பிழைக்கத் தெரியணும் கிளியே – நா. கிருஷ்ணா

                (அழுவதும் சுகமே (1980) தொகுப்பிலிருந்து)

பட்டு நூல்களைத் தொட்டு, உணர்வு

இட்டுக் கற்பனைக் கோர்த்து

ஒட்டும் வண்ணத்துப்பூச்சி, அழகு

இட்டு படைத்தவன் அங்கே !             

இட்டச் சேலைகள் காட்டி, எங்கள்

இதயம் பூத்திட வைத்தீர், எனப்

பட்டமும் பெருமையும் பெற்று,  நல்ல

துட்டு சேர்ப்பவர் இங்கே !

வாட்டும் நெருப்பில் வெந்து, நல்ல

வாய்க்கினிய கறிகள் செய்து, சுகம்

ஊட்டும்  சுவைபல சேர்த்து, நள

விருந்து சமைப்பவன் அங்கே !

கோட்டும் சூட்டுமாய் வந்து, நன்கு

கேட்டு வாங்கி மிக உண்டு, ஏப்பம்

மீட்டும் இடைவெளியிற் சற்றே, விருந்து

வீட்டை புகழ்பவர் இங்கே !

பாட்டு தந்தவன் ஒருவன், வண்ணப்

படம் பிடிப்பவன் ஒருவன், மெருகு

ஊட்டும் திரைக்கதைக்கொருவன், எனக்

கூட்டு முயற்சிகள் அங்கே !

சாட்டை சொடுக்கும் அழகும், நடிகன்

சண்டை போடும் அழகும், கண்டு

கூட்டம் புரளுது இங்கே, அவனைக்

கும்பிட உருளுது இங்கே !

தஞ்சை பெரிய கோயில், அழகு

தாஜ் மகால் ஒத்த சான்றும், எழ

நெஞ்சைப் பிளந்தவர் கோடி, அவர்

நினைவில் நிற்பதில்லை கிளியே !

உழைக்க மட்டும் தெரிந்தால்-உன்னை

ஒதுக்கி மிதித்துப் பிறர் உயர்வார்

பிழைக்கத் தெரியவேணும் கிளியே நன்கு

பேசத் தெரிய வேணும் கிளியே !

  • நா. கிருஷ்ணா

அதிரியன் நினைவுகள்: தமிழில் வாசிக்க கிடைத்த கலைச்செல்வம்

திரு மாலன், பத்திரிகையாளர், மற்றும் எழுத்தாளர்

நம்மைப் புதியதோர் உலகத்திற்கு அழைத்துச் செல்கிறார் நாகரத்தினம் கிருஷ்ணா. உலகின் மிக முக்கியமான வரலாற்றுப் புனைவுகளில் ஒன்று மார்கெரித் யூர்செனாரின் *அதிரியன் நினைவுகள்* (Memoirs of Hadrian). மிகப் பழைய நூல் எனக்கு ஒரு வயதாக இருக்கும் போது பிரஞ்ச் மொழியில் வெளியானது. நான் வேலை தேடிக் கொண்டிருந்த நாட்களில் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பை நூலகங்களில் வாசித்திருக்கிறேன். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தமிழில் வாசிக்கக் கிடைத்தது இந்தக் கலைச் செல்வத்தைத் தமிழுக்குக் கொண்டு வந்திருக்கும் நாகரத்தினம் கிருஷ்ணாவிற்கு நன்றி

தமிழில் நீங்கள் வாசித்திருக்கக் கூடிய வரலாற்றுப் புனைகதைகளிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது. தமிழில் எழுதப்படும் வரலாற்றுப் புனைவுகள் பக்கத்திற்குப் பக்கம் அல்லது அத்தியாயத்திற்கு அத்தியாயம் திடுக்கிடும் திருப்பங்கள், பரபரப்பூட்டும் செய்திகள்  கொண்டிருக்கும். கல்கியின் பொன்னியின் செல்வனைப் படித்தவர்கள் இதை அறிவார்கள்.

ஆனால். இது ரோமானியப் பேரரசர் அதிரியன் வாழ்க்கையையும் மனதையும் ஆழமாக ஆராயும் நாவல், இது எழுதப்பட்டிருக்கும் விதமே வழக்கத்திலிருந்து வேறுபட்டது. அதிரியன் தனது வாரிசும்  தத்தெடுக்கப்பட்ட பேரனுமான மார்கஸ் ஆரேலியஸுக்கு எழுதும் கடிதமாக இது விரிகிறது. அதனால் அதிரியன் நம்முடன் பேசுவது போன்ற அனுபவத்தை நமக்குக் கொடுக்கிறது. இது தமிழில் நமக்குக் கிடைத்திராத வாசிப்பு அனுபவம்.

சராசரித் தமிழ் வாசகர்கள் ரோம சாம்ராஜ்யத்தின் வரலாற்றை அறிந்திருக்க மாட்டார்கள் என்றே எண்ணுகிறேன். உலகின் சுவாரஸ்யமான வரலாறுகளில் அது ஒன்று. இது, 2ஆம் நூற்றாண்டு ரோமின் பின்னணியில் அதிரியன் ஆட்சி, அவரது தனிப்பட்ட உறவுகள், சிந்தனைகளை விவரிக்கிறது. வரலாற்றை அறிந்தவர்களுக்கும்  மொழிபெயர்ப்பின் எழுத்து நடை, வரலாற்றுப் பின்னணிக் குறித்த அலசல், இவற்றின் காரணமாக இந்த நாவல் பிடிக்கும்

நாவல் கருப்பொருள் சிக்கலானது ஆனால் நெடிதுயர்ந்த தென்னை மீதேறி அதன் காயைப் பறித்துச் சீவி உரித்து, உடைத்து உள்ளிருக்கும் பருப்பைக் கீறித் தருவது போல கடும் உழைப்பில் விளைந்த கனி போன்ற நடையில் நாகரத்தினம் கிருஷ்ணா அதனை நாம் வாசிக்க எளிதாக்கித் தருகிறார், இதற்கெல்லாம் வாசகன் மீதான பிரியம் மட்டுமே காரணமாக இருக்க முடியும்

நாம் ஏன் இந்த நாவலை வாசிக்க வேண்டும்? அதற்கான விடை இதுதான். இந்த நாவல் அதிரியன் குரல் மூலம் உலகளாவிய மனித அனுபவங்களை ஆராய்கிறது. மனித மனத்தைப் புரிந்து கொள்ள விழைகிற எவரும் இதனை வாசிக்க வேண்டும். இந்த நாவலின் ஒரு முக்கியப் பொருண்மை என நான் கருதுவது தலைமை, அதிகாரம் இவற்றின் சுமை. ரோமானியப் பேரரசை உறுதிப்படுத்த முயன்ற அதிரியனை ஆட்சி என்ற பொதுக் கடமை அவனுள் நிகழ்த்தும் தனிப்பட்ட மாற்றங்கள்  இதில் சித்தரிக்கப்படுகிறது. நல்லது, கெட்டது இரண்டுமே காலப்போக்கில் ஒரு வழக்கமாக மாறிவிடுகிறது,முகமூடி, காலப்போக்கில், முகமாகவே மாறிவிடுகிறது

நாவலின் இன்னொரு இழை காதலும் இழப்பும். காதல் என்பதை ‘வியத்தகு மனித உறவாக’ப் பார்க்கிறார் அதிரியன், ‘சில புதிரான  அற்புத நிகழ்வுகளுக்கு முன்பு மனிதர் தருக்கம் கூனிக் குறுகுவதுண்டு’ என்ற அவரது அவதானிப்பு என்பதைக் காலம் இன்றுவரை மெய்ப்பித்து வருகிறது.காதலில் உடலின் பங்கு பற்றியும் பேசுகிறார். காமம் பற்றி அதிரியன் முன்வைக்கும் கருத்துக்கள் அப்பட்டமான உண்மைகளைப் பேசுகிறது. “காமம் உடலில் ஆரம்பித்து உயிரில் முடிந்து, மனிதனை முழுமையாக வசீகரிக்கவல்ல ஓர் அபூர்வ விளையாட்டு, அத்தகைய மனிதனைவேண்டி எனது வாழ்க்கையின் ஒரு பகுதியை இழக்கவும் நான் தயார். காதற் பரவசத்தை விவரிப்பது கடினம் ; வார்த்தைளின்றித் தவிக்கிறேன். புணர்ச்சி தரும் இன்பம் முரண்பாடுகளாலானது ; அதில் வெப்பமுமுண்டு; குளிர்ச்சியுமுண்டு ; நெருக்கமும் உண்டு; மூர்க்கமும் உண்டு ; உடல்படும் வேதனைகளுமுண்டு, உயிர்களெழுப்பும் சப்தமும் உண்டு” என்கிறார் அதிரியன்

ஆனால் இழப்பைப் பற்றி இவ்வளவு அப்பட்டமாகப் பேசமுடிவதில்லை அவரது அன்பித்குரிய நண்பர்  ஆண்ட்டினஸுடைய மரணம் அவரை ஆழமாக பாதித்தது.  நெருங்கியவர்களுடைய மரணம், உணர்ச்சி, தத்துவச் சிந்தனை என்ற முரணான இரண்டையும் ஒரே நேரத்தில் விளைத்து நம்மைத் தாக்குபவை. ஆங்கிலத்தில் யூர்செனார் இந்தப் பகுதியை பரபரப்பைத் தவிர்த்து உணர்ச்சி ஆழத்துடன், கையாண்டிருந்தார் நாகரத்தினம் கிருஷ்ணாவும் அதற்கு இம்மி அளவும் குறையாத திறமையை இந்தப் பகுதியை மொழிபெயர்த்திருக்கிறார். மிகச் சவாலான இந்த இடத்தை கிருஷ்ணா கையாண்டிருக்கும் விதம் அவர் அதிரியனாகவே ஆகி எழுதியதைப் போல உணர்வுகளின் தீவிரத்தையும் இழப்பின் தாக்கத்தையும் உணர்த்துகிறது. .

இறந்து போன உயிர் நண்பனுடைய பெயரில் ஒரு நகரம் உருவாக்கப்பட்டதைப் பற்றி அதிரியன் எழுதுகிறார்: “அவன் நினைவாக ஆண்ட்டினோபோலிஸ் என்றொரு நகருக்கு அடிக்கல் நாட்டப்பட்டது .  ஆனால் அதுகூட, புரட்டுவணிகர்களுக்குப் புகலிடமாகவும் ; அரசாங்க அலுவலர்கள் முறையற்றவகையில் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தவும் ; விபச்சாரத்திற்கும், ஒழுங்கின்மைக்கும், தங்கள் உறவுகள் மரணத்திற்குக் கண்ணீர் சிந்திய மறுநாள் அவர்களை மறந்துபோகிற கோழைகளுக்கும் ; இடமளிக்கிற  மற்றுமொரு நகரமாகத்தான் இருக்கப்போகிறது ;  இந்நிலையில் இந்நகரத்தை  நிர்மாணிக்கும் செயல் அபத்த விளையாட்டன்றி வேறேன்ன ?”

ஒருநிமிடம் யோசித்துப் பாருங்கள். அனேகமாக நமது பெருநகரங்கள் எல்லாவற்றிலும் காந்தியின் பெயரால் ஒரு வீதி -அநேக இடங்களில் அது பெரிய கடை வீதி – அமைந்திருக்கிறது.  அவை காந்தியின் இயல்பையும் செய்லையும் பிரதிபலிக்கின்றனவா? பிரதிநிதிக்கின்றனவா? அல்லது அங்கு நடக்கிற செயல்கள் பெரும்பாலும் அதிரியன் மேலே விவரித்திருக்கிற அதே செயல்கள்களாகத்தான் இருக்கின்றனவா? இரண்டாம் நூற்றாண்டில் தொடங்கி இன்றுவரை அந்த ‘அபத்த விளையாட்டை’ விளையாடிக் கொண்டிருக்கிறோம்.

இந்த நூலை வாசித்துக் கொண்டுவரும் போது நம்மில் பலர் அதிரியனுக்கு நெருக்கமாக உணர்வோம். அதற்குக் காரணம் நாகரத்தினம் கிருஷ்ணாவின் நடை

சில உதாரணங்கள்:

என்னுடைய சிந்தனைக்குக் கடுமையான பயிற்சியை அளிக்க வல்ல குறிப்பாக  மிகவும் சிக்கலான, தெளிவற்ற கவிதைகளையும் சுவைத்துள்ளேன்.  கவிஞர்கள் அண்மைக் காலங்களைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம் அல்லது பழைய ஆசாமிகளாகவும் இருக்கலாம் ஆனால் எனக்குப் புத்தம்புதுப் பாதைகளைக் காட்டுகிறவர்களாகவோ அல்லது நான் தொலைத்த பாதைகளைத் திரும்பப்பெற உதவுகின்றவர்களாகவோ அவர்கள் இருக்கவேண்டும். அப்போதெல்லாம் எனது விருப்பம், குறிப்பாக கவிதைக் கலையில் உடனடியாக புலன்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆக்கங்களாக இருந்தன  என்பதையும் தெரிவிக்க வேண்டும்

நான்  மனிதர்கள் மீது பிரயோகிக்கத் தயங்கும் வெட்கக்கேடான அடக்குமுறைகளை மாணவர்கள் மீது பிரயோகித்தனர். குறுகிய ஞானவரம்பிற்குள் அடைபட்டுக்கிடந்த அந்த ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் நெருங்கிய தங்கள் சக ஊழியர்களை வெறுத்தனர் ; பிறவிஷயங்களிலும்  அவர்கள் அறிவு, குறுகியதென்றே சொல்லவேண்டும். எனினும் அகங்காரத்திலும் குறைவின்றி இருந்ததால் உச்சக்குரலில் வார்த்தைப் போரில் இறங்குவர்.

எந்த  அளவிற்கு சுதந்திரமானவனாகச் செயல்பட்டேனோ  அந்த அளவிற்குப் அடிபணியவும் செய்தேன் ; இத்தகைய முனைப்பைப் பிறரிடம் கணமுடியாது  என்பதொன்றுதான்  சராசரி மனிதர்களைக் காட்டிலும் என்னை உயர்ந்தவனாக  நான் உணரும்புள்ளி. ஏறக்குறைய மனிதர்கள்  அனைவருமே தங்களுக்குரிய சுதந்திரத்தை மட்டுமின்றி   உண்மையான அடிமைப் பண்பையும் அறியத் தவறியவர்கள்.

முதன்முறையாக இல்வாழ்க்கை என்கிற அமைப்பு எனக்கு அறிமுகம். அவ்வாழ்க்கை கிட்டத்தட்ட திணிக்கப்பட்டதொரு வாழ்க்கையெனில் மிகையில்லை.

அச்சம்தரும் கற்பனைகள், நம்பிக்கை அளிக்கும் மாயத் தோற்றங்களைப்போலவே அபத்தமானவை 

நேர்த்தி, துல்லியம், மற்றும் ஆழத்தால் அவரது நடை தனித்து நிற்கிறது. இது வாசகர்களை அதிரியன் உள் உலகத்தை நேரடியாக அனுபவிக்க அனுமதிக்கிறது. அவரது அழகான மற்றும் அர்த்தமுள்ள வாக்கியங்களை உருவாக்கும் திறன் அதற்கு மெருகூட்டுகிறது

*அதிரியன் நினைவுகள்*  பிரஞ்சு மொழியில் வெளியிடப்பட்டபோது உடனடி வெற்றியைப் பெற்றது, அதன் இலக்கிய மதிப்பிற்காகவும் நுட்பத்திற்காகவும் விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்றது.

