Monthly Archives: ஜூன் 2012

மொழிவது சுகம் -ஜூன் 29

பிலிப் பெர்:

கடந்த வியாழனன்று பிரான்சுநாட்டு குற்றவியல் நீதிமன்றம் பிலிப் பெர் என்ற பிரெஞ்சுக்காரருக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் நட்ட ஈடு வழங்க வேண்டுமெனவும் தீர்ப்பளித்துள்ளது.

பிலிப்பெர் என்ற மனிதருக்கு பலமுகங்கள் உண்டு. இந்த பிலிப்பேர் முகத்தை பார்க்கிறவர் எவரும் சந்தேகித்துவிடமுடியாது, தேவரனையர் கயவர் ரகம். நம்மில் ஒருவரென்ற நம்பிக்கையை வெகுச் சுலபமாகப் பெற்று விடுவார். அவரதுவெற்றி இச்சாமர்த்தியத்தில் தானிருக்கிறது. இம்மனிதர்களை இனம் பிரிக்கத் தனித் திறமை வேண்டும். தமிழில் இவர்களுக்கு ஏமாற்று பேர்வழி, சூழ்ச்சிகாரர், பித்தலாட்டக்காரர், முழுப்பாய் சுருட்டி என்கிறோம். வெகுசன தமிழ் தினசரிகள் இவர்களை ‘பலே ஆசாமி’கள் என்கின்றன. பிரெஞ்சில் நானறிந்தவகையில் ஒரு சொல்தான் ‘Escroc’.

2010 மார்ச் மாதம் பிரான்சுநாட்டின் தென் பகுதியில் வீசிய சூறைக்காற்றில் பல கிராமங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டன. அவ்வாறு பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஷரோனுமொன்று.  இந்த ஷரோன் கிராமத்திற்கு பிலிப்பேர், பிரான்சுநாட்டின் விவசாயத்துறை செயலர் போல தமது பரிவாரங்களுடன் வந்தார். கிராமத்தலைவர் ஓடோடிவந்து வரவேற்றார். செயலருக்கென தனி அலுவலகம் திறக்கப்பட்டது. தொலைபேசிவசதிகள் செய்துகொடுக்கப்பட்டன. விடாமல் போனில் பேசினார். கட்டளைகளை பிறப்பித்தார். எந்திரங்களும் கருவிகளும் வந்து குவிந்தன. நிறுவனங்களும் விவசாயத்துறை செயலர் கேட்கிறாரென்று வேண்டிய வாகனங்களையும் எந்திரங்களையும் அனுப்பி வைத்தன. டெண்டர் விடாமல் அரசாங்க ஒப்பந்தம் கிடைக்கிறதென்றால் சும்மாவா? அதே கிராமத்தில் இன்னொரு பக்கம் அசலாக அரசாங்கத்தால் அனுப்பிவைக்கப் பட்டிருந்தவ்ர்களால் புயல் நிவாரணப்பணிகள் நடந்தன. அங்கே வேலைகள் மெத்தனமாக நடந்திருக்கிறது.  ஒரு நாள் இரு நாள் அல்ல ஒருவாரம் கிராமத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.  ஒப்பந்தம் கிடைத்த சந்தோஷத்தில் நிறுவனங்களும் புயல் நிவாரணத்தை இத்தனை விரைவாகவும் சிறப்பாகவும் நடத்துகிறாரேயென்று கிராம மேயரும் பிலிப்பேரை கவனித்துக்கொண்டார்கள். எல்லோருமா எல்லா இடத்திலும் ஏமாறுகிறார்கள். அங்கேயும் ஒரு புத்திசாலி சந்தேகிக்கிறான். சம்பந்தப்பட்டவ்ர்களிடம் சொல்ல விலங்கிடப்பட்டு அழைத்துபோய் சிறைவைத்தார்கள், வழக்கு முடிந்து நேற்று தண்டனை கிடைத்திருக்கிறது. இதுதான் முதன் முறையல்ல, இத்தொழிலை பலமுறை செய்து 20 முறை தண்டனை அடைந்திருக்கிறார். பிலிபேரின் வழக்கறிஞர் அவரை அதிகம் தண்டிக்கவேண்டாமென்று வாதாடியிருக்கிறார். அவர் சொல்லுங்காரணம்: இதனால் பெரிதாக எதையும் அவர் சம்பாதித்துவிடவில்லை. அவருடைய முதல் குற்றம் 29 வயதில் ஆரம்பித்ததாம். விவாகரத்து காரணம் என்கிறார்கள் தொடக்ககாலத்தில் சிறு சிறுகுற்றங்களென ஆரம்பித்து அண்மையில்,  அதிவேகச்சாலை போடுகிறேனென வேறொரு பகுதியில் தள்வாடங்களுடன் இறங்கியதுவரை அடங்கும். இவரது வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு திரைப்படமொன்றும் வந்திருக்கிறது. இதை அடிப்படையாகக்கொண்டு வேறொரு கட்டுரையும் எழுதினேன். கிடைத்தால் போடுகிறேன்.

எனக்குத் தெரிந்து இந்தியர் ஒருவர் இருந்தார், இந்த ஊரில் வசித்தார், இப்போது எங்கே வசிக்கிறாரென தெரியாது. அதிகம் படித்தவரல்ல ஆனாலும் தொழில் நுட்பத்தில் தேர்ந்தவர். இந்த அபார ஞானத்தால் தொழில் நுட்பகல்வி முடித்து  அதில் சான்றிதழும் பெற்றார். ஓரளவு நல்ல வேலையும் கிடைத்தது. ஆனால் அவருக்குச் சட்டத்தை மீறவேண்டும். அப்படி மீறவில்லையெனில், ஞானத்தை தவறான காரியத்தில் பயன்படுத்தவில்லையெனில் தூக்கம் வராதோ என்னவோ அகப்பட்டுக்கொண்டு சிறை செல்வார். கணினி வல்லுனர்களில் சிலர் கடனட்டை வழக்குகளில் சிக்குவதைப் பார்க்கிறோம். தன்னை தலைவனாக வரித்துக்கொள்ளும் தகுதியிருந்தும் ஈன புத்தியினால் சாக்கடையில் விழும் மனிதர்களை அரசியலில் பார்க்கிறோம். நான்கு பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய  கில்லாடி. நாற்பது லட்சம் மோசடி செய்த பலே ஆசாமி. நாலாயிரம்கோடியைக் கொள்ளையடித்த சாணக்யர் என்றெல்லாம் கொடுக்கப்படுகிற அடைமொழிகளுக்குச் சொந்தக்காரர்கள் இருக்கிறார்கள். செய்யும் காரியத்தைக்காட்டிலும் இந்த அடைமொழிகள்  அவர்களை வசீகரிக்கின்றன. இதற்கு என்ன காரணம்? இம்மனிதர்களுக்கென்று பிரத்தியேகமாக ஏதேனும் ஜீன்கள் இருக்குமா? அப்படி செய்யத் தூண்டுவது எது? தங்கள் ஞானத்தில் நம்பிக்கையற்று, குறுக்கு வழியில் தமது இருப்பை நிலைநிறுத்தவும் பிழைப்பிற்கு அதொன்றுதான் வழியெனவும் மூளையில்  ஏதோ ஒரு நரம்பு அவர்களுக்குக் கட்டளையிடும்போலும். தம்மைச் சாமர்த்தியசாலிகளாகக் கட்டமைத்துக்கொள்ள ‘இந்த பலே ஆசாமிகளுக்கு’ கிடைக்கும் சந்தர்ப்பங்கள் ‘மது, மரியுவானா போல  ஒருவித போதைக்கு அவர்களைஅடிமைகளாக்குகின்றன. சீரியல் கில்லர்களைப்போலவே சமூகத்திற்கு எங்கே என்னை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்  என்று சவால் விடுகிறார்கள். மனைவிக்குத் தெரியாமல் குடிக்க ஆரம்பித்து, செய்யுங்காரியம் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியவந்தவுடன் குடித்துவிட்டு சாக்கடையோரத்தில் புரளவும் தயங்காத மனிதர்களின் மனோபாவம் இவர்களுக்கும் ஒரு கட்டத்தில் வந்துவிடும். யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளட்டும் என்போக்கை மாற்றிக்கொள்ளமுடியாது என்பதுபோல. ஓர் அறிவியல் கட்டுரையில் ஏனைய நோய்களைபோலவே இதுவும் ஒருவித மனநோய் என்றும்  குணப்படுத்த வியலாதென்றும் கூறுகிறார்கள்.

—-

மொழிவது சுகம் – ஏப்ரல் 27

துப்பறியும் புனைவுகள்: Whodunit

மேற்கத்திய நாடுகளில் குற்ற புனைவுகள் என வகைபடுத்தியபோதிலும், தமிழில் அவற்றை துப்பறியும் புனைவுகளென்றே அறிவோம். தவிர நம்முடைய துப்பறியும் புனைவுகளுக்கு நெடிய வரலாறு கிடையாது, அண்மைகாலத்தியவை. இருபதாம் நூற்றாண்டிலிருந்தே குற்றபுனைவுகளை தமிழ் எழுத்துலகம் சந்திக்க நேர்ந்தது. வடுவூர் துரைசாமி ஐயங்காரும் வை.மூ கோதைநாயகி அம்மாளும் முன்னோடிகள். குற்றப்புனைவுகள் அனைத்திலுமே பொலீஸார் வரவேண்டுமென்கிற அவசியமில்லை. அண்மையில் குற்ற நூல்களின் வரலாறு என்றதொரு நூலை வாங்கினேன். நூலாசிரியர்கள் இருவரும் குற்ற நூல்களின் வரலாற்றை அகழ்ந்து ஆய்ந்து அட்டவணை படுத்தியிருக்கிறார்கள். ஆசிரியர்கள் இருவரும் நூலைப்பற்றியும் நூலாசிரியர்கள் பற்றியும், நூல் உருவான விதம் பற்றியும் தகவல்களைத் தந்திருக்கிறார்கள். துப்பறியும் கதைகள் வாசகர்களிடம் ஏற்படுத்துகிற தூண்டலை இலக்கிய விமர்சகர்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லையே என்கிற ஆதங்கமும் தொனிக்கிறது.

முதல் குற்ற புனைவு எந்த நூற்றாண்டில், எங்கே எழுதப்பட்டதென நினைக்கிறீர்கள். பதினெட்டாம் நூற்றாண்டில் ஊர்பேர்தெரியாத சீனர் ஒருவரால் எழுதப்பட்ட அந்நூலின் பெயர் Trois affaires criminelles résolues par le juge Ti (Celebrated Cases of Judge Deei). இதொரு வரலாற்று குற்றப்புனைவு. குற்ற புனைவிற்கு என்ன பொருள் என்பதை அறிவீர்கள். வரலாறு என்பதற்கு என்ன பொருளென்றும் அறிந்திருப்பீர்கள். இரண்டையும் சேர்த்து பொருள்கொண்டால் வரலாற்று குற்றபுனைவு. சற்று எளிமையாகச் சொல்லவேண்டுமெனில், படைப்பாளியின் உயிர் வாழ்க்கைக்கு முந்தைய காலத்தில் நடந்ததென்று ஒரு புனைவை கட்டமைப்பது வரலாற்று குற்றவியல். பாத்திரங்களின் மொழி, சமூக அமைப்பு, காட்சிகள் விவரணை அனைத்திலும் கடந்த காலத்தைத் தெளிவாய்க் கொண்டுவரவேண்டும். இவ்வரலாற்று புதினங்களில் ‘யார் செய்திருப்பர்’ அல்லது எதனால் நிகழ்ந்தது என்ற கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது. ஆங்கிலத்தில் இதனை’ Whodunit (Who done it) என்கிறார்கள். Celebrated Cases of Judge Dee. என்ற சீன நூலை ரோபர்ட் வான் குலிக்(Robert Hans van Gulik ) என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். இந்நூலை வாசிக்கசந்தர்ப்பம் அமையவில்லை. ஆனால் எதிர்பாராதவிதமாக France-Culture என்கிற பிரெஞ்சு வானொலியில் பத்து பகுதிகளாக கேட்க வாய்ப்புக்கிடைத்தது. பிரெஞ்சில் தொடரைக்கேட்க விருப்பம் உள்ளவர்களுக்காக: http://www.franceculture.fr/oeuvre-trois-affaires-criminelles-resolues-par-le-juge-ti-roman-anonyme-chinois-du-xviiie-siecle-de-

பிரபல பிரெஞ்சு எழுத்தாளர் ‘பல்ஸாக்’ 1841ம் ஆண்டு எழுதிய Une ténébreuse affaire , என்ற நூலும் வரலாற்று குற்ற புனைவிற்கு நல்ல உதாரணம்.  பிறகு அகதா கிறிஸ்டி எழுதிய புனைவுகளில் சிலவும், கோனன் டாயில் புதினங்களும் அவ்வகைப்பட்டவை என்று கருதலாம். ஆனால் குற்றப்புனைவுகளை முழுக்க முழுக்க துப்பறியும் புதினங்களாக மாற்றிய புண்ணியவான்கள் ஆங்கிலேயர்களும் அமெரிக்கர்களும்.

இன்றைக்கு குற்ற வரலாற்று புதினங்கள் மூன்றாம் கட்டத்தை எட்டியிருக்கின்றன. இன்றைக்கு அவை இலக்கியம்: உம்பர்ட்டோ எக்கோ, குந்த்தர் கிராஸ், ட்ரூமன் கப்போட், ஓரான் பாமுக் போன்ற படைபாளிகள் குற்றப்புனைவுகளை இலக்கிய அந்தஸ்திற்கு உயர்த்தியவர்கள்.

தொடர்ந்து விற்பனையில் சாதனை செய்து அல்லது அதையே காரணமாக முன்வைத்து காழ்ப்பில் விமர்சனம் செய்பவர்கள்கூட கதைசொல்லலில் கல்கியின் இடத்தை என்றைக்கும்  எட்டப்போவதில்லை. எனக்கு அவருடைய பொன்னியின் செல்வனும், சிவகாமியின் சபதமும் வரலாறு குற்றப்புனைவு வகைமை சார்ந்ததே. எனது பங்கிற்கு நீலக்கடல், மாத்தாஹரி என்ற இரண்டு நூல்களை எழுதினேன். ஓரளவிற்கு அடையாளம் கிடைத்துள்ளது அதில் செய்திருக்கு பல முயற்சிகளை பாராட்டுகிறவர்கள் ஒருபக்கமெனில், உள்ளார்ந்த எரிச்சலில் உதாசீனப்படுத்தும் மனிதர்களுமுண்டு. நீலக்கடலுக்கும் மாத்தாஹரிக்கும் ஏன் எனது எந்தப்படைப்பிற்கு விமார்சனங்களை லாபி செய்து பெற்றவனல்ல. எழுதியவர்களை அவர்களின் விமர்சனத்திற்குப்பிறகே அறிமுகப்படுத்திக்கொண்டு நன்றி தெரிவித்திருக்கிறேன். ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய மேற்கத்திய படைப்பாளிகளின் பெயர்களை கடந்த இருபது ஆண்டுகளாகத்தான் சற்று உரத்து பேசத் தொடங்கியிருக்கிறோம்.  இன்றைய மேற்குலகைப்பற்றியும் அதன் படைப்புகளையும் கொண்டாட வழக்கம்போல இவர்களுக்கு 50 ஆண்டுகள் தேவைப்படலாம்.

