Monthly Archives: ஜூலை 2021

அப்துல் கலாம் – மாத்தா ஹரி

          25 ஏப்ரல் 2007  எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்களில் ஒன்று. அப்போதைய இந்திய ஜனாதிபதி மேதகு அப்துல்கலாம் ஐரோப்பிய ஒன்றிய பாராளு மன்றத்தின் விருந்தினர். சிறப்புரை ஆற்றினார் ஐரோப்பிய பாராளுமன்றம் நான் இருக்கிற Strasbourg ல் உள்ளது. இந்த நகரம் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலை நகருங்ம் ஆகும்.

          ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களின் முன்னிலையில் அவர் ஆற்றிய உரையைக் கேட்கும் வாய்ப்பு, குறைந்த எண்ணிக்கையில் அழைப்பிதழுடன் அனுமதிக்கப்பட்ட  இந்தியர்களில் நானும் ஒருவன்

கனியன் பூங்குன்றனாரின்  « யாதும் ஊரே யாவரும் கேளீர் » என்கிற சங்கப் பாடலை முழுவதையும் தமிழில் கூறி  அதற்கு ஆங்கிலத்தில் விளக்கவும் செய்து தமது உரையைத் தொடங்க மெய் சிலிர்ந்த து. எழுந்து நின்று வந்திருந்த நான்கைந்து தமிழர்கள் எழுந்து நின்று கைதட்டினோம்.

தொடர்ந்து அவர் ஆற்றிய உரையும் முக்கியமானது, சுவாரஸ்யமானது மாத்தாஹரி நாவலில் அந்த உரையை இடம்பெறச் செய்தேன் :

« ……

இந்தியக் குடியரசுத் தலைவர் மேதகு திரு அப்துல்கலாம் என்று அறிவிக்கப்படுகிறது. வருகைதந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர்களும், பார்வையாளர்களும் எழுந்து நின்றனர். பாராளுமன்றத் தலைவர், செயலாளர் புடை சூழ, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் பிரதிநிதியாக காலெடுத்து வைக்கிறார். வரவேற்புரைக்குப் பின்னர் சிறப்புரை:

“ஐரோப்பிய பாராளுமன்றத்தின் ஐம்பதாவது ஆண்டுவிழாவில், அதன் உறுப்பினர்களோடு இருக்க முடிந்தமையில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களோடு இருக்கையில் எம்மாதிரியான சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்வதென்றும் யோசித்தேன். கோடிக்கணக்கான மக்கள், மொழிகள், பண்பாடுகள், மதங்கள் என பன்முகப்படுத்தப்பட்ட தலைமையை ஏற்படுத்தித் தந்த அனுபவம் இந்தியாவிற்கு உண்டு. அவ்வனுபவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள எனக்குப் பெரிதும் விருப்பம்.” என்று ஆரம்பித்து ஐரோப்பிய ஒன்றியத்தைப் பாராட்டிப் பேசுகிறார்.

– அரவிந்தன் நாம புறப்படுவதற்கு முன்னாலத்தான் மதத்தைப் பத்தி விவாதிச்சோம், ஜனாதிபதி அற்புதமா சொன்னார் கவனிச்சியா. மதமும் அறிவியலும் விரோதிகளல்ல, விரும்பினா அவங்க சேர்ந்து செயல்படமுடியுங்கிறதுக்கு அவரது குருவே நல்ல உதாரணமென்பதுபோல விளக்கினார்.

அரவிந்தனும், ஹரிணியும், பாராளுமன்ற மண்டபத்தைவிட்டு வெளியேறிக்கொண்டிருந்தார்கள். ஜானாதிபதி உரை நிகழ்த்திமுடித்தபிறகு, ஹரிணி அதன் பிரம்மிப்பிலிருந்து மீளமுடியாமலிருந்தாள்.

–  நான் சரியா காதுல வாங்கலை ஹரிணி, என்னுடைய நாற்காலியிலிருந்த மொழி பெயர்ப்புச் சாதனத்தை எப்படி இயக்குவது என்பதிலேயே நேரம் போயிட்டுது

– 1960ல இந்திய விண்வெளிமையத்திற்கு உரிய இடந்தேடிப் பேராசிரியர் விக்ரம் சாராபாயும், அவரது சீடரான அப்துல்கலாமும் மற்றவர்களும், நாட்டின் பலபாகங்களிலும் அலைந்திருக்கிறார்கள். இறுதியில் கேரளாவிலுள்ள தும்பா அவர்களது எதிர்பார்ப்பிற்கு ஏற்றதாக இருந்திருக்கிறது. அரசாங்கம் பரிசீலனை செய்தபோது, ஆயிரக்கணக்கான கிறிஸ்துவ மீனவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டிய சிக்கலிருப்பது புரிந்தது, முக்கியமாக அங்கே இருந்த தேவாலயம். உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு அவர்களை வெளியேற்றினால் தங்கள் ஓட்டுவங்கியை இழந்து விடுவோம் என்ற கவலை, பிரச்சினையை பெரிதாக்குவதெற்கென்றே காத்திருந்த மதவாதிகள் வேறு. விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்கு அந்த இடத்தை எப்படியாவது பெற்றே தீருவதென்று தீர்மானமாக இருந்தார். ஒரு யோசனை பிறந்தது. தேவாலயத்தின் பங்குத்தந்தை பீட்டர் பெர்னார் பெரைராவைச் (Rev. Peter Bernard Pereira¡ ) சென்று சந்தித்திருக்கிறார், பங்குத் தந்தை, விக்ரம் சாராபாயிடம்,” என்ன விக்ரம், கடைசியில் என் பிள்ளைகள் இல்லத்தையும், எனது இல்லத்தையும், கடவுள் இல்லத்தையும் சேர்த்தே அல்லவா கேட்கிறீர்கள்? எப்படி முடியும்? எனச் செல்லமாக கடிந்துகொண்டாராம். பிறகு அவரை ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு தேவாலயத்திற்கு வரச் சொல்லியிருக்கிறார். பங்குத் தந்தை கேட்டுக்கொண்டபடி, விக்ரம் சாராபாயும் அவரது குழுவினரும், ஞாயிற்றுக்கிழமை போனபோது பிரார்த்தனை நடந்துகொண்டிருந்திருக்கிறது. தந்தை பெரைரா பைபிளிலிருந்து சில பகுதிகளைப் படித்துக்கொண்டிருந்தவர் முடித்துவிட்டு, விக்ரம் சாராபாயை பக்கத்தில் அழைத்திருக்கிறார். இவர் அவர் அருகில் போய் நின்றவுடன், கணீரென்ற குரலில், ” பிள்ளைகளே இதோ ஒருவரை உங்களுக்கு அறிமுகப் படுத்துகிறேன். பெயர் விக்ரம் சாராபாய், இவர் ஒரு விஞ்ஞானி. விஞ்ஞானத்தின் பலனைத்தான் நாம் அனைவரும் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம், இந்தத் தேவாலயம் உட்பட. இங்கேயுள்ள விளக்குகள் மின்சாரத்தால் எரிகின்றன, நான் உங்களிடம் உரையாடுவது தொழில்நுட்பத்தின் விந்தையில் உருவான ஒலிபெருக்கியின் உதவியால். நோயாளிகளுக்கு உரிய சிகிச்சையை மருத்துவர்கள் தரமுடிகிறதென்றால் அதற்கும் அறிவியலே காரணம், பங்குத் தந்தையாகிய நான் என்ன செய்கிறேன்? உங்கள் நன்மைக்காகவும், உங்கள் சுபிட்ஷத்திற்காகவும், அமைதி வேண்டியும் பிரார்த்திக்கிறேன், நமது விக்ரம் சாராபாயும் அதைத்தான் செய்கிறார். அவர் நமக்கு மேலும் நல்லதைசெய்யவேண்டுமென்று நினைக்கிறார், ஒரு மாபெரும் அறிவியல் அர்ப்பணிப்பிற்காக நமது இல்லங்களைக் கேட்கிறார், அதற்கு அரசாங்கத்தின்மூலம் உரிய மாற்று ஏற்பாடுகள் செய்யப்படுமென உறுதி அளிக்கிறார். இப்போது சொல்லுங்கள் நமது இல்லங்களைக் கொடுக்கலாமா?” கூட்டத்தினரிடையே முழு அமைதி, எழுந்து நின்றவர்கள் ‘ஆமென்’ என்கிறார்கள். இன்றைக்கு அந்த இடம் விக்ரம்சாராபாயுடைய கனவுகளை மட்டுமல்ல, இந்தியாவின் விண்வெளிக்கனவுகளையும் நிறைவேற்றி வருகிறது.

