Monthly Archives: திசெம்பர் 2013

மொழிவது சுகம் டிசம்பர் டிசம்பர் 28 – 2013

புத்தாண்டு வாழ்த்துகள் –2014

 spectaclereveillonno-kyip

நண்பர்கள் அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துகள்.  நிறைகுறைகள் இல்லாதது வாழ்க்கை அல்ல! இன்பமும் துன்பமும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. சொந்த வாழ்க்கையிலும் சரி குடும்பம், நாடு, உலகம் என அனைத்திலுமே மேடுபள்ளங்கள் இருக்கவே செய்கின்றன.  மகிழ்ச்சி மழையில் நனைந்த தருணங்களும், கையறு நிலையில், சாய்ந்துகொள்ள தோள்கிடைக்காதா என வாடிய சூழலும் இல்லாமலில்லை. எனக்கு உங்களுக்கு, அடுத்த நபருக்கு என இருக்கவே செய்கின்றன, எனினும் ஓடும் நீராக வாழ்க்கையை தொடரவே  இப்பிறவி வாய்த்திருக்கிறது.

அரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிதுவரம் கிடைத்திருக்கிறது, நோய் நொடிகள், எனவந்தாலும் ஆரோக்கியத்தை பெற்று ஆயுளை நீட்டிக்கொள்வதற்கான சூழலும் நிலவும் உலகம். ஆக 95 விழுக்காடுகள் வாழ்க்கை நம் கையில்.  ‘எதிர்பார்ப்புகளைநம்மால் மட்டுமே பூர்த்தி செய்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கைக்கு இடமளித்து வினையாற்றுவது அந்த 95 விழுக்காடுகளை முடிந்த அளவு மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும். மிச்சமுள்ள 5 விழுக்காட்டினை எதிர்பாராத சோகங்கள், மகிழ்ச்சிகள் நடத்துகின்றன என வைத்துக்கொண்டாலும் அதனை பக்குவமாக கையாளுவோமானால் நிறைவான வாழ்க்கைக்கு தொடர்ந்து உத்தரவாதம்.

வாழ்க்கைத் தேர்வும் நண்பர்களும்

முன்பு தென் ஆற்காடு மாவட்டத்திலும் தற்போது விழுப்புரம் மாவட்டத்திலும் இருக்கும் கொழுவாரிஎன்ற சிறுகிராமத்தில் எனது வாழ்க்கை ஆரம்பித்தது, பின்னர்  அங்கிருந்து அதே தென்னாற்காடு மாவட்டத்தை சேர்ந்த கழுப்பெரும்பாக்கம், அனுமந்தை; செங்கல்பட்டு மாவட்டத்தில் மாம்பாக்கம்; புதுச்சேரி மாநிலத்தைச்சேர்ந்த காலாப்பட்டு,  புதுச்சேரி -(இந்திய வாழ்க்கையில் பெரும் பகுதியைக் கழித்த ஊர்);  அடுத்து சென்னை.  1985க்கு பிறகு பொருள் தேடி புலம் பெயர் வாழ்க்கை: பிரான்சு நாட்டில் ஸ்ட்ராஸ்பூர், (பிரான்சு நாட்டின் கிழக்குப் பகுதி)Strasbourg 1  இந்நெடிய வாழ்க்கை பயணத்தில் அரிதான பல சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. தொடக்கக் கல்வி, உயர்நிலைப் பள்ளிகல்லூரி  என்ற கல்வி வாழ்க்கையில்; விக்ஸ் பிரதிநிதியாக, பயன முகவர் அலுவலக ஊழியனாக, புதுச்சேரி கென்னடி டுட்டோரியலில் ஆசிரியப்பணி, பிறகு 1985வரை புதுச்சேரி வருவாய் துறையில் பணி, பிரான்சுநாட்டில் மீண்டும் பல்கலைகழ்கத்தில் சேர்ந்து இந்திய படிப்பை முறைபடுத்திக்கொண்டது, கணக்கியலில் பட்டயம், ஸ்ட்ராஸ்பூர் நகராட்சிக்குட்பட்ட அமைப்பொன்றில் உதவி கணக்காயர் பணி, மாலைக் கல்வியில் மொழிபெயர்ப்பு பட்டயத்திற்கான கல்வி, தொடர்ந்து 1991ல் சுயமாக தொழில் செய்ய ஆரம்பித்து சிறியதொரு மளிகைகடை. என்னை நிலை நிறுத்திக்கொண்டபிறகு இளமைக்கால எழுத்து ஆர்வம் அக்கினிக் குஞ்சாக என்னுள் தகிக்க எழுத்திற்குத்  1999ல் திரும்பவும் வந்தேன்.

