Monthly Archives: ஒக்ரோபர் 2013

கருத்தரங்கம் – நூல்கள் வெளியீடு

சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ் இலக்கியத் துறை

மற்றும்

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், சென்னை

கருத்தரங்கம் – நூல்கள் வெளியீடு

காலனியக் காலத் தமிழ்ச் சமூகமும் சென்னை இலௌகிகச் சங்கமும்

நூல்கள் வெளியீட்டு நிகழ்வு

தலைமை: பேராசிரியர் மாண்பமை இரா.தாண்டவன் அவர்கள்

துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம்

நூல் : அத்திப்பாக்கம் வேங்கடாசலனார் ஆக்கங்கள் திரட்டு

(ஆதிக்க சாதிகள் – இந்து மதம்: ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராகத் தொழிற்பட்ட வரலாறு)

வெளியிடுபவர் : தோழர் ஆர்.நல்லக்கண்ணு

பெறுபவர் : பேராசிரியர் கோ.இரவீந்திரன்

தலைவர் – இதழியல் துறை – சென்னைப் பல்கலைக்கழகம்

நூல் : சென்னை இலௌகிக சங்கம்

(தத்துவவிவேசினி – THINKER இதழ்க் கட்டுரைகளின் பதிப்பு – 6 தொகுதிகள்)

வெளியிடுபவர் : நீதியரசர் கே.சந்துரு அவர்கள்

பெறுபவர் : பேராசிரியர் இரா.மணிவண்ணன்

தலைவர் – அரசியல் மற்றும் பொது வாழ்வியல் – சென்னைப் பல்கலைக்கழகம்

இடம் : பவள விழாக் கலையரங்கம்

மெரினா வளாகம் – சென்னைப் பல்கலைக்கழகம்

(கடற்கரை – திருவள்ளுவர் சிலை எதிர்)

28.10.2013 மாலை 4.00

கருத்தரங்கம்

காலனியக்காலத் தமிழ்ச் சமூகமும் சென்னை இலௌகிக சங்கமும்

29.10.2013 காலை 10.00 – 1.00

முதல் அமர்வு

தோழர் எஸ்.வி.இராஜதுரை

பத்தொன்பதாம் நூற்றாண்டு அறிவொளி இயக்கம்

ஆளிணிவாளர் க.திருநாவுக்கரசு

தத்துவவிவேசினியில் காலனியம் குறித்த பதிவுகள்

தோழர் ஜி.இராமகிருஷ்ணன்

சென்னை இலௌகிக சங்கத்தினரின் அறிவியல் கண்ணோட்டம்

தோழர் ஆ.சிவசுப்பிரமணியன்

காலனிய பொருளாதாரமும் சென்னை இலௌகிக சங்கமும்

இரண்டாம் அமர்வு

29.10.2013 பிற்பகல் 2.30 – 5.00

ஆளிணிவாளர் வ.கீதா

தத்துவவிவேசினி முதல் குடியரசு வரை : தொடர்ச்சியும் மாற்றமும்

தோழர் கொளத்தூர் மணி

பெரியாரும் சென்னை இலௌகிக சங்கமும்

தோழர் பெ.மணியரசன்

பத்தொன்பதாம் நூற்றாண்டு மறுமலர்ச்சியும் சென்னை இலௌகிக சங்கமும்

ஆளிணிவாளர் ரவிக்குமார்

சென்னை இலௌகீக சங்கம் : பார்ப்பனீய எதிர்ப்பும் சாதி மறுப்பும்

மூன்றாம் அமர்வு

30.10.2013 காலை 10.00 – 1.00

பேராசிரியர் எம்.எஸ்.எஸ். பாண்டியன்

ஐரோப்பிய புத்தொளி மரபும் சென்னை இலௌகிக சங்கமும்

பேராசிரியர் தமிழவன்

சென்னை இலௌகிக சங்கம் : சில அவதானிப்புகள்

பேராசிரியர் சுந்தர் காளி

ஆடியும் லிங்கமும்: தொன்மங்களை வாசிப்பதில் தத்துவவிவேசினியின் இருவேறு வழிமுறைகள்

ஆளிணிவாளர் ஸ்டாலின் இராஜாங்கம்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மறுமலர்ச்சி : ம.மாசிலாமணி

நான்காம் அமர்வு

30.10.2013 பிற்பகல் 2.30 – 5.00

பேராசிரியர் ந.முத்துமோகன்

தத்துவவிவேசினி முன்னெடுக்கும் மெளிணியியல் விவாதம்

ஆளிணிவாளர் ஞான. அலாளிணிசியஸ்

அகில இந்தியச் சமூக மாறுதலுக்கான பின்னணியில் சென்னை இலௌகிக சங்கம்

தோழர் விடுதலை இராசேந்திரன்

இலௌகிக சங்கத்தினரின் பெண் சார்ந்த கண்ணோட்டம்

பேராசிரியர் சுப.வீரபாண்டியன்

இலௌகிக சங்கத்தினரின் மூடநம்பிக்கை குறித்த பரப்புரைகள்

பேராசிரியர் தொ.பரமசிவன்

தமிழக நாத்திக மரபும் சென்னை இலௌகிக சங்கமும்

குறிப்பு : பேராசிரியர் வீ.அரசு பதிப்பித்துள்ள சென்னை இலௌகிக சங்கம்

(ஆறு தொகுதிகள் : 3330 பக்கங்கள்) என்னும் ஆக்கத்தை அடிப்படையாகக் கொண்டு

இக்கருத்தரங்கம் நிகழ உள்ளது. இத்தொகுதிகளை நியு செஞ்சுரி புத்தக நிறுவனம்

அண்மையில் வெளியிட்டுள்ளது.

அனைவரையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

உலக எழுத்தாளர் வரிசை 5 : ஜார்ஜ் சேம்ப்ர்

ஜார்ஜ் சேம்ப்ர் (Jorge Semprun)AVT_Jorge-Semprun_3796

ஜார்ஜ் சேம்ப்ர் மாட்ரிட்டில் (ஸ்பெயின்) பிறந்து  பாரீஸில் (பிரான்சு) மறைந்தவர்.  மேட்டுக்குடியில் பிறந்த பொதுவுடமைவாதி, ஸ்பெயின் மார்க்கோ முதல் ஜெர்மன் இட்லர்வரை இவரை பிடித்து சிறையிலடைக்க அல்லது கொல்ல காத்திருந்தார்கள். அரசியலோடு எழுத்திலும் தீவிர பங்களிப்பு. பிரெஞ்சு -ஸ்பானிஷ் இரண்டிலும் எழுதுவார். எழுத்தோடு தத்துவம் பேசியவர்.

சூழலைக் காட்டிலும் அக புறவய அனுபவங்களை தமது எழுத்தில் கொண்டுவரவும் அதனூடாக வாசிப்பை புதிய தளத்தில் நிறுத்தி அவ்வனுபவத்தை வாசகரையும் உணரச்செய்வதில் தேர்ந்தவர் ஜார்ஜ் சேம்ப்ர் (Jorge Semprun). ஒரு ஞாயிற்றுக்கிழமை, பூஷன்வால்ட் (‘Quel beau dimanche!) என ஆரம்பித்து வாசகரை வழிமறித்து தேடிக்கொள்ளும் சாமர்த்தியம் அவர் எழுத்துக்கு நிறையவே உண்டு. நளனுக்கு வாய்த்ததுபோல ‘தீவினைக் கொடுமை’யைக் காலமும், சரித்திரமும் அவருக்கு சோதனையாக அறிமுகப்படுத்துகிறது, புலிவாலைப்பிடித்த போதை அனுபவம். அதனை மயக்கத்தின்வழிநின்றே ஒரு போர்வீரனின் தீரத்துடன் எதிர்கொள்ளவும், ஒரு கலைஞனின் திறத்துடன் பகிர்ந்துகொள்ளவும் அவருக்கு முடிந்தது. நாஜிகளின் வதைமுகாமில் உள்ளத்தாலும் உடலாலும் தேய்ந்துகொண்டிருந்தபோது கண்ணெதிரே நிகழ்ந்த, சக மனிதகூட்டத்தின் தினசரிகள் மீதான தாக்குதலைத்  (கடுங்குளிர், பசிக்கு உணவின்மை, கொடுமைகள், ஈவிரக்கமற்ற கொலைகள், முகவாட்டங்கள், சோர்வுகள், கடுந்துன்பத்தின் முக்கல்கள் முனகல்கள் இன்னும் இதுபோன்றவற்றையெல்லாம் புறச் சம்பவங்களக் கணக்கில் கொள்ளாது) தவிர்த்து  – முகாமில் தமமக்குள் நிகழ்ந்த இரசாயன மாற்றங்களை சொல்லவேண்டியது அவசியம் என்கிறார். நாஜிகளுடைய வதை முகாம்களைப் பற்றிய கட்டுரைகள், வரலாறுகள், புனைவுகள்  ஏராளமாக வந்துள்ளனவென்றாலும், அதனை இலக்கியமாக்க இவர் ஒருவரால்தான் முடிந்திருக்கிறது. முகாம் வாழ்வை ஓர் யோகிபோல கடந்து வந்திருக்கிறார். அதற்கு ஒருவேளை அவரது தத்துவ அறிவு காரணமாக இருக்கலாம்.

