Monthly Archives: நவம்பர் 2017

மொழிவது சுகம்  25 நவம்பர் 2017 : அ. பொறுமைக் கல்  -அதிக் ரஹ்மி ஆ. என் கடன் உயிரை வதைப்பதே !

 

                Pierre de patience  

அ. பொறுமைக் கல்  -அதிக் ரஹ்மி

ஆப்கானிய நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட பிரெஞ்சுக் குடியுரிமைப்பெற்ற எழுத்தாளர் அதிக் ரஹ்மி (Atiq Rahimi )  என்பவரின் நாவல் Syngué  Sabour. இப்பெயர் அரபுப் பெயராக இருக்கலாம். பிரெஞ்சு மொழியில் Pierre de Patience  என்று நாவலுக்குப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. எளிமையான கதை அல்லது உண்மை. பொய்களை உரைப்பது கடினமான  வேலை. பிறரைக் கவர  நகாசு வேலைகள் வேண்டும். பேன்ஸி ஸ்டோர் கூட்ட த்தை அள்ள பொன்மூலாம் பூசவேண்டும். ஆனால் உண்மையைச் சொல்வது, முகத்திற்கு மஞ்சள் இடுவதுபோல. தரிசித்த முகம் வீடுவரை நம்மோடு வரும், அதிகாலை இளங்காற்றுபோல மனதை ஸ்பரிசிக்கும். அதிக் ரஹ்மி  திரைப்படக் கலைஞன், எனவே ஒவ்வொருக் காட்சியையும், காமெராவின் கோணத்திற்கேற்ப அமைத்துக்கொண்டு நகர்த்துகிறார்.

ஆப்கான் யுத்தம் ஆண்டுகள் பலவாக தொடருவதை அறிவோம்.   சொந்தக் கவலைகளை மறக்க, அண்டை வீட்டானின் பிரச்சினை உதவுவதும் நமக்குப் புதிதல்ல. பக்கத்து வீட்டுக்  குழாயிலும் தண்ணீர் வரவில்லை என்ற செய்தியில்தான் தற்காலிக நிவாரணம் கிடைக்கிறது.  ஆப்கான் போன்ற  நாடுகளிலோ அதிபர் உட்பட எல்லா வீடுகளிளும் பிரச்சினை. அண்டைவீட்டுப் பிரச்சினை மட்டுமல்ல  என் வீட்டுப் பிரச்சினையுங்கூட என  அம்மண்ணிற் பிறந்த  அதிக் ரஹ்மி நாவலை எழுதியுள்ளார். அண்டை வீடு,  எதிர்த்தவீடு மட்டுமல்ல தன்வீடும் எழவு வீடுதான் எனச் சொல்கிறார் ஆசிரியர்.

ஆப்கானின் தீராப்பிரச்சினையான உள் நாட்டுப்போரில் ஒரு பிரினருக்கு ஆதரவாக போரில் இறங்கி  குண்டடிப்பட்டுக் கோமாவில் கிடக்கும் கணவனிடம், மனைவி  வீட்டையும் நாட்டையும் நிர்மூலமாக்கும் பணியை ஓயாது தொடரும் மனிதர்களை, அவர்களின் அறங்களை, இரக்கமற்ற வாழ்க்கை முறையை,  அதன் விளைவுகளை தனக்கமைந்த வாழ்க்கை அடிப்படையில் ஊரை எரிக்காமல், மனிதர்களை எரிக்காமல் வார்த்தை குண்டுகளால் துளைத்தெடுக்கிறாள். அர்த்தமற்ற சகோதரப்போரில் படுகாயமுற்று சவம்போல வீட்டில் கிடக்கும் கணவனையும்,பிள்ளைகளையும் காப்பாற்ற சோரம் போகும் பெண்மணி,  விரக்தியின் உச்சத்தில் சமூகத்தையும் மனிதர்களையும்  கடுமையாக விமர்சிக்கிறாள். கணவனை ‘பொறுமைக் கல்லாக’  பாவித்து அக்கல்லிடம்  ஒளிவு மறைவின்றி அனைத்தையும் கோபத்துடன் கொட்டுகிறாள். ஆப்கானிய சமூகத்தில் குடும்பம், பெண்களின் நிலைமை, பெண்களிடம் மட்டும் கன்னித் தன்மையை எதிர்பார்க்கும் ஆண் வர்க்கம் என அனைத்தும் பராசக்தி வசனத்தில் சொல்லபட்டிருக்கிறது.

« மனிதரின்  நெற்றியில் திரவம் சொட்டு சொட்டாக விழுகிறது. சுருக்கங்களின் மடிப்பில் விழுந்தோடிய திரவம் சில நொடிகளுக்குப் பிறகு மூக்கின் தொடக்கத்திற்குத் தமது திசையை மாற்றிக்கொண்டு அங்கிருந்து கண் வட்டத்திற்குள் பரவி, பின்னர் கன்னத்தை வருடுவதுபோல ஓடி கனத்த அவருடைய மீசையில் முடிந்தது.

உறங்கப்போகும் சூரியன்

விழித்துக் கொள்ளும் மனிதரினம்

இன்றிரவும் அழிவுகள் தொடரும் !

இன்றிரவும் உயிர்ப்பலி தொடரும் !

காலையில் மழை பொழியும்

நேற்றைபோலவே

நகரமும் இடிபாடுகளும்

மழையில்  நனையும் !

காயங்களையும்

செத்த உடல்களையும்

மழை  நீர் கழுவும் ! »

போன்ற வரிகள், இலக்கியத் தகுதியை உறுதிசெய்பவை.பிரான்சு நாட்டின் கொன்க்கூர் இலக்கிய பரிசை (2008) வென்ற நாவல்.

ஆ என் கடன் உயிரை வதைப்பதே !

மனிதர் வாழ்க்கையில் கடன்படுவது இயற்கை. உலக மொழிகள் அனைத்திலும் கடன் என்ற சொல் இருக்கிறது.  ‘காதலன்’(l’amant) என்ற சுயபுனைவு  நாவலில் மார்க்கெரித் துராஸ் என்ற பிரெஞ்சு பெண் எழுத்தாளர், இந்தோ சீனாவில் பிரெஞ்சு கிழக்கிந்திய  நிறுவன ஊழியர்களுக்கு கடன் கொடுத்த செட்டியார்கள், அதிகாலையிலேயே வீட்டிற்கு வந்து,  எவ்வளவு சாக்குப்போக்குகள் சொன்னாலும் நம்பாமல், வட்டியைப் பெற்றபின்பே செல்வார்களென  குறிபிட்டிருப்பார்.

ஒருவரிடமிருந்து பெற்ற ஒரு பொருள், திரும்ப அவரிடம் ஒப்படைக்கப்படும்  என்ற உறுதியின்பேரிலும், நம்பிக்கையின் அடிப்படையிலும் இன்னொருவரிடம் கொடுக்கப் படுகிறது. அந்த இன்னொருவர் வாங்கியப் பொருளைத் திருப்பித் தரும்வரை கடனாளி. அன்றாட வாழ்க்கையில் விதவிதமான கடன் பரிமாற்றங்களைச் சந்திக்கிறோம்.  « கடைக்குப் போகலை, இரண்டு கரண்டி காப்பித்தூள் கொடுங்க, நாளைக்குத் திருப்பித் தரேன்(மாதத்தில் இருபது நாட்கள் இப்படி இரவல் வாங்கியே சிக்கனமாக குடும்பம்  நட த்தும் பெண்கள் இருக்கிறார்கள் எனப் பெருமைப் படாதீர்கள், எனக்குத் தெரிந்த அப்படியொரு பெண்மணி, மாதத்திற்கு பத்து சினிமாக்கள் பார்ப்பார்) » ; « அடட இந்தப் புத்தகம் உங்க கிட்ட இருக்கா ?» எனக்கேட்டு புத்தகத்தை இரவல் வாங்கிச் செல்பவர்கள், « பெயிண்ட் கடைக்கு வந்தேன் 5 ரூபாய் குறையுதுங்கிறான், கைமாத்தா கொடுங்க, நீங்க ஞாயிற்றுக்கிழமை ஊருக்கு வரும்போது,கொடுத்திடுவேன்! » இப்படி கடன் களுக்கு பல முகங்கள் இருக்கின்றன. இதற்கு வராக் கடன் என்று பெயர்.

