Monthly Archives: ஏப்ரல் 2012

மொழிவது சுகம் – ஏப்ரல் 27

Rosemary’s baby -Roman Polanski

அண்மையில் Arte என்கிற பிரெஞ்சு தொலைகாட்சியில் புகழ்பெற்ற ரோமன்போலெஸ்க்கியின் ரோஸ்மரியின் குழந்தை (Rosemary’s baby) படத்தை காணநேர்ந்தது. ரோஸ்மரி நாடகங்களில் துணைநடிகராக நடிக்கின்ற அவரது கணவர் இருவரும் நியூயார்க் நகரில் ‘Bramford’ என அழைக்கப்படும் தொகுப்புவீடொன்றில் குடியேறுகிறார்கள்.அவர்களுக்கு அண்டைவீட்டினராக அறிமுகமாகும் வயதான தம்பதியினர்  இளம் தம்பதினியினர் மீது காட்டும் அளவற்ற பாசம் ரோஸ்மரிக்கு சந்தேகத்தைக்கொடுக்கிறது. தொகுப்பு வீடு, அவ்வீட்டில் வசிக்கும் பிற குடித்தனகாரர்கள், வயதான தம்பதியினர் என ஒரு மர்ம முடிச்சில் திரைக்கதையை மிக துல்லியமாக சொல்லியிருக்கிறார்கள். ரோஸ்மரியாக நடிக்கும் மியா ·பரோ (Mia Farrow) வின் நடிப்பு அபாரம். நம் வீட்டுபெண்போல இருக்கிறார். தொடக்கத்தில் சாதுர்யமானவளாகவும், கெட்டிக்காரியாகவும் அறிமுகமாகிறவள்  பின்னர் பரிதாபமாக தோற்று துவளும்போது எரிச்சல் வருகிறது. சாத்தான் அபிமானிகளான கூட்டத்தின் சிலந்தி வலையில் சிக்குண்டு மெல்ல மெல்ல இரையாவது கொடுமை. மறக்க முடியாதபடம். படத்தின் மூலம்  Ira Levin என்பவரின் விற்பனையில் சாதனை படைத்த திகில் நாவலான  Rosemary’s baby க்குச் சொந்தமானது. எனக்கென்னவோ Roman Polansky படங்களிலேயே சிறந்தது இதுவாகத்தான் இருக்குமென்று அபிப்ராயம் ( அவரது மற்ற படங்களை மீண்டும் ஒருமுறை பார்க்கும் சந்தர்ப்பம் வாய்க்கும் வரை). இதன் தொடர்ச்சியாக The Tenant, மற்றும்  ஒரு படம் (பெயர் நினைவிலில்லை) வந்தன. பிறகு இருக்கவே இருக்கிறது ரோமான் போலஸ்கியின் பெயரைக் கொண்டாடவென்று The China Town.  எனக்கென்னவோ ஸ்பீல் பெர்க்கை காட்டிலும் ரோமன் போலஸ்கி திரைக்கதையில் மன்னர். உண்மை கற்பனையைக்காட்டிலும் சுவாரஸ்யமானது என்பதற்கு அவரது வாழ்க்கையில் ஏராளமான நிகழ்வுகள்.  1969ல் இலண்டனுக்கு படப்டிப்பிற்கு சென்றிருந்த பொழுது அவரது கர்ப்பினி மனைவியும் அன்றைய தினம் வீட்டிற்கு வந்திருந்த நண்பர்கள் சிலரும்  ஹிப்பி கூட்டமொன்றால் கொடூரமாக கொலையுண்டதே கூட ஒரு திகில் நாவலுக்கு ஈடான சம்பவங்களைக் கொண்டது.  நேரம் கிடைக்கும்போது ரோமன் போலஸ்கி பற்றி எழுதுகிறேன்.
————————————-

எரியுங்கள் உங்கள் ஓவியத்தை – அவர்கள் இரக்கமில்லாதர்களென்று.

அரசாங்கம் தமது நிதியில் ஒரு சதவீதத்திற்கு குறைவாக கலை மற்றும் பண்பாட்டுதுறைக்கு ஒதுக்கியிருக்கிருப்பது எரிச்சலூட்டியிருகிறது நவீன ஓவியங்களின் அருங்காட்சியக இயக்குனர் ஒருவருக்கு. கோபமுற்ற அவர் தமது காட்சிகூடத்திலிருந்த ஓவியங்களை அதை படைத்த அல்லது வரைந்த ஓவியர்கள் சம்மதத்துடன் அவர்களையும் அழைத்துவைத்துக்கொண்டு தெருவில் போட்டு எரித்திருக்கிறார், தொடர்வாரென்றும் தெரிகிறது.

மிகக்கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இத்தாலி அரசாங்கம், கலை பண்பாட்டு துறைக்கு எப்படி நிதியை ஒதுக்க முடியும் என அரசாங்கம் கேட்க, அருங்காட்சி அகத்தின் இயக்குனரோ’ அடப்பாவிகளா, இத்தாலி நாட்டின் பொருளாதாரமே கலையையும் பண்பாட்டையும் ஆதாரமாகக்கொண்டதாயிற்றே அதை அலட்சியம் செய்தால் உருப்படுவீர்களா? எனக் கேட்கிறார். இயக்குனர் பெயர் Antonio Manfredi நேப்பிள் அருகில் கசோரியா என்ற இடத்திலிருக்கும் சமகால ஓவியகூடத்தின் இயக்குனர். எரிக்கப்பட்ட முதல் ஓவியம் ஒரு பிரெஞ்சு ஓவியருக்குச் சொந்தமானது, பெயர் Séverine Bourguignon. அருங்காட்சியக இயக்குனர் எங்களிடம் இருக்கும் உங்கள் ஓவியத்தை எரிக்கபோகிறேன் எனக்கூறியபோது அதற்கென்ன சந்தோஷமாக நடத்திக்கொடுக்கிறேனென தீப்பெட்டியுடன் வந்திறங்கினாராம். ஒன்றிரண்டல்ல 200 ஒவியங்கள், எல்லாவற்றையும் எரித்துவிட்டுதான் பிறவேலைகள் என்கிறார் இயக்குனர். எரித்தபிறகு அவருக்கு அங்கென்னவேலை?

ம.லெ. தங்கப்பா  கவிதை

நண்பர் அ. பசுபதி தங்கப்பா  கவிதை ஒன்றை மடலிட்டிருந்தார். அவருடைய வலைப்பூவில் இக்கவிதை இருக்கிறதாம் தங்கப்பாவைவை போலவே எளிமையும் அழகும் ஆழமும் கொண்ட கவிதை:

ஆடு மேய்க்கலாம் – வாடா
ஆடு மேய்க்கலாம்
கேடு செய்திடும் – கல்விக்
கிடங்கை விட்டு வா (ஆடு மேய்க்கலாம்)

ஒரு படித்தவன் மக்கட்கு
உழைக்கவில்லையே!
வருவதியாவையும் – போட்டான்
வயிற்றில் கொள்ளையே! (ஆடு மேய்க்கலாம்)

பாதி மாந்தர்கள் – ஐயோ,
பசியில் சாகிறார்.
ஏது செய்கிறார் – தம்பீ
இங்குக் கற்றவர்? (ஆடு மேய்க்கலாம்)

பொருளை நாடுவர் – பேயாய்ப்
போட்டி போடுவார்
பெரிய கல்வியர் – தாமே
பிழைகள் செய்கிறார் (ஆடு மேய்க்கலாம்)

கல்வி என்று போய் – நெஞ்சைக்
கறைப் படுத்தலின்,
புல் நிலங்களில் – தம்பி
புரள்தல் இன்பமே! (ஆடு மேய்க்கலாம்)

கற்ற பேர்களே – நெஞ்சின்
கனிவு மாறினர்
முற்றும் தன்னலம் – தன்னில்
மூழ்கிப் போயினர். (ஆடு மேய்க்கலாம்)

அன்பு செய்திடக் – கல்வி
அறிவு தேவையா?
பண்பில் மேம்பட – எழுத்துப்
படிப்பும் வேண்டுமா? (ஆடு மேய்க்கலாம்)
——————————–

இசைவானதொரு இந்தியப்பயணம்-தில்லி

பிப்ரவரி -13

புதுச்சேரி அரசினருக்குச்சொந்தமான விருந்தினர் மாளிகை சாணக்யபுரியில் இருக்கிறது. இந்தியாவில் இருக்கிற அத்தனை மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் விருந்தினர் மாளிகைகளை வைத்திருக்கின்றன. தில்லி வந்திறக்கிய முதல் நாள் இரவு புதுச்சேரி அராசங்கத்தின் பயணியர் விடுதியில் ஏற்பட்ட  அனுபவத்தை எழுதியிருந்தேன். எது எப்படியோ புது தில்லியில் மலிவாக தங்கவும், உண்ணவும் வேறெங்கும் சாத்தியமில்லையென துணிந்து கூறலாம். 30 வருடத்திற்கு முன்பு நேரு யூத் கேந்திராவில் இருந்தேன். அப்போது தில்லிக்கு வந்தேன். தென்னிந்திய உணவிற்காக எங்கள் கிராமத்தைச்சேர்ந்த முதலியார் ஒருவர் ஆர்.கே.புரத்தில் உணவு விடுதியொன்று நடத்தினார். தில்லியிலிருந்த இரண்டுவாரமும் இரண்டு நாளைக்கு ஒரு முறை அங்கே சென்றுவிடுவதுண்டு. என்னுடன் புதுச்சேரி நண்பர்களும், தமிழ்நாட்டு நண்பர்களும் இணைந்துகொள்வார்கள். விடுதி மலிவாக இருப்பதாலோ என்னவோ வருகின்ற விருந்தினர் எண்ணிக்கையும் அதிகமாகவே இருக்கும்போலிருக்கிறது. விடுதி ஊழியர்களில் ஒரே ஒரு தமிழரை பார்க்க முடிந்தது. இரவு விடுதியில் உறங்குவதற்குமுன் பேசிக்கொண்டிருந்தபோது நண்பர் நாயகர், புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ் பேராசிரியர் மு. இளங்கோவன் பணி நிமித்தமாக சென்னை வந்திருப்பதாகக் கூறியிருந்தார். காலையில் வரவேற்பு கூடத்தில் அவரை சந்திக்க முடிந்தது. சிலர் என்றும் மார்க்கண்டேயனாக இருப்பார்கள், மு. இளங்கோவன் அந்த ரகம். ஏன் நாயகரும் அப்படித்தான். இருவர் வயதையும் அத்தனை சுலபமாக எடைபோடமுடியாது. நாயகரின் முழுபெயர் க.அ. வெங்கட சுப்பு¡ய நாயகர். அவர் முழுப்பெயரையும் பாரத்துவிட்டு, நண்பர் தேவமைந்தன் அறிமுகப்படுத்தியபோது எனக்கு எங்கள் கிராமத்தில் கூண்டுவண்டியிலிருந்து தள்ளாடிக்கொண்டே இறங்கும் நாயக்கர்கள் ஞாபகத்திற்கு வந்தனர். வந்தவரோ அநியாயத்திற்கு இளைஞராக இருந்தார்.

