Category Archives: Uncategorized

பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்-11

Strasbourg

 

Strasbourg (ஸ்ட்ராஸ்பூர் என்று உச்சரிக்கவேண்டும்)நான் வசிக்கின்ற நகரம். அல்ஸாஸ் என்ற பிரதேசத்தின் முதலாவது முக்கிய நகரம் மட்டுமல்ல, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைநகரமுங்கூட. பிரான்சுநாட்டின் கிழக்குப்பகுதியிலுள்ள இந்நகரம் மக்கட்தொகையில் ஏழாவது மிகப்பெரிய நகரம். 1949லிருந்தே ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைமைகேந்திரமாக இருப்பதோடு 1992லிருந்து ஐரோப்பிய கூட்டமைப்பின் பாராளுமன்றப் பீடமாகவுமுள்ளது. அதுபோலவே ஐரோப்பிய மனித உரிமை ஆணையத்தின் தலமையகம் மற்றும் ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றம் ஆகியவைகளும் இங்கு அமைந்துள்ளன.

 

ஐரோப்பாவின் அல்லது ஐரோப்பியர்களின் தலைநகரம் என்றபெருமைக்கு நகரத்தின் பூகோள இருப்பு காரணம். அல்ஸாஸ் பிரதேசம் ஜெர்மன், ஸ்விஸ் நாடுகளை எல்லைகளாகக் கொண்டுள்ளது, குறிப்பாக வடகிழக்கிலும், கிழக்கிலும். ஸ்ட்ராஸ்பூர் நகரிலிருந்து ஜெர்மன் நாட்டின் கேல் (Khel)நகரை பிரிப்பது  ரைன்(Rhin) நதி. பாலத்தை நடந்தே கடந்துவிடலாம். பிரபஞ்சன், கி.அ. சச்சிதானந்தன், இந்திரன், காலச்சுவடு கண்ணனென தமிழ் படைப்புலகமறிந்த ஒரு சிலர் பாலத்தைக் கடந்திருக்கிறார்கள். சுவிஸ் நாட்டின் பாசல் (Basale) நகரமும் அல்ஸாஸ் பிரதேசத்தின் எல்லையில்தானுள்ளது. ஸ்ட்ராஸ்பூரிலிருந்து 120 கி.மீ அல்லது அதிகபட்சமாக ஒரு மணிநேர பயணத்தில் சுவிஸ் நாடு அதுபோலவே இரண்டரை மணி நேர பயணத்தில் பிராங்பர்ட் அல்லது லக்ஸம்பர்க், நான்கு மணி நேர பயனத்தில் பிரஸ்ஸல்ஸ்(பெல்ஜியம்) சென்னையிலிருந்து மதுரைக்குப் போகும் நேரத்தில் பாதியை ஒதுக்கினால் இத்தாலியிலோ? கூடுதலாக ஒருமணிநேரத்தை ஒதுக்கினால் லண்டனிலோ இருக்கலாம். அல்சாஸ் மக்கள் அல்சாசியர்கள் எனப்படுவர். பேசும் மொழி ஜெர்மன் வாடைகொண்டது, பெயர் அல்ஸாஸியன். பிரெஞ்சு மொழி ஆதிக்கத்தால் தனது செல்வாக்கை இழந்திருந்த அல்ஸாஸ் மொழியை உயிர்ப்பிக்க எல்லா முயற்சிகளும் நடைபெறுகின்றன. நாடகங்கள், சினிமாக்கள், இலக்கியங்களென அல்ஸாஸ் மொழியில்  எல்லாமுண்டு.. அல்ஸாஸ் மக்கள் தங்களுக்குள் அல்ஸாஸ் மொழியை மட்டுமே பேசுவார்கள்.  அல்ஸாஸ் மொழியை அறியாத பிரான்சு நாட்டின் பிறபகுதி மக்கள் அல்ஸாஸ் கிராமங்களில் மருத்துவர்களாகவோ, கிராம ஊழியர்களாவோ பணியாற்றுவது கடினம். ஆனால் நகரமக்களும் இன்றைய தலைமுறையினரும்  இரண்டு மொழியிலும் தேர்ச்சிபெற்றிருப்பார்கள்.

 

அல்ஸாஸ் புராணத்தைவிட்டுவிட்டு மீண்டும் Strasbourg நகரத்திற்குவருகிறேன். My name is Rose நாவலின் கதைசொல்லி உலகின் கம்பீரமான தேவாலயங்களென நான்கு தேவாலாயங்களின் பெயர்களை குறிப்பிடுவான். அவற்றுள் முதலாவது Strasbourg, மற்ற மூன்று உள்ள நகரங்கள் Chartres, Bamberg, Paris.

 

Cathளூdrale Notre-Dame de Strasbourg ஒரு கத்தோலிக்க தேவாலயம், கோத்திக் (gothique)வகை கட்டிடக்கலை சார்ந்தது. உலகில் இரண்டாவது மிக உயரமான (147 மீட்டர்கள்) தேவாலயம். பிரான்சு நாட்டின் நொர்மாண்டி பிரதேசத்தைச்சேர்ந்த ரூவன் (Rouen) நகர் தேவாலயம் (உயரம் 157 மீட்டர்) முதலாவது. ஸ்ட்ராஸ்பூர் தேவாலயம் 1647ல் ஆரம்பித்து 1874ல் கட்டி முடிக்கப்பட்டது. பிற ஐரோப்பிய நகரங்களைப்போலவே ஸ்ட்ராஸ்பூர் நகரமும் கிருஸ்துமஸ் காலங்களில் கோலாகலமாக இருக்குமென்றாலும் கிருஸ்துமஸை முன்னிட்டு பங்குபெறும் கடைகள் விசேடமானவை. பண்டிகை நாட்களில் நாங்களும் ஒரு விற்பனை பிரிவை அங்கே செயல்படுத்துவதுண்டு. கடந்த இருபது ஆண்டுகளாக ஒவ்வொடு வருடமும் எங்களுடைய விற்பனை அகத்தில் இந்தியக் கைவினைபொருட்கள், புதுச்சேரி ஆரோவில் பிரதேசத்திலிருந்து இறக்குமதிசெய்யப்படும் ஊதுபத்திகள் ஆகியவற்றை  விற்பனைசெய்கிறோம். எனவே நவம்பர் மாதமும் டிசம்பர் மாதமும் எனக்கு மிகவும் நெருக்கடியான மாதங்களென சொல்லவேண்டும். இரவு வீடுதிரும்ப பத்துமணி ஆகும். வருடத்தின் பிற நாட்களில் எனது மற்ற கடைக்கு  அதிக பட்சமாக நான்கு அல்லது மணிநேரத்தை மட்டுமே ஒதுக்குகிறேன். கடையின் அக்கவுண்ட், பொருட்களை வாங்குவது, விலையைத் தீர்மானிப்பது போன்ற நிர்வாகப்பணிகளை மட்டும் பார்த்துக்கொள்கிறேன். எனது மனைவி, மைத்துனர் இருவரும் பிறவற்றைப்பார்த்துக்கொள்கிறார்கள்.வாசிப்பதை நேரம் கிடக்கும்போதும், முன்னிரவுகளுக்கென்றும் ஒதுக்கிவிட்டு எழுதுவதை அதிகாலையில் வைத்திருக்கிறேன். இரவில் விழித்திருப்பது குறைவு. பத்துமணிக்கெல்லாம் உறங்கிவிடவேண்டும், அர்த்தராத்திரியில் மனைவிமீதான பிரேமை எழாமலிருக்கவேண்டும், வராமலிருந்தால் உறங்கப்பிரச்சினையில்லை.

 

 

———————————————–

பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்-11

Strasbourg (ஸ்ட்ராஸ்பூர் என்று உச்சரிக்கவேண்டும்)நான் வசிக்கின்ற நகரம். அல்ஸாஸ் என்ற பிரதேசத்தின் முதலாவது முக்கிய நகரம் மட்டுமல்ல, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைநகரமுங்கூட. பிரான்சுநாட்டின் கிழக்குப்பகுதியிலுள்ள இந்நகரம் மக்கட்தொகையில் ஏழாவது மிகப்பெரிய நகரம். 1949லிருந்தே ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைமைகேந்திரமாக இருப்பதோடு 1992லிருந்து ஐரோப்பிய கூட்டமைப்பின் பாராளுமன்றப் பீடமாகவுமுள்ளது. அதுபோலவே ஐரோப்பிய மனித உரிமை ஆணையத்தின் தலமையகம் மற்றும் ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றம் ஆகியவைகளும் இங்கு அமைந்துள்ளன.

ஐரோப்பாவின் அல்லது ஐரோப்பியர்களின் தலைநகரம் என்றபெருமைக்கு நகரத்தின் பூகோள இருப்பு காரணம். அல்ஸாஸ் பிரதேசம் ஜெர்மன், ஸ்விஸ் நாடுகளை எல்லைகளாகக் கொண்டுள்ளது, குறிப்பாக வடகிழக்கிலும், கிழக்கிலும். ஸ்ட்ராஸ்பூர் நகரிலிருந்து ஜெர்மன் நாட்டின் கேல் (Khel)நகரை பிரிப்பது  ரைன்(Rhin) நதி. பாலத்தை நடந்தே கடந்துவிடலாம். பிரபஞ்சன், கி.அ. சச்சிதானந்தன், இந்திரன், காலச்சுவடு கண்ணனென தமிழ் படைப்புலகமறிந்த ஒரு சிலர் பாலத்தைக் கடந்திருக்கிறார்கள். சுவிஸ் நாட்டின் பாசல் (Basale) நகரமும் அல்ஸாஸ் பிரதேசத்தின் எல்லையில்தானுள்ளது. ஸ்ட்ராஸ்பூரிலிருந்து 120 கி.மீ அல்லது அதிகபட்சமாக ஒரு மணிநேர பயணத்தில் சுவிஸ் நாடு அதுபோலவே இரண்டரை மணி நேர பயணத்தில் பிராங்பர்ட் அல்லது லக்ஸம்பர்க், நான்கு மணி நேர பயனத்தில் பிரஸ்ஸல்ஸ்(பெல்ஜியம்) சென்னையிலிருந்து மதுரைக்குப் போகும் நேரத்தில் பாதியை ஒதுக்கினால் இத்தாலியிலோ? கூடுதலாக ஒருமணிநேரத்தை ஒதுக்கினால் லண்டனிலோ இருக்கலாம். அல்சாஸ் மக்கள் அல்சாசியர்கள் எனப்படுவர். பேசும் மொழி ஜெர்மன் வாடைகொண்டது, பெயர் அல்ஸாஸியன். பிரெஞ்சு மொழி ஆதிக்கத்தால் தனது செல்வாக்கை இழந்திருந்த அல்ஸாஸ் மொழியை உயிர்ப்பிக்க எல்லா முயற்சிகளும் நடைபெறுகின்றன. நாடகங்கள், சினிமாக்கள், இலக்கியங்களென அல்ஸாஸ் மொழியில்  எல்லாமுண்டு.. அல்ஸாஸ் மக்கள் தங்களுக்குள் அல்ஸாஸ் மொழியை மட்டுமே பேசுவார்கள்.  அல்ஸாஸ் மொழியை அறியாத பிரான்சு நாட்டின் பிறபகுதி மக்கள் அல்ஸாஸ் கிராமங்களில் மருத்துவர்களாகவோ, கிராம ஊழியர்களாவோ பணியாற்றுவது கடினம். ஆனால் நகரமக்களும் இன்றைய தலைமுறையினரும்  இரண்டு மொழியிலும் தேர்ச்சிபெற்றிருப்பார்கள்.

அல்ஸாஸ் புராணத்தைவிட்டுவிட்டு மீண்டும் Strasbourg நகரத்திற்குவருகிறேன். My name is Rose நாவலின் கதைசொல்லி உலகின் கம்பீரமான தேவாலயங்களென நான்கு தேவாலாயங்களின் பெயர்களை குறிப்பிடுவான். அவற்றுள் முதலாவது Strasbourg, மற்ற மூன்று உள்ள நகரங்கள் Chartres, Bamberg, Paris.

Cathளூdrale Notre-Dame de Strasbourg ஒரு கத்தோலிக்க தேவாலயம், கோத்திக் (gothique)வகை கட்டிடக்கலை சார்ந்தது. உலகில் இரண்டாவது மிக உயரமான (147 மீட்டர்கள்) தேவாலயம். பிரான்சு நாட்டின் நொர்மாண்டி பிரதேசத்தைச்சேர்ந்த ரூவன் (Rouen) நகர் தேவாலயம் (உயரம் 157 மீட்டர்) முதலாவது. ஸ்ட்ராஸ்பூர் தேவாலயம் 1647ல் ஆரம்பித்து 1874ல் கட்டி முடிக்கப்பட்டது. பிற ஐரோப்பிய நகரங்களைப்போலவே ஸ்ட்ராஸ்பூர் நகரமும் கிருஸ்துமஸ் காலங்களில் கோலாகலமாக இருக்குமென்றாலும் கிருஸ்துமஸை முன்னிட்டு பங்குபெறும் கடைகள் விசேடமானவை. பண்டிகை நாட்களில் நாங்களும் ஒரு விற்பனை பிரிவை அங்கே செயல்படுத்துவதுண்டு. கடந்த இருபது ஆண்டுகளாக ஒவ்வொடு வருடமும் எங்களுடைய விற்பனை அகத்தில் இந்தியக் கைவினைபொருட்கள், புதுச்சேரி ஆரோவில் பிரதேசத்திலிருந்து இறக்குமதிசெய்யப்படும் ஊதுபத்திகள் ஆகியவற்றை  விற்பனைசெய்கிறோம். எனவே நவம்பர் மாதமும் டிசம்பர் மாதமும் எனக்கு மிகவும் நெருக்கடியான மாதங்களென சொல்லவேண்டும். இரவு வீடுதிரும்ப பத்துமணி ஆகும். வருடத்தின் பிற நாட்களில் எனது மற்ற கடைக்கு  அதிக பட்சமாக நான்கு அல்லது மணிநேரத்தை மட்டுமே ஒதுக்குகிறேன். கடையின் அக்கவுண்ட், பொருட்களை வாங்குவது, விலையைத் தீர்மானிப்பது போன்ற நிர்வாகப்பணிகளை மட்டும் பார்த்துக்கொள்கிறேன். எனது மனைவி, மைத்துனர் இருவரும் பிறவற்றைப்பார்த்துக்கொள்கிறார்கள்.வாசிப்பதை நேரம் கிடக்கும்போதும், முன்னிரவுகளுக்கென்றும் ஒதுக்கிவிட்டு எழுதுவதை அதிகாலையில் வைத்திருக்கிறேன். இரவில் விழித்திருப்பது குறைவு. பத்துமணிக்கெல்லாம் உறங்கிவிடவேண்டும், அர்த்தராத்திரியில் மனைவிமீதான பிரேமை எழாமலிருக்கவேண்டும், வராமலிருந்தால் உறங்கப்பிரச்சினையில்லை.
Strasbourg Christmas market:
http://www.google.fr/search?q=strasbourg+march%C3%A9+de+noel&hl=fr&client=firefox-a&hs=DUy&rls=org.mozilla:fr:official&channel=s&prmd=imvns&tbm=isch&tbo=u&source=univ&sa=X&ei=MFPTTqGyBYSUsgaN9vDJDA&ved=0CGAQsAQ&biw=1143&bih=676
———————————————–

 

 

 

மொழிவது சுகம் நவம்பர் 21:

எஸ் ராமகிருஷ்ணன்:

வழங்கும் இலக்கிய தொடர் பேருரைகள் நவம்பர் 21லிருந்து 27 தேதிவரை ஒரு வாரகாலம் தினமும் மாலை 6 மணிக்கு ஆழ்வார் பேட்டையிலுள்ள ரஷ்ய அறிவியல் மற்றிம் கலாச்சார மையத்தில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. திங்கள் தொடங்கி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைவரை நாளுக்கொன்றென ஏழு இலக்கிய சொற்பொழிவுகளை நிகழ்த்துகிறார். நண்பர் எஸ்.ரா. நிகழ்த்தும் இவ்வுரைகள் ஏற்பாட்டாளர்கள் சொல்வதுபோல இளம்வாசகர்கள், கல்விப்புலம் சார்ந்து இலக்கியம் பயில்வோரன்றி இலக்கியத்தில் ஈடுபாடுகொண்டோர் அனைவருக்கும் பயனளிக்கக்கூடியது. மேற்கத்திய நாடுகளில் இதுபோன்ற சொற்பொழிவுகளை அடிக்கடி நிகழ்த்துகின்றனர். தமிழ் இலக்கியத்தில் நவீன இலக்கியத்தினை முன் வைத்து தொடர் சொற்பொழிவுகள் இதற்கு முன்பு நடந்திருக்கிறதாவென்று தெரியாது. நண்பர் எஸ்.ரா.விற்கும் ஏற்பாட்டாளர்களுக்கும் தமிழ் படைப்புலகு கடமைப்பட்டிருக்கிறது.

