலயங்களென நான்கு தேவாலாயங்களின் பெயர்களை குறிப்பிடுவான். அவற்றுள் முதலாவது Strasbourg, மற்ற மூன்று உள்ள நகரங்கள் Chartres, Bamberg, Paris.

 

Cathளூdrale Notre-Dame de Strasbourg ஒரு கத்தோலிக்க தேவாலயம், கோத்திக் (gothique)வகை கட்டிடக்கலை சார்ந்தது. உலகில் இரண்டாவது மிக உயரமான (147 மீட்டர்கள்) தேவாலயம். பிரான்சு நாட்டின் நொர்மாண்டி பிரதேசத்தைச்சேர்ந்த ரூவன் (Rouen) நகர் தேவாலயம் (உயரம் 157 மீட்டர்) முதலாவது. ஸ்ட்ராஸ்பூர் தேவாலயம் 1647ல் ஆரம்பித்து 1874ல் கட்டி முடிக்கப்பட்டது. பிற ஐரோப்பிய நகரங்களைப்போலவே ஸ்ட்ராஸ்பூர் நகரமும் கிருஸ்துமஸ் காலங்களில் கோலாகலமாக இருக்குமென்றாலும் கிருஸ்துமஸை முன்னிட்டு பங்குபெறும் கடைகள் விசேடமானவை. பண்டிகை நாட்களில் நாங்களும் ஒரு விற்பனை பிரிவை அங்கே செயல்படுத்துவதுண்டு. கடந்த இருபது ஆண்டுகளாக ஒவ்வொடு வருடமும் எங்களுடைய விற்பனை அகத்தில் இந்தியக் கைவினைபொருட்கள், புதுச்சேரி ஆரோவில் பிரதேசத்திலிருந்து இறக்குமதிசெய்யப்படும் ஊதுபத்திகள் ஆகியவற்றை  விற்பனைசெய்கிறோம். எனவே நவம்பர் மாதமும் டிசம்பர் மாதமும் எனக்கு மிகவும் நெருக்கடியான மாதங்களென சொல்லவேண்டும். இரவு வீடுதிரும்ப பத்துமணி ஆகும். வருடத்தின் பிற நாட்களில் எனது மற்ற கடைக்கு  அதிக பட்சமாக நான்கு அல்லது மணிநேரத்தை மட்டுமே ஒதுக்குகிறேன். கடையின் அக்கவுண்ட், பொருட்களை வாங்குவது, விலையைத் தீர்மானிப்பது போன்ற நிர்வாகப்பணிகளை மட்டும் பார்த்துக்கொள்கிறேன். எனது மனைவி, மைத்துனர் இருவரும் பிறவற்றைப்பார்த்துக்கொள்கிறார்கள்.வாசிப்பதை நேரம் கிடக்கும்போதும், முன்னிரவுகளுக்கென்றும் ஒதுக்கிவிட்டு எழுதுவதை அதிகாலையில் வைத்திருக்கிறேன். இரவில் விழித்திருப்பது குறைவு. பத்துமணிக்கெல்லாம் உறங்கிவிடவேண்டும், அர்த்தராத்திரியில் மனைவிமீதான பிரேமை எழாமலிருக்கவேண்டும், வராமலிருந்தால் உறங்கப்பிரச்சினையில்லை.

 

 

———————————————–

பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்-11

Strasbourg (ஸ்ட்ராஸ்பூர் என்று உச்சரிக்கவேண்டும்)நான் வசிக்கின்ற நகரம். அல்ஸாஸ் என்ற பிரதேசத்தின் முதலாவது முக்கிய நகரம் மட்டுமல்ல, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைநகரமுங்கூட. பிரான்சுநாட்டின் கிழக்குப்பகுதியிலுள்ள இந்நகரம் மக்கட்தொகையில் ஏழாவது மிகப்பெரிய நகரம். 1949லிருந்தே ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைமைகேந்திரமாக இருப்பதோடு 1992லிருந்து ஐரோப்பிய கூட்டமைப்பின் பாராளுமன்றப் பீடமாகவுமுள்ளது. அதுபோலவே ஐரோப்பிய மனித உரிமை ஆணையத்தின் தலமையகம் மற்றும் ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றம் ஆகியவைகளும் இங்கு அமைந்துள்ளன.

