Monthly Archives: செப்ரெம்பர் 2015

மூத்த படைப்பிலக்கியவாதிகள், திறனாய்வாளர்கள் விமர்சனங்கள் -2

« மாத்தாஹரி « நாவல் பற்றி மூத்த இலக்கியவாதி திரு கி அ. சச்சிதானந்தன் அவர்கள்

Matahari-2புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதை
– கி. அ. சச்சிதானந்தம்

Matahari1ஓர் அசலான நாவல் தனித்தன்மையோடு இருக்கும்; தனக்கென்று ஒரு முகவரியைக் கொண்டிருக்கும்; அப்போதுதான் அது இலக்கியமாகிறது. மீண்டும் மீண்டும் படிக்கப்படுகிறது. நினைவில் எழுந்து அசைபோட வைக்கிறது. அதைப் பற்றிய வினாக்கள் எழுகின்றன; விடைகள் கிடைக்கலாம்; கிடைக்காமல் போகலாம். ஒரு சமயத்தில், கிடைத்த விடை சரியெனப்படுகிறது, பின்னால் சரியில்லை எனத் தெரிகிறது. இப்படிப்பட்ட நாவல்தான் ‘மாத்தா ஹரி – புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதை.

இது நாகரத்தினம் கிருஷ்ணாவின் இரண்டாவது நாவல். மனித வாழ்க்கையை வரையறுத்துவிடலாம். ஒரு சூத்திரத்தில் சொல்லிவிடலாம் என்பதெல்லாம் அர்த்தமற்றது. சொல்லிவிடலாம் என்பவன் முட்டாள்.

மாத்தா ஹரி – ‘புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதை’ புறப்பட்டவள் எங்கு போய்ச் சேர்ந்தாள் என்று குறிப்பிடவில்லை. அவள் போய்ச் சேர்ந்தது பிரெஞ்சு நாட்டுக்கு. புதுச்சேரிக்குத் திரும்பி வராமலே அங்கு கல்லறையில் உறங்கிக்கொண்டிருக்கிறாள். கதை என்றால் ‘இட்டுக் கட்டியது’, ‘கற்பனை செய்யப்பட்டது’ என்று பொருள். ஆனால் படிக்கும்போதும் படித்து முடித்துவிட்டபோதும் அப்படி ஓர் உணர்வே தோன்றவில்லை. இந்நாவலை நிதானமாகப் படித்துப் போகவேண்டும். கவனம் சிதறாமல் படிக்க வேண்டும், இல்லாவிட்டால் தடுமாற்றம், குழப்பம், என்ன படித்தோம் என்று பின்னோக்கி படித்த பக்கங்களைப் புரட்டவேண்டும். அப்படி நாவலின் சொல்லாடல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. எல்லா கதைமாந்தர்களும் தன்மையிலும் படர்க்கையிலும் பேசுகிறார்கள். முக்காலமும் அதன் நேர் வரிசையில் வராமல் நிகழ்காலச் சம்பவங்கள் இறந்தகாலத்திலும், இறந்தகாலச் சம்பவங்கள் நிகழ்காலத்திலுமாக நாவலில் எடுத்துச் செல்லப்படுகிறது. அவ்வப்போது ஆசிரியர் வந்துவிடுவார். அவர் வருவதற்கும் காரணம் இருக்கிறது. இந்தப் புதுச்சேரிப் பெண்ணான பவானியை ஆசிரியருக்குத் தெரியும் என்பதனால்.

இந்த நாவலின் தொடக்கம், பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த திரைப்படமான ‘மகாத்மா காந்தி’ நினைவுக்கு வந்தது. இத்திரைப்படத்தின் முதற்காட்சியே மகாத்மா காந்தி சுடப்படுகிறார். காது செவிடுபட பின்னணி சப்தம். இப்படம் காந்தியின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிப்பதாகும். காந்தி வாழ்க்கையைக் காட்டிவிட்டுத்தானே இறுதியாக அவர் இறப்பைக் காட்டி படத்தை முடித்திருக்கவேண்டும். மாறாக, இறப்பை முதலில் காட்டிவிட்டு வாழ்ந்த வாழ்க்கையைக் காட்டுகிறதே. திரைப்படம் என்பதனால் எப்படி வேண்டுமானாலும் சுதந்திரத்தை எடுத்துக்கொள்ளலாமா என்று எழும் வினா தர்க்கரீதியானதுதான். சிந்தித்துப் பார்த்தபோது காந்தி இறந்துவிட்டார்; ஆனாலும் அவர் வாழ்ந்துகொண்டிருப்பவர் என்பதைக் காட்டவேதான் அந்த உத்தி கையாளப்பட்டதாக உணர்ந்தேன். இது படைப்புச் சுதந்திரம்; இதுதான் கலை.

இந்நாவல் புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட பெண் பவானியின் வாழ்க்கை. அவளின் மரணம் நாவலின் தொடக்கத்திலேயே தெரிவிக்கப்படுகிறது. ‘ஸ்ட்ராஸ்பூர் நகரின் மத்திய கல்லறையில் அவள் இருப்பிடம் (பக். 19) ஒன்று, இரண்டு, மூன்றாவதாக இருந்த கல்லறையில், பவானி தேவசகாயம் பிறப்பு 27. 06. 1959, இறப்பு 10. 02. 1992’ (பக். 20).

ஹரிணி தன் தாய் பவானி தேவசகாயத்தின் மரணம் தற்கொலையா அல்லது இயற்கையாக சம்பவித்ததா என்பதைக் கண்டறிய அவளுடைய வாழ்வில் குறுக்கிட்டவர்களைச் சந்திப்பதால் கிடைக்கும் தகவல்களேதான் இந்த நாவல். பவானி வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்டவர்கள்: பத்மா, தேவசகாயம் – இவர்கள் தமிழ் பிரான்சு குடிமக்கள், எலிசபெத், குளோது அத்ரியன், பிலிப் பர்தோ பிரான்சு நாட்டு வெள்ளைக்காரர்கள்.

ஹரிணி தன் பெற்றோர்களான தாய் பவானி, தந்தை தேவசகாயம் ஆகியோருடன் குழந்தையாக இருக்கும்போது பிரான்சு நாட்டுக்கு வருகிறாள். பவானி இறந்துவிடுகிறாள்; தேவசகாயம் போதைப்பொருள் விற்றதற்காகச் சிறையிலடைக்கப்படுகிறான். ‘எல்லா அனாதைக் குழந்தைகளையும் போலவே, பிரெஞ்சு அரசாங்கத்தின் மாவட்ட நிர்வாகம் பவானி தேவசகாயத்தின் மகள் ஹரிணியை வளர்க்கும் பொறுப்பையும் ஒரு குடும்பத்திடம் ஒப்படைத்தது. அதற்கான உதவித்தொகையையும் கொடுத்து வந்தது.’ (பக். 22). ஒரு கம்பெனியில் வேலை செய்யும் இளம் பெண்ணாக, சுதந்திரம் உள்ளவளாக, தனியாக வாழ்பவளாக அறிமுகமாகிறாள். ‘நேற்று மாலை நிர்வாக இயக்குநரான இளைஞன் சிரிலோடு பாதுகாப்பு எதுவும் எடுத்துக்கொள்ளாமல் உறவு’ கொண்டது. (பக். 23).

இந்நாவல் கதாமாந்தர்களின் செயல்பாடுகள், எண்ணங்கள், நடத்தைகள், நோக்கங்கள், காலவரிசைப்படி சொல்லப்படாமல், முன்னும் பின்னுமாகத் தாவித் தாவி, பாய்ச்சலோடு போகின்றன. அதாவது இறந்த காலத்தின் சம்பவங்கள் முன்னதாகவும், நிகழ்காலச் சம்பவங்கள் பின்னதாகவும் சொல்லாடல் நிகழ்கின்றது; இடையிடையே ஆசிரியரின் குரல் கேட்கிறது. எண்ணங்கள் தூலப் பொருள்களாகச் சித்தரிக்கப்படுகின்றன. புறத்திலுள்ள தூலப் பொருளா, மன ஓட்டங்களா? (எ. கா. பக். 44-45)

பவானியின் கதைதான் இந்நாவல். அவள் யார்? பிரெஞ்சுக்காரியான எலிசபெத் முல்லெர் சொல்கிறாள் ‘மயக்கமடையாத குறை. அப்படியொரு அழகுப் பெண்மணியை என் வாழ்நாளில் அதற்கு முன்பு சந்தித்ததில்லை. அலுவலகத்திற்கு வந்திருந்த பொதுமக்களும் சரி, அன்றைக்கு அக்கட்டடத்தில் வேறுபணியில் இருந்த மற்ற ஊழியர்களும் சரி சிலையாகச் சமைந்து போனார்கள். வாளிப்பான உடல், பட்டினைப் போன்ற முகம், நாசி துவாரங்களை ஒளித்த மூக்கு, உலர்ந்திராத சிவந்த உதடுகள், இடையில் நிழலாடும் வெண்பற்களின் உதவியோடு உதடுகள், சிரிக்க முயல்வது போன்ற பாவனை, வெல்வெட் போல இரண்டு விழிகள். தீப்பொறி போல கண்மணிகள். எல்லாவற்றையும் தன்னுள் அடக்கியதுபோல, தலை முதல் இடைவரை நீண்டிருந்த கூந்தல்.’ (பக். 27).

