அ. மேற்குலக சினிமா : ‘Still Alice’
திரைப்படங்கள், குறும்படங்கள் தொடர்கள் முதலானவற்றிர்க்குத் தொலைகாட்சி உரிமம் பெற்று வினியோகிக்கும் Nerflix தயவினால் இரண்டு நாட்களுக்கு முன்பு பார்த்த திரைப்படம் ‘Still Alice’. படத்தின் பெயரை பிரெஞ்சிலும் Still Alice என்றே வைத்திருக்கிறார்கள். பிரெஞ்சுத் திரைப்பட ரசிகர்கள் ‘Still’ என்ற சொல் உணர்த்தும் பொருளை புரிந்துகொள்வார்கள் என்பதைக் காட்டிலும் உணர்ந்துகொள்வார்கள் என்று நினைத்திருக்கலாம். இந்த still ஐ ‘உறைந்து போன’அலிஸ் அல்லது ‘என்றைக்கும் எங்களுக்கு நீ அலிஸ்’ அல்லது 4நீ எப்படி இருந்தாலும் எங்களுக்கு அலிஸ்4 என உங்கள் விருப்பப்படி வைத்துக்கொள்ளுங்கள். இராவணன் சிறை எடுத்ததாகக் கூட இருக்கட்டுமே அவள் எப்பவும் எனக்கு சீதைதான், எனக்கூறி இராமன் சீதையைத் தீக்குண்டத்தில் இறங்க அனுமதிக்கமாமல் இருந்திருந்தால் அவன் சீதாராமன். ஆனால் அலிஸ் படத்தில் வரும் கதைநாயகியின் கணவனும், பிள்ளைகளும் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டப் பெண்மணியிடம் உனக்கு எதுவேண்டுமானாலும் இருக்கட்டும் எங்களுக்கு என்றும் நீ அலிஸ்தான் ‘Alice Howland’ தான் என்று அரவணைத்து பிரச்சினைகளை எதிர்கொள்ளும் திரைப்படம் : ‘Still Alice’. படத்தின் நாயகி ஜூலியன் மூர் நடிப்பைப் பார்த்து மனம் உருகி நமக்கும் ‘Still நீ எங்களுக்கு அலிஸ் !’ என்றே சொல்லத் தோன்றும். ஜூலியன் மூர் இப்படத்திற்கு சிறந்த நடிகைக்குரிய ஆஸ்கார் விருதைப் பெற்றிருக்கிறார்.
அல்சைமர் நோய் குறித்து அவ்வப்போது பத்திரிகைகள், தொலைகாட்சிகள் தரும் செய்திகளால் அறிவதுண்டு. அதன் பயங்கரத்தை, அந்நோய் மனிதருக்கு எற்படுத்தும் விபரீதத்தை ஒரு முழு நேரத் திரைபடமாக பார்த்த அதிர்ச்சியிலிருந்து இன்னமும் மீளவில்லை. அறுபதைக் கடந்த எவருக்கும் அதொரு அதிர்ச்சிதரும் அனுபவம்.
அலிஸ் ஹவ்லேண்ட் 50 வயது பெண்மணி. அமெரிக்க பல்கலைகழகமொன்றில் மொழியியல் பேராசிரியை. வழக்கம்போல ஒருநாள் பாடம் நடத்துகிறபோது, சில சொற்களை நினைவுகூற முடியாமல் தவிக்கிறார் என்பதில் ஆரம்பிக்கிறது பிரச்சினை. பிறப்பிலேயே அவர் அல்சைமர் நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதும், குணப்படுத்த முடியாத நிலைக்கு அந்நோய் வளர்ந்திருப்பதும் மூளை, நரம்பியல் மருத்துவரால் தெரியவருகிறது. இந்த உண்மை குடும்பம் : பாதிக்கப்பட்ட நோயாளி, அன்பான கணவன், வளர்ந்த பிள்ளைகள் ; அவள் பணி சர்ந்த வெளி :மொழியியல்துறை, மாணவர்கள் இங்கே என்னதாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதுதான் கதை அல்லது திரைக்கதை.
இத்திரைப்படத்தின் சில சிறப்பான காட்சிகளைச் சுட்டிக்காடுவதற்கு முன்பாக, படத்தின் வெற்றிக்கு காரணமான மூவர்அணி பற்றிச் சொல்லவேண்டும்.
