Monthly Archives: செப்ரெம்பர் 2019

மொழிவது சுகம் கட்டுரைகள் -3:ஒரு ‘போ(Po)’ன மொழியின் கதை

( மொழிவது சுகம் நூல் தொகுப்பிலிருந்து )

 

அந்தமான் நிக்கோபார் தீவுகளி சேர்ந்த போவா(Poa) இனத்து முதியவள் அப்பெண்மணி. மரணம் கதவைத் தட்டிக்கொண்டிருந்த நேரம். பிறரிடம் கதைக்க அவரிடம் சொற்கள் இருந்தன, கேட்பதற்கும், புரிந்துகொள்ளவும் காதுகளும், மொழிஞானமும் உள்ளவர்களில்லை. எத்தனை நாட்களுக்குத் தற்கூற்றுமொழியில் தனக்குத்தானே அல்லது சூன்யத்துடன் கதையாடமுடியும். தமது பால்ய வயது அனுபவங்களையும், தாமறிந்த கதைகளையும் இவரது ‘போ’ மொழியில் புரிந்துகொள்ளவல்ல ஒரே மனித உயிராகவும் துணையாகவுமிருந்த அவரது அன்னை இறந்து 30 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. அன்று தொடங்கி கடந்த 30 ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் பொழுதை இயற்கையோடு கழித்தவராம்: பறவைகளும் விலங்குகளும் தமது மூதாதையார் மொழிகளை அறிந்தவைகள் என்ற வகையில் அவற்றுடன் நேரம் கிடைக்கும்போதெல்லாம் உரையாடிவருவாராம்.

 

கடந்த மாதம் முதல் வாரத்தில் 85வது வயதான அம்மூதாட்டி இறந்துபோனாள். அவளோடு இந்திய துணைக்கண்டத்தில் பேசப்பட்டுவந்த மிகப்பழமையான மொழிகளில் ஒன்றும் ஒப்பாரிக்கு ஆளின்றி புதைக்கபட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள். சொற்கள் உலகை நமக்கு புரியவைக்கின்றன. சொற்கள் கட்டமைக்கும் உலகமென்பது எல்லகளற்ற பரந்த வெளி, பேரண்டம். ஒவ்வொரு மொழியும் தமது சொற்களுக்கென தனித்துவத்தைக் கூர்தீட்டிவைத்திருக்கிறது. சொல்லின் புரிதல் அகராதிகளால் தீர்மானிக்கப்படுவதல்ல, அதற்கும் அப்பாற்பட்டது. எண்பத்தைந்து வயது போவா பெண்மணியோடு ‘அவளுடைய மொழிமாத்திரமல்ல, அம்மொழிகொண்டிருந்த அறிவுத் திரட்சியும் – வரலாறு, பண்பாடு, சடங்குகள், மரபுகளென்ற பிற விழுமியங்களும் காற்றில் கலந்தன. போவா பெண்மணிக்கு அந்தமான் நிக்கோபார் தீவுகளிலுள்ள பல்வேறு வகையானத் தாவரங்களின் பெயர்கள் மனப்பாடமாகத் தெரியுமாம், வேறு மொழிகளில் மூங்கிலுக்கு அவ்வளவு பெயர்களில்லை என்கிறார்கள். ஆக ஒரு மொழியின் இழப்பென்பது பண்பாட்டின் இழப்பு மாத்திரமல்ல பல நேரங்களில் இயற்கையையும் அதன் கூறுகளைப்பற்றிய ஞானத்தையும்  தன்னகத்தே கொண்ட இழப்பு. .

 

அந்தமான் நிக்கோபார் தீவு  மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த ஆறுமொழிகளுள் போவாமக்களின் போ(Po) மொழியுமொன்று  என்கிறார்கள். கடந்த நூற்றாண்டில் ஏறக்குறைய 5000பேர்கள் பேசிவந்த மொழி. உலகில் அதிகமொழிகளைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஐக்கியநாட்டு சபையின் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு அண்மையில் வெளியிட்ட அறிக்கையின்படி இந்தியாவிலிலுள்ள மொத்த மொழிகளின் எண்ணிக்கை 1635, அவற்றுள் 37 மொழிகளை ஆயிரத்திற்கும் குறைவானபேர் உபயோகிக்கின்றனர். இந்தியாவிலுள்ள மொழிகளுள் 196 மொழிகள் வெகுவிரைவில் அழிந்துபோகுமென்றும் யுனெஸ்கோ அறிக்கை தெரிவிக்கிறது(1). இந்திய அரசியல் சட்டம் 22 பிரதான மொழிகளை அரசு மொழியாக ஏற்றுக்கொண்டிருந்தபோதிலும் நாடு தழுவிய மொழிகளாக ஆங்கிலமும், இந்தியும் இருக்கின்றன. அந்தமான் நிக்கோபார் தீவுகளிலும் உள்ள 85 விழுக்காடு மக்களுக்கு இந்தி தாய் மொழி அல்ல, இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் குடியேறிவசித்துவரும் அவர்களுக்கு இன்று இந்திதான் பிரதான மொழி. வளர்ந்த மொழிகளான தமிழ், தெலுங்கு, குஜராத்தி, மலையாளம் இன்ன பிற மொழிகள் இந்திக்காகத் தம்மை அங்கே அழித்துக்கொண்ட பிறகு ஆதரவற்ற ‘போ’மொழி இத்தனை நாள் நீடித்ததே கூட வியத்தலுக்குரியது. தனிமனிதன், அவன் சார்ந்த சமூகம், அரசு இம்மூவரும் மொழியின்பால் அக்கறைகொண்டவர்களாக இருக்கவேண்டும். இந்திய மைய அரசைப்பொறுத்தவரை மாநிலத்திலுள்ள மொழிகளுக்கு ஆதரவாக எடுக்கும் எந்த முடிவும் இந்திய ஸ்திரத் தன்மைக்கு எதிராக முடியுமென்ற உண்மையை அவர்கள் அறியாதவர்களல்ல. தவிர குஜராத்திகளும், பஞ்சாபிகளும், இராஜஸ்தானியர்களும், பீகாரிகளும் தங்கள் மொழியிடத்தில் இந்தியை ஏற்றுக்கொண்டபிறகு, பிறருக்கு ஒரு நீதியெனில் எப்படி? ஆக பிறமொழிகளைப்போலவே தமிழின் தலையெழுத்து தமிழ்நாடு அரசு மற்றும் தமிழர்களைச் சார்ந்தது. இதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. இலத்தீன் அமெரிக்கநாடுகளில் போர்ச்சுகீஸ், ஸ்பானிஷ் மொழிகளும். ஆப்ரிக்க நாடுகள் மற்றும் இந்தியத் துணைக்கண்டத்தில் பிரெஞ்சும் ஆங்கிலமும் எஜமானர்கள். எங்கள் கிராமத்தில் பண்ணைகளில் வேலைசெய்தவர்களிற் பலர் பின்னாட்களில் சென்னைக்குச் சென்று துறைமுகத்திலும், கொத்தவால் சாவடியிலும் வேலைபார்த்து பொங்கலுக்கும் ஊர் திருவிழாவுக்கும் கிராமத்துக்கு வருவார்கள். கூட்டுறவு வங்கிகளிலும், சில நேரங்களில் சென்னையிலுள்ள தங்கள் பண்ணையாட்களிடமும் கடன்பட்டு வரப்பில் குடைபிடித்து நடக்கப்பழகிய ஒன்றைரை ஏக்கர் நிலக்கிழார்கள் ஜமீன்தார் மனோபாவத்துடன்  தனது முன்னாள் பண்ணையாட்களை விசாரிப்பார். அந்த முன்னாளும் வேட்டியும் சட்டையும் போட்டபின்பும், ‘ஐயா ஏதோ உங்கள் புண்ணியத்துலே நல்லா இருக்கேன்’, என்று கூறிவிட்டு கொத்தவால் சாவடியிலிருந்து கொண்டுவந்த வாழைப்பழதாரை கொடுத்துவிட்டு காலில்விழ, ஆசீர்வாத கூத்தும் நடக்கும். காமன் வெல்த் நாடுகள் என்ற முத்திரையும், கிரிக்கெட் மட்டையை தூக்கிபிடிக்கிறபோதும், ஆங்கிலத்தைப் பேசுகிறபோதும் அதுதான் நடக்கிறது. மேதகு விக்டோரியா மகாராணிக்கு நாம் நிரந்தர அடிமைகள். ஆண்டானிடமிருந்து அடிமை விடுதலை பெறுவதும், முதலாளியியத்திடமிருந்து தொழிலாளியின் விடுதலையும், காலனிய ஆதிக்கத்திலிருந்து சுதந்திரமுமென அரசியல் விடுதலையைச் சந்திக்க முடிந்தது, ஆனால் பண்பாட்டு விடுதலை என்பது வேறு, அதற்கு விடுதலைக்கான கதவுகள் அடைப்பட்டதுதான் ஒருபோதும் திறவாதவை.  நமது வாழ்க்கை மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் வணிகத் தந்திரங்களாலானது என்றானபிறகு,  மொழியில் தமிழராக நீடிப்பது எத்தனை தலைமுறைக்கு சாத்தியம்.

