Monthly Archives: ஜூலை 2011

இதனை இவனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து’

எழுத்தும் எழுத்தாளனும் ஓர் கடன் ஒப்பந்தம் செய்துகொள்கிறார்கள், ஒப்பந்ததாரர்கள் இருவரும்  ஒருவர்  மற்றவர் உயிரைத் தங்கள் சிமிழுக்குள் வைத்திருக்கிறார்கள். இருவருக்கும் எதிராளியின் ஆரோக்கியம் முக்கியம். இவர் அவரையோ அவர் இவரையோ தவிர்த்து உயிர்வாழமுடியாது. தனது வளத்தில் ஒரு பகுதியை எழுத்தாளனுக்கு கடன்கொடுக்க முன் வரும் எழுத்து, எழுத்தாளனின் தேவையையும், திருப்பி அளிக்கும் திறனையும் பொறுத்து கடன்தொகையை தீர்மானிப்பதில்லை. முழுச்சுதந்திரத்தையும் எழுத்தாளனுக்கு அளிக்கிறது, அவனது தேவையையும் திருப்பி அளிக்கும் திறனின் அடிப்படையிலும் கடன் தொகையை அவனே தீர்மானிக்கிறான்.

கைச்சாத்திடப்படாத இந்த ஒப்பந்தம் பரஸ்பரநம்பிக்கையின் அடிப்டையில் நிறைவேற்றப்படுகிறது. அசலுடன் வட்டியுயும் சேர்த்து பெற்று தனது கருவூலத்தை வளப்படுத்திக்கொள்ளும் எழுத்துக்குள்ளசுயநலம் எழுத்தாளனுக்கும் உண்டென்பதால் பரஸ்பர ஒட்டுண்ணிகுணத்தை மறந்து இருவரும் மற்றவர்களுக்கு நேர்மையாக இருக்கக் கடமைப் பட்டவர்கள் என்பதை இக்கடன் ஒப்பந்தத்தின் அடிப்படை சாரமாக கருதவேண்டியது. சார்த்துரு மொழியில் இதனை கடப்பாடு என்று அடையாளப்படுத்தலாம்.

மொழிக்குக் கடப்பாடுவடையானாக இருப்பவன் – கொஞ்சம் யோசித்துபார்த்தோமெனில் -அவனுக்கே அவன் கடப்பாடுடையவனாக இருக்கிறானென்று அச்சூத்திரத்தை தெளிவுபடுத்திகொள்கிறோம். சற்று கூடுதலாக சிந்தித்தால் எழுத்தும் எழுத்தாளனும் வேறுவேறல்ல- என்றாகிறது. வேண்டுமானால் புரிதலுக்காக எழுத்தாளர்களை எழுத்தின் அவதாரங்கள் எனக்கொள்வோம். அந்த அவதாரத்தில் அம்பையுமிருக்கலாம் ரமணிசந்திரனுமிருக்கலாம். எடுக்கின்ற அவதாரத்தின் நோக்கத்தை நிறைவேற்றவேண்டிய கடப்பாடு அவர்களுக்கிருக்கிறது. ஜெயகாந்தனுக்கென்று ஒரு மொழியை கதைசொல்லலை மேற்குறிப்பிட்ட கடன்பத்திரத்தில் ஷரத்தாக சேர்த்திருப்பார்கள், அந்த ஒப்பந்தத்தின் ஷரத்தை நிறைவேற்ற வேண்டிய தார்மீக கடப்பாடு ஜெயகாந்தனென்ற அவதாரத்திற்கு இருக்கிறது. எழுத்தாளனுக்குள்ள சுதந்திரம் என்பது ஒருவகையில் எழுத்திடமுள்ள கடப்பாட்டை புரிந்து நடப்பது.

உம்பர்ட்டோ எக்கோ தனது கறுப்பு நாயை வெள்ளை நாயாக மாற்றப்போகிறேன் என்கிறார். அவரது கறுப்பு நாய் நீங்கள் அறிந்த நாய்தான் பெயர் ‘The name of the Rose’. வெகுசன ரசனைகேற்றவகையில் தமது நாவலை திரும்பவும் எழுதப்போகிறாராம், பரவலான வாசகர்களை அவரது படைப்பு எட்டவேண்டுமாம்..

உம்பர்ட்டோவின் நல்லெண்ணத்தை சந்தேகிக்கமுடியாது. கூடுதலாக ஒன்றிரண்டு மில்லியன் டா¡லரை சம்பாதிக்கவேண்டுமென்ற என்ணம் அவரது பதிப்பாளருக்கு இருக்கக்கூடும். உம்பர்ட்டோவுக்கு இருக்கமுடியாது. அண்மையில் வெளிவந்த The Cemetery of Prague, நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது என்கிறார்கள் – வாசித்ததில்லை. இன்றையதேதியில் உம்பர்ட்டோ எக்கோ என்ற பெயரில் ஒரு விலைப்பட்டியலை நூலகத்தில் வைத்தால்கூடபோதும், அதற்கும் வாசகர்கள் கிடைப்பார்கள். இச்சூழலில் எல்லோருக்கும் கொண்டுபோகிறேனென்று இலக்கியத்தை எளிமைபடுத்து அவசியமா என்று கேள்வி எழுகிறது.

