Monthly Archives: மார்ச் 2016

மூத்த இலக்கியவாதிகள் திறனாய்வாளர்கள் விமர்சனங்கள்-9 ‘

பெருவெளிழுத்து:                                                                           

குற்றநீதிபற்றிய விசாரணைகள் : காப்காவின் நாய்க்குட்டி – அ.ராமசாமி

——————————————

நாவல்கலையினூடாக  வகைபிரித்தல்Rama-012

காலம், வெளி, பாத்திரங்கள் என்ற மூன்றையும் தனது விருப்பம் போல் உருவாக்கி விரியும் நாவல் இலக்கியப்பரப்பிற்கு எல்லைகள் எதுவும் இல்லை. அதே நேரத்தில் அது யாருடைய வாழ்க்கை வரலாற்றையும் விரிவாகச் சொல்லும் நோக்கம் கொண்ட இலக்கியவகையும் இல்லை. இது ஒன்றைத்தவிர நாவலென்னும் இலக்கியக்கலைக்கு வரையறை எதையும் சொல்லிவிடமுடியும் எனத் தோன்றவில்லை.

எழுதப்பட்ட ஒரு நாவலின் நிலவியல் பின்னணிகளையும் மொழிக்கூறுகளையும் அறியும்போது வட்டார நாவல் என வகை பிரிக்கிறோம்.  அதேபோல் காலப் பின்னணியைக் கணிக்கும்போது வரலாற்று நாவலாக மாறும் வாய்ப்பு உண்டு. தமிழில் எழுதப்பட்டு வாசிக்கப்பட்ட வரலாற்று நாவல்கள் பெரும்பாலும் வரலாற்றாசிரியர்களால் அறியப்பட்டு, உறுதிசெய்யப்பட்ட  காலத்தைப் பின்னணியாகக் கொண்டவை, அறியப்பட்டு உறுதிசெய்யப்பட்ட நகரங்களில் நடந்ததாகவே அவற்றின்  கதைகளும் சொல்லப்படுகின்றன. அப்படிச் சொல்லப்பட்ட  கதைகளில் அரசர்களின் பெயர்களும் கூட வரலாற்றுத் தரவுகளால் உறுதிசெய்யப்பட்டனவாக இருக்கின்றன. வரலாற்று நாவலாசிரியர்கள் முன்வைத்த வரலாற்றுப் பாத்திரங்களையே தலைப்பாக்கிச் சொல்வதை எளிய வழிமுறையாகப் பலரும் பின்பற்றினார்கள். வரலாற்றுப் புனைவுகளில் புதிய திசைகளில் பயணம் செய்த பிரபஞ்சன் (மானுடம் வெல்லும்)அந்த எளியமுறைக்கு மாற்றை முன்வைத்தவர்.

அறியப்பட்ட வரலாற்றைக் கவனமாகத் தவிர்த்துவிட்டு புனைவான வரலாற்றை உருவாக்குவதன் மூலம் சமூகநாவல்கள் உருவம் கொள்கின்றன. புனைவான கிராமங்கள் அல்லது நகரங்களை உருவாக்கும் நாவலாசிரியர்களின் நாவல்களிலும்  ஆண்டுக் கணக்குகளைச் சுலபமாகக் கண்டு சொல்ல முடியும்.   வாசிப்பவர்களுக்குக் கூடுதலான வரலாற்றறிவும் நிலவியல் பார்வையும் இருந்தால் அறியப்பட்ட வரலாற்றின் பின்னணியைக்கூடக் கண்டுபிடித்துவிடலாம். அதன் மூலம் ஒரு புனைவான நாவலை வரலாறாகவும் சமூக இருப்பாகவும் இயங்கியலாகவும் வாசிக்கமுடியும். ஆனால் உருவாக்கப்படும் பாத்திரங்கள் எப்போதும் புனைவாகவே இருக்கும்; இருக்கவேண்டும். அதுவும் அறியப்பட்ட மனிதர்களாக இருக்கும் நிலையில் அவை தன் வரலாறாகவோ/ வரலாற்றுப்புனைவாகவோ ஆகிவிடும். இவ்வளவு சிக்கல்களையும் தாண்டித்தான் அல்லது உள்வாங்கிய பின்பே ஒரு எழுத்தாளர்  நாவலை உருவாக்குகிறார். இதன் மறுதலையாக இவ்வளவு புனைவுகளையும் உடைத்துப் புரிந்துகொள்பவனே நாவலின் வாசகனாகவும் விமரிசகனாகவும் மாறுகிறான் என்றும் சொல்லலாம்.

 புதுவகை நாவல்கள்

பாத்திரங்களை உருவாக்குவதில் பெருமளவு வேறுபாடுகள் இல்லையென்றபோதும் காலம், வெளி ஆகியனவற்றை உருவாக்குவதில் நேர்கோட்டுத்தன்மையைக் குலைப்பதைப் புதுவகை நாவல்கள் முக்கியமான உத்தியாக நினைக்கின்றன. நேர்கோடற்ற தன்மையினூடாகப் பாத்திரங்களின் புறச்சூழலையும் அகநிலைப்பாடுகளையும் சந்திக்கச் செய்வதும் நடக்கின்றன. விலகிப்போவதையும் உருவாக்குகின்றன. இணைதலும் விலகலுமான எழுத்துமுறையின் மூலம் நமது காலத்து மனோநிலையான- நவீனத்துவ முறையைக் கடந்த பின் நவீனத்துவ மனநிலையைக் கட்டமைக்க முடியும்.  முதன்மையாக நான் எழுதும் நாவலில் விரியும் எதுவும் பெருங்கதையாடலின் கூறுகள் கொண்டதல்ல என்பதை எழுதுபவன் உணர்த்த முடியும். அண்மையில் வாசிக்கக் கிடைத்த ஒரு தமிழ் அத்தகைய உணர்த்துதலைக் கச்சிதமாகச் செய்தது.அந்த நாவலின் வெளி ஆச்சரியப்படத்தக்க விதமாகப்  பெருவெளிப் பரப்பைக் கொண்டிருக்கிறது. சிறுபரப்பான ஊர்களில் நிலைகொள்ளாது, மாநிலம் மற்றும் தேசம் என்னும் நிலவியல் சட்டகங்களைத் தாண்டி, கண்டத்தையும் கடக்கும் வெளியைக் கொண்டதாக எழுதப்பட்டுள்ளது அந்த நாவல். அந்த வகையில் இந்நாவலைத் தமிழின் முக்கியமான வரவு எனச் சொல்வதில் எனக்குத் தயக்கமில்லை.

Kafka Naykutti Wrapper 3-1நாவலின் பெயர் காப்காவின் நாய்க்குட்டி(மே,2015). எழுதியவரின் பெயர் நாகரத்தினம் கிருஷ்ணா. நாகரத்தினம் கிருஷ்ணா தமிழ் நிலப்பரப்பில் வாழும் தமிழ் எழுத்தாளர் அல்ல; அவர் வாழும் நகரம் பிரெஞ்சு நாட்டின் ஸ்ட்ராபோர்டு  என்பதால் இப்பெருவெளி எழுத்து சாத்தியமாகியிருக்கிறதோ என்றுகூடத் தோன்றுகிறது. உலக இலக்கிய வரலாற்றில் நன்கு அறியப்பட்ட பெயர் ப்ரான்ஸ் காப்கா. காப்காவின் முக்கியமான நாவலொன்று (Der Process/Trial-விசாரணை) தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு கால் நூற்றாண்டுக்கும் மேலாகிறது. பிரெஞ்சு நாட்டில் வாழும் நாகரத்தினம் கிருஷ்ணா, காப்கா என்னும் ஜெர்மானிய நாவலாசிரியரின் பெயரோடு ஒரு நாய்க்குட்டியை இணைத்துத் தனது நாவலுக்கு ஏன் தலைப்பு வைக்கவேண்டும் என்ற ஆவலே அந்த நாவலை வாசிக்கத்தூண்டும் காரணங்களில் முதன்மையாகிவிட்டது எனக்கு.

கட்டமைப்புப் புதுமை

அறியப்பட்ட இலக்கிய ஆளுமையான காப்கா என்ற குறிப்பான பெயரைத் தலைப்பாகக் கொண்ட அந்த நாவலின் பக்கங்களுக்குள் நுழைந்தால் ஒவ்வொரு இயலுமே குறிப்பான தகவல்களோடு தொடங்கி இருக்கிறதைக் கவனிக்கலாம். ஒரு நாட்குறிப்பின் பக்கங்களைப் போல ஒவ்வொரு இயலும் உருவாக்கப்பட்டுள்ளன. ஆண்டு, தேதி, கிழமை ஆகிய தகவல்கள் முன்நோக்கிய வரிசையில் தரப்பட்டிருந்தால் ஒரு நாட்குறிப்பை வாசிக்கும் அனுபவம் கிடைக்கக்கூடும். அதன்மூலம் எழுதியவரின் மனப்பதிவுகளை வாசிக்கிறோம் என்ற எண்ணம் உண்டாகியிருக்கும்.  ஆனால் காலக் குறிப்புகளோடு வெளியின் விவரங்களான நகரம் மற்றும் தேசக் குறிப்புகளையும் தந்திருப்பதால் வாசிப்பவர்க்குத் தரப்படுவது நாட்குறிப்பனுபவம் இல்லை என்றாக்கப்பட்டிருக்கிறது. இடம், மற்றும் காலமென இரண்டும் ஒன்றிணைக்கப்பட்ட பின்பு பாத்திரங்களின் வினைகளும் உரையாடல்களும் தொடர்ந்துள்ளன. இதனால் வாசிப்பவர்களுக்குக் கிடைப்பது வேறுவகையான உணர்வு. கிடைக்கும் உணர்வு,  வரலாற்றைப் புனைவாக வாசிக்கும் அனுபவம். வெளிப்பாட்டு நிலையில்  சமகாலத்தை மையமாக்கும் நாவல் என்னும் இலக்கியவடிவம் வரலாற்றுக்குள் நுழைவதின் நேர்மறைக் கூறுகளில் முதன்மையானது நம்பகத்தன்மையை உருவாக்குவது. அதல்லாமல் இன்னும் சில நேர்மறைக்கூறுகளும் உள்ளன. அதேபோல் எதிர்மறைக் கூறுகளும் உள்ளன. அவை பற்றித் தனியாக விவாதிக்கலாம்.

