Monthly Archives: ஜூலை 2019

படித்ததும் சுவைத்ததும் -13: டுயோங் த்யோங்

‘உலக எழுத்தாளர் வரிசை: டுயோங் த்யூயோங் ( Duong Thu Huong)

வியட்நாமைச் சேர்ந்த பெண் எழுத்தாளர், இலக்கிய விமர்சகர். சிறந்ததொரு நாவலாசிரியை, தீவிரமாக சோஷலிஸம் பேசிய முன்னாள் தோழர். தேசியத்தில் நம்பிக்கைவைத்து மேற்கத்திய திக்கதிற்கு எதிராக ஆயுதமேந்தியவர். வியட்நாம் நாட்டின் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட பிதாமகள். பின்னாளில் உள்நாட்டு மார்க்ஸியதோழர்களின் பிரபுத்துவ வாழ்க்கை இவரை சிந்திக்கவைத்ததது மாத்திரமல்ல, பொதுவுடமையின்பேரில் மக்களை அடிமைகளாக நடத்திய அம்மார்க்ஸிய முதலாளிகளின் போக்கு எரிச்சல் கொள்ளவும் செய்தது.இவரது குடும்ப வாழ்க்கை சிறப்பித்துச் சொல்லும்படியில்லை. துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்திமணம் செய்துகொண்டவனோடு நடத்திய இல்லறவாழ்க்கை நரகம் என்று சொல்லப்படுகிறது. இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பிறகு கணவரிடமிருந்து மணவிலக்குப் பெற்றிருக்கிறார். உள்நாட்டுப் போரின்போது 30பேர்கொண்ட கலைக்குழுவொன்றை உருவாக்கி, போர்முனைக்குச் சென்று வீரர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறார். ‘வேட்டுச் சத்தத்தினும் பார்க்க எங்கள் பாட்டுக்குரல் உரத்து ஒலித்தென’ என்ற பெருமிதம் அவருக்குண்டு. ‘எனக்கு அப்போதெல்லாம் நன்றாக பாடவரும், அதுபோலவே அபாயமான காரியங்களில் ஈடுபடுத்திக்கொள்ளும் துணிச்சலும் “திகம்’ என்கிறார். 1973ம் “மெரிக்கத் துருப்புகள் வடவியட்நாமிடம் நடத்திய யுத்தத்தில் தோல்வியுற்று விலகிக்கொண்டபிறகு நடந்த இரண்டாண்டுகால சகோதர யுத்தத்தின் இறுதியில் தென்-வியட்நாம் வட-வியட்நாம் நிர்வாகத்தின்கீழ் வருகிறது. டுயோங்கைப் பொறுத்தவரை வட-வியட்நாம் திக்கத்தின் கீழ்வராத தென்-வியட்நாம் மக்களின் வாழ்க்கை நன்றாகவே இருந்தது. 1979ம் ண்டு கம்யூனிஸ கட்சியுடன் இணைத்துக்கொள்ள அறிவுறுத்தி அழைப்பு வர, அந்நாட்களில் வியட்நாமியர்களின் பொதுவான மனநிலைக்கிணங்க, விருப்பமில்லாமலேயே கட்சியில் உறுப்பினரானார்.

‘காட்சித் திரிபுகளைக் கடந்து'(Beyond Illusions). என்ற முதல் நாவல் 1987ல் வெளிவந்தது. தொடக்க நாவலே நாட்டின் முதன்மையான நாவலாசிரியர்களில் அவரும் ஒருவரென்ற அங்கீகாரத்தை வழங்கியது என்கிறார்கள். ஒரு இலட்சம் பிரதிகள் விற்றனவாம், பிரெஞ்சு மொழிபெயர்ப்பின் பின் அட்டையில் எழுதியிருக்கிறது. வியட்நாம் போன்றதொரு சிறிய நாட்டில் அதற்குச் சாத்தியமுண்டா என்று தெரியவில்லை. போரினால் மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் நாவலில் விரிவாகப் பேசபடுகின்றன. கம்யூனிஸத் தலைவர்களின் அதிகார அத்துமீறல்களை கடுமையாக நாவலில் விமர்சனம் செய்திருந்தார். 1988ம் ண்டு வெளிவந்த  குருட்டு சொர்க்கம் (Paradise of the Blind), மற்றொரு நல்ல நாவலென்ற கருத்து நிலவுகிறது. விற்பனை அளவிலும் சாதனை புரிந்திருக்கிறது. இம்முறையும் ள்பவர்களும், ட்சிமுறையும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். ஆட்சியாளர்களுக்கு எழுத்தாளர் கையைக் கட்டிப்போட பேரம் பேசுகிறார்கள், அரசாங்கத் தரப்பில் ஒரு பெரிய வீடொன்றை தங்கத் தாம்பாளத்தில் வைத்துப் பரிசாகத் தர தயார் என்கிறார்கள். எழுத்தாளர் மறுக்கிறார். மறுப்பதோடு வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் ஆட்சியாளர்களைக் கண்டிக்கிறார். ஒருகட்சி ஆட்சிமுறையை ஒழித்து, ஜனநாயகத்தை நிலை நாட்டுவதற்கு அரசு முன் வரவேண்டுமென வற்புறுத்துகிறார். எனவே 1989ம் ண்டு கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். மறு ஆண்டு வியட்நாமிய எழுத்தாளர் அமைப்பிலிருந்தும் அவரை நீக்குகிறார்கள். 1991ம் ண்டு எட்டுமாதங்கள் சிறைவாசம். அவரது நூல்கள் அனைத்தும் உள் நாட்டில் தடை செய்யப்படுகின்றன. வெகுகாலம் வியட்நாமில் வீட்டுக் காவலிலிருந்த எழுத்தாளர் விடுதலைக்குப் பிறகு 2006ம் ண்டிலிருந்து பிரான்சுநாட்டில் வசித்துவருகிறார். பிரெஞ்சு மொழியை அறிந்தவரென்ற போதிலும் வியட்நாமிய மொழியில் எழுதப்பட்டு பின்னர் பிரெஞ்சிலும் ஆங்கிலத்திலும் அவரது படைப்புகள் மொழிபெயர்ப்பு செய்யப்படுவது வழக்கமாக இருந்துவருகிறது.

டுயோங் த்யூயோங் எழுத்தில்  அண்மையில் வெளிவந்துள்ள நாவல் Au Zenith(1). புரிதலுக்காக ‘உச்சம்’ “ல்லது ‘சிகரம்’ என்று மொழிபெயர்க்கலாம். பொதுவாக சிகரத்தைத் தொட்டவர்களுக்கு இறங்கிவரப்போதாது, பெரும்பான்மையோருக்கு விபத்தென்பது தீர்மானிக்கபட்டது. அவர்கள் நிலை தடுமாறி விழுகிறபோது பரிதாபமான முடிவையே சந்திக்கின்றனர். உள்ளன்போடு நேசிக்கிறவர்களின் அழுகுரலைக் கேட்கக்கூட வாய்ப்பின்றி தனித்து போகின்றனர் என்பது வரலாறு தரும் உண்மை. பூமி அனைத்தும் எனது காலடியில்; வானம் எனது வெண்கொற்றகுடை; தீயும், காற்றும் நீருங்கூட என்னைக்கேட்டே செயல்படவேண்டுமென நினைத்த அசுரர்களுக்கு நேர்ந்த முடிவுகளும் நமக்கு இதைத்தான் கூறின.  Au Zenith என்ற பெருங்கதையாடலைக்கொண்டு பெரியதொரு இலக்கியபோரையே படைப்புகளத்தில் நடத்தி முடித்திருக்கிறார் இவர்.

இம்முறை வியட்நாமியர்களின் தந்தையெனப் போற்றப்படும் அதிபரின் பிம்பம் ஆட்டம் காண்கிறது. வியட்நாம் தேசத்தந்தை அதிபர் ஹோசிமின்குறித்து வெளியுலகு அறிந்திராத தகவல்களையும், இரகசியங்களையும் கருப்பொருட்களாகக் கொண்டு புனைவு நீள்கிறது. இழப்புகளை எண்ணி அழும் அந்திமக்காலம் அதிபர் ஹோசிமினுக்குச் சொந்தமானதென்பதைச் சொல்லுகிற புனைவு. நாவலில் ஹோசிமின் என்றபெயர் சாதுர்யமாகத் தவிர்க்கப்பட்டிருந்தபோதிலும் அதிபர் என்றசொல்லுக்குள்ளே ஹோசிமின் ஒளிந்திருப்பதை வெகு சுலபமாகவே கண்டுபிடித்துவிடுகிறோம். தூரதேசங்களிலிருக்கும் நம்மைப் போன்றவர்களுக்கும், உள்ளூர் அபாவிகளுக்கும் ஹோசிமின் என்ற சொல் தரும் புரிதல் என்ன? உத்தமர், பெண்களை ஏறெடுத்தும் பாராதவர். உடல் பொருள் ஆவி அவ்வளவையும் வியட்நாமுக்கு அளித்து தமது சொந்த வாழ்வைத் தியாகம் செய்தவர் போன்ற புகழுரைகள் – சர்வாதிகாரிகள் அனைவருக்குமே பூணப்படும் கவசமென்று நாமும் அறிவோம். ஆனால் அவர்கள் அந்தரங்கம் புனித நீரல்ல, மாசுபடிந்தது. துர்நாற்றம் கொண்டது. அதிபராக அவதாரமெடுப்பவன் கட்சிக்கும் நாட்டுக்கும் அன்றி வேறு பயன்பாடுகளற்றவன் என்பதை அவன் தீர்மானிப்பதல்ல, அவன் அவனுக்காகவே வடிவமைக்கிற “திகாரமையம் தீர்மானிக்கிறது; அவர்களுக்கு உடற் தினவுகள் கூடாது; காமம், காதல், பெண்கள் விலக்கப்பட்டது, விலக்கப்பட்டவர்கள் என்ற சர்வாதிகார ஓர்மத்திற்கு வலு சேர்க்கிறவகையில் தங்கள் தேச நாயகனை சுத்திகரிக்க நினைக்கிறார்கள். விளைவு அதிபரின் பெண்துணை அழிக்கப்படுகிறது. தடயமின்றி கரைந்துபோகிறாள். சுவான் என்ற ஒருத்தி, அதிபரைக் காதலித்தாளென்ற ஒரே காரணத்திற்காகவும், அவருடன் படுக்கையைப் பகிர்ந்து ஒரு மகனுக்கும் மகளுக்கும் தாயானவள் என்ற குற்றத்திற்காகவுவ் தண்டிக்கப்படுகிறாள். மகன்,மகள், மனைவி என்ற உறவுகளை ஒரு சராசரி மனிதன் விரும்பலாம், குடும்ப வாழ்க்கை ஊர் பேரற்ற மனிதர்களுக்கு அவசியமாகலாம், ஆனால் நாட்டின் அதிபருக்கு, தேசத்தின் நலனையே மூச்சாகக் கொண்ட மனிதருக்கு அம்மனிதரே விரும்பினாலுங்கூட சர்வாதிகார கவசம் அதை அனுமதிக்காதென்பது நாவல் வைக்கும் உண்மை. விசுவாசிகளென்று சொல்லிக்கொள்ளும் ஒரு கூட்டம் இளம்பெண் சுவா¨னை(Xuan) கொலைசெய்து தெருவில் வீசிவிட்டுப்போகிறது. அவளுடன் பாலியல் வல்லுறவு கொள்பவன் உள்துறைமைச்சராக இருப்பவன். பெண் செய்த குற்றம் அதிபரைக் காதலித்தது அல்ல மாறாக சட்டபூர்வமாக அது அங்கீகரிக்கப்படவேண்டும் என்று விண்ணப்பித்ததற்காக. அவள் கொலை வாகன விபத்தென்று அறிவிக்கப்படுகிறது. பெண்ணுக்கும் அதிபருக்குமான உறவினை தொடக்கமுதல் அறிந்திருந்த அவளது ஒன்றுவிட்ட சகோதரியும் பின்னர் கொலை செய்யப்படுகிறாள், எதேச்சையாக இப்பெண்மூலம் அவளது காதலன் அறிந்திருந்த – ஆட்சியாளர்களால் மறைக்கபட்ட உண்மை வெகுகாலத்திற்குப் பிறகு வெளி உலகுக்குத் தெரியவருகிறது. பொதுவாக சோஷலிஸநாடுகளில் தனிமனிதன் அவனது இருப்பு, மகிழ்ச்சி, உறவு முதலான காரணிகளிலிருந்து அந்நியப்படுத்தப்படுகிறான். “காம்ரேட், உண்மையான Bolcheviqueற்கு குடும்பம் எதற்கென” கேட்ட ஸ்டாலினை இங்கே நினைவுகூர்தல் வேண்டும். ஸ்டாலின் மனைவி தற்கொலை செய்துகொண்டதும், அதை இயல்பான மரணமென்று வெளி உலகிற்கு அறிவித்ததும், மகன் போதைப்பொருளுக்கு அடிமையானதும், இரண்டாம் உலகபோரின்போதும் அவனுக்கேற்பட்ட சோகமான முடிவும் மறக்கக்கூடியதல்ல. ‘பெரிய அண்ணன்கள்’ அநேகரின் வாழ்க்கை வரலாறுகள், நமக்கு வாசிப்பு அலுப்பினை ஏற்படுத்துவதற்கு அவற்றின் ஊடுபாவாக ஒளிந்துள்ள இதுமாதிரியான ஒற்றுமை நிகழ்வுகளே காரணம். உலக வரலாற்றில் மாவீரர்களாக சித்தரிக்கபட்ட சர்வாதிகாரிகள் அனைவருக்குமே சொந்தவாழ்க்கை ஒளிமயமானதல்ல, அது இருண்ட குகைக்குச் சொந்தமானது. உடலும் மனமும் சோர தங்கள் இறுதி நாட்களை கடந்தகாலமாக உருமாற்றம் செய்து வேதனைகளோடு அவர்கள் மடிந்திருக்கிறார்கள்.

