Monthly Archives: ஜூலை 2022

நாடா கொன்றோ, காடா கொன்றோ

 

 “ ஆரோவில் நகரைச்சேர்ந்த ஆறு குடியிருப்புவாசிகள் மீதான காவல்துறையின் வழக்குப் பதிவு துரதிஷ்டமானது: ஆரோவில் நகர நிர்வாகம் கருத்து

அண்மையில் (22 May 2022) ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டில் வெளிவந்த இச்செய்தி இணைப்பை நண்பர் பேராசிரியர் க. பஞ்சாங்கம் எனக்கு அனுப்பிவைத்தார். செய்தி புதுச்சேரி ஆரோவில் நகரம் பற்றியது, நண்பர் இச்செய்தியை எனக்கு அனுப்பியதற்கான காரணத்தை இக்கட்டுரையை வாசிக்கின்ற நண்பர்களில் ஒரு சிலர் (எனது படைப்புகளை அறிந்தவர்களாக இருப்பின்) ஊகித்திருக்கக் கூடும், மற்றவர்களுக்கு ‘ஏன்’ என்ற கேள்வி எழலாம். 2019 இறுதியில் வெளிவந்த என்னுடைய நாவல் ‘இறந்த காலம்’ ஆரோவில் நகரையும் அதன் இன்றைய பிரச்ச்னைகளையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு நாவல்.

« ஆரோவில் » நகரை, அதன் பிறப்பை, விடியல்நகரம் என்ற பொருள் கொண்ட இச்சிறுநகரத்தை, யாதும் ஊரே யாவரும் கேளீர் என்கிற வரிக்குச் சாட்சியமாகலாம் என்கிற நம்பிக்கையைத் தமிழறிந்த மக்களுக்கு ஊட்டிய மனிதர்களின் கானகத்தை,  ஆன்மீக மார்க்ஸியக் கனவை நனவாக்க இந்திய மண்ணில், தமிழ் நாட்டில் புதுச்சேரிக்குக் கூப்பிடு தூரத்தில் அமைந்த மேற்கத்திய சாயல் கொண்ட கீழைதேசத்து சர்வதேச நகரின்  தற்போதைய ‘தான்’(self) அடையாளத்தை  அறிந்தவர்களுக்கு அல்லது ‘இறந்தகாலம்’ நாவலை வாசித்தவர்களுக்கு ஆங்கில தினசரியில் அண்மையில் வெளிவந்த இச்செய்தி வியப்பினை அளிக்க வாய்ப்பில்லை.

     நாவலை வாசிக்காத நண்பர்களுக்குச் சுருக்கமாகச் சில செய்திகள். ஆரோவில் நகரம் அறுபதுகளின் இறுதியில் உருவானதொரு சர்வதேச நகரம். புதுச்சேரியை அறிந்தவர்கள் அரவிந்தர், அன்னை, அரவிந்தர் ஆஸ்ரமம் போன்ற பெயர்களைக் கேட்டிருக்கக் கூடும். பிரிட்டிஷ் இந்தியா காலத்தில், ஆங்கிலேயருக்கு அவர்கள் ஆட்சிக்கு – எதிரானவர்கள் எனக் குற்றம் சாட்டப்பட்ட இந்தியர்கள், தண்டனையிலிருந்து தப்பிக்க, பிரெஞ்சுக்காரர்கள் வசமிருந்த புதுச்சேரிக்கு அடைக்கலம் தேடி வந்தனர். வந்தவர்களில், வங்காளத்தைச் சேர்ந்த அரவிந்தரும் ஒருவர். புதுசேரியில் அவர் ஆன்மீகவாதியாக மாறி ஓர் ஆஸ்ரமத்தையும் நிறுவினார். அவருடைய பெண்சீடராகவும், பின்னர் ஆன்மீகத் தோழியராகவும்  மாறியவர்தான் பிரெஞ்சுப் பெண்மணியான மீரா அல்ஃபஸா, என்கிற « அன்னை ». இவருடைய ஆசியுடன் உருவானதுதான் ஆரோவில் நகரம். அடிக்கல் நாட்டியபோது அதன் இலட்சியங்கள் உன்னதமானவை :

