Monthly Archives: பிப்ரவரி 2016

மொழிவது சுகம் பிப்ரவரி 26-2016

பேசாதிரு மனமே (1980)

இரத்தத்தின் இரத்தங்களும்
இரசவாத நடனமிட
கச்சைகள் கட்டிடுவர்
கலங்காதிரு மனமே !

காவிக்குப் பல்லிளித்து
கருத்துக்கு முகம் சுளிக்கும்
பாவிகள் சாதகத்தைப்
படியாதிரு மனமே !

உள்ளத்தில் சிறுமைகளை
உரமிட்டு வளர்த்தவர்கள்
கள்ளத்தால் கதையளப்பர்
கலங்காதிரு மனமே !

நட்பென்று வந்திடுவர்
நலங்கெட பொய்யுரைப்பர்
விலங்கினும் கீழின ங்கள்
விலைபோகாதிரு மனமே !

பிட்டுக்குமண் சுமந்து
பிரம்படி பட்ட ஈசன்
கட்டைக்கும் நாள் குறிப்பர்
கலங்காதிரு மனமே !

எதிர் வீட்டுத் தமிழனை
எட்டி உதைத்து விட்டு
பிறவித் தமிழுக்கென்பர்
பேசாதிருமனமே !

– நாகரத்தினம் கிருஷ்ணா

படைப்பிலக்கியத்தில் ஆர்வம் கொண்ட பலருக்கும் அவர்களின் தமிழ் ஆசான் கள் முதற்காரணம். நான் உயர் நிலைப் பள்ளியில் படித்தபோது எனக்கு வாய்த்த தமிழ் ஆசிரியர்களை மறக்க முடியாது :  ஒருவர் திரு நா.கிருஷ்ணசாமி, மற்றவர் திரு இராசேந்திரன்.  இருவரையும் அண்மையில் சந்தித்தேன். இவர்களின் ஆசியால் எல்லோரையும்போல கவிதையில் தான் எனது இலக்கிய வாழ்வும் ஆரம்பம்.  எழுபதுகளில் கண்ணதாசன் தனிப்பாடல்களில் தீராத மோகம். அவற்றின் உந்துதலில் ஒரு தொகுப்பை வெளியிட்டேன், தலமை திரு. அவ்வை  நடராசன்,  தொகுப்பிற்கு முன்னுரையும் அவருடையதுதான்.  பல இன்றும் வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருக்கிற வெகுசன இதழ்களில் பிரசுரமானவை. எனினும் தொடர்ந்து கவிதைள் எழுதாது, உரை நடைபக்கம் ஒதுங்கினேன். பிரசுரிப்பதில்லையே தவிர, அவ்வப்போது கவிதைகள் எழுத நேரிடுகிறது. அண்மையில் பா இரவிக் குமாருடையக்  கவிதைத் தொகுப்பை வாசித்துவிட்டு தொடர்ந்து எழுதுங்களேன் என வற்புறுத்தியபொழுது, அவர் என்னிடம் கூறிய பதில், ” நிறைய எழுதி வைத்திருக்கிறேன்” பிரசுரிக்கத் தயக்கம் என்றார். அவர் பதிலை என்னுடையதாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது.

உண்மையைச் சொன்னால்  கவிதை விடயத்தில் அப்படி யொரு தயக்கம் என்னிடத்தில் இருக்கிறது. நான் சட்டென்று வெந்து தணியும் ஆசாமி, வெறித்தனம் என்னுள் தீப்பற்றி எரிகிறபோது  கவிதை எனக்குச் சுயசிகிச்சை மருந்தாக இருக்கிறது. எழுதி ,  எழுதிய வேகத்தில் கிழித்தும் போடுவதுண்டு. இந்தச் சூழலில் ஒரு முடிவெடுத்தேன், பழையவற்றை அசைபோட்டு , புதிதாய் எழுதிக்கொண்டிருப்பவற்றிர்க்கு (கண்ணதாசன் பாணியில் அல்லாத புதுக்கவிதைகளுக்கு)  என்றேனும் ஒரு நாள் களம் அமைத்துக்கொடுக்கலாமா என்று பார்க்கிறேன். அதற்கான முதற்படி இது.

மொழிவது சுகம் பிப்ரவரி 21 62016

அ.சிறகின் கீழ் வானம் – கு.அ. தமிழ்மொழி

Siraguநான்கைந்து ஆண்டுகளுக்கு முனபு புதுவையில் நண்பர் சீனு. தமிழ்மணி நட த் திய நிகழ்ச்சியொன்றிற்குச் சென்றிருந்தபோது இக்கவிதை ஆசிரியைக் கண்டிருக்கிறேன். கவிதைத்தொகுப்பு வந்தபோது , நூலாசிரியருக்குப் பன்னிரண்டு வயது என்ற குறிப்பு உள்ளது. இத்தொகுப்பினை அண்மையில் தான் நண்பர் தமிழ்மணியிடமிருந்து பெற்றேன். தொகுப்பைப் போகிற போக்கிலே நம்பிக்கையின்றிதான் புரட்டிப்பார்த்தேன் எனினும், பிற்காலத்தில் சாதனையாளர்காகப் பிரம்மிப்பூட்டுகிற மனிதர்களின் இளம்பிராராயத்திய வியப்பூட்டும் அபாரத் திறன் இவரிடமும் தெரிந்த து.

விளையும் பயிர் முளையில் தெரியும் என்றொரு பழமொழி தமிழிலுண்டு. தமது போராட்ட குணத்திற்கரிய தொனியைச் சொற்களுக்கு அளித்து, உணர்வுகளுக்குரிய வண்ணத்தைக் குழைத்து ஹைக்கூ எழுதியுள்ளார், கு.அ. தமிழ்மொழி. எங்கோ சிலருக்குத்தான் பெயர்பொருத்தம் அமையும், பெயர் சூட்டிய பெற்றோர்களுக்கு நன்றி. ஓவியத்தையொத்த அவருடைய ஹைக்கூ சித்திரங்கள் நமது புருவங்க்களை உயர்த்தி பிரம்மிக்க வைக்கின்றன.

« யார் போட்ட து
ஓசோனில் ஓட்டை
சூழல் கேடு »

« ஆபத்தான வளைவு
மெதுவாகச் செல்லவும்
விரைவுப் பேருந்து »

« ஆங்க்கிலேயன் அன்று
ஆங்க்கிலம் இன்று
அடிமைத் தமிழர்கள் »

போன்ற கவிதைகளிற் தெறிக்கும் எள்ளலும், கோபமும் சூடு சுரணையுள்ள சமூகத்திற்கு உலக்கை இடி, குறிப்பாக ஹைக்கூவை முடித்துவைக்கும் வார்த்தைள் சாட்டையைச் சொடுக்குவதுபோல இருக்கின்றன.

வாசிக்கின்றவர்களைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்க க் கூடியக் கவிதைகளுக்கும் பஞ்ச்சமில்லை.