குறிப்பான குறிப்புகளும் நம்பகத்தன்மையும்  

நாகரத்தினம் கிருஷ்ணாவின் நாவல், பிராஹா, செக் குடியரசு/ 2013, சனிக்கிழமை  ஏப்ரல்,6 எனக் குறிப்பான வெளி மற்றும் காலக்குறிப்போடு முதல் இயலைத்  தொடங்குகிறது. நாவலின் கடைசி இயலான   47 வது இயலும் அதே  பிராஹா, செக் குடியரசு 2013, ஏப்ரல் 6 சனிக்கிழமை என அதே நாளிலேயே முடிகிறது.  இதனால்  ஒரேநாளில், ஒரு நகரத்தில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு என நினைத்துவிடும் வாய்ப்பிருக்கிறது.  தொடங்கிய புள்ளியில் நடந்த ஒரு மாயத்தை விடுவிக்கும் ரகசிய விடுவிப்பாக எழுதப்பட்டுள்ள இந்நாவலின் காலக்கணக்குகளைக் கவனமாகக் கணக்கிட்டால் கால அளவு நான்கு ஆண்டுகள் என்பது தெரியவரலாம். நான்காண்டுகளில் நடந்த சில நிகழ்வுகள் ஒரு மையத்தைச் சென்று அடைவதற்காக  உருவி எடுத்துத் தரப்பட்டுள்ளன. அதேபோல் நிகழ்வுகளின் தொடக்க வெளியாக ஐரோப்பாவின் செக் நாட்டுத் தலைநகர் பிராஹாவாக இருந்தாலும் அதிகமான நிகழ்வுகள் பிரான்ஸ் நாட்டின் ஸ்ட்ராபோர்டு நகரத்திலேயே நடக்கின்றன. ஸ்ட்ராபோர்டு நகரத்திற்கு  இலங்கையின் முல்லைத்தீவிலிருந்தும்    இந்தியாவின் புதுச்சேரி நகரத்திலிருந்தும் வந்து சேர்ந்த மனிதர்கள் சந்தித்த நடைமுறைச் சிக்கல்களும் மனவியல் உறுத்தல்களுமே நாவலின் களம். இவ்வெளிகள் தவிரப் பயணவெளிகளாக ஜெர்மனியின் ப்ராங்க்பர்ட்டும், எந்தெந்தத்தேசமெனத் தெரியாத பயண வழித்தடங்களும்கூட நாவலின் பரப்பில் வந்து போகின்றன .

காப்காவின் நாவல் நிகழ்வெளியால் மட்டுமல்லாமல் தரப்பட்டுள்ள குறிப்பான காலக் குறிப்புகளாலும்கூடப் பெருவெளி எழுத்தாக இருக்கிறது. காலத்தை அதன் நிகழ்தகவில் வரிசைப்படுத்தும்போது முதல் நிகழ்வாக  2009 மே 20, புதன்கிழமையை தொடக்க நாளாகச் சொல்லலாம். இந்த நாள் இலங்கைத் தீவில் நடந்த மனிதப்  பேரழிவுக்குப் பிந்திய ஒரு நாள் என்னும் குறிப்பு என்பதை மறந்துவிடக்கூடாது. மொழியையும் சமயத்தையும் அடையாளமாகக் கொண்ட பெரும்பான்மைச் சிங்கள பௌத்த ஒடுக்குமுறைக்கெதிராகத் தமிழ்/இந்துச் சிறுபான்மையினம் நடத்திய விடுதலைப்போரில் மனிதப்பேரழிவு நடந்த இடம் முல்லைத்தீவு. அந்த வரலாற்றுக் குறிப்போடு தொடங்கும் அந்த இயலில் முல்லைத்தீவிலிருந்து கிளம்பிக் கொழும்பு வழியாக இந்தியா வந்து, எந்தெந்த நாடுகள் வழியாகவும் நகரங்கள் வழியாகவும் செல்கிறோம் என்பதை அறியாமல் பயணம் செய்த ஒரு பெண்ணை (நித்திலா) அவளது அகதி அடையாளத்தோடு பிரான்ஸில் தங்கவைத்துவிட ஒரு பெண் (ஹரிணி)  உதவுகிறாள். அப்படி உதவும் அவள் நித்திலாவோடு எந்த உறவும் கொண்டவள் அல்ல. ஆனால் தமிழ்பேசும் ஆடவனுக்கும் பிரெஞ்சு பேசும் பெண்னொருத்திக்கும் பிறந்தவள். அவளது முயற்சியில்  அவளது நண்பர்களும் பங்கெடுக்கிறார்கள்.  அவர்களின் முயற்சிக்குப் பின்னிருக்கும் மனநிலை என்ன? என்பதே நாவல் எழுப்பும் அடிப்படை வினா. இந்த வினாவிற்கான விடையைப் பெற இன்னும் சிலரின் பயணமும் காரணங்களாக இருக்கின்றன. அந்தப் பயணமும் செக் நாட்டின் பிராஹாவை நோக்கிய பயணமே. இந்தப் பயணம் நித்திலாவின் பயணம்போல நெருக்கடியால் விரும்பி மேற்கொண்ட பயணமல்ல. தற்செயல் நிகழ்வுகளால் நகர்த்தப்படும் பயணம்.

இந்தியாவின் தென்கோடி நகரமான கன்யாகுமரியிலிருந்து 2010, நவம்பர்,12, வெள்ளிக்கிழமை காலை கிளம்பி, ரயிலில் டிக்கெட்டில்லாப் பயணியாக ஏறி, அந்த ரயிலில் வரும் ஒரு வெள்ளைக்காரனோடு ஒட்டிக்கொண்டு வட இந்தியாவின் புதுடெல்லி வந்து, ரிஷிகேஷில் தங்கியிருந்து இந்திய ஆன்மீகத்தின் அடையாளமாக ஆன ஒருவன், செக் குடியரசின் தலைநகரான பிராஹா வந்து சேரும் சாமியாரின் பயணம். இவ்விரு பயணிகளும் மூன்றாவதாக ஒரு கதைக்கண்ணியில் இணைக்கப்படுகிறார்கள். அந்தக் கண்ணி, புதுச்சேரியின் பிரெஞ்சிந்தியர்களுக்குள்ள இரட்டைக் குடியுரிமையைப் பயன்படுத்தி பிரான்சில் வாழும் குடும்பம். அவர்களது உதவியால் பிரான்ஸ் வந்த சேர்ந்தவன் வாகீசன் என்னும் இளைஞன்.

நாவலின் வெளியைப் பெருவெளியாகவும், குறிப்பான நான்காண்டு காலத்தை நிகழ்வுகளின் காலமாகவும் கொண்ட காப்காவின் நாய்க்குட்டியை அதன் ஆசிரியர் உருவாக்கியிருக்கும் சொல்முறையும் தொனியும் முக்கியமானவை. ரகசியங்களைத் தேடும் துப்பறியும் பாணியும், அதனால் கிடைக்கக்கூடிய விசாரணையின் விடுவிப்புமான சொல்முறையும் நாவல் முழுக்கப் பின்பற்றப்பட்டிருக்கிறது. மனிதத் தன்னிலைக்குள் அலையும் குற்றவுணர்வுக்கான காரணங்கள் மனிதர்களிடம் மட்டுமே இருப்பதில்லை; அவர்கள் வாழும் அமைப்புகளின் விதிகளிலும் இருக்கின்றன என்பதைத் தனது படைப்புகளில் அடியோட்டமாக வைத்து எழுதியவர் காப்கா. அதனை நினைவூட்டம்விதமாகத் தலைப்பைத் தேர்வுசெய்த நாகரத்தினம் கிருஷ்ணா தனது எழுத்துமுறையை விசாரணையின் தன்மையில் உருவாக்கியதன் மூலமும் தலைப்புப்பொருத்தத்தைச் செய்ய நினைத்திருக்கிறார்.

நித்திலா அகதியாகத் தொடர்ந்து இருக்கத்தக்கவளா? வெளியேற்றப்பட வேண்டியவளா? என்ற விசாரணைக்குப் பின்னால் பல துப்பறியும் பணிகள் நடக்கின்றன. துப்பறியும் பணியில் ஈடுபடுபவள் முழுநேரத்துப்பறியும் பணியில் ஈடுபட்ட அனுபவம் கொண்டவள் அல்ல. ஐரோப்பிய நீதிமன்றங்கள் பின்பற்றும் நடைமுறைப்படி  குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படும் நித்திலாவின் பேச்சை மொழிபெயர்க்கப்போனவள் ஹரிணி. அவளது மொழிபெயர்ப்புப்பணி கூடத் தற்செயலாக நேர்ந்தது. வழக்கமாக மொழிபெயர்ப்புச் செய்யவேண்டியவர் வரமுடியாததால், தனது வேலையைத் தற்காலிகமாகக் கைவிட்டுவிட்டு மனச்சோர்வோடிருந்த ஹரிணி தற்செயலாகத் தான் ஏற்றுக் கொண்டாள். ஏற்றுக் கொண்ட அவளுக்கு நித்திலாவின் மௌனமும், பேச விரும்பாத இறுக்கமும் பல ரகசியங்களைக் கொண்டது என நினைக்கவைக்கிறது. அதுவே அவளுக்கு ஏதாவது உதவிசெய்தாகவேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குகிறது.

இறங்கித் துப்பறிகிறபோது நித்திலா திருமணம் ஆகாமலேயே ஒரு குழந்தையைப் பெற்றுக்கொண்டவள் என்ற உண்மை தெரியவருகிறது. ஆனால் அந்த குழந்தை அவளிடம் இல்லை. அவளைப் பிரான்சிற்கு வரவழைத்த அக்காவிடம் இருக்கிறது. அக்காளும் அத்தானும் தங்கள் குழந்தை என்றே வளர்க்கிறார்கள். நித்திலாவின் குழந்தைக்குக் காரணமான ஆண் யார்? எதையும் வாயைத்திறந்து சொல்ல மறுக்கிறாள் நித்திலா. எந்தத் தீர்ப்பையும் ஏற்கும் மனவலிமையோடு கூண்டேறி இறங்கிக் கொண்டிருக்கிறாள் அவள். இந்த மனவலிமைதான் ஹரிணியை உற்சாகமடையச் செய்கிறது.

ஹரிணியைப் பொறுத்தவரையில் அந்தக் குழந்தை நித்திலாவின் குழந்தை என்று நிரூபித்துவிட்டால் அங்கேயே அவளை அகதியாகத் தங்கவைத்துவிடலாம்  அதற்கான துப்பறிதலும் விசாரணைகளுமாக நாவல் பல முடிச்சுகளோடு நகர்கிறது.  செயலாகக் கைவ் முறையானதங்கள் நாட்டிற்குள் நுழைந்தவர் முறையான அனுமதியின்றி நுழைந்தவராக இருந்தபோதிலும் சொந்தநாட்டுக் குடியுரிமைச் சட்டங்களும், உலக மன்றங்களில் ஒத்துக் கொண்ட அகதியுரிமைச் சட்டங்களும் அனுமதித்தால் ஒருவரை நாட்டைவிட்டு வெளியேற்றக் கூடாது என்ற உயரிய நடைமுறைகளைக் கொண்ட நாடுகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் குடியேற்றமுறையான விசாரணையின் அடிப்படையிலும் ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டில் அகதியாக ஒருவரைத் முல்லைத் தீவிலிருந்து நித்திலாவை ஸ்ட்ராபோர்ட் நகரத்திற்கு வரவைத்தவர்கள் அவளது அக்காவும், அவரது கணவரும். வரச்சொன்னபோது இருந்த காரணம், அவளுக்கு அங்கு அகதி உரிமையோடு புதுச்சேரியிலிருந்து வந்து பிரான்சில் தங்கியிருக்கும் வாகீசனைத் திருமணம் செய்து வைத்து போராளியாக வாழ்ந்தவளைக் குடும்பப் பெண்ணாக மாற்றிவிடலாம் என்ற ஆசைதான். அவனது புகைப்படத்தையெல்லாம் காட்டி அழைத்த அத்தானும் அக்காவும் அவள் வந்த பின்னர் அவனைக் கண்ணிலேயே காட்டவில்லை.  நீண்ட காலமாகத் தங்களுக்குக்  குழந்தை இல்லையென்பதால் அவளைத் தானே திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்ற ஆசை அவளது அத்தானுக்கும் இருந்தது.