இந்த வராக்கடன் பட்டியலில், வேறு சிலகாரணங்களை முன்னிட்டு பெரிய அளவில் பரிமாற்றம் செய்யப்படும் கடன்களும் இருக்கின்றன. உலக வங்கிக் கடன்கள், பன்னாட்டு  நிதி  நிறுவனத்தின் கடன்கள் , முன்னாள் இந்தியன்வங்கி மேலாளர் பாணியிலான கடன்கள், மல்லையாக்களுக்கு அளிக்கப்படும் கடன் களும் உள்ளன. இவை திரும்பவராதென கொடுப்பவருக்கும், திருப்பித் தரவேண்டிய அவசியமில்லையென வாங்கியவருக்கும் தெரியும்.

கடன் தரும் பொருள் எந்த வடிவத்திலும் இருக்கலாம். இக்டன் பணமாகவோ, பொருளாகவோ பரிமாற்றத்திற்கு உள்ளாகிறபோதுதான் பிரச்சினை. ஆனால் இவற்றையும் திரும்பத் தர உத்தேசமின்றி, மறந்த துபோல பாவனை செய்யும் மனிதர்களுக்கு சிக்கல்களில்லை. கடன்பெற்றவர் மானமுள்ள மனிதராக இருந்தால் தான் பிரச்சினை. வங்கித் தொழில்,  கடன் வர்த்தகம் போன்றவை இவர்களை நம்பியே இருக்கிறது.  கடன் பெற்ற பணத்தைத் திட்டமிட்ட பொருளியல் நடவடிக்கையில் முதலீடு செய்து தானும் பயன்பெற்று, வங்கிகள், நிதி  நிறுவனங்களை முடக்காமல் தம்மைப்போன்று பிறரும் பயனடையச் செய்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால்  நம்மில் பலருக்கு  எந்தவித திட்டமிடலும் கிடையாது. இத்தகைய மனிதர்கள்  கொஞ்சம் யோசித்து செயல்பட்டாலே கடன் தொல்லையிலிருந்து மீள்வது எளிது. கடன் கொடுத்த மனிதர்களை முழுக்கக் குற்றம் சாட்டுவதில்  நியாயமுமில்லை. கடன் கேட்கும் போதே இந்த முறைசாரா கடன் தொழிலில் உள்ள ஆபத்தை உணரவேண்டும்.

கடன் பிரச்சினையில் தவிப்பவர்களில் பெரும்பாலோர் கீழ்க்கண்டவையினர்தான் :

  1. 500 ரூபாய் சம்பாத்தியத்தில் 300 ரூபாயைக் குடித்து அழிப்பவர்கள்,
  2. வண்ணாரப்பேட்டையில் ரவுடியிஸம் பண்ணும் கதா நாயகன், டூயட் பாட லாஸ் வேகாஸ் போகவேண்டும் என்கிற இயக்குனரின் அறிவுபூர்வமான யோசனையை,அப்படியே ஏற்கும் தயாரிப்பாளர்,
  3. ஆழ்கிணறுக்கென கூட்டுறவு வங்கியில் பெற்ற கடனில் சூப்பர்வைசருக்கு, கடன் தரும் கோப்பைக் கவனிக்கிற கிளார்க் இவர்களுக்குப் பங்களித்ததுபோக இருக்கின்ற தொகையில் பெண்ணுடைய கல்யாணத்தையோ, மஞ்சள்  நீரையோ  நடத்தும் விவசாயி,
  4. கவர்மெண்ட் ஆஸ்பத்திரி வேண்டாம் பிரைவேட் ஆஸ்பத்திரியிலதான் நல்லாபார்பாங்க, கவர்மெண்ட் பள்ளிக்கூடம் வேணாம் அந்தக் கான்வெட்டுல தான், அந்த காலேஜுலதான் பிள்ளை படிக்கனுமென்று தங்கள் வருவாய் பற்றிய புரிதலின்றி இறங்குகிறவர்கள்.
  5. கடன் வாங்கிய பணத்தில் சபரிமலைக்குப் போகிறவர்கள்.
  6. மொய் வந்த தும் திருப்பிடுவேன், என பிள்ளைக்கோ பெண்ணுக்கோ தங்கள் நிலமைக்கு மீறி ஆடம்பரமாகச் திருமணம் செய்து வைப்பவர்கள்.
  7. அரசியல்வாதிகள், அரசு அலுவலக ஊழியர்கள், அதிகாரிகள், காவல் துறையினர் இவர்களில் பெரும்பாலோர் பணைத்தை அளவிடாமல் செலவழிப்பதற்குக் காரணம் இருக்கிறது, அவர்களின் வருவாய் அப்படி. அத்தகையோரின் வாழ்க்கையை அண்டைவீட்டிலும் எதிர்வீட்டிலும் காண்கிற மனிதர்களில்  ஒரு சிலருக்கு அவர்களைப்போலவே  பணத்தை எளிதாகச் சம்பாதிக்க கிடைக்கும் உபாயம், எதிர்ப்படும் நபரிடமெல்லாம் கடன் வாங்குவது.

1998ல்  நோபெல் பரிசுபெற்ற அமர்த்யா சென் வெளி  நாட்டைசேர்ந்தவர் இல்லை, இந்தியர்.  சிறு கடன் பிரச்சினைகளுக்கு, வறுமைக்கு எளிதான பல தீர்வுகளை உழைக்கும் மக்களுக்கென கைவசம் வைத்திருக்கும் அறிஞர்.  சமூகவியல், பொருளியல் இரண்டிலும் தேர்ந்தவர். அசோக்குமார் போன்றவர்களின் பிரச்சினைக்கு  தீர்வு கிடைக்குமா என்று தெரியாது ஆனால் தினக்கூலி கடனாளியைக் கந்துவட்டியிலிருந்துக் காப்பாற்ற அவரால் முடியும்

————————————-

 

 

 

 

 

 

 

 

 

மொழிவது சுகம் 2017 நவம்பர் 18 : ரஷ்யப் புரட்சி ஒரு நூற்றாண்டு

                   

(France – Culture என்ற பிரெஞ்சு வானொலி  நவம்பர் மாதம் முதல் வாரத்தில் நான் கு நாட்கள் ஒரு நாளைக்கு 50 நிமிடம் என்ற கணக்கில் ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டினை முன்னிட்டு சிறப்பு ஒலிபரப்பை ஏற்பாடு செய்திருந்த து, அதைக் கேட்டதின் எதிரொலி )

 

ரஷ்யப்புரட்சிக்கு  வயது   நூறு ஆண்டுகள்.  புரட்சி என்ற சொல்லுக்கும் தள்ளாடும் வயது. 1917ஆம் ஆண்டு புரட்சியையும், அதனை முன்னின்று   நடத்திய ஹீரோக்களையும் இன்றைய ரஷ்யாவில் பொதுவுடமைஅபிமானிகளைத் தவிர பிறர் நினைவு கூர்வதில்லை. எப்போது ஸ்டாலின் ரஷ்யப் புரட்சி தினத்தை தன்னை முன்னிலைப் படுத்தும் தினமாகப் பார்க்கப் பழகினாரோ, லெனின் கிராடு இனி எப்போதும்போல செயிண்ட் பீட்டர் பர்க் என எப்போது அறிவிக்கப்பட்டதோ அன்றே இனி மறக்கப்படவேண்டிய  நிகழ்வாக கோடிகாட்டப்பட்டது. கடைசியாக ரஷ்யப் புரட்சி வைபவ நினைவூட்டல் வேண்டாமென உத்தியோகபூர்வமாக அரசு அறிவிக்கவும் அது உறுதியானது. புரட்சி  தினத்தில், லெனின் அருங்காட்சியகத்தை பார்க்க மைல் கணக்கில் வரிசையில்  நின்ற முன்னாள் சோவியத் யூனியன் காலம் இன்றில்லை.இன்றைய இரஷ்ய இளைஞர்கள், லெனினை ஏற்றுக்கொள்ளத் தயார், ஆனால் ஸ்டாலினை ஏற்கத் தயாரில்லை. போல்ஸ்விக்குகளால் கொலையுண்ட ஜார் மன்னர்  இரண்டாம்  நிக்கோலஸ் இரஷ்ய நாட்டு கிழக்கு மரபுவழி கிறித்துவ திருச்சபையினரால் புனிதராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இனி அவர் புனிதர் நிக்கோலஸ். ரஷ்யர்களில் 28 விழுக்காட்டினர் திரும்பவும் ஜார் மன்னர் ஆட்சிக்கு ஆதரளிக்க தயார் என்கிறார்களாம். இந்நிலையில் அதிபர் புட்டின், லெனினை அண்மையில் கடுமையாக விமர்சித்திருப்பதையும் கவனத்திற்கொள்ளவேண்டியுள்ளது.

