Category Archives: Uncategorized

இசைவானதொரு இந்தியப் பயணம் -2

பிப்ரவரி- 2

சென்னை சூளைமேட்டிலிருந்த இந்தியன் வங்கி விடுதியில் விழித்தபோது காலை 7 மணி. நண்பர் சவியே கிடைத்த நேரத்தைச் சிக்கெனப் பிடித்து பராபரமேயென குறட்டைக்குள் உறங்கினார். உறங்குவதற்கும் புண்ணியம் செய்திருக்கவேண்டும். எனக்கும் படுத்தால் உடனே உறங்கிவிடும் பழக்கமுண்டு. சென்னையில் அன்றைக்கு வாய்க்கவில்லை. ஆக விழித்தும் விழியாமலும் படுத்திருந்தேன். நண்பர் எழுந்து உட்கார்ந்தார். ஏற்கனவே மேசையில் திறந்து வைத்திருந்த மடிக் கணினி முன்பாக அமர்ந்தார். அதை ஒரு வேடிக்கைபோல பார்த்துக்கொண்டிருந்தேன். கணினிக்கு உயிர்ப்பூட்டி இணைப்புக்கு முயன்று அதில் வெற்றியும் பெற்றதை வெளிச்சம் பூசிய அரையிருட்டில் தெரிந்த முகத்தில் காணமுடிந்தது. ஆனால் அடுத்த கணம் ஓ Merde! என்றார். அதனை இங்கே மொழி பெயர்த்து ஆகப்போவதொன்றுமில்லை. என்னதான் புற உலகுக்கென நமது நடை உடை பாவனைகளுக்கு முலாம் பூசினாலும், இப்படி இயல்பு குணங்கள் சொற்களூடாக திடீரென்று பல்லை இளிக்கும். சாயம் வெளுத்துவிடும். மனிதரின் பண்பு அவன் எழுதும் வார்த்தைகளில்லை பேசும் சொற்களில்தானிருக்கிறது. பொதுவிடங்களில் கவனத்துடன் காப்பாற்றப்படும் இயற்கைக்குணம் தனித்திருக்கும்பொழுதும், நெருங்கியவர்களுடன் உரையாடும்பொழுதும் வெளிப்பட்டு நாம் இன்னாரென்று காட்டிக்கொடுத்துவிடும்.

கணினியை மடித்து ஒதுக்கிவிட்டு என்னைப்பார்த்தார். அவருடைய கணினி எதிர்பாராமல் கிடைத்த இணைப்புகாரணமாக வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது. அப்பிரச்சினையைத் தொடவில்லை. புரிந்து கொண்டவிதமாக தலையாட்டினேன். இருவருமாக ஒருவர் பின் ஒருவராக காலைச் சடங்குகளை முடித்துக்கொண்டு விடுதிக் காவலரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு காப்பிவரவழைத்து குடித்தோம். நண்பர் சவியேக்குள்ள பிரச்சினை, கறுப்புக் காப்பி குடிப்பது. இந்தியாவில் பால் கலந்த காப்பி நன்றாக இருக்கிறது. கறுப்புக் காப்பியை தயாரிக்க நமக்குப் போதாதென்பது நண்பரின் அபிப்ராயம். மேலை நாடுகளில் எஸ்ப்ரெஸ்ஸோ காப்பிகளை குடித்துப்பழகியவர்களுக்கு நிலமை சங்கடந்தான். நட்சத்திர ஓட்டல்களில் அப்படியான சங்கடங்கள் இருக்காதென நினைக்கிறேன். வயிற்றில் பசி தலைகாட்டியது. விடுதிக் காவலரை அழைத்து நண்பருக்கு பிரெட் பட்டரென்றும், எனக்குப் பொங்கல் வடையென்றும் தீர்மானித்து வாங்கிவரும்படி அனுப்பினேன். எனது தொலைபேசிக்கு சிம் கார்டும் தேவைபட்டது. அதிலுள்ள சிக்கல்களை கூறிய விடுதிக்காவலர் கடவுச்சீட்டு அல்லது வேறு ஆதாரங்கள் வேண்டுமென்றார். என்னிடத்தில் OCI (Overseas Citizen of India) இருந்தது கொடுத்தேன். எங்கள் இருவருக்கும் நல்ல பசி சீக்கிரம்வந்தால் நல்லதென்று கூறி அனுப்பினேன். அவர் தலையாட்டியவிதம், அற்புதவிளக்கு பூதம்போலிருக்க அறைக்கதவை தாழ்ப்பாள்கூட போடாமல் விட்டுவைத்திருந்தேன். முதல் நாள் இரவு உணவென்ற பேரில் லூப்தான்ஸா எங்களைப் பழிவாங்கியிருந்தது. விமானம் இறங்க ஒரு மணிநேரமிருக்க  அவசர அவசரமாக ஒரு சாண்ட்விச். பின்னர் கொடுத்த தட்டை திரும்ப வாங்கும்போது கெச்சப்பும், டிஸ்யூவும் விநியோகித்தார்கள். நண்பருக்கு அதுபோல நான்கு சாண்ட்விச் வேண்டும்.

காலை மணி எட்டு. விடுதிக் காவலர் வரவில்லை. 8.30 ஆயிற்று வரவில்லை. சென்னையில் வந்திறங்கி ஆறு மணி நேரம் ஆகியிருந்தது. இந்திரனுக்கும், பதிப்பாள நண்பர் நடராஜனுக்கும் வருகையைத் தெரிவிக்கவேண்டும். குறிப்பாக நண்பர் இந்திரனுடன் பிப்ரவரி 5ந்தேதி புதுவையில் நடபெறவிருந்த கவிதை வாசிப்புக்காக தயாரிக்கவிருக்கும் ஒரு சிறிய கையடக்கமான புத்தகம் தொடர்பாக பேசவேண்டியிருந்தது. மறுமுனையில் கிடைத்தார். காலையில் என்ன திட்டமென்றார். எங்கள் அட்டவணையில் உங்களைச் சந்திப்பதென்று இருக்கிறது,  தொந்தரவுகளேதுமில்லையெனில் சந்திக்கலாமே என்றேன். அவரும் உங்களௌக்குக்காகத்தான் நேரத்தை ஒதுக்கியிருக்கிறேன் பேசலாமென்றார். அவர் வீட்டிற்கு ஏற்கனவே சென்றிருந்தாலும் முகவரி தேவைபட்டது. ஆட்டோகாரருக்குச் சொல்லவேண்டிய அடையாளத்தையும் தெளிவுபடுத்திக்கொண்டு காலை பத்து மணிக்கு வந்துவிடுவோமென தெரிவித்தேன்.

காலை 9மணி. உணவுடன் வந்துவிடுவதாகச் சொல்லிச்சென்ற காவலர் வரவில்லை:

சார்லி சாப்ளின் நடித்த பழைய கறுப்பு வெள்ளை படமொன்றுண்டு. அதில் சாப்ளின் பனிமலையொன்றில் கடும் பனிப்பொழிவால் கிடைத்த சிறுகுடிலொன்றில் தங்க நேரும். அக்குடிலில் வேறொரு மனிதரும் இவரைப்போலவே பனியிலிருந்து தப்பிக்க ஒதுங்கியிருப்பார். இருவரும் கொடூரப்பசிக்கு ஆளாகி எதையும் தின்னலாம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பார்கள். எதிராளியின் பார்வையில் சாப்ளின் கோழியாகத் தோற்றம் தருவார். நண்பர் சவியே என்னைப் பார்த்தபோது சாப்ளின்போலவே எனக்கும் இறக்கை முளைத்திருக்க தப்பிக்க வேண்டியிருந்தது.

விடுதியின் கீழே இந்தியன் வங்கி ஊழியர் சங்கத்தின் அலுவலகம். ஆங்கிலம் மற்றும் தமிழ் தினசரிகள் பிரிந்து கிடந்தன. கதவைத் தட்டினேன், எட்டிப் பார்த்த நபரிடம்:

– விடுதிக்காவலரின் பெயரைத்சொல்லி தேடுவதாகக் குறிப்பிட்டேன்.

– வெளியே போயிருக்கிறார் வந்துவிடுவார்- என்றார்.

அந்த வந்துவிடுவார் என்கிற சொல் தந்த உத்தரவாதத்தில் மயங்கி தெருவைப்பார்த்தேன். இந்தியப் பெரு நகரங்கள், தொல்பொருள் ஆய்வுத் துறையின் பராமரிப்புக்குட்படாமல் தமது ரகசிய குணங்களை போற்றிக் காக்கும் இலட்சோப இலட்ச தெருக்களில் அதுவுமொன்று. போடிகோவும் வண்ணப்பூச்சுமாக நிற்கிற கவர்ச்சிகரமான ஒற்றை வீடுகள், சோகையான நிறத்திற்கு வாழ்க்கைப்பட்டு மூக்கைச் சிந்தும் குடியிருப்புத் தொகுதிகள், முதலீட்டாளர்களை எதிர்பார்த்து நிற்கும் ஒண்டிக் குடித்தனங்களை உள்ளடக்கிய வீடுகள், அண்ணாச்சி கடை, நான்கு சக்கர தள்ளுவண்டியில் துணிக்கு இஸ்திரிபோடும் மனிதர், குப்பையை வாரலாமா விடலாமா என யோசித்து யோசித்து பதுகாப்பு எதுவுமின்றி குப்பைகளை சைக்கிள் வண்டியில் நிறுத்திய பிளாஸ்டிக் கூடைகளில் நிரப்பிக்கொண்டு மிகுந்த சிரமத்துடன் இருபக்கமும் தலையை திருப்பியவண்ணம் தமது வாகனத்தை முட்டி இழுத்து செல்லும் நடுத்தரவயது பெண்மணி. அரசு பெண்கள் விடுதியென்று எழுதியிருந்த ஒரு மாடி வீட்டின் தெருக்கதவு விசுக்கென்று திறக்கப்பட வெளிப்பட்ட இளம்பெண் ஒருத்தி தோளில் தொங்கியிருந்த பையை அவ்வப்போது முன்னால் தள்ளி பிடித்தபடி இடது கை கைக்குட்டையால் முகத்தில் அரும்பிய வியர்வையை ஒத்தியபடி நடந்துபோனார். இரண்டு ஆட்டோகாரர்கள் அருகருகே வண்டியை நிறுத்தியபடி உரையாடுகிறார்கள்.  சென்னை மொழியில் திட்டியபடி சிறுவனொருவனை திட்டிக்கொண்டு ஓடினான். சுவரொட்டியில் கண்ணீர் அஞ்சலி.

