Monthly Archives: ஜூலை 2015

பிரான்சு: நிஜமும் நிழலும் -2:

கேள்வி ஞானம் என்ற சொல்லை பலரும் அறிந்திருக்கிறோம். இக் கேள்விஞானம் அவரவர் பெறமுடிந்த தகவல்களின் அடிப்படையிலும், அத்கவல்களைப் பெற்ற நபரின் கற்பனை வளத்தைப் பொறுத்தும் உருவாவது. பிரான்சு நாட்டைப்பற்றியும் அப்படியொரு கருத்தினை நீங்கள் வைத்திருக்கலாம். அக்கருத்திற்கு வலு சேர்ப்பதோ அல்லது அதனைப் பலவீனப்படுத்துவதோ எனது நோக்கமல்ல. கிராமங்களில் பையன்கள் விளையாட உத்தி பிரிக்கும் போது, தன்னோடு வந்திருக்கும் புதிய பையனை அறிமுகப்படுத்த நினைக்கிற ஒருவன் ” கூழுப்பிள்ளை (உபயம் -கந்தர்வன் சிறுகதை) வீட்டுக்கு வந்திருக்காண்டா” என்பான். அந்தப் பையன் ‘கூழுப்பிள்ளை’ வீட்டிற்கு விருந்தாளியாக வந்திருப்பான், இருந்தும் பையன்கள் பார்வை சட்டென்று அவன் வயிற்றில் இறங்கும். அவன் வயிறும் கூழுப்பிள்ளை வீட்டு ஆண்களைப்போலவே பெருவயிறாக இருக்கவேண்டும் என்று அவர்கள்மனது தீர்மானித்ததை, பார்வையால் உறுதிசெய்துகொள்ளும் முனைப்பு அக்கண்களில் தெரியும். “கூழுப்பிள்ளை வீடு” என்ற அடைமொழி சிறுகச் சிறுகக் கட்டிய குளவிக்கூடு. அப்பையனைப்பற்றிய அசலான புரிதல் அவர்களிடத்தில் நிகழும் வரை அவ்விடத்தைக் ‘கூழுப்பிள்ளை வீடு’ என்ற சொல் நிரப்பும்.

நாடுகளும் அதுபோன்றவைதான். ஒரு ஆண் அல்லது பெண்ணின் ஆகிருதியை, தனித்தன்மையை, பலத்தை, பலவீனத்தை முதலிற் கட்டமைப்பதில் சமூகத்தைப்போல அவன் பிறந்த மண்ணிற்கும், நாட்டிற்கும் பங்கிருக்கிறது. பிரான்சு என்றதும் உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது? பார்த்த திரைப்படங்கள், படித்தப் புத்தகங்கள், மேற்கு நாடுகளில் அதுவுமொன்று என்ற உண்மையையொட்டிய கற்பனைகள்; புதுச்சேரிவாசியாக இருந்து பிரெஞ்சு ராணுவத்தில் பணிபுரிந்த முன்னாள் ராணுவ வீரர்களிடம் உரையாடிய அனுபவமிருப்பின் அவர்கள் திரித்த கயிறுகள், உங்கள் சொந்தக் கற்பனை என அனைத்தும் சேர்ந்து ஒருவகையானச் சித்திரத்தைத் தீட்டியிருக்கும். பின்னர் சித்திரத்தின் பருமனைப் பெருக்கிப் பார்ப்பதும், குறைத்துப் பார்ப்பதும் உங்களின் கற்பனையையும் அக்கற்பனைக்கான சூழலையும் பொறுத்தது. பிரெஞ்சுக்காரன், அமெரிக்கன், இந்தியன், போலந்துவாசி, உகாண்டாக்காரன், பாகிஸ்தானியன் என்கிற நாட்டு அடையாளம் மனிதர்கள் பற்றிய முதல் புரிதலைத் தொடங்கிவைக்கின்றன. ஒரு மண்ணின் பெருமையும் சிறுமையும், அதன் வரலாறும் அறிவியல் முன்னேற்றமும், சாதனைகளும், சாபங்களும் அம்மண்ணின் குடிகளை நிழல்போல சாகும் வரை துரத்துகின்றன. இதற்கு வேர் எது? பிரான்சுக்கும் அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்குமான கல்யான குணங்கள் எங்கிருந்து வந்தன. Rome wasn’t built in a day என்பதுபோல சிறுக சிறுக அதனைக் கட்டியெழுப்பியவர்கள் வேறுயாருமல்ல அவர்களும் அந்நாட்டின் குடிகள்தான். இன்றைய இந்தியனின், பாகிஸ்தானியன் அல்லது பிரெஞ்சுக்காரனின் பெருமை சிறுமை இரண்டிற்குமே அவரவர் முன்னோர்கள் தான் பொறுப்பு. தீதும் நன்றும் பிறர் தர வருவதில்லை.

பிரெஞ்சு மக்களும் பண்பாடும்

உலகில் எப்பகுதியில் வசிக்க நேரினும் மனிதர்களுக்கான அடிப்படை உயிரியல் தேவைகளில் பேதமில்லை. பசிவந்தால் உண்பதும், இயற்கை உபாதைகளுக்கு வழி செய்து கொடுப்பதும், புலன்களைப் பயன்படுத்துவதிலும் மனித விலங்குகளிடை பேதமில்லை. எனினும் பண்பாடு வேறு, அது வாழ்வியக்கத்தின் விழுமியம். மனிதனுக்கு மனிதன் அது வேறுபடுவதைப்போலவே, சமூகம், இனம், நாடு சார்ந்து வேறுபடுவதுண்டு. ஓர் இடத்தில் நிலையாய் வாழ்ந்துகொண்டிருக்கிற மக்கள் தங்களிடத்தில் ஏற்படுத்திக்கொள்கிற வாழ்க்கை நெறிகளின் தொகுப்பென்றும் பண்பாட்டைக் கூறலாம். கல்வி, சிந்தனை, அவன் சார்ந்த சமூகத்தின் தேவைகள், புவிசார் காரணிகள் ஒன்றிணைந்து உருவாக்கிய மரபு. உண்பது உயிரியல் தேவையெனில், எதை உண்பது? எப்படி உண்பது? எவருடன் உண்பது, உண்ணும்போது செய்யவேண்டியதென்ன செய்யக்கூடாதது என்ன? என்பதெல்லாம் பண்புகளாகப் பார்க்கப்டுகின்றன. ஆக மானுடத்திற்குப் பொதுவான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதில் பண்பாடுகள் குறுக்கிடுகின்றன. ஒரு சமூகத்தின் பண்பாடு மற்றொரு சமூகத்திற்கு வியப்பைத் தரலாம், முதுகுத் தண்டைச் சில்லிட வைக்கலாம். ஒரு சமூகத்தின் பண்பாட்டை மற்றொரு சமூகத்தின் பண்பாட்டின் அடைப்படையில் உயவென்றோ தாழ்வென்றோ முடிவுக்குப் பொதுவில் வரமுடியாது. செவ்விந்தியர்களுக்கும், மலைவாழ்மக்களுக்கும் நகர சார் மக்களின் பண்பாடுகள் தாழ்ந்தவை என நினைக்க உரிமைகள் இருக்கின்றன. பல நூறு ஆண்டுகால காலனி ஆதிக்கம், அறிவியல் முன்னேற்றத்தின் அசுர வளர்ச்சி, ஊடகம், தகவல் மற்றும் போக்குவரத்து துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், உலகமயமாக்கல் என பலவும் அண்மைக்காலங்களில் ஒற்றை பண்பாட்டை நோக்கி உலகம் பயணித்துக்கொண்டிருக்கக் காரணமென்ற சூழலில் பிரெஞ்சு பண்பாட்டில் நாம் தெரிந்துகொள்ள என்ன இருக்கிறதென பார்க்கலாம்:

 

மரியாதை, நாகரீகம், உபசாரம்:
ஓர் அந்நியனாக இருந்துகொண்டு பிரெஞ்சுக்காரர்களிடம் நான் பார்க்கும் குணம்: நேரம் தவறாமை, சட்டத்தை மதித்தல், எளிமை, வேலை நேரத்தை வேலைக்கென மட்டுமே செலவிடுதல், செய்யும் பணியில் அல்லது தொழிலில் அக்கறையுடனும், அர்பணிப்பு மனத்துடன் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக்கொள்ளுதல், மனதிலுள்ள வெறுப்பையோ கசப்பையோ துளியும் வாடிக்கையாளரிடமோ, நோயாளியிடமோ, நுகர்வோரிடமோ வெளிப்படையாகக் காட்டிகொள்ளாதது ஆகியவை. பேரங்காடியாக இருக்கலாம், வங்கியாக இருக்கலாம், அரசு அலுவலகங்களாக இருக்கலாம், தனியார் நிர்வகிக்கும் காப்பீடு நிறுவனங்களாக இருக்கலாம், மருத்துவ மனையாக இருக்கலாம் உங்களுக்கு உரிய நேரத்தை உங்களோடு செலவிட சம்பந்தப்பட்டவர் காத்திருப்பவார், இங்கே அது சேவை, தொழில் அல்ல. எதிர்பாராவிதமாக ஒன்றிரண்டு அசம்பாவிதங்கள் நடக்கலாம், ஆனால் அது அபூர்வமாக நிகழக்கூடியது.

