Monthly Archives: நவம்பர் 2014

எஸ். பொ. என்ற மாமனிதன்

S.P எஸ். பொ. என இலக்கிய நண்பர்களால் அன்புடன் அழைக்கப்ட்ட எஸ். பொன்னுதுரையை தமிழ் இழந்திருக்கிறது.. சில வருடங்களுக்கு முன்பாக யுகமாயினி சித்தன் முயற்சியில் நண்பர் திருப்பூர் கிருஷ்ணன் அமுதசுரபி இதழ் சார்பாக ஒரு நிகழ்ச்சியை சென்னையில் எனக்காக ஏற்பாடு செய்திருந்தார். அநிகழ்வுக்கு திரு எஸ்.பொ. தலமை தாங்கினார். அப்போதுதான் அவரை முதன்முதலாக நேரில் சந்தித்தேன். அதன் பின்னர் சென்ற ஆண்டு கோவையில் நடைபெற்ற தாயகம் கடந்த தமிழ் நிகழ்வில் அவரைக் காணும் வாய்ப்பு பெற்றேன். அவர் பேசும் தமிழும் சரி எழுதும் தமிழும் சரி காண்டாமணிபோல ஒலித்தபின்னும் ஓசையில் நீள்பவை, நெஞ்சில் வெகுநேரம் எதிரொலிப்பவை. ‘காப்பிக் குடிக்கபோனபோது மனிஷி பார்த்துவிடக்கூடாதென்றார். அந்த அம்மாவிற்குத்தெரியாமல் இனிப்பை அதிகம் சேர்த்தே உடம்பைக் கெடுத்துக்கொள்கிறாரென தெரியவந்தபோது கோபம் வந்தது. நண்பர் க.பஞ்சாங்கமும் நானும் கோவைக்கு விமானத்திற்காக சென்னை மீனம்பாக்கத்தில் காத்திருந்தபோது அவரது உரையாடியது இன்றும் மனதில் இருக்கிறது, குழு அரசியலில் சிக்காத இலக்கியவாதி. அவர் உழைப்பை தமிழ் புரிந்துகொண்டிருந்தது, தமிழர்கள்தான் உணரவில்லை; எதையும் விளம்பரங்களைக்கொண்டு எடைபோட்டு பழகிய தமிழர்கள் அவர் அருமையை விளங்கிக்கொள்ளாதில் வியப்புகளில்லை. எஸ்.பொ.வின் தமிழ்ப் பங்களிப்பும் அது சார்ந்த ஒளிவட்டமும் விலைகொடுத்து பெற்றதல்ல, தமிழ் உள்ளவரை இருப்பார்.

பத்ரிக் மொதியானொ: நினவுகளை கலை நுட்பத்துடன் எடுத்துரைக்கக் கூடியவர்

France Nobel Literature” நோபெல் பரிசும் பிரெஞ்சு இலக்கியமும் இணைபிரியாதவை, ஏனெனில் பிரெஞ்சு இலக்கியம், நோபெல் பரிசு என்கிற ஒளிப்பிரபைக்குள் வருகிறது” -என ‘பத்ரிக் மொதியானொ’வின் பெயரை 2014ம் ஆண்டு நோபெல் இலக்கிய பரிசுக்குத் தேர்வு செய்து முடிவை அறிவித்த தினத்தில் பிரான்சு நாட்டு வெளியுறவு அமைச்சர் கூறியிருந்தார். அவருடைய நாட்டின் இலக்கியபுகழ் குறித்து பெருமிதம்கொள்ள அமைச்சருக்குக் காரணங்கள் இருக்கின்றன. உலக நாடுகளில் நோபெல் பரிசை அதிகம் வென்ற நாடுகளில் பிரான்சு முதலாவது – இது நாள்வரை பதினைந்து பரிசுகள். அமெரிக்காவும் இங்கிலாந்தும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன. 1964 ஆம் ஆண்டு தமக்களிக்கப்பட்ட பரிசை ழான் போல் சார்த்துரு மறுக்கவில்லையெனில் பரிசுபெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்குமெனவும் பிரெஞ்சு மக்கள் தெரிவிக்கிறார்கள். ழான் போல் சார்த்ருவின் மறுப்பு நோபெல் பரிசுத் குழுவினரைச் சீண்டியதாகவும், கோபமுற்ற பரிசுக்குழுவினர் இருபது, ஆண்டுகள் பிரெஞ்சு இலக்கியவாதிகளைத் தண்டித்தத்தாகவும்(?) பேச்சு. 1985ம் ஆண்டு குளோது சிமோன் என்ற பிரெஞ்சு எழுத்தாளருக்குப் பரிசினை அளித்ததின் மூலம் பிணக்கு முடிவுக்கு வந்ததாகப் பிரெஞ்சு மக்களிடையே பரவலாக எண்ணமிருக்கிறது. 2008ல் கிளேசியோவுக்கு இலக்கியத்திற்கான நோபெல் பரிசு கிடைத்த ஆறாண்டுகள் இடைவெளியில் மற்றுமொரு பரிசு எந்பதால் பிரெஞ்சு இலக்கிய உலகம் மகிழ்ச்சியில் திளைக்கிறது, தங்கள் எதிர்காலம் ஆரோக்கியமானதென நம்பிக்கைக்கொண்டிருக்கிறது.

” நான் எழுதிய நூல்களைக் குறித்து குழப்பமே மிஞ்சுகிறது. ஓரே ஒரு புத்தகத்தைத்தான் கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளாக எழுதியிருக்கிறேன். ( 30ம்க்கு மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன). நடப்பது அனைத்துமே உண்மை அல்லாதது போலவும், கனவில் நிகழ்வதுபோலவும்; என்னைப்போன்ற பிறிதொருவருக்கே பரிசும், புகழும் வந்தடைந்திருப்பதுபோலவும். நினைக்கத் தோன்றுகிறது. எனது பெயர், பரிசுபெற வாய்ப்புள்ளவர்கள் பட்டியலில் இருக்கிறதென்று சொன்னார்கள், ஆனால் தேர்வு செய்யப்படுவேன் என நினைக்கவில்லை. நான் போற்றிய,வியந்த எழுத்தாளர்களுக்கு இணையாக நானும் வைக்கப்படுவேன் என நினைத்ததில்லை. ” -இவை, தேர்வுக்குழு தமது பெயரை அறிவித்த நாளில் பிரெஞ்சு பத்திரிகையாளர்களிடம் மொதியானொ கூறியவை, அவரை அறிந்தவர்களுக்கு இப்பதில் வியப்பினை அளித்திருக்க வாய்ப்பில்லை.