காலை மணி 10. விடுதிக்காவலர் வருவதாக இல்லை. பொறுமை இழந்து தொலைபேசியில் பிடித்தேன்.

– என்னங்க ஏதாச்சும் கிடைச்சுதா? நாங்க இன்றைக்கு காலமைதான் ஏதாவது சாப்பிடவேண்டுமென்று உங்களிடம் சொன்னது, நாளைகில்லை.

– அஞ்சு நிமிடத்திலே வந்துவிடுவேன் சார்.

ஐந்து நிமிடத்தில் வரவும் செய்தார். ஆனால் கைகளை வீசிக்கொண்டு 2G ஸ்பெக்ட்ரம் வழக்குக்கு முந்தைய ராஜா போல நடந்துவந்தார்.

– என்னங்க சும்மா வறீங்க..

– கோபிச்சுக்காதீங்க சார். ஒரு வேலையா போயிட்டேன். நீங்கள் ஒரு மிஸ்டு கால் கொடுத்திருந்தால் அப்போதே வாங்கி வந்திருப்பேன். பத்து நிமிடம் பொறுக்கமுடியுமா?

மிஸ்டு காலையோ கையையோ கொடுக்கவிருப்பமில்லாததால்

– இல்லைங்க பரவாயில்லை. நாங்கள் போகிற வழியில் பார்த்துக்கொள்கிறோம், என்று கூறிவிட்டு கீழிருந்தபடியே நண்பரை அழைத்தேன். பிரெஞ்சு நண்பர் இறங்கிவந்தார்.

ஒரு ஆட்டோவைப் பிடித்து, நண்பர் இந்திரன் முகவரியைக் கூறினேன். ஆட்டோகாரர் புரிந்துகொண்டார் ஐம்பது ரூபாய் கேட்டார். நண்பரும் நானுமாக ஏறிக்கொண்டோம். வழியில் ஐரோப்பிய மற்றும் இந்திய உணவுகள் சேர்ந்தாற்போல கிடைக்கும் உணவு விடுதி தென்படுகிறதா எனபார்த்தோம். எதுவுமில்லையென்றானது. நண்பர் இந்திரன் வீட்டிற்கு பத்து நாற்பதுக்கெல்லாம் வந்தாயிற்று. எதிர்பார்த்ததுபோலவே காலை உணவு ஆயிற்றா என்றார். இல்லையென்றேன். இங்கேயே சாப்பிடலாமே, தோசை இருக்கிறதென்றார். தோசையுடன் பூரியும் வந்தது. பிரெஞ்சு நண்பர் விருப்பமாக சாப்பிட்டார், நானுந்தான்.

மூவருமாக காலை உணவுக்குப்பிறகு ஏற்கனவே கூறியதுபோல கவிதைக் கையேடு தொடர்பாக நண்பர் இந்திரனுக்குத் தெரிந்த கணினி அலுவலகத்துக்குச் சென்றோம். காலை பதினோரு மணிக்கே வெயிலின் கடுமை தெரிந்தது. சில பிழைகளை திருத்தியதோடு எங்கள் பணி முடிந்தது.  சிறிய கலைபெட்டகமாக வடிவமைக்கப்பட்ட அப்புத்தகத்தின் வெற்றிக்குரியவர் இந்திரனென்று சொல்லலாம்.  இந்திரனுக்குள் ஒரு பிரம்மனும் உடன்வாழ்ந்ததை அன்றுதான் கண்டேன். மனதில் நிறைவுடன் மதிய உணவுக்கு ஒரு மலேசியன் அசைவ விடுதிக்குச் சென்றோம்.  விலை, தரம், அமைதி நன்றாக இருந்தன. மீண்டும் கணினி  கூடத்திற்கு செல்லவேண்டியிருந்தது. இறுதியாக ஒருமுறை படிவத்தைப் பார்த்து மனதுக்கு நிறைவு ஏற்பட்டவுடன் திரும்பினோம். திரும்பியபோது மாலை மணி ஏழு. அன்று நண்பர் எஸ்.ராவுக்கு இயல்விருது பெற்றமைக்காக ரஜனியின் தலமையில் பாராட்டுவிழா இருந்தது. நேரம் இணக்கமாக இல்லாததாலும், சுதா ராமலிங்கம் கிரீன் பார்க் ஓட்டலில் எங்களுக்கு விருந்து ஏற்பாடு செய்திருந்ததாலும் செல்ல முடியவில்லையென்கிற வருத்தம்.

மாலை வெகுநேரம் இந்திரனுடன் ச¨ளைக்காது இலக்கியம் பேசினோம். நண்பர் சவியே தமது Philomensurable குறித்து இந்திரனுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினார். இடையில் நான் மொழி பெயர்க்கவேண்டியிருந்தது. என்ன இருந்தாலும் இருவருக்கும் தெரிந்த மொழியில் இடைமனிதரின்றி உறவாடுவதிலுள்ள புரிதல் சாத்தியம் மொழிபெயர்ப்பில் கிடைக்காதென்பது நிச்சயம். நேற்றைய இன்றைய இலக்கிய ஆளுமைகள் சிற்பக் கலைஞர்கள் ஓவியர்களென்று பேச்சு நீண்டது. இடைக்கிடை நண்பர் இந்திரன் யாளிப்பதிப்பகத்தின் வெளியீடுகளைப் பகிர்ந்துகொண்டார்.

பிரான்சிலிருந்து புறப்படும்போதே காய்ச்சலுடன் புறப்பட்டிருந்தேன். காய்ச்சல் தோள்வலியையும் சேர்த்திருந்தது. அவருக்குத் தெரிந்த மருத்துவரிடம் நண்பர் இந்திரன் அழைத்துப்போனார். அவர் நோய்நாடி நோய்முதல்நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்ப செயல்படுகிற மருத்துவரென்று விளங்கிக்கொண்டேன். அபூர்வமான மனிதர். நண்பர் இந்திரன் அவரைப்பற்றி முன்னதாகக் கூறியிருந்த வார்த்தைகளுக்குப் பழுதின்றி நடந்துகொண்டார்.

இரவு எட்டு மணிக்கு நண்பர் இந்திரனின் சகோதரர் வாகனத்தில் கிரீன்பார்க் ஓட்டலுக்குச்சென்றோம். சுதாராமலிங்கம் அவர் துணைவர் ராமலிங்கம் அடுத்தவாரம் மணமுடிக்கவிருந்த அவர்கள் பிள்ளை, பெங்களூர் சட்டக்கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரியும் அவர் மகளென்று அனைவரும் வந்திருந்தனர். பெரிதாக வயிற்றுக்கு ஈயப்படுவதற்கு முன்பாக சிறிதாக செவியையும் கவனிக்க நினைத்ததால் அரசியல், இலக்கியம், பெண்ணுரிமை, உளப்பகுப்பாய்வு, கீழைநாடுகளைப்பற்றிய ஐரோப்பிய பார்வையென உரையாடல் நீண்டது.

தொடரும்…

இசைவானதொரு இந்தியப்பயணம் -1

பிப்ரவரி 1.

முதல்நாள் எனது துணைவி, தனது மகள் வயிற்று பேரனுடைய முதல் ஆண்டு பிறந்த நாளைக்கொண்டாட அமெரிக்கா சென்றாள். தனித்து அவ்வளவுதூரம் பயணிக்க தயக்கம் காட்டினாள் நான் நவீன பெண்கள்  அவதாரத்தையெல்லாம் விளக்கி, ஊக்கப்படுத்தினேன். இங்கே பார், உண்மையில் நீ இல்லாமல் இந்தியா செல்ல எனக்குங்கூட பயமென்றேன்.  பொய் சொல்லாதப்பா, உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதா? என்ற கண்களைச் சமாதானபடுத்த வேண்டியிருந்தது. ஊடியவளை உணராமல் போனால் எழுத்தாளானாக இருந்து என்ன பயன் சொல்லுங்கள்.

அமெரிக்கா புறப்படும் முன்னரேயே எனது பெட்டிபடுக்கைகளையும் பதினைந்து நாளுக்காக துணிமணிகளையும் வேண்டிய பணத்தையும் கொடுத்து, எனது பயணத்தையும் ஒழுங்குபடுத்தியிருந்தாள். என்னை ஊருக்குத் தயார்படுத்திய பட்டியலில் மூன்றாவதாகக் கைசெலவுக்கான பனத்தையும் சேர்த்திருக்கிறேன் கவனித்தீர்களா? ஏதோ வியாபாரம், கடை, எழுத்தென்று அலைந்துகொண்டிருக்கிறேனே தவிர, உண்மையில் நிதிமந்திரி அவள்தான். எழுத்தாளனாக இருக்கிறோமில்லையா? எனது புனைவு பிற இடங்களில் ஜெயிக்கிறதோ இல்லையோ அவளிடத்தில் ஜெயிப்பதற்கு கவனம் எடுத்துக்கொள்கிறேன்.

