Monthly Archives: திசெம்பர் 2016

மொழிவது சுகம் : ‘ஆயிரம் ரூபாய் நோட்டு’ம் மோடிவித்தையும்

1000_rupee_note_-_still_-_h_-_2016‘ஆயிரம் ரூபாய் நோட்டு ‘என்றொரு படத்தை netflixல் அண்மையில் பார்க்க நேர்ந்த து.  ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அதாவது அறுபதுகளில் வந்த ‘ஆயிரம் ரூபாய்’ என்றொரு தமிழ்த் திரைப்படத்தை அது நினைவூட்டியது.  படத்தில் தெருவில் ஆடிப்பாடி பிழைக்கும் சாவித்திரிக்கு ஒரு நாள் ஆயிரம் ரூபாய் தாளொன்று  கிடைக்கிறது.   அதைப் பாதுகாக்க அல்லாடுகிறார், அவசரத் தேவையை முன்னிட்டு உபயயோகிக்கலாம் என்று போனாலும், அன்றாட வயிற்றுப்பாட்டுக்கே தாளம்போடும்  பெண்ணிடம் ஆயிரம் ரூபாய் எப்படி வந்ததென்ற கேள்வி. முடிவில்  ஒரு கட்டத்தில் பைத்தியங்கூட அவருக்குப் பிடிக்கிறது.

 

‘ஆயிரம் ரூபாய் நோட்டு’ (1000 Rupee Note) ஒரு மராத்திய திரைப்படம். அடிப்படையில் ‘ஆயிரம் ரூபாய்’ கதையின் மையக் கருத்தை ஒட்டியதுதான், திரைக்கதை அமைப்பிலும் பிரமாதமான வேறுபாடுகளில்லை. எனினும் தமிழ் ‘ஆயிரம் ரூபாய்’ நாம்  நன்கறிந்த மெலோ டிராமா வகையறா, அதாவது ‘சோப்  ஒபேரா‘ (soap opera)ரகம். ஆனால் மராத்திய ‘ஆயிரம் ரூபாய் நோட்’ சிக்கல்களைத் திணிக்காத, எளிமையான திரைக்கதையும் சம்பவக் கோர்வையுமாக விசும்பல்கள் தேம்பல்களின்றி எதார்த்த முறுவல்களுடன்  நகரும் சினிமா.  எத்தனை யுகங்கள் வந்துபோயினும், ராஜபாட்டை அறியாது முட்டுச் சந்துகளில் உறைந்து துன்பத்துடன் வலுவில் கை கோர்க்கும் வாழ்க்கைக்கு உரியவர்கள் ஏழைகள் என்பதை  நியோ ரியலிஸத்துடன் காட்சிப்படுத்தும் சினிமா.

 

சாவித்திரி இடத்தில் இங்கே உஷா நாயக், ஆட்டம் போடவந்த இளமையும் கவர்ச்சியுமிக்க நாயகிஅல்ல, வயதானப் பெண்மணி. மகாராஷ்டிர மாநிலத்தில் கிராமமொன்றில் உழலும் கதை. விவசாயியான ஒரே மகன் வாங்கியக் கடனை திருப்பிச் செலுத்தமுடியாமல் தற்கொலைசெய்துகொள்கிறான் (இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கிலும் மல்லையாக்கள் தற்கொலை செய்துகொள்வதில்லை), கொள்ளிவைக்க உதவும் என்பதுபோல அரசுசெய்த அற்ப உதவியையும் மருமகள் சுருட்டிக்கொண்டுபோக, நிர்க்கதியாய் விடப்பட்ட விதவை.  கிராமத்தில் ஒருபணக்கார குடும்பத்தில் பத்துபாத்திரம் தேய்த்து, வீடுபெருக்கி, நாளெல்லாம் அவர்கள் வீட்டுத் துணிகளை அலசி  அவர்கள்  தின்று மீந்த தில் பசியாறும் பெண்மணி. வீட்டில் அடுப்பு மூட்டுவது டீ போட மட்டும் தான். தொடக்கத்தில் இந்த அடுப்பைமூட்டும் முயற்சியில் தீப்பெட்டியில் இருந்த நான்கு குச்சிகளில் மூன்று பயனற்றுப்போக, நான்காவது குச்சியிலாவது அடுப்பு பற்றவேண்டுமென கடவுளை வேண்டுவதும், மெல்ல மெல்ல விறகில் தீப்பிடித்து பரவ, தீச்சுவாலையின் செழுமை கன்னக்கதுப்பிலும், கண்மணிகளிலும் மினுங்குவதும், அந்த மினுங்கலை  உதட்டோரங்களில்  வழியவிடுவதும் கணநேரக் காட்சியென்றாலும் கோடிபெறும். ஏழைகள் வாழ்வில் மகிச்சிக்கூட  ரேஷனுக்கு உட்பட்டதில்லையா ?  இருந்தும்  அதையும் அண்டைவீட்டுக்காரனான சுதாமா என்ற ஆட்டிடையன் குடும்பத்துடன் பகிர்ந்து வாழ்பவள். « யாருடனாவது சேர்ந்து குடித்தால் தான் டீ சுவைக்கிறது » எனும் பெண்மணி.  அறுந்த செருப்பைத் தைக்கவும், ஐம்பது காசு செலவழித்து ஒரு தித்திப்பு ரொட்டி வாங்கவும் பலமுறை யோசிப்பவள், காரணம் சிக்கனம் அல்ல,  அவள் கையிறுப்பு அவ்வளவுதான்.

 

இந்த அன்றாடம் காய்ச்சியின் வாழ்வில் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் குறுக்கிட,  வாழ்க்கைத் திணறுறது. வழக்கம் போல தேர்தல் பிரச்சாரத்திற்குவருகிற ஓர் அரசியல்வாதி  வாக்குகளை விலைகொடுத்துவாங்குகிறான். தேர்தல் கூட்டத்தில் கலந்துகொண்டால் ஒருவேளை நல்ல சாப்பாடும், பணமும் கிடைக்குமென்கிற சுதாமா குடும்பத்துடன் இவளும் தேர்தல் கூட்டத்தில் கலந்துகொள்கிறாள். உணவுப் பொட்டலத்துடன், வயதான பெண்மணிக்கு விவசாயியான மகன் தற்கொலை செய்துகொண்ட தகவலால் வேட்பாளரிடமிருந்து கூடுதலாக இரண்டொரு ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் கிடைக்கின்றன. தலைவலி அன்றே ஆரம்பிக்கிறது. எங்கே பாதுகாப்பாக வைப்பதென்ற கவலையில் உறக்கமின்றி தவித்து (எந்த வெண்டைக்காய் வங்கியும் அவளுக்குத் தெரியாது), தனக்கிருக்கும் சில ஆசைகளை (உடைந்திருக்கும் மூக்குக் கண்ணாடியை சரி செய்வது, தன் மகன் படத்திற்கு பிரேம் போடுவது, தனக்கும் சுதாமா குடும்பத்திற்கும் துணிமணிகள் எடுப்பது) நிறைவேற்றிக்கொள்வதன்மூலம் இப்பிரச்சினையிலிருந்து விடுபடலாமென நினைக்கிறாள். நகரம்  நோக்கிப் பயணம். பேருந்து நடத்துனர் ஆயிரம் ரூபாயை மறுக்க, உடன் பயணிக்கும் சுதாமா பணம்கொடுக்கிறான். கண்ணாடிகடை, படத்திற்கு பிரேம் போடும்கடை அனித்திலும் இதே அனுபவம். துணிக்கடையில் மாற்றிக்கொள்ளலாமென நினைத்து அங்குபோகிறார்கள்.  கடைமுதலாளி சந்தேகித்து ரோட்டோரம் போகுகும்  போலீஸ்காரரை அழைக்கிறார், பாகிஸ்தானில் அடித்த கள்ளப் பணமாம், எனவே வயதான பெண்மணியும் துணைக்குவந்த அப்பாவி சுதாமாவும் விசாரணை யென்ற பெயரில் அடிபடுகிறார்கள், தடுப்புக்காவலில் வைக்கப்படுகிறார்கள், இறுதியாக சுதாமா கைவசமிருந்த பணத்தையும் இழந்து வீடு திரும்புகிறார்கள். இச்சம்பவத்தில் வழக்கம்போல இலாபம் பார்ப்பது போலீஸ்காரர்கள். வேட்பாளர்மீதான புகாரை பதிவு செய்வதைத் தடுக்க 50000 ரூபாயும், வேட்பாளரைக் காப்பாற்ற செய்த உதவிக்குச் சில ஆயிரங்களும் கைமாறுகின்றன.

இந்தியாவில் ஏழைகள் கையில் 500 ரூபாய் நோட்டையும், 1000 ரூபாய் பார்க்க முடிவதற்கு ஒன்று தேர்தல்  காரணமாக இருக்கலாம் ;  அல்லது சிறுகச் சிறுக வயிற்றைக்கட்டி வாயைக்கட்டி சேர்த்ததாக இருக்கலாம். திடீரென்று 500 ரூபாயையும் 1000 ரூபாயையும்  செல்லாதாக்கியதன் மூலம் இந்திய  மத்திய அரசு உண்மையில்  யாரைத் தண்டிக்கிறது ? ‘ஆயிரம் ரூபாய் நோட்’ படத்தில் வரும் ‘பூதி’ போன்ற பெண்மணி ‘ஓட்டு’க்காக வாங்கிய பணம் என்ற காரணத்தால் அவளைப் தண்டிப்பதைக்கூட ஜீரணித்துக்கொள்ளலாம்  ஆனால்  வங்கியென்றாலென்ன அது கறுப்பா சிவப்பாவென்று அறியாமல்,  உறிப்பானையையும் அண்டாகுண்டாவையும் வங்கியாகப் பாவிப்பவர்களைத் தண்டிப்பதில் மோடிக்கு என்ன அப்படியொரு குரூரமான சந்தோஷம்?   எத்தனை சதவீத இந்திய மக்கள் வங்கிகள் பற்றிய ஞானத்தைப் பெற்றிருக்கிறார்கள் ? இந்தியாவில் மக்கட்தொகை வீதாச்சாரத்திற்கேற்ப வங்கி எண்ணிக்கை உள்ளதா ?  இருக்கின்ற வங்கிகளின் சேவை தரமென்ன ? இவற்றிலெல்லாம் தகுந்த மாற்றத்தைக் கொண்டுவராமல் ஓர் உலக்கையை நட்டு புதிய இரண்டாயிரம் எனும் பணமுடிச்சை வைத்து முடிந்தால் எடுத்துக்கொள் எனக்கூறும் மோடி மந்திரம் சொல்வதென்ன ?

கட்டுக் கட்டாய் கறுப்புப்பணம் வைத்திருப்பவர்களுக்கெல்லாம் புதிய 2000 ரூபாய் இடவசதியைப் இரட்டிப்பாக்கி கூடுதலாக பதுக்க உதவி செய்திருப்பதைத் தவிர்த்து  கண்டபலன் என்ன ?

