Monthly Archives: ஓகஸ்ட் 2015

பிரான்சு நிஜமும் நிழலும் – 4

பிரெஞ்சுக் குடும்பம்

இன்றிருக்கிற சராசரி பிரெஞ்சுக்குடும்பமொன்றின் கூறுகள் உலகெங்குமுள்ள எல்லா நாடுகளிலும் படித்த மேல்தட்டு மக்களுக்குரியவைதான். புலன்களுக்கு அறிவைக்காட்டிலும் வீரியம் அதிகம். தங்களுடனான மோதலில் வீழ்ந்த அறிவை அத்தனை எளிதாக நெஞ்சுயர்த்த அவை அனுமதிப்பதில்லை. எளிதில் சோர்வுறும் குணங்கொண்ட அறிவும், புலன்களை அனுசரித்து வாழப் பழகிக்கொள்கிறது. ஆற்றல் உள்ளவர்கள் ஜெயிக்கிறார்கள், உணர்ச்சி அறிவைக்காட்டிலும் பலசாலி. உலகமனைத்தையும் மேற்கத்தியர்கள் அறிவால் வெல்ல முடிந்தது, உணர்ச்சியிடம் தோற்றுப்போனார்கள். உலகத்தின் வீழ்ச்சி உணர்ச்சிவசப்படுதலில்தான் தொடங்குகிறது. உணர்ச்சியைக் கண்கள், காது, வாய், மனம் என்று தனித்தனியாக அனுமதித்தால் தப்பித்தோம் – பிரித்தாளவேண்டும். அவற்றைக் கூட்டாகச் (உடலை) செயல்படவிட்டால் ஆபத்து. மேற்கத்தியர்களிடம் கற்றுக்கொள்ளக் கூடாதது என்று ஒன்றிருக்குமானால் இன்றைய அவர்களுடைய குடும்ப அமைப்பைச் சொல்வேன். சமூகப் பண்பாடுகளில் ஒன்றான குடும்பஅமைப்புமுறை இன்று மேற்கத்திய நாடுகளில் குலைந்துவருகிறது – எச்சரிக்கையாக இல்லாதுபோனால் நம்மையும் ஒரு நாள் தின்றுதீர்த்துவிடும்.

குடும்பம் என்றாலென்ன ? பொதுவானதொரு மூதாதையர் வழிவந்த இரத்த உறவுகளில் இறந்தவர்போக மிஞ்சியவர்கள், சமூக அறத்தின் அடிப்படையில் சேர்ந்து வாழ்வது. ஒருவருக்கொருவர் இன்பத்தையும் துபத்தையும் பகிர்ந்துகொள்வது, நெருக்கடி காலங்களில் தமது குடும்பத்தைசேர்ந்தவர்களுக்குத் துணை நிற்பது. இந்த இலக்கணங்களுக்குப் பொருந்துகிற குடும்பம்தான், ஒரு நல்ல சமூகத்தையும், தொடர்ந்து நாட்டையும் கட்டமைக்க முடியும்.

பிரான்சு நாட்டில் குடும்ப அமைப்பு நேற்று எப்படி இருந்தது?

இந்த நேற்று இரு பொருளைக்கொண்டது, முதலாவது நேற்று 30 வருடங்களுக்கு முன்பாக இந் நாட்டிற்கு (பிரான்சுக்கு) வந்த காலத்தைக் கணக்கில் கொள்ளவேண்டிய நேற்று, மற்றது ஒரு வயதான (70?) பிரெஞ்சுக் காரரிடம் நினைவில் இருக்கிற சுமார் ஐம்பது ஆண்டுகாலத்திற்கு முந்தைய பிரான்சு. எனது பார்வையில் ஒரு பிரெஞ்சுக் குடும்பம் எவ்வித மாற்றத்திற்கும் உட்படாமல் அப்படியே இருப்பதுபோல இருக்கிறது. ஆனால் பிரெஞ்சுக் காரர் புலம்புகிறார்.

இன்றைய பிரெஞ்சுக் சமூகத்தில் – குடும்பத்தில் பெண்களுக்குள்ள உரிமைகளைப் பார்க்கிறபோது நவீன பிரெஞ்சுக் குடும்பம், பாரம்பர்யப் பிரெஞ்சுக் குடும்பத்தைக்காட்டிலும் மேம்பட்டதென்கிற பொதுவானதொரு தோற்றத்தைத் தரும். நவீனப் பிரெஞ்சுக் குடும்பம் கட்டற்ற சுதந்திரத்தின் பெயரால் வானமே எல்லையென்று இருக்கின்ற கூரைகளை பிய்தெறிந்ததின் பலன், குடும்பம் என்ற அமைப்பு இன்று மழையிலும் வெயிலிலிலும் பாதுகாப்பற்று துன்புறுவதை சுகமென்று வர்ணிக்கிறபோது எரிச்சல் வருகிறது. பிரெஞ்சுக்காரிடம் கேட்டேன், “குடும்ப அமைப்பு என்பது பண்பாட்டுச்சின்னம், அதனைக் கட்டமைப்பது ஒரு சமூகத்தின் அறங்கள், இந்நிலையில் உங்கள் குடும்பம் என்ற குறியீடு அல்லது ஒழுங்குமுறை (system) ஐரோப்பியர்கள் என்கிற பொதுகுணத்திற்கு உரியதா, அல்லது உங்களுடையதா?” எனக்கேட்டேன். இரண்டொரு நிமிடங்கள் யோசித்தார், என்ன சொல்வதென யோசித்திருப்பார்போல, நுணி மூக்கைச் சொரிந்தபடி, ” மேற்கத்திய பண்புகளோடு, சாப்பாட்டு மேசையில் ‘பொர்தோ’ ஒயினையும், கமாம்பெர் பாற்கட்டியையும் (Le fromage Camembert), சேர்த்தீர்களானால் அதுதான் இன்றைக்கு பிரெஞ்சு பண்பாடு, என்பதுபோல, ஐரோப்பியருக்குரிய பொதுபண்புகளும், எங்களுடையதும் கலந்ததுதான் ” எனப் பதிலிறுத்தார், சமாளித்துவிட்டோம் என்கிற திருப்தி முகத்தில் தெரிந்தது.
இரண்டொரு நிமிடங்கள் அமைதியாக இருந்தவர் மனதில் என்ன தோன்றியதோ: ” உங்கள் பண்பாடு என்ன? இங்கே நீங்கள் எங்களைப்போலத்தானே வாழ்கிறீர்கள்?” எனச் சீண்டினார். 30 ஆண்டுகால புதுச்சேரி தமிழர்களின் பிரெஞ்சுப் பண்பாடென்று எதைச்சொல்வது? எனத் தயங்கினேன்.அவருக்குப் பதில் சொல்வதுபோல, ” சோறு சாப்பிடுகிறோம், மனைவி புடவை உடுத்துகிறாள், சிறுவயது பிள்ளைகள் என்றால் அவர்கள் விஜய் அல்லது ரஜனியின் ரசிகர்களாக இருக்கவேண்டுமென்று எதிர்பார்க்கிறோம், வளர்ந்ததும் குலம் கோத்திரம் பார்த்து நாங்கள் கைகாட்டுகிற பையனையோ பெண்ணையோ கல்யாணம் செய்துகொள்ளவேண்டுமென்று பிள்ளைகளிடம் எதிர்பார்க்கிறோம், உழைத்தோ உழைக்காமலோ (பிரான்சில் முடியும்) இங்கேயோ ஊரிலோ வீடோ, அப்பார்ட்மெண்ட்டோ வாங்கவேண்டுமென்று நினைக்கிறோம்” – எனக்கூறினேன். அவர் சிரித்தார். சிறிது தாமதித்து “எங்களுக்கு இதுபோன்ற பண்பாட்டுக் கவலைகள் இல்லை” எனக்கூறியவரிடம் மறுபடியும் ஓர் எள்ளல் சிரிப்பு.

