– பிரெஞ்சிலிருந்து தமிழில்
————————————————————————————————————–
மரி தியாய்( Marie NDiaye) பிரெஞ்சு படைப்பிலக்கிய
ஆளுமைகளுள் முக்கியமானவர். நாவல்களுள் Trois Femmes puissantes (Three Strong Women) குறிப்பிட்டு சொல்லவேண்டிய ஒன்று. 2009ல் வெளிவந்தபோது படைப்பிலக்கியங்களில் ‘பெஸ்ட்- செல்லர்‘ எனப்பெயரெடுத்தது. திருகலான நடைக்குச் சொந்தக்காரர். வாசிப்பவர்கள் திக்குதெரியாதக்காட்டில் அலைவதும், புதைமணலில் சிக்குவதுமான அனுபவத்தை பெற நேரிடுமெனச் சொல்லப்படுவதுண்டு. அவரது நாவலொன்றில் ஒருவரி 100 பக்கங்களில் சொல்லப்பட்டிருக்கிறதென அண்மையில் வெளிவந்திருக்கும் ‘La divine’ நாவலுக்கு எழுதப்பட்ட விமரிசினத்தைப் படித்துப் தெரிந்துகொண்டேன். ‘La divine’ இன்றைக்கு பெஸ்ட்- செல்லர்.
———————————————————————————————————
அதிபர் வந்த தினம்
– மரி தியாய்
அந்தத் திங்கட்கிழமை, அதிபர் முதன்முதலாக ஹாவ்ரு நகருக்கு வருகைதரும் நாள். காலையில் மெதுவாகவே எழுந்தாள். எழுந்திருக்கிறபோதே உடல் பாரமாக இருந்தது. இத்தனைக்கும் அவள் எடைபோட்டவளல்ல, அதுவன்றி சிலகிழமைகளாகவே, அவள் மிகவும் பலவீனமாக இருந்தாள் – வெறும் வயிற்றின் களக் களக்கென்று சப்தம் – மளுக்கென்று முறிந்துவிடக்கூடிய எலும்பும் தோலுமான தேகம் – அத்தேகம், சிறிது ஆசுவாசப்படுத்திக்கொள்ளலாமென அவள் உட்கார்ந்தபோது தங்கக் காலணிகளுடன் தரையைமூடிய பனியை உரசிப் பறப்பதாய்க் கண்ட ‘எல்ப்’ தேவதைகளின் மெல்லிய அமானுட தேகம்போன்றதல்ல; தீனி எடுக்காத பெட்டைக்கோழிக்குரிய தேகம் அல்லது குளிர்காலத்தில் துறைமுகப் பகுதியில் தாழப்பறக்கிற ஏதோவொரு நோஞ்சான் பறவையின் தேகம். உறக்கத்திலிருந்து இன்னமும் முழுதாக மீளவில்லை, பிற்பகல் நகரமன்றத்திற்கு வருகைதரவிருக்கும் அதிபரைப் பற்றிய பேச்சுக் காதில் விழுந்தது. அவளுடன் அதே வீட்டில் வாடகைக்குக் குடியிருக்கிற பெண்கள் இருவர், காதைத் துளைப்பதுபோல கீச்சுக்குரலில், மூச்சுவிடாமல், கீழே பேசிக்கொண்டிருந்தார்கள், பேச்சு அரை குறையாகக் காதில் விழுந்தது, புரிந்துகொள்வது கடினமாக இருந்தது. இங்கே பாரு, நான் என்ன சொல்ல வறேன்னா, வீட்டுக்கு உரிமையானவள் குறுக்கிட்டாள், தாழ்ந்த குரலில் சரிசமமாக வாதாடுவதைப்போல பேசிக்கொண்டிருந்தார்கள் என்பது மட்டும் தெளிவு.
ஒல்காவிற்கு, பெண்களிருவரின் அதிபரை பற்றியப் பேச்சில், அவரை தங்கள் சிநேகிதராகப் பாவித்து பேசுவதுபோல தெரிந்தது. அல்லது இவர்களுக்கு அவர் மிகவும் வேண்டியவராக இருந்து, அண்மைக்காலத்தில் தொடர்பு விட்டுப்போனதுபோலவும், மீண்டும் அவரைச் சந்திக்கக் கிடைத்த வாய்ப்பை எண்ணி மகிழ்வது போலவும் அப்பேச்சுகள் இருந்தன, அவர்கள் உரையாடலில் இடம்பெறும் அதிபர் யாராக இருக்கக்கூடுமென்ற தெளிவற்ற கேள்வியும் அவளிடம் பிறந்தது, தூக்கமயக்கத்திலிருந்து விடுபட்டுக்கொண்டிருந்த நிலையில், அவர் யாரென்பதை முடிந்த அளவு சீக்கிரமாக தெரிந்துகொள்ள விரும்பினாள். இரண்டு பெண்களும், வீட்டுக்குச்சொந்தக்காரியும் ஏதோ திட்டமிடுகிறார்கள். உடல் பலவீனத்தின் காரணமாக நீண்டநேரம் ஒல்கா ஆழ்ந்து உறங்கிவிடுவது அவர்களுக்கு வசதியாகப்போயிற்று; அவள் தங்களுடன் இல்லாமையை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள், அந்நேரங்களில் அவர்களுக்கு உபயோகமான எல்லா விஷயங்கள்பற்றியும் பேச்சு வருகிறது, ஒல்காவுக்கு நல்லதெதுவும் நடந்துவிடக்கூடாதென்பதைப்போலவும், அவர்களுக்குப் பலன்தரும் வகையிலும் திட்டங்களை முன்வைக்கிறார்கள். எல்லோரையும் போல, பிரச்சினைகளிலிருந்து மீள்வதற்கு உருப்படியான யோசனைகளின் தேவைகள் ஒல்காவிற்கும் இருந்தன. அதற்கான நல்ல தருணம், குருட்டுயோகம் வாய்க்காதது ஒரு குறை. மர்த்தின், கொரீன்; ஒருவேளை சந்த்ரின், கரினோ? போகட்டும் தற்போதைக்கு ‘ன்’ ல் முடியும் பெயர்களைக்கொண்ட இரு பெண்கள் – கேட்பவர்களிடம் ஒல்காவின் நெருங்கிய தோழியெனக் சொல்லிக்கொள்பவர்கள் – அவளை ‘ஒல்கானூஷ்க்கா’ என உரிமையோடு அழைப்பவர்கள் (அவளை ரஷ்யப்பெண்ணாக்கிப் பார்ப்பதில் அவ்வளவு மகிழ்ச்சி), எனினும் எந்தவொரு விஷயம் குறித்தாவது பேசவேண்டும் அல்லது முடிவெடுக்கவேண்டுமெனில் அது அற்ப விஷயமாகக்கூட இருக்கலாம், தங்களுக்குப் பெரும்பலன் கிடைக்குமாறு பார்த்துக்கொள்வார்களேதவிர மருந்துக்குங்கூட ஒல்காவுக்கு சாதகமாக முடிவெடுக்கக்கூடாதென்பதிற் கவனமாக இருப்பார்கள். முரணாக எதுவும் நடக்கலாம் அல்லது அதிக எதிர்பார்ப்புகளுக்கு இடமில்லை என்பதுபோன்ற பிரச்சினைகளில் ஒல்காவை நிறுத்தி வேடிக்கைப்பார்க்க அவர்களுக்குப் பெரிதும் விருப்பம், வேறுவகையான சிந்தனைக்கு அவர்கள் அருகதையானவர்களுமல்ல, அவர்கள் வளர்ப்பு அப்படி. ஒல்கா கால்கள் இரண்டையும் டைல்ஸ் தரையில் கவனமாக ஊன்றினாள், கட்டில் விளிம்பில் உட்கார்ந்தாள். பெண்களிருவரின் பெயரைத் தெளிவாக நினைவுபடுத்த முடியாமற்போவதுதான் எவ்வளவு எரிச்சலை தருகிறது? நுணுக்கமான தகவல்கள் தனக்கு மறந்துபோகின்றன என்பதை ஒத்துக்ககொள்ள வேண்டும். உறவுகளைத் துண்டிக்கும் இயல்புகொண்ட இதுபோன்ற மறதிகள், இன்னொருபுறம் தன்முன்னேற்றதிற்கு உதவக்கூடுமென நினைத்தாள். கீழே அவர்கள் தொடர்ந்து உரையாடிக்கொண்டு இருந்தனர். சக்தியைப் உரிய வகையில் பயன்படுத்ததெரியாது, சோர்வின்றி மும்முரமாக உரையாடலில் ஆழ்ந்திருந்தனர். பெண்களிருவரிடமும் பணம் இருந்தது. வயதென்னவோ இருவருக்கும் இருபத்தைந்துதான் சொல்லமுடியும் ஆனால் அதற்குள் தங்கள் பெயரில் பன்னாட்டு கடனட்டையொன்றை வைத்திருந்தார்கள், அதனைக்கொண்டு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு பணத்தை எடுக்கமுடியுமென்று ஒல்கா நினைத்தாள். ஆம், பணம் குறித்த கவலைகள் எதுவும் அப்பெண்களுக்கு இருக்க முடியாது. அவர்களை அலைக்கழித்தது வேறொரு பிரச்சினை, அத்தேவைக்காக பல நாட்கள் இரவு முழுக்க வீட்டுக்குச்சொந்தக்காரியின் வரவேற்பறையில் ரகசியதிட்டங்களைத் தீட்ட வேண்டியிருந்தது. உள்ளூரில் ஒருவகையான புகழ் தேவைபட்டது, நகரத்திலும், மாவட்டத்திலும் எல்லோருக்கும் அவர்களைத் தெரிந்திருக்கவேண்டும். அவர்கள் ‘எத்ரெத்தா’விலிருந்து வந்திருந்தார்கள், அங்கே எல்லோரும் அவர்களை அறிந்திருந்தார்கள், மாறாக ‘ஹாவ்ரு’ நகரில் எதிர்ப்படுகிற மனிதர்கள் முகமன் கூறாததோடு, கண்டுகொள்வதுமில்லை. ஒல்கா, ‘வெலெத்-சுர்-மேர்’லிருந்து வந்திருந்தாள். “என் அப்பா அதிபரைச் சந்திக்கிற மேயரைச் சென்றுபார்த்தார்” கிரிஸ்டின் அல்லது அலின் இருபெண்களில் ஒருத்தி உரத்தக் குரலிற் கூறினாள். வீட்டுரிமையாளர்ப் பெண்மணி அவள் பேச்சை மறுப்பவள்போல,” நாம எப்படி வேண்டுமானாலும் நினைக்கலாம், ஆனால் அவர்கள் இருவரும் ஒன்றல்ல”, என்றாள்..