———————————————————–

 

இந்தியா : மக்கட்தொகையும் வெளியும் இந்தியப் பாலின ஏற்றத் தாழ்வுகள் -2 கமலா மரியுஸ்

கட்டுரை ஆசிரியர்  –  கமலா மரியூஸ், வருகைப் பேராசிரியர் பொர்தொ பல்கலைகழகம், பிரான்சு; பிரெஞ்சு அரசின் மொழி நிறுவனம், புதுச்சேரி.

  1. வாய்ப்புகளில் சமத்துவமின்மை

 

2011ஆம் ஆண்டு இந்திய மக்கட்தொகை கணக்கெடுப்புடன்   ஒப்பிடுடுகையில்  கல்விபயின்றவர்  விகிதாச்சாரம் 2001 ஆம் ஆண்டில்  64.83  சதவீதமாக இருந்தது, இவ்வெண்ணிக்கை 2011 ஆம் ஆண்டில் 74.4 சதவீதமாக உயர்ந்துள்ளது தெரிய வந்தது. எனினும் பெண்கள் நிலமையில் காண்கிற சமத்துவமின்மை  அவர்களுடைய கல்விவாய்ப்பிலும் பிரதிபலிக்கிறது என்பதுதான் உண்மை நிலை. தமிழ்நாடு மாநிலத்தில்  கவனிக்கத்தக்க வகையிற் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக  1982 ஆம் ஆண்டில்  இலவச மதிய உணவுத் திட்டத்தை அனைவருக்குமென நடைமுறை படுத்தியது, ஆரம்பக் கல்வி மட்ட த்திலேயே  பள்ளிக் கல்வியைத் தொடராமல் வெளியேறும் மாணவர்களைத் தடுக்கும் வகையில்  கட்டாயக் கல்வியைச் சட்டமாக்கியது போன்றவை  அன்றையத் தமிழ்நாடு அரசின் முயற்சிகள். அடுத்ததாக  நாட்டின் 2010 ஆண்டு ஏப்ரல்  முதல் தேதியிட்ட சிறுவர்க்கான கட்டாய இலவசக் கல்வி அரசு ஆணை (Right of children to free and compulsory education act  2009) கடைசியில்  6லிருந்து 14 வயதுவரையிலான  அனைத்து சிறுவர் சிறுஅனைவருக்கும் தொடக்கக் கல்வியைப்  பெறுவதற்கான உரிமையை முதன் முதலாக வழங்கியது. 80 சதவீத மாணவர்க்குக் கிடைத்த மதிய உணவுத் திட்டமும், 70 சதவீத மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டப் பாடப் புத்தகங்களும் கூடுதற் பலனை அளித்தன.

tx-alphab-inde-par-caste-par-age

எனினும் கல்விவாய்ப்பில்  பாலின அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் தொடரவே செய்கின்றன. உதாரணத்திற்கு இருபாலினத்திரிடை கல்வி அறிவை,  2011ஆம் ஆண்டில்  ஆண்களில் 82.1 விழுக்காட்டினரும், பெண்களில் 65.5 விழுக்காட்டினரும் பெற்றிருந்தனர். அதாவது பாலின அடிப்படையில் பார்க்கிறபொழுது 2001 ஆம் ஆண்டில் வேறுபாட்டின் சதவீதம் 21.6 விழுக்காடு  என்றிருந்தது, 2011 ஆம் ஆண்டில் 16, 7 விழுக்காடு குறைந்துள்ளது  தெரிய வந்தது.  எனினும் எழுத்தறிவு பெற்றவரெனத் தெரிவிக்கப்பட்ட எண்ணிக்கையினரில் கணிசமான ஒரு பகுதியினர் அரசின் கல்வித் திட்டம் வகுத்துள்ள கல்வி அறிவை நிறைவு செய்யாதவர்கள், தவிர இந்தக் கல்வி அறிவு பெற்றவர்களென மக்கள் கணக்கெடுப்பு கையாளும் சொல்லாடலின் பொருளேகூட ஒரு குடும்பத் தலைவர் அளிக்கிற தகவலை அடிப்படையாக க் கொண்டது. தவிர  எழுதப்படிக்கத் தெரிந்தவர்  என்பவர் ஒரு குறிப்பிட்ட மொழியை ஓரளவு வாசிக்கவும் எழுதவும் கூடியவர்  என்று விளங்கிக் கொள்ளுதல் வேண்டும்.  இந்த எழுதப்படிக்கத் தெரிந்தோர் வீதாச்சாரம் வயதின் அடிப்படையில்  இருபாலினரிடையே வேறுபாட்டைக் கொண்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களில்  ஆண்கள் 54 சதவீத த்தினரும் பெண்கள் 19 சதவீத த்தினரும் கல்வி அறிவு உடையவர்கள். 10 வயதிலிருந்து 14 வயதுகுட்பட்ட பிரிவினரில்  பையன்கள் 82 சதவீதமும், பெண்கள் 78 சதவீதமும் கல்வி கற்றவர்கள். 14 வயதிற்கும் 17 வயதிற்கும் உட்பட்ட பிரிவினரிடை எழுதப் படிக்கத் தெரிந்தவர் சதவீதம் பெண்களித்தில்  32 சதவீத த்திலிருந்து  54 சதவீத த்தை இன்று எட்டியுள்ளது.

2-2012-09-27-11-32 7-img_3162_dxo

ஆயினும் இந்திய தேசத்தில் சராசரியாக எழுதப் படிக்கத்  தெரிந்தவர்களின்   விகிதாச்சாரத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள்  வெறுமனே வயது, சாதிகள், வாழ்விடத்தின் நகரத் தன்மை ஆகியவற்றைப் பொருத்தவை மட்டுமே  அல்ல. உயர்சாதியினர் வசிக்கும் நகரப்பகுதிகளில் கல்விஅறிவுபெற்றொர் விகிதாச்சாரம் அதிகம். இம்மாதிரியான இடங்களில் இந்துக்கள் கிறித்துவர்கள் என்ற பேதங்கள் கல்வியறிவு ஏற்றத்தாழ்வில் தெரிவதில்லை. அவ்வாறே குடும்ப வருவாய் அதிகரிக்கிறபொழுது, அதற்கிணையாக  அக்குடும்பத்தில்  ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் காணும் எழுத்தறிவு சமத்துவமின்மை வீதாச்சாரம்  குறையவும் செய்கிறது (fig 5 ).

5-abandon-scolarite-table

6-carte-alphab-femmes

பள்ளிபடிப்பைத் தொடராமல்  வெளியேறும் விழுக்காடும்  பெண்களிடத்தில் அதிகம். அதிலும் குறிப்பாக  தலித் , பழங்குடி மக்கள்  மற்றும்  இசுலாமியர் ஆகியோரிடை  மிகவும் அதிகம். அரசாங்கத்தின் இடஒதுக்கீட்டுக் கொள்கை, நகரத்தில் வாழும் வாய்ப்புள்ள இசுலாமியர்   போன்ற சாதமாகனச் சூழ்நிலைகளுக்குப் பின்னரும் தொடரவே செய்கிறது. பள்ளிக் கல்வியை முடிக்காத  உயர்சாதி இந்துப் பிள்ளைகள்  8 சதவீதம் ஆனால் அதேவேளை , இசுலாமியடரித்தில் 26 சதவீதமும், தலித் மற்றும் பழங்குடிகளிடத்தில்  31 சதவீதம் என்றிருக்கிறது. உழைக்கும் வயதுடைய உயர் சாதி இந்துக்கள், ஜெயின்கள், கிறித்துவர்களிடை  ஆண்களில் 16லிருந்து 17 சதவீத த்தினர் பட்டமோ , டிபளாமோவோ பெற்றிருக்கிறபோது; தலித், பழங்குடியினர், இசுலாமியர்கள் ஆகியோரிடை 4லிருந்து 6 சதவீத த்தினரும் அதிலும் பெண்கள் என்றுவருகிறபோது  இப்பிரிவினரில் 2 சதவீத த்தினரே அத்தகுதியைப் பெற்றுள்ளனர்.

 

கல்வி அறிவில் காணும் இந்த ஏற்றத் தாழ்விற்கு கல்வி நிறுவனங்களில் நிலவும் சூழல்களுங்கூட காரணம். உபகரங்கரண ங்கள், பாடப்புத்தகங்கள் ஆகியவை தேவைக்கேற்ப அனைவருக்கும் கிடைப்பதில்லை. ஆசிரியர்கள் போதிய எண்ணிக்கையில் இல்லாதாதது, அல்லது பணிக்கு ஒழுங்காக வராதது,  அவர்கள் கல்வி அறிவிலுள்ள குறைபாடுகள், கல்விநிறுவன செயல்பாடுகளில் காணும் குறைபாடுகள் போன்றவை இன்னொருபக்கத்தில் முறைசாரா கல்விமுறைக்கு வழிவகுக்கின்றன ( மாலைக் கல்வி, பிரத்தியேகமான கல்வி ஏற்பாடுகள் ..). அடுத்துப்  பல்கலைக் கழகங்கள் மற்றும் உயர்கல்வி ஸ்தாபனங்கள் என்றாலே மேல்தட்டு மக்களுக்கு என்பதுபோல இவ்விடயத்தில் அரசு காட்டும் மெத்தனமும்  சமூகத்தில் கல்வி அறிவில் காணும் ஏற்றதாழ்வுகளுக்குக் காரணம். எனினும் 2008க்கும் 2013க்கும் இடைபட்டக் காலத்தில் 58000 அரசுப் பள்ளிகளும் 70000 தனியார் பள்ளிகளும்  கட்டப் பட்டுள்ளன.

 

மத்திய அரசு நிதியுதவி அளிக்கிறபோதும் மாநில அரசுகளில் சொந்தத் திட்டங்களைச் சார்ந்திருக்க வேண்டிய நிலையிலும் இத்துறை உள்ளதாலும் மாநிலங்களிடை சீரற்ற ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட காரணம்(fig 8). இதன் விளைவாக கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத்,இமாசலப்பிரதேசம், மேற்குவங்காளம், வடகிழக்கு மாநிலங்களில் எழுதப் படிக்கத் தெரிந்தவர் விகிதாச்சாரம்  70 சதவீத த்திற்கு அதிகம்: மாறாக ஜர்கண்ட், உத்தரபிரதேசம், ஆந்திரப்பிரதேசம், மத்தியபிரதேசம், ஒரிஸ்ஸா, பீகார், ராஜஸ்த்தான் ஆகிய மாநிலங்கள் மிகவும் பின் தங்கிய நிலைமை, குறிப்பாக கடைசி இரண்டு மாநிலங்களிலும் கல்வி அறிவு 53 சதவீதம்(fig 7 ).இருந்தபோதிலும் கடந்த பத்து ஆண்டுகளில் பாலின அடிப்படையிலான கல்வி அறிவிலுள்ள  ஏற்றத் தாழ்வு வெகுவாக க் குறைந்துள்ளதென்பதையும் மறுப்பதற்கில்லை,

 

என்னதான் கல்வி அறிவில் முன்னேற்றம் ஏற்பட்டாலும் பாலின அடிப்படையில் காணும் சமத்துவமின்மைக்கு மக்களின் சமூகம் மற்றும் பண்பாடுகள் காரணம் என்பதும் தெளிவு. பெண்பாலின எண்ணிக்கையை வரம்பிற்குட்படுத்துதல், சமயத்தின் அடிப்படையில் வகுக்கப்பட்ட நெறிமுறைகள் பொதுவிடத்திற்கெனப்  பின்பற்றும் ஒழுங்கு போன்றவையும் இப்பிரச்சினையில் முக்கிய ப்பங்கினை வகிக்கின்றன.

