Category Archives: romans

‘ரணகளம்’ : ‘துணை’யும் ‘இணை’யும்

26047505_1779219605441809_5161767557754892563_n « புதுச்சேரி என்ற பெயரில் ஒரு  நாவலை எழுதத் தகவலைத் திரட்டினேன். கிடைத்துள்ள தகவல்கள் ஓரளவிற்குப் போதுமானவை. இருந்தாலும் நன்றாக வரவேண்டுமென்ற அச்சத்தினால் தள்ளிப்போகிறது. இடைவெளியை  நிரப்ப  ஒரு குறு நாவலை  எழுத முடிக்க யோசித்திருந்தவேளை ‘ our souls at night’  (கெண்ட் ஹாரெஃப் என்ற அமெரிக்க எழுத்தாளரின் நாவல்)  என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். குறு நாவலொன்றை எழுதத் தீர்மானித்தது தற்செயலெனில், Lunch box புகழ் ரித்தேஷ் பத்ரா எங்கிற இந்திய இயக்குனர் கைவண்ணத்தில் உருவான இத்திரைப்படத்தைக் காண  நேர்ந்ததும் தற்செயலே. ராபர்ட்ஃபோர்ட், ஜேன் ஃபோண்டா இருவரும் நடித்திருக்கிறார்கள். முதுமை அரிக்கும் இரு மனித உயிர்களின் அந்திம  நோய்க்கு கலை, உளவியல் அடிப்படையில் தீர்வுகண்டிருக்கிறார்கள். இப்படம் வேறொரு சிந்தனையைக் கொடுத்தது. துணை என்ற சொல்லைக் குஈத்து யோசிக்க வைத்தது. அந்த யோசனையைப் புனைவாக்கியதன் பலனே இந்த  நாவல். »

 

‘ரண்கவளம்’   நாவலுக்கு எழுதிய முன்னுரை இது. ஆம், ரணகளம் துணைகுறித்த ஒரு பார்வை. துணை மிகப் பெரிய சொல். துணையுடன் ஆற்றும் வினையே முழுமையை எட்ட உதவும் என்பதைமனிதர்க்கு குறிப்பால் உணர்த்த முற்பட்டதுபோல நமது உடலில் கைகள், கால்கள், கண்கள் நாசிதுவாரங்களென, முக்கிய உறுப்புக்களையெல்லாம்  இயற்கை இரண்டிரண்டாக  படைத்திருக்கிறது. இத்துணையை இணையாக, தோழமையாக, சரி நிகராகக் கொள்வதற்கு மாறாக இரண்டிலொன்றை உயர்த்தி பிடிக்கிறபொழுது, ஈன்றெடுத்தல் சுகப்பிரசவமாக நடைபெறுவது கிடையாது. இரண்டிலொன்றை உதவியாள், சேவகன், அடிமை, இரண்டாம் பாலினம் என்று கீழே  நிறுத்தி பெறப்படும் பலன்கள் முழுமையானப் பலன்களா என்றால் இல்லை. விசுவாசத்தின் பெயரால் செய்யப்படும் வினைக்கும் விருப்பத்தின் பெயரால் செய்யப்படும் வினைக்கும் இடையே வேறுபாடுகள் உண்டு.

 

ரணகளம் முன்னுரையில் சொல்லப்பட்டுள்ள ‘our souls at night’  பற்றியும் வேறு இரண்டு தகவல்களையும் பகிர்ந்துகொள்வது ஒருவகையில் அண்மையில் வந்துள்ள என்னுடைய  நாவலை ஏறி நின்று எட்டிப்பார்க்க வசதியாக முக்காலியைப் போடுவது.  ரணகளம்

அந்த வகையில் மூன்று ‘துணை’கள் குறித்து பேசுகிறேன். ஒவ்வொன்றும் ஒவ்வொருவகை.

 