நாஞ்சில் நாடன்

நாஞ்சில் நாடன் தளத்தில் அவரது மகளின் திருமண விழா படங்கள். காணக் கண்கொள்ளா காட்சி. பார்த்து மகிழ்ந்தேன். திருமணத்தில் கலந்துகொண்ட நண்பர் ஜெயமோகனின் வர்ணனையை வாசித்தால் திருமணத்தில் கலந்துகொண்ட அனுபவத்திற்கு உள்ளாவோம். அவருக்கே உரிய நடையில் மிக ழகாக நிகழ்ச்சியைச் சித்தரித்திருக்கிறார். புதுச்சேரியில் இருந்திருந்தால் நாஞ்சிலார் அழைக்காவிட்டாலும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருப்பேன். மணமக்களை வாழ்த்த அல்ல, வாழ்த்த அவருக்கு ஏராளமான உறவினர்களும் நண்பர்களும் அவர்களுக்குக்கிடைப்பார்கள். அவர் தயவில் நல்ல நாஞ்சில் நாட்டு சமையலை ஒரு பிடி பிடித்திருக்கலாம்.

வித்தியாசமான புத்தகவிழா

வருடம் தோறும் நவம்பர் மாதத்தில் 17-19 தேதிகளில் ஒரு வித்தியாசமான புத்தகவிழா ஒன்றை பிரான்சு நாட்டில் கொண்டாடுவார்கள். படைப்பிலக்கியத்தில் வாசகனை நகைப்பில் ஆழ்த்துகிற சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிற பகுதிகளை உரத்து வாசிப்பதென்பது நிகழ்ச்சியின் கருப்பொருள். இம்மையக்கருத்துக்கு உகந்தவை என்பது உடல்மொழியால் சொல்லகூடியவையாக இருத்தல்வேண்டும். படைப்பிலக்கிய பொது மரபிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டதாக இருக்கவேண்டும். தனது வாசகனை மகிழ்விக்கவும் வாய்விட்டு சிரிக்கவும் வைக்கும் வல்லமை அவ்வெழுத்துக்களுக்கு இருக்கவேண்டும். கடந்த வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும்  எனது சொந்தத் தொழில் சம்பந்தமாக பாரீஸ¤க்குச் சென்றவன் பாரீஸ் சொர்போன் பலகலைகழகத்தின் கலை பண்பாட்டுத்துறை சேவை ஏற்பாடு செய்திருந்த மூன்று நாள் நிகழ்ச்சியில், 19ந்தேதி நிகழ்ச்சியில் காணும் வாய்ப்பு கிடைத்தது. பியர் ழூர்து(Pierre Jourde) என்ற எழுத்தாளர் வாசிப்புக்குரிய நூல்களை தேர்வு செய்திருந்ததாகக் கூறினார்கள். நன்கு அறியப்பட்ட மற்றும் அறியப்படாத எழுத்தாளர்களென இரு தரப்பினரின் படைப்புகளும் இடம்பெற்றிருந்தன. வாசிக்கப்பட்டவைகளில் அல்போன்ஸ் அல்லேஸ், மிகெல் தெ செவாந்த், இடாலோ கல்வினோ, டனியல் பென்ஸெக் போன்ற எழுத்தாள்ர்களின் பெயர்கள் நினைவுக்கு வருகின்றன. வாசித்த இருவரும் ஏற்கனவே, குறுந்தகடுகளில் ஒலிவடிவம் பெற்ற படைப்புகளுக்குக் குரல் கொடுத்தவர்கள். முன் வரிசையில் னric Chevillard. எதையும் நையாண்டிசெய்தே பபழக்கப்பட்டவர் Anti -novelist வகையறா என்கிறார்கள் (எனக்கு Anti -novel, New Roman, Modern novel, Post modern novel -விவாதத்திகுரியவை அனைத்துமே பழைய மொந்தையல்ல என்கிறார்கள்) இது பற்றி ஒரு தொடரை எழுதவேண்டும்.

தற்போதைய தமிழ் படைப்புகளில் நகைச்சுவை தேடவேண்டியிருக்கிறது. நகைசுவையாக எழுதுவதற்கு தனி ஆற்றல் வேண்டும். கல்கி எழுத்துக்களை நான் விரும்பிவாசிக்க நேர்ந்தது நகைச்சுவக்காகவே. கலைமணியின் எழுத்துகளில் தில்லானா மோகனாம்பாள், ராவ் பகதூர் சிங்காரம் இன்றளவும் எனக்கு தமிழில் விரும்பி வாசித்தவை. கடுகு என்கிற அகஸ்தியன், தேவன், துமிலன் போன்றோர் என்னைக் கவர்ந்திருக்கிறார்கள். பாக்கியம் ராமசாமியைக்கூட கொண்டாடடலாம். அவரது அப்புசாமியும் சீதாபாட்டியும் சில கணங்கள் மகிச்சியாக வைத்திருக்க உதவுபவை. புதுமைபித்தன் சிறுகதைகளில் சமூகத்தையும் நடைமுறை வாழ்க்கையையும் போகிறபோக்கில் ஏளனம் செய்து நம்மைக் கடந்து செல்வார். நாம்தான் ஓடிச்சென்று அவரை பிடிக்கவேண்டும்.

Les neiges du Kilimanjaro (The snow of Kilimanjaro):

எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் இச்சிறுகதையை (http://xroads.virginia.edu/~drbr/heming.html)  நண்பர்கள் வாசித்திருக்கக்கூடும். ஆப்ரிக்காவுக்கு தமது மனைவியுடன் சபாரிக்கு வந்த இடத்தில் வலது காலில் முள்குத்தி புரையோடிப்போக படுக்கையில் கிடக்கும் எழுத்தாளன் தமது கடந்தகால நினைவுகளில் மூழ்கிறான். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமென்று நம்மவர்கள் சொல்வார்கள். அறுபது வயதுக்குமேல் அமர்நாத் பனிலிங்க தரிசினத்திற்குச்செல்கிறவர்கள் தங்கள் கடந்தகாலத்தை அசைபோட்டுபார்ப்பார்களாவென்று தெரியவில்லை. எழுத்தாளனுக்குள்ள சாபக்கேடு எல்லாவற்றையும் கேள்விக்குடுப்படுத்துவது? இங்கே கூடாரத்தில் கால் கட்டுடன் இருக்கும் எழுத்தாளன் முன்னே அவனுடைய பழைய உன்னதமான நினைவுகளைக் கிளறும் வகையில் பனிமூடிய கிளிமாஞ்சாரோ, நெருங்கும் அவனது மரணத்தை ஞாபகப்படுத்த வெளியே வட்டமிடும் கழுகுகள். தன்னைத்தானே சபித்துக்கொள்கிறான். கங்குல்போல அவனுள் உறையும் பழைய நினைவுகள், பின்னோக்கி அழைக்கின்றன.  எழுத்தில் கனியிருப்ப காயைமுன்னிருத்தியதற்காக வருந்துகிறான். ‘அரசியல், பெண்கள்,மது, பணம், கனவுகள்’ என்ற சுழலில் திக்கித் தவிக்கும் எழுத்தாளர்களின் ஒருவராக இக்கதையில் ஹெமிங்வே தம்மை அடையாளப்படுத்திக்கொள்வார். இச்சிறுகதை 1952ல் கிரிகிரிபெக்கும் ஏவா கார்டனரும் நடித்து திரைக்கு வந்திருக்கிறது. இப்போது இணைய தளங்களில் பார்க்ககிடைக்கிறது. கதையை சிதைக்காமல் படமாக்கிருக்கிறார்கள். கிரிகிரி பெக்கும் ஏவா கார்டனரும் நல்ல இளமைக் காலத்தில் இருந்தபோது எடுத்தபடம். இருவரும் பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். சிறுகதை தொடங்குவதுபோலவே திரைப்படமும் தொடங்குகிறது. பிற்காலத்தில் ஒரு பூர்ஷ்வாவாக மாறிபோன குற்றவுணர்வு ஹெமிங்வேக்கு இருந்திருக்கவேண்டும் இக்கதையில் அதற்கு கூடுதலாகவே வருந்துகிறார். இதேபெயரில் தற்பொழுது ஒரு பிரெஞ்சுப்படம் வந்துள்ளது. இப்படத்தில் கணவனும் மனைவியும் நாற்பது வயதைக் கடந்தவர்கள் தங்கள் வாழ்க்கையைக்குறித்து அலுத்துகொள்கிறார்கள். முதல் படத்திற்கும் இப்படத்திற்குமுள்ள பந்தம் அத்துடன் முடிந்தது. முதல் படத்தைபோன்றே கணவனும் மனைவியும் விஸ்கியை உறிஞ்சுகொண்டு தங்கள் நடந்துகொண்டது சரியா, தங்கள் வாழ்ந்தவிதம் சரியா என்று உரையாடுவதோடு சரி இவ்விரண்டு படங்களுக்கும் வேறு பந்தங்களில்லை. இங்கே கணவனும் மனைவியும் ஒரு கடற்கரை நகரில் படகு, கப்பல் கட்டுமான நிறுவனத்தில் தொழிலாளர்கள். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடியில் வேலை நீக்கம் செய்யப்படுகிறார்கள். தொழிற்சங்கத்தில்  கனவனும் மனைவியும் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்கள், தாங்கள் வேலை நீக்கம் செய்யப்பட்ட போதிலும் தங்கள் நண்பர்கள் உறவினர்களைக் காப்பாற்றி வேறு சிலரை வேலை நீக்கம் செய்ய காரணமாகிறார்கள். இவர்களுக்கு கிடைத்த பணத்தில் கிளிமாஞ்சாரோ செல்லலாமென்ற கனவு, இவர்கள் தந்திரத்தால் வேலை நீக்கம் செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களின் தாக்குதல்களால் முடிவுக்கு வருகிறது. இளைஞர்கள் இருவரையும் காவல்துறையிடம் காட்டிக்கொடுத்துவிட்டு பின்னர் தங்கள் செய்கைக்காக வருந்துகின்றனர். ஆனால் அவசியம் பார்க்க வேண்டியது The snow of Kilimanjaro (1952) திரைப்படம்.

—————————————

கதையல்ல வரலாறு 1-5

ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -? (தொடர்ச்சி)

மறுநாள் ஒரு திங்கட்கிழமை, ஜெர்மன் அரசாங்கத்தின் வானொலிச் செய்தியைத் தவறாமல் கேட்கின்றவர்களுகென்றே ஓர் அறிவிப்பு, அரசாங்கத்தின் ஊர்ஜிதப்படுத்தப்பட்ட தகவலாக வாசிக்கப்பட்டது. ஜெர்மனியரை திகைப்பில் ஆழ்த்திய அறிக்கையின் சாரம் இதுதான்:

“தேசிய சோஷலிஸ்டு கட்சி அதிகாரபூர்வமாக வெளியிடும் செய்தி: தோழர் ருடோல்ப் ஹெஸ் கடந்த சிலவருடங்களாகவே இனம் காணவியலாத நோயொன்றினால் பாதிக்கப்பட்டிருந்தார், எனவே அவர் வானில் பறப்பது முறைப்படி தடை செய்யப்பட்டிருந்தது, இத்தடையை மீறிய வகையில் ஒரு யுத்த விமானத்தை கையகப்படுத்தியுள்ளதாக அறிகிறோம்.”

“ருடோல்ப் ஹெஸ், ஆக்ஸ்பூர்க் யுத்த விமான தளத்திலிருந்து மே மாதம் பத்தாம் தேதி சனிக்கிழமையன்று புறப்பட்டுப் போனவர் திரும்பவில்லை.”

“போனவர் ஒரு கடிதத்தை விட்டுச் சென்றிருக்கிறார், அக்கடிதத்திலிருந்து அவர் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறாரென்பது உறுதிபடுகின்றது, பிரமை பீடித்திருப்பதாக அஞ்சுகிறோம். ”

“·ப்யூரெர் இப்பிரச்சினையில் தனிக்கவனம் செலுத்தியதன் விளைவாக தோழர் ‘ஹெஸ்’ ஸின் பாதுகாவலர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தோழர் ஹெஸ்ஸின் விமான பயணம் பற்றிய முழுத் தகவல்களை தெரிந்திருந்த அவர்கள்  ·ப்யூரெர் ஆணைப்படி அதனை தடுத்து நிறுத்தியிருக்கவேண்டும், அல்லது உரிய நேரத்தில் அரசுக்கு சம்பவம் நடப்பதற்கு முன்பாக தெரிவித்திருக்கவேண்டும், இரண்டும் இல்லையென்றானதால் சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது”

தமது நெருங்கிய நண்பர் ஹெஸ்ஸின் திடீர் பயணத்தை உலகுக்கு இட்லர் எவ்வாறு அறிவித்திருந்தார் என்பதைத்தான் நீங்கள் மேலே வாசித்தீர்கள்.