உம்பர்ட்டோவின் இந்த முயற்சியை கண்டிக்கின்றவர்கள் இருக்கிறார்கள். ஆதரவாக குரல் கொடுப்பவர்கள் இருக்கிறார்கள். நான் கண்டிக்கிறவர்கள் பக்கம். நாளை விஷ்ணுபுரத்தை எளிமைபடுத்துவதாக அதன் ஆசிரியர் கூறினால் ஏற்கமாட்டேன். விழ்ணுபுரத்து அழகே அதன் சிக்கலான நடையில்தானிருக்கிறது.. அப்படியொரு ஒப்பந்தத்தை ஜெயமோகன்  எழுத்தோடு கைசாத்திட்டுள்ளார். உம்பர்ட்டோ எக்கோவிற்கும் அத்தகைய கடப்பாடு எழுத்திடமுள்ளதென்பது எனது கருத்து. The name of the Rose வாசகர்கர்களில்  ஒரு விழுக்காட்டினர் கூட லத்தீன்மொழியை கற்றிருக்க சாத்தியமில்லை, அதனாலென்ன இடைக்காலத்தைப் பற்றி பேசுகிற நாவலொன்றில் அதன் உபயோகம் நாவலின் தரத்தை கூட்டியுள்ளதென்றே சொல்லவேண்டும். தவிர நாவலெங்கும் தற்காலத்தையும் இடைக்காலத்தையும் பிணைக்கும் தத்துவ விசாரங்களையும் குறியீடுகளையுங்கூட எளிமைப்படுத்துவாரா எனத் தெரியவில்லை. தவிர உம்பர்ட்டோவின் இந்த முடிவில் எனக்கென்னவோ ஏளனமும் கலந்திருக்குமோ என்ற சந்தேகம். அதாவது வெகுசன வாசகர்கள் இவரது படைப்பை தொடமறுப்பதற்குக்காரணம் வாசகர்களின் போதாமை எனச்சொல்லாமல் சொல்லுகிறார். அதாவது நாவலில் இவர் வெளிப்படுத்தியிருக்கிற மொழி ஆளுமையும், நுட்பமான சொல்லாடலையும், கோத்திக் நிழலையும், குறிப்பாக ‘I was a medievalist’ in hibernation’ எனக் கர்வப்படுகிற விஷயத்தை ஞான சூன்யங்களுக்குத் தெரியபடுத்துவானேன் என நினைக்கிறார் போலிருக்கிறது.

எனக்குள்ள ஆதங்கம் இதுதான் ‘இதனை இவனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து’ எழுத்து இவர்களோடு ஒப்பந்தம் போட்டிருக்கிறது அக்கடப்பாட்டை மீறுவானேன், மீறி தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்வானேன்.
——–

.

ஒரு கவிஞனின் பிறப்பும் இறப்பும்

கவிதை மூலமாக இலக்கிய பிரவேசத்தினை தொடங்குவது அநேகமாக தமிழில் அதிகமாக இருக்குமென நினைக்கிறேன். வெகு சன புத்தியில் குறிப்பாக எழுபதுகளில் இலக்கியமென்பது கவிதைதான் என்ற பார்வை இருந்தது. கதை -தொடர்கதை எழுதுவது என்பது சினிமாவின் நீட்சியாக பார்க்கப்பட்டது. திருமணங்களில் ஐந்து ரூபாய்க்கும் பத்து ரூபாய்க்கும் எவர்சில்வரில் கிடைக்கும் தட்டுகள் டம்ளர்களை வரிசை வைப்பவர்களிடையே, மாப்பிள்ளையின் ரசிகத்தன்மைக்கேற்ப (இதில் மணப்பெண்ணையெல்லாம் கணக்கிற்கொள்ள மாட்டார்கள்) எம்ஜியார் படத்தையோ சிவாஜிபடத்தையோ போட்டு வாழ்த்துமடல் தயாரித்து, சாஸ்திரிகள் ‘மாங்கல்யம் தந்துநானே’ சொல்லிமுடித்தாரோ இல்லையோ மைக்கை வாங்கி வாழ்த்து மடலை வாசிக்கும் வழக்கம் பின்னர் நடைமுறைக்கு வந்தது. அநேகருக்கு பள்ளியில் படித்த கவிஞர்கள் மறந்துபோகும், எதுகை மோனையைமட்டுமே இலக்கணமாகக்கொண்டு உள்ளூர் பெண்ணுக்கு காதல் கவிதை எழுத ஆரம்பித்த பயிற்சியில் திருமணங்களில் ஒரு பெரிய வாழ்ந்து மடலையே எழுதி சட்டமிட்டு மணமக்களுக்கு பரிசளித்துவிட்டு, அச்சடித்த மடலை கல்யாண மண்டபத்தில் சுண்டல்போல விநியோகிப்பதுண்டு. மணப்பெண்ணின் தோழிகளுக்குப் போய்ச்செரவேண்டுமென்பதில் குறியாக இருப்பார்கள். விநியோகித்து முடித்து ஆண்கள் கும்பலில் உட்கார்ந்தபடி பெண்கள் கூட்டத்தில் அதற்கு வரவேற்பு எப்படி என்பதை தெரிந்துகொள்ளும் ஆவலில் அவ்வப்போது தீனி தேடும் கோழிபோல தலையைத் திருப்பிக்கொண்டிருப்பார்கள். இவனுகளுக்கு வேற வேலை என்ன? என்று காதுபட முனுமுனுக்கும் பெருசுகளும் உண்டு.
என் நண்பன் ஒருவன் இருந்தான். மஞ்சள் நீர், திருமணம், தேர்திருவிழா நாட்களில் அம்மனுக்கு, இறப்பு நாட்களில் அஞ்சலி யென ஆசிரியப்பாவில் கவிதை எழுதியிருப்பான். ஒரு நாள் ரொம்ப வருத்தப்பட்டான். என்னம்மா ‘இத்தனை கவிதை எழுதிக்கொடுத்துட்டேன்’ என்னன்னுகூட கேட்கமாட்டேங்கிறா? என்றான். உனக்கு காதல் முக்கியமா கவிதை முக்கியமா எனக்கேட்டேன். காதல் என்றான். பேசாம கண்னதாசன் பாட்டுலே இரண்டு வரி எழுதிக்கொடு என்றேன். இவன் கண்ணதாசன் பாட்டை எழுதிக்கொண்டுபோனபோது அவளுடைய முறைப்பையனுக்கு நிச்சயித்திருந்தார்கள். வாலிபத்தில் முறுக்கேறும் இக்கவிதை யாத்தல் ஒரு பெண்ணிற்குத் தாலிகட்டின கையோடு அநேகருக்கு மறந்துபோகும்.  என்னிடம் கூடுதலாக சிலகாலம் தாக்குப்பிடித்திருந்தது. நண்பனிடம் பழகிய தோஷத்தில் இரண்டொன்றை அவ்வபோது அரைவேக்காட்டுக் கவிதைகளை (இப்போதைய பார்வையில்) பள்ளி இதழிலும்? கல்லூரி மலரிலும், சில வார சஞ்சிகைகளிலும் பார்த்து பரவசப்பட்டதுண்டு.  பின்னர் காலப்போக்கில் சிற்றிதழ்களில் வருகிற கவிதைகளின் தரத்தைப் பார்த்து வேண்டாமென்று ஒதுங்கிக்கொண்டேன். அவற்றில் பரவாயில்லை சாதியைச் சேர்ந்தவற்றில் ஒரு சிலதை தளைத்தில் இட்டிருக்கிறேன், அதிலொன்று இங்கே இருக்கிறது, சகிக்க முடிந்தால் மற்றவற்றை வாசியுங்கள்:

ஞாபக அம்மா ‘(1990)

வாழ்வியல் கவித்துவத்தில்
குயிற்பாட்டாய் ஞாபகங்கள்

இளவேனிற்காலத்து
இலைநீர் முத்தென
காற்றில் கலந்து
மனதை விசிறிடும்
பசிக்கும் வாழ்க்கையில்
பழைய அமுது

நினைவு பதிப்பில்
பிழைதிருத்தப்படாமல்
பிரசுரமாவதில்
வருத்தமென்றில்லை

சுட்டதும் சுடாததும்
ஞாபகத்தில் உண்டு
சுட்டது அந்தரங்கமானது
சுடாதது அ(வ்)வைக்களிப்பது

ஒரு மழைநாளில்
எனக்காக அம்மா
இரவிரவாய் அலைந்து
நாய்குட்டி தோழனை
தேடித் துவட்டி
திண்ணையில் விட்டதாய்
ஞாபகம்

இப்போதும் எனக்குள்
நாய்குட்டிகள் உண்டு
அம்மா?

——-

மோசமான எழுத்தாளர்?

” Cheryl’s mind turned like the vanes of a wind-powered turbine, chopping her sparrow-like thoughts into bloody pieces that fell onto a growing pile of forgotten memories”.

இருபத்தாறு வார்தைகள் ஒர் அரைப்புள்ளி, ஒரு புள்ளி என்ற மூன்று தகுதிகளின் அடிப்படையில் எழுத்தாளர் ஒருவருக்கு பரிசு கிடைத்திருக்கிறது. எழுத்தாளர் பெயர் சூ ·போண்டரி அமெரிக்காவின் விஸ்லான்சின் பல்கலை கழகத்தைச் சேர்ந்த பேராசிரியை.

கழகங்கள் அரசியலுக்கு வந்த பிறகு பேராசிரியர்கள் என்ற பெயரைக்கேட்டாலே சந்தேகிக்கவேண்டியிருக்கிறது. அசலான பேராசிரியர்கள் மன்னிக்கவேண்டும். சூ ·போண்டரி கதைக்கு வருகிறேன். இந்தப் பெண்மணிஓர் எழுத்தாளருங்கூட, அவர் எழுத்தைப் பாராட்டி Bulwer-Lytten 2011பரிசினைத் தந்திருக்கிறார்கள். எல்லா பரிசுகளையும்போலவே இப்பரிசினைத் தீர்மானிக்கும் தேர்வுகுழுவினரும் – கலிபோர்னிய மாநிலத்தைசேர்ந்த சான் ஜொசே பல்கலைகழகத்தைசேர்ந்தவர்கள்-  தங்கள் பரிசுக்கென்று சில தகுதியை வைத்திருக்கிறார்கள்.

அதென்ன தகுதி?

புரிந்துகொள்ள Edward Bulwer-Lytton என்ற எழுத்தாளரை நாம் அறிந்திருக்க வேண்டும். அவர் பல நாவல்களுக்குச் சொந்தக்காரர், அதிலொன்று ‘The Last days of Pompei’. ‘it was dark and stormy night” என ஆரம்பிக்கும் நாவலின் முதல்வரி வாசகர்களுக்குச் மிகுந்த சோர்வினைத் தரக்கூடிய மோசமான வரியாம். மிக மோசமான எழுத்து என தீர்மானிக்கப்பட்டு 1982ம் ஆண்டு புல்வெர்-லிட்டன் பெயரில் ஆரம்பிக்கப்பட்டக் கணக்கு, இப்பொழுது பரவலாக்கப்பட்டுள்ளது. மோசமான வரியை எழுதியவர் என்றவகையில் ஒன்றிரண்டு நாட்களுக்கு முன்பு இப்பரிசினை வென்றிருப்பவர்தான்  சூ ·போண்டரி. ஆரம்பத்தில் சொல்லப்பட்ட வாக்கியத்தைப் படித்துபாருங்கள். தேர்வுக்குழுவினர் காணும் குறை, ‘புனைவில் வரும் நாயகியின் மனதை காற்றாலையாகவும், நினைவுகளை அவற்றில் அடிபட்டு சிதறும் மைனாக்களோடு’ ஒப்பிட்டிருப்பது. பரிசுகொடுக்க நேர்ந்ததில் பொருத்தப்பாடிருப்பதாகச் சாதிக்கும் சூ இலக்கியம் போதிக்கும் பெண்மணிக்கு இப்படியான தகுதியும் ஒருவகையில் அவசியம் என்கிறார். சூ ·போண்டரி மனத்திடம் கொண்டவராக இருக்கவேண்டும், வேடிக்கையாக இம்முடிவை ஏற்றுக்கொண்டிருக்கிறார்.

————————————————————————-

 

எஸ்.ரா.வுக்கு நன்றிகள்

தமிழின் மூத்த எழுத்தாளரும், படைப்பிலக்கிய ஆளுமைகளுள் முதல் வரிசையில் இருப்பவருமான வணக்கதிற்குரிய நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன் எனது தளத்தை தமது தளத்தில் அறிமுகபடுத்தியிருக்கிறார். ஏற்கனவே மாத்தா ஹரி நூலை 2008ல் தமிழில் வெளிவந்த முக்கிய நூல்களுல் ஒன்றாக அவரது விருப்பத் தேர்வில் இடமளித்திருந்தார். அந்தச் செய்தி காலம்தாழ்ந்தே கிடைத்திருந்தது. உரியகாலத்தில் எனது நன்றியை தெரிவிக்கமுடியாமல் போய்விட்டதே என்று வருந்தினேன். மனதில் எவ்வித இடரலுமின்றி அன்போடு எனது தளத்தை தமது வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி தமது உயர்பண்பை மறுபடியும் வெளிப்படுத்தியிருக்கிறார். அவருக்கு மனமார்ந்த நன்றிகள்.

