Monthly Archives: ஜூலை 2013

மொழிவது சுகம் ஜூலை -27 2013

குறவர்கள், ஜிப்ஸிகள், ழித்தான்கள்(Gitans): தென் இந்தியா  – ஐரோப்பா: ஓர் உறுத்தும் உண்மை

முழங்கால் முட்டியைத் தாண்டாத சிறுகட்டங்களிட்ட நிறமங்கிய பாவாடை, மார்புகளின் பாரத்தை மறக்க அடிவயிற்றையும், மேற்கைகளையும் கடித்து சமாளிக்கும் இரவிக்கை, வெத்திலை சாறில் ஊறி காவியேறிய மஞ்சள் பற்கள் கத்திரிவெயிலில் வேர்ப்பதும் உலர்வதுமாக இருக்கிற பின்கழுத்து, செம்பொன்நிறப் புழுதிவாடை தணியாத  கொண்டை, கடுகளவுமணிகளின் கறுப்பு, வெள்ளை, மஞ்சள், காவி வண்ண அலங்கார அணிவகுப்பு, தோளில் தொங்கும் தூளியில் ஈக்கள் மொய்க்கும் குழந்தை, தலைச் சும்மாடில் ஒரு கோரைப்பாய் என வருடங்கள் தோறும்  சித்தேரிக்கரையில் புளியமரங்களுக்கடியில் டால்டா டின்களுடன் வந்திறங்கும் குறத்திகள், வெக்கை சூடிய பரதேவதைகள்.

கிராமத்து நண்பணிடம் அப்போது நடத்திய உரையாடல் பசுமையாக நினைவில் இருக்கிறது. பூனையாக இருந்த நாம நாயாக அலையறோமே இது தேவையா? என்ற எனது கேள்விக்கு, ஆசிரியர் பயிற்சியை முடித்திருந்த அவன் பதில், நாம எப்போது பூனையாக இருந்தோம்?

அதற்குப் பிறகு கல்லூரி நாட்களில், படித்த நூல்களில் ஆர். எல். ஸ்டீவன்ஸன் என்று நினைவு. நூலில் பெயர் Kidnapped அல்லது The Black arrow வாக இருக்கலாம், அல்லது இரண்டுமே அல்லாத வேறொரு நூலாக இருக்கலாம், ஜிப்ஸி பெண்ணொருத்தி வருவாள். வயதான பெண்மணி என்றாலும் அவளை எனக்குப் பிடித்திருந்தது. பிறகு ‘ஷோலே’ இந்திப்படத்தில் ஜட்கா ஒட்டுகிற பெண்ணாக வந்து வளவளவென்று பேசியே கவனத்தை ஈர்க்கிற ஹேமாமாலினி உடை அலங்காரம், ஜிப்ஸிபெண் தோற்றத்தில் அத்தனை ரம்மியம், எந்தக் காரணத்திற்காக ‘ஷோலே’ படம் சக்கைபோடுபோட்டதோ எனக்குத்தெரியாது, நான் ஐந்துமுறை படத்தைப்பார்க்க ஹேமாமாலினி என்கிற ஜிப்ஸி தேவதை ஒரு காரண அருவம். அண்மையில் ஜெய்ப்பூரில், முழங்கை மறைத்த சட்டையும் கண்ணாடிச்சில்லுகள் பதித்த மஞ்சளும் அரக்குவண்ணமும் கலந்த கணுக்கால் பாவாடையும், முலைக்காம்பைக் கவ்வியிருந்த குழந்தையை பக்கத்திலிருந்த பெண்ணிடம் கொடுத்துவிட்டு, ப்ரும்ப்ரும்ர்ர்ர்ம்.. என்று முழங்கிய மேளத்திற்கு, இராஜஸ்தானியா இந்தியா என்ற  குழப்பமானதொரு மொழியில் பொம்மலாட்டம் நிகழ்ச்சிக்குப் பாட்டுபாடினாள்.

பிரான்சு நாட்டிற்கு 1985ல் வந்தேன். பிரான்சு நாட்டில் எல்லா நாட்டினரும், எல்லா மதத்தினரும், எல்லா நிறத்தினரும் இருக்கிறார்கள், அவர்களில் தனித்த ஒரு கூட்டம் என் கவனத்தைக் கவர்ந்தது. கணுக்கால்வரையிலான பாவாடை, மார்புகள் புடைத்திருக்கும் சோளி, முன் தள்ளிய வயிறு, நைலான் ஸ்கார்பிற்குள் பத்திரப்படுத்தப்பட்ட தலை. இருபது முப்பது வாகனங்களில் அநேகமாக பென்ஸ், பிம்டபுள்யு, காரவான் என விலையுயர்ந்த வாகனங்களாக இருக்கும், நகராட்சி இவர்களுக்கென தண்ணீர் வசதி, மின்சாரவசதி ஏற்பாடு செய்துள்ள ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களில் தங்குவார்கள், அநேகமாக நகரத்தில் திருடு, கொள்ளை என்று நடந்தால் போலீஸ்காரர்கள் நேராக இவர்களைத்தான் தேடிவருவார்கள். பிரெஞ்சு மொழியில் இவர்களை ‘Gitanes’கள் என அழைக்கிறார்கள். இதே பெயரில் குறைந்தது மூன்று பிரெஞ்சு திரைப்படங்கள் வந்திருக்கின்றன. என்பங்கிற்கு ஒரு சிறுகதையை எழுதினேன். காரணம் இருக்கிறது.

ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்த கதைபோல ஐரோப்பாவிற்கு இந்தியாவிலிருந்து வந்த கதையொன்று இருக்கிறது. 1760 ஆம் ஆண்டு  அங்கேரி நாட்டைச்சேர்ந்த வயி இஸ்தவன் (Valyi Istvan) என்ற இளைஞர் இறையியல் படிக்க லேய்து (Leyde) பல்கலைகழகத்தில் சேருகிறார். ஊரில் அவர் குடும்பத்திற்கு பெரியதொரு பண்ணை இருந்தது. அப்பண்ணையில் Tsigans (Gitans) உள்ளூர்வாசிகளால் அழைக்கப்படும் நாடோடிமக்கள் வேலை செய்தார்கள். அவர்கள் பேசும் மொழிக்கும் அதே பல்கலைகழகத்தில் சகமாணவர்களாகவிருந்த மலபாரிகள் பேசிய மொழிக்கும் ஒற்றுமை இருப்பதைக் கண்டாராம். ஆயிரம் மலபாரி சொற்கள் அடங்கிய பட்டியல் ஒன்றைத் தயாரித்து தனது பண்ணை ஆட்களிடம் -Tsigans- காட்டியிருக்கிறார். அவர்கள் அச்சொற்களின் பொருளை சரியாகச் சொன்னார்களாம். இப்பட்டியல் எதிர்பாராதவிதமாக ஜார்ஜ் ப்ரே (George Pray) என்கிற பல்கலைக்கழக ஆசாமி ஒருவரிடம் சிக்க  அவர் 1776ம் பல்கலைகழக ஜர்னல் ஒன்றில் பதிசெய்ததாக ஒரு கிளைக்கதையும் உண்டு. .

1990 ஆண்டு இயான் ஆன்கோக் (Iyan Hancock) என்ற டெக்ஸாஸ் பல்கலைக் கழக ஆசிரியர் ஒருவர், ரொமனிகளைப் பற்றி நிறைய ஆய்வு செய்தவர், ரொமானியர். ருமேனிய நாட்டில் இந்நாடோடிமக்களுக்கு ரொமானிகள் என்றுபெயர். இன்றும் ஐரோப்பாவெங்கும் பயணிக்கிற இந்நாடோடிமக்கள் (Gitans) அதிகம் வசிப்பது ருமேனிய நாட்டில்தான். இயான் ஆன்கோக், வயி இஸ்தவன் ஆய்வு செய்ய நினைத்தார். உண்மையில் அப்படி ஒருவர் இருந்தாரா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. லேய்டு பல்கலைக்கழகத்திற்கும் சென்றார். பல்கலை ஆவணங்களை ஆய்வுசெய்ததில் அப்பெயரில் எவருமே அங்கே படித்ததில்லை என்ற உண்மையைக் கண்டறிகிறார். அவ்வுண்மை தெளிவற்ற பல பதில்களுக்குக் காரணமாயிற்று. பல்கலைகழக மாணவராக இல்லாமலிருந்து அங்கு அவ்வப்போது வந்துபோனவராக இருக்கலாமென்று சிலரும், அக்கண்டுபிடிப்பே அவருடையது இல்லை என்பவர்களும் இருக்கின்றனர்.

எது எப்படியிருப்பினும் இந்நாடோடிகளுக்கும் இந்தியாவுக்கும் உள்ள பூர்வீகப்பந்தம் குறித்துத் தொடர்ந்து ஆய்வுகள் நடபெற்றுவருகின்றன.  மொழிவகையில் ஒற்றுமைகள் இருக்கின்றனவாம். உதராணமாக ‘சூரி’ (கத்தி), நாக் (மூக்கு) போன்ற சொற்கள் அதே பொருளில்  ரொமானி மொழியிலும் உபயோகத்தில் இருக்கிறது என்கிறார்கள். அதேபோல பீஸ் (இருபது) என்ற சொல்லும் ரொமானி மொழியில் இருக்கிறதாம். இவற்றைத் தவிர வேறு வார்த்தைள் இல்லையெனவும் நினைக்கிறேன். நான் சந்தித்த ழித்தான்கள் (நாடோடிகள்) இரண்டு மூன்று பேர் , எங்களுக்கு இந்தியா பூர்வீகமென்று கூறிவிட்டு இச்சொற்களை மட்டுமே நினைவுபடுத்துகிறார்கள். ‘ஷோலே படத்தைப் பலமுறை பார்த்திருக்கிறார்கள், இந்திப்படங்களை விரும்பிப் பார்க்கிறார்கள். தவிர இந்நாடோடிமக்களில் ஒரு பிரிவினரின் பெயர் சிந்திகள்.

அவர்கள் இந்தியாவிலிருந்து வந்திருக்கலாமென்பதற்கு ஆதாரமாக பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. முதலாவதாக, அவர்கள் ஓரிடத்திலும் நிலையாக இருப்பவர்களில்லை என்பதால், இந்தியாவின் வடமேற்குபகுதிகளில் குடியேறி சிலகாலம் தங்கிவிட்டுப் பின்னர் மத்திய கிழக்கு நாடுகளுக்குப் போயிருக்கலாம், என்கிறார்கள். ஆனால் அரபு மொழியின் தாக்கமேதும் அவர்களிடத்தில் இல்லையென்பதால் குறுகிய காலத்திலேயே அங்கிருந்து பைஸாண்ட்டின் பேரரசு ஊடாக ஐரோப்பாவிற்குள் வந்திருக்கலாம் என்பது அறிஞர்களின் கருத்து.

