வணக்கம் நண்பர்களே!
ஜனவரி மாதம் 12ந்தேதி இந்தியா சென்றது. கிட்டதத்த ஒன்றரை மாதம் இந்தியாவில் இருக்க நேர்ந்தது, கைவசம் மடி கணினியை கொண்டு சென்றிருந்தும் பல பிரச்சினகள். அதிகம் உபயோகிக்க முடியவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் பழுதுபார்த்து இணைப்பை கொடுக்கவே பத்து நாட்களுக்கு மேல் எடுத்துக்கொண்டனர். புதுச்சேரி வீட்டில் சில சில்லறை வேலைகள் இருந்தன. ஒப்பந்தப்படி மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிற ‘அம்பை சிறுகதைகளில் ‘அடவி’ கதையை முடித்தாக வேண்டும். 17ந்தேதி புத்தக கண்காட்சியில் லெ கிளேசியோவின் ‘குற்ற விசாரணை’ நாவல் வெளியீடு நடைபெற்றது. அன்றைக்கு காலச்சுவடு பதிப்பகத்தின் மூன்று நூல்களை வெளியிட்டார்கள். அதில் ‘குற்றவிசாரணையும்’ ஒன்று. பிரபஞ்சன் வெளியிடுவதாக இருந்தது. திடீரென்று ஏற்பட்ட அவரது உடல் நலமின்மை காரணமாக நண்பர் பஞ்சாங்கத்தை வெளியிடக் கேட்டுக்கொண்டேன், அவரும் எவ்வித மறுப்புமின்றி சம்மதித்தார். நிகழ்வன்று பல நண்பர்களை சந்திக்க முடிந்தது. பி.எ. கிருஷ்ணன், இரா.முருகன், சுகிர்த ராணி, பேராசிரியர் நாச்சிமுத்து. ஆகியோரை குறிப்பிட்டு சொல்லவேண்டும். நிகழ்ச்சிக்கு வந்திருந்த கவிஞர் தமிழ்நதியுடன் பேசமுடியாதது ஒரு குறை. பிறகு 20, 21, 22 கோவையில் தாயகம் கடந்த தமிழ் நிகழ்வு. அது பற்றி தனியாகவே ஒரு கட்டுரையை இப்பகுதியில் எழுதியிருந்தேன். ஜனவரி 23ந்தேதி நண்பர் நாயக்கரின் கல்லூரியில் மொழிபெயர்ப்பு அனுபவங்கள் பற்றிய ஓர் உரையை ஏற்பாடு செய்திருந்தார். துறைத் தலைவர் திரு டானியலுக்கும், நாயக்கருக்கும் நன்றிசொல்லவேண்டும். இதற்கிடையில் கொஞ்சம் ‘அடவி’ சிறுகதை மொழிபெயர்ப்பை முடிக்க கால அவகாசம் கேட்டிருந்தேன்.
பிப்ரவரி 1 நண்பர் க. பஞ்சாங்கத்தின் ‘அழுததும் சிரித்ததும்’ கட்டுரை தொகுப்பு வெளியீட்டுவிழாவை ஏற்பாடு செய்திருந்தோம். கோவையிலிருந்து சிறப்பு சொற்பழிவாற்ற க.பஞ்சாங்கம் படைப்புகளின் முதல் வாசகரும், அவருடைய இனிய நண்பரும், கோவை அரசு கலைகல்லூரியின் பேராசிரியருமான முனைவர் துரை வந்திருந்தார். விழா சிறப்பாக நடந்தது. பல்கலை கழக அளவில் முனைவர் க.பஞ்சாங்கம் படைப்புகள் பற்றிய ஆய்வரங்கம் ஒன்றை கட்டாயம் நடத்தவேண்டும். பிப்ரவரி மாதம் நான்காம் தேதி திருவாரூர் மத்திய பல்கலை கழக தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் நாச்சிமுத்து, தங்கள் மாணவர்களுடன் ஓர் கலந்துரையாடலை, திடீரென்று ஏற்பாடு செய்திருந்தார். சீனு தமிழ்மணியை அழைத்துக்கொண்டு திருவாரூர் சென்றேன். தமிழவன், க.பஞ்சாங்கம் போல நாச்சிமுத்துவும் நவீன தமிழ் இலக்கியத்தில் அக்கறைகொண்டு இயங்குபவர். ஏற்கனவே புது தில்லியில் ஜவகர்லால் நேரு பல்கலை கழகத்தில் மொழிபெயர்ப்பு மாணவர்களோடு ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்து அறிமுகமாகி இருந்தார்.