« சிரிக்கிறார்
காந்தி
கள்ள நோட்டு »

« நேரம் தெரியாமல்
ஓடிக்கொண்டிருக்கிறது
கடிகாரம் »

« விடுதலை நாளில்
வாங்கினார்
கூண்டுக்கிளி «

« புத்தரிடம்
கேட்கிறான்
ஆசைய நிறைவேற்று »

« வாடிப் போனாள்
வெயிலில்
பூவிற்பவள் »

இது போன்ற நூற்றுக்கு மேற்பட்ட நம்மை வியப்பில் ஆழ்த்தக்கூடிய கவிதைள் தொகுப்பில் உள்ளன. தமிழ் நாட்டில் பொது இடங்க்களில் இவற்றைத் தட்டிகளில் எழுதிவைத்து, இந்தக் ஹைக்கூ தீக்குண்ட த்தில் இறங்க்கிச்செல்லுமாறு தமிழர்களைப் பணிக்கவேண்டும். மகாமகத் தமிழன் மரமண்டைக்கு இதெல்லாம் புரியவேண்டுமே.
கு.அ. தமிழ்மொழி விளைந்த நிலம் அப்படி. தாத்தா சுதந்திர போராட்ட வீர ர். கவிஞரின் தந்தையுடன் அதிகம் நெருக்கமில்லை என்கிறபோதும் அவரது பெரிய தந்தை சீனு தமிழ்மணியை பல ஆண்டுகளாகவே அறிவேன். மொழிப்பற்று, தமிழ்தேசியம், பகுத்தறிவுக் கொள்கையென்று வாழ்க்கையை அமைத்துக்கொண்ட குடும்பம் அவர்களுடையது. இதுபோன்ற குடும்பங்கள், வீதிக்கொன்று இருந்தால் கூட தமிழினம் கடைத்தேறும் என நினைப்பவன் அப்படியொரு பின்புலத்தில் வந்த பெண்புலி என்பதால் , கவிதைகளும் பாயும் புலிகளாக இருக்கின்றன.

செல்வி கு.அ. தமிழ்மொழிக்கு பல முகங்கள், ஒரு வேளை வயதுக்கொன்று என பல முனைகளில் தமது ஆற்றலை வெளிப்படுத்தியிருக்கக்கூடும். நூலின் பிற்சேர்க்கையாக இடம்பெற்றிருக்கிற புகைப் படங்கள், அவரின் சாதனைச் சாட்சியங்கள். வரைந்த ஒவியத்திற்குப் பரிசு, ஆடிய நடனத்திற்குப் பரிசு, பேசிய பேச்சுக்குப் பரிசு, எழுதியப் பாட்டிற்குப் பரிசு, வகுப்பில் முதல் மாணவி என்பதற்காகப் பரிசு என பங்கெடுத்த அனைத்திலும் பரிசுகள் இவரைத் தேடிவந்து அவை பெருமைப் பெற்றிருக்கின்றன. இளம் வயதிலேயே மாணவர் தொண்டியக்கத்தின் செயலாளர், தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் போராட்டம், தமிழ் நலக் காப்பணி சார்பில் போராட்டம் என களத்திலும் துணிச்சலைக் காட்டியிருக்கிறார். இதழொன்றிற்கு அளித்திருந்த பேட்டியையும் வாசித்தேன். இளம்வயதென்றாலும், ஆரோக்கியமான சிந்தனைக்குச் சொந்தக் கார ராகவும் இருக்கிறார்., தான் எடுக்கும் முடிவில் நியாயத் தை உணர்வதால் அதில் அவர் உறுதியுடன் இருப்பதையும் அறிய முடிகிறது. இவையெல்லாம் அவரது ஹைக்கூக்களை திரும்பவும் வாசிக்க வைத்தன.

செல்வி கு. அ. தமிழ்மொழியிடம் வேலு நாச்சியாரையும், மூவலூர் இராமாமிர்த த்தையும் சேர்த்துப் பார்க்கிறேன். ஒரு போராளிக்குரிய அத்துணை குணங்க்களும் பொருந்துகின்றன. இந்த ஐந்தாண்டுகால இடைவெளியில் வேறு பல தொகுப்புகளையும் அவர் கொண்டுவந்திருக்கலாம்,, கவிதையிலும் முதிர்ச்சிக் கண்டிருக்கலாம். கவிஞர் மாலதி மைத்ரி தலமையில் சிறுமியாக இருந்தபோதே கவிதை வாசித்திருக்கிறவர் ஆயிற்றே, எனவே எதிர்பார்ப்புகள் ஏராளம்.
———————————-
ஆ. Sept Vies

Netflix வசதி இருப்பதால் கட,ந்த சில மாதங்களாக நல்ல திரைப்படங்களைப் பார்க் க முடிகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு ‘Sept Vies’ என்ற பட த் தைப் பார்த் தேன். தமிழில் 7 ஜீவன் கள் என மொழிபெயர்க்கலாம்.. இதொரு அமெரிக்கத் திரைப்படம் என்பதால் அதன் அசல் பெயர் ஆங்க்கிலத்தில் Seven Pounds’ எனக்குக் கதைப்படி பிரெஞ்சுப் பெயர் சரி. ஆங்கிலப் பெயரும் காரணமில்லாமல் வைத்திருக்கமாட்டார்கள், அவர்களுக்கான காரணம் எனக்கு விளங்க்காதிருக்கலாம். . அண்மையில் தாகூர் கவிதையொன்றை சீனர் ஒரு வர் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருக்க அவரது அபத்தமான மொழிபெயர்ப்பு குறித்த கண்டனம் பிரெஞ்ச்சு தினசரிகளில் இடம்பெற்றிருந்தது. அது குறித்து சற்று விளக்கமாக அடுத்த மொழிவதும் சுகத்தில் எழுதுகிறேன்.
படத்தின் கதை நம்பும்படியாக இல்லை, திரைக்கதையும் மக்டொனாலில் அவசரகதியில் விழுங்க நேரும் உணவை நினைவூட்டுகிறது. என்றேனும் ஒரு நாள் உலக நாயகன் உல்டாப் பண்ணி தமிழ் இரசிகர்களின் தலையில் கட்டும் அபாயமும் நிறையவே இருக்கிறது.
கதைவாயகன் எதிர்கால மனைவியுடன் காரில் திரும்பும் போது, (அம்மாவுடனோ அப்பாவுடனோ காரில் வாயகன் திரும்பினால் சுவாரசியம் இருக்காதென்று அவர்களுக்கும் தெரிந்திருக்கிறது. ஹாலிவுட்டோ கோலிவுட்டோ வாஸ்து சாஸ்த்திரம் சினிமாவிற்கும் இருக்கிறது. காரில் திரும்பும் நாயகன் தனது கவனத்தை SMS செய்தியிற் செலுத்த ஏற்படும் விபத்தில் எதிர்கால மனைவி, இன்ன பிற ஜீவங்களென்று போன உயிர்கள் 7. குற்றம் உறுத்துகிறது. பிராயச்சித்தமாக பல்வேறு உடற் பிரச்சினைகளை முன்னிட்டு உயிருக்கு மன்றாடும் 7 ஜீவங்களுக்குத் தனது உடல் உறுப்புகளைத் தானம் செய்து காப்பாற்ற நினைக்கிறான், விபத்துக்குக் காரணமான கதா நாயகன்.. சிபிச் சக்கரவர்த்திபோல அல்ல, தன்னைச் சாகடித்து. உதவிப்பெறப் போகும் உயிர்கள் செப்பு கலவாதத் தங்கமாவென உரசிப்பார்த்து தேர்வு செய்கிறான், இதற்கிடையில் கொஞ்சூண்டு காதலும் உண்டு.