எழுந்திருப்பதற்கு வேண்டிய பலத்தைக் காணாத நிலமையில் அவளுடைய வெளுத்த, மெலிந்த பாதங்களிரண்டும், துடைத்து சுத்தமாக இருந்த டைல்ஸ் தரையில் இன்னமும் ஊன்றியிருந்தன. ( சாக்ஸ்களிரண்டும் தூரத்திற் கிடந்தன, அவற்றை எடுத்து காலில் மாட்டுவதென்றால் அங்கே செல்லவேண்டும், இதற்கிடையில் உடலில் மிச்சமிருக்கிற தெம்பைக்கொண்டு சிதறிக்கிடக்கிற சக்தியை திரட்டினால்தானுண்டு), பெண்களிருவரின் உரையாடலுக்கிடையில் விழும் சொற்களிலும், தொனியிலும் அதிபர் பெயரைக் கண்டுபிடித்து விடலாமென்கிற நம்பிக்கையில், அவர்களின் உரையாடலில் எதையும் தவறவிடக்கூடாதென பிரயத்தனம் செய்தாள். இருவரில் எவளிடம் தனக்குப் பிரச்சினையென்று தெரியாதபோது எந்த தைரியத்தில் கீழே இறங்குவது? மனதில் அழுந்தப் பதிந்திருந்ததொரு கடந்தகால சம்பவத்தை மிகத் துல்லியமாக நினைவுகூர்ந்தாள். அம்மாவின் முகபாவத்தைத் தெள்ளத்தெளிவாக அதிற் பார்க்கமுடிந்தது. ‘வெலெத்’ திலிருந்து ‘ஹாவ்ரு’க்கு பேருந்தில் வந்திருந்தாள், அறையொன்றின் வாடகை எவ்வளவு என்பதைக்குறித்து வீட்டுக்கார பெண்மணியிடம் ஒல்காவிற்காகப் பேசவேண்டியிருந்தது. (என் பெண் கணக்கியல் படிக்கப்போகிறாள், ‘கோ’ (Caux) மாவட்டத்தில் கணக்கியல் கற்க சிறந்த பள்ளி எதுவோ அதில் அவளைச் சேர்த்திருக்கிறோம்), வீட்டுக்குச்சொந்தக்காரி, ஒல்காவிற்கென சொல்லப்பட்ட அறையில் நுழைந்திருந்தாள்- அந்த அறை, பட்டினியால்வாடும் பறவைபோல சரீரத்தைத் தனதியல்பிற்கு கொண்டுவர ஒவ்வொரு நாளும் காலையில் அவதியுறும் ஒல்காவினுடைய இதே அறை- அவள் கண்கள் செயற்கை இழை பின்னல்வேலைகளைக்கொண்ட கட்டில் விரிப்பின் மீதும், அதே வேலைபாடுகளைக் கொண்ட வட்டவடிவ சிறு சிறு சிறு குஷன்கள் மீதும் சென்றன, குஷன்கள் சுவரையொட்டி, வெட்டிய தலைபோல கிடக்கும்- சிற்சிலசமயங்களில் அவை தவறி துவள்வதுபோல கட்டிலில் விழும் – ஒல்காவின் அம்மா அவற்றைக்கண்டதும் மனதைப் பறிகொடுத்தாள், தனது மகளுக்கு இப்படியொரு இடம்கிடைத்ததே என்கிறப் பரவசம். பிறகு அவள் பார்வை, இரண்டு மார்பிளுக்குமேலே நின்றிருந்த நல்லமரத்தினாலான சிறுமேசை, தூசுபடிந்த உலக உருண்டையின் கீழ் பொன்வண்ணத்திலிருந்த சிறுகடிகாரம், சாட்டின் துணியில் மெத்தைவைத்து தைத்த பழைய நாற்காலி ஆகியவற்றின் மீது சென்றது. அங்கு நிலவிய பாசாங்குத்தனமான பகட்டும், படாடோபமும்; அவை காட்டிய நெருக்கமும், வெளிப்படுத்திய அந்நியமும் ஒல்காவின் தாய்க்கு 1800 பிராங் மாத வாடகைக்குரிய போதுமான நியாயங்கள். தனது தாய், உடனே தலையாட்டுவாளென்பதையும்; கணக்கியலும், செயலாளர் பணிக்கும் படிக்கப்போகிற தனது ஒரே மகளுக்காகவும், ‘வெலெத்’ திலிருந்து நேராகப் புறப்பட்டு வந்திருக்கும் மகள் இப்படியொரு மேட்டுக் குடியினருக்குரிய டாம்பீகமான அறையில் தங்கி படிப்பினைத்தொடர்வதென்பது எத்தனை பெரிய கௌரவம் என்பதற்காகவும் வாடகையாக எவ்வளவு கேட்டாலும், அம்மா கொடுக்க ஆயத்தமாக இருக்கிறாளென்பதையும் ஒல்கா அறிவாள். “இங்கே நீ ராணி மாதிரி இருப்ப”, சந்தோஷத்துடன் ஒல்கா காதில் அவள் முணுமுணுத்தாள். ‘வெலெத்’ நகரத்தில் அவள் தாயுடைய கட்டில் விரிப்பு பருத்தியினாலானது, அங்குள்ள சிறு மேசை ஊசி இலைமரத்தில் செய்து, வார்னீஷ் அடித்திருந்தது. யாராவது வந்தால் உடனே ஒளித்துவைக்கப்படுகிற ஜோடி பொருத்தமற்ற சிறு தலையணைகள் அலங்கராங்களுடன் உண்டு ( பார்க்க சகிக்காத சூரியன் மறையும் காட்சி, மினுங்கும் அன்னங்கள், தொப்புள் தெரிய அழும் சிறுவன்..), அவை தரையில் உருண்டோடவும், அதன் ஜிப் கண்ணிற்படவும் இலேசாக காற்று வீசினாலே போதுமானது. அம்மா கொண்டுவந்திருந்த ஸ்காட்லாந்து பாவாடையின் மடிப்பிலிருந்த நாப்தாலின் வாசம், சலவைக்கட்டியின் இனிமையான பூமணம் ஆகியவற்றைக்காட்டிலும், அன்றைக்கு அம்மாவின் முகத்தில் கண்ட வியப்பையும் – அதைக்குறித்து இலேசான வருத்தமும் (எதனையும் முழுமையாக விரும்பப்போதாத தன்மீது நம்பிக்கையற்று ) அவளுடைய முழு சரணாகதியையும் (என் பெண் கணக்கியல் படிக்கப்போகிறாள், அங்கிருந்தவற்றுள் நல்ல ரோசா நிறத்திலிருந்த தரை விரிப்பையும், வெள்ளீயக் கைப்பிடியுடனுமிருந்த பதினைந்தாம்லூயி காலத்திய சிறு மேசையையும் தவிர்த்து, விரும்பும் வகையில் வேறெதுவுமில்லை.) ஒல்காவால் மிகத்துல்லியமாக நினைவுகூர முடிந்தது. அவ்வாறிருக்கையில், ஹாவ்ரு நகரில் அவளுக்குத் தோழியென்றிருக்கிற பெண்கள் இருவரின் பெயரை நினைவு படுத்த இயலவில்லையெனில் எப்படி? தனது அறையிலிருந்து ஒல்கா வெளியில்வந்தபோது, நடைகூடத்தில் பெண்களிருவரும் எதிரில் வந்தார்கள்- அவர்கள் தோற்றம் ஒல்காவின் அம்மாவுக்கு ஏமாற்றமளித்தது. நல்ல குடும்பத்தில் பிறந்த பெண்களுக்கென்று அவள் வகுத்திருந்த நியதியின்படிப்பார்க்க, அப்பெண்களிருவரும் படுமோசமாக உடுத்தியிருக்கிறார்கள்: மனதில் எவ்வித உறுத்தலுமின்றி அணிந்திருந்த, வீட்டிற்கு வண்ணபூசும் தொழிலாளர்களைப்போல முரட்டு ஜீன்ஸில் டங்கரீவகை காற்சட்டை; விறைத்துக்கொண்டிருந்த சிவப்பு சாயம் பூசிய தலைமயிர்; ஆக மொத்தத்தில் வெலெத் நகரில் பலரும் வெறுத்தொதுக்கும் இழிவான பெண்களைப்போல- அம்மா மனதில் என்ன இருக்கக்கூடுமென்பதைத் தெளிவாகவே கணித்திருந்தாள். அப்பெண்களிடம் வெளித்தோற்றத்திற்காக வற்புறுத்தப்படுகிற சில சில்லரை ஏற்பாடுகளை மிகக்கவனமாக தவிர்க்க வேண்டிய பொறுப்புகள், நல்ல ரசனைக்கும் பண்புக்கும் இருக்கின்றன என்பதை ஒருக்காலும் புரியவைக்க இயலாது. வீட்டுக்குடையவள் இப்பெண்களைப்பற்றி முன்பின்யோசிக்காமல் ஏன் வாடகைக்கு விட்டாளென்ற கேள்வியும் அவளுக்குள் இருந்திருக்ககூடும், அவ்வாறு நினைக்கிறபொழுது மனதிற் தேவையின்றி இரக்கம் பிறந்தது. மிகப்பெரிய அலங்கார கணப்படுப்பு, பழங்காலத்து மார்பிள் தரை, பொன்னிற கால்கள்கொண்ட சிறுமேசை நடுவிலிருக்க எதிரெதிரே போட்டிருந்த தோலினாலான சோபாக்கள் இவைகளெல்லாம் ‘எத்ரெத்தா’ வில், இளம்பெண்களிருவரின் பெற்றோர்களுடைய கடற்கரை பங்களாக்களில் இருக்கிற எண்ணற்ற விலையுயர்ந்த பொருட்களில் ஒரு சில. அப்பெண்களைப்பற்றிய அம்மாவின் எண்ணத்தில், இவை குறுக்கிட்டிருக்க வாய்ப்பில்லை. பெண்ணொருத்தியின் தந்தை, ‘வீடு மனை விற்பனை’ நிறுவனம் வைத்திருப்பதோ; மற்றொருத்தியின் தாய், பல் மருத்துவரென்பதோ; இதுபோன்ற குடும்பப் பின்னணிகளைக்கொண்ட பிள்ளைகளும் காலணிநாடாவற்ற சிவப்பு நிற டென்னிஸ் ஷக்களை போடக்கூடுமென்றோ அம்மா யோசித்திருக்கமாட்டாள். பேருந்தைப் பிடிக்கவேண்டிய அவசரத்தில், ‘வெலெத்’ நகரத்திலிருக்கும் தனது வீட்டோடு மௌனமாக ஒப்பிட்டு அப்பெண்களைத் தாழ்வாக நினைத்து அம்மா கடந்திருக்கலாம். ஆ.. எனது மகள் கணக்கியல் படிக்கப்போகிறாள், வீட்டுக்கூரையில் ஒரு டிஷ் ஆண்டெனா வைக்கபோகிறோம், என் பெண்ணுக்கு கணக்கியலறிந்த பெண்காரியதரிசியாக வரவேண்டுமென்ற கனவு, அதை கோ(Caux) மாவட்டத்திலொரு நல்ல பள்ளியில் சேர்ந்து சாதிக்கவேண்டுமென்ற எண்ணமிருந்தது… அம்மா, கூறியவை மீண்டும் மனதில் ஓடின. முக்கியமான நாட்களில் மட்டும் வெளியில் எடுக்கிற தன்னுடைய நீண்ட மேலங்கியை அம்மா அணிந்தாள், வெடிப்புகளில் பூச உபயோகிக்கிற பசைநிறத்தைக்கொண்ட மேலங்கி அது, அவளுடைய குட்டைப் பாவாடையை முழுவதும் மறைக்கப்போதுமானதாக மேலங்கி இல்லை, சிறியது. காலுறை பழுப்பு நிறத்திலிருந்தது. சாம்பல்நிற குதியுயர்ந்த அவளுடைய காலணிக்கு அவளுடைய தேர்வு எப்போதுமிந்த பழுப்பு நிற காலுறைகளே. ஏறக்குறைய ‘பிஜியெ’ போலவே இருக்கும்; உங்களுக்கு ‘பிஜியெ’ மார்க் காலணிகள் தெரிந்திருக்குமில்லையா? கிட்டத்தட்ட அதுபோலத்தான், விலைகூட அவ்வளவுதான். என் மகளிற்குக் குழந்தையிலிருந்து இப்படியொரு ஆசை இருந்துவந்திருக்கிறது. அலுவலகத்தில் வேலை பார்க்கவேண்டும், தலை நிமிர்த்தாது விசைப்பலகையைத் தட்டிக்கொண்டிருக்கவேண்டும். பிறகு கிசுகிசுக்கிறாள், கிசுப்பினூடே சட்டென்று குரல் தூக்கலாக ஒலிக்கிறது: செல்லம்! நீ இராணிபோல இருப்பாய். தியாகங்களுக்கு அம்மா தயாரென, ஒல்கா நன்றாகவே அறிவாள்: அவளுடைய கல்விக்காகவும், தங்கிப் படிக்க ஆகும் செலவிற்கும், சனிக்கிழமை மாலைகளில் கோதுமை அப்பம் சாப்பிட ஆகும் நேரத்திற்கும், வார இறுதியில் ‘டியெப்’வரை போகவேண்டுமென்ற விருப்பத்திற்கும் பலவவற்றை விட்டுக்கொடுக்க அம்மா தயார். இதுபோன்ற சங்கதிகளில் அப்பாவிடம் ஒல்காவிற்கு பெரிய எதிர்பார்ப்புகளில்லை. பெற்றோர் இருவருமே, பொதுவாக எண்ணிச் செலவிடுபவர்கள், திட்டமாக செலவு செய்து திருப்திகாண்பவர்கள். என் மகளுக்கு வெகு காலமாகவே எண்கள் மீது நிறைய விருப்பம், அதற்காகத்தான்… ஆ! எங்கள் மகள், அவளை நினைக்க எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. ம்..ம்.. அவளுடைய சில்லறை பிரச்சினைகளை கொஞ்சம் பார்த்துக்குங்க. நடைகூடத்தில், வீட்டுக்குச்சொந்தகாரி உடன் வர ‘அதெலி’னையும், ‘கொரினை’யும் எதிர்கொண்டவள், எந்த தைரியத்தில், எந்த ஆதாரத்தைக்கொண்டு கேவலமான இப்பெண்களிருவரும் இப்படியொரு மரியாதைக்குரிய வீட்டுரிமையாளரின் இல்லத்தில் குடியிருக்கிறார்களென நினைத்தாள், வந்தவேலை ஒருவழியாக முடிந்ததென்ற கட்டத்தில், அண்டைக் குடித்தனகாரிகளாக இருக்கத் தகுதியற்ற அப்பெண்களிருவரின் அறைகளை எட்டிப் பார்த்தாள், வீட்டுக்குச்சொந்தக்காரியின் முழுச் சம்மதத்துடன், பளபளவென்றிருந்த தங்கள் அறைச்சுவர்களில் தகாத சுவரொட்டிகளை (Power Zone அல்லது Red Dead Electrics இரண்டில் ஏதோவொருக் குழுவைசேர்ந்த பாடகரின் சிவப்புசாயம் தோய்ந்த தலைமயிர், பிறப்புறுப்புக்கிணையாக உயர்த்தப்பட்டிருந்த கிட்டார்மீது விழுந்திருந்தது) ஒட்டியிருந்ததும்; கட்டிலுக்குக் கீழே குஷன்களை போட்டுவைத்திருந்த விதமும்; சற்றுமுன்பு அவள் வியந்து பாராட்டிய கடிகாரத்தினை, சிறுத்தை சித்திரத்துடனான ஸ்கார்ப் ஒன்றால் மூடியிருந்ததும்; நல்ல சிவப்புநிற சிறிய நாற்காலியில் சரடுகள், வியட்நாம் யுத்தத்திலிருந்து திரும்பிய அமெரிக்க ராணுவ வீரர்களிடம் காண்கிற சகலவிதமான பொருட்கள், ‘டெக்ஸாஸிலிருந்து உன்னைப் புணர வந்திருக்கிறேன்’, ‘ நானொரு சூப்பர் – அப்பா’, ‘தற்போது எனதிடம் காலியாகத்தான் இருக்கிறது’ என்பதுபோன்ற வார்த்தைகள்; மற்றும் சிலுவையுடனான பலவித இயேசு உருவங்கள் அச்சடித்த பனியன்களென ஏராளமாகக் குவிந்துக்கிடந்ததைக் கண்டு அம்மா பெரும் வியப்புள்ளாகியிருக்கவேண்டும். இதைப்போல உனது அறையை நீ பாழாக்கக்கூடாது, எதையும் தொடவேண்டாம், அதது அங்கங்கே இருக்கவேண்டும், என