நண்பர் மு. இளங்கோவன் தில்லியில் அவரறிந்த தமிழர் ஒருவர் வாகனங்களை வாடகைக்கு விடுகிறார் என்றார். எனது பிரெஞ்சு நண்பர் இந்தியாவிற்கு வந்த நாளிலிருந்து, வாடகைக்கு வாகனத்தை எடுத்தால் நான் ஓட்டுவேனே என்று சொல்லிக்கொண்டுவந்தார், தில்லியிலும் மறக்காமமல் நினைவுபடுத்தினார். எனக்கு அச்சம் அவர் வாகனத்தை ஓட்டுவதிலில்லை. ஆனால் இந்தியச்சாலையில் விதிகள் வேறு. ஏதோவொரு சர்க்கஸில் சேர்ந்து கயிற்றில் நடக்க பயிற்சிபெற்றிருக்கவேண்டும். எனவே விஷப்பரிட்சைகள் வேண்டாமென்று அவர் கோரிக்கையை தவிர்த்துவிட்டேன். இத்தாலி அரசாங்கத்தைத்போல, பாதிக்கப்பட்டவருக்கு ஒரு கோடி கொடுக்க நம்மால் ஆகாதென்பது முதற்காரணம்: அவர் வாகனத்தை ஓட்டியது இந்திய எல்லைக்குள் அல்ல என இந்திய உச்ச நீதிமன்றத்த்தில் வாதாட திறமைபெற்ற மத்திய அரசாங்கத்தின் அட்டர்னியும் எங்களுக்கில்லையென்பது இரண்டாவது காரணம். மு. இளங்கோவின் தயவில் கரோல் பாக் தமிழரை தொலைபேசியில் பிடித்து வாகனத்தை வரவழைத்தோம். வாகன ஓட்டி நேபாளி. இந்திய தலைநலரில் அண்டைநாடுகளிலிருந்து பிழைப்பு நடத்துபவர்கள் பத்து சதவீதத்தினர் இருப்பார்களென வாகன ஓட்டி கூறிய ஞாபகம். எனக்கு அவ்வளவு இருக்காது என்பதுபோல தோன்றியது. வட இந்தியாவில் எல்லோரும் ஒரே சாயலில் இருப்பது போன்று தோற்றம். எனவே பாகிஸ்தானியரையும், பாங்களாதேஷ் மக்களையும் பிரித்து அடையாளப்படுத்துவதிலுள்ள சிரமங்கள், நேபாளியரையும், திபெத் மக்களையும் வடகிழக்கு இந்தியரிடமிருந்து வேறுபடுத்தி பார்ப்பதிலும் உள்ளன. எங்கே போகவேண்டுமென வாகன ஒட்டி கேட்டபோது உங்கள் விருப்பம்போல செய்யுங்களெனகூறிவிட்டு அமைதியானோம்.

அதற்குமுன்னால் ஓர் அதிசயம் நடந்தது, அதைப் பகிர்ந்துகொள்ளவில்லையெனில் தலைவெடித்துவிடும் அபாயமுண்டு. விடுதியின் துப்புரவு ஊழியர் ஒருவர் தெபெல் அறையின்முன்னால் நானூறு ரூபாய்கிடந்ததாகக் கூறி எங்களிடம் கொடுத்தார். எனக்கு அந்த ஊழியரின் செயல் மிகுந்த வியப்பைத் தந்தது.  பொதுவாக கீழே கிடந்தால் திருப்பி கொடுப்பதென்பது வழக்கமே அல்ல என நம்மில் பலர் எண்ணிக்கொண்டிருக்க அவர் செயல் அசாதரணமானதுதான். பல நட்சத்திர ஓட்டல்களில் எனக்குக் கிடைத்த அனுபவம் வேறு.  நாம் மறந்துபோகும் குளிர் கண்ணாடி, கோட்டு, முகச்சவரம் செய்யும் உபகரணங்கள் திரும்ப வந்து கேட்டால் கிடைக்காது. எனவே புதுச்சேரி அரசாங்க பயணியர் விடுதியில் பணியாற்றும் நேர்மையான அக்கடைநிலை ஊழியருக்கு ஏதேனும் ஊக்குவிக்கும் வகையில் அளித்திருக்கலாம். பிரெஞ்சு நண்பர் துப்புரவு ஊழியருக்கு பத்தோ இருபதோ கொடுப்பாரென எதிர்பார்த்தேன். 50 ரூபாய்கூட கொடுத்திருக்கலாம் அது பெரிய தொகையே அல்ல. அவராக முன் வந்து செய்யாததை நாம் சொல்லி செய்யச்சொல்வது அதையும் அந்நியர்கள் முன்னிலையில் இங்கிதமாக தெரியவில்லை. தவிர மூன்றாம் நாள் அறையைக் காலிசெய்யும்போது கொடுக்கலாமே என்ற எண்ணம் மனதிலுதிக்க அமைதியானேன். ஆனால் அந்த வ்ஊன்றாம் நாளில் அதை சுத்தமாக மறந்துபோனது.

சாணக்கியபுரியில் இருக்கிறபோதெல்லாம் ஏதோ ஐரோப்பாவில் இருப்பதுபோல இருக்கிறது. எனினும் 30 ஆண்டுகளுக்கு முந்தய சாணக்கியபுரி இல்லை. அப்போது இன்னும் புதியதாக இருந்தது.. சாந்தினி சவுக், பழைய டில்லி என்றுக் கடந்தபோகிறபோதுதான் இந்தியா என்ற ஞாபகம் வந்தது. முதலில் நாங்கள் பார்த்தது குதுப்மினார். குதுப்மினார் பழைய மிடுக்கு குறையாமல் இருக்கிறது. மூன்று நூற்றாண்டுகள் மூன்று மன்னர்கள் கட்டி எழுப்பிய உலகத்தின் மிகப்பெரிய மினார்களில் ஒன்று என்கிறார்கள்.. இந்தியாவில் மசூதிகளில் மினார்கள் குறைவு. துருக்கியில் கலை நுணுக்கத்துடன் எழுப்பட்ட மினார்களை பார்க்கமுடிந்தது. குதுப்மினாரை பார்த்த பின்பு இந்தியா கேட் சென்றோம். இந்தியா கேட்டை பார்த்தபோது கம்பீரமான இந்தியாவை பார்க்க முடிந்தது. வெளிநாட்டினர், பிற மாநில மக்களென்று கூட்டம் நிறைய. நிழற்படகலைஞர்கள், இந்தியா கேட்டை தபால் அட்டையில் விற்கிற சிறுவர்கள். வழக்கப்போல கூட்டத்தை நம்பி நடக்கிற தள்ளுவண்டி வியாபாரிகள் போன்ற காட்சிகளை மனதிற் நிறுத்த முடிந்தது. இந்திய ஜவான் ஒருவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டேன்

அங்கிருந்து ராஷ்டிரபதி பவன். வாகனத்தை தூரத்திலேயே நிறுத்தி இறங்கிக்கொள்ள வேண்டியிருந்தது. காவல் துறையின் கெடுபிடி நிழற்படங்கள் எடுத்துக்கொண்டு திரும்பினோம். வாகன ஓட்டி எதிரெதிராகவிருந்த இரு சிவப்பு கட்டிடங்களைக்காட்டி ஒன்று நிதி அமைச்சகத்திற்கும் மற்றது பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் சொந்தமானதென்றார். இந்திய அதிபரைப் பற்றி பேச்சுவந்தபோது இந்தியாவில் அதிபர்களும், ஆளுனர்களும் அரசாங்கப் பணத்தை ஆற்றில் கொட்ட ஏற்பட்ட பதவிகளன்றி அவற்றால் வேறு உபயோகங்களில்லையென பிரெஞ்சு நண்பரிடம் எரிச்சலுடன் கூறினேன். அண்மையில் ‘இந்து’ நாளிதழில் படிக்க நேர்ந்த செய்தியின் படி அதிபர் பொறுப்பிலிருக்கும் அம்மணி இந்திய வரலாற்றிலேயே இதுவரை அறிந்திராத அளவிற்கு வெளிநாட்டுப்பயணங்களால் நாட்டின் கருவூலத்தை ஏப்பம் விட்டிருக்கிறார். காரணம் ஒவ்வொரு பயணத்தின் போதும் அவரது குடும்பமென்ற ஒரு பெரிய படை உலகத்தை வலம் வந்திருக்கிறது பொதுமக்களின் பணத்தில். இந்தியாவில் ஆளுனர்களும் இதைத்தான் செய்கிறார்கள்.

பிற்பகல் ஒரு மணி அளவில் கன்னாட் பிளேஸ். மதிய உணவிற்கு, நல்ல உணவு விடுதியைத் தேடி மிகவும் சிரமப்பட்டோம். கிளப்போலவிருந்த உணவு விடுதியொன்றிற்குள் நுழைந்தோம். உள்ளே நல்ல ஆடை தரித்திருந்தால்தான் அனுமதிப்போம் என்றார்கள். காவலர்கள் ஒருமுறைக்கு இருமுறை எங்களைப் பார்த்த பின்பே அனுமதித்தார்கள். பிற்பகல் ராஜ்காட் சென்றோம். சாலைக்கு மறுபக்கம் காந்தி நினவரங்கம் இருக்கிறது. அடுத்தடுத்து நேருவுக்கு இந்திராகந்திக்கு ராஜிவ் காந்திக்கு சரண்சிங்கிற்கு என சமாதிகள் இருக்கின்றன. ராஜ்காட் தவிர வேறெங்கும் நாங்கள் போகவில்லை. இந்தவியாதி தமிழகத்திற்கும் தொற்றியிருக்கவேண்டும். மெரீனா பீச் சமாதிகள் பீச்சாக மாறாது என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. தமிழ்நாட்டில் எதுவும் நடக்கலாம். மற்ற சமாதிகள் எப்படியோ காந்தி சமாதியில் காதலர்களையும், அவர்கள் மீது கூழாங்கல்லை எறிந்துவிட்டு ஓடும் பையன்களையும் கண்டோம். டிட்டோ, மாண்டெலா போன்ற தலைவர்கள் நட்டிருந்த மரக்கன்றுகளிடத்தில் வெறும் அறிவிப்பு மட்டுமே இருந்தன. ஓரளவிற்கு களைத்திருந்தோம், அடுத்து பிர்லா மந்திர் லட்சிமி நாராயனன் கோவில். பிர்லா லட்சுமிக்கு கோவில் எடுக்காமல் வேறு யாருக்கு எடுப்பார். இங்கே கடுமையாகக் காவல். ஒருமுறைக்கு பலமுறை சோதனையிட்டபின் உள்ளே அனுமதிக்கிறார்கள்.

பிப்ரவரி 14

முதல் நாள் பிற்பகலே பணிக்கர் போக்குவரத்தில்  ஆக்ரா, பதேபூர்சிக்ரி, மதுரா வுக்கான ஒரு நாள் சுற்றுலா பயணத்திற்கு, விருந்தினர் மாளிகையில் பணிபுரியும் தமிழரிடம் நாயக்கர் ஏற்பாடு செய்திருந்தார்.  அதிகாலை ஆறுமணிக்கெல்லாம் கீழே இறங்கியாயிற்று. பேருந்து விடுதியின் வாசலுக்கே வந்து அழைத்துபோகுமென்றார்கள். நல்ல குளிர். ஆறேகால் மணிக்கு பணிக்கர் நிறுவனத்தின் வாகனம் எங்களை ஏற்றிக்கொண்டது வாகனத்தில் வேறு இரண்டுபேர் இருந்தனர். எங்கள் அனைவரையும் கரோல் பார்க் பேருந்து நிறுத்தத்தில் கொண்டுபோய்விட்டனர். வொல்வோ ரக பேருந்து வசதிக்கு குறைவில்லை ஆளுக்கு ஒரு பாட்டில் மினரல் தண்ணீரை நிர்வாகம் கொடுத்திருந்தது. காலை எட்டு எட்டரைமணி அளவில் நல்ல உணவு விடுதியொன்றில் காலை உணவு. அங்கிருந்து முதலில் ஆக்ராகோட்டை. அங்கே பேருந்தில் ஏறிய வழிகாட்டி பதேபூர் சிக்ரி, ஆக்ரா இரண்டு பொறுப்பையும் ஏற்றிருந்தார். ஆக்ரா தலைநகரான விதம்;  லோடிகள், பாபர், ஹ¤மாயூன், அக்பர்,ஷாஜகானெனெ ஒருவர்பின் ஒருவராக ஆக்ராவை ஏற்றுக்கொண்டது,   கோட்டையை பற்றிய உண்மை வரலாறு, கட்டுகதைகள், சொந்த சரக்குகளென வழிகாட்டி இடைவிடாது எல்லாவற்றையும் பாடமெடுப்பதுபோல கூறிக்கொண்டு வந்தார். அரசரின் அந்தப்புரம், மாளிகையில் கலைவேலைபாட்டிற்காக உபயோகிப்பட்ட விலைமதிப்பற்ற கற்கள், அரசிகள் நீராடுமிடம், ஷாஜகானின் அந்திமக் காலம், கோஹினூர் வைரமென அவர் புனையவும் நாங்கள் கேட்கவும் நிறைய இருந்தது. பதேபூர் சிக்ரிக்கும் தாஜ்மகாலுக்கு இந்தியர்கள் அல்லாதவர்களுக்கு நுழைவு கட்டணமாக 500 ரூபாய் வசூலித்தது அநியாயம்.