 

மூன்று ஐரோப்பியர் இருக்குமிடத்தில் ஒருவர் மட்டும் உங்களைப் பார்த்து புன்னகைக்கிறார் என்றால், நிச்சயமாக அவர் பிரெஞ்சுக் காரராக இருப்பார் – (இது ஆங்கிலேயர்கள் பிரெஞ்சுகாரர்களைக் குறித்து வைத்திருக்கும் அனுபவத்திற்கு நேர்மாறானது ) ஆங்கிலேயரும், ஜெர்மன்காரரும் என் அனுபவத்தில் சிரித்து பார்த்ததில்லை. பிரெஞ்சுக் காரர் நம்முடன் சட்டென்று கை குலுக்குவார், வளவளவென்று பேசுவார். அவரைப்பற்றிக் கூடுதலாக நம்மிடம் தெரிவித்திருப்பார். எத்தனை வெளிப்படை, எவ்வளவு நெருக்கம் என்றெல்லாம் நினைத்து மனதிற்குள் பாராட்டிக்கொண்டிருப்பீர்கள். இதோ வருகிறேன் என்று சொல்லிவிட்டு உங்கள் கண்ணெதிதே காப்பியோ தேநீரோ வாங்கிப் பருகுவார். பிரெஞ்சு நண்பர் ரெஸ்ட்டாரெண்டுக்கு சாப்பிடப் போகலாம் என அழைப்பார் நீங்கள் இரண்டு பேர் எனில் பிரச்சினையில்லை. அதிக எண்ணிக்கையில் இருப்பீர்களெனில் அவரவர் பில்லுக்கு அவரவர்தான் பணம் கொடுக்கவேண்டும். இந்த அணுகுமுறையில் எவ்விதச் சங்கடமும் பிரெஞ்சுக்காரர்களுக்கு இருக்காது. பிரான்சுக்கு வர நேரிட்டால் உங்கள் ஆங்கிலத்திற்கு எல்லா இடங்களிலும் கதவு திறக்கும் என நம்பாதீர்கள், இந்தியாலோ அல்லது ஆங்கில மொழி பேசுகிற நாடுகளிலோ தட்டுத் தடுமாறி ஆங்கிலம் பேசும் பிரெஞ்சுக்காரர்கள், உள்ளூரில் தமக்கு ஆங்கிலம் வராது, தெரியாது என்பார்கள். நெப்போலியனுக்கு ஆங்கிலேயரால் நேர்ந்த தோல்வியை சகித்துக்கொள்ள இன்றளவும் பிரெஞ்சுக்காரர்கள் தயாரில்லை. எனவே குறைந்த பட்சம் பிரெஞ்சுக் காரர்கள் அடிக்கடி உபயோகிக்கும் ‘merci’ (நன்றி) என்ற வார்த்தையையாவது சொல்லப்பழகிக்கொண்டு பிரான்சுக்குள் வருவது நல்லது.

அ. நீ அல்லது நீங்கள் – tutoiement ou Vouvoiement

தமிழில் உள்ளதுபோல நீ என்ற சொல்லும் நீங்கள் என்ற சொல்லும் பிரெஞ்சில் இருக்கிறது. நீ என்று அழைப்பதை tutoiement என்றும் நீங்கள் என்று அழைப்பதை Vouvoiement என்றும் பிரெஞ்சில் சொல்வதுண்டு . அந்நியர்கள், புதிய மனிதர்கள், பரிச்சயமற்ற மனிதர்கள் ஆகியோரிடம் ‘நீங்கள்’ என்ற சொல் உபயோகிக்கப்படுகிறது. மாறாக ‘நீ’ என்ற சொல்லை சிறுவர் சிறுமியரிடமும், உறவினர்கள், நண்பர்கள் தோழிகள் ஆகியோரை அழைக்கவும் பயன்படுத்துகிறார்கள். கணவன் மனைவியையும், மனைவி கணவனையும், பிள்ளைகள் பெற்றோர்களையும் ‘நீ’ போட்டே அழைக்கிறார்கள். வயது ஒரு தடையே இல்லை. முன்பின் தெரியாதவர்கள் பழக நேரும்போது ‘நீங்கள்'(Vous) எனத் தொடங்கி பின்னர் நெருக்கம் ஏற்படுகிறபோது ‘நீ'(Tu) என ஒருவர்க்கொருவர் அழைத்துக்கொள்வது சகஜம். இருவரில் ஒருவருக்கு 15 வயதும், மற்றவருக்கு 90 வயது என்றாலும் ஒருமையில் அழைத்துக்கொள்வது அவர்கள் பார்வையில் இடைவெளியைக் குறைக்கிறது. இங்கு வந்து பல ஆண்டுகள் ஆன பிறகும், தற்போதும் பழகிய நண்பர்களை முதல் நாளில் விளித்ததைப்போலவே ‘நீங்கள்’ போட்டு அழைக்கிறேன். ‘ நீ’ என்று அழைக்க தயக்கமாக இருக்கிறது. எங்கள் கிராமத்தில் தள்ளாடும் வயதிலும் கூட வயதிற் சிறியவர்களை ‘வாங்க போங்க’ என அழைக்கும் பெரியவர்கள் இன்றும் இருக்கிறார்கள். மனிதர் உயர்வு தாழ்வு இடைவெளியைக் குறைக்க பிரெஞ்சுக் காரர்களின் ‘நீ’ க்கு உரிய நியாயங்கள் சரியானவையென்றே நினைக்கிறேன்.

Bonjour – வணக்கம்

பிரெஞ்சுக்காரர்களின் வெற்றிக்கு அவர்கள் முகமனுக்காகச் செலவிடும் வார்த்தைகளுக்கும் சமிக்கைகளுக்கும் பெரும் பங்குண்டு. இருமனிதர்களின் பார்வைகள் சந்தித்தால் முகமன் இன்றிதமையாததென்பது அடிப்படை நாகரீகம். அவற்றை எதிர்கொள்ளும் மனிதர்களுக்கேற்ப ( அந்நியர், நண்பர், உறவினர் எனபதைப்பொறுத்து மாறுபடும்) எனினும் வார்த்தைகள், முறுவல்கள், கை குலுக்கல்கள் இரு கன்னங்களில் பரிமாறிக்கொள்ளப்படும் முத்தங்கள், தழுவல்கள், கட்டி அணைத்து முதுகில் தட்டுதல் என்று பிரான்சு நாட்டில் முகமனுக்குப் பல வடிவங்களுண்டு.