பிப்ரவரி 7 ந்தேதி அமெரிக்காவிலிருந்து வந்த மூத்த மகள் குடும்பத்தை வரவேற்க சென்னை விமான நிலயத்திற்கு சென்றிருந்தோம், அங்கிருந்து நேராக மதுரை, எங்கள் சம்பந்தி வீட்டிற்கு. மறு நாள் மதுரை கல்லூரி ஒன்றில் வெ. இறையன்பு நூல்கள் பற்றிய ஆய்வரங்கம் இருக்கிறது, வாங்களேன் பேசிக்கொண்டிருப்போம் என நண்பர் ந. முருகேசபாண்டியன் அழைத்திருந்தார். வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தோம் மதிய உணவை கல்லூரியிலேயே முடித்துக்கொண்டோம். வெ. இறையன்புவிடம் அறிமுகமும் செய்துவைத்தார். மூத்த கவிஞரான கலாப்பிரியாவை அங்கே சந்திக்க நேர்ந்தது மற்றொரு வரம். இளைஞரும் கவிஞருமான ஆத்மார்த்தியையும் சந்தித்தேன். அவருடைய கவிதை நூல் ஒன்றை என்னிடம் வழங்கினார். மதுரையிலிருந்து ஒரு நாள் எங்கள் சம்பந்தியின் பூர்வீக ஊரான வத்திராயிருப்புக்கு சென்றுவந்தோம், பரமக்குடி அருகே இருக்கிறது. அதற்கடுத்த நாள் எங்கள் மருகமனின் சகோதர் பெங்களூருக்குத் தனது சகோதரர் குடும்பத்தை அழைத்திருந்தார். எங்களையும் அவர்களுடன் வரச்சொல்லி வற்புறுத்தினார். ஆக எல்லோருமாக பெங்களூர் சென்றோம். மார்த்தஹல்லியில் இரண்டு நாள் இருந்தோம். நண்பர்கள் தமிழவனையும், பாவண்ணனையும் வாய்ப்பிருந்தால் சந்திக்கலாம் என நினைத்தேன். பெங்களூர் பயணம் திட்டமிடல் இல்லை. தொலைபேசியில் இரண்டொருமுறை தொடர்புகொண்டும் அவர்களை பிடிக்க முடியவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிறகு துணைவியுடன் புதுச்சேரி வந்து சேர்ந்தேன்.
பிப்ரவரியில் (16) மூத்த எழுத்தாளரும், சிறந்த விமசகருமான திரு வே.சபாநாயகம் அவர்களின் 80 வது அகவையை முன்னிட்டு அவரது முன்னாள் மாணாக்கர்களும், நண்பர்களும், இலக்கிய அன்பர்களும் ஒரு பெருவிழாவை விருத்தாசலத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள், பெற்றோர்களைச் சுற்றினால் உலகையை சுற்றிவந்ததுபோல எனச்சொல்லபடுகிற நமது புராணக் கதைக்கு ஒப்ப எனக்கு அந்நிகழ்ச்சி உதவியது எனலாம். என்னை அடையாளம் காட்டியவர்களில் வே.சபாநாயகம் ஒருவர். ஒவ்வொரு முறையும் இந்தியா செல்லும்போதெல்லாம் அவரை காணவேண்டும் என நினைப்பேன். தொலைபேசியில் அவ்வப்போது உரையாடி இருக்கிறேன். மென்மையான குரல், வயது குரலுக்கு ஒரு மிருதுத் தன்மையையும் ஏற்படுத்தியிருந்தது. ‘தாயகம் கடந்த தமிழ்’ மாநாட்டுக்காக கோவை செல்லவேண்டியிருந்தது உண்மைதான். எனினும் திரு வே.