Monthly Archives: ஜனவரி 2017

இதுவும் தமிழர் பிரச்சினதான்

ஓர் இணைய இதழ் சம்பந்தப் பட்ட நண்பர் கேட்டுக்கொண்டதற்கிணங்க  அ.முத்துலிஙத்தின் கதைகளை மறுவாசிப்பு செய்தேன்.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் பிரான்சு நாட்டில் வசித்து வருகிறேன், இலங்கையிலிருந்து இங்கே தங்கியுள்ள நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களோடு இருபது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்ச் சங்கம் ஏற்படுத்தியிருக்கிறேன். தமிழ்ச் சங்கவிழாக்கள்,நண்பர்களின் குடும்ப விழாக்கள் ஆகியவற்றில்  நட்பு, தொழில் என்ற அடிப்படையில் பங்கெடுப்பதுண்டு. தவிர எழுத்திலும் ஆர்வம் இருப்பதால் இலக்கியம் சார்ந்த ஈடுபாடும் உள்ளது. எனினும் எப்போதும் போல அ. முத்துலிங்கத்தின் கதைகளில் புரியாதசொற்களின்(தமிழ் அகராதிகளில் தேடிக்கிடைகாத சொற்கள்) விழுக்காடுகள் குறைந்திருக்கிறதே தவிர அவற்றின் பிரச்சினை முற்றிலும்  தீர்ந்துவிட்டதென கூற முடியவில்லை. இது ஏதோ ஈழ நண்பர்களின் எழுத்துகளில் காணும்  பிரச்சினையல்ல  வட்டார வழக்கினைக் கையாளும் கிராவைப் போன்றவர்களின் எழுத்துகளில் காணும் பொதுப் பிரச்சினை.

வேறு மொழிகளில் இப்பிரச்சினை இல்லையா? இருக்கிறது. எனக்குத் தெரிந்த பிரெஞ்சு, ஆங்கிலம் இரண்டிலும் பிரச்சினை இருகிறது. ஆனாலும் வாசிப்பை எளிதாக்கிக்கொள்ள  இருமொழிகளிலும் வழிமுறைகள் இருக்கின்றன. சொற்களின் வழக்கு, மிகக்குறுகிய வட்டத்திற்குள் பயன்பாடுகொண்டதாக இருப்பினும் அதற்குப் பொருள்காண, விளங்கிக்கொள்ள மேற்குலக மொழிகளில் முடியும். பொதுவாக நான் வாசிக்கிறபோது ஒரே ஒரு சொல் சரியாக அவ்வாக்கியத்துடன் இசைத்து என்ன பொருளைத் தருகிறதென்பதை விளங்கிக்கொள்ளாதவரை அடுத்த வாக்கியத்தை வாசிப்பதில்லை என்பதில் பிடிவாதமாக இருப்பவன். நம்மில் பலர் அப்படித்தான் இருப்பார்கள் என்பதென் நம்பிக்கை.

தமிழில்  பல நல்லகதைகளை வாசிக்கிறபோது இப்பிரச்சினைக்குறுக்கிட்டு வாசிப்பிலிருந்து என்னை வெளியேற்றுகிறது. எல்லா சொற்களையும் ஊகித்துப்பொருள் காண்பது இயலாத காரியம். சிக்கலான அல்லது திருகலான மொழிநடையை உபயோகிப்பது என்பது வேறு,  புரியாதச் சொற்களை பயன்படுத்துவதென்பதுவேறு. பயன்படுத்த கூடாதா ? எனக் கேட்டால் பயன்படுத்தத்தான் வேண்டும்.   A Clockwork Orange (Anthony Burgess)  நாவலைக்கூட குழப்பமின்றி புரிந்துகொள்ள முடியும், உரிய அகராதிகள் ஆங்கிலத்தில் இருக்கின்றன. ஆனால் தமிழில் அதற்குச் சாத்தியமில்லை. ஆயிரம் பக்கங்களில் ஒரு தொகுப்பு நூலை வெளியிடுகிறபொழுது ஐந்துபக்கங்களைக் கூடுதலாக ஒதுக்கி  அச்சொற்களுக்குரிய பொருளை விளக்கி, என்னைப்போன்ற மரமணடைகளுக்கு உதவினால் என்ன குறைந்துவிடும் ?

காதில் விழுந்ததொரு செய்தி

அம்பைசிறுகதைகளை என்னுடன் பிரெஞ்சில் மொழி பெயர்த்த பிரெஞ்சு பெண்மனி மலையாளமொழி கற்றவர், அவரோடு  தமிழ் கற்ற பிரெஞ்சு பெண்மணி  சென்னையில் இறங்கிய சில நாட்களில் நாம் படித்த தமிழுக்கும் வழக்கிலுள்ள தமிழுக்கும் காத தூரம் இருக்கிறதென எண்ணி அலறி அடித்துக்கொண்டு பிரான்சுக்குத் திரும்பியதாகச் செய்தி. விளைவாக மலையாளத்திலிருந்து பிரெஞ்சுக்கு மொழிபெயர்ப்பது பிரச்சினையின்றி நடந்துகொண்டிருக்க, தமிழ் தடுமாறிக்கொண்டிருக்கிறது.

———————————-

புரட்சியாளன் என்பவன் யார்?- அல்பெர் கமுய்

puratchiyalanபுரட்சியாளன்  என்பவன் யார்? ‘இல்லை’ இனி என்னால் முடியாது !” என தனக்கிடப்பட்ட ஆணையை மறுக்கிற மனிதன். அவன் மறுப்பவனே அன்றி நிராகரிப்பவனல்ல. அம்மனிதனே ‘சரி’ என்று இடப்படும் ஆணைக்குச் செயலின் தொடக்கத்தில் சம்மதிப்பவனாகவும் இருக்கிறான். தனது வாழ்நாள் முழுக்க தனக்கிடப்பட்ட ஆணைகளை மறுப்பின்றி நிறைவேற்றிய ஓர் அடிமை, இடப்பட்ட புதிய கட்டளையொன்றை ‘ஏற்பதற்கு உகந்ததல்ல’ என்று தீர்மானித்தது திடீரென்று எடுத்த முடிவு.  அவனுடைய திடீர் ‘மறுப்பிற்குப் பொருள் என்ன?

உதாரணத்திற்கு  “இப்பிரச்சினை சகிக்க முடியாத அளவிற்கு நீடித்துவிட்டது” என்றோ; “இதுவரை சரி,  இனி சரிவராது” என்றோ;  “நீங்கள் வரைமுறையற்று நடந்துகொள்கிறீர்கள்” என்றோ;  அல்லது  “அததற்கு வரம்பு இருக்கிறது, அதை நீங்கள் மீறக்கூடாது” என்றோ பொருள் கொள்ளலாம்.  ஆக மொத்தத்தில் ‘இல்லை’ என்னால் இனி முடியாது! என்ற மறுப்பு, அனைத்திற்கும் ஓர் வரம்பு இருக்கிறதென ஓர் எல்லையின் இருப்பைத் தெரிவிக்கிறது.  மற்றொரு ஆசாமி “வரம்பை கடக்கிறார்” என்ற சிந்தனையை ஒரு புரட்சியாளனிடமும்  காண்கிறோம். அந்த மற்றவர் தமக்குள்ள உரிமையை, அதன் எல்லைக்கு அப்பாற்பட்டு, எதிர்கொள்ளவேண்டிய பிரிதொரு உரிமைக்குள் -அதன் எல்லைக்குள் நீட்டிக்கப் பார்க்கிறார் எனப் புரட்சியாளன் கருதுகிறான். ஏற்க முடியாததொரு அத்துமீறலெனக் கணித்து திட்டவட்டமாக மறுத்தலும்; புரட்சியாளனிடம் தனக்குள்ள நியாயமான உரிமைக்குறித்த தெளிவின்மையும் – சரியாகச் சொல்ல வேண்டுமெனில், அவனுடைய “எனக்கும் உரிமையிருக்கிறது…” என்கிற மனப்போக்கும்  இணைந்துகொள்ள ‘எதிர்ப்பு மனப்பான்மை’  தனக்கான அடித்தளத்தைப் புரட்சியாளனிடம் அமைத்துக்கொள்ளும். ஏதோ ஒருவகையில், எங்கேனும் கொஞ்சம் நியாயம் தன்பக்கம் இருக்கிறதென்ற உணர்வு ஒருவருக்கு எழாதவரை கிளர்ச்சிக்கு இடமில்லை. அந்த வகையில்தான் கிளர்ந்தெழும் அடிமைக்கு மறுப்பதும், சம்மதிப்பதும் சத்தியமாகின்றன. உரிமைக்கான எல்லையை உறுதிப்படுத்தும் அதேவேளை, ஐயத்திற்குரியவற்றை அதன் எல்லைக்குள் வைத்திருக்கவும் விரும்புகிறான். தம்மிடமும் ‘பொருட்படுத்தக்கூடியவை…’ உள்ளன என வற்புறுத்துகிற புரட்சியாளன் அவற்றை மற்றவர்கள் ‘கவனத்திற்கொள்ள’ வேண்டுமென எதிர்பார்க்கிறான். தனக்கென்றுள்ள உரிமையை ஒடுக்கும் ஓர் ஆணையை, ஏற்கக்கூடிய வரம்பிற்கு அப்பாற்பட்டதெனக் கருதி எதிர்க்கிறான்.