——————————–

நாகரத்தினம் கிருஷ்ணா சிறுகதைகள்-1

எனக்குப்பிடித்த எனது சிறுகைதைகளில் முக்கியமானவற்றை மீண்டும் நண்பர்களுக்காக அவ்வப்போது மீள் பிரசுரம்செய்யத் தீர்மானித்திருக்கிறேன்.

நாளைபோவேன்

கதை எழுந்த கதை:

காரணம் எதுவாயினும் புலம்பெயர்ந்தவர்களுக்குச் சொந்த மண்ணுக்குத் திரும்பும் ஏக்கம் பின்னிரவு கனாக்களாக மட்டுமின்றி பகற்பொழுது உரையாடல்களில் கூட வந்துபோகும். ஒவ்வொரு நாளும்,  வந்ததற்கு ஏதோ கொஞ்சம் பணம் திரட்டிக்கொண்டு  ஊர் திரும்பிவிடமாட்டேனா? என அவர்கள் ஓயாமல் கூறியதை நீங்களும் காதுகொடுத்துக் கேட்டிருப்பீர்கள். தோட்டமென்ன, காணி என்ன? ஆற்றின் சலசலப்பு என்ன, ஆத்தா வைக்கும் குழம்பு ருசியென்ன என்கின்ற இவர்கள்தான் வந்த ஊரின் வசதிகள், தரும் சௌகரியங்கள், கூரையைப்பிரித்துக்கொட்டிய தளுக்கான வாழ்க்கை, பதியமிட்ட புதுநிலத்தில் தளிர்விடும் சந்ததிகள் இவற்றை பிரிய மனமின்றி சொந்த மண்ணுக்குத் திரும்புவதை ஒவ்வொரு நாளும் தள்ளிப்போட்டு பின்னர் தம் மனதை சமாதானப்படுத்த புதுப்புதுக்காரணத்தை தேடிக்கொண்டிருப்பார்கள்.  இந்தியாவில் குக்கிராமமொன்றில் பிறந்து பொருளாதாரக் காரணத்திற்காகவே புலம்பெயந்த எனது வாழ்க்கையும் கனவும் அதற்கு விதிவிலக்கல்ல.

17-6-2001ல் கல்கியில் வெளியான இச்சிறுகதையை ஆனந்தவிகடன், கல்கி இருவருமே தேர்வு செய்திருந்தார்கள். கல்கியிடமிருந்து முதலில் பிரசுரத்திற்குத் தேர்வுசெய்து கடிதம் வந்ததால் விகடன் திரு. வீயெஸ்விக்கு உரிய நேரத்தில் கடிதம் எழுதி தவிர்க்கவேண்டியதாயிற்று.

நாளைபோவேன்

வானம் எதையோ சுமந்து வேர்த்திருந்தது. இயந்திரகதியில் சீராக தூறல்கள். இலை உதிர்த்த மரங்கள் தூறல்களை அதிகமாக வாங்கிக்கொண்டு ஜீரணிக்கமுடியாமற் தவித்துக்கொண்டிருந்தன. காலை பிரார்த்தனைக்கு தேவாலயம் செல்லும் வயதான வெள்ளையர்கள் கண்களில் நீர்முட்டியக் குளிரை கைக்குட்டைகளால் ஒற்றிக்கொண்டு, நடக்கிறபோது அடிக்கடி ஏனோ ஆமையைப்போல தலையைத் திருப்புவதும் இழுத்துக்கொள்வதாகவுமிருந்தனர். அவர்களை எந்த முயல்களும் முந்த முயற்சி செய்வதாகத் தெரியவில்லை. வாலிழந்த பறவையொன்று விர்ரென்று இறங்கி மேலெழும்பி பின்னர் மேற்கே சென்று மேகத்தில் புதையுண்டது.

இங்கே அனைத்துமே முன்னதாகத் திட்டமிட்டு செயல்படுவதாக இவனுக்குள் தீர்மானம். இயற்கைகூட தமது காரியங்களை அட்டவணைபடுத்திச் சாதிக்கிறதோ? முன்னதாக் கணிக்கப்பட்டு காரியங்கள் ஆற்றப்படுவதில், எதிர்பார்த்தபடி நடைபெறுவதில் சுவாரஸ்யமில்லையென்பது அவன் எண்ணம். வாழ்க்கை என்பது எதிர்பார்ப்பு அத்தியாயங்களால்  எழுதப்படவேண்டும். சந்தோஷமோ துக்கமோ சொல்லிக்கொண்டு வரக்கூடாது. பிறப்பைப்போல இறப்பைப்போல ‘இன்றோ நாளையோ’ எனும் நிகழ்வுகளால் அமையவேண்டும்.

திரைச்சீலையை விலக்கி, சன்னலின் இரட்டைக் கண்ணாடியினூடே வெளியைப் பார்த்துக்கொண்டிருந்தான். இது ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கின்ற நிகழ்ச்சி.  இந்நிகழ்வில் இவனுக்குள் முரண்பாடு. எந்தத் திட்டமிடலை எதிர்க்கின்றானோ, அதனிடமே சமரசம் செய்துகொண்டு அடங்கிப்போகிறான். புறவாழ்க்கையை உடைத்துக்கொள்ள சிந்தனை அவசரப்படுவதும், அந்நேரங்களில் அதனை அமைதிப்படுத்துகிறவகையில், போதும் இந்த வாழ்க்கைபோதும் என தீர்மானிப்பான். இந்த பொம்மலாட்ட வாழ்வு வேண்டாம் இக்கயிற்றிலிருந்து விடுபடவேண்டுமென்றும் அடிக்கடி நினைத்துக்கொள்வான்.

வானிலிருந்து இரைச்சலாக சப்தம். அவன் உள்ளத்தைபோல இரைச்சலிட்டுக்கொண்டு செல்லும் விமானம். அதனுடைய காரியங்கள்கூடத் திட்டமிடப்பட்டவை. புறப்படும் இடம், சேர இருக்கிற இடம், எடுத்துக்கொள்ளும் நேரம், பயணிகளின் அதிகபட்ச எண்ணிக்கை என எல்லாமே. இரைச்சலிடும் இவ்விமானம் போகும் ஊர் எந்த ஊராக இருக்குமென்பதனை அவனுடைய பூகோள அறிவு விடை தராமலேயே  தேடுதல் சுவாரஸ்யத்தைக் கலைக்காமல் ஒளிந்துக்கொண்டது.

காலை ஆறுமணி. அதிகாலை விழிப்பினை ஐரோப்பா அறியாதது. இவன் மட்டும் விழித்திருந்தான். காலை ஐந்துமணியிலிருந்து சன்னலை ஒட்டி நிற்கிறான். அதிகாலையில் எழுந்திருக்கிற பழக்கம் அவனுக்கு இந்தியாவில்தான் வந்தது. மார்கழித் திங்களில் சின்னவயதில், காலையில் எழும்பி, கிணற்று நீரை வாளி வாளியாக உடம்பில் கொட்டிக்கொண்டு, பஜனை பாட ஓடியதும், பஜனையின் முடிவில் சுண்டலைத் தின்று சட்டையில் துடைத்துக்கொண்டு அம்மாவிடம் திட்டு வாங்கியதும் நினைவில் வந்து போயின. அன்றைக்கு பஜனைக்குக்கூடும் பையன்களில் யார் முந்திக்கொள்வதென்பதை முன்னிட்டு பிறக்கும் உற்சாகம் இன்றைக்கில்லை. என்றாலும், ஐரோப்பிய மண்ணிலும் காலையில் விழிப்பு பிறக்கிறது. தனதில்லத்தில் பிறர் காலை பத்து மணிவரை உறக்கத்தை அனுபவிப்பதைக் கண்டு எரிச்சலும் கோபமும் வருகிறது.  இந்த எரிச்சலும் கோபமும் எதிர்தரப்பிலுள்ள அந்தப் பிறருக்கும் உண்டு.

பிரேமா- அவன் மனைவி எழுந்தவுடன் அவளிடம் பேசவேண்டும் என்று தீர்மானித்தான்.

சன்னலில் பார்க்கிற காட்சிகள் மாறவேண்டும். காகம் கரைதலைக்கேட்கவேண்டும். கூரைவேய்ந்த வீடுகளைக் கடந்துசெல்லும் புகை மூட்டத்தைக் காணவேண்டும். காலைப்பேருந்துகளில் ‘மார்க்கெட்’டிற்கு கொண்டுபோவதற்காக இறக்கப்படும் காய்கறி மூட்டைகளில் ‘தொபீர்’களைக் கேட்கவேண்டும். போர்வையை விலக்காமல் கலைந்த தலையும் கண்களில் தூக்கமுமாக டீக்கடைக்குள் நுழையும் ‘என் முகங்களைக்’ காணவேண்டும். மழையில் நனைந்த சோர்வை வெளிக்காட்டாமல், சாராயத்திற்கு வழி பிறந்ததென்ற தெம்பில் ரிக்ஷாவின் பெடல்களை அழுந்த மிதிக்கும் ‘என் கால்களைக்’ காணவேண்டும். தண்ணீரில்  நனைத்த விரல்களைக் சொடுக்கிக் காம்புகள் வலிக்காமல் கால் இடுக்கில் குவளையைத் தொற்றவைத்துப் பால் கறக்கிற ‘என் கைகள்’ வேண்டுமென சொந்தமென்று சொல்லிக்கொள்ள ஊரில் நிறையபேர் இருந்தனர். ஆனால் அதுதான் எப்போது? என்றைக்கு? நாளையா? நாளை மறுதினமா? அடுத்த மாதமா? அடுத்த வருடமா?

சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர் இங்கே வந்து எல்லாவற்றிலும் பிரம்மித்தது நிஜம். அந்தப் பிரம்மிப்பு இப்படித் தன்னை இவ்வளவு சீக்கிரம் குறுக்கிக்கொள்ளும் என்று அவன் நினைத்ததில்லை. தீர்மானித்துவிட்டான். இன்றைக்கு இதற்கொரு முடிவு கட்டியாகவேண்டும். ஸ்டீரியோவைத் திருப்பினான். சி.டியி யில் நித்யஸ்ரீ யின் ‘எத்தனைகோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா” என்ற பாடல். சிரித்துக்கொண்டான். பிரேமா எழுந்துவிட்டாள். கட்டிலைச்சரி சரி செய்துவிட்டு இன்னும் சிறிது நேரத்தில் கேட்பாள் என்னங்க கப்பூசீனாவா? ஹார்லிக்ஸா? இக்கேள்வியைக்கூட அவள் மாற்றினால் தேவலாம்.

பூசனிப்பூவும் கோலமுமில்லாமல் இங்கே மார்கழி விழித்துக்கொள்வதில் அவனுக்குள் கசப்பு. இன்னும் சிறிது நேரத்தில் இவனது வாரிசுகள் அறைகளில் “குளோஸ் ஆல் மை ஐஸ்” ஸோ அல்லது விட்னி ஹ¥ஸ்டனின், “மை லவ் ஈஸ் யுவர் லவ்”வோ ஒலிக்கத் தொடங்கும். இவன் தேடுகிற தருமபுரம் சுவாமிநாதனுக்குகோ, சின்ன மௌலானாவுக்கோ இங்கே இடமில்லை என்கிற்போது மனதுக்குள் புழுக்கம் கூடிவிடும்.

முகத்தைத் திருத்திக்கொண்டு பக்கத்தில் வந்து நின்றாள் அவன் மனைவி.

“பிரேமா! கொஞ்சம் சாக்லேட் அதிகமாகவிட்டு கப்புச்சீனோதான் கொண்டுவா, உன்னோட பேசணும்”

” உங்களுக்கு ஞாயிற்றுகிழமையானா இந்தியா ஞாபகம் வந்திடுமே. இன்றைக்கே இந்தியாவுக்குக் கிள்ம்பவேண்டும்னு காலில் வெந்நீரைக் கொட்டிக்கொண்டு குதிப்பது உங்களுக்கு வழக்கமாகிவிட்டதே?”

“அப்படியில்லை பேரேமா! இன்றைக்குத் தீர்மானமா இருக்கேன். இப்படி உட்கார்.”

” எனக்கு நிறைய வேலை இருக்கிறது. கொஞ்சம் பொறுங்கள்” சென்றவள் வங்கியிலிருந்து கடந்த மாத இறுதியில் வந்திருந்த நிலவரத் தாள்களை மேசையிற் பரப்பினாள்.

அவசர அவசரமாக அவற்றைப் புரட்டினான். எத்தனை முறை புரட்டினாலும் அதில் இருப்பதுதான் இருக்குமென்ற அடிப்படை உண்மையில் நம்பிக்கையற்றுப் புரட்டினான். எண்களும் பூஜ்ஜியங்களும் கண்ணாமூச்சி ஆடின.

இங்கே வந்த ஆரம்பத்தில் இந்தியப் பெரியவர்களைப் பார்த்து அவன் கேட்கிற கேள்வி:

“ஏங்க..! எப்படி இந்த ஊர்ல இருக்கறீங்க? ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் நம்ம ஊருபோல வருமா?”

“என்ன செய்வது தம்பி? நம்முடைய தலைவிதி அது. ஒவ்வொருவரும் ஒரு காரணத்தைச் சொன்னாலும் ஏதோ கொஞ்சம் சம்பாதிக்கணும்னுதான் வரோம். பிறகு கொஞ்சங் கொஞ்சமாகப் பிள்ளைகள் இச்சூழலில் வளரும்போது, அவர்களோட நாமும் இங்க வாழவேண்டிய நிர்ப்பந்தம்.”

“இல்லைங்க.. அப்படிச்சொல்லாதீங்க! எனக்கு மட்டும் தேவையான பணம் கெடைச்சுதுன்னா ஊருக்குத் திரும்பிவிடுவேன்.”

பெரியவர் சிரித்தார்.

அவனுக்கு அந்தத் ‘தேவையானப் பணத்தை’ நிர்ணயிப்பதில்தான் சிக்கலே. வந்த புதிதில் ஒரு குறிப்பிட்ட தொகையை மனதில் வரித்துக்கொண்டு ‘தேடுதலைத்’ தொடங்கியவன் இன்றுவரை நிறுத்தியபாடில்லை. வருடங்கள் கூடக்கூட அவன் மனதில் வரித்தத் தொகை தனது நீள அகலத்தை, பரிமாணத்தைக் கூட்டிக்கொண்டு உச்சுகொட்டியது. கைக்கெட்டிய சுகங்கள் அவனுக்குத் திகட்டவில்லை. பதிலாக இன்னும் இன்னும்.. என்ற ஏக்கத்தை வளர்த்தன.