“2015ல் தமிழ்ப் பண்பாடு என்றுசொல்லிக்கொள்ள இருப்பதென்ன?” என்னிடமே கேட்டுக்கொண்டு அதற்குப் பதிலையும் கூறிப்பார்த்தேன். கன்னியாகுமரியில் ஆரம்பித்து தமிழர்களின் புண்ணிய ஸ்தலமான சென்னைவரை நம்மிடம் நான் நினைத்தைவிட கலந்துகட்டிய பண்பாடுகள் வரிசையில் நிற்கின்றன. கிராமங்களில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக பெண்பிள்ளைகள் வெளியிற் செல்ல உகந்த நேரம் பொழுது புலர்வதற்கு முன்பாக அல்லது பொழுது சாய்ந்தபின். மற்ற நேரங்களின் சன்னற்கம்பிகளை பிடித்துக்கொண்டு நிற்பார்கள். கணவன் மனைவியாக ஆன பிறகும் உழைக்கும் மக்களிடம் பிரச்சினைகளில்லை, ஆனால் சில வீட்டுப் பெண்கள் நான்கு சுவருக்குள்தான் அடைந்து கிடக்கவேண்டும், வெளியிற் போனால் கணவருக்குப் பின்னால் பத்தடி தள்ளிதான் மனைவிபோகவேண்டும், அதுதான் நல்ல (?) குடும்பத்துப் பண்பாடு என்பார்கள். புதுச்சேரிக்கு வந்தபோது அங்கே திருமணமான புது ஜோடியொன்று ரிக்ஷாவில் சேர்ந்து சினிமாவுக்குப் போனதை எங்கள் தந்தை வழி பாட்டி, “இதென்ன கலிகாலம், கொஞ்சங்கூட வெட்கமில்லாம!” என்றது நினைவில் இருக்கிறது. சென்னையில் சபையர் தியேட்டரில் படம் தொடங்கியதும் காதல் ஜோடிகளுக்கு மெரீனா பீச்சில் கிடைக்காத பண்பாட்டுச் சுதந்திரமுண்டு. இது போக சற்று ஒரிஜினலாக செட்டியார்களுக்கென காரைக்குடிப்பக்கம் சில தமிழ்ப்பண்பாடுகள், நாஞ்சில் நாடனைகேட்டால் நாஞ்சில் நாட்டுப்பண்பாடு என ஒரு புத்தகமே எழுதுவார், பிறகு கி.ரா.வின் கரிசல் காட்டுப் பண்பாடு, திருநெல்வேலி, மதுரை, தஞ்சையென்று திசைக்கொரு பண்பாடு இருக்கிறது. இதுபோக நாயக்கர்கள், மராத்தியர்கள், நவாபுகள், நிஜாம்கள், ஆங்கிலேயர்கள் பிரெஞ்சுகாரர்கள் விட்டுச்சென்ற பண்பாடுகள் இருக்கின்றன. இவைகளைப் புடைத்து தூற்றினால் பதர்போக தமிழகக் களத்துமேட்டில் மணப்பந்தல், தாலி, சோறு, பொங்கல் பண்டிகை, ஐம்பது வயதைக் கடந்த பெண்களுக்குப் புடவை, கீழ் சாதி, மேல் சாதி, தலைவர்களுக்கு அடிமட்டத் தொண்டரென்றால் உயிர்த் தியாகமும் அமைச்சரென்றால் தீச்சட்டியும்; நடிகர்களுக்குப் பாலாபிஷேகமும், பொழுது சாய்ந்தால் நல்ல குடிமகன்களாக இருப்பதும் தமிழ்நாட்டுப் பண்பாடு. பிறகு இருக்கவே இருக்கிறது பீஜித்தீவில் ஆரம்பித்து மொரீஷியஸ் வரை உலகமெங்கும் தீமிதித்தல், காவடி எடுத்தல்..ஆசுவாசப்படுத்திக்கொண்டு பிறவற்றை யோசித்தபோது பிரெஞ்சுக் காரர் குறுக்கிட்டு “என்னிடத்தில் பகிர்ந்து கொள்ளேன்!” – என்றார்.

நான், அடுத்தவரிடம் குறைகாண்பது சுலபம் என்பதால் “உங்கள் குடும்ப அமைப்பு எப்படி முன்பு போலவே இருக்கிறதா? மாற்றம் தெரிகிறதா? “, எனக்கேட்டேன்

“முன்பெல்லாம் மரபான பிரெஞ்சுக் குடும்பம் என்பது கணவன் மனைவி பிள்ளைகள் என்று வாழ்ந்தக் காட்சியை எல்லா வீடுகளிலும் பார்க்கலாம், சில குடும்பங்களில் இரண்டு மூன்று சந்ததியினர் கூட இருப்பார்கள்” பிள்ளைகளுக்குப் திருமணத்தைப் பெற்றோர்களே நடத்திவைத்தார்கள்; வருகின்ற பெண் அல்லது பிள்ளை நல்ல குடும்பமா? அவர்களால் குடும்பத்திற்கு என்ன இலாபம்; என சகலத்தையும் யோசித்தே திருமணங்கள் நடந்திருக்கின்றன” என்றார். அதேவேளை கடந்த காலத்திலிருந்த ஒரு வைதீகப் பிரெஞ்சுக் குடும்பம் ( La famille traditionnelle française) உலகின் பிற பகுதிகளைப்போலவே தந்தை வழிமுறைக்கு முக்கியத்துவம் தருகிற ஓர் ஆனாதிக்கக் குடும்பம்: ஆண்கள் வேலை செய்தார்கள் ஆண்கள் யுத்தம் செய்தார்கள், ஆண்கள் அரசியல் செய்தார்கள்; பெண்கள் எச்சில் எடுதார்கள், பத்துபாத்திரம் தேய்த்தார்கள், பெருக்கினார்கள் வாரினார்கள், பிள்ளைகளைச் சீராட்டினார்கள், உடன் கட்டை மட்டும் ஏறவில்லை, மற்றபடி இந்தியபெண்களுக்கிருந்த அதே நிலமைதான். சங்க காலத்திலேயே பெண்கவிஞர்களைச் சந்தித்திருக்கிற நமக்கு, பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை பிரெஞ்சுப் பெண்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாத விஷயம் வியப்பை அளிக்கலாம்.

நவீன பிரெஞ்சுக் குடும்பம்:

இன்று நிலமை வேறு சமூக அமைப்பில் மதத்தின் தலையீடு குறைந்ததும், பெண்கல்வி, பெண்ணுரிமை ஆகியவற்றில் ஏற்பட்ட முன்னேற்றமும் வைதீகப் பிரெஞ்சுக் குடும்ப அமைப்பைப் புரட்டிப்போட்டது. இந்தியாவைப் போலவே பதிவுத் திருமணம், சம்பிரதாயத் திருமணம் பிரான்சு நாட்டிலும் உள்ளன. தமிழில் நாம் அறிந்த பதிவு திருமணத்தைத்தான் இங்கே ‘le mariage civil’ என்ற பெயரில் நகரசபைகளிலும், மாநகராட்சிகளிலும் மேயர்களால் நடத்தி வைக்கபடுகின்றது. மதத்தின் பேரால் தேவாலயங்களில் ‘le mariage religieux’ நடத்திவைக்கப்படுகிறது. ஆனால் அண்மைக் காலங்களில் அரசே வழிவகுத்துக்கொடுத்த ஆண் பெண் கைகோர்த்தல் மேற்குறிப்பிட்ட இரண்டு வழிமுறைகளையும் உதறிவிட்டது அல்லது செல்வாக்கைக் குறைத்துவிட்டது எனலாம். கடந்த பத்து ஆண்டுகளாக எவ்வித உறுத்தலுமின்றி ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ ஆரம்பித்திருக்கிறார்கள். பிரெஞ்சு அரசாங்கம், குடும்பச் சுமையைப் பகிர்ந்துகொள்வதும் 80 விழுக்காடு பெண்கள் கல்விபெற்றவர்களாக இருப்பதும், 25 வயதிலிருந்து -45 வயது வரையிலான பெண்கள் பிறரைச்சார்ந்திராமல் சொந்தச் சம்பாத்தியத்தில் வாழ்வதும், தனித்திருக்கும் துணிச்சலை கொடுத்துவிடுகிறது. தவிர புதிதாக கொண்டுவரப்பட்ட ‘Le PACS’ (Pacte Civil de Solidarité -1999) சட்டம் தகுந்த வயதை அடைந்த ஒருவன் அல்லது ஒருத்தி சகபாலினம் அல்லது எதிர் பாலினத்தைச் சேர்ந்த ஒருவன் அல்லது ஒருத்தியோடு ஒப்பந்த அடிப்படையில் சேர்ந்து வாழ அனுமதிக்கிறது. இந்நிலையில் பாரம்பர்ய திருமணங்கள் வெகுவாகக் குறைந்துவிட்டன. இன்றைக்கு ஐம்பது விழுக்காட்டிற்கும் அதிகமான கணவன் -மனைவி பந்தம் PACS முறைமையை அடிப்படையாகக் கொண்டது. மூன்று தம்பதிகளில் ஒரு ஜோடி பிரான்சு நாட்டில் விவாகரத்து செய்துக்கொண்டதாக இருக்கிறது. ஒப்பந்தந்த அடிப்படையில் சேர்ந்து வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நவீன பிரெஞ்சு குடும்ப அமைப்பை அணுக் குடும்பம் ( la famille nucléaire ) என்றும், கலப்புக்குடும்பம் (la famille composée ou recomposée) என்றும் வகைபடுத்தலாம். ‘அணுக்குடும்பம்’ என்பது ஏற்கனவே கூறியதுபோல பாரம்பர்ய திருமணச் சடங்கினால் இணையும் தம்பதிகள். ‘கலப்புக் குடும்பம்’ என்பது தம்பதிகளில் ஒருவர் தனது பிள்ளைகளுடன் தனித்து வாழ்வது அல்லது மணவிலக்குப்பெற்ற கணவனோ மனைவியோ விவாகம் செய்துகொண்டோ அல்லது செய்துகொள்ளாமலோ இன்னொரு ஆண் அல்லது பெண்ணுடன் அவர்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ்வது ஆகும். இவகைக்கு Le PACS முதுகெலும்பு. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு (2013) ஓரினத் திருமணத்தையும் சட்டப்படி அங்கீகரித்து, தீவிர சமய வாதிகள், வலதுசாரிகள் கோபத்தை பிரெஞ்சு இடதுசாரி அரசாங்கம் சம்பாதித்துக்கொண்டிருக்கிறது.