அத்துமீறல் ஆசாமியை வெறுக்கிற அதேவேளை,  கிளர்ச்சியில் ஈடுபடுகிற போதெல்லாம் தாமதமின்றி  தன்னில் ஒரு பகுதியிடம் மனிதன் முழுமையாக  அவனைப் பிணைத்துக்கொள்கிறான். தமது சுய மதிப்பீடுகளைக் குறிப்பாலேனும் உணர்த்த முற்பட்டு அதற்கு எந்த விலையென்றாலும் கொடுத்து,  அதை அழிவினின்று பாதுகாக்க முற்படுகிறான். இதுவரை அமைதி காத்தவன். நிர்க்கதியாய் விடப்பட்ட நிலமையில், அவனுக்கு அநீதி இழைக்கப்படுகிறது என்பதில் தெளிவிருந்தபோதும் உடன்பட்டான்.  எவ்வித விருப்பமும் இல்லை, எதைப்பற்றியும் அபிப்ராயங்கள் இல்லை என்பதே அவனது அப்போதைய மௌனத்திற்கான பொருள், அதாவது வேண்டியதென்று எனக்கெதுவுமில்லை என்பதுதான் அதற்கான பொருள். அபத்தவியலைப்போலவே விரக்தி மனோபாவமும் அனைத்தையும் பொதுப்படையாகப் பார்க்கிறது. எதனிடத்திலும் தனிப்பட்டவகையில் கவனம்செலுத்துவதில்லை. வாய்மூடி இருப்பதன் அர்த்தம் அதுதான். ஆனால் பேச ஆரம்பித்த கணத்தில் ( அது மறுப்பதற்கு என்கிறபோதும்) அவனுடையக் கருத்தைக்கூறவோ, அவனது விருப்பத்தைத் தெரிவிக்கவோ இயலும். சொற்பிறப்பியல் அடிப்ப்டையில், கிளர்ச்சியாளன் (Le révolté) என்ற பிரெஞ்சு சொல்லுக்கு புறங்காட்டுதல், முகத்தைத் திருப்பிக்கொள்ளல் என்றாகிறது  எஜமானின் சாட்டையின்கீழ் காரியங்களைச் செய்தான். தற்போது என்ன நடக்கிறது?  விருப்பம் அல்லாதவற்றை நிராகரிக்கிறான். எல்லா விழுமியங்களும் கிளர்ச்சியில் முடிவதில்லை ஆனால் ஒவ்வொரு கிளர்ச்சியும் மறைமுகமாக விழுமியத்தை முன்வைக்கிறது. நாம் நினைப்பதுபோல உண்மையில் இப்பிரச்சினை விழுமியத்தை அடிப்படையாகக்கொண்டதா?

தெளிவின்மையுடன் என்றாலும்,   கலகம் அல்லது கிளர்ச்சியில் உள்ளுணர்வு விழித்துக்கொள்கிறது.  புரிதல் ஓர் ஒளிகீற்றுபோல திடீரென நிகழ தன்னிடம் ஏதோ ஒன்று இருப்பதும் அந்த ஏதோ ஒன்றை தன்னில் அடையாளம் காண்பதும் அம்மனிதனிடத்தில் நிகழ்கிறது. அக்கணத்திற்கு முன்பாக அவன் தன்னை உண்மையில் அடையாளப்படுத்திகொண்டவனல்ல. கிளர்ச்சிக்கு முன்பாக இழைக்கப்பட்ட அனைத்துக் கொடுமைகளையும் சகித்துக்கொண்டவன். இதைக் காட்டிலும் கூடுதலாகக் கிளர்ச்சியில் இறங்கவேண்டிய ஆணைகளுக்கெல்லாம் மறுபேச்சின்றி பணிந்திருக்கிறான். அவ்வாறான தருணங்களில் பொறுமையைக் கடைபிடித்தவன் – ஒரு வேளை மறுப்பை வெளியிற்காட்டாமல் அவனுக்குள் வைத்திருந்திருக்கக்கூடும். ஆனால் வாய் மூடியிருந்ததைவைத்து உரிமைப்பற்றிய விழிப்புணர்வைக்காட்டிலும் உடனடி நலனில் அக்கறை கொண்டிருந்திருக்கிறான் எனக்கருத வேண்டியிருக்கிறது. பொறுமையை இழந்த நிலையில், பதற்றத்தால் உருவான இத்திடீர் எதிர்வினை முன்பு எவற்றுக்கெல்லாம் மறுப்பின்றி செயல்பட்டானோ அவைகளோடும் சம்பந்தப்பட்டதாகிறது, ஆக இத்திடீர் மறுப்பை கடந்தகாலத்தின் மீதான செயல்பாடெனக் கருத இடமுண்டு. அடிமை தன்னை சிறுமைபடுத்துகிற எஜமானின் கட்டளையை நிராகரிக்கும் கணத்திலேயே தன்னுடை அடிமை நிலமையையும் நிராகரிக்கிறான். வெறுமனே மறுத்தலால் அவன் எட்டிய இலக்கிற்கும் கூடுதளான நிலமைக்கு தற்போது கிளர்ச்சி உதவுகிறது. தனது எதிராளிக்கென கிழித்திருந்த எல்லைக்கோட்டைத் தற்போது மீறுவது இவன். மீறுவதோடன்றி தன்னை சரிநிகராக நடத்தவேண்டுமென்கிறான். தொடக்கத்தில் மூர்க்கமானதோர்  பண்பாக மனிதனிடம் இருக்கிற எதிர்ப்புசக்தி மனிதனை முழுமையாக அபகரித்து, அவனூடாகத் தன்னை முன்நிறுத்துகிறது.அவனுள் உள்ள இப்பகுதியை பிறர் மதிக்கவேண்டும், அதுவே அவன் விருப்பம், எனவே பிற அனைத்தினும்பார்க்க மேம்பட்டதாக அதை நினைக்கிறான், தனது உயிர் உட்பட பிறவற்றோடு ஒப்பிட்டுப்பார்க்க்கிறான், கிடைத்தற்கரிய செல்வம், அது மட்டுமே மனதிற்கு உகந்ததாக இருக்கிறது.  இதற்கு முன்பாக  சமரசம் என்றபெயரில் முடங்கிக்கிடந்த அடிமை,  சட்டென்று விழித்துக்கொள்ள, அதன விளைவாக துள்ளிக்குதிக்கிறான் (« ஏறக்குறைய அதுபோலத்தான் »), இனி சமரசத்திற்கே இடமில்லை என்பதுபோல, முடிந்தால் ‘அனைத்தும்’ தவறினால் ‘ஒன்றுமின்மை’ (Tout ou Rien) என்கிற முடிவுக்கு வருகிறான்,  திடீரென்று உதித்த ஞானோதயம், கூடவே கலகமும் பிறக்கிறது.

