Monthly Archives: ஏப்ரல் 2023

பெருவெளி எழுத்து:  

குற்றநீதிபற்றிய விசாரணைகள் : காப்காவின் நாய்க்குட்டி

பெருவெளி எழுத்து:  – அ.ராமசாமி

நாவல்கலையினூடாக  வகைபிரித்தல்

Advertisements

Report this adஅந்தரங்கம்

காலம், வெளி, பாத்திரங்கள் என்ற மூன்றையும் தனது விருப்பம் போல் உருவாக்கி விரியும் நாவல் இலக்கியப்பரப்பிற்கு எல்லைகள் எதுவும் இல்லை. அதே நேரத்தில் அது யாருடைய வாழ்க்கை வரலாற்றையும் விரிவாகச் சொல்லும் நோக்கம் கொண்ட இலக்கியவகையும் இல்லை. இது ஒன்றைத்தவிர நாவலென்னும் இலக்கியக்கலைக்கு வரையறை எதையும் சொல்லிவிடமுடியும் எனத் தோன்றவில்லை.

எழுதப்பட்ட ஒரு நாவலின் நிலவியல் பின்னணிகளையும் மொழிக்கூறுகளையும் அறியும்போது வட்டார நாவல் என வகை பிரிக்கிறோம். அதேபோல் காலப் பின்னணியைக் கணிக்கும்போது வரலாற்று நாவலாக மாறும் வாய்ப்பு உண்டு. தமிழில் எழுதப்பட்டு வாசிக்கப்பட்ட வரலாற்று நாவல்கள் பெரும்பாலும் வரலாற்றாசிரியர்களால் அறியப்பட்டு, உறுதிசெய்யப்பட்ட காலத்தைப் பின்னணியாகக் கொண்டவை, அறியப்பட்டு உறுதிசெய்யப்பட்ட நகரங்களில் நடந்ததாகவே அவற்றின் கதைகளும் சொல்லப்படுகின்றன. அப்படிச் சொல்லப்பட்ட கதைகளில் அரசர்களின் பெயர்களும் கூட வரலாற்றுத் தரவுகளால் உறுதிசெய்யப்பட்டனவாக இருக்கின்றன. வரலாற்று நாவலாசிரியர்கள் முன்வைத்த வரலாற்றுப் பாத்திரங்களையே தலைப்பாக்கிச் சொல்வதை எளிய வழிமுறையாகப் பலரும் பின்பற்றினார்கள். வரலாற்றுப் புனைவுகளில் புதிய திசைகளில் பயணம் செய்த பிரபஞ்சன் (மானுடம் வெல்லும்)அந்த எளியமுறைக்கு மாற்றை முன்வைத்தவர்.

அறியப்பட்ட வரலாற்றைக் கவனமாகத் தவிர்த்துவிட்டு புனைவான வரலாற்றை உருவாக்குவதன் மூலம் சமூகநாவல்கள் உருவம் கொள்கின்றன. புனைவான கிராமங்கள் அல்லது நகரங்களை உருவாக்கும் நாவலாசிரியர்களின் நாவல்களிலும் ஆண்டுக் கணக்குகளைச் சுலபமாகக் கண்டு சொல்ல முடியும். வாசிப்பவர்களுக்குக் கூடுதலான வரலாற்றறிவும் நிலவியல் பார்வையும் இருந்தால் அறியப்பட்ட வரலாற்றின் பின்னணியைக்கூடக் கண்டுபிடித்துவிடலாம். அதன் மூலம் ஒரு புனைவான நாவலை வரலாறாகவும் சமூக இருப்பாகவும் இயங்கியலாகவும் வாசிக்கமுடியும். ஆனால் உருவாக்கப்படும் பாத்திரங்கள் எப்போதும் புனைவாகவே இருக்கும்; இருக்கவேண்டும். அதுவும் அறியப்பட்ட மனிதர்களாக இருக்கும் நிலையில் அவை தன் வரலாறாகவோ/ வரலாற்றுப்புனைவாகவோ ஆகிவிடும். இவ்வளவு சிக்கல்களையும் தாண்டித்தான் அல்லது உள்வாங்கிய பின்பே ஒரு எழுத்தாளர் நாவலை உருவாக்குகிறார். இதன் மறுதலையாக இவ்வளவு புனைவுகளையும் உடைத்துப் புரிந்துகொள்பவனே நாவலின் வாசகனாகவும் விமரிசகனாகவும் மாறுகிறான் என்றும் சொல்லலாம்.

புதுவகை நாவல்கள்

பாத்திரங்களை உருவாக்குவதில் பெருமளவு வேறுபாடுகள் இல்லையென்றபோதும் காலம், வெளி ஆகியனவற்றை உருவாக்குவதில் நேர்கோட்டுத்தன்மையைக் குலைப்பதைப் புதுவகை நாவல்கள் முக்கியமான உத்தியாக நினைக்கின்றன. நேர்கோடற்ற தன்மையினூடாகப் பாத்திரங்களின் புறச்சூழலையும் அகநிலைப்பாடுகளையும் சந்திக்கச் செய்வதும் நடக்கின்றன. விலகிப்போவதையும் உருவாக்குகின்றன. இணைதலும் விலகலுமான எழுத்துமுறையின் மூலம் நமது காலத்து மனோநிலையான- நவீனத்துவ முறையைக் கடந்த பின் நவீனத்துவ மனநிலையைக் கட்டமைக்க முடியும்.  முதன்மையாக நான் எழுதும் நாவலில் விரியும் எதுவும் பெருங்கதையாடலின் கூறுகள் கொண்டதல்ல என்பதை எழுதுபவன் உணர்த்த முடியும். அண்மையில் வாசிக்கக் கிடைத்த ஒரு தமிழ் அத்தகைய உணர்த்துதலைக் கச்சிதமாகச் செய்தது.அந்த நாவலின் வெளி ஆச்சரியப்படத்தக்க விதமாகப்  பெருவெளிப் பரப்பைக் கொண்டிருக்கிறது. சிறுபரப்பான ஊர்களில் நிலைகொள்ளாது, மாநிலம் மற்றும் தேசம் என்னும் நிலவியல் சட்டகங்களைத் தாண்டி, கண்டத்தையும் கடக்கும் வெளியைக் கொண்டதாக எழுதப்பட்டுள்ளது அந்த நாவல். அந்த வகையில் இந்நாவலைத் தமிழின் முக்கியமான வரவு எனச் சொல்வதில் எனக்குத் தயக்கமில்லை.நாவலின் பெயர் காப்காவின் நாய்க்குட்டி(மே,2015). எழுதியவரின் பெயர் நாகரத்தினம் கிருஷ்ணா. நாகரத்தினம் கிருஷ்ணா தமிழ் நிலப்பரப்பில் வாழும் தமிழ் எழுத்தாளர் அல்ல; அவர் வாழும் நகரம் பிரெஞ்சு நாட்டின் ஸ்ட்ராபோர்டு  என்பதால் இப்பெருவெளி எழுத்து சாத்தியமாகியிருக்கிறதோ என்றுகூடத் தோன்றுகிறது. உலக இலக்கிய வரலாற்றில் நன்கு அறியப்பட்ட பெயர் ப்ரான்ஸ் காப்கா. காப்காவின் முக்கியமான நாவலொன்று (Der Process/Trial-விசாரணை) தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு கால் நூற்றாண்டுக்கும் மேலாகிறது. பிரெஞ்சு நாட்டில் வாழும் நாகரத்தினம் கிருஷ்ணா, காப்கா என்னும் ஜெர்மானிய நாவலாசிரியரின் பெயரோடு ஒரு நாய்க்குட்டியை இணைத்துத் தனது நாவலுக்கு ஏன் தலைப்பு வைக்கவேண்டும் என்ற ஆவலே அந்த நாவலை வாசிக்கத்தூண்டும் காரணங்களில் முதன்மையாகிவிட்டது எனக்கு.

கட்டமைப்புப் புதுமை

அறியப்பட்ட இலக்கிய ஆளுமையான காப்கா என்ற குறிப்பான பெயரைத் தலைப்பாகக் கொண்ட அந்த நாவலின் பக்கங்களுக்குள் நுழைந்தால் ஒவ்வொரு இயலுமே குறிப்பான தகவல்களோடு தொடங்கி இருக்கிறதைக் கவனிக்கலாம். ஒரு நாட்குறிப்பின் பக்கங்களைப் போல ஒவ்வொரு இயலும் உருவாக்கப்பட்டுள்ளன. ஆண்டு, தேதி, கிழமை ஆகிய தகவல்கள் முன்நோக்கிய வரிசையில் தரப்பட்டிருந்தால் ஒரு நாட்குறிப்பை வாசிக்கும் அனுபவம் கிடைக்கக்கூடும். அதன்மூலம் எழுதியவரின் மனப்பதிவுகளை வாசிக்கிறோம் என்ற எண்ணம் உண்டாகியிருக்கும்.  ஆனால் காலக் குறிப்புகளோடு வெளியின் விவரங்களான நகரம் மற்றும் தேசக் குறிப்புகளையும் தந்திருப்பதால் வாசிப்பவர்க்குத் தரப்படுவது நாட்குறிப்பனுபவம் இல்லை என்றாக்கப்பட்டிருக்கிறது. இடம், மற்றும் காலமென இரண்டும் ஒன்றிணைக்கப்பட்ட பின்பு பாத்திரங்களின் வினைகளும் உரையாடல்களும் தொடர்ந்துள்ளன. இதனால் வாசிப்பவர்களுக்குக் கிடைப்பது வேறுவகையான உணர்வு. கிடைக்கும் உணர்வு,  வரலாற்றைப் புனைவாக வாசிக்கும் அனுபவம். வெளிப்பாட்டு நிலையில் சமகாலத்தை மையமாக்கும் நாவல் என்னும் இலக்கியவடிவம் வரலாற்றுக்குள் நுழைவதின் நேர்மறைக் கூறுகளில் முதன்மையானது நம்பகத்தன்மையை உருவாக்குவது. அதல்லாமல் இன்னும் சில நேர்மறைக்கூறுகளும் உள்ளன. அதேபோல் எதிர்மறைக் கூறுகளும் உள்ளன. அவை பற்றித் தனியாக விவாதிக்கலாம்.

