Monthly Archives: பிப்ரவரி 2013

மொழிவது சுகம் பிப்ரவரி 25 2013

அ. இந்தியப் பயணம்

தில்லி, ரிஷிகேஷ், ஹரித்துவார், ஜெய்ப்பூர்

ஜனவரி 11 லிருந்து பிப்ரவரி 14 வரை இந்தியாவில் கழிந்தது. ஜனவரி 14 லிருந்து 20 வரை புது தில்லி சென்றிருந்தோம். இம்முறை எனது மனவியுடன் சென்றிருந்தேன். நண்பர் வெ. சுப. நாயகர் அவர் துணைவியாருடன் வந்திருந்தார். ஒரு வாரம் மிக நன்றாகக் கழிந்தது. முதல் நாள் தில்லி. இரண்டாம் நாள் ரிஷிகேஷ், ஹரித்துவார் பார்த்துவிட்டுத் திரும்பினோம் மூன்றாம் நாள் ஒய்வு,  உள்ளூரில் பார்க்கவேண்டியவற்றைச் சென்று பார்த்தோம். தில்லி குளிர்பற்றி எங்களுக்குப் பெரிதாய் சொல்ல ஒன்று மில்லை அடுத்த இரண்டு நாட்கள் ஜெய்ப்பூர், ஆக்ரா, பதேபூர் சிக்ரி, மதுரா  எனக் கழிந்தன. மறுநாள் (20 ஜனவரி) பிற்பகல் சென்னை திரும்பினோம். நாயக்கர் அன்றே புதுச்சேரி சென்றுவிட்டார். நான்  உறவினருடைய காரில் பிற்பகல் புத்தகக் கண்காட்சிக்குச்சென்றேன். என் வாழ்நாளில் அப்படியொரு கூட்டத்தைச் சந்தித்ததில்லை. எழுத்தாளர் நண்பர்களில் சிலரைச் சந்திக்க முடிந்தது. அடுத்த ஒரு வாரம் புதுச்சேரியை விட்டு எங்கும் போகவில்லை. வீட்டிற்குப் பெயிண்ட் அடிக்க  ஏற்பாடு செய்திருந்தோம். இப்போதெல்லாம் இந்தியாவில் இதற்கெல்லாம் கணிசமாக செலவு செய்யவேண்டுமென புரிந்துகொண்டேன். எஞ்சியப்பொழுது கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி நூல் வெளியீட்டுவிழா சம்பந்தமாக கழிந்தது. நண்பர் எஸ். ராமகிருஷ்ணனும், தமிழவனும் தங்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கிடையில் எனது அழைப்பினை ஏற்று புத்தக வெளியீட்டுவிழாவில் கலந்துகொண்டது மன நிறைவாக இருந்தது. விழா சிறப்பாக அமைய அண்ணாமலை பாஸ்கரின் வேண்டுகோளை ஏற்று நண்பர் பெருமாளும் அவர் துணைவியாரும் உதவினார்கள். அவர்கள் தவிர திரு நந்திவர்மன், நாயக்கர், சீனு தமிழ்மணி ஆகியோரும் விழா சிறக்க காரணமாக இருந்தார்கள். சென்னையிலிருந்து உடல் நலன் பாதித்திருந்த நிலையிலும் கலந்துகொண்ட பெரியவர் கி.அ. சச்சிதானந்தத்தின் வருகையை மறுப்பதற்கில்லை. தோழி மதுமிதா அவர் சகோதரி, நண்பர் ஷங்கர நாராயணன், அகநாழிகை வாசுதேவன் நண்பர் சந்தியா நடராஜன் எனப்பலர் கலந்து கொள்ள விழா எதிர்பார்த்தைக் காட்டிலும் நன்றாக இருந்தது. இடையில் ஒரு நாள் மட்டுமே சென்னைக்குச் செல்ல முடிந்தது. மனைவியைக் ஓல்டு மகாபலிபுரம் சாலையிலிருக்கும் உறவினர் வீட்டில் விட்டுவிட்டு நாயக்கரும் நானும்  எஸ். ராமகிருஷ்ணன் வீட்டிற்குச் சென்றிருந்தோம். வெகு நேரம் உரையாடினோம். நண்பர் எஸ். ஆர். சில யோசனைகளைத் தெரிவித்தார். அவைகளை பிரான்சிலிருக்கும் நண்பர்களிடம் கலந்துபேசி நடைமுறைப்படுத்தும் எண்ணமிருக்கிறது. பிரான்சில் எனக்கு வேண்டிய நண்பர்கள் அனைவருமே பாரீஸில் இருக்கிறார்கள். நண்பர்களை நேரில் சந்தித்தே அதுபற்றி பேசமுடியும். புதுவையில் 7ம் தேதி உறவினர் வீட்டுத் திருமணமொன்றில் வெகுகாலத்திற்குப் பிறகு உறவினர்கள் சிலரைச் சந்திக்க முடிந்தது.

