அண்மையில் எதிர்பாராதவிதமாக மார்க்ஸின் கொடுங்கனவு என்ற நூலைப்பற்றிய விமர்சனமென்ற பெயரில் வசைதொகையறாவொன்றை வாசிக்க நேர்ந்தது. அதற்கு எனது எதிர்வினை.
நண்பர்களுக்காக:
http://74.208.102.131/index.php?option=com_content&view=article&id=19836:2012-05-22-11-28-07&catid=1475:2012&Itemid=718
தமிழில் நூல் விமரிசகர்கள் என்ற பிரிவினர் இல்லை. விமரிசனம் எழுதுபவர்களில் நடுநிலையாளர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அ. ராமசாமி, தமிழவன், பாவண்ணன், ந. முருகேசபாண்டியன், போன்றவர்கள் இருக்கிறார்கள். இவர்களின் விமரிசனம் எத்தகையதென்றாலும் நான் ஏற்பேன். அவர்கள் எழுத்தூடாக தெரியவந்த உண்மை அது. மிச்சமுள்ள 99 விழுக்காட்டினர் கலவையை பிரித்தெடுப்பது சுலபம்: அவர்கள் இரண்டே இரண்டு பிரிவினர்: துதிபாடிகள், வசைபாடிகள். முன்னவர்கள் ஒருபிரிவினர் விமர்சனமென்ற பெயரில் நூலையும், நூல் சம்பந்தப்பட்டவர்களையும் இனியில்லையென்று தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவார்கள். பின்னவர்கள் சம்பந்தப்பட்ட நூலை இழிவுபடுத்துவதற்கு முகாந்திரங்களென்ன என யோசித்தே எழுதத் தொடங்குவார்கள். இரண்டிற்கும் பின்னே ‘அரசியல்’ இருக்கிறது, இது ஊரறிந்த இரகசியம்.
இரண்டாவது கூட்டத்தைச்சேர்ந்த ஒரு நபருக்கு அண்மையில் கிடைத்த நூல் ‘மார்க்ஸின் கொடுங்கனவுகள்’. நியாயமான விமரிசினமென்றால் ஏற்கத்தான் வேண்டும், ஆனால் இதொரு வசைபாடியின் விமரிசனமென்பதால் எனது தரப்பை முன்வைக்க வேண்டியிருக்கிறது. ரிக்கார்டு டான்ஸைக் கலையென நம்பி தமிழககிராமங்களில் இப்போதெல்லாம் ‘எழவு விழுந்தால்கூட’ ஏற்பாடு செய்கிறார்கள். அந்நிலை நாம் பெரிதாய் நம்பிக்கொண்டிருக்கும் படைப்புலகத்திற்கும் நேர்ந்துவிடக்கூடதென்பதால் பதில் சொல்ல வேண்டியதாயிற்று.
‘மார்க்ஸின் கொடுங்கனவுகளை’ எழுதிய டெனிஸ் கொலன் அவர்களின் அபிமானிகளை குறிவைத்தே எழுதியவர் இதில் எந்தக்குற்றமும் இருப்பதாகத் தெரியவில்லை அதில் அவர் வெற்றியும் பெற்றிருக்கிறார். மார்க்ஸின் கொடுங்கனவு பிரெஞ்சு மூலத்திற்கு ஊடகங்கள், சஞ்சிகைகளில் (இடது சாரி பத்திரிகைகளும் அடக்கம்) வெளிவந்த விமர்சனங்கள் இருக்கின்றன. இப்பிரெஞ்சு விமர்சனங்கள் மார்க்ஸ் தாசர்களால் எழுதப்பட்டதல்ல துறைசார்ந்த வல்லுனர்களால் எழுதப்பட்டது. ‘மார்க்ஸின் கொடுங்கனவை’ விமர்சனம் செய்ய தமக்குகுள்ள தகுதிகள் என்பதைச் சொல்லாமல் சொல்ல, தமிழில் எட்டாம் வகுப்பு வாசகர்களை மிரட்டவென்று பலரும் எடுக்கும் ஆயுதத்தை நண்பரும் எடுத்திருக்கிறார். அவர்கள் வேறுயாருமல்ல தெரிதா, ரொலான் பாத், போன்றவர்கள் அவர்களைப் பற்றி ‘மார்க்ஸின் கொடுங்கனவை’ மொழிபெயர்த்த எனக்கும், என்னைக்காட்டிலும் கூடுதலாக டெனிஸ் கொலனும் அறிவார். டெனிஸ் கொலன் நூலை பிரெஞ்சில் விமரிசனம் செய்தவர்களும் நன்கறிவார்கள்.
