Monthly Archives: ஜனவரி 2016

காஃப்காவின் நாய்க்குட்டி – மஜ்ஜையின் ருசி- ரா. கிரிதரன்

Giri

(திரு. ரா. கிரிதரன் புதுச்சேரியைச் சேர்ந்தவர். தற்போது இலண்டனில் பணியாற்றி வருகிறார். வளர்ந்து வரும் நல்ல சிறுகதை எழுத்தாளர். இருபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், குறு நாவல்கள் எழுதியுள்ளார் கர்னாடக சங்கீதம் – ஓர் எளிய அறிமுகம் எனும் நூலை தமிழாக்கம் செய்துள்ளார். சொல்வனம் இணைய இதழில் வெளிவந்த ‘ நந்தா தேவி’ சிறுகதை இவரது எழுத்தாளுமைக்கும் கதைசொல்லலுக்கும் நல்ல உதாரணம், தமிழுக்குப் புதிது. சொல்வனம், காந்தி டுடே இணைய இதழ்களிலும; வார்த்தை, வலசை சிற்றிதழ்களிலும் படைப்புகளைக் காணமுடியும். பதாகை இணைய இதழ் இரண்டுவாரங்களுக்கு முன்பாக பாவண்ணன் சிறப்பிதழாக மலர்ந்திருக்கிறது. இதழ் நன்கு வரப்பெற்று பாவண்ணனுக்குப் பெருமை சேர்த்திருக்கிறது. இதழின் பொறுப்பாசிரியர் ரா.கிரிதரன். பிறந்த மண் புதுச்சேரிக்குப் பெருமை சேர்க்க உள்ள அன்புத் சகோதரர்.http://solvanam.com/?author=25 ; http://beyondwords.typepad.com)

காஃப்காவின் நாய்க்குட்டி – மஜ்ஜையின் ருசி

– ரா. கிரிதரன்

Kaafkaavin Naaikkutti Wrapper
இலண்டனிலிருக்கும் முக்கியமான சுற்றுலாத்தளங்களில் ஒன்றான டிரஃபால்கர் சதுக்கத்திற்கு ஓர் இருள் கவியும் நேரத்தில் சென்றிருந்தேன். உலக முகங்களில் சகல தினுசுகளும் பார்க்கக் கிடைக்குமிடம். புன்னகைக்கும் ஐரோப்பிய முகங்கள், புகைப்படமெடுத்து இருட்டை வெளிச்சத்தில் ஆழ்த்தும் சீனர்கள், காதலர்கள், மெத்ரோ பிடிக்க ஓடும் அலுவலகர்கள், சண்டை பிடிக்கும் அம்மா மகள், வாத்தியக்கருவி இசைப்பவர்கள் என ஒரு புத்துலகில் பிரவேசித்தது போலொரு நெகிழ்வுக்கூடல். சிங்கங்களின் சிலைகளுக்குப் பின்னே தெரிந்த ஆளுயரத் தொட்டிகளிலிருந்து நீரூற்று நடனத் துளிகளில் குழந்தைகளின் சந்தோஷங்கள் பல்லாயிரமாகத் தெறித்தன. உலகத்திலேயே மிகவும் அழகான சதுக்கம் எனத் தோன்றியது. அழகானப் பொழுதும் கூட. இவற்றுக்கு நடுவே ஆங்காங்கே தனிமையில் பிரக்ஞையற்றுச் சுற்றும் சிலரும் தெரிந்தனர். நாம் அறிந்த சில முகங்கள் – பங்களாதேஷ், பாகிஸ்தான் சில சமயம் இந்தியா போன்ற நாடுகளிலிருந்து பிழைப்புக்காக வந்து தனித்துச் சுற்றுபவர்களும் இருந்தனர். அவர்களது தனிமை அந்த சதுக்கத்தின் குதூகலத்தில் கரைந்துகொண்டிருந்தது. பிறிதொரு நாள் அதிகாலை ஐந்து மணிக்கு அதே இடத்துக்கு வரநேர்ந்தது. நீரூற்று சலனமற்றுக் கிடந்தது, தெருவிளக்கிலிருந்தும் கடைகளிலிருந்தும் வெளிப்பட்ட நியான் வெளிச்சம் கருங்கல் சுவர்களில் மோதிப்படர்ந்திருந்தன. காற்றின் ஓசையைத் தவிர வேறெந்த சத்தமும் இல்லை. அழும் குழந்தை கையில் அது வேண்டியதைத் திணித்தது போல நிசப்தம். அங்கொன்றும் இங்கொன்றுமாய் கடை வாசல்களில் சிலர் மூட்டை போல குளிருக்குச் சுருண்டு படுத்திருந்தனர். வெறும் தனிமை மட்டுமே இருந்தது.

நாகரத்தினம் கிருஷ்ணா எழுதிய ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ நாவலைப் படித்து முடித்தபோது என்னையும் அப்படிப்பட்ட தனிமை சூழ்ந்தது போலுணர்ந்தேன். கும்மாளங்களும், குதூகலங்களும் முடிந்த பிற்பாடு வரும் தனிமை அல்ல இது. நம் கண்முன்னே திரிந்த மனிதர்கள் அவரவர் தேடல்களைத் தொடரத்தொடங்கிவிட்டதில் நம்மை சூழும் தனிமை. அப்படியாகப் படிக்கும்தோறும் சந்தோஷத்தைக் கொடுத்த படைப்பு. அதற்குப் பல காரணங்கள் உண்டு; குறிப்பாக, புதுவிதமானக் களத்தில் சொல்லப்பட்ட அகப்பயணம் பற்றிய கதையாக நாவல் இருந்தது ஒரு காரணம். நாவலில் வரும் சின்னச் சின்ன பாத்திரங்கள் கூட துல்லியமாகத் துலங்கி வந்து நம்முடன் இருந்தது அடுத்த முக்கியமான காரணம். எனக்கு சந்தோஷத்தைத் தந்தது என்பதால் கதை மிக இலகுவான சிக்கலைப் பற்றிச் சொல்கிறது என நினைக்கவேண்டாம். மனித வாழ்வின் அவலத்தைப் பற்றிப் பேசும் ஒரு படைப்பு படிப்பவர் மனதில் ஆகப்பெரிய தாக்கத்தை அபத்தத்தின் வழியே உருவாக்க முடியும் என்பதைக் காட்டும் படைப்பு. ஒரு நவீன நாவல் இம்மூன்று முக்கியமான தளங்களையும் கணக்கில் கொண்டு சுவாரஸ்யமான வாசிப்பு அனுபவத்தைத் தரமுடியும் என்பதற்கு உதாரணம் இந்த நூல்.

‘நீலக்கடல்’, ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கெளமுதி’, ‘சன்னலொட்டி அமரும் குருவிகள்’, ‘எழுத்தின் தேடுதல் வேட்டை’ போன்ற புத்தகங்களுக்குப் பிறகு நான் படிக்கும் அவரது நாவல். முதலிரண்டு நாவல்களும் மிகவும் சம்பிரதாயமான கூறுமுறையில் எழுதப்பட்டவை. ‘நீலக்கடல்’ பிரெஞ்சு ஆட்சியின்போது மொரீசியஸ் தீவில் நடந்த தமிழர் காலனியாதிக்கத்தைப் பின்புலமாக வைத்து எழுதப்பட்ட வரலாற்று நாவல். பலவிதங்களில் இந்த நாவல் தமிழ் நவீன இலக்கியத்துக்கு முன்னோடியாக அமைந்திருக்கிறது. காலனியாதிக்கத்தைப் பற்றி நவீன வரலாற்றுப் பிரக்ஞையுடன் எழுதப்பட்ட முதல் நாவல் என இதை வகைப்படுத்தலாம். குறிப்பாக பிரஞ்சு காலனியாதிக்கம் உலக சரித்திரத்தில் மிகவும் கோரமான பக்கத்தைக் கொண்டது. நமது புதுச்சேரி முன்னோர்கள் இதை நேரடியாக அனுபவித்தவர்கள். பிரஞ்சு காலனியாதிக்கம் பிரிட்டீஷ் ஆட்சியை ஒப்பிட்டால் அதிக வன்முறையற்றது எனும் பொதுப்பிம்பத்தை பிரபஞ்சனின் ‘வானம் வசப்படும்’, ‘மானுடம் வெல்லும்’ போன்ற நாவல்கள் கோடிட்டுக் காட்டியது என்றால் நீலக்கடல் அக்காலகட்டத்து வாழ்க்கையை வாழ்ந்து காட்டியிருக்கும் ஒரு ஆழமானப் படைப்பு எனலாம். சரித்திரக் கதையில் அமைந்திருக்கும் காதல், வீரம் போன்ற ஒற்றைப்படையான மிகை உணர்வுகளைத் தாண்டி வரலாற்று பூர்வமாக மனித அவலத்தையும், ஆதிக்கத்தின் கரிய பக்கத்தையும் காட்டிய நாவல்.

எழுத்து முறையில் ‘நீலக்கடல்’ செவ்வியல் பாணியை ஒத்திருந்தது என்றால் ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ பின்நவீனத்துவத்தின் கூறுமுறையை ஒத்திருக்கிறது எனலாம். எழுத்துமுறையில் ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ அடைந்த பாய்ச்சலைக் காட்டுவதற்காக சொல்லப்பட்ட இந்த ஒப்பீடு அன்றி பின்நவீனத்துவ பாணியில் மையமற்று சொல்லப்பட்ட கதையாக இருக்கிறது எனும் அர்த்தத்தில் அல்ல. மிகத் திட்டவட்டமான மையமும், வாழ்க்கை தரிசனமும் ஒருங்கே அமைந்திருப்பதால் சில புனைவுக் கற்பனைகளையும் (பேசும் நாய்க்குட்டி) மீறி யதார்த்தத்தில் ஊறிய படைப்பாகவே அமைந்திருக்கிறது. அண்மைக்காலத்தில் இத்தனை சுவாரஸ்யமாக எழுதப்பட்ட மிகச் சொற்பமான நாவல்களில் இதுவும் ஒன்று என்பதும் இதன் பலம்.

மனித வாழ்க்கை துவங்கிய நாளிலிருந்து சந்திக்கும் சிக்கல்களான இடப்பெயர்வு,மனித உறவுகள் மீதான அதிகாரம் தரும் தத்தளிப்பு போன்றவற்றிலிருந்து விடுதலையைத் தேடி அலையும் மனிதர்களின் கதை இது. புதுச்சேரியிலும், யாழ்ப்பாணத்திலும், பிரான்ஸிலும், பிராஹாவிலும் நடக்கும் கதையாக அமைந்திருந்தாலும் மனிதர்கள் சந்திக்கும் சிக்கல்களில் பெரிய மாற்றமொன்றும் இல்லை. விடுதலை வேட்கை அரிக்காத மானுடனே கிடையாது எனும்போது தேசக்கட்டுப்பாட்டால், உறவுகளின் துஷ்பிரயோகத்தால், நெருங்காத உறவின் உஷ்ணத்தால் சிறைபட்டிருக்கும் மனிதன் பெறத்துடிக்கும் முதல் கைவிளக்கு விடுதலை. அதற்கானத் தேடுதலில் அலைபவர்கள் விலையாகக்கொடுப்பது என்ன? கொடுத்த விலைக்குக் கிடைத்த சுதந்திரம் மதிக்கத்தக்களவு இருக்கிறதா அல்லது மற்றொரு சிறையா? சிறையிலிருந்து சிறை, அங்கிருந்து வேறொரு தங்கக்கூண்டு என வழிதெரியாத இருட்டுக் குகைக்குள் கடக்கும் மானுட வாழ்வின் மதிப்பென்ன?

