Category Archives: Uncategorized

The Prague Cemetery

பொதுவாக பிரெஞ்சில் உள்ளூர் படைப்புகளை தவிர்த்து அந்நிய மொழிகளிலிருந்தும் வருடம் தோறும் விற்பனையில் சாதனை படைக்கும் எழுத்துக்களும், உலகமறிந்த எழுத்தாளர்களின் படைப்புகளும், உலகில் நன்கறியப்பட்ட பதிப்பகங்களின் வெளியீடுகளும் உடனுக்குடன் கிடைக்கின்றன. மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீட்டில் பிரெஞ்சு இலக்கிய உலகம் மிகக் கூடுதலாகவே அக்கறைகொண்டு செயல்படுகிறதெனலாம். அண்மையில் பிரான்சுநாட்டில் விற்பனையில் சாதனைப்படைத்தவர் பலரும் அறிந்த இத்தாலி படைப்பாளியான உம்பெர்ட்டோ எக்கோ. அவருடைய Cimetière de Prague (The Prague Cemetery) என்ற மொழிபெயர்ப்பு வெளிவந்த நான்குநாட்களில் 15000 பிரதிகள் விற்று தீர்ந்ததாக பிரெஞ்சு தினசரிகள் எழுதுகின்றன.

Cimetière de Prague (The Prague Cemetery) நாவலுக்கும் அவரது முதல் நாவலான The name of the Rose க்கும் இடையில் 30 ஆண்டுகள். அதாவது இத்தாலி மொழியில் அவரது முதல் நாவல் வந்த ஆண்டை 1980 என்று கணக்கிட்டால். இடையில் சராசரியாக ஐந்தாண்டுகளுக்கு ஒன்றென அவரது நாவல்கள் வந்துள்ளன. பொதுவாக எக்கோவின் நாவலை வாசிப்பவர்களுக்கு ஒவ்வொரு நாவலுக்கும் அவர் தந்திருக்கும் உழைப்பினை விளங்கிக்கொள்ளமுடியும். எழுதுவது வரலாற்றின் அடிப்படையிலென்பதால் மிகக் கவனமாக சான்றுகளில் கவனம் செலுத்தியிருப்பார், எடுத்தாளும் பொருளிலும் அவருக்குள்ள ஞானம் நம்மை வியப்பில் ஆழ்த்தும். உண்மையையும் புனைவையும் மிகச்சரியான அளவில் கலந்து,  வாசகனை அடுத்ததடுத்து பக்கங்களை புரட்டவைக்கும் அவரது ஆற்றல் பிரம்மிப்புகுரியது. வழக்கம்போல உம்பெர்ட்டோ எக்கோவின் இந்நாவலும் சமயம்- அதன் தகிடுதத்தங்கள், மெய்யியல், புதிர் – மர்மமென பின்னப்பட்டு வாசகனை வெருட்டும் கலையில் தேர்ந்துள்ளது.

அகஸ்ட்டின் பருவலென்ற பிரெஞ்சு சேசுசபையைசேர்ந்த மதகுருவிற்கு ஆகஸ்டு மாதம் 1806ம் ஆண்டு, இத்தாலி படைதளபதி ஜான் பப்திஸ்த் சிமோனினி என்பவனிடமிருந்து ஒரு கடிதம் வருகிறது. அக்கடிதத்தில் அவன் அகஸ்ட்டினின் நூல் (Memoires illustrating the history of Jacobinism) தமக்களித்த உத்வேகத்தை பாராட்டி எழுதுகிறான். – இந்நூல் உலகமனைத்தும் யூதர்களின் அதிகாரத்தின் கீழ் வரவேண்டுமென்ற யூதர்களின் சதிபற்றி பேசுகிறது. உம்பர்ட்டோ எக்கோவின் The Prague Cemetery இந்த உண்மையின் அடிப்படையில் எழுதப்பட்ட புனைவு.  19ம் நூற்றாண்டின் ஐரோப்பிய சம்பவங்களையும் இடைக்கிடை ஆசிரியர் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். The Name of the Rose நாவலில் அபெட் வலே என்பவரால் கையளிக்கப்பட்ட நூலினை நினைவுகூர்வதாக கதை தொடங்கும்  அந்த நூல் டாம் அட்சன் என்பவருடைய கையெழுத்து பிரதியின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு. இந் நாவலும் 1897-98 ம் ஆண்டில் மேலே குறிப்பிட்ட சிமோனினியின் நாட்குறிப்புடன் தொடங்குகிறது. இந்த சிமோனினி ஒரு எதிர் தலைவன் மட்டுமல்ல  ஒரு alter-Egoவுங்கூட, தனக்குள் வேறொரு மனிதனையும் உணருகிறான். அவனை புரிந்துகொண்டால் நாவலும் உங்களுக்கு வசமாகும். அதற்கு முன்பாக கொஞ்சமாக ஐரோப்பிய வரலாறு, கொஞ்சம் கூடுதலாக  பிரெஞ்சு வரலாறு குறிப்பாக பத்தொன்பதாம் நூற்றாண்டு, Masonic conspiracy theories, அகஸ்டின், சிமோனினி இவர்க¨ளை பற்றி தெரிந்துகொண்டு வாசிப்பது நல்லது.
———————————-

பிரான்சை தெரிந்து கொள்ளுங்கள் -8

அழகு

ஒருவர் மற்றவரை கடந்து செல்கிறபோது, இருவரில் ஒருவர்  தமது பார்வை நேரத்தில் கூடுதலாக ஓரிரு விநாடிகள் செலவிட நேரிடுகிறது. எதிராளிடமிருந்து பெறுகிற இக் கூடுதல் நேரத்தில்தான் அதைத் சாதுர்யமாக தமக்குச்சாதகமாக பயன்படுத்திகொள்வதில்தான் வெற்றி தோல்விகளிருக்கின்றன. உடை, தோற்றம், பேச்சு, உபயோகிக்கும் சொற்கள், கால நேரம் என்று அவற்றின் பட்டியலில் இதுபோன்ற பலவும் உண்டு. இது தவிர வீடு, நண்பர்கள், படிக்கும் புத்தகங்களென உங்களை சுற்றியுள்ளவையும் உங்கள் அழகைத் தீர்மானிக்க உதவுகின்றன.  அழகென்பது நம்மைப் பார்க்கின்றவர்களின் பார்வையைப் பொருத்தது மட்டுமல்ல அப் பார்வைக்கு உகந்தவர்களாய் நம்மை மாற்றிக்கொள்வதிலும் உள்ளது.

அழகென்பது அவரவர் பார்வையிலிருக்கிறதென்பது பொதுவாக சொல்லும் வார்த்தை. எனினும் பார்வைக்கு விருந்தாக்கிக் கொள்ளும் பொறுப்பு அப்பொருளுக்குமுண்டு. பிரான்சு நாட்டில் அதற்கான முயற்சிகள் அதிகம்.  அழகை உங்கள் பார்வை தீர்மானிப்பது  உண்மைதானென்றாலும் அந்த உண்மையைத் தீர்மானிப்பது பார்வையாளர்கள் அல்ல பார்க்கப்படும் பொருளென்பதில் பிடிவாதமாக இருப்பவர்கள் பிரெஞ்சுக்காரர்கள். பிரெஞ்சு கிராமங்களையோ நகரங்களையோ பார்க்கசெல்கிறபோது தங்கள் சொந்த நகரம் அல்லது கிராமத்தைப் பற்றிய பிரம்மிப்பை பார்வையாளர்கள் மத்தியில் ஏற்படுத்திதரவேண்டுமென்பதில் அவர்களுக்குள்ள அக்கறையைக் குறைத்துமதிப்பிட முடியாது.

அவ்வகையில் பிரான்சு நாட்டில் இருவகை போட்டிகள் நடைபெறுகின்றன.

முதலாவது நகரங்கள் மற்றும் பெருநகரங்களுகிடையிலான போட்டி:

1959 ஆம் ஆண்டிலிருந்து ‘நகரெங்கும்  மலர்கள்’ என்ற போட்டியை வசந்தகாலங்களில் பெருநகரங்கள் மற்றும் சிறுநகரங்களுக்கிடையில்  நடத்தி விடுதிகளுக்கு நட்சத்திர தகுதியை வழங்குவதுபோல இவற்றுக்கு – அதாவது நகரங்களுக்கும் பெரு நகரங்களுக்கும் ஒரு பூ, இரண்டுபூக்கள் என நான்கு பூக்கள் வரை வழங்கி அவற்றின் அழகு தகுதியை நிர்ணயம் செய்கிறார்கள். அந்நகரங்களில் பச்சைபசேலென்றிருக்கிற நிலவெளிகளின்  எண்ணிக்கைக் கூடுதலாகதாகவும், இயற்கையை போற்றுவதில் அவர்களிடத்தில் இருக்கும் அக்கறையையும்  பொறுத்ததென்பது ஒரு பக்க மெனில் மேம்பாடான உயிர்வாழ்க்கைக்கு உத்தரவாதமளிக்கக்கூடிய காரணிகளில் கவனம்கொண்டு நாகராட்சியும் மாநகராட்சியும் உழைத்திருக்கவேண்டும், பிற பகுதிமக்கள் அந்நகரின் அழகுக்கென வருவது அதிகரித்திருக்க வேண்டும். அவ்வகையில் பிரான்சு நாட்டில் ஒவ்வொருவருடமும் பன்னிரண்டாயிரம் நகரங்கள், பெருநகரங்கள் அத்தகுதிக்காக வருடா வருடம் போட்டியிடுகின்றன. http://www.cnvvf.fr/le_palmares-5.html.

இரண்டாவது போட்டி கிராமங்களுக்கிடையிலான போட்டி.

பிரான்சு நாட்டில் அழகான கிராமங்களென வெளியிடப்படும் பட்டியலில் இடம்பெற வருடாவருடம் 32000 கிராமங்கள் பங்குபெறுகின்றன. பிரான்சில் கிராமங்கள் என்பது அதிகபட்சமாக இரண்டாயிரம் பேர் வசிக்கின்ற பகுதி. இப்போட்டியில் கலந்துகொள்ளும் கிராமங்களிலிருந்து எதிர்பார்க்கப்படுபவை: கிராமத்தை பூச்செடிகளை வளர்த்து அழகுபடுத்துவது மாத்திரமல்ல அப்பகுதிக்கேயுரிய கட்டிடக்கலையைப் போற்றுதல், கிராமத்தின் சுற்றுசூழல், பாரம்பர்ய கலைப்பெருமை, பாரம்பர்ய உணவு பொருட்கள் என்பது போன்ற குணங்கள்.
———————-

‘பதிவுகள்’ இணைய இதழுக்கு அளித்திருந்த பேட்டி. ‘

நீலக்கடல் நாவல் தமிழ்நாடு அரசின் பரிசினை பெற்றபின்பு ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு அளித்திருந்த பேட்டி. ‘

 (பதிவுகள்’ இணைய இதழ் ஆசிரியர் திரு. வ. கிரிதரன் அவர்களுக்கும், தமிழ் மீது தீராதுகாதல்கொண்டு அமெரிக்காவில் இயங்கிவரும் திரு. ஆல்பர்ட் பெர்னாண்டோ அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். )

பதிவுகள்:-  தங்கள் நாவலுக்கு விருது கிடைத்தமைக்கும் மென்மேலும் கிடைக்கவும் முதலில் வாழ்த்துக்கள். விருது கிடைத்த செய்தியறிந்தபோது உங்கள் உள்ளத்துணர்வுகள் குறித்து…?

