ஆங்கிலேயருக்குப் பதிலாக போர்த்துகீசீசியர் இந்தியத் துணைக்கண்டத்தை ஆண்டிருந்தால் அனேகமாக இந்தியா கொச்சின் என்றே அழைக்கப்பட்டிருக்கும். பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வணிகத்துறைமுகமாக பெரிதும் உதவிய கொச்சின் பெயராலேயே இந்தியாவை போர்த்துகீசியர்கள் அழைத்தனர். அதாவது அன்றைய போர்த்துகீசியர்களுக்கு கொச்சின் என்பது இந்தியா. இந்த நிலையில் சீன மற்றும் இந்தியப் பண்பாட்டின் தாக்கமிருந்த சயாம் (இன்றைக்கு தாய்லாந்து), லாவோஸ், கம்போடியா, தொங்க்கன், அண்னம் பகுதிகள் அடங்கிய தூரகிழக்கு பகுதிகளை தொடக்கத்தில் மேற்குலகும் கொச்சின்சீனா என்றே அழைக்கத்தொடங்கி பின்னர் இந்தோ-சீனா ஆனது. பிரெஞ்சுக் காரர்களின் கைவசம் சயாம் நீங்கலாக பிறபகுதிகள் வந்தபோது, கொச்சின் சீனா என்ற பெயரில் ஒரு பிரதேசம் உருப்பெற்று, அதனுடன் தொங்கன், அண்ணம், லாவோஸ்,கம்போடியா இணைக்கப்பட்டு(Indochine française)நூறாண்டுகள் பிரான்சுநாட்டின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தன(1954 வரை). 1950 களில் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் கம்யூனிஸம் வலுப்பெற அதன் தாக்கம் இந்தோ சீனாவிலும் எதிரொலித்தது. சீனாவை ஒட்டியிருந்த தொங்க்கன் பகுதியில் பொதுவுடமை வாதிகள் வியட் மின்கள் வலுப்பெற்றார்கள். இந்தோ சீனாவில் வியட் இனத்தினர் தங்கள் அடையாளத்தை இழந்துவருகிறோம் என்கிற உணர்வில் இருக்க அதற்குத் தலமையேற்ற ஹோ சி மின் வியட்னாம் பொதுவுடமைக் கட்சியைத் தொடங்கி தாக்குதலை ஆரம்பித்தாார். பிரெஞ்சுகார ர்களுடன் நடந்த போரின் இறுதியில் அல்ல து முதல் இந்தோ சீனா யுத்தத்தின் முடிவில் வடவியட்நாம் கம்யூனிஸ்டுகளின் கையிலும், தென் வியட்நாம் மேற்கு மற்றும் அமெரிக்க ஆதவுடன் அரசாண்ட ஆட்சியாளர்கள் கையிலும் போனது. பின்னர் இருப்பந்த்தைந்து ஆண்டுகால போரின் முடிவில் 1975 ல் அமெரிக்கா வரலாறுகாணாத ஒரு தோல்வியைச் சந்திக்க வியட்நாம் பொதுவுடமை வாதிகளின் கைவசம் வந்த து. வியட்நாம் கம்யூனிஸப் படையிடம் “தியன் பியன் பூ(Diên Biên Phu) யுத்தத்தில் (1954்) பிரெஞ்சுக்காரர்கள்சந்தித்த தோல்வியும் அவர்களால் ஜீரணிக்க கூடியதல்ல. இருதரப்பிலும் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தார்கள். பதினோராயிரம் கைதிகள் வியட் மின்களின் பிடியில் சிக்கியதாகவும் அவர்களில் சில ஆயிரம் கைதிகளையே உயிருடன் திரும்ப பெற முடிந்த தாகவும் வரலாறு. பிரெஞ்சு ராணுவத்தை பொறுத்தவரை உயர் அதிகாரிகளைத் தவிர பெரும்பாலான படைவீரர்கள் பிரெஞ்சுக் காலனிநாடுகளைச் சேர்ந்தவர்கள் அதில் சமபங்கு உள்ளூர் வியட்நாமிய கத்தோலிக்கரும் இருந்தனர்.
ஆ. புதிய நாவல்
புதுச்சேரி பிரெஞ்சு காலனியாக இருந்தபோது, வறிய மக்கள் பிரெஞ்சு ராணுவத்தில் சேர்ந்து சைகோனுக்குப் போகிறேன் என்பார்கள். பிரெஞ்சு ராணுவத்தில் காலனிய படைப் பிரிவு பிரசித்தம். இவர்கள் அன்றைய கொச்சின் சீனாவிலிருந்த சைகோனுக்கு (தற்போதைய பெயர் ஹோசிமின் ) புதுச்சேரியிலிருந்து கப்பலில் சென்றார்கள். தொடக்கத்தில் இந்தோ சீனாவின் பாதுகாப்பு பணியிலிருந்த இவர்கள் பின்னர் வியட் மின்களுடன் போரிலும் பங்கேற்றனர். வியட்னாம் பிரெஞ்சுக் கார ர்களிடமிருந்து விடுவிக்கப்பட்ட பின் இப்புதுச்சேரி மற்றும் காரைக்கால ராணுவ வீர ர்கள் பிரான்சு நாட்டில் குடியேறினர், சிலர் புதுச்சேரிக்குத் திரும்பினர். இவர்களில் பலருக்கு வியட்நாமில் ஒரு குடும்பம், இந்தியாவில் ஒரு குடும்பம் என்ற இரட்டை வாழ்க்கை உண்டு.