வாழ்க்கைத் தேர்வில் தெளிவாக இருந்திருக்கிறேன். தொடக்கத்தில் சங்கடங்களை அளித்த போதிலும் முடிவுகள் தேர்வை நியாயப்படுத்தியிருக்கின்றன. பெற்றோர்கள் பார்த்துவைத்த திருமணம் என்றாலும், எனது மனைவியைப் பார்த்தபோது இவளால் நான் உயர்வேன் என மனம் உரைத்தது. அதுபோலவே பிரான்சுக்கு வர செய்த முடிவு. என்னுடன் பணிசெய்த பலர் வருவாய்துறையில் உயர்பதவியில் இன்று இருக்கிறார்கள், இருந்திருந்தால் .. என்ற எண்னமெல்லாம் சில நேரங்களில் மனதை அலைக்கழிக்கும், இருந்தும் அச்சமயம் எடுத்த முடிவில் தவறில்லை. அங்கே கையூட்டுகளோடு காலம் தள்ளினாலொழிய வளர்ந்திருக்க சாத்தியமில்லை. இங்கேவந்த ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு கலைஞர்களுக்கே உரிய சுதந்திர உணர்வில் சுயதொழில் செய்ய ஆரம்பித்து ஒரு பிரெஞ்சு நண்பரோடு சேர்ந்து வணிக செய்ய ஆரம்பித்தபோது, இந்தியப்பொருட்கள் தொடர்பான விஷயங்கள் என்பதால் எனக்கு முழுசுதந்திரமும் வேண்டும், என்றேன். குறுக்கிடக்கூடாது எனத் தெளிவாக கூறினேன். அவர் கணிசமான தொகையை முதலீடு செய்ய இருந்த நேரத்தில் எனது இந்த பதிலில் அதிர்ச்சி அடைந்து விலகிகொண்டார். ஒரு வாரம் கழித்து திரும்பவும் அதே தொகையுடன் வந்தார். உனது பதில் பிடித்திருந்தது, நீ மட்டுமே தொழில் செய் எனக்கூறி  காசோலையைத் திரும்பவும் என்னிடம் தந்தார், முடிந்தபோது திருப்பிக்கொடுக்க சொன்னார். அவருடனான நட்பு இன்றுவரை தொடர்கிறது. தனி ஆளாக வியாபாரத்தில் இறங்கிய முடிவில் தவறில்லை கடையின் வளர்ச்சி, அதன் தொடர்ந்த இயக்கம் தெரிவிக்கும் உண்மை. 2005ல் ஜெர்மனியிலுள்ள Global Foods உரிமையாளர், M. Pandari பாரீஸின் கிழக்கு பகுதியில் ஒரு மொத்த விற்பனை அகத்தை திறக்கவேண்டுமென்றுகூறி சேர்ந்து செயல்படலாம் எனத் தெரிவித்தார். ஆனால் எழுத்தில் முழுமூச்சாக இறங்குவதென தீர்மானித்து அவரது யோசனையை நிராகரித்தேன். பிரெஞ்சு நண்பர் முட்டாள் தனமான முடிவென்றார். எனினும் எடுத்த முடிவில் தவறில்லை என்பதை இப்போது உணர்கிறேன்.

 இக்கால பயணத்தில் நண்பர்களும் அந்தந்த வாழ்க்கைக்கு ஏற்ப மாறிகொண்டு வந்திருக்கிறார்கள். பிறந்த மண், கல்வி நிலையங்கள், வாழுமிடம், செய்யும் தொழில், ஆர்வம்காட்டும் துறைகள், உறவுகள் ஆகியவை  நமது நண்பர்களை தீர்மானிக்கின்றன. அகம் புறம் இரண்டும் அதனதன் தேவைக்கேற்ப, பாரதூரங்களின் அடிப்படையில் நண்பர்களை தேர்வுசெய்கின்றன. இதில் யாரையும் குற்றம் சொல்ல இயலாது இதுதான் வாழ்க்கை. நேற்றிருந்ததை மறந்ததாகச்சொல்லும் பலநண்பர்கள் தங்களுடைய நேற்றுகளைசௌகரியமாக மறந்திருப்பார்கள். நமக்கு மேலாக வளர்ந்துவிட்டதாக இவர்கள் நம்பும் ஒருவர் நம்மை மறந்துவிட்டார் என குற்றம் சாட்டுகிறபோது, நமக்கு கீழேயாகிப்போன எத்தனை நண்பர்களை நாம் நினைவில் வைத்திருக்கிறோம்  என்பதை யோசிக்க வேண்டுமில்லையா? பள்ளிகாலத்தில் பள்ளி நண்பர்கள், கல்லூரி காலத்தில் கல்லூரி நண்பர்கள், பணிக்காலத்தில் சக அலுவலக ஊழியர்கள் நண்பர்கள். தவிர வாழுமிடமும் சமூக நிகழ்வுகளும் சில நண்பர்களைக்கொண்டுவந்து சேர்க்கின்றன. எல்லா நட்புமே நீடிப்பு என்பது இரு தரப்பினரின் ஒத்த சிந்தனையை பொருத்தது. அதற்கு உத்தரவாதம் இருக்குமெனில் அல்லது அது தொடரும் வரை நட்பும் தொடரும்.

 எழுத்தில் என்ன சாதித்தேன் என்பது கேள்வியில்லை, ஆனால் எண்ணத்தால் உயர்ந்தமனிதர்களோடு உரையாட முடிகிறது, சில மணித்துளிகளை அவர்களோடு கழிப்பதற்கான தருங்களை எழுத்து ஏற்படுத்தி தருக்கிறது. படுத்தால் சங்கடங்களின்றி உறங்கும் வாழ்க்கை, இதைக்காட்டிலும் வேறென்ன செல்வம் வேண்டும்?

ஜே.டி. குரூஸ் சாகித்ய அகாதமி பரிசு.

கொற்கை நாவலை படிக்கவில்லை. அவரது ஆழிசூழ் உலகை படித்திருக்கிறேன். மனதிற்கு மிக சந்தோஷ்மாக இருந்தது. இவருக்கு கொடுக்கவில்லை அவருக்குக் கொடுக்கவில்லை என்ற புலம்பல் வேண்டாம். ஜே.டி.குரூஸ் அதற்கு முற்றிலும் தகுதியானவர். அது தவறான தேர்வல்ல  என்பது நமது மனதிற்குத் தெரியும். அவர் தொடர்ந்து பல நல்ல படைப்புகளை அளிக்கவேண்டும். தமிழ் படைப்புலகம் செழிப்புற ஜே.டி. குரூஸ் போன்ற படைப்பாளிகள் அடையாளம் பெறவேண்டிய தருணம். எந்தப் பின்புலமும் அல்லாமல் முழுக்கமுழுக்க படைப்பினை முன்வைத்து தேடிவந்த விருது. வாழ்த்துகள், எங்களுக்காக நிறைய எழுதுங்கள்.