அங்கேரிய நாட்டு மொழியியலாளர் ஜோசெப் வெக்ரெடி (Jozef Vekredi)யின் ஆய்வுப்படி (1988) இவர்கள் குற்றபரம்பரையினரென்றும் 7ம் நூற்றாண்டில் அரசாண்ட இந்திய மன்னர்களுக்கு வேண்டாதவர்களாகிஇருக்கலாம் என்கிறார். மாறாக அமெரிக்கப் பல்கலைகழகத்தைச் சேர்ந்த கென்னத் ப்ளாசு (Kenneth Blachut) 2005ல் வரையறுத்துள்ள முடிவின்படி, இவ்வெளியேற்றம் 6ம் நூற்றாண்டில் நிகழ்ந்திருக்கலாம். கி.மு. 1500ல் தென் இந்தியாவிலிருந்து வெளியேறி (அவரது கருத்தின்படி ஆரியர்கள் இப்பிரதேசத்திற்கு வந்ததும், இவர்கள் வெளியேற்றமும் ஒரேகாலத்தில் நிகழ்ந்தனவாம்.) பஞ்சாபில் பலகாலம் வசித்துவிட்டு அதன் பின்னர் ஐரோப்பாவிற்குள் வந்தவர்கள்.

ஆன்கோக் வேறொரு கருத்தையும் முன்வைக்கிறார். கஜின்யின் படையெடுப்பால் இது நிகழ்ந்திருக்கலாம் என்பது அவர்கருத்து. அவரால் கைது செய்யப்பட படைவீர்கள் (ஷத்திரியர்கள்) பின்னாளில் துருக்கியருடன் கலந்து ரொமானி என்ற இனத்தவ்ர்களாக மாறியிருக்கலாம் என்கிறார்.

ஆனால் இன்று Tsigans, Roms, Gypsys, Gitans என பலபெயர்களில் அழைக்கப்படும் இம்மக்கள் ஐரோப்பியர்களுக்கு வேண்டாதவர்கள். நாடற்றவர்களான இவர்கள் இரண்டாம் உலகப்போரில் யூதர்களைவிட அதிக எண்ணிக்கையில் நாஜிப்படையினரால் கொல்லப்பட்டபோதிலும், இவர்களைப்பற்றி எவரும் பேசுவதில்லை.அண்மையில் பிரான்சுநாட்டின் ஒரு நகரத்தின் மேயர் தனது நகரத்தில் இம்மக்களின் தொல்லை அதிகமாக இருக்கிறதென்று சொல்லவந்தவர், ‘இட்லர் இன்னும் அதிகம்பேரைக் கொன்றிருக்கலாம், அப்படிக்கொன்றிருந்தால் நமக்கு இவர்களால் பிரச்சினகள் வந்திருக்காது’ – எனத் தெரிவிக்கப்போக, மனித உரிமைகள் அமைப்பு வழக்குபோட்டிருக்கிறது, சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி அவரைக் கட்சியிலிருந்து வெளியேற்றி உள்ளது.

நன்றி :  Courrier International le 18 juillet 2013, Cidif
———————————————————————-

மொழிவது சுகம் ஜூலை 18-2013

எரிந்தது 18 மில்லியன் மட்டுமல்ல..

ஒன்றல்ல இரண்டல்ல ஏழு ஒவியங்கள் எரியுண்டன – இடம் ருமேனியா, செய்தவள் ஒரு மூதாட்டி. முதலாளித்துவ உலகில் அரிதானப் பொருட்கள், சிற்பங்கள் ஓவியங்களெல்லாம் junk bonds களாக மாறிவருவதை உறுதிபடுத்தும் சம்பவம். எரிக்கப்பட்ட ஓவியங்களுள் ஒன்றை பிக்காசோவின் தூரிகையும், இரண்டு ஓவியங்கள் மொனேவின்(Monet) கைவண்ணத்திலும், மத்திஸ் (Matisse); கொகன் (Gauguin) ஆகியோரின் தலா ஒரு ஓவியமும் அடங்கும். ஏழு ஓவியங்களும் கடந்தவருடத்தில் ஆம்ஸ்டர்டாம் அருங்காட்சியகத்திலிருந்து களவாடப்பட்டிருந்தன. ருமேனியா நாட்டின், அரசு அருங்காட்சியகத்தின் இயக்குனர் இச்செய்தியை உறுதிபடுத்தியிருக்கிறார். எரிந்த சாம்பலில் வெள்ளீயம், ஈயம், துத்தநாகம் ஆலிய நிறமிகள் இருந்தனவென்றும், இவ்வகை ஓவியங்களில் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை உபயோகிக்கப்பட்டு, பின்னர் அவை தடைசெய்யப்பட்டதென தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தவிர எரிந்த சாம்பலில் நீலம், மஞ்சள் சிவப்பு வண்ணத்துணுக்குகளும் கிடைத்தனவாம். எரிந்த ஏழு ஓவியங்களின் மதிப்பு 18 மில்லியன் யூரோவென ஒரு தோராயக் கணக்கு போட்டிருக்கிறார்கள்.

திருடப்பட்ட இவ்வோவியங்கள் முதலில் அநாதையாக பூட்டிக்கிடந்த வீடொன்றின் தோட்டத்தில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கின்றன. பிறகு என்ன நினைத்தார்களோ கல்லறையில் ஒளித்து இல்லை புதைத்து வைத்திருக்கிறார்கள். கடைசியில், புதைத்ததில் நிறைவு அடையாமல் திருமதி தொகாரு எரித்திருக்கிறார். திருடியக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் தன் மகனுக்கு எதிரான சாட்சியங்களை அழிக்க நினைத்து இந்த நல்ல காரியத்தைச் செய்திருக்கிறார். நல்ல அம்மா..

