Monthly Archives: ஏப்ரல் 2020

ஆனந்தரங்கப் பிள்ளை : வாழ்க்கை, வரலாறு ஆளுமை – 5

ஏற்றுக்கொண்ட பணியில் ஆர்வம்

« செய்யும் தொழிலே தெய்வம் அந்தத் திறமைதான் நமது செல்வம் » என்பது பழைய திரைப்படமொன்றில் இடம்பெறும் பாடல். பாடலாசிரியர் பட்டுக்கோட்டையார். அப்பாடல் உங்களில் பலரைப்போலவே  எனக்கும் விருப்பமான பாடல். எனினும் இப்பாடலில் தொடர்ந்து  இடம்பெறும் வரிகள் உடலுழைப்பை மட்டுமே கருத்தில்கொண்டு பாடப்பெற்றிருப்பதில் எனக்கு உடன்பாடில்லை. தொழில் என்பது உழைப்பை அடிபடையாகக் கொண்டது என்பது பொதுவில் ஏற்கக் கூடியது. அதேவேளை அவ்வுழைப்பு  உடல் திடத்தையும் அதன் திறனையும் மட்டுமே சார்ந்தது எனச் சித்தரிப்பதில் எவ்வித நியாயமும் இல்லை. உழைப்பு என்பது, உடலுக்கு எப்படியோ அப்படி  மன வலிமையையும், மூளையின் ஆற்றலையும் உள்ளடக்கியது என்கிற புரிதல் நமக்கு வேண்டும். மூளையைப் புறக்கணித்து உடலை மட்டுமே அண்டியிருக்கிற உழைப்பு நம்மை அவையில்  கூட்ட த்தில் ஒருவராக, பார்வையாளராக இருக்க மட்டுமே உதவும். மாறாக மூளையையும் உடலுடன்  இணைத்துக்கொள்ளும் உழைப்பு அவையில் முந்தியிருக்கச் செய்யும். உடலுழைப்பு அடிமைகளுக்கானது, மூளையின் பயன்பாட்டையும் உள்ளடக்கிய உழைப்பு ஆளுமைக்குச் சொந்தமானது.

வையம் காப்பவரேனும் – சிறு

வாழைபழக் கடை வைப்பவ்ரேனும்

பொய்ய கலத் தொழில் செய்தே பிறர்

போற்றிட வாழ்பவர் எங்கனும் மேலோர் !

என கவி பாரதி சுட்டுகிற மேலோர் வரிசைக்குக் கச்சிதமாகப் பொருந்துகிற ஆளுமை, ஆனந்த ரங்கர்.

நமக்கு கிடைத்துள்ள  அவருடைய நாட்குறிப்பு 1736ம் ஆண்டு தொடங்குகிறது. ஞானு தியாகு என்பவர் பிள்ளையின் அச்சிட்ட நாட்குறிப்பின் முதல் தொகுதிக்கு எழுதிய முன்னுரையில் :

« முதல்  அதிகாரி முதற்கொண்டு  சிப்பந்திவரையில் எல்லோரிடத்தும்  சம அன்பைக் காட்டிவந்தவர். ஆகையால் யாவரும்  அவரிடம் பதிலுக்கு முழுநம்பிக்கை வைத்துத் தங்களுக்கு தெரிந்த தை ஒளியாமல் சொல்லிவந்தார்கள். இதனால் அன்றோ, அரசியல் ரகசியங்கள் முதற்கொண்டு தனிப்பட்டவர்கள் குடும்ப வாழ்க்கைகள் வரையில் யாவற்ரையும் அறிந்து ஒரு தீர்மானத்துக்கு வர அவரால் முடிந்தது. » எனக்குற்ப்பிட்டிருப்பது கவனத்திற் கொள்ளதக்கது.