ஜார்ஜ் சேம்பர் ஒரு ரிபப்ளிகன், எதேச்சதிகாரத்தின் எந்தவடிவமும் மக்களுக்கு எதிரானது என்கிற உண்ர்வுபூர்வமான குரல்களுக்கிடையில் அவர் குரலும் இடம்பெற்றது. ஸ்பெயின் நாட்டில் பிராங்க்கோ என்கிற கொடுங்கோலனின் ஆட்சி காலத்தில் தொடங்கிய தலைமறைவு வாழ்க்கை பிரான்சு நாட்டை நாஜிகள் ஆக்ரமித்திருந்தபோதும் நீடித்தது. பொதுவுடமைக் கொள்கையில் தீவிர ஆர்வலர், கட்சியில் அக்கறையுடன் வினையாற்றியவர் எனினும் ஸ்டாலினிஸத்துடன் உடன்பட மறுத்து விலகிக்கொண்டார். தீவிரமான அரசியல் நிலைப்பாடுகளுக்காக எழுத்தை ஒருபோதும் மறந்ததோ, தியாகம் செய்யவோ இல்லை, அவ்வெழுத்தை அவர் சார்ந்த அரசியலுக்காகப் பயன்படுத்திக்கொண்டவரும் அல்ல.

 

ஜார்ஜ் சேம்ப்ர் அரசியல் எழுத்து என்ற இரு குதிரை சாரட்டில் பயணித்தவர் என்பதால், அவர் அரசியல் வழித்தடத்தையும் நாம் இங்கே பேசியாகவேண்டும். உண்மையைச் சொல்வதெனில் இளம்வயதில் நானும் ஒரு பொதுவுடமைக் கட்சியின் அனுதாபியாக, திராவிட கொள்கைகளில் பிடிப்புள்ளவனாக இருந்திருக்கிறேன், அதுகூட சரியான வார்த்தை அல்ல. ஏனெனில் எனது அந்த வயதில் அரசியல் சார்பென்பது எனது தகப்பனாருக்கு எதிரான மன நிலையில் உருவானது, பெரியார் அல்லது கார்ல் மார்க்ஸ் மீதுள்ள பிடிப்பினால் உருவானதல்ல. எனது தகப்பனாருக்கு எதெல்லாம் பிடித்ததோ அதெல்லாம் எனக்கு பிடிக்காதது, உணவு உட்பட. அப்படியொரு மனநிலையில் இருந்தேன். கிராமத்தில் நாடகம் எழுதி நடிப்பது, பாலம் என்ற இயக்கம்,  இதே மன நிலையில்தான் இளங்கலைப் படிப்பை சென்னையில் இராயபுரத்தில் தங்கித் தொடர்ந்தேன் ( துறைமுகத் தொழிலாளர்கள் அதிகம் நிறைந்திருந்த பகுதி) சர் தியாகராயக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபொழுது பீடி சுற்றும் தொழிலாளர்கள் சிலருடன் பழக்கம் ஏற்பட்டு, தீக்கதிர் பத்திரிகையை விரும்பி வாசித்ததுண்டு, ஆனாலும் என்னை உறுப்பினராக வேண்டுமென்று படிவத்தை நீட்டிய பொழுது மறுத்தேன். அதே நேரத்தில் பழைய காங்கிரசு நடத்தும் கூட்டங்களிலும் கலந்துகொண்டதுண்டு. சோ நடத்திய துக்ளக் இதழை விரும்பிப் படிப்பேன். கட்சிபேதமின்றி அநீதிகளுக்கு எதிராக குரல்கொடுக்கிறவர்கள் பக்கம் இருப்பதை இப்போதும் உணர்கிறேன். ஆட்சியில் இருக்கும் கட்சிகள் பிடிக்காமல் போய்விடுகின்றன. இதற்கு உளவியல் ரீதியில் ஏதேனும் காரணம் இருக்குமா எனத் தேடவேண்டும். பொதுவுடமைக் கட்சியில் என்  அனுபவத்தில் உணர்ந்தது, அக்கட்சியின் தொண்டர்கள் பிறரை நம்புவதில்லை, தலைவர்களை தங்கள் நிழலைக்கூட நம்புவதில்லை. பொதுவில் இருதரப்பும் எதார்த்த உலகோடு சம்பந்தப்பட்டவர்களல்ல. ஆனாலும் ஒன்றை உறுதியாக நம்பலாம். அரசியலில் பிறகட்சிகளைக் காட்டிலும் ஒன்றிரண்டு யோக்கியவான்களைப் பெற்றிருக்கிற கட்சியும் அதுவாகத்தான் இருக்க முடியும்.

ஜார்ஜ் சேம்ப்ரின் ‘Quel beau dimanche!’  (ஞாயிற்றுக்கிழமைக்குதான் என்ன அழகு!) என்ற அவரது சுய வரலாறு அல்லது புனைவு தற்செயலாக போலந்து நாட்டில் ‘Solidarnose’ பிறந்த அன்று வெளிவந்தது. அதாவது 1980ம் ஆண்டு ஜனவரிமாதம். ஜார்ஜ் சேம்பரின் வாழ்க்கையை அறிந்தவர்கள் வியப்படைவார்கள். நாஜிகளின் கொலை முகாமில் அடைபட்டிருந்த காலத்தில் நெஞ்சில் ஊறிய துன்ப உணர்வுகளை ஐந்து நாவல்களில் எழுதியிருந்தார். அவை 1963க்கும் 2001க் கும் இடைப்பட்டகாலத்தில் அவை வெளிவந்தன. அவற்றுள் இப்படைப்பை நடுவில் வைக்கலாம். இந்நூலுக்கு முன்பு வந்த le Grand voyage, l’Evanouissement என்ற இரண்டு நாவல்களிலும் தந்து கடந்த காலத்தை எட்டநின்று  அதனுடன் எவ்வித சமரசமுமின்றி விமர்சனம் செய்திருக்கிறார் எனில் பின்னர் எழுதிய இரண்டிலும் ( L’Ecriture ou la Vie, Le mort qu’il fait) தமது எதிர்காலத்தைப் பற்றிய  தீர்க்க தரிசனத்தை எடுத்துரைக்கிறார். ஸ்பெயின் கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாகச் செயல்பட்டதின் விளைவாக இருபதாண்டுகாலம் ஸ்பெயினுக்கும் பிரான்சுக்குமாக தலைமறைவு வாழ்க்கை நடத்தவேண்டியிருந்தது. அவர் வாழ்க்கையை மாற்றியது சொலிஜெட்சினா ( Solijenitsyne) நூலொன்று எனச் சொல்கிறார்கள் “எனது நினைவுகளை பரிசீலிக்கவும், விமர்சன உணர்வுக்குறிய எல்லா உரிமைகளும் மடை திறந்து, என்னைத் தனகெதிராகத் மாற்றும் திறனை தன்னிடம் வளர்த்தெடுத்ததென அவரே பின் நாளில் எழுதுகிறார்.

அவரது முக்கிய படைப்புகள்:

1. Le grand voyage (The Long Voyage) Gallimard, 1963
2. L’Ecriture ou la Vie (Writing or Life) Gallimard, 1994
3. Quel beau dimanche! ( What a beautiful sunday)

————————————————–

நூல் அறிமுகவிழா படங்கள்

வெ.சுப நாயகரின் மொழிபெயர்ப்பு ‘அப்பாவின் துப்பாக்கி’ நூல்  அறிமுகவிழா படங்கள்

Naya-1வெ.சுப. நாயகரின் ‘அப்பாவின் துப்பாக்கி’ சென்னையில் விமரிசையாக நடைபெற்றுள்ளது. முக்கிய பல ஆளுமைகள் பலர் கலந்துகொண்டு:நூலை வியந்து பாராட்டி இருக்கிறார்கள் என்பது நமக்கு மகிழ்ச்சி தரும் செய்தி.

நா.கிருஷ்ணா

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார்

நூற்றாண்டு விழா

தமிழிசை மூதறிஞர் குடந்தை ப. சுந்தரேசனாருக்கு நூற்றாண்டு விழா எடுக்கும் முகமாக அது பற்றிய செய்தியும் அவரைபற்றிய அரியதகவல்களும் கொண்டு முனைவர் மு. இளங்கோவன் தமது வலைப்பூவில் கட்டுரையொன்றை எழுதியுள்ளார்.