ஐரோப்பாவின் அல்லது ஐரோப்பியர்களின் தலைநகரம் என்றபெருமைக்கு நகரத்தின் பூகோள இருப்பு காரணம். அல்ஸாஸ் பிரதேசம் ஜெர்மன், ஸ்விஸ் நாடுகளை எல்லைகளாகக் கொண்டுள்ளது, குறிப்பாக வடகிழக்கிலும், கிழக்கிலும். ஸ்ட்ராஸ்பூர் நகரிலிருந்து ஜெர்மன் நாட்டின் கேல் (Khel)நகரை பிரிப்பது  ரைன்(Rhin) நதி. பாலத்தை நடந்தே கடந்துவிடலாம். பிரபஞ்சன், கி.அ. சச்சிதானந்தன், இந்திரன், காலச்சுவடு கண்ணனென தமிழ் படைப்புலகமறிந்த ஒரு சிலர் பாலத்தைக் கடந்திருக்கிறார்கள். சுவிஸ் நாட்டின் பாசல் (Basale) நகரமும் அல்ஸாஸ் பிரதேசத்தின் எல்லையில்தானுள்ளது. ஸ்ட்ராஸ்பூரிலிருந்து 120 கி.மீ அல்லது அதிகபட்சமாக ஒரு மணிநேர பயணத்தில் சுவிஸ் நாடு அதுபோலவே இரண்டரை மணி நேர பயணத்தில் பிராங்பர்ட் அல்லது லக்ஸம்பர்க், நான்கு மணி நேர பயனத்தில் பிரஸ்ஸல்ஸ்(பெல்ஜியம்) சென்னையிலிருந்து மதுரைக்குப் போகும் நேரத்தில் பாதியை ஒதுக்கினால் இத்தாலியிலோ? கூடுதலாக ஒருமணிநேரத்தை ஒதுக்கினால் லண்டனிலோ இருக்கலாம். அல்சாஸ் மக்கள் அல்சாசியர்கள் எனப்படுவர். பேசும் மொழி ஜெர்மன் வாடைகொண்டது, பெயர் அல்ஸாஸியன். பிரெஞ்சு மொழி ஆதிக்கத்தால் தனது செல்வாக்கை இழந்திருந்த அல்ஸாஸ் மொழியை உயிர்ப்பிக்க எல்லா முயற்சிகளும் நடைபெறுகின்றன. நாடகங்கள், சினிமாக்கள், இலக்கியங்களென அல்ஸாஸ் மொழியில்  எல்லாமுண்டு.. அல்ஸாஸ் மக்கள் தங்களுக்குள் அல்ஸாஸ் மொழியை மட்டுமே பேசுவார்கள்.  அல்ஸாஸ் மொழியை அறியாத பிரான்சு நாட்டின் பிறபகுதி மக்கள் அல்ஸாஸ் கிராமங்களில் மருத்துவர்களாகவோ, கிராம ஊழியர்களாவோ பணியாற்றுவது கடினம். ஆனால் நகரமக்களும் இன்றைய தலைமுறையினரும்  இரண்டு மொழியிலும் தேர்ச்சிபெற்றிருப்பார்கள்.

அல்ஸாஸ் புராணத்தைவிட்டுவிட்டு மீண்டும் Strasbourg நகரத்திற்குவருகிறேன். My name is Rose நாவலின் கதைசொல்லி உலகின் கம்பீரமான தேவாலயங்களென நான்கு தேவாலாயங்களின் பெயர்களை குறிப்பிடுவான். அவற்றுள் முதலாவது Strasbourg, மற்ற மூன்று உள்ள நகரங்கள் Chartres, Bamberg, Paris.

Cathளூdrale Notre-Dame de Strasbourg ஒரு கத்தோலிக்க தேவாலயம், கோத்திக் (gothique)வகை கட்டிடக்கலை சார்ந்தது. உலகில் இரண்டாவது மிக உயரமான (147 மீட்டர்கள்) தேவாலயம். பிரான்சு நாட்டின் நொர்மாண்டி பிரதேசத்தைச்சேர்ந்த ரூவன் (Rouen) நகர் தேவாலயம் (உயரம் 157 மீட்டர்) முதலாவது. ஸ்ட்ராஸ்பூர் தேவாலயம் 1647ல் ஆரம்பித்து 1874ல் கட்டி முடிக்கப்பட்டது. பிற ஐரோப்பிய நகரங்களைப்போலவே ஸ்ட்ராஸ்பூர் நகரமும் கிருஸ்துமஸ் காலங்களில் கோலாகலமாக இருக்குமென்றாலும் கிருஸ்துமஸை முன்னிட்டு பங்குபெறும் கடைகள் விசேடமானவை. பண்டிகை நாட்களில் நாங்களும் ஒரு விற்பனை பிரிவை அங்கே செயல்படுத்துவதுண்டு. கடந்த இருபது ஆண்டுகளாக ஒவ்வொடு வருடமும் எங்களுடைய விற்பனை அகத்தில் இந்தியக் கைவினைபொருட்கள், புதுச்சேரி ஆரோவில் பிரதேசத்திலிருந்து இறக்குமதிசெய்யப்படும் ஊதுபத்திகள் ஆகியவற்றை  விற்பனைசெய்கிறோம். எனவே நவம்பர் மாதமும் டிசம்பர் மாதமும் எனக்கு மிகவும் நெருக்கடியான மாதங்களென சொல்லவேண்டும். இரவு வீடுதிரும்ப பத்துமணி ஆகும். வருடத்தின் பிற நாட்களில் எனது மற்ற கடைக்கு  அதிக பட்சமாக நான்கு அல்லது மணிநேரத்தை மட்டுமே ஒதுக்குகிறேன். கடையின் அக்கவுண்ட், பொருட்களை வாங்குவது, விலையைத் தீர்மானிப்பது போன்ற நிர்வாகப்பணிகளை மட்டும் பார்த்துக்கொள்கிறேன். எனது மனைவி, மைத்துனர் இருவரும் பிறவற்றைப்பார்த்துக்கொள்கிறார்கள்.வாசிப்பதை நேரம் கிடக்கும்போதும், முன்னிரவுகளுக்கென்றும் ஒதுக்கிவிட்டு எழுதுவதை அதிகாலையில் வைத்திருக்கிறேன். இரவில் விழித்திருப்பது குறைவு. பத்துமணிக்கெல்லாம் உறங்கிவிடவேண்டும், அர்த்தராத்திரியில் மனைவிமீதான பிரேமை எழாமலிருக்கவேண்டும், வராமலிருந்தால் உறங்கப்பிரச்சினையில்லை.
Strasbourg Christmas market:
http://www.google.fr/search?q=strasbourg+march%C3%A9+de+noel&hl=fr&client=firefox-a&hs=DUy&rls=org.mozilla:fr:official&channel=s&prmd=imvns&tbm=isch&tbo=u&source=univ&sa=X&ei=MFPTTqGyBYSUsgaN9vDJDA&ved=0CGAQsAQ&biw=1143&bih=676
———————————————–

 

 

 

மொழிவது சுகம் நவம்பர் 21:

எஸ் ராமகிருஷ்ணன்:

வழங்கும் இலக்கிய தொடர் பேருரைகள் நவம்பர் 21லிருந்து 27 தேதிவரை ஒரு வாரகாலம் தினமும் மாலை 6 மணிக்கு ஆழ்வார் பேட்டையிலுள்ள ரஷ்ய அறிவியல் மற்றிம் கலாச்சார மையத்தில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. திங்கள் தொடங்கி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைவரை நாளுக்கொன்றென ஏழு இலக்கிய சொற்பொழிவுகளை நிகழ்த்துகிறார். நண்பர் எஸ்.ரா. நிகழ்த்தும் இவ்வுரைகள் ஏற்பாட்டாளர்கள் சொல்வதுபோல இளம்வாசகர்கள், கல்விப்புலம் சார்ந்து இலக்கியம் பயில்வோரன்றி இலக்கியத்தில் ஈடுபாடுகொண்டோர் அனைவருக்கும் பயனளிக்கக்கூடியது. மேற்கத்திய நாடுகளில் இதுபோன்ற சொற்பொழிவுகளை அடிக்கடி நிகழ்த்துகின்றனர். தமிழ் இலக்கியத்தில் நவீன இலக்கியத்தினை முன் வைத்து தொடர் சொற்பொழிவுகள் இதற்கு முன்பு நடந்திருக்கிறதாவென்று தெரியாது. நண்பர் எஸ்.ரா.விற்கும் ஏற்பாட்டாளர்களுக்கும் தமிழ் படைப்புலகு கடமைப்பட்டிருக்கிறது.

நாஞ்சில் நாடன்

நாஞ்சில் நாடன் தளத்தில் அவரது மகளின் திருமண விழா படங்கள். காணக் கண்கொள்ளா காட்சி. பார்த்து மகிழ்ந்தேன். திருமணத்தில் கலந்துகொண்ட நண்பர் ஜெயமோகனின் வர்ணனையை வாசித்தால் திருமணத்தில் கலந்துகொண்ட அனுபவத்திற்கு உள்ளாவோம். அவருக்கே உரிய நடையில் மிக ழகாக நிகழ்ச்சியைச் சித்தரித்திருக்கிறார். புதுச்சேரியில் இருந்திருந்தால் நாஞ்சிலார் அழைக்காவிட்டாலும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருப்பேன். மணமக்களை வாழ்த்த அல்ல, வாழ்த்த அவருக்கு ஏராளமான உறவினர்களும் நண்பர்களும் அவர்களுக்குக்கிடைப்பார்கள். அவர் தயவில் நல்ல நாஞ்சில் நாட்டு சமையலை ஒரு பிடி பிடித்திருக்கலாம்.

வித்தியாசமான புத்தகவிழா

வருடம் தோறும் நவம்பர் மாதத்தில் 17-19 தேதிகளில் ஒரு வித்தியாசமான புத்தகவிழா ஒன்றை பிரான்சு நாட்டில் கொண்டாடுவார்கள். படைப்பிலக்கியத்தில் வாசகனை நகைப்பில் ஆழ்த்துகிற சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிற பகுதிகளை உரத்து வாசிப்பதென்பது நிகழ்ச்சியின் கருப்பொருள். இம்மையக்கருத்துக்கு உகந்தவை என்பது உடல்மொழியால் சொல்லகூடியவையாக இருத்தல்வேண்டும். படைப்பிலக்கிய பொது மரபிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டதாக இருக்கவேண்டும். தனது வாசகனை மகிழ்விக்கவும் வாய்விட்டு சிரிக்கவும் வைக்கும் வல்லமை அவ்வெழுத்துக்களுக்கு இருக்கவேண்டும். கடந்த வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும்  எனது சொந்தத் தொழில் சம்பந்தமாக பாரீஸ¤க்குச் சென்றவன் பாரீஸ் சொர்போன் பலகலைகழகத்தின் கலை பண்பாட்டுத்துறை சேவை ஏற்பாடு செய்திருந்த மூன்று நாள் நிகழ்ச்சியில், 19ந்தேதி நிகழ்ச்சியில் காணும் வாய்ப்பு கிடைத்தது. பியர் ழூர்து(Pierre Jourde) என்ற எழுத்தாளர் வாசிப்புக்குரிய நூல்களை தேர்வு செய்திருந்ததாகக் கூறினார்கள். நன்கு அறியப்பட்ட மற்றும் அறியப்படாத எழுத்தாளர்களென இரு தரப்பினரின் படைப்புகளும் இடம்பெற்றிருந்தன. வாசிக்கப்பட்டவைகளில் அல்போன்ஸ் அல்லேஸ், மிகெல் தெ செவாந்த், இடாலோ கல்வினோ, டனியல் பென்ஸெக் போன்ற எழுத்தாள்ர்களின் பெயர்கள் நினைவுக்கு வருகின்றன. வாசித்த இருவரும் ஏற்கனவே, குறுந்தகடுகளில் ஒலிவடிவம் பெற்ற படைப்புகளுக்குக் குரல் கொடுத்தவர்கள். முன் வரிசையில் னric Chevillard. எதையும் நையாண்டிசெய்தே பபழக்கப்பட்டவர் Anti -novelist வகையறா என்கிறார்கள் (எனக்கு Anti -novel, New Roman, Modern novel, Post modern novel -விவாதத்திகுரியவை அனைத்துமே பழைய மொந்தையல்ல என்கிறார்கள்) இது பற்றி ஒரு தொடரை எழுதவேண்டும்.