அக்காவின் கணவனால் உண்டான பிள்ளையா? நித்திலாவை விட்டு விலகிய பின் இந்திய மரபுகளின் மீது பிடிமானம் கொண்ட அத்ரியானா என்னும் பிரெஞ்சுப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட வாகீசனால் கிடைத்த பிள்ளையா என்ற கேள்விக்கான விடை தெரிந்த ஒரேயொருத்தி நித்திலா மட்டுமே. அவளோ வாய் திறக்க மறுக்கிறாள். தொடர்ந்த முயற்சியில் ஹரிணிக்குத் தோல்வியே கிடைக்கிறது என்றாலும், அந்தக் குழந்தையின் தாய் நித்திலா தான் என்பதை நிரூபிக்கமுடிகிறது. அந்த நிரூபணம் போதும். நீதிமன்றம் அவளை பிரான்ஸிலேயே  அகதியாகத் தங்க அனுமதித்துவிடும். அதை நிறைவேற்றும் விசாரணையோடு நாவலின் நிகழ்வுகள் நிறைவடைகின்றன.

தரவுகள், சாட்சிகள், விசாரணைகள், சட்ட நுணுக்கங்கள் எல்லாம் அங்கே நிறைவடைந்தாலும் விசாகனைத் துரத்தும் குற்றம் என்னும் நாய்க்குட்டி – நாய்க்குட்டியாக மாறிய அத்ரியானா என்னும் மனச்சாட்சி- காப்கா மியூசித்திற்குப் பக்கத்தில் இருக்கும் ஆற்றில் குதித்து அவனைக் குதறியெடுப்பதாக எழுதுவதோடு நாவலை நிறைவு செய்கிறார் நாகரத்தினம் கிருஷ்ணா.

பிரான்ஸ் தேசத்தின் குடிமக்களின் வழியாக நகரும் துப்பறிதல் , விசாரணை அதன் முடிவில் கிடைக்கும் நீதி என்பதன் வழியாக ஒரு வாசிப்புத் தளம் உருவாக்கப்படுகிறது. அத்தேசத்திற்குப் புலம்பெயர்ந்தும் இடம்பெயர்ந்தும் சென்று சேர்ந்த இந்திய மற்றும் இலங்கைக் குடிமக்கள் வழியாக இன்னொரு வாசிப்புத்தளமும் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டையும் உருவாக்கி   நம் காலத்தின் முக்கியமான சொல்லாடலான  குற்றநீதியோடு தொடர்புடைய புள்ளியில் கொண்டுவந்து இணைப்பது இந்நாவலின் முக்கியமான விசாரணை. அவ்வகையில் இந்நாவல் உலக இலக்கியப்பரப்புக்குள் நுழையும் தன்மைகொண்டது .

நன்றி:  தீரா நதி பிப்ரவரி 2016

——————————

காப்காவின் நாய்க்குட்டி

நாகரத்தினம் கிருஷ்ணா

காலச்சுவடு பதிப்பகம்

நாகர்கோவில்

தமிழ் நாடு

———————————————————————

 

 

 

 

 

 

எழுதுவதற்குப் படித்தால் மட்டும் போதாது (ஸ்பெய்ன் பயணம்) -3

 IMG_1183பன்னிரண்டாம் தேதி(மார்ச்) காலை செவில்லா நகருக்குப் பயணம்ஸ்பெய்ன் இரயில்வே துறை  குறித்து ஒரு தகவல்மாட் ரீட்டில் ஆரம்பித்து, கொர்தோபா, செவில்லா என்ற மூன்று இரயில் நிலையங்களும் ஸ்பெய்ன் நகரங்களைப் போலவே அவ்வளவு சுத்தம், நன்கு பராமரிக்கிறார்கள்ஐரோப்பாவில் வேறு நகரங்களில் (ஸ்காண்டி நேவியா சுவிஸ் தவிர்த்து) இதுபொன்றதொரு சுத்தத்தைக் கண்டதில்லை.  ஐரோப்பாவின் பிற நகரங்களில் காண்பதைப்போல நூறாண்டுகளைக் கடந்த கலை நேர்த்திமிக்க கட்டிடங்களாக ஸ்பெய்ன் இரயில்  நிலையங்கள்  இல்லை அனைத்துமே நவீனத்தின் அடையாளங்கள், அறிவியல்  திரைப்படத்தில்  இடம்பெறுகிற  கட்டிட ங்களை நினைவூட்டுபவை.  அடுத்ததாக பாதுகாப்பு ஏற்பாடுகள். விமான நிலையத்தில் விமானத்தில் எறுவதற்கு முன்பாக உள்ள பாதுகாப்பு சோதனைகளை இங்கும் கடக்க வேண்டியிருக்கிறது. கட ந்த காலத்தில் இரயிலில் நடந்த பயங்கரவாத  தாக்குதல்அனுபவம் ஸ்பெய்ன் நாட்டவரை எச்சரிக்கையுடன் இருக்க வைத்துள்ளது   பிரான்சு நாட்டில் அத்தகைய பாதுகாப்பு சோதனைகள் இல்லை

 IMG_1200

ஏற்கனவே கூறியதை மீண்டும் நினைவூட்டுகிறேன். ஸ்பெய்ன் நாட்டின் அண்டாலூசியாவுக்குச் செல்கிறவர்கள் குறிப்பாக செவில்லாவிற்கும் கொர்தோபாவிற்கும் செல்கிறவர்கள்  பாரீஸிலிருந்து செவில்லா சென்று பின்னர் அங்கிருந்து கொர்தோபா செல்வது நல்லது. பணம்,  நாள் விரயம் இரண்டும் மிச்சம் செவில்லா செல்வதற்குக் காலை 9 மணிக்கு கொர்தோபா இரயில் நிலையம் சென்றோம்இடம்பெயர்ந்திருப்பது  இந்தியத் துணைக் கண்டம் என்பதைப் பயணச்சீட்டு விற்பவரின் பார்வை அவரது மூளைக்குத்  தெரிவிக்க ஆங்கில மொழியாடலுடன் தனது பணியைத் தொடர்ந்தார். நாங்கள் இருவரும் பிரெஞ்சுக் காரர்களுக்கு அடிமைப்பட்டுக்கிடந்த இந்தியப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள்  என்ற விளக்கத்திற்கெல்லாம் அவசியமின்றி பயணச்சீட்டுகள் கைமாறின. .

 IMG_1187

ஓருண்மையை உங்களொடு பகிர்ந்துகொள்ள வேண்டும்  இன்று உலகம் முழுவதும் தமிழர்கள் இருக்கிறார்கள்,   தமிழை, தமிழ்ப் பண்பாட்டைப் புலம்பெயர்ந்தவர்கள் வளர்த்தெடுப்பார்கள் என்றெல்லாம் நம்மிடத்தில் கனவுகள் இருக்கின்றன .  கனவுகாண யாருக்கு உரிமை இல்லை. நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களும் அன்றைய வசதிக்கேற்ப மொரீஷியஸிலும், பீஜித்தீவிலும், கரும்புத் தோட்டங்களில் வேலை செய்து குடிசைக்குத் திரும்பியவேளைகளில்  புலம்பெயர்ந்த சூடு தணியாமலிருந்தபோது தாயகத்தையும் தாய்மொழியையும் நேசித்தார்கள். அவர்களின் அடுத்த தலைமுறையினருக்கு அப்படியான நாஸ்ட்டால்ஜியாக்கள் இல்லை, புலம்பெயர்ந்த நாட்டில் அதற்கான தேவைகளும் இல்லைமிச்சமென்று இருப்பதெல்லாம். மாரியாத்தாளும், பழனி ஆண்டவரும், கோவிந்தனும் மட்டுமே. அமெரிக்கா, ஐரோப்பாவென்று புலம்பெயர்ந்திருக்குமிடத்திலும், இந்த உண்மைதான் நாளை அரங்கேறும். இன்றைக்கு அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் தமிழ்ப் பண்பென்ற ஆராதிக்கிறவர்கள், அவற்றைக் கொண்டாடுகிறவர்கள் அனைவருமே இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக ஐரோப்பா, அமெரிக்காவென்று குடியேறியவர்கள்.  தாயக நாஸ்ட்டால்ஜியா மோகத்திலிருந்து  விடுபடாதவர்கள் ஆதலால் மொழியென்றும் பண்பாடென்றும்(பொங்கல், தீபாவளி, கோலிவுட், பாலிவுட், ரஜனி, விஜய், அரசியல்) பேசுகிறார்கள். – ஆனால் அவர்களுக்கேகூட தாயகம் திரும்பும் ஆசையில்லை.  அலுத்துவிட்டதுஇந்தியாவிற்கு பார்வையாளனாக மட்டுமே  செல்ல விருப்பம்,, இலங்கைத் தமிழர்களில் 99 விழுக்காட்டினர் நிலமையும் அதுதான். இ ந் நிலையில் எங்கள் அடுத்த தலைமுறையினர் அடுத்தடுத்த  நூற்றாண்டுகளுக்குப் பின்னர் எப்படி இருப்பார்களெனச் சொல்ல வேண்டியதில்லை, தவிர தாய்  நாட்டிலேயே  தமிழ் படிக்க ஆளில்லாதபோது ரஜனிக்காகவும் விஜய்க்காகவும் இங்கே படிக்கிற தமிழ் எத்தனை காலத்திற்கு உதவும். இரண்டொரு நூற்றாண்டுகளை புலம்பெயர்ந்த மண்ணில் கழித்த தலைமுறை தங்கள் பிள்ளைகள் மேடைகளில் திருக்குறள் சொல்லக்கேட்டுச் சந்தோஷப் படுவார்களா ? மொரீசியஸில் அப்படியொரு நிலமை பதினேழாம் நூற்றாண்டில் இருந்தது, இன்றில்லை. ஆக உடலால்  மட்டுமே  தமிழர்களாக இருக்க முடியும், அது கூட வேறு கண்டத்தைச் சேர்ந்த உடலுடன் கலக்காதவரை  அந்த உடல் கூட புலம்பெயர்ந்த நாடுகளில் இந்தியத் துணைக் கண்டத்தைச் சார்ந்தவர் என்ற  அடையாளத்தை பெற உதவுமேதவிர தமிழர் அடையாளத்தைத் தருவதாக இருக்காது.  