 

அந்தமான் தீவு போவாப் பெண்மணியின் உதாரணத்தை பிரான்சு நாட்டிலுள்ள மொரீஷியஸ் தமிழர்களின் வீட்டிலும் சந்திக்கிறேன். ஒவ்வொரு மொரீஷியர் தமிழர் வீட்டிலும் எழுபது அல்லது எண்பது வயதில் ஒரு முதியவரோ அல்லது மூதாட்டியோ இருப்பார்கள். அவர்களுக்கு தமிழ் வருமென்று சம்பந்தப்பட்டவர்களின் மகனோ மகளோ தெரிவிப்பார்கள். பிறகு திடீரென்று ஒருநாள் அந்த முதியவரையோ அல்லது மூதாட்டியையோ கைப்பிடித்து அழைத்து வருவார்கள். இருக்கின்ற மூன்று படிகளை ஏறிமேலேவர ஐந்து நிமிடமெனில், மூச்சிறைப்பு அடங்கி சுவாசம் தனதியல்புக்கு வர ஒரு ஐந்து நிமிடம்பிடிக்கும். அதற்குள் அவரது மகனோ மகளோ பேசு பேசு என்று அவசரப்படுத்துவார்கள். வெகுகாலமாக உபயோகமின்றிக் கிடந்த ‘தமிழ்’, காற்றும் உமிழ்நீருமாக கலந்து வரும்: ‘வணக்கம்’ என்பார், பதிலுக்கு ‘வணக்கம்’,  என்பேன். ‘பொண்டாட்டி எப்படி?’ என்று அடுத்த கேள்விவரும், ‘இதற்கு என்ன பதிலைச் சொல்வதென்று? தெரியாமல் நான்  என் மனைவியைப் பார்க்க, அவள் புதுப்பெண்போல தலையைக் குனிந்துகொண்டிருப்பாள். நான் விழிப்பதைவைத்து, தமிழில் பேசி என்னை மடக்கிவிட்டதாக நினைத்து சந்தோஷத்துடன் புறப்பட்டுச் செல்வார்கள். அடுத்த சில மாதங்களில் அம்மொரீஷியரின் குடும்பத்தில் தமிழறிந்த அந்த ஒரு உறுப்பினர் இறந்திருப்பார். தமிழ்மொழியும் அவரோடு சேர்ந்து  அக்குடும்பத்திலிருந்து விடுபட்டிருக்கும். இது பெரும்பாலான மொரீஷியஸ் தமிழ் குடும்பங்களின் நிலை. இன்றைய மொரீஷியர் தமிழரின் தமிழர் பண்பாடு¦ன்பது நிறம், பெயர்கள், கடவுள் வழிபாடுகளில் மட்டுமே முடங்கிக்கிடக்கிறது, மொழி அடையாளமில்லை. தென் ஆப்ரிக்கா, இந்தியப் பெருங்கடலிலுள்ள தீவுகள் தமிழரிடத்திலும் எஞ்சியிருப்பது மேற்கூறப்பட்ட குறியீடுகள்தான். அதாவது பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் தமிழ் மண்ணிலிருந்து விடுவித்துக் கொண்ட நமது மூதாதையர்களின் இன்றைய நிலைமை இது. ஒரு நூறாண்டுகாலம் கடந்ததென்றால்  அரசியல் மற்றும் பொருளாதார காரணங்களை முன்னிட்டு புலம்பெயர்ந்துள்ள இலங்கை அல்லது இந்திய தமிழ்க்குடும்பங்களுக்கும் இதுதான் நேரும்.

 

தமிழர்கள் தமிழை மறக்காலிருக்க எனக்குத் தெரிந்த யோசனை, பேசாமல் தமிழை வரமளிக்கிற தேவதையாக மாற்றி, மாநாடுகளைக்கூட்டாமல் குடமுழுக்கு கும்பாபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்வது. நமது  பொதுப்பண்பின்படி தீமிதித்தோ, தேர் இழுத்தோ, கிறிஸ்துவ சகோதரர்களெனில் தமிழ்பூஜை வைத்தோ மொழியை நாம் மறக்காமலிருக்க இது உதவும். தமிழர்களின் நலன்கருதி இனமானத் தலைவர் வீரமணியும்  கலைஞரிடம் இதைப் பக்குவமாக எடுத்துச்சொல்லவேண்டும், இப்போதுள்ள சூழலில் அவரும் கேட்பார் போலத்தான் தெரிகிறது.

————————————–

 

 

 

மொழிவது சுகம் கட்டுரைகள் – 2:

சுவர்கள்: பெர்லின் முதல் உத்தபுரம்வரை

 

(இக்கட்டுரைகள் பத்தாண்டுகளுக்கு முன் பு எழுதப்பட்டவை யுகமாயினி இதழிலும், பின்னர் நூலாகவும் வெளிவந்தவை)

அந்நியரிடமிருந்து சொந்த உடமைகளைக் காத்துக்கொள்ள வேலி. அதிகாரமும், நீதியும் உங்கள் கையிலிருப்பின் நத்தம், புறம்போக்கு, அனாதீனங்களை உடமையாக்கிக்கொள்ளவும் வேலிபோடலாம். கட்சி பேதமின்றி எல்லா தலைவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அதற்கான சாமர்த்தியமுண்டு. அமைச்சரில் ஆரம்பித்து, கிராம நிர்வாக ஊழியர்வரை அவரவர் செல்வாக்கிற்கேற்ப பொதுநிலத்தை அபகரிப்பதென்பது ஒரு கலையாகவே இங்கே வளர்ந்திருக்கிறது. ஒருவரும் விதிவிலக்கல்ல. இவர்கள் எல்லோருக்குமே சட்டம் தமது கடமையைச் செய்யுமென்று நன்றாகத் தெரியும். நடிகனென்றால் தமிழ்நாட்டில் அரசு பொது நோக்கிற்காக கையகப்படுத்திய நிலத்தைக்கூட கேட்டு வேலிபோட முடியும். ஏழைகள் சிரிப்பில் இறைவனை காண்பவர்களில்லையா? அந்நியரிடமிருந்து சொந்த உடமைகளைக் காத்துக்கொள்ள மாத்திரமல்ல, அரசு எந்திரங்களின் ஆசீர்வாதத்தோடு பொதுசொத்தை அபகரிக்கவும், அப்பாவி தமிழ் அகதிகளை பட்டியில் அடைக்கவும் வேலிக்கு உபயோகமுண்டு. இந்த வேலிக்கு இன்னொரு வடிவமும் உண்டு பெயர்: சுவர்.

 

பிரிவினையென்றால் தடுப்புச் சுவர் எழுப்பி வாழப் பழகுவதென்பது இன்று நேற்று ஏற்பட்டதல்ல, காலங்காலமாய் மனிதர் இரத்தத்தில் கலந்தது. ஆற்றோரங்களை மனிதரினம் தேடிப்போனபோது ஏற்பட்டிருக்கலாம். தமக்கென்று ஒரு குடிசைவேண்டுமென கலவி முடித்த ஆதாமும் ஏவாளும் யோசித்திருப்பார்கள். சுவர் பிறந்த காரணத்திற்கு சுயநலம் ஒரு கிரியாஊக்கி. மனிதரினத்தில் இச்சுவர்களுக்குப் பல பெயர்கள். நிறம் என்கிறோம், சாதி என்கிறோம், மதம் என்கிறோம், மொழி என்கிறோம், உங்களுக்குத் தெரிந்த இங்கே சொல்ல அலுப்புற்றவையும் அவற்றுள் அடக்கம். அவரவர்க்கு கிடைத்த கற்களைக்கொண்டு சுவர் எழுப்புவது மாத்திரம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. சுற்றுச் சுவருக்குளே உட் சுவர்களும் உண்டு. வெங்காயம்போல உரித்துக்கொண்டுபோனால் தனிமைச் சுவரில் அது முடியும். ஒருவகையில் அது நான், எனதென்ற சுயமோகத்தின் உச்சம். ‘பிறர்’ என்ற சொல்லின் மீதான அச்சம். ஆனாலும் சுவர்கள் நிரந்தரமானதல்ல என்பதும் வாழ்வியல் தரும் உண்மை. அடைப்பட்டுக்கிடந்தவன் அலுத்துபோய் ஒரு நாள் சன்னலைத் திறக்கிறான், பிறகொருநாள் கதவைத் திறக்கிறான். ஆனாலும் ஒருவன் கதவினைத் திறக்கிறபோது உலகின் ஒரு மூலையில் இன்னொருவன் கதவினை அடைத்துக்கொண்டு எனக்கு ஒருவரும் வேண்டாம் என்கிறான்.  இன்னாதம்ம இவ்வுலகம் இனியது காண்பர் அதன் இயல்புணர்ந்தோர், என்று கூறி நம்மை நாமே சமாதானப்படுத்திக்கொள்வதைத் தவிர வேறு வழிகளில்லை.

 

கடந்த வாரம் நவம்பர் 9ந்தேதி பெர்லின் சுவர் வீழ்ந்து இருபது ஆண்டுகள் முடிந்த தினத்தை கோலாகலமாக ஜெர்மன் நாடு தமது நட்புநாடுகளுடன் சேர்ந்து கொண்டாடியது. அந்த வெற்றிக்குப்பின்னே மிகப்பெரிய சோகம் ஒளிந்துகிடக்கிறது. நாஜிகள் செய்தபாவத்திற்கு ஜெர்மன் மக்கள் மிகமோசமாக தண்டிக்கப்பட்டனர். ஸ்டாலின் அரக்க மனம் ஹிட்லருக்கு எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல. ஹிட்லராவது தனது ஆட்சிகாலத்தில் தன்னைச் சார்ந்தவர்களையும் தன்னினத்தையும் நேசித்தான். ஸ்டாலின் தன் நிழலைக்கூட நம்பியவனல்ல. இன்றைய இலங்கைத் தமிழர்கள் குடும்பங்களைப்போலவே பெர்லின் நகரத்தை சேர்ந்த ஒவ்வொரு ஜெர்மானிய குடும்பத்திலும் உயிரிழப்புண்டு, போரின் வடு உண்டு. நாஜிப்படைகளுக்கு தரத்தில் ஓர் இம்மி அளவும் செம்படைகள் குறைந்தல்ல. இரண்டாம் உலகப்போரின் முடிவில் ஜெர்மன் வீழ்ந்து 1945ம் ஆண்டு சோவியத் யூனியன் படைகள் பெர்லின் நகரத்திற்குள் நுழைந்தபோது இரண்டு மில்லியன் பெண்கள் வன்புணர்ச்சிக்கு ஆளானார்கள். அடுத்து இரண்டாம் உலகப்போரில் வெற்றிக்கு உதவியமைக்கு நன்றிக்கடனாக இங்கிலாந்தும், அமெரிக்காவும் ஜெர்மனியிடமிருந்து கைப்பற்றிய பகுதிகளை சோவியத் ரஷ்யாவே வைத்துக்கொள்ளலாமென சம்மதிக்க பெர்லின் நகரம் பாட்டாளிகளின் அரசு என்றபெயரில் 1945ம் ஆண்டு ஜூலைமாதம் காம்ரேட்டுகள் வசமானது. கிழக்கு ஜெர்மனியில் தங்கிய சோவியத்படை உள்ளூர் காம்ரேட்டுகள் துணையுடன் நடத்திய அராஜகத்தில் பாதிக்கக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்திற்கும் மேல். அவர்களில் சம்பவத்தின்போது இறந்தவர்களின் எண்ணிக்கை மட்டுமே பத்தாயிரத்துக்குமேல். நடந்தகொடுமைகளை வெளியிற் சொல்ல அருபது ஆண்டுகள் அவர்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. நாஜிகள் வீழ்ச்சிக்குப்பிறகு அதன் தலைவர்கள் விசாரணக்குட்படுத்தபட்டு தண்டித்தது நியாயமெனில் அதே போர்க்கால குற்றங்களுக்காக தண்டிக்கப்படவேண்டியவர்கள் மேற்கத்திய படைளிலும், சோவியத் படைகளிலும் பலர் இருந்தனர் ஆனால் அது நடக்கவில்லை. சரித்திரம் ஜெயித்தவனை நியாயவானாக ஏற்றுக்கொள்கிறது, குற்றங்களிலிருந்து தற்காலிகமாக விடுதலை அளிக்கிறது.

