அ. இந்தியப் பயணம்
தில்லி, ரிஷிகேஷ், ஹரித்துவார், ஜெய்ப்பூர்
ஜனவரி 11 லிருந்து பிப்ரவரி 14 வரை இந்தியாவில் கழிந்தது. ஜனவரி 14 லிருந்து 20 வரை புது தில்லி சென்றிருந்தோம். இம்முறை எனது மனவியுடன் சென்றிருந்தேன். நண்பர் வெ. சுப. நாயகர் அவர் துணைவியாருடன் வந்திருந்தார். ஒரு வாரம் மிக நன்றாகக் கழிந்தது. முதல் நாள் தில்லி. இரண்டாம் நாள் ரிஷிகேஷ், ஹரித்துவார் பார்த்துவிட்டுத் திரும்பினோம் மூன்றாம் நாள் ஒய்வு, உள்ளூரில் பார்க்கவேண்டியவற்றைச் சென்று பார்த்தோம். தில்லி குளிர்பற்றி எங்களுக்குப் பெரிதாய் சொல்ல ஒன்று மில்லை அடுத்த இரண்டு நாட்கள் ஜெய்ப்பூர், ஆக்ரா, பதேபூர் சிக்ரி, மதுரா எனக் கழிந்தன. மறுநாள் (20 ஜனவரி) பிற்பகல் சென்னை திரும்பினோம். நாயக்கர் அன்றே புதுச்சேரி சென்றுவிட்டார். நான் உறவினருடைய காரில் பிற்பகல் புத்தகக் கண்காட்சிக்குச்சென்றேன். என் வாழ்நாளில் அப்படியொரு கூட்டத்தைச் சந்தித்ததில்லை. எழுத்தாளர் நண்பர்களில் சிலரைச் சந்திக்க முடிந்தது. அடுத்த ஒரு வாரம் புதுச்சேரியை விட்டு எங்கும் போகவில்லை. வீட்டிற்குப் பெயிண்ட் அடிக்க ஏற்பாடு செய்திருந்தோம். இப்போதெல்லாம் இந்தியாவில் இதற்கெல்லாம் கணிசமாக செலவு செய்யவேண்டுமென புரிந்துகொண்டேன். எஞ்சியப்பொழுது கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி நூல் வெளியீட்டுவிழா சம்பந்தமாக கழிந்தது. நண்பர் எஸ். ராமகிருஷ்ணனும், தமிழவனும் தங்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கிடையில் எனது அழைப்பினை ஏற்று புத்தக வெளியீட்டுவிழாவில் கலந்துகொண்டது மன நிறைவாக இருந்தது. விழா சிறப்பாக அமைய அண்ணாமலை பாஸ்கரின் வேண்டுகோளை ஏற்று நண்பர் பெருமாளும் அவர் துணைவியாரும் உதவினார்கள். அவர்கள் தவிர திரு நந்திவர்மன், நாயக்கர், சீனு தமிழ்மணி ஆகியோரும் விழா சிறக்க காரணமாக இருந்தார்கள். சென்னையிலிருந்து உடல் நலன் பாதித்திருந்த நிலையிலும் கலந்துகொண்ட பெரியவர் கி.அ. சச்சிதானந்தத்தின் வருகையை மறுப்பதற்கில்லை. தோழி மதுமிதா அவர் சகோதரி, நண்பர் ஷங்கர நாராயணன், அகநாழிகை வாசுதேவன் நண்பர் சந்தியா நடராஜன் எனப்பலர் கலந்து கொள்ள விழா எதிர்பார்த்தைக் காட்டிலும் நன்றாக இருந்தது. இடையில் ஒரு நாள் மட்டுமே சென்னைக்குச் செல்ல முடிந்தது. மனைவியைக் ஓல்டு மகாபலிபுரம் சாலையிலிருக்கும் உறவினர் வீட்டில் விட்டுவிட்டு நாயக்கரும் நானும் எஸ். ராமகிருஷ்ணன் வீட்டிற்குச் சென்றிருந்தோம். வெகு நேரம் உரையாடினோம். நண்பர் எஸ். ஆர். சில யோசனைகளைத் தெரிவித்தார். அவைகளை பிரான்சிலிருக்கும் நண்பர்களிடம் கலந்துபேசி நடைமுறைப்படுத்தும் எண்ணமிருக்கிறது. பிரான்சில் எனக்கு வேண்டிய நண்பர்கள் அனைவருமே பாரீஸில் இருக்கிறார்கள். நண்பர்களை நேரில் சந்தித்தே அதுபற்றி பேசமுடியும். புதுவையில் 7ம் தேதி உறவினர் வீட்டுத் திருமணமொன்றில் வெகுகாலத்திற்குப் பிறகு உறவினர்கள் சிலரைச் சந்திக்க முடிந்தது.
எட்டாம் தேதி காலை நண்பர் நாயக்கர் தமது கல்லூரியில்:
“Insiders’ and outsiders’ perspective of France” என்ற தலைபைக்கொடுத்து பேசக்கேட்டிருந்தனர். பிரெஞ்சு மற்றும் ஆங்கிலம் படிக்கும் முதுகலை மாணவர்கள் வந்திருந்தனர். பேராசிரிய நண்பர்கள் ராஜா, தனியல் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. உயர்கல்வி மாணவர்களிடையே சொற்பொழிவு செய்வது இது மூன்றாவது முறை. புதுச்சேரி பல்கலை கழகத்தில் தமிழ்த்துறையில் மொழிபெயர்ப்பு அனுபவம் குறித்து 2011ல் பேசினேன், நண்பர் நந்திவர்மன் ஏற்பாடு செய்திருந்தார். 2012ல் தில்லி ஜவஹர்லால்நேரு பல்கலைகழகத்தில் மொழிபெயர்ப்புபற்றிய கலந்துரையாடலை பேராசிரியர்கள் நாச்சிமுத்துவும், சந்திரசேகரனும் ஏற்பாடு செய்திருந்தார்கள். நண்பர் நாயக்கரும் நானும் கலந்துகொண்டோம்.
மதுரை
எட்டாம் தேதி இரவு மதுரை சென்றோம். இந்தியாவில் நீண்டதூரம் பயணமெனில் பேருந்தை தவிர்ப்பது நலம். ரதிமீனா என்றொரு சொகுசு பேருந்து, சொகுசு பெயரில் மட்டுமே. படுக்கைக்கும் சேர்த்து பணம் கொடுத்திருந்தோம். உறங்கவே முடியவில்லை. சம்பந்தி இரவில் காரோட்டத் தயங்குவதால் ஆட்டோ வைத்துக்கொண்டு சென்றோம். ஆட்டோவிற்கு இரு மடங்கு கட்டணம் கொடுத்து செல்லவேண்டியிருந்தது. மதுரையிலும் கொசு நிறைய இருக்கிறது. மதியம் புதுச்சேரியிலிருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு மதுரை வந்திருந்த நண்பர் நந்திவர்மன் கல்வெட்டு பேராசிரியர் ஒருவருடன் வந்திருந்தார். வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அதுபோலவே புதுவையில் நடந்த புத்தக வெளியீட்டுவிழாவில் கலந்து கொள்ளாத நண்பர் ந. முருகேசபாண்டியன் இளங்கவிஞர் ஒருவருடன் மறுநாள் வந்திருந்தார். இரண்டு மணிநேரத்திற்கு மேல் நீண்ட எங்கள் உரையாடல் பிரான்சு, மொழிபெயர்ப்புகள், அயலகத் தமிழர்; கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி எனக் கழிந்தது. நேரம் போதவில்லை என்ற வருத்தத்துடனேயே பிரிந்தோம். மறுநாள் புதுச்சேரிக்கு பேருந்துகள் பிடித்து வந்தது மிகவும் கொடூரமான அனுபவம். இனி மதுரை செல்வதெனில் இரயிலோ, வாடகைக் காரோ எடுத்துசெல்வதென தீர்மானிக்க வேண்டியதாயிற்று. சகோதரர் மகனுக்கு திடீரென்று திருமண ஏற்பாடுகள் செய்து நாங்கள் பிரான்சுக்கு புறப்பட இருக்கிறோம் என்பதால் 13ந்தேதி நிச்சயத்தாம்பூலம். திருமணம் ஏப்ரல் 15ந்தேதி வைத்திருக்கிறார்கள். காலச்சுவடு 12, 13, 14 தேதிகளில் கன்னியாகுமரியில் நண்பர்களுக்கிடையில் கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்கிறது. நண்பர் கண்ணனிடம் வருவதாகச்சொல்லியிருக்கிறேன்.