« ஆரோவில் ஒரு சர்வதேச நகரமாகத் திகழவேண்டுமென  விரும்புகிறது, இங்கு உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் ஆண்களும் பெண்களும் அமைதியாகவும், முற்போக்கான நல்லிணக்கத்துடனும், எல்லாவற்றிற்கும் மேலாக மதம், அரசியல், மற்றும் நாடு என்கிற அடையாளத்தைக் கடந்து  வாழமுடியும். ஆரோவில்லின் நோக்கம் மனித ஒற்றுமையை நிலைநாட்டுவது. »

ஆக ஆரோவில்லை நிர்மாணித்தவர்களின் நோக்கத்தைக் குறைசொல்லமுடியாது. பிரச்ச்னை ஆரோவில்லையும் ஆஸ்ரமத்தையும் தொடர்ந்து நிர்வகித்தவர்களிடையே உருவான அரசியல் மற்றும் ஆதிக்கப்போட்டிகள். சில ஆரோவிலியன்களின் அத்துமீறல்கள். விளைவாகப் பிரச்சனைகள் வீதிக்கு வந்தன. பல குற்றசாட்டுகள், வழக்குகள் என ஒரு சராசரி நகரமாக மாறியதன் விளைவாக இன்று இந்திய அரசாங்கத்தின் நேரடிக் கண்காணிப்பில், கனவு நகரம்.  அடிக்கல் நாட்டப்பட்டு ஐம்பது ஆண்டுகள் ஆகின்றன. நகரை நிர்மாணித்தவர்களின் கனவு நிறைவேறியதா, சத்தியம் செய்ததுபோல சமய பேதமின்றி நிறபேதமின்றி உலகின் பல முனைகளிலிருந்தும் வருகின்ற மக்கள் ஆரோவில் குடிமகனாக வாய்ப்புண்டா ? நகரை விரிவாக்க அபகரிக்கபட்ட நிலங்களுக்கு உரிய நட்ட ஈடு ஏழைத் தமிழக விவசாயிகளுக்கு வழங்கபட்டதா ? என எழும் கேள்விகளுக்குத் தெளிவான பதில்களில்லை .  

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்.

என்கிறார் வள்ளுவர். அதாவது “எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை ».என குறளுக்கு மு.வ.விளக்கம் தருகிறார்.

கானக விலங்குகளை எடுத்துக்கொள்வோம். வள்ளுவன் கூறுவதுபோல அனைத்தும்  பிறப்பில் ஒத்தவைதான். எனினும் இயல்பில் சில கோரைப் புற்களையும் இலைதழைகளையும் மேய்ந்து பசியாற, வேறு சில பசிக்குத் தங்களுக்குத் தீங்கிழைக்காதவற்றை கொன்று பசியாறவேண்டிய இயற்கைத் தன்மையுடன் படைக்கப்பட்டுள்ளன. இயற்கையின் இந்த அநீதியிலிருந்து தம்பிக்க முதல்வகை விலங்குகள் குற்றமிழைத்தவரைத் தண்டிக்கப் பலமின்றி, ஓடி ஒளியவேண்டிய நெருக்கடி. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என நமக்கு வள்ளுவர் ஆறுதல் கூறினாலும், ஓர் உயிரின் இயல்பும், இயற்கை குணமும் அதன் பெற்றோர் உயிர் அணுக்களையும் சார்ந்தது என்கிறது அறிவியல். ஆனால் அதிலிருந்து மெள்ள மெள்ள விடுபட மனிதனால் முடியும். காரணம் மனித விலங்கு ஆறறிவு கொண்ட இனம். மனிதரினத்திற்கும் இயற்கை குணங்கள் உண்டென்கிற போதும் பல அடையாளங்களை முன்னிறுத்தி தமது சுயத்தை சமூகத்தில் பதிவுசெய்தாலும்,  அனைவரும் எதிர்பார்ப்பது அமைதியும் சுபிட்சமும் கூடிய வாழ்க்கை. ஆனால் அது அத்தனை எளிதானதல்ல என்பதை வரலாறுகள் உறுதிசெய்கின்றன. யுத்தங்களை வேடிக்கைபார்த்ததுபோதும் என ஒரு கட்டத்தில் தீர்மானித்து அமைதிகாண முயற்சிப்பதில்லையா ?  எழுத்தும் ஒரு சமுகத்தின் மக்களிடையே இணக்கமான சூழ்நிலையை உருவாக்க, குறைகளை களைய தமது கதைமாந்தர்கள் ஊடாகப் பேச்சுவார்த்தை நடத்துகிறது.