பொதுவுடமை சித்தாந்தம்- காலங்காலமாய் போற்றப்படும் மரபுகள் என்ற இரு கைகளுக்குள்ளும் சிக்குண்டு எவ்வாறு ஒரு தனிமனிதன் வாழ்க்கை அலைகழிக்கபடுகிறது என்பதே புனைவு மையப்படுத்தும் பொருள். டுயோங்குடைய முந்தைய நாவல்களும் தனிமனிதனை தேசாந்திரம் செய்யும் சோஷலிசஸ அரசியலை விமர்சித்திருக்கின்றன என்றாலும் இந்நாவலில் வரம்பற்ற அதிகாரத்தின் முடிவாக இருக்கும் ஒருவனே, தனிமனித தீண்டாமை கோட்பாட்டின் விளைவாக எவ்வாறு பாதிக்கப்படுகிறான் என்பது நாவல் தரும் விளக்கம். தங்கள் வாழ்நாளில் அதிகாரத்தில் உச்சியிலிருந்துகொண்டு ஆடிய மூர்க்க தாண்டவமனைத்தும், பதவி மோகத்தில் காயப்படுத்தப்பட்ட தனிமனித உணர்வுகளுக்காகத் தேடிக்கொண்ட களிம்பென்று விளங்கிக்கொள்ள வேண்டும். டுயோங் நமக்கு அறிமுகப்படுத்துகிற ஹோசி
மினைக் கண்டு பரிதாபப்படவேண்டியிருக்கிறது. தேசத்தந்தையென கோடானகோடி வியட்நாமியர்கள் புகழ்பாடிய நேற்றைய ஹோசிமின்
அல்ல இவர், விரக்தியின் உச்சத்தில், இறையின்றி மெலிந்துபோன நோஞ்சான் கழுகு. வாழ்க்கையின் கடைசிக்கட்டத்தில்
அனைத்துவகையிலும் தனிமைப்படுத்தப்பட்டுக் கிடக்கும் முதியவர்.

ஆசிரியர் நாவலின் தொடக்கத்திலேயே வாசகர்களைக் கனிவாய் எச்சரிக்கிறார். கற்பனையை மட்டுமே முழுமையாக நம்பி ஒரு நாவலைப் படைப்பதற்கான ஆற்றல் “வருக்கில்லையாம். ‘நான் எழுதுகிற புனைவுகள் அனைத்தும் உண்மைகள் அடிப்படையில் எழுதப்பட்டவை என்பது ஆசிரியர் தரும் வாக்கு மூலம். நாவலின் தொடக்கத்தில் அப்பா!.. அப்பா!.. என்றொரு அலறல். மலை அடிவாரத்திலிருந்து புறப்பட்ட இளஞ்சிறுவனின் அபயக்குரல் மலைகளெங்கும் எதிரொலிக்கிறது; மரங்கள் அதிர்ச்சியில் அசைந்துகொடுக்கின்றன, நிசப்தமான வெளியில் அதிர்வலைகளை ஏற்படுத்திவிட்டு அடங்குகின்றன. ஒருகணம் தம்மை மறந்த அதிபர் சுய நினைவுக்குத் திரும்புகிறார். ‘இல்லை, அவன் குரலில்லை’ இக்குரலுக்குடையவன் வேறு யாரோ’, தம்மைத்தாமே சமாதானம் செய்துகொள்கிறார்.. எனினும் அக்குரல் வெகுநாட்களாய் நெஞ்சுக்குள் கனிந்துகொண்டிருந்த சோகத்தை விசிறிவிட பற்றிக்கொள்கிறது- அவர் மீள்வாசிப்பு செய்யும் கடந்தகாலத்திற்குள் பிரவேசிக்கிறோம். தொடர்ந்து பையனின் அழுகுரல். ‘பையனின் தகப்பன் ஒருவேளை இறந்திருக்கக்கூடும், பாவம், இனி அவனொரு அனாதைச் சிறுவன். சட்டென்று அதிபர் மனதில் ஒரு கேள்வி, நான் இறப்பதாய் வைத்துக்கொள்வோம், என் மகனும் இந்தப்பையனை போலத்தான் அழுவானோ?(பக்கம் -23)

இளமைக்கால பாரீஸ் வாழ்க்கை, கடந்த கால காதல் ஆகியவற்றை எண்ணி எண்ணி ஆற்றொணாத துயரத்தில் மூழ்கும் அதிபரின் கதைக்கு இணைகதைகளாக மூன்றுகதைகள் வாசிக்கக் கிடைக்கின்றன. முதலாவதுகதை ‘வூ’ என்பவர் குறித்தது. வூ, அதிபரின் நம்பிக்கைக்கு உரியவர்மட்டுமல்ல அவருக்கு நெருக்கமான நண்பருங்கூட, ஹோசிமின் மகனை ரகசியமாக வளர்க்கின்ற பொறுப்பை ஏற்றிருப்பவர். பிறகு அவரது மனைவியாக ‘வான்’ என்பவளைப் பார்க்கிறோம்.   கடந்த காலத்தில் உழைக்கும் வர்க்கத்தில் ஒருத்தி, தீவிரமாக பொதுவுடமைக் கொள்கைக்கு வக்காலத்து வாங்கியவள்.  செம்படையில் சேர்ந்து எதிரிகளை விரட்டியவள். காலம் மாறுகிறது. இன்றைக்கு பொறுப்பான அதிகாரி. அதிகாரமும்  பதவிதரும் சுகமும் அவள் குணத்தை முற்றாக மாற்றி அமைக்கிறது. நாட்டின் விடுதலைக்குப் பிறகு சுகவாசியான அதிகாரவர்க்கத்துள் அவளும் ஒருத்தி என்று சுருக்கமாக முத்திரைகுத்திவிட்டு நாம் மேலே நகரலாம். ஊழலும் தன்னலமும் கொண்ட ஆட்சியாளர்களுக்கு அவள் உதாரணம். இரண்டாவது கதைக்குச் சொந்தக்காரன் செல்வாக்கான ஒரு கிராமத்துவாசி. ஹோசிமின் போல அல்லாது உறவும், கிராமமக்களும் விமர்சித்தபோதும், மகன்களும் முதல் மனைவியின் சகோதரர்களும் எதிர்த்தபோதும் தமது இருப்பிற்கும், சொந்த உணர்ச்சிகளுக்கு செவிசாய்த்து, முதல் மனைவியின் இறப்பிறகுப் பிறகு எதிர்பாராமல் சந்திக்க நேர்ந்த கூலிப்பெண்ணை மணக்கும் துணிச்சல்மிக்க கிழவன். மூன்றாவது கதை, சுவானுடைய சகோதரி கணவனுடைய கதை. சுவான் கொலைக்குப் பின்புலத்திலிருப்பவர்களைப் பழிவாங்கத்துடிக்கும் இளைஞனை ஆளும் வர்க்கத்தின் ஏவலர்கள் துரத்துகிறார்கள். நாவலில் சொல்லப்பட்டிருக்கிற அத்தனை கதைமாந்தர்களின் பண்பும், செயலும், விதியும் ஏதோ ஒருவகையில் ஹோசிமின் வரலாற்றோடு, வாழ்க்கையோடு முடையப்பட்டிருக்கிறது. “ம்மனிதர்களின் நிகழ்காலமும், கடந்தகாலமும், மனித வாழ்க்கையின் அகம் புறம், பொதுவாழ்க்கையில் அவர்களுக்கான பங்களிப்பென கதை பின்னல் நிகழ்கிறது.