தமிழிலும் அது நடக்கும். நாகரத்தினம் கிருஷ்ணாவிற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

மனிதம்: மனிதர் இயல்பு

  • நாகரத்தினம் கிருஷ்ணா

னிதம் அல்லது மானுடம் என்றால் என்ன?” என்கிற கேள்வி மிகவும் சிக்கலானது. இக்கேள்வியில் தன்னைத் தொலைத்து விடைதேடலில் காலத்தைச் செலவிடும் அவசியம் ஆதிமனிதனுக்கு இல்லை, ஆனால், இன்றைக்கு பல நேரங்களில் அதற்கான அவசியத்தை உணருகிறோம், இத்தேடலே ஒருவகையில் மனிதர் இயல்பை ஓரளவு கண்டறியும் முயற்சி.   

 மனிதப் பிறவி மண்ணிற் தோன்றிய காலத்தில் கண்ணிற்பட்ட சக விலங்கினங்களில் ஒருவனாக பிற  உயிரினத்தைக் கொன்று தன்னுயிரை, தன்னுடலை வளர்த்த அம்மனித விலங்குதான் பின்னாட்களில் அதைக்கடந்து அவ்வப்போது தன்னாலோ, பிற உயிர்களாலோ துன்புறும் சக உயிரின் மீது கருணையுற்று, உதவமுற்படவோ, அல்லது தனது வன்செயலுக்குப் பலியாகும் உயிர் துடிப்பதைக்கண்டு ஒதுங்கிக்கொள்ளவோ செய்தது ; விளைவாக விலங்கினின்று வேறுபட்டவன் என்பதை மனிதன் உணரவும் செய்தான். ஆனால் இக்குணம் எல்லா மனிதருக்கும், எல்லா தருணங்களிலும் உண்டா, பொருந்துமா ?

காந்தியும் மனிதர், இடலரும் மனிதர் ஆனால் இருவரும் தேடிய, நடைமுறைபடுத்திய அரசியல் வேறு வேறு : ஒருவர் பல்லாயிரக் கணக்கான மனித உயிர்களை கொன்று குவித்தவர், மற்றவர் கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்றில் இறங்கி, பலகோடி மக்களுக்கு அரசியல் விடுதலையை மீட்டுத் தந்தவர். வரலாறு ஒருவரை போற்றுகிறது, இன்னொருவரை தூற்றுகிறது. இருவேறு பாதையை இவ்வரலாற்று மனிதர்கள் தேர்வு செய்யநேர்ந்ததற்கும் மனிதர் இயல்பு அல்லது இயற்கை சுபாவத்திற்கும் தொடர்புண்டெனில் எப்படி ?

மனித இயல்பு அல்லது சுபாவம் என்ற கருத்து, மனிதரின்  ‘இயற்கை’ யான குணத்தை முன்நிறுத்தும் கருத்து, இதிலுள்ள பிரச்சினை அந்த இயற்கை சுபாவத்தை நம்மால் வரையறுத்து திட்டவட்டமாக உரைக்கவியலாதது.. ஓர் விலங்கினை வகைப்படுத்தி, அல்லது ஓர் தாவரத்தை வகைப்படுத்தி அதன் இயற்கைத் தன்மையை அல்லது செயல்பாட்டைத் தெளிவாக கூறமுடியும். ஆனால் பீட்டர் அல்லது அகம்மது அல்லது முருகன் அப்படியென்றோ இப்படியென்றோ வரையறுக்க நம்மால் ஆகாது.

ஆகத் திரும்பவும் நமக்குள் அந்த சிக்கலான கேள்வி ? காந்தியும் மனிதர், இடலரும் மனிதர்,  ஆபிரகாம் லிங்கனும் மனிதர் அலெக்சாண்டரும் மனிதர் ; கண்ணகியும் பெண் மாதவியும் பெண் ; மனிமேகலையும் பெண், அன்னை தெரேஸாவும் பெண் ; இவர்கள் அனைவருமே பகுதறியும் மனித விலங்குகள் ; ஆயினும் இவர்களின் இயற்கை சுபாவம் வேறாக இருந்திருக்கின்றன.

ஐந்தறிவு விலங்குகளை பொறுத்தவரை சில பிரத்தியேக பொதுப்பண்புகள் இருப்பது உண்மை. ஆனால் ஆறறிவு மனிதவிலங்குகளில் ஐரோப்பியர் அல்லது ஆசியர், கருப்பர் அல்லது வெள்ளையர், ஸ்பானிய மொழிபேசுகிறவர்  அல்லது ஜப்பானியர் மொழியில் உரையாடுகிறவரென எவராக இருப்பினும்  பொதுப்பண்புகளில் அதாவது உண்பது, உடுப்பது, உறங்குவது, குடும்பம், கணவன் மனைவி, மக்கள் உறவுகள் ஆகியவற்றுள் உலக நியதியைக் கடைபிடிப்பதில்  வேறுபாடுகளில்லை. ஆயினும் மனிதர் இயல்பு, என வருகிறபோது  மனிதர்க்கு மனிதர் வேறுபாடுகளைக் காண்கிறோம் ; இவ்வேறுபாட்டினை ஒரு குடும்பத்தில் உடன் பிறந்த சகோதர சகோதர்களிடங்கூட காணமுடியும். மகாபாரதத்தில் பாண்டவர்களோ இராமாயணத்தில் தசரதன் பிள்ளைகளோ ஒத்த இயல்பினரென சொல்ல இயலாதநிலை.

உடல் நிறமோ, பிறந்த மண்ணோ, பேசும் மொழியோ மனிதரைக் கணிக்க உதவுவதில்லை, நம்முடைய இயல்பே மனிதராகிய நம்முடைய   அடையாளத்தைத் தீர்மானிக்கிறது, நாம் யாரென்கிற புதிரை விடுவிக்கிறது. எந்தவொரு மனிதனின் அடையாளமும் இம்மனித இயல்பை உள்ளடக்கியது, அதுவே அவனுடைய அவதாரத்திற்குக் காரணமாகிறது. இயல்பில் ஒரு சிலருடன் கைகோர்க்க வைப்பதும், வேறு சிலருடன் கைகலப்பில் அவனை நிறுத்துவதும் அவனுள் ஒளிந்திருக்கு இயற்கை சுபாவமே. அதேவேளை பெருவாரியான மனிதர்களின் இவ்வியல்பே அவனுடைய தேவைகள், அத்தேவையிலுள்ள அவசியம் சார்ந்து உரிமைகள் ; அவ்வுரிமைகளைப் பெற அவனுடைய சமூகம் சார்ந்த கடமைகள் ஆகியவற்றைத் தீர்மானிக்கவும் உதவுகின்றன.

தொடக்கக் கால மனிதரினத்திற்கு, இன்றைய நாகரீக மனிதருக்குள்ள பிரச்சினைகள் இருக்க வாய்ப்பில்லை. அவனுடைய சிந்தையில் எப்படி பசியாறுவது என்கிற கேள்வி  இருந்ததேயன்றி, எதையுண்டு பசியாறுவதென்கிற கேள்வியில்லை. எதிரில் நிற்கும் மனிதன் குறித்த ஐயமோ, அச்சமோ எழ வாய்ப்பு அதிகமில்லை. இன்றைய மனிதன் நாகரீத்தில் தோய்ந்தவன், அவன் இயல்பில் அல்லது சுபாவத்தில் மனித நாகரீகம் கட்டமைத்த வேறுபாடு இருக்கிறது, அவன் இயல்பில், சுதந்திரம் என்கிற பாடபேதமிருக்கிறது. அவன் சுபாவத்தில் வரலாற்றின் எதிரொலி ஏற்படுத்தியுள்ள தாக்கமிருக்கிறது. மனிதரிடம் உள்ளுறையும் இயற்கை சுபாவத்தை சந்தேகிக்க வைப்பதே, மனித நாகரீகத்தில் தொடர்ந்து ஏற்பட்டுவரும் மாற்றங்களே. ஒவ்வொரு மனிதனுள்ளும அவனுடைய இயற்கையான குணமென்ற ஒன்று, அவன் அறியவந்த சுதந்திரமென்ற சொல் கட்டமைத்த பெருவெளி பண்பு மற்றொன்று, ஆக இருமேடைகளிலும் கதைநாயகனாக உலா வரவேண்டிய சூழல். இந்த இருவேடம் தரிக்கும் நிர்ப்பந்தம், இன்றைய மனிதர் வாழ்க்கையில் தவிர்க்க இயலாததாக இருப்பதே நமது இயல்பென்கிற தலையில் இறக்கப்பட்டுள்ள சுமை.

பகுதறிவு விலங்கென்கிற நவீன மனிதன் : இயற்கைப் பண்பும், மனிதப் பண்பும் இரண்டற கலந்தவன். இயற்கை பண்பென்பது இதுதான் அதுதான் என வரையறுக்க முடியாதது. மேற்கத்திய அறிவின்வழி, இயற்கை குணம் அல்லது ஒருயிரின் இயல்பு என்பது  ஓர் வழிமுறை, ஒரு காரணி, ஓர் உயிர், ஒரு பொருள், ஒன்றின் சாரம் .  “இயற்கை”, அதன் கிரேக்க சொல்லான “ஃபூசிஸ்” (Phusis)போலவே, தானாகவே வளர்வது,  அது அறிவியல் மற்றும் மரபுக்கு எதிரானது.  ஆனால் மனித உயிரிடத்தில் ஒருகணத்தில் எரிமலையாய் வெடித்து தன்னை அடையாளப்படுத்தக் கூடியது. கண்ணகி குடும்பப் பெண் என்கிற பொதுபண்பிற்குரியவள்., ஆனாலும் கணவன் கள்வனென குற்றம்சாட்டப்பட்டுக் கொலையுண்டான், என்கிற செய்திகேட்டு அவளுள் பொதிந்திருந்த இயற்கைசுபாவம் நீதி கேட்டு முடிமன்னனின் முன்னால் முழங்குகிறது., சிமொன் தெ பொவ்வார் என்கிற பிரெஞ்சுப் பெண்மணியை அவளுள் இருந்த பிரத்தியேக மனித இயல்பு ஆணுக்கு நிகர் பெண்ணெண குரலெழுப்ப தூண்டுகிறது.

 ஆழ்ந்து நாம் சிந்திக்கிறபோது மனித உயிர் இயற்கையில் எதையும், எதைக்குறித்தும் சந்தேகிக்கும் ; தொடர்ந்து அதற்கு ஏன் எதற்கென்ற கேள்விக்கு விடை தேடும் சுபாவம் ; இறுதியில் அதற்குரிய அடையாளத்தை எட்டியதும் அவ்வுயிர் திருப்தியுறுகிறது. இப்பிரச்சினையில் வேடிக்கை என்னவெனில் மரம், செடிகொடி விலங்கினைப்போல மனித உயிர் இயற்கையின் ஓர் அங்கம், அதேவேளை மற்ற உயிரினங்களைப்போலன்றி, அவன் அல்லது அவளுக்குகுள்ளே இயற்கையென்கிற அடைமொழிக்குரிய சுபாவத்தை, இயல்பில் பெற்று தனித்து நிற்கிறான் அல்லது நிற்கிறாள், ஆனால் அதேமனிதன் ஏற்கனவே குறிப்பிட்டது போல தனது அறிவின் முதிர்ச்சியால், அவன் சார்ந்த சமூகத்தின் கூறுகளால் அவனுடைய இயற்கை குணத்திலிருந்து வேறுபடவும் முடிகிறது., அல்லது தன்ன்னியல்பை வெல்லவும் முடிகிறது. அப்படிவென்றவர்களே சரித்திரம் படைகிறார்கள்.

மனிதர்களும் விலங்குகளும், மார்ட்டின் ஹைடெகர் என்கிற ஜெர்மானிய தத்துவவாதியின் கருத்தின்படி, “உயிரினங்கள்” தான், ஆனால் மனிதர்கள் மட்டுமே “மனிதர்கள்” என்று பொதுப்ப்டையாக அழைக்கப்படுகிறார்கள். மாறாக  விலங்குகளோ நாய், பூனை, குதிரை, கழுதை, புலி, புள்ளீமான் என தோற்றத்தின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றின் இயல்பும் அல்லது இயற்கைக் குணமும் அதற்கேற்ப வெவ்வேறாக உள்ளன. மனித உயிரோ நாயாக நரியாக, பசுவாக புலியாக இயல்பான அதேவேளை உறுதிபடுத்தவியாலாத விலங்காக வலம் வருகிறான். அவனை அல்லது நம்மை தோற்றத்தைக் கொண்டு வகைப் படுத்த இயலாது :

« மக்களே போல்வர் கயவர் அவரன்ன
      ஒப்பாரி யாங்கண்ட தில்
.  »  என்கிறது குறள்.

ஆக ஒருமனிதனின் இயற்கைப் பண்பை அல்லது அவனுடைய மனித இயல்பை ஆடைபோல அவன் தன்னை அலங்கரித்துக்கொண்ட கல்வியைக்கொண்டோ, செய்யும் தொழிலைக்கொண்டோ, பிறந்த நாடு அல்லது  பேசும் மொழியைக் கொண்டோ அளவிட ஒருபோதும் உதவாது. அவன் உத்தமனா அய்யோக்கியனா துரியோதனனா தருமனா ; நகுலனா சகுனியா ? என்பதை காலமே உரசி அவர் யாரென நமக்கு உரைக்கும். அன்றியும் கூத்தாடிகளை அல்லது நாடக நடிகர்களை கர்ணன் என்றோ, கண்ணன் என்றோ ; பாஞ்சாலியென்றோ, குந்தியென்றோ அவர்கள் நாடகம்போடும் ஊரில் பார்வையாளர்கள் அவர்கள் தரிக்கும் வேடத்தை நம்பலாம்.. ஆனால் அவர்கள் சொந்த ஊருக்குத் திரும்பியதும் உள்ளூர்மக்களுக்கு அவர்கள் கர்ணனோ குந்தியோ அல்ல, கூத்தாடிகள்.  ஆகப் பொதுவில் மனிதவிலங்குகளில் தங்கள் இயற்கை சுபாவத்தை ஒளித்து உறவாடும் மனிதர்கள் அநேகர்.