 

இந்த நிலைக்கு யார் காரணம் ? 

இதற்கெல்லாம் எகாதிபத்தியத்தை குறைகூறமுடியாது, எந்தப் பிரச்சினைக்கும் முதற்காரணம் நாம் என்பது உணரப் படாதவரை, தனிமனிதனோ, இனமோ, ஒர் இயக்கமோ அடைய வேண்டிய குறிக்கோளை அடைய முடியாது. வெற்றிக்கு நாம்  காரணமெனில்,  அடையும் தோல்விக்கும் நாம் காரணம். இப்பிரச்சினையில் மார்க்ஸைக்கூட விமர்சிக்கிறவர்களுண்டு. கார்ல் மார்க்ஸ்  நவீன உலகின் மிகப்பெரிய சிந்தனாவாதி, அவரது மேதமைக்கு ஈடு இணையில்லை,  என்பதை ஒருவரும் மறுப்பதற்கில்லை. அவர் ஒரு பூர்ஷ்வாவாக இருந்த போதிலும் சம காலத்திய  அறிஞர்கள் கவனத்திற்கொள்ளாமல் அலட்சியம்  செய்த,  இங்கிலாந்து  நாட்டுத் தொழிற்புரட்சி  பிரச்சினைகளின் தீவிரத்தை அவர் உணர்ந்திருந்தார். உழைத்தும் வறுமையில் உழன்ற ஆலைத் தொழிலாளர்களின் கொடூர வாழ்க்கைதன்னில்  அவர் கொண்டிருந்த பரிவையும்  உதாசீனப்படுத்திவிடமுடியாது.  எனினும் ஒரு சிலர் சுட்டும் குறைகளிலும் உண்மையில்லாமல் இல்லை.

 

கார்ல் மார்க்ஸ்  தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றவர், பொருளியல், அரசியல் கட்டுரைகளென சஞ்சிகைகளில் எழுதி  பத்திரிகையாளராகவும் அறியப்பட்டவர். 1845 ஆம் ஆண்டு பாரீஸில் ஜெர்மன் பதிப்பாளர் ஒருவருடன்,  தாம் இதுவரை பத்திரிகைகளில் எழுதிவந்த  சிந்தனைகளின் அடிப்படையில் ஒரு நூலை (அரசியல் மற்றும் பொருளியல் விமர்சனம்) எழுதுவதென ஒப்பந்தம் செய்துகொண்டார். பதிப்பாளர் இளைஞர், தொழிலுக்கும் புதியவர். ஒப்பந்த த்தில் மார்க்ஸ் கையெழுத்துப் பிரதியை ஒப்படைக்கும் தேதியைக் குறிப்பிடத் தவறிப்போனார்கள். உடல் நிலை, சரியானத் தகவல்கள் கைவசமில்லை போன்ற காரணங்களால் பதிப்பிக்கும் காலம் இழுபட்ட து. மார்க்ஸ் எழுத உட்கார்ந்த  நேரத்தில் அவருக்குப் பொருளாதார  நெருக்கடி, பதிப்பாளர் முன்பணம் ஏதும் கொடுத்துதவ முன் வரவில்லை. அவருடைய நண்பர் நண்பர் எங்கெல்ஸ் இல்லையேல் இன்று மூலதன நூல் இல்லை. 1859ல் மேற்கண்ட விமர்சன நூலுக்கு  முன்னுரை எழுத உட்கார்ந்தபோது, எதைப்பற்றியெல்லாம் அ ந் நூலில் பேசுவதென வரையறை செய்துகொண்டிருக்கிறார். 1866 இறுதியில் ஒரே  நூலாக வெளிக்கொண்டுவருவது இயலாதென உணர்ந்திருக்கிறார். திட்டமிட்ட பகுதிகள் ஒவ்வொன்றையும் தனித்தனி  நூலாக வெளியிட த் திட்டம். அந்த வகையில் அவர் காலத்திலிலேயே வெளிவந்த து முதல் பகுதி மட்டுமே. மார்க்ஸ் இறந்தபின் அவர் முடிக்காதிருந்த இரண்டாவது பகுதியை யும், மார்க்ஸ் கைவசமிருந்த தாக நம்ப ப் படும் தகவல்களை ஒப்பேற்றி மூன்றாவது பகுதியையும் எங்கெல்ஸ் வெளியிட்டார். அவரும் இறந்தபின் கார்ல் கௌட்ஸ்கி 1895ல் நான் காம் பாகத்தைக்கொண்டுவந்தார்.  கார்ல் மார்க்ஸ் ஒப்பந்தம்போட்ட காலத்திலேயே எழுத உட்கார்ந்திருந்தால் அவர் மனதை முழுமையாக விளங்கிக்கொண்டிருக்க முடியும். இ ந் நூல்கள், மேற்குலக குறிப்பாக இலண்டன் தொழிலாளர்கள் பிரச்சினைகளின் அடிப்டையில் எழுதப்பட்டதென்ற உண்மை ஒரு பக்கம். தொழிலாளர் வர்க்கம், தொழில் முதலீட்டாளர்களால் மட்டுமிமின்றி,  சமூகம், காலம்காலமாய் ஏற்றுக்கொண்ட நெறிமுறைகள், சமயம், மனிதரின் இயற்கைக் குணங்கள் என்று பல முதலாளிகளால்  சுரண்டப்பட்டவர்கள் என்ற உண்மை இன்னொரு பக்கம்.

அனைத்திற்கும் மேலாக மூலதனம் யாருக்காக எழுதப்பட்ட தோ, அந்த அடித்தட்டுமக்களோ, சுரண்டப்பட்டத் தொழிலாளர்களோ புரிந்துகொள்ளக் கூடியதல்ல. உழைப்பை அதிகம் அறிந்திராத, மேடை, எழுத்து, அரசியல் என்று இயங்கிய, இயங்கும் அறிவு ஜீவிகள், அரசியல்வாதிகள் ஆகியோரை மட்டுமே பெரிதும்  நம்பும் சிந்தனைக் களஞ்சியம் அது. பிரெஞ்சில் மொழி பெயர்க்கப்பட்ட போது, விளங்கிக் கொள்ள முடியாத பகுதிகளை எளிமை படுத்தப்பட்டதாகவும், பல பல பகுதிகளை வேண்டாமென ஒதுக்கியதாகவும் சொல்வதுண்டு.  இன்று உலகின் பலபகுதிகளிளும் புரிந்துகொள்ளபட்டுள்ள மார்க்ஸியம் அந்தந்த பிரதேச மொழிகளில் மொழிபெயர்க்கபட்ட மூலதன நூலின்  அடிப்படையில்  புரிந்துகொள்ளபட்ட மார்ல்ஸியமேயன்றி, மார்க்ஸ் ஜெர்மன் மொழியில் எழுதிய முயுலதன நூலின்  மார்க்ஸியம் இல்லை, என்ற விமர்சனமும் உண்டு.

ரஷ்யப் புரட்சி மறக்கப்பட வேறுகாரணங்களென்ன ?

வரலாற்றில் முதன் முறையாக பொதுவுடமை ஆட்சியை லெனின் பெட்ரோகிராட் என ரஷ்யமொழியில் அழைக்கபட்ட செயின்ட் பீட்டர்ஸ் பர்கில் 1917 நவம்பர் 7 ல் கொண்டுவந்தார். மார்க்ஸ் மொழியில் சொல்வதெனில் ப்ரொலெட்டேரியன் புரட்சியினால் அடைந்தது. பிரெஞ்சு பஸ்த்தி சிறை உடைப்பு நிகழ்வோடு ஒப்பிடப்படும் ‘குளிர்கால அரண்மனை மீட்பு ‘, வெகுசனக் கொந்தளிப்பிற்குச் சான்றாக முன்வைக்கப்பட்டது.  ஜார்மன்னர்களில் ஈவிரக்கமற்ற ஆட்சியும், மாற்றத்தை கொண்டுவர நினைத்த ஜனவாயகவாதிகள் பலவீனப்பட்டிருந்ததும், புரட்சியின் வெற்றிக்கு உதவின என்பதையும் மறந்துவிடமுடியாது. உலகெங்குமுள்ள காம்ரேட்டுகள் ரஷ்யப் புரட்சியை மறக்காமல் இருப்பதைப்போலவே, ரஷ்யக் காம்ரேட்டுகளுக்கும் புரட்சிபற்றிய  நோஸ்டால்ஜியாக்கள் நிறையவே இருக்கின்றன. பெருவாரியான ரஷ்யர்களுக்கு  ரஷ்யப் புரட்சி  சகோதர யுத்தத்திற்கு வழிவகுத்த து என்ற  வருத்தம் இருக்கிறது.

