- நாகரத்தினம் கிருஷ்ணா
“மனிதம் அல்லது மானுடம் என்றால் என்ன?” என்கிற கேள்வி மிகவும் சிக்கலானது. இக்கேள்வியில் தன்னைத் தொலைத்து விடைதேடலில் காலத்தைச் செலவிடும் அவசியம் ஆதிமனிதனுக்கு இல்லை, ஆனால், இன்றைக்கு பல நேரங்களில் அதற்கான அவசியத்தை உணருகிறோம், இத்தேடலே ஒருவகையில் மனிதர் இயல்பை ஓரளவு கண்டறியும் முயற்சி.
மனிதப் பிறவி மண்ணிற் தோன்றிய காலத்தில் கண்ணிற்பட்ட சக விலங்கினங்களில் ஒருவனாக பிற உயிரினத்தைக் கொன்று தன்னுயிரை, தன்னுடலை வளர்த்த அம்மனித விலங்குதான் பின்னாட்களில் அதைக்கடந்து அவ்வப்போது தன்னாலோ, பிற உயிர்களாலோ துன்புறும் சக உயிரின் மீது கருணையுற்று, உதவமுற்படவோ, அல்லது தனது வன்செயலுக்குப் பலியாகும் உயிர் துடிப்பதைக்கண்டு ஒதுங்கிக்கொள்ளவோ செய்தது ; விளைவாக விலங்கினின்று வேறுபட்டவன் என்பதை மனிதன் உணரவும் செய்தான். ஆனால் இக்குணம் எல்லா மனிதருக்கும், எல்லா தருணங்களிலும் உண்டா, பொருந்துமா ?
காந்தியும் மனிதர், இடலரும் மனிதர் ஆனால் இருவரும் தேடிய, நடைமுறைபடுத்திய அரசியல் வேறு வேறு : ஒருவர் பல்லாயிரக் கணக்கான மனித உயிர்களை கொன்று குவித்தவர், மற்றவர் கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்றில் இறங்கி, பலகோடி மக்களுக்கு அரசியல் விடுதலையை மீட்டுத் தந்தவர். வரலாறு ஒருவரை போற்றுகிறது, இன்னொருவரை தூற்றுகிறது. இருவேறு பாதையை இவ்வரலாற்று மனிதர்கள் தேர்வு செய்யநேர்ந்ததற்கும் மனிதர் இயல்பு அல்லது இயற்கை சுபாவத்திற்கும் தொடர்புண்டெனில் எப்படி ?
மனித இயல்பு அல்லது சுபாவம் என்ற கருத்து, மனிதரின் ‘இயற்கை’ யான குணத்தை முன்நிறுத்தும் கருத்து, இதிலுள்ள பிரச்சினை அந்த இயற்கை சுபாவத்தை நம்மால் வரையறுத்து திட்டவட்டமாக உரைக்கவியலாதது.. ஓர் விலங்கினை வகைப்படுத்தி, அல்லது ஓர் தாவரத்தை வகைப்படுத்தி அதன் இயற்கைத் தன்மையை அல்லது செயல்பாட்டைத் தெளிவாக கூறமுடியும். ஆனால் பீட்டர் அல்லது அகம்மது அல்லது முருகன் அப்படியென்றோ இப்படியென்றோ வரையறுக்க நம்மால் ஆகாது.
ஆகத் திரும்பவும் நமக்குள் அந்த சிக்கலான கேள்வி ? காந்தியும் மனிதர், இடலரும் மனிதர், ஆபிரகாம் லிங்கனும் மனிதர் அலெக்சாண்டரும் மனிதர் ; கண்ணகியும் பெண் மாதவியும் பெண் ; மனிமேகலையும் பெண், அன்னை தெரேஸாவும் பெண் ; இவர்கள் அனைவருமே பகுதறியும் மனித விலங்குகள் ; ஆயினும் இவர்களின் இயற்கை சுபாவம் வேறாக இருந்திருக்கின்றன.
