Monthly Archives: ஓகஸ்ட் 2011

மனுநீதிச் சோழனும் மரண தண்டனையும்

சிரமறுத்தல் வேந்தருக்கு பொழுதுபோக்கு மற்றவர்க்கோ உயிரின் வாதை” என்பது பாரதிதாசனின் வரி. இன்றைக்கு வேந்தர்களில்லை, அவர்களிடத்தில் தலிபான்கள், பேட்டை ரவுடிகள் அவர்களின் புரவலர்களான அரசியல்வாதிகள் போக சிந்தனையிலும் பண்பாட்டிலும் வளர்ந்துள்ளதாக நம்பப்படும் நவீன உலகில் சில அரசாங்கங்களையும் சேர்த்துக்கொள்ளலாம். கொலைக்களத்திற்கு அழைத்துபோகப்படுபவர்கள் அனைவருமே குற்றவாளிகள் அல்ல. தவிர தண்டனையென்பது குற்றவாளிக்கான நீதிசார்ந்தது அல்ல தண்டனை வழங்குபவருக்கான நீதிசார்ந்தது. பல நேரங்களில் செய்த குற்றத்தைவிட செய்தவன் யார் என்ற அடிப்படையில் நீதி வழங்கப்படுகிறது. வாள்பிடித்தவன் நீதிபதி, எதிராளி ஆடு. நான்காண்டுகளுக்கொரு முறை மரண தண்டனை எதிர்ப்பாளர்கள் மாநாடு கூட்டப்படுகின்றது. முதல் மாநாடு 2001ல் பிரான்சு நாட்டில் ஸ்ட்றாஸ்பூர் நகரில் கூடியது. அடுத்த மாநாட்டினை கனடாவில் மோரியால் நகரில் கூட்டினர். மூன்றாவது மாநாடு மீண்டும் பிரான்சு நாட்டில் பாரீஸ் நகரில் கூடியது. இப்போது நான்காம் முறையாக இம்மாதம் (பிப்ரவரி 24,25,26) சுவிஸ் நாட்டில் ஜெனிவா நகரில் கூடியுள்ளது. கடந்த முறை பிரான்சு நாட்டின் அப்போதைய அதிபர் சிராக்கின் ஆதரவுடன் கூட்டப்பட்ட மாநாட்டில் உலகெங்குமிருந்து சுமார் ஆயிரம்பேர் அரசு மற்றும் அரசுசாரா அமைப்பு நிறுவனங்கள் சார்பில் கலந்து கொண்டதாகச் சொல்லப்படுகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நாட்டின் செயல்பாடுகளை, அரசியல்களை தீர்மானிக்கவல்ல சூத்ரதாரிகளை மாநாட்டில் பங்கெடுக்கச் சொல்வதன்மூலம் அந்நாடுகளின் அரசியற் சட்டங்களிலிருந்து மரணதண்டனையை ஒழிக்க இயலுமென சமூக ஆர்வலர்கள் நினைக்கிறார்கள்.

அமெரிக்கா, சீனா, ஈரான் ஆகிய மூன்று நாடுகளுக்குள்ளும் அரசியல்சட்டத்தின் உதவியோடு நடத்தும் சிரமறுத்தலில் ஒற்றுமை இருக்கிறது. உலகில் குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் கீழ் 98 விழுக்காடு மரண தண்டனைகளை இம்மூன்று நாடுகளும் நிறைவேற்றுகின்றன. ஜனநாயகத்தைப் பேணுவதாக நம்பப்படும் அமெரிக்காவில் வெள்ளையரை காட்டிலும் பிறருக்கு(அவர் கறுப்பரோ ஆசியரோ) மரணத் தண்டனை விதிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம். அமெரிக்காவில் குற்றவாளிகளாகக் கருதி தீர்ப்பு வழங்கப்பட்டவர்களில் ஏழு சதவீதத்தினர் மறு விசாரணையில் அப்பாவிகளென தெரியவந்திருக்கிறது. மீதமுள்ள 93 சதவீதத்தினரில் 20 சதவீதத்தினரே மரண தண்டனைக்குறிய குற்றவிதிகளுக்குப் பொருந்துகிறார்கள் எனப்பார்க்கிறபோது இப்பிரச்சினையிலுள்ள விபரீதம் தெரியவரும். மனிதகுல பிரச்சினைகளுக்கு மார்க்ஸியமே தீர்வு என்று நம்பியகாலங்களிலும் சரி இன்றைக்குப் படுத்த படுக்கையிலிருக்கும் மார்க்ஸியத்தைத் தேற்ற, தனியுடமையை ஔடதமாக ஊட்டுகிற நவீன சோஷலிஸ சீனர்களுக்குஞ் சரி சுதந்திரம் என்ற சொல் கொடுங்கனவு. மார்க்ஸிய தோழர்களான சீனர்களின் சிந்தனையில் இன்று சிவப்பில்லை, மாறாக கைகள் என்றும்போல சிவப்பானவை. உயிரைக் குடித்து சிவந்தவை, மரண தண்டனை விதிப்பதில் ஆர்வம் அதிகம். அரசாங்கத் தரப்பில் வருடத்திற்கு ஆயிரமென்று நேர்த்திக்கடன் செலுத்துவதாகத் தெரிகிறது. இணைய தளங்களில் உள்ள தகவல்கள் வருடத்திற்கு 7000மென்று தெரிவிக்கின்றன. சீனர்களை அறிந்தவர்களுக்கு இந்த எண்ணிக்கை வேறுபாட்டில் வியப்புகளில்லை. ஈரான் நாட்டிலும் ஆண்டு தோறும் 300லிருந்தோ 400பேர்கள்வரை  கல்லால் அடித்தோ, தூக்கிலிடப்பட்டோ கொல்லப்படுகிறார்களெனச் சொல்லப்படுகிறது. பத்தொன்பது வயது, பதினாறு வயதென்றுள்ள பெண்கள்கூட பாலியல் குற்றச்சாட்டின்பேரில் கொல்லப்படுகிறார்கள். இங்கும் உத்தியோகபூர்வமாக தெரிவிக்கப்படும் எண்ணிக்கைக்கும் உலக மனிதர் ஆணையம் வெளியிடும் தகவல்களுக்கும் மலைக்கு மடுவுக்குமான பேதங்கள் உள்ளன. சிறுவயதினரின் தவறுகளுக்கு மரணதண்டனையை தீர்ப்பாக வழங்கிய பின்னர் தண்டனையை நிறைவேற்ற பதினெட்டுவயது ஆகவேண்டுமென மரனத்தின் வாசலில் அவர்களை நிறுத்திவைப்பது ஆகக் கொடுமை. அண்மையில் எதிர்கட்சி ஆதரவாளர்கள் பலருக்கு ஈரான அரசாங்கம் தூக்குத் தண்டனை வழங்கியது. பொதுவாக மரணதண்டனைக்கான குற்றச்சாட்டுகளில் நியாயமிருப்பதுபோல தோற்றம் உருவாக்கப்பட்டிருப்பினும், கணிசமான வழக்குகளில் உண்மைக்கு எவ்வித உத்தரவாதமுமில்லை. அமெரிக்க நாட்டில் மரணதண்டனைக்கான வாய்ப்பு கறுப்பரினத்திற்கு அதிகம் அவ்வாறே ஈரானிலும், சீனாவிலும் ஆட்சியாளர்களை விமர்சிப்பவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் அல்லது விஷ ஊசியால் சாகடிக்கப்படுவார்களென்பதும் உண்மை. ஈரானிலும் சீனாவிலும் குற்றவாளிகள் தங்கள் தரப்பு நியாயங்களைச் சொல்லக்கூட அனுமதிக்கபடுவதில்லை, வழக்கறிஞர்கள் உதவிக¨ளையெல்லாம் அவர்கள் கேட்டு பெறமுடியாது.

கடந்த காலங்களில் பிரெஞ்சுப் புரட்சி அரசியல் எதிரிகளின் தலைகளை கொய்திருக்கிறது. தொடர்கொலைகள் புரிந்தவர்கள் மாத்திரமல்ல குற்றமற்ற அப்பாவிகளையும் கொன்றிருக்கிறார்கள். இதை அடிப்படையாகக்கொண்டு பல நாவல்களும் புனைவுகளும் பிரெஞ்சு மொழியில் வந்திருக்கின்றன. அந்நியன் கதைநாயகன் தமது நண்பனுக்கு உதவப்போய், மரணத்தண்டனை பெறுவான். இன்றைக்குப் பிரான்சு நாட்டின் நிலைமை வேறு, மரண தண்டனையை 1981லிருந்து முற்றாக ஒழித்திருக்கிறார்கள். இந்தியாவில் மரண தண்டனைகள் அதிகம் விதிக்கப்படுவதில்லை மிக அரிதாகத்தான் நிறைவேற்றபடுகின்றன எனக்கூறியபோதிலும் அப்பணியைச் சமூக குற்றவாளிகளும் காவல் துறையினரும் செய்வது பலரும் அறிந்த செய்தி.ஒருமுறை இந்தியாவிற்கு பிரெஞ்சு நண்பர் ஒருவருடன் வந்திருந்தேன். வழக்கறிஞராக இருந்த ஒரு நண்பரைத் தேடி சென்னை உயர் நீதிமன்றத்திற்குச் சென்றோம். அங்கிருந்த மனுநீதிச் சோழன் சிலை குறித்து விசாரிக்க, நீதி விஷயத்தில் சோழனுக்கென்று புனைந்தோதப்பட்ட நேர்மையை விளக்கிக் கூறினேன். நண்பர் சிரித்தார். இருபது ஆண்டுகால நண்பர், நானிருக்கும் நகரில் ஒவ்வொரு மாதமும் கடைசி வியாழக்கிழமைகூடும் தத்துவவாதிகளின் உரையைக் கேட்க அவரும் வருவார், அப்படித்தான் எங்கள் நட்பு வளர்ந்தது. இப்போது மரணதண்டனை எதிர்ப்பாளர்கள் அணியில் தீவிர உறுப்பினர். கன்றிற்காக சோழன் தனது மகனைக் கொன்ற கதையின் தீர்ப்பில் உடன்பாடில்லை என்பதுபோல அல்பெர் கமுய் வார்த்தையில் அதை Absurdism என வர்ணித்தார். எங்கள் தமிழர் வாழ்க்கை இது போன்ற கற்பனை குறியீடுகளால் ஆனதென்ற உண்மையை சொல்ல வெட்கப்பட்டு எனக்கும் சிரித்து மழுப்பவேண்டியிருந்தது.