– அவர் பேசினதை அப்படியே வரி பிசகாமற் சொல்லுவேண்ணு நான் நினைக்கலை.

– இதிலே இன்னொரு நீதியும் இருக்கு, இங்கே மதமும் சரி விஞ்ஞானமும் சரி இரண்டுமே மக்களுக்கு நன்மைங்கிற குறிக்கோளில் இணைஞ்சிருக்கின்றன. மக்களுக்கு நன்மை செய்வதுதான் இவர்கள் நோக்கமென்றால், மதமும் விஞ்ஞானமும் மாத்திரமுமல்ல, மதமும் மதமுங்கூட இணைந்து பணியாற்றமுடியும்.  இப்படியொருவரை இந்திய ஜனாதிபதியா பார்க்கிறது, இதுதான் முதன் முறை.

– ஏதோ தவறி வந்துட்டார். நம்ம ஊரு அரசியல்வாதிகளுக்கு இப்படிபட்ட மனிதர்களைத் துளியும் பிடிக்காது

– மணி ஒன்றரை ஆகுது, எங்கேயாவது ரெஸ்டாரெண்டுக்குப் போகலாமா?

————

நீலக் கடல் நாவல் – திருத்திய பதிப்பு

« திரைகடலோடித் திரவியம் தேடுவதற்கு மற்றவர்களின் உத்தி ஆளும் குணம், நமக்கோ சுலபமாக அடிமையாகும் குணம். அது இன்றளவும் தொடர்வது தமிழனின் சாபக்கேடு. ‘ஆண்டே’, ‘அண்ணே’, ‘தலைவரே’, ‘சார்’, ஐயா, ‘எஜமான்’ வரிசையில் இன்றைக்கு ‘அம்மா’ வையும் சேர்த்துக்கொண்டு, கைகட்டி, வாய்புதைத்து, உடலைக் குறுக்கிவாழ்வதென்பது, மற்ற இனத்தைவிட நம்மிடம் அதிகமாகிப் போன வயிற்றெரிச்சல் இப்புதினத்துக்கான காரணங்களில் ஒன்று.  »

« என் பங்கிற்கும் தமிழிலக்கிய எல்லைக்கல்லைப் பிடுங்கி இரண்டு மில்லி மீட்டராவது தள்ளி நடவேண்டுமென்ற ஆசை. காலம் பதில் சொல்லும் »

ஆனந்த விகடனில் வெளிவந்த சிறுகதையை விரிவாக எழுதிய 2005ல் வெளிவந்த நீலக்கடல் முன்னுரையில் இப்படி எழுதியிருக்கிறேன்.

இளம் படைப்பாளிகள் முதல் மூத்த எழுத்தாளர்வரை தங்கள் எழுத்துக்குறித்த பெருமைகள் இருக்கவே செய்யும். எனக்கும் இருக்கிறது.

வாழும் காலத்தில் கிடைக்கிற ஆராதனைகள்  பெரும்பாலும் நமக்கு வேண்டியவன் நம்ம குலம் , நம்ம கோத்திரம் அல்லது நாம் இன்றைக்கு மாலை போட்டால் நாளைக்கு நமக்கு அவன் மாலை போடுவான் என்கிற வணிக நியதிகளுக்கு, நீதிக்கு உட்பட்ட வை.

காலம் கையூட்டுவாங்காத நீதிபதி, விலைக்கு வாங்க முடியாதது. ஈவிரக்கமற்றது, அதன் தராசு துல்லியமானது, இந்தக்  காலத்தின் தயவை நம்பி வாழ்க்கையை ஆரம்பித்தேன்.

கிராமத்தில் தந்தை மணியக்காரர் உறவினர்களெல்லாம் அன்றைய தென்னாற்காடு மாவட்டத்தில் கர்ணம் ஆகவோ மணியம் ஆகவோ இருந்தார்கள். ஊரில் முதல் மெத்தைவைத்த வீடு எங்களுடையது. நஞ்செய் புன்செய் என செல்வாக்காக வாழ்ந்த குடும்பத்தில் கடன் காரர்களை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. எனது தந்தையின் வாழ்க்கை ஒரு பாடம்.

ரு வெறியுடன் ஆரம்பித்த இளமை,கல்லூரியில் படிக்கிறபோது ட்யூஷன் சொல்லிகொடுத்தேன். புதுவையில் வருவாய் துறையில்  எழுத்தராக பணிபுரிந்த போது காலையில் Alliance Française பிரெஞ்சு மொழி படிப்பேன்,  மாலையில் the Hindu நடராஜன் புதுச்சேரி நீடராஜப்பையர் வீதியில் நடத்திய கென்னடி டுட்டோரியலில் History Geography பாடம் எடுத்தேன். சென்னை சௌகார்பேட்டை யில்  பேண்ட் பிட், சட்டை பிட்களை எடைக்கு  வாங்கி வருவாய் துறை சக ஊழியர்களுக்கு விற்றிருக்கிறேன். புதுச்சேரியிலும் முன்னள் நீதிபதி அம்புரோஸ் பிள்ளைகளுக்கு , காந்திவீதியில் அவர் பெத்தி செமினேர் பள்ளிகருகிலிருந்த அவர் உறவினர் வீட்டு பிள்ளைகளுக்கு ட்யூஷன் எடுத்திருக்கிறேன். வருவாய்துறை தேர்வில் கிடைத்த துணைத்தாசில்தார் உத்தியோகத்தை, எனது மாமியார்வீட்டு அண்டைவீடுக்காரரான  திருநெல்வேலிக்காரர் லேபர் கமிஷனர் பாக்கியம் பிள்ளை புத்திமதியை மீறி உதற்விட்டு, ஏதொவொரு துணிச்சலில் பிரான்சுக்கு வந்தேன். இங்கும் ஆரம்ப நாட்கள் எளிமையானவை அல்ல, அந்த அனுபவங்களையும் ஒரு நூலாக வெளியிடலாம். நான் படித்திருந்த முதுகலை சமூகவியல் அங்கீகரிக்கப்பட இங்குள்ள பல்கலையில் DEUG சேரவேண்டியிருந்த து. எரிச்சலூட்ட பாதியில் வெளியேறி DPECF  சேர்ந்தேன், இது Accountancy, commerce க்கு சமம், இதற்கிடையில் புதுச்சேரியில் இருக்கும் மனைவி பிள்ளைகள் ஏக்கம், வேலை தேட தூண்டியது, ஒரு தொண்டு நிறுவனத்தின் உதவியால், முதலில் உள்ளூர் நகரசபையில்  கணக்கெழுதும்  உத்தியோகம், இடையில் ஒருவருட  ஆங்கிலம் – பிரெஞ்சு மொழிபெயர்ப்பு டிப்ளோமா . சுதந்திர ஆக்ஜிஜன் தேவைப்பட சிறிய முதலீட்டில் வணிகம். 30 ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த இன்றைய நிகழ்காலம், எனது இறந்த காலத்தின் கொடை.

காலம் என்னை ஏமாற்றவில்லை. உழைப்பும், உண்மையும் போராட்டகுணமும் எனக்கு உதவி இருக்கின்றன.  ஆம் நன்றும் தீதும் பிறர் தர வாரா.நீகலக்கடல் நாவல் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பதுபோல  எழுத்துக்கும் காலத்தை பெரிதாக நம்புகிறேன், காலமும் காலத்தையொத்த ஒன்றிரண்டு மனிதர்களும் நீதியைச் சரியாக வழங்குவாரகள் என்பதென் அசைக்கமுடியாத நம்பிக்கை. .காலத்தின் தீர்ப்பு எனக்குரிய நியாயத்தையும் உரிமையையும் இன்றுவரை உணர்ந்ததாகவே இருந்து வந்திருக்கிறது,

இந்த நீலகடல் எடிட்செய்யப்படவேண்டும் , செம்மையான பதிப்பாக வெளிவரவேண்டுமென்ற என்ற எனது குறை தீர்ந்துள்ளது என்ற செய்தியை மட்டும் தற்போது தெரிவித்துக்கொள்கிறேன்.

                                                  நாகரத்தினம் கிருஷ்ணா

நீலக்கடல் நாவல் குறித்து …..

