Monthly Archives: மே 2019

படித்ததும் சவைத்ததும் -3: ‘புயலில் ஒரு தோணி’ப. சிங்காரம்

படித்ததும் சுவைத்ததும் – 4 : ‘புயலிலே ஒரு தோணி’ – ப. சிங்காரம்

(இத்தொடரிலுள்ள கட்டுரைகள் அவ்வப்போது எழுதப்பட்டு சிற்றிதழ்களிலும், திண்ணைமுதலான இணைய இதழ்களிலும் வெளிவந்தவை)

 

“பண்டைநாள் பெருமைபேசி மகிழும் இனத்தாரிடம் நிகழ்கால சிறுமைகள் மிகுந்திருக்கும்” என உரிமையோடு தமிழினத்தைச் சாடுகிற அசலான இனப்பற்றுள்ள ப. சிங்காரம் தமிழினத்தின் காவலரோ, தமிழினத் தலைவரோ அல்ல ஆனாலும் இனத்தின் எதிர்காலம் குறித்த கவலைகளை தமது எழுத்துகளில் தயக்கமின்றி தெரிவித்திருக்கிறார். எத்தனை படித்தாலும், எங்கே வாழ்ந்தாலும் “அடுத்தக் காட்சிக்காக சினிமா ஜோடனையுடன் தவம் செய்கிறது தமிழர்கூட்டம்”-(பக்கம் 114 -புயலில் ஒரு தோணி ) என்ற அடையாளப்படுத்திக்கொண்டிருக்கும் தமிழினத்தின் பொதுபிம்பத்திற்கும், தங்கள் இலக்கியவெளியை தமிழிலக்கிய வரலாற்றில் முதல் இருநூறு பக்கங்களில் குறுக்கிக்கொண்டு மொழியை வளர்ப்பதாக நம்பிக்கொண்டிருக்கிற பிதாமகர்களுக்கும் ப. சிங்காரம் போன்றவர்கள் அவசியமற்றவர்கள். ஆனால் வாசிப்பு, எழுத்து, படைப்புபென்று அலைகிற நம்மைப் போன்றோருக்கு அவர் தவிர்க்கமுடியாதவர் ஆகிறார்.

சராசரி மனிதனைக்காட்டிலும், கலைஞன் எளிதில் உணர்ச்சிவசப்படுபவன், உண்மையோடு கைகோர்க்கிறவன், சிறுமை கண்டு கொதித்துப்போகிறவன். படைப்பு: ஒருவகையான ஆயுதம், ஊடகம். படைப்பாளி தமக்குள் இருக்கும் அந்த மற்றொருவனை சமாதானப்படுத்தும் தந்திரம். ப. சிங்காரமும் அதைத்தான் செய்திருக்கிறார். அவரால் எழுதப்பட்டவை இரண்டே இரண்டு நூல்கள். அவர் எழுத்தைப் புரிந்து, அவரைப்புரிந்து ஊக்குவிக்க அப்போதைய படைப்பிலக்கிய சூழல் தவறி இருக்கிறது. அதற்கு அவரும் ஒருவகையில் பொறுப்பு. “இப்போதுதான் சுஜாதா, சிவசங்கரி கதைகளை எடுத்து வாசித்துப் பார்த்தேன். விஷயமே இல்லாம இருக்கு. ரெண்டு பக்கங்கூட வாசிக்க முடியலை.” என்ற அவரது எரிச்சலும், “தமிழில் இதுவரை நல்ல நாவல்கள் எழுதிய நாவலாசிரியர்களின் பெயர்களைச் சொன்னேன். “அவங்க எழுதியதை படிக்கவில்லை”, என்றாறென அவரைச் சந்தித்த ந. முருகேச பாண்டியன் தரும் வாக்குமூலமும், மாற்றுதளத்தில் இயங்கிய தமிழ் படைப்பாளிகளை பற்றியோ, அவர்கள் தம் படைப்புகள் குறித்தோ ஞானம் ஏதுமின்றியே வாழ்ந்து மடிந்திருக்கிறார் என்பதை உறுதிபடுத்துகின்றன.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் சிங்கம் புணரி கிராமத்தில் பழனிவேல் நாடார், உண்ணாமலை அம்மாள் ஆகியோருக்கு மூன்றாவது மகனான ப. சிங்காரம் பிறந்த ஆண்டு 1920. சிங்கம் புணரி தொடக்கப்பள்ளி, மதுரை செயிண்ட் மேரீஸ் பள்ளியென்று கல்வியினை முடித்து பிழைப்புத் தேடி இந்தோனேஷியாவிற்குச் சென்றிருக்கிறார். இடையில் 1940 ஆண்டுவாக்கில் இந்தியாவிற்கு வந்திருந்தபோதிலும், 1946ல் இந்தியா திரும்பியவர் மதுரையில் நிரந்தரமாக தங்கி தினத்தந்தியின் பணியாற்றி இருக்கிறார். முதல் நாவல் ‘கடலுக்கு அப்பால்’ 1950ம் ஆண்டு எழுதப்பட்டு கலைமகள் நாவல் போட்டியில் முதல் பரிசினைப் பெற்றிருக்கிறது. இரண்டாவது நாவல் ‘புயலிலே ஒரு தோணி’ 1962ல் எழுதபட்டு கலைஞன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. இப்போது இரண்டு நாவல்களையும் இணைத்து தமிழினி முதல் பதிப்பை 1999ம் ஆண்டிலும், இரண்டாவது பதிப்பினை 2005ம் ஆண்டிலும் வெளியிட்டிருப்பதை அறியமுடிகிறது. இந்த மூன்றாண்டுகள் இடைவெளியில் மூன்றாவது பதிப்பினை வெளியிட்டிருப்பார்களா என்று தெரியவில்லை.

‘புயலிலே ஒரு தோணி’, ‘கடலுக்கு அப்பால்’ என்ற இரு நாவல்களும், நல்ல நாவல்கள் என்பதற்கான இலக்கணங்களைத் தவிர்த்து, புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளன் ஒருவனின் படைப்புகளாக அவை என்னை பெரிதும் கவர்ந்தன. கண்ணிற பட்ட அவலங்களை ஒளிக்காமல், ஒதுங்கிப்போகாமல் வெளிக்கொணர்ந்த ப. சிங்காரத்தின் உணர்வும், மனதை நச்சரிக்கும் தாய்நாட்டு ஏக்கமும், அவர் அமைத்துக்கொண்ட துறவு வாழ்க்கையும், முரண்பாடுகள் ஏதுமின்றியே உறவுகளிடம் அவர் ஒதுங்கிவாழ்ந்தமை போன்ற அம்சங்களில் என்னைக்கண்டது கூட அதற்குக் காரணமாக இருக்கலாம்.

ஆசிரியரே சொல்லுவதுபோன்று ‘புயலில் ஒரு தோணி’ இரண்டாம் உலகப்போரைபற்றிய நாவலா? என்றால் ஆமோதிக்கவும் முடியவில்லை, மறுக்கவும் முடியவில்லை. கதைக் களம் யுத்தகாலம். தாயகம் பற்றிய பல கனவுகளுடனிருந்த கதை நாயகனை யுத்தம் சுவீகரித்துக் கொள்கிறது, ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான ஆதிக்க யுத்தம், அவர்களுடைய காலனி நாடுகளையும் விட்டுவைக்கவில்லை, உலகின் பலமுனைகளிலும் நடைபெறும் யுத்தமும் அதன் வெற்றி தோல்விகளும் அப்பாவி மக்களின் தினசரி வாழ்க்கையை எப்படி புரட்டி போடுகின்றன என்பதுதான் கதைக்கான Trame. ஒரு சில அத்தியாங்களில் டாய் நிப்பன் (ஜப்பானியரின்) படையின் ராணுவ திட்டங்கள், கடற்படை நடவடிக்கைகள், விமானத் தாக்குதல்கள், நேச நாடுகளுடைய பதிலடிபற்றிய விபரங்கள் தெளிவாகச் சொல்லபட்டிருக்கின்றன. ஜப்பானியபடை மெடான் நகருக்குள் நுழைவதுடன் ஆரம்பமாகும் கதை. ரஷ்யாவுக்குள் நுழைந்த நாஜிப்படைகள் ஈட்டும் வெற்றி, ஜப்பானியரின் நீதகா யாமா நோபுரே போர்த்திட்டம், பெர்ள் ஹார்பர் தாக்குதல், பிரிட்டிஷார் வசமிருந்த தெற்கு ஆசியாவைத் தங்கள் வசம்கொள்ள ஒரே நேரத்தில் பல திசைகளில் ஆயிரக்கணக்கான மைல் இடைவெளியுள்ள இடங்களில் போர்தொடுத்து கண்ட வெற்றிகளென்று ஜப்பானியர் தற்காலிக வெற்றிக் களிப்பில் திளைத்திருந்த நேரம். யுத்தகால விபரீதங்களையும் ஆசிரியர் நாம் திடமனதின்றி வாசிக்க இயலாதென்கிற அளவிற்கு ஆசிரியர் எழுதியிருக்கிறார்.

