பிரான்சு நாட்டில் அதிபர் தேர்தல் நெருங்குகிறது (ஏப்ரல் 2022) அரசியலில் மேற்கு நாடுகளைப் பொறுத்தவரை வலதுசாரிகள் இடதுசாரிகள் என்ற பிரிவு பொதுவில் அதிகம் பொருளாதாரக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டிருந்த காலம் மறைந்து தற்போது ஐரோப்பியர், ஐரோப்பியர் அல்லாதார் என மக்களைப் பிரித்து நிறம் இனம் என்ற சொல்லடையாளங்கள் அடிப்படையில் தங்கள் கொள்கைகளை வகுத்துக்கொண்டு அரசியல்செய்கிற காலமிது. கருத்துக் கணிப்பின்களின்படி வலது சாரிகளுக்கும் தீவிர வலதுசாரிகளுக்கும் அதிபர் தேர்தல் போட்டி(இடது சாரி கட்சிகளின் வேட்பாளர்கள் -பசுமை கட்சி, சோஷலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட், தீவிர இடதுசாரிகள் – ஒருவர்கூட தேறமாட்டார்கள் என்கிற நிலமை). தற்போதைய அதிபர், வலமா இடமா ? போன அதிபர் தேர்தல் வரை, முன்னாள அதிபரின் அலுவலகத்தில் நிதித் துறை ஆலோசகர். திடீரென்று கட்சிகள் பின்புலமின்றி அதிபர் தேர்தலில் குதித்தார். வங்கி அதிபர்கள், பெறு நிறுவனங்கள், தவிர தீவிர வலது தீவிர இட து சாராத மிதவாதிகள் ஆதரவும் கிடைக்க, பாரம்பர்ய கட்சிப் பின்புலமற்ற ஒருவரால் அதிபராக முடிந்தது. திரும்பவும் அவர் ஜெயிக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகம். இத்தகைய சூழலில் கலை இலக்கிய உலகில் இரண்டு அதிசயங்கள் நடந்தன.
Panthéon :
பாரீசில் உலகப் புகழ்பெற்ற அருங்காட்சியகங்கள் உண்டு. அப்பட்டியலில் ‘Panthéon’ நினைவுக்கூடம் முக்கியமானதொன்று. பாரீசு நகரில் Quartier Latin பகுதியில் இந்நினைவுக்கூடம் உள்ளது. பெருநகர மொழியில் சொல்வதெனில் இலத்தீன் வட்டத்தில் இருக்கிறது. ஒருகாலத்தில் இப்பகுதியில் உள்ள உயர் கல்விக்கூடங்களிலும், பிற முக்கிய இக்கிய மன்றங்களிலும் இலத்தீன் மொழி அதிகம் ஒலித்ததால் ‘Quartier Latin’. ‘Panthéon’ ல் என்ன விசேடமெனில் பல கலை இலக்கியவாதிகளின் சமாதிகள் ஒரே இத்தில் – வொல்த்தேர், விக்தொர் யுகோ, எமில் ஸோலா என 80 பேர்- இலக்கியம், அரசியல், இராணுவத்தில் சாதித்த உடல்கள் . இச்சமாதிகளில் ஒன்றாக ஐரோப்பிய இனத்தவரிடையே ஆப்ரிக்க பெண்மணி உடலும் கடந்த நவம்பர் 31 முதல் இடம் பெற்றுள்ளது. இனவெறியும் நிறவெறியும் அதிகம் சுட்டெரிக்கிற அரசியல் மற்றும் சமூகச் சூழலில் பிரான்சு தேசத்தைப் புகலிடமாக தேர்வு செய்து மறைந்த கருப்பரின பெண்மணி Joséphine Baker அமெரிக்காவில் பிறந்தவர். பிரான்சு தேசத்தில் குடியேறி, பாடல், நடனம் என முழு நேர தொழில்முறைக் கலைஞராக மாறியபின் இரண்டாம் உலகபோரின்போது ஜெர்மன் பிரான்சு நாட்டை ஆக்ரமித்திருந்த சூழலில், அதற்கு எதிரான எதிர்ப்பு இயக்கத்தில் தீவிரமாகப் பங்காற்றியவர். உலகில் பலநாடுகளிலிருந்தும் இனம், நிறம் பேதமின்றி பிள்ளைகளைத் தத்தெடுத்து அவருடைய கோட்டைபோன்ற வீட்டில் அடைக்கலம் அளித்து கல்வி தந்தவர். தம் சொத்து முழுவதையும் பிறர்க்கென வாரிவழங்கிய அப்பெண்மணியின் இறுதிக்காலம் வறுமையில் முடிந்தது . இப்பெண்மணிக்கு கடந்த நவம்பர் 31 அன்று பிரெஞ்சு அரசாங்கம் Panthéon நினைவுக்கூடத்தில் இடமளித்தது தீவிர வலதுசாரிகளுக்கு மிகப்பெரிய சவுக்கடி.
2. மரியோ வர்காஸ் லோஸா
தென் அமெரிக்கா பெரு நாட்டைசேர்ந்த ஸ்பானிய மொழி எழுத்தாளர் மரியோ வர்காஸ் ஐ தமிழ் வாசகர்களும் அறிவார்கள். 2010 இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றவர். அவருக்குப் பிரெஞ்சு இலக்கிய உலகின் பீடம் எனச்சொல்லப்படுகிற பிரெஞ்சு அகாதமியில் உறுப்பினர் தகுதி அளிக்கபட்டுள்ளது. பிரான்சுதேச குடியுரிமை அல்லாதர் அதற்குள் நுழைவது அத்தனை எளிதான காரியமல்ல. மரியோ பிரெஞ்சு மொழி எழுத்தாளாரா என்றால் அதுவுமில்லை. எனினும் பிரெஞ்சுக் பண்பாட்டையும் மொழியையும் நன்கறிந்தவர் எனச்சொல்கிறார்கள். அண்மையில் ஆப்ரிக்க இளைஞருக்கு கொன்க்கூர் இலக்கிய பரிசை அளித்து கௌவுரவித்த துபோல, மரியோ வர்காஸுக்கு பிரெஞ்சு அகாதமியில் இடமளித்திருப்பது கவனத்திற்குரியது. அகாதமி உறுப்பினர்கள் மரணமிலா பெருவாழ்வுக்கு உரியவர்கள் ( Immortels). உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை நாற்பது, பதினெட்டாவது இருக்கைக்குரிய எழுத்தாளர் மற்றும் தத்துவவாதி மிஷெல் செர்(Michel Serres) இடத்தில் மரியோ வர்காஸ். எனினும் சிலி நாட்டுத் அதிபர் தேர்தலில் தீவிர வலது சாரி வேட்பாளருக்கு இவர் ஆதரவு அளித் திருப்பது இங்கு கடும் விமர்சனத்திற்கு காரணமாகி இருக்கிறது.
மனித உறவுகள் தேவைகளை பொறுத்தவை இல்லையா ? அலுவல் சார்ந்து, தினசரி வாழ்க்கைத் தேவைகளை முன்னிட்டு பேருந்திலோ, பொது இடங்களிலோ ஓரிரு விநாடிகளோ நிமிடங்களோ நம்மை எதிர்கொள்ளும் முகங்கள் எதிர்வீட்டுச் சுவர்போல, தெருமுனை கடைபோல, பேருந்து நிறுத்தம்போல அற்ப இருத்தல்களாக எனக்குப் படுகின்றன. விதிவிலக்காக குறுகியகாலம் புதிய ஊர், புதிய தேசம் என பயணிக்கிறபோது அந்நியச் சூழலில் எனது மொழியைப் பேசுகிறவர், நான் பிறந்து வளர்ந்து நாட்டைச் சேர்ந்தவர் என நம்பும் பட்சத்தில் நீங்கள் எப்படியோ, நான் அந்த முகத்தைத் திரும்பத் தேடுகிறேன். கூட்டத்தில் கலந்தாலும் அம்முகத்திற்குரிய உடலைப் தேடும் நோய் என்னை பலகாலமாக பீடித்துள்ளது. என்னுடைய வாழ்க்கையில் அவர்களோ, அவர்களுடைய வாழ்க்கையில் நானோ சந்திப்புக்கு முந்தைய நாள்வரை குறுக்கிட்டிருக்க வாய்ப்பில்லை. அறிமுகமற்ற அந்த ஆண் அல்லது பெண், எனதருகில் காலியாகவுள்ள இருக்கையில் உட்காருகிறார். அவர் பேசாமல் அமர்ந்திருந்து தனக்குறிய நிறுத்தம் வந்த தும் இறங்கிபோயிருந்தால் பிரச்சனையில்லை. நான் அறிந்த மொழியில் ஏதோ முனுமுனுக்கிறார் அல்லது நான் திறந்து படிக்கும் நாவலின் ஆசிரியர் தமக்கும் பிடித்த எழுத்தாளர் எனக் கூறிவிட்டு புன்னகைக்கிறார். எதோ ஒரு காரணத்தை முன்னிட்டு அறிறுமுகமாகும் இப்புதியவரை, சில சமயங்களில் எனக்குத் திரும்பச்சந்திக்கவும் நட்புகொள்ளவும் நேரிடுகிறது.
பிரான்சு நாட்டில் கொரோனா தொற்று பற்றிய பதற்றம் மக்களிடையே அதிகம் பரவாமல் இருந்த நாளொன்றில் எதிர்பாராத ஒரு தொலைபேசி அழைப்பு. அழைத்த பெண்ணின் பெயர் மீரா. புதுச்சேரிக்கு அருகிலுள்ள ஆரோவில் நகரில் எதேச்சையாக நான் சந்தித்த ஒரு பெண். பயிற்சி முகாமொன்றில் சம்பவித்த எதிர்பாராதசந்திப்பு. எனக்கும் அவளுக்குமிடையே இருந்த இடைவெளியை என்னைப்போலவே பிரான்சு நாட்டிலிருந்து வந்தவள் என்ற காரணம் குறைத்திருந்தது. ஒருமணி நேரத்திற்கும் குறைவான சந்திப்பு. இதுபோன்ற சந்திப்புகளில் இரு மனிதருக்கிடையில் என்ன நிகழுமோ, பேச்சுகளின் தன்மை என்னவாக இருக்குமோ அந்த வகையிலேயே எங்கள் சந்திப்பும் உரையாடலும் இருந்தன. தொலைபேசியில் தாய்வழி பெற்றோரின் இந்தோசீன வாழ்க்கை பற்றிய கூடுதல் தகவல்களுக்காக என்னை அழைத்த தாகவும் கூறினாள். « என்னிடம் என்ன எதிர்பார்க்கிறாய் ? » எனக்கேட்டேன். « ஸ்ட்ராஸ்பூர் நகரில் இந்தோ சீனா சண்டையில் பங்கெடுத்த வியட்நாமியர் யரையேனும் சந்திக்க நேர்ந்தால் சைகோனில் சிங்காரவேலு-மரியா ஹோவாம்மீ தம்பதிகளைப் பற்றிக் கேள்விபட்ட துண்டா, என விசாரித்துச் சொன்னால் போதும் », என்றாள். எனக்கு இவ்விஷயத்தில் அவளுக்குப் பெரிதாக உதவ முடியும் என்கிற நம்பிக்கை இல்லை. முயற்சித்துப் பார்க்கிறேன், எனக்கூறி அழைப்பைத் துண்டித்துவிட்டேன்.
இது கடலில்தொலைத்த ஊசியைத் தேடும் கதை. எனக்கு இந்நகரில் சில பிரெஞ்சு நண்பர்களையும் இந்தியக் குடும்பங்களையும் தெரியும்அவர்களிடம் விசாரிக்கலாம் அல்லது என்னைப் பெற்றவள் ஒரு பிரெஞ்சுப் பெண்மணி தவிர சமூக நலத்துறையில் பணியேற்றியவள், அகதிகளாகவும் வேறுகாரணங்களை முன்னிட்டும் பிரான்சு நாட்டில் குடியேறிய குடும்பங்களுக்கு தனது அலுவல்சார்ந்து உதவி இருக்கிறாள். அவளுக்கு ஒருக்கால் சைகோனிலிருந்து பிரான்சுநாட்டிற்கு குடிவந்த வியட்நாமிய குடும்பங்கள் தெரிந்திருக்கலாம். ஒரு நூற்றாண்டுகால ஆக்ரமிப்பிற்குப் பிறகு, ஆக்ரமிக்கப்பட்டவகளிடமே தோற்று பிரான்சு இந்தோசீனாவிலிருந்து வெளியேறியது. அவர்களை ஆதரித்து தங்கள் சொந்தங்களைப் பகைத்துக்கொண்ட வியட்நாமியர்களும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அவர்களுடன் பிறந்த மண்ணைத் துறந்து பிரான்சுநாட்டில் தஞ்சம் புகவேண்டிய நிர்ப்பந்தம். அவர்களில் எத்தனைபேர் சைகோனில் வசித்தவர்கள். அந்த முன்னாள் சைகோன்வாசிகளில் புதுச்சேரிமனிதர்களை அறிந்தர்கள் எத்தனைபேர்? அப்படியே அறிந்திருப்பினும் இன்றைய தேதியில் அவர்கள் அனைவரும் முதுமை அடைந்திருக்கவேண்டும். ஆனபோதிலும் மீராவின் தேடலுக்கு உதவத் தீர்மானித்தேன்.
அவள் தொலைபேசியில் அழைத்தவேளையில் நான் முன்பே தெரிவித்ததுபோல மானுடவாழ்க்கை கொரோனா தொற்றிடம் சின்னாபின்னபட்டிருந்தது. அபத்தமும், கதவடைப்பும், மிதமான அடக்குமுறையும் முகக் கவசத்துடன் மலிவாக விநியோகிக்கப்பட்ட காலம். அல்பெர் கமுய்யும், காப்ஃகாவும் னவுகளில் கைகொட்டிச் சிரித்தார்கள். அன்றைக்கும் முந்தைய நாட்களைப் போலவே சலிப்பும் சோர்வுமாய் உட்கார்ந்திருந்தேன். அழைப்புமணி ஒலித்தது. கொரோனா காலங்களில் தேடிவரும் மனிதர்கள் குறைவு. பதிவுத் தபாலை நேரடியாக பட்டுவாடாசெய்ய வேண்டிய கட்டாயத்தில் அஞ்சல் ஊழியர் வந்திருருக்கலாம் அல்லது ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருளை ஒப்படைக்க வந்த ஊழியராக இருக்கலாம் அல்லது மீரா ?….. கதவைத் திறந்தேன். சந்தேகித்தவர்களில் ஒருவருமில்லை. இவள் குள்ளமான ஆசியப் பெண், மகிழ்ந்து வீட்டிற்குள் வரவேற்கக்கூடிய தோற்றம். மெலிந்த உடல். மஞ்சள் நிறம், கழுத்தின் இருபுறமும் கருகருவென்று அடர்த்தியான கேசம், தட்டையான சிரித்த முகம், கண்களைத் தேடிக் கண்டுபிடித்தபின்,
– என்ன விஷயம் சொல்லுங்கள், என்றேன்
– எனது காரில் காய்கறிகள் இருக்கின்றன, விலை மிகவும் மலிவு, இரசாயண உரங்களின்றி இயற்கை முறையில் விளைந்தவை, என்றாள்.
– சந்தோஷம், ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்புதான் கடைக்குச் சென்றுவந்தேன். அடுத்தமுறை வந்தீர்களெனில் கண்டிப்பாக வாங்குவேன், என்ற பதிலைக்கேட்டு, ஏமாற்றத்துடன் திரும்பி நடந்தவள், நான் கதவைவிட்டு அகலாமல் இருப்பதை உணர்ந்தவளாய் மீண்டும் வந்தாள்.
– என்னை சீனப்பெண் என நினைத்தீர்களா, இல்லை. வியட்நாமிய பெண். எங்கள் சங்கத்திற்காக இந்த விற்பனை. வியட்நாமிய கைவினைப் பொருட்களெல்லாம் கூட என்னிடம் இருக்கின்றன .
வியட்நாம் என்றவார்த்தை எனது குடியிருப்பிற்குள் அவளை அனுமதித்தக்க விரும்பியது. « உள்ளே வாங்க, ஒரு காப்பி குடிச்சுட்டுப்போகலாம் » எனமரியாதை நிமித்தமாக அழைத்தேன். « இல்லை, எனக்கு நேரமில்லை. அடுத்தமுறை வருகிறேன் » எனக் கூறி வெளியேறியவளைத் தொடர்ந்தேன். தக்காளி,கத்தரிக்காய், திராட்சை, இரண்டு அன்னாசிப் பழங்கள் என வாங்கிக்கொண்டபின், « உங்கள் வியட்நாமியச் சங்கம் எங்கே இருக்கிறது ?, » எனக் கேட்டேன். தாமதமின்றி ஒரு முகவரி அட்டையைக் கொடுத்தாள். புத்தர் ஆலயமொன்று அங்கிருப்பதாகவும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழுநேரமும் அது திறந்திருக்குமெனவும் தெரிவித்தாள்.
II
வியட்நாம் பெண்ணைச் சந்தித்த மூன்றாவது ஞாயிற்றுகிழமை, மீராவும் நானுமாக காலை பத்துமணிக்கு, அவள் கொடுத்திருந்த முகவரிக்குச் சென்றோம். ஸ்ட்ராஸ்பூர் நகரின் வடபகுதியில் இருபது நிமிட காரோட்டத்திற்குப் பின் அடர்ந்த காடுபோல மரங்கள். தார்ச் சாலை மரங்களை விலக்கி உள்ளே எங்கள் வாகனத்தை அனுமதித்த சில நொடிகளில் வணிக வளாகம் தோற்றத்துடன் அம்முகவரி எங்களை வரவேற்றது. ‘Pagode Phô-Hien’ என முன்வாயிலில், படல்போன்ற கதவருகே சலவைகல்லில் எழுதி வைத்திருந்தார்கள். நாங்கள் தயக்கத்துடன் சிறுகதவை உட்பக்கம் தள்ளியபோது, எழுந்த சப்தம் அங்கு நின்றிருந்த இரண்டு நடுத்தர வயது ஆண்களின் கவனத்தைத் திருப்பியது. முகக் கவசங்களை இறக்கி மெலிதாக புன்னகைத்தார்கள். எங்களை வரவேற்கின்ற வகையில் அவர்கள் தலை தாழ்ந்து உயர்ந்தன. நடுத்தரவயதுடைய மனிதரொருவர் கை நாங்கள் செல்லவேண்டிய திசை நோக்கி நீண்டது. கைகாட்டிய பாதையில் இறங்கி நடந்த சில அடிகள் தூரத்தில் நடைகூடமொன்றின் ஆரம்பம். முழுக்க முழுக்க மரங்களை உபயோகித்திருந்த கட்டிட அமைப்பு இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, ஒரு பகுதி வாழிபாட்டுக் கூடமாகவும் மறுபகுதி, உணவு விடுதி, சமையற்கூடம், அங்கத்தினர்கள் கூடிப்பேச ஒரு சிறுகூடம் என்றிருந்தன.
கொரோனா தொற்று சூழ்நிலைக்கொப்ப மனிதர் நடமாட்டம் வளாகத்திற்குள் அதிகமில்லை. வந்திருந்த மனிதர்களும் ஆசியர் பாதி ஐரோப்பியர் பாதி என்றிருந்தனர். அவர்களில் வயதான மனிதர்களைக் காண்பதும் அரிதாக இருந்தது. எதற்காக வந்திருந்தோமா அது நிறைவேறுமென்ற நம்பிக்கை எனக்குச் சுத்தமாக இல்லை. எனது ஏமாற்றத்தை வெளிப்படையாகத் தெரிவிக்கின்ற வகையில் உதட்டை பிதுக்கியவண்ணம் மீராவைப் பார்த்தேன். அவள் அதை பிரச்சனை இல்லை வா என்பதுபோல என்னை இழுத்துக்கொண்டு முன்னேறினாள். காலணிகளை கழற்றவேண்டியிருந்தது. வெற்றுக் கால்களுடன் ஒரு நீரூற்று, செடிகொடிகள் எனகடந்து முழுக்கமுழுக்க மரத்தாலான விசாலாமான மண்டபத்திற்குள் காலெடுத்துவைத்தோம்.
பால் வெள்ளையில் சலவைக் கல்லால் செய்த பிரம்மாண்ட மான புத்தர் சிலை. மனிதர்கள் தரையில் கால்பாவாமல் நடப்பதுபோலபட்டது, அவ்வளவு நிசப்தம். காணிக்கை செலுத்தினார்கள். ஊதுபத்தியை கொளுத்தி மிகப்பெரிய அண்டாபோன்ற பாத்திரத்தில் நிரப்பியிருந்த மணலில் சொருகிவிட்டு ஒதுங்கி மற்றவர்களுக்கு வழிவிட்டார்கள். ஒதுங்கியவர்கள் முழங்காலிட்டு குனிந்து வணங்கிய பின்னர் ஆளுக்கொரு தடுக்களவு பாயில் சம்மணமிட்டு அமர்ந்தார்கள். வெள்ளை நிறத்தில் நீண்ட பருத்தியாலான காற்சராயும், அதே நிறத்தில் முழங்கால்களை மறைத்த சட்டையும் தலைமுடியை முற்றிலுமாக வழித்திருந்த பெண்மணி ஒருத்தி முழங்காலிட்டு வணங்கிய பிறகு புத்தர் முன்பாக சம்மணமிட்டு அமர்ந்தார். பௌத்தம் சம்பந்தப்பட்ட புனித நூலாக இருக்கவேண்டும் அதை விரித்துவைத்துக்கொண்டார் வலது கையில் சிறு மரச்சுத்தியல், அதைக்கொண்டு அருகில் கவிழ்த்திருந்த கையளவு வெண்கல கிண்ணத்தை அடித்து ஓசை எழுப்பியபடி சுலோகத்தைச் சொல்ல அதன் ஓசையும் வெண்கல கிண்ணத்தின் மெல்லிய அதிர்வும், மண்டபம் முழுதும் ஒலிது, எழமுடியாமல் எங்களைக் கட்டிப்போட்டது.
பிற்பகம் ஒரு மணிக்கு மண்டபத்திலிருந்து வெளியில் வந்தோம். சுட்டெரிக்கும் வெயில். அதிர்ஷ்ட்டவசமாக சுற்றிலும் பச்சைபசேலென்று மரங்கள், வளர்ந்த கோரைபுற்கள், செடிகொடிகள் ; அரும்புகள், பூக்கள், அங்கொன்றும் இங்கொன்றுமாக பட்டாம் பூச்சிகள், இனிய நறுமணம். ஒரு சிறு குளம், குளமுழுக்கத் தாமரையும் அல்லியும். தண்டுகளுக்கிடையே கும்பல் கும்பலாக சிறு மீன்கள். குளத்தையொட்டிப் போட்டிருந்த பெஞ்சில் இளஞ்சோடி ஒன்று அமர்ந்திருந்த து. அவர்களிடம் « எங்களுக்குச் சைகோனைப்பற்றியத் தகவல் வேண்டும். உங்களால் அப்படி யாரையாவது அறிமிகப்படுத்த இயலுமா ? » மீரா இளைஞனிடம் கேட்டாள். அவன் « நாங்கள் ஆம்ஸ்டர்மிலிருந்து வந்திருக்கிறோம். பிரெஞ்சு தெரியாது. எங்கள் சங்கச் செயலாளரிடம் அழைத்துப்போகிறேன், அவர் பதில் சொல்வார் » என ஆங்கிலத்தில் பதில் கூறிவிட்டு முன்னால் நடந்தான். நாங்கள் இருவரும் இளைஞனைப் பின்தொடர்ந்தோம். அவன் எங்களைக் கொண்டுபோய் நிறுத்தியது மூன்றுவாரங்களுக்கு முன்பு, « காய்கறிகள் விற்கிறேன் வேண்டுமா ? » எனக் கேட்டு என் வீட்டிற்கு வந்த அதே பெண்ணிடம்.
எங்களைக் கண்டு புன்னகை செய்தவள், « புத்தரை தரிசித்தீர்களா, மண்டபத்தின் சுற்றிப் பார்க்க முடிந்ததா ? உட்காருங்கள் இன்னும் சிறிது நேரத்தில் மதிய உணவு பரிமாறும் நேரம். சைவ உணவு. இருந்து சாப்பிட்டுவிட்டுப் போகலாம் », என எங்களை உபசரிக்க ஆரம்பித்தாள். நான் மீராவின் முகத்தைப் பார்த்தேன். « உங்கள் அன்பிற்கு மிகவும்நன்றி ஆனால் உங்களோடு அமர்ந்து உணவுண்ணும் அதிர்ஷ்ட்டம் இன்றைக்கு எங்களுக்கில்லை. உண்மையில் நாங்கள் வந்தது வேறுகாரணத்திற்காக» என்றேன். « சொல்லுங்கள், என்ன விஷயம் ! » என்ற பெண்ணிடம் மீரா பாரீஸிலிருந்து வந்திருப்பதையும், வந்திருக்கும் காரணத்தையும் தெரிவித்தேன். « இதை நீங்கள் அன்றைக்கே தெரிவித்திருக்கலாமே » என்றவள் சற்று பொறுங்கள் வருகிறேன் எனகூறி, சமையல் பாத்திரங்களை ஒழுங்கு செய்து கொண்டிருந்த நடுத்தர வயது பெண்மணியை அழைத்துவந்தாள். மைஃபோங் என்றபெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட பெண்மணி, எங்களைக் கண்டதும் கையெடுத்துக் கும்பிட்டார். தம்முடைய வளர்ப்புத் தாயும், தந்தையும் தமிழர்களென்றும் அதனால் ஓரளவு தமக்குத் தமிழ் வருமென்றும், இஸாபெல்லும் தானும் நெருங்கிய தோழிகளென்றும், இசாபெல் தந்தை சிங்காரவேலுவையும் தாய் மரியா ஹோவாம்மியையும் நன்றாகத் தெரியும் கூறினாள். என்னுடைய முகவரியைக்கேட்டு வாங்கிக்கொண்ட பெண்மணி, மறுநாளே எனது குடியிருப்பைக் கண்டுபிடித்து ‘saigon -Dimanche, l’Inde -illustré, Reveil Saïgonnais, au comptoir- Hindou, impartial, தனது தாய் வேதவல்லியின் சுயபுனைவு என கைகளில் திணித்தபோது, மீராவுக்கு மட்டுமல்ல எனக்கும் இன்ப அதிர்ச்சி.
சமீபத்தில் உலகப் புகழ்பெற்ற இயக்குநர் அகிரா குரசேவாவின் நேர்காணல் ஒன்றைத் தமிழ் மொழிபெயர்ப்பில் படித்தேன்; ஓரிடத்தில் ஒரு படத்தை இயக்குவதற்கு முன்னால் அந்தப் படத்தின் கதைக் களத்தைத் தேர்ந்தெடுத்த பிறகுதான் அதன் கதைமாந்தர்களுக்குப் பெயரிடுவது, நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுப்பது ஆகியவை குறித்து முடிவு எடுப்பேன் என்கிறார்; இதைப் படித்த கணமே இதைத்தானே இலக்கியப் படைப்பாக்கம் குறித்துப் பேசுகிற தொல்காப்பியரும் முதற்பொருள், கருப்பொருள் என்று முன் வைக்கிறார் என்ற எண்ணம் எனக்குள் ஓடியதால், அந்த நேர்காணலில் குறிப்பிட்ட அந்தக் கூற்று என் மறதிக்குள் சென்று மறைந்து விடாமல் எனக்குள் நிலைநிறுத்தப்பட்டு விட்டது; இதை ஏன் இங்கே சொல்லிக்கொண்டிருக்கிறேன் என்றால் எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணாவும் படைப்பாக்கத்தின் மேன்மையான இந்த இரகசியத்தை அறிந்து செயல்படுபவராகத் தன் எழுத்துப் பயணத்தில் இயங்கியுள்ளார் என்பதைத் தெரிவிப்பதற்காகத்தான்.
முதலில் களத்தை –அதுவும் புதிய புதிய களத்தைத்– தேர்ந்தெடுப்பது, பிறகு அதன் மேல் நின்று கொண்டு எங்கெங்கோ சிதறிக் கிடக்கும் தகவல்களைத் தேடித் திரட்டித் தன்னுணர்வாக உள்ளிழுத்துத் தேக்கி வைத்துக் கொள்வது, தொடர்ந்து தேக்கி வைத்துக் கொண்டதைக் கதையாடலாக மொழிமயப்படுத்துவது என்று முப்பரிமாணத்தில் தன் புனைவெழுத்தை நடத்திக் காட்டுகிறார் கிருஷ்ணா; இதை இன்னும் கொஞ்சம் விரிவாகச் சான்றுகளோடு விளக்க வேண்டுமெனத் தோன்றுகிறது.
அவருடைய முதல் நாவலான ‘நீலக்கடல்’ (2005), 16, 17ஆம் நூற்றாண்டுகளில் பிரெஞ்சுக் காலனியாக இருந்த மொரீசியஸ் தீவுக்குக் கொண்டு செல்லப்பட்ட புதுச்சேரிப் பிரெஞ்சு காலனிய மக்களின் வாழ்க்கைப் பாடுகளைப் பற்றிப் பேசுகிறது. மொரீசியஸ் தீவு என்ற, தமிழில் இதுவரை யாருமே தொடாத, புதிய களத்தில் காலூன்றிக் கொண்டு அந்த நாவல் நடக்கிறது. இது போலவே மாத்தாஹரி (2008), காஃப்காவின் நாய்க்குட்டி (2015), ரணகளம் (2018) ஆகிய நாவல்கள் பிரெஞ்சுக் காலனியாக இருந்த, புதுச்சேரியைக் களமாகக் கொண்டு ஐரோப்பா வரை நீளுகின்றன. கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி (2012), நாயக்கர் காலச் செஞ்சியையும் புதுச்சேரியையும் களமாகக் கொண்டு இயங்குகிறது. இறந்த காலம் (2019) என்ற நாவல் புதுச்சேரிக்கு அருகில் இருக்கும் ‘ஆரோவில்’-ஐ இயங்கு களமாக அமைத்துக் கொள்ளுகிறது. இப்போது இந்த நாவல், –சைகோன் புதுச்சேரி– பிரெஞ்சு காலனியாக இருந்த இந்தோ சீனாவைத் (சைகோன்) தன்னுடைய புனைவு வெளிக்கான கதைக்களமாகக் கொண்டு ஒரு பேராறு போல நகர்கிறது.; ஒவ்வொன்றிலும் களத்தைத் தேர்ந்தெடுப்பதும், தகவல்களைத் திரட்டுவதும், தொடர்ந்து மொழிமயப்படுத்துவதுமென முப்பரிமாணங்களும் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய கிருஷ்ணாவின் இந்த எழுத்துப் பயணம் முழுவதிலும் நின்று செயல்படும் மற்றொரு முக்கியமான போக்கைக் கவனிக்க வேண்டும்; அதாவது அனைத்திலும் புதுச்சேரிப் பகுதியை ஏறத்தாழ 200 ஆண்டுகாலம் ஆண்ட பிரெஞ்சுக் காலனித்துவத்தின் கீழ் புதுச்சேரி மக்கள் பட்ட பெரும்பாட்டைத்தான் படைப்பாக்கித் தந்துள்ளார். இந்த அளவிற்குப் பிரெஞ்சுக் காலனித்துவத்தின் கோரமுகத்தையும் தமிழ் நிலப்பரப்பிலும் பண்பாட்டுக் கூறுகளிலும் அது நிகழ்த்திக் காட்டிய மாற்றங்களையும் அவற்றால் பெருவாரித் தமிழ் மக்கள் அடைந்த வலிகளையும் வேதனைகளையும் இலக்கியமாக்கித் தந்தவர்கள் நாம் போற்றும் பிரபஞ்சனும் நம் போற்றுதலுக்குரிய நாகரத்தினம் கிருஷ்ணாவும்தான்; இதிலும் பிரபஞ்சனின் களம் காலனிக்குள்ளான புதுச்சேரி நிலப்பரப்பு மட்டும்தான்; ஆனால் கிருஷ்ணாவின் களம் பிரெஞ்சுக் காலனிக்கு ஆட்பட்ட பல்வேறு வகையான நிலப்பரப்பென விரிந்தது என்பதையும் குறித்துக் கொள்ள வேண்டும்.
கிழக்கிந்திய நாடுகளில் நடந்த ஐரோப்பியர்களின் காலனித்துவத்தைத் தமிழில் வேறு சிலரும் எழுதியுள்ளனர்தான்; ப.சிங்காரம் (கடலுக்கு அப்பால், புயலிலே ஒரு தோனி), அகிலன் (பால்மரக் காட்டினிலே), ஆர்.சண்முகம் (சயாம் மரண ரயில்), ரங்கசாமி (லங்கா நதிக்கரையில்), குமரன் (செம்மண்ணில் நீல மலர்கள்), இளம் வழுதி (இலட்சியப்பாதை); பாரதியாரின் ‘கரும்புத் தோட்டத்திலே’ என்ற கவிதையையும் புதுமைப்பித்தனின் ‘துன்பக்கேணி’ சிறுகதையையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்; ஆனால் நாகரத்தினம் கிருஷ்ணா போல் முழுக்க முழுக்கத் தன் நாவல் எழுத்துக்கள் அனைத்திலும் 17-ஆம் நூற்றாண்டு தொடங்கி 20ஆம் நூற்றாண்டு வரை பிரெஞ்சுக் காலனித்துவத்தால் புதுச்சேரி வாசிகள் வாழ்வில் நிகழ்ந்த பல்வேறு அசைவுகளைப் பல்வேறு கோணத்தில் நான் முன்பே சுட்டிக்காட்டியது போல பல்வேறு ‘களத்தில்’ வைத்துத் தமிழில் படைப்பிலக்கியம் செய்தவர்கள் வேறு யாருமில்லை. இதை எந்த அளவிற்கு இன்றைய புதுச்சேரி வாசிகளும் எழுத்தாளர்களும் உணர்ந்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
II
ஓடி ஓடி உலகம் முழுக்கக் காலனிகளைத் தேடி அடைய ஐரோப்பிய நாடுகளுக்கிடையே நடந்த போட்டியில் புதுச்சேரி பிரெஞ்சுக்காரர்களின் காலனி நாடாக உருவெடுத்தது; மேலும் பிரெஞ்சுக்காரர்களுக்கு இதுதான் முதலில் சிக்கிய காலனி என்ற தகவலையும் இந்த “சைகோன் புதுச்சேரி” நாவல் மூலம் அறிந்து கொள்கிறோம்; இந்தப் போட்டியில் நாங்கள் மற்ற ஐரோப்பியர்களை விட வித்தியாசமானவர்கள்; யோக்கியவான்கள், காலனிக்குள்ளான மக்கள் நலத்தையும் எண்ணிப்பார்ப்பவர்கள் என்றொரு எண்ணத்தை உருவாக்கும் நோக்கில் தன் காலனி மக்களுக்குப் பிரெஞ்சுக் குடியுரிமையை வழங்கியது பிரெஞ்சு அரசு. இதற்குப் பெயர் “ரெனோன்சான்” என்பதாகும். இந்த ஆணைப்படிச் “சட்டப்பூர்வமான வயதடைந்த பிரெஞ்சிந்தியர்கள் அனைவரும் ஜாதி, மதம், பாலின வேறுபாடுகள் குறுக்கீடின்றி, பிறப்பால் அவரவருக்கென்று நிர்ணயிக்கப்பட்ட சமூக அடையாளத்தைக் (சாதி போன்ற அடையாளத்தை) களைந்து கொள்ளலாம்.” குடும்பப் பெயர் ஒன்றைச் (சான்றாக எதுவார் என்பது போன்று) வைத்துக் கொள்ளவேண்டும்.
இவ்வாறு பிரெஞ்சுக் குடியுரிமை பெற்ற புதுச்சேரி மக்கள், ஏறத்தாழ ‘மூவாயிரம் கல்’ தொலைவில் இருக்கும் மற்றொரு பிரெஞ்சுக் காலனி நாடான வியட்நாமிற்கு, நாங்களும் பிரெஞ்சுக் குடிமக்கள்தான் என்ற கோதாவோடு, வசதியான வாழ்வைத் தேடிப் புலம்பெயர்ந்து வாழ்ந்த கதையைத்தான் இந்த நாவலில் புனைவாக்கியுள்ளார் நாகரத்தினம் கிருஷ்ணா. எட்டாம் வகுப்பு அளவிற்குப் புதுச்சேரிப் பள்ளிகளில் படித்தவர்களுக்கே சைகோனில் கடற்படை, ஆயுதக்கிடங்கு, கல்வித்துறை, கப்பல் நிறுவனம், நீதித்துறை, நகராட்சி, காவல்துறை… என்று கடிகாரத்தைப் பார்த்து வேலை செய்கிற உத்தியோகங்கள் காத்திருந்தன என்ற தகவலைத் தருகிறார் கதைசொல்லி.
பிரெஞ்சு இந்திய நகரமான புதுச்சேரிக்கு அருகில் இருக்கும் விவசாயக் குடும்பம் ஒன்றில் இரண்டு தம்பிகளோடு மூத்தவனாகப் பிறந்து செல்லமாக வளர்ந்த வேதவல்லியை அவளுடைய 14ஆவது வயதில் 30 வயதடைந்த தாய்மாமன் சுப்புராயனுக்குத் திருமணம் முடித்துக் கொடுக்கிறார்கள்; ஒரே காரணம், தாய்மாமன் வீடு பக்கத்துத் தெருதான்; எனவே அன்பு மகளை எப்பொழுது வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற ஆசைதான்; ஆனால் சுப்புராயனோ, “திருமணம் முடித்து நீ பக்கத்துத் தெருவிற்கு வருவதற்கே அந்த அழுகை அழுதவர்கள், சைகோனுக்கு உன்னை அனுப்பச் சம்மதிப்பார்களா? யோசித்துப்பார்” என்று மனைவியைச் சமாதானப்படுத்திச் சம்பாதித்து வசதியாக வாழவேண்டும் என்ற ஆசையில் கப்பலேறி சைகோன் வந்து சேர்கிறான். இவ்வாறு “புருஷனுடைய காரியம் யாவிலும் கை கொடுக்க” விதிக்கப்பட்டுள்ள நிலையில் இருந்த வேதவல்லியைப் பிரெஞ்சுக் காலனிய அடக்குமுறைக்குள்ளான வியட்நாமியரும், அடக்குகின்ற ஐரோப்பியரும், பிரெஞ்சுக் குடியுரிமை பெற்ற புதுச்சேரித் தமிழர்களும், மளிகைக்கடை, ஜவுளிக்கடை, வட்டிக்கடை என்று வணிகம் செய்து சம்பாதிக்க வந்த பிரிட்டிஷ் இந்தியர்களும் ரெயோல் தமிழர்களும் (அதாவது ஐரோப்பியர் கலப்பால் உருவானவர்கள் – தங்களுக்கான விசுவாசிகளை உருவாக்கிக்கொள்ள உள்ளூர்ப் பெண்களை மணம் முடித்துக்கொள்ளும் தந்திரத்தினால் உருவான இனம்) மற்றும் லாவோஸ், தாய், கம்போடிய மக்களும் வாழ்கின்ற இந்தோசீனா எனப்படும் சைகோன் என்னவாக மாற்றி வளர்த்தெடுத்தது என்பதுதான் இந்த நாவலின் அடிச்சரடு.
பத்து வயது ஆவதற்குள்ளேயே முழு வீட்டு மராமத்து அனைத்தையும் ஏற்று நடத்திய விவசாயக் குடும்பத்துப் பொண்ணான வேதவல்லி எப்படிப்பட்டவள்? “எருமைத் தயிரை ஏட்டோடு அகப்பை கொள்ள எடுத்துச் சோற்றுக்கு வலிக்காமல் தலையில் பூவை வைக்கிறது போல வைப்பவளாம்”; இப்படிப்பட்டவளுக்குப் புலம்பெயர்ந்த வாழ்வு பிடிக்கவா செய்யும்? “கை நிறைய சோத்தை அள்ளி வாயில் வச்சேன்; இங்கே கரண்டியைப் புடி, குச்சியைப் புடின்னு பாடம் எடுக்கிறாங்க” என்கிறாள் ஓரிடத்தில். கதைசொல்லியும் 1985 தொடங்கி இன்று வரை புலம்பெயர்ந்து பிரெஞ்சு நாட்டில் வாழ்ந்து கொண்டிருப்பவர் என்பதனால் புலம்பெயர் வாழ்வில் எதிர்கொள்ள நேரும் அத்தனை அவஸ்தைகளையும் மிக நுணுக்கமாக வேதவல்லி மூலமாக நாவலுக்கு எந்தப் பங்கமும் இல்லாமல் புனைவு வெளிக்குள் பொருத்தி விடுகிறார். ஆண்டுகள் பல ஆனாலும் வேதவல்லிக்குள் சைகோன் நுழையவே முடியவில்லை:
“சுப்புராயனைத் தவிர என்னுடையதென்று சொல்ல இங்கு எதுவுமில்லை. கண்களைக் கட்டிப் புதைகுழியில் தள்ளப்பட்டிருப்பதைப் போலப் பல நேரங்களில் உணர்கிறேன். ஒவ்வொரு கணமும் புதுச்சேரிக்குத் திரும்பாமல் புதைந்துவிடுவேனோ என அஞ்சி நாட்களைக் கழிக்கிறேன். என் கால் பதித்த பூமியை, கைதொட்ட பூவரசு மரங்களை, பழகிய சினேகிதிகளை, தாயை, தந்தையை, தம்பிகளை, பாகூர் ஏரியை, புதுச்சேரி குயில் தோப்பை, அதிகாலை நாதஸ்வரத்தை, மார்கழி மாதத் திருப்பாவையை, அம்மா ஆசையோடு கொடுத்த அதிரசத்தை என்றாவது ஒருநாள் திரும்பக் காண்பேன், தொடுவேன், கேட்பேன், ருசிப்பேன் என்ற நம்பிக்கையில் கணங்களைக் கரைத்துக் கொண்டிருக்கிறேன்.”
இவ்வாறு “பிறந்த மண்நோய்” என்று சொல்லத் தக்க அளவிற்குப் பீடிக்கப்பட்டிருக்கும் வேதவல்லித் தன்னைச் சைகோனுக்குக் கொண்டு வந்து சேர்த்த, காவல்துறையில் பணியாற்றும் கணவன் சுப்புராயன் நடவடிக்கையில் வெறுப்புற்று ஆண்-பெண் உறவில் ஆணின் அதிகாரம் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் பாங்கினை மிக நுட்பமாக உணர்ந்து கொள்பவளாகப் பரிணாமம் அடைகிறாள். “விவேகம், சமயோசிதம், நிதானம், சாதுரியம் என எதிலும் வேதவல்லி மீசுரம்” என்று தன் கணவன் சுப்புராயன் வாயாலேயே சொல்லும் அளவிற்குச் சைகோன் வாழ்வில் வளர்ச்சி அடைகிறாள் “அடை காத்த கோழியே தன் குஞ்சைப் பருந்து வசம் ஒப்படைத்த கதைதான் என் திருமணம்” என்று உணர்ந்து கொள்ளும் அளவிற்கு உயர்கிறாள்:
“பொட்டைக் கழுதைகளுக்குத் தெரிந்து ஆவப்போவதென்ன என்பது அவருடைய உயர்ந்த அபிப்ராயம். வயிற்றுக்குச் சோறு, உடுக்கத் துணி, இந்திரியங்கள் தாகவிடாயில் தவிக்கிறபோது தாம்பத்ய உறவு, ஐரோப்பியர் கொண்டாட்டமோ, தமிழர் விழாக்களோ எதுவென்றாலும் தேர்போல் ஜோடிச்சு, அம்மனைப் போல அலங்கரிச்சு இழுத்துச் சென்று சபையில் நிறுத்தும் புருஷ லட்சணம்; இதற்கு மேல் ஒரு பெண்டாட்டி மூக்கைச் சிந்த என்ன தேவை இருக்கு என்கிற சமூகத்திற்கு என் புலம்பல் காதில் விழாதென்று எனக்குத் தெரியும்.”
இது மட்டுமா? மற்றொரு இடத்தில்,
“பெரியார், பெண் விடுதலையென்று பேசுற ஆம்பிளைக்குக் கூடத் தங்கள் வீட்டுப் பெண்கள் வேதகாலப் பெண்ணா இருந்தா திருப்தி”
என்றும் கிண்டல் செய்கிறாள். “இது என் கணவர் வாங்கிக் கொடுத்த புடவை” என்று ஒரு விழா நிகழ்ச்சியில் வீட்டுக்காரரைப் பெருமைப்படுத்தும் ஒரு பெண்மணியிடம் பேச்சுக் கொடுத்து ஒரு வாங்கு வாங்கி விடுகிறாள் வேதவல்லி:
“பிறந்ததிலிருந்து நம்ம கேட்டு எது நடந்திருக்கு? இந்த ஆளுக்குக் கழுத்த நீட்டுன்னு சொன்னாங்க, நீட்டினோம். தொங்கத் தொங்கத் தாலி கட்டிக்கிட்டோம். இதைச் சமைச்சி வை, அதைப் பண்ணி வை’ என்பாங்க, செய்தோம், “சைகோனுக்குப் புறப்படுன்னு” சொன்னாங்க, புறப்பட்டு வந்தோம். நாமளும் மனுஷங்க தானே; அவங்களுக்கு ரெண்டு வார்த்தை, நம்மளுக்கு ரெண்டு வார்த்தைன்னு இருப்பதுதானே நியாயம்
என்றெல்லாம் இன்னும் நீண்டு கொண்டு போகிறது அந்த உரையாடல்.
இப்படியெல்லாம் வேதவல்லி புதிய பரிணாமம் அடைவதற்கு ஒரு பக்கம் குடிகாரக் கணவன் என்றால் மற்றொரு பக்கம் இஸ்மாயில் அண்ணன், அவர் மனைவி அமீனா பேகம் மற்றும் புருஷாந்தி போன்ற உன்னதமான ஆண்களோடு பழகக் கிடைத்த வாய்ப்பும், சைகோன் தமிழ்ச் சங்கத்தில் கலந்து கொண்டு அதன் நிர்வாகியாகவும், தமிழாசிரியராகவும் பணியாற்றக் கிடைத்த சமூகச் சூழலும்தான் காரணம் எனச் சொல்ல வேண்டும்; இஸ்மாயில் அண்ணன் ஜவுளிக்கடை, பலசரக்குக்கடை என வைத்துப் பெருஞ்செல்வந்தராக விளங்குபவர். கணவன் மனைவி இருவரும் இந்தியர் சங்கம், அது சார்ந்த விழாக்கள் என அனைத்தையும் முன்னின்று நடத்துபவர்கள். இவர்களின் இஸ்லாமிய வீட்டைக் காட்சிப்படுத்தும் இடத்தில் கதைசொல்லியின் எடுத்துரைப்புத் திறனை அறிந்து வியந்து நிற்க நேர்கிறது; (இந்த மாதிரி சைகோன் நகரத்தையும் தெருக்களையும் மலைகளையும் பள்ளத்தாக்குகளையும் வனங்களையும் ஆறுகளையும் கடலையும் போர்க் காட்சிகளையும் நாவலுக்குள் காட்சிப்படுத்த கிருஷ்ணா எடுத்துக் கொண்டிருக்கும் கடும் உழைப்பினையும் மொழித்திறத்தினையும் புலப்படுத்த தனியாகவே ஒரு கட்டுரை எழுதினால்தான் முடியும்).
வேதவல்லி வாழ்வில் பெரும் இடம் பிடித்த மற்றொருவரான லெயோன் புருஷாந்தியும் புதுச்சேரியைச் சேர்ந்த ரெனோன்சான்தான்; ஆனால் மற்ற பிரெஞ்சு இந்தியரைப் போல் இல்லாமல் பிரிட்டிஷ் இந்தியா விடுதலை பெற வேண்டும்; அப்பொழுதுதான் பிரெஞ்சு இந்தியாவான புதுச்சேரிக்கும் விடுதலை சாத்தியமென்று இயங்குபவர்; சைகோனிலுள்ள பிரெஞ்சு வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்த புருஷாந்தி, இந்தியாவில் காந்தியடிகள், ‘அந்நியர்களிடம் அடிமை வேலை பார்க்கும், உத்தியோகத்தை உதறிவிட்டுத் தேசத்திற்காக வெளியே வரவேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தபோது தானும் வங்கி வேலையை உதறிவிட்டு வெளியே வந்தவர். அதுமட்டுமல்ல நான்கு பிள்ளைகளுக்குத் தாயாக இருக்கும் கோடீஸ்வரியான தன் உறவுக்கார விதவையை இரண்டாவது திருமணம் முடித்துக் கொண்டதால் பெரும் சீர்திருத்தவாதி என்று பேர் பெற்றவர்; இவரைக் குறித்து வேதவல்லி ஓரிடத்தில், “என்னைப் போல பிறந்த மண்ணுக்கு ஏங்கும் ஓர் ஆணைச் சந்தித்தேன்; 15 ஆண்டுகாலம் அந்த மனிதருடன் எனது சினேகிதம்” என்கிறாள். அவரைக் குறித்துக் கேள்விப்படுவனவும், நேரடியாகவும் பார்க்கின்ற அவரது நடைமுறைச் செயல்பாடுகளும் வேதவல்லியை அவருக்கு நெருக்கமாக இட்டுச் செல்லுகின்றன.
இரண்டாம் உலகப்போரை ஒட்டி ஜெர்மனி பிரான்சு தேசத்தைப் பிடித்துவிடவே, பிரெஞ்சுக் காலனியான சைகோன் தலைமை, ஜெர்மனியின் நட்பு நாடான ஜப்பான் கைக்கு மாறுகிறது. இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரியான ஜப்பான் உதவியோடு சிங்கப்பூர், மலேசியா, பர்மா போன்ற கிழக்காசிய நாடுகளில் உள்ள இந்தியர்களைத் திரட்டி, “இந்திய தேசிய சுதந்திர லீக்” சார்பில் “இந்திய தேசியப் படை” என்ற விடுதலைப் படையை உருவாக்கி அதன் தலைவராக இருந்த நேதாஜி, சைகோனுக்கும் வருகை தருகிறார்; சைகோன் தமிழர்களிடையே படு குழப்பம்; தற்போதைய தலைமை, நேதாஜிக்கு வேண்டிய ஜப்பானின் தலைமை என்பதால் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் வரவேற்கத் தயாராகின்றனர். விடுதலை விரும்பியான புருஷாந்திதான் துணிச்சலாக முன்னின்று நடத்துகிறார்; அரசு ஊழியனான கணவனின் முணுமுணுப்பையும் பொருட்படுத்தாமல் வேதவல்லி ஆர்வத்தோடு அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுகிறாள். அப்பொழுது வேதவல்லி கூறும் ஒரு கூற்று முக்கியமானது: “புருஷாந்தியின் சகோதரர் போல இருந்தார் ‘நேதாஜி’ ” என்கிறாள். தன் விரல்களில் கழுத்தில் கிடந்தவை மட்டுமல்லாமல், தன் மனைவி உடம்பில் கிடந்த நகைகளை எல்லாம் கழற்றி நேதாஜி கையில் கொடுத்த புருஷாந்தியைப் பார்த்து வியந்து விம்மி நிற்கிறாள் வேதவல்லி. இதை ஒட்டி வேதவல்லியின் நினைவோட்டத்தைக் கதைசொல்லி சித்திரிக்கும் பகுதி மிக முக்கியமானது. வேதவல்லியின் நெஞ்சில் எந்த அளவிற்குப் புருஷாந்தி வேர் விட்டுப் படர்ந்துவிட்டார் என்பதைக் காட்டும் பகுதி:
“நேதாஜிக்கும் புருஷாந்திக்கும் தோற்றத்தில் அதிக வித்தியாசமில்லை. உயரம், ஆகிருதி, தேஜஸ், முகவிலாசம்- இரண்டுபேருக்கும் அப்படியொரு ஒற்றுமை. இருவருமே சராசரி மனிதர் கூட்டத்தில் பிறந்தவர்கள்… அதிகம் போலிகளே நிறைந்த மனிதர் கூட்டத்தில் இப்படிப் பட்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்… புருஷாந்தியும் நேதாஜியும் விதியால் தீர்மானிக்கப்பட்ட மனிதர்கள் இல்லை; விதியைத் தீர்மானிக்கிற மனிதர்கள். சொந்த விதியை மட்டுமல்ல ,மானுடத்தின் விதியை, தேசங்களின் விதியைத் திருத்தி எழுதுகிறவர்கள்; இந்த அபூர்வ மனிதர்களுக்கு முன்பாக சுப்புவும் நானும் எங்களைப் போன்ற கோடானு கோடி ஈனப் பிறவிகளும் மழைக்கால ஈசல் போலப் பிறப்பதும் தெரியாது; இறப்பதும் தெரியாது. இந்த மகாபுருஷர்கள் முளைப்பர்கள், செடியாவார்கள், கொடியாவார்கள், மரமாக நிற்பார்கள். பூவாக, காயாக, கனியாகக் கற்பகோடி காலம் பயன் தருவார்கள்.”
இப்படியெல்லாம் புருஷாந்தியைத் தன் நெஞ்சில் பரவிப்படர அனுமதிக்கும் வேதவல்லி ஓரிடத்தில், “மனதில்கூட அந்நிய ஆடவனைத் தீண்டக் கூடாது என்பது உங்கள் சமூகவிதியெனில் நான் உத்தமி கிடையாது” என்று சொல்ல நேர்கிறது; மேலும் புருஷாந்தி, “எங்கள் ரப்பர் தோட்டத்து வேலையாள் ஒருத்தன் ‘இந்தக் குழந்தை அனாதை’ என்று என்னிடம் வந்து விட்டுள்ளான்; இதை நீங்கள்தான் உங்கள் குழந்தையாக ஏற்று உங்கள் வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்” என்று கேட்டுக் கொண்டபோது குழந்தை இல்லாத வேதவல்லி, கணவனிடம் கூட முன் அனுமதி கேட்காமல் சம்மதிக்கிறாள். ‘லட்சுமி’ என்று பெயரிட்டுப் பின்பு கணவனையும் ஏற்றுக் கொள்ள வைக்கிறாள்; புருஷாந்தி செய்கிற ஒவ்வொரு செயலும் அவளுக்குள் இனிமை தருவதாக அமைகிறது.