வீட்டைவிட்டு வெளியில் வருகிறேன், கதவைப்பூட்டிவிட்டுத் திரும்புகிறேன். எதிரே நான் அறிந்திராத குடும்பமொன்று (கணவன் மனைவி, பிள்ளைகள்) பூங்கொத்து சகிதம் பக்கத்து வீட்டிற்குச் செல்ல படியேறி வருகிறார்கள். அவர்களை இதற்கு முன்பாக பார்த்ததில்லை இருந்தும், குடும்பத் தலைவர் வாயிலிருந்து ‘Bonjour’ என்ற வார்த்தை. இதொரு அடிப்படைப் பண்பு. இதப் பண்பை எல்லா இடங்களிலும் எல்லா தருணங்களிலும் காணலாம் நீங்கள் சாலையோரத்தில் நடந்து போகிறீர்கள், அனிச்சையாக எதிரே வருகிறநபரை பார்க்க நேரிடுகிறது: அவர் ஆணோ பெண்ணோ, சிறுவரோ சிறுமியோ; கிழவனோ கிழவியோ; நாயுடன் நடதுபோகிறவரோ அல்லது காதலனின் தழுவல் பிடியிலிருந்து சட்டென விடுபட்டவளோ எவராயினும் உங்களுக்கு ஒரு ‘Bonjour” சொல்லாமல் கடந்து செல்லமாட்டார் பெரிய அங்காடிக்குள் நுழைகிறீர்கள், ஒரு பொருளைப் பார்க்கிறீர்கள், வாங்குவதா வாங்க வேண்டுமா எனக் குழப்பத்திலோ அல்லது வெறுமனே, மனைவியைத் திருப்திபடுத்தவேண்டியும், பர்சைக் காப்பாற்றும் யோசனையுடனும் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். வாங்கும் ஆசாமிகளா, கடைதோறும் இப்படி நுழைந்து நேரத்தை செலவிடும் தம்பதிகளா என்பதை விற்பனையாளர் உங்கள் முகங்களைப் பார்த்ததும் அறிந்திருப்பார், எனினும் உங்களை நெருங்கி “உங்களுக்கு உதவட்டுமா?’ எனக்கேட்பதற்கு முன்பாக விநயமாக இரண்டு ‘Bonjour’ களை பிள்ளையார் சுழிபோல செலவிட்டபிறகே விற்பனை உரையாடலைத் தொடங்குவார். பொருளை எடுத்துக்கொண்டு பணத்தை செலுத்தவருகிறீர்கள், காசாளரும் ஒரு ‘Bonjour’ க்குப் பிறகே பொருளுக்குரிய பணத்தை பெறுவார். அன்றைய தினம் அவர் இரு நூறு வாடிக்கையாளர்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தாலும் அனைவருக்கும் முறுவலுடன் கூடிய ‘Bonjour’ ஒன்றை காசாளர் பெண்மணி செலவிடுவாள். பிரான்சு நாட்டில் இரயிலில் பயணம் செய்த அனுபவமிருப்பின், பரிசோதகர் பயணச்சீட்டை வாங்கி சரிபார்க்கும் முன்பாக ‘Bonjour’ தெரிவிக்காமல் உங்கள் கையிலிருந்து டிக்கெட்டை வாங்கமாட்டார். ஒரு இரயிலில் குறைந்தது நூறுபேருக்கு என்றாலும் ஒரு நாளைக்கு 500 பேருக்காவது அவர் ‘Bonjour தெரிவிக்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது. காரில் போகிறீர்கள், அல்லது நடந்து போகிறீர்கள் உங்களிடம் உரிய அத்தாட்சி பத்திரங்கள் இருக்கின்றனவா என்பதைச் சோதித்துப்பார்க்க போலிஸார் நினைத்தாலும் மேற்கண்ட வார்த்தைதான் முதலில் வரும். ஆக நாடு முழுவதும் ஒவ்வொரு நொடியிலும் பல லட்சக்கணக்கான வணக்கங்கள் மனிதர்களிடையே பரிமாறிகொள்ள நேரிடுகிறது: முறுவலோடும் வணக்கத்தோடும் தொடங்கும் உரையாடல், இரு நபர்களுக்கிடையேயான இடைவெளியை குறைக்கிறது, உரையாடலை இலேசாக்குகிறது.

(தொடரும்)

மொழிவது சுகம் ஜூலை 18 -2015

அ. இலக்கிய சொல்லாடல்கள் -4

 

கலை மக்களுக்காக (Art Social)

கோட்பாட்டளவிலும் சரி, செயல்பாட்டிலும் சரி எவ்வித விதிமுறைகளையும் வகுத்துக்கொள்ளாமல் செயல்பட்ட கலை இலக்கிய ஆர்வலர்கள், தங்கள் சமூகத்தை முன்வைத்து சில பொறுப்புகளும் கடமைகளும் தங்களுக்கு இருப்பதாகக்கூறி உருவானதே “கலை மக்களுக்காக’ என்ற இயக்கம். குறிப்பாக 1830க்கும் 1848க்குமான இடைபட்ட காலத்தில் இவ்வியக்கம் தீவிரமாக செயல்பட்டது. ‘கலை மக்களுக்காக’ என்பது கலை, இலக்கியம் ஆகியவற்றைக்கொண்டு சமூக ஏற்றதாழ்வுகளை விமர்சனம் செய்வது மற்றும் சாதாரண மக்களின் முன்னேறத்திற்கு ஆதரவாக அவ்வைரண்டையும் பயன்படுத்திக்கொள்ளுதல். மரபை உடைத்து, புதிய போக்கில் நம்பிக்கைக்கொண்டிருந்த முற்போக்குச் சிந்தனையாளர்கள் இவ்வியக்கத்தின் அபிமானிகள். பதினெட்டாம் நூற்றாண்டில் மேட்டுக்குடி மக்களின் ஆதிக்கம், மதத்தில் தலையீடு ஆகியவற்றை மறுத்த சீர்திருத்தவாதிகள், கலைஞர்களை சராசரி மக்களின் முன்னேற்றத்தை மனதில் வைத்து செயல்படவேண்டுமென வற்புறுத்தினார்கள் அச்செயல்பாடு இரண்டுவிதமாக இருக்கலாமென யோசனையும் சொல்லப்பட்டது. சமூகக் குறைபாடுகளை படைப்புகளில் வெளிப்படுத்துதல் என்பது ஒரு முறை, அக்குறைபாடுகளை அகற்றுவதற்கு உரிய யோசனைகளை வழங்குதல் என்பது மற்றொரு முறை.

 

“கலை கலைக்காக” என்ற இயக்கம் படைப்பிலக்கியவாதிகளிடத்தில் செல்வாக்கைப் பெற்ற அதேக் காலக் கட்டத்தில் கலை மக்களுக்காக என்ற இயக்கம் ஓர் எதிர் நடவடிக்கையாக இடது சாரி சிந்தனையாளர்களிடத்தில் செல்வாக்குப் பெற்றது. இவ்விரண்டு போக்குகளும், அவை பயணித்த பாதைகளும் வேறு வேறாக இருந்தபோதிலும் ஒவ்வொன்றும் மற்றதின் இயங்கா தளத்தைக் கண்டறிந்து அதில் செயல்பட்டதால், படைப்பிலக்கியதுறைக்கு இரண்டுமே உதவிபுரிந்திருக்கின்றன. இவ்வகையில் வந்த தொடக்ககால படைப்புகள்: உதாரணத்திற்கு Journal des débats என்ற பிரெஞ்சு தினசரியில் எழென் சுய் (Eugène Sue) என்பவர் ஒருவருடத்திற்குமேல் தொடர்ச்சியாக எழுதிய ‘The Mysteries of Paris’ என்ற நாவலைக் குறிப்பிடலாம். சோஷலிஸ சமூகத்தை கட்டமைக்கமுயலும் ஒரு மேட்டுக்குடி கதாநாயகன் தொழிலாளர்கள், அடித்தட்டுமக்கள் சகவாசம் என வலம் வரும் கதை. இப்படைப்புகள் ஒரு பக்கம் தொழிலாளர்கள் உலகில் ஓர் எதிர்பார்ப்பினை உருவாக்கின, மற்றொரு பக்கம், சமூக நலனில் அக்கறைகொண்டு அர்பணிப்பு மனத்துடன் செயல்படும் படைப்பாளிகளை இனம் கண்டது. ஆனாலும் ஓர் உண்மையைச் சொல்லவேண்டும், தம்மை நேரடியாக இணைத்துக்கொண்டு இவ்வியக்கத்தில் தீவிரமாகப் பங்காற்றிய பிரபலங்கள் குறைவு, சொற்ப எண்ணிக்கையினரே, ஆர்வம் காட்டினார்கள். மாறாக தொடர்கதைகள், கவிதகள், நாடகங்கள் மூலம் தங்கள் பிரச்சினைகளை வெளிப்படுத்த சமூகத்தின் அடித்தட்டு மக்கள் ஆர்வம் காட்டினார்கள், அவற்றில் வேகம் இருந்தது, உண்மையும் இருந்தது, மாறாக வாசிப்புக் கணந்தோறும் சிலிர்க்கவைக்கிற, இன்பத்தில் திளைக்கவைக்கிற, எண்ணி மகிழ்கிற இலக்கிய குணங்கள் அற்றவையென்ற விமர்சனத்திற்கு ஆளாயின; எமிலி ஜோலா, பியர் த்ய்ப்போன்(Pierre Dupont) போன்றோர் அந்தக் களங்கத்தைத் துடைத்தவர்கள் என்கிறபோதும் அவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

 

1851ம் ஆண்டில் இரண்டாம் பிரெஞ்சு குடியரசைக் கலத்துவிட்டு, அதுநாள் வரை அதிபராகவிருந்த லூயி நெப்போலியன் போனபார்த் இரண்டாம் பிரெஞ்சு பேரரசை ஏற்படுத்தி தன்னை மூறாம் நெப்போலியனாக அறிவித்துக்கொண்டபோது ‘கலை மக்களுக்காக’ என்ற அணியினருக்குப் போதாதகாலம். ஆனால் 1889ல் மீண்டும் இவ்வியக்கம் சுறுசுறுப்பாக இயங்கியது. A. Tabarant, L.Cladel ஆகியோர், வேறு சிலருடன் இணைந்து சமூக எழுத்தாளர்கள் கிளப் (Club de l’art social) என்ற அமைப்பை உருவாக்கினார்கள். L’art social (1891-94) என்ற இதழ், ‘Théâtre d’art social’ என்ற நாடக இயக்கம், B. Lazare என்ற எழுத்தாளர் நடத்திய L’écrivain et l’art social (1896) என்ற சஞ்சிகை ஆகியவைகளெல்லாம் பின்னாளில் இவியக்கத்திற்கு ஏற்பட்ட ஆதரவைத் தெரிவிப்பவை.