“பத்ரிக் மொதியானொவா, யார் அந்த ஆள்?” எனக் “தி கார்டியன்” இதழ் பத்திரிக்கையாளர் கேட்டதாக ஒரு செய்தி பிரெஞ்சு தினசரியொன்றில் வெளியாகி இருந்தது. அவர் கோபத்திற்குக் காரணம், அமெரிக்க எழுத்தாளர் ‘பிலிப் ரோத்’ திற்கு பரிசு கிடைக்காதது. இல்லை என்றானதும் கோபம் பத்ரிக் மொதியானொ மீது திரும்பியிருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் அறியப்பட்ட அளவிற்கு ஆங்கில மொழி பேசும் பகுதிகளில் மொதியானொ நன்கறியப்டாத பெயாராம். அமெரிக்காவில் இதுவரை மோதியானாவின் மூன்று நூல்களே வந்திருப்பதாகவும் அவையும் பிற பிரெஞ்சு எழுத்தாளர்களைக்காட்டிலும் விற்பனையில் தேக்க நிலையில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. நோபெல் பரிசு அக்குறையைக் களைந்து விடுமென பிரெஞ்சு இலக்கிய உலகம் எதிர்பார்க்கிறது.

பத்ரிக் மொதியானொ எப்படி? பிரான்சு நாட்டைப் பொறுத்தவரை, நோபெல் பரிசு அளிக்காமல் இருந்திருந்தாலுங்கூட ஓர் முக்கியமான எழுத்தாளர். என்றைக்குப் பிரெஞ்சு இலக்கிய உலகு தங்கள் நாட்டின் அதிமுக்கியம்வாய்ந்த “கொன்க்கூர் பரிசை” அளித்தார்களோ, அன்றிலிருந்தே அவர் ஓர் முக்கிய எழுத்தாளர். பிரான்சுக்கு வந்த புதிது, பிரெஞ்சு இலக்கியத்தில் அதிகம் அக்கறை கொள்ளாத தொடக்க காலம். ஒரு நாள் இரவு ‘ஆண்ட்டென் 2′ என்ற பிரெஞ்சு சேனலின் வாரம் ஒருமுறை நடபெறும் இலக்கிய நிகழ்விற்கு பத்ரிக் மொதியானொ’ வந்திருந்தார். நல்ல உயரம், அதற்கேற்ற உடல் வாகு. நிகழ்ச்சியை நடத்திய மொழிவிற்பன்னர் ‘பெர்னார் பீவோவும் கிட்டத்தட்ட அவரைப்போலவே இருந்தார். ‘பெர்னார் பீவோ’வின் கேள்விகள் சுருக்கமாக இருந்தபோதிலும் நிகழ்ச்சியைப் பார்த்த எனக்கு அவற்றைப் புரிந்துகொள்வதில் சங்கடங்கள் இருந்தன. மாறாக பத்ரிக் மோதியானோவின் பதில்கள் எளிதாகப் புரிந்தன. ஒவ்வொரு பதிலையும் நிறுத்தி நிதானமாகக்கூறினார். அவருடைய பதில் நீளமாக இருந்தபோதிலும் எளிமையான சொற்களைக் கையாண்டார். ஆனால் அதைக் கூறிய விதம், அவரை முன்பின் அறிந்திராத என்னை நகைக்கச் செய்தது. பாதி வாக்கியத்தை கூறுவார், பல நொடிகளை தயக்கத்துடன் கழித்த பிறகு, மீதி வாக்கியத்திற்கு வீட்டிற்கு சொல்லியனுப்பி இருப்பதுபோலக் காத்திருப்பார், வந்து சேர்ந்ததை உறுதிப்படுத்திக்கொண்டவர்போல மிச்சமிருக்கும் வாக்கியம் வெளிப்படும்.. அப்பதிலும் திரும்பத் திரும்பவரும், ‘கீறல் விழுந்த இசைத்தட்டு’ போல. நிகழ்ச்சியை நடத்தியவருக்கும் வந்திருந்த பார்வையாளர்களுக்கும் மொதியானொவின் பதில்கள் எப்படி இருந்தனவோ தெரியாது. எனக்கு அன்று இரண்டொரு பிரெஞ்சு சொற்கள் கற்க வாய்பாக அது அமைந்தது. தொண்ணூறுகளில் இருந்துதான் பிரெஞ்சு இலக்கியத்தில் ஆர்வம் பிறந்ததென்று சொல்லவேண்டும். உயர் நிலைப் பள்ளி மாணவர்களுக்கானப் பாடத் திட்டத்தில் நவீன இலக்கியங்களிலிருந்து சில பகுதிகளைப் பிரசுரித்து எளிமையான கேள்விகளுடன் விளக்கம் சொல்லப்பட்டிருக்கும். பல நவீன எழுத்தாளர்கள் அப்பாடநூல்கள் மூலமாக எனக்குத் தெரியவந்தார்கள். அவர்களில் பத்ரிக் மொதியானொ¡வும் ஒருவர். இவர்களுக்கெல்லாம் நோபெல் பரிசு கிடைக்குமென சில பெயர்கள் பிரெஞ்சு இலக்கிய உலகில் அவ்வப்போது வதந்திகளாக பரவும்: ஹூல்பெக், மரி தியய், பஸ்க்கால் கிஞ்ஞார் எனப் பெயர்கள் அடிபடும், மொதியானோவின் பெயரும் அதிலுண்டு, பட்டியலில் மூன்றாவதாகவோ நான்காவதாகவோ வருவார். ஒருவேளை மற்றவர்களை மொதியானொ முந்திக்கொண்டதற்கு வயது அல்லது அவரது சுவீடன் உறவு காரணமாக இருந்திருக்கலாம் என்ற வதந்தி தற்போது.