துணை -1 : இணை

‘our souls at night’  நாவலில் நாயகனும் நாயகியும் எழுபது வயதைக் கடந்தவர்கள். நாயகன் மனைவியை இழந்தவர்,  நாயகி கணவனை இழந்தவள்.   ஒரே தெருவில் அவரவர் வீடுகளில், இன்றையை  நியதிக்கேற்ப  பிள்ளைகளைப் பிரிந்து வாழ்கிறார்கள். இருவரும் தனிமை விபத்துக்குள்ளானவர்கள்,   மன ஊனமுற்றவர்கள். பகல்வாழ்க்கையும் அது சார்ந்த உரையாடலும் வணிப விதிக்குட்பட்ட  நிலையில், தெரிந்தமுகங்கள்கூட சம்பாஷனைகளை சடங்குகளாக அணுகுகிறச் சூழலில் பாசாங்கற்ற அன்பிற்கும் அரவணப்பிற்கும் இரவு வெளிச்சம் தருமென  நம்பும் கதை நாயகி தனிமை வெக்கைக்கு நிழல் தேடும் முயற்சியாக மூதாட்டியான ஜேன்ஃபோண்டா, கிழவர் ராபர்ட் ஃபோர்ட் ஐ தேடிவருகிறாள். அவரிடம்  நேரடியாகவே இரவு என்னுடன் வந்து தங்க முடியுமா எனக் கேட்கிறாள். அவர் தயங்குகிறார். யோசித்து சொல்கிறேன் என் கிறார். ஒரு நாள் இரவு  அவள் வீட்டிற்கு இரவுக்கு வேண்டிய ஆடைகளுடன் பிறர் அறியாதபடி அவள் வீட்டு பின் வாசல்  வழியாக வருகிறார். இருவரும் அவரவர் குடும்பம் பிள்ளைகள், பிடித்தது பிடியாதது என உரையாடலைத் தொடங்குகிறார்கள். அவர்களிடையே  நாம் பலரும் சந்தேகிக்கிற வேறுவகையான உறுவுகள் இருப்பதில்லை. பின்னர்  செய்தி அச்சிறிய  கிராமத்தில் மதுச்சாலைகளில், பொதுவெளிகளில் அவர்களைகிண்டலும் கேலியுமாக விமர்சிக்க உதவுகிறது. சொந்த பிள்ளைகளின் கோப்பத்திற்கும் ஆளாகிறார்கள்.

 

துணை -2 : புணர்ச்சி

 

The Reader என்று மற்றொரு திரைப்படம் பெர்னார் ஷ்லிங்க் என் கிற ஜெர்மன் எழுத்தாளரின்  நாவல். இப்படத்தில் மைக்கேல் பதின் வயது சிறுவன். ஒரு மழை  நாளில் பள்ளியிலிருந்து திரும்பும் வழியில்  மைக்கேல், திடீரென்று  உடல் நலிவுற்று  வருந்துகிறபோது,  டிராம் ஒன்றில் பரிசோதகராக வேலைசெய்யும்,  அவனைக்காட்டிலும் இருமடங்கு  வயதுடைய  ஹன்னா உதவுகிறாள். அவர்களிடையே  நட்பு பிறக்கிறது. நட்பு காதலாகிறது. முதலில் குறிப்பிட்ட படத்தில் உடல் உறவுக்கு இடமில்லை. இங்கே உடல் உறவின்றி அவர்கள் சந்திப்புகள் கழிவதில்லை. முதல் படத்தில்  நாயகனும் நாயகியும் தங்கள் மனதில் உள்ள சேமித்துள்ள அனைத்தையும் உரையாடலாக பகிர்ந்துகொள்கிறார்கள். இப்படத்தில் உடல் உறவு கொள்ளும்  நேரத்திலும் உலக இலக்கியங்களை  மைக்கேல் வாசிக்க ஹன்னா கேட்டு ரசிக்கிறாள். முதல் படத்தில் இருவருக்குமிடையில் ரகசியங்கள் இல்லை. இரண்டாவது படத்தில்  தம்பதிகளிடையே ஒருவர் குறிப்பாக ஹன்னா இளைஞனிடம் மறைக்க ரகசியங்கள் உண்டு.

 