“வடக்கேயுள்ள பேப்பேயெம் பெட்ரோல் கிடங்கு சீறி எரியும் தீக்குரல் இப்போது தெளிவாகக் கேட்கிறது..இடையிடையே பீப்பாய்கள் வெடிக்கும் ஓசை: ட்ராஅஅம்…ட்ராஅஅம்…அச்சின் மாட்ஸ்கப்பை கிடங்குகள் உடைந்து கிடக்கின்றன. அவற்றினுள் ஈசல்போல் மொய்த்திருக்கும் மனிதக் கும்பலின் களவு- வெறி இறைச்சல்; வெளியே ஓவல் டின், டயர், பூட்ஸ், டார்ச் லைட்டுகளுடன் விரையும்- இடறிவிழும் ஆட்கள், மனிதக்கூட்டம் அகப்பட்டதை அள்ளிச் சேர்த்து சுமக்க முடியாமல் சுமந்து செல்கிறது.(பக்கம்- 24);

“புல்லாந்தரையில் பிறந்த மேனிக் கோலத்தில், மல்லாந்த உருவங்கள், சுற்றிலும் வேற்று மானிடர். சூரியனின் பட்டபகலில் ஊரறிய உலகறிய காதறிய கண்ணறியக் கட்டாய உடலாட்டு. ஆயயவோய்! ஓ மரியா! ஆயயயோவ்!” (பக்கம் – 25),

“ஹக்கா- வில்ஹெல்மினா முக்கு வெற்றிடத்தில் பிளந்த வாயும் மங்கிய கண்களுமாய் ஐந்து தலைகள் மேசைமீது கிடந்தன- இல்லை நின்றன. சூழ்ந்திருந்த ஜப்பானியர் சிரித்து விளையாடினர்.(பக்கம்-30)

ஆயுதத்தினாலுற்ற வெற்றிக்குப்பின்னே கொலை, கொள்ளை கற்பழிப்பு என்ற பழிவாங்கல் படலம், தளையுண்டிருக்கிறவரை சாதுவாகவும், நுகத்தடி நீங்கியதும் துள்ளுகிற மனித மிருகங்களின் பற்களிலும் கால்களிலும் சிக்கித் தவிக்கும் மானிடத்தின் பரிதாப நிலையை விவரித்து இருப்பதாலேயே போர்பற்றிய நாவலென்றொரு வரையறைக்குள் அவசரப்பட்டு திணிப்பதும் நியாயயமாகாது. அதனை மறுப்பதற்கு ஆசிரியரது வார்த்தைகளேபோதும், வேறு சாட்சிகள் வேண்டாம். “இன்னக்கி நம்ம ஆளுக இல்லாத இடம் உலகத்திலே எங்க இருக்கு? ஆனா போன இடத்துல என்ன இருக்குண்ணு கூர்மையாகப் பார்க்க மாட்டாங்க. அப்படி பார்த்திருந்தாகன்னா இன்னக்கித் தமிழிலே ஏகப்பட்ட புத்தகம் வந்திருக்கும்” என்று ந. முருகேச பாண்டியனிடம் அவர் வெளிப்படுத்தும் ஆதங்கத்தினை, தமது நாவலில் புரிந்துகொண்டு செயல்பட்டிருப்பதன் மூலம் நாவலை எழுத அவருக்கு வேறுகாரணங்களும் இருக்கின்றன.

படைப்பவனில்லாத நாவலெது? கதை நாயகன் ஊடாகவும் பிற மாந்தர்கள் ஊடாகவும் சொந்த மண் உழப்படுகிறது. அந்த நாள் நினைவுகளில் ஆசிரியர் மூழ்கித் திளைக்கிறார், கூடவே விடுபடமுடியாமல் இனம், நாடு சார்ந்த கனவுகள் கவலைகள் அது சார்ந்த கோபங்கள், ஆவேசங்கள்.

“பாண்டி! உங்கள் நாட்டுக்கு எப்போது விடுதலை?”

“அடுத்த தைப்பூசம்.”

“தைப்பூசத்தன்று பரம்பரை வழக்கபடி காவடியாட்டம் தான்” (பக்கம் -30)

“கோட்டைக் கொத்தளங்களைத் தகர்த்தெறிந்த தமிழ் வீரர்களின் கொடிவழியில் வந்தோரிற் சிலர், இதோ….. பண்டைய ஸ்ரீவிஜய அரசின் ஒரு பகுதியான சுமத்ராவிலிருந்து மற்றொரு பகுதியான மலேயாவை நோக்கித் தொங்கானில் செல்கின்றனர். கடல் கடந்து போய்ப் புத்தம் புதுமைகளை கண்டறிந்து செயல் புரிய வேண்டுமென்ற ஆர்வத்தினால் உந்தப்பட்டல்ல – வயிற்றுப் பிழைப்புக்காக.”(பக்கம்-71)

“தமிழ் மக்கள் முன்னேற வேண்டுமானால் முதல் வேலையாகப் ‘பொதியமலை போதை’யிலிருந்து விடுபடவேண்டும். அதுவரையில் முறையான மேம்பாட்டு முயற்சிகளுக்கு வழிபிறக்காது. ‘திருக்குறளைப் பார்! சிலப்பதிகாரத்தைப் பார்! தஞ்சைப் பெரியகோயிலைப்பார்! காவேரி கல்லணையைப்பார்!” என்ற கூக்குரல் இன்று பொருளற்ற முறையில் எழுப்பப்படுகிறது.”

“வினைநவில் யானை விறற் போர் தொண்டையர்! மழைமருள் பல்தோல் மாவண் சோழர்! சேண்பரல் முரம்பின் ஈர்ம்படைக் கொங்கர்! ஒளிறு வாட்தானைக் கொற்றச் செழியர்! இவர்களின் கொடிவழில் வந்தோரெல்லாம் இப்பொழுது எங்கே, என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

– மலேயாவில் ரப்பர் வடிக்கிறார்கள்

– இலங்கையில் தேயிலை கிள்ளுகிறார்கள்

– பர்மாவில் மூட்டைத் தூக்குகிறார்கள்

– கயானாவில் கரும்பு வெட்டுகிறார்கள்

– பாரத கண்டம் எங்கும் பரவி பிச்சை எடுக்கிறார்கள் (பக்கம் – 132)

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் உலகமெங்கும் வாழ்ந்த தமிழினத்தின் அவல நிலை, இன்றைக்கு உலகெங்கும் சிதறி வாழும் பெரும்பான்மைத் தமிழரின் அடிப்படை குணமாக மாறிப் போயிருக்கிறது. திரைகடலோடியும் திரவியும் தேடு என்பதில் மட்டும் குறியாய் இருக்கும் தமிழினத்தை உலகெங்கும் பார்க்கிறோம்: நமக்கு வன்முறையிலோ, அடிமைப்பட்டோ பொருளீட்டவேண்டும், மற்றபடி இனப்பற்றாவது மொழிப்பற்றாவது. தன்னை சுய விசாரனைக்குட்படுத்தாத தனிமனிதன் மாத்திரமல்ல, இனமும் உருப்படாது.

புயலில் ஒரு தோணி நாவலாசிரியருக்கு சொந்த நாட்டின் ஏக்கங்களும் நோஸ்ட்டால்ஜியாக நிறைய வருகின்றன. சேதாரமின்றி தமது நெஞ்சத்தை அவரால் விடுவிக்க முடிவதில்லை. பாண்டியன் தொடங்கி, ஆவன்னா என்று சொல்லப்படுகிற ஆண்டியப்ப பிள்ளைவரை பலரும் ஊர் நினைவில் திளைக்கிறவர்கள். வேலையோடு வேலையாய், பெட்டியடிப் பையன்கள் அடுத்தாளாகி வசூலுக்குப் போகும் நாளையும், அடுத்தாட்கள் மேலாளாகி ஆட்டி வைக்கும் காலத்தையும் எண்ணிக் கனவு காண்பார்கள். “திருப்பத்தூரில் கார் ஏசண்டுகள் சின்ன இபுராகிமும் சாமிக்கண்ணுவும் வந்தே மாதரம் ஐயர் கிளப்பு கடைக்கு முன்னே, நானாச்சு நீயாச்சென்று கட்டி புரண்டு மல்லுகட்டியது; வலம்புரிக் கொட்டகை சுந்தராம்பாள் நாடகத்தில் புதுப்பட்டி ஆட்களுக்கும் திருப்பத்தூர்காரர்களுக்கும் இடையே பொம்பளைச் சங்கதியாய் நடந்த கலகம்; சிராவயல் மன்சு விரட்டில் மாரியூர்க் காரிக்காளையை வல்லாளப்பட்டி ஐயன் பந்தயம்போட்டு பிடித்தது போன்ற பழம் நிகழ்ச்சிகளை சலிப்பின்றி மீண்டும் மீண்டும் பேசிபேசி..” ( பக்கம் -36) அவர்கள் மகிழ்கிறவர்கள்.