ஒரு குற்றத்தில், குற்றவாளியை உடனடியாக கைது செய்யமுடியாத நிலையில் யாரை அரசாங்கம் சந்தேகிக்கவேண்டுமோ அவர்கள் எவரையும் குற்ற வளையத்துக்குள் இட்லர் அரசு கொண்டுவரவில்லை.’ஹௌஸ் ஷோபெரையோ, யுத்த விமான தயாரிப்பாளரும், அவரது நெருங்கிய மற்றொரு சகாவான மெஸ்ஸெர்ஷ்மிட்டையோ, ஹெஸ்ஸின் மனைவியையோ.. மூவரில் ஒருவரைக்கூட அரசு தொடவில்லை. ஹௌஸ் ஷோபெருடைய மகனை, விசாரணை என்ற பேரில் மூன்று மாதம் சிறை வைத்தார்கள். மூன்றாவது மாதம் விடுதலைசெய்யப்பட்டு வெளியில் வந்தவர் வழக்கம்போல தமது பணியினைத் தொடர அனுமதிக்கபட்டார். அடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர், ஹெஸ்ஸின் பாதுகாவலர் ‘பின்ஷ்’. இவர் மூன்றாண்டுகள் சிறையிலிருந்தார். விடுதலைக்குப்பிறகு 1944ம் ஆண்டு கிழக்கு ஐரோப்பிய போர்முனைக்கு அனுப்பப்பட்டார். அங்கே அவர் ரஷ்யர்களிடம் சிக்கவே மீண்டும் சிறைவாசம்.

ஹெஸ்ஸின் பாதுகாவலர் ‘பின்ஷ்’ ஐ சிறைபிடித்த ரஷ்யர்கள், அவரது எஜமானருடைய பிரிட்டிஷ் பயணத்தின் உண்மையை அறிய பலவகைகளிலும் வதைசெய்தார்கள்: விரல்கள் உடைக்கப்பட்டன, உணவு மறுக்கப்பட்டது; உறங்க விடவில்லை. எவ்வளவு வதை செய்துமென்ன? அவருக்கு என்ன தெரியுமோ அதைத்தானே சொல்லமுடியும். அவர்களிடத்திலும் அதைத்தான் கூறினார். பதினோறு ஆண்டுகள் அவர் ரஷ்ய சிறையிலிருந்த பின்னர் விடுதலைப்பெற்று 1955ம் ஆண்டு ஜெர்மன் திரும்பினார்.

இனியும் ஹெஸ்ஸின் பயணத்தையும் அவருடைய திட்டத்தையும் மர்மப் பயணம் என்றோ, ரகசியப் பயணமென்றோ சொல்லிக்கொண்டிருக்க இயலாது. வெளியுலகம் அறிந்த ரகசியமாயிற்று. 1941ம் ஆண்டு மே 17ந்தேதி பிரிட்டிஷ் பிரதமர் வின்சன் சர்ச்சில் அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட்டிற்கு விளக்கமாக மே 11, 12, 14, 15 தேதிகளில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் வெளிவிவகாரத்துறை அமைச்சகத்தின் பிரதிநிதி நடத்திய உரையாடலின் முழுவிபரத்தையும் ஓர் அவசரசெய்தியாக பாவித்து தகவல் அனுப்பியிருந்தார். இதற்கு முந்தைய தொடரில் நீங்கள் வாசித்தவைதான் அத்தகவல்கள் என்றபோதிலும் மீண்டும் ஒருமுறை உங்களுக்குச் சுருக்கமாக நினைவுபடுத்துவது நல்லது..

மே 11 மற்றும் 12 தேதிகளில் இரவில் நடந்த உரையாடலில் ஹெஸ் குறிப்புகளை வைத்துக்கொண்டு வளவளவென்று நிறைய பேசினாரென்றும். அன்றையப் பேச்சில் மூன்று விடயங்கள் அவரிடம் பிரதானமாக இருந்தனவென்றும் சொல்லப்பட்டிருந்தது. முதலாவது இங்கிலாந்து ஜெர்மன் நாடுகளிடையேயான கடந்த 30 ஆண்டுகால உறவுபற்றியப் பேச்சு. அதன் நோக்கம் ஜெர்மன் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதும், பிரிட்டன் செயல்பாடுகளில் குற்றம் கண்டுபிடிப்பதும்.  இரண்டாவது எப்படியும் இட்லர் ஜெர்மன் மக்களின் முழு ஆதரவுடன்,  விமானப்படை மற்றும் அதி நவீன நீர்மூழ்கிக் கப்பல்களின் துணைகொண்டு கூட்டுபடைகளை வெல்லப்போகிறாரென்ற ஹெஸ்ஸின் கர்வப் பேச்சு. இங்கிலாந்துடன் சமாதானமாக போகவேண்டுமென்பதைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்த ஹெஸ்ஸின் பேச்சு பற்றியது, மூன்றாவது. ·ப்யூரெருக்கு பிரிட்டனைப் பற்றி வெகுகாலந்தொட்டு உயரிய கருத்துக்கள் இருப்பதாகவும், அவை இனியும் தொடருமென்றும், அந்நம்பிக்கைக்கு இடையூறின்றி பிரிட்டன் ஜெர்மனுக்குச் சொந்தமான காலனிநாடுகளை திருப்பி அளித்து, ஐரோப்பிய விவகாரத்தில் ஜெர்மனியின் நடவடிக்கைகளில் பிரிட்டன் குறுக்கிடக்கூடாதென்று ஹெஸ் கூறியதும் முதல் நாள் ஹெஸ்ஸின் பேச்சில் குறிப்பிடத்தக்க விஷயம். ‘இங்கிலாந்துடன் சமாதானமாகப்போவதற்கு இப்போதுள்ள தலமைக்குப் பதிலாக வேறொரு அரசாங்கம் பொறுப்பேற்கவேண்டும்’ என்று ஹெஸ் தெரிவித்த இட்லர் விருப்பத்தையும் சர்ச்சில் மறக்காமல் தந்தியில் குறிப்பிட்டிருந்தார்.

மே 14ம் நாள் ‘ஹெஸ்” ஸ¤டன் நடந்த உரையாடலென்று:

1. சமாதான ஒப்பந்தத்தின் ஷரத்துகள் எதுவாயினும் ஜெர்மன் ஈராக்கின் ரஷீத் அலி குழுவினரை ஆதரிக்கும், அடுத்து ஈராக்கிலிருந்து பிரிட்டன் வெளியேறியே ஆகவேண்டும்.

2. நீர்மூழ்கி கப்பல்களின் துணையுடன் இங்கிலாந்தின் உணவுப்பொருட்களின் வரத்தை தடைசெய்யும் வகையில் முற்றுகையை நீட்டித்து கடைசி இங்கிலீஷ்காரன் பசியால் துடிப்பதை ஜெர்மன் காணவேண்டும். என தந்தி தெரிவித்தது.

மே15ம்நாள் ஹெஸ்ஸ¤டனான பேட்டி என்ற வகையில் தந்தியில் அமெரிக்கா நட்புக்குகந்த நாடல்ல என்பதாகவும்; அமெரிக்காவின் ஆயுதங்கள், யுத்த விமானங்கள் ஆகியவைக்குறித்து ‘ஹெஸ்’ ஸ¤க்கு பெரிய அபிப்ராங்கள் ஏதும் இல்லை என்று கூறப்பட்டிருந்தது.

‘ஹெஸ்’ஸ¤டன் நடந்த உரையாடலென்று மேற்கண்ட தகவல்களைத் தெரிவித்திருந்த சர்ச்சில் ‘ஹெஸ்’ஸின் ஆரோக்கியம் பற்றி குறிப்பிட்டிருந்த தகவலும் வரலாற்றில் முக்கியத்துவம் பெறுகின்றது. இப்பிரச்சினை பின்னர் தெரியவந்தற்கு இங்கிலாந்து அரசாங்கமும் ஜெர்மன் அரசாங்கமும் ஹெஸ் உடல்நிலைகுறித்த அறிக்கையில் முரண்பட்டிருந்தைக் காரணமாகச் சொல்லலாம். ஹெஸ் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்ததாகவும், மன நிலை பாதித்ததன் அறிகுறி அவரிடம் சுத்தமாக இல்லையென்றும் சர்ச்சில் தந்தி தெரிவிக்கிறது. அதுவன்றி ஹெஸ்ஸின் முயற்சிகள் பற்றி இட்லர் அறிந்திருக்கமாட்டாரென தாம் நம்புவதாகவும், இங்கிலாந்தில் சண்டையின்றி சமாதானமாக போகவேண்டுமென்ற எண்ணத்துடன் ஒரு குழுவினர் இருப்பதாகவும், அவர்கள் இப்போதுள்ள பிரிட்டிஷ் அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து விரட்டிவிடுவார்களென்று அந்த’ ஆள் (ஹெஸ்) கூறுவதை நம்பாமல் இருக்கமுடியவில்லை என்கிறார் சர்ச்சில்.

வணக்கத்திற்குரிய அதிபருக்கு, மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் உங்கள் கவனத்திற்கு மட்டும் உரியது. எங்கள் தரப்பில் நாங்கள் விரும்புவதெல்லாம், இதுகுறித்த எத் தகவலையும் பத்திரிகையாளர்களுக்கு மூச்சு விடகூடாது. அதன் மூலம் ஜெர்மன் தலைவர்கள் குழப்பத்தில் நிறுத்தவேண்டும். நம்மிடம் கைதிகளாகவுள்ள எதிரிகளின் ராணுவ அதிகாரிகளுக்கும் அதுதான் நிலமை. நிச்சயமாக இப்பிரச்சினை ஜெர்மன் ராணுவத்தில் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்தியிருக்குமென நம்புகிறேன், என எழுதி சர்ச்சில் முடித்திருந்தார்.

இதற்கிடையில் ‘ஹெஸ்’-ஐ ·பார்ன் பரோவுக்கருகிலிருந்த மாளிகைக்குக் கொண்டு சென்று சிறை வைத்தார்கள். ஹெஸ் தொடர்ந்து சர்ச்சில் அரசாங்கத்தில் ஓர் அமைச்சரையேனும் தாம் சந்திக்க ஏற்பாடு செய்யவேண்டுமென்று நிப்பந்தம் கொடுத்தார். கிர்க் பட்ரிக், பிரிட்டிஷ் பிரதமரிடம் இதுபற்றி எடுத்துரைத்து  கைதுசெய்யப்படுள்ள ஹெஸ்ஸ¤க்கு உதவ முன்வந்தார். சர்ச்சிலுக்கு உடன்பாடில்லை. தாம் இணங்கினால் சர்ச்சில் ஜெர்மனுடன் சமாதானம் பேச குறுக்குவழியில் இறங்கினாரென அரசியல் விமர்சர்கள் எழுதுவார்களென்று தவிர்த்தார். ஆனாலும் கிர்க் பட்ரிக் சளைக்கவில்லை. அதன் மூலம் ஹெஸ்சிடமிருந்து வேறு உண்மைகளை பெறமுடியுமென்பதுபோல பேசினார். இறுதியில் சர்ச்சில் அவர் யோசனைக்கு சம்மதிக்க சர் ஜான் சைமன் என்ற வெளிவிவகாரத்துறை முதன்மைச் செயலரை அனுப்பினார்கள். இப்படியொரு சந்திப்பு நிகழ்ந்ததாகவே காட்டிக்கொள்ளகூடாது என்று பிரதமர் அலுவலகம் தீர்மானித்தது. இச்சந்திப்பு பற்றிய முழு விபரமும் பின்னர் நூரம்பெர்க் விசாரனையின்போது வெளிவந்தது. இம்முறை உரையாடல் மூன்றுமணி நேரம் நீடித்தது. ஹெஸ், சர் ஜான் சைமனிடம் பிரான்சு நாட்டிலிருந்து 1940ம் ஆண்டு இங்கிலாந்துக்கு வரவேண்டுமென்று தமக்கு திட்டம் இருந்ததென்பதை உறுதி செய்தார். தொடர்ந்து

– எப்படியும் இன்றில்லாவிட்டாலும் ஒரு நாள் போரில் நாம்தான் ஜெயிக்கபோகிறோம், அப்படி இருக்கையில் சமாதான ஒப்பத்தத்திற்கு முன்பாக வெர்சாய் ஒப்பந்தத்தின்படி நம்மிடம் கைப்பற்றியவற்றை திரும்பவும் ஒப்படைக்கவேண்டுமென்று உங்களை ஏன் வற்புறுத்தக்கூடாதெனக் கேட்டதற்கு ·ப்யூரெரிடமிருந்து வந்த பதிலென்ன தெரியுமா, ‘அப்படியே போரில் நாம் ஜெயித்தாலும், நல்லுறவை பேணவேண்டும் என நினைக்கிறபோது இதுபோன்ற நிர்பந்தங்களை விதிக்கக்கூடாது’, என்றார். எங்கள் தலைவரின் நல்லெண்ணம் மட்டும் உங்களுக்குத் தெரியவருமெனில், சமாதானத்திற்கு நீங்கள் உடன்படுவீர்கள் என்று நினைத்தேன். தவிர மிக மோசமான உங்கள் நிலமையும் இப்படியொரு பயணத்தை மேற்கொள்ள எனக்குக் காரணமாயிற்று, -என்றார் ஹெஸ்.

– எங்கள் மீது நீங்கள் பரிதாபப் படுவதைவைத்து, மிகமோசமானதொரு தாக்குதலை நடத்த நீங்கள் திட்டமிட்டிருக்கிறீர்கள் எனக் கருதலாமா?

தலையாட்டிய ஹெஸ் மீண்டும் தமது நாட்டின் யுத்ததளவாடங்களின் எண்ணிக்கை, நீர்மூழ்கிக்கப்பல்களின் ஆற்றலென பேச ஆரம்பித்துவிட்டார். இடையில் குறுக்கிட்ட சர் ஜான் சைமன்:

– வந்தது எப்படி ·ப்யூரெர் அனுமதியுடனா? அல்லது அனுமதி இன்றியா?

– அவரது சம்மதத்துடன் வந்தேனென்றா சொல்லமுடியும்? என்று பதில் கேள்விகேட்ட ஹெஸ், கடகடவென்று சிரிக்கிறார். சிரித்துமுடித்ததும் ஒரு சிறிய தாளை எடுத்து அவர் முன் பரப்பினார்.

‘ஒப்பந்தத்திற்கான அடிப்படை நிபந்தனைகள்’ என்று அதில் எழுதியிருந்தது. அதனைத் தொடர்ந்து ஹெஸ்:

– இவைகளெல்லாம் அவ்வப்போது எங்கள் தலைவர் முன்வைத்த நிபந்தனைகள், என்றார்.

சர் ஜான சைமன் அதனைப் படித்துபார்த்தார் புதிதாக எதுவுமில்லை, ஏற்கனவே இவோன் கிர்க் பட்ரிக்கிடம் ஹெஸ் கூறியிருந்தவைதான் அதிலிருந்தன.