வில் ஸ்மித் நடித்திருக்கிறார் என்பதைவிட நன்றாகவே நடித்திருக்கிறார் எனலாம். இருந்தாலும் அவரை அழுமூஞ்சியாகப் பார்க்க மனம் ஒப்பவில்லை
—————————————-

மூத்த இலக்கியவாதிகள் திறனாய்வாளர் விமர்சனங்கள் -8: மாத்தாஹரி நாவல் குறித்து – பேராசிரியர் பா. இரவிக்குமார்

      இரண்டாம் உரையாடல்

(மாத்தா ஹரி நாவலை முன்வைத்து)

                                                           பேராசிரியர் பா. ரவிக்குமார்,         

Ravikumar                                       

தமிழில் எழுதப்படும் பெரும்பாலான நாவல்கள், யதார்த்ததிற்கு உட்பட்ட நேர்கோட்டு நாவல்களாக இருக்கின்றன. தமிழ் வாசகர்கள் இத்தகைய நாவல்களை வாசிப்பதற்கு என்று பழக்கப்பட்டு விட்டார்கள். ஒருவகையில் தமிழர்களின் வாழ்க்கையேகூட பழக்கப்பட்ட வாழ்க்கைதான். இது ஏன்? இது எதற்கு? இது எப்படி என்பதையெல்லாம் அவர்கள் பெரும்பாலும் சிந்திப்பதில்லை. இந்தக் கூற்று, பெரும்பாலும் எல்லோருக்கும் பொருந்தும். விதிவிலக்குகள் இருக்கலாம். விதிவிலக்குகள் விதிகள் அல்ல. பழக்கப்பட்ட வாழ்க்கை, வாழ்வதற்கு எளிதாக இருக்கிறது. வசதியாக இருக்கிறது. ஏன் இந்த எளிமையும், வசதியும் என்றால் வாழ்க்கையில் நடைபெறும் பல சம்பவங்களை நாம் மறந்துவிடுகிறோம்; அல்லது பலவற்றை மறந்துவிட வேண்டும் என நினைக்கிறோம். ஆனால், வாழ்க்கை அதன் தன்மையில் புதிர்கள் நிறைந்தது. அதனாலேயே அழகானது. ரகசியங்கள் நிறைந்தது. ஒரு பள்ளத்தாக்கின் மௌனம் போன்றது.

எந்தக் கதையைச் சொன்னாலும், நாகரத்தினம் கிருஷ்ணா, இந்தப் புதிர்களையும், அழகையும், ஆபத்துகளையும் தன் எழுத்தில் கொண்டுவர நினைக்கிறார்.

‘மாத்தா ஹரி’ தமிழில் எழுதப்பட்ட நேர்கோட்டு நாவல் அல்ல; ஆனால், நேர்கோட்டு நாவலைப் படிக்கின்ற அனுபவத்தைத் தரக்கூடிய நாவல். அண்மைக்காலங்களில் (கடந்த பத்தாண்டுகளில்) தமிழில் எழுதப்பட்ட வித்தியாசமான நாவல்.

நாகரத்தினம் கிருஷ்ணாவின் எழுத்துகளைப் புகழவேண்டும் என்பதற்காக இக் கூற்றைக் கூறவில்லை. தமிழில் எழுதும் எல்லோருமே புகழ்ச்சியை விரும்புகிறார்கள். நாகரத்தினம் கிருஷ்ணா எப்படியோ, எனக்குத் தெரியாது. நாகரத்தினம் கிருஷ்ணாவின் எழுத்துகளைக் கவனப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இதைக் கூறுகிறேன்.

இந்த நாவலின் கதை இது; இது இதைச் சொல்கிறது……. அதைச் சொல்லவில்லை என்றெல்லாம் இந்த நாவலைப் பற்றி எதையும் கூறப் போவதில்லை. ஒரு முத்திரைக்குள் இந்த நாவலை அடக்கிவிடலாம் என்றால், அது நாவலாசிரியருக்குச் செய்யும் துரோகமாகிவிடும்.

மாத்தா ஹரி, பவானி, ஹரினி, என்கிற மூன்று பெண்களின் கதையை இந்த நாவலில் சொல்லிச் செல்கிறார் நாகரத்தினம் கிருஷ்ணா. உண்மையில் கதை சொல்லல் மூலமாக, வாழ்க்கை குறித்து ஒரு விசாரனையை மிக இயல்பாக நடத்தியுள்ளார்.

நாவல் என்பது வெறும் கதையல்ல என்பதை நாம் அறிவோம். கதையின் மூலமாகவும், கதை மாந்தர்களின் மூலமாகவும் வாழ்க்கை பற்றிய பார்வையை நாவலாசிரியரின் முன்வைக்கிறான். சுவாரஸ்யமான கதை சொல்லலின்மூலம், நாகரத்தினம் கிருஷ்ணா வாசகர்களுடன் இணைந்து, வாழ்க்கை குறித்த தேடலை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறார்.

1917 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட நடனப் பெண்மணியான மாத்தா ஹரியைப் பற்றிய புனைவாகவும், புதுச்சேரியிலிருந்து புறப்பட்டுச் சென்ற பவானி என்ற பெண்ணைப் பற்றிய புனைவாகவும், அவளுடைய வளர்ப்பு மகள் ஹரினியைப் பற்றிய புனைவாகவும் இந்த நாவல் விரிகிறது. இடையில் நிறைய கதைமாந்தர்கள். மாத்தா ஹரியைத் திருமணம் செய்துகொண்ட ராணுவ அதிகாரி ருடோல்ப், மாத்தா ஹரியை நேசித்த அல்லது அவள் அழகில் மயங்கிய ஆண்கள், பவானியைத் திருமணம் செய்து கொண்ட தேவசகாயம், ஹரினியுடன் உறவு கொண்ட சிரில், அரவிந்தன், பவானியின் தந்தை, பாட்டி, தோழி பத்மா, தேவசகாயத்திடம் உறவு வைத்துக் கொண்ட எலிஸபெத், மாத்தா ஹரியின் மண்டையோட்டைத் தேடும் குளோத், பவானியை நேசிக்கும் பிலிப், நாவலின் இறுதியில் வரும் பஸ்கால் என்று ஏராளமான கதைமாந்தர்கள்.

ஆனால் மாத்தா ஹரி, பவானி, ஹரினி ஆகிய மூன்று கதை மாந்தர்களை மையமிட்டுதான் நாவல் கட்டமைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்குள் நிறைய ஒற்றுமைகள். மாத்தா ஹரி இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவள். கணவனால் வஞ்சிக்கப்பட்டவள். தான் தேர்ந்தெடுத்துக்கொண்ட வாழ்க்கையின் காரணமாக, சமூகத்தாலும் வஞ்சிக்கப்பட்டவள். ஜெர்மனியின் உளவாளி என்று குற்றஞ்சாட்டப்பட்டு, பிரான்ஸ்தேச அரசாங்கத்தால் தூக்கிலிடப்பட்டவள். ஹாலந்தில் பிறந்து, இந்தோனேஷியாவில் துன்பங்களை அனுபவித்து, பின்னர் விபச்சார வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டு, மரண தண்டனை என்ற பெயரில் கொலை செய்யப்பட்டவள். பேரழகி.