வணிக நடவடிக்கைகளில் பிள்ளை :

இளம்வயதிலேயே பிள்ளைக்கு இடைத் தரகர் பொறுப்பு . இடைத்தரகர் பணி என்பது இங்கே இரு தேச மனிதர்களுக்கிடையில் ,  இருவேறு இனத்திவரிடையில், இருவேறு பண்பாடுகளின் பின்புலத்திலிருந்து வந்த மனிதர்களுக்கிடையில், இரு வேறு மொழிகளுக்கிடையில் கடமையை நிறைவேற்றவது. துபாஷியாக நியமிக்கப்பட்டு  அதனல் தான் அடையும் பலன்களுக்கு யார் காரணமோ அவர்களுக்கு விசுவாசமாக இருப்பது ஒரு பக்கம் ;  சுதேசி வியாபாரிகளுக்கு, தனது மண் சார்ந்த மனிதர்களின் நம்பிக்கைக்கு உரிய மனிதராக நடந்துகொள்வது இன்னொரு பக்கம்.  இருகுதிரையில் சவாரி செய்யவேண்டிய நெருக்கடி. இரு தரப்பினரும், மகிழ்ச்சியும் நிறைவும் அடைகின்றவகையில் பணியாற்றவேண்டும்.  தரமான நெசவுத் துணிகளை வாங்க வேண்டும், தான் ஊழியம் பார்க்கிற நிறுவனத்திற்கு இலாபம் தரும் வகையில் பேரமும் அமையவேண்டும்.  உள்ளூர் வியாபாரிகளும் மன நிறைவுடன் தங்கட் பொருளை விற்று காசாக்க வேண்டும்.

இப்பணியில் வேரு சில நெருக்கடிகளும் பிள்ளைக்கு இருந்தன. பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகிகளில் ஒரு சிலர், நிறுவனத்தின் இலாபத்தில் தாங்கள் எவ்வளவு சம்பாதிக்கமுடியுமென கணக்கிட்டு கொள்ளையடித்த பின்,  பிடிபடும்போது  பழியைத் தரகர்கள்மீது சுமத்திவிட்டு தப்பிக்கின்றவர்கள். நைனியப்ப பிள்ளையின் வழக்குத் தெள்ளத் தெளிவான சான்று. எனவே இவற்றை நன்கு விளங்கிக் கொண்டிருந்த ஆனந்தரங்கர் கணக்கு வழக்குகளில், போடும்  ஒப்பந்தங்களில், எச்சரிக்கையாக இருந்தார். வணிக நடவடிக்கைகளை  பிறர் குறைகாணாத வகையில் அமைத்துக்கொண்டார் அவற்றை எண்பிக்க எழுத்துப் பூர்வமாக குறித்தும்வைத்தார். பிள்ளையின் செயல்பாட்டைப் புரிந்துகொள்ள பல உதாரணங்கள் :

நள வருடம், புரட்டாசி மாதம் 21 ந்தேதி,1736ம் ஆண்டு  ஒக்தோபர் மாதம் 3 ந்தேதி புதன் கிழமை

« காலை பத்துமணிக்கு  சுங்குவார் சேஷாசல் செட்டிக்கு ஒப்பந்தம் கொடுத்து பாவைகட்டு ( the bales of piece-goods) 1471க்கு மூணாந்தர விலைப்படிக்கு சுமார் லட்சத்திருப்பதினாயிரத்து நானூத்தி தொண்ணூற்று ஒன்றரை வராகனுக்கு கொந்திராத்துலே (contract) கையெழுத்துப்போட்டு பிற்பாடு பதினோரு பீரங்கியும் போட்டு (once the contract was executed, guns were fired.)அவன் தம்பியும்கூட கையெழுத்துப் போட்டபடியினாலே சேஷாசலசெட்டிக்கு ஆறு கெஜம் சிவப்பு சகலாத்தும் மேற்படி லட்சுமிபதி  செட்டிக்கு ஆறு கெஜம்  சகலாத்தும் கொடுத்தார்கள்.  » –

– ( பக்கம் 3,ஆ.நா.குறிப்பு vol.I)

                                  கணக்கு வயணம்

வர்த்தகர் வெள்ளி வாங்கிப்போய்  ரூபாய்யோடு விச்சு முசே லெகுவுக்கு (Monsieur Legou)செலுத்தினது.