- லிசா ஜெனோவா (Lisa Genova). இவர்தான் படக் கதைக்குச் சொந்தக்காரர். அமெரிக்க பல்கலைகழகமொன்றில்நரம்பியல் துறை பேராசிரியராக பணிபுரியும் பெண்மணி. இவருடைய பேராசிரிய நண்பர் ஒருவர் திடீரென்று சுகவீனப்பட்டு அல்சைமர் நோயில் அவதிப்படும் கொடுமையை நேரிலுற்ற அனுபவத்தை, வேதனையைப் பிறரிடம் பகிர்ந்து கொள்ள நினைத்து எழுத்தாளராக மாறியவர். ‘Still Alice’ முதல் நாவல். வேறு நாவல்களை அவர் எழுதியிருக்கிறாரா என்று தெரியவில்லை. வெளியிட பதிப்பாளர்களைத் தொடர்பு கொண்டிருக்கிறார். எவரும் முன்வராததால் சொந்த முதலீட்டில் வெளியிட்டிருக்கிறார். திடீரென்று கவனம் பெற்றிருக்கிறது. தற்போது மூன்று மில்லியன் பிரதிகளுக்குமேல் விற்று தீர்ந்துள்ளதாம். தொடர்ந்து ஹாலிவுட் இயக்குனர்கள் இவரைத் தொடர்புகொண்டு தங்கள் திரைப்பட ஆசையைத் தெரிவிக்க கதை திரைக்கதையானது, திரைப்படமானது, ஆஸ்கார் விருதையும் பெற்றுதந்துள்ளது.
- வாஷ் வெஸ்ட்மோர்லண்ட்(Was Westmoreland), ரிச்சர்ட் கிளட்ஸர்(Richard Glatzer)
திரைக்தை, வசனம், இயக்கமென படத்தில் மூன்றிலும் இணைந்து பணியாற்றியவர்கள். இருவருமே ஒருபாலின விரும்பிகள், சேர்ந்து வாழ்ந்து, 2013ல் மணமும் செய்துகொண்டதாகச் சொல்லப்படுகிறது. இருவரும் சேர்ந்து இயக்கிய கடைசிப்படம். ரிச்சர்ட் கிளட்ஸர் அண்மையில் Still Alice படத்தின் நாயகிக்கு ஆஸ்கார் விருதுவாங்கிக் கொடுத்த மகிழ்ச்சி வற்றுவதற்கு முன்பாக அண்மையில் இறந்துவிட்டார்.
- ஜூலியன் மூர் (Julienne Moore) திரைப்படத்தின் நாயகி. ஹாலிவுட்டிற்குப் புதியவரல்ல, பல விருதுகளையும் பின்வாசல் வழியாக அன்றி நேர்வழியாகவே ஏற்கனவே பெற்றிருக்கிறார். அதற்கு மகுடம்போல ஸ்டில் அலிஸ் படத்திற்கு அவருக்கு 2015 சிறந்த நடிகைக்குரிய ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது.
இனித் திரைப்படத்திற்கு வருவோம் :
நாவலின் நோக்கத்தை, நாவலின் பல நூறுபக்கங்கள் ஏற்படுத்தாதத் தாக்கத்தை இரண்டுமணி நேரகாட்சியில் ஏற்படுத்தும் பொறுப்பை இயக்குனர் இருவரும் திறம்பட செய்திருக்கிறார்கள். திரைக்கதையும், காட்சி படிமங்களும் இணைந்து பயணிக்கின்றன.
நோயாளி யாரோ எவரோ அல்ல ஓரு பேராசிரியை. பேராசிரியை என்ற சொல்வேண்டாம் அந்தச் சொல்லுக்குத் தற்போது சனி பிடித்திருக்கிறது. தலைசிறந்த கல்விமான் என்றுவைத்துக்கொள்வோம். சொற்களின் செறிவையும், நுட்பத்தையும், அதற்குரிய தொனியையும் வழங்கி இதயம் பூரிக்கிற மொழி அறிஞர். கற்ற கல்வியையும் பெற்ற அனுபவத்தையும், இம்மண்ணிற் பிறந்ததற்கு நன்றிக் கடனாக பிறருக்கும் அளித்திருக்கிறோம் என்று திருப்தியுறும் 50 வது வயதில் தமக்கு அல்சைமர் முற்றிய நிலையில் இருக்கிறதென்கிற உண்மையை மருத்துவர் மூலமாக தெரியவருகிறபோது ஜூலியன் மூர் முகபாவம் பல படங்களில் நமது நடிகையர் திலகம் காட்டியுள்ள முகபாவங்கள்.
அல்சைமர் நோய், பாதிக்கபட்ட நோயாளி, நோயாளியின் தினசரிகள், குடும்பம், அலுவலகம் என்று பொருள்களை வகுத்துக்கொண்டு காட்சிகளை நகர்த்தியுள்ளனர். கொடிய நோய் பொதுவாகப் பாதிக்கப்பட்டவரின் நம்பிக்கைகளை மட்டுமல்ல, அவர் சார்ந்த உறவுகளைக்கூட அவரிடமிருந்து விலக்கிவிடும், விரட்டிவிடும். இத்தகைய சூழலில் எப்படி குடும்ப வாழ்க்கையை, அலுவலகப்பணியைச் சந்திப்பது ? குடும்பத்தில் கணவன், பிள்ளைகள் ; அலுவலகத்தில் துறைத் தலைவர், பணி நிமித்த நண்பர்கள், மாணாக்கர் இவர்களிடம் தொடர்ந்து இணக்கமாக எப்படி இருப்பது ? போன்றவற்றை ஜூலியன் மூர் திறம்பட செய்திருக்கிறார்.
« கடந்த 50 ஆண்டுகளாக எனது ஒட்டுமொத்த வாழ்க்கையின் அவ்வளவு உழைப்பையும் கணப்பொழுதில் தொலைத்துவிட்டு நிற்கிறேனே ! » என்று அலிஸான ஜூலியன் மூர் புலம்பும்போது முரண்நகையாக எனக்குள் தேவையின்றி சிறுவர் சிறுமியர்களுக்கென்று தயாரிக்கப்பட்ட வால் டிஸ்னி திரைப்படமான ‘அலிஸின் அற்புத உலகம்’ என்ற பெயர் குறுக்கிட்டது.
ஒரு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையை அறிவித்து, மரணம் மட்டுமே உனக்கு விடுதலை தரும் என்பதுபோலத்தான் மருத்துவர்கள் சில நேரங்களில் நோயாளிக்கு அவனுடைய முற்றிய நோய் பற்றிய தகவலைத் தெரிவிப்பதும் ஆகும். குற்றவாளிக்கேனும் வாதிடவும், மேல் முறையீடு செய்யவும் வாய்ப்புண்டு. ஆனால் நோய்முற்றிய நிலையில், திரும்பும் திசைதோறும் கதவுகள் அடைபட்ட பின் கையறுநிலையில் அவர் என்ன செய்துவிடமுடியும் ? « உனக்கு என்ன பிரச்சினையென்றாலும், நானிருக்கிறேன் ! » என கணவர் சொன்னாலும்( ?), « நாங்களிருக்கிறோம் ! » எனப் பிள்ளைகள் ஆறுதல் கூறினாலும், அலுவலகத்தில் « என்றைக்கும் நீ எங்களுக்கு அலிஸ்தான் ! » என நண்பர்கள் தெரிவித்தாலும் அவள் திசையில், அவள் கணங்களில், திடீரென்று மனித உயிராக அன்றி வீட்டுவிலங்காக சபிக்கபட்டதொரு வாழ்க்கையை ஏற்பது எளிதானதல்ல.
ஜாகிங்போகிறபோது நின்று குழம்புவது, வீட்டில் டாய்லெட்டைத்தேடி ஒவ்வொரு கதவாகத் திறந்து சலிப்புறுவது, கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக தயாரிக்கும் உணவிற்கு ரிய செய்முறையை மறந்துவிட்டுத் தடுமாறுவது, தொலைபேசியை எங்கே வைத்தோம் என்று தெரியாமல் தேடுவதும், பதற்றத்தின் தாளகதி கூடுவதை உடல்மொழியில் காட்டுவதும், தனது மாட்டாமையை உணர்ந்த மறுகணம் மனம் உடைந்து கதறி அழுவதும்மறக்க முடியாதவை. Alice சலனமற்ற நடமாடும் சவமாக, Still Alice ஆகிறார் என்பதை காட்சி அடுக்குளாகத் தீட்டியிருக்கிறார்கள்.
இயக்குனர்கள், நோயாளி பெண்மணி, நோய் சார்ந்த அவள் பிரச்சினைகள் என்று திரைக்கதையை அமைத்துக்கொள்ளாமல் அவள் ஒரு மனைவி, நான்கு பிள்ளைகளுக்குத் தாய், படித்த நடுத்தர வர்க்கப் பெண்மணி என்பதையும் மறந்துவிடாமல் அதற்கேற்ப காட்சிகளை அமைத்திருக்கின்றனர். குறிப்பாக தமக்கு வந்திருக்கும் அல்சைமர் ஒரு பரம்பரை நோயென மருத்துவர் தெரிவித்த மறு கணம், பிள்ளைகளை வீட்டிற்கு அழைத்து அவர்களையும் சோதனைக்கு உட்படுத்த வற்புறுத்தும் காட்சி, இளைய மகள் பிறபெண்களைபோல சட்டமோ, மருத்துவமோ படிக்காமல் நாடகத்துறையைத் தேர்வு செய்தமையைச் சகித்துகொள்ளாமல் நடக்கும் உரையாடல் போன்றவற்றைக் குறிப்பிட வேண்டும்.
ஆ.அகோதா கிரிஸ்டோஃப் (Agota Kristof)
அகதா கிரிஸ்டியை தெரியாதவர்கள் உலகில் இருக்க முடியாது. இங்கிலாந்தில் பிறந்து ஐம்பதுக்கு மேற்பட்ட துப்பறியும் புதினங்களை எழுதி இன்றளவும் விற்பனையில் சாதித்துக்கொண்டிருக்கிற எழுத்தாளர். பிரெஞ்சு இலக்கிய உலகில் கிட்டத்தட்ட இதேபெயரைக்கொண்ட, மாறாக உலகின் புகழ்பெற்ற எழுத்தாளர்களாலும், தீவிர இலக்கிய அபிமானிகளாலும் போற்றப்படும் எழுத்தாளர் ஒருவர் உண்டு. அண்மையில்தான் மறைந்தார். பெயர் Agota Kristof. பிரெஞ்சு மொழியில் எழுதியிருந்தாலும் பிரான்சு நாட்டவர் அல்ல அல்லது பிரெஞ்சு மொழியையும் தனது ஆட்சிமொழியாகக் கொண்டிருக்கிற, இவர் வாழ்ந்த(மறைந்த) சுவிஸ் நாட்டவருமல்ல. சொந்த நாடு ஹங்கேரி. 1956ல் பொதுவுடமை ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியிலிறங்க அதனை ஒடுக்க சோவியத் ராணுவம் வரவழைக்கப்பட்டபோது தப்பித்து அந்நிய நாடுகளில் தஞ்சம் புகுந்தவர்களில் இவரும் ஒருவர். இவருக்கு அடைக்கலம்கொடுத்த நாடு சுவிஸ். இந்நாட்டில் தமது அகதி வாழ்வைத் தொடங்கியபோது வயது 21. கவிதைகள் நாடகங்கள் என்று எழுதினாலும் முதல் நாவல் அவருடைய 51 வயதில் வெளிவந்தது. இவரது முத்தொடர் நாவல் வரிசையில் முதல் நாவல் ‘Le Grand cahie ‘ (The notebook), தமிழில் வரவேண்டும் என்று நான் நினைக்கிற பிரெஞ்சுமொழி நவீன படைப்புக்களில் ஒன்று. இந்நாவல் முக்கியத்துவம் பெறவும் தீவிர இலக்கிய அபிமானிகளால் கொண்டாடப்படவும் காரணமென்ன ? அவருடைய பிரெஞ்சு மொழி அறிவு படைப்பிலக்கிய களம் எதிர்பார்க்கும் திறன் கொண்டதல்ல, வாழ்க்கையில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக அறியவந்த மொழி. தாய்மொழி ஹங்கேரியனில் எழுதாமல் அந்நியமொழியான பிரெஞ்சு மொழியியைப் தமது படைப்புமொழியாகத் தேர்வுசெய்தார். ஏன் ?