பிப்ரவரி ஒன்றாம் தேதி. வழக்கம்போல நான்கு மணிக்கு எழுந்தேன். கடந்த சில நாட்களாக Strasbourg நகரில் நல்ல குளிர். கவனமாக உடுத்திக்கொண்டு மனைவி குறித்துவைத்திருந்த கட்டளைகளின் படி வீட்டை இருத்திவிட்டு காரில் இரு பெட்டிகளையும் ஏற்றிக்கொண்டு, அங்கிருந்து எனது பிரெஞ்சு நண்பர் வீட்டிற்குச் சென்று அவரையும் அழைத்துக்கொண்டு, இரயில் நிலையம் அருகிலிருக்கும் எனது கடைக்கருகே வாகனத்தை நிறுத்திவிட்டு, மூச்சிரைக்க பெட்டிகளை நண்பரும் நானுமாக இழுத்துக்கொண்டு ஓடி, இரயில் நிலையத்துக்கருகிலுள்ள லூப்தான்ஸாவின் பேருந்து நிறுத்தத்தை அடைந்தபோது அதிகாலை நான்கு மணி பத்து நிமிடம் இருக்கலாம். பேருந்தில் எங்களைப்போலவே பிராங்க்பர்ட் விமானதளத்திற்குச் செல்லவிருந்த சக பயணிகள் வரிசையில் குளிரும் பெட்டியுமாகக்  காத்திருந்தார்கள். பேருந்து ஓட்டுனருக்கு குளிரைப்பற்றிய கவலை இல்லையென நினைக்கிறேன். நான்கு மணி பதினைந்து நிமிடத்திற்கு முன்பாக கதவைத் திறக்கமாட்டேன் என்பதுபோல நிதானமாகத் தினசரியைப் புரட்டிக்கொண்டிருந்தார். ஏதோ தயவு பண்ணவிரும்பியவர்போல ஓரிரு நிமிடங்களுக்கு முன்பாக சொர்க்கவாசலைத் திறந்துவிட்டார். ஸ்ட்ராஸ்பூர்கிலிருந்து 250 கி.மீட்டரிலுள்ள பிராங்பர்ட் செல்ல இரண்டரை மணி நேரம் ஆகிறது. பேருந்தில் ஒரு குட்டித் தூக்கம். ஏழேகால், ஏழரைக்கெல்லாம் பிராங்பர்ட்டை அடைந்துவிட்டோம். நுழைவாயிலில் பிரெஞ்சு நண்பருக்கல்ல எனக்குச் சோதனை. அந்நியர்கள் குறிப்பாக இஸ்லாமியர்கள், கறுப்பர்கள் (இந்தியர்களும் அதிலடக்கம்) என்றால் கையில் குண்டினை வைத்துக்கொண்டு அலைகிறார்களென்ற பார்வை ஐரோப்பியர்களுக்கு இருக்கிறது. வேண்டா வெறுப்பாக அவனிடம் எனது கடவுசீட்டையும் மற்ற அத்தாட்சிகளையும் காண்பித்துவிட்டு ‘புறப்பாடு’ வரிசைக்கு வந்தோம். கையில் மிண்ணனு பதிவுச்சீட்டு அதை எந்திரத்தில் கொடுத்து பயணத்தைப் பதிவு செய்து அதற்கான அட்டையை எடுக்கவேண்டும். எந்திரத்திற்குக்கூட நான் கறுப்பனென தெரிந்திருக்கவேண்டும் அடம் பிடித்தது. அதைச் சமாதானப்டுத்துவதற்குள் போதுபோதுமென்றாகிவிட்டது. ஒருவழியாகச் சமாளித்து பெட்டிகளை பதிவு செய்துவிட்டு, சுங்க அதிகாரிகளையும் கடந்து பாதுகாப்புசோதனையை முடித்துக்கொண்டு, கை பைக்காக காத்திருந்தோம். நண்பரின் பை வந்தது. எனனுடையதில்லை. ஓர் ஆரியப்பெண் -இடலரின் தூரத்து சொந்தமாக இருக்க வேண்டும். கையை அசைத்தாள். பின்னாலிருந்த நண்பரைப் பார்த்தேன், அவர் வேறு திசையில் கைகாட்டினார். எனது கைப்பையை திறந்துவைத்துக்கொண்டு ஏதோ இரணிய கசிபுவின் வயிற்றைக் கிழித்த நரசிம்ம அவதாரம்போல மற்றொருத்தி. அருகிற் சென்றேன். விஸ்கி போத்தல் கைப்பையிற்கூடாதென்றாள். பத்துவருடங்களுக்கு மேலாக ஒரு விஸ்கி போத்தல் எங்கள் வீட்டில் சீண்டுவாரின்றி இருந்ததென்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களாவென்று தெரியாது. சிகரேட், மது, இத்யாதிகளை தொட்டது கிடையாதென சத்தியமெல்லாம் செய்யமாட்டேன். ஆனாலும் எனக்கு விருப்பமானவை பட்டியலில் அவைகளெல்லாம் இல்லை. எப்போதாவது இந்த எப்போதாவதிற்கு இரண்டு மாத இடைவெளியிளியிலிருந்து ஆறுமாதம்வரை பொருள் கொள்ளலாம். ஆகப் பாட்டிலுக்காக கைப்பையை பதிவு  செய்து விமானத்தில் அனுப்பிவிட்டு பறந்து, ஓடி, நடந்து, நீந்தி எல்லா பரிசோதனைகளையும் மீண்டும் கடந்து விமானத்தின் நுழைவாயிலைக் கடந்தபோது காத்திருந்த  கொத்தவரங்காய் பணிப்பெண் களின் குட்டன் மோர்கனை ஏற்றுக்கொண்டு நொண்டி நடந்து கபினுக்குள் கையிருப்பை துருத்திவிட்டு நாற்காலிக்குள் அடைபட்டபோது காலை பத்து. மிக மோசமான சேவை. சென்னையில் எங்களை வரவேற்க தோழி சுதாராமலிங்கம் வந்திருந்தார். அதிகாலை சென்னையை தரிசித்துக்கொண்டு இந்தியன் வங்கி விருந்தினர் விடுதியில் படுத்தபோது விடிந்துவிட்டிருந்தது.

தொடரும்…

பண்பாட்டு சந்திப்பு

அன்புடையீர்

எதிர்வரும் பிப்ரவரி மாதம் 5ந்தேதி மாலை ஆறுமணி அளவில் இந்திய பிரெஞ்சு பண்பாட்டு உறவுகளை மேம்படுத்தும் வகையில் புதுச்சேரியில் சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளோம். இத்துடன் அழைப்பிதழை இணைத்திருக்கிறோம். நவீன தமிழிலக்கியத்தைச் சார்ந்த மூத்த பெருமக்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள உள்ளனர். தாங்களும் விழாவில் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்

நா.கிருஷ்ணா

மூன்று மொழிபெயர்ப்புகள்

வணக்கம் நண்பர்களே

அண்மையில் எனது மூன்று மொழிபெயர்ப்புகள் வந்துள்ளன. உங்கள் பார்வைக்கு:

1. உலகங்கள் விற்பனைக்கு – அதிர்வுக்கதைகள்

மேற்கத்திய உலகில் Sudden Fiction என்றொரு வகைமையுண்டு. பின்னர் கவிதைகளிலும் எதிரொலித்தது. முடிவு எதிர்பாராததாக இருப்பது அதன் பிரத்தியேகச் சிறப்பு. அவற்றை வாசிக்கையில் சில அதிர்வுகளை வித்தியாசமாக உணர்ந்தேன். இக்கதையில் இழையோடும் அதிர்வு அசப்பில் சீரான ஓட்டத்தையும் ஆழ்ந்துணர்கிறபோது இதயத் துடிப்பில் ஒரு சுனாமியையும் ஏற்படுத்தும் வல்லமை கண்டு அதிர்ந்தது உண்மை.

உலகங்கள் விற்பனைக்கு
அதிர்வுக்கதைகள்
விலை-90ரூபாய்
சந்தியா பதிப்பகம் 57, 53rd street
சென்னை -600083, இந்தியா

2. உயிர்க்கொல்லி
ஐந்து பிரெஞ்சுக் கதைகளின் தொகுப்பு.
விலை -100ரூபாய்

இதற்கு முன்பு செவ்வியல் கதைகளை மட்டுமே வாசித்து பழக்கப்பட்டிருக்கும் தமிழ் இலக்கிய வாசகர்கர்களுக்கு இந்தக்கதைகள் வாசிப்பில் புதிய அறைகூவலை முன்வைக்கின்றன. மனித மனத்தின் நவீன சிடுக்குகுகளை இரக்கமின்றி வெளிப்படுத்துகின்றன. எல்லாக்கதைகளும் இலக்கிய வாசிப்பு சுகம் மட்டுமல்ல; அமைதியைக் குலைக்கும் ‘புனிதச் சடங்கு’ என்பதை நிறுவும் தொகுப்பு இது.

3. மார்க்ஸின் கொடுங்கனவு
டெனிஸ்கோலன் தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா
விலை 200ரூபாய்
மார்க்ஸிய சித்தாந்தத்தை பழுதறக் கற்றுத் தேர்ந்தவரும் தத்துவ பேராசிரிஅய்ருமான டெனிஸ்கோலன் பிரெஞ்சிலளித்த நூலின் தமிழாக்கம் இந்நூல். கார்ல்மார்க்ஸ் கட்டமைத்திருக்கும் மார்க்ஸிய சித்தாந்தத்தை பழமைவாதிகளிடமிருந்து விடுவித்து நவீனக் காலத்திற்கு ஏற்ற விதத்தில் அதில் மாற்ரங்களைக்கொண்டுவருவதில் பெரும்பிடிப்புள்ள இவரது கட்டுரைகள் மார்க்ஸியம் பற்றிய மஏஏஒரு பரில்மாணத்தை துலக்கமாக்குகிறது.

