Monthly Archives: மே 2020

படித்ததும் சுவைத்ததும்

மலர்கள் விட்டு ச்சென்ற வெற்றிட த்தில்

……(கொரியகவிதைகள் மொழிபெயர்ப்பு தொகுப்பு) மொழிபெயர்த்தவர்கள் : பா. இரவிக்குமார், . கல்பனா

பரிசல் வெளியீடு

 

. « you don’t value a thing unless you have it »

அட்சதைகளுக்காக அடிமைச் சாசனமாக எழுதப்படும் அலங்காரக் கவிதைகளைக் காட்டிலும் « அம்மா இங்கே வா ! ஆசை முத்தம் தா, தா ! » என எழுதப்படும் உயிர்க்கண்ணிகளில்  கவிஞன் வாழ்கிறான்.  « நூலுக்காக கவிதைகள் அல்ல , கவிதைகளுக்காக நூல்  ». கவிதைக்கு மட்டுமல்ல கலை, இலக்கிய ஆக்கங்களுக்கும் இம்முத்திரை பொருந்தும். « The Lacuna » என்றொரு ஆங்கில நாவல், ஆசிரியர் Barbara Kingsolver. ஆழ்நீரில் மூழ்கும் விளையாட்டில் ஆர்வம் கொண்ட ஒருவனின் நாட்குறிப்பாக நீளும் நாவலில் மீன்கள் எழுப்பும் ஓசை குறித்து  ஒரு சுவாரசியமான உரையாடல் உண்டு:

« மீன்கள் எழுப்பும் ஓசையை வெறும் சத்தமாகவும் கருதலாம், பேச்சாகவும் கருதலாம் »,  என்கிறான் ஒருவன் நூலின் கதை நாயகனிடம். « அதை எப்படி அறிவது ? » என்கிற கேள்விக்கு, « மற்ற மீன்கள் புரிந்துகொள்ள  வாய்ப்பளித்து ஒரு மீன் எழுப்பும் ஓசை, பேச்சு » ; பதிலாக « தான் இருப்பதைக் காட்டிக்கொள்ள எழுப்பும் ஓசை, சத்தம் » என்பது கிடைக்கும் பதில்.  இதில் இன்னொன்றையும் நாம் விளங்கிக்கொள்ளவேண்டும். அவ்வோசை உண்மையில் வெறும் சப்தமாகவும் இருக்கலாம், செய்தியாகவும் இருக்கலாம். அவ்வோசையக் காதில் வாங்குகிற பிறவும் எது உண்மையில் பேச்சு, எது வெறும் ஓசை என்பதை என்பதைப் பகுத்தறியும் ஞானம் வேண்டும். இலக்கிய உலகிற்கும் இது பொருந்தும். இங்கு காதுகள் செவிடாகும் அளவிற்கு பறைகள் கொட்டப்படுகின்றன. சங்குகள் ஊதப்படுகின்றன. இருப்பதைக் காட்டுவதற்காகச் சத்தமிடும்  இம்மீன்கள் எழுப்பும் ஓசைகளை பல நேரங்களில் «  புரியாமல் புரிந்துகொண்டது போல » தங்கள் செவுள்களை அசைத்து  அண்டங்காக்களைக்கூட குயில்களென சாதிக்கவும்  ஒரு கூட்டமுண்டு , புரிந்து இதன் அடிப்படை « கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் » ஃபார்முலாக்கள். இச்செய்தியின் மறு விவரணதான் இத்தொகுப்பிலுள்ள « மீன் பாடல்  » என்கிற கவிதை தெரிவிக்கும் செய்தி :

« தொட்டியில் ஒரு மீன் கவனிக்கிறது.

ஒரு பறவையின் பாடல் சன்னல் வழியே பாய்கிறது

பறவை வணங்கி வாழ்த்துகிறது

« எப்படி இருக்கிறீர்கள், திருமீனே ! »

தன் செவுள்களை நெகிழ்த்திக்கொண்டு

மீன் பதிலளிக்கிறது :

« இரண்டு நீர்க்குமிழிகள் ».

இம்மீன் அளிக்கும் பதிலில் கவிஞன் இருக்கிறான். இவ்விரு நீர்குமிழிகள் சொல்லவருவதென்ன ? வாசிப்பவரின் கற்பனைக்கொப்ப இட்டு நிரப்பிக்கொள்ளலாம். மீனின் “இரண்டு நீர்க்குமிழ்கள்” அதன ஓசை புரிந்த பறவைக்கு விளங்கும், காரணம் அதுபேச்சு வெறும் சத்தமல்ல. ஆக உண்மையான இலக்கியம்   யாருக்கு சத்தமாகாதோ அவர்களுடனேயே உரையாடலை நிகழ்த்தும். எல்லோருக்கும் புரியவில்லையே என்ற வருத்தம் உண்மையான படைப்பாளிக்கு கூடாது. நண்பரும் மொழிபெயர்ப்பாளருமான சு. வெங்கிடசுப்பராய நாயகர் அனுப்பிய குறும்பட ஒளிப்பதிவில் தற்செயலாக வாசிக்க நேர்ந்த  « you don’t  value  a thing unless you have it » வாசகம் தெரிவிக்கும் செய்தியும் இதுதான்.

« மலர்கள் விட்டுச்சென்ற வெற்றிடத்தில் » தமிழில் மொழி பெயர்க்கபட்ட கொரிய மொழிக்கவிதைகளின் தொகுப்பு. மொழிபெயர்ந்தவர்கள் கவிதை அனுபவங்களில் தோய்ந்தும், கவிதைகளை வாசித்தும், கவிதைகளை எழுதியும், கவிதைகளோடு பழகியும் வருகிற கவிஞர்கள் : பா இரவிக்குமார், ப. கல்பனா. கவிதைகள் கொரியமொழியிலிருந்து ஆங்கிலத்திற்குப் பயணித்து அங்கிருந்து  தமிழுக்கு வந்துள்ளன. 78 கவிதைகள் கொண்ட ஒரு தொகுப்பு. பரிசல் வெளியீடு. தொகுப்பிற்கு மொழிபெயர்ப்பாளர்கள் எழுதியுள்ள முன்னுரைகள், மொழிபெயர்ப்புக்கான காரணங்களைத் தெரிவிக்கின்றன. தொகுப்பிற்குள் நுழைவதற்கு முன்பாக இம்முன்னுரையை  அவசியம் வாசிக்கவேண்டும். பொறுப்புணர்ந்து சிரத்தையுடன் எழுதபட்ட முன்னுரைகள். ப. கல்பனா, கொரியமொழிக்கவிதைகள் பால் நாட்டம் கொண்ட காரணத்தை முன்வைக்க, பா. இரவிக்குமார் மொழிபெயர்ப்புக் கூட்டுமுயற்சியில் எதிர்கொண்ட சிக்கலையும் கண்ட தீர்வையும் எழுதுகிறார். இம்முன்னுரைகளை வாசிக்காமல் தொகுப்பிற்க்குள் நுழைவது வரவேற்பின்றி ஒரு வீட்டுக்குள் காலெடுத்துவைப்பதற்குச் சமம்.

மொழிபெயர்த்த இருவரும் கவிஞர்கள், கலை  இலக்கியங்களில் ஈடுபாடுகொண்டவர்கள் எனவே சடங்காக அன்றி ஆர்வத்துடனும் அக்கறையுடனும் இக்கொரிய கவிதைகளை கொண்டுவந்திருக்கிறார்கள். ஒரு கட்டுரையை அல்லது ஆவணமொன்றை மொழிபெயர்ப்பதற்கும்  இலக்கிய படைப்புகளை மொழிபெயர்ப்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. சொல், சொல்லின் பொருள், சொல்லின் உபயோகம், அதற்கான காரணம் அனைத்தையும் உள்வாங்கி க்கொண்டு தாய்மொழியில் கொண்டுவருகிறபோது, மூலமொழியின் முகம் கோணாமல் பார்த்துக்கொள்ளவேண்டிய அக்கறை மொழிபெயர்ப்பாளருக்கு இருக்கிறது. ஒரு கவிஞனின் மொழியாடலை, உள்ளத்தை, அவன் உணச்சிகளை சமைத்தல் என்பது அவனுடைய சம தளத்தில் நின்று பெறுவோர்க்கே சாத்தியம். கவிஞர்களின் படப்புகளை கவிஞர்கள் இருவர் மொழிபெயர்த்திருக்கின்றனர் என்ற நம்பிக்கை நூலைத் தொடும்போது நமக்கு எழுவது இயற்கை.

. மொழிபெயர்ப்புக்காக ஒரு கவிதை

கீழ்க்கண்ட கவிதையை வாசியுங்கள், இது கொரியக் கவிதையின்

ஆங்கில வடிவம்:

The Rust Tree Inside Me by Jung Kut-byol
(
녹나무

I’ve been sitting on the windowsill. What has gone wrong?
Alongside a movie theater, a few bars, and a closed supermarket
absurd red insects disappear
I know there’s not any place better than here.
I feared the clock and the train,
wars and horror movies, too. I was young then.

………………………………………………

……………………………………………………

தொகுப்பில் இடம் பெற்றுள்ள தமிழ் மொழிபெயர்ப்பு இது :

எனக்குள் இருக்கும் துருவேறிய மரம் –  யுங் கட் பையல்

சன்னலருகில் அமர்ந்த்திருக்கிறேன்

என்ன தவறு நேர்ந்துவிட்டது

திரையரங்குகளில்

சில மதுக்கடைகளில்

மூடிய அங்காடிகளில்

வேடிக்கையான சில பூச்சிகள் மறைகின்றன.

இந்த இடத்தைவிட

சிறந்த இடம்

வேறொன்றுமில்லை

என்பதை அறிவேன்

கடிகாரத்தையும் இரயிலையும்

கண்டு அஞ்சினேன்….

போரையும் பயங்கரத் திரைப்படங்களைப்

பார்த்தும்.

அப்போது நான்

இளையவள்.

 

இது வெறும் மொழியாக்கமல்ல, கவிதை ஆக்கம். மூலமொழியில் இக்கவிதையை நாம் அறிந்தது இல்லை. ஆனால் ஆங்கில மொழியில் அக்கவிதைக்குரிய அத்துணை அடர்த்தியும், செறிவும் நேர்த்தியும் தமிழுக்கு வந்திருக்கிறது, தமிழ்க்கவிதையாகப் படைக்கப்பட்டிருக்கிறது.