«  உண்மையும் இனிமையும் கூடிய வரலாற்று நாவல் »  – பிரபஞ்சன்

இன்றைய மொரீஷியஸ் தீவில் வாழ்பவர்களாகிய தமிழர்களில் கணிசமான பேர் அந்தப் பதினேழாம் நூற்றாண்டுகால பகுதியில் குடிபெயர்ந்தவர்கள். சொந்த தேசத்து சாதி அடிமை முறை, மதப் பிணக்கு, சுரண்டும் அமைப்பில் சிக்கி தம் வாழ்வை இழந்தவர்கள் என்று பலரும், தம் பொன்னுலகம் என்று நம்பிய பிரஞ்சு தீவுகளுக்குக் காலடி மண்ணையும் துடைத்துக் கொண்டு கப்பல் ஏறினார்கள். சற்றே பெரிய புறாக்கூடுகளில் இவர்கள் அடைத்து வைக்கபட்டுக் சகல விதமான வன்முறைக்கும் ஆளானார்கள். தாய்நாடு திரும்புவோம் என்ற நம்பிக்கை இன்றியே சென்ற ‘சொர்க்கத்தில் ‘ தம் உயிரை பலி கொடுத்தார்கள். இந்தத் துயர வாழ்க்கையை ஆதாரபூர்வமாகவும் வரலாற்று பிழையற்ற தகவல்களோடும் தருகிறது, நாகரத்தினம் கிருஷ்ணா எழுதிய இந்த நாவல்.

நாகரத்தினம் கிருஷ்ணாவின் வரலாற்று பார்வை மிக விரிந்தது. ஆட்சியாளர்களின் காவல்முறை, பரம்பரை, காதல் என்று மட்டுமே நிலைபெற்றிருந்த வரலாற்று நாவல் தடத்தை மாற்றிப் போட முயற்சித்திருக்கிறார் ஆசிரியர். சாதாரண மக்கள் வியர்வையிலிருந்தும் ரத்தத்திலிருந்தும் இவர் கட்டியெழுப்பும் பாத்திரங்கள் விரிகின்றன. வாழ்க்கையின் பசிய வாசனை நாவல் முழுதும் வீசுகிறது. பெண்களைக் குறித்த இவர் பார்வை மிக முக்கியமானது. பெண்களை சதையாகவும், காமப்பங்காளிகளாகவும் மட்டுமே பார்க்கபட்டு வந்த பார்வையிலிருந்து விலகி, அவர்களை உயிரும் ரத்தமும் கொண்ட உயிர்களாக, உணர்வும் மனமுங்கொண்ட மனிதர்களாக இவர் சித்தரித்து இருப்பது, இந்த நாவலின் முக்கிய அம்சங்களில் ஒன்று.

இந்த நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க நாவல் : நீலக்கடல்நூலாய்வு

– மலேசிய எழுத்தாளர் : முனைவர்.ரெ.கார்த்திகேசு.

கதைச்சுவையும் சம்பவச் செறிவும் உள்ள நல்ல நாவல்தான் நீலக் கடல். மொரிஷியசைப் பின்னணியாகக் கொண்டு இன்னொரு நாவல் தமிழில் இருக்கிறதா என எனக்குத் தெரியவில்லை. இல்லை என்று எடுத்துக் கொண்டால் அந்த வகையில் இது முதல். ஆனால் பாண்டிச்சேரியைப் பின்னணியாகக் கொண்ட இன்னொரு அரிய நாவலான பிரபஞ்சனின்வானம் வசப்படும்இங்கு நினைவு கூரத் தக்கது.

புதுச்சேரி வட்டாரம்வரலாறு சார்ந்த நாவல்கள்:
நீலக்கடல்குறிப்பாகதேவமைந்தன்.

1916ஆம் ஆண்டில், ‘புதுவைக் கலைமக’ளில், அதன்  ஆசிரியர் தம்பி புருஷோத்தமன், ‘ரமணி’ என்ற நாவலைக் கண்டித்து எழுதினார்: அந்தத் திறனாய்வுரையின் தலைப்பு ‘குணாகுணவாராய்ச்சி” (புதுவைக் கலைமகள்– [1916] தம்பி புருஷோத்தமன்) என்பதாகும்.

சொற்போக்கிலும் பொருட்போக்கிலும் ‘ரமணி’ போன்ற நாவல்கள் எவ்வளவு நடைமுறைக்கு
முரண்போக்கில் போயின என்பதை அதில் காட்டினார். தம் கதாபாத்திரங்கள் மாறுவேடம் போட்டு விட்டால் போதும்.. ஏற்கெனவே அவர்களுடன் மிகவும் நெருங்கிப் பழகியவர்களுக்குக் கூட அவர்களைத் தெரியாமல் போய்விடும் என்ற அக்கால நாவலாசிரியர்கள் குடித்த மனப்பாலுக்கு மருந்து வழங்கினார்.

“உலக வழக்கிற்கு முரண்படாதனவாயும், தேசா சாரத்தைத் தழுவினவாயும், பொது சனங்களின்
நடவடிக்கைகட்குப் பொருந்தினவாயும், காலதேச நிச ரூப வர்த்தமானங்கட்கு ஒத்தனவாயுமுள்ள கற்பனைக் கதைகளே நாவல் எனப்படும்” என்று சாராம்சமாக நாவலுக்கு இலக்கணம் எழுதினார்.

இந்த அடிப்படையிலேயே – தன் எதிர்பார்ப்பை மிகவும் சிறப்பாக நிறைவேற்றும் வகையில்
நாவல்கள் தன் ஊரிலேயே பின்னர் படைக்கப்படும் என்று தம்பி புருஷோத்தமன் நினைத்திருப்பாரா!

நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘நீலக்கடல்’ நாவலில் பிரஞ்சுத் தீவான மொரீஷியஸ் முதலான
வற்றின் வரலாற்று அடிப்படைகளுக்கு ‘Les Tamouls A L’lle Maurice – Ramoo Sooria Moorthy,’ ‘Les Indienes A L’lle de France, ‘ ‘A Lougnon – (Correspondance du Conseil Superieur de Boubob et de la Compagne des Indes)’ முதலான பற்பல நேரடி  ஆவணங்களே சான்று காட்டப் பெற்றுள்ளன.

‘ தான்’ அமுதம் இறவாதது

                                             

          வெயில், பனி, மழையென இயற்கையில் உறையும் காலம் தன் இறும்பூதலுக்குத் தேடும் உயிர், கவிஞன். அவனுக்குப் பிறப்புண்டு இறப்பில்லை ; தரிப்பதுண்டு மரிப்பதில்லை.  உலகில் ஒவ்வொரு மொழியும் தமது உன்னதத்தை அறிய, மேன்மைபடுத்த, மெருகூட்ட தவமிருந்து பெற்ற, பெறும் பிள்ளை. உலகறிந்த கவிஞர்கள் சிலரை நினைவுகூர்ந்து பார்க்கிறேன் ஷேக்ஸ்பியர், பொதுலேர், தாகூர் என்கிற வரிசையில் பாரதியின் கவிதை நிலமும் பரந்தது, வளம்கொழித்த வண்டல்மண் பூமி, நஞ்செய் புஞ்செய் இரு வகைச் சாகுபடியையும் செய்து உயர்ந்த கவிதை மகசூலைத் தமிழுக்குப் படியளந்த நிலம். மகாகவி என்றொரு அடைமொழியை அவனாக வரித்துகொண்டவனில்லை. அவன் கவிதையில் தோய்ந்தவர்கள் சூட்டியபெயர். பாரதி என்ற சொல்லே போதும், சட்டென்று முண்டாசுடன் முன்னால் நிற்பான், அப்படியொரு ஆகிருதி, தேஜஸ். அவனுக்கெதற்கு அடைமொழிகள். கூழாங்கற்கள் மார்தட்டிக்கொள்ளட்டும். அவன் மலை, இமையமலை, சிகரங்களின் கொள்ளிடம். இயற்கை, சமயம், தேசியம், சமூகம், பெண், மனிதர்கள், பறவைகள், விலங்குகள்,  என எதையும் பாடியிருக்கிறான், எதுவாகவும் வாழ்ந்திருக்கிறான். இலக்கணத்திற்கு உள்ளே வெளியே இரண்டிலும் தேர்ந்தவன்.





          உங்களில் பலரைப் போலவே தமிழில் திரும்பத் திரும்ப வாசிக்க நேர்வது பாரதி கவிதைகள். அப்படி வாசிக்கிறபோது அவருடைய வசன கவிதைகளில் ‘இன்பம்’ என்ற தலைப்பின் கீழ் இடம்பெற்ற இரண்டு கவிதைகள் கூடுதலதாக எனக்குச் சில செய்திகளை, சித்தாந்த உரையிலிட்டுக் கையளித்ததுபோன்ற உணர்வு :

                    ‘தான்’ வாழ்க

எல்லா உயிரும் இன்ப மெய்துக.

எல்லா உடலும் நோய் தீர்க.

எல்லா உணர்வும் ஒன்றாதலுணர்க.

‘தான்’ வாழ்க.

அமுதம் எப்போதும் இன்பமாகுக.

          விந்து ‘தான்’ ஆக தாயொருத்தியின் வயிற்றில் கருவாகிறது. சிசுவாகப்  பிறக்கிறது. தொடக்கத்தில் தாயைக் கொண்டு ‘தான்’-ஐ அல்லது குழந்தையை அடையாளப்படுத்துகிறோம். பிறகு நமது சமூக நெறி, குழந்தையை அடையாளப்படுத்த தாய்மட்டும்போதாது எனக் கூற, பெற்ற  குழந்தைக்கு உரிய   தந்தையைக் காட்டி, ‘தான்’  அடையாளத்திற்கு வலு சேர்க்கிறாள் தாய். ஆக   பெற்றோர்களைக் கொண்டு குழந்தைக்கு அல்லது இந்த  ‘தான்’ -உக்கு  முதல் அடையாளம் கிடைக்கிறது. தந்தை தாய் இருவரும் பிறகு ஆவணங்களைக்கொண்டும் குழந்தைக்கும் தங்களுக்குமுள்ள உறவை உறுதிசெய்கிறார்கள்.  தவழ்ந்த குழந்தை நடக்கத் தொடங்குகிறது, இனி கல்வி, வேலை, பிற காரியங்கள் எனப்  பலவற்றிர்க்கு  வீட்டைவிட்டு வெளியில் வரவேண்டும். குழந்தை போகும் இடமெல்லாம் பெற்றோர்கள் உடன் சென்று இன்ன நிறம், சுருட்டை முடி, கன்னத்தில் மட்சம் என ஒவ்வொன்றையும் பட்டியலிட்டுக்கொண்டிருக்க முடியாதில்லையா,  எனவே தங்களுடைய குழந்தைக்கு ஒரு பெயரை (‘தான்’ –  புறத்தோற்றத்திற்கு) சூட்டுகிறார்கள். உதாரணத்திற்குப் பாரதி என வைத்துக்கொள்வோம். பாரதி என்ற பெயரைக்கேட்டதும், பாரதியின் உறவினர்களுக்கு பாரதியின் பெற்றோர்  மட்டுமல்ல, பாரதியின் தாத்தா பாட்டி பெயர்களெல்லாம் நினைவுக்கு வரும். நமக்கு பாரதியின் மனைவி செல்லம்மா  பெயராவது நினைவுக்கு வருமா ? சொல்வதற்கில்லை. ஆனால் பாரதி என்றதும் நமக்கு  முறுக்கிய மீசை, நெற்றியில் கூரைபோட்டிருக்கும் முண்டாசு, நேர்கொண்ட பார்வை, அடர்ந்த புருவங்கள், பொட்டு, புதுச்சேரி, எட்டயபுரம், திருவல்லிக்கேணி, பாரதிதாசன் எனப் பலவும் கண்முன்னே வந்துபோகும்.  ஐந்துவயதில் சுப்பிரமணியாக இருந்த ‘தான்’-உம்  நாற்பது வயதில் திருவல்லிக்கேணியில் இறந்த பாரதிக்கும் பலவேறுபாடுகள், இருந்தும் ‘அவர்’தான்’ இவர்’ என்பதில் நமக்கு ஐயங்கள் இருப்பதில்லை, காரணம் பொதுவாக ஒவ்வொரு ‘தான்‘ -உடனும் ‘ஒரு தனித்துவம்’ நிழலாகத்  தொடர்கிறது.

          இதனை புரிந்துகொள்ள  மேற்குலக மெய்யியல் சிந்தனையில் ஓர் புராணக் கதை உதாரணமுண்டு, உபயம் கிரேக்க நம்பிக்கைகள். இக்கிரேக்க கதையின்படி ஏதன்ஸ் நகரத்திற்கு மகாபாரத ஏகசக்கர கிராமத்து பகாசூரன் கதைப்போல  ஒரு தலைவலியிருந்தது,அதன்படி ஒன்பதுவருடத்திற்கொருமுறை, மனித உடலும் எருதுவின் தலையும் கொண்ட மினோத்தோர் (le Minautaure)  என்கிற அரக்கனுக்கு ஏழு இளம்பெண்களையும், ஏழு இளைஞர்களையும் உணவாக வழங்கவேண்டுமென்பது,ஏதன்ஸை வென்ற  எதிரி மன்னனின் கட்டளை.     தீசஸ் (Theseus)மனித விலங்கோடு யுத்தம் செய்ய ஏதன்ஸ் நகரத்திலிருந்து படகில் செல்ல வேண்டியிருக்கிறது.மிருகத்தைக் கொன்றபின் நாடுதிரும்பும் தீசஸ் படகு ஏதென்ஸ் துறைமுகத்தில்  நிறுத்தப்படுகிறது. ஆண்டுகள் பல கடக்கின்றன. படகுக்கு வயது கூட  அவ்வப்போது பழுதாகும் பகுதிகள் புதுப்பிக்கப்படுகின்றன. ஒரு கட்டத்தில் முற்றிலும் புதிய படகாக ஜொலிக்கிறது. உண்மையில் படகின் எந்த பாகமும் பல வருடங்களுக்கு முன்பு தீசஸ் எடுத்துச்சென்ற படகுக்கு உரியவை அல்ல. இருந்தும்  ஏதன்ஸ் நகரைவிட்டு புறப்படும்போது படகு எத்தகைய பொலிவுடன் இருந்ததோ அப்படியே இருக்கிறது, தொடர்ந்து அப்படகை  தீசஸ் படகென்றே மக்கள் நம்பினர். மனிதன் தீசஸ் படகுபோல மாற்றத்திற்கு உட்பட்டபோதிலும் அவன் சார்ந்த உண்மைகள் நிரந்தரமானவை, அழிவற்றவை. இளம் வயது பாரதிக்கும், தேசியக் கவிஞனாக இருந்த பாரதிக்கும் கால இடைவெளியில் அவன் உடலும், உள்ளமும் தீசஸ் படகுபோல புதுப்பிக்கப்பட்டவை எனினும் வெளியுலகிற்கு – உங்களுக்கு – எனக்கு பாரதி என்ற கவிஞனின் பிம்பம் நிரந்தரமானது அழிவற்றது.

          ஆங்கிலத்தில் identity ( அடையாளம்) என்கிற வார்த்தையின் மூலம் இலத்தீன்  ‘idem’,  பொருள் : « அதுதான் இது ». ஒரு வகையில் அடையாளம் என்பது  ‘தான்’ அன்றி வேறில்லை. சுருங்கக் கூறின் அடையாளப்படுத்துவதென்பது பெருங்கூட்டத்திலிருந்து ‘ தான்‘-ஐ பிரித்துணர்வது. ஒன்றை அடையாளப்படுத்த பல தனிமங்கள் இருக்கலாம், ஆனால் அவை அனைத்தும் கூட்டாக அடையாளப்படுத்துவது அந்த ஒன்றையே : அது ‘தீசஸ் படகு’ அல்லது ‘பாரதி’ என்கிற உண்மை. ‘தான்‘ எத்தனை அவதாரம் எடுத்தால் என்ன, அது எப்போதுமே ‘தான்’ அன்றி வேறில்லை. அது ஒருபோதும் A =B ஆகமுடியாது.A=A  ஆக மட்டுமே இருக்கமுடியும்.

          இந்திய துணைக்கண்டத்தின் வேதமரபுகளில்  ‘தான்’ என்ற சொல்லின் பூர்வாங்க வேரைத் தேடினால் ஒன்று,  பரம்பொருள், முழுமுதல், ஆத்மா எனபொருள் தருகின்றன. பாரதி ‘ஆண், பெண் , மனிதர், தேவர்….’ என ஒரு பட்டியலிட்டு அனைத்தும் ஒன்று என்கிறான்.

           ‘தான்’ தெய்வம்

ஆண், பெண்,மனிதர், தேவர்,

பாம்பு, பறவை, காற்று, கடல்,

உயிர், இறப்பு – இவை அனைத்தும் ஒன்றே.

ஞாயிறு, வீட்டுச்சுவர், ஈ, மலையருவி,

குழல், கோமேதகம்- இவை அனைத்தும் ஒன்றே.

இன்பம், துன்பம், பாட்டு,

வண்ணான், குருவி,

மின்னல், பருத்தி – இஃதெல்லாம் ஒன்று.

மூடன், புலவன், இரும்பு, வெட்டுக்கிளி – இவை ஒரு பொருள்.

வேதம், கடல்மீன், புயற்காற்று, மல்லிகை மலர்-

இவை ஒரு பொருளின் பலத்தோற்றம்.

உள்ளதெல்லாம் ஒரு பொருள் ; ஒன்று.

இந்த ஒன்றின் பெயர் « தான் »

‘தான்’ தெய்வம்.

‘தான்’ அமுதம், இறவாதது.

அனைத்தயும் ஒன்றாகக் காண்பதன் மூலம் தன்னை பலவாக பார்க்கிறான், பாரதி. « முப்பது கோடி முகமுடையாள், உயிர் மொய் புற வொன்றுடையாள் – இவள் செப்பு மொழி பதினெட்டுடையாள் – எனிற் சிந்தனை ஒன்றுடையாள் », எனப் பாடியவனும்  அக்கவிஞன்தான். ஜீவராசிகள், பஞ்சபூதங்கள், தாவரங்கள் எல்லாம் ஒன்றே என்பதன் மூலம்  பாரதி தெரிவிக்கின்ற உண்மை பாலுள் நெய்போல் ஞாலம் எங்கணுமூலமுதலுளது, என்ற உண்மை. நம்மில் அவனும் அவனில் நாமும் உய்த்திருக்கிற உண்மை, அவன் மரணத்தைவென்ற கவிஞன். ‘தான்’  தெய்வம். ‘தான்’ அமுதம், இறவாதது எனப்பாடியதற்கு வேறென்னபொருள் இருக்க முடியும் .

அகத்திலுறும் எண்ணங்கள் ;

புவியின் சிக்கல் அறுப்பவைகள் ;

புதியவைகள் ;

அவற்றையெல்லாம்

செகத்தார்க்குப் பாரதியார்

சித்தரிப்பார்

தெளிவாக,

அழகாக,

உண்மையாக !

                              – பாரதிதாசன்

இறந்தகாலம் நாவலில் இருந்து ….

Tu Connais la Nouvelle? என்ற் பிரெஞ்சு அமைப்பு இலக்கிய ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் என்னுடைய இறந்த காலம் நாவல் பிரெஞ்சு மொழிபெயர்ப்பான ‘Je vis dans le Passé’ பிரதியிலிருந்து தமாரி ( Tamari Tchabukaidze) என்கிற மேடை நாடகை நடிகையால் வாசிக்கப்பட்ட பகுதி

“………….கடற்கரையில் காந்தி சிலையிலிருந்து துய்ப்ளே சிலைவரை இருவருமாக நடந்து திரும்பியபின், பழைய கலங்கரை விளக்கிற்கெதிரே இருந்த சிமெண்ட் கட்டையில் கடலைப் பார்த்தவாறு உட்கார்ந்தார்கள். இதுவரை சராசரி மனிதர்களைப் போலவும் வழிகாட்டிப்போலவும் ஆஸ்ரமம், மணக்குள விநாயகர் கோவில், பாரதிப்பூங்கா, ஆயி மண்டபம், கவர்னர் மாளிகை, இந்தோசீனா வங்கி யுகோ வங்கியாக மாறிய கதை கடற்கரை ஓரமிருந்த தேவாலயம்.என்று அறிமுகப்படுத்திக்கொண்டும் இடைக்கிடை குட்டிகுட்டிக் கேள்விகளுக்குப் பதில் தெரிவித்துக்கொண்டுமிருந்த மாதவன்,  இருவரும் உட்காரக் காத்திருந்ததுபோல, “ புதுச்சேரி பற்றி உன் அபிப்ராயமென்ன?” என்று கேட்டான்.

சிலநொடிகள் தாமத த்திற்குப் பின் பதில் வந்தது. – எந்தப் புதுச்சேரி பற்றி என்னுடைய கருத்தைசொல்ல.  மேற்கின் எச்சங்களாகத் தங்கிப்போன வீதிகள், காலனி ஆதிக்க வரலாற்றுச்சின்னங்கள் ஆகியவற்றிற்கிடையே கடந்த நான்கு மணி நேரமாக நான் கண்ட கடற்கரை, ஆஸ்ரமம், இந்துக்கோவிலென்றிருக்கிற கிழக்குப் புதுச்சேரியைப் பற்றியா அல்லது பேருந்துநிலையம், காளான்கள் போன்ற புறநகர்பகுதிகள் என்றிருக்கும் மேற்குப் புதுச்சேரி பற்றியா? இவை இரண்டில் உனது தேர்வு எது?  என்னைக்கேட்டால் காலையில் உன்வீட்டிற்கு வருவதற்கு முன்பாக பார்த்த மேற்கு புதுச்சேரி அழகு. அது இயற்கையாக இருக்கிறது. சரண்யா, மாதவன், ரங்கநாயகி அம்மா, ஈஸிசேரில் ஒரு அப்பா என்றிருக்கிற குடும்பத்தைப்போல. உன் அம்மாவையும், சரண்யாவையும் எங்கள் வீட்டிற்கு கடத்திப் போகலாமா என்றுபார்க்கிறேன்.  என் அம்மாவிற்கும் ரங்கநாயகி அம்மாள் பற்றி ஒரு மின்னஞ்சல் எழுதும் எண்ணமிருக்கிறது.  அபிப்ராயம் புதுச்சேரி என்ற ஊரைப்பற்றியது என்றால் அவரவர் ஊர், அவரவருக்கு அழகு. உனக்குப் புதுச்சேரி அழகெனில். அமெரிக்கா ஜெஸிக்காவிற்கு அவள் பிறந்த பசடீனா அழகு. அந்தவகையில் பாரீஸ் எனக்கு அழகு.  பாரீஸை மறந்துவிட்டு புதுச்சேரியியின் அழகைப்பேசு என்றால் ஆரோவில் பஸ்ஸிலிருந்து இறங்கும்போது பார்த்த பேருந்து நிலையம் அழகு, ஆட்டோவில் வந்தபோது விநோதமான குழல் வாத்தியமும், டமடம மேளமுமாக, கொத்தாக இலைகளை பிடித்துக்கொண்டு மஞ்சள் ஆடையில் நாக்கைத் துருத்திக்கொண்டு ஆடியபடி நடந்த பெண்மணி அழகு. கோணிப்பையை விரித்து, வெற்றிலைச் சாறை துப்பிய வேகத்திலேயே கொத்தமல்லி புதினாவென்று கூவி விற்ற பெண்மணி அழகு, வெத்திலை எச்சிலை காலில் வாங்கிய மனிதர் முகம் சுளித்தது அழகு, அவர் மீது மோதிக்கொண்ட சிறுவன் அழகு, Tiens! எப்படி அதைச் சொல்ல மறந்தேன், கோவிலில் பார்த்த குழந்தைகூட அழகுதான். புதுச்சேரியைக் காண என்பதைக்காட்டிலும் புதுச்சேரி மனிதர்களைப்  பார்க்க வந்தேன் என்று சொல்வதுதான் சரி.  மனிதர்கள் மூலமாகத்தான் ஒரு நகரம் அழகைப் பெறுகிறது. உண்மையில் புதுச்சேரியைத் தேடி வந்தேன் என்று சொல்வது இன்னும் கூட பொருத்தமாக இருக்கும். பாரீசில் இல்லாத  சில புதுச்சேரியில் இருக்கின்றன. புதுச்சேரியில் கிடைக்காத சில பாரீசில் கிடைக்கலாம்.  மனிதர்கள் பயணம் செய்யும் நோக்கமே இங்கே இல்லாதவை அங்கே கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான். அரவிந்தர் தோழி புதுச்சேரிக்கு வந்தது அவருக்குப் பாரீஸில் கிடைக்காத அரவிந்தரைத் தேடி. அரவிந்தரால் அவர் தோழிக்குப் புதுச்சேரி அழகு. எனக்கும் நான் தேடும் பொருள் கிடைக்கும் இடமெல்லாம் அழகுதான்……..

சரி உனக்கென்ன ஆரோவில் என்ற பெயர் மேல அப்படியொரு கோபம்.

– எங்க வீட்டுக் கூடத்தில் மாட்டியுள்ள படத்தில் இருக்கிற தாத்தாவைத் தெரியுமில்லையா? இந்தக் கோபம் அவர்கிட்டே இருந்து எனக்கு வந்திருக்கலாம். காந்தி அபிமானி. பிரிட்டிஷ் இந்தியச் சுதந்திரப் போராட்டத்தோடு ஒப்பிடும் அளவிற்கு இங்கே பெரிதாக எதுவும் நடக்கவில்லை என்கிறவர்.  இங்கு போராட்டமென்று நடந்ததெல்லாம் கலவரம் என்பது அவர் கருத்து. தியாகிகள்னு சொல்லனும்னா ஆலைத் தொழிலாளிகளைத் தான் சொல்லனும் என்பார்.  அவருடைய பங்காளிவீட்டுல ஒரு குடும்பமே அதனாலப் பாதிக்கப்பட்டதென்கிற வருத்தம் அவருக்கு.  நீ தப்பாக எடுத்துக்கொள்ளமாட்டாய் எனில் என்னுடைய அனுபவத்திலிருந்து சொல்கிறேன். ஆரோவில்லில் இருக்கும் உங்களுடைய ஆட்கள் பலருக்கும் தாங்கள் உயர்ந்த இனமென்கிற எண்ணம் நிறைய.  அக்கம்பக்கத்திலிருக்கிற ஏழைத் தமிழர்களை  காலனிகால கூலிகளாகப் பார்க்கிறார்கள்.    காலனி ஆதிக்கத்தின்போது  புதுச்சேரி நகரத்தின் ஒரு பகுதியைத் தங்களுக்கென  உங்கள் மக்கள் ஒதுக்கிக்கொண்டார்கள். பிறகு அரவிந்தரோடு மிரா அல்ஃபஸ்ஸா சேர்ந்துகொள்ள  பிரெஞ்சு அரசாங்கம் இந்த ஆன்மீக ஜோடிக்கு, கேட்டவரத்தையெல்லாம் கொடுத்தது. வெள்ளையர் பகுதிகளெல்லாம்   ஆஸ்ரமத்தின் கைக்கு வந்தன. இதன் அடுத்த கட்டமாகத்தான்  ஆரோவில்லைப் பார்க்கவேண்டும். பெருகும் அபிமானிகளின் எண்ணிக்கைக்கு ஒப்ப ஆஸ்ரமத்தை விரிவாக்க ஆரோவில், அரவிந்தரின் தோழிக்குத் தேவைப்பட்டது.  உலகமெல்லாம ஒரு குடும்பம்  எனும் ஆன்மீக மார்க்ஸியத்தின் அடிபடையில் சமயமில்லை, எல்லையில்லை, பொருள் வேண்டியதில்லை என்றெல்லாம் சொல்லப்பட்டது.  ஆரோவில்லில் தற்போதைய நிலமை என்ன?  பணமில்லாதவர் உள்ளேநுழையமுடியாது.  சுதந்திரம் சமத்துவம் என்ற உங்கள் தேசத்து வார்த்தைகளெல்லாம் இங்கும்  உச்சரிக்கப்பட்டன. அரசியல் மார்க்ஸியம் எப்படியோ இந்த ஆன்மீக மார்க்ஸியம் கண்டது என்னைப் பொறுத்தவரை தோல்வி. சமத்துவத்தை நிலைநாட்ட ஆசைபட்டால் சுதந்திரத்தைத் துறக்கவேண்டும், சுதந்திரம் இருக்குமிடத்தில் சமத்துவத்திற்கு வாய்ப்பேஇல்லை. இரண்டையும் இணைப்பது எப்படிச் சாத்தியம்? சமயம் பாமர மக்களை  அடிமைப்படுத்த என்றால், ஆன்மீகம் அறிவாளிகளை அடிமைகொள்ள.  ஜெஸிக்காவை சந்தித்ததுபோல பிரான்சுவாஸ், செலின், எதுவார், கிற்ஸ்டோபர் என ஆரோவில் மனிதர்களை சந்தித்துப் பேசு,  ஒவ்வொரு மனிதரிடமும் ஒருவகையான ஆரோவில் கனவு இருப்பது புரியும்.  அதுபோல அக்கம்பக்கத்திலுள்ள கிராம மக்களிடமும் பேசிப் பழகு.  நீ புரிந்துகொள்ளவேண்டிய இன்னொன்று, ஆரோவிலியன்கள் எல்லோருமே  அரவிந்தருமல்ல,  மிரா அல்ஃப்ஸ்ஸாவுமல்ல. , வாழ்க்கையின் முதிர்ச்சியில், வயதின் முதுமையில், அவர்கள் கண்ட கனவுலக வீட்டின் கதவைத் தட்டுகிறவர்களெல்லாம் வாழ்க்கையை வாழ்ந்திராத மனிதர்களாக இருப்பது பெரும்பிரச்சினை. இங்கு வருகிறவர்கள் கர்ம யோகிகள் அல்ல, வாழ்க்கை போகிகள், சராசரி மனிதர்கள். தப்புகள் நடக்க வாய்ப்புகள் அதிகம்.  ஊர்கூடி தேர் இழுக்கிறபோது, மொத்தபேருக்கும் எந்த திசையில் தேர் போகவேண்டும், எங்கெங்கு ஆராதனைக்கு நிற்கவேண்டும் என்று தெரிந்திருக்கவேண்டும். சில  நல்லது நடந்திருக்கிறது என்பதையும் நான் மறுக்கவில்லை. ஆனால் இந்த விடியல் நகரம் இன்னும் வைகறையைக்கூடகாணவில்லை….”

மாத்தா ஹரி பிரெஞ்சு மொழிபெயர்ப்பு நாவலில் மே 30ம் தேதி châteaudun தமிழ் இலக்கிய நிகழ்வில் வாசிக்கபட்ட பகுதி.

நாவலின் ஒரு பகுதியை  அல்லது ஒரு அத்தியாயத்தை வாசிக்கவிருந்த  ‘ தமாரி’ என்ற பெண்மணி நாவலின்  பிரெஞ்சு மொழிபெயர்ப்பிலிருந்து தாம்   தேர்வு செய்த பகுதியை அனுப்பியிருந்தார். அப்பகுதி மறைந்த திரு கி. அ. சச்சிதானந்தம், நாவலின் தமிழ் பதிப்புப் பற்றிய தம்முடைய கட்டுரையில் சிலாகித்திருந்த பகுதி. இநாவலைக் குறித்து பகிர்ந்துகொள்ள வேண்டிய உண்மைகள் நிறைய இருக்கின்றன. இதன் தொடர்ச்சியாக பின்னர் எழுதுகிறேன்.

30 மே அன்று வாசிக்கப்பட்ட பகுதி கீழே :

‘வானத்து சுடர்களெல்லாம் மிக இனியன. மழை இனிது, மின்னல் இனிது, இடி இனிது. கடல் இனிது காடு நன்று’ எனப்படித்தப் பாரதியின் ‘காட்சி நினைவில் விரிந்தது. மழையின் எல்லாப் பரிணாமங்களும் பவானிக்குப் பிடித்தமானது: சினம், நிதானம், பாய்ச்சல், பரிவு, விழுமியம், குரூரம், ஆளுமை, வன்மம், விதுப்பு, உடல், மனம், விளிம்பு, நுனி, ஓரம், கூரை விழல்முனையின் குன்றிமணிக் காய்ப்புகள், இலைச் சரிவுகளில் எடுக்கும் ஓட்டம், நீர்க் காளான்களாய் நிலத்தில் இறங்குமுன் உள்ளங்கைகளில், உதடுகளில், பற்களில், கண்களில், கண்மடல்களில், இமை மயிர்களில், மார்பகங்களில், இதயத்தில் நிகழ்த்தும் அதன் செப்படி வித்தைகள், ஆனந்தப்படும் உடல், ஏற்படுத்தும் கிளர்ச்சி, அதன் முன்பின் காலங்கள், போதிக்கும் பாடங்கள், கற்றுத் தரும் அனுபவங்கள் எல்லாமே விருப்பமானது. அதை எதிர்கொள்ள, முடிந்ததைச் செய்திருக்கிறாள். ஒதுங்கிக் காத்திருந்து சிறுமியாய் ஓடும்நீரில் கப்பல் விட்டு அது கவிழாமல் பார்த்துக்கொண்டிருக்கிறாள்; பதின்வயதில் பாவடை நாடாவை இறுக்கிக்கட்டிக்கொண்டு, வாசல் நீரில் தபதபவெனக் குதித்திருக்கிறாள், விலாப்புறங்களில் இடித்துக்கொண்டு கூத்தாடி இருக்கிறாள், தெறித்து உயரும் நீரை முகத்தில் வாங்கி இருக்கிறாள், ஒருசிலதுளிகள் சந்தடிச்சாக்கில், இவள் சட்டையின் அனுமதிப்பெற்று, முதுகுப்பரப்பிலும், மார்பிலுமாக இறங்கிப்பரவ, கிறங்கி இருக்கிறாள், பாட்டியுடைய இளஞ்சூட்டுக் கோபத்திற்கு அஞ்சியவளாக மூக்கால் அழுதபடி ஏறிவந்திருக்கிறாள், இரண்டு நாட்கள் சேர்ந்தாற்போல தும்மிக்கொண்டு, அவள் அரவணைப்பில் வேதுபிடித்திருக்கிறாள். வாலைக்குமரியாய் மழைக்காதலைப் புரிந்து குடை விரிக்காமல் நிதானமாக நடந்து அதன் அன்பில் நனைந்திருக்கிறாள்; இன்றைக்கு உடல் தழுவும் அதன் தாபத்தைப் தெரிந்து, கலவிக்கு உடன்படுகிறாள், முடிவில் பரவசம் காண்கிறாள். இடியும் மின்னலுமாய் ஊடலை வெளிப்படுத்தும் மழையையும் எதிர்கொள்ளத் தெரிந்தவள், அவள் மண் அல்ல குன்று, பேய் மழையிற் கரைவதில்லை. சூறாவளி நண்பனுடன் சிநேகிதம் கொள்ளும் மழையை வெறுக்கிறாள். கெஞ்சுதலுடன் அந்த உறவு வேண்டாமே என்கிறாள். அதன் வெள்ளப் பிரவாகத்தில் நீச்சல் தெரிந்தவர்களுங்கூட மூழ்கடிக்கப் படுகிறார்களே என்கிற வருத்தம் அவளுக்கு.

புதுச்சேரியிலும் அதன் சுற்றுவட்டாரத்திலும், மழைக்கு முன்னும் பின்னுமான காலங்கள் மெய்சிலிர்க்க வைப்பவை. ஐப்பசி கார்த்திகை மாதங்களில் கடற்கரையில் நின்றபடி, மழைக்குத் தன்னைத் தயார் செய்துகொள்ளும் வானத்தை ஏதோ புதையலைக் கண்டவர்போல அப்பாவின் விழிகளும், உடலும் வாங்கிக்கொள்வதும், அவர் கைவிரல்தொட்டு தன்னுள் பாயும் அனுபவ மின்சாரத்தில் சிறுமி பவானி அதிர்வதும் நிறைய நடந்திருக்கிறது. மழையை வரவேற்கும் அப்பா மேலுக்குச் சட்டை அணிவதில்லை. துண்டைக்கூட வீட்டில் போட்டுவிட்டுத் திறந்த மார்புடன் ஆவேசம் வந்தவர்போல இவளை இழுத்துக்கொண்டு நடப்பார். ‘பார் பார் மேலே பார்.. அங்கே… இதோ இந்தப்பக்கம் அடிவானில்….’ தவறவிட்டால் இனிக் கிடைக்காது என்பதுபோல. அதற்குப் பிறகு அவர் புலன்களின் காட்சித்தரவுகள், துணுக்குச் சித்திரங்களாகத் துளிர்விட்டு கொடிகளாகச் சுற்றிக்கொள்வதும், பல நேரங்களில் கிளைபரப்பி அசைவதும் அவளிடத்தில் நடந்திருக்கிறது. “மழை ஒரு மகத்தான ஜீவன். நம்பிக்கைகளுக்கு ஆதாரமாக இருந்திருக்கிறது, கனவுகளை நிறைவேற்றி இருக்கிறது, என அப்பா சொல்லிமுடித்துவிட்டு அடிவானத்தைப் பார்க்கவும், சோர்ந்திருக்கும் சூரியனை மேகங்கள் சூழ்ந்துகொள்ளும். பின்னர் அவற்றைக் காற்றின் கைகொண்டு சூரியன் வழித்துப்போடுவதும், அவ்விடத்தை வேறு மேகங்கள் ஆக்ரமிப்பதும் நடக்கும். சாம்பல் வண்ணத்தில் இருள் படர, பகல் தியானத்தில் ஆழ்ந்துவிடும். நெளிவுகளில் தன் உடல்காட்டி பகலின் மோனத்தை குலைக்கவென்று கடல் அலைகள் மூலம் முயற்சிக்கும், தொடர்ந்து நாசித் தமர்களில், ஈரத்துடனான கவிச்சி. தனது உடலைக் குறுக்கித் திணிப்பதுபோல பவானி உணரும்போது, ‘அப்பா வீட்டிற்குத் திரும்பலாமே’, என்பாள். அவர், இவளைத் திரும்பிப் பாராமலேயே, ‘ஸ்ஸ்ஸ்ஸ்..’.என்பார். ‘மழையில் நனைந்து பழகிக்கொள். பனிக்குளிருக்கும், அலைக்கும் காற்றுக்கும், சுட்டெரிக்கும் வெயிலுக்கும் இல்லாத மகத்துவம் மழைச் சஞ்சீவியில் இருக்கிறது மகளே! வாழ்வியல்மேட்டையும் பள்ளத்தையும் சமதளத்தில் நிறுத்துவதற்கான வல்லமை நீருக்கும் அதன் தாயான மழைக்கு மட்டுமே உண்டு. நமது பிறப்பிற்கும், உயிர்வாழ்க்கைக்கும் மழையே ஆதாரம். வயிற்றுக்கு உணவு இல்லையென்றாற்கூடச் சக்கரவாகப் பறவைபோல எனக்கு மழையை உண்டு பசியாறமுடியும், நமது எல்லா வலிகளுக்கும் மழையே நிவாரணம்’, என்பார்.

கோடையில் கடைசிவரை ஏமாற்றப் பழகி, விரக்தி எச்சிலாய் நாக்கில் துளிர்க்கும் மழை, ஆடிமாதத்தில் வீட்டிற்குள் நுழைவதற்குள் இடியும் மின்னலுமாகச் சடசடவென்று பெய்து நம்மைத் தொப்பலாக நனைத்துத் தெருவில் புழுதியாய் மணக்கும் மழை, போது போதும் என்று புலம்பினாலும் இரவு பகலாக இடை விடாமல் ஹோவென்று மண்ணில் இறங்கி, ஐப்பசி கார்த்திகை மாதங்களில் பூமியை வெள்ளக்காடாக மாற்றி, நொப்பும் நுரையுமாகப் பாய்ந்து கடலை ஆர்ப்பரிக்க வைக்கிற மழையென அப்பாவால் அறிமுகப்படுத்தப்பட்ட மழையிற்தான் எத்தனை விதம். தனது இறப்புக்கூட ஒரு மழை நாளில் நடைபெறவேண்டுமெனத் தீர்மானித்தவர்போல, இவள் பார்த்துக்கொண்டிருக்க அவர் கடலில் இறங்கியதும், கரையில் நின்று கதறியதும், உப்பிய வயிறும் சிவந்த கண்களும் ஈக்கள் மொய்க்கும் மூக்குமாக வாசலில் கிடத்தி இருந்த அப்பாவை எரிக்க, ஈரவிறகிற்கு டின் டின்னாய் மண்ணெண்ணெய் தேவைப் பட்டதை, அரிச்சந்திரன் கோவிலில் நின்றபடி பார்த்துக்கொண்டிருந்ததும் நேற்று நடந்ததுபோல இருக்கிறது. மழைகாரணமாக இரண்டு நாட்கள் தொடர்ந்து அவரது உடலை எரிக்கவேண்டி இருந்ததென்று வெட்டியான் சொன்னான். அப்பாவைத் தீயில் எரித்ததைவிட மழையிற் கரைத்திருக்கலாம்.

அறையைவிட்டு வெளியில்வந்தாள், தென் திசையில் பார்வையின் முடிவில் நீள் வரிசையில் மரங்கள். என்னென்ன மரங்கள் அவை என்பது தெளிவில்லாமல் இருக்கிறது. அவை அரியாங்குப்பம் ஆற்றின் கரை ஒட்டியும் ஒட்டாமலும் வளர்ந்து நிற்கும் தென்னை, பலா, மாமரங்கள். வெண்புள்ளிக் கூட்டமாய் மடையான்கள், கொக்குகள், நாரைகள். மேலாக ஐம்பதில் நரைத்த மனிதத்தலைபோல கறுத்தமேகம். இவள் பார்த்துக்கொண்டிருக்க சருகுகள் சிவ்வென்று மேலெழும்பி, சிட்டுக்குருவிகள்போலத் தட்டாமாலையாகச் சுற்றிவிட்டு மயக்கத்துடன் பூமியில் விழுகின்றன. காற்றுக்கு ஈடுகொடுக்க முடியாத மரங்கள், இரண்டொருமுறை அசைந்துகொடுத்துவிட்டு, ஏதோ செய்யக்கூடாததைச் செய்துவிட்டதைப்போல நிறுத்திக்கொள்கின்றன. அடுத்து அதிகாலைநேரங்களில் கடற்கரைமணலில், கால் புதைய நடக்கிறபோது, உடலைச் சுற்றிக்கொள்ளுமே குளிர்ந்த காற்று, அப்படியான காற்று. இப்போது இடைக்கழி, கூடமென்று நடந்து வாசலுக்கு வந்திருக்கிறாள். காற்று ஓய்ந்து உடலில் இதமாய்ப் பரவும் வெப்பம். இடக்கையால் உலக்கை மாதிரி இடப்புறம் நிற்கிற தூணைப் பிடித்தாள். பிறகு இடதுகாலால், கவனமாக குதிகாலைப் பின்னே தள்ளி தூணைக் கெந்தி அணைத்தைப்படி வாசலூடாக மீண்டும் விண்ணைப் பார்க்கிறாள். காற்றில் வழுக்கும் முதல் நீர்முத்து, மீன்கொத்திபோலச் செங்குத்தாக அவள் கண்மணியைக் குறிவைத்து இமைமயிர்களில் விழுந்து ஊசலாடி முடிக்கும் முன்பு, சட்டென்று விழிமடல்களில், அடுத்தடுத்து குதித்து விளையாடுகிறது, த¨லையை சிலுப்பிக்கொள்ள நேரிடுகிறது, கிறக்கத்தில் வலது கையைக் குவித்து நீட்டுகிறாள், உள்ளங்கையில் நீர்த் துளி விழுகிறபோதெல்லாம் உடல் சிலிர்க்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக பவானியின் விருப்பமானவைகள் பட்டியலில் காற்றும், தீயும், மண்ணும் ஆகாயமுங்கூட இடம்பெற்றிருக்கின்றன. அதற்கும், மழையேகூட காரணமாக இருக்கலாம். அப்பா இருந்திருந்தால் காரணம் சொல்லி இருப்பார். பிடிக்காதது அவைகளை மறந்து வாழ்வது. அவற்றின் கோபத்தோடும், சாந்தத்தோடும் வாழப்பழகி இருக்கிறாள். வானில் வேர் விடவும், மண்ணில் கிளை பரப்பித் துழாவவும், காற்றைப் பருகவும், நீரைச் சுவாசிக்கவும், தீயில் விரல் நனைக்கவும் அவளுக்கு முடிகிறது. இலையுதிர்காலத்தில் பூக்களையும், கோடையில் மழையையும், எதிர்பார்க்கும் சாராசரி மனிதர்களிலிருந்து வேறுபட்டு, அவற்றுக்கான குறியீடுகளுடன் தனது கதவைத் தட்டுகிறபொழுதெல்லாம் தாழ் திறக்கிறாள். நெஞ்சு பிசையப்பட சர்வமும் சிலிர்த்திருக்கிறாள். பிறரைப்போல நாம் இருப்பதில்லை என்பது இருக்கட்டும், சில நேரங்களில் நாமாகக் கூட நாம் இருப்பதில்லை. அதுதானே உண்மை. நேற்றுப் பாருங்களேன் ‘கா·ப்கா’ போலவே பாய்ச்சலிடும் குதிரை ஒன்றில் செவ்விந்தியனாகச் சவாரிசெய்கிறாள், அவனைப்போலவே அவளது தலையற்ற உடலைப் பார்க்கிறாள். இரண்டு நாட்களுக்கு முன்பிருந்த பவானி இல்லை. இவள் வேறு.

– ‘மழையோடு இப்படி ஆட்டம்போடுவது, பிறகு இரவெல்லாம், மூக்கை உறிஞ்சியபடி தும்மிக்கொண்டு இருப்பது. நாளைக்கு பிரச்சினைகள் என்றால், கிழவி என்ன செய்வேன்’ -பாட்டி.

இச்சொற்களையும், வாக்கியத்தையும் நினைவு தெரிந்த நாளில் இருந்து கேட்டுக்கேட்டு பவானிக்கு அலுத்துவிட்டது.

– என்ன பாட்டி, ஆரம்பிச்சுட்டியா?

– ஆமாண்டி நீபாட்டுக்கு மழையிலே நனைந்து, சளி காய்ச்சலென்று படுத்துக்கொண்டால், அவசரத்துக்கு எங்கேண்ணு வைத்தியனைத் தேடறது.

– இப்படிப் புலம்புவதை விட்டாகணும். இல்லைண்ணா ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் நீ வேண்டாமென்று சொல்லிட்டுப் புறப்பட்டுடுவேன்.

பாட்டியின் கண்களை, மறுகணம் கண்ணீர் மறைத்தது. ஒடுங்கிய கண்களின் இடநெருக்கடி காரணமாக ஒன்றிரண்டு துளிகள் சுருங்கிய முக வரிகளில் விழுந்து பரவின.

– அய்யோ பாட்டி! உன்னை விட்டுட்டு எங்கே போவேன். இறுகக் கட்டிகொண்டாள். தளர்ந்த உடலென்றாலும், அவளது, அன்பின் கதகதப்பு தனது உடலில் பரவட்டும் என்று காத்திருந்து, விலகிக்கொண்டாள். அவள் கண்களைத் துடைத்தாள்.

மெள்ள சிரிக்க முயற்சித்தாள். உதடுகள் ஈரப்பதத்துடன் திறந்துமூட, பற்களற்ற சூன்யத்தை ஒளிரும் கண்கள் நிரப்புகின்றன. இருகண்களிலும் சேர்ந்தாற்போல நீர்த்திரை. முந்தானையைத்தேடி அவள் கை அலைவதைக் கவனித்தாள். அவளை மீண்டும் அணைத்துக்கொண்டாள். பாட்டியின் கண்ணீர் இவளது கன்னத்தில், இவளது கண்ணீர் பாட்டியின் முகத்திலுமாகச் சங்கமித்து உதட்டினைத் தொட்டு கரித்தது. இடியும் மின்னலுமாக மழை இன்னமும் சடசடவென்று பெய்து கொண்டிருக்கிறது. வாசல் நிரம்பி, நீர்க் குமிழிகள் உண்டாவதும், விலகுவதும், உடைந்து தெறிப்பதுமாக இருக்க, பாட்டியை விலக்கிக்கொண்டு கவனிக்கிறாள்.

“இதில் யார்யாருக்கு எந்தக் குமிழி? படைப்பிலக்கணத்தின் விதிப்படி நான் தொடக்கம், உடைந்து தெறிக்கிற நீர்க்குமிழி பாட்டியாகவும் இருக்கலாம், பிறகு அங்கே அதோ அதுபாட்டுக்கு எனது கவனத்திற்படாமல் உடைந்து நீர்த்துப்போகிற குமிழிகளில் அப்பாவும் அம்மாவும் இருக்கலாம். தொடக்கமென்று நான் குறிப்பிட்ட குமிழி, பார்த்துக்கொண்டிருக்க விலகிப் போகிறது, எத்தனை தூரம் போகும்? வாழ்க்கையே விலகல் சார்ந்ததா? இந்தவீட்டையும், பாட்டியையும் விட்டுவிட்டு எப்படி?”

——-