 

மார்க்ஸியத்தை ஏற்றுக்கொண்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலேயே ஓரளவிற்கு வளத்துடன் இருப்பதாக நம்பப்பட்ட கிழக்கு பெர்லினிலிருந்து நாள் தோறும் மக்கள் வெளியேறி மேற்கு ஜெர்மனிக்குச் சென்றுக் கொண்டிருந்த நிலையில் (1948க்கும் -1961ற்குமிடையில் மேற்கு ஜெர்மனிக்குக் புலம்பெயர்ந்த கிழக்கு ஜெர்மனியர்கள் 2.7மில்லியன்பேர்கள்), கம்யூனிஸ நாடுகளில் பாலும் தேனும் பாய்ந்தோடுகிறது என்ற பிரசாரத்தைக் கேலிகூத்தாக்கியது. கூட்டம்கூட்டமாக மக்கள் வெளியேறுவதைத் தடுக்க நினைத்த கிழக்கு ஜெர்மன் அரசு சுவர் எழுப்ப தீர்மானித்தது. மேற்கத்தியர்கள் பணம்கொடுத்து கிழக்குஜெர்மனியர்களை விலைக்கு வாங்குவதாகவும், மனிதக் கடத்தலைத் தடுப்பதற்காகவே சுவர் எழுப்பப்படுவதாகவும் கிழக்கு ஜெர்மன் அரசுதரப்பில் விளக்கம் சொன்னார்கள். 165 கி.மீ நீளமும் 302 காவல் அரண்களும், குறிபார்த்து சுடுவதில் வல்ல காவலர்களும், மின்சாரம் பாய்ச்சப்பட்ட வேலியும், தானியியங்கி துப்பாக்கிப் பொறுத்தப்பட்ட காவல் தூண்களுங்கொண்ட சுவர் 1961ல் பெர்லினை இரண்டு துண்டாக்கியது. தாயின் மார்பிலிருந்து குழந்தையைப் பிடுங்கி எறிந்ததுபோல உறவுகள் பிரிக்கபட்டனர். கடுமையான காவலையும் மீறி உயிரை பணயம்வைத்து சுவரைக் கடக்க நீர், நிலம், ஆகாயமென அத்தனை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. துப்பாக்கிக்குண்டுக்குப் பலியானவர்கள் உண்டு, கைது செய்யப்பட்டவர்கள் உண்டு; எனினும் முயற்சி தொடர்ந்தது. அதிகாரத்தையும், பொய்யான பிரச்சாரங்களையும் மட்டுமே நம்பி மார்க்சியத்தை செயல்படுத்திவந்தவர்கள் தங்கள் தோல்வியை உணர்ந்தபோது நிலைமை கைமீறிவிட்டது. 1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 9ந்தேதி பெர்லின் சுவர் இடிக்கப்பட்டது. பெர்லின் சுவரோடு ஐரோப்பியக் கண்டத்தைப் பொறுத்தவரை கம்யூனிஸமும் இடிந்து விழுந்தது. மேற்கத்திய ஐரோப்பியநாடுகளுக்கும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே அதுகாறும் நிகழ்ந்துவந்த நிழல் யுத்தமும் பனிப்போருங்கூட அத்துடன் முடிவுக்குவந்தன.

 

1989 பெர்லின் சுவர் இடிக்கபட்ட அந்த ஆண்டில்தான் தமிழ் நாட்டில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த உத்தபுரமென்ற கிராமத்தில் தலித் மக்களுக்கு எதிராக சுவரொன்றை  எழுப்புவதற்குக் காரணங்களைத் தேடியிருக்கிறார்கள். தேடியவர்கள் உயர்சாதிமக்கள் என்று சொல்லிக்கொள்கிற வேற்று சாதியினர். பிரச்சினை ஒருபக்கம் அரசமரம், மற்றொருபக்கம் முத்தாலம்மன் கோவில். முத்தாலம்மன் பக்தர்களான சாதியினருக்கு அரசமரம் சுற்றும் சாதியினர் அருகில் வரக்கூடாதாம். அரசமரத்துக்கும் முத்தாலம்மனக்கும் இடையே பத்தடிதூர இடைவெளியை அவர்கள் இரு சாதிகளுக்கான இடைவெளியாகக் கணக்கிட்டுவிட்டார்கள் போலிருக்கிறது. சாதிச்சண்டைவளர்ந்து, அரசாங்கத்தின் ஆதரவு எப்போதும் பலம் வாய்ந்தவன்பக்கம் என்ற நீதிப்படி உருவான ஒப்பந்தத்தை ஏற்கும்படி தலித்மக்கள் வற்புறுத்தப்பட்டார்கள். 1989ம் ஆண்டு ஆகஸ்டுமாதம் இரு சாதியினருக்குமிடையில் நடந்த மோதலில் சாதிக்கு இரண்டென உயிர்ப்பலிகளை முத்தாலம்மனுக்கும் அரசமரத்திற்கும் கொடுத்திருக்கிறார்கள். பிரச்சினைக்குத் தீர்வாக 300 மீட்டருக்குத் தடுப்புச் சுவர். தண்ணீர்த் தொட்டி, ரேஷன்கடை, பள்ளிக்கூடம் தலித்துக்கென்று தனியே ஒதுக்கி தமது உயர்சாதியினர்(?) குணத்தைக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். 2008ம் ஆண்டு கள ஆய்வில் இறங்கிய மதுரை மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலையீட்டால் உண்மை வெளியுலகிற்கு தெரிய வந்திருக்கிறது. கிழக்கு ஜெர்மனியில் சுவரை எழுப்பிய பொதுவுடமைத் தோழர்கள் உத்தபுர தீண்டாமைச் சுவரை இடித்தாகவேண்டுமென்று புறப்பட்டது காலத்தின் கட்டளை. 61ல் எழுப்பட்ட பெர்லின் சுவரை இடிக்க 1989 வரை  ஜெர்மன் மக்கள் காத்திருக்கவேண்டியிருந்தது 1989ல் காந்தி தேசத்தில், பெரியாரை போற்றும் மாநிலத்தில் தலித் மக்களுக்கெதிரான உத்தபுர சுவரை முழுவதும் இடிக்க எத்தனை ஆண்டுகள் காத்திருக்கவேண்டுமோ? பாலஸ்தீன மக்களைத் தடுத்து அவர்கள் நிலப்பரப்பை கையகப்படுத்தி 2005 ஆண்டில் உலநாடுகளின் எதிர்ப்பை துவம்சம் செய்து இஸ்ரேலியர்கள் கட்டிக்கொண்டிருக்கிற சுவரையும் இங்கே அவசியம் நினைவு கூர்தல்வேண்டும்.

 

லூயி தெ பெர்னியே என்ற எழுத்தாளர் தமது நாவலொன்றில் ‘சரித்திரத்திற்கு ஆரம்பமென்று ஒன்றில்லை என்பார். அவரைப் பொறுத்தவரை இன்றைய நிகழ்வு நேற்றைய சம்பவத்தின் விளைவாக இருக்கலாம் அல்லது நாளைக்கு நடக்கவிருப்பதின் காரணியாக இருக்கலாம். வரலாறு வெற்றிபெற்றவர்களால் மட்டும் எழுதப்படுவதல்ல, ஒடுக்கப்பட்டவர்களாலும் எழுதப்படுவது, என்ற நம்பிக்கை எனக்குமுண்டு. அவ்வப்போது எழும் முனகலுங்கூட உரத்து ஒரு நாள் ஒலிக்குமென நம்புகிறவன். உலகமே எனதுகையிலென்று கொக்கரித்த பலரும் கேட்பாரற்று செத்து மடிந்திருக்கிறார்கள். இலங்கைத் தமிழனமோ, பாலஸ்தீனமோ, உத்தபுரமோ ஒடுங்கிவிடாது. அவர்களுக்கான காலம் வரும் வேலியோ, சுவரோ எடுபடும், இடிபடும். சரித்திரம் அவர்களது வெற்றிக்கெனவும் சில பக்கங்களை ஒதுக்கியிருக்கிறது.

 

——————————

 

  கடந்த காலத்தின் குரல் – ஜிதேந்திரன்

கடந்த காலத்தின் குரல்

  • ஜிதேந்திரன்

  நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களின் ‘இறந்த காலம்’ நாவல் சந்தியா பதிப்பகம் வெளியீடாக டிசம்பர், 2018-இல் வெளிவந்திருக்கிறது. நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள் பிரான்சில் வாழும் புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர். பிரெஞ்சு இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர். மொழிபெயர்ப்பாளர். நீலக்கடல், மாத்தா ஹரி, கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி, காஃப்காவின் நாய்க்குட்டி, ரணகளம் முதலிய ஐந்து நாவல்களை எழுதியுள்ளார். ‘இறந்த காலம்’ அவருடைய ஆறாவது நாவல்.

நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள் வரலாற்றுப் பின்புலத்திலேயே தன்னுடைய படைப்புகளை அமைத்துக் கொள்கிறவர். புதுச்சேரியிலிருந்து புலம்பெயர்ந்து பிரான்சில் வசிப்பதனால், பிறந்த தேசத்தைப் பற்றிய வரலாற்றைத் தன்னுடைய படைப்புகளில் வரைந்து கொள்கிறார். புதுச்சேரி வரலாற்றைப் பேசுபவை பிரபஞ்சனின் ‘மானுடம் வெல்லும்’, ‘வானம் வசப்படும்’ நாவல்கள். புதுச்சேரியின் வரலாற்றை ஆவணப்படுத்தும் அதே திசையில், ஆனால் மாறுபட்ட கதைசொல்லல் திறமையில் நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள் தன்னுடைய பிரதிகளைச் செய்கிறார். இவருடைய நீலக்கடல் நாவல் பாண்டிச்சேரி மற்றும் பிரெஞ்சு தேசத்தின் காலனி ஆதிக்கத் தீவு மொரிஷியஸ் பற்றியது. மாத்தா ஹரி நாவல் புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதை. பிரான்சில் சுட்டுக் கொல்லப்பட்டவள். கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி நாவல் புதுச்சேரி மற்றும் செஞ்சி நாயக்கரின் வரலாற்றைச் சொல்கிறது. காஃப்காவின் நாய்க்குட்டி நாவல் புதுச்சேரியிலிருந்து பிரான்சு, செக் குடியரசுக்குப் புலம்பெயர்ந்தவர்களைப் பற்றியது. ரணகளம் நாவல் தமிழக அரசியல் பற்றியது.