(தொடரும்)

 

 

பாரீஸில் இருவிழாக்கள்

பாரீஸில் காந்தி சிலை:

கடந்த மாதம்(அக்டோபர்2) நான் குடியிருக்கும் Strasbourg நகரில் காந்தி சிலையை முதன்முதலாகத் திறந்தார்கள். நாளை அதாவது 11-11-2011 அன்று பாரீஸ் நகர புறநகரொன்றில் மற்றொன்றை திறக்கவிருக்கிறார்கள். வொரெயால் தமிழ்சங்க தலைவர் இலங்கைவேந்தன் என்பவரை கடந்த சில வருடங்களாக அறிவேன் அயராத உழைப்பாளி. வருடந்தோறும் விழாக்களை நடத்தி அப்பகுதிவாழ் தமிழ்மக்களை ஒருங்கிணைக்கிறார். தமிழ்ப்பள்ளியொன்றை நிறுவி பிள்ளைகள் தமிழின் விரல் பிடித்து நடப்பதைப் பார்த்து பெருமிதம் கொள்கிறார். இந்திய அரசியல்வாதிகளுக்கும் காந்திக்குமுள்ள பந்தமென்பது இந்திய ரூபாய் நோட்டுக்களில் அவர் இடம்பெற்றிருக்கிறார் என்பதாக இருக்கலாம், ஆக அவர்களும் காந்தியைப் போற்றுகிறவர்களாகிறார்கள். ஆனால் இன்றைய உலகிற்கு காந்தியின் தேவை தவிர்க்கமுடியாதது. அவரது சாத்வீகமான அரசியல் மட்டுமல்ல, அடிதட்டு மக்களின் வளர்ச்சியில் அக்கறைகொண்ட வாழ்வாதார பொருளரசியலும் முன்னெப்போதும் கண்டிராத அளவிற்கு தேவையாகிறது. பாரீஸில் முதன் முதலாகக் காந்தி சிலை திறக்க எடுத்துக்கொண்ட நண்பர் இலங்கைவேந்தனின் முயற்சி போற்றுதலுக்குரியது.

நாள்: 11-11-2011, பகல் 2மணி அளவில்; இடம்: Avenue Gandhi, 95490- Vaureal தொடர்புகட்கு: Ilangaivendhan- 06 10 43 22 16

பத்தாவது ஆண்டு கம்பன் விழா:

பிரான்சு கம்பன் கழகத் தலைவர் கவிஞர் கி.பாரதிதாசனை பல ஆண்டுகளாக அறிவேன். அவருக்கு தமிழ்தான் குடும்பம், தமிழர்கள் தான் உறவினர்கள். சந்தத்துடன் மரபுக்கவிதை எழுதுவதில் சமர்த்தர். தமிழ்மொழி மீது தீராத காதல் கொண்டு இயங்குபவர். தமிழர்களென்றாலே பல சங்கங்கள் இருக்கவேண்டுமில்லையா? இங்கேயும் நூறு சங்கங்களாகவது அப்படி இயங்கும். அவற்றுள் உருப்படியாக தமிழுக்கு உழைக்கும் அமைப்புகளில் நானறிந்தவகையில் ஐந்து அல்லது ஆறு அமைப்புகள் இருக்கலாம். அவற்றுள் சட்டென்று அனைவரும் நினைவு கூரும் அமைப்பு பாரீஸ் கம்பன் கழகம். வருடந்தோறும் செப்டம்பர்மாதங்களில் பாரீஸில் கம்பன் விழா களைகட்டும். இவ்வருடம் பத்தாவது ஆண்டுவிழா என்பதால் சிறப்பாக கொண்டாட நினைத்திருக்கவேண்டும். நவம்பரில் வந்திருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து கம்பன் விழா மேடைகளறிந்த பேச்சாளர்கள் கலந்துகொள்கிறார்கள். வழக்கம்போல பட்டிமன்றம், வழக்காடுமன்றம் என அமர்க்களபடுத்துகிறார்கள். ஆக இரண்டு நாட்களுக்கு பாரீஸ் வாழ் தமிழர்கள் தமிழ் அமுதைப் பருக நல் வாய்ப்பினை பாரீஸ் கம்பன் கழகம் அருளியிருக்கிறது. சிறப்பு பேச்சாளராக தமிழருவி மணியன் கலந்துகொள்கிறார்.

நாட்கள்: 12 மற்றும் 13-11-2011 (சனி மற்றும் ஞாயிறு) இடம்: La Salle Champ De Foire, Route des Refzniks, 92500- Sarcelles; தொடர்புகட்கு: K. Barathidassan- 01 39 93 17 06

கதையல்ல வரலாறு1-3

ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -? (தொடர்ச்சி)

கனடாவைப் கைப்பற்றிய கையோடு பிரிட்டனையும் அபகரிக்கவிருக்கிற பேராசை பிடித்த அமெரிக்கர்களின் திட்டத்தை  தெரியுமென்று கூறி ஹெஸ் தம்மை வியப்பில் ஆழ்த்தியதாக அரசாங்கத்திற்கு சமர்ப்பித்திருந்த அறிக்கையில் இவோன் கிர்க்பட்ரிக் வேடிக்கையாகக் குறிப்பிட்டிருந்தார்.

– நம்மிரு நாடுகளுக்கும் பரஸ்பரம் பயன்தரக்கூடிய யோசனை என்னிடமுள்ளது. ஆனால் அதன் வெற்றி நீங்கள் தரும் ஒத்துழைப்பைப் பொறுத்தது. இங்கிலாந்து ஜெர்மனுக்குச் சொந்தமான காலனி நாடுகளை அதனிடம் ஒப்படைக்கவேண்டும், அப்படி ஒப்படைப்பீர்களெனில் ஐரோப்பிய அரசியலில் பிரிட்டிஷ் அரசாங்கம் எதையும் செய்யலாம், நாங்கள் தடுக்கப்போவதில்லை, அவ்வாறே எங்கள் ஐரோப்பிய நாட்டாமையில் நீங்களும் குறுக்கிடமாட்டீர்களில்லையா?

கிர்க் பட்ரிக் மிகவும் அமைதியாகத் திருப்பிக்கேட்டார்.

– எனக்கொரு சந்தேகம்?

– என்னது?

– ரஷ்யா இருப்பது ஐரோப்பாவிலா, ஆசியாவிலா?

– இதென்ன கேள்வி, இரண்டிலும் என்றுசொல்வதைக்காட்டிலும் ஆசியா என்பதுதான் பொருத்தமான பதிலாக இருக்கும்

– அப்படியெனில் ஐரோப்பிய விவகாரங்களில் வேண்டப்படுகிற முழுச்சுதந்திரம், ரஷ்யா விவகாரத்தில் தங்களுக்கு வேண்டாம், அப்படித்தானே?

ஹெஸ் முகம் மாறியது. பட்ரிக் மனதிலுள்ள ஐயத்தை உடனடியாக தீர்க்க நினைத்தவர்போல அவருடைய பதிலிருந்தது.

– எங்களுக்கு ரஷ்யாவிடம் சில எதிர்பார்ப்புகள் உள்ளன. பேச்சு வார்த்தை அல்லது யுத்தம் இரண்டில் ஏதாவதொரு வழிமுறையில் அவை பூர்த்திசெய்யப்படவேண்டும். அதுவன்றி வேறு திட்டங்கள் தற்போதைக்கு இல்லை ரஷ்யா மீது உடனடியாக நாங்கள் தாக்குதல் நடத்த இருக்கிறோமென்பதெல்லாம் வதந்தி.

உலக அமைதிக்குப் பங்கம் விளைவித்த வகையிலும் மனிதகுலத்திற்கு எதிராக நடத்திய யுத்தமூலமாக இழைத்த குற்றங்களுக்காகவும் ஜெர்மானிய நாஜித் தலமைக்கு எதிராக நடந்த புகழ்பெற்ற நூராம்பெர்க்(Nuremberg) வழக்கின் ஆவணங்களை பரிசீலித்திருந்த பிரெஞ்சு பத்திரிகையாளர் ரெமொன் கர்த்தியே ஒன்றை அவதானித்திருந்தார். அவரது கணிப்பின்படி ஹெஸ்ஸ¤க்கும் பட்ரிக்கிற்கும் இடையிலான உரையாடல் நடந்தது 1941ம் ஆண்டு மேமாதம் 13ந்தேதி அடுத்த இரு தினங்களில் (மேமாதம் 15ந்தேதி) ரஷ்யாவின் மீது படையெடுக்க  ஜெர்மானியர்கள் முடிவெடுத்துவிட்டார்கள், எனவே ரஷ்யா மீதான ஜெர்மானிய படையெடுப்புக்கு உடனடி சாத்தியமில்லை என்று ஹெஸ் கூறியதும் அவற்றை வதந்தியென நிராகரித்திருந்தமையும் உண்மையில்லை என்பது அவரது கணிப்பு

– இத்தாலியைப்பற்றிய தங்கள் அபிப்ராயமென்ன, அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்? – பட்ரிக்

– எனக்குத் தெரியாது.-ஹெஸ்

– இது மிக முக்கியமானது.

– இத்தாலியர்களின் எதிர்பார்ப்புகள் அத்தனை கடுமையானவைகளாக இருக்குமென்று நான் நம்பவில்லை.

– அவற்றுக்கான தகுதிகள் அவர்களுக்கில்லை?

– தாராளமாக இருக்கிறது இல்லையென்று சொல்ல முடியுமா என்ன. அவர்களுக்கு நாங்கள் நிறைய கடமைபட்டுள்ளோம். தவிர 1919ல் ருமேனியர்களுக்கு என்ன நடந்தது? அவர்களுக்கு உதவ நீங்கள் ஆர்வம் காட்டியது மறந்துபோனதா? அவர்கள் மட்டும் உத்தமர்களா என்ன?

ஹெஸ்ஸ¤ம் இவோன் பட் ரிக்கும் இரண்டே கால் மணிநேரம் உரையாடினார்கள். பட்ரிக் அலுத்துபோனார். இத்தனை நேரம் உட்கார்ந்து இந்த மனிதனிடம் பேசிக்கொண்டிருந்தது அதிகமென்று நினைத்திருக்கவேண்டும், எழுந்தார்.

– ஒன்றை முக்கியமாக  உங்களுக்கு தெரிவித்திருக்க வேண்டும்? – மீண்டும் ஹெஸ்.

– எதைப்பற்றி?

-இவ்வளவு நேரம் நான் முன்வைத்த பரிந்துரைகள் நியாயமான முடிவுகளை அடைய வேண்டுமெனில், அது பற்றி விவாதிக்க ஒரு புதிய அரசாங்கமும் தலைவர்களும் வேண்டும். உங்கள் இப்போதையை அரசாங்கம் கூடாது. சர்ச்சிலும் சரி அவரது நண்பர்களும் சரி 1936 லிருந்தே ஜெர்மனுக்கும் இங்கிலாந்துக்குமிடையேயுள்ள அவ்வளவு சிக்கல்களுக்கும் காரணமாக இருப்பவர்கள். யுத்த தீர்வை முன்வைத்து காய் நகர்த்தியவர்கள். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நண்பர் இட்லர் ஒருபோதும் சம்மதிக்கமாட்டார்.

மறுநாள் அதற்கும் மறுநாளென்று கிர்க் பட்ரிக் ஹெஸ் சந்திப்புகள் நிகழ்ந்தன. முதல்நாள் மனநிலையில் ஹெஸ் இல்லை. இப்போது தமது தகுதியின் அடிப்படையில் சில மரியாதைகளை எதிர்பார்க்கத்தொடங்கினார். அதுவும் தவிர கிர்க் பட்ரிக் ஓர் அதிகாரி என்பதைத்தவிர வேறு தகுதிகளில்லாதாவர். மாறாக ருடோல்ப் ஹெஸ்ஸென்ற தான் ஜெர்மன் அதிபருக்கு நண்பர் மட்டுமல்ல ரை(Reich) அரசாங்கத்தில் மூன்றாவது இடம். அதற்குரிய மரியாதையை ஆங்கிலேயர்கள் கொடுக்கவில்லை, அவரது தகுதிக்கு பிரிட்டன் மன்னரை சந்திக்க ஏற்பாடு செய்திருக்கவேண்டும், சாத்தியமில்லையெனில் குறைந்த பட்சம் ஓர் அமைச்சரையாவது கண்ணில் காட்டியிருக்கலாம். மாறாக கண்டவர்களையும் இவரிடத்தில் அனுப்பிவைத்து முட்டாள்தனமான கேள்விகளுக்குப் பதில்சொல்லவேண்டுமென்று நினைக்கிறார்கள். யோசித்துப்பார்க்கவும்  எரிச்சலுற்றார். அந்த எரிச்சலில் தமக்கு மொழிபெயர்ப்பாளர்கள் வேண்டுமென்றார்; சட்ட ஆலோசர்கள் உதவியும், காரியதரிசிகளின் சேவையும் தமக்குத் தேவைப்படுகிறது ஏற்பாடு செய்யுங்களென்று அதிகாரமாகக் கேட்டார். இதற்கிடையில் லிவர்பூல் அருகில் சிறைவைக்கபட்டிருந்த இரண்டு ஜெர்மன் பிரமுகர்களின் பெயரைக்கூறியவர் மறக்காமல் அவர்களுடைய தண்டனைக் கைதி எண்ணையும் கூறி ஆச்சரியப்படுத்தினார். இவ்வளவு களேபரங்களுக்கிடையிலும் அவரது மே 13ந்தேதியிட்ட பிரேரணையில் ஒருசிலவற்றையும் மறக்காமல் குறிப்பிட்டிருந்தார். அதிலொன்று இங்கிலாந்து ஈராக்கைவிட்டு வெளியேற வேண்டுமென்பது.

– ஆனால் ஒன்றுமட்டும் எனக்குத் தெளிவாகவில்லை. ஈராக் ஒன்றும் ஐரோப்பாவில் இல்லையே? – மீண்டும் கிர்க் பட்ரிக்

– ஈராக் நாட்டினர் எங்களுக்காக ஆயுதம் தூக்கியவர்கள். எங்கள் ·ப்யூரெர் நமது நாடுகளுக்கிடையில் அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடுகிறபோது இவ்விஷயங்களை தவறாமல் கணக்கிற் கொள்ளவேண்டுமென நினைக்கிறார்.

ஹெஸ் அமெரிக்காவை மறக்கவில்லையென்பதை அவரது உரையாடலின் தொடர்ச்சி தெரிவித்தது. ஜெர்மானியர்களுக்கு அமெரிக்கர்களிடம் கிஞ்சித்தும் பயமில்லை என்றார். மறுபடியும் ஜெர்மானிய நீர்மூழ்கி கப்பல்களால் இங்கிலாந்துக்கு ஏற்படவிருக்கும் பேரழிவினைக்குறித்து பேச ஆரம்பித்தார்.

– நான் சொல்வதை கவனமாகக் கேளுங்கள், உங்களுக்குள்ள எல்லா தொடர்புகளையும் துண்டிப்பதன்மூலம் போரில் வெற்றிபெறபோவது ஜெர்மன். எங்களிடம் தயார் நிலையிலுள்ள நீர்மூழ்கிக்கப்பல்களின் எண்ணிக்கை எவ்வளவு, கட்டிக்கொண்டிருக்கிற நீர்மூழ்கிக் கப்பல்களின் எண்ணிக்கை எவ்வளவு என்ற கணக்கெல்லாம் உங்களிடத்திலில்லை. இட்லருக்கும் எதையும் பெரிய அளவில் செய்யவேண்டும், இதுவரை உலகம் கண்டிராத அளவில் எங்கள் அதிநவீன நீர்மூழ்கிக்கப்பல்கள் புதுரக போர்விமானங்களின் துணையுடன் தாக்குதலில் இறங்கப்போகின்றன. அதன் விளைவாக கூடிய சீக்கிரம் இங்கிலாந்தின் எல்லா வழிகளும் அடைபடும். அதன் விளைவாக நீங்கள் தோல்வியை ஏற்றுக்கொண்டு சரண் அடைந்தாலும் எங்கள் ·ப்யூரெர் அதை அனுமதிக்கும் திட்டமில்லை. உங்கள் மக்கள் பட்டினிகிடந்து மரணத்தை தழுவும்வரை முற்றுகை தொடரும்.