நள வருடம் மார்கழி மாதம்  25ந்தேதி 1737 ஆம் வருடம் ஜனவரி மாதம்  4ந்தேதி

        பத்தருக்கு சேர் விராகனிடை 65க்கு சேர் 100க்கு  ரூபா…..2335

ஆக க் கூடின ரூபாய் 5259. 11/16

ரெண்டு குலானு போட்டிருக்கிற (coins stamped with double head)

காசு பத்தருக்கு சேர் 100க்கு ரூபாய் …2318

ஆக 324-க்கு கூடின ரூபாய் …..7567 1/16

இதுக்கு கூலிக்கு பிடிச்சுக்கொண்டது  1000-க்கு  ரூபாய் 16 ஆக

ரூபாய் 121 1/16  போக நீக்கி  முசே லெகுவுக்கு செலுத்தினது            ரூபாய் ……7446

– (பக்கம் 8 ஆ. நா.குறிப்பு vol 1)

 

துய்மா (M.Dumas) என்கிற அதிகாரிக்கு மயிலாப்பூர் துறைமுகம் சார்ந்த பிரச்சனை ஒன்றை துய்புவா(M.Dubois) என்பவர் கடிதம் மூலம் தெரிவிக்கிறார்.  அதன்படி கடலூரில் பிள்ளை அவர்கள் ஏற்றியதாகக் கூறி இரசீது வைத்திருக்கும் நான்கு கட்டுத் துணிகள்,  கப்பலில் ஏற்றப்படவில்லையென்றும், அது மயிலாப்பூரை வந்தடையவில்லை என்பது கடிதத்தில் சொல்லபட்டுள்ள குற்றச்சாட்டு. பிள்ளை நான்கு கட்டுகள் அனுப்பியதற்கான ஆதாரங்களை உரிய சான்றுகளுடன் தெரிவிக்க, அவர்மீது சுமத்தப்பட்டக் குற்றச் சாட்டு பொய்யானதென நீரூபணம் ஆகிறது. இத்தகவலை 1737 ஆம் ஆண்டு  மார்ச் மாதம் 20 ஆம் நாளிட்ட நாட்குறிப்பில் நமக்கு வாசிக்க கிடைக்கிறது.

உண்மையும், நியாயமும் தன் தரப்பில் இருக்கிறதெனில் பிள்ளை அதிகாரத்தைக் கண்டு அஞ்சுவதில்லை என்பதற்கு மற்றொரு உதாரணம் 1738 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ந்தேதி நடந்த மற்றொரு சம்பவம்.

“காலமே நான் முசே எலியாசு (M. Elias) வீட்டுக்குப்போய் அவருடனே பேசியிருக்கச்சே கும்பெனி சேவகன் கோன்சேல் கூடியிருக்கிறார்கள் (meeting of the Council). துரை உங்களை அழைத்துக்கொண்டு வரச்சொன்னார் என்று சொன்னான். அதன் பேரிலே கோன்சேல் வீட்டுக்கு வந்த இட த்தில் …….துரை அவர்களுக்கு ஆசாரம் (வணங்கி) பண்ணி மற்ற கோன்சேலியோரவர்களுக்கும் (the other Council members)

ஆசாரம் பண்ணி நின்றேன். அப்போது துரை அவர்கள் என்னைக் கிட்ட வர்ச்சொல்லி ரங்கப்பா உன்பேரிலே முசே பிலவுவான் (M.Pilavoine) மூவாயிரத்து எழுநூத்து வராகன் வரவேணுமென்று கணக்கெழுதிக்கொண்டு வந்து கொடுத்திருக்கிறான், என்று சொன்னார். நான் அதற்கு கொடுக்கவேண்டியதில்லை. எந்தச் சம்மதி (under what) என்று கேட்டேன் . அதற்கு அவரிருந்து கொண்டு 1734 வருஷத்தில் நாற்பத்தெட்டு பவழப்பெட்டி வாங்கின சம்மதிக்கு கெடுவு போக நின்ற நாளுக்கு வட்டி என்று சொன்னார். அதற்கு நான் அய்யா பவழ வட்டியை நான் கொடுக்கமாட்டேன். இது கும்பெனிக்குப் பெரிய காரியமல்ல. இப்பவழச் சரக்குக்கு நான் பிணை இருந்ததற்கு நாலாயிரம் அய்யாயிரம் வராகன் மட்டுக்கும் மூழ்கிப்போனதுமல்லாமல்(நட்டமடைந்ததும் அல்லாமல்) சிறிதுபேர் மானுஷமாய் (insolvent condition) செலுத்த தவறினார்கள் பேரிலே மூவாயிரம் வராகன் மட்டுக்கும் எனக்கு வரவேணும். அதற்குக் கணக்கும் தாஸ்த்தாவேசுகள் சீட்டுகள் எல்லாம் இருக்குதென்று …..”  கவர்னரிடத்தில் துணிச்சலுடன் பேசுகிறபோது, அவர் பணியில் சில நெறிகளை வகுத்துக்கொண்டு கடமை ஆற்றியிருக்கிறார். அதற்கு சோதனை வருகிறபோது, அஞ்சுவதில்லை என புரிந்துகொள்கிறோம்.

 

தொடரும்…

 

மொழிவது சுகம் ஏப்ரம் 19…2020


நலம் நலமறிய ஆவல்

பொதுவாக  மார்ச் முதல் மே வரை  வழக்கமாகவே கடினமான மாதங்கள். வருடாந்திர கணக்கை சமர்ப்பிக்கவேண்டும். 60 பதுகளின் ஜமாபந்தி நாட்கள் மீண்டும் நினைவுக்கு வரும்  அப்பா கிராம மணியமாக வேலை பார்த்தார், அம்மா வழி சகோதர ர்கள் கர்ணமாக வேலை பார்த்தார்கள். ஜமாபந்தி நாட்களில் நாங்கள் அவர்களுக்கு உதவேண்டும். விழி பிதுங்கிவிடும். சிட்டா, அடங்கலை கூட்டிக்  கூட்டிக் கண்கள் பூத்துவிடும், முத்தாய்ப்பாக சில நாட்கள் திண்டிவனம் தாலுக்கா ஆபிஸில் பழியாய் கிடக்கவேண்டும். கிடைத்த பலன் கணக்கில் ஆர்வத்தை கொடுத்தது.   விளைவாக எனவே எனது நிறுவனக் கணக்குகளை இன்று நானே பா பார்க்கிறேன் அதாவது எழுதுகிறேன், கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக.

எனக்குத் தெரிந்து பல நண்பர்கள் தங்கள் பிரதான பணிபோக இங்கு தோட்டப்பராமரிப்பு, தேனிவளர்த்தல், தச்சு வேலை, எதையாவது பழுதுபார்த்தல் என செய்கிறார்கள். நான் பெரிதாக வெட்டி முறிப்பதில்லை.  பிரான்சு நாட்டில் மொழி பெயர்ப்புக் கல்விக்கென்று  செலவிட்டது மாதங்கள்தான் ஆனால் அக்கவுண்டன்ஸிக்கு செலவிட்டது கிட்டத்தட்ட 3 வருடங்கள். சில வருட  தொழில் அனுபவமும் அதிலுண்டு.  தவிர இதற்கென உள்ள மென்பொருள்கள், கணக்கெழுதுவதை சுலபமாக்கி உள்ளன.   தெரிய வேண்டியதெல்லாம் வரவு செலவு கணக்கை,  1 முதல் 8 வரையிலான எண்களின் உட்பிரிவுகளின் கீழ் அந்தந்த journal ல் , debit aல்லது crédit பதிவு செய்யத் தெரிந்திருந்தல். பிறகு….Grand Livre, Balance, Compte de Résultat, Bilan அனைத்தும் உங்கள் விரல்களின் அதிகாரத்திற்கு உட்பட்டவை.

 

வாசிப்பு

இந்நெருக்கடியிலும்சில நூல்களை வாசிக்க முடிந்த து.1சிரியாவின் தலை மறைவு நூலகம்  2. உயிர்த்தேன் 3. சாமத்தில் முனகும் கதவு 4. La Tresse ஒரு பிரெஞ்சு நாவல்

  1. சிரியாவின் தலை மறைவு நூலகம்

பிரெஞ்சு மொழி பெயர்ப்ப்பு, மொழி பெயர்த்திருப்பவர்  பேராசியர் எஸ் ஆர் கிருஷ்ணமூர்த்தி. ஏற்கனவே சில நூல்களைப் பிரெஞ்சிலிருந்து தமிழுக்குப் மொழிபெயர்த்து நன்கறியப்பட்டவர். பேராசியரும் மற்றொரு மொழிபெயர்ப்பாளருமான சு. வெங்கடசுப்பராய நாயக்கரின் கல்லூரி ஆசிரியரும் கூட. இந்நூல் காலச்சுவடு வெள்யீடு.

நூலாசிரியர் டெல்ஃபின் மினூய் (Delphine Minoui), மினூய் தந்தையின் பெயர், ஈரானியர். தாய் பிரெஞ்சு பெண்மணி. அரசு வானொலிகளில் பணியாற்றியவர், தற்பொழுது நன்கறியப்பட்ட பிரெஞ்சு பத்திரிரிகை குழுமத்தின் சிறப்பு செய்தியாளராக பணியாற்றுகிறார். தந்தை ஈரானியர் என்பதாலேயே என்னவோ தமது பத்திரிகையாளர் பணியை இஸ்லாமிய நாடுகள் சார்ந்து எனத் தீர்மானித்திருக்கிறார். ஏற்கனவே  ஈரான் ஈராக், ஏமன் ஆகிய நாடுகளை மையமாக கொண்டு எழுதியிருக்கிறார். இந்நூல் துருக்கியில்  பிரெஞ்சு இதழொன்றின் பத்திரிகையாளராக பணியாற்றிய காலத்தில் அண்டை நாடான சிரியா உள்நாட்டு யுத்தத்தால் சின்னாபின்னபட்டுக்கொண்டிருந்த நிலமையைப் பேசுகிறது.  தலைக்குமேலே யுத்த விமான ங்கள் தாக்குதலை நடத்த சகோதர யுத்த்திற்கிடையிலும் நூலகம் உருவாக்கிய மனிதர்களின் தலைவிதியை நூல் பகிர்ந்து கொள்கிறது.

அரபு வசந்தம் :

இலங்கையை அடுத்து உள்நாட்டுப் போரால் அதிகம் பாதிக்கப்பட்டநாடு சிரியா.  பொதுவாக அரபு நாடுகளில் நாடு என்பது ஆள்பவரின் உடமை. சுதந்திரம் என்பது அவரவர் வீட்டு எல்லையைப் பொறுத்தது.  பொதுவெளி உபயோகத்துக்கு அல்ல.  அண்மையில் சவுதி அரேபிய நாட்டைச் சேர்ந்த Al-arab News ல் பணியாற்றிய பத்திரிகையாளர் ஜமால் ஹஷோஹி (Jamal Khashoggi) துருக்கியில் சவுதி அரேபிய தூதரகத்தில் வைத்து கொலைசெய்யப்பட்டது உலகறிந்த செய்தி. செய்த குற்றம்  சௌதி அரசை  அவர் விமர்சனம் செய்தது.  சுதந்திர ம் குறித்து வாய்கிழிய பேசும் அமெரிக்காவோ பிற மேற்கு நாடுகளோ உத்தியோகபூர்வமாக சவுதி அரேபியாவை இதுநாள்வரை கண்டித்ததில்லை.