அமெரிக்க தேவயானி

இந்தியாவா? என மூக்கில் விரலைவைத்த சம்பவம். இந்தியா தூதரக அதிகாரியை விசா தவறுதலுக்காக அமெரிக்கா நடத்தியவிதம் கண்டு கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர்வரை பிறகு உலகெங்கும் இந்தியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால் இந்தச் சொரணை நமக்கு எல்லாவற்றிலும் வேண்டும், தொடர்ந்தும் பேண வேண்டும். வழக்கம்போல அமெரிக்கா என்பதால் காம்ரேட்டுகள் கொதித்துபோனார்கள், இப்பிரச்சினையில் சிக்குண்ட அந்த வேலைக்காரி பெண்ணைக் குறித்து மருந்துக்கும் வார்த்தையில்லை. அநேகமாக சொல்லியிருந்தால் தோழர் நல்லகண்ணு சொல்லியிருக்கலாம், முணுமுணுத்திருக்கலாம். வேறு தோழர்கள் சொல்ல வாய்ப்பில்லை. இலங்கைத் தமிழர்கள் செத்தொழிந்ததோ, நாள் தோறும் தமிழக மீனவர்களை இலங்கை அரசு நடத்தும் விதமோ அவர்கள் காதில் விழவும் விழாது, கிருஸ்துமஸ் கேக் வெட்டலுக்கிடையில் நேரமிருக்கும்போது கொஞ்சம்  அடித்தட்டு மக்களையும் அவர்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். அரசியல்வாதிகளில் மனசாட்சிக்கு செவிசாய்க்கிறவர்கள் ஒரு சிலர் இருப்பார்கள் எனில்  அவர்கள் மார்க்ஸியவாதிகளாகத்தான் இருப்பார்கள் என இன்னமும் என்னைப்போன்ற மனிதர்கள் நம்புகிறார்கள் அதனைப் பாழ்படுத்தவேண்டாம்.

ஊழல் ஆசாமிகளை ஒதுக்காதவரை ஒலிம்பிக்கில் இடமில்லை என சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு இந்தியாவை நீக்கியது குறித்த கவலை இன்மையும், தூதரக அதிகாரி தவறே செய்யவில்லையென வக்காலத்துவாங்குவதில் காட்டும் அவசரமும் இந்தியாவின் பிம்பத்தை பெரிதாய் உயர்த்திவிடாது.

டில்லி கெஜ்ரிவால்

முதன் முறையாக ஆம் ஆத்மி என்ற மக்கள் நலனை முன்னிலைபடுத்தக்கூடிய ஓர் அரசு டில்லியில் பதவி ஏற்றிருக்கிறது. விளைவு அவசர அவசரமாக லோக்பால் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியிருக்கிறது. அவர்கள் நிதானமாக செயல்படவேண்டும். கேலிக்குரியவர்களாக மாறிவிடக்கூடாது. அத்தியாவசியமானவற்றிற்கு முன்னுரிமை அளித்து ஊழலற்ற ஆட்சியை அவர்கள் ஆட்சியில் இருந்த குறைந்த காலத்தில் தந்திருக்கிறார்கள் என்கிற எண்ணத்தை மக்களிடத்தில் ஏற்படுத்துவதைப் பொருத்தே அவர்களின் எதிர்காலம் மட்டுமல்ல இந்தியாவில் எதிர்காலமும் தீர்மானிக்கப்டும். அவ்வாறு இல்லையெனில் இந்தியாவின் எதிர்காலம் வழக்கம்போல ஊழல் ஆசாமிகளின் பிடியில் தான்.

 ——————————

இலங்கு நூல் செயல் வலர்: க. பஞ்சாங்கம் -1

 Panjangakm.பஞ்சாங்கம் குறித்து எழுதவேண்டும் என்ற ஆர்வம் நிர்பந்தத்தால் கட்டமைந்ததல்ல ஒருவகை ஆர்வத்தால் பிறந்தது. இவ் ஆர்வத்திற்கு எனது கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி” நாவலை முன்வைத்து அவர் வெளிக்கொணர்ந்த வியத்தலும்-பாராட்டுதலும்என்ற ஒரு சிறு தீப்பொறி பொறுப்பு. அவருடைய நூல்களும் சொற்களும், கழி வீச்சினையொத்த மொழி வீச்சும், கருத்துக்களை முன்வைக்கிறபொழுது  பொருளின் தராதரத்தை துல்லியமாக எடைபோடும் திறனும், எண்ணத்தில் பதிவானவற்றை இம்மியும் பிசகாமல் எடுத்துரைக்கும் வல்லமையும் அத்தீப்பொறி செந்தழலாக என்னுள் பற்றி எரிய காரணமாயிற்றூ. அம்மனிதரோடு ஒப்பிடுகையில்  எனது சிறுமையையும் உணர்கிறேன். அவர் மாத்திரமல்ல திருவாளர்கள் பிரபஞ்சன், ரெ.கார்த்திகேசு, வே.சபாநாயகம், கி.அ.சச்சித்தானந்தன், தமிழவன் ஆகியோர், நூலின் மூலமே ஆக்கியோனை கவனத்திற்கொள்கிறவர்களாக இருக்கிறார்கள். பிரபஞ்சன் எல்லா நூல்களையும் வாசிப்பார், பிடித்திருந்தால் கண்களில் நீர்கசிய பாராட்டுவார். சிறியவர் பெரியவர் பேதம் பார்ப்பதில்லை.  மேலே நான் குறிப்பிட்டிருந்த பலரும் அப்படியானவர்கள்தான். அவர்களைப்போல பரந்த வாசிப்பு எனக்கில்லை. சிற்றிதழ்கள், நண்பர்களின் பரிந்துரை இணையதளங்களின் கருத்தியங்கள் அடிப்படையில் தேர்வுசெய்கின்ற போக்கு பல நேரங்களில் நல்ல நூல்களை வாசிக்க முடியாமற் செய்துவிடுகிறது. இழப்பு படைப்பாளிக்கு மட்டுமல்ல நுகர்கிற வாசகனுக்குங்கூட. வணிக உலகில், கனியிருக்க காயைதேர்வு செய்து அல்லாட வேண்டியிருக்கிறது.