      கொடிய விலங்கிடமிருந்து, காட்டில் சாதுவான மிருகங்கள் உயிரைக் காத்துக்கொள்ள ஓடி ஒளிகின்றன. விலங்குகளின் புறதோற்றம் கொண்டு, அவை கொடியவையா அல்லவா எனத் தீர்மானிக்கமுடியும். மனிதரின் புறத்தோற்றம் என்பது என்ன ? அது ஒருவரைப் பார்த்து யார் எனக்கேள்வி கேட்பதில் தொடங்குகிறது ? அவரது அடையாளத் தேடலின் ஆரம்பம் அது. 

      ஒரு பெண்ணும் அவள் வீட்டுப் பசுவும் கருவுறுகிறார்கள் என்பதை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். ஒரு பசுவின் பேறுகாலம் ஒன்பது மாதங்கள் எனச்சொல்லப்படுகிறது. பெண்ணிற்குப் பேறுகாலம் பத்து மாதங்கள். இருவருக்கும் பிரசவ வலியும் சம்பவ நிகழ்வும் வள்ளுவர் குறள்படி அதிகவேற்றுமைகள் இல்லை. ஆனாலும் பிறந்த குழந்தையை அடையாளப் படுத்த தாய் மட்டும் போதாதென்று அவனது கணவனையும்( உண்மையில் தாய் மட்டுமே குழந்தையின் தந்தையை அறிவாள் என்கிறபோதும்) முன்னிறுத்தவேண்டிய சமூகத் தேவை மனிதருக்கு உள்ளது. கன்றுக்குத் தன் தந்தையை  தாயுடன் உறவுகொண்ட காளையை அடையாளப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தங்கள் இல்லை.

ஓர் உயிரை மனிதன், பறவை, பூச்சி, விலங்கு என பகுத்து அடையாளம் காண ஆரம்பித்து மெள்ள மெள்ள ஆண் பெண், கொடிய சாதுவான, காடு வீடென அடையாளம் பெற்று குறிப்பாக மனித உயிர் பின்னர் ஆப்ரிக்கன், ஆசியன், ஐரோப்பியன் என இன அடையாளமும்;  இந்தியன், பிரான்சு நாட்டவன், ஸ்பெயின் நாட்டவன் என்கிற  தேச அடையாளமும், இன்னும் நுணுக்கமாக அதற்குள் நுழைந்து தமிழன், மலையாளி, தெலுங்கன் வங்காளி என பல குறியீடுகள் மனிதர்களின் அடையாளச் சங்கிலியில் கண்ணிகளாகளாக இருக்கின்றன. இவை அனைத்துமே செய்தொழில் அளித்த அடையாளங்களில்லை, பிறப்புதரும் உயிரியல் அடையாளங்கள், புற அடையாளங்கள். இவை நமது உடன் பிறந்த அடையாளங்கள்.  

மனிதருக்கு இன்னொரு அடையாளம் அது அவனுடைய அக அடையாளாம். விலங்குகளித்திலிருந்து அவனை வேறுபடுத்திக் காட்டும் அடையாளம் : அறிவும், அதன்விளைவாக சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்கும் திறனும்.

விலங்குகள் பிறர் கட்டளைக்கு கீழ்ப் படிய மட்டுமே தெரிந்தவை, அவை இன்று என்னால் உழமுடியாது என கிளர்ச்சியோ, ஒட்டுமொத்த உழவுமாடுகளையும் சேர்த்துக்கொண்டு, நிலம் எங்களுக்குச் சொந்தம், இனி மனிதர்கள் நிலத்தை உழவேண்டுமென புரட்சியிலோ இறங்குவதில்லை.  மனிதன் சிந்திக்கிறான், சிந்தித்து அதனபடி நடக்கிறான். முட்டாளாக இருந்தால் கூட யோசித்து ஒரு முடிவச்சொல்கிறான். அம்முடிவுப்படி செயல்படுகிறான். அடிமையாக இருப்பதும், ஆள்பவனாக இருப்பதும் மனிதன் கற்றவை கேட்டவை மட்டுமின்றி, அவன் அனுபவத்தினாலும் எடுக்கிற முடிவு.  அடிமையாக இருந்தது போதும் என கிளர்ச்சியில் இறங்குவதும், ஒட்டுமொத்த மாற்றம் வேண்டி புரட்சியில் இறங்குவதும் அவன் அறிவு தரும் வழிகாட்டலில். நடக்கின்றன. இது அம்மனிதனைச் சார்ந்த சமூகம், ஊர் அனைத்திற்கும் பொருந்தும்.