கோதுமை, பெட் ரோல் தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் பிற ஐரோப்பிய  நாடுகளைவிட மேம்பட்டிருந்த ரஷ்ய நாடு 1922லிருந்து பின்னடைவைச் சந்திக்க லெனின் காரணமானார் என்பது மற்றொரு குற்றச்சாட்டு. ஒரு கட்சி ஆட்சிமுறை, தீவிர மார்க்ஸியக் கோட்பாடு போன்றவை  உடமைப் பறிப்புக்கு வழிவகுத்து  உடமையாளர்களை அனாதைகளாக தெருவில் நிறுத்தியதும், அதிகாரத்தைக் கட்டிக் காப்பதில் செலுத்திய அக்கறையை  போல்ஷ்விக்குகள் உற்பத்தியில் காட்டாததும்  நாட்டைப் பாதித்தது.

அடுத்த தாக போல்ஷ்விக் தலைவர்கள் சொத்துடமையாளர்களை மட்டுமல்ல, கல்வியாளர்கள், அறிவுஜீவிகள், அறிவியல் அறிஞர்கள், பொறியியல் வல்லுனர்கள் ஆகியோரை பிற நாடுகளுக்கு புகலிடம் கேட்டு ஓடவைக்கும் சூழ் நிலையை ஏற்படுத்தினார்கள். பொறுப்பிலிருந்த பலரும்   கல்வி, திறமை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டவர்களில்லை. தலைவர்களுக்கு விசுவாசமாக இருந்தவர்கள், கட்சியின் ஆதரவைப் பெற்றிருந்தவர்கள் அல்லது அப்படி நடித்தவர்களே  நிர்வாகப் பொறுப்பில் இருந்தனர்.

மக்களால் தேர்வுசெய்யபட்ட பிரதி நிதித்துவ சபையை  ஆரம்பத்திலேயே (1918)  கலைத்து, தாங்கள் மக்கள் விருப்பத்திற்கு எதிரானவர்கள் என்பதை த் தெள்ளத் தெளிவாகப் போல்ஷ்விக்குகள்  கூறியிருந்தனர், அதன் காரணமாக  தங்கள் வாக்குரிமையைத் திரும்பப் பெற 1991வரை ரஷ்யர்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.  புரட்சியின் எதிரிகள் என்ற பெயரில் தங்களை விமர்சித்தவர்களைத் தண்டிக்க, கொல்ல,  NKVD  என்ற காவல்துறை, மற்றும்  செம்படை வீரர்கள் துணையுடன் நட த்திய அராஜகத்தையும் ரஷ்யர்கள் மன்னிக்கத் தயாரில்லை. இறுதியாக ஜெர்மன் ஜன நாயக சோஷலிஸ்டுகள், வைமர் குடியரசு இரண்டிற்கும் எதிராக லெனினும் ஸ்டாலினும் எடுத்த நடவடிக்கைகள் மறைமுகமாக இட்லர் ஜெர்மன் அரசியலில் களமிறங்க காரணம் ஆயிற்று. பிறகு என்ன  நடந்த து என்பதை  நாம் அறிவோம். இரண்டாம் உலகப்போரில் பல்லாயிரக்கணக்கான ரஷ்யர்கள் கொல்லப்பட்டனர். கிழக்கு ஐரோப்பிய  நாடுகளுக்கு  நாஜிகளிடமிருந்து விடுதலை என்ற பெயரில், ஸோவியத் மயமாக்கலில்  ரஷ்யா இறங்கியதன்பலனாக சமேலும் பல இலட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். அதை மேற்கு நாடுகளும் வேடிக்கைப் பார்த்தன. ஜெர்மன் பாசிசத்திற்கு எதிராக  தோள்கொடுத்த சோவியத் யூனியன் எத்தனை ஆயிரம் பேரைக் கொன்றால் என்ன ? என்பது மேற்கு நாடுகளின் அன்றைய நிலைப்பாடு.

 

இறுதியின் ரஷ்யப் புரட்சி உலக  நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது என்ன ?

மார்க்ஸியத்தை பெர்லின் சுவர் இடிபாடுகளில் தவறவிட்டு லெனினிய  ஸ்டாலினிய சர்வாதிகாரச் சிந்தனையை, தங்கள் எதிரே தலைநிமிர்ந்தவர்களையெல்லாம் கொல்லும் கலையை , மாவோவின் சீனா,  போல் போட்டின் கம்போடியா, ஆப்ரிக்க தென் அமெரிக்க தலைவர்களுக்கும் கற்றுக்கொடுத்த து  போல்ஷ்விக்குகளே.  இன்றைக்கும் வடகொரியா, மியான்மார், துருக்கி, எகிப்தென,  சில கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஏதோ ஒருவகையில் எதிரொலிக்கவே செய்கிறது.

——————————————————-

மொழிவது சுகம் நவம்பர் 10 2017: அ. ஒரு மொழி பெயர்ப்பாளனின் புலம்பல்

 

puratchiyalan

அல்பெர் கமுய் என்ற பிரெஞ்சு எழுத்தாளரின் L’Homme Révolté என்ற பிரெஞ்சு நூலை தமிழில் ‘புரட்சியாளன்’  என்று மொழி பெயர்த்திருந்தேன்.  அது காலச்சுவடு வேளியீடாக 2016ல் வெளிவந்த து. ஆங்கிலத்தில் இதே நூல் ‘The Rebel’ என்ற பெயரில் வெளிவந்தது. சில  நண்பர்கள் எனக்கு கிளர்ச்சியாளன் என்ற பெயரை சிபாரிசு செய்தார்கள். அவர்கள் ஆங்கில நூல்வழியில் அந்தப் பெயரை அணுகியிருக்கலாம். உண்மையில் ஆங்கில மொழிபெயர்ப்பு, மூல  நூலின் பல பகுதிகளைத் தவிர்த்திருந்தது. அது மொழிபெயர்ப்பாளர், அதை அப்படியே ஏற்றுக்கொண்ட  ஆங்கிலப் பதிப்பாளர் ஆகியோர் விருப்பம்.

தமிழில் சில கேள்விகள் ஆகாது. எனது மாத்தா ஹரி நூலுக்கு  முன்னுரை எழுதிய எழுத்தாள நண்பர் ஒருவர்  மாத்தா ஹரி பற்றி  தான் முன்னமே அறிந்திருந்த தாகவும், அப்பெண்மணிபற்றிய படங்கள் சிலவற்றை ஏற்கனவே பார்த்திருப்பதாகவும் தெரிவித்திருப்பார். பிரான்சு  நாட்டில் இருந்த எனக்கே  மாத்தா ஹரி படங்கள் எளிதில் பார்க்க கிடைக்க வில்லை. எனது நூல் வெளிவந்தபோது, இணையத்தில் தற்போது உள்ளது போன்ற சௌகரியங்களில்ல.  ஒரு Médiathèque மூலம் பார்க்க கிடைத்த து, எழுத்தாள நண்பர் மாதாஹரி படங்களைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் தமிழில் மேடையில், இதழ்களில், பத்திரிகைகளில் துணிச்சலாக ஹெமிங்வே அம்மா சோறு பிசைந்து கொடுக்க, அவரும் நானும் பசியாறி இருக்கிறோம் என த் தெரிவித்தால் நம்பத் தயாராக இருக்கிறார்கள்.

மீண்டும் புரட்சியாளன்  நூலுக்கு வருகிறேன்.  நான் இந் நூலுக்கு பெயர் சூட்டியபொழுது, எனக்கு மூலநூல் பிரெஞ்சு    நூலான l’Homme révolté அன்றி ‘ The Rebel’ அல்ல.  அடுத்து மூல நூல் ஆசிரியர்  ‘The Rebel’ என்ற சொல்லுக்கு இணையாக அதே பொருளைத் தரக்கூடிய   ‘La Rebelle’ எனும் சொல் பிரெஞ்சு மொழியிலிருந்தும் அதை வேண்டாம் என ஒதுக்கிவிட்டு l’Homme révolté என்ற பெயரை தேர்வு செய்திருக்கிறார். எனக்கு உறிச்சொல்லான révolté , என்ற சொல்லை கலகம், கிளர்ச்சி என்று தட்டையாக மொழி பெயர்த்து சிறுமைப் படுத்த விருப்பமில்லை.  இங்கே நாரதர் கூட கலகக்காரன். அடுத்து  கிளர்ச்சி என்ற சொல்லை தமிழில்  புலனுணர்வு சார்ந்த ஒன்றாக காண்கிறப் போக்கும் இருக்கிறது. இத்தகைய சூழலில் l’Homme révolté, என்ற சொல்லை அதே பிரெஞ்சு மொழியில் l’homme de la révolution, அதாவது revolutionary man ஆக பொருள்கொண்டு புரட்சியாளன் என பெயர்வைப்பதுதான் பொருத்தமென்று நினைத்தேன்.