பிறகு மதிய உணவுக்குப்பிறகு கைத்தொழில் நிறுவனம் என்றபெயரை சொல்லி உத்திரபிரதேசம் அரசாங்கத்திற்கும் சொந்தமில்லாத ஒரு தனியார் நிறுவனத்திற்கு அழைத்து சென்று வெளியில் விற்கிற தாஜ்மகாலை வாங்விடாதீர்கள் நாங்கள்தான் அசலான சலவைக்கல்லில் செய்த தாஜ்மகாலை விற்கிறோம் (இந்த செய்தி மட்டுமே உண்மை) என சுற்றுலாவாசிகளை கவர சர்க்கரை பாகில் நனைத்த வியாபார சொற்களைபோட்டு பொருட்களை விற்க முயற்சிக்கிறார்கள். இதுதவிர தமிழ்நாடா கேரளாவா என விசாரித்து சென்னை குமரன் சில்க்ஸ் மொத்தவிலைக்கு அளிக்கும் சரக்கை உங்களுக்கு சில்லரையிலும் தருகிறோமெனக்கூறி பட்டுபுடவைகளை விற்றார்கள். பேரம் பேச தெரிந்தால் தோல் பொருட்கள் விலை பரவாயில்லை. நண்பர் நாயகர் ஒரு ஜோடி செருப்பு வாங்கினார்.

தாஜ்மகாலை இப்போதெல்லாம் பேருந்துகள் நெருங்கிவிடக்கூடாதாம். பேருந்துகள் கக்கும் புகை உலக அதிசயத்தை பாழ்படுத்திவிடலாமென்ற அச்சம் ஏற்க கூடியதே. எங்கள் வழிகாட்டி தெற்கு வாயிலைத் தவிர்த்துவிட்டு ( நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தார்கள் என்பது ஒரு காரணம்; எங்களை அதிக நேரம் கடையில் நிறுத்தியிருந்தால் நேரமின்மை என்பது மற்றொரு காரணம்) ஒவ்வொரு வாயிலாக எங்களை இழுத்துக்கொண்டு வழிகாட்டி ஓடினாரென்று சொல்லவேண்டும். ஏதோ ஒருவாசலில் இறுதியாக நுழைந்தோம். தாஜ்மகாலுக்காக அவ்வளவு சிரமத்தையும் ஏற்கலாம் போலிருந்தது நல்ல வெயில். யமுனையின் தோற்றம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ஷ¥க்களை தவிர்க்க அவைகளின் மீது பிளாஸ்ட்டிக் உரைகளை அணிந்துகொண்டு நடக்கலாம் என்பதென்கிற யோசனை துருக்கியிலும் கடைபிடிக்கபடுகிறது. மாலை நாலரை மணிக்கு வெளியில் வந்து பேருந்து பிடித்து மதுராவரும்போது மணி ஆறாகிவிட்டது. கிருஷ்ணர் பிறந்த இடமாம். முதன்முறையாக வந்திருந்தேன். வித்தியாசமான கோவில். இங்கேயும் பலத்த காவல். வெளியில் தெளிவாக எழுதியிருந்தது: புகைப்படகருவிகள் அனுமதியில்லை. நண்பர் தெபெல் புகைப்பட கருவியுடன் நுழைய காவலர்கள் அவரை உள்ளே விட மறுத்தார்கள். நண்பர் நாயக்கருடன் அதை கொண்டுபோய் பாதுகாப்பகத்தில் கொடுத்துவிட்டு மீண்டும் எங்களுடன் இணைந்துகொண்டார்கள். மதுரா கோவிலின் பின்பக்கம் மசூதியொன்றிருக்கிறதென்றார்கள் பார்க்கவில்லை.

மதுராவில் கொஞ்சம் பழம் வாங்கி சாப்பிட்டோம். அங்கு தேனீர் நன்றாக இருந்தது. இரவு விடுதிக்குவரும்போது மணி பத்தாகிவிட்டது. நல்லவேளை புறப்படும்போதே சொல்லிவைத்திருந்ததால் இரவு உணவு காத்திருந்தது.
—–

மொழிவது சுகம் – ஏப்ரல் -23


பிரான்சு அதிபர் தேர்தலும் – கருணாநிதியும்

எதிர்பார்த்ததுபோலவே அதிபருக்கான தேர்தல் முதற்சுற்றின் முடிவின் படி இரண்டாம் சுற்றுக்கு சர்க்கோஸியும்(Sarkozy), ஹொலாந்தும் (Hollande) தேற்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். தொடக்கமுதலே கருத்துக்கணிப்புகள் உருதிபடுத்திய தேர்வாளர்களின் வரிசைஎண் பிறழவில்லை. ஹொலாந்து (Socialiste) சர்க்கோஸி (UMP), மரி லெப்பென் (Front National), ழான் லுய்க் மெஷான்சொன் (Front de Gauche), பிரான்சுவா பைய்ரு(Modem) என வற்புறுத்தப்பட்ட ஆருடத்தில் மாற்றமில்லை. மாறாக முதலிரண்டு வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விழுக்காட்டிற்கும் கருத்துகணிப்பிற்கும் அதிகவித்தியாசங்களில்லை என்கிறபோதும் அடுத்தடுத்தவந்த வேட்பாளர்களின் வாக்கு சதவிதத்தில் கணிப்புகள் பொய்த்திருக்கின்றன.

இவர்களில் இனவாதியும் தேசியவாதியான மரிலெப்பென் 18 விழுக்காடுவாக்குகளை பெற்று மூன்றாவது இடத்திலும், தேர்தல் பிரச்சாரத்தின் போது பெரும் எண்ணிக்கையில் மக்களை கவர்ந்தும் எதிர்பார்த்த அளவில் வாக்குகளைக் குவிக்கத் தவறியிருக்கிறார் தீவிர இடதுசாரியான ழான் லுயிக் மெலான்ஷோன். அவர் பெற்ற வாக்குகள் சதவீதம் பதினோரு சதவீதம். பத்து சதவீத வாக்குகளைபெறுவார் என நம்பப்பட்ட பிரான்சுவா பைரூ பெற்ற வாக்குகளோ 9 விழுக்காடு.

இரண்டாவது சுற்றில் என்ன நடக்கும்.?

தீவிர இடதுசாரிகளும், இயற்கை விருப்பிகளும் தங்கள் ஆதரவு ஹொலாந்துக்கென்று வெளிப்படையாக அறிவித்து இருக்கின்றனர். அவர்களின் ஆதரவு ஓட்டுகள் 99 விழுக்காடு சோஷலிஸ்டு கட்சியின் வேட்பாளரான ஹொலாந்துக்கு உதவும். ஆனால் அது மட்டும் போதுமா என்ற கேள்விகள் இருக்கின்றன.

தீவிர வலது சாரியான மரி லெப்பென் பதினெட்டு சதவீத வாக்குகளை பெற்றிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்து இடதுசாரியுமல்ல வலதுசாரியுமல்ல எனச்சொல்லிக்கொண்டிருக்கும் பிரான்சுவா பைரூவின் ஓட்டுகள் யாருக்கென்ற கேள்வி.

பைரூவின் ஆதரவாளர்கள் மெத்தபடித்தவர்கள், சிந்திக்கும் ஆற்றல் உள்ளவர்கள். பைரூவிற்கு பின்னே திரண்டவர்கள் பைரூவின் நியாயமான செறிவுமிக்க அறிவுபூர்வமான கருத்துரைகளில் நம்பிக்கை வைத்து அவர் பின்னர் வந்தவர்கள். எனவே முதல் சுற்று வாக்குகள் அவ்வளவையும் சிதறாமல் அவர் கைகாட்டுகிற வேட்பாளருக்கு போடும் ஆட்டு மந்தைகளல்ல அவர்கள்.

அடுத்து மரி லெப்பென் என்பரின் ஓட்டு வங்கி. முதல் சுற்றில் இவருக்கு விழுந்த ஓட்டு. முழுக்க முழுக்க இனவாத ஓட்டு என்றோ வெளிநாட்டினர்மீதுள்ள வெறுப்பினால் விழுந்த ஓட்டு என்றோ சொல்ல இயலாது. பிரான்சு நாட்டில் இனவாதமும் வெளிநாட்டினர் மீதான வெறுப்பும் இருக்கவே செய்கிறது. ஆனால் இந்த தீவிரவலதுசாரிக்கு விழுந்த ஓட்டுகள் வேறெங்கிருந்தும் வரவில்லை வழக்கம்போல ஆளும் கட்சியின் மீது இருக்கும் வெறுப்பிற்கும் கசப்பிற்கும் எங்கே நிவாரணம் தேடுவதென்று அலைந்துகொண்டிருந்த வலதுசாரியினரின் ஒரு பிரிவினருக்கும் – திரும்பத் திரும்ப சோஷலிஸ்டுகளுக்கும், யுஎம்பிக்களுக்கும்- ஓட்டளித்து அலுத்துபோன மக்களில் ஒரு பிரிவினருக்கும் மாற்றம் தேவைபட்டது, எனவே தங்கள் வாக்கை இப்பெண்மணிக்கு அளித்தார்கள். இவர்களுக்கு மாற்றம் வேண்டும். இவர்களில் பெரும்பனமையினரின் வாக்கு சர்க்கோசியைக்காட்டிலும், ஹொலாந்துக்கு ஆதரவாகவே நாளை இருக்கும். அதுவும் தவிர அடுத்துவரும் தேர்தலில் கணிசமாக பாரளுமன்ற உறுப்பினர்களைப் பெறவேண்டுமென்ற கனவிலிருகிற மரிலெப்பென் கட்சிக்கு, யுஎம்பியின் கட்சியின் சரிவு அவசியமாகிறது. ஒரு வேளை யுஎம்பி யின் கட்சியினர் மரிலெப்பென் கட்சியுடன் ரகசிய உடன்பாடு கண்டாலொழிய இதற்கு விமோசனமில்லை. சர்க்கோசியும் அவரது ஆதரவாளர்களும் பிரான்சுவா பைரூவின் ஓட்டுவங்களைபெறமுடியாத நிலையில், மரி லெப்பனின் ஓட்டுகளைப் பெற எல்லா தத்திரங்களையும் கையாளலாம்.

எது நடந்தாலும்…

சர்க்கோசியின் வாதத்திறமையும் தைரியமும் நாடறிந்ததுதான். இருந்தாலும் அவருடைய யோக்கியதையில் மக்களுக்கு நம்பிக்கை இல்லை, அதிபர் பதவிக்கான கண்ணியத்தைக் காப்பற்றியவரல்ல அவர். எனக்கு அவர் பிரான்சுநாட்டின் கருணாநிதி. ஹொலாந்துக்கு அனுபவமில்லை என்கிறார்கள். அரசியலில் நல்ல மனிதர்கள் அதிசயமாகத்தான் பூக்கிறார்கள், ஹொலாந்து ஜெயிக்கட்டும்- ஜெயிப்பார். அனுபவம்? அது தன்னால் வரும்…

_____

இசைவானதொரு இந்தியப் பயணம்-12

பிப்ரவரி 12

பன்னிரண்டாம் தேதி காலை விடுதிபொறுப்பிலிருந்தவர் கணக்கு தீர்க்கும்போது ஒரு நாள் வாடகை கொடுக்கவேண்டியிருக்கிறதென்றார். ஆக வைப்புதொகைபோக அவரிடம் ஒரு நாள்கட்டணத்துக்குண்டான  தொகை செலுத்தப்பட்டது. இதற்கு ரசீதெல்லாம் இல்லை. பொதுவாக இந்தியாவில் அநேக கொடுக்கல்வாங்கல்களுக்கு ஆதாரங்களில்லை. நூற்றுக்கு 90 சதவீதம் இப்படித்தான். இதுவே குற்றத்தை நினைக்காதவர்களுக்குகூட குற்றமிழைக்க தூண்டுதலாக இருக்கிறது. கிராம மணியக்காரராக எனது தகப்பனார் அரசாங்க சிட்டா அடங்கல் தாள்களை கையேடுகளாக தைத்துக்கொள்ள உதவியதும், அவர் வாங்கிய ஐந்தும் பத்தும் அப்போது எனக்கு இலஞ்சமாகவே தெரியவில்லை. இந்திய உத்தியோக பர்வதத்தில் இவைகளெல்லாம் அறங்கள் என நினைத்திருந்தேன். தூரத்தில் நின்று பார்க்கிறபொழுதுதான் அதனுடைய கொடூரம் விளங்குகிறது.

