Monthly Archives: ஏப்ரல் 2015

“வல்லினத்தைப் பெரிதும் தவிர்த்த வாய்மொழி”

பாரிசீலிருந்து கவிஞர் கி.பாரதிதாசன் அனுப்பியிருந்த செய்தியைத் மின்ஞஞ்சலில் வாசித்தேன். பின்னர் திரு. முருக பத்மபாபனும் அச்செய்தியை தெரிவித்திருந்தார். சில கணம் துடித்து பின்னர் மனதைச் சமாதானபடுத்திக்கொண்டேன். திரு மதிவாணன் புதுசேரியில் இறந்தார் என்பதுதான் அச்செய்தி.

திரு மதிவாணன் ஆசிரியப்பணியில் இருந்தவர், அண்மைக்காலத்தில் பிரான்சுக்கு குடியேறியவர். இறப்பு தொட்டுவிடும் தூரத்தில் அவர் இல்லை. எப்போதும் நமது வாசலில் இறப்புக் காத்திருக்கிறது எனபது உண்மை. இன்றோ நாளையோ பிறந்தவர் அனைவரும் இறக்கவேண்டுமென்பது இயற்கை நியதி. எனினும் சில இழப்புகள் நம் நெஞ்சைப் பிழிகின்றன.

பாரீஸ் முத்தமிழ்ச்சங்கத் தலைவர் திரு செயராமன், நண்பர் பெஞ்சமின் லெபோ ஆகியோருடன் ஒரு முறை எங்கள் வீட்டிற்குவந்திருந்தார். அதுதான் மதிவாணன் என்ற இளைஞருடனான  முதல் சந்திப்பு. அதற்கடுத்து எப்போதேனும் இரண்டொரு முறை பாரீஸ் தமிழ்ச்சங்க நிகழ்வுகளில் எதிர்கொள்ள நேரிட்டிருக்கிறது, மொத்த சந்திப்பைக் கணக்கிற்கொண்டாலும் சுமார் 30 நிமிடம் அவரோடு உரையாடியிருப்பேன். பல நேரங்களில் தமிழ் இனத்தின்மீது கசப்பும் வெறுப்பும் கோபமும் வருவதுண்டு, ஆனாலும் அவர் வேறுமனிதராக இருந்தார். வித்தியாசமானவராகத் தெரிந்தார். ஒரு மூன்றுமணிநேரம் விழா எடுத்து, ஆரவாரமாக தமிழின்பேரால் மேடையில் ஒரு கூட்டம் முட்டிமோதிக்கொண்டிருக்கும், ஆனால் இவரோ பரமசாதுவாக பார்வையாளர் கூட்டத்திடை, வாடும் செடிக்கு தேடித் தேடி நீர்வார்ப்பதுபோல வல்லினத்தைப் பெரிதும் தவிர்த்த வாய்மொழியால் மனிதர்களைப் உபசரித்து, தமிழ் வளர்த்த இளவல். புதுச்சேரி தமிழரில் ஓர் அபூர்வம், பசுமை மங்கா அருகம்புல். ஒதியமரங்களைக் காட்டிலும் அருகம்புல்தான் வழிபாட்டுக்குரியது

நா.கிருஷ்ணா

மொழிவது சுகம் 18 ஏப்ரல் 2015

பேச்சும் எழுத்தும்

 

பேச்சாளனாக நான் வாங்கிய இரண்டு பரிசுகள், ஒன்று காலாபட்டு அரசு உயர்நிலைபள்ளியில், மற்றது. சென்னை சர் தியாகராயர் கல்லூரியில் – மொழியில் எனக்கிருந்த பற்றைத் தெரிவிக்கும் சான்றுகளாக – பல வருடங்கள் வீட்டில் வைத்திருந்து பின்னர் கரையானுக்கு இரையாகி காலத்தில் கரைந்தது நடந்திருக்கிறது. உயர் நிலைப்பள்ளியில் படிக்கிறபோது மதுரைச் தமிழ்ச்சங்கம் நடத்திய கட்டுரை, கதைப் போட்டிகளிலும், கல்லூரியில் படிக்கிறபோது கட்டுரைப் போட்டிகளில் பங்கெடுத்து வெற்றி பெற்றிருந்தபோதும் அதனை மதித்ததில்லை. பேச்சுப்போட்டியில் பெற்ற வெற்றிகளையே பெரிதாகக் கொண்டாடி இருக்கிறேன். பேச்சு என்னைக் கவர்வதற்கு அந்நாட்களில் பலருக்குமிருந்த காரணம் எனக்கும் இருந்தது. பெரும்பாலானத் தமிழர்களைபோலவே பேச்சுகளைக்கேட்க இலக்கியவிழாவுக்குச் செல்வதுண்டு. இலக்கியமேடைகளில் பொதுவாக முதல் நான்கைந்து வரிசைகளில் ஆழமான சிந்தனை கொண்ட கற்றறிந்த பெருமக்கள் அமர்ந்திருப்பர். மேடையில் அமர்ந்திருப்போர் கவனத்துடன் பேசுவார்கள். நாவன்மையோடு சொல்வன்மையும் ஆழமும் நுட்பமும் கொண்டதாக அப்பேச்சு அமையும். பின்னர் காலம் மாறியது. திராவிடக் கட்சிகள் பின்னாட்களில் பேச்சுமொழியை ஏச்சு மொழியாக, வசைமொழியாக இரட்டை அர்த்தம் தொனிக்கும் மொழியாக, மாற்றி அதற்கு பெருமைசேர்த்தார்கள் -குறிப்பாக எழுபதுக்குப் பின்னர். காரணம் அவர்களுக்கு முன்பாக கூடியிருந்த மக்களின் அறிவை அவர்கள் விளங்கிக்கொண்டிருந்தனர் இக்கொள்ளை நோய் இலக்கிய மேடைகளையும் விட்டுவைப்பதில்லை. முதல் நான்கைந்து வரிசைகளிலும் தற்போது வெகுசன இரசனைகொண்டவர்கள் ஆக்ரமித்துவி ட்டதுதான். இன்றைக்கு அதையும் கடந்து விளம்பர யுகம் என்பதால் தொலைக்காட்சியில் எத்தனை நேரம் ஒருவரின் முகம் காட்டப்படுகிறதோ அதைபொறுத்தே அம்மனிதனின் அறிவையும் நுண்மான் நுழைபுலத்தையும் தீர்மானிக்கிறவர்களாக இருக்கிறோம். விவாதமேடையில் யாரையெல்லாம் தினம் தினம் கூப்பிடுகிறார்களென ஒரு சராசரி மனிதன் பார்க்கிறான். அவனுக்கு அவர்கள்தான் பெருந்தகைகள். இது ஏதோ தமிழ்நாட்டில் மட்டும நடக்கிறதென சொல்லி விரக்தி அடையக்கூடாது. உலகெங்கும் நிலவும் உண்மை.