வங்கித்தாள்களில் விடுபடமுடியாமல் தலையைச் சொறிந்துகொண்டான்.

“பிரேமா?”

“கூப்பிட்டீங்களா?”

“ஆமாம். நம்ம வங்கிக்காரனிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கணும். இந்தியாவிலேயே இன்னுமொரு வீடோ அல்லது இங்கேயே இன்னுமொரு அப்பார்ட்மெண்ட்டோ வாங்கணும்.”

“அப்போ.. இந்தியாவுக்கு எப்போ திரும்பறதா உத்தேசம்?”

“இப்போதைக்கு இல்லை” சலித்துக்கொண்டு பதில் வந்தது.

அடுத்த ஞாயிற்றுகிழமையும் சன்னல் திரையை விலக்கி வைத்துக்கொண்டு, ஐரோப்பிய வாழ்க்கையைச் சாபமிடுவான். இந்தியாவிற்குப்போக நாள் குறிப்பான்.

——————————

துருக்கி பயணம்-7

அண்ட்டால்யா – கொன்யா – கப்படோஸ்

ஏப்ரல் – 1

 மீண்டும் அண்ட்டால்யா விலிருந்தோம். ஒரு வாரத்திற்குப் பின் அண்ட்டல்யாவை வேறுதிசைகளில், வேறுகோணத்தில் வேறு கதைப்பொருளில் காண இருந்தோமெனச் சொல்லலாம். முதல் நாள் அண்ட்டால்யா: அவ்லாமணி அண்ட்டல்யா, அஸ்பெண்ட்டோஸ் அண்ட்டல்யா, மனவ்காட் அண்ட்டல்யா, செலிமியே அண்ட்டால்யா ஆகியவை சட்டைபொத்தான்களைப்போல  நினைவில் அணிவித்ததும் வரிசையாக வந்தன. இவ்விரண்டு நாட்களும் நாங்கள் பார்க்கவிருக்கிற அண்டால்யா வேறுவகையென்று சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் வழங்கி கைவசமிருந்த குறிப்புகள் தெரிவித்தன.

அண்டல்யாவில் எப்போதும்போல நல்ல சீதோஷ்ணநிலை. மாசுமருவின்றி வானம் வெளுர் நீலத்தில் கண்ணுக்கெட்டியதூரம்வரை தெரிந்தது. இதமான குளிர்ந்தகாற்று. நாளையும் இதுபோலவே இருக்கவேண்டுமென வேண்டிக்கொண்டேன். ரோம் நகரில் மூன்று நாட்கள் மழையில் அலைந்தது நினைவுக்கு வந்தது. இன்றும் எங்களை பெட்டிகளுடன் இறங்கும்படி வழிகாட்டிக் கேட்டுக்கொண்டார். இதுதான் கொஞ்சம் சங்கடமாக இருந்தது. இருக்கப்போவது இரண்டு நாட்கள், ஒரே ஓட்டலில் தங்க வைத்திருக்கலாம். அன்றிரவு நகரத்தை ஒட்டிய  மற்றொரு ஓட்டலில் தங்கவிருக்கிறோமென்றார்கள். உருப்படியான ஓட்டலாக இருந்தால் சௌகரியமென நினைத்துக்கொண்டேன்.

சென்ற வார கட்டுரையில் தெரிவித்த சுவட்டில் பண்பாட்டு சுற்றுலாவில் இன்றைய உபயம் நகை உற்பத்தித் தொழிற்சாலை. எங்கள் கிராமத்தில் ஒருகிராம் இரண்டுகிராம் தங்கத்தை குமிட்டி உமி உழக்கில் வைத்து உருக்கும் கோவிந்தசாமி பத்தரைத் தவிர்த்து வேறு தொழிற்சாலைகளைக் கண்டதில்லை.  நகைகள் மேற்கத்தியரின் ரசனைகேற்று தயாரித்திருந்ததால் என் மனைவி அக்கறைகொள்ளமாட்டாளெனத் தெரியும். எங்கள் குழுவினருடன் நுழைந்தபொழுதே, இங்கிருந்து தப்பிக்க வழியிருக்கிறதாவென அங்கிருந்த நபரிடம் கேட்க, அவர் முகம் சுருங்கிப்போனது. இங்கும் ஒருவர் வாடிக்கையாளர்களை வலையில் வீழ்த்த பெரியதொரு சொற்பொழுவு ஆற்றினார். அவர் ஓய்ந்ததும்   விற்பனையாளர்கள் சூழ்ந்துகொண்டனர். ஒரு விற்பனையாளர் நீங்கள் பாகிஸ்தானியரா என்றார், மறுத்தேன். எங்களைவிடாமல் பின்தொடர்ந்து வந்தவரிடம் எங்கள் பேருந்து நிற்கும் இடத்திற்குத் திரும்பவேண்டும் சாத்தியமா என்றேன். வழி சொன்னார். எங்களுக்குத் துணையாக மூன்று தம்பதிகள். வெளியில்வந்து பேருந்தைக் கண்டுபிடித்தோம். வரிசை வரிசையாக நின்றிருந்த பேருந்துகளில் எங்கள் பேருந்து எண்ணைக் கண்டு பிடித்தோம். குழுவைச்சேர்ந்த மற்றவர்கள் வந்து சேர ஒரு மணி நேரம் ஆகுமென்று தோன்றியது. நடுத்தரவயது மனிதரொருவர் ஆரஞ்சு பழச்சாற்றை பிழிந்துவிற்றார். துருக்கியில் போனவிடங்களிலெல்லாம் ஆரஞ்சு சாறு விற்பது ஒரு தேசியத் தொழிலாக இருந்தது. பொதுவாக ஒரு குவளைச்சாறு ஒரு டாலரெனில் நகை உற்பத்தி நிறுவனத்தில் 1.50 டாலர்.

அங்கிருந்து பத்துமணிஅளவில் நாங்கள் சென்று பார்த்தது பெர்க(Perge) என துருக்கி மொழியிலும் பெர்ஜ் என்று ஆங்கிலத்திலும்  சொல்லப்படும் வரலாற்று நகரம். அண்ட்டால்யாவிற்கு 20கி.மீட்டர் தொலைவில் உள்ளது. இத்தொடரில் ஏற்கனவே பலமுறை துருக்கிக்கும் கிரேக்கத்திற்குமுள்ள வரலாற்று தொடர்புகள் குறித்து எழுதி வந்துள்ளேன். 12ம் நூற்றாண்டில் பெரும் எண்ணிக்கையில் கிரேக்க மக்கள் துருக்கிக்கு வடக்கிலிருந்து உள்ளே நுழைந்திருக்கிறார்கள். நுழைந்தவர்கள் ஆரம்பகால புலம்பெயர்ந்தோர் விதிமுறைப்படி செழுமையாகவிருந்த மத்திய தரைகடலொட்டி குடியேறியிருக்கிறார்கள். அவர்கள் குடியேறிய அப்பிரதேசம் ‘பாம்பிலி (Pamphylie) என அழைக்கப்பட்டது. இத்தொடரின் இரண்டாம் நாள் கட்டுரையில் அஸ்பெண்ட்டோஸ் திறந்த வெளி நாடக அரங்கத்தைபற்றி விளக்கமாக எழுதுயிருந்தேன். அந்நாடக அரங்கு பெர்ஜ் நகரத்தின் ஒரு பகுதிஅல்லது பெர்ஜ் நகர கிரேக்கமக்களின் கலை பண்பாட்டுக் குறியீடு. நகரத்தைச் சுற்றிப் பாதுகாப்பு அரண்போல பெரிய கோட்டை சுவரொன்று இருந்ததன் அடையாளமாக பத்துபன்னிரண்டு மீட்டர் உயரமுள்ள மதிற் சுவரின் எச்ச சொச்சங்கள் நுழைவாயிலில் காணக் கிடைக்கின்றன.  அடுத்த பெரிய அதிசயம் கவிழ்த்த ‘U’ போன்ற குதிரை இரத போட்டி மைதானம்,  ரதபோட்டிக்கென பாதைகளில் கற்களைபாவித்திருக்க அவற்றில் இன்றும்  ரதங்கள் தொடர்ந்து ஓடியதால் ஏற்பட்ட தடங்கள், அதிசயமாக சீர்குலையாமல் இருக்கின்றன. ஏறக்குறைய பதினைந்தாயிரம் பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில் இருக்கைகளும் உள்ளன. இது தவிர நகரில் கடைத்தெருக்களும், மக்களுக்கான நடைபாதைகளும், கடைச்சொந்தக்காரர்கள் பின்புறமாக கடைக்குள் வரவும், வாடிக்கையாளருடன் தொடர்புகொள்ள மக்கள் நடைபாதையோடு கடைமுன்புறம் திறப்பும் உள்ளன. இங்கே முக்கியமாக குறிப்பிடவேண்டியது பொது நீராடுமிடமும், வெந்நீர் போடுவதற்கென அவர்கள் கையாண்ட பொறி இயல் நுட்பமும் வியக்கவைப்பவை. திரும்பிய திசைகளிலெல்லாம் பல மொழிகளில் (சீன மொழி உட்பட) வழிகாட்டிகள் உரத்த குரலில்  அழைத்து வந்திருந்த சுற்றுலா பயணியருக்கு கிரேக்க பழைய நகரத்தின் பெருமையைக் கூறிக்கொண்டிருக்க,  நம் அண்மையில் வந்து மெல்லிய குரலில், கைப்பிடியைத் திறந்துக்காட்டி இவ்விடத்தைச்சேர்ந்த பொருள், ஐம்பது டாலருக்குக் கிடைக்கும், வேண்டுமா என்கிற துருக்கியர்களையும் காணமுடிந்தது பெரும் அதிர்ச்சி.

அங்கிருந்து மத்திய தரைக்கடலொட்டி மேற்கத்தியர்களாலும், கோடீஸ்வரர்களாலும் ஆக்ரமிக்கபட்டிருந்த நவீன அண்ட்டல்யாவைக் கண்டபிறகு தூங்கி வழிந்த ரெஸ்டாரெண்ட் ஒன்றில் மதிய உணவிற்கு அழைத்துசென்றார்கள். சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்திருந்த உணவகம். உப்பு சப்பில்லாமலிருந்தது. கடந்த ஏழு நாட்களில் வேறெங்கும் அத்தனைமோசமான உணவை எடுத்துக்கொண்டதில்லை.

பிற்பகல் அண்ட்டால்யாவின் இதயப்பகுதிக்குச் சென்று பார்த்தோம். அதை கொஞ்சம் விபரமாக எழுதவேண்டியிருக்கிறது. அடுத்த வாரம் எழுதுகிறேன்.

(தொடரும்)

 

 

 

 

 

 

 

 

துருக்கி பயணம்-6

அண்ட்டால்யா – கொன்யா – கப்படோஸ்

மார்ச்-31

உயிர் வாழ்க்கையில் கிடைக்கும் ஒவ்வொரு நாட்களும் முக்கிய

மானதுதான். கப்ப டோஸை பிரிகிறபோது மனதைச் சமாதானப்படுத்த வேறு காரணங்கள் உடனடியாகத் தோன்றவில்லை. இனி திரும்பவும் கப்படோஸ் அனுபவம் வாய்க்குமா? இங்கு கழித்த இரண்டு நாட்கள் போல மறுபடியும் அமையுமாவென என்னை நானே கேட்டுக்கொண்டபோதுதான், நமது வாழ்க்கையில் எல்லா நாட்களும் முக்கியமானவையென நினைத்துக்கொண்டேன். இன்னொரு கப்படோஸ் எனக்கு அவசியமற்றதாகப் பட்டது. கப்படோஸ் கப்படோஸ் மட்டுமே அப்படி இருக்கவேண்டும். வேறொரு நாட்டில் வேறொரு பிரதேசம் அதன் சாயலில் இருப்பதை சகித்துக்கொள்ள முடியாது, மனம் அலுப்பில் நுரைதள்ளக்கூடும். உலகத்தின் சுவாரஸ்யமே ‘அதைப்போல இது’, ‘மற்றவரைபோல நானென’ சொல்லிக்கொள்ளாத இருப்புகளினாலேயே தீர்மானிக்கப்படுகின்றன. தங்கிய விடுதி, ஊழியர்கள், மக்கள் இப்படி எல்லோரும் வேறாக இருந்ததாலேயே, நினைவில் இருக்கிறார்கள். குறிப்பாக அமீது என்ற இளைஞரை மறக்க முடியாது. சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் பகலில் நாங்கள் வெளியிற் செல்கிறபோதும், தங்கிய ஓட்டலில் காலை சிற்றுண்டி, இரவு உணவு என சாப்பிட்டபோதும் கப்படோஸ் பிரதேச உணவை ( பயண ஏற்பாட்டாளர்க்கு அதில் இலாபமும் இருக்கக்கூடும்)  சிபாரிசு செய்தார்கள். வேண்டாமென்றால் வேறு உணவிற்கு வாய்ப்பிருந்தது. அந்த வேற்று உணவுகள் இரண்டொரு ஐரோப்பிய மற்று துருக்கிய உணவுகள். அண்ட்டல்யாவில் தங்கியிருந்தபோன்று அதிக பல்வகையான உணவுகளுக்கு வாய்ப்பில்லை.

உணவு பிரியர்களுக்காக:  காலை உணவுக்கு துருக்கியில் காவல்ட்டி ( kahvalti) என்று பெயர். ஏற்கனவே காலையில் என்ன உண்டோமென்பதை எழுதியிருக்கிறேன். வேண்டுமானால் அங்கே எழுதாதவற்றை இங்கே குறிப்பிடுகிறேன். பிரத்தியேக உணவுகளின் பெயர்களை  (துருக்கி பெயர்கள்) சிலவற்றை கேட்டுக் குறித்துக்கொண்டாலும், பின்னர் எங்கள் வழிகாட்டியிடம் காட்டிய பொழுது, அவற்றை திருத்தினார்.  பலபெயர்களை தவறாக காதில் வாங்கிக்கொண்டு கையேட்டில் குறித்துவைத்திருந்தேன். Bazlama, lavash ரொட்டிகளில் குறிப்பிடப்படவேண்டியவை.  இறைச்சி தூவிய Lahmacun வாய்க்கு ருசியாக இருந்தது. இதை துருக்கியரின் பிஸ்ஸா எனவும் சொல்லக்கேட்டேன். ஹொமோஸ் (houmous) கப்படோஸில் எல்லா இடங்களிலும் கிடைக்கிறது: கொத்துகடலையையும் எள்ளையும் சேர்த்து அரைத்த தொகையல் போன்ற ஒன்று, கொஞ்சம் புளிக்கவும் செய்கிறது, ரொட்டியுடன் சேர்த்து சாப்பிடுகிறார்கள். பதப்படுத்தபட்ட மிளகாய், ஆலிவ் (ஊறுகாய்?) ஆகியவற்றையும் துருக்கியர்கள் நிறைய சாப்பிடுகிறார்கள். துருக்கி காபி: பால்கலவாத மிக ஸ்ட்ராங்கான கறுப்புகாபி. முயற்சி செய்தேன், தொடர விருப்பமில்லை.