தற்போதைய தமிழ் படைப்புகளில் நகைச்சுவை தேடவேண்டியிருக்கிறது. நகைசுவையாக எழுதுவதற்கு தனி ஆற்றல் வேண்டும். கல்கி எழுத்துக்களை நான் விரும்பிவாசிக்க நேர்ந்தது நகைச்சுவக்காகவே. கலைமணியின் எழுத்துகளில் தில்லானா மோகனாம்பாள், ராவ் பகதூர் சிங்காரம் இன்றளவும் எனக்கு தமிழில் விரும்பி வாசித்தவை. கடுகு என்கிற அகஸ்தியன், தேவன், துமிலன் போன்றோர் என்னைக் கவர்ந்திருக்கிறார்கள். பாக்கியம் ராமசாமியைக்கூட கொண்டாடடலாம். அவரது அப்புசாமியும் சீதாபாட்டியும் சில கணங்கள் மகிச்சியாக வைத்திருக்க உதவுபவை. புதுமைபித்தன் சிறுகதைகளில் சமூகத்தையும் நடைமுறை வாழ்க்கையையும் போகிறபோக்கில் ஏளனம் செய்து நம்மைக் கடந்து செல்வார். நாம்தான் ஓடிச்சென்று அவரை பிடிக்கவேண்டும்.

Les neiges du Kilimanjaro (The snow of Kilimanjaro):

எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் இச்சிறுகதையை (http://xroads.virginia.edu/~drbr/heming.html)  நண்பர்கள் வாசித்திருக்கக்கூடும். ஆப்ரிக்காவுக்கு தமது மனைவியுடன் சபாரிக்கு வந்த இடத்தில் வலது காலில் முள்குத்தி புரையோடிப்போக படுக்கையில் கிடக்கும் எழுத்தாளன் தமது கடந்தகால நினைவுகளில் மூழ்கிறான். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமென்று நம்மவர்கள் சொல்வார்கள். அறுபது வயதுக்குமேல் அமர்நாத் பனிலிங்க தரிசினத்திற்குச்செல்கிறவர்கள் தங்கள் கடந்தகாலத்தை அசைபோட்டுபார்ப்பார்களாவென்று தெரியவில்லை. எழுத்தாளனுக்குள்ள சாபக்கேடு எல்லாவற்றையும் கேள்விக்குடுப்படுத்துவது? இங்கே கூடாரத்தில் கால் கட்டுடன் இருக்கும் எழுத்தாளன் முன்னே அவனுடைய பழைய உன்னதமான நினைவுகளைக் கிளறும் வகையில் பனிமூடிய கிளிமாஞ்சாரோ, நெருங்கும் அவனது மரணத்தை ஞாபகப்படுத்த வெளியே வட்டமிடும் கழுகுகள். தன்னைத்தானே சபித்துக்கொள்கிறான். கங்குல்போல அவனுள் உறையும் பழைய நினைவுகள், பின்னோக்கி அழைக்கின்றன.  எழுத்தில் கனியிருப்ப காயைமுன்னிருத்தியதற்காக வருந்துகிறான். ‘அரசியல், பெண்கள்,மது, பணம், கனவுகள்’ என்ற சுழலில் திக்கித் தவிக்கும் எழுத்தாளர்களின் ஒருவராக இக்கதையில் ஹெமிங்வே தம்மை அடையாளப்படுத்திக்கொள்வார். இச்சிறுகதை 1952ல் கிரிகிரிபெக்கும் ஏவா கார்டனரும் நடித்து திரைக்கு வந்திருக்கிறது. இப்போது இணைய தளங்களில் பார்க்ககிடைக்கிறது. கதையை சிதைக்காமல் படமாக்கிருக்கிறார்கள். கிரிகிரி பெக்கும் ஏவா கார்டனரும் நல்ல இளமைக் காலத்தில் இருந்தபோது எடுத்தபடம். இருவரும் பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். சிறுகதை தொடங்குவதுபோலவே திரைப்படமும் தொடங்குகிறது. பிற்காலத்தில் ஒரு பூர்ஷ்வாவாக மாறிபோன குற்றவுணர்வு ஹெமிங்வேக்கு இருந்திருக்கவேண்டும் இக்கதையில் அதற்கு கூடுதலாகவே வருந்துகிறார். இதேபெயரில் தற்பொழுது ஒரு பிரெஞ்சுப்படம் வந்துள்ளது. இப்படத்தில் கணவனும் மனைவியும் நாற்பது வயதைக் கடந்தவர்கள் தங்கள் வாழ்க்கையைக்குறித்து அலுத்துகொள்கிறார்கள். முதல் படத்திற்கும் இப்படத்திற்குமுள்ள பந்தம் அத்துடன் முடிந்தது. முதல் படத்தைபோன்றே கணவனும் மனைவியும் விஸ்கியை உறிஞ்சுகொண்டு தங்கள் நடந்துகொண்டது சரியா, தங்கள் வாழ்ந்தவிதம் சரியா என்று உரையாடுவதோடு சரி இவ்விரண்டு படங்களுக்கும் வேறு பந்தங்களில்லை. இங்கே கணவனும் மனைவியும் ஒரு கடற்கரை நகரில் படகு, கப்பல் கட்டுமான நிறுவனத்தில் தொழிலாளர்கள். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடியில் வேலை நீக்கம் செய்யப்படுகிறார்கள். தொழிற்சங்கத்தில்  கனவனும் மனைவியும் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்கள், தாங்கள் வேலை நீக்கம் செய்யப்பட்ட போதிலும் தங்கள் நண்பர்கள் உறவினர்களைக் காப்பாற்றி வேறு சிலரை வேலை நீக்கம் செய்ய காரணமாகிறார்கள். இவர்களுக்கு கிடைத்த பணத்தில் கிளிமாஞ்சாரோ செல்லலாமென்ற கனவு, இவர்கள் தந்திரத்தால் வேலை நீக்கம் செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களின் தாக்குதல்களால் முடிவுக்கு வருகிறது. இளைஞர்கள் இருவரையும் காவல்துறையிடம் காட்டிக்கொடுத்துவிட்டு பின்னர் தங்கள் செய்கைக்காக வருந்துகின்றனர். ஆனால் அவசியம் பார்க்க வேண்டியது The snow of Kilimanjaro (1952) திரைப்படம்.