 

இந்த விளம்பர உலகில் எழுத்து பாதிக்காமல் இருக்கிறதா? சாத்தியம் உண்டா? பெரிய எழுத்தாளர்கள்கூட ரஜனி வந்து வெளியிட்டால் கூடுதல் கவனம் பெறலாம் என நினைக்கிறகாலம். இந்த நிலையில், இந்த விளம்பர உலகில் விருதும், பரிசும் ஓர் எழுத்தாளனை அவனது எழுத்தைத் தீர்மானிக்கும் உறைகல்லாக, தராசு ஆக இருக்க முடியுமா?
விளையாட்டுப்போட்டிகளுக்கு ஓர் எல்லைக்கோடு இருக்கிறது, ஓடும் தூரம் இருக்கிறது. ஆக வெற்றி பெற்றவனை காலமும் தூரமும் கணிக்க உதவுகிறது. போரில் வெற்றியைத் தீர்மானிக்க எதிராளியின் தோல்வி உதவுகிறது. பொருளாதார வெற்றியைத் தீமானிக்க அசையும் அசையா சொத்துகள் உள்ளன. குடும்பவாழ்க்கையின் வெற்றியைகணிக்க தாம்பத்தியமும், பிள்ளைளின் சமூகப் படி நிலையும் இருக்கின்றன. பேசாளன் வெற்றியைக்கூட – அன்று உடன் பேசியவர்களோடு ஒப்பீடு செய்து ஒரு முடிவுக்கு வந்துவிடலாம். ஆனால் எழுத்தின் வெற்றியைத் எப்படி தீர்மானிப்பது? யார் தீர்மானிக்கிறார்கள்? எப்படி தீமானிக்கிறார்கள். தேர்வாளர்களின் பெரும்பான்மையோரில் வாக்குகளைபெற ஏதேனும் மந்திரம் இருக்கிறதா?

 

விருதுவாங்கிய எழுத்தாளர்கள், பரிசு பெற்ற எழுத்தாளர்கள், சிஷ்யர்களை பெருக்கிக்கொள்ள முடிந்த எழுத்தாளர்கள், சினிமாவுக்கு கதைவசனம் எழுத உட்காரும் எழுத்தாளர்கள் – இவர்களெல்லாம் பெரியவர்கள் மற்றவர்கள் சிறியவர்கள் என்றும் வெகுசுலபமாகத் தீர்மானிக்க முடியாதத் துறையாக; காலம் மட்டுமே வெற்றி தோல்வியைக் கணிக்க முடிந்த துறையாக எழுத்து இருப்பது எனக்கு சந்தோஷத்தை அளிக்கிறது. தமிழ்நாடு அரசு பரிசு என்பது என்னைப்போன்ற அதிகம் அறியபடாத எழுத்தாளர்களுக்கு ஒரு சிறிய அங்கீகாரம், தேவைதான், ஆனால் பெருமைப்பட ஒன்றுமில்லை. உலகெங்கும் பரிசினை அறியாத விருதுகளை ஈட்டாத எழுத்தில் சாதனை புரிந்த பல பெயர்கள் எனக்கு நினைவுக்கு வருகின்றன. எனவேதான் நண்பர் இந்திரன் இரண்டு நாட்களுக்கு முன்னர் ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவல் தமிழ்நாடு அரசு பரிசு பெற்றிருக்கும் செய்தியை அறிவித்தபோது அதிர்ச்சி, மகிழ்ச்சி, அச்சம் என்ற கலவை மனதிற் புரண்டது, என்னால் தடுக்க இயலவில்லை.

 

இச்சம்பவத்தில் எனக்கு மகிழ்ச்சி தந்த விஷயம், செய்திக்குப் பின்னர் கிடைத்த மேன்மக்களின் வாழ்த்துகள்.kirushnappar_nayakar__21225
அவை மட்டுமே நிஜம், பரிசு ஒரு Virtual image. நண்பர்கள் பாராட்டுதலில் ஓர் எச்சரிக்கையும் இருக்கிறது, “தலைக்கனம் கொள்ளாதே, கவனத்துடன் தொடர்ந்து எழுது!” என்பதுதான் அது.
தமிழ் நாடு அரசு பரிசுபெற்ற ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவல் மதிப்புரை – பேராசியர் க. பஞ்சாங்கம் காலச்சுவடு இதழில் எழுதியது:
1. வாழ்வின் பன்முகப்பிரதி:
http://www.kalachuvadu.com/issue-165/page69.asp
வணக்கத்திற்குரிய ந.முருகேசபாண்டியன் ‘தி இந்து’ தமிழ் தினசரியியில் எழுதியிருந்தது:
2. சமகாலத்து நாவல்கள்- செஞ்சியின் கதை
http://tamil.thehindu.com/general/literature/சமகாலத்து-நாவல்கள்-செஞ்சியின்-கதை
—————————————-
———————

மொழிவது சுகம் ஏப்ரல் 11 -2015

அ. ஜெயகாந்தன் – குந்த்தர் கிராஸ்jeyakanthan
“எப்போதாயினும் கூற்றுவன் வருவான்” என்பதை ஜெயகாந்தன் விஷயத்தில் மரணம் மீண்டும் உறுதி செய்திருக்கிறது.

 

ஜெயகாந்தன் என்ற மனித உயிரிக்கு மரணம் நேர்ந்திருக்கிறதே யன்றி, ஜெயகாந்தன் படைப்புகளுக்கு இல்லை. மரபுகளில் விடுபடாது, நடுத்தர குடும்பத்தைப் பற்றி பேசுகிறபோதும்கூட மேட்டிமை மையை நிரப்பி தீபாவளி பட்ஷணங்களிடை தங்கள் ரோமாண்டிஸத்தை கடைவிரித்தவர்கள் காலத்தில்; விளிம்பு நிலை மக்களை, அவர்கள் வாழ்க்கையை, அதன் அழகை, ஆபாசத்தை, அறுவறுப்பை கலைப்படுத்தவும், மனம் சுளிக்காமல் வாசிக்கவும் செய்த படைப்பாளி.

 