தமிழ்மொழிபால் உண்மையான அக்கறைகொண்டுள்ள உள்ளங்கள் விழாகுழுவினரை தொடர்புகொண்டு தோள்கொடுக்குமாறு வேண்டுகிறேன்.

http://muelangovan.blogspot.in/

நா.கிருஷ்ணா

———————————————

மொழிவது சுகம் அக்டோபர் – 20 2013

1.  வாசித்ததில் மனதிற்பதிந்தவை.

அ. அம்மா நீ வென்றுவிட்டாய் – அ.முத்துலிங்கம்

தலைப்பை போடுகிறபோதே எழுத்தாளர் பெயரையும் கூடவே சேர்ந்துவிட்டேன், நீங்கள் என்னை சந்தேகிக்கக்கூடாது இல்லையா? .  கட்டுரையாளர் அ.முத்துலிங்கம்,  குசும்பு இல்லாவிட்டால் எப்படி.  அ.முத்துலிங்கம் குறிப்பிடுகிற அம்மா சுடச்சுட நோபெல் பரிசும் கையுமாக நிற்கிற அலிஸ் மன்றோவைபற்றியது. சிறுகதை எழுத்தாளரான 82 வயது கனேடியப் பெண்மணியை நேரில் சந்தித்த சம்பவத்தை அவரது பிரத்தியேக மொழியில் ஆங்காங்கே எழுத்தாளரைபற்றிய சுவாரஸ்யமான தகவல்களுடன் தந்திருக்கிறார். கட்டாயம் படிக்க வேண்டிய கட்டுரை.

http://amuttu.net/home

ஆ. சொல்வனம் 16-19-2013

தற்போதெல்லாம் இணைய இதழ்கள் நன்றாக வருகின்றன, அச்சிதழ்களைக் காட்டிலும் இலக்கிய அக்கறையுடன் செயல்படுகிறார்கள். இரு வாரத்திற்கு ஒரு முறையென வரும் சொல்வன இதழில் இம்முறை ஒரு சிறுகதை, இரண்டு பயணக்கட்டுரைகள், நூல் விமர்சனங்கள் என வந்திருக்கின்றன. வௌவால் உலவும் வீடு என்ற சிறுகதையை கே.ஜே. அசோக்குமார் என்பவர் எழுதியிருக்கிறார். மிக நன்றாகசொல்லப்பட்டிருந்தது. அண்மைக்காலத்தில் இப்படியொரு நல்ல சிறுகதை வாசித்த அனுபவம் எனக்கில்லை. அதுபோல ‘நம்மோடுதான் பேசுகிறார்கள்’ என்ற நூலின் புத்தக விமர்சனத்தையும், ரா.கிரிதரன் எழுதியுள்ள நார்வே பயணக்கட்டுரையின் இரண்டாம் பகுதியையும் விரும்பி படித்தேன். காபி பற்றிய ஒரு கலந்துரையாடலில் இதுவரை அறிந்திராத பல தகவல்கள். எங்கேயோ எப்போதோ வாசித்ததுபோல,  ஒரு வேளை சொல்வனத்தில்தான் ஏற்கனவே வந்ததா? இருந்தாலும் எத்தனை முறை குடித்தாலும் காபி அலுப்பதில்லை என்பதுபோலவே சொல்லப்படும் தகவல்களும் சுவையாகவே இருந்தன. ஆர். எஸ் நாராயணன் எழுதிய இயற்கை வேளாண்மை களஞ்சியமும் தொடராக வருகிறது. இதுதவிர மற்றுமொரு பயணக்கட்டுரையும், புத்தக விமர்சனமொன்றும் , ஒரு மொழி பெயர்ப்பு சிறுகதையும் உள்ளன.

http://solvanam.com/
————————————
2. புறங்கூறல்

பயனில சொல்லாமை – இன்னாச்சொல் மூன்றுமே ஒரு குடும்பத்துப் பிள்ளைகள்தான்

நமக்கு வெண்சாமரங்கள் வீசப்படுகிறபோதும், பரிவட்டம் கட்டுகிறபோதும் குளிரும் மனம், நமக்குத் தெரிந்த மனிதருக்கு என்கிறபோது வதைபடுகிறது. அதிலும் அவர் அண்டைவீட்டுக்காரராக இருப்பின் அம் மனிதரை பிடிக்காமல் போய்விடுகிறது நேற்றுவரை நம்மைபோல அவனும் இரு சக்கர வாகனத்தில் பயணித்த போது, கூடுவதும், குலவுவதும் ஆராதிப்பதும் அணைப்பதுமாகக் கழிந்த வாழ்க்கை,  பக்கத்து வீட்டுக்காரன் நான்கு சக்கர வாகனத்தில் போவதைப் பார்த்ததும் அல்லது அவன் பிள்ளைக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்ததும் நிலைகுலைந்து போகிறது. உறக்கமின்றி தவிக்கிறது. அண்டைவீட்டுக்காரனுக்கு ஏதேனும் அச்ம்பாவிதம் நடக்காதா என எதிர்பார்க்கிறது, இயலாதபோது, குறைகளை தனது குடும்பத்தில் ஆரம்பித்து அந்த அண்டைவீட்டுக்காரனுக்கு (இவன் இடப்பக்கம் வசிக்கிறான் என்றால்) வலப்பக்கம் ஓர் அண்டைவீட்டுக்காரன் இவனைப்போல தவித்துக்கொண்டிருப்பான் இல்லையா அவனிடம் சென்று   விமர்சித்து இருவருமாக ஆறுதல் அடைவார்கள். இம்மன நிலை அந்த அண்டைவீட்டுகாரனுக்கும் வேறு காரணங்களை முன்னிட்டு இவன் மீது ஏற்பட்டிருக்கும். அன்டைவீட்டுக்காரன் பற்றிய இந்த புறங்கூறல் ஒரு குறியீடுதான்.

அண்மையில் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் கூறிய தகவல்  பலரிடம் நாம் பொதுவில் காண்பதுதான். “எனக்கும் அவருக்கும் நிறைய விஷயங்களில் ஒற்றுமை உண்டு என்றவர், அவருக்கும் இன்னாரை …. பிடிக்காது என்றார்” ஒருவனை எளிதாக பலிகடாவாக ஆக்கவும் இப்படி நான்கு பேர்கூடி தங்கள் சரியான பக்கம் இருக்கிறோம் என்பதை நம்பச்செய்யவும் புறங்கூறலை  ஆயுதமாகக்கொள்வதுண்டு. தமிழ்நாட்டிலிருக்கும் ஆயிரத்தெட்டு கட்சிகளுக்கும், எழுத்தாளர்களிடையில் வெளிப்படையாகவும், இலைமறைகாயாகவும் வன்மம் பாராட்டுவதும் இப்படியான வக்கிரங்களின் அடிப்படையில்தான். மனைவி குடிகார கணவனைக்கொன்றாள் எனும் செய்தியைக்காட்டிலும், கள்ளக் காதலனுடன் சேர்ந்து கண்வனைக்கொன்றாள் என்ற செய்தியும், எதிர்கட்சி எம்.எல். ஏ ஆளும்கட்சி தலைவரை சந்தித்தார் என்ற செய்தியும் முக்கியத்துவம் பெறுகின்றன.

இம்மனக்கோளாறு நம் எல்லோரிடமும் உண்டு.

புறங்கூறுதல் எங்கிருந்து பிறக்கிறது, எதனால் பிறக்கிறது? அழுக்காறு, அவா, வெகுளி என வள்ளுவர் இன்னாசொல்லுக்கு முன்பாக மூன்று படிநிலைகளைத் தெரிவிக்கிறார். ஒரே குடும்பம், ஒரே அலுவலகம், ஒரே துறை, ஒரே ஊரைச்சேர்ந்த இருவருள் ஒருவர்தான், இம்மன சிக்கலில் கூடுதலாகப் பாதிக்கப்படுகிறார்கள். உலகில் எந்த நாடும், எந்த மதமும், எந்த இனமும் இதற்கு விதிவிலக்கல்ல. நம்மிடம் கொஞ்சம் கூடுதலாக இருக்குமென்கிற ஐயம் எனக்கு எப்போதுமுண்டு.  செத்த வீட்டில் கூட ஒப்பாரிமுடித்த கையோடு:

– ” அவள் கழுத்திலே இருக்கற சங்கிலி பர்வதத்துடையது மாதிரி இல்லை?”