 

. சுவைக்காக ஒரு கவிதை

 

முதுமை என்பது வாழ்க்கைப் போரின் தோல்விக் கட்டம். எல்லாபோர்களையும் போலவே உயிர் வாழ்க்கை யுத்தமும்: எல்லைப்பிரச்சனைகள், எதிரிகள், திட்டமிடல்கள், சூட்சிகள், யுத்த தந்திரங்கள் ஆயுதங்கள், வெற்றிகள், சமாதானங்கள் என்கிற   தொடர் அத்தியாயங்களால் எழுதப்பட்டவை. பலமுறை வில்லன்களுடன் போரிட்டும் வெற்றியை ருசித்துமிருப்போம் தோல்வியில் துவண்டு பினர் வீறுகொண்டு எழுந்துமிருப்போம். ஆனால்  உயிர்வாழ்க்கை யுத்தகளத்தில் இறுதிக்கட்ட போரென்று ஒன்றுண்டு, அதில் தலைவன் வாகை சூடுவதில்லை. தோற்றேஆகவேண்டும். அவன் இராமனாக இருந்தால் கூட. எதிரியின் ஆயுதம் முதுமை எனும் ஈட்டி. எதிரி யாரென்று சொல்லவில்லையே,  இயற்கை. இராவணனைக் காட்டிலும் பல தலைகள் கொண்ட விலங்கு. கடலைப்போல காற்றைபோல அமைதியையும் அறியும் வெகுண்டெழவும் செய்யும். இறுதிவெற்றி தமக்கென்ற இறுமாப்பு என்றைக்கும் அதற்குண்டு.

மகா அலெக்ஸாந்தர் மகாசீஸர் அவர்களைப்போல வெல்லமுடியாதென்று வீறாப்பு பேசிய மகாமகா மனிதர்கள் பலரும் இறுதியில் மண்ணுக்குள் புதையுண்டவர்கள், தீக்குள் சாம்பலானவர்கள்தான். ஏதோ ஒரு நாளில் இயற்கை விழுங்கி ஏப்பமிடும் மனிதர் வாழ்க்கையை . “இலை உதிர்கால நாள் »    கவிதை நமக்குத் தெரிவிக்கும் உயிர் வாழ்க்கைப் பற்றிய சத்தியம் கவனத்திற்கொள்ள தக்கது.

 

பெர்சிமன் மரக்கிளையின் நுனியில்

அமர்ந்தது ஒரு தும்பி

மயங்கி யிருந்த ஒரு நாள் முழுவதும்

காற்றடித்தபோதும், அது அசையவில்லை

குளிர்மழைபெய்தபோதும்

மரக்கிளையை ருசித்தபடியே.

அது அசையவே இல்லை.

 

மெதுவாக அதனை நெருங்கியபோது

திடுக்கிட்டேன்

அதேஇடத்தில்

அது முக்திநிலை அடைந்திருப்பதைப் பார்த்து.

 

கவிதைகள் சில  ஏமாற்றத்தைத் தரினும், அக்விதைகளில் இடம்பெறும் சில வரிகள் அந்த ஏமாற்ரத்தைத் தவிர்க்க உதவுகின்றன:

 

…………..

தயவு செய்து

உங்களை நீங்களே

ஏமாற்றிக்கொள்ளாதீர்கள்.

 

தாலாட்டைப் பாடி

மக்களை நிரந்தரமாக உறங்க வைக்கும்

போலிக் கவிஞர்களே…

நீங்கள் கவிதை எழுதவேண்டும்

என்பதற்காக

வறுமையை வணிகம்செய்து

ஒரு கவளச்சோற்றுக்குத்

தவிக்கும்

பசித்த வாயை அழுக்காக்காதீர்கள்.

 

——-

மலர்கள் மக்களின் கனவுகளாக

இருந்தால்,

எவ்வளவு அழகாக இருப்பார்கள்

மனிதர்கள்

_______

 

 

மேர்குறிப்பிட்ட கவிதைகள் அன்றி இத்தொகுப்பில் நான் வாசித்து மகிழ்ந்த பிற கவிதைகள்: பனிப்பாதை, பனி, மலர்கள் விட்டுச் சென்ற வெற்றித்ட த்தில், அன்றில், சொல், அறிமுகம், மலர்கள், என்னையே அழித்துகொள்ளுதல், ஒரு கதவு திறக்கிறது.

 

மீண்டும் தகவலுக்காக

 

மலர்கள் விட்டுசென்ற இட த்தில்…

கொரியமொழி கவிதை தொகுப்பு

 

மொழிபெயர்ப்பாளர்கள்

பா. இரவிக்குமார் – ப . கல்பனா

பரிசில் வெளியீடு.

 

———————————————————–

ஆனந்தரங்கப் பிள்ளை : வாழ்க்கை, வரலாறு, ஆளுமை – 6

 

          பிள்ளையின் சொல்வன்மை :

 

« கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல். »  என்பது குறள்.

சொல் என்பதைப் போகிறபோக்கில் ஓசையும் மொழியும் சார்ந்த விடயமாக, மொழியின் ஒரு கூறாக கருதி கடந்து செல்வது அறியாமையின் குறியீடு. அதிலும் குறிப்பாக தலைமைப் பண்பை வேண்டுவோருக்குச் சொல்தான் பல நேரங்களில் அவர் எண்ணித் துணிகின்ற கருமத்திற்கு ஒளியூட்டுகிறது, எதிர்பார்த்த பலனை அவர் தந்த உழைப்பிற்கு, அந்த உழைப்பை கோரிய நிறுவனத்திற்கு உரிய பயன்பாட்டை அள்ளி வழங்குகிறது.  சொற்கள் நாம் பிறருட ன்  உறவாட உருவானவை.  சரியாக உபயோகித்தால் பெருங்கூட்ட த்தை உங்கள் பின் தொடரவும் செய்யும், தவறினால் உங்களை அனாதை ஆக்கவும் கூடும். கட்டளை, வேண்டுகோள், ஆலோசனை, அறிவுரை, தூண்டுரை, கருத்து  எனச் சொற்களுக்கு பன்முகத்தன்மை உண்டு.  உச்சரிக்கப்படும் தொனியைபொறுத்து, காலத்தைப் பொறுத்து, உச்சரிப்பவர் உள்வாங்கிகொள்பவர் இருவரின் மனநிலை, பட்டறிவு சார்ந்து அகன்ற பொருள் தரும் வல்லமை பெற்றவை சொற்கள், எனவேதான் அவற்றைக் கவனமாகச் கையாளக் கடமை பட்டுள்ளோம்.

எல்லா ஆளுமைகளையும்போலவே ஆனந்தரங்கப்பிள்ளையின் தொழில்திறனிலும் சொற்கள் அளப்பரிய பங்கினை வழங்கியுள்ளன.  எதிர்கொள்ளும் மனிதர்களை எளிதாக ஈர்க்கும் உருவத்தை ஆனந்தரங்கப்பிள்ளை பெற்றிருந்தார் என்பதை நாம் அனைவரும் அறிவோம் – திடகாத்திரமான உடல்,  முறுக்கிய மீசை, நெற்றியில் சூரணம், கிரீடம்போல ஒரு தலைப்பாகை.  உடலை மறைக்க விலாவில் முடிச்சிட்ட வெள்ளை வெளேரென்று ஓர் அங்கி, இடையில் ஒரு குறுவாளென்று அம்மாமனிதரின் தினசரியை அணிசெய்த கம்பீரமான தோற்றம், அவர் பெயரை உச்சரிக்கும் தோறும் கண்முன் நிற்பவை.   தோற்றத்தால்  அவர் பேச்சுக்கு வரவேற்பு கிடைத்ததா அல்லது  சாதுர்யமானப் பேச்சு அவர் தோற்றத்திற்கு பொலிவையும் வலிமையையும் அளித்ததா என்பது விடைகாண இயலாத கேள்வி.

« அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்க, மானம் உடைய தரசு »என்ற குறள் தரும் நீதியை முற்றாக நிராகரித்தவை  முடியாட்சிகள். பதினெட்டாம் நூற்றாண்டு தென்னிந்திய அரசுகளும் அதற்கு விதிவிலக்கல்ல. சட்டமும் நீதியும் ஆள்வோரின் நலத்திற்காக என நம்பப்பட்ட காலம், எனவே அவர்களுக்கு ஊழியம் பார்த்தவர்களும் அதை உணர்ந்து பணி ஆற்றவேண்டிய நெருக்கடி.

பிள்ளையின் காலத்தில், புதுச்சேரி அருகில் பல சிற்றரசுகள் இருந்தன. எங்கும் அரசுக்கட்டில் யாருக்குச் சொந்தம் என்பதில் பலத்தப்  போட்டி.  தில்லியில் மொகலாய அரசு பலவீனமடைந்த நிலையில் ஹைதராபாத் நிஜாம் வாரிசுகளிடையே யுத்தம்.  இந்த வாரிசுரிமைப் போட்டி அவர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் பரவிற்று. ஆற்காடு அதிலொன்று. விளைவாக கர்னாடக யுத்தம், தொடர்ந்து தொண்டைமண்டல பிரச்சனைகள், மராத்தியர் படையெடுப்பு, ஆற்காடு, செஞ்சி அரசியல் மாற்றங்கள், இவர்களை ஆட்டுவித்த ஐரோப்பிய வணிக நிறுவனங்களுக்கிடையில் உருவான போட்டிகள்  என்பது அப்போதைய அரசியல் சூழல்.

நிர்வாகிகளின் சொந்த விருப்பு வெறுப்புகள், அரசியல் இலாபம், பொருளாதாரப் பலன்கள் என்கிற பின்புலத்தில் ஓர் அரசு மற்றொரு அரசின் நட்பைக் கோருவதும், தவறினால் யுத்தம் நத்துவதும், முறையான  யுத்த த்திற்கு வாய்ப்பில்லை என்கிறபோது  திடீர் தாக்குதலை நடத்துவதும், எதிரி அரசின் எல்லைக்குள் பிரவேசித்து  குடிமக்களின்  உடமைகளைப் பறிப்பதும், சூறையாடுவதும்  சமூகச் சூழல்.