ஒரு நவீன இலக்கியத்தின் உபாசகனாக நான் கொண்டாடுபவர்கள் தமிழில் இருவர்: ஒருவர் ஜெயகாந்தன் மற்றவர் சுந்தர ராமசாமி. செயற்கை இழைகளில் பின்னாமல், சித்துவேலைகள் செய்யாமல் இயல்பாய் படைப்பிலக்கியத்தை ஒளிரச் செய்த கலைஞர்கள். இருவரும் வெவ்வேறு பாதையில் வெவ்வேறு வாகனங்களில் பயணித்தவர்கள் என்பதும், அப்பயணங்கள் கால நேர வர்த்த்மானங்களுக்கு உட்பட்டவை என்பதும் மறுக்க முடியாதவை.எனினும் அவர்கள் சாலைகள் இணையானவை, ஒருவருடையது குண்டும் குழியுமான சாலையுமாகவும், மற்றவருடையது வழுவழுப்பான தார்ச்சாலையாகவும் (நேர்மையான ஒப்பந்ததாரர் ஒருவர் போட்ட சாலையென்று வைத்துக்கொள்ளுங்கள்) இருந்தபோதும் அவை இரண்டுமே ஒரு திசை ஓர் இலக்கு என்று செயல்பட்டவை. நாடாபுழுக்களின் தொல்லையால் சோகைப்பட்டுக்கிடந்த நவீனத் தமிழிலக்கியம் ஆரோக்கியமாக எழுந்து உட்கார காரணமானவர்கள். ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன் ஒருவீடு ஒரு உலகம்’, சுந்தர ராமசாமின் ‘ஒரு புளியமரத்தின் கதை’ இரண்டுக்கும் நிகராக வேறொரு தமிழ்ப் படைப்பை வைத்து சமன்படுத்த எனது நவீன இலக்கிய அறிவு ஒப்பவில்லை. அவற்றைப் பற்றி நிறைய பேச இருக்கிறது. ஜெயகாந்தனை நவீன படைபுலகின் பிரம்மனாக காண்கிறபோதெல்லாம், படைப்பின் நுட்பங்களிலும் நுணுக்கங்களிலும் தேர்ந்த பெருந்தச்சனாக எனது நினைவில் வடிவம் கொள்கிறவர் சுந்தர ராமசாமி.
ஜெயகாந்தன் என்றபெயரை உச்சரிக்கிறபோது நினைவுகூரமுடிகிற மற்றொரு பெயர் மகாகவி பாரதி – கம்பீரமாக முண்டாசுகட்டிய மீசை பாரதி. பாரதியைப் பற்றி அறிந்ததெல்லாம் அவனுடையை கவிதைகள் ஊடாகத்தான். அவனைக்குறித்து நாம் கட்டமைத்துள்ள வடிவம் எத்தனை கம்ப்பீரமாக அக்கவிதைளிடையே தோற்றம்தருகிறதென்பதை, அவற்றை வாசிக்கிறபோதெல்லாம் உணர்ந்திருக்கிறேன். பாரதி ஒரு கவிதை ஜெயகாந்தனென்றால், ஜெயகாந்தன் ஒர் உரைநடை பாரதி. பாரதி கவிதைகளை வாசிக்கிற அதே அனுபவம் ஜெயகாந்தன் எழுத்தில் கிடைத்திருக்கிறது. ஜெயகாந்தன் இறுதிக்காலத்தைக் குறித்த விமர்சனங்கள் எதுவாக இருப்பினும் அவன் கம்பீரமாக உலாவந்த காலத்தில் எனது மனதில் கட்டியெழுப்பி இதுநாள் வரை போற்றிவருகிற ஓர் அசல் படைப்பாளியியகவே இருந்துவந்திருக்கிறான். ஜெயகாந்த்னை நேரில் கண்ட அனுபவம் உண்டு -அவனுடைய மேடைப்பேச்சைக் கேட்டக் கூட்டத்திடையே. மனதில் பட்டதை துணிச்சலாக கூறும் அந்த அறம், இன்றையத் தமிழரிடத்தில் நமது எழுத்தாளர்களிடத்தில் எனக்குத் தெரிந்து இல்லை. எதற்கு அஞ்சாத மேடைப்பேச்சு, தனது மனதில் இருப்பதை, பிறர் அபிப்ராயத்திற்குக் காத்திருக்காது பேசும் துணிச்சல்; எண்ணம் -எழுத்து- செயல் மூன்றையும் இணைத்து ஓர் வில்லம்புபோல செயல்பட்டவன். கூழைக்கும்பிடு, கால் பிடித்தல், நின்பாதமே சரணம் என வீழ்ந்து மேடைவரம் கேட்கும் மனிதப் பிழைகளுக்கு அவன் மகத்துவம் புரியாது.

 

குத்தர்கிராஸ்330px-Günter_Grass_auf_dem_Blauen_Sofa

இடதுசாரி சிந்தனையாளர், இலக்கியத்திற்கான நோபெல் பரிசை 1999 ஆண்டு பெற்றவர் ஜெர்மன் நாட்டில் நேற்று (13-4-2014) தனியார் மருத்துவம¨னையில் இறந்ததாக செய்தி. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நகறியப்பட்ட ஜெர்மன் எழுத்தாளர். ஜெயகாந்தனைப்போலவே அரசியல் சமூகம் இரண்டுடனும் தமக்குள்ள உடன்பாடுகளையும் முரண்களையும் அஞ்சாமல் எழுத்தில் தெரிவித்தவர் அதனால் பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கிறார். இவருடைய நாவல்களில் Le tambour ( The tin drum), புகழ்பெற்ற நாவல் பின்னர் சினிமாவாகவும் வெளிவந்து பிரெஞ்சு கான் திரைப்பட விழா பரிசையும், ஆஸ்கார் விருதையும் வென்றது  வில்லிப் பிராண்ட்டுடன் இணைந்து பணியாற்றிய இவர், இட்லர் காலத்தில் நாஜிகளில் இளைஞர் அணியில் உறுப்பினராக இருந்தார் என்ற செய்தி பெரும் புயலைக் கிளப்பியது.

இவருடைய நாவல் ஒன்றைப் பற்றி உயிர்மை இணைய இதழில் எழுதிய கட்டுரை

http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=1117

 

ஆ. சுடப்பட்ட தமிழர்கள்

செம்மரம் வெட்டுவதற்குக் தினக்கூலிக்குச்சென்ற தமிழர்கள் சுடப்பட்டிருக்கிறார்கள். பற்வைகளை சுடவும், மீன் பிடிக்கவும் விதிகள் வைத்திருக்கிறார்கள். உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடென்று சொல்லிக்கொள்கிற இந்தியாவில்தான் இந்தக் கூத்து அரங்கேறுகிறது. ஓடவைத்து ஓர் ஆப்ரோ -அமெரிக்கனை சுடும் ஒற்றை அமெரிக்க மிருகத்திற்கும், இருபதுபேரை கட்டிவைத்து சுடும்காட்டுமிராண்டிகளுக்கும் அதிக வித்தியாசமில்லை. ஐஎஸ் தீவிரவாதிகளைபோல கத்தியைப்போல உபயோகிக்கவில்லை. அவர்களுக்கும் இவர்களுக்குமுள்ள வித்தியாசம் இந்த மயிரிழைதான். அநேகமான சுடப்பட்ட துப்பாக்கிகளை ஏந்திய கைகள் இரண்டொரு தமிழருக்கும் சொந்தமாக இருக்கக்கூடும். செந்தப்பிணங்களுக்கு நமது தமிழகக் கட்சிகளும் மிகப்மிகப்பரிவோடு அவர் வசதிக்கேற்ப விலைகொடுக்க முன்வருகிறார்கள். அவர்கள் உயிரோடு இருக்கும்போது ஒரு ஓட்டுக்கு ஆயிரமோ வேறு இலவசங்களோ கொடுக்கவேண்டியிருந்திருக்கும் அத்துடன் ஒப்பிடுகிறது அரசியல் கட்சிகளுக்கு கூடுதலான செலவுதான், ஆனால் ஓட்டு அரசியலைவைத்து பார்க்கிறபோது நியாயமான முதலீடு என அவர்களுக்குத் தோன்றியிருக்கலாம். வாழ்க ஜனநாயகம்!

—————————————–

அரசு நின்று சொல்லும் – அறிவியல் புனைகதை

நீங்க படுக்கிறபோது, எழுந்திருக்கிறபோது, பல் துலக்குகிறபோது, ஷூவுக்கு பாலிஷிடமறக்கிறபோது, அலுவலகம் கிளம்புகிறபோது, எக்குத் தப்பாய் தொட்டு விளையாடும் சக ஊழியையிடமிடமிருந்து எப்படி தப்புவதென யோசிக்கிறபோது ஓர் அரசமரம் உங்களிடத்தில், அரூபமாக நின்றபடி மகனே மகனேண்ணு புலம்பினா, உங்க மன நிலை எப்படி இருக்கும். கடந்த ஒருமாசமா இந்த பிரச்சினை எங்கிட்டே இருக்கு. அரசமரம் பேசுமாண்ணு கேக்காதீங்க? நிலவில் கால் வைத்ததையும், அமெரிக்காவிலே ஜெய்ஹோ ஒலித்ததையுங்கூட ஆரம்பத்திலே ஒருத்தரும் நம்பலை, கற்பனையிலேதான் சாத்தியம்னு சொன்னாங்க. அதுமாதிரிதான் இதுவும். நாளைக்கு உங்களையும் எதாவது ஒரு மரம் தொட்டுப் பேசலாம், ‘சார், பத்து நிமிஷம் என் நிழலிலே நின்றிருக்கீங்க, 100 ரூபாய் ஆகுது, பில்லைப் பிடியுங்க”ண்ணு சொல்லலாம், முத்தொள்ளாயிரத்துலே வரமாதிரி, “எனக்கு வெட்கமா இருக்கும்மா, வேறு எங்கனாச்சும் உங்க காதலை வச்சுக்குங்கண்ணு’ கேட்டுக்கலாம். ஆக நம்புங்க, நம்பிக்கையிலேதான் எதிர்காலமிருக்கு, குடும்பமிருக்கு, கூட்டணியிருக்கு, அமைச்சர்பதவியிருக்கு.

பெயர் வேல் என்கிற வேலாயுதம். டில்லியைச் சேர்ந்த இரண்டு கணினியாளர்களுக்குச் சொந்தமான வாம்ப் நெட்வொர்க்ஸ் என்கிற நிறுவனத்தில் பன்னூடகப் பிரிவில் வேலை. எண்11158, மாக்மில்லன் அவென்யூ, அப்பார்ட்மெண்ட் 10, லாஸ் ஏஞ்ஜெல்ஸ், கலிஃபோர்னியா, யு.எஸ்.எ. ங்கிற முகவரிக்குச் சொந்தக்காரன். காலையிலும் மாலையிலும் கீழ்த்தளத்தில் பாவாடைக் கட்டிய யானைபோல நிற்கிற ஆப்ரிக்க பெண்மணியையும், எனக்காகவே மட்டும் வாய் திறக்கிற அல்லது தேவகி சொல்வதுபோல என்னைப் பார்த்தால் மாத்திரம் குரைக்கிற அவளுடைய நாயையும் தவிர்த்து அமெரிக்க வாழ்க்கையில் பெரிதாக எனக்கு உபத்திரவம் எதுவுமில்லைண்ணுதான் சொல்லணும். எனக்கு சனிதிசை நடக்கிறதென்று மாதவன் சொல்கிறான். அதையே நண்பனும் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டருமான ரமேஷ் பண்டாரியிடத்தில் சொன்னபோது குதிரை கனைப்பதுபோல சிரித்தான். ஒருமாதமா தூக்கமில்லைண்ணு சொன்னால் நம்பமாட்டேன்கிறான். படுக்கை நோகிறது, பால் பழங்கள் கசந்துவிட்டன. தேவகிங்கிற எனது பிரியத்துகந்த காதல் மனைவியை தொடணுங்கிற கெமிஸ்ட்ரி இரத்தத்தில் இல்லை. நான் படிகளில் கால் வைக்கிற நேரமாக பார்த்து, ஹாய் சொல்லியபடி கதவைப் பூட்டுகிற பஞ்சாபி ஆண்ட்டியின் விசாலமான மார்புகள் குறித்த கவனமோ, அவளுடைய பிரெஞ்சு பர்ஃப்யூம் குறித்த பிரக்ஞையோ இப்படி எதுவுமில்லை.

இரண்டுமாதங்களுக்கு முன்பு இந்தியாவிற்குச் செல்வதென்று தேவகியும் மைனஸ் நானுமாக தீர்மானித்தோம். அதற்கு தேவகி இரண்டு காரணங்களை வைத்திருந்தாள். ஒன்று, அமெரிக்காவிற்கு நாங்கள் வந்து நான்கு ஆண்டுகளாக ஆகியிருந்தது, இரண்டு,” அப்பாவும் அம்மாவும் பேரனைப் பார்க்கணுமென்று சதா நச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள்”. எனக்கும் அதுபோல இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, “மருமகனுக்காக நம்ம பெரியாண்டவர்கிட்டே நேந்துகிட்டிருக்கேன், எப்போ அமெரிக்காவிலிருந்து வர, அவனுக்கு முடியிறக்கி காதுகுத்தணும்’ என்று கடிதங்கள் தோறும் வற்புறுத்துகிற அக்காள். இரண்டு, “தனது அமெரிக்க வாழ்க்கையை சிநேகிதிகளுக்கும், உறவினர்களுக்கும்” காட்டியாகணுமென்ற தேவகியின் ஆசை. ஆக இந்த கடைசி விருப்பமே ஊருக்குபோவதென்கிற எங்கள் முடிவுக்குச் சாதகமாக இருந்திருக்கவேண்டும். அப்பா அம்மா இறந்த பிறகு, எங்கள் தாய்மாமாக்களில் ஒருவரை மணந்து எங்கள் கிராமத்திலேயே குடியிருந்தவள் எனது தமக்கை. என்னை படிக்கவைத்தது, சீராட்டியது எல்லாமுமாக இருந்து கவனித்துக்கொண்டதுன்னுஅக்காவைக் கொண்டாட வண்டி வண்டியா காரணங்களிருக்கு. ஆக இந்தியப் பயணம் முடிவானதும் தேவகிக்கு ரொம்ப சந்தோஷம், புறப்படுவதற்கு முன்னால அவசரம் அவசரமா விக்டோரியா பெக்காம் ஸ்டைலில் பாப் வெட்டிக்கொண்டாள். பிரெஞ்சு ஃபேஷன் புத்தகங்களை வரவழைத்து வாசித்தாள், ஆங்கில உச்சரிப்பில் அமெரிக்கர் டிக்ஷன் வருமாறு பார்த்துக்கொண்டாள். “உங்க வீட்டு வழக்கப்படி அருணுக்கு பெரியாண்டவர் கோவிலில் மொட்டைபோட்டு காது குத்தி கிடாவும் வெட்டுவோம், நான் வேண்டாங்கிலை ஆனா என்னுடைய உறவினர்களுக்கும் சிநேகிதிகளுக்கும் எங்கனாச்சும் ஸ்டார் ஓட்டலில்தான் டின்னர் ஏற்பாடு பண்ணனுமென்றாள். அவளுடைய அப்பா தலையைவிட என் தலை நன்றாக ஆடுகிறதென்று அவள் வழங்கியிருந்த பாராட்டுக்கு எதுவும் நேர்ந்திடக்கூடாதென்பதால் வழக்கம்போல தலையாட்டி வைத்தேன்..