2012ம் ஆண்டு அக்டோபர் ஆலந்து நாட்டின் ரோட்டர்டாம் நகரிலிருந்த, குன்ஸ்த்தால் (Kunsthal) அருங்காட்சியகத்திலிருந்து ஏழு ஓவியங்களும் சாமர்த்தியமாக திருடப்பட்டன, எடுத்துக்கொண்ட நேரம் வெறும் 90 நிமிடங்கள். குற்றவாளிகள் ஆறுபேரும் ருமேனியர்கள் அவர்களுள் ஓவியங்களை எரித்தக்குற்றத்திற்காக கைது செய்யப்படுள்ள திருமதி தொகாருவும் அடக்கம். வழக்கு அடுத்தமாதம் 13ந்தேதியன்று தொடங்குகிறது.

பிரான்சில் என்ன நடக்கிறது?

Le Petit Nicolas – சிறுவன் நிக்கோலா: அறுபதுகளில் சக்கைபோடுபோட்ட சிறுவர்களுக்கான கதைபுத்தகம். அநேகமாக பிரான்சுநாட்டில் தங்கள் பால்ய வயதில் ‘சிறுவன் நிக்கோலாவை’ வாசித்திராத மனிதர்களே இல்லை என்கிறார்கள். நிக்கோலா என்ற சிறுவனின் தினசரி வாழ்க்கை அனுபவங்கள் கதைகளாக கோட்டோவியத்துடன் பிரசுரமாகி, விற்பனையில் அப்புத்தகங்கள் சாதனையும் படைத்தன. நிக்கோலாவின் குடும்பம், பெற்றோர்கள், தந்தை, அவர் முதலாளி, பள்ளி சிநேகிதர்கள், சிநேகிதைகள் அவன் சந்திக்கிற பிற மனிதர்கள் என முழுக்க முழுக்க நிக்கோலாவின் உலகம் எளிய மொழியில் நேரான வாக்கியத்தில் சொல்லப்பட்டது. சிறுவன் நிக்கோலா ‘ரெனே கோசின்னி’ என்பவரின் கற்பனையில் உருவானவன். தொடக்கத்தில் பெல்ஜியத்திலும் பின்னர் பிரான்சிலும் தொடராகன் வெகு காலம் வந்தவை. 2009 ஆண்டில் Le Petit Nicolasவின் ஐம்பதாவது வயதை விமரிசையாகக்கொண்டாடினார்கள். நிகழ்ச்சியைச் சிறப்பிக்கும் விதமாக அவ்வாண்டு Le Petit Nicolas என்ற பெயரில் கார்ட்டூன் திரைப்படமும் வெளிவந்தது. பிறகு திரைப்படமும் வெளியானது. இதுவரை உலகமெங்கும் பல மொழிகளில் வெளிவந்து 15 மில்லியன் புத்தகங்கள் விற்ப¨னை ஆகியுள்ளனவாம். அடுத்தமாதம் யிட்டிஷ் (Yidish), அரபு, ப்ரெத்தோன் ஆகியமொழிகளில் வர இருக்கின்றன.

ஒரு குட்டித்தகவல்.

‘சிறுவன் நிக்கோலா’ மூன்று மொழிகளில் வரவிருக்கும் செய்தியைத் தெரிவித்திருந்தேன். அரபு மொழியைப்பற்றி உங்களுக்குத் தெரியும் ஆனால் அதனுடன் முன்னும் பின்னுமாகக் குறிப்பிட்டுள்ள மொழிகள் இரண்டையும் உங்களில் அநேகர் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. அவை இரண்டுமே பிரெஞ்சு அரசாங்கத்தால் அதிகாரபூவமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள பிரான்சு மொழிகள். அதுபோல 75 மொழிகளை பிரெஞ்சு அரசாங்கம் அங்கீகரித்திருக்கிறது. வேறு சில மொழிகள் கோர்ஸ், ஒக்ஸித்தான், அல்சாசியன்… நான் வசிக்கிற ஸ்ட்ராஸ்பூர் நகரம் அல்ஸாஸ் எனப்படும். இங்கு பேசப்படும் மொழி அல்சாஸியன், ஜெர்மன் மொழியிலிருந்து பிறந்தது. யிட்டிஷ் மொழியும் ஜெர்மானிக் மொழியிலிருந்து பிறந்ததுதான், இன்னொரு கூடுதலானத் தகவல் உலகில் பெரும்பாலான யூதர்கள் பேசுமொழியும் யிட்டிஷ் மொழியே.