 

3          பொதுவெளிப் பயன்பாட்டில் பாலின அடிப்படையிலான நிர்ப்பந்தங்கள்

 

ஆண்கள் பெண்கள் இருபாலினருமே பொதுவெளிகளில் காணக்கிடைத்தாலும், உடலளவில் பெண்களின் அண்டைவெளி புழக்கத்தை   சமூகத்தின் அடிப்படையில் கட்டுப்படுத்துகிற  பண்பாட்டு நெறிமுறைகள் அனேகம்.  கூட்டுக்குடும்பம் அல்லது  சார்ந்திருக்கும் சமுதாயம் காரணமாக, ஒருவித க் கட்டுப்பாடு  ஒருவித சமூகக் கெடுபிடி  இயல்பாக செயல்பட்டு ஆண்களிடமிருந்து பெண்களை விலக்கிவைப்பதில் சறுக்கல்களை தவிர்க்கும் முனைப்புத் தெரிகிறது. அன்றாடப் புழங்கும் இடங்களிலிருந்து வெளியில் வருகிறபோது  ஒருவித அநாமதேயத்தையோ, பிறர் பார்வைக்குத் தப்பிக்கும் உருவத்தையோ தேடிப்பெறவேண்டிய நெருக்கடி பெண்களுக்கு. உள்ளது. இஸ்லாமியப்பெண்களுக்கு பர்தா, சில வடமாநிலப்பெண்களுக்கு (உத்தரபிரதேசம், அரியானா, ராஜஸ்த்தான்)  குங்காட் (Ghunghat)  போன்றவை பொதுவிடங்களின்

உபயோகத்திற்கென்று நிர்ப்பந்திக்கப் பட்டவை. ஆக பொதுவிடங்களில் பெண்கள் புழங்கப் பொழுதுபோக்கு காரணிகளினும் பார்க்க (பூங்கா, காப்பி பார்கள், அழகு நிலையங்கள்  ..) குடும்பம்  அல்லது சமுதாய சார்ந்த காரணிகளே( சந்தை, பள்ளி, குழந்தைகள் பூங்கா, வேலை செய்யும் அலுவலகம், சமய வழிபாட்டு இடங்கள், பண்டிகைகள்) முக்கியத்துவம் பெறுகின்றன. நகரங்களின் பொதுவாக  எங்கும் காண்கிற பூங்காக்கள், திரைப்படக் கூடங்கள் காப்பி பார்கள், பேரங்காடிகள் போன்ற பொதுவிடங்களில் புழங்குகிற உரிமை கூடுதலாகப் பெண்களுக்குக் கிடைக்கிறது, இம்மாதிரியான பொதுவிடங்கள்  ஒருவகையில் சிலவரம்புகளுடன் நெறிமுறையைக் க்டக்கவும்  ஆண்களுடன் பகிர்ந்துகொள்ளவும் முகத்திரையிட்ட பெண்களை அனுமதிக்கின்றன. அதேவேளை  வீதிகளில் கடைவிரித்துள்ள துரித உணவகங்கள், மதுக்கடைகள், மதுவருந்தும் விடுதிகள் ஆண்களுக்கு மட்டுமே புழங்குவதற்குரியவை.

 

எனினும் பொதுவிடங்களில் பெண்களின் நடமாட்டம் என்ற உரிமைக்கான விலை  இப்பிரச்சினையை கையாளுதல், அதனை உணர்வு பூர்வமாக எதிர்கொள்ளுதல்  ஆகிய விடயங்களில் பேரத்திற்கு  உட்பட்டதாக தொடர்ந்து இருந்து வருகிறது. 2010 ஆம் ஆண்டுஇந்திய மனித வளர்ச்சி  கணக்கெடுப்பின்படி பெரும்பான்மையான பெண்கள் அதாவது மொத்த பெண்கள் எண்ணிக்கையில் 73 விழுக்காட்டினர் மருத்துவ மனைகளுக்குச் செல்வதென்றாலுங்கூட தனியே போவதெனில் ஆண்களின் குறிப்பாக தங்கள் கணவர்களின் அனுமதியை பெறாமல் செல்லமுடியாதென்றும் , அவ்வாறான அனுமதியும் 34 விழுக்காட்டினருக்கு மறுக்கப்பட்டிருக்கிறதென்றும் தெரிவிக்கிறது.(fig 8)

8-autonomie-table

வடமாநிலங்களைப்  பொறுத்தவரை கல்வி, வயது, ஏன் பெருநகரங்களில் வசிபதுகூட மருத்துவமனைகளுக்கு செல்லும் வாய்ப்பில் குறுக்கிடுபவையாக உள்ளன. புர்க்கா மற்றும் குன்காட் வழக்கிலுள்ள இந்த வடமாநிலங்களில் பொதுவிடங்களில் பெண்களுக்கான  சமத்துவமின்மை மிக க் கடுமையாக உள்ளது (fig 9 ). ஆனால் இப்பிரச்சினை அதிகம் நகரவாழ்க்கையைக்கொண்ட மாநிலங்களில் (கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத்) இப்பிரச்சினை அதிகமில்லை. அரசு ஆவணங்களில் பெண்கள் தங்கள் பெயரை இடம்பெறசெய்வதேகூட பெண்களின் சுய அதிகாரத்தை வெளிப்படுத்துவதாக  தொழில் அபிவிருத்திபெற்ற குஜராத், கர்னாடகா மாநிலங்களில் கருதப்படுகிறது

9-cartes-autonomie-femmes

தவிர கூட்டுக்குடும்பம் (la famille indivise)அல்லது விரிந்தக் குடும்பம் (la famille élargie)என்கிற அமைப்புமுறை பெண்ணை அடிமை நிலையில் வைத்துள்ளது. விளைவாக இந்தியக் குடும்ப அமைப்பில்  அதிகம் வன்முறையில் பாதிக்கப்படுபவளாக அவள் இருக்கிறாள். மாமியாரின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கிற பெண் அவ்வாறில்லாத பெண்ணைக்காட்டிலும் அதிகம் குடும்ப வன்முறையில் பாதிக்கப்படுவதாக இது குறித்த பல ஆய்வு முடிவுகள் ( Jejeebhoy, 1998 ) தெரிவிக்கின்றன. எனினும் இக்கருத்தை ஒரு குடும்பத்தில்  மாமியார்  என்பவர் தன் குடும்பத்தின் நன்மதிப்பில் அக்கறைகொண்டு கணவன் – மனைவிப் பிணக்கைக் குறைக்க முயற்சிக்கிறார் என்பது தெரியவந்த கணத்தில் , பொதுமைப் படுத்தக்கூடியதல்ல என்பதாகிறது.

.

.(தொடரும்)

 

காலத்தின் கவியே, சென்று வாருங்கள் – பா.செயப்பிரகாசம்

(அதிகாரம் மூச்சிழந்தால் அதன்காலில் மிதிபட்ட  காலத்தை மறந்து அமைதிகாத்தால்கூட ஏற்றுகொள்ளலாம், ஆனால் அதனைப் பரணிபாடும்  சிற்றெறும்பு மந்தைகளின் போக்கை எப்படி எடுத்துக்கொள்வது.  ‘அதிகாரம் நின்றாலும் ஆயிரம் பொன், படுத்தாலும் ஆயிரம்பொன்’ என்ற புதுமொழியாகப் பொருள் கொள்ளலாமா ?    ‘இன்குலாப்’  என்ற  கவிக்குரல், புரட்சிக்குரல்  சில நாட்களுக்கு முன்பு அடங்கிப்போனது . அந்த இன்குலாப் குறித்து நண்பர் பா.ஜெயப்பிராகாசம் கனடாவிலிருந்து வெளியாகும் ‘தாயகம்’ இணைய இதழுக்கு எழுதியக் கட்டுரை சொரணையுள்ள தமிழ் நண்பர்களுக்காக.)inkulab

 

காலத்தின் கவியே, சென்று வாருங்கள் – பா.செயப்பிரகாசம்

 

கல்லூரி முன்புறம் அலையடிக்கும் தெப்பக்குளம்.   பின்னால் வைகை ஆறு. திருமலை நாயக்கர் ஆட்சியில்  அரண்மனை கட்டுவதற்காக மண் அகழ்ந்து எடுத்து வரப்பட்ட இடம் மதுரைத் தெப்பக்குளம் என வரலாறு பேசும்.வைகை ஆறுக்கு, கரை எல்லைகள் தவிர  கால எல்லை இல்லை.தெப்பக்குளத்துக்கும் வைகைக்குமிடையில் ஆற்றுப்படுகையில் எழுந்து நிற்கும் மதுரைத் தியாகராசர் கல்லூரி. இரு நீர்நிலைகளின் நடுவில் மிதக்கும் தாஜ்மகால் என்று கல்லூரிக்காலத்தில் கவிதை வடித்ததுண்டு.

ஆனால் ஓயாத் தமிழ் அலைகள் அடிக்கும் கடல்   என்ற பேர் கல்லூரிக்கு!

கவிஞர்கள் மீரா,அப்துல்ரகுமான், அபி    என தமிழில் தடம்பதித்த   கவிஞர்கள்  மதுரைத் தியாகராசர் கல்லூரியில் பயின்ற காலம்;  அப்போது தமிழ் முதுகலையில்   . கவிஞர் நா.காமராசன் முதலாண்டு மாணவர்;   தமிழ்இளங்கலையில் இறுதியாண்டு மாணவன்  நான்.  இரண்டாம் ஆண்டு மாணவராக எஸ்.கே.எஸ் .என அறியப்பட்ட இன்குலாப்.  அனைவரும் முன் பின்னான ஆண்டுகளில் மதுரைத் தியாகராசர் கல்லூரியின் ஒரு சாலை மாணாக்கர்கள்.

