Monthly Archives: மார்ச் 2013

எழுத்தாளன் முகவரி- 11:

கதையும் காலமும்

ஒரு நல்ல கதை சொல்லல், விருந்தோம்பலைப்போல. வாசகன் விருந்து, படைப்பாளி விருந்து படைப்பவன். இலையில் உட்காருபவனுக்கு எதில் தொடங்கலாமென்று தெரிந்தே இருக்கும், பிறந்தது முதல் சொந்தவீட்டில், உறவினர் வீட்டில், நண்பர்கள் வீட்டில், அந்நியர் வீட்டில் அவன் விரும்பியதை, விரும்பாததை சந்தோஷத்துடன் அல்லது கசப்புடன் சாப்பிட்டு முடிக்கிறான். விருந்தை இலையில் உட்காருவதற்கு முன், இலையில் உட்கார்ந்த பின் என இருவகையாகப் பிரித்துக்கொள்வோம். இ.மு.: வாசகன் சுந்ததிரத்தோடும், தேர்வோடும், விருப்பத்தோடும் சம்பந்தப்பட்டது. இல்லத்தரசனான கணவன் எனது சுதந்திரம் முக்கியத்துவம் பெறுகிறது, எனது தேர்வு முன்னிலை வகிக்கிறது, எனது விருப்பம் நிறைவேறுகிறதென அங்கே நினைக்கிறான், இ.பி.யில்? அவன் சுதந்திரமும், தேர்வும், விருப்பமும் மனைவியின் பரிசீலனக்கு உட்படுகிறது. உப்பும் உறைப்பும் அவள் எடுத்த முடிவு. நாக்கின்ருசி அவனால் தீர்மானிக்கப்ட்டதல்ல, அவள் தீர்மானித்தது, சமைத்துப்போட்டவர்கள் காட்டியது. படைப்பும் அப்படிபட்டதுதான், படைப்பாளியே வாசகனை உருவாக்குகிறான். விருந்தை வழிநடத்தும் பொறுப்பு விருந்து படைப்பவனுக்கு இருப்பது போல வாசகனை வழிநடத்தும் பொறுப்பு எழுத்தாளனுக்கு இருக்கிறது. அந்த வழி நடத்தலில் மிகமுக்கியமான இரண்டு  தனிமங்கள்: ‘தொடக்கமும்’, ‘முடிவும்’. ஒரு புனைவை எழுத உட்காருகிறபோது, எதில் தொடங்கவேண்டும் எங்கே முடிக்கவேண்டும் என்பதில் தெளிவும், காலத்துடன் அவற்றைச் சடைபோடும் சாதுர்யமும் இருந்தால், பாதிகிணறை தாண்டிவிட்டோமென்பது உறுதி.

புனைவுகள் அனைத்துமே வரிசைக்கிரமமாக சொல்லப்பட வேண்டுமென்பதில்லை: ஒரு நேர்க்கோட்டில் கதையை முன்னெடுத்துச் செல்பவர்கள் இருக்கிறார்கள், முடிவை நோக்கி கதையை நகர்த்தும் முறை, – விஷ்ணுபுரம் (ஜெயமோகன்)-வானம் வாசப்படும் (பிரபஞ்சன்). கதையின் முடிவை இடையில் வைத்து முன்னும் பின்னுமாக கதையைப் பிரித்து சொல்லுதலென்பது இன்னொரு ஒருவகை,  – வார்சாவில் ஒரு கடவுள் (தமிழவன்) -யாமம் (எஸ். ராமகிருஷ்ணன்). பின்னர் இறுதிச்சம்பவத்துடன் தொடங்கி – ஆரம்பத்தை முடிவில் வைப்பது என்பது பிரிதொருவகை – புலிநகக்கொன்றை (பி.எ. கிருஷ்ணன்) -மாத்தா ஹரி (நாகரத்தினம் கிருஷ்ணா). இம்மூன்று பிரிவுக்குள்ளும் அவரவர் கற்பனை சார்ந்து மேலும் பலவகைமைகளை கட்டமைக்க முடியும், மேற்கண்ட நாவல்களே அதற்கு சாட்சிகள்.

கதை ஆரம்பம் என்பது மிகமிக முக்கியமானது. கதையின் முதல் வாக்கியம், முதல் பத்தி அவற்றில் உபயோகிக்கபடும் சொற்கள், காற்புள்ளிகள், அரைப்புள்ளிகள், புள்ளிகள், உடுகுறிக்கள் இன்ன பிற சேர்ந்து நாவலின் தலைவிதியைத் தீர்மானிக்கின்றன.

முச்சந்தியில் நின்று கொண்டிருந்தது புளிய மரம். முன்னால் சிமிண்டு ரஸ்தா. இந்த ரஸ்தா தென் திசையில் பன்னிரண்டு மைல் சென்றதும், குமரித் துறையில் நீராட இறங்கிவிடுகிறது. வடதிசையில் திருவனந்தபுரம் என்ன, பம்பாய் என்ன, இமயம் வரைகூட விரிகிறது. அதற்கு அப்பாலும் விரிகிறது என்றும் சொல்லலாம். மனிதனின் காலடிச்சுவடு பட்ட இடமெல்லாம் பாதை தானே?” – ஒரு புளியமரத்தின் கதை -சுந்தரராமசாமி.

“பெரியபாட்டியின் கட்டில் சுவரிலிருந்து ஒரு அடியாவது தள்ளியிருந்தது. தண்ணீர் நிரம்பிய எவர்சில்வர் வட்டைகளின் உள்ளே அதன் கால் நுனிகள் அமிழ்ந்திருந்தன. சுவர்கள் அசாதாரணமான வெண்மையில் பளிச்சிட்டன. சுத்தமான படுக்கை விரிப்புகளிலும் தலையணை உறைகளிலும் அப்போதுதான் பெட்டிபோட்ட துணிகளின் முறுமுறுப்பு, கத கதப்பு. எப்போதும் சுவரில் ஓடிக்கொண்டிருக்கும் பல்லிகளைக் காணவில்லை. வேலைக்காரி செண்பகம் சில நாட்களுக்கு முன்புதான் ஒவ்வொன்றாகத் தேடி விரட்டினாள்”– புலிநகக்கொன்றை – பி.எ. கிருஷ்ணன்.

” உப்பரிகையின் மேல் நின்று வானத்தை அண்ணாந்து பார்த்தாள் கோகிலாம்பாள். வானம் தொட்டுவிடும் தூரத்தில் இருப்பதாகப்பட்டது அவளுக்கு. அப்படியே கையை உயர்த்தினாள். வானம் கைக்கு வசப்படவில்லை. வானத்தை யார்தான் தொடமுடியும்? அது என்ன விரித்த ஜமக்காளமா, அல்லது பாயா, எக்கித்தொட?” – மானுடம் வெல்லும் -பிரபஞ்சன்.

எழுத்தைத் தொடர்ந்துப் படிக்க  வாசகனுக்கு உதவுவதைப்போலவே, கதையை உற்சாகத்துடன் நடத்திச்செல்ல படைப்பாளிக்கு உதவுவதும் ஒரு புனைவின் தொடக்கமே. முதல் வரிதொடக்கமென்பது, நமது பணிக்காலத்தில் முதல் நாள் வேலைக்கு ஒப்பானது: பதட்டமும், எதிர்பார்ப்பும் சிலிர்ப்பும், சந்தோஷமுமாக   தொடங்கி, வரும் நாட்களை ‘தலையெழுத்து’ இப்படி ஆகிவிட்டதென்றோ, புதுமாப்பிள்ளையின் குதூகலத்துடனோ எதிர்கொள்கிற சாத்தியங்களுள் இரண்டிலொன்றை ஏற்படுத்தித் தருவது.