– பிரிட்டானிய மக்களின் உயிர்வாழ்க்கைக்கு வேண்டிய பொருளை முடக்குவதுதான் யுத்தமெனில், உங்களால் அதை சாதிக்க இயலாது. நீங்கள் நினைப்பதுபோல டன் கணக்கில் எங்களுக்கு பொருட்கள் வேண்டியதில்லை. நாங்கள் கையிறுப்பைவைத்தே கூட உங்களுடன் மோதமுடியும்.

– எங்கள் யுத்த தந்திரம் உங்கள் கற்பனைக்குக்கூட பிடிபடாதது. மிக மோசமான முற்றுகையை வெகு சீக்கிரம் சந்திக்கவிருக்கிறீர்கள். நாளொன்றுக்கு ஒன்று அல்லது இரண்டுகப்பல்கள் உதவிக்கு வரகூடுமென்று வைத்துக்கொண்டாலுங்கூட உங்கள் தேவைக்கு காணாது, குறித்துக்கொள்ளுங்கள்

உரையாடலின் தொனிமட்டுமல்ல, ஹெஸ்ஸின் உடல் மொழியும் புதிய பாவங்களை வெளிபடுத்தியது, மேசையை ஓங்கிக் தட்டினார்.

– எனது பயணம் அருமையான சந்தர்பத்தை உங்களுக்கு வழங்கியிருக்கிறது. இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்வது புத்திசாலித்தனம், தவறினால் ஜெர்மன் நாட்டுடன் சமாதானம் காண மறுக்கிறீர்கள் என்று பொருள். உங்களை அழிப்பது ·ப்யூரெர் கடமை, அதன் பிறகு காலத்திற்கும் நீங்கள் அவருக்கு அடங்கிய குடிகள்.

தமது உரையை நிறுத்தி சிறிது மூச்சுவாங்கினார்.

– சொல்ல வேண்டிய அவ்வளவையும் கூறியிருக்கிறேன்.

ஹெஸ்ஸை தற்காலிகமாக தங்க வைத்திருந்த சிறிய அறையின் கதவு மூடப்பட்டது. ஹெஸ் வந்த நோக்கம் வேறு. . இங்கே நடப்பதெதுவும் அவருக்கு உகந்ததாக இல்லை. தனது நாட்டைவிட்டு இவர்களையெல்லாம் நம்பி இவ்வளவுதூரம்   வந்ததே தவறோ என அவர் யோசித்திருக்கக்கூடும்.

வெகுகாலந்தொட்டு அரசியல் மனதிற்கு பிடித்ததுறையாக ஹெஸ்ஸ¤க்கு இருந்துவந்திருக்கிறது. ம்யூனிச் பல்கலைகழகத்தில் மாணவராக இருந்த காலந்தொட்டே ஹௌஸ்ஷோபர் போன்றவர்களின் அரசியல் சிந்தனைகளில் தீவிர பிடிப்புடன் இருந்தவர். பொருளியல் மாணவர். யுத்தத்தின்போது கவசப்படையில் பணியாற்றி இருக்கிறார். இரண்டுமுறை போரில் படுகாயமுற்று உயிர்பிழைத்தது ஓர் அதிசயமாக நிகழ்ந்தது. அதன் பிறகு பின்பு விமானப்படையில் சேந்து மளமளவென்று உயர் பதவியை எட்டினார். முதல் போரில் ஜெர்மனுக்கு நேர்ந்த தோல்வியை அவரால் சகித்துகொள்ள முடியவில்லை. ஜெர்மன் நாட்டின் இழந்த புகழை மீட்கக்கூடிய ஓர் அதிபரை எங்கனம் உருவாக்கப்போகிறோம்? என்ற ஹெஸ்ஸின் வாக்கியங்கள் இடலர் காதுவரை சென்றவை சோஷலிஸ்டு கட்சியின் நிகழ்வொன்றில் கட்சியில் புதிதாகச் சேர்ந்திருந்த ஹெஸ்ஸை ஹிட்லர் முதன்முதலாக சந்திக்கிறார். ஹெஸ் அவரிடம் ஹௌஸ்ஷோபர் சிந்தனைகள் குறித்து உரையாடுகிறார். ‘உயிர்வாழ்க்கையின் வெளி'(Vital space) யென்ற அக்கோட்பாடு பிற்காலத்தில் தன்னை பெரிதும் கொண்டாடிய நபரை அன்றைக்குத்தான் முதன் முதலாகச் சந்தித்தது.

அன்று தொடக்கம் ஹெஸ் இட்லரின் நெருங்கிய சகாவானார். 1933ம் ஆண்டுவரை அவருடைய துணை நிர்வாகியாகவும் அவருடைய அந்தரங்க காரியதரிசியாகவும் பணியாற்றிருக்கிறார். அவரிடம் இட்லர் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். இட்லரின் எதிரிகளை அழிக்க எடுத்த நடவடிக்கைகளிலும் சரி, 1935ம் ஆண்டு யூதர்களுக்கு எதிரான சட்டவரைவுக்கும் சரி ஹெஸ் காரணமாக இருந்திருக்கிறார், அவற்றில் கையொப்பமும் இட்டிருக்கிறார்.  நாளுக்குநாள் ஹெஸ்ஸின் செல்வாக்கு ஆட்சியில் மட்டுமல்ல சோஷலிஸ்டு கட்சியின் நிர்வாகத்திலும் அதிகரித்தது. ஹெஸ்ஸின் மேற்பார்வையிலேயே அநேக சட்டவரைவுகள் கொண்டுவரப்பட்டன. 1938முதல் நாட்டின் ரகசிய அமைச்சகத்தின் உறுப்பினர்களில் ஒருவராக இணைந்து யுத்தத்திற்கான திட்டங்களை வகுத்தார். ஜெர்மன் நாட்டிற்கும் பிற நாடுகளுக்குமிடையே பகமை வெளிப்படையாக தெரிவந்தபோது  ரை(Reich) பாதுகாப்பு சபையின் ஆறு உறுப்பினர்களுள் அவரும் ஒருவர். தமது அரசியல் வேதகுருவான ஹௌஸ்ஷோபர் மனைவி ஒரு யூதர் என்று அறியவந்தபோது அவரை வதை முகாமிருந்து காப்பாற்றியவர். அதுபோலவே வதை முகாம்கள் என்று சொல்கிறபோழுது நினைவுக்கு வருகிற புக்கென்வால்ட், ஔஸ்விட்ஷ் விவகாரத்தில் இவருக்குப் பங்கில்லை என்கிறார்கள். குறிப்பாக இட்லர் கோரிங்கிற்கு அடுத்த இடத்தை வழங்கியதன்மூலம் தமது நம்பிக்கைக்குரியவர் ஹெஸ் என்பதை உலகுக்கு அறிவித்திருந்தார்.

‘ஹெஸ்’ஸை அறிந்தவர்கள் அவருடைய இங்கிலாந்து விஜயத்திற்கு வேறொரு காரணத்தை முன் வைக்கிறார்கள்; அது அவரது சொந்த முயற்சியாக இருக்காதென்பது அவர்கள் வாதம். குறிப்பாக ஹெஸ்ஸ¤டன் பழகிய நண்பர்கள், உறவினர்களின் கூற்றுப்படி, சரித்திர வல்லுனர்களை திகைப்பில் ஆழ்த்திய இச்சம்பவத்திற்கு ஹெஸ்ஸின் அபிமானத்திற்குரிய நண்பரும் பேராசிரியருமான கார்ல் ஹௌஸ்ஷோபரிடம் வைத்திருந்த அளவுகடந்த பக்தியை குற்றம் சொல்கிறார்கள்.பின்னவர் ஹெஸ்ஸிடம் ஒரு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். நமது கதை நாயகரின் பைத்தியக்காரத்தனமான விமான பயணம் மாத்திரமல்ல அவருடைய உயிர்வாழ்க்கையும் கார்ல் ஹௌஸ்ஸ்ஹோபரின்  சிந்தனையை ஒட்டியதாக கடைசிவரை இருந்தது.

கார்ல் ஹௌஸ்ஷோபரை ஓர் அசாதாரண மனிதரென்றே சொல்லவேண்டும். தம்மை சுற்றியிருந்த மனிதர்களிடத்தில், எதையும் தீர்க்கதரிசனத்துடன் கணிக்க தம்மால் முடியும் என்று நம்பவைத்தார். முதல் உலகப்போரின்போது ஒரு நாள் ஹௌஸ் ஷோபர் ஒரு ராணுவ உயர்மட்ட அதிகாரியோடு இரயில் பயணம் செய்யவேண்டியிருந்தது. இரயில் புறப்படவிருந்த சமயம், கடைசி நிமிடத்தில் தமது பயணத்தை இரத்து செய்வதாக அறிவித்தார். அதற்கு அவர் சொன்ன காரணம் பயணத்தின்போது இரயில் குண்டு வீச்சிற்கு ஆளாகுமென்பதாகும். அவர் கூறியதுபோலவே இரயில் குண்டுவீச்சில் சேதமுற்று நூற்றுக்கணக்கான உயிர்களை பலிவாங்கியது. இதை ஹெஸ் நேரிடையாகக் கண்டு ஹௌஸ் ஷோபெர் திறனைக் கண்டு பிரம்மித்ததாக, கூறியிருக்கிறார். ஹெஸ் தமது அபிமான பேராசிரியரின் மகனிடமும் நட்பு பாராட்டினார்.  ம்யூனிச் நகரிலிருந்த அந்த வீட்டிற்குச் செல்வதை வழக்கப் படுத்திக் கொண்டிருந்தார். அப்போதெல்லால் கார்ல் ஹௌஸ்ஷோபர் பிரிட்டனையும் அந்நாட்டின் மக்களையும் சிலாகித்து சொல்வது வழக்கம். ஜெர்மானியரும் ஆங்கிலேயரும் கார்ல் ஹௌஸ்ஷோபருடைய கூற்றின்படி ஒரு தாய்வயிற்றுப் பிள்ளைகள். அதன் பின்னர் சந்தர்ப்பம் வாய்த்தபோதெல்லாம் இட்லரிடம் ஜெர்மனும் இங்கிலாந்தும் சேர்ந்து வாழ்வதன் அவசியத்தை வலியுறுத்தியதோடு,  ஒருமுறை அரசுமுறைப்பயணமாக இட்லர்  பிரிட்டன் சென்று வரவேண்டுமென்கிற யோசனையையும் முன்வைத்தார். 1940ம் ஆண்டு ஹௌஸ்ஷோபர் இங்கிலாந்திடம் ஜெர்மன் சுமுகமான உறவை பேணவேண்டுமென வற்புறுத்தினார். இட்லர் ரஷ்யாவைத் தாக்க  முடிவெடுத்தபோது, ஹௌஸ் ஷோபர், கோரிங், ஹெஸ் ஆகிய மூவரும் ஜெர்மன் அரசு நடத்தவிருக்கும் இருமுனைத் தாக்குதல் என்பது ஆபத்தை விலைக்கு வாங்குவதற்குச் சமமென்று தெரிவித்திருந்தார்கள்.

– இருமுனைதாக்குதலென்பதே இல்லை, சுவர்போல அட்லாண்டிக் பெருங்கடல் துணையிருப்பதால் ரஷ்யாவை தரைமட்டமாக்குவதென்பது எளிதில் முடியுமென்ற பதில் இட்லரிடமிருந்து தீர்க்கமாக வந்தது.

பதிலைக்கூறிய இட்லர் கார்ல் ஹௌஸ்ஷோபர் மூவர் அணியின் கோரிக்கையைக்கேட்டு சிரித்திருக்கிறார். இங்கிலாந்துடன் சமாதானமாக போகச் சொல்லும் யோசனையை வரவேற்க கூடிய நேரம் அது அல்லவென்பது இட்லரின் கருத்து, அதுவும் ஜெர்மனியர்களில் கப்பற்படையும், வான்படையும் நவீனப்படுத்தியிருக்கின்ற நேரத்தில். 1940லேயே தாம் போனால் போகிறதென்று சொல்லி இங்கிலாந்துடன் சமாதானத்தை ஏற்படுத்திக்கொள்ள விரும்பியதாகவும் அதற்கு பிரிட்டிஷ்காரர்களிடமிருந்து எவ்வித பதிலுமில்லை என்பதை தமது நண்பர்களுக்கு இட்லர் நினைவூட்டினார்.

1940 ம் ஆண்டு ஆகஸ்டுமாதத்தின் இறுதியில் ஒருநாள் ஹெஸ்ஸ¤ம் பேராசிரியரும் மாலை ஐந்து மணிக்கு ஆரம்பித்து விடிய விடிய பேசினார்கள். கூரூன்வால்ட் காட்டில்மட்டும் சுமார் மூன்று மணிநேரத்திற்கு உரையாடல் நீண்டிருக்கிறது. உரையாடலின் கருப்பொருள் பிரிட்டன் மீது ஜெர்மன் திட்டமிட்டுக்கொண்டிருந்த தாக்குதல் பற்றியது. உரையாடலின் சாரம் பொதுவான ஓர் இடத்தில் வைத்து ஜெர்மன் மற்றும் ஆங்கிலேயருக்கிடையேயான யுத்த பதட்டத்தை தணிக்கும் வகையில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வது. அதற்கு இரு தரப்பிலும் ஆதவுதரகூடியவர்களின் உதவியை நாடுவது. இங்கிலாந்து தரப்பில் அதற்கு உகந்த நபர் சர் ஐயன் ஹாமில்டன் அதாவது ஏற்கனவே இக்கட்டுரையில் நமக்கு பரிச்சயமான ஹாமில்டன் பிரபு. அவருக்கு கடிதம் எழுத லிஸ்பன் நகரில் வசித்த இவர்களுக்கு நன்கு அறிமுகமான பிரிட்டிஷ் பெண்மணியொருத்தியின் உதவியை நாடுவதென தீர்மானித்தார்கள்.  இது சம்பந்தமாக ஹெஸ், கார்ல் ஹௌஸ்ஸ் ஷோபெர், அவருடையமகன் ஆகிய மூவருக்கிடையே தொடர்ந்து கடிதப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தன. அக்கடிதங்களில் அப்பெண்மணியின் இடத்திலோ அல்லது ஹாமில்டன் யோசனையின்படி பொருத்தமான ஓர் இடத்திலோ இருதரப்பிலும் தலா ஒருவர் சந்திக்க ஏற்பாடு செய்வது குறித்து சற்று விஸ்தாரமாகவோ யோசித்திருக்கிறார்கள். ஆகஸ்டு மாதத்தின் இறுதியில் நடந்துமுடிந்த உரையாடலைத் தொடர்ந்து ஹெஸ் செப்டம்பர்மாதம் 10ந்தேதி கார்ல் ஹௌஸ் ஷோபருக்கு எழுதியிருந்த கடிதம் நமக்கு மிகத்தெளிவாக அவர்களுடையை யோசனையை விளக்குகிறது. அதே மாதத்தில் மேற்கண்ட கடிதத்தின் அடிப்படையில் ‘மிகவும் ரகசியம்’ என்று குறிப்பிட்டு  கார்ல் ஹௌஸ்ஷோபரின் மகன் ஆல்பிரெஷ்ட் ஹௌஸ்ஷோபெர் ஹெஸ்ஸ¤டனான தமது சந்திப்புபற்றி எழுதியிருக்கிறார். ஹெஸ்ஸ¤டைய பயணத்தையும், அவரது ஆழ்மனத்தையும் புரிந்துகொள்ள இக்குறிப்பு உதவுகிறது. அந்த ஆவணத்தில் ஆல்ப்ரெஷ்ட் எழுப்பும் கேள்வி: இங்கிலாந்திற்கும், ஜெர்மனுக்குமிடையே அமைதியை ஏற்படுத்திதருவதற்கான வாய்ப்பு இன்னமும் உள்ளதா?