           தியாகராசர் கல்லுரியில் முதுகலை முடித்த கவிஞர் மீரா ‘சிவகங்கை மன்னர் கல்லூரியில்’ ஆசிரியராக இருந்த வேளையில் அவருடைய மாணவராய் புகுமுக வகுப்பில் (Pre university  course) வாசித்தவர் எஸ்.கே.எஸ். சாகுல் அமீது. புகுமுக வகுப்பு முடித்து மதுரைத் தியாகராசர் கல்லூரியில் தமிழ்இளங்கலை சேருகிறார். இறுதி ஆண்டு முடிக்கும் வரை  அவர் எஸ்.கே. எஸ். சாகுல் அமீது.

எஸ்.கே.எஸ். சாகுல் அமீது கவிதைகள் எழுதினார். அவை யாப்பு சார்ந்த

மரபுக் கவிதைகள்.

மண்னின் குழந்தைகளாய்- இங்கு

வாழும் உயிர்களுக்கு

விண்ணின் ஒளிமுலையில்-இருந்து

வீழும் வெயில் பாலே.

முதிர வைப்பாய் அரும்பை-அனல்

முத்தம் கொடுப்பதனால்

முதிரவைத்தல் முறையோ –அந்த

ஊமை மலர்க் குலத்தை.

சுரண்டிக்  கொழுப்பவர்கள்உன்

சூட்டில் பொசுங்க வில்லை

சுரண்டப் படுபவர் தாம்- உன்

சூட்டில் பொசுங்குகிறார்.

இவை ’வெயில் ‘   தலைப்பில்   அவர் எழுதிய கவிதையில் சில வரிகள்.

பாடகன் வருகின்றான்’ என்று மற்றொரு கவிதை.

பாலைவனத்தின் சோலைகளே –ஒரு

பாடகன் வருகின்றான் அவன்

பயணக் களைப்புக்கு நிழல்கொடுத்தால் –ஒரு

பாடல் தருகின்றான்

நீலவானத்திற் கப்பால் –எதையோ

நினைத்துப் போகின்றான்

நீண்ட உலகத் துயர் களைய

நெஞ்சை நனைத்துப் போகின்றான்”

மரபுசார்ந்த வடிவத்திலும் சமூகத்தின் மீதான அக்கறையை- ஆங்கரிப்பை வெளிப்படுத்தினார்.பின்னரான புதுக்கவிதை வடிவங்களிலும் அவர் இன்னும் வீரியமான சொல்லாடல்களை கைவசப்படுத்தினார்.

எஸ்.கே.எஸ்.சாகுல் அமீது பிறப்பதற்கு ஆறு தலைமுறைக்கு முன் ஒரு மரைக்காயருக்கும் (உயர்நிலை சாதி) .இஸ்லாமியரில் கீழ் சாதியான ஒரு நாவிதர் வீட்டுப் பெண்ணுக்கும் திருமணம் நடந்து விட்டது. திருமணத்தின் பின் நாவிதர்கள் வீடுகள் மீது தாக்குதல்கள் நடந்தன. கலப்புமணம் என்பதால் தாக்குதல். அந்த செல்வந்த மரைக்காயருக்கும் நாவிதப் பெண்ணுக்குமான குடும்பவழியில் வந்தது இன்குலாப் குடும்பம்.

     இஸ்லாமியச் சமுதாயத்தில் மிக ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த “நாவிதக்குடி“ – அவர் பிறந்தது. நாவிதத் தொழிலை அவர்கள் இழிவாகக் கருதவில்லை. சித்த மருத்துவமும், நாவிதமும் நெடுங்காலமாக இணைவாகக் கைகோர்த்து நடப்பன.     தனியாகப் பிரித்துப் பெயரிடப்பட்ட நாவிதர் குடியிருப்பு -மரைக்காயர் முஸ்லீம்களின் வாழ்முறைகளிலிருந்து விலக்கப்பட்ட குடியிருப்பாக அமைந்தது.   நாவித முஸ்லீம் இளைஞர்களின் அயராத முயற்சியால்நாசுவக்குடி’ என்னும் அந்தப்பெயர் மாற்றப்பட்டது.

ஒடுக்கப்பட்ட பிரிவிலிருந்து வளர்ந்து வந்ததால், அவருள்   எதிர்ப்புக் கங்கு சீராய்   வளர்ந்தது.        பிரச்சனைகள் எனும் வெளிக்காற்று வீசுகையில் அதை எதிர்கொள்ள இயலாமல் , ஊதி அணைத்து விட்டு, அல்லது உடன்பட்டுப்  போனவர்கள் பக்கம் அவர் போகவில்லை. மரபுக்கவிதை   விதைத்த போதும் எதிர்க்கருத்தியலின் வேர் அவருக்கு இந்த ஒடுக்கபட்டோர் குரலிலிருந்து உருவானது.

–2–

     1965-ல் மாணவர் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போர் வெடித்த போது, தமிழ்நாட்டில் சனவரி 25 முதல் இரு மாதங்கள் கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. சமூகத்தின் ஒரு அங்கமான மாணவர்கள், தாம் இயங்க வேண்டிய கல்வி வளாகங்களுக்குள் இல்லாமல்   வெளியில் இயங்கினார்கள். இரு மாதப் போரை நடத்தியபின் போராட்டத்தைத் திரும்பப் பெறுவது என முடிவு செய்தோம். திரும்பப்பெறுவது மீண்டும் தொடங்குவதற்காகவே என்று அறிவிப்புச் செய்தோம். கல்வி நிலையங்கள் விடுமுறைக்குப் பின் திறக்கப்படுகையில் தமிழகம் முழுதும் மீண்டும் மொழிப்போர் தொடங்கும் என ஏப்ரல், மே மாதங்களில்  தமிழ்நாடு முழுதும் கூட்டம் நடத்தி  உரையாற்றினோம். அதைக் காரணம் காட்டி   தமிழ்நாட்டில் இந்திய தேசிய பாதுகாப்புச்சட்டத்தில் பத்து மாணவர்கள் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டைச் சிறைக்குள் அடைக்கப்பட்டார்கள். அதில் கவிஞர் நா.காமராசன், கா. காளிமுத்து, பா.செயப்பிரகாசம் ஆகிய நாங்கள் மூவரும் ஒரே கல்லூரி மாணவர்கள். மதுரையில் மருத்துவக் கல்லூரி மாணவர் இரா.சேதுவும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதாகி பாலையங்கோட்டையில் அடைக்கப்பட்டார்.

     பாதுகாப்புச் சட்டத்தில் உள்ளேயிருந்த எங்களுக்கு அது பாதுகாப்பாக ஆகியிருந்தது.     வெளியே இருந்த மாணவர்கள் காவல்துறைத் தாக்குதலுக்கு ஆளாகியிருந்தனர். எங்களை விட கல்லூரிக்குள்ளிருந்த மாணவர்களுக்கு பொறுப்புக்களால் தோள்கள் கனம் கொண்டன. தியாகராசர் கல்லூரி மதுரையிலுள்ள அனைத்துக் கல்லூரிகளுக்கும் போராட்ட முன்னோடியாகத் திகழ்ந்தது. அந்தப் பாரம்பரியத்தைத் தொடரும் பணியை இன்குலாப், ஐ.செயராமன், இரா. முத்தையா (முன்னாள் சட்டப் பேரவைத்தலைவர்), முருகையா (தற்போது சுடர் முருகையா), கன்னியப்பன், சரவணன் (காரு குறிச்சி அருணாசலத்தின் மகன்)- போன்றோர் ஏற்றுச் செய்தனர்.

     1965 ஆகஸ்டு 15 –ல் தியாகராசர் கல்லூரியில் கறுப்புக் கொடி ஏற்ற முடிவு செய்தார்கள். அப்போது நாங்கள் சிறையினுள் இருந்தோம்.   கறுப்புக் கொடி ஏற்றிய இன்குலாபை, ஐ. செயராமன் போன்ற சிலரை இழுத்துச் சென்ற போலீஸ், மயங்கி விழும் வரை அடித்தது. நாங்கள் சிறையில் அடைபட்டிருந்த அக்காலத்தில்தான் மதுரை அழகர் மலையில் ரகசியக் கூட்டம் ஒன்றை இவர்கள் நடத்தினார்கள். ” இனி எந்த நிலையிலும் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை. ஆயுதங்கள் செய்வோம் (குண்டு தயார் செய்வது)” என சபதம் எடுத்தார்கள். இரத்தத்தில் கையெழுத்திட்டார்கள். அதில் இன்குலாப் முக்கிமானவர். ஆயுதப் போராட்டக்   கருத்து 1967-க்குப் பின்னர்தான் நக்சல்பாரி புரட்சி என்னும் வசந்தத்தின் இடிமுழக்கம் கேட்கத் தொடங்கியபோது தொடங்கியது. அதற்கு ஈராண்டுகள் முன்னரே இக்கருத்து இன்குலாப் முதலான இளம் உள்ளங்களில் உருவாயிற்று எனில் கட்டுத்திட்டில்லாது அவிழ்த்து விடப்பட்ட அரச பயங்கரவாதம் அந்நிலைக்கு நடத்திச் சென்றது   உண்மை.

இளங்கலை முடித்த பின் ஓராண்டில் சென்னை புதுக்கல்லூரியில் பயிற்றுநர் (Tutor).; 1967 –ல் இளவேனில் சென்னையில் ஆசிரியராக   நடத்தியகார்க்கி’ இதழில் எஸ்.கே..சாகுலமீது -இன்குலாப் ஆகிறார். அதே காலகட்டத்தில் அதே கார்க்கியில்   பா. செயப்பிரகாசம்,  சூரிய தீபன் ஆகிறார்.

சென்னை புதுக்கல்லூரியில் பயிற்றுவிக்கிற.அப்போதிருந்தே(1967) சொந்தப் பெயர் பின்னுக்குப்போய், இன்குலாப் என்ற பெயரே அறியப்பட்டதாயிற்று. விருத்தாசலம் என்னும் பெயர் கண்மறைவாகி, புதுமைப்பித்தன் என்ற பெயர் இயற்பெயர்   ஆகியது போல் எஸ்.கே. எஸ், சாகுல்அமீது மறைந்து இன்குலாப்   இயற்பெயராகியது.

           “ஓர் இலட்சியத்தின் அடிப்படையில் புனைபெயரை வரித்துக் கொள்ளலாம். புதுமைப்பித்தன் போல. அல்லது வலுவான ஒரு எதிரியைப் பற்றி எழுதும்போது, தனது காலம் கனிகிறவரை தன்னை மறைத்துக் கொள்வதற்காகவும் புனைபெயர் சூட்டிக் கொள்ளலாம். நாங்கள் சூட்டிக்கொண்டது இக்காரணங்களுக்காகத்தான்.” என்கிறார்.