காலத்தின் சகாயத்தினால், க.பஞ்சாங்கத்தின் நூல்கள் சிலவற்றை வாசிக்க ஆரம்பித்தேன். அந்நூல்களைப் பற்றி எழுதுவது அவசியமாகிறது. தமிழ், மொழி, இனம், தமிழ் தேசியம் என்று உண்மையில் அக்கறைகொண்டு இயங்குகிற நெஞ்சங்களுக்காக அந்த அவசியம். ஆரவாரமின்றி மொழிக்கு உழைத்துக்கொண்டிருக்கிற க. பஞ்சாங்கம் போன்றவர்களால்தான் தமிழ் ஜீவித்துகொண்டிருக்கிறது என நம்புகிறேன். தமிழுக்கு நீர் வார்க்கிர பஞ்சாங்கம் போன்ற மனிதர்கள் அங்கொருவர் இங்கொருவர் என இருக்கவே செய்கிறார்கள். அந்த ஒருவர் நீங்களாகக்கூட இருக்கலாம். உங்கள் அறிமுமகம் எனக்கு வாய்க்காமல் போயிருக்கலாம், உங்கள் உழைப்பு எனக்கு தெரியாமலிருக்கலாம்.  ஆக க.பஞ்சாங்கத்தை எழுதுவதென்பது உங்களை எழுதுவதைப்போல.

என்னைப்பற்றிய தெளிவையும் நண்பர்களுக்கு தெரிவித்துவிடவேண்டும். எனக்கு படைப்பிலக்கியம் வரும், நவீன உலகின் போக்குகளை முன் வைத்து காத்திரமான விமர்சனங்களை முன்வைக்கும் திறனுமுண்டு எனினும் தொல் இலக்கியங்களில் மிகவும் தேர்ந்த க. பஞ்சாங்கம் போன்ற மனிதர்களின் ஆளுமைகளோடு ஒப்பிடுகிறபோது நான் மாகாணி அவர் மரக்கால்.  இருந்தும் கல்விமான்கள் எனச்சொல்லிக்கொள்கிற பல அரைவேக்காடு மனிதர்களிலும் பார்க்க தமிழை நன்றாகவே கற்றிருக்கிறேன். இத்தொடரை எழுத அதுபோதுமென்று நினைக்கிறேன்.

க. பஞ்சாங்கத்தின் இலக்கிய திறனாய்வு கட்டுரைகள் இரு தொகுதிகளாக வந்துள்ளன இரண்டுமே காவ்யா வெளியீடு, நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகள் இரண்டாயிரம் பக்கங்கள். தொன்ம இலக்கியங்கள், நவீன இலக்கியங்களென மரபு நவீனம் இரண்டையும் திறனாய்வு செய்திருக்கிறார். இரண்டாயிரம் பக்கங்களில் படைப்பிலக்கியத்தை எழுதலாம், திறனாய்வது என்பது வேறு.  ஒப்பிட முடியாத உயர்வான பணி. மொழியின் மீது தீராத காதலும், அக்கறையும் அதற்கு மனமுவந்து உடலுழைப்பை தரவல்ல முனைப்பும் வேண்டும். முடிந்த அளவிற்கு திறனாய்வு பொருளுக்கு உதவவல்ல நூல்களை சேகரிக்க வேண்டும், அவற்றைப் புடைத்து தூற்றி பதர்களையும் கற்களையும் அகற்ற வேண்டும். பொறுமையுடன் வாசித்து ஒருபாற் கோடாமை மனத்துடன் உள்வாங்கியும், உள்வாங்கியவற்றை சீர்தூக்கியும், சீர்தூக்கியவற்றை நடுவு நிலை பிறழாமல்எண்ண ஓட்டத்தை உள்ளது உள்ளவாறே எழுத்தில் வடிக்கவும் தெரிந்திருக்க வேண்டும், அசாதரண உழைப்பின்றி இது சாத்தியமல்ல. வாசித்து எழுதியதைக் காட்டிலும் விருதுகளைபட்டியலிடும் மனிதர்களுக்கிடையில் (அவர்கள் மீது குற்றமல்ல குறுநில மன்னர்களும் விருதுகளை ஆனை மீது ஏற்றிவந்த பரம்பரை அல்லவா தமிழினம்) இவர் போன்ற அற்புதங்களும் இருக்கவே செய்கிறார்கள். அதிசயமாக கண்ணிற்படும் பஞ்சாங்கம் போன்ற மனிதர்களை கொண்டாடினால்தான் இந்த இனத்திற்கு விமோசனமென்று ஒரு சராசரி தமிழனாக நினைக்கிறேன். பஞ்சாங்கத்தை எழுதுவது எனது தமிழை எழுதுவது, எழுதுகிறேன்…

நவீன இலக்கிய கோட்பாடுகள் என்ற முதற்தொகுப்பு -காவியா வெளியீடு – 68 கட்டுரைகள் இருக்கின்றன. இன்றைய இளம் படைப்பாளிகள் ஒவ்வொருவர் கையிலும் இருக்கவேண்டிய கையேடு. நவீனத் தமிழிலக்கியத்தின் உட்கூறுகளான புதுக் கவிதைகள், தலித் இலக்கியம், பெண்ணிலக்கியம் போன்ற திணைகளையும், அக்கலை நேர்த்தியை செப்பனிடக்கூடிய கருவிகள் பற்றியும், சு.ரா. தமிழ் ஒளி, இ.பா. சிற்பி, தமிழன்பன், பிரபஞ்சன் போன்ற மூத்த படைப்பாளிகளின் பங்களிப்புகள் பற்றிய கட்டுரைகளும்வீன இலக்கியத்திற் தாக்கத்தினை ஏற்படுத்திவரும் பிற காரணிகள் பற்றியதுமான கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றுள் பெண்ணிலக்கியம், தலித் இலக்கியம், எடுத்துரைப்பு ஆகியவை எல்லோர் கவனத்திற்கும் கொண்டு செல்லப்படவேண்டியவை. இவற்றை குறித்து ஒவ்வொன்றாக எழுதுகிறேன். அதன் பின்னர் இரண்டாவது தொகுப்பிற்குச் செல்லலாம்.