—————————————

கதையல்ல வரலாறு 1-5

ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -? (தொடர்ச்சி)

மறுநாள் ஒரு திங்கட்கிழமை, ஜெர்மன் அரசாங்கத்தின் வானொலிச் செய்தியைத் தவறாமல் கேட்கின்றவர்களுகென்றே ஓர் அறிவிப்பு, அரசாங்கத்தின் ஊர்ஜிதப்படுத்தப்பட்ட தகவலாக வாசிக்கப்பட்டது. ஜெர்மனியரை திகைப்பில் ஆழ்த்திய அறிக்கையின் சாரம் இதுதான்:

“தேசிய சோஷலிஸ்டு கட்சி அதிகாரபூர்வமாக வெளியிடும் செய்தி: தோழர் ருடோல்ப் ஹெஸ் கடந்த சிலவருடங்களாகவே இனம் காணவியலாத நோயொன்றினால் பாதிக்கப்பட்டிருந்தார், எனவே அவர் வானில் பறப்பது முறைப்படி தடை செய்யப்பட்டிருந்தது, இத்தடையை மீறிய வகையில் ஒரு யுத்த விமானத்தை கையகப்படுத்தியுள்ளதாக அறிகிறோம்.”

“ருடோல்ப் ஹெஸ், ஆக்ஸ்பூர்க் யுத்த விமான தளத்திலிருந்து மே மாதம் பத்தாம் தேதி சனிக்கிழமையன்று புறப்பட்டுப் போனவர் திரும்பவில்லை.”

“போனவர் ஒரு கடிதத்தை விட்டுச் சென்றிருக்கிறார், அக்கடிதத்திலிருந்து அவர் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறாரென்பது உறுதிபடுகின்றது, பிரமை பீடித்திருப்பதாக அஞ்சுகிறோம். ”

“·ப்யூரெர் இப்பிரச்சினையில் தனிக்கவனம் செலுத்தியதன் விளைவாக தோழர் ‘ஹெஸ்’ ஸின் பாதுகாவலர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தோழர் ஹெஸ்ஸின் விமான பயணம் பற்றிய முழுத் தகவல்களை தெரிந்திருந்த அவர்கள்  ·ப்யூரெர் ஆணைப்படி அதனை தடுத்து நிறுத்தியிருக்கவேண்டும், அல்லது உரிய நேரத்தில் அரசுக்கு சம்பவம் நடப்பதற்கு முன்பாக தெரிவித்திருக்கவேண்டும், இரண்டும் இல்லையென்றானதால் சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது”

தமது நெருங்கிய நண்பர் ஹெஸ்ஸின் திடீர் பயணத்தை உலகுக்கு இட்லர் எவ்வாறு அறிவித்திருந்தார் என்பதைத்தான் நீங்கள் மேலே வாசித்தீர்கள்.

ஒரு குற்றத்தில், குற்றவாளியை உடனடியாக கைது செய்யமுடியாத நிலையில் யாரை அரசாங்கம் சந்தேகிக்கவேண்டுமோ அவர்கள் எவரையும் குற்ற வளையத்துக்குள் இட்லர் அரசு கொண்டுவரவில்லை.’ஹௌஸ் ஷோபெரையோ, யுத்த விமான தயாரிப்பாளரும், அவரது நெருங்கிய மற்றொரு சகாவான மெஸ்ஸெர்ஷ்மிட்டையோ, ஹெஸ்ஸின் மனைவியையோ.. மூவரில் ஒருவரைக்கூட அரசு தொடவில்லை. ஹௌஸ் ஷோபெருடைய மகனை, விசாரணை என்ற பேரில் மூன்று மாதம் சிறை வைத்தார்கள். மூன்றாவது மாதம் விடுதலைசெய்யப்பட்டு வெளியில் வந்தவர் வழக்கம்போல தமது பணியினைத் தொடர அனுமதிக்கபட்டார். அடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர், ஹெஸ்ஸின் பாதுகாவலர் ‘பின்ஷ்’. இவர் மூன்றாண்டுகள் சிறையிலிருந்தார். விடுதலைக்குப்பிறகு 1944ம் ஆண்டு கிழக்கு ஐரோப்பிய போர்முனைக்கு அனுப்பப்பட்டார். அங்கே அவர் ரஷ்யர்களிடம் சிக்கவே மீண்டும் சிறைவாசம்.

ஹெஸ்ஸின் பாதுகாவலர் ‘பின்ஷ்’ ஐ சிறைபிடித்த ரஷ்யர்கள், அவரது எஜமானருடைய பிரிட்டிஷ் பயணத்தின் உண்மையை அறிய பலவகைகளிலும் வதைசெய்தார்கள்: விரல்கள் உடைக்கப்பட்டன, உணவு மறுக்கப்பட்டது; உறங்க விடவில்லை. எவ்வளவு வதை செய்துமென்ன? அவருக்கு என்ன தெரியுமோ அதைத்தானே சொல்லமுடியும். அவர்களிடத்திலும் அதைத்தான் கூறினார். பதினோறு ஆண்டுகள் அவர் ரஷ்ய சிறையிலிருந்த பின்னர் விடுதலைப்பெற்று 1955ம் ஆண்டு ஜெர்மன் திரும்பினார்.