மிக்க நன்றி. உண்மையில் மட்டற்ற மகிழ்ச்சியில் திளைத்தேன், மறுப்பதற்கில்லை. நீலக்கடல் நாவலை சிரத்தை எடுத்துக்கொண்டு  வித்தியாசமாக எழுதினேன். மூன்று காலத்திற்கும் மூன்றுவிதமான மொழிகளை பாவித்தேன். அம்மொழிகளும் பாத்திரங்களின் சமூகச் சூழல், அறிவுத் திறன், சம்பவ நெருக்கடிகள் என பலக் காரணிகளின் அடிப்படையில் உபயோகிக்கப்பட்டிருக்கின்றன. இது கதையல்ல  ஆண்டவர்களையும், அவர்களின் குடிகளையும் சமதளத்தில் வைத்து, வரலாறு என்பது வெற்றிபெற்றவர்களின் உண்மை மட்டுமல்ல, வாழ்ந்தவர்களின் உண்மை என தெரிவித்த முயற்சி. அந்த உண்மையையை நிறுத்த ஒரு சராசரி தமிழ் எழுத்தாளனைக்காட்டிலும் பொருட் செலவையும், புலம்பெயர்ந்தவர்களால் இயலாத காலச் செலவையும் தயக்கமின்றி செய்திருக்கிறேன். ஆக்ஸ்போர்ட் பல்கலைகழக வெளியீடுகளையும், பிரான்சில் நான் வசிக்கிற நகரத்து நூலகங்களில் கிடைக்காத புத்தகங்கள், இந்தியாவில் வாங்கிய நூல்களென சொந்தமாக வாங்கி வரவழைத்துப் படித்தேன், நீலகடலுக்கெனவே சிறிய நூலகம் வைக்கலாம். கதை நடக்கும் முக்கிய இடங்களுக்கெல்லாம் சென்று வந்தேன். பிறகு இணைய தளங்களின் உதவியையும் மறுப்பதற்கில்லை. பதினெட்டாம் நூற்றாண்டில் பிரெஞ்சுக் காரர்களின் உணவென்றால், பிரான்சின் எந்தப் பகுதியிலிருந்து அவர்கள் வந்தவர்கள், பதினெட்டாம் நூற்றாண்டில் அவர்களுடைய உணவுப் பழக்கவழக்கங்கள் என்னென்ன, ஒரு இசைக்கருவியின் பெயரைச் சொல்லவேண்டுமானால் கூட கதை நடந்த ஆண்டில், கதை நடக்கும் களத்தில் அதன் உபயோகத்திற்கான சான்றுகள் இப்படித் தேடித் தேடி எழுதியதுகூட பரிசுக்குக் காரணமாக இருக்கலாம். பிறகு எதையும் எனக்காகத்தான் செய்கிறேன். உண்பது, உடுப்பது, நேசிப்பது என எல்லாவற்றையும். எனது எழுத்தும் அப்படித்தான். ஒருவகை சுயநலம். சில சுயநலங்கள் பிறருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. நீலக்கடலுக்கு அப்படியான வெற்றியாகக்கூட இருக்கலாம், பரிசுக்காக எழுதப்படவில்லை. எனினும் தமிழக அரசுக்கு நன்றி. இன்னொரு உண்மையையும் சொல்லவேண்டும், அது நீங்களும் அறிந்ததுதான். பரிசுபெற்றவைமட்டுந்தான் உலகில் பெரிய படைப்புகளென்றோ, பரிசுவாங்கியவர்கள் மாத்திரந்தான் பெரிய எழுத்தாளர்களென்றோ சொல்வதற்கில்லை. பரிசேதும் இல்லை என்றாலும் சோர்ந்திருக்கமாட்டேன். உலகமெங்கும் பரிசுகள் பெற்றிராத தரம் வாய்ந்த படைப்புகள், மிகப்பெரிய படைப்பாளிகள் இருக்கத்தான் செய்கின்றனர். சமீபத்திய உதாரணம் சுந்தர ராமசாமி.

பதிவுகள்:- நீலக் கடல் நாவல் உருவானது குறித்து உங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்துகொள்ளமுடியுமா?

நீலக்கடல் நாவலை1973ஆம் ஆண்டிலிருந்து எனக்கு தொல்லைகொடுத்த, இரண்டு மன ஆக்ரமிப்புகளின் வடிகால் என்று சொல்லலாம். முதலாவது சென்னையில் சர் தியாகராயாக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நேரம். இராயபுரத்திலிருந்து கல்லூரிக்குத் நடந்து செல்வது வழக்கம். அப்போது ஒவ்வொரு நாளும் ஒன்பது நாற்பந்தைத்துக்கு, T.H. ரோடு எனப்படும், திருவொற்றியூர் சாலையில் ஒரு பள்ளிமாணவி எதிர்படுவாள். நான் அறிந்து, தோழியர் கூட்டத்தோடு அவளைப் பார்த்ததில்லை. சில நேரங்களில் எங்கள் பார்வைகள் சந்தித்திருக்கின்றன. மனதில் பதிந்திருந்தாள், நிறைய கவிதைகள், ஒன்றிரண்டு சிறுகதைகள் அவளை மையமாக வைத்து எழுதியிருக்கிறேன். இன்றுவரை சிறுகதைகள் ஒவ்வொன்றிலும் வர்ணணைகள் என்று எழுதுகிறபோதெல்லாம் அவள் குறுக்கிடுகிறாள். நீலக்கடல் தேவயானி அந்தப் பெண்ணாகக் கூட இருக்கலாம். இரண்டாவதாக அதே ஆண்டில் ஏதேச்சையாகக் கேட்ட புலவர் கீரனின் கந்தபுராண சொற்பொழிவு. நீலக்கடல் கதைக்கு ஆதாரமான கருமாறிப்பாய்தல் என்றால் என்ன? என்பதை, தமது உரைக்கு இடையில் குறிப்பிட்டார். ஆக நீலக்கடலுக்கான விதை 1973ம் ஆண்டிலேயே என் மனதில் ஊன்றப்பட்டுவிட்டது.

பதிவுகள்:- நீலக்கடல் நாவல் உருவாக வித்திட்டது ஆனந்தவிகடனில் வெளியான தங்கள் சிறுகதை.

முன்பே குறிப்பிட்டதுபோல 1973ம் ஆண்டு வித்திட்ட நீலக்கடல் ‘பார்த்திபேந்திரன் காதலி’ என்ற பெயரில் ‘கதை சூப்பர் ஸ்பீடு, கலக்கல் டர்னிங், நெஞ்சை தொட்டுட்டேம்மா’ என்ற குறிப்புடன் ஆனந்தவிகடன் இதழில் (09-05-2004) பிரசுரமானது.

பதிவுகள்:- நண்பர்களின் ஆலோசனையின் பெயரில் தமிழக அரசின் விருதுக்கு விண்ணப்பித்தீர்களா? அல்லது  தற்செயலாக நீங்கள் அனுப்ப எதிர்பாராமல் விருது கிடைத்ததா?

இதில் என்பங்கு எதுவுமில்லை. கடந்த ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதியன்று, சந்தியா பதிப்பகம் தெரிவித்த செய்தியை எனது இளைய மகள் மூலம் அறிந்தேன். மறுநாள் தொடர்புகொண்டு விசாரித்ததில் நீலக்கடலுக்கு தமிழக அரசின் விருது கிடைத்திருப்பதைத் தெரிவித்தார்கள். எல்லா பதிப்பாளர்களையும்போலவே, போட்டியில் கலந்துகொள்ள தாம் வெளியிட்ட நூல்களை அரசின் பார்வைக்கு சந்தியா பதிப்பகம் அனுப்பிவைத்திருக்கிறது. பரிசு கிடைத்தபிறகுதான் இதனை அறிந்தேன். உண்மையில் இந்த விருது 2005ல் வெளிவந்த நூல்களுக்கான விருது, 2006ம் ஆண்டு கூடிய தேர்வுக்குழுவினர் அதுபற்றி விவாதித்து  2007ல் விருதினைக் கொடுத்திருக்கிறார்கள்.

பதிவுகள்:- முதல் கதை, முதல் கவிதை எழுதி வெளிவந்தபோது உங்களுக்குள் பொங்கிவழிந்த மகரந்த நினைவுகளை கொஞ்சம் மலருங்களேன்….?

அதனைப் படைப்பென்று சொல்ல முடியாது, எனது உணர்வுகளை எழுத்தில் அளிக்க முடியுமென்கிற நம்பிக்கையை ஊட்டிய தருணமென்று சொல்லலாம். அப்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த வேளை,எனது தமிழாசிரியர் ‘நாகி’யென எங்களால் அன்புடன் அழைக்கப்பட்ட திரு நா.கிருஷ்ணசாமி யாப்பிலக்கணத்தின் ஒருபகுதியாக ஆசிரியப்பாவை முடித்துவிட்டு, ஆளுக்கொரு கவிதை எழுதச்சொன்னார் ‘காகமே காகமே கருநிறக் காகமே,வேகமாய்ச் சென்று நீ மேகமாய் மறைவதேன்’, என ஒருக் கவிதையை எழுதிப்போய் காட்ட, பிற மாணவர்களைக்காட்டிலும் எனக்குக் கொஞ்சம் எழுதவருகிறதென நினைத்தவர் பள்ளி ஆண்டுமலர் தயாரிக்கும் ஆசிரியர் குழுவில் என்னையும் சேர்த்துக்கொண்டார். அதற்கடுத்த ஆண்டு, பள்ளியில் தொடங்கப்பட்ட கையெழுத்துப் பிரதியான ‘மனம்’ இதழுக்கு ஆசிரியராக உத்தியோக உயர்வு. எனது முதற் கவிதை, முதற்கதை, முதற்கட்டுரை மூன்றும் அவ்விதழில் இடம்பெற நேர்ந்ததை வாய்ப்பென்றுதான் சொல்லவேண்டும். அக்கையெழுத்துப் பிரதியை எவர்கையில் கண்டாலும் என்னிடத்தில் ஒருவித பெருமிதம் தொற்றிக்கொள்ளூம். அந்த இதழை அநேகமாகப் பள்ளியில் அதிகமுறைவாசித்தவன் நானொருவனாகத்தான் இருக்கவேண்டும்.