நவீன பிரெஞ்சுக் குடும்பம் -கலப்பு குடும்பம் – சமூகத்தின் எதிர்பார்ப்பைத் துச்சமாகக் கருதுகிறது. தனிமனிதனின் உடல் சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் அளித்து, மனிதத்தின் ஒழுங்குகளை கலைத்துப்போட்டிருக்கிறது. இரத்த உறவுகள்கொண்ட பிள்ளைகள், தம்பதிகள் ஆகியோரிடமே சிற்சில சமயங்களில் அசாதரண பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடுகிறபோது, உடம்பின் இச்சையைமாத்திரம் கணக்கிற்கொண்டு ஒழுங்கைச் சிதைத்து கட்டமைக்கப்படும் நவீன குடும்ப அபைப்பு ஆனாதிக்கமோ பெண்னாதிக்கமோ அல்ல உணர்ச்சிகளின் ஆதிக்கம்- ஆபத்தானது.
(தொடரும்)
—————————————————–

மொழிவது சுகம் ஆகஸ்டு 15 -2015

அ. இலக்கிய சொல்லாடல்கள் -5 : சுயபுனைவு (Autofiction)

சுயபுனைவு இன்றைய இலக்கியபோக்குகளுள் ஒன்று, அதாவது இன்றைய இலக்கியப் போக்கு என்பது, இப்பகுதியை நான் எழுதிக்கொண்டிருக்கிற கணத்திற்கு உரியது. நிகழ்காலத்தைத் திட்டவட்டமாக வரையறுக்க ஆகாததால், சுயபுனைவை இக்கணத்திற்கு உரியது என்றேன். தொன்மம் இறந்தகாலம்- சரி, நவீனம் நிகழ்காலமா அல்லது சமகாலத்திற்குரியதா? இந்த சமகாலத்தை எங்கே ஆரம்பிப்பது அதன் எல்லை எதுவரை? எண்ணிக்கையில் எத்தனை ஆண்டுகள் சார்ந்த விஷயம்? நிகழ்காலமென்றால், எது நிகழ்காலம்? இக்கட்டுரையை நான் எழுதிக்கொண்டிருந்த தருணம் நீங்கள் வாசிக்கிறபோது இறந்த தருணமாக மாறியிருக்கும் அல்லது நான் இப்பகுதியை எழுதிக்கொண்டிருந்த நேரத்தில் நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கிற நேரம் எனக்கு எதிர்காலம். ஆக நிகழ்காலமே கேள்விக்குறியாக இருக்கிறபொழுது நவீனத்துவத்தின் காலத்தை வரையறுப்பது எப்படி? எனவேதான் ஒரு தற்காப்புக்காக சுயபுனைவை நான் எழுதிய கணத்தின் இலக்கியபோக்கு எனக்குறிப்பிட்டேன். நவீனத்துவம் பின் நவீனத்துவம் குறித்த தலைப்புகளில் எழுதுகிறபோது சற்று விரிவாக இவைற்றைபற்றி பேசுகிறேன்.

சுய புனைவு என்ற பெயரில் இரண்டு சொற்கள் இருக்கின்றான. இச்சொற்களைக்கொண்டு இப்படைப்பிலக்கியம் எந்த வகை சார்ந்தது எனவிளங்கிக்கொள்ளலாம். வழக்கம்போல இதுவும் ஒரு உரைநடை புனைவுதான், மாறாக ஒரு தனிநபரின் சொந்த வாழ்க்கைபற்றிய புனைவு – கற்பனையும், எழுதும் மனிதனின் அந்தரங்கமும் கைகோர்க்கும் எழுத்து. புதியது என்பது தேடலில் பிறப்பது, போதும் அலுத்துவிட்டது என் புலன்களுக்கு, சிந்தனைக்குப் புதிதாய் என்னதரப்போகிறேன், வழக்கமான திசையில் பயணித்தபோது சோலையும், சுணைநீரும், நிழல் தரும் மரங்களும் இருந்தனவென்பது உண்மைதான், புதிய திசையில் பாலையும் வெக்கையும் குறுக்கிடலாம், இருந்தும் இரண்டாவதைத்தான் தேர்வு செய்வேன் அதுவே என் ஆண்மைக்கு அழகு என ‘நேற்றை’ மறுப்பதில் தான் ‘நாளை’ இருக்கிறது. மனித வாழ்க்கையில் மறுப்பு முக்கியமான சொல். மேற்கத்திய நாடுகளின் கலை இலக்கியம் அறிவியல் முன்னேறங்கள் மறுக்கவேண்டியவற்றை மறுத்ததால் கண்ட பலன்.

சுயபுனைவு என்ற சொல் சுய சரித்திரம் என்ற சொல்லிலிருந்து பிறந்தது என்பது தெளிவு. ஏற்கனவே கூறியதுபோன்று சொந்த வாழ்க்கையை சுவைபட புனைவாக்குவது. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்திலேயே சுயபுனைவுகள் எழுதப்பட்ட வந்திருக்கின்றன. ஆனால் அப்போதெல்லாம் அவற்றிர்க்கு வெவ்வேறு பெயர்கள். சிலர் ” புதிய சுயவரலாறு” (Nouvelle autobiographie) என அழைத்தார்கள்; சிலர் ” நான்- புதினம்” ( Roman de je) பெயரிட்டார்கள்; வேறு சிலரோ “சுயவரலாற்றுப் புனைவு” ( Roman autobiographie) என அழைத்திருக்கிறார்கள், இறுதியாக இன்றைய பொருளில் சுய புனைவு என்ற சொல்லை 1977ம் வருடத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் செர்ழ் தூப்ரோவ்ஸ்கி(Serge Dobrovsky).