பவானியை புதுச்சேரியில் வழக்குரைஞராக அறிமுகமாகிறோம். அவள் சிந்தனை ‘பெண் என்பவள் பிறர் சார்ந்து தனது வாழ்க்கையை அமைத்துக்கொள்வதைப் பொதுவாக நான் விரும்புவதில்லை எனவே இதற்கு என்னால் உடன்பட முடியாது.’ (பக். 44). தேவசகாயம்தான் பவானியைத் தன்னை திருமணம் செய்துகொள்ள மன்றாடுகிறான். கெஞ்சுகிறான். அப்போது அவள் மனம் குழம்புகிறது, மூளையைக் கசக்கிப் பிழியும் கேள்விகள், சிந்தனை ஓட்டங்கள் இவையெல்லாமே அவள் திருமணம் செய்யமாட்டாள் என்ற முடிவையே சுட்டிக் காட்டுகின்றன. அவள் பாட்டியின் தீடிரென்று சம்பவித்த மரணம் திருமணத்திற்குக் காரணமாக இருக்கிறது. ஏனென்றால் அவள் சின்னக் குழந்தையாகவே இருந்தபோது அவள் வீட்டைவிட்டு ஓடிப்போய்விட்டாள். ஏன் என்றால் அவளுக்கு மீண்டும் சினிமாவில் நடித்துப் புகழும் பணமும் பெற வேண்டுமென்று ஆசை. ஓடிப்போனவளை நினைத்து வருந்திய அவளது தகப்பனும் செத்துப் போய்விடுகிறாள். ஆக அவளுக்கு இந்த உலகத்தில் ஆதரவாக இருந்தது அவள் தந்தைவழிப் பாட்டி. பாட்டி உயிரோடு இருக்கும் வரை பவானி திருமணம் செய்து கொள்ள வேண்டுமென தன் கவலையை வெளியிட்டுக்கொண்டிருந்தாள். அவளும் இறந்துவிட்ட பிறகு? அதனால்தான் என்னவோ தேவசகாயத்தைத் திருமணம் செய்துகொண்டாள். ஆக அறிவுபூர்வமாக வாழ்க்கை போவதில்லை… அவள் தேவசகாயத்தைத் திருமணம் செய்யாமல் இருந்தால் நாவலே இல்லை! பவானி திருமணம், பிரெஞ்சு நாட்டில் அவள் வாழ்க்கை எல்லாம் ஊழ்வினையா? வாழ்க்கையை அறிவுபூர்வமாகச் சிந்தித்த பவானி தன் வாழ்க்கையை அதன் போக்கில் விட்டுவிட்டாள். தலைவிதி இல்லாமல் என்ன?

தேவசகாயம் எப்படிப்பட்டவன்? ‘அவனால பத்துப் பெண்களுக்குத் தாலி கட்டவும், நூறு பிள்ளைகளைப் பெத்துக்கவும் முடியும். என்னுடைய தகப்பனாரைவிட அவனுடைய தகப்பனாருக்கு இருக்கிற சொத்தும் அதிகம், வாங்கற பென்ஷனும் அதிகம். அவன் கவிதைகள் எழுதுவான். அவன் கொஞ்சம் வித்தியாசமானவன். ஒரு சமயம் ரஜினி படத்தை முதல் நாளே பார்க்கணும் என்பான். இன்னொரு சமயம் மார்க்கோ, •பெரேரி என்ற இத்தாலிய இயக்குநரின் படங்கள் பாத்திருக்கிறாயா என்பான். தனது பிறந்த நாளைக்கு ஒரு பெரிய ஓட்டலில் எங்களுக்கு டின்னர் கொடுத்துட்டு, மறுநாள் மடத்துக்குச் சென்று அநாதைப் பிள்ளைகளோட சாப்பிடப் போறேன் என்பான்.’ (பக். 59). தேவா சின்னப் பையனாக இருந்தபோது, அவரின் தந்தையார் தெருவில் மாம்பழம், வெள்ளரிப்பிஞ்சு கூவி விற்பவளைக் கூட்டி வைத்துக்கொள்கிறார். அவளைத் தன் தாயாக தேவாவினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. (பக். 117) இவனுக்கு கஞ்சா என்ற மரியுவானா பழக்கம் ஏற்பட்டது. ‘பௌர்ணமி இரவொன்றில், திருவக்கரை வக்கிரகாளியைத் தரிசிக்கச் சென்ற இடத்தில் சாது ஒருவர், ‘அம்மனைச் சாந்த சொரூபியாக இவனுள் காண உதவும் ‘ஒளடதம்’ என்று அறிமுகப்படுத்தி வைத்தார். நாளொன்றுக்கு இரண்டு முறை இம்மருந்தை எடுத்துக்கொண்டால், குறைந்தது 150 ஆண்டுகள் உயிர்வாழலாமென உத்திரவாதம் செய்கிறார்.’ (பக். 120) விளைவு? ‘சகல புவனங்களையும் மயக்கும் மோகினியாக இவனுள் வக்கிரகாளி அம்மன்… மாத்தா ஹரி… ம். இல்லை. பவானி’. (பக். 121).

தேவசகாயம் காளி உபாசகன் என்று சொல்லக் கேள்வி. புதுச்சேரியில் இருக்கிறபோது அடிக்கடி திருவக்கரைக்குச் சென்று வருவானாம். பழம் பூவென்று வீடு முழுக்க நிறைந்துவிடும். நாக்கைத் திருத்திக்கொண்டு, கண்களை விரியத் திறந்தபடி பக்கத்திற்கு ஒன்பது கைகளென்று, கபால மாலையணிந்த காளி. முகம் மட்டுமல்ல, கரிய அந்த உடலிலும் உக்கிரத்தைப் பார்க்கலாம். அதனருகிலேயே மாலை சாற்றிய மாத்தா ஹரியின் முழு உருவப்படம். விடிய விடிய பூஜை நடக்கும். கட்டி கட்டியாய் கற்பூரத்தை எரிப்பார்கள். கத்தை கத்தையாய் ஊதுபத்தி கொளுத்துவார்கள்.’ (பக். 189).

ஆக, தேவசகாயம் பவானியின் அழகிற்காக அவளைத் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவளிடம் மாத்தா ஹரியைக் காண்கிறான். பவானியைப் புணரும்போது தன் மனைவியாகவும், அதே சமயத்தில் வணங்கும் தாயாக மாத்தா ஹரியாகப் பார்க்கிறான். தேவசகாயம் ஒருவித மனநோயாளியா என்ன? பணக்காரனான தேவசகாயம் பவானியிடம் அப்படி மன்றாடி மண்டியிட்டு மணம் புரிந்துள்ளான். ஏன் கெஞ்ச வேண்டும்? “தேவா, பல முறை சொல்லிவிட்டேன். நான் மாத்தா ஹரி இல்லை. பவானி… பவானி… பவானி.” “உனக்கு பவானி, எனக்கு மாத்தா ஹரி.” காலில் விழுகிறான். மீண்டும் மீண்டும் பித்துப்பிடித்தவன் போல என் கால்களில் விழுகிறான். (பக். 88).

மாத்தா ஹரி யார்? 1917 ஆண்டில் தன் அழகான உடலை வைத்துக்கொண்டு செருமானிய நாட்டுக்கு உளவு வேலை செய்தாள் என்று பிரான்சுக்காக தூக்கிலிடப்பட்டாள். அவளைப் பற்றி ஏராளமான புத்தகங்களும், வந்திருக்கின்றன. அவள் வாழ்க்கை பற்றி விரிவான குறிப்புகள். (பக். 28லிருந்து 33; பக். 80-81) மாத்தா ஹரிக்கு என்று ஒரு சமயக்குழு அதாவது ‘கல்ட்’ உருவாகியிருக்கிறது. (பக். 176 -178).

எலிசபெத் முல்லர், குளோது அத்ரியன், பிலிப் பர்தோ ஆகியவர்கள் இந்த கல்ட்டுடன் சம்பந்தமுள்ளவர்கள்.

‘குளோது அத்ரியன் பிரெஞ்சுக்காரன். வயது அறுபது. ஹிப்பி, நியூடிஸ்ட், எக்கொலொஜிஸ்ட், மரணதண்டனைக்கு எதிரி. கடைசியில் மாத்தா ஹரியின் பரம ரசிகர்.

அவரது அறையின் நான்கு சுவர்களிலும் நீங்கள் பார்ப்பது அனைத்துமே மாத்தா ஹரியின் படங்கள் தாம். குழந்தையாக, விடலைப் பெண்ணாக, வாலைக்குமரியாக, தேவதையாக, குற்றவாளியாக சுவரெங்கும் மாத்தா ஹரி அலங்கரித்துக்கொண்டிருக்கிறாள்’. (பக். 136) பிரெஞ்சு நாட்டு அருங்காட்சியகத்திலுள்ள மாத்த ஹரியின் மண்டையோடு காணாமல் போய்விடுகிறது.

இந்தச் சூழலில் சம்பந்தப்பட்டவர்கள் யாரோ திருடியிருக்கிறார்கள்.‘குளோது பிஞ்சிலேயே பழுத்தார். போதைப் பழக்கம் அதன் தேவைக்காக சின்னச் சின்னத் திருட்டுகள். எழுபதுகளில் ஹிப்பி இயக்கத்தில் சேர்ந்து கோவாவில் முழுநிர்வாண வாழ்க்கையை விரும்பும் கூட்டத்துடன் சேர்மானம்… ஆரோவில் பகுதியில் தங்கி இருந்தார்.’ (பக். 138).

பவானி வாழ்க்கைக்கும், மாத்தா ஹரி வாழ்க்கைக்கும் பொதுவான, ஒற்றுமை அம்சங்கள் இல்லை. ஆனால் மாத்தா ஹரி சமயக் குழுவிலிருப்பவர்களினால் பவானி வாழ்க்கை பாதிக்கப்பட்டது அவ்வளவுதான்.

இந்நாவலின் களம் புதுச்சேரியிலும், பிரான்சு நாட்டிலும் இடம் பெறுகிறது.