பணிவுடன்
நா.கிருஷ்ணா

மனித வாழ்க்கையும் தேர்வும்.

‘வாய்யா அல்லது வாம்மாவென்று அழைத்து, ‘தமிழ்நாட்டிலே உங்களுக்குக் குடைக்கூலிக்குக்கூட இடம் கிடக்கவில்லைண்ணு கேள்விபட்டேன், இங்கேதான் கொஞ்சகாலம் தங்கிக்குங்களேன்’ என்று மத்திய சிறையோ அல்லது திகார் சிறையோ சொல்வதில்லை. அழையாவீட்டு விருந்தாளியாக இவர்கள்தான் வலியச்சென்று கதவைத் தட்டுகிறார்கள். அவர்கள் வாழ்க்கைத் தேர்வு அப்படி.  “அறத்தாறிதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோ டூர்ந்தான் இடை” என்கிறது குறள். இந்த அறம் வேறொன்றுமல்ல – தேர்வு. பல்லக்கு சுமப்பவனும், அமர்ந்திருப்பவனும் அவரவருக்கு எது வேண்டுமோ அதை தேடிப்பெற்றிருக்கிறார்கள். இத்தருணத்தில் நமது இடமென்ன? என்ற கேள்விக்குண்டான பதில் அதற்கு முந்தைய தருணம் வரையிலான நமது தேர்வுகளின் அடிப்படையில் பெறப்பட்டது. கோளும் நாளும் அதனதன் விதியை அவைகளே எழுதிக்கொள்கின்றன. அருபது நொடி, அருபது நிமிடம், இருபத்துநான்கு மணி நேரமென்று ராசிபலன் பார்க்காமல், சனீஸ்வரன் கோயிலைச் சுற்றாமல் தம்மை மட்டுமே கருத்தில்கொண்டு நாட்கள் முன்நகர்ந்துகொண்டுதானிருக்கிறன. இவர் நம்ம ஆள் அதனால் நல்லது செய்யவேண்டுமென்றோ, அவர் எதிர் தரப்பு ஆள் அவருக்குத் தீங்கு செய்யவேண்டுமென்ற திட்டமெல்லாம் நாளுக்கில்லை. நமது வாழ்க்கைக்கு அவை எவ்விதத்திலும் பொறுப்பல்ல. தீதுநன்றும் பிறர் தர வருவதல்ல.

மனிதர் வாழ்க்கையில் தேர்வு முக்கியம். நம்மால் தேர்வு செய்யய்யப்படமுடியாதது மூன்று: பெற்றோர்கள், இனம், மொழி இவற்றைத் தவிர பிற அனைத்தும் தேர்வுசெய்ய முடிந்தவைதான். கல்வி, வேலை,  வாழ்க்கைத்துணை, நண்பர்கள், படிக்கும் புத்தகங்கள், நெறிகள், முரண்கள், சண்டை, சமாதானம், சவடால் பேச்சு, கோபம், அமைதி, சிரிப்பு அழுகை என இப்பட்டியலை முடிக்காமல் நீட்டிக்கொண்டே போகலாம். ஒவ்வொரு வினையும் அவ்வினையின் பலனும் எதிரெதிர் பண்புகளைக்கொண்ட இரு தனிமங்களொன்றின் தேர்வை சார்ந்தது. இத்தேர்வில் எனக்குச் சாதகமானதென்ற கருத்தியத்தின் அடிப்படையில் ஒரு தேர்வையும் எனது பாதகத்தைத்தரும் என்ற கருத்தியத்தின் அடிப்படையில் மற்றொன்றையும் தேர்வு செய்கிறோம். அதாவது பின்னதும் ஒரு வகையில் தேர்வு என்றாகிறது. எனினும் இந்த இரண்டாம் வகை தேர்வுக்கு நிராகரிப்பு என்று பெயர். வேண்டாமென்று முகம் சுளிப்போம், போதும், மிக்க நன்றிங்க என நாகரீகமாகவும் மறுக்கக்கூடும், கடுமையாக விவாதிக்கலாம். தள்ளி நிற்கலாம் ஒதுங்கிப் போகலாம், சிலநேரங்களில் ஓடவும் செய்யலாம். தேர்வுக்கு அறிவு புலன் இரண்டும் துணை நிற்கின்றன, குறள் சுட்டும் பல்லக்கில் ஊர்பவன் அறிவினைக்கொண்டு தேர்வு செய்திருக்கலாம். இருந்தபோதிலும் அதை சாசுவதப்படுத்திக்கொள்ள ஒவ்வொரு நாளும் அவனதுதேர்வு சரியானதாக அமையவேண்டும்.

‘எக்ஸ்பிரஸ்’ பிரெஞ்சு தினசரிகளுள் முக்கியமானது. நித்தியானந்தா- ரஞ்சிதா, பட்டப்பகலில் கொலை. ரஜனிப்பேரப்பிள்ளை மூத்திரம் போனார் போன்ற நாட்டின் அதிமுக்கியமான கவலைகளில் அக்கறைகொண்ட நாட்டின் நெம்பர் ஒன் தினசரி அல்ல, ஒரு சராசரி தினசரி. இவ்வருடம் வாசகர்களை உறுப்பினர்களாகக் கொண்ட தேர்வுக்குழுவினர் சிறந்த நாவலாக பிலிப் விலென்(Philippe Vilain) என்ற எழுத்தாளரின் ‘Pas son Genre’ (அவனுக்கு உகந்ததல்ல) நாவலை தேர்வு செய்துள்ளனர்.