 IMG_1179.JPG

ஸ்பெய்ன் பயணத்திற்கு வருகிறேன்  செவில்லாவில் வந்திறங்கியபோது காலை பத்தரை மணி. பொதுவாக ஐரோப்பிய பெரு நகரங்களில் சுற்றுலா பயணிகளுக்கென  தகவல் அலுவலகங்கள் இருக்கும், இந்தியாவில் இது பெரும் குறை. சேவைகள் குறித்து பெரும் அறிவிப்புகளை மத்திய அமைச்சர்களில் ஆரம்பித்து மா நில அமைச்சர்வர்கள் வரை செய்வார்கள். தினசரிகளிலும் செய்திகள் வரும். கருணா நிதி  தேதிமுக கூட்டணி கனிந்து விட்டது என்பதைப் போன்றதுதான் இதுவும். பின்னர் அனைத்தும் புஸ்வாணமாக முடியும்

 

 செவில்லா இரயில் நிலையத்திலிருந்த சுற்றுலா தகவல் அலுவலகத்தில் பணியாற்றிய பெண் எங்களிடத்தில் ஒரு வரை பட த்தைக் கொடுத்து பிரெஞ்சுமொழியில் நிதானமாக அனைத்தையும் விளக்கினார். நிலையத்தைவிட்டு வெளிவந்ததும் தட எண் 21 பிடித்து (இம்முறை நீல நிறப் பேருந்து) ஏறியதும், ஓட்டுனரிடம் நாங்கள் இறங்கவேண்டிய இடத்தைக் குறிப்பிட்டோம். தவறுதலாக எங்கேயாவது இறங்க்கிவிடப்போகிறோம் என்ற பயம். அவர் ஸ்பானிஷ் மொழியில் பதிலைச்சொன்னார். அடுத்த  நிறுத்தத்தில் இறங்கிக்கொள்ள வேறு ஓட்டுனர் மாறப் போகிறார் என்பதை அவர் கூறியதைவைத்து ஊகிக்க முடிந்ததுஅடுத் த நிறுத்தத்தில் ஏறிய ஓட்டுனரிடம்  எங்களைப்  பார்த்து முன்னவர் கூறியதைவைத்து, எங்களுக்குரிய நிறுத்தத்தில்  இறக்கிவிடச்சொல்கிறார் என்பது புரிந்ததுநான்காவது நிறுத்தத்தில் இறங்க்கியதும் sight seeing பேருந்து தடத்தின் பயணச் சீட்டு முகவர்கள் எங்களைச் சூழ்ந்துகொண்டார்கள். இங்கும் பச்சை, சிவப்பு வண்ணத்தில்  அரைமணி நேரத்திற்கு ஒரு முறை நகரின் முக்கிய சுற்றுலா இடங்களை பேருந்துகள் வலம் வருகின்றன.  முதற்சுற்றை பேருந்தின் மேற்தளத்தில் அமர்ந்து  ஒலி நாடா  அளித்த விளக்கங்களைக் கேட்டவண்ணம் முடித்தோம். அதன் பின்னர் பார்க்க வேண்டியவற்றுள்  எவையெவை முக்கியமோ  அவற்றை மட்டும் கண்டோம்.

கொர்தோபாவை விட செவில்லா பெரிய நகரம். குறைந்தபட்சம் இரண்டு நாட்களை ஒதுக்குவது நல்லது. செவில்லா கொர்தோபாவைப் போலவே புராணீகமும் மர்ம மும் ஒன்றிணைந்த அதிசய நகரம்இங்கும் வரலாறு மூன்றாம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது. ரோமானியர்கள், அரபுகள் ஸ்பானிஷ் மன்னர்கள்  ஆளுகைக்கு உட்பட்டிருக்கிறது. கிறிஸ்தோப் கொலம்பஸ்  கடற்பயனத்தை மேற்கொள்வதற்கு முன்பாக தமது திட்ட த்தை நண்பர்களுடன் கலந்தாலோசித்தது இவ்விடத்தில்தான். இங்கும் பார்க்கவேண்டியவையென ஒரு பெரிய பட்டியலை விரிக்கலாம்.  மார்கெரித் யூர்செனார் என்ற பிரெஞ்சு எழுத்தாளரை அறிந்தவர்கள் அவருடைய முக்கிய நாவலான  Mémoires d’Hadrien ஐ வாசித்திருக்கக்கூடும். உலகின் முக்கிய நாவல் வரிசையில் அதற்கு எப்போதும் இடமுண்டுதமிழ்ப்படுத்த விரும்பி. இருபது பக்கங்களுக்கு மேல் மொழி பெயர்த்து தொடராமல் இன்னமும் கணினியில் தூங்குகிறதுஅந்த அத்ரியனை ரோமானியர்களுக்கு அளித்தது செவில்லா நகரம்தான். யுனெஸ்கோவின் மரபுவழி சின்னங்களாகத் தேர்வு செய்யப்பட்ட பல நூற்றாண்டுகளைக் கடந்தக் கட்டிடக்கலைச் சான்றுகள் ஏராளம் : Catedral de Santa Maria Aalcazar,Plaza d’Espana, Quartier Tirana, SantaCruz …1992 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகப்பொருட்காட்சி  கோபுரமும், அறிவியல் மண்டபங்கள்நவீன கலை நுட்பத்துடன் வடிவமைத்த பாலங்கள் பார்க்க வேண்டியவை இருக்கின்றனஇரவு தங்க முடிந்தால்  Flamencoவைத் தவறவிடாதீர்கள்.  

 

பிளாஸா எஸ்பானாவில் அதிசயமாக ஒர் ஈழத் தமிழரைச் சந்தித்தேன் வியப்பாக இருந்த து. ஸ்பெய்ன் நாட்டிற்கு அவர்கள் காலனி மக்களே அதிகம் வருவதில்லை. அண்டை நாடான மொராக்காவிலிருந்து புலம்பெயருபவர்கள் உண்டு. வழக்கம்போல இந்தியத் துணைக்கண்ட த்திலிருந்து சீக்கியர்களையும், பாகிஸ்தானியரையும் பார்க்கலாம். தமிழர்கள் அரிதாகத் தான் கண்ணிற்படுவார்கள். அதை அவர் உறுதி செய்தார்இந்த நகரை எப்படி தேர்வு செய்தீர்கள் பிரத்தியேக க் காரணம் இருக்கிறதா எனக் கேட்டதற்கு, தான் பத்தாண்டுகளுக்கு முன்பு இலண்டனில்  இருந்தாகவும், தமிழர்கள் முகத்தில் விழிக்க க் கூடாதென்று இப்படி தனி ஆளாக இங்கிருக்கிறேன் என்றார்அவர் இப்படிக் கூற எது காரணமாக இருக்குமென யோசித்தது ஒரு நல்ல நாவலுக்கு களம் அமைத்துக் கொடுத்தது. ஆனால் அதனை ஈழத் தமிழில் எழுதவேண்டும்.  இந்தியத் தமிழ் உதவாது   அதில் ஈரம் இருக்காது என்பதால் அப்போதே அதை மறந்தாயிற்று.  இறுதியாக அவரிடம் கேட்க எனக்கு ஒரு கேள்வி இருந்ததுதமிழர்கள் முகத்தில் விழிக்க் கூடாது என்பது உங்கள் முடிவென்றால் எதற்காக என்னைத் தடுத்து நிறுத்தி எதற்காகப்  பேசவிரும்பினீர்கள் என்று மனதில் எழுந்ததைக் கேட்கவும் செய்தேன் . தமிழ் பேசி நாளாயிற்று  என்பது அவர் பதில்.

 

 

———————————————

பரந்து கெடுக உலகியற்றியான்!

பிள்ளை வரத்திற்கா?

இல்லை, இல்லை!

பெண்ணுக்காகவா?

சீச்சி….!

அம்மா, அப்பா…

தம்பி, அண்ணன்

அக்காள், தங்கை, நண்பர்கள்?

ஒருவரும் வேண்டாம்!

வாசத்தைப் பிரித்துணரும்,

ஓசையின் ருசி அறியும்

வாழ்க்கையின் தூரம் காணும்

சூட்சமங்கள்?

வேண்டவே வேண்டாம்!

எதற்காகப் பின்

கொலைவாளும்,

கண்களில் தீயுமாக

கடவுளைக் குறித்து தவம்?

என்னையும் என் சகமனிதர்களையும்

கொன்றபின் -இனி நீ

எதற்கு ?

பரந்து கெடுக!

 

 

எழுதுவதற்குப் படித்தால் மட்டும்போதாது (ஸ்பெய்ன் பயணம்) -2

ஸ்பெய்ன் நாட்டின் தென்பகுதி குறிப்பாக அண்டாலூஸியா (Andalousie)  வரலாறு, இயற்கை, மரபு, பண்பாடு அனைத்திலும் ஒரு பன்முகத் தன்மையைத் தெரிவிக்கும் பிரதேசம். இப்பிரதேசத்தில் கொர்டாபோ, செவில்லா இரண்டும் முக்கிய நகரங்கள். மாட்ரீட்டிலிருந்து புறப்பட்டு கொர்தோபாவை அடைந்தபோது மாலை நான் கரை மணி. வழக்கமாக இன்று எல்லா பெரு நகரங்களிலமுள்ள  இரயில் நிலையங்களின் அலங்காரங்களுடன் எங்களை வரவேற்றன. பிராஸ்ஸரியொன்றில் காப்பிக் குடித்துவிட்டு  வெளியில் வந்தபோது காவி நிறத்தில்கண்ணுக்கெட்டியவரை காரைபூசிய கம்பளம் ஒரு பெருவெளிபோல விரிந்து நீண்டது. தகுந்த இடைவெளியில் நீருற்றுகள், நவீனமும் கலை நயமும் பின்னிப்பிணைந்த மின் விளக்குக் கம்பங்கள். ஸ்பெய்ன் ஆண்களும் சரி பெண்களும் சரி தனி அழகு, மத்தியதரை கடற்பகுதிகளின் பிரத்தியேக வார்ப்புகள்அவர்கள் : காற்றைபோல நடக்கிறார்கள், ஓதுவார் குரலில் உரத்துப் பேசுகிறார்கள். சோறுபோல சிரிக்கிறார்கள்எங்கே சென்றாலும்  « ….லா ! » என வரவேற்கும் ஸ்பானியர்களின் விழிச்சந்தைகளில் செலவின்றிபெற்ற முறுவலும், புன்னகையும்  நெஞ்சத்தை மளமளவென்று நிரப்பி  நம்மைத் திக்குமுக்காடச் செய்கிறது. அந்தி நேர கொர்டோபாவின் குரல்களை அலட்சியம் செய்யும் துணிச்சல் எனக்கோ, மனைவிக்கோ இல்லை. அலுப்பை  இறக்கி  ஓட்டல் கட்டிலில் ஓய்வெடுக்கச்செய்துவிட்டு, நாங்கள் கிழே இறங்கினோம்.

 IMG_1012

கொர்தோபாவின் மேற்குப் பகுதியில் தேடிக்கண்டறிவது  எங்கள் நோக்கம். கிறிஸ்த்தோப் கொலம்பஸ் பாதம் பட்ட பூமியில்  இயன்றவரை நடந்து பார்ப்பது. நவீனத்தில் தலை நனைத்துக்கொண்டிருக்கிற உலகின் பெரு நகரங்களை ஒத்திருந்த பகுதிகளைக் கடந்து, Tapas,, Croquettes போன்ற மோகினிப்பிசாசுகளின் சூட்சியில் விழாமல், புதிர் விளையாட்டுப்போன்ற தொரு புதர் மண்டிக் கிடந்த துபோல வீடுகளும் குறுகிய தெருக்களாற்  கோலமிடப்பட்டுமிருந்த பழைய நகருக்குள் நுழைந்தோம். இரு சக்கர வாகனங்களுக்கும் பாதசாரிகளுக்கும் மட்டுமே  அனுமதிக்கப்படுவார்கள் என்பதைப் போன்றதொரு  நகர அமைப்பு. சுற்றியுள்ள மனிதர்களை மறந்தோமென்றால் பத்து பன்னிரண்டு நூற்றாண்டுகள் பின்னோக்கிப் பயணித்த உணர்வு. யூதர்களும், கிறித்துவர்களும், இஸ்லாமியர்களும் இன்றளவும் இணக்கத்துடன் வாழும் பகுதி.    7ம் நூற்றாண்டில் தொடங்குகிறது  « La Juderia »  என்ற இப்பகுதியின் வரலாறுகாலாற இப்பகுதியில் நடந்துவிட்டு, இரவு உணவை முடித்துப் படுத்தபோது இரவு பத்து மணி. IMG_1016

 