இந்த சைகோன் புதுச்சேரிவாசிகளின் வாழ்க்கையை புதுச்சேரி மற்றும் இந்தோ சீனா (வியட்நாம்`)பின்புலத்தில் கதையை விரிப்பது என் நோக்கம் கதைக்களன் காலம் 1930 – 1954. —————————————-
( 2010 ல் வெளிவந்த சிரிக்கிற ரோபோவையும் நம்பக்கூடாது என்ற அறிவியல் புனைகதை தொகுப்பிலிருந்து)
நீங்க எப்படிப் பட்டவர்? ரோம் பத்தி எரிஞ்சதுக்கோ, காவிரிப்பூம் பட்டினம் கடலில் மூழ்கிப்போனதற்கோ, நாசகாகி வெந்து துடித்ததற்கோ அல்லது அதற்கும் முன்னாலே இலெமூரியாக் கண்டம் துண்டாடப்பட்டதற்கோ வருந்தும் ரகமா அப்படியானால் உங்களால் உதவ முடியும். இந்தப் பூமியைக் காப்பாற்றமுடியும்.
வரவிருக்கும் ஆபத்து இங்கே மேலே குறிப்பிட்ட அல்லது சொல்ல மறந்த எல்லாத்துக்கும் பெருசு, ரொம்ப பெருசு. எதிரிகள்- அந்நிய மனிதர்கள்-உறவுகள் உயிர்களுக்கு மட்டுமல்ல, விலை மதிக்க முடியாத உங்கள் உயிருக்குங்கூட ஆபத்து காத்திருக்கிறது. அபிஷேக ஆராதனை, மெழுகுவர்த்தி பிரார்த்தனை, ஐந்து வேளை தொழுகைங்கிற வழக்கமான உத்திகள், உங்களை இந்தப் பேரழிவிலிருந்து காப்பாற்றிவிடாது. ஓடியாகணும். ஓடி, சம்பந்தப்பட்டவங்களுக்கு நிலைமையை நீங்க புரியவைக்கணும். போர்க்கால அவசரத்துடன் செயல்பட்டாகணும்.
இச்செய்தியின்மீது உங்களுக்குள்ள நம்பகத்தன்மையின் சதவீதம் எவ்வளவு என்பதனை என்னாலே ஊகிக்க முடியலை. முடிந்தமட்டும் உங்கள் அவநம்பிக்கையை குறைக்கின்ற வகையில் பிரச்சினையைத் தெளிவாகவும் ஆனால் எனக்கிருக்கும் ஆபத்து காரணமாகச் சுருக்கமாகவும் சொல்லப் பார்க்க்¢றேன். எதற்கும் நீங்களும் ஒருமுறை இதனை வாசிப்பதற்கு முன்னால் பாதுகாப்பான இடத்தினை தேர்வு செய்துகொண்டு வாசித்தல் நலம். அமெரிக்காவென்றால் உயர்ந்த கட்டிடங்களையும், இஸ்ரேலென்றால் பேருந்துகளையும், அரபு நாடுகளென்றால் திறந்த வெளிகளையும், இந்தியாவென்றால் காவல் நிலையங்களையும் தவிர்க்கவும்.
எம்பேரு ஆ.லெ. வள்ளியப்பன். அதாவது ஆத்தங்குடி லெட்சுமண செட்டியார் (அப்பா பிறந்தது நாகர்கோவிலென்பதால் ‘ல’, ‘லெ’ யாகி விட்டது) சீமந்த புத்திரன் வள்ளியப்பன். வான சாஸ்திரத்தையும், உதவிக்கு கணினி அறிவையும் 3:1 என்ற விகிதாச்சாரத்தில் மூளையில திணிச்சுக்கிட்டவன். அப்பா கொடுக்கும் பாக்கெட் மணியில் பகலானால் ஆஸ்திரேலியா, ஐரோப்பா என அலைஞ்சுட்டு ராத்திரியானா வாலிபவயது உடல் உபாதைகளுக்காக யூதரினத்து வெள்ளைக்கிளி நீல் எத்ரியாவை கணினியிலிருந்து நிழலாக வரவழைச்சு, அவளோட இல்லை அதோட கெட்ட காரியங்களை செஞ்சிகிட்டிருந்தேன்(ஒரு காதற் குறிப்பு: கொஞ்சலுக்கு ஹீப்ரு மொழி உகந்ததல்ல).
கேனையன், பின்னால் இந்தப் பெண்ணால் எனக்கும் உங்களுக்கும் ஏற்படவிருந்த ஆபத்தைப் பற்றி அறிந்துணரும் விவஸ்தையில்லாமலேயே, கேப்பையில் நெய்வடிகிறதென்று நம்பிக் கொண்டிருந்திருக்கிறேன். அப்பா சொன்னபடி என் மாமாவின் ஏகபுத்திரி ஆவுடை நாயகியைக் கல்யாணம் பண்ணிக்கொண்டு அவளது தகப்பனார் பதிப்பகத்தில் “காற்றில் தண்ணீர் பிடிப்பதெப்படி”, “கழுதையை குதிரையாக்குவதெப்படி” மாதிரியான புத்தகங்களைப் பதிப்பித்து நாலு காசு பார்த்திருக்கலாம். எல்லாம் விதி. கடந்த பத்து வருடமா நீல் எத்ரியாவின் மாய வலையில் விழுந்து, இன்றைக்கு ஏதோவொரு கிரகத்தின், பேர்வைக்காத கோளொன்றில் சிக்கித் தவிக்கிறேன்.
நீல் எத்ரியாவுடன் எனக்கேற்பட்ட சிநேகிதம் எப்போதுண்ணு நாள் கிழமையோட ஞாபகத்திலில்லை. ஆனால் சூரக்குடிச் சந்தைக்குப் போயிருந்த அப்பா மென்பொருள் செயலியொன்றை வாங்கி வந்திருந்த அன்று ஆரம்பித்தது என்பது மட்டும் உறுதி. அப்பா வாங்கி வந்திருந்த செயலியைக் கணினியில் இணைத்தவன், விசைபட்டனை அழுத்திவிட்டுக் கைகள் துறுதுறுக்கக் காத்திருந்தேன். திரை விழித்துக்கொண்டது, அங்கேயிங்கேயென்று அலறியடித்துக் கொண்டோடி ராம், ரோம் என இருக்கின்ற கணினியின் நினைவு எல்லைகளை ‘பிட்’ பிட்டாக மிதித்துத் திரும்பி அப்பாடா என்று பெருமூச்சுவிட்டுக் கொண்டு நிற்கின்றது. திரைக்குள் முப்பரிமாண முகமொன்று தோன்றுகிறது. ஒட்டிக்கொண்டிருக்கும் உதடுகள் மேலும் கீழும் முன்னும் பின்னுமாய் அசைய, எச்சிலில்லாத வார்த்தைகள் வந்து விழுகின்றன.
“வணக்கம் டியர்! உனக்கு அலாவுதீனும் அற்புதவிளக்கும் கதை தெரியுமா? இன்றைய தினத்திலிருந்து, நீயுமோர் அளவான அதிகாரங்களுள்ள அலாவுதீன். உன்னுடைய ஏவல்களை நிறைவேற்றவென்று ஏற்படுத்தப்பட்டுள்ள பைனரி(Binary) பூதம் நான். வேண்டுமென்றால் உன்னுடைய விருப்பத்திற்கேற்ப என்னை உருமாற்றம் செய்து கொள்ளலாம். விரும்பிய பேரால் அழைக்கலாம், வேண்டியதைக் கேட்டுப்பெறலாம்” என்று சொற்களால் தூண்டில் போட, சனி பிடித்தது.
ஆவுடை நாயகி மீதிருந்த கசப்பில், உலக அழகிகளைப் பக்க வரிசையில் கணினியில் நிறுத்தி, பிடித்த உடற்பாகங்களை இரவல் பெற்று முப்பரிமான நிழலுக்குக் கொடுத்து, நடக்கவிட்டுக் கீழே பார்த்ததில்… (வேண்டாம் அதையெல்லாம் இங்கே சொல்லுவது நாகரீகமாகாது) அமெரிக்க இணைய தளங்களைத் தேட கிடைத்த பெயர் ‘எத்ரியா’. இந்த யூதபெயருக்குப் ‘பலமானவள்’ என்பதாய் அர்த்தமாம். ‘நீல்’ எனது விருப்பத்தின் பேரில் ஒட்டிக்கொண்ட அவளது ‘கற்பனைத் தகப்பன்’ பெயர். வாய் கொள்ள ‘நீல் எத்ரியா’ என்று அழைத்தேன். புகை மண்டலத்தை எழுப்பிக்கொண்டு என்னருகில் வந்து நின்றாள்.
“டியர்!.. இனிமே நான் உங்கள் நிரந்தர அடிமை”, காதருகே கிசுகிசுக்கிராள். அவள் கையைப்பிடித்துக்கொண்டு, கிரகங்கள்தோறும் நானுனக்கு அடிமை என்கிறேன். அவள் சிரிக்கிறாள். எத்ரியாவின் பணிகளை இன்னதென்று திட்டவட்டமாக சொல்ல முடியாது. மின்னஞ்சல்களுக்குப் பதில்கள் எழுதுவது, கோப்புகளை வரிசை படுத்துவது -நிராகரிப்பது-அழிப்பது, பைரவி ராகத்துலே பாம்பே ஜெயஸ்ரீ குரலில்’மனதில் உறுதிவேண்டும்’ என்பது, சாப்பிடவைப்பது, தூங்க வைப்பது, டாய்லெட் பேப்பரை உபயோகித்து என்…பதென்று நிறைய வினைச் சொற்களை எனது மனதைப் படித்து, அவள் விரையம் செய்ததில் அவளில்லாமல் ஆ.லெ. வள்ளியப்பனில்லை என்றாகிவிட்டேன்.
ஒருநாள் கொஞ்சம் அதிகப்படியான மையலில் பிதற்றிக்கொண்டிருக்கிறேன். அவள் எனது காதினை மெல்லக் கடித்துவிட்டு, “வள்ளியப்பன் நமக்கு அதிஷ்டம் வந்திருக்கிறது” என்றாள்.
“எப்படி?”ன்னு கேட்கிறேன்.
“எங்க ஆட்களுக்கொரு சா·ப்ட்வேர் நாம எழுதணும். அப்படி எழுதினா எங்களுக்கும் இலாபம். உங்களுக்கும் இலாபம். என்ன சொல்றீங்க?
“எத்ரியா.. என்னிடம் நிக்கோலஸ் கோபர்னிகஸ் குறித்து கேளு. கிரகங்களின் எண்ணிக்கையைக் கேளு. அவற்றின் வழித்தடங்களைக் கேளு. அந்தக் கிரகங்களுக்குள்ள வெப்பத் தன்மையையும் அவற்றுக்கான வண்ணங்களையும் கேளு. கிரகங்களுக்கிடையே உள்ள தூரத்தை வானியல் அளவில் கேளு. அதைவிடுத்து சா·ப்ட்வேர் எழுதணும்னு சொல்ற. ஏதோ மீயுரை(HTML) குறியீட்டில் சில வரிகள் எழுதுவேன். அதை வச்சு பெருசா எதையாவது கனவு காணாதே. சத்தியமா சொல்றேன். சா·ப்ட்வேர் பற்றி எனக்கு ஒரு மசுரும் தெரியாது.”
“பயப்படாதே. உன்னோட வான சாஸ்திர அறிவுதான் எங்களுக்கு வேணும். மற்றபடி சா·ப்ட்வேர் எப்படி எழுதணுகிறதை நான் வழி நடத்துவேன். இதை மட்டும் நீ எழுதிமுடிக்க உதவுவாயென்றால் உனக்குப் பெரிய புதையல் காத்திருக்கிறது.
“உன்னுதவியால் எழுதப்படவிருக்கும் மென்பொருள் செயலி எங்கள் எதிர்பார்ப்பின்படி அமையுமானால், இனி ந, இந்த முப்பரிமாண எத்ரியாவுடன் கொஞ்ச வேண்டிய அவசியமில்லை. அசலான எத்ரியாவுடனேயே காதல் செய்யலாம். நான் சொல்வதெல்லாம் சத்தியம். ஏதாவதொரு கோளில், கோட்டையை எழுப்புவோம். அங்கே நமக்கென்ற தொரு அரண்மணை, உப்பரிகை, நந்தவனம், அந்தபுரம், சப்பிரமஞ்சம், ஓய்வு நேரங்களில்புஷ்பக விமானம் என்று ஏற்பாடு செய்துகொண்டு தேவையான எண்ணிக்கையில் பிள்ளைகள் பெற்று நம்முடைய இனத்தை விருத்தி செய்வோம் சம்மதமா?”
“மூட்டை மூட்டையாய் சம்மதம். எப்போ புறப்படலாம்?”
“இப்போதில்லை. நாளைக்குக் காலையில் பயணம். பூலோகத்திலிருந்து புவர்லோகம் போகணும். வழியில் மூணு அல்லது நான்கு கிரகங்களில் தங்க வேண்டியிருக்கும்.”
“எதிரியா சொன்னதுபோலவே, வழியில் இரண்டொரு கிரகத்தில் தங்கி எங்கள் வாகனத்திற்கு எரிசக்தியை நிரப்பிக்கொண்டு, அவள் குறிப்பிட்டிருந்த புவர்லோகத்துக் கோளொன்றில் எழுப்பியிருந்த அந்தக் கம்ப்யூட்டர் சா·ப்ட்வேர் கம்பெனியை அடைய ஒரு மாதம் பிடித்திருந்தது.
முதலிரண்டு கிழமைகளும் வேலைகளேது மில்லாமல் கேப்ஸ்யூல்களை விழுங்கிக்கொண்டு அத்தியாவசியமான கடன்களின் நிர்ப்பந்தமின்றி இருந்தேன். ஆனால் நாட்கள் ஆக ஆக எத்ரியாவைக் காணாமல் நான் தவிக்க ஆரம்பித்தேன். ஒரு நாள் ராஜாக்களுக்கான உடை அலங்காரத்துடன் அசப்பில் என் மாமா மாதிரியான ஒருவன் தானழைத்துவந்த பெண்மணியை லாபியில் உட்காரவைத்துவிட்டு எனது பக்கத்து ஆசாமியிடம், வெகுநேரம் பேசிவிட்டுப் போனான். எனக்கு என் மாமாதான் மோப்பம் பிடித்து ஆவுடை நாயகியை இவ்வளவுதூரம் அழைத்து வந்திருப்பாரோ என்ற சந்தேகம். அந்தப் பெண்மணியைப் பார்க்க லட்சணமாகயிருக்க சந்தேகம் தீர்ந்தது. ஆனாலும் வந்த நபரை யாரென்று அறிந்து கொள்ளும் ஆவலில் பக்கத்து ஆசாமியிடம் கேட்டுவிட்டேன்.
“யார் இந்த ஆள்? ஏதோ நாடகத்திலிருந்து மேக்கப் கலைக்காமல் வந்தவன் மாதிரி இருக்கிறானே? அவனுக்கு இங்கென்ன வேலை?”
“மெல்லப்பேசு. நாடகத்து ராஜாயில்லே. நிஜராஜா. இலங்கை ராச்சியத்தின் அதிபதி. பேரு இராவணன். அவன் இந்தியாவைச்சேர்ந்த அயோத்தி மன்னன் ராமனின் மனைவியான சீதையைக் கடத்தியிருப்பவன். இலங்கைக்குத் திரும்பற வழியிலே இங்கு வந்திருக்கிறான்.”
“அடடே! உனக்கு நம்ம கம்பெனியின் பிராஜெக்ட் பற்றி எதுவும் தெரியாதா? இன்றைக்கு மதியம் இரண்டு மணிக்கு நம்ம பிராஜக்ட் லீடர் மிஸ்டர் சாரங்கன் இங்கே வரார். அவர் விளக்கமாச் சொல்வார். பிரம்ம லோகத்துலே வேலை பார்த்தவரை நம்ம கம்பெனிதான் எத்ரியா டெக்னிக்கைப் பயன்படுத்தி இங்கே அழைச்சுவந்தது.”
“எத்ரியா டெக்னிக்கா?”
“ஆமாம் உன்னையும் என்னையும் அழைத்துவர உபயோகப்படுத்திய தந்திரம். மிஸ்டர் சாரங்கன் இங்கே வந்து சேர்ந்ததும் அப்படித்தான்.”
” ஆனா எத்ரியா என்ற பேரு நான் வச்சதுதானே?”
“இல்லை! அப்படி உன்னை நம்ப வச்சிருக்காங்க. நடந்ததெல்லாம் ஆப்பரேஷன் மகா சங்காரத்தின் முதற்படி. இரண்டு மணிக்கு எத்ரியா பிராஜக்ட் லீடரோட வருவா. எல்லாம் தெரியவரும் அதுவரை அமைதியாயிரு. “
பகல் இரண்டுமணிக்கு பக்கத்து ஆசாமி சொன்னதுபோல எத்ரியா வந்தாள். அவளோடு உச்சித் தலை குடுமியும், நெற்றியில் திருநீறும், மார்பில் முப்புரியும், இடுப்பில் தார்பாய்ச்சிக் கட்டிய வேட்டியுமாக ஒரு மனிதர்.
“மிஸ்டர் வள்ளியப்பன்! மீட் மிஸ்டர் சாரங்கன். நம்ம பிராஜெக்ட் லீடர்.” மூவரும் மாற்றி மாற்றிக் கை குலுக்கிக்கொண்டு அறிமுகம் முடிந்தபின் நாற்காலியில் அம்ர்ந்தோம்;
“வள்ளியப்பன் நேரடியாக விஷயத்துக்கு வறேன்; இந்த பிராஜக்டுக்குப்பேரு ‘ஆப்பரேஷன் மகா சங்காரம்’. இந்த யூ.ஸ்.பி. கியில் உள்ள தகவல்களைப் பிரம்மலோகத்திலிருந்து தந்திரமாக கொண்டுவந்திருக்கோம். இந்தக் கோப்பிலே உள்ளபடிதான் ‘உலகத்தில் நடந்ததும் நடக்கவிருப்பதும்’ என்று நம்பப்படுகிறது. இதைத்தான் நாம மாற்றி எழுதணும். அப்படி மாற்றி எழுதமுடியும்னா, நம்ம கம்பெனி எம்.டி.தான் அடுத்த பிரம்மா. எப்படிங்கிற சந்தேகமெல்லாம் வேண்டாம். முடியும் நம்மால் முடியும். கிரகங்களின் பாதையை மாற்ற முடியும்னா உலகத்தின் தலையெழுத்தையும் மாற்ற முடியும்னு நம்பறோம். இதற்கொரு சா·ப்ட்வேர் நாம் எழுதப்போறோம். அதன் மூலமா கிரகங்களின் பாதையை மாற்றுவதென்று தீர்மானிச்சுருக்கோம்.
“புரியலை?”
“இந்த உலகம் பூகம்பம், புயல், கடல் கொந்தளிப்பால் சிறு அழிவுகளைச் சந்தித்து அழிந்தும் தோன்றியும் வருகிறதென்று சொல்லப்படுகிறது. ஆனால் உலகமனைத்தும் ஒரே காலத்தில் அழியுமென்றால் அதற்கு மகா சங்காரம் என்று பெயர். அதற்கான ஏற்பாடுகளைத்தான் நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம். அதற்குப் பிறகு நம்ம பிரம்மா உருவாக்குகிற உலகில் குறையற்ற மனிதர்கள் தர்ம ஆத்மாக்கள் மாத்திரமே ஜனிப்பார்கள்.”
” அய்யய்யோ … அப்படியானால் மகா சங்காரத்தின்போது அழிவு எல்லா உயிர்களுக்குந்தானே?”
“அப்படியில்லை. மகா சங்காரத்தின் முடிவில் மாயையில் இறைவன் ஒடுங்குகிறான். பிரம்மனுக்கு அழிவில்லை. அதாவது மகா சங்காரத்தின் கர்த்தராகிய நம்ம எம்.டி.க்கு அழிவில்லை. அழிவின் முடிவில் முதல் ஜனனம் நாமதான். அவரது வார்த்தைகளை பரிபூரணமா நம்பலாம். அதற்கான உத்தரவாதங்களை எனக்குக் கொடுத்திருக்கார். மகாசங்காரத்தை நாம் வெற்றிகரமாகச் செய்து முடிப்பதற்கு உலகத்தைத் தயார் செய்யணும். “இதுவரை நடந்ததையும் இனி நடக்கவிருப்பதையும்” புரட்டிப்போடணும்”. வரிசையாக நாம செய்யப்போற காரியங்களையும் வரிசைபடுத்தி உங்களிடம் கொடுத்த யு.எஸ்.பி கீயில் குறிச்சி வச்சிருக்கேன். அப்போதுதான் அழிவினை வேகமாக நெருங்கமுடியும். மிஸ்டர் வள்ளியப்பன் மிகவும் ஜாக்கிரதையாக எழுதவேண்டிய செயலி. எங்காவது எசகுபிசகாக நடக்குமானா நம்ம எல்லோரையும் கோளுக்கு வெளியே உதறிவிடுவார்கள். முதலில் நீங்க பிராஜக்டோட மாடலிங் சா·ப்ட்வேரை எழுதுங்க. அதன் பிறகு பிராஜக்ட் உறுப்பினர்கள் கூடி விவாதித்து ஒரு முடிவுக்கு வருவோம். இனி மிஸ் எத்ரியா இந்த நிமிடத்திலிருந்து ஆப்ரேஷன் மகாசங்காரம் சா·ப்ட்வேரை எழுதிமுடிக்கும்வரை உங்களோடுதானிருப்பாள். நான் வரட்டுமா?”
குடுமிக்கார கிழவன் வெளியேறிய அடுத்த சில நிமிடங்களில் எத்ரியா என்பக்கத்திலிருந்தாள்.
“சாரி டியர்! இரண்டு வாரமாக உங்களை ரொம்பவே காயப்போட்டுட்டேன். அதற்குப் பரிகாரமாக ஏதேனும் செஞ்சாகணும். எங்கே வச்சுக்கலாம்?”
“போடி…..எக்குதப்பா ஏதாவது சொல்லிடப்போறன், எனக்கு முதலில் மூத்திரம்போகணும் என்று கத்திவிட்டு டாய்லெட்டுக்குள் புகுந்துகொண்டேன். பாக்கெட்டிலிருந்த கைகணினியில் யு.எஸ்.பி.கீயை செருகி அவசரகதியில் தரவுகளில், பூமியில் நீங்கள் வாழும் காலத்திற்குப் பொருந்துகின்றத் தகவல்களை மாத்திரம் அனுப்பிக்கொண்டிருக்கீறேன்.
இதுவரை ஆப்பரேஷன் மகா சங்காரத்திற்கு ஆதரவாக இந்தக் கூட்டம் தீர்மானித்திருப்பவை.
75690 நவம்பர் 2002 சீனாவில் சார்ஸ் நோயினைப் பர்வச் செய்தல்…
75689 செப்டம்பர் 6 2002 ஈராக் மீது அமெக்க பிரிட்டிஷ் விமானங்களின் தாக்குதல்…
75688 செப்டம்மர் 11 2001 அன்று அமெரிக்க இரட்டைகோபுரங்…….
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது பழையத் திரைப்படப் பாடல்.
சகமனிதனை நேசிக்க ஒரு காரணம் இருக்கிறதெனில் வெறுக்கவும் எதோ ஒரு வெண்டைக்காய் காரணம் இருக்கவே செய்கிறது. வெள்ளையர்களுக்கு ஆப்ரிக்க மக்கள்மட்டுமே கறுப்பர்கள் அல்ல நாமனைவருமே கறுப்பர்கள். என்னுடைய பிரான்சு அனுபவத்தில் சொந்த அனுபவத்தில் சொல்கிறேன். பல அலுவலங்களில் அவர்கள் முக குறிப்பு தெரிவிக்கும் செய்தியை அறிந்திருக்கிறேன்.
எனக்குத் தெரிந்த இலங்கை நண்பர் ஒருவரின் மகன் பிரெஞ்சுப் பெண்ணொருத்தியை காதலித்து மணம் முடித்தார். திருமண வரவேற்பில் மகனின் பெற்றோரை அவர் சார்ந்த குடும்பங்களை அவருடைய வெள்ளையர் சமப்ந்தி குடும்பம் எப்படி நடத்தினர் என்பதை அத்திருமணத்தில் கலந்துகொண்டவகையில் நானறிவேன்.
ஒரு எல்லையை நிர்ணயம் செய்துகொண்டு கை குலுக்குவார்கள். இதை வெள்ளையரின் பொதுவான குணம் என முடிவுக்கு வரலாமா ? இயலாது. அமெரிக்க கறுப்பர் போராட்ட த்திற்கு ஆதரவாக பிரான்சு நாட்டில் நடந்த போராட்ட த்தில் ஐரோப்பிய இனத்தவரும் பங்கேற்றனர் (இங்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கறுப்பரின இளைஞர் கைதுசெய்யப்பட்டபோது மரணித்திருந்தார், அச்சம்பவத்தை அமெரிக்காவில் நடந்த சம்பவத்திற்கு இணையாகப் பார்க்கின்றனர் இளஞரின் குடும்பமும் அவர் ஆதரவாளர்களும்).
வெள்ளையர்களின் நிறவெறி ஒருபக்கம் இருக்கட்டும், நாம் எப்படி ? நமது சாதிப்பிரிவினைகள் நமது சமூகத்தில் அனைத்து மக்களையும் சரிசம மாய் நத்துகிறதா ? இங்கே வெளியில் மார்க்ஸியம் பேசுபவர்கள், பெரியாரியம் பேசுபவர்களில் எத்தனைபேர் சொந்த வாழ்க்கையில் அக்கொள்கைக்கு நேர்மையாக நடந்துகொண்டிருக்கின்றனர் ? அவன் நம்மவன் என்றுதான் இங்கு காய்கள் நகர்த்தப்படுகின்றன. அவர்களின் குற்றமும் அல்ல, மனிதர் குண த்தின் இயல்பு அது. விதிவிலக்கில்லையா ? எப்படி இல்லாமல் போகும். ஐந்து அல்லது பத்து விழுக்காட்டினர் உண்மையாகவும் இருக்கலாம். முரண்களை நம்பியே உலகம் இயங்கு கிறது.
அண்மையில் la Tresse என்றொரு பிரெஞ்சு நாவலைபடித்தேன்.Laetitia Colombani என்ற பெண்மணி எழுதிய நாவல். நாம் இந்தியாவிலிருந்துகொண்டு அமெரிக்க கறுப்பினத்திற்கு ஆதரவாக குரல் கொடுப்பது போன்று அவர் ஸ்மிதா என்ற தலித் பெண்ணை மையமாக வைத்து பிரான்சிலிருந்துகொண்டு இந்தியாவைச் சாடுகிறார், இந்தியாவில் எதுவும் சரியில்லை என்கிறார். அந்நாவலில் ஸ்மிதா அன்றி இரண்டு பெண்ள் வருகிறார்கள். ஒருத்தி ஜூலியா இத்தாலியைச் சேர்ந்தவர், மற்றவர் சாரா கனட நாட்டைச் சேர்ந்தவர். ஜூலியாவையும் சாராவையும் பிரச்சனைகளியிலிருந்து மீள முடிந்த பெண்களாக சித்தரிக்கும் நூலாசிரியர் இந்தியத் தலித் பெண்ணை(பகல் பூர், உத்திரபிரதேசம்) இந்திய சமூக அமைப்பின்படி கைகளால் நாள் முழுக்க மலம் அள்ள பிறந்தவள், ஊருக்குள் நுழைகிறபோது, அவளைக்ண்டு மற்றமக்கள் ஒதுங்கி க் கொள்ள வசதியாக காக்கையின் இறகை தலையில் அப்பெண்மணி சொருகிக் கொள்வது கட்டாயம், தலித் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப இயலாது, அவ்வாறு பள்ளிக்குச் சென்ற ஸ்மிதாவின் பெண்ணை பிராமண ஆசிரியர் பிரம்பால் அடித்து பள்ளியிலிருந்து துரத்திவிடுகிறார். இப்படியல்லாம் கதை நீளும். மூன்று பெண்களின் வாழ்க்கையைத் தலைமயிர் பிணைப்பதாக வரும் புனைவில் ஜூலியாவின் இத்தாலி சமூக அமைப்பு குறித்தும் சாராவின் கனடா நாட்டு சமூக அமப்புக் குறித்தும் விமர்சனங்கள் இல்லை. ஆனால் இந்தியா என வருகிறபோது, ஆசிரியரின் கை நீளுகிறது, இழிவான விமர்சனங்கள்.