மார்க்ஸின் கொடுங்கனவை யார்வேண்டுமானாலும் படிக்கலாம், ஆனால் அதன்மீது பாரபட்சமற்ற ஒரு விமரிசனத்தை வைக்க வறட்டு உணச்சிக்கொப்பளிப்பு போதாது, பொருளியல் அறிவும், மூலதனத்தின் முக்கியமான பகுதிகளையாவது விளங்கிக்கொண்டும் இறங்கவேண்டும். அப்படி தமிழ்நாட்டில் இல்லாமலில்லை. ஆனால் தற்போது அவர்கள் இங்கே அதனைச்செய்வதில்லை என்பதுதான் படைப்புலகிற்கு நேர்ந்துள்ள சோகம்.
1. இந்த விமரிசினத்தின் திசை:
“தன்னுடைய காலத்திலேயே இந்த நாட்டில் ஒரு சோசலிச சமுதாயம் மலர்வதைக் கண்ணால் கண்டுவிடுவோம் என்ற திடமான நம்பிக்கையில் போராடிய ஆர். நல்லகண்ணு, பாலன், என். சங்கரைய்யா, டி.ஆர்.எஸ். போன்ற அன்றைய இளைய தலைமுறையினர் முதல் அவ்வாறில்லாத இன்றைய இளைய தலைமுறை வரை விடை தேடும் சிக்கல் ஒன்றிற்கு விடை சொல்ல முன்வரும் எந்தப் பிரதியும் உற்சாகமூட்டக்கூடியதுதானே!
முதலாளித்துவக் கொடுமைக்கும், இன்னும் தொடரும் நிலவுடைமை, சாதிய, பெண்ணடிமை மனோபாவங்களும் மடிந்து, என்று விடியும் எமது வாழ்வு?’ என்று ஏங்கும் நிலையில் கோடிக்கணக் கான ஜீவன்கள் இந்த மண்ணில் உள்ளன.
‘மனிதர்கள் மனிதர்களாக வாழும் ஒரு சமூகமாக இந்தச் சமூகத்தை மாற்ற முடியும்’ என்ற நம்பிக்கையுடன் அதற்கான மார்க்கத்தையும் முன் வைக்கும் தத்துவமாக மார்க்ஸியம் அல்லாது வேறொரு தத்துவம் இதுவரை நமக்குக் கிடைக்க வில்லை. இந்த அமைப்பிலேயே ஏதாவது சிறிது மேம்படுத்திக்கொள்ள சில நலத்திட்டங்களை மட்டும் சொல்லும் தத்துவங்கள் வேண்டுமானால் ஏராளம் உள்ளன. ‘வள்ளுவனும் கம்பனும் கனவாக முன்வைத்த பொதுவுடைமையை நனவாக்கவும் முடியும்’ என்று தெளிந்த பாரதியின் நம்பிக்கையைத் தொடர மனித குலத்திற்கு மார்க்ஸியத்தைத் தவிர வேறொரு தத்துவம் இதுவரை கிடைக்கவில்லை.”
கட்டுரையாளர் இத்தனை பில்டப் எதற்காகக் கொடுக்கிறாரென்று கேட்கறீர்களா?
“ஒரு மார்க்ஸியவாதியின் நிலையிலிருந்து முன் வைக்கப்படும் விமரிசனம் அல்ல. அதாவது, நூலாசிரியர் டெனிஸ்கொலன் முன்வைக்கும் கருத்துக்கள் மீதான ஒரு மார்க்ஸிய வாதியின் எதிர்வினையாக இது அமைக்கப்படவில்லை” என்று அவர் சத்தியம் செய்வதற்காக.
இதைத்தான் தமிழில்
“கணக்கன் கணக்கறிவான் தன் கணக்கைத் தான் அறியான்.” என்பார்கள்.