இவ்வாறான அரசியல் சமூக சூழலில் பிரெஞ்சு கிழக்கிந்திய வணிக நிறுவனத்திற்கு, அதனுடைய  நிர்வாகிகளுக்கு, அவர்களின் கீழிருந்த குடிகளுக்கு, எதிரிகளுக்கு, நண்பர்களுக்கு எல்லோரிடத்திலும் நம்பிக்கைக்குரியவராக பிள்ளை திகழ அவருடைய சாதுர்யமான பேச்சும் உரையாடலும், நலன் விசாரிப்பும், பெரும் மாயையை நிகழ்த்தின என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

குருவப்ப பிள்ளையின் அகால மரணத்திற்குப் பிறகு அவருடைய உறவினரான ஆனந்தரங்கப்பிள்ளை துபாஷியாக நியமனம் ஆகியிருக்கவேண்டும். அவருக்கு ஏன் துபாஷி பதவி கிடைக்கவில்லை, அவருக்குப்  பதிலாக கனகராய முதலியார் தலைமைத் துபாஷியாக நியமனம் ஆனது எப்படி என்ற கதைகளையெல்லாம் வாசக நண்பர்கள் அறிவீர்கள்.  கனகராய முதலியார் இறந்தபின்னராவது இப்பதவி  உரிய காலத்தில் ஆனந்தரங்கரை வந்தடைந்ததா  என்றால் அதுவுமில்லை. கனகராய முதலியாரின் இறப்புக்குப் பிறகு அவருடைய சகோதரர் தானப்ப முதலியார் நேரிடையாகவும், பிறமனிதர்கள் மூலமும் துபாஷி உத்தியோகத்திற்கு முயன்றார். அவர் கிறித்துவர் என்ற ஒரு தகுதியைத் தவிர வேறு தகுதிகள் இல்லை என்பதால் வணிக நிறுவன அதிகாரிகளால நிராகரிக்கப்படுகிறார். அதேவேளை நிர்வாகிகளின் ஏகோபித்த ஆதரவு பிள்ளையின் பக்கம் இருந்தும், கிறித்துவ குருமார்களின் ஆதரவைப் பெற இயலாத  நிலையில் பிள்ளையில் தலைமைத் துபாஷி நியமனம் தள்ளிப்போகிறது. இத்தகைய சூழலில் பிள்ளையின் நெருங்கிய சினேகிதர் போசே  (M de Bausset)  அழைப்பின் பேரில், ஆனந்தரங்கப் பிள்ளை அவரைச் சென்று பார்க்கிறார்.கடன் பத்திரமொன்றில்  நண்பரின் வேண்டுகோளுக்கிணங்க பிணையாகத் தன் கையொப்பத்தை இட்டபின்,  இருவரும்  அன்றைய தகவல்களின் அடிப்படையில்  விவாதிக்கிறார்கள் : எலிஸபெத் என்கிற கப்பல் பற்றிய செய்தி,  கப்பல் நிறுத்தவிருக்கும் காரைக்கால் துறைமுகம், இறக்குமதியாகவிருக்கும் வெள்ளிகட்டிகள், துறைமுகத்திற்கு அரசு ஏற்பாடு செய்துள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளென்று  நீளும் உரையாடலுக்கு இடையில், ‘போசே’ பிள்ளையிடம் அவருக்கு வரவேண்டிய தலைமை துபாஷி உத்தியோகம் தள்ளிப்போக காரணமென்ன ? எனக் கேட்கிறார். அதற்கு  ஆனந்தரங்கப்பிள்ளை அளிக்கும் பதிலும், அப்பதிலைக் காதில் வாங்கிய போசே பிள்ளையைப்பற்றித் தெரிவிக்கும் கருத்தும் நமது ஆய்விற்கு உரியவை.

« எனக்கென்னத்துக்கு அந்த உத்தியோகம், இப்போது எனக்கு என்ன மரியாதை தாட்சியாயிருக்கிறது (குறைவாக இருக்கிறது) ; அரிகை (வெகுமானம்) நடக்கிறது. பல்லக்கு நடக்கிறது. துரை அவர்களுடைய தயவு பூரணமாயிருக்கிறது. சகல மேன்பாடும் நடக்கிறது. அப்படியிருக்க எனக்கு அந்த உத்தியோகம்(பற்றிய) கவலையில்லை…இதல்லாமல் வர்த்தகம் பண்ணிக்கொண்டிருக்கிதற்குச் சமானமில்லை » என்பது பிள்ளையின் பதில்.  இப்பதிலை முன்வைத்து போசே தெரிவித்ததென்று  பிள்ளை தமது நாட்குறிப்பில் நாம் அறிவது : « இதற்கு ஏன்  நீ விதண்டாவாதமாய்ப் பேசுகிறாய். அப்படிப் பேசாதே. பலவந்தமாய் வந்தால் ஏன் வேணாமென்று  சொல்லுகிறாய். உன்னத்தனை சமர்த்தன் ஒருத்தருமில்லை. …….. சின்ன முதலி (கனகராய முதலியார் சகோதரர்) ஆனால் இந்த உத்தியோகத்துக்கு கப்பாசல்ல(தகுதி அல்ல). கிறித்துவரிடையில் மட்டுமின்றி  தமிழரிலேயும்  கெட்டிக்காரர் நீ ஒருத்தர் தவிர வேறேயில்லையென்று துய்மா நாளையிலேதானே நேமிக்கபட்டு சொல்லப்பட்டிருக்கிறது. இப்பவும் முசே துய்ப்ளேயும் அப்படியே சொல்லியிருக்கிறார். கோன்சேல்காரர் (ஆலோசனை சபையினர்) அத்தனைபேரும் உனக்கு இந்த இடம் வரவேணுமென்று சுவாமியைபார்த்து பிரார்த்திக்கிறார்கள் ஏனென்றால், நீ அவரவர் மனது வர நடந்துகொள்ளுகிறபடியால் அவரவர்கள் உமக்கு இந்த இடம் வந்தால் அவரவர் காரியங்களெல்லாம் செய்து கொடுப்பீரென்றுஅவரவர்க்குத் தார்ப்பரியமாயிருக்கிறார்கள். »

இந்த உரையாடலில் இரண்டு விடயங்கள் தெளிவாக இருக்கின்றன. முதலாவதாகத் பிள்ளை தன்னிடத்தில் கொண்டுள்ள அளவுகடந்த நம்பிக்கை.  இரண்டாவதாக,  ஒட்டுமொத்த பிரெஞ்சு கிழக்கிந்திய நிர்வாகிகள் பிள்ளையிட த்தில் கொண்டுள்ள நன்மதிப்பு. « எனக்கு அரிகை நடக்கிறது, பல்லக்கு நடக்கிறது »  எனவே துபாஷி பதவியால் புதிதாகப் பெறுவதற்கு ஒன்றுமில்லை என ஆனந்தரங்கர் பெருமிதம்கொள்வதில் நியாயமுண்டு, காரணம்  «  இசைமுழக்கோடு பல்லக்கில் பயணிக்கவும்,கவர்னர் மாளிகைவரை  போகவும், தங்கப்பிடிபோட்ட கைத்தடி வைத்திருக்கவும், மிதியடியோடு அரசாங்கத்து அலுவலங்களில் தடையின்றி நுழையவும் அவர் உரிமை பெற்றிருந்தார் » என ரா தேசிகம் பிள்ளை பதிவு செய்துள்ளார்.

தலைமைத் துபாஷியாக ஆவதற்கு முன்பாகவும் ஆன பின்னாலும் எங்கெல்லாம் அவர் தேவைக்கு அவசியம்  நேர்ந்ததோ அங்கெல்லாம் நமது ஆனந்தரங்கர் இருந்தார். வணிகராக, தரகராக, ஆளோசகராக, மகாநாட்டாராக சினேகிதராக, குடும்பத் தலைவராக, புரவலராக அவதாரம் எடுக்கும் பாத்திரத்திற்கேற்ப அவருடைய பேச்சாற்றல் ஆலோசனைகளை முன்வைக்கவும், கருத்தைக் கூறவும், பஞ்சாயத்து செய்யவும், சமாதானம் பேசவும், தீர்ப்பு வழங்கவும் உதவிற்று. கவர்னர் முதற்கொண்டு கனகயாய முதலியார் குடும்ப்பிரச்சனைகள் வரை அனைத்து தரப்பினருக்கும் ஆனந்தரங்கர் உதவி வேண்டியிருந்தது.

« ஆனந்தரங்கப் பிள்ளை நாட்டு மக்களிடையே ஏற்படும் தகறாறுகளை தீர்த்துவைப்பதுண்டு. நாள்தோறும் ஊர்ப்பொதுச்சாவடிக்குச் சென்று அவ்விடத்தில் ஆராய்ச்சிக்கு வருகிற இத்தகைய வழக்குகளை அவர் நன்றாக பரிசீலனைசெய்து தீர்ப்பளித்துவந்தார். அவர் செய்யும் தீர்ப்புகள்  எல்லாம் இரு திறத்தாலும் பாராட்டப்படுவையாக இருந்தன » என ரா. தேசிகம் பிள்ளை எழுதுகிறார். « முதல் அதிகாரி முதற்கொண்டு கடைசி சிப்பந்ந்தி வரையில் எல்லோரிடத்திலும் சம அன்பைக் காட்டி வந்தவர் ஆகையால் யாவரும் பதிலுக்கு முழு நம்பிக்கை வைத்து தங்களுக்குத் தெரிந்ததை ஒளியாமல் அவர்களும் சொல்லிவந்தார்களென்றும் அதனால் அரசியல் ரகசியங்கள் முதற்கொண்டு தனிப்பட்டவர்கள் குடும்ப விஷயங்கள் வரையில் யாவற்றையும் அறிந்து ஒரு தீர்மானத்துக்கு வர முடிந்தது » என்பது   ஞானு தியாகு என்பவர் தெரிவிக்கும் செய்தி.