——————————————————–

மொழிவது சுகம் – கட்டுரை தொகுப்பிலிருந்து

அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் சென்னை -11 பதிப்பில் விரைவில் வெளிவர உள்ளது

பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்-3

ஷாம்பெய்ன்: ஆங்கிலத்தில் ஷாம்பெய்ன் எனசொல்லப்படும் வார்த்தை பிரெஞ்சிலிருந்து வந்தது ஆனால் அதை பிரெஞ்சில் ஷம்ப்பாஞ்ன் என்று சொல்லவேண்டும். பிறந்த நாள் கொண்டாட்டமா, பரிட்சையில் பாஸா? பெரும் பண்டிகையா? விளையாட்டில் வெற்றியா? தேர்தலில் டெப்பாசிட்டாவது தேறியதா? லாட்டரி சீட்டில் ஒரு மில்லியன் டாலர் விழுந்ததா? காதலித்த பெண் எனக்கு நல்ல மாபிள்ளை வாச்சிருக்கார், மறக்காம ரிசப்ஷனுக்கு வந்திடுங்கோ என்கிறாளா? தூங்கு தண்டனை தற்காலிகமாக ரத்தா? எல்லா சந்தோஷத்துக்கும் கொண்டாவென்று இருக்கும் ஒரே பானம் champagne.

இந்த champagne என்ற சொல்லை Champagne என்று எழுதினால் கவனியுங்கள்- ‘c’ க்குப் பதிலாக ‘C’ என்று எழுதியிருக்கிறேன். – அது பிரான்சு நாட்டின் வடகிழக்குப் பகுதியைச்சேர்ந்த பிரதேசம். அப்பிரதேசத்தின் முழுப்பெயர் Champagne-Ardenne. இந்த Champagne பிரதேசத்தில் தயாரிக்கப்படும் மதுபானமே champagne. பிரான்சுக்கு வந்தால் இப்பிரதேசத்திற்கு போய்வாருங்கள். அங்குள்ள vignoble எனப்படும் திராட்சைத் தோட்டங்களில் எப்படி ஒயினை ருசித்துப்பார்க்க அதன் தயாரிப்பாளர்கள் அனுமதிக்கிறார்களோ அதுபோலவே Champagne பிரதேசத்தில் அத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள் champagneஐ ருசித்துப்பார்க்க அனுமதி அளிக்கிறார்கள். அச்சடங்கிற்கு Dégustation என்று பெயர், நம்ம ஊரில் அல்வா கடைகளில் வாயில் போட்டுப்பாருங்கள் என்று கொடுப்பதில்லையா? அதுபோல.

ஷாம்பெய்னும் உண்மையில் ஒருவகை ஒயின் ஆகும். அதாவது Le Vin Péstillant என்பார்கள் ஆங்கிலத்தில் The Sparkling wine, தமிழில் காஸ் ஒயின் – சோடா ஒயினென்றும் சொல்லலாம். ஏற்கனவே கூறியபடி Champagne பிரதேச champagne தாயாரிப்பாளர்களுக்கு மட்டுமே அப்பெயரை வைத்துக்கொள்ள உரிமையுண்டு, பிரான்சிலே கூட வேறு பிரதேசங்களில் தயாரிக்கப்படும் அதே வகை தயாரிப்புகளுக்கு அப்பெயரை வைக்க உரிமையில்லை. எனவே மற்ற பிரதேசத்துக்கார்கள் உதாரணம் எங்கள் பகுதியில் (Alsace) Vin mousseaux எனக்கூறி விற்கவேண்டியிருக்கிறது. இதர ஐரோப்பிய நாடுகளிங்கூட இதுதான் நிலமை ஸ்பெயின் நாட்டினர் தங்கள் தயாரிப்பினை cave என்கின்றனர். இத்தாலி நாட்டினருக்கு Prosecco, ஜெர்மனுக்கு Sekt. ஐரோப்பியர்கள் என்றில்லை உலகில் எந்த நாடும் champagne என்ற பெயரில் விற்பனை செய்யக்கூடாது. ஆஸ்திரேலியாவில் Australian sparlking wine என விற்பனை செய்வதாக சொல்லப்படுகிறது. எத்தனை பெயர்கள் இருந்தபோதும் உலகில் ஷாம்பெய்ன் என்ற வார்த்தையின் வியாபார மகத்துவத்தை பலரும் அறிவர். எனவே அப்பெயரைத் திருட்டுத்தனமாக உபயோகிப்பதும் உலகில் நடக்கிறது அப்படி யாராவது வியாபாரம் செய்வதை தகுந்த ஆதாரங்களுடன் தெரிவித்தால் Champagne பிரதேச champagne தயாரிப்பாளர் கூட்டுறவு அமைப்பு உங்களுக்குத் தகுந்த வெகுமதியைத் தரும்.

கடைசியாக ஒரு புதிர்: பிரான்சிலுங்கூட ஒயின் இல்லாத வீடொன்று உண்டு, அது யார் வீடு தெரியுமா? விடைதெரியாதர்கள் நண்பர் காலச்சுவடு கண்ணனைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

குறுந்தொகை ‘நாயகர்’

அண்மைக்காலங்களில் பிரெஞ்சிலிருந்து தமிழில் மொழிபெயர்த்த சிறுகதைகளை சிற்றிதழ்களில் வாசிக்க நேர்ந்த வாசகர்களுக்கு வெங்கட சுப்ராய நாயக்கர் என்ற பெயர் அறிமுகமான பெயராக இருக்கக்கூடும். பெயரைப் படித்து நீங்கள் ஏதோ சுதந்திரப் போராட்ட தியாகி தமிழ் சிற்றிதழ்பக்கம் ஒதுங்கியிருக்கிறார் என்றெல்லாம் கற்பனை செய்யவேண்டாம். விஜய நகர பேரரசின் எச்ச சொச்ச நாயக்கர்களில் ஒருவராக இருக்குமோ என்ற சந்தேகத்தைக்கூட நீங்கள் தவிர்க்கலாம் ஏனெனில் புதுச்சேரியிலும் தமிழ் நாட்டின் வட மாவட்டங்களிலும் வன்னியர்களில், ஒரு பிரிவினருக்கு நாயக்கர் என்றே பெயர்.

மெலிந்த தேகம், ஒடுங்கலான முகம், போன்சாய் வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்போல நன்கு கத்தரித்த குட்டையான கேசம். பலத்த காற்றென்றாலும் படிந்த தலை மயிர் எழுந்திருக்காது, அத்தனை அடக்கம். ஆனாலும் மனிதரின் கைக்கு எப்போதும் அதன் மீது தனி கவனமுண்டு. பேண்டுக்குமேல் சட்டை, முழுக்கையை மணிகட்டு தெரிய மடித்திருப்பார். புதுச்சேரி என்றதும் எனது ஆழ் மனதில் நோஸ்த்தால்ஜியாவாக ஓர் பிம்பம் உயிர்த்தெழும், எழுபதுகள்வரை அந்த புதுச்சேரிவாசியை தினசரி வாழ்க்கையில் – நேருவீதியிலோ, மாத்ரு கபேயிலோ, இந்தியன் காபி ஹவுஸிலோ, காலை பதினோரு மணிக்கு பெரிய மார்க்கெட்டிலோ, மாலை ஆனால் ஒதியஞ்சாலை திடலில் பேத்தாங் ஆட்டத்தின் ‘பூல்’களுடனோ – சந்திக்காமலிருந்ததில்லை. கண்ணிற் பட்டோமோ இல்லையோ ‘போன்ழூர் ம்ஸே’ என்பார்கள். மதாம், புள்ளைங்க சௌக்கியமா? கேட்பார்கள். இந்த இரண்டாவது விசாரிப்பில் அவர்களைக் கடந்து செல்ல முடியாது. நிற்க வேண்டும். பேசவேண்டும். பேசவேண்டும் – பேசவேண்டும். வீட்டிற்குத் திரும்ப மீண்டும் உங்களுக்கு உங்கள் மதாம் (மேடம் இங்கே மனைவி) ஞாபகம் வரவேண்டும். ஆனாலும் பேச்சின் முடிவில் சலிப்பு தோன்றாது. மறுநாள் சந்திக்க நேர்ந்தால் நீங்கள் ‘போன்ழூர் ம்சே’ என்று வலிய சில நேரங்களில் உங்களுக்கு முன்னே நடப்பவர் அவர்தானா என்பதை உறுதிபடுத்த முடியாத நிலையிலுங்கூட தோளைத்தொட்டு பேசுவீர்கள், அப்படியொரு நெருக்கமான சினேகிதத்தை மனதில் வார்த்திருப்போம்.