ஒரு தத்துவவாதி முடிவெட்டும் பெண்ணை நேசிக்க முடியுமா? பேராசிரியர்கள், அறிஞர்கள், சித்தாந்தம், பேருரைகள், விவாதங்கள், ஆய்வு கட்டுரைகளென நேரத்தை செலவழித்து,  பல்கலைகழக வளாகங்கள் நிறைந்த பாரீஸ் மாநகரில் வாழ்ந்துபழகிய ஒரு சிந்தனாவாதி திடீரென்று ஒரு நாள் துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு பட்டிக்காட்டு வாழ்க்கையை தேர்வு செய்யமுடியுமா? என்ற இரண்டு கேள்விகளை முன்வைத்து அப்பதிலுக்குண்டான சாதக பாதகங்களை ஆய்ந்து மனித வாழ்க்கையில் தேர்வுக்குள்ள முக்கியத்துவத்தை வெகு நேர்த்தியாக சொல்லியிருக்கிறார்.  ‘எதை தேர்ந்தெடுப்பது?’ என்ற கேள்வியை மையப்பாடுத்திய கதை சொல்லல்  நீர்ச்சுழலின் வேகத்துடன் வாசகனை ( முதல் அத்தியாயத்தை சகித்துக்கொண்டால்) உள்வாங்கிகொள்கிறது. எந்த மருந்துக்கும் குணமாகாத எந்த வேப்பிலை அடிக்கும் இறங்கிவராத ஒரு தீராத நோய் கதை சொல்லிக்கு இருக்கிறது. அந்நோய் உடனடியாக முடிவுக்கு வரவிடாமல் அவனைத் தடுக்கிறது, விளைவு, பிரச்சினைகளிலிருந்து விடுபடமுடியாமல் தவிக்கிறான்.  அவனுக்கு ஒன்றைத் தேர்வு செய்கிறபோது மற்றவற்றை நிராகரிக்கிறோமென்கிற குற்ற உணர்வு, ஓர் இருப்பின் நிராகரிப்புக்குண்டான தகுதியை நிர்ணயிப்பதில் அவனுக்கு சிக்கல்கள் இருக்கின்றன. தேர்வு குறித்து அவனுக்குள் உறையும் தயக்கத்தின், ஆரம்பம் எங்கே என்று பார்க்கிறபொழுது தனி மனிதனையும் அவன் சார்ந்த சமூகத்தையும் பிணைத்திருக்கிற கயிற்றின் தன்மையை ஆராய வேண்டியிருக்கிறது. கதைசொல்லியான பிரான்சுவா தனக்குப் பிறர்கொடுக்கின்ற மரியாதை சமூகமென்ற சனாதன தர்மத்தின்பாற்பட்டதென்ற முடிவினைக்கொண்டவன். அவர்களோடு வாழ நேர்ந்தாலும் தான் அவர்களிலொருவனல்ல என்று நம்புபவன். ( சாதிகட்சிகளில் தலைவர்கள் நினைவுக்கு வந்தால் அதற்கு பிலிப் விலென் பொறுப்பல்ல). தேர்வு செய்வதில் தயக்கமுள்ள ஆசாமி என்பதால், அவனாக அவன் இருப்பதில்லை, அவனுக்கான் வாழ்க்கையை அவன் தர மறுக்கிறான். வாழ்க்கையை இரண்டாக வகுந்து: பகுத்தும், காரண காரிய அடிப்படையில் செயல்களை தீர்மானித்தும் கற்பனா உலகில் உலாவரும் வாழ்வு ஒருபுறம் எதார்த்ததின் வெக்கைக்கும் குளிருக்கும் ஏற்ப போர்வைதேடும் சராசரி மனித வாழ்க்கை தேர்வு மறுபுறம். மேற்குடிதன்மையும் பாரீஸ்நாகரத்தின் அகங்காரமும்  பாம்புபோல இறுக சுற்றிக்கொண்டிருக்கிறது. தொட்டால் கொத்திவிடுமோ என்கிற பயம்.

கதை சொல்லி,  நாவலில் வருகிற மனிதர்களின் இயல்பான குணத்திற்காக அவர்களை நேசிப்பதை ஏற்றுக்கொள்கிறோம்: சிலர் நிறைகளுக்காக நேசிக்கப்படுகிறார்கள்.  வேறு சிலரை அவர்களின் குறைகளுக்காக நேசிக்கிறான். இதுவே அவன் தேர்விற்கான நபரை அடையாளப்படுத்த தயங்குவதற்குக் காரணமாகிறது. தவிர குறையும் நிறையும் அவரவர் பார்வையைப் பொறுத்ததென்ற உண்மையை உணராமலுமில்லை. அவன் வாழ்க்கையில் குறுக்கிடும் ஜெனி·பர் ஒரு சிகைத் திருத்தும் பெண்மனியாக இருந்தும் அவள் ஸ்பரிசத்தில் ஒரு தத்துவவாதியாக இருந்துகொண்டு இவன் போதிக்கமறந்த அல்லது இயலாத உண்மைகளை அவள் போதிப்பதாக நினைக்கிறான்.

இந்நாவலில் வரும் கதைநாயகனின் அச்சமும் பதட்டமும் உலகில் பலருக்கும் ஏற்படும் அனுபவம். எதைதேர்ந்தெடுப்பது என்று ஆரம்பித்து, தேர்வுக்காக பல தேர்வுகளை எழுதி காத்திருந்து அலுப்பவர்களில்  ஒருவன். நீதிக்குப் பொருந்தக்கூடிய ஒரு தேர்வினை எட்ட உச்ச நீதிமன்றத்திற்கா போகமுடியும்.

புலம் பெயர்ந்தவர்களின் எழுத்துக்கள்

பிறந்த மண்ணையும், பேசும் மொழியையும் துறந்து அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணங்களால், புதிய புதிய நாடுகளுக்குப் புலம் பெயர்வது என்பது, இன்றைய வாழ்வியல் விதியாகிவிட்டது.