பிரெஞ்சு சுயபுனைவுகளில், avant-gardiste களின் பங்கும் நிறைய இருக்கிறது ‘காதலன்’ நாவலை எழுதிய மார்கரித் துராஸ் படைப்புகள் அனைத்துமே, அவரரது சொந்த வாழ்க்கை, குடும்பம் பற்றியதுதான். அதுபோல அண்மையில் நோபெல் பரிசுபெற்ற பத்ரிக் மொதியானோ படைப்புகளும் அவர் சொந்தவாழ்க்கையைப் பேசுபவைதான். லெ கிளேஸியொவின் காலச்சுவடு பதிப்பில் வெளிவந்த ‘குற்றவிசாரணை’ நாவலும் சுயபுனைவுகளில் ஒன்றே. Alain Robbe-Grillet என்பவர்தான் புதிய சுயவரலாறு என்ற அடையாளத்துடன் அவருடைய “Le Voyageur”(2001) என்ற நாவலை எழுதினார். எழுபதுகளில் ‘je'(நான்) என்றசொல்லோடு சமூகம், உடல் நோய், மரணம், குடும்பம், பாலுறவு போன்ற விடயங்கள் இணைத்த படைப்புகள்(சுயபுனைவுகள்) புத்தகச் சந்தைகளில் அதிகம் விலைபோயின. இன்றைய பிரெஞ்சு படைபுலகம் சுயபுனைவுகளைச் சுற்றி இயங்குவது என உறுதிபடக் கூற முடியும். சுயவரலாறு அல்ல என்கிறபோதும் படைப்பிலக்கியாதி தான் சாட்சியமாக இருந்தவற்றையே புனைவில் அதிகம் கொண்டுவருகிறான். இதுபோன்ற நிலையில் ‘நான்’ என தன்னிலையில் கதை சொல்ல முனைகிறபோது, அதை எழுதியவனாகவே பார்க்கிற மரபு எங்கும் இருக்கிறது, .படைப்பில் வருகிற ‘நான்’ (கதைசொல்லி) வேறு, எழுதிய ‘நான்’ (எழுத்தாளன்) வேறு என்று வற்புறுத்திசொல்லவேண்டியல் கட்டாயம் பிரெஞ்சு படைப்பிலக்கியவாதிகளுக்கும் இருந்திருக்கிறது. மர்செல் புரூஸ்டு இதற்கெனவே ஒரு நூலை (Contre Sainte-Beuve) எழுதினார்.

ஆ. கடவுளின் கடவுள்- இரா இராகுலன்.

ஒன்றை நேசிப்பது என்பது வேறு, அதை சுவாசிப்பது என்பதுவேறு. ஒரு நல்ல கவிஞன் பிறருக்காக அல்ல தனக்காக கவிதை வடிவைத் தேர்வு செய்கிறான், கவிஞன் இயல்பில் ஓர் அழகியல் உபாசகன், மென்மை உள்ளம் படைத்தவன், பிறர் துயரம் சகியாதவன், இவ்வுலகின் ஒழுங்குகளில் அக்கறை கொண்டவன் அவை பிறழ்கிறபோது அறச்சீற்றத்தை வெளிப்படுத்துகிறான். அவன் தனக்காக அல்ல பிறருக்காக குரல்கொடுக்கும் கலகக்காரன், போராளி. இந்த அக்கறையை, அறச்சீற்றத்தை, பரிவை, நாம் காணாத உலகின் தரிசனத்தை, இதமான மொழியில் இலக்கியம் ஆக்குகிறான். உண்மையான கவிதை ஒரு காற்றுபோல தொழிற்படும்: மென் தளிர்களை நளினமாக அசைத்துப்பார்க்கும் வித்தையும் வரும், எச்சில் இலைகளை எங்கே கொண்டுபோய் சேர்க்க வேண்டுமோ அங்கு சேர்க்கவும் செய்யும். நல்ல கவிஞன் காத்திருப்பதில்லை, சீண்டிய நெஞ்சில் சிம்மாசனமிட்டு அமர்ந்து அவன் உடலையும் உணர்வையும் ஒருசேர ஆட்டிவிக்கும் அனுபவத்தை உடனுக்குடன் மொழிப்படுத்தினால்தான் அவனுக்குத் தூக்கம் வரும். இளைஞர் இரா. இராகுலன் அப்படிப்பட்டவரென தெரிகிறது.

குழந்தை அழலாம் என்றொரு கவிதை, பார்க்க எளிய கவிதைபோலத் தெரிகிறது ஆனால் அக்க்விதை பூடகமாகத் தெரிவிக்கும் செய்திகள், அதன் புன்புலத்தில் விரியும் காட்சிகள், கேட்கும் கேள்விகள் சாத்தியமுள்ள விடைகள், இவ்வுலகின் மீதான கோபம் – மொத்தத்தில் சிருஷ்டிக்கப்பட்ட பொருள் சிருஷ்டிக் கர்த்தாவின் முகத்தில் வீசுகிற கேள்வி.

குழந்தை அழலாம்

பசிக்காக
தொடரும் கொசுக்கடிக்காக
வயிற்றுக்கிரகத்திலிருந்துப் புலம் பெயர்த்தியதற்காக
அல்லது
தன்போன்ற இன்னொருவனை பேசுவதற்கு
ஏற்பாடு செய்யுங்களேன் என்பதற்காக

இக்கவிதையில் பொதுவில் ‘குழந்தை அழுவதற்கு’ சராசரி மனிதர்கள் முன்வைக்கும் காரணத்திலிருந்தே பதிலைத் தொடங்குகிறார். ஆனால் அடுத்தடுத்த வரிகளில் வரும் வார்த்தைகள் சொல்ல வருவது வேறு. கொசுக்கடியை முழுமைப்படுத்த உபயோகித்த ‘தொடரும்’ என்ற வார்த்தையின் தேர்வும் அதன் இடமும் முக்கியம். ‘வயிற்றுக் கிரகத்திலிருந்து புலம்பெயர்த்தியதற்காக’ வும் குழந்தை அழலாம் என்ற யூகத்தை எழுப்புக்கிறார், யூகம்போன்றதொரு தோற்றத்தைத் தந்தாலும் ( ‘அல்லது’ என்ற சொல் உபயோகத்தைக் கவனிக்கவும்). அந்த அழுகை சீற்றத்தினால் வெடித்து எழுந்த குரலாகவும், ஏன் செய்தீர்கள்? என்ற கேள்வியாகவும் தொக்கி நிற்கிறது. படைத்தவர்கள் அனைவரிடமும் குழந்தைக்குள்ள கேள்வி இது – உங்களுக்கு நம்பிக்கை இருக்குமானால் படைப்புக் கடவுளிடமுங்கூட எனச்சேர்த்துக்கொள்ளலாம். தன்னை இந்த மண்ணில் பிறப்பெடுக்கவைத்ததில் உடன்பாடில்லை – என்பதைத் தெரிவிக்கும் அழுகை. இறுதியாக ‘குழந்தை அழுவதற்கு கவிஞர் கூறும் மற்றொரு காரணம்: “தன்போன்ற இன்னொருவனை பேசுவதற்கு ஏற்பாடு செய்யுங்களேன் என்பதற்காக “. அவ்வழுகைக்குள் ஓலிந்துள்ள உத்தரவு ஓர் எள்ளல்போல இருப்பினும், கவிஞர் சொல்ல வருவது நம்முடைய மரமண்டைக்கு அதன் அழுகைக்கான காரணங்களைப் புரிந்துகொள்ள போதாது, தன்போன்ற இன்னொரு குழந்தை மட்டுமே புரிந்துகொள்ளும் – எனவே என்னைப்புரிந்துகொள்ளக்கூடிய ஒரு குழந்தையை என்னோடு பேசுவதற்கு அனுப்பிவையுங்கள் என்பதற்காக குழுந்தை அழுகிறது எனக்கூறுவது, விரக்தியின் உச்சம், இச்சமூகத்தின் மீது இயல்பாக மென்மை உணர்வுடையோருக்கு எழும் தார்மீகக்கோபம்.

‘நினைவுகூர்தல்’ என்ற தலைப்பில் ஓர் அற்புதமான கவிதை. நோஸ்ட்டால்ஜியாவை இதைக் காட்டிலும் சிறபான படிமமம்கொண்டு – விளக்கமுடியுமா எனத் தெரியவில்லை. திரும்பத் திரும்ப வாசித்து மகிழ்ந்த கவிதைகளில் அதுவொன்று

………..
தூசிபடித்த நாற்காலி மீது
வீட்டுக்காரனொருவன் அமர்ந்திருந்தான்

மேசையின் மீது புத்தகங்கள்
தூசியாலும் பூச்சிகளாலும்
வாசிக்கப்படுவதைப் போல்
கடந்த நிகழ்வுகளைப்
பாழ்பட்டுபோன வீட்டுக்குள்
ஒவ்வொன்றாய்த் தேடியெடுக்கிறான்”

இவரது கவிதைகள் அதிகம், தனிமை, நினைவுகள், நினைவுலகம் மனம் எனசுற்றி வருகின்றன அதனாலேயே இவுலகின் குறை நிறைகளை கூர்ந்து கவனித்து கவிதை வடிக்க முடிகிறது.