(தொடரும்)  

புதிய நூல்

புதிய நூல்

 வணக்கத்திற்குரிய நண்பர்களுக்கு

கிளேசியொவின் Le Procès -Verbal என்ற பிரெஞ்சு நாவல்  குற்றவிசாரணை( என்ற பெயரில் காலச்சுவடு பெளியிடுகிறது. ஜனவரி 17ந்தேதி திருவாளர்கள் பிரபஞ்சன் வெளியிட நண்பர் நாயகர் முதல் பிரதியைப் பெற்றுகொள்கிறார்

 நிகழ்ச்சி இடம் மற்றும் நேரத்தை பின்னர் அறிவிக்கிறேன்.

 அன்புடன்

நாகரத்தினம் கிருஷ்ணா

 

தாயகம் கடந்த தமிழ் -2014

தாயகம் கடந்த தமிழ்   –2014

              ஜனவரி-20-22

 

புரவலர் டாக்டர் நல்ல பழனிச்சாமியை தலைவராகக்கொண்டும் கவிஞர் சிற்பி, முனைவர் ப.க. பொன்னுசாமியை ஆகியோரின் வழிகாட்டுதலுடனும் இயங்கும் கோவை தமிழ் பண்பாட்டு மையம் ஆதரவில் ஜனவரி-20-22 தேதிகளில் தாயகம் கடந்த தமிழ்என்ற பெயரில் ஓர் கருத்தரங்கை ஏற்பாடுசெய்யப்படுள்ளது. திரு.மாலன். விழாக்குழுவின் தலைவர். வெளிநாடுகளிலிருந்து திருவாளர்கள் அ.முத்துலிங்கம், எஸ்.பொ. சேரன், ரெ.கார்த்திகேசு போன்ற படைப்பாளிகளோடு கல்விமான்களும், நவீன தமிழின் கணினி மேம்பாட்டிற்கு பெரும்பங்கினை அளித்துவரும் திரு முத்து நெடுமாறன் போன்றோர் கலந்துகொள்வதும் நிகழ்ச்சியின் சிறப்பு.

 பிற தகவல்களுக்கு தாயகம் கடந்த தமிழ் ‘2014, அதிகார பூர்வமான வலைத் தளத்திற்குச் செல்லவும்

http://www.webdesignersblog.net/tamil/amaippukkulu.php

உலக எழுத்தாளர் வரிசை -7: ரஸ்ஸல் பாங்க் (Russell Banks)

“வீடுமுறவும் வெறுத்தாலும் என்னருமை 220px-Russell_banks_2011
நாடு பிரிந்த நலிவினுக்கென் செய்கேனே” (பாரதியார்)

முதலாளித்துவமும் நவீன சமூக அமைப்பும் மென்று உமிழ்ந்த மனிதர்களிடத்தில் அக்கறைகொள்கிற படைப்பிலக்கியவாதி ஒருவர் அமெரிக்காவில் இருக்கமுடியுமெனில் அது அநேகமாக ரஸ்ஸல் பாங்க் ஆக மட்டுமே இருக்க முடியும். சொந்தநாடுகளைக் கடந்து பிறநாடுளின் இலக்கிய விமர்சகர்களால் ஏற்றுகொள்ளபட்டவர்களையே உலக எழுத்தாளர்கள் என அழைக்கிறோம்.  இவர்கள் அனைவருமே கைவசப்பட்ட மொழியைக்கொண்டு  தங்கள்  எடுத்துரைப்பில் உலக நடப்புகள் சிலவற்றுள் தங்களுக்குள்ள உடன்பாடின்மையைப் பதிவுசெய்கிறார்கள்.  ஆண்குறி பெண்குறி, உடல் உறவுகளுக்கு இரண்டு பக்கங்கள் என்பது போன்ற திட்டமிடல்கள் உலக எழுத்தாளர் தகுதியை நிர்ணயித்து விடாது. படைப்பு மானுடத்தின்மீது அக்கறை கொண்டதாக இருக்கவேண்டும். தமது அனுபவங்களுக்கு கலைவடிவம் கொடுப்பது மட்டுமல்ல, அக்கலை வடிவங்கள் ஊடாக உற்ற அனுபவத்தினைப்பற்றிய கருத்தையும் சாதுர்யமாக எடுத்துரைக்க வேண்டும். மகிழ்ச்சியை தெரிவிக்கத் தவறினாலும் ஏமாற்றம், நிராசை, அவநம்பிக்கை, சிறுமையின் அதிகாரம் ஆகியவற்றுக்கு எதிரான அறச்சீற்றத்தைப் பதிவுசெய்யும் பொறுப்பு வேண்டும்.