மிரா அல்ஃபஸ்ஸா (அன்னை) புதுச்சேரி வந்த 1914 முதல் புதுச்சேரி அரசு இந்திய அரசுடன் இணைந்த 1954 வரையிலான அரசியல் நிகழ்வுகளைப் பதிவு செய்கிறது இந்நாவல். புதுச்சேரி நகர உருவாக்கமும், அக்காலகட்டத்தில் புலம்பெயர்ந்த மக்களின் வாழ்க்கையும் இதில் இருக்கின்றன. ஆரோவில் ஒரு கண்ணியாகவும், புதுச்சேரி விடுதலை மற்றும் புலம்பெயர் அரசியல் மறு கண்ணியுமாக நாவல் அமைகிறது. இரண்டையும் இறுதியில் இணைக்கும் லாவகம் சிறப்பு.

மனிதன் இறந்த காலத்திலிருந்து மீள முடியாது. இறந்த காலம் அவனைத் தொடர்ந்து கொண்டிருக்கும், அவனுக்குள் மனமாக. சுற்றியிருப்பவர்களும் அவனை அவனது இறந்த காலத்தின் நீட்சியாகவே காண்கிறார்கள். தனது நேற்றைய சம்பவங்களை; நேற்றைய தவறுகளை; அவமானங்களை தனிமனிதன் மறக்கலாம். ஆனால் அவனைக் குறித்த அந்நிகழ்வுகளை மற்றவர்கள் மறந்துவிடுதில்லை. அதிலும், வரலாற்றுத் தவறுகள் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டப்படுகின்றன. பரந்து விரிந்த இந்திய நிலப்பரப்பில் ஆங்கிலேயர் எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்ற வேளையில்தான், பிரெஞ்சிந்திய விடுதலைச் சிக்கலும் இருந்தது. இந்திய விடுதலைப் போராட்டத்தில்  பிரெஞ்சு ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த புதுச்சேரியின் நிலை தர்மசங்கடமானது. வேறு வழியில்லாமல் அவர்களும் வெளியேற வேண்டியதாகிவிட்டது. நாவலில் அரவிந்தர் ஆஸ்ரமத்தின் செயல்பாடுகள் விமர்சிக்கப்படுகின்றன. ஆரோவிலியன்களாவது என்பது ஏமாற்று வேலை. எந்த மனிதனும் முழுமையாகப் புனிதனாகிவிட முடியாது. ஆரோவில் குழுமத்தில் இணைபவர்கள் சில காலம் புனிதர்களாக நடிக்கலாம். தவம், தியானம் செய்கிறவர்கள் பெரும்பாலும் தங்களுக்குள்ளாகப் பாலியல் சிக்கலுக்குள் தத்தளிக்கின்றனர். உலகின் எந்தத் தியான ஆஸ்ரமும் பாலியல் சர்ச்சைகளுக்குள் சிக்காமல் இருந்ததில்லை. ஓஷோ கம்யூன், நித்யானந்தா ஆஸ்ரமம் உட்பட, வட இந்தியச் சாமியார்கள் பட்டியல் பெரிது. காலங்காலமாக மனிதன் காமத்திலிருந்து விடுபட முடியாதா? என்ற சிக்கல் இருக்கிறது. ஏன் விடுபட வேண்டும்? ஓஷோ ‘காமத்திலிருந்து கடவுளுக்கு’ என்கிற வழியைக் காட்டுகிறார். தியானம் செய்கிறவர்கள் காமத்தை அடக்குவதன் மூலம் தங்களுக்குள் மனப் பிளவுகளை உண்டாக்கிக் கொள்கிறார்கள். அதனை அடக்குவதன் மூலம் பாலியல் சிக்கல் வெறி கொண்டதாகிறது.

குருவால் ஈர்க்கப்பட்ட சீடர்கள் தங்கள் சொத்துக்களை தாங்களாகவே ஆஸ்ரமத்திற்கு எழுதி வைத்து விடுகின்றனர். அல்லது வசியத்தால் சொத்துக்கள் எழுதி வாங்கப்படுகின்றன. சில நேரங்களில் மிரட்டலாலும்கூட. இங்கு அவர்கள் சீடர்கள் அல்ல; பொதுமக்கள். ஆஸ்ரமத்திற்கு வெளிநாட்டு உறுப்பினர்கள் எண்ணிக்கை பெருகப் பெருக, பணம் சேர்கிறது. ஆஸ்ரமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை விலைக்கு வாங்கி, ஆஸ்ரமத்தை விஸ்தரித்துக் கொண்டே போகிற யதார்த்தத்தைப் பார்க்க முடிகிறது. வெள்ளியங்கிரி மலைப் பகுதியில் ஆஸ்ரமம் அமைத்திருக்கும் ஈஷா யோகா மையத்தின் மீது சுற்றியுள்ள மக்கள், சுற்றுச்சூழல் துறை, வனத்துறைகளின் குற்றச்சாட்டுகள் உண்டு. அப்படித்தான் ஆரோவில்லும். “இந்த நகரத்தை (ஆரோவில்) உருவாக்க 50 வருடங்களுக்கு முன் சொற்ப விலைக்கு மக்களிடம் இருந்து நிலங்களை வாங்கிக் குவித்தனர். கொஞ்ச நாட்களில் வாங்கிய இடம் போதவில்லை என்பதால், கிராமப் புறம்போக்கு நிலத்தையும் ஆக்கிரமித்து வேலி அமைத்து ஆரோவில் இடமாக மாற்றிக் கொண்டனர். ஆரோவில்வாசிகள் யாரும் ஆரோவில்லில் இடம் வாங்கக் கூடாது என்ற விதி உள்ளது. ஆனால், ஆரோவில்வாசிகள் பலரும் ரகசியமாக இடங்களை ஆக்கிரமித்துள்ளனர். தொழில் தொடங்குவதற்காகச் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களின் 133 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். கிராமத்து வாய்க்கால், ஏரி, கோயில் நிலம், விளையாட்டு மைதானம் என ஒன்றையும் விட்டு வைப்பது இல்லை” (ப.180).

இந்த இரண்டு குற்றச்சாட்டுகளும் ஆரோவில் அமைப்பிற்கு உள்ளது என்று விவரிக்கிறார் நாவலாசிரியர். வெளிநாட்டிலிருந்து வந்த ஐரோப்பியப் பெண் ஆரோவில் நகரத்தில் மூன்று பேரால் கற்பழிக்கப்பட்ட செய்தி, ஆரோவில் நகர விரிவாக்கம் ஆகிய இரண்டும் சமீபத்திய உண்மைச் செய்திகள். ஆனால், ஆரோவில் உருவாகும்பொழுது சொல்லப்பட்ட நோக்கத்திற்கு எதிரான திசையில் இப்போதைய ஆரோவில் இருக்கிறது என்கிற குற்றச்சாட்டைத்தான் நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள் முன்வைக்கிறார்.

நில அபகரிப்பு என்பதில் ஆரோவிலுக்கு பிரெஞ்சு அரசாங்கமே குறைந்த விலையில் நிலத்தைக் கொடுத்தது என்பதும் அடங்கும். அதைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆஸ்ரமவாசிகள் / ஆரோவிலியன்கள் அபகரித்துக் கொண்டார்கள் என்கிற உண்மையை நாவல் விவரிக்கிறது. ஆரோவிலின் ஆன்மீக சோஷலிஸம் என்பதே ஏமாற்றுத் தந்திரம். புளி ஏப்ப ஆன்மீகவாதிகள், பசி ஏப்ப ஆன்மீகவாதிகள் உண்டு என்கிறார் நாவலாசிரியர். தங்கம் பூசப்பட்ட மாத்ரி மந்திர் கோளம் ஆன்மீகத்திலிருந்து விலகிய நிலை. வெளிநாட்டிலிருந்து வந்து தங்குகிற ஆஸ்ரமவாசிகள், ஆரோவிலுக்கு வெளியே வாழும் புதுச்சேரி ஏழை மக்கள் எனப் பெரும் பிளவுகளைக் கொண்டிருக்கிறது ஆரோவில் நகரம். ஆரோவிலுக்கு நிலத்தைக் கொடுத்துவிட்டு, ஆரோவிலுக்கு உள்ளேயே எடுபிடி வேலை பார்க்கும் ஏழை மக்களும் இருக்கிறார்கள்.

நர்மதா குடும்பத்திடமிருந்து நிலத்தைப் பிடுங்கிக் கொண்ட ஆல்பர்ட், நர்மதாவைக் கற்பழித்த ஆல்பர்ட், ஆரோவிலுக்கு வருகிற பெண்களைச் சீரழிக்கிற துய்மோன் என ஆரோவில் நகரக் களங்கத்திற்கு உருவகமாக இரண்டு கதாபாத்திரங்களை வடிவமைத்திருக்கிறார். அமெரிக்காவிலிருந்து வருகிற ஜெஸிக்கா, பிரான்சிலிருந்து வருகிற மீரா இருவருமே ஆரோவில் நகரில் கற்பழிக்கப்படுகிறார்கள். ஜெஸிக்கா எந்தப் புகாரும் அளிக்காமல், நாடு திரும்புகிறாள். மீரா காவல் நிலையத்தில் புகாரளித்தாலும், சாட்சியங்கள் இல்லையென்று கூறி, காவல்துறை புகாரை ஏற்க மறுக்கிறது. மீரா ஜெஸிக்காவைத் திரும்ப அழைத்துவந்து, அஸ்ஸாமிற்குச் செல்கிற துய்மோன், ஆல்பர்ட் இருவரையும் குழந்தை கடத்துபவர்களாகச் சித்திரித்து, அங்கு வைத்து அவர்கள் இருவரும் கொல்லப்படும் சூழ்நிலையைத் திட்டமிட்டு உருவாக்குகிறார்கள்.