பதிவுகள்:- எத்தனை மொழிகளில் பரிச்சயம் உண்டு? உங்கள் நூல் எதுவும் பிற மொழியில் மொழிபெயர்க்கப்படவுள்ளதா?

ஆங்கிலமும், பிரெஞ்சும் அறிவேன். இதுவரை எனது எந்தநூலும் மொழிபெயர்க்கபடவில்லை. பிரான்சில் உள்ள நண்பர்கள் சிலர் நீலக்கடலை மொழி பெயர்க்கவேண்டுமென்றனர். பிரான்சில் Act Sud பதிப்பகம் நீலக்கடல் மாதிரியான நூல்களில் அக்கறை காட்டும் நிறுவனம். அவர்களிடம் ஓராண்டிற்குமுன் எழுதி கேட்க மொழிபெயர்ப்பினை அனுப்பச் சொல்லிக் கேட்டிருந்தார்கள். ஒரு சில நண்பர்கள் மொழி பெயர்க்கிறேனென்று இணங்கி ஒரு பக்கங்கூட மொழிபெயர்க்கவில்லை. நானுங்கூட முதல் அத்தியாயத்தை மொழிபெயர்க்க உட்கார்ந்து சோர்ந்துவிட்டேன்.  நாவலின் பதினெட்டாம் நூற்றாண்டு மொழி சங்கடப்படுத்துகிறது. சிறுகதையொன்றை நேரடியாக பிரெஞ்சில் எழுதியிருக்கிறேன். தமிழ் அளவிற்கு மொழியை லாவகமாக பிரெஞ்சில் என்னால் கையாள இயலவில்லை. ஆனால் நீலக் கடலை எப்படியும் மொழி பெயர்த்து பிரெஞ்சில் வெளியிடுவது என்கிற கனவிலிருந்து இன்னும் விடுபடவில்லை.

பதிவுகள்:- இந்தப் பன்மொழிப் புலமை உங்கள் படைப்புகளை செழுமைப்படுத்த உதவுகிறதா?

பன்மொழிப் புலமை என்றெல்லாம் சொல்வது அதிகப்படியான அடைமொழி. மூன்று மொழிகளிலும் பேச எழுத முடியும், தமிழில் கொஞ்சம் கூடுதலாகக் கவனம் செலுத்துகிறேன் அவ்வளவுதான். நிறைய விஷயங்களில் எனக்குப் பற்றாக்குறை இருக்கிறது அதனை எழுதும்போது உணருகிறேன். எனக்கு வாசிப்பு போதாது. ஆங்கிலமும் பிரெஞ்சும் படைப்புலகில் முக்கியமான மொழிகள். சமீபகாலமாக ஆங்கிலத்தில் வெளிவரும் நூல்கள் சந்தை நோக்கோடு செயல்படுகின்றன. விற்பனைக்கான அத்தனை தந்திரங்களும் கையாளப்படுகின்றன. குறிப்பாக அமெரிக்கர்கள் கதைசொல்வதில் தேர்ந்தவர்கள். பிரெஞ்சுக் காரர்களுக்கு எழுத்து முக்கியம். ரஷ்ய எழுத்தாளர்களைப்போல. உயிர்ப்புள்ள இலக்கிய படைப்புகளில் ஆர்வம் கொண்டவர்கள்-பிரெஞ்சு படைப்புலகம் என்பது நிலைப்பாடுக்கு எதிரான கலகக்குரல்களால் வளர்ந்தது. தன்னுணர்வு, அகமனப் போராட்டம் இவைகள் பிரெஞ்சில் அதிகம். இரண்டு மொழி படைப்புகளையும் அந்தந்த மொழியில் படிக்கிறேன். இரு மொழி படைப்பும் என் எழுத்துக்கு உதவுகின்றன. இங்கேயுள்ள நூலகத்தில் Bi-Langue என்று ஒரு பிரிவு உண்டு. அப்பிரிவில் புகழ்பெற்ற ஆங்கில சிறுகதைகள், மூலமும் மொழிபெயர்ப்புமாக எதிரெதிர் பக்கங்களில் இருக்கும். அம்மாதிரியான நூல்களை மாதத்திற்கு ஒன்றேனும் வாசிக்கும் பழக்கமுண்டு. இந்த ஒப்புநோக்குவாசிப்பு புறநோக்கில், மொழியின் வல்லமையை புரிந்துகொள்ள உதவ, அகநோக்கில்(மொழி இரண்டையும் இரு கண்களெனக் கொண்டால்) ஒத்துணர்வில் துடிப்பது வலமா இடமா? என்பதைப் புரிய வைக்கிறது. இப்படியானப் புரிதல்கள், நமது எழுதும் திறனிற்கு நிச்சயம் உதவக் கூடும்.

பதிவுகள்:- விருது..வாசகனின் பாராட்டு…இதில் எதைப் பெருமையாகக் கருதுவீர்கள்?

பாராட்டும் விருதும் இருவேறு சொற்கள் என்றாலும் பொருள் ஒன்றுதான். இரண்டுமே ஒன்றோடொன்று தொடர்புடையவை, வாசிப்பில்லாமல் விருது ஏது. பாராட்டுவதற்கு முன்னால் வாசிப்பு, வாசிப்பு முக்கியம்.

பதிவுகள்:- புதுக்கவிதையின் திசை திருப்பப்பட்டு, அதன் பாதை இன்றைக்குச் சரியாக இல்லை என்ற கவிஞர் மேத்தாவின் கருத்து குறித்து என்ன சொல்கிறீர்கள்?

 இதில் சொல்வதற்கென்ன இருக்கிறது, அறுபதுகளில் எழுப்பி பாரதியைக் கேட்டிருந்தால் கூட அவருக்குப் பின்னால் கவிதை எழுதவந்தவர்களைப் பார்த்து இதைத்தான் சொல்லியிருப்பார். தம்மை அடையாளப்படுத்த பிறர் இருப்பை நிராகரிப்பதென்பது, அரசியல்வாதிகளிடமிருந்து படைப்பாளிகள் பெற்ற தாக்கம். கவிதையை ஓர் வீடென்று வைத்துக்கொண்டால், அதன் வடிவங்களில் ஒன்று புதுக்கவிதை. ஒரு வீட்டின் உட்பகுதி எந்த நாட்டிலும், எக்காலத்திலும் பொதுவானத் தன்மைகளுடன் நிரந்தரமாக இருக்கின்றன, வெளித்தோற்றங்கள் அதாவது வடிவங்கள் காலத்திற்கேற்ப, மக்களின் வளர்ச்சிக்கேற்ப, தேவைசார்ந்து மாற்றம் பெருகின்றன. கவிதை நிரந்தரமானது. அதன் உணர்வுகள் நிரந்தரமானவை. வடிவம் மாறும் தன்மையது, புதுக்கவிதையும் அதிலொன்று. கற்பனைத் திறனும், நாடகப் புலமையும் இணைந்த காப்பியங்களை அறிவோம், உரைநடை வடிவத்திற்கு மாற்றாக அவை எழுதபட்டன. பிறகு நாடகத் தன்மைகளை குறைத்துகொண்டு கவிஞன் தன் மனம்சார்ந்த உணர்வுகளில் அக்கறைகாட்டினான் எனினும் மரபுக் கவிதைகளாகத்தான் அவை இருந்தன. கவிதையென்பது இசையோடு தொடர்புகொண்டது, என்ற எண்ணத்தின் அடிப்படையில், தனிமனித உணர்வுகளை பேசும் போதுங்கூட யாப்பிலக்கணம்: சீர், அசை, தளை எதுகை மோனை விதிகள் அத்தியாவசியமாக இருந்தன. உலகமெங்கும் அதுதான் நடந்தது. பிரான்சில் மரபுக் கவிதைகளை அவர்கள் Poesie Classique என்று அழைத்தனர், பின்னர் Poesie Moderne (புதுக்கவிதை) அங்கு 1880ல் குறியீட்டாளர்களால்(Symbolists) அறிமுகப்படுத்தபட்டது. கட்டுபாடற்ற வரிகளில், ஓசை ஒழுங்குகளை ஒதுக்கிவிட்டு எழுதத் துணிந்த Gustave Kahnன் கவிதையான Palais Nomade அதற்கு முன் உதாரணமாகச் சொல்லப்படுகிறது. Vers Libres – Free verses என இலக்கியத்தில் பொருள்கொள்ளப்படும் அக்கவிதைகள் கவிதை வடிவத்தின் ஓர் அங்கம். உணர்வுகளுக்கு,  சுதந்திரமான எழுத்து உருவம் கொடுக்கப்படவேண்டும், என்பது புதுக்கவிதைகளின் எழுதப்படாத விதி. புதுக்கவிதையை கர்த்தாக்களான குறியீட்டாளர்கள் கவனமெல்லாம், அந்த நேரத்தில் அபௌதிகம், புதிர்நிலை என்றிருந்தது. டி.எஸ் எலியட் புதுக்கவிதையை “means too much to mean anything at all” என்றவர். புதுக்கவிதை என்பதே சுதந்திர எழுத்து என்கிறபோது அதற்கான திசை, குவிமையம் என்றெல்லாம் பேசுவது சரியல்ல. அதைவிட திசைகளைப் பற்றி அக்கறைகொள்ளாமல், கவிதை இருக்கிறதா, படைப்பு மனம் இருக்கிறதா என்று பார்ப்பது நல்லது.  நல்ல படைப்புகள் வலிகளைச் சொல்லவேண்டும், உண்மையைப் பேசவேண்டும். சமுதாயத்தின் எல்லா தரப்பினரும் எழுத்துலகில் தங்கள் உணர்வை பதிப்பிக்க முடியும் காலமிது. படைப்புலகம் அவ்வப்போது தடுமாறினாலும், நிமிர்ந்தே நிற்கும். திசைமாற்றமும் அதற்கு உதவலாம்.

பதிவுகள்:- உடலுறுப்புகளை கொச்சையாகப் பெயர் குறிப்பிட்டு கவிதையில் பெண்களே எழுதுவது இன்றைக்கு பரவலாக நடந்துவருகிறது. இது குறித்து தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?