இங்கிலாந்தில் அரசியலில் ஏற்பட்ட குழப்பமும், ஆஸ்த்திரியா வாரிசுரிமைப்போரும், பிரான்சுநாட்டுக்கு ஆதாயமாகவும், எதிரிகளான  இங்கிலாந்து  மற்றும் அங்கேரி நாடுகளுக்கு பெரும் இழப்பில் முடிந்ததாகவும் புதுச்சேரிக்கு  செய்தி வருகிறது. இந்த நிலையில் ஆனந்தரங்கர் வழக்கம்போல  கவர்னர் மாளிகைக்குச் செல்கிறார். அலுவலக கணக்காயர் மத்தியே (Mathieu)  என்பவர் ஆனந்தரங்கரைக் கண்டதும், « ஐரோப்பாவிலிருந்து வந்திருக்கும் செய்தியைக் கேள்விபட்டீர்களா ? » எனக் கேட்கிறார். அதற்கு, « நான் கேட்ட சமாச்சாரமெல்லாம் பொய்யாயிருக்கும், சிறிது சரிப்படாது. தேவரீர் அவர்கள் வாக்கினாலே மெய்யென்று சொன்னேன். இப்போது கச்சேத்(gazette) படித்துபார்த்துச் சொல்லுகிற படியினாலே யார் சொன்னாலும் மெய்யாயிருக்குமென்றும் அல்லாமல் பொய்வராது »என்பது ஆனந்தரங்கரின் பதில். உண்மையில் நமது ஆனந்தரங்கருக்கு இத்தகவல் முன்னதாக தெரிந்திருக்கிறது, அத்தகவல் உண்மையானது என்பதும் பிள்ளைக்குத் தெரியும். இருந்தும் அவருக்கு கிடைத்த தவலை உறுதி செய்துகொள்ளவும், அரசாங்க செய்தி என்பதாலும் மிகவும் எச்சரிக்கையாக வார்த்தைகளைக் கையாளுகிறார். பிள்ளையின் பதிலில் இடம்பெறும் பொய், மெய் என்ற இரு சொற்களும் அவற்றோடு இணைந்த எழுவாய்களும், இறுதியாக  அதிகாரபூர்வமான செய்தியில் பிள்ளை வைக்கும்  நம்பிக்கையும், பேச்சாளரின்  சொல்வன்மைக்குச் சிறு உதாரணம்.

எல்லோராலும் கொண்டாடப்பட்ட ஆன ந்த ரங்கப்பிள்ளையை விரும்பாத ஒரு கூட்டம் இருந்த து, அக்கூட்டம் கிறித்துவல்லாத ஒரு மனிதர் பிரெஞ்சு நிர்வாகத்தில் இவ்வளவு பெரிய செல்வாக்கினை பெற்றிருப்பதை அசூயையுடன் கவனித்தக் கூட்டம். அவர்களில் முதன்மையானவள் கவர்னர் துய்ப்ளேயின் மனைவி ழான் என்பவள். அவள் தீவிர மதவாதி. பிள்ளைக்குக் களங்கம் கற்பிக்க முன் நின்று உழைத்தவள். அவரது காரியம் யாவற்றையும் சந்தேகிப்பவள். கோள்சொல்பவள். ஆனந்தரங்கப்பிள்ளை தனக்கெதிரான அவளுடைய ஒவ்வொரு நடவடிக்கையையும், அவளுடைய கணவரின் உதவியுடனே வெகு எளிதாக உடைத்து நொறுக்கினார் என்பதையும் நாளேட்டின் குறிப்புகள் ஊடாக அறிகிறோம்.  ஆகத் தமது பேச்சுதிறந்தாலே பதினெட்டாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் புதுச்சேரி பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனத்திற்குத் தெம்பூட்டியவர் ஆனந்த ரங்கர். புதுவருட வாழ்த்துக்களை ஒவ்வொரு வெள்ளைக்கார அதிகாரியையும் தேடிச்சென்று தெரிவித்த பண்பு, முதலாவது கர்னாடக யுத்த த்தின் போது, ஆற்காடு அரசியலை புரிந்துகொண்டு பிரெஞ்சு கவர்னரை வழிநடத்திய சானக்கிய திறன்,  தேவனாம் பட்டணம் துறைமுகத்தை கைப்பற்ற இயலவில்லையே என புதுச்சேரி கவர்னர் சோர்வுற்றபோது தெம்பூட்ட தேர்வு செய்த சொற்கள்,  என அவருடைய பெருமைகளைக்கூற  பல உதாரணங்கள் இருக்கின்றன.

எந்த் ஐரோப்பியரிடம் அவர் ஊழியம் செய்தாரோ, அவர்களைப் பற்றி இப்படியும் ஒரு விமர்சனத்தை வைக்கும் துணிச்சலையும் நாம் பிள்ளையைதவிர வேறொருவரிட த்தில் காண இயலாது.  ஒரு பிரச்ச்னையில், பிறர் கூறிய தகவலை தீரவிசாரிக்காமல் பிளேசான்ஸ் (M Plaissance) என்கிற அதிகாரி அறிக்கை ஒன்றை தயாரித்து கவனருக்கு அனுப்பிவைத்ததை,  அவரும் ஏற்றுக்கொண்டு பிள்ளையிடம் அதுபற்றி விசாரிக்க :

«  என் மனதிலே தமிழர் விவேகமில்லாத மடையர், சொன்னதை மெய்யாக எண்ணுகிறவர்கள்.  எரோப்பியர்கள் அப்படியல்ல, எதிலும்  பகுத்தறிவு  உண்டு என்று நான் சிறிது நாள் எண்ணியிருந்தேன். இப்போ பார்க்கப்போனால் வெள்ளைக் காரரிலே முசியே பிளேசாண்சை யொத்த அநேகம்பேர் தமிழரைப்பார்க்கிலும் மடையராகவும், கழுதையாகவும் இருக்கிறார்கள். »

(தொடரும்)

கொரோனா பூனை – நாகரத்தினம் கிருஷ்ணா

வெண் துகில் வெயில் வேய்ந்த  முற் கோடைகாலம். வீட்டுக்கதவை இழுத்துச் சாத்திவிட்டு வெளியில் நின்கிறேன். வளையிலிருந்து வெளிவந்த வயல் எலியின் மனநிலை.  முடங்கிக் கிடந்த உடல் கைகளை அகல விரித்தும், துள்ளுவதுபோல பாவனை செய்தும், சிறு முறுவலுடன் விடுதலைக் கணத்தை ருசித்தது.  தொலைக்காட்சி, கணினி, கைத்தொலைபேசி திரைகளின் பொய்ப்பிம்பங்களில்  அலுப்புற்றிருந்த  விழிகள் ஆர்வத்துடன் அலைபாயத் தொடங்கின.  இயல்பான இருத்தலில் பூமி. ஓசைக்குக் கூட ஊரடங்கோ என சந்தேகிக்க க்கூடிய அமைதி. மனிதர் ஆக்ரமிப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட மகிழ்ச்சியில் இயற்கை.

கடந்த இரண்டு நாட்களாக மழை..மழை. இன்றுதான் சூரியனைக் கான முடிந்தது. உடுத்திய சாம்பல் நிற மேகத்தை களைந்திருக்கும்  நீலவண்ண ஆகாயம் ;  வேலிக்காக வளர்த்திருந்த செடிகளும், மரங்களும் மாசற்று பளிசென்று இருக்க, கைகள் நீளுமானல் கிள்ளித் தின்னலாம் அப்படியொரு பச்சை. குடியிருப்புகளின் சுவர்கள் கூரைகள் கூட மழை நீரில் அலசப்பட்டு பளிச்சென்று இருந்தன. புற்பூண்டுகளும், செடிகொடிகளும்  பூச்சிகள், புழுக்களுக்கு இசைந்து நெளிகின்றன. இலைகள் குலுங்குவதுபோல அசைய,  காற்றுக் கேசத்தை கலைத்துவிட்டு ஊமையாக கடந்துபோனது.  மேய்ச்சலுக்கு அவிழ்த்துவிடப்படாத தொழுவமாடுகள்போல சோர்வுடன் வீதியோரம் நிறுத்தப்பட்ட வாகனங்கள்.  மரங்கள் உயிர்ப்புடன் நின்றவண்ணம் புரள்போவதுபோல பிரமை. மொசு மொசுவென்று என்கால்களில் ஏதோ உரசியது, பதற்றதுடன் குனிந்தேன் : மியாவ் என்று குரலெழுப்பி விண்ணப்பிக்கும் கண்களுடன்  ஒரு  பூனை. கறுப்பு நிறப் பூனை, ஏர்கனவே அதன் உரிமையாளருடன் பல முறைத் தற்செயலாக சந்திக்க நேர்ந்திருக்கிறது. ஆனால் முதன்முறையாக மிக நெருக்கத்தில் பார்க்கிறேன்.

பிராணியின் ஆரோக்கியத்தை, உடல்ரோமங்களின் மினுமினுப்பு உறுதி செய்தது. கரும்பழுப்புக் கண்களில் பளபளப்பு. அருகம்புல் போல பக்கத்திற்கு நான்காக விறைத்திருந்த மீசைமயிரில் கூட வளப்பம் மின்னியது.  அதன் மெல்லிய இலைபோன்ற சிவந்த நா, எந்திரத்தனமாக விநாடிக்கொருமுறை, வெளிப்படுவதும் உதடற்றவாயை ஈரப்படுத்தியபின் தன் இருப்பிடம் திரும்புவதுமாக இருக்க சில கணம் இரசித்தேன். பூனையின் கண்களை இரண்டாவது முறையாகப் பார்க்கிறேன், வெறுமையும் கெஞ்சலும் அப்பி இருக்கின்றன.  இருந்தும், எனது கால்களைத் தனது  முகத்தால் உரசியபின், தம் முன்னிரண்டு கால்களைக் கொண்டு  தெரிவித்த செய்தியை விளங்கிக்கொள்ள பொறுமை இல்லை.  நான் வெளியிற் செல்வதற்கு, என்கைவசமிருந்த படிவம்  அனுமதித்த நேரத்தில், பத்து நிமிடங்கள் ஏற்கனவேசெலவாகிவிட்டன என்பது முதற்காரணம். இரண்டாவது காரணம், பூனை  அண்டைவீட்டுக்காரிக்குச் சொந்தமானது.  பூனையை அலட்சியம் செய்துவிட்டு விடுவிடுவென்று சாலையில் நடக்கத் தொடங்கினேன்.