அன்னை, அரவிந்தரின் நல்ல நோக்கம் தற்போதைய நிகழ்வுகளால் அடிபட்டுப் போகிறது. ‘ஆரோவிலியன்கள் எல்லாருமே அரவிந்தருமல்ல, மிரா அல்ஃபஸ்ஸாவுமல்ல’ (ப.103). ஆரோவிலுக்கு எதிரான கருத்துக்கள் மாதவன் வழியாகச் சொல்லப்படுகின்றன. நாவல் முழுக்க அன்னை, அரவிந்தருக்கு எதிரான பார்வை இருக்கிறது. அன்னை, அரவிந்தரின் நிலைப்பாடுகள் விமர்சிக்கப்படுகின்றன. “முடிகொட்டிய நரைத்த தலைக்கு ஒரு சல்லடைத் துணியை முக்காடிட்ட சூன்யக்காரி போல ஒரு மூதாட்டி” (ப.39) என்கிற அன்னையின் முகத் தோற்றத்தைச் சொல்லும் வரிகள் அன்னையின் பக்தர்களுக்குப் பேரதிர்ச்சியைத் தரும். அன்னையின் கண்கள்தான் பிரசித்தமானவை. மாறாக, இந்த நாவலில் அன்னையின் ‘குரல்’ பேசுகிறது. பிரான்சிலிருக்கிற மீராவை (நாவலின் நாயகி) இந்தக் குரல்தான் தொந்தரவு செய்கிறது. நாவலின் தொடக்கத்தில் வருகிற அந்தக் குரல், இறுதியில் மீரா கற்பழிக்கப்பட்டபின்தான் வருகிறது. மீராவை இங்கு அழைத்து வந்த குரல், ஆரோவிலின் பெருமைக்குக் களங்கம் செய்கிறவர்களை அழிக்க விரும்பும் குரல்.. அவள் கற்பைக் காப்பாற்ற முன் வரவில்லை. ‘இறந்த காலம்’ நாவல், அன்னையின் கடந்த (இறந்த) கால வாழ்க்கையைக் கொஞ்சம் அலசுகிறது. துய்மோன், ஆல்பர்ட் கொல்லப்பட்ட பிறகு, ஆரோவில் களங்கங்களைப் போக்கிய பிறகு,  அன்னையின் இந்தக் குரலில் அமைதி ஏற்படுவதாக நாவல் முடிகிறது.

நாவலின் மற்றொரு தளம் – புதுச்சேரி அரசியல். இறந்த காலம் – புதுச்சேரியின் கடந்த காலம். புதுச்சேரியிலிருந்து பிற நாடுகளுக்கு, குறிப்பாக, இந்தோ சீனாவிற்குப் (சைக்கோன்) புலம்பெயர்ந்தவர்களின் வாழ்க்கைச் சூழலையும், அவர்கள் ஏமாற்றப்பட்ட வரலாற்றையும் சொல்கிறது. சாதி ஆதிக்கத்திலிருந்து விடுபட, சமத்துவ உரிமையைப் பெற விரும்பி பிரெஞ்சு தேசத்தின் காலனி ஆதிக்க நாடுகளில் வாழும் மக்கள் ‘ரெனோன்சியாசியோன்’ (La renonciation) எடுத்துக் கொள்வார்கள். அவ்வாறு மாறியவர் ‘ரெனோன்சான்’ (காலனிவாசி) எனப்படுகிறார். சுப்பராயன் அப்படி ரெனோன்சானாக, ஃபெலிக்ஸ் சுப்பராயனாக மாறிக்கொண்டார். சிங்காரவேலர் எதுவார் என்று மாறிக்கொண்டார். இவர்கள் சிப்பாய்களாக பிரெஞ்சு தேசத்திற்காகப் போர்க் களத்தில் உயிரைக் கொடுக்கப் பயன்படுத்தப்படுகிறார்கள். அதாவது ரெனோன்சானாவதற்கு இது ‘இரத்த வரி. ஆங்கிலேயக் காலனியாதிக்கத்தை மட்டுமே அறிந்திருந்த தமிழ்ச் சூழலுக்கு இந்தப் பிரெஞ்சிந்தியக் காலனியாதிக்கச் சிக்கல்கள் புதிது. பிரெஞ்சு தேசத்தில் மூன்று வகையான மக்கள் இருக்கிறார்கள். பூர்வீகப் பிரெஞ்சு மக்கள், கிரேயோல் மக்கள் (தாய் அல்லது தந்தை இருவரில் ஒருவர் ஐரோப்பியர்), ரெனோன்சான் மக்கள். இவர்களில் ரெனோன்சான் மக்கள் சரிசமமாக நடத்தப்படுவதில்லை. பதவி, வேலை, ஆடம்பர வாழ்க்கை, சாதியத் தடைகளிலிருந்து விடுதலை என ஆசை வார்த்தைகாட்டி, இந்தோ சீனாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட புதுச்சேரி மக்களின் நிலையை சுப்பராயன், சிங்காரவேலர், வேதவல்லி வழி நாவலாசிரியர் புலப்படுத்துகிறார். அதே காலகட்டத்தில் இந்திய விடுதலைப் போராட்டங்கள் பிரெஞ்சிந்தியப் புதுச்சேரியில் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் விளக்குகிறார். சைக்கோனின் நிகழ்வுகளை வேதவல்லியும், புதுச்சேரி அரசியல் நிகழ்வுகளை அவரது தம்பி சதாசிவமும் ஒருவருக்கொருவர் எழுதும் கடிதங்கள் மூலமாக வாசகர்களுக்குத் தெரியப்படுத்துகிறார்.

புதுச்சேரி நிகழ்வில் அரவிந்தர் ஆஸ்ரமம் அமைத்தது, ஆரோவில் உருவாக்கப்பட்டது, காந்தியின் புதுச்சேரி வருகை, அரவிந்தரைச் சந்திக்க காந்தி தூது அனுப்பியபோதும் அரவிந்தர் மறுப்பு தெரிவித்தமை, இந்தோ சீனா வங்கி, புதுச்சேரி அரசியலின் நாயகன் ‘வி.எஸ்’ எனப்படுகிற வ. சுப்பையாவின் அரசியல் போராட்டங்கள், பிரெஞ்சிந்திய வாலிபர் சங்கம், சவானா மில், ரோடியர் மில், கெப்ளே மில் தொழிலாளர்களின் போராட்டங்கள், துப்பாக்கிச் சூடு, 12 பேர் உயிரிழப்பு, கவர்னர் எதுவார் குபேர் என்பவரின் அரசியல் மீதான விமர்சனம் எனப் பல பக்கங்களை நாவலாசிரியர் விரிவாக விளக்கிச் செல்கிறார். ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 12 பேர் உயிரிழந்ததை, தற்போதைய தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்த உணர்வெழுச்சியோடு பொருத்தி எழுதியிருக்கிறார்.

வரலாற்றுப் புனைவை எழுதும்போது, நிகழ்வை எழுதுகிற அதேநேரத்தில், கற்பனையும், படைப்பாற்றல் மிக்கவராகவும், தனித்த பாத்திரங்களை உருவாக்கி, ரசனை குன்றாமல் நாவலை எழுதிச் செல்கிறார். நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களின் தனித்திறமையே கதைசொல்லும் உத்திதான். கதையில் ஏற்படுத்துகிற சுவாரஸ்ய முடிச்சுகள், வாசகர்கள் கண்டுபிடிக்கிற அளவில் ‘பொடி’ வைத்து எழுதுகிற எழுத்து நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களுடையது. இந்த நாவலில் மட்டுமல்ல, அவரது எல்லாப் படைப்புகளிலும் இந்தத் தனித்திறனைப் பார்க்கலாம். நாள், தேதியிட்டு காலத்தை மாற்றி மாற்றி எழுதும் உத்தி இவருடைய பொதுவான தன்மை. கடந்த காலத்திற்கும், நிகழ்காலத்திற்குமாக இவரது மொழி, கதை சொல்லும் உத்தி மாறி, மாறிப் பயணிக்கும். காலத்தை இணைக்கும் புள்ளியைக் கூர்ந்த அவதானிப்புடன் செய்கிறார். நிகழ்கால அரசியலை; சம்பவங்களை; அரசியல்வாதிகளைக் குறிப்பால் உணர்த்தும் முறையைக் கைக்கொண்டிருக்கிறார்.

மீரா, ஜெஸிக்கா, மாதவன் தவிர பிரான்சிலிருக்கும் மீராவின் தாய் இஸாபெல், அவரது இரண்டாவது கணவர் லூயிஸ், புதுச்சேரியில் மாதவனின் குடும்பம், மீரா தங்கும் வீட்டில் ஆல்பர்ட்-தேவகி, ஆரோவிலியன் துய்மோன், நர்மதா, கலைவாணி முதலியோர்தான் கதாபாத்திரங்கள். அரூபப் பாத்திரங்களான வேதவல்லி, சதாசிவம் கடிதங்களின்படி மாதவனும், மீராவும் திருமண முறை உறவினர்கள். இந்த முடிச்சை அவிழ்ப்பதில்தான் நாவலின் சுவாரஸ்யம் இருக்கிறது. வேதவல்லியின் மற்றொரு தம்பி சிங்காரவேலர் புதுச்சேரியிலிருந்து இந்தோ சீனாவிற்குச் சென்று, அங்கு வியட்நாமியப் பெண்ணை மணம் செய்து, அங்கிருந்து ஆப்பிரிக்காவுக்குச் செல்வதாகச் சொல்கிறது வேதவல்லியின் கடிதம். மீரா தன்னுடைய தாத்தா பற்றிக் குறிப்பிடும்பொழுது, இதே குறிப்பைச் சொல்கிறாள். கதாபாத்திர உறவுகளை சஸ்பென்ஸாக வைத்து, வாசகர்கள் கண்டுபிடிக்கும்படியான எழுத்து முறை இவருடைய மற்ற நாவல்களிலும் காணப்படுகிறது. மீராவின் தாய் இஸாபெல்லும் புதுச்சேரியில் வல்லுறவுக்கு ஆளாகிறாள். மீராவின் தந்தை யாரென்றே தெரியாத சூழலில், துய்மோனாக இருக்கலாம் என இஸாபெல் கூறுகிறாள். துய்மோன் – இந்தப் பெயர் ஏன்? 1735ஆம் ஆண்டு கவர்னராகப் புதுவைக்கு வந்தவர் துய்மா. இவர் ஏழு ஆண்டுகள் ஆட்சியில் இருந்திருக்கிறார். அவரைக் குறிப்பிடும் விதமாக இந்தக் கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கிறதோ என ஐயம் தோன்றுகிறது.

ஆசிரியர் எந்த ஒரு கதாபாத்திரத்தையும் வீணாக்கவில்லை. சாதாரணமாக ஒருமுறை டிராப் செய்கிற டிரைவர்கூட இறுதியில் மறுபடியும் வருகிறார், மணிகண்டனாக. மீராவின் திட்டங்களுக்கு உறுதுணையாக. மீராவை ஆரோவில் நகரில் சைக்கிளில் பின்தொடர்கிற பத்திரிகையாளர், விமான நிலையத்தில் தற்செயலாகப் பக்கத்தில் அமர்பவர் நாவலின் இறுதியில் மீண்டும் வருகிறார்கள். முதலில் ஒரு முடிச்சு அல்லது ஒரு கேள்வி. அதற்கு நாவலின் ஏதோ ஒரு பக்கத்தில் விடை என்கிற ரீதியில் நாவலின் சுவாரஸ்யம் கூட்டுகிறார்.

