‘வாசிப்பு இன்றியமையாதது’ என நம்புகிற ஆயிரக்கணக்கான எழுத்தாளர்களின் நானும் ஒருவன். படைப்பிலக்கியத்தின் எத் துறையை எடுத்துக்கொண்டாலும் வாசிப்பும் உள்வாங்க்கிகொள்ளும் திறனும் முக்கியம். ‘படைப்பிலக்கியதுறையில்’ வெறும் கையை வைத்துக்கொண்டு முழம்போடமுடியாது. நவீன இலக்கிய அபிமானிகள் தெளிவாகச் சிந்திக்கக்கூடியவர்கள். அவர்களை முன்வைத்து படைக்கிறபோது அதற்கான தகுதியை நமது படைப்பிற்கு ஏற்படுத்தித் தரவேண்டும். ‘இவனா? என்ன பெரிதாக எழுதியிருக்கப்போகிறான்? என நினைக்கிற, நூலைத் தொட்டு பார்க்காமலேயே மதிப்பிடுகிற மனிதர்களைப் பெரிது படுத்துகிறீர்களோ இல்லையோ மேலே குறிப்பிட்ட வாசகருக்கு நாம் உண்மையாக இருக்கவேண்டும். அவர் அறிவுக்கேற்ப, படைப்பிலக்கியத்தில் செய்திருக்கிற ‘கால’ முதலீட்டிற்கு ஈடான இலாப அனுபவத்தை ஏற்படுத்தித் தரும் கடமையும் பொறுப்பும் படைப்பாளிக்கு இருக்கிறது. ஒரு படைப்பாளி வாசகர் ஒருவருக்குத் தரும் வாசிப்பு அனுபவத்தில், அப்படைப்பாளி பிற ஆசிரியர்களின் எழுத்துக்களை வாசித்துப்பெற்ற அனுபவமும் சேர்ந்தது. பிற உற்பத்தி தொழிகளில் உள்ளதுபோலவே ஒரு பொருளின் உற்பத்தியில் முதற் பொருள்களாக படைப்பாற்றலும், கற்பனைத் திறனும் உள்ளதெனில் அததன் துணைப்பொருட்கள் பட்டியலில் வாசிப்பை சேர்ப்பது கட்டாயம். எனவேதான் எழுத்துக்கும் கூடுதலான நேரத்தை வாசிப்புக்கு படைப்பாளியொருவன் ஒதுக்கவேண்டும். படைப்புத்துறை சார்ந்து வாசிப்புக்குரிய நூல்களை தேர்வு செய்யலாம். எல்லாவற்றையும் வாசிப்பதென்பது ஒருவகை, தேர்ந்தெடுத்து வாசிப்பதென்பது ஒருவகை.
வாசிப்பின் நேரத்தையும், வாசிக்கின்ற படைப்பயும் பொறுத்தே உங்கள் படைப்பு அமைகிறது. எழுதவும் வேண்டும் வாசிக்கவும் வேண்டும் என்பதால் நேரம் காணாதுதான். மேற்கத்திய எழுத்தாளர்களின் சௌகரியமான வாழ்க்கை தமிழில் முழுநேர எழுத்தாளர்களாக இருக்கிற நட்சத்திர எழுத்த்தாளர்களுக்கே வெறு கனவாக முடிகிறபோது, ஏதோ எங்களால் உங்களுக்கு விலாசம் கிடைக்கிறதே அதுபோதா எனும் உத்தம தமிழ் பதிபாளர்களை நம்பியா ஒரு தமிழ் எழுத்தாளன் பெண்டாட்டி, பிள்ளைகளுடன் ஜீவிக்கமுடியும். எனவே வேறு பணிகளில் இருந்துகொண்டு எழுத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. எனக்குத் தொழில் வணிகம். கடந்த ஐந்து ஆண்டுகளாக அப்பாரத்தை என் மனைவியில் தலையில் இறக்கிவைத்துவிட்டு எழுத்தில் கவனம் செலுத்தினாலும், அப்போதைக்கப்போது நிறுவனத்திலும் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. இந்தியப்பொருட்கள் அங்காடிகடையைத் தவிர, ஒரு Immobilier Société யும் இருக்கிறது. இரண்டுமே மிகச் சிறிய நிறுவனங்கள், என்றாலும் இரண்டின் நிர்வாக விஷயங்கள், பொருட்களை வாங்குவது அவற்றின் விலையைத் தீர்மானிப்பது, வாடிக்கையாளரைக் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், விற்பனை வரி சம்பந்தமான தொடர்புகள், வருடாந்திர கணக்குகள் என பிரச்சினைகள் இருக்கவே செய்கின்றன. இதற்கிடையில் அவ்வப்போது மொழிபெயர்ப்புப் பணியையும் உப தொழிலாக செய்கிறேன். அதைக்கடந்துதான் வாசிப்பு எழுத்து என்று இயங்கவேண்டியிருக்கிறது.
நூல்களையும் இதழ்களையும் எப்படி தேர்வு செய்கிறேன்?
வீட்டில் சிறியதொரு நூலகம் இருக்கிறது, சிறுக சிறுகச் சேர்த்து உருவாக்கிய நூலகம். புதுச்சேரி வருகிறபோதெல்லாம் தமிழ் நூல்களை வாங்கிக்கொண்டு வருகிறேன். தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம் மூன்று மொழிகளிலும் வாசிக்கிறேன். மாதத்திற்கு மொழிக்கொன்று முடிக்கவேண்டுமென்பது திட்டம், அதைக் கடை பிடித்தும் வருகிறேன். தமிழில் காலச்சுவடு, தீராநதி இதழ்கள் வீட்டிற்கு கடந்த பத்தாண்டுகளாக வருகின்றன. கடை வைத்திருப்பதால் வெகு சன இதழ்களை வாசிக்கவும் சந்தர்ப்பம் வாய்க்கிறது. பிரெஞ்சு இலக்கிய திங்கள் இதழ் ‘Le Magazine Littéraire’ வீட்டிற்கு வருகிறது. தமிழ் நூல்களை மதிப்புரை எழுதுகிறவர்கள் யார் என்ற அடிப்படையிலும், நண்பர்களின் சிபாரிசிலும், புத்தகங்களை random ஆக ஒன்றைப் பிரித்து வாசிக்கிறபோது ஏதேனும் இரண்டு வரிகளில் உண்மையும், சொல் நேர்த்தியும் இருப்பின் வாங்கிவிடுவேன். பிரெஞ்சில் நூல்களைத் தேர்வு செய்வது எளிதாக இருக்கிறது. தினசரிகள், இலக்கிய திங்கள் இதழ்கள், ‘France Culture’ வானொலி ஆகியவற்றில் முன் வைக்கப்படும் விவாதங்கள், மதிப்புரைகள் ஆகியவற்றை 90 விழுக்காடுகள் நம்பலாம், குறிப்பாக François Busnel என்கிற இலக்கிய திறனாய்வாளரை கண்ணை மூடிக்கொண்டு நம்புகிறேன். மதிப்புரை எழுதத் தகும் என்ற நூல்களைத் தேர்வு செய்தே எழுதுவார். அண்மைக்காலமாக ஆங்கிலமொழியில் படைப்புகளை தேர்வுசெய்ய எனது மகள் உதவுகிறார். தமிழ் நூல்கள் சிலவற்றை நூலாசிரியர்களிடமிருந்து நேரடியாக அன்பளிப்பாக பெற்றிருக்கிறேன். ஈழத்தைச் சேர்ந்த நண்பர் மரியதாஸ் நான் இருக்கிற இதே ஊரில் வசிக்கிறார். எனது நாவல்கள் பதிப்புக்குப் போகும் முன்னும் பின்னும் வாசிப்பவர், ஆலோசனைகளும் வழங்குவார். அவற்றில் உடன்பாடிருக்குமானால் ஏற்கவும் செய்வேன். ஆனால் தமிழில் அவர் கல்கி, சாண்டில்யன், மு.வ. இவர்களைத் தாண்டிபோனதில்லை. அவர்களுக்கு அடுத்தபடியாக எஸ்.பொ.வத் தெரிந்து வைத்திருந்தார். மாறாகச் சங்க இலக்கியங்களில் ஆழ்ந்த புலமை. தமிழண்ணல், ஜெயமோகன், அண்மையில் நாஞ்சில் நாடன் இவர்களெல்லாம் சங்க இலக்கியங்களை பற்றி எழுதியபோது அவைகுறித்து விடிய விடிய அவரும் நானுமாக உரையாடி இருக்கிறோம். (அண்மையில் நண்பர் க. பஞ்சாங்கம் பிரான்சு வந்திருந்தபோது, அவரிடம் அழைத்துசென்றேன். கடந்த ஓராண்டுக்கு மேலாக கட்டில் வாழ்க்கை என்றிருப்பதால், பேராசிரியர் க.பஞ்சாங்கத்தின் சந்திப்பு அவருக்கு ஆறுதலைத் தரும் என்று நம்பினேன், அது வீண்போகவில்லை.) அவர் எனக்குப் பரிசளித்த ஆங்கில நூல்கள்அதிகம். இவை எனது நூலகத்திற்கு எப்படியெல்லாம் நூல்கள் வந்தடைகின்றன என்பதற்கு சற்று விரிவானதொரு விளக்கம்.
நூலகம் ஏன்?
வருடா வருடம் வாங்கி சேர்க்கின்ற நூல்களைத் தவிர வார மாத இதழ்கள் வீட்டிற்கு வருகின்றன என்று கூறி இருந்தேன், இவற்றைத் தவிர இணைய இதழ்கள் வலைப்பூக்கள்என்றுள்ளன. பிரெஞ்சு, ஆங்கிலம், தமிழ் தினசரிகள் இவ்வளவும் வாசித்தபின்னும் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை பிரெஞ்சு பொது நூலகத்திற்குச்சென்று நூல்களைக் கொண்டு வருகிறேன். ஒரு தடவையில் ஐந்து நூல்கள் எடுக்கலாம். தற்போது நூல்கள் புத்தகமாகவும், குறுந்தகடுகளிலும் கிடைப்பது ஒரு வசதி. ஆக சில நேரங்களில் குறுந்தகடு நூல்களையும் கொண்டு வருகிறேன், வாகனத்தில் போட்டுக்கேட்க வசதியாக இருக்கிறது.
இந்நிலையில் நாம் நூலகத்திற்குச் செல்ல பிரத்தியேகக் காரணங்கள் இருக்க முடியுமா? நிறைய இருக்கின்றன. உலகின் அத்தனை எழுத்தாளர்களும் ஒன்று கூடுகிற இடம் நூலகம். நூலகங்களில் இடம்பெறுதல் என்பது அந்நூல்களுக்கான மிகப்பெரிய விருது, வேறு பரிசுகளோ, விருதுகளோ, விமர்சனங்களோ, சிபாரிசோ வேண்டாம். ஒரு நூற்றாண்டைக் கடந்தும், எழுத்தாளன் காலத்தில் கரைந்தபோதும் அவன் படைப்பு நீர்த்துப்போகாமல், செல்லரிக்கப்படாமல் இருக்குமென்றால் அப்படைப்பில் நாம் எழுத்தாளனாக வருவதற்குரிய சூட்சமங்கள் இருக்கின்றன. அவை நாம் வாசிக்க வேண்டியவை. எழுத்தாளனாக வர நினைத்தால், நூலகத்திற்குச் செல்லும் வாய்ப்பைப் பெருக்கிக்கொள்ளுங்கள். என்னதான் இடம் பொருள் என நம்மிடமிருந்தாலும் ஒரு நல்ல நூலகத்தை உருவாக்கவோ பராமரிக்கவோ நமக்கு நேரமும் காணாது
எனக்கு எழுத்தின் மீது பற்றுதலை உருவாக்கியதில், நூலகங்களுக்கும் பங்கிருக்கிறது. ஒரு நூலகத்தின் வேலை நேரத்தை தெரிந்துகொண்டு பத்து மணிக்குத் திறக்கிறார்கள் என்றால் பதினோரு மணிக்கு உள்ளே நுழையுங்கள். கடையொன்றிர்க்குள் ஒரு பொருளை வாங்குவதற்காக நுழைகிற வாடிக்கையாளருக்குக் கிடைக்காத வரவேற்பு அங்குண்டு. தலைக்குமேலே உள்ளே உட்கூரைகூட தனிப்பட்ட அக்கறையுடன் நம்மை கவனிக்கிறதோ என எண்ணத் தோன்றும். ஊழியர்களின் மரியாதையான பார்வை முதலாவதாக, அதற்கடுத்து நூலகங்களுக்கென்றே உள்ள அமைதியான சூழல். ‘வேறு இடத்தில் அப்படியாதொரு ஒத்திசைவைகொண்ட மனிதர்களைச் சந்திக்க நமக்கு சாத்தியமா என்று தெரியவில்லை, ஆகச் சமரசம் உலாவும் இடம். இறந்தபின் ஏதோ சொர்க்கம் சொர்க்கம் என்று பேசிக்கொள்கிறார்களே அது இப்படியிருந்தால் தேவலாம் என் பல நேரங்களிக் நினைத்ததுண்டு.
சன்னமான மின்சார ஒளி, அவ்வப்போது உயிர் பெரும் காற்று – நமதுடலைச் சுற்றுவதற்குப் பதிலாக நெஞ்சைத் தொட்டு மயங்க்கம் தரும்; தரையை ஒத்தி எடுக்கும் பாதங்கள், காற்ற்றின் முனுமுனுப்புகளாக காதில் விழும் சொற்கள்; மெல்ல முன்னேறுகிறோம். தவம்போல புத்தகங்களில் ஆழ்ந்திருக்கும் மனிதர்களைக் கடந்தால் அங்கே நமக்காக அவர்கள் காத்திருப்பார்கள், வசாகாவரம் பெற்ற்வர்கள். யார் வேண்டுமானாலும் அவர்களுடன் கை குலுக்கலாம், கட்டி அணைக்கலாம். நிறம் பார்ப்பதில்லை, இன பார்ப்பதில்லை, குலம் கோத்திரம் சாதி எதுவும் வேண்டாம்: முதல் நாள் வேறொருவர் கொண்டுபோய் திருப்பித் தந்திருப்பார், இன்று நமக்காக அவை காத்திருக்கும். உலகில் பிறதுறைகளுக்கில்லாதாத பெருமை எழுத்திற்கு உண்டு, இங்கே எடுத்துரைக்கும் ஆற்றலும் மொழிவன்மையும், கற்பனை வளமும் கொண்ட எவருக்கும் நூலகத் தட்டுகள் இடம் கொடுக்கின்றன.. மெல்ல நெருங்கி அவற்றில் ஒன்றைதொட்டுப்பாருங்கள். உங்கள் கைப்பட்டதும் கண்பார்த்ததும் என்றோ மறைந்துபோன எழுத்தாளன் உயிர்த் தெழுவான்: அல்பெர் காமுய், தாஸ்த்தாவெஸ்கி, ஜேம்ஸ் ஜாய்ஸ், ஹெமிங்வே, முராகாமி, என்று எவராகவும் அது இருக்கலாம். அவர்களுடன் தொடங்குகிற உங்கள் உரையாடல் ஒரு நாள் அவர்களில் ஒருவராக உங்களையும் மாற்றினால் ஆச்சரியப்படமாட்டேன்.
————————————
Like this:
Like ஏற்றப்படுகின்றது...