கொர்தோபா இரண்டாம் நாள்

இன்று Sight seeing பேருந்து எடுப்பதெனத் தீர்மானித்திருந்தோம்காலை ஒன்பது மணிக்கு சுற்றுலா அலுவலகத்தில் விசாரித்தபோது சுற்றுலா பேருந்தொன்றிர்க்கு நபர் ஒன்றுக்கு 18 யரோவென பயணச் சீட்டு வாங்க்கியாயிற்று. கொஞ்சம் பொறுப்பான ஊழியை, பேருந்து நிற்கும் சுற்றுலா இடங்க்கள், அவற்றில் எவை மிகவும் முக்கியமானவை, ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை பேருந்து என்ற தகவல் அன அனைத்தையும் விளக்கிக் கூறிவிட்டு  இருபது மீட்டர் தூரத்தில் இருந்த பேருந்து  நிறுத்தத் தில் விட்டுவிட்டுச்  சென்றார். எல்லா பெரு நகரங்களிலும் தற்போது கிடைக்கின்ற சேவைமுதலில் ஒரு சுற்று எங்கும் இறங்காமல் பேருந்தின் மேற்தளத்தில்  அமர்ந்து சுற்றுலா இடங்கள் பற்றிய விளக்கங்களைக் காதில் வாங்க்கிக்கொண்டு, அவற்றில் முக்கியமானவை எவைஎவையெனக் குறித்துகொண்டு மறு சுற்றில் இருந்து பார்க்கவேண்டிய இடங்களில் இறங்க்குவதும், பார்த்து முடித்தபின் அடுத்த பேருந்து பிடித்து பிற இடங்க்களூக்குச் செல்வன்ற முடிவுடன் பயணத்தைத் தொடர்ந்தோம். இரவு தங்கியிருந்த ஒட்டல் அருகே இருந்த உணவுவிடுதியில் னல்ல ஸ்பானிஷ் உணவு. அதிகமில்லை நபர் ஒன்றுக்கு !2யூரோவில் முடிந்தது.

 IMG_1020

. கத்தீடரல் மசூதி

IMG_1122தற்போது தேவாலயம் உள்ள இடத்தில் 6ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட Baslic  San Vincente இருந்துள்ளது. நகரில் இஸ்லாமியர் என்னிக்க்கை அதிகரித் தும், அப்போதைய கொர்தோபா மன்னர்அப்துல் ரெஹ்மான் ஒரு மசூதியைக் கட்ட நினைத்தார். தனது கற்பனையில்  கண்ட மசூதியை எழுப்ப இடம்போதாதென நினைத்ததால் பஸ்லிக்கை இடிக்க வேண்டியிருந்ததுஇடித்த இட த்தையும் உள்ள்டக்கி,  உலகில் வேறெங்கும் காணமுடியாத அளவில் பிரம்மாண்டமானதொரு மசூதி  எட்டாம் நூற்றாண்டில் உருவாயிற்று. 13ம் நூற்றாண்டில் நகரம் கிறுஸ்த்துவ மன்னர்களின் கைக்குத் திரும்பவும்  வருகிறதுஅவர்கள் மசூதியை தேவாலயமாக மாற்றுகிறார்கள். ஆக ஒரு மசூதிக்குரிய இசுலாமிய கலை நுணுக்கங்களுடன் தேவாலயத்தைக் காணமுடிகிறது. கிருஸ்துவர்களும் தங்கள் பங்கிற்குக் கலை  நுட்பத்தை தேவாலயத்தில் சேர்த்துள்ளார்கள். Mezquita de Cordoba என்றும் Catedral de Nuestra Señora de la Asunción என்றும்  இன்று அழைக்கப்படுகிறது.IMG_1154

இது தவிர Algazer  de les Reyes, Christines, Medina Azahara, Pont Roman, Plaza de potro, Palais vienne என நாங்க்கள் பார்த்தவை. அவை பற்றிய தகவல்கள் இணைய தளத்தில் கிடைக்கின்றன.

 

கொர்டோபா முற்றங்கள்

 IMG_1175

அண்டாலூஸியா பிரதேசங்க்களைப் பற்றிச்சொல்கிறபோது நகர்ப்பகுதிகளில் முற்றங்கள் பற்றிக் குறிப்பிடவேண்டும்அக்காலத்தில்  கிராமங்களில் வாசலை நடுவில் வைத்து சுற்றிலும் கூடம் அறைகள் என்றிருக்கும் முற்றத்தைப் போலத்தான் இவைகளும் உள்ளன. எனினும் இங்கு அந்த முற்றம் பூஞ்செடிகள் அடர்ந்த தாவரங்கள் என அலங்காரமாய் உள்ளன. தரைகளைக் கூழாங்கற்களைப் பதித்து அழகுபடுத்தி இருக்கிறார்கள்.

 (தொடரும்)

எழுதுவதற்குப் படித்தால் மட்டும் போதாது…..1

 IMG_0973« எழுதுவதற்குப் படித்தால் மட்டும் போதாது ஊர் சுற்றவும் வேண்டுமென » நண்பர்  இந்திரன் தெரிவித்திருந்தார். உண்மையும் அதுதான். நமது இருத்தல் பிற மனிதர்களாலும் தீர்மானிக்கப்படுகிறது. மனைவி உள்ளவரைதான் கணவன், தந்தை எனும் இருத்தல் பிள்ளைகளால் கிடைக்கிறது. சகோதரன் என்பதும் சகோதரி என்பதும் உடன்பிறந்தவர்கள்  படைக்கும் அடையாளம். எழுத்தாளன் என்பதும், ஓவியன் என்பதும், ஆசிரியன் என்பதும்  நாமே நமக்குப் படைத்துக்கொள்ளும் அடையாளங்கள் அல்ல. இச்சமூகத்தின் அங்க்கீகரிப்பால் அதன் அமைப்பு முறைகளால்  அதனை உருவாக்கிய பிறமனிதர்களால் தீர்மானிக்கப்படுவது. எனவே இயலும் போதெல்லாம் நமாது இருத்தலை இயக்கி நமது இருப்பை உறுதிசெய்ய வேண்டியிருக்கிறது, தவறினால் , இயங்கமறுத்தால் அவர்கள் புதைத்துவிட்டுப் போய்விடுவார்கள். ஆக இயலும் போதெல்லாம்  சக மனிதர்களைச் சந்திக்கவேண்டும், என் சுவாசக் காற்று அவர்களைத் தொட்டுக் கடக்கவேண்டும், அதனூடாக எனது உயிர்வாழ்க்கை புதுப்பிக்கப்படுகிறதென உங்களைப் போலவே நானும் நினைக்கிறேன். எழுத்தாளர்கள் மட்டுமல்ல எல்லோருமே ஒவ்வொருகணமும் படிக்கிறோம் என்ற உணர்வின்றியே வாழ்க்கைமுழுதும்  கற்கிறோம், பெற்றதை அதற்கான தேவைவருகிறபோது உபயோகிக்கவும் செய்கிறோம். எவரிடம் கற்றோம், எங்கே படித்தோம் என்கிற உணர்வின்றியேஅவற்றை உபயோகிக்கவும் செய்கிறோம். கற்றதும் பெற்றதும் அதற்கான அவசியம் வருகிறபோது  நமது அனுமதிக்குக் காத்திராமலேயே  எஜமானாக மாறி  நம்மை செலுத்துகிறது.

 

ஐரோப்பாவில் உள்ள சௌகரியம் நாடுகளின் எல்லைகள் குறுகிய நிலப்பரப்புக்குளைக் கொண்டவை . புதுச்சேரியிலிருந்து சென்னைக்குச் செல்ல ஆகும் அதே நேரத்தை இங்கும்,   சாலைப்பயணத்திற்குச் செலவிட்டால் ( நான் இருக்கும் ஸ்ட்ராஸ்பூரிலிருந்து)  ஜெர்மனிலோ, ஆஸ்ட்ரியாவிலோ, சுவிட்ஸர்லாந்திலோ, பெல்ஜியத்திலோ, லக்ஸம்பர்கிலோ இருக்கமுடியும்.  ஸ்பெய்ன் நாட்டிற்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பார் சலோனாவிற்குச் சென்றிருக்கிறேன். மகனும், மருமகளும் தங்கள் திருமணப் பரிசாக எங்கள் அனைவரையும் அழைத்துச் சென்றார்கள். அமெரிக்காவிலிருந்து பெரியமகள், மருமகன் ; இளையமகள் என அனைவரும் சென்றிருந்தோம்.  உயிர்மை.காம் ல்  அது வாசிக்க கிடைக்கும் : http://uyirmmai.com/ContentDetails.aspx?cid=1456.  . ஸ்பெய்ன் செல்ல ஆசைப்பட்டால் பார்சலோனாவிற்குக் கண்டிப்பாக முதலிற் போகவேண்டும். அதன் பிறகே மற்றதெல்லாம். இம்முறை நாங்கள் சென்றது ஸ்பெய்ன் நாட்டின் தென்பகுதியிலுள்ள அந்தாலூசி(Andalousie) பிரதேசத்திற்கு. இப்பிரதேசத்தில் செவில்லா கொர்தோபா, இரண்டுமே முக்கியமான நகரங்கள்.. 9ந்தேதி Strasbourg லிருந்து புறப்பட்டோம். பிரான்சு முழுக்க வரவிருக்கும் புதிய தொழிலாளர் சட்டத்தை எதிர்த்து வேலை நிறுத்தம், அதன் விளைவாக 4 யூரோ கொடுத்து விமான நிலையத்திற்குச் செல்வதற்குப் பதிலாக  டாக்ஸிக்கு 60 யூரோ கொடுக்க வேண்டியிருந்த து. பாரீஸ் ஒர்லி விமான நிலையத்தில் காலை எட்டுமணிக்கு இறங்க்கியபோது பருவ நிலையும் மோசமாக இருக்க அனேக விமானங்களை இரத்து செய்திருந்தார்கள். ஆனால் மாட் ரீட் செல்ல பிரச்சினையில்லை.  ஸ்பெய்ன் தலை நகரம் மாட் ரீட்டில் இறங்கியபோது பிற்பகல் பன்னிரண்டரை.. மாட் ரீட்டிலிருந்து கொர்தோபா செல்ல விரைவு வண்டி எங்களுக்கு 2.20க்கு இருந்தது. இந்த இடத்தில்  ஒரு சிறுகுறிப்பு  பாரீஸிலிருந்து அந்தாலூசி செல்ல விரும்பும் நண்பர்கள் பாரீஸ் ஒர்லியிலிருந்து செவில்லா (Seville)  சென்று அங்கிருந்து கொர்தோபா செல்வது உத்தமம். பயணச்செலவு மட்டுமல்ல  நேரமும் மிச்சம் ( பாரீஸ்செவில்லா 60 யூரோ+, செவில்லாவிலிருந்து கொர்தோபா  இரயிலுக்கு 9யூரோ) . தேவையின்றி மாட்ரீட் போனதில் எல்லாமே இரட்டிப்பு ஆனது.