புதுச்சேரி வாழ் தமிழ் பிரெஞ்சு குடிமக்கள் வாழ்க்கை துவக்கமாக வெளிப்படுகிறது. ‘பத்மாவிற்குப் பிறந்த நாள். பகல் விருந்தில் கோழி, ஆடு, ஐஸ்கிரீம் என அனைத்தும் இருந்தன. பிரெஞ்சு அரசாங்கத்தின் பணம். அவள் தகப்பன், பிரெஞ்சு ராணுவத்தில் துப்பாக்கி பிடித்த நேரத்தைக் காட்டிலும் வெள்ளைத்தோல் கேப்டனுக்கு பிரியாணி செய்துபோட்ட நேரங்களும், கால், கை பிடித்த நேரங்களும் அதிகம். பதினைந்து ஆண்டுகள் தெரிந்த இரண்டொரு பிரெஞ்சு வார்த்தைகளோடு பிரான்சில் தள்ளிவிட்டு புதுச்சேரியில் வீடு, கார் என்று வாங்கி வைத்துக்கொண்டு உள்ளூர்வாசிகளின் வயிற்றெரிச்சல்களைக் கொட்டிக்கொண்டிருக்கிறார்’ (பக். 42-43) ‘நம்ம பாண்டிச்சேரிக்காரங்களைப் பத்தித் தெரியுமே. சிலர் ஒழுங்காகவும் இருக்கலாம். அவங்களைச் சொல்லலை. ஆனால் நிறைய பேர், ஒருத்தன் மாத்தி ஒருத்தன், அடுத்தவங்க வீட்டுக்குப் போறதே தன் வீட்டிலே குடிச்சது போதாதுன்னு அங்கேயும் விஸ்கி பாட்டிலைத் திறந்து வச்சுக்கணும் என்பதற்காக. வந்தவுடனேயே ஆரம்பித்துவிடுவார்கள். பெண்கள் குசினிக்குள் இருப்போம். பிரெஞ்சு ராணுவத்துல பணிபுரிந்திருப்பார்கள், அவர்களை ராணுவ வீரர்கள் என்பதைவிட எடுபிடிகள்னு சொல்லலாம். துப்பாக்கியைத் தொட்டுப் பார்க்காதவன்கூட, தான் இல்லையென்றால் பிரெஞ்சு ராணுவமே இல்லையென்பதுபோலப் பேசுவான். விடிய விடிய குடிப்பார்கள். பெண்களாகிய நாங்கள் மீனையும் கறியையும் வறுத்து அவர்கள் சாப்பிட்டு முடித்த தட்டை நிரப்பவேண்டும். ’

நாவலின் சொல்லாடலையும் தமிழ் நடையையும் குறிப்பிட வேண்டியது. பல இடங்களில் கவிதைச் செறிவாக, சுழன்று அடித்து ஓடும் நதியின் ஓட்டத்தைப்போல இருக்கிறது. (எடுத்துக்காட்டாக பார்க்க பக். 46-50, பவானியின் குழந்தை பற்றியும் அவனின் தந்தையைப் பற்றிய அத்தியாயம் 7ல்.)

ஆழ்ந்த இலக்கியப் பயிற்சியும் பரந்துபட்ட வாழ்க்கை அநுபவமும், புற உலகத்தை உள்வாங்கிக்கொள்ள எப்போதும் விழித்திருக்கும் மனமும் இருந்தாலொழிய மாத்தா ஹரியை எழுத முடியாது.
—————————————————————————————————

நூல்: மாத்தாஹரி – புதுச்சேரியிலிருந்துபுறப்பட்டஒருபெண்ணின்கதை
ஆசிரியர்: நாகரத்தினம்கிருஷ்ணா
பக்கங்கள்: 288 விலை: ரூ. 150
வெளியீடு: எனிஇந்தியன்பதிப்பகம்
102, பி.எம்.ஜி. காம்ப்ளெக்ஸ்,
57, தெற்குஉஸ்மான்சாலை,
தி. நகர்,, சென்னை – 17.

என்னைக் கவர்ந்தப் பெண்கள்

20150916_094052

ஓர் உயிரி தனது இருப்பை உறுதிபடுத்தவும், தன்னை முன்னெடுத்துச் செல்லவும், தொடக்கக்காலத்தில் ‘இயற்கை’ நெறியின்படி வினையாற்றியது. காலப்போக்கில் தனிமனிதன் கூட்டமாக வாழ முற்பட்டபோது சமூகம் என்ற அமைப்பு அனைத்து உயிர்களுக்கும் பொதுவான வாழ் நெறிகளை அமைத்துக்கொடுத்து அதன்படி வாழவேண்டுமென ‘உயிரியின் இருப்பை’ நிர்ப்பந்தித்தது, ஒரு கூட்டுச் சமூகத்தில் தனிமனிதனின் விருப்பு வெறுப்புகள், அவை கற்பிக்கும் செயல்பாடுகள், பிற மனிதர்களின் இருப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஓர் உயிரியின் இருப்பை உறுதிபடுத்தும் முனைப்பு, மற்றொரு உயிரியின் இருப்பை மறுக்ககூடாதென்பதுதான் நவீன சமுதாயத்தின் எதிர்பார்ப்பு. நாம் விரும்புவதும் விரும்பாததும்; உண்பதும் உடுத்துவதும்; கட்டுவதும் இடிப்பதும் நம்முடைய தேவை நிமித்தம் நடைபெறவேண்டுமென்றாலும், நம்மைச் சார்ந்த நம்மோடு கூட்டாக இயங்குகிற பிற உயிரிகளின் தேவைகளையும் குறைந்தளவேனும் அவை பூர்த்திசெய்யாதுபோனால் குழப்பமும் கலகமுமே மிஞ்சும், காரணம் இச்சமூகத்தில் ஒரே நேரத்தில் நாமாகவும் பிறராகவும் நாம் இருக்கிறோம்.

எல்லா உயிர்களையும் நேசிக்கிறேன் என்பதே கூட ஒருவகையில், சிலரைக்கூட குறிப்பிட்டு நேசிக்க நாம் தயாரில்லை என்பதாகத்தான் பொருள். பேச்சுக்கு என்று வைத்துகொண்டால் கணவன் என்றால் மனைவி, காதலன் என்றால் காதலி அல்லது இதற்கு எதிர்மாறாக; அடுத்து பிள்ளைகள் என்றால் பெற்றோரிடத்திலும்; பெற்றோர்கள் என்றால் பிள்ளைகளிடத்திலும்; சகோதரர்கள் சகோதரரிகளுக்கிடையிலும் பரஸ்பர அன்பு நிலவுமென சமூகம் நம்புகிறது, பிறகு நட்பின் அடிப்படையிலும் ஒருவர் மற்றவரை நேசிக்கிறோம் அன்பு பாராட்டுகிறோம். எனினும் நவீன உலகில் இவ்வுறவுகளின் ஆயுட்காலம் பரஸ்பர அன்பைக் காட்டிலும், பரஸ்பர எதிர்பார்ப்புகளால் தீர்மானிக்கப்படுகிறது.

நித்தம் நித்தம் பிறரைச் சந்திக்கிறோம். மனைவி, மக்கள், அண்டைவீட்டுக்காரர், உடன் பயணிப்பவர், அலுவலகங்கள், கடைகள், பொது இடங்கள்: எத்தனை மனிதர்கள், எத்தனை முகங்கள். இவற்றில் ஒரு சில முகங்களே ஏதோ சில காரணங்களால் திரும்பத் திரும்ப எதிர்கொள்ள நேரிட்டு, நம்மில் இருக்கின்றன, பெரும்பாலாவை பனிபோல, மலர்போல, மழைபோல இயற்கை நிகழ்வாக வருவதும் போவதுமாக இருக்கின்றன. இக்கூட்டத்திடை எவ்வித நிர்ப்பந்தமுமின்றி, எதிர்ப்பார்ப்புகளின்றி ஒரு சில முகங்களை, அம்முகங்கள் தாங்கிய மனிதர்களை நேசிக்கிறோம். ஓர் வாசகன் எழுத்தாளனை நேசிப்பது, ஒரு ரசிகன் தன்னுடனை நடிகன், நடிகைக்கு, பாடகன் இப்படி யாரோ ஒருவனை ஆராதிப்பது, சமூக நலனில் அக்கறைகொண்ட ஒருவன் சமூக ஆர்வலர் ஒருவரிடம் காட்டும் மரியாதை ஆகியவை நிர்ப்பந்தகளற்ற எதிர்பார்ப்புகளற்ற அன்பு. சிற்சில நேரங்களில் நாம் முரண்பட நினைக்கும் விஷயங்களில், இன்னொருவர் முரண்படுகிறார்; நாம் நமது எதிர்ப்புக்குரலை பதிவு செய்ய தயங்குகிறபோது, துணிச்சலின்றி முடங்குகிறபோது வேறொருவர் அதனைச் செய்கிறார். அது எதிர்ப்புகுரலாகத்தான் இருக்கவேண்டுமென்பதில்லை பிறரிடத்தில் காட்டும் கரிசனமாக இருக்கலாம், அந்த வினைக்காக, நமது மனநிலைக்கு ஒத்திசைந்து ஆற்றும் செயலுக்காக அம்மனிதரை போற்றுகிறோம். அப்படி நமது அன்பிற்குரியவர்களாக, நமக்கு மனதுக்கு இசைந்தவர்களாக, நமது விருப்ப இலக்கணங்களுக்கு உட்பட்டவர்களென்று ஒரு கூட்டத்தையா கைகாட்ட முடியும். விரல்விட்டு எண்ணிச் சொல்லிவிடலாம் அவ்வகையில் பெண்கள் நால்வரைப்பற்றி பதிவு செய்ய விருப்பம். ஏன் பெண்கள், ஆண்களில்லையா? “பெண் உயராவிட்டால் ஆண் ஏது?” என்பான் பாரதி, ஆணித்தரமான உண்மை. அரசியல், நிர்வாகம், அறிவியல், பொருளாதாரம் எனப் பலதுறைகளிலும் சாதனைப் படைத்துள்ள பெண்களிடம் ஆண்களின் ஆளுமையும், கம்பீரமும் ஒருபுறமிருக்க, ஆண்களிடம் காணக் கிடைக்காத கருணையும் தாயுள்ளமும் அவர்களை -பெண்களை உயரத்தில் நிறுத்துகிறது.

 

அ. பாரதி கண்ணம்மா:
கண்ணம்மா ஓர் அழகு தேவதை, மித். ‘கண்ணம்மா’ என்ற சொல்லின் அடர்த்தியை, அதன் திரட்சியை, மணத்தை, பசுமையை ‘கற்பனை நவிற்சியின்’ ஒட்டுமொத்த பருமையை, உபாசிப்பவனாய் அதன் இண்டு இடுக்குகளைதொட்டுப் பரவசத்தில் திளைக்கிற பாரதியைக் ‘கண்ணம்மா’ பாடல்களில் காண்கிறோம். கண்ணம்மா பாரதியுடைய செல்லம்மா. குயிற்பாட்டில் தத்துவத்தை சொன்னவனுக்கு, ‘கண்ணம்மா’ பெயரில் ஒரு செல்லம்மா கிடைத்திருக்கிறாள். பாரதி பாடிய, ஆராதித்த, மருவ ஆசைகொள்ளும் கண்ணமாக்களை இன்றளவும் படிமங்களாக, ஜீவன் சொட்டும் காட்சிகளாக மனதில் அசைகின்றன, மல்லிகை மணம் தோய்ந்த ஈரக்காற்றாக நெஞ்சைக் குளிருவிக்கின்றன. அந்நாட்களில் : தெருவாசலில் கோலமிடும்போதும், அன்றலர்ந்த பூசனிப் பூவை கோலத்திடை பூக்கவைக்க நடத்தும் ஒத்திகையின்போதும், கோலமிட்டு பாவாடைத் தடுக்க தலைவாசலைக் கடக்கிறபோதும்; தெருவாசலில் அண்டைவீட்டுப் பெண்ணுடன் உரையாடியபடி பார்வையைத் தெருவில் சிந்துகிறபோதும் ; ஒரு கையில் ஊஞ்சல் சங்கிலியும் மறுகையில் புத்தகமுமாக, ஊஞ்சலில் ஒருக்களித்துப் படுத்திருப்பவள், ஆண்வாசனை உணரரப்பட்ட கணத்தில் ஓடி மறைகிற போ¡தும்; கிணற்று நீர்ல் முகம் அலம்பி புழக்கடையின் முந்தானை விசிற நடந்து வருகையிலும் சந்தித்தத இளம்வயது செல்லம்மாக்கள் பலரும் கண்ணம்மாக்கள்தான்.