இது தவிர கிளர்ச்சியும் கலகமும்  சுய நலம் கொண்டவை, பொது  நலத்தின் விழுக்காடுகள் அதில் குறைவு, சோற்றில் உப்பில்லை என்று கூட கலகத்தில் இறங்கலாம், கிளர்ச்சி செய்யலாம். அதனாலேயே அவைகளுக்கு  எளிதாக ஒடுக்கப் படும் வாய்ப்பும் அதிகம். ஆனால் புரட்சி அப்படியல்ல. பழைய ஆட்சியும் அதிகாரமும் புல் பூண்டற்று போக அவ்விடத்தில்  முற்றிலும் புதிய ஒன்றை இட்டு  நிரப்புவதும் செயல்படுத்துவதும் ஆகும். தங்கள் பக்கத்தில் உள்ள  நியாயத்தை உணர்ந்து, அதனை முன்   நிறுத்த எந்த எல்லைக்கும் போகத் தயாராக இருப்பவர்கள் புரட்சியாளர்கள்.    நூறு போலீஸ்காரர்களைக் கண்டதும் கலைந்து போகும்  போராட்டங்களை அல்பெர் கமுய்  கணக்கிற்கொள்ளவில்லை.  அவற்றைப் புரட்சியென வர்ணிக்கவும் கூடாது.  புரட்சி யின்போது அதிகாரத்தில் இருப்பவர்கள், புரட்சியாளர்கள்  இரு தரப்பிலும் உயிர்ப் பலிகள் உண்டு. புரட்சி வரலாறுகளின்  அடிப்படையில், புரட்சி மனிதனை அல்லது புரட்சியாளனை அடையாளம் காண்பது தான், அல்பெர் கமுய்  நோக்கம்.

அனைத்துக்கும் மேலாக ஒரு மொழி பெயர்ப்பாளனாகிய எனக்கு எது நியாமாக  நூலுக்குப் பொருந்திவரும் என்ற அடிப்படையில் ஒரு பெயரைத் தேர்வு செய்ய  உரிமை இருக்கிறது. ஆலோசனைகளைக் கேட்டு பெறுவதில் எவ்வித தவறுமில்லை. எல்லா நேரங்களிலும் நாம் எடுக்கும் முடிவுகள் சரியாக இருக்காதென்பது உண்மைதான். ஆனால் வருகிற ஆலோசனைகள்  சரியானவை என்பதற்கு என்ன உத்தரவாதம்.

———————————

சு.ரா.வின் சிருஷ்டி ரகசியம்

சு. ராநவீன தமிழ் இலக்கியம் என்கிறபோது கவிதைக்கு பாரதியும், சிறுகதைக்கு புதுமை பித்தனும் எப்படியோ, அப்படி நாவலுக்கு சுந்தர ரமாசாமி. தமிழ் படைப்பிலக்கிய மும்மூர்த்திகள் என்று இவர்களைத்தான் அடையாளப்படுத்த முடியும். மூவரும் அவரவர்துறையில் ‘avant-gardiste’கள். கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் வடிவத்தையும் மிக நேர்த்தியாகவே சுரா கையாண்டவர். பகுத்துணரக்கூடிய, சீர்தூக்கிபார்க்கவல்ல வாசகர்களையும் அதற்கிணையான பாராட்டுதல்களையும்   குவித்துக்கொண்டதைப் போலவே, நேர்மையற்ற விமர்சகர்களின் தாக்குதலுக்கு ஆளானதிலும் அவருக்கு நிகர் அவர்தான். இக்கட்டுரை ஒரு திறனாய்வு அல்ல. ஓர் சராசரி வாசகனுக்கு சற்று கூடுதலான வாசிப்பு அனுபவத்தின் அடிப்படையில் சுரா என்ற இலக்கிய தச்சனை உள்வாங்கிக் கொண்டதன் சுருக்கம்.

தீவிர  இலக்கியமும் வெற்றியும் அரிதாகவே இணையும், அதிசயமாக ஒன்றிணைகிறபோதும் விற்பனையில் வெகுசன இலக்கியத்துடன் போட்டியிடக்கூடிய நிலமையில் அவை இருப்பதில்லை. இந்நிலையில் பல நல்ல படைப்புகளை விருதுகளே நமக்கு அறிமுகப்படுத்துகின்றன. அவ்விருதுகளில் ஓட்டைகள் இருப்பின் காலம் தூக்கி எறிந்துவிடும், நூலக ரேக்குகளில் அநாதைப்பிணமாகிவிடும். சுரா வின் எழுத்து விருதுகளால் அலங்கரிக்கப் பட்டவையுமல்ல. அவரை விமர்சித்தவர்கள் கூட வாஸ்து சரியில்லையென குறை கூற முடிந்ததே தவிர அவர் கட்டி எழுப்பிய மாளிகையின் கலை நுட்பங்களையோ, கதவுகளின் சித்திரவேலைபாடுகளையோ, சன்னல்களும் சாத்திரங்களும் கண்ணுள்ளவர்களுக்கு அளித்த காட்சிபிரவாகங்களையோ குறைசொல்ல முடிந்ததில்லை

சுராவின் படைப்பிலக்கிய வடிவங்களில் நாவல்கள் எனக்குப் பிடித்தமானவை. சிறுகதைகளைக்காட்டிலும், நாவலில் அவரது முழுமையான பரிணாமத்தை : அவ்வளர்ச்சி எட்டிய உயரத்தை, கண்ட ஆழத்தை அளவிட என்பதைக்காட்டிலும், விளங்கிக்கொள்ள முடிந்தது. அவரது சம காலத்திய அல்லது அவருக்குப் பின்பு எழுதபட்ட நாவல்களோடு ஒப்ப்பீடு செய்து அவர்கள் அப்படி இவர் இப்படி என்று எழுதுவதும் சரியல்ல என்பதென் கருத்து. இவை சுரா வின் நாவல்கள். சுரா என்ற எழுத்துக் கலைஞனின் தூரிகைக்குச் சொந்தமானவை. கண்காட்சிக்காக அல்ல தம்மை அலைக்கழித்த சிந்தனைகளை அவற்றின் முடிவில் உருவானக் கருத்துக்களை பிறருக்குத் தெரிவிக்க தீட்டியவை. « கருத்துக்களின் மோதல் பதற்றத்தையும் தரக்கூடியது » என்பது எஸ்.ஆர்.எஸ்ஸுக்கு மட்டுமல்ல அவருக்கும் தெரியும். தவிர « எதிரே இருப்பவர்களின் உறவுகளுக்குஅதிக முக்கியத்துவம் அளிக்க அளிக்க கருத்து மங்கிக்கொண்டே போகிறது. மனித குலத்திற்கு முக்கியம் அளிக்கும்போது கருத்து கூர்மைபடுகிறது. இந்தக்கூர்மை எதிர் நின்று பேசும் தனிமனிதர்களை எப்போதும் காயப்படுத்துகிறது. ஒரு சில மனிதர்களுக்காக விட்டுகொடுக்க முடியுமா ? » என ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள் ‘ நாவலில் ஒலிக்கும் கருநாகப்பள்ளியின் குரல் அவருடையதுதான். எடுத்த முடிவில் உறுதியாய் இருந்தாரென்றும் தெரிகிறது.

எனது சகமனிதனைப் பற்றிய எனது அபிப்ராயம் இது, எனது சமூகத்தைப்பற்றிய எனது விமர்சனம் இது, இவர்களின் அரசியலில் எனக்கு உடன்பாடில்லை. இது கசப்பு இது இனிப்பு, என்பதைத் தாம் சுயவரம்செய்துகொண்ட வார்த்தைகளில் பேசுகிறார், வாதிடுகிறார். அவற்றுடன் உடன்படவேண்டும் என்ற எந்த நிர்ப்பந்தமும் நமக்கில்லை, கதவுகள் திறந்தே இருக்கின்றன, வாசல் வரை வந்து வழி அனுப்பவும் அவர் தயார். உண்மையில் சுரா தன் ரசனை, தனது ருசி, தனது நிறம், தனது வாசனை, தன் விருப்பமென ( சுரா வார்த்தைகளில் சொல்வதெனில்) ‘தன் உள்ளொளியைக்காண’ எதனையெல்லாம் படைத்தாரோ அவைதான் நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடியாக அவரை கொண்டு நிறுத்திற்று.