ஒல்காவின் காதில் இரைந்தாள். வீட்டுச்சொந்தக்காரியிடம், தனது மகள்மீது நம்பிக்கை வைக்கலாம் என்பதுபோல அசட்டு சிரிப்புடன்: என் பெண்ணுக்கு எல்லாம் சுத்தமா இருக்கணும், அவளை நான் வளர்த்தவிதம் அப்படி, அவளுடைய அறையில் தூசு தும்பென்று எதுவும் இருக்காது, என்றாள். வீட்டுக்குடையவள் தோளைக் குலுக்கினாள், அவளுக்கு, பேச்சை முடித்து சீக்கிரம் அம்மாவை பேருந்தில் அனுப்பிவைத்தால் தேவலாம் என்றிருந்தது, மாதம் 500 பிராங் கூடுதலாக செலுத்தமுடியுமெனில் ( 2003ல் பெண்களிருவரும் குடியிருக்க வருவதற்கு நான்குமாதம் இருந்தது, அப்போதே, அவர்கள் பெற்றோர்கள் செலுத்திய தொகை), வாடகைக்குக் குடியிருப்போர் எவ்வித முன் அனுமதியின்றி அறையை மாற்றி அமைக்கவும்; விரும்பும் அசிங்கங்களை சுவரில் ஒட்டவும், மாட்டவும்; எவ்வித தயக்கமுமின்றி அரசியல் கருத்துக்களைத் துணிச்சலாகப் பேசவும் செய்யலாமென்பது பின்னாளில் ஒல்கா அறியவந்த சேதி. ஒல்கா அம்மா சீக்கிரம் புறப்பட்டால் தேவலாம் என்றிருந்த வீட்டுக்காரிக்கு அவற்றை விபரமாக தெரிவிக்கும் எண்ணமெல்லாம் இல்லை. வாயிலில் கால்வைத்தபோதும் அம்மா நிறுத்தாமல் நன்றியைத் தெரிவித்துக்கொண்டிருக்க பொறுமை இழந்த வீட்டுக்குடையவள், வாயிற்கதவை மூடப்போனாள். அந்தநேரத்திலும் தயக்கமின்றி, வாடகைப்பணத்தை முதல் தேதி என்றிராமல் அதற்கான தவணைவரும்போது செலுத்தலாமாவெனக் கேட்ட அம்மா, அப்படி கேட்டதற்கு தனது வருத்தத்தையும் தெரிவித்துக்கொண்டாள். அவள் ஏன் அப்படிக் கேட்டாள், பின்னர் அதற்காக ஏன் வருத்தம் தெரிவிக்கவேண்டும் என்பதை புரிந்துகொண்ட ஒல்கா வியந்தாள்: அம்மா கண்ணியமானவள், தனக்கெதிரில் இருப்பவள் தன்னைக்காட்டிலும் மரியாதைக்குரியவளென்று நினைத்துக்கொண்டிருந்ததுபோக, பொதுவில் நேர்மையானவர்கள் எதிர்பார்க்கிற நியாயங்களேதுமின்றி பிறரை துச்சமாக கருதும் அப்பெண்மணியின் மனப்பாங்கும், பணிவின்மையும், அறிவின்மையுமே தன்னை அப்படி நடந்துகொள்ளத் தூண்டியவை என்பதுபோல அம்மா தனது நடத்தைக்கு நியாயம் கற்பித்திருந்தாள். அம்மாவின் பலவீனத்தை குறைத்து மதிப்பிடமுடியாது, பிடிவாதக்காரி, மனதையும் அத்தனைச் சுலபமாகப் படித்துவிடமுடியாது, வெளித்தோற்றத்தைக்கொண்டு எடைபோடவியலாத மனிதரினத்தைச் சேர்ந்தவள், உறுதியானவள். எதிரிலிருந்த பெண்மணி இதனை எதிர்பாக்கவில்லை, அதற்கென்ன? அப்படியே செய்தாலாயிற்று, என்ற வார்த்தைகள் விருப்பமின்றி முணுமுணுக்கப்பட்டன. சரி, அடுத்தமாதம் தொடக்கத்தில் ஒல்கா வாடகைக்கு வரலாமென சிறிது முகச்சுளிப்புடன் கூறிவிட்டு கதவைத் தடாலடியாக மூடினாள். ஒன்றின் பயனை அடைவதற்கு முன்பாக அதற்கான பணத்தை கொடுப்பதில் எவ்வித நியாமுமில்லை. வீட்டுக்குடைவளின் வார்த்தையில் நம்பிக்கை பிறந்தது, அணிந்திருந்த காலணிகளும் சுகமாக இருக்க அம்மா புறப்பட்டாள், நடந்ததனைத்தும் திருப்தியாக இருந்தன, அவளுடைய சாம்பல் நிற தலைமயிர் பளீரென்றிருந்தன, பல வருடங்களாக அணிந்தணிந்து மூக்கில் இரு சிவந்த சொட்டைகளை ஏற்படுத்தியிருந்த கண்ணாடியின் உலோகப்பிரேம்களும் தலைமயிர்போலவே வெயிலில் மினுங்கின.
– அதிபர் இயல்பான மனிதர், தயக்கமின்றி உன்னிடத்தில் பேசுவாரென்று தோன்றுகிறது. அவர் ரொம்ப எளிமையானவரென்று அப்பா சொன்னதாக ஞாபகம், இளைஞர்களை மிகவும் நேசிக்கிற நபரென்றும் கேள்வி.
– நம்ம மாதிரி வயசுப் பெண்களையும் நேசிப்பவர் என்கிறார்கள். நம் வயது பெண்களின் மனதில் என்ன இருக்கிறதென தெரிந்துக்கொள்ள விரும்புபவராம்.
– அவரிடம் பேசும்போது ‘மேன்மைமிகு அதிபர் அவர்களே’ என அழைக்க மறக்கவேக்கூடாது, என்ன? – வீட்டுக்குச்சொந்தக்காரி குரலில் சிறிது கடுமையைக்கூட்டிக்கொண்டு எச்சரித்தாள்.
வெலெத் நகரத்திற்கு வாகனத்தில் அம்மாவுடன் வீடு திரும்பொழுது மனதிற் பெரிதாய்ச் சந்தோஷமெதுவுமில்லை. ஹாவ்ருபோன்ற பெரிய நகரத்தில் வசதியானதொரு வீடு கிடைத்ததென்ற மகிழ்ச்சி அம்மாவிடம் வெளிப்படையாகத் தெரிந்தது. குடி அமரப்போகும் இடத்தின் பெருமையை நினைக்கிறபொழுது அழுது வடிந்துகொண்டிருந்த கணக்கியல் பள்ளியும் (எண்களை அதிகம் விரும்புவாள் என்ற எண்ணத்தை தாயிடம் ஏற்படுத்திய கட்டிடம், அதுவன்றி வேறெதைப்பற்றி அவளிடம் சொல்ல இருந்தது?), எளிதிற் புரிந்துகொள்ளமுடியாத பண்பாட்டுத் தளத்தின் அநேகக் குணங்களில் ஏற்கனவே தங்களுக்குள் ஒற்றுமைகண்டிருந்த இரண்டு பெண்களும், நல்ல சிவப்பு நிறத்திலிருந்த அறையின் தோற்றமும், அவளுக்காக செலவிடவிருந்த பணத்தின் அருமையும் நினைவுக்கு வர ஒல்காவிற்குக் குமட்டிக்கொண்டு வந்தது, அடக்கிக் கொண்டாள். கருத்திருந்த கடலின் பின்புலத்தில் அம்மாவின் பாதியுடல் துண்டித்துக்கொண்டு தெரிந்தது. அழுக்கடைந்த வாகன கண்ணாடி ஊடாக இருவரும் தெளிவின்றி பார்த்த கடல் ‘வெலெத்’ திலோ அல்லது ‘ஹாவ்ரு’ விலோ கண்டதல்ல. அதிலும் வீட்டுக்குடையவளின் கூடத்திலிருக்கும் குறுகிய சன்னல் வழியாகப் பார்க்க கூரையைத் தாங்கிப்பிடிக்கிற இரு முக்கோண வடிவ தலைப்பு சுவர்களுக்கிடையில் முடிந்தால் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் என்பதுபோல சின்னஞ்சிறு துண்டாகச் சோர்வுடனும் சாம்பல் நிறத்துடனும் கடல் பரிதாபமாகத் தெரியும்.