(தொடரும்)

பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள் -10

 கொன்க்கூர் இலக்கிய பரிசு:

எட்மண்ட் டெ கொன்க்கூர் (Edmond Huot de Goncourt)  என்பவரின் மரணத்திற்கு பின்பு அவரது உயிலின் அடிப்படையில் அவரது சகோதரர் ழூய்ல் கொன்க்கூர் (Jules Huot de Goncourt) பெயரில் 1900 ம் ஆண்டில் ஏற்படுத்தபட்டதே கொன்க்கூர் இலக்கிய பரிசு. சகோதரர்கள் இருவருமே எழுத்தாளர்கள். இணைந்தும் தனித்தனியாகவும் இவர்களுடைய படைப்புகள் பிரெஞ்சில் உள்ளன. இவ்வமைப்பு கவிதைகள், கட்டுரைகள் என்று பிற படைப்புகளுக்கு பரிசுகளை வழங்குகிறபோதிலும் புனவுகளுக்கு வழங்கப்படும் பரிசே முக்கியத்துவம் வாய்ந்தது. பிரெஞ்சில் இன்றுவரை பல இலக்கிய பரிசுகள் இருப்பினும், கொன்க்கூர் இலக்கிய பரிசு என்பது ஓர் எழுத்தாளனை சிறந்த படைப்பாளியாகவும் பரிசுபெற்ற படைப்பின் விற்பனையை அதிகரிக்கவும் துணைநிற்கிறது. பிரெஞ்சு மொழியில் பரிசுக்கான ஆண்டில் வெளிவந்த நாவல்களைக் கணக்கிற்கொண்டு தேர்வு செய்கிறார்கள். போட்டியில் கலந்துகொள்வதற்கான நுழைவுத் தகுதி போட்டிக்கான ஆண்டில் ‘உரைநடையில் வெளிவந்த மிகச்சிறந்த புனைவு’ (‘le meilleur ouvrage d’imagination en prose, paru dans l’annளூe’). போட்டியை நடத்துபவர்களே – (l’Acadளூmie Goncourt) தேர்வுக்குரிய நூல்களைத் தேர்வு செய்கிறார்கள். படைப்பாளரோ, பதிப்பகமோ தங்கள் நூல்களை அனுப்பவேண்டியதில்லை, அனுப்பவுங்கூடாது. ஒருமுறை பரிசுபெற்றவரை மறுமுறை தேர்வுசெய்வதில்லை.

நான்கு கட்டமாக தேர்வுகள் நடைபெறுகின்றன. முதற் கட்டத் தேர்வில் (செப்டம்பர் முதல் வாரம்) 15 நூல்கள், இரண்டாம் கட்டத் தேர்வில் 8 நூல்கள் ( அக்டோபர் முதல்வாரம்) மூன்றாம் கட்டத் தேர்வில் நான்கு நூல்கள் (அக்டோபர் இறுதிவாரத்தில்) என முடிவு செய்கிறார்கள் ஆக நேற்று அறிவிக்கப்பட்ட முடிவில் (அக்.25) 2011 நவம்பர் மாதம் 2ந்தேதி அறிவிக்கப்படவுள்ள இறுதித் தேர்வுக்குத் தகுதியானவையென நான்கு படைப்புகளை தெரிவு செய்துள்ளனர்.

1. Sorj Chalandon –  Retour தூ Killybegs – Grasset
2. Alexis Jenni –  L’Art franவூais de la guerre – Gallimard
3. Carole Martinez –  Du Domaine des Murmures – Gallimard
4. Lyonel Trouillot – La belle amour humaine – Actes Sud

1. Retour à Killybegs – கில்லிபெக்கிற்கு திரும்புதல்  என்ற நூல் அயர்லாந்து விடுதலைப்படை (IRA)- என்ற தீவிர தேசிய அமைப்பில் பங்குபெற்று பின்னர் அந்த அமைப்புக்கு எதிராக அரசுடன் சேர்ந்து செயல்பட்ட  Tyrone Meehan என்பவரின் செயபாட்டில் உள்ள அரசியலையும், மனித குணபண்பையும் இந்த மனிதனின் ஊடாக  ஆசிரியர் சாற்பற்ற விவாதத்தை எழுப்புகிறார். இலங்கை நண்பர்கள் இப்படியொரு நாவலை கருணாவை மையமாகக்கொண்டு எழுதலாம் ஆனால் சார்பற்று சொல்லப்படவேண்டும். வெறும் அரசியல் சார்ந்து சொல்லாமல் மனித மனங்கள் முரண்களை பற்றுவதற்கான கணங்களில் எப்படிச் செயல்படுகின்றன என்பதைச் சொல்ல உளவியல் அடிப்படையிலான கண்ணோட்டம் அவசியம். Sorj Chalandon: நூலின் ஆசிரிரியர். Liberation தினசரியில் பத்திரிகையாளர். இவரது 4வது நாவலே மேலேகுறிப்பிடப்பட்டது. இதற்கு முன்பு  மூன்று நாவல்கள் வந்துள்ளன. மூன்றுமே இலக்கிய பரிசுகளை ஏற்கனவே பெற்றுள்ளன. இந்நாவல் கடந்த செப்டம்பர்மாதம் வெளிவந்தது.

2-L’Art français de la guerre -(பிரெஞ்சுக்காரர்களின் ராணுவக் கலை) என்ற இந்த புனைவு Alexis Jenni என்பவரால் எழுதப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவ தளபதி தனது அனுபவங்களை, நிரந்தர வேலையின்றி ஊர்ச்சுற்றிக்கொண்டு காதல், மரியுவானா இரவு விடுதிகளென அலையும் ஓர் இளஞனிடம் பகிர்ந்துகொள்வதாகப் புனையப்பட்டுள்லது. அலெக்ஸிஸ் ஜெனி என்கிற உயிரியல் ஆசிரியருக்கு இது முதல் புனைவு.

3.- முனகலின் வெளி (Du Domaine des Murmures). இடைக்காலத்தைப்பற்றி பேசும் புனைவில் உண்மை புனைவு இரண்டுமுண்டு. பன்னிரண்டாம் நூற்ராண்டுக்கு வாசகர்களை அழைத்துச்செல்கிறகதை. முழுக்க முழுக்க புனைவை வடிப்பதைக்காட்டிலும், உண்மை வரலாற்றை புனைவிற்கொண்டுவருவதற்கு உழைப்பு வேண்டும். உரிய சான்றுகள் வேண்டும் அதை உண்மையா என பலமுறை ஒப்பிட்டுப்பார்க்கவேண்டும், காலத்தை வரையறுப்பதிலும் வரிசையிடலிலும் கவனம் வேண்டும். செஞ்சியைப்பற்றி எனது நாவலில் சீர்காழியில் நடைபெறும் முலைப்பால் உற்சவத்தின் மாதமும், கொள்ளிடத்தில் ஆடிப்பெருக்கும் கால வரிசையில் பிறழ்ந்து இருப்பதைக் கவனித்து திரும்பவும் எழுதவேண்டியிருந்தது. ஒரு பெண்ணுக்கு இரட்டைசடை என எழுதி பின்னர் அதைத் தைத் திருத்த வேண்டியிருந்தது. இதுபோன்று சின்ன சின்ன அவதானிப்புகள் தேவையாகின்றன. அதற்கான மொழிகள் வேறு உடை, உணவுமூறை, வைத்திய மென்று இன்றுள்ள சித்த ஆயுர்வேதத்தை போகிற போக்கில் மறுபதிவுசெய்யலாமா? அவற்றை எவைகளெல்லாம் உண்மையிலிருந்தன. என்கிற கேள்விகள் வரலாம். பன்னிரண்டாம் நூற்றாண்டை முன்வைத்துசொல்லப்பட்டுள்ள இந்நாவல் இரண்டு நாட்களுக்கு முன் வாங்கினேன். இதற்குப் பரிசு கிடைக்கவேண்டும் என்பதென் விருப்பம்.

ஓர் இளம்பெண் – Esclarmonde- மானிடவர்க் கென்று பேச்சுப்படில் வாழ்கில்லேன்” என்கிற நமது ஆண்டாள் வழிவந்தவள். பெற்றோர் தீர்மானிக்கும் திருமணத்தை மறுக்கிறாள். ஆழ்வார் ஆண்டாளை அரங்கனோடு சேர்த்துவைக்கிறார். இங்கே Esclarmonde  கோட்டையொன்றில் சிறைவைக்கப்படுகிறாள். அவளுக்கு வெளியுலக்தொடர்பு என்பது ஒரு சிறிய சன்னல். அவளுடைய சிறை அவளுக்குக் கட்டப்படுள்ள சமாதியென்று தெரியாமலே அங்கிருக்கிறாள்;  இப்புதிய தனிமைக்கும் அவள் நேசித்த தனிமைக்கு பாரிய இடைவெளிகொண்டதென்கிற உணரத்தொடங்குகிறபோது, செத்த உயிர்களோடு கைகோர்க்க நேரிடுகிறது தான் உயிருள்ள ஜென்மமா, இறந்த ஜென்மமா எனத் தெரியாமல் தடுமாறுகிறாள். தந்தையின் அதிகாரம் கழுத்தை நெரிக்கிறபோது அவளுடைய சுதந்திரக்குரல் அல்லது ஈனஸ்வரம் அவளுடைய எம்பிரான் வாழும் புனிதஸ்தலத்தில் (இஸ்ரேல்)எதிரொலிக்கிறது. இநாவல் குறித்து தனிக்கட்டுரை எழுதவேண்டும். Carole Martinez என்ற பெண்நாவலாசிரியருக்கு இது இரண்டாவது நாவல். அவரது முதல் Le Cஞூur cousu, Paris, னditions Gallimard மூன்று பரிசுகளை வென்ற நாவல்.

4. ஓர் இனிய மானுடக் காதல் -( La belle amour humaine)  Lyonel TROUILLOT என்கிற ஹைத்திநாட்டைச்சேர்ந்த படைப்பாளியின் கதை. மேற்கிந்திய தீவு ஒன்றிர்க்கு தனது தந்தையைத் தேடிவரும் மேற்கத்திய இளைஞனின் உளவியல் தேடலை விவரிக்கும் புனைவில் இன்றைய உலகவாழ்க்கைக்கு மனிதனின் எந்த அவதாரம் உகந்ததென்கிற கேள்விக்கு விடைதேடுகிறது. நாவலாசிரியருக்கு இது மூன்றாவது நாவல். .

——————————————————

மொழிவது சுகம்-Oct.15

லக அழகித் தேர்வும் ஓர் உண்மையும்..

அமெரிக்க தூதரகத்தின் சென்னைக்கிளையின் தூதுவர், பல்கலைகழகமொன்றில் ஆற்றிய உரையில், சுமார் இருபது ஆண்டுகளுக்குமுன்பு ஒரு மாணவியாக இந்தியா வந்திருந்தபோது தமது பயண அனுபவமொன்றை கோடிட்டுக் காட்டுகிறார். இந்தியர்களின் சினேகித மனப்பாங்கையும் பரிவையும் கண்டு வியந்தோதியவர் உரையின் எச்சமாக நெடிய இரயில்பயணத்தின் இறுதியில் தம்முடைய தோல் தமிழர்களைப்போல அழுக்காகவும் கருப்பாகவும் மாறிவிட்டதென குறிப்பிடுகிறார். மயிர் நீக்கின் வாழா கவரிமான் அன்னார் இனத்தினை சேர்ந்தவர்கள் என்பதால் உடனே நமக்கு கோபம் பிறந்து எதிர்ப்பைத் தெரிவித்தோம். தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழனை அழுக்கானவர் கருப்பானவர்களென்று தவறியுங்கூட உச்சரிப்பதென்றால்  அப்பெண்மணிக்கு வாய்க்கொழுப்பின்றி வேறில்லை. வெள்ளையர்களின் இத்தகு மனப்போக்கு கண்டனத்திகுரியதென்பதில் மாற்று கருத்தில்லை.

எனினும் எனக்கு சில சந்தேகங்கள் இருக்கின்றன. சில தெளிவுகள் தேவைப்படுகின்றன. அப்பெண்மணியை கண்டிக்கிறபோது தமிழர்கள் அழுக்கானவர்கள் என்றதற்காக கண்டிக்கிறோமா கறுப்பானவர்கள் என்றதற்காக கண்டிக்கிறோமா அல்லது இரண்டிற்குமேவா என்று யாரேனும் தெளிவு படுத்தினால் நல்லது. நாம் அழுக்கானவர்கள் எனக் கூறப்படுவதை எதிர்க்கலாம். ஆனால் நம்மை கறுப்பர்களென்று கூறுவதை எதற்காக கண்டிக்கவேண்டும்? என்பது எனக்குப் புரியவில்லை. நமது நிறம் கறுப்புத்தானே இதில் வெட்கப்பட என்ன இருக்கிறது? அமெரிக்க கறுப்பரினத்து மக்கள் தாங்கள் கறுப்பர்கள் என்பதைப் பெருமையாக கம்பீரத்தோடு சொல்லிக்கொள்கிறார்கள்.

நம்முடைய சான்றிதழ்களிலும் பிற அத்தாட்சிகளிலும் தோலின் நிறம் கறுப்பெனக் குறிப்பிடப்பட்டால் கூடாதென்போமா? எப்படி சொல்லலாமென்று  கொடி பிடிப்போமா?  அதையொரு அமெரிக்கர் கூறக்கூடாதெனில் இந்தியாவுக்குள் வரும் வெளிநாட்டினரை அமெரிக்கனென்றோ இத்தாலியனென்றோ, இங்கிலீஷ்காரனென்றோ சொல்லாமல் ‘வெள்ளையர்’ என நாம் உச்சரிக்கும்போது அதுவும்தானே நிறவெறியாகும்.   கறுப்பு நிறத்தின்மீது நம்மிடத்திலுள்ள துவேஷத்திற்கு யாரிடம் நியாயம் கேட்பது. பெண் சிவப்பாய் இல்லையென நிராகரிக்கிற தமிழன் தமக்குள்ள நிறவெறியை உணர்வதுண்டா? பதினாறு வயதினிலே மயிலு கூட வெள்ளைத்தோலுடன் இருக்கவேண்டும் என எதிர்பார்க்கும் பாரதிராஜாவும், திராவிடத்தை குஷ்புவிடம் அடகுவைத்திருக்கும் நமது இனமானமும் எதைச்சொல்கிறது?. சினிமாக்களிலிருந்து சீரியல்கள்வரை கறுப்பு தமிழச்சிகளை வேண்டாமென்கிறோமே, தன்மானத் தமிழர்கள் இவற்றையெல்லாம் யோசிப்பதுண்டா? ஒருவேளை அவர்கள் இலக்கணத்தில் தமிழன் வேறு தமிழச்சி வேறா?