இந்த நாவலின் நித்திலா, ஹரிணி, கமிலி, வாகீசன், சாமி என ஒவ்வொருவரும் கற்பனாவாதிகள், தேடுதலில் ஈடுபடுபவர்கள், ஏமாளிகள் என நமக்குத் தோன்றிய வகையில் வகைப்படுத்தலாம். அவர்கள் தேடும் ஒவ்வொரு விஷயமும் ஏதோ ஒரு உயர்ந்த லட்சியத்தை நோக்கிய பயணமாக இருப்பதில்லை. தங்கள் சொந்த இருப்பை ஸ்திரப்படுத்திக்கொள்ள, வாழ்வின் குழப்பங்களுக்குத் தீர்வு ஏற்பட, உறவுச்சிக்கல்களிலிருந்து விடுபட என லட்சியங்கள் மண்ணில் பாவித்து பல சமயம் பிறர் காலடியிலும் தேய்ந்துவிடுகிறது – அக்காவின் புருஷனால் திருமணத்துக்குத் துரத்தப்படும் நித்திலா போல. ஏதோ ஒரு வகையில் எல்லாரும் விடுதலைக்காக ஏங்கி நிற்பதோடு மட்டுமல்லாது தங்களது ஸ்வாதீனமான இருப்பிடத்தை விட்டு விலக வேண்டிய அவசியத்துக்கும் உள்ளானவர்கள்.

நேர்கோட்டு பாணியில் அல்லாது கதை ஒவ்வொரு கதாப்பாத்திரங்களினூடாகத் தாவித்தாவி செல்கிறது. அப்படித் தாவிச் செல்வதிலும் ஒரு ஒழுங்கு அமைந்திருக்கிறது. தனது காதலன், அக்கா கொடுத்த தகவலின்படி தன்னைத் திருமணம் செய்யப்போகும் வாகீசனைத் தேடி இலங்கைவாசியான நித்திலா ஐரோப்பிய பிராஹா நகரத்தை வந்தடைவதிலிருந்து கதை தொடங்குகிறது. மிகச் சரியான இடம்தான். கதையில் தொடக்கத்தில் கொடுக்கப்படும் தேதிகளுக்கும் ஒரு முக்கியத்துவம் உள்ளது – 2013, ஏப்ரல் 6 ஆம் தேதி நடக்கும் கதையாகத் தொடங்குகிறது. நித்திலா ஓரு முன்னாள் போராளி. இலங்கை உள்நாட்டுப்போரின் இயக்கத்தில் பயிற்சி எடுத்தவள். போர் முடிந்து மறுசீரமைப்பின்போது இலங்கை அரசால் புகலிடம் கொடுப்பட்டாலும், இயக்கத்தில் ஈடுபட்டதை மறைத்ததினால் விசாரணைக்குத் தேடப்படும் குற்றவாளி. பிரான்ஸிலிருக்கும் அக்காளும் மாமாவும் அழைத்ததன் பேரில் வந்துவிடுகிறாள். பிராஹா நகரில் தன்னந்தனியாக வாகீசனைத் தேடி அலைவது எதனால்? ஹோட்டலில் வேலை செய்யும் வாகீசன் ஒரு எழுத்தாளனாக ஆசைப்படுபவன். பிராஹா நகரில் பிரான்ஸ் காஃப்காவின் நினைவிடங்களில் நேரத்தைக் கழிக்க விருப்பப்படுபவன் – பிராஹா வருவதற்கான முகாந்திரங்கள் கச்சிதமாக அமைந்திருக்கும் தொடக்கம்.

சார்லஸ் பாலமும், வெல்ட்டாவா நதியும் பிராஹாவின் பிரதானமான அடையாளங்கள். சார்லஸ் பாலம் பழைய பிராஹாவை நவீனப் பகுதியோடு இணைக்கும் மிக முக்கியமான இடமாகும். வெல்ட்டாவா நதியைத் தாண்டி நிற்கும் பாலம் நெடுக கருங்கல் சிற்பங்களும், நவீன விளக்குகளும் பொருத்தப்பட்டு சுற்றுலா மையமாகக் காட்சி அளிக்கிறது. இந்த நாவலில் வெல்ட்டாவா நதியும் இந்த பாலமும் தேடுதலின் தவிப்பைக் காட்டும் படிமமாக உருவாகியுள்ளது. பிராஹா நகரில் வாகீசனைத் தேடும் நித்திலா பாலத்தைக் கடக்கும்போது அங்கு படகு கவிழ்ந்து ஒரு ஜோடி இறந்துவிட்டதை அறிகிறாள். கூடவே ஒரு வயதான இந்தியர் அவளைப்பார்ப்பதை கவனிக்கிறாள். இவர்கள் அனைவரையும் ஒரு நாய்க்குட்டி பார்ப்பதையும் கண்டுகொள்கிறாள். வண்ண ராட்டினத்தைச் சுற்றும்போது வெள்ளையும் வண்ணங்களும் சேர்வதும் பிரிவதுமாகக் கண்ணுக்குத் தெரிவது போல இங்கிருந்து ஒவ்வொரு கதாபாத்திரமும் துலங்கி எழத்தொடங்குகிறது. அவ்வப்போது அவர்களது தேடுதலின் தீவிரம் அதிகரிக்கும்போது பிராஹா நகரின் சார்லஸ் பாலத்தின் மீது அவர்களது வாழ்க்கைப் பயணம் குறுக்கும் நெடுக்குமாகக் கடப்பதுமாக அமைகிறது.

இந்த இடத்தில் ஒரு நேர்கோட்டான பாதையில் செல்லாமல் ஒரு புதிர்வட்டப்பாதையில் செல்லும்படி ஆசிரியரைத் தூண்டியிருக்கும் விஷயங்களைப் பற்றி எண்ணிப்பார்க்கிறேன். கன்னியாகுமரியில் பெண்ணாசையால் வாழ்வைத் தொலைத்து பின் சுதாரித்து மீண்டவர் பிள்ளைகள் பெரியவர்களானதும் அதே பெண்ணின் ஒப்புதலில் திடுமென வாழ்விலிருந்து நிராயுதபாணியாக நீக்கப்படும் சாமியின் சித்திரம். புதுச்சேரிக்கு சுற்றுலா செல்லும் பிரான்சு தேசத்து எலிஸபெத்தும் தமிழனும் இணைந்த புதிர் நொடியில் உருவாகிப்பிறந்த ஹரிணி ஒரு புறம். மாமனின் துன்புறுத்தலைத் தவிர்க்க திருமணம் செய்ய ஏற்பாடு செய்திருப்பதாக நம்பி வரவழைக்கப்பட்ட வாகீசனைத் தேடி நித்திலாவின் பயணம் ஒரு திசையில். ஊருக்குத் திரும்ப முடியாது எழுத்தாளனாகவும் ஸ்திரப்பட முடியாது ஹோட்டலில் காலத்தைக் கழிக்கும் வாகீசன் விசா சிக்கலுக்காகத் திருமணம் செய்துகொள்ளும் வாழ்க்கை. இவையனைத்தையும் இணைப்பது அவர்களது இருத்தலின் மீதிருக்கும் ஆதாரப்பிடிப்பு. இவர்கள் அனைவரும் முன்னர் வாழ்ந்த வாழ்வைவிட மேலான ஒன்றை அடையும் முயற்சியில் நம்மைப்போன்றவர்கள் தாம். ஆனால் அவர்களின் நிஜ உலகம் ஒரு நாய் வேட்டைக்களம். புதைகுழி. வீழ்ந்தால் மீளமுடியாத நிலையில் இந்தப்பயணம் அவர்களது ஜீவமரண முடிவைத் தாங்கிய ஒன்று.

ஒன்றுடன் ஒன்று முற்றிலும் வேறுபட்ட கதையாக அமைந்தாலும் அவர்களது வாழ்க்கை லட்சியம் ஓருடலாக்குகிறது. அவர்களது வாழ்விலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பக்கங்களை அடுத்தடுத்த பகுதிகளாகப் படிக்கும்போது நமக்கு எந்தவிதமான குழப்பமும் ஏற்படுவதில்லை. சொல்லப்போனால் நித்திலா வாழ்வில் வரும் சிறு வெளிச்சம் ஹரிணியின் வாழ்வைக் காட்டுகிறது. நித்திலாவுக்காக மொழிபெயர்ப்பாளராக வரும் ஹரிணியின் போராட்டம் அவளது அம்மாவுடனான சங்கமத்துக்கு உதவுகிறது. அம்மாவிடம் கொஞ்சமும் உதவி கேட்கக்கூடாது எனும் வீறாப்புடன் வாழ்ந்து வருபவள் நித்திலாவின் விசா சிக்கலுக்காக நாடு கடத்துவதைத் தவிர்ப்பதற்காக எலிஸெபத்துடன் பேசத்தொடங்குகிறார். ஹரிணியின் அம்மாவோடு ஒரு புது பிணைப்பு உருவாகிறது. அதே போல, கொடூர வாழ்விலிருந்து நித்திலாவை மீட்கப்போராடும் வாகீசன் தனது விசா சிக்கலைத் தீர்ப்பதற்காக ஒரு பிரான்ஸ் நாட்டுப்பிரஜையைத் திருமணம் செய்ய வேண்டியிருக்கிறது. இப்படி ரிலே ரேஸ் போல சக மனித உறவுகளுக்குள் இருக்கும் முடிச்சுகளை இன்னும் சிக்கலாக்கி பாத்திரங்களை பகடைக்காயாக மாற்றியிருக்கிறார் ஆசிரியர். அவர்களை நன்றாகவே அலைக்கழிய வைக்கிறது.

ஜன்னலில் விரையும் சொட்டு நீரைப்போல ஏதோ ஒரு நிதானத்துக்கு வரத்துடிப்பது போல ஏனோ இந்த கதாபாத்திரங்களுக்கு வாழ்வு அமைந்துவிட்டது. சடசடவென ஒரு குழிக்குள் விழுவதும் பின்னர் நிதானமாக எழுந்து முழு சக்தியைத் திரட்டி தேடுவதுமாக வாழ்வைக் கழிக்கிறார்கள். அந்தத் தேடுதலும் தகுந்த முடிவைத் தருவதில்லை. சிலர் தேடுதலுக்காகவே பிறந்தவர்கள் – அவர்களது இயல்பு தங்கள் இயல்பை சந்தேகிப்பது. அங்கிருந்து நகர்வதும் அலைவதும் மட்டுமே.

“ஹரிணி தான் உட்கார்ந்திருந்த சோபாவிலிருந்து எழுந்து, எலிஸபெத்தின் கைகளைப் பிடித்து மண்டியிட்டிருந்தாள். எலிஸபெத் சோபாவிலிருந்து இறங்கினார். அவள் முகத்தை தனது மார்பில் சேர்த்து அணைத்தார். வெதுப்பான ஹரிணியின் கண்ணீர் எலிஸபெத்தின் சன்னமான மேலாடையை நனைத்து மார்பைத் தொட்டது. அவள் கைகள் மேலும் இறுகின. இரு பெண்களின் விம்மலும் தேம்பலும் வெகுநேரம் அங்கே கேட்டது”

பல கதாபத்திரங்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் இந்த நாவலின் வெற்றி அவர்களுக்கிடையே இருக்கும் அக ஆழத்தை சரியான அளவு காட்டியதில் இருப்பதாகத் தோன்றியது. ஒருவிதத்தில் ஒருவரது செயல் மற்றொருவரின் தேவையை நிரப்புகிறது. அதன் மூலம் இருவரும் அகவிடுதலையில் அடுத்த கட்டத்தை அடைகிறார்கள். புதுத் தளம் புதுச் சிக்கல்கள். கதாபாத்திர வார்ப்பினால் மட்டுமே உருவான இணைப்பு மட்டுமல்ல, இந்த நாவலின் அடியாழத்தில் அதிகாரத்துக்கும், விடுதலைக்கும் உண்டான இழுபறி ஆட்டமும் ஒரு காரணம். சொல்லப்போனால், நாவலின் தரிசனம் இந்த இழுபறி ஆட்டத்தில் அமைந்திருக்கிறது.