ஒன்று மட்டும் நமக்குத் தெளிவாக விளங்குகிறது. அவனுக்குள் நிகழும் இந்த ஞானோதயம்  ‘அனைத்துமாக’ ( குழப்பங்களுக்கிடையிலும்) தன்னைப்  பிரகனடபடுத்திக்கொள்கிற அதேவேளை அவனது உயிரை அந்த ‘அனைத்திற்காக’வும் இழக்க அவன் தயார் என்கிற மனநிலை காரணமாக  ‘ஒன்றுமின்மை’ ஆகவும் இருக்கிறது. போராளி தன்னை அனைத்துமாக கட்டமைத்துக்கொள்ள விரும்புகிறான். திடீரென்று தன்னில் கண்டுணர்ந்து போற்றுகிற விழிப்புணர்வில் தன்னை முழுமையாகக்  காண அவன் விழைகிறான், இயலாதெனில்  ‘ஒன்றுமின்மை’ ஆவது அதாவது தனது ஆதிக்க சக்தியிடம் முற்றாக தோற்றொழிந்துபோவதென தீர்மானிக்கிறான். கடைசியில் தான் புனிதமென்று கருதுகிற சுதந்திரத்தைப் பறிகொடுப்பதைக்காட்டிலும் இறுதித் தோல்வியாக மரணத்தைக் தழுவவும் அவன் சித்தமாக இருக்கிறான். ஒருவர் காலடியில் அடிமைப்பட்டுக்கிடப்பதைக்காட்டிலும், அந்த ஒருவர் காலடியில் உயிரை விடுவது மேல் என்பது அவனது இறுதிக்கட்ட சித்தாந்தம்.

-புரட்சியளன் நூலிலிருந்து

——————————-

புரட்சியாளன்

அல்பெர்கமுய்

பிரெஞ்சிலிருந்து தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா

காலச்சுவடு. நாகர்கோவில்

—————————–

 

இந்தியா : மக்கட்தொகையும் வெளியும் : இந்தியப் பாலின ஏற்றத்தாழ்வுகள் -3 (தொடர்ச்சி)

 

  • கமலா மரியுஸ், வருகைப்பேராசிரியர், பொர்தோ பல்கலைக் கழகம், பிரான்சு;பிரெஞ்சு அரசின் மொழி நிறுவனம், புதுச்சேரி.

 

  1. அதிகாரம், வலிமை சார்ந்த ஆண்பெண் ஏற்றத்தாழ்வுகளும் பாலின வன்முறையும்

பல நூற்றாண்டுகளாகவே இந்தியப் பெண்கள்மீது அடக்கு முறை தொடர்வது அங்கீகரிக்கப்பட்ட நடைமுறையாக இருந்துவருகிறது. இது போதாதென்று பாலின வன்முறையின் அடிப்படையிலான வலிமை,அதிகாரம் சார்ந்த ஏற்றத் தாழ்வுகளையும் காண்கிறோம். இந்தியாவில் இரண்டு வன்புணர்ச்சி குற்றங்களுக்கு ஒன்று என்ற  வீதத்தில்தான்,  தண்டனைக்குரிய வாய்ப்புள்ளது. ஆண்களை முன்னிறுத்தும் சமூகம் என்ற அடிப்படையில் உலகெங்கிலும் மேற்கொள்ளப்பட்ட 2011 ஆம் ஆண்டு ஆய்வில்  தங்கள் வாழ்க்கைத் துணைக்கு எதிராக ஆண்கள் இழைக்கும் வன்கொடுமைகள் இந்தியத் துணைக்கண்டத்தில்  அடிக்கடி நிகழ்வது தெரியவருகிறது. 20 சதவீத இந்திய ஆண்கள் தங்கள் மனைவிக்கு அல்லது வழ்க்கைத் துணைக்குப் பாலியல் துன்பத்தினைக் கொடுக்கின்றனர் என்பது ஒருபுறமிருக்க, தங்கள் மனைவிக்கு அல்லது வாழ்க்கைத் துணைக்கு பாலியல் வன்கொடுமை இழைப்பது உண்மையென தயக்கமின்றி  ஒப்புக்கொள்கிற ஆண்கள் 14 சதவீதம். இந்தியர்கள் பொதுவாகவே பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை நியாப்படுத்துகிறவர்களாக இருக்கிறார்கள். இப்படி நியாயப் படுத்துகிறவர்களில் 68 விழுக்காட்டினருக்குக் குடும்ப வாழ்க்கையை சீராகக் கொண்டுபோக ஒரு பெண் உடல்சார்ந்த வன்கொடுமைகளை சகித்துக்கொள்வது கட்டாயம். « சில காரணங்களை முன்னிட்டு பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தேவைப்படுகின்றன » என்கிற இந்திய ஆண்கள் 65 விழுக்காட்டினர். கருத்தாய்வின்படி 37 விழுக்காட்டினர் பெண்களுக்கு தொடர்ந்து வன்கொடுமைகள் இழைப்பது தெரியவந்துள்ளது. இதிலுள்ள பிரச்சினை என்னவெனில் 92 விழுக்காடு ஆண்கள் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்குச் சட்டப்படி தண்டனைகள் உண்டு என்பதை அறிந்திருக்கிறார்கள். இந்திய மனிதவள மேம்பாட்டு  நிறுவன ஆய்வு முடிவுகள்  ஓரளவு இதனை உறுதிசெய்கின்றன.  அவ்வாய்வில், 39 சதவீத பெண்கள் தங்கள் கணவர்களின் அனுமதியின்றி வெளியிற் சென்ற காரணத்திற்காகவும் ; 35 சதவீதப் பெண்கள் வீட்டு அலுவல்களைப் பொருட்படுத்தவில்லை என்கிற காரணத்தின் பொருட்டும் ; சமைக்கவில்லை என்பதற்காக 29 சதவீத த்தினரும் தண்டிக்கப்படிருக்கின்றனர்(fig.10). கல்வி, பெறும் ஊதியம், நகரவாழ்க்கை ஆகியவை குடும்ப வன்முறைகளை, ஓர் வரம்பிற்குள் நிறுத்த உதவும் காரணிகள் என்றறிகிறோம்.

10-violence-percue-hommes-inde

குறைந்த பட்சம் பள்ளி இறுதிவகுப்பை முடித்த ஒரு மனிதர்  மணவாழ்க்கையில் ஆண்பெண் உறவை புரிந்து நடந்துகொள்ளும் போக்குள்ளவர் என்பதை 2011 ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது. இருந்தும் சில ஆய்வாளர்கள் வருவாயை அதிகரித்துக்கொள்ளும் வாய்ப்புள்ள பெண்களுக்கும் வன்கொடுமை அவர்களுடைய ஆண் துணையினரால்  இழைக்கப்படுவது அதிகரித்துவருகிறதென்றே தெரிவிக்கிறார்கள்.  அதற்கு வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு கிடைக்கிற  ஒருவரையும் சார்ந்திராத சுயாதீன நிலமை தங்களைப் பாதிக்கும் என்ற அச்சம் அவர்களுடைய கணவன்மார்களுக்கு  உள்ளதென்கிற காரணத்தைச் சொல்கிறார்கள்.

இப்படி அடுக்கடுக்கான ஏற்றத் தாழ்வுகள் தெளிவாக உள்ள நிலையில், பெண்களுக்கான வேலைவாய்ப்பில் பொருளாதார முன்னேற்றம் எற்படுத்தியுள்ள தாக்கத்தையும் அறிந்துகொள்ளுதல் வேண்டும்.

 

5 . சமத்துவமற்ற வேலைவாய்ப்பும், முறைசாரா பெண்கள் பணியும்

கடந்த இருபது ஆண்டுகளில் 7லிருந்து 8 சதவீத சராசரி வளர்ச்சி என்ற அடிப்படையில் இந்தியப்பொருளாதாரம் சாதித்து, கடந்தகால இழப்பை வேகவேகமாக சரிசெய்துள்ள போதிலும்  அது பெண்களின் பணித்தகுதிக்கும், திறனுக்கும் பெரிதாக உதவ வில்லை.

அண்டை நாடான சீனாவில் பணிசெய்யும் தகுதியுடைய பெண்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் பணியாற்றும் வாய்ப்புக்கிடைத்து செய்கிறார்கள். ஆனால் இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கினரே அத்தகைய வாய்ப்பை ப் பெறுகிறார்கள். வேலை செய்யும் பெண்களின் விழுக்காடு நகர்புறங்களைக் காட்டிலும் கிராமங்களில் அதிகம், அவ்வாறே வடமாநிலங்களைக் காட்டிலும் தென் மாநிலங்களிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் வேலைக்குப் போகும் பெண்களின் விழுக்காடு அதிகம். (OCDE, 2014). [11]

வளர்ந்துவரும் பிற நாடுகளுக்கு மாறாக இந்தியாவில் வேலைக்குப்போகும்  பெண்களின் விழுக்காடு கடந்த பத்துவருடங்களாக குறைந்துவருகிறது. அதேவேளை வேலைக்குப் போகும் ஆண்களின் விழுக்காட்டில் எவ்வித மாற்றமுமில்லை. இவ்வீழ்ச்சியை  2005 ஆம் ஆண்டு தொடக்கம், ஊதியமேதுமின்றி , சுயதொழில்களில் ஈடுபடுகிற  பெண்களிடத்தில் குறிப்பாக விவசாயத் துறையில், அதிகம் காணமுடிகிறது.