உலகஅழகியாக அண்மையில் அங்கோலா நாட்டைச்சேர்ந்த ஒரு கறுப்பரினபெண்ணை தேர்வுசெய்திருக்கிறார்கள். உலக அழகிதேர்வுக்குழுவில் இடம்பெற்றிருந்த பலர் இவ்வளவிற்கும் கறுப்பர்களில்லை வெள்ளையர்கள். நம்மால் ஒரு கறுப்பு தமிழச்சியை குறைந்த பட்சம் தொலைகாட்சியில் செய்தி வாசிப்பவராகவாவது அனுமதிப்போமா?

——————

பிரெஞ்சு சினிமா:  குற்றமிழைத்ததாக நம்பப்படுபவர்களும் குற்றவாளிகளாக தீர்மானிக்கப்படுவர்களும்

அண்மையில் திரைக்கு வந்துள்ள ஒரு பிரெஞ்சு படம் L’Affaire Outreau – Présumé coupable – ஓர் உண்மைக் கதை. ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையில்  காவல் துறையும் நீதித்துறையும் விளைவித்த பெருஞ்சேதத்தை திரைப்படத் துறையின் அத்தனை உன்னதங்களையும் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு பிரெஞ்சு நீதித்துறையின் அவலங்களை இப்படத்தில் தோலுறுத்தி காட்டியிருக்கிறார்கள். அலென் மரேசோ  நீதித்துறையில் அமீனா வாக பணிபுரிந்தவர். 2001ம் ஆண்டு அவர் செய்யாத ஒரு குற்றத்துக்காக 23 மாதங்கள் சிறையில் இருந்தார். அவர் குடும்பவாழ்க்கை சிதறுகிறது. மனைவி பிரிந்துபோகிறாள். அவரது பிள்ளைகள் தங்கள் உறவைத் துண்டித்துகொள்கின்றனர். அவரது அலவலகம் மூடப்படுகின்றது. அதனைப்பின்னர் ஒரு நூலாக கொண்டுவருகிறார். அதுவே L’Affaire Outreau.

நடந்தது இதுதான். ஊத்ரோ என்ற ஊரைசேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்கள் பெற்றோர்களின் நண்பர்களில் சிலர் தங்களிடத்தில் பாலியியல் குற்றங்களை இழைத்ததாக குற்றம் சாட்டுகிறார்கள். அவர்களின் பெற்றோர்களும் சிறுவர்களின் குற்றச்சாட்டை உறுதிபடுத்துகிறார்கள் அதன் விளைவாக பலர் கைது செய்யப்படுகின்றனர். சிறுவர் மீது இழைக்கப்படும் பாலியல் வன்முறைகளை பிரெஞ்சு சட்டம் மிகக் கடுமையாகத் தண்டிக்கிறது. கைதுசெய்யப்பட்டவர்களில் சிறுவர்களின் பெற்றோர்களும் அடங்குவர். குற்றத்தின் தீவிரம் கருதி கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணையின் அடிப்படையில் விடுதலை மறுக்கப்படுகிறது. வழக்கு விசார¨ணைக்கு வருவதற்கு முன்பே மூன்றாண்டுகாலம் குற்றம்சாட்டப்பட்டவர்கள் சிறையில் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் சிறையிலேயே இறக்கிறார்.  2004ம் ஆண்டு முதல் தீர்ப்பு வழங்கப்பட்டது குற்றம் சாட்டப்பட்ட பதினேழுபேரில் பதின்மூன்றுபேர் தொடக்கத்திலிருந்தே தாங்கள் நிரபராதிகள் என்றார்கள். அரசு வழக்கறிஞர் தவறுதலாக சிலரை வழக்கில் சேர்த்தாகச்சொல்லி  தங்களை நிரபராதிகள் என்று சொல்லிவந்த அப்பதின்மூன்றுபேரில் ஏழுபேரை விடுதலைசெய்தார். நான்குபேர்கள், ஏற்கனவே சிறையிலிருந்த காலத்தை அவர்களுடைய தண்டனைக்காலமாகக் கணக்கிற்கொண்டு விடுதலை செய்யப்பட்டனர். இரண்டுபேர் தொடர்ந்து சிறைதண்டனை அனுபவிக்க நேர்ந்து பின்னர் விடுதலை செய்யப்படுகிறார்கள். தண்டிக்கப்பட்ட மேற்கண்ட ஆறுபேரும் மேல் முறையீடு செய்கிறார்கள்.

தொடக்கத்திலிருந்து தங்கள் குற்றத்தை ஒப்புகொண்டுவந்த நான்குபேருக்கும் அவர்களுடைய குற்றங்களின் அடிப்படையில் 15 – 20 -5- 6 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்படுகிறது. தங்களை நிரபராதிகளென வாதிட்டுவந்த ஆறுபேரின் மேல் முறையீடு பாரீஸ் நீதிமன்றத்தில் நடபெற்றது. முதல் நாளே ஓர் உண்மை தெரியவந்தது. குற்ற்வாளிகளென தீர்மானிக்கபட்டுத் தொடர்ந்து தண்டனைபெற்ற மேற்கண்ட நான்குபேரில் ஒரு பெண்மணி தாம் பொய்யாக மற்ற்வர்களை இவ்வழக்கில் சேர்த்தாக சொல்ல,  நிரபராதிகளென ஆரம்பம் முதல் கூறிவந்தவர்கள் உண்மையிலேயே நிரபராதிகள் எனக் கருதப்பட்டு விடுதலை செய்யப்படுகின்றனர்

குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபரின் குற்றங்கள் நிரூபணம் ஆகாதவரை அவர் குற்றவாளியல்ல. ஆனால் நடைமுறை உண்மை என்பது வேறு. காவல்துறையும், செய்தித் தாள்களும் கூட்டணி அமைத்துக்கொண்டு சமூகத்தின் முன்னால் ஒருவனை குற்றவாளியாக நிறுத்தமுடியும்.

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த பெண்மணியென தினசரியில் செய்தியாக ஒருவர் இடம்பெறுகிறாரென்று வைத்துக்கொள்வோம் அவர் மீதுள்ள குற்றங்கள் நீதிமன்றத்தில் உரிய சாட்சியங்களைக்கொண்டு நிரூபிக்கப்படாதவரை சட்டத்தின் முன் அவர் குற்றவாளியல்ல, அவர் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார் அவ்வளவுதான். ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது. நீதிபதி தண்டிப்பதற்கு முன்பே ஆளாளுக்கு ஒரு கொலைவாளினை வைத்துக்கொண்டு அவளை தேடி அலைகிறார்கள். பெண்மணியின் படத்தைபோட்டு  கீழே பெயரை எழுதி – அருகிலேயே ஒரு நடிகையின் திருமண செய்தி இருக்கலாம்- நீங்கள் அதையும் இதையும் சேர்த்து குழப்பிக்கொள்ள கூடாதுபாருங்கள் அதற்காக. அவள் ஏழையாகவோ, நடுத்தரகுடும்பத்தை சேர்ந்தவளாகவோ இருக்கும் தகுதியொன்று போதும். செய்தித்தாளில் ஆரம்பித்து வரிசையாக பலரும் ஈவிரக்கமின்றி தண்டிக்க தயார். அப்பெண்மணியின் பின்னே ஒரு குடும்பம், பிள்ளைகள், வாழ்க்கை, உறவுகள் இருக்கிறதென்ற பிரக்ஞையின்றி அவளை கால்வேறு கைவேறாக கிழித்துப்போடுவார்கள்.

செல்வாக்கு உடைவன் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டால் -குற்றம் தெளிவாக நிரூபிக்கப்பட்டாலுங்கூட –  அவனைத் தண்டிப்பதற்கு பலமுறை யோசிக்கிற சட்டம் சராசரி மனிதனென்றால் அவசரம் காட்டுகிறது.  குற்றவாளிகளை தாராளமாக தண்டிக்கட்டும் அல்லது ஏதோ காரணங்களால் விடுதலை கூட செய்யட்டும் ஆனால் நிரபராதி ஒருவனை தண்டிக்கிறபோது புலம்ப வேண்டியிருக்கிறது.

இந்திய எழுத்துகளுக்கான இடம்?

பாரீஸ் நகரிலுள்ள புகழ்பெற்ற நவீனகலை அருங்காட்சியகமான Centre Pompidou வில் ‘Paris-Bombay-Delhi’ என்ற பொருளுளில் கடந்த ஆறுமாதகாலமாக கண்காட்சியொன்று நடபெற்று வருகிறது. பிரான்சு மற்றும் இந்தியாவைச்சேர்ந்த நவீனக் கலைஞர்களின் கலைபடைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இக்கண்காட்சி செப்டம்பர் 19 அன்று முடிவுற்றது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கடந்த செப்டம்பர் 16 மற்றும் 17 தேதிகளில் எழுத்தாளர்கள் “மொழிபெயர்ப்பாளர்களின் பார்வையில் இந்தியா” என்கிற இரண்டுநாள் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

இதுபோன்ற நிகழ்ச்சிகளில் சந்தர்ப்பம் வாய்க்கிறபோது கலந்துகொள்வதுண்டு. ஆனால் இம்முறை கூடுதலான ஆர்வத்துடன் நிகழ்ச்சிக்கு செல்ல காரணமிருந்தது. கடந்த ஆறுமாதத்திற்கு முன்பு இங்கே “Echanges et Partages Franco-Indiens என்ற பெயரில் ஓர் அமைப்பை நிறுவினேன். என்னோடு சில பிரெஞ்சு நண்பர்கள் அமைப்பில் வேறு பொறுப்புகளில் இருக்கிறார்கள். எங்கள் அமைப்பில் முக்கிய நோக்கங்களென்று எடுத்துக்கொண்டால் ஆங்கிலத்திலல்லாத பிற இந்திய மொழி படைப்புகளை பிரெஞ்சில் கொண்டுவர முயற்சி எடுப்பது, இந்திய எழுத்தாளர்களையும் பிரெஞ்சு எழுத்தாளர்களையும் வருடத்திற்கொரு முறை இந்தியாவிலோ அல்லது பிரான்சிலோ சந்திக்க ஏற்பாடு செய்வது. எனது இக் கனவை நண்பர் இந்திரனிடம் தெரிவித்தபோது மிகுந்த உற்சாகத்தோடு வரவேற்றார், பல அரிய யோசனைகளை வழங்கினார், வழங்கியும் வருகிறார். எனவே பாரீஸில் செப்டம்பர் 16 -17 ஏற்பாடு செய்யப்பட்ட எழுத்தாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் பார்வையில் இந்தியா என்ற கருத்தரங்கு வழக்கத்திற்கு மாறாக கூடுதலாக எனது அக்கறையைப் பெற்றிருந்தது. தவிர நிகழ்ச்சிக்கான அறிவிப்பில் திருமதி  Dominique Vitalyos என்ற பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர் பெயரிருந்தது. நான் நேரடியாக சந்தித்ததில்லை. ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்பதில் கூடுதல் அக்கறையுடனும், மலையாளத்திருந்தும் மொழிபெயர்ப்பு செய்துவருகிறார். ஆக அவரை சந்திக்கவும் வாய்ப்பு என்று கலந்துகொண்டேன். கேரளத்திலிருந்து வைக்கம் முகம்மது பஷீருடன் இணைந்து அவர் மொழிபெயத்திருந்த பஷீரின் படைப்பினைத் தவிர்த்து அவர் அறிமுகப்படுத்தியுள்ள கேரள எழுத்துகள் ஆங்கிலத்திலிருந்தே வந்திருக்கவேண்டும். ஆக அப்பெண்மணி இந்திய திறமைசாலிகளை கண்டுபிடித்து அறிமுகப்படுத்தி வருவதாக தெரிவித்துக்கொண்டார். இந்தத் திறமைசாலிகளுக்கு அவரது பார்வையில் என்னபொருளென்று விளங்கிக்கொள்ளவும் ஆவல் இருந்தது.

முதல் நாள் நிகழ்ச்சியில் இந்திய எழுத்தாளர்களென்று நான்குபேரை அறிமுகப்படுத்தினார்கள்: Manil suri, Sudhir Kakar, Preeta Samarasan et Kunal Basu. இவர்கள் நால்வரையும் அறிமுகப்படுத்திய Dominique Vitalyos இந்தியாவில் பன்முகத் தன்மையை மேற்கண்ட எழுத்தாளர்கள் வெளிபடுத்துவதாகவும், இன்றைய இந்தியாவின் படைப்புலகை இவர்களூடாக விளங்கிக்கொள்ள முடியுமெனக் கூறி புளகாங்கிதமடைந்தார். இந் நால்வரின் படைப்புகளை இயலுமெனில் வாசித்துப்பாருங்கள். அவற்றின் தகுதரம் குறித்து விவாதிக்க ஒன்றுமில்லை. இதில் பிரீதா சமரசன் என்ற பெண் மலேசியாவைசேர்ந்தவர். தானொரு தமிழ்ப்பெண் என்பதைத் தவிர்த்து இந்தியாவுக்கும் தனக்கும் எந்தத் தொடர்புமில்லை என ஒத்துக்கொண்டார். மற்ற மூவரும் பிரீதா சமரசன் போலவே தாங்கள் தாய்மொழியை வீட்டில் கூட உபயோகிப்பதில்லையென்றும்  இந்தியாவுக்குபோவது கூட அரிதாக நிகழ்கிறதென்றும் ஆனால் இந்தியாவில் ஏற்படும் மாற்றங்களை அவதானித்துவருவதாகவும் தெரிவித்தார்கள். அவர்கள் கூற்றுப்படி இந்தியாவில் பிறந்ததைத் தவிர்த்து அவர்கள் மொழி அளவிலும் பண்பாட்டளவிலும் விலகி வெகு நாளாகின்றது என்பது புரிந்தது?  மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில் தங்கள் படைப்புகள் இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டத்தில்லை எனவும் ஆனால் ஆங்கிலத்தில் தங்கள் படைப்புகள் கிடைக்கிறபோது இந்தியவாசகனுக்கு பிறமொழிகளில் அவற்றைக் கொண்டுசெல்வது அவசியமில்லையெனவும் வாதிட்டார்கள்.

கேள்வி நேரத்தின்போது நான் அவர்களிடத்தில் கேட்டது இதுதான். வந்திருந்த பார்வையாளர்கள் இதுபோன்ற கேள்வியை நான் தவிர்த்திருக்கலாமென்று ‘உச்சு’கொட்டினார்கள். சிலர் எழுந்துவந்தபோது உங்கள் கேள்வி நியாயமானதென்றார்கள்.