இலங்கையில் போர் முடிந்து சீரமைப்பு நிலைமைத் தொடங்கியதில் பாதிக்கப்பட்ட பல அகதிகளில் நித்திலாவும் ஒருத்தி. போர் நின்றுவிட்டால் அகதியாக காலத்தைக் கழிப்பவர்கள் தங்களது சொந்த நாட்டுக்குத் திரும்பவேண்டும் என்பது அரசு விதி. அது எப்படி நடக்கிறது என்பதை அந்த விதி பார்ப்பதில்லை. நன்னடத்தை விதிகளால் அரசியல் அகதிகளுக்கு இடம் கொடுக்க இருக்கும் சுதந்திரம் அதைப் பறிக்கவும் அரசுக்கு வழிவகுக்கிறது. நித்திலாவின் சுதந்திரம் இந்த அதிகாரத்தின் முனையில் ஊசலாடுகிறது. ஆனால் அரசு குடியுரிமைச் சிக்கலை சரிசெய்தாலும் மத்யூஸ் மாமனின் தொந்திரவிலிருந்து அவளுக்கு விடுதலை கிடையாது. அதை வாகீசன் கையில் அவள் ஒப்படைத்தால், அவனும் ஒரு சூழ்நிலைக் கைதி என்பதை அறியாமலேயே. சுதந்திரம், சமத்துவக்கனவை கனவாகவே வைத்திருக்கும் பிரான்ஸில் சுதந்திரம் என்பது பண்டமாற்று முறையைப் போன்றது என்பதை நித்திலா, வாசீகன், ஹரிணி வாழ்க்கை நிரூபிக்கிறது என்றால் கன்னியாகுமரியிலிருந்து, பிராஹா வந்தாலும் ஆன்மசுதந்திரம் என்பது தேடிக்கொண்டே இருக்கும் நித்திய பயணம் மட்டுமே என்பதை சாமி காட்டுகிறார்.

இத்தனை உள்ளடுக்குகளைக் கொண்ட நாவலை நாகரத்தினம் கிருஷ்ணா தனது திறமையான புனைவு மொழி மூலம் குழந்தை விளையாட்டு போலாக்கிவிட்டார். வாசகனின் கவனத்தைத் தொடர்ந்து தக்கவைக்குவிதமான நடுவாந்திர மொழிப் பிரயோகம். நீண்ட வாக்கியங்களைத் தவிர்த்ததன் மூலம் ஒருவித அவசர கதியைப் புகுத்த முடிந்திருக்கிறது. அதே சமயத்தில் நித்திலாவின் கதையில் வரும் இலங்கைத் தமிழ் எவ்விதமான விலக்கத்தையும் கொடுக்காது இலங்கை அகதியின் வாழ்க்கையைத் தத்துரூபமாகக் காட்டுகிறது. பொதுவாக நான் பார்த்தவரை அது இருதலைக்கொல்லி வாழ்க்கை தான். சொந்த சமூகத்தின் விடுதலை தனக்கிடப்படும் மூக்கணாங்கயிறு எனும் நிலைமை வேண்டுதலுக்கு எதுவுமில்லாத நிலைக்கு மக்களைத் தள்ளிவிடும். அந்த மனநிலையைக் காட்டும் நித்திலாவின் கதாபாத்திரம் மிகக்கச்சிதமானப் படைப்பு. அவளது குறிப்பு வரும்பகுதிகள் மட்டும் கதையாகச் சொல்லப்படாமல் அவள் எழுதிய குறிப்புகளாகவே பதியப்பட்டிருந்தால் நாவல் இன்னொரு ஆழத்தை சந்தித்திருக்கும். இது மட்டுமே எனக்கு சிறு குறையாகத் தெரிந்தது.

அகப்பயணத்தைப் போல புறப்பயணமும் நெடியது. கன்னியாகுமாரி, புதுச்சேரி, பாரீஸ், ஸ்டிராஸ்பூர், பிராஹா என தங்கள் கவலைகளைச் சுமந்தபடி அவர்களது வாழ்வு ஓடிக்கொண்டேயிருக்கிறது. நாய்க்குட்டியாக மாறிவிடும் வாகீசனும் அவனது பிரெஞ்சு மனைவியும் கூட ஒருவிதத்தில் தங்கள் கஷ்டங்களிலிருந்து விடுதலை அடைந்துவிட்டார்கள் எனலாம். கதையின் புனைவு உத்தியாக மட்டும் நின்றிருந்தால் ஆழத்தைக் கூட்டியிருக்காது. நாய்க்குட்டியாகப் பாவித்து வாகீசன் பேசுபவை திக்கற்றவனின் சுயபுலம்பலாகவே தோன்றுகிறது.

மீண்டும் ஒருமுறை டிரஃபால்கர் சதுக்கத்தில் நான் கழித்த அதிகாலைப் பொழுதை நினைத்துப்பார்க்கிறேன். தனித்துவிடப்பட்டது போல சோபைகூடிய வெளி. ஏதோ ஒருவிதத்தில் தேடுதலைத் தக்கவைத்துக்கொண்டிருப்பவர்கள் வந்துசெல்லும் crossroads ஆக நம் வாழ்க்கை மாறிவிட்டது. கூட்டுரோட்டு சந்திப்பு போல சிலர் சேர்கிறார்கள், சிலர் பிரிகிறார்கள். வாழ்வின் அபத்தத்தைப் புரிந்துகொள்ளமுடியாமல் தவிப்பவர்களுக்கு மத்தியில் தங்கள் குழப்பங்களுக்கும் கவலைகளுக்கும் ஏதேனும் ஒருவிடிவு கிடைக்கும் எனும் எதிர்பார்ப்பில் இந்த crossroads வழியே ஓடிக்கொண்டே இருக்கின்றனர். வாழ்க்கை மீதான பிடிப்பு, இருத்தலின் தேவை என சமாதானப்பேச்சு எத்தனை சொன்னாலும் தேடுதல் எனும் தளத்தை வாழும் கலை என்பதாக எடுத்துக்கொள்வதில் தான் தீர்வு அமைந்திருக்கிறது. அக்கலையை மிக நேர்த்தியாகக் காட்டும் நாவலாக காஃப்காவின் நாய்க்குட்டி அமைந்திருக்கிறது. நீலக்கடல் முதல் நாகரத்தினம் கிருஷ்ணாவைத் தொடர்ந்து வருபவன் எனும் முறையில் அவரது அடுத்தகட்ட பயணத்துக்காக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்

—————————————————————–
நன்றி: சொல்வனம் இதழ்

பனிமூட்டம்

ழான் – ப்போல் திதியெலொரான்
பிரஞ்சு மொழியிலிருந்து தமிழில்: நாகரத்தினம் கிருஷ்ணா
ஓவியங்கள்: கார்த்திகேயன்
பன்னிரண்டு ஆண்டுகள். ஆமாம்! கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக இங்கிருக்கிறேன். ‘மரியா’ என்னுடைய இரண்டு பெண்களில் மூத்தவள், இதற்கெல்லாம் காரணம் அவள்தான். இரண்டொரு நாட்களில் சொடுக்கு போட்டதுபோல நடந்து முடிந்ததல்ல. போராடிப் பார்த்தேன், கட்டிப் புரளவில்லை, மற்றபடி பெரியதொரு யுத்தம் நடந்தது. தனது முடிவிற்கு ஆதரவாக அவள் முன்வைத்த நியாயங்களும் கொஞ்சநஞ்சமல்ல, எனினும் நிர்ணயிக்கப்பட்ட தேதியை ஆரம்பத்தில் மட்டுமே என்னால் தள்ளிப்போட முடிந்தது. எலிஸ்பெத் இரண்டாவது மகள், தனக்கு இதில் சொல்ல ஒன்றுமில்லை என்பதுபோல அமைதியாக இருந்தாள், வெகுநாட்களாகவே, தர்மசங்கடமான சூழல்களில் மதில்மேல் பூனைபோல இருந்து பழக்கப்பட்டவள். இப்பிரச்சினையைக் குறித்துத் தீர்மானிக்கும் முழு அதிகாரத்தையும் தனது மூத்த சகோதரிக்குக் கொடுத்திருந்தாள், பெரியவளோ இதற்காகக் காத்திருந்தவளே அல்ல. அவர்கள் முடிவுக்கு எதிராக எனது ஆட்சேபம் வெகுகாலம் நீடித்ததென்னவோ உண்மை. ‘மரியா’வின் ஓயாத வற்புறுத்தலைக் கிழட்டுக்கழுதையின் பிடிவாதத்துடன் தள்ளிப்போட்டும் வந்தேன். “பொதுவாக இந்த முடிவு எல்லாருக்கும் நல்லது, விடுதியும் தூரத்தில் இல்லை. நம்ம வீட்டிலிருந்து காரில் பத்து நிமிடப் பயணம். உங்களைப் பார்க்க, நாங்களும் ஒவ்வொரு வாரமும் வரப்போறோம். எனக்கும் பொறுப்பானவர்கள் கையிலே உங்களை

ஒப்படைச்சிருக்கேன் என்ற நிம்மதி.” என்றாள் அவள்.

‘ஷத்தோ ரூ’ புற நகர்ப் பகுதி எனது இறுதிகாலத்தை முடித்துக்கொள்வதற்கான இடமல்லவென்றும், பால்யவயதிலிருந்தே கடலுக்கு வெகு அருகில் வாழ்ந்து பழகிவிட்டு இப்போது அதைவிட்டு விலகியிருப்பதென்றால் கடினமென்றும் அவள் விளங்கிக் கொள்ளும் வகையில் கூறிப் பார்த்தேன், எடுத்த முடிவில் அவள் பிடிவாதமாக இருந்தாள். மரியாவின் வாதங்கள் என்னை இங்கே கொண்டுவந்து சேர்க்கவில்லை என்பதொன்றுதான் கடைசியில் இவ்விஷயத்தில் எனக்குள்ள சிறிய ஆறுதல். சமையலறைக்குள் நான் வழுக்கி விழுந்ததும், கேடுகெட்ட தொடை எலும்பு, நாட்பட்ட சுள்ளி போல இரண்டாக உடைந்ததும் இங்கு வரக் காரணம். ‘ரோஸ்’ – வீட்டுவேலைகளுக்கு எனக்கு ஒத்தாசையாக இருந்த பெண்மணி – சமயலறை ‘சிங்க்‘ அடியில் நான் விழுந்துகிடந்ததைக் கண்டிருக்கிறாள். முதல் நாள் முன்னிரவிலிருந்து கேட்பாரற்று, சுயமாக எழுந்திருக்கவும் முடியாமல் கிடந்திருக்கிறேன். இப்படியொரு சம்பவத்திற்குப் பிறகு சம்மதித்துத்தானே ஆகவேண்டும். சிகிச்சைக்குப் பிறகு ஆறு கிழமைகள் மரியா வீட்டில் உடலைத் தேற்றிக் கொள்ளத் தங்க நேரிட்டது. அந்நாட்களில் தான் எஞ்சியிருந்த எனது பிடிவாதத்தை மூத்தமகளால் கரைக்க முடிந்தது.

‘லெ க்ளிஸின்’ (Les Glycines)1 என்ற பெயரை முதன்முதலாக என்னிடத்தில் அவள் உச்சரித்தபோதே வெடவெடத்தது. இப்பகுதியில் ‘ஷெவால் பிளாங்’ (Cheval blanc)2 என்ற விநோதமான பெயர்கொண்ட தங்கும் விடுதிகள் அநேகம். அதைப்போலவே ‘லெ க்ளிஸின்’ என்ற பெயரில் முதியோர் காப்பகங்களும் ஏராளம். பெயர்தான் ‘கிளிஸின்’ என்றிருந்ததே தவிர, கட்டிடத்தில் நான்குபக்கங்களிலும் அரிதாகக்கூட ஒரு கிளிஸினைக் காணமுடியவில்லை. அவை படர்வதற்கு சுவர்கள்தான் ஏற்றவை, எனினும் சுவர்களில் இல்லை. தோட்டத்திலாவது முளைத்திருக்கும் அறிகுறி தெரிந்ததா என்றால், இல்லை. ‘ஷெவால் பிளாங்’ என்ற பெயர்கொண்ட ஓட்டல்கள் அருகில் வெள்ளைக் குதிரைகளை நம்மால் பார்க்க முடிகிறதா என்ன? இன்றைக்குங்கூட இதுபோன்ற பெயர்களை ‘ஏன்’ வைக்கிறார்கள், ‘எதற்காக’ வைக்கிறார்கள் என்பது எனக்கு மர்மமாகவே இருந்துவருகிறது. இதுபோன்ற புதிர்களுக்கு எவரிடமும் பதிலிருப்பதாகத் தெரியவில்லை. தவிர, இந்த ‘ஏன்’ மற்றும் ‘எதற்கு’ மனிதர்கள் அனைவருக்குமே கேலிக்குரியதாக இருக்கின்றனவென்று நினைக்கிறேன். நான் தங்கியுள்ள இவ்விடத்தில் ‘ஏன்’ ‘எதற்கு’ என்று கேட்பது எங்களுக்கு அவசியமில்லையாம், அதற்கான வயதையெல்லாம் கடந்துவிட்டோமாம், சொல்கிறார்கள். இரண்டு செவிலியர்கள், துணையாகச் சிப்பாய்கள்போல இரண்டு தடியர்கள்; அவர்கள் இட்டதுதான் அதிகாரம், வைத்ததுதான் சட்டம், ஒருவரும் அச்சட்டங்களை வளைத்துவிடமுடியாது. இரவுக்கொன்று பகலுக்கொன்று, என்றும் நிரந்தரம்!

சூரியனைக் காண்போமா என்றிருக்கிறது. இதமான வெப்பம் மட்டுமல்ல, அதனுடைய ஒளிக்கும் இங்கே பற்றாக்குறை. எப்படி நிகழ்ந்ததென்று புரியாதவகையில் நிர்மலமான வானிலையின் இடத்தில் ஊத்தை பிடித்த பனிமூட்டம், எங்கிருந்து வந்ததோ? பூமிமீது ஓயாமல் வடிந்துகொண்டிருக்கிறது. இன்றைய தினத்திலும் காலைப்பொழுதை மொத்தமாக மூழ்கடித்துக்கொண்டிருப்பது அதுதான்; விரிந்து கிடக்கும் தோட்டம், மரங்கள், இரும்பினால் செய்யப்பட்ட வெளி வாயிற்கதவு எதுவும் கண்ணிற்படவில்லை. அழுக்கடைந்த மிகப்பெரிய பஞ்சுப்பொதி அவற்றை விழுங்கியுள்ளது. நவம்பர் மாதத்தில், இங்கே இப்படித்தான் இருக்கும் போலிருக்கிறது. பனிமூட்டம் சூது நிறைந்தது. ஒருவகையில் முதுமைபோல. சோர்வைக் களைந்து அது புத்துணர்ச்சி பெறுவது இரவு வேளைகளில். பிறகு சந்தடிகளின்றி உங்கள் மீது தாக்குதலைத் தொடுக்கும். ஓரிடத்தையும் விட்டுவைப்பதில்லை, தந்திரமாக நுழைந்துவிடும். தன்னை வெளிக்காட்டாமல் நமது எண்ணங்களை மரத்துப்போகச் செய்யும், நினைவுகளை முடக்கிவிடும். விடிந்ததும் மறுபடியும் பனிமூட்டம், எங்கும் – எல்லா இடங்களிலும், அப்படியெல்லாம் உங்களை விட்டு எங்கும் போகமாட் டேன், உங்களோடுதான் இருப்பேன் என்பதைப்போல. இன்றும் வழக்கம்போல கடைசி ஆளாக உணவகத்திற்கு வந்துசேர்ந்தேன். வெகுநாட்களாகவே இதுபோன்றதொரு வேடிக்கையான பழக்கம் என்னிடம் இருக்கிறது. காப்பகத்திலுள்ள மற்றவர்களைப்போல விரைவாக நான் நடப்பதில்லையென்று நீங்கள் நினைக்கக்கூடாது. அந்த மற்றவர்களிலும் பெரும்பாலோர் இங்கு ஜிம்மர் சட்டத்தின் உதவியின்றி நடப்பதில்லை என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும், எனது தாமதத்திற்கு அவர்களைப்போல எனக்குப் பசி இல்லை என்றும் கூற முடியாது. எனினும் ஸ்பானிய காளைச்சண்டையில், உயிருக்குப் போராடும் விலங்கைக் கொல்லும் புண்ட்டியெரோ(Puntillero)3 ஆசாமியிடம் காணும் பழமையான அனிச்சை செயல் என்னிடமும் இருந்தது. கடைசியில்தான் அது நடக்கிறது, கிட்டத் தட்ட எல்லாவற்றையும் சொல்லிமுடித்த பிறகு, இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதற்காக நானே முடித்துவைக்கவேண்டிய நிர்ப்பந்தம். ஒரு சிறிய பீங்கான் கோப்பைக்கு முன்பாக அமர்ந்திருக்கிறேன். உணவகத்தின் ஊழியை ழிசேல் லெவஸ்ஸெர், உங்களுக்கு எது விருப்பம், தேநீரா காப்பியா என்று வினவுகிறாள். கடந்த பன்னிரண்டு வருடங்களாக ஒவ்வொரு நாளும் காலையில் கடவுள் விதித்தபடி கொஞ்சமாகப் பால்விட்டு காப்பி குடிக்கிறேன், இப்பெண்ணும் அதே பிடிவாதத்துடன் எனக்கு காப்பி வேண்டுமா, தேநீர் வேண்டுமா என நிதமும் கேட்டபடி இருக்கிறாள். “மத்மஸல் லாவ் வெவஸ்ஸெர்! தயவுசெய்து வழக்கம்போல கொஞ்சம் பால்விட்டு காப்பி கொடேன்!” வலதுபக்கம் அமர்ந்திருந்த பெண்மணி முனங்கினாள். எதிரே இறுகிக் கடினமாகவிருந்த ரொட்டி, குழைந்த வெண்ணெய், வாயில் வைக்கமுடியாத அளவிற்கு சர்க்கரை கலந்திருந்த ஜாம். பெண்மணியிடம், “நீ எப்போதும் குறைகூறிக் கொண்டிருப்பவள்” என்று கூற நினைத்த எனது விருப்பம், மேசையில் எனக்கு முன்பாக வைக்கப்பட்ட ஒரு கண்ணாடித் தம்ளர் தண்ணீரையும் மூன்று மாத்திரைகளையும் பார்க்காமல் இருந்திருந்தால் நிறைவேறி இருக்கும்; வார்த்தைகளை விழுங்கிக்கொண்டேன். மறுநாள் சூரிய உதயத்தை காணாமற் போய்விடுவேனோ என்ற அச்சத்தின் காரணமாக நான் விழுங்கவேண்டிய மாத்திரைகள் அவை. இரத்த அழுத்தத்திற்காக இளஞ்சிவப்பு நிறத்தில் ஒரு மாத்திரை, தைராய்டு பிரச்சினைக்காக வெள்ளை மாத்திரை, பிறகு வெளிர் நீலத்தில் ஒன்று. இருப்பிலிருந்து நம்மை விலக்கிவைக்கக் கண்டுபிடித்ததில் முதுமையைக் காட்டிலும் வேறு சாபம் இருக்கமுடியாது. இங்குள்ள சிலருக்கு வானவில்லில் இருக்கிற அத்தனை நிறத்திடமும் உரிமையுண்டு. மேசையில் குவிக்கப்பட்டிருக்கும் மாத்திரைகளை விழுங்கவே பெரும்பான்மையான நேரத்தை அவர்கள் செலவிடுவார்கள். மாத்திரைக் குவியலோடு பூஜ்ய விழுக்காடு கொழுப்புச் சத்துடைய வெண்ணெய் என்ற பெயரில் ஏதோ ஒன்று தடவப்பட்ட ரொட்டியும் காத்திருக்கும். இங்கே அனைத்துமே பூஜ்ய விழுக்காடு கொண்டவைதான். நாங்கள் ஆரோக்கியமாகச் சாகவேண்டும் என்பது அவர்களின் விருப்பம். நேற்றிரவுகூட ஒருவர் புறப்பட்டிருந்தார். லெ கிளிஸின் காப்பகங்களில் ‘இறப்பு’ என்ற சொல்லை மிகவும் கவனமெடுத்துத் தவிர்த்துவருகிறார்கள். காப்பகத்தில் ஒரு சில பகுதிகள் இருக்கின்றன, அங்கு ‘இறப்பை’ எந்த நேரமும் சந்திக்க வாய்ப்புண்டு. எனினும் மரணத்தை நேரிடையாகச் சந்திக்கும் விஷயத்தில் துணிச்சல் கூடாதென்று வழக்கமாகவே பிடிவாதம் காட்டி வருகிறார்கள். அச்சந்திப்பைத் தவிர்க்க, வலம் வரவேண்டும், மரியாதையுடன் விலகிக்கொள்ளவேண்டும், ‘புறப்பாடு’ என்ற அழகானதொரு வார்த்தை ஆடைகொண்டு மரணம் உடுக்கப்பட்டிருக்கிறது. உணவகத்தில் அன்று காலையில் தியானச்சூழல் நிலவியது என்றெல்லாம் என்னால் கூறிக்கொண்டிருக்க முடியாது. வழக்கத்திற்கு மாறாக சப்புக்கொட்டுவதும் மெல்லுவதும் சற்றுக் குறைந்திருந்தது என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். ஒருவேளை வாய்களுக்குச் சாப்பிடும் ஆர்வம் குறைவாக இருந்திருக்கும். பார்வைகள் ஓரிடத்தில் நிலையாய் இல்லை. கரண்டிகளும் பிறவும் எழுப்பும் ஓசைகள்கூட மிகவும் அடக்கமாக ஒலிக்கின்றன. இன்மையின் வெளிப்படையான அறிகுறி ஒன்றே ஒன்றுதான், எல்லோருடைய பார்வையும் அதன்மீதுதான் கூடுதலாக இருந்தது: மர்செல் கர்னியெ இல்லாத காலி நாற்காலி அது. உணவகத்தில் நட்டநடுவே வாய் பிளந்துகொண்டிருந்த அக்காட்சி மிகவும் கொடுமையானது.

அதிகாலையில் கட்டிலில் மிகவும் அமைதியாகப் படுத்திருந்ததைக் கண்டோம். அவருடைய புறப்பாடு ஒருவருக்கும் வியப்பூட்டவில்லை. மாரடைப்புக்குப் பலியாகியதாகச் சற்று முன்பு காப்பகத்தின் நிர்வாகி திருமதி வெர்ழ்லெ கூறியிருந்தாள். தும்மியதில் தெறித்ததைத் தடுக்க உணவு மேசையிலிருந்த துணிகொண்டு வாயை மூடினேன். குருதிநாள் விரிசல், மாரடைப்பு, நுரையீரல் வீக்கம் காரணம் எதுவாயினும் கடைசியில் அதற்குப்பெயர் மாரடைப்பு. விநோதமான இக்கொரிடாவின் (Corrida)4 மூன்றாவது தெர்சியோ (Tercio)5வில் எங்களில் ஒரு நபரை மரணம் முடித்துவைக்கும் சம்பவத்தை எடுத்துச்சொல்ல ‘மாரடைப்பு’ என்ற சொல்லைக்காட்டிலும் மேம்பட்ட சொல் அவர்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை. இங்குள்ளவர்களில் நான் மட்டுமே ‘எஸ்டோகாட்’

(Estocade)6 எப்படி நடக்கிறதென்பதை நேரில் கண்டவன். இங்கேயும் அதுதான் நடந்தது. வடிவிலும் கூர்மையிலும் குறைசொல்ல முடியாத ‘எஸ்டோகாட்.’ கிழங்களாக வலம்வருகிற ‘கிளிசிசின்’களில் மரணத்திற்கு ‘எஸ்டோகாடை’ உபயோகிப்பதில் ஒருபோதும் சங்கடங்கள் இருப்பதில்லை. நீண்ட நாட்களாகவே மர்செல் கர்னியெ தனக்கென்று வைத்திருந்த பாந்த்ரீ (banderilles)7 சிப்பத்துடன் சுற்றிவந்தார். கட்டுப்படுத்த இயலாமல் அதிகரித்திருந்த கொலாஸ்ட்ரோல், குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்த சர்க்கரை, களைத்திருந்த இரத்த நாளங்கள் என பிரச்சினைகளை வைத்துக்கொண்டு இறப்பதற்குத் தவணை கேட்டுக்கொண்டிருந்த கூட்டத்தில் அவரும் ஒருவர், இங்கு அதுபோல டஜன் கணக்கில் பலர் இருக்கின்றனர். ஆவிகள்போல இருக்குமிடம் தெரியாமல் இருப்பார்கள். தங்கள் நேரத்தில் கணிசமான காலத்தை ‘சூப்’பிற்கென்று ஒதுக்கிக் காத்திருப்பார்கள். தங்கள் அறைகளைவிட்டு வெளியில் வருகிறார்களென்றால் அது வயிற்றை நிரப்ப உணவகத்திற்கு வருவதுதான். அதன்பின்னர் தங்கள் முதுமைக்கு அடிபணிந்து கூன்போட்ட முதுகுடன் சாய்வுநாற்காலிகளுக்குத் திரும்பி மீண்டும் அடுத்தவேளை உணவுக்கான நேரம் வரும்வரை காத்திருப்பார்கள். மர்செல் கர்னியெ கூட அக்கூட்டத்தைச் சேர்ந்தவர்தான். முழங்காலில் கிடக்கும் துண்டையும் புறங்கையையும் தடவிக்கொடுத்தபடி நாள் முழுக்கத் தனது இரவுமேசை மீதிருக்கும் கடிகாரத்தை அவதானித்த வண்ணம் இருந்தார். புறப்படுவதற்குத் தயாராகவிருக்கிற உயிர்கள், துறைமுகமேடையில் தாமதமின்றி நிகழவிருக்கிற புறப்பாட்டின் வரவை எதிர்பார்த்து வலம் வருவார்கள். ‘மர்செல் கர்னியெ’வின் காலியாகவிருந்த நாற்காலியை ஆவலுடன் பார்த்தேன்.

ஞாயிற்றுக்கிழமை, பார்வையாளர் களுக்கான நாள். நுழைவுவாயிலுக்கு நேர் எதிராகவிருந்த ஹால் பெஞ்சு ஒன்றில் உட்கார்ந்தவண்ணம் பிற்பகலைச் செலவழித்தேன், என்னுடன் வேறு சிலரும் இருந்தனர். கண்ணாடித் தடுப்புக்கு மறு புறம் தெரிந்த உயிர்ப்பியக் கத்தில் எனது கவனம் இருந்தது. மணிக் கணக்காக அரைத்தூக்கத்தில் நான் இருக்கும் அந்தவேளையில், சிறுசிறு குழுக்களாக உறவினர்கள் உரத்துப் பேசியபடி வேகவேகமாக உள்ளே நுழைவார்கள். எல்லா ஞாயிற்றுக்கிழமை களையும் போலவே அன்றும் ‘மரியா’வை எதிர்பார்த்தேன், உணர்வு மழுங்கியிருந்த மூளை விழிப்புற்றுச் சென்ற வருடத்தில் அவள் இறந்ததை நினைவூட்டியது. வரக்கூடாத இடத்தில் வந்த கட்டியொன்று மூன்று மாதத்தில் அவள் உயிரைக் குடித்துவிட்டது. தனக்கு முன்பாகப் பிள்ளைகள் இறப்பைக் காண்பதென்பது கொடுமை, ஒருவருக்கும் நேரக் கூடாது. இரண்டும் இரண்டும் நான்கென்பதுபோல, தன்னுடைய மகளுக்கு முன்பாக தந்தை என்பதுதான் நியாயம்! எலிஸபெத்தும் அபூர்வமாக என்னைப் பார்ப்பதற்கு வருவதுண்டு. அவளுடைய ‘நீம்’ நகரம் ‘ஷத்தோ ரூ’விலிருந்து வெகுதூரம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு உணவிற்குப் பிறகு தொலைபேசியில் அழைத்துப் பேசுவாள்; ஆனால் எனக்குக் காது முன்புபோலக் கேட்பதில்லை. ஆயிரம்பேர் பேசினாலும் கடந்தகாலத்தில் என்னால் அடையாளப்படுத்த முடிந்த சொந்தப் பெண்ணின் குரல், தற்போது நீர்மப்பொருள் கொதிபோல மேலும்மேலும் கேட்கச் சாத்தியமற்ற ஒலியாகிவிட்டது. எனவே ஒருவித பாவனை உரையாடலை நடத்துகிறேன். “ஆம்”, “இல்லை”, “நல்லது” போன்ற என் வார்த்தைகள், முணுமுணுப்பாக, பொய்யான உரையாடலை ஆர்வத்துடன் நிகழ்த்தும். பின்னர் இருவருமாக “பிறகு பார்ப்போம்”, “அடுத்த வாரம் பேசலாம்”, “உடம்பைக் கவனித்துக்கொள்ளுங்கள் அப்பா”, “எனது அன்பு முத்தங்கள்” சொற்களால் அதனை முடித்துக்கொள்வோம். ஞாயிற்றுக்கிழமைகள் பொதுவில் எனது விருப்பத்திற்கு உகந்தவை அல்ல. இப்படித்தான் இருக்கவேண்டுமென்று எதையோ நினைவூட்டும் ஆணைகள் அவற்றில் பொதிந்திருக்கின்றன. குறிப்பாக “உண்மையான வாழ்க்கை என்பது இங்கே, நான்கு சுவர்களுக்குள் இல்லை, மாறாக வெளியே, அடர்ந்த பனிமூட்டத்திற்குள் இருக்கிறது, ஆனால் உங்களுக்குத் தற்போதைக்கு அங்கு செல்லச் சாத்தியமில்லை” என்பதைக் கூறுவதாக உள்ளது.

சிறிது நேரத்திற்கு முன்பாக, மர்செல் கர்னியெ உடலை எடுத்துச் சென்றார்கள். காளைச்சண்டையின் முடிவில் கொன்ற காளையை இழுத்துசெல்வதுபோன்ற சத்தம் எனது தலைக்குள் அப்போது கேட்டது. இப்போதெல்லாம் “மரணம் என்னை விரும்பவில்லையோ” என அடிக்கடி நினைக்கிறேன். கீழே இருக்கிற உயிர்களின் இறுதிப்பயணத்திற்குதவ, மரணத்திற்கு ஒருவேளை தொடர்ந்து வயதானதொரு புண்ட்டியெரோ (Puntillero) ஆசாமியின் தேவை இருக்கிறதோ? நான் தெளிவாக இருக்கிறேன். எனக்கான இடம் இங்குதான். கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன்பு காளைச் சண்டைத் திடலில் பெற்றிருந்த அதே இடம். ஏனென்றால் கிளிசின்களிலும் சில நேரங்களில் ‘எஸ்டோகாட்’

(Estocade)6ஐ சொருகியபின்பும் முடிவு தாமதமாகவே வருகிறது. இந்த அற்ப உயிர்த் தாரை வற்றாமல் பாய்வதற்குக் காலம் இன்னமும் இருக்கிறது. நள்ளிரவில் என்னுடைய கட்டிலைவிட்டு நழுவவேண்டும், நாள்பட்ட சடலமாகிப்போன வலிமூட்டையைக் கொஞ்சம் மறந்து, நடைக்கூடத்தில் இருளில் பதுங்கிச் செல்லவேண்டும். சரியான கதவைக் கண்டுபிடிக்கும்வரை இதயத் துடிப்புடன் ஒவ்வொரு அறையாகக் கடக்கவேண்டும், இரவு காவலர் பிடியில் அகப்பட்டுவிடாதென்ற பிரார்த்தனையும் முக்கியம்! கட்டில்வரை நெருங்குகிறேன். கடந்த காலத்தில் காளைச்சண்டை மணற் திடலில் செய்த அதே காரியம். இறுதி இழையை அறுத்து, அவற்றுக்கு விடுதலை அளிக்கிறேன். அதிசயமாக, கண்ணுக்குப் புலனாகாத அந்தத் தொப்புள்கொடியைத் துண்டிக்கும் தருணத்தில் மட்டுமே உயிர்வாழ்வதைப் போன்ற உணர்வு என்னிடம் இருக்கிறது, ஒருபோதும் பிறநேரங்களில் அதை உணர்ந்த அனுபவமில்லை. பிதா கர்னியெவின் இறுதிமூச்சைச் சிரமமின்றிப் பறிக்க முடிந்தது. பிறரைப்போலவே, முகத்தில் அழுத்திப்பிடித்த தலையணை, நுரையீரலில்

எஞ்சியிருந்த உயிரைக் குடித்து முடித்தது. எல்லாவற்றையும் செய்து முடித்தபிறகு கடைசியாக ஒருமுறை அவர்களை அவதானிப்பதுண்டு. அந்திக் கருக்கல் அவர்கள் முகத்தைத் திரையிட்டிருப்பினும், அஸ்தமித்த அவர்கள் பார்வையில் சிற்சிலசமயங்களில் ஒருவித நிம்மதி இழைகள் இருப்பதாகத் தோன்றும்.

நாளை, எனக்கு 102 வயது. ‘ழிஸ்லெர் லெவஸ்ஸெர்’ வியப்பில் வாய்பிளக்கவேண்டும் என்பதற்காகவே தேநீர் குடிக்க இருக்கிறேன்.

குறிப்புகள்:

1. Glycine ஒருவித கொடி; நீலம், வெள்ளை ஆகிய நிறங்கள்கொண்ட பூக்களையும் காணலாம்.

2. Cheval blanc – வெள்ளைக்குதிரை

3. Puntillero – காளைச் சண்டையின் இறுதியில், உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கும் காளையைக் கொல்வதற்கென உள்ள ஊழியர். அவர் உபயோகிக்கும் குறுவாளுக்கு ‘Puntilla’ என்று பெயர்.

4. Corrida – ஸ்பெயின் மற்றும் பிரான்சு நாட்டின் வடபகுதியில் நடக்கும் காளைச் சண்டை

5. Tercio – காளைச் சண்டையின் மூன்றாவது கட்டம் அல்லது இறுதிச்சுற்று

6. Estocade – காளைச்சண்டையில் காளையை அடக்கும் வீரனின் கையிலுள்ள வாள்

—————————————

நன்றி: காலச்சுவடு ஜனவரி இதழ்

கோட்டுக் கவிஞன் – ‘செந்தில் பாலா’ « மனிதர்களைக் கற்றுக்கொண்டு போகிறவன் » – என்ற கவிதைத் தொகுப்பை முன்வைத்து…..

ஓர் அசல் படைப்பிலக்கிய வாதி நேர்க்கோட்டில் நடக்க முயன்று தோற்பவன். அ ந் நேர்க்கோடு அவனைச் சர்ந்த சமூகம் ‘தனக்கன்று பிறர்க்கு’ எனப் போட்டுவைத்திருக்கும் கோடல்ல, தனக்கென்று நித்தம் நித்தம் அழித்தழித்துப் போட்டுக்கொள்ளும் கோடு. மீறுதல் அதற்காகத் தன்னை வருத்திக்கொள்ளுதல் என்கிற சுய விதிக்குள் வருவது. செந்தில் பாலா என்ற இளைஞரும் தனக்கென கோடுகளைக் கிழித்துக்கொண்டு அல்லாடுபவராக இருக்கிறார். எவ்வித முகப்பூச்சுகளுமற்று அகப்பசிக்கு கவிதை சமைக்கும் இந்த இளைஞர்களால் தமிழ்க்கவிதை யின் எதிர்காலம் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.

 

மேற்குலகில் கலை கலைக்காக என்ற குரல் எழலாம். ஏற்றத் தாழ்வுகள் மலைக்கும் மடுவுக்குமாக உள்ள நாட்டில் , இறந்தபிணத்தை எடுத்துச் செல்லவும் சாதிபார்க்கும் ஒரு நாட்டில் சமூகப் பிரக்ஞையற்று ஒருபடைப்பிலக்கியவாதி இருக்க முடியுமெனில் அவன் நேர்மை குறித்து சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. இத்தொகுப்பு குறித்து மேலே செல்வதற்கு முன்பாக இளைஞர் செந்தில் பாலாவுக்கு வைக்கும் வேண்டுகோள், தனி மனித மயக்கத்தில் ஆழ்ந்திடாமல் அவ்வப்போது சகமனிதனைப் பற்றிய பிரக்ஞையுடனும் எழுதுங்கள்.

 

கலை கலைக்காகவா ? அல்லது கலை மக்களுக்காகவா ? என்ற விவாதம் மேற்கத்தியர்களுக்கே கூட இன்று அலுத்துவிட்ட து. ‘எனக்குத் தொழில் கவிதை’ என் கிறவர்கள் என்ன செய்கிறார்கள் ? வெகுசனப் புரிதலுக்கு உட்படாத அல்லது சாதாரணக் கண்கள் காணப் போதாதக் காட்சியை மொழிபெயர்க்கிறார்கள். சார்த்ரு ( Jean Paul Sartre) « ஒரு கலை படைப்பின் பிரதான நோக்கம் நமது வாழ்க்கையின் மிகமுக்கியமானவற்றை கவனத்திற்கொள்ளச் செய்வது » என் கிறார். கலை, படைப்பிலக்கியம் என இயங்கும் நெஞ்சங்கள் அனைத்திற்கும் இக்கூற்று பொருந்தும். ‘பார்த்தல் மட்டுமே எப்படி பார்வையாகும் ?‘ என இக்கவிதைத் தொகுப்பில் ஓரிடத் தில் செந்தில் பாலா கேட்பது கூட அந்தப் பொருளில்தான்.

 

அண்மையில் இந்தியா வந்திருந்தபோது புபுதுச்சேரி, கடலூர் சிதம்பரம், கும்பகோணம் எனப் பேருந்து நிலையங்களைக் கடந்துசெல்ல வேண்டியிருந்தது. எல்லா பேருந்து நிலையங்க்களிலும் கூச்சமின்றி மனிதர்கள் கால் நடைகள்போல மூத்திரம்போய்கொண்டிருந்தார்கள். ஒரிடத்தில் சிவப்பு புடவை அணிந்த பெண்கள் கூட பேருந்தை சாலை ஒரத்தில் நிறுத்திவிட்டு எவ்விதக் கூச்சமுமின்றி இயற்கை உபாதைகளைக் கழித்துக்கொண்டிருந்தார்கள். பார்க்க நேர்ந்த என்னைப்போன்ற ஒரு சிலர்தான் பதற்றத்துடன் தலையைத் திருப்பிக்கொள்ள வேண்டியிருந்து. அக்காட்சி என்னுடன் பயணம் செய்த பலருக்கு ப் பழகியது என்பதை அவர்களில் இயல்பான செயல்பாடுகள் உறுதிசெய்தன. எனக்குங்க்கூட இவை உறுத்தாதவையாக இருந்துள்ளன- அதாவது – ஆண்கள் மட்டுமே இதற்குக் காப்புரிமை பெற்றவர்கள் என்ற நம்பிக்கையில் இருந்தவரை. அன்றையதினம் அதிசயம்போல பேருந்தில் என்னுடன் பயணம் செய்த அனேகர் செந்தில் பாலா போல ‘பார்த்தல் மட்டுமே எப்படி பார்வையாகும் ?’ எனக் கேட்பவர்களாகத்தான் இருந்தார்கள்.

 

கூட்டம் கூட்டமாக அவசரகதியில் எந்திரத் தனமாக இயங்கும் இவ்வுலகில் கவிஞன் மாத்திரம் எதையோ காதில் வாங்கியபடி நிற்கிறான். எதையோ கண்டு மெய்சிலிர்க்கிறான். அகத்தில் திரையிட்டு தேம்பி அழுகிறான், சிரித்து மகிழ்கிறான் அல்லது அருவருப்புடன் முகம் சுளிக்கிறான். அவ்வனுபவத்தை மொழிபடுத்தினால் அவன் கவிஞன், தவறினால் பைத்தியக்காரன் என்பதற்குக் கீழ்க்கண்ட இச்சிறிய உருவகக் கவிதை நல்ல உதாரணம்:
« இன்றைய எனக்கான பகல் நேரம்
ஜன்னலில் எட்டிப் பார்த்தபடி காத்திருப்பது கண்டு
தாழ்ப்பாளுக்கு ஓய்வளித்து கதவு திறக்க
வெப்பத்தின் வலிபொறுக்காது
புரண்டுகொண்டிருந்தன
நேற்றைய குப்பைகள் »

 

« இன்றைய எனக்கான பகல் நேரம் » என்று எழுத எவருக்கும் சாத்தியம். ஆனால் « வெப்பத்தின் வலிபொறுக்காது புரண்டுகொண்டிருந்தன நேற்றைய குப்பைகள் » என்று எழுத வெகுசனப் பார்வையிலிருந்து விலக்கப்பட்ட்ப் பார்வையைக் கொண்டிருத்தல் வேண்டும்.

 

‘கணக்கின் கணக்கு ‘

கீழ்க்கண்ட கவிதைக்கு செந்தில் பாலா பெயர் சூட்டவில்லை. என்னுடைய சௌகரியத்திற்காகவும் உங்க்களுடைய சௌகரியத்திற்காகவும் ‘கணக்கின் கணக்கு’ என்ற பெயரை கவிதைக்கு வைத்தேன். கவிதைப் பனி உறைந்த நீர்படுகையை நினைவூட்டுகிறது. ஆழமற்ற நீர்பரப்ப்பு போல அமைதி பூசிய கவிதை. கால்களை, சில்லிட்ட நீரில் வைக்கிற்போது பாசியும் நொய்மணலும் சேர்ந்தொரு கலவை முழகாலைத் தொட்டு , முதுகுத் தண்டைக் குறுகுறுக்கச் செய்கிற கவிதை, வாழ்க்கையை வரவு செலவு கணக்கில் வைக்கிற மனிதம் பற்றிப் பேசுகிறது.

 

எல்லாவற்றிர்க்கும் அல்லது எல்லோருக்குள்ளும்
ஒரு கணக்கு இருக்கிறது
மௌனத்துக்குள்ளும் முணுமுணுப்புக்குள்ளும்
புலம்பலுக்குள்ளும்
வேடிக்கைப் பார்ப்போருக்குள்ளுங்கூட
ஒரு கணக்கு இருக்கிறது
அனைவருக்குள்ளும் ஒரு கணக்கு
ஒடிக்கொண்டே இருக்கிறது

எல்லாவற்றிர்க்கும்
கணக்குப் பார்க்க முடியாது அல்லது கூடாது
அதிலும் ஒரு கணக்கு இருக்கிறது
உள்ளுக்குள் ஒடிக்கொண்டிருக்கும் கணக்கிற்கும்
வெளியில் பேசும் கணக்கிற்கும்
சம்பந்தமே இருக்காது ஆனால் இருக்கும்
ஒரு கட்டத்தில் எல்லா கணக்குகளும்
பொய்த்துபோகின்றன

அனாயசமாக
கணக்கு
அது ஒரு கணக்கைப்போட்டுவிட்டு
மிக இயல்பாகப் போய்கொண்டிருக்கிறது.

 

இங்கே மனிதர்கள் அனைவருமே ஏதோவொரு கணக்குடன் முகமன் கூறி , ஏதோவொரு கணக்கில் கட்டியணைத்து, ஏதோவொரு கணக்கின் அடிப்படையில் பிரிவையும் தீர்மானிக்கின்றனர். எல்லோருக்குமே விடைசரியாகவே இருக்குமென்ற நம்பிக்கை. ஆனால் நமக்கும் மேலே கணக்கோ வேறொரு கணக்குடன் நமது விதியை எழுதிக்கொண்டிருக்கிறது.

 

எல்லாபடைப்பாளிகளிடம் காணக்கூடியதுதான். கவிஞன் நதியோ, நிலாவோ, தெற்கத்தி காற்றோ அல்ல. மனிதன். இச்சமூகத்தில் ஒருவன். உங்கள் அண்டைவீட்டுக்காரனாக இருக்கலாம். அலுவலகத்தில் உங்கள் வலப்பக்கம் அமர்ந்து கோப்பு பார்ப்பவனாக இருக்கலாம். ஏன் உங்கள் சகோதரனாகவோ சகோதரியாகவோ கூட இருக்கலாம். உங்களிடம் கவிதையொன்று எழுதியிருக்கிறேன் அபிப்ராயத்தைச் சொல்லுங்கள் எனக் கேட்கிறபோது, தவறாமல் இரண்டொரு நொடிகள் ஒதுக்கி அக்குழந்தைக் கட்டியது மணல்வீடென்றாலும் கோட்டையெனக் கூறப் பழகிக்கொள்ளுங்கள். ஒரு கவிஞனைப் போற்றுவது மரம் வளர்ப்பது போன்றது

 

« கேட்பாரற்று கிடப்பது பற்றி எழுதி
யாரிடமாவது படித்துக்காடும்பொருட்டு
கவிதைக்குறித்தும் கவிதைக்களம் குறித்தும்
பேசத்தொடங்கிவிடுகிறேன்

எதிரிலிருப்பவர்கள் கவனம்
இங்கில்லை என்பதிலிருந்துதான்
தெரிந்துகொள்கிறேன்
எனது கவிதையோடே
செத்துக்கொண்டிருக்கிறேன் என்று »

 

செந்தில் பாலாவின் இக்கவிதையைப் படிக்க நேரும் எவரும் இனி ஒருபோதும் கவிதையையோ கவிஞனையோ அலட்சியம் செய்யமாட்டார்கள் என நம்புகிறேன்.

 

‘அடைதலும் அடைத்தலும்’ இத்தொகுப்பிலுள்ள ஒரு முக்கியமான கவிதை. கவிஞனாக தனது இருத்தலைக் கற்பித்துகொள்வதால் எழுத நேரும் கவிதை. செந்தில் பாலா இயல்பை முன் நிறுத்திப்பாடிய கவிதைகள் தொகுப்பில் இருக்கின்றன. இக்கவிதை அவர் இயல்பே கவிதையாக ஒளிர்வதுதான் என்பதைப் பறைசாற்றும் விதத்தில் இருக்கிறது.

 

அடைதலும் அடைத்தலும்

« எல்லோரையும் போல வாரச்சந்தையில் வாங்கிவிட்டேன்
குருவிகள் வளர்ப்பது பெரும் பாவமென்று
எனக்குத் தோன்றவில்லை

அப்படிப்பார்த்தால் வளர்ப்பதென்பதே பாவம் தான்
……………………….
……………………………

வளர்க்கப்படுகிறோம் என்பதை அறியாமலேயே வளருகின்றன
மாடுகளும், ஆடுகளும், கோழிகளும் கூட

வளர்த்தல் வேறு, வளருதல் வேறு புரிகிறது என்றாலும்
யாரும் வளருவதே இல்லை
…………………………
………………………….

கூண்டுக்குள் அடைபட்டுக்கிடப்பதை
பொறுக்க முடியாமல் பறக்கவிட்டுவிட்டேன்
ஆனாலும்
எங்களை யாரேனும் விட்டாலும் கூட
எங்கே செல்வோம் பறக்க. »

வினாக்குறியின்றி முற்றுபுள்ளிவைத்து கேள்வியையே பதிலாக முடித்து இச்சமூகத்தைப் பட்டியாக அல்லது தொழுவமாகவும் மனிதர்கள் வளர்ப்பு விலங்குகளாகவும் கண்டுவருந்துகிற கவியுள்ளம் இறுதியில் எங்களை யாரேனும் விட்டாலுங்கூட எங்கு செல்வோம் பறக்க எனக் கவிஞர் நமது சர்பாக போதாமையில் வருந்துகிறபோது, நம்மால் இயலக்கூடியது ஒன்றேஒன்றுதான் சமூகத் தொழுவத்தில் அடைபட்டு கிடப்பது.

« இறுதியாக
எதையாவது எழுதாமல்
தூங்கமுடிந்ததில்லை என்பதெல்லாம்
நிச்சயம் எனக்குக் கிடையாது » என்றும்

« இதையெல்லாம் எழுதியிருக்கலாமே
என்றபடி தூங்கிக் கொண்டிருக்கிறேன் » என்றும் செந்தில்பாலா சொல்கிறார்.

எனவே விழித்த தும் மறக்காமல் கவிதை எழுதும் பழக்கத்தை செந்தில் பாலா தொடர்வது தமிழ்க் கவிதை உலகிற்கு பயன் தரும் என்பதை நெருக்கமான நண்பர்கள் நினைவூட்டவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்
_____________
மனிதர்களைக் கற்றுகொண்டு போகிறவன்
ஆசிரியர் : செந்தில் பாலா
பதிப்பாளர் : நறுமுகை, 25 /35 தேசூர்பாட்டை, செஞ்சி -605 202

‘கைரேகைக்கொடியில் கனவுப் பூ’ – பா. இரவிக்குமார்

« கலக்குரலைக் கர்னாடக க் காரனிடம் எதிர்பார்க்கலாம். அவன் வெவரம் தெரியாதவன். நாம் நமது சொரணையுள்ள தமிழ் எழுத்தாளர்கள் வழி நடப்போம். ‘பகலில் பக்கம் பார்த்து பேசு இரவில் அதுவும் வேண்டாம், பகுத்தறியாமல் துணியாதே என்றெல்லாம் நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள் என்பது நமது படைப்புலக மேதைகளுக்குத் தெரியாதா என்ன ? »

படைப்பிலக்கியத்தில் கவிதை எழுதுவது அத்தனை எளிதான செயல் அல்ல .ருந்தும் தமிழில் அதிகம் கவிதை எழுதப்படுகிறது. இன்றைக்கு உலகில் அதிகம் கவிதை எழுதுபவர்கள் தமிழராகத்தான் இருக்க வேண்டும். பதிப்பாளர்கள் கவிஞர்களைக் கண்டால் ஒடுகிறார்கள். இன்று கவிதை எழுதுபவர்களை (தமிழில்) மூவகையினராகப் பிரிக்கலாம். தமிழ் படித்து, யாப்புப் படித்து, கவிதை வாசிக்க மேடைகிடைத்தால் வாழ்த்துப்பா, இரங்கற்பா எனக் கவிதை எழுதிகொண்டிருப்பவர்கள். ஆண்டுக்கு ஐந்துகவிதை எழுதுவதால் இலக்கண சுத்தமாக எழுதுவார்கள். ஆனால் கவிதைக்குரிய இலட்சணங்களைக் கோட்டைவிட்டிருப்பார்கள். அடுத்தவர்கள் பதின் வயதினர். கொஞ்சம் தமிழ் ஆர்வம் கொஞ்சம் வயதுக்கோளாறு என்ற சுரவேகத்தில் கவிதை எழுத ஆரம்பித்து, ஏதாவதொரு சிற்றிதழில் பிரசுரமானதும், முக நூலில் வைரமுத்துவை திட்டுவார்கள் (உள்ளூர வைரமுத்துவாக வரும் ஆவல் இருந்தாலுங்கூட). சொந்தச் செலவில் கவிதைப் புத்தகம்போட்டு தொடர்ந்து உழைப்பவர்கள் நிலைபெறவும் மற்றவர்கள் தொலைந்துபோகவும் இதில் வாய்ப்பிருக்கிறது

மகாகவி பாரதிக்கு கவிதையில் வாழ்பவனே கவிஞன், கவிதை எழுதுபவன் அல்ல. அவன் கவிதையையே வாழ்க்கையாக உடையோன் . வாழ்க்கையையே கவிதையாகச் செய்தோன். வாழ்க்கையைக் கவிதையாகச் செய்தல் என்பதென்ன ? வாழ்க்கை முழுதும் கவிதையாக வாழ்ந்து முடிபவன்.தனது காலத்தின் மனித வாழ்க்கையைக் கவிதைகளில் பதிவு செய்கிறவன், அதன் உயர்வு கண்டு பெருமிதமும், தாழ்வுகண்டு பெரும் சீற்றத்திற்கும் ஆளாகிறவன். அவன் « தேடிச் சோறு நிதம் தின்ன்று, பல சின்னசிறுகதைகள் பேசி » வாழ்ந்து கரைகிற மனிதக் கூட்டத்தில் ஒருவனல்லன். தமது மொழியாற்றலை கவிப்புலமையை சகமனிதன் உயர்வுக்கு உபயோகிக்கிறவன். சமூக பிரக்ஞையோடு கவிதை செய்பவன். எட்டயபுரத்திலிருந்து திருவல்லிக்கேணிவரை சமகால வாழ்க்கையைக் கவிதையாகச் செய்தவன், பாரதி. குயிற்பாட்டில் தத்துவமும், சொல்லத் தெரிந்திருந்தான், ‘கண்ணம்மா கண்ணம்மா’ என காதலில் உருகவும் அறிந்திருந்தான் . வாழ்க்கையைக் கவிதையாகச் செய்தலென்பதன் அடையாளம் இது.
பா. இரவிக்குமார் என்ற இந்த இளைஞரிடம் சகமனிதனைப்பற்றிய அக்கறை தெரிகிறது. இச்சமூகத்தின் போக்கு குறித்து க் கவலைப்படுபவராக இருக்கிறார். ஆக பாரதி வைத்திருக்கிற கவிஞன் சட்டைக்குக் கச்சிதமாகப் பொருந்தும் இளைஞர். பா. இரவிக்குமார் பெயருக்கு முன்னால் கவிமாமன்னன் , கவிவேந்தன், கவி நாட்டாமை என்கிற பட்டங்கள் எதுவுமில்லை. கவிஞர் என்ற சொல்லையும் தவிர்த்திருந்தார். ஆக நல்ல கவிதைகள் எழுதியிருக்கக்கூடும் என்ற நம்பிக்கையிலேயே அவருடையக் கவிதைத் தொகுப்பைத் திறந்தேன், ஏமாற்றம் அதிகமில்லை.

இத்தொகுப்பிலுள்ள முதல் கவிதை . எனக்கும் உங்களுக்குமான ‘கடைசி சந்திப்பு’
என வாசகர்களை மிரட்டுவதுபோன்றதொரு கவிதைத் தலைப்பைக் கொண்டிருக்கிறது.

கடைசி சந்திப்பு

கடைசி சந்திப்பு/ஏற்படுத்தும் ரணங்கள்/சொல்லி முடியாதவை
அறைக்குள் என்றால்/ ஆறுதலாகச்/சற்றே விசும்பலாம்
சாலையில் என்றால்/அபத்தமாக எதையோ/பேசவேண்டி இருக்கும்.

எந்த த் தருணத்தில்/பிரிகிறோம்/என்பதைச் சொல்ல முடியாது/துல்லியமாக
ஏதோ ஒர் ஏக்கத்தின்/அல்லது /ஏதோ ஒரு கனவின் /மரணம் அது
சபித்தவோ வாழ்ந்தவோ/ சக்தியற்று/ஒரு சிறுவனின்/குமுறலெனத்/துடிக்கும் நெஞ்சம்

உயிர் /அறுபடும் நொடியில்/கண்ணீரின்/ உயிர்ப்பு அது

இனி/பார்க்கவே கூடாது /என்ற முடிவுடனும்../ஒரே ஒரு முறை/
சந்திக்கமாட்டோமா /என்ற ஏக்கத்துடனும் /நாம் பிரிந்தத் தருணத்தில்தான்
நான் இறந்து போனேன்.