நாவல் களம், சொல்லப்படும் அரசியல், கதைமாந்தர்கள், கொள்கை முழக்கங்கள் என்றபேரில் மக்களை ஏமாற்றும் ஆளும் வர்க்கம், அப்பாவி மக்கள், வெள்ளந்தியாய் வாழப்பழகிய கிராமங்கள், கவலை பூத்த முகங்கள், நம்பிக்கை வறட்சிகள், நிலைப்பாடு மோதல்கள்,அலைக்கும் காற்று, மொத்தத்தில் இந்திய நாவலொன்றை படிப்பதுபோன்ற உணர்வு, எனவே இவரது நாவலை அக்கறையுடன் வாசிக்க முடிகிறது. உயிர்ப்புள்ள படைப்புக்குரிய கலாநேர்த்தியும், கூர்மையும் ஆழமும் இப்படைப்டப்பிற்கான தனித்துவம். எழுத்தென்பது சம்பவமொன்றின் சாட்சிமட்டுமல்ல, எழுத்தாளனின் மனசாட்சியாக இருக்கவேண்டும், அது சத்திய வார்த்தைகளால் நிரப்பப்படவேண்டும். சகமனிதர்கள், சமூகமென்ற என்ற கடப்பாட்டுடன் ஒலிக்கும் படைப்பாளுமைகள் போற்றுதலுக்குரியவை. இலக்கியங்கள் இதைத்தான் சொல்லவேண்டுமென்றில்லை ஆனால் ஏதோவொன்றை சொல்லவே படைக்கப்படுவை. ட்யோங் த்யோங்கிற்கும் அந்த நோக்கம் நிறையவே இருந்திருக்கவேண்டும்: ஏராளமாக ஆளும் வர்க்கத்திடம் அவருக்குக் கோபம் இருக்கிறது, அது கடுங்கோபம். பிரான்சையும், அமெரிக்காவையும் அத்தனை திடத்தோடு எதிர்த்த மக்கள், எப்படி சர்வாதிகாரத்திற்கு அடிபணியும் கோழைகளாய் மாறிப்போனார்கள் என்றகோபம்; தேச நலன் என்பது தனிமனிதச் சுதந்திரத்தினால் மட்டுமே கட்டமைக்கப்படவேண்டும் என்ற சிந்தனைப்பள்ளிக்கு ஆசிரியர் சொந்தங்கொண்டாடுகிறார். இந்நாவலை நடத்திச்செல்வது கதைமாந்தர்களின்  மேதைமைக்கொத்த உரையாடல்கள், சல்லிவேர்கள்போல பரவி ஆனால் நாவலை நிறுத்த அவை முதற்பக்கத்திலிருந்து இறுதிவரை உதவுகின்றன. மனிதர் குரலுக்கான அதிகார
அளவையும், வீச்சையும் வயதே தீர்மானிக்கிறதென்பதும் நாவல் தரும் செய்தி. அதிபர் தனக்குத்தானே நடத்தும் உரையாடல்; அவரது காவலர்களுடனும், நம்பிக்கைக்குரிய ‘வூ’ வுடனும் நடத்தும் உரையாடல்;  ‘வூ’தம்பதிகளுக்கிடையேயான உரையாடல்; விவசாயியான கிழவன் குவாங் மகன்களுடன் நடத்தும் உரையாடல் என்ற பெரிய பட்டியலை அடுத்து வேறு சில பட்டியல்களும் உள்ளன. உரையாடல்களில் ஒன்றைப் புரிந்துகொள்கிறோம். குறைந்தபட்சம் இருவரின் பங்களிப்பு தேவையெனச்சொல்லபடுகிற உரையாடலில் ஒன்று மற்றொன்றை நிராகரிக்கும் போக்கே பெரிதும் காணகிடைக்கிறது. நவீனத்தால் அல்லது யுகமாற்றங்களால் புறக்கணிக்கமுடியாதவற்றுள் மரபான உரையாடலையும் சேர்க்கவேண்டும். உ.ம்.:  “தாய் சோன் மலையை மதிப்பதுபோல உனது தகப்பனையும் நினை’, ‘ஊற்று நீரை நேசிப்பதுபோல பெற்ற தாயையும் நேசிக்க வேண்டும்’.” ஓவியததையோ, சிற்பத்தையோ அவதானிக்கிறபோது சில புள்ளிகள், சில தடயங்கள், சில பகுதிகள் படைப்பாளியின் ஆளுமையை வெளிப்படுத்தக்கூடும், ஓர் ஆசிரியனின் இருப்பை, சுவாசத்தை, அசைவை உணர்த்தும் கணங்கள் அவை. சங்கீதத்தில் கமகங்கள் போன்றவை.டுயோங் த்யூயோங் நாலிலும் அத்தகையை கமகங்களை இடைக்கிடை நிறைய உண்டு. அறைக்குத் திரும்பியவர், கட்டிலில் இயல்பாய் எப்போதும்போல படுக்கிறார். குண்டு காவலாளி, கதவினைச் சாத்திவிட்டு  புறப்படுகிறான். படிகளில் அவனது கனத்த பாதங்கள் எழுப்பும் ஓசை, புத்தவிகாரங்களெழுப்பும் சீரான மணியோசையில் கரைந்துபோகின்றன”, ஓர் நல்ல உதாரணம்.

புரட்சிகள் தரும் மாற்றங்கள் வரலாற்றை மாற்றி எழுத உதவியதேயன்றி மானுட நெருக்கடிக்களுக்குத் தீர்வினைத் தந்ததில்லை. “வாழ்க்கைதரும் இன்னல்களுக்கு ஆறுதலாக இருந்த புத்த விகாரங்களின் பிரார்த்தனையும்- சேகண்டி ஓசையும் எங்கே போயின?” என்ற கேள்வியைக் கேட்டு குற்ற உணர்வில் வருந்தும் அதிபருடைய மனப்போராட்டத்தினூடாகவே புனைவுக்குண்டான விவரணபாணியை உருவாக்கமுடியுமென்பது இந்நாவலின் சாதனை.
—————————————————————————————————————————–
1. Au Zenith – Duong Thu Huong translated from Vietnamese Phuong Dang Tran-Sabine Wespieser Editeur, Paris

படித்ததும் சுவைத்ததும் – 10: இராஜேந்திர சோழனின் யுத்த களம்

 

அஸ்வகோஷ் என்கிற இராசேந்திர சோழன், பெயருக்கேற்ப   நல்ல உயரம், அதற்கேற்ப உடல்வாகு, ஈரத்துடன் மினுங்கும் கண்கள், கூரிய மூக்கு, அதை உதட்டிலிருந்து பிரிப்பதற்கு நெய்பூசி நீவியது போல, உதட்டோரம் இருபுறமும் உறையிலிட்ட வாள்போல மீசை. தலையில் மகுட த்தைச் சூட்டினால் சோழர் குல வாரிசென்பது நிச்சயம். எழுத்திலும் இந்த கம்பீரமும் மிடுக்கும் அப்படியே குறையாமல் இருப்பதுதான் அதிசயம்.

 

இராசேந்திர சோழனை நிகழ்காலத்திற்கு அழைத்து, நிலைக்கண்ணாடி முன்பாக நிறுத்தினால் அதில் நா. பார்த்தசாரதியோ, ஜெயகாந்தனோ தெரிந்தால் வியப்புமல்ல. அதிலும் பின்னவரைப்போல தனது இருத்தலை உறுதிசெய்ய உரத்து குரலெழுப்பும் அரசியல் இவருக்கு வராது என்கிறபோதும், அடித்தட்டு மக்களின் குமுறலை, ஆற்றாமையை கதைபடுத்துகிறவர்.  வாய்பேசாத மக்களுக்கு வக்காலத்து வாங்குகிற  வழிமுறையில் அவருக்கும் இவருக்கும் ஒற்றுமை உண்டு.

இராசேந்திர சோழன்போல கம்பீரமானதொரு எழுத்தாளரை  நா.பார்த்தசாரதி, ஜெயகாந்தன் ஆகியோருக்குப் பிறகு குறிப்பிட்டுச்  சொல்ல யாருமில்லை. அவருடைய சிறுகதையொன்றில்  . « தோளில் ஒரு பையை மாட்டிக்கொண்டு கிளம்பிவிடுவார் » என்று ஒரு வரியைப் படித்த  நினைவு. அதுபோலத்தான் முதன் முதலில் சந்தித்தபோது  இருந்தார். அன்று எழுத்தாளர் பிரபஞ்சனும் நானுமாக புதச்சேரி கடற்கரையிலிருந்து திரும்பி வந்துகொண்டிருந்தோம்.  தலைமைத் தபால்  நிலையத்திற்கு எதிரே சரியாகச் சொல்ல வேண்டுமெனில், மத்திய தொலைபேசி இணைப்பக அலுவலகத்திற்கு எதிரில், AITUC கொடிக்கம்பத்திற்கு அருகில் அவரைச் சந்தித்தேன். ஒரு தொழிற்சங்கவாதிபோலவே இருந்தார். கணிரென்ற குரல். பிரபஞ்சன் என்னை அவருக்கு அறிமுகப்படுத்தினார். இரண்டொரு  நிமிடங்கள் உரையாடியிருப்போம்,பின்னர் அவர் கிழக்கு திசையிலும்,  நாங்கள் மேற்கு திசையிலுமாக  நடந்தோம்.  சில ஆண்டுகளுக்குப் பிறகு  நண்பர்கள் ஹைக்கூ  தமிழ் மணி, மொழிபெயர்ப்பாளர் வெங்கட சுப்புராய  நாயகர் ஆகியோர் உதவியால் மயிலத்தில் அவருடையை   இல்லத்தில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இனிய குடும்பம், அன்பான உபசரிப்பு, என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்களில் அதுவுமொன்று.

2017 இரஷ்யப் புரட்சியின்  நூற்றாண்டு.மேற்குலகையும் அமெரிக்காவையும் வீழ்த்த மாசேதுங்கின் சீனா  தனியுடமையை சுவீகாரம் எடுத்துக்கொண்டிருக்க, லெனின் அறைகூவலில் கிளர்ந்தெழுந்த சோவியத் மண்ணில் சோஷலிஸம் இன்று நேற்றய சரித்திரம். பனிப்போரை மறந்து, உலகமயமாக்கலுக்கு உரமூட்டுவதெப்படி என்ற விடயத்தில் மேற்கு, கிழக்கு, வடக்கு, தெற்கு பேதமின்றி  நாடுகள் கைகோர்த்துள்ள  21ஆம் நூற்றாண்டு. அல்பெர் கமுய்யில் ஆரம்பித்து இராசேந்திர சோழன்வரை பொதுவுடமை ஸ்தாபனத்தின் மீதும், அதன் அபிமானிகளிடத்திதிலும், கொண்ட கோபமும் குமுறலும்  நியாயமானவை என்பதை வரலாறு  உறுதிசெய்துள்ள காலகட்டம்.  இத்தகைய சூழலில் இராசேந்திர சோழனைப் பற்றி எழுதுவதும் பொருத்தமானதுதான்

 