எட்டாம் தேதி காலை நண்பர் நாயக்கர் தமது கல்லூரியில்:

“Insiders’ and outsiders’ perspective of France” என்ற தலைபைக்கொடுத்து பேசக்கேட்டிருந்தனர். பிரெஞ்சு மற்றும் ஆங்கிலம் படிக்கும் முதுகலை மாணவர்கள் வந்திருந்தனர். பேராசிரிய நண்பர்கள் ராஜா, தனியல் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. உயர்கல்வி மாணவர்களிடையே சொற்பொழிவு செய்வது இது மூன்றாவது முறை. புதுச்சேரி பல்கலை கழகத்தில் தமிழ்த்துறையில்  மொழிபெயர்ப்பு அனுபவம் குறித்து 2011ல் பேசினேன், நண்பர் நந்திவர்மன் ஏற்பாடு செய்திருந்தார். 2012ல் தில்லி ஜவஹர்லால்நேரு பல்கலைகழகத்தில் மொழிபெயர்ப்புபற்றிய கலந்துரையாடலை பேராசிரியர்கள் நாச்சிமுத்துவும், சந்திரசேகரனும் ஏற்பாடு செய்திருந்தார்கள். நண்பர் நாயக்கரும் நானும் கலந்துகொண்டோம்.

மதுரை

எட்டாம் தேதி இரவு மதுரை சென்றோம். இந்தியாவில் நீண்டதூரம் பயணமெனில் பேருந்தை தவிர்ப்பது நலம். ரதிமீனா என்றொரு சொகுசு பேருந்து, சொகுசு பெயரில் மட்டுமே. படுக்கைக்கும் சேர்த்து பணம் கொடுத்திருந்தோம். உறங்கவே முடியவில்லை. சம்பந்தி இரவில் காரோட்டத் தயங்குவதால் ஆட்டோ வைத்துக்கொண்டு சென்றோம். ஆட்டோவிற்கு இரு மடங்கு கட்டணம் கொடுத்து செல்லவேண்டியிருந்தது. மதுரையிலும் கொசு நிறைய இருக்கிறது. மதியம் புதுச்சேரியிலிருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு மதுரை வந்திருந்த நண்பர் நந்திவர்மன் கல்வெட்டு பேராசிரியர் ஒருவருடன் வந்திருந்தார். வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அதுபோலவே புதுவையில் நடந்த புத்தக வெளியீட்டுவிழாவில் கலந்து கொள்ளாத நண்பர் ந. முருகேசபாண்டியன் இளங்கவிஞர் ஒருவருடன் மறுநாள் வந்திருந்தார். இரண்டு மணிநேரத்திற்கு மேல் நீண்ட எங்கள் உரையாடல் பிரான்சு, மொழிபெயர்ப்புகள், அயலகத் தமிழர்; கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி எனக் கழிந்தது.  நேரம் போதவில்லை என்ற வருத்தத்துடனேயே பிரிந்தோம். மறுநாள் புதுச்சேரிக்கு பேருந்துகள் பிடித்து வந்தது மிகவும் கொடூரமான அனுபவம். இனி மதுரை செல்வதெனில் இரயிலோ, வாடகைக் காரோ எடுத்துசெல்வதென தீர்மானிக்க வேண்டியதாயிற்று. சகோதரர் மகனுக்கு திடீரென்று திருமண ஏற்பாடுகள் செய்து நாங்கள் பிரான்சுக்கு புறப்பட இருக்கிறோம் என்பதால்  13ந்தேதி நிச்சயத்தாம்பூலம். திருமணம் ஏப்ரல் 15ந்தேதி வைத்திருக்கிறார்கள். காலச்சுவடு 12, 13, 14 தேதிகளில் கன்னியாகுமரியில் நண்பர்களுக்கிடையில் கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்கிறது. நண்பர் கண்ணனிடம் வருவதாகச்சொல்லியிருக்கிறேன்.