காலமும், இடமும் வேறு என்றாலும், கிட்டத்தட்ட பவானியும் மாத்தா ஹரியைப் போன்றவள். சுயசிந்தனைவாதி. பவானியும் தண் கணவன் தேவசகாயத்தால் வஞ்சிக்கப்படுகிறாள். இத்தனைக்கும் மிகத் தெளிவான பெண். திருமணமும், காதலும் வேண்டாம் என நினைத்தவள். ஒரு கட்டத்தில் பவானி இப்படி நினைக்கிறாள்:-

“நடுத்தர வர்க்கத்து பெண்ணாய்ப் பிறந்தவள், ஒரு குபயோக சுபதினத்தில், காதலித்தோ அல்லது காதலிக்காமலேயோ, கல்லுடனோ, புல்லுடனோ, குறைந்தபட்சம் மாலை மாற்றிக் கொள்ள வேண்டும். அடுத்து, எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் தான் மலடி அல்லவென்று நிரூபித்தாக வேண்டும். கல்லுக்கும் புல்லுக்கும் பிடித்ததைச் சமைக்கவேண்டும், அவனது விருப்பத்திற்கென்று சினிமாவுக்குப் போகவேண்டும், அவனது விருப்பத்திற்கு நண்பர்களை உபசரிக்க வேண்டும், அவனது விருப்பத்திற்குப் படுக்க வேண்டும். நல்ல வேளை அவனுடைய விருப்பத்தைக் கேட்டுத்தான் மனைவியானவள் டாய்லெட் போகவேண்டுமென்ற கட்டாயம் எதுவுமில்லை” (ப.111)

இப்படி நினைக்கும் பவானிதான், சூழலின் காரணமாகத் தேவசகாயத்தைத் திருமணம் செய்துகொண்டு பிரான்ஸில் துன்புறுகிறாள். தற்கொலை செய்துகொள்கிறாள்; அல்லது கொலை செய்யப்படுகிறாள்.

தன் தாயின் இறப்பிற்குக் காரணத்தைக் கண்டுபிடிக்கத் துடிக்கும் ஹரினி, இருபத்தோராம் நூற்றாண்டைச் சேர்ந்தவள். சிரில், அரவிந்தன் போன்ற இளைஞர்களிடம் மிக இயல்பாக உடலுறவு வைத்துக் கொள்பவள். வாசகர்கள் அதிர்ச்சியுறும் வண்ணம் நாவலின் இறுதியில் காணாமல் போகிறாள்.

“எனினும், அவர்களின் மூவரும் வாழ்க்கையும் முன்னர் சொன்னதுபோல ஒரு நிறம். ஒரு வாசனை. ஒரு பயணம். இதன் பொருள், எல்லாப் பெண்களும் ஏதோ ஒரு வகையான நுகத்தடிகளைச் சுமக்கிறார்கள் என்று சொல்லி, இதைப் பெண்ணிய நாவல் என்று ஒரு சிமிழுக்குள் அடக்கிவிடமுடியுமா என்றால் முடியாது.” (ப.6) என்று மிகச் சரியாகவே, வாசகர்களையும் விமர்சகர்களையும் எச்சரிக்கை செய்துள்ளார் பிரபஞ்சன். வாழ்க்கை ஒரு வரையறைக்குள் அடங்குவதில்லை. இந்த நாவலையும் அப்படித்தான் கருத வேண்டியுள்ளது.

மாத்தா ஹரி, பவானி, ஹரினி ஆகிய மூன்று பெண்கிளன் கதைகையும் நேர்கோட்டில் கூறாமல், நாகரத்தினம் கிருஸ்ணா முன் பின்னாக, சௌகரியமாகக் கதையை மாற்றிக் கூறுகிறார்.

நாவலை எழுகும் நாகரத்தினம் கிருஸ்ணாவிடமே பவானி பேசுதல், நாவலின் இறுதியில் நாகரத்தினம் கிருஷ்ணா பவானியிடம் பேசுவதன்மூலம் வாசகர்களிடம் பேசுதல் முதலிய உத்திகள் வாசகர்களுக்குப் புதுமையாக இருக்கும் என்று நம்புகிறேன்.

வாசகர்கள் அவரவர்களுக்குத் தேவையானதை இந்த நாவலின்மூலம் உணரலாம். பேரிலக்கியத்தின் தன்மை, வாசகர்களுடன் எப்போதும் உரையாடிக் கொண்டிருப்பதுதான். எது உண்மை? எது புனைவு? என்பதைப் பிரித்தறியாத வண்ணம், உண்மையும் புனைவும் கலந்த இலக்கியமாக இந்த நாவல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி, ஸ்டராஸ்போ, இந்தோனேஷியா போன்ற பல நகரங்களைக் களமாகக் கொண்டு இந்த நாவலை எழுதியிருப்பதன்மூலம், பல்வேறு கலாச்சாரங்களின் தன்மையை மிக நுட்பமாகச் சித்தரித்துள்ளார் நாகரத்தினம் கிருஷ்ணா. பிற தமிழ் நாவலாசிரியர்களிடமிருந்து நாகரத்தினம் கிருஷ்ணா வேறுபடும் இடம் இது. பல உலக நாவல்களை வாசித்த அனுபவம், கிருஷ்ணாவிற்கு அற்புதமாகக் கைகொடுத்துள்ளது.

நாகரத்தினம் கிருஷ்ணாவின் மொழிநடையைத் தனியே கூறவேண்டும். நேர்கோடல்லாத நாவல்களில் வாசிப்புத் தன்மை (Readability) குறைந்துவிடுவதற்கான வாய்ப்பிருக்கிறது. நாவலின் எந்த இடத்திலும் இத்தன்மை குறையவில்லை. ஒரு நூற்றணாடு வாழ்ந்த அனுபவத்தையம், பல நாடுகளைப் பார்த்த அனுபவத்தையும் வாசகர்கள் ஒருங்கே பெறுவார்கள் என்பதை நிச்சயமாகக் கூறமுடியும்.

வாழ்க்கை என்பதை ஒரு சாத்தியக்கூறு (Probability) என்று பார்க்கிறார் நாகரத்தினம் கிருஷ்ணா. ஹரினி என்னவானாள்? பவானியின் மரணம் கொலையா? தற்கொலையா? என்பதெல்லாம் பிரச்சனையில்லை. ஒரு துப்பறியும் நாவலாக இந்த நாவலை யாரும் கருதிவிடக்கூடாது. துப்பறியும் நாவலுக்குரிய சுவாரஸ்யம் இருக்கிறதே தவிர, உண்மையில், இது துப்பறியும் நாவலில்லை.

“வாழ்க்கை முழுதும் இரண்டு உரையாடல்களைத் தொடர்ந்து நடத்துகிறோம். இரண்டாவது உரையாடல், பொய் கலவாதது. அந்தரங்கமானது. நாமே நமக்கென்று நடத்தும் உரையாடல். இங்கே பரஸ்பர புரிதல்களில் சிக்கல்கள் இருப்பதில்லை, மறுப்புகள் இடம்பெறுவதில்லை” (ப.285) என்று நாவலின் இறுதியில் கூறுகிறார் நாகரத்தினம் கிருஷ்ணா.

நாவலின் இறுதி என்று கூறுவதும் ஒரு வசதி கருதிதான் என்பதை வாசகர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

உண்மையில், இந்தப் பிரதி முதலும் முடிவும் அற்றதாக நீள்கிறது.

நாவல் முடியும் இடத்தில் வாழ்க்கை தொடங்குகிறது என்று எடுத்துக் கொள்ளலாம் அல்லவா?

வாழ்க்கைக்கும்கூட முதல் ஏது? முடிவு ஏது?

இந்த அனுபவத்தைத் தந்த கிருஷ்ணாவிற்குத் தமிழ் வாசகர்கள் நன்றிக்கடன் பட்டுள்ளார்கள்.