பெண்ணியம் பற்றி தமிழில் அதிகம்பேசிய ஆண் பாரதி. இன்று வரை அவன் அளவிற்கு பெண்கள் உட்பட கவிதைகளிலும் கட்டுரைகளிலும் பெண்விடுதலைக் குறித்து மேசியவர்கள் குறைவு. பெண்களைக் காட்டிலும் கூடுதலாக எதிர்பாலினத்திடம் கிறங்கிக் போகிறவர்கள் ஆண் கவிஞர்கள். பாரதி அழுது ஆர்பாட்டம் பண்ணுபவனல்ல, மறந்துங்கூட கண்ணைக் கசக்கியவனில்லை; தமிழைத் தாயென்றும், இந்திய நாட்டைப் பாரதமாதாவென்றும், பாரத தேவியென்றும் உருவகப்படுத்தியவன்; எந்த நேரமும் நின்மையல் ஏறுதடீ குறவள்ளி, சிறுகள்ளி எனப் பொங்கினவன். வீரத் தாய்மார்களை வேண்டியவன். “அந்நாட்களில் மாதர்கள் காட்டிய வீரத் தன்மையையும் இந்நாட்களிலே ஆண்மக்கள் காட்டும் பேடித்தன்மையையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஆ நமது உயர்வு கொண்ட பாரத ஜாதி இந்தனை தாழ்ந்த நிலைக்கு வருவதைக்காட்டிலும் ஒரே அடியாக அழிந்து போயிருந்தாலும் சிறப்பாகயிருக்குமே என்று மனம் குமுறுகின்றது” (1) என இந்திய நாட்டைக் குறித்து வருந்துகிற நேரத்திலும் பெண்களைத் தோளில் சுமக்கிறான். அவனுடையக் ‘கண்ணம்மா’ இந்த பெருமிதத்தின் விளைச்சல். அவள் மாசறு பொன், அப்பழுக்கற்ற நீதி. மனித இன உயர்பாலினத்தின் ஒரு துளியென்றாலும் பாரதியின் கவிதைக் கடலிற் கலந்து ஆண்கள் மனதில் ஒரு பெரும் சூறாவளியையை வாசிப்புதோறும் ஏற்படுத்திக்கொண்டிருப்பவள்.

கண்ணம்மாவைக் காதலியாகக் காண்கிறபோது, காதலில் திளைப்பது போலவே பாரதியிடம் வார்த்தைகள் வந்து விழுகின்றன. தெற்கத்திய காற்றின் அணுகுமுறை அவனிடம் தெரிகிறது, அவளுடைய வட்ட கருவிழிகள், மலரொளியொத்த புன்னகைகள், நீலக்கடலையொத்த நெஞ்சின் அலைகள், குயிலோசையொத்த குரலோசை இன்னும் இதுபோன்ற தகுதிகள் அனைத்துமே காதல்வயப்படும் எல்லா ஆண்களுக்கும் – அவனொரு கவிஞனாகவும் இருப்பான் எனில் எளிதாக அமையக்கூடும். மாறாக அவள் “பொங்கித் ததும்பித் திசையெங்கும் பாயும் புத்தன்பும் ஞானமும் மெய்த்திருக்கோலம் வாய்த்த செல்லம்மாவாக, கண்ணம்மாவாக வாய்க்கும் பேறு ‘பாரதி’க்கு மட்டுமே வாய்க்கும். அந்தக் கண்ணம்மாவை ‘மருவ’, பாரதி ‘மூத்தோர் சம்மதி’க்குக் காத்திருந்தது வியப்புதான், மாறாக அவளைக் கொண்டாடவும் குலதெய்வாகப் போற்றவும் ஒருவர் சம்மதியும் அவனுக்கு மட்டுமல்ல எனக்கும் அவசியமல்ல, தமிழும் அதன் சொற்களும் சம்மதிக்க வேண்டும், அதொன்றுதான்.

ஆ. சுதா ராமலிங்கம்:

Sudha“புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும்” என்ற குறள் நினைவுக்கு வருகிறபோதெல்லாம் தோழியர் சுதா இராமலிங்கத்தை நினைத்துக்கொள்வேன். ஆண்நண்பர்களென்றாலும் பெண் நண்பர்கள் என்றாலும் பரஸ்பர தேவைகளை ஒட்டியே நட்பு உருவாகிறது. அதன் ஆயுளும் அத்தேவைகள் நீட்சியைப் பொருத்தே அமையும். என் வாழ்நாளில் பல நண்பர்கள் குறுக்கிட்டிருக்கிறார்கள், பழகி இருக்கிறார்கள் பள்ளி, கல்லூரி, பணி, இருந்த நாடு, இருக்கிற நாடு, என்ற கூறுகளுக்கேற்ப நட்பு உருவாகிறது. உருவாவது போலவே சில ஆண்டுகளுக்குப் பிறகு உருக்குலைந்து சருகாகி காற்றில் கலந்தும் போகிறது. காரணங்கள் இரு தரப்பிலும் இருக்கின்றன. நானே கூட காரணமாக இருக்கலாம். அவர்களது எதிர்பார்ப்பிற்கு நானோ எனது எதிர்பார்ப்பிற்கு அவர்களோ பொருந்தாதது நட்பின் முறிவுக்குக் காரணமாக இருக்கலாம். வழக்கறிஞர் சுதா இராமலிங்கம் சமூக வலைத்தளம் மூலம் அறிமுகமானவர். இன்றைக்கும் இலக்கிய எல்லைக்கு அப்பால், இரத்த உறவுகளைக் கடந்து இந்தியாவிற்கு வருகிறபோதெல்லாம் தவறாமல் நேரில் சந்தித்து பரஸ்பர நலன் விசாரிப்புகளை பரிமாறிகொள்ளும் அளவிற்கு பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக எங்கள் நட்பு தொடருகிறது.

நட்பு தொடங்கிய காலத்தில், அவர் நாடறிந்த வழக்கறிஞர் என்பதோ, அவருடைய இடது சாரி சிந்தனையோ, மனித உரிமை ஆனையத்தில் தீவிரமாகச் செயல்படுகிறவரென்றோ, எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் தமது ‘யாதுமாகிநின்றாய்” கட்டுரைத் தொகுப்பில் அவரைப்பற்றியும் எழுதியிருப்பாரென்றோ எனக்குத் தெரியாது. அப்போதைய நிலையில் ஏன் இப்போதும் கூட அவரது சமூகத் தகுதி என்னிலும் பார்க்கக் கூடியதே. எனினும் எங்கள் இருவரிடத்திலும் பாசாங்கற்ற, உண்மையான அப்பிப்ராயங்கள் இச்சமூக அமைப்பின் மீதும், அதன் செயல்பாட்டின் மீதும் சொல்ல இருந்தன, இருக்கின்றன. அநீதிக்கு எதிராக கோபமும், பாதிக்கபட்டோரிடம் சுயாதீன உத்வேகத்துடன் கூடிய அக்கறையும் பரிவும் இருப்பதை உணரும் சந்தர்ப்பங்கள் இருவருக்கும் அமைகின்றன. நட்பு என்பது ஏதோ ஒரு தளத்தில் – ஒரு புள்ளியில் – இரு வேறு மனிதர்களிடை உணர்வு ஒத்துப்போகவேண்டும், அது மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்படவும் வேண்டும். ஒத்தக் கல்வியோ, ஒந்த பொருளாதார நிலமையோ, ஒத்த துறையோ அதனைக் கையளிப்பதில்லை. அவர் இந்தியாவிலும் நான் பிரான்சு நாட்டிலென்று வாழ்ந்தாலும்; அவர் மூத்த வழகறிஞராகவும், People’s Union for Civil Liberties உறுப்பினர் எனத் தீவிரமாக செயல்பட்டுக்கொண்டிருக்க; நான் எழுத்து, வாணிகம் எனக் கவனம் செலுத்த நேரிட்டாலும் பல்வேறு அலுவல்களுக்கிடையிலும் தொலைபேசி, முகநூல், சந்தர்ப்பம் அமைகிறபோது நேரில் என்று அளவளாவிக்கொண்டு இருக்கிறோம். “மாத்தா ஹரி” என்ற எனது நாவலில் கற்பனை மாந்தர்களைத் தவிர்த்து வாழும் காலத்து படைப்புலக நண்பர்களும் இடம்பெற்றிருப்பார்கள். படைப்புலகம் சார்ந்திராது நாவலில் இடம்பெறுகிற ஒன்றிரண்டு பெயர்களில் வழக்கறிஞர் சுதா இராமங்கமும் ஒருவர்.