மனிதர்களின் அகஅடையாளம் நூறுவிழுக்காடு தீமையை மட்டுமே கொண்டோ அல்லது நன்மையைமட்டுமே கொண்டோ உருவாவது அல்ல அவரவர்க்கு கிடைக்கும் வாய்ப்பும் வசதியும், அமையும் சமூகச் சூழலும் பெற்ற கல்வியும், அனுபவமும் அதனைத் தீர்மானிக்கின்றது. நகரீக சமூகம் வன விலங்குகளுக்கான நீதிமுறையிலிருந்து விலக்களித்து மெலியாரை வலியாரிடமிருந்து காப்பாற்ற சட்டத்தையும் சாட்சிகளைக்கொண்டு இழைத்த குற்றங்களுக்குக் குற்றவாளி பொறுப்பென்கிறது. காரணம் குற்றம் இழைக்கிறவன் மனிதன், விலங்கு அல்ல. அவன் விரும்பினால், முனைந்தால் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமைகளைத் தவிர்க்கமுடியும், விலங்குகளிடமிருந்து அவனை வேறாக அடையாளப்படுத்துகிற அவனுடைய அறிவுக்கும் உணர்ச்சிக்குமான போராட்டத்தில் யார் வெல்கிறார்கள் எனபதை பொறுத்தது அது.

இயற்கை, இயல்பு என்பது ஒழுங்கின்மை பண்பைக்கொண்டது. காட்டில் செடிகொடியும்பிறவும்  அதன் இயல்பில் வளரலாம், பிறவற்றை நிராகரித்து தம் நலம் பேணலாம். மாறாக ஒரு நகருக்கு அழகூட்ட பொது பூங்காவிற்கு கொண்டுவரப்படும் செடியும், கொடியும் மரமும் சில ஒழுங்குகளுக்கு, நியதிகளுக்கு உடபடவேண்டும் அதுதான் பூங்காவிற்கு அழகைத் தரும். ஆரோவில் நகருக்கு மட்டுமல்ல, எல்லா சமூகத்திற்கும் இதுபொருந்தும்.

 நாடா கொன்றோ ; காடா கொன்றோ;

அவலா கொன்றோ ; மிசையா கொன்றோ;

எவ்வழி நல்லவர் ஆடவர்,

அவ்வழி நல்லை ; வாழிய நிலனே

                                – ஔவை

_______________________________________

இறந்த காலம் (நாவல்)

ஆசிரியர்: நாகரத்தினம் கிருஷ்ணா

சந்தியா பதிப்பகம், சென்னை

புதுச்சேரியின் அடையாளங்கள் – வரலாறு காட்டும் தொன்மையும் தொடர்ச்சியும்- முனைவர் அ.இராமதாசு

                                                                                  – நாகரத்தினம் கிருஷ்ணா

        வரலாறு என்பது காலத்தின் வடுக்கள். தேசத்தின், ஓர் இனத்தின், ஓர் ஊரின் பெருமை சிறுமைகளை, உற்ற பெருமித த்தை, அடைந்த அவமானத்தை ச் சொல்வது. அக் குறிப்பிட்ட நிலம் சார்ந்த மக்களின் இறந்த காலத்தைப் பேசும் பண்பாட்டு ஆவணம். வரலாறுகள் உண்மை என நம்பப்படுவதால், ஆதாரங்களை அடித்தளமாக கொண்டு கட்டப் படவேண்டும்.  