அண்மையில் தமிழகத்தில் குழந்தைக்குச் சாக்லேட் கொடுத்தவர்களைக் குழந்தை கடத்தல் கும்பலென அடித்துக் கொன்ற (உண்மை) செய்தியை, இரண்டாகப் பிரித்து, முன்பின் தெரியாதவர்களிடம் குழந்தை சாக்லேட் பெறுவது குற்றமாகப் பார்க்கும் நாடு இது என்று ஒரு பகுதியிலும், குழந்தை கடத்துபவர்கள் எனத் தவறாகச் சித்திரிக்கப்பட்டு, இருவரையும் ஊர் மக்கள் அடித்துக் கொலை செய்கின்றனர் என்பதை இறுதிப் பகுதியிலும் அமைத்திருக்கிறார்.

‘இறந்த காலம்’ நாவல் புதுச்சேரியில் பெரிய கவனத்தைப் பெற்றிருக்க வேண்டும். அன்னை, அரவிந்தர் ஆஸ்ரமவாசிகளால் இந்த நாவல் நிச்சயம் விமர்சிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.

*****

 

நாமார்க்கும் குடியல்லோம்

நாமார்க்கும் குடியல்லோம்

( மொழிவது சுகம் நூல் தொகுப்பிலிருந்து  )

“காலையில் எழும்ப வேண்டியது

ஒரு கோணியோடு

ஒரு தெருவு நடந்தால் போதும்

கோணி நிறைந்துவிடும்

காகிதங்கள் ஏராளம் செலவாகின்றன

தலை நிமிர்ந்து வாழலாம்”

 

என்கிற வரிகளும்,  “ஐம்பது பைசாவிற்கு கால் மடக்கி கையேந்துகிறது எங்கள் ஊர் யானை”  என்ற வரியும் தமிழர்களைப் பற்றிய சித்திரமாக கவிஞர் மு. சுயம்புலிங்கத்தினால் சுட்டப்படுகிறது. அவரவர்க்கு ஒரு கோணி கைவசம் இருக்கிறது, நிரம்புகிறது. தலை நிமிர்ந்து வாழ்கிறோம். சுதந்திரமென்றும் சொல்லிக்கொள்கிறோம். கோணி மனிதர்களுக்கு மாத்திரமல்ல தன்மானமிக்க ஆனைகளுங்கூட மேடை தானமாகக் கிடைத்தால் கால் மடக்கி, பணிவு காட்டும் சுதந்திரம். தார்மீகச் சுந்திரமா? சட்டம் தரும் சுதந்திரமா என்ற கேள்விகளுக்கு அவசியமில்லை. நாம் பிழைக்கிறோம் என்பது முக்கியம். மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ, எனக்கேட்கும் துணிச்சல்மிக்க எழுத்தாளர்கள் தமிழுக்குச் சாத்தியமா? என்ற கேள்வி கவிஞர் சுயம்புலிங்கத்தின் கவிதைகளை வாசித்த பிறகு எழுகிறது.

 

மரிதியய் கம்பனுக்கு வேண்டியவர்(இரண்டு வாரங்களுக்கு முன்பு அவரைக் குறித்து எழுதியிருந்தேன், இக்கட்டுரையை அதன் தொடர்ச்சி எனலாம்). பிரெஞ்சில் இன்றைய தேதியில் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர்: கறுப்பரினம், பெண்மணி என்பது இலக்கியத்திலும் கோட்டாவை வற்புறுத்தி அடையாளம் பெற நினைப்பவர்களுக்கு உதவக்கூடிய தகவல். 2009ம் ஆண்டுக்கான கொன்க்கூர் இலக்கிய பரிசினை, நியாயமானத் தேர்வில் வென்றவர். ஆனாலும் அப்பெண்மணி பரிசுக்குரியவரல்ல என்ற விமர்சனம் வந்தது. விமர்சித்தவர்கள் அப்பெண்மணியின் எழுத்தாளுமையையோ, பரிசுக்குரியதாகத் தேர்வு செய்த அவரது நூலையோ கேள்விக்குட்படுத்தவில்லை, அவரது பிரெஞ்சு அடையாளத்தைக் கேள்விக்கு உட்படுத்தினார்கள். தற்போது பிரெஞ்சு அதிபராக உள்ள நிக்கோலாஸ் சர்க்கோசியினுடைய கடந்த கால செயல்பாடு பிரான்சு நாட்டிலுள்ள சிறுபான்மை மக்களுக்கு எதிரானதாக இருந்ததென்ற குற்றசாட்டு உண்டு. நகரின் பின் தங்கிய பகுதிகளில் வாழ்ந்த கறுப்பரின மக்களும், அரபு மக்களும் குறிப்பாக இளைஞர்கள் அவரை இனவெறியாளரென்றே சித்தரித்திருந்தார்கள். அவர் உள்துறை அமைச்சராக இருந்த நேரத்தில் புலம்பெயர்ந்த மக்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் அறிவு ஜீவிகளை முகஞ்சுளிக்க வைத்தன. சர்க்கோசி 2007ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டபொழுது கறுப்பரினத்தை சேர்ந்த அறிவுஜீவிகள், கலையுலக பெருமக்கள், பாடகர்கள் எனப் பலர் அவருக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்படி சர்க்கோசியின் எதிரணியிலே இடம்பெற்றவர்களுள் மரி தியய்யும் ஒருவர். அதிபர் தேர்தல் முடிவு சர்க்கோசிக்கு ஆதரவாக இருந்தது. வெற்றிபெற்றதாக அறிவிக்கபட்டார். நிக்கோலாஸ் சர்க்கோசி ஒரு மிருகம், அத்தகைய மனிதரின் கீழ்வந்த பிரான்சும் எனது நம்பிக்கையை இழந்துவிட்டது, இங்கிருந்து வெளியேற விரும்புகிறேன், என்ற கூறி பிரான்சு நாட்டைவிட்டு வெளியேறியவர் கடந்த மூன்று ஆண்டுகளாக ஜெர்மன் நாட்டில் பெர்லின் நகரில் தமது கணவருடன் வசித்து வருகிறார்.

 

மரி தியய்க்கு பரிசளித்திருக்கக்கூடாதென்று சொல்ல நினைத்த எரிக் ராவுல் என்ற ஆளும் கட்சி உறுப்பினர்: “2009ம் ஆண்டிற்கான கொன்க்கூர் இலக்கிய பரிசுக்கென அறிவிக்கபட்ட முடிவு தவறானது. தேர்வுக்குழுவினர் சரியான நபரை தேர்வு செய்ய தவறிவிட்டனர். பரிசுக்குரியவர் பிரான்சு தேசத்தின் அடையாளம் கொண்டவராகவும் அதன் பெருமைகளை போற்றுகிறவராக இருக்க வேண்டும். அதற்கு மாறாக இப்பெண்மணி (மரி தியைய்) நமது (பிரான்சு) நாட்டையும் நமது அதிபரையும் சிறுமைபடுத்தி பேசியிருக்கிறார். விமர்சித்து இருக்கிறார். இவ்விடயத்தில் நமது கலை, பண்பாட்டுத் துறை அமைச்சர் தலையிட்டு ஆவன செய்யவேண்டும்” என்றார். அவருக்கு ஆதரவாக குரல்கொடுக்க அதிபரின் துதிபாடிகளும் முன் வந்தனர். ஆனாலும் இப்பிரச்சினையில் கலை பாண்பாட்டுதுறை அமைச்சரும், பரிசு அளித்த கொன்க்கூர் அமைப்பும், தேர்வுக்குழுவில் அங்கம் வகித்த எழுத்தாளர்களும், பரிசுபெற்ற எழுத்தாளர் பெண்மணியும் என்ன சொல்லப்போகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதில் பிரெஞ்சு மக்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

 

மரிதியய் பெண்மணியை பரிசுக்குரியவராகத் தேர்வுசெய்த படைப்பாளிகள் ஆளுங்கட்சி உறுப்பினர்களின் கூச்சலை வன்மையான கண்டித்தனர். “அரசியல் வாதிகள் ஓய்ந்த நேரங்களில் இலக்கியமென்றால் என்னவென்று தெரிந்துகொள்ள முயற்சிக்கவேண்டும். இலக்கிய பரிசினை ‘மிஸ் பிரான்சு’ தேர்வு என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். மரிதியய் என்ன எழுதியிருக்கிறார் எனப்பார்த்து பரிசினை அளிக்கிறோமே தவிர என்ன பேசினார் எனப்பார்த்து பரிசுவழங்குவதில்லை. தவிர சுதந்திரம் சுதந்திரமென்று வாய்கிழிய பேசுகிறோம், ஓர் எழுத்தாளரை இப்படி பேசக்கூடாது அப்படி பேசக்கூடாது என்று தெரிவிப்பதன்மூலம் இவர்கள் என்ன சொல்லவருகிறார்கள். சுதந்திரமான நாட்டில்தானே இருக்கிறோம்? என்ற கேள்வியையும் அரசாங்கத்தைப் பார்த்து கேட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு ஆதரவாக எழுத்தாளர்களும் களத்தில் குதித்தனர்.

 

கலைப் பண்பாட்டுத் துறை அமைச்சருக்கு வருவோம். இவர் பெயர் பிரெடெரிக் மித்தரான் முன்னாள் அதிபர் பிரான்சுவா மித்தரானின் சகோதரர் மகன். இடது சாரி சிந்தனையாளர், எழுத்தாளர், கலை விமர்சகர். தீவிர வலதுசாரி சிந்தனைகொண்ட சர்க்கோசி ஆட்சிக்கு வந்தவுடன், எதார்த்தவாதியானார். உலக அரசியலில் இனி தீவிர வலதுசாரிகளுக்கோ அல்லது தீவிர இடது சாரிகளுக்கோ இடமில்லை என்ற உண்மையை சர்க்கோசியும் அறிந்திருந்த காரணத்தால், தமது கட்சி அமைச்சரவையில் இடதுசாரி சிந்தனைவாதிகள் பலரை சேர்த்துக்கொண்டார். அவர்களுள் பிரடெரிக் மித்தரானும் ஒருவர். கலை மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் பதவி அவருக்குக் கிடைத்தது. வலது சாரி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தபோதும் அவரது இடதுசாரி சிந்தனையை எவரும் சந்தேகித்ததில்லை.