கப்படோஸ் எனும்போது நினைவில் நிற்கக்கூடிய நபர் உணவு விடுதியிலில் பணியாற்றிய அமீது. இருபது வயதைத் தாண்டாத இளைஞர். பயிற்சி மாணவராக இருக்கவேண்டும்.  பிரெஞ்சும் ஆங்கிலமும் கலந்த மணிப்பிரவாள மொழியில் உரையாடுவது அவருக்கான குறியீடு. அவரவருக்கு வேண்டியவற்றை எடுத்துக்கொள்ளும்வகையில் மேசைகளில் உணவுவகைகள் காத்திருக்க, விருந்தினர் அம்மேசைகளை நெருங்கினால் போதும், அமீதுவின் கண்களோடு பற்களும் அகலத் திறக்கும், அதை நாங்கள் புன்னகையென எடுத்துக்கொண்டோம்.  பாலினத்திற்கேற்ப முஸே அல்லது மதாம் மூக்கடைப்புடன் ஒலிக்கும். தொடர்ந்து சூப் வேண்டுமா என்பது ஆங்கிலத்தில் கேட்பார். அவர் வாக்கியத்தை முடிக்குமுன்பே கோப்பையில் ஊற்றப்பட்ட சூப்பின் ஆவி உங்கள் முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டிருக்கலாம். முதல் முறையாக அவரது உபசரிப்பைக் கண்டு குதூகலித்து பதிலுக்கு புன்னகைத்தது உண்மை.  அதுவே இரண்டாவது மூன்றாவதெனத் தொடர்ந்தபோது, இளைஞரைகண்டு ஒளியவேண்டியிருந்தது. மூன்றாம்நாள் மாலை, மறுநாள் ஓட்டலை காலிசெய்யவிருந்ததால், இரவு உணவைமுடித்துக்கொண்டு அறைக்குத் திரும்புவதற்கு முன், வரிசையில் நின்று இளைஞரிடம் எங்கள் குழுவினர் விடைபெற்றுக்கொண்டது அற்புதமான காட்சி.

காலையில் பெட்டிகளை எடுத்துக்கொண்டு வரவேற்பு கூடத்தில் நேரத்திற்கு இருந்தோம்.  பனி கொட்டிக்கொண்டிருந்தது. நல்லவேளை நேற்றும் அதற்கு முந்தைய நாளும் பனி இல்லையே என்றளவில் ஆறுதல். ஐரோப்பாவில் குளிர்காலமென்பது டிசம்பர் நான்காவது வாரத்தில் ஆரம்பித்து மார்ச் நான்காவது வாரம் முடிய என்பது பொதுவிதி. இருப்பினும், மார்ச் மாதத்தில் இரண்டாவதுவாரத்திற்குப்பிறகு பணிப்பொழிவு அரிது. கப்படோஸில் பனிப்பொழிவு அன்று கடுமையாகவே இருந்தது. எங்கள்  ஓட்டுனர் பேருந்தை நிதானமாகவே செலுத்தினார்.

 கைவினை நெசவு ஊடாக தரைவிரிப்புகள் செய்யும் நிறுவனமொன்றை பார்வையிட எங்களை அழைத்துச்சென்றார்கள். நவீன சுற்றுலா அகராதியில் எங்கள் சுற்றுலாவிற்கு கலாச்சார சுற்றுலா என்று பெயர். சுற்றுலாவின்போது ஏதாவதொரு நிறுவனத்தின் தயாரிப்பை – நுகர் பொருளை- பார்வையிட அழைத்துசெல்வார்கள். சுற்றுலா பயணிகளில் 90 விழுக்காட்டினர் ஏமாளிகள் என்று பரிபூரணமாக  நம்புகிறார்கள். சுற்றுலா கட்டணம் கவர்ச்சிகரமாக இருக்கும். அக் கட்டண இழப்பை ஈடு செய்ய இதுபோன்ற துனை சுற்றுலா திட்டங்கள் உதவுகின்றன. தரை விரிப்பு நிறுவனத்தில் நுழைந்தவுடன் ராஜ உபச்சாரம். கோட்டு சூட்டுடன் ஒரு விரிவுரையாளர் உங்களை வரவேற்பார். உலக அளவில் தங்கள் பொருட்களுக்குள்ள வரவேற்பை கவர்சிகரமான உரிச்சொற்களுடன் புகழ்பாடுகிறார். பக்கிங்காம் அரண்மணைக்குப்பிறகு உங்கள் வீட்டு வரவேற்பறையைமட்டுமே எங்கள் தரைவிரிப்பு அலங்கரிக்கப்போகிறது என்கிறார், சொல்லி முடித்ததும், நமது தேவைக்குரிய பானங்கள் (ஒயின், ஸ்னாப்ஸ், தேநீர்..) வரவழைக்கப்படுகின்றன. கம்பளம், பட்டு பருத்தி என மூவகை நூல்களையும் கலந்தும் தனித்தனியாகவும் செய்திருந்த விரிப்புகள் விரித்துபோட்டபொழுது, அடடா! ஆகா! உச்சுகள். விலை? பக்கிங்காம் அரண்மனைக்கு நெசவு செய்த நுணுக்கமும், ஞானமும் உங்கள் வீட்டிற்கு வருகிறதென்றால் விலையைபற்றி யோசிக்க என்ன இருக்கிறது. உங்களுக்குத் தலைச்சுற்றல் வராதெனில் கடிதம் எழுதுங்கள் விலையைச் சொல்கிறேன். விரிவுரையாளரின் சொற்பொழிவுக்குப்பிறகு, ஒவ்வொரு சுற்றுலா பயணியையும் தேடி விற்பனையாளர் முதலைகள் படையெடுக்கின்றன. ஸ்பெயினில் எருதுசண்டை பார்த்திருக்கிறீர்களா? ஏறக்குறைய அதே அணுகுமுறை. என்னை அணுகியபோதே அவர்களுக்கு நெற்றியில் என்ன எழுதியிருக்கிறதென ஊகித்திருக்கவேண்டும். அரைமணி நேரத்திற்குக்கூடுதலாக எங்களிடம் ஒரு பெண்மணிவிவாதித்தாள். எனது மனைவி அருகிலில்லையெனில் ஒருவேளை துருக்கிப்பெண்மணியின் பிரெஞ்சுக்காக இல்லாவிட்டாலும் அவள் முகத்திற்காகவாவது அசடு வழிந்திருப்பேன். அவள் சாமர்த்தியமான பேச்சையெல்லாம் சமாளித்து  எங்கள் வீட்டிற்கு பக்கிங்காம் அரண்மனை வேலக்காரி கூட வரமாட்டாள், உங்களுக்கேன் வீண் சிரமமென்றேன். வேண்டிய விலையில் கிடைக்கும் என்றாள், எதுவென்று கேட்க ஆசை.  வயதும் மனைவியும் தடையாக இருந்தார்கள், தவிர்த்தேன். விலையைப் பாதியாகக்குறைத்தாள், நான்கு தவணையில் கட்டலாம் என்றாள். வீட்டிற்கு அனுப்பிவைப்போம் என்றாள். ம்.. இல்லை. அநேகமாக அன்றிரவு அவள் சபித்திருக்கக்கூடும்.

Mustapa Pasa (Sinosa)அண்டல்யா விற்குப் பயணத்தைத் தொடர்வதற்கு முன்பாக காணநேர்ந்த சிறு நகரம் அதனையும் அங்கிருந்த சந்தையையும் கண்டோம். ஒட்டோமான் காலத்தில் இங்கே கிரேக்கர்கள் பெரும் எண்ணிக்கையில் வசித்திருக்கிறார்கள். அப்பொழுது பெயர் சினாசோஸ். இன்றைக்கும் ஒன்றிரண்டு கிரேக்க குடும்பங்கள் இருக்கின்றன. அவர்களைப் பொறுத்தவரை அந்நகரம் சினாசோஸ். துருக்கியர் தேனீரோ அவர்கள் மதுவையோ அருந்தும்போது, கணப்படுப்பை எரியவிட்டு சுற்றிலும் மணிக்கணக்கில் உட்கார்ந்துகொண்டு ஊர்க்கதைகளை அளக்கிறார்கள்.தேனீரை இந்தியாவில் சாய் என்பதுபோல சே என்கிறார்கள். அங்கே பெண்களை தவிர்த்துவிட்டு எங்கள் வழிகாட்டி, ஓட்டுனர், டாக்டர், இன்னும் நான்குபேரென உட்கார்ந்து துருக்கி-பிரெஞ்சு அரசியல் பேசினோம்.

 Saratli:ரண்டாவதாக நாங்கள் பார்த்தது. கப்படோஸ் அருகில் எண்ணற்ற நிலவறை கிராமங்கள் இருக்கின்றன. அதாவது இருந்தன.  அவற்றில் ஒன்று சராத்தலி. ஏற்கனவே கொரேம், உர்க்கூட் போன்ற இடங்களில் மலைகளை குடைந்து மக்களும், மதகுருமார்களும் வசித்தற்கான காரணங்களைக் கூறினேன். அவை இக் கிராமங்களுக்கு ப்பொருந்தும், அதாவது எதிரிகள் படையெடுக்கிற போது நிலவறை உறைவிடங்கள் அவர்களுக்கு மிகப்பாதுகாப்பாக இருந்திருக் கின்றன.  இதில் வியப்புக்குரிய விடயம், குடியிருப்பு ஒவ்வொன்றிர்க்கும் ஒரு சுரங்க வழி, அது தவிர குடியிருப்புக்களிடையேயும் தொடர்புகள். உள்ளே அறைகள், கிணறு, சூரிய ஒளி உள்வாங்கிக்கொள்வதற்காக மறைவான திறப்பு, காற்றுவாங்கிகள், உணவு தானியங்களை சேமிக்க ஜாடிகள் என எல்லாம் உபயோகத்திலிருந்திருக்கின்றன. இறந்தவர்களை அக்குடியிருப்புகளிலேயே புதைத்துமிருக்கிறார்கள். சில நிலவறை கிராமங்கள் பல அடுக்குகளைக்கொண்டவை. துருக்கி அரசாங்கத்தின் தொல் பொருள் இலாகா இவ்விடங்களை மிகப்பொறுப்புடன் பாதுகாத்து வருகிறார்கள்.

பேருந்தில் தொடர்ந்து பயணம். மீண்டும் கொன்யா, தொரஸ் மலைத்தொடர் எனக்கடந்து வழியில் கிராமங்களில் நிறுத்தி அவ்வப்போது கிடைக்கும் பழங்களை: ஆரஞ்சு, ஆப்ரிகாட், திராட்சை – வாங்கிக்கொண்டு அண்டல்யா ஓட்டலை அடைந்தபோது மாலை மணி ஐந்து. (பொதுவாக 30யூரோவிலிருந்து 50யூரோவரை இரண்டுபேருக்கான அறைகிடைக்கிறது. ஐரோப்பாவினும்பார்க்க மலிவு. இந்தியாவில் கூட நட்சத்திர ஓட்டல்களில் இன்று 5000 ரூபாய்க்குக்குறைந்து அறைகளில்லை). ஓட்டலில்  எங்களுக்குக் கொடுக்கப்பட்ட அறையில் பெட்டிகளைபோட்டுவிட்டு, ஒருமணி நேரம் அக்கடாவென்று ஓய்வு. மாலை 6.30 க்கு சிறிது வெளியிற் சுற்றிவிட்டுவரலாம் எனக் கிளம்பியபொழுது, டாக்டர் தம்பதிகள் எதிர்பட்டார்கள். பக்கத்தில்தான் கடல் அங்கிருந்து தான் வருகிறோம் என்றார்கள். நானும் எனது மனைவியும் கடலை பார்த்துவருவதென்று கிளம்பினோம் ஓட்டலின் பின்புறம் இருபது முப்பது மீட்டரில் ஆரவாரமின்றி கடல் உறங்குவதுபோல கிடந்தது. ஒரு மணிநேரத்துக்குமேல் இருந்திருப்போமென நினைக்கிறேன். ஓட்டலுக்குத் திரும்பும்போது இரவு எட்டு மணி.

(தொடரும்)

 

 

 

 

 

 

 

 

அணமையில் வாசித்த பதிவுகள் -june 16

அ. தமிழில் விமர்சகர்களே இல்லை:

“விமர்சனம் என்பது வெறும் கோட்பாடோ, ஆய்வோ அல்லது வெறும் ரசனை சார்ந்து உதிர்க்கப்படும் அபிப்பிராயங்களோ அல்ல. மொழியின் அழகும், படைப்பின் ஆழமும் ஒரு சேர வெளிப்படும் அபூர்வமான கலையே விமர்சனம் என்பது. ஒரு படைப்பையோ, அல்லது ஒரு படைப்பாளியின் ஒட்டுமொத்த மன உலகையோ நளினமும், அழகும் மிக்க உரைநடையில் ஆழமான வீச்சுடன் எழுதத் தெரிந்தவனே முதல் தரமான விமர்சகன் -“வண்ண நிலவன்.

பெருமதிப்பிற்குரிய வண்ண நிலவன் தளத்தில் வாசித்த கட்டுரை “தமிழில் விமர்சகர்களே இல்லை” ஓர் எல்டாரோடாவை கட்டிக்கொண்டு  இதுதான் இலக்கியமென பரமார்த்த குருகதை அளந்துகொண்டிருக்கிற இன்றைய தமிழ் படைப்புலகத்தின் கன்னத்தில் அறைகிறது.