 
இருபதாம் நூற்றாண்டில் தீவிர இடதுசாரி சிந்தனையாளர்கள் ‘கலை மக்களுக்காக’ இயக்கத்தைக் கையிலெடுத்ததும், அது இலக்கிய அடையாளத்தை இழந்து அரசியல் சாயத்தை அப்பிக்கொண்டது, தொடக்கத்திலிருந்த கவர்ச்சி அதற்கில்லை. பின்னாளில் அதனாலேயே செல்வாக்கிழக்க காரணமும் ஆயிற்று. எனினும் சந்தர்ப்பங்கள் வாய்க்கிறபோது அவ்வப்போது இக்குரல்கள் ஒலிக்கின்றன. இவ்வியக்கத்தின் பலமும் பலவீனமும் அடித்தட்டு மக்கள். சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து வரும் படைப்புகளுக்கு அம்மக்களே உரிய வரவேற்பைத் தருவதில்லை. அவர்கள் அக்கறைகொள்ள இருக்கவே இருக்கின்றன மலிவான பொழுதுபோக்கு அம்சங்கள். அடித்தட்டு மக்களை குறிவைத்து தார்மீக நோக்கம், எதார்த்தைத் தோலுரித்துக்காட்டுதல், பொழுதுபோக்கு அம்சங்கள் ( வெகு சன எதிர்பார்ப்பு?)மூன்றையும் ஒன்றிணைப்பதென்பது எளிதான விஷயமுமல்ல இன்று ‘தலித் எழுத்த்து’ ‘பெண்ணிய எழுத்து’ என்று சொல்லிக்கொண்டிருப்பதெல்லாம் ‘கலை மக்களுக்காக’ முன் வைக்கும் வாதங்கள்தான். நாளை ‘முதியோர் இல்லத்தில் வாடும் வயது கிழங்கட்டைகளின் எழுத்து’ என்று கூட ஒரு வகைமை உருவாகலாம், எதுவவும் தப்பில்லை, ஆனால் இயங்கும் தளம் இலக்கியம் அல்லது கலை என்பதை மறந்து அனுதாபத்தை யாசிப்பதும், பிரச்சார அரசியலை மையப்படுத்துவதும் உண்மையான நோக்கத்திற்கு ஒரு போதும் உதவாது. ‘கலை மக்களுக்காக’ என்ற கூத்தரங்கில் அதிகம் அமெச்சூர் நடிகர்கள் அரிதாரம் பூச வருகிறார்கள், விளைவாக அவர்கள் நொண்டுவதைக் கூட கலை என சாதிக்கிறார்கள், பார்வையாளர்கள் முகம் சுளித்தால் கூடம் கோணலென்கிறார்கள் அதே வேளை தற்போது தமிழில் மற்றொரு கூட்டம் (‘கலை கலைக்காக’ என்ற திருநாமத்தை அவர்கள் வெளிப்படையாக தரிப்பதில்லை, தரித்தால் வடகலையா? தென்கலையா? என்ற கேள்விக்குப் பதில் சொல்லவேண்டிய ஆபத்து அதில் இருக்கிறது.) கைக்கு எட்டாத இடத்தில் இலையைச் போட்டு முடிந்தால் சாப்பிட்டுக்கொள் என்கிறது.

 

வயிறு பசிக்கிறதே என்று வைக்கோலையும் புண்ணாக்கையும் சாப்பிடமுடியாது, வாய்க்கும் ருசியாக இருக்கவேண்டும் என்பது என்கட்சி.

 

ஆ. அண்மையில் வாசித்தது

சொல்வனம் இதழ் 131ல் வாசித்தவற்றுள் கவர்ந்தவை அல்லது கவனம் பெற்றவை என இரண்டு செய்திகளைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். இக்கட்டுரைகளை நான் தேர்வு செய்தமைக்குக் காரணம் அவை இரண்டுமே, சித்திரத்தை அடிப்படையாகக்கொண்டவை. நூலாசிரியர்கள் கனவுபோல எழுத்தில் இயக்கிய காட்சிகளை, வாசகர் மனதில் படிமங்களாக மட்டுமே இடம்பெறக்கூடியவற்றை கோடோவியங்களைக்கொண்டு நடமாடச்செய்வதற்கு அசாத்திய ஞானம் வேண்டும், கலைஞானம் அறிந்து வருது அல்ல, கண்டு கேட்டு உற்று உணர்ந்து பெறுவது, மனிதர் காரியமல்ல, சிந்தனையில் விவேகமும் பார்வையில் நுட்பமும் அழகும் வேண்டும்.

‘கோபுலு’ மறக்க முடியாத நினைவுகள் – எஸ். சிவக்குமார்: என்ற தலைப்பில் அவரோடு பழகிய நண்பர், எஸ். சிவக்குமார் தம் நினைவுகளை பகிர்ந்துகொள்கிறார். விகடன் இதழாளர்கள் தங்கள் இதழில் இக்கட்டுரையை வெளியிடத் தவறினோமே என வருந்தி இருக்கக்கூடும். கோபுலுவுக்கு செலுத்தப்பட்ட உன்னதானமான அஞ்சலி இதுவாகத்தான் இருக்கமுடியும், கோபுலு என்ற பெயர் தன்னுள் விதையாக விழுந்த கதையிலிருந்து கட்டுரை தொடங்குகிறது. கோபுலுவின் கோட்டோவியத்தின் சௌந்தர்யமும் நளினமும் இந்த மனிதரின் எழுத்திலும் இருக்கிறது, வெகு நாளாயிற்று இதுபோன்ற நடையிற் தோய்ந்து. வெறுமனே சடங்காக எழுதிப் பிரசுரமான கட்டுரையாக தெரிவியவில்லை. கோபுலுவின் ஓவியத்துடனும், காலத்துடனும் தோய்ந்து சுவைத்து மகிழ்ந்ததை அவற்றின் Texture கொண்டே வார்த்தைகளாக வடிவமைத்திருக்கிறார். விகடனில் வெளிவந்த த. நா. குமாரசுவாமியின் நாவல் வரிகளை கோபுலு தமது தூரிகை கொண்டு உயிர்பித்திருந்த காட்சியைக் கட்டுரையாளர் விவரிக்கிறபோது, கோபுலுவின் சித்திரங்கள் திரும்பவும் உயிர்பெற, நாடகக்கொட்டகை பார்வையாளன்போல கண்களை அகல விரித்து காட்சியில் லயிக்கிறோம். எனக்கும் தேவன் எழுதிய “ஸ்ரீ மான் சுதர்சனத்தை” ஒரு பைண்ட் செய்யப்பட்ட புத்தகத்தில் சந்திக்கிற வாய்ப்பு அமைந்திருக்கிறது. கோபுலுவின் ஓவியத்தைக் கட்டுரையாளர்போல அக்கறைஎடுத்துக்கொண்டு அந்த நாளில் கவனித்தது குறைவு, பின்னாளில் சில வார இதழ்களைப் பிரிக்கிறபோது ஓவியங்களை வைத்து வரைந்தது யார்? என்பதை அறிவது எளிதாக இருந்திருக்கிறது, எனினும் கட்டுரையாளர் திரு எஸ். சிவக்குமார் அளவிற்கு ஓவியங்களில் தோயும் மனம் அப்போது எனக்கில்லை.

பீமாயணம் -தீண்டாமையின் அனுபவங்கள் -ரா.கிரிதரன்: சொல்வனத்தில் நான் வாசித்து மகிழ்ந்த இரண்டாவது கட்டுரை.பொதுவாகத் தமிழில் புத்தக மதிப்புரைகள் செய்வது இலக்கிய சேவை அல்ல. இவர்களை ஐந்து வகையினராகப் பிரித்துப் பார்க்கலாம்.
முதற் பிரிவின்படி சில விடாக்கொண்டன் எழுத்தாளர்கள் ( இதில் பெண்களும் அடக்கம்) நமது கையில் புத்தகத்தைத் திணித்து அல்லது தபாலில் அனுப்பி எப்படியாவது மதிப்புரையை எழுதவைத்துவிடுவார்கள். இராண்டாவது வகையில் எழுத்தைத் தவிர வேறு கூறுகளின் நிர்ப்பந்தகளால் எழுதப்படும் மதிப்புரைகள், சொல்லக் கூச்சமாக இருக்கிறது, நான் எழுதிய 90 விழுக்காடுகள் இப்படி எழுதப்பட்டவைதான். மூன்றாவது வகைமையில் ‘இவர்’ ‘அவர்’ நூலுக்கு மதிப்புரை எழுதுவார், நன்றிக்கடனாக சில மாதங்களுக்குப்பின் ‘அவர்’ ‘இவர்’ நூலுக்கு மதிபுரை எழுதுவார். பரஸ்பரம் முதுகைச் சொரிந்துகொள்வார்கள்.மேற்கண்ட மூன்று வகமைகளிலும் மதிப்புரைகள் தரம் எப்படியென்று சொல்லத்தேவையில்லை. நூலாசிரியர் நோபெல் பரிசுக்குத் தகுதியானவர் என்பதை மட்டும் சாமர்த்தியமாக தவிர்த்துவிடுவார்கள் மற்றபடி அவர்கள் எழுதிய பத்து மதிப்புரைகளை எடுத்து மறுவாசிப்பு செய்துபார்த்தால், வார்த்தைகளுக்கு அவர்களிடம் எவ்வளவு வறட்சி யென்பது வெட்ட வெளிச்சமாகிவிடும். ஆனால் மேற்கண்ட மூன்று வகைமைக்குள்ளும், அணுகுமுறையில் தவறிருப்பினும், நியாயங்களும் நடந்திருக்கலாம், தமிழ்ச்சூழலில் எழுத்தாளர்கள் சொந்த முயற்சியால்தான் தங்கள் அடையாளத்தை உறுத்திப்படுத்த வேண்டியிருக்கிறது. இந்த மூன்றுவகை புத்தக மதிப்புரையாளர்களால் ஒருவருக்கும் பாதிப்பில்லை.நான்காவதாகத் தங்களை வசிஷ்டர்கள்(?) என நினைத்துக்கொள்கிற விமர்சகர்கள் இருக்கிறார்கள். அவர்களால் கொண்டாடப்பட ஒன்று நீங்கள் அவருக்குக் குடிப்பிள்ளையாக இருக்கவேண்டும், மீடியாக்கள் தயவால் வாமணவதாரம் எடுத்தவரென்றால், உங்களுக்குச் சலுகைகள் உண்டு, வசிஷ்டர்களை அனுசரித்துப்போகத் தெரியவேண்டும். தவறினால் உங்கள் இருப்பு கேள்விக்குறியாகும், அரிச்சுவடி பாடம் எடுப்பார்கள், உங்களுக்கு பேனாவைத் தொட யார் அதிகாரம் கொடுத்தது என்ற கேள்விகளும் வரலாம்.

 

இவற்றையெல்லாம் கடந்து ஐந்தவதாக வகை புத்தக மதிப்புரையாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யாரென்று சிற்றிதழ்களையும், இணைய இதழ்களையும் தொடர்ந்து வாசித்து வருபவர்கள் அறிவார்கள். நல்ல புத்தகங்கள் படித்தேன், அவற்றைப்பற்றி எழுதவேண்டும் என்று தோன்றியது எழுதுகிறேன், என புத்தக மதிப்புரைகள் எழுதிக்கொண்டிருப்பவர்கள். அவர்களில் ஒருவர் நண்பர் ரா.கிரிதரன்.

 

இவர் மதிப்புரை எழுதுகிற புத்தகங்களை நம்பி வாங்கலாம். வாசித்தபின் மதிப்புரை எழுதிய ரா. கிரிதரன் கருத்திற்கு உடன்படாமல் போக வாய்ப்புண்டு. ஆனால் மதிப்புரை என்ற பெயரால் கொடுக்கும் சிபாரிசு கடிதம் நம்பிக்கைத் தன்மை கொண்டது. அவர் மதிப்புரைக்குத் தேர்வு செய்த நூலின் ஆசிரிரியரோ, ஓவியரோ, பதிப்பாளரோ ஒருவரும் வேண்டியவர்கள் பட்டியலில்லை. அம்பேத்த்கரின் வாழ்க்கை வரலாற்றைக் காட்டிலும் அதனைஓவியமாக்கிய கலைஞர்கள் ரா. கிரிரனைக் அதிகம் கவர்ந்த்திருக்கிறார்கள். அதாவது ஐயத்திற்கு இடமின்றி ஒரு வாழ்க்கை வரலாற்றை ஓவியமொழியில் கூடுதலாக பேசவைத்திருப்பதில் மனதைப் பறிகொடுத்திருக்கிறார்.சாதாரணமாக சித்திரகதைகளில் ஒரு கலைஞனின் ஓவிய ஞானத்தை மறைக்கிற, மீறிய கதை சொல்லல் இருக்கும். சித்திரக் கதையின் உற்பத்தியில், ஓவியன் ஒரு தொழிலாளி, கலைஞன் அல்ல. மாறாக பீமாயணம் நூலை விமர்சனம் செய்திருக்கிற நண்பர் ரா.கிரிதரன் கோபுலு பற்றிய கட்டுரைரையில் எஸ். சிவக்குமார் நினைவுகூருகிற அதே அணுகுமுறையை இங்கே கையாண்டிருக்கிறார். பல நேரங்களில் ரா.கிரிதரன் காட்சியில் லயித்து அதிலேயே அமிழ்ந்துவிடுவதுபோன்ற உணர்வை கட்டுரையில் சில வரிகள் தருகின்றன. பர்தான்கோட் ஓவிய முறையை உயிர்ப்பித்த பணியில் பாரத்பவன் மட்டுமல்ல, பீமாயணம் நூல் ஊடாக தமிழ் அறிய காரணமான காலச்சுவடு, அந்நூலை அறிமுகசெய்ய நூலின் கலைத் தன்மையைப் புரிந்துகொண்டு ஓர் ஆழமான கட்டுரை எழுதிய ரா. கிரிதரன் அனைவருக்கும் நன்றி கூற வேண்டியவர்களாக இருக்கிறோம்.

 
மேற்கண்ட இருகட்டுரைகளின் முழுப் பயனை அடைய, சொல்வனம் இணையதளைத்தில் அவற்றை வாசியுங்கள்.
http://solvanam.com

————————————————————————————————————————

பிரான்சு: நிஜமும் நிழலும் -1

காலை பத்து மணி. விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள், வாசனை தைலங்கள் விற்பனைக்குப் பிரசித்தமான பாரீஸின் புகழ்பெற்ற ஷான்ஸெலிஸே (Champs-Elysées) அவென்யு. மேட்டுக்குடி உல்லாசப்பயணிகள் அதிகம் புழங்குகிற இடம். சீனக் குடியரசைச் சேர்ந்த உல்லாசப்பயணிகளைச் சுமந்துவந்தப் பேருந்தொன்று சட்டென்று பிரேக் அடித்து குலுங்கி நிற்கிறது, முன் கதவு பக்கவாட்டில் ஒதுங்கியதும், சொர்க்கவாசல் திறக்கப்பட்ட சந்தோஷத்தில் இறங்குகிறார்கள். ஷாப்பிங் நேரத்தை வீணாக்கிவிடக்கூடாது என்பதுபோல வேகமாக அவரவவருக்கு விருப்பமான கடைகளுக்குள் நுழைகிறார்கள். தங்கள் உருப்படியான நோக்கம் நிறைவேறிய திருப்தியுடன் நான்கைந்து மணிநேரம் கழித்து திரும்புகிறார்கள். ஒவ்வொருவர் கையிலும் பிரார்த்தனைபோல உலகின் பிரசித்திபெற்ற நிறுவனங்களின் வர்த்தகக்குறி கொண்ட பைகள் (சராசரியாக நபர் ஒன்றுக்கு 2011ம் ஆண்டின் கணக்குப்படி 1470 யூரோ வரை சீனர்கள் இங்கே செலவிடுவதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது). அவர்களை இடை மறிக்கும் பாரீஸ்வாழ் சீனர்கள் குழுவொன்று சீன மொழியில் அச்சிட்ட நாளிதழை இலவசமென்று கொடுக்க முன் வருகிறது. ஆனால் பேருந்துகளில் வந்தவர்களோ அந்த நாளிதழை வாங்க மறுப்பதோடு, ஒருவகையான அச்ச முகபாவத்துடன் பேருந்தில் ஏறுகிறார்கள். செய்தித்தாளின் பெயர் “The Epoch Times”. சீனாவில் தடைசெய்யப்பட்டுள்ள நாளிதழ். .மக்கள் குடியரசு என்று சொல்லிக்கொள்ளும் சீன நாட்டிலிருந்து உல்லாசப் பயணிகளாக வந்தவர்கள் பயணம் வந்த இடத்தில்கூட வாய்திறக்க அஞ்ச, பிரான்சு நாட்டிற்கு அகதிகளாக வந்தவர்களுக்கு தங்கள் குரலை வெளிப்படுத்தவும், அச்சில் பதித்து பகிர்ந்துகொள்ளவும் உரிமை இருக்கிறது.