கம்பீரத்தில்  இராசேந்திர சோழன் ஒரு ஜெயகாந்தன் எனில் எளிமையில் அவர்  மற்றுமொரு சு. சமுத்திரம். மூவருமே  கலையும் படைப்பிலக்கியமும் மக்களுக்காக என வாதிடும் பரம்பரையைச் சார்ந்தவர்கள். தங்கள் படைப்புக்களை அத்தகைய கண்ணோட்ட த்துடன் படைத்தவர்கள். மனித வாழ்க்கையின் அலங்காரத்தை மட்டுமின்றி அவலங்களையும் தமது படைப்பில் சொல்லப்வேண்டிய கடமை  படைப்பிலக்கியவாதிக்கு இருக்கிறது. அறுபதுகள் வரை நவீன தமிழ் இலக்கியம் மேலை  நாடுகளில் ஆரம்பத்தில் எழுதப் பட்டதைப்போலவே மேட்டுக்குடியினரின் வாழ்க்கை முறையை, வாழ்க்கைப் பார்வையை படைப்பில் மையப்படுத்தி அல்லது அவைகளை மையமாக வைத்து, விளிம்பு  நிலை மக்களை முற்றாக  நிராகரித்து இதுதான் தற்கால தமிழர்களின் வாழ்வியல், சமூக  நெறிகள் என்று சொல்லப்பட்டன.  கர்நாடகச் சங்கீதம், அலுவலகம், வற்றல் குழம்பு, சந்தியா வந்தனம் அத்திம்பேர், பட்சணங்கள் புனைவுகளிலும், சிறுகதைகளிலும் சாகாவரம் பெற்றிருந்தன.  இவற்றிலிருந்து முரண்பட்டு ஜெயகாந்தன் சேரி மக்களுக்கு இலக்கியத்தில் இடம் அளித்திருந்தார். அவரும் பொதுவுடமை ஸ்தாபனத்தின் பிரதிநிதி என்றபோதிலும் எஜமான் தொனியில்  அடித்தட்டு மக்களைப் பற்றி எழுதினார். விளிம்பு  நிலை மக்களை புரிந்துகொள்ள அவரெடுத்த முயற்சிகள் எல்லாம், பரிசோதனை முயற்சிகள். அவர்களில் தன்னை ஒருவராகக் கண்டு எழுதியதல்ல. ஆனால் சு. சமுத்திரம் போன்றவர்கள் தாங்களும் அந்த அடித்தட்டு மக்களில் ஒருவர் என்ற உணர்வுடன் படைத்தவர்கள். அத்தகைய பண்பை நமது இராசேந்திர சோழனிடம் காண முடிந்தது. அதேவேளை  எழுத்தாற்றல்,கதை சொல்லும் திறன் இரண்டிலும் தனித்தன்மையுடன் பிரகாசிக்கிறார். இது இராசேந்திர சோழனுடைய பலம் மட்டுமல்ல பலவீனமும் ஆகும்.

 

இராசேந்திர சோழன் சிறுகதைகள்

 

முனைப்பு : தாய்மொழியான தமிழுக்கு முக்கியத்துவம் தரவேண்டும், என்ற உணர்வில் எழுதப்பட்ட கதை.  தமிழ் இன உணர்வாளர்கள் கூட்டிய மாநாட்டில்  சிறுகதை  நாயகனும் கலந்துகொள்கிறான்.  நண்பகல் இடைவேளையின்போது வழங்கப்பட்ட உணவுப்பொட்டலத்தைப் பிரித்தவண்ணம் :

 

« அதே பேச்சாளர்கள் அதேபேச்சு இப்படி மாநாடு நடத்திக்கினு இருந்தா எப்பத்தான் விடிவு காலமோ… » என்கிறான். « நம்மகிட்ட  என்ன செயல் திட்டம் இருக்கு அதை நடைமுறை படுத்த. அது இல்லாத வரைக்கும் சும்மா வாயாலேயே பேசிக்கினு இருக்க வேண்டியது தான் » என்ற நண்பரின் பதிலுக்கு, « எல்லாரையும் ஒரு சேர சந்திக்கிறதுக்கு ஒரு வாய்ப்பு அதைத் தாண்டி வேற என்ன ? » என்பது அவன் அங்கலாய்ப்பு. தம்முடைய அன்றாட வாழ்க்கையில் தமிழ்ச் சொற்களை மட்டுமே பாவிப்பது  எனத் தீர்மானித்து அவன் படும் சங்கடங்களை ஆசிரியர் அழகாகச் சொல்லிக்கொண்டு போகிறார்.  இன்றைக்கு உலகமெங்கும் தம்ழ் மாநாடுகள் என்ற பெயரில் அரங்கேறும் கூத்துக்களை படைப்பிலக்கியவாதி அவருக்கே உரித்தான தொண்டை மண்டல வட்டாரத் தமிழில் சொல்லியிருக்கிறார்.

 

சூரப்பன் வேட்டை :  பெயரைக்கொண்டே சட்டென்று நம்மால் எதைப்பற்றி ஆசிரியர் பேசுகிறார் என்பதைச் சுலபமாக விளங்கிக் கொள்கிறோம்.  நாட்டின் அத்தியாவசிய பிரச்சினையிலிருந்து மக்களை திசை திருப்ப அன்றைய  அரசு எடுத்துக்கொண்ட முயற்சியே வீரப்பன் வேட்டை என்பதை த் துணிச்சலுடன் சொல்லும் கதை.  நேர்மையான சமூக உணர்வுள்ள எழுத்தாளனுக்கு  வரும் கோபத்துடன் எழுதியிருக்கிறார். அந்தக் கோபத்திலும் இராசேந்திர சோழன் தமது வழக்கமான எள்ளல் மொழியைக் கையாள மறப்பதில்லை.  ஏமாளிதேசம், ஏமாற்று தேசம் வஞ்ச்சகப் பேரரசு, சூரப்பன், தடாலடிப்படை என்ற உருவகப்படைப்பில் ஒளிந்திருப்பவர்கள் யார் என்பதை விளங்கிக்கொள்வதில் அதிக சிக்கல்களில்லை. இக்கதையில் :

« தேடுதல் வேட்டையின் போது ரம்மியமான காலைப்பகுதியில் வீசும் மெல்லிய இளங்க்காற்றில் இயற்கைக்கு மாறான ஏதோ ஒரு துர் நாற்றமும் கலந்து வருவதாக உணர்ந்த தடாலடிப் படைத் தலைவர்……. இது காட்டு விலங்குகள் விட்டதாகவே இருக்க முடியாதென்றும், அதே வேளை  இது பருப்பு, சாம்பார், காய்கறி உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வருபவர்கள் விட்டதாகவும் தெரியவில்லை. காடை, கௌதாரி….உடும்பு அயிட்டங்களாகவே தெரிகிறது என்றும்…..தொடர்ந்து காட்டில் வாழ்பவர்களுக்கே இது சாத்தியமென்றும், எனவே சூரப்பனோ அல்லது அவர் கும்பலைச் சேர்ந்தவர்களோ விட்டதாகத்தான் இருக்க முடியுமென்றும் சொன்ன அவர் இதை உறுதிச் செய்து கொள்வதற்காக சம்பந்தப்பட்ட அயிட்டத்தை ஆய்வுக்காக கண்ணாடிக் குப்பியில் அடைத்து வல்லுனர் முடிவுக்கு அனுப்பியுள்ளதாகவும் ….உறுதியானால் இன்னும் ஆறுமாதத்திற்குள் அவனைப் பிடித்து விடுவது நிச்சயம் என்றும் அறிவித்திருந்தார் »  என்பது எள்ளலின் உச்சம்.

 

சவாரி :

 

இராசேந்திர சோழனின் சிறுகதைகளில்   நான் மிகவும் விரும்பி வாசித்த சிறுகதை. கி மாப்பசானை நினைவூட்டும் மொழி நடை.

த.கு கட்சியின் தலைமைக் குழு கூட்டம். « அஜண்டாவைச் சொல்லுங்க தோழர் » என்கிறார், உறுப்பினர்களில் ஒருவர். « வழக்கமான அரசியல் போல அறிக்கை எல்லாம் வேணாம். இண்ணையக் கூட்ட த்துலே ஒரே ஒரு சப்ஜெக்ட் தான், குதிரைப் பிரச்சினைன்னு அது மட்டும் போதும், அதுலியெ உட்பிரிவா அ.முகம், ஆ.வயிறு, இ.கால்கள், ஈ. வால், உ. சூத்துன்னு அத மட்டும் போட்டுக்குங்க போதும் », என்கிறார் மற்றவர். « இயக்கப்பணிகள் பொருட்டு தலைமைக்குழு தோழர்கள் அவ்வப்போது வெளியூர் பயணங்களை மேற்கொள்வதில் பல்வேறு இடர்ப்பாடு…இச்சிக்கலைத் தீர்க்க கட்சிக்கு குதிரை ஒன்று வாங்குவது என்றும், முக்கியமான நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் த.கு தோழர்கள் இக்குதிரையைப் பயன்படுத்திக்கொள்வது என்றும், த.கு.வில் முடிவு செய்து » தலைமைகுழுப் போட்ட தீர்மானத்தை மாவட்ட வட்ட குழுக்களும் வழிமொழிகின்றன. பிறகு வழக்கமான அரசியல் கூத்துகள். ஒரு  நல்ல சாதிக்குதிரையை வாங்க ‘குதிரை  நிதி’ திரட்ட அது குறித்த ஆதரவுகள் எதிர்ப்புகள் என்று நீளும் கதையில் நாம் செய்தித் தாள்களில் வாசிக்கிற அத்தனை அசிங்கங்களும் அரங்கேறுகின்றன.  நல்லதொரு அரசியல் நையாண்டி கதையை படித்த மகிழ்ச்சி.

 

பிரார்த்தனைகளும் பிரசாதங்களும் :

 

மறுபடியும் மா நாடுகளைப் பகடி செய்யும் கதை. அரசியல்  மா நாடு என்றில்லை, பொதுவாக  இங்கு அனைத்துமே கிடைத்த  நிதியை செலவு செய்ய அரங்கேற்றும் காரியங்கள். எவனோ செத்திருப்பான், ஈமச் சடங்குகளில் தங்கள் தங்கள் உறவுக் காரர்களுக்கு தலைக்கட்டுதல் கன ஜோராக நடைபெறும். அதன் மாற்று காட்சிதான் இந்த மா நாடுகள்.  இந்த லட்சணத்தில் மைக்கைப் பிடித்துக்கொண்டு அடுத்தவன் முதுகில் அழுக்கைத் தேடுவார்கள். மா நாட்டின் முடிவில் என்ன உருப்படியாக  நடந்தது, எனத் தேடினால் ஒன்றுமிருக்காது.

« என்னப்பா மா நாடெல்லாம் எப்படி » என நண்பனைக் கேட்கிறான் மா நாட்டில் கலந்துகொள்ள வாய்ப்பில்லாத கதை நாயகன்.