ஓர் உண்மையை நாம் புரிந்து கொள்ளவேண்டும், கால வாரிசைப்படி முதலில் வரவேண்டியது, கதைசொல்லலில் பெரும்பாலும் முதலில் வருவதில்லை. நீங்கள் வாசித்த அல்லது வாசித்துக்கொண்டிருக்கிற எந்த வொரு புனைவை உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டாலும், புனைவின் இடையிற்தான் வாசகர்கள் குறுக்கிடுகிறோம். மேற்சொல்லப்பட்ட மூன்று உதாரனங்களையும் திரும்பவும் வாசியுங்கள், நமக்குத் திறக்கப்படுவது நுழைவாயிலல்ல, சன்னலோ, புறவாசலோ அல்லது இரண்டுமற்ற வேறொரு கதவு ஆனால் நிச்சயமாக தெருக்கதவு அல்ல. தெருவில் கூவிப் பொருள் விற்பவர்களும், தெருவிபச்சாரிகளும் தங்கள் வாடிக்கையாளர்களின் கவனத்தைப்பெற என்ன செய்கிறார்களோ அதைத்தான் இங்கே எழுத்தாளர்களும் செய்கிறார்கள், எழுத வேண்டிய வகையில் எழுதினால் வாசக விசுவாமித்திரர்களைக் கவிழ்ப்பது சாத்தியமென்பதற்கு இவை எடுத்துக்காட்டுகள். பெரிய பெரிய கடைகளில் நுழைவாயில் காட்சிப்பேழைகளிலுள்ள அலங்கார அணிவகுப்பும் வாடிக்கையாளர்களை கவர்கிற உபாயந்தான். இத்தொடக்க உபாயத்தால் வாசகன் குறிப்பிட்ட புனைவிடம் சரண் அடைகிறான். சரணடைந்த வாசகனை தக்கவைத்துக்கொள்ள இத் தந்திரத்தை நாவலெங்கும் நீட்டிக்கவும் செய்யலாம் அதாவது எப்போது வாசகனிடமிருக்கும் விமர்சகத்திறன், நாவலாசிரியன் கதையை முடிக்கப்போகிறானென்று மனதிற் கிசுகிசுக்கிறதோ அதுவரை. வாசகனின் அம்முணுமுணுப்பை முன்னதாக ஊகிக்கத் தெரிந்து அங்கே புனைகதையை முடித்துக்கொள்ளவேண்டும்: Alice in Wonderlandல் வரும் King of Hearts முயலிடம் சொல்வதுபோல “Go on still you come to the end, then you stop.

ஆனாலிந்த முதலுக்கும் முடிவுக்குமிடையில் காலத்தோடு இணைந்து கதை சொல்லவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. எந்தவொரு புனைவுக்கும் முடிவென்பது ஒன்றுதான், மாறாக ஆரம்பம்  இரண்டுவகை: ஒன்று ஒரு கதையின் கால வரிசைப்படியுள்ள ஓர் ஆரம்பம் மற்றது கதைசொல்லலின்படியுள்ள ஓர் ஆரம்பம். கால வரிசைப்படி கதைச்சொல்லப்படுவதில்லையென்பதை ஏற்கனவே புரிந்துகொண்டிருப்பீர்கள்.

‘புலிநகக்கொன்றை’ நாவலின் இம்முதல் பத்தியை திரும்பவும் வாசியுங்கள்:

“பெரியபாட்டியின் கட்டில் சுவரிலிருந்து ஒரு அடியாவது தள்ளியிருந்தது. தண்ணீர் நிரம்பிய எவர்சில்வர் வட்டைகளின் உள்ளே அதன் கால் நுனிகள் அமிழ்ந்திருந்தன. சுவர்கள் அசாதாரணமான வெண்மையில் பளிச்சிட்டன. சுத்தமான படுக்கை விரிப்புகளிலும் தலையணை உறைகளிலும் அப்போதுதான் பெட்டிபோட்ட துணிகளின் முறுமுறுப்பு, கத கதப்பு. எப்போதும் சுவரில் ஓடிக்கொண்டிருக்கும் பல்லிகளைக் காணவில்லை. வேலைக்காரி செண்பகம் சில நாட்களுக்கு முன்புதான் ஒவ்வொன்றாகத் தேடி விரட்டினாள்”

வாசித்தீர்களா? இது கதை சொல்லலின் தொடக்கம், – மாறாக கட்டிலிற் கிடக்கிறபாட்டியிடம் அசைபோடும் நினைவுகள், காலக்கிரமப்படி கதையொன்றை நமக்கு வைத்திருக்கின்றன, அதற்குமொரு தொடக்கமுண்டு, அதனை இரண்டாவது தொடக்கமென வசதிக்காக வைத்துக்கொள்ளலாம்.  கதை சொல்லல் தொடக்கம் பிரதான தொடக்கமெனில், கதையின் காலவரிசைத் தொடக்கம் துணைத்தொடக்கமாகிறது, கதைசொல்லற்படி ஒரு தொடக்கத்தை எழுதியாயிற்று, உபதொடக்கமென்கிற கடந்த காலத்திற்கு நுழைந்தாக வேண்டும்,  அதற்கான தருணமெது? என்பதைச் தேர்வு செய்வதில் எழுத்தின் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது.

‘கதை சொல்லல் தொடக்கத்தை’ வாசிக்கும் நமக்கு இரண்டு கேள்விகள் எழக்கூடும்: எதனால் பெரிய பாட்டி கட்டிலிற் கிடக்கிறாள், அதற்கு முன்னால் நடந்ததென்ன? என்பதொன்று, ‘பெரியபாட்டிக்கு அதன்பிறகு என்ன ஆயிற்று? என்பது மற்றொன்று. கேள்விக்கேற்ப பாட்டியின் கடந்த காலமோ, அல்லது வருங்காலமோ அடுத்து புனைவில் வருகிறது. அவற்றில் ஏதாவதொன்றைத்தான் படைப்பாளி உடனடியாக தேர்வு செய்ய முடியும், அதற்கான தருணமும் முக்கியம். படைப்பாளி மேற்கண்ட இருகேள்விகளுள் வாசகனுக்கு உடனடித் தேவை எது என்பதை ஊகித்து அக்கேள்விக்குரிய பதிலை தர எழுத்தாளர்கள் முன்வரவேண்டும், அடுத்தக் கேள்விக்கான பதிலை இரண்டுபக்கம் தள்ளி ஆரம்பிக்கலாம். புலிநகக்கொன்றை ஆசிரியர் நிகழ்காலமாக பாட்டியின் பேர்த்தியை (ராதா) சாட்சியாக வைத்து, கடந்த காலத்திற்கு நம்மை அழைத்துச்செல்கிறார். “நேற்று நடந்தவை பறந்துபோய்விட்டன. பலவருடங்களுக்கு முன்பு நடந்தவை பாறாங்கற்கள். அசைக்க முடியாதபடி அங்கங்கே நினைவிற் கிடந்தன” வென்று அக்கடந்த காலத்தை தான் எழுதுவதற்கு ஆசிரியர் நியாயமும் கற்பிக்கிறார்.

காலமும் வினைச்சொற்களும்.

பொதுவாக எல்லா புனைவுகளுமே கடந்த காலத்தில் எழுதப்படுகின்றன. ஆங்கிலத்திலோ பிரெஞ்சிலோ எழுதும்பாது அதனை simple pastல் எழுதுகிறார்கள். Flashback ஐச்சொல்ல, past perfect அவர்களுக்கு கைகொடுக்கிறது.  ”ராதாவின் வயதில் அவள் நம்மாழ்வாருக்கு பால் கொடுத்துக்கொண்டிருந்தாள்’ எனப் புலிநகைக்கொன்றை வரியை வாசித்தால், தமிழிலும் ஓரளவிற்கு இது சாத்தியம் என நினைப்போம். ஆனால் ஒரிருவரிகளுக்கு இது உதவலாம். கடந்த காலத்தை இரண்டொரு பக்கங்கள் நீட்டவிரும்பினால் ‘கொண்டிருந்தான், கொண்டிருந்தாள், கொண்டிருந்தது சொற்கள் வாசகனுக்கு அலுப்பைத்தரலாம். எனக்கென்று சில தேர்வுகளிருக்கின்றன. கடந்த காலத்தின் பொதுவான சம்பவங்களைத் தவிர்த்து பாத்திரங்களின் செயல்பாடுகளைச் சொல்ல வருகிறபோது நிகழ்காலத்தில் சொல்வது எனக்கு உகந்ததாக இருக்கிறது. பழைய படத்தைத் தியேட்டரில் பார்க்கிறபோது என்ன நடக்கிறது, அடைத்திருந்த கதவுகள் விரிய திறந்ததும் நுழையும் காற்றுபோல மனிதர்களும் அவர்களின் செயல்களும் நிகழ்காலத்திற்கு வந்து விடுகிறார்களில்லையா? அத்தகைய  Visual effects  கதைகளிற் கிடைக்க முயற்சி செய்கிறேன். புதுச்சேரியில் வருவாய்த் துறையில் ஊழியம் செய்தபோது, காலை நேரத்தில் பிரெஞ்சு மொழிவகுப்பிற்கு சென்றுவந்ததால் மாலையில் ‘கென்னடி டுட்டோரியல்’ என்ற ஸ்தாபனத்தில் வேலை செய்தேன். அங்கே வரலாறு பாடத்தை பயிற்றுவித்தேன். வரலாற்று பாடங்கள் இறந்த காலத்திற்குரியவை என்பது பலரும் அறிந்ததுதான். ஆனால் அதனை நிகழ்காலத்தில் நடப்பவையாக மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவது எனது முறை. மொஹஞ்சாதாரோ நகருக்குள் நுழைகிறீர்கள்: முதலில் நீங்கள் பார்ப்பது அகன்ற தெருக்கள், செங்கற்களான கட்டிடங்கள்…’ என்ற சாயலில் பாடபோதனை இருந்தது. இன்றைக்கு எனது புனைவுகளிலும் அதைக் கடைபிடிக்கிறேன்.