இத்தொகுப்பில் சுருக்கமாக இருந்தபோதிதிலும் என்னை ஈர்த்த மற்றொரு கவிதை
பெருமழை‘ என்ற தலைப்பிட்ட எளிமையான வரிகள்:

வெகு நேரமாய் மழை
காரணம் புரியவேயில்லை
பாறையின் இடுக்கொன்றில்
சிக்கிகொண்ட விதையினருகே
இப்பொழுதுதான்
பெருமழையின் ஒரு துளிவந்து சேர்ந்தது.

வாழ்க்கைமீதான அவநம்பிக்கைகள் ஏற்படுத்தித் தரும் கோபம் கடவுளிடம் திரும்புவதை இவர் கவிதைகளில் வெவ்வேறு இயற்கைநிகழ்வாக அறிமுகமாகின்றன. மேலே அதே இயறகைக்கொண்டு அவிழ்க்கப்பட்டப் புதிரை, சமூகத்திலிருந்து விலக்கிக்கொண்டு தனி மனிதனாக அவிழ்க்கமுற்படுகிறபோது ‘நான் நானாகக்கூட இல்லையே” என்ற ஏக்கம் கவிதை மொழியில் மின்னலாகத் தோன்றுகிறது, நடப்பது சில கணமென்றாலும், தாக்கத்தால் நெஞ்சம் அதிர்வது சத்தியம்.

தொகுப்பிலுள்ள அந்த வயோதிகன், அன்பெனும் மது, இரவைக் கிழித்த கதிர்கள் எனத் தொடங்கும் கவிதை, மன நிலை, பொம்மைகள், இவ்வாறு வாழ்கிறோம் போன்றவற்றைப் பலமுறை வாசித்திருப்பேன். ‘உயிர்க் கிணறு’, ‘ஊர்ந்த நடை’, ‘உலகின் கரை’ நினைவில் நிற்ககூடிய வார்த்தை கட்டிகள். பல நேரங்களில் சொற்சிலம்பில் கவனம் செலுத்தி கவிதையின் இலக்கை தவறவிடுவதுபோலவும் தெரிகிறது. உதாரணம் ‘தெரியாது’ என்ற கவிதை.

இவரது கவிதைகளை வாசித்துவிட்டு இருவர் தங்கள் கருத்துக்களை அழகான தமிழில் உள்ளார்ந்த உணர்வோடு பாராட்டி மகிழ்ந்திருக்கிறார்கள், ஒருவர் மூத்தக் கவிஞர் பழமலய் மற்றவர் ஸ்ரீநேசன், அவற்றின் மீதான நம்பகத் தன்மை இரா. இராகுலன் கவிதைகளைப் படித்தபின் கணிசமாகக் கூடியிருக்கிறது. இறுதியாக இக்கவிதைத் தொகுப்பை வெளியிட்டு, புண்ணியம் தேடிக்கொண்ட ‘நறுமுகை ஜெ. இராதாகிருஷ்ணனுக்கும் நன்றி.

———

கடவுளின் கடவுள் (கவிதைத் தொகுப்பு)
விலை ரூ50.
– இரா. இராகுலன்
நறுமுகைப் பதிப்பகம்
29/35 தேசூர் பேட்டை, செஞ்சி 604202

இ. ஸ்ட்ராஸ்பூர் தேவாலய ஒலி ஒளி காட்சி

பிரான்சு நாடெங்கும் சுற்றுலா காலமென்பதால், பயணிகளை ஈர்க்கின்ற வகையில் நகரம் அதன் சுற்று புறங்களில் கண்களுக்கும் செவிக்கும் விருந்தளிக்கும் வையில் நிகழ்ச்சிகளை செப்டம்பர்வரை ஏற்பாடுகளை செய்துள்ளார்கள். ஸ்ட் ராஸ்பூர் மாநகராட்சியியும் தன்பங்கிற்கு சிலவற்றை ஏற்பாடு செய்து உள்ளூர் வாசிகளையும், சுற்றுலா பயணிகளியும் மகிழ்விக்கும் பணியில் நகரமெங்கும் பொழுதுபோக்கு கலை நிகழ்ச்சிகள், ஆயிரம் வயதைக் கொண்டாடும் உலகப் புகழ்பெற்ற தேவாலயத்தில் ஒலி, ஒளி காட்சிகள் தினந்தோறும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். நேற்று மனைவியும் நானுமாகச் சென்று பார்த்தோம். சொல்ல வார்த்தைகள் போதாது. தொழில் நுட்பமும், கலையும் இணைந்து கண்களுக்கும் காதிற்கும் சுகத்தை அளித்தன.

நன்றி : You tube
———————————————————-

பிரான்சு: நிஜமும் நிழலும் -3

கைகுலுக்கல் – Se serrer la main

 

பிரெஞ்சு பண்பாட்டில் கைகுலுக்குவதென்பது முன்பின் தெரியாத ஒருவரை முதன் முறையாக சந்திக்கிறபோதும் விடைபெறுகிறபோதும் இடம்பெறும் குறிப்பாக வியாபாரம், அலுவலகம் அல்லது பொதுவிடங்களில் சந்திப்பு நிகழ்கிறபோது கைகுலுக்கிக்கொள்வதென்பது மரபு. முதன் முறையாக உருவாகும் இந்த அறிமுகம் வியாபாரம் அல்லது அலுவல் நிமித்தமாக எத்தனைமுறை சந்திக்க நேர்ந்தாலும் கைகுலுக்கலே தொடரும். அதாவது அவர்கள் சந்திப்பு அலுவல் எல்லையைக் கடந்த நெருங்கிய நட்பு அல்லது உறவு என்ற வட்டத்திற்குள் பிரவேசிக்காதவரை. பிரெஞ்சு வழக்கில் கைகுலுக்கல் நளினமானது, சில நொடிகளே நீடிப்பது. ஆங்கிலேயரைப்போல இறுகப்பிடித்து ஆளையே பிடித்து உலுக்குவதுபோல கைகுலுக்கும் பண்பாடு பிரெஞ்சுக்காரர்களிடமில்லை. கைகளிரண்டும் அழுக்காகவோ, ஈரமாகவோ இருந்தால். பிரெஞ்சுக்காரர்கள் தோளை காண்பிப்பார்கள். நீங்கள் தொட்டு சந்திப்பை தொடரலாம் அல்லது விடைபெறலாம். வேறு சிலர் ஏதேனுமொரு விரலை நீட்டுவார்கள். அதற்கும் மேற்குறிப்பிட்ட சடங்குதான்.

 

காதலும் முத்தமும் :

 

“இது யார்தும்மா குழந்தை? தங்கச்சியா- தம்பியா? உங்கம்மாவுக்கு உடம்பு கிடம்பு சரியில்லையா? நீ தூக்கிவந்திருக்க!”

 

“இல்ல சார் என்னோடதுதான். திடீர்னு கல்யாணம் கூடிடுச்சி. அவர் எங்க வீட்டாண்டதான் இருக்கார். அப்பப்ப பார்ப்பாரு, ஒரு நாள் திடீர்னு ‘லவ்’ வை சொன்னாரு. நான் ஆரம்பத்துலே, எனக்கு அதெல்லாம் பிடிக்காதுன்னுதான் சொன்னன். அவர் கேட்கலை.?
“அப்புறமென்ன நீயும் லவ்வ சொல்லிட்ட, ஓடிப்போய் கல்யாணம்பண்ணிகிட்ட சரிதானே? ”

 

‘ ‘லவ் மேரேஜ்’, ‘லவ் கம் அரேஞ்சுடு மேரேஜ்’ என்ற வார்த்தைகள் தமிழ் சமூகத்தில் அதிகம் காதில் விழுகின்றன. ஒரு பக்கம் காதலைக் கொண்டாடும் தமிழ் சினிமாக்கள், இன்னொரு புறம் காதலைத் தீவிரமாக எதிர்க்கும் சாதிக்கட்சிகள் – இவ்விரண்டையும் செய்திகளாக்கும் தினசரிகள். ஆக மொத்தத்தில் தமிழ்மண்ணில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிகம் மகசூலைத்தரும் பொருள் என்பதில் எவ்வளவு உண்மை இருக்கிறதோ அவ்வளவு உண்மை காதல் திருமணம் இந்தியர் மரபில் மிகக்குறைவான விழுக்காடுகளுக்குரியவை என்பதும். பீஸா சாப்பிடப் பழக்கிக்கொண்டதை ப் போல இந்த நிலமையும் மாறலாம். நாளை மகனையோ மகளையோ பார்த்து ‘இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி இருக்கப்போற சீக்கிரம் லவ் பண்ணி, கல்யாணம் பண்ணிக்கோ! என்கிற மேற்கத்தியர்களின் நிலமை எல்லா நாடுகளிலும் தவிர்க்க முடியாதது. பிரான்சு போன்ற நாடுகளில் பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை பெற்றோர்கள் சம்மதத்துடனே திருமணங்கள் நடந்திருக்கின்றன. இன்று மேற்கு நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்டவர்களிடை பெற்றோர்கள் ஏற்பாட்டில் திருமணங்கள் நடப்பதில்லை. ஓர் ஆணையோ அல்லது பெண்ணையோ விரும்புவது பெற்றோர்கள் சம்மதமின்றி நடக்கிறது என்பதால், திருமணச்செலவையும் அந்த ஜோடியே பார்த்துக்கொள்கிறது, பின்னர் அவர்கள் பிரிவும் பெற்றோர்களை எதிர்பார்க்காமலேயே நடைபெறுகிறது. ஓர் ஆணும் பெண்ணும் சேர்வதும் பிரிவதும் அவரவர் சொந்த விருப்பம், இரண்டிற்குமே உதவச் சட்டங்கள் இருக்கின்றன.