“அந்தக்காலம் திரும்புமா… கையைச் சுழற்றி பாடிக்கொண்டே தெருவில் ஓடலாம். அப்பாயி செட்டியார்கடை மசால் மொச்சை! ராளிப் பாட்டி விற்கும் புளி வடை! தெருப்புழுதியில் உட்கார்ந்து சந்தைப்பேட்டை பெரியாயிடம் பிட்டும் அவைக்கார வீட்டம்மாளிடம் ஆப்பமும்.. போனதுபோனதுதான். அது ‘மறை எனல் அறியா மாயமில்’ வயது (பக்கம் -98) என்று ஏங்குகிறவர்கள்.

“இங்கினக் கிடந்துக்கிணு சீனன் மலாய்க்காரனோட மாரடிக்கிறதுக்கு வதிலாய் ஊர்ல போயி என்னமாச்சும் ஒரு தொழிலைப் பார்க்கலாம்… ஊர்ல இருக்கிறவுகள்ளாம் சம்பாரிக்கலையா.. நாமள்தான் அக்கறையில என்னமோ கொட்டிக்கிடக்குதுண்ணு வந்து இப்படி லோலாயப்படுறம்” ( பக்கம்-86) என்பது வெளிநாட்டில் வாழும் அநேகர் தவறாமல் சொல்வது.

இந்த ஏக்கத்திற்கு மாற்றாகவும், தங்கள் இனத்தின் கையாலாகாதத்தனத்தின் மீதிருந்த கோபத்திற்கு வடிகாலாவும் எதிர்பாராமல் குறுக்கிட்ட யுத்தம் அமைகிறது. போர்காரணமாக நிலைகுலைந்து கலங்கிநின்ற தென் கிழக்காசியத் தமிழரின் கவலையை ஓரளவுக்கேணும் போக்கும் அருமருந்தாக இந்தியச் சுதந்திர சங்கமும், அதன் போர் அமைப்பாக ‘ஆஸாத் ஹிந்த் ·ப்வ்ஜிலும்’ இருக்கவே ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் சேர்ந்து போர் பயிற்சி பெறுகின்றனர், “இந்தியச் சமுதாயத்தையே மாற்றித் திருத்தி அமைக்கபோவதாகவும் அதற்குத் தேவையான தகுதியும், திறமையும் தம்மிடம் இருப்பதாக” (பக்கம் -140) பாண்டியனும் அவனது கூட்டாளிகளும் நம்புகிறார்கள்:

“நாம் எதை நம்புவது?”

“இருள் விலகி ஒளி பிறக்குமென்பதை.”

“ஒளி பிறக்காவிடின், இருளையே ஒளியென நம்புவது”( பக்கம் -50) என்ற பாண்டியனுடைய விரக்தி கலந்த சிரிப்பில் ந. முருகேசபாண்டியன் சந்தித்த மதுரை ப. சிங்காரத்தைப் பார்க்கிறோம்.

இந்தியச் சுதந்திரத்தில் சுபாஸ் சந்திர போஸின் பங்கினை வரையறுக்க உரிய ஆதாரங்கள் இல்லாத நிலையில், அவருடன் தங்களை இணைத்துப் புதையுண்ட தென் கிழக்காசிய தமிழ் இளைஞர்களின் பங்களிப்பும் கவனத்தைப் பெறாமலேயே போனது மிகப்பெரிய சோகம். நாவலாசிரியர் பங்களிப்பு அவ்விழப்பை ஈடு செய்ய முயற்சிப்பது புரிகிறது. நாவலாசிரியர் தகுந்த அதற்கான ஆதாரங்களை பின் இணைப்பில் சேர்த்திருந்தால் ஓர் ஆவணமாகக்கூட இந்நாவல் பின்நாட்களில் உபயோகம் கண்டிருக்கும்.

ஜப்பானிய துருப்புகள் வருகையை வேடிக்கைப் பார்க்கவென்று மெடான் நகர வீதியொன்றில் இந்தோனேஷிய மக்கள் ஆர்வத்துடன் கூடியிருக்கிறார்கள். “அன்னெமெர் காதர் மொய்தீன் ராவுத்தரின் பெரிய கிராணி பாண்டியன் சைக்கிளை தள்ளிக்கொண்டு, வடக்கேயிருந்து கெசாவன் நடைபாதையில் வருகிறான். நிறம் தெரியாத சராயும், வெள்ளை சட்டையும் அணிந்த, வளர்ந்து நிமிர்ந்த உருவம். காலடி ஒரே சீராய் விழுந்து ஒலி கிளப்புகிறது. வாயில் தீயொளி வீசும் சிகரெட்.” என்ற கதை நாயகனின் சிக்கனமான அறிமுகத்தில் பலத் தகவல்கள் அடங்கியுள்ளன. நிறம் தெரியாத சராய், வெள்ளை சட்டை, வளர்ந்து நிமிர்ந்த உருவம், ஒரே சீராய் ஒலி எழுப்பும் காலடிகள், தீயொளி வீசும் சிகரெட், பாண்டியன் என்ற பெயருக்கான தேர்வு அனைத்திலும் ஒரு கசிவற்ற முழுமை அல்லது எல்லை மீறா கச்சிதம் இருக்கிறது. கறாரான இக்குணப்பொதிகளை சுமந்தபடி வலம்வரும் பாண்டியனை எங்கும் பார்க்கிறோம். மெடான் சந்துகள்; வட்டிக்கடை தமிழர்கள் நிறைந்த மொஸ்கி ஸ்ட்ராட்டில்; “கடமையிலிருந்து வழுவாமலே, இயலாதவர்க்கு உதவ வேண்டிய அவசியத்தை” (பக்கம்- 44), அர்னேமிய ஆற்றுப் படுகையில் செயல்படுத்துகிற நேரத்தில்; “இந்தாம்பிள இவுஹ குளிக்யணும், ஜல்தியா வென்னிபோடு” என்று பினாங் சீனி இராவுத்தர்கடை அப்துல் காதர் அன்பு உபசரிப்பிற்கு, “வெந்நீர் வேண்டாம், பச்சைத் தண்ணீரே போதும்”, என்ற நாசூக்கான மறுப்பில்; “நானோ இல்லறத்தை வெறுக்கும் இளைஞன்”(பக்கம் – 59) என்பதிலுள்ள அகம்பாவத்தில்; ஜராங் லெப்டினென்ட் ஆக மாறியது தொடங்கி கண்ணிற் தெரிகிற கொலைவெறியென பல பாண்டியன்களை சந்திக்கிறோம். “கட்டுப்பாடில்லாத மனிதன் எவ்வளவு கொடிய விலங்கு” (பக்கம் – 26) என்பதற்கு அவனே சாட்சி.

காட்சியை நேர்முகப்படுத்துவதாகட்டும்:

“காலை நேரத்தில் கிட்டங்கி முழுவதும் நன்மணம் கமழும் -மல்லிகை சாம்பிராணி, அரகஜா. அன்றாடச் சலவை ஆடையும் பரக்கப் பூசிய திரு நீறுமாய்க் கைமேசைகளுக்குப் பின்னே, கடன் சீட்டுகளையும் குறிப்புப் பேரேடுகளையும் புரட்டியவாறு அடுத்தாட்கள் அமர்ந்திருப்பர். பெட்டியடி பையன் கால்களை சம்மண்மாய் இறுக்கிப்பூட்டிப் பெட்டகத்தோடு பெட்டகமாய் நேர்முதுகுடன் உட்கார்ந்து, பாங்கியில் சமால் போடுவதற்காக பணம் எண்ணிக் கண்ணாடிக் காகிதங்களில் சுருட்டிக்கொண்டிருப்பான்…..” (பக்கம்- 36)

மொழியைக் கையாளும் லாவகமாக இருக்கட்டும்:

“வானும் கடலும் வளியும் மழையும் மீண்டும் ஒன்றுகூடிக் கொந்தளிக்கின்றன. வானம் பிளந்து தீ கக்கியது. மழைவெள்ளம் கொட்டுகிறது. வளி முட்டிப் புரட்டுகிறது. கடல் வெறிக்கூத்தாடுகிறது. தொங்கான் நடுநடுங்கித் தாவித் தாவித் குதிகுதித்து விழுவிழுந்து நொறுநொறு நொறுங்குகிறது. சாகிறோம். சாகப்போகிறோம். மூழ்கி முக்குளித்து மீன் கொத்தி அழுகித் தடம் தெரியாத சாவு சாவு சாவு…”(பக்கம்- 108)

மென்மையான நகைச்சுவையாகட்டும்:

“பொண்டாட்டியக் கூப்பிடச் சொன்னா மாமியாளைக் கூட்டியாந்து விடுகிற பயல்ங்கிரது சரியாப்போய்ச்சுது. போடா கொதக்குப்பலே, போ.”(பக்கம் – 65)

“மந்தை மாடுகள் வருவதும் போவதுமே சின்ன மங்கலம் பெண்களின் காலக்கோல்… ஆனால் யூனியன் ஆபீஸ் பெரிய கடிகாரத்தை அவ்வளவு திண்ணமாய் நம்பமுடியாது. ஒரு நாள் உச்சிப்பொழுதில் அது ஆறு மணி அடித்தது..”(பக்கம் -99)

ஒரு நல்ல பின் நவீனத்து நாவலுக்குரிய அத்தனை இலட்சணங்களும் இருக்கின்றன. புயலில் ஒரு நாவல் 1964ல் எழுதப்பட்டதாக சொல்லப்டுகிறது. நாவலைப் படிக்கிறபோது சமீப காலமாக தமக்கென ஒரு அடையாளத்துடன் தீவிரமாக இயங்கிவரும் குண்ட்டெர் கிராஸ¤ம் (Gunter Grass), லூயி தெ பெர்னியேரும் (Louis de Bernieres) நினைவுக்கு வருகிறார்கள்

—————————————————————————————————————–

புயலில் ஒரு தோணி- கடலுக்கப்பால் -நாவல்கள்

விலை -180ரூ

ஆசிரியர் – ப. சிங்காரம்

தமிழினி பதிப்பகம்- சென்னை -14

 

படித்ததும் சுவைத்ததும் -2 : முஸல்பனி – தமிழவன்

உண்மை என்ற ஒன்றில்லை

புகழ்பெற்ற பிரெஞ்சு நாவலாசிரியர் லெ.கிளேசியோ தனது ‘குற்ற விசாரணை நாவலுக்கு  எழுதிய முன்னுரையில் “எதார்த்தவாதத்தில் பெரிதாய் எனக்கு அக்கறையில்லை ‘(உண்மை’ என்று ஒன்றில்லை என்ற கருத்து மேலும் மேலும் என்னிடத்தில் வலுப்பெற்று வருகிறது) இந்நாவல் முழுவதும் ஒரு புனைவென்ற எண்ணத்தைக் கட்டமைக்க விரும்பும் எனக்குள்ள எதிர்பார்ப்பு வாசிப்பவரிடத்தில் சிந்தனைத் தாக்கத்தைக் குறைந்த பட்சம் தற்காலிகமாவது ஏற்படுத்தித் தருதல்”- எனக் குறிப்பிடுவார். உயிர்வாழ்க்கை என்பது ஒரு வகை புனைவு. பொய்வடிவத்தில் உண்மைகளும், உண்மையென்று பொய்களும் அல்லது இரண்டும் கலந்த கலவையாக, அருதியிட்டு கூறவியலாத தன்மையினதாக இருக்கிற நமது வாழ்க்கை சார்ந்த கலையின் எந்தவொரு வடிவமும் உண்மையை மையமாகக்கொண்டதென்பது அல்லது எதார்த்தமென வாதிடுவது கேலிகூத்தாகாவே முடியும்.

 

“அழிவை எதிர்க்க இலக்கியத்தால் மட்டுமே முடியும்” என்ற நம்பிக்கையுடன் அயர்வுறாமல் கல்விப்பணியோடு படைப்பிலக்கியத்திலும் தீவிரமாகப் பங்காற்றிவந்திருக்கிற தமிழவனின் ‘முஸல் பனி’ நாவலை வாசித்த தருணத்திலும் வாசித்து முடித்தபோதும் லெ கிளேசியோவிற்கும் இவருக்கும் மன நிலையிலும், வினைத்திட்பத்திலும், ஓர் இணக்கமிருப்பதைக் கண்டேன். நவீன தமிழும், தமிழவனும் வெவ்வேறானவர்களல்ல என்பது வெகுகாலமாகவே திடமாய் மனதிற் பதிந்திருப்பதால் இதில் வியக்க ஒன்றுமில்லை. ஏனைய துறைகளைப்போலவே இலக்கியமும் மாற்றத்திற்கு உட்பட்டது. அம்மாற்றமும் நாளை மறுநாளோ, நாளையோ, இன்று பிற்பகலோ நிகழ்ந்தால் போதும் என்பதல்ல, இக்கணமே நிகழ்ந்தாகவேண்டும் தவறினால் எப்போதும்போல காலத்தால் பின் தள்ளப்படும். இலக்கியம் என்பது ஒருமொழியின், அம்மொழியூடாக ஓர் இனத்தின் தராதரத்தை தீர்மானிக்கும் உரைகல். அந்த இலக்கியம் காலத்தோடு பயணிக்கும் திறன்கொண்டதாக இருத்தல் அவசியம்.புனைவுகள் கவிதைகள் வாசிப்பும்; ஓவியங்கள் சிற்பங்கள் புரிதலும் ஒன்றிரண்டு மனிதர்களிடம் கூடுதலாக வினைபுரிகின்றன. அவர்களின்சிந்தைகளில் கிளர்ச்சியை ஊட்டி வாசித்தவனை எழுத்தாளனாகவும்; இரசித்தவனை கலைஞனாகவும் உருமாற்றம் செய்து எழுதவும், தீட்டவும், வடிக்கவும் தூண்டுகின்றன:

 

நூலினான உரையினனான

நொடியோடு புணர்ந்த பிசியினான

ஏது நுதலிய  முதுமொழியான

மன்றமொழிகிளர்ந்த மந்திரத்தான

கூற்றிட வைத்த குறிப்பினான (தொல்-செய்யுள்165)

 

என்றெழுதிய தொல்காப்பியருங்கூட இன்றைக்கிருந்தால் கூடுதலாகச் சில வடிவங்களைக் குறித்து பேசியிருப்பார். நியாண்டர்தால் மனிதன் தொடங்கி நவீன மனிதர் வரையிலான கால நீட்சியில் இயங்குவெளியும் அவற்றின் உட்கூறுகளும், குணங்களும் தம்மைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டு வருகின்றன. இலக்கிய கோட்பாடுகளுக்கும் இவ்விதி மொழி பேதமின்றி உலகின் எப்பகுதி ஆயினும் பொருந்தும். முஸல்பனியின் நூலாசிரியர் முன்னுரையில் கூறுவதுபோல இருபத்தொன்றாம் நூற்றாண்டுக்கான தமிழிலக்கியத்தைக் கண்டுபிடிப்பதில் விஞ்ஞான முறை, கறார் தன்மை, தமிழ்யாப்பின் உள்ளொழுங்கு, தொல்காப்பியத்தின் அகண்ட தன்மையும் முக்கியம். நவீன தமிழிலக்கிய கோட்பாடாக அவற்றைக் கையாளுவது காலத்தின் கட்டாயம். இதே நூலின் முன்னுரை இறுதியில் தெரிவிக்கும் கருத்தில்   ஓரளவு முரண்பட்டாலும் இன்றைய தமிழ்ச் சூழலில் பலரும் நினைப்பதுபோல அல்லது எழுதிக்கொண்டிருப்பதுபோல நவீன இலக்கியம் என்பது எதார்த்த மென்ற பெயரில் எட்டுகால் பூச்சிக்கு எத்தனை கால்களென்று கேட்டு பதிலைப் பெறுவது அல்ல.

 

கீழைதேயத்து படைப்பாளிகளுக்கு இம்முஸல்பனி நாவலை முன்வைத்து (நேர்வினையாகவும், எதிர்வினையாகவும்) சில பொறுப்புணர்வுகளை தமிழவன் விதைத்திருக்கிறார். கெ. அய்யப்ப பணிக்கர் தமது, ” இந்திய இலக்கிய கோட்பாடுகள்” என்ற நூலில் எழுப்பியுள்ள வினாக்கள் முஸல் பனி நாவலுக்கும்  பொருந்தும். இருபத்தொன்றாம் நூற்றாண்டு தமிழ் நாவல்கள் அடிப்படையில் மூன்று உண்மைகளை மனதிற்கொண்டு வினையாற்ற கடமைப்பட்டிருக்கிறோம்:

 

  1. ஐரோப்பிய மரபு: காலனி ஆதிக்கத்தினால் கிடைத்த ஐரோப்பிய சிந்தனை மரபு
  2. பன்முகத்தன்மைகொண்ட இந்திய மரபு
  3. தமிழ் மரபு

 

ஆக இன்றைய தமிழ் நவீனமென்பது மேற்கொண்ட மூன்று மரபுகளையும் உள்வாங்கிகொண்டு செயல்படுவது. உலக இலக்கியங்களோடு இணைந்து பயணிக்க ஐரோப்பிய மரபையும், பாரம்பரிய மரபயும் இணைத்து ஒரு புதியமரபில் இயங்குவது காலத்தின் கட்டாயம்.