எழுதினால் என்ன தப்பு? ஏன் பெண்கள் எழுதக்கூடாதா?  ஒரு படைப்பாளி அவர் ஆணோ, பெண்ணோ தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளவும், தானொரு புரட்சிகரமான சிந்தனாவாதி என்று காட்டிக்கொள்வதற்காகவும், தனது படைப்புப் பேசப்படவேண்டுமென்பதற்காகவும் உடலுறுப்புகளை நீங்கள் சொல்வதுபோல கொச்சையாக தமது எழுத்துக்களில் கொண்டுவருகிறாரென்றால் அது கண்டிக்கத் தக்கது.  ஆனால் தனது வலிகளையும், குமுறல்களையும் வெளிப்படுத்த, அல்லது ஒரு படைப்பின் தேவை சார்ந்து அதைப்பயன்படுத்த வேண்டியிருக்கிறது என்றால் தாராளமாக எழுதலாம். அந்த உரிமையைப் பெண்கள் விஷயத்தில்மட்டும் மறுப்பது என்ன நியாயம். சொல்லபோனால் ஆண்களைக்காட்டிலும் பெண்கள் தார்மீக உரிமை உடையவர்கள். அக்கவிதைகளில் தாக்குதல்களில்லை, தற்காப்பு நிலை. மூச்சுத் திணறிக் கிடந்தவன் சுவாசம் பெறும் முயற்சி. பொதுவாக இம்மாதிரியான கவிதைகளுக்கு புகலிடமாக இருப்பவை சிற்றிதழ்கள் சிற்றிதழ்வாசகர்களில் பெரும்பாலோர் அவர்களது கவிதைகளை ஏனைய கவிதைகளைப்போலவே எடுத்துக்கொள்கின்றனர், புரிந்துகொள்கின்றனர். முகஞ்சுளிப்பதில்லை. ஆபாசம் எங்கே இருக்கிறது தெரியுமா குடும்பபத்திரிகைகளில், வெகுசன இதழ்களில், தினசரிகளில், நமது சீரியல்களில், சினிமாக்களில்.

பதிவுகள்:- பிரான்சில் நீங்கள் நடத்திவந்த “நிலா” இதழைத் தொடர்ந்து நடத்த இயலாது போனதற்கு என்ன காரணம்?

எல்லாவற்றையும் தனி ஒருவனாக செய்ய வேண்டியிருந்தது. எனது எழுத்திற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. தவிர ‘நிலா’ இதழ், வெகுசன இதழ் சாயலில் வெளியிடவேண்டிய நிர்ப்பந்தம். எனக்கான இடம் அது இல்லை என்பதும், வாசகர்களுக்காக நான் என்ற மனநிலையில், சினிமா செய்திகள், துணுக்குகள், ஜோக்குகள் என்று எழுதி அலுத்துவிட்டது. எனினும் மூன்றாண்டுகள் தொடர்ந்து இருமாத இதழாக வெளிவந்தது.

எனது முதல் சிறுகதைத் தொகுப்பில் அடங்கிய கதைகளில் மூன்றில் ஒரு பங்கு அதில் பிரசுரமானவையே. எனது பாரீஸ் நண்பர்களில் திரு பாலகிருஷ்ணன் எழுதிய ‘நானொரு சங்கத்தமிழன்’, திரு. முத்துக்குமரன் எழுதிய ‘பிரான்சு தொழிற்சட்டங்கள்’ போன்ற தொடர்கட்டுரைகளுக்கு நல்ல வரவேற்பிருந்தது.

பதிவுகள்:- எழுத்தாளர், இதழ் ஆசிரியர் அனுபவங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?

எழுத்தாளராக இருந்துவிடலாம், இதழ் ஆசிரியராக இருப்பது கடினம். உங்களுக்குத் தெரியாததா என்ன? எழுத்தாளனுக்கு இரண்டே இரண்டு கவலைகள்தான். ஒன்று: தனது எழுத்து பிரசுரத்திற்கு ஏற்கப்படுமா? என்பது. இரண்டாவது பிரசுரமானபின் எத்தனை வாசகர்கள் படித்திருப்பார்கள் என்பது. அத்துடன் சரி. மாறாக இதழ் ஆசிரியர்களை எடுத்துக்கொண்டால் தலைவலிகள் நிறைய இருக்கின்றன. சொந்த எழுத்துக்களில் கவனம் செலுத்தமுடியாது. விரும்பியோ விரும்பாமலோ எல்லா எழுத்துக்களையும் படித்துப்பார்க்கவேண்டிய கட்டாயம். பிரசுரமாகும் ஆக்கங்களுக்குத் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டிய நிர்ப்பந்தம், இனம், மதம், நாடு என எல்லாவற்றையும் ஒளித்துக்கொண்டு, நடு நிலையாளராக அடையாளப்படுத்திக்கொள்ளவேண்டிய அவசியம்..என நிறைய  சொல்லலாம். எழுத்தாளனாக இருக்கவே விரும்புகிறேன்.

பதிவுகள்:- சிறுகதை, நாவல், கவிதை இந்த மூன்றிலுமே தடம்பதித்துள்ள தாங்கள் எதில் அதிகமாக முகம் காட்ட விரும்புகிறீர்கள்?.

உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் தரமானக் கவிதைகள் எழுத எனக்குப் போதாது. கவிதை உலகம் எனக்குப் பிடிபடாததுபோல இருக்கிறது.  கவிதை எழுதுவதென்பது உட்கார்ந்துகொண்டு  காய்களை நகர்த்தும் சதுரங்க விளையாட்டு, எனக்கு ஓடிப் பிடித்து விளையாடவேண்டும். அதற்கு உரைநடை வெளியே எனக்கு உகந்ததென தீர்மானித்திருக்கிறேன். குறிப்பாக சிறுகதைகள்:அன்றாட வாழ்க்கையில்,  சட்டென்று நமது கவனத்தில் இடம்பெறும் ஏதோ ஒன்று சிறுகதையாகக்கூடும். அமெரிக்க சிறுகதை எழுத்தாளர்கள் மீது எனக்குப் பொறாமைகள் நிறைய.

பதிவுகள்:- அச்சு இதழ்களில் உங்கள் ஆக்கம்….. இணைய இதழ்களில் உங்கள் ஆக்கம் வெளியாகும்போது எதில் அதிக மகிழ்ச்சி ஏற்படுவதாக கருதுகிறீர்கள்?

அச்சு இதழ்களில் வருகிறபோது கூடுதலாக மகிழ்ச்சிக் கிடைக்கிறது. எனினும் அச்சு இதழ்களில் படித்துவிட்டு என்னைத் தொடர்பு கொண்ட வாசகர்களைக் காட்டிலும் இணைய இதழ்களில் குறிப்பாக திண்ணை, பதிவுகள் இதழ்களில் படித்துவிட்டு தொடர்புகொண்டவர்கள் அதிகம். உண்மையைசொல்லபோனால் எனது வளர்ச்சியே இணைய இதழ்களினால் ஏற்பட்ட வளர்ச்சி.

பதிவுகள்:- புலம்பெயர்ந்து வாழும் தமிழ்க் குழந்தைகளுக்கு ஏற்ப கதை, பாட்டு எழுதி வெளியிடும் எண்ணம் உண்டா?

அப்படி ஏதும் எண்ணம், இதுவரை தோன்றவில்லை. உங்கள் கேள்வி அதற்கு வித்திட்டிருக்கிறது.  குழந்தைகளுக்குச் சொல்ல, நிறைய இருக்கிறது. வழக்கமான உத்திகளிலிருந்து மாறுபட்டு கதை பாட்டு எழுதலாம்.

பதிவுகள்:- நீங்கள் எழுதிய படைப்புக்களில் மன நிறைவைத் தந்த ஆக்கமாகக் கருதுவது எதை?

 சிறுகதைகள். துரதிஷ்டவசமாக அவை சரியாக அறியப்படவில்லை. அன்புள்ள அப்பா, அக்கினி காரியம், எமன் அக்காள் கழுதை, பிறகு, நாளை போவேன்..எனக்குப் பிடித்த என்னுடைய சிறுகதைகளில் முக்கியமானவை.

பதிவுகள்:- எழுத்தாளர் என்ற நிலையில் உங்களின் இலட்சியங்கள் என்று…..?

எல்லா எழுத்தாளர்களுக்குமுள்ள இலட்சியங்கள் எனக்கும் இருக்கின்றன. முதலாவதாக ஒரு நல்ல எழுத்தாளனென்று பேர்வாங்கவேண்டும். இரண்டாவது கனவு, Simone de Beauvoir எழுதிய Le Deuxieme Sex  நூலையும், Margurite Yourcenarடைய Memoire d’Adrien நூலையும் தமிழுக்குக் கொண்டுவரவேண்டும். இதைத் தவிர பெரிதாகச் சொல்ல ஒன்றுமில்லை

பதிவுகள்:- உங்களின் நாவல் வெற்றிக்கு மூவர்  காரணம் என்று சொல்லியிருக்கிறீர்கள். குறிப்பாக இணையத்தில் கதையைப் படித்து ஊக்கமூட்டும்வகையில் பின்னூட்டு கொடுத்தவர்கள் குறித்து…?

அவர்கள் எனது நாவல் வாசகர்கள் மட்டுமல்ல எனது சிறுகதைகளையும், கவிதைகளையுங்கூட வாசித்து விட்டு பாராட்டுபவர்கள் எனவே நாவல் எழுதியபோது அவ்வப்போது பாராட்டினாலும் புத்தகமாக வெளிவந்தபிறகுதான் முழுவதுமாக படித்துவிட்டுப் பாராட்டினார்கள். அப்படித்தான் கவிஞர் சதாரமாலதியின் நட்புக் கிடைத்தது. பிறகு மரியதாஸ் என்ற நண்பர்  தொடர்ந்து என்னை உற்சாகப்படுத்தியவர். இந்த நாவல் எனக்குப் புகழ் சேர்க்கும் என்று உறுதியாக நம்பியவர் அவர்.

பதிவுகள்:- உங்கள் குடும்பத்தைப்பற்றி….?

மனைவி கிரிஜா, சராசரி இந்தியப் பெண்மணி. வணிகம் தொடர்பான எனது பணிகளை அவள் பங்கீடு செய்துகொள்வதால் எழுத்தில் என்னால் கவனம் செலுத்த முடிகிறது. ஒரு மகன் இரண்டு பெண்கள்.மகன் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் விற்பனைத் துறையில் பாரீஸில் பணிபுரிறார். மூத்த மகள் தனது கணவருடன் அமெரிக்காவில் இருக்கிறாள். இளையவள் வேதியியில் துறையில் இருக்கிறாள்.

———–

இவ்வார பதிவுகள்: நினைவில் நிற்பவை

தளவாய் சுந்தரம்: காந்திராஜன் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார்.

ஒரு தேர்ந்த பத்திரிகையாளருக்கேயுரிய சாதுரியத்துடன் ‘தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார்”  என்கிற கவர்ச்சிகரமான தலைப்பில் எழுதப்பட்டுள்ள கட்டுரை குறித்து வெகுநாட்களாகவே  எழுதவேண்டும் எழுதவேண்டுமென தள்ளிபோய்விட்டது. தளவாய் எழுத்துக்களை சிலாகிப்பவர்களில் ஒருவர் திரு. இந்திரன். நல்ல எழுத்துக்களை மனம்திறந்து அரிதாக பாராட்டுகிறவர்களில் இந்திரனும் ஒருவர்.  ஆக தளவாய் எழுத்தும் அந்த மரியாதையை தக்கவைத்துக்கொள்ளும் எழுத்தென்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. எதிர்காலத்தில் இதழியலில் இரு பெயர்கள் பெரிதும் பேசப்படும் மெனில் அவற்றுள் ஒன்று திருமாவேலன், மற்றவர் தளவாய் சுந்தரம்.