ஓருண்மையை நாம் உணரவேண்டிய தருணமிது : ஏற்கனவே கூறியதுபோல கற்கால மனிதர்களின் இயல்பில் அல்லது இயற்கை சுபாவத்தில் அதிக பேதமில்லை. ஆனால் இன்றையை மனித சுபாவம் ஐந்தறிவு விலங்கினத்தின் அத்துணை குணங்களையும் தன்னகத்தே கொண்ட ஆறறறிவு விலங்கு. ஐந்தறிவு விலங்கிடம் அன்பு பாராட்டினால் தன்பிறவிக்குணத்திலிருந்து விடுபட்டு நம்மை நெருங்கி உறவாடும். ஆனால் மனிதவிலங்குகளை வகைபடுத்த இயலாத நிலை, ஒரு மனிதவிலங்கு மற்றொன்றை நெருங்குகையில் கவனம்தேவை. வாழ்க்கையென்ன கதையா, உத்தமன் யார், பொய்யன் யார முடிக்கும்போது தெரியவர. பகுத்தறிவு விலங்குகளில் சில  பிற  விலங்கினும் பார்க்க உயர்ந்தது என்பதை பொதுமறையாக எண்பிக்க முயற்சித்தபோதிலும் அவற்றை விரல்விட்டு என்ணிவிடலாம்.  காட்டு விலங்குகள் நாட்டு விலங்குகளாக நடமாடும் உலகில் வாழவேண்டிய நெருக்கடி. இன்றைய பகுத்தறிவு விலங்கு தன்னலத்தைக் கட்டிக்காக்கத் தெரிந்த தந்திரவிலங்கு. சகமனிதர் என்றாலும் நம்முடைய இயல்பை நாமே சரிவர நிர்வகிக்க இயலாத நிலையில், அண்டை மனிதரின் போட்டியையும் பொறாமையும், கோபத்தையும், அன்பையும், தந்திரத்தையும், பரிவையும் அளவிடமுடிந்தால் பிரச்சினைகளில்லை. அதற்கான தீர்வு பாரதி பாடுவதுபோல நமக்கும் :   

மனதிலுறுதிவேண்டும்,
     வாக்கினி லேயினிமை வேண்டும்;
     நினைவு நல்லது வேண்டும்,
     —————————————————————-

ஆடை, வடிவம், அழகு  சங்கம் காட்டும் தோற்றம்-      நா. கிருஷ்ணா                 

ஆடை, வடிவம், அழகு சங்கம் காட்டும் தோற்றம் என்கிற இந்நூல் புதுச்சேரி பாரதுதிதாசன் மகளிர் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் ஏ. இராஜலட்சுமியின் ஆய்வு நூல். சங்க காலம், பெண்கள் இருதரப்பினரையும் முன்வைத்து அவர் எழுதியுள்ள பிறநூல்களை வாசித்தோருக்கு இந்நூலின் பெருமை சொல்லாமலே விளங்கும். 

« அழகு இந்தப் பிரபஞ்சத்தின் செய்தி. உண்மையுமாய் ஒளியுமாய் உணர்வையும் அறிவையும் கவர்ந்து உயிரில் கலக்கும் செய்தி. சமூக – பொருளாதார – பண்பாட்டின் நிகழ்வாய் அழகு பற்றிய செய்தி காலந்தோறும் பற்பல வடிவங்களில் வெளிப்பட்டு வந்திருக்கிறது. குறிப்பிட்ட சூழமைவுகளோடும், குறிப்பிட்ட பின்புலங்க்களோடும் வடிவமைக்கப்பட்டும், கண்டறியப்பட்டும் வந்திருக்கிற அழகினுடைய ஆற்றல் அறிவுப்புலனையும், உணர்வு நிலையினையும் இலக்கியமாக ஆக்குகிறது. » மேற்கண்ட வரிகள் தமிழறிஞர் தி.சு. நடராசன் அவர்களுக்குச் சொந்தமானவை. ‘ ஆடை,வடிவம், அழகு சங்கம் காட்டும் தோற்றம்’ என்கிற இந்த நூலை வாசிக்கக் கையிலெடுத்தபோது, நூலாசிரியரின் முயற்சியை, இப்பிரபஞ்சத்தின் அழகியலைப் புரிந்துகொள்ளும் நுட்பமாகவே பார்க்கிறேன்.

சங்கத்தமிழ், உலக இலக்கிய அழகியலில் முன்னத்தி ஏர், மொழிக்கலையின் வண்ணத்திரை. அதன் அடிச்சுவட்டில் கால்பதித்து கரையேறி, தமிழ்க்கள்ளை மாந்தி, பிறருக்கும் பகுத்து நம் தமிழ்க் கலைவாணியைக் கொண்டாடிய பெருமக்களையும், அவர்கள் படைப்புகளையும் அறிவோம். இங்கே நூலாசிரியர் ‘ஆடையை’ அலகாகக்கொண்டு சங்கத்தமிழின் பெருமையை பேசுவதோடன்றி, சங்கத் தமிழனின் வாழ்வியலையும் படம்பிடித்து காட்டுகிறார். 

மனிதரின் அடிப்படைதேவைகள் மூன்றென சொல்லப்படுகிறது அவை உணவு, உடை, உறையுள். மூன்றும் மனிதர் வளர்ச்சியை, பண்பாட்டை மதிப்பிடும் காரணிகள். இவைமூன்றில் உணவும், இருப்பிடமும் அத்தியாவசியமானவை. என்கிறபோதும், ஆடை விலங்கிடமிருந்து மனிதரை வேறுபடுத்தும் காரணி ; முன்பின் அறிந்திராத மனிதர்களிடத்தில் நம்மைப் பற்றி உயர்த்தியோ தாழ்த்தியோ முன்மொழியும் கட்டியக்காரன். சுருங்கக் கூறின் ஒருவனை அல்லது ஒருத்தியை பார்த்தகணத்தில் ஒதுங்கிச் செல்லவோ அல்லது மரியாதைச் செலுத்தவோ காரணமாக இருப்பது ஆடை. இச்சக்தி உணவுக்கோ, இருப்பிடத்திற்கோ இல்லை. ஆடை வாய்திறந்து, யாசிக்கவேண்டியதில்லை, அதற்குரிய மரியாதையை மௌனமொழியில் ஈட்டிக்கொள்ளும் வல்லமைகொண்டது.    ஆடைக்கென்று ஒருசமூகத்தில் பன்முக அடையாளங்களுண்டு. அது தனி மனிதனின், அல்லது அவனுடைய இனத்தின் அடையாள வெளிப்பாடு. ஆணோ பெண்ணோ- அவர்கள் சார்ந்த சமூகத்தின் பின்புலத்தில், மதிப்பிடவும், தகுதியை நிர்ணயிக்கவும் அணிந்துள்ள ஆடை காரணமாகிறது. மனித உடலுக்கு ஆடைதரும் நன்மையென்ன என பார்க்கிறபொழுது, நாம் வாழும் இடத்தின் தட்பவெப்பத்திலிருந்து மட்டுமின்றி பிற மனிதர்களின் விமர்சனங்களிலிருந்தும் நம்மைக் காக்கும் கவசம். 

சங்க இலக்கியத்தை முன்வைத்து ஆடை அழகியலின் பன்முகத்தன்மையை ஆய்வுசெய்துள்ள நூலாசிரியர் கொடுத்துள்ள தலைப்புகள் : 1. தழையாடை உருவாக்க மரபு. 2. சங்க கால புலைத்தியும் அவர் தம் வாழ்நிலையும் 3. தழையாடை-பணி-மகளிர் 4. வெண்மை தமிழ் ஆடை மரபின் தனித்துவம் 5. புலமையும் வறுமையும் 6. தழையாடை அணியும் முறை 7. உடுக்கையும் உடுத்தியவரும் 8. பொன்னாடையும் சமூக கருத்தாட்டமும் 9. சிதாஅர் 10. தலைவனும் கையுறையும் 11. பருத்திப் பெண்டிர் 12. தமிழர் ஆடை மரபில் கலிங்கம் 13. சங்க மரபில் ஆடை . இவற்றின் சாரத்தைக் கீழ்க்கண்ட வகையில் அணுகலாம்.

1. சங்க காலத்தில் ஆடைகள் :

« சங்கால மக்கள் என்னென்ன ஆடைகளை உடுத்தியிருந்தார்கள் என்பதைத் திட்டவட்டமாக அறிய இயலவில்லை » என்கிற பேராசிரியர் மா. இராசமாணிக்கனாரின் கருத்தை மேற்கோளாகக் காட்டியிருப்பினும், « தோலாடை, மரவுரி எனத் தொடங்கிய ஆடையின் வளர்ச்சி இன்றைய மனிதர்களைக் காட்டிலும், ஆதிக்குடிகளிடம் சமூகப்படிநிலையை எதிரொலிக்கும் அடையாளமாகவும் வழக்கில் இருந்துள்ளன என்பதையும், ஆடையென்ற சொல்லைக் கையாண்ட சங்கப் பாடல்களையும், அவற்றின் துணையுடனேயே ஆடையின் பல்வேறு பரினாமங்களையும் காண நூலாசிர்யர் எடுத்துக்கொண்ட முயற்சி, நமக்குப் பெருமை சேர்த்திருக்கிறதென்பது உண்மை.

அ. பொன்னாடை, பட்டு, கலிங்கம்

 இன்றைய தமிழினத் சமூகத்த்தின் படிநிலையை ஆடையைக்கொண்டு மதிப்பிடுவது கடினம், ஆனால் நம்முடைய மூதாதையர் சமூகத்தில் ஆடைக்கு கணிசமான பங்களிப்பு இருந்துள்ளது. பொன்னாடைக்கு பொன்போன்ற ஒளிபொருந்திய ஆடையென பரிபாடல் விளக்கம் தருவதாகச் சொல்லப்படுகிறது. சங்க இலக்கியங்கள் தழையாடையைக் குறித்து விதந்து பேசும் அதே நேரம் பொன்னாடை பற்றியும் குறிபிடுவதாக நூலாசிரியர் தெரிவிக்கிறார். இன்றைக்குப் பொன்னாடை போர்த்தப்படாத தமிழரையோ தமிழச்சியையோ காண்பதரிது, ஆனால் சங்கத்தமிழர் பொன்னாடைப் போர்த்த தேர்வுசெய்திருந்த பிதாமகர்கள் இருவர் ; ஒருவர் கடவுள், மற்றவர் அரசன்.

பட்டாடை சங்ககாலத்திலேயே புழக்கத்தில் இருந்தமைக்கான சான்றினைக் ‘கொட்டைக் கரைய பட்டுடை நல்கி...என்கிற பொருநராற்றுப்படை பாடல் வரி மூலம் ஆசிரியர் உறுதிசெய்கிறார். பட்டாடை சீன நாட்டிலிருந்து சாவக நாடு ஊடாக தமிழ் நிலத்திற்கு வந்ததாகச சொல்லப்படுகிறது. பட்டாடையைபோலவே கலிங்கம் வகை புடவைகளும், வேறு ஆடைகளும் தமிழ்நாட்டில் வந்தனவென்று அறிகிறோம். இவ் ஆடைகளில் பருத்தி ஆடைகளும் அடக்கம்.  கலிங்கம், பட்டுடைகளின் மாற்றுப்பெயரென்றும் சொல்லப்படுகிறது. சங்ககாலப் பெண்கள் கலிங்கம் உடுத்தியதற்கு சான்றுகளாக சங்கப்பாடல்களை இந்நூலாய்வுகள் தெரிவிக்கின்றன. கடையெழு வள்ளல்களில் ஒருவனான பேகன் மயிலுக்குப் போர்வை வழங்கியதை :

வானம் வாளிணித்த வனமலைக் கவாஅன்

கான மஞ்சைக்குக் கலிங்கம் நல்கிய

அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்

பெருங்கல் நாடன் பேகனும்”

என்று சிறுபாணாற்றுப்படையில் நத்தத்தனார் பாடுகிறார். பேகன் மயிலுக்கு வழங்கிய போர்வை கலிங்கம் என்று அறிகிறோம்.

ஆ. தழையாடை

« தமிழ்ச் சமூகத்தின் ஆதித் தொல்குடிசார்ந்த அடையாளத்தின் குறியீடாக தழையாடை இருந்தது » என்கிற பேராசிரியர் பக்தவச்சலபாரதியின் ஆய்வு முடிவு, இப்பகுதியில் நூலாசிரியருக்கு துணைநிற்கிறது.

பகைத்தழை, மடிவை, குழையென்று தன்மைக்கேற்ப தழைகளைத் தேர்வுசெய்து, துண்டித்து,கோர்த்து,தொடுக்கும்போது இடையிடையே ஆம்பல், நெய்தல், காந்தள், ஞாழல், வேங்கை, காஞ்சி, செங்கழுநீர், குவளை,துத்தி, புன்னை,தாழை முதலான மலர்களை இணைத்து தழையாடைகளை பண்டைத்தமிழர்கள் உருவாக்கினரென அறிகிறோம்.

உதாரணத்திற்கு, தழைகளை பறித்து தேவையற்றவற்றை நீக்கிவிட்டு, பாம்பின் படம் போன்று அகன்று காணப்படும் அல்குலுக்குத் தழையாடையைக் கட்டி இளம்பெண்கள் உடுத்தினார்கள் என்கிற  குறிஞ்சிப்பாட்டைச் சுட்டுகிறார் நூலாசிரியர்.

« கிள்ளை ஓப்பியும் கிளை இதழ் பறியா

 பைவிரி அல்குல் கொய்தழை தைஇ

 பல்வேறு உருவின் வனப்பு அமை கோதை

 எம் மெல்லிரு முச்சி கவின் பெறக் கட்டி”

தழையாடையை அணிந்தவர் யார் ?

தழையாடையை பேதைப்பருவம் முடிந்து பெதும்பைப் பருவம் தொடங்கிய காலத்திலிருந்து அவர்களின் மகப்பேறு காலம்வரை பெண்கள் அணிந்தனரென்றும்.  தினைப்புணம் காவல் காக்கும் பெண்களும், நெய்தல் நில பரதவப்பெண்கள் கடல் தெய்வத்தினை வணங்கும்பொழுதும், மீன்களைவிற்றல் மீன்களை உலர்த்துதல் முதலான பணிகளில் ஈடுபட்டபொழுதும் தழையாடையை அணிந்தனரென அறிகிறோம். குறமகளிர், பரத்தையர், விறலியர் முதலானோர் தழையாடை பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அவ்வாறே, களவொழுக்க காலத்தில் தலைவி தலைவனைச் சந்திக்கிறபொழுது தழையாடையை அணிந்திருக்கிறாள். ஆனால் அவளே தலைவனின் இறப்பிற்குப் பிறகு தழையாடை அணியக்கூடாதென்கிற வழக்கு இருந்ததென அறிகிறோம்.

உண்மையான காதலுறவுகொண்ட ஆடவனே காதலிக்கு தழையணியை அன்பளிப்பாக வழங்கமுடியுமென்ற நிலையில், களவாய் ஒருவன் ஒருத்தியைச் சந்திக்கிறபோது கையுறை (சங்க கால கையூட்டோ ?)கொண்டுவருவது சங்ககாலவழக்கம். அதற்குதாரணமாக பலபாடல்களை நூலாசியர் சுட்டுகிறார். அவற்றிலொன்று நற்றிணையில் இடம்பெற்றுள்ளன இப்பாடல்.

« தளிர் சேர்த்தண் தழை தைஇ, நுந்தை  

குளிர் வாய் வியன் புனத்து எல் பட வருகோ ?

குறுஞ் சுனைக் குவளை அடைச்சி, நாம் புணறிய

நறுந் தண் சாரல் ஆடுகம் வருகோ ? »

குறிஞ்சி, மருதம், நெய்தல் பாலை பெண்கள் தழையை ஆடையாக உடுத்தியிதோடு கழுத்திலும், தலையிலும், காதிலும் வெவ்வேறு வகையில் அதனை தொடுத்தும், செருகியும் தன்னை அழகுப்படுத்திக் கொண்டனரென்றும், அழகியல் உணர்வோடு, ஆடவரை ஈர்க்கும் வகையிலும் இவ்வலங்காரம் அமைந்திருந்தாகவும் சங்கப் பாடல்கள் துணையுடன் நூலாசிரியர் விளக்குகிறார்.