 

இ. சிமொன் தெ பொவ்வார் (Simone de Beauvoir):Simone

 

பொவ்வார்’ ஓர் அக்கினி தேவதை. இருபதாம் நூற்றாண்டின் பெண் அதிசயம்.”நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகள், திமிர்ந்த ஞானச்செருக்கு” எனப் பாரதி எதிர்பார்க்கிற புதுமைப் பெண் இலக்கணத்திற்குக் கச்சிதமாகப் பொருந்தும் பெண்மணி. ” நான் சந்தித்த பெண்களிலேயே சிமொன் தெ பொவ்வார் ஒருத்திதான் புத்தி கூர்மையும் அழகும் ஒருங்கேப் பெற்ற பெண்மணி அல்லது உங்களுக்கு அப்படி யாரேனும் தெரிந்தவர் ஒருவர் இருந்தால் அவர்களில் இவரும் ஒருவர்” என ஜெர்மன் பத்திரிகையாளரும் பிற்காலத்தில் பெண் இயங்களில் ‘சிமொன் தெ பொவ்வாருடன் இணைந்துகொண்ட அலிஸ் ஷ்வார்ஸெர் சொல்கிறார். பெண்கள் அழகாகவும் புத்திகூர்மையுடைவர்களாக இருப்பவர்கள் அரிது, அதிசயமாக நடைபெறக்கூடியது. பெண்களுடைய ‘பைபிள்’ எனப்படும் அவருடைய ‘இரண்டாம் பாலினம்’ என்ற அரியதொரு படைப்பை வாசிக்க நேர்ந்தது. பெண்கள் படைப்பை, உயிரியல் கட்டமைப்பை, மானுட இருப்பை அவர்கள் உயிர் வாழ்க்கையை அத்ன் சிக்கல்களை, காலம் காலமாய் அந்த அழகியலுக்கு இழைக்கப்படும் அநீதிகளை, அன்றாட அவலங்களை அமிலச் சொற்கள் கொண்டு நிரப்பியிருந்தார். சமயத்தின் பேராலும், மரபின்பேராலும் பெண்களை இழிவுபடுத்தும் மூடர்களின் இழிந்தப் போக்கை அவரளவிற்கு கண்டித்தவர்கள் உலகிலில்லை. அறிவு, அழகு, நுண்ணுணர்வு, அள்ப்பரிய மனோபாவம், நினைத்ததைச் சாதிக்கும் ஆற்றல்:சிமொன் தெபொவ்வார்.
அரசியல் இலக்கியம் இரண்டிலுமே சில பக்கங்கள் அவர் காலத்தில் பிரான்சு நாட்டில் ஒளிர்ந்ததெனில் அதில் சிமொன் தெ பொவ்வாரின் பங்களிப்பு பிறர்கவனத்தில் கொள்வதற்குரிய நியாயங்களுடன் இருந்துள்ளது. “நான் நானாக இருப்பதிலுள்ள சவால்களை எதிர்கொள்ள தயார்” என்ற வாக்கியம் “கடமை தவறாத இளம்பெண்ணொருத்தியின் நினைவுகள் என்றொரு நூலில் இடம்பெறுகிறது. பெற்றோர் நிழலிலிருந்து மீளத் துணிந்த இள்ம்பெண்ணின் அசட்டுக்குரலென அதை ஒதுக்கிவிடமுடியாது. பெண்ணாய்ப் பிறந்த ஒவ்வொருவருவரிடத்திலும் வயது பேதமின்றி, சமயங்களைக் கடந்து, எல்லைகளை மறந்து ஒலிக்கவேண்டிய குரல். இந்த நூற்றாண்டிலும் குறிப்பாக, விளக்கப்போதாதா அல்லது நியாயப்படுத்த சாத்தியமற்றவைகளை மதம், மரபுகொண்டு பெண்களை அடிமைப்படுத்தி சுகங்கண்ட மனிதர் கூட்டத்துக்கு ( இதிலும் பெண்களும் அடக்கம் என்பதை கிஞ்சித்தும் மறக்கக்கூடாது) எதிராக ஒலிக்கவேண்டிய குரல். அது நாள்வரை சிமோனுடைய தேவைகளையும் விருப்பங்களையும் முடிவுகளையும் தீர்மானிப்பவர்களாக இருந்த அவருடைய தந்தையும் தாயும், பிறரும் ஆதி அந்தமின்றி அவர் நிறுத்துகிற ‘நான்’ என்ற வார்த்தையின் முன்பாக துவளுகிறார்கள். எதை விரும்பவேண்டுமோ அதை விரும்ப எதை நிராகரிக்கவேண்டுமோ அதை நிராகரிக்க, சிந்தனைக்கு உகந்ததைச் தேர்வு செய்ய தன்னைத் தயார்படுத்திக்க்கொண்டு காலத்தை எதிர்கொண்ட சிமொன் தெ பொவ்வாரை, நாம் விரும்பாமற் போனால்தான் ஆச்சரியம்.

 

இ. பிரான்சுவா சகான் ( Françoise Sagan):

 

Sagan
“அழகான இளம் ராட்சஸி” என பிரான்சு நாட்டின் புகழ்பெற்ற இலக்கிய விமர்கர் ‘மொரியாக்’ (François Mauriac)கினால் வர்ணிக்கபட்டவர். “பதினெட்டு வயதில் 188 பக்கங்களால் நான் அடைந்த புகழ் ஒரு வாணவேடிக்கை” என நேர்காணலில் தெரிவித்திருந்தார். அவருடைய அந்த நூலின் பெயர் “வணக்கம் துயரமே” ( Bonjour tristesse), எனது மொழிபெயர்ப்பில் காலச்சுவடு பதிப்பகம் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பாக கொண்டுவந்தது. அந்த எழுத்தாள பெண்மணியை நேசிக்க நேர்ந்தது அப்படித்தான். சமகால பிரெஞ்சு பெண் எழுத்தாளர்களில் உலகமெங்கும் பரந்த அள்வில் கொண்டாடப்பட்ட எழுத்தாளர் ஒருவர் உண்டென்றால் அவர் பிரான்சுவா சகன் மட்டுமே. ஏற்கனவே பல மில்லியன் பிறதிகள் விற்பனை கண்ட அவரது நாவல் இன்றளவும் விற்பனையில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கிறது.

இவரது பலவீனமாகக் மதுவும் போதைப் பொருட்களூம், தன்னைத் திடப்படுத்திக்கொள்ள அவருக்கு மது தேவைபட்டது. விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்கள் விருப்பமானவை. விபத்தொன்றில் ஆறுமாதத்திற்கு மேல் மருத்துவமனையில் இருந்து வெளிவந்தபோது வலிகளிலிருந்து நிவாரணம் பெற போதைமருந்துக்கு அடிமையானார். அவரைச் சந்திக்க பத்திரிகயாளரும் ஊடகத்தினரும் சூதாட்ட விடுதிக்கும், இரவு விடுதிகளுக்கும் தேடிப்போகவேண்டும். பந்தயக் கார்களில் மோகம் கொண்டவர் என்பதால் வேகம், விபத்து, கோமாவென அடிக்கடி மருத்துவமனை, மரணத்தோடு நெருக்கம் என வாழ வேண்டியிருந்தது. தொடக்கத்தில் குறிப்பிட்டிருந்த உலகப் புகழ்பெற்ற அவருடைய சிறுநாவலை எழுதிய நிகழ்வும் விபத்தென்று தான் சொல்லவேண்டும். பிரென்சுக் கவிஞர் ரெம்போ (Arthur Rimbaud) வின் கவிதை ஒன்றை (Illuminations) படித்து முடித்துவிட்டு அதன் பாதிப்பில் நாவலை எழுதப்போக, பிரெஞ்சு படைப்பிலக்கிய உலகில் ஒரு பெரும் புயலை உண்டாக்கியது. இந்நாவலில் 17 வயது இளம்பெண்ணொருத்தியின் உடல், மன, பாலுணர்வு உளைச்சல்களை மிகுந்த எதார்த்தத்துடன் கூறியிருப்பார். நாவல் வெளிவந்த காலத்து சமூக நெறிகளை, பத்தாம் பசலி கொள்கைகளை நிராகரித்திருந்தது. இருபது புதினங்கள், திரைப்படங்கள், கட்டுரைகள் கவிதைகள் என இவர் எழுதிக்குவித்திருந்தபோதிலும் எனக்கு ‘வணக்கம் துயரமே’ பிரான்சுவா சகனை மட்டுமே பிடிக்கிறது, பிடிக்கிறது என்ற வார்த்தை எனக்கு அவர் மீதுள்ள காதலை ஒரு சதம்கூடத் தெரிவிக்கப்போதாது.
——————————————————————————————
1. பக்கம் – 10 – மலாலவி பாரதியாரின் பெண்ணியக் கட்டுரைகள் -தொகுப்பு முனைவர் க.பஞ்சாங்கம்.

பிரான்சு நிஜமும் நிழலும் -5: உணவும் -விருந்தும்.

“savourer de bons petits plats”

“உலகில் எந்த நாட்டுமக்களும் தங்களைப் போல திருப்தியாக சாப்பிடுவதில்லை” என 80 விழுக்காடு பிரெஞ்சு மக்கள் நினைப்பதாக வாக்கெடுப்புத் தகவல் ஒன்று தெரிவிக்கிறது.. இங்கே திருப்தியாக என்பதற்கு ‘வயிறார’ சாப்பிடுவதென்ற பொருள் இல்லை. உணவை சமைப்பது, பரிமாறுவது, விருந்தினர்களுடன் உண்பது எனபவற்றில் சில நாகரீகமான விதிகளை வைத்திருக்கிறார்கள் அதைத் தாங்கள் கடைபிடிப்பதாக நம்பவும் செய்கிறார்கள். யுனெஸ்கோவின் கலாசார பாரம்பர்ய உடமைப்பட்டியலில் பிரெஞ்சு உணவு இடம் பெற்றுள்ளதும் அவர்கள் பெருமிதத்திற்குக் காரணமாக இருக்கக்கூடும்.

ஓர் உயிரியின் அடிப்படைத் தேவைகளில் உணவு முதலிடத்தைப் பெறுகிறது. உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே என்கிறார் திருமூலர். மனித இனம் ஓரிடத்தில் நிலையாய் வாழத்தொடங்கியபிறகு அந்தந்த இடத்தின் தட்பவெப்பநிலைக்கேற்பக் கிடைத்தவற்றை உண்ணத் தலைப்பட்டு, அவற்றிற்குப் பற்றாகுறை ஏற்பட்டபோது தாங்களே உற்பத்திசெய்து, விலங்குகளென்றால் வேட்டையாடி வயிற்றுப் பசியைப் போக்கிக் கொண்டனர். தட்பவெப்ப நிலை, மண்ணின் தன்மை, அதியாவசியமான நீர் என்று இயற்கையைச்சார்ந்தே உணவு தானியங்கள், காய் கனிகள், கீரைவகைகள், கால்நடைகளென்று உண்ணும் பொருட்களின் உற்பத்தித் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இயற்கை சாராத கூறுகளான சமயம், சமூகம், மரபு, பண்பாடு போன்றவை நாம் எதைச் சாப்பிடவேண்டும் எதைச் சாப்பிடக்கூடாது என முடிவெடுக்கின்றன. இவற்றைத்தவிர அறிவியல், போக்குவரத்து, தகவல்தொடர்புசாதனங்கள், நட்சத்திர ஓட்டல்கள், சமையல் புத்தகங்கள், குறிப்புகள், பரவை முனியம்மாக்கள், தாமோதரன்கள் இப்படி வயிற்றினை நாக்கினை வழிநடத்த பல்லாயிரம்பேர் இருக்கிறார்கள்.

உணவுக்கும் மனிதரின் குணத்திற்கும் தொடர்பிருக்கும் போலிருக்கிறது. கொடிய விலங்குகள் என வர்ணிக்கப்படுபவைகளுக்கும், சாதுவான விலங்குகள் என வர்ணிக்கப்படுபவற்றிர்க்கும் உணவுமுறையில் பெருத்த வேறுபாடுகள் இருக்கின்றன. ஆடு, மாடு, முயல் போன்றவை சாதுவாக இருப்பதற்கும்; புலி, சிங்கம்போன்ற காட்டுவிலங்குகளின் மூர்க்கத்திற்கும் உணவு பழக்கவழக்கங்களும் ஒரு காரணியா? அஹிம்சை வழி முறையை காந்தி தேர்வு செய்ததில் அவரது உணவுமுறைக்கும் பங்கிருக்கிறதென்பது உண்மையா?

இருபத்தோராம் நூற்றாண்டில் இருக்கிறோம். எல்லா உணவுகளும் எல்லா நாடுகளிலும் கிடைக்கின்றன. பிரெஞ்சு பர்ப்யூம்களைபோலவே, பிரான்சு நாட்டு ஒயின்களும் இந்திய முக்கிய நகரங்களில் கிடைக்கின்றன. இந்தியத் தந்தூரி, நான்(Nan), மசாலா (curry) ஆகியவை உலகெங்கும் அறியப்பட்டிருப்பதைபோலவே பிரான்சிலும் கிடைக்கின்றன. தீபாவளியென்றால், எங்கள் வீட்டில் அதிரசம், முறுக்கு, சோமாஸ், போளி, லட்டு( அதுவும் பூந்தி லட்டு எப்போதாவதுதான் ரவா லட்டே அதிகம்) இதைத்தான் செய்திருக்கிறார்கள். மைசூர்பாகு, ஜாங்கிரியை கல்கி, விகடன் தீபாவளி மலர்களில்தான் பார்க்கவேண்டும்.தவறினால், புதுச்சேரி உறவினர்கள் யாரேனும் அபூர்வமாக வாங்கிக்கொண்டுவந்தால்தானுண்டு. ஆனால் தற்போது கிராமத்தில்கூட ‘ஸ்வீட் ஸ்டால்கள்’ திறந்துவைத்திருக்கிறார்கள். கலர் கலராக அடுக்கிவைத்திருக்கிறார்கள், கவர்ச்சிக்கு ஈக்களின் ரெக்கார்ட் டான்ஸ் வேறு. புதுச்சேரிக்கு ஒர் அமெரிக்கன் KFC என்றால், குக்கிராமத்திற்கு ஒரு பாம்பே ஸ்வீட்ஸ்டால் ஏன் கூடாது, தாராளமாக வரலாம், ஆனால் கொழுக்கட்டைகளுக்கு பாதிப்பிருக்கக்கூடாது.

பிரான்சு நாட்டிலும் உலகின் ஏனைய நாடுகளைப்போலவே உலக நாடுகளின் ரெஸ்ட்டாரெண்ட்கள் இருக்கின்றன. ஐரோப்பியரல்லாத ரெஸ்ட்டாரேண்ட்களில் இந்திய மற்றும் சீன ரெஸ்ட்டாரெண்ட்கள் பிரெஞ்சுக்காரர்கள் விரும்பிப் போகக்கூடியவை. இந்தியத் துணைக்கண்டத்தைச் சேர்ந்த எந்த நாட்டுக்காரராக இருந்தாலும் தங்கள் ரெஸ்ட்டாரெண்டிற்கு காந்தி யென்றோ, இந்திராவென்றோ, பாம்பே என்றோ, தில்லி என்றோ, தாஜ்மகால் என்றோ பெயர்வைப்பது பொதுவாக வழக்கில் இருக்கிறது. இந்தியா உட்பட இந்தியத் துணைக்கண்டத்தைச் சேர்ந்தவர்களுக்குக் காந்தி தற்போதைக்கு ஒரு வியாபாரப் குறியீடு என்பதால், பாகிஸ்தானியர்கள் உட்பட காந்தி என்ற பெயரைத்தான் வைக்கிறார்கள், ‘ஜின்னா’ வென்று தங்கள் ரெஸ்டாரெண்டிற்கு பெயரிடுவதில்லை.

‘உணவென்பது உயிர்வாழ்க்கைக்கான ஒரு கலை’ (l’alimentation est un art de vivre)

பிரெஞ்சுக்காரகள் உணவுப்பொருட்களையும், உண்பதையும் உயிர்வாழ்க்கைக்கான ஒரு கலையாகத்தான் பார்க்கிறார்கள். உலகெங்கும் “பிரெஞ்சு உணவுக்கலை”க்கும் (la gastronomie française), பிரெஞ்சு சமையலுக்கும் (la cuisine française) எத்தகைய வரவேற்பும், மரியாதையும் இருக்கிறதென்பதைத் தெரிந்துவைத்திருக்கிறார்கள். ஓவியம், சிற்பம், படைப்பிலக்கியத்தைப்போல சமையலும் அவர்கள் கலைகளுள் ஒன்று. வெறும் வார்த்தை அலங்காரத்தோடு இது முடிந்துவிடுவதல்ல. நீங்கள் விருந்தினர் என்றால் சாப்பிடுவதற்கு முன் – சாப்பிடும்போது – சாப்பிட்டபின் -உங்களை வழி அனுப்பும் வரை உங்களைத் தொடர்வது. உணவின் சுவை என்பது அழைத்தவர் ‘காரம், கரிப்பு, உவர்ப்பு, இனிப்பு இவற்றின் கூட்டுத் தொழில்நுணுக்கத்தின் தயாரிப்பு மட்டுமல்ல சமைத்த உணவிற்குப் பொருத்தமான தட்டுகளைத் தேர்வுசெய்வது, சாப்பிடத்தூண்டும் வகையில் அவற்றைக் காட்சிப்படுத்துவது, பவ்யமாகப் பரிமாறுவது; அழைக்கப்பட்ட விருந்தினர் கண்கள், கைகள், வாய் மூன்றையும் நளினமாகத் தொழிற்படுத்தி உண்பது அவ்வளவும் அடங்கும். பிரெஞ்சு உணவில் நான்கு சொற்கள் அடிப்படையானவை: ரொட்டி, மாமிசம், பாற்கட்டி, ஒயின். இவற்றைத் தவிர சிம்பொனி இசைக்கலைஞர்கள் உபயோகிக்கிற பகத் ( Baguette) என்கிற பெயரிலேயே அழைக்கப்டுகிற குச்சிபோன்ற நீண்ட ரொட்டியும் பிரெஞ்சுக்காரர்களின் அடையாளம். இங்கும் பிரதேச அடையாளங்களைக்கொண்ட உணவுவகைகளுக்கு உதாரணமாக அல்ஸாஸ் (Alsace)பிரதேசத்தின் ‘தார்த் ஃப்ளாம்பே(Tarte flambée) ஷுக்ரூத்(choucroute); அக்கித்தேன்(Aquitaine) பிரதேச ‘லெ ஃபுவா கிரா'(le foie gras), ‘லெ கொன்ஃபி தெ கனார்’ (le confit de canard); தொர்தோஜ்ன் (Dordogne) பிரதேச ‘லெ தூரன்'(le tourin), ‘லெ ஃபிலெ தெ பெஃப்’ (le filet de bœuf), ‘சோஸ் பெரிகெ’ (sauce Périgueux) போன்றவற்றைக் கூறலாம். அதுபோல பிரனெ அட்லாண்டிக் (Pyrénées-Atlantiques), கோர்ஸ்(Corse), ப்ரெத்தாஜ்ன் (Bretagne) உணவுகளும் பிரசித்தம். பாரீஸுக்கென்று பிரபலமான உணவுகள் இருக்கின்றன, தவிர பிரெஞ்சு ஷேஃப்(Chef)களும் புதிது புதிதாய் தாயாரித்து வாடிக்கையாளரின் பாராட்டுதலுக்காகக் காத்திருக்கிறார்கள். உலகின் பிறபகுதிகளைபோலவே இயற்கை விவசாய உற்பத்திப்பொருகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
உணவு வேளைகள்:

1. Le Petit déjeuner – காலை உணவு: இன்றைக்கு உலகம் முழுவதும் பரவலாகச் சாப்பிடுகிற (அட்டைப்பெட்டிகளில் அடைத்த) céréale பிரெஞ்சுக்காரர்கள் இல்லங்களை ஆக்ரிமித்திருந்த போதிலும், பிரான்சு நாட்டின் தேசிய காலை உணவாக இடம்பிடித்திருப்பது க்ருவாஸ்ஸான்(Croissant). இப்பிறை வடிவ பேஸ்ட்ரி வகை ரொட்டி; பால் கலவாத காப்பி, ஆரஞ்சு ஜூஸ், தேநீர், ஷொக்கொலா என்கிற சாக்லேட் பானம் இவற்றுள் ஏதேனும் ஒன்றுடன் காலை நேரங்களில் அவசரமாகத் தினசரியை மேய்ந்தபடி ஒரு பேஸ்ட்ரி (viennoiserie) கடையிலோ, ரெஸ்ட்டாரெண்டிலோ, நட்சத்திர ஓட்டலொன்றின் டைனிங் ஹாலிலோ ஐரோப்பியர் ஒருவரைப் பார்க்க நேர்ந்தால் அநேகமாக அவர் பிரெஞ்சுக்காரராக இருப்பார். இன்று புதுச்சேரி உட்பட உலகெங்கும் க்ருவாஸ்ஸான் கிடைத்தாலும் பிரான்சு நாட்டுத் தயாரிப்புக்கு ஈடாக இல்லை. அப்படி பிரான்சு அல்லாத வேறு நாடுகளில் நன்றாக இருந்தால் அநேகமாக அந்தப் பூலான்ழெரி (Boulangerie) என்ற ரொட்டிக்கடையை நடத்துபவர் மட்டுமல்ல அங்குள்ள ரொட்டிகளைத் தயாரிப்பவரும் பிரெஞ்சுக்காரராக இருக்கவேண்டும். பிரெஞ்சுக்காரர்கள் வேறு ஏதேனும் (Pain au chocolat, baguette avec de la beurre, du miel, de la confiture) காலை உணவாக எடுக்க நேர்ந்தாலும் அது எளிமையானதாகவே இருக்கும், ஆங்கிலேயர்போல காலையிலேயே பேக்கன், ஆம்லேட் என்று வயிற்றில் திணிக்கும் வழக்கமில்லை.

2. Le déjeuner அல்லது le repas du midi- மதிய உணவு: மதிய உணவுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தற்போதெல்லாம் பணிநேரத்தில் ஒரு மணிநேரமே சாப்பிடுவதற்கான நேரமென்று ஒதுக்கப்படுகிறது இதில் ஓர் அரைமணிநேரத்தை உண்பதற்கென்று ஒதுக்கி அவசரகதியில் சாப்பிடுவதற்குப் பெயர் கஸ்க்ரூத் (le casse-croûte). சாண்ட்விச், ஹாம்பர்கர் இரகங்கள் அவை. வீடுகளிலும் அநேகமாக சமைக்க நேரமில்லையெனில் டின்களில் அடைத்துவைத்த உணவுகளை சுடவைத்து உண்பது வழக்கமாகிவிட்டது. மாறாக வார இறுதிநாட்களில் நிதானமாக( பன்னிரண்டு மணிக்கு உட்கார்ந்தால் இரண்டு இரண்டரைமணி நேரம்) மேசையில் அமர்ந்து பேசியபபடி சாப்பிடுவார்கள்

3. Le dîner அல்லது le repas du soir. மாலை உணவு: இதனை இரவு உணவு என அழைப்பதில்லை. பொதுவாக மாலை ஆறுமணியிலிருந்து இரவு எட்டுமணிக்குள் முடித்துக்கொள்வார்கள். விருந்தினர் வந்தால் இரவு மேசையைவிட்டு எழுந்திருக்க பன்னிரண்டு மணி ஆனாலும் பெயர் என்னவோ ‘le repas du soir’ தான். இரவு வேளைகளில்தான் அதிகம் அனுபவித்து உண்பார்கள். எனவே திருமணங்கள், பிறந்த நாள், வேறுவகையான கொண்டாட்டங்கள் அனைத்துமே முகூர்த்தநாள் பார்க்காமல் வார இறுதிநாட்களில் நடபெறுகின்றன, விருந்தும் இரவுவேளைகளில். இவ்விருந்தும் கொண்டாட்டமும் விடிய விடிய நீடித்தாலுங்கூட ‘la soirée’ என்றுதான் பெயர். மற்றபடி மதியம் இரவு இரண்டுவேளைகளிலும் முறைப்படி உண்பதெனில் எடுத்துக்கொள்ளும் உணவு வரிசைகளில் வேறுபாடுகளில்லை. அவை பொதுவாக ஆந்த்ரே (l’entrée), பிளா ஃப்ரன்சிபால் (le plat principal), தெஸ்ஸெர் (le dessert) என்று மூன்று கட்டமாக நடைபெறும்.

அ. l’Entrée அல்லது l’hors d’œuvre : ஆங்கிலத்தில் இதனை appetizer என்கிறார்கள். முக்கியமான உணவைச் சாப்பிடுவதற்கு முன்பாக எடுத்துக்கொள்ளும் எளிமையான உணவு அநேகமாக சலாத் (salade) அல்லது தெரீன் (terrine) அல்லது சூப் இவற்றில் ஏதேனும் ஒரு வகை சார்ந்ததாக இருக்கும்.

ஆ. Le plat principal பிரான்சு நாட்டில் கிடைக்கும் காய்கறிகள், கடலுணவுப்பொருட்கள், மாமிசங்கள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி (charcuterie) ஆகியவற்றைக்கொண்டு தயாரிக்கப்படுபவை

இ. Le Dessert இனிப்பு பண்டமாகவோ, ஐஸ்கிரீம் ஆகவோ, பாற்கட்டி ஆகவோ இருக்கலாம்.
பெரும்பாலும் ஒயினுடனேயே சாப்பிடுகிறார்கள். சாதாரண நாட்களில் குடும்பங்களின் வசதி மற்றும் படி நிலையைப் பொறுத்தது அது. மாறாகப் விருந்தினரை அழைத்திருந்தால் ஒயின் கட்டாயம், முக்கியப்பண்டிகை நாட்களில் அல்லது கொண்டாட்டங்களில் ஷாம்பெய்னும் முக்கியம். ஷாம்பெய்னும் பிரெஞ்சு சொத்துதான். பிரான்சு நாட்டில் Champagne என்றொரு பிரதேசத்தில் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட ஒருவகை வெள்ளை ஒயின் (le vin blanc)தான் பின்னாளில் ஷாம்பெய்ன் ஆனது. அதுபோல பிரெத்தாஜ்ன் பகுதியில் ஆப்பிளிலிருந்து தயாரிக்கப்பட்டும் ‘Cidre’ம் பிரசித்தம்.அதுபோல பிரான்செங்கும் ஒயின் தயாரிக்கப்பட்டாலும் பொர்தோ (Bordeaux) என்ற பிரதேசம் பிரபலமானது.

உணவு மேசையில் கடைபிடிக்கப்படவேண்டியவை

விருந்துக்கு அழைத்திருந்தால், நல்ல ஒயின் பாட்டிலொன்றை பரிசாகக்கொண்டுபோவது நலம். கன்னங்களில் முத்தம் கொடுத்து வரவேற்ற பிறகு முதன்முறையாக அந்த வீட்டிற்கு வந்திருக்கிறவர்கள் என்றால், உங்கள் ஓவர் கோட்டை வாங்கி அதற்குரிய இடத்தில் மாட்டுவார்கள். உணவு உட்கொள்ளப்படுவதற்கு முன்பாகப் பொதுவாக அப்பெரித்திஃப்( l’apéritif’)ஐ வரவேற்புக் கூடத்தில் வைத்துக் கொடுப்பார்கள். இது அநேகமாக விஸ்கியாக இருக்கும். முடிந்ததும் « மேசைக்கு » என்பதைக் குறிக்கும் வகையில் “à table” என விருந்துக்கு அழைத்த வீட்டுப் பெண்மணி கூறினால், உணவு தயார், மேசையில் உட்காரலாம் என்று அர்த்தம். அப்பெண்மணியே அவரவர்க்கான இருக்கையையும் காட்டுவார் அல்லது வாய்மொழியாகத் தெரிவிப்பார். பெரிய விருந்துகளில் நாற்காலிக்கு முன்பாக மேசையில் அழைக்கப்பட்டவ்ர்களின் பெயர்கள் இருக்கும். பொதுவாக தம்பதிகள் எதிரெதிராகவோ, ஒரு ஆண் ஒரு பெண்ணென்ற வரிசையிலோ உட்காருவது வழக்கம். மேசையில் கையைப் போடாமல் நேராக உட்காரவேண்டும். சாப்பிட ஆரம்பிப்பதற்கு முன்பாக விருந்துக்கு அழைத்தப் பெண்மணியே ‘போன் அப்பெத்தி’ (Bon appétit) எனக்கூறி விருந்தை ஆரம்பித்துவைப்பார். விருந்தினர்கள் பதிலுக்கு ‘போன் அப்பெத்தி’ எனக்கூறகூடாது. ‘merci’ என நன்றியைத் தெரிவித்தால் போதும்.உணவுப் பரிமாறல் (l’entrée, le plat principal) இடப்புறமிருந்தும், le dessert வலப்பக்கமும் பரிமாறத் தொடங்கவேண்டும். ஏதாவதொரு உணவு பிடிக்காதவகை எனில் ‘நன்றி வேண்டாம்’ எனக்கூறி மறுக்கவேண்டும். கைகளால் பொதுவாகச் சாப்பிடக்கூடாது, ஏதாவதொரு உணவுப்பொருளுக்குக் கையை உபயோகிக்க வேண்டியதெனின் எதிரில் அமர்ந்திருக்கும் விருந்துக்கு அழைத்த வீட்டுப் பெண்மணியே வழிகாட்டுவார். கூடையில் ‘Pain’ எனும் ரொட்டித்துண்டுகளை வைத்திருப்பார்கள். அவற்றைக்கையால் எடுக்கலாம். ஆனால் பக்கத்தில் அமர்ந்திருப்பவர் கேட்டால் ரொட்டித்துண்டைக் கையில் எடுத்துக்கொடுக்கக்கூடாது, ரொட்டித்துண்டுகள் கூடையை எடுத்துக் கையில் தரலாம். பிரெஞ்சுக்காரர்கள் பொதுவாக நிறைய பேசுவார்கள், அதிலும் இரவு உணவின்போது அலுக்காமல் பேசிக்கொண்டிருப்பார்ககள். பொதுவாக ஒயின் பாதிக் குடிக்கபட்டு வைத்திருந்தால், உங்களுக்கு இனி ஒயின் வேண்டாம் என்பதாக அர்த்தப்படுத்திக்கொள்வார்கள். வேண்டியிருந்தால் ஒயின் கோப்பைக் காலியாக இருக்கவேண்டும். உணவு உட்கொள்ளும்போது வாயில் உணவை வைத்துக்கொண்டு பேசக்கூடாது. அதுபோலவே முட்கரண்டியையோ கத்தியையோ ஆட்டிபேசவும் கூடாது, பிரெஞ்சுக்காரகளுக்கு ஏப்பம் விடுவது நாகரீகமல்ல, அசம்பாவிதமாக ஏதேனும் நடந்தால் ‘பர்தோன்’ (pardon) எனக்கூறி மன்னிக்கக்கோருவது வழக்கம். சாப்பிட்டு முடிந்ததும் சில வீடுகளில் டிழெஸ்திபிற்கு (Digestif ) என்றிருக்கிற அதாவது செரிமானத்திற்கு உதவுகிற மதுவைத் தருவார்கள். சிலர் காப்பியோ, தேனீரோ பருகிவிட்டு விடைபெறுவது உண்டு. புறப்படுகிறபோது அழைத்த விருந்தினர்கள் உங்கள் ஓவர்கோட்டை மறக்க வாய்ப்புண்டு, தவறாமல் கேட்டு அணியுங்கள். புறப்படும் முன்பாக சக பாலினத்திடம் கைகுலுக்கலும், எதிர்பாலினத்திடம் கன்னத்திற்கு இரண்டென முத்தங்களும் விடைபெறலை பூர்த்திசெய்யும்.
(தொடரும்)

மூத்த படைப்பிலக்கியவாதிகள், திறனாய்வாளர்கள் விமர்சனங்கள் –1

நீலக்டல் நாவல் குறித்து முனைவர்.ரெ.கார்த்திகேசு.