ஐந்தறிவு விலங்குகளை பொறுத்தவரை சில பிரத்தியேக பொதுப்பண்புகள் இருப்பது உண்மை. ஆனால் ஆறறிவு மனிதவிலங்குகளில் ஐரோப்பியர் அல்லது ஆசியர், கருப்பர் அல்லது வெள்ளையர், ஸ்பானிய மொழிபேசுகிறவர் அல்லது ஜப்பானியர் மொழியில் உரையாடுகிறவரென எவராக இருப்பினும் பொதுப்பண்புகளில் அதாவது உண்பது, உடுப்பது, உறங்குவது, குடும்பம், கணவன் மனைவி, மக்கள் உறவுகள் ஆகியவற்றுள் உலக நியதியைக் கடைபிடிப்பதில் வேறுபாடுகளில்லை. ஆயினும் மனிதர் இயல்பு, என வருகிறபோது மனிதர்க்கு மனிதர் வேறுபாடுகளைக் காண்கிறோம் ; இவ்வேறுபாட்டினை ஒரு குடும்பத்தில் உடன் பிறந்த சகோதர சகோதர்களிடங்கூட காணமுடியும். மகாபாரதத்தில் பாண்டவர்களோ இராமாயணத்தில் தசரதன் பிள்ளைகளோ ஒத்த இயல்பினரென சொல்ல இயலாதநிலை.
உடல் நிறமோ, பிறந்த மண்ணோ, பேசும் மொழியோ மனிதரைக் கணிக்க உதவுவதில்லை, நம்முடைய இயல்பே மனிதராகிய நம்முடைய அடையாளத்தைத் தீர்மானிக்கிறது, நாம் யாரென்கிற புதிரை விடுவிக்கிறது. எந்தவொரு மனிதனின் அடையாளமும் இம்மனித இயல்பை உள்ளடக்கியது, அதுவே அவனுடைய அவதாரத்திற்குக் காரணமாகிறது. இயல்பில் ஒரு சிலருடன் கைகோர்க்க வைப்பதும், வேறு சிலருடன் கைகலப்பில் அவனை நிறுத்துவதும் அவனுள் ஒளிந்திருக்கு இயற்கை சுபாவமே. அதேவேளை பெருவாரியான மனிதர்களின் இவ்வியல்பே அவனுடைய தேவைகள், அத்தேவையிலுள்ள அவசியம் சார்ந்து உரிமைகள் ; அவ்வுரிமைகளைப் பெற அவனுடைய சமூகம் சார்ந்த கடமைகள் ஆகியவற்றைத் தீர்மானிக்கவும் உதவுகின்றன.
தொடக்கக் கால மனிதரினத்திற்கு, இன்றைய நாகரீக மனிதருக்குள்ள பிரச்சினைகள் இருக்க வாய்ப்பில்லை. அவனுடைய சிந்தையில் எப்படி பசியாறுவது என்கிற கேள்வி இருந்ததேயன்றி, எதையுண்டு பசியாறுவதென்கிற கேள்வியில்லை. எதிரில் நிற்கும் மனிதன் குறித்த ஐயமோ, அச்சமோ எழ வாய்ப்பு அதிகமில்லை. இன்றைய மனிதன் நாகரீத்தில் தோய்ந்தவன், அவன் இயல்பில் அல்லது சுபாவத்தில் மனித நாகரீகம் கட்டமைத்த வேறுபாடு இருக்கிறது, அவன் இயல்பில், சுதந்திரம் என்கிற பாடபேதமிருக்கிறது. அவன் சுபாவத்தில் வரலாற்றின் எதிரொலி ஏற்படுத்தியுள்ள தாக்கமிருக்கிறது. மனிதரிடம் உள்ளுறையும் இயற்கை சுபாவத்தை சந்தேகிக்க வைப்பதே, மனித நாகரீகத்தில் தொடர்ந்து ஏற்பட்டுவரும் மாற்றங்களே. ஒவ்வொரு மனிதனுள்ளும அவனுடைய இயற்கையான குணமென்ற ஒன்று, அவன் அறியவந்த சுதந்திரமென்ற சொல் கட்டமைத்த பெருவெளி பண்பு மற்றொன்று, ஆக இருமேடைகளிலும் கதைநாயகனாக உலா வரவேண்டிய சூழல். இந்த இருவேடம் தரிக்கும் நிர்ப்பந்தம், இன்றைய மனிதர் வாழ்க்கையில் தவிர்க்க இயலாததாக இருப்பதே நமது இயல்பென்கிற தலையில் இறக்கப்பட்டுள்ள சுமை.