துணை – 3 : காப்பு

Emmanuel-Macron-et-sa-femme-Brigitte-a-l-Elysee-le-2-juin-2015_exact1024x768_p

தற்போதைய பிரெஞ்சு அதிபர் மக்ரோனுக்கும் அவருடைய மனைவி பிரிஜித்திற்கும் இருபத்தெட்டு  வருடங்கள் வித்தியாசம். இருபரும் காதலில் விழுந்த ஆண்டு 1993.  அப்போது  பிரிஜித்  பள்ளி ஆசிரியை நாற்பத்துமூன்று வயது, அவருடைய காதலன் அதிபர் மக்ரோனுக்கு  பதினைந்து வயது. அவர்கள் காதலில் விழுந்தபோது பிரிஜித்தின் முதல் கணவர்  மகளும், அதிபர்மக்ரோனும் ஒரே வகுப்பில் படித்தார்கள். இருந்தபோதும் ஆசிரியையும் மாணவனும் காதலித்தார்கள். பதினெட்டு வயதுக்கு கீழ் உள்ள சிறுவனுடனான உறவு பெரும்மாபாலான  நாடுகளைப்போலவே பிரான்சிலும் தண்டனைக்குரியது. எனவே இருவரும் 13 வருடங்கள் காத்திருந்தார்கள். முதல் கணவனை 2006ல் பிரிஜித் விவாகரத்து செய்துவிட்டு 2007ல் மக்ரோனை மணமுடிக்கிறார்.  மக்ரோனுக்கும் பிரிஜித்திற்கும் பிள்ளைகள் இல்லை. பிரிஜித்தின் முதல் கணவர் பிள்ளைகளை ஏற்றுகொள்கிறார். அதிபர் மக்ரோன் தான் ஒரு தன் பாலினவிரும்பி இல்லை என பகிரங்கமாக மறுக்கவேண்டிய  நிர்ப்பந்தம் இருந்தது. இன்றும் 38 வயது பிரெஞ்சு அதிபர் இம்மானெவெல் மக்ரோனும் அவருடைய 66 வயது மனவியும் துணை என்ற சொல்லுக்கு துணை என்ற சொல்லின் சாட்சியாய் நிற்கிறார்கள்..

 

இந்த மூன்று தடத்திலும் துணை என்ற சொல் மேற்குலகில் வெவ்வேறு பொருளில் பயணிக்கிறது.  ‘இது என் வாழ்க்கை, பிறர் குறித்து எனக்கென்ன கவலை !’ என்கிற தனிமனிதன் ஒருபக்கம்.  ‘அது அவன் வாழ்க்கை, நமக்கென்ன வந்தது ! எனக் கருதுகிற சமூகம். இந்த இரு தரப்பிற்கும் மேற்கண்ட உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்ததில் பங்கிருக்கிறது.    இதில் என்னை ஆச்சரியமூட்டும் விஷயம்  தனிமனித வாழ்க்கைக்கு விசுவாசமாக இருக்கவேண்டி பாசம் பந்தம் போண்ற சொற்களைப் பின்னுக்குதள்ளி வாழும்  மேற்குலக சமூகம் கீழைத்தேய சமூகத்தைக் காட்டிலும் வலிமையுடன் இருப்பது.

 

கடந்தகாலம் கடவுள் சடங்கு  பெயரால் மனித உயிர்களை ஒன்றிணைத்தது. அகக் கூறுகளைக் காட்டிலும் புறக் கூறுகள் அன்று முக்கியத்துவம் பெற்றன. இன்று புறகூறுகள் இடத்தில்  அகக்கூறுகள்.

மேற்குறிப்பிட்ட மூன்று உதாரணங்கள்  சாராது, கீழைப்பின்புலத்தில் துணை என்றசொல்லுக்குப் பொருள் காண முற்பட்டதே ‘ரண களம்’    இங்கே எனது ‘துணை’க்குப் பொருள்,  ‘ நட்பு ‘. துணையின்றியும், பயணிக்கலாம். ஆனால் அலுப்பின்றி பயணிக்க  துணை வேண்டும்.

—————–

மொழிவது சுகம் – நவம்பர் -2- 2012

சந்திப்பும் இருநோக்கும்....

ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.

காதலன் காதலியைத் தவிர சந்திப்பு தருணத்திற்காக ஏங்கும் மனிதர்கள் வேறெவரேனும் உலகில் இருப்பார்களா? கடந்த வெள்ளியன்று பாரீஸில் நண்பர் ஒருவர் மகளின் திருமண வரவேற்பு விழாவை ஏற்பாடு செய்திருந்தார். புதன்கிழமையன்றே பாரீஸ் புறப்பட்டாயிற்று. பிரான்சு நாட்டில் ஓரளவு எனது நட்புவட்டம் என்பது பெரிதும் பாரீஸில் வசிக்கும் நண்பர்களைச் சார்ந்தது. அவர்களில் பலரும் தமிழ்ச் சங்கங்களை ஏற்படுத்தி நடத்திவருபவர்கள். அவர்களில் ஒரு சிலருடன் நெருக்கமாகவும் இருந்திருக்கிறேன். ஆனால் இன்று அப்படியில்லை. ஏற்பட்ட இடைவெளிக்கு அல்லது சந்திப்பு தாமதத்திற்கு ஒருவகையில் இரு தரப்புமே பொறுப்பேற்கவேண்டும்.

மனிதர் வாழ்க்கையில் சந்திப்பு உயிருக்குச் சுவாசம்போல. தினசரியும், தொலைக்காட்சி பெட்டிகளும், வலைத்தளங்களும் இல்லாத காலங்களில் சந்திக்கிற மனிதர்களின் எண்ணிக்கையும் கூடுதலாக இருந்தன. எங்கள் கிராமத்தில் தேனீர்க்கடையில் அறுவடை முடிந்தகாலங்களிலும், வயல்வெளி வேலைகள் அதிகரிக்கிறபொழுது பிற நேரங்களிலும் கூடுவார்கள். தேனீர்க்கடைகள் தவிர்த்து சிலர் வீட்டுத் திண்ணைகளும் உபயோகத்திற்கிருந்தன. இச்சந்திப்பின் போது ஒருவரையொருவர் உறவுமுறைவைத்து விளித்துக்கொள்வார்கள். இவர் அவரை மாமா என்பார், அவர் இவரை ‘இல்லை மச்சான்’ என மறுதலித்துப் பேசுவார். பேசப்படும் பொருள் அவர்கள்வாழ்க்கையின் அன்றையதின குறுக்கீடுகளை நினைவூட்டுவதாக அமையும். தெற்குவெளிக்கு தண்ணீர் எட்டமாட்டேங்குது, நட்ட நடவு நாலு நாளா தண்ணீர்வரத்தின்றிகாயுது, உரக்கடைக்குப் போயுட்டுவந்தேன், யூரியா வர ஒரு வாரமாகுமாம்’, இப்படி அப்பேச்சு அமையும். இத்திண்ணைபேச்சும், உறவின் முறையும் அவர்கள் அடிப்படையில் உள்ளூர் விவசாயிகள் என்ற சரடால் உருவானது. அதிலொரு விவசாயிக்குப் பார்த்தவிவசாயம் போதும், நெல்லை வாங்கி அவித்து, அரைத்து அரிசியாக குப்பங்களுக்குக் கொண்டு சென்று விற்று சிறிது பணம் பார்க்கலாமென எண்ணம் வந்ததெனில் அன்று முதல் அவ்விவசாயியின் சந்திப்பும் நட்பும் அவரைப்போன்று தொழிலில் ஈடுபடும் மற்றொரு மனிதரிடம் என்றாகிவிடுகிறது. ஆக வாழ்க்கை உறைந்து போய்விடுவதில்லை. கடலைச்சென்றடையும்வரை, கடக்க வேண்டியவைகளை கடந்தே ஆகவேண்டும்.

பிரமிப்பாக இருக்கிறது, பிறந்ததுமுதல் சந்தித்த மனிதர்கள்தான் எவ்வளவுபேர்? குடும்பம், உறவுகள், வீட்டுத் திண்ணைகள், கூடங்கள், பள்ளி வகுப்புகள், கல்லூரிகள், பருவகால நண்பர்கள், அலுவலகங்கள், திருமண மண்டபங்கள் கடைகள், பயணங்களில் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள்… இவர்களில் எத்தனைபேரை நட்பின்பேரால் இன்றும் சுமக்கிறோம் சந்திக்கிறோம், உரையோடுகிறோம், மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறோம், துன்பத்தை இறக்கிவைக்கிறோம். எங்கள் கிராமத்து நெல் வியாபாரிபோல நேற்றுவரை என்னோடிருந்த மனிதர் பலரை இழந்திருக்கிறேன். வினை சார்ந்து, உரிப்பொருள் அல்லது கருப்பொருள் சார்ந்து சந்திப்பில் இடம்பெறும் பங்குதாரர்கள் வேறாக இருப்பார்களென்பது வாழ்க்கைப் பயணம் போதிக்கும் அறம்.

இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மனிதர்கள் குறிப்பிட்ட இடத்தில் எதேச்சையாக அல்லது ஏற்கனவே தீர்மானித்தபடி கூடுவது சந்திப்பு. இச்சந்திப்பிற்கு பங்கேற்கிறவர்களின் பொதுநலன் மையமாகவிருக்கலாம். அவரால் இவருக்கும் இவரால் அவருக்கும் ஏதேனும் பலன்களிருக்கலாம். இரகசியமாக அல்லது பிறர் அறியவந்தால் பாதகமில்லை எனச்சந்திக்கிறவர்கள் ஒருபுறமெனில் மூன்றாவது நபரை சீண்டவேண்டுமென்பதாக அல்லது அவரது நித்திரையைக்குலைக்க வேண்டுமென்பதற்காகச் சந்திக்கிறவர்களுமிருக்கிறார்கள். அண்மையில் சில தே.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாட்டு முதலைமைச்சரைச் சந்தித்ததைப்போல. விளம்பரத்திற்காகவும் சில சந்திப்புகள் நிகழ்வதுண்டு. டெசோ தீர்மானத்தை கோட்டு சூட்டுடன் தி.மு.க புள்ளிகள் ஐநா துணைக்காரியதரிசியை ஓர் ஐந்து நிமிடம் தயவுபண்ணச்செய்து சந்தித்தது (ராஜபக்ஷே வயிற்றில் புளியைகரைக்க அல்ல அவர் கல்லுளிமங்கனென்று தி.மு.க தலைவர் நன்றாகவே அறிவார்.  வேண்டுமானால் மத்திய ஆளும் காங்கிராஸாருக்கு எரிச்சலூட்டவென்று கருத இடமுண்டு) எதிர்காலத்தில் காங்கிரஸ¤க்கு எதிராக ஓர் அணியை ஏற்பாடு செய்யவந்தால் தமிழ்த் தேசியவாதிகளை வளைத்துப்போட கையாளும் தந்திரம். கூடுதலாக ஊசிப்போன பண்டத்தை சொந்த ஊடங்களில் கூவியும் விற்கலாம். இனி எதிர்வரும் தேர்தலுக்கு முன்பாக மரியாதை நிமித்தமாக கருணாநிதி, வைகோ, ராமதாஸ் சந்திப்பு நிகழலாம்.

தமதிருப்பின் மீது நம்பிக்கைவைத்து உறைந்த இரு உயிர்களை இளக்கி ஒன்றிணைத்து இயங்கச் செய்வது சந்திப்பு என்பது உளவியலாளர்கள் கருத்து. சமுதாய ஒழுங்கமைவு, சமூகக் கட்டுமானம், சமூக இயக்கம் என பல வழிநடத்தல்களுக்கு சந்திப்புகள் உதவியாயிருக்கின்றன. எவ்வகையான சந்திப்புகளிலும் முதல்சந்திப்புக் கிளர்ச்சியூட்டக்கூடியவைகளாகவும், ஆவலும் எதிர்பார்ப்புமாக அலைக்கழிக்கவும் செய்யும். காதலன் காதலி சந்திப்பு, தம்பதிகளின் முதலிரவு, உத்தியோகத்திற்கான நேர்முகத் தேர்வு… ஆகியவை உதாரணத்திற்கு இருக்கின்றன. இச்சந்திப்புகளில் கள்ளம் கலக்கிறபோது கூடுதலாக போதைதருமோ என்னவோ பங்குதாரர்களில் எளிதில்சுயமிழந்துபோகிறார்கள். சில நேரங்களில் சந்திப்பு மௌனியின் மனக்கோட்டை மனிதர்களைப்போல நம்மைக் கடந்து முன் சென்று என்றோ நம்மைக் கண்டதை நினைவுகூர்ந்து “என்னப்பா சௌக்கியமா?” என விசாரிக்கலாம். ஒருவர் “உன்  சிரிப்பு கூட மாறிவிட்டது”, எனலாம். மற்றொருவர், நேற்றுகூட நாங்கள் சங்கரைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். உன் நினைவுகூடவந்து, உன்னைப்பற்றியும் பேசினோம்” எனச் சமாளிக்கலாம். சந்திப்புகளில் சில சலவைக்குறிகளாகும் அதிசயமிது.

சந்திப்பு என்பது இருமனிதர்களுக்கிடையேயானதாக இருக்கவேண்டுமென்ற நிர்ப்பந்தம் இருக்கிறதாவென்ன?

பாரீஸ¤க்கு வருகிறபோதெல்லாம் அவளைச்சந்திக்கிறேன். சந்திப்பின் இலக்கணங்களில் 90விழுக்காடுகள் பொருந்துகின்றன. என் மகன் வீட்டிலிருந்து பாரீசின் பிறபகுதிகளுக்கு பயணிக்கிறபோது நிகழ்கிறது. Cite Universitaire என்ற இரயில் நிலையத்திற்கு முன்பாக கடந்த ஐந்தாண்டுகளாக வெயில், மழை, பனியென காலங்களை வென்று அவள்  எனக்காகக்காத்திருக்கிறாள். சந்திப்பின் முடிவில் பங்குதாரர்கள் எதிர்பார்ப்புகள் சமதளத்தில் வைத்து திருப்தியுறக்கூடியவை என்ற விதி எங்கள்வரையில் சரியாதென்பதென் அனுமானம். ஒரே ஒரு குறை அவள் ஊர்பேர் தெரியாத ஓவியன் கிறுக்கிய கிரா·பிட்டி எனும் சுவரோவியம். தற்போதைக்கு அவள் ஆயுட்காலம்வரை எங்கள் சந்திப்புகள் தொடரலாம். குறள் சொல்வதுபோல, “இருநோக்கு இவளுண்கண் உள்ளது”.

—————————————————————————