பெண்களில் ஒருத்தியின் பெயர் ‘கொரின்’ என்றும் தலைமுடியை ஒட்ட வெட்டியிருந்த மற்றவள் கரோலின் என்றும் ஒல்கா முடிவுக்குவந்தாள். எழுந்திருக்காமலேயே கட்டில்மீதுக் கிடந்த பேண்ட்டையும், நிட்டெட் பனியனையும் கை நீட்டிஇழுத்தாள், சோர்ந்தும் களைத்துமிருந்தவள் மூச்சை இழுத்துவிட்டபடி இரண்டையும் அணிந்தாள். பெல்ட்டிலிருந்த கடைசித் துளைவரை உபயோகித்தும் இடுப்பில் பேண்ட் இறுகாமல் மிச்சமிருந்தது. தனதெலும்புகளை பாரமாக உணர்ந்தாள், சுமக்க வியலாத அளவிற்கு அப்பாரமிருந்தது. மிதமிஞ்சிய அளவில் இளைத்திருப்பதை வைத்து, உடல் அபௌதிக நிலமையில் இருக்கிறதென்றோ அல்லது மென்மையான தேகமென்றோ பொருள்கொள்ளாமல் அது கடும் பாரத்திற்குரியதென எண்ணவேண்டும். சதைக் குறையும்போது, எலும்புகளின் எடைமட்டும் மாறாமலேயே இருக்கின்றன. ஆடைகளை ஒரு வழியாக அணிந்து முடித்தவள், காலையில் வராமற்போன தலைச்சுற்றலை எதிர்பார்த்தவள்போல ஜாக்கிரதையாக எழுந்து நின்றாள். படிகளின் கைப்பிடிகளில் சரிவதுபோல இறங்கும் வேளை, உரையாடிக்கொண்டிருந்த மற்றவர்களின் வலிந்த குரல்கள் பதட்டத்துடனும் நாடகத்தன்மையுடனும் காதில் ஒலித்தன.
– அட நம்ம.. ஒல்கானூஷ்கா… – கரோலினிடமிருந்து ஓர் அலட்சிய வரவேற்பு.
– எழுந்திருக்க உனக்கு இன்னும் நேரமிருக்கிருக்கிறதே? அதற்குள்ளாகவா! – வீட்டுச்சொந்தக்காரி.
காலை உணவை முடித்ததன் அடையாளமாக காலிக்கோப்பைகளும், பாதிக் கடித்த வெண்னெய் ஜாம் தடவிய ரொட்டித்துண்டுகளும் மேசைவிரிப்பிற் கிடந்தன. அம்மேசையை விட்டு சற்றுதள்ளியிருந்த நாற்காலியில் ஒல்கா அனிச்சையாக உடலைச் சரித்தாள். ‘ஏத்ரெத்தா’ நகரிலிருக்கும் அப்பெண்களின் சொந்த இல்லங்களில் ஒவ்வொருநாளும் சரியாக காலை எட்டுமணிக்கு வந்து நிற்கிற வேலைக்காரிகளுண்டு.
– நீங்கள் ஏதோ அதிபரென்று பேசியது காதில் விழுந்தது, அவருக்கென்ன?
ஒல்கா பார்வை கெஞ்சுவதுபோல கொரினிடம் சென்றது, மூவரில் ஒல்காவிடம் சிறிது இரக்கம் காட்டுபவள் அவள்.
– அதிபர் இன்றைக்கு ‘ஹாவ்ரு’ வருகிறார். அவருக்கு நகரமன்றத்தில் கோக்டெய்ல் விருந்து கொடுக்கிறார்கள், எங்களுக்கும் அழைப்பு வரும். அதிபருடன் நேரடியாக உரையாடவேண்டுமென்ற விருப்பமிருக்கிறது, அதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறோம்.
– அதிபரென்றால்? எனக்குப்புரியலை- எதற்கு அவர் பிரசிடெண்ட்?
– இதென்ன கேள்வி, தூங்குமூஞ்சி! நாங்கள் குடியரசுத் தலைவர்பற்றி பேசறோம். நீ என்ன நினைச்ச.. காற்பந்தாட்ட சங்கத்தின் பிரெசிடெண்ட் என்றா? அல்லது ஹாவ்ரு நகரத்திலிருக்கிற ஏதாவதொரு முட்டாப்பசங்க சங்கத்தின் பிரெசிடெண்ட் என்றா? எனக்கேட்ட அப்பெண், வேறெங்கும் கண்டிராத பொல்லாமையுடன், வெறுப்பை உமிழும் வகையில் புருவங்களைச் சுருக்கினாள், சிகரெட் ஒன்றை பற்றவைத்தாள். ஒன்றிரண்டு புகைக் கவளங்கள் எந்திரத்தனமாகவும் சோம்பேறித்தனத்துடனும் உள்ளே இழுபட்டதும், எந்த நேரமும் அந்த சிகரெட் காலில் போட்டு நசுக்கப்படலாமென்பதை ஒல்கா அறிவாள்.
– ஹாவ்ரு நகருக்கு மித்தரான்(1) வருகிறாரா? அதுவும் இன்றைக்கா? – ஒல்கா ஆச்சரியத்துடன் வினவினாள்.
– அசடு! வருவது மித்தரான் இல்லை, சிராக். சிராக் என்ற பெயரை இதற்கு முன்னாலே கேள்விப்பட்டதுண்டா?
– வீட்டுக்குடையவளும் மற்றவளும் ஒல்காவைப் பார்த்த பார்வையில் கசப்பும் வியப்பும் கலந்திருந்தன, முதலாவது பெண் வெளிர் நீல வீட்டுடையில் தனதுணர்ச்சிகளை வெளிப்படுத்த விரும்பாதவள்போல அமைதியாக இருந்தாள். தோலின் ஓட்டை உடைசல்களை அடைக்க நினைத்தவள்போல கிரீம் தடவியிருந்தாள், சாயம்பூசிய தலைமயிரின் அடிப்பாகம் கன்னங்கரேலென்று தெளிவாக நெற்றியைப் பிரித்துக்காட்டியது. புகை பிடிக்கிற பெண்களை மட்டும் ஒருபோதும் நம்பாதே, அம்மா அடிக்கடி சொல்வாள். ஒல்காவிற்கு சட்டென்று நினைவுக்கு வந்தது, வெட்கத்தில் தலை குனிய வேண்டியிருந்தது: அண்மையில் நடந்தது, என்றைக்கென்று நினைவில்லை, ஆனால் இரவு வேளை. வியப்பின் உச்சத்தில் அம்மா சத்தமிட்டாள், அக்குரல் ஜெயித்தவளின் குரல்: மித்தரான் கதை முடிந்தது, சிராக் வாழ்க! அம்மா சிராக்கை விரும்புவாள், சிராக் என்றால் பலதும் மறந்துபோகும். சரி, ஒல்கா எப்படி அதை மறந்தாள். கண்களில் நீர்கோர்த்தது. நினைவோடு சேர்ந்து தசையும் அவ்விடத்திலில்லை, இருந்ததெல்லாம் எலும்புகளும் சோர்வும், இருண்டதொரு நிச்சயமற்ற மூலை, விவேகமற்ற கண்ணீர் சமுத்திரம், நியாயப்படுத்த முடியாதது மட்டுமல்ல, தடுக்கமுடியாமலுமிருந்தது. பசியில் வாடிய அவளுடல், அந்த உப்புநீரைக் குடித்து வயிற்றை நிரப்புவதுபோலிருந்தது, சில நேரங்களில் நிரம்பிவழிவதும் உண்டு, தற்போதும் அதுதான் நடந்தது. எல்லோரும் வீட்டுக்குடையவளின் சமயலறையில் கூடியிருந்தார்கள். இவளுக்கும் சரி அந்த இரு பெண்களுக்கும் சரி முட்டாள்தனமாக அதுபோல திடீர் திடீரென உடைந்து அழுகிற வழக்கம் இருந்ததென்றாலும், தற்போது ஒல்காவைத் தவிர பிறரிடம் இல்லை.. இயேசுவே ( அம்மாவுக்க்கு ‘எல்லாம் வல்ல இயேசுவே! எனகூறவேண்டும் அதுதான் மரியாதை!), காலை உணவாக ரொட்டியும், குடிப்பதற்கு பாலும் ஏற்பாடு செய்யேன்!
ஒல்கா தனது உள்ளங்கை இரண்டையும் ஒன்றன்மீது ஒன்றை வைத்து அழுத்தினாள்
– அதிபருக்குக் கொடுக்கவிருக்கிற கோக்டெய்ல் விருந்தில் அழைப்பிதழ் இல்லாதவர்கள் கலந்துகொள்ள முடியுமா?
– முடியவே முடியாது, கரோலின் கத்தினாள்
– பெரிய மனிதர்களின் சிபாரிசின்றி உள்ளே நுழைய முடியாது. உன்னுடைய பெற்றோருக்கு நகரமன்றத்தில் மேயரைத் தெரிந்திருக்கவேண்டும் அல்லது குறைந்த பட்சம் ஒரு பெண்காரியதரிசியை தெரிந்து வைத்திருந்தால் கூட போதும், வாய்ப்புண்டு.