மற்றொரு காட்சி : Ernst & Young என்ற அமைப்பும், L’express தினசரியும் ஆண்டுதோறும் வழங்கும் “உலகின் சிறந்த தொழிலதிபர்” என்ற விருதை கடந்த ஞாயிற்றுக்கிழமை ‘மொனாக்கோ'(Monaco) நாட்டில் நடந்த நிகழ்ச்சியொன்றில் ‘Mohed Altrad’ என்பவர் வென்றதாக செய்தி. பிரெஞ்சு தினசரிகளும் தொலைக்காட்சிகளும் முதன்முறையாக ஒரு “Français” (பிரெஞ்சுக்காரர் அல்லது பிரெஞ்சு குடியுரிமை உள்ளவர்) இவ்விருதை வென்ற செய்தியை பெருமிதத்துடன் தெரிவித்தன. ஆனால் இவருடைய பூர்வீகத்தைத் தெரிவிக்க ஆர்வம் காட்டவில்லை. அவர்கள் விரும்பவில்லை என்பதால் உண்மை இல்லை என்றாகிவிடுமா? விருதை வென்றவர் ஓர் இஸ்லாமியர், சிரியாவிலிருந்து பிரான்சுக்கு வந்தவர், உழைத்து முன்னேறியவர். அவர் இஸ்லாமியர் என்றாலும் பிரான்சு நாட்டின் புகழுக்குக் காரணமாக இருக்கிறார் எனவே பிரெஞ்சுகாரர்களுக்கு வேண்டியவர். மற்றொரு சம்பவவத்தில் வேறொரு காட்சி: ஓர் அமெரிக்க விமான நிறுவனம் தனது நாட்டிற்குப் பயணம் செய்யவிருந்த ‘மெதி'(Mehdi) என்ற இளைஞரிடம் துர்வாசம் இருப்பதாகக் கூறி பாரீஸ் விமான தளத்தில் இறக்கிவிட்டது. செய்திவாசித்தவர்கள் அவர் ஒரு பிரெஞ்சுக் காரர் அல்லது பிரெஞ்சு குடுயுரிமைப்பெற்றவர் என்பதைச் சாதுர்யமாகத் தவிர்த்து, அவர் அல்ஜீரிய நாட்டைச்சேர்ந்தவர் என்ற சொல்லை உபயோகித்தார்கள். பிரெஞ்சுக் காரர்களின் விசித்திரமான இந்த மனப்போக்கையும் நாம் புரிந்து கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.

மேற்கத்திய நாடுகள் என்றால் என்ன? பிரான்சும் பிரிட்டனும் பூமிப்பந்தின் எப்பகுதியில் இருக்கின்றன? என்பதை அறியாத வயதில் கிராமத்திளிருந்து மூன்று கல் நடந்து, பேருந்து பிடித்து அரைமணி ஓட்டத்திற்குப்பிறகு “அஜந்தா டாக்கீஸ் பாலமெல்லாம் இறங்கு” என்று நடத்துனர் கூவலில் அறிமுகமான புதுச்சேரிதான் அப்போது எனக்குப் பிரான்சாகத் தெரிந்தது. புதுச்சேரியைப்பற்றி ஓரளவு நினைவுபடுத்த முடிவது 1962ம் ஆண்டிலிருந்து. எங்கள் கிராமத்திற்கும் புதுச்சேரிக்கும் நெருக்கம் அதிகம். பெரும்பாலான உறவினர்கள் புதுச்சேரியில் இருந்தார்கள். உறவினர்களுக்கு கிராமத்தில் நிலங்கள் இருந்தன. அறுவடைகாலங்களில் எங்கள்வீட்டில் தங்கிவிட்டு கிளம்பிப்போவார்கள். அவர்கள் வீட்டிற்கு நாங்களும் போவதுண்டு. அப்படித்தான் புதுச்சேரி அறிமுகமானது. நேருவீதிக்கு வடகே இருந்த உறவினர்கள் வசதிபடைத்த குடும்பங்கள், Notaire ஆகவும், Huissier ஆகவும் இருந்தனர் மாறாக நேரு வீதிக்கு தெற்கே இருந்தவர்கள் பால் வியாபாரம் செய்பவர்கள் (பிரெஞ்சிலிருந்து தமிழுக்கும் -தமிழிலிருந்து பிரெஞ்சுக்கும் மொழிபெயர்த்த தேசிகப்பிள்ளை குடும்பம் இதற்கு விதிவிலக்கு). புதுச்சேரிக்குச் செல்லும்போதெல்லாம் பிரெஞ்சு கலாச்சாரத்தை பிரித்துணர முடியாத வயதென்றாலும், திண்டிவனம், கடலூர், விழுப்புரம் ஆகியவற்றிலிருந்து புதுச்சேரி வேறுபட்டது என்பதை விளங்கிக்கொண்டிருந்தேன். இந்த வேறுபாட்டை வலியுறுத்திய தனிமங்களில் கள்ளுக்கடை, சாராயக் கடைகள்; அரைக்கால் சட்டையில் மஞ்சள் தொடைதெரிய சைக்கிளில் செல்லும் திரட்சியான ஆஸ்ரமத்துப் பெண்களும் அடக்கம். தொடக்கப்பளிக்கே கூட பக்கத்து கிராமத்திற்கு போகவேண்டியிருந்த நிலையில், நாங்கள் அம்மம்மா என்று அழைத்த அம்மா வழி பாட்டியுடன் 60களில் புதுச்சேரியில் தங்கிப் படிக்கலானோம். காந்திவீதியின் தொடக்கத்தில் ஐந்தாம் எண் வீடு. புதுச்சேரி சற்று கூடுதலாக அறிமுகமானது அப்போதுதான். ராஜா பண்டிகையும், மாசிமகமும், கல்லறை திருவிழாவும், கர்னவாலும் பிரம்பிப்பைத் தந்தன நாங்கள் குடியிருந்த வீட்டிற்குச் சொந்தக்காரர் பிரெஞ்சு காவல்துறையில் பணியாற்றிவர், அவர் ‘சிப்பாய்’ ஆக இருந்தபோது எடுத்துக்கொண்ட படத்தைப் பெருமையுடன் காட்டியிருக்கிறார். ஒவ்வொரு வருடமும் ’14 juillet’ ( பஸ்த்தி சிறையைக் பிரெஞ்சு பிரெஞ்சு புரட்சியின்போது கைப்பற்றிய தினம் – இன்று தேச விடுதலை நாளாகக் கொண்டாடப்படுகிறது.) அன்று புதுச்சேரியில் விழா எடுப்பார்கள். தொடர்ந்து பிரெஞ்சு தூதரகத்தில், சிறிய அளவிளான விருந்திருக்கும், அவ்விருந்திற்கு குடியிருந்த வீட்டுக்காரர் அழைப்பினைப் பெற்றிருப்பார், என்னையும் அழைத்து செல்வார். அவர் ஷாம்பெய்ன் அருந்துவதில் ஆர்வத்துடன் இருக்க, எனது கவனம் கொரிக்கின்ற பொருட்கள் மீது இருக்கும். பிரெஞ்சுக்காரர்களையும் அவர்கள் பேசிய பிரெஞ்சு மொழியையும் பிரம்மிப்புடன் அவதானித்த காலம் அது. நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவனாக இருந்தாலும், கல்வி, பணி, மணம் அனைத்தும் புதுச்சேரியோடு என்றானது. எனது மனைவி உறவுக்காரபெண். அவருக்குப் பிரெஞ்சு குடியுரிமை இருந்தது. அவரால் எனக்கும் கிடைத்தது. எனினும் வருவாய்த்துறை பணியைத் துறக்க சங்கடப்பட்டேன். ஏதோ ஒரு துணிச்சலில் புதுச்சேரி அரசு பணியைத் துறந்துவிட்டு இங்கு வந்தது சரியா என்ற கேள்வி இன்றைக்கும் இருக்கிறது. எனினும் தொடங்கத்தில் இருந்த உறுத்தல்கள் வெகுவாகக் குறைந்திருக்கின்றன. பிரான்ன்சு நாட்டில் சட்டத்தை மதித்தால் சங்கடங்கள் இல்லை.

அமெரிக்காவும் (வட அமெரிக்கா) மேற்குலகும், நாம் விரும்பினாலும் விரும்பாவிடினும் நவீன யுகத்தின் ‘Avant-gardistes’ கள். நமது அன்றாடம் அவர்களால் எழுதப்பட்டது, எழுதப்படுகிறது. காலையில் கண்விழிப்பது முதல் இரவு உறங்கப்போவதுவரை சிந்தனை, உணவு, நகர்வு, தகவல் தொடர்பு, காட்சி, கலை இலக்கியம் இப்படி மனித இயக்கத்தின் எந்தவொரு அசைவிலும் மேற்கத்தியரின் தாக்கம் இருக்கிறது. நூறு குறைகள் இருப்பினும் மானுடத்திற்கு ஆயிரமாயிரம் நன்மைகள். மூச்சுக்கு முன்னூறுமுறை அமெரிக்காவையும் மேற்கத்தியர்களையும் திட்டிவிட்டு, பிள்ளகளை பொறுப்பாக ஏகாதிபத்தியத்திடம் ஒப்படைத்தபின் தங்கள் விசாவுக்காக கால்கடுக்க அவர்களின் தூதரகத்தில் காத்திருக்கும் காம்ரேட்டுகள் இருக்கிறார்கள்.. எனக்குத் தெரிந்த இடதுசாரி புதுச்சேரி தோழர் ஒருவர் பிரான்சிலிருந்து துடைப்பம், டெலிவிஷன் என்று வாங்கிக்கொண்டு சென்னை விமான நிலையத்தில் இறங்கினார். எதிரிகள் கூட மேற்கத்தியரிடம் கடனாகவோ விலைக்கோ பெற்ற வாளைத்தான் அவர்களுக்கு எதிராகச் சுழற்றவேண்டியிருக்கிறது.

வரலாறு என்பது வெற்றி பெற்றவர்களால் எழுதப்படுவது. ஐக்கிய நாட்டு சபையில் ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பினர்கள். இந்த ஐவரில் சீனா நீங்கலாக மற்றவர்கள் இரண்டாம் உலகப்போரில் வெற்றிபெற்ற அணியைச் சேர்ந்தவர்கள். இனி மற்றொரு உலக யுத்தத்தை இப்பூமி தாங்காது எனத் தீர்மானித்தபோது,வெற்றி பெற்றவர்களே அதற்கான பொறுப்பையும் ஏற்றார்கள். அமெரிக்காபோல சீனா போல அல்லது ஒன்றிணைந்த சோவியத் யூனியன்போல பெரிய நாடுகள் என்று சொல்ல முடியாவிட்டாலும், காலனி ஆதிக்கத்தால் உலகின் பரந்த நிலப்பரப்பை தமது ஆளுகைக்கு உட்படுத்தியிருந்த பிரிட்டனும், பிரான்சும் ஐநா சபையில் நிரந்தர உறுப்பினர்கள் ஆனார்கள். அதனை இன்றுவரை கட்டிக்காக்கும் வல்லமை அவர்களிடம் இருக்கிறது. வல்லரசு என்றால் பொருளாதாரமும் ராணுவமும் என்றும் பலரும் நம்பிக்கொண்டிருக்க கலையும் இலக்கியமுங்கூட ஒரு நாட்டின் வல்லரசுக்கான இலக்கணங்கள் என இயங்குவதாலேயே இன்றளவும் தனித்துவத்துடன் நிற்கின்றனர். அனைத்துத் துறைகளிலும் நித்தம் நித்தம் புதுமைகளை விதைத்தவண்ணம் இருக்கிறார்கள். யுகத்தோடு பொருந்தக்கூடிய, யுகத்தின் தேவைகளைப் பூர்த்திசெய்யவல்லது எதுவோ அதைமட்டுமே மனித இனம் பூஜிக்கிறது, அதை அளிப்பவர்களையே கொண்டாடுகிறது. ‘Survival of the fittest’ என்பது நிரந்தர உண்மை. அதன் சூட்சமத்தை மேற்கத்தியர்கள் நன்றாகவே புரிந்துவைத்திருக்கிறார்கள் என்பதென் அனுமானம்.

பெருமைகளைப் பற்றி பேசுகிறபோது அதன் சிறுமைகளைப் பற்றியும் பேசத்தான் வேண்டும். பிரான்சு அப்பழுக்கற்ற நாடு அல்ல. 30 ஆண்டுகால பிரான்சு வாழ்க்கை பல ஏமாற்றங்களையும் தந்துள்ளது. அரசுக்குமேல் அதிகாரம் படைத்திருந்த மதத்தை எதிர்த்து சுதந்திரத்தின் மேன்மையை ருசிக்கவைத்த வொல்தேர் பிறந்த மண்ணில்தான் அச்சுதந்திரம் அனைவருக்குமானதல்ல, ஐரோப்பியருக்கு மட்டுமே பொருந்தும் என்று வாதிடக்கூடிய அறிவு ஜீவிகளையும் பார்க்கிறேன். அலுவலங்களில், அன்றாட பயணங்களில், உரிமைகளைக் கேட்டு நிற்கிறபோது குடியுரிமையைக் கடந்து எனது நிறமும், பூர்வீகமும் எனக்கான உரிமையைப் பறிப்பதில் முன்நிற்கின்றன. எனினும் இது அன்றாடப் பிரச்சினைகள் அல்ல ஆடிக்கொருமுறை அம்மாவசைக்கொருமுறை நிகழ்வது. சொந்த நாட்டில் சொந்த மனிதர்களால், ஒரு தமிழன் இன்னொரு தமிழரை அல்லது தமிழச்சியை நிறம், பொருள், சாதி, சமயம், செல்வாக்கு அடிப்படையில் நிராகரிப்பதை ஒப்பிடுகிறபோது இது தேவலாம்போல இருக்கிறது. இங்கே உழைப்பும் திறனும் மதிக்கப்படுகின்றன. இன்றைக்கும் ஏதொவொரு காரணத்தை முன்வைத்து ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானவர்கள் மேற்கத்திய நாடுகளை தேடி வருகிறார்கள்

உலகத் தினசரிகளில் அமெரிக்கா பிரிட்டனுக்கு அடுத்தபடியாக ஏதோவொரு காரணத்தால் செய்தியில் பிரான்சு இடம் பெறுகிறது. உலக நாடுகளில் அதிகம் சுற்றுலா பயணிகளைக் ஈர்க்கிற நகரமாக பாரீஸ் இருப்பதைப்போலவே, உலக நாடுகளின் தலைவர்களுக்கு பிரான்சு அதிபர் அழைப்பும், பாரீஸ் நகரில் கால்பதிப்பதும் கனவாக இருக்கிறது. ஐக்கிய நாட்டு சபையின் நிரந்தர உறுப்புநாடாக இருப்பதைபோலவே, உலக நாடுகளின் நலன் கருதி (?) இயங்குகிற அத்தனை அமைப்புகளிலும் (எதிரெதிர் அணிகளிலுங்கூட ) பிரான்சு இடம்பெற்றிருப்பதென்பது ‘புவிசார் அரசியலில்’ இநாட்டுக்குள்ள முக்கியத்துவத்தைத் தெரிவிக்கிறது. உலகமெங்கும் பிரெஞ்சு மொழி பேசுகிறவர்கள் இருக்கிறார்கள். ஆங்கிலத்திற்கு நிகராக அல்லது ஆங்கிலத்திற்கு அடுத்தப்படியாக பரவலாக பேசப்படும், கற்கப்படும் முக்கிய மொழிகளில் பிரெஞ்சும் ஒன்று. உலகில் அதிகமக்களால் பேசப்படுகிற மொழியென சொல்லப்படும் மாண்டரின், இந்தி, ஸ்பானிஷ், அரபு மொழிகளைக்காட்டிலும் செல்வாக்குள்ள மொழி. அதுபோல நாம் முழக்கங்களாக மட்டுமே அறிந்த கடமையும், கண்ணியமும், கட்டுப்பாடும் மக்களின் மூச்சுக்காற்றாக இருப்பதும் பிரெஞ்சு சமூகத்தின் வெற்றிக்கு காரணம். பிரான்சுநாட்டின் நிலம், நீர் மலைகள், பூத்துகுலுங்கும் கிராமங்கள், பரந்த வயல்வெளிகள், நகரங்கள், கிராமங்கள், பனிப் பூ சொரியும் குளிர்காலம், பூத்து மணம் பரப்பும் வசந்தம், சிலுசிலுக்கும் காற்று, இதமான வெயில் ரெம்போவின் கவிதைகள், குளோது மொனேயின் ஓவியங்கள், புதுப் புது நுட்பங்களையும் ரசனைகளையும் படைப்பிலக்கியத்தில் கொண்டுவந்த எழுத்தாளர்கள், கலைஞர்கள், சேனல் 5 பர்ப்யூம், பொர்தோ ஒயின், பிரெஞ்சு பாலாடைக்கட்டிகள், ஏர்பஸ், சேன் நதி, லூவ்ரு, லூர்து அனைத்துக்கும் மேலாக ‘பெண்கள்’ என்று ஒரு மாமாங்கத்திற்கு சொல்ல இருக்கின்றன.

