Monthly Archives: மே 2015

கா·ப்காவின் நாய்க்குட்டிக்கு விடுதலை

கடந்த சில மாதங்களாக என் கைவசமிருந்த நாய்க்குட்டியை கீழிறக்கிவிட்டிருக்கிறேன்.கள்ளர்களைக்கண்டால் குரைக்கவும், நல்லவர்களிடம் நெருங்கவும் தெரிந்த நாய்.

 
காலச்சுவடு எம். எஸ் ‘விரும்பிப் படிக்கக்கூடியதாக இருந்தது’ என்றார். நண்பர் க. பஞ்சாங்கமும், பா. ரவிக்குமாரும் முழுமையாகப் பாராட்டியவர்கள். இருவருமே திறனாய்வாளர்கள்; க.பஞ்சாங்கத்தை அறிவேன் எனவே அவர் பாராட்டுதல் போலியானதல்ல. பா. இரவிகுமாரின் முகமும் உண்மை முகம். எழுத்தாளனாக இருப்பதில் உள்ள ஒரு சௌகரியம் மனிதர்களில் அசல் எது போலி எது என அறிய முடிவது.

 

தமிழ்நாட்டில், தமிழர்களிடத்தில் அடையாளம் பெற சில சித்து வேலைகள் தெரிந்திருக்கவேண்டும். இனம், சாதி தமிழரிடத்தில் எல்லா மட்டாங்களிலும் எதிரொலிப்பதைபோலவே எழுத்திலும் இடம் பெற்றிருக்கிறது. ஓர் எழுத்தாளனின் தகுதி இதன் அடிப்படையில்தான் எடைபோடப்படுகிறது.

 

ஐரோப்பாவில் வசிக்கிறேன், இந்தியத் தமிழனாக இருக்கிறேன், கடைவைத்திருக்கிறேன் காலச்சுவடுக்கு வேண்டிவனாக இருக்கிறேன் இவைகளெல்லாம் என்னை நிராகரிக்க வைக்கப்படும் தகுதிகள். தங்களைப்பற்றி எழுதுவேன் என எதிர்பார்த்து தங்கள் புத்தகங்களை அனுப்பிவைத்து ஏமாறுகிற படைப்பாளிகளுக்கும் ‘நான் நிராகரிக்கப்படவேண்டியவன்’. பிற காரணங்களும் இருக்கின்றன, அவற்றை பட்டியலிட விருப்பமில்லை. எனது எழுத்தை மட்டுமே பார்த்து ஏற்றுகொண்டவர்கள் பட்டியல் நம்பிக்கை தருகிறது, தொடர்ந்து இயங்க வைக்கிறது. திருவாளர்கள் பிரபஞ்சன், க.பஞ்சாங்கம், கி. அ. சச்சிதானந்தன், ரெ.கார்த்திகேசு, வே.சபாநாயகம், ந.முருகேசபாண்டியன், தமிழவன், பாவண்ணன், நறுமுகை இராதாகிருஷ்ணன், பா.இரவிக்குமார் அறிமுகமற்ற இளம்தலைமுறையினர் எனப் பலர் இருக்கின்றனர். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த படைப்புலகம் அல்ல இது, நாமிருப்பது கணினி உலகம். திறமையுள்ள எழுத்தாளனை காலமும் கணினியும் கவனித்துக்கொள்ளூம். எந்தக் குழுவும், சூதும் கவ்வ முடியாதது, வெந்தணலால் வேகாது, அசூயை வெள்ளங்கள் அடித்துக்கொண்டுபோகா.

 

பிரபஞ்சனும், பழ அதியமானும் நூல் வெளியீடு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாமற்போனது குறை. பிரபஞ்சன் வராதது ஏமாற்றத்தைத் தரவில்லை, எதிர்பார்த்ததுதான். ஆனால் அவர்கள் வந்திருந்தால் பா. இரவிகுமார், நறுமுகை இராதாகிருஷ்ணன் போன்ற்வர்களின் பேச்சு சிறப்பாக அமைய வாய்ப்பில்லை. நண்பர் க;பஞ்சாங்கமும் வழக்கம்போல நூலை முழுமையாகப் படித்துவிட்டு பாராட்டினார்; மனதிற்கு நிறைவாக இருந்தது. சென்னையிலிருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நண்பர் இந்திரனுக்கும் நன்றி சொல்லவேண்டும்.

 
நண்பர் நாயகர், சீனு தமிழ்மணி, பெருமாள் ஆகியோர் நிகழ்ச்சி பொறுப்பினை ஏற்று செம்மையாக நடத்த உதவினார்கள். அண்மைக் காலத்தில் நல்ல நண்பர்களை, மனிதர்களை அடையாளப்படுத்த எழுத்து உதவியிருக்கிறது. திருவாளர்கள் பெஞ்சமின் லெபோ, நந்திவர்மன், தமிழ்ச் சங்க செயலர் பால சுப்பிரமணியம், திருமதி பூங்குழலி பெருமாள் அனவருக்கும் நன்றிகளை இச்சமயத்தில் மீண்டும் பதிவு செய்ய வேண்டும். பசுபதி ஐயாவுக்கும் நன்றி.

 

நா.கிருஷ்ணா

“காப்காவின் நாய்க்குட்டி” நாவல் வெளியீட்டு விழா

Kaafkaavin Naaikkutti Wrapper Continue reading

காஃப்காவின் நாய்க்குட்டி – நாவல் ( காலச்சுவடு பதிப்பகம்)

அன்பினிய நண்பர்களே

வருகிற 23-5-2015 அன்று மாலை ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ என்ற எனது புதிய நாவல் புதுச்சேரி தமிழ்ச் சங்க அரங்கில் வெளியிட உள்ளோம்.
நிகழ்ச்சியில் திருவாளர்கள் பிரபஞ்சன், க. பஞ்சாங்கம், இந்திரன், பழ. அதியமான் ஆகியோர் கலந்துகொள்ள இருக்கிறார்கள். நிகழ்ச்சி பற்றிய முழு விபரத்தை அடுத்த வாரம் பதிவிடுகிறேன். நேரில் அழைத்ததாகக் கருதி நண்பர்கள் விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்கவேண்டும்.

__________________________________________________
‘காஃப்காவின் நாய்க்குட்டி’ பிறந்த கதை

 

காஃப்காவின் நாய்க்குட்டி’ என்ற நாவலின் தலைப்பினைப்போலவே, ‘பிராஹா நகரப் பயணம்’, ‘பயணத்தின் மூன்றாம்நாள்’ ‘காப்கா பிறந்த இல்ல’த்தைக் கண்டது, ‘நாவல் கருதரித்தது’ அனைத்துமே தற்செயல் நிகழ்வுகள். திட்டமிடல்களைக் காட்டிலும் எதிர்பாராதவைகளே நமது வாழ்க்கையை அதிகம் தீர்மானிப்பவை என்பதை உறுதி செய்த மற்றோர் சம்பவம். பொதுவாக கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவின் தலைநகரங்கள் புகழ்வாய்ந்தவை, வரலாற்றுப் பெருமையும் கலைவளமும் கொண்டவை. மேற்கு ஐரோப்பாவில் பல நகரங்களை பார்க்கும் வாய்ப்பு அமைத்திருக்கிறது, மாறாக கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பிய நகரங்களுக்கு சென்றதில்லை. பிராஹா¡விற்கு செல்லவேண்டும் என்ற எண்ணத்தை அதிகம் ஏற்படுத்தியவர் மார்கரெஃப் என்ற எங்கள் மருத்துவர். அவரிடம் செல்கிறபோகிறதெல்லாம், உடல் நலனைப்பற்றிய விசாரிப்புகள் அதுத் தொடர்பான தகவல் பரிமாற்றங்கள் என்பதைக் காட்டிலும், எங்கள் இருகுடும்பங்களைப் பற்றிய தகவல் பரிமாற்றங்கள், விடுமுறையைக் கழித்த இடம், உள்ளூர் அரசியல் இன்ன பிற தவல்களாக இருக்கும். நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் காத்திருக்கிற நாட்களில்கூட ஓர் அரைமணிநேரமாவது உட்காரவைத்து இப்படி எதையாவது இறக்கிவைக்கவில்லையென்றால் அவர் தலைவெடித்துவிடும் என்ற முற் பிறப்பு சாபமோ என்னவோ? பிராஹா நகரம் பற்றி அவர் எங்களிடம் பேசியது அதிகம். இந்நிலையில்தான் சென்ற வருடம்(2014) ஜூன்மாதத்தில் திடீரென்று பாரீஸிலிருந்து ஒரு தமிழ்ச் சங்கத்தைச்சேர்ந்த குழுவொன்று பிராஹா செல்ல இருக்கிறோம் வருகிறீர்களா என அழைத்தனர். உடன் வந்திருந்த புதுச்சேரி நண்பர்களைப் பற்றி தெரியும் ஆதலால், காஃப்காவைப் பற்றி துளியும் சிந்தனையில் இல்லை. எனினும் மூன்றாம் நாள் புகழ்பெற்ற வெல்ட்டாவா நதியில் படகில் காலை பதினோரு மணி அளவில் பயணித்த போது, காஃப்கா மியூசியம் என்றெழுதிய பெயர்ப் பலகைக் கண்ணிற்பட்டது, நண்பர்களிடம், அதைப் பார்க்கும் எனது ஆசையைப் பகிர்ந்துகொண்டேன், ஆனால் அவர்கள் முகங்களில் வேறுவகையான பதில்களிருக்க அமைதியானேன். படகுப் பயணம் முடிந்ததும் பிற்பகல் நகரில் அவரவர் விருப்பம்போல சுற்றிவிட்டு பேருந்து நிறுத்தத்திற்கு இரவு எட்டு மணிக்கு வந்துவிடவேண்டும் என்பது பயணத் திட்டம். படகுச் சவாரி மதியம் சுமார் பன்னிரண்டரை மணிக்கு முடிந்தது. கரை இறங்கியதும் உடன் வந்தவர்கள் சிறுசிறு குழுவாய் பிரிந்து நடக்கத் தொடங்கினார்கள். பகலுவுணவின் தேவையை முடித்துக்கொண்டு காஃப்கா மியூசியத்தை பார்க்க முடியாததற்காக வருந்தியவாறு பழைய நகரைச் சுற்றிவந்தோம். மாலை ஐந்து மணி அளவில் காப்பிக் குடிக்காலாமென ஒரு ரெஸ்ட்டாரெண்டிற்குள் நுழைந்தோம். கோடைகாலம் என்பதால் சில நாற்காலிகளும் மேசைகளும் வெளியில் இருந்தன, ஒன்றில் அமர்ந்து காப்பி வரவழைத்துக் குடித்துவிட்டு உரையாடிக்கொண்டிருந்தபோதுதான் சற்று தூரத்தில் மற்றொரு ரெஸ்டாரெண்ட் கட்டிடத்தின் முகப்பில் கஃப்கா மார்பளவு சிலையைப் பார்த்தேன். காஃப்காவிற்கும் அந்த இடத்திற்கும் சம்பந்தமிருக்கிறதென்று உள்ளுணர்வு தெரிவித்தது. நண்பர்களை இழுத்துக்கொண்டு ஓடினேன். அங்கிருந்தவர்களிடம் விசாரித்தேன், ‘காஃப்கா பிறந்த இல்லம்’ என்றார்கள், அனுபவத்தை விவரிக்க வார்த்தைகள் போதாது. விடைபெற்றபோது அங்கிருந்த நாய்க்குட்டி என் கவனத்தைப் பெற்றது’, கிழட்டு நாயொன்றை மையமாகக்கொண்ட காஃப்காவின் சிறுகதையொன்றும் நினைவுக்கு வந்தது. வெளியில் வந்தபோதும் பேருந்தில் பயணித்தபோதும் நாய்க்குட்டித் திரும்பத் திரும்ப மனதை ஆக்ரமித்து அலைக்கழித்தது. இது ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ பிறந்த கதை.

 

இந்நாவல் கடந்த ஜனவரியில் வந்திருக்கவேண்டும், ஆறுமாதங்கள் கூடுதலாக பதிப்பகத்தார் எடுத்துக்கொண்டார்கள். ஆனால் அப்போதைக்கும் தற்போதைக்குமான இடைவெளியில் செய்தவை சிற்சில மாற்றங்கள் என்கிறபோதும் அப்பெருமை நண்பர் கண்ணனுக்கே உரியது. “அவசரப் படவேண்டாம் என்றார்”. அது நியாயமானதென்பதை இந்நாவலின் முதல் வாசகன் என்ற வகையில் தெளிவாகப் புரிந்துகொண்டிருக்கிறேன். இநாவலை வாசித்துபார்த்து கவிஞர் மோகனரங்கன் சிற்சில கருத்துகளை முன்வைத்தார், அதன் அடிப்படையில் சில திருத்தங்களையும் கொண்டுவந்தேன். அவரைப்போலவே நாவலின் ஆக்கத்திற்கு உதவிய வேறு மூன்றுபோர் இருக்கிறார்கள். ஒருவர் பாரீசிலுள்ள உயிர்நிழல் ஆசிரியை லட்சுமி, நாவலில் வரும் 90 விழுக்காடு ஈழத் தமிழ்சொற்களை தந்து உதவியவர், மற்றவர் ஸ்ட்ராஸ்பூரிலுள்ள நண்பர் சூசை பாக்கியராஜ். இக்கதையில் வரும் பாரதி என்ற பெண்ணின் உண்மைப் பெயர் விமலினி, அவர் ஸ்ட்ராஸ்பூர் நகரில் வசிக்கிறார். கதையில் அதிகம் இடம்பெறுகிற ‘நித்திலா’, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக மொழிபெயர்ப்பு நிமித்தமாக நான் சந்தித்த பெண். ஆக வழக்கம்போல உண்மையும் புனைவும் இடம்பெற்றிருக்கின்றன. நாவல் வரவேற்பை பெறுமென்ற நம்பிக்கை இருக்கிறது. நல்ல நாவல் என நீங்கள் நினைத்தால் மேலே சுட்டிய மனிதர்களுக்கெல்லாம் அப்பெருமையில் பங்குண்டு, நாவல் உங்களை ஏமாற்றினால் அதற்கு நான் மட்டுமே பொறுப்பு.
. (காஃப்காவின் நாய்க்குட்டி முன்னுரையில்)

– நா.கிருஷ்ணா
nakrishna@live.fr

எழுத்தாளன் முகவரி -18: நூலகமும் எழுத்தாளனும்

‘வாசிப்பு இன்றியமையாதது’ என நம்புகிற ஆயிரக்கணக்கான எழுத்தாளர்களின் நானும் ஒருவன். படைப்பிலக்கியத்தின் எத் துறையை எடுத்துக்கொண்டாலும் வாசிப்பும் உள்வாங்க்கிகொள்ளும் திறனும் முக்கியம். ‘படைப்பிலக்கியதுறையில்’ வெறும் கையை வைத்துக்கொண்டு முழம்போடமுடியாது. நவீன இலக்கிய அபிமானிகள் தெளிவாகச் சிந்திக்கக்கூடியவர்கள். அவர்களை முன்வைத்து படைக்கிறபோது அதற்கான தகுதியை நமது படைப்பிற்கு ஏற்படுத்தித் தரவேண்டும். ‘இவனா? என்ன பெரிதாக எழுதியிருக்கப்போகிறான்? என நினைக்கிற, நூலைத் தொட்டு பார்க்காமலேயே மதிப்பிடுகிற மனிதர்களைப் பெரிது படுத்துகிறீர்களோ இல்லையோ மேலே குறிப்பிட்ட வாசகருக்கு நாம் உண்மையாக இருக்கவேண்டும். அவர் அறிவுக்கேற்ப, படைப்பிலக்கியத்தில் செய்திருக்கிற ‘கால’ முதலீட்டிற்கு ஈடான இலாப அனுபவத்தை ஏற்படுத்தித் தரும் கடமையும் பொறுப்பும் படைப்பாளிக்கு இருக்கிறது. ஒரு படைப்பாளி வாசகர் ஒருவருக்குத் தரும் வாசிப்பு அனுபவத்தில், அப்படைப்பாளி பிற ஆசிரியர்களின் எழுத்துக்களை வாசித்துப்பெற்ற அனுபவமும் சேர்ந்தது. பிற உற்பத்தி தொழிகளில் உள்ளதுபோலவே ஒரு பொருளின் உற்பத்தியில் முதற் பொருள்களாக படைப்பாற்றலும், கற்பனைத் திறனும் உள்ளதெனில் அததன் துணைப்பொருட்கள் பட்டியலில் வாசிப்பை சேர்ப்பது கட்டாயம். எனவேதான் எழுத்துக்கும் கூடுதலான நேரத்தை வாசிப்புக்கு படைப்பாளியொருவன் ஒதுக்கவேண்டும். படைப்புத்துறை சார்ந்து வாசிப்புக்குரிய நூல்களை தேர்வு செய்யலாம். எல்லாவற்றையும் வாசிப்பதென்பது ஒருவகை, தேர்ந்தெடுத்து வாசிப்பதென்பது ஒருவகை.

 

வாசிப்பின் நேரத்தையும், வாசிக்கின்ற படைப்பயும் பொறுத்தே உங்கள் படைப்பு அமைகிறது. எழுதவும் வேண்டும் வாசிக்கவும் வேண்டும் என்பதால் நேரம் காணாதுதான். மேற்கத்திய எழுத்தாளர்களின் சௌகரியமான வாழ்க்கை தமிழில் முழுநேர எழுத்தாளர்களாக இருக்கிற நட்சத்திர எழுத்த்தாளர்களுக்கே வெறு கனவாக முடிகிறபோது, ஏதோ எங்களால் உங்களுக்கு விலாசம் கிடைக்கிறதே அதுபோதா எனும் உத்தம தமிழ் பதிபாளர்களை நம்பியா ஒரு தமிழ் எழுத்தாளன் பெண்டாட்டி, பிள்ளைகளுடன் ஜீவிக்கமுடியும். எனவே வேறு பணிகளில் இருந்துகொண்டு எழுத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. எனக்குத் தொழில் வணிகம். கடந்த ஐந்து ஆண்டுகளாக அப்பாரத்தை என் மனைவியில் தலையில் இறக்கிவைத்துவிட்டு எழுத்தில் கவனம் செலுத்தினாலும், அப்போதைக்கப்போது நிறுவனத்திலும் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. இந்தியப்பொருட்கள் அங்காடிகடையைத் தவிர, ஒரு Immobilier Société யும் இருக்கிறது. இரண்டுமே மிகச் சிறிய நிறுவனங்கள், என்றாலும் இரண்டின் நிர்வாக விஷயங்கள், பொருட்களை வாங்குவது அவற்றின் விலையைத் தீர்மானிப்பது, வாடிக்கையாளரைக் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், விற்பனை வரி சம்பந்தமான தொடர்புகள், வருடாந்திர கணக்குகள் என பிரச்சினைகள் இருக்கவே செய்கின்றன. இதற்கிடையில் அவ்வப்போது மொழிபெயர்ப்புப் பணியையும் உப தொழிலாக செய்கிறேன். அதைக்கடந்துதான் வாசிப்பு எழுத்து என்று இயங்கவேண்டியிருக்கிறது.

 

நூல்களையும் இதழ்களையும் எப்படி தேர்வு செய்கிறேன்?

 

வீட்டில் சிறியதொரு நூலகம் இருக்கிறது, சிறுக சிறுகச் சேர்த்து உருவாக்கிய நூலகம். புதுச்சேரி வருகிறபோதெல்லாம் தமிழ் நூல்களை வாங்கிக்கொண்டு வருகிறேன். தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம் மூன்று மொழிகளிலும் வாசிக்கிறேன். மாதத்திற்கு மொழிக்கொன்று முடிக்கவேண்டுமென்பது திட்டம், அதைக் கடை பிடித்தும் வருகிறேன். தமிழில் காலச்சுவடு, தீராநதி இதழ்கள் வீட்டிற்கு கடந்த பத்தாண்டுகளாக வருகின்றன. கடை வைத்திருப்பதால் வெகு சன இதழ்களை வாசிக்கவும் சந்தர்ப்பம் வாய்க்கிறது. பிரெஞ்சு இலக்கிய திங்கள் இதழ் ‘Le Magazine Littéraire’ வீட்டிற்கு வருகிறது. தமிழ் நூல்களை மதிப்புரை எழுதுகிறவர்கள் யார் என்ற அடிப்படையிலும், நண்பர்களின் சிபாரிசிலும், புத்தகங்களை random ஆக ஒன்றைப் பிரித்து வாசிக்கிறபோது ஏதேனும் இரண்டு வரிகளில் உண்மையும், சொல் நேர்த்தியும் இருப்பின் வாங்கிவிடுவேன். பிரெஞ்சில் நூல்களைத் தேர்வு செய்வது எளிதாக இருக்கிறது. தினசரிகள், இலக்கிய திங்கள் இதழ்கள், ‘France Culture’ வானொலி ஆகியவற்றில் முன் வைக்கப்படும் விவாதங்கள், மதிப்புரைகள் ஆகியவற்றை 90 விழுக்காடுகள் நம்பலாம், குறிப்பாக François Busnel என்கிற இலக்கிய திறனாய்வாளரை கண்ணை மூடிக்கொண்டு நம்புகிறேன். மதிப்புரை எழுதத் தகும் என்ற நூல்களைத் தேர்வு செய்தே எழுதுவார். அண்மைக்காலமாக ஆங்கிலமொழியில் படைப்புகளை தேர்வுசெய்ய எனது மகள் உதவுகிறார். தமிழ் நூல்கள் சிலவற்றை நூலாசிரியர்களிடமிருந்து நேரடியாக அன்பளிப்பாக பெற்றிருக்கிறேன். ஈழத்தைச் சேர்ந்த நண்பர் மரியதாஸ் நான் இருக்கிற இதே ஊரில் வசிக்கிறார். எனது நாவல்கள் பதிப்புக்குப் போகும் முன்னும் பின்னும் வாசிப்பவர், ஆலோசனைகளும் வழங்குவார். அவற்றில் உடன்பாடிருக்குமானால் ஏற்கவும் செய்வேன். ஆனால் தமிழில் அவர் கல்கி, சாண்டில்யன், மு.வ. இவர்களைத் தாண்டிபோனதில்லை. அவர்களுக்கு அடுத்தபடியாக எஸ்.பொ.வத் தெரிந்து வைத்திருந்தார். மாறாகச் சங்க இலக்கியங்களில் ஆழ்ந்த புலமை. தமிழண்ணல், ஜெயமோகன், அண்மையில் நாஞ்சில் நாடன் இவர்களெல்லாம் சங்க இலக்கியங்களை பற்றி எழுதியபோது அவைகுறித்து விடிய விடிய அவரும் நானுமாக உரையாடி இருக்கிறோம். (அண்மையில் நண்பர் க. பஞ்சாங்கம் பிரான்சு வந்திருந்தபோது, அவரிடம் அழைத்துசென்றேன். கடந்த ஓராண்டுக்கு மேலாக கட்டில் வாழ்க்கை என்றிருப்பதால், பேராசிரியர் க.பஞ்சாங்கத்தின் சந்திப்பு அவருக்கு ஆறுதலைத் தரும் என்று நம்பினேன், அது வீண்போகவில்லை.) அவர் எனக்குப் பரிசளித்த ஆங்கில நூல்கள்அதிகம். இவை எனது நூலகத்திற்கு எப்படியெல்லாம் நூல்கள் வந்தடைகின்றன என்பதற்கு சற்று விரிவானதொரு விளக்கம்.

 

நூலகம் ஏன்?

 

வருடா வருடம் வாங்கி சேர்க்கின்ற நூல்களைத் தவிர வார மாத இதழ்கள் வீட்டிற்கு வருகின்றன என்று கூறி இருந்தேன், இவற்றைத் தவிர இணைய இதழ்கள் வலைப்பூக்கள்என்றுள்ளன. பிரெஞ்சு, ஆங்கிலம், தமிழ் தினசரிகள் இவ்வளவும் வாசித்தபின்னும் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை பிரெஞ்சு பொது நூலகத்திற்குச்சென்று நூல்களைக் கொண்டு வருகிறேன். ஒரு தடவையில் ஐந்து நூல்கள் எடுக்கலாம். தற்போது நூல்கள் புத்தகமாகவும், குறுந்தகடுகளிலும் கிடைப்பது ஒரு வசதி. ஆக சில நேரங்களில் குறுந்தகடு நூல்களையும் கொண்டு வருகிறேன், வாகனத்தில் போட்டுக்கேட்க வசதியாக இருக்கிறது.

 

இந்நிலையில் நாம் நூலகத்திற்குச் செல்ல பிரத்தியேகக் காரணங்கள் இருக்க முடியுமா? நிறைய இருக்கின்றன. உலகின் அத்தனை எழுத்தாளர்களும் ஒன்று கூடுகிற இடம் நூலகம். நூலகங்களில் இடம்பெறுதல் என்பது அந்நூல்களுக்கான மிகப்பெரிய விருது, வேறு பரிசுகளோ, விருதுகளோ, விமர்சனங்களோ, சிபாரிசோ வேண்டாம். ஒரு நூற்றாண்டைக் கடந்தும், எழுத்தாளன் காலத்தில் கரைந்தபோதும் அவன் படைப்பு நீர்த்துப்போகாமல், செல்லரிக்கப்படாமல் இருக்குமென்றால் அப்படைப்பில் நாம் எழுத்தாளனாக வருவதற்குரிய சூட்சமங்கள் இருக்கின்றன. அவை நாம் வாசிக்க வேண்டியவை. எழுத்தாளனாக வர நினைத்தால், நூலகத்திற்குச் செல்லும் வாய்ப்பைப் பெருக்கிக்கொள்ளுங்கள். என்னதான் இடம் பொருள் என நம்மிடமிருந்தாலும் ஒரு நல்ல நூலகத்தை உருவாக்கவோ பராமரிக்கவோ நமக்கு நேரமும் காணாது

 

எனக்கு எழுத்தின் மீது பற்றுதலை உருவாக்கியதில், நூலகங்களுக்கும் பங்கிருக்கிறது. ஒரு நூலகத்தின் வேலை நேரத்தை தெரிந்துகொண்டு பத்து மணிக்குத் திறக்கிறார்கள் என்றால் பதினோரு மணிக்கு உள்ளே நுழையுங்கள். கடையொன்றிர்க்குள் ஒரு பொருளை வாங்குவதற்காக நுழைகிற வாடிக்கையாளருக்குக் கிடைக்காத வரவேற்பு அங்குண்டு. தலைக்குமேலே உள்ளே உட்கூரைகூட தனிப்பட்ட அக்கறையுடன் நம்மை கவனிக்கிறதோ என எண்ணத் தோன்றும். ஊழியர்களின் மரியாதையான பார்வை முதலாவதாக, அதற்கடுத்து நூலகங்களுக்கென்றே உள்ள அமைதியான சூழல். ‘வேறு இடத்தில் அப்படியாதொரு ஒத்திசைவைகொண்ட மனிதர்களைச் சந்திக்க நமக்கு சாத்தியமா என்று தெரியவில்லை, ஆகச் சமரசம் உலாவும் இடம். இறந்தபின் ஏதோ சொர்க்கம் சொர்க்கம் என்று பேசிக்கொள்கிறார்களே அது இப்படியிருந்தால் தேவலாம் என் பல நேரங்களிக் நினைத்ததுண்டு.

 

சன்னமான மின்சார ஒளி, அவ்வப்போது உயிர் பெரும் காற்று – நமதுடலைச் சுற்றுவதற்குப் பதிலாக நெஞ்சைத் தொட்டு மயங்க்கம் தரும்; தரையை ஒத்தி எடுக்கும் பாதங்கள், காற்ற்றின் முனுமுனுப்புகளாக காதில் விழும் சொற்கள்; மெல்ல முன்னேறுகிறோம். தவம்போல புத்தகங்களில் ஆழ்ந்திருக்கும் மனிதர்களைக் கடந்தால் அங்கே நமக்காக அவர்கள் காத்திருப்பார்கள், வசாகாவரம் பெற்ற்வர்கள். யார் வேண்டுமானாலும் அவர்களுடன் கை குலுக்கலாம், கட்டி அணைக்கலாம். நிறம் பார்ப்பதில்லை, இன பார்ப்பதில்லை, குலம் கோத்திரம் சாதி எதுவும் வேண்டாம்: முதல் நாள் வேறொருவர் கொண்டுபோய் திருப்பித் தந்திருப்பார், இன்று நமக்காக அவை காத்திருக்கும். உலகில் பிறதுறைகளுக்கில்லாதாத பெருமை எழுத்திற்கு உண்டு, இங்கே எடுத்துரைக்கும் ஆற்றலும் மொழிவன்மையும், கற்பனை வளமும் கொண்ட எவருக்கும் நூலகத் தட்டுகள் இடம் கொடுக்கின்றன.. மெல்ல நெருங்கி அவற்றில் ஒன்றைதொட்டுப்பாருங்கள். உங்கள் கைப்பட்டதும் கண்பார்த்ததும் என்றோ மறைந்துபோன எழுத்தாளன் உயிர்த் தெழுவான்: அல்பெர் காமுய், தாஸ்த்தாவெஸ்கி, ஜேம்ஸ் ஜாய்ஸ், ஹெமிங்வே, முராகாமி, என்று எவராகவும் அது இருக்கலாம். அவர்களுடன் தொடங்குகிற உங்கள் உரையாடல் ஒரு நாள் அவர்களில் ஒருவராக உங்களையும் மாற்றினால் ஆச்சரியப்படமாட்டேன்.

————————————