வேதவல்லியின் இத்தகைய நடவடிக்கைகளைக் காண்கின்ற குடிகாரக் கணவனுக்குள்ளும் சந்தேகம் பரவி வினைபுரிவதையும் கதைசொல்லி பதிவு செய்கிறார்; புருஷாந்தியின் கார் டயரைத் தன் ஆட்களை விட்டுப் பஞ்சர் பண்ண வைக்கிறார்; புருஷாந்தியோடு சேர்ந்து நேதாஜி வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரவில் வீடு திரும்பும்போது மழையில் நனைந்துவிட்ட வேதவல்லி, கதவை எவ்வளவு தட்டியும் திறக்காமல் இரவு முழுக்க வெளியிலேயே கிடக்கும்படிச் செய்கிறார்; தாங்க முடியாத மனநிலை மேலெழும் ஒரு நிலையில் நேரடியாகவே தன் மனைவியைப் பார்த்து “வேதா! நீ என்னை விட்டுப் போய்விட மாட்டீயே” என மருவுகிறார். பதிலுக்கு ‘இது என்ன பைத்தியக்காரத்தனம்’ என்கிறாள் மனைவி.
வேதவல்லி “கடந்த 15 ஆண்டுகளாக, புருஷாந்தியுடன் எனது சினேகிதம்” என்று சொல்லிக் கொண்டாலும் காதலென்றும் சொல்ல முடியாத, வெறுமனே நட்பு என்றும் சொல்ல முடியாத ஏதோ ஒரு விதமான பெயர் வைக்க முடியாத உறவு இருவர்க்கிடையே உருவாகிச் செயல்படுவதைக் கதைசொல்லி மிக நுட்பமாகப் புனைந்து காட்டுகிறார். ஆண் – பெண் உறவில் பெரிதும் பேசப்படாத, ஆனால் சமூகத்தில் பெருவாரியாக நடைமுறையில் உள்ள நுட்பமான ஒரு புதிரான உறவை -மொழிவழிக் கதையாடுவதற்குச் சவாலாக இருக்கும் உறவை -மிக மேன்மையான முறையில் போகிற போக்கில் பதிவு செய்வது போன்ற ஒரு பாவனையில் படைத்துக்காட்டியிருப்பது, கதைசொல்லியின் மனித உறவுகள் குறித்த மகாபுரிதலையும் அதைப் புனையும் மொழியாற்றலையும் காட்டுவதாக உணர்ந்து வாசகன் என்ற முறையில் மகிழ்ந்தேன். ரவிந்தரநாத் தாகூர் இந்த மாதிரியான ஓர் உறவைத் தனது சிதைந்த கூடு (நஷ்ட நீட) என்றொரு கதையில் எழுதிக் காட்டியிருக்கிறார்; சத்யசித்ரே கூட அதைக் ‘காதம்பரி’ என்று திரைப்படமாக எடுத்துள்ளார். மகாமேதைகளின் அடையாளம் இத்தகைய நுண்ணிய தளங்களில் இயங்கிக் காட்டுவதுதான் போலும்.
III
இரண்டாம் உலகப்போரில் ஜப்பானின் கை ஓங்குவதைப் பார்த்து அமெரிக்கா, பிரிட்டீஷ் அரசாங்கத்திற்கு, “இனி இந்தக் காலனிய அரசியலைத் தொடரக் கூடாதென்ற” நிபந்தனையுடன் உதவ முன் வந்தவுடன் இங்கிலாந்து வெற்றி அடையத் தொடங்குகிறது; 1945 மார்ச்சு முதல் ஆகஸ்டு மாதம் வரை ஜப்பான் சைக்கோனில் எதிர்த் தாக்குதல் நடத்திப் பிரெஞ்சு வீரர்களைக் கொன்று குவித்தது; ஆனாலும் சைகோன் முழுதும் ஜப்பானியர்தான் இருப்பது போல நினைத்துக் கொண்டு அமெரிக்காவின் B52 விமானம் குண்டு மழை பொழியவே மீண்டும் சைகோன் பிரெஞ்சுக்காரர்களின் கீழ் வந்தது. ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிற்குள்ளாகிக் கிடந்த பிரான்சிலும் போரில் ஜெர்மன் தோற்றதால் மீண்டும் பிரெஞ்சியர் ஆட்சி நிலைநிறுத்தப்பட்டது; ஆக்ரமிக்கப்பட்ட பிரான்சில் இருந்து தப்பித்து இங்கிலாந்தில் இருந்து கொண்டு தெகோல், பிரான்சு விடுதலைப் படையை நடத்திக் கொண்டிருந்ததால், இந்த விடுதலைப்படைக்குப் புதுச்சேரியில் உள்ள தமிழ் மக்களும் நிதி திரட்டினர் என்ற தகவலையும் கதைசொல்லி பதிவு செய்துள்ளார்.
இவ்வாறு சைகோனில் மீண்டும் பிரெஞ்சியர் ஆட்சி நிலைநிறுத்தப்பட்டவுடன் ஜப்பான் ஆதரவுடன் இயங்கிய நேதாஜிக்குச் சைக்கோனில் வரவேற்பும் நன்கொடையும் அளிப்பதை முன்னின்று நடத்திய புருஷாந்தி கைது செய்யப்படுகிறார்; அவர் குடும்பம் நிலைகுலைந்து போகிறது. அவரை வெளியே கொண்டு வர வேதவல்லி படாதபாடு படுகிறாள்.. அவருடைய அருமை பெருமைகளையும் சமூகச் சேவைகளையும் பட்டியலிட்டு அதிகாரத்தின் முன் கோரிக்கை வைக்க மனு ஒன்றைத் தயாரித்துப் பலரிடம் கையெழுத்து வாங்க அலைகிறாள்.. ஆனால் யாரும் அதிகாரத்தைப் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. அவரிடம் உதவிகள் பெற்ற தமிழர்கள் யாரும் புருஷாந்தியை எட்டிக் கூடப்பார்க்கவில்லை. இந்த இடத்தில் கதைசொல்லி தமிழர்களின் மன அமைப்பில் உறைந்து கிடக்கும் அடிமை உணர்வையும் ஒற்றுமையின்மையையும் புலப்படுத்தி விடுகிறார்.மிகவும் வேண்டிய இஸ்மாயில் அண்ணன் கூட ஒத்துழைக்கவில்லை; தனக்குப் பிறகு சைகோன் வந்து சேர்ந்த சின்னத்தம்பி சிங்காரவேலும் மனுவில் கையெழுத்துவிட மறுத்துவிடுகிறான்; இறுதியில் விசாரணை என்ற பேரில் வதைபட்டு மனம் பிறழ்ந்த நிலையில் புருஷாந்தி சிறையிலிருந்து வெளியே தள்ளப்படுகிறார்..
இதற்கிடையில் சைகோனை நூறாண்டு காலமாக அடிமைப்படுத்தி வியட்நாம் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் பிரெஞ்சுக் காலனித்துவத்திற்கு எதிராகக் கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஆயுதப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் ஹோசிமின் தலைமையிலான கம்யூனிஸ்டு விடுதலைப் படை ‘தியன்பியன் பூ’ – எனும் இடத்தில் தன் கடைசி யுத்தத்தைத் தொடங்கிவிட்டது. இந்தப் போர்க்களக் காட்சிகளையும், வியட்நாம் மக்களின் வீரதீரங்களையும் கதைசொல்லி கம்பனைப் போல், நேரில் பார்த்தவர் போல் அவ்வளவு நேர்த்தியாக எடுத்துரைக்கிறார். எப்பொழுதுமே சம்பளம் வாங்கும் அரசாங்கக் கூலிப் படைக்கும் உயிரைப் பணையம் வைத்துப் போராடும் விடுதலைப் படைக்கும் நடக்கும் போரில் விடுதலைப் படை வெற்றி பெறுவதுதானே வரலாற்றின் அறம். “யானைக்கும் புலிக்கும் இடையிலான யுத்தம்” என்று இந்தப் போரை வர்ணித்தாராம் ஹோசிமின். நாவலாசிரியரும் புலிகள் போலப் பாய்ந்து வியட்நாம் விடுதலை வீரர்கள் போரிட்டதை வாசகர்களுக்குக் காட்சிப்படுத்துகிறார். கடந்து வர முடியாதபடி அகலமான, கொடூரமான முள்கம்பிவேலி போட்டிருக்குமாம் காலனிய அரசு; முன்னே செல்லும் வியட்நாம் வீரர்கள் அந்த முள் வேலிமேல் தலைகுப்புறப் படுத்துக்கொள்வார்களாம்; பின்னே வரும் வீரர்கள் அந்த உடலின் மேல் மிதித்து முன்னேறிச் செல்வார்களாம். இப்படி மிதிபட்டு உயிரோடு இருந்தவர்கள் குறைவு. இவ்வாறு 56 நாட்கள் உயிரைக் கொடுத்து நடத்திய போரில் சைகோன் தன் விடுதலையைச் சாதித்துக்கொண்டது.
இனிப் பிரான்சுக்குச் செல்வதா? புதுச்சேரிக்குச் செல்வதா? சைக்கோனிலேயே தங்குவதா? என்று பிரச்சனைகள் எழுந்தபோது வேதவல்லி கணவனோடு புதுச்சேரிக்குத் திரும்புகிறாள்; தம்பி சிங்காரவேலுவும் அவனது வியட்நாம் மனைவி மரியாவும் அவர்களின் மகள் இஸபெல்லாவும் பிரான்சுக்குப் புறப்படுகிறார்கள். மகன் பிலிப், கம்யூனிஸ்டு படைவீரன் என்பதால் சைகோனையே தேர்ந்தெடுக்கிறான். லட்சுமி என்று வேதவல்லியின் வளர்ப்பு மகளாக அறியப்பட்ட, வியட்நாம் தாய்க்கும் ஒரு தமிழர்க்கும் பிறந்த பைஃபோங், பாகூரில் சிங்காரவேலுவின் முதல் மனைவி ஜானகிக்குப் பிறந்து அவளால் தந்தையைத் தேடி அடைய சைகோனுக்குக் கப்பலேற்றி அனுப்பப்பட்ட பொன்னுசாமியை மணந்துகொண்டு பிரான்சுக்குப் புறப்படுகிறாள்.
***
புதுச்சேரிக்கு வந்து ஆறு ஆண்டுகள் ஓடிவிட்டன. ஒரு நாள் வேதவல்லி, வீட்டில் செய்த புட்டை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு தன்னைப் போலவே புதுச்சேரிக்கு வந்து சேர்ந்த புருஷாந்தியைப் பார்க்கக் காலாற நடந்து போகிறாள். அவர் மனம் பிறழ்ந்த அதே நிலையில், ஒரு பெஞ்சில் அமர்ந்திருக்கிறார்; கொண்டு வந்த பாத்திரத்தை வேதவல்லி கொடுக்கிறாள். வாங்கிக் கொண்ட புருஷாந்தித் திருப்பி அவளிடமே கொடுக்கிறார். இதைப் பார்த்துக் கொண்டேயிருந்த பக்கத்து மனிதர் ஒருவர் “அவருக்குக் கொடுத்துத்தான் பழக்கம், வாங்கிப் பழக்கம் இல்லை” என்கிறார். வேதவல்லி திரும்பி நடக்கத் தொடங்குகிறாள். “ஹோ ஹோ எனப் புருஷாந்தி சிரிப்பது வெகுதூரம் கேட்டது” என்று நாவல் முடிகிறது. இந்தச் சிரிப்புக்கான அர்த்தத்தை வாசகர்கள்தான் எழுதி நாவலை நிரப்பிக் கொள்ள வேண்டும்.
IV
அங்கும் இங்குமெனக் காலத்தாலும் இடத்தாலும் குறுக்கும் நெடுக்குமாகப் பின்னப்பட்டுள்ள ஒரு நேர்கோட்டில்லா நாவலுக்குள் இருந்து நானிங்கே வேதவல்லி என்கிற ஓரிழை வழியாக மட்டும் நாவலைக் குறித்து உரையாடியுள்ளேன். இதேபோல் ஒவ்வொரு இழையைப் பிடித்துக் கொண்டும் மொழியாடுவதற்கு நாவலுக்குள் விஷயங்கள் குவிந்து கிடக்கின்றன. அவற்றுள் ஒன்றிரண்டையாவது சொல்லி என் முன்னுரையை முடித்தால்தான் என் மனம் நிறைவடையும்.
குறிப்பாகப் பாகூர்க்கரையில் பழகி, வயிற்றில் கருவை உருவாக்கிவிட்டுச் சைகோனுக்குக் கப்பலேறிவிட்ட வேதவல்லியின் சின்னத்தம்பி சிங்காரவேலுவை அடைவதற்குப் போராடும் ஜானகியின் கதை, பெண்ணின் பேராண்மையையும் போராடும் மன வலுவையும் புலப்படுத்தும் ஒரு கதை ஆகும். ஊரைச் சமாளித்துக் குழந்தையைப் பெற்று வளர்த்து ‘நாலு எழுத்துப்’ படித்துத் தகப்பனைத் தேடி அவனைச் சைக்கோனுக்கு அனுப்ப முடிவெடுகிறாள் ஜானகி. படிக்க வைக்கப் புதுச்சேரி சென்றால்தான் சாத்தியமென்று, வெள்ளைக்காரத் துரை வீட்டில் வேலைக்காரியாகச் சேர்ந்து சாதிக்கிறாள். ஒரு நாள் அந்தத் துரை வீட்டுத் துரைசாணி, “எனக்கு இன்னைக்கு உடம்பு சரியில்லை; இன்று இரவு அவரோடு கட்டிலில் நீதான் படுக்க வேண்டும்” எனக் கட்டளையிடுகிறாள். வேலை போனாலும் பரவாயில்லை என்று ஜானகி மறுத்துவிடுகிறாள். நல்ல வேளை, இவளை அங்கு வேலையில் சேர்த்துவிட்ட அந்த முகவரே, வேறொரு பெண்ணை அதற்கு ஏற்பாடு செய்து விடுகிறார். இப்படி இந்தக் கதையாடலை நிகழ்த்திக்காட்டுகிறார் கதைசொல்லி; இதில் ஜானகியின் போராடும் திறம் மட்டுமா வெளிப்படுகிறது? காலனித்துவ அதிகாரம் தன் காலனிய மக்களை எந்த அளவிற்குச் சுரண்டிக் கொழுத்துத் திரிந்துள்ளது என்பதையும் இந்தக் கதையாடல் உரத்துப் பேசவிடவில்லையா? கதைசொல்லி எதுவும் பேசவில்லை; காட்சியைக் காட்டிவிட்டு நகர்ந்துவிடுகிறார்; இப்படியான தொனிகளோடு கூடிய எடுத்துரைப்பு நாவல் முழுவதும் பரந்து கிடப்பதால் நின்று நிதானமாக வாசிக்கும் வாசிப்பை நாவல் எதிர்பார்த்துக் கிடக்கிறது.
***
சைகோனின் பண்பாட்டுக் கூறுகளை நாவலுக்குள் படம் பிடிக்கச் சிங்காரவேலுக்கும், வியட்நாமியப் பெண் மரியாவிற்கும் ஏற்படும் காதலையும், தொடர்ந்து நடக்கும் திருமண வாழ்க்கை நிகழ்வுகளையும் கதைசொல்லி பயன்படுத்திக் கொள்ளுகிறார்; மரியாவின் முழுப்பெயர் மரியா ஹோவாம்மீ; அன்னமிட்டுகள் என்று அழைக்கப்படும் இந்த வியட்நாமியர் வழக்கப்படி ஒரு பெண்ணை மணம் முடிக்க வேண்டுமென்றால் மாப்பிள்ளை வீட்டார்தான் சீர் வரிசை எல்லாம் செய்யவேண்டும். அரக்கு வண்ணத்திலுள்ள வட்டமான பெட்டி நிறைய வைத்திலை பாக்கு, மணப்பெண்ணுக்குச் சிவப்பு நிறத்தில் பட்டுச்சேலை, மேல் சட்டைக்காகவும் நீண்ட கால்ச்சராய்க்காகவும் பட்டுத்துணி, பொன்னாலான காதணி, இரண்டு ஜாடி நிறைய ஒயின், ஒரு கொழுத்த பன்றி – இவ்வளவும் கொடுத்தால்தான் பெண் கிடைக்கும்.
இதேபோல் வியட்நாம் உணவு வகைகளின் பெயர்களை, –பன் ச்சா, மி க்வாங், பன்ச்சுங், நேம், ச்சாய் ஜா, கோய்கோன், லெச்சே – எல்லாம் நாவலுக்குள் கொண்டு வருவதோடு, ‘பன் கஸ்யோ’ என்ற உணவை எப்படிச் சமைத்து உண்ப என்பதையும் பதிவு செய்கிறார். (உப்பு, மசாலா கலந்து வேக வைத்த இறால், பன்றி இறைச்சி, பீன்ஸ், முட்டை கலந்த கலவையை அரிசிமாவு ரொட்டியுடன் சேர்த்து, அதற்கான மீனு் சாஸ்-இல் நனைத்துச் சாப்பிட வேண்டும்.) வியட்நாமில் சாப்பிடப்படும் மற்றொரு உணவையும் இங்கே கட்டாயம் குறிப்பிடவேண்டும். கோழி 21 நாள் முட்டையை அடைகாத்து முடித்தால் குஞ்சு பொரிக்கும்; ஆனால் கொழ கொழவென்று திரவத்துடன் இருக்கும் அந்த வளராத குஞ்சை 15ஆம் நாளிலேயே எடுத்துப் பக்குவம் செய்து சாப்பிடுகின்றனர். வேதவல்லியின் சுப்பு இதை விரும்பிச் சாப்பிடப் பழகிக் கொண்டாராம். இவ்வாறு சைகோனின் உணவு, உடை, அலங்காரம், நடை, உடை, பாவனை முழுவதையும் நாவலுக்குள் வாசிப்பிற்குத் தடையேதும் இல்லாமல் பொருத்தி விடுகிறார். “கிழக்காசியாவின் முத்து” என்று கொண்டாடப்படும் சைகோனின் நிலவரை அமைப்பையும் இயற்கை வளத்தையும் வாசிக்கிற வாசகனை உணரச் செய்து விடுகிறார்.
***
நாவலுக்குள் வாசிப்பின் ஆர்வத்தைத் தக்க வைத்துக் கொள்ளக் கதைசொல்லிகள் பயன்படுத்தும் மர்மமுடிச்சினையும் லட்சுமி என்ற வேதவல்லியின் வளர்ப்பு மகள் மூலம் அமைத்துக்கொள்ளுகிறார்; அனாதைக்குழந்தை என்று புருஷாந்தியால் இந்த மர்ம முடிச்சுப் போடப்படுகிறது; பிறகு போகப் போகக் கதை வளர்ச்சியின் ஊடே அந்த முடிச்சைக் கொஞ்சம் கொஞ்சமாக அவிழ்த்துக் கொண்டே போகும் கதைசொல்லியின் நுட்பம் நாவலுக்கு அலாதியான அழகை ஊட்டுகிறது. இறுதியில் அந்த லட்சுமியின் தாயை அடித்துச் சிதைத்துப் பைத்தியக்கார நிலைக்குத் தள்ளியது, தன்னை வளர்த்த தந்தை சுப்பராயன்தான் என்று மகளே அறிந்து துடித்துத் தந்தையை வெறுத்து ஒதுக்கித் தள்ளும் ஓர் அபத்த நாடகமாக அந்த மர்ம முடிச்சு அவிழ்க்கப்படுவதும் நாவலுக்குக் கனம் சேர்க்கிறது.
இப்படிச் சைகோன் நிகழ்வுகளையும் அதன் அரசியல் போக்குகளையும் பிரெஞ்சுக் காலனித்துவத்தின் ஒடுக்குமுறைகளையும் விவரித்துக் கொண்டு போகும்போதே புதுச்சேரியில் நடக்கும் அரசியலையும் அங்கு இங்கு என்கிற முறையில் நாவலுக்குள் கொண்டு வந்துவிடுறார். தலைவர் சவரிநாதன் தலைமையில் புதுச்சேரி அரிஜனசேவா சங்கம் நடத்திய கூட்டத்திற்குக் காந்தியடிகள் வந்து சொற்பொழிவாற்றியதையும், காந்தியடிகள் தன் பேச்சில் புதுச்சேரி விடுதலை குறித்து ஒரு வார்த்தை கூடப் பேசாதது விமர்சனத்திற்கு உள்ளான தகவலையும் பதிவு செய்கிறார்; இந்நிகழ்ச்சியை முன்வைத்து சிநேகிதர்கள் சேஷாசலம் ரெட்டியாரும் சதாசிவ முதலியாரும் உரையாடுவது போல் ஒரு காட்சியை அமைத்துத் தமிழ்ச் சமூகத்தின் சாதிய முகத்தைக் குறித்து அலசிவிடுகிறார்; ஒரு ஊருக்குள் எல்லோரும் பக்கத்தில் பக்கத்தில் கலந்து இருக்காமல் தனித்தனியான குடியிருப்புக்களில் இருக்கும் நிலை நீடிக்கும் வரை சாதியை ஒழிக்க முடியாது என்று நண்பர்கள் இருவரும் பேசிக் கொள்கின்றனர்.
***
மேலும் புதுச்சேரியில் நடந்த ஆலைத்தொழிலாளர் போராட்டத்தில் காலனிய அரசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலியானது (20 பேருக்கு மேல் காயம்), தோழர் சுப்பையா நாடு கடத்தப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டது போன்ற வரலாற்றுத் தகவல்களை முன்வைத்து, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பனவெல்லாம், (பிரான்சில் தொழிலாளர் நலம் பேசும் அரசு ஆட்சியில் இருந்தாலும்கூட) வெள்ளை இனத்தினருக்கு நடுவில்தான்; காலனிய கறுப்பு மக்களுக்குக் கிடையாது என்ற நிலைதான் நிலவியது என்பதை எடுத்துக் காட்டுகிறார்; கூடவே புதுச்சேரியில் இயங்கிய பிரெஞ்சு இந்தியர் கட்சி, மகாஜன சபை முதலியவற்றின் அரசியலையும் நேரு எடுத்த முயற்சியால் விடுதலைபெற்ற இந்திய யூனியனோடு புதுச்சேரிப் பிரெஞ்சு இணையப்போகிறது என்ற நிலை ஏற்பட்டவுடன் நேற்று வரை பிரெஞ்சுக்காரர்களுக்கு விசுவாசியாக இருந்த குபேர் போன்ற தலைவர்கள், உடனே மாறிக் கொண்டு இந்திய விடுதலைத் தியாகிகளாக வலம் வந்த வரலாற்றுக் காட்சிகளையும், செல்வராஜ் செட்டியார் சுடப்பட்ட நிகழ்வினையும், புதுச்சேரி வந்தபோது தன்னைப் பார்க்க விரும்பிய காந்தியடிகளைப் பார்க்க மறுத்து விட்டார் அரவிந்தர் என்ற தகவலையும், 1954 அக்.18-இல் புதுச்சேரி வரலாற்றில் குறிப்பிடத்தக்க கீழையூர் வாக்கெடுப்பு நிகழ்ச்சிகளையும், கதைசொல்லி நாவலுக்குள் இணைத்துவிடுகிறார். இவ்வாறு நாவல் முழுக்கவும் சமூகவரலாறும் புனைவும் கலந்து ஒன்றையொன்று மேன்மைப்படுத்திக்கொள்கின்றன.
***
2019இல் எழுதிய ‘இறந்த காலம்’ நாவலிலேயே தமக்கை வேதவல்லி சைகோனில் இருந்து சிரஞ்சீஷத் தம்பி சதாசிவத்திற்கு, 1934ம் வருடம் ஜனவரி மாதம் 15ஆம் தேதி மடல் எழுதுவதாகப் படைத்து, வேதவல்லியையும் புதுச்சேரித் தமிழர்களின் சைக்கோன் வாழ்வையும் அறிமுகப்படுத்திவிட்டார்; ஆனாலும் மனநிறைவு அடையாமல், முழுமையாகச் சைகோனைக் களமாக வைத்து, அங்குப் புலம் பெயர்ந்து வாழ நேர்ந்த புதுச்சேரி மக்களைக் குறித்து ஒரு நாவல் எழுத வேண்டும் என்று 2020 – ஜனவரியில் பிரான்சில் இருந்து புதுச்சேரிக்கு 1 ½ மாத விடுமுறையில் வந்தபோது சொல்லிக் கொண்டிருந்தார்.
இப்பொழுது சொன்னபடி ஓர் ஆழமான பின்காலனித்துவ நாவலை எழுதி முடித்துவிட்டார்; தீவிரமான ஒரு படைப்பாக்கத் தீயைத் தனக்குள் கொண்டிராமல் இது சாத்தியமில்லை; அதே நேரத்தில் இந்த ஓராண்டாக உலகம் முழுவதிலும் மக்களைக் கொள்ளை கொண்டு போவது மட்டுமல்லாமல் இருக்கின்றவர்களின் நடமாட்டத்தையும் நான்கு சுவர்களுக்குள் சுருக்கிப் போட்டுவிட்ட இந்த கோவிட் – 19 தொற்றுக் காலத்தில் இப்படியொரு படைப்பு உருவாகவும் வாய்க்கிறதே என்று இந்த நாவலைப் படித்து முடித்த கையோடு தொற்று நோய்க்கும் ஒரு நன்றி சொல்லவும் தோன்றுகிறது. நன்றி. வணக்கம்.
« பெண் இயற்கையின் சீதனப் பரிசல்லவோ » என்றொரு வரி, பழையத் தமிழ்ப்பாடலில் வரும். எனது முதற் புனைவான நீலக்கடல் நாவலை மறுபதிப்பு செய்யவிரும்பி, அதன் பிடிஎஃப் கோப்பை திரு பரிசில் சிவசெந்தில்நாதன் அனுப்பி இருந்தார். அந்நாவலின் முன்னுரை இப்படித் தொடங்குகிறது.
« வாழ்க்கையும் ஓரு கடல். நம்பிக்கைக்கும் எச்சரிக்கைக்கும் இடையிலேயே, நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். கடல் அழகானது, ஆழமானது, அமைதியானது, கொந்தளித்தால் அடங்காதது பெண்மையைப்போல. இருவருமே பார்வைக்குள் அடங்காதவர்கள். கண்ணைக்கொண்டு கணக்கிடமுடியாதவர்கள். அவர்களிடம் நமக்குள்ள ஈர்ப்பினை, குறிப்பாக அவர்களின் ‘மறுகரைகளு’க்குள்ள ஈர்ப்பினை, இவ்வுலகம் தோன்றிய நாட்தொட்டு புராணங்கள் காவியங்களோடு, சரித்திரச் சான்றுகளும் தெளிவாய் முன்வைக்கின்றன. »
காவியங்கள் பெண்களை மையப்படுத்தியே எழுதப்பட்டன. இன்று வெவ்வேறு பிரச்சனைகளைப் மையப்படுத்தி நாவல்கள் வெளிவந்தாலும் ஏதோவொருவகையில் பெண்கதைமாந்தர்கள் முக்கியத்துவம் பெற்றுவிடுகிறார்கள். மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள், நாவல்கள் எனது ஆக்கங்களில் பெண்கள் கூடுதலாக இடம்பெற்றிருக்கிறார்கள். நீலக்கடல் தெய்வானை ; மாத்தாஹரி பவானி ; கிருஷ்ணப்ப நாயக்கர்கௌமுதி செண்பகம், சித்ராங்கி ; காஃப்காவின் நாய்க்குட்டி நித்திலா, ரணகளம் அக்காள் ; இறந்த காலம் மீரா ; வெளிவரவுள்ள சைகோன்- புதுச்சேரி வேதவல்லி ; இவர்கள் தவிர மாத்தாஹரி தொடங்கி ‘சைகோன் -புதுச்சேரி’ நாவல்கள் வரை அனைத்திலும் ஹரிணி என்ற பெண் இடம்பெறுகிறார். இவர்கள் எங்கிருந்து வந்தார்கள். இவற்றுக்கான காரணம் என்ன ? இவர்களெல்லாம் உண்மையா பொய்யா ? சில நேரங்களில் கற்பனையை காட்டிலும் உண்மைகள் சுவாரஸ்யமாக இருப்பதுண்டு.
பிரான்சு வந்த புதிதில் எண்பதுகளின் பிற்பகுதியில் சந்திக்க நேர்ந்த ஒரு ஐரோப்பியபெண், எங்கள் குடும்பநண்பர். எங்கள் மூன்றாவது பெண் பிரசவத்திற்காக மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லவும், தனது தாயை மருத்துவமனையில் எனது மனைவிக்குத் துணையாக விட்டுச் சென்றதும், அங்கிருந்து அழைத்துவந்தபோது உடன் வந்த தும் மறக்க முடியாதவை. தொடர்ந்த நட்பு காலஓட்டத்தில் தடைபட்டு, புதுவருட வாழ்த்து அட்டை பரிமாற்றம் என முடிந்த அந்த நட்பு ஒரு கட்டத்தில் அதுவும் இல்லையென்றானது. அவரைச் சுத்தமாக நாங்கள் மறந்து விடுகிறோம். காலங்கள் உருண்டோடுகின்றன. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தொலகாட்சி நிகழ்ச்சியொன்றில் அந்த அதிசயம் நிகழ்கிறது. இந்தியாவைக் காட்டுகிறார்கள். அதில் முப்பது முப்பத்தைந்து வயது பெண்ணொருத்தி தலித் இளைஞர் ஒருவரை மணந்துகொண்டு, பத்துக்கும் மேற்பட்ட ஏழை சிறார்களைத் தன் பிள்ளைகளாக ஏற்று ராஜஸ்தானில் வசிக்கிறார். அவர்களுக்கு நல்ல கல்வித் தருகிறார். தம்பதியரின் மண்சுவருடன் கூடிய விழல் வேய்ந்த வெறும் தரையில் பாய் விரித்து படுக்கிறார். காலையில் பிள்ளைகளுக்கு யூனிஃபார்ம் அணிவித்து ஷூக்களைபோட்டு, தனது இந்தியக் கணவருக்கு அவர் வாங்கிகொடுத்துள்ள வாகனத்தில் பிள்ளைகளை முத்தமிட்டு அனுப்பிவைக்கும் காட்சி நெஞ்சை நெகிழவைத்தது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் குடும்பத்திற்கு வந்து அவர்தானா இவர் என்பதில் ஐயமும் இருக்கிறது. பெண்ணின் பெற்றோர்கள் இறந்துவிட்டதால் என்னிடம் தற்போதைக்கு உறுதிபடுத்த தகவல்கள் இல்லை. அவர் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும், மீண்டும் ஒரு பெண்ணை மையப்படுத்தி, அந்த உயர்ந்த உள்ளத்தை புரிந்துகொள்ளும் தேடலாக நாவலை எழுதுகிறேன், இம்முறை பிரெஞ்சிலும் எழுதி அதனை தமிழ்ப் படுத்த நினைத்து ஆரம்பித்திதுள்ளேன்.
பொதுவில் கதை மாந்தர்கள் எங்கோ நாம் கண்டவர்கள், நம்முடைய வாழ்க்கை என்கிற பெருங்கதையில் ஒரு சிலர் ஒன்றிரண்டு பக்கங்களிலும், வேறு சிலர் கூடுதலான பக்கங்களிலும், மற்றும் சிலர் தொடக்கம் முதல் முடிவுவரை வியாதிருப்பவர்கள். குறுக்கிடும் சக ஜீவன்களுடன் சில மணி நேரங்கள் பழக நேர்ந்தாலும், அவர்களை நன்கு புரிந்துகொண்டதுபோல நமது படைப்பில் பாசாங்கு செய்து பாத்திரங்களப் படைத்து நமது கற்பனைகளை அவர்களுக்கு அணிவித்து மகிழ்கிறோம் என்பது கசப்பான உண்மை. எத்தனை ஆண்டுகள் பழகினாலும் மனிதர்களை நன்கு விளங்கிகொள்ள சாத்தியமில்லை. இந்த விளங்காத பக்கங்களை விளங்கிகொள்ளும் தேடலாக கதை மாந்தர்களை படைத்து அவர்களின் குணத்தையும் பிற்வற்றையும் நமது ஊகங்களால் நிரப்புகிறோம்.
எனது தாயுடன் அருபது ஆண்டுகளுக்குச் சற்று கூடுதலாகவும், எனது மனைவியுடன் நாற்பத்தைந்து ஆண்டுகளாகவும் வாழ்ந்து வருகிறேன்.அம்மாவும் சரி, மனைவியும் சரி சராசரி இந்தியப் பெண்கள், என்னென்ன இலக்கணத்தை இவர்களுக்கென கீழைதேய பொதுபுத்தி விதிதிருக்கிறதோ அதை மீறாதவர்கள். எனது வாழ்க்கையில் பெருபகுதி அவர்களுக்குரியது. இன்றைய கிருஷ்ணாவின் பலம் அவர்கள் ஊட்டியது, எனது வாழ்க்கைப் பாதையை, இளம் வயதில் தாயும், திருமணத்திற்குப்பிறகு துணைவியும் செப்பனிட்டிருக்கிறார்கள். எனினும் அவர்களுடை பல நேர மௌனத்திற்கும், சிரிப்பிற்கும், முக சமிக்கைகளுக்கும் விடைகாண முடியாமற் திணறியிருக்கிறேன், திணறுகிறேன். பல நேரங்களில் அவற்றுக்கான தேடலாக கூட எனது நாவல்களின் பெண் கதை மாந்தர்கள் இடம்பெற்றுவிடுகிறார்கள்.