காலை சென்னையை நோக்கி புறப்பட்டோம். திண்டிவனம் தாண்டியதும் வண்டியை நிறுத்தி காலை உணவை முடித்துக்கொண்டோம். எங்கள் வாகன டிரைவர் வழக்கமான வாகன ஓட்டிகளைபோலவே ஒரு விண்ணப்பத்தை வைத்தார். அவர் கண்டாக்டரிடம் காட்டியதாகவும் கண்ணாடி மாற்றுவதற்காக ஒரு கணிசமான தொகை தேவைப்படுகிறதெனவும் கூறினார். இது பரவாயில்லை. ஒரு வாகனஓட்டி தாம் அநாதையெனவும் தம்மை தத்து எடுத்துக்கொள்ள முடியுமா எனவும் கேட்டு ஒரு கட்டத்தில் பிரெஞ்சு நண்பர் ஒருவரை மிரட்டும் அளவுக்குப்போயிருக்கிறார். அவர் பிரெஞ்சு தூதரகத்தைத் தொடர்புகொண்டு அவர்கள் தலையிட பாதுகாப்புடன் விமானம் ஏறியதாகக்கூறினார். இந்தியப்பயணத்தை கொண்டாடும் நண்பர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவரவர் அனுபவம் அப்படி.

காலை பத்துமணி அளவில் பறங்கிமலையை அடைந்தோம். புனிததோமையார் கொல்லப்பட்டதாக நம்பப்படுமிடத்தில் போர்ச்சுகீசியர்கள் அவரது ஞாபகார்த்தமாக நினைவு சின்னம் ஏற்படுத்தியிருந்தார்கள் எனது இளங்கலை பட்டப்படிப்பை சென்னையில் முடித்திருந்தேன். அப்போதெல்லாம் காலையும் மாலையும் மின்சார ரயிலில் தாம்பரத்திலிருந்து கல்லூரிக்குப் பறங்கிமலையை கடந்துதான் செல்லவேண்டும். அதன் பிறகும் பலமுறை சென்னைக்கு சென்றிருக்கிறேன், தங்கியிருக்கிறேன். ஆனால் பறங்கிமலையில் ஏறியதில்லை. முதன் முறையாக ஏறினேன். மேலே மலையினினுன்று பார்க்கும் மீனம்பாக்கமும் சென்னையின் பிறபகுதிகளும் வேறுவகையான சென்னையை கண்முன்னே நிறுத்தியதை மறக்கமுடியாது. பெரு நகரத்தின் ஆரவாரங்களிலிலிருந்து விலகிக்கொண்ட நகரத்தின் ஒரு துண்டு அது. உயர்ந்தவைகள் எப்போது ஆராவராமின்றியே செயல்படுகின்றன. சாந்த்தோம் போவதற்கு முன்பாக நண்பர் சந்தியா நடராஜனையும், சூளைமேட்டில் சுதாராமலிங்கம் குடும்பத்தினரையும் சந்தித்து விடைபெற்றோம். பிரெஞ்சு நண்பர்களிடம் வள்ளுவர் கோட்டம் பற்றி பேசினேன். ஆனால் அங்கே இறங்கிபார்க்க ஆர்வம் இல்லாததும் சாந்த்தோம் செல்வதில் மட்டுமே குறியாக இருந்ததும் எனக்கு அவர்களுடைய மதம்பிக்கைமேல் வெறுப்புகொள்ள செய்தது. சாந்தோம் ஆலயத்தில் எப்போதும்போல வெளிநாட்டவரை நிறைய பார்க்க முடிந்தது. உள்நாட்டவர்களில் குறிப்பாக வெளிநாட்டவர் அதிகம். மதிய உணவை ஸ்பென்ஸர் பிளாஸாவிலிருந்த சரவண பவனில் எளிமையாக முடித்துக்கொண்டோம். அங்கேயே வியாசர்பாடியிலிருந்த ஆரோக்கியராஜ் என்பவருக்கு கொடுக்கவேண்டியதொகைக்கு உரிய இந்தியரூபாயை யூரோ கொடுத்து மாற்றிக்கொண்டோம். அவருக்கு திண்டுக்கல் செலவும், ஒருவாரத்திற்கு ஏற்பாடு செய்திருந்த வாகனச்செலவும் கொடுக்க வேண்டியிருந்தது. பிறகு வியாசர்பாடியில் தொண்டு நிறுவன நண்பர் இருந்தார். வரவேற்று பரிசுகள் தந்தார், உணவளித்தார் கடைசியாக பில்லை கொண்டுவந்தார். நியாயயமான அணுகு முறைதான்.

மாலை நானும் நண்பர் சவியெ தெபெல்லும் தில்லி செல்வதாக இருந்தோம். எங்களுக்கு 8.40க்கு விமானம். மனே தம்பதியினர் நள்ளிரவில் லூப்தான்ஸா விமானம்பிடித்து பிராங்பர்ட்வழியாக பிரான்சு திரும்புவதாக இருந்தார்கள். எனவே நாங்கள் முன்னதாக விமான நிலையத்திற்கு கிளம்பினோம். எங்களுடன் தில்லி வரவிருந்த நண்பர் நாயகர் விமான நிலையத்தில் இணைந்துகொண்டார். புதுச்சேரி விருந்தினர் மாளிகையில் தங்க ஏற்பாடு செய்திருந்தார். எனினும் முன்னேற்பாடாக அங்கே ஏதேனும் பிரச்சினைகள் வந்தால்  ஆர்.கே புரத்தில் நண்பர்களுடன் தங்கிக்கொள்கிறேன், நீங்கள் இருவர் மட்டும் கிடைக்கும் ஒரு அறையில் புதுச்சேரி விருந்தினர் மாளிகையிலேயே தங்கிக்கொள்ளலாமென அறிவித்தார். ஏதேனும் செய்தாகவேண்டுமேயென நினைத்து  எழுத்தாளர் சின்னப்ப பாரதி கூறியிருந்த தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழ பேராசிரியர் கிடைப்பாரா என முயற்சித்தேன். பேராசிரிய பாலசுப்பிரமணியனை சென்னையில் பிப்ரவரி மாதம் 2 மற்றும் 3 தேதிகளில் நான் சென்னையில் சந்திக்க வேண்டியது. என்னகாரணத்தாலோ அது நடைபெறவில்லை. எழுத்தாளர் சின்னப்பபாரதியிடம் பிரச்சினையைக்கூறினேன். என்ன சார் கொஞ்சம் முன்னாடிச்சொல்லக் கூடாதா என வருத்தப்பட்டார். பின்னர் நண்பர் காலச்சுவடு கண்ணனுக்கு எஸெம்ஸ் அனுப்பினேன். அவர் பிரச்சினையில்லையென உடனடியாக நண்பர் பி.எ.கிருஷ்ணன் பெயரையும் வேறு இரண்டு நண்பர்களின் பெயர்களையும் அவர்கள் தொடர்பு எண்களையும் கொடுத்தார். கவலைப்படாமல் போய் இறங்குங்களென நம்பிக்கையும் கிடைத்தது.

ஏர் இந்தியாவுகென்றே எழுதிய விதியின்படி ஒரு மணிநேரம் தாமதமாக டில்லி தலை நகரை அடைந்தோம். தில்லி விமான நிலையத்தில் பிரம்மாண்டம் தலையைச் சுற்றியது. உண்மையில் அசந்துபோனேன். இரவு ஒருமணிக்கு தில்லி இந்திராகாந்தி விமானதளத்தில் இறங்கி பெட்டிகளை ட்ராலிகளில் தள்ளிக்கொண்டு மூவருமாக வெளியேற  நாகரத்தினம் கிருஷ்ணாவென அட்டையில் எழுதி காத்திருந்த இளைஞர்கள் கண்ணிற்பட்டனர். எழுத்தாளர் கு.சின்னப்பாரதியின் தயவினால் பேராசிரியர் பாலசுப்பிரணியன் அனுப்பிவைத்த ஜவஹர்லால் நேர் பல்கலைகழகத்தில் முனைவர் ஆய்வு செய்யும் மாணவர்களென அறிமுகத்திற்குப்பின்னர் தெரியவந்தது. ஜெகதீசன் என்ற மாணவர் குறிப்பாக பிரெஞ்சிலிருந்து தமிழாக்கம் செய்யப்படுபவைகளை முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்கிறார். அவர் ஆய்வில் நான் இடம்பெற்றிருக்கிறேன் என்பது தில்லி பயனத்தில் மூன்றாம் நாள் எனக்கு தெரியவந்த செய்தி.

தில்லி பன்னாட்டு விமான தளத்திலுள்ள ஒரு வசதி, போகும் முவரியைக்கொடுத்து கட்டணத்தைச் செலுத்தி ரசீதுபெற்றுக்கொண்டவுடன் காத்திருக்கும் டாக்ஸிகள் வரிசையில் வந்து நம்மை ஏற்றிக்கொள்கின்றன. இந்த நற்காரியத்திற்கு தில்லி காவல் துறைக்கு நன்றி கூறவேண்டும். இரண்டு டாக்ஸிகளில் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு கிளம்பினோம். புதுச்சேரி விருந்தினர் மாளிகைக்கு முன்பாக இறங்கியவுடன் நடுத்தரவயது டாக்ஸி டிரைவர் பெட்டிகளுக்கு கூடுதலாகக் கட்டணம் கேட்டார். எல்லாவற்றையும் அங்கே செலுத்திவிட்டதாகத் தெரிவித்தேன். இளைஞரான டாக்ஸிடிரைவரிடம் நடுத்தரவயதுகாரர் சணடைபிடித்தார். அங்கேயே நீ தெளிவய் அவர்களிடம் கூறியிருக்கவேண்டுமென்றார். இளைஞர் அமைதியாக ஏதோ பதில் சொன்னார். பின்னர் டாக்ஸியைக் கிளப்பிக்கொண்டு போய்விட்டார். நடுதரவயதுகாரரும் புறப்பட உள்ளே விடுதியில் எங்களுக்கு வேறு பிரச்சினைகள் காத்திருந்தன.

நாயக்கர் பயந்ததுபோலவே புதுச்சேரி விருந்தினர் மாளிகை இரவு பொறுப்பாளர் ஒரு அறைதான் உங்களுக்குப் பதிவு செய்திருக்கிறதென்று குண்டைத் தூக்கிப்போட்டார். நண்பர் நாயக்கரும் நான் வேண்டுமானால் புதுச்சேரி நண்பர்கள் இருவர் வெளியில் தங்கியிருக்கிறார்கள் அவர்களுடன் இருந்துகொள்கிறேன், நீங்கள் இங்கே தங்குங்கள் என்றார். வேறொரு ஓட்டலில் அன்றிரவு அறைகளெடுத்து தங்கியிருக்க முடியுமென்றாலும், வெள்ளைக்கார நண்பர் முன்னால் எனக்கு அது கௌரவ பிரச்சினையாகபட்டது. புதுச்சேரி அரசாங்கம் நாயக்கரிடம் கொடுத்திருந்த அத்தாட்சியில் இருவர் பெயரில் அறை பதிவுசெய்திருப்பது தெளிவாக இருந்தது. அதை தில்லியிலுள்ள புதுச்சேரி விருந்தினர் மாளிகைக்கும் மின் நகலில் அனுப்பி இருக்கிறார்கள். ஆக எங்கள் தரப்பில் வாதாட ஆதாரங்களிருந்தன. விடுதி பொறுப்பாளராக வட இந்தியரிடம் தெளிவாகக் கூறினேன். என்ன செய்வீர்களோ ஏது செய்வீர்களோ! நாங்கள் இங்கிருந்து போகும் உத்தேசமில்லை. இல்லையெனில் சம்பந்தப்பட்டவர்களை இரவு நேரமாக இருந்தாலும் பரவாயில்லையென உடனடியாக அழையுங்கள் அவர்களிடம் பேசிக்கொள்கிறேன், என்றேன். அவர் என்னென்னவோ கூறினார். நானும் எனது முடிவை மாற்றிக்கொள்ளபோவதில்லை என்றேன். எனது குரல் பொறுப்பாளர் குரலைக்காட்டிலும் ஓங்கியே ஒலித்தது. ‘சாப், நான் என்ன செய்யட்டும் என்மீது தப்பில்லை. இங்கிருந்த ஊழியர்கள் செய்த தப்பு’ என்று கூற அது எனக்கு வசதியாய் போயிற்று. அடுத்த இரண்டு நிமிடங்களில் பேரேட்டில் எங்கள் பெயர்கள் பதிசெய்யப்பட சாவியை வாங்கிக்கொண்டு கொடுத்த இரண்டு அறைகளில் ஒன்றில் நானும் நாயக்கரும் மற்றதில் தெபெல்லும் தங்கிக்கொண்டோம். மறுநாள் வந்து சந்திப்பதாகக்கூறி மாணவர்கள் விடைபெற்றார்கள்.
————————–