———————————–

16. எழுத்தாளன் முகவரி: புதிரும் – விடையும்

மேற்கத்திய புனைவுலகில் நாவல்களில் பலவடிவங்கள் இருக்கின்றன. அத்தனை வடிவங்களிலும் நாவல்கள் தொடர்ந்து எழுதப்பட்டு வருகின்றன. தமக்கென பெற்றுள்ள வாசகர்கள் ஆதரவுடன் புனைவுலகில் தங்கள் இருப்பை அவை உறுதிப்படுத்திக்கொள்வதையும் காண்கிறோம். நாவல்களின் கரு, புழங்கும் எல்லை, வாசகர்கள் எண்ணிக்கை, அவர்களின் தரம் ஆகியக் தனிமங்கள் நாவல்களுக்குள் இனப்பாகுபாட்டை உருவாக்குகின்றன. ஒப்பந்தம் செய்துகொண்டு படைக்கிற எழுத்தைத் தவிர்த்து – அல்லது ஒப்பந்த தொழிலாளியின் எழுத்தைத் தவிர்த்து, பிற எழுத்துகள் அனைத்துமே பிற தொழில்களைப்போலவே ஒரு படைப்பாளி தொழிற்படும் ஆற்றலை, படைப்புத் திறனை மதிப்பீடு செய்ய உதவுபவை. சிறந்த தச்சனாக, சிறந்த கருமானாக, சிறந்த ஆசிரியனாக, சிறந்த விஞ்ஞானியாக இருப்பதைப்போலவே சிறந்த எழுத்தாளன் என்ற அடையாளத்தை அவன் படைப்புகளே உறுதிசெய்ய முடியும். நூறுபேர் கல்லுடைக்கிறார்கள், ஒருவர் மட்டுமே சிற்பி என அடையாளப்படுத்தப்படுகிறார். ஆயிரம் பேர் உளி எடுக்கிறார்கள், ஒன்றிரண்டுபேர்மட்டுமே செதுக்கு வேலைக்கு உரியவர்களெனச் சொல்லப்படுகிறார்கள். எதுகையும் மோனையும் தெரிந்தவனெல்லாம் கவிஞனல்ல, படைப்புலகம் ஒரு சிலரை மட்டுமே அங்கீகரித்திருக்கிறது. இது ஏன்? ஒரு குடும்பத்தில் மூன்று பிள்ளைகள் இருக்கிறபோது ஒருவன் அல்லது ஒருத்தியைமட்டுமே மட்டுமே படு சுட்டி என்று கொண்டாடுகிறோம். வீதியில் ஐம்பது குடும்பங்களில் ஒருவர் மட்டுமே அல்லது ஒருத்தி மட்டுமே ஊரறிந்தவர் ஆகிறார். இந்த மனிதர்களுக்கு மட்டும் ஏன் இப்படியொரு கொடுப்பினை, பிறர் பொறாமைகொள்ளும் வாழ்க்கை எப்படி அமைகிறது?. செய்யும் தொழில் எதுவாயினும் அதில் பக்தியும், ஆழ்ந்த ஈடுபாட்டுடனும் காரியம் ஆற்றும்போது கவனத்திற்கு வருகிறார்கள்.

நம்மோடு சேர்ந்து நூறுபேர் கடைவிரித்திருக்கிறார்கள் என்கிறபோது நமது பொருட்கள் வாடிக்கையாளரின் கவனத்தை பெறவேண்டுமானால், அப்பொருட்கள் தொடர்ந்து விலைபோகவேண்டுமெனில் மேற்குறிப்பிட்ட பக்தி, ஆழ்ந்த ஈடுபாடு ஆகியவற்றுடன் தனித்தன்மைகொண்ட ஞானங்களும் தேவைப்படுகின்றன. இலக்கிய படைப்பாளிகள் எனச்சொல்லபடுகிறவர்கள் மேற்கத்திய நாடுகளில் 90 விழுக்காடுகள் மொழியிலோ, தத்துவத்திலோ, பத்திரிக்கைத் துறையிலோ உயர்கல்வி பெற்றவர்களாக இருப்பார்கள். பத்தாண்டு அனுபவம் தராத ஞானத்தை ஓர் ஆண்டு கல்விமூலம் வெகு எளிதாகபெறமுடியும். சிந்திக்கும் ஆற்றலை அனைத்துத் தளங்களிலும் செலவிட்டுக் கூடுதல் சிறப்புடையப் படைப்புகளைப் தருவதற்கு அவர்களால் முடியும். தமிழில் அப்படியொரு நிலமை இல்லை. மக்களுக்கு ஏற்ப தலைவர்கள் அமைவதுபோல, வாசகர்களின் ஞானத்தை பிரதிபலிக்கிற வகையில்தான் ஒரு மொழியின் எழுத்தாளர்கள் அமைவார்கள்.

ஓரளவு கல்வியுடனும் பிற ஞானத்தை வாசிப்பின்மூலமும் பெற்றே ஜெயகாந்தனும், பிரபஞ்சனும் எழுத்தில் ஜெயிக்க முடிந்ததெனில், உயர்கல்வி பெற்றிருப்பின் இவர்கள் புகழ் வீச்சு எதுவரை இருந்திருக்குமென யோசிக்க வேண்டியிருக்கிறது. அப்படி யோசிக்கறபோது இன்னொரு அச்சமும் வருகிறது, கொஞ்சம் அதிகம் படித்திருந்தால், இவர்கள் இந்திய அறத்தின்படி ஏதேனுமொரு அலுவலகத்தில் கோப்புப் பார்த்துக்கொண்டிருந்திருப்பார்கள், நமக்கு  நல்ல எழுத்தாளர்கள் கிடைத்திருக்க மாட்டார்கள். பணிசெய்துகொண்டே எழுதியவர்கள் இல்லையா? இருந்தார்கள் இருக்கிறார்கள். தங்கள் கவனத்தை முழுவதும் எழுத்துக்காக சோர்வின்றி முழு ஈடுபாட்டுடன் அவர்களால் அளிக்க முடிகிறதா? ஆக இன்றைய படைப்புக்குத் தேவையான எழுத்து நுட்பத்தைப் பெற, உயர் கல்வியும் வேண்டும், ஆழ்ந்த ஞானமும் வேண்டும், தமது நேரத்தை முழுமையாக எழுத்துக்குச்செலவிட, தயாராகவும் இருக்கவேண்டும்.