கடந்த பத்து தினங்களாகவே வீட்டில் அடைத்து வைக்கப் பட்டிருக்கிறோம். கொரோனா  வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள், இறந்தவர்கள் இரு  எண்ணிக்கையுமே மளமளவென்று அதிகரிக்க  எத்தைத் தின்னால் பித்தம் தெளியும் என்ற குழப்பத்தில் நடைமுறை வாழ்க்கையை, முற்றாக அரசாங்கம் முடக்கிவிட்ட து. உரிய காரணங்களின்றி வெளியிற் செல்ல அனுமதி இல்லை. அவசியம் இருப்பின் முகவரியுடன் கூடிய படிவத்தை நிரப்பி அதில்  நாள், வெளியிற் செல்லத் தொடங்கும் நேரம், அதற்கான காரணம் மூன்றையும் குறிப்பிடவேண்டும். இன்றைக்குப் பேரங்காடிக்குச் சென்று அத்த்யாவசியப் பொருட்கள் சிலவற்றை வாங்கவேண்டிய நெருக்கடி. அதற்காக வெளியில் வந்தபோதுதான் கதவருகில் அண்டைவீட்டுப் பெண்மணியின் பூனை தரிசனம்.

இந்தியப் பிறப்பும் வளர்ப்பும் சோற்றைத் தின்று பசியாறும் வழக்கத்திலிருந்து என்னை விடுவிக்காததைப்போலவே சில பண்பாடுகளிடமிருந்தும் என்னை விடுவிக்காமல் சிறைவைத்திருக்கிறது. தந்தையை ; வயதில் மூத்தவரை, நண்பர்களைக்கூட ஒருமையில் அழைப்பது நம்முடைய  வழக்கமில்லை, ஐரோப்பியருக்கு அது சரி. அது போலத்தான் எனது அண்டைவீட்டுக்காரியுடனான எனது இன்னொரு பிரச்சனையும். பெண்மணியின் குடியிருப்புக்கு அருகில்  எனது மனைவி பிள்ளைகளுடன்  வசிக்க நேர்ந்தபோது எனக்கு வயது 30. இன்று ஐம்பத்திரண்டு. எப்போது முதன் முதலாக இருவரும் ஒருவரை மற்றவர் கடந்து செல்ல நேர்ந்திருக்கும்  என்பது நினைவில் இல்லை. ஆனால் இந்த இருபத்திரண்டு வருடங்களில் பல முறை எங்கள் இருவருக்கும் அவ்வாறானச் சந்தர்ப்பங்கள் நிறைய வாய்த்திருக்கும் என்பதை நீங்கள் ஊகித்திருப்பீர்கள். ஐரோப்பியர் வழக்கப்படி அப்பெண்மணி ஒவ்வொருமுறையும் எனக்குப் பிரெஞ்சு மொழியில் வணக்கம் என்ற பொருளில் ‘போன் ழூர்’ என்பாள். முதலில் கூறுவது அவளாகவே இருக்கும். இருந்துபோகட்டும், அதிலென்ன பிரச்சனை என்கிறீர்களா ? பிரச்சனைகள் எதுவும் அவள் தரப்பில் இல்லை, மாறாக எனது தரப்பில் நிறைய இருந்தன.

 

இந்தியப் பண்பாட்டில் அண்டைவீட்டுகாரன் எதிர்ப்படும்போதெல்லாம் வணக்கம் தெரிவிக்கப் பழகியதில்லை. அதிலும் பெண்கள் என்றால், மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என்பது விதி. இத் தொட்டிற் பழக்கம் ஐரோப்பாவரை என்னைத் தொடர்கிறது.  நான் அவளுக்கு முதலில்  « போன் ழூர் » தெரிவிப்பதில்லை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்,  ஆனால் ஐரோப்பியர் நாகரீகத்தை மதித்து அவளுக்கு பதிலுக்குக் குறைந்த பட்சம்  ஒரு புன்னகையையேனும் தெரிவிக்கவேண்டும்.  ஆனால்  அதுகூட  எனது மனநிலையை பொறுத்திருந்தது. உதாரணத்திற்கு அப்பெண்மணி 100முறை எனக்கு முகமன் கூறியிருப்பதாக வைத்துக்கொண்டால், நான்கைந்துமுறை மரியாதை நிமித்தம், பதில் வணக்கம் தெரிவித்திருப்பேன். 95 முறை தெரிவிக்கா த தற்கு, அப்போது வேறுமன நிலையில் இருந்திருப்பேன் அல்லது வேண்டுமென்றே அலட்சியம் செய்திருப்பேன்.

ஓருண்மையைச் சொல்லவேண்டும். இவ்வுலகில் ஒரு சிலர் நிலத்தில் வாழ்வதில்லை, நீரில் வாழ்கிறார்கள்.  நீரெனில் ஆழ்கடலில். மூச்சுத் திணறும்போது நீரின்மேற்பரப்பிற்கு வருவதுண்டு. நுரையீரலை ஆக்ஸிஜனால் நிரப்பிய திருப்தியில் மீண்டும் ஆழ்கடல் மனிதர்களாகிவிடுவர். அவர்களில் ஒருவர் நீங்களா என்றெனக்குத் தெரியாது. ஆனால் நான், அவர்களில் ஒருவன். கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்பிருந்தே சமூக இடைவெளியைத் தீவிரமாகப் பின்பற்றிக்கொண்டிருப்பவன். எனக்கும் அடுத்த மனிதருக்கும் இடையே சமூக இடைவெளி என்பது « கைபட்டுவிடும், தும்மல் தொட்டுவிடும் தூரம் என்றில்லை », மரியாதை நிமித்தமாக எதிர்ப்படும் மனிதரின் புன்னகைகூட  எனக்குத் தீங்காக முடியலாம் எனத் தாள்ளிநிற்பேன், முகத்தைத் திருப்பிக்கொள்வேன்.  இந்தலட்சணத்தில் அண்டைவீட்டுப் பெண்மணியின் « போன் ழூர்  » கடனைத் தீர்க்க வேண்டுமென்பது தலை எழுத்தா என்ன ?

பெண்மணியின் குடியிருப்பு இரண்டு நாட்களுக்கு முன்பும் பூட்டி இருந்த து.  அப்போது அதை நான் பொருட்படுத்தவில்லை.  இன்றைக்கும் பூட்டி இருக்கிறது. அவளுடைய பெழோ 305  நிறுத்தபட்ட இடத்தில் தொடர்ந்து அசையாமல் இருந்தது.  அதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். கோடை நாட்களில் பூட்டப்பட்டிருந்தால், நீண்ட நாள் விடுமுறையைக் கழிக்க பயணம் செய்திருப்பாள் என்பது நிச்சயம். தவிர, அவ்வாறு பயணிக்கிற போதெல்லாம் தம்முடைய செல்லப் பிராணியை பிராணிகள் பாதுகாப்பு சங்கத்தினரிடம் ஒப்படைப்பது பெண்மணியின் வழக்கம். அவர்கள் பூனையைக் கொண்டு  செல்வதை நானே பலமுறை கண்டிருக்கிறேன். ஆனால் இம்முறை அதற்கு சாத்தியமல்ல. கடந்த பதினைந்து நாட்களாக கொரோனா வைரஸ் பிரச்சனையால் போக்குவரத்துகள் முற்றாக முடக்கப்பட்டுவிட்டன. உள்ளூரிலேகூட வீட்டைவிட்டு மனிதர்கள் வெளியில் போவதென்றால் அனுமதிவேண்டும். ஆகப் பெண்மணியின் குடியிருப்புத் தொடர்ந்து அடைக்கப்பட்டிருப்பதற்கு ஒரு வேளை கொரோனா வரஸ் ?  காலைச் சுற்றிய பூனையின் கண்கள் முதன் முறையாக மனதைச் சங்கடப்படுத்தியது.

வீட்டுக்கென சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களைத் தேடி தேடி வாங்கியபொழுது , பூனைக்கென்று டின்னில் அடைத்த உணவுப்பெட்டிகள் இரண்டையும் மறக்காமல் வாங்கிக்கொண்டேன்.  வீட்டிற்குத் திரும்பியபொழுது கதவருகே பூனை இருக்கிறதா என்று பார்த்தேன் இல்லை. அழைப்பு மணியைஅழுத்தினேன். மனைவி கதவைத் திறந்தாள். உதட்டில் விரலை வைத்து, அமைதி என்றாள். அவள் விலகிக்கொண்ட தும்  இரண்டடி  தூரத்தில் பூனை ஆர்வத்துடன் பாலை நக்கிக் குடித்துக்கொண்டிருந்தது. என் புருவங்கள் உயர்ந்ததை விளங்கிக்கொண்டவள்போல, «  பக்கத்து வீட்டுப் பெண்மணியை ஆம்புலன்ஸில் அழைத்துப் போனதை ஒரு வாரத்திற்கு முன்பு பார்த்தேன். அவர்கள் பூனை எப்படியோ தப்பி வெளியில்வந்திருக்கிறது. நல்ல பசிபோல. பாலை ஊற்றி வைத்தேன். முதலில் தயங்கியது வாயை வைக்கலை. இப்போதுதான் குடிக்க ஆரம்பித்த து » மகிழ்ச்சி பொங்க தெரிவித்தாள்.

அவள் கண்களில் தெரிந்த இரக்கம் எனக்கு அச்சத்தைக் கொடுத்த து. பூனையிடம் வைரஸ் இருந்தால் ?  பிராணி நலக் காப்பகத்திற்குத் தகவல் தெரிவிப்பது

நல்லதென்றேன். அவள் சங்கடத்துடன் தலையாட்டினாள். பாலைக் குடித்துக்கொண்டிருந்த பிராணியை நெருங்கி, உடலை இரண்டாக மடித்து  அதன் காதில் மெதுவாக « போன் ழூர் » என்றேன். அதிர்ச்சியில் தலையை உயர்த்திய பூனை சில  நொடிகள் என்னை ஏறிட்டுப்பார் த்த த து, பிறகு எனது மனைவி முகத்தில் சில நொடிகள், அச்சம் நீக்கியதைப்போல தொடர்ந்து பாலைக் குடித்த து.

– நன்றி  காலசுவடு

————————–

மொழிவது சுகம் மே 10 – 2020

அ. படித்த தும் சுவைத்த தும்: சாமத்தில் முனகும் கதவு

    மனம் அதிசயமானது, அதிவினோத பராக்கிரமசாலி. ஐம்புலன்களால்: தொட்டு, பார்த்து, கேட்டு, சுவைத்து,  நுகர்ந்து அறிய இயலாதவற்றை மனம் தொடுகிறது, மனம் காண்கிறது, மனம் கேட்கிறது, மனம் சுவைக்கிறது, மனம் நுகர்கிறது.