இ. துவராடை :

துவர்நிற ஆடையைக் குறிக்கும் இடங்களில் ஆடை என்கிற சொல்லே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறதென்கிற ஆசிரியர், நூலில் நோக்கிற்கேற்ப சங்கப்பாடல்களை உதாரணமாகத் தருகிறார் ஆசிரியர். காய்ந்த சருகிலிருந்து உருவான ஆடை துவர்நிறத்தில் இருந்ததால் துவராடை எனப்பட்டதென்றும் ; வழிப்பறியில் ஈடுபட்ட பாலைநில மறவரும், வில்லுடன் திரிந்த கொலைபாதகர் எய்னரும் துவராடை அணிந்தனர் என்றும் தெரியவருகிறது.  இறைவனுக்கு அணிவித்த ஆடை பொலிவுடையது என்ற பொருளில் பரிபாடலில் பொலம்புரி ஆடையெனச் சொல்லப் பட்டிருக்கிறது. என்கிறார் ஆசிரியர்.  இதுபோல புறநானூற்று பாடலொன்றில் வீர்னொருவனின் தோற்றத்தை விதந்தோதும் வகையில் அவனது ஆடைப்பற்றிய குறிப்பில் பூவேலைப்பாடு மிக்க ஆடை என்ற பொருளில் பூவார் ஆடை என்ற சொல் பயன்படுத்தியிருப்பதை ஆசிரியர் கோடிட்டுக் காட்டுகிறார். இவைதவிர இல்வாழ்க்கையில், நீராடுகையில் ஆடை என்கிற சொல்ல கையாண்டுள்ள சங்கப்பாடல்களின் வரிகளைப் பற்றியும் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

ஈ. உடுக்கை :

உடுக்கை சங்க இலக்கியத்தில் வறியவர்கள் அணிந்த உடையாகவே  குறிப்பிடுகிறதென்றும், வறுமையில் உழலும் மனிதர்களின் எளிய உடையைக் குறிக்கும் இடங்களில் “உடுக்கை” என்ற சொல்லாட்சியைக் காணமுடிகிறதென்றும் இவ்வாய்வு நூல் நமக்குத் தெரிவிக்கிறது.

புறநானூற்றில் சேரமான் வெற்றியைப் புகழ்ந்துரைக்கும் பாடலொன்றில் இடையன் ஒருவனின் தோற்றத்தை வர்ணிக்கும் கவிஞர் ‘மாசுண் உடுக்கை’யில் அவன் இருந்ததாக எழுதுகிறார். மற்றொன்றில் புலவர் பெருஞ்சித்திரனாரின் மனைவி வறுமையின் பிடியில் சிக்கி மேனி ஒளியிழந்திருக்க அவளாடையை ‘மாசொடு குறைந்த உடுக்கையள்’ எனச் சித்தரித்திருப்பதைக் காண்கிறோம். அவ்வாறே வறுமையில் வாடிய குறவர் ஆடையும் உடுக்கையென அழைக்கப்பட்டுள்ள சங்கப் பாடல் வரிகளைச் சுட்டுகிறார் ஆசிரியர்.

உ. சிதாஅர் :

உடை குறித்த சங்கப்பாடல்கள் ‘சிதாஅர்’ என்ற சொல்லைக் கையாண்டுள்ளதாகக் குறிப்பிடும் ஆசிரியர் புறநானூறு, பொருநராற்றுப்ப்டை, சிறுபாணாற்றுப்ப்டை, முல்லைப்பாட்டு ஆகியவற்றுள் கந்தை என்கிற பொருளில் இவ்வார்த்தை உபயோகப்பட்டிருப்பதாக தெரிவிக்கிறார்.  வறுமையில் வாடும் பாணர், புலவர் ஆகியோரின்  கந்தலாடையைச் சித்தரிக்க சிதாஅர் உபயோகப்பட்டுள்ளதென தெரியவ்ருகிறது.

உ.ம் :

« வே ற்று இழைநுழைந்த வேர்நனை சிதாஅர்

  ஓம்பி உடுத்த உயல் பாண » (புறநானூறு)

2. ஆடை சார்ந்த பிற சொல்லாடகள்

சங்கக்கவிதைகளைச் சான்றாகக்கொண்டு தொல்தமிழர் ஆடைகுறித்த  உண்மைகளை பகிர்ந்துகொள்ளும் நூலாசிரியர், தமது தேடலை முழுமை படுத்துகின்றவகையில் வேறுசில சொல்லாடகளையும் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.

      அ.பருத்திபெண்டிரும் புலைத்தியரும்

       இருதரபினருமே பெண்கள். பருத்திபெண்டிர் என்கிற முதல் தரப்பினர் « பஞ்சிலிருந்து நூலினை உருவாக்கும் செயல்பாட்டில் முழுமையாகத் தங்களை இணைத்துக்கொண்ட பெண்களைப் பருத்திப் பெண்டிர் என அழைத்தனர்  »

.     “பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன,

 நெருப்புச் சினம் தனிந்த நிணம் தயங்கு

 கொழுங் குறை,

 பரூஉக் கள் மண்டையொடு, ஊழ்மாறு பெயர.”

புறநான்னூற்றில் இடம்பெற்றுள்ள இப்பாடலால், பெண்களில் ஒரு பகுதியினர் பஞ்சிலிருந்து நூலினை எடுக்கும் தொழிலில் ஈடுபட்டனர் என்பதும் அவர்களை பருத்திப்பெண்டிரென நம் முன்னோர்கள் அழைத்தனரென்றும் தெரியவருகிறது. இப்பெண்கள் தங்களின் உழைப்பின் மூலமாக மட்டுமே வாழவேண்டிய சூழலில் இருந்துள்ளனர் என்பதும்  இப்பெண்களில் பெரும்பான்மையோர் கைம்பெண்கள் என்பதும் கூடுதல் தகவல். பொருளீட்டிக் குடும்பத்தைக் காப்பற்ற ஆளில்லாத நிலையில் அச்சுமையை இப்பெண்கள் தங்கள் உழைப்பினைக்கொண்டு ஈடுகட்டியுள்ளனரென அறிகிறோம்.

ஆடை உருவாக்கத்திற்குப் பருத்திப் பெண்டிரெனில், அவற்றினை பராமரிக்கின்ற மகளிராகப் புலைத்தியர் சங்க காலத்தில் இருந்துள்ளனர். அழுக்கான ஆடைகளைத் துவைப்பவளைப் ‘புலைத்தி’ என்ற சொல்லால் சங்க இலக்கியம் குறிக்கிறது. மேலும் ஆடைகளை இரவு நேரங்களில் துவைத்தமையையும் இவ்விலக்கியங்களில் பதிவு செய்துள்ளதாக நூலாசிரியர் தெரிவித்துள்ளார். நூலில் இடம்பெற்றுள்ள கீழ்க்கண்ட பாடல் நற்றிணைப் பாடல்.

“ஆடு இயல் விழவின் அழுங்கல் மூதூர்

 உடையோர் பன்மயின் பெருங் கை துவா,

 வறன் இல் புலைத்தி எல்லித் தோளிணித்த

 புகாப் புகர்? கொண்ட புன் பூங் கலிங்கமொடு

 வாடா மாலை துயல்வர, ஓடி,

 பெருங் கயிறு நாலும் இரும் பனம் பிணையல்

 பூங் கண் ஆயம் ஊக்க…”

ஆ. தமிரின் ஆடையில் வெண்மை நிறம்

வெண்ணிற ஆடை தமிழரின் நாகரிக வளர்ச்சியில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததென்றும், வெவ்வேறு குறியீடுகளை இவ்வாடை கொண்டிருப்பினும், சங்ககால சமூக இயங்கியலில் வெண்மை பெறும் இடம், வாழ்வியல் நிகழ்வுகளில் வெள்ளுடையின் முக்கியத்துவம், அதிகாரக் கட்டமைப்பில் இவ்வாடையின் செயல்பாடு போன்ற காத்திரமான பல்வேறு தரவுகளைத் தன்னகத்தேக் கண்டுள்ளதென அறிகிறோம்.

« சங்கப் பனுவலில் தூய வெண்மையான ஆடை குளிர்ந்த அருவியிலிருந்து பலவாய் இழியும் துகிலின் தூய விரிப்பை ஒப்ப காட்சியளிப்பதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. » என்கிறார் நூலாசிரியர். வெண்மை ஆடையின் தூய்மையையும், அழகினையும் ஒருசேர புலப்படுத்தும் இப்புறநானூறுப் பாடலை இங்கே சாட்சியமாகிறது. .

“திரைபொரு முந்நீர்க் கரை நணிச் செலினும். 

எறிபடைக் கோடா ஆண்மை அறுவைத்

தூவிரி கடுப்பத் துவன்றி மீமிசைத்

தண்பல இழிதரு அருவி நின்

கொண் பெருங்கானம் பாடலெனக் கொளிதே

துகிலினுடங்கி இழிதருமருவி

அவிர்துகில் புரையு மவ்வெள்ளருவி”

*           *          *          *

மனித இனம் தோன்றிய குறுகிய காலத்திலேலே விலங்கிடமிருந்து நம்மை வேறுபடுத்திக்காட்ட, உதவியது ‘ஆடை’. ஓர் இனத்தின் அடையாளமாக, பண்பாட்டின் வெளிப்பாடாக, பிறப்பு முதல் இறப்புவரை குதுகூலம், கொண்டாட்டம், திருமனம், இறப்பு என்று மனிதரின் உயிரோடும் உடலோடும் பயணித்த உடையை, நம்முடைய தொல்குடியினரைக்கொண்டு ஆடை, வடிவம், அழகு-சங்கம் காட்டும் தோற்றம் என்கிற முனைவர் ஏ.இராஜலட்சுமியின்  இந்நூல் சிறப்பாக ஆய்வு செய்துள்ளது. அன்றியும் நூலாசிரியர் இப்பொருள் குறித்த தேடலுக்குத் துணை புரிந்த நூல்களென்று 75 அறிஞர் பெருமக்களின் நூல்களை பட்டியலுட்டுள்ளார். ஆக பண்டைத் தமிழரின் உடைகுறித்த சொல்லினை முன்மொழிந்து அதனூடாக ஓர் அழமான புரிதலை நூல் தருகிறது. சராசரி தமிழருக்கக்கு மட்டுமின்றி இத்துறை சார்ந்து ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்கள், கல்விமான்கள் ஆகியோருக்கும் இந்நூல் பெரிதும் உதவும் என்பது நிச்சயம்.

_______________________________________________________________________

காதலன் – மார்க்கெரித் துராஸ் – தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா- சரவணன் மாணிக்கவாசகம்

துராஸ் இருபதாம் நூற்றாண்டின் சிறந்த பிரெஞ்சு எழுத்தாளர்களில் ஒருவர். இவர் நாடகாசிரியர், திரைக்கதாசிரியர், திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். முப்பதுக்கும் அதிகமாக இவரது புனைவுத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன.

நாகரத்தினம் கிருஷ்ணா பாண்டிச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமாவார். கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல் என்று எல்லாமும் சேர்ந்து இவருடைய இருபத்தெட்டு தொகுப்புகள் வெளியாகியுள்ளன. பிரெஞ்சிலிருந்து நேரடியாகத் தமிழுக்கு மொழிபெயர்ப்பவர்.

சுயசரிதைக்கூறுகள் கொண்ட நாவலிது. பதினைந்து வயதுப் பிரெஞ்சுப் பெண்ணுக்கு இருபத்தேழு வயதான சீன வாலிபனுடனான நிறைவேறாது என்பது தெரிந்திருந்தும் கொண்ட உறவைப்பற்றிய நாவல். காமம், காலனியாதிக்கம், அடையாளம் முதலியவற்றைக் குறித்துப் பேசும் கதை. 1920 மற்றும் முப்பதுகளிலான வியட்நாம் பின்னணியில் வருகின்றது.

இந்த நாவலை ஒரு Erotic memoir என்று சுருக்குவதற்கில்லை. நினைவுப் பயணத்தில், குடும்ப உறவுகள், வியட்நாமில் பிரெஞ்சாக இருப்பதன் அடையாளச்சிக்கல், காலனியதிக்க வியட்நாமின் வாழ்க்கை என்பதும் கலந்து வருகின்றது. நாவல் நேர்க்கோட்டுக் கதையாகச் செல்லாது Fragmented Vignettes ஆக நகர்கிறது.

பல விருதுகளை வென்றதுடன் திரைப்படமாக எடுக்கப்பட்ட நாவல்.

இந்த நாவலை எது தனித்துக் காட்டுகிறது என்று பார்க்கலாம். பெரும்பாலான எழுத்தாளர்கள் மொழியில் இது ஒரு Confession Literature ஆக முடிந்திருக்கும். துராஸ் ஆரம்பிப்பதே வெகு இளமையிலேயே எல்லாம் கடந்துவிட்டது என்கிறார். சுயம் சமூகவிதிகளுடன் மோதுவதும், காதல் என்பது சுதந்திரம் மட்டுமல்ல, Entrapment என்பதை விவரிக்கவும் நாவல் பயன்படுகிறது.

நாவல் கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலுமாக மாறிமாறி செல்வதுடன் கதைசொல்லி Intimate momentaஐ தன்மையிலும் விமர்சனத்துக்குரியவற்றை Third person singularலும் சொல்வதாக அமைந்திருக்கின்றது. கனவின் சாயல் கொண்ட கவிதை போன்ற வரிகள், அதிகபட்ச நேர்மையான எழுத்துடன் சேர்கையில் ஒரு மயக்கும் தன்மையை உருவாக்குகிறது.

Family dysfunction அவளை இளமையிலேயே Sexual relationshipஐ நாட வைத்ததா இல்லை அவன் பணக்காரன் என்பதனாலா என்று எதற்குமே நாவலில் விளக்கமில்லை. போகிற போக்கில் வாசிக்கும் நாவலல்ல இது, வாசகனின் பங்களிப்பையும் கோருவது.

#மொழிபெயர்ப்புநூல்கள்

பிரதிக்கு:

குலுங்காநடையான் 95000 40516

முதல்பதிப்புஅக்டோபர் 2025

விலை ரூ. 250.

மனிதம்: தன் நெஞ்சறிவது பொய்யற்க….

                 உண்மை :

உண்மை என்பது மனிதர் அறிவின் தேடல். தம்மிடம் தொடுத்த வினாக்களின் அடிப்படையில், ஒரு பொருள் அல்லது ஒரு கருத்தியம் சார்ந்து மனிதரின் அறிவு, தக்க பதிலொன்றை எட்ட முயற்சிக்கிறது. இம்முயற்சிக்கு நமது அனுபவமும் அறிவும் கைகோர்த்து உதவுகின்றன.

சற்று விரிவாக கூறவேண்டுமெனில், இப்பிரபஞ்சத்தின் எல்லா கூறுகளும், அவற்றின் இயக்கமும், அதற்குக் காரணமான உந்துவிசையும், ஆக அனைத்துமே மனிதர்  கண்ணோட்டத்தில் அல்லது மனித வாழ்க்கையை மையமாகக்கொண்டு உருப்பெற்றவை. இவற்றையே உண்மையென்கிறோம் அல்லது உண்மையென நம்புகிறோம். இந்நம்பிக்கை, நேற்றைய மனித நம்பிக்கையின் தொடர்ச்சி.  அது வித்தாக விழுந்து மரமாக ஓங்கிவளர்ந்திட பல காரணிகள் இருக்கின்றன.