பிப்ரவரி 14 சென்னையில் விமானமெடுத்து துபாய் வழியாக 15ந்தேதி பாரீஸ் வந்து இறங்கினோம். இரண்டு நாட்கள் பாரீஸில் மகன் வீட்டில் கழிந்தன. 16ந்தேதி ஸ்ட் ராஸ்பூர் வந்து சேர்ந்தேன். கடந்த ஒருவாரமாக பிரான்சில் கடுங்குளிர், பனியும் அதிகம். ஒவ்வொரு நாளும் -5, -10 என்று பாகைமானிபயமுறுத்த வெளியிற் செல்ல யோசிக்கிறேன்.

—————————————————

ஆ. பிரான்சில் என்ன நடக்கிறது?

Belle et bête (Beauty and the beast)
பிரான்சு வந்து ஒருவாரம் ஆகப்போகிறது. கடந்த ஒருவாரமாக சென்னைப் பத்திரிகையாளர்களின் மொழியிற்சொல்வதெனில்
மிகவும் பரபரப்பாக பேசப்படும் விவகாரம் ஒரு நூல். நூலின் தலைப்பு Belle et bête.

பிரெஞ்சு எழுத்தாளர் கிளேஸியோ  ‘உலகில் உண்மையென்று எதுவுமில்லையெனவும், அனைத்துமே கற்பனை அல்லது புனைவு என்பார். எனக்கும் அதில் உடன்பாடுண்டு. இயற்கை, உயிர்கள், இயக்கம், வெளி, இருத்தல், சூன்யம், புள்ளிகள், கோடுகள் ஓடும் நீர், தேங்கிய குட்டை, வெப்பம், குளிர்  இப்படி கண்ணுக்குத் தோற்றம் தரும் அனைத்துமே பொய் அல்லது மாயை என முடிவுக்கு வருவதொன்றே அநேகக் கேள்விகளுக்கு எளிதான பதிலான அமையும். மார்க்ஸ் போன்றே பொருளின் மதிப்பு பௌதிக வடிவத்தைச் சார்ந்ததல்ல என நம்மை தேற்றிக்கொள்ளமுடிந்தால் நிம்மதியாக உறங்கி எழலாம். சக எழுத்தாளரிடம் தயக்கமின்றி கை குலுக்கலாம், உட்கார்ந்து பேசலாம், சொல்லிக்கொண்டு புறப்படலாம்.

மர்செலா லாகுப்(Marcela lacub) என்ற பெண்மணி முகவரியைத் தொலைத்த ஓர் அரசியல்வாதியுடனான ஆறுமாத அந்தரங்க அனுபவத்தை, ” Belle et bête” நம்முடன பகிர்ந்துகொள்கிறார். இப்பெண்மணி யாரோ எவரோ அல்ல, பிரான்சுநாட்டின் தேசிய ஆய்வு நிறுவனத்தின் இயக்குனர், சட்ட நிபுணர், நேரம் வாய்த்தால் எழுதவும் செய்வார்.  நூலின் தலைப்பின்படி ‘Belle’ இப்பெண்மணியென்றால்,  ‘bête” யாரென்ற கேள்வி எழத்தான் செய்யும்.