              நூலாசிரியர் முனைவர்  அ. இராமதாசு சராசரி பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கி, துணை முதல்வர், மாவட்ட ஆசிரியர் கல்விப் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர், தொடக்க கல்வித் துணை இயக்குனர், கல்வி இயக்கத்தின் மாநிலத் திட்ட இயக்குனர், இணை இயக்குனரென தம்மைக் கல்வி உலைக்களத்தில் உருமாற்றப்பெற்ற கல்விமான், முனைவர். நிறைகுடம். ஏதோ பணி செய்தோம், சம்பாதித்தோம் என்றில்லாமல்  ஓய்வு பெற்றபின்பும்  ஆய்வுகளில் கவனம் செலுத்தி புதுச்சேரி நகரின் வரலாற்றுத் தடத்தில்  பயனித்து கண்டறிந்த தடயங்களை, படித்தறிந்த ஆவணங்களை – ஆய்ந்து தெளிந்த உண்மைகளை நமது கவனத்திற்கு கொண்டுவந்திருக்கிறார். அவற்றின் தொகுப்பே ‘புதுச்சேரியின் அடையாளங்கள்’ என்கிற இத் தொல்லியல் நூல்.

பதினான்கு அத்தியாயங்கள்.  புதுச்சேரியை அறிந்த மனிதர்களுக்கு முனைவர் அ. இராமதாசு நம் கண்முன் நிறுத்தும், கற்றூண்களும், கலங்கரை விளக்கமும், வாராவதியும் பிறவும் புதியதல்ல ஆனால் அவற்றின் பிறப்பும், தொடக்கமும் அதனையொட்டிய பல செய்திகளும் நம்மில் பலர்  அதிகம் அறிந்திராதவை.

உதாரணமாக , புதுச்சேரி கடற்கரையில் காந்தி சிலைக்கு அழகூட்டுகிற கற்றூண்கள் எங்கிருந்து வந்தன, எப்போது வந்தன, அவற்றின் உயரம்  என்ன வேலைப்பாடுகள் என்ன – என ஆழமாக உரிய ஆவணங்களின் துணைகொண்டு விவரித்துக் கொண்டு போகிற முனைவர் « உருவாக்கபட்டு நான்னூறு ஆண்டுகளைக் கடந்துள்ள போதிலும் பெரிய அளவில் சிதைந்து விடாமல் இன்றும் பெருமையோடு காட்சியளிக்கும் கருங்கல் தூண்களை இப்போது நம்மால் உருவாக்க இயலாதுஎன்பதை உணர்ந்து மேலும் பலதலைமுறைகளைகண்டு களிக்கும் வகையில் அதிகப்பொறுப்போடு அவற்றை நாம் பாதுகாக்க வேண்டும் » ( பக்கம் 8  ) என்று ஓர் அக்கறைகொண்ட புதுச்சேரிவாசி என்கிற வகையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு விண்ணப்பமும் வைக்கிறார். இதற்கிடையில் கற்தூண்களைக் குறித்து ஒரு பெரும் வரலாறே நம் கண்முன்னே  நதிபோல சுழன்றோடுகிறது.

ஒரு தேசத்தை, அதன் கருவறையாக நின்று மனித உயிர்களை சுமக்கிற சிற்றூர் பேரூரின்  சுவடுப் பனைகளில் ஏறி இறங்கும் ஆர்வம் எல்லோருக்கும் வராதென்பது தெரிந்த துதான்,  நம் வாழ்நாளில் அதனை கடக்கின்றபோதேனும், கருத்தரித்த வயிற்றின் அருமை பெருமைகளை அறிய முயல்வோமா என்றால், இல்லையென்றே சொல்லவேண்டியிருக்கிறது. பாமர ர்களை விடுங்கள் படித்த மனிதர்களுக்கே கூட  இங்குள்ள மதுச்சாலைகளின் முகவரி தெரிந்த அளவிற்கு புதுச்சேரியின் தொன்ம வரலாற்றின் சாட்சியங்களையோ அவற்றின் முகவரியையோ அறிந்திருப்பார்களா என்பது சந்தேகமே. இன்று காலை பாரதியார் பூங்காவில் நடந்தேன், சிலை அரசியலிலும் தமிழர்கள் தேர்ந்தவர் என்பதை மறுப்பதற்கில்லை, ஆனால் பாரதியார் சிலையின் காலடியில் ஒரு  குப்பைப் பையொன்று காக்கை அலகொன்றின் கவனத்தைப் பெற்றிருந்தது.  பாரதி இதொரு பிரச்சனையே அல்ல என்பதுபோல நின்றிருந்தான். பாரதிக்கே இந்த கதியெனில், கற்றூண்கள்  பராமரிப்பை, புதுச்சேரி நிர்வாக எந்திரத்திடம் எப்படி எதிர்பார்க்கமுடியும்.  

