ஆறாண்டுகளுக்கு முன்புவரை அதிகம் அறியப்படாத எழுத்தாளர். 2005ல் இத்தாலியில் அவருடைய முதல் நாவல் வந்தபோது பதிப்பித்து வருகிற எல்லா நாவல்களையுமே வாசிப்பது என்றிருக்கிற வாசகர்கள் மட்டுமே மிலேனாவை அறிந்து வைத்திருந்தார்கள். நன்கு புகழ்பெற, தமது இரண்டாவது நாவல்வரை அவர் காத்திருக்க வேண்டியிருந்தது, அந்த இரண்டாவது நாவல் Mal de Pierres(பிரெஞ்சு மொழி பெயர்ப்பில்). இநாவல் வெளிவந்ததும் மடமடவென்று அவரது புகழ் இத்தாலிக்குள்ளும் வெளியிலும் உயர்ந்தது, இன்றது தொடர்கதை ஆகியிருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளாக இத்தாலிய இலக்கிய உலகில் மந்திரம்போல உச்சரிக்கப்படுகிற ஒரு பெயர். நடுநிலைப்பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றும் 52 வயதான இப்பெண்மணி இதுவரை ஐந்து நாவல்களை மட்டுமே எழுதி யிருக்கிறார். சர்தீனியா மத்தியதரை கடலிலுள்ள சிறு தீவு, இத்தாலியின் ஆட்சிக்குட்பட்ட பகுதி. பூகோள அமைப்பில் மட்டுமல்ல இலக்கிய வரைபடத்திலும் சர்தீனியா தனக்கென எல்லைகளை வடிவமைத்துக்கொண்டு சமூக அமைப்பு, மொழி, பண்பாடு, உணர்வுகளை வெளிப்படுத்துவது இன்றுவரை தொடர்கிறது என்பதற்கு, இப்பெண் எழுத்தாளர் ஓர் உதாரணம். இத்தாலிய படைப்பிலக்கியத்தில் சர்தீனிய எழுத்தாளர்களின் பங்களிப்பும் தாக்கமும் நிறையவே உண்டு என்கிறார்கள். 1926ம் ஆண்டு நோபெல் பரிசுபெற்ற Grazia Deledda, Salvatore satta ( இவருடைய The day of Judgment முக்கியமானதொரு நாவல்) என பலர் இப்பிரதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள்.
எண்பதுகளில் சர்தீனியத் தீவை சேர்ந்த பல எழுத்தாளர்கள் இத்தாலிய மொழியில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தினார்கள். Sergio Atzeni, Mercello Fois, Salavatore Mannuzu என நீளும் தன்மையது அப்பட்டியல். மிலேனாவும் இப் பலமான இனவரலாறு, நிலக்கோட்பாடென வகுத்துக்கொண்டு செயல்பட்ட படைப்புலகைச் சேர்ந்தவர்தான். இத்தாலிய ஆதிக்கத்தின்கீழ் கட்டுண்டு கிடப்பதாக உணர்ந்த இவ்வெழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளில் அச்சுதந்திரத்தின் தேவையை உணர்ந்திருக்கவேண்டும், அவர்கள் எழுத்துகளில் அது முழுவதுமாக வெளிப்பட்டது. முழுக்க முழுக்க சர்தீனிய அடையாளம் சார்ந்து செயல்பட்ட இவ்வெழுத்தாளர்கள் தங்கள் சொந்த மொழியான சார்துமொழியை உரையாடலில் கலந்து எழுதுவதை வழக்கமாகக் கொண்டவர்கள். மிலேனா எழுத்துக்களிலும் சர்தீனிய தேசியம் சுட்டெரிக்கிறது(அந்நியர்களுக்கு?). ஆனால் அதே வேளை பிற சர்தீனிய எழுத்தாளர்களைப்போல (தங்களை அடையாளப்படுத்த படைப்பில் அவர்கள் அடிக்கடித் திகட்டும் அளவிற்கு வட்டார சொற்களையும், உரையாடலையும் கலப்பதுண்டாம்) வட்டார மொழியை அதிகம் கையாளுவதில்லையாம், குறைவென்கிறார்கள்.