மானுட வாழ்க்கையில் உற்பத்தி, நுகர்வு என்னும் இரண்டைத் தவிர்த்துப் பிறவற்றைப் புறந்தள்ளிவிடுவதும் முழுமுயற்சியில் முதலாளித்துவம் இறங்கியுள்ள இன்றையச் சமுதாயச் சூழல் குறித்தும் மார்க்ஸிய சிந்தனைகள் மறுவாய்வு செய்யப்படவேண்டியதன் அவசியம் குறித்தும் விரிவாகவும் அறிவுச் செழுமையுடனும் பொதியப்பட்டுள்ள இக்கட்டுரைகள்  பயனுள்ளவகையிலான செறிவுமிக்க விவாதங்களை உருவாக்ககூடியவை.

மேற்கண்ட இருநூல்களும்
காலச்சுவடு பதிப்பகம்
பழைய எண்130, புதிய எண்257
திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை
சென்னை-600005

கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

அண்மையில் விஷ்ணுபுர அறக்கட்டளை பூமணியை விருதுகொடுத்து கொண்டாடியிருக்கிறது. நண்பர் ஜெயமோகனுக்கு முகம் விருது, நண்பர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு இயல் விருது. எழுத்தாளனை வாழுங்காலத்தில் கொண்டாட மனம் வேண்டும். வேருக்கு நீர்போல அது இன்றிமையாதது. அது எழுத்தாளருக்கு மட்டுமல்ல சம்பந்தப்பட்ட மனைவி, மக்கள் மகிழ்ச்சிகொள்ளும் தருணம். நமது கடந்தகால இலக்கிய வரலாற்றில் இப்படியொரு வாய்ப்பில்லை. இன்று அதைக் கருத்தில்கொண்டு இயங்கும் நல்லுள்ளங்களுக்கு நன்றி. பரிசுபெற்ற நண்பர்களை பாராட்டும் நேரத்தில், உரியவர்களை தேர்வுசெய்து பாராட்டும் பரிசுக்குழுவினருக்கு மீண்டும் நன்றிகள்.

—————————————–

வணக்கம் நண்பர்களே!

நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்.

ஒரே சமயத்தில் சொந்தத் தொழில் கணக்கு வழக்குகள், குடும்பம், இலக்கியம், புதிதாக ஏற்பாடு செய்துள்ள இலக்கிய அமைப்பென கவனத்தை செலுத்த கடினமாகத்தான் உள்ளது. இவற்றோடு கூடுதலாகக் காய்ச்சலும், கணினிப் பிரச்சினைகளும் சேர்ந்துகொண்டன. ஸ்விஸ் அருகில் ஒரு பணிபுரியும் இளையமகள் ஒவ்வொருவாரமும் வீட்டிற்கு வந்து விடுவாள், இவ்வாரம் அவள் காருக்குப்பிரச்சினை. எனவே நாங்கள் அங்கு செல்லவேண்டியதாயிற்று. எங்கள் ஊரிலிருந்து 145கி.மீட்டரில் அவ்வூர்இருக்கிறது. மகளுடன் நேரத்தை செலவிட்டதால் எல்லாபெற்றோர்களையும் போலவே இரண்டு நாட்களும் மகிழ்வாக இருந்து பொங்கலை எளிமையாகக் கொண்டாடிவிட்டுத் திரும்பினோம்.
————————————————-

2011 நல்ல வருடமாக அமைந்தது, பாரீஸிலிருக்கும் மகன், அமெரிக்காவிலிருக்கும் மகளென இரு தரப்பிலும் பேரப்பிள்ளைகள்- இளைய மகளுக்கு படிப்பை முடித்திருந்த கையோடு ஒரு நல்ல நிறுவனத்தில் வேலை- மாத்தாஹரி நாவலுக்கு கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை பரிசு என மகிழ்ச்சிக்குக்குறைவில்லை. இதற்கிடையில் சிங்கப்பூர் தமிழ் புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் மாநாட்டில் தமிழவன் வாசித்திருந்த கட்டுரையில் தமிழின் முக்கிய புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் பட்டியலில் ஈழ நண்பர்களோடு இந்திய புலம்பெயர்ந்தவர்களையும் கணக்கிற்கொண்டு காஞ்சனா தாமோதரனையும், என்னையும் அப்பட்டியலில் இணைத்து எங்கள் நூல்களைப்பற்றி விரிவாக அல்சி பாராட்டியிருந்தார். கட்டுரை அனுப்பிய நண்பர்கள் ரெ.கார்த்திகேசும், கோ. ராஜாராமும் அக்கட்டுரையை சிங்கப்பூர் மாநாட்டு தொகுப்பு நூல் வரும்வரை பிரசுரிக்கக்கூடாதென அன்புக்கட்டளையிட்டதால், நண்பர்கள் சில காலம் பொறுத்திருக்க வேண்டும்.

—————————————————————–

எனது மூன்று நூல்கள்:

இவ்வருடம் எனது மூன்று மொழிபெயர்ப்புகள் வந்திருக்கின்றன. சந்தியா பதிப்பகத்திலிருந்து “உலகங்கள் விற்பனைக்கு”, காலச்சுவடு பதிப்பகத்திலிருந்து உயிர்க்கொல்லி என்கிற சிறுகதைத் தொகுப்புகளும், ‘மார்க்¢ஸின் கொடுங்கனவு’ என்லிற மார்க்ஸியத்தைப்பற்றிய விமர்சன நூலும் வந்துள்ளன. இவற்றைப் பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் எழுதுகிறேன்.
——————————————

மொழிவது சுகம் டிசம்பர் 15

காந்திஎன்றகுறியீடு

கடந்த மாதம்(அக்டோபர்2) நான் வசிக்கின்ற Strasbourg நகரில் காந்தி சிலையை முதன்முதலாகத் திறந்தார்கள். 11-11-2011 அன்று பாரீஸ் நகர புறநகரொன்றில் மற்றொன்றை திறந்தார்கள். வொரெயால்(Voreyal) தமிழ்ச்சங்க தலைவர் இலங்கைவேந்தன் எனக்கு அறிமுகமானவர். வருடந்தோறும் தமிழ் நிகழ்ச்சிகளை நடத்தி அப்பகுதிவாழ் தமிழ்மக்களை ஒருங்கிணைத்து வருகிறவர். இவ்வமைப்பு தமிழ்பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறது. ஆர்வமுள்ள சிறுவர் சிறுமியர் தமிழ் கற்று வருகின்றனர். வொரெயால் தமிழ் அமைப்பு நடத்தும் பொங்கல் நிகழ்ச்சியில் தமிழ் படிக்கும் சிறுவர் சிறுமியர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் தவறாமல் இடம்பெறும். வெளிநாடுகளில் வாழும் தமிழர்களை பொறுத்தவரை தமிழ் கற்கும் வாய்ப்புகள் மங்கிய சூழலில் இதுபோன்ற வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருபவர்களை வணங்க வேண்டியிருக்கிறது. நண்பர் இலங்கைவேந்தன்,  பாரீஸில் காந்திக்கு சிலைவைக்க முயற்சிகளெடுத்து அதில் இன்று வெற்றியும் பெற்றிருக்கிறார். இருமாதங்களுக்கு முன்பு சிலை திறக்க யாரை அழைக்கலாமென என்னிடம் யோசனைக் கேட்டார். எனக்கு இன்றைய தேதியில் முன்னாள் இந்திய அதிபர் அப்துல் கலாமைக் காட்டிலும் பொருத்தமான வேறு நபர்கள்  இல்லை என்பதை வற்புறுத்தினேன் .  தமிழ்நாட்டில் நேர்மையானவர்கள் என நம்பப்படுகிறவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டேன். இந்தியா சென்றதும் அவர்களைச் சந்தித்து பேசுவதாக என்னிடத்தில் கூறினார். அவ்வாறு அவர் செய்யவில்லை, இந்தியாவிலிருந்து திரும்பியபிறகு என்னைச் சமாதானபடுத்தும் வகையில் சில காரணங்களைக் கூறினார். அதை நான் வேறுவிதமாக ஊகித்தேன்: காந்தி சிலையை நிறுவ உழைப்பு பொருள் இரண்டும் தேவைபட்டன. உழைப்பை தர முன் வரலாம்,  ஆனால் பொருட்தேவையை ஓரளவுதான் சுமக்க முடியுமென்ற நிலை. இது எல்லோருக்கும் நேர்வதுதான். மீன் விற்றாலென்ன காசு நாறாதில்லையா?  சுமையை பகிர்ந்துகொள்ளும் செல்வந்தர்களும் அரசியல்வாதிகளும் தேவையாக இருந்தனர். எனவே அவர்களை அழைக்க வேண்டிய நிர்ப்பந்தம். எது எப்படியிருப்பினும் காந்தி முதன் முறையாக சிலை வடிவில் பாரீஸ் மண்ணில் கால் பதிக்க நண்பர் எடுத்த பெருமுயற்சி நனவாகியுள்ளது. வேறு இந்தியர்கள் சாதிக்காதது, பாராட்டுக்கள்.

இன்று காந்தி என்ற சொல் வணிகமொழியில் சொல்வதெனில் ஒரு விற்பனை குறியீடு. காங்கிரஸில் ஆரம்பித்து கசாப்புகடைவரை அவரவர் சரக்கினை விற்க முதலீடற்ற விளம்பரமாக காந்தி உதவுகிறார். இந்தியாவுக்கு மட்டுமல்ல இந்தியா துணைக்கண்டத்தைச்சேர்ந்த பலருக்கும் காந்தி உபயோகமாகிறார். இந்தியர்களோடு, பாகிஸ்தானியரும், வங்காள தேசத்தினரும், இலங்கையரும் மேற்கத்திய நாடுகளில் காந்தியின் பெயரால் நடத்தும் ரெஸ்டாரெண்ட்டுகளில்  பிரியாணியும், முர்க்மசாலாவும், நான் கீமாவும், சிவப்பு ஒயினும், விஸ்கியும், பீரும் விலைபோகிக்கொண்டிருக்கின்றன.  அக்டோபர் 2ல் காந்தியை ஞாபகம் வைத்து சிலைக்கும் காந்தி சமாதிக்கும் தலைவர்கள் அஞ்சலி செய்ய மறப்பதில்லை.