இயறகையின் சுழற்சிக்கேற்ப வாழப்பழகிய மனித உயிர்கள்,   அறிவுவழி நடத்த,  எதார்த்தத்தின் கதவுகளைத் திறந்து  கண்டறிந்தவற்றையும் உண்மைகளென்று கூறலாம்.  இவையன்றி, ஒரு மனிதனைச் சுற்றியுள்ள பிறர், அவன் பின்புலத்தில் உள்ள சமூகம், அவன் மரபு ; அவனுடைய கல்விக் கேள்விகள், புலன்கள் ஆகிய அனைத்திற்கும்  உண்மையில் பங்குண்டு. முடிவைத் தீர்மானிக்கிறபோது, தீரயோசித்து எது மெய் எது பொய்யென கண்டறியவேண்டும். ஆனால் அது அவளவு சுலபமல்ல எனபதுதான், நாம் வாழும் இன்றைய உலகின் போக்கு.   

சாக்ரடீஸைப் பொறுத்தவரை, உண்மை என்பது ஒவ்வொருநாளும்   மனிதர்கள் வாழ்க்கையிடம் கற்றுப்பெறும் அறிவு மட்டுமல்ல, அவ்வுண்மை மனிதர் வாழ்க்கையில் ஓர் அங்கமென்றும், அதை தட்டியெழுப்பும் சக்தி மனிதகுலத்திற்கு மட்டுமே உள்ளதென்றும் நம்புகிறார்; ஆனால் உண்மை எதிர்கொள்ளும் பெரும் பிரச்சினை, தன்னை முன்னிலைப்படுத்த அது படும்பாடு, அதற்குள்ள சவால்.

மனிதர்வாழ்க்கையில் காலம் காலமாக நம்பிவரும் உண்மைகளுக்குப் பிரச்சினைகளில்லை : ‘சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைகிறது’, ‘இந்தியா ஆசியக்கண்டத்தில் இருக்கிறது,’ ‘தமிழர்வழக்கில் மனைவியென்பவள் தாலிகட்டியவள்’, ‘சனி ஞாயிறு அலுவலக விடுமுறை தினம்’ இன்னமும் இதுபோன்ற ஏராளமான உண்மைகளை ஏற்பதில், அங்கீகரிப்பதில் நமக்குச் சங்கடங்களில்லை, காரணம் இவ்வுண்மைகள் நாம் பிறப்பதற்கு முன்பே உறுதிசெய்யப்பட்டவை, வழக்கில் உள்ளவை. இன்று, எவரேனும் நம்மை அணுகி, «  இனி சூரியன் மேற்கில் தோன்றி கிழக்கில் மறையும் » என்று கூறினால் நாம் கைகொட்டி சிரிப்போம்.  சொல்லும் நபர், வானியலில் தேர்ந்தவரே ஆயினும் உலகம் அதனை ஏற்றுக்கொள்ள தயங்கும். அந்நபரின் மனநிலையைச் சந்தேகிப்போம். காரணம் இயற்கையும், அறிவியலும், காலமும், மரபும், கட்டமைத்ததை ; ஊரும் உலகமும் ஏற்றுக்கொண்ட உண்மையை மறுக்கவியலாதென  நினைக்கிறோம்.   

இந்நிலையில், பொய்மை எங்கிருந்து வந்தது ?

மேற்குலகில் ஒரு பழங்கதையுண்டு. அக்கதையின்படி, ஒருநாள் பொய்மை வாய்மையைச் சந்திக்கிறது. இரண்டும் பரஸ்பரம் வணக்கங்களைத் பரிமாறிக்கொள்கின்றன. பொய்மை வாய்மையிடம் : « இன்றைய தினம்  வானிலை நன்றாக இருக்கிறது » எனத் தெரிவிக்க, வாய்மைக்கு பொய்மையின் வார்த்தைகளில் சந்தேகம்(நியாயம்தானே ?) எனவே அதை தெளிவுபடுத்திக்கொள்ள வாய்மை தலையை உயர்த்தி வானைப் பார்க்கிறது. அதற்கு வியப்பு, பொய்மைக் கூறியதுபோல  மேலே மேகமூட்டமற்ற நீலவானம். « நீ கூறியது உண்மைதான் » என வாய்மை பொய்மை கூறியதை ஆமோதிக்கிறது. பொய்மைத் தொடர்ந்து அருகிலிருந்த நீர்நிலையைச் சுட்டிக்காட்டி, « இது கூட அழகாக இருக்கிறது ! » என்றுதெரிவிக்க, வாய்மைக்குப் பொய்மை கூற்றில் உண்மை இருக்குமோ என்று மீண்டும் ஐயம், எனவே நீர் நிலையைப் பார்க்கிறது. இம்முறையும் பொய்மை கூறியதுபோலவே, நீர்நிலை அழகாக இருக்கிறது. இந்நிலையில் பொய்மை, « வா இருவரும் நீராடலாம் !  » என  தந்திரமாக அழைக்க, பொய்மையின் அழைப்பினை நம்பி, வாய்மை தனது ஆடைகளைக் களைந்து  பொய்மையுடன் நீராடுகிறது. இந்நிலையில் அவசரம் அவசரமாக கரையேறிய பொய்மை, தனது ஆடைகளுக்குப் பதிலாக வேண்டுமென்றே வாய்மையின் ஆடையைத் தரித்து, அங்கிருந்து போய்விடுகிறது, நிலமையை புரிந்துகொண்டு கரையேறிய வாய்மை, பொய்மையின் ஆடையைத் தரிக்க மனமில்லை, அதுவாய்மைக்குப் பொருந்தவும் இல்லை. அதன்  நிர்வாண கோலத்தைக்கண்டு, பார்த்தவர்கள் வெறுத்து ஒதுக்க அவமானமுற்ற வாய்மை வேறுவழியின்றி ஒரு கிணற்றில் பாய்கிறது. ஆக கதையின்படி பொய்மையின் தந்திரத்திற்குப் பலியான வாய்மை இன்று கிணற்றில் கிடக்கிறது. மாறாக கம்பீரமாக நம்மிடையே உலாவருவது வாய்மை உடை தரித்த பொய்மை.

இவர்தான அவர்தான் என்றில்லை, எவரிடமும் பொய்மையின் ஆர்ப்பாட்டம் ; எங்கும் எதிலும் பொய்மையின் வீச்சு. வீட்டில், வெளியில், அலுவலகத்தில், வணிகச் சந்தையில், செய்தித்தாள்களில், சமூக ஊடகங்களில், உரையாடும் விடயங்களில் உண்மையின் நிலமை என்னவென்று நாம் அறிவோம். வாங்கும் பொருள் எங்கிருந்து வந்தது, எப்படி தயாரிக்கபட்டது என்கிற தேடலைக்காட்டிலும் ; விலையும், ருசியுமே அப்பொருளின் தேர்வைத் தீர்மானிக்கிற கணத்தில் வாழ்கிறோம். மானுடவாழ்க்கையெனும் தினசரி சந்தையில் உண்மை விலைபோவதில்லை, விலைபோவது அழகான ஆடம்பரமான கவர்ச்சிகரமான பொய்கள். அரிச்சந்திரன் கதை போதித்தது, என்ன ? நடிகர் எம். ஆர். ராதா வார்த்தைகளில் சொல்வதெனில் சுடுகாட்டில் வாட்சுமேனாக அரிச்சந்திரன்  உத்தியோகம் பார்த்தார், வேறேன்ன கண்டார் ?

ஆதியாகமத்தின்படி(Book of Genesis) ஏதென் தோட்டத்தில்(Garden of Eden) தடைசெய்யப்பட்ட மரத்தின் கனியை உண்டால், மரணம் சம்பவிக்குமென இறைவன் கூறிய பொய்யைமறுத்து, அக்கனிமரம் பற்றிய உண்மையை ஆதாம்-ஏவாளுக்குத் தெரிவித்ததற்கு, இவ்வுலகில் மனித உயிர்கள் பெருக காரணமான பாம்பு, சபிக்கப்பட்டக் கதையும் உண்டு.

ஆக மனிதன் தோன்றிய நாள்தொட்டு உண்மையும் பொய்யும் உடன் பயணித்தாக அறிகிறோம். மேற்குலக பழங்கதை கூறுவதுபோல உண்மை அம்மணத்துடன் உலாவர சங்கடப்பட்டு ஒளிந்துவாழ, பொய் உண்மையின் ஆடையைத் தரிந்து மேளதாளத்துடன் வீதியுலா வருகிறது. அன்றைய உலகில் கதைக்கேனும் உண்மைபேச ஓர் அரிச்சந்திரன் கிடைத்தார். ஆனால் இன்றைக்கு அப்படி ஒருவர் இருக்கமுடியுமா ? சாத்தியமா ? என்ற் கேள்விக்கு நம்மிடம் பதிலில்லை. பொய் என்பது, நாவிற்கும் மனதிற்கும் சம்பந்தமற்ற வார்த்தைகளின் அடுக்கு, தீய எண்ணத்தின் வெளிப்பாடு. உள்நோக்கமின்றி தவறுதலாக ஒன்றைக்கூறுவது பொய் ஆகாது, ஆனால் உள்நோக்கத்துடன் தெரிந்த ஒன்றை திரித்துக்கூறுவது பொய் ஆகிறது.

கோப்பருந்தேவி ஊடல் கொண்டிருந்தாள், அவளை ஆற்றுவிக்க முனைந்து தன் விவேகத்தை நெடுஞ்செழியன் இழந்திருக்க, அவ்வேளை பார்த்து அரசனை வணங்கிய பொற்கொல்லன் “கள்வன் ஒருவன்; அரண்மனைச் சிலம்பைக் கவர்ந்தவன் ; அவனை என் சிறுகுடிலகத்து நிறுத்தி வைத்துள்ளேன்” என விண்ணப்பித்ததோடு “அவன் கன்னக்கோல் இன்றியும், கவைக்கோல் இன்றியும் துன்னிய மந்திரம் துணையாகக் கொண்டு மன்னிய காவலரை ஏய்த்துக் கவர்ந்தான்” என்று தன்நெஞ்சறிந்த உண்மையை திரித்தும் கூறுகிறான். பாண்டியன் நெடுஞ்செழியனும் சிந்தித்துப் பார்த்தவனில்லை ; காவலர்களை அழைக்கிறான். கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்தும்பொய் தீரவிசாரிப்பதே மெய் என்கிற பழமொழி பாமரர்க்கேயன்றி பாராளும் மன்னனான எனக்கெதற்கென நினைத்திருக்கலாம்,  தன் மனைவியின் சிலம்பு கள்வன் கையில் இருந்தால் அவனைக்கொன்று அச்சிலம்பினைக் கொண்டு வருக என்று கட்டளை இட்டான். இங்கே வெற்றிபெற்றது பொற்கொல்லனல்ல, அவனது மனசாட்சிக்கு எதிராக அவனை வழி நடத்திய பொய்.

« கண்டொன்று சொல்லேல் » அதாவது கண்ணால் கண்டதற்கு மாறாக சொல்லேல் என்கிறது ஆத்திச்சூடி. ஆனால் கண்ணால் காண்பதே ஆயினும் அது பொய்யா மெய்யா என்பதைத் தீர்மானிக்க சில கணங்களை ஒதுக்கி ஆய்ந்தறிவது நமக்கு அவசியமாகிறது, அதற்கு நாம் தயாராக இருக்கின்றோமா என்பது மனிதர்க்குள்ள சவால். வள்ளுவர் ஒரு படிமேலே சென்று நன்மை பயக்குமெனில் வாய்மையிடத்தில் பொய்மையை உபயோகிப்பதில் தவறில்லை  என சிபாரிசு செய்கிறார்.

« பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின் » என்பது குறள்.

சிலப்பதிகார கொல்லனுக்கு அவன் கூறிய பொய்யால் அவனுக்கு நன்மையா என்றால் நன்மைதான், ஆனான் அவன் கூறிய பொய்யால் கோவலனுக்குத் தீமையாயிற்று. ஆகவே வள்ளுவப்பெருந்தகை எவ்வுயிருக்கும் தீங்கு விளைவிக்காதெனில் பொய்யுரைக்கலாம் என்கிற பொருள்படும் படியே பாடியிருப்பார் என்பது நிச்சயம்.

நம்மைத் தவிர பிறமனிதரிடம் உண்மையை எதிர்பார்க்கும் மனிதராய் உலகில் இன்று வாழ்கிறோம் ; நம்மில் அரிச்சந்திரரென்று எவருமில்லை.  என்பதும் ஓர் உண்மை. தத்துவவாதி கான்ட்(Immanuel Kant) எக்காரணத்தை முன்னிட்டும் பொய்சொல்லும் உரிமையை எடுத்துக்கொள்ளக் கூடாதென்கிறார். அவரைப் பொறுத்தவரை, காட்டுமிராண்டித்தனமான சக்திகளால் துரத்தப்படும் ஒரு அப்பாவியின் உயிரைக் காப்பாற்றவேண்டிய நிலையிலுங்கூட, ஒருபோதும் பொய் சொல்லக்கூடாதென்பது அவர் முன்வைக்கும் வாதம், ஆனால் கான்ட் அதற்கான காரணத்தை முன்வைத்தவரில்லை. நம்முடைய வள்ளுவருக்கு வலுவான காரணம் இருக்கிறது. பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காதென்கிற பழமொழியின் வீரியத்தைக் காட்டிலும், வள்ளுவர் விடும் எச்சரிக்கைக்கு சக்தி அதிகம்.  « ஒரு மனிதன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக்குறித்து பொய்சொல்வது நல்லதல்ல, அவ்வாறு செய்தால் அவன் மனசாட்சி உறுத்தும், விளைவாக அமைதியிழந்து அல்லற்படுவான் என்கிறபொருளில் :

தன்நெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின்
     தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

என்கிறார். இதைவிட பொய்மைக்கு வேறென்ன தண்டனைவேண்டும். அதிலும் அதிகாரமும் பணமும் ஆட்சிசெய்யுமுலகில், இக்குற்றவாளிகளை அவர்களுடைய மனசாட்சிதான் தண்டிக்கவேண்டும்.

—————————————————————————————————————–

காலப் பிசாசுகள் : மனித மனங்களின் கதை –

  • நாகரத்தினம் கிருஷ்ணா

சிறுகதை அல்லது சிறுகதைகள் என்பது கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக நவீன இலக்கிய கதையாடலில், முக்கியத்துவம் பெற்றுள்ள கதை வடிவம்.

நாவலென்பது பல அத்தியாயங்கள் என்பதால் பக நூறுபக்கங்கள் ; முக்கிய கதை மாந்தர்கள் மட்டுமின்றி, ஏதேதோ காரணங்களை முன்னிட்டு இவர்கள் வாழ்நாளில் குறுக்கிடும் பிற துணைப் பாத்திரங்கள் ; ஏராளமான கருப்பொருள்கள் கொண்ட கதையையும், அதனுடன் பிரசவித்த சகோதர கதைகளையும் உள்ளடக்கியது.  இவை கதைசொல்லியின் சொந்த அனுபவமாக இருக்கலாம், அச்சம்பவத்தின் நேரடி சாட்சியாகவும்  இருந்திருக்கலாம், அல்லது இவை இரண்டுமின்றி, மனிதர் கூட்டத்திற்கு வெளியே ஓரு பார்வையாளனாக தன்னை முன் நிறுத்திக்கொண்டு,  புலன்களின் துணையுடன் அவரது மூளை மானுட மேடையில் அரங்கேறும் காட்சிகளைப் பரிசீலித்து, திரட்டிய உண்மைகளை ஆக்கக் கூறுகளாகக் கொண்டு  சமைத்தக் கதையாகவும் இருக்கலாம். அவ்வாறு கதைகளைச் சமைக்கிறபோது, வாசக விருந்தினரின் சுவைக்கென வாசனாதி திரவியங்களை சேர்க்கவேண்டியுள்ளது. நாவலென்கிற பெருங்கதையாடலுக்குள்ள இவ்வழிமுறை சிறுகதைக்கும் பொருந்தும். 