 

சுராவின் கதை மூலம்

சமையற்கலையில் தேர்ந்த ஒருவன் சமைக்கிறபோது. தான் விரும்பியவகையில் சமைத்து, ருசித்துப்பார்த்து திருப்தியுற்ற பின்னரே வந்திருக்கும் விருந்தினருக்கு படைக்க நினைக்கிறான். நல்ல எழுத்தாளனிடத்திலும் இது நிகழ்கிறது. தன்னை சந்தோஷப்படுத்தும் எழுத்து பிறரையும் சந்தோஷப்படுத்தும் என்ற நம்பிக்கை, எனவே தனக்காக முதலில் எழுதுகிறான். தெரியவந்த செய்தி, நேர்ந்த அனுபவம் அல்லது ஏதோ ஒன்று அவன் மன அலைகளில் கரையொதுங்கத் தவறி திரும்பத்திரும்ப மேலே வருகிறது. உணர்சிகளை ஒதுக்கிவைத்து அறிவைப்பிசைகிறது. தூக்கத்தைக்கெடுக்கிறது. பிடறியில் அடித்து ஊமையா நீ ! பேசித்தொலையேன்  என்கிறது. எனவே சொல்லவேண்டியதைத் தீர்மானிக்கிறான். அதை உரைக்கவும், கேட்கவும், மறுக்கவும் ஆட்கள் வேண்டும், பொருத்தமானவர்களையும், தன் கலையாற்றலுக்கு பங்கம் நேராத மொழியையும் தேர்வு செய்கிறான். சிறந்த படைப்புகள், நல்ல எழுத்தாளன் எனக் கொண்டாடப்படும் மனிதர் அனைவரிடத்திலும் இது நிகழும்.

« காற்றாடி மரங்கள் ஒன்றன்பின் ஒன்றாகச் சரிந்து மண்ணில் விழுந்த காட்சியை ஒதுங்கி நின்று வேடிக்கைபார்த்தது இப்பொழுது கூட பசுமையாக என் நினைவில் தங்கி நிற்கிறது…… அடி மரம் அலற மரங்கள் ஒன்றன்பின் ஒன்றாகச் சாயும். கிளைகள் தரையில் மோதி நொறுங்கும். அதிர்ச்சியில் மரம் மேலே சற்று எம்பி உயர்ந்து மீண்டும் தொப்பென்று விழுந்து சரியும். பாரதப்போர் முடிந்த குருஷேத்திரம் மாதிரி பிணக்காடாய் காட்சி அளித்தது தோப்பு. » (ஒரு புளியமரத்தின் கதை பக்.57)

இச்சம்பவத்தினைக் கண்ட சுரா மனதளவில் பாதிக்கப்பட்டதன் விளைவு ‘ஒரு புளிய மரத்தின் கதை’ ஜே.ஜே சில குறிப்புகளை எழுதத் தூண்டியது எது ?

« தமிழ் நாவல்களில், அதாவது தமிழ்க் காதல் கதைகளில் அல்லது தமிழ்த் தொடர்கதைகளில் என் மனதைப் பறிகொடுத்திருந்த காலம். அன்று வானவிற்கள் ஆகாயத்தை மறைத்திருக்க, தடாகங்கள் செந்தாமரைகளால் நிரம்பியிருந்தன. உலகத்துப் புழுதியை மறைத்துக்கொண்டிருந்தார்கள் பெண்கள்.

ஆஹா, தொடர்கதைகள் ! ஒரு குட்டியை ஏக காலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குட்டன்கள் காதலிக்கிறார்கள். பரிசு சீட்டு யாருக்கு விழும் ? கண்டுபிடிக்க முடிந்ததில்லை என்னால். நானும் மாறி மாறி அவனுக்கு இவள், இவளுக்கு அவன் என்றெல்லாம் கணக்குப் போட்டுப் பார்ப்பேன். யூகங்களை நொறுக்கி எறிந்துவிடுவார்கள் மன்னன்கள். » (ஜே.ஜே.சி . பக்-14)

மேற்குலகும், இந்தியாவின் பிற மாநிலங்களும் துணிச்சலுடன் புதிய முயற்சிகளில் இறங்க, அவ்வாறான முயற்சியில், பரிசோதனையில் தமிழ்நாடு இல்லை என்ற கவலை அவர்  மனதைத் தொடர்ந்து அரித்து வந்திருக்கிறது சுரா மட்டுமல்ல அன்றைக்கு நம்மில் 99 விழுக்காட்டினர் இவற்றை வாசித்தவர்கள் தாம். ஆனால் சுரா இதற்குத் தம்வழியில் தீர்வு காணவிரும்பினார். அத்தீர்வை அல்பெர் கமுய் மரணத்துடன் இணைத்து வசீகரித்த அண்டைமாநில எழுத்தாளனில் தன்னைக் காணமுனைந்ததின் விளைவு : ‘ஜே.ஜே சில குறிப்புகள்’.

உண்மையைச் சொல்லப்போனால் நவீனத்துவம், பின் நவீனத்துவம் பற்றிய வாசனை நான் அறியாது இருந்த காலத்தில் சுரா நக்கல் செய்யும் தொடரொன்றில்தான் சுஜாதா கைகாட்ட, ஜே.ஜே. சில குறிப்புகளை வாசிக்கத் தொடங்கினேன்.  இன்று எல்லையற்ற கற்பனைகள், வாசகர்களை உணர்ச்சிக்கடலில் தள்ளும் மெலோ டிராமாக்கள் போன்றவற்றை படைபிலக்கிய உலகம் ஓரளவு நிராகரித்துவிட்தென்றுதான் கூறவேண்டும் மேலை நாடுகளில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பரவலாக்கப்பட்ட கல்வி அறிவு இந்த மாற்றத்திற்கு மூலகாரணம். எனினும் அம்மாற்றம் இங்கு மெதுவாகவே நிகழ்ந்தது.

குழந்தைகள் பெண்கள் ஆண்கள் நாவலில் பிறப்பு எப்படி நிகழ்ந்தது. ஆசிரியர் கூற்றின்படி « ஜே.ஜே சில குறிப்புகளில் பாலு தன் குடும்பத்தோடு கோட்டயத்திலிருந்து நாகர்கோவிலுக்கு வந்த து 1939 ஆம் வருடம் செப்டம்பர் மாதம், இரண்டாவது உலகம்காயுத்தம் அறிவிக்கப்பட்ட அன்றோ அதற்கு அடுத்த நாளோ என்று குறிப்பிட்டிருந்தேன். காலம் பற்றிய மயக்கம் ! இன்று அது இல்லை. » என்று நாவலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். ஆக இக்காலத்தை தெளிவாக வாசகர்களுக்குச் சொல்லிவிடவேண்டும் என்பதோடு, பாலுவைப்பற்றியும் விரிவாகப் பேச விஷயங்கள் இருக்கின்றன என்று சுரா நினைத்திறார்.

இவை அவருடைய நாவல்களின் தோற்றத்திற்கான காரணங்கள். இப்பிரச்சினைகளை நாவலாக்குவதெப்படி, அதற்கான கதைமாந்தர்களை தேர்வுசெய்வதெப்படி எதைச் சொல்வது, எப்படிக்கூறினால் தன் எண்ணம் சிறக்கும் என்றெல்லாம் பின்னர் சிந்தித்திருக்கவேண்டும்.

உள்ளொளியும் உண்மையும் :

‘ஐம்பது பைசாவிற்கு கால் மடக்கி கையேந்துகிறது எங்கள் ஊர் யானை’ (கவிஞர் சுயம்புலிங்கம்) ரக படைபிலக்கிய விழாக்கால கோவில் யானைகளுக்கிடையில், நாமார்க்கும் குடியல்லோம் எனத் திரிந்த காட்டுயானை சுரா.  எவருடனும் எவற்றுடனும் சமரசம் செய்துகொள்ளாத படைப்பாளி. « எங்கும் இந்த கதைதான், பாரதி ஜமீனுக்குத் தூக்கு எழுதினான். புதுமைபித்தனும் எம்.கே.டி. பாகவதருக்கு வசனம் எழுதப்போனான். »  (ஜே.ஜே சி.கு. பக்கம் – 36) என்று தாம் கொண்டாடிய பாரதியையும் புதுமைப்பித்தனையுங்கூட கண்டிக்க காரணங்கள் இருந்தன, அத்தகைய ஒழுக்க மீறலைத் தாம் செய்யக்கூடாது எனத் தீர்மானமாக இருந்திருக்கிறார்.

