Monthly Archives: ஓகஸ்ட் 2017

யாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 3

(திண்ணை கட்டுரைகள் மே 1 -2008)

என்ன இருந்தாலும் அந்தக்காலம் போல வருமா? என மூச்சுக்கு முன்னூறு தரம் சொல்கிற பெருசுகளை திருப்தி பண்ணனுங்கிறதுக்காகவே நடந்திருக்கணும். நாள் 24-4-2008, சம்பவம் நடந்த இடம் பிரான்சு நாட்டின் மேற்கிலுள்ள உலகப் புகழ்பெற்ற மர்செய் துறைமுகப்பட்டினம். 1930லிருந்து -1960 வரை அமெரிக்காவின் நிழல் உலகத்தை ஆட்டிப்படைத்ததில் மர்செய் விருமாண்டிகளுக்குப் பெரும்பங்குண்டு. சிரியா, துருக்கி, இந்தோ- சீனவிலிருந்து மார்·பினை இறக்குமதிசெய்து அதை ஹெரோயினாக புடம்போட்டு அமெரிக்காவுக்கு அனுப்பிவைத்து தாதாக்களுக்கெல்லாம் இலக்கணம் கற்பித்த போல்கர்போன்(Paul Carbon) விட்ட அம்பில் அமெரிக்கா தூக்கமின்றி தவித்ததும் அப்போதைய அமெரிக்க அதிபர் நிக்ஸன் கேட்டுக்கொண்டதற்கிணங்க பிரான்சு தீவிர நடவடிக்கையெடுத்து தாதாக்களை களையெடுத்ததும் வரலாறு. எழுபதுகளில் வெளிவந்து சக்கைபோடுபோட்ட பிரெஞ்சு கனெக்ஷன் திரைப்படத்தை எப்போதாவது பார்க்கநேர்ந்தவர்களுக்கு (மர்செய்) ஸ்தல மகிமை புரியும். அப்பியாச வித்தைக்கு அழிவில்லை என்பது மாதிரி, ஸ்தல பெருமையைக் காப்பாற்ற அப்போதைக்கப்போது ஏதாவது நடக்கத்தான் செய்கிறது.

இந்தியச் செய்தித்தாள்கள் இப்போதெல்லாம் தங்கள் நிருபர்களைச் செய்தி சேகரிக்கவென்று எங்கும் அனுப்பவேண்டாம் என்று நினைக்கிறேன்: சாலைவிபத்து, பா.மா.கா எதிர்ப்பு, வைகோ அறிக்கை, தே.தி.மு.க. கேள்வி, அ.தி.மு.க. ஆர்பாட்டம், மார்க்ஸிஸ்டுகள் போராட்டம், முதல்வர் கையெழுத்தென்று தலைப்புகளில் அவ்வப்போது சில சொற்களையும், தேதிகளையும் மாற்றிக்கொண்டால் போதும் நாளிதழ் ரெடி. இதற்கு முந்தைய வியாழக்கிழமை அதாவது 24-04-08 அன்று தமிழ் தினசரியொன்றில் மேற்கண்ட வழக்கமான புலம்பல்களுக்கிடையே தசாதாவரம் கேசட் வெளியீட்டுக்கு ஜாக்கிசான் வருகை என்றொரு சுவாரஸ்யமான செய்தி. நிருபர்களிடம் அமிதாபச்சனா யார்? சென்னை தண்ணீரா? வேண்டாம், என்று அவர் திருவாய் மலர்ந்ததாகத் தகவல். அடுத்த மாதம் ஹாங்காங்கில் கொஞ்சம் மாற்றிக் கேட்டா¡ல், கமலஹாஸனா யார்? தமிழ் சினிமாண்ணு ஒன்றிருக்கா? என்று அவர் மறுபடியும் ஆச்சரியப்படக்கூடும். தேவையா? திரைப்படப் பாடல் வெள்¢யீட்டிலெல்லாம் ஒரு முதலமைச்சர் கலந்துகொள்ளும் அதிசயம் உலகில் வேறெங்காவது நடப்பது சாத்தியமா என்பது இருக்கட்டும், அண்டை மாநிலமான கேரளாவில் சத்தியமாக நடக்காது. ஆனால் பிரான்சில் மர்செய் புறநகரில் கடந்த 24-04-08 நடந்ததாகப் படித்த சம்பவம் அதைவிடக் கொஞ்சம் சுவாரஸ்யமானது:

இரவு எட்டுமணி. விட்டகுறை தொட்டகுறைண்ணு குளிர்காலம் விடாமல் துரத்திக்கொண்டிருக்கும் ஏப்ரல் மாதம், எழுநூறு மீட்டர் நீளமுள்ள கூட்ஸ் இரயிலில் வழக்கம்போல தனியொரு ஆளாக எஞ்சின் டிரைவர், கைகளை அதன்போக்கிலே அலையவிட்டபடி அமர்ந்திருந்தார். பாதையில் பிரச்சினையில்லை என்பதன் அடையாளமாக சமிக்ஞை விளக்குகள் பச்சை வண்ணத்தில் கண் சிமிட்டுகின்றன. புறப்படுவதற்கு முன்னால் அலுவலகத்திற்குச் சென்று தேவையான தகவல்களை ( விதிமுறைகளில் உள்ள புதிய மாற்றம், கடைசி நிமிடத்தில் பாதையில் ஏதேனும் மாற்றமிருந்தால் அதைப்பற்றிய தகவல்கள், ஓட்டவிருக்கும் இரயில் எஞ்சின் குறித்த தகவல்கள், டேஷ்போர்டு பற்றிய ஆவணங்கள்) ஒரு முறை புரட்டிவிட்டு, கையில் எடுத்துக்கொண்டுதான் புறப்பட்டிருந்தார். இன்னும் முப்பது கி.மீ தூரம் ஓடினால் வேலை முடிந்தது, வழக்கம்போல அலுவலகத்தில் கையிலிருப்பதை ஒப்படைத்துத்துவிட்டு, ஸ்டேஷனின் காத்திருக்கும் சமீபத்திய காதலியை ஆரத்தழுவி அவசரமாய் ஒர் இருபது சதவீத காதலை வெளிப்படுத்திவிட்டு மற்றதை உறங்காமலிருந்தால் பின்னிரவுக்கு வைத்துக்கொள்ளலாம் என்று திட்டம். இரண்டு வாரமா எதிர்பாத்துக்கொண்டிருக்கேன், என்னை மறந்திடாதய்யாண்ணு, சின்னவீடு கைப்பேசியில் குறுஞ்செய்தி அனுப்பியிருத்த சந்தோஷம் மனசிலும் உடம்பிலும் எக்குத்தப்பா என்னென்னவோ பண்ணுது. வண்டியின் வேகம் நிதானத்திற்கு வந்திருந்தது. தூரத்தில் நிலவொளியில் தண்டவாளத்தில் நிழலாய் ஏதோ கிடக்கிறது, மனப்பிராந்தியோ என்று ஒதுக்கினார், ஆனால் நெருங்க நெருங்க பொதியாய்க் கிடந்த நிழலுக்கு, வடிவம் கிடைத்திருந்தது. மரக்கட்டைகளும், உலோகங்களும், தண்டவாளத்தின் குறுக்கே கிடக்கின்றன. மூளை விடுத்த எச்சரிக்கையை, கைகள் புரிந்துகொண்டு எஞ்சினை நிறுத்த ஒரு சில வினாடிகள் பிடித்தன. எஞ்சினை விட்டு இறங்கிய ஓட்டுனர் அதே அவசரத்துடன் எஞ்சினுக்குள் ஏறி கதவை அடைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. காரணம் தண்டவாளத்துக்கருகே காத்திருந்த கொள்ளையர் கும்பல். ஷோலே காலத்து கொள்ளையர்பாணி. தகவலைச் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிவித்துவிட்டு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு(?) காத்திருந்தார். வந்த கும்பல் மளமளவென்று காரியத்தில் இறங்கியது. முதலாவது கண்டெய்னரின் பூட்டை உடைத்தார்கள், கதவைத் திறந்தார்கள் ஒன்றுமில்லை; இரண்டாவதின் பூட்டை உடைத்தார்கள், கதவைத் திறந்தார்கள் ஒன்றுமில்லை; மூன்றாவதின் பூட்டை உடைத்தார்கள், கதவைத் திறந்தார்கள், ஒன்றுமில்லை; நான்காவது; ஐந்தாவது…ம்; இதென்னடா சோதனைண்ணு இஷ்டப்பட்டத் தெய்வங்களை வேண்டிக்கொண்டு ஆறாவது கண்ட்டெய்னரின் பூட்டை உடைத்து கதவைத் திறந்ததில் அவர்களுக்குக் கிடைத்த தகவல்படி இருக்கவேண்டிய எலெக்ற்றானிக் பொருட்கள் இல்லையாம், இரவு நேரத்தில் கடவுள்மார்களின் நித்திரையைக் கலைத்ததின் பலனோ என்னவோ, இங்கே பரியை நரியாக்கிய கதையாக எலெக்ற்ரானிக் பொருட்களுக்குப் பதிலாக அத்தனையும் தலையணை உறைகள்-ஏமாற்றம். தகவல் கிடைத்து போலீஸ¤ம் வந்துவிட, காரில் ஏறி கொள்ளையர் கூட்டம் பறந்திருக்கிறது. நம்ம கூட்ஸ் டிரைவர் ஒரு மணி நேரம் கழித்து வண்டியை எடுத்துபோய் நிறுத்தவேண்டிய இடத்தில் நிறுத்தி, மற்ற அலுவல்கலையும் முடித்துவிட்டு காதலியைத் தேடி அலுத்துபோனது குறித்து வேண்டுமானால் ஒரு கதையாக்கலாம். ஆனால் கொள்ளையர்கள் எதிர்பார்த்த கூட்ஸ்வண்டி அடுத்த அரைமணி நேரத்தில் எலெக்ற்றானிக் பொருள்களுடன் அவர்கள் காத்திருந்த பாதையிலேயே போயிருக்கிறது.