 

காத்திருந்த பிரச்சினைIMG_0974

வாழ்க்கை மட்டுமல்ல பயணமும் பிரச்சினைகளைச் சந்தித்து முடிவில்சுபம்முறுவலிக்குமெனில், மகிழ்ச்சிதான். ஆனால் பிரச்சினைக்குரிய அத்தருணங்களை வர்ணிக்க வார்த்தைகள் போதாமாட்ரீட் விமானத்தளத்தில் இறங்கி  இரயில் நிலையம் செல்ல மகளின் யோசனை டாக்ஸி பிடிப்பது. அதனை நான் விரும்புவதில்லை. முடிந்தவரை தவிர்த்திருக்கிறேன். பொதுமக்கள் வாகனத்தில் பயணிக்கிறபோது மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. நடப்பது அதனைக் காட்டிலும் கூடுதலாக உதவும் எனில் நடக்க ஆசைப்படுவதுண்டு. கவிஞர் இந்திரன் கூறுவதுபோல மனிதர்களை வாசிக்க என்று வைத்துக்கொள்ளலாம்விமானத் தளத்தில் இறங்கி அங்கிருந்த ஓர் அரசு சுற்றுலாதுறை அலுவலகத்தில் விசாரித்தபோது  இரயில் நிலையம் செல்ல பேருந்து இருப்பதை உறுதி செய்தார்கள். ஸ்பெய்ன் நாட்டில் உள்ள சௌகரியம் பெருந்தடங்களில் செல்கிற பேருந்துகளுக்கு, தடத்திற்கு ஒரு நிறத்தை ஒதுக்கி இருக்கிறார்கள். அவற்றினை இணைக்கிற  கிளைத் தடங்களில்  செல்கிற வாகனங்களுக்கும் பெருந்தட வாகனத்தின் நிறத்தையே ஒதுக்குவதால் பேருந்து தூரத்தில் வருகிறபோதே அடையாளப் படுத்த முடிவதோடு வீண் பதற்றமும் கொள்ளவேண்டியதில்லை. விமான நிலையத்திலிருந்து மஞ்சள் நிறப் பேருந்து மாட்ரீட் அத்தோஷா இரயில் நிலையத்திற்குச் செல்கிறது,  இருபது நிமிட பயணம். வாகன ஒட்டுனரிடம் இரயில்  நிலையத்தில் இறங்கவேண்டும் என்றேன், பிரெஞ்சு, ஆங்கிலம் இரண்டுமொழிகளை உபயோகித்தும் பயனில்லை. பேருந்திலிருந்த ஒரு குறிப்பு நான்காவது நிறுத்தம் என்றிருக்க அமைதியாய்  இருக்கையைத் தேடியபொழுது குறுக்கிட்ட ஆங்கிலேயர்( ?)   நான் இரயில் நிலையத்தில் இறங்கப் போகிறேன் என்றார்.  பேருந்து நின்றபோது பயணித்தவர்கள் அனைவருமே இரயில் நிலையத்திற்குப் பேருந்தைப் பிடித்தவர்கள் எனப் புரிந்தது

 

ஓர் அதிர்ச்சித் தகவல். IMG_0984

மகள் அனுப்பியிருந்த முன்பதிவு பாரீஸ்ஒர்லிமாட் ரீட் விமானப் பயணம், தொடர்ந்து மாட் ரீட்கொர்தோபா இரயில் பயணம் . எங்கள் முன் பதிவைக்காட்டி இரயில் பயணச்சீட்டைபெற வரிசையில் பத்து நிமிடம் நின்று, பயணச் சீட்டு விற்பனையாளரை நெருங்க்கியபோது முன்பதிவில் இரயில் பயணத்திற்கான எண் இல்லை எனக்கூறி . பயணிகள் சேவை அலுவலகத்தில் விசாரிக்குமாறு அனுப்பிவைத்தார். அங்கும் அரைமணி நேரக் காத்திருப்பிற்குப் பின்னர்  தங்களுக்கு மேலேயுள்ள நிர்வாகத்திடம் விசாரியுங்கள் என அனுப்பி வைத்தார்கள். இரயில் பயணத்திற்கான முன்பதிவு  எண்ணைப் பெற்றால்தான் தீர்வு என்பது முடிவாகக்  கிடைத்த பதில். . எங்க்களுக்குப் மின் அஞ்சலில் பயண முன்பதிவை அனுப்பிய முகவர் செய்த தவறு. நாங்க்களும் முன்பதிவில் இருந்த விமானப் பயண பதிவு எண்ணை இரயில் பயணத்திற்கும் சேர்த்து என நினைத்துவிட்டோம். மகளுக்குப் போன்போட்டு பயண முகவர் அலுவலகத்தைத் தொடர்புகொள்ள கூறினோம். நேரம் கடந்துகொண்டிருந்தது.  கொர்தொபா செல்லும் இரயில் பத்து நிமிடத்தில்  புறப்பட இருக்க பிரச்சினையைப் பிறகு தீர்த்துகொள்ளலாம் என நினைத்து 180 யூரோ கொடுத்து ஒரு வழிபயணமென இரண்டு டிக்கெட்டை எடுத்து ஓடி இரயில் அமரும் வரை அனுபவித்த நரக நொடிகளை மறக்க முடியாதுIMG_1001

ஸ்பெய்ன் விரைவு இரயிலும்  400 கி.மீதூரத்தை  ஒரு மணி நாற்பது நிமிட த்தில் கடந்திருந்தது. இத்தனைக்கும் வழியில்  இரண்டு ஸ்டேஷனில் தலா ஐந்து நிமிடம் நின்றிருக்கும்பிற்பகல் 2.20க்குப் புறப்பட்டு மாலை 4.10க்கெல்லாம் கொர்தொபா வந்துவிட்டோம். எடுத்திருந்த ஒட்டல் இரயில் நிலையத்திற்கு வெகு அருகிலேயே இருந்த து. ஒட்டலுக்குச் சென்று சிறிது ஓய்வெடுத்துவிட்டு மாலை ஐந்தரை மணிக்கெல்லாம் கீழே இறங்கி   அரபு பண்பாட்டுடன் இரண்டற கலந்திருந்த கொர்தொபா பழைய நகர்ப் பகுதிக்குச் சென்றோம்

(தொடரும்)

 

ஒரு மொழி பெயர்ப்பு சிக்கல்

_l-ecrivain-chinois-feng-tang-

புது தில்லியில் அண்மையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக அண்டை வீட்டுக்காரரான சீனாவை இந்தியா அழைத்திருந்தது. சீனாவுக்கும் இந்தியாவுக்குமுள்ள ஏழாம் பொருத்தம் தெரிந்ததுதான். வீட்டிற்கு அழைத்து விருந்தே போட்டாலும் கை கழுவிகிறபோது விருந்து விஷமாகிப் போவது இன்று நேற்றல்ல நேரு காலத்திலிருந்து தொடரும் உண்மை. சீன அதிபர் Xin Jinping இந்தியா வந்திருந்தபோது , இந்திய அரசு இந்த அழைப்பை விடுத்திருக்கிறது. ஏற்றுக்கொண்ட சீனாவும் 8 எழுத்தாளர்கள் 81 பதிப்பகங்கள் என கலந்துகொள்ள விழாவும் களைகட்டியிருக்கிறது. யார் கண் பட் டதோ   இருதரப்பும் கசப்புடன் பிரியும்படி ஒரு சம்பவம்.

தாகூரின் Stray Birds (திசையற்ற   பறவைகள்) கவிதை சீனமொழியில் வந்திருக்கிறது. மொழி பெயர்ப்பாளர் சீனமொழியில் பிரபல வெகுசன எழுத்தாளரும்,   மொழிபெயர்ப்பாளருமாக சமீபக் கால த்தில் புகழடைந்துள்ள Feng Tang என்ற இளைஞர்.

அக்கவிதையில்

“காதலனுக்காக உலகு, தனது பெருவெளி முகமூடியைக் களைகிறது” –

(The World puts off its mask of vastness to its lover) என்று ஒரு வரி வருகிறது

இதனை சீனமொழியில்  மொழிபெயர்த்தவர் அதாவது Feng Tang:

“உலகம் ,   காதலனுக்காக,  தனது பெருவெளியை மறைத்திருந்த உள்ளாடையைக்   களைகிறது”

என்று தந்திருக்கிறார். அதாவது

Le monde, pour son amant, retire son masque d’immensité ”

என்றிருக்க வேண்டியதை

“ Le monde, pour son amant, retire les sous-vêtements recouvrant son immensité. ”

என பிரான்சு நாட்டின் தினசரி ‘ Le Monde’ சொல்கிறது.

 

இத்தவறை சீன வாசகர் ஒருவர் கண்டறிந்த ஏதோ ஒரு தினசரிக்கு எழுத ( கடந்த டிசம்பர் மாதம் ) ஒரு சில சீன இதழ்களும் இதனைப்பண்பாட்டு பயங்கரவாதம்என வர்ணித்ததோடு , மொழிபெயர்ப்பாளரை வக்கிரமான ஆசாமியென கண்டிக்கவும் செய்தன.

அதேவேளை மொழிபெயர்ப்பாளர்  தான் மொழிபெயர்த்த து சரியே என வாதிப்பதாகவும்,  அபருக்கு ஆதரவாக சில சீன  இதழ்களும் எழுத்தாளர்களும் இது மொழிபெயர்ப்பாளர் உரிமை எனவும் வாதிக்கின்றன..  இருந்த போதும் எதற்குப் பிரச்சினையென சீன பதிப்பகம் பதிப்பித்த கவிதைத் தொகுப்பைத் திரும்பப்பெற்றிருக்கிறது.  பதிப்புரிமையைச் சீனர்களுக்குத் தந்த இந்திய  பதிப்பாளரும் ‘Nyogi Books’ – உரிமையாளருமான Bikash Nyogi  « வங்க்காள மொழியிலிருந்து ஆங்க்கிலத்திலும், ஆங்க்கிலத்திலிருந்து சீன மொழிக்கும் சென்றதால் இது மொழிபெயர்ப்பில் தவறு நிகழ்ந்து விட்ட து « – என சமாதானம் சொல்லிக்கொண்டிருக்கிறாராம்.

 

நன்றி Le Monde 21 -1-2016

 

 

 

எப்போதோ எழுதியது -2 (1973)

 ஆத்தோரமாயிருக்கும்….

 

ஆத்தோரமாயிருக்கும்

காத்தாடித் தோப்புக்குள்ள

ஆத்தா நீ சின்னப்பொண்ணு

கண்ணிவச்ச- அதைப்

பாரத்தா இந்தப் புய

சொக்கிப் போனான்!

 

சேத்தோரமாயிருக்கும்

சிறு நண்டு குறுகுறுப்ப

சித்தாட சின்னப்பொண்ணு

கண்ணுக்குள்ள- நீ

சிலுசிலுன்னு பாத்துவைக்க

வேத்து போனான்!

 

நாட்டாமை கருப்பஞ்சோல

நடுச்சாம இரவு வேள

சீட்டாட்டம் முடிச்சுப்புட்டு

காத்திருந்தான்

காத்திருந்து காத்திருந்து

நீத்துப்போனான்

 

வேட்டவலம் சந்தையிலே

வேட்டிய மடிச்சுக் கட்டி

காட்டாறா வலம் வந்து

நோட்டமிட்டான் -மனச

கருப்பஞ் சக்கையாக்கிப்புட்டு

மறைஞ்சுப்போன!

 

அம்மாவாசை கருக்கலிலெ

அயிரைமீனு சுட்டுத் தின்ன

கம்மாகரையில் காத்திருப்பான்

சின்னப்பொண்ணு – நீ அவன்

கன்னம் சேர்த்து சொல்லவேணும்

பாட்டு ஒண்ணு!