 

முஸல் பனி நாவல் என்ன சொல்கிறது ஏன் முக்கியத்துவம் பெறுகிறது? ஆசிரியர் சொல்வதுபோல அதன் பூடக மொழியா? குறியீடுகளா? படிமங்களா? எடுத்துரைப்பா? இருப்பியல்வாதியான தமிழவனை பின் நவீனத்துவத்திலிருந்து பிரித்துப் பார்ப்பது இயலாத காரியம்.. தமிழர் வரலாற்றை, பெருமைகளை, கீர்த்திகளை, வடக்கில் இமயம்வரைசென்று கொடிநாட்டிய புகழை சங்க இலக்கியங்களும் காப்பியங்களும் பெருமிதம் பொங்க படைப்பிலக்கியத்திற்குக் கொண்டுவந்த காலம்போக, அப்பழம்பெருமைக்கு நேர்ந்த வீழ்ச்சியை, அபகீர்த்தியை, குறிப்பாக அண்மைக்காலங்களில்  தமிழினத்திற்கு இழக்கப்பட்ட அநீதி கண்டு கொதி நிலையில் சுமார் நூறுபக்கங்களில் தமிழ் தேசிய உணர்வின்பாற்பட்டு இப்படைப்பிலக்கியத்தை கொண்டுவந்திருக்கிறார். இம்முயற்சிக்கு வழமைபோல இருபத்தொன்றாம் நூற்றாண்டு மேற்கத்திய கதை சொல்லல்  உத்தி கைகொடுத்திருக்கிறது. மொழியிலும் இலக்கியத்திலும் தமிழர்கள் முன்னோடிகள். மேலை நாடுகள் தங்களுக்கான மொழியெது என்ற தேடலில் இருந்த காலத்தில் திணைகள், அகம் புறமென்று தமிழர் வாழ்க்கைச் சித்திரம் மிக நுட்பமாக எழுதப்பட்டுவிட்டது. ஆனால் அதன் பிறகு  மேற்கத்திய ஆமைகள் தொடர்ந்து முந்திக்கொண்டுவருகின்றன.

 

இருபத்தொன்றாம் நூற்றாண்டு கதைசொல்லல் என்றால் என்ன? விரல்விட்டு எண்ணிக்கொண்டிருந்த காலமோ சுவரில் பற்றுவைத்த காலமோஇன்றில்லை. இலக்கியம் என்பது மூத்தோர் சொல்லோ அற நூலோ அல்ல. தொடக்க காலத்தில் கல்வியென்பதே இம்மை மறுமை,நெறிமுறைகள் என்று இயங்கின. இன்று அக்கல்வி மொழி, அறிவியல்,வரலாறு, புவியியல், தத்துவம்போன்ற பெரும் பிரிவுகளும், நுணுக்கமான பல உட்பிரிவுகளும் கொண்டது. நேற்றைய இலக்கிய அப்பியாசம் யாப்பில்தேர்ச்சிபெற்று அறநூல்களை எழுதவும், வயிற்றுபாட்டிற்கு செல்வர்களை அண்டிப் பிழைக்கவும் செய்தது. இன்று மனித இனத்தின் அறிவு வளர்ந்திருக்கிறது, விரிவடைத்திருக்கிறது. இன்றைய இலக்கியமும் சுதந்திரமானது, எண்ணற்ற நுட்பங்களுடன் இயங்குவது. நவீன இலக்கியம் இவற்றையெல்லாம் கணக்கிற்கொள்ளாமல் முழுமை அடைய இயலாது.

 

காலனி ஆதிக்கம் நமது பண்பாட்டை புரட்டிப்போட்டதுபோலவே நமது சிந்தனையிலும் பெரும் மாற்றத்தைக்கொண்டுவந்தது. விரும்பியோ  விரும்பாமலோ மேற்கு நாடுகளின் தத்துவமும், தர்க்கமும், ஓர்மையும், கலை நுணுக்கமும், இலக்கிய பார்வையும் உலகெங்கும் வியாபித்துவிட்டன. அதன் காரணமாக இன்று உலக இலக்கியம் என்பது மேற்கத்திய இலக்கிய கோட்பாட்டின் வழிவந்தவை என்ற புரிதல் உள்ளது. தென் அமெரிக்க படைப்புகள், வட அமெரிக்க படைப்புகள்; ஆப்ரிக்க நாடுகளின் படைப்புகள்; இந்தியா உட்பட ஆசிய நாடுகளின் படைப்புகள் ஆகியவற்றுள் மேற்கத்திய நாடுகளின் சிந்தனைத் தாக்கங்களிருக்கவே செய்கின்றன. அதேவேளை தொல்காப்பிய்னைபோன்ற ஒரு முப்பாட்டனை பெற்றிருந்த நமக்கு மேற்கத்திய அறிவுக்கு முன்னால் முழு சரணாகதி என்பது கற்பனையிலும் சாத்தியமில்லை. அதிலும் உலகின் பெரும்பாலான படைப்பிலக்கியங்கள் அறத்தைபோதிப்பதே இலக்கியம் என்று எண்ணிக்கொண்டிருந்தவேளை நமது சங்க இலக்கியங்கள் அகம் புறமென்று மனிதர் வாழ்க்கையைப் பிரித்து படைப்பிலக்கியத்தை ஆரம்பித்து வைத்தன.

 

நண்பர் தமிழவன் ‘முஸல் பனி’, முன்னுரைக்கு எட்டு பக்கங்களை ஒதுக்கியிருக்கிறார், தனது நாவல் குறித்து விரிவாகப் பேசுகிறார். முஸல்பனி வாசகனுக்கு அதற்கான அவசியமிருப்பதாகப் படவில்லை. இப்பிரசங்கம் நாவலின் மதிப்பை கூட்டவில்லை. எனினும் அளவிற் சிறியதாக இருந்து புகழின் உச்சத்தை எட்டிய நாவல்கள் உலகில் அனேகம். படைப்பிலக்கியத்தினை அளவிட மொழியும், எடுத்துரைப்பும் சொல்லப்படும் விஷயமுமே முக்கியம், பக்கங்களின் எண்ணிக்கை அல்ல.

 

தெகிமோலா என்பதை கண்டமாகவோ, நாடாகவோ வைத்துக்கொள்லலாம். முஸல்பனியில் ஆரம்பித்து, அத்திகரிப்பா,எட்டு திசைகள், முன்னூற்றுஅறுபத்தைந்து படிகள், மண்ரா பட்டணம், காண முடியாத உண்மை, ஆதி இலக்கணகாரன் ஆகியவை  பெயர்கள்களாகவும் குறியீடுகளாகவும் வருகின்றன. அகவய நோக்கில் முதலில் கண்பார்வைக்கும் பின்னர் சிந்தனைக்குள்ளும் ஒடுங்குகிற ஒவ்வொன்றிர்க்கும் பெயர்கள் தவிர்க்க முடியாதவை. இப்பெயர்கள் பேராசியர் பஞ்சாங்கம் சொல்வதுபோல மனிதரின் நிலம் சார்ந்து இடப்படுகின்றன. இதனுடன் ஓரினத்தின் மரபையும் இணைத்துக்கொள்ளவேண்டும். இப்பெயர்கள் ஊடாகத்தான், அப்பெயரை ஒட்டிய மனிதரின் இயல்புகள் பொருளின் பண்புகள் ஆகியவற்றைக் குறித்த மேம்போக்கான கருத்துக்களை கணப்பொழுதில் ஏற்படுத்திக்கொள்கிறோம். அக்கருத்தியங்களை நோக்கி நம்மை முன் நகர்த்தவும் செய்கிறோம். ஆனால் அப்பெயர்கள் நிலையாய் ஓரிடத்தில் இருப்பதில்லை, தொடுவானம்போல விலகிச் செல்கின்றன. அடர்த்தியான பனிமூட்டம் நாம் அண்மித்ததும் கலைவதுபோல தோற்றம் தருவதும் நாம் கடந்ததும் மீண்டும் அடர்ந்து படர்வதுமாக ஒரு சித்துவிளையாட்டினை நிகழ்த்துகிறது. குறிப்பாகத் தமது முழுமையை பிறர்  அறிந்துவிடக்கூடாதென்கிற முனைப்புடன் அவை செயல்படுகின்றன. இக்கண்பொத்தி விளையாட்டு அபரிதமான புனைவுகளுக்கும் கற்பனைகளுக்கும் வழிவகுக்கின்றன. தமிழவன் இதைச் சரியாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.