பத்ரிக் மொதியானொ¡விற்கு நோபல் பரிசினை வழங்கியிருப்பதன் மூலம் பிரெஞ்சு இலக்கிய உலகின் தனித்துவம் மீண்டும் உலகிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதென்றே நம்பவேண்டியிருக்கிறது. உலகிற்கு பிரெஞ்சு இலகியத்தின் பங்களிப்பைக் குறைத்து பதிப்பிடமுடியாது. எடுத்துரைப்ப்பிலும், கதைசொல்லலிலும் வடிவத்திலும் ஒரு மாபெரும் புரட்சியை நடத்திக் காட்டியவர்கள். கடந்த 30 ஆண்டுகளாக ஆண்டுகளாக ‘Ecriture de soi’ எனப்படுகிற ‘தன்னை எழுதுதல்’ பிரெஞ்சு இலக்கிய உலகை ஆளுமை செய்கிறது. கட்டுரை, சிறுகதை, புதினம் எனும் எடுத்துரைப்பின் அனைத்துவடிவங்களிலும் இது நிரூபணம் ஆகியுள்ளது. மொதியானொவின் எழுத்துக்கள் அனைத்துமே தன்னை எழுதுதல் வகைமை சார்ந்தவை. அவருடைய கதைகள், கட்டுரைகள் நாவல்கள் அனைத்துமே அவர் வாழ்க்கையை, அவர், குடும்பத்தை, அவர் நண்பர்களை, அவர் சந்தித்த மனிதர்களை, அவர் குடியிருந்த வீட்டை, அந்த வீடிருந்த கட்டிடத்தை, அக்கடிதம் இருந்த வீதியைத் திரும்பத் திருப்ப அலுக்காமல் பேசுபவை. அவருடைய தன்னை எழுதலில்: சுய வரலாறும் உண்டு, சுய புனைவும் உண்டு. அவருடைய சுயபுனைவுகள் வித்தியாசமானவை, எடுத்துரைப்பில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு அதிலின்று வெற்றியும் பெற்றிர்ருக்கின்றன. கதைக் களனை அவர் பயன்படுத்திக்கொள்ளும் விதமும், எளிமையான கதைசொல்லலும், தேடலும், மொதியானோவை தனித்து அடையாளப்படுத்துகின்றன.

Un pedigree என்பது அவருடைய சுயவரலாறு, 2005ல் வெளிவந்தது. இலக்கிய விமர்சகர்களின் கருத்துப்படி அதொரு hetro-biography, auro-biography அல்ல. அதாவது தன்னை பிறனாகப் பாவித்து எழுதப்பட்ட சுயவரலாறு. இங்கே நோபெல் பரிசு அறிவிக்கப்பட்டதும் பத்திரிகையாளர்களிடம் அவர் தெரிவித்த: “பரிசு அறிவிப்பும் அது சார்ந்த கொண்டாட்டங்களும் எனக்கல்ல, என்னைபோன்ற ஒருவருக்கு அளித்ததாகவே பார்க்கிறேன்” என்ற கூற்றை நினைவு கூர்தல் வேண்டும். பத்ரிக் மொதியானொவின் சுயவரலாறு இப்படித் தொடங்குகிறது; ” ஜூலை மாதம் 30ந்தேதி 1945ம் ஆண்டு பூலோஜ்ன் – பில்லியான்-கூர்- ல், எண்-11, மார்கரீத் சந்தில் பிறந்தேன்” காலச் சுவடு வெளிவந்திருக்கும் ‘உயிர்க்கொல்லி’ சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பத்ரிக் மொதியானொவின் சிறுகதை ‘சேன் நதியில்’ கதை சொல்லியும், மதாம் பிளாஷ் மகளான சோனியாவும் பிறந்தது பூலோஜ்ன் என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது, வீட்டு எண்ணை மட்டும் தவிர்த்திருக்கிறார். அவருடைய சுயவரலாற்றில், ” மொதியானோவின் தாய் நாடகபட்டறையில் பயிற்சிபெற சேர்ந்ததும், தன்னைச் (மொதியானோவை) சரியாகக் கவனிப்பதில்லை” – என்றும் வருகிறது. ‘சேன் நதி’க் கதையிலும் நாடகப் பட்டறையில் தொழில்முறை கலைஞராக பயிற்சி பெறும் சோனியா தனது மகளை கவனிப்பதில் அக்கறைகொள்வதில்லை. அதுபோலவே மொதியானொவின் சுயவரலாற்றில், நீதிமன்றத் தீர்ப்பின்படி வீட்டுத்தளவாடங்களை அபகரிக்க நீதிமன்ற உத்தரவுடன் அரசாங்க பிரதிநிதி வரப்போகிறார் என்றறிந்து, வீட்டுத் தளவாடங்களை இரவோடிரவாக எழுத்தாளரின் தந்தை வேறிடத்திற்கு அனுப்பியதாகக் கூறியிருப்பார், “வீடு வெறிச்சோடிக்கிடக்கும்”, என சொல்லப்பட்டிருக்கும். இக்காட்சியையும் “சேன்நதி” சிறுகதையில் அப்படியே பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். அதுபோலவே சுயவராற்றில், ” மூன்றாவது மாடியில் எந்நேரமும் விருந்தினர்களின் சிரிப்பும் கும்மாளமும் அமர்க்களப்படும், நாங்கள் ( மொதியானொவும் அவரது சகோதரரும்) அதைக் காதில் வாங்கியிருக்கிறோம். நாங்கள் கவனிப்பாரற்று இருக்க பக்கத்து அறையில் அவரது சினேகிதர் சினேகிதைகளுடன் அம்மா கொண்டாட்டத்தில் இருப்பார்கள்” என்பதெல்லாம் ‘உயிர்க்கொல்லித் தொகுப்பில் இடம்பெற்றுள்ள “சேன் நதி”க்கதையில் அப்படியே இடம் பெறுகின்றன. இவ்வுண்மை அவருடைய அனைத்துப் புனைவுகளுக்கும், எடுத்துரைப்பிற்கும் பொருந்தக்கூடியது. எனவே பத்ரிக் மொதியானொ பிரெஞ்சு எழுத்தாளர்களையும் பார்க்க ஒப்பீட்டு அளவில் கூடுதலாக ‘தன்னை எழுதுதலில்’ முழுமையாக ஒப்படைத்துக்கொண்டவர் எனத் தெரிவிக்கலாம். நோபெல் பரிசு பத்ரிக் மொதியானொவிற்குக் கிடைத்தது என்பதைவிட ‘தன்னை எழுதுதலுக்குக்’ கிடைத்தப் பரிசு எனக் கூறினால் மிகையில்லை.

1978ம் ஆண்டு மொதியானொ¡விற்குப் பிரெஞ்சு இலக்கிய உலகின் கொன்க்கூர் பரிசு (Prix Goncourt) அவருடய “Rue des boutiques obscures”( ரோமிலுள்ள தெருவின் பெயரை நாவலின் தலைப்புக்குப் பயன்படுத்திக்கொண்டார் ) மொதியானொவை நெருங்கக் காரணமாயிற்று. வாசிப்புத் தேர்வுக்கு இதுபோன்ற பரிசுகளும் நமக்கு உதவுகின்றன. கொன்க்கூர் பரிசுபெறும் நாவல்களை வாங்குவதென்ற முடிவின் அடிப்படையில், பழைய புத்தகக்கடையில் பாக்கெட் நாவல் தரத்தில் வீட்டிற்கு வந்தது. இந் நாவலும் சரி இதற்கு முன்பாக வாசித்திருந்த ஒன்றிரண்டு சிறுகதைகளும் சரி பலரும் கூறுவதைப்போல மொதியானொ கடந்த காலத்தைத் தேடும் மனிதரென்பதை தெரிவிக்கின்றன. எழுத்தாளருக்கு கடந்த காலம் என்பது அவருடைய கடந்த காலம் அல்ல, அவருடன் வாழ்ந்த சக மனிதர்களின் கடந்த காலம். “பிறருடைய கடந்த காலத்தை தன்னுடைய நினைவுகளிலிருந்து மீட்கிறார்”. “Rue des boutiques obscures” நாலை ஆங்கிலத்தில்” Missing person” என்று மொழிபெயர்த்திருந்தது வியப்பை அளித்தது. பிறவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் என்னபெயர் கொடுப்பார்கள் என்ற கேள்வி எழுந்ததால் இந்த வியப்பு. கிடைக்கிற தகவல்களை வைத்து பார்க்கிறபோது மோதியானோவின் எல்லா நாவல்களுமே தொலைந்த மனிதர்களைத் தேடுபவைதான் – ‘தொலைத்த காலத்தைத் தேடும்’ மர்செல் ப்ரூஸ்டு போல.

பத்ரிக் மொதியானொவை இன்னார் என்று புரிந்துகொள்ள தமிழில் வந்துள்ள உயிர்க்கொல்லி சிறுகதைத் தொகுப்பில் உள்ள ‘சேன் நதி ‘ என்ற ஒரு கதை போதுமானது. அவரது படைப்புகளின் பொதுப்பண்புகளாக: அவர் வாழ்க்கையிலும்அவருக்கு வேண்டியவர்களின் வாழ்க்கையிலும் குறுக்கிட்ட மனிதர்களின் பழைய நினைவுகளில் ஆழ்தல், அவற்றை மீட்டெடுத்தல், கையில் முகவரியை வைத்துக்கொண்டு அம் முகவரிக்குரிய நபர்களைத் தேடுதல், அவர்களின் அடையாளங்கள், மொதியானொவின் காலம் ( குறிப்பாக பாரீஸ் ஜெர்மன் ஆக்ரமிப்பிலிருந்த நாட்கள்) மொதியானொ காற்பதித்த இடங்கள் ( பாரீஸ் வீதிகள், சந்து பொந்துகள், நதிக்கரைகள், பூங்காக்கள்) இரண்டாம் உலகயுத்தம், ஜெர்மானியர் பிடியிலிருந்த பாரீஸ் நகர மக்களின் துயர வாழ்க்கை ஆகியவைத் திரும்பத் திரும்ப வருகின்றன. நோபெல் பரிசு தேர்வு முடிவை வெளியிட்ட அன்று “கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளாக ஒரு புத்தகத்தையே திரும்பத் திரும்ப எழுதிவருவதைப் போன்ற உணர்வும் இருக்கிறது” எனப் பத்திரிகையாளர்களிடம் மொதியானொ கருத்து தெரிவித்தமைக்குக் காரணம் இதுவே. எனினும் நினைவுகளை துல்லியமாகவும் கலை நுட்பத்துடனும் சொல்வதில் அவர் நிகரற்ரவர்.
——

மொழிவது சுகம் : நவம்பர் 15 -2014

அ.    இரண்டு லட்சுமிகள்

 

இக்கணத்தில் இரண்டு லட்சுமிகளை நினைவுகூரவேண்டியவாக இருக்கிறேன். எனது புதிய நாவலோடு சம்பந்தப்பட்ட லட்சுமி ஒருவர், மற்றவர் மொழிபெயர்ப்போடு சம்பந்தப்பட்டவர். இரண்டு நூல்களுமே விரைவில் வர இருக்கின்றன. இரண்டுமே காலச்சுவடு சம்பந்தப்பட்டவை. ஒன்றுகாலச்சுவடு க்காக நான் எழுதியுள்ள புதிய நாவல், மற்றது காலச்சுவடின் முயற்சியால் பிரெஞ்சு பெண்மணி ஒருவருடன் இணைந்து பணியாற்றிய மொழிபெயர்ப்பு. மூல நூலின் ஆசிரியர் அம்பை என்கிற மற்றொரு லட்சுமி.

 
உயிர்நிழல் லட்சுமி.

பிரான்சு என்றதும் பல இலக்கியவாதிகளுக்கு பாரீஸில் உள்ள லட்சுமி என்ற பெயர் நன்கு அறிமுகமான பெயர். ‘உயிர் நிழல் லட்சுமி விளம்பரமின்றி, தன்னை ஒளித்து இலக்கியபணி ஆற்றிக்கொண்டிருக்கும் பெண்மணி.  காலச்சுவடு வெளியிட உள்ள எனது நாவலுக்கு சில அத்தியாங்களில் பாத்திரங்களுக்கு ஈழத் தமிழ் சொற்கள் அவசியமாகப்பட்டன. லட்சுமி தகுதந்த ஈழத்தமிழ்ச் சொற்களை இட்டு உரையாடலுக்கு ஜீவனைக் கொடுத்திருக்கிறார் நாவல் பேசப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.  பேசப்படின் அவ்வெற்றியில் அவருக்குள்ள பங்கை மறுக்க முடியாது.

 

அம்பை லட்சுமி

வரும் ஜனவரியில் அம்பையின் சிறுகதைகள் De Haute lutte என்ற பெயரில் ZULMA பிரெஞ்சு பதிப்பகம் கொண்டுவருகிறது. Doiminique Vitalyos என்ற பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளருடன் நான் இணைந்து பணியாற்றியது. அம்பையின் சிறுகதைகள் மிக நன்றாக வந்திருக்கின்றன. நாளை இம்மொழி பெயர்ப்பு பேசப்படுமெனில் அம்பையின் கதைகளுக்காக மட்டுமல்ல டொமினிக் என்ற பெண்மனியின் உழைப்பிற்காவும் பேசப்படவேண்டும். டொமினிக் வித்தாலியோ மலையாளம் ஆங்கிலம் இரண்டிலிருந்தும் பல இந்திய நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார்.

 

ஆ. புதிய நூல்கள்
இவ்வருட தொடக்கத்தில் மொழிபெயர்ப்பைத் தவிர்த்து எனது நான்கு நூல்கள் வருகின்றன. நாவலொன்றையும் இலக்கிய கட்டுரைகளையும் காலச்சுவடு கொண்டுவருகிறது. சிறுகதைத் தொகுப்பையும் பயணக்கட்டுரைகள் தொகுப்பையும் நற்றிணை பதிப்பகம் கொண்டுவருகிறது.

நாவல் – எனது பிராஹா பயணத்தின் தாக்கம் என்று சொல்லவேண்டும், பெயர் முடிவாகவில்லை, முடிவானதும் அறிவிக்கிறேன். காலச்சுவடு வெளியிட உள்ள மற்றொரு நூலான கட்டுரை தொகுப்பின் பேயர் ‘தத்துவத்தின் சித்திர வடிவம்’. நற்றிணை வெளியிட உள்ள சிறுகதை தொகுப்பு: மகாசன்னிதானமும் மர்லின் மன்றோ ஸ்கர்ட்டும்’. பயணக்கடுரைகள் தொகுப்பிறகு ‘காப்காவின் பிராஹா – (பயணக்கட்டுரைகள்)’ எனப் பெயர் வைத்திருக்கிறோம்.

 
இ. தன்னைத் தானறிந்தால் தனக்கொரு கேடுமில்லை

தமிழ்நாட்டில் பொய்யான காவலதிகாரியாக, சுங்க அதிகாரியாக, இலஞ்ச ஒழிப்பு அதிகாரியாக நடித்து பின்னர் கைதான மனிதர்களைப்பற்றிய செய்திகளைப் படித்திருப்போம். இம்மனிதர்களின் தேர்வு தமிழ்நாட்டில் மேற்கண்ட சிலதுறைகளை மட்டுமே குறிவைக்கிற காரணத்தை, பத்திரிகைகளில் வரும் செய்திகளும், அவர்கள் தண்டிக்கபட்ட வழக்குகளும் தெரிவிக்கின்றன.  மனிதர்கள் இயல்பும் தேடும் பொருளின் குணமும் இவ்வினையை எழுதுகின்றன. இதற்கான ஆதாரங்களை மனித மனங்களில்தான் தேடவேண்டும். இரு பூதவியல் விஞானிகளில் ஒருவர் ஆக்கத்திற்கும் மற்றவர் அழிவிற்கும் உதவுகிறார். எனக்குத் தெரிந்த, பிரான்சில் வாழ்ந்த ஒரு தமிழர் நல்ல வேலையில் இருக்கவேண்டியவர், தமது தொழில் நுட்ப அறிவை தவறான காரியங்களில் முதலீடு செய்து சிறைதண்டனை பெற்றார். சிலர் கள்ள நோட்டு அடிப்பதில்லையா? மனித மனங்களை வளைப்பவை அவர்களுக்கமையும் சந்தர்ப்ப சூழல்கள்தான், அதனடிப்படையில் அவர்கள் விதியைத் தீர்மானிக்கறபொறுப்பை அவர்கள் சொந்த அறிவு எடுத்துக்கொள்கிறது.

 

இரண்டு நாட்களுக்கு முன்பு பிரெஞ்சு தினசரியில் வந்த செய்தியும் அப்படியொரு தேர்வை பற்றியதுதான். பிரெஞ்சு ஆசாமி குறிவைத்த துறைவேறு, நாட்டைப்பொறுத்து குற்றங்கள் தேர்வும் அமையும் போலிருக்கிறது. அவர் பாரீஸ் நகரசபையில் பணியாற்றுகிறவர், சாலை பராமரிப்பில் ஊழியம். சந்தர்ப்பங்கள் வாய்க்கிறபோது கலை இலக்கியங்கள், இசை பண்பாட்டிற்கென சேவைசெய்துவரும் அரசு வானொலியின் (France Culture) பத்திரிகையாளராக (பொய்யாக) தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு பிரபல பாடகர்கள், நாடக- திரைப்படக் கலைஞர்கள் ஆகியோரை பேட்டிக் கண்டிருக்கிறார். ஆனால் எழுத்தாளர்களை நெருங்கவில்லை. பேட்டி அளித்தவர்கள் தாங்கள் பேட்டி அளித்தபின் சம்பந்தப்பட்ட வானொலியில் அந்நிகழ்ச்சி ஒலிபரப்பப்பரப்பாகிறதா என்பதில் அக்கறை காட்டுவதில்லை. “என்னுடைய பேட்டி இதில் வருகிறது அதில் வருகிறது” என மெனக்கிட்டு கடிதம் எழுதிக்கொண்டிருக்கிற மனிதர்களும் இல்லை என்பதால் பேட்டிக்குப் பிறகு என்ன நடந்ததென்பது ஒருவருக்கும் தெரியாமலேயே போயிருக்கிறது. இது தவிர பிரான்செங்கும் கலை விழாக்கள், இசைவிழாக்கள், திரைப்படவிழாக்கள் நடக்கிறபொழுது பத்திரிகையாளராகக் கலந்துகொண்டிருக்கிறார். ஆனால் சாமர்த்தியமாக சில காரியங்களைச் செய்திருக்கிறார். மற்ற பத்திரிகையாளர்கள்போல நட்சத்திர ஓட்டல், முதல் வகுப்புப் பயணம் போன்ற சலுகைகளை விழா ஏற்பாட்டாளர்களிடம் கேட்பதில்லை, சாதாரண ஓட்டல்கள், இரண்டாம் வகுப்பு பயணம் என அடக்கிவாசித்திருக்கிறார். தவிர எந்த ஏற்பாட்டாளராவது இவருடைய பத்திரிகையாளர் அடையாள அட்டையின் ஒரிஜினலைக் கேட்டால் நழுவி விடுவாராம். ஒரு முடிவு இருக்குமில்லையா எத்தனை நாளைக்கு ஏமாற்ற முடியும், மற்றொரு பத்திரிகையாளர் சந்தேகப்பட்டு போட்டுக் கொடுத்துவிட்டார். ஆனால் இப்படியொரு தவறான தேடலைத் தொடங்கியது இன்று நேற்றல்ல சுமார் இருபத்தேழு ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1987ஆம் ஆண்டு. ஏன் அப்படி நடந்துகொண்டார்? நடச்சத்திர மனிதர்களை நெருங்குவதற்கும் அவர்களுடன் கூடுதலாக நேரத்தைச் செலவிடவும் வேறுகாரணங்கள் தனக்குக்கிடைக்கவில்லை என்கிறார்.

 
நேற்றுவரை நாம் எதைத் தேடினோமோ அதுதான் நம்மைக் கட்டமைத்திருக்கிறது. நமது ‘இன்று’ நேற்றைய தேடலால் கிடைத்தது. ஒரு கும்பலில் ஆறுமுகத்தைத் தேடினால் ஆறுமுகம்தான் கிடைப்பார், அங்கே ஆறுமுகம் இல்லையேன்றால் வெறும் கையோடு திரும்பவேண்டியதுதான். ஆறுமுகத்தைத் தேடிவிட்டு ராமசாமி கிடைக்கவில்லையே எனப்புலம்புவதால் எவ்வித பயனுமில்லை. தன்னைத் தானறிந்தால் தனக்கொரு கேடுமில்லை என்பதொரு சொலவடையுண்டு, தான் தேடியது எதை, அல்லது தேடுவது எதை என்பதில் தெளிவு வேண்டும். ஐம்பது வயதிலும் அறுபதுவயதிலும் உண்மையை விளங்கிக்கொள்ளாமல் அல்லது போதாமல் மிஷெல் ஒபாமா மாதிரி மனைவி அமைந்தால், அவர் பிள்ளைகள்போல எனக்குப் பிள்ளைகள் அமைந்தால், அந்தத் தேதியில் பிறந்திருந்தால் அமெரிக்க ஜானாதிபதியாகியிருப்பேன், சூப்பர் ஸ்டாராராகி இருப்பேன் என்பதெல்லாம் அபத்தம். ஒபாமாவும், ஏ. ஆர் ரஹ்மானும் ஜெயகாந்தனும் எதைத் தேடினார்களோ அதைப் பெற்றிருக்கிறார்கள். நாளோ, கோளோ, மனைவியோ, சுற்றமோ நட்போ அவர்களுக்கு உச்சத்தை கொடுப்பதில்லை.
—–

இலங்கு நூல் செயல்வலர் க.பஞ்சாங்கம்: 8: – நோக்கு நிலை (Focalisation)

panchuண்விழிப்பதுமுதல் கண்ணுறங்குவம்வரை மேற்கத்தியர் முதலீடு செய்த அறிவு நம்மை வழி நடத்திக்கொண்டிருக்கிறது. இன்றைய மனித வாழ்க்கை மேற்கத்தியர்களால் எழுதப்படுவது. கலை இலக்கியமும் அதற்கு விதிவிலக்கல்ல. “இன்றைய மனிதன் உண்மையில் செய்யவேண்டியது என்ன? என்ற கேள்வியைக் கேட்கிற அல்பெர் கமுய் ” அபத்த உலகில் பிறந்த மனிதனுக்குள்ள பங்கு, வாழ்க்கையை ஏற்பதும், அதனுடன் முரண்படுவதும், அதற்கு அடிமையாகாமலிருப்பதும்” என்கிறார்.  அல்பெர் காமுய் ஒத்த எழுத்தாளர்கள் நம்மிடையே இருக்கலாம், ஆனால் அவனையொத்த சுய சிந்தனைவாதிகள் நமிடம் இல்லை. படைப்பிலக்கியம் என்பது இட்டுக்கட்டுவதும், வார்த்தை விளையாட்டுகளுமல்ல, ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கி, வாசகனுக்கு இலைபோடுவது, வாசகனோடு விவாதிப்பது, தன்னைக்கடந்து செல்லவும் வெல்லவும் வாசகனை அனுமதிப்பது. நவீன இலக்கியத்தின் இன்றைய பரிணாமம் என்பது வாய்ச் சவடால்களால் கண்டதல்ல, சோர்வுறாத சிந்தனைச் சவடால்களால் உருப்பெற்ற்வை. சந்தைப்படுத்துதல் என்ற சொல்லுக்கு உளவியல் நோக்கில் பொருள்தேடவேண்டும், ஒவ்வொருமுறையும் நுகர்வோரிடத்தில் உபயோகிக்கும் பொருள் புதியது, கூடுதற் பயனை அளிக்கவல்லது என்ற நம்பிக்கையை அளிக்கவேண்டும். இதற்கு என்ன வழி? உற்பத்தியாளருக்குத் தனது பொருளைபற்றிய முழுமையான அறிவும் தெளிவும் வேண்டும், அதன் பின்னரே நுகர்வோரை நெருங்கவேண்டும். புரட்சியைத் தொழில்களில் மட்டுமல்லை சிந்தனைகளிலும் செய்துகாட்டுபவர்கள் மேற்குலகினர். நவீன இலக்கியத்தின் பல படிநிலைகள் இந்திய இலக்கிய மரபிற்குப் புதிதல்ல. அவற்றின் தடங்கள் இருக்கவே செய்கின்றன. ஆனால் இவற்றையெல்லாம் ஒப்பீடு அளவில் ஆய்வு செய்து கீழைத் தடத்தில் ஓர் இலக்கிய மரபைக் கட்டமைக்க தவறி இருக்கிறோம்.

 

நோக்கு நிலை என்றால் என்ன?

 

“ஒரு பனுவலில் கதையென ஒன்று கதைசொல்லியின் மூலமாய் ஒரு காட்சிகோணத்தின் ஊடாகசொற்களால் முன்வைக்கபடுகிறது” (பக்கம் 207 ந.இ.கோ.) என்று எளிமையாகக் கட்டுரை ஆசிரியர் நமக்கு நோக்குநிலையை விளக்குகிறார். ஆங்லேயர்களாலும் அமெரிக்கர்களாலும் ஒரு கோணத்தில் பார்த்தல் எனக்கூறியதையே ழெரார்ட் ழெனெத் (Gérard Genette) என்ற பிரெஞ்சு இலக்கிய கோட்ப்பாட்டாளர் நோக்குநிலை என அழைப்பதாக தெரிவிக்கிறார். இவ்விடத்தில் ழெரார் ழெனெத் ஒரு பிரெஞ்சுக்காரர் என்பதால் அவரைப்பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தைச் செய்வது நல்லதென நினைக்கிறேன். 1930ல் பிறந்த ழெனெத் அமைப்பியல்வாதிகளில் ஒருவர், இலக்கிய விமர்சகர் அனைத்துக்கும் மேலாக பல இலக்கிய கருத்துருவாக்கங்களை முன்வைத்த மொழிஅறிஞர். அவருடைய Palimpsestes. La Littérature au second degré ( Editions Seuil -1982) முக்கியமானதொரு நூல். ‘பாலம்செஸ்ட்’ ( Palimsests) என்பது என்ன? ஒரு பனுவலில் சில சொற்களை அல்லது சில வரிகளை மாற்றிச்சொல்ல நினைக்கிறோமென்று வைத்துக்கொள்ளுங்கள், என்ன செய்கிறோம், ஏற்கனவே எழுதிய சொற்களை அல்லது வாக்கியங்களைக் கலைத்துவிட்டு அதன் மீது புதிய சொற்களை அல்லது புதிய வரிகளை எழுதுகிறோம், அவ்வாறு எழுதுகிறபோதும் பழைய சொற்களின் அல்லது வாக்கியங்களின் தடம் சரியாக கலைபாடமல் இருக்கிறதில்லையா அதன் பெயரே பாலம்செஸ்ட். ழெனெத்திற்கு இந்த பாலம்செஸ்ட்போலவே ஒவ்வொரு பனுவலிலும் ஏதோவொரு பனுவல் ஒட்டிக்கிடக்கிறது. சென்ற நூற்றாண்டில் எண்பதுகளில் இக்கருத்துருவாக்கத்தை ஜெனெத் முன்வைத்தபோது மேற்குலக விமர்சனதளம் பெரும் அதிர்வைக்கண்டது. இலக்கிய விமர்சனங்ளை வைக்கிறபோது ழெனெத்தின் புதிய அனுகுமுறையுடன் பனுவலை நெருங்க வேண்டியிருந்தது.

 

ழெனெத்தின் நோக்கு நிலை கோட்பாட்டின் பொருள் என்ன, எவ்வகையில் எடுத்துரைப்பை மேம்படுத்துகிறது என்பதையெல்லாம் பேராசிரியர் விரிவாகப் பேசியிருக்கிறார். இரண்டு கேள்விகள் எழுப்பப்ட்டிருக்கின்றன. முதற் கேள்வி யார் பார்ப்பது? இரண்டாவது: யார் பேசுவது? உடனடியாகவும் வெளிப்படையாகவும் நமக்குக் கிடைக்கக்கூடிய பதில் இரண்டும் ஒருவரே – அந்த ஒருவரை கதைசொல்லியென்றோ அல்லது எடுத்துரைப்பவர் என்றோ நாம் அழைக்கலாம், கூடுதல் விளக்கங்களை அறிவதற்கு பேராசியரின் நவீன இலக்கியகோட்பாடுகள் நூல் உங்களுக்கு உதவும்.

 

ழெனெத்தின் நோக்கு நிலையைச் சற்று எளிமைபடுத்தி புரிந்துகொண்டு, அதன் பிரதான கூறுகளில் கவனத்தைச் செலுத்துவோம். கதைசொல்லல் அல்லது எடுத்துரைத்தல் என்ற சொற்களில் இடம்பெறும் சொல்லல், உரைத்தல் இரண்டும் ‘பேசுதல்’ என்ற வினைச்சொல் குடும்பத்தைச் சேர்ந்தவை.,  இதனை Dégès என்ற கிரேக்க சொல்லால் அழைக்கிறார்கள். நோக்கு நிலையில் இரண்டாவதாக இடம்பெறும் ‘பார்த்தல்’ என்ற சொல்லுக்கு கிரேக்க மொழியில் Mimèsis என்று பெயர். ஆக நோக்கு நிலை என்ற சொல்லை இருவகையில் பொருள் கொள்ளலாம். முதலாவது நோக்குநிலையை ஓர் அறிவியல் கலைச்சொல்லாக அணுகும் வழிமுறை. அதன் படி இங்கே எடுத்துரைப்பின் பணி, வாசகரின் கவனத்தை ஒரு பொருள் அல்லது கதைமாந்தர் அல்லது இப்படி ஏதோ ஒன்றைப்பற்றிய விபரத்தின்மீது திருப்புவது – இதுவே யார் பார்ப்பது ( Mimèsis) என்ற கேள்விக்கான பதில். நோக்குநிலை பற்றிய இரண்டாவது அணுகுமுறை காட்சிவெளி சார்ந்த எடுத்துரைப்பு (la perspective narrative) .

 

நோக்கு நிலையின் செயல்பாடுகள் எடுத்துரைப்பில் தன்னிலை மற்றும் படர்க்கை மொழியாடல்களில் நடைபெறுகின்றன. இவை அனைத்திலும் சூத்ரதாரியாக இருப்பவர் கதைசொல்லி என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. எடுத்துரைத்தல் பற்றிய ஆய்வு என்பது ஒரு கதைக்கும் -சொல்லலுக்கும் உள்ள உறவு முறைகளை விளங்கிக்கொள்வது. நோக்கு நிலைவழி இவற்றை வகைப்படுத்தியிருக்கிறார் கட்டுரை ஆசிரியர்:

 

1. கொள்கை அளவில் நோக்கு நிலையும் எடுத்துரைத்தலும் வேறு வேறு
2. படர்க்கை மாந்தரை எடுத்துரப்பவராக பயன்படுத்துதல்
3. எழுவாய் வழி கதைசொல்லல்
4. நோக்கு நிலையைப்பொறுத்தவரை தன்மையில் சொல்லப்பட்டாலும் படர்க்கை நிலையில் சொல்லப்பட்டாலும் வேறுபாடுகள் இல்லை. இரண்டுமுறையிலும் பனுவல் உலகில் நோக்கு நிலைஎன்பது ஒரு கதை மாந்தரின் பண்பாடாகசெயல்படுகிறது. இவ்விரண்டுக்கும் இடையிலுள்ள ஒரே வேறுபாடு எடுத்துரைப்பவரின் அடையாள வேற்றுமைதான்.

 

மேற்கண்ட அடையாள வேற்றுமையை அறிவது ழெனெத்தின் கோட்பாட்டைக் கூடுதலாக விளங்கிக்கொள்ள உதவுமென நினைக்கிறேன். ழெனெத் நான்குவகை கதை சொல்லிகளை அறிமுகப்படுத்துகிறார்

 

I. கதைசொல்லி இடம்பெறலாம் அல்லது இடம்பெறாமலும் போகலாம் என்கிற சூழலில்:

 

1. கதைக்கு வெளியே கதை சொல்லி

 

இக்கதைசொல்லியை ழெனெத் Le narrateur extra diégétique என அழைக்கிறார். இங்கே கதை சொல்லி கதைமாந்தரல்ல. கதைக்கு வெளியே இருப்பவர், வாசகனிடம் நேரடையாகப் பனுவலைப் படைத்தவர் பேசுதல். ஹோமரின் ஒடிஸ்ஸியஸ் ஓர் உதாரணம்.
எடுத்துக்காட்டு: “முன்பொருகாலத்தில் சிவப்பி என்றொரு பெண்ணிருந்தாள். பெற்றோர்கள் அப்பெயரிட்டு அழைக்கக் காரணம்…” எனத் தொடங்கி பாடம் எடுக்கும் முறை. பெருமாலான பழைய நூல்கள் இவகையிலேயே கதைசொல்லலை நிகழ்த்தியிருக்கின்றன.

 

2. கதைக்குள் இருந்து கதை சொல்லல்.

 

இக்கதை சொல்லியை ழெனெத் Le narrateur intra diégétique என அழைக்கிறார். கதைசொல்லி கதைக்குள் இடம்பெறும் கதை மாந்தர்களில் ஒருவர். பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதைகளில் வரும் சிம்மாசன பொம்மை பேசுவதுபோல கதைசொல்லப்படுவதை இங்கே உதராணமாகக் கொள்ளலாம்.

 

எடுத்துக்காடு: “என் பெயர் சிவப்பி, நான் பிறந்தபோது மிகவும் சிவப்பாக இருந்ததைவைத்து எனக்குப் பெற்றோர்கள்.. ” எனக் கதைமாந்தரே கதை கூறல் இவ்வகையில் அடங்கும்.

 

11 கதைக்குள் கதைசொல்லி என்றொரு கதைமாந்தர் இடம் பெற்றால்

 

1. பிறர்கதையைக்கூறும் கதைசொல்லி

 

ழெனெத் இக்கதைசொல்லியை Le narrateur hétéro diégétique என அழைக்கிறார். அவர் கதையில் வரும் பிறகதைமாந்தர்களைப் பற்றி பேசுபவராக இருக்கிறார். ஹரூகி முராகாமியின் ஸ்புட்னிக்கின் காதலர்கள் உதாரணம்.

எடுத்துக்காட்டு: “சிவப்பி என்ற எனது தோழியைப்பற்றி உங்களுக்குக் கூற வேண்டுமென நினைக்கிறேன்….”

 

2. தன்கதையைக்கூறும் கதை சொல்லி

 

ழெனெத் இவரை le narrateur homo diégétique என அழைக்கிறார். இவ்வகைக்கு உதாரணமாக யு.ஆர். அனந்தமூர்த்தியின் பாரதிபுரத்தைக் கூறலாம்.

 

எடுத்துக்காட்டு: “சிவப்பியாகிய எனது கதையைச் சொல்லப்போகிறேன்..” எனத் தொடங்குவது ஆகும்.

 

நோக்கு நிலை வகைபாடுகள்:
இதனை இரண்டு முக்கிய தலைப்பின்கீழ் கட்டுரை ஆசிரியர் விவரிக்கிறார்:

1. கதையோடு தொடர்புடைய நிலைப்பாடு
2. தொடர்ந்து நீடிக்கும் தன்மை

 

1. கதையோடு தொடர்புடைய நிலைப்பாடு

 

இத்தலைப்பின் கீழ் சிலவகை நோக்குநிலைகள் சொல்லப்படுகின்றன. அவற்றில் முக்கியமானது அகநிலைபட்ட நோக்கு நிலை மற்றது புற நிலைபட்ட நோக்குநிலை.

புறவயப்பட நோக்குநிலை: எடுத்துரைப்பு முகவரோடு இது மிகவும் அணுக்கமானதென்று அறிகிறோம். எடுத்துரைப்பாளருக்கும் கதைமாந்தருக்கும் உள்ள உளவியல் கலந்த இடைவெளி மிகவும் குறுகிய அளவில் இருக்கிறபோது இது எழுவாய் எடுத்துரைப்பாக நிகழ்கிறது..

அகவயப்பட்ட நோக்குநிலை: இது பனுவலுக்குள் இடம்பெறுவது, பொதுவில் கதை மாந்தர்களின் நோக்குநிலையாக இது அமையுமென்றும், அதே வேளை சில நேரங்களில் அக நிலைபட்ட நோக்கு நிலைபடுத்துதல் என்பது பனுவலின் நிலை அமைதியோடு இணைந்து ஒன்றாகிவிடும் எனவும் கதைமாந்தர்களின் பண்பு நலன்களை அடையாளப்படுத்த தவறிவிடுமென்றும் சொல்லப்படுகிறது.

 
2. தொடர்ந்து நீடிக்கும் தன்மை

 

எடுத்துரைப்பு முழுவதும் நோக்கு நிலைப்படுத்துவதென்பது தொடர்ந்து நீடிக்கிறதென்றும்; நோக்கு நிலையின் கோணத்தையும் தன்மையினையும் இடம், களம், பல்வேறு வகைக் கூறுகள் தீர்மானிக்கின்றன என்பதையும் இப்பகுதியில் ஆசிரியர்எடுத்திரைத்திருக்கிறார்.

அ. வெளி அல்லது இடம்: இங்கே நோக்கு நிலைபடுத்துபவர் எடுத்துரைக்கும் பொருளிலிருந்து வெகு தூரத்தில் ஒரு புள்ளியில் இருந்துகொண்டு சொல்வதென்றும், இந்நிலைப்பாடு தொன்ம இலக்கியங்களில் அதிகம் இடம் பெற்றிருக்கிறதென்ற செய்தி கிடைக்கிறது.

ஆ. காலம்: ஒரு கதை மாந்தர் தமது கடந்தகாலத்தைப் பின்நோக்கிப் பார்ப்பதற்குக் காலம் துணை நிற்கிறது. இங்கே கடந்தவைஅனைத்தும் ஒரு காலத்திற்கு உரியவையாக பார்க்கப்படுகிறது.

மேற்கண்ட வெளி காலம் ஆகியவற்றோடு உள்வியல் கூறுகள், அறிதல் கூறுகள் உணர்ச்சிக்கூறுகள் கருத்துநிலைக்க்கூறுகள் என்கிற பல்வேறு அம்சங்கள் கதைசொல்லியின் நோக்குநிலையில் சூழலுக்கு ஏற்ப இடம் பெற்று கதைசொல்லலுக்கு துணை நிற்கின்றன.

(தொடரும்)