மனித குலத்தின் வரலாறு அறிந்தவர்களுக்குப் புலம்பெயருதல் புதியதல்ல என்பது விளங்கும். தன் வாழ்வை மேம்படுத்திக்கொள்வதற்காக, இயற்கையாகவும் செயற்கையாகவும் புலம்பெயருதல் உலகம்தோன்றிய நாட்தொட்டு நடந்து வருகின்றது. குறுகிய காலத்திற்கு ஓரிடத்திற்கு அல்லது ஒரு நாட்டிற்கு சுற்றுலா, கல்வி, மருத்துவம், உறவினரைப் பார்க்கவென்று சென்று வருபவர்கள் இருக்கின்றார்கள். இவர்களைப் புலம்பெயர்ந்தவர்களாக எவரும் கணக்கிற் கொள்வதில்லை. ஏனெனில் புலம்பெயர்ந்த  இடங்களில் அல்லது நாடுகளில்இவர்களது குறுகியகால வாழ்க்கை ஒரு பார்வையாளர் வாழ்க்கை. ஷாப்பிங் சென்று தனது கையிலிருக்கும் பணத்திற்கும், தனது தேவைக்கும் பொருட்கள வாங்கும் தம்பதியினரைப் போல அற்ப காலத்தில் அதீதச் சந்தோஷத்துடன் திரும்பவேண்டும் என்ற நோக்குடன் பயணிக்கும் மக்கள் இவர்கள். இத்தகு மக்களை திக்குத்தெரியாதக் காட்டில், பல ஆண்டுகளுக்குப் பிறகும் தனது தேவையும், இருப்பும் என்ன? எங்கே? என்று அறியாமலேயே பயணிக்கும் மக்களோடு ஒப்பிடமுடியாது.

நீண்டகாலப் புலம்பெயருதலில், கலாச்சாரம், மொழி இவற்றில் அடிப்படை ஒற்றுமைகள் கொண்ட அரசியல் எல்லைக்குள் பொருளாதாரத் தேவையைமட்டும் கருத்திற் கொண்டு நடப்பது ஒருவகை உ.ம். தமிழ்நாட்டிலிருந்து கேரளாவிற்கோ, இங்கிலாந்திலிருந்து பிரான்சுக்கோ இடம்பெயருவது. மொழி கலாச்சாரத்தையொதுக்கிவிட்டு, அரசியல் நிர்பந்தங்களுக்காகவும், பொருளாதாரக் காரணங்களுக்காகவும் முற்றிலும் புதிய மண்ணிற்குப் புலம்பெயருதல் மற்றொருவகை, உ.ம் மூன்றாவது உலக நாடுகளிலிருந்து மேற்கத்திய நாடுகளுக்கோ அல்லது அமெரிகாவிற்கோ இடம்பெயருவது. புலம் பெயருதல் என்ற சொல், குறிப்பாக இவ்விரண்டாம் நிலை மக்களோடே அதிகத் தொடர்புடையதாகும்.

குடியேற்ற நாடுகளுடைய பூர்வீக மக்களின் அடையாளங்களை முற்றிலுமாக எரித்துவிட்டு வந்த நாட்டை சொந்த நாடாக வரித்துக்கொண்டு வாழுகின்ற அமெரிக்கர்கள் மற்றும் ஆஸ்திரேலியர்கள் போன்றவர்கள் ஒருபுறமிருக்க, புதிய மண்ணுக்குப் வாழ்க்கைப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாகத் தங்கள் இனம், கலாச்சாரம், மொழி இவைகள் தன்னிடமிருந்து விலகிச் செல்வதைத் தெரிந்தோ தெரியாமலோ ஏற்க பழகிய மக்களே இன்றைக்குப் பரவலாக புலம்பெயர்ந்தவர்கள் அடையாளத்துடன் வாழுகின்றார்கள். இவர்களின் உணர்வுகள், அனுபவங்கள், துயர்கள், சங்கடங்கள், சந்தோஷங்கள் முற்றிலும் புதிய கண்ணோட்டத்தில் படைப்புகளாக வலம் வருகின்றன.

பொதுவாகவே இன்றைக்கு, தெற்காசிய எழுத்தாளர்களின் படைப்புகள் முன் எப்போதுமில்லாத அளவிற்கு மேற்கத்திய புத்தக விற்பனைக் கூடங்களிற் காணக் கிடைக்கின்றன. மேற்கத்திய மொழிகளில் குறிப்பாக ஆங்கிலத்தில் ஏன் பிரெஞ்சில்கூட இந்தியம் பேசுகின்ற படைப்புகள் நிறைய வருகின்றன. இவைகளுக்கு மேற்கத்திய நாடுகளில் அமோக வரவேற்பு.  இந்தியாவைக் களனாகக் கொண்ட படைப்புகள் சுலபமாய் விற்றுத் தீருகின்றன. ஆங்கிலத்தில் எழுதிய, எழுதும் இந்தியப் படைப்பாளர்களுள் ஆர்.கே நாராயணன், குஷ்வந்த் சிங், எம்.ஆர். ஆனந்த் இவர்களோடு சமீபகாலமாக அருந்ததிராய், விக்ரம் சேத், யு. ஆர் அனந்தமூர்த்தி, உபமன்யு சட்டர்ஜீ, கமலா தாஸ், முகுந்தன், தமிழ்நாட்டின் பாமா ஆகியோரது படைப்புகளும் இங்கே நல்ல வரவேற்பைப் பெறுகின்றன. மேற்கத்தியர்களும் இந்தியமண்ணின் வரலாறுகள், நிகழ்வுகள், வாழ்வியல் நேர்மைகளைக் களனாகக்கொண்டு படைப்புகளை எழுதி வெற்றிபெறுகின்றார்கள் என்பதற்கு, போல் ஸ்காட், ஷரோன் மாஸ், பெத்தி கிறிஸ்டியன், வில்லியம் டால்ரிம்பிள், எரிக் தெஷொ- ழான் குளோது லாத்தே போன்றவர்களைக் குறிப்பிடமுடியும்.