இசைவானதொரு இந்தியப்பயணம்

பிப்ரவரி 11

அதிகாலை திண்டுகல்லிலிருந்து திரும்பியிருந்தோம். இம்முறை நந்திவர்மன் வீட்டெதிரேலேயே அறை எடுத்து தங்கினோம். அரவிந்தர் ஆஸ்ரமத்தோடு தொடர்புடையவர்களுக்குச் சொந்தமானது விடுதி. மறுநாள் அதிகாலை அறைகளை காலி செய்துவிட்டு சென்னை திரும்புவதாக இருந்தது. வாடகை இரண்டுநா¨ளைக்குக்கொடுப்பதா ஒரு நாள் கொடுப்பதா என்ற சிக்கல் இருந்தது. நிர்வாகிகளில் ஒருவரைத் தவிர இருவர் (‘முதல் நாள் சந்தித்த ஆஸ்ரமத்து பெண்மணி உட்பட) ஒரு நாள் வாடகை செலுத்தினால் போதுமென்றார்கள். எனக்கு அவர் ஒரு நாள் வாடகை என்கிறாரே, இவரிடம் செலுத்தினால் பிரச்சினை முடிந்தது நாளைக்கு எப்படியோ? என நினைத்து எனது நிலமையை விளக்கினேன். அவர் போகும்போது கொடுங்களென்றார். பதினோராம் தேதி விடுதிப் பொறுப்பிலிருந்தவர் வாடகை வசூலிப்பதைக்காட்டிலும் தம்மையும் தமது நண்பரையும் போகும் போது கவனித்துவிட்டுப்போங்கள் எனக்கெஞ்சுவதில் அக்கறை கொண்டவராக இருந்தார். நானும் இரண்டுநாள் வாடகை செலுத்தவேண்டியிருக்குமோவென நினைத்திருக்க ஒருநாளாக குறைந்திருந்த சந்தோஷத்தில் (உண்மையில் ஒரு நாள் வாடகை நாங்கள் கட்டுவதுதான் நியாயமுங்கூட) 50 ரூபாயைக் கொடுத்தேன். அவனுக்குக் கொடுத்தேன் ( மன்னிக்கவும் நான் காசுகொடுத்தபிறகு அந்த மானுடப்பிறவி சிறுத்துப் போனது. இவர்களில் ஆரம்பித்து சுப்ரீம் கோர்ட்டில் அரசுவக்கீல் இத்தாலிவிவகாரத்தில் மாநில மற்றும் மத்திய அரசுகெதிராக முகத்தில் கரியைப்பூசுவதை மரக்கட்டை இந்தியர்கள் சர்வசாதாரணமாக எடுத்துக்கொள்ளலாம், உணர்வுள்ள இந்தியன் கொதித்துதான் போவான்.

மீண்டும் பதினோறாம் தேதி அதிகாலைக்கு வருகிறேன். நண்பர் இந்திரனும் சென்னையிலிருந்து எங்களுடன் திண்டுக்கல் பயணத்திற்காக இணைந்துகொண்ட ஆரோக்கியராஜ் என்பவரும் நாமக்கலிருந்து புதுச்சேரி வந்து சேர்ந்தவுடனேயே புறப்பட்டு போனார்கள். மதியம் புதுச்சேரி அமைச்சர் ஒருவருடன் அண்ணாமலை ஓட்டலில் விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன், என்று நண்பர் நந்திவர்மன் கூறினார். எனக்கு இதில் விருப்பமில்லை. இதுபோன்ற விருந்துகளினால் கிடைக்கப்போகும் நன்மைகள் என்னவென்று தெரியாது. தவிர எனக்கு மழைக்கு முளைத்த காளான்போல இந்த தேர்தலில் நட்சத்திரமாகி அடுத்த தேர்தலில் உதிர்ந்து விடுகிற எரிநட்சத்திரங்கள் மீது பிடிப்பு எப்போது இருந்ததுமில்லை. அமைச்சரைக்காட்டிலும் நந்திவர்மனை மதிப்பது முக்கியமாகப் பட்டது, சம்மதித்தேன். பன்னிரண்டு மணிக்கு வருவதாகக்கூறிய அமைசர் ஒரு மணிக்கு என்றாகி பின்னர் இரண்டு மணிக்கு வந்தார்.  அமைச்சர் என்கிறபோது இதைக்காட்டிலும் முக்கியபணிகள் இருந்திருக்கலாம். நாசூக்காக அவரும் இதை தவிர்த்திருக்கலாமே என்று தோன்றியது. அவருடன் போட்டோ எடுத்துக்கொண்டோம், அதை பிரசுரிக்க எனக்கு ஆர்வமில்லை

எங்கள் வீட்டு கல்யாண ஆல்பத்தில் ஒரு சிறுவன் எடுத்திருந்த நிழற்படங்களில் பெரும்பாலானவற்றுள் நிற்பான். இப்போது அச்சிறுவன் வளர்ந்து வாலிபநாக இருக்கிறான். இப்போதும் அப்படி போட்டோக்களுக்கிடையே ஓடி ஓடி நிற்பானா எனத்தெரியவில்லை. எனக்குத் தெரிந்து இதற்கெனவே மெனக்கெட்டு அலையும் மனிதர்களைப் பார்த்திருக்கிறேன். பிணத்தின் பக்கத்தில் படுத்து அவர்கள் போட்டோ எடுத்து பார்த்ததில்லை. பிணம் விஐபி உடையதாக இருந்தால் அதனுடனும் படமெடுத்து வீட்டில் மாட்டிவைப்பார்கள். ஒரு சிலர் விஐபிக்கள் தெருக்களில் பொதுமக்களுடன் கைகுலுக்கிறபோது இடையிற் கைகொடுத்து நண்பர்களை நிழற்படம் எடுக்கச்சொல்லி வீட்டில் மாட்டிவைத்திருக்க பார்த்திருக்கிறேன். கிளி ஜோஸ்யக்காரன் அண்ணாவுக்குப்பார்த்தேன், பெரியாருக்கு ஜோசியம்பார்த்தேன் என போட்டோக்களை காண்பிப்பதுபோல இவர்களுக்கு இப்படியொரு நோய். இதில் வேடிக்கை என்னவெனில் பிறரிடம் கேமராவைக்கொடுத்தால் எங்கே தவறிப்போகுமோ என நினைத்து மனவியை விட்டே போட்டி எடுக்கச் சொல்கிறார்கள். அந்த மனைவி இவர் மீது என்ன அபிராயங்களை வளர்த்துக்கொண்டிருப்பார் என்ற அடிப்படையில் என்னிடம் ஒரு சிறுகதைக்கூட உருவாகியது. . உளவியல் மாணவர்கள் முனைவர் பட்டத்திற்கு இப்பிரச்சினையை எடுத்துக்கொண்டு கூட ஆய்வு செய்யலாம்.

மாலை 7மணி அளவில் ஆசிரியர் வெங்கிடேசனாரைச் சந்தித்ததையும் இங்கே பதிவுசெய்யவேண்டும். இவர் ஒரு மரபுக் கவிஞர், ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர், புல்லாங்குழல் கலைஞர். அவர் வீட்டிற்குள் நுழையும்போது கர்ணகடூர குரலில் ஏசு அழைக்காமலிருந்தால் அவருக்குச் சந்திக்க நேரிட்ட தருணங்கள் கூடுதல் மகிழ்ச்சியைத்  தந்திருக்கும். அவர் லால்பகதூர் சாலையில் வசிக்கிறார். இந்திய சம்பிரதாயப்படி காரமும் இனிப்பும் வழங்கப்பட்டன. வயது எழுபதுக்குமேல் என்றார் நம்பமுடியவில்லை. அடிக்கடி தலைகாட்டிய கருப்பானை அவர் அதட்டியபோதும் அஞ்சாமல் உலாவந்ததைக்கொண்டே அவர் வயதை நம்பவேண்டியிருந்தது. புல்லாகுழலில் ஒரு இசைத்துண்டை வாசித்துக்காட்டினார். அவர் எழுத்தைக்காட்டிலும் இசை எங்களை கூடுதலாக வசீகரித்தது. அவருடைய மூத்தமகள் திருமதி பூங்குழலியையும் அவரது துணைவர் திரு பெருமாளையும் அறிவேன். இருவரும் புதுச்சேரியில் ஆசிரியப்பணி ஆற்றுகிறவர்கள். சிலகாலம் விடுப்பு எடுத்துக்கொண்டு பிரான்சுநாட்டில் வந்து தங்கியிருந்தார்கள். அவ்வமயம் திருமதி பூங்குழலி பட்டிமன்றங்களில் கலந்துகொண்டு நன்றாக பேசுவார். கத்தரித்ததுபோல விவாதங்களைவைத்து, எடுத்துக்கொண்ட தலைப்பினின்று பிறழாமல் உரையாடும் வல்லமை அவருக்குண்டு.
———————-

சிற்பங்களே எனது வார்த்தைகள்- படைப்புகளைக்கொண்டு எனது இருப்பை நியாயப்படுத்துகிறேன் -கபி க்ரெட்ஸ் (Gaby Kretz)

அவரைச் சந்திப்பதற்கு முன்பு அவரது குழந்தைகளைச் சந்திக்க நேர்ந்தது. முதல் சந்திப்பு ஒரு பிற்பகலில் ஜீவனுள்ள அந்திவெயிலின் திரைமறைவில் ஒரு தேவாலயத்தில் வைத்து நிகழ்ந்தது. அவரது குழந்தைகள் குழப்படியற்ற குழந்தைகள். பிரபஞ்சம் அங்கே படிமங்களாக உயிர்பெற்று அசைந்தன. மானுட உயிரியக்கத்தின் குறியீடுகளாக கபி க்ரெட்ஸென்ற  கலைஞர் சமைத்திருந்த சிற்பங்கள் இருக்கக் கண்டேன். கலை நுணுக்கமும் அழகியல் பார்வையும் ஒருங்கே அமைந்த படைப்புகளென்று அவற்றை சொல்லவேண்டும். அமைதியும் சன்னமான மின்சாரஓளியும் குடிகொண்டிருந்த சூழலில் நீந்தியபடி சிற்பங்களை வரிசையாகப் நண்பருடன் பார்த்து முடித்து நிமிர்ந்தபோது சிட்டு குருவி முனுமுனுப்பதுபோல குரல்கள். நண்பர் அவர்தான் என்றார். எனக்குத் தயக்கமாக இருந்தது. நிழல்போல அவரைத் தொடர்ந்துசென்று பெண்மணி முன் நின்றேன். மொட்டவிழாத சிரிப்பு, கூர்மையான கண்கள். நெற்றியில் நிழல்போல் அசையும் தலைமையிர். எதிரிலிருப்பவர்களை உள்வாங்கி மனதிற்குள் பிசைந்து பிரதியெடுப்பதுபோன்றதொரு பார்வை.  நண்பர் ஓரிருவார்த்தைகளில் அவருடைய சிற்பங்களை சிலாகித்துவிட்டு,  இரண்டாவது முறையாக அவற்றைக் காணவந்தத தமது நோக்கத்தை நியாயப்படுத்துகிறார். இதற்கிடையில் என்னைபற்றிய அறிமுகமும் நடந்து முடிகிறது.