– ” மாதிரி என்ன அவளுடையதுதான், இவளுக்கேது, சங்கிலி சரடெல்லாம்,”எனப் பேசும் பெண்களுண்டு. இது போன்ற உரையாடல் உங்கள் காதிலும் விழுந்திருக்கும். பார்வதி வீட்டிலிருந்து இரவல் வாங்கப்பட்ட நகையென்ற உண்மையை போட்டுடைக்கும் நல்லெண்ணத்திற்கு அடிப்படை காரணம், இவள் இரவல் வாங்கப்போனபோது, வேறொருத்தி முந்திக்கொண்டதும், இவளுக்கு அது வாய்க்கவில்லை என்கிற அசூயையுமாகும்.

ழான் குளோது லொதெ (Jean Claude Laudet) என்கிற உளப்பகுப்பியல் அறிஞர், “நம் ஒவ்வொருவரிடமும் அடுத்தவரைபற்றிய இருவிதமான அபிப்ராயங்கள் இருக்கின்றன, ஒன்று நேர்மறையானது, மற்றது எதிர்மறையானது என்கிறார். மற்றவரைப்பற்றிய எதிர்மறை அபிப்ராயங்கள், அவர் நம் அருகில் இருக்கிறபோது ஒளிந்துகொள்கின்றன. அவர் மறைந்ததும், வேறொருவர் கிடைக்கிறபோது  இல்லாத மனிதர் அடித்துத் துவைக்கப்படுகிறார். இப்படி சகட்டுமேனிக்கு மற்றர்களை விமர்சிப்பதற்கு சாமிவேல் லெப்பார்த்தியெ  ( Samuel Lepastier) என்கிற மற்றொரு உளப்பகுப்பாய்வாளர்  கூறும் காரணம், ஒன்று மற்றவர்களை குறை கூறி பேசுவதன்மூலம், நம்மை உயர்த்திக்கொள்ள முனைவது; இரண்டு நம்மிடம் கூடாதென்று நினைக்கும் அவதூறை மற்றவர்கள் தலையில் இறக்கிவைப்பது.

—————————————————————

நூல் வெளியீடு : அப்பாவின் துப்பாக்கி

invitation new                                                             எதிர் வரும் அக்டோபர் 20ந்தேதி சென்னையில் இனெர் சலீம் என்ற குர்திய திரைத்துறை வல்லுனர் பிரெஞ்சில் எழுதிய ‘அப்பாவின் துப்பாக்கி’ நூல் அறிமுகவிழா நடக்க உள்ளது இந்நூலை பிரெஞ்சிலிருந்து மொழிபெயேத்திருப்பவர் நண்பர் பேராசிரியர் வெங்கிட சுப்புராய நாயக்கர்.

அதே நாளில் ஜி.குப்புசாமியின் மொழிபெயர்ப்பு நூலொன்றையும் வெளியிட இருக்கிறார்கள். இரண்டு நூல்களுமே காலச்சுவடு வெளியீடுகள்.

நண்பர்கள் வருகை தந்து நிகழ்ச்சியை சிறப்பிக்க வேண்டுமென பணிவான வேண்டுகோள்

அன்புடன்
நா.கிருஷ்ணா

உலக எழுத்தாளர் வரிசை -4

லோரா காசிஷெக் ( Laura Kasisschke)Laura

பிரான்சுநாட்டை பொருத்தவரை ஒரு நல்ல நாவலாசிரியராக அறியப்பட்ட பெண்மணி. அமெரிக்காவில் இவர் ஒரு நல்ல கவிஞர் என்கிறார்கள். எனக்கு கவிஞராக அல்ல நாவலாசிரியராக அறிமுகம். ஒன்றிரண்டு தமிழ்க் கவிதைகள் தருகிற அலுப்பு பிறமொழி கவிதைகள்வரை நீள்கிறது. எனவே அறிமுகமான பெயர்களைத் தேர்வு செய்து கவிதைகளை வாசிக்க வேண்டியிருக்கிறது. லொரா கசிஷ்க் என்றா லோரா காசிஷெக் என்றா எப்படி உச்சரிப்பதென அவரது படைப்பொன்றை வாங்கியபோது (அட்டையில் போட்டிருந்த பெண்மணியின் தோற்றத்தில் ஈர்க்கப்பட்டு) குழப்பங்கள் இல்லை. ஆனால் இன்று, அவரைப்பற்றி எழுத உட்கார்ந்தபோதுதான் இப்படியொரு சங்கடம் அதிலிருப்பது தெரியவந்தது. எழுத்தாளர் பெண்மணி கணவர், பிள்ளைகளென கொஞ்சம் சமர்த்தாக குடித்தனம் பண்ணிக்கொண்டு மிச்சிகன் பல்கலைகழகத்தில் ஆசிரியபணியையும் செய்து நேரம் கிடைக்கிறபோது நாளொன்றுக்கு நான்கு மணிநேரத்தை எழுத்திற்குச் செலவிடுவதாக் பிரெஞ்சு இலக்கிய இதழ் ‘Lire’ சத்தியம் செய்கிறது.

வீட்டிற்கு ஒரே மகள், இளம்வயதிலேயே  வளர்ந்தபெண்போல பாவித்து பெற்றோர்கள் தோழமையுடன் அவரை நடத்தியிருக்கிறார்கள். தனது வயதொத்த சிறுமிகள் போலன்றி அலுப்புதரும் வாழ்க்கை முறையில் தப்பிக்க வாசிப்பையும் எழுத்தையும் தேர்வு செய்தாராம்.

அகன்ற வீதிகள், மரங்கள், வீடுகள் வீடுகளைச் சுற்றிலுமிருக்கிற பராமரிக்கப்பட்ட புல்வெளிகள், நடை ஓட்டத்திற்கென நைக் ஸ்போர்ட்ஸ் ஷ¥க்கள் அணிந்து செல்லும் இள்வயது பெண்கள், அவர்களைத் துரத்திக்கொண்டு செல்லும் ஆண்கள், சிரிப்பை உதட்டிலும் கசப்பை மனத்திலுமாக இருத்திக்கொண்டு ஓரக் கண்களால் நம்மை பார்த்துக்கொண்டு தங்கள் நாயைக் கொஞ்சியபடி லிப்டில் இறங்குகிற நடுத்தர வயது பெண்மணி, விள்ம்பரங்களில் பார்க்கிற முகங்கள் போல சிரித்தபடி வீட்டைவிட்டு இறங்குகிற ஜோடிகளென அமெரிக்காவில் லாஸ் ஏஞ்செலஸ் அருகிலுள்ள பசாடின நகரில் எனது மகளைப் பார்க்கச் செல்கிறபோதெல்லாம் மனதிற் பதிவு செய்திருக்கிறேன். ஆனால் இதுபோன்ற காட்சிகள் லோரா காஷிஷெக் நாவல்களிலும் இடம்பெறுகின்றன. நடுத்தர குடும்ப (பேற்கத்திய நாடுகளிலும், அமெரிக்காவிலும் நடுத்தர குடும்பமென்று சொன்னால் இந்தியாவில் நாம் காண்கிற நடுத்தர வர்க்கமல்ல அதற்கு மேலே) பெண்களின் பிரச்சினகளை இவர் பொதுவாக கதைகளுக்கான கருவாக எடுத்துக்கொள்கிறார். ஆர்பாட்டமின்றி வாழ்ந்துகொண்டிருக்கிறார்களென நம்பப்படுகிற நடுத்தர குடும்பங்களின் தலைக்குமேலே ஒன்றல்ல இரண்டல்ல பல டாமக்கிளீஸ் கத்திகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அன்றாட வாழ்க்கையில் திசைச் சிக்கல், வற்றாத துன்பங்கள், ஆபத்து விளிம்பில் கால் கடுக்க நிற்கிறார்கள். இவரும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்மணி என்பதால் அவர்களின் பிரச்சினைகளை எளிதாகக் கையாளுகிறார்.