சரி கட்டுரைக்கு வருகிறேன். கட்டுரை காந்திராஜன் என்ற இளைஞர் பற்றியது. தமிழ் இளைஞர்கள் சூப்பர் ஸ்டார், உலகநாயன் என்று அலைகிறபோது விதிவிலக்காக தமிழ்நாட்டில் பாலை வெக்கையில் மலைகளையும் குகைகளையும் தேடி அலைந்துகொண்டிருப்பவராக, அங்குள்ள குகை ஓவியங்களைக் கண்டு பதிவு செய்பவாராக நண்பர் காந்திராஜன் இருக்கிறார். எனக்கு உதவாக்கரை பேச்சில் மயங்கி உணர்ச்சிக்கு ஆளாகி கரிக்கட்டையாகிப்போகிற அபத்தமான இளைஞர்க¨ளைக்காட்டிலும் இவரைப்போன்றவர்கள் கொண்டாடப்படவேண்டியவர்கள். இது போன்ற மனிதர்களின் உழைப்பும் தியாகமும்  பேசப்பட்டாலன்றி ஓர் இனம் உருப்படாது என்பது எனது கருத்து. எனது இந்தக்கருத்திற்கு இணக்கமாக இருக்கிறது காந்திராஜனைப்பற்றி நண்பர் தளவாய் சுந்தரம் தீட்டியுள்ள சித்திரம். காந்திராஜன் போன்ற இளைஞர்களைத் தேடிப்பிடித்து பயனுள்ள தமிழனாய் இருப்பதெப்படியென்ற பாடத்தை வருடத்திற்கு ஒருமுறையேனும் உணர்ச்சிக்கொந்தளிப்பில் தீக்குளிக்கிற உயிர்களுக்கும், வெயிலில் கால்கடுக்க தியேட்டர்வாசலில் காத்துக்கிடக்கும் பிண்டங்களுக்கும் புத்தியில் உரைக்கிறமாதிரி சொல்லவேண்டும். தமிழ்ச்சமுதாயம் காப்பாற்றப்பட்டுவிடும். காந்திராஜனை வனங்குகிறேன், அக்காந்திராஜனை  அறிவதற்கு வாய்ப்பளித்த தளவாயையும் வணங்குகிறேன்.

http://dhalavaisundaram.blogspot.com/2011/03/blog-post.html

எஸ்.ராமகிருஷ்ணன்

பறவை கோணம் தலைப்பில் நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன் தமது வலைத்தளத்தில் உயிர்மை இதழில் வெளிவந்த தமது பத்தியை மறு பதிவு செய்துள்ளார். பாமாவிஜயம் திரைப்படத்தில் இயக்குனர் பாலச்சந்தர் பாடல்காட்சியொன்றின் நுணுக்கமான அவதானிப்பை கட்டுரை விவரிக்கிறது. அக்கட்டுரையில் பாடலைக் காட்சிப்படுத்திய திறன்குறித்து மட்டும் பேசாமல், அக்காட்சியினூடாக, இன்றைய தமிழ் வாழ்க்கை இழந்துபோன ஒரு குடும்பத்தின் அன்றாடத் தருணங்களை நினைவு கூர்ந்து அவருக்கே உரிய மொழி நடையில் அவரோடு சேர்த்து நம்மையும் ஏக்கத்தில் நிறுத்தியிருக்கிறார். நடிகையர் திலகம் என்று வர்ணிக்கபட்ட சாவித்திரி கணேசனின் பிராப்தம் படமும் அப்படத்தால் அப்பெண்மணிக்கு ஏற்பட்ட வாழ்க்கைச்சரிவும், உயிர்வதையும் கட்டுரையின் பிற்பகுதியில் இடம் பெற்றிருக்கிறது.

அ.ராமசாமி:

தனிக்கவனமெடுத்து வாசிக்கும் எழுத்துக்களில் திரு அ.ராமசாமியின் எழுத்துக்களுக்கு பிரத்தியேக இடமுண்டு. தமிழ் இனம், தமிழர் வாழ்வென்ற அக்கறை வெளிப்பாடாக மொழிப்படுத்தப்படும் அவரது கருத்தியல்கள் கவனத்திற்கொள்ளப்படவேண்டியவை. தமிழ், தமிழர் என்கிற நிலைப்பாட்டை எப்போதும் முன்வைக்கிற அவரது எழுத்துக்களில் உடன்பாடு-மறுப்பு என்ற இருதரப்பு நியாயங்களையும் பொதுவில் சார்பின்றி வைத்து, தமது கருத்தை தெளிவாகக் கூறுவார். “தமிழ் ஊடகங்களில் ஒடுக்கப்பட்டோர் நிலையும் விடுதலையும்”, என்கிற அவரது பதிவு தமிழ் ஊடகங்களில் தமிழ்ச்சமூகத்தில் கேட்பாரற்றுக்கிடந்த மக்களினை சந்தைப்படுத்தும்  அண்மைக்கால இதழியல் அறத்தை சற்று ஆழமாகவே ஆய்வுசெய்திருக்கிறது.

“தினசரிகளின் கவனம் வட்டாரச் செய்திகளாக இருக்கப் பருவ இதழ்களின் கவனம் முழுவதும் அரசியல் மற்றும் திரைப்படத்துறை சார்ந்த ரகசியங்களைத் தேடுவதாக இருக்கின்றன. அரசியல்வாதிகளின் குற்றப் பின்புலம், ஊழல் நடவடிக்கைகள்,திரைப்படத்துறையினரின் அந்தரங்கங்கள், நட்புகள், ஆடம்பர வாழ்க்கை எனக் காட்சிப்படுத்தும் பருவ இதழ்களின் நோக்கம் அவற்றைக் களைய வேண்டும் என்பதாக இல்லை. அதற்கு மாறாக அவற்றைக் காட்சிப்படுத்தி அவற்றையே இயல்புநிலையாகக் காட்டி நம்பச் செய்வதாக இருக்கிறது.”

என்ற அவரது விமர்சனத்தில் உள்ள நியாயத்தை, தமிழைனத்தின் மீது அக்கறைகொண்ட எவரும் புரிந்துகொள்வார்கள்.

http://ramasamywritings.blogspot.com/2011/09/blog-post_6770.html

ஷாஜி

ஷாஜியின் தளத்தில் ஷம்மி கபூர் பற்றி நல்லதொரு கட்டுரை. எழுபதுகளில் இந்தி சினிமாக்கள் சென்னையை ஆக்ரமித்திருந்த நேரம் கல்லூரிகளில் தமிழ் சினிமாக்கள் பற்றி பேசுவதைக்காட்டிலும் இந்தி சினிமாக்கள் குறித்து அதன் நாயகர்கள் பற்றியும், அச்சினிமாக்களை திரையிடும் தியேட்டர்களைக் குறித்தும் பேசுவதே நாகரீகமென்றிருந்த காலம். குறிப்பாக அப்போது ராஜேஷ் கன்னா, தேவ் ஆனந்த், ஷம்மிகபூர், அமிதாபச்சன், தர்மேந்திரா பிறகு கபூர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களென நடிகர் பட்டாளம்; நடிகைகளின் பட்டியலும் நீளமானது. ஷர்மிளா, ரேகா, ஹேமா மாலினி, ஜெயா, மும்தாஜ், ஜீனத் அம்மன் என பலர் இருந்தாலும் எனது அபிமான நடிகை சாய்ஸ் லீனா சந்தாவர்க்கர். ஷம்மி கபூரைப் பற்றி பேசும் இக்கட்டுரை அவரது ஆழமான பல பரிமாணங்களை உரிய சொற்களின் துனையோடு சொல்கிறது.

“இந்திய சினிமாவின் எக்காலத்துக்குமுரிய கலகக்கார நாயகன்தான் ஷம்மி கபூர். சுதந்திரம் கிடைத்து பத்தாண்டுகளுக்கு பின்னரும் இந்தியாவில் நிலவிய முன்னேற்றமின்மை கொண்டுவந்த சமூகப்பிரச்சினைகளுக்கும் அதையொட்டிய இளைஞர்களின் கோபத்துக்கும் அக்காலத்து பதின்பருவத்தினரின் அடக்கப்பட்ட காதல் ஏக்கங்களுக்கும் ஒரு வடிகாலாக அமைந்தது ஷம்மி கபூரின் கலகக்காரனும் கிளர்ச்சிக்காரனுமான திரைநாயகனின் பிம்பம். யா?¥. . டாலி §?¡. . ஸ¥க்கூ..ஸ¥க்கூ. . என்றெல்லாமான விசித்திர வார்த்தைகளில் கோஷமிட்டுக்கொண்டு திரையில் அவர் வெளிப்படுத்திய பித்தும் சுறுசுறுப்பும் இளைஞர்களை உன்மத்தர்களாக்கியது. அவரது பாத்திரங்கள் தங்களது விருப்பத்துக்கேற்ப காதலிகளை வெல்பவர்கள். அவரது படங்கள் எப்போதுமே சந்தோஷமாக முடிபவை. ஒரு பதின்பருவத்தினனுக்கு ஆனந்தமடைய வேறு என்ன வேண்டும்? ”

என்கிற கேட்கிற ஷாஜியின் கட்டுரை தவிர்க்கப்பட கூடாதது.

http://www.musicshaji.blogspot.com/

மொழிவது சுகம்: செப்.20

Paris-Delhi-Bombay

கடந்த 16-17 தேதிகளில் பாரீஸ¤க்கு சென்றிருந்தேன்.  நானிருக்கும் Strasbourg லிருந்து சுமார் 500 கி.மீட்டர் தூரத்தில் பாரீஸ் இருக்கிறது. தொடக்கத்தில் சிலகாலம் பாரீஸில் இருந்துவிட்டு இப்போதிருக்கிற நகரத்தில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறேன். எனக்கு பாரீஸ் வாழ்க்கை பிடிப்பதில்லை. உலகில் எல்லா பெருநகரங்களுக்கான வாழ்க்கை பாரீஸ¤க்கும் பொருந்தும். சென்னையில் எப்படி வடசென்னை தென் சென்னை இருக்கிறதோ அப்படியான பிரிவு பாரீஸிலும் உண்டு. பாரீஸின் வடபகுதியில் பிற பகுதிகளைக் காட்டிலும் மூன்றாவது உலகநாடுகளிலிருந்து வந்தவர்கள் இங்கு கூடுதலாக உள்ளனர். பொதுவாக உடலுழைப்பை நம்பி இருக்கிறவர்கள் வாழும் பகுதி, ஆப்ரிக்கர்களும் தமிழர்களும் பிற பகுதிகளைக் காட்டிலும் இங்கு அதிகம்.