பிப்ரவரி 14 சென்னையில் விமானமெடுத்து துபாய் வழியாக 15ந்தேதி பாரீஸ் வந்து இறங்கினோம். இரண்டு நாட்கள் பாரீஸில் மகன் வீட்டில் கழிந்தன. 16ந்தேதி ஸ்ட் ராஸ்பூர் வந்து சேர்ந்தேன். கடந்த ஒருவாரமாக பிரான்சில் கடுங்குளிர், பனியும் அதிகம். ஒவ்வொரு நாளும் -5, -10 என்று பாகைமானிபயமுறுத்த வெளியிற் செல்ல யோசிக்கிறேன்.
—————————————————
ஆ. பிரான்சில் என்ன நடக்கிறது?
Belle et bête (Beauty and the beast)
பிரான்சு வந்து ஒருவாரம் ஆகப்போகிறது. கடந்த ஒருவாரமாக சென்னைப் பத்திரிகையாளர்களின் மொழியிற்சொல்வதெனில்
மிகவும் பரபரப்பாக பேசப்படும் விவகாரம் ஒரு நூல். நூலின் தலைப்பு Belle et bête.
பிரெஞ்சு எழுத்தாளர் கிளேஸியோ ‘உலகில் உண்மையென்று எதுவுமில்லையெனவும், அனைத்துமே கற்பனை அல்லது புனைவு என்பார். எனக்கும் அதில் உடன்பாடுண்டு. இயற்கை, உயிர்கள், இயக்கம், வெளி, இருத்தல், சூன்யம், புள்ளிகள், கோடுகள் ஓடும் நீர், தேங்கிய குட்டை, வெப்பம், குளிர் இப்படி கண்ணுக்குத் தோற்றம் தரும் அனைத்துமே பொய் அல்லது மாயை என முடிவுக்கு வருவதொன்றே அநேகக் கேள்விகளுக்கு எளிதான பதிலான அமையும். மார்க்ஸ் போன்றே பொருளின் மதிப்பு பௌதிக வடிவத்தைச் சார்ந்ததல்ல என நம்மை தேற்றிக்கொள்ளமுடிந்தால் நிம்மதியாக உறங்கி எழலாம். சக எழுத்தாளரிடம் தயக்கமின்றி கை குலுக்கலாம், உட்கார்ந்து பேசலாம், சொல்லிக்கொண்டு புறப்படலாம்.
மர்செலா லாகுப்(Marcela lacub) என்ற பெண்மணி முகவரியைத் தொலைத்த ஓர் அரசியல்வாதியுடனான ஆறுமாத அந்தரங்க அனுபவத்தை, ” Belle et bête” நம்முடன பகிர்ந்துகொள்கிறார். இப்பெண்மணி யாரோ எவரோ அல்ல, பிரான்சுநாட்டின் தேசிய ஆய்வு நிறுவனத்தின் இயக்குனர், சட்ட நிபுணர், நேரம் வாய்த்தால் எழுதவும் செய்வார். நூலின் தலைப்பின்படி ‘Belle’ இப்பெண்மணியென்றால், ‘bête” யாரென்ற கேள்வி எழத்தான் செய்யும்.
அம்மணி தேடிப்போன ஆணிடம் முகமன் கூறினார், கை குலுக்கினார். நேரமிருந்தால் இருவரும் நாளை இரவு சேர்ந்து டின்னர் சாப்பிடலாமா என்றார். டின்னர் முடித்ததும் அரைபார்வையில் போதை தளும்ப, எனது கட்டில் இருவரைத் தாங்கக்கூடியதென்றார். அந்த ஆண் அல்லது ‘bête’ வேறு யாருமல்ல பிரெஞ்சு ஜனாதிபதி யென்றவெண்ணெய் திரண்டு வந்தபோது நியூயார் ஓட்டலொன்றில் தாழியை உடைத்தவர். நாவடக்கம் கொண்ட ஆசாமிக்கு புலனடக்கம் பலகாத தூரம். சீதையைத் தொடாமற் இராவணன் கெட்டதாக கீழைதேச பண்பாடு எழுதுகிறது. இவர் பெண்களைத் தொட்டே கெட்டு குட்டிசுவரானவர்.
———————————-