Monthly Archives: நவம்பர் 2018

புதிய நாவல்

அன்பினிய நண்பர்களுக்கு  வணக்கங்கள்

 

வயது அதிகரிக்கிறபொழுது, காலமும் நேரமும் கிடைத்தற்கரிய பொருளாக இருக்கிறது. பிறகு வயதுக்கே உரிய தொல்லைகள்.

புதிதாக ஒரு நாவலை எழுதி முடித்துள்ளேன். எனது படைப்புகளை பிரெஞ்சில் கொண்டுபோகும் எண்ணத்துடன், எனது மற்றுமொரு நூலை   மொழிபெயர்க்கத்தொடங்கியுள்ளேன்.

 

எனது புதிய நாவல் : இறந்த காலம்

இன்றைய ஆரோவில் நகரை மையமாக வைத்து சொல்லப்படும் கதையில் அரவிந்தரின் ஆன்மீகத் தோழி மிரா ரா அல்ஃபஸ்ஸா புதுச்சேரிவந்த காலத்தில் (1914) தொடங்கி 1954 வரையிலான புதுச்சேரி, அதேகாலத்தில் ரெனோன்சாசியோன்(Renonciation) என்ற பெயரில் தங்கள் பூர்வீக அடையாளத்தை துறந்து பிரெஞ்சுக் குடியினராக மாறி, தங்களை வாழ்விக்க வந்த வள்ளல்களாக பிரெஞ்சுக்கார்களைக் கருதி அவர்களுக்காக (தங்களுக்காகவும்) இந்தோ சீனா (சைகோன்)சென்ற தமிழர்களைப்பற்றியும் கொஞ்சம் பேசுகிறேன்.நவீனமும் சரித்திரமும்  பின்னப்பட்ட, நாவல்.

 

புதுச்சேரி  வரலாறு என்பது இந்தோ சீனாவையும் சார்ந்த து.  காலனிகால வரலாறில்  பிரெஞ்சுக்காலனிகள் எங்கெங்கெல்லாம் இருந்தனவோ அங்கெல்லாம் சென்று கிறித்துவமத த்தில் விழுந்து, மேற்குலக நாகரீகத்தில் கரைந்துபோன தமிழர்கள் ஒருபக்கமெனில்,   பண்பாட்டைப் போற்றுவதாகச் சொல்லிக்கொண்டு   தேர் இழுத்தலிலும்.  தீமிதித்தலிலும் தீவிரம் காட்டும் மக்கள்  இன்னொரு பக்கம். ஒரு தலைமுறைக்குப் பிறகு புலம்பெயரும் அனைவரிடமும் நிகழும் விபத்திற்கொப்ப மொழியைத் தொலைத்து, வீட்டில் அம்மா, அப்பா அம்மம்மா சொற்களை வாய்க்கரிசியாக உபயோகிக்கும் இம்மக்களை அவர்களின் இழப்புகளை  அவர்களின் நடுவே ஒரு தமிழனாக நின்று எழுதியிருக்கிறேன். இரைச்சல் மிக்க தமிழ் சூழலில் இவர்களின் கேவலும் விசும்பலும் காதில் விழுமா என்று தெரியவில்லை. இந்தோ சீனா தமிழர்களின் வாழ்க்கையை மட்டுமே ஆதாரமாக கொண்டு ஒரு நாவல் எழுதும் எண்ணமும் உண்டு . எல்லாம் ஆசைகள் தான் சொல்வதுபோல பல நேரங்களில் என்னால் செயல்பட முடிவதில்லை.

பதிப்பகம்

பதிப்பகங்களைப் பொறுத்தவரை, சந்தியா எனக்குப் பிறந்தவீடெனில் காலச்சுவடு புகுந்த வீடு. இருவருமே என்னைப் புரிந்து தொழிலுக்கு அப்பாற்பட்ட நட்புடன் பழகுகிறவர்கள். இந்த நாவலை சந்தியா பதிப்பகம்வெளியிடுகிறது.  காக்கை உட்கார பணம்பழம் விழுந்த கதையாக பாலியல் குற்றம்  நாவலின் மையப்பொருள். இதை நான்கு மாதங்களுக்கு முன்பு எழுதத் தொடங்கியபோது , இன்றைக்கு உலகமெங்கும் பேசப்படும் பொருளாக அப்பிரச்சினை மாறுமென  நினைக்கவில்லை.

மதுரையில் அண்மையில் மயில்கள் பல விஷம் வைத்துக்கொல்லப்பட்டதாகப் படித்த செய்தி, நாவலின் விதை, அது ஆரோவில்லில் மரமாகியிருக்கிறது.

———————————————————–