நண்பர்களால் நாயகர் எனப்படும் வெங்கட சுப்ராய நாயக்கரும் எனக்கு அறிமுகமானவிதமும் ஒரு வகையில் அப்படி நிகழ்ந்ததுதான் – உபயம் எங்கள் இருவருக்கும் பொதுவான இனிய நண்பராக இருக்கிற தாகூர் கலைகல்லூரி முன்னாள் பேராசிரியர் திரு தேவ மைந்தன் என்கிற பசுபதி அவர்கள். நாயகரும் கடந்த 22 ஆண்டுகளுக்கு மேலாக பேராசிரியராக பணியாற்றிவருகிறார், அவர் முனைவருங்கூட. கற்பிக்கும் துறை பிரெஞ்சு இலக்கியம். அவருடைய வழிகாட்டுதலில் பல ஆய்வு மாணவர்கள் உள்ளனர் என்பது கூடுதல் செய்தி. தற்போது புதுவைப் பல்கலைகழகத்தைசேர்ந்த காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தில் பிரெஞ்சு மொழி பேராசிரியர்.

எனக்கும் நாயகருக்கும் நட்பு நீடிப்பதற்கான காரணம் இக்கட்டுரையின் முதல் வரியிலேயே இருக்கிறது. அதனை படித்தபோதே ஏன் அவரோடு ஒட்டிக்கொண்டிருக்கிறேன் என்பதை நண்பர்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள். அவரும் எனது எழுத்தை அவ்வப்போது பாராட்டி பேசுவார் நானும் அவரது முயற்சிகளை தொடர்ந்து விசுவாசித்து வந்திருக்கிறேன். பிரெஞ்சு படித்த புதுச்சேரி தமிழர்களில் மொழிக்கு விசுவாசமாக இருப்பவர்கள் குறைவு. நண்பர் பசுபதியும் சரி, நாயக்கரும் சரி தொன்ம இலக்கியத்தைபோலவே நவீன இலக்கியங்களிலும் ஆர்வம் காட்டுபவர்கள். இப்படி இரண்டிலும் ஆழ்ந்த ஞானமும் தீராத ஈடுபாடும் ஒருசேர அமைந்த பேராசிரியர்களை அரிதாகத்தான் பார்க்கமுடிகின்றது. நாயகர் பிரெஞ்சிலிருந்து தமிழில் சிறுகதைகளை மொழிபெயர்ப்பதோடு, தமிழ் சிறுகதைகளையும் பிரெஞ்சில் மொழி பெயர்த்துவருகிறார்.

நண்பரது அண்மைக்கால சாதனை மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்காக குறுந்தொகையை பிரெஞ்சில் மொழி பெயர்த்திருப்பது. பிரான்சைசேர்ந்த மற்றொரு நண்பர் கோபாலகிருஷ்ணன் பட்டினப்பாலையைத் பிரெஞ்சில் மொழிபெயர்த்திருப்பதாக செய்தி. இதுபோன்ற நல் உழைப்புகளை மனமுவந்து தமிழ் கூறும் நல்லுலகம் போற்றவேண்டும். குறுந்தொகையிலிருந்து சில பாடல்கள் பிரெஞ்சு மொழி பெயர்ப்புடன்:

3. குறிஞ்சிதலைவி கூற்று
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.
தேவகுலத்தார்.
 
 
Poème 3
Situation poétique – tiṇai : Région montagneuse – kuṟiñci
 
L’héroïne  proteste à son amie qui a fait des remarques sur le héros :
Plus vaste que la terre,
plus haut que le ciel,
plus profond que le vaste océan,
est  mon amour pour cet homme
venant des montagnes,
où les abeilles fabriquent
du miel des fleurs de kuṟiñci aux tiges noires.
                                                            -Tēvakulattār
Note: L’amour est comparé à la terre qui s’étend horizontalement, au ciel qui s’étend en hauteur,  à l’océan qui s’étend en profondeur. Les fleurs de  kuṟiñci   fleurissent dans les régions montagneuses tous les douze ans.  Les abeilles fabriquent du miel de ces fleurs.  Elles ne vont pas butiner ailleurs. La jeune femme est certaine que son bien-aimé n’ira pas vers une autre femme.
 
kuṟiñci – Phelophyllum kunthianum
……………………..
20. பாலைதலைவி கூற்று
அருளும் அன்பும் நீக்கித் துணைதுறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே.
கோப்பெருஞ்சோழன்.
 
 
Poème: 20
 
Situation poétique-  tiṇai : Région désertique –pālai
L’héroïne dit à son amie :
Cet homme
a oublié l’amour et la compassion.
Il a oublié aussi sa compagne
et s’en est allé chercher fortune.
S’il est intelligent qu’il le soit.
Nous, femmes, restons innocentes.
-Kōpperuñcōḻaṉ
 
Note : Innocente veut dire simple, sans complication; les quatre vertus de la femme indienne étaient la crainte, l’innocence, la timidité, la politesse. La logique de l’héroïne est fondée sur l’émotion contraire à celle de son homme qui préfère la quitter pour aller chercher fortune.
………………………..
40. குறிஞ்சிதலைவன் கூற்று
யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.
செம்புலப் பெயனீரார்.
 
 
Poème: 40
Situation poétique – tiṇai : Région montagneuse – kuṟiñci
Le héros s’adresse à sa bien-aimée :
Ta mère et ma mère,
se connaissent-elles?
Ton père et mon père
ont-ils des liens de parenté?
Toi et moi,
nous ne nous sommes jamais rencontrés.
Pourtant,
telle la pluie imprégnant la terre rouge
nos cœurs se mêlent et s’entremêlent.
-Cempulappeyanīrār
 
Note : Le héros observe que leur relation sera inséparable et éternelle comme  l’eau de pluie qui imprègne la terre rouge. Comme cette union est née spontanément, sans crier gare, le héros en est sûr. D’après Mani, cempulam se réfère à kuṟiñci – la région montagneuse.
 ………………….
 

பிரெஞ்சு சினிமா-1 – Les Bien-Aimés- காதல் நோயாளிகள்

தமிழ் பண்பாட்டில் (அப்படியொன்று இருக்கிறதா என்ன?) ‘காதல்’ என்ற சொல் பெண்ணை மையப்படுத்தியே வலம் வரும் சொல். நமது இலக்கியங்களும், திரைப்படங்களுங்கூட அந்த அறத்தை இதுகாறும் போற்றிவந்திருக்கின்றன. ஒருவனுக்கு ஒருத்தியை அதிகம் வற்புறுத்தாத நமது சமூகம் பெண்களுக்கென விதிகளை கறாராக (ஒருத்திக்கு ஒருவன்) வைத்திருக்கிறது. பிரான்சுக்கு முதன்முறைவந்திருந்து இந்தியாவுக்குத் திரும்ப ஆறாண்டுகள் பிடித்திருந்தது. ஆறாண்டு இடைவெளிக்குப் பிறகு சந்திக்க நேர்ந்த என் புதுச்சேரி நண்பர் இம்முறை மனைவியோடு துணைவியொன்றை சிறையெடுத்திருந்தார். அப்பெண் வெளிநாட்டிலிருந்து தமது பூர்வீக நிலங்களை விற்பதற்காக புதுச்சேரிக்கு வந்திருக்கிறார். கொஞ்சம்கூட கூச்சமின்றி அறிமுகப்படுத்தினார். அவருக்குத் தமது தாலி கட்டிய மனைவியைக்காட்டிலும் துணைவி  கூடுதலாக படித்திருக்கிறதென்கிற பெருமை வேறு. என்ன இப்படி பண்ணிவிட்டாயே என்றேன். நீ இந்தியாவிலிருக்கும்போது எனது வீட்டைப்பார்த்தாய் இல்லையா? இப்போது எப்படி இருக்கிறது, என்றார். அதற்கென்ன இடித்து நன்றாகத்தான் கட்டியிருக்கிறாய் என்றேன். நன்றாக மட்டுமில்லை, பெரிதாகவும் கட்டியிருக்கிறேன் என்றார். அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரிந்தது. அவரது இலக்கணப்படி அவ்வீட்டின் பரப்புக்கு இன்னும் நான்கு ஐந்தையாவது சேர்த்துக்கொண்டிருக்கவேண்டும், சேர்த்துக்கொண்டாரா இல்லையா என்று தெரியாது.

திரு அவ்வை நடராசன் ஒரு நல்ல சுவைஞர். மனம் திறந்து பாராட்டுவார். அவரைச் சந்திக்கவென்று வருகிறவர்களிடமெல்லாம் நம்மை அறிமுகம் செய்வார், நாம் எழுதிய ஏதாவதொரு பகுதியை வரி பிசகாமல் நினைவு கூர்வார். அவருடைய அண்ணா நகர் வீட்டிற்குச் ஒருமுறை சென்றிருந்தபோது எனது கவிதைத் தொகுப்பிலிருந்த கவிதையொன்றிர்க்கு காதல்கள் என்று பெயரிட்டிருந்ததைப்பார்த்துவிட்டு, காதல்கள் என்று பன்மையில் சொல்லக்கூடாதென்றார், அது காதல் என்று இருக்கவேண்டுமென்றார். நான் எனது தரப்பு விளக்கத்தைக் கொடுத்ததும் ஏற்றுக்கொண்டார், முதலும் கடைசியுமான அந்த கவிதைத் தொகுப்பிற்கு முன்னுரையும் எழுதித்தந்தார். ஆக அவ்வை நடராசன் காதல் என்ற சொல்லுக்கு பன்மையைத் தவிர்க்க நினைத்த தமிழ் பண்பாடு சென்னையிலிருந்து 125கி.மீ தள்ளியிருந்த நண்பரின் புதுச்சேரி இல்லத்தில்  வேறுபடிமத்தை அடைந்திருந்தது.