கடந்த ஆறுமாதகாலமாக பாரீஸிலுள்ள நவீன கலையகமான Centtre Pompidou வில் Paris-Delhi-Bombay என்கிற கண்காட்சி நடைபெற்று  செப்டம்பர் பத்தொன்பதாம் தேதி முடிவுற்றது. பிரான்சு மற்றும் இந்திய நவீன ஓவியக்கலைஞர்களின் படைப்புகள் இடம்பெற்றிருந்தன. அதன் ஒரு பகுதியாக(?) மேலே நான் குறிப்பிட்ட தேதிகளில் “எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் பார்வையில் இந்தியா” என்ற கருத்தரங்கு இரண்டு நாட்கள் நடபெற்றது. பார்வையாளர்களில் ஒருவனாக நானும் கலந்துகொண்டேன். முதல் நாள் இந்தியாவின் வேதகால ஞானத்தைப் பற்றிய ஒரு கலந்துரையாடலில் மூன்று பிரெஞ்சு பல்கலைகழக பேராசிரியர்கள் கலந்துகொண்டார்கள். அவர்கள் மிகவும் அக்கறை எடுத்துக்கொண்டு கிரகஸ்தா, சம்சாரா, நிர்வாணா என்று விவரித்துக்கொண்டிருந்தது எரிச்சலூட்டியது. இன்று நேற்றல்ல வெகுகாலமாகவே இவர்களுக்கு இந்தியா என்றாலே வேதகால இந்தியா  அல்லது மக்களின் அவல நிலை. மேற்கண்ட கண்காட்சியில்கூட கலை படைப்புகள் என்ற பெயரில் வைத்திருந்தவைகள்: இந்தியாவின் சாதிப்பிரிவுகள், பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள், தலித்மக்கள், சேரிகள், தெருவில் அலையும் மாடுகள், மும்பை மூன்றாம் பாலினமக்கள்.   இந்திய எழுத்தாளர்கள் என்று அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் நால்வரும் ( Manil suri, Sudhir Kakar, Preeta Samarasan et Kunal Basu.) ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டிருப்பவர்கள். அவர்கள் இந்தியாவிலிருந்துகொண்டு ஆங்கிலத்தில் எழுதினால் கூட பரவாயில்லை வெளிநாடுகளில் இருந்துகொண்டு எழுதுபவர்கள். இந்தியாவில் பிறந்ததோடு சரி. இந்தியாவின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அறிமுகப்படுத்தபட்ட மூவரில் ஒருவர் மேற்கு வங்காளம், ஒருவர் மகாராஷ்டிரா, மூன்றாமவர் குஜராத். நான் நினைத்ததுபோலவே மூவரும் மேட்டுக்குடியினர். கல்லூரிபடிப்பை முடித்து மேலைநாடுகளில் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்கள்; வீட்டில்கூட அவர்களுடைய தாய்மொழியை பேசுவதில்லையாம். காரணம் சிறுவயதுமுதலே ஆங்கிலத்தில் படித்ததுதானாம், ஆக தாய்மொழியில் எழுதவோ படிக்கவோ தெரியாதென்பதை பெருமையாகச் சொல்லிக்கொண்டார்கள். நான்காவது பெண் மலேசியாவைச் சேர்ந்தவள், தமிழ்ப் பெண். அவளும் தம் பங்கிற்குத் தமிழ் தெரியாது என்பதை பெருமையாகச்சொல்லிகொண்டாள். நால்வரின் நூல்கள் இந்தியாவில் பிரதேச மொழியில் மொழிபெயர்க்கப்பட்டதா என்ற கேள்விக்கு இல்லை என்று கூறியதோடு அதற்கான அவசியமில்லை என்றார்கள்.

ஆங்கிலத்தில் எழுதினாலும் அமெரிக்காவிலிலோ இங்கிலாந்திலோ வசித்தாலும் இவர்கள் இந்திய எழுத்தாளர்களுமல்ல ஆங்கில எழுத்தாளர்களுமல்ல என்றொரு பார்வை மேற்கத்திய படைப்புலகில் இருப்பதை உணர்ந்திருப்பார்கள் எண்றே நம்புகிறேன். இந்த நால்வரின் எழுத்தையும் இதுவரை வாசித்ததில்லை. வாசிக்கும் உந்துதலை ஏற்படுத்தித்தருவதாக அவற்றின் பெயர்களுமில்லை. பொதுவாக இந்திய ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டிருக்கிறவர்களில் பெரும்பான்மையோர் காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுபடாதவர்கள் என்பதென் அவதானிப்பு.

—–

Echanges et Partages Franco-Indienne:

இது அண்மையில் நான் ஏற்படுத்தியுள்ள அமைப்பு. இதற்கு நான் தலைவராகவும், Xavier என்ர பிரெஞ்சு நண்பர் பொருளாளராகவும், Fraçoise என்ற பெண்மணி செயலாளராகவும் உள்ளனர்.  எங்கள் சங்கத்தின் நோக்கம் நவீன தமிழ் படைப்புகளை  பிரெஞ்சுக்குக் கொண்டுவருவது, பிரெஞ்சு மற்றும் தமிழ் எழுத்தாளர்கள் சத்திப்பிற்கு இந்தியாவிலும் பிரான்சிலும் ஏற்பாடு செவது ஆகியவை. தமிழிலிருந்து பிரெஞ்சுக்குக் கொண்டுவருவதென்பதில் பல சிக்கல்கள் இருக்கின்றன என்பது தெரியவந்துள்ளது. வங்காள மொழியிலிருந்து பிரெஞ்சுக்கு மொழிபெயர்க்கும் பிரெஞ்சு பெண்மணி தமது போராட்டத்தைப் பற்றி சுருக்கமாக தெரிவித்தார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக மூன்று நாவல்களை மொழிபெயர்த்துவைத்துக்கொண்டு பதிப்பாளர்களை தேடி ஓய்ந்துவிட்டாராம். வாழ்த்துக்கள் என்றார். மனதில் தைரியமிருக்கிறது, தமிழுக்குத் ஏதாவது செய்யவேண்டுமென்ற உந்துதலுமிருக்கிறது, முயன்று பார்ப்போம்.
————————————–

நந்திவர்மன் வலைத்தலம்.

நந்திவர்மன் புதுச்சேரியைச் சேர்ந்தவர். இன்றைய பல அரசியல் கட்சி தலைவர்கள் பலருடனும் வடக்குத் தெற்கு என பேதமின்றி நட்பு பாராட்டி வந்திருக்கிறார். திராவிடப் பேரவை செயலாளர். எனக்கு அவருடைய கொள்கைகளில் முரண்கள் இருப்பினும், அவரது உழைப்பை போற்றுகிறேன். புதுச்சேரி மாநிலத்தை  பொறுத்தவரை அம்மண்ணிற்கும் மக்களுக்கும் ஓயாமல் குரல்கொடுத்து வருபவர். காலத்திற்கேற்ப தம்மை மாற்றிக்கொண்டு அரசியலில் இலாபம் பார்க்கும் மனிதர்களில் இவரைப்போன்ற மனிதர்கள் அபூர்வம் என்பது எனது சொந்த அனுபவம்.

அனத்திற்கும் மேலாக அண்மையில் புதுச்சேரி அரசின் தமிழ் மாமணி விருதை பெற்ற்வர் என்பதையும் இங்கே நினவுகூர்தல் வேண்டும்.

உலகத் தமிழர்களுக்காகவும் வக்காலத்து வாங்குகிற நண்பரின் வலைப்பூ கீழ்க்கண்ட முகவரிகளில் வாசிக்கக் கிடைக்கின்றன.

http://nandhivarman.wordpress.com/
http://annaist.livejournal.com/
http://dravidaperavai.blog.co.uk/tags/nandhivarman/

பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்-5: Métro – Boulot -Dodo

« Au déboulé garçon pointe ton numéro
Pour gagner ainsi le salaire
D’un morne jour utilitaire
Métro, boulot, bistro, mégots, dodo, zéro ».

மே 1968 பிரெஞ்சு கலவரத்தின் போது பாரீஸ் சொர்போன் பல்கலைகழகச் சுவரில் முதன் முறையாக எழுதப்பட்டிருந்த வாசகம்.

நகரவாழ்க்கையை எந்திர வாழ்க்கையோடு ஒப்பிட்டு சலித்துக்கொள்வது இன்று நேற்று ஏற்பட்டதல்ல. பாரீஸ் நகர வாழ்க்கையை அங்குள்ள மக்கள் Métro – Boulot -Dodo – ஆங்கிலத்தில் subway – work- Sleep என நேரடியாக மொழிபெயர்க்கலாம். இது உரிய பொருளை தருவதாக இருந்தாலும் ஆங்கிலேயர் வழக்கில் the daily grind பொருத்தமான சொல் என்கிறார்கள். மொழிபெயர்ப்பில் உள்ள சிக்கல் இது. ஒரு சொல்லை மொழிபெயர்க்கிற பொழுது, அதற்குரிய சரியான பொருள்தரும் சொல்லை கண்டுபிடித்தால் மட்டும் போதாது அதற்கு ஈடான மரபான சொற்கள் வழக்கிலிருக்கிறதா என்பதைப் பார்க்கவேண்டும். இது குறித்து தனியாக ஒரு கட்டுரை எழுதவிரும்புகிறேன்.

மேற்கொண்ட சொல்வழக்கிற்கு வருகிறேன். எழுபதுகளில் சென்னையில் கல்லூரியில் படித்தபொழுது குரோம்பேட்டையிலிருந்து தினசரி மின்சார ரயில் பிடித்து சென்னைக் கடற்கரைவரை செல்வது வழக்கம். அப்போதெல்லாம்(?) அரக்கோணம், காஞ்சிபுரம், விழுப்புரமென்று வசித்துக்கொண்டு சென்னைவரை தினசரி இரயிலில் பயணம் செய்து பணியாற்றுவர்களை அப்பகுதிகளிலிருந்து வரும் பாசஞ்சர் இரயில்களில் காண்பதுண்டு. அவர்கள் வாழ்க்கையை மேற்கண்ட Metro – Boulot -Dodo என ஒப்பிட தோன்றும். இன்றைய தேதியில் எல்லா பெரு நகரங்களிலும் பணிசெய்து வாழ்க்கையை நகர்த்துபவர்களின் தினசரிகளுக்கு இது பொருத்தமான சொல்லே.