பெயருக்கேற்ப சிறுகதை என்பது சுருக்கமான ஒரு கதை, பெரும்பாலும் ஒரு நிகழ்வு அல்லது அதனோடு தொடர்புடைய சம்பவங்களின் அடுக்கை மையமாகக் கொண்டது. எனவே பக்கங்கள்  கருப்பொருள்களில் மட்டுமின்றி, கதைமாந்தர்களும் பெரும் எண்ணிக்கையில் இருக்கவேண்டுமெகிற அவசியம் இதற்கில்லை. வார்த்தைகள் விரயமின்றி கதைசொல்வதே இதன் குறிக்கோள்.  நாவலெகிற பெருவிருந்தில் விருந்தினரை திருப்திசெய்ய இலை நிறைய வகைவகையா உணவுவகைகளை பரிமாறுகிறோம், இங்கே இரண்டொரு பதார்த்தத்தில் வந்த விருந்தினர்கள் திருப்தியுற வேண்டும், எனவே மிகுந்த துல்லியமும் ஆழமும் கதைசொல்லிக்கு அவசியமாகிறது. போதாதற்கு கதைசொல்லிக்கு ஏனைய கலைஞர்களைப்போலவே, தொடர்ந்து தன் துறைசார்ந்து இயங்க வாசகரிடமிருந்து உடனுக்குடன்   எதிர்வினையென்கிற எரிசக்தியும் வேண்டியுள்ளது. அண்மைக்கால மேற்குலக கதையாடலில் ஆரம்பம் முடிவு, இடையில் கதைசொல்லும் போக்கில் காலவரிசை என்கிற நியதியை அல்லது இலக்கணத்தை மீறும் போக்கை பரவலாகக் காண்கிறேன், பரிசோதனை முயற்சிகள் ஏராளம், தமிழில் அத்தகைய கதைசொல்லிகளை காண்பது அபூர்வம். அத்தகைய அபூர்வ கதைசொல்லியாகத்தான், இச்சிறுகதை ஆசிரியரை பார்க்கிறேன்.     

ஒரு கலைப் படைப்பை அதைப் போல இதைஇபோல என ஒப்புமை நோக்கில் அணுகுவதே அப்ப்டைப்பை, அதனைப் படைத்தவனை நிராகரிப்பதாகும். காலப்பிசாசுகள் தொகுப்பில்  கதைப்புர சிற்பியின் உளிக்கும், சுத்தியலுக்கும் காத்திருப்பவை மானுடக் கற்கள், பிசாசென  பெற்றெடுத்த பிள்ளைக்கு பெயர்சூட்ட பெற்றவருக்குள்ள உரிமையை யார் தடுப்பது, பிறப்புமுதல் இறப்புவரை நாம் தேவதைகளாக அல்லது இறைதூதர்களாக வாழமுடிந்திருக்கிறதா அல்லது வாழத்தான் முடியுமா ? ஏதோவொரு கணத்தில் நொடியில் எல்லோருமே பிசாசுகள்தான்.  சமயக் கடவுள்களும், தேவதைகளும்கூட இந்த விதியின் விளையாடுக்குப் பலியானவர்களெனில் சராசரி மனிதர்களைப்பற்றி நாம் என்னசொல்ல ? நல்லதோர் வீணையாகிய மனதை கட்டிக்காக்க வகையறியாது  நலம்கெட புழுதியில் எறிவது இன்று நேற்றா ? நெஞ்சுபொறுக்காமல் இப்படைப்பாளி கதையின் கருப்பொருளை  தீட்டிய வகையில் அவற்றை உரைநடை ஓவியங்கள் என்றோ அல்லது நவீன கவிதைகள் என்றோ கருதினால் அது மிகையில்லை

காலப் பிசாசுகள் என்கிற இத்தொகுப்பில் 75 சிறுகதைகள் உள்ளன. இத்தொகுப்பை தொடர்ந்து வாசித்தவனில்லை. பல நெருக்கடிகள், தள்ளிப்போட்டுவந்தேன். அண்மையில் வேறொரு படைப்பாளியின் சிறுகதைதொகுப்பிற்கு ஏற்கனவே எழுதி இணைய இதழொன்றில் பிரசுரமான கட்டுரையை, அந்த  எழுத்தாளர் குறித்த  மலரொன்றிர்க்காக கேட்டிருந்தார்கள். அதன்பொருட்டு, எழுத்தாளர் கதைகளை மறுவாசிப்பு செய்து முடித்து, வீட்டு நூலகத்தில் அதனிடத்தில் வைத்தபோது, அருகிலிருந்த காலப்பிசாசிடம், கவனம் சென்றது. ஏற்கனவே இத்தொகுப்பில் வாசித்த கதைகளைத் தவிர்த்துவிட்டு பிறவற்றிர்க்கு நேரமொதுக்கி வாசிக்கத் தொடங்கினேன். கதையின் கருப்பொருள்களும், கதைமாந்தரும், மனித மனதை மொழிபெயர்க்கும் ஆசிரியரின் திறனும், என்னை பிரம்மிக்க வைத்தன.

 நாவல்களைத் தொடங்க ஒருசில பத்திகள் வாசகரை ஈர்க்கத் படைப்பாளிக்குத் தேவப்படுகிறதெனில், இச்சிறுகதைகளில் ஆசிரியருக்குத் தேவைப்படுவனவெல்லாம், ஒரு சில வார்த்தைகள், அவ்வார்த்தைகள் அடங்கிய ஒன்றிரண்டு வாக்கியங்கள்.  

  « என்னப்பா எல்லாம் ஒரே மாதிரியா இருக்கு ? »(விளையாட்டு)

  « எங்கே ஓடுகிறது கங்கை ? இப்படி நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறதே ! » (ஓட்டம்)

  « ஓட்டத்தில் வந்த உடம்பு கட்டிலுக்கு முரண்டுபிடித்துக் கொண்டிருந்தது. »(அம்மாவின் காகம்)

  « வாக்கு பதிவுக்காக வரிசையில் நின்றான் »(ஓலம்)

  « சூடு இல்லை, சில்லிட்டுக் கிடந்தார் பார்வதி அம்மாள் »(சூடு)

  « சேரியில் இன்று யாரும் வேலைக்குப் போகவில்லை. தென்னைமரத்துக்கு மேலே சூரியன் வந்துவிட்ட து. சர்க்கார் கேண்யில் தண்ணீர் எடுக்கும் சகடைச் சத்தமும் நின்று போயிருந்தது » (வழி)

  இத்தொகுப்பிலுள்ள அத்தனைக் கதைகளிலும், புதிர்போடுவது போல இங்கனம் ஆரம்பம், விடுகதையாக தொடங்கி இறுதியில் மனிதர் வாழ்க்கைப் புதிருக்கான விடையை, நம்மிடமே அல்லது நம்முடைய  சுற்றம் நட்பு ஆகியோரிடம் தேடிக் கண்டறியும்படி சொல்கிறாரோ என்கிற ஐயம்.  இந்த ஆரம்பம் ஒரு கேள்வியாகவோ, வியப்பாகவோ, வாக்குமூலமாகவோ, முன்னுரையாகவோ வாசக விருந்தினரை முகமன்கூறி அழைத்து நாடக அரங்கில் கதைசொல்லியால் அமர்த்தப்படுகின்றனர்.  கதைமாந்தர்களின் துணையுடன், சுருக்கமான சூழலில், கதை நிகழ்த்தப்படுகிறது, முற்றுபெறுகிறது. திரை விழுந்தபின்னரும் நம் மனதில் வியப்பூட்டும் பலகேள்விகள், ஆச்சர்யங்கள்.

அப்பாவின் பெருமிதம் இத்தொகுப்பின் முதல்கதை. « வலையை அறுத்துக்கொண்டு குளத்தில் விழுந்த சூரியதிமிங்கலம் காற்றில் குளித்துக் கொண்டிருந்தது. இரவெல்லாம் சிக்கித்துடித்த நட்சத்திர மீன்கள் காணாமல் போயிருந்தன. நிலா ஆமையும் தலை மறைவாகியிருந்தது. » என்கிற கவின் வரிகளில் கதையின் தொடக்கம். இரண்டொரு நிமிடங்களை அவ்வரிகளை திரும்ப வாசிக்க செலவிட்டேன், கதையை முடித்தபின்னரும் ஒரு முறை வாசித்துப்பார்க்க மனம் விரும்பியது.  கதைநாயகன்  ஆசிரியர் வார்த்தையில் சொல்வதெனில் ‘ரொம்பகாலத்திற்குப் பிறகு’ கிராமத்திற்கு வந்திருக்கிறான், உடம்பிற்கு முடியாமல் சோர்ந்திருக்கும் அப்பாவைக் காண சொந்த கிராமத்திற்கு வந்திருக்கிறான். கதையில் சிறுகதைக்கான இலக்கணப்படி  மகன், கதையின் மையப் பாத்திரமான அவனுடைய தந்தை, துணை மாந்தர்களாக அவனுடைய தாய், குழந்தைகள் மற்றும், குடும்பத்திற்கு வேண்டிய சோமு அண்ணன் என குறைந்த எண்ணிக்கயில் பிறர். கதைக்கான கரு, மீன்பிடிப்பதை ஒரு கலையாக நேசிக்கும் மனிதரொருவரைப் பற்றியது. எந்தவொன்றையும் கிடைக்கும் ஊதியம் அல்லது வெகுமதிக்காக, பொழுதுபோக்கிற்காகச்  செய்வதென்பது வேறு, மாறாக தனது ஆத்ம திருப்திக்காக, மனகிழ்ச்சிக்காக ஈடுபாட்டுடன் செய்வதென்பது வேறு. காலத்தை ஓட்ட, வயிற்றுப்பசிக்கும், குடும்பத்தைக் காப்பாற்றவும், கௌவுரத்திற்காக வேலைசெய்தவன், ஓய்ந்துபோவதுண்டு. ஆனால் ஓவியன், சிற்பி, கவிஞன் ஆகியோருக்கு ஓய்வேது ? ஆகமொத்தத்தில் கலைஞர்கள் கட்டையில் போகுமட்டும் உற்சாகம் இழப்பதில்லை. இக்கதையில் வரும் தந்தைக்கு மீன் பிடிப்பது தொழிலல்ல ஒரு கலை. சோர்ந்தது உடலேயன்றி அவர் மனமல்ல என்பதை மீண்டும் தூண்டிலோடு குளத்திற்கு சென்று மீன் பிடித்த பெருமிதத்தின் கம்பீரத்தை, அழகை கதையாசிரியர் சொல்லும் அழகை, வாசித்து புரிந்துகொள்ளவேண்டும். இக்கதையின் ஒவ்வொரு வார்த்தையும், வாக்கியங்களும் ஏன் கதை முழுவதும் மீன்பிடித்தலை தூண்டில்போடும் மனிதர்களோடு வாழ்ந்ததுபோல, தூண்டில் போட பார்த்ததுபோல காட்சிகளை ஓவியபோல கதையாசிரியர் தீட்டியுள்ளார். 

     விளையாட்டுக் கதையில் கதைநாயகருடைய, « பணம் கொடுத்தால் பத்திரிகை மூஞ்சியே மாறிடுது….நம்பிக்கைகள் தடுமாறிக் கொண்டிருந்தன . »-என்கிறபுலம்பலும் ; « அடுத்தவர் கண்களில் முகம் திணிக்கிற உலகில் ஒளிவதும், கண்டு பிடிப்பதும் ஏன் ? எனக்குள் நான் ஒளிந்துகொள்ளவும், என்னையே நான் கண்டுபிடித்துகொள்ளவுமா ? ஏன் நான் ஒளிந்து கொள்கிறேன் ? எப்போது  நான் ஒளிந்துகொள்கிறேன் ? » என்கிற கேள்வியும் கள்ளர்களுக்கு மாத்திரமல்ல, பத்திரிகையாளர்கள் தேடி படம் பிடிக்கிற மனிதர்களுக்கும் பொருந்தும்.

     கல்யாணமாகி ஆறுவருடங்களில் வாழ்க்கை ஓட்டம் தடுமாற, கணவன் உயிரோடிருக்க காசியில் தங்கிவிடும் உத்தேசத்துடன் கங்கைக்ரையில் வந்திறங்கிய பெண்ணின் மனப் போராட்டடத்தை, சித்தரிக்கும் கதை, ‘ஓட்டம்’ .  « கங்கைக்கு என்ன நிர்ப்பந்தம், புறப்பட்ட இடத்திலிருந்துதே ஓட்டம். எவ்வளவு காலமா ? எங்கே போகிறோம் என்பதுதெரியாமல் ! » எனத் தன் மனப்பிசாசிடம் கதைப் பெண் கேள்விக் கணைகளைத் தொடுக்கிறாள். அவள் ஏன் ஓடுகிறாள், எங்கே ஓடுகிறாள் ? அவளுடைய கணவன் சந்தனுவல்ல, சராசரி மனிதனுமல்ல. அடுத்தநாட்டு கம்பெனியில் வேலைபார்த்து பருஷனின் ஊதாரிச் செலவுக்குக் இவள் காசு சம்பாதிக்கணும். இவள் பெற்றோரும், கல்லானானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என போதிக்கும் பரம்பரை. அவள் மகாபாரதப் பெண்ணல்ல இருபதாம் நூற்றாண்டு பெண், விடைதேடி கங்கையிடம் அடைக்கலம் கோரி வருகிறாள். விடை கிடைத்ததா ?  என்றால் கிடைத்தது. ஆனால் அவ்விடையை விளங்கிக்கொள்ள அப்பெண்ணுடன் கங்கையில் வாசகர்கள் படகில் பயணிக்கவேண்டும்.

     இத்தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்துமே  நாம் சார்ந்த சமூகத்தை கூடுதலாக புரிந்துகொள்ள எனக்கு உதவின : குறிப்பாக பாலின பிரச்சினையை முன்வைத்த திருமங்கை, உளநோயா உடல் நோயா எனத் தீர்மானிக்கவியலாத கவிச்சி, அக்ராஹார குடும்பமொன்றின் சிக்கலை இலைமறைகாயாக எடுத்துக்கொண்டு செதுக்கிய சிற்பியின் விதி, எது நிஜப்பார்வை என்கிற கேள்வியை முன்வைக்கும் பார்வை, ஊழல்வாதிகளின் நேர்த்திக்கடனுக்குப் பலியாகும் ஏழைகளின் தலையெழுத்தைப் பேசும் ஜாதிநாய்கள், தீபாவளியைக் கருவாகக் கொண்ட நநிஜங்கள், போகிறபோக்கில் மனிதர்பண்பைக் கோட்டிட்டுக்காட்டும் சகஜம் என சொல்லிக்கொண்டே போகலாம். « கடவுள்கூட பூலோகத்துவந்தா கூத்தாட வச்சிடுவாங்கபோல. சிதம்பரத்தில் நடராஜர், இங்கே பெருமாள் » என்பது போன்ற எள்ளலையும் ஆங்காங்கே ஆசிரியர் நமக்கு வினியோகிக்கத் தவறுவதில்லை.

நண்பர் ம. இராசேந்திரன் ஓர் அசல் கலைஞனாக தனது மனதில் பிரவாகமெடுப்பதை வார்த்தைகளில் வடிக்கிறார். அதில் பல்வேறு குரல்கள் : மனித உறவுகளின் மகிழ்ச்சியை, துயரை, வேட்கையை, விருப்பத்தை, இயல்பான கருணையை, வெறுப்பை, விவேகத்தை, அறியாமையை ; புவியியல் எல்லைகள் கடந்து,  மனிதமென்கிற சமயம் சார்ந்து, மானுட அரசியல் எழுதிக்கொள்ளும் வேத பாடங்களில் தேர்ந்தவராய் ; கதைசொல்லி யதார்த்தங்கள், சொந்த அனுபவங்களென பல்வேறுகருப்பொருள்கள் துணைகொண்டு, வாசகரை அவரோடு அழைத்துச் சென்று வியப்பூட்டுகிறார்.  ஒர் ஆச்சரியமான, எதிர்பாராத முடிவுடன் வாசகரடமிருந்து கதை சட்டென விடைபெறுகிறது, ஆயினும் வந்த விருந்தினரை வழி அனுப்பிவிட்டு அவர் திரும்பிச்செல்வதை பார்த்தவண்ணம் இருப்பதுபோல,  வாசித்து முடித்தபின்னரும் வாசகன் மனம் அவர் கதை காலெடுத்துச் சென்ற பாதையில் கவனத்தை வைக்கிறது.  நம்முடைய எதிர்பார்ப்புகளுடன் கண்னாமூச்சி ஆடும் அவர் புனைவுகள் இறுதியில் இன்னதெனறு அடையாளப்படுத்தவியலாத அரூபத்தை- பிசாசை நம்மிடம் ஏவிவிடுகின்றன. அதனை ஓட்டும் பூசாரியும் அவர்தான், பேயிறங்கியதென வெளியில் வந்தால் அங்கே இன்னொரு பிசாசு. மனதின் ஏமாற்றத்தை, எரிச்சலை, கோபத்தை, கொந்தளிப்பை, துயரை, பொறாமையை, சந்தோஷத்தை, மனப்பிராந்தியை, மனக்கோளாறுகளை வகைப்படுத்தி ஆசிரியர் எழுத்தில் கொலுவைத்திருக்கிறார்.  ஒரு நல்ல சிறுகதைக்குச் சுருக்கமும் கதை சொல்லும் திறனும் வெற்றிக்கான திறவுகோல்கள். ஒரு சிறுகதையின் கட்டமைப்பின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடவியலாது ஏனெனில் அது படைப்பின் வெற்றியை பெரும்பாலும் தீர்மானிக்கிறது. ஆசிரியர் ம. இராசேந்திரன் தம் படைப்புகள் மூலம் அதை நிரூபித்துள்ளார்.  

 —————————————————————————————————-

காலப் பிசாசுகள் : மனித மனங்களின் கதை –

  • நாகரத்தினம் கிருஷ்ணா

சிறுகதை அல்லது சிறுகதைகள் என்பது கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக நவீன இலக்கிய கதையாடலில், முக்கியத்துவம் பெற்றுள்ள கதை வடிவம்.

நாவலென்பது பல அத்தியாயங்கள் என்பதால் பக நூறுபக்கங்கள் ; முக்கிய கதை மாந்தர்கள் மட்டுமின்றி, ஏதேதோ காரணங்களை முன்னிட்டு இவர்கள் வாழ்நாளில் குறுக்கிடும் பிற துணைப் பாத்திரங்கள் ; ஏராளமான கருப்பொருள்கள் கொண்ட கதையையும், அதனுடன் பிரசவித்த சகோதர கதைகளையும் உள்ளடக்கியது.  இவை கதைசொல்லியின் சொந்த அனுபவமாக இருக்கலாம், அச்சம்பவத்தின் நேரடி சாட்சியாகவும்  இருந்திருக்கலாம், அல்லது இவை இரண்டுமின்றி, மனிதர் கூட்டத்திற்கு வெளியே ஓரு பார்வையாளனாக தன்னை முன் நிறுத்திக்கொண்டு,  புலன்களின் துணையுடன் அவரது மூளை மானுட மேடையில் அரங்கேறும் காட்சிகளைப் பரிசீலித்து, திரட்டிய உண்மைகளை ஆக்கக் கூறுகளாகக் கொண்டு  சமைத்தக் கதையாகவும் இருக்கலாம். அவ்வாறு கதைகளைச் சமைக்கிறபோது, வாசக விருந்தினரின் சுவைக்கென வாசனாதி திரவியங்களை சேர்க்கவேண்டியுள்ளது. நாவலென்கிற பெருங்கதையாடலுக்குள்ள இவ்வழிமுறை சிறுகதைக்கும் பொருந்தும். 

பெயருக்கேற்ப சிறுகதை என்பது சுருக்கமான ஒரு கதை, பெரும்பாலும் ஒரு நிகழ்வு அல்லது அதனோடு தொடர்புடைய சம்பவங்களின் அடுக்கை மையமாகக் கொண்டது. எனவே பக்கங்கள்  கருப்பொருள்களில் மட்டுமின்றி, கதைமாந்தர்களும் பெரும் எண்ணிக்கையில் இருக்கவேண்டுமெகிற அவசியம் இதற்கில்லை. வார்த்தைகள் விரயமின்றி கதைசொல்வதே இதன் குறிக்கோள்.  நாவலெகிற பெருவிருந்தில் விருந்தினரை திருப்திசெய்ய இலை நிறைய வகைவகையா உணவுவகைகளை பரிமாறுகிறோம், இங்கே இரண்டொரு பதார்த்தத்தில் வந்த விருந்தினர்கள் திருப்தியுற வேண்டும், எனவே மிகுந்த துல்லியமும் ஆழமும் கதைசொல்லிக்கு அவசியமாகிறது. போதாதற்கு கதைசொல்லிக்கு ஏனைய கலைஞர்களைப்போலவே, தொடர்ந்து தன் துறைசார்ந்து இயங்க வாசகரிடமிருந்து உடனுக்குடன்   எதிர்வினையென்கிற எரிசக்தியும் வேண்டியுள்ளது. அண்மைக்கால மேற்குலக கதையாடலில் ஆரம்பம் முடிவு, இடையில் கதைசொல்லும் போக்கில் காலவரிசை என்கிற நியதியை அல்லது இலக்கணத்தை மீறும் போக்கை பரவலாகக் காண்கிறேன், பரிசோதனை முயற்சிகள் ஏராளம், தமிழில் அத்தகைய கதைசொல்லிகளை காண்பது அபூர்வம். அத்தகைய அபூர்வ கதைசொல்லியாகத்தான், இச்சிறுகதை ஆசிரியரை பார்க்கிறேன்.     

ஒரு கலைப் படைப்பை அதைப் போல இதைஇபோல என ஒப்புமை நோக்கில் அணுகுவதே அப்ப்டைப்பை, அதனைப் படைத்தவனை நிராகரிப்பதாகும். காலப்பிசாசுகள் தொகுப்பில்  கதைப்புர சிற்பியின் உளிக்கும், சுத்தியலுக்கும் காத்திருப்பவை மானுடக் கற்கள், பிசாசென  பெற்றெடுத்த பிள்ளைக்கு பெயர்சூட்ட பெற்றவருக்குள்ள உரிமையை யார் தடுப்பது, பிறப்புமுதல் இறப்புவரை நாம் தேவதைகளாக அல்லது இறைதூதர்களாக வாழமுடிந்திருக்கிறதா அல்லது வாழத்தான் முடியுமா ? ஏதோவொரு கணத்தில் நொடியில் எல்லோருமே பிசாசுகள்தான்.  சமயக் கடவுள்களும், தேவதைகளும்கூட இந்த விதியின் விளையாடுக்குப் பலியானவர்களெனில் சராசரி மனிதர்களைப்பற்றி நாம் என்னசொல்ல ? நல்லதோர் வீணையாகிய மனதை கட்டிக்காக்க வகையறியாது  நலம்கெட புழுதியில் எறிவது இன்று நேற்றா ? நெஞ்சுபொறுக்காமல் இப்படைப்பாளி கதையின் கருப்பொருளை  தீட்டிய வகையில் அவற்றை உரைநடை ஓவியங்கள் என்றோ அல்லது நவீன கவிதைகள் என்றோ கருதினால் அது மிகையில்லை

காலப் பிசாசுகள் என்கிற இத்தொகுப்பில் 75 சிறுகதைகள் உள்ளன. இத்தொகுப்பை தொடர்ந்து வாசித்தவனில்லை. பல நெருக்கடிகள், தள்ளிப்போட்டுவந்தேன். அண்மையில் வேறொரு படைப்பாளியின் சிறுகதைதொகுப்பிற்கு ஏற்கனவே எழுதி இணைய இதழொன்றில் பிரசுரமான கட்டுரையை, அந்த  எழுத்தாளர் குறித்த  மலரொன்றிர்க்காக கேட்டிருந்தார்கள். அதன்பொருட்டு, எழுத்தாளர் கதைகளை மறுவாசிப்பு செய்து முடித்து, வீட்டு நூலகத்தில் அதனிடத்தில் வைத்தபோது, அருகிலிருந்த காலப்பிசாசிடம், கவனம் சென்றது. ஏற்கனவே இத்தொகுப்பில் வாசித்த கதைகளைத் தவிர்த்துவிட்டு பிறவற்றிர்க்கு நேரமொதுக்கி வாசிக்கத் தொடங்கினேன். கதையின் கருப்பொருள்களும், கதைமாந்தரும், மனித மனதை மொழிபெயர்க்கும் ஆசிரியரின் திறனும், என்னை பிரம்மிக்க வைத்தன.

 நாவல்களைத் தொடங்க ஒருசில பத்திகள் வாசகரை ஈர்க்கத் படைப்பாளிக்குத் தேவப்படுகிறதெனில், இச்சிறுகதைகளில் ஆசிரியருக்குத் தேவைப்படுவனவெல்லாம், ஒரு சில வார்த்தைகள், அவ்வார்த்தைகள் அடங்கிய ஒன்றிரண்டு வாக்கியங்கள்.  

  « என்னப்பா எல்லாம் ஒரே மாதிரியா இருக்கு ? »(விளையாட்டு)

  « எங்கே ஓடுகிறது கங்கை ? இப்படி நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறதே ! » (ஓட்டம்)

  « ஓட்டத்தில் வந்த உடம்பு கட்டிலுக்கு முரண்டுபிடித்துக் கொண்டிருந்தது. »(அம்மாவின் காகம்)

  « வாக்கு பதிவுக்காக வரிசையில் நின்றான் »(ஓலம்)

  « சூடு இல்லை, சில்லிட்டுக் கிடந்தார் பார்வதி அம்மாள் »(சூடு)

  « சேரியில் இன்று யாரும் வேலைக்குப் போகவில்லை. தென்னைமரத்துக்கு மேலே சூரியன் வந்துவிட்ட து. சர்க்கார் கேண்யில் தண்ணீர் எடுக்கும் சகடைச் சத்தமும் நின்று போயிருந்தது » (வழி)

  இத்தொகுப்பிலுள்ள அத்தனைக் கதைகளிலும், புதிர்போடுவது போல இங்கனம் ஆரம்பம், விடுகதையாக தொடங்கி இறுதியில் மனிதர் வாழ்க்கைப் புதிருக்கான விடையை, நம்மிடமே அல்லது நம்முடைய  சுற்றம் நட்பு ஆகியோரிடம் தேடிக் கண்டறியும்படி சொல்கிறாரோ என்கிற ஐயம்.  இந்த ஆரம்பம் ஒரு கேள்வியாகவோ, வியப்பாகவோ, வாக்குமூலமாகவோ, முன்னுரையாகவோ வாசக விருந்தினரை முகமன்கூறி அழைத்து நாடக அரங்கில் கதைசொல்லியால் அமர்த்தப்படுகின்றனர்.  கதைமாந்தர்களின் துணையுடன், சுருக்கமான சூழலில், கதை நிகழ்த்தப்படுகிறது, முற்றுபெறுகிறது. திரை விழுந்தபின்னரும் நம் மனதில் வியப்பூட்டும் பலகேள்விகள், ஆச்சர்யங்கள்.

அப்பாவின் பெருமிதம் இத்தொகுப்பின் முதல்கதை. « வலையை அறுத்துக்கொண்டு குளத்தில் விழுந்த சூரியதிமிங்கலம் காற்றில் குளித்துக் கொண்டிருந்தது. இரவெல்லாம் சிக்கித்துடித்த நட்சத்திர மீன்கள் காணாமல் போயிருந்தன. நிலா ஆமையும் தலை மறைவாகியிருந்தது. » என்கிற கவின் வரிகளில் கதையின் தொடக்கம். இரண்டொரு நிமிடங்களை அவ்வரிகளை திரும்ப வாசிக்க செலவிட்டேன், கதையை முடித்தபின்னரும் ஒரு முறை வாசித்துப்பார்க்க மனம் விரும்பியது.  கதைநாயகன்  ஆசிரியர் வார்த்தையில் சொல்வதெனில் ‘ரொம்பகாலத்திற்குப் பிறகு’ கிராமத்திற்கு வந்திருக்கிறான், உடம்பிற்கு முடியாமல் சோர்ந்திருக்கும் அப்பாவைக் காண சொந்த கிராமத்திற்கு வந்திருக்கிறான். கதையில் சிறுகதைக்கான இலக்கணப்படி  மகன், கதையின் மையப் பாத்திரமான அவனுடைய தந்தை, துணை மாந்தர்களாக அவனுடைய தாய், குழந்தைகள் மற்றும், குடும்பத்திற்கு வேண்டிய சோமு அண்ணன் என குறைந்த எண்ணிக்கயில் பிறர். கதைக்கான கரு, மீன்பிடிப்பதை ஒரு கலையாக நேசிக்கும் மனிதரொருவரைப் பற்றியது. எந்தவொன்றையும் கிடைக்கும் ஊதியம் அல்லது வெகுமதிக்காக, பொழுதுபோக்கிற்காகச்  செய்வதென்பது வேறு, மாறாக தனது ஆத்ம திருப்திக்காக, மனகிழ்ச்சிக்காக ஈடுபாட்டுடன் செய்வதென்பது வேறு. காலத்தை ஓட்ட, வயிற்றுப்பசிக்கும், குடும்பத்தைக் காப்பாற்றவும், கௌவுரத்திற்காக வேலைசெய்தவன், ஓய்ந்துபோவதுண்டு. ஆனால் ஓவியன், சிற்பி, கவிஞன் ஆகியோருக்கு ஓய்வேது ? ஆகமொத்தத்தில் கலைஞர்கள் கட்டையில் போகுமட்டும் உற்சாகம் இழப்பதில்லை. இக்கதையில் வரும் தந்தைக்கு மீன் பிடிப்பது தொழிலல்ல ஒரு கலை. சோர்ந்தது உடலேயன்றி அவர் மனமல்ல என்பதை மீண்டும் தூண்டிலோடு குளத்திற்கு சென்று மீன் பிடித்த பெருமிதத்தின் கம்பீரத்தை, அழகை கதையாசிரியர் சொல்லும் அழகை, வாசித்து புரிந்துகொள்ளவேண்டும். இக்கதையின் ஒவ்வொரு வார்த்தையும், வாக்கியங்களும் ஏன் கதை முழுவதும் மீன்பிடித்தலை தூண்டில்போடும் மனிதர்களோடு வாழ்ந்ததுபோல, தூண்டில் போட பார்த்ததுபோல காட்சிகளை ஓவியபோல கதையாசிரியர் தீட்டியுள்ளார். 