” உங்கள் எழுத்தை நான் மதிக்கிறேன். என்னுடைய கேள்வி உங்கள் படைப்பு பற்றியதல்ல மாறாக நீங்களே உங்களை வெளிநாடு வாழ் இந்தியர்களென்று தெரிவித்திருந்திருந்தீர்கள். அப்படி இருக்கையில் உங்களை வெளிவாடுவாழ் இந்தியர்களை பிரதிநிதித்துவ படுத்தும் எழுத்தாளர்கள் (Indian diaspora writers) என்று சொல்வதுதானே நியாயம்? இந்திய எழுத்தாளர்களென்று (Indian writers) எப்படி  அழைத்துக்கொள்ளலாம் எனக்கேட்டேன், தொடர்ந்து அப்படிச்சொல்லிக்கொள்வதில் உங்களுக்கு கூச்சமிருப்பதில்லையா? ” – என்பது எனது கேள்வி.

அவர்கள் பதில் என்னவாக இருக்குமென்று உங்கள் ஊகத்திற்கு விட்டுவிடுகிறேன். உண்மைதான் அது அவர்கள் குற்றமல்ல. வந்திருந்த எழுத்தாளர்களில் ஒருவர் மட்டும் பிரதேசமொழிகளில் எங்களைபோல எழுதுகிறவர்கள் இருக்கிறார்கள் என பெருந்தன்மையுடன் (?) கூறினார்.  மற்றவர்கள் ஒரு படி மேலே போய் நல்ல எழுத்தாளர்கள் பிரதேசமொழிகளிலும் உண்டு என்றார். ஒருவர் இது பிரதேச மொழி எழுத்தாளர்களின் பொறாமைக் குரல் என்றார், பிறகு நக்கலாக நீங்களேகூட ஓர் இயக்கத்தைப் பிரான்சில் தொடங்கலாமென்றார். அவர்களுக்குள்ள உரிமையை ஏற்றுகொண்டாலுங்கூட, பிரதேசமொழிகளில் எழுதுகின்ற இந்திய எழுத்தாளர்களை அழைத்திருக்கவேண்டாமா? என்பதென் கேள்வி. இன்னமும் காலனிய சிந்தனையிலிருந்து விடுபடாமல் ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டிருக்கிற இந்த மேட்டுக்குடிமக்களின் எழுத்துமட்டுமே இந்திய எழுத்தாக கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக பிரச்சாரம் செய்யப்படுகிறதென்பது எனக்குள்ள வருத்தம். அவர்களைக்குற்றம் சொல்வதில் நியாயமில்லை. இந்திய அரசாங்கமும், இலக்கிய மைப்புகளும் என்னசெய்துகொண்டிருக்கின்றன என்ற கேள்விகள் இருக்கின்றன. உடனுக்குடன் ஆங்கிலத்திலிருந்து  தமிழுக்குப் படைப்புகள் வருகின்றன, ஆனால் அது ஒருவழிப்பாதையாக இருப்பதுதான் சோகம்.

மறு நாள் மொழி பெயர்ப்பென்ற தளத்தில் நடந்த விவாதத்தையும் நவீன தமிழிலக்கியத்தினை பிறமொழிகளிற் கொண்டுசெல்ல முனைகிறபோது எதிர்கொள்ளவிருக்கிற சிக்கல்களையும் அடுத்த இதழில் தெரிவிக்கிறேன்.

———-

கவனத்திற்கொள்ள வேண்டிய பதிவுகள் -அக்.11.

வளவு

திரு இராம.கி. எனும் திரு இராமகிருஷ்ணன் என்பவரது வலைத்தலம் ‘வளவு’. இராயர் காப்பி கிளப்பென்ற யாஹ¤ குழுமத்தில் பல தமிழ் ஆர்வலர்களின் பெயர்கள் அறிமுகமாயின. அவற்றுள் திரு இராம.கி பெயருமொன்று. இராயர் காப்பி கிளப் குறித்து தனியாக எழுதவேண்டும். திரு. இராம.கி. பொறியாளர். தமிழில் தீராத காதல்கொண்டு விளம்பரங்களின்றி ஓயாமல் எழுதிக்கொண்டிருப்பவர். தமிழ் வேர்சொற்களை அலசி ஆய்ந்து முன்நிறுத்துபவர். போகிறபோக்கில் தமிழ் என்ற சொல்லேகூட தமிழில்லை என சொல்லிவிடுவாரோ என்ற அச்சம் இடைக்கிடை வருவதுண்டு.  நான் எழுதியிருக்கிற  இந்த பத்து வரிகளில் எத்தனை சொற்கள் தமிழல்லாத சொற்கள் இருக்கிறதோ? அவர்தான் அறிவார். எனக்கு இருக்கின்ற தமிழையே குறையின்றி கொண்டு சேர்த்தால் போதும். எனினும் அவரது வலைத்தலம் நான் விரும்பி படிக்கும் தளம், காரணம் பல நேரங்களில் நல்ல தமிழ்ச் சொற்களின்றி அவதிப்படுகிறபோதேல்லாம் அவரது வலைத்தலம்தான் எனக்கு உதவுகிறது, தவிர அவரது தமிழ் தேசியமும் பாசாங்கற்றது, கட்டுரைகள் அவ்வளவும் போற்றிபாதுகாக்கப்படவேண்டியவை. கடந்த மூன்றுமாதமாக அவர் மாணிக்கவாசகர் காலம் என்ற தொடரை எழுதிவருகிறார். பொறுமையோடு படித்தால், தெரிந்துகொள்ள வழக்கம்போல செறிவான தகவல்கள்.

வலைத்தள முகவரி: http://valavu.blogspot.com/2011/09/1.html

தேவமைந்தன்

நண்பர் தேவமைந்தன் அவருடைய பெயரிலேயே உள்ள வலைத்தலத்தில், திண்ணையில் ஏற்கனவே வெளிவந்த அவரது கட்டுரை ஒன்றை மறுபதிவு செய்திருக்கிறார். திண்ணையில் வாசித்திருக்க சந்தர்ப்பம் இல்லாவர்கள், அமையாதவர்கள் வாசிக்கவேண்டிய ஒன்று. மறுபடியும் வாசித்தாலும் தவறில்லை. ரேங்கே (Ringuet -Philippe Panneton) என்ற கனடா எழுத்தாளரின் ‘முப்பது ஏக்கர்’ புதினம் குறித்தது கட்டுரை. நாவலாசிரியர், நாவல், கருப்பொருள், நாவலின் நாயகன் அவன் எழுச்சி, வீழ்ச்சி எனகட்டுரை ஆழமாக படைப்பட்டிருக்கிறது. தேவமைந்தன் எதை எழுதினாலுலும் மிக கவனமாக சிரத்தை எடுத்துக்கொண்டு எழுதுவார். கிட்டதட்ட எண்பது ஆண்டுகளுக்கு முன்புவந்த நாவலை தேடிப்பிடித்து நண்பர் பாராட்டுகிறபோது, படிக்கின்ற எவருக்கும் அப்படைப்பை ஒருமுறையாவது வாசிக்க வேண்டும் என்கிற உந்துதலைத் தரக்கூடும். வெகு நாட்களுக்கு திண்ணையில் படித்தது என்றாலும் தேவமைந்தன் எழுத்துக்காகவும் மறுவாசிப்புக்கு உட்படுத்த வேண்டிய கட்டுரை. மறக்காமல் சந்தர்ப்பம் அமைந்தால் ‘முப்பது ஏக்கர்களையும்’ தேடிப்படியுங்கள்.

தேவமைந்தன் வலைப்பூ: http://httpdevamaindhan.blogspot.com/:

அ.ராமசாமி

திரு அ.ராமசாமி வலைப்பூவில் இம்முறை ஹெப்ஸிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு நூலைப்பற்றி மதிப்புரை நோக்கில் ஒரு கட்டுரை. அ.ரமசாமியின் எழுத்துக்களுக்கு எப்போதும் என்னிடம் மரியாதை உண்டு. கட்டுரையில் ஆசிரியர் வணிக எழுத்து இலக்கிய எழுத்தென கட்டமைக்கபட்ட இருபிரிவினருக்கிடையே நடந்த சகோதரச்சண்டையை கோடிட்டு காட்டிவிட்டு கட்டுரை ஆசிரியர் இவ்விரண்டிற்கும் பொதுவானவராக அடையாளப்படுத்திக்கொண்ட  ஹெப்சிபாதாசன் படைப்புகள் பற்றிபேசுகிறார். புத்தம்வீடு என்ற நாவலும் அதன் தொடர்ச்சியாக வெளிவந்த பிற இரண்டு நாவல்களைக்குறித்தும் சொல்லப்பட்டிருக்கிறது. ஹெப்சிபா எப்படி தமது பாத்திரங்களூடாக பிற பழமைவாதிடகளிடமிருந்து வேறுபட்டிருக்கிறார் என்பதை வழக்கம்போல கறாரான தமது வாக்கியங்களின் துணைகொண்டு நிறுவ முயன்றிருக்கிறார். வாசிக்க வேண்டிய பதிவு

அ.ராமசாமி: http://ramasamywritings.blogspot.com/2011/10/blog-post_11.html#more

அசதா

இவரது வலைத்தலத்தில்  யுவான் ருல்போவின் எரியும் சமவெளி  அவலத்துயரின் அழகியல் என்றுள்ள – அண்மையில் இப்பதிவாளர் நாகர்கோவில் நிகழ்வின்றில் நிகழ்த்திய உரையின் – மறுபதிவுவை நண்பர்கள் வாசிக்க வேண்டும்:  தென் அமெரிக்க எழுத்தாளர் யுவான் ருல்·போவின் பதினைந்து சிறுகதைகள் அடங்கிய தொகுப்பை குறித்தது. சில கதைகளை ஆழமாகவும், சிலவற்றை போகிறபோக்கில் ஒன்றிரண்டு வரிகளிலும் சொல்லியிருக்கிறார். யுவான் ருல்போவின் கதைகள் எப்படியிருந்தாலும் இந்த நண்பரின் எழுத்துக்கள் அந்த எழுத்தாளருக்கு கூடுதல் மதிப்பீட்டத் தந்திருக்கின்றன என்பது வெளிப்படை.

அசதா: http://mugaiyurasadha.blogspot.com/

The Prague Cemetery

பொதுவாக பிரெஞ்சில் உள்ளூர் படைப்புகளை தவிர்த்து அந்நிய மொழிகளிலிருந்தும் வருடம் தோறும் விற்பனையில் சாதனை படைக்கும் எழுத்துக்களும், உலகமறிந்த எழுத்தாளர்களின் படைப்புகளும், உலகில் நன்கறியப்பட்ட பதிப்பகங்களின் வெளியீடுகளும் உடனுக்குடன் கிடைக்கின்றன. மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீட்டில் பிரெஞ்சு இலக்கிய உலகம் மிகக் கூடுதலாகவே அக்கறைகொண்டு செயல்படுகிறதெனலாம். அண்மையில் பிரான்சுநாட்டில் விற்பனையில் சாதனைப்படைத்தவர் பலரும் அறிந்த இத்தாலி படைப்பாளியான உம்பெர்ட்டோ எக்கோ. அவருடைய Cimetière de Prague (The Prague Cemetery) என்ற மொழிபெயர்ப்பு வெளிவந்த நான்குநாட்களில் 15000 பிரதிகள் விற்று தீர்ந்ததாக பிரெஞ்சு தினசரிகள் எழுதுகின்றன.

Cimetière de Prague (The Prague Cemetery) நாவலுக்கும் அவரது முதல் நாவலான The name of the Rose க்கும் இடையில் 30 ஆண்டுகள். அதாவது இத்தாலி மொழியில் அவரது முதல் நாவல் வந்த ஆண்டை 1980 என்று கணக்கிட்டால். இடையில் சராசரியாக ஐந்தாண்டுகளுக்கு ஒன்றென அவரது நாவல்கள் வந்துள்ளன. பொதுவாக எக்கோவின் நாவலை வாசிப்பவர்களுக்கு ஒவ்வொரு நாவலுக்கும் அவர் தந்திருக்கும் உழைப்பினை விளங்கிக்கொள்ளமுடியும். எழுதுவது வரலாற்றின் அடிப்படையிலென்பதால் மிகக் கவனமாக சான்றுகளில் கவனம் செலுத்தியிருப்பார், எடுத்தாளும் பொருளிலும் அவருக்குள்ள ஞானம் நம்மை வியப்பில் ஆழ்த்தும். உண்மையையும் புனைவையும் மிகச்சரியான அளவில் கலந்து,  வாசகனை அடுத்ததடுத்து பக்கங்களை புரட்டவைக்கும் அவரது ஆற்றல் பிரம்மிப்புகுரியது. வழக்கம்போல உம்பெர்ட்டோ எக்கோவின் இந்நாவலும் சமயம்- அதன் தகிடுதத்தங்கள், மெய்யியல், புதிர் – மர்மமென பின்னப்பட்டு வாசகனை வெருட்டும் கலையில் தேர்ந்துள்ளது.

அகஸ்ட்டின் பருவலென்ற பிரெஞ்சு சேசுசபையைசேர்ந்த மதகுருவிற்கு ஆகஸ்டு மாதம் 1806ம் ஆண்டு, இத்தாலி படைதளபதி ஜான் பப்திஸ்த் சிமோனினி என்பவனிடமிருந்து ஒரு கடிதம் வருகிறது. அக்கடிதத்தில் அவன் அகஸ்ட்டினின் நூல் (Memoires illustrating the history of Jacobinism) தமக்களித்த உத்வேகத்தை பாராட்டி எழுதுகிறான். – இந்நூல் உலகமனைத்தும் யூதர்களின் அதிகாரத்தின் கீழ் வரவேண்டுமென்ற யூதர்களின் சதிபற்றி பேசுகிறது. உம்பர்ட்டோ எக்கோவின் The Prague Cemetery இந்த உண்மையின் அடிப்படையில் எழுதப்பட்ட புனைவு.  19ம் நூற்றாண்டின் ஐரோப்பிய சம்பவங்களையும் இடைக்கிடை ஆசிரியர் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். The Name of the Rose நாவலில் அபெட் வலே என்பவரால் கையளிக்கப்பட்ட நூலினை நினைவுகூர்வதாக கதை தொடங்கும்  அந்த நூல் டாம் அட்சன் என்பவருடைய கையெழுத்து பிரதியின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு. இந் நாவலும் 1897-98 ம் ஆண்டில் மேலே குறிப்பிட்ட சிமோனினியின் நாட்குறிப்புடன் தொடங்குகிறது. இந்த சிமோனினி ஒரு எதிர் தலைவன் மட்டுமல்ல  ஒரு alter-Egoவுங்கூட, தனக்குள் வேறொரு மனிதனையும் உணருகிறான். அவனை புரிந்துகொண்டால் நாவலும் உங்களுக்கு வசமாகும். அதற்கு முன்பாக கொஞ்சமாக ஐரோப்பிய வரலாறு, கொஞ்சம் கூடுதலாக  பிரெஞ்சு வரலாறு குறிப்பாக பத்தொன்பதாம் நூற்றாண்டு, Masonic conspiracy theories, அகஸ்டின், சிமோனினி இவர்க¨ளை பற்றி தெரிந்துகொண்டு வாசிப்பது நல்லது.
———————————-