ஆனால் மேற்கண்ட இரு கூட்டத்திலும் சாராமல், இந்தியாவிற் பிறந்து அமெரிக்காவிலும், மேற்கத்திய நாடுகளிலும் வாழ்ந்தபோதிலும் இரு நாடுகளையும் கருவாகவும் களனாகவும் கொண்டு ஆங்கிலத்தில் எழுதுகின்றவர்கள் அதிகரித்து வருகின்றார்கள். இவர்களுடைய எழுத்தில் தங்கள் மூதாதையர் மண்ணின் ஈரப்பதம் உலறாமல் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அதன் நிறைகளும் குறைகளும், இரத்தமும், தசையும் நரம்புமாக எழுத்தில் வந்துவிழுகின்றன. அதே குணத்தோடு குடியேறிய நாட்டுப் பிரச்சினைகளையும் துணிவோடு தெளிவாகச் சொல்ல முடிகிறது. தன் வாழ்நாளில் கணிசமாகவொரு பகுதியைப் பிறந்த நாட்டில் அல்லது சொந்த மண்ணில் கழித்துவிட்டு, எஞ்சிய ஆயுளை இன்னொரு மண்ணில் அல்லது இன்னொரு நாட்டில் கழிக்க நேரும்போது, அவனுடல் மாற்றத்தை ஏற்றுகொண்ட அளவிற்கு, அவனுள்ளம்  மாற்றத்தை ஏற்பதில்லை. இதையே வேறுவகையிற் சொல்வதென்றால், உணர்ச்சிகள் மாற்றத்தைச் சுலபமாக ஏற்க, அறிவு விலகி நின்று போராடுகின்றது. இப்போராட்ட வாழ்க்கை முதற் தலைமுறையைச் சார்ந்த அனைத்து மக்களுக்கும் உண்டு. சுடர் மிகும் அறிவுள்ள அவன், அதன் நலங்கெடப் புழுதியில் எறிவதில்லை. மாறாகத் தனது அடையாளத்தை வெளிப்படுத்த அறிவைப் பயன்படுத்திக்கொள்கிறான். புலம்பெயர்ந்தவர்களிடம் கிடைக்கும் சொந்த நாட்டின் சிந்தனைகளும் வந்த நாட்டின் அனுபவங்களும் உலக இலக்கியங்களுக்கு ஓரு புதிய அனுபவத்தைக் கொடுத்துள்ளது.  உலகின் ஏனைய புலம்பெயர்ந்த எழுத்தாளர்களைப் போலவே சொந்த மண்ணின் உணர்வுகளை, அனுபவங்களை, பார்வைகளை எழுத்தில் வடிக்கும் படைப்புகளைக் கொண்டுவந்ததுபோக, வந்த மண்ணின் உணர்வுகளை, அனுபவங்களை, பார்வைகளை எழுத்தில் வடிக்கும் படைப்புகள் சமீபகாலங்களில் இத்தகு படைப்பாளிகளாற் பெருகிவருகின்றன.

ஆங்கிலத்தைத் தவிர, தமிழில் வருகின்ற பெரும்பாலான இன்றைய இலக்கியபடைப்புகளில் உற்பத்தி இலக்கணம் இருக்கின்றதேயொழிய படைப்பிலக்கணமில்லை. இவர்களின் நோக்கங்களனைத்தும் புகழுக்கும், விற்பனைக்குமான தந்திரம். இதற்காக எல்லா உபாயங்களையும் (அடிதடி உட்பட..) கையாளுகின்றார்கள். உற்பத்திப் பொருளின் விற்பனைச் சந்தைக்குக்குப் பயன்படும் யுக்திகளான ‘ஒப்பீட்டு விளம்பரம்’, நுகர்வோர் சார்பில் ஆகா.. ஓகோச் சான்றிதழ்கள்.. இன்னபிறவற்றைத் திட்டமிட்டு நகர்த்துகின்றார்கள். இத்தகு தந்திரங்கள் அன்றன்றைய பங்குச்சந்தைக்கு உதவுமேயொழிய, காலத்தை எதிர்த்து நிற்க உதவாது. வெற்றியைத் திட்டமிட்டு செய்வது படைப்பாக முடியாது, வியாபாரம். அவ்வாறு செய்பவர்கள் படைப்பாளிகலல்ல வியாபாரிகள்.

அதற்குமாறாக படைப்பிலக்கணம் சார்ந்து, துணிச்சலுடன் எழுதுகின்ற வி.எஸ் நேப்போல், சல்மான் ருஷ்டீ, கமலா மார்க்கண்டேயா, அனிதா தேசாய் போன்றவர்களும் பாங்களா தேஷைச் சேர்ந்த தலிமா நஸ்ரீன், இலங்கையைச் சேர்ந்த ஷியாம் செல்வதுரை போன்ற புலம்பெயர்ந்த படைபாளிகளைப் பார்க்கிறோம். இவர்களின் எழுத்தில் நேர்மையும், துணிவும் இயல்பாய் அமைந்திருக்கின்றன.

தமிழிலும் இன்றைக்குப் புலம் பெயர்ந்த எழுத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.. தமிழ்நாட்டிற்கு வெளியே, சிலநூற்றாண்டுகளுக்கு முன்பு வேறு நாடுகளுக்குக்(சிங்கப்பூர், மலேயா,..) குடியேறி இன்றைக்கு அவற்றைத் தாய்நாடுகளாக வரித்துக்கொண்டு தமிழில் எழுதுபவர்கள் ஒருபக்கமெனில், சமீபத்தில் கட்டுரையின் ஆரம்பத்திற் குறிப்பிட்டதுபோன்று அரசியல் பொருளாதாரக் காரணங்களுக்காக உலகின் பலநாடுகளிலும் குடியேறி, புதிய கலாச்சாரத்தினைச் சந்தித்து அதனைத் தமிழில் சொல்பவர்கள் மறுபக்கமென இவர்களைப் பிரிக்கலாம். தாயக எழுத்தாளர்களில் சிலர் மிகச் சுலபமாக வைக்கும் குற்றச்சாட்டு, “அங்கேபோயும் அவர்கள் இதைத் தானே எழுதிக்கொண்டிருக்கிறார்கள்”, என்பது. இதற்கான பதில், “கொழும்பிலிருந்துகொண்டு மட்டக்கிளப்பு, கிளிநொச்சி என்று எழுதுவதற்கும், சென்னையிருந்துகொண்டு வடுகப்பட்டியையும், திருவரங்கத்தையும் எழுதுவதற்கும் தாயகத் தமிழர்களுக்கு என்ன உரிமையுண்டோ, நியாயங்கள் உண்டோ, அவைகள் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் உண்டு என்பதாகும். புலம்பெயர்ந்த எழுத்துக்கள் எதைச் சொல்கின்றன என்பதைவிட எப்படிச் சொல்கின்றன என்பதைப் பார்க்க வேண்டும். புலம் பெயர்ந்தவர்களின் சொற்கள் தமிழுக்குப் புதிது, எழுதும் பொருள் தமிழுக்குப் புதிது, களம் தமிழுக்குப் புதிது.

ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும், கனடாவிலும், வளைகுடா நாடுகள், சிங்கப்பூர், மலேசியாவென தமிழர்கள் பரவியுள்ள இடங்களிலிருந்து ஏற்கனவே தமிழுலகம் அறிந்த படைப்பாளிகளிடமிருந்தும், இளம் படைப்பாளிகளிடமிருந்தும் நல்ல தமிழில், அறிவியல், இலக்கியக் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் என்பதாகப் பல தேர்ந்த படைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. தாயகத் படைப்பாளிகளுடன் இணைந்து, இணையக்குழுமங்களிலும் இணையத்தளங்களிலும் தமிழிலொரு முதிர்ச்சிபெற்ற இலக்கியச் சூழலுக்காகப் பங்காற்றிவருகின்றார்கள், உழைத்து வருகின்றார்கள்.

தமிழிலக்கியவரலாறு, இருபத்தோராம் நூற்றாண்டில் புலம்பெயர்ந்த தமிழர்களால் முக்கியத்துவம் பெறும். தாயக ஏக்கமும், குடியேற்ற நாடுகளில் அவன் சந்திக்கின்ற பிரச்சினைகளும் படைப்புகளின் தரத்தைக் கூட்ட உதவுமேயன்றி குறைக்க ஒருபோதும் உதவாது. இது தவிர தமிழகத் தீவர இலக்கியவாதிகள் கட்டியழும், மேற்கத்திய காலாவதியாகிவிட்ட இஸங்களைக் காட்டிலும், .குடியேற்ற நாடுகளில் எழுதப்படும்  புலம் பெயர்ந்த மக்கள் எதிர்நோக்கும் சமூகம் சார்ந்த பிரச்சினைகளான இனவெறி, நிறவெறி, பாலியற் பிரச்சினைகள் அந்தந்த நாடுகளில் மொழிபெயர்க்கப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம். தமிழிலக்கியங்களில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பேசபட்டவையே மேற்கத்திய படைப்பாளிகள் இஸங்கள் என்ற பெயரால் குழுக்களமைத்துக்கொண்டு எழுதப்போக, இன்றைக்கவை மேலைநாடுகளில் முகவரி இழந்து கிடக்கின்றன. ஆகவே இந்தியாவில் கூச்சலிட உதவும் இஸங்கள் இரண்டுங்கெட்டான் இந்தியவாசகனை மிரட்ட உதவுமேயன்றி மேலை நாடுகளை மிரட்டாது. ஜெயகாந்தனிலிருந்து – பாமாவரை அசலான தமிழ்ப் படைப்புகளே மேலைநாடுகளை எட்டிப்பா¡ர்த்திருக்கின்றன. இந்தச் சூழலில் எதிர்காலத்தில் தமிழிலக்கியத்தை மேற்கத்திய மக்களுக்குக் கொண்டு செல்வதில் தாயக மக்களைவிட புலம்பெயர்ந்தவர்களின் பங்கு கணிசமாகவிருக்கும் என்பது சத்தியம்.

அவ்வாறே மொழி பெயர்ப்பிலும் புலம்பெயர்ந்தவர்கள் கணிசமானப் பங்கினை ஆற்றமுடியுமென நம்புகிறேன்.  எந்த எழுத்தையும் மொழிபெயர்க்கும்பொழுது, மூலமொழியை வாங்கிக்கொள்ளும் திறனும் சொந்தமொழியில்  அதை வெளிபடுத்தும் ஆளுமையும் அவசியம். மொழி அறிவோடு, மூல ஆசிரியனின் காலம், சமூகம், கலாச்சாரம் பற்றிய அடிப்படை அறிவில் தெளிவாக இருக்கவேண்டும். சென்னையிலிருந்துகொண்டு ரஷ்ய நாவலை மூலத்திலில்லாமல், இரண்டாவது மொழியிலிருந்து மூன்றாவதாக ஒரு மொழியில் சொல்ல வருவதென்பது சரியாகாது. மலையாள நாவலொன்றை பக்கத்து எல்லையிலிருக்கும் தமிழ்நாட்டில் மலையாளமறிந்த ஒரு தமிழரால் தமிழுக்குக் கொண்டு வரும்போது பிரச்சினைகளில்லை. ஆனால் மலையாளத்திலிருந்து ஆங்கிலத்திலும் அங்கிருந்து வடகிழக்கிலுள்ள ஒரியாவில், கேரளாபற்றிய பூகோள அறிவைமட்டுமே துணையாகக்கொண்டு மொழிபெயர்ப்பது அபத்தம். தமிழிலுள்ள பெரும்பாலான மொழிபெயர்ப்புகள் மூலத்தோடு பக்கங்களின் எண்ணிக்கையில் ஒத்துபோகின்றனவேயொழிய, மொழியிலோ, படைப்பாளியிடமோ அல்ல. இக்குறைகளைப் போக்க இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மன், நோர்வே, கனடா என வாழும் தமிழர்கள் முயன்றார்களெனில் பல நல்ல படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டு வரமுடியும்.

“புலம் பெயர்ந்தவர்கள் பல சவால்களை எதிர்நோக்க வேண்டியிருப்பதால் அவர்களால் பெரியதொரு இலக்கியத்தைப் படைத்து விட முடியாது” என்கின்ற  ஜெயமோகனின் அபிப்ராயத்தை மிக எளிதாக ஒதுக்கலாம். அவ்வாறே  “உலக அரங்கில் தமிழ் இஇலக்கியத்தைப் புலம்பெயர் இஇலக்கியம் தலைமையேற்று வழி நடத்தும்” என. எஸ்.பொ. கூறுவதும் சற்று மிகையானக் கூற்று. ஆனால், இந்த நூற்றாண்டில் உலக அரங்கில் தமிழ் இஇலக்கியத்திற்கான அங்கீகாரத்தினைப் புலம் பெயர்ந்தத் தமிழர்கள் கணிசமாகப் பெற்றுத்தருவார்கள் என்பதனை மறுக்கவியலாது.

……