2. முதல் நெருடல்:
மார்க்ஸின் கொடுங்கனவு புத்தகத்தின் பின் அட்டையில் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதென சொல்லப்பட்டிருப்பதாகவும் புத்தகத்தின் உள்ளே பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதாக சொல்லப்பட்டிருப்பதாகவும், இந்த அரிய உண்மையை நண்பர் கண்டுபிடித்துவிட்டதாகச் சொல்லியிருக்கிறார். ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதென புத்தகத்தின் பின் அட்டையில் உண்மையில் போடவேண்டுமென நோக்கமிருப்பின், புத்தகத்தின் உள்ளே பிரெஞ்சிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டதென்பதைப் பெருமையுடன் சொல்லிக்கொள்ள வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை. காலச் சுவடு எதனையும் கவனத்துடன் செய்பவர்கள், ஆனைக்கும் அடிச்சறுக்குமென்பதுபோல அத்ததவறு நிகழ்ந்துவிட்டது. புத்தகத்தின் மொழிபெயர்ப்பாளர் பிரதிகள் கைக்குக் கிடைத்ததும் அதனைச் சுட்டிக்காட்டினேன். காலம் கடந்துவிட்டது, அதை பெரிதுபடுத்தவில்லை. அவ்வளவுதான். இதில் எந்த வியாபார தந்திரமுமில்லை.
கட்டுரையாளர் பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்த்ததென்று சொல்லப்படுவதை “மூல பாஷையான எபிரேயு பாஷையிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டது என்பதுபோல” என நக்கலடிக்கிறார். இதில் கொஞ்சநஞ்சமெல்ல எனக்கு நிறைய பெருமை இருக்கிறது. கட்டுரையாளருக்கு எபிரேயு பாஷையிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்கும் ஆற்றல் இருக்கலாம், கிரேக்கம், இலத்தீன் மொழிகூட அறிந்திருக்கலாம். எனக்குத்தெரிந்தது தமிழும், ஆங்கிலமும், பிரெஞ்சும் மட்டுமே. இதில் வெட்கப்பட ஒன்றுமில்லை. மாறாக நிரம்ப மகிழ்ச்சி. காரணம் பிரெஞ்சு நூல்களுக்கு மொழிபெயர்ப்புரிமையை அதிகார பூர்வமாக பெறவேண்டுமானால், மூல நூலான பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்க்கவேண்டுமென்பது பிரெஞ்சு அரசாங்கம் கலை இலக்கிய பண்பாட்டுத்துறை முன் வைக்கும் நிபந்தனை. அந்நிபந்தனையை படைப்புதுறையில் அரிதாக நிறைவேற்றுகிற ஒரு சிலரில் இந்திய அளவில் நானுமொருவன். எனது இடத்தில் எவரிருந்தாலும் சொல்லத்தான் செய்வார்கள். அரசியல்வாதிகளையும் விஞ்சி விளம்பரம் தேடும் படைப்புலககில், எனக்கிருக்கும் உண்மையான தகுதியை பெருமையாகச்சொல்லிக்கொல்வதில் தவறேதுமில்லை
தமிழில் என்ன நடக்கிறதென தெரியாது. மேற்கத்தியர்கள் மொழிபெயர்ப்புக்கென சில விதிமுறைகளை வைத்திருக்கிறார்கள். மிகவும் அரிதான சூழல்களைத் தவிர்த்து அவற்றில் கறாராக இருக்கவும் செய்கிறார்கள்.
1. உதாரணமாக பிரான்சு நாட்டில் பிற மொழிகளிலிருந்து பிரெஞ்சுக்குக் கொண்டுவரவேண்டுமெனில் மொழிபெயர்ப்பாளரின் தாய்மொழி பிரெஞ்சாக இருக்கவேண்டும்.
2. நூலின் மூலமொழியிலிருந்து நேரடியாக அவை மொழிபெயர்க்கப்படவேண்டும்.
அவ்வாறே தங்கள் மொழியிலிருந்து வேற்று மொழிக்குப்போகும்போதும் பிரெஞ்சிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்கவேண்டுமென எதிர்பார்க்கிறார்கள். இந்த அடிப்படை விதிமுறைகளோடு சில உட்பிரிவுகளையும் பிரெஞ்சு மொழிபெயர்ப்புலகில் திருப்திசெய்யவேண்டும்.