கவிதை என்பது இறுக்கமானது, சொற்களை விரயம்செய்யாமல் சொல்லவேண்டியவற்றைக் கவிதைக்குரிய உபகரணங்களைக்கொண்டு விளக்க முற்படுவது. இக்கவிதையில் கடைசி சந்திப்பு என்ற சொல்லே நிழ்வின் மொத்தபாரத்தையும் சுமந்து வதைபடுகிறது கடைசி சந்திப்பை ரணங்கள் எங்கிறார் கவிஞர். ரணங்கள் நாள்பட்டவை. ஆறாப்புண்களைத்தான் ரணங்கள் என்கிறோம். ரணங்ககளின் வலியை வார்த்தைகள் கொண்டு விளக்கமுடியாது. அதனால் தான் அதனை « சொல்லி முடியாதவை » எங்கிறார். கவிதைக்குரிய கருவிகளை நாடாமல் அதாவது உருவகம், உவமை என்று சுற்றி வளைக்காமல் « ஏதோ ஓர் ஏக்கத்தின் அல்லது ஏதோ ஒரு கனவின் மரணம் அது » என்கிறார். « சபிக்கவோ வாழ்த்தவோ சக்தியற்று ஒரு சிறுவனின் குமுறலென துடிக்கும் நெஞ்சம் » என்றும், « உயிர் அறுபடும் நொடியில் கண்ணீரின் உப்பு அது » என்றும் உருவகப்படுத்துகிறார். உண்மையில் கடைசிசந்திப்பு என்பது ஒரு வகையான பொய்யான வீம்புடனும், மீண்டும் சந்திக்கமாட்டோமா என்ற ஏக்கத்துடனும் நிகழ்வதாலேயே « நாம் பிரிந்த தருணத்தில் தான் நான் இறந்துபோனேன் » எனக் கூறுகிறபோது « பெண்ணை ஏமாற்றும் வழக்கமான ஆணின் தந்திரமோ எனச் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. உண்மையில் காதலன் இறந்திருந்தால் கடைசி சந்திப்பு என்ற கவிதையை எழுதியிருக்க முடியாது,

இன்றைய உலகில், அதிகாரமென்பது சகமனிதரை அடக்கி ஆள்வதற்கு என்பதோடு, அந்த அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள அவசியம் எனில் மொத்த மனிதர்களையும் அழித்தொழித்துவிட்டு தனி மனிதனாக அவன் மட்டும் மிஞ்சினால் கூட போதுமென்று நினைக்கிறான்.

« ஏன் எதற்கு என்று தெரியாமல்
யார் யாருக்காகவோ
ஆடவேண்டியிருக்கிறது

அதிகாரத்தை நிலை நிறுத்த
சகலரையும் பலிகொடுக்கையில்
அரசன் அல்லது அரசி நான்

துக்கம் தோய்ந்த விரல்களால்
எவர் எவரையோ
வெட்ட வேண்டியிருக்கிறது
……….

வெட்டப்பட்டுப் பரிதாபமாய்
வீழ்கையில்
ஒரு சாதாரண சிப்பாய் நான்

என்பவை ‘பொய் முகங்கள்’ கவிதையில் இடம் கிற வரிகளில் தோய்ந்துள்ள உண்மைகள் அனைவருக்கும் பொருந்தும்.

தொகுப்பிலுள்ள மற்றொரு முக்கியமான கவிதை, ‘கனவில் வரும் பிணங்கள்’. இதொரு கொடுங்கனவென்று தலைப்பு நமக்கு சொல்கிறது. அர்த்த ராத்திரியில் குழந்தை அலறி அழும். வளர்ந்தவர்கள் என்றால் நடு இரவில் திடுக்கிட்டு எழுவார்கள். வேர்வையில் நனைந்திருப்பார்கள். ஒரு தம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு உறங்கமுயற்சிப்பார்கள். கனவு கொடுங்ககனவாகிப் போவதே பிரதானக் காரணம். மூளை நரம்பியல் வல்லுனர்கள் , உறக்க ஒழுங்கின்மையின் போது கொடுங்க்கனவுகள் எற்படுகின்றன என் கிறார்கள். நமக்கு எப்போது கொடுங்கனவு வருகிறது என்பது முக்கியமல்ல ? ஏன் கொடுங்கனவு காண்கிறோம் என்பதும் தெரிந்துகொள்ளவேண்டிய ஒன்று. உலகெங்கும் எதேதோ காரணங்ககளுக்காக மனித இனம் பிளவுண்டு மோதுவது, வெட்டி மடிவது இன்று தொடர்கதையாகி இருக்கிறது. சமயம், நிறம், இனம், சாதி, எனக் கட்டிப்புரள காரணங்களும் உள்ளன. ‘ பொய் முகங்களில்’ கவிஞன் தன்னுள் இருக்கும் கொலைவெறிச் சிமிழைத் திறந்துபார்க்கிறான். இங்கே அதற்கான புறக் காரணத்தைக்கூறி, படுகளத்தின் பார்வையாளாகி கையறு நிலையில் கதறுகிறான். எழுதியவர் தமிழ்க்கவிஞர், அண்டை மா நிலமான கர்னாடக படைப்பிலக்கியவாதி அல்ல, அவர்களுக்கு எழுத்தும் வாழ்க்கையும் ஒன்று. நாம் காகிதப்புலிகள். கொடுங்கனவு கண்ட கையோடு ஒரு தம்ளர் தண்ணீர் குடித்து ஆசுவாசப்படுத்திகொண்டால் சுபம் இக்கேடுகெட்ட சமுகத்தை இடித்துரைக்க பா. இரவிக்குமாரும் தயாரில்லை.
« திரிசூலங்கள் பற்றியும்
கொலைவெறிகொண்ட கண்கள் பற்றியும்
எதுவும் தெரியாமலேயே
அந்தக் குழந்தைகள் இறந்த து
எவ்வளவு நல்லது ?
……………………..
…………………………….

கனவில் ஒரு பிணம் வந்து
நீ இந்துவா ? எனக்கேட்டால்
கடவுளே !
என்ன பதில் சொல்வேன் ?

எனச் சங்க டத்தை அந்தக் கடவுளிடமே முறையிட்டால் சிக்கல் தீர்நது. கலக்குரலைக் கர்னாடக எழுத் தாளனிடம் எதிர்பார்க்கலாம். அவன் வெவரம் தெரியாதவன். நாம் நமது சொரணையுள்ள தமிழ் எழுத்தாளர்கள் வழி நடப்போம். ‘பகலில் பக்கம் பார்த்து பேசு இரவில் அதுவும் வேண்டாம், பகுத்தறியாமல் துணியாதே என்றெல்லாம் நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்களென்பது நமது படைப்புலக மேதைகளுக்குத் தெரியாதா என்ன ?
இத்தொகுப்பில் உள்ள ‘கடைசி இரவு’, ‘நான் தாகமாய் இருக்கிறேன்’ , ‘சுதந்திரம்’, ‘இந்த வாழ்க்கை’ பிற முக்கியமான கவிதைகள்.
———————————————————————-

கைரேகைக் கொடியில் கனவுப்பூ

ஆசிரியர் பா. இரவிகுமார்

வெளியீடு

மித்ர ஆர்ட்ஸ்& கிரியேஷன்ஸ்

சென்னை  84

மு. அரிகிருஷ்ணன்

கடந்த ஒருவருடமாகவே நச்சரித்து வந்தார் . நானும் பிடிகொடுக்காமல் நழுவிவந்தேன் . இறுதியில் பிடிவாதம் ஜெயித்தது. பிடிவா த த் தி ன் பெயர் மு . அரிகிருஷ்ணன்  பல படைபாளிகளோடு என்னையும் களரி கலை இலக்கியம் மற்றும் கூத்துகலைஞர்கள் ஆதரவு அமைப்பு சேலம் அருகே ஏர்வாடி கிராமத்தில் ஏற்பாடு செய்திருந்த ஒரு நாள் நிகழ்விற்கு (2-1-16) அழைத்திருந்தார்கள். நண்பர் பஞ்சுவுடன்  நானும் கலந்துகொண்டேன்

அரிகிருஷ்ணன் புஜக்கட்டையும் தலைக் கிரீடமுமாக இருப்பாரோ என எதிர்பார்த்தேன். இல்லை நட்சத் திர எழுத்தாளர்களில் ஆரம்பித்து முதற்படைப்பு சிற்றிதழில் வந்த சந்தோஷத்தில் திளைத்திருக்கிற இளம் படைப்பாளர்வரை இங்கே அனைவருக்கும் தங்கள் இருத்தலை கவனம் பெறச்செய்ய குறைந்தபட்சம் கீரிப்பிள்ளை பாம்புச் சண்டையையாவது களமிறக்குகிறபோது (இலக்கிய சேவைதான் நம்புங்கள்) தன் இருத்தலை கூத்துக் கலைஞர்களின் அடையாளத் தேடலில் செலவிடுகிற மனிதரை எப்படி எடுத்துகொள்வது?. அரசியலைப்போலவேஎழுத்திலும் விளம்பரமே கரைசேர்க்கும் என்ற சூட்சமத் தீவில் அரிகிருஷ்ணானும் சிக்கி இருக்கிறார் . எனினும் சேலம் மாவட்ட கூத்துக்கலைஞர்களை அமெரிக்க மண்ணில் கால்பதிக்க, கிராமியத் திடல்களில் அறுவடை நாட்களில் பின்னிரவுகளில் தோல்பாவை கூத்துகளில் ஒலித்த குலுரலுக்குரிய முகங்களை ஆங்கிலத் தினசரிகளில் இடம் பெற, பார்வையாளரிடமிருந்து பெற்ற ஐந்து ரூபாய் பத்து ரூபாய் சன்மானத்தைச் சாராயக்டையில் சேர்க்கும்வரை தொட்டுமகிழும் கைகள் முன் முறையாக விருதுகளையும் சான்றிதழ்களையும் காமெரா முன்பாக கையிற்பிடிக்க வாய்ப்பினை அளித்த அரிகிருஷ்ணனை நாம் மறந்தாலும் கூத்துக் கலைஞர்கள் மறக்கமாட்டார்கள் அரிகிருஷ்ணனோடு, அவருடைய குடும்பத்தினரும், நண்பர்களும், உறவுகளும் சொல்லப்போனால் கிராமம் முழுக்க பல மாதங்கள் சோர்வின்றி உழைத்கிறார்கள் என்பது நடந்த நிகழ்ச்சிகள் மூலம் தெரியவந்தன.

அரிகிருஷ்ணன் பணி அரியப் பணி . தற்போது தமிழ் நாட்டில் கலை இலக்கியதுறையில் இருக்கிறவர்கள் சென்ற தலைமுறையினர் இல்லை. ஆரோக்கியமான பொருளதார சூழலில் பெரும்பாலோர் இருக்கிறார்கள். அவர்கள் அரிகிருஷ்ணன் போன்றோரின் முயற்சிக்குத் துணை நிற்கிறார்கள்.  சாகித்ய  அகாடமி  அளித்த விருதையும் பணத்தையும் சுயமரியாதையுள்ள நமது எழுத்தாளர்கள் திருப்பித் தாராமற் போனதன் காரணம் அவர்கள்  ஒருவேளை அரிகிருஷ்ணன் போன்றவர்களுக்கு உதவுவதாக இருக்கலாமென என்னுடன் வந்த நண்பர் ஒருவர் கூறினார். கலை இலக்கியதுறை சார்ந்த மனிதர்கள் பிரச்சினையில் உழல அதைப் பார்த்துகொண்டிருக்க எப்படி   அவர்க ளுக் கு மனம் வரும்?  ஆக இனி நலிந்த எழுத்தாளர்களுக்கு பிரச்சினை வராமற் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு  பரிசு பெறும் எழுத்தாளர்களைச் சேர்ந்தது என்பதைக் கேட்க இனிமையாக இருக்கிறது.
————————————————————–