நாவல்களில் பலவடிவங்கள் உண்டு, ஆனால் தமிழில் பரவலான முயற்சிகள் குறைவு. காரணம் வாங்குவோரும் இல்லை வாசகனும் இல்லை. இளம் வயதில் மேதாவி, நாஞ்சில் பி.டி சாமி, கலாதர் ஆகியோரை எல்லாம விரும்பிப் படித்திருக்கிறேன். ஆனால் எனக்கு ராஜேஷ்குமார் வகையறாக்களைப் பிடிப்பதில்லை காத தூரம் ஓடுவேன். அகதா கிரிஸ்டி, கானன் டாயில், பெரி மேஸன், சிட்னி ஷெல்டன் ஆகியோரையும் ஆர்வத்துடன் படித்த காலமொன்றுண்டு. தமிழில் மர்ம நாவல்கள் என்ற முத்திரையுடன் வரும். பொதுவில் இன்றைக்கும் குற்ற புனைவுகளை விரும்பி படிக்கிறோம், கடைசிப்பக்கத்தில் அவிழ்க்கப்படும் மர்மம் முதல் இருநூறுபக்கங்களை வாசிக்கின்ற சக்தியை நமக்கு அளிக்கின்றன. இந்த யுக்தியைப் பயன்படுத்திக்கொண்டு அதாவது மர்மமுடிச்சை கடைசியில் அவிழ்க்கிற இத்தந்திரத்தை நாவலில் பரவலாக தூவி  வாசகனை சோர்வின்றி வாசிக்க குற்ற புனைவுகளற்ற நாவல்களிலும் சாத்தியமா? சாத்தியம் என்பதை இன்றைய எழுத்துகள் நிரூபிக்கின்றன. கதையின் கரு, தேர்வு செய்யும் சொற்கள், கதை சொல்லும் வகைமை, உத்தி, நடை எனபலவற்றின் துணைகொண்டு அதனைச் சாதிக்க முயற்சிக்கிறார்கள்.

எனக்கும் விறுவிறுப்பாகக் கதை சொல்லிப்போவதில் விருப்பம் அதிகம், அதாவது விறுவிறுப்பான கதைகளெனில் குற்ற புனைவென்றோ அல்லது மர்ம நாவலென்றோ நீங்கள் பொருள்கொள்ள மாட்டீர்களெனில்.  விறுப்பான கதைகளுக்கு, ‘திட்டமிடல்’ என்பது நெருக்கமானதொரு சொல். திட்டமிடலின்றி செய்ய ஏதேனுமிருக்கிறதா? சொல்லுங்கள். இங்கே சொல்லவரும் கதையையே  திட்டமிடல் வேண்டும். நிகழ்ச்சி கூறுகளை முறையாக வகுத்துக்கொண்டு கதை சொல்ல தொடங்கவேண்டும். வாசகனுக்கு அதன் தேவை அவசியமற்றதாக இருக்கலாம், ஆனால் விறு விறுப்பாகக் கதை செல்ல நினைக்கும் எழுத்தாளனுக்கு ஒரு கட்டாயத் தேவை.

சுமார் முப்பதுவருடங்களுக்கு முன்புவரை திரைப்பட பாடல்கள் புத்தககங்கள், தியேட்டர் வாசலிலோ, திருவிழாக்களிலோ, தெருவில் கடைபரப்பியோ விற்கப்படுவதுண்டு., அச்சிறு புத்தகத்தில்:

“ஏழைவிவசாயி பாலன் பண்ணையார் மார்த்தாண்டம் மகள் செவ்வந்தியைக் காதலித்தான். ஒரு நாள் பண்ணையாருக்கும் பாலனுக்கும், கூலித் தகராறு ஏற்படுகிறது. முறைமாமன் நாகலிங்கமும் செவ்வந்தியைக் காதலித்து பண்ணையாரிடம் தன்குடும்பத்துடன் பெண்கேட்டுவந்தான், அவன் நடத்தையைக் காரணம் காட்டி பண்ணையார் நாகலிங்கத்திற்குப் பெண்ணைத் திருமணம் செய்துகொடுக்க மறுக்கிறார். மறுநாள் பண்ணையார் கொலைசெய்யப்பட சந்தர்ப்ப சாட்சியங்களைவைத்து போலீஸ் பாலனை கைது செய்கிறது. பாலன் விடுதலை அடைந்தானா? செவ்வந்தியைத் திருமணம் செய்துக்கொண்டானா? வெள்ளித் திரையில் மிகுதியைக் காணுங்கள் என அந்த விளம்பர முடியும்”.

நீங்கள் வாசித்ததொரு விறுவிறுப்பான நாவலை மனதில் அசைபோடுங்கள். நிகழ்ச்சித் தரவுகளின் வரிசையை அவதானியுங்கள். அத்தரவுகளை துல்லியமாகப் புரிந்துகொள்ள முயலுங்கள். ஆல்·ப்ரெட் ஹிட்ச்காக்  அதனை, “TheMcGuffin’ (1) என அழைப்பாராம். நாவலொன்றில் நிகழவிருக்கும் சம்பவங்களுக்கான காரணங்கள் அவை. அதாவது காரியங்களுக்கான காரணங்கள். நகரத்தை வெடிவைத்து தகர்ப்பதற்கானத் திட்டம், ‘யாதோன் கி பாரத்’ படத்தைப்போல காணாமற்போன சகோதரனைத் தேடி அலைவது, பழிக்குப்பழி வாங்குவது, வங்கியில் கொள்ளை -இவை எல்லாமே ‘TheMcGuffin’ கீழ் ஒதுங்குபவைதான். TheMcGuffin சூத்திரம் குற்ற புனைவுகளுக்கு மாத்திரம் சொந்தமல்ல எல்லா நாவல்களுக்கும் உதவும். ‘கிருஷ்ணப்பர் நாயக்கர் கௌமுதி’ என்ற பெயரை நாவலோடு எப்படிப் பொருத்தலாம், கிருஷ்ணப்ப நாயக்கர் யார்? அவரோடு செண்பகம் எப்படி இணைந்தாள், சித்ராங்கி எழுதிய கடிதத்தை கிழித்துபோட எது ‘காரணம்’? அக் ‘காரணம்’ அவள் எதிர்காலத்தடத்தை எப்படி புரட்டியது? என்பதாக அண்மையில் எழுதிய ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’க்கு சில கேள்விகளை வைத்துக்கொண்டு அவற்றிற்கான பதில்களை தொய்வில்லாமல், இலக்கிய சுவை குன்றாமலும், கூற முயற்சித்தேன். இப்படி உபயோகமான கேள்விகளை அல்லது திட்டமிடல்களை அடிப்படையில் கதையை நகர்த்தத் தீர்மானித்த பிறகு ஒவ்வொரு கேள்விக்குமான பதிலை நம்முடைய உணர்வோடு, அனுபவத்தோடு, அவ்வனுபவத்தின் அடிப்படையில் எடுத்த முடிவோடு கதையை முன்நகர்த்தலாம். ஆனால் இதில் கவனத்திற்கொள்ள வேண்டிய விடயம் சொல்லப்படும் கதை படைப்பாளியின் அனுபவமல்ல படிக்கின்ற வாசகனின் அனுபவம் என்ற எண்ணத்தை ஏற்படுத்திதருதல்.