குறிப்பான குறிப்புகளும் நம்பகத்தன்மையும்  

நாகரத்தினம் கிருஷ்ணாவின் நாவல்பிராஹாசெக் குடியரசு/ 2013, சனிக்கிழமை  ஏப்ரல்,6 எனக் குறிப்பான வெளி மற்றும் காலக்குறிப்போடு முதல் இயலைத்  தொடங்குகிறது. நாவலின் கடைசி இயலான   47 வது இயலும் அதே  பிராஹாசெக் குடியரசு 2013, ஏப்ரல் 6 சனிக்கிழமை என அதே நாளிலேயே முடிகிறது.  இதனால்  ஒரேநாளில், ஒரு நகரத்தில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு என நினைத்துவிடும் வாய்ப்பிருக்கிறது.  தொடங்கிய புள்ளியில் நடந்த ஒரு மாயத்தை விடுவிக்கும் ரகசிய விடுவிப்பாக எழுதப்பட்டுள்ள இந்நாவலின் காலக்கணக்குகளைக் கவனமாகக் கணக்கிட்டால் கால அளவு நான்கு ஆண்டுகள் என்பது தெரியவரலாம். நான்காண்டுகளில் நடந்த சில நிகழ்வுகள் ஒரு மையத்தைச் சென்று அடைவதற்காக  உருவி எடுத்துத் தரப்பட்டுள்ளன. அதேபோல் நிகழ்வுகளின் தொடக்க வெளியாக ஐரோப்பாவின் செக் நாட்டுத் தலைநகர் பிராஹாவாக இருந்தாலும் அதிகமான நிகழ்வுகள் பிரான்ஸ் நாட்டின் ஸ்ட்ராபோர்டு நகரத்திலேயே நடக்கின்றன. ஸ்ட்ராபோர்டு நகரத்திற்கு  இலங்கையின் முல்லைத்தீவிலிருந்தும்    இந்தியாவின் புதுச்சேரி நகரத்திலிருந்தும் வந்து சேர்ந்த மனிதர்கள் சந்தித்த நடைமுறைச் சிக்கல்களும் மனவியல் உறுத்தல்களுமே நாவலின் களம். இவ்வெளிகள் தவிரப் பயணவெளிகளாக ஜெர்மனியின் ப்ராங்க்பர்ட்டும், எந்தெந்தத்தேசமெனத் தெரியாத பயண வழித்தடங்களும்கூட நாவலின் பரப்பில் வந்து போகின்றன .காப்காவின் நாவல் நிகழ்வெளியால் மட்டுமல்லாமல் தரப்பட்டுள்ள குறிப்பான காலக் குறிப்புகளாலும்கூடப் பெருவெளி எழுத்தாக இருக்கிறது. காலத்தை அதன் நிகழ்தகவில் வரிசைப்படுத்தும்போது முதல் நிகழ்வாக 2009 மே 20, புதன்கிழமையை தொடக்க நாளாகச் சொல்லலாம். இந்த நாள் இலங்கைத் தீவில் நடந்த மனிதப் பேரழிவுக்குப் பிந்திய ஒரு நாள் என்னும் குறிப்பு என்பதை மறந்துவிடக்கூடாது. மொழியையும் சமயத்தையும் அடையாளமாகக் கொண்ட பெரும்பான்மைச் சிங்கள பௌத்த ஒடுக்குமுறைக்கெதிராகத் தமிழ்/இந்துச் சிறுபான்மையினம் நடத்திய விடுதலைப்போரில் மனிதப்பேரழிவு நடந்த இடம் முல்லைத்தீவு. அந்த வரலாற்றுக் குறிப்போடு தொடங்கும் அந்த இயலில் முல்லைத்தீவிலிருந்து கிளம்பிக் கொழும்பு வழியாக இந்தியா வந்து, எந்தெந்த நாடுகள் வழியாகவும் நகரங்கள் வழியாகவும் செல்கிறோம் என்பதை அறியாமல் பயணம் செய்த ஒரு பெண்ணை (நித்திலா) அவளது அகதி அடையாளத்தோடு பிரான்ஸில் தங்கவைத்துவிட ஒரு பெண் (ஹரிணி) உதவுகிறாள். அப்படி உதவும் அவள் நித்திலாவோடு எந்த உறவும் கொண்டவள் அல்ல. ஆனால் தமிழ்பேசும் ஆடவனுக்கும் பிரெஞ்சு பேசும் பெண்னொருத்திக்கும் பிறந்தவள். அவளது முயற்சியில் அவளது நண்பர்களும் பங்கெடுக்கிறார்கள். அவர்களின் முயற்சிக்குப் பின்னிருக்கும் மனநிலை என்ன? என்பதே நாவல் எழுப்பும் அடிப்படை வினா. இந்த வினாவிற்கான விடையைப் பெற இன்னும் சிலரின் பயணமும் காரணங்களாக இருக்கின்றன. அந்தப் பயணமும் செக் நாட்டின் பிராஹாவை நோக்கிய பயணமே. இந்தப் பயணம் நித்திலாவின் பயணம்போல நெருக்கடியால் விரும்பி மேற்கொண்ட பயணமல்ல. தற்செயல் நிகழ்வுகளால் நகர்த்தப்படும் பயணம்.

இந்தியாவின் தென்கோடி நகரமான கன்யாகுமரியிலிருந்து 2010, நவம்பர்,12, வெள்ளிக்கிழமை காலை கிளம்பி, ரயிலில் டிக்கெட்டில்லாப் பயணியாக ஏறி, அந்த ரயிலில் வரும் ஒரு வெள்ளைக்காரனோடு ஒட்டிக்கொண்டு வட இந்தியாவின் புதுடெல்லி வந்து, ரிஷிகேஷில் தங்கியிருந்து இந்திய ஆன்மீகத்தின் அடையாளமாக ஆன ஒருவன், செக் குடியரசின் தலைநகரான பிராஹா வந்து சேரும் சாமியாரின் பயணம். இவ்விரு பயணிகளும் மூன்றாவதாக ஒரு கதைக்கண்ணியில் இணைக்கப்படுகிறார்கள். அந்தக் கண்ணி, புதுச்சேரியின் பிரெஞ்சிந்தியர்களுக்குள்ள இரட்டைக் குடியுரிமையைப் பயன்படுத்தி பிரான்சில் வாழும் குடும்பம். அவர்களது உதவியால் பிரான்ஸ் வந்த சேர்ந்தவன் வாகீசன் என்னும் இளைஞன்.

நாவலின் வெளியைப் பெருவெளியாகவும், குறிப்பான நான்காண்டு காலத்தை நிகழ்வுகளின் காலமாகவும் கொண்ட காப்காவின் நாய்க்குட்டியை அதன் ஆசிரியர் உருவாக்கியிருக்கும் சொல்முறையும் தொனியும் முக்கியமானவை. ரகசியங்களைத் தேடும் துப்பறியும் பாணியும், அதனால் கிடைக்கக்கூடிய விசாரணையின் விடுவிப்புமான சொல்முறையும் நாவல் முழுக்கப் பின்பற்றப்பட்டிருக்கிறது. மனிதத் தன்னிலைக்குள் அலையும் குற்றவுணர்வுக்கான காரணங்கள் மனிதர்களிடம் மட்டுமே இருப்பதில்லை; அவர்கள் வாழும் அமைப்புகளின் விதிகளிலும் இருக்கின்றன என்பதைத் தனது படைப்புகளில் அடியோட்டமாக வைத்து எழுதியவர் காப்கா. அதனை நினைவூட்டம்விதமாகத் தலைப்பைத் தேர்வுசெய்த நாகரத்தினம் கிருஷ்ணா தனது எழுத்துமுறையை விசாரணையின் தன்மையில் உருவாக்கியதன் மூலமும் தலைப்புப்பொருத்தத்தைச் செய்ய நினைத்திருக்கிறார்.

நித்திலா அகதியாகத் தொடர்ந்து இருக்கத்தக்கவளா? வெளியேற்றப்பட வேண்டியவளா? என்ற விசாரணைக்குப் பின்னால் பல துப்பறியும் பணிகள் நடக்கின்றன. துப்பறியும் பணியில் ஈடுபடுபவள் முழுநேரத்துப்பறியும் பணியில் ஈடுபட்ட அனுபவம் கொண்டவள் அல்ல. ஐரோப்பிய நீதிமன்றங்கள் பின்பற்றும் நடைமுறைப்படி குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படும் நித்திலாவின் பேச்சை மொழிபெயர்க்கப்போனவள் ஹரிணி. அவளது மொழிபெயர்ப்புப்பணி கூடத் தற்செயலாக நேர்ந்தது. வழக்கமாக மொழிபெயர்ப்புச் செய்யவேண்டியவர் வரமுடியாததால், தனது வேலையைத் தற்காலிகமாகக் கைவிட்டுவிட்டு மனச்சோர்வோடிருந்த ஹரிணி தற்செயலாகத் தான் ஏற்றுக் கொண்டாள். ஏற்றுக் கொண்ட அவளுக்கு நித்திலாவின் மௌனமும், பேச விரும்பாத இறுக்கமும் பல ரகசியங்களைக் கொண்டது என நினைக்கவைக்கிறது. அதுவே அவளுக்கு ஏதாவது உதவிசெய்தாகவேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குகிறது.

இறங்கித் துப்பறிகிறபோது நித்திலா திருமணம் ஆகாமலேயே ஒரு குழந்தையைப் பெற்றுக்கொண்டவள் என்ற உண்மை தெரியவருகிறது. ஆனால் அந்த குழந்தை அவளிடம் இல்லை. அவளைப் பிரான்சிற்கு வரவழைத்த அக்காவிடம் இருக்கிறது. அக்காளும் அத்தானும் தங்கள் குழந்தை என்றே வளர்க்கிறார்கள். நித்திலாவின் குழந்தைக்குக் காரணமான ஆண் யார்? எதையும் வாயைத்திறந்து சொல்ல மறுக்கிறாள் நித்திலா. எந்தத் தீர்ப்பையும் ஏற்கும் மனவலிமையோடு கூண்டேறி இறங்கிக் கொண்டிருக்கிறாள் அவள். இந்த மனவலிமைதான் ஹரிணியை உற்சாகமடையச் செய்கிறது.