ஸ்பானீஷ் எழுத்தாளர்களின் படைப்புலகம் வேறு, ஒருவித மயக்கத்தில் கதை சொல்லல் நிகழும், கதைமாந்தர்கள் பனிமூட்டத்திற்கிடையில் ஊர்ந்துகொண்டிருப்பார்கள், ஒரு வித பைத்தியக்கார உலகம். இத்தாலியர்கள் எதார்த்தத்தை விறுவிறுப்பாகச் சொல்ல தெரிந்தவர்கள். மிலேனாவின் கதை சொல்லலும் அதற்கு விதிவிலக்கல்ல. 2005 இவர் முதல் நாவல் Quand le requin dort ( சுராமீன் உறங்கும் வேளை) வெளிவந்ததைத் தொடர்ந்து விமர்சனங்களும் வந்தன. விமர்சகர்கள் ஒருமுகமாகப் பாராட்டி இருந்தனர். இருந்தபோதும் பெரிய வெற்றியென்று இல்லாதது அப்போதைய குறை. முதல் நூலைப் பதிப்பித்தவர்களும் இத்தாலியில் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் இல்லையாம். அந்தக் குறையை அடுத்துவந்த Mal de Pierres தீர்த்திருக்கிறது. இதற்குங்கூட ஆரம்பத்தில் சிவப்புக் கம்பளம் ஏதுமில்லை. குலம் கோத்திரம் பார்க்காமல் எழுதப்படுகிற விமர்சனங்களால் பின்னர் அடையாளம் கிடைத்திருக்கிறது, பிறகு அடுத்தடுத்து மூன்று நாவல்கள், ” Battement d’ailes, la Comtesse de Ricotta இறுதியாக Sttospra. இம்மூன்று நாவல்களுமே ‘Best sellers’ வகைமைச் சார்ந்தவை.
Mal de Pierres நாவலில், பேர்த்தி தனது பாட்டியின் கதையை சொல்கிறாள். இரண்டாம் உலகப் போர் சூழலில், காதலின்றி, திருமணம் சம்பிரதாயமாக நிறைவேறுகிறது. கடனேயென்று மணம் செய்துகொள்கிறாள். திருமண பந்தம், வாழும் சமூகத்திற்காக உருவாகிறது. சர்தீனிய சமூகத்தின் சராசரி ஆண்வர்கத்தின் பிரதிநிதி கணவன். புகைபிடிக்கிறான், பெண்களைத் தேடிபோகிறான். மனைவியும் பரத்தைபோல நடந்துகொள்ளவேண்டுமென எதிர்பார்ககிறான், அவள் மறுப்பதில்லை. தினசரி வாழ்வாதாரங்கள் நெருக்கடியைச் சந்திக்கிறபோது, அவனுடைய விட்டேத்தியான வாழ்க்கையில் ஒழுங்கை வற்புறுத்துகிறாள். எல்லாம் இருந்தும் பல ஆண்டுகளாக அவள் மனம் தேடிஅலையும் காதல் மாத்திரம் அவளுக்கு வாய்க்காமல் கண் பொத்தி விளையாடுகிறது. மூத்திரப்பையிலுள்ள கற்களுக்காக நிவாரணம் தேடிபோன இடத்தில் அக்கற்களே அவள் வாழ்க்கையின் ஔவடதமாக உருமாற்றிகொண்டு அவளுக்கு உதவ வருகின்றன. அவள் தொட்டதெல்லாம், அவள் வேண்டியதெல்லாம் கிடைக்கிறது. மாத்தா ஹரி நாவலை இதனுடைய தாக்கத்தில்தான் எழுதினேன்.
—————————————–