முதல் ஒரு வாரம் சென்னையில் கழிந்தது. மறு வாரம் திட்டமிட்டப்படி கிராமத்துக்குப் புறப்பட்டோம். ஏற்பாடு செய்தபடி பெரியாண்டவருக்குப் படைத்து முடி இறக்கி, உள்ளூர் காசி பத்தரைக் கூப்பிட்டு குழந்தைக்கு காதும் குத்தினோம். அந்த மகா மகா இரவு வந்தது. அரசமரத்தடியிலேயே வெகு காலத்திற்குப் பிறகு கயிற்றுக்கட்டிலைப் போட்டு படுத்துவிட்டேன். மாதவன் துணைக்குப் படுக்க வருகிறேன் என்று சொன்னவன், வரவில்லை. திண்டிவனம்வரை போயிருப்பதாகச் சொன்னார்கள். “தனியாக, பனியிலே இப்படி திறந்த வெளியிலே ஏன் படுக்கணும்? உள்ளே வாங்க”, என்றாள் தேவகி. முகத்தைப் பார்த்தேன், இந்த நான்காண்டுகால தாம்பத்யத்தில் தேவகியிடமிருந்து இதுபோன்ற சொல்லாடல்களை அறிந்ததில்லை. “கயிற்று கட்டில், அரசமரம், துணைக்கு நீயும்னா அந்த காம்பினேஷன் இன்னும் ஜோராகவிருக்கும்,” என்றேன், அவளுக்குப் புரிந்திருக்கவேண்டும், தலையில் கொட்டிவிட்டு திரும்பி நடந்தாள்.

எத்தனை மணிநேரம் தூங்கி இருப்பேனோ தெரியாது. வேலு, வேலு என்று அழைப்பதுபோல இருந்தது, சட்டென்று விழித்துகொண்டேன்? சுற்று முற்றும் பார்த்தேன். பகல்போல நிலவு, தூரத்தில் பூவரசுமரமொன்றில் கட்டிருயிருந்த ஒரு ஜோடி உழவுமாடுகளின் கண்கள் நிலவொளியில் நாவற்பழத்திற்குள் மின்மின்பூச்சிபோல ஒளிர்ந்தன. தாத்தாவின் இருமல் சத்தம் எங்கள் வீட்டு திண்ணைக்காய்ப் புறப்பட்டு வந்தது, வேறு மனித நடமாட்டமில்லை. கிராமத்தில் மோகினிப்பிசாசுபற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன், அப்படி ஏதாச்சும்? நினைக்கும்போதே உடல் சிலும்பி அடங்கியது. குளிர் அடிப்பதுபோலிருந்தது. எதிரே அரச மரம் பகலினும் பார்க்க வளர்ந்திருப்பது போலவும் அதன் கிளைகள் வழக்கத்திற்கு மாறாக தரைதொட்டு படர்ந்திருப்பதுபோலவும் பிரமை. பால்போன்ற நிலவொளியில் இலைகள் வெள்ளித்தகடுகளாய் பிரகாசிக்கின்றன. காற்று வேகமாய் வீசும்தோறும் சலசலத்தன. ‘வேலு’ உன்னைத்தான், எழுந்திரு என்று எனது காதருகே முனுமுனுப்பதுபோல இருந்தது. சந்தேகமில்லை இது ஏதோ மோகினி பிசாசுதான். எழுந்து நின்று மனதைத் திடப்படுத்திக்கொண்டு யாரது என்றேன். எதிரே பெரியாண்டவரும் அவரைச் சுமந்திருந்த குதிரையும் அசையாமல் நிற்கிறார்கள். நடு நிசியில் பெரியாண்டவர் வேட்டைக்குப் போவதுண்டென்று சொல்லியிருக்கிறார்கள். அப்படி எதுவும் நடப்பதுபோல தெரியவில்லை. நிலவொளியில் குளிரைப்பற்றிய கவலைகளின்றி அவர் ஆரோக்கியமாகத்தான் இருந்தார். “வேலு என்னைத் தெரியுதா?” என்ற குரல் இப்போது தெளிவாகக்கேட்டது. தேவகிப் பேச்சைக்கேட்டு, அபோதே ‘உள்ளே போய் படுத்திருக்கலாமோ? என்று நினைத்தேன். “தெரியலை!, தைரியமிருந்தால் முன்னாலே வா”, என்றேனேத் தவிர, உண்மையில் பயந்துபோயிருந்தேன். ஒருவேளை பேசுவது பெரியாண்டவராக இருக்குமோ? என்ற சந்தேகமும் வராமலில்லை. என மனத்திலிருப்பதை குரலுக்குடைய ஆசாமி புரிந்துகொண்டிருக்கவேண்டும். “என்ன யோசனையிலே மூழ்கிட்டே, அரசமரந்தான் பேசறேன்”, என்றது மீண்டும் குரல். இப்போது நிலவை முழுதுமாக மேகம் மறைக்கத்தொடங்கி, எங்கும் இருள் சூழ்ந்துகொண்டது.

“வேலு! நீ என்னோட பிள்ளை. இம்முறை குரல் எனது தலைக்குள்ளிருந்து புறப்பட்டு வந்தது.” அதற்கென்ன இருந்துட்டு போறேன்.” “இல்லை நான் சொல்றதை நம்பணும்”, “சரி சரி நம்பறேன், அதுக்காக மாசம் ஆயிரம் டாலர் எனக்கு அனுப்பிவைக்கணுமென்று கேட்டுவிடாதே”, என்றேன். அரசமரம் சிரிப்பதுபோல காற்றில் கிளைகளை அசைத்து சலசலத்தது. ஊருலே பலரும் கேலி பேசியிருக்காங்க. அக்கா பிறந்ததுக்கப்புறம் வெகுகாலம் ஆண்பிள்ளை இல்லைங்கிற கவலையில் அம்மாவும் அப்பாவும் வாட்டத்துடன் இருந்ததாகவும், அம்மா பிள்ளை வரங்கேட்டு அரசமரத்தை சுற்றியதாகவும் பேச்சுகளுண்டு. அதற்காக அரசமரத்தை அப்பாண்ணு சொன்னா எப்படி. எனது அம்மான்னு இல்லை, இந்தியாவுல தெருவுக்கு இப்படி பத்துபேராச்சும் தேறுவாங்க. “உன்னை பெற்றது அரசமரந்தான், உங்க அப்பனில்லை”, என்று என் காதுபட சிலர் பகடிபேசியிருக்கிறார்கள். அதற்காக அரசமரம் என்னிடம் சொந்தம் கொண்டாடுவது என்ன நியாயம்? உறக்கமின்றி கட்டிலில் சிறிதுநேரம் எழுந்து உட்கார்ந்தேன். அரசமரத்துக் கிளைகள் காற்றில் அசைகிறபோதெல்லாம், மகனே! மகனே! என்று குரல்கள்.