அம்மணி தேடிப்போன ஆணிடம் முகமன் கூறினார், கை குலுக்கினார். நேரமிருந்தால் இருவரும் நாளை இரவு சேர்ந்து டின்னர் சாப்பிடலாமா என்றார். டின்னர் முடித்ததும் அரைபார்வையில் போதை தளும்ப, எனது கட்டில் இருவரைத் தாங்கக்கூடியதென்றார். அந்த ஆண் அல்லது ‘bête’ வேறு யாருமல்ல பிரெஞ்சு ஜனாதிபதி யென்றவெண்ணெய் திரண்டு வந்தபோது நியூயார் ஓட்டலொன்றில் தாழியை உடைத்தவர். நாவடக்கம் கொண்ட ஆசாமிக்கு புலனடக்கம் பலகாத தூரம். சீதையைத் தொடாமற் இராவணன் கெட்டதாக கீழைதேச பண்பாடு எழுதுகிறது. இவர் பெண்களைத் தொட்டே கெட்டு குட்டிசுவரானவர்.

———————————-

திரு. வே.சபாநாயகத்திடமிருந்து ஒரு கடிதம் மற்றும் எனது பதில்

பேரன்பு கொண்ட நண்பர் நா.கி அவர்களுக்கு,
    வணக்கம் உங்களது அஞ்சல் கண்டு உங்களது வலைத்தளத்தைப் பார்த்தேன்.
புதிய நாவல் ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ வெளியீட்டு விழா நிகழ்ச்சிப்
படங்களைப் பார்த்தேன். நாவலின் ஒரு சோற்றுப் பதமாக தந்திருந்தையும்
ரசித்தேன். தலைப்பே உள்ளே நுழைந்து பார்க்க ஆவலைத் தூண்டுகிறது.
கிடைக்கும்போது முழு விருந்தையும் சுவைக்க வேண்டும். என் விமர்சனம்
உங்களுக்குத் தூண்டுதலாக இருந்ததை இருமுறை குறிப்பிட்டுள்ளீர்கள். மகிழ்ச்சி
தருகிறது. அதன் மூலமாக உங்களது நட்பு கிடைத்ததைப் பேறாகக் கருதுகிறேன்.
முதுமையின் உடல் நலிவால் வெளியூர் செல்ல இயலாமையால் உங்கள விழா
சாக்கில் உங்களையும், மற்ற இலக்கிய நண்ர்களையும் சந்திக்க முடியாது போனது
வருத்தம் தருகிது.  மேலும் சிறந்த படைப்புகளை உருவாக்கவும் இப்புதிய நாவல்
தகுந்த அங்ககீகாரமும் பரிசுகளும் பெறவும் வாழ்த்துகிறேன்.
(பி.கு: எனது இனிஷியல் ‘வே’ – ‘வெ’ அன்று.) 
மிக்க அன்புடன்,
சபா.
———————————————————————–
அன்பிற்கும் வணக்கத்திற்குமுரிய திரு வே.சபாநாயகம் அவர்களுக்கு!
உங்கள் கடிதம் மிகுந்த சந்தோஷத்தை அளித்தது. முதன்முதலில் எனது எழுத்தை எவ்வித முன்முடிவுகளின்றி வாசித்து பாராட்டியவர்கள் நீங்கள். அதை என்னால் மறக்கமுடியாது. இன்றைய தமிழ்ச்சூழலில் பெரும்பாலான புத்தக மதிப்புரைகள் வேண்டியவர்கள் கேட்டுக்கொண்டபடி  எழுதுகிறார்கள். எனக்கு அப்படி எழுதப்பட்டவை அல்ல என்பதால் மகிழ்ச்சி.  இந்தியா வரும்போதெல்லாம் ஒவ்வொரு முறையும் உங்களை பார்க்க வேண்டுமென நினைப்பேன். அங்கே வருகிறபோது இலக்கிய துறைசார்ந்த செயல்பாடுகளில் கவனம் வரமாட்டேன்கிறது. உறவுகள், உள்ளூரிலுள்ள வீடு, பராமரிப்பு, குடியிருப்போர் பிரச்சினைகளென கவனம் சிதைந்துவிடுகிறது.
உங்கள் ஆசிப்படி இந்நாவலும் நெருங்கிய நண்பர்களால் பாராட்டப்பட்டிருக்கிறது. கிருஷ்ணப்ப நாயக்கர் நாவல் குறித்து இன்னொரு முகம் தெரியாத நண்பர் வானளாவ புகழ்ந்திருந்தார். கொஞ்சம் அதிகபட்சமாக உணர்ந்ததால் அதைத் தவிர்த்துவிட்டு குறைகளையும் சுட்டிக்காட்டியிருந்த அஜெய் என்ற  நண்பரின் மடலை வெளியிட்டிருந்தேன்.
உங்கள் பெயர் முதல் எழுத்தை திருத்திவிடுகிறேன்.
பணிவுடன்
நா.கிருஷ்ணா

கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி -நூல் வெளியீட்டு விழா

கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி -நூல் வெளியீட்டு விழா – 26-01-2013

OLYMPUS DIGITAL CAMERAமுதல் நாவல் நீலக்கடல் 2005ல் வெளிவந்தது. தமிழ்ப் படைப்புலகிற்குப் புதியவன் என்ற வகையில், வெளியீட்டுவிழா அவசியமென நண்பர்கள் கூற  எனதன்பிற்கும் மரியாதைக்குரிய பிரபஞ்சன் தலைமையில் நடந்தேறியது. பெரிய படைப்பென்று சொல்லமாட்டேன். ஆனாலும் நடுநிலையான விமர்சகர்களின் கவனத்தைப்பெற்றது. திருவாளர்கள் ரெ.கார்த்திகேசு, வே. சபாநாயகம், ந.முருகேசபாண்டியன், தேவமைந்தன் ஆகியோர் எனக்கு உற்சாகத்தை ஊட்டும் வகையில் எழுதியிருந்தார்கள். நீலக்கடல் நாவலை  பாராட்டி எழுதுவதற்கு முன்பு, இவர்களிடம் எனக்குத் தொடர்பில்லை. அவர்கள் பாராட்டுதலை உறுதிப்டுத்தும் வகையில் தமிழ்நாடு அரசின் பரிசும் அந்நாவலுக்குக் கிடைத்தது.   மூன்றாண்டுகள் கழித்து இரண்டாவது நாவல்- மாத்தாஹரி வெளிவந்தது. நண்பர் எஸ். ராமகிருஷ்ணன் 2008ல் வெளிவந்திருந்த கதை, கட்டுரை, கவிதைகளில் தமது தேர்வென பத்து படைப்புகளைக் குறிப்பிட்டிருந்தார், அவற்றுள் மாத்தாஹரி ஒன்று. தொடர்ந்து அந்நாவலையும் திருவாளர்கள் ரெ. கார்த்திகேசு, வெ.சபாநாயகம், கி.அ. சச்சிதானந்தம் ஆகியோர் பாராட்டி எழுதினார்கள். தமிழவன் சிங்கப்பூரில் நடந்த மாநாடொன்றில் வாசித்த கட்டுரையில் மாத்தாஹரி நாவலை வெகுவாக பாராட்டியிருந்தார். நாவலுக்கு கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை பரிசு கிடைத்தது.

‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ எனது மூன்றாவது நாவல். என்னைக்காட்டிலும் எனதெழுத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் நண்பர் எஸ். ராமகிருஷ்ணன், தமிழவன், ந.முருகேசபாண்டியன், கி.அ.சச்சிதானந்தன், மதுமிதா ஆகியோரை நூல் வெளியீட்டு விழாவிற்கு அழைத்திருந்தேன். அன்பிற்குரிய திரு.பிரபஞ்சன் அவர்களுக்கு சாரல்விருதுக்கான பாராட்டுவிழாவில் நண்பர் ந.முருகேச பாண்டியன் கலந்துகொண்டதால் அவரால் வர இயலவில்லை. பின்னர் அக்குறை மதுரையில் எங்கள் சந்திப்பால் நீங்கியது. அழைப்பிதழில் போட்டிருந்த விருந்தினர்களின்றி  ஆன்றோர்கள் முன்னிலையில் (திருவாளர்கள் லெனின் தங்கப்பா, தேவமைந்தன், முருகேசன், ரமேஷ் பிரேதன், பக்தவச்சலபாரதி, மு. இளங்கோவன், விஜெயவேணுகோபால், இளம்பாரதி, பாலகிருட்டிணன், சந்தியா நடராசன், சங்கர நாராயணன், உதய கண்ணன், அகநாழிகை வாசுதேவன் அவரது நண்பர்கள்… தமிழ் சான்றோர்கள், பிரெஞ்சு பேராசிரியர்களென கலந்துகொள்ள நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடந்தது. நண்பர் பாவண்ணன் கலந்துகொள்ளவேண்டுமென எதிர்பார்த்தேன். அவருக்கும் சாத்தியமில்லாமல் போய்விட்டது.

நிகழ்ச்சியை முன்னின்று நடத்திய பேராசிரியர்  நாயகர், கவிஞர் சீனு. தமிழ்மணி, கவிஞர் பூங்குழலி பெருமாள் அவர் தம் துணைவர் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். இன்னும் பல எழுத்தாள நண்பர்கள் விடுபட்டிருக்கலாம் மன்னிப்பார்களாக. நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாவிடினும் உள்ளன்போடு வாழ்த்திய உள்ளங்கள் இருக்கின்றன:  பிரான்சு சிவன்கோவிலைச்சேர்ந்த நண்பர் முத்துக்குமரன், என்மீது அளவற்ற அன்புகொண்டிருக்கும் பிரான்சு திருவள்ளுவர் கலைக்கூடம் அண்ணாமலை பாஸ்கர், நண்பர் இந்திரன் ஆகியோரை மறந்துவிடமுடியாது. அனைவருக்கும் எனது நன்றிகள்.

‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’க்கு வரவேற்பு எப்படி?

அஜய் என்ற முகம் தெரியாத நண்பர் எழுதியிருக்கிறார்:

வணக்கம் ஸார்,
 
உங்க கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி நாவல் படிச்சேன். just wanted to share my feelings with you.
களன்,   கதை சொல்லல் முறை (back and forth between the present and past) ,  பாத்திர வார்ப்பு எல்லாம் மிக நேர்த்தி. நடுவில் வந்த நிகழ்காலத்தில் நடக்கும் மர்ம இழையை விட வரலாற்று இழையே நாவலின் முக்கிய பகுதியாக எனக்கு தோன்றுகிறது. சில விஷயங்கள் பூடமாகவே இருப்பது, சில நிகழ்வுகள் முன்னும் பின்னுமாக வருவது,  வாசகனை உழைக்கக் கோருகிறது, an interesting exercise for us too. ஒரு 15-20 ஆண்டு கால snapshots, ஆட்சியாளர்களின் machinations, சூழ்நிலைக்கு ஏற்றவாறு நிலைபாடுகள் மாறுவது, சைவ, வைணவ பூசல், இதையெல்லாம் விட காலத்தின், வரலாற்றின் போக்கில் மனிதர்கள் (அவர்கள் யாராக, எந்த உயர்ந்த/எளிய நிலையில் இருந்தாலும்) சிதறி அடிக்கப்படுவது  நன்றாக பதிவாகி உள்ளது. Shows us how insignificant we are in the overall scheme of things. தீட்சிதரின் பெருமைகள் அனைத்தும் ஒரு நாளின் தவிடு பொடியாகின்றன,ஜகன்னாத்தன்/சித்ராங்கி/செண்பகம்  வாழ்கை முற்றிலும் மாற கால வெள்ளத்தில் அனைவரும் அடித்து செல்லப்படுகிறார்கள். சென்பகத்தையும், சித்ராங்கியையும் எளிதில் மறக்க முடியாது, குறிப்பாக செண்பகம், a multi layered personality. ஒரு புறம் தன்னிச்சையாக செயல்படுபவளாக தோன்றினாலும், இன்னொரு புறம் தங்கக் கூண்டில் இருக்கும் பார்வை போல் இருக்கிறாள் (குழந்தையை பிரிவதூ என்பது சுலபமா என்ன?)
 
நாவலின் blurb படித்து முழு வரலாறு சார்ந்தது என்று நினைத்ததால் நாவல் நிகழ்காலத்தில் நடக்கும் இழை (ஹரிணி சார்ந்து நடக்கும் மர்மமான விஷயங்கள்) எனக்கு சற்று ஏமாற்றம்  அளித்திருக்கலாம்.  அதுவும் சுவாரஸ்யமாகவே இருந்தது. இருந்தும் அவசர அவசரமாக முடிக்கப்பட்டது போல் தோன்றியது. குறிப்பாக பத்திர பதிவு இடம், எரிக் நோவா  பற்றிய உண்மை என இறுதியில் தெரிய வருவது.  நாவல் குறிப்பிட்ட பக்க அளவில் இருக்க வேண்டுமென்பதால் இப்படி இருந்திருக்கலாமோ.
 
நாவலை இன்னும் நீட்டித்து நிகழ் காலத்தையும், வரலாற்றையும் இணைப்பதை இன்னும் காத்திரமாக செய்திருக்கலாம். அல்லது முழு வரலாற்று புனைவாக எழுதி இருக்கலாம். I feel that length has played spoilsport here, would have been even more simulating if it had been extended to another 100 or more pages, (would have loved read more about padre and how they viewed us). One of the rare instances where we want the novel to still continue. Still a very engrossing and erudite read sir. Apologies if I have offended you with my comments.
 
Regards
Ajay
 


http://wordsbeyondborders.blogspot.com

நண்பரின் கூற்றுப்படி நன்றாக வந்திருக்கிறதென நினைக்கிறேன். எனது வளர்ச்சிக்குப் பலர் காரணமாக இருந்திருக்கிறார்கள். அவ்வை நடராசன், சு. சமுத்திரம், சுஜாதா, இரா.முருகன்- இராயர் காப்பி கிளப், திண்ணை, பதிவுகள் போன்ற இணைய இதழ்கள் எனக் குறிப்பிடலாம். முக்கியமாக நால்வரை நான் எவ்வளவு வணங்கினாலும் தகும்: மனமாச்சர்யங்களின்றி ‘நீலக்கடல்’ நாவல்மூலம் என்னை அடையாளம் கண்டு எழுதிப் பாராட்டிய திரு. ரெ.கார்த்திகேசு, திரு.வே.சபாநாயகம், திரு.ந.முருகேசபாண்டியன், தேவமைந்தன் ஆகியோரே அந்த நால்வர். குடத்திலிட்ட இவ்விளக்கை குன்றின்மீது நிறுத்த விழைந்தவர்கள் அவர்கள். மீண்டும் வனங்குகிறேன்.

———————————–

விழாப்படங்கள்

OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA