Monthly Archives: ஒக்ரோபர் 2012

பிரான்சைத் தெரிந்துகொள்ளுங்கள்- குளிர்கால நேரம்

கடந்த சனிக்கிழமை இந்தியாவிற்கும் பிரான்சுக்குமான நேர இடைவெளி மூன்றரை மணி நேரமாகவிருந்தது நேற்றைய தினத்திலிருந்து அது நான்கரை மணி நேரமாக கூடியிருக்கிறது. என்ன நடந்தது? பிரான்சு நாட்டில் நேற்று அதிகாலை மூன்றுமணி எனக்காட்டிக்கொண்டிருந்த முட்களைத் திருத்தி இரண்டு மணிக்குக் கொண்டு போனதால் இந்த மாற்றம்.

ஒவ்வொரு வருடமும் கோடையில் ஒரு மணிநேரத்தைக் கூட்டுவதும், குளிர்காலத்தில் ஒரு மணி நேரத்தை குறைப்பதும் வழக்கமாக நடப்பதுதான். பிரான்சு என்றில்லை உலகில் அநேக நாடுகளில் இவ்வழக்கம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. எனக்குத் தெரிந்து மேற்கு ஐரோப்பிய நாடுகள், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் (ரஷ்யா நீங்கலாக). வட அமெரிக்கா, தென் அமெரிக்காவின் ஒரு சில நாடுகளில் இவ்வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது ஆப்ரிக்க நாடுகளில் மொராக்கோவிலுண்டு, இஸ்ரேல் ஈரான் நாடுகளிலுமுண்டு.

இந் நேரமாற்றத்திற்கு முக்கியமான காரணம் பகற்பொழுதைக் குறிப்பாக குளிர்காலத்தில் கூடுதலாகப்பெறவேண்டும். இலையிதிர் காலத்தில் ஆரம்பித்து குளிர்காலம்வரை பகற்பொழுதைக்காலை ஒன்பதுமணிக்கு புலர்ந்தும் புலராமலும் தொடங்குவதும் மாலை நான்குமணிக்கெல்லாம் இருட்டத்தொடங்குவதும் காரணமாக இருக்கலாம். இந்தியாவில் அதிகம்பார்த்திராத சாம்பல் நிறவானத்தை இலையுதிர்காலம் தொடங்கி குளிர்காலம் முடியக் காணலாம்.

பகற்பொழுதைக்கூடுதலாகப் பெறும் நோக்கில் எடுக்கப்படும் இந்நடவடிக்கையை ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை  2ந்தேதி ஒரு மணி நேரத்தை கூட்டிவைத்து ஆரம்பித்துவைக்கிறார்கள் பிறகு அவ்வருடத்திலேயே அக்டோபர் மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமையன்று ஒருமணிநேரத்தை குறைத்து முடிக்கிறார்கள்.
——————————–

பிரான்சைத் தெரிந்துகொள்ளுங்கள்: SOLDES

 

தமிழ்நாட்டில் குறிப்பாக ஆடித்தள்ளுபடி, பண்டிகைக்கால விசேடத் தள்ளுபடி என விளம்பரங்களைப் பார்க்கிறேன். பிரான்சுநாட்டில் பண்டிகைக்கால விசேடத் தள்ளுபடியென்று எதுவுமில்லை. வருடத்தில் இரண்டுமுறை குளிர்காலத்தில் ஜனவரி இரண்டாவது வாரத்தில் தொடங்கி பிப்ரவரி இரண்டாவது வாரம்வரை அதிகபட்சம் மூன்று வாரங்களும், கோடையில் ஜூன் ஜூலை ஆகஸ்டுமாதங்களிலும் நடைபெறும். பிரதேசங்களைப் பொறுத்து தேதிகளில் முன்பின்னாக மாற்றம் இருக்கலாம். வருடம் முழுக்க கடைகள் தங்கட் பொருட்களை விலைகுறைத்து விற்க சுதந்திரமுண்டு என்றபோதிலும் ‘SOLDES” என்ற சொல்லை விளம்பரப்படுத்தி விற்க ஏற்கனவே கூறியதுபோன்று வருடத்தில் இருமுறையே அனுமதியுண்டு. தேதியையும் விற்பனைகாலத்தையும் அரசாங்கமே தீர்மானிக்கிறது. மற்றகாலங்களில் விலையைக்குறைத்துவிற்க ஏன் அனுமதியில்லை. வால்மார்ட்டுகள் இந்தியாவிற்கு வந்தால் அண்ணாச்சிகடைகளுக்கு ஆபத்தாகிப்போகும் என்பதைப்போல இத்தள்ளுபடியை அனுமதித்தால் அதாவது SOLDES என்ற சொல்லைப் பயன்படுத்திக்கொள்ள பெரிய வர்த்தக நிறுவனங்களை அனுமதித்தால் சில்லறைகடைகளின் விற்பனை பாதிக்குமென்று அரசாங்கம் நம்புகிறது எனினும் திமிங்கலங்கள் வாய்க்குள் வருடத்திற்குப் பல ஆயிரம் கடைகள் சமாதிஆவது தொடர்ந்துகொண்டுதானிருக்கிறது.

எழுத்தாளன் முகவரி-7: நடைவாசல்கள்

“பத்திரிகையாளரான சகோதரி ஒருத்தி என்னைத் தடுத்து, ” ஒரு புனைகதை ஆசிரியர் எப்படி உருவாகிறார்?” எனக் கேட்டார். இது காலங் காலங்காலமாய் வெற்றிபெற்ற எழுத்தாளரிடம் முன்வைக்கபடும் புளித்துபோன கேள்வி. ‘என்னிடம் அதற்கு பதிலேதுமில்லையென்று ‘ கூறினேன். எனது தயக்கத்திற்குக் காரணம், இக்கேள்விக்கொரு பொதுவான பதிலை சொல்லமுடியாதது. ஒவ்வொரு எழுத்தாளரும் சிலகாரணங்களை சொல்லக்கூடும், பிறகு அப்பத்திரிகையாளரே, “நீங்கள் ஒரு நல்ல புனைகதை ஆசிரியராக எப்படி மாறினீர்கள்?”, எனக்கேட்டார். இக்கேள்விக்கு என்னால் ஓரளவிற்கு பதிலளிக்க முடியுமெனத் தோன்றியது. கதை சொல்லலில் எனக்கு நாட்டம் ஏற்பட காரணத்தை யோசித்தபோது, நீண்டா காலமாகத் தொடர்ந்து வாசிப்பது, சொற்களின் மீதுள்ள பிரியம் போன்றவை உடனடியாக ஞாபகத்திற்கு வந்தன, எனினும் இது தவிர வேறுகாரணங்களை இருக்கின்றன”, என்று தமது கட்டுரையொன்றினைத் தொடங்குகிறார் B.J. Chute. (1913-1987)

பேயாத்ரீஸ் ஜாய் ஷ¤ட் நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர். அமெரிக்க எழுத்தாளர் அமைப்பின் தலைவராகவும் இருந்திருக்கிறார். சிறுவர் இலக்கியம், பதின்ம வயதினர், பெரியவர்களென வயதிற்கொத்த படைப்புகளை எழுதியவர். அவருடைய நாவல்களில் ‘Greenwillow”(1956) முக்கியமானது.

பத்திரிகையாளர் கேட்டகேள்வி (What makes you a fiction writer?) அவரை உறங்கவிடாலற் செய்திருக்கிறது. பலமுறைத் தனக்குத்தானே இக்கேள்வியைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். அவருக்குத் தம்மை ஜாய் என அழைத்துக்கொள்வதில் அல்லது அழைக்கப்படுவதில் விருப்பம் அதிகமாம். அவரது விருப்பத்திற்கு மரியாதை அளித்து இக்கட்டுரையில் ஜாய் என்றே அழைக்கிறேன். நமது ஜாய் ஓர் எழுத்தாளனாக சாதனைப்படைக்க நான்கு யோசனைகளை முன்வைக்கிறார்.மூன்றாம் திருமுறையில் வரும் வள்ளலார் பாடலோடு ஜாயின் யோசனை மிகக் கச்சிதமாக பொருந்துகிறது. கட்டுரையின் முடிவில் உங்கள் வாசிப்புக்கு அப்பாடல் காத்திருக்கிறது.