செத்தும் கொடுத்த சீதக்காதியின்“ பிறப்பிடமும் இன்குலாப் பிறந்த ஊரும் கீழக்கரை . சீதக்காதியின் சமாதி கீழக்கரையில் இருக்கிறது. ஆனால் சீதக்காதிகள் இன்று இல்லை. அந்தக் கீழக்கரையில் அதே சீதக்காதியின் பெயர் சொல்லி ”ஊரின் சீரைக் கெடுக்கும் சர்வதேசக் கொள்ளைக்காரர்களின் பொய் முகங்களை“ புல் முளைத்த சமாதி கட்டுரையில் அம்பலப்படுத்தினார் இன்குலாப்.

என் போன்ற எளிய குடும்பத்தவர்கள் மீது அகந்தை மனோபாவமும், ஆதிக்க சக்திகள் முன்பு அடிவருடித்தனமும் காட்டும் சக்தியை கீழக்கரைச் சமுதாயத்தின் பிரதிநிதியாகக் கருதவில்லை நான்” என்பார் இன்குலாப்.

பள்ளியில் பயின்ற போது அவரும் நானும் தி.மு.கழகத்துக்காரர்கள். அக்காலத்தின் இளைய தலைமுறை   எப்படி உருவாகிற்றோ   அப்படியே நாங்களும் உருவானோம் . சென்னை புதுக்கல்லூரியில் ஆசிரியராக இணைந்த இரு ஆண்டுகளில் அவர் ஒரு மார்க்சியர். 1968 . டிசம்பரில் 48 தலித் மக்கள் பொசுக்கப்பட்ட வெண்மணிப் படுகொலை மார்க்சியத்திற்கு உறுதியான   அடித்தளம் அமைத்தது.   அரசதிகாரத்திலிருந்த தி.மு.க. வின் பண்ணை ஆதரவுப் போக்கு அவரை எதிர்ப்பக்கம் திருப்பியது.

     “ஒரு கோட்பாடு தவறானது என்பதை அனுபவங்கள் உணர்த்துமேயானால், அதை உதறி விட்டுச்செல்வதுதான் பகுத்தறிவு பூர்வமானது. அவ்வாறு உதறுவது பரந்து பட்ட மக்களின் நலன் கருதியதாக இருக்க வேண்டும்.“

      அவர் தன்னுடைய வாழ்நாளை வளர்ச்சிப் பரிணாமத்திலேயே வைத்திருக்க இந்தக் கருத்துத்தான் துணையாற்றியிருந்தது. தி.மு.க.வை உதறித்தள்ளி , மார்க்சிஸ்ட்   இயக்கச் சார்புடையவராய் ஆகியதும், பின்னர்   புரட்சிகர மா.லெ. இயக்கத்தில் இணைந்து செயல்பட்டதும், இன்று மார்க்ஸிய லெனினிய அடிப்படையிலான தமிழ்த் தேசியவிடுதலையில் ஊன்றி நிற்பதுவும்  அவரிடம் தொடரும் வளர்ச்சிப் போக்கு.

     புரட்சிகர மா.லெ. இயக்கச் செயல்பாட்டில் இணைந்த போதுமனிதன்’ ‘புதிய மனிதன்’ என கலை இலக்கியப் பண்பாட்டிதழ்களை நடத்தும் பொறுப்பை ஏற்றிருந்தார். எனது தடமும் இன்குலாப் நடந்த பாதை போலவே அமைந்திருந்தது.  பின்னர் புரட்சிகர மா.லெ.இயக்கம். ஆனால் இன்குலாபும் நானும் வேறு வேறு புரட்சிகரக் குழுக்களில் இயங்கினோம். தனித்தனி அமைப்புகளில் இயங்கும் காலத்திலும், புரட்சிகர   விடுதலை என்னும்   முனைப்பில் ஒன்றாய் இருந்தோம்.

     .

     இன்குலாப் கல்லூரிப் பணியில் இருந்த போது ‘மனிதன்’புதிய மனிதன்’ இதழ்களில் ஆசிரியராக இயங்கினார். கல்லூரியில் பணியாற்றிய காரணத்தால் இதழ் ஆசிரியர் பெயர் வெளிப்படையாக இருக்காதே, தவிர முழுமையாகப் பின்னணியில் நின்று இயக்கியவர் இன்குலாப்.

     .”ஆய்வு என்பது ஒரு செயலுக்கான புத்தி பூர்வ முன்னேற்பாடு” என்கிறார் ஈழத்து அரசியல் ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு. ஒரு கருத்தையும் அது உருவாவதற்கான கடந்தகால, சமகால அனுபவங்களையும் தொகுத்து ஆய்வு செய்கிறபோது அடுத்த கட்ட செயலாற்றுதற்கான நகர்வை நோக்கி ஒருவர் செல்வது இயல்பானதாகும்.

     கீழவெண்மணி நிகழ்வை அதிர்ச்சியும் வேதனையுமாய் உணர்ந்து, ஆய்வு மேற்கொண்டதால், மார்க்ஸிய செயல்பாடு என்ற அடுத்த கட்டப் புத்தி பூர்வ ஏற்பாடு இன்றுவரை இன்குலாப்பின் நடைமுறையாக இருந்துவருகிறது.

  -3-

     கருத்துருவாக்கத்திற்கு சொல்லாடல்கள் அடிப்படையானவை. ஆதிக்க சக்திகள் நம்முள் நடமாட வைத்துள்ள கருத்தியல்களை இந்தச் சொல்லாடல்களே  இன்றும் உயிரோட்டமாய்ச் சுமந்து வருகின்றன. இதனைத் தெளிவுபடுத்துகிறது ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னும் ஒரு வர்க்கம் வாழுகிறது என்கிற  மார்க்சிய வாசகம். இந்த முழக்கத்தை

வெள்ளையாய்த் தோன்றும்

எந்தச் சொல்லும்

வெள்ளையாய் இல்லாததால்

இல்லை எனது சொல்லும்

வெள்ளையாய்”

என்று  கவித்துவத்துவத்துக்குள் பொதிந்து தருகிறார் இன்குலாப்.

அவரின் சமகாலத்தவர்கள் எவரும் செல்லாத அளவுக்குச் சமகாலக் கருத்தியலை புரட்சிகரமாக்கிச் சென்று கொண்டிருந்தார்.   தகிப்பு அவருக்குள் இயல்பாய்ச் சுரந்தது, ஒரு போதும் அந்தச் சுரப்பு வற்றிப்போக விடாமல் இதழ்ப் பணி,   கவிதை, கட்டுரை, நாடகம், சொற்பொழிவு எனப்  பலப்பல   வடிவங்களில் வினையாற்றிக் கொண்டிருந்தார்.

முதுகில் சுமந்தாய்

அவர்கள் பல்லக்கு

முகத்தில் சுமந்தாய்

அவர்கள் எச்சில்

இன்றும் சுமப்பாய்

அவர்கள் மலங்கள்”

என்று   முற்றுப்புள்ளியிட்டிருந்தால், அது ஒரு விவரச் சித்தரிப்பாக முடிந்திருக்கும். அது இன்குலாப் கவிதையாக இருந்திருக்காது.அனுபவச் சித்தரிப்பிலிருந்து அடுத்த செயல் பூர்வத்தின் வழிகாட்டுதலைத் தரும் வகையில்

இனியும் சுமப்பாய்

அவர்கள் தலைகள்”

என வைக்கிறபோது இன்குலாப் என்னும்   கவி வெளிப்படுகிறார்..

முதல் ஆறுவரிகள் ஒரு கலைஞனுக்குரிய  அனுபவ வெளிப்பாடு; இறுதி இரு வரிகள் ஒரு புதிய உலகத்தைக் காணும் முயற்சியின் மானுடப் பிரகடனம்.

     ” மனுசங்கடா நாங்க மனுசங்கடா” என்ற பாடல் தலித் இதயத்தில், குரலில், இயக்கங்களில் இன்றும் போர்க்களப் பாடலாக ஒலிக்கிறது.

   உயரம் கூடக்கூட அதிகாரமும்   சீரழிவும் அதிகரித்துக் கொண்டு போகும் என்பது நடைமுறை விதி. நாற்றமும் அதனோடு சேர்ந்துவரும்.    அதிகாரத்தோடு இணைந்த நண்பர்கள், தேர்தல்அரசியலோடு கைபிணைத்தவர்கள்   அனைவரையும் கண்டார்.  எந்தப் பதவி என்றாலும் இன்றைய நிலையில் அசிங்கப்ப முடியும் என்பதற்கு சாட்சிகளாக அவர்கள் உருமாறினார்கள்.

சமகால அரசியல் பருவநிலையால் அவர் எவ்விதப் பாதிப்பும் அடையவில்லை .

நவீன கவிதை , நவீன நாடகம், கலைப் பிரதேசத்தில் அவர் கொண்டு வந்த புதிய பதிவுகள் முக்கியம் வாய்ந்தவை.  ஆயினும் அவை பொருட்டேயல்ல.    மனிதனாய் வாழ்ந்த பதிவு தான் முக்கியம்!  சொல்லும் செயலும் ஒன்றாய்க் கொண்டு வாழ்ந்தார்.

அவர் கவிதையால் நினைக்கப்படுவார்:

எழுதியநாடகத்தால் நினைக்கப்படுவார்.                                                                                           

 எல்லாவற்றினும் மேலாய் வாழ்ந்த வாழ்க்கையால் நினைக்கப்படுவார்.

–4–

தோழரே, நினைவிருக்கிறதா?

1983- ஜூலை, இலங்கையின் கொழும்பில், பிறபிற பகுதிகளில் நடந்த தமிழர்மீதான இனப்படுகொலைக் குரூரத்தை வெளிப்படுத்தி,   ஆகஸ்டு, செப்டெம்பர்மனஓசை’இதழ்களைக் கொண்டுவந்தோம்.செப்டம்பர் இதழில் ”கரையில் இனியும் நாங்கள்…. ” என்ற கவிதையால் ஈழத்தமிழருக்கு கரம் நீட்டினீர்கள்.

காற்று

ஈழத்தின்

கனலாய் வீசுகிறது.

கரைகளில்

இனியும்

நாங்கள் கைகட்டி நிற்கவோ? “

உயிர்வலிக்கும் கேள்வி எழுப்பி, உயிர்தருதல் போல் ஒரு பதிலும் தந்தீர்கள்.

ஈழப் போருக்கு கரங்கள் வேண்டும்

இங்குள்ள தமிழர் கரங்கள் நீளுக!

ஈழப் போருக்கு தளங்கள் வேண்டும்

எங்கள் கரைகள் தளங்கள் ஆகுக!

ஈழப் போருக்கு ஆயுதம் வேண்டும்

இன்குள்ள தமிழர் ஆயுதம் செய்க!

ஈழப் போருக்கு ரத்தம் வேண்டும்

இங்குள்ள தமிழர் ரத்தம் பாய்க! “

மானுடக் குரல் எங்கிருந்தாலும் தோழமை கொள்ளும் என குரலைப் பெய்தீர்கள்.