உதாரணமாக பிரெஞ்சில் அமெரிக்கன் இங்கிலிஷ், பிரிட்டிஷ் இங்கிலிஷ், இந்தியன் இங்கிலிஷ் என்றெல்லாம் வகைப்படுத்தபடுத்தப்பட்ட பிரெஞ்சைத் தாய்மொழியாகக்கொண்ட மொழிபெயர்ப்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அந்தந்த நாடுகளின் மொழிபெயர்ப்பைமட்டுமே கையிலெடுக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் பிரான்சு நாட்டில் மொழி பெயர்ப்பாளர் பெயரை பார்த்தவுடனே மூல நூலசிரியர் யாரென்று சொல்லிவிடலாம். காரணம் அவர் மொழிபெயர்ப்பது அனைத்துமே அந்த மூல ஆசிரியரின் படப்புகளாக இருக்கக்கூடும். இம்மொழிபெயர்ப்பாளர்கள் சம்பந்தப்பட்ட நாடுகளில் தொடர்ந்து பல ஆண்டுகள் தங்கியிருப்பார்கள். படைப்பாளியை மட்டுமல்ல படைப்பாளியின் மக்களையும் படைப்பாளியின் உலகையும் நன்கு உள்வாங்கிக்கொண்டே மொழிபெயர்க்க உட்காருவார்கள். தமிழ் படைப்புலகில் அத்தகைய வாய்ப்புகள் குறைவு. அதற்குப்பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் காலச்சுவடின் மொழிபெயர்பாளர்களுக்கு பதிப்பாளர் அத்தகைய வாய்ப்புகளை வழங்கிவருகிறார்.
ஆங்கிலத்திலிருந்து தமிழ் படுத்துவதைக்கூட அமெரிக்காவிலிருக்கும் தமிழரோ இங்கிலாந்திலிருக்கும் தமிழரோ அந்தந்தநாடுகளின் மொழிபெயர்ப்பில் கவனம் செலுத்தினால் தமிழுக்குக் கூடுதலாக நன்மைகள் பிறக்குமென்பது எனதுக் கருத்து. மொழிபெயர்ப்பு என்பது மொழியைப் பெயர்ப்பதல்ல, பண்பாட்டை பெயர்ப்பது, முதல்நூலின் படைப்பாளியை புலம்பெயரவைப்பது. இதிலுள்ள உண்மையை சார்பற்று கண்டறியவேண்டும். ஆக பிரான்சிலிருந்துகொண்டு பிரெஞ்சில் மொழிபெயர்க்கும் எனக்கு நியாயமான கர்வங்கள் இருக்கின்றன.
‘
‘மார்க்ஸின் கொடுங்கனவு’
” சிந்தனைக்கு நாங்கள் ஏகபோக உரிமையாளர்களெனச் சொல்லிக்கொள்கிறவர்கள் கார்ல் மார்க்ஸ் சவப்பெட்டியின் என்ச்ஜிய ஆணிகளை இறுக அடித்துக்கொண்டிருக்கிற காலமிது. புதைத்த ஆண்டைக் கணக்கிற்கொண்டால் அவரது மரணம் உறுதிசெய்யப்பட்டவொன்று. ஆனாலும் சிற்சில சமயங்களில் அசைந்துகொடுக்கிறது. நான் இறக்கவில்லை என்கிறது. இன்றளவும் அவரைத் துரத்துகிற ஏச்சும் பேச்சும் அல்லது இனி அவரை நினைத்து என்ன ஆகப்போகிறதென்கிற பாசாங்குகளும் மார்க்ஸ் இறப்பை நம்ப மறுப்பதற்கான சான்றுகள்.
” இச்சூழல் மிக மோசமான முரண்களைக் கொண்டுள்ளது. உண்மையில் காலாவதியான மார்க்ஸியத்தின் தந்தையாக மார்க்ஸ் இருப்பாரெனில் சமூக அறிவியல் மற்றும் வரலாற்று புலத்தின் எதிர்காலத்தை அதாவது இன்றைய உலகைக்குறித்து மிகுந்த தீர்க்க தரிசனத்துடன் சரியாகத் தெரிவித்த சிந்தனையாளராக அவர் இருந்திருப்பாரா என்பதை யோசிக்கவேண்டும்.”
டெனிஸ்கொலனை அறிந்தவர்களுக்கு, (பரமார்த்த குருவின் சீடர்களுக்கல்ல) அல்லது இந்நூலை முற்றுமுதலாக ஆழ வாசித்தவர்களுக்கு என்ன சொல்லவருகிறார் என்று புரிந்திருக்கும். மார்க்ஸியம் பற்றிய டெனிஸ்கொலன் விமரிசன நூலை தமிழ் படைப்புலக பெரும்பாலோரின் விமரிசனப் சூத்திரத்துடன்அணுகக்கூடாது. நம்மில் பலருக்குப் பூச்சொரியவும், புழுதிவாரி தூற்றவும் மட்டுமே தெரியும். மார்க்ஸின் கொடுங்கனவு நூலை விமரிசனம் செய்தவர் தாம் மார்க்சியவாதி அல்லவென அழுகுணி ஆட்டம் ஆடுவதைத் தொடக்கத்தில் எழுதியிருந்தேன். மார்க்ஸியம் பற்றிய விமரிசின நூலில் மொத்தப்பக்கங்கள் 270லும் மார்க்ஸ்பற்றிய துதிகளாக இருக்கவேண்டுமென அவர் நினைக்கிறார். மன்னிக்கவும் அதற்கு சாத்தியமில்லை. விமரிசனமென்பது நிறை குறைகளை பேசுவது. கொலன் அதனைச் சரியாகவே செய்திருக்கிறார். புத்தகத்தில் முழுக்க முழுக்க மார்க்ஸியத்தில் தெளிந்தவராக, இறுதிவரை மார்ஸ்சியத்தின் ஆதரவாளராக செயல்படும் டெனிஸ் கொலன் வேண்டிய இடத்தில் அவரை கண்டிக்கவும் தவறவில்லை. ஏனெனில் அவர் மார்க்ஸின் பக்தன், கட்டுரையாளரைபோல மார்க்ஸை வைத்து பிழைப்பு நடத்தும் பூசாரிகள் கூட்டமல்ல. கீதையையும் காண்டீபனையும் வலிய மார்க்ஸ¤டம் ஒப்பிட்டுப்பேசிய அவலத்தால் இப்படி எழுதவேண்டியதாயிற்று- நவீன மார்க்ஸியவாதிகள் மார்க்ஸைக் காப்பாற்ற கண்ணனை அழைப்பார்கள் போலிருக்கிறது.
நான் உண்மையில் எதிர்பார்த்தது முதலாளிய வர்க்கத்தினரின் கண்டனக்குரலை. பல இடங்களில் முதாளியத்தைக்குறித்த எள்ளல்களும் மார்க்ஸியம் குறித்த துதிபாடல்களும் இந்நூலில் நிறைய இடம்பெறுவதும் இறுதியில் மார்க்ஸியத்தின் சார்பாக தர்க்கத்தை முடிப்பதும் காரணங்கள். இந்நூலில் அடிநாதமாக மூன்று விஷயங்கள் இருக்கின்றன. மார்க்ஸியம் எங்கே பொய்த்தது, எங்கே வெற்றிபெற்றது என்பதொன்று, மார்க்ஸியவாதிகளென்கிற பூசாரிகள் இழைத்த தவறுகளென்ன, எங்கே போய்கொண்டிருக்கிறார்கள்? என்பது இரண்டாவது. பிறப்பு முதற்கொண்டு முதலாளியியம் எப்படி சாதுர்யத்துடன செயல்பட்டுவருகிறது என்பது மூன்றாவது. இறுதியில் தம் பங்கிற்கு சில மாற்று யோசனைகளை வைக்கிறார். இங்கே அவற்றை பட்டியலிட்டால், தமிழ் தொலைக்காட்சிகளில் சினிமா விமரிசனம் என்ற பெயரில் காட்சிகளை பிய்த்து போடுவதுபோல ஆகிவிடும். விருப்பமுள்ளவர்கள் படியுங்கள். கேள்விகளிருப்பின் எழுதுங்கள். கேள்விகள் நூலில் பேசப்படும் விஷயங்கள் பற்றியதாக இருக்கவேண்டும்.
டெனிஸ் கொலன் நூலுக்கு எழுதியுள்ள முன்னுரையே நூல் சொல்ல வருவதென்ன என்பதைக் கோடிட்டுக்காட்டிவிடுகிறது. மார்க்ஸியம்பற்றிய பகுப்பாய்வு என்ற வகையில் மார்க்ஸ் தவறுகள் சுட்டிக்காட்டப்படவேண்டும். அப்படிச்சொல்லபடவில்லையெனில் அதுபகுப்பாய்வு நூல் அல்ல. இன்றைய உண்மைகள் தெளிவாக இருக்கின்றன. இதற்கெல்லாம் டெனிஸ்கொலனை குறைசொல்ல ஒன்றுமில்லை. இல்லையில்லையென்றால் யார் தடுத்தது. உங்கள் கனவு காணும் உரிமையை யார் பறித்தது. மார்க்ஸியத்தின் மீது உண்மையில் நம்பிக்கைவைத்து ஆக்கபூர்வமாக முதலாளியியத்தை எதிர்கொள்ளும் வழியை சிந்திப்ப்பவர்க்கு டெனிஸ்கொலன் எழுதியிருக்கிறார். சோஷலிஸத்திற்கேற்பட்ட சரிவினை மிகத் துல்லியமாக முன் வைக்கிற டெனிஸ் கொலன், அதில் முதலாளியியத்தின் பங்கினையும் சுட்டத் தவறுவதில்லை. மார்க்ஸின் முக்கிய கருத்தியங்களெல்லாம் விசாரணைக்கு உட்படுத்துகிறார். கொஞ்சம் சகிப்புத் தன்மையோடு, அவற்றை வாசித்து மீசையில் மண் ஒட்டவில்லை என்கிறவர்கள் எழுந்திருக்க முயற்சிக்கவேண்டும். விரும்பியோ விரும்பாமலோ சமூகத்தில் ஒவ்வொரு தனிமனிதனும் முதலாளியாகவே இருக்க நினைக்கிறான். இந்த அடிப்படை உண்மையை விளங்கிக்கொள்ளாமல் அடம் பிடிப்பது அடாவடித்தனம். முதலாளியியத்தின் தந்திரங்களையும், உபாயங்களையும்; மூலதன இயங்கியல், நுகர்வோர் சமுதாயமும் சுரண்டலும், உழைப்பின் மீதான சுரண்டல் அதிகரிப்பு என முதலாளித்துவ உற்பத்தி கூறுகளின் நிரந்தரமாக்கப்பட்ட விதிகள் பலவும் நம் எல்லோரிடமும் இருக்கிறது. என்ன செய்வது ஸ்டாலின் தொடங்கி கேரள காம்ரேட்டுகள் வரை மார்க்ஸை புரிந்துகொண்டிருக்கும் விதத்தை பார்க்கிறபோது, கொலன் சொல்வதுபோல மார்க்ஸின் சவப்பெட்டியின் எஞ்சிய ஆணிகளை முதலாளியியத்தோடு சேர்ந்து இறுக அடித்துவிட்டுத்தான் கட்டுரையாளர் கூட்டம் ஓயும் போலும். இத்தனை களேபரத்திற்குமிடையில் மார்க்ஸியத்தை மீட்கவேண்டுமென நினைப்பவர்கள் ஒன்றிரண்டு பேர் இருக்கக்கூடும் நீங்கள் சொல்லுகிற தோழர் நல்லகண்ணுவும் அதிலொருவர். இது தவிர தமிழ்நாட்டில் மார்க்ஸியத்தில் தேர்ந்தவர்களெல்லாம் இருக்கிறார்கள், நிச்சயமாக வாசிப்பார்கள். பொத்தாம் பொதுவாக முன் முடிவுகளின் அடிப்படையில் புழுதிவாரி இறைக்கமாட்டார்களென்பது நம்பிக்கை.
மொழி பெயர்ப்பு குறித்து.
எல்லா மொழிபெயர்ப்புகளுமே நூறு விழுக்காடுகள் சரியென்று எந்த கொம்பனும் சொல்லமாட்டான்.
மார்க்ஸ் ஒரு சொல் ஒருமொழியில் கறாராக இருந்தார் என்கிறார். அப்படி எப்போதும் இருந்ததில்லை என்பதுதான் என் அனுபவம். எனக்கு யோசனை கூறும் முன்பு தோழர் முனுசாமி தோழர் கந்தசாமியென விளிப்பதை அல்லது எழுதுவதைத் தவிர்த்து காம்ரேட் கந்தசாமியென்றோ காம்ரேட் முனுசாமியென்றோ அழைத்துக்கொள்வதுதான் மார்க்ஸ்சின் ஒரு சொல் ஒரு மொழிக்குப்பொருந்தும்மென மார்க்சியவாதிகளுக்கு முடிந்தால் அறிவுரைகூறுங்கள்.
சோஷலிசத்தையும் பொதுவுடமையையும் பிரித்துணர்வதில் எந்தக்குழப்பமுமில்லை. பிரெஞ்சு தெரிந்த தமிழும் அறிந்த நல்ல மொழிபெயர்ப்பாளர்கள் இருப்பார்கள் அவர்களிடம் கொஞ்சம் ஒப்பிட்டுப்பார்க்கச்சொல்லவும். Dialectical Materialism – பொருள் முதல்வாத உரையாடல் என்மொழிபெயர்க்கப்பட்டதில் எவ்வித தவறுமில்லை. சொல்லப்போனால் அதுதான் சரியான அதற்குகந்த மொழிபெயர்ப்பு, அவ்வாறே பூக்கோவின்
Order of things என்பதையும் தேவையில்லாமல் போகிறபோக்கில் தட்டடையாக பொருள்கொள்வது சரியாகாது.
இந்த எதிர்வினையின் ஆரம்பத்தில் கூறியதை மீண்டும் நினைவு கூர்கிறேன்:
மொழிபெயர்ப்பு என்பது மொழியைப் பெயர்ப்பதல்ல, குயிலாபாளையத்தில் குதிரையை குர்ரமென்று எழுதுவோம் நீயும் அப்படி எழுதென்றுசொல்ல நண்பர் எந்த அதிகாரத்தின்கீழ் இதுபோன்ற எதிர்பார்ப்பினை வைக்கிறாரென்று புரியவில்லை. பூக்கோவை உங்களைவிட கூடுதலாக அறிவேன். மொழிசார்ந்து அல்ல பண்பாடு சார்ந்து. எனவே அதனடிப்படையில் மிகச்சரியாகவே ஒவ்வொரு சொல்லையும் பலமுறை யோசித்து விவாதித்தே மொழிபெயர்க்கிறேன்,எழுதுகிறேன். தமிழில் கலைசொற்களுக்கென்று முறையான அகராதிகளில்லை. மேற்கத்திய உலகில் வருடத்திற்கொருமுறை மொழியின் வளர்ச்சிக்கேற்ப சொற்களின் வருகைக்கேற்ப அகராதிகளும் தம்மை புதுப்பித்துக்கொண்டுவருகின்றன. இங்கே நாட்டாமையாக இரண்டுபேர் எழுதிவிட்டால் அதுசரியோ தப்போ மற்றவர்களும் அதையே கடைபிடிக்கவேண்டுமென்பதுதான் அபத்தம்.
தமிழில் எனக்குக்கிடைத்த மூலதன நூலைவாசித்தேன். அதிலுள்ள குறைகளை இங்கே சொல்வது நியாயமாகாது. மொழிபெயர்ப்பென்றால் ஒன்றிரண்டு தவறுகள் நேரலாம். ஆனால் சரியான மொழிபெயர்ப்பையே தவறென்று வாதிடும் நண்பர்கள் பொருள் மயக்கம்தரும் குறைகளைத் தவிர்க்க கொஞ்சம் அக்கறை எடுக்கவேண்டும். அவற்றைத் திருத்தி நல்லபதிப்பாக கொண்டுவருவது மார்க்ஸியவாதிகளுக்கு அவசியம். நண்பர் தியாகுவின் உழைப்பை பார்க்கிறபோது அது கடினமான காரியமல்ல. தோழர்கள் சீரியஸாக கவனிக்கவேண்டிய பிரச்சினை இது.
நூலை விமர்சிப்பதற்கு முன்பு எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல மார்க்ஸியத்தின் மீதுள்ள தீவிர அபிமானத்தைத் தெரிவித்துவிட்டு நூலைத் தவிர நூலாசிரியன் வரலாற்றையே அறிந்ததுபோல டெனிஸ் கொலன் மீதான விமர்சனம் கட்டுரையாளர் மொழியில் சொல்வதெனில் மன்னிக்க முடியாதக்குற்றம்.
1. டெனிஸ்கொலன் மார்க்ஸியவாதியென்று இங்கே யார்சொன்னார்கள். அவர் மார்க்ஸியவாதியே அல்ல. காலச்சுவடு பதிப்பகமோ மொழிபெயர்ப்பாளனாகிய நானோ எந்த இடத்திலும் அவரை மார்க்ஸியவாதியாக சித்தரிக்கவில்லை. அவரை மார்க்ஸிய சிந்தனாவாதியென்றே பிரெஞ்சு படைப்புலகம் அறியும், அதைத்தான் நாங்களும் பதிவுசெய்தோம். ‘மார்க்ஸியவாதிக்கும்’ ‘மார்க்ஸிய சிந்தனாவாதிக்குமுள்ள’ பேதத்தைக்கூட அறியாமல் இந்த நூலைப்பற்றிய விமர்சனம்செய்யும் துணிச்சல் எதனால் வந்தது. அநேகமாக உங்கள் பார்வையில் புரிதல் தரும் குழப்பம் காரணமாக இருக்குமா அல்லது தமிழ் வாசகர்கள் பொருளற்ற வம்புகளை விரும்பிபடிப்பவர்கள் நம்பிக்கை காரணமா? இதே அணுகுமுறைதான் மொழிபெயர்ப்பிலும் வந்திருக்குமோ?
2. விமர்சிக்க வந்த நூலைக்காட்டிலும் கட்டுரையாளர் காலச்சுவடிடம் காட்டும் அக்கறையும் யோசனைகளும், மொழிபெயர்ப்பாளர் வணிகர் என்ற கண்டுபிடிப்பும், என்ன பெரிதாக பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்த்துவிட்டாய் என்கிறதொனியும் கட்டுரையாளருக்கு வலி வேறெங்கோவென்று விளங்கிகொள்கிறோம்.
வணிகன் என்கிற தகுதி கார்ல் மார்க்ஸை பற்றிய நூலை மொழிபெயர்க்க தகுதியற்றவனாக ஆக்கிவிடுமா? நான் அம்பானியோ, டாட்டாவோ அல்ல ஒரு மளிகைகடை நடத்தி வருகிறேன் அவ்வளவுதான். எங்கேயேனும் மளிகைகடைக்காரன் கார்ல்மார்க்ஸை தொடக்கூடாது கூலித்தொழிலாளிதான் செய்யவேண்டுமென்று விதியிருக்கிறதா. புரட்சியை பாட்டாளிவர்க்கம் நடத்தியதாக சரித்திரமில்லை. புரட்சிக்கு பூர்ஷ்வாக்களைத்தான் நம்பவேண்டியிருந்தது. பிரான்சிலும், ரஷ்யாவிலும் நடந்தது அதுதான். பூர்ஷ்வாக்களை வழி நடத்த அனுமதித்த பாட்டாளிவர்க்கம் மளிகைகடைகாரனுக்குக் கதவைச் சாத்திவிடுமா என்ன?
இதுபோன்ற காரணங்களை முன்வைத்து விமர்சிப்பதைப்பதைத் தவிர்த்து, பதிப்பகத்தின் பெயரையோ எழுத்தாளன் மொழிபெயர்ப்பாளன் பெயர்களையோ நினைவு கூராமல் நேரமிருந்தால் ஒருமுறை முழுவதும் பொறுமையோடு படித்துப்பாருங்கள்.
நன்றி.
Like this:
Like ஏற்றப்படுகின்றது...