வண்ண நிலவன் சொல்வதுபோல ஒரு தேர்ந்த சார்பற்ற விமர்சகன் வேண்டும். அதுவன்றி தற்போதைக்கு விமோசனமில்லை. கிணற்றை எட்டிப்பார்த்து இதுதான் கடல் என்கிற  வாசகர்கூட்டத்திற்கும் இதில் பொறுப்பு இருக்கிறது. படைப்புலகம் ஆரோக்கியமாக இருக்க முதுகு சொறியாத விமர்சனமும், தேர்ந்த வாசகர்களும் தேவை. அமெரிக்காவிலிருந்து கொண்டு தமிழில் வலைத் தளங்களில் எழுதும் இளைஞர்கள் (இவ்வளவிற்கும் தீவிர இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர்கள்போல தெரிகிறது) எப்போதேனும் அமெரிக்காவின் இன்றைய நவீன எழுத்துக்கள் பற்றியோ, நவீன எழுத்தாளர்கள் பற்றியோ எழுதுவார்களென எதிர்பார்த்து ஏமாந்திருக்கிறேன். தமிழ் நாட்டெல்லைக்குள் வாசிக்க போதிய வசதியற்றிருக்கும் வாசகர்களை இங்கே நான் கணக்கிற்கொள்ளவில்லை.  எங்கே பாரபட்சமற்ற விமர்சகர்களும், வாசிப்பில் பரந்த ஞானமும் உண்டோ அங்கே மட்டுமே இலக்கியம் வளரும்.

http://wannanilavan.wordpress.com/2012/06/06

ஆ. கசல் கடவுள்

“அவர் பாடல்கள் நடுவே கொடுக்கும் ‘இசைமௌனம்’ அப்படிப்பட்டது. அதை பெற்றுக்கொள்ள காது மட்டும் போதாது. அவரது இசை கேட்பவனுக்குள் அலையாழியென வலியையும் உணர்ச்சிக் கொந்தளிப்பையும் எழுப்பி, சென்ற காலங்களின் அடிநுனி முதல் இக்கணம் வரை காதலை இழந்து துயருறும் அத்தனை பேருடைய ஒட்டுமொத்த துயரத்தையும் அவன் நெஞ்சில் கொண்டுவந்து நிறைக்கும் வல்லமைகொண்டது. அவரது குரல் இன்னொரு மானுடக்குரல் அல்ல. வலியையும் தியாகத்தையும் மீட்பையும் ஒலிவடிவம் கொள்ளச்செய்யும் ஒன்று அது. அது தூயகாதலின் வெற்றியைப்பற்றிய புனிதமான நன்னம்பிக்கையை முன்வைத்து, இறப்பையும் விதியையும் நோக்கி அறைகூவுகிறது. அது இணையற்ற, அழிவில்லாத ஒரு அனுபவம்.. ” (கசல் கடவுள் கட்டுரையில் ஷாஜி)

கசல் கடவுள்: மெஹ்தி ஹசன் என்ற தலைப்பிலுள்ள ஷாஜியின் பதிவு வாசிக்கவேண்டிய ஒன்று. தமது நண்பரும் பாடகருமான ஸ்ரீனிவாஸ் ஊடாக ஹசனை அறிந்துகொண்டது தொடங்கி கசல் பாடகரின் சரிதை, சாதனை, இசையாற்றல் அவ்வளவையும் உணர்வுபூர்வமாக கட்டுரையாளர் எழுதியிருக்கிறார்.

http://www.musicshaji.blogspot.fr/

இ. Pattu’s terrace Garden

ஊர்வம்பில்லாத வலைத்தளங்களை தேடிப்பிடித்து வாசிக்கவேண்டியிருக்கிறது. அவற்றில் ஒன்றுதான் Pattu’s terrace Garden. நண்பர் இயற்கை தாவரவளர்ப்பில் ஆர்வலர். அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார். உபயோகமான பதிவு. வீட்டில் தோட்டமும் அல்லது வேறு வகையில் வசதிகளுமிருப்பின்  நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள குறிப்புகளிருக்கின்றன;

http://gardenerat60.wordpress.com/2010/11/03/seethaphal-custard-apple/

ஈ நெஞ்சின் அலைகள்

திண்ணை இணைய இதழில் தொடர்ந்து காணக்கூடிய பெயரொன்று உண்டெனில் அநேகமாக திரு. ஜெயபாரதன் என்ற பெயராக இருக்கும். எளிய தமிழில் சிக்கலான அறிவியல் கூறுகளையும் தெளிவுபடுத்தும் ஆற்றலில் அணமையில் இவருக்கு நிகராக வேறொருவரைக் கண்டதில்லை. அன்னாருடைய வலைத்தளமே நெஞ்சின் அலைகள். கோவையிலிருந்து வெளிவந்த கலைக்கதிர் என்ற நூலை எழுபதுகளில் விரும்பி வாசித்ததுண்டு. அதற்குப்பிறகு அதுபோன்றதொரு மொழியில் அறிவியலில் அக்கறையற்றவர்களையும்  வசீகரிப்பதில் நண்பர் தேர்ந்திருக்கிறார். வாசித்த கட்டுரை, கூடிய சீக்கிரம் செவ்வாய் கோளில் இறங்கவிருக்கும் தளவூர்தி பற்றியது.

http://jayabarathan.wordpress.com/

உ. கணையாழின் கதை

அன்பிற்குரிய திரு வே.சபாநாயகம்  தமது நினைவுத் தடங்களில் கணையாழியின் வரலாற்றை தொடக்கமுதல் இன்றுவரை பதிவு செய்திருக்கிறார். திண்ணை இதழிலும் வெளிவந்துள்ளது. கணையாழி பற்றிய பொதுவான தகவல்களை அறிந்திருக்கிறேன். கணையாழின் தொடக்கம், ஆரம்பாகால முயற்சிகள், பங்களிப்புகள் வெளியான படைப்புகள் கணையாழியால் அறியப்பட்ட எழுத்தாளர்கள், இன்று ம. ராஜேந்திரனிடம் கணையாழி வந்திருப்பதுவரை தெளிவாக்ச் சொல்லப்பட்டிருக்கிறது. இன்று பத்துக்கும் மேற்பட்ட சிற்றிதழ்கள் வருகின்றன. நிலைத்து நிற்க ஆர்வமும், உழைப்பும், புதிய யுக்தியும், நிதியும் வேண்டும். கணையாழிக்கு வாழ்த்துகள்

http://ninaivu.blogspot.fr/
——–

மொழிவது சுகம்:ஜூன் 16

பிரான்சில் என்ன நடக்கிறது?: மூன்று பெண்கள்

ராணிகள் அரசனுக்கு எதிரான சூழ்ச்சிகளில் இறங்கக்கூடுமென்பதால், அவர்களிடம் அரசன் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்கிறார் அர்த்தசாஸ்திரத்தில் கௌடில்யர். ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்கிற சொலவடையில், முன்னதை ஏற்கலாம் அடுத்து வருவதை பெண்களிடத்திற் சொல்ல துணிச்சல் வேண்டும்.

ஆன் சேங்க்ளேர் (Anne Sanclair)

அண்மையில் பிரெஞ்சு அதிபர் தேர்தலில் சோஷலிஸ்டு கட்சியின் பிரான்சுவா ஒலாந்து வெற்றி பெற்றதைப் பற்றி ஏற்கனவே எழுதியிருந்தேன். உண்மையில் சோஷலிஸ்டு கட்சியின் சார்பாக நிறுத்தப்பட்டு ஜெயித்திருக்கவேண்டியவர் தொமினிக் ஸ்ட்ரோஸ்கான் (Domonique Strauskan). சிறந்த பொருளாதார நிபுணர், பிரெஞ்சு அரசாங்கத்தின் முன்னாள் நிதி அமைச்சர், சோஷலிஸ்டு இயக்கத்தின் முக்கிய தலைவர்களுள் ஒருவர், மிதவாதி. பிரான்சுநாட்டில் மீண்டும் இடதுசாரிகள் ஆட்சியைக் கைப்பற்றுவது கடினம் என்ற நிலையில் இடதுசாரியினருக்கு நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தவர். பிரெஞ்சு அதிபர் தேர்தலுக்கு முன்பாக மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் ஆதரவைப் பெற்றவர். அப்போதைய அதிபராக இருந்த சர்க்கோசி UMP எனும் வலது சாரிகட்சியின் சார்பில் அதிபரானவர். கொஞ்சம் தந்திரசாலியுங்கூட. இரண்டாவது முறையும் அதிபராகவேண்டுமென்ற நினைத்த அவர், உள்ளூர் அரசியலிலில் இருந்து,  எதிர்காலத்தில் தமக்கு எதிராக நிற்கக்கூடிய சோஷலிஸ்டு வேட்பாளரை களத்திலிருந்து வெளியேற்றினால் – உள்ளூர் மக்களிடமிருந்தும் அரசியலிலிருந்தும் வெளியேற்றினால் – ஓரளவு தொமினிக்கின் செல்வாக்கைக் குறைக்கலாம், அதிபர் தேர்தலில் கடுமையான போட்டியைத் தவிர்க்கவும் செய்யலாமென கருதி தந்திரமாக டொமினிக்கை பன்னாட்டு நிதி நிறுவனத்தின் தலைவராக நியமனம் செய்தார். ஓர் எதிர்கட்சிதலைவரின் திறமையை மதித்து உலக அரங்கில் பொறுப்பான பதவியில் அமர்த்திய சர்க்கோசியின் தயாள குணத்தை அப்போது புகழாதவர் எவருமில்லை. சர்க்கோசிக்கு தொமினிக் ஸ்ட்ரோஸ்கானுடைய பொருளாதார நிபுணத்துவமென்கிற புறவாழ்க்கையைக்காட்டிலும், அன்னாரது கீழ்மையான அகவாழ்க்கைமீது நம்பிக்கை. உள்ளூர் பிரெஞ்சு ரகசியபோலீஸார் தெரிவித்த தகவலின்படி டொமினிக் பெண்களென்றால் கார்த்திகை மாதத்து நாயாகிவிடுவார் என்ற உண்மை சர்க்கோசிக்கு உற்சாகத்தை அளித்திருந்தது. சர்க்கோசி எதிர்பார்த்ததுபோலவே எல்லாம் நடந்தது. பிரெஞ்சு அதிபர் தேர்தலை முன்னிட்டு சோஷலிஸ்டு கட்சிக்குள் வேட்பாளரை தேர்வுசெய்யும் முதற்கட்ட வாக்கெடுப்பில் கலந்துகொள்வதற்கு  பன்னாட்டு நிதிநிறுவனத் தலைவர் தமது பெயரை பிரேரிப்பதற்காக பாரீஸ் வருவதற்கு முன்பாக நியுயார்க்கில் ஓட்டலொன்றில் தங்குகிறார். ஓட்டல் அதிபர் சர்க்கோஸியின் நண்பருடையது. ஓட்டலில் பணியாற்றிய கறுப்பரின பெண்ணிடம் வல்லுறவு கொண்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு பாரீஸ் புறப்படுவதற்கு முன்பாக டொமினிக் கைதுசெய்யப்பட்டார். விசாரணை, வழக்கு, சிறைவாசம். குற்றம் சாட்டிய பெண்ணின் கடந்தக்காலத்தை தோண்டிய அமெரிக்க போலீஸார், பெண்மணியின் நடத்தையில் சந்தேகத்தை விதைத்து பன்னாட்டு நிதி நிறுவன அதிபரை விடுவித்திருந்தாலும் வழக்கு முடியவில்லை. தொடர்ந்து பிரான்சு நாட்டிலும் அவருக்கெதிராக பல பெண்கள் குற்றம் சாட்டினர். பெண்பத்திரிகையாளரில் ஆரம்பித்து, கால்கேர்ள்கள் வரை இதிலடக்கம். பலவற்றில் உண்மையில்லாமலில்லை. இதில் சர்கோசியை சுலபமாக குற்றம் சாட்டமுடியாது. டொமினிக்கின் பலவீனத்தை அவர் பயன் படுத்திக்கொண்டார். அதிபராக வேண்டியவர் நம் ஊரில் சொல்வதுபோது கழிநீர் பானையில் விழுந்தார்.

ஆனால் இங்கே சொல்லவந்தது டொமினிக் பற்றியோ சர்க்கோசி பற்றியோ அல்ல  டொமினிக்கின் மனைவி குறித்து. நாம் இருப்பது 21ம் நூற்றாண்டு. சம்பவம் நடந்தது மேற்கத்திய நாடொன்றில், குறிப்பாக பிரான்சு நாட்டில். இங்கே பெண்ணுரிமை, பெண்விடுதலை போன்ற சொற்கள் இந்தியாபோன்ற மரபுகளில் மூழ்கிய கீழைநாடுகளைக்காட்டிலும் உயிர்ப்பானவை, வீரியம் மிக்கவை. மேற்கண்ட சம்மபவங்களுக்குப்பிறகு அடுத்தடுத்து பாலியல் குற்றங்களுக்கு உள்ளாகி (பில் கிளிங்டன் போல அல்ல, இரவுவேளைகளில் இதற்கெனவே டொமினிக் அலைகிறவரென வெட்ட வெளிச்சமாகியுள்ள நிலையில்), மனைவியிடம் அவர் உண்மையாக நடந்துகொள்ளவில்லையென்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையிலும் அவர் மனைவி ‘ஆன் சேங்க்ளேர்’ அதை எதிர்கொண்டவிதம் வியப்பில் ஆழ்த்தியது.  தாம் சம்பாதித்த பணத்தைமட்டுமல்ல தமது பெற்றோர் பணத்தையும் பாலியல் வழக்குகளிற் சிக்கித் தவிக்கும் கணவருக்காக செலவிடுகிறார். தொமினிக்கின் அரசியல் நண்பர்கள், நெருங்கிய பிற துறை நண்பர்கள், உறவினர்கள் என எல்லோரும் கைவிட்ட பிறகும் ஆன் சேங்க்ளேர்’ அவருடன் இருக்கிறார். இது போன்ற நெருக்கடியான நேரத்தில் பிரிவது நியாயமில்லை என்கிறார். பத்ரிகையாளர்களிடம் தம் குடும்பபிரச்சினையை பிறரோடு பகிர்ந்துகொள்ளவிருப்பமில்லையென தெரிவிக்கிறார். வியப்புக்குரிய விடயம் அவரொரு பத்திரிகையாளர், தொலைகாட்சி நட்சத்திரம், பெண்விடுதலையாளர்.

வலெரி திரெர்விலெர் – செகொலன் ரொயால்:

இவ்விரு பெண்மணிகளும் தற்போதையை பிரான்சு அதிபர் பிரான்சுவா ஒலாந்தோடு தொடர்புடையவர்கள்.

செகொலன் ரொயால், அரசியல்வாதி. 2007ல் சோஷலிஸ்டுக்கட்சியின் வேட்பாளராக அதிபர் தேர்தலுக்கு நின்று சர்க்கோசியிடம் தோற்றவர். தோற்றதற்கு சோஷலிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளராக அப்போதிருந்த ஒலாந்து சரியாக ஒத்துழைக்கவில்லை என்ற குற்றசாட்டு உண்டு, இக்குற்றசாட்டிற்கு பின்புலத்தில் இருந்தவர் யாரென்று அடுத்துவரும் வரிகளை படித்தால் புரிந்துகொள்வீர்கள். 2012ல் அதிபர் தேர்தலின்போது கட்சிக்குள் ஆளுங்கட்சிக்கு எதிராக யாரை வேட்பாளராக நிறுத்துவதென்ற தேர்தல் நடந்தது.  டொமினிக் போட்டியிடவாய்ப்பில்லை என்றானபிறகு,  கட்சிக்குள் நடைபெற்ற அதிபர் வேட்பாளருக்கான தேர்வுக்காக சோஷலிஸ்டு கட்சியில் ஆறுபேர் போட்டியிட்டனர். அவர்களில் செகொலன் ரொயால் ஒருவர். ஆனால் துரதிஷ்டவசமாக முதல் சுற்றில் தோற்றார். இரண்டாவது சுற்றில் சோஷலிஸ்டு கட்சியின் வேட்பாளராக ஒலாந்தை கட்சி உறுப்பினர்கள் தேர்வு செய்தனர்.