தமிழ் நாவலின் வரலாற்றை நாகரத்தினம் கிருஷ்ணா, தன் தத்துவப் பார்வையால் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றுள்ளார் என்பதை மட்டும் உறுதியாகக் கூற முடியும்.

 

                                                                                                                      பா. இரவிக்குமார்

பாவண்ணன் என்ற ஒர் எழுத்துப் போராளி

“புதுச்சேரி வாழ்க்கையை சமூக எதார்த்த நோக்கில் சித்திரிக்கும் நாவல்களைப் படைப்பதில் குறிப்பிடத் தக்கவர் பாவண்ணன் ஆவார்.” என்கிறார் தேவமைந்தன்.

ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்கள்: சிறுகதைகள் கட்டுரைகள், கவிதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புகளென படைப்புலகின் அவ்வளவு வடிவங்களிலும் ஆழமான ஞானம்கொண்ட மனிதர். தமிழ்ப்படைப்புலகில் பாவண்ணனுக்கென்று தனித்த இடமுண்டு. அந்த இடத்தை இன்று நேற்றல்ல என்றைக்கு எழுத்துலகில் அவர் காலடியெடுத்துவைத்தாரோ அன்று தொடக்கம் கட்டிக்காத்து வந்திருக்கவேண்டுமென்பது என்பதென் அனுமானம். ஆனால் அதனைக் தக்கவைத்ததில் எழுத்தாளர் பாவண்ணனைக் காட்டிலும்;  நல்ல குடும்பத் தலைவராக, அரசு ஊழியராக, சமூகத்தை உளமார நேசிப்பவராக இருக்கிற பாவண்ணன் என்கிற மனிதருக்குப் பெரும் பங்கிருக்கிறது. தமிழ்ப் படைப்பிலக்கிய துறையில் சொந்த வாழ்க்கையில் ஒரு நேர்க்கோட்டைக் கிழித்து அதனின்று ஓர் மி.மீட்டர் கூட பிறழாமல் நடப்பதைக் கொள்கையாகவே ஏற்றுக்கொண்ட மனிதர். அவரைப்போலவே அவரது இலக்கிய ஆளுமையும் எளிமையானது, பகட்டிலிருந்து விலகி நிற்பது; எதார்த்த சமூகத்தை, அதன் பங்காளிகளைக் குறிப்பாக இந்தியச் சமூகத்தின் முதுகெலும்பாக இருக்கிற நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்வனுபங்களை, அவற்றின் ஈரத்துடன், கவிச்சி போகாமல் பொத்தி வைத்து படைப்புதோறும் மணக்க மணக்கச் சொல்லத் தெரிந்தவர். எழுத்துவேறு வாழ்க்கைவேறு என்றில்லாமல் இரண்டையும் ஒன்றாகப் பார்க்கிற படைப்பிலக்கியவாதிகள் இங்கு அபூர்வம். பாவண்ணன் அத்தகைய குறிஞ்சிப்பூக்களிலொருவர். தமிழ்ச்சூழலைச் புரிந்துகொண்டு எந்தக் குழுவினரையும் சார்ந்திராமல் படைப்புண்டு தானுண்டு என ஒதுங்கி இருக்கத் தெரிந்த சாமர்த்திய சாலியுங்கூட.

பாவண்ணனைக் கொண்டாட இரண்டு காரணங்கள் எனக்கிருக்கின்றன. முதலாவதாக தமிழில் சிறுகதையென்றதும் மேற்குலகப் படைப்புகளுக்கு இணையாக எனக்கு நினைவுக்குவருகிற ஒரு சில எழுத்தாளர்களில் பாவண்ணனும் ஒருவர். இவர்கள் கதைகள் மானுடம்சார்ந்த பிரச்சினைகளை, பொறுப்புள்ள மனித மனத்தின் கவலைகளைக்கொண்டு  அளவிடுபவையாக இருக்கின்றன. பாவண்ணனைப்பற்றி எழுத விரும்பியதற்கு இரண்டாவது காரணம், அவர் என்னைப்போலவே தமிழ்நாட்டைச்சேர்ந்த விழுப்புரம் மாவட்டத்துக்காரர்,  வாழ்க்கையின் பெரும்பரப்பை புதுச்சேரியோடு பிணைத்துக் கொண்டவர்.

நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள் சிறுகதைகள் என சாதனைகளைக் குவித்திருந்தபோதிலும் ஒளிவட்டத்தைத் தவிர்த்து அமைதிதவழும் முகமும் வசீகரமான குறுநகையுமாக அவரை முதன்முறை நான் அவரைக் கண்டது மறக்கவியலாது. எவ்வித பந்தாவுமின்றி, சினேகிதப் பாங்குடன் கைகுலுக்க முன்வந்தபோது உயர்ந்த அவரது மனிதம் இன்றுவரை குறையின்றி மனதில் நிலைத்திருக்கிறது.

பாவண்ணன் கதைகள் குறிப்பாக சிறுகதைகள்:

நவீன இலக்கியத்தில் இன்றைய தேதியில் சிறுகதைகளை அதிகம் காண நேர்வதில்லை. இன்று வெளிவரும் புனைகதை வடிவங்களில் சிறுகதை தொகுப்புகள் எத்தனை, நாவல்கள் எத்தனை என்பதை ஒப்பிட்டுபார்த்து சிறுகதை எழுத்தாளர்கள் அருகிவருவதைத் தெரிந்துகொள்ளலாம். சிறுகதைக்குரிய பண்புகள் அனைத்தையும் நாவல்கள் எடுத்துக்கொண்டுவிட்டன என்பதும் ஒருகாரணம். ஒரு நல்ல சிறுகதை என்பது வாசித்துமுடித்ததும் நிறைவைத் தரவேண்டும், வாசகரிடத்தில் ஆசிரியர் சொல்லவந்தது முள்போல தைத்திருக்க வேண்டும், ஏன் அப்படி எழுதினார் என்ற கேள்வியை எழுப்பவேண்டும். பாவண்ணன் சிறுகதைளில் பெரும்பாலானவற்றிடம் இப்பண்பினைக் காண்கிறோம். விவரிப்புகளைக் குறைத்து, சிக்கனமாக வார்த்தைகளைக் கையாண்டு எதார்ந்த உலகிலிருந்து அதிகம் விலாமல் கதை சொல்லும் பாணி அவருடையது. அவரது சிறுகதைகளில் சிலவற்றை இக்கட்டுரைக்காகத் திரும்பவும் வாசித்த இத்தருணத்திலும் மனதில் நிற்பவையாக இருப்பவை.  வண்ண நிலவன், வண்ணதாசன் போன்ற தமிழ்ச்சிறுகதை ஓவியர்கள் தீட்டும் சித்திரங்களுக்கு இணையானவை அவை.