 

மனிதர்கள் கூடிவாழ்வது என்று தீமானித்தபிறகு, ஒரு கூட்டத்திற்கென பொதுவானதொரு வாழ் நெறியை அச்சமூகத்தைச் சேர்ந்த பெருவாரியான மக்களோ அல்லது அவர்களால் ஏற்றுகொள்ளப்பட்ட ஒரு சிலரோ அறிவுறுத்துகிறார்கள். தனது தேவைகளை தான்மட்டுமே நிறைவேற்றிக்கொள்வது இயலாது என்றிருக்கிறபோது, தானல்லாத பிறர் வகுக்கும் நியதிக்கும் அவன் கட்டுப்பட்டான். அதுபோலவே இவன் பிறரோடு சேர்ந்து ‘இதுதான் சரி’ என்றதை ஏற்ற மனிதர்களும் இருந்தார்கள். பெருவாரியான மக்களால் ஏற்கப்பட்ட ஒரு வழக்கம் ஆண்டு பலவாக கடைபிடிக்கப்பட்டு மரபு ஆனது. மானுடம் பெற்றுள்ள வளர்ச்சிக்கு ஒப்ப வாழ் நெறிகளை விவாதத்திற்குட்படுத்தி தேவையெனில் சில மாற்றங்களை கொண்டுவருவது அவசியம், எதுவும் ‘taboo’ அல்ல என்று நினைத்த மேற்கத்திய சமூகத்தில் ஒரு பிரிவினர் “இப்போக்கு எதில் போய் முடியுமோ?” என்ற கவலையில் மூழ்கி இன்று தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க வீதியில் இறங்குகின்றனர்.
ஒரு பிரெஞ்சுக் குடும்பம் இரண்டு பெண்கள்: ஒருத்தி நடுத்தர வயது, மற்றவள் உயர்கல்வி தொடர்பவள். ஒருத்திதாய், மற்றவள் மகள். தன்னுடன் பழகும் ஆண் நண்பன் தன்னிடம் காதலைத் தெரிவிக்கவில்லை என்ற வருத்தத்தைத் மகள், தாயிடம் தெரிவிக்கிறாள். தாயோ “அவசரப்படாதே அவன் உன்னிடம் பழகுவதைவைத்துப் பார்க்கிறபோது, விரும்புவதாகத்தான் தெரிகிறது, ஒரு வேளை எப்படிச் சொல்வது என தயங்குகிறானோ என்னவோ” என மகளுக்குச் சமாதானம் சொல்கிறாள். ஒரு வாரம் கழித்து மகள் இல்லாத சமயம் பார்த்து அவள் தாயிடம் இளைஞன் வருகிறான், தனது மனதிலுள்ள காதலைத் தெரிவிக்கிறான். பிரச்சினை என்னவெனில் அவன் காதல் வயப்பட்டது பெண்ணின் தாயிடமே அன்றி அவள் மகளிடம் அல்ல என்ற உண்மை. பெண்ணின் தாய்க்கு எதிர்பாராத இத்தகவல் அதிர்ச்சியை அளிக்தபோதிலும், தனக்கான நியாங்களின்படி அக்காதலை ஏற்பது சரி. இளைஞனுக்கு அவள் தரும் பதில் ஒரு பெரிய’Oui’ (Yes). அவள் பெண்ணேகூட தாய் எடுத்த முடிவினைக்கேட்டு அதிர்ச்சி அடைவதில்லை, பெண்கள் இருவரும் தாய்- மகள் என்ற உறவின் அடிப்டையில் இப்பிரச்சினையைப் பார்ப்பதில்லை, இரு பெண்களுக்கிடையேயான பிரச்சினையாக பார்க்கின்றனர். “எனது நலன் முக்கியம், மகளோ, மகனோ உறவினர்களோ, நண்பர்களோ, சமூகமோ வாழ்வில் குறுக்கிட, எனது நடத்தையை மதிப்பிட ஒன்றுமில்லை – என்ற இந்த பிரெஞ்சுக்காரர்களின் அல்லது மேற்கத்தியர்களின் போக்கு உலகமெங்கும் பரவி வருகிறது.

 

சுதந்திரத்திற்கு வானமே எல்லை என்கிற ‘Libertine’ கூட்டம் – Marquis de sade (1740 -1814) போன்றவர்கள் பிரெஞ்சு சமூகத்தில் இன்று அதிகம். அவர்கள் “மனம்போன போக்கில் வாழ்வேன், எனது தேவைகளும், உணர்ச்சிகளுமே எனக்கு முக்கியம்” என வாதிடுபவர்கள். விளைவாக ஓர் ஆணும் பெண்ணும் -அல்லது ஆணும் ஆணும் – அல்லது பெண்ணும் பெண்ணும் சேர்ந்துவாழ (திருமணம் என்பது தற்போதைக்கு விலக்கப்பட்ட சொல்) காதல் – (l’amour) ‘இறைவணக்கம் போல’ பிரெஞ்சுக் காரர்களுக்கு மிகவும் அத்தியாவசியமானது. அவர்களில் ஒருவருக்கு அல்லது இருவருக்குமே முதற்பார்வையிலேயே ஏற்பட்ட மயக்கம் – coup de foudre, காதலுக்குக் காரணமாக இருக்கலாம், ஆங்கிலத்தில் ‘love at first sight’ என்கிறோமே அதே பொருளில். வயது, குடும்பம், சமூகம் என எவ்விதத் தளைகளும் அவர்களுக்கில்லை, தயக்கமின்றி ஒருவர் மற்றவரிடம் “Je t’aime’ (I love you) என்பார்கள்.

 

முதல் மனைவியை விவாகரத்து செய்திருந்த பிரான்சு நாட்டின் அதிபர் பிரான்சுவா ஒலாந்து (François Hollande) அதிபர் தேர்தலில் ஜெயித்து மேடையில் தோன்றியபோது தமது காதலி பத்திரிகையாளர் பெண்மணிக்குப் பகிரங்கமாக பிரெஞ்சு முத்தம் தர தயங்கவே இல்லை. அப்பெண்மணியின் இடத்தில் இன்று ஒரு நடிகை. இவரிடம் ‘Je t’aime’ என அதிபர் தெரிவித்து ஒருவருடம் ஆகப்போகிறது. இவருக்கு முன்பிருந்த அதிபர் சர்க்கோசியும் தனது அப்போதையை மனைவிய விவாகரத்து செய்துவிட்டு, இத்தாலி நாட்டைச்சேர்ந்த பாடகி ஒருவரை பதவிக்காலத்தில் காதலித்து மணம் செதுகொண்டார். பெரும்பாலான பிரெஞ்சுகாரர்கள் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட கணவன், மனைவி என வாழ்கின்றவர்கள்தான். முறைப்படி மணவிலக்கு பெற்றபிறகே இது நடைபெறுகின்றன என்றாலும் தங்கள் பிள்ளைகள் நலனில் அக்காறைகொள்ளாத இந்த நவீன வாழ்க்கை ஏற்கனவே கூறியதுபோன்று சொந்த நலனை மட்டுமே கருத்தில் கொள்கிற வாழ்க்கை முறை.