அவளுடைய அம்மா வெகுகாலமாகவே சிராக்குடைய அபிமானியாக இருந்தாள், அவள் பிறப்பதற்கு முன்பிருந்தா? சிராக், சிராக்கிற்கு மட்டுமே அவள் இரசிகை. வேறொரு நடிகருக்கோ, பாடகருக்கோ அல்லது மூச்சுவிடாமற் பேசி அப்பாவை வாய்விட்டு சிரிக்கவைக்கிற பெரிய நகைச்சுவையாளர்களுக்கோ அம்மா இரசிகை அல்ல. மேசையிற் கிடந்த ரொட்டியை நோக்கி கை நீளுவதுபோலவும், அதை வாய்க்குக் கொண்டுவருவருவது போலவும் ஒல்கா கற்பனையில் ஆழ்ந்தாள், தனது கரத்தை ரொட்டியிடம் கொண்டு செல்ல விரும்பவும் செய்தாள், ஆனால் முன்பு போலவே அதனை செயல்படுத்த கை மறுத்தது. எல்லா வல்ல இயேசுவே, காலை ரொட்டிக்கு ஏற்பாடு செய்.
– என் பெற்றோர்களின் வாக்குகள் ஒவ்வொருமுறையும் அவருக்கே போடப்பட்டிருக்கின்றன.- முணுமுணுத்தாள்.
– தற்போதைக்கு அது முக்கியமல்ல. உன்னை உள்ளே விடுவார்களா, மாட்டார்களா? என்பதுதான் முக்கியம்.
– அம்மா ஒரு சிராக் பைத்தியம், – வாய்திறக்கக் கூடாதென ஒல்கா விரும்பியபோதிலும், அழுத்தமாக பதில் வந்தது.
வீட்டுக்குசொந்தக்காரியும் இரண்டுபெண்களும் குலுங்ககுலுங்கச் சிரித்தார்கள். பெண்மணி கிண்டலடிப்பதுபோல பேசினாள், அதன் பொருள் ஒல்காவிற்கு விளங்கவில்லையென்றாலும், அம்மாவின் பிறப்புறுப்பு குறித்து பேச்சுவந்தது. நடுத்தர வயதினளான வீட்டுக்காரபெண்மணி பார்க்க சவம்போல தோற்றம்தரினும், சிற்சில சமயங்களில் அவள் உபயோகிக்கும் வார்த்தைகள் காதுகொடுத்து கேட்கக்கூடியவை அல்ல, இளம்பெண்களிருவரும் தேவலாம். அவளொரு விதவை. மேசையை சுத்தம் செய்வதற்காக எழுந்தாள். ஒல்கா மௌனமாக பார்த்துக்கொண்டிருக்கிறபோதே ரொட்டி, பால், ஜாம் அனைத்தும் மாயமாய் மறைந்தன. இதைத் தொடர அனுமதிக்கமாட்டேன். ஒரு நாள் இல்லாட்டி ஒருநாள் எங்கேயோ பசியிற் சுருண்டு விழத்தான் போகிறேன், என்னை வீட்டிற்குத் தூக்கிக்கொண்டு வரத்தான் போகிறார்கள். அவள் கைகளில் துளியும் அசைவில்லை, இரு உதடுகளுக்கும் அதே கதி, சிறுத்தும் உலர்ந்துமிருக்கிற தொண்டை, இம்மி அளவு உணவைக்கூட இறங்க அனுமதிக்காது, என்று பட்டது.
– அங்கு போவதற்கு வேறுவழிகள் இருக்கின்றனவா, பார்க்கணும். சிராக்கைப் பார்க்கத்தான் போறேன், அவருடன் பேசத்தான் போறேன் – குரல் தீர்க்கமாக ஒலித்தது.
– நல்லதுதான், ஆனால் உன்னுடைய கிழட்டு அம்மாவுக்கு அவர்மேல இருக்கிற காதலைச் சொல்லி சந்தோஷப்படலாம் என்ற எண்ணத்தை விட்டுடு – இரண்டுபெண்களிலொருத்தியின் அடைகோழி குரல்.
வீட்டுக்காரபெண்மணி கருமையான தனது புருவங்களை ( அவள் புருவத்திற்கு மையிடுவதுண்டு) நெரித்தவள், கூறினாள்
– ‘வெலெத்’ நகர கிழட்டு அம்மாக்களைப்பற்றி, அவரிடம் கரிசனங்களிருக்க வாய்ப்பில்லையென நினைக்கிறேன். நானாக இருந்தால் அவரிடம் அதுபோன்ற விஷயங்களை வாய் திறக்கமாட்டேன்.
மூவரைக் குறித்தும் அடுத்தடுத்து யோசித்து பார்த்ததில் அதிபர் சிராக்கை தான் நினைத்ததைக் காட்டிலும் அவர்களுக்கு நன்றாகத் தெரியுமென்கிற முடிவுக்கு ஒல்கா வந்தாள்; வயிற்றுக்குள் சிறிய உலர்ந்த கடினமானதொரு பந்து உண்டானதைப்போல இருந்தது; இருபக்கமுமிருந்த விலா எலும்புகளைத் தட்டினாள். ஒரு வாரம் ஆகப் போகிறது வாயில் உணவை வைத்து. ஏன்? எதற்காக? ஏனென்று சொல்ல எவராவது முன்வருவார்களா? சிராக்குடைய இரண்டாவது பெயரென்ன? கொரின் என்பவளிடம் கேட்க நினைத்து, பிறகு வேண்டாமென்று முடிவெடுத்தாள். பியர், பிரான்சுவா, லூயி? நிறைய அவளுக்கு நேரமிருக்கிறது, குறைபொழுதிற்குள் பெயரைத் தெரிந்துகொள்ளமுடியுமென நினைத்தாள். அப்பெயரை இத்தனைக்கும் எத்தனை முறை அம்மா இவளிடம் கூறியிருப்பாள், இருந்தாலும் ஞாபகப்படுத்த முடியவில்லை.
அதன் பிறகு, வானம் சாம்பல் வண்ணத்திலிருந்த அன்று காலை ஒல்கா இரண்டுபெண்களுடன், கணக்கியல் படிக்கும் பள்ளிக்குச் சென்றாள். கொரினும் கரோலினும் முன்னால் நடந்தார்கள். தையல் விட்டிருந்த மடிப்புகளைக்கொண்ட ஆண்களுக்கான பழைய ஜாக்கெட்டுகளை ( கசங்கிய ஆடைகளை அதிகம் விரும்புவர்கள்)அணிந்திருந்ததின் காரணமாக பெண்களுடைய மெல்லிய தோள்களிரண்டும் கூடுதலாக விரிந்து விநோதத் தோற்றத்தை அளித்தன. வணிகவியல் கற்பிக்கும் அப்பள்ளியின் வாசலில் பெண்கள் இருவரும் நின்றார்கள். ஒல்காவின் உயிர்ப்பான கன்னங்களில் முரட்டுத் தனமாக முத்தமிட்டார்கள். தனது வகுப்புவரை போவது போல ஒல்கா பாவனை செய்தாள், ஒருவரும் பார்க்கவில்லையென்பதை உறுதிப்படுத்திக்கொண்டதும் கடற்கரையை நோக்கி நடந்தாள். கடைசியாக வகுப்பில் கால வைத்தது எப்போது? வருடத்தின் ஆரம்பத்தில் கட்டாயம் போயிருக்கவேண்டும், சிரமத்துடன் நினைவுகூர்ந்தால் சாம்பல் நிற சுவர்களுடன் வகுப்பும், எதிர்காலம் நன்றாக அமையவேண்டுமென்ற கட்டாயத்தில் சேர்த்திருந்த, படிப்பில் அக்கறையும் நம்பிக்கையும் கொண்ட பெண்களின் முகங்களும் கண்ணிற் தெரிகின்றன (ஒல்கா அம்மாவிற்கு: வாழ்க்கையில், இன்றைய சமூகத்தில் எவற்றையெயெல்லாம் அடையவேண்டுமென்று நினைக்கிறோமோ; அவ்வளவையும் மகள் கணக்கியல், காரியதரிசி பட்டய தேர்ச்சி மூலகாகப் பெற்று வெளியில் வருவாள், உறுதி). இரண்டுபெண்களையும் பிரிந்த சூட்டில் முதன்முதலாக கடற்கரைக்கு அல்லது அத்துறைமுகத்தின் திசைக்கு கால்கள் திரும்புவதற்கு முன்பாக, இரண்டொருமுறை அல்லது அதற்குங்கூடுதலாக ஒருவேளை பள்ளிக்குச் சென்றிருக்கலாம். பிறகு வந்த இடத்தில் மணிக்கணக்கில் நேரத்தைக் கழிப்பாள்; குறுங்கற்கள் மீது அமர்ந்ததும்; சோர்வு, பற்றின்மை, அடைத்திருக்கும் தொண்டை, இறுகிப்போன வயிறு, அவ்வளவும் மறைந்துபோகும். கடற் பறவைகளோ; கப்பல்களோ; ஒரு முறை எதிர்பாராமல் வியப்புக்குரியவகையில் குறுக்கிட்டு அவளிடம் மிகுந்த கவனத்துடன் தங்கள் மென்மையான அழைப்பை விடுத்து ( எலும்புக்கூளங்கள் நிரப்பிய பாரமானதொரு குப்பை பையாக அவர்களுக்கு இவள் தெரியவில்லையா?) பின்னர் மெதுவாகக் கூழாங்கற்களில் தடுமாறியபடி விலகி, திரும்பவும் அவளை நெருங்கி, வற்புறுத்தலுக்குப் பிறகு சோர்ந்து; கவர்ச்சியற்றுமிருக்கும் கடற்கரையில் ஒருபெண்ணை இனியவார்த்தைகளைக்கூறி எழுந்திருக்கசெய்ய இயலாதென்பதால் நம்பிக்கை இழந்து; முகம் கருத்து ஒடுங்கிய முகத்துடன் வேலையற்ற மீன்களைப்போல, எந்திரத்தனமான பிடிவாதத்துடன் அவளைச் சுற்றிவரும் கொரின் கரோலின் போல ஜாக்கெட் அணிந்த நடுத்தரவயது ஆண்களோ முதலிற் கண்ணிற் படவில்லை.