சூறை

வருவாயற்றுப்போன இரயில்வே ஸ்டேஷனை, நிர்வாகம் மூட நினைக்கிறது. ஸ்டேஷன் மாஸ்டராக பொறுப்பேறிருக்கும் கதை சொல்லி பல ஆண்டுகளுக்கு முன்பாக அதே ஸ்டேஷனில் பணியாற்றியவர். “அப்பொழுதெல்லாம் இப்படி இல்லை. பார்க்கும் போதே ஆர்வத்தைத் தூண்டும் செந்நிறத்தில் ஸ்டேஷன் கட்டிடம் நின்றிருக்கும் முகப்பில் மஞ்சள் நிறப் பெயர்ப்பலகை. கரிய வர்ணத்தால் முன்று மொழிகளில் எழுதிய ஊரின் பெயர். ஏழெட்டு சிமெண்ட் பெஞ்சுகள். இரும்புக் கிராதிகள். மறுபுறம் பெரிய கூட்ஸ் ஷெட். பக்கத்தில் இந்தியன் ஆயில் டேங்க். கசகசவென்று சதா நேரமும் ஒரு கூட்டம். இன்றோ சூறையாடப்பட்டுப் பாழான ஒரு புராதன இடம் போல முள்ளும் புதரும் மண்டிக் கிடக்கிறது. குதிரை வண்டிகளும் மாட்டு வண்டிகளும் இருந்த இடத்தில் நாய்கள் படுத்துக் கிடக்கின்றன”  என்கிற ஒப்பீட்டுடன் கதை தொடங்குகிறது. செல்லரித்த பழைய நிழற்படத்தையொத்து நிற்கிற கட்டிடமும் பிறவும் ஊர்மக்களால் எப்படி கபளீகரம் செய்யப்படுகிறது என்பதுதான் கதை.  விட்டகுறை தொட்டகுறையென்று ஸ்டேஷனிடத்தில் தீராத காதல்கொண்டிருக்கும் கதைசொல்லிக்கு அந்த ஸ்டேஷனுக்கு அப்படியொரு தண்டனையை (நிரந்தரமாக மூடும்) தர மனம் ஒப்புவதில்லை. மூடப்படாலிருக்க நியாயங்களைத் தேடுகிறார். அந்நியாயங்களைப் பட்டியலிட்டு உயரதிகாரிகளுக்கு அறிக்கையாக அனுப்பவும் செய்கிறார்.  ஆனால் இரயில்வே நிர்வாகத்திற்கு இவர் முன்வைக்கும் நியாயங்களைக் காட்டிலும், அந்த ஸ்டேஷனின் வரவு செலவு கணக்கு தரும் உண்மை பெரியது. அதனைக்கூட கதைசொல்லியால் சகித்துக்கொள்ள முடிகிறது  ஆனால் கண்னெதிரே ஸ்டேஷன் கொள்ளை போவதை வேடிக்கைப் பார்ப்பதன்றி வேறெதுவும் செய்ய இயலாத தனது கையாலாகதத்தனத்தை  சகிக்க முடிவதில்லை.  ஸ்டேஷன் மாஸ்ட்டரின் குமுறல் தீயில் எண்ணை வார்ப்பதுபோல, ஸ்டேஷனில் வேலைசெய்யும் ஊழியர்களின் அவலக்குரல்:

“அம்முவரிடமும் விஷயத்தைச் சொன்னேன். அதிர்ந்து போனார்கள் அவர்கள்.

என்ன சார் இப்பிடி செய்றாங்க. புள்ளகுட்டிக் காரங்கள இப்பிடித் தூக்கியடிச்சா என்ன செய்றது சார் ? என்று முறையிட்டார்கள். எனக்கும் கோபமாய்த் தான் இருந்தது. எதுவும் செய்ய இயலாத வெற்றுக்கோபம்.

போவ முடியாதுன்னு சொன்னா என்ன சார் செய்ய முடியும் அவுங்களால ? என்றான் ஒருவன்.

சேங்க்ஷன் போஸ்ட்டயே ரத்து செஞ்சிட்டப்புறம் சம்பளம் வாங்க முடியாதுப்பா என்றேன் நான்.

அப்ப எங்க கதி ?

போய்த்தான் ஆவணும்”

இதற்கும் கூடுதலாக பிரச்சினையின் ஆழத்தை, ஏமாற்றத்தை வாசகர்களிடம் கொண்டு செல்லமுடியுமா என்று தெரியவில்லை. பாதிக்கப்பட்டமனித மனங்களில் இவரும் பயணித்து  வெகு உருக்கமாகத் தீட்டியிருக்கிறார். அதுபோலவே தமது நினைவுகளில் தேங்கிக்கிடக்கும் தடயங்கள் சிறுகச் சிறுக தம் கண்னெதிரிலேயே அழிக்கப்படுவதை கண்டு குமுறும் ஸ்டேஷன் மாஸ்டரின் விரக்தியும், ஏமாற்றமும் மிக அழகாய்ச் சொல்லப்பட்டிருக்கிறது:.

“சரக்குக்கூடம் பிரிக்கப்பட்ட இடத்தில் ஊர்ப் பெரிய மனிதர் ஆடுகளையும் மாடுகளையும் கொண்டு வந்து கட்டினார். தொடர்ந்து மற்றவர்களின் மாடுகளும் இளைப்பாறத் தொடங்கின. மாடுகளுக்கு அங்கேயே தீவனம் தரப்பட்டது. எங்கும் சாணம் குவியத் தொடங்கியது. அறையில் அரைமணி நேரம் கூட உட்கார முடியாது.

சாணத்தின் வீச்சமும் முத்திரத்தின் வீச்சமும் திணற வைத்து விடும். கழிவுகளில் உட்கார்ந்து வரும் ஈக்களும் வண்டுகளும் அறைக்குள் சுதந்தரமாக வந்து ரீங்கரிக்கும். கரிய பருத்த அவ்வண்டுகளைக் கண்டதுமே நான் அச்சம் கொள்வேன். மேலே உட்கார்ந்துவிடக் கூடாது என்று அவற்றைச் சூசூ என்று விரட்டியபடியே இருப்பேன். இரவு நேரங்களில் மனிதர்களும் உபாதைகளுக்கு ஒதுங்கும் இடமாகி விட்டது அது. திரும்பிப் பார்க்கக்கூடக் கூசும் அளவுக்கு அந்த இடத்தின் தன்மையே மாறிப்போனது”.

என்கிற விவரக் குறிப்பு ஸ்டேஷனின் மரண சாசனம், கைவிடப்பட்ட நோயாளியின் இறுதி நிமிடங்களை நினைவூட்டும் காட்சி. அவரது சிறுகதைகளில் “சூறை” எனக்கு மிகவும் பிடித்ததொரு சிறுகதை.

பிரந்தாவனம்

இக்கதையும் அவரது ஏனையக் கதைகளைப்போலவே நடுத்தரக் குடும்பத்தை மையமாகக்கொண்டது. பொம்மைக்கு உருகும் ஒரு பெண்மணி, எதற்கும் கணக்குப் பார்க்கும் ஒரு கணவன், கணக்கைப் புரிந்துகொள்ள காட்டும் அக்கறையில் நூற்றில் ஒருபங்கு அக்கறையைக்கூட மனைவியின் உணர்ச்சிகளிடம் காட்டாதவன். கிராமத்திலிருந்து அழைத்துவரப்பட்டு அவர்கள் ஆதரவில் கல்வியைத் தொடருகிற கதைசொல்லியான ஒரு சிறுவன். இவர்கள் மூவரும்தான் கதை மாந்தர்கள். சிறுவனும் அவன் அண்ணியென அன்போடு அழைக்கிற பெண்மணியும் ஒரு நாள் கடைக்குப் போகிறார்கள். போகிற நாளில் வண்டியில் பொம்மைவைத்து விற்கப்படுகிற கடையொன்றை பார்க்க நேரிடுகிறது.  அவ்வண்டியிலிருந்த கிருஷ்ணன் பொம்மை அவ்பெண்மணியை ஈர்க்கிறது: “தலையில் மயில் இறகோடு சிரித்துக்கொண்டு இருந்தது குழந்தை கண்ணன் பொம்மை. அச்சு அசலான கண்களைப் போல பொம்மைக் கண்களில் ஈரம் ததும்பி இருந்தன. இதோ இதோ என்று விரலைப் பற்றிக்கொண்டு கூடவே ஓடிவந்துவிடும் குழந்தையைப் போல இருந்தது. பொம்மையின் அழகைக் கண்ட மகிழ்ச்சியில் அண்ணியின் முகம் பிரகாசத்துடன் ஒளிர்ந்தது” எனக் கதையாசிரியர் எழுதுகிறபோது  கதையில் வரும் அண்ணிக்கு மட்டுமல்ல வாசிக்கும் நமக்குங்கூட பொம்மையிடத்தில் காதல் வருவது இயல்பு. பொம்மையை வாங்கத்துடிக்கும் அப்பெண்மணியின் ஆசைகளுக்குப்பின்னே பல தருக்க நியாயங்கள் இருக்கின்றன. பொம்மையை வாங்கி வீட்டிற்குக்கொண்டுவந்து அவ்வப்போது கொஞ்சி மகிழ நினைக்கிறாள். பேரம்பேசி பொம்மையை வாங்குவதில் பிரச்சினையில்லை. ஆனால் செலவுக்கணக்கில் கறாராக இருக்கும் கணவனை எப்படி சமாளிப்பது? பொம்மையை வாங்க பணத்திற்கு எங்கே போவது? வீட்டுசெலவில் அதை மூடிமறைக்கலாம் என்றாலும், அதையும் கண்ணில் விளக்கெண்ணைகொள்டு கண்டுபிடித்து ஏன் எதற்கென கேள்விகேட்கும் கணவனுக்கு என்ன பதில் சொல்வது? என்கிற அறிவின் கேள்விகளையெல்லாம் உணர்ச்சி அலட்சியம்செய்து, கதைசொல்லியின் யோசனையின் தெம்பில் பொம்மையை வாங்கிவிடுகிறாள். பொம்மைக்கான செலவை அழுக்கு சோப்பு வாங்கியதாகக் கணக்கும் காட்டுகிறாள். கணவனின் கழுகுக் கண்கள் வீட்டிற்கு ‘எட்டு’ரூபாய் செலவில் வந்திருக்கும் பொம்மையை அறியாமலேயே அழுக்கு சோப்பிற்கு அந்த மாதம் கூடுதலாகச் செலவிட்ட தொகை அநாவசியம் என கண்டிக்கிறது. குருட்டு தைரியத்தில் வாங்கப்பட்ட பொம்மையை அலமாரியில் ஒளித்து வைத்து வேண்டுமென்கிறபோது, கணவனுக்குத் தெரியாமல் எடுத்துப்பார்த்து மகிழலாம் என்பதுதான் பெண்மணியின் திட்டம். பொம்மைமீது அவள் செலுத்தும் அன்பும், எந்த நேரத்திலும் குட்டுவெளிப்படலாம் என்ற நிலையில் அவள் மனம் படும் பாடும், சிறுவனின் இக்கட்டான நிலமையும் பாவண்ணன் ஒரு தேர்ந்த கலைஞன் என்பதைப் பறைசாற்றும் படிமமாக கதைச் சொல்லப்படுள்ளது.

‘முள்’

‘முள்’ சிறுகதையும் பாவண்ணன் கதைகளில் மிக முக்கியமானது. பொதுவாக பாவண்ணன் தன்மை கதை சொல்லலுக்கு முக்கியத்துவம் கொடுப்பவராக இருக்கிறார். இக்கதையும் அதற்குத் தப்பவில்லை. கதை சொல்லியான இளைஞன் தன்னிலும் மூத்தவயதுகொண்ட சகஊழியரை அண்ணன் என அ¨ழைத்து அவருடையக் குடும்பத்தோடு நெருங்கிப்பழகுகிறான். அந்த வீட்டுப் பெண்மணியை அண்ணி யெனவும், அவ்வீட்டுப் பிள்ளைகள் இவனை சித்தப்பா என்று அழைத்தும் அன்யோன்யமாகவே பழகுகிறார்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அந்தவீட்டிற்குச் சென்று அவர்கள் வீட்டுப் பிள்ளைகளோடு சந்தோஷமாக வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கிறான். அந்தச் சந்தோஷத்தை குலைப்பதுபோல, ஊழியரின் சொந்தத் தம்பி தனது மனைவி, குழந்தையுடன் வெளிநா¡ட்டிலிருந்து வருகிறான்.  சொந்தத் தம்பி வந்திருக்கிற நிலையில், இவன் யார்? அவ்வீட்டில் அவனுக்குரிய இடம் எது? என்ற கேள்விகள் எழுகின்றன. இப்ப்டியொரு பிரச்சினையைக் கருவாகக்கொண்டு தமிழில் கதை எழுதுகிறவர்கள் அபூர்வம். இப்படியொரு கதைக் கருவை கையாண்டிருக்கிறாரே என்பதற்காக மட்டும் பாவண்ணைப் பாராட்டவில்லை. அப்பிரச்சினையை மையமாக வைத்து கதைசொல்லியின் அண்ணனாக இருக்கிற சக ஊழியர், அவர் மனைவி, வீட்டுப் பிள்ளைகள், வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் தம்பி மனைவி இப்படி வெவ்வேறு மனிதர்களின் வினைகளையும் எதிர்வினைகளையும் கொண்டு எதார்த்த உலகை காட்சிப்படுத்தியிருப்பதற்காகவும் பாராட்ட வேண்டியிருக்கிறது.

பாவண்ணைன் படைப்பு மாந்தர்கள்

இவர் படைப்பில் இடம்பெறும் மனிதர்கள் மேல்தட்டுமக்களா, மெத்த படித்த வர்க்கமா என்றால் இல்லை. பரம ஏழைகளா என்றால் இல்லை. ஆனால் அவர்கள் விவசாயிகளாக இருப்பார்கள், ஆலைத் தொழிலாளிகளாக இருப்பார்கள். வாழ்வை அதன் போக்கிலே அனுசரித்துபோகிற வெகுசன கூட்டத்தின் பிரதிநிதிகள், அலங்காரமற்ற மனிதர்கள். கள்ளங்கபடமின்றி உரையாடத் தெரிந்தவர்கள். விழுப்புரம், கடலூர், புதுச்சேரி நகரங்களில் அல்லது அதையொட்டிய பகுதிகளில்  காண்கிற வெள்ளந்தியான மனிதர்கள்.

” ‘காலையில மொடக்கத்தான் கீரை பறிச்சிட்டு வந்து குடு’னு ராத்திரி கேட்டாரு. வாக்கிங் போனப்ப ஏரிப் பக்கத்துலேர்ந்து பறிச்சியாந்தேன். குடுக்கறதுக்காக வந்து எழுப்புனா, கொஞ்சம்கூட அசைவே இல்லடா. தொட்டா ஐஸ் கட்டியாட்டம் சில்லுனு இருந்திச்சி. ஓடிப் போயி டாக்டரக் கூட்டியாந்து காட்டுனேன். பாத்துட்டு ‘ராத்திரியே உயிர் பிரிஞ்சிடிச்சி’னு சொன்னாரு” “கடேசியா ஒரு தடவ மூஞ்சியப் பார்த்துக்குறவங்க பாத்துக்குங்க” –  (சுவரொட்டி )

நெனப்புதான் பொழப்பைக் கெடுக்குது’ என்று குத்தலாகப் பதில் சொன்னார் சித்தப்பா. “நாய குளிப்பாட்டி நடு ஊட்டுல வெச்சாலும், அது வாலக் கொழச்சிக்கினு போற எடத்துக்குத்தான் போவுமாம். பணத்த கண்ணால பார்த்ததும் மாணிக்கம் பயலுக்குப் பழைய ஞாபகம் வந்திருக்கும். தண்ணியடிச்சிட்டு எங்கனாச்சும் ரோட்டுல உழுந்து கெடப்பான்.’ -( தாத்தா வைத்தியம்)

“இன்னாடா சங்கமாங்கி ஆடுன்னா ஆடறதுக்கு நீ வச்ச ஆளாடா அவுங்க” என்று அவள் குரல் உயர்கிறது. லுங்கிக்காரன் இந்தத் தாக்குதலைச் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. “மார்ல கைவச்சிப் பேசற அளவுக்கு ஆயிடுச்சாஸ என் சாண்டா குடிச்சவனே, போடா போய் ஒங்காத்தா மார்ல கைவச்சி ஆடச் சொல்லுடா இல்லன்னா ஒங்கக்கா மார்ல கைவச்சி ஆடச் சொல்லு” என்று கைநீட்டிச் சொல்கிறாள். “என்னமோ ரெண்டுங்கெட்டானுங்க நாலு ஆட்டம் அடி ரெண்டு காசு சம்பாரிக்க வந்தா திமிராடா காட்டற திமிரு” என்கிறாள். ( வக்கிரம்)

இப்படி உரையாடலில் அக்காலத்தில் தென் ஆற்காடு, வட ஆற்காடு என அழைக்கப்பட்ட பிரதேசங்களில் ( எனக்கு இன்னும் கடலூர், விழுப்புரம், திருவண்னாமலையென  நீளும் பட்டியலில் அத்தனைப் பிடித்தமில்லை) காணும் வட்டார வழக்குகள், கதையில் வரும் பெயர்கள் உட்பட (உ.ம். ‘மண்ணாகட்டி’)  எனக்குப் பிடித்தமானவை.

மேற்குலகில் திறனாய்வாளகள் ஒரு படைப்பாளியை அவன் படைத்த படைப்பு, படைப்பில் இடம்பெறும் மாந்தர்கள், கதை நடைபெறும் தளம், கதைமாந்தர்களின் உரையாடல், கதைசொல்லல்  ஆகியவற்றை ‘Being there’  என்ற சொல்லுடன் இணைத்துப் பார்ப்பார்கள். அச்சொல்கொண்டே அப்படைப்பாளியை மதிப்பிடவும் செய்வார்கள். பாவண்ணனும் தனது படைப்பிலக்கியத்தில் வடிவம் எதுவாயினும் ‘Being there’ ஆக உருமாற்றம் பெறுகிறார். கதையென்றால் கதைசொல்லியாக கதைமாந்தராக, கதைக்களனாக அதற்குள் அவரே எங்கும் நீக்கமற நிறைந்துவிடுகிறார், கட்டுரைகளிலும் இதுதான் நடக்கிறது. அதிகம் தன்னிலையில் சொல்லப்படுவது காரணமாக இருக்கலாம், கதைமாந்தர்களைக் கதை மாந்தர்களாகப் பார்க்க முடிவதில்லை. பாத்திரங்களைக் கடந்து ஆசிரியர் முன்வந்து நிற்பது ஒரு குறை. இருந்தபோதிலும் கிராமப்பின்புலத்திலிருந்து வந்திருக்கும் என்னைப்போன்றவர்களுக்கு மிகவும் தெரிந்த மனிதர்களாக, இதற்கு முன்பு எங்கோ பார்த்ததுபோன்ற (déjà vu) தோற்றத்தை அவருடைய படைப்பு மாந்தர்கள் தருவது சிறப்பு. அடுத்ததாக அவரது படைப்புகளில் காணும் உயர்பண்பு: ‘கலை மக்களுக்காக’ என்ற நம்பிக்கையில் எழுதுகோலை கையில் எடுத்திருப்பது. வடிவங்கள் எதுவாயினும் பாவண்ணன் எழுத்துக்கள் அல்லது அவரது படைப்புகள் கருவாக எடுத்துக்கொள்கின்ற பிரச்சினைகள் தனிமனிதனைக்கடந்து பொது நியாயத்தின்பாற்பட்டவையாக இருப்பது அவற்றின் தனித்துவம்.

பாவண்ணன் ஒர் எழுத்துப் போராளி

போராளி என்பவன் யார்? வாய் மூடி கிடப்பவனல்ல; ஆமாம் போடுபவனல்ல; அநீதிக்கு வழிவிட்டு ஒதுங்கி செல்பவனல்ல; தனக்காகப் போராடுபவனல்ல. வேறு யார், அவர்கள் எப்படி இருப்பார்கள்?  அவர்கள் எழுத்தாளர்களெனில்  பா.ஜெயப்பிரகாசம், பாவண்ணன் போல இருப்பார்கள் சத்தமின்றி இயங்குவார்கள். சமூகத்திற்குத் தீங்கு என்றால் ஆயுதமின்றி, ஆர்பாட்டமின்றி அமைதியாகப் புரட்சியில் இறங்குவார்கள். இருவருமே பார்க்க சாதுவானவர்கள், ஆனால் எழுத்தென்றுவந்துவிட்டால் அவர்கள் எடுக்கிற விசுவரூபத்திற்குமுன்னால் அநீதிகள் சிறுத்துபோகும். வாடா போடா என எதிரியுடன் அடிதடியில் இறங்கும் இரகமல்ல, அன்பாய்த் தோளைத்தொட்டு திருத்த விரும்புபவர்கள், நவீன படைப்பிலக்கிய இலக்கணத்திற்கு மாறாக நீதியை இலைமறைகாயாக வலியுறுத்த முனைவர்கள்.

பாவண்ணன் எழுத்துக்களில் சமூக அக்கறையைத் தவிர வேறு நோக்கங்களில்லை.  படைப்பிலக்கியத்தின் வடிவம் எதுவாயினும் தமது மேதமையை உறுதிபடுத்தும் எண்ணங்களும் கிடையா. கண்களை அகல விரித்து வாசகர்கள் பிரம்மிக்கவேண்டும், ரசிக மனங்களைக் கிறங்கச் செய்யவேண்டும் என்பதுபோன்ற ஆசைகளும் இல்லை. மாறாக பாலீதீன் பைகள் கூடாது, மணற்கொள்ளைத் தடுக்கப்படவேண்டும், குடியிலிருந்து அடித்தட்டு மக்கள் விடுபடவேண்டும், திருநங்கைகளை சிறுமை படுத்தும் மனிதர்களை கண்டிக்க வேண்டும், முதியவர்களை அரவணைக்க வேண்டும், பூமியெங்கும் மரங்களை நடவேண்டும்,  காடுகளைப் பராமரிக்கவேண்டும் என்பது உயரிய குறிக்கோள்கள் இருக்கின்றன. இந்தியா போன்ற நாடுகளில் கலை மக்களுக்கானதென்கிற சிந்தனை அவசியம். அந்த ஒரு காரணத்திற்காகவே பாவண்ணனைக் கூடுதலாக நேசிக்கலாம், அவரை எழுத்துப்போராளியென அழைக்கவும் அதுவே காரணம்.

நன்றி : பதாகை – பாவண்ணன் சிறப்பிதழ்