எங்கள் உறவினர் வீட்டு பாட்டியும் அவருடைய கணவரான தாத்தாவும் நேரிட்டுக்பேசி பார்த்ததில்லை. அவர் ஏன் எங்க இருக்கிற? வெத்திலை செல்லத்தை எடுத்துவா என்பார்? பாட்டி தெருக்கதவின் பின்புறத்தில் ஒளிந்தபடி கையை மட்டும் நீட்டும். என் வாழ் நாளில் நான் மட்டுமல்ல எங்கள் உறவினர்களும்  அவர்கள் எப்போதும் அப்படித்தான் என்பார்கள். ஆனால் அந்தத் தம்பதியினருக்கு பதினோரு பிள்ளைகள். பிறகுதான் வயது ஆக ஆக எங்கள் கிராமத்துக்கு ஒரு பண்பாடு, புதுச்சேரிக்கு ஒரு பண்பாடு, அங்கிருந்து சென்னைக்கு வந்தால் அங்கே ஒரு பண்பாடு என்றிருக்கக்கண்டேன். சென்னையிலிருந்து பிரான்சுக்கு வந்ததும் பாரீஸ¤க்கென்று ஒரு பண்பாடு இருக்கக்கண்டேன்.

இந்தப் பண்பாட்டுப் பிரக்ஞையின் – உணர்வின் – வரலாறு யாது? இன்று நாம் தமிழ்ப் பண்பாடென்று முன்வைக்கப்படுபவைகளையே நமது முன்னோர்களும் கொண்டிருந்தார்களா?.  ஒரு புதுச்சேரி நண்பர் ஒருவர் எங்கேயோ ஒரு ரெஸ்டாரெண்டுக்குபோனவர் பிரியாணி நல்லா இல்லைஎன குறைபட்டுக்கொண்டார். நம்ம சாப்படை அவங்கள்ளாம் செய்ய ஆரப்பிச்சுட்டாங்க நம்ம பண்பாட்டை கெடுக்கறாங்க என்றார். கறிச்சோறெல்லாம் நம்ம இலக்கியத்திலே வருகிறதுதான் அதற்காக பிரியாணியை தமிழ்ப் பண்பாடுண்ணு பேச ஆரம்பிச்சா எப்படி?  பிறகு அந்த நண்பருக்கு பிரியாணி என்ற சொல் இஸ்லாமியர்களிடமிருந்து கற்றுக்கொண்டது. என்றேன், தொடர்ந்து நம்ம பண்பாட்டை ஆம்பூர் பிரியாணி, முனியாண்டி விலாஸ் பிரியாணி என்ற அடிப்படையில் பார்க்க ஆறம்பிச்சுடாதீங்க என்றேன். செப்பனிடப்பட்ட மரபு  அல்லது சீர்மைக்குளான மரபு பண்பாடாகிறது. இந்த மரபும் பண்பாடும் பிரிக்கமுடியாதவை, பண்பாடென்பதே மரபின் வழிபட்டதுதான். பண்பாடு என்பதற்கு அவரவரவர் அளவில் பொருள் இருக்கிறது.

காதலின்றி வாழ்க்கையில்லை அல்லது உயிர்வாழ்க்கையே காதலிப்பதில் தான் இருக்கிறது. ஒவ்வொரு தினமும் காதலில் ஆரம்பித்து காதலில் முடிகிறது இதுதான் Les bien aimés – The Beloved என்ற பிரெஞ்சு சினிமாவின் ஒற்றைவரி திரைக்கதை பாரீஸில் ஆரம்பித்து பிராகு, லண்டன், மோரியால் (கனடா) பின்னர் திரும்பவும் பிரான்சு என்று சுற்றிவரும் மதெலின் அவள் மகள் வேரா இரு பெண்களின்  –  காதலை அல்ல – காதல்களை கொண்டாட்டம், குதூகலம், ஆட்டம் பாட்டம், அழுகை, இழப்பு மீண்டும் கொண்டாட்டம் குதூகலம் ஆட்டம் பாட்டம் அழுகையென ஒரு முடிவற்ற தொடக்கத்தை நிகழ்த்திக்கொண்டு – உயிர் வாழ்க்கையை நகர்த்துகிறது திரைக்கதை. தாய் மகள் இருவருக்கும் காதல்தான் வாழ்க்கை, அவர்கள் தினசரிகளில் உணவுபோல, உடைபோல, நடப்பதுபோல, பேருந்து பிடிப்பதுபோல கைவீசுவதுபோல காதல் வந்து போகிறது. காதலித்தல் என்ற வினைச்சொல்லின் கால வர்த்தமானங்களை மட்டுமல்ல அதன் பூகோள படிமத்தையும் சேர்த்தே குதறியிருக்கிறார் கதை திரைக்கதை இயக்குனர் பொறுபேற்றுள்ள  கிறிஸ்தோ·ப் ஒனோரே. 1960ல் ஆரம்பித்து இன்றையதினம் வரை வழகக்கமான துள்ளலுடனும் பொய்யுடனும் உறுதிமொழியுடனும் காத்திருப்படனும் ஏமாற்றத்துடனும் பயணிக்கிறது காதல்கள். அம்மாவும் பெண்ணும் எளிதாகக் காதல் வயப்படுகிறார்கள், மனைவியாக துணைவியாக, வைப்பாட்டியாக, கள்ளக்காதலிகளாக எல்லாவித அவதாரங்களும் எடுக்கிறார்கள். மேற்கத்திய உலகின் பண்பாடென்றதொரு சுவருக்குள் அக்காதல்களை  அடைத்து விடமுடியாது இன்றைய உலகில் எல்லா பெருநகரங்களிலும் சன்னலைத் திறந்து காற்றுவாங்குவதைப்போல காதலைத் தேடும் இதுபோன்ற மதெலின்களும் வேராக்களும் இருக்கவே செய்கிறார்கள். ஒரு ஜோடி உயர்ந்த ரக பாதணிக்காக சோரம்போகிற மதெலினை சந்திக்கிறோம். முதலில் ஒரு ஸ்லாவ் (செக்கோஸ்லோவாக்யா) டாக்டரிடம் காதல், பிறகு போலந்து நாட்டைச்சேர்ந்த ஓர் அழகான இளைஞனைச் சந்திக்க நேர்ந்ததும் அவனுடன் காதல் ஆகக் காதல் வைரஸில் அவதிப்படும் இளநங்கை. அவள் மங்கை மடந்தை அரிவை தெரிவையானபின்பும் உயிர்க்கொல்லியாக உடன் பயணிக்கிறது. அவளது மகளுக்கு வேறுமாதிரியான அனுபவங்கள், அவளுள்ளும் உந்து சக்தியாக இருந்து அவள் உயிர் வாழ்க்கையை முன் நகர்த்துவது காதல்களே. இருவரும் காதலிக்கிறார்கள் காதலிக்கப்படுகிறார்கள், எளிதாக காதல் வயப்படுகிறார்கள், காதல் தருணங்களுக்காக ஏங்குகிறார்கள். திணவெடுத்த சரீரத்தின் தேவையோடு அவர்கள் காதல்களை ஒப்பிட்டளவில் நிறுத்துவதுகூட நியாயமானதொரு பார்வை ஆகாது. வேறெங்கோ காரணங்களும் அதற்கான நியாயங்களும் இருக்கின்றன. நாம் அவற்றை உய்த்துணரமுடியாதவரை நமது சமூக யாப்பிலக்கணப்படி அப்பெண்கள் சவலைப்பாக்கள்.

Chiara Mastroianni மகளாகவும் Catherine Deneuve தாயாகவும் நடித்திருக்கிறார்கள். காத்தெரின் தெனேவ் பற்றிச் சொல்லத் தேவையில்லை மிக நன்றாகவே நடித்திருக்கிறார். மகளாக நடித்திருக்கும் சியாராவும் நன்றாகவே செய்திருக்கிறார். Les Bien aimés திரைப்படம் கடந்த வருடம் கான் திரைப்படவிழாவில் சிறப்புகாட்சியில் திரையிட அனுமதிக்கப்பட்ட படம். ஆகையால் பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது. படத்தின் இயக்குனர் கிறிஸ்தோப் ஒனொரே(Christophe Honoré)நம்ம ஊர் பாசத்திற்குரிய பாரதிராஜா ரகம். இதுவரை அவர் எடுத்துள்ள படங்கள் அனைத்துமே காதலை அதிகமாக முன்நிறுத்துபவை. ஆனால் நம்முடைய தமிழ் சினிமா ரகத்தில் உருக உருக  காதலைத் தெரிவிக்காது அதன் பன்முகத் தன்மையைப் பற்றி பேசுபவை.

கிறிஸ்டோப் ஒனோரே பிரெஞ்சு பாரதிராஜாவெனில் படத்திற்கு இசை அமைத்துள்ள அலெக்ஸ் போப்பென் (Alexs Beaupain) பிரெஞ்சு இளைய ராஜா.  கடந்த இருபது ஆண்டுகளாக  நாடகம் மற்று இசைத் துரையில் அரும்பணியாற்றிவரும் La Compagnie du Ressort அமைப்புடன் இணைந்து எண்ணற்ற இசை நிகழ்ச்சிகளை மேடையேற்றிருக்கிறார். பாடலாசிரியர், இசைகோர்ப்பவர். இவருக்கும் இயக்குனர் கிறிஸ்தோ·ப் ஹொனொரேவுக்குமான நட்பு 2000 ஆண்டிலேயே தொடங்கிவிட்டது சேர்ந்து பணியாற்றிய திரைப்படங்கள் இவர்கள் கூட்டணியின் வெற்றியைத் தெரிவிக்கின்றன:

 Je peux vivre sans tois, tu sais/Le seul problème mon amour c’est/Que je ne peux pas vivre sans t’aimer

 நீயின்றியும் உயிர் வாழ்வேன்-அதை/ நீயும் அறிவாய்-ஆனால்/உன்னைக் காதலித்தாலன்றி/உயிர்வாழமுடியாதென்பது/எனக்குள்ள பிரச்சினை.

எனபது இப்படத்தில் வரும் பாடல். படத்தின் கதையும் அதுதான்.

——–

மொழிவது சுகம்: மனிதர் கடமைத் தேர்வென்பது உண்மைசார்ந்ததல்ல

“Aucun pouvoir sur terre ne peut arrêter une idée dont l’heure est venue.”

“காலமும் நேரமும் கைகூடினால், வருவது வழியில் நிற்காதென்று” எங்கள் கிராமத்தில் சொல்லக்கேட்டிருக்கிறேன். கைய்யறு நிலையில் மனிதர்க்கு தெம்பூட்டுவதற்கென்றே இது போன்ற வாசகங்கள் தமிழில் மட்டுமல்ல உலகில் எல்லாம் மொழிகளிலுமுண்டு. மேலேயுள்ள வாசகம் பிரெஞ்சுமொழிக்குச் சொந்தம். பத்தொன்பதாம் நூற்றாண்டு முழுவதும் அரசியல், சமூகம், இலக்கியமென பிரெஞ்சு பிரபஞ்சத்தை சுற்றிவந்த விக்டர் யுகோ என்ற மாமனிதனுக்கு அவ்வரிகள் சொந்தமானவை. இன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கும் இந்தியப் பாராளுமன்றத்தில் அவற்றை உச்சரித்திருக்கிறார்.  தமிழ் வழக்கிற்கும் விக்டர் யுகோவின் கூற்றுக்கு அடிப்படையில் வேறுபாடுண்டு. இங்கே ‘idée’ என்பதற்கு ‘திட்டம்’ அல்லது கருதுகோள் என்று பொருள். ஒரு திட்டத்தை செயல்படுத்துவதற்கான நேரமும் காலமும் பொருந்திவந்தால் அதனைத் தடுப்பதென்பது எப்பேர்பட்ட அதிகாரத்திற்கும் இயலாது’ என்றப் பொருளில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தமது உரையில் குறிப்பட்டிருந்தார். காரணம் ரூபாயின் மதிப்பை குறைப்பது, அந்நிய முதலீட்டை கட்டுப்பாடுகளின்றி வரவேற்பதென்ற தீவிர பொருளாதார சீர்திருத்தங்களை நாட்டில் அறிமுகப்படுத்தினாலொழிய இந்தியா தலையெடுக்க முடியாதென்ற உண்மையின் அடிப்படையில் ஆற்றிய உரை.

மன்மோகன் சிங் அப்போது பிரதமரல்ல, இந்தியாவின் நிதி அமைச்சராக பொறுப்பேற்றிருந்த காலம். புது டில்லி பாராளுமன்றத்தில் நிதி அமைச்சராக பொறுப்பேற்ற உடன் 1991ம் ஆண்டு ஜூலை மாதம் நிகழ்த்திய உரை.. அதற்கு முன்பு என்ன நடந்தது என்பதை நாம் அறிவோம். இந்தியா வாங்கியக் கடனை வட்டியுடன் திருப்பி அடைக்குமா என்ற நிலையில் உலக வங்கிக்கு முன்னீட்டு வைப்பாக தமது கையிறுப்பு தங்கங்களை -அதாவது 67 டன் தங்கத்தை உலக வங்கிக்கு அனுப்பிவைத்து கடனைப் புதுப்பிக்கவேண்டிய நிர்ப்பந்தம். இத்தகைய நெருக்கடியான நேரத்தில்தான் நிதி அமைச்சராக மன்மோகன் சிங் பொறுப்பேற்றார். அதன்பின்னர் மளமளவென்று அப்போதைய இந்திய நிதிஅமைச்சகம் மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக, அறுவடை செய்துகொண்டிருக்கிற பலன்களுக்கு இன்றைய இந்தியா சாட்சி. இப்போது மன்மோகன் சிங் நிதி அமைச்சரல்ல நாட்டின் பிரதமர் அதாவது பெயரளவில். அவர் ஆளவில்லை பெரிய முதலாளிகள் ஆளுகிறார்கள். அமெரிக்காவிலும் மேற்கத்திய நாடுகளிலும் அரசாங்கங்கள் பெருமுதலாளிகளுக்காக வளைந்துகொடுக்கிறார்களெனில் இங்கே இந்தியாவில் அரசாங்கம் அவர்கள் காலடியில் கிடக்கிறது. ஆக அன்று மன்மோகன் சிங் மடைதிறந்த வெள்ளம் இன்று புற்களுக்குப் பாயந்ததுபோக பயிர்களை நனைக்கிறது.

உடடியாக பெரிய மாற்றங்கள் எதையும் அன்னா ஹஸாரே போராட்டம் விளைவிக்கப் போவதில்லை. அன்னா ஹசாரேவும், அவரது சகாக்களும், பொதுமக்களில் பலரும் இது மந்திரத்தில் மாங்காய் விழவைக்கிற செயல் திட்டமல்ல என்பதை உணர்ந்தே இருப்பார்கள். எனினும் ஊழல் சக்திகளை இப்போராட்டம் யோசிக்க வைக்கும். கையூட்டுக் கொடுக்கின்றவர்களில் ஒரு சிலரையாவது வேறுவகையில் தங்கள் அன்றாடப்பிரச்சினையை சமாளிக்கத் தூண்டும். அரசு ஊழியர்களில் ஒன்றிரண்டு பேராவது இலஞ்சம் கேட்க வெட்கப்படக்கூடும். காவலர்களில் உத்தமர்களை சந்திக்கும் அதிசயங்கள் நிகழலாம். நீதிபதிகள் இனி குற்றவாளிகள் கூண்டில் நிறுத்தப்படும் ஊழல் ஆசாமிகளிடம் துளியும் இரக்கம் காட்டமாட்டார்கள்.

ஜனநாயகம் என்கிற கருத்தியமும் சரி அதன் தொழிற்படுத்தும்விதமுஞ்சரி மக்களின் ஆதரவும் திடமான உறுதியும் இருந்தாலொழிய ஜெயிப்பதில்லை. நேற்றைய இந்தியா, அண்மையில் துனீசியா, எகிப்து,  இன்று லிபியா உதாரணங்கள். மேற்கத்திய நாடுகள் விரும்பின அல்லது அமெரிக்கா விரும்பியது அதனால் மேற்கண்ட நாடுகள் சர்வாதிகாரிகளிடமிருந்து விடுதலைபெற்றார்களென கூறவியலாது. மக்கள் விரும்பினார்கள், வேண்டினார்கள், உறுதியாய் நின்றார்கள் முடிவில் விடுதலையைப் பெற்றார்கள். ஆனால் பெற்ற விடுதலையை பாதுகாப்பதிலும் பராமரிப்பதிலுந்தான் பிரச்சினைகளிருக்கின்றன.  அன்னா ஹசாரேவின் போராட்டத்துக்கு ஆதரவு தருவதால் பிரச்சினைக்குத் தீர்வுகாணமுடியாது. சொந்த வாழ்க்கையில் ஊழலைத் தவிர்க்க என்ன செய்யப்போகிறோம் என்பதைப் பொறுத்தது அது.

நமது மக்கள் உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர்கள். சில வேளைகளில் அன்னா ஹஸாரேவுக்குக் கூடும் கூட்டத்தைப்பார்க்க அரட்டை அரங்கங்களில் நடந்தேறும் காட்சிகள் நினைவுக்கு வருகின்றன. பொதுவாழ்க்கையில் நேர்மையை எதிர்பார்க்கும் நாம், சொந்த வாழ்க்கையில் இலாபத்தை தரும் காரியத்தை மட்டுமே தேர்வு செய்கிறோம். மனிதர் கடமைத் தேர்வென்பது உண்மைசார்ந்ததல்ல அவனது அகவயமான விருப்பத்தை பூர்த்திசெய்வது. மனிதனின் அகவிருப்பம் அடுத்தவர்களின் நலனில் அக்கறைகொண்டதல்ல. மதுபோல, காமம்போல அதுவும் போதை தரக்கூடியது, நம்மை மயக்கத்தில் ஆழ்த்தக்கூடியது. ஆக அன்னா ஹஸாரேயின் போராட்டமென்பது ஓர் ஆரம்பம் அதனை தொடர்ந்து செயல்படுத்துவதென்பது ஒவ்வொரு இந்தியனின் அந்தரங்க நேர்மை சார்ந்தது.

————

பிரான்சைத் தெரிந்துகொள்ளுங்கள்-2

அன்றாட உணவு: பிரெஞ்சு மக்களுக்கு ரொட்டி ஒரு பிரத்தியேக உணவு.
இங்கே அதிகாலையிலேயே அதாவது காலை ஐந்து மணிக்கே ரொட்டிக்கடைகளை திறந்து வைத்திருப்பார்கள்.  பூலான்ழெரி (Boulangerie) என்கிற ரொட்டிக்கடைக்குச் சென்று வீட்டுக்கு,  அன்றைக்கு வேண்டிய ரொட்டிகளை வாங்குகிறார்களோ இல்லையோ தவறாமல் காலை உணவுக்கு வேண்டிய ரொட்டிகளை கட்டாயம் ஒர் அசலான பிரெஞ்சுக்காரன் கட்டாயம் வாங்கிவருவான். தினசரி ரொட்டியில் பகத் (Baguette)க்ருவாசான் (la Croissant) சாக்கலேட் க்ருவாசான் என அமெரிக்கர்கள் சொல்கிற சாக்லேட் ரொட்டி(le pain au chocolat) ஆகிய மூன்றும் முக்கியமானவை. பழங்காலத்தைப் போலன்றி இப்போது அநேக பிரெஞ்சுக்காரர்கள் பிறபொருட்களை வாங்குவதற்கென பேரங்காடிகளுக்குச் செல்கிறபொழுது ரொட்டிக்களையும் அங்கேயே வாங்கிக்கொள்ள நேர்ந்தாலும் ஆங்காங்கே இருக்கிற ஒன்றிரண்டு கடைகளில் இவற்றை வாங்குவதை ஒரு சம்பிரதாயமாக வைத்துள்ளனர். எனவே அரிதாகி வருகிற இதுபோன்ற ரொட்டிக்கடைகளில் கூட்டம் அதிகம்.

பெரும்பாலான நட்சத்திர ஓட்டல்களிலும், விமானங்களிலும் இந்த பிரெஞ்சு ரொட்டிகளை காலை உணவுக்கு வழங்குவதைப் பார்த்திரிப்பீர்கள். பகத்தை (Baguette) அதிகம் பார்த்திருக்க நண்பர்களுக்கு வாய்ப்பிருக்காது. இந்தியாவில் புதுச்சேரி சென்னை, பெங்களூர், நகரங்களில் பெரிய ரொட்டிகடைகளில் இப்பொழுது கிடைக்கிறது. பகத் என்ற சொல்லை அநேகமாக நீங்கள் கேட்டிருக்கலாம்  இசைக்குழுவை நடத்துபவர் கையிலிருக்கும் குச்சிக்கும், டிரம்ஸ் வாசிக்க உபயோகப்படும்  குச்சிகளுக்கும் பகத் என்றுதான் பெயர். பிரான்சுக்கு வந்தால் கையில் பகத்துடன் அதாவது நான் சொல்வது குச்சிபோன்ற நீண்ட ரொட்டியுடன் நடந்துபோகிற மனிதர்களை கட்டாயம் எதிர் கொள்வீர்கள். சிலர் வீடுவரை எடுத்துச்செல்லகூட பொறுமை இருக்காது, சூடாக இருக்கும்போது அதன் மணம் அப்படி, உடைத்து வாயில்போடச்சொல்லி வம்பு பண்ணும்.

———————

கல்வராயன் மலையும், பிரான்சு மாணவியரும்.

நண்பர் ஆ.பசுபதி என்கிற தேவமைந்தன் மூலம் பிரான்சுநாட்டு நொர்மாண்டி பள்ளி மாணவியர் கல்வராயன் மலை -புள்ளுவக்குடியில் ஒரு பள்ளிக்கூடத்தை கட்டித் தந்துள்ள செய்தியை அறிந்தேன் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. அந்த மகிழ்ச்சிக்கு இரண்டு காரணங்கள் ஒன்று அப்பள்ளி மாணவியர் தமிழ்நாட்டிற்கு தங்கள் உழைப்பை நல்கியிருக்கிறார்களென்பது. இரண்டாவது அப்பள்ளி மாணவியரில் ஒரு பெண் நாங்கள் இருக்கும் பிரான்சில் நான் வசிக்கின்ற நகரைசேர்ந்தவர், குறிப்பாக அவரது பெற்றோர்களை அறிவேன்.

http://httpdevamaindhan.blogspot.com/

பிரெஞ்சுத் தமிழர்கள்

‘மிஸியே’, ‘மதாம்’, பீரோ, ஒப்பித்தால், ‘சொல்தா’ ‘ருய் ரொமென் ரொலான்’, ‘ஹோட்டெல் தெ வீல்’, அல்லியான்ஸ் பிரான்ஸேஸ், லிஸ்ஸே பிரான்ஸே இதுபோன்ற சொற்களும், காவல் துறையின் ‘சிவப்பு கெப்பி, ‘ஆயி மண்டபம்’ போன்ற குறியீடுகளும், அன்னை எனப்படும் அரவிந்தரின் ஆன்மீகத் தோழியான மீரா அல்·பான்ஸாவும் என்றென்றும் புதுச்சேரியை பிரான்சு நாட்டோடு இணைத்து நினைவூட்டுபவர்கள். ஆனால் பிரெஞ்சு தமிழர்கள் என்கிறபோது அவர்கள் புதுச்சேரி மக்கள் மட்டுமல்ல. பிரெஞ்சு மண்ணோடு, மொழியோடு, கலாச்சாரத்தோடு ஏதோவொருவகையில் தொடர்புடைய தமிழர்களெல்லாம் பிரெஞ்சுத் தமிழர்களெனில், மொரீஷியஸ் தமிழர்களும், இலங்கைத் தமிழர்களுங்கூட பிரெஞ்சுத் தமிழர்களாகிறார்கள். ஏறக்குறைய ஒன்றரை இலட்சம் தமிழர்கள் பிரான்சில் இன்றைக்கு வசிக்கிறார்களெனில் அவர்கள் இந்தியா (புதுச்சேரி), இலங்கை, மொரீஷியஸ் நாடுகளிலிலிருந்து அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணங்களை முன்னிட்டு இங்கு குடியேறிவர்கள். இம்மூன்று பிரிவினரும் எண்ணிக்கை அளவில் ஏறக்குறைய சமமாகவே இருக்கிறார்கள்.

காலனிய ஆதிக்கத்தின் விளைவாக புதுச்சேரி மற்றும் காரைக்காலைச் சேர்ந்த இந்தியத் தமிழர்களும், மொரீஷியஸ் தமிழர்களும் பிரான்சுக்குக் குடியேறியவர்கள். இந்து மாக்கடலைச்சேர்ந்த பிரெஞ்சு தீவுகளில் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் 17ம் நூற்றாண்டிலேயே கப்பலில் கொண்டுவரப்பட்டு குடி அமர்த்தப்பட்டனர். தொடக்கத்தில் அடிமைகளாகவும், பின்னர் தோட்டத் தொழிலாளர்களாகவும் உதாரணமாக பெனுவா துய்மா என்பவர் கவர்னராக இருந்த காலத்தில் பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காப்பித்தோட்டத்தில் பணிபுரியவென்று 300 புதுச்சேரி தமிழர்கள் அழைத்துவரப்பட்டு ரெயூனியன் என்ற தீவில் குடியமர்த்தப்பட்டார்கள். நாளடைவில் அவர்கள் மர்த்த்தினிக், குவாதுலுப், பிரெஞ்சு கயானா தீவுகளென்று பரவி வசித்தனர். பின்னர் அவர்களில் பலர் ஐரோப்பிய எல்லைக்குள்ளிருந்த பிரெஞ்சு பிரதேசத்துக்கு குடிவந்தனர். இவ்வரலாறு மொரீஷியஸ¤க்கும் ஓரளவு பொருந்தும். 1940களில் இரண்டாம் உலகபோரின் போது பிரான்சு பிறகாலனிகளிலிருந்து எப்படி யுத்தத்திற்கு ஆள் சேர்த்ததோ அவ்வாறே தமதுவசமிருந்த இந்திய காலனிப்பகுதிகளிலிருந்தும் வீரர்களைக் கொண்டுவந்தது. புதுச்சேரி அடித்தட்டு மக்கள் பலரும் இவ்வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு பிரெஞ்சு ராணுவத்தில் சேர்ந்தனர். பிரான்சு நாட்டில் இன்றுள்ள புதுச்சேரி மற்றும் காரைக்காலைச் சேர்ந்த இந்தியத் தமிழர்களில் பெரும்பாலோர் பிரெஞ்சு ராணுவத்தில் பணிபுரிந்தவர்களாகவோ அல்லது அவர்கள் சந்ததியினரின் இரத்த உறவுகொண்டவர்களாகவோ இருப்பார்கள். இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றதை அடுத்து,  புதுச்சேரி மாநிலம் 1954, நவம்பர் 1 முதல் விடுதலை பெற்று இந்தியாவுடன்’இணைப்புத் தீர்மான ஒப்பந்தத்தின்'(De-facto settlement’) அடிப்படையில் இணைந்தது. இதனால் எழுந்த சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ள 1956இல்  இந்தியாவுக்கும் பிரான்சுக்குமிடையில் மீண்டுமொரு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. தொடர்ந்து 1962, ஆகஸ்ட் 16இல் ‘நடைமுறை அதிகார மாற்ற ஒப்பந்தத்தில்’ (De-jure transfer) இந்தியப் பிரதமர் நேருவும் பிரஞ்சுத் தூதுவரும் கையொப்பமிட்டனர். இவ்வொப்பந்தம் புதுச்சேரி மக்களுக்கு இந்தியா அல்லது பிரான்சுநாட்டு குடியுரிமைகளூள் இரண்டிலொன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வாய்ப்பினை நல்கி, அவ்வாய்ப்பினை மேலும் ஆறுமாதகாலம் நீட்டிக்கவும் செய்தார்கள். அதன் பலனாக கணிசமான அளவில் புதுச்சேரி, காரைக்கால் வாசிகள் மீண்டும் பிரான்சுக்கு வரநேர்ந்தது. இது புதுச்சேரி தமிழர்கள் பிரான்சுக்கு வரநேர்ந்த வரலாறு. இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை சென்ற நூற்றாண்டில் எண்பதுகளில் நடந்த இனக் கலவரத்திற்குப் பிறகு பிரான்சுக்குக் குடிவந்தவர்களென்பது அண்மைக்காலங்களில் திரும்பத் திரும்ப நாம் வாசித்தறிந்த வரலாறு.

பிரெஞ்சுத் தமிழர்களின் இன்றையை சமூக கூறுகள், பண்பாடுகளென்ன? என்பது சிக்கலானதொரு கேள்வி. நாமிருக்கும் உலகம் பொருள்முதல் வாதத்தை மட்டுமே பிரதானமாகக்கொண்டது. மனித இனமும் விற்பனையை மட்டுமே அல்லது விலைபோவதை மட்டுமே கருத்திற்கொண்டு இயங்கும் சரக்காகிப்போனதொரு நிலையில்: பண்பு, தொன்மம், அறம் இவைகளெல்லாம்கூட -விற்பனையின் கிடைக்கும் இலாபத்தின் அடிப்படையில் அவ்வப்போது உருமாற்றம் பெற்று ஆயுளை நகர்த்தும் நிர்ப்பந்தத்தில் உள்ளன. பிரெஞ்சுத் தமிழர்களின் சமூகக்கூறுகள் தமிழ்நாட்டைப்போலவே பல கூட்டு வடிவங்களை முன்னிறுத்துகின்றன. பொதுவாகப் பிரெஞ்சுத் தமிழர்கள், பண்பாட்டு அடையாளமென்று  முன்னிறுத்துவது அவரவர் ‘இருத்தலை(Existence) உயர்த்திப்பிடிக்கும் குணமேயன்றி தமிழரின் அரிதானப் பெருமையை உண்மையில் மீளப்பெறும் முயற்சிகளில்லை.

பிரெஞ்சுத் தமிழர்களை ஒரு வசதிக்காகவும், மானுடவியல் தெளிவுறுத்தும் உண்மைகள் அடிப்படையிலும் மூன்றுவிதமாக அடையாளப்படுத்தலாம். தமிழை மறந்தவர்கள், மறந்து கொண்டிருப்பவர்கள், மறக்க இருப்பவர்கள். தமிழை மறந்தவர்களென்று பிரெஞ்சு மண்ணுக்கு பதினேழு, பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் வந்துசேர்ந்த தமிழர்களின் இன்றைய சந்ததியினரைச் சொல்லலாம். இவர்கள் மேலே குறிப்பிட்ட ரெயூனியன், குவாதுலுப், பிரெஞ்சு கயானாவை சேர்ந்தவர்கள், அடுத்து புதுச்சேரி காரைக்கால் மக்களின் சந்ததியினராக ஹனாய், சைகோனிலிருந்து இவர்களுடன் இணைந்துகொண்டவர்கள், மூன்றாவதாக மொரீஷியஸிலிருந்து குடிபெயர்ந்து பிரான்சு நாட்டில் வசிப்பவர்கள். மொரீஷியஸ் தமிழர்களுள் ஒரு பிரிவினர் மட்டுமே தங்களைத் ‘தமுல்'(Tamul) அதாவது தமிழர்கள் எனக் கூறிக்கொள்வார்கள். கிறிஸ்துவர்களும், இஸ்லாமியர்களும் அவர்கள் தமிழர்களாக இருந்தாலுங்கூட இவர்களுக்கு ‘இல்லை’. காரணம் இவர்கள் தீ மிதிக்கிறார்கள், காவடி எடுக்கிறார்கள், கோவிந்தனுக்குப் பூசை வைக்கிறார்கள், மாரியம்மனுக்கு கஞ்சி ஊற்றுகிறார்கள். திருவாசகத்தையும், ஒன்றிரண்டு திருப்புகழையும் பிரெஞ்சில் அப்படியே எழுதிவைத்துக்கொண்டு கதிரசனும் (கதிரேசனும்) பொக்கிலியும்(பொற்கலையும்) வாசிப்பவர்கள். ஆக இவர்களைத் தமிழர்களாக அடையாளப்படுத்துவது தமிழ்த்தாயோ தமிழன்னையோ அல்ல முருகனும், மாரியம்மனும். இதுபோன்ற நாட்களைத் தவிர்த்து மற்ற நாட்களில் இவர்கள் முழுக்க முழுக்க மேற்கத்திய வாழ்க்கைநெறியைப் பின்பற்றுவர்கள். பிரெஞ்சுத் தமிழர்களில் இரண்டாவது வகையினருக்கு: இருபதாம் நூற்றாண்டில் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலிருந்து குடியேறியவர்களையும், திருமணம் மற்றும் வேறு காரணங்களை முன்னிட்டு (இந்த வேறுகாரணங்களில் அறுபதுவயது பெண்மணியைப் பிரெஞ்சு குடியுரிமைக்காக மணப்பதும் அடக்கம்) பிரான்சுக்குப் புலம்பெயர்கிறவர்களையும் உதாரணமாகக் கொள்ளலாம். மொரீஷியர்கள் தங்களை ‘தமுல்'(Tamoul) என்று சொல்லிக்கொள்ளத் தயங்குவதில்லை. தமிழ்ச் சங்கங்கள் வைத்து பொங்கல், தீபாவளி, பாரதி, கம்பன், அண்ணா என்று கொண்டாடினாலும் புதுச்சேரிமக்கள் அண்மைக்காலம்வரை தங்களை தமிழரென வெளிப்படையாக அறிவித்துக்கொள்வது குறைவு அல்லது அதனைத் தவிர்க்க நினப்பவர்கள். பிரான்சு நாட்டில் குடியிருக்கும் ஒரு புதுச்சேரிவாசியை நீங்கள் யாரென்று கேட்டீர்களெனில் அவர் சட்டென்று சொல்வது, ‘Je suis Pondicherien'( புதுச்சேரியைச் சேர்ந்தவன்). பிரெஞ்சு வரலாறும் அவர்களை புதுச்சேரியைச் சேர்ந்த பிரெஞ்சுக்காரர்களென்றே (Franco-Pondicherians) கருதிவந்திருக்கிறதே தவிர ‘பிரெஞ்சுத் தமிழர்கள்’ என்ற சொல்லாட்சியின் கீழல்ல. நாற்பதுகள், ஐம்பதுகள் அறுபதுகளில் பிரான்சுக்கு வந்தவர்கள் பெரும்பாலும் பிரெஞ்சு ராணுவத்திற்குச் சேவகம் செய்யவென்று வந்தவர்கள், அவர்கள் தமிழை மறக்காமலிருக்க நீங்கள் நினைப்பதுபோல கம்பனோ திருவள்ளுவனோ காரணமல்ல சிவாஜிகணேசனும் எம்ஜிஆரும். இக்காலங்களில் நன்கு படித்த இரண்டிலிருந்து ஐந்து சதவீத புதுச்சேரி தமிழர்களும் பிரான்சுக்கு வந்திருக்கிறார்கள், அவர்கள் பல்கலைகழகங்களிலோ உயர் பணிகளிலோ இருப்பவர்கள். தமிழால் எனக்கென்ன லாபம்? என்று வலம் வருபவர்கள். எண்பதுகளில் வந்த புதுச்சேரிகாரர்கள் அதிக எண்ணிக்கையில் தமிழ்ச்சங்கங்களை நிறுவி வருடத்தில் ஒன்றிரண்டு நாட்கள் பட்டிமன்றம், கவிதையென்று அமர்க்களப்படுத்துகிறார்கள். இப்போக்கிற்கு இதேகாலங்களில் பிரான்சுக்கு வரநேர்ந்த இலங்கைத் தமிழர்கள் காரணமாக இருக்கலாம். தமிழ், தமிழ் மக்கள் என்ற சொல்லைப் பிரெஞ்சுக்காரர்கள் அறியப்படநேர்ந்ததே எண்பதுகளில்  இலங்கைத் தமிழர்களின் வருகைக்குப் பின்பென்றுதான் சொல்லவேண்டும்,  காரணம் இலங்கைத் சகோதரர்கள் தமிழர்களென்ற குலக்குறியுடன் பிரான்சுக்கு வந்தவர்கள் அகதித் தகுதி பெறுவதில் ஆரம்பித்து, பண்பாட்டிலும் பிறவற்றிலும் தமிழ்த் தேசிய அரசியலை முன்வைத்து தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளவேண்டிய நெருக்கடி அவர்களுக்கு இருந்தது. இதே இலங்கையிலிருந்து எண்பதுகளுக்கு முன்பு ஐரோப்பாவிற்குப் புலம்பெயர்ந்தவர்கள் இந்த அளவிற்குத் தமிழுணர்வைக் கொண்டவர்களல்லவென்பதையும் நினைவு கூர்தல் வேண்டும்.

தமிழ்த்தேசிய உணர்வுடன் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் தமிழையும் கொண்டுவந்தார்கள். தமிழ் சங்கங்கள் ஊடாக தமிழைப் போதிப்பதோடு உயர் நிலைப் பள்ளி இறுதிவகுப்புத் தேர்விலும் தமிழை ஒரு பாடமாக எடுக்க முடிகிறதென்றால் அது இலங்கைத் தமிழர்களின் முயற்சி, அதற்கு உறுதுணையாகவிருந்த புதுச்சேரிகாரரான பாரீஸ் சொர்போன் பல்கலைக்கழகத்தின் l’Institut National des Langues et Civilisations Orientales தமிழ் பேராசிரியர் நண்பர் முடியப்பநாதனையும் இங்கே குறிப்பிடவேண்டும். எண்பதுகளுக்குப் பிறகு பாரீஸ் நகரில் Gare du Nord என்ற பகுதி தமிழர் பகுதியாக மாறி இருக்கிறது. இங்கு பெயர்ப்பலகைகளெல்லாம் தமிழில் வைக்கப்படவேண்டுமென்று சட்டங்கள் ஏதுமில்லை, இருந்தபோதிலும் பெயர்ப்பலகைகளைத் தூய தமிழில் பார்க்க முடியும். தமிழர்களுக்கே உரிய குணத்துடன் கோவில்களை நிறுவி, வழிபாடு, பூசைகள், சடங்குகள் எப்போதும்போல தொடருகின்றன. இந்து கோவில்கள் மட்டுமல்ல கிறிஸ்துவ தேவாலயங்களிலும் தமிழில் பூசைகள் நடக்கின்றன. இங்கு எமது நிறத்தையும் முகத்தையும் பார்த்து தமிழரல்லாத ஒருவர் பிரான்சு நாட்டில்  ‘வணக்கம்’ என்று கூறினால் அப்பெருமை இலங்கைத் தமிழர்களைச் சார்ந்தது.

இந்தியத் தமிழரோ இலங்கைத் தமிழரோ தமிழ் அடையாளத்தை தக்கவைத்துக்கொண்டிருப்பவர்கள் எவரென்று பார்த்தால் அவர் தங்கள் ஆயுளில் ஒரு பகுதியை இந்தியாவிலோ இலங்கையிலோ செலவிட்டவராக இருப்பார். மொழிமீதான காதல் எங்கும் அரும்பும், ஆனால் மொழிஉணர்வினை பிறந்த மண்ணில் பெற்றால்தான் உண்டு.
———-
நன்றி: அமுதசுரபி பொங்கல் மலர்

பிரான்சை தெரிந்துகொள்ளுங்களேன் -1: பிரெஞ்சு மொழி

உலக நாடுகளில் ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக உபயோகத்திலிருக்கிற மொழி பிரெஞ்சு. பிரெஞ்சும் இலத்தீன் மொழியின் பாரம்பர்யத்தில் உதித்ததுதான், அது எட்டியுள்ள இடமும் ஆங்கிலத்திற்கும் சிறிதும் சளைத்ததல்ல. மொழி மாநாடுகளும், ஞானசூன்ய ஆய்வுகட்டுரைகளும், பட்டிமன்றங்களும் தமிழை வளர்த்துவிடும் என நம்பும் திராவிடத்தின் ஆர்ப்பாட்ட அரசியலின்றி மொழி வளர்க்கும் இனம் பிரெஞ்சினம். அவர்கள் மொழிவரலாறும் அரசியல் வரலாறும் வேறுவேறல்ல.

சூது, தந்திரம், வர்த்தகம், காலனி ஆதிக்கம், மதமாற்றம், கலை, பண்பாடு, தொழில்கள், அறிவியல் வளர்ச்சி என அனைத்தும் பிரெஞ்சு மொழியின் வளர்ச்சிக்குப் பங்களித்திருக்கின்றன. ஒன்றை இங்கே சுட்டிக்காட்டவேண்டும் இங்கிலாந்தும் -பிரான்சு நாடும் இருமைப் பண்புகளின் அடிப்படையில் எதிராளிகளாக இருந்தாலும் இருவரும் பரஸ்பரம் தங்களை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். இங்கிலாந்து அரச குடும்பத்தின் முக்கிய மொழியாகவும், ஆங்கில கனவான்களின் மொழியாகவும், பிரெஞ்சு இருந்துவந்ததென்பது சரித்திரம் தரும் உண்மை. இன்றைக்கும் ஆங்கில மொழி வல்லுனர்கள் அநேகர் பிரெஞ்சு மொழியை சரளமாக பேசவும் எழுதவும் வல்லவர்கள். ஆங்கிலத்தித்தில் எழுதும் படைப்பாளிகளுக்கும் இது பொருந்தும். இத்தகைய மனப்பாங்கை பிரெஞ்சு எழுத்தாளர்களிடம் பார்க்க முடியாது. ஆக ஆங்கிலம் தம்மை நிலைநிறுத்திக்கொண்ட  இடத்திலெல்லாம் பிரெஞ்சு ஊடுறவ காரணமாயிற்று. ஆங்கில நாவல்களில் படைப்புகளில் பிரெஞ்சு மொழியை இடைக்கிடை புகுத்துவதென்பது நாகரீகமாயிற்று; விளைவு பிரெஞ்சு ஆங்கிலம் நுழைந்த இடத்திலெல்லாம் இலைமறை காயாக உடன் சென்றது. இதற்கு எதிர்மாறானது ஆங்கிலத்தின் நிலமை.  ஆங்கிலம் தெரிந்த பிரெஞ்சு எழுத்தாளரை விரல்விட்டு எண்ணிவிடலாம், அப்படியே தெரிந்தாலும் ஆங்கிலச் சொற்களை பயன்படுத்தவே மாட்டார்கள். அப்படி உபயோகிக்க நேர்ந்தாலும் மிகவும் தவிர்க்கமுடியாத நிர்ப்பந்தங்கள் இருந்தாலொழிய உபயோகிப்பதில்லை.

உலகில் 33நாடுகளில் அரசு மொழியாக பிரெஞ்சு இருக்கிறது. தவிர உலகில் புதிய மொழியைக் கற்பவர்கள் ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக தேர்வுசெய்வது பிரெஞ்சு. 175 மில்லியன் மக்கள் உலகில் பிரெஞ்சு மொழியை நன்கு எழுதவும் பேசவும் தெரிந்தவர்களெனவும் 100 மில்லியன் மக்கள் அன்றாட வாழ்க்கையிலும் அம்மொழியை உபயோகிக்கத் தெரிந்தவர்கள். உலகின் மிக முக்கியமான அரசு சாரா நிறுவனங்கள் அனைத்திலும் பிரெஞ்சு முக்கியமானதொரு மொழியென்ற தகுதியுமுண்டு.

——–

எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை, வாழிய நிலனே: அன்னா ஹஸாரே

அன்னா ஹஸாரேவை எனக்கு அறிமுகப்படுத்தியவை இந்திய ஊடகங்கள். சொந்தச்செலவில் பொன்னாடை போர்த்திக்கொண்டு ஊர்முழுக்க தண்டோரா போடும் இந்திய மனப்பான்மைக்கு விலக்காக ஓர் அபூர்வ மனிதர். ஊர் பிரச்சினையைக் கையிலெடுத்துக்கொண்டு உழைக்கின்ற ஒன்றிரண்டு உத்தமர்கள் இந்தியாவில் இன்றைக்கும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்கிறபோது மனதிற்கு நிறைவாக இருக்கிறது. இந்தியா, அரசியல் கொள்ளைகூட்டத்திடமிருந்து விடுபடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது நறிகுறவர் கூட கைத் தொலைபேசி வைத்திருக்கிறார் என்பதிலில்லை. தனிமனித ஒழுக்கத்தைப் போற்றுகின்றவர்களின் எண்ணிக்கையும், சட்டத்தை மதிக்கிறவர்களின் எண்ணிக்கையும், கலையையும் பண்பாட்டையும் வளர்த்தெடுக்கின்றவர்களின் எண்ணிக்கையையும் பொறுத்தது அது. மனித குலத்தில் எந்தக்கும்பலில் இந்த எண்ணிக்கையினர் கணிசமாக இருக்கிறார்களோ, பெருமைகளை பாசாங்கற்ற செயல்பாடுகளால் நேர் நிறுத்துகிறார்களோ அக்கும்பல், அந்த இனம் – அவர்களை சேர்ந்த நாடு வாரலாற்றின் கவனத்தை தனது பக்கம் ஈர்க்கிறது.

இந்திய ஊடகங்களின்றி வேறு வகையிலும் அன்னா ஹசாரேவை படிக்க முடிந்தது. உபயம்: அவரது சகாக்களான கிரண்பேடி, மற்றும் சாந்தி பூஷன்; அவரது குரலுக்கு செவி சாய்க்கும் நடுத்தர வர்க்கம், படித்த மக்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், அரசு அலுவலகர்கள், ஓய்வு பெற்ற முன்னாள் அரசு அலுவலர்கள், முதியோர்கள், இளைஞர்கள், குடும்பப்பெண்மணிகள் என்று அப்பட்டியல் நீளுகின்றது. ஆக மொத்தத்தில் ஒரு சமூகத்தின் அனைத்து தரப்பினரும் அவருக்காக ஊர்வலம் போகிறார்கள், உண்ணாவிரதம் இருக்கிறார்கள், கூட்டம் ஏற்பாடு செய்கிறார்கள். சராசரி இந்தியன் ஒருவனுக்கு பரவலாக நாடெங்கும் ஆதரவு திரண்டதில்லை. ஆக அவரை நம்புகிறேன். இந்த எனது நம்பிக்கைக்கு வலுவூட்டுவதுபோல முன்னாள் நீதிபதி கிருஷ்ணய்யர் போன்றவர்களின் குரல்களும் ஒலிக்கின்றன.

அவரது போராட்டம் வெற்றி பெறவேண்டும் ஊழல் பெருச்சாளிகளிடமிருந்து இந்தியா விடுதலை பெறவேண்டுமென அண்ணல் காந்தியை பிரார்த்திக்கிறேன்.