« அவன் எழுத்தாளன், தன் உள்ளொளிகாண எழுத்தை ஆண்டவன். மிக முக்கியமான  விஷயமல்லவா இது ? அபூர்வம் அல்லவா ? » (ஜே.ஜே சி.கு. பக்கம் -9)

« சிந்திக்கும் மனிதனுக்கு ஒருபாஷைதான் உண்டு. உண்மையின் பாஷை அது » (ஜே.ஜே சி.கு. பக்கம் – 11)

 

உள்ளொளியைக் காண்பதும் தம்மை சுயவிசாரணை (introspection) செய்து அதன்மூலம் தம்மையும், தம்மைச் சுறியுள்ள மனிதர்களையும் நிகழும் சம்பவங்களையும் மூளையில் பரப்பி, கொழுப்பு நீக்கி, கசடுகளிலிருந்து பிரித்தெடுத்துக் ககண்டறிந்த உண்மைகளை அந்தந்த பாத்திரங்கள் ஊடாக அவற்றின் தன்மைக்கேற்ப மொழிநடையில் பகிர்ந்துகொள்வதும்  மூன்று நாவல்களிலும் இயல்பாய் நடக்கிறது.

« அது தானாகப் பிறந்தது, தன்னையே நம்பி வளர்ந்தது. இலைவிட்ட து பூ பூத்தது. பூத்துக் காய் காயாக காய்த்ததில் இலைகள் மறைந்தன. ……வானத்தை நோக்கித் துழாவின கைகள். வேர்கள் மண்ணுக்குள் புகுந்து அலைந்தன. ஆமாம் சுய மரியாதையுடன் நிறைவாழ்வு வாழ்ந்த மரம் அது. » (ஒ.பு.கதை பக்.-14)

« கனவானுக்குத் தனது தோரணைகள்மீதும் தனது பண்பாடுகள்மீதும் தாங்க முடியாத வெறுப்பு ஏற்படுகிறது ….தான் சன்மார்க்கியல்ல, வெறும் மனிதன் என முச்சந்தியில் நின்று உரக்கக் கூவி , தனது மேலங்கியைக் கிழித்தெறிந்துவிட்டு இன்ப வெள்ளத்தில் குளிக்க வேண்டுமென்று அவனுக்குத் தோன்ற ஆரம்பித்துவிட்டது. » (ஒ.பு.கதை பக்.68)

« மனிதன் தன்னை சகஜமாக வெளிப்படுத்திக்கொள்ள முடியாமல் போய்விட்டது. பரிபூரணத்தின் குரூரமான உருண்டைகள் பொறுப்பற்று அவன் முன் உருட்டப்படுகின்றன…..இந்த இரண்டாயிரம் வருடங்களாக மனிதன் அடைந்திருக்கும் சங்கடங்கள்… அவமானங்கள், தன் கரங்களால் தன் தலைமீது அவன் போட்டுக்கொண்ட அடிகள். இவற்றிலிருந்து அவனுக்கு முற்றாக விடுதலை கிடைக்கவேண்டும். அவன் இயற்கையாய் பயணத்தைத் தொடரட்டும். அவன் கால் சுவடுகளில் துளிர்ப்பவை எவையோ அவைதாம் நாகரிகம். » (ஜே.ஜே.சி.குபக்42)

« எனக்குப் புத்திசாலி என்று பெயர். ஒவ்வொன்றையும் தீர ஆராய்ந்து கனகச்சிதமாக அறிமுகப்படுத்துகிறவன் என்றுபெயர் பிறர் நினைக்கும் அளவுக்கு சாமர்த்தியம் என்னிடம் இல்லை என்பது உள்ளூர தெரிந்துகொண்டே இருக்கிறது. மற்றவர்களுக்கும் அது தெரிந்துவிடாமல் மறைத்து கொண்டிருப்பதுதான் உண்மையில் என் சாமர்த்தியம். என் வேஷம் தான் நான் என்று பிறர் நினைக்கும்படி செய்துவிடுகிறேன். » (குழ.பெண்.ஆண்கள் -பக்.182)

தம்மைப் புடம்போட்டுபார்த்து தம்மைப்பற்றிய உண்மைகளை ஏற்பதோடு அவற்றை பிறமனிதருடன் பகிர்ந்துகொள்ள சுயபுனைவு(autofiction) உத்தி. ஒரு சாதுர்யமான தேர்வென்றுதான் சொல்லவேண்டும். மூன்று நாவல்களுமே சுய புனைவு வகை. இவற்றுள் ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ சமுத்திரம். கதை மாந்தர்களின் எண்ணிக்கையும் அதற்கேற்ப அதிகம் எனவே படர்க்கையில் சொல்லப்படுகிறது. ‘ஒரு புளியமரத்தின் கதையி’லும், ‘ஜே.ஜே சில குறிப்புகளி’லும் கதை மாந்தர்களின் எண்ணிக்கை குறைவு எனவே தன்மையில் உரைக்க சௌகரியம். படைப்பாளிகள் அனைவருமே புனைவென்று முன்வைக்கும் எழுத்தில் தங்கள் உண்மைஅனுபவங்களை பகிர்ந்து கொள்ளவே செய்கிறார்கள். எனினும் சுயபுனைவுகளில் உண்மைக்குக் கூடுதலாக இடமுண்டு, அவை போலி உண்மைகளாகவும் இருப்பதில்லை.

இளமைக்காலத்தில் எழுதப்பட்ட நாவல்கள் என்பதால் முதலிரண்டு நாவல்களிலும் எரிமலையின் அருகில்  நிற்பதைப்போன்ற உணர்வு வாசகனுக்கு. தன்மையில் சொல்லப்படுவதால் எனக்கென்ன பயம் என்ற தொனி.  சமூகம், அதன்  நெறிமுறைகள், இயக்கமுறை மொத்தமும் அவருடைய கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கின்றன. சுயநலஅரசியல்வாதிகளின் சதுரங்க விளையாட்டு காலங்காலமாகவே பொது நலனுக்கு எதிரானவை என்பதைச்சொல்ல ஒரு புளியமரத்துக்கதை யெனில். ஜே.ஜே சில குறிப்புகளில் அவர் சாடுவது வெகுசன இலக்கியவாதிகளை.

‘ஒரு புளியமரத்துகதையில்’ வரும் திருவிதாங்கூர் நேசன் இதழும்,  இசக்கியும், காதரும், தாமு போன்ற அரசியல்வாதிகளும் சரி  ‘ஜே.ஜே சிலகுறிப்புகளில்’ இடம் பெற்றிருக்கிற திருச்சூர் கோபாலன், முல்லைக்கல்மாதவன் நாயர், பொங்குமாக்கடல் தாமரைக்கனி போன்றவர்களும் மலையாளக்கரையில் இருக்கிறார்களோ இல்லையோ தமிழ்மண்ணில் சிரஞ்சீவிகளாக சுராவின் கனவுகளைப் பொய்யாக்குவதென்று பிடிவாதமாக இருக்கவேசெய்கிறார்கள்.

சுராவும் கதை மாந்தர்களும்

சுராவின் பாத்திரபடைப்புகளில் எனக்குப் பிரியமானவர்களில்  அநேகர் ‘குழந்தைகள், பெண்கள் ஆண்களில்’ தான் இருக்கின்றனர். பாலு என்கிற பெரிய குடும்பத்து குழந்தை உள்ளத்தைப்போலவே, வறுமையினால் பிஞ்சிலே பழுத்திருந்த லச்சம் சாதுர்யம் என்னைக் கவர்ந்தது. லச்சத்திற்கும் பாலுவிற்கும் இடையில் நடக்கும் உரையாடலை ரசித்து வாசிக்க வேண்டியவை. லஎஸ்.ஆர்.எஸ்ஸுக்குவாய்த்த லட்சுமியைப் பற்றி ஆயிரம் பக்கங்கள் எழுதலாம். « முல்லை பூத்துக்கிடக்கு. போய் பாருங்கோன்ன்னு தினசரி சொல்றா ஆனந்தம். நடக்க முடிஞ்சால் தானே ? அவ வச்சுக்க க் கூடாது. எனக்கு வச்சுக்க முடியாது ! » என எத்தனை எளிதாகச் சொல்லமுடிகிறது. எஸ்.ஆர்.எஸ் என்ற சாமர்த்தியசாலி இருட்படிமத்தை வெகு எளிதாகத் தோற்கடிக்க நறுமணத்துடன் ஜொலிக்கும் பெரிய தீச்சுடர் அவள். பிறகு « ரதிவீட்டில் ரம்பை சமையற்காரி »என்பதுபோல வந்து சேர்ந்த ஆனந்தம். பல கை மாறிய நாராயணி, தளியல் சேது அய்யர், வள்ளி…

மூன்று நாவல்களிலுமே கதைகள், கிளைக்தைகள் அதற்கேற்ப பாத்திரங்கள்.