காலையில் வெகுநேரம் உறங்கியிருந்தேன். கண்விழித்தபோது தேவகியும், அக்காளும் கவலையுடன் அமர்ந்திருந்தார்கள். “அருண் எங்கேயென்று கேட்டேன். ‘ தாத்தா தூக்கி போயிருக்கார். வடக்கு வெளி பக்கம் போயிருக்கணும், என்ற அக்காள், தொடர்ந்து ” உன் உடம்பு அனலா கொதிச்சுது, நாங்க என்னமோ ஏதோன்னு பயந்துட்டோம். அரசடியிலே எதுக்காக படுக்கபோன, அங்கே காத்து கருப்பு நடமாடுதுண்ணு சொல்லிக்கிறாங்க”, என்று புலம்பினாள். “பயப்படாதக்கா, நானென்ன சின்ன சின்னகுழந்தையா?”, என்று எழுந்தவன் பல்துலக்கிக்கொண்டு தேவகிக் கொடுத்த காப்பியை அவசர அவசரமாக விழுங்கிவிட்டு, எதிர்பட்ட மாதவனை இழுத்துக்கொண்டு மறுபடியும் அங்குதான் போனேன். இரவு சம்பவம் என்னை முழுதாக மாற்றியிருந்தது. நேற்றைய இரவின் சுவடின்றி அரசமரம் பிரமாண்டமாக நின்றுகொண்டிருந்தது. அடிமரத்தில் ஆங்காங்கே முதுமையின் தளர்ச்சி. கிளைகளும், கணுக்களுங்கூட உயிரியல் பூங்காக்களில் பார்க்கிற கிழட்டு சிங்கத்தினைபோல பரிதாபமாக இருக்க, நான் முதன் முறையாக அதை அக்கறையோடு பார்த்தேன். .

– மாதவா என்னடா இது, அரசமரம் ஏன் இப்படி இருக்கு, யாரும் கவனிக்கிறதில்லையா?

– கவனிக்கதான் செய்யறாங்க, வயசாச்சில்லையா. அநேகமாக அடுத்தமுறை நீ வருகிறபோது இருக்காது, வெட்டி அப்புறபடுத்திட்டு, புதுசா நடபோறாங்க.

– அதைத் தடுக்கணுமே.

– எதுக்கு?

– இந்த மரத்துக்கும் எனக்கும் உறவு இருக்குது.

மாதவன் என்னை மேலும் கீழுமாகப் பார்த்தான். உனக்கு ஒண்ணும் ஆகலையே.

– ராத்திரி இங்கே கட்டிலைப்போட்டு படுத்திருந்தேன், கனவா உண்மையில் நடந்ததாண்ணு தெரியலை. அரசமரம் என்னை தன்னோட பிள்ளைண்ணு சொல்றமாதிரி குரலைக் கேட்டேன்.

மாதவன் முதலில் நான் சொன்னதெதையும் விளங்கிக்கொள்ளாதவன்போல அமைதியாக என்னைப்பார்த்தான். சட்டென்று கைகள் இரண்டையும் உதறி உதறி நிறுத்தாமல் குனிந்து, குனிந்து முன்னும் பின்னுமாக நகர்ந்து வெகுநேரம் அடக்க முடியாமல் சிரித்தான். ஊர்க்கிணற்றில் தண்ணீர் எடுக்கவந்த இரண்டொரு பெண்கள் திரும்பிப் பார்க்கிறார்கள். .

– டேய் நீ இப்படி சிரித்தால், எனக்குக் கோபம் வரும், நீ நம்பணுங்கிறதுக்காக நான் சொல்லலை.

– அரசமரம் உன்னிடம் பேசியதாகவே இருக்கட்டும் அதற்கென்ன? போயுட்டு ஆகவேண்டிய வேலையைப்பார்ப்பியா. இந்த லசணத்துலே அமெரிக்காவுலே வேற இருக்க. பொண்டாட்டியோட நாலு எடம் சுத்திபார்த்துட்டு நல்லபடியா ஊரு போய்ச்சேரு.

– இல்லைடா, இந்த மரத்த வெட்டாம தடுக்கணும். அதற்காக நான் என்ன செய்யணும்னு சொல்லு.

– போடா பைத்தியக்காரா. நாமல்லாம் சொன்னா ஒருத்தரும் இங்கே கேக்கமாட்டாங்க. நாட்டாமை வீட்டு சூளைக்கு மரம் தேவைபடுது, மரத்துக்கு வயசாச்சுங்கிறது ஒரு சாக்கு.

அதற்குப் பிறகு ஊரிலிருந்த இரண்டு நாட்களும் அரச மரத்தடியில்தான் எனக்குப் படுக்கை என்றானது. எனக்கும் அரசமரத்துக்கும் விடிய விடிய பேச நிறைய இருந்தன. மாதவன்போல உங்களுக்கு என்மீதான அபிப்ராயம் எதுவானாலும் இருக்கட்டும், அரசமரத்துக்கும் எனக்கும் ஏதோ சம்பந்தமிருக்கிறது என்பதில் திடமாக இருந்தேன். எனது அம்மாவின் ஒழுக்கத்தையும், திருமணம் என்கிற பந்தத்தால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிற தந்தை மகன் உறவுபற்றிய சமூகக் குறியீட்டையும் கேள்விக்குட்படுத்தலாம் என்ற சிக்கலையும் தாண்டி அரசமரத்தை முழுக்க முழுக்க நம்பினேன்.