அன்றைய தினம் அவர்களில் ஒருவன் ஒல்காவை நெருங்கினான். அவள் முகத்தருக்கே, அவநம்பிக்கையுடனான தனது முகத்தைக்கொண்டுவந்தவன் மிகுந்த துணிச்சலுடன் அவளை மயக்க முற்பட்டான். குறும்பாகச் சில வார்த்தைகள் வந்தன, அவள் ஒளித்துவைத்துள்ள மகத்துவங்களைப்பற்றி சாடைகாட்டி பேசினான், அவளுக்குப் புரியாமலில்லை, டீ ஷர்ட்டின் கீழுள்ளதைபற்றி பேசினான்.( மார்பகங்கள் ஆகக்கூடுதலாக இருக்கிற பெண்களை நம்பக்கூடதென்றும், அளவாய் உள்ள பெண்களை மட்டுமே நம்பவேண்டுமென்றும், அம்மா சொல்வாள்) என்பது அவளுக்கு விளங்காமலில்லை. அவன் ஏற்கனவே தன்னிடம் இதுபோல நடந்துகொண்டிருக்கிறான் என்பது தெரியவந்ததும் முதலில் எரிச்சலும் கோபமும் கொண்டாள். பின்னர் அவன் உதவ முடியுமென்று தோன்றியது.
– அதிபர் சிராக்கின் முதற் பெயர் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?
– யாரு?
– சி…ராக். அவர் முதற்பெயர் எனக்குத் தெரியலை, குஸ்த்தாவ், ரொபெர், அந்த்துவான்? நான் அவசியம் தெரிஞ்சுக்கணும்.
அவன் உதடுகளில் கீழ்த்தரமான சிரிப்பொன்று எட்டிப்பார்த்தது, அவளது கேள்விக்குள் ஆபாசமாக எதையாவது கண்டுபிடிக்கமுடியுமா, சிராக் என்ற பெயருக்குப்பின்னே தன்னைச் சந்தோஷப்படுத்தும் தகவலேனும் ஒளிந்திருக்குமாவென ஆள் பிரயாசைப்படுவதும் தெரிந்தது.
– நீ என்ன சொல்றேன்னு புரியலை, – முகத்தைச் சுளித்தபடி பதிலிறுத்தான்.
– சிராக் என்ற பெயதை கேட்டதில்லை? இந்த நாட்டின் ஜானாதிபதி!
– ஹ¥ம்.. எனக்கு அவரை யாரென்றே தெரியாது.
ஏமாற்றத்தின் அடையாளமாக ஒல்கா தனது தோளைக் குலுக்கினாள். முழந்தாளிட்டு ஒல்காவின் பக்கத்தில் உட்கார்ந்தான். குறுங்கற்களிடையே கிடந்த சில பிளாஸ்டிக் துண்டுகளை பொறுக்கியெடுத்தவன் மிகவும் அழுக்காகவிருந்த தனது உள்ளங்கையில் வைத்து துள்ளிக் குதிக்கச் செய்தான். சற்று முன்பிருந்த சிரிப்பு மறைந்துபோனது, மனதின் அழுக்கை வெளிப்படுத்தும் விதமாக கீழுதடு மேலுதட்டை கவ்வியிருந்தது.
– அநேகமாக நீங்கள் வெளிநாட்டவராக இருக்கவேண்டும், அதனாற்றான் எங்கள் அதிபரை உங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை – கரிசனத்துடன் மீண்டும் அந்த ஆளிடம் பேசினாள்.
கோபத்தை அடக்கமுடியாதவன்போல அவளைப் பார்த்தவன், வார்த்தைகளைத் துப்பினான்:
– என்னைப்பார்க்க வெளிநாட்டான் மாதிரியா தோணுது? எதையும் சொல்றதுக்கு முன்னாலே, கொஞ்சம் யோசிச்சுப் பேசணும்.
இலேசாகச் சிவந்தும், பெரிய துளையுடனுமிருந்த அவன் தடித்த மூக்கு அவமானத்தில் மேலும் பெரிதானது, அதற்குத் துணைபோவதுபோல அவன் கண்களை ஈரமாக்கும் குடிகாரர்களின் கண்ணீர். காயப்பட்ட தனது மரியாதையின் கௌவரவத்தைக் காப்பாற்றுவதற்கான பிரயத்தனங்களில் இறங்கினான்.
– என்னைக்காட்டிலும் ஒரு பிரெஞ்சுக்காரனா? எங்கிட்ட வேண்டாம். அந்த ஆளின் பெயர்தானே உனக்கு வேண்டும், ‘ழாக்’ போதுமா?
கேட்டவுடன் அம்மா அடிக்கடி கூறிக்கொண்டிருந்த முதற்பெயர் அதுவல்லவென்பது உடனே நினவுக்கு வந்தது. மனிதர் தவறியிருக்க வேண்டும், அல்லது அவளைச் சந்தோஷப்படுத்த முனைந்து இச்சிறிய விளையாட்டுகான உரிமையை எடுத்துக்கொண்டிருக்க வேண்டும். சிரமத்துடன் எழுந்து நின்றாள், தலை சுற்றலும், கால்களில் நடுக்கமும் தெரிந்தன.
– இல்லை. அது ‘ழாக்’ என்று இருக்க முடியாது. சொல்லப்போனால் அது மாதிரியான முதற்பெயருக்கும் நமக்கும் வெகுதூரமென்று நினைக்கிறேன்.
தொனி கொஞ்சம் எள்ளலாக ஒலித்தது, அது கேலிக்குரியதாகவுமிருந்தது. பலவீனமாக வெளிப்பட்ட தனது சிரிப்பை அவளால் அடக்கவும் முடியவில்லை. கன்னமிரண்டையும் கண்ணீர் நனைத்தது. முடிந்த அளவிற்கு அந்த ஆளிடமிருந்து சீக்கிரம் விலகிச்செல்ல தீர்மானித்தாள், அவளைத் தொடர்ந்துவரும் எண்ணமேதுமில்லை என்பதுபோல அசையாமல் அவன் நின்றிருந்தான், அவள் திரும்பிப்பார்த்தபொழுது, சாம்பல் நிற தலை மினுங்கிற்று, அணிந்திருந்த பழைய ஜாக்கெட்டிற்குள் தோள்களின் வளைவுகளைக் கண்டாள், ‘எத்ரெத்தா’ பெண்களின் தோள்களுக்குள்ள சரி நிகரான அதே வளைவுகள்.