உலகின் புகழ்பெற்ற எழுத்தாளரின் வார்த்தைகள் நமக்கு பதில்சொல்கின்றன :
« வெகு நாட்களுக்குப் பிறகு அகோதா கிறிஸ்த்தோஃப் என்றொரு பெண்மணி ஒரு வகையான ஒப்பீட்டு முயற்சியென சொல்கின்ற வகையில் அற்புதமான சில படைப்புகளை எழுதியிருக்கிறார் என்பது தெரிய வந்தது. 1956 பிரச்சினையின்போது, ஹங்கேரி நாட்டைத் துறந்து சுவிஸ் நாட்டில் தஞ்சம் புகுந்தவர். பிரெஞ்சு மொழி தாய்மொழியல்ல, அதில் எழுதவேண்டிய சூழ் நிலை. இருந்தும் அந்நியமொழியான பிரெஞ்சுமொழியில் எழுத்தில் முற்றிலும் ஒரு புதிய பாணியைப் பயன்படுத்தி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். இசைவான நடை, குட்டிகுட்டி வாக்கியங்கள், குழப்பமற்ற சொற்கள், சுற்றிவளைக்காத வாக்கியங்கள், துல்லியமான விவரிப்புகள், வெகு இயல்பான அணுகுமுறை. அந்நியமொழியில் எழுதத் துணிந்ததால் மிகச் சிக்கனமான முறையில், ரகசியங்கள் நிறைந்த, மர்மங்களைக்கொண்ட சூழலைப் புதினங்களில் அவரால் கட்டமைக்க முடிகிறது. அவருடைய முதல் நாவலைப் படித்தபோது எனக்கு நன்கு பரிச்சயமான அனுபவங்களில் திளைப்பதுபோல உணர்ந்தேன். » (‘Hear the wind sing’, 2016 முன்னுரை)
அகோதா கிறிஸ்த்தோஃப் ஐக் கொண்டாடுபவர் யாரோ எவரோ அல்ல ஹரூகி முராகாமி. காரணம் அவரும் சொந்தமாக மதுக்கடை நடத்திக்கொண்டு, விழிபிதுங்கிக் கொண்டிருந்தவேளை, கவலையை மறக்க எழுத உட்கார்ந்திருக்கிறார். தாய்மொழியான ஜபானிய மொழியில் எழுதாமல் அகோதா கிறிஸ்தோஃபை கொண்டாடும் காரணங்களுக்காகவே தமது முதல்நாவலை ஆங்கிலத்தில் எழுதி பின்னர் அவரே ஜபானிய மொழிபெயர்ப்பையும் செய்தாராம். ஆனால் 2015ல்தான் அமெரிக்கர் ஒருவரின் மொழிபெயர்ப்பில் பிற ஆங்கிலமொழி பேசும் நாடுகளில் ‘Hear the wind sing’ என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. பிரெஞ்சுமொழியில் வெளிவந்த ஆண்டு 2016. தாய்ய்மொழியான ஜப்பான் மொழியில் இந்நாவலை எழுதாதற்கு அவர்சொல்லும் காரணம், தாய்மொழியிலுள்ள ஆளுமை, சொல்ல நினைத்ததை நேரடியாகச் சொல்லவிடாமல் அவரைத் தடுத்து அலைகழித்ததாம். அன்னிய மொழியிலுள்ள அரகுறை அறிவு தேவையின்றி சொற்களை, வாக்கியங்களை உபயோகிக்காமல் எழுத உதவியதாம். ஆக அவர் ஆங்கிலத்தில் எழுதி பின்னர் தாய்மொழிக்குக் கொண்டுவந்ததுதான் முதல் நாவல். ஜபானிய புகழ்பெற்ற இலக்கிய இதழ் இவர் எதிர்பார்த்திராத பரிசையும் அளித்து நாவலை வெளியிட்டு மிகுந்த வரவேற்பை முதல் நாவலுக்கு அளித்திருக்கிறது. இருந்தும், ஹரூகி முரகாமிக்கு, இம்முதல் நாவல் உட்பட ஆரம்பகால நாவல்களிடத்தில் அதிருப்தியும் இருந்திருந்திருக்கிறது. கிட்த்தட்ட 35 ஆண்டுகளுக்குப் பின்னரே ஆங்கிலம் உட்பட பிற மொழிகளில் வெளிவர அனுமதித்திருக்கிறார்.
————————————————————-