இனியும் ஹெஸ்ஸின் பயணத்தையும் அவருடைய திட்டத்தையும் மர்மப் பயணம் என்றோ, ரகசியப் பயணமென்றோ சொல்லிக்கொண்டிருக்க இயலாது. வெளியுலகம் அறிந்த ரகசியமாயிற்று. 1941ம் ஆண்டு மே 17ந்தேதி பிரிட்டிஷ் பிரதமர் வின்சன் சர்ச்சில் அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட்டிற்கு விளக்கமாக மே 11, 12, 14, 15 தேதிகளில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் வெளிவிவகாரத்துறை அமைச்சகத்தின் பிரதிநிதி நடத்திய உரையாடலின் முழுவிபரத்தையும் ஓர் அவசரசெய்தியாக பாவித்து தகவல் அனுப்பியிருந்தார். இதற்கு முந்தைய தொடரில் நீங்கள் வாசித்தவைதான் அத்தகவல்கள் என்றபோதிலும் மீண்டும் ஒருமுறை உங்களுக்குச் சுருக்கமாக நினைவுபடுத்துவது நல்லது..

மே 11 மற்றும் 12 தேதிகளில் இரவில் நடந்த உரையாடலில் ஹெஸ் குறிப்புகளை வைத்துக்கொண்டு வளவளவென்று நிறைய பேசினாரென்றும். அன்றையப் பேச்சில் மூன்று விடயங்கள் அவரிடம் பிரதானமாக இருந்தனவென்றும் சொல்லப்பட்டிருந்தது. முதலாவது இங்கிலாந்து ஜெர்மன் நாடுகளிடையேயான கடந்த 30 ஆண்டுகால உறவுபற்றியப் பேச்சு. அதன் நோக்கம் ஜெர்மன் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதும், பிரிட்டன் செயல்பாடுகளில் குற்றம் கண்டுபிடிப்பதும்.  இரண்டாவது எப்படியும் இட்லர் ஜெர்மன் மக்களின் முழு ஆதரவுடன்,  விமானப்படை மற்றும் அதி நவீன நீர்மூழ்கிக் கப்பல்களின் துணைகொண்டு கூட்டுபடைகளை வெல்லப்போகிறாரென்ற ஹெஸ்ஸின் கர்வப் பேச்சு. இங்கிலாந்துடன் சமாதானமாக போகவேண்டுமென்பதைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்த ஹெஸ்ஸின் பேச்சு பற்றியது, மூன்றாவது. ·ப்யூரெருக்கு பிரிட்டனைப் பற்றி வெகுகாலந்தொட்டு உயரிய கருத்துக்கள் இருப்பதாகவும், அவை இனியும் தொடருமென்றும், அந்நம்பிக்கைக்கு இடையூறின்றி பிரிட்டன் ஜெர்மனுக்குச் சொந்தமான காலனிநாடுகளை திருப்பி அளித்து, ஐரோப்பிய விவகாரத்தில் ஜெர்மனியின் நடவடிக்கைகளில் பிரிட்டன் குறுக்கிடக்கூடாதென்று ஹெஸ் கூறியதும் முதல் நாள் ஹெஸ்ஸின் பேச்சில் குறிப்பிடத்தக்க விஷயம். ‘இங்கிலாந்துடன் சமாதானமாகப்போவதற்கு இப்போதுள்ள தலமைக்குப் பதிலாக வேறொரு அரசாங்கம் பொறுப்பேற்கவேண்டும்’ என்று ஹெஸ் தெரிவித்த இட்லர் விருப்பத்தையும் சர்ச்சில் மறக்காமல் தந்தியில் குறிப்பிட்டிருந்தார்.

மே 14ம் நாள் ‘ஹெஸ்” ஸ¤டன் நடந்த உரையாடலென்று:

1. சமாதான ஒப்பந்தத்தின் ஷரத்துகள் எதுவாயினும் ஜெர்மன் ஈராக்கின் ரஷீத் அலி குழுவினரை ஆதரிக்கும், அடுத்து ஈராக்கிலிருந்து பிரிட்டன் வெளியேறியே ஆகவேண்டும்.

2. நீர்மூழ்கி கப்பல்களின் துணையுடன் இங்கிலாந்தின் உணவுப்பொருட்களின் வரத்தை தடைசெய்யும் வகையில் முற்றுகையை நீட்டித்து கடைசி இங்கிலீஷ்காரன் பசியால் துடிப்பதை ஜெர்மன் காணவேண்டும். என தந்தி தெரிவித்தது.

மே15ம்நாள் ஹெஸ்ஸ¤டனான பேட்டி என்ற வகையில் தந்தியில் அமெரிக்கா நட்புக்குகந்த நாடல்ல என்பதாகவும்; அமெரிக்காவின் ஆயுதங்கள், யுத்த விமானங்கள் ஆகியவைக்குறித்து ‘ஹெஸ்’ ஸ¤க்கு பெரிய அபிப்ராங்கள் ஏதும் இல்லை என்று கூறப்பட்டிருந்தது.

‘ஹெஸ்’ஸ¤டன் நடந்த உரையாடலென்று மேற்கண்ட தகவல்களைத் தெரிவித்திருந்த சர்ச்சில் ‘ஹெஸ்’ஸின் ஆரோக்கியம் பற்றி குறிப்பிட்டிருந்த தகவலும் வரலாற்றில் முக்கியத்துவம் பெறுகின்றது. இப்பிரச்சினை பின்னர் தெரியவந்தற்கு இங்கிலாந்து அரசாங்கமும் ஜெர்மன் அரசாங்கமும் ஹெஸ் உடல்நிலைகுறித்த அறிக்கையில் முரண்பட்டிருந்தைக் காரணமாகச் சொல்லலாம். ஹெஸ் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்ததாகவும், மன நிலை பாதித்ததன் அறிகுறி அவரிடம் சுத்தமாக இல்லையென்றும் சர்ச்சில் தந்தி தெரிவிக்கிறது. அதுவன்றி ஹெஸ்ஸின் முயற்சிகள் பற்றி இட்லர் அறிந்திருக்கமாட்டாரென தாம் நம்புவதாகவும், இங்கிலாந்தில் சண்டையின்றி சமாதானமாக போகவேண்டுமென்ற எண்ணத்துடன் ஒரு குழுவினர் இருப்பதாகவும், அவர்கள் இப்போதுள்ள பிரிட்டிஷ் அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து விரட்டிவிடுவார்களென்று அந்த’ ஆள் (ஹெஸ்) கூறுவதை நம்பாமல் இருக்கமுடியவில்லை என்கிறார் சர்ச்சில்.