அவரது முக்கிய நாவல்கள் :

1. A moi pour toujours  (Be mine)
2. En un monde parfait (In a perfect world)

பார்சலோனா-2

Barcelona1

முதல்நாள்மாலை  ஐந்துமணிக்குமேல், எங்கள்  விடுதியிலிருந்து  புறப்பட்டுச்சென்றோம்இருமருங்கிலும்  அணிவகுத்துநிற்கும்  மரங்கள். எதிர்ப்படும்மனிதர்களைகவனமுடன் தவிர்த்து, எழுத்தோடும் நிலையில் குத்துக்காலிட்டு  அமர்ந்தபடி, கும்பல்நடுவே வைராசாவை என நம்மைப் பார்த்து தூண்டில்போடும் மூணுசீட்டுரக மங்காத்தா  ஆசாமிகளின் வசீகரிக்கும் குரலை சாமர்த்தியமாக  ஒதுக்கிவிட்டுவேற்றுலக மனிதர்கள்போலவும், இடைக்கால மனிதர்கள் போலவும், வரலாற்று புருஷர்கள்போலும் வேடம்பூண்டு ஜீவிக்கும் மனிதர்களையும்பூக்கடைகளையும், ஐரோப்பாவின் பெரியநகரங்களின் சுற்றுலாப்பகுதிகளில் காண்கிற பிறஅம்சங்களையும் போகிறபோக்கில் ரசித்து, மகிழ்ச்சியுடன் உலாவர உதவும் ரம்பலா வீதியைக்குறித்து நிறைய எழுதலாம். பிரெஞ்சிலும் ஆங்கிலத்திலும் லாரம்பலாவென்று எங்கள் கைவசமிருந்த வழிகாட்டிக் குறிப்பில் சொல்லப்பட்டிருந்தாலும் கட்டலோன் மொழியில் லெரம்பால்என்கிறார்கள்; அரபுச் சொல்லான ரமலாஸ் அதற்கு மூலம் என்கிறார்கள்

Barcelona3பிலாசா தெ கட்டலோனாவில் ஆரம்பித்து இறங்கி கிழக்கே நடந்தால் கொலம்பஸ் நினைவுத் தூண்வரை லாரம்பலாவின்ஆதிக்கந்தான். கொலம்பஸ்நினைவுத்தூணைக்கடக்கிறபோது, சிலுசிலுவென்றுகாற்று, உப்புநீரின்மணம், வரிசை வரிசையாக அணிவகுத்து நிற்கும் உல்லாசப்படகுகள், வலதுபக்கம்சற்றுதூரத்தில் துறைபிடித்துநிற்கும் உல்லாசக்கப்பல்கள், துறைமுகம், சரக்குக்கப்பல்கள்துறைமுகத்தை நெருங்கியதும் அனுமதிக்காகக் காத்திருக்கும் சரக்குவாகனங்கள்.

Barcelona4கரையோரங்களில் கலைஞர்கள் உருவாக்கியுள்ள மணற்சிற்பங்களை வியந்துமகிழலாம். மனமிருந்தால்அக்கலைஞர்களுக்கு உதவலாம், கிராஸியாஸ் என்றுசொல்லி வாங்கிக்கொள்கிறார்கள். பிறகு தண்ணீர்தண்ணீர்மத்தியதரைக்கடல்: பார்த்தவுடன் ஸ்படிகம்போன்றகடல்நீரைக் கைகொள்ள அள்ளிக்கொள்ளத்தோன்றும். நீலநிற மஸ்லினைப்போர்த்திக்கொண்டதுபோல கடலுக்கடியில் மணல்மூடியதரை; அதில் நொடிக்கொருதரம் நட்சத்திரக் கும்பலொன்று நிதானமாய் அசைந்து செல்வதுபோல மீன்கள்நீந்தும் அழகையும், கரகாட்டக்காரியின் பாவடைபோல விரிந்து பின்னர்நிலைக்குத்திரும்பும் நீர்த்திரைகளையும் பார்த்துமகிழநேரம் போதாது.

லாரம்பலாவை வீதி என்பதைக்காட்டிலும், அகன்ற நடைபாதை என்றுசொல்வதுமிகவும் பொருத்தமானது. சுமார் 150 அடி அகலங்கொண்ட அச்சாலையில் சுமார் ஐம்பது அடிகளை இருமருங்கிலும் வாகனங்களின் போக்குவரத்துக்கென்று ஒதுக்கியிருக்கிறார்கள், மீதியுள்ள சாலை மக்கள் நடமாட்டத்திற்கென்று தாரைவார்க்கப் பட்டிருக்கிறது. பார்சலோனா நகரில்பார்க்கவேண்டியவை என்று நாங்கள்தீர்மானித்திருந்த அல்லது அப்படியொருதீர்மானத்திற்கு எங்களைக் கொண்டுவந்திருந்த புகழ்வாய்ந்த இடங்கள், கட்டிடங்கள், போதைதரும் வெளிகள் அனைத்துமே இந்தரம்பலாவைச் சுற்றியிருந்தன என்பதால், பார்சலோனாவில் தங்கியிருந்த ஐந்துநாட்களிலும் ரம்பலாவின் காலைநேரங்களும்மாலை நேரங்களும் பழகியிருந்தன.

Barcelona2

ரம்பலா பாதசாரிகளை,கடற்கரையைநோக்கிச்செல்லுபவர்கள், கடற்கரையிலிருந்து திரும்புபவர்கள் என இருவகையாகப் பிரித்தாலும் உலகின் எல்லா பெரியநகரங்களின் பாதசாரிகளின் கால்களுக்குள்ள குணங்கள் ரம்பலா பாதசாரிகளுக்கும் உண்டென்பதை மறுப்பதற்கில்லை, அர்த்தமற்று கால்போனபோக்கிலே நடப்பவர்கள், அவசரகதியில் எதையோஅல்லது எவரையோ தேடிப்போகிறவர்களைப் போலநடையும் ஓட்டமுமாய் விரைந்துசெல்பவர்கள், தேவதைகள், தேவர்கள், பரத்தைகள், அசுரர்கள், பணம்படைத்தவர்கள், பிச்சைஎடுப்பவர்கள், கலைஞர்கள், ஓவியர்கள், ரோஜாவிற்கும் பாகிஸ்தானியர், குளிர்பானங்கள் அடைத்த சிறுடின்களைக் கூவிவிற்கும் சிவப்பிந்தியர், ஏமாளிகளுக்காகக் காத்திருக்கும் கிழக்குஐரோப்பிய ஆண்கள், பெண்கள், சிறுவர்கள்; மலைப் பாம்புபோலமரத்தில் சுற்றிக்கொண்டு கஞ்சாபுகைக்கும் ஆசாமி, அவனருகே வானத்தை விழிவெண்படலத்தால் அளந்தபடிசொள்ளொழுகஉறங்கும் பெட்டை, திரிசடை சிவனார் போன்ற தலைமுடியும் சிவந்தகண்களுமாய் வயலினா, மாண்டலினா எனத் தீர்மானிக்கமுடியாத இசைக்கருவியை  வாசிப்பதில் லயித்திருக்கும்மனிதர்; புராண இதிகாசநாயகர்களாக, சரித்திரபுருடர்களாகவும், வேடம்தரித்து வெள்ளை அல்லது பொன்வண்ணத்தில் நாள்முழுக்க, பாதசாரிகள் இரக்கப்பட்டுஅல்லது தாமாக மனமுவந்துதரும் ஒற்றைநாணயத்தை வாங்குகிறநேரங்கள் தவிர்த்துபிறநேரங்களில் அசைவின்றி மணிக்கணக்கில் சிலைபோலநிற்கும் வீதிக்கலைஞர்களென ரம்பலாபற்றிச் சொல்லநிறைய இருக்கிறது

– – தொடரும்

வாழ்வின் பன்முகப்பிரதி – க. பஞ்சாங்கம்

Na.krishna -New books3 001

தமிழில் நாவல் என்ற இலக்கிய வகைமை தோன்றி ஒன்றரை நூற்றாண்டு காலத்தை நெருங்கிவிட்டது. ஆனாலும் தமிழ்மனப்பரப்பில் ‘நாவல் என்பது பாட்டி சொல்லுகின்ற பழங்கதை போன்றதுதான்’ என்ற பார்வைதான் இன்னும் ஆழமாக நிலைபெற்றுள்ளது. கல்விப்புலத்திலும்கூடப் பெரும்பாலான தமிழ்ப் பேராசிரியர்கள் அப்படித்தான் மாணவர்களுக்கு ஒரு நானூறு பக்க நாவலைக் கதையாக மட்டும் சுருக்கி இரண்டு வகுப்பில் நடத்திமுடித்து விட்டு, இரண்டு மாதிரி வினாக்களையும் சொல்லி நாவலை மாணவர்களிடமிருந்து மட்டுமல்ல, தன்னிடமிருந்தும் அப்புறப்படுத்திவிடுகிறார்கள். மேலும், இத்தகைய முறையில் நடத்துவதற்கு ஏற்ப அமைந்துள்ள எழுத்துக்களைத்தான் ‘நாவல்’ என்ற பாடப்பகுதிக்குத் தேர்ந்தெடுத்து வைக்கிறார்கள் என்பது இன்னும் பெரிய அவலம். இத்தகைய நிலைக்கு நேர்எதிர்மாறாக நாவல் என்பது கதை சொல்வதல்ல; அந்தப் பின்புலத்தில் சமூகத்தை ஆவணப்படுத்துவது; வரலாற்றை, நிகழ்வுகளைப் புனைவாக உருமாற்றுவதன் மூலம் அவற்றை அழகியலாக்குவது; வாழ்வின் நீள்வலியையும் வாதையையும் மொழிப்படுத்தி இருப்பின் அதிசயத்தைக் கொண்டாடுவது; ஓடிக்கொண்டே இருக்கும் மனிதர்களை நிறுத்தி வாழ்வின் தீராத கவர்ச்சியாக இருக்கும் புதிர்களை நோக்கி மடைமாற்றி விடுவது; சமூகத்தின் ஆழத்தில் இயங்கும் எளிதில் பிடிபடாத நுண் அரசியலை, ஆதிக்கங்களை வெளிக்கொணர முயல்வது என்ற தளத்திலும் தமிழில் நாவல்கள் தொடர்ந்து எழுதப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன; அத்தகைய வரிசையில்தான் நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ என்ற நாவல் வெளிவந்துள்ளது.

செஞ்சி ‘கிருஷ்ணபுரமென்றும்’ சிதம்பரம் ‘தில்லை’ என்றும் அழைக்கப்பட்ட கிருஷ்ணப்ப நாயக்கர் ஆட்சிக்காலத்தில் குறிப்பிட்ட சில ஆண்டுகளில் (1597 – 1617) நடந்த வித்தியாசமான வரலாற்று நிகழ்வுகளைத் தனது புனைவிற்குள் கொண்டு வருவதன் மூலம் அற்புதமான ஒரு புதிய பிரதியைக் கட்டமைத்துள்ளார் நாகரத்தினம் கிருஷ்ணா. தமிழ்நிலம் சார்ந்த வாழ்வை, வரலாற்றை, இங்கிருந்து புலம்பெயர்ந்து போய் பிரான்சில் வாழ்ந்து கொண்டு ஓர் அந்நியச் சூழலில் தன்னை இருத்திக் கொண்டு நோக்குவதனால், அவருக்குள் இந்த மண் குறித்த கூடுதலான புரிதலும் அழகும் அசிங்கமும் கூடி வந்து கை கொடுத்துள்ளன போல் தோன்றுகிறது. ஏற்கனவே நீலக்கடல், மாத்தா ஹரி என்று இரண்டு நாவல்களை உலகத் தரத்தில் எழுதியுள்ளவர் என்பதும்குறிப்பிடத் தகுந்தது.

இந்த நாவலில் நிகழ்ச்சிகளும் அவற்றை எடுத்துரைக்கும் முறையியலும் ஒன்றையொன்று போட்டிப் போட்டுக் கொண்டு உள்ளே நுழையும் வாசகர்களை வேகமாக இழுத்துச்செல்கின்றன. மண் புழுக்கள் பந்து போலத் திரண்டு கொள்வது இயல்பு. அதுபோல இந்த நாவலின் நிகழ்வுகள், செறிவாக உயிரோட்டம் மிகத் திரண்டு உருண்டு கிடக்கின்றன. வாசகர்கள்தான் உருட்டி உருட்டி பின்னமுற்றுக் கிடக்கும் முடிச்சுகளை அவிழ்த்துக் கொண்டே நகர வேண்டும். தில்லையில் தாசிக்குலப் பெண் சித்ராங்கியின் பணிப்பெண்ணான செண்பகத்திற்குக் கள்ள உறவில் பிறந்த ஒரு குழந்தை, விஜயநகரப் பேரரசின் இளவரசனாக முன்மொழியப்படும் நிலைக்கு எவ்வாறு கொண்டு செலுத்தப்பட்டான்; எதிர்பாராத நிகழ்வுகள் எப்படி மனித வாழ்வை வடிவமைக்கின்றன; என்பதுதான் நாவலின்அடிப்படை முடிச்சு. இந்த முடிச்சை வெவ்வேறு பக்கங்களில் வெவ்வேறு விதமாக அவிழ்க்கிற நிகழ்ச்சிகளைக் காலத்தாலும் இடத்தாலும் முன்னும் பின்னுமாக அடுக்கி வைத்திருப்பது தான்கதைசொல்லியின் மிகப்பெரிய பலம்.

இந்த நாவல் எடுத்துரைப்பின் பலம் அது கையாளும் மொழியில் இருப்பதாகப் படுகிறது. 17ஆம் நூற்றாண்டுத் தமிழ்மொழியில் எப்படிக் கதையை நிகழ்த்திச் செல்வது? என்ற பெரிய பிரச்சினையை நாவல் எதிர்கொண்டுள்ளது; சான்றாக, தில்லைவாழ் அந்தணர்கள் எப்படிப் பேசி இருப்பார்கள்? இன்றைக்குப் பிராமணர்கள் வீட்டில் பேசுகிற அந்தப் பேச்சுத்தமிழ் அன்றைக்குத் தோன்றியிருக்குமா? தெரியாத நிலையில் தீட்சதர்களின் பெயர்கள், அவர்கள் வாழ்ந்த வீடுகளின் தோரணை, தெருக்களின் முகம் முதலியவற்றைச் சொல்வதன் மூலமாகவே பிராமணக் குடும்பச் சூழலை வாசகர் மனத்திற்குள் கொண்டு செலுத்திவிடுகிறார்; அகராதிகளில் தேடிப்பிடித்துப் பிரத்தியேகமான வார்த்தைகளைக் கொண்டுவந்து வேலை வாங்கியுள்ளார்; நிகழ்ச்சிகளையெல்லாம் கதைமாந்தர்களை எல்லாம் இன்றைய யதார்த்தவாத எழுத்தாளர்கள் தங்களின் சாதனையாகக் கருதுகின்ற அந்தப் ‘பேச்சுமொழி உரைநடை’ இல்லாமலேயே சிறப்பாகப் படைத்துக் காட்டிவிடலாமென்பதை கிருஷ்ணா செய்துகாட்டிவிட்டார் என்கிற உண்மை, எனக்குள் பெரும் வெளிச்ச வெடிப்பாக இறங்கியது. இதுபோலவே ‘சேரி வாழ்வையும்’ பேச்சுமொழி உரையாடல் இல்லாமலேயே காட்சிப்படுத்த முடிந்திருக்கிறது.

மர்மங்களின் மேல் வெளிச்சத்துளிகளைத் தூவுவது போல ஒரு பாணியில் நாவலை எடுத்துச் செல்லும் கதை சொல்லி, வாழ்வில் எதிர்கொள்ள நேரும் அமானுஷ்ய விஷயங்களையும் தொன்மங்களையும் எடுத்துரைப்பிற்குப் பயன்படுத்தும்போது வாசிப்பின் ஆர்வமும் ஈடுபாடும் கூடிக்கொண்டே போகின்றன. படைப்பிற்குள் வாசகரும் தொழில்புரிய வேண்டிய சூழலை உருவாக்கிவிடுகிறார். “மரணக் கிணற்றுக்குள்” இருந்து கேட்கிற ஓலங்கள், ஹரிணி ஏதோ ஒரு பிடியில் சிக்கி ஓடிச் சென்று கிணற்றுக்குள் விழுவது போன்ற காட்சி, பேருந்து நிலையத்தில் சாமிநாதனென்று ஒருவனைப் பார்ப்பது, பிறகு அப்படி ஒரு ஆளே இல்லை என்று அறிய நேர்வது, செண்பகம் கமலக்கண்ணி என்ற ரூப / அரூப மயக்கம், – இப்படிப் பல மர்மமான நிகழ்வுகள் மூலம், ஒரு வரலாற்று நாவலை வாழ்வின் புதிரைத் தேடும் பயணமாகப் படைத்து விடுகிறார்; அதனால்தான் 2050இல் ஹரிணியின் மகளான பவானி (அடுத்த தலைமுறை) மீண்டும் புதுச்சேரி, செஞ்சி என்று வந்து தன் அம்மா குறித்த பல உண்மைகளைத் தெளிவுபடுத்திக் கொண்டு திரும்பும்போது அவளுக்குப் பசுவய்யாவின்

எங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல்?
பாதத்தின் விளிம்பிலிருந்துதானா?
அல்லதுஅதன் அடியிலிருந்தா?

என்ற கவிதை வரிகள் நினைவுக்கு வந்தன என்று சொல்லி நாவலை முடிக்க முடிகிறது. 254 பக்கத்திற்கு இதுவரைப் புனைந்து வந்த அத்தனை வரலாற்று நிகழ்வுகளும் வெறும் நிழல்கள்தானா? எல்லாமே பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போய்விடுமா? தீராத வினையாய் வாசித்து முடித்த நமக்குள் தொடர்ந்து பயணிக்கிறது.

மதம், தாசி, அரசு என்ற மூன்றும் கூடிக்கொண்டு நாயக்கர் காலப் பொதுமக்களின் வாழ்வை எவ்வாறு சீரழித்தன என்று ஒரு வரலாற்று நாவல் போல இது புனையப்பட்டாலும் நிகழ்காலச் சமூகத்திலும் இந்தக் கூட்டணி தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது என முன்வைக்கின்ற அறச்சீற்றம் இப்புனைவுகளுக்குள் பொதிந்துவைக்கப்பட்டுள்ளது.

அகச்சமயம் புறச்சமயமென முறுக்கிக்கொண்டு கிடந்த பக்தி காலகட்டத்தை ஒட்டிப் புறச்சமயமான சமணத்தையும் பௌத்தத்தையும் கழுவேற்றி அழித் தொழித்த நிலையில் அகச்சமயத்திற்குள்ளேயே முரண்கள் முற்றி, தில்லை நடராஜர் கோயிலுக்குள் கோவிந்தனுக்கு என்ன இடமென்று இரண்டாம் குலோத்துங்கன் பெருமாளை அப்புறப்படுத்திய பின்பு, செஞ்சி கிருஷ்ணப்ப நாயக்கர் தன் காலத்தில் மீண்டும் நடராஜர் கோயிலுக்குள் கோவிந்தராஜர் திருப்பணியைத் தொடங்குகிறார்; தீட்சதர்கள் தடுக்கிறார்கள்; சபேச தீட்சதர் அரசர் காலில் விழுந்து விண்ணப்பம் செய்கிறார்; “தாழ்மையாகப் பெரியவர்களுக்கு மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்கிறோம்; முன்னோர்கள் காலத்தில் சைவவைணவ பிரிவினருக்கிடையே மாச்சர்யம் இருக்கக்கூடாது என்பதால் விபத்தாக(?) கனகசபைக்கருகிலேயே சித்திரக்கூடத்தையும் ஏற்படுத்திவிட்டார்கள். அப்பொழுதே நாங்கள் தடுத்திருக்க வேண்டும். தடுத்திருந்தால் இன்றிந்த பிரச்சினை எழாது. அச்சுதராயரைத் தொடர்ந்து இன்றைக்கு நீங்களும் வைணவ சன்னதியைக் கட்டியெழுப்புவதற்கு வந்து நிற்கிறீர்கள். நாட்டில் திருப்பணிக்குகந்த வைணவ ஸ்தலங்கள் ஏராளமாக உள்ளன. இது சிவ ஸ்தலம். கோவிந்தராஜர் இந்த ஆலயத்திலுள்ள பிற கடவுளர் போல பரிவார தெய்வங்களுக்குள் வருகிறாரே தவிர, அவருக்கு வேறு முக்கியத்துவங்கள் கூடாதென்பதுதான் எங்கள் பிரார்த்தனை. தீட்சதர்களாகிய நாங்கள் ஒருவருக்கும் பொல்லாங்கு பண்ண வேணுமென்று நினைக்கிறவர்களல்லாத படியால், அபகாரியம் செய்து சுவாமி ஆக்கினைக்கு ஆளாக வேண்டாமென்று தங்கள் பாதாரவிந்தங்களை வணங்கி கேட்டுக்கொள்கிறேன்” என்கிறார்; முடிவாக என்னதான் சொல்ல வருகிறீர்கள் என்று மன்னன் கேட்டபோது, “எங்களை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்; ஆனால் ஒரு கல்லைக்கூட கோவிந்தராஜருக்கென உள்ளே வைக்க அனுமதியோம்”. கோவிலில் நைவேத்தியம் செய்து பிழைக்கும் நீர் சவால் விடுகிறீரா? என்கிறது அதிகாரம்.

கோபுரத்தில் ஏறி உயிரை விடுவோம்” என்று தீட்சதர் கையை அசைத்துப் பேசிய போது “சிகை அவிழ்ந்து பின்புறம் ஆடியது” எனக் காட்சிப்படுத்துகிறார் கதைசொல்லி. “உமக்கு அப்படியொரு பிரார்த்தனையிருந்தால் தாராளமாகச் செய்யும்” என்று மன்னன் சொல்லி முடிப்பதற்குள், “சங்கரா! ஒரு குரல் தெற்குக் கோபுரத்தின் திசைக்காய்க் கேட்டது. ஈஸ்வர தீட்சதர் இரண்டாம் பிறைமாடத்திலிருந்து குதித்திருந்தார். நச்சென்று சத்தம். காலைப்பரப்பிக் கொண்டு இறந்தார். மூளை சோற்றுப் பருக்கை போல இரத்த சிவப்பில் சிதறிக் கிடந்தது . . . பிரகாரமெங்கும் மகாதேவா! சதாசிவா! எனக் குரல்கள் கேட்டன”. ஒவ்வொருவராக விழத் தொடங்கினர்; ஏன் ஒவ்வொருவராகச் செத்து மடிய வேண்டும், “மொத்த பேரையும் சுடுங்கள்” என ஆணை பிறந்தது. இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த போர்த்துக்கீசிய மதபோதகர் பாதர் பிமெண்ட்டா அன்றைய இரவு தமது நாட்குறிப்பில் “கோபுரத்திலிருந்து குதித்து உயிரைவிட்ட தீட்சதர்கள் மாத்திரம் மொத்தம் இருபது பேரென மறக்காமல் குறித்துக்கொண்டார்”.

இந்தப் பகுதியைப் படிக்கும்போது இன்னும் அதிகமாக இந்நிகழ்ச்சியைப் புனைந்திருக்க வேண்டுமென எனக்குப்பட்டது; ஏனென்றால் இதுவரை தீட்சதர்கள் கோபுரத்தில் குதித்த இந்த வரலாறு, புனைவெழுத்திற்குள் வரவே இல்லை. இவர்தான் முதன்முதலில் இதைச் செய்துள்ளார்; மேலும் இந்நிகழ்வு வாய்வழிச் செய்திதான்; பெரிதும் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்ற கருத்தும் இங்கே இன்னும் நிலவிக்கொண்டிருக்கிறது; இது குறித்து நாகரத்தினம் கிருஷ்ணாவிடம் கேட்டேன்;”இது வரலாறு; அந்தப் போர்த்துக்கீசிய மதத்துறவி தனது நாட்குறிப்பில் தான் கண்டதை அப்படியே எழுதியுள்ளார்; அது பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது; நான் அதை பாரீஸ் நூலகத்தில் எடுத்து வாசித்துள்ளேன். வேறுசில வரலாற்றுக் குறிப்புகள் மூலம் அவர் எழுதியுள்ளது சரிதான் என்றும் தெரிகிறது. அதனால்தான் அவர் பெயரை அப்படியே நாவலில் சேர்த்துள்ளேன்” என்றார். இவ்வாறு கிருஷ்ணா கூறிய பிறகு, இதைத் தீட்சதர்களின் தனிப்பட்ட போராட்டமாக மட்டும் காட்டாமல், அவர்கள் தலைமையில் பொதுமக்களின் போராட்டமாகப் புனைந்திருக்கலாமே என்று எனக்குப்பட்டது. அரசை எதிர்த்து சபேச தீட்சதரின் மருமகன் ஜெகதீசன் சொல்வது போல உணர்ச்சிவசப்பட்டுத் திடீரென எடுத்த ஒரு முடிவு போல நாவலுக்குள் இது காட்டப்பட்டுள்ளது. சபேச தீட்சதரே ஒரு கட்டத்தில் ‘அவசரப்பட்டு முடிவெடுத்து விட்டோமே’ என்று மனம் மருகுவது போலச் சொல்லப்படுகிறது. கோபுரத்தில் இருந்து குதித்துத் தற்கொலை செய்யக்கூடிய அளவிற்கு ஒரு போராட்டத்தை உருவாக்க வேண்டுமென்றால், அது குறித்துப் பலவிதமான உரையாடல்கள், பலவிதமான தரத்தில், தளத்தில் பல நாட்கள் நடந்திருக்க வேண்டும்; இந்தப் புனைவெழுத்து அத்தகைய உரையாடல்களைக் கைப்பற்ற முனைந்திருக்கலாமோ என்று பட்டது; மேலும், தீட்சதர்கள் இத்தகைய முடிவெடுப்பது என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பது புனைவெழுத்தின் பிடிக்குள் வரவில்லை என்று எனக்குத் தோன்றியது.

வரலாறுதோறும் மதப்பிரச்சினைகளைமதப் பிரிவுகளைக்கூர்மைப்படுத்திப் பெருவாரி மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் குறித்து விழிப்புணர்வு பொதுவெளியில் ஏற்பட்டுவிடாமல் பார்த்துக்கொள்ள முடிகிறது. நாயக்கர் ஆட்சியிலும் இப்படித்தான் மதம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் கதைசொல்லி மிக நுட்பமான அவதானிப்புடன் பதிவுசெய்துள்ளார். “ஏற்கனவே எழுந்தால் வரி, உட்கார்ந்தால் வரி . . . ஏழைக் குடியானவனுக்கு உடலுள்ளவரை கடல் கொள்ளாத கவலைஅவர்களின் இத்தகைய கவலைகள் அதிகாரத்திற்கு வினையாகிவிடக் கூடாது என்பதற்காகத் தான் மதப்பிரச்சினை எப்பொழுதும் செத்துவிடாமல் பொத்திப் பாதுகாக்கப்படுகிறது போலும்.

இந்த நாவலில் அதிகாரப் போட்டி நிகழும்போது கூடவே சொந்தபந்தம் என்பதெல்லாம் மாயமாய் மறைந்து, “கொலைக்களமாக” மாறிப்போகும் நிகழ்வுகளை வாசிக்கும்போதும், பெண் கொடுப்பதும் எடுப்பதும் எவ்வாறு அரசியலின் பகடைக்காய்களாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பார்க்கும்போதும் அதிகாரத்திற்கும் ஈவிரக்கமற்ற மனிதக்கொலைகளுக்குமுள்ள வரலாற்றுப் பிணைப்பைக் கதைசொல்லி புனைவாக்கி இருக்கும் பாங்கு நமக்குள் இறங்கி வினைபுரிவதை உணரமுடிகிறது.

ஒரு விதமான முக்கோணக் காதல் மிகவும் மூர்க்கத்தனமான முறையில் இயங்கும் பாங்கு இந்நாவலின் தொடக்கம் முதல் இறுதிவரை நீளுகிறது. தலைமைத் தீட்சதரின் மகளை பால்ய விவாகம் முடித்த கையோடு, நீண்ட ஆயுள் வேண்டி மணமாலையைக் காவிரிப் பெருக்கில் விடச் சென்ற பிள்ளைகளை ஆறு அடித்துச் சென்றுவிட, மணமகன் ஜெகதீசன் மட்டும் கிடைக்கிறான் உயிரோடு. அந்த ஜெகதீசனை ‘சித்ராங்கி’ என்ற தேவதாசியும், அவளது பணிப்பெண் செண்பகமும் காதலிக்கின்றனர். இந்தக் காதல் பின்னணி, தில்லை தொடங்கி கிருஷ்ணபுரம் (செஞ்சி) வரை நீளுகிறது. எடுத்துரைப்பிற்குள் வாசகர்களை வளைத்துப் போடுவதற்குக் கதைசொல்லிகளுக்கு வரலாறுதோறும் பயன்படும் மிகப்பெரிய கருவி இந்தக் காதல்தான். இந்தக் காட்சிகளையும் மிகவும் வித்தியாசமான பாணியில் சொல்லியுள்ளார் கிருஷ்ணா என்பது சுட்டிக்கூறப்பட வேண்டிய ஒன்றாகும். வறுமையில் இடையர் குலத்தைச் சார்ந்த கார்மேகத்தை ஒண்டிப் பிழைக்க நேர்ந்த ஒரு சூழலிலும் தன் காதலை மறக்க முடியாமல், ஒரு கிறுக்கனாகத் தன் திண்ணையில் தூங்கும் ஜெகதீசனோடு படுத்துத் தன் மனம் வேட்ட உடலை அடைந்து மகிழ்கிறாள் தாசியான சித்ராங்கி; மற்றொருத்தியான செண்பகமோ தனக்கும் ஜெகதீசனுக்குமான கள்ள உறவில் பிறந்த மகன் விஜயநகரப் பேரரசின் இளவரசனாக்கப்படுவான் என்கிற பெரிய வாய்ப்பு பொய்யாகிவிட்ட சூழலில், தனக்கு அரசன் கொடுத்த ஏவல் ஆட்களால், கிறுக்கனாகத் திரியும் ஜெகதீசனை இழுத்து வந்து, அவன் கையில் கத்தியைக் கொடுத்துத் தன்னைக் குத்த வைத்துச் செத்து மடிகிறாள்; ”பாவி! எல்லாம் உன்னால்தானே” என்று அவள் கத்தும்போது பரிதாபம் அதன் உச்சத்தைத் தொடுகிறது. ஒரு தமிழ்ப் புலவரின் மகளான செண்பகம் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி (வரலாறு) எழுதுவதும் இப்படியாக இடையிலேயே முறிந்துவிடுகிறது. ‘கௌமுதி’ என்பதற்கு ‘வரலாறு’ என்று பொருள் சொல்வதுபோலவே “விழாக்கால நிலவு” என்று ஒரு பொருளும் சொல்லுகின்றன அகராதிகள். கதைசொல்லி ‘வரலாறு’ என்ற பொருளில்தான் பயன்படுத்தியிருப்பதாகச் சொன்னார்; ஆனால், ‘விழாக்கால நிலவு’ என்ற பொருளில் நாவலை வாசித்த போது, ஒரு புனைவெழுத்திற்குரிய அத்தனை ரசனையும் கூடி வந்ததாக உணர்ந்தேன்; இப்படித்தான் வாசகர்கள் மூலமாக எழுத்தாளரைவிடப் பிரதி பன்மடங்கு பெரிதாகத் தன்னை வளர்த்தெடுத்துக் கொள்கிறது போலும்.

நாவல் எழுத்து என்பது பன்முகப்பிரதியாகத் திரண்டு வர வேண்டும் என்பதற்கேற்பவும் இந்த நாவல் திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்டுள்ளது; நாயக்கர் கால ஆட்சியில் தமிழ் புறக்கணிக்கப்பட்ட வரலாற்றுண்மை (.65/140), விவசாயிகளின் நிலைமை (.25), பாளையக்காரர்களின் பெண்பித்து பிடித்த நிலை (75, 79, 164) போர்த்துகீசியர்கள், ஒல்லாந்துகாரர்கள் என்ற வெள்ளைக் காலனித்துவத்திற்கு முன்னால் பாளையக்காரர்கள் ஏமாந்து போகும் தன்மை, இடங்கைச் சாதியார் தெருப்பக்கம் மதப்போதகர்கள் கண் வைப்பது (137) சேரிமக்களின் வாழ்நிலை (39-43) ஆண்மையச் சமூகத்தில் தாசிப்பெண்கள் படும்பாடு(49- 71) உள்நாட்டுப் போரின் விளைவுகள் (245) நிகழ்காலத்தில் இந்தியப் பிரெஞ்சுக் குடிமக்களின் புதுச்சேரி வீடுகள் அரசியல்வாதிகளின் உடல் முறுக்கிய ஆட்களால் ஆக்ரமிக்கப்படும் அவலம், புலம்பெயர்ந்து வாழநேரும் மனிதர்களின் மனநிலை, களஆய்வு, ஆராய்ச்சி என்று வரும் வெளிநாட்டு ஆய்வாளர் உலகில் நடக்கும் சதி, சூழ்ச்சி எனப் பன்முகப்பட்ட மனிதப் பிரச்சினைகளும் இப்புனைவு வெளிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. நாவல் எனும் இந்த வடிவத்தை நன்றாக உள்வாங்கியதோடு அதை வேலை வாங்கும் திறமும் உழைப்பும் எழுத்தின் நிர்வாக முறையையும் அறிந்தவராகக் கதைசொல்லி வெளிப்படுகிறார். தமிழ்ப் புனைகதையுலகம் இவர் எழுத்தால் கனம் பெறுகிறது.

அந்தப் பஸ்ஸைப் பிடித்துச் செல்லுங்கள்’ என்பதற்குப் பதிலாக அந்தப் பஸ்ஸை எடுங்கள்’ என்று ஆங்கிலம் வருகிறது (.15). இதேபோல் அச்சுப்பிழையோ என்னமோ புரியாத சில தொடர்கள் (.18/23) இருக்கின்றன. மற்றொன்று ஒரு காதல் மடல், வெண்பா வடிவில் வருகிறது (.50)வெண்பா நன்றாகவே வந்துள்ளது. ஆனால், தளை தட்டுகிறது. கிருஷ்ணாவே எழுதினதாகச் சொன்னார்; அதை அடுத்த பதிப்பில் சரிபார்த்துக்கொள்ளலாம்.

கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி (நாவல்)
நாகரத்தினம் கிருஷ்ணா
சந்தியா பதிப்பகம்,
நியுடெக் வைபவ், 53ஆம் தெரு,
அசோக் நகர்,
சென்னை. 83
பக்கங்கள்: 256, விலை: ரூ. 160

நன்றி: காலச்சுவடு செப்டம்பர் 2013

——————————————————————————–