« அடேயப்பா எத்தனைக் கதைகள் ! எவ்வளவு விசித்திரமான பாத்திரங்கள் ! எவ்வளவு கோணலும் நெரிசலுங்கொண்ட மன இயல்புகள் ! » (ஒ.பு.கதை பக்.15) என சுராவின் வார்த்தைகளைக்கொண்டே நாமும் வியக்க வேண்டியுள்ளது.

ஜே. ஜே. பாத்திரம் உருவாக ஆல்பெர் கமுய்மேலிருந்த பிரியமும், சுரா நேசித்த மலையாள எழுத்தாளரும் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் ஜே. ஜே சில குறிப்புகளை எழுதுகிறபோது அவனாகவே சுரா வாழ்ந்த்திருப்பார் என்பதுதான் நிஜம். «  ஜே.ஜே – நான். நான் ஆகவேண்டியதை ஜே. ஜே ஆகியிருப்பது. » (ஜே.ஜே. சிலகுறிப்புகள் பக். 23)

சுய புனைவு என்பதால் கற்பனை மனிதர்கள் குறைவு மூன்று நாவல்களுமே பாலுவை சுற்றிவருபவை. பாலுசார்ந்த மனிதர்களையும் அவன் அனுபவங்களையும் பேசுபவை. பெரும்பாலான கதை மாந்தர்கள் கற்பனைகளல்ல என்பதை ஊகிப்பதில் சிக்கல்களில்லை.

« 1958 இல் எங்கள் ஊரில் நான் விரும்பும் நாவலாசிரியர் ஒருவர் தங்கியிருந்தார். நானும் இலக்கிய நண்பரும் வெகுநேரம் ஆசையோடு அவருடன் பேசிக்கொண்டிருப்போம். பேச்சு அலுப்புற்ற வேளைகளில் அந்த ஓட்டலின் இரண்டாவது மாடியில் நின்று பஜார் இயக்கங்களை வேடிக்கைப்பார்த்தபடி இருப்போம். அங்கிருந்து நேராகக் கீழே பார்த்தால் சினிமா தியேட்டரை ஒட்டிப் பொரிகடலைகாரி ஒருத்தி உட்கார்ந்துகொண்டிருப்பது தெரியும். அவளுடைய சிரம் வெட்டி வைக்கப்பட்டிருப்பதுபோல தெரியும். இந்தக் கோணத்தில் பார்க்க நேர்ந்த தால் அவள் என் மனசில் இடம்பெற்றாள். » என்பது தமது பாத்திர தேர்வு குறித்து சுரா தரும் வாக்குமூலம். சுராவின் அபிமானம்பெற்ற ஜோசஃப் ஜேம்ஸ்ஸு, எம்.கே அய்யப்பன், பேராசிரியர், சாரம்மா. தாமோதர ஆசான், செல்லத்தாய், வள்ளிநாயகம் பிள்ளை ;எஸ்.ஆர்.எஸ், ரமணி , லட்சுமி, லச்சம், டாக்டர் பிஷாரடிபோன்ற நிஜ மனிதர்களும் சரி,  அவர் சண்டைபிடிகிற கற்பனை மனிதர்களும் சரி வேறு கண்டத்திலிருந்து குதித்த மனிதர்களாக இருக்க முடியாது. பாலுவின் தேசத்தைச் சேர்ந்தவர்களே.

 

சுராவின் இலக்கியம்

« கதைகளின் முடிவுகள் மட்டுமல்ல வெளிப்படும் ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு முக்கியம் » (ஜே.ஜே சி.கு. பக்கம் -90)

« தோற்றங்கள் அல்ல தோற்றங்களுக்குப் பின்னால் இருக்கும் உண்மையே இலக்கியத்திற்கு ஆதாரமாகும்.. இதில் ஒரு நாளும் மாற்றம் இல்லை.  » (ஜே.ஜே சி.கு. பக்கம்-91)

உள்ளொளியைக் காண்பது, சிந்தனையை உண்மை மொழியில் தெரிவிப்பது, அத்தெரிவித்தலுக்கு உபயோகிக்கும் சொற்களை கவனமாகத் தேர்வுசெய்வது  ஆகியன, சுரா வகுத்துக்கொண்ட படைப்பு நெறிகளைத் தெரிவிக்கின்றன. மூன்று நாவல்களிலும் மறந்துங்கூட தான் வகுத்துக்கொண்ட இலக்கியகோட்பாட்டிலிருந்து விலகியவர் அல்ல. உதாராணங்காட்ட மூன்று நாவல்களையும் இங்கே பிரதிபடுத்த வேண்டியிருக்கும். ஒவ்வொரு வார்த்தையையும் இலக்கியப்படுத்தியிருக்கிறார். ஒரு புளியமரத்தின் கதையில் வரும் நவீன பூங்காவின் காட்சி சித்தரிப்பு. குழந்தை பெண்கள் ஆண்களில் வரும் மழைக்காட்சி, ஏன்  செஞ்சாறு கொழகொழவென்று பசுவின் வயிற்றோடு இரு பக்கங்களிலும் வழிந்தது என நாம் அற்பமென்று அலட்சியப்படுத்தும் ஒரு துக்கடா காட்சியைக்கூட still-frameஆக மாற்றும் அழகும் கலைதான், இலக்கியம்தான்.

அவரது எள்ளல் நடையையும் குறிப்பிடாமல் இருக்க முடியாது.

« உத்தியோகம் பார்த்த காலங்களில் ஒழுங்காக இருந்து பரிதவித்து விட்டாராம் அவள் அப்பா. அதற்குப் பரிகாரமாக பென்ஷன் வாங்கியதும் பிருஷ்டத்தை எல்லோரும் பார்க்குப்படி சொரிந்துகொள்ளவேண்டுமாம். சுதந்திர த்தைப் பற்றித்தான் என்னென்ன கற்பனைகள். »(குழ.பெண்.ஆண்கள் பக்-236)

« புளியமரத்தடியைப் பெருக்கிய தோட்டி அன்று விசேஷ சிரத்தை எடுத்துக்கொண்டு பெருக்கினான்….கீழே விழுந்துகிடந்த சுதந்திரக்கொடியை மட்டும் சிறுகுழந்தைக்கு சட்டை தைக்க உதவும் என்ற எண்னத்தில் சுருட்டி மடியில் வைத்துக்கொண்டான் »(ஒ.புளி.கதை பக்.76)

« அவனுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தமாகியிருந்த சம்பளத்தொகை எங்களுடைய ஏழை முனிசிபாலிடியை பொறுத்தவரை கௌபீனத்தை அவிழ்த்து தலைப்பாகைக் கட்டிக்கொள்ளும் காரியம். » »(ஒ.புளி.கதை பக்.60)

இறுதியாக ஒன்றைச் சொல்லவேண்டும். ஜே.ஜே சிலகுறிப்புகள் நூலுக்கும் அர்த்தமற்ற குற்றசாட்டுக்கள் உண்டு. சமூக வாழ்க்கை என்பது கூட்டு வாழ்க்கை. புரிதல் நம்முடையதாக இருக்கலாம் நாமாக கற்றதுபோக சிலவற்றை இச்சமூகமும் போதிக்கிறது. பால் பூத்திற்கு செல்லும்போதும், பேருந்தில் இன்னொருவர் இறங்கிய நிறுத்தத்தில் நாமும் இறங்க வேண்டியிருந்தது என்பதாலும், உணவு விடுதியில் எதிர்மேசையில் இருப்பவர் ஆர்டர் செய்ததை நாமும் ஆர்டர் செய்து சாப்பிட்டோம் என்பதாலும், சவரக்கத்தியைக் கழுத்தில் இறக்குகிறபோது தேவையின்றி வந்துபோகிற அச்சமும் எல்லோருக்கும் பொதுவான அனுபவங்கள்தான், ஆனால் அவற்றை வெளிப்படுத்தும் மொழியில்தான் இலக்கிய ஆளுமைகள் வேறுபடுகிறார்கள்.

———————————————————–