 

Faire le Bise – முத்த பரிமாற்றம்:

 

முத்தம் என்றாலே காதல் சம்பந்தப்படப் பொருள் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் பிரெஞ்சு சந்திப்புகளில் கைகுலுக்கல்போல, முத்தங்கள் இரு மனிதர்களுக்கிடையேயான உறவின் வெளிப்பாடு. காதலன் காதலி, கணவன் மனைவி ஆகியோரன்றி நண்பர்கள் உறவினர்கள் அனைவரிடையேயும் முகமன் கூறவும் ஒருவர் மற்றவரிடம் தமக்குள்ள அன்பையும் நெருக்கத்தையும் வெளிப்படுத்திக்கொள்ளும் வகையிலும் முத்தமிட்டுக்கொள்வது வழக்கம். முத்தத்தை Bise அல்லது Bisu எனப்பொதுவாகச் சொல்வார்கள்.

 

காதலன் காதலி, கணவன் மனைவிக்கிடைய இடம்பெறும் முத்த பரிமாற்றம் உதடுகளை மையமாகக் கொண்டது. அதிலும் பிரெஞ்சு முத்தம் உலகம்புகழ்பெற்றது. இரண்டாம் உலகபோருக்குப்பின் அமெரிக்க வீர்கள் சொந்த நாடு திரும்பியபோது, காத்திருந்த காதலிக்கும், மனைவிக்கும் மணிகண்ணகில் தாங்கள் ஐரோப்பாவில் கற்றதென பிரெஞ்சு முத்தங்களை வழங்கியிருக்கிறார்கள்; இதன் விசேடம், உதடுகளோடு இருபாலரின் நாக்கும் ஒத்துழைக்கவேண்டும், பிரெஞ்சில் இம்முத்தத்தைச் அரங்கேற்றுவதற்கு Galocher என்று பெயர். Galocher என்பதற்கு Overshoe என்று பொருள். மழைக்காலத்தில் ஓவர் ஷூ போட்டு நடந்து பார்த்துவிட்டு காதலிக்கோ காதலர்க்கோ பிரெஞ்சு முத்தத்தைத் கொடுத்துப் பெயர்வைத்தது சரிதானா? எனத் தெரிவியுங்கள்.

 

இரண்டு நண்பர்கள் சந்திக்கிறபோது தன்னோடு இருக்கிற மூன்றாவது நபரை அறிமுகப்படுத்துகிறபோதும் கன்னத்தில் முத்தமிடலாம் குறிப்பாக அவர்கள் சிறுவர் சிறுமியராகவோ வயதில் மூத்தவராகவோ இருப்பின் முத்தமிட தயங்கவேண்டியதில்லை. முத்தமிடுவதா அல்லது கைகுலுக்கல்போதுமா என்பதை இரு நபர்களுக்கிடையேயான உறவு அல்லது நட்பின் அளவுகள், பாலினம் ஆகியவைப் பொதுவாக தீர்மானிக்கின்றன ( பல நேரங்களில் அவர்களின் முகங்கள்). சிநேகிதிகள் இருவர் அதாவது அவர்கள் ஒருவரையொருவர் நீ போட்டுக்கொள்ளும் அளவிற்கு நெருக்கமிருப்பின், சந்திக்கிறபோதும், புறப்படும்போதும் கன்னத்தில் முத்தமிட்டுக்கொள்ளலாம். எதிர் பாலினத்தைச்சேர்ந்த இருவர்கூட அவ்வாறு செய்யலாம். ஆனால் அவ்விருவரில் ஒருவரான பெண் அதை விரும்பாவிடில் ( அவர்கள் விலகி நின்று கை நீட்டுவார்கள் -கை குலுக்குவதற்காக) தவிர்ப்பது நாகரீகம். அவ்வாறே இருவர் சந்திக்கிறபோதும் பிரிந்து செல்கிறபோதும் முத்தமிடுவது தவிர்க்கபடுவதற்கு காரணங்களிருக்குமெனில் நிச்சயம் கைகுலுக்கவேண்டும்.

 

கன்னத்தில் முத்தமிடும் சம்பிரதாயத்தில் சில விதிமுறைகள் இருக்கின்றன.

 

1. இருவர் கன்னங்களும் மற்றவரின் கன்னத்தில் பாதி அளவைத் தாண்டக்கூடாது.

2. கன்னத்தில் உதடுகளை பதிக்காமல் முத்தமிடவேண்டும் கன்னத்தில் உதடுகள் பதிந்தால் அதற்கு வேறுபொருள்.

3. எண்ணிக்கை:

– கன்னத்தில் மாறிமாறி இரண்டு முறை முத்தமிட்டுக்கொள்வதென்பது (நட்பு, நெருங்கிய உறவுகள்) பொது வழக்காக இருக்கிறது.
சில நேரங்களில் சந்திப்பைத் தொடங்குகிறபோது மூன்று முத்தமென்றும் புறப்படும்போது இரண்டு முத்தமென்றுங்கூட சில பகுதிகளில் வழக்க முண்டாம்.

(தொடரும்)

மொழிவது சுகம் -ஆகஸ்டு 2 -2015

அ. இலக்கிய சொல்லாடல் -5 : ‘சுய சரித்திரம்'(Autobiographie)
தமிழில் முதல் சுய சரித்திரம் உ.வே.சா. அவர்களுடையது, மேற்கத்தியர்களோடு ஒப்பிடுகிறபோது காலத்தால் பிந்தங்கியது, தவிர சில அறிஞர் பெருமக்களின் வற்புறுத்தலால் நிகழ்ந்தது என்கிறார்கள். பிரெஞ்சு இலக்கிய உலகில் ஒரு சுய சரித்திரத்தை வெறுமனே, எழுதிய மனிதரின் சொந்த வரலாறாகப் பார்ப்பதில்லை, அவர்களுக்கு அது ஓர் இலக்கிய வகைமை.பிரெஞ்சுத் திறனாய்வு அகராதியில் 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தவிர்க்கமுடியாததொரு சொல்லாக உள்ளே நுழைந்துவிட்ட இலக்கிய வினை, ‘சுய சரித்திரம்’. Autobiographie என்ற பிரெஞ்சு சொல்லை நேரடியாக மொழிபெயர்ப்பின் அது எழுதிய நபரின் வாழ்க்கைச் சரித்திரம். ஆனால் உண்மையில் ஒருவகையான நினைவு கூரல். எழுதிய நபரின் கடந்தகால நினைவுகளை அசைபோடுதல். இக்காரியத்தில் குவிமையமாக இருப்பது: எழுதியவர் மூன்றாவது நபராக இருந்து பார்த்தக் கேட்ட சம்பவங்களல்ல; அவரே பங்காற்றிய நிகழ்வுகள். ‘இருத்தல்’ சம்பாதித்து, மறக்க இயலாமல், அவருடைய மனக்குளத்தில் தெப்பமாக மிதக்கிற சொந்த அனுபவங்கள். அவர் துணைமாந்தரல்ல, நாயகன்; சாட்சி என்று கூற முடியாது சம்பவத்தின் கர்த்தா. தெளிவாகச் சொல்லவேண்டுமென்றால் “கடந்தகால வாழ்க்கைக்கு முக்கியத்துவம் அளித்து தன்னுடைய இயற்கைப் பண்பை உரைநடையில் ஒருவர் பிறரிடம் பகிர்ந்து கொள்ளும் செயல்.