« ரொம்ப சிறப்பா இருந்தது. மூன்று நாளும் என்.வி. தான். மொத நாள் மீன் குழம்பு. ரெண்டாம் நாள் சிக்கன், மூணாவது நாள் மட்டன் கூடவே வட பாயாசம் வேற » என்கிறான் சினேகிதன்.  இவன் சிரித்து « ஏம்பா அதையா கேட்டேன் மாநாடு எப்படி இருந்த துன்னா » என் கிறான். « எல்லாம் வழக்கம் போலத்தான் » என்கிறவன், « மா நாட்டிலே  எல்லாருக்கும் பஞ்ச்சாமிர்தம் கொடுத்தாங்க. நம்ப தோழர் ஒருத்தர் பஞ்சாமிர்த வியாபாரம் பண்றாராம். வெளி மார்க்கட்டுல வெல அமபது ரூபா.  நம்ப தோழர்களுக்கு பத்து ரூபா சலுகை »  என இராசேந்திர சோழன் எழுதுகிறபோது, சோரம் போகாத எழுத்தாளர்கள் ஒன்றிரண்டு பேர் எக்காலத்திலும் தோன்றுவார்கள் என்ற  நம்பிக்கையை அளிக்கிறார்.

 

விசுவாசம் :

 

தெரு  நாய் ஒன்றின் விசுவாசம் பங்களா நாயாக மாறியதும் இடம் மாறும் அழகு மிக  நேர்த்தியாகச் சொல்லப்பட்டுள்ள து. தெரு  நாய்தான் கதை நாயகன் அல்லது கதை நாய்கன். நாய், குரைப்பு, அதனை அறிந்த மனிதர்கள்  என்று மூன்று தரப்பினருக்கிடையே நிகழும் சம்பவக் கோர்வை ஆழமான சமூக பார்வையுடன் கதையாகச் சொல்லப்படுகிறது.  இராசேந்திர சூழன் படைப்பு குறித்து ஆய்வு செய்பவர்கள், சிறுகதை எழுத ஆர்வமுள்ள இளைஞர்கள் கட்டாயம் படித்துப் பார்க்கவேண்டிய கதை.

 

இராசேந்திர சோழனின்  நெடுங்கதைகள்

 

தமிழினி வெளியீடான இராசேந்திரசோழன் குறுநாவல்கள்  என்ற தொகுப்பில்  இடம்பெற்றுள்ள சில கதைகளை இங்கே குறிப்பிடவேண்டும்.  அவற்றில் மூன்றினை எழுத்தாளுமைக்கு, வெவ்வேறுவகையில் படைப்பை எழுத்தாளர் அணுகும் முறைமைக்கு உதாரணமாகச் சுட்டலாம்.

 

அ. பரிதாப எழுத்தாளர் திருவாளர் பரதேசியார் பண்டித புராணம்

 

‘முச்சந்தி இலக்கிய பாணி’யில்  எழுதப்பட்ட நெடுங்கதை. சமகால எழுத்தாளர் ஒருவரை அல்லது ஒட்டுமொத்தமாக பெருவாரியான தமிழ் எழுத்தாளர்களின் வாழ்க்கை முறையை பகடி செய்திருக்கிறார் எனலாம். பரதேசி எழுத்தாள்ரின் பிரம்மச்சர்ய வாழ்க்கையை முடித்துவைத்த திருமணம், இல்லறத்தில் இணைந்துகொண்ட புதுமனையுடனான ஊடல், தாம்பத்ய கடமைகள், திருவிருக்கையில் சாய்ந்து கைகளைதலைக்கு மேலே தூக்கிப்போட்டு பின்னிய கோலத்தில் கதையைத் தேடும் முயற்சிகள் நக்கல் மொழியில் இராசேந்திர சோழன் என்ற எழுத்தாளரின் இன்னொரு பரிமாணத்தை த் தெரிவிக்கின்றன.

எழுத்தாளர் பரதேசியாரைப்போல எழுத்துவாழ்க்கையை அமைத்துக் கொண்ட பரிதாப எழுத்தாளர்கள் எல்லா காலத்திலும் இருக்கவே செய்கிறார்கள். இராசேந்திர சோழன் சொல்வது போல ‘மனம் லயிக்காமல், உணர்வு ஒன்றாமல், ஏதோ கடமைக்கு  என்று எழுதி, எழுத்தும் இலக்கியமாகாமல், மனசுக்கும் திருப்தியில்லாமல்’ எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் ‘எழுதாமல் இருப்பது உத்தம ம்’  என்று முடிவெடுப்பின் படைப்புலகிற்கு நல்லதுதான்.

 

ஆ. 21 வது அம்சம்

 

எழுபதுகளின் மத்தியில் அமலான நெருக்கடி  நிலையையும், அப்போதைய மத்திய அரசின் இருபது அம்சத் திட்டங்களையும்  பரிகசிக்கும் கதை. இக்கதை பிரச்சினையுள்ள காலத்தில் வெளிவரவில்லை என்று தெரிகிறது. வந்திருந்தால் எழுதியவருக்கும் பெரும் பிரச்சினையாக மாறியிருக்கும். சுப்பராயன் என்ற ஏழை குடியானவனுக்கு கரம்பாக க் கிடக்கும் நிலங்களை உழுது பயிரிட கடனுக்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்று முனைப்புடன் ஆசிரியர் பணியிலிருக்கும் ராமச்சந்திரன் என்பவர் எடுக்கும் முயற்சிகளையும், அவருடன் சுப்பராயனும் அவன் தகப்பனும் ஒவ்வொரு வங்கியாக ஏறி இறங்கி படும் துயரங்களையும் ஆசிரியர் சொந்த அனுபவம்போல சித்தரிக்கிறார். இப்பிரச்சினைக்கிடையில் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தின் கீழ் குறியீட்டை எட்ட அறுவைச் சிகிச்சைக்கு ஆட்களைப் பிடிக்க  ஆசிரியர்கள் பட்ட வேதனைகளையும் பார்க்கிறோம். வாசக்டமி என் கிற ஆண்களுக்கான அறுவைச் சிகிச்சைக்குக் கிழம் கட்டைகளையெல்லாம் ஏமாற்றி அறுவைச் சிகிச்சை செய்த  கதைகள் ஏராளம்.

 

இ. சிறகுகள் முளைத்து :

அக்காள், அம்மாள் என பாஸ்கரன் என்ற இளைஞனுக்கு ஆதரவாக இருந்த பெண்கள் இருவரும் அவர்கள் சேர்ந்த சமூகம் எதிர்பார்க்கிற அல்லது விதித்திருக்கிற  நெறிமுறைகளை மீறுகிறார்கள். சாம்பசிவம் வாத்தியார் என்ற பிம்பம் அவன் கண்முன்னே வெடித்துச் சிதறுகிறது. இம் மெய் நிகழ்வினை ஏற்றுக்கொள்ள திரானியின்றி மனதில் ரணத்துடன்  நாட்களைக் கழிக்கிற இளைஞன் வாழ்க்கையில், ஆறுதலாக இளம்பெண் ஒருத்தி குறுக்கிடுகிறாள். இவனும் தன் வாழ்க்கையில் நடந்தவற்றை மறந்து காதல் வயப்படுகிறான். ஊடலின் உச்சம் காதலர்களுக்கிடையே பிரிவினையை எழுப்புகிறது. அழுதகண்ணீரும், சிந்திய மூக்கும் என்கிற வாய்ப்பாடுகளை மறந்து, எளிமையான மொழியில் சொல்லப்பட்டநேர்த்தியான கதை.

 

இராசேந்திரன் சோழன் என்கிற படைப்பு பிரம்மனை உறுதி செய்யும் நெடுங்கதை. இவரது படைப்புக்கே உரிய அடிதட்டுமக்கள், அதனை உறுதி செய்து காட்சிகள். தொண்டைமண்டலப் பகுதிக்குரிய நாட்டார் வழக்குச் சொற்கள், வெள்ளந்தியான உரையாடல்கள் என  கதையின் தடிப்பையும் பொருண்மையின் வரைபடத்தையும் எழுத நமக்கு வார்த்தைகள் போதா. மேட்டுக்குடியினர் அபிநயகூத்தாக அமைத்துக்கொள்ளும் பொய்யான வாழ்க்கை முறை, அடித்தட்டு மக்களின் வயிற்றுக்கும் வாழ்விற்கும் விடையாக அமைந்து, திக்கின்றி கூனிக்குறுகி எதார்த்த த்தோடு இணங்கிப்போகும் அவலம் பச்சையாகச் சொல்லப்பட்டுள்ளது. ஓர் சமூக பிரக்ஞையுள்ள எழுத்தாளன் என்று அவருக்குப் படைப்பிலக்கியம் பரிவட்டம் கட்டுகிறது, இக்கதைகொண்டு.   பாஸ்கரன் என்ற புள்ளியைச் சுற்றி வட்டமிடும் மாக்கோலம் அழகு.  அவன் அக்காள், தாய் ரஞ்சிதம், தேவானை, வடிவேலு, மல்லிகா, சங்கரலிங்கம், ஏன் மரவள்ளிக்கிழக்கு ஆயா உட்பட  சமூகத்தின் பரிதாபத்திற்குரிய உயிர்களைக்கொண்டு, இரத்தமும் சதையுமாக படைக்கபட்ட கதை.

 

அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை அடையாளப்படுத்த சொல்வண்ணம்கொண்டும் தீட்டும் ஒவியங்கள் ஒன்றா இரண்டா ?

 

« குளித்து முடித்து தலை பின்னிகொள்ள உட்காரும்போது அவள் முகத்தில் படிந்திருந்த கலவரம், ரசம் போன ஓட்டைக் கண்ணாடியில் வெளிறித் தோன்றியது »

 

« அவன் உள்ளே நுழைந்தான், வீடு சின்ன வீடு. கொஞ்சம் வேகமாக ஓடிவந்தால் தாண்டி விடுகிற அகலம். அதைப்போல ஒண்னரை மடங்கு நீளம். சுற்றிலும் இடுப்புயரம் சரிந்து மெலிந்த மண் சுவருக்குமேலே மக்கிய கீற்றுவரிசைகள். ஓரத்தில் நைந்துபோன கயிற்றுக் கட்டில். மேலே அழுக்கடைந்த கோரைப்பாய். எண்ணெய்ப் பிசுக்கு ஏறிய உறையில்லாத தலையணையுடன் கீழே ஒரு முக்காலி. சுவர் நீளத்துக்கு இழுத்துக் கட்டிய தேங்காய் நாரினால் தரித்த ஒரு கொடிக்கயிறு. மடித்துப்போட்ட அழுக்குச் சேலைகளும், கழற்றிப்போட்ட ரவிக்கைகளும்…மூலையில் ஓர் அடுப்பு »

 

« பிசுபிசுப்பு ஏறிய கரிய பெஞ்சுகளில் ஈக்கள் மொய்த்தன. மேசைமேல் யாரோ குடித்துவைத்துவிட்டுப் போன கிளாஸ் ஒன்றில் ஈ ஒன்று விழுந்து இறந்து போயிருந்த து. கடைப்பையன் வந்துகிளாசுகளைப் பொறுக்கிக் கொண்டுபோய் அழுக்கடைந்து வெள்ளையாய் தெரிந்த நீரில் அப்படியே போட்டுக் கழுவிக்கொண்டிருந்தான். வெற்றுடம்பில் வியர்வை வழிய புழுக்கமும் கசகசப்பும் நிறைந்த இத்தில் நின்று மாஸ்டர் டீ போட்டுக்கொண்டிருந்தான். »