 சிற்பக் கலை மானுடத்தின் அழுத்தமான பிரதிகள். சொற்களை மறுதலித்து  ஊமைமொழியில் உரையாடும் கலைவடிவங்களில் ஓவியமும் சிற்பமும் தன்னிகரற்றவை. ஓவியமும் சிற்பமும் ஒரே இனமென்றாலும் ஓவியத்தின் முப்பரிமாணவடிவமென்று சிற்பத்தைக் குறிப்பிடலாம். தொடு உணர்வை சிற்பக் கலையினும் பார்க்க வேறொன்றால் கச்சிதமாகவும், நேர்த்தியாகவும் சொல்ல முடியுமமென்று நினைக்கவில்லை. ஏனையகலைகளைக் காட்டிலும் சிற்பகலையுடன் ஒரு நெருக்கத்தை நம்மால் ஏற்படுத்திக்கொள்ள இதுவே காரணமென்று நினைக்கிறேன். சிற்பக் கலைக்குள்ள மற்றொரு சிறப்பு இவர் அவைரைப்போல, அந்த சிற்பத்தைப்போலவென்று ஒரு கலைஞரை அவரது படைப்பை மற்றொருவருடனோ, பிரிதொரு படைப்புடனோ போகிறபோக்கில் ஒப்பீடுசெய்வதில் சங்கடங்களுண்டு. சிற்ப கலைஞனும் சரி அவரது படைப்புகளும் சரி தனித்தவை.

கலைஞர் கபி க்ரெட்ஸ் நவீன கற்பனையுடன்கூடிய வெண்களிமண்ணிலான சுடுமண் சிற்பங்கள் வடிப்பதில் தேர்ந்தவர். அவரது சிற்பங்களை காணும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்தவர் சேவியர் என்ற நண்பர். இருவரும் கடந்த அக்டோபர் மாதத்தில் ஒருநாள் பாரீசிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தோம். பேச்சுக்கிடையில் கிருஷ்ணா! ஸ்ட்ராஸ்பூர் அருகில் சிற்பக் கண்காட்சியொன்று நடைபெறுகிறது. நீ அதை விரும்புவாய் என்று நினைக்கிறேன், ஆகையால் இருவருமாகச் சென்று பார்த்து வருவோம்’, என்றார். அண்மையில் ஓவிய கண்காட்சியொன்றிற்குச்சென்று மனம் ஒன்றாமல் ஏமாற்றத்துடன் உதிர்த்த எனது வார்த்தைகளுக்கு நிவாரணம் தேடுகிறார் நண்பர் என்பதாக அப்போதைக்கு நினைத்துக்கொண்டேன். அருங்காட்சியகங்களுக்குப் போகிறபோது சிற்பங்களையும், ஓவியங்களையும் பார்க்கின்ற சந்தர்ப்பம் வாய்ப்பதுண்டு. பொதுவில் அனைவரையும் போலவே கூடுதலாக நேரம் எடுத்துக்கொண்டு அவசரமின்றி நிதானமாக அவற்றை பார்க்க நேரும். அம்மாதிரி நேரங்களில் நீங்கள் பொறுமையாகப்பாருங்கள் எனக் கூறிவிட்டு கிடைக்கிற இடத்தில் அலுப்புடன் எனது மனைவி  உட்கார்ந்துவிடுவாள். அநேக தருணங்களில் ஓவியம் மற்றும் சிற்பக் காட்சிகள் எங்கள் திட்டத்தில் இடம்பெறாமல் போவதுண்டு. நண்பர் தான் கண்ட காட்சியை, தமக்கு நேர்ந்த அனுபவத்தை எனக்கும் எப்படியாவது ஏற்படுத்தித் தருவதென்று தீர்மானித்துவிட்டதால் ஒரு ஞாயிற்றுகிழமை அவரும் நானுமாக கபி க்ரெட்ஸ் சிற்பங்களை பார்ப்பதென்று முடிவெடுத்துச் சென்றோம். கபி க்ரெட்ஸ் என்ற பெண் சிற்பக்கலைஞரின் நுணுக்கமான உணர்வுகளை அவர் படைத்திருந்த சிற்பங்களூடாக புரிந்துகொள்ள வாய்ப்பமைந்தது இப்படித்தான்.

 மானுடத்தின் வழித்தடங்களை, உயிர்வாழ்க்கையின் உள்ளுணர்வை சிற்பங்களூடாக நம்மிடம் பகிர்ந்துகொள்ள கபி க்ரெட்ஸ் அகத்தில் கால்கடுக்க வெகுதூரம் நடந்திருக்கவேண்டும். பல்வேறு கருப்பொருளில்  மனித உயிர்களை இரத்தமும் சதையுமாக ஒரு சிற்பக் கலைஞருக்கேயுரிய கவி உள்ளத்துடன் வடிவமைத்திருக்கிறார். ஆரம்பம், உறவு, துன்பம், வழித்தடம், வழிகாட்டி, மகோன்னதம், ஒளி, சக்தி, மூச்சு, திசைமயக்கம் போன்றவை அவரது கருப்பொருட்களில் சில. வடிவங்கள் தோறும் தம்மையும் இணைத்துக்கொண்டு, ஆன்மீகத் தேடலை கலைஞர் தமது சிற்பங்களூடாக அவர் நிகழ்த்தியிருந்தார். மனித குணத்தின் ஓட்டைகளையும், விரிசல்களையும்  வென்ற நிம்மதியையும் எட்டிய அனுபூதி நிலையையும் சிற்பங்களின் முகத்தில் – காணமுடிந்தது. பனித்த கண்கள், புன்னகைபூத்த உதடுகள், சிறைத்த தலை என்ற பொதுஇலக்கணம்கொண்டு சிற்பங்கள் இருந்தன. அச்சிற்பங்கள் அனைத்துமே ஏகாந்த பிரதிகள், ஆனால் அவர்கள் ஒருவராக, இருவராக, மூவராக, கும்பலாக நின்று மானுடவாழ்க்கையின் இரகசியங்களை முனுமுனுக்கிறார்கள். சிற்பங்களில் பலர் பௌத்த பிட்சுகளாக எனக்குத் தெரிந்தார்கள். அப்பிட்சுகள் இடைக்கால கிருத்துவ மடாலயத்திற்குள் பிரவேசித்திருப்பதுபோல உணர்வு. ஓர் இந்தியனென்ற வகையில் அச்சிற்பங்களை பரபிரம்மங்களாகக் கண்டேன். எத்தனை யுகங்கள்,  ஊழிக்காலங்கள் வரினும் போயினும் நிலைபேறுடைய கடைபேருண்மையை சுமக்கும் சிற்பவடிவங்கள் அவை. அவரது படைப்புகளை ஒரு தேவாலயத்தின் பின்புலத்தில் காட்சிபடுத்தியமைக்குப் பிரத்தியேகக் காரணங்கள் இருக்கமுடியுமா என்ற கேள்வி எழுந்தது. அமைதி குடிகொண்டிருக்கும் எந்தச்சூழலும் அச்சிற்பங்கள்வழி உணர்த்தப்படும் உண்மைகளுக்குப் பொருத்தமாகவே இருக்குமென தோன்றியது. எனவே அவரை குறிப்பிட்ட மதத்துடன் இணைத்து பார்க்க சங்கடப்பட்டேன். “எனது படைப்பு மாந்தர்கள் பெரும்பாலும் கண்களை மூடி, தியானத்தில் ஆழ்ந்து அக உலகத்தில் மூழ்கிய ஆன்மீக மனிதர்கள். அவர்களை அறிமுகப்படுத்த தேவாலயச் சூழல் ஒத்ததாக இருக்கிறது மற்றபடி மதம் அல்லது கோட்பாடு என்ற முத்திரையின் கீழ் எனது படைப்புகளை அடையாளப்படுத்த விருப்பமில்லை, பிரபஞ்சத்தின் குறியீடுகளென சொல்லிக்கொள்ளவே விருப்பம்”, என்ற கபி க்ரெட்ஸின் கறாரான பதில் எனது அனுமானத்தை உறுதிபடுத்துவதாகவே அன்று அமைந்தது.

கலைஞர் கபி க்ரெட்ஸை மீண்டும் நண்பரும் நானும் அவரது கலைகூடத்தில் சென்று சந்தித்தோம். உரையாடலின்போது சிற்பக்கலையில் அவருக்கு ஏற்பட்ட ஆர்வம், சிற்பத்தை படைக்கிறபோது மனதிலுதிக்கும் எண்ணங்கள் அதற்கான காரணங்கள் எனப்பொதுவாகச் சில கேள்விகளை முன் வைத்தேன். கபி க்ரெட்ஸ் சித்திர கலை, ஓவியம் தீட்டுதல் என ஆர்வங்கொண்டிருந்த மிக அடக்கமான கிராமத்துபெண். தொடக்கத்தில் தனதிருப்பை பிறருக்குணர்த்த ஓவியங்களும் சித்திரங்களும் தேவையாய் இருந்த என்றார்.  “வெண்களிமண்ணில் சிற்பங்களை உருவாக்குகிறபோது ஆரம்பம் முதல் முடிக்கின்றவரை எனது உணர்வுகளை குறையின்றி அதனோடு பகிர்ந்துகொள்ளும் மன நிலைக்கு ஆளாகிறேன். அவ்வுணர்வுகளை முழுமையாக வெளிப்படுத்தவும் முடிகிறதென்று பரிபூரணமாக நம்புகிறேன். பரபரப்புடன் இயங்கும் உலகச்சூழலில் நம்முள் நிதானத்தையும் அமைதியையும் தேடவேண்டியவர்களாக இருக்கிறோம். சிற்பக்கலை அதற்கு வழிவகுக்கிறது”, என்ற பதிலில் எனது பல கேள்விகளுக்கு விடைகள் கிடைத்தன.   இளைமைமுதற்கொண்டு கலைகளில் இருந்த ஆர்வத்தினால் ஒற்றைபெண்ணாக இத்தாலிக்குப் புறப்பட்டு போனார். அங்குதான் சுடுமண்வகை சிற்பங்களில் அவருக்கு காதல் பிறக்கிறது. சிற்பக் கலையை பயில ரோம் நகர வீதிகளில் குருவைத் தேடி அலைந்திருக்கிறார். அப்படிக்கிடைத்தவர்தான் the name of the rose போன்ற திரைப்படங்களில் பணியாற்றி பெரும் புகழ்பெற்றிருந்த Filomeno Crisara. அவரிடம் குருகுலவாசம். இன்று கபி க்ரெட்ஸ் ஒரு தேர்ந்த சிற்பக்கலைஞர். வருடம்தோறும் உலகின் பல பாகங்களுக்கும் சென்று கண்காட்சிகளை நடத்திவருகிறார். “விரல்கொண்டு ஓவியம் தீட்டுவதைக்காட்டிலும் கைகொள்ள களிமண்ணையெடுத்து உருவங்களை சமைப்பதில் கூடுதல் மகிழ்ச்சி கிடைக்கிறதென்று” உரையாடலின் போது அவர்தெரிவித்த வார்த்தைகள் பேரின்பத்தில் உய்யும் நிலை.

——–

உலக மகளிர்தினம்:

பண்டிகைக்கு, நாட்டிற்கு, தலைவர்களுக்கென ஒதுக்கிய நாட்கள் போக, எஞ்சிய நாட்களில் ஒன்றிரண்டு சில நல்ல காரியங்களுக்கும் பயன்படுகின்றன. அவற்றுள் வருடம்தோறும் மார்ச் மாதத்தில் நினைவுகூரப்படும் உலகமகளிர் தினமும் ஒன்று. ஆனால் புள்ளிவிவரங்கள் தரும் ஏமாற்றத்தினால் அறைகூவல்கள்,  புதிய சபதங்கள். சமுதாயத்தில் அடையாளம்பெற்ற பெண்களை தலமையில் உரைகள், விவாதங்கள், தீர்மானங்கள். ஆனால் வரலாறு தரும் உண்மைகள் தெளிவாகவே இருக்கின்றன. தனிமனிதனோ, இனமோ, ஒரு சமூகமோ பாதிக்கப்படுகிறவர் எவராயினும் சுயமுயற்சியோ விழிப்புணர்வோ இல்லையென்றால் விமோசனங்களில்லை. சுதந்திரம், சமத்துவம் எனப் பெருமைகொள்ளும் பிரான்சுநாட்டின் இன்றைய நிலமை:

4மணி 1நிமிடம்: சராசரியாக நாளொன்றிர்க்கு பெண்ணொருத்தி வீட்டுப்பணிகளுக்கு செலவிடும் நேரமிது. ஓர் ஆண் குடும்பத்திற்கென்று வீட்டிலிருக்கிறபோது செலவிடும் நேரத்தைக்காட்டிலும் (2மணி 13 நிமிடம்) இருமடங்கு அதிகம். இது தவிர  பிள்ளைகளோடு குறைந்தது ஒரு மணி நேரம் செலவிடுகிறாள், மாறாக ஆண்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஒதுக்க முடிந்த நேரம் அரைமணிக்கும் குறைவு.