 

அத்திகரிப்பாவும் அவனது நாடு தெகிமொலாவும், 3300 ஆண்டுகளுக்குப்பின்பு அவன் வழித்தோன்றலாக வருகிற முஸல்பனியும் அவர்கள் வாழ்க்கை சரிதத்தோடு பயணிக்கும் தொன்மமும், குறியீடுகளும் உருவகமும் சொற்காட்சிகளாக விரிந்து அழகுசேர்க்கும் படிமங்களுக்கும் நாவலில் பஞ்சமில்லை. அவற்றை அளவுடன் கையாண்டிருக்கலாமோ? என்ற மனக்குறையும் அவ்வப்போது தலைகாட்டுகிறது. ஆசிரியர் கூறுவதுபோல நூல் முழுக்க தமிழர் வரலாறு, அவ்வரலாற்றோடு பிணைந்த  நினைவுகள், நிகழ்வுகள், கலை இலக்கியம், சிறுமைகள், பெருமைகள் என பலவும்  நூல் முழுதும் விரவிக்கிடக்கின்றன. அத்திகரிப்பாவுக்கு எட்டு திசைகள் இருந்தாலும் அவற்றுக்கு பெயர்கிடையாதென்பதும்; மண்ரா பட்டணம் அதன்  இருமைப்பண்புகள்; ‘பாத்திக்கட்டி பிரிந்திருக்கும் மக்கள்’ (அங்கே  காதல் என்ற சொல் கலவரத்தை நிகழ்த்தும், அவர்களின் தினசரி வாழ்க்கையை படுகளமாக்கும்), ‘காண்பதற்குப் பயணம் செய்பவர்கள்’ (ஒரு முறை கண்கள் நிறைய கண்டுவிட்டால் தங்கள் இனமும் குடும்பங்களும் விடுதலை பெற்றுவிடும் என்ற பொது உளவியலை நம்பிய இனத்தைச்சேர்ந்த்தவர்கள்), ‘சூத்திரங்களில் இருந்தபடிஅழுத எழுத்துக்கள்’,முப்பத்தொரு தீர்க்கதரிசிகள் என்பதுபோன்ற சொற்றொடர்களைக்கொண்டு தமிழர் சரித்திரத்தை மீண்டும் நினைவூட்டுகிறார்.

 

தமிழவனின் இச்சோதனை முயற்சி இலக்கியத்தில் சூராவளியை ஏற்படுத்துகிறதோ இல்லையோ, உறங்கப்பழகிய தமிழர்களில் ஒன்றிரண்டுபேராவது விழித்தெழுவார்கள் என்று நம்புகிறேன். உலகில் இன்று நவீன இலக்கியம் என்பது பிறதுறைகளைப்போலவே மேற்கத்திய தாக்கத்தோடு வளர்ந்தது. தமிழிலக்கியம் அதிலொன்று. எனினும் வளர்ச்சியில் மேற்கத்திய உலகுடன் நமது இலக்கியம் இணையாக இருக்கின்றதா என்றால் இல்லை. எடுத்துரைப்பிலும் உத்தியிலும் ஓர் இருபது முப்பது ஆண்டுகள் எப்போதும் பிந்தியவர்களாகவே இருக்கிறோம். ‘முஸல்பனி’ நாவல் அக்குறையை தவிர்க்க முயன்று வெற்றியும் பெற்றிருக்கிறது என்று சொல்லவேண்டும்.அம்முயற்சி திருவினையா என்பது அடுத்த கட்ட விவாதம். ஆனாலும் தமிழின் Avant-gardiste ஆன தமிழவனின் இச்சோதனைமுயற்சியை கவனத்திற்கொள்ளாதவர்கள் கிணற்றுதவளைகளாகத்தான் இருக்கவேண்டும்.

____________________________________________________________________

 

 

படித்ததும் சுவைத்ததும் – 1

தடம் பதித்த சிற்றிதழ்கள்வே. சபா நாயகம்

நெரு நல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமையை உலகிற்குக் கொடுக்கும் பட்டியலில் சிற்றிதழ்களுக்கும் இடமுண்டு, .  இக்கட்டுரையை நீங்கள் வாசிக்கிற நேரத்தில் இரண்டொரு சிற்றிதழ்கள் புதிதாய்ப் பிறந்திருக்கலாம்,, ஒரு சில தங்கள் ஆவியை விட்டிருக்கலாம் ஏதோ ஒரு வேகத்தில் தொடங்கி , சொந்தப் படைப்புகளுக்கு முன்னுரிமைகொடுத்து,  நவீன தமிழிலக்கிய மரபுப்படி  இரண்டொரு இதழ்களில் எதிரிகளையும் வசைபாடிவிட்டு, முடியாதவர்கள் இரண்டொரு மாதங்களிலும்  முடிந்தவர்கள் இரண்டொரு வருடங்ககளிலும் அதன் ஜீவனை முடித்திருந்தால், விட்ட ஜீவனுக்குப் பெயர் சிற்றிதழ்.

நண்பர்  சு. ஆ. வெங்கிட சுப்புராய நாயகர்  எங்கோ எப்போதோ  படித்ததாகச்  அடிக்கடி சொல்வார்:

“இந்தப் பத்திரிகையில் இவனைக் கிழி

அந்தப் பத்திரிகையில் அவனைக் கிழி

இருவரும் போடவில்லையெனில்

நீயே ஒரு பத்திரிகைத் தொடங்கி

எல்லோரையும் கிழி ”

திரு வே. சபா நாயகம் அவர்களின் தடம் பதித்த சிற்றிதழ்கள் கட்டுரைத் தொகுப்பைப் படித்தபோது மேலே சொல்லப்பட்டது  உண்மையென நிரூபணம் ஆயிற்று. பெரும்பாலோருக்கு  சிற்றிதழ் என்பது  தன்னையும் தன் எழுத்தையும் முன்னிலைப் படுத்தவும்,   களத்தில் இருக்கிற, சகச் சிற்றிதழ்களை,சக எழுத்தாளர்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ பழி தீர்த்துக்கொள்ளும் ஆயுதம், சிலருக்கு, எலிவளையென்றாலும் தனிவளையெனில் சுதந்திரமாக ஒன்றைச் சொல்லமுடியும் என்ற ஆத்ம திருப்தி.  காரணங்கள்  எதுவாயினும்  தரமான சிற்றிதழ்கள் மற்றும்  இணைய இதழ்களால், நவீன தமிழிலக்கியத்திற்கு மட்டுமல்ல மரபிலக்கியத்திற்கும் புதிய வாசனையும், புதிய பார்வையும்  கிடைத்திருக்கிறது. சிற்றிதழ்களால் அடையாளம் பெற்றவர்களை வெகுசன இதழ்களும் தேடிவந்து கொண்டாடுவது சிற்றிதழ்களுக்குக் கிடைத்திருக்கிற பெருமை. இன்றைக்கு காலச்சுவடு, தீரா நதி, உயிர்மை, உயிரெழுத்து, காக்கைச்சிறகினிலே, சிற்றேடு, மணற்கேணி, மணல்வீடு, திசையெட்டும் என பட்டியலிடவேண்டிய இதழ்கள் ஏராளம்,  தமிழ் நாட்டில் மட்டுமல்ல உலகமெங்கும் சம்பந்தப்பட்டவர்களின் இருத்தலைத் தெரிரிவிக்க தமிழர்கள் வாழ்கிற நிலப்பரப்பெங்கும் சிற்றிதழ்கள் வந்துகொண்டிருக்கின்றன. இவற்றுடன் இணைய இதழ்களையும் மறக்காமற் கணக்கிற் கொள்ளவேண்டும். இவை  அனைத்துமே அதனதன் பாதையில்  நவீனத் தமிழை வளர்த்தெடுக்கின்றன.

இருந்தபோதிலும் ஒரு சிற்றிதழை நடத்துவதென்பது அத்தனை எளிதல்ல. ஆயிரம் பிரதிகளை அரசு நூலகங்கள் வாங்க முடிந்தால் பெரிய வரம். சந்தாவைச் செலுத்திவிட்டு ஆளுக்கொரு கவிதையுடனோ படைப்புடனோ  சந்தா செலுத்தும் வாசகர்கள் எழுத்தாளர் கனவுகளுடன் காத்திருக்கிறார்கள்  போடத் தவறினால், சந்தாவைப் புதுப்பிக்காமல் போகலாம். எதிரி இதழில்  எதையாவது எழுதலாம் அல்லது வேறொரு சிற்றிதழையே தொடங்கலாம். வாசகர் கிடைத்தாலும் எழுத்தாளருக்குப் பற்றாக்குறை,   ஆசிரியரே எத்தனைபெயரில் எழுத முடியும். ஒருசில இதழ்கள் சாமர்த்தியமாக   நிலைய வித்துவான்களை ஏற்பாடு செய்துவிடுகின்றன. அடுத்து,  அச்சடித்த இதழ்களை விற்று முதல் காணவேண்டும். நிதி ஆதாரப் பிரச்சினை சிற்றிதழ்களுக்குத் தொன்று தொட்டு இருந்து வந்திருக்கின்றன. விற்காத இதழ்களை இலவசமாகக் கொடுத்தாலும், அடுத்த இதழையாவது காசு கொடுத்து வாங்குவார்கள் என்ற உத்தரவாதம் கிடையாது.