 

எளிய மக்களின் வெள்ளந்தியான உரையாடல்களும், மல்லிகா, பாஸ்கரன் என்ற மனித உயிர்களுக்கிடையேயான பாலின ஈர்ப்பு பரிபாஷைகளும் ஆசிரியர் குரலாக ஆங்காங்கே ஒலிக்கிற வரிகளும் முக்கியமானவை :

 

« … மனுஷன வாழ வக்யறதே இந்தக் கவலைதான்… அதுதான் மனுஷன் வாழறதுக்கேத் தூண்டுது.  என்னா. யாரபத்தியும் எதப்பத்தியும் கவலைப்படாதவன் எதுக்குப் பயப்படுவான் சொல்லு… ஒண்ணுத்துக்கும் உதவமாட்டான்… அதனால்தான் சொல்றது ஒவ்வொரு மனுஷனுக்கும் ஏதாவது ஒரு கவல அவசியம் இருக்கணம்… என்னா… »

 

« இந்த சிஸ்ட்டத்துல வாழர ஒவ்வொரு மனுஷனும் …உழைப்பை மட்டுமா விக்றான்  கருத்தை விக்றான்… மனசாட்சிய விக்றான்… தன்மானத்த விக்கிறான்… தன்னையே விக்றான். எல்லாரும் விரும்பியா விக்றான்… அவனவனும் தன் தேவையை முன்னிட்டுதான் விக்கிறான் … இப்படி நாட்டுல எத்தனை விபச்சாரங்கள் »

 

கதை மக்களுக்காக :

 

படைப்பாளியின் குடும்பம் மற்றும் சமூகச் சூழல், கல்வி, அக்கல்வியைக்கொண்டு அவர் வளர்த்துக்கொண்ட சிந்தனை, அலுவலகம், அவர் தெரிவு செய்த  நண்பர்கள், வாசித்த நூல்கள் அனைத்திற்கும் படைப்பை உருவாக்கியதில் பங்கிருக்கின்றன. ஒரு பக்கம் அதிகாரம் அ நீதி, அறசீற்றம் என வெகுண்டெழும் எழுத்தாளர்கள் தங்கள் வாழ்க்கை என்ற ‘ யாக அவிற்பாகத்திற்கு’  வரிசையில்  நிற்பதை காண்கிறோம். இராசேந்திர சோழனின் சிறுகதைகள் ஆகட்டும், நெடுங்கதைகள் ஆகட்டும் இரண்டுமே அவரை சமூக உணர்வுள்ள மனிதராக, சகமனிதன் கரையேற கைகொடுக்கும் மனிதராகச் அடையாளப்படுத்துகின்றன.  இவர் படைப்புகள் கலைக்கானவை என்பதோடு மக்களுக்காகவும் என்ற என்ண்ணத்துடன் படைக்கபட்டுள்ளன.

அண்மையில் (2018 பிப்ரவரி மாதத்தில்) மூன்றாவது முறையாக அவரைச் சந்திக்க நேர்ந்தது, பேராசிரியர் க. பாஞ்சாங்கம், தமிழ்மணி, நாயகர், செல்வபெருமாள் என நாங்கள்  ஐந்துபேரும் ஒரு பிற்பகல் வேளை அலுப்புடன் சாய்ந்திருந்த நேரத்தில் மயிலத்திற்குச் சென்றிருந்தோம். குறுகலான தெரு ; உழைப்பு, வியர்வை, சினிமா, அரசியல் சங்கேதச் சொற்களில் பல்லாங்குழி ஆடும் மக்கள். எங்களை எதிர்பார்த்ததுபோல எழுந்துவந்தார். ஆசனங்களைச் சுட்டிக்காட்டிவிட்டு, அவரும் எங்களுடன் அமர்ந்தார். எழுத்தாளன் தனிமை என்பது : எடைகற்களைத் தொலைத்த தராசு. ஒளியைத் துறந்த தீபம், புரை குத்தியும் உரையாதபால்.

அறிமுகம் சுருக்கமாக முடிந்தது. இலைமறைகாயாக முகத்தில் கண்சிமிட்டும் சந்தோஷம். மீசையில் விரைப்பு இல்லை. திறந்த விழிகளுக்குள் விலைமதிக்கமுடியாதக் கோமேதக் கற்கள். தனிமைக்குள் அடைபட்டுக்கிடந்த அறிவும் மொழியும் எங்கள் சந்திப்புக்காக காத்திருந்தனபோலும். நண்பர் சீனு தமிழ்மணி எழுத்தாளர் பற்றிய தொகுப்பினைப்பற்றிய விவரங்களைப் பகிர்ந்துகொள்ள, இன்றைய தலைமுறைக்கு நேற்றைய தமிழ் எழுத்தினால் என்ன சொல்லமுடியும் என்பதைத் தெரிவிக்கும் வகையில் தொகுப்பு இருக்கவேண்டும் என்ற யோசனையைத் தெரிவித்த்தார். மயிலம், இளமைக்காலம், ஆசிரியப்பணி, மார்க்சிய அபிமானம் ஆகியவற்றைக் குறித்த நண்பர்கள் பஞ்சு, சீனு தமிழ்மணி ஆகியோரின் வினாக்களுக்கு ஒரு குழந்தையின் ஆர்வத்துடன தமது கடந்தகாலத்தைப் பகிர்ந்து கொண்டார். அதை விவரிக்கிறபோது உதட்டசைவிற்க்கு ஏற்ப கட்டைவிரலுடன் கருத்துமோதலில் குதித்ததுபோல ஆள்காட்டிவிரல் அசைகிறது. கடந்தகாலத்தில் பயணிக்கிறபோது சந்தோஷ குளத்தில் முங்கிக் குளிப்பதை பரவசம் சொட்டும் விழிகளில் கண்டோம். பஞ்சுவும், தமிழ்மணியும் அளவளாவ அரைக்கண்மூடி தியானிப்பதுபோல நானும், நாயகரும் செல்வபெருமாளும் கேட்டு மகிழ்ந்தோம். இக்கட்டுரைரயை எழுதிக்கொண்டிருக்கிறபோதும், அக்காட்சி நெஞ்சத்திரையில் நிழலாடுகிறது.

 

————————————————————————

 

உதவியவை :

  1. http://www.sirukathaigal.com
  2. இராசேந்திர சோழன் குறு நாவல்கள், தமிழினி , சென்னை 14

—————————————————

 

படித்ததும் சுவைத்ததும் -9: கோபல்ல கிராமம் -கி.ராஜநாராயணன்: புலம் பெயர்தலின் வலியும் வாழ்வும்

கோபல்ல கிராமம்– கி.ராஜநாராயணன்: புலம் பெயர்தலின் வலியும் வாழ்வும்

அண்மைக்காலங்களில் குறிப்பாக அகதிகளுக்கான ஐக்கிய நாட்டு ஆணையம் ஏற்பட்ட பிறகு புலம் பெயர்தல் என்ற சொல் முக்கியத்துவம் பெற்றுவருகிறது. பன்னாட்டு அரசியலில், பொருளியல் நோக்கில், உள்ளூர் அரசியலில், ஊடகங்களில் புலம் பெயருதல் இன்று விவாதத்திற்குரிய பொருள். சென்னை புழல் சிறையைக் காட்டிலும் , பெங்களூரு பரப்பன அக்ரஹாரம் தரும் புலம் பெயர் வலி கொடியது. இன்றைக்கல்ல, என்றைக்கு விலங்கினங்களும், மனிதரினமும் தோன்றியதோ அன்றையிலிருந்து வெகு ஜோராக புலம்பெயர்தல் நடந்துகொண்டிருக்கிறது. கால்கள் இருக்கிறபோது நடந்துதானே ஆக வேண்டும், ஓரிடத்தில் மரம்போல வேருன்றி நீரையும், உயிர்ச்சத்தையும் பெற முடியாதபோது இடம்பெயரத்தானே வேண்டும். ஆக இயல்பிலேயே மனிதன் புலம் பெயரும் உயிரினம். குகையில் – வெட்டவெளியைக் காட்டிலும் குகை பாதுகாப்பானது – உயிர்வாழ்க்கையைத் தொடங்கிய மனிதன் இடம் பெயராதிருந்தால் இன்றைக்குக் “கோபல்ல கிராமங்கள்” ஏது, நகரங்கள் ஏது. உலகமெங்கும் விவாதிக்கப்படுகிற பன்முக கலாச்சாரம்தான் ஏது.

 

நடந்துதான் போகவேண்டும் என்றிருந்த காலங்களில் கால்களும் மனங்களும் அனுமதித்த தூரத்தை, இன்றைய தினம் புலம்பெயரும் மனிதர்களின் பொருளாதாரமும், பயண ஊர்திகளும் தீர்மானிக்கின்றன. புலப்பெயர்வின் துணைக் கூறுகள் இவை.. கற்கால மனிதன் உயிர்வாழ்க்கையின் ‘அடிப்படைத் தேவை’க்குப் புலம் பெயர்ந்தான். நிகழ்கால மனிதர்களுக்கு அடிப்படைதேவையைக் காட்டிலும் ‘பாதுகாப்பான வாழ்க்கை’ முக்கியம். பருவம் பொய்த்து, பஞ்சம் பிழைக்க ஊரைவிட்டு ஊர்போதல் வெகு காலம்தொட்டு நடைமுறையில் உள்ளது. கிராமங்களில் விவசாயக்கூலிகளாக, அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடியது போதும், “பட்டணம் போகலாம், பணம் காசு சேர்க்கலாம்” எனப் பட்டணம் சென்று, கொத்தவால் சாவடியில் மூட்டைத்தூக்கி பொங்கலுக்கு கிராமத்திற்குத் திரும்பி, கிராமத்தில் கம்பத்தம் எனக்கொண்டாடப்படுக்கிற பெருந்தனக்காரர்களுக்கு புரோ நோட்டின்பேரில் கடன் கொடுக்கிற மனிதர்களைப் பார்த்திருக்கிறேன். அதுபோலவே படிப்பதற்கும், படித்தபின் உரிய வேலைதேடி நகரங்களுக்கும் மனிதர்கள் பயணிப்பதை இன்றும் காண்கிறோம். இந்தியாவிலிருந்து வளைகுடா நாடுகளுக்குப் போகிறவர்கள், மேற்குலகில் குடியேறுகிறவர்கள் பிறநாடுகளுக்குப் புலபெயர்கிறவர்களில் அநேகர் ‘பணம் காசு சேர்க்கலாம்’ எனப் புலம் பெயரும் இனம். பணத்தோடுகூடிய பாதுகாப்பான வாழ்க்கையைத் தேடிப் போகிறவர்கள். இது தேவை தரும் நெருக்கடியால் ஏற்படும் புலப்பெயர்வு. இப்புலப்பெயர்வு போகும் தூரத்தையும், சேரும் இடத்தையும் தீர்மானிக்க கால அவகாசத்தை இவர்களுக்குத் தருகிறது.

 

கோபல்ல கிராம மாந்தர்களின் நெருக்கடி :

 

நவீன யுகத்தில் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக இடம்பெயர்வதற்கு, பிறந்த மண்ணிலிருந்து வேருடன் பிடுங்கப்படுவதற்கு வேறு மாதிரியான நெருக்கடிகள், நிர்ப்பந்தங்கள் இருக்கின்றன. இதுதான் நாம் பிறந்த மண், இப்படித்தான் என் வாழ்க்கை, இங்குதான் என் கட்டை வேக வேண்டும் எனத் தீர்மான மாக ஓரிடத்தில் வாழ்க்கையை நடத்துகிற ஒரு சிலரின் வாழ்க்கையில் காட்டாறுபோல சம்பவங்கள் திடீர்ப்பெருக்கெடுத்து இவர்கள் திசையில் பாய தட்டுமுட்டு சாமான்களுடனும், குஞ்சு குளுவான்களுடனும் தம்மையும் பெண்டு பிள்ளைகளையும் காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு, விதியை நொந்து, திக்கு திசையின்றி, மயக்கமானதொரு வெளியை நோக்கி ஒரு நாள் ஒரு கணம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வரும் மரணத்தைப் போல புலம்பெயரும் மனிதனின் பயணம் தொடங்குகிறது. இடையில் எதுவும் நிகழலாம், எங்கேயும் நிகழலாம் என்ற கையறு நிலையில் வேதனை, விரக்தி, சோர்வு, கொசுறாக சிறிது நம்பிக்கை என்ற பிரித்துணர முடியாத சகதியில் காலூன்றி, வாழ்க்கை முழுவதும் தவிக்கச் சபிக்கபட்ட மக்கள். இந்த இரண்டாம் வகைப் புலம்பெயர்தலும் அதற்கான நிர்ப்பந்தமும் ‘கொடிது கொடிது’ வகையறா.

 

வடக்கே தெலுங்கு தேசத்தில் அமைதியாகவும் செல்வாக்குடனும் வாழ்க்கையை நடத்திய மக்களின் வாழ்வில் சூராவளிபோல வீசிய நெருக்கடி, கள்ளம் கபடமற்ற ” கம்மவர், ரெட்டியார் , கம்பளத்தார், செட்டியார், பிராமணர் , செட்டியார், பிராமணர், பொற்கொல்லர், சக்கிலியர்….இப்படி எத்தனையோ மக்களை ” (பக்கம் 36, கோபல்ல கிராமம்) வேருடன் பெயர்த்து தெற்கே வீசிவிடுகிறது. « இவர்கள் இங்கு புறப்பட்டு வந்ததற்கும் காரணங்கள் எத்தனையோ. தெலுங்கு அரசர்கள் இங்கே ஆட்சி செலுத்தியதையொட்டி வந்தவர்கள். முஸ்லீம் ரஜாக்களுக்கு பயந்துகொண்டு வந்தவர்கள் »  என கோபல்ல கிராமத்திற்கு ஆசிரியர் கோடிட்டுக்காட்டுவது இரண்டாவது காரணம்.

« கும்பினியான் எந்த இடத்திலும் நம்முடையப் பெண்டுகளைத் தூக்கிக்கொண்டு போனதாகவோ , பிடித்து பலாத்காரமாகக் கற்பழித்ததாகவோ அவர்களுக்குச் செய்திகள் இல்லை. இந்த ஒரு காரனத்துக்காகவே அவர்களுக்குக் கும்பினியான் உயர்ந்து தோன்றினான் ! » (பக்கம் 135, கோபல்ல கிராமம்) என்கிற ஒப்பீடு புலப்பெயர்ந்த மக்களின் ஆறாமனப் புண்ணிற்குப்  பூசும் களிம்பு.

 

கோபல்ல கிராமம் பிறந்த காரணத்தை சென்னாதேவி என்ற பெயரும் பெயருக்குடையவளும் தருகிறார்கள். நாம் பார்த்திராத அந்த புவியுலக அப்ஸ்ரஸை கி.ரா எனும் விஸ்வ கர்மா வார்த்தைகளால் பிசைந்து கண்முன்னே நிறுத்துகிறார் :

« சென்னா தேவி இருக்குமிடத்தில் அவளுக்கு அருகே அவளைச் சுற்றி ஒரு பிரகாசம் குடிகொண்டிருக்கும், அவள் நிறை பௌர்ணமி அன்று பிறந்த தினாலோ என்னமோ அப்படியொரு சோபை அவளுடைய முகத்தில் »

«  அவளுடைய குரல்தான் என்ன இனிமை என்கிறாய் ! அவள் பாட ஆரம்பித்தால் இந்தப் பிரபஞ்சமே ஒலியடங்கி மௌனமாகிவிடும். காற்று அசைவதை நிறுத்திவிடும். கொடிகள் ஆடாமல் நிற்கும். பூமியில் நம்முடைய பாரம் லேசாகி அப்படியே கொஞ்சமாக மேலே கிளம்பி காற்றில் மிதப்பது போல் ஆகிவிடும். பெருங்குளத்தின் நிறை தண்ணீரைப்போல ஆனந்தம் தாங்காமல் தத்தளிக்கும் நம்மனசு »

«அவள் அபூர்வமாகத்தான் வாய்விட்டுச் சிரிப்பாள். இன்னொருதரம் அப்படி சிரிக்கமாட்டாளா என்று இருக்கும். அவளுடைய சிரிப்பில்தான் எத்தனைவிதம் !

கண்களால் மட்டும் சிரித்துக் காட்டுவது. கண்கள் சிரிப்பதற்கு புருவங்கள் அப்படி ஒத்துழைக்கும் !

கடைகண்ணால் சிரிப்பது. முகத்தில் எந்தவித சலனமும் இல்லாமல் நேர்பார்வையில் சிரிப்பது. தரையைப் பார்த்து சிரிப்பது. (அவளுடைய சிரிப்பிலேயே இதுதான் அழகு) கண்களைச் சுழற்றி – பறவையாடவிட்டு- ஒரு சிரிப்புக் காட்டுவாள் ( அப்போது கண்கள் ஜொலிக்கும்) சிலசமயம் சற்றே மூக்கைமட்டும் விரித்து மூக்கிலும் சிரிப்பை வரவழைப்பாள் !

உதடுகள் புன்னகைக்கும்போது வாயின் அழகு பல மடங்கு அதிகமாகிவிடும்  சிரிப்பை அடக்க உதடுகளை நமட்டும்போதுஅவைகள் இளஞ்சிவப்பின் எல்லையைத்தாண்டி குருவி இரத்தம் போல செஞ்சிவப்பாகிவிடும்.

அவளுடைய மூக்கில் தொங்கும் புல்லாக்கின் கீழ் ஒரு முத்து தொங்கும். பற்கள் மின்ன அவள் சிரிக்கும் போதெல்லாம் அந்த முத்துக்கும் பற்களுக்கும் போட்டிதான் ! புல்லாக்கில் அப்படியொரு முத்தைக் கோத்து, பற்களுக்கு நேராய் தொங்கவிடணும் என்று ஓர் ஆசாரிக்குத் தோணியிருக்கே. அது எப்பேர்பட்ட ரசனை !! (பக்கம் 31,32 கோபல்ல கிராமம்) »

ஆசாரியின் ரசனையைபற்றி கி.ரா சிலாகிப்பதிருக்கட்டும், நமக்கு கிரா.வின் ரசனைதான் இங்கு முக்கியம். இப்பகுதியை வாசித்தபின் நமக்கே சென்னாதேவி மேல் ஓர் ‘இது’ வந்துவிடுகிற நிலையில் துலுக்க ராஜாவைக்குற்றம் சொல்ல ஒன்றுமில்லை. கேள்வி ஞானத்தினாலேயே பெண்ணை அடைய நினைக்கிறான். துலுக்க ராஜாவின் ஆட்களில் ஒருவன் பெண்ணை உள்ளது உள்ளபடியே வர்ணிக்கப்போதுமான சொல்ல்லாற்றலைப் பெற்றிருக்கவேண்டும் அல்லது ‘ கோபல்ல கிரமத்தின்’ பிரதியில் ஒன்றை கொண்டுபோய் கொடுத்திருக்கவேண்டும். (பெண்களை வர்ணிக்கவே அவரிடம் பாடம் எடுத்துக்கொள்ள ஆசை, கதை எழுதத்தான் நண்பர்கள் தப்பாக எடுத்துக்கொள்ள கூடாது)

சென்னாதேவியின் முடிவு மட்டுமல்ல அவளைச் சேர்ந்தவர்களின் முடிவுங்கூட மாணிக்கமாலை வடிவத்தில் வந்தது. பெண்ணுக்கு மாணிக்க மாலை செய்து போட்டுப்பார்க்க நினைத்த பெற்றோர்கள் வீட்டிலுள்ள கெம்புக் கற்களை விலைபேச ரத்தின வியாபாரிகளை அழைக்கிறார்கள். வந்தவர்கள் ரத்தினவியாபாரிகள் அல்ல துலுக்க ராஜாவின் ஆட்கள். பெண்ணின் அழகைத் தங்கள் ஆட்கள் மூலமாக அறிந்த ராஜா அவளை அடைய முயன்றதில் ஆச்சரியமில்லை. அவனிடமிருந்து தப்பிக்க அதிலும் வெட்டிய பசுமாட்டின் தலை சமையலுக்கென காத்திருக்க, அலறி அடித்துக்கொண்டு சொந்த மண்ணிலிருந்து புறப்படவேண்டியிருக்கிறது. பயணம் அவ்வளவு எளிதானதல்ல. ஈழத்தமிழர்களின் புலம்பெயர்வு அனுபவத்தை, நல்லதங்காள் கதையைப் போல நச்சென்று சுருக்கி கிரா  :

«  நடந்து நடந்து கால்கள் வீங்கி பொத்து வெடித்து வடிந்து புண்களால் அவதிப்பட்டோம். எங்களோடு வந்த இரண்டு குழந்தைகளும் மூணு வயசாளிகளும் நோய்ப்பட்டு தவறிப்போய்விட்டார்கள். அவர்கள் இறந்துபோன துக்கம், மேலும் பலர் நோய் அடைந்த கஷ்டம்….

அனுபவித்திராதப் பட்டினி, காலம் தாழ்ந்து கிடைக்கும் அன்னம், உடம்பு அசதி, மனத்தின் சோர்வு , கூட வருவோரிடம் காரணமற்ற மனக்கசப்பு, மௌனம், குறைகூறல் இப்படியெல்லாம் துன்பப்பட்டோம் . » (பக்கம் 59, கோபல்ல கிராமம்), என்கிறார்.