ஒரு நாளில் பெண், தமது விருப்பமானவைகளுக்காக செலவிடும் நேரம்: 4மணி.45. ஆண்கள் விருப்பமானவைகளுக்கு ஒதுக்கும் நேரம் 5மணி 30 நிமிடங்கள். வேலைவாய்ப்பும் ஆண்களுக்கே அதிகம். பெண்களில் 31  சதவீதத்தினர் வேலையின்றி முடங்கிக்கிடக்க ஆண்களில் வேலைவாய்ப்பு அமையாதவர்கள் 25 சதவீதத்தினர். வேலைக்கும் செல்லும் பெண்களிலும் 31சதவீதத்தினர் பகுதிநேரப் பணிகளைச் செய்தே காலத்தைத் தள்ளவேண்டியிருக்கிறது. ஆண்களில் சொற்ப சதவீதத்தினரே (அதாவது 7 விழுக்காட்டினர்) இந்நெருக்கடியைச் சந்திக்கின்றனர். தவிர வேலைக்குச்செல்லும் பெண்களில் 25 விழுக்காட்டினருக்கு ஆண்களுக்கு ஈடான ஊதியமோ, ஊதிய உயர்வோ வழங்கப்படுவதில்லையாம். இப்படி பலதுறைகளில் இருபத்தோராம் நூற்றாண்டிலும் பெண்கள் நிலைமை ஆண்களினும் பார்க்க தாழ்ந்தேயிருக்க, இயற்கை ஒரு விஷயத்தில் அவர்களுக்கு நீதியை வழங்கியிருக்கிறது. அது பெண்களுக்கான ஆயுட்காலம். மருத்துவத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தினால் பெண்கள் ஆயுட்காலம் 85 ஆண்டுகள் என்கிறார்கள். சராசரி ஆணுக்கு 78 வயதில் உயிர்வாழ்க்கை முடிந்துவிடுமாம். ஆணைக்காட்டிலும் 7 ஆண்டுகள் அதிகம். 78 ஆனடுகால இழப்பை இந்த எட்டு ஆண்டுகளில் தாய்க்குலத்தினர் ஈடுசெய்யமுடியுமாவெனத் தெரியவில்லை. ஆனால் பெண்களில் அநேகர் கணவனை இழந்தபிறகு நிம்மதியாக இருக்கிறார்ளென்றும் ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

——-

பதிப்புலகத்தின் எதிர்காலம்

இனி அச்சு வடிவ புத்தகங்களுக்கும் செய்திதாட்களுக்கும் வேலையில்லை என்கிறார்கள். ஜெனிவாவில் ஐக்கிய நாட்டு சபையின் ஒரு பிரிவான உலக அறிவு சார் சொத்துரிமை அமைப்பின் கருத்தின்படி 2040ல் மேற்கண்ட சங்கதிகள் இலக்கமயப்படுத்தப்பட்டு கணினிக்குள் கரைந்து போகும். எச்சரிப்பவர் இவ்வமைப்பின் பிரதிநிதி திருவாளர் கர்ரி (M. Gurry). La Tribune de Geneve’ என்ற சுவிஸ் நாட்டு தினசரி ஒன்றிர்க்கு அளித்துள்ள பேட்டியில் இதனைத் தெரிவித்திருக்கிறார். அவரது கருத்தின்படி இன்னும் ஒரு சில ஆண்டுகளில் இன்று நாம் வாசித்துக்கொண்டிருக்கும் தினசரிகள் அவ்வளவும் இல்லாதொழியும்.- இப்போதே நம்மில் பலர் குறிப்பாக வலைத்தள இணைப்புள்ள கணினி உபயோகிப்பாளர்கள் தினசரிகளை இணையதளங்களில்தான் வாசித்துக்கொண்டிருக்கிறோம். அதுபோலவே அச்சசு வடிவிலான புத்தகங்கள் 2040ல் முடிவுக்குவந்துவிடுமாம். அமெரிக்கா முந்திக்கொள்ளும் என்கிறார்கள்.அதாவது 2017லேயே அங்கு அச்சிட்ட புத்தகங்கள் சந்தைக்கு வராது. வளர்ச்சியென ஒன்றிருந்தால் இழப்புகளுக்கும் தயாராகத்தான் இருக்கவேண்டும். ஆனால் அவர் எழுப்பும் வேறொரு பிரச்சினை கவனத்திற்குரியது. பத்திரிகையாளரும் எழுத்தாளர்களும் திருவோடு ஏந்தவேண்டியிருக்குமென அஞ்சுகிறார். பதிப்பிக்க சாத்தியமில்லை என்கிறபோது பதிப்பாளர்களும் பத்திரிகை அதிபர்களும் ஊதியத்தை எங்கிருந்து வழங்குவார்கள் என்று கேட்கிறார்?   “குறைந்த பட்சம் அறிவுசார் சொத்துரிமைக்கேனும் உத்தரவாதம் வழங்கப்படவேண்டும் இல்லையேல் ஆபத்து”, என்கிறார் ஆசாமி. மேற்கத்திய நாடுகளிலும் அமெரிக்காவிலும் ஒருவேளை இக்குரலில் தொனிக்கும் குரலுக்குப் பொருளிருக்கலாம், தமிழ் எழுத்தாளர்கள் இதில் கவலைப்பட  என்ன இருக்கிறது, சொல்லுங்கள்?

—————————————————————.

இசைவானதொரு இந்தியப்பயணம் -10

பிப்ரவரி 10

திண்டுக்கல்லில் ஒன்பதாம் தேதி இரவு பார்சன்ஸ் கோர்ட் என்ற ஓட்டலில் தங்கியிருந்தோம். காலையில் ஆறரைமணிக்கெல்லாம் புறப்பட்டு, எங்கள் காலை உணவை முடித்துக்கொண்டு எட்டுமணிக்கெல்லாம் நாமக்கல் புறப்பட்டுவிட்டோம். ஹோசூர் கிருஷ்ணகிரி சாலையில் வடக்கே பயணம் செய்யவேண்டியிருந்தது. அண்மைக்காலங்களில் சாலைகளின் துரிதவளர்ச்சியை இந்தியாவில் பார்க்க முடிந்தது. திண்டுக்கல் நாமக்கல் சாலையும் எதிர்பார்த்ததைக்காட்டிலும் நன்றாக இருந்தது. கு. சின்னப்ப பாரதி காலையிலேயே ஒருமுறை தொடர்புகொண்டிருந்தார். வழிகளையெல்லாம் சரியாகச் சொல்லியிருந்தார். ஓரிடத்தில் எங்கள் வாகனஓட்டி சாலையைத் தவறவிட்டு கரூருக்குள் போய்விட்டார். பத்து நிமிடநேரம் கூடுதலாக செலவிட்டிருந்தோம். ஆனால் அதை பெரிதாகச் சொல்லிக்கொள்ள இல்லை. இடையில் ஒரு பெட்ரோல் பங்க்கில் சிறிது நேரம் வாகனத்தை நிறுத்த நேர்ந்தது. திண்டுக்கல் நாமக்கல் சாலை ஓரம் நன்றாகவே இருந்தன. ஒன்பது மணிக்கெல்லாம் நாமக்கல் அடைந்துவிட்டோம். நகரத்தின் உள்ளே சேலம் ரோட்டில் எழுத்தாளர் சின்னப்ப பாரதி அவரது நண்பருடன் காத்திருந்தார்.

கிறித்துவ சகோதரி ஒருவரால் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருந்த தமது சங்கம் என்ற நாவலை பிரான்சு நாட்டில் எந்த பதிப்பகமாவது வெளியிட முன் வருமா எனக்கேட்டு எழுத்தாளர் கு. சின்னப்பபாரதி எழுதியிருந்தார். எனக்கும் தமிழ் படைப்புகளை எனது அமைப்பு மூலமாக பிரெஞ்சில் கொண்டுவரும் ஆர்வம் இருந்ததால் சம்மதித்தேன். எங்கள் அமைப்பு மூலம் கொண்டுவந்தால் பிரயோசனமில்லையென்பதும் தெரியவந்தது. காரணம் பிரெஞ்சு பதிப்பகங்கள் துணையின்றி அதனைப் பரவலாக பிரெஞ்சு வாசகர்களிடம் கொண்டு சேர்க்க முடியாதென்பது காலம் கடந்து தெரியவந்தது.  எனினும் பதிப்பகங்களுக்கு அனுப்பி வைப்பதென்று முடிவு செய்தேன். இதற்கிடையில் தமிழ்நாட்டிலிருந்த மூத்த எழுத்தாளர்களில் சிலர் பிரெஞ்சு பதிப்பகங்களுக்கு முதன் முதலாக அனுப்புகிறபொழுது தமிழில் நல்ல நூல்களை அனுப்பினால்தானே தொடர்ந்து ஆர்வம் காட்டுவார்கள் என்றார்கள். நான் பிரெஞ்சில் வெளிவந்த அந்த நூலை வாசித்தேன். எனக்கு நிறைவாக இருந்தது. தவிர கொல்லிமலை மக்களின் பிரச்சினையை பேசுவதாக இருந்தது. பிரெஞ்சு பதிப்பகங்கள் மூன்றாம் உலக நாடுகளிலிருந்து இதுபோன்ற நூல்களைத்தான் எதிபார்க்கிறார்கள் என்ற எனது நம்பிக்கை காரணமாக முதலில் ஒரு பதிப்பகத்திற்கு அனுப்பிவைத்தேன். அவர்கள் எழுதிய கடிதத்தில் தங்கள் பதிப்பகத்தின் மீது நம்பிக்கைவைத்து கையெழுத்து பிரதியை அனுப்பியதற்காக நன்றி தெரிவித்துவிட்டு, தாங்கள் பதிப்புக்கு இணங்கினால் ஒரு மாதத்தில் கடிதம் எழுதுவதாகவும் இல்லையெனில் உரிய தபால் கட்டணம் அனுப்பிவைத்தால் திருப்பி அனுப்புவதாகவும் தெரிவித்திருந்தார்கள். கு.சின்னப்பாரதி பிரெஞ்சு மொழி பெயர்ப்புவெளிவர மிகுந்த ஆர்வமும்காட்டினார்  அவசரமும்காட்டினார். எனவே வேறு இரண்டு பதிப்பகங்களுக்கு அனுப்பிவைத்தேன். மூத்த எழுத்தாளர்கள் கூறியதுபோல அதனை அப்படைப்பின் குற்றமாக ஏற்றுகொள்ள இயலாது. இக்காலத்தில் மொழிபெயர்ப்பினை பதிப்பிக்கிறபோது அம்மொழிபெயர்ப்பும் ஒழுங்காக வந்திருக்கவேண்டும். எனக்கு நன்றாக இருந்தது. படித்த பதிப்பாளர்களின் விருப்பம் வேறாக இருந்திருக்கிறது. தவிர பல நல்ல எழுத்துகள் பதிப்பாளர்களால் பல முறை நிராகரிக்கப்பட்டமைக்கு  முன்னுதாரணங்கள் இருக்கின்றன.

மாறாக எனது அமைப்பு நண்பர்களிடம் மொழிபெயர்ப்பு நாவலை அனுப்பிவைத்தபோது அதில் பிரான்சுவாஸ் மட்டும் மொழிபெயர்ப்பு திருப்தியில்லை என்றார். மற்ற இருவரும் நாவல் நன்றாக இருக்கிறதென்றார்கள். ஆக நாவலைப்படித்துவிட்டு அடித்தட்டு மக்களின் துயரில் அக்கறைகொண்டிருக்கிற  கு.சின்னப்ப பாரதியை  பார்க்க ஆர்வம் காட்டினார்கள். இந்தியாவுக்கு வருவதற்கு முன்பாக சின்னப்ப பாரதியிடம் இவ்விஷயத்தைக்கூறியிருந்தேன். அவர் மிகவும் சந்தோஷப்பட்டார். எந்த எழுத்தாளனும் எதிர்பார்ப்பது அதைத்தானே. விருதுகள், பரிசுகளைக்காட்டிலும் இதுபோன்ற பாராட்டுதல்கள்தான் எழுத்தாளனை உற்சாகப்படுத்துக்கின்றன. கு.சின்னப்பபாரதி சேலம் ரோட்டில் பிரெஞ்சு நண்பர்களைக் காரில் பார்த்ததும் கட்டி தழுவினார். சக எழுத்தாளனாக அந்த மகிழ்ச்சியை உள்வாங்கிக்கொண்டேன். அவரது வாகனத்தை பின்தொடர்ந்துவருமாறு எங்கள் வாகனஒட்டிக்கு கட்டளை பிறப்பித்துவிட்டு முன்னால் சென்றார்.  கொஞ்சதூரத்தில் ஒரு உணவு விடுதிமுன்னால், பலகாரம் சாப்பிடலாமே என்றார். நாங்கள் ஏற்கனவே திண்டுக்கல்லில் முடித்துவிட்டு வந்ததைக் கூறினோம். அவருடைய வீடு நகரத்தைவிட்டு தள்ளி, புற நகரில் அமைந்திருந்தது. பிரெஞ்சு நண்பர்களுக்கு ஆரத்தி எடுத்தார்கள். உள்ளே சென்றதும் தேநீர் வந்தது. சின்னப்பபாரதியின் துணைவியார் பாரதிக்கு வாய்த்த செல்லம்மாள் என நினைத்துக்கொண்டேன். வேறு சொற்கள்வேண்டாம். எழுத்தாள நண்பர் ஒரு குழந்தையைபோல தமது படைப்புகளையும் மொழிபெயர்ப்புகளையும் எடுத்துகாட்டி மகிழ்ந்தார். அந்தக் கண்களைப்பார்க்கவேண்டுமே!

எல்லோரும் செல்வம் காலேஜ் ஆவ் டெக்னாலஜிக்குச்சென்றோம். அங்கும் அனைவருக்கும் வரவேற்பு. பிறகு அறக்கட்டளை நண்பர்களின் அறிமுகம், செல்வம் கல்விஸ்தாபனத்தில் தலைவர் திருவாளர் முனைவர் செல்வராஜ் அறிமுகமென முடிந்து மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். கு; சின்னப்பபாரதி அறக்கட்டளை தலைவரும் சரி நிர்வாகிகளும் சரி கு.சின்னப்பாரதி மீது வைத்திருந்த மரியாதையை புரிந்துகொள்ள முடிந்தது. மாணவர்கள் ஆசிரியர்களென சுமார் இரு நூறுபேருக்கு மேல் கூடியிருந்தனர். எனது மாத்தாஹரி அண்மையில் சின்னப்பாரதி அறக்கட்டளையின் சார்பாக பரிசினை வென்றிருந்தது. என்னை அறிமுகப்படுத்துகிறபோது அதனை மறக்காமல் குறிப்பிட்டார்கள். இரண்டு மாணவர்கள் காலச்சுவடில் எனது படைப்புகளை தொடர்ந்து படிப்பதாக கூறியது எதிர்பாராத சந்தோஷம். நண்பர் இந்திரனும் பேசினார். பிரெஞ்சு நண்பர்கள் சின்னப்பபாரதியின் நூலை குறிப்பிட்டு பேசினார்கள். பங்கேற்ற அனைவருக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கினார்கள்.

மதியம் கேட்டரிங் மாணவர்கள் தயாரித்திருந்த இந்திய உணவு மேற்கத்திய பாணியில் பரிமாறப்பட்டது. இடையில் எழுத்தாளர் சின்னப்பபாரதி எ·ஸ்பிரஸ், இந்து பத்திரிகையாளர்களை பேட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார். பிரெஞ்சு நண்பர்களுக்கு நாமக்கல் மண்ணில் எழுத்தாளர் உத்தியோகம் கிடைத்திருந்தது. அந்த செய்தியை பின்னர் படிக்கவும் நேர்ந்தது. இந்தியாவில் ஆங்கிலதினசரிகளைக்கூட அத்தனை சுலபமாக நம்பக்கூடாதென்பதுபோல அடுத்த நாள் செய்திகளிருந்தன. பிரெஞ்சு நண்பர்கள் தங்களை எழுத்தாளர்களென்று சித்தரித்தும், சின்னப்பபாரதியைப் பார்க்கத்தான் இவ்வளவுதூரம் வந்தோமென்றும் நாங்கள் சொல்லவே இல்லையே என்றார்கள். இதெல்லாம் இந்திய தினசரிகளில் சகஜமென கூறி அவர்களை (பிரெஞ்சு நண்பர்களை) பிறகொருநாள் சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. மதியம் கொல்லிமலைக்கு பயணித்தோம். எழுத்தாளர் சின்னப் பாரதி நூலில் வரும் சந்தை நடக்குமிடத்தையெல்லாம் காண முடிந்தது. சின்னப்ப பாரதியின் தயவால் கொல்லிமலையின் தரிசனம். இன்னொரு முறை ஆற அமர குடும்பத்துடன் சென்று அங்கே தங்கிவிட்டு வரவேண்டும், என நினைத்துக்கொண்டிருக்கிறேன். சின்னப்பபாரதி கொல்லிமலைக்குத் துணையாக அனுப்பியிருந்த நண்பர் இருமுறை வழியைத் தவறவிட்டதும், நாமக்கல்லை நெருங்குகறபோது போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டதும் வழக்கம்போல நண்பர் சவியே தெபலுக்கு எரிச்சலூட்டியது. ஏதோ சொல்லப்போக நான் பதிலுக்கு ஏதோகூற விவாதம் விதண்டாவாதமாக நீண்டது. போதாதற்கு எங்களுக்கு முன்னால் காரில் சென்ற சின்னப்ப பாரதியின் நண்பர் நாங்கள் பின்னால் வருகிறோமா இல்லையா என்பதைக்கூட கவனியாமல் புறப்படுபோய்விட நாங்கள் வழியைத் தவறவிட்டு சில மணித் துளிகள் கூடுதலாக அலைந்தோம். பின்னர் சின்னப்பபாரதிக்கு போன்செய்து அவருடைய இளைய மருமகன் வந்து எங்களை அழைத்து சென்றார். இரவு எழுத்தாளர்வீட்டில் இலைபோட்டு குழிப்பணியாரம், இட்டலி, தோசை, பூரி யென வயிற்றை நிரப்பினார்கள். முதலில் பத்தாம்தேதி இரவு தங்கிவிட்டு பதினோறாம் தேதி காலை புதுச்சேரி செல்லலாமென்றுதான் யோசித்திருந்தோம். அதிகாலை எழுந்திருக்க தாமதித்துவிடும் பின்னர் புதுச்சேரிசெல்ல காலை பத்தும் ஆகலாம பதினொன்றும் ஆகலாமென்றுகூற அன்றிரவே புதுச்சேரிக்குப் புறப்பட்டாயிற்று.

————————

பிரான்சும் திரைப்பட விழாக்களும்

செசார் தேசிய திரைப்பட விருது-2012

இபோதெல்லாம் இந்தியத் திரைபடத்துரையினருக்கு ஆஸ்கார் விருதுகளில் அக்கறையிருக்கிறதோ இல்லையோ கான் (Cannes) திரைப்பிடவிழாவில் கலந்துகொள்ள ஆவலாய் இருக்கிறார்கள். ஆஸ்கார்போல அதுவுமொருநாள் அலுத்துபோகக்கூடும். கான் திரைப்படவிழாவைத் தவிர்த்து பிரான்சு நாட்டில் ஆப்ரிக்க  லத்தீன் அமெரிக்கா திரைபட விழா, ஐரோப்பிய திரைப்படங்களுக்கான விழா, கேலிச்சிந்திரங்களுக்கான திரைபடங்கள்விழா, இத்தாலிய படவிழா, அமெரிக்க திரைப்படவிழா, பெண்கலைஞர்களை மையமாகக்கொண்ட திரைப்படங்கள் விழா, சமூக விழிப்புணர்வு தரும் திரைப்படங்கள் விழா, குறும்படங்கள் விழா, நார்வே சுவீடன் திரைப்படங்கள் விழா, குற்றவியல் படங்கள், அதீதக் கற்பனைகளை கதைக்களனாகக் கொண்ட படங்களென ஆண்டுதோறும் பிரான்சுநாட்டில் 24 திரைப்படவிழாக்கள் நடைபெறுகின்றன. இது தவிர தேசிய திரைப்பட விருது விழாவும் பிப்ரவரிமாதத்தில் செசார் தேசிய திரைப்பட விருது விழாவென்ற (Cérémonie des César du cinéma) பெயரில் நடை பெறுவதுண்டு.

செசார் தேசிய திரைப்பட விருது விழா 1975ம் ஆண்டிலிருந்து வருடந்தோறும் சிறந்த நடிகர், நடிகை, இயக்குனர், இசை அமைப்பாளர், சிறந்த துணை நடிகர், நடிகை அறிமுகக் கலைஞரென பட்டியலிட்டுப் பரிசுகளை வழங்குகிறார்கள். விருது  குழுவினர், அரசாங்கத்தின் தலையீடின்றி செயல்படுகிறார்கள். அமைப்பு ஒரு தன்னாட்சி உரிமையுள்ள இயக்கம். அமெரிக்காவுக்கு ஆஸ்கார் விழா எப்படியோ அப்படி பிரான்சு நாட்டிற்கு செசார் தேசிய திரைப்பட விழா. இவ்வருடம் “L’Artiste (The Artist) என்ற ஊமைப்படம் பல பரிசுகளைத் தட்டிசென்றது. இப்படத்தைப் பற்றி இரண்டு மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் எழுதியிருந்தேன். சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகையென பரிசுகளைக் குவித்தபோதும் சிறந்த நடிகருக்கான செசார் விருது ‘Intouchables’ (‘தீண்டத் தகாதவர்கள்) படத்தில் நடித்திருந்த கறுப்பரான ஒமர் சி (Omar Sy)க்கு கிடைத்தது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், சில சினிமாக்களிலும் இதுவரை துணைபாத்திரங்களில் நடித்திருந்த ஒமர் சிக்கு தகுந்த பரிசென்றே சொல்லவேண்டும். L’Artiste படத்தின் கதா நாயகன் Jean Dujardin (ழான் துய்ழர்தென்)  ஏமாற்றத்துக்குள்ளானார். அவரது ஏமாற்றத்தை தவிர்க்கும் வகையில் எல்லோரும் எதிர்பார்த்ததுபோலவே அதற்கடுத்த வாரத்தில் லாஸ் ஏஞ்சலிஸில் நடைபெற்ற விழாவில் L’Artiste திரைப்படம் பலபரிசுகளை வென்றது. அதில் சிறந்த நடிகருக்கான பரிசும் அடங்கும்.

ஆசிய திரைப்படங்களுக்கான விழா

பிரான்சு நாட்டில் அண்மையில் நடந்து முடிந்த (மார்ச்-7-11) ஆசிய திரைப்படங்களுக்கான விழா’( Festival international des cinémas d’Asie –FICA)  நமக்கு முக்கியமானது. இந்தியத் திரைப்படத்துறையினர், இப்படியொரு திரைப்பட விழா பிரான்சுநாடைபெறுகிறதென்பதை அறிந்திருப்பார்களா எனத் தெரியவில்லை. சீனா, ஈரான், ஜப்பான், பிலிப்பைன், தென் கொரியா, தாய்லாந்து ஆகிய நாடுகள் பங்கேற்றன. வழக்கம்போல இந்தியாவின் பெயரை காணவில்லை. புதிய முயற்சிகளிலிறங்கும் நமது தமிழ்ப்பட இயக்குனர்கள் கவனத்திற்கொள்ளவேண்டிய விழா. விழாவுக்கு இஸ்ரேலிய பாலஸ்தீனியரான இயக்குனர் எலியா சுலைமான் (Elia Suleiman) தலமை வகித்தார், அவரொரு நல்ல நடிகருங்கூட. மொர்ட்டெஸா பாஷ்பாப் (Morteza Farshbab)என்ற ஈரானிய இயக்குனரின், துக்கம் (Mourning) தாமரை விருதைப் பெற்றது. விமர்சகர்களின் தங்கத் தாமரை விருதை ஜப்பானிய இயக்குனர் சொனோ சியொன் (Sono Sion) உழைப்பில் வெளிவந்திருந்த ‘Himlizu’ வென்றது. சீனாவின் புகழ்பெற்ற இயக்குனரான வாங் சியாஷ¤வாய் (Wang Xiashuai)யும், ஜப்பான் நாட்டின் இயயக்குனருமான கியோஷி குரொசொவா (Kiyoshi Kurosawa)வும் கௌரவிக்கப்பட்டனர்.

————————————–