வணக்கத்திற்குரிய அதிபருக்கு, மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் உங்கள் கவனத்திற்கு மட்டும் உரியது. எங்கள் தரப்பில் நாங்கள் விரும்புவதெல்லாம், இதுகுறித்த எத் தகவலையும் பத்திரிகையாளர்களுக்கு மூச்சு விடகூடாது. அதன் மூலம் ஜெர்மன் தலைவர்கள் குழப்பத்தில் நிறுத்தவேண்டும். நம்மிடம் கைதிகளாகவுள்ள எதிரிகளின் ராணுவ அதிகாரிகளுக்கும் அதுதான் நிலமை. நிச்சயமாக இப்பிரச்சினை ஜெர்மன் ராணுவத்தில் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்தியிருக்குமென நம்புகிறேன், என எழுதி சர்ச்சில் முடித்திருந்தார்.

இதற்கிடையில் ‘ஹெஸ்’-ஐ ·பார்ன் பரோவுக்கருகிலிருந்த மாளிகைக்குக் கொண்டு சென்று சிறை வைத்தார்கள். ஹெஸ் தொடர்ந்து சர்ச்சில் அரசாங்கத்தில் ஓர் அமைச்சரையேனும் தாம் சந்திக்க ஏற்பாடு செய்யவேண்டுமென்று நிப்பந்தம் கொடுத்தார். கிர்க் பட்ரிக், பிரிட்டிஷ் பிரதமரிடம் இதுபற்றி எடுத்துரைத்து  கைதுசெய்யப்படுள்ள ஹெஸ்ஸ¤க்கு உதவ முன்வந்தார். சர்ச்சிலுக்கு உடன்பாடில்லை. தாம் இணங்கினால் சர்ச்சில் ஜெர்மனுடன் சமாதானம் பேச குறுக்குவழியில் இறங்கினாரென அரசியல் விமர்சர்கள் எழுதுவார்களென்று தவிர்த்தார். ஆனாலும் கிர்க் பட்ரிக் சளைக்கவில்லை. அதன் மூலம் ஹெஸ்சிடமிருந்து வேறு உண்மைகளை பெறமுடியுமென்பதுபோல பேசினார். இறுதியில் சர்ச்சில் அவர் யோசனைக்கு சம்மதிக்க சர் ஜான் சைமன் என்ற வெளிவிவகாரத்துறை முதன்மைச் செயலரை அனுப்பினார்கள். இப்படியொரு சந்திப்பு நிகழ்ந்ததாகவே காட்டிக்கொள்ளகூடாது என்று பிரதமர் அலுவலகம் தீர்மானித்தது. இச்சந்திப்பு பற்றிய முழு விபரமும் பின்னர் நூரம்பெர்க் விசாரனையின்போது வெளிவந்தது. இம்முறை உரையாடல் மூன்றுமணி நேரம் நீடித்தது. ஹெஸ், சர் ஜான் சைமனிடம் பிரான்சு நாட்டிலிருந்து 1940ம் ஆண்டு இங்கிலாந்துக்கு வரவேண்டுமென்று தமக்கு திட்டம் இருந்ததென்பதை உறுதி செய்தார். தொடர்ந்து

– எப்படியும் இன்றில்லாவிட்டாலும் ஒரு நாள் போரில் நாம்தான் ஜெயிக்கபோகிறோம், அப்படி இருக்கையில் சமாதான ஒப்பத்தத்திற்கு முன்பாக வெர்சாய் ஒப்பந்தத்தின்படி நம்மிடம் கைப்பற்றியவற்றை திரும்பவும் ஒப்படைக்கவேண்டுமென்று உங்களை ஏன் வற்புறுத்தக்கூடாதெனக் கேட்டதற்கு ·ப்யூரெரிடமிருந்து வந்த பதிலென்ன தெரியுமா, ‘அப்படியே போரில் நாம் ஜெயித்தாலும், நல்லுறவை பேணவேண்டும் என நினைக்கிறபோது இதுபோன்ற நிர்பந்தங்களை விதிக்கக்கூடாது’, என்றார். எங்கள் தலைவரின் நல்லெண்ணம் மட்டும் உங்களுக்குத் தெரியவருமெனில், சமாதானத்திற்கு நீங்கள் உடன்படுவீர்கள் என்று நினைத்தேன். தவிர மிக மோசமான உங்கள் நிலமையும் இப்படியொரு பயணத்தை மேற்கொள்ள எனக்குக் காரணமாயிற்று, -என்றார் ஹெஸ்.

– எங்கள் மீது நீங்கள் பரிதாபப் படுவதைவைத்து, மிகமோசமானதொரு தாக்குதலை நடத்த நீங்கள் திட்டமிட்டிருக்கிறீர்கள் எனக் கருதலாமா?

தலையாட்டிய ஹெஸ் மீண்டும் தமது நாட்டின் யுத்ததளவாடங்களின் எண்ணிக்கை, நீர்மூழ்கிக்கப்பல்களின் ஆற்றலென பேச ஆரம்பித்துவிட்டார். இடையில் குறுக்கிட்ட சர் ஜான் சைமன்:

– வந்தது எப்படி ·ப்யூரெர் அனுமதியுடனா? அல்லது அனுமதி இன்றியா?