அவரவர் விருப்பம் சாந்து வினைச்சொற்களின் காலத்தைத் தீர்மானிக்கலாம். எப்படி எழுதினாலென்ன? வாசகரை நமதெழுத்தோடு ஒன்றச்செய்யவும்  அவருக்கு அலுப்பேற்பட சாத்தியமுண்டு என்ற தருணத்தில் கதையை முடிக்கவும்  தெரிந்திருக்கவேண்டும்.

மீண்டும் உங்கள் கவனத்திற்கு:

“Go on still you come to the end, then you stop.
——————————————————

மொழிவது சுகம் மார்ச் -17 -2013

1. பிரான்சை தெரிந்து கொள்ளுங்கள்:

பிரெஞ்சு மொழியை முதல் மொழியாகவோ துணைமொழியாகவோ கொண்டுள்ள நாடுகளுக்கிடையேயான பிரெஞ்சு மொழிக் கருத்தரங்கு வழக்கம்போல  இந்த ஆண்டும் 16-03-2013 அன்று தொடங்கிவைக்கப்பட்டிருக்கிறது. ஒருவாரம் நடைபெறும் நிகழ்ச்சியின் கருப்பொருள் “தொலைதூரத்தில் விதைத்த பத்துவார்த்தைகளைச் சொல்”. கருத்தரங்கின் முடிவில் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவுகளிலொன்று, ‘பிரெஞ்சு மொழியை தாய்மொழியாகக் கொண்டிராத ஆசிரியரால் பிரெஞ்சில் எழுதப்பட்ட படைப்பிலக்கியத்திற்கு பரிசொன்றை அறிவிக்க இருப்பது. Kundera, Atiq Rahimi, Eugène Green, Vassills Alexakis, எனப் பலர் இருக்கிறார்கள்; அந்த வரிசையில் இடம்பெற எனக்கும் கனவுகளுண்டு. ஆனால் அதற்கான பிரெஞ்சு மொழி என்னிடத்தில் தற்போதைக்கு இல்லை.

பிரெஞ்சுமொழி அத்தனை சுலபமான மொழி அல்ல:

– தெளிவான இலக்கணம் கிடையாது விதிவிலக்குகள் ஏறாளமாகக் குறுக்கிடும். அரசாங்கப் பொதுதேர்வுகளிலும், பிறவற்றிலும் இன்றைக்கும் சொல்வது எழுதுதல் பிரெஞ்சில் உண்டு.

– வினைத்திரிபுகள் (conjugation) குழப்பத்தை அளிப்பவை

– வாக்கிய அமைப்பு முறை  சிக்கலானது.

– இதுதவிர கறாரான விதிமுறைகள், போன்ற ஏராளமான மிரளவைக்கும் சங்கதிகள் பிரெஞ்சு இலக்கணத்திலுண்டு.

எனினும் மேலே குறிப்பிட்ட எழுத்தாளர்கள் பிரெஞ்சை தாய்மொழியாகக்கொண்டவர்களல்ல, இருந்தும் கற்றுத் தெளிந்து பிரெஞ்சில் எழுதுகிறார்கள். நீலக்கடல், மாத்தாஹரி, அண்மையில் வெளிவந்த  கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி  ஆகியவற்றை எழுதும்போதே ஒரு காலத்தில் பிரெஞ்சில் அவை வெளிவருமென்ற கனவுகளுடன் எழுதினேன். மாத்தாஹரியை முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதன்பின்னர் பிரெஞ்சில் கொண்டுவரலாமென நினைத்து கி.அ. சச்சிதானந்தம் சொன்னாரென்று இலண்டனிலிருந்த பத்மனாப ஐயரிடம் ஒன்றுக்கு இரண்டு பிரதிகள் அனுப்பினேன் இரண்டுவருடத்திற்கு மேல் ஆகின்றன இதுவரை பதிலில்லை, சம்பிரதாயத்திற்காக அதன் தலைவிதி குறித்து ஒருவரி எழுதியிருக்கலாம். ‘அறுவடைக்கு ஆள்பிடிக்க அலைந்த விவசாயியின் கதை தாமதமாக நினைவுக்கு வந்தது. கொஞ்சம் தமிழுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு – அல்லது குறைத்துக்கொண்டு பிரெஞ்சில் எழுதவேண்டுமென்று தீர்மானித்திருக்கிறேன்.

பிரெஞ்சு மொழி குறித்தும்,  அதன் சிக்கலான இலக்கண விதிமுறைகள் குறித்தும் கடுமையான விமர்சனங்கள் இருப்பினும் – உலகமொழி எனப்படுகிற ஆங்கிலம், பிரெஞ்சுச் சொற்களை அதிகம் கடன்வாங்கியிருக்கும் மொழி என்பதும் உண்மை. அதுபோலவே அமெரிக்காவில் அதிகம் உபயோகத்திலிருக்கிற முதல் பத்து சொற்களில் நான்கு பிரெஞ்சு சொற்களாம்:  http://www.merriam-webster.com/info/2012words.htm

—————————————-

2. “Rem Tene, Verba sequentur’

ஒரு நாவலாசிரியன் எவ்வாறு உருவாகிறான்?

போதுமான விருப்பமும் அதில் நியாயமும் இருந்தால்  எழுத வரலாம் அப்படித்தான் 49ம் வயதில் எனக்கும் நேரந்தது என்கிறார் உம்பர்ட்டோ எக்கோ. அவருடைய “The name of the Rose” விற்பனைச் சாதனையை உலகம் அறியும். 17மில்லியன் பிரதிகள் விற்றனவாம்.  “ஓர் இளம் எழுத்தாளனின் பாவ சங்கீர்த்தனம்’ (Confessions d’un jeune romancier) என்ற அவருடைய நூல் அண்மையில் வந்துள்ளது. நமது நாவலாசிரியர்க்கு, ‘பொய்யினாற் சிறைபட்டிருக்கும் கைதிகள்’ எழுத்தாளர்கள் என்ற எண்ணம் வெகுநாளாக இருந்திருக்கிறது. தோமஸ் அக்கினோ பற்றி அவர் எழுதிய முனைவர் தேர்விற்கான  ஆய்வறிக்கை ஒருகுற்ற புனைவுபோல இருந்ததாக கிண்டலடித்திருக்கிறார்கள். ஒருமுறை அவரது தோழியொருத்தி  குற்றபுனைவொன்றை எழுதுமாறு வற்புறுத்த, அதற்குத் தடாலடியாக 500 பக்கங்களில் இடைக்காலத்தில் திருமடமொன்றில் நடப்பதுபோன்ற குற்ற புனைவை எழுதித் தருகிறேனெனப் பதில் கூறியிருக்கிறார்.  அதன் பின்னர் மர்மமான நூலொன்றை வாசிக்கிற கிருத்துவ துறவி விஷம்வைத்துகொல்லப்படுவதுபோன்ற சுவாரஸ்யமான கற்பனையும்  உதித்திருக்கிறது. ஆச்சரியமூட்டும் வகையில் வீட்டு அலமாரியில் இடைக்காலத்தைபற்றியும், திருமடம், சேசுசபையினர்  வேண்டிய தகவல்கள் அனைத்தும் இவருக்காக காத்திருப்பது தெரிய வந்தது,  ஆக நாவல் பிறக்கிறது. நாவல் எழுத விரும்புபவர்களுக்கு அவர் தரும் புத்திமதி ‘கருப்பொருளை மனதில் நிறுத்துங்கள், சொற்கள் தன்னால் வரும் (Rem Tene, Verba sequentur’).