பகுதறிவு விலங்கென்கிற நவீன மனிதன் : இயற்கைப் பண்பும், மனிதப் பண்பும் இரண்டற கலந்தவன். இயற்கை பண்பென்பது இதுதான் அதுதான் என வரையறுக்க முடியாதது. மேற்கத்திய அறிவின்வழி, இயற்கை குணம் அல்லது ஒருயிரின் இயல்பு என்பது ஓர் வழிமுறை, ஒரு காரணி, ஓர் உயிர், ஒரு பொருள், ஒன்றின் சாரம் . “இயற்கை”, அதன் கிரேக்க சொல்லான “ஃபூசிஸ்” (Phusis)போலவே, தானாகவே வளர்வது, அது அறிவியல் மற்றும் மரபுக்கு எதிரானது. ஆனால் மனித உயிரிடத்தில் ஒருகணத்தில் எரிமலையாய் வெடித்து தன்னை அடையாளப்படுத்தக் கூடியது. கண்ணகி குடும்பப் பெண் என்கிற பொதுபண்பிற்குரியவள்., ஆனாலும் கணவன் கள்வனென குற்றம்சாட்டப்பட்டுக் கொலையுண்டான், என்கிற செய்திகேட்டு அவளுள் பொதிந்திருந்த இயற்கைசுபாவம் நீதி கேட்டு முடிமன்னனின் முன்னால் முழங்குகிறது., சிமொன் தெ பொவ்வார் என்கிற பிரெஞ்சுப் பெண்மணியை அவளுள் இருந்த பிரத்தியேக மனித இயல்பு ஆணுக்கு நிகர் பெண்ணெண குரலெழுப்ப தூண்டுகிறது.
ஆழ்ந்து நாம் சிந்திக்கிறபோது மனித உயிர் இயற்கையில் எதையும், எதைக்குறித்தும் சந்தேகிக்கும் ; தொடர்ந்து அதற்கு ஏன் எதற்கென்ற கேள்விக்கு விடை தேடும் சுபாவம் ; இறுதியில் அதற்குரிய அடையாளத்தை எட்டியதும் அவ்வுயிர் திருப்தியுறுகிறது. இப்பிரச்சினையில் வேடிக்கை என்னவெனில் மரம், செடிகொடி விலங்கினைப்போல மனித உயிர் இயற்கையின் ஓர் அங்கம், அதேவேளை மற்ற உயிரினங்களைப்போலன்றி, அவன் அல்லது அவளுக்குகுள்ளே இயற்கையென்கிற அடைமொழிக்குரிய சுபாவத்தை, இயல்பில் பெற்று தனித்து நிற்கிறான் அல்லது நிற்கிறாள், ஆனால் அதேமனிதன் ஏற்கனவே குறிப்பிட்டது போல தனது அறிவின் முதிர்ச்சியால், அவன் சார்ந்த சமூகத்தின் கூறுகளால் அவனுடைய இயற்கை குணத்திலிருந்து வேறுபடவும் முடிகிறது., அல்லது தன்ன்னியல்பை வெல்லவும் முடிகிறது. அப்படிவென்றவர்களே சரித்திரம் படைகிறார்கள்.
மனிதர்களும் விலங்குகளும், மார்ட்டின் ஹைடெகர் என்கிற ஜெர்மானிய தத்துவவாதியின் கருத்தின்படி, “உயிரினங்கள்” தான், ஆனால் மனிதர்கள் மட்டுமே “மனிதர்கள்” என்று பொதுப்ப்டையாக அழைக்கப்படுகிறார்கள். மாறாக விலங்குகளோ நாய், பூனை, குதிரை, கழுதை, புலி, புள்ளீமான் என தோற்றத்தின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றின் இயல்பும் அல்லது இயற்கைக் குணமும் அதற்கேற்ப வெவ்வேறாக உள்ளன. மனித உயிரோ நாயாக நரியாக, பசுவாக புலியாக இயல்பான அதேவேளை உறுதிபடுத்தவியாலாத விலங்காக வலம் வருகிறான். அவனை அல்லது நம்மை தோற்றத்தைக் கொண்டு வகைப் படுத்த இயலாது :
« மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில். » என்கிறது குறள்.