மனத்தின்  உண்மையான சொரூபம் நிர்வாணமானது.  உடலைப்போல அலங்கரிக்கப்பட்டதோ, வாசனை ஊட்டப் பட்ட தோ அல்ல. சமயம், சமூகம், அறிவதிகாரம், அனுபவ மூதுரை முதலான கட்டுகள் இறுக மறக்கும் நிலையில் அல்லது தளர்கின்ற கணத்தில் “பசியாற வேட்டையாடுவதில் தவறில்லை” எனபோதிக்கிற மனதின் நியாயத்திற்கு ஐம்புலன்கள் சேவகர்கள். இந்த மனத்தை உளவியல் அறிஞர்கள் நனவு(consciousness), முன்நனவு அல்லது மன உணர்வின் இடைநிலை அல்லது தயார்நிலை(preconciousness), இறுதியாக நனவிலி நிலை (unconsciousness) என வகைப்படுத்துகின்றனர். எழுத்தென்பதே நனவிலி நிலையின் வெளிப்பாடென்பது இவ்வறிஞர்களின் கருத்து.

கேஜே.அசோக்குமார் எழுத்துகள் நனவிலி  நிலையைக் கடந்தவை. அதாவது மன வீட்டின் நிலைப்படியைக் கடந்து, நுழைவாயிலில் காத்திருந்து அலுத்து, வீதிக்கு வந்தவை. தன்னையும் தானறிந்த மனிதர்களையும் மனக்கண்களால் பார்ப்பவை, மனதால் பரிசீலிப்பவை, சிற்சில சமயங்களில் கதையாடல் தேர் தமக்கான வீதியை திசைதப்பியபோதும் கவனத்துடன் தேரடிக்குத் திரும்புகிற கதைகள்.

முதல் மனிதனும் இரண்டாம் மனிதனும்:

மனிதர் சமூகத்தை மூன்று மனிதர்களாகப் பிரதிநிதித்துவப்படுத்தலாம்.  முதல்மனிதன் வேறுயாருமல்ல நாம். மூன்றாம் மனிதன்: நாம் அதிகம் சந்திக்க வாய்ப்பற்ற பெரும் திரளான மக்கள் கூட்ட த்தில் ஒருவன். இரண்டாம் மனிதன்? கண்களுக்கு அப்பால் இருக்கிற மனிதனல்ல தினம் தினம் கண்ணிற் படுகிற மனிதன், கடலுக்கு அப்பால் இருப்பவனல்லன், கைக்கெட்டும் தூரத்தில் இருப்பவன். தூரத்து சொந்தமல்ல பங்காளி .  மூன்றாவது வீட்டிலோ அடுத்த தெருவிலோ வசிப்பவன் அல்ல, உங்கள் தெருவில் நீங்கள் தினமும் சந்திக்கிற எதிர்வீட்டுக்காரன். வேறொரு துறைசார்ந்த ஊழியனல்ல, உங்கள் அலுவலகத்தில் அடுத்த மேசையில் கோப்பு பார்க்கிற சக ஊழியன். வேறு கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியரல்ல, உங்கள் கல்லூரியில் உங்கள் துறை சார்ந்த பேராசிரியர். மலையாள எழுத்தாளரோ, கன்னட மொழி எழுத்தாளரோ அல்ல  நம்பைப்போலவே நோபல் விருதை தவறவிட்ட தமிழ் எழுத்தாளர்.  இந்த இரண்டாம் மனிதனை, அவன் விழுந்தால் ஓடிச்சென்று அனுதாபம் தெரிவிக்கும் மனம் ஆறுதல் படுத்தும் மனம், அவன் எழுந்து கம்பீரமாக நடந்தால்  அசூயை கொள்கிறது. கந்தல் கோலத்தில் பிச்சை கேட்கும் மனிதனுக்கு இரக்கப்படும் மனம், அவனே கொஞ்சம் வெள்ளையும் சள்ளையுமாக வீதிக்கு வந்தால் “இவனுக்கு வந்த வாழ்வைப் பாரு”என்கிறது.  இச்சிறுகதை தொகுப்பின் பிணவாடை   சகமனிதன் வளர்ச்சிக்கண்டு காயும் மனங்களுக்கு நல்ல உதாரணம்.

பெரும் எண்ணிக்கையில் இயங்கும் இத்தகைய முதல் மனிதர்களின் மனதை வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறது கே ஜே.  அசோக்குமாரின் கதைகள். அவர் கதைகள் தன்மையில் சொல்லப்பட்டாலும் படர்க்கையில் சொல்லப்பட்டாலும் வீழ்ந்த மனிதர்களைப் பற்றியது, அவர்களின் வீழ்ச்சிகாண காரணத்தை பார்வையாளனாக அறிய முற்படுவது.

“இரண்டாண்டுகளுக்கு முன்பு பார்த்ததைவிட பாதியாகிவிட்டிருந்த” வௌவால்கள் உலவும் வீடு கதையில் வரும் அண்ணன்; “உன்னைச் சுமந்து செல்ல முடியாது எனச் சொல்லும்படி வளைந்த முன் சக்கரம் ஆடியபடி மறுப்பு தெரிவிக்கின்ற “ சாமத்தில் முனகும் கதவு நாயகன் கூத்தையா; “பிச்சைக்கார ர் என முதலில் நினைத்திருந்தான். ஆனா இல்லைஎன்றும் சொல்ல முடியாது.” எனும் மயக்கத் தோற்றம்கொண்ட அந்நியன் என ஒருவன் பெரியவர்; “தாழ்ப்பாள் போடப்பட்டிருப்பதை உறுதிபடுத்திக்கொண்டு விளக்குகளை அணைக்காமல் “ படுத்துறங்கும் போதும் கனவில் புலியைக் காண்கிற வருகை கதைநாயகன்; “வாசனையே இல்ல. இத யாரு வச்சிக்குவா” எனக் கனகாம்புரம் பூவை விரும்பாத வாசமில்லாத மலர் சந்திரா; “நான் சத்தியபிரகாஷைக்கொன்று அவனுடலில் உட்புகவேண்டும்” என்கிற கொதிநிலை பொறாமையில் உள்ள பிணவாடை பரந்தாமன். “ஆமாமா, நாங்க பிரிஞ்சோன்னயே பெரிய கட தெருவில நட த்த முடியாம வித்துட்டு கும்பேஸ்வரம் கோயில் கிட்டப் போச்சி, அப்புறம் உங்கப்பன் திருவாலூரு போயிட்டு திரும்பிவந்தப்ப கீழ சந்து தெருவில வந்துச்சு. அப்பவே ரொம்ப ஒடிச்சிட்டாரு” மாங்காச்சாமி வரும் கதை சொல்லியின் தந்தை. கதிர்தான் முதலில் பஸ் ஸ்டாண்ட் என்று அழைக்க ஆரம்பித்தான். பஸ் ஸ்டாண்டில் கண்டெடுக்கப்பட்டதால் இப்பெயர்” பஸ் ஸ்டாண்ட் கதையில் வரும் சிறுவனென  தொகுப்பில் எழுத்தின் மையப்பொருளாக இடம்பெறும் ஆண் பெண் இரு பாலருமே வீழ்ந்த மனிதர்களாக இருக்கிறார்கள்.

மனித மனத்தின் ஓட்டைகளும் இரத்தக் கசிவும் அவசரச் சிகிச்சைக்கு காத்திருக்கும் நோயாளியை நினைவூட்டுகின்றன. நமக்கும் வாழ்ந்த மனிதர்களைக்காட்டிலும் வாழ்ந்துகெட்ட மனிதர்களெனில் கூடுதல் கரிசனம்.  மனிதர்களின் இச்சபலத்தை புரிந்துகொண்டு, பரிவும் குற்றவுணர்வுமாக  கதைசொல்லி இம்மனிதர்களை தேடிஅலைகிறார். அலைந்த அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொள்ளும் மொழியும் இதமானவை.

கே.ஜே அசோக்குமாரின் கதைகளில்  உவமைகளும் உருவகங்களும் படிமங்களும் ஏராளம். கொஞ்சம் குறைத்துக் கையாண்டிருக்கலாம். பல இடங்களில் பொருத்தமாக கதைக்கிசைந்து கையாண்டிருப்பதால், அவற்றின் இருப்பையும் சந்தேகிக்க முடிவதில்லை.

“எதிர்ச்சாரி வீட்டுவாசலில் இரவெல்லாம் திரிந்த களைப்பில் இரண்டு நாய்கள் வண்டியில் அடிபட்ட துபோல படுத்துக்கிடந்தன.”

“நீருக்கு அடியில் தெரியும் கூழாங்கல்லைப்போல மின்னும் கண்களோடு உற்சாகத்தோடு அவர் பேசுவதைக்கேட்க சிலர் எப்போதும் இருப்பார்கள்.”

“ கூரையில் ஒட்ட டைகள் வெளித்திண்ணைவரை பரவித் தொங்கிக்கொண்டிருப்பதை இப்போதுதான் கவனிப்பதுபோலப் பார்த்தான்”

“ உச்சியில் சில சில்வண்டுகள் பறந்துகொண்டிருந்தன. நீர்போன்ற தெளிந்த நீலவானத்து பின்னணியில் அது தெளிவாகத் தெரிந்த து.”

தன்மையில் சொல்லப்பட்ட கதைகள் சுயத்துடன் கதை சொல்லிக்குண்டான போராட்டங்களை விவரிப்பவை, ஆழ்மனதின் சிக்கல்கள் குழப்பமின்றி கதைகளாக்கப்பட்டுள்ளன. இத்த்கைய முயற்சிகள் தமிழுக்குத் தேவை. தமிழ்ச் சிறுகதைக் களத்தில் அதிகம் வாசித்திராத கதைக்களங்கள்.  வருகை, எறும்புடன் ஒரு சனிக்கிழமை, சாமத்தில் முனகும் கதவு, அவன் (இதே பெயரில் நான் எழுதியுள்ள ஒரு கதை நினைகுக்கு வந்தது.) ஆகியவை அவ்வகையிலான கதைகள்.