2000த்திலிருந்து 2012வரை , வேலைக்குப்போகும் வயதிலுள்ள பெண்களின் எண்ணிக்கை 99 மில்லியன் அதிகரித்திருக்க, அவர்களுக்குரிய பணிகளின் எண்ணிக்கை ஆறுமில்லியனைமட்டுமே தொட்டிருக்கிறது.இதேகாலகட்ட த்தில் பணிவாய்ப்பைப் பெற்ற ஆண்களின் எண்ணிக்கையோ 69 மில்லியன் (Marius,2013)

ஆக எண்பதுகளில் ஆரம்பித்துவைத்த  பொருளாதார  தாராளமயம், பெண் தொழிலாளர்களின்  எண்ணிக்கைப் பெருக்கத்திற்கு சாதகமாக இருந்திருக்கவேண்டிய வளர்ச்சித் திட்டங்கள் என்ற நிலமைக்குப் பின்னும் , பெண்கள் வேலையைப்பொறுத்தவரை எவ்வித நெறிமுறைக்கும் அடங்காத தொரு பெரும்  மாற்றத்திற்கு – குறிப்பாக எண்ணற்ற இடைத்தரகர்கள் குறுக்கீட்டுடன், கீழ்-ஒப்பந்த அடிப்படையில்    வீட்டிலிருந்தே பணிபுரியும் கைவினைக் தொழில்களில் (கூடைமுடைதல், எம்பிராய்டரி,கைவினைப் பொருட்கள், ஊதுபத்திகள்…) -உள்ளாகியிருப்பதைக் காண்கிறோம்,  குடும்பச் செலவை சரிகட்ட ,  இளம்வயதிலேயே வேலைக்குப் போகும் பெண்களின் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரித்துவருவதன் பலனாக குறைந்த ஊதியம், முறைசார பணிகள் என்ற நிலமைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். இங்கே நாம் ஆதாரமாக எடுத்துக்கொண்டிருப்பது ‘இந்தியா : வேலைவாய்ப்பு மற்றும் சமத்துவமின்மையின் விளைவுகள் (l’OCDE -2009) தரும் விளக்கம். முறைசாரா பணிகளின் பரிமாணம்  மற்றும் அதன் வளர்ச்சி குறித்த அவ்விளக்கம் தெளிவானது :

முறைசாரா துறையிலுள்ள முறைசாராபணி : சுய தொழில் : சொந்த முதலீட்டுடன் உழைக்கிறவர்கள், முதலாளிகள், குடும்பத்தொழிலில் ஈடுபடுவோர், ஐந்துபேருக்கும் குறைவான தொழிலாளர்களை அல்லது தொழிலாளப்பெண்மணிகளைக் கொண்ட சிறுநிறுவங்களைச் சேர்ந்த  ஊதியம்பெறும் முதலாளிகளும் ஊழியர்களும்

–  முறைசார்ந்த துறையில் முறைசாராதபணி : ஐந்து அல்லது அதற்கும் குறைவான சிறு நிறுனவங்களில் எவ்வித சமூக பாதுகாப்புமின்றி ஊதியம் ஒன்றிர்க்காக மட்டுமே உழைக்கிற தொழிலாளர்கள் அல்லது தொழிலாளர் பெண்மணிகள் ; சமூக பாதுகாப்பின்றி வீடுகளில் ஊதியத்திற்காக மட்டும் பணியாற்றுகிறவர்கள்.13-img_7352_dxo

இதன்படி தெரியவருவது, பன்னாட்டுச் சந்தைப்போட்டி நிலவும் சூழலில், முதலீட்டாளர்கள் தங்கள் உற்பத்தி நிறுவனங்களை கிராமப் பகுதிகளிலும், புறநகர்களிலும் தொடங்குகிறார்கள். இத்தேர்வுக்கு உற்பத்திச்செலவில் சிக்கனம்,    தொழில் அளவுசார் ஆதாயங்கள் முதலியவை காரணம். பொதுவாக, குறைவான ஊதியத்திற்குப் பெண்களை  வேலைவாங்கலாம் என்பது முதலாவது, அடுத்து நகர்ப்புறங்களைக்காட்டிலும் கிராமப்புற பெண்களுக்கு ஊதியத்தைக் குறைத்துக் கொடுக்கலாம் என்ற கருத்திருப்பதாலும், பெண்களுக்கு வேலையைபற்றிப் போதிக்க ஒரு சில நாட்கள்போதுமென்பதாலும் முதலாளிகள் பெண்தொழிலாளர்களைத் தேடுகிறார்கள், அதிலும் மணமாகாத இளம்பெண்களெனில் அவர்களுக்கு  முன்னுரிமைகொடுக்கிறார்கள். தவிர பெண்கள் திறமைசாலிகள், பணிவானவர்கள், குறைந்த ஊதியத்திற்குச் சம்மதம் தெரிவிப்பவர்கள் என்ற கருத்து முதலாளிகளிடை இருப்பதுமொரு காரணம்.  உண்மையில் போதிய அளவு கல்வியோ, வேலைக்குரிய தகுதியோ பெற்றிராத நிலையில் வேறுவழியின்றி முறைசாரா துறைகளில் குறைந்த ஊதியத்திற்கு, பாதுகாப்பும், உத்தரவாதமுமற்ற  வேலைகளைச் செய்ய பெண்கள் தயார். அடுத்ததாக பெண்கள், தங்கள் பணியில் நெகிழ்வுத் தன்மையை எதிர்பார்ப்பவர்களாக உள்ளார்கள், அதாவது அவர்கள் வருகை  அத்தனை முக்கியத்துமானதல்ல, குறைந்த அளவு திறன் அல்லது தகுதிபோதும்  எனக் கருதும் துறைகளை அவர்கள் தேர்வுசெய்கின்றனர், அதன் மூலம் தங்கள் குடும்ப நலனின் அக்கறைசெலுத்த முடியுமென  நினைக்கின்றனர் . முறைசாரா நிறுவனங்களுக்குரிய தேசிய ஆணையத்தின் (le NCEUS (2007))கருத்தின்படி முறைசார்ந்த துறைகளில் பெண்கள் பணியாற்ற  குறைந்த பட்சம் பத்தாண்டு  கல்வியாவது வேண்டுமென்ற நிலையிருக்க,   முறைசாரா துறையில் பணியாற்ற நான்காண்டு கல்விபோதுமானது(K.Marius-Gnanou 2013) . முறைசாரா தொழிலாளர்களுக்குள்ள பரிதாபமான நிலமைகாரணமாக, அரசு  2008 ஆம் ஆண்டு டிசம்பர்மாதம்  ஒரு சட்ட வரைவை முன்வைத்தது.  அடையாள அட்டையொன்றின் அடிப்படையில் முறைசாராதுறை  தொழிலாளர்களுக்கு  சமூகப் பாதுகாப்பு, குறைந்தபட்ச ஊதியம் ஆகியவற்றிர்க்கு வகைசெய்வது திட்டத்தின் நோக்கம்.