நினவிருக்கிறதா?

தோழரே. நீங்கள் இப்போது ஞாபக அடுக்குகளைக் கடந்து சென்றுவிட்டீர்கள்.

கவிஞராக நீங்கள், எழுத்தாளராக நான்,ஓவியராக மருது, திரைத்துறை இயக்குநராக புகழேந்தி,அரசியலாளராக தொல். திருமாவளவன் என சரிவிகித உணவுக் கலவைபோல் 2002 அக்டோபரில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ’மானுடத்தின் தமிழ்க் கூடல்’ மாநாட்டில் பங்கேற்றோம். யாழ்ப்பாண பலகலைக் கழகத்திலிருந்து அலுவல்ரீதியிலான அழைப்பு வந்திருந்த போதும்,   விடுதலைப் புலிகளின் “ கலைப் பண்பாட்டுக் கழகம்” பின்னிருந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்தது.கலைப் பண்பாட்டுக் கழகப் பிரிவின் செயலராக கவிஞர் புதுவை இரத்தினதுரை. விடுதலைப் புலிகளின் யாழ் அரசியல்பிரிவு செயலகத்தில் நம்மையெல்லாம் ஆரத் தழுவி வரவேற்றாரே,   இன்று அவரோ, அரசியல் ஆலோசகர் பாலகுமாரோ, போராளி யோகியோ உயிருடனிருக்கிறார்களா என்ற கேள்வி நம் நெஞ்சைக் கணக்கச் செய்கிறது.

நான்கு நாள் மாநாடு. ஒவ்வொருநாளும் போராளிகள் பாதுகாப்பில் மாநாட்டுக்கு  அந்த உலகுதழுவும் குரலை அடையாளம் கண்டு,கவிதை எழுதிய கரத்தைத் தடவி 2002- அக்டோபர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மானுடத்தின் தமிழ்க் கூடல் மாநாட்டில் ஈழத்தமிழர் வியந்தார்களே,   தோழரே!

நேற்று நீங்கள் நடந்தீர்கள்

இன்று நீங்கள் நடக்கிறீர்கள்

நாளையும் காலத்தினூடாக நடப்பீர்கள்.

சென்று வாருங்கள் தோழரே! வீர வணக்கம்.

——————————————————————————————–

இந்தியா : மக்கட்தொகையும் வெளியும் – கமலா மரியுஸ்

இந்தியா : மக்கட்தொகையும்  வெளியும்

இந்தியப் பாலின ஏற்றத்தாழ்வுகள்

கமலா மரியுஸ், வருகைப் பேராசிரியர்

  • பொர்தோ-மோந்த்தேஜ்ன் பல்கலைக் கழகம், பிரான்சு;
  • பிரெஞ்சுஅரசின் மொழி மற்றும் பண்பாடு ஆய்வு நிறுவனம், புதுச்சேரி, இந்தியா.

 

இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சியும் ; கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் நாடு அடைந்துள்ள முன்னேற்றமும் பலரும் அறித்ததுதான், இருந்த போதிலும் சமூகத்தில் மக்களிடையே பெரும் எற்றதாழ்கவுகள் இருக்கவே செய்கின்றன. 1000 ஆண்களுக்கு 940 பெண்கள் என்கிற விகிதாச்சாரமும் ; குறைவான ஊதியமும் ; பாலின அடிப்படையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் ; ஆணும் பெண்ணும் சமம் என்பதை நிறுவ பெரும் முயற்சிகள் தேவைப்படுகின்றன என்பதைக் காட்டுகின்றன. எனவே பாலினம் என்கிற முப்பட்டகக் கண்ணாடியின் உட்கட்ட வேறுபாடுகளை நிலவியலை முன்வைத்து ஆய்வு மேற்கொள்வது அவசியமாகிறது.

இரண்டாயிரம் ஆண்டிலிருந்ததே, இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சி உதாரணமாக எடுத்தாளப்பட்டு வருகிறது, நியாயமான எடுத்துகாட்டே, இருந்தபோதிலும் அடைந்துள்ள இப்பொருளியல் முன்னேற்றம் இந்தியச் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள விளைவுகளென்று வருகிறபோது வரைமுறைக்கு உட்பட்டதாகிறது . கிடைக்கும் அனேக சமூக அமைப்பின் தரவுகளின் படி ( அதாவது  மக்கட்பெருக்கம், கல்வியறிவு, குடும்பத்தைத் தவிர்த்து பிற பணிகளில் பெண்களின் பங்களிப்பு, மக்களின் ஆயுட்காலம், மருத்துவ வாய்ப்பு ஆகியவற்றில்) பாகிஸ்தானைத் தவிர்த்து பிற தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகிறபோது இந்தியா மிகவும் பின் தங்கியுள்ளது, ஆனால் தனிநபர் வருமானத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியென்று வருகிறபோது சிறந்த பலன்களை அது அடைந்துள்ளது. இதனை அமர்த்தியா சென் « வளர்ச்சிப்பாதையில் காண்கிற ஒரு களங்கத்தின் » குறியீடு (2014) என்கிறார்.

இனம், மதம், சாதி, பாலினம் அடிப்படையில் வேறுபடுகிற அனைத்து இந்தியரையும் கோட்பாட்டளவில் பாதுகாப்பதற்கு சமத்துவ அரசியலமைப்புச் சட்டம் என்ற ஒன்றிருந்தாலும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாகவும், தனித்தன்மையுடனும் வினையாற்றும் சாதி அமைப்பும் அதன் செல்வாக்கும் நவீன இந்திய சமூகத்தில் முக்கியப் பங்கினை வகிப்பதுடன் அனைத்து மட்டங்களிலும் ஏற்றத்தாழ்வுகள் வலுப்பெற்ற காரணமாக இருக்கின்றன என்பதும் உண்மை

12-img_6112 இந்த வெவ்வேறான ஏற்றதாழ்வுக்கான அடிப்படை காரணங்களை ஒட்டுமொத்தமாக அணுகுவதா அல்லது அவற்றின் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் நிலையை தெளிவுபடுத்துவதன் மூலம் அனைத்தையும் சேர்ந்தார்போல விளங்கிக்கொள்வதா ? என்பதே தற்போது நமக்குள்ள கேள்வி.  பாகுபாடு தாக்கக் கருத்தியத்திலும் ( le concept d’intersectionnalité ) [1] இது எதிரொலிக்கிறது  இக்கருத்தியம் எற்றத்தாழ்வுகளிலுள்ள ஒருங்கிணைந்த  பண்பினையும் ; சாதிப்பிரிவுகள், வர்க்கப் பிரிவினைகள், பிற அடையாளங்கள், பாலின நோக்கு, மத வேறுபாடுகள், புவிசார்  இடஅமைப்பு ஆகியவற்றுடன்  தொடர்புடைய அடக்குமுறையையும்  மறு பரிசீலனை செய்வதற்கு பொருத்தமான ஆய்வுக்கருவி. ஆனால் பாலின அடையாளம் என்பது சமூக ஏற்றத்தாழ்வு பிரச்சினையின் ஒரு கூடுதல் காரணி  என்பது உறுதி. ஆனால் இதனைப்  வர்க்கம் மற்றும் சாதிய வேறுபாடுகளிடமிருந்து பிரித்துப்பார்க்க முடியாது. அமர்த்யா சென் கூறுவதைப் போல (2007,233) , « ஐயத்திற்கிடமின்றி  இருவகை உரிமை பாதிப்புகளின் தலையீடு பாலின வேறுபாட்டில் உள்ளது- பெண்ணாகவும் அதேநேரத்தில் பிற்பட்டவகுப்பினளாகவும் அவள்  இருக்கிறாள்  என்ற உண்மை- இது  ஏழ்மையில் உழலும்  குறைந்த அளவு சலுகைகளுடனும் வாழ்கிற  வகுப்பினைச் சார்ந்த பெண்களை பெருமளவில் தண்டிக்கிறது. »

எனினும் சாதி அமைப்பு பாலினவேறுபாட்டில் சிற்சில பிரிவினருக்குச் சாதகமாக வும் அமைத்துள்ளது. பிராமண பெண்ணுடைய நிலமை (2)   ஒரு தாழ்ந்த சாதியைச் சேர்ந்த ஆணைக் காட்டிலும்  பொறாமைப்படக் கூடியதாக இருக்கிறது  தவிர பாலின எல்லைகள் இருப்பினும் சலுகைபெற்ற வகுப்பைப் பின்புலமாகக் கொண்ட பெண்கள் இந்திய சுதந்திர போராட்டத்தின்போது, பிரிட்டிஷ் இராச்சியத்திற்கு  எதிராகவும், பின்னர் இந்திய அரசியல் உயர் பதவிகளிலும் ஆற்றிய,ஆற்றும்  பங்களிப்புகள் சாதி அமைப்பின் பலன்களைத் தெரிவிப்பவைதான். இந்திரகாந்தி பல ஆண்டுகள் (1966 -1977 ; 1980 -1984) நாட்டைஆள முடிந்தது இதற்கொரு நல்ல உதாரணம். பெண் என்பவள் வேண்டாம் என்ற நிலைப்பாடு ஒருபக்கம், நாட்டின் பிரதமர் அல்லது அதிபராக ஆவதென்பது இன்னொரு பக்கம் என்ற நிலையில் , இந்தியாவில் நிலவும் பாலின சமன்பாடின்மையை ஓர் இந்தியப் பெண் எவ்வாறு எதிர்கொள்கிறாள் ?

சமத்துவமின்மைக்கு மாறுபட்ட பல காரணிகளைப் போலவே, மாறுபட்ட அதன் வடிவங்களும்  அதாவது வெளி சாரந்த பாகுபாடுகள், வன்முறைகள் அல்லது அமர்த்யா சென்  மொழியில் (2005) சொல்வதெனில் : வறுமை, எழுத்தறிவின்மை, மருத்துவப் பாதுகாப்பின்மை  போன்றவையும் காரணமாகின்றன. உடல் சார்ந்த ஒரு சில வன்முறைகள் ( வரதட்சணை கொலைகள் , பெண் சிசுக்கொலைகள், பாலுறவு அடிபடையிலான வன்முறைகள்) நீண்ட நாட்களாகவே வெளிப்படையான பாகுபாடுகளாக இருந்து வந்துள்ளன என்பது மிகப்பெரிய அளவில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப் பட்டிருக்கிறது (கபாடியா 2002). மாறாக கவனத்திற்கு வராத வெளிசார்ந்த பாலின சமத்துவமின்மை பற்றிய விடயம் ஆய்வுக்கு மிக க் குறைந்த அளவிலேயே இதுவரை உட்படுத்தப்பட்டுள்ளது. « இடங்கள் மற்றும் வெளிகள் சார்ந்தும் பாலினப்பாகுபாடுகள் இருக்கின்றன » என்ற அனுமானத்துடன் அண்மைக் காலத்தில்தான் ஆய்வாளர்கள் (சார்லஸ் 2008, தேசாய் 2007, ரனதீவ் 2002) புதுவிதமான ஆய்வுப்பணிகளில்  இறங்கினார்கள்.

பாலின சமத்துவமின்மையின் பல்வகையான முகங்களுடன் இணைந்த பேதங்களின் பரப்பை அமர்த்யா சென் வழி முறையில் (2007,251)(3) வெவ்வேறான தலைப்புகளின்கீழ் வகைப்படுத்தி அவற்றில் வெளிசார்ந்த பரிமாணத்தையும் (மரியுஸ் 2016) கருத்தில் கொண்டு நாம் பரிசீலிப்போம்.

4-2012-09-30-11-18

  1. நிலவியல் அடிப்படையிலான பாகுபாடு

ஆசியாவில் மிக க் குறிப்பாக இந்தியாவிலும் சீனாவிலும் பெண்களின் இறப்பு வீதம் அசாதாரண வகையில் அதிகரிப்பது, தொடரும் ஆண்குழந்தைகளின் பிறப்பினால் நிகழும் ஆண்மயம் இவ்விரண்டின் தாக்கத்தினாலு ம் பாலின ஏற்றத் தாழ்வு விகிதம்அதன் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. ஆசியாவின் பாலினப் பாகுபாட்டை நிலவியல் பரப்பு, மக்கள் அடர்த்தி அடிப்படையில்  ஐயத்திற்கிடமின்றி சிறப்பான முறையில் ஆய்வு மேற்கொண்ட மக்கட்தொகை வல்லுனர் கி. கில்மோட்டோ 2010 ஆம் ஆண்டில் சீனாவிலும் இந்தியாவிலும் 91 மில்லியன் ஆண்கள் கூடுதாலாக இருப்பார்களெனக் கணித்திருந்தார்.  இவ்விரண்டு தேசங்களிலும் பாலின  விகிதாச்சாரமென்பது உலகின் பிறநாடுகளையொத்ததாக இருக்குமெனில்  20 மில்லியன் பெண்களைக் கூடுதலாக கணக்கெடுக்க நேர்ந்திருக்கும். கணித்த எண்ணிக்கைக்கும், பின்னர் அவதானித்தமைக்கும் மக்கட்தொகையில் காண நேர்ந்த இப்பெரிய இடைவெளியை இருபது ஆண்டுகளுக்கு முன்பே இந்தியப் பொருளியல் நிபுணர் அமர்த்யா சென் இந்தியாவிலும் சீனாவிலும் பல மில்லியன் பெண்களை இழக்க நேரும், என்பதை « Missing women » என்ற பெயரில் தெளிவாக க் அனுமானித்திருந்தார்.  இம்மக்கட்தொகை பேரழிவிற்குப் பல்லாயிரம் ஆண்டுகளாக இந்திய அமைப்பு முறையில் நெறிமுறை மற்றும் மதிப்பீடுகளில் தொடரும் இழப்புகள் மட்டுமின்றி நாட்டில் பிரத்தியேகமாகப் பின்பற்றப்பட்டு வரும் குடும்பக் கட்டுப்பாடு அரசியலும் காரணம்.

சமூக நிர்ப்பந்தங்கள் காரணமாக இளம்வயது திருமணங்கள் வழக்கில் இருப்பினும், குழந்தைப்பேறு அளவோடு இருப்பதற்கு, தம்பதிகளிடையே பாலியலுறவில் கடைபிடிக்கும் ஒழுங்குகள்  உதாரணத்திற்கு பிரசவத்தை அடுத்து பாலியலுறவை தள்ளிவைத்தல் ; பாட்டியாக நேர்ந்தால், குழைந்தைப் பேற்றை தவிர்ப்பது (அதாவது நாற்பது வயதில்) போன்ற வலுவான சமூக நெறிமுறையும் காரணம்.  தவிர கடுமையான உணவுத் தட்டுப்பாடு என்ற சூழலில், சமூக அமைப்புகள் மற்றும் மால்தஸீயன் சர்வதேச  நிறுவனங்கள( ஐக்கிய நாட்டு சபையின் மக்கட்தொகை நிதியமைப்பு, உலக நாடுகளின் வளர்ச்சிக்கான அமெரிக்க நிறுவனத்தின் உதவி, உலகச் சுகாதாதார அமைப்பு)போன்றவற்றின் தாக்கத்தினால் « மக்கட்தொகை வெடிகுண்டுக்கு  (the Population Bomb) » எதிராக அரசாங்கம் விரிவானதொரு  குடும்பக் கட்டுப்பாடுத் திட்டத்தைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவர அதனொரு பகுதியாகக் கருக்கலைப்புச் சுதந்திரமும் (கருக்கலைப்பு மருத்துவச் சட்டம் 1971) ஆண்களுக்கு வாசக்டமியும் நடைமுறைக்கு வந்தன. 1975 -1977ல் இந்திராகாந்தியால் அறிமுகப்படுத்தப் பட்டு நடைமுறையிலிருந்த நெருக்கடி நிலையின்போது மிதமிஞ்சிய அளவில் கருத்தடைகள் செய்யப்பட்டன. 1975-1976 ல் வருடத்திற்கு 2.7 மில்லியனாக இருந்த கருத்தடை செய்துகொண்டவர்கள் எண்ணிக்கை, அதற்கடுத்த வருடம் 8.3 மில்லியனைத் தொட்டது, அவர்களில்  வாசக்டமி செய்துகொண்டவர்கள் மட்டும் 6 மில்லியன்கள் (கில்மொட்டோ, குல்கர்னி, 2010,41). கருத்தடை அறுவைச் சிகிச்சியைத் மிகத் தீவிரமாகக் கையாண்டதன்  விளைவாக காங்கிரஸ் கட்சி 1977 பொதுத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்தது, அதன்பின்னர் கருத்தடை செய்துகொள்பவர்களில் ஆண்களின் எண்ணிக்கையில் விரைவான சரிவையும், மாறாக பெண்களின் எண்ணிக்கையில் உயர்வையும் காண முடிந்தது

குடும்பக் கட்டுப்பாடுத் திட்டம் 1956 ஆம் ஆண்டிலிருந்து 2000 வரை 250 மில்லியன் பிறப்புகளைத்  தவிர்த்தது. அவற்றில் மூன்றில் இரண்டு பங்கு கருத்தடையின் தயவினால்  நடந்தது.(கில்மொட்டோ, குல்கர்னி2010,68). இக்குடும்பக் கட்டுப்பாடு  அரசியலின் மிகக் கொடூரமானதொரு விளைவுகளிலொன்று பெண்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்தது :  1911 ஆம் ஆண்டு 1000 ஆண்களுக்கு  972 பெண்கள் இருந்தார்கள் இன்று 933,  ஆக எண்ணிக்கை சரிவை கண்டுள்ளது. அதாவது சீனாவை அடுத்து ( 100 பெண்களுக்கு 117 ஆண்கள் என்ற பிறப்பு வீதம்) உலகிலேயே ஆண்பெண் விகிதாச்சாரத்தில் பாதகமான நிலையிலுள்ள நாடு இந்தியா.  2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்திய மக்கட்தொகை  121 கோடியே 19 இலட்சத்து மூவாயிரத்தி நானூற்று இருபத்தி இரண்டு பேர்.  அதன்படி ஆண்கள் எண்ணிக்கையுடன் சரிநிகராக்க 38 இலட்சம்  பெண்கள் கூடுதலாகத் தேவை (624 இலட்சம் ஆண்களுக்கு  586 இலட்சம் பெண்கள்) (fig1). பெரும் எண்ணிக்கையில் தாய்மார்கள் வாரிசாக ஓர் ஆண்குழைந்தை வேண்டுமென்று இடையில் பிறக்கும் பெண்குழந்தைகளை மருத்துவ தொழில் நுட்ப உதவியுடன் கொன்றுவிடுகிறார்கள். கடந்த  இருபது ஆண்டுகளில் தேர்ந்தெடுத்த கருக்கலைப்பு நடமுறையினால் ஆண்ழந்தைகளின் பிறப்புவீதம் கணிசமாக பெருகியுள்ளதையும் பெண்களின் எண்ணிக்கை ஆயிரம் ஆண்களுக்கு 945 என்று 1991ல் இருந்தது  2011 ஆம் ஆண்டு 914 ஆக குறைந்துள்ளதன் மூலம் அறியமுடிகிறது. (4)

1-sex-ratio-evolutionகிராமப்புறங்களில் தந்தைவழிச் சமூக சொத்துரிமைச் சமச்சீரற்ற ஆண் பெண் விகிதாச்சாரத்திற்கு சாதகமாக உள்ளதென்பதை பெரியநாயகம் ஆரோக்கியசாமி மற்றும் சீனுவாசன் கோலி இருவரின் (2012) ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.  தேசிய குடும்பச் சுகாதார ஆய்வு நிறுவனத்தின் தரவுகளின்படி (National Family Health Survey (2005-2006), ஒரு குடும்பத்தில் எந்த அளவிற்கு நில உடமையின் அளவு முக்கியத்துவம் பெறுகிறதோ அந்த அளவிற்குப் பெண்களின் சுயமாக செயல்படும் உரிமை  மட்டுப்படுத்தப்படுகிறது என்ற உண்மை தெரியவந்துள்ளது. அதாவது பெண்களின் இடம் பெயரும் உரிமை, முடிவெடுக்கும் உரிமை, பணிக்கான ஊதியம் இவற்றில் பாதிப்பினைக் காண்கிறோம், தவிர இக்குடும்பங்களில் பையன்கள் பெண்கள் விகிதாச்சாரமும் (0-6 வயது) பையன்களுக்கே சாதகமாக இருக்கிறது. ஒரு ஏக்கருக்கும் குறைவான நில உடமையாளர்களை எடுத்துக்கொண்டால் அக்குடும்பங்களில் 100 சிறுமியருக்கு 107 பையன்கள் என்றிருக்கிறார்கள். ஆனால் பத்து ஏக்கருக்கும் அதிகமாக வைத்திருக்கிற நில உடமையாளர்களை எடுத்துக்கொண்டால் , அங்கே 100 சிறுமியருக்கு 128 பையன்கள் என்ற நிலை. ஆந்திரப் பிரதேசத்தில் நிலமை மிகவும்மோசம், 4 ஹெக்டார் நிலமுள்ள குடும்பங்களில் 100 சிறுமியருக்கு 170 சிறுவர்கள் என்றிருக்கிறார்கள். மாறாக கேரளா, மத்திய பிரதேசம், மேற்குவங்காளம் ஆகிய தாய்வழிச் சொத்துரிமை வழக்கிலிருக்கும் மாநிலங்களில் நில உடமை ஆண் பெண் விகிதாச்சாரத்துடன் தொடர்பு படுத்தும் அளவிற்கு முக்கியத்துவம் பெறவில்லை.

carte-sex-ratio-indeபாலினப் பாகுபாட்டில் தந்தை வழி சமூகக் கட்டமைப்புகள் ஆதிக்கம் செலுத்துகிறதென்பதை ஒருசில ஆய்வாளர்கள் கண்டிருக்கிறார்கள், அதன்படி இஸ்லாமியர்களைபோலவே  இந்துக்களும் காஃப் பஞ்சாயத்தின் கீழ்(அதிகாரம் பரவலாக்கப்பட்ட பின்பு ஆண்கள் மட்டுமேஅங்கம் வகிக்கிற மரபுவழியில் அமைந்த ஆனால் நெறிமுறைகளைப் பின் பற்றாத கிராம சபை)  கௌவுரவத்தை முன் நிறுத்தினார்கள். விளைவாக மிதமிஞ்சிய வகையில் எங்கும் எதிலும் ஆண்கள் என்றொரு நிலைப்பாட்டினை பஞ்சாப், அரியானா மாநில இந்துக் குடும்பங்களிலும் கீக்கியரிடையே ஜாட் எனும் ஆதிக்க வகுப்பினரிடமும், இத்துடன் நில்லாது  கௌவுரவக்கொலைகள், சிசுக்கொலைகளென்ற குற்ற நடைமுறைகளை குஜராத், ராஜஸ்தான் மாநில பழமைவாத இந்துக்களிடமும் இஸ்லாமியர்களிடமும் காண்கிறோம். «  மேல்தட்டுமக்களின் கருத்தியங்கள் அல்லது உயர்சாதி பிராம்மணர்கள் மற்றும் பிரதிநித்துவ அமைப்பெனக் கூறிக்கொண்ட நவீனம், இவற்றுடன் ஆணாதிக்கம், இப்படி அனைத்துமாகவிருந்த இக்காவலரண்கள் பெண்களை வேட்டையாடுவதற்கு பெரிதும் ஆதரவாக இருந்தவை »(ஹெஸே 2014,277). மேலும் பிராந்தியப் பிரிவினைகளும் பாலினப் பாகுபாட்டில் குறிப்பிட்டுசொல்லும்படியாக ஏற்றத்தாழ்வுகளைத் தெரிவிப்பவைகளாக உள்ளன : வடமேற்கு மாநிலங்களை (ஜம்மு மற்றும் காஷ்மீர், பஞ்சாப், அரியானா, ராஜஸ்த்தான், குஜராத் ) தென்மாநிலங்கள் அல்லது கிழக்குப்பிராந்தியங்களுடன் ஒப்பிடுகிறபோது பிந்தியவற்றுள் ஆண் பெண் விகிதாச்சார  ஏற்றத்தாழ்வு அத்துணை முக்கியத்துவம் பெறவில்லை என்பது கண்கூடு.  (fig. 2).

carte-sex-ration-enfants-indeஎனினும் இந்தியச் சமூகங்கள் பாலின விகிதாச்சாரத்தைத் தாங்கள் தேர்வு செய்யும் நிலையிலில்லை என்பதையே இந்தியாவின் வடமேற்குப் பிராந்திய கிறித்துவர்கள்,இஸ்லாமியர்கள் அல்லது தலித்துகள் மூலம் அறிகிறோம். அங்கு நாட்டின் இதரப் பிராந்தியங்களைக் காட்டிலும் ஆண்பெண் விகிதாச்சார எற்றத்தாழ்வுகள் கூடுதலாக இருக்கின்றன. இந்த ஒவ்வொரு குழுவிலும் அதன் பிரத்தியேக பண்பாடுகள், சமூகப் பண்புகள் ஆகியவற்றைபோலவே, அவர்கள் வாழும் இடமும் மேற்கூறப்பட்ட ஏற்றத்தாழ்விற்குக் காரணமாகிறது(கில் மோட்டோ, 2010).  உண்மையில் பாலினத் தேர்வு தொடக்கத்தில் செல்வாக்குடன் இருந்த பகுதி, வரலாற்றளவில் பெண்களுக்கு எதிரானப் பாகுபாடு எங்கு வலுவாக இருந்ததோ அப்பகுதி, அது குறிப்பாக குஜராத் தொடங்கி பஞ்சாப் வரை விரிந்துள்ள மேற்குப் பிராந்தியம்.  அங்கு பெண் சிசுக்கொலை பரவலாக வழக்கிலிருந்த காலத்தில் , அதனை ஒழிக்க காலனிய அரசாங்கம் கடுமையாக போராடியது.  ஆனால் பெண்களுக்கு எதிரான இப் பாகுபாடு மெள்ள மெள்ள  புதிய பிராந்தியங்களையும் தமது ஆதிக்கத்தின் கொண்டுவர வரைபடம் (fig3) தெரிவிவிப்பதைப்போல தேசத்தின் ஒரு கணிசமான பகுதியை  இன்று அப்பாகுபாடு தமக்குரிமையாக்கிக்கொண்டுள்ளது.  இறுதியாக வெளிசார்ந்த  அண்மையும், பாகுபாட்டின் இயல்புகள் மற்றும் நெறிமுறைகளின் பிரச்சாரத்திற்கு உதவியது(மனியெ,2015) ; பாகுபாட்டின் இயக்கத் தன்மையை நன்கு விளங்கிக்கொள்ள சமூகம் மற்றும் பொருளியல் காரணிகளன்றி, கில்மோட்டோ  ஆய்வின் உதவியால் (2004,2006,2008, 2010) இன்று  புவிசார் காரணங்களும் உதவுகின்றன.

மக்கட்தொகையில்  இதுபோன்ற இடையூறு கள் ஏற்படுத்தும் தீங்கான பலன்களை அளவிடத் தொடங்கியிருக்கிறோம். அண்மைக்கால தலைமுறையில் எற்பட்டுள்ள பெண்கள் பற்றாக்குறையினால் முதலில் துன்பத்திற்கு ஆளாகிறவர்கள் திருமண வயதை அடைந்துள்ள இளைஞர்கள், விளைவாக தந்தைவழி இனப்பெருக்கமுறை மட்டுமின்றி மரபு வழிபட்ட பாலின கருத்தியமும் கேள்விக்கு ஆளாகியுள்ளது. இப்புதிய சூழல் பெண்களின் நிலையில் உண்மையில் மாற்றத்தைத் தந்துள்ளது, அவர்கள் தற்போது தங்கள் வரதட்சணையைக் குறைக்கும்படி பேரத்தில் ஈடுபடவோ அல்லது தங்கள் சாதிக்கு வெளியே மணம் செய்துகொள்ளவோ இயலும் (கௌர் 2014). காஃப் பஞ்சாயத்து அனுமதியுடன் கலப்புத் திருமணங்கள் ஜாட் வகுப்பினரிடையே  நடைபெறுவதைக் காண்கிறோம், அண்மைக் காலம் வரை இதனை நினைத்துப் பார்க்க இயலாது.  குடும்ப அமைப்புமுறை  இன்று கணவன்,மனைவி, பிள்ளைகள் எனும் தனிக்குடும்பமாக மாறிவருகிறது, இப்போக்கிற்கு, உலகமயமாக்கப் பட்டப் பொருளாதாரம் தரும் ஒத்துழைப்பினால்  பெண்களுக்கு வேலைவாய்ப்ப்பும்  அதனால் அவர்களுக்கு வாய்க்கிற தனித்து செயல் பட முடியுமென்ற  நம்பிக்கையும் தந்தைவழி சமூகத்தைக் கலகலக்கச் செய்வதோடு ஆண்பிள்ளைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கருத்தியத்தை உபயோகமற்றதாவும் ஆக்கியுள்ளது.  சமச்சீரான பாலின விகிதாச்சாரத்தை  அடைய ஊக்கத்தொகை, பலவகையான நிதி உதவிகளைப் பெண்களுக்கு மட்டுமே(5)  வழங்கி பாலினவேற்றுமைக்கு எதிராகப் பிரச்சாரத்தையும் மேற்கோள்ளவேண்டும்.  பாலின விகிதாச்சாரம் எதிர்பார்க்கின்ற காலக்கெடுவில்  இல்லையென்றாலும் சிறிது முன்போ பின்போ அந்தந்த மாநிலங்களைப் பொறுத்து ஓர் எல்லையைத் தொட்டு  தைவான் தென் கொரியா நாடுகளில் ஏற்பட்ட அனுபவத்தைப்போல பின்னர் குறையும்,  அதற்கு இங்கும்  பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை பரவலாக்கவேண்டும் என்பது  கில் மொட்டோவின் யோசனை(6), அவ்வழியில் நாமும் சிந்திக்கலாம். இதை உறுதி செய்வதைபோலவே வரை படம்( fig2)வடமேற்கு மாநிலங்களில் (பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசம், அரியானா)  இந்நிகழ்வு உண்மையாகியிருப்பதை  அம்மாநிலங்களில் பெண்களுக்கு அனுகூலமாக இருக்கும் பாலின விகிதாச்சாரம் தெரிவிக்கிறது, அதேவரைபடத்தில் கிழக்குப் பிராந்தியங்களிலும், ஆந்திர மாநிலத்திலும், பாலின விகிதாச்சாரத்தில் உள்ள  சரிவையும் காணமுடிகிறது.

(தொடரும்)

———————————————–

[1] L’intersectionnalité (Crenshaw, 2005) est une démarche tout à fait utile pour la géographie car elle permet d’étendre considérablement le travail de déconstruction sur les pratiques spatiales en intégrant les mécanismes de domination divers, liés au sexe, au genre, à la caste, à la communauté, aux générations. Cette réflexion sur l’intersectionnalité des catégories de genre, race et caste a très largement nourri le champ des postcolonial studies, des diapora studies, des queer studies.

[2] Les brahmanes appartiennent à l’ordre le plus élevé (varna) du système des castes (Marius-Gnanou et al., 28, 2015)

[3] Amartya Sen est sans doute l’un des penseurs indiens qui a proposé l’une des analyses les plus pertinentes sur les inégalités dans le contexte indien en adoptant une approche multidimensionnelle, combinant classe, caste et genre.

[4] Les données sont issues du recensement de 2011, c’est pourquoi dans les documents de cet article l’Andhra Pradesh n’est pas divisé comme c’est le cas depuis 2014 avec la création d’un nouvel État, le Télangana.

[5] Le gouvernement central a mis en place The National Girl Child Protection Scheme, qui attribue des aides aux familles pour la scolarité de leur fille, pour leur mariage, selon leurs revenus.

[6] Guilmoto, Christophe. « La masculinisation des naissances. État des lieux et des connaissances », INED, 2015 (pdf)