செகொலன் ரொயால் பற்றிய பிற தகவல்கள் முக்கியமானவை. அதிபர் ஒலாந்துவோடு பிரெஞ்சு நிர்வாக அகாதெமியில் உடன் பயின்றவர். பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். பிள்ளைகளும் உண்டு. முந்தையை சோஷலிஸ்டு அரசாங்கத்தில் அமைச்சராக பணியாற்றிய அனுபவமும் இப்பெண்மணிக்குண்டு.  2006ம் ஆண்டுவரை ஒலாந்தோடு வாழ்க்கை நடத்தியிருக்கிறார்.  2006ல் ஒலாந்து வலெரி தெரிர்விலெர் என்கிற விதவையை சினேகிதம் கொள்ள ஒலாந்து செகொலன் பிரிகிறார்கள். அதிகார பூர்வமாக ‘வலெரி தெரிர்விலெரை’ ஒலாந்து மணம் முடிக்காததால் அதிபர் மாளிகையில் வலெரிக்கு இடமில்லை. தற்போதைக்கு வலெரிக்கு மணமுடித்துக்கொள்ள விருப்பமுமில்லை. டொமினிக் மனைவி ஆன் சேங்க்ளேர் போல புதிய அதிபர் ஒலாந்துவின் தற்போதைய தோழி வலேரியுமொரு பத்திரிகையாளர், பெண்ணுரிமையில் நம்பிக்கைகொண்டவர்.

அதிபர் ஓலாந்தும் செகொலனும் விவாகரத்து பெற்றுக்கொண்டாலும் அவர்கள் பிள்ளைகள் ஒலாந்து அதிபர் தேர்தலில் நின்றபோது தங்கள் தந்தைக்காக தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கினார்கள்.  செகொலன் சோஷலிஸ்டுகட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர், எனவே சோஷலிஸ்டுகட்சியின் பிற  தலைவர்களை நடதுவதைபோலவே அவரையும் நடத்தவேண்டிய நிர்ப்பந்தம் முன்னாள் கணவ்ரும் இந்நாள் அதிபருமான ஒலாந்துவிற்கு இருக்கிறது. இந்நிலையில் சட்டசபை தேர்தல் வந்தது. சோஷலிஸ்டு கட்சியின் தலைவர்களில் சிலர் தாங்கள் ஜெயிப்பதற்கு வாய்ப்புள்ள தொகுதிகளை தேர்வுசெய்து அங்கே நிற்க விரும்பினார்கள். அதை கட்சி மேலிடமும் ஆதரித்தது. செகொலன் நிற்கிற தொகுதி அவர் பிறந்த பிரதேசத்தில் வருகிறபோதும் அதேக் கட்சியைச் சேர்ந்த உள்ளூர் பிரமுகர் கட்சியின் தலமைக்கு எதிராக செகொலனை எதிர்த்து நிற்கிறார். செகொலனை அவரது கட்சியும் அவரது அதிபரும் ஆதரிக்கிறார்கள். ஜெயித்தால் பாராளுமன்ற சபாநாயகராக நியமிக்கப்படுவாரென்று நம்பப்பட்டது. இந்நிலையில் சக்களத்தி சண்டை அரங்கேறியிருக்கிறது.  புதிய சினேகிதிக்கு அதிபர் தமது முன்னாள் மனைவியிடம் அரசியல் ரீதியாக நட்பு பாராட்டுவதுகூட பிடிக்கவில்லை. அதிபரிடம் இப்புதிய சினேகிதி எச்சரித்ததாகவும், அதைமீறி செகொலனுக்கு அவர் ஆதரவு தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது. விளைவு வலெரி பகிரங்கமாக ட்வீட்டரில் செகொலனுக்கு எதிராக நிற்கும் மற்றொரு வேட்பாளரை ஆதரித்து அறிக்கை விட்டிருக்கிறார். சோஷலிஸ்டுகட்சி மட்டுமல்ல பிரான்சே கொந்தளித்து போனது. இப்பெண்மணி இவ்வளவு கீழ்தரமாக நடந்துகொள்வாரென எவரும் எதிர்பார்க்கவில்லை. பத்திரிகைகள் அனைத்தும் விளாசிதள்ளிவிட்டன. ஒரு பக்கம் மணச்சடங்குகளில் ஒப்புதலில்லை, தொடர்ந்து பத்ரிகையாளராக இருந்துகொண்டு சுதந்திரமாக இருக்கப்போகிறேன் என அறிவித்துக்கொண்டே, இன்னொரு பந்தத்தை புறவாசல்வழியாக நாகரீகமற்ற வகையில் நிரூபணம் செய்வதாக விமர்சனங்களை வைக்கப்படுகின்றன. நெருக்கடியான நிலையில் நாட்டின் பொறுப்பை ஏற்றிருக்கும் ஒலாந்துவிற்கு இது கூடாத தலைவலி. ஒலாந்துவிற்கு நிர்வாகதிறமை போதாது, மென்மையான அணுகுமுறைக்குச்சொந்தக்காரர் என்கிற விமர்னசங்களை, சொந்தக் கட்சி தலைவர்களே வைத்திருந்தார்கள்.  அவரது புதிய சினேகிதையின் அடாவடிப்போக்கு அவற்றை உறுதி செய்கின்றன. இதையே கையாளதவர் நாட்டின் நெருக்கடியை எப்படி கையாளுவார் என்கிறார்கள் எதிர்கட்சிகாரர்கள்.

ஆன் சேங்க்ளேர் – வலேரி திரேவிலெர் இருவருமே மேற்கத்திய கலாச்சாரத்தில் விளைச்சல். பண்பாடு நாம் கற்ற ஞானத்தின் எடைசார்ந்ததல்ல, நம்மை முன்னிருத்திக்கொள்ளும் வகைமை சார்ந்தது.
——————————–

மொழிவது சுகம்:- ஜூன் 12

அம்பானிவீடும் சென்னை விமான தளமும்:

அண்மையில் அருந்ததிராய் கட்டுரையொன்றை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அது அம்பானி மும்பையில் கட்டியெழுப்பிய ‘வசந்தமாளிகை’  ‘Antilla’ பற்றியது. அவரது மனைவிக்காக கட்டினார் என்கிறார்கள். ஒவ்வொரு நாளும் இந்த வசந்த மாளிகையைக்காண மும்பை வாசிகள் கூடுகிறார்களென்று பேச்சு. அண்ணாந்து பார்த்துவியக்கிறார்களாம். எங்கள் கிராமத்திலிருந்து சென்னைக்கு சுற்றுலா வருவார்கள். அந்த ஒரு நாள் சுற்றுலாவின்போது ஒருமணிநேரமோ இரண்டுமணிநேரமோ மீனம்பாக்கம் அருகே பேருந்தை நிறுத்தி காத்திருந்து விமானங்கள் வந்திறங்குவதைப் பார்ப்பார்கள். பழைய திரைப்படங்களில் கதாநாயகன் விமானத்தில் இறங்குவதை காண்பிக்கவென காட்சிகளை வலுக்கட்டாயமாக சேர்ப்பதுண்டு. கதாநாயகனோ அல்ல கதாநயகியோ யாரேனும் இருவரில் ஒருவர் மாளிகைக்குச் சொந்தக்காரர்களாக  இருக்கவேண்டும். வயிறு ஒட்டிப்போன ரசிகர்களை நம்பியே பிலிம் சுருள்கள் இருந்தன. விமானங்களின் எண்ணிக்கையும் பெருகி, நகரவாழ்க்கை அதிசயங்களுக்கும் பழகியிருக்கும் இந்நாட்களில்கூட தென்மாவட்ட நகரங்களிலிருந்து சென்னைக்கு வரும் பேருந்துகளில் 30 ஆண்டுகளுக்கு முன்பாக அதே ஆர்வத்துடன் விமானத்தை பார்க்கும் பயணிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.  ‘Antilla’ வைப்பற்றிய அருந்ததிராயின் கட்டுரையை வாசித்தபோது விமானத்தை வேடிக்கைப்பார்க்கும் தென்மாவட்ட கிராமத்து மனிதர்கள்தான் நினைவுக்கு வந்தார்கள். நியூயார்க்கிலோ, சிங்கப்பூரிலோ ‘Antilla’விற்கு இம்முக்கியத்துவம் கிடைக்குமாவென்று சொல்லவியலாது. உலகில் சேரிகள் நெருக்கமாகவுள்ள நகரங்கள் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் ஆப்ரிக்க ஆசிய நாடுகளிலுமுள்ளன, ஏன் இந்தியாவில் சென்னையைக்கூட குறிப்பிடலாம். எனினும் மும்பை நகருக்கு அம்பானியின் தயவால் இந்த பாக்கியம் கிடைத்துள்ளது. மும்பை குடிசைவாசிகள் புண்ணியம் செய்திருக்கவேண்டும். அதிலும்  ஹெலிகாப்டர் உபயோகத்திற்கான தளம், 27மாடிகள், 9 லிப்டுகள், மாடியிலேயே பூங்கா, உடற்பயிற்சிக்கான கூடம், வாகனங்கள் நிறுத்த ஆறுமாடிகள், 600 பணிஆட்களென்றால் சும்மாவா. தற்போதைக்கு ‘Antilla’ வில் ஆள் நடமாட்டமில்லையாம். அதாவது குடிபோகாமல் இருக்கிறார்கள். வாஸ்த்து சாஸ்த்திரம் பார்த்து கட்டவில்லையோ? அதனாலென்ன அறுபதினாயிரம் மனைவியர், அக்குரோணி கணக்கில் சேனைகள், அஷ்டதிக்கு பாலகர் என்றெல்லாம் கற்பனைகளை வரித்துப் பழகிய நமக்கு இந்த மாளிகையை மையமாகவைத்து புனையப்படும கதைகள் கசக்கவா செய்யும். அமெரிக்காவிலும் மேற்கத்திய நாடுகளிலும் முதலாளிகள் சுவாசிக்க பிராணவாயுயின்றிதவிக்க இந்தியப்பொருளாதாரத்தில் இவர்கள் காட்டில் மழை. 1.22 பில்லியன் மக்கத்தொகைகொண்ட பாரதத்தின் மொத்த தேசியவருவாயில் 25 சதவீதம் அம்பானியையொத்த முதல் நூறு பணக்காரர்களிடம் இருக்கிறதாம். இவர்களைப்போன்றவர்களும் புதிதாய் இந்தியப்பொருளாதாரத்தில் தலையெடுத்திருக்கிற 300மில்லியன் நடுத்தர வர்க்கமும் நாளொன்றுக்கு இருபது ரூபாய்க்கு வழியற்ற 800 மில்லியன்மக்களின் வாழ்க்கையைக்குறித்தும், வாழ்வாதாரங்களைக்குறித்தும் பிரக்ஞையற்று வாழ்வதாக அருந்ததிராய் எழுதுகிறார், யோசிக்கவேண்டியிருக்கிறது.

பிரான்சுவா ஒலாந்து

எதிர்பார்த்ததுபோலவே பிரான்சுநாட்டு அதிபர் தேர்தலில் சோஷலிஸ்டு கட்சியின் வேட்பாளர் பிரான்சுவா ஒலாந்து வெற்றிபெற்றிருக்கிறார். இந்த ஒலாந்து என்ற சொல்லை ஆனந்தரங்க பிள்ளையின் நாட்குறிப்பில் கண்டேன். ஆனந்தரங்கபிள்ளைக்கும், இன்றைய பிரெஞ்சு அதிபருக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? எதையாவது எழுதலாம். கற்பனையிருப்பின் முடிச்சுகளா இல்லை. ஆனந்தரங்கபிள்ளை நாட்குறிப்பில் வருகிறவர்கள் டச்சுகாரர்களென்று நாமழைத்த  ஓலாந்துகாரர்கள்.

பிரான்சுவா ஓலாந்து அதிபர் தேர்தலுக்கு நின்றபோது, ஆட்சியிலிருந்த வலதுசாரி கட்சியும் அவர்களது அனுதாபிகளும் கடுமையாக விமர்சித்தார்கள். அவர் தேர்தலில் நின்று ஜெயித்தும் ஆயிற்று. அங்கொன்றும் இங்கொன்றுமாக புலம்பலும் தொடர்கிறது. மொத்த வாக்காளார்களில் 80 சதவீதத்தினர் தங்கள் உரிமையைப் பயன்படுத்தியிருந்தனர். பிரான்சுநாட்டின் அரசியலமைப்பு விதிப்படி முதல் சுற்றில் வெற்றிபெற்றிருந்த முதலிரண்டு வேட்பாளர்களும் இரண்டாம் சுற்று வாக்கெடுப்பிற்கு  அனுமதிக்கப்பட்டிருந்தனர். சோஷலிஸ்டுகட்சியின் ஒலாந்தும், வலதுசாரிகளின் சர்க்கோசியும் மோதினார்கள். போனமாதம் எழுதியிருந்ததைத்போன்றே ஒலாந்து வெற்றிபெற்றார். சர்க்கோசிக்கு எதிரான அலையே ஒலாந்துவின் வெற்றிக்கு உதவியதென சொல்லவேண்டும். பிரான்சுவா ஒலாந்து 52 விழுக்காடு வாக்குகளையும், சர்க்கோசி 48 விழுக்காடு வாக்குகளையும் பெற்றிருந்தார்கள்.

“வளர்ச்சியைப் புறக்கணித்து செலவினைக் குறைக்கவேண்டும்” என்று ஐரோப்பிய கூட்டமைப்பு எடுத்திருந்த முடிவை பிரான்சுவா ஒலாந்து மீண்டும் பரிசீலனைக்கு உட்படுத்த சொல்கிறார். ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பில் அங்கம் வகித்த பலரும் வலதுசாரி பின்புலத்திலிருந்துவந்தவர்களென்பதால், பசியேப்பக்காரகளின்  சஞ்சலத்தைக்காட்டிலும் புளிஏப்பக் காரர்களின் சங்கடங்கள் அவர்களுக்கு முக்கியமாகபட்டன. ஒலாந்துக்கு பசிஏப்பக் காரர்களின் சஞ்சலங்கள் முக்கியம். அவரது தேர்தல் வாக்குறுதிகள் தெளிவாக இருக்கின்றன. அவருக்கெதிராக கட்சிகட்டிகொண்டிருந்த ஐரோப்பிய வலதுசாரிகள், இறங்கிவந்திருக்கிறார்கள். பொருளியல் நிபுணர்களின் விமர்சன தொனியிலும் இறக்கமிருக்கிறது. நேற்றுவரை ஆட்சியிலிருந்த வலதுசாரி நடந்ததனைத்திற்கும் தாங்கள் பொறுப்பல்ல, அதற்கு உலகத்தில் ஏற்பட்ட நெருக்கடியே காரணம் என்றார்கள். புதிய அதிபரின் வாக்குறுதிகளை நம்பத் தயாரில்லை என்கிற சர்க்கோசி அனுதாபிகளுக்கு,  தங்கள் சர்க்கோசி சென்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததில் வருத்தங்களில்லை. பிரான்சிலேற்பட்ட நெருக்கடிக்கு சர்க்கோசியும் அவரது சகாக்களும் பொறுப்பல்ல என்றும் உலகம் திணித்ததாக கூறவும் அவர்களுக்கு தயக்கமில்லை.