ஆகக் கதையை: புதிர் புதிருக்கான விடையென இரண்டாக வகுத்துக்கொண்டு செயல்படலாம். நாடக அரங்கில் விளக்கை அணைப்பார்கள் திரைவிழுகிறது. பார்வையாளர்கள் மத்தியில் சலசலப்பு, அடுத்த சில நொடிகளில் அமைதி, யாரும் கேட்டுபெற்ற அமைதியல்ல விழுந்த திரையும் அணைந்த விளக்கும் ஏற்படுத்திய அமைதி, திரை விலகினால், விளக்கு மீண்டும் உயிர்பெற்றால் என்ன நடக்குமென்ற எதிர்பார்ப்பு ஏற்படுத்திய அமைதி. நல்ல கதை சொல்லலுக்கும் இத்திரையும் இருட்டும் விளக்கும், வெளிச்சமும் தேவை.

அல்லது இப்படியும் அமைத்துக்கொள்ளலாம் நீங்கள் ஒரு கால் பந்தாட்ட வீரர் (எழுத்தாளர்) கோல் போட்டு முடிக்கும் வரை நீங்கள் செய்யவேண்டியவை என்ன? உங்கள் கால்களை நம்பி பார்வையாளர் காலரியில் அமர்ந்த்திருக்கும் ரசிகனுடைய எதிர்பார்ப்பை எப்படி நிறைவேற்றப்போகிறீர்கள் என்பதில் இருக்கிறது உங்கள் வெற்றியும் தோல்வியும்.

———————————————-
1. Inside the Mystery Novel – Stanley Elen

கி. ராஜநாராயணனின் புனைகதைகளும் இயற்கையை எழுதுதலும் – பேராசிரியர் க. பஞ்சாங்கம்.

தமிழ்நாட்டின் வேறு பகுதிகளில் பிறந்து, பின்னாளில் அரசியல் மற்றும் பணி நிமித்தமாக புதுச்சேரிக்கு வந்து, வேரூன்றி கிளைவிட்டு நிழல்பரப்பி தமிழிலக்கியத்திற்குப் பெருமை சேர்த்தவர்களில் முன்னோடி பாரதியார். அண்மையில்,  கி. ரா அவ்வரலாற்றை திரும்ப எழுதினார். ஒருவகையில் புதுச்சேரிவாசிகள், புதுவைப் பல்கலைகழகத்திற்கு நன்றி கூறக் கடமைப்பட்டவர்கள். பாரதி, பாரதிதாசனுக்குப் பிறகு, புதுச்சேரி எல்லைக்குள் குறுகிவிடாமல், வங்கக்கடல்கடந்து மலேசியா, சிங்கப்பூர், இலங்கையென தமிழ் ஒலிக்கிற இடங்களிலெல்லாம் புழங்குகிற பெயரென்று உண்டெனில், அது படைப்புலகில் பிரபஞ்சன், கல்விப்புலத்தில் லெனின் தங்கப்பா. இவை இரண்டும் தமிழ் அறிவுஜீவிகளுக்கு நனு அறிமுகமான பெயர்கள்.     ஏற்கனவே கூறியதுபோன்று புதுச்சேரி பல்கலைகழகத்திற்கு பணியின் பொருட்டு வந்தவர்கள் பலர் இன்று தங்கள் உழைப்பால், உள்ளூர்வாசிகளால்  உயர்த்த முடியாத புதுச்சேரியின் புகழை, தமிழ் வெளியெங்கும் கொண்டு செல்கிற அரும்பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள், அவர்களில் குறிப்பிடத்தக்கவர் பேராசிரியர். க. பஞ்சாங்கம். அவரது மூன்று புத்தகங்களை சமீபத்தில் வாசித்தேன். முதலாவது: இப்பத்தியின் தலைப்பில் சொல்லப்பட்டிருக்கும் புத்தகம், மற்றது “ஒரு தலித் ஒரு அதிகாரி ஒரு மரணம் என்ற நாவல்”, மூன்றாவது அவரது இலக்கிய திறனாய்வு நூல்- இரண்டாம் பாகம். முதல் பாகம் எனக்குக்கிடைக்கவில்லை. பஞ்சாங்கத்தின் படைப்புலகம் குறித்து சிறப்புக் கட்டுரை ஒன்றை எழுத இருக்கிறேன். தற்போது வேலை பளுகாரணமாக உடனடியாக செய்ய இயலாத நிலை. தவிர அவரது இலக்கிய திறனாய்வு கட்டுரைகள் தொகுப்பின் இரண்டாம் பாகத்தில் நவீன இலக்கிய பிரிவை மட்டுமே வாசிக்க முடிந்தது, ஏனைய பகுதிகளை இன்னும் வாசிக்காததும் தள்ளிப்போடுவதற்கு ஒரு காரணம்.