 
“என்னுடைய நாவலின் மையப்பாத்திரமே நான்தான் என்கிறார் ” “Les aventures burelesques de Monsieur d’Assoucy” எழுதிய Charles Coypeau d’Assoucy (1605 – 1677). வெகுகாலம் தொட்டே தங்கள் வாழ்க்கை அனுபவத்தை பதிவுசெய்வது இலக்கிய உலகில் நடந்துவருகிறது. ஆனால் அப்படி யொன்றை பதிவுசெய்கிறோம் என்பதை படைப்பாளிகள் உணர்ந்தது பதினேழாம் நூற்றாண்டு என பிரெஞ்சு இலக்கிய வரலாறு தெரிவிக்கிறது. சாட்சியங்கள் என்ற பெயரில் தங்கள் சுய சரித்திரத்தில் தன்னைத் தானே வியந்தோதிக்கொண்ட கதைகள் பிரெஞ்சு இலக்கியங்களிலும் தொடக்ககாலங்களில் நிறைய நடந்திருக்கின்றன. சுயசரித்திரம் எழுத மதமும் தூண்டுகோலாக அமைந்தது. குறிப்பாக கிருத்துவத்தில் சமயச் சடங்குகளில் ஒன்றாக இருக்கிற பாவ சங்கீர்த்தனம் சுய சரித்திரத்திரத்திற்குக் காரணமாக இருந்தது. பாவச் சங்கீர்த்தன சடங்கு அளித்த தைரியதில் தங்கள்ள் சமய குருக்களிடம் பகிர்ந்துகொண்ட சொந்த வாழ்க்கையில் இழைத்தத் தவறுகளை, அல்லது அப்படிக் கருதிய தவறுகளை, முன்பின் அறிந்திராத வெகு சனத்திடம் பகிர்ந்துகொள்வதன் மூலமாக தங்கள் நெஞ்சின் பாரத்தைக் குறைக்கமுடியுயுமென பலர் நம்பினார்கள். உதாரணத்திற்கு மோந்தேஞ்னுடைய ( Montaigne) ” Essais, ரூஸ்ஸோவுடைய (Rousseau) ‘Les confessions’ ஆகியவற்றைக் கூறலாம். அதன் பின்னர் ஷத்தோ•ப்ரியான்(Chateaubriand ) என்பவர் எழுதிய Mémoires d’outre-tombe, சுயவரலாற்றின் புதியதொரு பயன்பாட்டைத் தெரிவிப்பதாக இருந்தது. ஒரு புனைவிற்குறிய குணத்தை எழுத்தில் கொண்டுவந்ததோடு, ஒரு தனிமனிதன் சமூகத்திற்குக் கையளித்த விண்ணப்பமாகவும் அது இருந்தது. “மானுடத்தின் அந்தரங்க வரலாறு ஒவ்வொரு தனிமனிதனிடமும் இருக்கிறது” என்ற நம்பிக்கையுடன் எழுதப்பட்ட George Sandன் (1804-1876) ‘Histoire de ma vie”யும் அவ்வகையில் முக்கியமானதொன்று  Autobiographie என்ற வார்த்தையில் அதன் முன்னொட்டு சொல்ல்லின் வரையறுக்கப்பட்ட பொருள் , அடுத்து பின்னொட்டு சொல் அடிப்படையில் எழுத்தும் வாசிப்பும் எடுத்துக்கொள்கிற சுதந்திரம், இவ்விரண்டு கருத்தியங்களிலும் திறனாய்வாளர்கள் – இலக்கிய வரலாற்றாசிரியர்கள் ஆகிய இரு தரப்பினருக்கிடையிலும் முரண்கள் இருக்கின்றன. விளைவாக இன்றளவும் கோட்பாட்டளவில் குழப்பமான சொல்லாடலாகவே இருந்துவருகிறது. ஒரு சுய சரித்திரத்திற்கான வரவேற்பு என்பது ஒரு மனிதன் தனது சமூகத்தில் ஏற்கனவே சம்பாதித்திருந்த செல்வாக்கு மற்றும் இடம் சார்ந்தது. அதே வேளை அதன் வெற்றி என்பது சொல்லப்படும் செய்தியிலுள்ள நம்பகத் தன்மை, எடுத்துரைப்பிலுள்ள தனித்தன்மை மற்றும் அழகியலால் தீர்மானிக்கபடுபவை.

 

ஆ. பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம்

 

புதுச்சேரியைசேர்ந்த முனைவர் மு. இளங்கோவன் எழுதி இயக்கிய ஆவணப்படம். சுந்தரேசனாரின் அருமை பெருமைகளை அவரோடு நெருங்கிப்பழக வாய்ப்பமைந்த நண்பர்களும், அறிஞர் பெருமக்களும் பகிர்ந்துகொள்கிறார்கள். காவிரி ஆற்றோடு கலந்து பாய்கிற சிலப்பதிகார கானல்வரிகள் சுந்தரேசனாரின் கணீரென்ற குரலில் அந் நதி நீர்போலவே ஓசையிலும் சுவையிலும் உயர்ந்து நிற்கிறது.

“ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தமிழிசையை நுட்பமாக அடையாளம் கண்டவரென்றும் தமிழ் நாட்டில் மிகப்பெரும் இசை விழிப்புணர்வு ஊட்டி, தமிழர்களிடத்து இசையார்வம் தழைக்க உழைத்தவர். சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், தேவாரம், நாலாயிரத் திவ்விய பிரபந்தம், சிற்றிலக்கியங்களை அதற்குரிய இசையில் பண்முறையில் பாடிக்காட்டிய பெருமைக்குரியவர்” என்கிற குறிப்புகள் இந்த ஒளிவட்டில் இடம்பெற்றுள்ளன, அதற்குப் பொருந்துகிறவகையிலேயே ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது
ண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் (ஆவணப்படம்)

எழுத்து இயக்கம்: முனைவர் மு.இளங்கோவன்
வெளியீடு: வயல்வெளித் திரைக்களம்
தொடர்புகட்கு: http://www.muelangoven.com

 

இ. அதிபர் அப்துல் கலாமும் – மாத்தாஹரி நாவலும்

 

அவரது மரணத்தால் நாடே உறைந்துபோய்விட்டது. இந்திய அதிபர்களில் ஒருவருக்கு நானறிந்து நாடுதழுவிய அஞ்சலி என்பது இதுதான். அதற்கான தகுதிகள் அவருக்கு கூடுதலாகவே இருந்தன. அதிபராக அல்ல ஒரு மா மனிதராக அதிபர் நாற்காலியை அலங்கரித்திருந்தார். வெளிநாட்டுத் தலைவர்கள் சம்பிரதாயமாக அல்லாது, அண்மைக்காலங்களில் ஒர் அசாதாரண ஆசாமி என்ற நினைப்போடு கைகுலுக்கிய இந்தியத் தலைவர் இவராகத்தான இருக்கவேண்டும். தமிழர்களுக்கென்றமைந்த தனித்த குணத்தின்படி ஆராவரத்துடன் துக்கத்தை அனுசரித்தார்கள். அவர் இரண்டாம் முதறை அதிபரானால் எனது பெருமை என்ன ஆவது நினைத்த தமிழினத் தலைவர்களெல்லாங்கூட தராசில் நிறுத்தி அஞ்சலி செலுத்தினார்கள். தமிழக முதல்வர் கலாம் பெயரால் பரிசு என்று அறிவித்து எல்லோரினும் பார்க்க எனது அஞ்சலி எடைகூடியதென்று தெரிவித்து எதிரிகளை வாயடைக்கசெய்துவிட்டார். மறைந்த கலாமே இத்தைகைய கூத்துகளுக்குச் சம்மதிக்கக்கூடியவரா? என யோசிக்க வேண்டியிருக்கிறது.  ஐரோப்பிய யூனியனின் பொன்விழா (50 ஆண்டுகள்) நிகழ்வில் திரு கலாம் கலந்துகொண்டார். ஐரோப்பிய பாராளுமன்றம் இருப்பது நான் இருக்கிற Strasbourg நமரில். அழைக்கப்ட்ட இந்தியர்களில் நானும் ஒருவன். நாள் ஏப்ரல் 25, 2007. அவர் ஆற்றிய உரையை மறக்க முடியாது. ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள், எங்களைபோல அழைக்கப்பட்டிருந்த நண்பர்களுக்கு முன்னால் கனியன் பூங்குன்றனாரைபற்றி இரண்டொரு வரிகள், புறநானூற்றிலிருந்து “யாதும் ஊரே; யாவரும் கேளீர்” எனத் தமிழில் கூறி ” I am a world citizen, every citizen is my own kith and kin” என ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துவிட்டு உரையைத் தொடர்ந் த போது, நாங்கள் சிலிர்த்ததும், பரவசத்தில் கண்கள் சுரந்ததும் மறக்க முடியாத அனுபவம்.  அச்சம்பவத்தை ‘மாதாஹரி ‘நாவலில் அத்தியாயம் 24ல் பயன்படுத்திக்கொண்டேன், கதையில்வரும் இளம்பெண் (ஹரிணி) இந்திய அதிபர் அப்துல் கலாம் பாராளுமன்ற உரையை நேரில் கேட்பதுபோன்று அமைத்து அவர் உரையின் சில பகுதிகளை நாவலில் கலாம் பேச்சாக பதிவு செய்தேன். ஏதோ என்னால் முடிந்தது.
———————————————————-