இந்த உலகம் எங்கிருந்து வந்தது, யார்கையில் இருக்கிறது? தெரிந்தோ தெரியாமலோ ஒவ்வொரு நாட்டிலும் கைவிரல் எண்ணிக்கையிலிருக்கிற மனிதர்களிடம் உலகப்பொருளாதாரம் இருக்கிறது. உலகத்தின் தலைவிதியை இந்தச் சிறுகூட்டமே கைவலிக்காமல் எழுதுகிறது. அதை எழுதியதில் சர்க்கோசிகளுக்கும் பங்குண்டு. இன்றைய முதலாளியியத்திற்கு சில செப்படிவித்தைகள் தெரியும். சீனாவில் மாவோயிஸம்; பொதுவுடமைகாரர்களுக்கு சோஷலிஸம் -மார்க்ஸிஸம்; அமெரிக்காவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் முதலாளியியம்; இந்தியாவுக்கு ஜனநாயக சோஷலிஸமென மேடைக்கும் எதிரிலிருக்கும் ரசிகர்க¨ளைப் பொறுத்தும் எந்த வேடமும் முதலாளித்துவம் தரிக்கும். நேற்றுவரை பிரான்சு சர்க்கோசி குத்திரைபட்டிருந்தது.. இன்று ஒலாந்து முத்திரை. பீடித்துள்ள நோய்க்கு இதுதான் மருந்து என்று அறியாதபோது புதிய மருந்தையும் முயற்சிக்க வேண்டியதுதான். தற்போதைக்கு புதிய மருத்துவரின் கைராசிபற்றி கருத்து கூற உடனடியாக எதுவுமில்லை. அவருடைய ஒலாந்து முகராசியை பலரும் நம்புகிறார்கள். ஒலாந்து தீவிர இடதுசாரியுமல்ல. இங்கிலாந்தின் முன்னாள் அதிபர் தோனி பிளேர் ரகம். ஆக உருப்படியான மாற்றங்களுக்கு உத்தரவாதமுண்டு. சிக்கனத்தின் அடிப்படையிலான பொருளாதார நடவடிக்கைக்கு மாறாக ஒலாந்து வற்புறுத்தும் வளர்ச்சியின் அடிப்படையிலான பொருளாதாரக்கொள்கையின் யோசனைக்கு ஆதரவாக சில ஐரோப்பிய தலைவர்களன்றி, ஒபாமாவின் அரசும் செவிசாய்த்திருக்கிறது

புதிய அதிபர் பதவியேற்றதும், ஆட்சிபொறுப்பிலிருந்த வலதுசாரி அரசாங்கம் விலகிக்கொண்டது. அதிபர் ஒலாந்துவின் சோஷலிஸ்டு கட்சியின் அமைச்சரவை பதவியேற்றுள்ளது. எனினும் ஜூன்மாதத்தில் நடைபெறவிருக்கிற பாராளுமன்றத் தேர்தலில் இவர்கள் பெரும்பான்மை பெற்றாலொழிய ஆட்சியில் நீடிப்பது சாத்தியமில்லை. பிரெஞ்சு குடியாட்சியில் அதிபர் ஒரு கட்சி, ஆள்பவர்கள் ஒருகட்சி என்ற காட்சிகள் புதியதல்ல. எனினும் இப்போதுள்ள சூழல் பல சிக்கல்களுக்கு வழிவகுக்கலாம். அன்றியும் ஒலாந்து தமது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால், எதிர்கட்சிவசமிருக்கிற நிர்வாகமே காரணமெனக்கூறி நாளை தந்திரமாக தப்பித்துக்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. பெரும்பான்மையான கருத்துகணிப்புகள் புதிய அமைச்சரின் சோஷலிஸ்டு கட்சிக்கு ஆதரவாக இருக்கின்றன. ஆக அதிபரின் அமைச்சரவை தப்பி ஜீவித்திருக்க வாய்ப்புண்டு. சட்டவரைவிற்கு உட்படுத்தவேண்டிய எந்தவொரு முடிவையும் பாராளுமன்றத் தேர்தல் நடந்தேறும்வரை இடைக்கால அரசாங்கம் எடுக்கமுடியாது. புதிய அதிபர் தற்போதைக்கு உடனடியாக அவரால் செய்யமுடிந்த சிலவற்றை நடைமுறைபடுத்தியிருக்கிறார். தேர்தலுக்கு முன்பாக தமது அமைச்சரவையில் ஆண்களும் பெண்களும் சம எண்ணிக்கையிலிருப்பார்கள், எனத் தெரிவித்திருந்தார். அதைபோலவே புதிய அமைச்சரவையில் 17 ஆண்கள், 17 பெண்கள். அடுத்து அதிபர் தமது ஊதியத்தையும் அமைச்சர்கள் ஊதியத்தையும்; தங்கள் இருதரப்பு செலவினங்களையும் 30 சதவீதம் குறைப்பதாக அறிவித்திருந்தார். அதையும் நடைமுறை படுத்தியிருக்கிறார். இனி பிறநடவடிக்கைள் குறித்து ஜூன்மாத பாராளுமன்ற தேர்தலுக்குபிறகே சொல்லமுடியும்.

——————–

துருக்கி பயணம்-5

அண்ட்டால்யா – கொன்யா – கப்படோஸ்

மார்ச்-30

இரண்டாம் நாளாக கப்படோஸ் பிரதேசத்தை பார்வையிட விருந்தோம்.  இப்பிரதேச மெங்கும்  பார்வைக்கும், தெரிந்து கொள்ளவும் கலைகூறுகளும் கல்விக்கூறுகளும் திகட்டும் அளவிற்கும் இருக்கின்றன,  வருடம் முழுக்க தங்கி பார்த்துவரலாம். கடந்தவாரம் எழுதியதுபோன்று  வரலாறு, புவியியல், பண்பாடு மூன்றும் தமது தழும்பை ஆழமாகப் பதிவுசெய்திருப்பதால் துருக்கிக்கு பயணிக்கும் மேலேகுறிப்பிட்டுள்ள துறை ஆர்வலர்கள் எவரும் இப்பிரதேசத்தைத் தவிர்க்கக்கூடாதென்பதில் கவனமாக இருக்கின்றனர். பாரசீகமக்கள், அஸ்ஸீரியன் மக்கள், கிரேக்க நாட்டவர், உலகின் ஏனைய நாகரீகங்களோடு ஒப்பிட்டு பெருமைபேச துருக்கியருக்கு வாய்ப்பளித்த இட்டிட்ஸ் (Hittites)களும் இப்பகுதியைக் கைப்பற்றி பலகாலம் ஆண்டிருக்கிறார்கள். கனிமவளம் நிறைந்த பகுதியானதால் (குறிப்பாக  வெள்ளியும் தங்கமும் ) படையெடுப்பிற்கு காரனமாகியிருக்கிறது. வந்தவர்கள் வழக்கம்போல மதத்தையும் மதத்தையொட்டிய நம்பிக்கையையும், நம்பிக்கையோடு விரவிய பண்பாட்டையும் பொதிகளாக கொண்டுவந்து சேர்த்திருக்கின்றனர். பாரசீகர்கள் இப்பகுதிக்கு கட்படுகா (Katpatuka) என்று பெயரிட்டிருக்கிறார்கள். ‘கட்படுகா’ என்றால் குதிரைகள் நாடு என்று பெயராம். அலெக்ஸாண்டர் தமக்கு வரவேண்டிய திரைப்பணத்திற்கு குதிரைகளை கொடுக்கும்படி கேட்டதாக குறிப்ப்ட்டிருந்தேன். கப்படோஸ் வரலாற்றோடு எனது பயண எழுத்தையும் ஓடவிடுவது உங்களுக்கு அயற்சியை தருமோ என்னவோ எனக்குத் தரக்கூடும் ஆகவே சுற்றுலா வாசிகளைக் கவர்ந்த அல்லது கவரங்கூடிய அருங்காட்சிகளுக்கு காரணமான முகத்துவாரத்தை அறிமுகபடுத்திவிட்டு இன்று பார்த்தவைகளை பட்டியலிடுகிறேன்.  ஆறாம் நூற்றாண்டில் தொடங்கி ஒன்பதாம் நூற்றாண்டுவரை கப்படோஸ் பலமுறை சுன்னி பிரிவு அப்பாசிட் அரபு இனத்தவரின் தாக்குதலுக்கு உள்ளாகிறது. கிட்டதட்ட மூன்று நூற்றாண்டுகள். உயிர்பிழைக்க அடிக்கடி பதுங்குழிகளை தேடியவர்கள் அதையே நிரந்தரமாக்கிக்கொள்கிறார்கள். இப்பிரதேசமெங்கும் மலைகளிலும் நிலவறைகளிலும் வாழ்க்கையை அமைத்துக்கொண்டதற்கு இதுவே முதலும் முடிவான காரணம்.

காலை உணவிற்கு நாங்கள் மேசையில் அமர்ந்தபொழுது டாக்டருடன் அவர் மனைவியும் இறங்கியிருந்தார்; இன்று உடல்நலம் தேவலாம் என அவர் கூறிக்கொண்டாலும் முகத்தில் முந்தைய நாட்களில் கண்ட களையில்லை.

ஒர்த்தாயிஸ்ஸார் (Ortalhisar) – கொரேம் பள்ளதாக்கு ‘Goreme Valley):

காலையில் முதலிற் பார்த்தது ஒர்த்தேயிஸ்ஸார். மதிய உணவிற்குபிறகு பிற்பகல் மாலை ஐந்து மணிவரை கொரெம் பள்ளதாக்கென்கிற கொரெம் அருங்காட்சியகத்தை கண்டோம். இவ்விரண்டுமே கொரெம் நகரத்திற்கு வெளியே சில கி.மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கின்றன. கப்படோஸ் பகுதியில் எரிமலைகள் வெடித்து அதன் லாவாக்களால் உருவான குன்றுகள் குடைவதற்கு எளிதாகவும் பாதுகாப்பிற்கு உகந்ததாகவும் இருந்திருக்கின்றன. மக்கள் குடியிருப்பிற்கு மட்டுமின்றி, கிருத்துவ குருமார்கள் தேவாலாயங்களுக்கும் அவை உதவின. (முதல் நாள்  மனிதஉருவில்  கண்ட தோற்றங்களுக்கும் அக்குன்றுகளில் மென்மையே காரணம். அம்மனித உருகொண்ட தோற்றங்களை Cheminளூe de fளூe என்று பிரெஞ்சில் அழைக்கிறார்கள் அல்லது நிலவியலில் hoodoo என்கிறார்கள்.) ஆக இப்பகுதி முழுக்க ஆர்தடோக்ஸ் கிருத்துவர்கள் வசம் இருந்திருக்கிறது. குகைகளில் பைசாண்ட்டைன் வகை ஓவியங்கள் இருக்கின்றன. ஒர்த்தாயிஸ்ஸார் வித்தியாசமானதொரு சிறுநகரம். மலைகோட்டைபோல தோற்றம் தரும் இக்கிராமமெங்கும் குடியிருப்புகள் புறாக்கூண்டுகள் போல உள்ளன. அரபு படைகளில் பயம் முற்றாக விலகிய பிறகு (பத்தாம் நூற்றாண்டில்) பூமிக்குமேலே திறந்தவெளியில் குடியிருப்புகளை அமைத்துக்கொண்டு மக்கள் வசித்திருக்கிறார்கள். அச்சிறிய நகரில் இடைக்காலத்தைச்சேர்ந்த ஒரு மசூதியுமிருந்தது. வீடுகள் எளிமையாக இருந்தன. நுழைவாயில்கள் கிரேக்கர் சாயலுடன் இருக்கின்றன. கப்படோஸ் பிரதேசத்தின் செராமிக் வகை அலங்கார தட்டுகள் பொம்மைகள் நிறைய கிடைக்கின்றன.  நாங்கள் சுற்றுலா சென்ற இடங்களிலெல்லாம் இதுபோன்ற கடைகள் ஏராளமாக இருந்தனவென்றாலும் இங்கே விலை மலிவு. கண்ணேறு கழிக்கவென்று, செராமிக்கில் செய்து நீலவண்னத்தில் மயிற்கண் தோற்றமும் அலங்காரப் பின்னலும்கொண்ட சில்லுகள் கிடைக்கின்றன. வீட்டு முகப்புகளிலோ வரவேற்பறைகளிலோ கட்டித் தொங்கவிடலாமென்றார்கள். ஐரோப்பியர்ககளுக்கு குதிரை லாடத்தைவீட்டுச் சுவற்றில் அடித்துவைக்கும் பழக்கமுண்டு. இந்நகரத்து வீதிமுழுக்க கடைகள், அவற்றுள் விதவிதமான பேரிச்சைகள், உலர்ந்த திராட்சைகள், பாதாம், பிஸ்தா, முந்திரி, வெள்ளரி பருப்புவகைகள் நியாயமான விலைகளில் கிடைக்கின்றன.

பிற்பகல் கொரெம் நகரில் ஒரு ஓட்டலில் நல்ல உணவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். பிறகு அங்கிருந்து கொரெம் பள்ளதாக்கு, திறந்தவெளி அருங்காட்சியகம். காவல் பலமாக உள்ளது. அவ்வாறிருந்தும் சிற்சில இடங்களில் விஷமிகளின் அத்துமீறல்களை உணரமுடிந்தது. இங்குள்ள தேவாலயங்களுள் நுழைவாயில்களில் பெரும்பாலானவை ஓர் ஆள் மட்டுமே புகுந்து செல்லகூடியவை. ஒவ்வொருமுறையும் ஒரு குழுவினரை மட்டுமே உள்ளே அனுமதிக்கின்றனர். அதிகபட்சம் பத்து நிமிடங்களுக்குமேல் உள்ளே இருக்க அனுமதிலில்லை. வெளியே காத்திருக்கிற குழுக்களின் எண்ணிக்கை அதிகமாகவிருந்ததால் இந்தத் திட்டம். ஐரோப்பியர்கள், அமெரிக்கர்களுக்குப்பிறகு அதிக எண்ணிக்கையில் சீனர்களையும் ஜப்பானியர்களையும் அங்கே சந்திக்க நேர்ந்தது. துருக்கிமொழியில் Kilise என்றால் தேவாலாயமென எங்கள் வழிகாட்டி சொன்னார். பிரெஞ்சு மொழியில் Eglise என்ற சொல்லுக்கு இது மிகவும் நெருக்கம். இந்த கொரெம் பள்ளதாக்கில் நிறைய Kiliseகள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான நான்கைமட்டுமே நாங்கள் கண்டோம். அவற்றுள் இரண்டு முக்கியமானவை.