 

போலந்தில் பிறந்தவரும், தற்போது பிரான்சில் வசிப்பவருமான பிரபல திரைப்பட இயக்குனரான ரோமன் போலஸ்கியை (Rosemary’s Baby, Chinatown) சமீபத்தில் ஸ்விஸ் காவல்துறை கைது செய்தது.  அவர் கைது செய்யப்பட காரணம் 1977ம் ஆண்டு திரைப்படமொன்றை இயக்குவதற்காக அமெரிக்காவில் தங்கி இருந்தபொழுது இளம்வயது பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகக் பாலியியல்குற்றச்சாட்டு. இப்பிரச்சினையில், ரோமன் போலஸ்கி ஒரு பிரெஞ்சு குடிமகனாகவும் இருந்ததால் அமெரிக்காவைக் கண்டித்து  பிரடெரிக் மித்தரான் அறிக்கை வெளியிட்டார். முப்பது ஆண்டுகளைக் கடந்த ஒரு வழக்கில் வெறும் குற்றசாட்டுகளின் அடிப்படையில் ஒரு சாதாரண மனிதரைபோல ரோமன் போலஸ்கிபோன்ற கலைவிற்பனரை கைது செய்யவேண்டும், விசாரணைக்குட்படுத்தவேண்டுமென அமெரிக்கா எதிர்பார்ப்பது நியாயமல்ல என்றார். இவரது அறிக்கையை பலரும் கண்டித்தார்கள். போலன்ஸ்கியின் தவறை நியாயப் படுத்துகிறார் என்றார்கள். எனினும் அமைச்சர் ரோமன் போலஸ்கியை உணர்வு பூர்வமாக ஆதரித்ததைப் பலரும் சிலாகித்தார்கள். எனவே அமைச்சரின் கருத்து எழுத்தாளர் மரிதியய்க்கு ஆதரவாக இருக்குமென்று நம்பினார்கள். ஆனால் நடந்தது வேறு. ஓடோடிச்சென்று ரோமன் போலஸ்கியை ஆதரித்தவர், எழுத்தாளருக்கு ஆதரவாக ஒரே ஒரு வார்த்தை..ம் இல்லை. எழுத்தாளருக்கு உண்டான பேச்சு சுதந்திரம் எழுத்தாளரை விமர்சிக்கிறவர்களுக்கும் உண்டு எனக்கூறி தமக்கு அமைச்சர் பதவி அளித்த சர்க்கோசிக்கு விசுவாசமாக நடந்துகொண்டார். “ஐம்பது பைசாவிற்கு கால் மடக்கி கையேந்துகிறது எங்கள் ஊர் யானை” என்ற கவிஞர் சுயம்புலிங்கத்தின் வரிக்கொப்ப.

 

பிரான்சு நாட்டையும், அதிபரையும் விமர்சனம் செய்துவிட்டு, பிரெஞ்சு இலக்கிய பரிசினை வாங்குவது தவறு என்ற ஆளும் கட்சியின் விமர்சனத்தை பரிசுபெற்ற பெண்மணி மரி தியய் எப்படி எடுத்துக்கொண்டார். “இங்கே பாருங்கள் எனக்குப் பரிசினைக்காட்டிலும் பேச்சு சுதந்திரம் முக்கியம், அதிபர் சர்க்கோசி குறித்தும், அவர் நிர்வாகத்தின் கீழுள்ள பிரான்சு குறித்தும் எனக்கு இப்போதும் ஒரே அபிப்ராயந்தான். பரிசுக்காக அதிபரிடமோ, பிறருடனோ சமரசம் செய்துகொள்ள நான் தயாரில்லை”, எனக் கறாராகச்சொல்லிவிட்டார்.

 

“தனது எண்ணத்தையும் கருத்தையும் சுதந்திரமாகத் தெரிவிப்பதே மனித உரிமைகளுள் மிகவும் உன்னதமானது” என 1789ம் ஆண்டு ஆகஸ்டுமாதம் 26ந்தேதி மனித உரிமை பிரகடனத்தின் பிரிவுக்கூறு எண் 11 தெரிவிக்கிறது. அதன்படி ஒரு குடிமகன் சுதந்திரமாக பேசவும், எழுதவும், எழுதியதைப் பிரசுரிக்கவும் அது வழிவகுக்கிறது. ‘நான் சிந்திக்கிறேன் எனவே வாழ்கிறேன்’ – ‘Je Pense donc je suis’ என்பார் ரெனே தெக்கார்த். ‘எழுதுகிறேன் எனவே சுதந்திரமாக இருக்கிறேன்’, என்பது எனது சொந்தப் புரிதல். எழுத்து வெளியைப்போல ஒரு சுதந்திர உலகம் இருக்க முடியாது. எழுத்து என்னை வசீகரித்ததற்கும் பிரதான காரணம் இதுவே. சுதந்திரம் என்ற சொல் தனி மனிதன், சமூகம் என்ற இரு முனைகளுக்கும் கயிற்றில் நடக்க முயல்கிற கழைக்கூத்தாடியொருவனின் கவனத்தைப் பெற்றது. இரு முனைகளும் ஒத்துழைக்கவேண்டும். சில சில்லறைவிதிகளென்ற கம்பைக் கையிலேந்தியபடி பிசகாமல் அடியெடுத்து வைக்கும் வித்தை. சுதந்திரத்தினை இருவகையில் தனிமனிதன் பிரகடனபடுத்தமுடியும்: எதிர் தரப்பு அதிகாரத்திற்கு அடிபணிவதில்லை, கட்டளைக்குக் கீழ்ப்படிவதில்லை, இச்சைக்கு இணங்குவதில்லையென எதிர்வினைகளூடாக தன்னுடைய சுதந்திரத்தைக் காப்பதென்பது ஒரு வகை. எனது எண்ணம், எனது சிந்தனைகள், எனது முடிவுகளென சொந்த விருப்பத்தை பூர்த்திசெய்வதன் ஊடாக சுதந்திரத்தைப் போற்றுவதென்பது இன்னொருவகை. இரண்டிற்கும் நோக்கமொன்றுதான்: நாமார்க்கும் குடியல்லோம்.

(மொழிவது சுகம் நூல் தொகுப்பிலிருந்து)

__________________________________________

 

 

 

மொழிவது சுகம்,  செப்டம்பர்  7, 2019  

 

அ. இது அசல் நெய்யினால் தயாரிக்கப்பட்ட …….

நண்பர் க. பஞ்சுவின் மனம் சுவைத்த கவிதை அனுபவம் சொற்களாக உருமாறி்யுள்ளது. ” நவீன கவிதைகளும் என் வாசிப்புகளும்’ என்ற நூல் வடிவில் கவிஞர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

பிரான்சு நாட்டில் வசிப்பவர்களுக்கு Michelin என்ற சொல் குறிப்பாக என்னைப்போல ருசி கண்டவர்களுக்கு ( எங்க அம்மா வழி தாத்தா, உண்ணு ருசி கண்டவனும் பொண்ணு ருசி கண்டவனும் உருப்படப்படமாட்டான் ன்னு அடிக்கடி சொல்லுவார்) நன்கு அறிமுகமான சொல். இந்த மிஷலன் என்கிற நிறுவனம் தன்னுடைய பிரதிநிதி ஒருவரை உணவு விடுதிகளுக்கு அனுப்பிவைக்கும். அவர் யார், எப்போது வருவார், அவர் எப்படி இருப்பார் என்கிற எந்தத் தகவலும் தெரிவிப்பதில்லை. வாடிக்கையாளர்களுள் ஒருவராக வந்துபோகும் அம்மனிதர் (அல்லதுமனிதி) உணவு விடுதியின் சூழல், வாடிக்கையாளர்களை வரவேற்கும் முறை, அவர்களை நடத்தும் விதம், உணவின் தரம், பரிமாறும் விதம் முதலான கூறுகளின் அடிப்படையில் முடிவுகளை ஒன்று இரண்டு மூன்று என நட்சத்திர எண்ணிக்கையில் மதிப்பிடுவார்கள்.  இந்த நட்சத்திர மதிப்பீடு ஓட்டலின் தரத்தை நிர்னயிக்கும்.

நண்பர் க.பஞ்சாங்கம் பேராசிரியர் என்றோ, முனைவர் என்றோ  கவிஞர் என்றோ, திறனாய்வு திலகர் என்றோ அல்லதுவேறு  பட்டுக்குஞ்சலங்களாலோ,  தன்னை அலங்கரித்துக்கொண்டு  படைப்புக்களை அணுகுவதில்லை. (நூலட்டை அதற்குச் சாட்சி).   அதுபோலவே படைப்புக்களின் தரத்தை எழுதியவரின் பாலினம், எத்தனைமுறை தன்னை வந்து பார்த்தார், அவருடைய பின்புலமென்ன என்று அணுகுவதில்லை. பிரான்சு மிஷலன் நிறுவனத்தைப்போலவே  அவருடைய இதயமும் திடமானது. « அசல் நெய்யினால் தயாரிக்கப் பட்டது » என்பதுபோன்ற  படைப்பாளிகளின் முன்னொட்டுச் சான்றிதழ்கள் உதவாது.    நூலில் இடபெற்ற கவிஞர்கள் க. பஞ்சாங்கத்தால்விரும்பி வாசிக்கப்பட்ட வர்கள். நூலாசிரியர் நண்பர் க.பஞ்சாங்கத்தையும் நூலில் இடம்பெற்றுள்ள  கவிஞர்களையும் வாழ்த்துகிறேன்.

 

ஆ.  கட்டற்ற சுதந்திரம் ( Liberalism)  என்கிற காட்டாறு

அண்மையில் படித்த நூல் பிரெஞ்சு எழுத்தாளர், வரலாற்றாசிரியர், அரசியல்வாதி எனப் பல அடையாளங்களுடன் அண்மையில் மறைந்த Max Gallo – மாக்ஸ் கலோ- என்பவரின் « Le regard des femmes » ( பெண்களின் அவதானிப்பு)என்கிற நாவல்.  பார்த்த திரைப்படம்  « Partir » ( திரைக்கதையைக்கொண்டு  ‘ஓடுகாலி என்பது தமிழில் சரி). நாவலுக்கும் திரைப்படத்திற்கும் இடையில் ஒற்றுமைகள் அதிகம் : ஆண்பெண் – உடல் சேர்க்கை – மேற்கத்திய தம்பதிகளின் வாழ்க்கை முறை சமூகப்பாதையில்  இந்த இருகோடுகளுக்குள் நிகழும் திசைமாற்றம், தடம் புரளும் குடும்ப இரயில் என லென  அந்த ஒற்றுமைகளை வகைப்படுத்தலாம்.

Le regard des femmes (பெண்களின் அவதானிப்பு ) நாவல் ஐரோப்பிய ஒன்றியத்தில் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கும் பிலிப்  அவருடைய இளம் மனைவி லிசா இடையிலான உறவுகள் ;  பிலிப்பின் தாய், தந்தை இருவரின் குடும்ப வாழ்க்கை  அதில் ஏற்படும் விரிசல் ஆகியவற்றைப் பெண்களின்  பார்வையில் விவரிக்கிறது. பிலிப்பும் அவர் தந்தையும்  அவர்களுடன்  குடும்பம் நடத்திய (என்று சொல்ல இயலாது, கூடி வாழ்ந்த  என்று சொல்வது சரி )பெண்களின்  எதிர்பார்ப்பின் அடிப்படையில் விமரிசனத்திற்கு உள்ளாகின்றனர். தங்களின் பிற ஆண்களுட னான உறவுக்கு அல்லது எல்லை மீறலுக்கு தங்கள் உடல் உள்ளம் இரண்டையும் புரிந்துகொள்ளாத பிலிப்பும் அவர் தந்தையும் குற்றவாளிகளென  வாதிட்டு பிற ஆண்களுடனான படுக்கைப் பகிர்வுகளை  இப்பெண்கள்  நியாயப்படுத்துகிறார்கள்.