அமெரிக்காவை வல்லரசு என்றோ, பணக்கார நாடு என்றோ ரஸ்ஸல் பாங்க் ஒருபோதும் ஏற்றுக்கொண்டவரல்ல. அவரது புனகதைகள் பலவும் கிளிப்பிள்ளை போல திரும்பத் திரும்ப அக்கருத்தை வற்புறுத்தி வந்திருக்கின்றன. சமூகத்தால் கைவிடப்பட்ட மனிதர்களுக்கு ஆதரவளிப்பதே தமது எழுத்தின் குறிக்கோளென்று ரஸ்ஸல் செயல்படுகிறார். திக்கற்ற மனிதர்களே அவரது கதை மாந்தர்கள். கடைநிலைமனிதர்களின் தலைவிதியை எழுத்திலேனும் திருத்திவிடலாம் என்ற கனவுகளுடன் எழுதிக்கொண்டிருப்பவர். இரந்தும், கேட்பாரற்றும், வீதிகள் பாலங்களின் கீழ் உயிர் வாழ்க்கையின் அடிப்படை தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய வக்கற்று நடைபிணமாகித் திரிந்தலையும் மனிதர்களைப்பற்றியதாக அவர் புனைகதைகள் இருக்கின்றன.  ஒரு தொண்டு நிறுவனமாக தம்மை உருமாற்றிக்கொண்டு செயல்படும் தோற்றத்தை நமக்கு ஏற்படுத்தி தருகிறது. வன்முறை, வன்புணர்ச்சி, கொலை, களவு, களவாணித்தனம் ஆகிய குற்றப் பண்புகளைக் காட்டிலும் அக்குற்றத்திற்குக் காரணமான சமூகத்தைத் தண்டிப்பதில் அவருக்கு ஆர்வம்.  அவரைப் பொறுத்தவரை உணர்ச்சிக்குப் பலியாகி குற்றமிழைக்கிறவர்கள் தண்டனைக்குரியவர்களல்ல மன்னிக்கப்படவேண்டியவர்கள், அவர்கள் நோயாளிகள்: உரிய சிகிச்சைக்குக் காத்திருப்பவர்கள். சமூகத்தின் கயமைக்கு யார் பொறுப்பு, எப்படி நிகழ்கிறது, அதனை அளவிடுவதால் கிடைக்கும் நன்மை தீமையென்ன என்ற ஆய்வு நோக்கில் அவர் படைப்புகளை அணுகவேண்டும். சட்டமும் நீதியும் குற்றவாளிகளை தண்டிக்கமட்டுமே செய்கின்றன. பலியாடுகளுக்கு தங்கள் பாதுகாப்புகுறித்த பிரக்ஞயை உணர்த்தும் பொறுப்பு சமூகத்தின் பங்குதாரனான தனக்குமுண்டு என்றுணர்ந்து ரஸ்ஸல் வினையாற்றுகிறார்.

தண்ணீர் குழாய்ப் பழுதுபார்க்கும் தொழிலாளியான ரஸ்ஸலின் தந்தைக்குக் குடிபழக்கமும் உண்டு. சகோதரன் வியட்நாம் யுத்தத்தால் சீரழிந்து போனவன், மற்றொரு சகோதரன் சண்டையும் சச்சரவும் நிறைந்த குடும்ப மரபுப்படி, காணாமற் போகிறான். குடிகாரத் தந்தை, வறுமை, திக்கு தெரியாமல் பயணித்த பெற்றோர்கள், அவர்கள் இழைத்த கொடுமைகள் ஆகியவற்றிலிருந்து தப்ப நினைத்த ரஸ்ஸலுக்கு  வார்த்தைகள் ஒளிகீற்றாக அவர் சிறைவாழ்க்கைக்குள் நுழைந்தன. அக்காலங்களில், சிறுவன் ரஸ்ஸல்,   ஒத்த வயதினரிடம்  தேடிச்சென்று  அளந்த கதைசொல்லலுக்குக் கிடைத்த வரவேற்பு அவனை உறசாகமூட்டியது, குடும்ப நரகத்திலிருந்து விடுவிக்கும் பிராணவாயுவாகவும் அமைந்தது தொடர்ந்து ஆர்வமுடன் செயல்பட்டான். பின்னாளில் ரஸ்ஸல் சிறந்த படைப்பாளியாக உருவானதின் பூர்வாங்கக் காரணமிது. அவர் வரையில், “வார்த்தைகள் என்பது அர்த்தமற்றவைகளுக்குப் பொருள் தேடும் முயற்சி, நிஜத்தை  எட்ட நம்மை வழி நடத்தும் ஓர் அரூப சக்தி” தவிர “எழுத்திடம் அடைக்கலம் வேண்டுவது  சிறுமைகளிடமிருந்து தப்புவதற்கு அல்ல மாறாக அதனை அடக்கி ஆளவும், நெறிபடுத்தவும், நடந்த வற்றைச் சாட்சிப்படுத்தவும், இறுதியாக படைப்பாளி தனது மனதிற்கு உகந்த மாற்றுலகை கட்டி எழுப்புவதுமாகும் (1). பதினாறு வயதிலேயே தனக்கு மனதளவில் சிகிச்சை தேவைப்பட்டதெனவும் அதன் பொருட்டே சொற்களின் உதவியை நாடியாகவும் தெரிவிக்கிறார். ஆனாலும் அப்போதைக்கு அவரது முயற்சிகள் இலக்கியம் என்பதைக் காட்டிலும் ஒருவகை சுயதேடல்களாகவே இருந்திருக்கிறது. எழுத்தை கையிலெடுக்கிற பெரும்பான்மையோர்  சிறைவாழ்க்கையை தேர்வுசெய்து கதவை அடைத்து வாழ்கிற இந்நாளில், ரஸ்ஸல் எழுத்துகளென்ற சிறகை விரித்து விசும்பைத் தொட விரும்பினாராம் (1)

ரஸ்ஸல் பாங்க்கின் கதை மாந்தர்கள் விளிம்புநிலை மனிதர்கள். சமூகம் விலக்கிவைத்த கடை நிலை மனிதர்கள். இரந்தும், குற்றம் புரிந்தும் வீதியோரங்களிலும் பாலத்தின் அடியிலும் ஆதரவு கரம் தேடி வாழும் உயிர்களாகவே அவர்களைச் சந்திக்கிறோம். தங்கள் ஆசைகளுக்குத் தடங்கல்களாக இருக்கிற வாழ்க்கை முறை, வரையரைகளுடன் கூடிய கனவுகள், எதிர்கொள்ள முடியாத சக்திகள் தரும் நெருக்கடி ஆகியவற்றைப் பற்றிய புரிதலெல்லாம் அவர்களுக்கு நிறையவே உண்டு. இம்மனிதர்களின் தலைகளின் சுமையாக இருப்பது, அவர்களின் பெற்றோர்கள், அவர்கள் பூர்வீகம் அதாவது அவர்களை இன்னார் வழிவந்தவர்கள் என அறிமுகப்படுத்தும் ‘இன்னார்கள்’ இவர்கள் மீது பெரும் பாரத்தை இறக்கியிருக்கிறார்கள். என்னதான் உழைத்தாலும், சோபித்தாலும் ‘இன்னார்’ என்ற சொல் அவர்கள் தலை விதியைத் தீர்மானிப்பதாக இருக்கிறது. இதனுடன் சமூகத்துடனான அவனுடைய கொடுக்கல் வாங்கல்கள், இயற்கையை எதிர்கொள்ள முடியாத பலவீனம், மூலதன உலகின் அமைப்புமுறையென வேறு பல காரணிகளும் கால்களைப் பிணைக்கின்றன.  எனினும் சிறிதுகூட இரக்கமற்ற சமூகப்பாட்டையில் தட்டுத் தடுமாறியோ, நொண்டிக்கொண்டோ, அவ்வப்போது விழுந்தெழுந்தும் மெல்ல என்றாலும் தொடர்ந்து நடக்கவே செய்கிறான். நீந்தத் தெரியாதவனைக் காப்பாற்ற முனைவதிலுள்ள சங்கடம் வாசிக்கிறபோது  ஏற்படுகிறது. அவன் மூழ்குகிறபோது அவனுடன் சேர்ந்து  மூழ்குகிறோம், அவன் நீர்மட்டத்திற்கு மேல் வந்து மூச்சுவிடும்போது,  வாய்கொள்ள காற்றை உள்வாங்கி ஆசுவாசப்படுத்திக்கொள்கிறோம். “நவீன உலகு ஆக்ரமித்துள்ள மனிதர்களின் இயல்பான நடவடிக்கைகள் ஊடாகவே பிரபஞ்ச உண்மைகளை நாவலாசிரியர்கள் நிலைநிறுத்த விரும்புகிறோம், அவற்றை தொடர்ந்து உயிர்ப்பிக்கவும் நம்மால் முடியும்”(2) என்று கூறும் ரஸ்ஸல் அம்மனிதர்களை தனது கதையாடலைக்கொண்டு தொடர்ந்து இயங்கச் செய்கிறார்.

அண்மையில் (2012) பிரெஞ்சு மொழிபெயர்ப்பில் வெளிவந்த ரஸ்ஸல் பாங்க்கின் நாவல் Lointain souvenir de la peau (3) (Lost memory of skin). இநாவலில் ரஸ்ஸலின் கவனம் பாலியல் குற்றவாளிகள் பக்கம் சென்றிருக்கிறது.  ரஸ்ஸலை பொறுத்தவரை குற்றவாளிகளைக்கொண்டே ஒரு சமுதாயத்தின் ஆரோக்கியத்தை அளக்க முடியும். வெப்பமானி, பால் மானிபோல சமூகத்தின் நோயை அளக்க உதவுபவர்கள் அவர்கள். இப்பாலியல் குற்றவாளிகளைத் தங்களின் ஒரு பிரிவினர் என்பதை பெரும்பாலோர் ஏற்பதில்லை. அந்தப் பிறருக்கு இவர்களெல்லாம் சமூகத்தை சீரழிக்கும் புல்லுருவிகள், ஊருக்கு ஒதுக்குப்புறமாய் வாழவேண்டியவர்கள். நடுத்தர அல்லது பணக்கார குடும்பங்களின் வம்சாவளியில் வந்தவர்களாக இருப்பின் அவர்களை அமெரிக்க்காவின் முதுகெலும்பென கொண்டாடுவர், அரசும் அவர்கள் வாழ்வில் அக்கற்றை கொண்டிருக்கும். இவர்கள் அருவருப்பான சாக்கடை புழுக்கள் என்ற எண்ணத்துடன் பாலியியல் குற்றவாளிகளுக்கென ஒரு காலனியை (ரஸ்ஸல் கற்பனையின்படி)உருவாக்குகிறது, தவிர அவர்கள் கண்ணிற்படும் சிறுவர் சிறுமியர்கூட பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாகலாம் என்கிற அச்சத்துடன்  மக்கள்  குடியிருப்புகளிலிருந்து காலனியை குறைந்தது 760 மீட்டர் தள்ளி அமைக்கவேண்டும் என்ற நியதிப்படி உருவான காலனி அது. அங்கு குற்றவாளிகளைக் கண்காணிக்க மின்னணு காப்புகள் இல்லை. பதிலாக உலோக குண்டுகளுடன் கூடிய சங்கிலியாலான தளை.