– அவரது சம்மதத்துடன் வந்தேனென்றா சொல்லமுடியும்? என்று பதில் கேள்விகேட்ட ஹெஸ், கடகடவென்று சிரிக்கிறார். சிரித்துமுடித்ததும் ஒரு சிறிய தாளை எடுத்து அவர் முன் பரப்பினார்.

‘ஒப்பந்தத்திற்கான அடிப்படை நிபந்தனைகள்’ என்று அதில் எழுதியிருந்தது. அதனைத் தொடர்ந்து ஹெஸ்:

– இவைகளெல்லாம் அவ்வப்போது எங்கள் தலைவர் முன்வைத்த நிபந்தனைகள், என்றார்.

சர் ஜான சைமன் அதனைப் படித்துபார்த்தார் புதிதாக எதுவுமில்லை, ஏற்கனவே இவோன் கிர்க் பட்ரிக்கிடம் ஹெஸ் கூறியிருந்தவைதான் அதிலிருந்தன.

(தொடரும்)

 

 

பாரீஸில் இருவிழாக்கள்

பாரீஸில் காந்தி சிலை:

கடந்த மாதம்(அக்டோபர்2) நான் குடியிருக்கும் Strasbourg நகரில் காந்தி சிலையை முதன்முதலாகத் திறந்தார்கள். நாளை அதாவது 11-11-2011 அன்று பாரீஸ் நகர புறநகரொன்றில் மற்றொன்றை திறக்கவிருக்கிறார்கள். வொரெயால் தமிழ்சங்க தலைவர் இலங்கைவேந்தன் என்பவரை கடந்த சில வருடங்களாக அறிவேன் அயராத உழைப்பாளி. வருடந்தோறும் விழாக்களை நடத்தி அப்பகுதிவாழ் தமிழ்மக்களை ஒருங்கிணைக்கிறார். தமிழ்ப்பள்ளியொன்றை நிறுவி பிள்ளைகள் தமிழின் விரல் பிடித்து நடப்பதைப் பார்த்து பெருமிதம் கொள்கிறார். இந்திய அரசியல்வாதிகளுக்கும் காந்திக்குமுள்ள பந்தமென்பது இந்திய ரூபாய் நோட்டுக்களில் அவர் இடம்பெற்றிருக்கிறார் என்பதாக இருக்கலாம், ஆக அவர்களும் காந்தியைப் போற்றுகிறவர்களாகிறார்கள். ஆனால் இன்றைய உலகிற்கு காந்தியின் தேவை தவிர்க்கமுடியாதது. அவரது சாத்வீகமான அரசியல் மட்டுமல்ல, அடிதட்டு மக்களின் வளர்ச்சியில் அக்கறைகொண்ட வாழ்வாதார பொருளரசியலும் முன்னெப்போதும் கண்டிராத அளவிற்கு தேவையாகிறது. பாரீஸில் முதன் முதலாகக் காந்தி சிலை திறக்க எடுத்துக்கொண்ட நண்பர் இலங்கைவேந்தனின் முயற்சி போற்றுதலுக்குரியது.

நாள்: 11-11-2011, பகல் 2மணி அளவில்; இடம்: Avenue Gandhi, 95490- Vaureal தொடர்புகட்கு: Ilangaivendhan- 06 10 43 22 16

பத்தாவது ஆண்டு கம்பன் விழா:

பிரான்சு கம்பன் கழகத் தலைவர் கவிஞர் கி.பாரதிதாசனை பல ஆண்டுகளாக அறிவேன். அவருக்கு தமிழ்தான் குடும்பம், தமிழர்கள் தான் உறவினர்கள். சந்தத்துடன் மரபுக்கவிதை எழுதுவதில் சமர்த்தர். தமிழ்மொழி மீது தீராத காதல் கொண்டு இயங்குபவர். தமிழர்களென்றாலே பல சங்கங்கள் இருக்கவேண்டுமில்லையா? இங்கேயும் நூறு சங்கங்களாகவது அப்படி இயங்கும். அவற்றுள் உருப்படியாக தமிழுக்கு உழைக்கும் அமைப்புகளில் நானறிந்தவகையில் ஐந்து அல்லது ஆறு அமைப்புகள் இருக்கலாம். அவற்றுள் சட்டென்று அனைவரும் நினைவு கூரும் அமைப்பு பாரீஸ் கம்பன் கழகம். வருடந்தோறும் செப்டம்பர்மாதங்களில் பாரீஸில் கம்பன் விழா களைகட்டும். இவ்வருடம் பத்தாவது ஆண்டுவிழா என்பதால் சிறப்பாக கொண்டாட நினைத்திருக்கவேண்டும். நவம்பரில் வந்திருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து கம்பன் விழா மேடைகளறிந்த பேச்சாளர்கள் கலந்துகொள்கிறார்கள். வழக்கம்போல பட்டிமன்றம், வழக்காடுமன்றம் என அமர்க்களபடுத்துகிறார்கள். ஆக இரண்டு நாட்களுக்கு பாரீஸ் வாழ் தமிழர்கள் தமிழ் அமுதைப் பருக நல் வாய்ப்பினை பாரீஸ் கம்பன் கழகம் அருளியிருக்கிறது. சிறப்பு பேச்சாளராக தமிழருவி மணியன் கலந்துகொள்கிறார்.

நாட்கள்: 12 மற்றும் 13-11-2011 (சனி மற்றும் ஞாயிறு) இடம்: La Salle Champ De Foire, Route des Refzniks, 92500- Sarcelles; தொடர்புகட்கு: K. Barathidassan- 01 39 93 17 06