பாரீஸில் Métro – Boulot -Dodo என்றால் பிரான்சு நாட்டில் பிறபகுதிகளில் தினசரி வாழ்க்கையை எப்படி காண்கிறார்கள் அல்லது அந்த வாழ்க்கையை எந்தச் சொற்றொடரால் அடையாளப்படுத்துகிறார்களெனில் “Les Français bouffent, se logent et roulent’ என்பார்கள். அதாவது சம்பாதிப்பது சாப்பாட்டிற்கும், வீட்டிற்கும், வாகனத்திற்கும் சரியாக இருக்கிறதென்கிற பொருளில்:

பிரெஞ்சுக்காரர் ஒருவர் 100 யூரோ சம்பாதிக்கிறார் என்று வைத்துக்கொண்டால் அவர்:

25,40 யூரோ உணவுப்பொருள்களுக்கும்
17,40 யூரோ வீட்டு வாடகை அல்லது வீடுவாங்கிய கடன், வீட்டு பராமரிப்பு செலவுக்கும்
14,30 யூரோ போக்குவரத்து செலவு இதி சொந்த வாகனசெலவுகளும் அடங்கும்
10,30 யூரோ துணிமணிகளுக்கும்
9,10 யூரோ வீட்டு உபயோகப்பொருட்களுக்கும்
7,90 யூரோ பொழுதுபோக்கு சமாசாரங்களுக்கும்
4,80 யூரோ உடல் நலத்திற்கும்
2,70 யூரோ விடுமுறைக்கும்
8,10 யூரோ பிறவற்றுக்கும் செல்விடுவதாக அண்மையில் தெரியவந்த செய்தி அதாவது சேமிப்பும் இதிலடங்கும்.

மேற்கண்ட தகவல் அசலான பிரெஞ்சுகாரருக்கு மட்டுமே பொருந்தும். வேண்டுமெனில் இங்குள்ள ஐரோப்பியருக்கு என்று கூடுதலாகப் பொருள்கொள்ளலாம்.

ஒரு கொசுறு செய்தி இந்த Métro – Boulot -Dodo என்கிற ஸ்லோகத்தை அறிமுகப்படுத்தியவர் பத்திரிகயாளரும், வானொலியில் கலைஞராகவும் திகழ்ந்த Pierre Béarn (Louis Gabriel Besnard). அவர் இயற்றிய பாடலொன்றில் இந்த ஸ்லோகம் வருகிறது. Pierre Béarn104 ஆண்டுகள் உயிர்வாழ்ந்து 2004ல்தான் இறந்தார்.

___________________________________

Annonce

Chers amis

Il y aura un évènement  culturel sur l’Inde pour deux jours  à Paris :

L’Inde vue par des écrivains, des traducteurs, des photographes et un cinéaste

les 16 et 17 septembre 2011
Centre Pompidou
Petite Salle, niveau-1 Paris

na. Krishna

http://www.centrepompidou.fr/Pompidou/Manifs.nsf/0/8FFDC63779BD8843C12578B00044C159?OpenDocument&sessionM=2.6.2&L=1&form=Actualite

 

பிரான்சை தெரிந்து கொள்ளுங்கள்-4

ஆணும் பெண்ணும் சமமென்பதை நாம் மறுப்பதில்லை. பிரான்சு நாட்டிலும் உலக மகளிர் தினம், பெண்ணுரிமை வாதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்; ஆனாலும்  அவரவர் அனுபவங்கள் வேறு:

ஓர் அலுவகத்தில் ஆணும் பெண்ணும் பதவியிலும், வாங்கு ஊதியத்திலும், பெறும் சலுகைகளிலும் சமமென்றே சட்டம் கருதினாலும், அதை முறைப்படுத்தினாலும் இருவேறு உலகங்களை அவர்கள் அலுவலக வாழ்க்கை ஏற்படுத்தித் தருவதாக ஒரு பிரெஞ்சு இதழ் தெரிவிக்கிறது:

எதிர்ப்படும் உங்களுக்கு அலுவலகத்தில் வணக்கம் தெரிவிக்க மறந்தால்:

ஆண் எனில்: அவனுக்கு இன்று ஏதோ பிரச்சினைகள்.

பெண் எனில்: அவளுக்குத் திமிறு

நிறுவனத்தின் இயக்குனரோடு ரெஸ்டாரெண்டில் சேர்ந்து சாப்பிடுகிறான் அல்லது சாப்பிடுகிறாள் என வைத்துக்கொள்ளுங்கள்

ஆணென்றால்: கூடிய சீக்கிரம் அவனுக்கு பதவி உயர்வு காத்திருக்கிறது

பெண்ணென்றால்: இயக்குனருக்கும் அவளுக்கும் ஏதோ கசமுசா

வேலையில் கறாராக இருப்பதாக வைத்துக்கொண்டால்

ஆணென்றால்: தனக்குள்ள அதிகாரத்தை பிரயோகித்தத் தெரிந்தவன்
பெண்ணென்றால்: என்ன இருந்தாலும் அந்தப்பொம்பிளைக்கு இத்தனை ஆர்பாட்டம் கூடாது

மேசை ஒழுங்கற்றிருந்தால்:

ஆணென்றால்: மேசையை ஒழுங்குபடுத்தக்கூட அவனுக்கு நேரமில்லை, ஓய்ச்சலின்றி வேலை

பெண்ணென்றால்: அவளுக்கு அலங்காரத்திற்கே நேரம் போதாது. மற்றதை எப்படி கவனிப்பது?

தினசரி வாசிப்பது

ஆணென்றால்: பங்குச்சந்தைப் புள்ளிவிவரங்களை அலசுகிறான் அல்லது நாட்டு நடப்புகள் துல்லியமாக தெரிந்துகொள்ள ஆர்வம்

பெண்ணென்றால்: சமையல் பக்கங்களை வாசிக்கிறாள் அல்லது. சீரியல்கள், சினிமாக்கள் ஒளிபரப்பு நேரங்களை தெரிந்துகொள்ள ஆர்வம்.

விரைவில் திருமணம்

ஆணென்றால்: குடும்பம் வாழ்க்கையென்று செட்டில் ஆக விருப்பம், நல்லதுதானே

பெண்ணென்றால்: ஆறுமாதத்தில் பிரசவ விடுமுறை கேட்டு விண்ணப்பம் செய்வாள்

மாலையில் அலுவலகத்தில் கூடுதலாக சில மணி நேரம் இருக்கவேண்டி இருக்கிறது

ஆணென்றால்: அவனுக்கு வேலையிலே அவ்வளவு அக்கறை
பெண்ணென்றால்: என்னவோ நடக்குது கேமரா வைக்கணும்

சக நண்பர்களுடன் கலகலப்பாக பேசினால்

ஆணென்றால்: சக ஊழியர்களுக்கிடையே சுமுகமான உறவு
பெண்ணென்றால்: ஊர்க்கதை நடக்கிறது

அலுவலக கடிதத்தில் நிறைய பிழைகள்
ஆனென்றால்: அவனுடைய பெண்செயலாளருக்குப் போதவே போதாது
பெண்ணென்றால்: அவளுக்கு தப்பின்றி பிரெஞ்சு எழுதவராது.

கூடுதலாக ஊதியம் கேட்பது

ஆணென்றால்: அவனுக்கு வேறு எங்கோ நல்ல வேலை கிடைப்பதற்கு சாத்தியங்கள் இருக்கவேண்டும்.
பெண்ணென்றால்: இப்போது அவள் வாங்குகிற சம்பளமே அதிகம்

அலுவல் விஷயமாக வெளிநாடு செல்லவேண்டும்

ஆணென்றால்: மனைவி பிள்ளைகளை விட்டு இப்படி அடிக்கடி பிரயாணம் செய்வது சிரமம்தான்
பெண்ணெனில்: இப்படி அடிக்கடி ஊர்மேயறாளே புருஷன் கண்டுகொள்வதில்லையா?

_________________________________

பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்-3

ஷாம்பெய்ன்: ஆங்கிலத்தில் ஷாம்பெய்ன் எனசொல்லப்படும் வார்த்தை பிரெஞ்சிலிருந்து வந்தது ஆனால் அதை பிரெஞ்சில் ஷம்ப்பாஞ்ன் என்று சொல்லவேண்டும். பிறந்த நாள் கொண்டாட்டமா, பரிட்சையில் பாஸா? பெரும் பண்டிகையா? விளையாட்டில் வெற்றியா? தேர்தலில் டெப்பாசிட்டாவது தேறியதா? லாட்டரி சீட்டில் ஒரு மில்லியன் டாலர் விழுந்ததா? காதலித்த பெண் எனக்கு நல்ல மாபிள்ளை வாச்சிருக்கார், மறக்காம ரிசப்ஷனுக்கு வந்திடுங்கோ என்கிறாளா? தூங்கு தண்டனை தற்காலிகமாக ரத்தா? எல்லா சந்தோஷத்துக்கும் கொண்டாவென்று இருக்கும் ஒரே பானம் champagne.

இந்த champagne என்ற சொல்லை Champagne என்று எழுதினால் கவனியுங்கள்- ‘c’ க்குப் பதிலாக ‘C’ என்று எழுதியிருக்கிறேன். – அது பிரான்சு நாட்டின் வடகிழக்குப் பகுதியைச்சேர்ந்த பிரதேசம். அப்பிரதேசத்தின் முழுப்பெயர் Champagne-Ardenne. இந்த Champagne பிரதேசத்தில் தயாரிக்கப்படும் மதுபானமே champagne. பிரான்சுக்கு வந்தால் இப்பிரதேசத்திற்கு போய்வாருங்கள். அங்குள்ள vignoble எனப்படும் திராட்சைத் தோட்டங்களில் எப்படி ஒயினை ருசித்துப்பார்க்க அதன் தயாரிப்பாளர்கள் அனுமதிக்கிறார்களோ அதுபோலவே Champagne பிரதேசத்தில் அத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள் champagneஐ ருசித்துப்பார்க்க அனுமதி அளிக்கிறார்கள். அச்சடங்கிற்கு Dégustation என்று பெயர், நம்ம ஊரில் அல்வா கடைகளில் வாயில் போட்டுப்பாருங்கள் என்று கொடுப்பதில்லையா? அதுபோல.