  • நா.கிருஷ்ணா

தடம் பதித்த சிற்றிதழ்கள் – வே. சபா நாயகம்

 

நெரு நல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமையை உலகிற்குக் கொடுக்கும்Sabanayagam பட்டியலில் சிற்றிதழ்களுக்கும் இடமுண்டு, . இக்கட்டுரையை நீங்கள் வாசிக்கிற நேரத்தில் இரண்டொரு சிற்றிதழ்கள் புதிதாய்ப் பிறந்திருக்கலாம்,, ஒரு சில தங்கள் ஆவியை விட்டிருக்கலாம் ஏதோ ஒரு வேகத்தில் தொடங்கி , சொந்தப் படைப்புகளுக்கு முன்னுரிமைகொடுத்து, நவீன தமிழிலக்கிய மரபுப்படி இரண்டொரு இதழ்களில் எதிரிகளையும் வசைபாடிவிட்டு, முடியாதவர்கள் இரண்டொரு மாதங்களிலும் முடிந்தவர்கள் இரண்டொரு வருடங்ககளிலும் அதன் ஜீவனை முடித்திருந்தால், விட்ட ஜீவனுக்குப் பெயர் சிற்றிதழ்.

நண்பர் சு. ஆ. வெங்கிட சுப்புராய நாயகர் எங்கோ எப்போதோ படித்ததாகச் அடிக்கடி சொல்வார்:

“இந்தப் பத்திரிகையில் இவனைக் கிழி

அந்தப் பத்திரிகையில் அவனைக் கிழி

இருவரும் போடவில்லையெனில்

நீயே ஒரு பத்திரிகைத் தொடங்கி

எல்லோரையும் கிழி ”

 

திரு வே. சபா நாயகம் அவர்களின் தடம் பதித்த சிற்றிதழ்கள் கட்டுரைத் THADAMதொகுப்பைப் படித்தபோது மேலே சொல்லப்பட்டது உண்மையென நிரூபணம் ஆயிற்று. பெரும்பாலோருக்கு சிற்றிதழ் என்பது தன்னையும் தன் எழுத்தையும் முன்னிலைப் படுத்தவும்,  களத்தில் இருக்கிற, சகச் சிற்றிதழ்களை,சக எழுத்தாளர்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ பழி தீர்த்துக்கொள்ளும் ஆயுதம், சிலருக்கு, எலிவளையென்றாலும் தனிவளையெனில் சுதந்திரமாக ஒன்றைச் சொல்லமுடியும் என்ற ஆத்ம திருப்தி. காரணங்கள் எதுவாயினும் தரமான சிற்றிதழ்கள் மற்றும் இணைய இதழ்களால், நவீன தமிழிலக்கியத்திற்கு மட்டுமல்ல மரபிலக்கியத்திற்கும் புதிய வாசனையும், புதிய பார்வையும் கிடைத்திருக்கிறது. சிற்றிதழ்களால் அடையாளம் பெற்றவர்களை வெகுசன இதழ்களும் தேடிவந்து கொண்டாடுவது சிற்றிதழ்களுக்குக் கிடைத்திருக்கிற பெருமை. இன்றைக்கு காலச்சுவடு, தீரா நதி, உயிர்மை, உயிரெழுத்து, காக்கைச்சிறகினிலே, சிற்றேடு, மணற்கேணி, மணல்வீடு, திசையெட்டும் என பட்டியலிடவேண்டிய இதழ்கள் ஏராளம், தமிழ் நாட்டில் மட்டுமல்ல உலகமெங்கும் சம்பந்தப்பட்டவர்களின் இருத்தலைத் தெரிரிவிக்க தமிழர்கள் வாழ்கிற நிலப்பரப்பெங்கும் சிற்றிதழ்கள் வந்துகொண்டிருக்கின்றன. இவற்றுடன் இணைய இதழ்களையும் மறக்காமற் கணக்கிற் கொள்ளவேண்டும். இவை அனைத்துமே அதனதன் பாதையில் நவீனத் தமிழை வளர்த்தெடுக்கின்றன.

 

இருந்தபோதிலும் ஒரு சிற்றிதழை நடத்துவதென்பது அத்தனை எளிதல்ல. ஆயிரம் பிரதிகளை அரசு நூலகங்கள் வாங்க முடிந்தால் பெரிய வரம். சந்தாவைச் செலுத்திவிட்டு ஆளுக்கொரு கவிதையுடனோ படைப்புடனோ சந்தா செலுத்தும் வாசகர்கள் எழுத்தாளர் கனவுகளுடன் காத்திருக்கிறார்கள் போடத் தவறினால், சந்தாவைப் புதுப்பிக்காமல் போகலாம். எதிரி இதழில் எதையாவது எழுதலாம் அல்லது வேறொரு சிற்றிதழையே தொடங்கலாம். வாசகர் கிடைத்தாலும் எழுத்தாளருக்குப் பற்றாக்குறை,  ஆசிரியரே எத்தனைபெயரில் எழுத முடியும். ஒருசில இதழ்கள் சாமர்த்தியமாக   நிலைய வித்துவான்களை ஏற்பாடு செய்துவிடுகின்றன. அடுத்து, அச்சடித்த இதழ்களை விற்று முதல் காணவேண்டும். நிதி ஆதாரப் பிரச்சினை சிற்றிதழ்களுக்குத் தொன்று தொட்டு இருந்து வந்திருக்கின்றன. விற்காத இதழ்களை இலவசமாகக் கொடுத்தாலும், அடுத்த இதழையாவது காசு கொடுத்து வாங்குவார்கள் என்ற உத்தரவாதம் கிடையாது.

கடந்த காலம்போல அல்லாமல் இன்றைக்குச் சில சிற்றிதழ்கள் சாமர்த்தியமாக நடந்துகொள்கின்றன. புலம்பெயர்ந்த தமிழர்களின் பிரச்சினைகள் , வெகுசன இதழ்களுக்குப் போட்டியாக சினிமா, அரசியலை விவாத்திற்கு எடுத்துக்கொள்வது போன்றவற்றைக்கொண்டு சிற்றிதழ்களைக் காப்பாற்ற முடிகிறது பிறகு நல்லி சின்னசாமி செட்டியார் போன்ற பரோபகாரிகளின் உதவியுங்க்கூட இன்றைய சிற்றிதழ்களைப் பொருளாதார நெருக்கடியில்லாமல் பார்த்துக்கொள்கிறது. இந்தகைய சமார்த்தியம் போதாத, எந்தவித் திட்டமிடலும் இல்லாத சிற்றிதழ்கள் வீட்சியைத் தவிர்ப்பது கடினம். சாமர்த்தியமுள்ள இதழ்கள்கூட விற்பனையில் மேற்குலுடன் ஒப்பிடுகிறபோது சந்தோஷப்படும் நிலையிலில்லை. இவ்வாறான தமிழ்ச்சூழலில் ஒரு சிற்றிதழைத் தொடர்ந்து நடத்துவதும் பெரும் சிரமம்தான்

 

இக்கட்டுரைத் தொகுப்பின் ஆசிரியர் திரு வே. சபாநாயகம். சிறுகதைகள், நெடுங்ககதைகள், நாவல், கட்டுரைகள், வாழ்க்கை வரலாறுகள், சிறுவர் கதைகள், திறனாய்வுகள் எனப் படைப்புலகில் அகலக் கால் வைத்திருந்தாலும் பாதங்களை அழுந்த ஊன்றியவர். ஓய்வின்றி எழுதிக்கொண்டிருப்பவர். கவிதை ஒவியம் ஆகியவற்றிலும் தேர்ந்தவர் விருதுகள் பரிசுகள் என வாங்கிக் குவித்திருந்த போதும், அவரது எளிமை என்னை வியப்பில் ஆழ்த்தும். அவருடைய “எழுத்துக் கலை பற்றி இவர்கள்” என்ற தொடரையும், “எனது இலக்கிய அனுபவங்கள்” என்ற கட்டுரைத் தொடரையும் விரும்பி பலமுறை வாசித்திருக்கிறேன். அதே ஆர்வத்துடனேயே ‘தடம் பதித்த சிற்றிதழ்கள்’- என்ற இக்கட்டுரைத் தொகுப்பையும் படித்தேன், தொகுப்பு என்னை ஏமாற்றவில்லை.

 

இக்கட்டுரைத் தொகுப்பில் இருபது சிற்றிதழ்கள் இடம் பெற்றிருக்கின்றன. இதழுக்கொன்று என இருபது விரிவானக் கட்டுரைகள். அதென்ன இருபது சிற்றிதழ்கள், மற்றவை என்ன ஆயிற்று? என்ற கேள்வியை ஆசிரியர் நம்மிடம் எதிர்பார்த்ததைப்போல::

 

“மணிக்கொடி தொடங்க்கி, சமீபத்தில் நின்றுபோன சுபமங்க்களாவரை இலக்கிய ஆர்வமும் எழுச்சியும் மிக்கவர்களால் தொடங்கப்பட்டு, சிலகாலம் வந்து, பிறகு ஏதேதோ காரணங்களால் நின்று போன இலக்கிய பத்திரிகைகள் ஏராளம். அவைகளில் இன்றும் நினைவில் நிற்பதாக, இலக்கிய உலகில் தடம்பதித்து, இலக்கிய ரசிகர்களின் நெஞ்சில் வாழும் பத்திரிகைகள் சிலவற்றின் சாதனைகளையும், அவை நின்று போன காரணங்க்களையும் இப்போது எண்ணிப் பார்ப்பது சுவாரஸ்யமானதாக இருக்கும்.” என தகுந்த பதிலையும் கூறிவிடுகிறார்.

 

பொதுவாக இதுபோன்ற தகவல் செறிவுள்ள கட்டுரைக்கு சொல்லப்படும் விடயங்களைக்காட்டிலும் எழுதின்றவரின் ஞானத்தை முன்னிலைப்படுத்தும் நோக்கம் கூடுதலாக இருக்கும் (கல்விமான்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் எழுதுகிறார்களாம்) அதனாலேயே நம்மைப்போன்ற வாசகர்களை மிரட்டுவதற்கென்ற மொழி நடையைத் தேடிப்பிடிப்பார்கள். வே. சபா நாயகம் எழுத்து அப்படி அல்ல. தவிர அவருடைய கட்டுரைகளில் பாகுபாடுகளில்லை. அவரால் நடை, கசட தபற, இலக்கியவட்டம், ஞானரதம் வானம்பாடியென எழுதுகிறபோதும் சரி, வண்ணங்கள், களரி, இன்று என எழுதும்போதும் சரி சம்பந்தப்பட்ட சிற்றிதழ்கள் குறித்த முழுமையான தகவல்களைத் திரட்டிச் சொல்ல முடிந்திருக்கிறது. முழுமையான தகவல்கள் எனச் சொல்லக்காரணம், ஒவ்வொரு சிற்றிதழுக்குமென்றும் எழுதப்பட்ட கட்டுரையில் முதல் இதழ் வந்த ஆண்டு, எத்தனைப் பக்கங்கள், எத்தனை இதழ்கள், என்ன விலை, யாரால் தொடங்ககப் பட்டது? இதழாசிரியர் பெயர், படைப்புகளை எழுதியவர்கள் யார், யார்? எந்தெந்த படைப்புகள் கவனம் பெற்றன போன்றவிபரங்களைச் சேகரித்து ஆசிரியர் சொல்லியிருக்கிறார். மிகவும் கடுமையானப் பணி. ஒப்புக்காக எழுதப்பட்டதல்ல. இத்தகைய புள்ளிவிவரங்களுக்கிடையிலும் , எழுத்தாளர்களின் குழாயடிச் சண்டைகளையும் மறைக்கவில்லை. சொல்லப்பட்டிருக்கிற சிற்றிதழ்களில் நடை, கசட தபற, அன்னம் விடு தூது, இலக்கிய வட்டம், வானம்பாடி, சுட்டி, கவனம், ஞானரதம், சுவடு ஆகிய இதழ்கள் முக்கியமானவை. இருபது இதழ்களிலிருந்தும் , இன்றிருக்கும் சிற்றிதழ்கள் பாடம் கற்கவேண்டியவையும் கற்கக்கூடாதவையும்   நிறையவே இருக்கின்றன. இவற்றைத் தவிர இந்த இருபது இதழ்களுக்கும் கீழ்க்கண்ட ஐந்து விடயங்க்களில் உள்ள ஒற்றுமை மிக முக்கியமானது:

 

அ. இதற்கு முன்பு வேரொரு சிற்றிதழில் பணியாற்றியவர் அல்லது பணியாற்றியவர்கள் அங்கிருந்து வெளியேறி புதிய இதழினைத் தொடங்க்குகிறார்கள்.