நாம் இப்படியிருக்க அமெரிக்காவின் மார்ட்டின் லூதர்கிங்கில் ஆரம்பித்து தென் ஆப்ரிக்காவின் நெல்சன் மாண்டெலா, பர்மாவின் அவுன் சன் ஸ¥ கீ (Aung San Suu Kyi) போன்ற உலகறிந்த பெருமக்கள்- காந்தியைபோலவே பிறருக்காக தங்களை வருத்திக்கொள்கிறவர்கள் – காந்தியின் சீடர்களென சொல்லிக்கொள்வதில் நிறைவு காண்கிறார்கள். அன்னா ஹசாரே தம்மை காந்தியுடன் ஒப்பிடவேண்டாமென்கிறார்.  காந்தி இந்தியாவின் தேசிய அடையாளம், பாரம்பரிய சின்னம். காந்தியம் குறித்த விவாதங்கள் தேவைதான், ஆனால் காந்தி என்ற மனிதரின்  அப்பழுக்கற்ற நெறியும் அறத்தின் மீதான அவரது பிடிமானமும் விவாதங்களுக்கு அப்பாற்பட்டது. எதையும் சந்தேகித்தே பழக்கப்பட்டவர்களிடம் நாம் விவாதிக்க ஒன்றுமில்லை. இன்றைய உலகிற்கு காந்தியின் தேவை தவிர்க்கமுடியாததது. அவரது சாத்வீகமான அரசியல் மட்டுமல்ல, அடிதட்டு மக்களின் வளர்ச்சியில் அக்கறைகொண்ட வாழ்வாதார பொருளியலும் முன்னெப்போதும் கண்டிராத அளவிற்கு தேவையாகிறது.

புனைவும்நிஜமும்.

டேனி போயலின் Slumdog Millionaire தி ரை ப்படத்தில்வரும் சம்பவம் உண்மையாகியிருக்கிறது. சில நேரங்களில் எது புனைவு எது உண்மையென்று பிரித்துணரமுடியாமல் குழம்பிப்போகிறோம். இச்சம்பவம் அதற்கு ஓர் நல்ல உதாரணம். உண்மைசம்பவங்களின் அடிப்படையில் நாவல்களும், திரைப்படங்களும் வருவதுண்டு. ஆனால் புனைவு உண்மையாகுமா? நடந்திருக்கிறது நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் என்ற நிகழ்ச்சில் பங்குகொண்டு ஜெயித்திருக்கும் 26 வயது இளைஞனரான சுசில்குமார் என்ற இளைஞர் பீகார் மாநிலத்தைச்சேர்ந்த மோத்திஹரி என்ற சிறிய நகரத்தைச் சேர்ந்தவர். அரசாங்கத்தில் எழுத்தராக பணிபுரிகிறாராம். ஒரு ஏழை விவசாயின் மகன் என்கிறார்கள். அவரது முன்னும்பின்னுமான வாழ்க்கையும் திரைப்படத்தை ஒத்திருந்ததா ஒத்திருக்குமா என்பது தெரியவில்லை.

காலபைரவன்

அந்நிய மொழிகளில்வரும் படைப்புகளை முடிந்தவரை உடனுக்குடன் வாசிக்கும் பழக்கமுண்டு. வாங்கிய வேகத்தில் பத்து பக்கங்களுக்கு மேல் தொடர்ந்து படிக்க முடியாமற்போன நூல்களையும் நிறைய வைத்திருக்கிறேன். பிரெஞ்சிலும் ஆங்கிலத்திலும் வாசிக்கிறபோதெல்லாம் தமிழில் இதைக்காட்டிலும் நல்லவாசிப்புகளை சந்தித்திருக்கிறேன் என்ற பெருமிதமும் இடைக்கிடை வருவதுண்டு. தமிழின் முன்னணி எழுத்தாளர்கள் பலரின் படைப்புகள் உலகறிந்த எழுத்தாளர்களின் எழுத்துக்களைக்காட்டிலும் மீசுரமானவை. அக்டோபர் மாத உயிரெழுத்தில் ‘விஷம் தோய்ந்த நெடுங்கனவின் நகம்’ என்ற சிறுகதையை படித்தேன். காலபைரவன் என்ற இளைஞர் எழுதியிருக்கிறார். சொல்ல வார்த்தைகளில்லை. தமிழில் அண்மைக்காலத்தில் வெளிவந்த சிறுகதைகளுள் முக்கியமானதொரு படைப்பு. இக்கதையை மீண்டும் நினைவுகூரும்வகையில் நவம்பர் மாதம் 14ந்தேதி பிரெஞ்சு தினசரியில் மர்செய் என்ற பிரதேசத்துக்கருகே நடந்ததாக ஒரு சம்பவம். இந்தியக்குடும்பத்தைசேர்ந்த நாற்பது வயது பெண்மணி புத்தி சுவாதீனமற்ற 6 வயது மகனை கழுத்தை இறுக்கி கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டாள் என்பது செய்தி. காரணமும் காரியமும் நெருக்கமானவைதான் அந்த நெருக்கம நூலிழையாகவும் இருக்கலாம், பாரிய இடைவெளியாகவும் இருக்கலாம். முடிவின்றி காரணகாரியத்தை அறிவுகொண்டு புறத்தில் தேடுவது வானத்தைக் கைகொண்டு தொடும் முயற்சி. காலபைரவன் காரணகாரியத்தை மனித மனங்களுக்குள் தேடுகிறார்.

ஓடப்பரும்உதையப்பரும்..

1961ம் ஆண்டு அக்டோபர் 17 பிரான்சுநாட்டின் காலனிய வரலாற்றில் ஒரு கறைபடிந்த தேதி. பாரீஸ் மாநகரில் அமைதியாக ஊர்வலம்சென்ற அல்ஜீரிய மக்களில் பலர் பிரெஞ்சு காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை நினைபடுத்தும் தேதி அது. கடந்தமாதம் அதனுடையைய ஐம்பதாவது ஆண்டு தினம். பொதுவாக காலனிய வரலாறென்பது ஆதிக்க சக்திகளின் அதிகார அடக்குமுறைகளாலும்  அடிமைபட்டநாடுகளின் அபயக்குரல்களைக்கொண்டும் எழுதப்பட்டது. எஜமானர்கள் எஜமானர்களாகவே இருக்கவேண்டுமா என்ன? அடிமைப்பட்டுக்கிடந்தவர்கள் தலைநிமிர நினைக்கிறார்கள். அந்நியர் ஆதிக்கத்திற்கு எதிராகக் குரல்கள் ஒலிக்கின்றன. காற்று திசைமாறுகிறது. ஓடப்பராயிருந்தவர்கள் உதையப்பர்களாக மாறுகிறார்கள், அதற்கான விலையையும் அவர்கள் செலுத்தவேண்டியிருந்தது. பிரான்சுநாட்டின் காலனிகளில் ஒன்றாக இருந்து விடுதலைபெற முயன்ற அல்ஜீரிய மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் ஏராளம். அதுபோன்ற அநீதிகளின் சாட்சியாகவிருந்த நாட்களில் ஒன்றுதான் 1961ம் ஆண்டு அக்டோபர்மாதம் 17ந்தேதி. தேதியின் அடிப்படையில் பார்க்கிறபோது சம்பவம் ஒரு நாள் அடையாளத்தை பெற்றதைப்போல தோற்றம் தரினும் பின்புலத்தில் பல மாதங்களின் – அதாவது உண்மையில் ஆகஸ்டுமாதத்தின்  இறுதியில் தொடங்கிய பிரச்சினை அக்டோபர் இறுதிவரை நீடித்தது.

ஆப்ரிக்கக் கண்டத்தில் இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையினராகக்கொண்ட அல்ஜீரியாநாடு பிரெஞ்சு காலனியாக இருந்துவந்தது. இரண்டாம் உலகப்போருக்குப்பின் காலனிநாடுகள் பலவும் விடுதலைபெறவிரும்பியதைபோலவே அல்ஜீரியமக்களும் விடுதலை பெற விரும்பினர். அவர்களை வழி நடத்த இரண்டு விடுதலை இயக்கங்கள் தோன்றின. ஒன்று தேசிய விடுதலை முன்னணி (Front de Libération Nationale), மற்றொன்று அல்ஜீரிய தேசிய இயக்கம். இவை இரண்டினுள் முதல் இயக்கம் வன்முறையில் நம்பிக்கை வைத்திருந்ததால் பிரெஞ்சு அரசாங்கத்தின் ஆதரவு இரண்டாவது இயக்கத்திற்கு. இவ்விரண்டு அமைப்புகளுக்கும் பிரான்சுநாட்டில் குடியேறியிருந்த அல்ஜீரிய மக்களிடை அனுதாபிகளிருந்தனர். தாய்நாட்டில் இவர்களுக்குள் ஏற்பட்ட சகோதர யுத்தத்தை புலம்பெயர்ந்த நாட்டிலும் தொடர்ந்தனர். இச் சகோதரயுத்தத்தில் ஏறக்குறைய 4000பேர் கொல்லப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