     விளையாட்டுக் கதையில் கதைநாயகருடைய, « பணம் கொடுத்தால் பத்திரிகை மூஞ்சியே மாறிடுது….நம்பிக்கைகள் தடுமாறிக் கொண்டிருந்தன . »-என்கிறபுலம்பலும் ; « அடுத்தவர் கண்களில் முகம் திணிக்கிற உலகில் ஒளிவதும், கண்டு பிடிப்பதும் ஏன் ? எனக்குள் நான் ஒளிந்துகொள்ளவும், என்னையே நான் கண்டுபிடித்துகொள்ளவுமா ? ஏன் நான் ஒளிந்து கொள்கிறேன் ? எப்போது  நான் ஒளிந்துகொள்கிறேன் ? » என்கிற கேள்வியும் கள்ளர்களுக்கு மாத்திரமல்ல, பத்திரிகையாளர்கள் தேடி படம் பிடிக்கிற மனிதர்களுக்கும் பொருந்தும்.

     கல்யாணமாகி ஆறுவருடங்களில் வாழ்க்கை ஓட்டம் தடுமாற, கணவன் உயிரோடிருக்க காசியில் தங்கிவிடும் உத்தேசத்துடன் கங்கைக்ரையில் வந்திறங்கிய பெண்ணின் மனப் போராட்டடத்தை, சித்தரிக்கும் கதை, ‘ஓட்டம்’ .  « கங்கைக்கு என்ன நிர்ப்பந்தம், புறப்பட்ட இடத்திலிருந்துதே ஓட்டம். எவ்வளவு காலமா ? எங்கே போகிறோம் என்பதுதெரியாமல் ! » எனத் தன் மனப்பிசாசிடம் கதைப் பெண் கேள்விக் கணைகளைத் தொடுக்கிறாள். அவள் ஏன் ஓடுகிறாள், எங்கே ஓடுகிறாள் ? அவளுடைய கணவன் சந்தனுவல்ல, சராசரி மனிதனுமல்ல. அடுத்தநாட்டு கம்பெனியில் வேலைபார்த்து பருஷனின் ஊதாரிச் செலவுக்குக் இவள் காசு சம்பாதிக்கணும். இவள் பெற்றோரும், கல்லானானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என போதிக்கும் பரம்பரை. அவள் மகாபாரதப் பெண்ணல்ல இருபதாம் நூற்றாண்டு பெண், விடைதேடி கங்கையிடம் அடைக்கலம் கோரி வருகிறாள். விடை கிடைத்ததா ?  என்றால் கிடைத்தது. ஆனால் அவ்விடையை விளங்கிக்கொள்ள அப்பெண்ணுடன் கங்கையில் வாசகர்கள் படகில் பயணிக்கவேண்டும்.

     இத்தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்துமே  நாம் சார்ந்த சமூகத்தை கூடுதலாக புரிந்துகொள்ள எனக்கு உதவின : குறிப்பாக பாலின பிரச்சினையை முன்வைத்த திருமங்கை, உளநோயா உடல் நோயா எனத் தீர்மானிக்கவியலாத கவிச்சி, அக்ராஹார குடும்பமொன்றின் சிக்கலை இலைமறைகாயாக எடுத்துக்கொண்டு செதுக்கிய சிற்பியின் விதி, எது நிஜப்பார்வை என்கிற கேள்வியை முன்வைக்கும் பார்வை, ஊழல்வாதிகளின் நேர்த்திக்கடனுக்குப் பலியாகும் ஏழைகளின் தலையெழுத்தைப் பேசும் ஜாதிநாய்கள், தீபாவளியைக் கருவாகக் கொண்ட நநிஜங்கள், போகிறபோக்கில் மனிதர்பண்பைக் கோட்டிட்டுக்காட்டும் சகஜம் என சொல்லிக்கொண்டே போகலாம். « கடவுள்கூட பூலோகத்துவந்தா கூத்தாட வச்சிடுவாங்கபோல. சிதம்பரத்தில் நடராஜர், இங்கே பெருமாள் » என்பது போன்ற எள்ளலையும் ஆங்காங்கே ஆசிரியர் நமக்கு வினியோகிக்கத் தவறுவதில்லை.

நண்பர் ம. இராசேந்திரன் ஓர் அசல் கலைஞனாக தனது மனதில் பிரவாகமெடுப்பதை வார்த்தைகளில் வடிக்கிறார். அதில் பல்வேறு குரல்கள் : மனித உறவுகளின் மகிழ்ச்சியை, துயரை, வேட்கையை, விருப்பத்தை, இயல்பான கருணையை, வெறுப்பை, விவேகத்தை, அறியாமையை ; புவியியல் எல்லைகள் கடந்து,  மனிதமென்கிற சமயம் சார்ந்து, மானுட அரசியல் எழுதிக்கொள்ளும் வேத பாடங்களில் தேர்ந்தவராய் ; கதைசொல்லி யதார்த்தங்கள், சொந்த அனுபவங்களென பல்வேறுகருப்பொருள்கள் துணைகொண்டு, வாசகரை அவரோடு அழைத்துச் சென்று வியப்பூட்டுகிறார்.  ஒர் ஆச்சரியமான, எதிர்பாராத முடிவுடன் வாசகரடமிருந்து கதை சட்டென விடைபெறுகிறது, ஆயினும் வந்த விருந்தினரை வழி அனுப்பிவிட்டு அவர் திரும்பிச்செல்வதை பார்த்தவண்ணம் இருப்பதுபோல,  வாசித்து முடித்தபின்னரும் வாசகன் மனம் அவர் கதை காலெடுத்துச் சென்ற பாதையில் கவனத்தை வைக்கிறது.  நம்முடைய எதிர்பார்ப்புகளுடன் கண்னாமூச்சி ஆடும் அவர் புனைவுகள் இறுதியில் இன்னதெனறு அடையாளப்படுத்தவியலாத அரூபத்தை- பிசாசை நம்மிடம் ஏவிவிடுகின்றன. அதனை ஓட்டும் பூசாரியும் அவர்தான், பேயிறங்கியதென வெளியில் வந்தால் அங்கே இன்னொரு பிசாசு. மனதின் ஏமாற்றத்தை, எரிச்சலை, கோபத்தை, கொந்தளிப்பை, துயரை, பொறாமையை, சந்தோஷத்தை, மனப்பிராந்தியை, மனக்கோளாறுகளை வகைப்படுத்தி ஆசிரியர் எழுத்தில் கொலுவைத்திருக்கிறார்.  ஒரு நல்ல சிறுகதைக்குச் சுருக்கமும் கதை சொல்லும் திறனும் வெற்றிக்கான திறவுகோல்கள். ஒரு சிறுகதையின் கட்டமைப்பின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடவியலாது ஏனெனில் அது படைப்பின் வெற்றியை பெரும்பாலும் தீர்மானிக்கிறது. ஆசிரியர் ம. இராசேந்திரன் தம் படைப்புகள் மூலம் அதை நிரூபித்துள்ளார்.  

 —————————————————————————————————-

நீ வரவில்லையெனில் – புதிய நாவல்

2025 ஜூன் மாதம் வெளிவந்த எனது புதிய நாவல் குறித்து

—————————————————————–

அன்பினிய நண்பர்களுக்கு,

மனிதநேயம் என்கிற மனிதப்பண்பின் உன்னத  வெளிப்பாட்டைக் குறிக்க அன்பு, பாசம், பரிவு, இரக்கம், கருணை போன்ற சொற்கள் வழக்கில் இருப்பினும், கடைசியாக குறிப்பிட்ட ‘கருணை’ மனித நேயத்தினை தெளிவாக அடையாளப்படுத்தும் ஒரு சொல்.

மனிதரினத்தில் காணக்கூடிய அன்பும் பாசமும் வரையறைக்குட்பட்டவை, உறவு, நட்பு, என்கிற வட்டத்துக்குள் அடங்கியவை. முன்பின்தெரியாத மனிதர்களெனில் முகசுளிக்க கூடியவை. ஏன் பறவைகள் விலங்குகளிடம்கூட அன்பிற்கும் பாசத்திற்கும்  இடமுண்டு. மாறாக பரிவும், இரக்கமும், கருணையும் மனிதரினத்தில் மட்டுமே காணகூடிய மெய்மைகள். இப்பண்புடையோர் பிறர் துன்பங்கண்டு வருந்துவதோடன்றி அத்துன்பத்தைக் களையவும் முற்படுபடுகின்றனர். இம்மூன்றில் « பரிவும், இரக்கமும் » « மேலோர் கீழோர் » என்கிற பாகுபாட்டின்கீழ் தள்ளி நின்று செயல்படக்கூடியவை. மாறாக கருணயுள்ளம் கொண்ட மனிதர் துன்புறும் மனித உயிர்களைத் தேடி வருகிறார், அவர்களை அரவணைத்து கண்ணீர் துடைக்கிறார். வயிற்றுப்பசிக்கு வாசல்தேடி வரும் மனிதர்களுக்கு, உணவளிக்கும் மனிதர்களின் இரக்கத்தைக் காட்டிலும், வயிற்றுப்பசியில் வாடும் மனிதர்களைத் தேடிசென்று பசியாற்றும் மனிதர்களின் கருணையுள்ளம் பெரிது.  

நாடக அரங்குகளைக் காட்டிலும் நிஜவாழ்க்கையில் ஒப்பனையுடன் வலம் வருகிறவர்கள் இன்று எண்ணிக்கையில் அதிகம்.  இது பாசாங்குலகம். உறவு, நட்பு, அரசியல்வாதிகளின் வாக்குறுதிகள், எழுத்தில் காட்டும் அறச்சீற்றமென எங்கும் எதிலும் பாசாங்கு. கருணைக்கு இதயபூர்வமாக பொருள்காண முற்படுபவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். பிறர் நலத்தை மேடையிலும் சுயநலத்தை திரைமறைவிலும் தேடிச் சோர்வுறும்  கூட்டத்திடை,  வாழ்க்கை வெள்ளத்தில் மூழ்கித் தத்தளிக்கும் சபிக்கப்பட்ட மக்களுக்கு இதயம் கனக்க உதவிகரம் நீட்டும் மகாத்மாக்களை  இறைவனிடத்தை இட்டுநிரப்ப அவதரித்தவர்களென எண்ணத்தோன்றுகிறது.

பெங்களூரில் ஆட்டோ ராஜா என்ற மனிதர் நேற்றுவரை வன்முறைகளில் தீர்வுகண்ட மனிதர். இன்று திக்கற்ற பல மனித உயிர்களுக்கு எவ்வித விள்ம்பரமுமின்றி மறுவாழ்வுதரும் மகேசனாக இருக்கிறார் என்று கேள்வி. இந்நாவலில் இடம்பெறும் பெண், பிரான்சு நாட்டில் பிறந்து, தனது வளமான மேற்குலக வாழ்க்கையைத் துறந்து,  மொழி, பண்பாடு அனைத்திலும் வேறுபட்ட ; போக்குவரத்து, மின்சாரம் இவற்றை அறியாத, ஒருவேளை உணவைக்கூட எளிதாகப் பெறமுடியாத உலகில் பிறருக்கென தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஒருத்தி. முடிந்தவரை அதிகப் புனைவுகளின்றி அவள் வழித்தட உண்மையை எழுத்தில் வடித்திருக்கிறேன்.

“உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்

அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்

தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்;

துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்

புகழ்எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின்

உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;

அன்ன மாட்சி அனைய ராகித்

தமக்கென முயலா நோன்தாள்

பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.”

கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதியின்  உலக இருத்தலுக்கான  காரணங்களிலொன்றை  புதின மொழியில் உங்களோடு பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.

இந்நாவலைச் சிறப்புடன் கொண்டுவந்த சந்தியா பதிப்பகத்திற்கும், நண்பர் நடராஜனுக்கும் நன்றிகள்.

அன்புடன்

நாகரத்தினம் கிருஷ்ணா

ஸ்ட்ராஸ்பூர்

nakrishna@live.fr

பாரிஸ் டிரான்ஸி தமிழ்ச் சங்கம்: திரு அலன் ஆனந்தன்

தமிழர்களாகிய  நமக்கு விளம்பரத் தேடல்களின்றி வாழ்வது கடினம். ஆனால், பிரான்சு நாட்டில்    தமிழினம், தமிழர் பெருமை இரண்டையும்  ஆண்டுகள் பலவாக தொடர்ந்து நிலைநிறுத்திவரும் அரிதான புதுச்சேரி தமிழர்களில் ஒருவர் நம்முடைய அலன் ஆனந்தன். இவர் புதுச்சேரி தமிழர் மட்டுமல்ல, பாரீஸ் புறநகர்களில் ஒன்றான Drancy நகரின் Conseiller municipal. அந்நகரில் காந்தி மகானுக்கு சிலை எடுத்தவர், பேதமின்றி தமிழ் இனத்தை ஆதரிப்பவர், அனைத்திற்கும் மேலாக பாசாங்கற்ற மனிதர்.

பிரான்சு நாடு, அதன் பூர்வீகமக்களன்றி, தன்னுடைய காலனிய வரலாற்றின் காரணமாகவும், உலகநாடுகளில் பிரச்சினகள் காரணமாகவும் அரசியல், பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் புகலிடமாகவும் உள்ளது. இம்மக்கள் இனம், மொழி, பண்பாடு என்கிற அடிப்படையில் வேறுபட்டவர்கள். இம்மக்களில் இலங்கை மற்றும் இந்தியத் தமிழர்களும் அடங்குபவர். தமிழர்கள் தனிமனிதர்களாகப் பார்க்கிறபோது திறமைசாலிகள், மாறாக கூட்டமாக பார்க்கிறபோது பலவீனமானவர்கள். தன்னினம், தன்மக்ள நலன் கருதி உண்மையாக உழைப்பவர்களைக் காண்பது அரிது.

நண்பர் அலன் ஆனந்தன் விதி விலக்கு. தனித்துவமானமனிதர், புதுச்சேரி தமிழர் என்கிறபோதும், யாழ்ப்பான தமிழர்களையும் நேசிப்பவர். டிரான்சி நகரில் தமிழர் விழா, தமிழர் விளையாட்டு என நிகழ்ச்சிகளைப் பல ஆண்டுகளாக சிறப்பாக நடத்திவருகிறார். அப்படியொரு விழாவைக் கட்ந்த ஏப்ரல் 26 அன்று காணும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. பறை, நாதஸ்வரம், நாட்டியமென அரங்கு ஒளிர்ந்த து. அவ்விழா நண்பர் அலன் ஆனந்தனுடைய ஆளுமை, அனைத்து மனிதர்களையும் அரவணைக்கும் அவருடைய உயர்ந்த பண்பு இரண்டையும் எனக்கு உணர்த்திற்று. நண்பரையும், அவரது தமிழ்ச் சங்கத்தில் பொறுப்பேற்று உழைக்கும் திருவாளர்கள்: நெப்போலியன், முத்துப்பிள்ளை, தங்கதுரை, ஸ்ரீதர்;திருமதியர்  பானுமதி ஆனந்தன் , அமேலி ஜூலியன், சிவகௌரி கண்நாதன் ஆகியோரையும் வணங்கி வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகிறேன்.