ஷாம்பெய்னும் உண்மையில் ஒருவகை ஒயின் ஆகும். அதாவது Le Vin Péstillant என்பார்கள் ஆங்கிலத்தில் The Sparkling wine, தமிழில் காஸ் ஒயின் – சோடா ஒயினென்றும் சொல்லலாம். ஏற்கனவே கூறியபடி Champagne பிரதேச champagne தாயாரிப்பாளர்களுக்கு மட்டுமே அப்பெயரை வைத்துக்கொள்ள உரிமையுண்டு, பிரான்சிலே கூட வேறு பிரதேசங்களில் தயாரிக்கப்படும் அதே வகை தயாரிப்புகளுக்கு அப்பெயரை வைக்க உரிமையில்லை. எனவே மற்ற பிரதேசத்துக்கார்கள் உதாரணம் எங்கள் பகுதியில் (Alsace) Vin mousseaux எனக்கூறி விற்கவேண்டியிருக்கிறது. இதர ஐரோப்பிய நாடுகளிங்கூட இதுதான் நிலமை ஸ்பெயின் நாட்டினர் தங்கள் தயாரிப்பினை cave என்கின்றனர். இத்தாலி நாட்டினருக்கு Prosecco, ஜெர்மனுக்கு Sekt. ஐரோப்பியர்கள் என்றில்லை உலகில் எந்த நாடும் champagne என்ற பெயரில் விற்பனை செய்யக்கூடாது. ஆஸ்திரேலியாவில் Australian sparlking wine என விற்பனை செய்வதாக சொல்லப்படுகிறது. எத்தனை பெயர்கள் இருந்தபோதும் உலகில் ஷாம்பெய்ன் என்ற வார்த்தையின் வியாபார மகத்துவத்தை பலரும் அறிவர். எனவே அப்பெயரைத் திருட்டுத்தனமாக உபயோகிப்பதும் உலகில் நடக்கிறது அப்படி யாராவது வியாபாரம் செய்வதை தகுந்த ஆதாரங்களுடன் தெரிவித்தால் Champagne பிரதேச champagne தயாரிப்பாளர் கூட்டுறவு அமைப்பு உங்களுக்குத் தகுந்த வெகுமதியைத் தரும்.

கடைசியாக ஒரு புதிர்: பிரான்சிலுங்கூட ஒயின் இல்லாத வீடொன்று உண்டு, அது யார் வீடு தெரியுமா? விடைதெரியாதர்கள் நண்பர் காலச்சுவடு கண்ணனைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

குறுந்தொகை ‘நாயகர்’

அண்மைக்காலங்களில் பிரெஞ்சிலிருந்து தமிழில் மொழிபெயர்த்த சிறுகதைகளை சிற்றிதழ்களில் வாசிக்க நேர்ந்த வாசகர்களுக்கு வெங்கட சுப்ராய நாயக்கர் என்ற பெயர் அறிமுகமான பெயராக இருக்கக்கூடும். பெயரைப் படித்து நீங்கள் ஏதோ சுதந்திரப் போராட்ட தியாகி தமிழ் சிற்றிதழ்பக்கம் ஒதுங்கியிருக்கிறார் என்றெல்லாம் கற்பனை செய்யவேண்டாம். விஜய நகர பேரரசின் எச்ச சொச்ச நாயக்கர்களில் ஒருவராக இருக்குமோ என்ற சந்தேகத்தைக்கூட நீங்கள் தவிர்க்கலாம் ஏனெனில் புதுச்சேரியிலும் தமிழ் நாட்டின் வட மாவட்டங்களிலும் வன்னியர்களில், ஒரு பிரிவினருக்கு நாயக்கர் என்றே பெயர்.

மெலிந்த தேகம், ஒடுங்கலான முகம், போன்சாய் வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்போல நன்கு கத்தரித்த குட்டையான கேசம். பலத்த காற்றென்றாலும் படிந்த தலை மயிர் எழுந்திருக்காது, அத்தனை அடக்கம். ஆனாலும் மனிதரின் கைக்கு எப்போதும் அதன் மீது தனி கவனமுண்டு. பேண்டுக்குமேல் சட்டை, முழுக்கையை மணிகட்டு தெரிய மடித்திருப்பார். புதுச்சேரி என்றதும் எனது ஆழ் மனதில் நோஸ்த்தால்ஜியாவாக ஓர் பிம்பம் உயிர்த்தெழும், எழுபதுகள்வரை அந்த புதுச்சேரிவாசியை தினசரி வாழ்க்கையில் – நேருவீதியிலோ, மாத்ரு கபேயிலோ, இந்தியன் காபி ஹவுஸிலோ, காலை பதினோரு மணிக்கு பெரிய மார்க்கெட்டிலோ, மாலை ஆனால் ஒதியஞ்சாலை திடலில் பேத்தாங் ஆட்டத்தின் ‘பூல்’களுடனோ – சந்திக்காமலிருந்ததில்லை. கண்ணிற் பட்டோமோ இல்லையோ ‘போன்ழூர் ம்ஸே’ என்பார்கள். மதாம், புள்ளைங்க சௌக்கியமா? கேட்பார்கள். இந்த இரண்டாவது விசாரிப்பில் அவர்களைக் கடந்து செல்ல முடியாது. நிற்க வேண்டும். பேசவேண்டும். பேசவேண்டும் – பேசவேண்டும். வீட்டிற்குத் திரும்ப மீண்டும் உங்களுக்கு உங்கள் மதாம் (மேடம் இங்கே மனைவி) ஞாபகம் வரவேண்டும். ஆனாலும் பேச்சின் முடிவில் சலிப்பு தோன்றாது. மறுநாள் சந்திக்க நேர்ந்தால் நீங்கள் ‘போன்ழூர் ம்சே’ என்று வலிய சில நேரங்களில் உங்களுக்கு முன்னே நடப்பவர் அவர்தானா என்பதை உறுதிபடுத்த முடியாத நிலையிலுங்கூட தோளைத்தொட்டு பேசுவீர்கள், அப்படியொரு நெருக்கமான சினேகிதத்தை மனதில் வார்த்திருப்போம்.

நண்பர்களால் நாயகர் எனப்படும் வெங்கட சுப்ராய நாயக்கரும் எனக்கு அறிமுகமானவிதமும் ஒரு வகையில் அப்படி நிகழ்ந்ததுதான் – உபயம் எங்கள் இருவருக்கும் பொதுவான இனிய நண்பராக இருக்கிற தாகூர் கலைகல்லூரி முன்னாள் பேராசிரியர் திரு தேவ மைந்தன் என்கிற பசுபதி அவர்கள். நாயகரும் கடந்த 22 ஆண்டுகளுக்கு மேலாக பேராசிரியராக பணியாற்றிவருகிறார், அவர் முனைவருங்கூட. கற்பிக்கும் துறை பிரெஞ்சு இலக்கியம். அவருடைய வழிகாட்டுதலில் பல ஆய்வு மாணவர்கள் உள்ளனர் என்பது கூடுதல் செய்தி. தற்போது புதுவைப் பல்கலைகழகத்தைசேர்ந்த காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தில் பிரெஞ்சு மொழி பேராசிரியர்.

எனக்கும் நாயகருக்கும் நட்பு நீடிப்பதற்கான காரணம் இக்கட்டுரையின் முதல் வரியிலேயே இருக்கிறது. அதனை படித்தபோதே ஏன் அவரோடு ஒட்டிக்கொண்டிருக்கிறேன் என்பதை நண்பர்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள். அவரும் எனது எழுத்தை அவ்வப்போது பாராட்டி பேசுவார் நானும் அவரது முயற்சிகளை தொடர்ந்து விசுவாசித்து வந்திருக்கிறேன். பிரெஞ்சு படித்த புதுச்சேரி தமிழர்களில் மொழிக்கு விசுவாசமாக இருப்பவர்கள் குறைவு. நண்பர் பசுபதியும் சரி, நாயக்கரும் சரி தொன்ம இலக்கியத்தைபோலவே நவீன இலக்கியங்களிலும் ஆர்வம் காட்டுபவர்கள். இப்படி இரண்டிலும் ஆழ்ந்த ஞானமும் தீராத ஈடுபாடும் ஒருசேர அமைந்த பேராசிரியர்களை அரிதாகத்தான் பார்க்கமுடிகின்றது. நாயகர் பிரெஞ்சிலிருந்து தமிழில் சிறுகதைகளை மொழிபெயர்ப்பதோடு, தமிழ் சிறுகதைகளையும் பிரெஞ்சில் மொழி பெயர்த்துவருகிறார்.

நண்பரது அண்மைக்கால சாதனை மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்காக குறுந்தொகையை பிரெஞ்சில் மொழி பெயர்த்திருப்பது. பிரான்சைசேர்ந்த மற்றொரு நண்பர் கோபாலகிருஷ்ணன் பட்டினப்பாலையைத் பிரெஞ்சில் மொழிபெயர்த்திருப்பதாக செய்தி. இதுபோன்ற நல் உழைப்புகளை மனமுவந்து தமிழ் கூறும் நல்லுலகம் போற்றவேண்டும். குறுந்தொகையிலிருந்து சில பாடல்கள் பிரெஞ்சு மொழி பெயர்ப்புடன்:

3. குறிஞ்சிதலைவி கூற்று
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.
தேவகுலத்தார்.
 
 
Poème 3
Situation poétique – tiṇai : Région montagneuse – kuṟiñci
 
L’héroïne  proteste à son amie qui a fait des remarques sur le héros :
Plus vaste que la terre,
plus haut que le ciel,
plus profond que le vaste océan,
est  mon amour pour cet homme
venant des montagnes,
où les abeilles fabriquent
du miel des fleurs de kuṟiñci aux tiges noires.
                                                            -Tēvakulattār
Note: L’amour est comparé à la terre qui s’étend horizontalement, au ciel qui s’étend en hauteur,  à l’océan qui s’étend en profondeur. Les fleurs de  kuṟiñci   fleurissent dans les régions montagneuses tous les douze ans.  Les abeilles fabriquent du miel de ces fleurs.  Elles ne vont pas butiner ailleurs. La jeune femme est certaine que son bien-aimé n’ira pas vers une autre femme.
 
kuṟiñci – Phelophyllum kunthianum
……………………..
20. பாலைதலைவி கூற்று
அருளும் அன்பும் நீக்கித் துணைதுறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே.
கோப்பெருஞ்சோழன்.
 
 
Poème: 20
 
Situation poétique-  tiṇai : Région désertique –pālai
L’héroïne dit à son amie :
Cet homme
a oublié l’amour et la compassion.
Il a oublié aussi sa compagne
et s’en est allé chercher fortune.
S’il est intelligent qu’il le soit.
Nous, femmes, restons innocentes.
-Kōpperuñcōḻaṉ
 
Note : Innocente veut dire simple, sans complication; les quatre vertus de la femme indienne étaient la crainte, l’innocence, la timidité, la politesse. La logique de l’héroïne est fondée sur l’émotion contraire à celle de son homme qui préfère la quitter pour aller chercher fortune.
………………………..
40. குறிஞ்சிதலைவன் கூற்று
யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.
செம்புலப் பெயனீரார்.
 
 
Poème: 40
Situation poétique – tiṇai : Région montagneuse – kuṟiñci
Le héros s’adresse à sa bien-aimée :
Ta mère et ma mère,
se connaissent-elles?
Ton père et mon père
ont-ils des liens de parenté?
Toi et moi,
nous ne nous sommes jamais rencontrés.
Pourtant,
telle la pluie imprégnant la terre rouge
nos cœurs se mêlent et s’entremêlent.
-Cempulappeyanīrār
 
Note : Le héros observe que leur relation sera inséparable et éternelle comme  l’eau de pluie qui imprègne la terre rouge. Comme cette union est née spontanément, sans crier gare, le héros en est sûr. D’après Mani, cempulam se réfère à kuṟiñci – la région montagneuse.
 ………………….