‘கி. ராஜநாராயணனின் புனைகதைகளும் இயற்கையை எழுதுதலும்’ என்ற நூலை அன்னம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது, சில நூல்களுக்கு அரிதாகவே நல்ல முன்னுரைகள் அமையும்.  இதற்கு முன்னுரை எழுதியிருப்பவர் பேராசிரியை திருமதி மீனாட்சி. இந்நூலின் பெருமைக்கும் அதன் தரத்திற்கும் எதுகாரணம் என்று பலமுறை யோசித்தேன். ஆய்வுப்பொருளாக எடுத்துக்கொள்ளப்பட்ட கி.ராஜநாராயனனின் புனைகதைகளுக்கும்,  நண்பர் பஞ்சாங்கத்தின் எழுத்தில் தோய்ந்து திளைத்து மகிழ்ச்சிப்பரவசத்தில் ஓர் இலக்கியத் தோரணத்தை நூலின் தலைவாசலிற் தொங்கவிட்டுப் பூரிக்கும் பேராசிரியை மீனாட்சியின் முன்னுரைக்குங்கூட நூலின் பெருமையில் பங்கெடுக்க பூரண உரிமையிருக்கிறதென நம்புகிறேன். பிறகு இருக்கவே இருக்கிறது பேராசிரியர் பஞ்சாங்கத்தின் அறிவுபூர்மான, அழகான, வலுவான, நியாயமான வாதங்கள், கருத்துகள், தீர்ப்புகள். போகிறபோக்கிலே, ஏதோ சில அரசியலை முன்வைத்து, ‘கி.ரா’ என்ற நாடறிந்த படைப்பாளிக்கு சந்தடிசாக்கில்  ஒரு மாலையைப்போட்டு பூசைவைக்கிற தமிழ்மரபு குலதெய்வப் படையலாக இந்நூல் இல்லை. அவரது இலக்கிய திறனாய்வு கட்டுரைகள் தொகுப்பிலுங்கூட ‘கி.ரா’ மீதுகொண்டுள்ள அன்பையும், ஓர் விமர்சககருக்குள்ள பொறுப்பையும் பேராசியர் கலக்கவில்லை. அதது அந்தந்த இடத்தில் தமது எல்லைக்கோடுகளை தாண்டாமல் இருக்க பழக்கியிருக்கிறார்.

தொல்காப்பியர் வழி அதாவது இயற்கை என்பது ‘நிலமும் -பொழுதும்’ என்ற கருத்தியத்தின் அடிப்படையில்  இரண்டு சொற்களின் உறவுகளைச் சென்று பார்க்கிறார். அவற்றிடம் எங்கள் படைப்பாளி எவ்வாறெல்லாம் தனதெழுத்தில் உங்கள் பெருமைகளைக் கொண்டாடுகிறான் பாருங்கள் என்கிறார். கி.ராவின் மண்ணு தின்னியும், புல் பூண்டும், மண் தினுசுகளும், கலப்பைக் கொழுவும், முள்ளெலிகளும், காட்டாமணக்குவிதைகளும் பஞ்சாங்கத்தின் கைப்பகுவத்தில் மீசை முறுக்குகின்றன. நிலம், பொழுது, கருப்பொருட்கள், விலங்குலகம், பறவைஉலகம், தாவரங்களென கி.ராவின் எழுத்துலகம் காட்சிப்படுத்தப்படுகிறது. சத்தியமாக சொல்கிறேன் கோபல்ல கிராமத்திற்குள் இத்தனை ரசனையோடு நான் சென்றதில்லை. மீண்டும் ஒருமுறை கோபல்ல கிராமத்து மக்களைச் சந்திக்க நினைக்கிறேன், கி.ராவின் இயற்கையை தரிசிக்க இருக்கிறேன். இப்படியொரு போதைக்கு என்னை அடிமைபடுத்தியிருக்கிற நண்பரை எந்தச் சட்டத்தின் கீழ் தண்டிப்பது?  கி.ராவைத்தான் கேட்கவேண்டும். கி.ரா எழுத்தை தமிழில் நல்ல வாசகர்கள் என அறியப்பட்டவர்கள் அனைவருமே பொதுவாக வாசித்திருப்பார்கள், வாசிக்காதவர்கள் சொற்பமாகவே இருப்பார்கள். அனைவருக்கும் நான் வைக்கும் அன்பான வேண்டுகோள்:

“பேராசிரியர் க.பஞ்சாங்கத்தின் கட்டுரைகளை ஒருமுறைவாசித்துவிட்டு,  கி.ராவின் படைப்புகளை வாசியுங்கள். கிரா என்ற கலைஞனின் பிரம்மாண்டம் ஓரளவு பிடிபடும்.
—————–
கி. ராஜநாராயனனின் புனைகதைகளும் இயற்கையை எழுதுதலும்
ஆசிரியர்: பேராசிரியர் க.பஞ்சாங்கம்

அன்னம் பதிப்பகம்
மனை எண் 1. நிர்மலா நகர்,
தஞ்சாவூர்- 613007
தொலைபேசி : 04362 -239289
—————————-