ராஜபக்ஷேபோலவே பிரெஞ்சு அரசாங்கமும் இந்த சகோதரயுத்தத்தை மறைமுகமாக கூர்தீட்டி விளைவை சந்தோஷத்தோடு ரசித்தது தேசிய விடுதலை முன்னணியின் ஆதரவுபெற்ற ஆல்ஜீரியாவின் தற்காலிக அரசாங்கத்திற்கு வேண்டிய நிதியை அவ்வியக்கத்தின் பிரான்சு நாட்டின் கிளையும்  பிரான்சு நாட்டில் வசித்துவந்த அதன் அல்ஜீரிய உறுப்பினர்களும் உதவப்போக இதை தடுத்து நிறுத்த நினைத்த பிரெஞ்சு அரசாங்கம் தனது ஆதரவுபெற்ற தேசிய இயக்கத்தைக்கொண்டு இவர்களை கண்காணிக்க ஆரம்பித்தது. அல்ஜீரிய தேசிய முன்னணிக்கு எதிராக ஒர் பிரத்தியேக காவற் படையை ஏற்படுத்தியது. தேசிய விடுதலை முன்னணியின் அனுதாபிகளான ஆண்களும் பெண்களும் அவ்வப்போது இழுத்துசெல்லப்பப்பட்டு துன்புறுத்தப்பட்டனர். பிரெஞ்சு அரசாங்கத்தின் பிரத்தியேக காவற்படையுடன் நேரடித் தாக்குதலில் தேசிய முன்னணி இறங்க இருதரப்பிலும் பல உயிரிழப்புகள். பிரத்தியேக காவற்படையின் ஒரு பிரிவினரும் பிரெஞ்சு இனவாதிகளும் ஒன்றுகூடி அல்ஜீரிய மக்களை தண்டித்தாக வேண்டும் என்கிறார்கள். மாவட்ட தலைமை நிர்வாகி இதை மறைமுகமாக ஆதரித்தாரென்ற குற்றசாட்டு. ஒரு பக்கம் பிரெஞ்சு அரசாங்கத்தின் மூர்க்கமான காவல் படை, எதிரணியில் பிரான்சில் வாழ்ந்துவந்த எழுத்தறிவற்ற அல்ஜீரிய மக்கள். ‘வன்முறைக்கெதிராக’ என்று தமது நடவடிக்கைகளுக்கு சமாதானம் சொன்ன பிரெஞ்சு அரசாங்கம் வன்முறையாளர்களைக் கொல்லவில்லை அப்பாவி அல்ஜீரியர்களைகொன்றது. விசாரணை என்ற பெயரிலே சித்திரவதை செய்தது. அடித்துக் கொன்றது. காரணமின்றி திடீர் திடீரென்று ஆண்களும் பெண்களும் கைது செய்யப்பட்டனர். பலரை பிரான்சிலிருந்து வெளியேற்றியது. இக்காலங்களில்  அப்படிக்கொல்லபட்டவர்களின் எண்ணிக்கை மாத்திரம் 307பேரென்று சொல்கிறார்கள். அக்டோபர் 17 1961 அன்று பிரெஞ்சு அரசாங்கத்தின் மேற்கண்ட நடவடிக்கைகளை எதிர்ப்பு தெரிவித்து அல்ஜீரிய மக்களில் சுமார் இருபதாயிரம் மக்கள் ஊர்வலம் போகின்றனர் அவர்களுக்கு எதிராக பத்தாயிரம் போலிஸார் தாக்குதலில் இறங்கினர் ஆண்கள் பெண்கள் சிறுவர் சிறுமியரென எவரையும் பொலீஸார் விட்டுவைக்கவில்லை. அடிபட்டு வீழ்ந்தவர்கள் பல மணிநேரம் வீதிகளிலேயே கிடந்ததாக சொல்கின்றனர். சேன் நதியில் குதித்து தப்பியோடமுயன்ற்வர்கள் பலர் நதியில் மூழ்லிப்போனதாகவும் பிரெஞ்சு அரசாங்கம் இத்தாக்குதலில் 30லிருந்து 50 பேர் இறந்ததாச் சொல்கிறது பத்திரிகையாளர்கள் குறைந்தது 200பேராவது இறந்திருக்கலாமென எழுதியுள்ளார்கள். அப்பாவிகளுக்கு நீதிகிடைத்ததாக வரலாறில்லை.

 புக்கர் பரிசு

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆங்கில படைப்பிலக்கிய உலகில் புக்கர் பரிசு (மேன் குழுமம் சுவீகரித்தபிறகு மேன் புக்கர் பரிசு) முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. அதை மறைமுகமாக விமர்சித்தவர்கள் பலரும் அதன் அங்கீகாரத்திற்கு ஏங்கினதென்னவோ உண்மை. ஆனாலின்று அப்புக்கர் பரிசுக்கு எதிராக வெளிப்படையாக விமர்சனம் வந்திருக்கிறது. புக்கர் பரிசு தேர்வு குழு ஒரு படைப்பின் வாசிப்புத் தன்மையை(readability) பார்க்கிறதேயன்றி படைப்புத் திறனை பார்ப்பதில்லை என்பது இவர்கள் சொல்லும் குற்றச்சாட்டு.   போட்டி புக்கர் பரிசு ஒன்றை அடுத்த ஆண்டிலிருந்து நடத்த திட்டமிட்டுள்ளதாக இவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். புக்கர் பரிசுபோல காமன்வெல்த் நாடுகளிலிருந்து வெளிவரும் ஆங்கில படைப்புகளை மட்டும் கருத்தில் கொள்ளாமல்,  உலக நாடுகளில் ஆங்கிலத்தில் எழுதப்படும் எல்லா படைப்புகளையும் தங்கள் தேர்வு குழு போட்டிக்கு அனுமதிக்கும் என்கிறார்கள் புக்கர் பரிசு தேர்வுக்குழுவில் இலக்கியதுறை சார்ந்தவர்களும் அத்துறை சாராதவர்களும் இடம்பெற்றிருக்கிறார்களாம், ஆனால் இவர்கள் அமைக்கவிருக்கும் தேர்வுக் குழுவில் தொழில் முறை விமர்சர்கர்கள், எழுத்தாளர்கள், மொழிஅறிஞர்கள் மற்றும் இலக்கியதுறைசார்ந்தவர்கள் பங்குபெறுவார்களென்றும் இவர்கள் அனைவருக்கும் ஒரே ஒரு நோக்கம்தான் இருக்க முடியும் அந்நோக்கம் ‘தெளிவுடனும் எவருடனும் சமரசம் செய்துகொள்ளாமலும், மிகச்சிறந்த படைப்புகளை தேர்வு செய்தல்’ என்று சத்தியம் செய்கிறார்கள். இவர்களுக்கு போட்டியாக இன்னொரு புக்கர் பரிசு பிறக்காமலிருந்தால் சரி.

நன்றி: அம்ருதா டிசம்பர் இதழ்

—————————–

பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்-13:

நவம்பர் டிசம்பர் இரண்டுமாதங்களும் பிற நாடுகளைப்போலவே பிரான்சு நாட்டில் கிருஸ்துமஸ் கொண்டாட்டம். நகரங்கள் கிராமங்களென்ற பாகுபாடின்றி எங்கு பார்த்தாலும் விழாக்கால கோலாகலங்களில் பிரான்சு திளைக்கும். அக்காலங்களில் நவம்பர் கடைசிவாரத்தில் ஆரம்பித்து டிசம்பர் முடிய நடைபெறுகிற  கிருஸ்துமஸ் கடைகளும் பிரசித்தம். இப்போதெல்லாம் உலகில் எல்லா நாடுகளிலும் கிருஸ்துமஸ் பண்டிகைக்கால கடைகளைப் பரவலாக பார்க்கின்ற சந்தர்ப்பம் வாய்த்தாலும் ஸ்ட்ராஸ்பூர் நகர் கடைகளைபோல எங்கும் பார்த்திருக்கமாட்டீர்களென உறுதியாகச்சொல்வேன். இந்நகரமிருக்கும் அல்சாஸ் பிரதேசம் பல ஆண்டுகள் ஜெர்மன் நாட்டின் வசமிருந்தது ஒரு காரணம்.

ஸ்ட்ராஸ்பூர் கிருஸ்துமஸ் கடைகளுக்கு 500 வயது. அதாவது முதன் முதலாக உலகில் கிருஸ்துமஸ் பண்டிகைக்கால கடைகளென்று திறக்கபட்டது இங்கேதான். கி.பி 1570லிருந்து வருடம் தோறும் கிருஸ்துமஸ் காலத்தில் இக்கடைகள் இயங்குகின்றன. பண்டிகைக்குத் தேவையான அலங்காரப் பொருட்கள், பிரார்த்தனை பொருட்கள், வாசனை திரவியங்கள், உள்ளூர் கலை பொருட்கள் விசேடமான பிஸ்கட்டுகள், சாக்லேட்டுகள் ஆகியவை இக்கடைகளில் கிடைக்கும். கடந்த இருபது ஆண்டுகளாக வருடம்தோறும் நானும் ஒரு கடையை இங்கே திறந்து நடத்திவருகிறேன்.

பிரான்சின் பிற மாநிலங்களிலிருந்தும் ஐரோப்பாவின் பிற நாடுகளிலிருந்தும்  சுற்றுலா பயணிகள் ஏராளமாக இக்காலங்களில் ஸ்ட்ராஸ்பூர் வருகின்றனர். ஒளிவெள்ளத்தில் மூழ்கிய வீதிகளில் கூட்டத்தில் புகுந்து வெளிவருவது ஒரு சுகமான அனுபவம், நடுக்கும் குளிருக்கு இருக்கவே இருக்கிறது ‘Vin Chaud’ ம்   jus d’orange chaudம் (சூடான ஒயினும், சூடான ஆரஞ்சுபானமும்.)

——————————-

கதையல்ல வரலாறு -2-3

நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்

பதவி இறக்கப்பட்ட முன்னாள் கவர்னர் கியோம் எபேர் தாய் நாடு திரும்புகிறார்.  போனவர் எத்தனை நாளைக்குதான் மதுபாட்டில்களை திறந்து வைத்துகொண்டு உட்கார்ந்திருப்பது, உணவுண்ண உட்கார்ந்தால் சமையல்காரன் ம்ஸியே முதலில் மதாமை கவனித்து விட்டு வருகிறேன் என்கிறான்; ஒப்பேராவுக்கு போகும் மதாம் எபேரா சாரட்டில் நாய்க்கும் தனக்கும் மட்டுமே இடமிருக்கிறது நீங்கள் இருந்து வீட்டைபார்த்துக்கொள்ளுங்கள் என்கிறாள்; மாளிகைப் பணிப்பெண்கள்கூட தொட்டு பேசாதே என்கிறார்கள். ஆக ஏதாவது செய்தாக வேண்டும்; கொடுக்க வேண்டியதை கொடுத்து பிடிக்கவேண்டியவர்களை பிடித்து திரும்பவும் புதுசேரிக்குப் கவர்னராய் பொறுபேற்பதென்று கங்கணம் கட்டிக்கொண்டார். அன்று முதல் தினந்தோறும் புதுச்சேரி திரும்புவதற்கான முயற்சிகளில் இறங்கினார். மன்னரின் அமைச்சர்களை சென்று சந்தித்தார். மன்னரின் மனைவி துணைவிக¨ளை போய் பார்த்தார், அவரின் மகளைப் பார்த்தார், மகனைபார்த்தார். மன்னரின் வளர்ப்பு பூனையையும் நாயையும் தவிர வாய் திறந்து இவருக்கு யார் யாரெல்லாம் சிபாரிசு செய்ய முடியுமோ அவர்களிடமெல்லாம் முறையிட்டார். தம்மை கவர்னர் பொறுப்பிலிருந்து நீக்கியதற்கு எந்த முகாந்திரமுமில்லை என்றார். தான் மாசற்றவரென்றும் தன் பேரில் கொண்டுவரப்பட குற்றசாட்டுகள் ஆதாரமற்றவையென்றும் ஓலமிட்டார்.

மன்னருக்கு எபேர் பிரச்சினை பெரும் பிரச்சினையாகிவிட்டது. எங்கே போனாலும் எதை தொட்டாலும் எபேர் பேசுவதுபோல இருக்கிறது. மனைவி கூட எபேர் பிரச்சினையை தீர்த்துவிட்டு என்னைத் தொடுங்கள் என்கிறாள் -மன்னர் மனைவி எபேருக்கு உறவு முறையாக வேண்டும். எபேருக்கு மக்கள் காவலர் என்ற புதுபட்டத்தைக்கொடுத்து புதுச்சேரிக்கு அனுப்பி வைத்த பிரெஞ்சு முடியாட்சி அவர் மகனையும் புதுச்சேரி காலனி அரசாங்கத்தின் மேல்ஆலோசனை கூட்டத்தின் அங்கத்தினராக நியமித்தது. செத்த பிணம் பிழைத்தெழுந்தால் காலை எட்டிவைத்து நடக்குமாம் அப்படித்தான் அமைந்தது தந்தைக்கும் மகனுக்கும் வந்த வாழ்வு.

தந்தையும் மகனும் புதுச்சேரிக்கு வந்து இரண்டொரு மாதங்கள் ஆகியிருந்தன. தந்தை எபேரைக் காட்டிலும் மகன் எபேருக்கு கூடுதலாகவே புதுச்சேரியின் நிலமை புரிந்தது. முத்தியப்ப முதலியார், தம்மைத் தரகர் பதவியிலிருந்து எபேர் துரத்தினார் என்பதைக்காட்டிலும் நைநியப்பிள்ளை தமது உத்தியோகத்தைப் பறித்துக்கொண்டு நன்கு சம்பாதிக்கிறார் என்பது உறுத்தலாக இருந்தது. பிரான்சிலிருந்து வந்திறங்கிய எபேர் மகனை முத்தியப்ப முதலியார் சதித்தித்தார்.

– துரை உங்கள் தந்தையார் முதலில் நைநியப்பிள்ளை நன்கு கொழுத்துவிட்டான். உங்கள் தயவால் முன்னுக்கு வந்தவன், கேட்பதை கேளுங்கள் அவன் கொடுத்தாக வேண்டும்- என்றார்.

இரவுமுழுக்க உறக்கமில்லாமல் தவித்த எபேர் மகன் மறுநாள் காலை நைநியப்பிள்ளையைக் கூப்பிட்டனுப்பினார். அவரும் வந்தார்.

– என்ன நைநியப்பிள்ளை சௌக்கியமா?

– ஏதோ எஜமான்கள் தயவுலே குடிகள் நாங்கள் பிழைக்கிறோம்.

– நான் கேள்விபட்டது அப்படி இல்லையே. உம்மைப் பற்றி நிறைய பிராது வந்திருக்கிறது. என் தகப்பனார் உமக்குக்கொடுத்த சகல சுதந்திரங்களையும் நீர் தவறாக பயன்படுத்தி சம்பாதித்ததாகப் புதுச்சேரி முழுக்க பேச்சாமே.

– துரையின் காதுக்கு யாரோ தவறான செய்தியைக் கூறியிருக்கிறார்கள்..

– நான் சொல்வதைக்கேளும். என் தகப்பனார் உமக்குக்கொடுத்த தரகு வேலையில் 40000 வராகன் சம்பாதித்திருக்கிறீர் என்று கேள்வி, அதில் 10000 வராகன்களை என் தகப்பனாருக்குக் கொடுக்கவேண்டும்

– 10000 வராகனுக்கு நான் எங்குபோவேன்.

– சரி 5000 மாவது கொடுங்கள்.

– துரை மன்னிக்கவேண்டும். நீங்கள் கேட்கும் தொகையை நான் கொடுக்க சம்மதித்தால் செய்த குற்றத்தை ஒப்புக்கொள்கிறேன் என்று பொருள். உங்கள் பணத்தில் நீங்கள் நினைப்பதுபோல இலாபமொன்றும் பார்க்கவில்லை என்பது தான் உண்மை.

– பரவாயில்லை 3000 மாவது கொடுங்கள், உங்களை மன்னிக்கிறேன்.

– ஏற்கனவே கூறிய பதில்தான். உங்கள் தகப்பனாரை நான் ஏமாற்றவில்லை. எனவே என்னால் எதுவும் கொடுப்பதற்கில்லை.

மகன் எபேர் ¨நியப்பிள்ளைக்கு எதிரிகள் இருக்கிறார்களா என்று தேடினார். நைநியப்பிள்ளைமேல் புகார்தர அவர்கள் வற்புறுத்தப்பட்டார்கள். அவர்களுடைய புகார்களின் அடிப்படையில் நைநியப்பிள்ளை கைது செய்யபட்டு சிறையிலடைக்கப்பட்டார். குற்றவாளி நைநியப்பிள்ள வழக்கு நடந்தது. அவர் குற்றங்களை முழுவதுமாக மறுத்தார்.

1715ம் ஆண்டு ஜூன் மாதம் ஐந்தாம் தேதி பிரெஞ்சு கூட்டுறவு சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளும், மேல் ஆலோசனை சபையினரும் கூடியிருந்தனர்: குற்றவாளியாக அவர்கள் முன்னால் நிறுத்தப்பட்டிருந்தவர் நைனியப்பிள்ளை. கண் துடைப்புபோல நடந்தேறிய ஆலோசனைக் குழுவினரின் விசாரணைக்குப் பிறகு ஏற்கனவே எழுதிவைத்திருந்த தீர்ப்பு வாசிக்கப்பட்டது.

“குற்றவாளியான நைநியப்பிள்ளை 50 சவுக்கடிகள் தோளில் பெறவேண்டுமென்றும், மூன்று வருஷம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டுமென்றும், 8888 வராகன்களைப் பிரெஞ்சு கூட்டுறவு சங்கத்திற்கு (அப்போதெல்லாம் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில்லை) மான நஷ்டமாகக் கொடுக்க வேண்டுமென்றும், 4000 வராகன் அபராதம் கட்டவேண்டுமென்றும், மூன்று வருடம் சிறைதண்டனையை அனுபவித்த பிறகு பிள்ளை பிராஞ்சு எல்லையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டுமென்றும், மேற்படி தொகைகளைச் செலுத்தத் தவறினால் மூன்று வருஷ சிறைவாசத்துக்குப்பிறகு, மோரீஸ் தீவுக்கு அடிமையாய் அனுப்பபடவேண்டுமென்பதும்” தீர்ப்பின் சுருக்கம்.

அது தவிர நைநியப்பிள்ளைக்குப் பதிலாக, தரகர் முத்தியப்ப முதலியார் மகன் கனகராயமுதலியார் தரகராய் நியமிக்கப்பட்டார்.

1717ம் ஆண்டு ஆகஸ்டுமாதம் நைநியப்பிள்ளை சிறையிலேயே இறந்தார். நைநியபிள்ளைக்கு மூன்று மகன்கள்குருவப்பா, முத்தப்பா, வேங்கடாசலம். இவர்களில் மூத்தவர் குருவப்பாபிள்ளை. தமது தந்தைக்கு இழைக்கபட்ட அநீதிக்கு அரசாங்கம் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறதென நினைத்தார்.

“தம் தகப்பனார் மாசற்றவரென்றும், அநியாயமாய் தண்டிக்கப்பட்டாரென்றும், அவருக்கு விரோதமாய் வாக்கு மூலம் கொடுத்த சாட்சிகாரர்களெல்லாம் பலவந்தத்தாலும், பயத்தினாலும் அப்படி செய்தார்களென்றும், ஆகையால் நைநியப்பிள்ளை வழக்கை மறு விசாரணை செய்ய வேண்டுமென்றும்” பிரான்சு மன்னருக்கு எழுதினார். எழுதியதோடு அல்லாமல் அரசர் ஆலோசனை சபையிடம் நேரில் சென்று முறையிடுவது, தமது வழக்கை எடுத்துக்கூற பிரான்சில் ஒரு பிரதிநிதியை ஏற்பாடு செய்வதென்று முடிவு செய்து அதன்படி பாரீஸ¤க்கு நேரில் செல்கிறார்.

(தொடரும்)

அண்மையில் வாசித்த பதிவுகள் Déc.6:

பேரிசையின் பின்னணி: சொல்வனம்

சொல்வனம் இணைய இதழில் பேரிசையின் பின்னணி-தவில் கண்ட மாற்ரங்கள் என்ற தலைப்பில் ப. கோலப்பன் என்பவர் எழுதியுள்ள கட்டுரை கவனத்தைப்பெற்றது. எழுத்தாளர் நாஞ்சில் நாடன் மகள் திருமணத்தில் கலந்துகொண்ட கட்டுரையாளர் லயசுத்தமான ஒரு தவில் புராணமே படித்திருக்கிறார். நவீன தவில் ஓசையில் ஏற்பட்ட மாறுதலுக்கு வேணுகோபாலென்ற கலைஞர் காரணமென்பது என்னைப்போன்றவர்களுக்குப் புதிய செய்தி. ‘தவிலுக்கு வார் பிடிப்பது’ குறித்த தகவலும் சுவாரஸ்யமனாது. கட்டுரையாளர் குறிப்பிடும் தில்லானா மோகனாம்பாள் வாத்ய கோஷ்டியும் அவர்கள் எதிரே வைத்தியும் கண்முன்னே நிற்கிறார்கள்.  காதலியை அல்லது மனைவியை ஆரத் தழுவுபவர்கள் தயவு செய்து கட்டுரையாளர் சிபாரிசு செய்திருக்கிறாரென தவிலை நினைத்துக்கொள்ள வேண்டாம். தவிலுக்கு நல்லதோ இல்லையோ சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு நல்லது.

கணையாழி -மீண்டும் பாரதி

கணையாழியில்  இந்திரா பார்த்தசாரதியின் ‘மீண்டும் பாரதி’ தொடரை வாசித்தேன். பாரதியின் கவிதையில் தங்களுக்குள்ள ஈடுபாட்டைப் பலரும் சொல்லக்கேட்டிருக்கிறோம். ஆனால் அதை இ.பா. சொல்கிறபோது கூடுதலாக காதுகொடுக்க நேரிடுகிறது. மொழிபெயர்ப்பு பற்றிய அவரது கருத்தை மனமார வழிமொழிகிறேன். ஆயிரம் சொல்லுங்கள் மூலமொழியில் ஒரு படைப்புக்குள்ள முழுபாய்ச்சலையும் அம்மூல மொழியைத் தாய்மொழியாகக்கொண்டவர்கள் வாசித்துப் பெறும் இன்பத்தையும் அதன் மொழிபெயர்ப்பு வாசகர்களால் ஒருபோதும் பெறமுடியாதென்பது சத்தியம் சத்தியம். தமக்கு தமிழால் அறியவந்த பாரதி, ஆங்கிலத்தால் அறியப்பட்ட தாகூரைக்காட்டிலும் மேலானவர் என்பதற்கு பாரதியாரைத் தாம் தாய்மொழியில் வாசிக்க நேர்ந்தது காரணமெனச் சொல்லும் இ.பா., பாரதியின் கவிதை ஆற்றலைக் கொண்டாடவும் தயங்கவில்லை. ‘புல்லை நகையுறுக்கி பூவை வியப்பாக்கி’ என்பதற்கு ஈடான வரிகளை கம்ப சித்திரத்தில் மட்டுமே காணமுடியும் என்கிறார்.  குயில் பாட்டைப்பற்றிய ஒரு விரிவான ரசனை நூல் எழுதத் திட்டமிட்டிருப்பதாக இ.பா தெரிவிக்கிறார். காத்திருக்கிறோம் ஐயா!.

இதம் தரும் வங்கக் கதைகள்:

வணக்கத்திற்குரிய வே. சபாநாயகம் தமது வலைப்பூவில் அம்ருதா பதிப்பகத்தின் அண்மைக்கால வங்கச் சிறுகதைகள் என்ற நூலுக்கு மதிப்புரை எழுதியுள்ளார். ஆரவாரமின்றி மென்மையாய் சிலுசிலுத்து ஓடும் சிற்றோடையின் நளினமும் அழகும் வங்கத்கதைகளில் பொதுத்தன்மை  என்கிறார் வே.சபாநாயகம். தொகுப்பிலுள்ள 15 சிறுகதைகளை அவருக்கே உரித்தான் மொழியில் கதைப்பொருளை பகிர்ந்துகொள்கிறார். அலுப்புத் தட்டாமல் வாசிக்கவும் ரசிக்கவும் முடிகிற கதைகளென்ற உத்தரவாதம் தரப்படுகிறது. மொழிபெயர்ப்பாளர் வங்காளம் தமிழ் இருமொழிகளிலும் தேர்ச்சிபெற்றவரென்பதால், வங்கமொழிக்கேற்ப தமிழ்படுத்தியிருக்கும் நேர்த்தி தடையற்ற வாசிப்புக்கு உதவுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

ஆர். அபிலாஷ்

நண்பரது வலைத்தலத்தில் வந்துள்ள தமிழ் இலக்கியம் ஏன் பன்னாட்டுத் தளத்தை அடையவில்லை? என்ற கட்டுரை பற்றியும் குறிப்பிடவேண்டும். பிறமொழி படைப்புகள் சிலவற்றை ஒப்பிட்டு தமிழ் ஏன் அந்நிலையை எட்டவில்லையென கட்டுரையாளர் ஆதங்கப்படுகிறார். தமிழ் இலக்கியவாதிகள் வெகு சனங்கள் எனப்படுகிற பெருவாரியான மக்களிடமிருந்து விலகி நிற்பதும், வெகு சனப்பிரச்சினைகளில் கவனங்கொள்ளாததும் அவர் சொல்லும் காரணங்கள். அதை மறுக்கமுடியாது. அதற்காக புலம்பெயர்ந்த இந்திய இலக்கியவாதிகள் -அபிலாஷைபொறுத்தவரையில் ஆங்கிலத்தில் எழுதுபவர்கள்- எடுத்துள்ள நிலைபாட்டை இந்தியாவில் மாநில மொழிகளில் எழுதுகிறவர்களும் எடுக்கவேண்டுமென்பது அபத்தம். புலம்பெயர்ந்தவர்கள் எந்த மொழியில் எழுதினாலும் அவர்கள் சூழலைவத்துத்தான் எழுதமுடியும். அபிலாஷே சொல்வதுபோல அது வேரறுந்தநிலையாகக்கூட இருக்கலாம். ஆனால் அவை ஆங்கிலத்தில் எழுதப்படுவதால்தான் பலரும் அறிய நேர்ந்ததே தவிர அபிலாஷ் சொல்கிற அவர்களுடைய பண்பாட்டைத் துண்டித்துக்கொண்டது காரணமல்ல. சொல்லபோனால் அவர்களுடைய நூலிலும் இந்தியாவில் இன்றளவுமுள்ள சில சூட்சமங்களை சொல்லியே விலைபோகவேண்டியிருக்கிறது. மேலை நாடுகளில் பிரபலமான இந்திய எழுத்தாளர்களைத் தவிர்த்து காமா சோமாவென்று ஆங்கிலத்தில் வரும் நாவல்கள் விற்பனையாவது உள்ளே இருக்கும் சரக்கும் தரமானது என்பதாலல்ல நாவலின் அட்டைகளில் இன்றளவும் ஒரு ரிக்ஷாவோ, பத்து தலை நாகமோ, கையில் இரத்தம் சொட்டும் தலையுடன்கூடிய காளியோ இடம்பெற்றிருப்பதால் இருக்கலாம். அபிலாஷ் சொல்லும் ஸ்பானிய, துருக்கி நாவல்களைப்படித்தால் அங்கேயும் எழுத்தாளனின் மண் சார்ந்த கலாச்சாரமும் பண்பாடும் இருக்கத்தான் செய்கின்றன. பிறமொழிகளுக்குக் கொண்டு செல்கிறபோது பண்பாட்டளவில் வேற்று மொழிகாரர்களுக்கு புரியவைப்பது கடினமே. The Name of the Rose நூலில் பக்கத்திற்கு பக்கம் கிரேக்க மொழியோ லத்தீன் மொழியோ ஏராளமாக இருக்கும், ஆங்கில நாவல்களில் பிரெஞ்சு வாசகங்களோ, பிரெஞ்சு நாவலில் ஹீப்ரு மொழியோ நாவல் தன்மைகருதி சேர்க்கத்தான் செய்கிறார்கள். மேற்கத்தியர்கள் பண்பாடில் – காலனி ஆதிக்கம் -கலாச்சார ஆதிக்கம்- உலகாலவிய மயக்கமிருப்பதால் இக்குறைகளை சகித்துக்கொள்கிறோம். நாவலின் ஓட்டத்தில் வாசகன் அக்குறைகளை பொருட்படுத்துவதில்லை. நமக்கு நல்ல மொழி பெயர்ப்பாளர்கள் அமைவதில்லை என்பது உண்மையில் ஒரு குறை. தமிழ் படைப்புகளை இந்தியாவில் அவர் ஆங்கில இலக்கியத்தில் கரைத்துக் குடித்தவராகக்கூட இருக்கட்டும் அவர் ஆங்கிலம் பண்டித ஆங்கிலமாக இருக்குமே ஒழிய ஒரு படைப்புக்குரிய ஆங்கிலமாக இருக்கமுடியாதென்பது உண்மை. இங்கிலாந்திலோ அமெரிக்காவிலோ இருக்கும் ஆங்கிலம் வேறு இந்திய ஆங்கிலம் வேறு. தமிழ் நாவலை தமிழறிந்த ஆங்கிலேயரோ அமெரிக்கரோ மொழிபெயர்த்தாலன்றி நமது படைப்புகளுக்கு விமோசனங்களில்லை. அப்படி அமைந்தால் பண்பாட்டளவில் மற்றவர்களுக்கு கடினமாக இருக்குமென்று நம்பக்கூடியவைகளைகூட கொண்டுபோகமுடியும். ஒரு நல்ல மொழிபெயர்ப்பாக இருந்தால் நாவலின் கடைசிபக்கங்களில் கள்ளருக்கும் பிள்ளைமாருக்கும் சில விளக்கங்கள் கிடைக்குமானால் கண்டிப்பாக வாசகர்கள் கிடைப்பார்கள்.
———————————-