பிற்பகல், எவ்வித சுவடுமின்றி சிலமணி நேரங்களைக் கழித்திருந்தாள். கால்களிரண்டும் நகரமன்றம் வரை அவளை கூட்டிக்கொண்டு போயின. நுழைவாயில் செயற்கையான வேலிகளிட்டும், நகரசபை பொலிசாரைக்(2) கொண்டும் தடுக்கப்பட்டிருந்தது. எனினும் காவலிலிருந்த ஓட்டை வெளிப்படையாக தெரிந்தது, தன்னை அதிபரின் கோக்டெயில் விருந்துக்கு அழைத்திருப்பதாகத் தெரிவித்தபோது கேள்வின்றி அனுமதித்தார்கள். அங்கிருந்த ஓர் ஊழியை இன்னும் நேரமிருக்கிறதென்றாள். வரவேற்பு மண்டபத்தில் அப்போதுதான் மேசைகளை ஒழுங்குபடுத்தி யிருந்தார்கள், நகரசபை மேயர் மாடியில் பதிவுத் திருமணமொன்றை நடத்திக்கொண்டிருப்பதாக அறிந்தாள். மூலையில் கௌண்ட்டர் அருகே நாற்காலியொன்றிருந்தது, அங்கே காத்திருக்க முடிவு செய்தாள். இணக்கமான சோர்வொன்று அயற்சியை மேலும் கூட்ட கண்கள் இருண்டன. நகரத்தின் முக்கிய பிரமுகர்கள் பலர் போவதும் வருவதுமாக இருப்பதை அரை உறக்கத்தில் கவனித்தாள், பிறகு எதிர்பாராததொரு குபீரென்றவெளிச்சம் மண்டபத்தின் பளிங்குத் தரைக்கு ஒளியூட்டியது. கூதிர் காலத்தின் பிற்பகலில் இன்றாவது ஹாவ்ரு நகரில் சூரியனைப் பார்க்கமுடிந்ததென்கிற சந்தோஷம். நாற்காலியில் அமர்ந்திருக்க சுகமாக இருந்தது, பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்குமென்றும், அவளுக்கென உதவிக்கரம் கூடிய சீக்கிரம் நீட்டப்படுமென்றும் மனதில் உறுதிப்பட்டது. கண்ணீர் மீண்டும் பெருக்கெடுத்தது. அவருக்கு முதற்பெயர் எதுவென்றாலும் இருக்கட்டும், அதிபரிடம் பேசுவேன்; மிகமோசமான எனது பள்ளியைப் பற்றியும், செயற்கை இழை பின்னல்களைக்கொண்ட படுக்கை விரிப்பு குறித்தும், எனது தொண்டை பிரச்சினைக் குறித்தும்? மற்றும் … தற்போது அதிக எண்ணிக்கையில் மனிதர்கள் உள்ளே நுழைந்தார்கள், எல்லோரும் வரவேற்பு மண்டபத்திற்காய்ச் சென்றார்கள். பெண்களிருவரையும் ஒல்கா பார்த்தாள், நிமிர்ந்து நின்றிருந்த அப்பெண்களின் தலைகளில் ஒட்டவெட்டிய முடி ஆரஞ்சு நிற சாயத்தில் மினுங்கியது; கணக்கியல் பள்ளியின் தலைமை ஆசிரியையும்; கர்வங்கொண்ட வீட்டுக்கார பெண்மணியை ஆடம்பர உடையிலும் கூட்டத்தில் அடையாளம் கண்டாள். அவளுக்குத் தூக்கிவாரிபோட்டது, அம்மாவும் கும்பலில் இருந்தாள். மகளிடம் எதுவும் கூறாமலேயே, தனது அபிமான தலைவரை அம்மா காணவந்திருக்கிறாள் என்பதை விளங்கிக்கொண்டாள், இருபது ஆண்டுகளாக தான் கொண்டாடும் ஒருவரை, மிக நெருக்கத்தில் காணக் கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை துய்க்கவேண்டுமென்ற மனநிலைக்கு அவள் தயார் என்பதுபோலவும் இருந்தாள். அம்மாவைப் பார்த்ததும் முதலில் அதிர்ச்சியும் சற்று எரிச்சலும் வந்தது, எனினும் சமாளிப்பதுபோல அவளைப்பார்த்து சிரித்துவைத்தாள். அம்மா ஏடாகூடாமாக ஏதேனும் செய்து தொலைப்பாளோ என்ற அச்சமும் பிறந்தது, சொந்தப்பெண்ணை கணநேரம் மறந்து, தன்னுடைய அதிபரை கூடுதலாக விரும்பக்கூடும்- அதிலென்ன தப்பு? அம்மா அவளுடைய அழகான சாம்பல் வண்ண ஆடையையும், கருப்பு வண்ண காலுறையையும் அணிந்திருந்தாள். அட இந்த முறையாவது தோற்றத்தில் கவனமெடுத்துக்கொண்டு வந்திருக்கிறாளே, என்பதில் மகிழ்ச்சி. திடீரென்று சந்தேகம் முளைத்தது: அம்மா பள்ளி தலைமை ஆசிரியயைச் சந்திக்க நேர்ந்து, அவளிடம் தான் ஒழுங்காகப் பள்ளிக்கு வராதிருப்பதை தலைமை ஆசிரியைக் கோள்மூட்டிவிடுவாளோ என்பதால் முளைத்த ஐயம். எல்லாம் ஒரு நிமிட நேரம், இதுபோன்ற முக்கிய தினமொன்றில் அதைப்பற்றி நினைக்கக்கூடாதென்பதுபோல, உடனே மறந்தாள். கண்ணாடி வழியாக வந்த சூரிய ஓளி சுள்ளென்று உறைத்தது. தலைவலிப்பது போலிருந்தது, விரல்களைக்கொண்டு அழுத்தினாள், நெற்றி கொதித்ததோடு மட்டுமின்றி, வேர்க்கவும் செய்தது. என்ன இருந்தாலும் சூரியனைப் பார்ப்பதென்பது ஒரு வரம். குறைகளற்ற அம்மாவின் அன்பும், திடீரென்று ஒளிவெள்ளத்தில் மூழ்கிய நகரமும் கொடுத்துள்ள இச்சந்தோஷத்தை தவறவிடக்கூடாது. அவளுங்கூட தன் பங்கிற்கு நகரசபையின் பெரிய மண்டபத்தின் மின்சாரம் பாய்ச்சப்பட்ட திடீர் சூழலையும், அதிர்வையும் அனுபவிக்கவேண்டும் என நினைத்தபோது ஒரு சந்தோஷக்குரல்: ஆ! வந்துட்டார்! சின்னதாக ஒரு துள்ளல், பின்னர் உடலில் ஓர் அதிர்வு. என்ன நேர்ந்தது? அவள் தலையில் புள்ளியொன்றைக் குறிவைத்து வெப்பம் தாக்கியிருந்தது. அது அவளுடைய நினைவாற்றல் மற்றும் கவனத்திறனை அபகரித்திருந்தது. பிறகு? தொடர்ந்து குரல் கேட்கிறது: இதோ ஜனாதிபதி! அடுத்து கூச்சலும் குழப்பமும், வரவேற்புவிழா மணடபத்தின் வாயிலைநோக்கி மகிழ்ச்சிப்பெருக்கில் மனிதர்கள் ஓடுகிறார்கள். வெடுக்கென்று எழுந்தாள், தலை வெடித்தது. அப்படியொரு நம்பிக்கை அவளிடம் ஒருபோதும் ஏற்பட்டதில்லை, கண்களுக்கிடையில் ஏற்பட்ட வலிக்கும் அது பொருந்தும் -சூரியனே வலிய அவள் மூளையில் கொஞ்சம் இடத்தைப் பறித்துக்கொண்டதுபோல இருந்தது. இருக்கையை நீங்குவது அத்தனை எளிதான காரியமல்ல, என்பதும் அவளுக்குத் தெரியும். சற்றுதள்ளி, வீட்டுக்கார பெண்மணியின் முகத்தில் செயற்கைத்தனமான சிரிப்பு. அம்மா பின்னால் நின்றுகொண்டிருந்தாள், ஒல்கா வந்திருப்பதை அறியாத அவளிடத்தில் பிரியமும், சிலிர்ப்பும் தெரிந்தன. வழிவிடுங்கள், ஆ.. வந்துட்டேன். மைனாபோல ஒரு குதிப்பு, மண்டபத்தின் நடுவில் இருந்தாள். அதிபரின் முதற்பெயர் என்னவென்று இப்பொழுது அவளுக்குத் தெரியும், ஞாபகப்படுத்திக்கொண்டாள்: ரெனே! ஆம் அதுதான். நிற்க சங்கடமாக இருந்தது. அவற்றை கால்களென்று சொல்ல முடியாது புற் கற்றைகள், எலும்புகளைச்சுமக்க அவற்றிடம் பலமில்லை, மிகவும் மெலிந்தவை. உரக்க குரலெழுப்ப நினைத்தாள். ரெனே! வீட்டுக்குடையவள் பெண்கள் இருவரிடமும், “மேதகு அதிபர் அவர்களே!” என்று அழைக்க சிபாரிசு செய்திருந்தாள். ரெனே என்ற பெயருக்கும் அதிபருக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லையெனில்? புற்களென நம்பப்பட்ட கால்கள் கழலுகின்றன. வெப்பமான டைல்ஸ் தரையில் சுருண்டு விழுந்தாள், மனிதர்களின் வியப்பும், கூச்சல்களும் காதில் விழுந்தன, அடுத்து நிறைய சுருக்கங்களுடன் ஒரு முகம், அலங்கரிக்கப்பட்டது, வினோதமான சாயமிட்ட ஒரு மனித முகமூடி, கடுகடுத்த பார்வையுடன் அவளை நோக்கி குனிந்தது. அதிபரென்று விளங்கிக்கொண்டாள்- ழான்? ரெமொன்? அவரிடம் என்ன பேசுவது? தொண்டை அடைத்தது, புன்னகைக்க மட்டுமே முடிந்தது.
————————————————————————————————————-
1. முன்னாள் பிரெஞ்சு அதிபர்
2. Polices Municipaux, பிரான்சு நாட்டில் நகரசபைகளுக்கென தனிக் காவலர் படையுண்டு
Like this:
Like ஏற்றப்படுகின்றது...