அரபு நாடுகளுக்கே உரிய இத்தகைய நெருக்கடியில் பிரான்சு நாட்டின் முன்னாள் காலனி நாடான துனீஸிய மக்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளை வற்புறுத்தி  வீதியில் இறங்கினாகள். 2010ல் தொடங்கிய இப்போராட்டம்  « அரபு வசந்தம் » என்ற பெயரில் மளமளவென பிற அரபுநாடுகளிளும் பரவிற்று. அடிப்படைத் தேவைகளுக்காக தொடங்கிய போராட்டம் முடியாட்சி, சர்வாதிகாரம் ஆகியவமற்றிற்கு எதிரானதாக பின்பு திசை மாறியது. இக்கட்டத்தில் போராட்டக்காரர்கள்  மேற்கத்திய நாடுகளின் கைக்கூலிகளென  சித்தரிக்கப்பட்டனர். இவ்விமர்சனத்தில் ஒரளவு நியாயமும் இருந்தது. எதிர்பார்த்ததுபோல அமெரிக்கா, மேற்கு ஐரோப்பிய நாடுகளுடன் கைகோர்த்த அரபுநாடுகள் இத்தகைய போராட்டத்தை எதிர்கொள்ளவில்லை. அரபு வசந்தத்தினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் சிரியாவும் ஒன்று.அதிகாரத்திற்கு எதிராக மக்கள் ஆயுதம் ஏந்தினர். அவர்களை மேற்கு நாடுகள் மறைமுகமாக ஆதரித்தன. இச்சம்பவத்தைப் பயன் படுத்தி இசுலாமிய தீவிரவாதம் கலிபா அரசாங்கம் அமைக்கும் கனவுடன் உள்ளே நுழைய வழக்கம்போல அப்பாவி மக்கள் உயிச் சேதத்தையும், உயிர் வாழ்க்கை சேதத்தையும் எதிர்கொள்ளவேண்டி இருந்தது. சிரிய மக்களின் விதியில் விளையாடியவர்கள் நால்வர்:1. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ஆதரவு பெற்ற  “அரபு வசந்த” போராளிகள், 2; ரஷ்யாவின் ஆதரவுபெற்ற சிரியா முடியாட்சி, 3. இஸ்லாமிய தீவிரவாதிகள், 4.இச்சம்பவத்தைப் பயன்படுத்தி  தங்கள் நிரந்தர எதிரிகளான குர்தின மக்களை அழிக்க முனைந்த துருக்கி அரசு.

சிரியாவின் தலைமறைவு நூலகம்

பல மேற்கத்திய பத்திரிகையாளர்கள், யுத்தமுனைகளிலிருந்து செய்திகளை அனுப்புவதை அறிந்திருக்கிறேன், ஆஃப் கான் யுத்தம், தலிபான்கள், தீவிரவாதிகள் இவர்களையெல்லாம் நேரில்  சென்று, கண்டு  பணயக் கைதிகளாக பிடிபடக்கூடும்  என்ற அச்சம் எதுவுமின்றி தகவல்களைக் கட்டுரைகளாக தருவது வழக்கம். இந்நூலாசிரியர் இஸ்தான் புல்லில் பணியாற்றியபொழுது தமக்குச் சிரியாவிலிருந்து சமூக ஊடகமொன்றின் உதவியால் கிடைத்த புகைப்படைத்தைக் கொண்டு நூலைத் தொடங்குகிறார்.  புகைப்படத்தை  அனுப்பிய அஹமத்  என்வருடன் தொடர்புகொண்டு நூலாசிரியர் அவர் தரும் தகவல்களைக்கொண்டு இஸ்தான்புல்லில் இருந்தபடி  நூலின் பக்கங்களை நிரப்புகிறார். இடிபாடுகளுக்கிடையில் கிடைத்த புத்தகங்களைக் கொண்டு நூலகத்தை அஹமத் தம் நண்பர்களின் துனையுடன் ரகசியமாக உருவாக்குகிறார். அவர்களின் முயற்சிக்கு« வயிற்றுப்பசியை விரட்ட இலை தழைகளிலான சூப் ! அறிவுப்பசியை விரட்ட தொடர்வாசிப்புகள் ! » எனக் காரணத்தை முன் வைக்கிறார் ஆசிரியர். சிரியா தலைமறைவு  நூலகம் ஊடாக டமாஸ்கஸ் அருகிலிருந்த  தராயா நகரின் போராளிகள், நகர்மீதான அரசுப்படைகளின் தாக்குதல்கள், அப்பாவி மக்களின் அவல வாழ்க்கை என விரியும் நூல் இறுதியில் நகரம் அரசுப் படைகளின் கைவசம் போக முற்றுப்பெறுகிறது. துனிசீயாவில் தொடங்கிய “அரபு வசந்தம் “அரபு நாடுகளைபொறுத்தவரை கானல் நீர் என்பதை நூல் உறுதி செய்கிறது.  சிரியா உள்நாட்டு யுத்தத்தை செய்திகளாவும் புகைப்படங்கள் ஊடாகவும் அறிந்திருப்போம். நூல் நேரடி விவரணையைத் தருகிறது. கறிப்பாக அஹமது, ஷாதி,ஹூஸ்ஸும் ஓமர் மறக்க முடியாத மனிதர்கள்.

 

பிற நூல்கள் குறித்து அடுத்து வரும் கட்டுரையில்….

——————————————————————————————