சபாநாயகம் அவர்களின் அகவை நிகழ்வு எனது இந்தியப் பயண நாட்களில் அமைந்தது எந்த திடமிடலாலும் நேர்ந்ததல்ல. ஒன்றை அல்லது ஒருவர் மேல் உண்மையாக அன்பு வைக்கிறபோது இதுபோன்ற அதிசயங்கள் நிகழும் போலும். தமிழ் நாட்டில் முக்கிய எழுதுதாளர்கள் அவ்வளவு பேரையும் சந்தித்திருக்கிறார், அவர்களோடு சடங்காக அல்ல சரிசமதையாக உட்கார்ந்து உரையாடி இருக்கிறார், உண்டு மகிழ்ந்திருக்கிறார். அதனால் தான் 80வது அகவை நிகழ்ச்சியில் என்னையும் மேடையேற்றி அவர் அருகில் அமர்த்திக்கொண்ட அக்கணத்தை நமது புராண கதையோடு ஒப்பிட்டேன். அன்றலர்ந்த தாமரைபோல என்று ஓர் உவமை சொல்வார்கள் அப்படியொரு முகம். மாணவர்கள், நண்பர்கள், உறவினர் இவர்களுடன் அவர் எப்படி நடந்துகொண்டிருப்பார் என்பதற்கு அன்று திரண்டிருந்த கூட்டமே சாட்சி. கவிஞர் பழமலை தலைமையில் ஒரு பெரிய குழு விழாவை மிகச்சிறப்பாக முன்னின்று நடத்தினார்கள். நாயக்கர், சீனு.தமிழ்மணி மூவருமாக சென்றிருந்தோம். அன்பிற்குரிய குறிஞ்சிவேலன், திரு. பி.ச. குப்புசாமி ஆகியோரை சந்தித்தேன். கண்மணி குணசேகரனை சந்திக்க நேர்ந்ததும் மகிழ்ச்சியை அளித்தது. கைகளைப் பற்றிக்கொண்டு முகத்தில் பரவசத்தை ஏற்றியவராய் ‘அண்ணே அண்ணே’ என்று அழைத்தபோது மயங்கித்தான் போனேன். ‘ பி.சுசீலா வின் ‘அத்தான்.. அத்தான்..’ கூட அதனை நேர் செய்ய முடியாது. பிப்ரவரி 21 மதுரையிலிருந்து எங்கள் மகளும் மருமகனும் புதுச்சேரி வந்திருந்தார்கள். மூண்று நாட்கள் தங்கிதியிருந்தார்கள், சென்னையில் அவர்கள் வாங்கியிருந்த ஓர் அப்பார்மெண்ட்டிற்கு சின்னதாக சடங்கு செய்துவிட்டு வந்தோம். பிறகு 27ந்தேதி அமெரிக்கா புறப்பட்டுபோன பெண்ணிற்கு வழி அனுப்புதல். 28ந்தேதி குற்ற விசாரணை நாவலுக்கும் நண்பர் நாயக்கரின் ‘அப்பாவின் துப்பாக்கி’ நாவலுக்கு புதுவையில் ஓர் அறிமுகவிழா ஏற்பாடு செய்யப்பட்டது. காலச்சுவடு கண்ணன், கவிஞர் சுகுமாரன், பா. ஜெயப்பிரகாசம், க. பஞ்சாங்கம் கலந்துகொள்ள நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறியது.
மார்ச் 3ந்தேதி பிரான்சுக்கு வந்த நாளிலிருந்து, தொழில் சம்பந்த பிரச்சினைகள், அம்பையின் ‘பிரசுரிக்கப் படாத கைப்பிரதியை’ மார்ச் 15க்குள் அனுப்ப வேண்டியதை மார்ச் 25 அன்றுதான் அனுப்பிவைத்தேன். பிரெஞ்சு இணையதளத்தை இரண்டு மாதங்களாக கவனிக்காமல் இருக்கிறேன், பஞ்சாங்கத்தைப் பற்றிய தொடரில் இப்போது கவனம். இடையிடையே முடிக்க வேண்டிய கடை கணக்கு என சொல்ல பிரச்சினைகளை சொல்ல்கொண்டேபோகலாம். தீர்வாகாது, ஒரு நாளைக்கு 48 மணி நேரம் கொடுத்திருந்தால் கூடுதலாக உழைக்கலாம்!
நிகழ்ச்சிகள் சம்பந்தப்பட்ட படங்களை எனது புகைப்படகருவிலிருந்து எடுத்துப்போடுவதில் தற்போது சில சிக்கல்கள் இருக்கின்றன. தீர்ந்ததும் எடுத்துப்போடுகிறேன்.
———————————