மொத்தத்தில் முறைசார் துறையில் பணி செய்யும் பெண்கள் 7 சதவீதத்திற்கும்  முறைவு. மிகக் குறைவான உற்பத்தியைத் தருகிற விவசாயம் ; மரபுவழிபட்ட சிறு அளவிளான உற்பத்தி நிறுவனங்கள் ; சேவைத் துறைகள் உதாரணத்திற்குக் கல்வித்துறை, வீட்டுப்பணிகள் ஆகியவற்றில் பெண் ஊழியர்களை அதிகம் காணமுடிகிறது. இந்தியா : வேலைவாய்ப்பு மற்றும் சமத்துவமின்மையின் விளைவுகள் (l’OCDE -2014, பக்கம் 39) அறிக்கையின்படி 2012 ஆம் ஆண்டில் ஊதியமுள்ள ஒருவேலையில்  அல்லது தற்காலிக பணியில் ஈடுபட்டுள்ள பெண்களில்  60 விழுக்காட்டினர், அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியத்திற்கும் குறைவான சம்பளத்திற்கு உழைக்கிறவர்கள், அதேவேளை ஆண்களென்று எடுத்துக்கொண்டால் அவர்களில் 25 விழுக்காட்டினரே அப்படிக் குறைவான ஊதியத்திற்கு உழைக்கின்றனர்.  முக்கியமற்ற துறைகளிலும், சேவை துறைகளிலும் வேலைவாய்ப்புச் சந்தையிலுள்ள நெகிழ்வற்றத் தன்மை, பெண்களை இத்துறைகளை தேர்வு செய்யாமல் தடுக்கிறது.  அவ்வாறே நல்ல ஊதியத்திற்குச் தொழிற்சாலைகளில் சாத்தியமிருந்தும் அவ்வேலைகளை பெண் விவசாயக்கூலிகள் ஏற்கமுடிவதில்லை  காரணம்  100 தொழிலாளர்களுக்குமேல் வேலைசெய்கிற உற்பத்தித் துறை நிறுவனங்களில், ஒரே ஒரு ஊழியரை வேலையிலிருந்து நீக்குவதென்றாலும், உரிய அனுமதிபெறுவதுகட்டாயம். பன்னாட்டு நிதி நிறுவனத்தின் ஆய்வொன்று விளக்குவதைப்போல  ஆசியாவிலேயே  தமது உழைப்பை, விவசாயத்துறையிலிருந்து தொழில்துறைக்குக் கொண்டுபோக சாத்தியமின்றி மிகவும் பின்தங்கி இருப்பவள்  இந்தியப்பெண்மணி.  பணியில் சமத்துவமின்மையை அளவிட மிகவும் பொருத்தமான அடிப்படைகாரணியென்று எடுத்துக்கொண்டால் அதாவது ஓர் ஆண்டில் வேலைசெய்யும் நாட்களின் அடிப்படையில் பார்க்கிறபொழுது வயதும்,  நகரவாழ்க்கையும் பெண்களின் வேலைநாட்களைப் பாதிப்பவை.  அவ்வாறே ஆண்களோடு ஒப்ப்டுகிறபோது பெண்களிடத்தில் வேலை சமத்துவமின்மை மிக அதிகம், விளைவாக ஆண்களைக் காட்டிலும் பெண்களின் பங்களிப்பு வேலையில் மிகக் குறைவு(fig.11).

11-tx-activite-genre-urbain-rural

நகர்ப்புறங்களைக் காட்டிலும் கிராமப்புறங்களில் வேலைசெய்யும் பெண்களின் விழுக்காடு குறிப்பிட்டுச்சொல்லும் அளவில் உள்ளது என்பது உண்மையென்கிறபோதும் நகர்ப்புற பெண்களின் வேலை நாட்களின் எண்ணிக்கை (180) கிராமப்புற பெண்களின் வேலை நாட்களின் எண்ணிக்கையைக் (106) காட்டிலும் உயர்ந்த அளவிலுள்ளது. இதற்கு, ஐயத்திற்கிடமின்றி பெண்கள் முறைசாரா பிறபணிகளிலும் ;  சுயதொழில்கள் என்று சொல்லக்கூடிய (fig 12),  அதே சமயத்தில்  உறுதிபடுத்தவியலாத  விவசாயம், கால்நடைவளர்ப்பு போன்ற பணிகளிலும் ஈடுபடுவதாகும். கணக்கெடுப்பின்படி, செயல்படகூடிய 127. 3 மில்லியன் பெண்களில் 90 விழுக்காடு பெண்கள் முறைசாரா துறைகளில்( சுயதொழில், தற்காலிக பணி ஆகியவையும் இதிலடக்கம்) பணிபுரிகிறார்கள். குழந்தைத் தொழிலாளர் பற்றியும் இங்கு குறிப்பிட வேண்டும், குறிப்பாக பெண்குழந்தைகள், இப்போக்கு கிராமப்புறங்களில் அதிகம் பரவியுள்ளது. பந்தினைந்துவயதுக்கு உட்பட்ட பெண்குழந்தைகளில் 9விழுக்காட்டினர் வேலைக்குச் செல்கின்றனர்.  ஏழைக்குடும்பங்களில் வேலைச்சுமைகளால் பாதிக்கப்படும் பெண்குழந்தைகளும் ஏராளம். வீட்டில் வயதில்குறைந்த தங்கை, தம்பியரைப் பார்த்துக்கொள்வது, சமைப்பது, கூட்டிப்பெருக்குவது, தண்ணீருக்காகக் குட த்தையும், பாத்திரங்களையும் சுமப்பது  என்று இப்பெண்குழந்தகளுக்குப் பொறுப்பு அதிகம். சற்று வயதுகூடிய பெண்குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் வயல்வெளிக்குச் சென்று விதைத்தல், நாற்று நடுதல், களையெடுத்தல் அறுவடை செய்தல் முதலான காரியங்களுக்கு உதவிசெய்கின்றனர்.

எனினும், தேசிய மாதிரி ஆய்வு அமைப்பின் ( NSSO 2009,22) அமிதாப் குண்டு (A.Kundu)  ஆய்வின் அடிப்படையில் கிடைத்த தரவுகளின்படி, 1980 லிருந்து நிரந்தர ஊதியப்பணிக்குச் சாதகமாக  தற்காலிக பணிகளில்  சரிவினைக் காண்கிறோம். 1983 ஆம் ஆண்டில் நிரந்தர ஊதியப்பணியில் இருந்தோர் எண்ணிக்கை 25.8 விழுக்காடு. இது 2004-2005ல் 35.6 விழுக்காடாக(fig.13) உயர்ந்துள்ளது . பெரிய அளவில் இல்லை என்கிறபோதும், இவ்வளர்ச்சி உலகமயமாக்கல் காரணமாக உற்பத்திநிறுவனங்கள் புறநகர்கள், மாவட்டத்  தொழிற்பேட்டைகள் என இடம்பெயர்ந்ததால் நிகழ்ந்தது. உண்மையில் செயல்படும் தகுதியுள்ள பெண்களில் 12.3 விழுக்காடுபெண்களே உற்பத்தித் துறையில் உழைபிற்குரிய  ஊதியம் பெறுகிறவர்கள். தவிர ஊதியம்பெறாமல் பணிசெய்யும் விழுக்காடு குறிப்பாக கிராமப்புறங்களில், இன்னமும் குறைந்தபாடில்லை. 2007-2008ல் 43 விழுக்காட்டினர் அவ்வாறு ஊதியமின்றி உழைக்கிறவர்களாக இருந்துள்ளனர். வேலைசெய்து சம்பாதித்தபெண்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் 67 சதவீத த்தினர் தற்காலிக பணிமூலம் சம்பாதித்தவர்கள், 26சதவீதத்தினர் சுய தொழிலில் சம்பாதித் தவர்கள், நிரந்தரவேலையில் சம்பாதித்தவர்கள் வெறும் 7 சதவீதத்தினர் மட்டுமே.