ஹரிணியைப் பொறுத்தவரையில் அந்தக் குழந்தை நித்திலாவின் குழந்தை என்று நிரூபித்துவிட்டால் அங்கேயே அவளை அகதியாகத் தங்கவைத்துவிடலாம் அதற்கான துப்பறிதலும் விசாரணைகளுமாக நாவல் பல முடிச்சுகளோடு நகர்கிறது. செயலாகக் கைவ் முறையானதங்கள் நாட்டிற்குள் நுழைந்தவர் முறையான அனுமதியின்றி நுழைந்தவராக இருந்தபோதிலும் சொந்தநாட்டுக் குடியுரிமைச் சட்டங்களும், உலக மன்றங்களில் ஒத்துக் கொண்ட அகதியுரிமைச் சட்டங்களும் அனுமதித்தால் ஒருவரை நாட்டைவிட்டு வெளியேற்றக் கூடாது என்ற உயரிய நடைமுறைகளைக் கொண்ட நாடுகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் குடியேற்றமுறையான விசாரணையின் அடிப்படையிலும் ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டில் அகதியாக ஒருவரைத் முல்லைத் தீவிலிருந்து நித்திலாவை ஸ்ட்ராபோர்ட் நகரத்திற்கு வரவைத்தவர்கள் அவளது அக்காவும், அவரது கணவரும். வரச்சொன்னபோது இருந்த காரணம், அவளுக்கு அங்கு அகதி உரிமையோடு புதுச்சேரியிலிருந்து வந்து பிரான்சில் தங்கியிருக்கும் வாகீசனைத் திருமணம் செய்து வைத்து போராளியாக வாழ்ந்தவளைக் குடும்பப் பெண்ணாக மாற்றிவிடலாம் என்ற ஆசைதான். அவனது புகைப்படத்தையெல்லாம் காட்டி அழைத்த அத்தானும் அக்காவும் அவள் வந்த பின்னர் அவனைக் கண்ணிலேயே காட்டவில்லை. நீண்ட காலமாகத் தங்களுக்குக் குழந்தை இல்லையென்பதால் அவளைத் தானே திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்ற ஆசை அவளது அத்தானுக்கும் இருந்தது.

அக்காவின் கணவனால் உண்டான பிள்ளையா? நித்திலாவை விட்டு விலகிய பின் இந்திய மரபுகளின் மீது பிடிமானம் கொண்ட அத்ரியானா என்னும் பிரெஞ்சுப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட வாகீசனால் கிடைத்த பிள்ளையா என்ற கேள்விக்கான விடை தெரிந்த ஒரேயொருத்தி நித்திலா மட்டுமே. அவளோ வாய் திறக்க மறுக்கிறாள். தொடர்ந்த முயற்சியில் ஹரிணிக்குத் தோல்வியே கிடைக்கிறது என்றாலும், அந்தக் குழந்தையின் தாய் நித்திலா தான் என்பதை நிரூபிக்கமுடிகிறது. அந்த நிரூபணம் போதும். நீதிமன்றம் அவளை பிரான்ஸிலேயே அகதியாகத் தங்க அனுமதித்துவிடும். அதை நிறைவேற்றும் விசாரணையோடு நாவலின் நிகழ்வுகள் நிறைவடைகின்றன.

தரவுகள், சாட்சிகள், விசாரணைகள், சட்ட நுணுக்கங்கள் எல்லாம் அங்கே நிறைவடைந்தாலும் விசாகனைத் துரத்தும் குற்றம் என்னும் நாய்க்குட்டி – நாய்க்குட்டியாக மாறிய அத்ரியானா என்னும் மனச்சாட்சி- காப்கா மியூசித்திற்குப் பக்கத்தில் இருக்கும் ஆற்றில் குதித்து அவனைக் குதறியெடுப்பதாக எழுதுவதோடு நாவலை நிறைவு செய்கிறார் நாகரத்தினம் கிருஷ்ணா.

பிரான்ஸ் தேசத்தின் குடிமக்களின் வழியாக நகரும் துப்பறிதல் , விசாரணை அதன் முடிவில் கிடைக்கும் நீதி என்பதன் வழியாக ஒரு வாசிப்புத் தளம் உருவாக்கப்படுகிறது. அத்தேசத்திற்குப் புலம்பெயர்ந்தும் இடம்பெயர்ந்தும் சென்று சேர்ந்த இந்திய மற்றும் இலங்கைக் குடிமக்கள் வழியாக இன்னொரு வாசிப்புத்தளமும் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டையும் உருவாக்கி நம் காலத்தின் முக்கியமான சொல்லாடலான குற்றநீதியோடு தொடர்புடைய புள்ளியில் கொண்டுவந்து இணைப்பது இந்நாவலின் முக்கியமான விசாரணை. அவ்வகையில் இந்நாவல் உலக இலக்கியப்பரப்புக்குள் நுழையும் தன்மைகொண்டது .

நன்றி: தீரா நதி பிப்ரவரி 2016

‘நந்தகுமாரா நந்தகுமாரா:’ கைதேர்ந்த கதைசொல்லியின் சிறுகதைகள் – தேவமைந்தன்

இக்கட்டுரை செப்டம்பர் 27 2007ல் தமிழின் முதல் இணைய இதழான திண்ணை யில் வெளிவந்த கட்டுரை. கட்டுரை ஆசிரியர் தமிழ் மரபிலக்கியம, நவீன இலக்கியம் இரண்டையும் நன்றாக அறிந்த தமிழ்பேராசிரியர்களில் ஒருவர். 1948ல் கோவையில்பிறந்த இவர்,  இந்தியாவில் புதுச்சேரிமாநிலத்தில்,  புதுச்சேரி அரசின் தாகூர் கலைக் கலைக் கல்லூரியில் தமிழ்த்துறைத்தலைவராகப் பணிபுரிந்துதன் 52-ஆம்அகவையில்விருப்பஓய்வுபெற்றவர். 1968ஆம்ஆண்டுமுதல்தேவமைந்தன்படைத்தகவிதைகள், ‘உங்கள்தெருவில்ஒருபாடகன்‘(1976) ‘புல்வெளி‘(1980) ‘போன்சாய்மனிதர்கள்‘(1993) என்றமூன்றுநூல்களாகவெளிவந்துள்ளன. 1969 முதல்வானொலி உரைகள்நிகழ்த்திவருபவர். செந்தமிழும் நாப் பழக்கம் என்ற இவர் தம் வானொலி உரைத் தொடர் குறிப்பிடத் தகுந்தது.

நந்தகுமாரா நந்தகுமாரா:’ கைதேர்ந்த கதைசொல்லியின் சிறுகதைகள் – தேவமைந்தன்

செந்தில்நாதன்(1), சிவத்தம்பி(2) ஆகியோர் தமிழில் சிறுகதையின் தேவை அறிந்துணரப்பட்ட இருபதாம் நூற்றாண்டின் அறுபதுகளில் தமது அறிவுழைப்பால் உலகச் சிறுகதை இலக்கணங்களை அலசி ஆராய்ந்து அவற்றின் பின்னணியில் வ.வே. சு. அய்யர், பாரதி முதலானோர் அந்நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திவிட்ட சிறுகதையையும் அதன் இலக்கண அடிப்படைகளையும் பன்முகங்களையும் சுவடிப் படுத்தினர்.

அவர்களைத் தொடர்ந்து பேராசிரியர்கள் பலர் சிறுகதை மற்றும் நெடுங்கதை வடிவங்களைக் குறித்துப் புத்தகங்கள் எழுதலாயினர். சற்றேறக்குறைய நாற்பதாண்டுகளுக்குமுன் புதுமைப்பித்தனின் ‘துன்பக் கேணி'(3) போன்ற கதைகளின் அளவைக் குறித்துப் பயன்படுத்திய ‘நெடுங்கதை’ என்ற சொல்லுக்கு ஈடான ஆங்கிலச் சொல்லாக ‘novella’ இருந்தது. நாகரத்தினம் கிருஷ்ணா ‘வணக்கம் நண்பர்களே!’ என்ற தன்னுரையில் குறிப்பிட்டுள்ளதுபோல் பிரெஞ்சில் ‘nouvelle’ ‘ஒருவகை சுருக்கமான இலக்கிய’க் கட்டுரைதான். இருப்பினும், ‘éditions de la connaissance’ இன் பதிப்பான பிரஞ்சு ஆங்கில அகராதியில் – நா.கி. தெரிவிப்பதுபோல் இலங்கைத் தமிழர் சொல்லும் ‘தகவல்’ அல்லது ‘செய்தி’ ‘nouvelle’க்குப் பொருளாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ‘nouvelle’க்கு – அடுத்த பொருள் ‘சிறுகதை’ என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.(4) சான்றுகளாக, இத்தொகுப்பில் உள்ள ‘மொரீஷியஸ் கண்ணகி’யைச் சிறுகதை என்றும்; ‘ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும்’ கதையை நெடுங்கதை என்றும் சொல்லலாம். கதை சொல்லல்(narration)தான் அளவு அடிப்படையாக நெடுங்கதையையும் சிறுகதையையும் வேறுபடுத்துகிறது. ஆறரைப்பக்கங்கள் அச்சில் வருகின்ற அளவு சிறுகதையான ‘மொரீஷியஸ் கண்ணகி’ கதைசொல்லப்படுகையில், இருபத்திரண்டு பக்கங்கள் வருமளவு நெடுங்கதையான ‘ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும்’ கதைசொல்லப்பட்டுள்ளது. அவ்வளவுதான்.

“ஒரு தேர்ந்த கதைசொல்லியாக என்னை உருவாக்கிய பெருமை அனைத்தும் பிரெஞ்சு படைப்புலகம் சார்ந்தது என்று எனது படைப்புகளை படிப்பவர் எவரும் முடிவுக்கு வரக்கூடும்” என்கிறார் நா.கி. மேம்போக்காகப் படிக்கும் பொழுதுதான் அப்படியான முடிவுக்கு வரமுடியும். வாசிப்புக்கும் மறுவாசிப்புக்கும் நா.கி. அவர்களின் இத்தொகுப்புக் கதைகளை உட்படுத்தும்பொழுது, நா.கி.’யின் கதைபுனையும் திறன்(skill) மட்டுமே பிரெஞ்சுப் படைப்புலகம் சார்ந்தது என்றும், அவர்தம் தேர்ந்த கதைசொல்லலைக் ‘குஞ்சுபொறிக்கும் மயிலிறகுகள்’ என்று நம்பிய காலத்திலிருந்தே வாழ்க்கை ஏட்டுக்குள் பொந்தி வைத்தது – இந்தியத் தமிழ்நாட்டின் திண்டிவனம் வட்டம் ஒழிந்தியாப்பட்டின் அருகில் உள்ள கிராமத்து மண்ணும் மக்களுமே என்றும் இக்கட்டுரையாளர் சிந்தையுள் தோன்றுகிறது. இம் முடிபுக்கு(finding) ‘நந்தகுமாரா நந்தகுமாரா’ தொகுப்பிலுள்ள கடைசிக்கதையான ‘ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும்”-ஆகவும் பொருத்தமான சாட்சியம் ஆகும்.

பிரெஞ்சுப் படைப்புலகத்துக்கு மிகவும் உரியவையான குறியீட்டியமும்(symbolisme) ஆழ்மனவெளிப்பாட்டியமும்(surréalisme) கீழைத்தேயங்களுக்கேயுரிய தொன்மத்துடன்(myth) ஒன்றியும் உறழ்ந்தும் கலந்து நா.கி.யின் படைப்புகளில் வெளிப்படுகின்றன. ‘எமன் – அக்காள் – கழுதை’ சிறுகதை இதற்குச் சரியான சான்று. மேற்படிக் கலவையின் எதிர்மறையான சான்று என்றும் இக்கதையைக் கூறலாம். ஏனென்றால், இதில் வரும் ‘அக்காள்'(5) எமன் ஏறிவரும் எருமைக்கிடாவையும் கழுதைக் கிடா என்றே சாகுமுன்/எமனுடன் போகுமுன் சாதிக்கிறாள். அதற்குக் காரணமான அவள் ஆழ்மனப் பாதிப்பை நா.கி.(பக்.41-43) மிக நுட்பமாகச் சித்தரித்திருக்கிறார். சலவைத் தொழிலாளி முருகேசனின் முறைப்பாட்டுக்கு ‘அக்கா’ளின் தந்தையார் பஞ்சாட்சர நாயக்கர், “பத்து ரூபாயை விட்டெறிஞ்சி, போடா போய் வேலையைப்பாருண்ணு அவனைத் துரத்தியதும் தப்பில்லை, ஆனால் துரத்திய வேகத்தில் அக்காளைப் பார்த்து “பொட்டைக் கழுதைக்கு கொஞ்சம் அடக்கம் வேணும்” என்று சொல்லாமலிருந்திருக்கலாம்..” என்பதிலும் ஒரு மென்மையான கோரம் கரைந்திருக்கிறது.

மேற்படிக் கலவையின் உடன்பாடான சான்றாக, ‘அம்மா எனக்கொரு சிநேகிதி ‘ கதையைச் சுட்டலாம். இந்தக் கதைப்பாத்திரங்களோடு ‘ஓர் அசாதரணமான மௌன’மும் கதைப்பாத்திரமாகக் கலந்துள்ளது. கர்ணன்பால் குந்திதேவி கொண்டிருந்த வேறுபாடான தாயன்பை இக்கதையில் வரும் அம்மா கொண்டிருக்கிறார். இதில் அம்மாவுக்கும் மகனுக்கும் ஏற்படும் இருபதாண்டு இடைவெளி, குந்திக்கும் கர்ணனுக்கும் ஏற்பட்ட இடைவெளியைப் போலவே உள்ளது. குறியீட்டு நிலையில் வைத்து நோக்கினால்தான் இது புலப்படும். கதையடிப்படையில், கர்ணன் – மகன், குந்திதேவி – அம்மா கதைமுடிவு, முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. படைப்பாளர் ஒருவர் இதையெல்லாம் சிந்தித்து இவ்வாறு படைக்க வேண்டும் என்பதில்லை. அவருடைய ஆழ்மனத்தில் தைத்து, மறைவாக இயக்கம் கொள்ளும் தொன்மப் பதிவு இதைச் சாதித்துக் காட்டிவிடும். அம்மா தனக்கொரு சிநேகிதி என்று இக்கதையில் வரும் மகன் நம்பினாலும், அம்மா – தான் அவனுக்கு அம்மா என்றே உணர்வு நிலையிலும் சாதித்துவிட்டு மறைகிறார். “குந்திக்கு நேர்ந்ததுபோல என் மார்பு நிறைய அன்பு”(ப.31) என்றுதன் கடைசிக் கட்டத்தில் அவர் கூறுவது இதை மெய்ப்பிக்கும். அந்தியூரில்(கோவை மாவட்டம்), கதைசொல்லியொருவர் பாரதக் கதை சொல்லுவதில் தேர்ந்தவராயிருந்தார். அவர் இந்தக் கட்டம் குறித்துச் சொல்லுகையில், “கர்ணன் தன் மகனென அறிவிக்கக் குந்தி எத்தனிக்கும் முன்பே அவள் தாய்ப்பால் அறிவித்துவிட்டது. நாகாத்திரம், அவன் அதை அறியக் காரணம் ஆயிற்று. அருச்சுனன்மேல் ஒருமுறைக்குமேல் அந்த அத்திரத்தைப் பிரயோகிக்கலாகாது என்று கண்ணன் தன் உள்ளத்துள் கொண்ட தீர்மானமே, குந்தியிடமிருந்து தாய்ப்பால் வெளிப்பட்டுக் கர்ணன் முகம் தீண்ட ஏது ஆயிற்று” என்று சொன்னது நாற்பதாண்டுகளுக்குப் பின்னும் என் செவிகளில் ஒலிக்கிறது. ‘அம்மா எனக்கொரு சிநேகிதி,’ ‘அக்கினிகாரியம்,’ ‘அப்பா படிச்சுப் படிச்சு சொன்னார்,’ ‘எமன் – அக்காள் – கழுதை,’ ‘குஞ்சுபொரிக்கும் மயிலிறகுகள்,'(6) ‘நந்தகுமாரா நந்தகுமாரா'(7), ‘சாமி – பெரிய சாமி,’ ‘தாண்டவராயன்'(8), ‘ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும்’ ஆகிய கதைகள் – நா.கி. “வாழ்க்கையின் ஒரு பகுதியைத் தமிழ் மண்ணிலும் மறுபகுதியை பிரெஞ்சு மண்ணிலும் செலவிட்டுள்ள”(9) போதும், இவர்தம் ஆழ்நெஞ்சின் வேர்கள் தனக்கே சொந்தமானதும் பூர்விகமானதுமான அடையாளத்தைத் தேடுவதில்தான் ஊன்றியுள்ளன(10) என்பதைத் தெற்றெனப் புலப்படுத்துகின்றன.

“சொந்த மண்ணிலும், வந்த மண்ணிலும் தன்னை நிறுத்தி வதைபடும் என்னுள் உள்ள ‘வேறொருவன்’ பார்த்த அல்லது பங்கீடு செய்துகொண்ட சாட்சிகளை சார்பற்று சொல்லியிருக்கிறேன். எத்தனை நாளைக்குச் சுமப்பது? இறக்கி வைக்கவேண்டுமில்லையா? இறக்கிவைத்திருக்கிறேன்”(11) என்று நா.கி. சொல்கிறார். புலம்பெயர்வோர் காணும் கனவுகள், தங்களின் சொந்த மண் குறித்ததாகவே பெரும்பாலுமிருக்கும் என்றும், காட்சிகள் வேறுபட்டாலும் களங்கள் தம் புலத்தைச் சார்ந்தவையாகவே இருக்கும் என்றும் கேள்விப் பட்டிருக்கிறேன்.

அடுத்தடுத்த வீடுகளில் நிகழும் நிகழ்வுகளைச் சித்தரிப்பதான கதை, ‘38,39,40 – புல்வார் விக்தோர் யுகோ.’ சொந்த மண்ணின் வாழ்க்கை பகட்டாக இல்லை(ப.8) என்று வேர்களைத் துறந்து, தங்களைத் தாங்களே தங்கள் சொந்த மண்ணிலிருந்து பிடுங்கிக் கொண்டு, அன்னிய மண்ணில் தங்களை நட்டுக் கொள்ள முயன்றவர்களின் பிள்ளைகள் அடையும் பின்னடைவு(12), புலம்பெயர்ந்த கறுப்பின மக்கள்(13), அரபு மக்கள்[அரபினர்மேல் கடும் வெறுப்பு ப.6], புதுச்சேரித் தமிழர்கள்(14) வியத்னாம் மக்கள்(15) ஈழத்துத் தமிழ் மக்கள்(16) ஆகியோர் இந்தக் கதையில் நம் மனக்கண் முன்னே பலவகைகளில் சுயமிழந்து நொந்து நூலழிந்து போகிறார்கள்.

அறிவியல் கதைகள்(scifi) இரண்டு, இத்தொகுப்பில் உள்ளன. ‘அமலா..விமலா..கமலா,’ ‘ஆப்பரேஷன் மகா சங்காரம்’ என்பவையே அவை. முதல் கதையில், அசுரத்தனமான அறிவுபடைத்த கிழவரை அபத்தமானவர் என்று நினைக்கிறான் ‘பயோ கெமிஸ்ட்ரியில் டாக்டரேட் செய்யும்’ சுந்தரம். 1997இல் – முதல் குளோனிங் ஆட்டுக்குட்டியைக் கொண்டுவந்த டாக்டர் வில்மட், தன்னை முழுதாக ஏமாற்றியவர்; அவர் சாதித்தவை எல்லாமே தன்னுடைய உழைப்பு என்று அவர் சொல்லும்பொழுதும் “அதோ அந்த அறை முழுக்க எனது இருபது ஆண்டு கால உழைப்பிருக்கிறது. எல்லாமே டீ.என்.ஏ., ஆர்.என்.ஏ. பற்றிய சுவாரஸ்யமான சங்கதிகள்” என்று காட்டும்பொழுதும் அவன் நம்பவில்லை. திருமணமானவுடன், அவன் அவரைச் சகித்துக்கொண்டதற்கு ஒரே காரணமாகிய அவர் மகள் – அமலா மட்டுமல்ல, விமலா – கமலாவும்தான் என்று அறிய வரும்பொழுதுதான் அவனுக்கு உறைக்கிறது;
அதிர்ச்சியே மேலிடுகிறது. குளோனிங்கில் தொடங்கும் கதை, ‘ரீஜெனெரேஷன்’ என்று தொடர்கிறது. இரண்டாம் கதையான ‘ஆப்பரேஷன் மகா சங்காரம்,’
இலெமூரியாக் கண்டம் துண்டாடப்பட்டதுமுதல் சுனாமி என்னும் ஆழிப்பேரலை வரை எல்லாமே சிறு சிறு ‘புரொக்ராம்’கள்தாம்… உலகமனைத்தும் ஒரே காலத்தில் அழிவதற்கான ஏற்பாடுகளை ‘மகா சங்கார’த்துக்கான ‘புராஜக்ட்’டைச் சிலர் செய்கிறார்கள் என்பதைக் கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் கிளுகிளுப்பு கலந்து சொல்லியிருக்கிறார் நா.கி.

பெண்மேல் ஆழமான வெறுப்பு, மனநோய்போல் மாறும்போது அதை ‘misogyny’ என்பார்கள்.(17) இந்தத் தொகுப்பின் தலைப்புக்குரிய கதையான ‘நந்தகுமாரா நந்தகுமாரா’வும் ‘அப்பா படிச்சுப் படிச்சு சொன்னா’ரும் அத்தகைய கதைமாந்தரான ஆண்களைக் கொண்டவை. பெண்ணின் ஐரோப்பிய ஆணவத்தால் மனமுடையும் ஆணான நந்தகுமாரன் தவறான முடிவுக்கு வரும்பொழுது, தன்னின உறவை நெடுநாளாகத் தொடர்ந்திருந்தும் இவனுடன் நான்காண்டுகள் உறவுகொண்டு கருத்தரித்திருக்கும் ஐரோப்பியப்பெண் தங்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தையை, தோழியுடன் தான் ஏலவே செய்திருக்கும் முடிவுக்கு மாறாக, இவனுடன் தான் சேர்ந்தே வளர்க்கத் தீர்மானித்திருப்பதாக – தன் ஓரினஉறவுத் தோழியிடம் சொல்கிறாள். புதுச்சேரியிலிருந்து பிரான்சுக்குப் போய் வாழும் நந்தகுமாருக்கு மனதிடம் இல்லாமல், பொறுமையாக அவளிடம் அமர்ந்துபேசத் திராணியில்லாமல் போனதற்கு சித்தியுடனான அவனது இளம் வயது அதிரடி அனுபவம் காரணமாக இருக்கலாம்.(18) ‘அப்பா படிச்சுப் படிச்சு சொன்னார்’ கதை கொஞ்சம் வித்தியாசமானது. அரசுப் பணி நிரந்தரம் என்று நம்புகிறவர்களுக்கு ஓர் எச்சரிக்கை. முதுகில் எலும்பில்லாததுகளே கடைசிவரை நீடிக்கும் அவலம் இதில் ‘அறைய’ப்பட்டிருக்கிறது. அரசுப் பணியைப் போராட்டத்தால் இழந்து தன்மானத்துடன் வாழும் ‘அவர்,’ தன் மனைவியும் தொடர்ந்து தன்னைச் சொற்களால் தாக்கிக் கேவலப்படுத்துவதைச் சகித்துக் கொண்டே வருபவர். ஒரு நாள், “திண்டிவனத்தைக் குறுக்கும் நெடுக்குமாக அளந்துவிட்டு(19) வீட்டை அடைந்தபின், வழக்கத்துக்கும் அதிகமாகப் பேசுவதுடன் அவரது ஆண் தகைமையையும் (பௌருஷம்)(20) அவர் மனையாள் தாக்கத் தொடங்குகிற போது கொதித்துப் போகிறார். அப்பா அவரை அவர் இளம்பருவத்தில் எச்சரித்த சொற்கள் நினைவுக்குள் கனலுகின்றன.(21) இதன் பிறகு கதையில் வரும் எட்டுப் பத்திகள், நீங்களே படித்துக்கொள்ள வேண்டியவை.(ப.37)

‘மொரீஷியஸ் கண்ணகி’ கதையில் காப்பியில் கலக்கும் சர்க்கரைக்கட்டிகூட ஒரு குறியீடாகி, திடமானதும் தீர்க்கமானதுமான முடிவைக் கண்ணகி என்கிற கதாபாத்திரம் மேற்கொள்ளுவதற்கான காரணியாகவும் மாறுகிறது. “கண்ணகி..உட்கார். அமைதியாகப் பேசித் தீர்க்கலாம்” என்பவனுக்கு, “இல்லை. நான் சர்க்கரைக்கட்டி இல்லை கரைந்திட மாட்டேன். கண்ணகி. மொரீஷியஸ் கண்ணகி. எழுந்து நிற்பேன். மதுரையை எரிக்கும் ரகமில்லை. கோவலனை எரிக்கும் ரகம்” என்று உறுதிப்படுத்த “கைப்பையிலிருந்த ஒரு சின்னத் துப்பாக்கியை எடுத்தாள்” என்று கதை முடிகிறது. நா.கி.’யின் ‘நீலக்கடல்’ தேவானி/தெய்வானை, நினைவுக்குள் நுழைந்து பேருரு எடுப்பதை இவ்விரண்டிலும் ஆழ்ந்தவர்கள் தவிர்க்கஇயலாது.

‘பிறகு’ என்ற கதை, ஓர் ஈழத் தமிழ்ப் பெண் தனது தமக்கையின் இரண்டு பிள்ளைகளுக்காக எடுக்கும் அழுத்தமானதும் தீர்க்கமானதுமான தீர்மானத்தையும்; அவள் ஒவ்வொரு முறையும் அதைச் சொல்ல வரும்பொழுது முழுமையாய்க்கூட அதைக்கேட்காத புதுச்சேரித் தமிழனின் அவசர புத்தியையும் மென்மையாக அலசிக் காட்டியிருக்கிறது.

பிரஞ்சிலக்கியப் படைப்பாளிகளின் உத்தியொன்றை நா.கி. பின்பற்றுவது, இரண்டு கதைகளில் அழுத்தமாகப் பதிவாகியுள்ளது. முதலாவது, ‘மொரீஷியஸ் கண்ணகி.’ அடுத்தது, இத்தொகுப்பைப் பெருமைப்படுத்துகிற ‘ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும்’ என்கிற கடைசிக்கதை. ‘டிஜிட்டல் காமரா’ போல – நாள், நேரத்தைப் பதிவு செய்யும் உத்தியே அது. 10-1-1994 10 மு.ப.; 11-1-1994 08 மு.ப.; 30-1-1994 10 மு.ப.; 20-2-1994 11 மு.ப.; 15-10-1994; 06-11-1994 ஆகிய நாள் நேரங்களில் ஒழிந்தியாப்பட்டுக்கு நாலு கல் தள்ளியுள்ள கிராமத்தில், அரை ஏக்கர் நஞ்சையொன்று தொடர்பாக, வந்துவிட்ட இந்தியச் சுதந்திரத்துக்கு முன்பும் பின்பும், அதன் வெள்ளிவிழாக் காலத்தும், வரப்போகும் இந்தியச் சுதந்திரத்தின் வைரவிழாவின் பொழுதும், விபத்தில் இறந்துபோன ராமசாமியின் பாட்டன் கோவிந்தசாமி/ தந்தை சின்னசாமி/ பார்வதியின் புருசன் ராமசாமி/ ராமசாமியின் வம்சாவளியினரில்(22) எவரேனும் ஒருவர் அடையக்கூடிய நியாயமான ஆசையின் பரிணாமம் மிகவும் அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பார்வதியின் புருசன் ராமசாமியைச் செயற்கை கொண்டுபோனது; பார்வதியை எவ்வெவ்வாறோ சேர்ந்துவிட்ட அரை ஏக்கர் நஞ்சையை(23) இயற்கை கொண்டு போகிறது. ராமசாமியின் அநியாயமான இறப்பிலிருந்தும் ஆதாயம் பார்த்த மருத்துவமனை – காவல்துறை ஆள்களுக்குப் படியளக்கவும், அவர்கள் வாழும்போதே வாய்க்கரிசிபோடகவும் உடனடியாக உதவி, போக்கியமாகக் கொண்டு கடன்கொடுத்த காசாம்பு முதலி அதில் பயிரிட்டிருந்த ஒரு போகம் பயிருடன் ஏரியுடைந்து வெள்ளக்காடாகிக் கொண்டுபோனது – இயற்கை. இப்பொழுதெல்லாம் புதுச்சேரி – திண்டிவனம் பாதையில் காரோட்டுபவர்கள், மக்கள் மேல் தாங்கள் ஓட்டும் வண்டி பட்டுவிடும் நிலைகூட ஏற்பட்டுவிடக் கூடாதே என்று அஞ்சும் நிலை வந்து விட்டதன் உண்மையான காரணத்தை இந்தக்கதை உணர்த்துகிறது.

‘நந்தகுமாரா நந்தகுமாரா’ தொகுப்பு, நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களுக்குப் பெருமை சேர்க்கும் சிறுகதைகளைக் கொண்டுள்ளது என்பதை சிறுகதை ஆர்வலர்கள் வாசித்துப் பார்த்தால் உணர்ந்து கொள்வார்கள்.
********
அடிக்குறிப்புகள்:
1. செந்தில்நாதன்,ச., தமிழ்ச் சிறுகதைகள் ஒரு மதிப்பீடு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை. 1967.
2. சிவத்தம்பி, கா., தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும், பாரிநிலையம், சென்னை, 1967.
3. முதற்பதிப்பில் 38 பக்கங்கள்.
4. nouvelle f piece of news; short story. dictionnaire: français/anglais: anglais/ français. éditions de la connaissance. 1995. pg.126.
5. பெயர், கதை முழுதும் தெரிவிக்கப்படவில்லை; ஆனால் அவள் பெற்றோர் – உற்றார் உறவினர் – எதிரிகள் ஒவ்வொருவரும் பெயர் குறிப்பிடப்படுகின்றனர்.
6. இது, வகைமாதிரிச் சான்று.[typical example]
7. சித்தியின் பாதிப்பு, அவனைப் பிரான்சிலும் விடவில்லை. – பக்.67, 69.
8. “எதற்காக ‘என்னுடைய’ அடையாளத்தின் மீது குறிவைக்கிறாள்? முடியுமா? என்னை, என் பிரதியை வயிற்றில் சுமந்து கொண்டு? நான் இல்லை என்றால் எப்படி? – நினைக்க நினைக்க ஆத்திரம்.” ப.107.
பிரான்சுக்குப் புறப்படும்போது, அவனது தாத்தா தாண்டவராயப் பிள்ளை கசந்துபோய்க் கேட்டவை. பக்.107-108. “தாத்தா சொன்னது உண்மையா? இழப்புகளுக்குப் பழகிக் கொண்டோமா?” ப.108. “…இறுதியாகப் பதிவேட்டில் குழந்தை பிறந்த நேரத்தை எழுதி முடித்து பெயரினைக் கேட்டபோது, இவன் சொன்னான்: / தாண்டவராயன்.” ப.109.
9. கடைசி அட்டைப் பக்கம்.
10.”இதைத்தான் திரும்பத் திரும்ப சொல்றீங்க. நீங்க வரலைண்ணு யாரங்கே அழுவறாங்க”
“சொந்தமண் நினைவுகள் என்பது ஜீவாத்மா பரமாத்மா உறவு மாதிரி. ஜீவாத்மாவை யாரும் அழைக்க வேண்டியதில்லை. அதுவாகத்தான் தேடிப்போகும்.”-குஞ்சுபொறிக்கும் மயிலிறகுகள், ப.53.
11. வணக்கம் நண்பர்களே!, ப.4
12. “இவனைப் போலவே உயர்நிலைப் பள்ளிக் கல்வி வரை படித்திருந்த எதிர்வீட்டுப் பையனுக்கு சுலபமாய் வேலை கிடைக்கிறது. அவன் பெயர் கியோம். இவன் பெயர் ரஷீத்.” – ‘38,39,40 ‘புல்வார் விக்தோர் யுகோ,’ ப.10.
13. ஆப்பிரிக்கப் பொடியனும் வெள்ளைப் பெண்ணும் பண்ணும் செயல். – ‘38,39,40 ‘புல்வார் விக்தோர் யுகோ,’ ப.9.
14. புதுச்சேரித் தமிழர்களையும் கறுப்பினமாகப் பார்க்கும் வெள்ளை மனப்பான்மை ப.12; பிரான்சில் வாழும் புதுச்சேரித் தமிழர்களுக்குத் தமிழில் பேசப் பிடிக்காது. – கதை: ‘பிறகு..’ ப.117.
15. எதற்கும் தளராத மரியம் என்கிற வியத்னாம் அம்மையார் தனது அப்பார்ட்மெண்ட்டின் படிக்கட்டுகளின் இடைவெளியிலிருந்த கூடத்தில் ஆப்பிரிக்கப் பொடியனும் வெள்ளைப் பெண்ணும் பண்ணும் செயலை எதிர்த்ததால் உயிரோடு எரித்துக் கொல்லப்படும் நிகழ்ச்சி ப.14.
16. அறுபது வயதான சந்திரானந்தம் மாஸ்டருக்கேற்பட்ட கொடுமை பக்.6-8: அவருக்கும் ஏற்படும் ஆறுதல்! – “காது மடலுக்குக் கீழே, பிடறியில் நமைச்சல் தணிந்திருந்தது. தலையணையைக் கொஞ்சம் உயர்த்திப் போடச்சொல்லிக் கேட்டு ஒருக்களித்துப் படுத்தார்.” ப.14.
17. misogyny=பெண்மேல் வெறுப்பு. பிரெஞ்சில் misogyne mf = misogynist. தொடர்புடைய சொற்கள்: misogamy =திருமணத்தின் மேல் வெறுப்பு misandry=ஆண்மேல் வெறுப்பு.
18. நந்தகுமாரனுக்கான சித்தி, பத்துத் தலைகளும், கருகருவென்ற புருவமும் பெரிய கண்களும், மூன்று வாய்களும் தொங்கும் நாக்கும், இரண்டு கால்களுமாய் கறுப்புச் சரீரத்துடன் தமிழ்ப் பஞ்சாங்கங்களில் வருகின்ற மகர சங்கராந்தி புருஷ ஸ்த்ரீ ரகம். துர்த்தேவதை. அவள் ராச்சியத்தில் அவனப்பா செய்ததெல்லாம் சேவகம்தான். அந்தச் சேவகத்தின் சூட்சுமம் அவளது பெரிய மார்புகளில் இருப்பதை ஒரு மழைநாளில் அவன் அறிந்திருக்கிறான்…… ப.67.
19. “திண்டிவனத்தில் அவரை அறிந்தவர்கள் அரசாங்க ஜீப்பில் பயணித்தே அவரைப் பார்த்திருக்கின்றார்கள். ப.35.
20. இந்தச் சொல்லை நா.கி. பயன்படுத்தவில்லை. ‘பௌருஷம்’ என்ற தலைப்பில் த. ஜெயகாந்தன் சிறுகதை உள்ளது. அதனால்தான் அடைப்புக்குள் இட்டேன்.
21. “எங்க.. அவங்கிட்டயா…வேண்டாம்டி. நான் மூர்க்கன். அப்பா படிச்சு படிச்சுச் சொன்னார். உங்களை நம்ப வேண்டாம்னு சொன்னார். அவரை மாதிரியே என்னையும் கொண்டுபோயிடாதே.” ப.37.
22. ‘ஆவளி’ என்றால் வரிசை; ‘வம்சாவளி’ என்பது பிழையல்ல; தீபாவளி போல வம்சாவளி. தீபங்களின் வரிசைபோல வம்சங்களின் வரிசை. அதேபோல, ‘கனவு'(dream state)க்கு மாற்று ‘நனவு'(reality)தான்; நினைவு(thought) அல்ல. ‘நினைவுகூர்தல்’ என்ற சரியான சொல்லையும் வாய்வந்தவழியே மேடைகளில் பேசி ‘நினைவுகூறுதல்’ என்று ஆக்கிவிட்டார்கள்.

********

புத்தகம்:

நந்தகுமாரா நந்தகுமாரா (சிறுகதைகள்)

ஆசிரியர்:

நாகரத்தினம் கிருஷ்ணா

பதிப்பகம்:

சந்தியா பதிப்பகம்
ஃப்ளாட் ஏ, நியூடெக் வைபவ்,
57 – 53ஆவது தெரு, அசோக் நகர்,
சென்னை – 600 083.
புத்தக அளவு: தெமி 1×8
பக்கங்கள்: 144. விலை: ரூ. 70/-
தொ.பே: 044 -24896979, 55855704
****
annan.pasupathy@hotmail.com
http://kalapathy.blogspot.com
http://360.yahoo.com/pasu2tamil

பார்க்க நல்ல மனிதர்போல தெரிகிறீர்கள்

( இங்கு நீதிமன்றத்திற்கு மொழி பெயர்ப்பாளனாக நான் சொல்ல நேர்ந்திடும், அப்படிச் சென்றபோது, என்னுடைய வழக்கு விசாரணை அல்லாது வேறொரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை பார்த்து பெண்நீதிபதிக் கேட்ட கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதிலும் வித்தியாசமானவை. அதன் எதிரொலிதான் இக்கதை. கடந்த பிப்ரவரியில் வெளிவந்துள்ள சிறுகதை தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.)

பார்க்க நல்ல மனிதர்போல தெரிகிறீர்கள்

      குளிரகாலம் முடிந்து இளவேனிற்காலம் தொடங்கி ஒருவாரம் ஆகிறது, கடந்த சில  நாட்களாகவே இரவுபகலாக பனிபொழிந்து கொண்டிருக்கிறது. கிழக்கு ஐரோப்பிய  நாடுகளில் டிசம்பர் தொடங்கி மார்ச் வரையில், என்னைப்போன்ற பாவப்பட்ட மனிதர்களை வாட்டுவதெற்கென அவ்வப்போது பூமியின் துருவப் பகுதிகள் அனுப்பி வைப்பதாக நம்பப்படுகிற கடுங் குளிர்காலப் பனி. தொலைகாட்சி வானிலை அறிவிப்பாளர்கள் – அதிலும் பெண் அறிவிப்பாளர்கள் என்றால், அவள் சொல்வதை எங்கே காதில் வாங்கமுடிகிறது – எச்சரித்தும்,  உடுத்தவேண்டியவற்றை  உடுத்தத் தவறி வெளியில் கால் வைக்கிறபோதுதான், அதன் வீரியத்தை உணரமுடிகிறது. திறந்த வாசற்கதவை அடைத்துவிட்டு,  திரும்பவும் வீட்டுக்குள்   நுழைந்து குளிரைச் சமாளிக்கப் பொருத்தமாக  ஒரு கம்பளிச்சட்டை, ஒரு கம்பளி ஸ்கார்ஃப், ஒருகம்பளிச் ஜாக்கெட், என்று  வெளியில் வந்தேன்.

குடியிருப்புகளின் கூரைகள், இலைகளை உதிர்த்த மரங்கள், மோட்டார் வாகனங்கள், சாலைகள்,  நடைபாதைகளென, திறந்தவெளியில் வானத்தின் கண்காணிப்பில் இருந்தனவற்றில் விதை நீக்கிய பஞ்சை உலர்த்தியதுபோல,  எங்கும் பனி. போதாதென்று, ‘பனி’ வெண் சாம்பல் தூவலாக  காற்றில் அலைந்து பூமியைத் தேடிக்கொண்டிருந்தது. மழைத்தூறல்கள் தங்கள் பாட்டுக்கு விழுந்துகொண்டிருந்தன. அவற்றின் வினையில் குறுக்கிடக்கூடாது எனப் பனிப்பொழிவு எச்சரிக்கப்பட்டிருக்கவேண்டும்,  மழைத்தூறல்களுக்கு இடையூறின்றி  சாதுர்யமாகத் தப்பித்து,காற்றின் வீச்சுக்கு ஈடுகொடுத்து, காற்பந்தாட்ட வலைக்குள் பந்தைப் போட்ட ஆட்டக்காரரின் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள, பிற  வீரர்கள்  ஒருவர்பின் ஒருவராக தாவிவிழுந்து அவரை மூடிமறைப்பதுபோல, சீவல்களாக உதிரும் பனித்துகள்கள் ஒன்றின்மீது ஒன்று விழுந்துகொண்டிருந்தன.  வாகனங்கள், வளர்ந்த செடிகொடிகள், மரங்கள் ஆகியன மட்டுமின்றி ;  திக்கற்ற  புழுக்கள், வண்டுகள், சிறு சிறு பூச்சிகளின் உயிர்வாழ்க்கையும்  நசுக்கப்படுவதை  எதார்த்தமாக கருதிக்கொண்டு படி இறங்கினேன்.  திரையிடாத  என் முகத்தில்  உறைந்த  நீரை வாரி இறைத்த துபோல பனிக்காற்று தாக்குகிறது. முகத்தை நனைத்தக் காற்றை வழித்து எரிந்தபின்,  குடியிருப்பு அருகில்போடப்படிருந்த  படிகளைக் கவனத்துடன் அடையாளப்படுத்திக்கொண்டு காலெடுத்துவைத்தபோது, மிதிபடும் பனி, சப்பாத்துகளில் பிதுங்கி மனித அழுக்கின் அடையாளம் பாதச்சுவடுகளாகப் பின் தொடர்வதை ரசித்தபின், நேரத்தின் நெருக்கடியை உணர்ந்தவனாய் நடந்தேன்.

வாகனத்தை எடுக்க குடியிருப்பின் பின்பகுதிக்கு வரவேண்டும். பனியைத் தரித்திருந்த ஊசியிலை மரங்களுக்கு இடையே,  சிலுசிலுவென்று  குறுக்கிடும் காற்றுத் திரைகளை விலக்கி, தரையெங்கும் கொட்டிப் பரப்பியிருந்த பனியை மிதித்து துவைத்தபடி, காரஜ் எண்ணை மனத்திரையில்  சரிபார்த்துக்கொண்டு  நடந்து எதிரில்  நின்றேன். குடியிருப்புகளின்  பின்புறத்தில், எனக்கு இடது பக்கமாக  நிற்கும் இலைகளை உதிர்த்து நிற்கும் ஒக் மரங்களின் மீது எனது பார்வை சென்று முடிந்தது.

இதேவேளையில் பிறகாலங்கள் எனில் சிட்டுக் குருவிகள் பெருங்கும்பலாகக்  கூடி அப்பகுதியைக் கடந்து செல்கிற எந்த மனிதரையும் திரும்பவைக்கிற வகையில் ‘க்ரிக்..க்ரிக்’ என சத்தமிடும், குறிப்பாக பத்து அல்லது பதினோருமணிக்கு. அவைகளுக்குள்ளும் பிரச்சினைகள் இருக்கும்போல : சற்றே பெரிதான தடித்த கிளையொன்றில் இருகுருவிகள் உட்கார்ந்திருக்க, கீழும் மேலும், எதிரிலும் பக்கவாட்டிலும் கிளைகள்,கொம்புகளில் வாதி, பிரதிவாதி, சாட்சிகள், ஜூரிகள் என்று   ஒரு   நீதிமன்ற காட்சி கச்சிதமாமாக அரங்கேறும்.  கனம்  நீதிபதி அவர்களே என ஆரம்பித்து  வாதிடும் பறவைகளின் தொனியைக்கொண்டு, வழக்கை ஊகிக்க முயன்று, குழப்பத்துடன் கிளம்பிச்சென்றது அதிகம்.   `முதல்  நாள்  விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட குருவிக்கு மறு நாள் என்ன  நேர்ந்திருக்கும் என யோசிப்பதுண்டு. அதை விளங்கிக்கொள்ள, மரத்தில் அமர்ந்திருக்கும் குருவிகூட்டத்தில், அப்பறவையைத் தேடி அலுப்புற்றிருக்கிறேன். ஒருமுறை அப்படியொன்றைத் தேடிக்கொண்டிருந்த வேளை, எங்கள் குடியிருப்பின் முதல் மாடியில் குடியிருக்கும் பெண்மணி, முகத்தில் பல கேள்விகளைத் தேக்கிக்கொண்டு என்னைப் பார்ப்பது மட்டுமல்ல, அதுமுதல்  எப்போதேனும் என்னைக் கடந்து செல்லவேண்டிய இக்கட்டு உருவாகிறபோதெல்லாம், கால்கள் பின்னிக்கொள்ளத் தடுமாறுகிறாள், தம் குழந்தைகளை சேர்த்தணைத்தபடி முகத்தைப் பராக்கு பார்ப்பதுபோல வைத்துக்கொண்டு அச்சத்துடன்   நடந்து, சில அடிதூரம் சென்றபின் திரும்பிப் பார்க்கிறாள்.  

காலை பத்து முப்பதுக்கு நீதிமன்றத்தில் இருக்கவேண்டும் என்பது நினைவுக்கு வந்த து. சம்பந்தப்பட்ட வழக்கு பத்து நாற்பத்தைந்திற்கோ, பதினொன்றிற்கோ தொடங்கலாம், எனினும் அரசாங்கம் தரும் மொழிபெயர்ப்புக்கான கட்டணத்தைப் பெறுகிறபோது, அவர்கள் கோரிக்கை கடிதத்தின்படி  பத்து முப்பதுக்கு விசாரணை மண்டபத்தில் இருப்பதுதான்  நியாயமாக இருக்க முடியும். வாகனத்தை எடுத்துக்கொண்டு பிரதான சாலையில் ஊர்ந்தவேளை, பனிப் பொழிவு நின்று சூரியனை அனுமதித்திருக்க, சாலையோரங்களிலும், நடைபாதையிலும், கட்டிடங்களின் கூரைகளிலும் விழுந்து கரையாமலிருந்த பனிகளில் பொன் நீலத்தில் சூரிய ஒளி நட்சத்திரங்களாக பிரகாசிப்பதும் மறைவதுமாக இருந்த அழகை ரசிக்க நேரமின்றி சாலையில் கவனம் செலுத்தினேன். சாலைகள், வீதிகள், திருப்பங்கள்  நன்கு பழகியவை என்கிறபோதும், சரியானவற்றை இருமுறை தவறவிட்டதற்கு, வழக்கமாக காண்கிற  குருவிகள் விசாரணை, இல்லை என்றானது காரணமாக இருக்கலாம். 

வாகனத்தை  இடம் பார்த்து  நிறுத்தி, இடத்திற்கான கட்டணத்தைச் செலுத்த எந்திரத்தில் வாகன எண்ணைப் பதிவுசெய்து, கடனட்டையை நுழைக்க, எவ்வளவு  நேரத்திற்கு என்ற கேள்வி. குறைந்தது ஒரு மணி  நேரம் தேவைப்படும். நிறுத்தியுள்ள வாகனங்கள் நேரத்திற்குரிய தங்கள் கட்டணத்தைச் செலுத்தியுள்ளனவா எனச் சோதித்துக்கொண்டு செல்லும் நகரசபை ஊழியர்களைப் பார்த்ததும், அவர்கள் திரும்ப  இப்பக்கம் வருவது இப்போதைக்கில்லை , அதற்குள் வாகனத்தை இங்கிருந்து அகற்றிவிடமுடியும் என்று கணக்கிட்டு, அவர்கள் போகட்டுமெனக் காத்திருந்து, எவ்வளவு குறைவாகச் செலுத்த முடியுமோ அக்கட்டணத்தைச் செலுத்தி, இரசீதை காரில் வைத்தபின்  கையிற் கட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்தேன்,  மணி 10.15.

        நீதிமன்றத்தில் நுழைந்தபோது எனக்கு முன்பாக ஐந்துபேர் சோதனைக்கு உட்பட காத்திருந்தார்கள். பயங்கரவாதத் தாக்குதல்கள் பெருகியபின் எல்லா இடங்களிலும் சோதனைக்குப் பின்னரே அனுமதி என்றாகிவிட்ட து. எனது முறைக்குப் பத்து நிமிடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. குளிருக்கென போட்டிருந்த ஜாக்கெட், வாலெட், கைத்தொலைபேசி  மூன்றையும் கன்வேயர் பெல்ட்டில் வைத்துவிட்டு சோதனைகளை கடந்து முதற்தளத்தில்  அழைத்திருந்த  விசாரணைக் கூடத்தைக் கண்டுபிடிக்க கூடுதலாகப் பத்து  நிமிடங்கள் தேவைப் பட்டன.

      பத்து முப்பதுக்கு விசாரணை மன்றம் எண் 13ல் இருக்கவேண்டும். என் கைக்கெடிகாரம் பத்து முப்பத்தைந்தைக் காட்டியது.  மண்டபத்தின் கதவுகள் மூடப்பட்டிருந்தன. தயக்கத்துடன் கதவைத் தட்டினேன். வரலாம் என்ற அனுமதிக் குரலைக் காதில் வாங்கியபடி உள்ளே  நுழைந்தேன். எனக்கு நேர் எதிராக போடப்பட்டிருந்த மேசையின் பின்புறம்  நீதிபதி, அவரிடமிருந்து சில அடிகள் தள்ளி பக்கவாட்டில் மிகச்சிறிய தட்டச்சு எந்திரத்துடன் பெண்செயலர். அவருக்கு  எதிரில் ஆசனங்களில் வழக்கறிஞர்கள்.  நீதிபதி என்ற பொருளுக்குச் சமனாக வைத்த எடைகற்கள்போல அவருக்கு எதிரே நாற்காலிகளில் வரிசைக்கு இரண்டொருவர் என அமர்ந்திருக்கும்,  அனுமதிக்கப்பட்ட பார்வையாளர்கள்.   எல்லோருடைய பார்வையும் என் முகத்தில் இருந்தது.  தாமதத்திற்கு விளக்கம் என்றபேரில் விரயம் செய்யப்படும் வார்த்தைகளில் சலிப்புற்று அமைதியாய் நின்றேன். வழக்கறிஞர் பெண்மணிகளில் ஒருவர், தனது கைக்கெடிக்காரத்தைப்பார்த்தார். நீதிபதி பெண்மணி என்னிடம், « முன்வரிசையில் உட்காரலாம். குற்றவாளியைக் காவலர்கள் அழைத்துவரும் நேரம் » எனச்சொல்லவும், காலியாகவிருந்த நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்தேன். 

பெண் செயலருக்குப் பின்புறமிருந்த கதவைத்  தள்ளிக்கொண்டு இரு காவலர்கள், நடுத்தர வயது மனிதர் ஒருவரை அழைத்துவந்தனர். அழைத்துவந்த மனிதரின் கைவிலங்கை அகற்றி, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியபின், காவலர் இருவரும் பக்கத்திற்கொருவராக  நின்றகொண்டனர்.  அவருடையை ஐரோப்பிய   நிறம், உயரம், எனது மொழிபெயர்ப்பு வழக்கிற்கு உரியவரல்ல எனபதைத் தெரிவித்தன.  அடுத்தடுத்த நீதிபதியின் கேள்விகளை வைத்தும், குற்றவ்வாளியின் பதில்களைக்கொண்டும் தெரியவந்த செய்திகள் : ஹாலந்து நாட்டவர், பத்திரிகயாளர், ஒரு நிறுவனத்தின் உரிமையாளர். இந்நிலையில்தான் பாடகி ஒருத்தியுடன் அறிமுககம், கவிதைகளும் எழுதுபவள். அவளின் நட்பில் அவளை முன்னுக்குக்கொண்டுவர ஏராளமாக செலவு, ஒரு நாள் அவர் வெறும் ஆள் என்றவுடன், அப் பெண்மணி இவரை உதறிவிட்டு வெளியேறுகிறாள். பத்து ஆண்டுகளுக்கு மேலாக பெரிய நகைக்கடைகள், ஆயத்தஉடை கடைகள் முதலானவற்றில்  விலையுயர்ந்த நகைகள் ஆடைகள் வாங்குவது, நட்சத்திர ஓட்டல்களில் தங்குவது. அவற்றிர்குரிய பணத்தை, பொய்த் தகவல்களின் அடிப்படையில் வங்கியில் பெற்ற  கடனட்டைகள்,காசோலைகளில்  செலுத்துவது, பிடிபடுவது, சிறைசெல்வது. 

 குற்றவாளியிடம் கேட்கும் வழக்கமானக் கேள்விகளைக்  கேட்டு அதற்குண்டான பதில்களைப் பெற்றுமுடிந்த பின் பெண்நீதிபதி தம் கையிலிருந்த பேனாவை கோப்பு அருகே வைத்தார், நிமிர்ந்து உட்கார்ந்தார், ஏதோ முதன் முறையாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள  நபரை காண்பதுபோல புருவத்தைக் குறுக்கிச் சில கணங்கள் அவர் முகத்தைப் பார்த்தார்.பார்வைக்கான விளக்கத்தைக் குற்றவாளிக்கும் எங்களுக்கும் தரமுற்பட்டவர்போல :

–  உங்களைப்பார்க்கிறபோது குற்றவாளியாகத் தெரியவில்லை பார்க்க நல்ல மனிதர்போல தெரிகிறீர்கள். எப்படி இக்குற்றங்களை தொடர்ந்து செய்கிறீர்கள் இதிலிருந்து விடுபட நினைத்த தில்லையா ? – என்று கேட்டார்.

 நீதிபதியின் கேள்வி என்னை நிமிர்ந்து உட்காரச் செய்தது. குற்றவாளியின் முகத்தை சற்று  கூர்ந்து கவனித்தேன். செய்த குற்றத்தின் அறிகுறிகளின்றி, பால்போல தெளிவான முகம், படிய வாரியத்தலை, அணிந்திருந்த கண்ணாடியும், மூக்கின் கூர்மையும், உடைகளில் செலுத்தியிருந்த அக்கறையும் சந்தேகிக்க முடியாதவைதான். என்ன பதில் சொல்லப் போகிறார் என  நீதிபதியைப் போலவே அனைவரும் காத்திருக்கிறோம்.  பதில் அவர் நெஞ்சுக்கும், உதட்டிற்குமிடையில்  எங்கோ தயங்கி  நிற்பதுபோல எனக்குப் பட்டது. அதற்கு முகவுரைபோல மெலிதாக அவிழ்ந்த சிரிப்பு அவர் உதடுகளைக் கடக்க, பார்வயாளர்கள் மத்தியிலும் இலேசாகச் சிரிப்பு.  நீதிபதி எரிச்சலுற்றார். குற்றவாளியின் வழக்கறிஞர் ஏதோ சொல்ல முற்பட்டார். அவரைத் தடுத்த  நீதிபதி, « தற்போது குற்றவாளி எதற்காகச் சிரிக்கிறார் என்பதை அவர் வாயால் சொல்லட்டும் »- என்றார்.

அவையில்  நிசப்தம்.  குற்றவாளி மௌனத்தை கலைத்துக்கொண்டவர்போல  மெலிதாகத் தொண்டையைக் கனைத்து அதற்கு ஐரோப்பிய வழக்கப்படி சம்பிரதாய மனிப்பும் கேட்டார், பின்னர் :

–  உங்க கேள்வியிலேயே பதிலிருக்கு மேடம், உண்மையில் நல்லவர்கள்போல இருப்பதால் குற்றம் இழைப்பது எளிதாகிறது, சுலபமாக மற்றவர்களை ஏமாற்றவும்முடியும். என் பிரச்சினை உங்களுக்குப் புரிகிறதில்லையா ? – என்று கேட்டு  பெண்  நீதிபதியின் முகத்தைப் பார்த்தார்.

நீதிபதிப் பெண்மணி பதில் கூறுவதைத் தவிர்த்து, தம் முன்பிருந்த கோப்பு காகிதங்களின் முனைகளை மடிப்பதும் பிரிப்பதுமாகத்  பதற்றத்தைக் தணித்துக்கொள்ளும் முயற்சியில் இறங்கினார்.

– மேடம், நான் என் பதிலை முடிக்கவில்லை, உங்கள் அமைதி, எனது பதிலில் உள்ள நியாயத்தினால் என நினைக்கிறேன். இன்னொரு கேள்வியும் எனது பதிலோடு கேட்க இருக்கிறது, அதையும் கேட்டுவிட்டால் மனதுக்கு நிம்மதி !

குற்றவாளியின் குரல் நீதிபதியின் சேட்டைகளை சட்டென்று முடிவுக்குக் கொண்டுவந்தன. கண்களை அகல விரித்து, தலையைச் சொடுக்கியவர், ஒரு சடங்குபோல  எதிரிலிருந்த எங்களை ஒரு நொடி பார்த்தார், பின்னர் குற்றவாளிப் பக்கம் கண்களைத் திருப்பியவர், « சொல்லுங்க கேட்கிறேன் » என்பதுபோல தலையைக் குலுக்கினார்.

– நீங்க உட்படஇங்கே இருக்கிறவங்க  அனைவருமே பார்வைக்கு  நல்ல மனிதர்கள்போலத்தான் இருக்கிறோம். விதிவிலக்காக குற்றத்தைக் கூடுதலாகத்  துரத்துவதும், பதிலுக்குத் தண்டனை என்னைத் துரத்துவதும் ஒருவித போதை  விளையாட்டாகிப்போனது. அது சுகமாகவும் இருக்கிறது . பெரும்பான்மை மனிதர்களைப்போல அளவாகப் பழகிக் கொள்ள எனக்குத் தெரியவில்லை, அப்படி இருந்திருந்தால்  பார்வையாளர் கூட்டத்தில் நானும் ஒருவனாக இருந்திருக்கலாமில்லையா ?

நீதிபதி தலையை பதில் எதையும் கூறாமல், தலையைத் திருப்பி பார்வையாளர்களைப்பார்த்தார்.அரசு வழக்கறிஞர், தமது காரியதரிசி என்று அவர் பார்வை ஓடி,  கடைசியாக குற்றவாளியினுடைய வழக்கறிஞரிடத்தில் முடிவுக்கு வந்தது. காரணத்தைப் புரிந்துகொண்டவர்போல குற்றவாளியின் வழக்கறிஞர் இருக்கையைவிட்டெழுந்து, பார்வையாளர்களுக்கும் நீதிபதிக்கும் இடையில் நின்று இருதரப்பினரையும் தமது வாதம் ஈர்க்கவேண்டும் என்பதை உணர்ந்து, சொற்களுக்கேற்ப குரலை உயர்த்தியும் தாழ்த்தியும்  தரப்பு வாதத்தை வைத்தார்.  தொடர்ந்து குற்றவாளிக்கு எதிரான அரசு தரப்பு வழக்கறிஞரின் வாதம், கடைமைக்காக என்றிருந்தது.  எனது மொழிபெயர்ப்புக்குரிய குற்றவாளியை அழைத்தபோது மணி பதினொன்றரை. முடிவாகக் குற்றவாளிகளின் தண்டனைக்  குறித்த தீர்ப்புகளை வழங்க  நீதிபதி  முப்பது நிமிடம் எடுத்துக்கொண்டார்.

காலை பன்னிரண்டு முப்பது.  நீதிபதியின் பெண்காரியதரிசி,  என்னை அழைத்து அன்றைய பணிக்கான ஊதியப் படிவத்தை அளித்து, உங்கள் ஒன்றரை மணி  நேரத்தை இரண்டு மணி  நேரமென்று போட்டிருக்கிறேன் மகிழ்ச்சிதானே என்கிறார். குற்றவாளிகள் தரப்பில் வாதிட வந்த வழக்கறிஞர்கள், குற்றவாளிகளைச் சூழ்ந்து தெம்பூட்டிக்கொண்டிருந்தனர்,  அவர்களுக்கு  விலங்குபூட்டக் கைகளில் விலங்குடன் காத்திருந்த காவலர்களிடமிருந்து தப்பிக்க நினைத்தவர்கள்போல நீதிபதிகள் முதல் பார்வையாளர்கள்வரை அவசர அவசரமாக வெளியேறிக்கொண்டிருந்தோம்.

இடைத்தேர்தல்

சிறுகதை தொகுப்பு

எழுத்து பிரசுரம், சென்னை