Partir ( ஓடுகாலி) : இத்திரைப்படத்தை அண்மையில் Arté என்கிற பிரெஞ்சு தொலக்காட்சிஅலை வழியாகக் காண நேர்ந்த து. கத்ரின் கொர்சினி (Catherine Corsini) இயக்கத்தில் வெளிவந்த படம் . ஒரு மருத்துவர் அவர் மனைவி, இரண்டு  வளர்ந்த பிள்ளைகள்.  மருத்துவர்,தமது  பிசியோதெராப்பிஸ்ட் மனைவிக்கென்று ஒரு பணி அறையை தனது வீட்டில் ஏற்படுத்த முனைந்து, ஒரு நிறுவனத்தைத் தொடர்புகொள்ள அவர்கள் ‘இவான் ‘ என்றொரு  தொழிலாளியை  அனுப்பிவைக்கிறார்கள், இவான் ஒரு முன்னாள் சிறைவாசி. ஒரு நாள்  சுஸானும், தொழிலாளியும் சில பொருட்களை வாங்க கடைக்குச் சென்று திரும்புகையில் கார் விபத்துக்குள்ளாகிறது.  இவான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறான். சுஸான் விபத்துக்குத் தானும் ஒருவகையில் காரணமென்று கொண்ட அனுதாபம் தொழிலாளி  மீது தணியா  மோகத்தில் முடிகிறது.  சமூகத்தில் கௌரவமாக வாழ்ந்துகொண்டிருக்கிற கணவர் மீதான அன்பு, வளந்த இருபிள்ளைகள் மீதான பாசம் இரண்டையும் ஒதுக்கிவிட்டு  உடல் இச்சைக்கு முக்கியத்துவம் கொடுத்து அடிக்கடி அன்றாடக் கூலியுடன் படுக்கிறாள்.  முடிவில்  இந்த வேட்கையை ஆற்றிட கணவனைக் கொலை செய்கிறாள்.

மேற்கண்ட இரண்டிலும் சொல்லப்பட்ட இன்றைய எதார்த்தம், « பண்பாடு பண்பாடு » என்று கூச்சல் போடுகிற இந்தியாவிலும் நடப்பதுதான். நடுத்தரவயது  பெண்மணியின் இன்னொரு ஆணுடனான  ‘Passion’ (அதி தீவிர காதல்  )  திரைக்கதைக்கான மையப்பொருள் என்ற வகையிலும், திரைப்படம் ஓரு காட்சி ஊடகம் என்பதாலும்,  அதனை அழுத்தமாக தெரிவிக்க  ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை உடலுறவு காட்சிகள்.  ஒருவன் எதற்கெடுத்தாலும் அழுபவன் எனவைத்துக்கொண்டு ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை அழுதுவதைக்காட்டினால்  கோபம் வராதா. இயக்குனரின் கற்பனை பஞ்சம் எரிச்சல் ஊட்டியது. கதையோ கட்டுரையோ எழுதும்போது திரும்பத் திரும்ப ஒரே சொல்லை  உபயோக்கும் படைப்பாளிகளைப்போன்று

சுற்றுச்சூழல் மட்டுமல்ல பண்புச் சூழலும் நடைமுறை உலகில் மாசுபட்டுக்கொண்டிருக்கிறது. உதாரனத்திற்கு இன்று ஐரோப்பியர்களிடையே ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது மகிழ்ச்சிக்காக, குடும்பம் என்ற பாரத்தை சுமக்க அல்ல. விளைவாக பிள்ளைகள் வேண்டுமா ? இந்தியா போன்ற மூன்றாம் உலக  நாடுகளில் வாடகை த் தாயை ஏற்பாடு செய்துகொள்ளலாம்( இந்திய மருத்துமனைகளில் சில உடல் உறுப்புகள் வியாபாரத்தில்  அக்கறைகாட்டுவதைபோலவே, வாடகைத் தாய்மார்களை அமர்த்திக்கொடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றனவாம். மேகத்திய நாடுகளைக்காட்டிலும் மிகவும் மலிவாக வாடகைத் தாய்மார்களை அமர்த்திக்கொள்ளலாமாம்) என்கிற எண்ணம் வலுபெற்றுவருகிறது,

கர்ப்பம் தரிப்பதும் குழந்தையைப் பாராமரிப்பதும் மேற்கத்திய தம்பதிகளின் வாழ்க்கைக்கு இடையூறு தருகிறதாம். அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவிலும் இது நிகழலாம்.

மேற்கத்திய நாடுகளில் அரசியல் கட்சிகள் பொதுவில் வலது சரிகள் x இடதுசாரிகள்  என இருவகையாக பிரித்துபார்க்கப்படுகின்றனர். (இதனை  முற்போக்கு  x பிற்போக்கு என்கிற  அபத்தபார்வையில் பொருள்கொள்ளகூடாது.) வலதுசாரிகளும் இடதுசாரிகளைபோலவே சுதந்திரச் சிந்தனை கொண்டவர்கள் என்பதை மறுக்க முடியாது. அதாவது வலதுசாரிகளும் பழமைவாதிகள் அல்லர்,  முற்போக்குவாதிகளே. பின் பிரச்சினை எங்கே எழுகிறது. கடைப்பிடிக்கும் சுதந்திரத்தின் பார்வையில் உள்ளது. மேற்குலக வலது சாரிகள் தன்னல சுதந்திரத்தில் (personal interests ) அக்கறை கோண்டவர்கள்.   மாறாக (மேற்குலக) இட து சாரிகள் கூட்டுச் சுதந்திர த்தை  (collective interests. )முன் நிறுத்துபவர்கள்.  அதாவது முன்னவர்களுடையது அதிகம் தனி நலம் சார்ந்த து , பின்னது பொது நலன் சார்ந்த து.  இத்தன்னல சுதந்திரத்தை எதிர்மறை சுதந்திரம்(Negative liberty) என்றும்  பொதுநலனை அடிப்படையாக்கொண்ட மேற்கத்திய இதுசாரிகளின் சுதந்திரத் தேர்வை நேர்மறை சுதந்திரம் என்றும், (Positive liberty)  கருதுகிறார்கள்.  சுதந்திரத்தை கூறலாம். தயவு செய்து இதனை இந்திய முற்போக்கு பிற்போக்குடன் குழப்பிக்கொள்ளவேண்டாம்.

 நேர்மறை சுதந்திரம் :  கட்டுப்பாடுடை யது. ஒரு மனிதனை, சமூகத்தை கட்டுக்குள் வைத்து அனைவருக்கும் பொதுவான  இலக்கினை அடைவது. ஒரு தேசம், சமூகம்  ஆகியவற்றின் நலனில் அக்கறைகொண்டது.  நேர்மறை சுதந்திரம் கரையுடைய ஆறுபோல முறையான பாசனத்திற்கு வழிவகுப்பது அல்லது பொது நன்மைகருதி போக்குவரத்து விதிகளை மதித்து விரும்பிய  ஊர் போய்ச்சேர உதவுவது. சிற்சில பாதிப்புகள் தனிமனித சுதந்திரத்திற்கு உண்டென்கிறபோதும் சமூகத்தின் நன்மை கருதி அச்சமூகத்தில் நாமும் ஒருவர் என்ற உண்மையினால் ஏற்கிறோம்.

எதிர்மறை சுதந்திரம் : தன் சுதந்திரம்பற்றி மட்டுமே அக்கறைகொண்டு பிறரை, பிறவற்றைக் கூடாதென்பது. காட்டாறு போன்றது, நீரென்றாலும் பயனாளிகளை வெள்ளத்தில் மூழ்கடிக்கும் அபாயம் இதிலுண்டு. பொதுநன்மைக்காக விதிக்கபட்ட போக்குவரத்து விதிகளை மீறுவேன் என்கிற எதிர்மறை சுதந்திரத்தில் போகவேண்டிய ஊருக்குப்பதிலாக எமலோகத்தில் நம்மை கொண்டு சேர்க்க கூடிய வாய்ப்புகள் அதிகம். globalisation வேண்டும் என்பவர்கள் வலியுறுத்தும் சுதந்திரம். பொருளியலில்  Liberal economy  அல்லது negative economy என்பது இதுதான். விற்பவர் சாமர்த்தியம் வாங்குபவன் சாமர்த்தியம் இடையில் ஒருவரும் குறுக்கிடக்கூடாது, அரசாங்கம் சட்டம்  எதுவும் வேண்டாம். மாறாக Social economy  பொருளாதாரம் வணிகம் ஆகியக் கொள்கைகளில்   சமூகத்தின் நன்மைகருதி, பெருவாரியான மக்களின் நலன் பொருளியல் நடவடிக்கைகளில் அரசு குறுக்கிடவேண்டும் என்கிறது.

Marquis de Sade  என்கிற  பத்னெட்டாம் நூற்றாண்டு பிரெஞ்சு  பிரமுகரை அநேக மாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.  உடலுறவில் மிருகத்தனமான இச்சைகளுக்கு அடித்தளமிட்டவர், ‘Libertin’  என்கிற  சுதந்திரமான உடல் இச்சை இயக்கத்தின் மூலம் வக்கிரமான  ஆசாபாசங்ககளுக்கும் அடித்தளமிட்டவர். அகராதியில் Sadism, Sadiste சேர்க்கபட காரணமானவர்.  எதிமறையான சுதந்திர த்திற்கு நல்லதொரு உதாரணம்.

 

அமிர்தம் மட்டுமல்ல  சுதந்திரமும் அளவுக்கு மிஞ்சினால் உயிரைக்குடிக்கூடியதுதான் என்பதெல்லாம் தெரிந்தும் நாம் மீறத்தான் செய்கிறோம்.  வாழ்வியல் போக்குவரத்தில், பெண்களைக்காட்டிலும் விதிமீரல்களில் அதிகம் ஆர்வம் காட்டுபவர்கள் உண்மையில் ஆண்கள். «  கவனக்குறைவு »எனக்கூறி  ஆண்கள் தப்பிக்க முடியாது.  குடும்பப் போக்குவரத்துக் கண்காணிப்பாளர்களான  மனைவியர் இந்த சால்ஜாப்புகளை நம்புவதில்லை. அவர்களுக்கு அபராதத் தொகையை எப்படிப்பெறுவதென்பது தாய்வீட்டுச் சீதனம்.

 

———————————————————————–