—————————————————————————————————————-

நாகரத்தினம் கிருஷ்ணா சிறுகதைகள் -4

அன்புள்ள அப்பாவுக்கு

கதை பிறந்த கதை: விமானப்பயணம், வெளிநாட்டு கணவன், ஐரோப்பிய வாழ்க்கை, எனக்கனவுகளுடன் வந்து, தங்கள் கனவுகள் மெல்ல மெல்ல நிறமிழந்ததும், பின்னிரவுகளில் கடந்தகால நினைவுகளின் தணுப்பில் நிகழ்காலத்தை அணுகி விதியுடன் சமரசம் செய்துகொள்ளும் பெண்களைப்பற்றிய மற்றொரு கதை.

கதைக்களம் பிரான்சு. வெளி நாடுகள் என்றாலும் கிராமத்திலிருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்தாலும் பொதுவில் பெண்களுக்கு ஒரே அனுபவம்தான்.

குங்குமம் இதழில் 10-02-01 அன்று பிரசுரமானது.

அன்புள்ள அப்பாவுக்கு

                                                                                   பாரீஸ் 10-12-2000

அன்புள்ள அப்பாவுக்கு,

இங்கு நான், உங்கள் மருமகப்பிள்ளை இருவரும் நலம். அதுபோல உங்கள் நலனையும் அம்மா, அண்ணன், அண்ணி, குழந்தை சௌம்யா அனைவரின் நலனையும் அறிய ஆவல். உங்களிடமிருந்து கடிதத்தை எதிர்பார்த்தேன். கடந்த இரண்டுமாதங்களாக பதிலில்லை. இப்போதெல்லாம் முன்புபோல நீங்கள் அடிக்கடி கடிதம் போடுவதில்லை.  என்ன கோபம்?

உங்களுக்கு சர்க்கரை குறைந்திருக்கிறதா?  இங்கிருந்து அனுப்பிய கருவியில் உங்கள் சர்க்கரை அளவைப் பார்ப்பதுண்டா? அடிக்கடிப் பார்த்து கண்ட்ரோலில் வைத்திருக்கவும். மாத்திரைகளை வேளாவேளைக்குத் தவறாமல் எடுத்துக்கொள்ளவும்.

அவ்வப்போது தலைசுற்றல் வருகிறதென அம்மா சொன்னார்கள், இப்போது பரவாயில்லையா? அவர்களுக்கும் ஒருவேளை சர்க்கரை இருக்குமோ? நான் போன முறை சொன்னது ஞாபகமிருக்கட்டும் அவரையும் குழந்தைவேல் டாக்டரிடம் காண்பித்து கம்ப்ளீட்டாக செக்-அப் செய்யவேண்டும். அண்ணி மறுபடி உண்டாகி இருப்பதாக எழுதியிருந்தீர்கள். சந்தோஷமாக இருந்தது. அதுபற்றியும் விசாரித்ததாகச்சொல்லவும். முன்புபோல ஏமாற்றக்கூடாதென்றும் ஒரு குட்டிப்பையனை பெற்றுத்தரனுமென்றும் அழுத்தம் திருத்தமா அவங்கக்கிட்டே சொல்லுங்கள்.

அண்னன் ஆபீஸ் பிரச்சினைகள் முடிந்ததா? ரூபாய் ஐம்பதினாயிரம் பணம் கட்டினால் கேஷியர் பிரமோஷன் கிடைக்குமென்று எழுதியிருந்தீர்கள். நானும் எனது பக்கத்து அப்பார்ட்மெண்ட்டில் இருக்கிற ஆப்ரிக்க பெண்ணொருத்தியிடம் நாலாயிரம் பிராங்க் கடன் வாங்கி அனுப்பினேன். பிரச்சினை தீர்ந்ததா?

எனக்கு என்ன எழுதறதுன்னு தெரியலை. திரும்பத் திரும்ப இப்படி எழுதறேனேன்னு நினைக்கவேண்டாம். எழுதாமலிருக்கவும் முடியலை. இவரது நிலையில் எந்த மாற்றமும் இல்லை. முந்தைய கடிதங்களில் எழுதியிருந்ததுபோலவே இப்போதும் பிரெஞ்சு பெண்ணோடுதான் இருக்கிறார். வீட்டிற்கு ஒழுங்காக வருவதில்லை. திடீரென்று வீட்டு நினைப்பு வந்தவர்போல வருவார், தனியாக அல்ல அவருடைய வெள்ளைக் வெள்ளைக் குதிரையோடு. வீட்டில் நுழைந்தவுடன் ஹாய்யாக சோபாவில் உட்கார்ந்துகொண்டு,”கொமான் சவா? (எப்படி இருக்கிறாய்)”, என அக்குதிரை கனைக்கும். “ஷெரி, எஸ்கெத்தா உய்ன் சிகாரெத் (டியர், சிகரெட் உன்னிடமிருக்குமா?) எனக்கேட்கவும், அவரும் அவள் வாயில் வைத்து பற்ற வைப்பார். மூக்கிலும் வாயிலும் அவள் விடும் புகை! சகிக்காது. அடுத்து கையோடு கொண்டுவரும் பீர் பாட்டிலை ஆளுக்கொன்று திறந்து கொண்டு,  விடிய விடிய கும்மாளம் அடிப்பார்கள். எதுவும் கேட்டுவிடக்கூடாது. கேட்டால் தீர்ந்தது. குடித்து முடிக்காத பாட்டில் எனது தலையிலோ தப்பிக்க முடிந்தால் சுவரிலோ மோதிச் சிதறும்.

எப்போதாவது ஒருமுறை வீட்டிற்கு வந்தாலும் சந்தோஷம் இருக்கிறதா? ச சு·பி ! ·பே பா லெ சினேமா! (போதும் ·பில்ம் காட்டாதே) என மாடியில் குடியிருக்கிறவர்கள் எழுந்துவரட்டும் என்பதுபோல கத்துவார். பிறகு விஸ்கி பாட்டிலைத் திறந்துகொண்டு சோபாவில் தொபீரென உட்காருவார். அவள் சிரிப்பாள். என்னை வைத்துக்கொண்டே அவர்கள் நடந்துகொள்ளும் விதம்…. எழுதவே கூசுகிறது.

எனக்கு பயமாக இருக்கிறது. பயம் அவர்கிட்ட இல்லை என்கிட்டதான். நான் படித்த படிப்பு, கற்றுகொண்ட தைரியமெல்லாம்  என்னை அநாதை ஆக்கிட்டதென்கிற பயம். ‘எல்லாம் விதிப்படின்னு’ அம்மா சொல்வாங்களே, அந்தக்குரல் கூட அழுது தொண்டை கட்டிட்டதுன்னா சரியா வரமாட்டேங்குது.

எதிர்வீட்டுக்கொரட்டில ரிக்ஷாக்கார குடும்பமொன்று இருந்தது ஞாபகமிருக்கா? அவன் பேருகூட ‘வரதன்’ன்னு ஞாபகம். குடித்துவிட்டு மனைவியை அடிக்கிற மறுநாள் ‘எம்.ஜி.ஆர். படத்துக்கு ஜோடியா போவாங்க. அம்மா அவளை கேலிசெய்வாங்க. அந்த மாதிரி ‘மறு நாள்’ அமைஞ்சாகூட போதும்னு மனசு சொல்லுது. நானும் அம்மாவின் கேலியை ஏற்று வரதன் மனைவியைப்போலவே சிரித்து மழுப்ப தயார்.

பக்கத்திலிருக்கும் ஆப்ரிக்க பெண்தான் எல்லா உதவிகளையும் செய்கிறாள். சோஷியல் மேடத்திடம் அவ்வப்போது அழைத்துச்சென்று எனக்குச் சாப்பாட்டிற்கு வழி செய்கிறாள். பிரான்சுக்கு வருவதற்கு முதல் நாள் அம்மா,” உனக்குப் பிடிச்சதுண்ணு வத்த குழம்பும், சுட்ட அப்பளமும் செய்தேன், வயிற்றுக்கு ஒழுங்கா சாப்பிடு!” என்றார்கள்.  ரொம்ப பசிச்சா? அம்மாவின் இரவல் குரலால் என்னை நானே கேட்டுக்கிட்டு, சாப்பிட உட்காருகிறேன்.

பிரெஞ்சு பாஷை எனக்கு இன்னும் பிடிபடவில்லை. நான் படித்த படிப்பிற்கு அங்கீகாரமில்லை. இரண்டுவாரங்களாக ஒரு வயதான தம்பதிகளிடம் வீட்டு வேலை பார்க்கிறேன். மற்ற நேரங்களில் எதையாவது நினைத்துக்கொண்டு அழுகிறேன். அழும்போதுகூட யாராவது பக்கத்தில் இருந்தால்தானே ஆறுதல். சேர்ந்தாற்போல தொடர்ந்து சில நாட்கள் ஓய்வின்றி அழணும், அதுவும் உங்களையெல்லாம பக்கத்தில் வைத்துக்கொண்டு. அது முடியுமா அப்பா? இந்தியாவுக்கு வந்து விடட்டுமா? எனக்கு உடனே கடிதம் போடவும்.

இப்படிக்கு
கலா
—————————————
புதுவை, 05-02-2001

சௌபாக்கியவதி கலாவுக்கு,

அப்பா அம்மா இருவரும் ஆசீர்வதித்து எழுதிக்கொண்டது. இங்கு நாங்கள் இருவரும் நலம். அதுபோல உன் அண்ணன், அண்ணி, குழந்தை சௌம்யா ஆகியோரும் நலம்.

சௌம்யாவுக்கு எப்போதும் உன் ஞாபகம் தான். அண்ணனுக்கு கேஷியர் உத்தியோகம் கிடைத்து ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறான். எனக்கு சர்க்கரை அளவு கட்டுபாட்டில் இருக்கிறது, நீ பயப்பட வேண்டியதில்லை. அம்மாவின் தலைச்சுற்றல் குறைந்திருக்கிறது. போனவாரங்கூட டாக்டரிடம் காட்டினோம். புதிதாக சோனி கலர் டி.வி. ஒன்று சமீபத்தில் வாங்கினோம். அவளுக்கு மிகவும் சந்தோஷம். மெகாசீரியல்களைப் பார்க்க காலை பதினோருமணிக்கே உட்கார்ந்துவிடுகிறாள்.

நீ எங்களைப் பற்றி கவலைப்பட்டுக்கொண்டிராதே. நீ சந்தோஷமாக இருந்தால்தான் எங்களுக்கு நிம்மதி. உன் கடிதத்தைப் பார்த்ததிலிருந்து அம்மா ஒழுங்காகச் சாப்பிடுவதில்லை.  அவளும் புலம்ப ஆரம்பித்துவிட்டாள். எல்லோரும் உனது நினைவாகவே இருக்கிறோம். தைரியமாக இரு. அவசரப்படவேண்டாம். எல்லாவற்றிர்க்கும் மேலே வேதபுரீஸ்வரர் இருக்கிறார்; நம்முடைய வேண்டுதல் வீண்போகாது; அந்த ஊரிலும் கோவில்கள் இருப்பதாக அறிந்தேன்; நேரம் கிடைக்கும்போது போய்வா; பிரார்த்தனைக்குப் பலன் கிடைக்கும். திரிபுரசுந்தரி கடாட்சத்தால் ஒரு குழந்தை பிறந்தால், குறைகளெல்லாம் தீர்ந்துவிடும். பேரனோ பேர்த்தியோ எதுவென்றாலும் பரவாயில்லையென அம்மா சொல்லச்சொன்னாள்.

ஆண்களென்றால் அப்படி இப்படித்தான் இருப்பார்கள். நீதான் அட்ஜெஸ்ட் பண்ணிப்போகவேண்டும். உன் ஜாதகத்தை நமது ஜோஸியரிடம் காட்டினேன். சனிதிசை நடப்பதாகச் சொன்னார். இன்னும் இரண்டு ஆண்டுகள் நீ சிரமப்படவேண்டியிருக்குமென்று கூறினார். பிறகு யோகதிசையாம். நான் திருநள்ளார் சனிபகவானுக்கு அர்ச்சனை செய்துவிட்டு வருகிறேன். சற்று பொறுமையுடன் இருந்து நீதான் அவரைத் திருத்தவேண்டும். கடவுள் கிருபையால் எல்லாம் நல்லபடிமுடியும்.

உன் தோழி கல்பனா ஸ்டேட்ஸ்லிருந்து வந்திருந்தாள். போன வருடம் வாங்கிய மனையில் வீடு கட்ட ஆரம்பித்துவிட்டார்கள். முப்பது லட்சத்துக்கு எஸ்டிமேட் போட்டிருக்கிறார்கள். இருபது இலட்சத்திலேயே நாம் பிரமாதமாகக் கட்டிவிடலாம். நம் வீட்டு எதிரிலேயே 1400 சதுர அடிகள் கொண்ட மனை விற்பனைக்கு வருகிறது. ஏதாவது ஏற்பாடு செய்து பணம் அனுப்பு. அங்கெல்லாம் சவரன் என்னவிலை போகிறது? வரும்போது கொண்டுவந்தால் உங்கள் ஊர் பணத்தைக் காட்டிலும் கூடுதலாக இலாபம் தரும். அண்ணனுக்கு ‘ரேமெண்ட்வெல்’ வாட்ச்  ஒன்று வேண்டுமாம். யாரிடமாவது மறக்காமல் கொடுத்தனுப்பவும். சௌம்யாவுக்கு கிண்டர் சாக்லேட் ஒரு பாக்கெட்டும் எனக்கு ஒரு கெல்லெட் ஷேவிங் செட்டும் ஏற்பாடு செய்யவும்.

இப்படிக்கு
அப்பா
நன்றி குங்குமம் 10-02-2001
————————————————————-

மொழிவது சுகம் – 10 மார்ச் 2013

1.  முனைவர் மு. இளங்கோவன் அவர்களுக்கு நன்றி:

கடந்த பிப்ரவரி மாதம் புதுச்சேரி பாரதிதாசன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் மு. இளங்கோவன் அவர்கள் இல்லத்திற்கு சென்றிருந்தேன்,  எனது இனிய நண்பரும் பேராசிரியருமான நாயக்கருடைய நெருங்கிய நண்பர் என்பதால், அவரும் உடன் வந்திருந்தார்.  பேச்சு இலக்கிய திசையிற் பயணித்தது. அவரது வலைத்தளம் பற்றியும் உரையாடினோம். பின்னர் என்னைப்பற்றிய செவ்வியாக நீண்டது. அச்செவ்வியை நண்பர் தமது வலைத்தளத்தில் இடப்போவதாகவே ஆரம்பத்தில் நினைத்தேன். பின்னர் அவருடனான தொலைபேசி உரையாடல் மூலம் கட்டுரை வடிவில் அச்செவ்வி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,சென்னையில் வாசிக்கப்பட்டதாக அறிந்தேன். அக்கட்டுரையைத் தமது வலைத்தளத்திலும்  நண்பர் இட்டிருக்கிறார். அன்னாருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

http://muelangovan.blogspot.fr/2013/03/blog-post_8.html
http://tamil.oneindia.in/art-culture/essays/2013/writer-nagarathinam-krishna-171242.html
———————————————————–

2. மீண்டும் இந்தியா?

எனது சகோதரர் இல்ல சுப நிகழ்ச்சிகாரணமாக மீண்டும் எதிர்வரும் ஏப்ரல் 10ந்தேதி இந்தியா வருகிறேன். நண்பர்கள் துணையுடன் செஞ்சியில் கிருஷ்ணப்ப நாயக்கர் நாவலைக்குறித்த ஓர் கலந்துரையாடலை  ஏற்பாடு செய்ய உள்ளோம். புதுவை ‘இலக்கியம்’ நண்பர் சீனு தமிழ்மணியின் ஆதரவுடன் நடபெற உள்ளது. வெகுவிரைவில் அது பற்றிய முழுத் தகவல்களைத் தெரிவிக்கிறேன். ஏப்ரல் இறுதிவரை இந்தியாவில் இருக்கிறேன். நண்பர்கள் விருப்பப்படின் சந்திக்கலாம்.

——————————————————

3.  உன்னைப் போல் ஒருவன்

poster_294774Fernando Cortes அல்லது Hernando Cortez பதினாறாம் நூற்றாண்டில் தென் அமெரிக்காவைக் கைப்பற்றவும், அங்கு ஸ்பெயின் நாட்டின் காலனி ஆதிக்கத்தை நிறுவவும் காரணமாக இருந்தவர். ஸ்பானிய தொல்லிலக்கியங்களை நினைவு கூர்பவர்களுக்கு முதலிற் கவனத்திற்கு வருவது ‘Don Quichotte’ (Cervantes), அடுத்தது ‘The Seducer of Seville and the Stone Guest’ ( Tirso de Molina). இவை இரண்டிற்கும் ஈடானதொரு படைப்பொன்றும் இருக்கிறது பெயர்: The True History of the Conquest of New Spain, ஆசிரியர் Bernal Diaz Castillo. 1580ம் ஆண்டு எழுதப்பட்ட இந்நூல் கடந்த ஐந்து நூற்றாண்டுகளாகவே முதலிரண்டு இடத்தைப்பெற்றிருக்கிற நூல்களைப்போலவே விற்பனையில் சாதனைப் படைத்து வருமொரு படைப்பு. மெக்சிகையும் இதர பகுதிகளையும் கொர்ட்டெஸ¤ம் துணைக்குச்சென்ற அவரது படைவீரர்கள் 500பேரும் இரண்டுவருடப் போராட்டத்திற்குப் பிறகு எவ்வாறு கைப்பற்றினார்கள், அங்கிருந்த 18மில்லியன் மக்களையும் அவர்தம் மண்ணையும் ‘அஸ்டெக்’ வம்சாவளி ஆட்சியினரிடமிருந்து எவ்வாறு மீட்டெடுத்தார்கள் என்பதை அழகியலையும், செவ்வியலையும் சரிசமமாகக் கலந்து சொல்லப்பட்ட நாவல். முதல் இரண்டு நூல்கள் இருக்கிறதோ இல்லையோ, மூன்றாவது இடத்தை பெற்றிருக்கும் இந்நாவலை தங்கள் வீட்டிலில்லை எனசொல்வதற்கு ஸ்பெயின் மொழி பேசுபவர்கள் பல முறை யோசிப்பார்களாம். நூலைப்பற்றிய புகழுரைகளை மறந்துவிட்டு, நூலாசிரியர் பற்றிய தகவலுக்கு வருவோம்.  இவரைக்குறித்து பெரும் புதிர் இருப்பதாக நம்பப்பட்டது. அந்நாவலை வாசித்தவர்கள் நூலாசிரியர் வேறுயாருமல்ல  நாவலில் வருகிற வெற்றிவீரனான கொர்த்தெஸ் உடன் சென்ற 500 படைவீரர்களுள் ஒருவரென இதுவரை நம்பினார்கள். அதுதான்  இல்லை என்கிறார் பிரெஞ்சு வரலாற்றாசிரியரும் ஆய்வாளருமான ‘Duverger’.

Bernal Diaz Castilloவின் வாழ்க்கை வரலாற்றை எழுதியபோது அவரைப்பற்றிய உண்மைகள் சில இந்த ஆய்வாளருக்குத் தெரிய வந்திருக்கின்றன. அதன் அடிப்படையில் நூலாசிரியரின் பூர்வீகத்தைப் பற்றிய தேடலில் மிகத் தீவிரமாக இறங்கினார்.  கௌதமாலா மற்றும் ஸ்பெயின் ஆவணங்களை இரவுபகலாக ஆய்ந்ததற்குப் பலன்கள் கிடைத்தன: நூலாசிரியரென நம்பப்பட்ட Bernal Diaz மழைக்குக்கூட பள்ளிக்கு ஒதுங்கியவரல்ல, தவிர கொர்த்தெஸின் தென் அமெரிக்க படையெடுப்பை பெர்னால் மிகத் துல்லியமாக விவரித்திருந்தார்.  ஸ்பெயின் மன்னருக்கும் படைத்தளபதிக்குமிடையே ஏற்பட்ட பிணக்கும் தர்க்கமும் தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தன.- இவைகளெல்லாம் பிரெஞ்சு ஆய்வாளரை யோசிக்க வைத்தன. இத்தனைபெரிய காவியத்தை ஓர் எழுத்தறிவற்ற சாதாரண வீரன் படைத்திருக்க சாத்தியமில்லை என்ற முடிவுக்கு வருகிறார். மேலும் மேலும் ஆவணங்களைத் தோண்டியதின் விளவு,  Bernal Diaz Castillo என்கிற பெயர் ‘புனைபெயர்’ என அறியபட்டது.  The True History of the Conquest of New Spain என்ற நூலின் உண்மையான ஆசிரியர் வேறுயாருமல்ல அது கடைசியில் நூலின் கதை நாயகனாகச்சொல்லப்பட்ட  கொர்ட்டெஸ்தான் என்ற முடிவுக்கு வருகிறார் பிரெஞ்சு ஆய்வாளர். சொந்த பெயரில் எழுதிய ஆக்கத்தை மன்னரின் ஆணைக்கேற்ப முதலில் கொர்ட்டெஸ் தீயிட வேண்டியதாயிற்று. ஸ்பெயின் மன்னர், பிறகு தெளிவாக தடையும் பிறப்பித்து விட்டார், அதன்படி நூலை மீண்டும் எழுதி அரங்கேற்ற கொர்ட்டெஸ¤க்கு வாய்ப்பு மறுக்கப்பட, கொர்ட்டெஸ் கண்டுபிடித்த தந்திரமே, தனது படைவீரன் ஒருவன் பெயரில் சொந்த அனுபவத்தை நூலாகக் கொண்டுவரத் துணிந்தது.

கடந்த 30 ஆண்டுகளாக பின் நவீனத்துவத்தை மறந்து (பின்-பின் நவீனத்துவம்?) வேறு பாதைகளில் மேற்கத்திய நாவலுலகம் பயணம் செய்துகொண்டிருக்கிறது. அதில் ஒருவகை தமது சொந்த அனுபவத்தை நூலாக எழுதுவது. உண்மையில் இதை பதினாறாம் நூற்றாண்டிலேயே கொர்ட்டெஸ் பின்பற்றியிருக்கிறார் என அறியவருகிறோம்.  1980லிருந்து மேற்கத்திய புனைகதை உலகத்தின் பாதை என்ன என்பதைத் தொடராக எழுதும் எண்ணமிருக்கிறது.
————————————————————————————————————————————-

எழுத்தாளனின் முகவரி-10 – உங்களுக்காக எழுதுங்கள்

எல்லோருக்கும் பிடித்தது?

மேற்கத்திய உலகில் புத்தக கடைகளுக்குச் சென்றால் புதிய நூல்களைப் பார்வைக்கு வைப்பதுபோலவே ‘Best seller’ நூல்களையும் வரிசைபடுத்தி பார்வைக்கு வைப்பார்கள். இப் ‘பெஸ்ட் செல்லர்’களில் இரண்டுமுண்டு: வேர்க்க விறுவிறுக்க அல்ல மூச்சிறைக்க ஓடிவந்து  மெட்ரோ அல்லது பேருந்து பிடித்து, எதிரில் அல்லது பக்கத்து இருக்கைக்காரர்களின் சாடையான பார்வைகள் மொய்த்தொதுங்க, காப்பி போட்டோமே கேஸை நிறுத்தினோமா என்ற பிரதான கவலைக்கிடையில் நுணிப்புல் மேயப்படும் நாவல்கள் ஒரு ரகம்; முதுகின் பின்புறம்  நிற்கும் மனைவியிடம், கொஞ்சம் படிக்கணும் என்னை தொந்தரவு செய்யாதே எனக் கூறிவிட்டு இரவு எட்டுமணிக்குமேல் தீவிரமாகப் பக்கங்களைப் புரட்டவைக்கும் நாவல்கள் மற்றொரு ரகம். முதற் பிரிவை ‘வெகுசன ரசனை’க்குரியவை என்கிறார்கள். இரண்டாம் வகைமைக்கு படைப்பிலக்கியங்களென்று பெயர்.

பிரான்சில் இன்றைய தேதியில் சூப்பர் ஸ்டார் ‘மார்க் லெவி’ (Marc Levy) பெருவாரியான மக்களின் திணவுகளைப் புரிந்துகொண்டு எழுதுகிறவர். கணிப்பொறியாளர். சொந்த முதலீட்டில் தொடங்கிய நிறுவனம் கைகொடுக்கவில்லை, எழுத்தாளராக மாறினார். 2000 மாவது ஆண்டில் முதல் நாவல் வெளிவந்தது. நாவலின் பெயர். Et si c’était vrai (If Only It Were True). நாற்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில், 32 நாடுகளில், இதுவரை ஐந்து மில்லியன் புத்தகங்களென்கிறது அதன் வெற்றி. அவர் படைப்புகள் வெகுசன இரசனைக்குரியவை.

படைப்பிலக்கியங்கள் எனப்படுகிற இரண்டாவது வகைமைக்கு மரி தியாய்( Marie NDiaye) பெண் எழுத்தாளரை உதாரணத்திற்குச் சொல்லலாம். பிரெஞ்சு படைப்பிலக்கிய  ஆளுமைகளுள் முக்கியமானவர். இவரைப்பற்றி ‘மொழிவது சுகம்’  கட்டுரையொன்றில் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். மரி தியாய் நாவல்களுள் Trois Femmes puissantes (Three Strong Women) குறிப்பிட்டு சொல்லவேண்டிய ஒன்று. 2009ல் வெளிவந்தபோது படைப்பிலக்கியங்களில் ‘பெஸ்ட்- செல்லர்’ எனப்பெயரெடுத்தது. திருகலான நடைக்குச் சொந்தக்காரர். வாசிப்பவர்கள் திக்குதெரியாதக்காட்டில் அலைவதும், புதைமணலில் சிக்குவதுமான அனுபவத்தை பெற நேரிடுமெனச் சொல்லப்படுவதுண்டு. அவரது நாவலொன்றில் ஒருவரி 100 பக்கங்களில் சொல்லப்பட்டிருக்கிறதென அண்மையில் வெளிவந்திருக்கும் ‘Ladivine’ நாவலுக்கு எழுதப்பட்ட விமரிசினத்தைப் படித்துப் தெரிந்துகொண்டேன். ‘Ladivine’ இன்றைக்கு பெஸ்ட்- செல்லர்.

தமிழுக்கு வருவோம். இங்கே பெஸ்ட்-செல்லர் என்ற சொல் வழக்கிலிருக்கிறதா? மேற்கத்திய நாடுகளைப்போல நீண்டவரிசையில் காத்திருந்து எழுத்தாளரிடம் கையொப்பம் பெற்று புத்தகங்களை வாங்கிச்செல்லும் காட்சிக்கு சாத்தியமுண்டா? பெரும்பாலான பதிப்பகங்கள் ‘அரசு நூலகத்தேவைக்கு’ வாங்குவார்களா? அதற்கான அரசாணை கிடைக்குமா? என தவமிருக்கிற அவல நிலை.  ‘பெஸ்ட்-செல்லர்’ என்பதெல்லாம்  நமக்கு அதிகம் என்பதைப் புரிந்து கொண்டு ஒரு வசதிக்காக இக்கேள்வியை மாற்றி எழுப்புகிறேன்.

” எல்லோரும் விரும்பும் வகையில் எழுதுவதெப்படி? “

என்னைக்கேட்டீர்களெனில் தெரியாதென்பேன்.  சிட்னி ஷெல்ட்டனை, ‘பெஸ்ட் நாவலைக்கொடுக்க என்ன செய்யணும்? எனக் கேட்டபொழுது அவர் கூறிய பதிலும், ‘ எனக்குத் தெரியாது’, என்பதுதான்.  ‘ஒரு கப் காபிகொண்டு வா, எல்லோரும் விரும்பற மாதரி நாவலொன்று எழுதணும்’, என்றெல்லாம்  மனைவியிடம் இதுநாள்வரை சொன்னதில்லை. ஒரு பொருளை உற்பத்தி செய்கிறவன், எல்லோருக்கும் இப் பொருளைக் கொண்டு போக நினைக்கிறேன்’ எனச் சொல்கிறபோது, ‘மலிவு’ என்ற சொல் மூக்கிய சூத்திரமாக ஏற்றுக்கொள்ளபட்டு பொருளின் தரத்தில் சமரசம் செய்துகொள்கிறான். கவனிக்கப்படவேண்டுமென்பது வேறு, வீதியில் போகிறவர்கள் அவ்வளவுபேருக்கும் காட்சிப்பொருளாக இருக்கப்போகிறேன் என்பது வேறு. தமிழில் எழுதப் படிக்க்கத் தெரிந்திருக்கிற எல்லோரையும் சென்றைடைய வேண்டுமெனில் அரிச்சுவடிதான் எழுதவேண்டும், நாவல் எழுதமுடியாது. உண்மையில் எல்லோரையும் திருப்தி செய்ய எழுதுகிறேன் என்பதற்குப் பொருள் ஒருவரையும் திருப்திசெய்யப்போவதில்லை என்பதுவே. பொதுவாக ஒரு நல்ல எழுத்தாளன் பிறருக்காக எழுதுவதில்லை, தன்னைச் சந்தோஷப்படுத்திக்கொள்ள எழுதுகிறான்.

ஏதோ ஒரு கதைப்பொருள் திடீரென்று துளிர்த்து அதன் பசுமையை மூளையெங்கும் தூவுகிறது. உறங்குவதற்கு முன்பும், விழிப்பின்போதும், டாய்லெட்டிலும், எங்கோ எதற்கோ யாருக்காவோ காத்திருக்கிறபோதும் – ஆக மொத்தத்தில் அவன் ஒற்றையாக இருக்கிறபோதெல்லாம் அக்கதைப்பொருள் கொசுபோல மொய்க்கிறது. நாய் ஈபோல விடாமற் துரத்துகிறது. குழந்தைப் பிச்சைக்காரர்களைப்போல எளிதிற் விலக்க முடியாததொரு விலங்கு.  அடுத்துக் கதைப்பொருளுக்கான பாத்திரங்கள் வேண்டும்: அவர்கள் குடும்பத்தைச்சேர்ந்தவர்களாக இருக்கலாம்;  வீட்டைப்பூட்டிக்கொண்டிருக்கிறபோது வந்து இறங்குகிற விருந்தாளிகளாக இருக்கலாம்; எட்டாம் வகுப்பு தோழியாக இருக்கலாம், மழையில் நனைகிற கழுதையாக இருக்கலாம்; வீட்டில், வீதியில், சக பயணத்தின்போது, மழைக்காக குடைவிரிக்கிறபோது, “எதிரில் ஆள்வருவது கண்ணுக்குத் தெரியலை” எனத் திட்டிவிட்டுப் போகிறவர்களாக இருக்கலாம். கதைப்பொருளும், கதைமாந்தர்களும் தயார் என்றானதும் எழுதுகிறான். எழுதும் உத்தி அவனது சுயமுயற்சி. பரந்த வாசிப்பு அனுபவம், வடம்பிடித்து அவனை இழுத்துச்செல்கிறது. எப்படிச் சொல்லலாமென்பதில் மட்டும் தெளிவும் அக்கறையுமிருந்தால், மூன்றாம் சாமத்தில் கூட கண்விழித்து விதியுலாவைக் காண்கிற வாசகனைப் பெறமுடியும்.

பிறர் அறிவுரைகள் வேண்டாம்- தேர்வு செய்து வாசியுங்கள் -பிடித்ததை எழுதுங்கள்

எப்படி எங்கே எதைத் தொடங்குவது? சான்கிளேர் லூயி (Sinclair Lewis) என்கிற நோபெல் பரிசுபெற்ற அமெரிக்க எழுத்தாளருக்கு நேர்ந்த சம்பவம். அவருடைய  Main street நாவலுக்கு புலிட்ஸர் பரிசு கிடைத்ததும், எழுதுவதுகுறித்த பயிற்சி வகுப்புகள் நடத்தவேண்டுமென்று பல பல்கலைகழகங்கள் கேட்டிருக்கின்றன. ஒவ்வொருமுறையும் தட்டிக் கழித்து வந்திருக்கிறார். ஒருநாள்  தவிர்க்க முடியவில்லை. ஐவி லீக் காலேஜ்க்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டார் (அல்லது இச்சிக்கலுக்கு முடிவுகட்டவேண்டுமென அவர் தீர்மானித்திருக்கவேண்டும்) அந்த நாளும் வந்தது, அதற்கான நேரமும் வந்தது.  நிர்வாகத்தின் வற்புறுத்தலுக்கு தப்ப முடியாத மாணவர்களும் ஆசிரியர்களும் வந்திருக்க கல்லூரி ஆடிட்டோரியத்தின் அரங்கு நிரம்பியிருந்தது. எதிர்காலத்தில் சான்க்கிளேர் லூயி போல எழுதிப் பேர்வாங்கவேண்டுமென்ற எண்ணத்துடன் வந்திருந்த மாணவர்களும் கூட்டத்திலிருந்தனர்,  சான்க்ளேர் வழிமுறையைக் கேட்கும் ஆவலில் காத்திருக்கின்றனர். அவரை நிர்வாகத்தினர் வரவேற்று அரங்கத்திற்கு அழைத்து வந்தனர். மேடைக்கு வந்தவர் அதனை அளப்பதுபோல குறுக்கும் நெடுக்குமாக தாண்டுகால் வைத்தார். இரண்டொரு நிமிடங்கள் கேட்டறிய வந்த கூட்டத்தை அமைதியாகப் பார்த்தார்: இங்கே எதற்காக காத்திருக்க வேண்டுமென்பதுபோல,  “வீட்டில் உட்கார்ந்து ஏன் நீங்கள் எழுதக்கூடாது?” என்று கேட்டுவிட்டு மேடையிலிருந்து இறங்கிவிட்டாராம். அவர் சொல்லவந்தது, “பிறர் அறிவுரைகளுக்காகக் காத்திருக்காதீர்கள்.”

எழுத்து சுதந்திரம்?

தமிழ் படைப்பிலக்கிய சூழலில் ‘பெஸ்ட்- செல்லர்’களுக்கு வாய்ப்பில்லாத நிலையில்,  உயிர் வாழ்க்கையின் நிர்ப்பந்தங்களுக்காக கூடுபாயவேண்டியிருக்கிறது. தொலைகாட்சிக்கோ, திரைப்படத்திற்கோ எழுதுகிறபொழுது அறிவுசார் கொத்தடிமைகளென்கிற ஒப்பந்தத்தில் படைப்பாளர்கள் கையொப்பமிடுகிறார்கள். அங்கே அவர் எழுதுவதில்லை, அவரோடு சேர்ந்து ஆயிரம் பேர் பேப்பரும் கையுமாக அலைகிறார்கள். “சார், நடிகர் பொண்டாட்டி ஒரு மாதரியான பொம்பளை, என்னை தப்பா நினைப்பாங்க. கதையை மாத்த முடியலைன்னாலும்
பரவாயில்லை, வசனத்தையாவது மாற்றுங்கண்ணு, ” இயக்குனர் மூலமாக நடிகை சிபாரிசு செய்யலாம். வியாபாரமாகிற நடிகரெனில், முழுக்கதையையும் வசனத்தையும் அவரது ஒளிவட்டமே தீர்மானம் செய்யும். இயக்குனர்,  தம் பங்கிற்கு “பிரிவியூவில்  பத்திரிகையாளர்கள் நம்ம படத்தின் முடிவு சரியில்லைண்ணு அபிப்ராயப்படுகிறார்கள். அதனாலே ஆவிக்கு கதைநாயகன் தாலிகட்டுவதுபோல திரும்ப ஒருகாட்சியை ஷ¥ட் பண்ணி சேர்த்துக்கலாம். ஒரு வடகொரியா படத்துலே அப்படியொரு காட்சி வருது,” என்பார். வடகொரியா படத்துலே தாலியெல்லாம் கட்டுறாங்களாண்ணு? எழுத்தாளர் அவரைக் கேட்கமுடியாது. கேட்டால் மாலை அவர் ஆட்டோவிலே வீட்டுக்குத் திரும்பவேண்டியிருக்கும், கார் அனுப்பமாட்டாங்க. கேமராமேன் தம்பங்கிற்கு கோணம்பார்த்தே, உரையாடல்களை கத்தரித்திருப்பார். எழுத்தாளர் அங்கே படைப்பாளியல்ல. பணியாளர். எஜமானர்கள் கட்டளையை நிறைவேற்ற கடமைப்பட்டவர். சுதந்திரமாக எழுதமுடியாதது படைப்பாகாது.

எவ்வித நிர்ப்பந்தத்திற்கும் ஆளாகாமல் எதைப் பற்றி எழுதப்போகிறோம் என்பதில் தெளிவு வேண்டும். நாவலுக்குண்டான பிரதான கரு உங்களிடம்தான் உருவாகிறது. நாவல் எழுதத்தொடங்குகிறபோதும் எழுதுகிறபோதும் நான் வாசிப்பதில்லை. அதுகூட எனது எழுத்தை நிர்ப்பந்திக்குமென நம்புகிறேன். எப்படி கொண்டுபோகவேண்டும் என்றும் ஆரம்பத்தில் தீர்மானிப்பதில்லை. பிரதான பாத்திரங்கள், ஒன்றிரண்டு துணைபாத்திரங்களென்று என்னோடு உரையாட ஆரம்பித்துவிடுவார்கள். நமது திரைப்படங்களில் முதற் பிரவேசம் அநேகமாக கதைநாயகனுக்குச்சொந்தமாக இருக்கும், அதை நான் விரும்புவதில்லை. நான் கிராமத்திலிருந்து வந்தவன். தெருக்கூத்துகளில் முக்கியபாத்திரங்களின் அறிமுகம் நடு நிசியில்தான் அரங்கேறும். அதைத்தான் நானும் எனது நாவல்களில் உத்தியாகக் கையாளுகிறேன். துணைப்பாத்திரங்களைக்கொண்டு நாவலைத் தொடங்கிவிடுவேன், முதல் ஐந்து அத்தியாயங்கள் வரை எப்படி முடிக்கப்போகிறோமென்றே தெரியாது. பிறகுதான் ஒன்றன் பின் ஒன்றாக பூக்கள் இதழ்பிரிப்பதுபோல அத்தியாயங்கள் விரிந்து என்னை பரவசமூட்ட, அப் பரவசத்தில் திளைத்தபடி எழுதிக்கொண்டிருப்பேன். இப்படியொரு பத்து அத்தியாங்களை எட்டியதும், பதினொன்றாவது அத்தியாயத்திலிருந்து ஒவ்வொரு அத்தியாயத்திலும் என்ன எழுதப்போகிறேன் என்பதை எண்களிட்டு அத்தியாயச் சுருக்கங்களை எழுதிக்கொள்வேன். அப்படிச்சுருக்கங்களை எழுதுகிறபோது, முதல் பத்து அத்தியாயங்களை திரும்பவும் எழுதவேண்டியிருக்கும். திட்டமிடுதலும் முக்கியம், நாவலை முடிக்கும் வரை அதனோடும், நாவலில் வரும் பாத்திரங்களோடும் வாழப் பழகிகொள்ளுங்கள்.  பெஸ்ட்-செல்லரை எட்டமுடிகிறதோ இல்லையோ, மனமார ஒரு சிலர் பாராட்டுகிறபோது அதன் இனிமையை நெஞ்சில் ருசிப்பீர்கள்.

————————————————