 

ஆ. தொடங்கும் அனைவரும் தமிழ் இலக்கியத்தை மேம்படுத்தப் போவதாகச் சூளுரைக்கிறார்கள்.

 

இ. இலக்கிய சர்ச்சைகள் என்ற பெயரில் எழுத்தாளர்கள் கட்டிப் புரளுகிறார்கள்.

 

ஈ தீவிர இலக்கியம் என்பதே கவிதைகள் என அதிகம் விளங்கிக்கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

 

உ நிதி ஆதாரம் இல்லை என்பதைக் காரணமாக முன்வைத்து கடையை மூடுகிறார்கள்.

 

 

நாமறிந்த மூத்த படைப்பாளிகள் பலரின் பயிற்சிக் களமாக சிற்றிதழ்கள் இருந்துள்ளன. நடை இதழில் சி.மணி, ஞானக்கூத்தன்போன்றோரையும் – “ஞானக்கூத்தனின் பெயர் பிரபலமாவதற்குக் காரணமான பல சிறந்தக் கவிதைகள் நடை’ யில் வந்தன” எங்கிறார், வே.ச. 1970ல் வெளிவந்த ‘கசடதபற’ இதழில் சா. கந்தசாமி நா.முத்துசாமி, அசோகமித்திரன் முதலானப் பெயர்களைச் சந்திக்கிறோம். கசட தபற இதழில் ஞானக்கூத்தனைத் தவிர்த்து இன்று புதுக்கவிதயென்றால் நினவுக்கு வரக்கூடிய ஆத்மா நாம், கல்யாண்ஜீ,, கலாப்பிரியா, தேவதச்சன் என பலரும் எழுதியிருக்கின்றனர்.

வானம்பாடி கவிஞர்கள் ஒத்துழைப்புடன் 1984ம் ஆண்டு வெளியான அன்னம் விடுதூது கவிஞர் `மீராவின் பொறுப்பிலும், கவிஞர் சிற்பியை ஆசிரியராகவும் , கவிஞர் அழ்ப்துல் ரகுமானை சிறப்பாசிரியராகவும் கொண்டிருந்தபோதிலும், “ அரசியல் விமர்சனம், இலக்கிய விளக்கம் , அறிவியல் சாதனைகள், சமூகப்பிரச்சினைகள் , ஓவியம், நாடகம், சினிமா………இலக்கிய அக்கப்போர்கள், நூல் மதிப்புரைகள், கவிதைகள் கதைகள் என்று ஒன்று பாக்கியில்லாமல் திகட்டத் திகட்டவாசகர்க்கு ‘ விருந்தளித்தது என்கிறார் வே.சபா நாயகம். இன்றைய தமிழின் முக்கியமான சிறுகதை ஆசிரியர்கள் எழுதியிருந்தபோதிலும் இச்சிற்றிதழில் “கவிதைகள் கட்டுரைகள் அளவிற்கு அதிகம் பெறவில்லை” என்பது கட்டுரை ஆசிரியருக்குக அன்னம் குறித்த குறை இருந்திருக்கிறது.

“இலக்கிய வட்டம் “ முழுக்க முழுக்க க.நா.சு. வை முன்னவராகவும் மூலவராகவும் கொண்டு வெளிவந்திருக்கிறது. நகுலன், டிகே துரைசாமி என்ற பெயரிலும் கதை கவிதை எழுதியாக அறிகிறோம். இவர்களைத் தவிர கிருஷ்ணன் வம்பி, நசிகேதன், சுந்தர ராமசாமி ஆகியூரது படைப்புகளும் இடம் பெற்றிருந்தன எங்கிறார் வே.சபா நாயகம்.

இத்தொகுபிலுள்ள முக்கியமான கட்டுரைகளில் வானம்பாடி சிற்றிதழ் பற்றியதுமொன்று   ‘மானுடம் பாடும் வானம்பாடி’ எனத் தன்னைப்பிரகடனப்படுத்திக்கொண்ட இதழில் புவி அரசு, ஞானி, இளமுருகு, அக்னிபுத்திரன் சிற்பி, மு.மேத்தா பிரபஞ்சன், தமிழன்பன், கல்யாண்ஜி, தமிழவன், பா. செயப்பிரகாசம் சிதம்பர நாதன் என நிறைய பேர் எழுதியிருக்கிறார்கள்.

இப்பட்டியலில் அப்போதே இலக்கியத்துடன் சமூக பிரக்ஞையைக் கையாண்டதற்கு உதாரணம்போல ‘சுட்டி’ என்ற சிற்றிதழும் இடம்பெற்றுள்ளது. . இவ்விதழ் எண்பதுகளின் தொடக்கத்தில் வந்திருக்கிறது ஆசிரியர் நாராயண பாரதி. இதழ் ஒருவரையும் விட்டுவைக்கவில்லை, எதையும் எவரையும் கடுமையாக விமர்சித்ததின் பலன் 950 பிரதிகளுடன் தொடங்கிய இதழ் ஆறே மாத்தில் 12000 இதழ்களை எட்டி 107வது இதழை 25000 பிரதிகளை விற்க முடிந்த சாதனைக்குப்பின் சந்தாதாரர்களுக்குக் கூட த் தெரிவிக்காமல் மூடிவிட்டார்களாம்.

இச்சிற்றிதழ்கள் பற்றிய தகவல்களில் முக்கியமானது, எழுத்தாள நண்பர்களுக்கிடையே நடந்த இலக்கிய சர்ச்சைகள். எந்த அளவிற்கு இலக்கியத்திற்கு முக்கியம்கொடுத்தனவோ அதே அளவிற்கு சர்ச்சைகளிலும் குறிப்பாக கசட தபற போன்ற பெரிய இதழ்கள் ஆர்வம் காட்டியுள்ளது சுவாஸ்யமான தகவல். உலகமெங்கும் இலக்கியவாதிகளிடையே சர்ச்சை என்பது அவர்கள் இரத்த்தத்தில் ஊறியதாக கடந்தகாலத்தில் இருந்திருக்கிறது. க.நா.சு. வின் இலக்கியவட்டம், வானம்பாடி ஆகிய இதழ்களில் பங்க்காற்றியவர்களும் சர்ச்சைகளில் ஆர்வம் காட்டி யிருக்கிறார்கள்.

 

சிற்றிதழ்களைப் பற்றியத் தகவல்களை குறையின்றி திரட்டித் தருவது நோக்கம் என் கிற போதும் அவற்றால் நவீனதமிழிலக்கியம் அடைந்த பலனைக் குறைத்து மதிப்பிடமுடியாது என்பதைப்போல, வே. சபா நாயகம் சந்தர்ப்பம் வாய்க்கிற போதெல்லாம் அவற்றைப் பாராட் ட த் தவறுவதில்லை.

“மிகுந்த உழைப்பு மேற்கொண்டு சி. மணி யாப்பியம் என்ற 50 பக்கத்துக்கும் மேற்பட்ட யாப்பிலக்கணம் பற்றிய எளிமையான பயனுள்ள இலவச இணைப்பை பொருளாதாரப் பிரச்சினையிருந்தும் நடை மூன்றாவது இதழுடன் ‘செல்வம்’ பெயரில் எழுதியளித்திருந்தார்…… நடையின் சாதனைகளில் முக்கியமானதாக இதைச் சொல்லாம் “ (பக்கம் 11)

 

“கசட தபற” சோதனை முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி பெற்றிருக்கிறது குறிப்பாகப் புதுகவிதைக்கு அது நிறையவே செய்த து” (பக்கம் 16)

 

“ஆரோக்கியமான அருமையான விஷயங்க்களை வெளியிட்டு ஒட்டுமொத்தம் பாராட்டுதல்களுக்குள்ளாகி வீறு நடை போட் ட அன்னம் “ (பக்கம் 33)

 

“ ஒரு பத்திரிகையைப் பார்த்தவுடனேயே அதன் இலக்கியத் தரம் தெரிந்துவிடும் என்ற கருத்து உண்டு. அப்படி முதல் இதழைப் பார்த்த துமே சாதனை புரியும் சாத்திய கூறுகளுடன் ‘அஃக்’ என்றொரு இலக்கியப் பத்திரிகை” (பக்கம் 59)

 

திரு.வே. சபா நாயகத்தின் கட்டுரைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள முக்கியமான இதழ்கள் அனைத்தும் இன்றைய நவீன தமிழிலக்கியம் அடைந்துள்ள வளர்ச்சிக்குக் காரணமானவை. ஏன் அவை நின்றுபோயின என்பது பலரும் அறிந்த து தான் , தவிர தொடங்ககும்போது கொள்கை முழக்கத்துடன் வந்தவை என தெரிகிறது. அவற்றைச் சரியாக நிறைவேற்ற முடியவில்லையே என்ற கோபங்கூட அவர்கள் தொடர்ந்து இதழை நடத்த முடியாமற்போனதற்குக் காரணமாக இருக்கலாம். புதிதாய் இதழ் தொடங்குகிறவர்கள் இந்த நூலிலிருந்து கற்பதற்கு, தெரிந்துகொள்வதற்கு நிறைய இருக்கின்றன. இன்று வெற்றிகரமாக இயங்கிகொண்டிருக்கும் சிற்றிதழ்களோடு இத்தொகுப்பிலுள்ள பழையச் சிற்றிதழ்களின் செயல்பாடுகளை ஒப்பிட்டு பாருங்கள். நல்ல விடயங்களைச் சொல்ல சாத்தியமெனில் சில சமரசங்களும் செய்துகொள்ளுதல் அவசியம். இறுதியாக வெற்றி பெற்ற சிற்றிதழ்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள்: சினிமா அரசியலுக்கு ஒதுக்கியதுபோக ஒன்றிரண்டு பக்கங்களை வே. சபா நாயகம், பாரதிபுத்திரன், பக்தவச்சல பாரதி, பழ. அதியமான், க.பஞ்சாங்கம் இன்னும் இது போன்றோரின் நூல்களைக் கவனத்திற்கொள்ள, வாசகர்களிடம் கொண்டுசெல்ல ஏதேனும் செய்யுங்கள். இவர்களின் உழைப்பையும் சிற்றிதழ்கள் கவனித்தால்தானுண்டு.

நன்றி சொல்வனம்

தடம் பதித்தச் சிற்றிதழ்கள்
ஆசிரியர்: வே.சபா நாயகம்
மணியம் பதிப்பகம்
14/39 இரத்தின முதலி தெரு
குறிஞ்சிப்பாடி-607302

————————————————————————