Elmali Kilise: மிகச்சிறியது பதினோறாம் நூற்றாண்டில் உருவானது. உள்ளே டார்ச்சை உபயோகித்தே எங்கள் வழிகாட்டி விளக்கவேண்டியிருந்தது காவி நிறத்திலிருந்த ஓவியங்களில் பைபிளோடு தொடர்புடைய சித்திரங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன.

Tokali Kilise இவ்வாலயம் கொரெம் அருங்காட்சிகத்திற்கு வெளியே இருபது முப்பதுமீட்டர் தொலைவிலுள்ளது. வாடிகன் அரசாங்க நிதியுதவியுடன், இத்தாலி அரசின் தொழில் நுட்பத்தையும் பெற்று இங்கே புணருத்தான வேலைகள் நடக்கின்றன. அங்கும் பைபிளில் சொல்லப்படும் காட்சிகளை நினைவூட்டும் சித்திரங்கள்.

ஆறுமணிக்கு ஓட்டல் உணவை முடித்துக்கொண்டு இரவு விடுதியொன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  Folk மற்றும் ‘Belly Dance’ காணச்சென்றோம். இன்னும்பத்துவருடங் கழித்து கப்படோஸ் சென்றாலும் சுற்றுலாவாசிகளுக்கு இது வாய்க்கும். கொரெம் நகருக்கு வெளியே  இருந்தது. பெரியதொரு இரவு விடுதி. சுமார் இருநூறுபேர் அமர்ந்துபார்க்கக்கூடிய மண்டபம், சுற்றிலும் இருக்கைகள் -மேசைகள். உள்ளே நுழைகிறபோதே புகைப்படக்காரரை ஏற்பாடுசெய்து ‘கிளிக்’க்கிட்டார்கள். இரவு வெளியேறுகிறபோது தவறாமற் காத்திருந்து ஐந்து யூரோக்குப் ஒரு பீங்கான் தட்டின் பின்புறம் பதிவுசெய்த நமது நிழற்படத்தை நமது தலையிற்கட்டுகிறார்கள். முதலில் இசைக்கலைஞர்கள் வந்து அமர்கிறார்கள். இருக்கைகளுக்கெதிரே குளிர்பானங்கள் மது பாட்டில்கள் கொறிப்பதற்கு தீனி. உங்கள் விருப்பம்போல குடிக்கலாம்.

முதலாவதாக கிராமிய நடனம். ரஷ்யாவைச் சேர்ந்த கொக்காஸ் கலைஞர்கள் என்றார்கள். நடனம் மட்டும் கப்படோஸ் பிரதேசத்திற்குரியதாம். ஒருபெண்ணை மணக்க இருவர் போட்டி போடுகிறார்கள். அதற்கு ஆட்டம் பாட்டம் சண்டை எல்லாமுண்டு.  ஜெயித்தவனை புறம்தள்ளிவிட்டு பெண் தோற்றவனுக்கு கை நீட்டுகிறாள். மொழி புரியாதுபோனாலும், நம்ம ஊர் நையாண்டிமேளக் கலைஞர்கள் நினைவுக்கு வந்தார்கள். சுமார் ஒரு மணி நேர நிகழ்ச்சி. அடுத்து இளம்பெண்ணின் வயிற்றசைவு நடனம்.30 நிமிடம் தனியொருத்தியாகவும், அடுத்து சுற்றுலா வாசிகளுடன் அரைமணிநேரமென்றும் அவள் நடனம் இருந்தது.  randomமாக ஆண் பெண் பேதமின்றி அழைத்து ஒவ்வொருவரையும் வயிற்றை அசைத்து ஆடச் செய்தாள். பத்துபேர் இருக்கலாம். ஒவ்வொருவரோடும் இரண்டு அல்லது மூன்று நிமிடம் செலவிட்டிருப்பாள். சிலர் முயற்சி எடுத்து ஆடவும் செய்தனர். அவள் ஆட்டத்தினும் பார்க்க சில தொப்பை ஆசாமிகள் ஆட்டத்திற்கு கைத்தட்டல்கள். தேறும் ஆசாமிகளுக்கு பெண்ணின் முத்தமும் கிடைத்தது. வேடிக்கையாக இருந்தது. நிகழ்ச்சி முடிந்து வெளியேறியபோது அப்பெண்ணை சந்திக்க நேர்ந்தது. டாக்டரின் சகோதரி அவளிடம் பேசினார். இந்தப்பெண்ணா சற்றுமுன் அப்படி ஆடினாள் என நினைக்கும் அளவிற்கு உடையில் பெருத்தமாற்றம். பேருந்து ஏறும்போது கடுங்குளிர்காற்று இரவு ஒருமணிக்கு ஓட்டல் திரும்பினோம்.

கீழ்க்கண்ட youtubeஐ வலைத்தலத்தில் கிடைக்கிறது. நாங்கள் சென்ற இடத்தில்தான் எடுக்கப்பட்டிருக்கவேண்டும். மண்டபம், கலைஞர்கள் ஆடும்பெண் உட்பட நாங்கள் பார்த்த நிஜத்தின் நிழலென்பதில் துளியும் சந்தேகமில்லை.

(தொடரும்)

மொழிவது சுகம் ஜூன் 9-2012

பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்

பிரான்சுநாட்டுக்கு வருகிற கிறிஸ்துவர்களைதவிர புதுச்சேரி தமிழர்கள் பலருக்கும் ஏற்படும் பெயர் குழப்பங்களை ஏற்கனவே எழுதியிருக்கிறேன். ஆங்கிலத்தில் 1. First name (Christian name) 2. Second name (Sur name) 3. Full name என்று நமது பெயர்களை எழுதுகிறார்கள். இவ்வரிசையை பிரெஞ்சில்: 1. Prénom 2. Nom de Famille 3. Nom et Prénom என வருகிறது. .

ஆங்கிலேயர்கள் விண்ணப்ப படிவங்களில் மேலே குறிப்பிட்ட வரிசையில் எழுத: அதாவது First name (Christian name)  முதலிலும் Second name இரண்டாவதென்று வரும். மாறாக பிரெஞ்சுக்கார்கள் ஆவணங்களில் Seconde name (Nom de famille) முதலாவதாகவும் First name (Prénom) இரண்டாவதாகவும் வரும். பிரெஞ்சு நிர்வாகத்தின் கீழிருந்த புதுச்சேரியை சேர்ந்த மக்களுக்கு பிரச்சினைகளில்லை. மற்றவர்கள் பாட்டனோ பூட்டனோ பிரெஞ்சு ராணுவத்திலோ அல்லது சிவில் நிர்வாகத்திலோ பணியில் சேர்ந்தபொழுது தகப்பனார் பெயரென்று இவர்கள் கூறிய 20, 30 செ.மீ. நீளமுள்ள பெயர்கள் பிரெஞ்சுக்காரன் காதில் நுழையவும், காதில் நுழைந்தாலும் பின்னர் வாயில் நுழையவும் கடினமாக இருந்ததால், காதில் வாங்கிய ஒலியை எழுத்திற் கொண்டுவந்தான். அவனுக்கு மிகவும் கடுமையாகத் தோன்றியபொழுது,  அவன் என்ன கேட்கிறான் என்பதை விளங்கிக்கொள்ளாத தமிழருக்கு  அவனுக்கு தோன்றியவவற்றையெல்லாம் பெயராக வைத்தான். பெயர்வைக்கும் போது கடுமையாக வெயிலா வெப்பம், குளிரா குளிர், சொரிந்துகொண்டிருந்தானா சொரி: இவ்வரிசையில் le chien, Paris, Samedi, dimanche, janvier (நாய், பாரீஸ், சனி, ஞாயிறு, ஜனவரி) பெயராகக்கொண்ட தமிழர்களுண்டு. இது முதல் தலைமுறை கதை. அடுத்து  பிரெஞ்சு நிர்வாகத்திலடங்காத தமிழர்கள் அறுபதில் பிரான்சுக்குள் வந்தார்கள். இவர்கள் Nom, Prénom கதைகள் அறியாத  இந்திய சமூகத்தினர். பிரெஞ்சு Nom ஐ (குடும்பப்பெயரை) ஆங்கிலேயரின் First name உடன் குழப்பிக்கொண்டு தங்கள் பெயரை தந்தைபெயரிடத்திலும் தந்தைபெயர் போடவேண்டிய இடத்தில் தங்கள் பெயரையும் இட்டு நிரப்பிக்கொண்டு இருப்பவர்கள்.  இவர்களில் சிலர் குடும்பப்பெயரில் தங்கள் பெயரை நிரப்பி தங்கள் பெயர் போடவேண்டிய இடத்தில் என்ன எழுதுவதென்று தெரியாமல் ஆவணத்தை பிரெஞ்சு அரசாங்கத்திடம் சமர்த்தியதன் பலனாக ‘Néant (Nothingness- சூன்யம்) -என்று தங்களை அழைத்துக்கொள்பவர்களுமுண்டு.

இன்று பிரெஞ்சு பெயர்களில் தமிழ்நாட்டு தமிழரில் ஆறுமுகம், சீனுவாசன் பெயர்கள் அதிகமாக இருப்பதைப்போல பிரான்சு நாட்டில் சுமார் 200 பெயர்களைத் திரும்ப திரும்ப வைக்கின்றனர்.  இப்பெயர்களுல் இணைப்புக்குறிகொண்ட பெயர்கள் அதிகமுண்டு Jean-Pierre, Paul-Henri, Anne- Laure.

2. பிரெஞ்சு மொழியில் இந்தியைப்போல பெயர்ச்சொல்களில் ஆண்பால் பெண்பாலுண்டு. அதை மனிடர்க்கு வைக்கும் பெயர்களிலும் பார்க்கிறோம். அதாவது ஆண்களுக்கு வைக்கப்படும்பெயர்களின் இறுதியில் ஒரு ‘e’, ‘ette’ அல்லது ‘ine’சேர்த்து அப்பெயரை பெண்ணுக்கு வைக்கும் வழக்கும் பிரெஞ்சிலுண்டு. உதாரணமாக Jean என்று ஒரு ஆணை அழைத்தால் பெண்ணுக்கு ‘Jeanne’ Daniel -Danielle. நாம் சந்திரனை சந்திராவாக மாற்றுவதைப்போல. பிரெஞ்சில் அதிக உபயோகத்திலுள்ள பெயர்கள், பிரான்சுவா, அத்ரியென், அலென், அந்த்துவான், பெர்னார்ட், ப்ருனோ,சார்லஸ், கிரிஸ்டியன், தாவீத், திதியெ, எதுவார்….

———————————————
மலைகள்.காம்

நண்பர் சிபிச்செல்வன் முயற்சியில் மலர்ந்திருக்கும் புதிய இணைய இதழ் மலைகள்.காம். நண்பருக்கு இலக்கிய உலகில் நண்பர்களுக்கு குறைவில்லை என்பதை இதழைப்பார்த்ததும் விளங்குகிறது. இதுவரை மூன்று இதழ்கள் வந்துள்ளன. நவீன கன்னட சினிமா குறித்து  விட்டல் ராவ் எழுதியுள்ள நூலினை முன்வைத்து பாவண்ணன் கூடுதலாகச் சில செய்திகளைத் தந்து கன்னட திரையுலகத்தின் மரியாதையை அவர் பங்கிற்கும் கூட்டியுள்ளார். மலைகள். காம் ஒணைய இதழில் நோக்கம் பல புதிய படைப்பாளிகளை குறிப்பாக இளைய தலைமுறையை அறிமுகப் படுத்தவேண்டுமென்ற முயற்சியைப் பார்க்கிறோம். மில நல்ல முயற்சி. அடுத்து ‘புத்தக அலமாரி’  எனும் பகுதியும் வரவேற்க தக்கது. இப்பகுதியின் நோக்கம் தமிழின் முன்னணி பதிப்பகத்தார் நூல்களை குறிப்பாக அதிகம் வெளியுலகிற்கு எட்டாத படைப்புகளுக்கு புதிய வாசகர்களைத் தேடும் ஆர்வம். முதல் நூலாக காலச்சுவடு வெளியீடான “டாக்டர் வரதராஜுலு நாயுடுவின் வரலாறென்ற நூலை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்கள். நூலாசிரியர் பழ. அதியமான். நூலிலிருந்து சில பகுதிகளையுமெடுத்துப் போட்டிருக்கிறார்கள். நல்ல முயற்சி. தொடரவேண்டும்.

http://malaigal.wordpress.com/
————————————-
கவிஞர் வைதீஸ்வரன்.

கவிஞர் வைதீஸ்வரன் நாடறிந்த கவிஞர். அவருடைய ‘வைதீஸ்வரன் கவிதைகள் தொகுப்பு’ தமிழ்க் கவிதைகளை நேசிக்கிற எவரும் கட்டாயம் தங்கள் நூலகத்தில் வைத்திருக்கவேண்டிய நூல். மூத்த கவிஞர்களுள் ஒருவரான அவர் அண்மையில் ஓர் வலைப்பூவைத் தொடங்கியிருக்கிறார். அவரது வலைப்பூவின் 50 வயது சிறுகதையொன்றை வாசிக்கும் சந்தர்ப்பம்வாய்த்தது. 1961ம் ஆண்டு ‘எழுத்து’ இதழில் வந்த கதையென்று ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். கவிஞரின் முதல் சிறுகதையென்று சொல்கிறார்கள். நம்ப முடியவில்லை. படைப்பின் அழகும், தொனியும் கவிதையென்று நம்மை நம்ப வைக்கிறது. முதல் சிறுகதை இவ்வளவு கச்சிதமாக நேர்த்தியாகவும் உலகில் எத்தனைபேருக்கு அமையும். சிறுகதையின் தலைப்பு ‘கட்டையும் கடலும்’.  வாழ்ந்து முடித்த யோகிபோல கதைசொல்ல தமது இளமையின் முதற்படைப்பை தேர்வுசெய்திருக்கிறார். உருவகக்கதையொன்றில் பேருண்மையை பொத்திவைத்திருந்த இவ்அகத்தியர் கமண்டலத்தை உருட்டிவிட்ட காகமெதுவோ?

http://vaidheeswaran-mywritings.blogspot.fr
——————————————-