இந்தியாவில் நலிந்த பிரிவினர் படும் அவலம் ஊரறிந்த சத்தியம். மறுப்பதற்கில்லை. ஆனால் கதையாசிரியரின் எழுத்தில் ஒருவகை sadism இருந்தது. பிரெஞ்சு மொழியில் நூலை விமர்சித்து ஒரு கட்டுரை எழுதினேன் பல பிரெஞ்சு நண்பர்களுக்கு அனுப்பியும் வருகிறேன். இந்நிலையில் எனக்குள் வேறொரு கேள்வியும் எழுகிறது.
அமெரிக்க கறுப்பரினத்திற்கு தாராளமாக குரல்கொடுப்பதிலுள்ள நியாயம் புரிகிறது. ஆனால நம்முடைய மனிதர்களை சரி சமமாக நடத்துகிறோமா ? என என்னை நானே கேட்டுக்கொண்டேன். la Tresse ஆசிரியர் போன்று மான்களிடம் கருணைகாட்டும் சைவப் புலிகள் நம்மிலும் பலர் இருக்கிறார்கள். கொத்தடிமைகளாக செங்கற் சூளைகளிலும், தொழிற்சாலைகளிலும் பணிசெய்துகொண்டு, சாலையோரம், கழிவுநீர்க் கால்வாய்கள் ஓரம் குடிசைகளில் இந்தியாவெங்கும் வாழும் சமூகத்தின்நலிந்த பிரிவினரரின் கழுத்தை மிதித்திருப்பது நம்முடைய கால்கள் இல்லையா, அவர்கள் « we can’t breath ! » என்பது நம் காதில் விழுவதுண்டா ? ஆணனவக்கொலைகள் தெரிவிக்கும் அறம், கறுப்பினத்திற்கு எதிரான வெள்ளையரின் நிறவெறி அதிகாரத்திற்கு எந்த வகையில் குறைந்தது ?
பெண் சிவப்பாய் இல்லையென நிராகரிக்கிற தமிழன் தமக்குள்ள நிறவெறியை உணர்வதுண்டா? பதினாறு வயதினிலே மயிலு கூட வெள்ளைத்தோலுடன் இருக்கவேண்டும் என எதிர்பார்க்கும் தமிழ்த்திரை ஜாம்பவான்களும், திராவிடத்தை சிவப்புத் தோல் நடிகைகளிடம் அடகுவைக்கும் அரசியலும் இனமானமும் தெரிவிப்பதென்ன? இரண்டு தமிழ் பெண்களுக்கு கறுப்பு வண்ணத்தை அடித்து , தமிழிலக்கியத்தையும் அவமதித்து, « எங்கிட்டயும் இரண்டு பெண்கள் இருக்குப் பழகிக்குங்க » என வெடகமின்றி கிடைத்த கூலிக்கு மாரடிக்கும் தமிழறிஞர்களைப் பெற்ற தேசம் நம் தேசம். அதையும் வெட்கமின்றி ரசித்தோம். இங்கு யாருக்கும் வெட்கமில்லை என்பதுதான் உண்மை.
சினிமாக்களிலிருந்து சீரியல்கள்வரை கறுப்பு தமிழச்சிகளை வேண்டாமென்கிறோமே, தன்மானத் தமிழர்கள் இவற்றையெல்லாம் யோசிப்பதுண்டா? ஒருவேளை அவர்கள் இலக்கணத்தில் தமிழன் வேறு தமிழச்சி வேறா? உலகஅழகியாக அண்மையில் அங்கோலா நாட்டைச்சேர்ந்த ஒரு கறுப்பரினபெண்ணை தேர்வுசெய்திருக்கிறார்கள். உலக அழகிதேர்வுக்குழுவில் இடம்பெற்றிருந்த பலர் இவ்வளவிற்கும் கறுப்பர்களில்லை வெள்ளையர்கள். நம்மால் ஒரு கறுப்பு தமிழச்சியை குறைந்த பட்சம் தொலைகாட்சியில் செய்தி வாசிப்பவராகவாவது அனுமதிப்போமா?