(தொடரும்)

நன்றி: சொல்வனம்

 

மொழிவது சுகம் ஜூலை 5 2015

அ. இலக்கிய சொல்லாடல்கள் -3

கலை கலைக்காக (Art pour l’art)

“கலை கலைக்காக” அல்லது ‘art pur’ ( ‘தூய கலை’ அல்லது அசல் நெய் என்பதுபோல ‘அசல் கலை’ ) என்ற குரல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில், ஒலிக்கத் தொடங்கியது. படைப்பிலக்கியம் சுதந்திரமாக இயங்கவேண்டி பலரும் தீவிரமாக செயல்பட்ட நேரத்தில் இக்குரல்கள் கேட்டன. “எவ்வித விசாரணைக்கும் உட்படுத்தவேண்டிய அவசியம் படைப்புகளுக்கில்லை”, “தமது முடிவைத் தாமே தீர்மானிக்கக்கூடியவற்றை மட்டுமே படைத்தல்” போன்ற கனவுகளுக்குரியவையாக அக்குரல்கள் இருந்தன. இன்றைய நவீன இலக்கியத்தில், ஒரு பிரிவினரின் முன்னோடிகள் அவர்கள். “மக்களைப் பற்றியும், தங்கள் சமூகத்தைப் பற்றியும் அக்கறை கொள்ளாத மனிதர்களுக்கு இவையெல்லாம் ஒரு சால்ஜாப்பு” என எதிர் தரப்பினர் (கலை மக்களுக்காக) குற்றம் சாட்டினார்கள். கலையின் அனைத்து சாத்தியகூறுகளையும் முயற்சி செய்ததோடு, அறிவோடு முரண்பட்டு, உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த கற்பனை நவிற்சி வாதமும் (Romanticisme) ஒருவகையில் “கலை கலைக்காக” என்ற வாதத்திற்குக் காரணம், குறிப்பாக அதன் “சுயாதீன உத்வேகம்” (Libre inspiration).

‘பல்ஸாக்'(Balzac)க்கின் ‘Illusions Perdues’ கதை நாயகனிடம், எந்த வாழ்க்கையைத் தேர்வு செய்வாய்? என்கிற கேள்வியை முன்வைக்கிறபோது:எளிமையான படைப்பாளிகள் கூட்டத்தோடா? ஆடம்பரமான பத்திரிகையாளன் வாழ்வா? – அவன் தேர்ந்தெடுப்பது படைப்பாளிகள் கூட்டத்தை, அதுமட்டுமே கலைஞனுக்குரிய வாழ்வாக இருக்க முடியும் என நம்புகிறான். ‘கலை கலைக்காக’ என்றவர்களுக்கு எதிராக ஒரு பெரிய சொற்போரே நடந்தது. எதிரணியில் இருந்தவர்கள் உங்கள் படைப்பில் அப்படி என்ன இருக்கிறது? அதன் உபயோகம்தான் என்ன? எனக்கேட்டபோது தெயோபில் கொத்தியெ ( Théobile Gautier): “அழகைபோற்றுகிறோமே, அது போதாதா, வேறென்ன வேண்டும்? ” எனக்கேட்டார்?

‘கலை கலைக்காக’ என வாதிட்டவர்களுக்கும், அவர்களின் எதிராளிகளுக்குமிடையே 30 ஆண்டுகளுக்கு மேலாக நடந்த யுத்தம் நீதிமன்றம் வரை சென்றது. எங்கள் செயல்பாட்டில் எவரும் குறுக்கிட சகியோம், என்றவர்கள் நீதிமன்றத்திற்குப் போக நேர்ந்தது ஒரு முரண் நகை. கொத்தியெ, பொதுலெர், பொபெர், கொங்க்கூர் சகோதரர்கள் எனப்பலரும் தங்கள் கொள்கையைப் பறைசாற்ற தேர்வு செய்த இடம் “Le salon de Madame sabatier” ( மதாம் சபாத்தியெ ஒரு Demi-mondaine – அதாவது தாசி அபரஞ்சி ரகம்) “.

‘தூய கலை’ என்ற பெயரில் அழகியலை சுவீகரித்துக்கொண்டவர்களை, சமூகம் சார்ந்து செயல்பட்ட இலக்கியவாதிகள் நிராகரித்தனர். “அழகியல் குறித்து வாய்கிழிய பேசுகிறார்கள் ஆனால் அதில் சமூகத்தின் எதார்த்தநிலைக்கும் இடமுண்டு என்பதை எப்படி மறந்துபோனார்கள்” என்பது இவர்களுக்கு எதிராக வைக்கப்பட்ட குற்றசாட்டு.. மார்க்ஸிய அபிமானிகள் குறிப்பாக Ecole de Francfort, எங்களிடம் இதுபற்றி பேசவே வேண்டாம் என ஒதுங்கிக் கொண்டனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே இக்குரல்கள் அடங்கி ஒலிக்கத் தொடங்கின. சமூகம் சார்ந்த விழுமியங்களை நிராகரிக்கிற இக்குரல்கள் இன்றுங்கூட அவ்வப்போது கேட்கின்றன. ஒட்டுமொத்த சமூகமே அழிந்தாலும் பிரச்சினை இல்லை ஆனால் எனக்கு (எழுத்தாளனுக்கு – இந்திரலோகத்து பிரஜை? ) ‘நகச்சுத்தி’ வந்தால் கூட அது அழகியல் – “கலை கலைக்காக” என்கிற சவடால் கூட்டம் பாரீஸில் மட்டுமில்லை சுங்குவார்பட்டியிலும் இருக்கிறது.

————————————–
ஆ. காஃப்காவின் கையெழுத்து பிரதிகள்

காஃப்காவின் கையெழுத்துப் பிரதிகளுக்காக அவற்றின் தற்போதைய உரிமையாளருக்கும் -இஸ்ரேல் மற்றும் ஜெர்மன் நாட்டுக்கும் நடக்கும் சட்டப்போர் பற்றி ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன்பு இப்பகுதியில் ஏழுதியிருந்தேன். கிட்டத்தட்ட அது முடிவுக்கு வந்துவிட்டதெனலாம்.

காஃப்கா இறக்கும் தருவாயில், தான் இறப்பிற்குப் பிறகு அழித்துவிடவேண்டுமென தன் நண்பர் மாக்ஸ் பிராட் என்பவரிடம் ஒப்படைத்திருந்த (1924)கையெழுத்து பிரதிகளின் தலையெழுத்து வேறாக இருந்தது. செக்கோஸ்லோவாக்கியாவை ஜெர்மன் கைப்பற்றியபோது, காஃப்காவின் நண்பர் பாலஸ்தீனத்திற்குத் திரும்பினார்(1939), பின்னர் இஸ்ரேல் குடிமகன் ஆனார். இவரும் தன் பங்கிற்கு ஒரு உயிலை எழுதி பல மில்லியன் டாலர் மதிப்புள்ள கையெழுத்துப்பிரதிகளை தமது அந்தரங்கப் பெண் செயலாளர் ‘எஸ்த்தர் ஹோஃப். என்பவருக்கு உரிமை ஆக்கினார் (1968). காஃப்காவின் நண்பர் எழுதிய உயிலி வாசகம், ” இஸ்ரேல் பல்கலை கழகத்திற்கோ, தெல் அவிவ் மாநகராட்சி நூலகத்திற்கோ, வேறு நிறுவனத்திற்கோ அல்லது அந்நிய நாடொன்றிர்க்கோ “அப்பெண்மணி விரும்பினால் கொடுக்கலாம் என்றிருந்தது. உயிலிலிருந்த “அந்நிய நாடொன்றிர்க்கும் கொடுக்கலாம்” என்ற வாசகம் பிறவற்றைக்காட்டிலும் பொன் முட்டை இடுவதாக இருந்தது. எப்படியோ பல ஆண்டுகள் காஃப்காவின் கையெழுத்துப்பிரதிகளில் ஒரு சில இஸ்ரேல் நாட்டில் -டெல் அவிவ் நகரில் பெண்மணி வீட்டிலும்; பெரும்பாலானவை சுவிஸ் வங்கியொன்றின் காப்பகப் பெட்டியிலும் இருந்தன. ‘விசாரணை’ நாவலின் கையெழுத்துப் பிரதியை ஜெர்மன் தேசிய ஆவணக் காப்பகத்திற்கு விற்கவும் செய்தார். இந்நிலையில் காரிதரிசிப் பெண்மணி 2007ல் இறந்தார். இவர் தன்பங்கிற்கு ஒரு உயிலை எழுதி தமது இருமகள்களுக்கும் சீதனமாக அவற்றைக் கொடுத்தார். அன்றிலிருந்து காஃப்காவின் வேர் எங்கள் மண்ணுக்குச்ச்சொந்தம், எனவே கையெழுத்துப் பிரதிகள் எங்களுக்கேச் சொந்தமென ஜெர்மன் அரசாங்கமும், அவர் மாக்ஸ் பிராட் எங்கள் குடிமகன், அவர் உயிலும் எங்களுக்கே முன்னுரிமை அளிக்கிறது எனவே கையெழுத்துபிரதிகள் எங்களுக்கேச் சொந்தம் என இஸ்ரேல் அரசாங்கமும், எஸ்தெர் ஹோபின் வாரிதாரர்களுக்கே சொந்தமென காரிதரிரிசியின் பெண்களும் வாதிட, டெல் அவிவ் நீதிமன்றம் இஸ்ரேல் நாட்டின் தேசிய ஆவணக் காப்பகத்திடம் கையெழுத்துப்பிரதிகள் அனைத்தும் ஒப்படைக்கப்படவேண்டுமென தீர்ப்பளித்துள்ளது.
——————————–