* * * *
சோதனைச் சாலையில், மூன்று நாட்கள் கழித்து வரச்சொல்லியிருந்தார்கள். எனக்கு முதல்நாள் இரவிலிருந்தே தூக்கமில்லை, அதிகாலையில் பச் என்று கன்னத்தில் பாதி காதில்பாதியென்று தேவகி முத்தமிட்டும், தள்ளி படுக்கத்தான் தோன்றியது. காலையிலிருந்தே அலுவலகத்தில் வேலை ஓடவில்லை. எப்போது மாலை மணி நான்கு ஆகுமென காத்திருந்தேன். பண்டாரி இருக்கையில் இல்லாதது சௌகரியமாக இருந்தது. அவனுடைய காரிதரிசி அல்போன்ஸா இருக்கிறாளாவென்று எட்டிப் பார்த்தேன், நாற்காலி பக்கவாட்டில் திரும்பிக்கிடந்தது. டாய்லெட்டில் சலசலவென்று சத்தம், உள்ளேதான் இருந்தாள், அவள் வெளியிலிருந்தால்தான் ஆச்சரியம். புறப்பட்டுவிட்டேன். பெவெர்லி ஹில்ஸின் பிரதான சாலையைப் பிடித்து, ஹோஷ் அவென்யூவூக்குள் நுழைந்து, காரை நிறுத்த இடம்தேடியபொழுது, புல்வெளிக்கு இரப்பர் குழாய் மூலம் நீர் பீய்ச்சியபடியிருந்த லத்தீன் அமெரிக்க பெண்ணொருத்தி, ஹாய் என்றாள். தொங்கலில் தெரிந்த ஃப்ரோபேஸ் ஜெனெடிக்ஸ் விளம்பரப் பலகையை ஒருமுறை நிமிர்ந்து பார்த்துவிட்டு, படபடக்கும் இதயத்துடன் உள்ளே நுழைந்தேன். வழக்கத்திற்கு மாறாக முகத்தில் வியர்த்துக் கொட்டியது. கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைக்கவும், வரவேற்பிலிருந்த பெண் நிமிர்ந்து பார்த்தாள். அவளிடம் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு நான் வந்த காரணத்தைத் தெரிவித்தேன். என் கையிலிருந்த தாளை வாங்கிப்பார்த்தாள், பின்னர் கணினித் திரையைப்பார்த்தபடி, கடகடவென்று விசைப்பலகையில் எனது கோப்புக்குரிய எண்ணை விசைப்பலகையில் தட்டினாள். பரிசோதனை முடிவின் அறிக்கை வந்திருக்க வேண்டும். உதட்டைச் சுழித்துக்கொண்டு ‘எஸ்’ என்றாள். பின்னர் குனிந்து வரவேற்பு மேசையில் வலப்பக்க இழுப்பறையில் தேடியெடுத்த உறையை என்னிடத்தில் நீட்டினாள். கையில் வாங்கிக்கொண்டேன். அவசரமாக உறையைக் கிழித்து அறிக்கையை வாசிக்க, ‘எக்யூஸ்மி’ என்று எனக்குப் பின்புறம் ஒரு குரல். ஒதுங்கிச் சென்று அங்கு வரிசையாய்ப்போட்டிருந்த நாற்காலியொன்றில் அமர்ந்து நிதானமாக அறிக்கையை வாசித்தேன். உறவுமுறைக்கான சாத்தியம் 0% என்று சோதனை அறிக்கையின் முடிவில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. மீண்டும் வரவேற்பு மேசை பெண்ணிடம் சென்று நின்றேன். அறிக்கை தயாரித்தவரை பார்க்க வேண்டுமே என்றேன். கூப்பிடுகிறேன், கொஞ்சம் உட்காருங்கள் என்றாள். மிகவும் பதட்டமாக இருந்தது. தேவகியிடம் அனைத்தையும் சொல்லி இருக்கலாமோவென தோன்றியது. வீடு பக்கத்தில்தான் இருக்கிறது, அருண் தூங்கிக்கொண்டிருப்பான். அநேகமாக இந்நேரத்தில் இணையத்தில் ஏதேனும் தமிழ் சினிமா பார்த்துக்கொண்டிருக்கலாம் அல்லது சமையல் குறிப்புகள் எழுதிவைத்துள்ள நோட்டை புரட்டியபடி இன்றிரவுக்கு என்ன சமையல் செய்யலாமென அவள், யோசித்துக் கொண்டிருக்கலாம்.

– மிஸ்டர் வேல்! என்ற குரலைகேட்டு எழுந்தேன். ஜான் மாத்யூவென்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட இளைஞன் என்னிடம் கை நீட்டினான், புரிந்துகொண்டு எனது கையை நீட்டினேன். கைகுலுக்கியபடி, பார்வையால் தனது அறையைக் காட்டிவிட்டு முன் நடந்தான். நான் அவனைப் பின்தொடர்ந்து நடந்தேன். இருக்கையில் அமர்ந்ததும் என்னை அமரச்செய்தான். அவனுடைய கையில் எனக்கான சோதனை அறிக்கையின் மற்றொரு படி இருந்தது. உங்க தாத்தா மரபணுமீது நடத்தப்பட்ட Y குரோமோசோம் சோதனையின் அடிப்படையில் உங்களுக்கும் உங்க தாத்தாவுக்கும் உறவு இல்லைண்ணு முடிவுக்கு வந்திருக்கோம். ஆனா ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும், இம்முடிவுகள் நீங்களாகக் கொடுத்திருந்த மாதிரி உயிரணுக்களிலிருந்து உருவானது. இம்முடிவுலே வேறு சந்தேகங்களிருந்தால் சொல்லுங்கள் முடிந்த அளவு விளக்குகிறேன்,” என்றான். “இல்லை, எதுவுமில்லை, புறப்படறேன். நன்றி. என்று அவனிடம் கைகுலுக்கிக்கொண்டு விடைபெற்றேன்.வெளியில் வந்ததுபோது தலை பாரமாக இருந்தது.

அன்றிரவு தேவகியின் கேள்விகளுக்கு என்னிடம் பதிலில்லை. முதன் முறையாக அவளது மறுப்புக்கு செவிசாய்க்கவில்லை. ஒருவார விடுமுறையில் இந்தியாவுக்கு இரண்டாவது முறையாகச் சென்றுவருவதென்பதில் உறுதியாக இருந்தேன்.

* * * * *

சென்னையில் விமான நிலையத்தில், மதியம் ஒருமணிக்கு இறங்கி சுங்க இலாக்காவினரின் சோதனைளையெல்லாம் முடித்துக்கொண்டு வெளியில்வந்தபோது மாதவன் காத்திருந்தான்.

– அக்கா, மாமா வரலையா?

– இல்லைடா. முதலில் அவங்க வருவதாகத்தான் இருந்தது. நெல்லறுப்பு வச்சிருக்காங்க களத்து மேட்டுலே காவல் இருக்கணும். நீ போயிட்டு வந்திடுண்ணு சொன்னாங்க. நானும் சரிண்ணு சொல்லிட்டேன். ஏது உங்க மாமியார் வீட்டுக்குப் போகாம இந்த முறை நேரா நம்ம கிராமத்துக்குப் போகத் துடிக்கிற, அதுக்கு ஏதாச்சும் காரணம் இருக்கணுமே, என்றவனிடம், காரணத்தை ஊருலே போய் சொல்றேன், உன்னிடத்திலா மறைக்கப் போறேன், என்றேன். மாலை ஐந்து மணிக்கெல்லாம் கிராமத்தை அடைந்திருந்தோம்.

‘தம்பி இருந்து காப்பித் தண்ணி குடிச்சுட்டுப்போயேன். எங்கே அத்தனை அவசரமா போற”, என்ற அக்காவின் குரலை காதில் போட்டுகொள்ளாமல் புறப்பட இருந்த மாதவனிடம், “ஆறுமணிக்கெல்லாம் அரசடியிலே வந்திடு பேச நிறைய இருக்கிறது என்றேன். “எந்த அரசடி?” என்றான். “அதாண்டா நம்ம ஊருலே எத்தனை அரசடி இருக்கிறது? பெரியாண்டவர் கோவில் அரசடியைத்தான் சொன்னேன்”, என்றேன். “சரி சரி அதற்கென்ன வந்துட்டாப் போச்சு”, என்றவன் குரல் சுரத்தில்லாமல் ஒலித்தது. அவன்போன பிறகு அக்காள் வெநீர் வைத்துக்கொடுக்க குளித்து முடித்தேன். பிறகு காப்பி வந்தது, குடித்தேன். பயண அலுப்பு இருக்குமில்லையா, கொஞ்சம் படுக்கிறது. நாளைக்கு வேணா செய்யவேண்டியதை பார்க்கிறது, என்ற அக்காவிடத்தில், இல்லைக்கா, மாதவனைத்தான் பார்க்கணும் வேறு ஜோலிகளில்லை, வந்திடுவேன் என்று கிளம்பிப்போனேன்.