எனக்குக் குறிப்பாக சாமத்தில் முனகும் கதவு, அபரஞ்சி, அந்நியன் என ஒருவன், மாங்காச்சாமி, பின் தொடரும் காலம் ஆகியவை முக்கியமான கதைகள்.எனது தேர்வும் உங்கள் தேர்வும் இணங்கியாக வேண்டும் என்கிற  நிர்ப்பந்தங்கள் இல்லை. ஆனால் ஒரு நல்ல வாசிப்புணர்வை கே ஜே . அசோகுமார் கதைகள் தரும் என்பது உறுதி.

சிலவருடங்களுக்கு முன்பு இச்சிறுகதை தொகுப்பு ஆசிரியரின்  சிறுகதையொன்றை சொல்வனம் இணைய இதழில் வாசித்தேன். பாராட்டியிருந்தேன்.  இத்தொகுப்பிலுள்ள பெரும்பாலால கதைகள்  அதை நிரூபித்துள்ளன. மேலும் வளர்வார். பாராட்டுகள்.

நன்றி : திண்ணை இணைய இதழ்

__________________________________________________________

 

 

 

 

.

கொரோனா பூனை,  சிறுகதைக்குக் கிடைத்த பரிசில்கள்,

காலச்சுவடு  மே இதழில் வெளிவந்த கொரோனா பூனை  சிறுகதைக்குக் கிடைத்த பரிசில்கள், காலச்சுவடு இதழுக்கு மனமார்ந்த நன்றிகள். இக்கதையின் பிரெஞ்சு மொழி ஆக்கத்தை வெளியிட்ட Short édition க்கும் நன்றி

Quelques témoignages d’appréciation reçus sur la nouvelle Cornoa Chat. Un grand merci aux magazines Kalachuvadu pour la publication de cette nouvelle en tamoul et à Short édition pour la publication de cette nouvelle en français

இத்தகைய சூழலிலும் கதை மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. கச்சிதமான மொழியில் எக்கச்சக்கமான தொனிகளோடு.
படைப்பிற்கும் நெருக்கடியான சூழலுக்கும் அப்படி என்ன நெருக்
கமான உறவோ தெரியவில்லை. பாராட்டுக்கள் கிருஷ்ணா!**
– பஞ்சு

——————————————-

வேறு மாதிரியான கதை. சுவையான கதை.      -அம்பை.

—-

 

il faut des moments de crise comme celle que nous vivons actuellement pour que se révéle le vécu intérieur ! la crise a du bon et l’animal nous provoque aussi à l’humanité. Merci ! – – Francis Manet

—–

Bravo pour cette jolie histoire toute pleine de pudeur et d’humanité ! – Manillion

—–

Je viens de la lire : elle est intéressante et bien écrite. Par contre, même si en Inde, on se croise, entre voisins, sans se saluer (d’après ce qu’il dit, mais cela m’étonne),  comme Krishna vit en France, je trouve qu’il pourrait faire l’effort de répondre à la salutation de sa voisine, par exemple. Il présente comme un trait de caractère comme un autre le fait de fuir les autres (un simple sourire le met en fuite, dit-il même), moi je trouve que c’est bien triste : le sens de la vie, d’un point de vue chrétien, c’est d’aimer les autres et d’aller vers eux.

Cordialement.

Miche

——

 

Merci pour le partage de ces écritures conona chat, ça touche a beaucoup de choses, j ai adore,

 

ZOHRA

 

Salut Krihna

 

Ton texte est simple et reposant et amène à la sagesse et l’essentiel comme

respirer et regarder

Je pense l’envoyer à des amis

Merci à toi

 

Xavier

Bonjour Xavier, bonjour Krishna

 

Chat alors !

Merci pour ce sensible et beau témoignage.

J’ai beaucoup apprécié les détails et le goût de ce bonbon rédactionnel.

L’écriture est compréhensive et bien rythmée.

On se plonge très vite dans la truculence de l’histoire et avec avidité on attend la suite …

 

Frédéric

_________________________________________________________________

Bonsoir Xavier,

Merci pour ce partage. Finalement, il a mis le chat à la SPA ? Ou il l’a adopté ? Est-ce que la voisine va mieux ? C’est écrit de façon très fine et détaillée, avec un ressenti singulier et original. N’hésite pas à envoyer d’autres nouvelles de Krishna.

– Anne MARIETTE

 

 

மொழிவது சுகம்  3 மே மாதம் 2020

 தமிழா தமிழா….நாளை ?

நேற்று  காற்றுவெளி வைகாசி மின்னிதழில்  : ஒரு நாள் ஒரு மனிதன் ஒரு குடும்பம்,  என்கிற சிறுகதையை வாசிக்கக் கிடைத்தது ஒரு வார்த்தையில் சொல்வதெனில் அபாரம்.  எனக்கு இலக்கியம் என்பது வெறும் அழகியல் சார்ந்த கலை அல்ல, மனித மனத்தையும் சமூகத்தையும் உள்வாங்கிக்கொண்டு சொல்லப்படவேண்டும். சிறுகதை ஆசிரியர் மு. தயாளன் அப்படி எழுதியிருக்கிறார்.  பாராட்டுகள்.

கதைக்குள் போவதற்கு முன்பாக கதையை முன்னிட்டு என்னுள் விளைந்த  கருத்தை, பங்கிட்டு கொள்ள நினைக்கிறேன்.

இராமன் எத்தனை இராமனடி பாடலுக்கு எதிர்பாட்டு, ஏற்றப்பாட்டுக்குத்தான் எதிர்பாட்டிருக்க வேண்டுமென்பதில்லை.

இரண்டு பிரெஞ்சு பேராசிரியர்கள் : ஒருவர் தமிழர், மற்றவர் பிரெஞ்சுக்காரர். இருவரும் சந்திக்கின்றனர். அவர்கள் உரையாடும் மொழி என்னவாகயிருக்கும் ? நிச்சயம் பிரெஞ்சு மொழி, அது இயல்பு. காரணம் இருவருக்கும் தெரிந்த பொது மொழி பிரெஞ்சு. மாறாக இரண்டு தமிழ் அறிஞர்கள் :  ஒருவர் தமிழர் மற்றவர் பிரெஞ்சுக்காரர். இவர்கள் சந்திப்பு எந்த மொழியில் இருக்குமென எதிர்பார்க்கிறீர்கள் ? பொதுமொழியான தமிழில்தானே இருக்கவேண்டும். ஆனால் அப்படி இருப்பதில்லை. அதை நிராகரித்துவிட்டு தமிழறிந்த இருவரும் ஆங்கிலத்தில் உரையாடுவர். காரனம் நம் தமிழ் அறிஞருக்கு தமக்கு ஆங்கிலமும் தெரியும் என்பதைப் பறைசாற்றவேண்டும். தமிழ் அறிஞரான பிரெஞ்சு காரருக்குள்ள பிரச்சனை நடைமுறை தமிழில் சரளமாக உரையாடுவது.

தமிழில் பல ஆய்வுகள் செய்தவர், சங்க இலக்கியங்களப் பிரெஞ்சுமொழியில் மிகச் சிறப்பாக உள்வாங்கி மொழி பெயர்த்தும் இருப்பார். ஆனால் தமிழில் பேசுவதற்கு அப்பிரெஞ்சு தமிழ் அறிஞருக்குத்  தடுமாற்றம். காரணம் இங்கு சென்னைதமிழ், திருநெல்வேலி தமிழ், நாகர்கோவில் தமிழ்,  கோயம்புத்தூர் தமிழ், மதுரை தமிழ், சேரித் தமிழ்,  ஜஃப்னா தமிழ் என  பல தமிழ்கள். போதாதற்கு செட்டியார் தமிழ், நாடார் தமிழ், பிள்ளைமார் தமிழ், தெலுங்கர் தமிழ், பிராமணர் தமிழ், சினிமாதமிழ், தொலைக்காட்சி  காம்பையர் தமிழ் என தசரதனைப்போல தமிழுக்கும் ஏகப்பட்ட பத்தினிகள். இதில் அஃப்சியல் பத்தினி யாரோ ? உலகில் வேறு மொழிகளுக்கு இத்தனை சாளரங்கள் கொண்ட அந்தப்புரம்  இல்லை.

ஒரு முறை, மலையாளம் கற்ற ஒரு பிரெஞ்சு பெண்மணி, தமிழ் கற்ற ஒரு பிரெஞ்சு பெண்மணி இருவரும் மொழிபெயர்ப்பில் கூடுதல் பயிற்சிபெற சென்னை வந்து இறங்குகிறார்கள்.( ஏற்கனவே இதுகுறித்து எழுதியிருக்கிறேன்.) காதில் வாங்கிய தமிழைக் கேட்டு வந்த வேகத்தில் தமிழ் கற்ற பெண்மணி இது சரிப்படாது என பிரான்சு திரும்புகிறார். மலையாளம் கற்ற பிரெஞ்சு பெண்மணியோ தொடர்ந்து இயங்குகிறார். பிரெஞ்சு எடிட்ட ர்களால் அங்கீகரிக்கபட்ட  பிரெஞ்சு மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட  தமிழ்-பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர்கள் இன்றில்லை. அதன் விளைவு என்ன என்பதை  சொல்லவேண்டியதில்லை.

‘இன்று’  எனப்படித்துவிட்டு  இண்னைக்கு, இண்னைக்கி இன்னிக்கி என பேசுவதும் எழுதுவதும், பிறப்பால் தமிழரலாதவர்களுக்கும்,  தமிழ் நிலத்தில் வசிக்காத தமிழ் கற்கும் புதியவர்களுக்கும்  மருட்சியை ஏற்படுத்தும்  என்பதை உணரவேண்டாமா. இன்றைய நவீன இலக்கியங்கள் பெரும்பாலும் வட்டார வழக்கில் வருகின்றன.    ஐம்பது சொற்களைத் திரும்ப திரும்ப உபயோகித்து சிறுகதையை முடித்துவிடுகிறோம். இங்கே நாவல் எழுதக் கூட  ஐநூறு சொற்கள் போதும் பலமுறை அவற்றை உபயோகித்து படைப்பை முடித்துக்கொள்ளலாம்.