13-categories-emploi

வேலைக்குப் போகும் இந்தியபெண்களின் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரிக்கிறபோதும் அவர்களில் பெரும்பான்மையோர் (அதாவது மிகவும் வறிய நிலையிலுள்ள பெண்கள்) ஆண்கள் ஊதியத்தைக்காட்டிலும் குறைவான ஊதியம்பெற்று(அரசு பணிகளில் இதற்கு விதிவிலக்குண்டு) வேலைக்குப் போவதற்குக் வேலைக்குச் செல்லும் வாய்ப்பை இதுவரை அவர்கள் பெறாததும் ஒரு காரணமாகும். மாறாக ஓரளவு படித்த பெண்கள், ஏற்புடைய  வருவாயுள்ள ஆண்களை மணக்கிற பொழுது அப்பெண்களுக்கு வேலைக்குப் போகவேண்டுமென்ற நெருக்கடி குறைவு, குறிப்பாக இதனை கிறமப்புறங்களில் காண்கிறோம் (S.Desai et al.,2010). இருந்தபோதிலும் ஊதியத்தில் சமத்துவமற்ற நிலையினால்  பெரும்பாலான  பெண்கள் பாதிக்கப்படவே செய்கிறார்கள் (fig.14). உதாரணத்திற்கு பத்து ரூபாய் ஆண் சம்பாதித்தால்  கிராமப்புறங்களில் பெண்ணின் சம்பாத்தியம் 5 ரூபாய் 40 காசாகவும், நகர்ப்புறங்களில் 6ரூபாய் 80 காசென்ற நிலமைதான் உள்ளது (HDS 2009)

14-revenu-journalier

 கிராமப் புறங்களில் ஊதியங்கள் பணமாகவோ, பண்டமாககவோ அல்லது இரண்டுமாகவோ வழங்கப்படுகின்றன. விவசாயத் தொழிலாளியின் ஒருநாள் ஊதியம் இரண்டு யூரோ (2015-2016ல் நாளொன்றிர்க்கு 150 ரூபாய்). விவசாயவேலைகளில் (விதைத்தல், நாற்றுநடல், களைஎடுத்தல், அறுவடை, உலர்த்துதல்)  பெண்களின் பங்களிப்பிற்கும் ஆண்களின் பங்களிப்பிற்கும் அதிக பேதமில்லை என்கிறபோதும் ஆண்கள் பெண்களைக்காட்டிலும் ஒன்றரைமடங்கு அதிகம் சம்பாதிக்கின்றனர். ஹிமாச்சலபிரதேசம், ஜம்மு காஷ்மீர், கேரளா ஆகிய மாநிலங்களில் மட்டுமே விவசாயத் தொழிலாளிகள் ஒரு நாளைக்கு 150 ரூபாய்க்குக் கூடுதலாகச் சம்பாதிக்கின்றனர். முரணாக நகரமயமாக்கம், தொழில் மயமாக்கம்  என மாற்றத்தைக்கண்டுள்ள மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களிலும் கூட விவசாயத் தொழிலாளிகளின் நிலைமை பீகார், மத்திய பிரதேச மாநிலங்கள் நிலமைக்கு இணையாகவே உள்ளன.

இந்தியாவில் சந்தைப்போட்டிகளால் உருவான பாகுபாடுகள்,  நிறுவனங்கள் தரும் நெருக்கடிகள், காலம்காலமாகத் தொடரும் சமூக மரபுகள் ஆகியவை  பாலின ஏற்றத்தாழ்வுகளுக்கு வலுசேர்ப்பதில் ஒன்றிணைந்திருக்கின்றன  எனவே பொருளாதார வாய்ப்புக்களிலிருந்து பிரித்துப் பெண்களை உற்பத்தி த் திறன்குறைந்தவர்கள் என்ற பொறியில் அடைத்துவைக்கும் காரணிகளைச் சமாளிப்பது  அவசியமாகிறது.

மாறாக  நகருக்கு வெகுதொலைவில் உருவாகும் இதுபோன்ற புதிய  தொழிற்பேட்டைக்கள்  சுதந்திரம்,  தன்னுரிமை போன்றவற்றில் புதிய  வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் அதே நேரத்தில், புதிய சார்பு நிலைகளுக்கும் (கேலிக்குரிய ஊதியம், வேலை நேரத்தை தவறாக பயன்படுத்துதல், வேலை பளுவை அதிகரித்தல்….) காரணமாகின்றன.

முடிவு

இந்தியச் சூழலில்  பாலின அடையாளம் என்பது சமூக ஏற்றத்தாழ்வினை மேலும் அதிகரிக்கச் செய்யும் ஒரு காரணி என்ற கருத்தில் மாற்றமிருக்கமுடியாது.  ஆனால் சாதி, வர்க்கம், புவியியல் இடவமைப்பு ஆகிய விடயங்களில் அதுமட்டுமே தனித்ததொரு  பிரச்சினை அல்ல. கேரள மாநிலத்தின் அனுபவங்களிலிருந்தும் ; நகரமயமாக்கம், தொழில்மயமாக்கம்  ஆகிய பண்புகளுக்குட்பட்ட மாநிலங்களின் ஓரளவு அனுபவங்களிலிருந்தும்  நாம் தெளிவாகப் புரிந்துகொள்வது, திறன்வாய்ந்த குடும்ப நலதிட்டக்கொள்கை யொன்றினைக்கொண்டு  பெண்கள் அனைவருக்கும் கல்வி, சுகாதாரம்பற்றிய விழிப்புணர்வு, ஆகியவற்றோடு, பண்பாட்டு வழிமுறையில்  மாற்றத்தையும், பொதுவாக பெண்கள் நிலையில்  மேம்பாட்டையும் கொண்டுவர முடியுமென்ற உண்மையை.

இந்தியப் பாலின ஏற்றத்தாழ்வு பற்றிய இக்குறுக்குவெட்டு ஆய்வின் அடிப்படையில் சமூகச் சிந்தனையில் நீதிக்கு முதலிடம் கொடுக்கவேண்டிய அவசியம் உணர்த்தப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக 1950 ஆம் வருடமே அதாவது இந்திய அரசமைப்புச் சட்டம் முதன் முதலாக நாட்டில் ஏற்றுக்கொள்ளபட்ட காலத்திலேயே பெண்களுக்குரிய நீதியை வழங்குதல் குறித்த விவாதத்தை தொடங்கியிருந்தார்கள்.  கோட்பாட்டளவில் இந்திய அரசமைப்புச் சட்டபிரிவுக்கூறுகள் 15ம் 16ம் இனம், சாதி, சமயம், பாலினம் இவற்றின் அடிப்படையிலான பாகுபாட்டிலிருந்து நேர்மறை பாகுபாட்டிற்கு ஊக்கமளித்து (அதாவது சட்டசபைகள், பாராளுமன்றங்கள், கல்வி, பொதுத்துறைகள் ஆகியற்றில் சமூகத்தில் மிகவும் பின்தங்கிய மக்களுக்கு முன்னுரிமை அளித்தல்)  அனைத்து இந்தியர்களையும் பாதுகாக்கிறது.  இருந்தபோதிலும், பாலினசமத்துவமின்மையால் விளையும் பாதகங்கள் சாதி அமைப்பு முறை பிரச்சினைகளுக்குக் காரணமாயினும், அவை சிறுபான்மை மதப்(குறிப்பாக இஸ்லாம்)  பிரச்சினைகளென  கருதபட்டு தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன.

சாதி, இனம், சிறுபான்மை மாற்றும் பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் வேற்றுமை பாராட்டக்கூடாதென்ற கொள்கை இந்தியாவைப் பொறுத்தவரை நாம் எதிர்பார்த்தைப்போலவே அந்தந்த  சூழலுக்கேற்பவே செயல்பட்டுள்ளதென்பது தெரியவ்ரும் உண்மை, விளைவாக சாதி அமைப்புகளும், அவை சார்ந்த குழுக்களும் (உதாரணத்திற்கு ‘பின் தங்கிய பிறசாதியினர்’(OBC) ) முன்னுரிமை விடயத்தில்  பாலின அடையாளம், சிறுபான்மையினர் ( தங்களுக்கென தனிநபர் சட்ட வாரியத்தை இவர்கள் நியமித்துக்கொண்டுள்ள போதிலும் – Hasan, 2014)  என்ற பிரிவையெல்லாம் பின்னுக்குத் தள்ளி,  வாகைசூடுபவர்களாக இருக்கிறார்கள்.

வேறு வார்த்தைகளில் சொல்வதெனில் சாதிகளும், பழங்குடியினரென அங்கீகரிக்கப்பட்டவர்களும், பின் தங்கிய வகுப்பினரும் வீதாச்சார கொள்கையால் பயனீட்டும் பிரிவினராக உள்ளனர்.

பெண்கள் அனைவரையும் ஒரேவகையான பிரிவினர் எனக் கூறமுடியாதென்பது நிச்சயம். அவர்கள் சாதி, வர்க்கம், சமயம், இடம் என பல்வேறுகாரணங்களால் பிரித்துப் பார்க்கப்படுபவர்கள். எனினும் OBC யினர் அழைக்கப்படும் பிற பிற்பட்ட வகுப்பினர் வெவ்வேறானவர்கள், சிதறிய வகுப்பினர் என்ற நிலையை, தங்களுடைய   கூட்டம்சேர்க்கும் அரசியலாலும்,  இடஒதுக்கீடு வீதாச்சாரம் ஆகியவற்றின் தயவினாலும் இவர்கள்  கடக்க முடிகிறது, காரணம் இவை இரண்டும் அரசியல் வெற்றியை இன்று தீர்மானிக்கும் காரணிகள்.  இருந்தும் சமூக மரபுகளில் அழுத்தம்கொடுக்கக்கூடிய சக்திகள் பாலின சமத்துவத்தில் குறிப்பிடத்தக்க அனைத்து பரிணாம வளர்ச்சியையும் கட்டுக்குள் வைத்திருக்கின்றன, இவ்வளவிற்கும்  சமூக சட்டங்களை  நடைமுறை படுத்துவது  அரிதாக என்றாலும் தொடரவே செய்கிறது, குறிப்பாக வடபகுதிகளில்.

உண்மையில் நீதிமன்ற முடிவுகள் மற்றும் விளக்கங்களின்படி  மனைவி, தாய், நலிந்தவள், அடக்கமானவள், பாதுகாப்பு வேண்டுபவளென என பலவகையில்  பெண்கள் பிரதிநித்துவபடுத்தப் படுகிறார்கள். கடைசியில் வழக்கம்போல குடும்பம் என்பது  சட்ட உரிமையின் குறுக்கீட்டிலிருந்து தப்ப முடிந்த தனிப்பட்ட உலகமாக இருந்து வருகிறது(K. Marius, 2016).

பெண்களின் சுய உரிமையை க் கருத்திற்கொண்ட பல்வேறு முற்போக்கான சட்டங்கள், அவற்றை உறுதியாக க் கையாளக்கூடிய தனிநபர் சட்டம் மற்றும் சம்பந்தப் பட்ட சமுகத்தின் மரபுகள் ஆகியவற்றுக்கிடையேயுள்ள இந்த அடிப்படை முரண்பாடுகளை இந்திய அரசின் சட்டத் துறை முதலிற் களைந்தாக வேண்டும்.

—————————————————–

Compléments bibliographiques

Voir aussi

 

Kamala MARIUS
Géographe, maîtresse de Conférences HDR,
Université Bordeaux Montaigne, 
UMR LAM (CNRS/Sciences Po Bordeaux)
Institut Français de Pondichéry, UMIFRE 21 CNRS/MAEE

Merci à Anne Le Fur pour la réalisation des cartes de ce corpus.

mise en web : Jean-Benoît Bouron

[1] L’intersectionnalité (Crenshaw, 2005) est une démarche tout à fait utile pour la géographie car elle permet d’étendre considérablement le travail de déconstruction sur les pratiques spatiales en intégrant les mécanismes de domination divers, liés au sexe, au genre, à la caste, à la communauté, aux générations. Cette réflexion sur l’intersectionnalité des catégories de genre, race et caste a très largement nourri le champ des postcolonial studies, des diapora studies, des queer studies.

[2] Les brahmanes appartiennent à l’ordre le plus élevé (varna) du système des castes (Marius-Gnanou et al., 28, 2015)

[3] Amartya Sen est sans doute l’un des penseurs indiens qui a proposé l’une des analyses les plus pertinentes sur les inégalités dans le contexte indien en adoptant une approche multidimensionnelle, combinant classe, caste et genre.

[4] Les données sont issues du recensement de 2011, c’est pourquoi dans les documents de cet article l’Andhra Pradesh n’est pas divisé comme c’est le cas depuis 2014 avec la création d’un nouvel État, le Télangana.

[5] Le gouvernement central a mis en place The National Girl Child Protection Scheme, qui attribue des aides aux familles pour la scolarité de leur fille, pour leur mariage, selon leurs revenus.

[6] Guilmoto, Christophe. « La masculinisation des naissances. État des lieux et des connaissances », INED, 2015 (pdf)

[7] LiveMint, 22/10/2015 Par comparaison, la France compte 52 000 écoles primaires publiques et privées.

[8] Les données pour cet article proviennent essentiellement de Sonalde, Desai et al., Human Development in India, challenges for a society in transition, OUP, 2010. Ce rapport récent est sans doute le mieux documenté sur les questions de développement humain en Inde. Il a été réalisé par des chercheurs de l’Université du Maryland et du NCAER entre décembre 2004 et novembre 2005. L’enquête a été menée auprès de 41 554 ménages (soit 215 000 personnes) dans 33 États.

[9] Réalisée dans six pays (le Brésil, le Chili, la Croatie, l’Inde et le  Rwanda), l’enquête menée par l’International Centre for Research on Women (ICRW) basé aux États-Unis et en Inde, ainsi que l’Instituto Promundo au Brésil, a pris en compte plus de 8 000 hommes et 3 500 femmes entre 18 et 59 ans. La conception des relations hommes-femmes y est étudiée notamment à travers les situations de violences conjugales, sexuelles, ou encore la distribution des tâches au sein de la famille. L’Inde partage le pire bilan avec le Rwanda en termes de violences conjugales et d’inégalités hommes-femmes. Les Indiens sont en tête des inégalités des sexes concernant la répartition des tâches domestiques. http://www.icrw.org/publications/evolving-men

[10] Sahoo, Raju, 2007, Social change, vol 73, n°4 p. 131-152

[11] http://www.oecd.org/fr/eco/Inde%202014%20Synthese.pdf

 

மொழிவது சுகம் ஜனவரி 10, 2017:ஜல்லிக்கட்டு பூம் பூம்……

நமக்கென்று மெல்வதற்கு அவ்வப்போது சில பிரச்சினைகள் கிடைக்கின்றன. ஜெயல லிதா மர்மச்சாவு  போய் ஜல்லிக்கட்டு வந்திருக்கிறது ….

தமிழ்நாட்டில் தென் மாவட்ட த்தில் காலம் காலமாய் ஜல்லிக் கட்டு நிகழ்ந்து வருகிறது இதைத் தடுப்பதற்குச் சொல்லப்படும் காரணங்கள் வலுவானவை அல்ல. ஐரோப்பிய நாடுகளில் ஸ்பெயினில் ‘corrida de toros’ , என்ற பெயரிலும் பிரான்சின் சில பகுதிகளில் ‘la Corrida’ என்ற பெயரிலும், போர்ச்சுகல், பெரு, கொலம்பியா போன்ற இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும் இக்காளைச்சண்டைகள் ஜாம் ஜாமென்று எதிர்ப்பையெல்லாம் மீறி நடந்துவருகின்றன. இங்கும் விலங்குப் பாதுகாப்பாளர்களின் (la Société Protectrice des animaux (SPA)கடுமையான எதிர்ப்புக்கு ஆளாகி நீதிமன்றங்கள் வரை(குறிப்பாக பிரான்சுநாட்டில்) பிரச்சினை எடுத்துச் செல்லப்பட்டது.  எனினும் காலம் காலமாய் கடைபிடிக்கப்பட்டுவரும் மரபு என்ற வகையில் நீதிமன்றம் அனுமதித்ததால் அவை நடைபெற்று வருகின்றன. Corrida வீரர்களை காளயைக் கொல்பவர் என்ற பொருளில் Matador என அழைக்கிறார்கள். அதாவது தமிழர் மரபுக்கு மாறாக இவர்கள் காளையைக் கொல்பவர்கள். நமது மரபு காளையை அடக்குவது தான். இதனைத் தடுப்பதில்  எவ்வித நியாமும். இருப்பதாக த் தெரியவில்லை. நடிகர் கமலஹாசன் சொல்வதைபோல உணவுக்காக கொல்லப்படும் விலங்கு கள் வதையின்றிக் கொல்லப்படுகின்றனவா எனப்பார்க்கவேண்டும். இங்கே காளைகள் துன்புறுவது மிகமிக க்குறைவு. தார்க்குச்சி பாய்ச்சி பாரவண்டிகளை இழுக்கும் மாடுகள் நாடெங்கும் இன்றைக்கும் இருக்கவே செய்கின்றன. கிராமங்களில் சுமையை இழுக்கமுடியாமல் படுத்து அடம் பிடிக்கும் மாடுகளை வாலச்சுருட்டுவதும், மிலாறுகளால் கைவலிக்க அடிப்பதும், கண்களில் மிளகாய்த் தூளைத் தூவுவதையும் சிறுவயதில் பார்த்துப் பதறியதுண்டு.  இப்பிரசினைகள் எல்லாம் இக்காளைகளுக்கில்லை. தவிர சொல்லபோனால் சபரிமலைகளுக்குப் போகும் மனிதர்களைப்போல குடும்பத்தின் மற்றவர்களை பட்டினிபோட்டு பிரத்தியேக கவனிப்பு.