கல்விக்காகவும், பொருளுக்காகவும், ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு, மற்றொரு மாநிலத்திற்கு, மற்றொரு நாட்டிற்கு, மற்றொரு கண்டத்திற்கு விரும்பியே அதாவது போகின்ற இடம் எதுவென்று அறிந்தே புலம்பெயர்கிறவர்கள் ஒருவகை. மொழி, இனம், மதத்தின் அடிப்படையில்; சொந்த மண்ணில் உரிமைகள் மறுக்கப்பட; இன்னதிசை, இன்ன நாடு, இன்னகண்டம் என்று அறியாமல் புலம்பெயர்கிறவர்கள் , இரண்டாவது வகை. கோபல்ல கிராமத்தின் பூர்வீக க் குடியினர் இரண்டாவது வகையினர். எந்த சென்னாதேவிக்காக புலம்பெயர்ந்தார்களோ, அந்தச் சென்னாதேவியை வழியிலேயே இழக்கிறார்கள். புலம் பெயர்தல் இழப்புகளின் கோர்ப்பு

 

புலம்பெயர்தலின் வலியும் வாழ்வும் :

இக்கட்டுரையின் முற்பகுதியில் இருவகை புலப்பெயர்வைக் குறிப்பிட்டிருந்தேன். பழமரத்தைத் தேடும் பட்சிகளுக்கு பிரச்சினையில்லை, குறிக்கோளில் தெளிவிருப்பதால் அதற்குரிய மரங்களை அடைவதில் அலைச்சல் சில வேளைகளில் கூடுதலாக இருப்பினும், பயனடைவது உறுதி. இளைப்பார மரம் கிடைத்தால்போதும், பசியாற கனிகள் வேண்டுமென்பது அடுத்தக்கட்டம் என பறந்தலையும் பட்சிகளின் அனுபவம் சிக்கல்கள் நிறைந்தவை.

« நாங்கள் இதுவரை பார்த்திராத மரங்கள், செடிகொடிகளையெல்லாம் பார்த்தோம். எத்தனை மாதிரியான அதிசயப்பூக்கள், வாசனைகள் ! மனிதர்களின் ஜாடைகூட மண்ணுக்கு மண் வித்தியாசப்படும் போலிருக்கிறது. » ( பக்கம் 59 கோபல்ல கிராமம் )

புதிய பூமி, புதிய மனிதர்கள், புதிய இயற்கை என அதிசயித்த மறுகணம் புதியச் சூழலோடு தம்மைப் பொருத்திக்கொள்ள ஆவன செய்யவேண்டும். மலேசியநாட்டிற்குச் சென்ற தமிழர்கள், மொரீஷியஸ் தீவுக்குச் சென்ற தமிழர்கள் என்ன செய்தார்களோ அதைப்போலவே சென்ற இடங்களில் தங்கள் கடந்த கால வாழ்வை எண்ணி கலங்கிடாமல், அரவணைத்த  பூமியைத் திருத்துகிறார்கள், உழுகிறார்கள், கிணறுவெட்டுகிறார்கள், வெள்ளாமை செய்து ஓய்ந்த நேரங்களில் பிறந்த மண்ணை நினைத்து அழவும் செய்கிறார்கள்.

« மழைக்காலங்களில் கொஞ்சம் நிலங்க்களை ஆக்கித் திருத்தலாம் என்றால் அது அவ்வளவு லேசில் முடியாது போலிருந்த து. அவர்கள் சோர்ந்துபோனார்கள் . கள்ளிச்செடிகளை தரையோடு தோண்டி வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்தெரிய வேண்டியிருந்தது. தோண்டும்போது பெயறும் பாறைக்கற்களை அப்புறப்படுத்த வேண்டியிருந்தது . பெரிய்ய கற்கள் பெயர்ந்த இடங்களில் ஏற்பட்ட பள்ளங்களை சமப்படுத்த வேண்டும்.  »(பக்கம் 78 கோபல்ல கிராமம்)

« சிற்றெறும்புகளைப் போல் சுறுசுறுப்பாக வேலையில் இறங்கினார்கள்….அவர்கள் முதலில் நினைத்ததுபோல் அவ்வளவு சுலபமாகவும், அவ்வளவு சீக்கிரமாகவும் அந்தப்பரப்பு பூராவையும் நிலமாக்கிட முடியவில்லை. பூமியிலுள்ள கற்பாறைகள் இவைதவிர மண்ணுக்குக் கீழே எரியமுடியாமக்ல் நின்றுபோன மரங்களின் கனமான வேர்கள் இவைகளெல்லாம் அவர்களுடைய வேலைகளுக்குத் தடங்கலாக இருந்தது. பரப்பு அவ்வளவு நல்ல நிலங்களாய் ஆகப் பல வருடங்கள் பிடித்தன. » (பக்கம் 88 கோபல்ல கிராமம்)

புலம் பெயருதல் என்பது புதிய பூமிக்கு வாழ்க்கைப்படல். பெண்ணாய் பிறந்தவளுக்குப் பிறந்தவீடு முக்கியமல்ல புகுந்தவீடுதான் முக்கியம் என்பார்கள். புலம்பெயர்ந்தவர்களுக்கும் சொல்லப் படுவது அதுதான். நாள்முழுக்க புகுந்த வீட்டிற்கு உழைத்து அந்தி சாய்ந்ததும் பிறந்த வீட்டின் நினைப்பில் வாடுகிற பெண்ணின் கதைதான் புலம்பெயர்ந்தவர் வாழ்வு. பெற்றோரைப் பிரிவது, நண்பர்களைப் பிரிவது காதலன் அல்லது காதலியைப் பிரிவது, அனைத்துமே வலிகளை விதைக்கக்கூடியவைதான். தவிர இப்பிரிவுகளிகளில், சம்பந்தப்பட்ட இருதரப்பினருமே கர்த்தாக்களாகவும் கருவிகளாகவும் இருக்கமுடியும். காலம் கனிந்தால், இருதரப்பினரில் ஒருவர் எதிர்திசைநோக்கி இயங்கவும், பின்னர் இணையவும் சாத்தியத்தினை அளிக்கவல்ல, மனித உயிர்களுக்கு இடையேயான பிரிவுகள் அவை. ஆட்டை வளர்த்தேன், கோழியை வளர்த்தேன், என ஐந்தறிவு விலங்கிடம் செலுத்தும் அன்பிற்கு நேரும் இழப்பினைக்கூட காலம் நேர்செய்துவிடும். ஆனால் மண்ணைப் பிரிவதென்பது, உயிர் மெய்யைப் பிரிவதற்கு சமம். மெய்யைத் திரும்பவும் பெறுவதற்கான முயற்சியில் உயிர்தான் இறங்கவேண்டும்.

கறந்த பால் முலைக்குத் திரும்புமா? திரும்பவேண்டுமே என்பதுதான் நமது கனவு. பொழுதுசாய்ந்தால், சொந்தகூட்டுக்குத் திரும்பலாமென்கிற உடனடி நம்பிக்கைக்கானது அல்ல புலம் பெயர்தல், என்றேனும் ஒரு நாள் திரும்பலாமென்கிற தொலைதூர நம்பிக்கைக்கானது. பூமி உருண்டை என்பது உண்மையென்றால் புறப்பட்ட இடத்திற்குப் போய்த்தானே சேரவேண்டும். அந்த நம்பிக்கையில் பூத்த கனவினை நுகர்ந்தவாறே, புலம்பெயர்ந்தவன், நினைவுப்பொதிகளை சுமந்தபடி தனக்கென விதிக்கப்பட்ட வாழ்க்கைத் தடத்தில் நடக்கவேண்டியிருக்கிறது., வேதனைகளும் வலிகளும் அதிகம், இறக்கிவைக்க  சுமைதாங்கிகளுக்குத்தான் பஞ்சம். எந்த மண்ணில் வாழ்ந்தாலும் சொந்த மண்ணே புலம் பெயர்ந்தவனின் முதல்வீடு-தாய்வீடு: கண் திறந்தபோது காத்திருந்த வீடு. தாலாட்டு கேட்டு உறங்கிய வீடு. உதிர உறவுகள் உலவிய வீடு. வளையும் மெட்டியும் வாய்திறந்து பேசிய வீடு. காதல் மனையாள் நாவின் துணையின்றி பார்வையும் பாங்குமாய் குசலம் விசாரித்த வீடு, வெட்கச் செம்மையும், சிறுபதட்டமும் கொண்டு அவள் சிணுங்கிய வீடு, தம்மக்கள் சிறுகை அளாவிய கூழ்கண்ட வீடு. தன் ஆயுளில் குறைந்தது, கால்நூற்றாண்டை கண்ட ஆரம்பகால வீட்டை மறக்க அவனென்ன உணர்வற்ற உயிரா ?

« இந்த நீண்ட வேடுவ வாழ்க்கையில் அனைவருமே சந்தோஷம்கொண்டு திருப்தி அடைந்தார்கள் என்று சொல்ல முடியாது ஒரு சிலர் தங்கள் பிறந்த மண்ணை நினைத்து நினைத்து ஏங்க ஆரம்பித்தார்கள். அப்படி ஏக்கம் கொண்டு வாடியவர்களில் முக்கியமாகப் போத்தணாவைசொல்லலாம். திடீரென்று குழந்தைபோல அழுவார். »( பக்கம் 83 கோ.கி) எனப் புலம்பெயர்ந்தவனின் துயர வாழ்க்கையை உரைக்கப் போத்தண்ணாவை முன் நிறுத்துகிறார் கிரா. எனினும் அவரே பின்னர், «எங்கேயோ ஒரு தேசத்தில் பிறந்து ஒரு தேசத்தில் வந்து வாழவேண்டியிருக்கிறதே என்று நீங்க நினைச்சி மனம் கலங்கவேண்டாம் எல்லாம் பூமித்தாயினுடைய ஒரே இடம்தான் »(பக்கம் 75 கோ.கி) . எனக்கூறி சமாதானப்படுத்துகிறார். என்ன செய்வது வாழ்க்கைப் பிணிகளுக்குப் பலநேரங்களில் அருமருந்தாக இருப்பது  இந்தச் சமாதனம் தான்.

புலம்பெயர்வதற்குரியக் காரணம் எதுவாக இருப்பினும், புலம் பெயர் மக்கள் நன்றிக் கடனாக, பெறும் வாழ்க்கைக்கு நன்றிக்கடனாக பிறந்த மண்ணின் கலையையும் பண்பாட்டையும் புதியபூமியில் விதைக்கிறார்கள்;  உழைப்பையும், ஞானத்தையும் பகிர்ந்துகொள்கிறார்கள். இவர்களால் அடைக்கலம் தரும் நாடுகள் அடையும் பலன்களும் கொஞ்ச நஞ்சமல்ல. உதாரணத்திற்குப் பிரான்சு நாட்டிற்கு, பிரெஞ்சு மொழிக்குப் பெருமைசேர்த்த அந்நியர்கள் அனேகர். அந்த வரிசையில் தமிழ்நாடும் தமிழ்மொழியும் இந்தக் கரிசல்காட்டுக் கதைசொல்லிக்கு ஏராளமாகக் கடன்பட்டிருக்கிறது. புலம் பெயர்ந்தவர் வாழ்க்கையை வேடுவ வாழ்க்கையெனச் சொல்லக்கூடிய ஞானம் வேறு எவருக்கு உண்டு.