எனது பிரெஞ்சு மொழி பெயர்ப்புகளைத் திருத்திக்கொடுக்கும் பிரெஞ்சு பெண்மணி  திருமதி Lliliane என்பவர் இன்றைக்கும் எதாவதொரு பிரெஞ்சு படைப்பை வாசிக்க நேருகிறபோது அகராதியை புரட்டாமல் வாசிக்க முடிவதில்லை என்கிறார். இந்த ஒரு காரணங்கூட பிரெஞ்சு படைப்புகள் அதிகம் நோபல் பரிசு  பெறுவதற்கு காரணமாக இருந்திருக்கலாம். நம்மிட ம் அகராதியைத் தேடவேண்டிய நெருக்கடியை உண்டாக்குகிற நவீன தமிழ் இலக்கியங்கள் உண்டா ? அப்படியே உபயோகித்தாலும் அந்நெருக்கடியைச் சமாளிக்க வருடந்தோறும்  நவீன சொற்களை உள்வாங்கிய புதிய  அகராதிகள் உண்டா ? ஆனால் கறிக்குதவாத ஏட்டுசுரக்காய்  தமிழ் விழாக்களுக்கு நம்மிடத்தில் பஞ்மே இல்லை.

இனி சிறுகதைக்கு வருகிறேன்.

ஒரு நாள் ஒரு மனிதன் ஒரு குடும்பம்.

கொரோனா தொற்று, ஐரோப்பா, புலம்பெயர்ந்த தமிழ்க் குடும்பம், ஊரடங்கு,  இப்பிரசினைகளைக்கொண்டு, ஈழத்தமிழில் சொல்லபபட்ட ஒரு சிறுகதை.

கொரோனாவுக்கென படைக்கபட்ட இரு முதியவர்கள். அவர்கள் மகன் கோபி, மனைவி இரு பிள்ளைகள் கொண்ட இங்கிலாந்து வாழ்க்கைத்தரத்தில் ஒரு ஏழ்மையான குடும்பம். கோபி ஓர் இந்திய கட்டிட வேலை முதலாளியிடம் ஊழியம் பார்க்கிறவன். முறைப்படி அரசுக்குத் தெரிவித்து அவர் அவனை வேலைவாங்கவில்லை. இதனால் முதலாளி  தொழிலாளி இருவருக்கும் இலாபம். முதலாளி அரசுக்கு செலுத்தவேண்டிய சில வரிகளை ஏமாற்றலாம். தொழிலாளி தனக்கு வேலையில்லையென  சம்பந்தப் பட்ட அரசு நிறுவங்களிடம் உதவித் தொகை கேட்டுப் பெறலாம்.

இருந்தும் கொரோனாவால் தமிழ்க்  குடும்பம் தள்ளாடுகிறது. களவாய் செய்த வேலை இல்லைஎன்றாகிவிட்ட து. ஒரு மாதமல்ல மூன்றுமாதத்திற்கு பிரச்சனை நீளும் என்கிறபோது அவர்கள் என்ன செய்ய முடியும். இதற்கிடையில் கொரோனாவைக் கோடிட்டுக் காட்டும் இருமல் கிழவர்.   கணவன் மனைவி இருவருடைய உரையாடலும் அதிகம் புலம் பெயர்ந்த குடும்பங்களில் கேட்க கூடியதுதான் :

« ஏனப்பா சோசல் காசு வரும் தானே ? » என்று திவ்யா கணவனுக்கு ஆறுதல் கூறுகிறாள்.

« அது வந்தென்ன பிரயோசனம். அப்பிடியே கொண்டுபோய் சீட்டுகட்டச் சரி » என்றான் கவலையோடு.

« ஓமப்பா, அது வேறை கிடக்குது. அது எப்பையப்பா முடியுது ? »

« இரண்டு சீட்டும் முடிய இன்னும் ஆறுமாதம் கிடக்குது »

« நீங்கள் அணடைக்குச் சீட்டு எடுக்கேக்கையே சொன்னனான். இப்ப அவசரப்படவேண்டாமெண்டு. நீங்கள் கேட்டால் தானே. அவசர அவசரமாய் தங்கச்சிக்கு எடுத்தனுப்பினியள். இப்பக்கிடந்து மண்டையைப்போட்டு உடைக்கிறியள். »

 

மேற்கண்ட உரையாடலைக்காட்டிலும் கிழவரின் இருமல் சத்தத் திற்குப்பிறகு தம்பதிகளுக்கிடையே நடக்கும் கீழ்க்கண்ட உரையாடலில் கதை பிரகாசிக்கிறது.

« இந்த நேரம் பார்த்து இந்த மனிசனும் இருமித்தள்ளுது »

……………………………………..

………………………………………

அவன் என்ன நினைத்தானோ தெரிய வில்லை.

« இஞ்சரப்பா பிள்ளையளை அவரோட விளையாட விடாதையும். »

« ஏனப்பா, அது சும்மா இருமல்தான். »

« அது எனக்குத் தெரியும். எதுக்கும் முன்னெச்சரிக்கையா இருக்கிறது நல்லது தானே. »

« ஓமப்பா அதுவும் சரிதான். அவர் வாழ்ந்து முடிச்சவர். »

இத்துடன் கதை முடிவதில்லை எல்லா வறிய குடும்பங்களிலும் நடப்பதுபோலவே அப்போதைய தேவைகளைச் சமாளிக்க உண்டியலை உடைத்து 35 பவுண்களுடன் தமிழ்க் கடைக்குச்செல்கிறான், கோபி. கொரோனவை முன்வைத்து இலாபம் பார்க்கும் கடைக்காரனை மனதிற்குள் திட்டித் தீர்க்கிறான். பட்டியலில் இருந்த அனைத்தையும் வாங்க இயலவில்லை.  முதியவருக்கு இருமல் மருந்தை  வாங்க வேண்டிய கட்டாயம். பொருட்களுடன் திரும்பவந்தபோது அதிர்ச்சிக் காத்திருந்தது. வீட்டெதிரே முதியவரை அழைத்துபோக ஆம்புலன்ஸ்.

சிறுகதையின் கடைசி வரி மிகவும் முக்கியம். நான் அதைச் சொல்லப்போவதில்லை. நீங்கள் வாசிக்கவேண்டும்.

_________________________________________________

 

 

மொழிவது சுகம் மே 3 2020

 Corona mandates, we comply.

படைத்தல், காத்தல் மூர்த்திகள் ஓய்வெடுத்துக்கொள்ள அழித்தல் பொறுப்பில் மும்முரமாக கொரோனா மூர்த்தி.  பதவியேற்றது முதலே எக்காளம். வல்லரசு, வல்லற்ற அரசுகள் பம்பை உடுக்கையுடன், “சந்தி “ கட்டிக்கொண்டிருக்கி ன்றன.  பண்டாரத்தின் விபூதிக்கு காத்திருக்கும் பக்தர்கள் ஒருபக்கம் . தீர்த்தத்தை எதிர்பார்க்கிறவர்கள் இன்னொருபக்கம், இவர்களில் பொறுமையற்றவர்கள் பெருமாளைத் தேடி  திருப்பதி செல்வதாகச் செய்தி.

வந்த பாதையில் திரும்பிச் செல்வோம். மார்ச் மாத இறுதி அல்லது ஏப்ரல் முதல் வாரம்- தற்காலிக ஊரடங்கு என்கிற முத்திரையுடன்  உலகெங்கும்  மனிதர் வாழ்க்கை நான்கு சுவர்களுக்குள் முடமாக்கப்பட்ட நேரம்.  புதுச்சேரியைச் சேர்ந்த நண்பர்  பசுபதி தமது முகநூல் பதிவில் ஊரடங்கு நாட்களில் அதன் நோக்கத்தை புரிந்துகொள்ளாமல் வெளியில் சுற்றித் திரியும் மனிதர்களைக் கண்டித்திருந்தார். அவரது கோபம் நியாயமானது என்பதை கோயம்பேடு உறுதி படுத்துகிறது. மேற்கு நாடுகள் குறிப்பாக நான் வாழ்கின்ற பிரான்சு நாடுபோன்றவை படும் இன்னல்கள், விலக்க இயலா பொல்லாங்கான சூழல்கள் உலகறிந்தவை. ஊரடங்கு  உத்தரவை பிரகடன படுத்துவதற்கு முன்பாக அன்றாட உணவுக்கு தினக்கூலியை அல்லது தினசரி வருவாயை மட்டும் நம்பியுள்ள மனிதர்களுக்கு அரசுகள் உதவி தாமதமாகத்தான் கிடைத்தன. கொரோனா தொற்று ஊரடங்கை வற்புறுத்த, ஊரடங்கா மனநிலைக்கு பசிப்பிணி சிலரைத் தள்ளுகிறது என்பதும் உண்மை.

நண்பர் முக நூல் பதிவைக் காண்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இங்கு (பிரான்சு நாட்டில்) எனக்கேற்பட்ட அனுபவம் சுவாரசியமானது. ஒருவாரத்திற்கு மேலாக வீட்டில் அடைந்துக்கிடந்த சூழலில் சில அத்தியாவசிய பொருட்கள் வாங்கக் கடைக்குச் செல்லவேண்டியிருந்த து. வெளியிற் செல்வதற்கான அனுமதி அத்தாட்சியை பதிவிறக்கம் செய்துகொண்டு குடியிருப்பைவிட்டு வெளியில் வந்தபோது காலைச் சுற்றிய ஒரு கருப்பு பூனை என்னை வியப்பில் ஆழ்த்தியது.

ஊரடங்கு உத்த்ரவை மீறி அப்பிராணியாக என் கால்களில் வீழ்ந்த அண்டைவீட்டுப் பிராணியை இன்று போய் நாளை வா எனக் கூறத் தயங்கினேன். அதன வாடிய முகம் மனதைச் சங்கடப்படுத்தியது. கடைக்குச் சென்று திரும்பும்வரை ஏதேதோ கற்பனைகள்.  தமிழ் பிரெஞ்சு இரு மொழிகளிலும் « கொரோனா பூனை» என்றொரு சிறுகதையை எழுதினேன். இரண்டையும் பிரசுரத்திற்கு அனுப்பிவைத்தேன்.

தமிழில் சிறுகதை  காலச்சுவடு மே மாத இதழில் வெளிவந்துள்ளது. பிரெஞ்சு மொழியில்  இச்சிறுகதை Short edition ல் வந்துள்ளது. கீழ்கண்ட இணைப்புகளில் இரண்டும் வாசிக்கக் கிடைக்கும்.

தமிழில்:

https://www.kalachuvadu.com/magazines/%E0%AE%95%E0%AE%BE

%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81/issues/245/articles/7-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AF%88

பிரெஞ்சு மொழியில்:

https://short-edition.com/fr/oeuvre/nouvelles/corona-chat