கடந்த காலம்போல அல்லாமல் இன்றைக்குச் சில சிற்றிதழ்கள்  சாமர்த்தியமாக நடந்துகொள்கின்றன.  புலம்பெயர்ந்த தமிழர்களின் பிரச்சினைகள் , வெகுசன இதழ்களுக்குப் போட்டியாக சினிமா, அரசியலை விவாத்திற்கு எடுத்துக்கொள்வது போன்றவற்றைக்கொண்டு  சிற்றிதழ்களைக் காப்பாற்ற முடிகிறது  பிறகு  நல்லி சின்னசாமி செட்டியார் போன்ற பரோபகாரிகளின் உதவியுங்க்கூட  இன்றைய  சிற்றிதழ்களைப் பொருளாதார நெருக்கடியில்லாமல் பார்த்துக்கொள்கிறது.  இந்தகைய சமார்த்தியம் போதாத, எந்தவித் திட்டமிடலும் இல்லாத   சிற்றிதழ்கள்  வீட்சியைத் தவிர்ப்பது கடினம். சாமர்த்தியமுள்ள இதழ்கள்கூட விற்பனையில் மேற்குலுடன் ஒப்பிடுகிறபோது  சந்தோஷப்படும் நிலையிலில்லை.  இவ்வாறான தமிழ்ச்சூழலில் ஒரு சிற்றிதழைத் தொடர்ந்து நடத்துவதும் பெரும் சிரமம்தான்

இக்கட்டுரைத் தொகுப்பின் ஆசிரியர்  திரு வே. சபாநாயகம். சிறுகதைகள்,  நெடுங்ககதைகள், நாவல், கட்டுரைகள், வாழ்க்கை வரலாறுகள், சிறுவர் கதைகள், திறனாய்வுகள் எனப் படைப்புலகில் அகலக் கால் வைத்திருந்தாலும்  பாதங்களை அழுந்த ஊன்றியவர். ஓய்வின்றி எழுதிக்கொண்டிருப்பவர். கவிதை  ஒவியம் ஆகியவற்றிலும்  தேர்ந்தவர்  விருதுகள் பரிசுகள் என வாங்கிக் குவித்திருந்த போதும், அவரது எளிமை என்னை வியப்பில் ஆழ்த்தும். அவருடைய “எழுத்துக் கலை பற்றி இவர்கள்” என்ற தொடரையும், “எனது இலக்கிய அனுபவங்கள்”  என்ற கட்டுரைத் தொடரையும் விரும்பி பலமுறை வாசித்திருக்கிறேன்.  அதே ஆர்வத்துடனேயே ‘தடம் பதித்த சிற்றிதழ்கள்’- என்ற இக்கட்டுரைத் தொகுப்பையும் படித்தேன், தொகுப்பு என்னை ஏமாற்றவில்லை.

இக்கட்டுரைத் தொகுப்பில் இருபது சிற்றிதழ்கள் இடம் பெற்றிருக்கின்றன. இதழுக்கொன்று என இருபது விரிவானக் கட்டுரைகள். அதென்ன  இருபது சிற்றிதழ்கள், மற்றவை என்ன ஆயிற்று? என்ற கேள்வியை ஆசிரியர் நம்மிடம் எதிர்பார்த்ததைப்போல::

“மணிக்கொடி தொடங்க்கி, சமீபத்தில் நின்றுபோன சுபமங்க்களாவரை இலக்கிய ஆர்வமும் எழுச்சியும் மிக்கவர்களால் தொடங்கப்பட்டு, சிலகாலம் வந்து, பிறகு ஏதேதோ காரணங்களால்  நின்று போன இலக்கிய பத்திரிகைகள் ஏராளம். அவைகளில் இன்றும் நினைவில் நிற்பதாக, இலக்கிய உலகில் தடம்பதித்து, இலக்கிய ரசிகர்களின் நெஞ்சில் வாழும் பத்திரிகைகள் சிலவற்றின் சாதனைகளையும், அவை நின்று போன காரணங்க்களையும் இப்போது எண்ணிப் பார்ப்பது சுவாரஸ்யமானதாக இருக்கும்.” என தகுந்த பதிலையும் கூறிவிடுகிறார்.

பொதுவாக இதுபோன்ற தகவல் செறிவுள்ள கட்டுரைக்கு  சொல்லப்படும் விடயங்களைக்காட்டிலும் எழுதின்றவரின்  ஞானத்தை முன்னிலைப்படுத்தும்  நோக்கம் கூடுதலாக இருக்கும் (கல்விமான்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் எழுதுகிறார்களாம்) அதனாலேயே  நம்மைப்போன்ற வாசகர்களை மிரட்டுவதற்கென்ற மொழி நடையைத்  தேடிப்பிடிப்பார்கள். வே. சபா நாயகம்  எழுத்து அப்படி அல்ல.  தவிர அவருடைய கட்டுரைகளில்  பாகுபாடுகளில்லை. அவரால்  நடை, கசட தபற, இலக்கியவட்டம், ஞானரதம்  வானம்பாடியென  எழுதுகிறபோதும் சரி, வண்ணங்கள், களரி, இன்று என எழுதும்போதும் சரி  சம்பந்தப்பட்ட சிற்றிதழ்கள் குறித்த முழுமையான தகவல்களைத் திரட்டிச் சொல்ல முடிந்திருக்கிறது.  முழுமையான தகவல்கள் எனச் சொல்லக்காரணம், ஒவ்வொரு சிற்றிதழுக்குமென்றும் எழுதப்பட்ட கட்டுரையில் முதல் இதழ் வந்த ஆண்டு, எத்தனைப் பக்கங்கள்,  எத்தனை இதழ்கள், என்ன விலை, யாரால் தொடங்ககப் பட்டது?  இதழாசிரியர் பெயர், படைப்புகளை எழுதியவர்கள் யார், யார்?  எந்தெந்த படைப்புகள் கவனம் பெற்றன  போன்றவிபரங்களைச் சேகரித்து ஆசிரியர் சொல்லியிருக்கிறார். மிகவும் கடுமையானப் பணி. ஒப்புக்காக எழுதப்பட்டதல்ல. இத்தகைய புள்ளிவிவரங்களுக்கிடையிலும் , எழுத்தாளர்களின் குழாயடிச் சண்டைகளையும் மறைக்கவில்லை. சொல்லப்பட்டிருக்கிற சிற்றிதழ்களில் நடை, கசட தபற, அன்னம் விடு தூது, இலக்கிய வட்டம், வானம்பாடி, சுட்டி, கவனம், ஞானரதம், சுவடு ஆகிய இதழ்கள் முக்கியமானவை. இருபது இதழ்களிலிருந்தும் , இன்றிருக்கும் சிற்றிதழ்கள் பாடம் கற்கவேண்டியவையும் கற்கக்கூடாதவையும்   நிறையவே இருக்கின்றன.   இவற்றைத் தவிர இந்த இருபது இதழ்களுக்கும் கீழ்க்கண்ட  ஐந்து விடயங்க்களில் உள்ள ஒற்றுமை மிக முக்கியமானது:

அ.       இதற்கு முன்பு வேரொரு சிற்றிதழில் பணியாற்றியவர் அல்லது பணியாற்றியவர்கள்  அங்கிருந்து வெளியேறி புதிய இதழினைத் தொடங்க்குகிறார்கள்.

ஆ.      தொடங்கும் அனைவரும் தமிழ் இலக்கியத்தை மேம்படுத்தப் போவதாகச் சூளுரைக்கிறார்கள்.

இ.    இலக்கிய சர்ச்சைகள் என்ற பெயரில்  எழுத்தாளர்கள் கட்டிப் புரளுகிறார்கள்.

ஈ     தீவிர இலக்கியம் என்பதே கவிதைகள் என அதிகம் விளங்கிக்கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

உ.      நிதி ஆதாரம் இல்லை என்பதைக் காரணமாக முன்வைத்து கடையை மூடுகிறார்கள்.

நாமறிந்த மூத்த படைப்பாளிகள் பலரின் பயிற்சிக் களமாக சிற்றிதழ்கள் இருந்துள்ளன.  நடை இதழில் சி.மணி, ஞானக்கூத்தன்போன்றோரையும் – “ஞானக்கூத்தனின் பெயர் பிரபலமாவதற்குக் காரணமான பல சிறந்தக் கவிதைகள் நடை’ யில் வந்தன” எங்கிறார், வே.ச. 1970ல் வெளிவந்த ‘கசடதபற’ இதழில் சா. கந்தசாமி நா.முத்துசாமி, அசோகமித்திரன் முதலானப் பெயர்களைச் சந்திக்கிறோம்.  கசட தபற இதழில் ஞானக்கூத்தனைத் தவிர்த்து இன்று புதுக்கவிதயென்றால் நினவுக்கு வரக்கூடிய ஆத்மா நாம், கல்யாண்ஜீ,, கலாப்பிரியா, தேவதச்சன் என பலரும் எழுதியிருக்கின்றனர்.

வானம்பாடி கவிஞர்கள் ஒத்துழைப்புடன் 1984ம் ஆண்டு வெளியான அன்னம் விடுதூது கவிஞர் `மீராவின் பொறுப்பிலும், கவிஞர் சிற்பியை ஆசிரியராகவும் , கவிஞர் அழ்ப்துல் ரகுமானை சிறப்பாசிரியராகவும் கொண்டிருந்தபோதிலும், “ அரசியல் விமர்சனம், இலக்கிய விளக்கம் , அறிவியல் சாதனைகள், சமூகப்பிரச்சினைகள் , ஓவியம்,  நாடகம், சினிமா………இலக்கிய அக்கப்போர்கள், நூல் மதிப்புரைகள், கவிதைகள் கதைகள் என்று ஒன்று பாக்கியில்லாமல் திகட்டத் திகட்டவாசகர்க்கு ‘ விருந்தளித்தது என்கிறார்  வே.சபா நாயகம்.  இன்றைய தமிழின் முக்கியமான சிறுகதை ஆசிரியர்கள் எழுதியிருந்தபோதிலும் இச்சிற்றிதழில் “கவிதைகள் கட்டுரைகள் அளவிற்கு அதிகம் பெறவில்லை” என்பது கட்டுரை ஆசிரியருக்குக அன்னம் குறித்த  குறை இருந்திருக்கிறது.

“இலக்கிய வட்டம் “ முழுக்க முழுக்க க.நா.சு. வை முன்னவராகவும் மூலவராகவும் கொண்டு வெளிவந்திருக்கிறது.  நகுலன், டிகே துரைசாமி என்ற பெயரிலும் கதை கவிதை எழுதியாக அறிகிறோம். இவர்களைத் தவிர கிருஷ்ணன் வம்பி, நசிகேதன், சுந்தர ராமசாமி ஆகியூரது படைப்புகளும் இடம் பெற்றிருந்தன எங்கிறார் வே.சபா நாயகம்.

இத்தொகுபிலுள்ள முக்கியமான கட்டுரைகளில் வானம்பாடி சிற்றிதழ் பற்றியதுமொன்று   ‘மானுடம் பாடும் வானம்பாடி’ எனத் தன்னைப்பிரகடனப்படுத்திக்கொண்ட இதழில் புவி அரசு, ஞானி, இளமுருகு, அக்னிபுத்திரன் சிற்பி, மு.மேத்தா பிரபஞ்சன், தமிழன்பன், கல்யாண்ஜி, தமிழவன், பா. செயப்பிரகாசம் சிதம்பர நாதன் என நிறைய பேர் எழுதியிருக்கிறார்கள்.

இப்பட்டியலில் அப்போதே இலக்கியத்துடன் சமூக பிரக்ஞையைக் கையாண்டதற்கு உதாரணம்போல  ‘சுட்டி’  என்ற சிற்றிதழும் இடம்பெற்றுள்ளது. . இவ்விதழ் எண்பதுகளின் தொடக்கத்தில் வந்திருக்கிறது ஆசிரியர் நாராயண பாரதி. இதழ் ஒருவரையும் விட்டுவைக்கவில்லை, எதையும் எவரையும்  கடுமையாக விமர்சித்ததின் பலன் 950 பிரதிகளுடன் தொடங்கிய இதழ்  ஆறே மாத்தில் 12000 இதழ்களை எட்டி 107வது இதழை 25000 பிரதிகளை விற்க முடிந்த சாதனைக்குப்பின் சந்தாதாரர்களுக்குக் கூட த் தெரிவிக்காமல் மூடிவிட்டார்களாம்.

இச்சிற்றிதழ்கள் பற்றிய தகவல்களில்  முக்கியமானது, எழுத்தாள நண்பர்களுக்கிடையே  நடந்த இலக்கிய சர்ச்சைகள். எந்த அளவிற்கு இலக்கியத்திற்கு முக்கியம்கொடுத்தனவோ  அதே அளவிற்கு சர்ச்சைகளிலும் குறிப்பாக  கசட தபற போன்ற பெரிய இதழ்கள் ஆர்வம் காட்டியுள்ளது சுவாஸ்யமான தகவல். உலகமெங்கும் இலக்கியவாதிகளிடையே சர்ச்சை என்பது அவர்கள் இரத்த்தத்தில் ஊறியதாக கடந்தகாலத்தில் இருந்திருக்கிறது.  க.நா.சு. வின் இலக்கியவட்டம், வானம்பாடி ஆகிய இதழ்களில் பங்க்காற்றியவர்களும் சர்ச்சைகளில் ஆர்வம் காட்டி யிருக்கிறார்கள்.

சிற்றிதழ்களைப் பற்றியத் தகவல்களை குறையின்றி திரட்டித் தருவது நோக்கம் என் கிற போதும் அவற்றால்  நவீனதமிழிலக்கியம் அடைந்த பலனைக் குறைத்து மதிப்பிடமுடியாது என்பதைப்போல, வே. சபா  நாயகம் சந்தர்ப்பம் வாய்க்கிற போதெல்லாம் அவற்றைப் பாராட் ட த் தவறுவதில்லை.

“மிகுந்த உழைப்பு மேற்கொண்டு சி. மணி யாப்பியம் என்ற 50 பக்கத்துக்கும் மேற்பட்ட யாப்பிலக்கணம் பற்றிய எளிமையான பயனுள்ள இலவச இணைப்பை பொருளாதாரப் பிரச்சினையிருந்தும் நடை மூன்றாவது இதழுடன் ‘செல்வம்’ பெயரில் எழுதியளித்திருந்தார்…… நடையின் சாதனைகளில் முக்கியமானதாக இதைச் சொல்லாம் “ (பக்கம் 11)

“கசட தபற” சோதனை முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி பெற்றிருக்கிறது குறிப்பாகப் புதுகவிதைக்கு  அது நிறையவே செய்த து” (பக்கம் 16)

“ஆரோக்கியமான அருமையான விஷயங்க்களை வெளியிட்டு ஒட்டுமொத்தம் பாராட்டுதல்களுக்குள்ளாகி வீறு நடை போட் ட அன்னம் “ (பக்கம் 33)

“ ஒரு பத்திரிகையைப் பார்த்தவுடனேயே அதன் இலக்கியத் தரம் தெரிந்துவிடும் என்ற கருத்து உண்டு. அப்படி முதல் இதழைப் பார்த்த துமே சாதனை புரியும் சாத்திய கூறுகளுடன் ‘அஃக்’ என்றொரு இலக்கியப் பத்திரிகை” (பக்கம் 59)

திரு.வே. சபா நாயகத்தின் கட்டுரைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள முக்கியமான இதழ்கள் அனைத்தும் இன்றைய நவீன தமிழிலக்கியம் அடைந்துள்ள வளர்ச்சிக்குக் காரணமானவை.  ஏன் அவை நின்றுபோயின என்பது பலரும் அறிந்த து தான் , தவிர தொடங்ககும்போது கொள்கை முழக்கத்துடன் வந்தவை என தெரிகிறது. அவற்றைச் சரியாக நிறைவேற்ற முடியவில்லையே என்ற கோபங்கூட அவர்கள் தொடர்ந்து இதழை நடத்த  முடியாமற்போனதற்குக் காரணமாக இருக்கலாம்.  புதிதாய் இதழ் தொடங்குகிறவர்கள்  இந்த நூலிலிருந்து கற்பதற்கு,  தெரிந்துகொள்வதற்கு  நிறைய இருக்கின்றன. இன்று வெற்றிகரமாக இயங்கிகொண்டிருக்கும்  சிற்றிதழ்களோடு இத்தொகுப்பிலுள்ள பழையச் சிற்றிதழ்களின் செயல்பாடுகளை  ஒப்பிட்டு பாருங்கள். நல்ல விடயங்களைச் சொல்ல சாத்தியமெனில் சில சமரசங்களும்  செய்துகொள்ளுதல் அவசியம். இறுதியாக வெற்றி பெற்ற சிற்றிதழ்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள்: சினிமா அரசியலுக்கு ஒதுக்கியதுபோக ஒன்றிரண்டு பக்கங்களை  வே. சபா நாயகம், பாரதிபுத்திரன், பக்தவச்சல பாரதி, பழ. அதியமான், க.பஞ்சாங்கம் இன்னும் இது போன்றோரின் நூல்களைக் கவனத்திற்கொள்ள, வாசகர்களிடம் கொண்டுசெல்ல  ஏதேனும்  செய்யுங்கள். இவர்களின் உழைப்பையும் சிற்றிதழ்கள் கவனித்தால்தானுண்டு.

 

————————————————————————