தொன்மங்களைத் தேடித் தேடி ஆவணபடுத்தும் நூலாசிரியர் : புதுச்சேரி அங்காடிகள், அவற்றுக்கு மகுடமாக அமைந்த மணிகூண்டுகள், கலங்கரை விளக்கம், தாவரவியல் பூங்காக்கள் முதலியவற்றினைக் குறித்தும் விரிவான செய்திகளை, பல தொல்லியல் கல்விமான்களின் நூற்குறிப்புகள் துணைகொண்டு விரிவாகப் பதிவுசெய்துள்ளார். புதுச்சேரி காலனிய ஆட்சியிலிருந்த போக்குவரத்து வாகனங்கள், பஞ்சாலைகளின் தோற்றமும் முடிவும், அவை இயங்கிய விதம்,அவைசார்ந்த அரசியல், தொழிலாளர் பிரச்சனைகள், காலனிய அரசு அவற்றை அணுகிய விதம், தொடர்ந்து கட்சிபேதமின்றி  புதுச்சேரி ஆட்சியாளர்கள் தொழிலாளர் நலனில் காட்டிய அக்கறை, விளைவாக  மூடப்பட்ட பஞ்சாலைகள் என வரலாற்றை வலியுடன் எழுதுகிறார்.

நூலிலுள்ள எந்தவொரு அத்தியாயத்தையும் குறைத்து மதிப்பிட முடியாது, ஒவ்வொன்றிலும் செறிவானத் தகவல்கள், குறிப்பாகக் கீழ்க்கண்டவை :

அ. ஆறுகளும் ஏரிகளும்

புதுச்சேரியில் 1889 ஆம் ஆண்டில் விவசாயத்திற்காக் பெரிய ஏரிகள் உள்ளிட்ட 59 ஏரிகளும், 9 பெரிய வாய்க்கால்களும், 5  தடுப்பணைகளும், 202 நீரூற்றுகளும், 12 பெரிய கேணிகளும்  53 நீர்த்தேக்கங்களும் இருந்தன என்கிற உண்மையை 1889ம் ஆண்டில் லூயிஸ் ஹாரிக் எழுதியுள்ள குறிப்புடன் தொடங்கும் ஆசிரியர் புதுச்சேரியில் பாய்ந்த, பாய்கிற ஆறுகளை : செஞ்சி ஆறு, திருக்காஞ்சி ஆறு, அரியாங்குப்பம் ஆறு, சுண்ணாம்பு ஆறு, பம்பை ஆறு, குடுவை ஆறு, மலட்டாறு, பெண்ணையாறு எனப்பட்டியலிட்டு அவற்றைபற்றிய விரிவானதகவல்களுடன் எழுதியுள்ளா.  இவற்றில் பல தகவல்கள் அரியவை, புதியவை. இவை மட்டுமல்ல, நீர் சார்ந்த, நீர்ப்பாசனம் சார்ந்த ஒட்டுமொத்த தகவகளின் கலைக் களஞ்சியம் எனவும் இந்நூலை நாம் கருத்லாம்.  

ஆ. துய்ப்ப்ளெக்சு மாளிகை, கோட்டையும் அரணும்,

காலனிய நிர்வாகத்தின் போது பிரெஞ்சு நிர்வாகிகள் வாழ்ந்த மாளிகையும், அதனுடன் இணைந்த கோட்டையையும் பின்னர் அவற்றுக்கு நேர்ந்த கேட்டையும்  என்னைப் போலவே உங்களில் சிலர் வாசித்திருக்க க் கூடும், இங்கும் ஆசிரியர் சோர்வின்றி பல அரியத் தகவல்களைத் திரட்டித் தந்துள்ளார். உதாரணமாக புதுச்சேரியினல் முதன் முதலாக கட்டப்பட்ட பர்லோன் கோட்டையைப் பற்றிப் பேசுகிறபோது :

« 1688ல் கட்டப்பட்ட அக்கோட்டைக் கடலிலிருந்து 400 அடிதூரத்தில் அமைந்திருந்த து. பிரெஞ்சுக் காரர்களுக்கு முன்பு புதுச்சேரியில் தங்கி வர்த்தகம் செய்துவந்த டேனிஷ்கார ர்கள் கட்டியிருந்த கட்ட டத்திற்கு 50 அடி வடக்கில் அக்கோட்டை ஏற்படுத்தப்பட்டது. சதுரமா அல்லது நீள் சதுரமா என்று கூற முடியாத ஓர் ஒழுங்குமுறையற்ற வடிவில் நான்கு கோபுரங்களோடு அது இருந்த து. கோட்டையின் வடக்குப் புறத்திலும் தெற்குப் புறத்திலும் சிறிய கொத்தளங்கள் அமைக்கபட்டிருந்தன. சில ஆண்டுகள் கழித்து, அரை வட்ட வடிவிலான அமைப்பு ஏற்படுத்தப்பட்டுக் கோட்டையின் வடக்குப்  பகுதி பலப்படுத்தப்பட்ட து. 32 பீரங்கிகள்கோட்டை மதிற் சுவரில் வைக்கப்பட்டிருந்தன. கோட்டைக்குள் பிரான்சுவா மர்த்தனும் கும்பெனி அலுவலர்களும் குடியிருந்தனர் . கப்புசின் பாதிரியாளர்களின் சிறிய தேவாலயம் ஒன்று கோட்டைக்குள் அமைந்திருந்த து. கோட்டையை எழுப்புவதற்கான ஒப்புதல் பெற்ற செஞ்சியை ஆண்ட ராம்ராஜாவுக்கு (சிவாஜியின் இரண்டாவது மகன்)  5000 சக்கரம் பிரான்சுவா மர்த்தன் கொடுத்தார் (Alfred Martineau, 1962) »(பக்கம் 114 ) என ஆழமான தகவல்கள்.  

இ. அரிக்கமேடு

கீழடி உண்மைகள் அறிவதற்கு முன்பாக அரிக்கமேடு ஆய்வும், அறியவந்தவையும்  தமிழர் வரலாற்றுச் சான்றுகள். அரிக்கமேட்டைப் பற்றிய முதல் தகவல் பதினெட்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் கிடைத்ததாக அறிகிறோம். இது தவிர படிப்படியாக அந்நிலப்பகுதி குறித்த அரசியல் வரலாறு, ஆய்க்கான ஏற்பாடுகள், திட்டங்கள், இருபதாம் நூற்றாண்டில் முப்பதுகளில் மூவர்கொண்ட பிரெஞ்சுகுழு ஒன்று அங்கு சென்று சேகரித்த தகவல், கிடைத்தபொருட்களைப் பற்றிய தகவல்கள். பொதுகே, பழவேற்காடு, அருவாநாடுஇவற்றுக்கு இடையே உள்ள சிக்கல்கள், ஊகங்கள் குழப்பங்களுக்கிடையில் புதுச்சேரி என்ற சொல் முதன் முதலாக 16 நூற்றாண்டில் போர்ச்சுகீசியரின் தரைபடத்தில் குறிப்பிடப்பட்டிருந்த து என்கிற தகவலையும் அறிகிறோம்.

ஐரோப்பிய நாடுகளில் பிரான்சு  தேசம் கலை, இலக்கியத்தில் தனித்துவம் பெற்ற ஒரு தேசம். அவை காலனிய பிராந்தியத்திலும் எதிரொலித்தன. அவற்றிலும் புதுச்சேரி ஆசியப் பிராந்தியத்தில், இந்தியத்துணைகன்டத்தில்  தனக்கென பிரத்தியேக அடையாளத்தை வகுத்துக்கொண்ட நகரம். முனைவர் ஆ. இராமதாசு அவர்களின் இந்நூல் ஒரு கலங்கறை விளக்கமாக நின்று, பண்ட்டைய புதுவையைப் புரிந்துகொள்ள  உதவுகிறது. இந்நூலின் துணைகொண்டு ஒரு வரலாற்று சுற்றுலாவை புதுவை பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு ஏற்படுத்தி தரலாம். புதுவை அரசு சுற்றுலாத் துறையும், நகரின் கடந்த காலத்  தடயங்களை அறிய விரும்பும் ஆர்வலர்களுக்கு இந்நூல் வழிகாட்டுதலில் ஒரு நகரச் சுற்றுலாவிற்கு வழிகோல முடியும்.