உலகமெங்கும் விலையேற்றம் இன்றைக்கு விபரீத பரப்பில் கால் வைத்திருக்கிறது. நடுத்தரவரக்கம் ஏழைகளாகவும், ஏழைகள் தரித்திரர்களாகவும் உருமாற்றம் பெறுவதற்கு உலகமயமாக்கம் தன்னாலான கைங்கர்யதைச் செய்துவருகிறது. மேற்கண்ட மர்செய் கொள்ளை முயற்சியைப் படித்தபோது உலகமயமாக்கலை நினைத்துக்கொண்டேன், அதுகூட அப்படித்தான். இப்படி எதையோ எதிர்பார்த்து கொள்ளை அடிக்கவந்தவர்கள் ஏதேதோ கதவுகளைத் திறந்துப்பார்த்து ஒன்றும் கிடைக்காமல் ஏமாந்து நிற்கிறார்கள், சரி ஆறாவது கதவு? கடைசியில் சொல்கிறேன். முதன் முதலில் உலகமயமாக்கல் என்ற சொல்லை உருவாக்கியவர்களின் மனதில் வேறு கனவுகள் இருந்தபோதிலும் உலகில் ஒரு மூ¨லையில் இருக்கிற மனிதனின் அறிவும், செயல்பாடுகளும், மறுகோடியில் இருக்கிற மனிதனின் தேவைகளுக்குப் பரஸ்பரம் உதவிக்கொள்ளக்கூடுமென்று உத்தரவாதம் அளித்தனர். அதன் இயங்கு துறைகளென்று அரசியல், பொருளாதாரம், கலை பண்பாடென்று சித்தரிக்கப்பட்டது. உண்மையில் உலகமயமாக்கல் மூலம் தாங்கள் சிம்மாசனத்தில் அமரலாம் என்று மனப்பால்குடித்த மேற்கத்தியர்களும், அமெரிக்கர்களும் கன்னத்தில் கைவத்துக்கொண்டு சோர்ந்திருக்கின்றனர். இதில் இலாபம் பெற்றது சீனா. உலகமயமாக்கல் மூலம் உலகச்சந்தையை வளைத்துபோடலாம் என்று கனவுகண்ட மேற்கத்திய மற்றும் அமெரிக்க பணமுதலைகள், கம்யூனிஸ போர்வையில் சீனாவென்ற ஒற்றை முதலாளித்துவம் விஸ்வரூபமெடுக்குமென்று எதிர்பார்க்கவில்லை. இந்தியாவைப் போலவே சீனாவின் உற்பத்திக்கூலி அதாவது அதிற் பங்கேற்கும் மனித சக்திக்கான ஊதியம் உலக அளவில் மிகக்குறைவானது. இந்தியாவில் ஏரியில் தூர் வாரவேண்டும் என்றால் கூட அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் நடத்தும் மக்களைப் பார்க்கிறோம். ஆனால் கிட்டத்தட்ட 1.3 மில்லியன் மக்களை வெளியேற்றவேண்டிய கட்டாயத்தில் உருவாகும் சீன நாட்டின் Three Gorges அணைக்கு எதிராக ஒரு காக்கை குருவி கூட அங்கே எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. அதற்குப் பேருதான் கம்யூனிஸ சுதந்திரம். சீனாவில் அரசாங்கம் தீர்மானித்ததுதான் ஊதியம், கொடுப்பதுதான் கூலி, தவிர எல்லா கம்யூனிஸ்டு நாடுகளையும் போலவே வளர்ந்து வரும் நாட்டின் சுபிட்சங்களை அனுபவிக்கிறவர்கள் ஏழை சீனர்கள் அல்லர், கட்சித் தலைமையின் உறவினர்கள். சீன அரசாங்கத்திடம் பொதுவுடமை பேரால் குவிந்திருந்த தேசியச் சொத்துக்களை, முதலாளித்துவ கட்டமைப்புக்கு எழுதிகொடுத்தபோது சீன அரசே ஒரு இராட்சத முதலாளியாக அவதாரமெடுத்தது. தவிர பசுத்தோல் போர்த்திய புலியின் இப்புதிய அவதாரம், இதுவரை அரசின் பொறுப்பில் வைத்திருந்த மக்களுக்கான நலத்திட்டங்களைச் சுலபமாக அலட்சியப்படுத்த முடித்தது, தவிர மக்களின் வாழ்வாதாரத்திற்குச் செலவிட்ட தொகையும் மிச்சமானதால் பெரும் மூலதனங்களைக் குவித்துக்கொண்டு, புது பெருச்சாளி பழைய பெருச்சாளியை மிரட்டுகிறது. இன்றைக்கு உலக அளவில் அந்நிய முதலீட்டில் முதலாவது நாடாக சீனா இருப்பதாகச் சொல்லப்படுகிறது. G7 நாடுகள் மூலதனங்களை ஆற்றில் போடலாமா? கடலில் கொட்டலாமா? என அலைந்துகொண்டிருக்க, நவீன தொழில் நுட்பம் சார்ந்த உலகச் சந்தையின் விலையையும், மேற்கத்திய மற்றும் அமெரிக்க தொழிற்சாலைகளின் தலைவிதிகளையும் தீர்மானிப்பவையாக இன்றைக்கு ஆசிய நாடுகள், அதிலும் புற்றீசல்போல உலகச்சந்தையை மொய்க்கும் டூப்ளிகேட் சீனப்பொருட்களோடு விலையில் போட்டியிட இயலாமல் மேற்கத்திய தொழில்கள் முடங்கிவருகின்றன. மக்களின் வாங்கும் சக்தி குறைந்திருக்கிறது. விலைவாசி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 30லிருந்து 40 சதவீதம் கூடியிருக்கிறது. உணவுப்பொருட்களை யாசகமாகப் பெற தொண்டு நிறுனங்களில் வாசலில் காத்துக்கிடக்கும் மக்களின் எண்ணிக்கை சமீபகாலங்களில் மேற்கத்திய நாடுகளில் அதிகரித்து வருகிறது.

சரி.. அமெரிக்க மற்றும் மேற்கத்திய முதலாளித்துவ கொள்ளையர் திறந்த ஆறாவது கதவைப்பற்றி சொல்லலையே. அது வேறொன்றுமில்லை, குறைந்த ஊதியத்தில் இந்தியா மற்றும் சீனா உடபட உலக நாடுகளில் கிடைக்கும் மனித சக்திகளால் ஓரளவு இலாபம் பார்ப்பது. ஆனாலும்…ம். உலகமயமாக்கல் சொப்பனத்திற் கண்ட அரிசி சோற்றுக்காகாதென்றுதான் நினைக்கிறேன்.

யாம் மெய்யாய்க் கண்டவற்றுள்: 2

(திண்ணை இணைய இதழ் கட்டுரைகள்)

Aimé

Liberté? -Oui, Égalité? – Oui, Fraternité?…….

செவ்வியொன்றிற்கு எமெ செசேர் அளித்தப் பதிலைத்தான் மேலே குறிப்பிட்டிருக்கிறேன். பிரான்சு நாட்டில் சுதந்திரமும் சமத்துவமும் இருக்கிறதென்றாவது ஓரளவு திருப்திபட்டுக்கொள்ளலாம் ( அவர் Oui- ஆம்- என்று சொல்லியிருந்தாலும் அதனை உச்சரித்தவிதமும், பார்வையில் தெறித்த எரிச்சலும் வேறாக இருந்தது) ஆனால் சகோதரத்துவம் என்ற சொல்லுக்கான பொருள் இங்கே கேள்விக்குறியாக இருக்கிறது என்பதுதான் அவர் சொல்ல வந்ததற்கான பொருள். எமெ செசேர் சமகால பிரெஞ்சு கவிஞர்களில் மிகமுக்கியமானவர், மிகை யதார்த்தவாதி, கவிஞர் ஆந்த்ரே பிரெத்தோனுக்கு நெருங்கிய நண்பர். Negritude என்ற சொல்லைப் படைத்தவர். உலகெங்குமுள்ள கறுப்பினமக்களின் ஏகோபித்த சுதந்திரமூச்சு. கடந்த ஏப்ரல் மாதம் 17ந்தேதி பிரான்சு நாட்டிற்குச் சொந்தமான கடல்கடந்த பிரதேசங்களில் ஒன்றான மர்த்தினிக் பிரதேசத்தில் -அவர் பிறந்த இடத்தில் உயிர் பிரிந்தபோது, பிரான்சு நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் அமைச்சர்கள், எதிர்கட்சி பிரமுகர்கள், படைப்பாளிகள், பிறதுறை சாரந்த விற்பன்னர்கள்ளென பலரும் கண்ணீர் சிந்தினர், நாடுமுழுக்க துக்கம் அனுசரிக்கப்பட்டது. வழக்கம்போல சிந்திய கண்ணீரில் முதலைகளுக்கும்(எங்குதானில்லை) பங்குண்டு- யார் மனிதர் எவை முதலையென்பது பரம்பொருள் அறிந்த ரகசியம் – ஆமென்.

நாகரீகத்திலும் பண்பாட்டிலும் வளர்ந்திருப்பதாக மனித இனம் மார்தட்டிக்கொள்ளும் இந்த நூற்றாண்டிலும், ஆதிக்கமும், அதிகாரமும்- திக்கற்ற பல மனித சமூகங்களின் மண்ணோடும், உணர்வோடும் இசைந்த வாழ்வியல் நெறிகளை, விழுமியங்களை ஓசையிடாமல் அழித்துவருகின்றன என்பது உலகமறிந்த உண்மை. அவை காப்பாற்றப்படவேண்டுமெனக் குரல் எழுப்புகிறவர்களும் இல்லாமலில்லை. கவிஞர் எமெ செசேர், ஒடுக்கப்பட்டவரினம், தம் மரபுகள் குறித்ததான மதிப்பீட்டில் நியாயமான அணுகுமுறையை வற்புறுத்தியவர். ஆக அவரது கவிதை, மற்றும் அரசியல் பங்களிப்பென்பது அவர் பிறந்த மண் சார்ந்தது, அதன் பண்பாட்டு உணர்வுகளால் வடிவமைக்கப்பட்டது. ‘நான் ஒரு கறுப்பன், கறுப்பன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்கிறேன்’, என்றவர்.

“எனது நீக்ரோகுணம்
ஒரு பாறையோ அல்லது பகற்பொழுதின் கூக்குரலைக்
காதில் வாங்காதவொரு ஜடமோஅல்ல
எனது நீக்ரோகுணம்
குருட்டு பூமியில் விழுகிற அமில மழையுமல்ல
எனது நீக்ரோ குணம்
உயர்ந்த கோபுரமுமல்ல
பெரிய தேவாலயமுமல்ல
அது பூமியின் செங்குருதியிற் தோயும்
அது வானில் கஞ்சாப்புகையில் மூழ்கும்
பொறுமையினாலுற்ற பொல்லாங்குகளை
இனங் கண்டிடும்…” (Le cahier d’un retour au pays natal)
எனத் தொடரும் இக்கவிதை அவரது மிக முக்கியமான படைப்புகளிலொன்று.

எமெ செசேரைக் கூடுதலாகத் தெரிந்துகொள்ள அவர் பிறந்த மர்த்தினீக் பிரதேசத்தினைப் புரிந்துகொள்ளவேண்டும். மர்த்தினீக் பிரான்சு நாட்டிற்குச் சொந்தமான நான்கு கடல்கடந்த பிரதேசங்களில் ஒன்று, இதர பிரதேசங்கள்: குவாதுலூப், பிரெஞ்சு கயானா, ரெயூனியோன். இவற்றை நேற்றுவரை DOM-TOM(1) என்று அழைத்து வந்தவர்கள் சமீபகாலமாக DOM-ROM (2)ou DROM என்றழைக்கிறார்கள். பெயரிலும், அரசியல் சட்டத்திலும் கொண்டுவந்த மாற்றங்கள், அம்மண்ணின் பூர்விகக் குடிகளின் வாழ்க்கையில் ஒளியேற்றியதா என்றால் இல்லை. இங்கே வருடமுழுக்க சூரியனுண்டு மக்களின் வாழ்க்கையில்தான் சூரியனில்லை. மேற்குறிப்பிட்ட நான்கு பிரதேசங்களும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின்கீழ் காலனிகளாக இருந்தவை, பிற காலனி நாடுகள் விடுதலை அடைந்தபோதும், கறுப்பின மக்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட இப்பிரதேசங்களை விடுவிக்காமல் பிரான்சு அரசு சொந்தமாக்கிக்கொண்டதற்கு முக்கிய காரணம் பூளோக ரீதியிலான அவற்றின் அமைப்பு. பிரதான பிரதேசத்திற்கு(Metropole)(3) அரசியல், பொருளாதாரம், ராணுவம் என பல முனைகளிலும் இலாபத்தை ஈட்டித் தருகிறது. குறிப்பாக அட்லாண்டிக், பசிபிக், இந்தியபெருங்கடலென்று சிதறிக்கிடக்கிற பல்லாயிரக்கணக்கான மைல்களைக்கொண்ட கடற்கரைப் பிரதேசங்களைப் பயன்படுத்திக்கொண்டு அணு ஆயுத சோதனைகள் நடத்தவும், வலிமை மிக்க கடற்படையை அமைத்துக்கொள்ளவும், உலக நாடுகளின் அரசியலை அருகிலிருந்து மோப்பம் பிடிக்கவும் முடிகிறது. பொருளாதார இலாபங்களும் கொஞ்ச நஞ்சமல்ல. உலகில் சுற்றுலாத் துறையை மட்டும் நம்பி ஜீவிக்கிற நாடுகள் பல. அவற்றிற்குப் போட்டியாக இருக்கும் இப்பிரதேசங்கள்(DROM), பிரான்சு நாட்டுக்கு கொடுப்பது அதிகம், கொள்வது குறைவு. உலகமெங்கும் சுதந்திரம் சுதந்திரம் என்ற குரல் கேட்கிறதே, இங்கே என்னவாயிற்று என்ற சந்தேகம் எழலாம், “வெள்ளைக்காரனே தேவலாம்”, என்று சொல்ல இந்தியாவிற் கேட்கிறேன். அப்படியான மன நிலையிற்தான் இவர்களைப் பிரெஞ்சு அரசாங்கம் வைத்திருக்கிறது. நிறைய பிரெஞ்சுக்காரர்களை அதாவது வெள்ளைத்தோல் மனிதர்கள் இப்பிரதேசங்களில் குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள்- பெரும் முதலாளிகள் இவர்கள்தான், ஓய்வு நேரங்களில் அவர்கள் அரசியலும் பார்க்கிறார்கள், உள்ளூர் மக்கள் அவர்களுக்குத் தொண்டர்களாக இருக்கிறார்கள். ஒன்றிரண்டு உள்ளூர் தலைவர்களும் உண்டு. தீமிதிக்கிற காவடி எடுக்கிற இந்திய வம்சாவளியினரையும் சேர்த்து பல்வேறு இனத்தவர்கள் கலந்து வாழ்கிறார்கள், உணர்வால், பண்பாட்டால் வேறுபட்ட மக்களை மேய்க்கச் சுலபமாக முடிகிறது. உதாரணமாக பிரெஞ்சுக் கயானாவில் தென் அமெரிக்காவிலுள்ள அத்தனை இனத்தவர்களும் இருக்கிறார்கள், ரெயூனியனை எடுத்துக்கொண்டால் ஆப்ரிக்கர்கள், வெள்ளையர்கள், சீனர்கள், வட இந்தியர்கள், தமிழர்கள், இந்திய முஸ்லீம்கள்- பிறபகுதிகளிலும் அதுதான் நிலைமை, கூடுதலாக வியட்நாம், இந்தோனேசியா, மடகாஸ்கர் மக்களையும் சேர்த்துக்கொள்ளலாம். தவிர பிரான்சு அரசு நிர்வாகப் பிரதேசங்களையும் தந்திரமாக கலைத்துப் போட்டு ஆள்கிறது. ஆப்ரிக்க இனத்தவரான பூர்வீகமக்களுக்குக் குடியும் கூத்தும் வேண்டும், தங்குதடையின்றி கிடைக்கிறது, இப்பிரதேசங்களுக்கு அதிகச் சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறதென்பதெல்லாம் கண்துடைப்பே. பிரான்சிலுள்ள இதரப் பகுதிகளோடு ஒப்பிடுகிறபோது இங்குள்ள அவலம் விளங்கும்: ஐம்பது விழுக்காட்டிற்குக் கூடுதலான மக்கள் வறுமையில் இருக்கிறார்கள். மருத்துவ அடையாள அட்டையான -Carte Vitalஐ – மர்த்தினீக் வாசி அறிந்ததில்லை. பிராதான பிரதேசத்தில் ஏழைகளுக்கான மருத்துவச் செலவு(Couverture Medicale Sociale) முழுக்க முழுக்க அரசு சார்ந்தது, இப்பிரதேச மக்களுக்கு பட்டைநாமம். பிரெஞ்சு மெட்ரோபோலில் (Mainland) குறைந்த பட்ச தனி நபர் ஊதியம் 1300 யூரோ என்றால், இங்கே 600 யூரோ…உணவுப் பொருட்களுக்கான விலைகள் சராசரி Dom-Tom வாசியால் தொடமுடியாதவை. எல்லாவற்றிற்கும் மேலாக இப்பிரதேசங்களைச் சேர்ந்தமக்கள் அரசியல் சாசனப்படி பிரெஞ்சு குடிமக்கள், ஆனால் மெட்ரோபோலுக்கு அதாவது பிரதான பிரான்சு நாட்டுக்குள் நுழைகிறபோது அவர்களும் வேறு நாடுகளிலிருந்து பிரான்சுக்குப் பிழைக்கவந்த மக்கள்போலவே நடத்தப்படுகிறவர்கள்.

பிரெஞ்சு காற்பந்தாட்ட முன்னணி வீரர்களில் ஒருவரான லிலியாம் துராம் ஒரு முறை சொன்னது, ” எங்கள் பிரதேசத்தில் இருக்கிறபோது பிரெஞ்சுக் காரன் என்ற நினைவுடன் இருந்தேன், ஆனால் மெட்ரோபோலுக்கு வந்ததும் அந்நியனாக உணருகுகிறேன்”.

——————————————————————————————————-
1. Departement d’outre-mer – Territoire d’outre-mer.
2. Depaartment Region d’outre-mer
2. Metropole – Mainland

யாம் மெய்யாய் கண்டவற்றுள்-1 (திண்ணை இதழ் கட்டுரைகள்)

திராவிடர்களுக்கும் ஆப்ரிக்க மக்களுக்கும் உள்ள உறவு தெரிஞ்சதுதான், அதை நாம மறந்தாலும் அவங்க மறக்கமாட்டாங்கண்ணு நினைக்கிறேன், மூட்டை மூட்டையா டாலரை சுமந்து முதுகு கூன்போட்டுவிட்டது கொஞ்சம் இறக்கிவைக்கணும் பங்காளி, உன்னுடைய வங்கிக் கணக்கைக் கொடு என்று கேட்டு, வாரத்துக்கு நாலு மின்னஞ்சலையாவது அனுப்பிவைக்கிறார்கள். எல்லாக் கடிதங்களிலும் பொதுவாக ஒரு விஷயமிருக்கும், கடிதம் எழுதுகிறவன் கற்பனையா உருவாக்கின வங்கியிலே, மில்லியன் கணக்கிலே டாலரை வச்சிட்டு வாரிசில்லாம ஒருத்தன் செத்துபோனதாகவும், தனித்து உண்ணல் தகாது என்றுணர்ந்த ஆப்ரிக்க நண்பர், உலகிலுள்ள கோடானுகோடியான மனிதன் முதல் கிருமி ஈறாக உள்ள ஜீவராசிகளில் நம்மைக் கண்டுபிடித்து(இளிச்சவாயனாக இருக்ககூடுமென்ற நம்பிக்கையில்), பகுத்துண்ண விரும்புவதாகவும், நம்ம அக்கவுண்ட் நெம்பரைக் கொடுத்தா பணமடையைத் திறந்து விடுவதாகவும் சத்தியம் செய்திருப்பார். இந்திய வம்சாவளியிலே வந்த நமக்கு இராமயனச் சகோதரர்களைக் காட்டிலும், மகாபாரதக் கௌரவர்களைத்தான் அனுபவத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறோம், இந்த லட்சணத்தில் ஆப்ரிக்க பங்காளி தானதருமம் செய்ய முன்வந்தால் சந்தேகம் வரத்தானே செய்யும். அதிலும் அவர்கள் கற்பனையில் உதிக்கிற வங்கி ஒரு சுவிஸ் வங்கி அல்லது மேற்கத்திய வங்கியாக இருந்தாலும் ஓரளவு நம்பலாம். ஆப்ரிக்க கண்டத்தின் கடன்களில் ஐம்பது சதவீதத்திற்கு மேற்பட்டத் தொகையை, அந்நாடுகளின் தலைவர்கள்- சர்வாதிகாரிகள்- தங்கள் பெயரிலும், உறவினர்கள் பெயரிலும் வெளிநாட்டுவங்கிகளில் போட்டுவைத்துள்ளதாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கைத் தெரிவிக்கிறது. இதற்கு மேற்கத்திய நாடுகளும் உடந்தை. அவர்கள் நாட்டில் (மேற்கத்திய) விலை போகாதப்பொருட்களையெல்லாம், மூன்றாம் உலக நாடுகள் தலையில் கட்டுகிறபோது சம்பந்தப்பட்டத் தலைவர்களையும் கவனிப்பது ஊரறிந்த ரகசியம். இந்தியா போன்ற நாடுகளில் நெல்லுக்கிறைத்த நீர் புல்லுக்கும் போய்ச்சேருகிறதென்றால், ஆப்ரிக்க நாடுகளில் இறைக்கிற நீரெல்ல்லாம் புல்லுக்கு மட்டுமே பாய்கிற கொடுமையுண்டு. இங்கிலாந்து தனது நேற்றைய காலனி நாடுகளைக் குறித்து என்ன அபிப்ராயம் வைத்திருக்கிறதோ, பிரான்சைப் பொறுத்தவரை இன்றைக்கும் அவை காலனி நாடுகள்தான். பிரெஞ்சுக்காரர்களுடைய காலனி ஆதிக்கம் என்பது பதினேழாம் நூற்றாண்டில் ஆரம்பித்து இருபதாம் நூற்றாண்டின் மத்திய பகுதிவரை நீடித்திருந்தது எனலாம். காலனிய நிலப்பரப்பில் பிரிட்டன் மற்றும் ஸ்பெயினுக்கு அடுத்து மூன்றாவது இடத்தையே பிரான்சு பெற்றிருந்தது. பதினேழாம் நூற்றாண்டில் வட அமெரிக்காவிலும், ஆசியாவிலும் தனது காலனி ஆதிக்கத்திற்கு வேரூன்றிய போதிலும், பிரெஞ்சுகாரர்கள் பெருமைகொள்ள முடிந்தது பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம்வரை காலனி ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவந்த தென்கிழக்கு ஆசிய நாடுகள், வட ஆப்ரிக்க நாடுகள் மற்றும் மத்திய ஆப்ரிக்க நாடுகளால். இன்றைய தேதிவரை குறிப்பாக மத்திய ஆப்ரிக்க நாடுகளைச்(மோரிட்டேனியா, செனெகல், மாலி, சாடு(Chad)…)சேர்ந்த மக்கள், பிரெஞ்சுக்காரர்களென்றால் முகம் சுளிப்பவர்கள் ஆனால் அவர்களின் த¨லைவர்கள் பிரெஞ்சு நிர்வாகத்திற்கு அடிபணிகிறவர்கள் என்பதற்கு சமீபத்திய உதாரணத்தைச் சொல்கிறேன்.

‘L’Arch de Zoe’ என்பது பிரான்சில் 2004ல் தொடங்கப்பட்ட தொண்டு நிறுவனம், நோக்கம் சுனாமியில் பாதிக்கப்பட்ட சிறுவர்களைத் தத்தெடுத்து, அவர்களது கடந்தகாலப் பண்பாட்டிற்குப் பாதகமின்றி வளர்த்து எதிர்காலத்திற்கு உத்தரவாதமளிப்பது. முதற்கட்டமாக சுமத்ராவிற்கு அருகில் Banda Aceh என்ற கிராமத்திற்கருகே ஒரு புணர்வாழ்வு இல்லம் அமைப்பது என்றெல்லாம் அறிவித்தார்கள். இந்தோனேசியாவிலிருந்து சுனாமியால் பாதிக்கபட்டிருந்த ஓர் அநாதைச் சிறுவனைப் பாரீஸ¤க்கு அழைத்துவந்து அவன் கால்களுக்குச் செய்யவேண்டிய அறுவைச் சிகிச்சையைச் செய்து செய்தித்தாளிலும் தொலைக்காட்சிகளிலும் இடம்பிடிக்க தொண்டு நிறுவனத்தின் மதிப்பு பிரெஞ்சு மக்களிடையே ஓங்கியே இருந்தது. இந்நிலையில் ஏப்ரல்(2007) 24ந்தேதியிட்ட தொண்டு நிறுவனத்தின் அறிக்கை டார்·பர்(1) உள்நாட்டுப்போரை, ஐக்கிய நாட்டுச் சபை அலட்சியம் செய்து, பல்லாயிரக் கணக்கானவர்கள் படுகொலைக்கு காரணமாகிவிட்டதென்று குற்றம் சாட்டியது. தொடர்ந்து, அநாதையாக்கப்பட்ட பத்தாயிரம் சிறுவர்களை அங்கிருந்து வெளியேற்றி, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்யப் போவதாகவும், தத்தெடுக்க விரும்பும் குடும்பங்கள் தங்களோடு தொடர்பு கொள்ளவேண்டுமென்றும் அறிவித்தது. பலர் தொண்டு நிறுவனத்தின் போக்கே தவறு என்றார்கள், பல சட்ட சிக்கல்கள் இருப்பதாகத் தெரிவித்தார்கள், பிரெஞ்சு அரசாங்கமும் தமது 14-6- 2007 அறிக்கையில் Arche de Zoe தொண்டு நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிடாமல், அதன் நடவடிக்கைகள் அரசின் சட்டதிட்டங்களுக்கு ஒத்ததல்ல என்று அறிவித்தது. ஆனால் அடுத்தமாதமே- ஜூலையில் வெளியிடப்பட்ட மற்றொரு அறிக்கையில், மனித உரிமை மற்றும் வெளிவிவகாரத்துறை துணை அமைச்சர் Rama Yade டார்·பர் அநாதைச் சிறுவர்களுக்கு உதவ விரும்பும் தொண்டு நிறுவனங்கள் தங்கள் திட்டத்தைத் தெரிவித்தால், அரசு பரிசீலிக்குமென அறிவித்தார், அதன்படி ஆறு தொண்டு நிறுவனங்கள் தங்கள் திட்டங்களை முன் வைத்தன, அவற்றுள் Arche de Zoe ஒன்று. பிரெஞ்சு அரசாங்கத்தின் தரப்பில் ஆகஸ்டு 3,2007 அன்று மற்றொரு அறிக்கை. இம்முறை தொண்டு நிறுவனத்தினை நம்பி இறங்கும் குடும்பங்கள் எச்சரிக்கப்பட்டனர்: டார்·பர் களத்தில் இருக்கும் இதர அரசு சாரா நிறுவனங்கள் தொண்டு நிறுவனத்திற்கு ஆதரவாக இல்லை என்பதோடு, பிரச்சினைக்குறிய பிள்ளைகள் அநாதைகளா இல்லையா என்பதையும் உறுதிசெய்ய முடியவில்லை என்றும், சூடான் நாட்டுச் சட்டமும் தத்து எடுப்பதற்கு ஆதரவாக இல்லையென்பதால் இவ்விஷயத்தில் மிகவும் கவனமாக நடந்துகொள்வது அவசியமென்றும் வற்புறுத்தியது. தொண்டு நிறுவனம் ஆரம்பத்தில் பணத்தைப் பற்றி பிரஸ்தாபிக்கவில்லையென்றபோதிலும் 300 குடும்பங்கள் தலா குழந்தையொன்றிற்கு 2400 யூரோவை, டார்·பிலிருந்து வெளியிற்கொண்டுவரும் செலவுக்கென கொடுத்திருந்தார்கள், (தற்போதைய தகவலின்படி கிட்டத்தட்ட 550000யூரோவை தொண்டு நிறுவனம் வசூல் செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது)

2007 அக்டோபர் மாதம் 24ந்தேதி, திட்டமிட்டபடி தத்தெடுத்தக் குழைந்தைகளுக்காக ஒரு சில குடும்பங்கள் பிரெஞ்சு விமான தளமொன்றில் காத்திருக்க, கடைசியில் ஏமாற்றத்தில் முடிந்தது. சூடான், சாடு பார்டர் எல்லையில் தொண்டு நிறுவனத்தினைச் சார்ந்தவர்களும் அவர்களுக்கு உதவிய மற்ற ஐரோப்பியர்கள், உள்ளூர் ஆட்கள் நான்குபேர் ஆக மொத்தம் பதினேழுபேரை சாடு அரசாங்கம் கைது செய்தது. அவர்கள் விமானத்தில் கடத்த முயன்றதாகச் சொல்லப்பட்ட சிறுவர் சிறுமியர் எண்ணிக்கை 103. இப்பிரச்சினையில் முக்கியமாகத் தெரிந்து கொள்ளவேண்டியது பிரெஞ்சு தொண்டு நிறுவனம் சொல்வதுபோன்று உண்மையிலேயே அவர்களுடைய நோக்கம் அநாதைச் சிறுவர்களுக்குப் புணர்வாழ்வு கொடுப்பதா? அல்லது உள்நாட்டுப்போரால் பாதிக்கபட்டிருக்கும் டார்·பர் பக்கம் உலக நாடுகளின் கவனத்தைத் திருப்புவதா என்ற கேள்விகள் எழுகின்றன. ஏனெனில் இரண்டுமே உண்மையில்லை, கடத்தப்படவிருந்த சிறுவர்கள் அநாதைகள் இல்லை. குழந்தைகளின் ஏழைப் பெற்றோர்களிடம் உங்கள் குழந்தைகளை ஐரோப்பாவிற்குச் கொண்டு சென்று நன்கு வளர்க்க விரும்புகிறோம், பிறகு திரும்ப அனுப்பிவிடுவோம் என்றெல்லாம் ஆசை வார்த்தைகளைக் கூறி மயக்கியிருக்கிறார்கள். தவிர அக்குழந்தைகள் பிரச்சினைக்குறிய டார்·பூர் பிரதேசத்துக் குழந்தைகளும் அல்ல அதன் எல்லையிலுள்ள சாடு நாட்டைச் சேர்ந்த கிராமத்தின் குழந்தைகள்.

வேறு சில சந்தேகங்களும் எழுகின்றன அதாவது ஏன் அக்குழந்தைகள் சிறுவர் விபச்சாரத்திற்காகவோ அல்லது மனித உறுப்புகளுக்காகவோ(தொண்டு நிறுவனத்தின் தலைவர் ஒரு மருத்துவர்), கடத்தப்பட்டிருக்கக்கூடாது? அனைத்துக்கும் மேலாக இன்றைய தேதியில் ஐரோப்பிய நாடுகளில் தத்தெடுப்பதென்பது இலாபகரமான தொழில் அல்லது வியாபாரம். இத்தனைச் சந்தேகங்கள் இருப்பதால் தொண்டு நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் தண்டிக்கப்படத்தானே வேண்டும் அதுதானில்லை. சாடு அரசாங்கம் தொண்டு நிறுவனத்தினரை கைது செய்த போது அனைத்துத் தரப்பினரும் அவர்கள் தண்டிக்கப்படக்கூடியவர்கள் என்றே நினைத்தனர். ஆனால் நடந்தது வேறு. இங்கேதான் நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோல ஆப்ரிக்க நாடுகளுக்கேயுரிய பிரச்சினைகள் மூக்கை நுழைக்கின்றன. 1960ம் ஆண்டுவரை சாடு பிரெஞ்சு காலனியாக இருந்தது. தற்போதைய அதிபர் பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பதே பிரெஞ்சு அரசாங்கத்தின் தயவில். எதிர்ப்பாளர்கள் எப்பொழுதெல்லாம் அதிபருக்கு எதிராக கலவரம் செய்து, ஆட்சியைக் கவிழ்க்க நினைக்கிறார்களோ அப்போதேல்லாம் பிரெஞ்சு அரசாங்கம் தனது படையை அனுப்பி அதிபரைக் காப்பாற்றி வருகிறது. எனவே Arche de Zoe அமைப்பாளர்கள் சாடில் தீர்ப்பு கூறப்பட்டு அங்கே தண்டனையை அனுபவிக்காமல் பிரெஞ்சு சிறைக்குக் கொண்டுவரப்பட்டு, கடைசியில் சாடு அதிபர் கருணையுடன் மன்னிப்பு வழங்க இன்றைக்குச் சுதந்திர பறவைகள். கடைசியில் முத்தாய்ப்பாக ஒரு செய்தி குழந்தைகளைக் கடத்த Arche de Zoe தொண்டு நிறுவனத்திற்கு(?) உதவிய விமானம் பிரெஞ்சு அரசாங்கத்திற்குச் சொந்தமானது.


1. மேற்கு சூடானைச் சேர்ந்த பல்வேறு பழங்குடிகளைச் சேர்ந்த பிரதேசம், பலகாரணங்களை முன்னிட்டு 2003லிருந்து அவர்களுக்குள் யுத்தம் நடந்துவருகிறது, அவர்களில் ஒரு பிரிவினருக்கு சூடான் அரசாங்கத்தின் ஆதரவு இருந்துவருகிறது, விளைவு, எண்ணற்றமக்கள் இடம்பெயர்ந்துள்ளார்கள், உயிரிழப்பும் அதிகம். http://en.wikipedia.org/wiki/War_in_Darfur

குறிப்பிற் குறிப்புணர்வார் : சா.பாலுசாமியின் அர்ச்சுனன் தபசு, நாயக்கர் கால கலை இலக்கிய கோட்பாடுகள் நூல்களை* முன்வைத்து

 

ஒரு கால கட்டத்தின் கலை இலக்கியத்தை வாசிப்பதென்பது, அக்காலகட்டத்தின் சமூகத்தையும், மக்களின் வாழ்நெறியையும் அறிதலாகும் கலைக்கூறுகள் எவ்வடிவமாயினும் அது பண்பாட்டின் அடையாளம். மனித இனம் தனது பண்பாட்டினை, உணவு, உடை, உரையாடும் மொழி, கொண்டாடும், பண்டிகை, ஆண்பெண் உறவு, குடும்பம், சமூகம் என வெளிப்படுத்துவதோடு திருப்திகொள்வதில்லை, அது சார்ந்த மகிழ்ச்சியை,  துயரை, அச்சத்தை, கவலையை, கோபத்தை, வியப்பை, அன்பை, பரிவை, காமத்தை உணர்வுகளைக்கொண்டு  தன்னைச்சுற்றியுள்ள மனிதர்களுடன் உரையாடவும்  செய்கிறது,    பார்த்தலும், நுகர்தலும், சுவைத்தலும், கேட்டலும், தொட்டுணர்தலும், நம்மைசுற்றியுள்ள நிகழ் உலகை புரிந்துகொள்ளவும் ; அப்புரிதலால் இசைந்தோ முரண்பட்டோ  வாழ்க்கையை நகர்த்தவும் செய்கிறோம். இந்த அடிப்படை உணர்வுகள் இல்லையேல் பிரபஞ்சமே பொய் என்றாகிவிடும். சா. பாலுசாமி போன்றவர்கள் கடந்த காலத்தையும் புரிந்துகொள்ள  முயற்சிக்கிறார்கள். சிக்மண்ட் பிராய்டு கூறுவதைப்போல « சிதைந்த நினைவுகளை மீட்டெடுக்கும் முயற்சி ».  பிராய்டு உளவியல் அறிஞர் என்பதால், தொல்லியல் முயற்சிகளுக்கு, உளவியல் அகராதியில் விளக்கம் தேடுகிறார். தொல்லியல் அறிஞர்கள் மானுடம் கடந்துவந்த பாதையைச் தேடிச்செல்பவர்கள்.காலத்தால் புலம்பெயர்ந்திருக்கும் மனித கூட்டத்திற்கு, புறப்பட்ட புள்ளியின் மகத்துவத்தை நினைவூட்டும் பணி.

 

மூதறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி  « தமிழ் அழகியல் பற்றிய மதிப்பீடு, தமிழ்க்கலைகளின் ஒட்டுமொத்தமான மொத்தமான மதிப்பீட்டிலிருந்து வெளிவரவேண்டும் » என்ற ஒரு விருப்பத்தை நாயக்கர்கால கலைக்கோட்பாடு நூலின்அணிந்துரையில் தெரிவித்திருக்கிறார்.  தமிழ் நிலத்தின்  இரண்டாயிரம் ஆண்டுகால வரலாற்றில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக களப்பிரர், பல்லவர், நாயக்கர், மொகலாயர், ஆங்கிலேயர், பிரெஞ்சுக் காரர் ;  இன்றைக்கு இந்திய யூனியன் என்று தமிழ் மண் அடிமைப்பட்டுக்கிடக்கிறபோது இதில் தமிழ் அழகியல், தமிழ்க்கலைகள் எங்கே தேடுவது ? எப்படி அடையாளப்படுத்துவது ? நண்பர் சா.பாலுசாமி,  நாயக்கர் கால கலைகளில் இந்தியநாட்டின் பிறபாணிகளும், ஐரோப்பிய தாக்கமும் இருக்கின்றனவென்று தெரிவித்துள்ள உண்மையை நாம் அவ்வளவு சுலபமாக ஒதுக்கிவிடமுடியாது.  தொடர்ந்து தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி :

« சிற்றிலக்கியங்களை எழுதிய புலவர்களின் பெயர்களைக்கூடத் தெரியும் ஆனால் சிதம்பரத்து நடராஜரையோ, தஞ்சை பிரகதீஸ்வரத்து நந்தியையோ …..வடித்தவர்களின் பெயர் தெரியாது. இதற்குக் காரணம் கலையாக்கம் பற்றிய தமிழ்நாட்டுச்(இந்திய) ஒழுங்கமைவு » என முன்வைக்கும்  குற்றச்சாட்டில் உள்ள உண்மையையும் நாம் மறுப்பதற்கில்லை. இதை பாலுசாமியில் ஆய்வுமுடிவுகளும் உறுதி செய்துள்ளன.

இந்தியத் துணைக்கண்டத்தில் இலக்கியப் படைப்பாளிகளைப்போல பிறதுறைசார்ந்த கலைஞர்கள் அங்கீகரிக்கப் படுவதில்லை. நாமறிந்த தமிழகத்தில் ஓவியர் என்றால் பேனர் வரைபவர்கள்,  வீர சந்தாணத்தின் மரணத்தை சினிமா நடிகர் மரணமென சொன்னால்தான் தமிழர்கள் விளங்கிக் கொள்வார்கள் எனும் கொடுமை. ஐரோப்பிய நாடுகளிலோ  குழாய் பழுதுபார்ப்பவர், ரொட்டி சுடுபவர் கூட கலைஞர்(l’artisan).  இந்நாடுகளில் ஓவியம் சிற்பம் முதலான துறைகள் மட்டுமல்ல சமையல், நிழற்படம், ஆடை அலங்காரம், ஆபரணம், பேச்சு  இப்படி அனைத்தையும் கலையாக பார்க்கும் மரபு. நமது மரபில் இன்றுங்கூட தச்சர், கல்தச்சர், பொற்கொல்லர் ஆகியோரை கலைஞர்களாகப் பார்ப்பதில்லை சாதிக்குள் அடக்கி, கலைக்கு புறத்தில் வைத்து தொழிலாளிகளாகப் பார்க்கும் விநோதம் உள்ளது. இத்தகைய சமூக ஒழுங்கமைவில்  சா. பாலுசாமி போன்றவர்களின்  உழைப்பு முக்கியத்துவம் பெறுகிறது. குடவாயில் பாலசுப்பிரமணியன் ‘ அர்ச்சுனன் தபசு’நூலுக்கு வழங்கியிருக்கிற அணிந்துரையில் :

« ஆய்வு, நுட்பம், விருப்பு வெறுப்பற்ற நடுநிலை பிறழாத அணுகுமுறை, அறிஞர் தம் கருத்துக்களை காய்தல் உவத்தலின்றி காணும்பண்பு, தொன்மங்கள் குறித்த ஆழமான பார்வை, எல்லா மொழிகளையும் நேசித்து உண்மைகாணும் திறம், கலையியல் கோட்பாடுகளின் வெளிப்பாடு, ஜடமென உலகப் பார்வையில் திகழும் பாறையினை நம்மோடு பேசவைத்துள்ள பாங்கு » என ஆய்வாளர் தொழிற்பட்ட முறையைப் பாராட்டியுள்ளார். காரணம் நம்மிடத்தில்  சார்பற்ற ஆய்வாளர்கள் குறைவென்பதை, அவர் நன்கறிவார்.

சா. பாலுசாமி நேற்றைய தமிழகம்  அங்கீகரிக்க மறந்த முன்னிலை படுத்தத் தவறிய படைப்பாளிகளைக் குறிப்பாக ஓவியர்களையும் சிற்பிகளையும் அவர்கள் படைப்பூடாக  பெருமைபடுத்துகிறார். இலக்கியத்திற்கு உ.வே. சா என்ன செய்தாரோ அதனையே சா.பாலுசாமி போன்றவர்கள் சிற்பத்திற்கும், ஓவியத்திற்கும் செய்திருக்கிறார்கள். ஏதோ ஆசிரியர் தொழில் செய்தோம், கருத்தரங்குகளில் கலந்துகொண்டோம், நான்கு ஐந்து ஆட்டோ ரிக்‌ஷாக்களை வாங்கிவிட்டு காசுபார்த்தோம் என்றில்லாமல் கள ஆய்வுக்கு நேரத்தை ஒதுக்கி, முடிவின்றி பயணம் செய்து இறுதியில் கண்டறிந்த உண்மைகளை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்கள்.

இது போன்ற ஆய்வுகளில் அக்கறைகொள்ள  முதலாவது தேவை தேர்வு செய்த பொருள் குறித்து ஞானமும், பேரார்வமும். அடுத்ததாக ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும் பொருளைத் துல்லியமாக அவதானித்தல். இறுதியில் கிடைத்த தகவல்களை ஒரு முறைக்குப் பலமுறை பிற அறிஞர்கள் கண்ட உண்மைகளோடு  ஒப்பீடு செய்து, நடுநிலமையோடு தம்முடைய கருத்தைப் பதிவு செய்தல். வருங்காலத்தில் இந்நூல்களெல்லாம் ஆய்வுக்கு உதவலாம் என்பதால் பொறுப்புடனும், கவனத்துடனும்  அக்கருத்துக்களை பதிவுசெய்வதும் அவசியம். நண்பர் பாலுசாமி கூடுதலாகவே உழைத்திருக்கிறார் என்பதுதான் நூல்கள் தெரிவிக்கும் உண்மை.

 

. ஆய்வுப் பொருள் பற்றிய ஞானமும், பேரார்வமும்

செய்யும் தொழில் எதுவாயினும் அதில் முழுமையாக ஒருவர் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். அதிலும் ஆய்வாளர்களுக்கு இக்குணம் பெரிதும் இன்றிமையாதது. ஆசிரியரின் நூல்களைப் புரட்டிப்பார்க்கிறபோது, ஏதோ கடமைக்குச் செய்தவரல்ல என்பதை ஒவ்வொரு பக்கத்திலும், தேர்வு செய்த தலைப்புகளிலும், அவற்றை அணுகும் முறையிலும், காட்டும் ஆதாரங்களிலும், அறிஞர்பெருமக்களின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் தயக்கமின்றி தேடிப்பெற்றதிலிருந்தும் அறிகிறோம்  கீழ்க்கண்டவரிகளும் இத்துறைமீது அவர் கொண்டிருந்த பேரார்வத்தை புரிந்துகொள்ள உதவுகின்றன :

 

« 1933 ஆம் ஆண்டு டாக்டர் தயா எங்களை மாமல்லைக்கு அழைத்துச்சென்றார். அங்கிருந்த ஒவ்வொரு சின்னத்தையும் ஆய்வு நோக்கில் அவர் விவரித்தபோது ஏற்பட்ட கலையறிவும் கலையனுபவமும் எல்லையற்ற பரவசத்தை ஏற்படுத்தின. கலைச்சின்னங்களை அணுக வேண்டிய முறையும் புரிந்தது. பின்னர் அவருடனும் மாணவர்களுட னும் பலமுறை மல்லைக்குச் சென்றுவரும் வாய்ப்பால் பல்லவக் கலைகுறித்துப் பயிலும் ஆர்வம் தொடர்ந்தது » (  நூண்முகம், அர்ச்சுன ன் தபசு பக்கம் 19)

 

இந்நிலையில்  குமர குருபரர் பாடுவதைப்போல :

 

« மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார் »

 

என்ற நிலைக்கு நமது ஆய்வாளரும் ஆளானார் என்பதைக்  கீழ்க்கண்ட வரிகள் உறுதிசெய்கின்றன.

 

« ……..அவ்விளக்கங்களால் நிறைவுபெறாத மனநிலை தொடர்ந்து தேடச்செய்தது. ஆயினும் , நம்பத்தகுந்த உறுதியான முடிவுக்குப் பல்லாண்டுகளாக வர இயலவில்லை. இருப்பினும் கடந்த இரண்டாண்டுகளாக ஒரு தீவிர மனநிலையோடு தொடர்ந்து தேடியதில், பல்வேறு கருதுகோள்கள் எழுந்து, மாறி, இறுதியாக ஒன்றை உறுதி செய்து, விளக்க முடிந்தது. » (நூண்முகம், அ.த. பக்கம் 19).

 

ஆய்வில் கண்டறிந்த முடிவுகள் அறிஞர்பெருமக்களுக்கு மட்டுமின்றி பிறமக்களும் புரிந்துகொள்ளும் வகையில் சொல்வதற்கு ஆய்வுகுறித்த தெளிதலின்றி சாத்தியமில்லை. ‘நாயக்கர் கால கலைக்கோட்பாடுகள் நூலில், ஆசிரியர், விஜயநகர அரசு, தமிழ் நாட்டில் அவர்கள் காலூன்றியது, அவ்வரசின் பிரதிநிதித்துவ ஆட்சிகள், அவர்கள்வீட்சிக்குப்பின் சுயாதீனமாக ஆண்ட நாயக்கர்கள், என நாயக்கர் கால கலைத் தடத்தை அரசியல் வரலாற்றுடன் தொடங்கி, கலையின்பல்வேறு பரிமாணங்கள், அவற்றின் உள்ளடக்கங்களென்று பரந்து விரிந்த கலைஆகாயத்தை, வாசகனின் கண் சிமிழுக்குள் அடைப்பதற்கு அசாத்திய துணிச்சலும் ஞானமும் வேண்டும்.  அவ்வாறே ‘அர்ச்சுனன் தபசு நூலில் ஒவ்வொரு சிற்பத்தையும் விவரிக்கும் முன்பாக அச்சிற்பத்தோடு  இணைந்த இலக்கியம், புவியி யல் தகவல்களை ஆதார த்துடன் தெரிவித்துள்மை ஆய்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. நூலின் நன்றியுரையில் அவர் சுட்டும் அறிஞர் பெருமக்களின் பெயர்கள், இறுதியில் சேர்க்கப்பட்டுள்ள ஆய்வறிஞர்களின் கருத்துக்கள் அனைத்தும் நூலுக்கும், ஆசிரியரின் ஞானத்திற்கும் பெருமை சேர்ப்பவை.

 

. அவதானிப்பும்  ஆய்வாளரும்

 

ஓர் ஆய்வாளருக்கு இருக்கவேண்டிய சிறப்பு குணங்களில் மிகமுக்கியமானது அவதானிப்பு, பொறுமையுடன் ஒரு பொருளை கண்களால் துழாவ அறிந்திருத்தல், உற்று நோக்குதல். இந்நூல்களில் அவர் குறிப்பிட்ட இடங்களுக்கு நாமும் சென்றிருக்கிறோம். நம்பில் பெரும்பாலோர் கோபுரங்களையும், மண்டபங்களையும், தூண்களையும், சிற்பங்களையும், சுதைகளையும்   பார்க்கவும் செய்கிறோம். வீட்டிற்கு வந்ததும் மதுரைக்குச்சென்றேன், மாமல்லபுரம் சென்றேன் என்று நமது பயணம் புள்ளிவிவரத்தை த் தாண்டி பெரிதாக உதவுவதில்லை. ஆனால் பாலுசாமி போன்றவர்கள் சிற்பங்களையோ, ஓவியங்களையோ பார்ப்பவர்களில்லை அவதானிக்கிறவர்கள்.

குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்

யாது கொடுத்தும் கொளல்.(குறள்  703, குறிப்பறிதல்)   குறளுக்கிணங்க ஒருவரின் முக க் குறிப்புக்கொண்டே  அவரது உள்ளக்குறிப்பை உணரக்கூடிய  ஆற்றல் சா.பாலுசாமிபோன்ற ஆய்வாளர்க்கு உண்டு..

« தாரமங்கலம் கைலாசநாதர் கோயிலில்  வாலி, சுக்ரீவன் போர்க்காட்சி ஒரு தூணிலும், வாலிமீது ம்பு தொடுக்க வில் வளைத்துள்ள இராமர் உருவம் மற்றொரு தூணிலும் காட்டப்பட்டுள்ளன. இராமன் உள்ள தூணிலிருந்து பார்த்தால் வாலியின் உருவம் தெரியும்படியும், வாலி உள்ள தூணிலிருந்து பார்த்தால் இராமன் உள்ள தூண் தெரியாதபடியும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும். »(பக்கம் 135 நா.க.கோ)

 

18 ஆம் நூற்றாண்டைச்சார்ந்த சிதம்பர சிவகாமியம்மன் ஆலய ஓவியம் : பெண்கள் இருவர் சமைக்கும் காட்சி

« அடர் சிவப்பு, மஞ்சள் கலந்த சிவப்பு, பச்சை ஆகிய மூல வண்ணங்கள் பயன் படுத்தப்பட்டுள்ளன. ஆடைக்கும் உடலுக்கும் ஏறக்குறைய ஒரேவண்ணம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அடுப்புக்கற்கள், எரியும் தீ, உறிக்கயிறு, உறியிலுள்ள பானைகள் அனைத்திற்கும் ஒரே வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. சமைக்க வைத்துள்ள காய்க்கும் , புடவைகளின் முந்தானைக்கும் ஒரே வண்ணம் கொடுக்கப்படெடுள்ளது. உருவங்கள் ஒரே திசை நோக்கி  அமைந்துள்ளன. அமர்ந்துள்ள பெண்ணின் தோள்களும் சமைக்கும் பெண்ணின் கைகளும் அளவொப்புமை யற்றுள்ளன. காட்சியில் பயன்படுத்தப்பட்ட வண்ணங்களே மேற்பகுதியை அலங்கரிக்கவும் தரைக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. (பக்கம் 206, நா.க.கோ)

« அவர் முன்னர் நிற்கும் தபசி, ஒற்றைக்காலில் நின்றவண்ணம் கைகளைத் தலைக்குமேல் உயர்த்தி, விரல்களைக் கோர்த்துள்ளார். மார்பில் எலும்புகள் துருத்தி க் காணப்படுகின்றன. இடையில் ஒரு சிறு ஆடை உள்ளது. முகம் மிக மேல் நோக்கியுள்ளதால் நேர்பார்வைக்கு மீசையும் தாடியுமாக வாய்ப்பகுதிமட்டுமே பெரிதாக த் தெரிகிறது.(பக்கம் 36 , அ.த)

சா. பாலுசாமியின் நூல்களில் இது போன்ற பல உதாரணங்களை அவதானிப்பிற்குச் சான்றாக எடுத்துக்காட்ட முடியும். நாயக்கர்கால கலை கோட்பாடுகளினும் பார்க்க அர்ச்சுன ன் தபசுவில் கூடுதலாக உதாரணங்கள் இருக்கின்றன.

 

 இ. ஒப்பீடும் முடிவும்.

 

ஓர் ஆய்வாளர்  எடுத்துக்கொண்ட பொருளை கவனமாக அவதானித்தபின் கிடைத்த தகவல்களை பிறசான்றுகளுடன் ஒப்பிட்டு பின்னர் தீர்க்கமான தொரு முடிவுக்கு வருகிறார். அம்முடிவு குடவாயில் பாலசுப்பிரமணியம் பாராட்டுவதைப்போன்று நடுவு நிலைமையோடும் எடுக்கப்பட்டுள்ளது.

 

« தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின். » என்கிறது குறள்.

 

« காடுகள் மிகுந்த இமயத்தின் இயற்கை இட து புறபாறையில் காட்டப்பட்டுள்ளது. மூன்றாம் வரிசையில் பாயும் சிங்கத்திற்கு அடுத்தும், இரண்டு வேடர்களுக்கு இடையேயும் உடும்பு ஏறுவதாகவும் பெரு மரங்கள் காட்ட ப்பட்டுள்ளன. வானரத்திற்கும் முயலுக்குமிடையே தொகுப்பாக மரங்கள் செதுக்கபட்டு அடர்வனம் சித்தரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயர்ந்த சிகரங்களைக்கொண்ட இமயத்தின் மலைகளும் ஆழ்ந்த பள்ளதாக்குகளும் பொங்கிப்பாயும் ஆறுகளும் விலங்குகள், வனங்கள் முதலிய இயற்கைப்பொருட்களும் இச்சிற்பத்தொகுதியில் மிக நேர்த்தியாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. (பக்கம் 69 அ.த)

 

« பனைமரம்போல் உயர்ந்த மலைகளில்  உச்சியிலிருந்து இறங்கிவந்துள்ள இந்த யானைகள் வைடூர்யம்போல் மின்னுகிற இப்பெரிய தடாகத்தைக் கலக்குகின்றன.

என அமையும் மகா பாரத த்தின் வருணனைக்கு ஏற்ப இந்த யானைகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. »(பக்கம் 172 அ.த)  போன்றவற்றைக்கொண்டு முடிவுகளை தகுந்த ஒப்பீடுகளுக்குப் பின்னரே எடுத்துள்ளார் என்பது தெளிவு.

 

அவதானித்து கிடைத்த தகவல்கள், பிறசான்றுகள் அடிப்படையில் பகீரதனா ? அர்ச்சுனனா ? தவசி உண்மையில் யார் என்பதை இமயமலையின் இயற்கைப் பண்பு சான்றுகளை, மகாபாரத சான்றுகள் ஆகியவற்றோடு மாமல்லபுர சிற்பத்தொகுதியில்  இடம்பெற்றுள்ள மரங்கள், விலங்குகள், கந்தர்வர்கள், மலைவேடர்கள் ஆகிய உருவங்களை ஒப்பிட்டு தவசி அர்ச்சுனன்  எனத் தீர்மானத்திற்கு வரும் ஆய்வாளர் முடிவு இங்கே மிகவும் வலுவானது.

 

ஆய்வாளர் சா.பாலுசாமியைப்போல , பேராசிரியர் க. பஞ்சாங்கத்தைப்போல மொழித்துறையிலும் பிறதுறைகளிலும் உண்மையாக உழைப்பவர்கள் குறைந்த எண்ணிக்கையினர். இவர்களையெல்லாம் அடையாளம் கண்டு போற்றுகிற பொறுப்பு மத்திய மாநில அரசுகளுக்கு இருக்கிறது.

* அர்ச்சுன ன் தபசு, நாயக்கர் கால கலை இலக்கிய கோட்பாடுகள் இரண்டும் காலச்சுவடு பதிப்பக வெளியீடு.

 

 

 

ஈழத்துமண்ணும் எங்கள் முகங்களும்- வ.ஐ.ச. ஜெயபாலனின் கவிதைக் காவியம்

(2007 ல் திண்ணை இதழில் எழுதிய கட்டுரை)

சென்னைப் பல்கலையின் பாடநூலாக இருந்த(1987-2002) ஈழத்துமண்ணும் எங்கள் முகங்களும்- என்கிற கவிதைக் காவியத்தைப் படிக்கிற வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. இக்கட்டுரை அதற்கான காலங்கடந்த மதிப்புரை அல்ல. பொதுவாக சிறந்த படைப்புகள் அனைத்துமே, அடர்த்தியான மௌனங்களை தன்னுள் அடக்கியது. அப்படியான மௌனங்களை கலைத்தே தீர்வதென்கிறதென்ற பிடிவாதத்துடனேயே வாசிப்பை நிகழ்த்துகிறோம். வாசிப்பு கணங்களில் பல்வேறு உரையாடல்களை அவை நம்முடன் நிகழ்த்துகின்றன. ஒவ்வொரு வாசிப்பும், ஒருவகையான சங்கேத எண். அது முந்தையப் புரிதலை நிராகரித்து, ஒவ்வொரு முறையும் மாற்று அனுபவங்களுக்கு வழிவகுக்கின்றன. எனினும் அத்தனைக் கதவுகளையும் திறக்கின்ற வல்லமை நமக்கு அமைவதில்லை. நமது பகீரத முயற்சிக்குப் பிறகும் ஏதோ ஒரு புதிர்த் தன்மையைத் தக்க வைத்துக்கொள்ளத்தான் ஒவ்வொரு படைப்பும் முனைகிறது. தவிர, நான் சுவைஞனேயன்றி, காரம் கொஞ்சம் தூக்கலாக இருக்கிறது, உப்பை குறைத்திருக்கலாமோ, இனிப்பைச்சேர்த்திருக்க வேண்டுமோ என்று சொல்லக்கூடிய வித்வமும் எனக்குப்போதாது. நல்ல ரசிகன், இசையோ, பாடலோ, கவிதையோ, ஓவியமோ, புனைகதையோ எதுவென்றாலும் அழகாயிருந்தால் (தோற்றம், அமைப்பு, ஓசை, உள்ளடக்கம் அத்தனையிலும், கண்ணுக்குக் குளுமையாகத்தானே அழகு இருக்கிறது) பரவசப்படுகிறேன்- உபாசிக்கிறேன்- சௌந்தர்ய உபாசகன். தி.ஜானகிராமன் சொல்வதுப்பொன்று முன்வரிசையில் உட்கார்ந்து தலையை ஆட்டும் ரசிகனல்ல, மூலையில் உட்கார்ந்து கசிந்துருகும் பைத்தியம், கால்கள் சோரும்வரை கொண்டாடுவேன், மனம் உலரும் வரை நெக்குருகுவேன். இங்கேயும் அதுதான் நடந்தது.

ஒரு கவிஞனின் வெற்றி எப்படி தீர்மானிக்கப்படுகிறது, விரல்தேய (அல்லது உதடுகள் தேய) உரைத்துப்பார்த்து அவனது கவித்துவத்தைத் தீர்மானிக்கும் உரைகல்தான் எது? காலத்தை வெல்லும் அவற்றின் சூட்ஷமம் எந்தச் சிமிழில் அடைபட்டு கிடைக்கிறது, அதற்கு என்ன பேரு? கம்பனுக்கும், வள்ளுவனுக்கும், பாரதிக்கும் தங்கள் கவிதைபெயரில் தொலைந்துபோன இன்ன பிற சங்ககால மகா மகா மனிதர்களுக்கும், மரணமிலாப் பெருவாழ்வை வரமாகத் தீர்மானிப்பவைகள்தான் எவை எவை? கவிதை என்பதே என்றென்றும் மனதில் நிற்கக்கூடிய வரிகளைப் படைப்பதால் மட்டும் தீர்ந்துபோயிற்றா, அவ்வரிகளில் வரிசைப்படுத்தபட்டுள்ள சொற்கள் முக்கியமில்லையா, அவை நம் மனதிற்கு தரும் உணர்வுகள் முக்கியமில்லையா? “மன்னவனும் நீயோ, வள நாடும் உன்னதோ” என்ற கம்பனும், “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலை” உயர்த்திசொன்ன வள்ளுவனும், ”தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்’’ என்ற பாரதியும், “புதியதோர் உலகம் செய்வோம்,” என்ற பாரதிதாசனும், “யாதும் ஊரே யாவரும் கேளீர்”, என்ற கனியன் பூங்குன்றனாரும் அடர்த்தியான இதுபோன்ற ஒருசில சொற்களில் வாழத்தானே செய்கிறார்கள். மாத்யூ அர்னால்டு( Mathew Arnold) இவற்றைத்தானே ”Touchstones’ என்கிறான். அடுத்து என் புத்திக்குத் தோன்றுவது கவிஞர்களுக்கான பயணமும்- காலமும். கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும், இழுத்துபோட்டுக்கொண்டு கற்றாழை முற்கள் கலந்த கானல் நீரில் தாகம் தணித்துகொள்ள அவர்கள் செய்யும் முயற்சி. ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினால் மட்டும் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது, “பல நேரங்களில், ” மாமழைப் போற்றுதும் மாமழைப் போற்றுதும்” என அதற்கான மாற்று வழியையும் அறிந்திருப்பவனும் நல்ல கவிஞனே. அவன் தொன்மங்களை மறக்காதவன், நவீனத்தை போற்றுபவன். இன்றைய பிரெஞ்சு கவிஞர்கள் அடிக்கடி சொல்வது “Soyez Precis! n’en parlez pas, Montrez!” சுற்றிவளைக்காதே அதாவது சுருங்கச்சொல், வார்த்தையைத்தவிர், காட்சிப்படுத்து. இருபதாம் நூற்றாண்டு தொடங்கி கவிஞர்கள் சொற்களில் சிக்கனம் பார்க்கத்தொடங்கிவிட்டார்கள். Poetry is a language measured and supercharged, என்பதைத்தான் நம்முடைய லா.சா.ரா வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால், “நெருப்புண்ணா வாய்ச் சுடணும் அப்படி சுண்டக்காய்ச்சு எழுதணும்”. அடுத்து நல்ல படைப்பிலக்கியங்களுக்கேயுரிய நேர்மையும், உண்மையும், கவிதைகளுக்கும் வேண்டும், வ.ஐ.ச. ஜெயபாலன் கவிதைகளில், இவைகளெல்லாம் உயிர்நாதமாக ஒலிக்கின்றன.

எனது வாழ்வும், கவிதையும் என்று எழுதபட்டுள்ள தமது முன்னுரையில், “கலைஞனில் அந்நியப்பட்ட தன்மை, சமூகப் பொறுப்பின்மை, உலகையும் வாழ்வையும் பற்றிய அவனது பார்வை குறித்த கோளாறுகள், உள்ளடக்கம் பற்றிய பிணி என பலதும் கவிஞனைத் தொற்றிக்கொள்வதாகவும், மரபுகளை ஒட்டவே அறுத்தெறிந்துவிட்டு நாதமில்லாத வசனங்களைப் பற்றிக்கொண்டு உயிர்பெறுகிற ஆகாயத் தாமரை கவிதைகள் பல மக்களிடமிருந்து அந்நியப்படுவற்கு- நான் அந்நியப்படுகிறேன். மண்ணிலிருந்தும் மரபுகளிலிருந்தும் அவற்றை மீறி எழுந்து, செழித்துப் பரந்து படுகிற கவிதைகளோடு மக்களுக்கு என்றுமே சம்மதமுண்டு” என்கிற அவரது வாக்குமூலத்திற்கு ஒப்ப கவிதைகளை எழுதியிருக்கிறார். “வெறும் தோற்றங்களை உடைத்துக்கொண்டு தன்னைச் சுற்றி நிலவுகின்ற இயற்கையையும், உயிரினங்களையும், மனிதர்களையும், இவற்றுக்கிடையிலான பல்வேறு உறவுகளையும் அவற்றின் உண்மைகளையும் கலைஞர்கள் அவர்கள் ஓவியம் தீட்டினாலும் சரி, காவியம் படைத்தாலும் சரி-தமது ஞானக்கண்களால் எப்போது கண்டுகொள்ளப் போகின்றார்கள்? எப்பொழுது அவர்கள் சூரியனையும், பள்ளத்தாக்குகளில் வாழுகிற மனிதரையும், ஒளியைத் தடுக்கிற மலைகளில் இரகசியங்களையும் பற்றி மக்களுக்குக் கூறப் போகின்றார்கள்? என்று கேள்வி எழுப்புகிறார். “வன்னியின் வாழ்வும், இயற்கையும், காலங்களும் வாய்வழிச் சொல்லிவந்த வாழ்வின் கதைகளை நான் காவியமாக்கி இருக்கிறேன்”, என்று கவிஞர் சொல்கிறார்.

ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும் என்ற காவியம், ரதிதேவி என்ற பெண்ணொருத்தியின் பிறப்பும், முடிவும் பேசுங்காவியம்- இன்றைய ஈழத்தின், விடுதலை வேள்வியில் தினந்தோறும் தங்களை எரித்துக்கொள்கிற தமிழ்ப் பெண்ணொருத்தியின் காவியம், 1986ல் எழுதப்பட்டு அச்சில் வந்திருக்கும் இந்நூலில் சொல்லப்பட்டவை அனைத்தும் இன்றளவும் தொடரும் உண்மை. காவியத்தில் பெருமூச்சிடுகிற கவிஞனுக்கும், காவியத்தை எழுதியுள்ள கவிஞனுக்கும் தொப்புட்கொடி உறவு. கவிதைகளில் நேற்றைய ஈழமண்ணில் வாழ்வொட்டிய மறுகல் உண்டு, தமிழ்ப்போராளிகளுக்கிடையே ஒற்றுமையின்மை குறித்த வேதனையுண்டு, பெண்விடுதலைக்கு ஆதரவு உண்டு, சமூக விமர்சனப்பார்வையுடனான எரிச்சலுமுண்டு எள்ளலுமுண்டு. ஒரு தேர்ந்த கவிஞனின் உள்ளார்ந்த மனவெழுச்சியை ரசித்து சுவைக்கிற நேரத்திலே, ‘வெடிப்பொலியும், துப்பாக்கி சன்னதமும்’ காவியத்தின் இறுதிப்பகுதிவரை எதிரொலிப்பதையும் கேட்கிறோம், ஆற்றினைத் தாண்டி காட்டினுள் பாய்ந்து ஓரடிப்பாதையில் ஓடிமறைந்தாலும் தவிர்க்க இயலாது. காவியத்துக்கான இலக்கண விதிகளை துவம்சம் செய்த மக்கள் காவியம், இளங்கோவுக்குகோர் கண்ணகி, வ.ஐ.ச. ஜெயபாலனுக்கோர் ரதிதேவி.

காவியம் கடுங்கோடையில் ஆரம்பிக்கிறது, கவிஞரின் கொதிக்கும் மனதையும் அதில் வேகும் கருப்பொருளையும் தகிக்கும் சொற்களூடாக ஸ்பர்சிக்கிறோம் .

“பாலி ஆற்றின் கரையில் இருந்தேன்
மணல் மேடுகளில்
உயிர்வற்றும் நாணல்கள்
காற்றில் பெருமூச்சைக் கலக்கும்
….
கூனிக்குறுகிக் கூசிக் கூசி
ஏழ்மைப் பட்டதோர் நிலக்கிழான்
தனது குலத்தெரு வீதியில் நடைமெலிதல்போல
கோடைதின்ற ஆறு நடந்தது
நாணற் புற்களை நக்கி நனைத்தது.
அல்லிக்கொடிகளின் கிழங்குகளுக்கு
நம்பிக்கைத் தந்தது
தூற்றி அகலும் பறவையைப் பார்த்து
மீண்டும் மாரியில் வருக என்றது
மண்ணுள் பதுங்கி இரு என
புல் பூண்டுகளின் விதைகளுக் குரைத்தது.
ஒப்பாரி வைக்கும் மீன்களை அதட்டி
முட்டைகள் தம்மை மணலுள் புதைத்து
சேற்றுள் தலைமறை வாகி
வாழ்வுக்காகப் போரிடச்சொன்னது.”

என்கிற தொடக்க வரிகளிலேயே இன்றைய ஈழத்தின் நிலையையும், ஏக்கத்தையும், விடிவுபிறக்குமென்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறார். கோடை தின்ற ஆற்றை, ஏழ்மைபட்டதோர் நிலக்கிழான் தனது குலத்தெரு வீதியில் நடைமெலிதல்போல என்ற உவமானத்தைப் படிக்கிறபோது, காட்சியை கண்முன்னே உலவவிட்டு, உயிர்வற்றும் நாணலைப்போல பெருமூச்சினை காற்றில் கலக்கத்தான் நமக்கும் முடிகிறது. கவிதை என்றால் என்ன என்பதற்கு தமது முன்னுரையில் “நமது வாழ்வோடு கவிதைகள் ஒட்டி உறவாடுகின்றன: அவை சொல், உருவம், உள்ளடக்கம் கொண்டதொரு ஆரோக்கியமான குழந்தை” என்று கூறியிருப்பதற்கொப்ப சொற்களை இழைத்திருக்கிறார். காவியமெங்கும் உவமை, உவமானங்கள், படிமங்களென்று பார்க்கிறோம்.

“காட்டுப் பகுதியில் யானை புகுந்த நெல் வயல்போல (பக்கம்- 49)

“வீடு, பசுமையில்லா கல்மரம்”(பக்கம்- 50)

“வானில் விண்மீன்கள் வேட்டையாட, மின்னல் பாம்புகள் நெளியும் (பக்கம்-83)

“செவ்விள நீரின் சிறுசிறு பிஞ்சுகளாக திரண்ட மார்பு(பக்கம்-92)

“நமது கோட்டைத் தீவு மட்டும் புத்தகம் தின்று அமைதியாய் இருந்தது(பக்கம்-100)

“தேவர்கள் வானில் சோளம் வறுத்த ஓர் இரவு ( பக்கம்-120)

இன்றைய யாழ்பாணத்தின் அவலநிலைகண்டு இருப்புக்கொள்ளவியலாத தனது மனநிலையை கவிஞர், காவியமெங்கும் வெளிப்படுத்தியுள்ளார் கவிஞரின் ஆழ்ந்த இலக்கிய பயிற்சியினையும், தேர்ந்த கவித்துவத்தையும் எதிரொலிப்பவை அவை.

தெருத்தெருவாக புதைக்கப்பட்ட
இளைஞர்களையும் யுவதிகளையும் சூல்கொண்டிருந்த
எம் யாழ்ப்பாணம் (பக்கம் 82)

கனவில் எனது தாயார்
கர்ப்பம் தரித்து அவஸ்தைப்பட்டாள்
ஊரெல்லாம் கிழவிகள் கர்ப்பங்கள் தரித்தார்
ஊரெல்லாம் குண்டுகாயங்களோடு
பிள்ளைகள் பிறந்தன (பக்கம்-84)

ஈழநாட்டின் வழித் தெருவெங்கும்
போர்விளையாடும் வீரக்குழந்தைகள் (பக்கம் 87)

“போராடுகிற எங்கள் வாழ்வில்
மரணம்மட்டுமே நிச்சயமானது
வடக்கிலிருந்து கிழக்குவரைக்கும்
நீண்டஎம் ஈழ தேசத்து மண்ணில்
தினம்தினம் எம்முள் ஒருவனையேனும்
விடுதலைக்காகக் களப்பலி தருகிறோம்.”

“ஊரெல்லாம் சாவீடும், ஒப்பாரிபாட்டும்
கறுப்பிக்கு கலியாணவீடும் தெம்மாங்கு பாட்டுமா”
அடுக்களைக்குள்ளே உறியைப்போல
அவளும் இருக்கிறாள்”

“யாரே அறிவர்
ஒடுக்கபட்ட ஒரு தேசத்து
இளைஞரின் திசைகளும்
நதிகளின் மூலமும். “

கவிதை படைத்தலில் அவருக்குள்ள நேர்மைக்கும், துணிச்சலுக்கும் கீழ்க்கண்ட வரிகள் உதாரணம்..

“வலது காலால் எங்கள் எதிரியை
உதைக்கிறீர் என்பதனாலே
இடதுகாலால் எங்களை மிதிக்க
உரிமை தந்தது யார்?” (பக்கம் -63)

மனதை உலுக்கும் கேள்வி, சம்பந்தப்பட்டவர்கள் யோசிக்க வேண்டும்.

கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலனின் பார்வை விசாலமானது, காவியம் பாடவந்த நேரத்தில்கூட காலங்காலமாய், நமது சமுதாயத்தில் பெண்ணுக்கு இழைக்கப்படும் அநியாயங்களை அவர் மறந்தவரல்லர், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறதென்பதை அவதானித்து எழுதவேண்டிய கடன்பாட்டிலிருந்தும் அவர் தவறியவரல்லர்:

“ஆண் வதை பட்டால் தியாகம் என்பதும்
பெண் வதைபட்டால் கற்பிழப்பென்பதும்
ஆண்தலைபட்ட சமூக நியாயம்” (பக்கம் -29)

“மன்னித்துடுக
காலம் காலமாய்
பாட்டன் தந்தை நான் எனது நண்பர்கள்…
பெண்களுக்கு ஆண்கள் இழைத்த
பொல்லாப்புகளின் புராணம் அறிந்தேன்’”

தமது மனதையும் நிஜ வாழ்க்கையையும் சமன் படுத்த நினைத்த கவிஞர், ஒட்டுமொத்த ஆண்குலத்தின் சார்பாகவும் பெண்களிடத்தில் மன்னிப்பு கோருகிறார்.

மாப்பணனுக்கும், சிறுமி ரதிக்கும் நடக்கும் சிறுபிராயத்தினருக்கே உரிய கேலியும் கிண்டலும் கலந்த எளிய உரையாடல்கள் காதில் ரீங்காரமிடக்கூடியவை:

“என்னடி தெரியும் எங்கள் சிரமம்
நாளைக்கு நீயே வயலை உழுதுபார்”
என்று மாப்பாணன் எரிந்து விழுவதும்

“ஏலுமென்றால்
வீட்டு வேலையை ஒருக்கால் செய்துபார்
நீ சமைத்தால் நாயும் தின்னாதே”
என்று நான் சபிப்பதும்…” (பக்கம் -54)

கவிதைகளிலிருந்து கவிஞனா அல்லது கவிஞனிடமிருந்துருந்து கவிதைகளா என்ற கேள்விக்கு அநேகமாக விடைகிடைப்பதில்லை. இது பொதுவாக எல்லா கவிஞருக்கும் நிகழ்வது. வாழ்க்கையிலுள்ள முரண்களுக்கெதிராகக் குரல்கொடுக்கையில், தானொரு பார்வையாளான் என்ற நிலை பிறழ்ந்து, தன்னையும் சமுதாயக்கேடுகளில் சூத்ரதாரியாக எண்ணிக்கொள்வதால் கவிஞன் நெருக்கடிக்குக் ஆளாகிறான். கடந்தகாலத்தைப்போலவே ஈழத்தில் நிலவிவரும் சாதீயக்கொடுமைகளையும் கவிஞர் விட்டுவைக்கவில்லை, சமூகப் பிரக்ஞையின்றி கவிஞன் இருக்க முடியுமா என்ன?

“ஈழத்தமிழர் ஒற்றுமை முழங்குவர்
மாடுமேய்க்கும் வன்னிப் பயலுக்கு
கல்வி எதற்கெனக் கிண்டலும் பண்ணுவர்” (பக்கம்-57)

“ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்”, தலைப்பிற்கேற்ப இப்பனுவல், ஈழமண் குறித்த ஏக்கத்தையும் அதன் கடந்தகால பெருமைகளையும் பேசுவதோடு, பண்பாடு, அரசியல், மனித நேயம் என பல்துறைகளிலும் தமிழினத்தின் முகங்களை அறிமுகம் செய்கிறது, அவற்றின் அவலங்களை விண்டுரைப்பதோடு, அவற்றின் விடியலுக்காகவும் பெருமூச்சிடுகிறது.

Click to access 278.pdf

ஈழத்துமண்ணும் எங்கள் முகங்களும்
வ.ஐ.ச. ஜெயபாலன்
வெளியீடு: காந்தளகம் சென்னை-2