அரசமரமின்றி பெரியாண்டவர்கோவில் வெறிச்சோடி கிடந்தது. பழைய மரத்தை வெட்டி, குழியைப்பறித்து, வேர்களை சுத்தமாக அகற்றி மண்ணிட்டு நிரப்பி இப்போது அந்த இடத்தில் வேறொன்றை நட்டிருந்தார்கள். எனக்குப் பெருத்த ஏமாற்றம்.

– என்னடா, அரசமரம் இல்லையென்றா அப்படி பார்க்கற. இன்னும் பத்துவருடத்திலே தளதளண்ணு இது வளர்ந்து அந்த இடத்தை பிடிச்சிடப்போவுது..

– இல்லைடா பழைய மரம் எங்கப்பா மாதிரி..

– ஆரம்பிச்சிட்டியா, மாதிரியாவது பாதிரியாவது, உங்கப்பனை எரிச்ச இடத்துலே புதர் மண்டிகிடக்கு, அதை பார்க்கறதுக்கு இல்லை. அரசமரத்தை அப்பண்ணு சொல்லிகிட்டுத் திரியறான்.

– இந்த ஒரு மாதத்துலே நான் இரண்டாவது முறையா இந்தியாவுக்கு வரக்காரணமே அரசமரந்தான். அரசமரந்தான் பேசுச்சோ, இல்லை அது என்னுடை சொந்தக் கற்பனையோ. இந்த இடத்துலே அந்த இரவுலே எனக்கென்று சில உண்மைகள் சொல்லப்பட்டிருக்கு, அந்த வார்த்தைகளை நம்பறேன். அதை உறுதிபடுத்திக்கத்தான் மீண்டும் வந்திருக்கேன். அது என்னண்ணு தெரிஞ்சுக்கலைன்னா தலை வெடிச்சுடும்போலிருந்தது புறப்பட்டு வந்துட்டேன். அரசமரம் எனக்கு அப்பாவோ இல்லையோ, ஆனா எங்க தாத்தாவுக்கு நான் பேரனில்லை.

– எப்படி சொல்ற?

– Y-STR மரபணு சோதனைண்ணு ஒண்ணிருக்கு, அதை இங்கிருந்து கொண்டுசென்ற சாம்பிளை லேபில் கொடுத்து சோதிக்க சொன்னேன். அவர்களுடைய அறிக்கையின்படி எனக்கும் எங்க தாத்தாவுக்கும் உறவு இல்லை.

– நியாயமாப் பார்த்தா உங்க உங்க அப்பா, அம்மா, நீயென்று உங்கள் மூவருடைய உயிரணுக்களையும் சோதிச்சுதானே ஒப்பிட்டு பார்க்கணும்.

– அப்பாவும் அம்மாவும் இல்லாததால், தாத்தாவோட உதவியை நாடினேன். ஆனா அவர்கிட்டே உண்மையை சொல்லலை.

– உங்க அப்பா எரிச்ச இடத்துலே போயுட்டு ஒரு எலும்பை எடுத்தும்போறது.

– யார் எலும்பை எடுத்தும்போகச் சொல்ற? எங்கப்பாவை எரிச்சதுக்கபுறம் குறைந்தது நான்கு பேரையாவது அந்த இடத்திலே எரிச்சிருப்பாங்கண்ணு சொல்றாங்க

– சரி அதைவிடு, நீ இத்தனை பைத்தியகாரனா இருக்கிறாதால, நான் கேட்கிறேன்? உங்க அம்மா விஷயத்துலே உண்மை இல்லைண்ணு நம்பும் போது, உங்க பாட்டியை மட்டும் எப்படி நம்பறே, அவங்க உங்க தாத்தாவோட இல்லாம வேற ஒருவரோட உறவுவச்சிருந்து உங்கப்பா பிறந்திருந்தாகூடத்தான் உனக்கும் உங்க தாத்தாவுக்குமான மரபணு பொருத்தத்துக்குச் சாத்தியமில்லாம போகும். உயிரியல்வழி தந்தை உறவுமுறையை உறுதிபடுத்துவதேகூட 99.99 விழுக்காடுதான் சாத்தியமென சொல்கிறபோது எல்லாவற்றையுமே சந்தேகிக்கலாமே. பேப்பர்ல படிச்சேன், அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் இந்த சோதனைகளை உணர்வின் அடிப்படையிலே பார்க்க்லை, சமூக பொருளாதார அடிப்படையிலே என்ன லாபம்னு அவங்க பார்க்கிறாங்க. ஏற்கனவே குடும்ப உறவுகள் கலகலத்துபோச்சு, இதுலே இது வேற.

* * * * *

இரவு உறக்கம் வராமல் புரண்டுகொண்டிருந்தேன். திண்ணையில் படுத்திருந்த தாத்தாவிடமிருந்து சுருட்டு நாற்றம், உறக்கத்தை மேலும் சிக்கலாக்கியது. எழுந்து வெளியில் வந்தேன். திண்ணை முழுக்க அடர்த்தியாக இருட்டு, தாத்தாவின் இருப்பை அடையாளப் படுத்தும் பவானி ஜமுக்காளம், இருட்டுக்குப் பொட்டிட்டதுபோல தீக்கங்கு. .

– வா உட்கார்- ஜமுக்காளம் பேசியது.

– தாத்தாவுக்கு உறக்கம் வரலியா?

– இல்லை, ஆனா தேவைன்னா தானாவரும். அரசப்பன்கிட்டேயும் இதைத்தான் சொன்னேன். அவனும் ஒரு இராத்திரி இப்படித்தான் உன்னைப்போல தூக்கமில்லாம தவிச்சான். அர்த்தராத்திரியிலே எழுந்துவந்து உன்னைப்போலத்தான் கேட்டான்.

– அரசப்பன் யாரு?

– வேற யாரு, உன் தகப்பன்தான். உன்னைப் பெற்றவளைபோலவே உன் அப்பனைப் பெற்றவளும் பிள்ளைவரம் கேட்டு அரசமரத்தை சுத்தினவதான், பிறந்த பிள்ளைக்கு அரசப்பனென்று பேரும் வச்சாள். அந்தபேரையும் பிடிக்கலை ஊரையும் பிடிக்கலை புறப்பட்டு வந்துட்டோம்.

அன்றிரவு ஏதோ புரிந்ததுபோல இருந்தது. ஆனாலும் ஒரு கேள்வி மனதில் இன்றுவரை இருக்கிறது. தாத்தா சமாதானப்படுத்தியது அவரையா என்னையா?

——-

சிரிக்கிற ரொபோவையும் நம்பக்கூடாது என்ற அறிவியல் கதைகள் தொகிப்பிலிருந்து. பிற கதைகளை வாசிக்க இங்கே சொடுக்குக:http://www.pratilipi.com/nagarathinam-krishna/sirikkira-robovaiyum-nampakkuudathu

 

——