இந்த நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க நாவல் : நீலக்கடல் – நூலாய்வு

– மலேசிய எழுத்தாளர் : முனைவர்.ரெ.கார்த்திகேசு.

(முனைவர்ரெ.கார்த்திகேசுஅவர்கள்மலேசியா, பினாங்குநகரைச்சேர்ந்தவர். மலேசியஅறிவியல்பல்கலைக்கழகத்தில்பொதுமக்கள்தகவல்சாதனைத்துறையில்பேராசிரியராகஇருந்துஓய்வுபெற்றவர். மலேசியவானொலி, தொலைக்காட்சியின்முன்னாள்அலுவலர். தமிழ்கூறும்நல்லுலகத்திற்கும்மலேசியாவிலும்நன்கறியப்பட்டசிறுகதைஎழுத்தாளர், நாவலாசிரியர், இலக்கியத்திறனாய்வாளர். அனைத்துலகநாடுகள்பலவற்றில்கலந்துகொண்டுஆய்வுக்கட்டுரைகளைச்சமர்ப்பித்தபெருமைக்கும்உரியவர்இவர்!)

2005 இல் பதிப்பிக்கப்பட்ட “நீலக்கடல்” என்னும் இந்த நாவல் தமிழ் நாட்டிலும் அதற்கு வெளியிலும் கூட இன்னும் அதிகம் அறியப்படாமலும் பேசப்படாமலும் கிடக்கிறது. இருந்தும் இந்த நூற்றாண்டில் வெளிவந்துள்ள குறிப்பிடத்தக்க நாவலாக நான் அதனைக் கருதுவதற்கு முக்கிய காரணங்கள் இருக்கின்றன.

நாவலை எழுதியுள்ளவர் பிரஞ்சுக் குடிமகனாக பிரான்சில் வாழும் நாகரத்தினம் கிருஷ்ணா என்னும் எழுத்தாளர். முன்பு பாண்டிச்சேரியில் வாழ்ந்தவர். இணையத்தில் அதிகம் எழுதும் இவரை இணைய வாசகர்கள் அறிந்திருக்கிறார்களேயன்றி பொதுவான வாசகர்கள் இன்னும் அறியவில்லை.

தமிழில் இப்படி இணைய உலகத்தில் முகிழ்த்து அச்சுக்கு வரும் எழுத்தாளர்கள் தொகை இனியும் பெருகப் போவதால் இது ஒரு குறிப்பிடத் தக்க தொடக்கம்.

இதைச் சொல்லும் பொழுது இணையத்தில் வரும் தரமான படைப்புக்களை அச்சுக்குக் கொண்டு வருவதற்கென்றே தோன்றியுள்ள “எனி இந்தியன்” பதிப்பகம் பற்றியும் குறிப்பிட வேண்டும். அமெரிக்கத் தமிழர்களால் நடத்தப்படும் இந்தப் பதிப்பகம் இதுவரை கட்டுரைகள், அறிவியல் புனைகதைத் தொகுப்பு என்ற வடிவில் சிலபுத்தகங்களைக் கொண்டு வந்திருக்கிறது. http://www.anyindian.com என்ற தளத்தில் விவரங்கள்பெறலாம்.

நாகரத்தினம் கிருஷ்ணா தமிழ் அன்றி பிரஞ்சு மொழியையும் நன்கு அறிந்தவர். பிரெஞ்சிலிருந்து பல படைப்புக்களைத் தமிழுக்குக் கொண்டு வந்து இணையத்தில் பதிப்பித்துள்ளார். “பிரஞ்சு இலக்கியம் பேசுகிறேன்” என்னும் ஒரு நூலைத் தமிழில் தந்துள்ளார்.

அவருடைய பாண்டிச்சேரி மற்றும் பிரெஞ்சு மொழிப் பின்னணியைப் பயன் படுத்திக் கொள்ளும் இந்த நீலக்கடல் நாவல் தன் கதைப் பின்னணியை பாண்டிச்சேரியிலும் மொரிஷியசிலும் கொண்டிருக்கிறது. கதை நடக்கும் காலம் பிரஞ்சுக் காலனித்துவ காலமான 18ஆம் நூற்றாண்டும் பின் நிகழ் காலமான 2000ஆம் ஆண்டுகளும் ஆகும்.

2000ஆம் ஆண்டுகளில் பெர்னார் ·போந்தேன் என்னும் ஒரு பிரெஞ்சுக்காரர் பாண்டிச்சேரியில் தன் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையை ஆராய வருகிறார்.

முக்கியமாக 1943இல் தனது மூதாதையர்களில் ஒருவரான பெர்னார் குளோதன் என்பவர் பற்றிய தமிழ்க் கடிதம் ஒன்றின் உண்மையினை அறிய வருகிறார்.

அந்த ஆய்வில் முன் காலத்தில் பாண்டிச்சேரி பகுதியில் செல்வாக்காக இருந்த மதுரை நாயக்கர் வழிவந்த அரச குடும்பங்களின் ரகசியங்கள் சிலவற்றைக் கண்டெடுக்கிறார். இந்த ரகசியங்கள் அவரை ஆற்காடு நவாபு காலத்தில் வஞ்சிக்கப் பட்ட நாயக்கரின் வாரிசான ஒரு பெண், பிரெஞ்சுக்காரர்கள் நிறுவிய இன்னொரு காலனியான மொரிஷியசில் ஒளிந்திருப்பதாக அவருக்குத் தெரிகிறது. இந்தப் பெண் பிரெஞ்சு வீரர் ஒருவரைக் காதலித்ததாகவும் அறிகிறார். இந்த பிரெஞ்சு வீரர் தன் மூதாதையானபெர்னார் குளோதன் என அறிகிறார்.

இந்தப் பின்கதை பாண்டிச்சேரிக்கும் மொரிஷியசுக்குமாக மாறி மாறி அலைகிறது. அதோடு 18ஆம் நூற்றாண்டுக்கும் நிகழ்காலத்துக்கும் கூட அலைகிறது. அதற்கும் மேலாக இந்தப் பாத்திரங்கள் எல்லாம் இந்தியாவின் வேதகால வரலாற்றிலிருந்து திரும்பத் திரும்ப பிறந்து வந்து இந்த நாடகங்களை ஆடுவதாகவும் அவர் அறிகிறார். பெர்னார் குளோதனின் நிறைவேறாத காதலை அவர் அறிவதோடு கதை முடிகிறது.

ஆனால் இந்தக் காதல் யுகங்கள் தோறும் வெவ்வெறு பாத்திரங்களைக் கொண்டு தொடரக் கூடும் என்று நாவலாசிரியர் கோடி காட்டுகிறார். ஆகவே வரலாறும் மர்மமும் கலந்த புனைவு.

கதைச்சுவையும் சம்பவச் செறிவும் உள்ள நல்ல நாவல்தான் நீலக் கடல். மொரிஷியசைப் பின்னணியாகக் கொண்டு இன்னொரு நாவல் தமிழில் இருக்கிறதா என எனக்குத் தெரியவில்லை. இல்லை என்று எடுத்துக் கொண்டால் அந்த வகையில் இது முதல். ஆனால் பாண்டிச்சேரியைப் பின்னணியாகக் கொண்ட இன்னொரு அரிய நாவலான பிரபஞ்சனின் “வானம் வசப்படும்” இங்கு நினைவு கூரத் தக்கது.

நாகரத்தினம் கிருஷ்ணாவின் இந்தப் படைப்பில் பிரபஞ்சனின் எழுத்தின் தாக்கம் நிறைய இருப்பதாகவே எனக்குப் படுகிறது. இந்த நூலுக்கான முன்னுரையையும் பிரபஞ்சனே எழுதியுள்ளார்.

பிரபஞ்சனைப் போலவே கிருஷ்ணாவும் ஆனந்தரங்கம் பிள்ளை டயரியியிலிருந்து தகவல்களை எடுத்துப் பயன் படுத்தியுள்ளார். ஆனால் பிரபஞ்சனுக்கும் இவருக்கும் உள்ள குறிப்பான ஒற்றுமை இவர் பயன் படுத்தியிருக்கும் நடைதான். ஏறக்குறைய ஆனந்தரங்கம் பிள்ளை டயரியில் உள்ள 18-ஆம் நூற்றாண்டின் நடையே பிரபஞ்சனிடமும் கிருஷ்ணாவிடமும் இருக்கிறது. கிட்டத்தட்ட பரமார்த்த குரு கதை எழுதிய பெஸ்கி பாதிரியர் பயன் படுத்திய நடை போன்றது இது. இது இந்த இருபதாம் நூற்றாண்டு வாசகர்களாகிய நமக்கு ஒரு எரிச்சலையே உண்டு பண்ணுகிறது எனலாம்.

எனினும் நாகரத்தினம் கிருஷ்ணாவின் கதை தொடர்ந்து படிக்கக் கூடியதாக இருக்கின்ற காரணம் தமிழில் இதுவரை நாம் படித்திராத புதிய கதைக் களனில் புதிய செய்திகளை அவர் சொல்கிறார் என்பதுதான். கதை சுவையாகவும் சில மர்மங்களுடனும் பின்னப் பட்டுள்ளது. அதோடு பிரஞ்சு வாழ்க்கை மற்றும் பிரஞ்சு இலக்கியம் பற்றியும் இதற்கு முன் நாம் அறிந்திராத செய்திகளைக் கதையின் ஊடே சுவையாகச் சொல்லிச் செல்லுகிறார்.

மலேசியத் தமிழ் வாசகர்களைப் பொறுத்தவரை மொரிஷியஸ் நாட்டினை வளப்படுத்த அவர்கள் அப்பாவித் தமிழர்களைப் பிடித்துப் போய் நடத்திய விதம் நம் நாட்டின் ஆரம்ப ஒப்பந்தத் தொழிலாளர்களின் கதையோடு ஒத்திருப்பது இன்னொரு சுவையான ஒப்பீடாக இருக்கும்.

******