 

இருந்தும் சில கேள்விகள் ஐயங்கள்  எனக்கு வருகின்றன.

 

மேற்குலகில் விருபுகின்றவரெல்லாம் காளையுடன் சண்டை யிட முடியாது. Matador ஆக விரும்புவர்கள் கடுமையானத் தேர்வுக்குப் பிறகு உரிய பயிற்சியைப் பெற்று களத்தில் இறக்கிவிடப்படுபவர்கள். அந்த நிலை தமிழ் நாட்டில் இல்லை. தவிர இச்சண்டைக்கென உரிய வகையில் பாதுகாக்கப் பட்டத் ‘திடலும்’, இத்துறைக்கென சிறப்பு பயிற்சிபெற்ற மருத்துவக் குழுவும், வீர ர் காயம்பட்டாலோ, உயிர் இழந்தாலோ கணிசமானத் தொகையை காப்பீட்டு நிறுவனங்களும்,  உதவித்தொகையை அரசும், காளைச்சண்டை ஏற்ப்பாட்டாளர்களும்  அவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும்இசெய்து தருகின்றனர். இதுபோன்ற பாதுகாப்பு உத்தரவாதங்கள் தமிழ்நாட்டு ஜல்லிக்கட்டு வீர ர் களுக்கு உண்டா ?

 

இது தவிர எனக்கு வேறு சில சந்தேகங்கள்….

 

  1. தமிழ் நாட்டில் காளைகள் பலசலியாக இருக்கின்றன, காளையை அடக்குகிறேன் என கள மிறங்கும் வீர ர் கள் அந்த அளவிற்கு இல்லையே ஏன்

 

  1. தமிழ்நாட்டில் பேய் பிடி த்த து என்று சொல்லி ஆடுகின்றவர்களைப் பார்த்திருக்கிறேன், உயர் சாதி இந்துக்கள் பெண்களுக்கோ பணக்கார குடும்பங்களைச் சேர்ந்தவர்களோ இப்படியெல்லாம் தெருவில் இறங்கி ஆடுவதில்லை. அதுபோல காளையைப் பிடிக்கிறேன் என களத்தில் இறங்கும் இளைஞர்களெல்லாம் பின் தங்கிய மக்களாகவே ஏன் இருக்கிறார்கள் ? இந்த வீரம் மார் தட்டும் மற்ற தமிழர்களிடம் எப்படி இல்லாமல் போயிற்று ?

 

3. இந்த அப்பாவி இளைஞர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் அரசு தரும்                 பாதுகாப்புகள் என்ன ?  அவர்களின் இழப்பினை ஈடு செய்ய அரசின்                                      உத்தரவாதம் என்ன ?

 

  1. தமிழக முதலமைச்சரோ, ஸ்டாலினோ, வைகோவோ, திருமாவளவனோ, அன்புமணியோ இம்மாதிரியான சிக்கலான நேரத்தில் பொங்கல் நிமித்தமாக ஆளுக்கொரு களத்தில் இறங்கி காளையை  அடக்கித் தமிழர் பெருமையை  ஏன் நிலை  நிறுத்தக்கூடாது ?

 

——————————–

 

 

மொழிவது சுகம் ஜனவரி 2 2017

முகமற்ற மனிதர்கள்jazz-artist

 

நேற்றிரவு, சியாட்டல் வீதியில் நடந்தபோது, கடுமையன குளிர். விழாக் காலமானதால்  கூடுதலான மின்விளக்குகள் அலங்கரிப்பில் சாலைகள். ஆங்கிலப்புத்தாண்டின் மகிழ்ச்சி கலகலவென்று சிரிப்பூடாக சிந்தியதுபோக இமைகளில் ஓளித்துகள்களாக ஒட்டிக்கொண்டிருந்தது போக,  மெல்லிய இருள் பூசிய முகங்களில் குறையாமல்  சிவந்த முகங்கள் என்பதால் பளிச்சென்று தெரிந்தது. எனினும் இவற்றையெல்லாம் பொருட்படுதாமல் கடக்கும் நொடிகளை அலங்கரிக்கும் முயற்சியில் ஒரு ஜாஸ் கலைஞன். தன்னைக் கடந்தும் செல்லும் மக்களின் கவனத்திற்கு தனது இசை உள்ளாகிறதா, அதன் உவகையும் இனிமையும் குளிருக்கு இதமாக பாதசாரிகளின் இதயத்தை வருடுகிறதா என்பதுபற்றிய பிரக்ஞை எதுவும் இல்லாதவன்போல இசைஇழைகளின் ஊடாக நாங்கள் விலகி வெகுதூரம் சென்றைருந்தபோதும் எங்களைப் பின்தொடர்ந்து கொண்டிருந்தான்.

 

உலகின் மிகச்சிறிய அரசு என்ற அளவில் (எல்லைப்பரப்பில்  பார்க்கிறபோது) வாடிகனும், போப் பிரான்சுவாவும் சட்டென்று நினைவுக்கு வருவதப்போலவே நிலப்பரப்பில் மிகப்பெரிய  நாடு என்றதும் ரஷ்யாவும் புட்டினும் நினைவுக்கு வருகிறார்கள். இவற்றுக்கிடையில் எத்தனையோ நாடுகளிருந்தும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சில நாடுகளையும் அதன் தலைவர்களை  மட்டுமே நமக்குத் தெரிந்திருக்கிறது.

 

மோடியை அறியாத பெரும்பான்மையான பிரெஞ்சுக்காரர்களைப் போலவே, பிரான்சு அதிபரைப்பற்றிக் கேள்விப்பட்டிராத கோடிக்கணக்கான இந்தியர்கள் உண்டு ஆனாலும் இந்த இருநாட்டு  மக்களும் ஒபாமா யார்,  புட்டின் யார் ஏன் ? நாளை வரவிருக்கிற ட்ரம்ப்பையும் அறிந்திருக்கிறார்கள். மோடியை பிரெஞ்சுக்காரர்கள் அறியாததும், பிரான்சு அதிபரை இந்தியர்கள் அறியாததும் யார்குற்றம். ஒருவரைப்பற்றி நாம் அறியத் தவறியாதாலேயே அவர்கள் இருத்தல் இல்லை என்றாகிவிடுமா ?

 

ஒரிடத்தின் இருத்தல் பிற இடங்களில் இன்மை ஆவது இப்படித்தான்.  இவ்வுலகம் அறியப்பட்டவர்களால் மட்டுமல்ல அறியப்படாதவர்களாலும்  முன்நகர்த்தப்படுகிறது, சுமந்து செல்லப்படுகிறது. வரலாறு படைநடத்துனர்களுக்கு மட்டுமல்ல படையில் ஆயிரத்தில் ஒருவராய் காலிழந்த கையிழந்த, உயிர்நீத்த எண்ணற்ற வீரர்களுக்கும் சொந்தமானது.

 

இருட்டிற்கு நிறமில்லை என்பது எந்தவிதத்தில் நியாயம் ? பச்சையையும், சிவப்பையும் கண்ணிழந்த சகோதரர் கறுப்பாகப் பர்க்கிறார் என்பதால் அவை இரண்டும் நிறமற்றவை என்பதை நாம் ஏற்போமா ? அதுபோல இருட்டிற்கு நிறமில்லாதது நமது கண்களின் குறையாக  இருக்கலாமில்லையா ? ஆட்சியாளர்களைப்போல, நிர்வாகிகளைப்போல, அறிவியல் வல்லுனர்களைப்போல படைப்பிலக்கியவாதிகளைப்போல  வியர்வை சிந்தும் இருட்டும் பகல் தான்,  விழாக்கால மின்சார அலங்காரத்தைப்போல முகமற்ற அந்த ஜாஸ் மனிதனும் விழாக்கால இரவுக்கு ஒளிச்சேர்ப்பவர்தான்.  வீதிகளில், பேருந்துகளில், அங்காடிகளில் இப்படித்தான் ஏதோவொரு இசைக்கருவியை வாசித்தவண்ணம்  இவ்வுலகை இயக்கும் மனிதர்கள் இருக்கவே செய்கிறார்கள்.

————————————————————————