கதை நாயகன் லெ கிட் இருபத்திரண்டு வயது இளைஞன். செய்த குற்றத்திற்கு மூன்று மாத சிறை தண்டனை அனுபவித்துவிட்டு  காலனி வாழ்க்கைக்கு வருகிறான். அவன்செய்தகுற்றம் வலைத்தளத்தில் பாலியல் தொடர்பான படங்களைப் பார்ப்பது,.  போலீஸார் விரித்த வலையில் வெகு எளிதாகச் சிக்கப் போதுமானதாக இருக்கிறது. தந்தையை இழந்தவன், தாய்க்கு மகனைக் காட்டிலும் வேறுவகையான தேவைகள் இருக்கின்றன.புறக்கணிக்கப்ட்ட  ‘கிட்’ போர்னோ போதைக்கு அடிமையாக நேர்ந்தது அவ்வகையில் தான். தண்டனைப்பெற்று திரும்பும் மகனை தாய் வெறுத்த நிலையில் அவனுக்கென்று கிடைத்த ஒரே ஆதரவு அவன் வளர்க்கிற பச்சோந்தி., அதனுடன்தான் அவன் வளர்ந்தான். பாலத்தின் கீழிருக்கும் குற்றவாளிகள் சேரியில் இவனைப்போல சங்கிலிக்குண்டை சுமந்து அரசுக் கண்காணிப்பின்கீழிருக்கும் நண்பர்கள் கிடைக்கிறார்கள், பொழுதும் போகிறது. அங்குதான் ஒருநாள் மாமிச மலைபோன்ற ஒரு சமூகவியல் பேராசிரியரைச் சந்திக்கிறான். பேராசிரியருக்கு நடுத்தெரு நாராயணர்களிடம் அக்கறை கொள்ள காரணம் இருக்கிறது, அவர் செய்யும் ஆய்வுக்கு அவர்கள்தான் பொருள். ஆக லெ கிட் அவருடைய ஆய்வுக்கு உதவமுடியுமென நம்புகிறார். இவர்கள் இருவரையும் கொண்டு எஜமானரான ரஸ்ஸல் தனது வேட்டையைத் தொடங்குகிறார். அவருக்கு குறி அமெரிக்காவின் அரசியல். ஒரு பக்கம் பாலியல் தொடர்பான வங்கிரங்களுக்குக் காரணமாக இருந்துகொண்டே இன்னொரு பக்கம் ஏமாந்த மனிதர்களைத் தண்டிக்கும் சொந்த நாட்டின் அரசியலை வழக்கம்போல மிகக் கடுமையாக ரஸ்ஸல் விமர்சிக்கிறார்.

குறைந்த பட்ச அன்பைக்கூட அறிந்திராத  ரஸ்ஸல் பான்க்கின் கதைமாந்தர்கள்  நிராதரவான நிலையில் நாவலெங்கும் அன்பிற்கு ஏங்குவதை உணரமுடிகிறது. மனம் இளகுகிறது. விழியோரங்களில் நீர்கசிவதை தடுக்க இயலவில்ல. ஏன் சிலருக்கு மட்டும் இப்படியான வாழ்க்கை? அவர்கள் செய்த குற்றமென்ன?  இச்சமூகத்திற்கு அதில் பங்கில்லையா? ரஸ்ஸல் மட்டும் கேட்கவில்லை நமக்குள்ளூம் கேட்டு அழுது புரளுகிறோம். அதுதான் எழுத்தின் வெற்றி.

வெளிவந்துள்ள படைப்புகள்:

பன்னிரண்டு நாவல்கள்

Family Life (1975)
The Sweet Hereafter(1991)
The Rule pf the Bone (1005)
Affliction(1989)
Lost Memory of Skin (2011)
அவற்றுள் முக்கியமானவை.

சிறுகததைகள் 6 தொகுப்புகள் வந்துள்ளன
Searching for survivors (1975)
The Angel on the Roof (2000)

இரண்டு கவிதை தொகுப்புகள்

இவற்றை தவிர அவரது படைப்புகள் திரைவடிவமும் பெற்றுள்ளன. ‘Affliction’ முக்கியமான திரைப்படம்

——————————————————-

1. Transfugeஇதழுக்கு (Sep.2005) அளித்த செவ்வி  ஒன்றில்

2. Le Magazine Littéraire, page 16 (août 2012)

3. Lointain souvenir de la peau, Russel Banks, Traduit de l’anglais (Etats-unis) par Pierre Furlan -Edition Actes Sud

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் புதிய நூல்கள்

inviஎதிர்வரும் டிசம்பர் 8 காலை திருச்சி கலைஅரங்கில்  நண்பர்  எஸ். ராமகிருஷ்ணனின் பத்து நூல்கள் வெளீயீட்டு விழா நடபெற உள்ளது. நண்பர்கள் திறளாக கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்க வேண்டப்படுகிறார்கள்

நிகழ்ச்சி ஏற்பாடு களம் மற்றும் உயிர்மை பதிப்பகம்
—————–

அணு உலை எதிர்ப்பு கவிதைப் போட்டி? கடைசி நாள் : 31.12.2013.

தலைப்பு : கூடங்குளம்: ஏன் இந்த உலை வெறி?

1. கவிதை எந்தப் பா வகையிலேயும்
(புதுப்பா, மரபுப்பா) இருக்கலாம்.

2. 24 வரிகளுக்கு  மிகாமல் இருக்க வேண்டும்.

3.    அணுஉலை எதிர்ப்புக் கருத்துகளை உள்ளடக்கிய கவிதைகளை            மட்டுமே அனுப்புக!

4. கடைசி நாள் : 31.12.2013.

5. உங்களின் தெளிவான அஞ்கல் முகவரி,
மின்னஞ்சல் (e-mail),
அலைப்பேசி விவரங்களைக் குறிப்பிடுக.

பரிசுத் தொகை
முதல் பரிசு உருவா 500
இரண்டாம் பரிசு உருவா 300
மூன்றாம் பரிசு உருவா 200
நான்காம் பரிசு உருவா 100
(5 நான்காம் பரிசுகள்)

பரிசுகள்   நூல்களாக  மட்டுமே  வழங்கப்படும்

அனுப்பவேண்டிய முகவரி:

நாளை விடியும்
7ஆ,எறும்பீசுவரர் நகர்,
மலைக்கோயில் தெற்கு,
திருவெறும்பூர்,
திருச்சிராப்பள்ளி (மா) – 620013.
மின்னஞ்சல் : naalaividiyum@gmail.com

www.naalaividiyum.blogspot.com

www.periyaariyal.blogspot.com

www.ambethkariyam.blogspot.com

www.penniyakkural.blogspot.com

www.aravaanigal.blogspot.com

www.jothidamosadi.blogspot.com

www.saibabamosadigal.blogspot.com

www.thamizhpeyargal.blogspot.com

www.anuulaiethirppu.blogspot.com