ஆக ஒருமனிதனின் இயற்கைப் பண்பை அல்லது அவனுடைய மனித இயல்பை ஆடைபோல அவன் தன்னை அலங்கரித்துக்கொண்ட கல்வியைக்கொண்டோ, செய்யும் தொழிலைக்கொண்டோ, பிறந்த நாடு அல்லது பேசும் மொழியைக் கொண்டோ அளவிட ஒருபோதும் உதவாது. அவன் உத்தமனா அய்யோக்கியனா துரியோதனனா தருமனா ; நகுலனா சகுனியா ? என்பதை காலமே உரசி அவர் யாரென நமக்கு உரைக்கும். அன்றியும் கூத்தாடிகளை அல்லது நாடக நடிகர்களை கர்ணன் என்றோ, கண்ணன் என்றோ ; பாஞ்சாலியென்றோ, குந்தியென்றோ அவர்கள் நாடகம்போடும் ஊரில் பார்வையாளர்கள் அவர்கள் தரிக்கும் வேடத்தை நம்பலாம்.. ஆனால் அவர்கள் சொந்த ஊருக்குத் திரும்பியதும் உள்ளூர்மக்களுக்கு அவர்கள் கர்ணனோ குந்தியோ அல்ல, கூத்தாடிகள். ஆகப் பொதுவில் மனிதவிலங்குகளில் தங்கள் இயற்கை சுபாவத்தை ஒளித்து உறவாடும் மனிதர்கள் அநேகர்.
ஓருண்மையை நாம் உணரவேண்டிய தருணமிது : ஏற்கனவே கூறியதுபோல கற்கால மனிதர்களின் இயல்பில் அல்லது இயற்கை சுபாவத்தில் அதிக பேதமில்லை. ஆனால் இன்றையை மனித சுபாவம் ஐந்தறிவு விலங்கினத்தின் அத்துணை குணங்களையும் தன்னகத்தே கொண்ட ஆறறறிவு விலங்கு. ஐந்தறிவு விலங்கிடம் அன்பு பாராட்டினால் தன்பிறவிக்குணத்திலிருந்து விடுபட்டு நம்மை நெருங்கி உறவாடும். ஆனால் மனிதவிலங்குகளை வகைபடுத்த இயலாத நிலை, ஒரு மனிதவிலங்கு மற்றொன்றை நெருங்குகையில் கவனம்தேவை. வாழ்க்கையென்ன கதையா, உத்தமன் யார், பொய்யன் யார முடிக்கும்போது தெரியவர. பகுத்தறிவு விலங்குகளில் சில பிற விலங்கினும் பார்க்க உயர்ந்தது என்பதை பொதுமறையாக எண்பிக்க முயற்சித்தபோதிலும் அவற்றை விரல்விட்டு என்ணிவிடலாம். காட்டு விலங்குகள் நாட்டு விலங்குகளாக நடமாடும் உலகில் வாழவேண்டிய நெருக்கடி. இன்றைய பகுத்தறிவு விலங்கு தன்னலத்தைக் கட்டிக்காக்கத் தெரிந்த தந்திரவிலங்கு. சகமனிதர் என்றாலும் நம்முடைய இயல்பை நாமே சரிவர நிர்வகிக்க இயலாத நிலையில், அண்டை மனிதரின் போட்டியையும் பொறாமையும், கோபத்தையும், அன்பையும், தந்திரத்தையும், பரிவையும் அளவிடமுடிந்தால் பிரச்சினைகளில்லை. அதற்கான தீர்வு பாரதி பாடுவதுபோல நமக்கும் :
மனதிலுறுதிவேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
—————————————————————-