படைப்பு தரிசினத்திற்கு எழுத்தாளனுக்கென்று பிரத்தியேகமாக நான்கு நடைவாசல்களை ஜாய் திறக்கிறார்:

1. கற்பனை:

சிறுகதை ஆசியரனாக வரவேண்டுமென்றாலும் சரி, நாவலாசிரியனாக ஜெயிக்க வேண்டுமென்றாலும் சரி கற்பனை முதலாவது நடைவாசல். ஜாய் எழுத்தாளனை சிலந்தியென்றும், எழுத்தை சிலந்திவலையென்றும் கூறுகிறார். வாசகன் அவ்வலையில் சிக்கும் இரை. ஜாயைப் பொறுத்தவரை கற்பனையே எழுத்துக்கான அடிப்படைத் தூண்டுதல் – Muse என்ற கிரேக்க பெண்தெய்வம். கிரேக்க புராணக்கதைகளின்படி பல்வேறு கலைகளுக்குப் பொறுப்பேற்று வழிபடுத்துகிற ஒன்பது பெண்தெய்வங்களுள் ம்யூஸ¤ம் ஒருத்தி. அவளுடையப் பணி அகத்தூண்டுதலுக்கு வழிகோலுவது. கதையாசிரியனுக்கு இம் ம்யூஸின் கடாட்சம் வேண்டும். ஆனால் அதற்காக 108 தேங்காய், நேர்த்திக்கடன் போன்ற வழிமுறைகளை ஜாய் போதிப்பதில்லை. ‘கற்பனை’ என்பது வரமாகப் பெறுவதல்ல அல்லது கடைக்குப்போய் சிறுகதை எழுதலாமென்றிருக்கிறேன் 200 கிராம் கற்பனை கொடுங்கள் அண்ணாச்சியென்று கேட்கவும் முடியாது. பால் கறக்கிற பசுமாட்டுக்குத் தீனி வைப்பதுபோல, எழுதும் மூளைக்கு தீனிகொடுக்கவேண்டும், கறந்து பழக வேண்டும். ஒரு படைப்பாளி நித்தம் நித்தம் எழுதவேண்டும் எழுதத் தவறினால் தொழிற்படும்  கற்பனையும் துருபிடிக்கலாம், உற்பத்தியும் (எழுத்தும்) பாதிக்கலாம். சிலந்தி வலைபின்னும் சாமர்த்தியத்தை கவனித்திருக்கிறீர்களா? பிடிப்பற்ற வெளியில் ஒரு பாய்ச்சல், கசியும் மிக மெல்லிய இழையினூடே தொடர்ந்து வியப்புக்குரிய வகையில் நேர்த்தியாக உருவெடுக்கும் வலை, அந்தரத்தில் ஒருமாய்மாலத்தையே நடத்தி, சுற்றியிருக்கிற ஈக்களுக்கு அதில் காலார உட்காரலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தித் தருகிறது.  வாசகனைச் சிலந்திவலையிற் சிக்கும் ஈக்களோடு ஒப்பிடக்கூடாதென்றாலும் உண்மை அதுதானே.

2. அனுதாபம்:

ஜாய் கூறும் இரண்டாவது நடைவாசல். அனுதாபம். ஆங்கிலச்சொல்லான ‘Embathy’ என்ற சொல்லை இதற்கு உபயோகிக்கிறார். அகராதியில் பொருள் தேடினால்: மாற்றார் உணர்வு அறிதல் அல்லது மற்றொருவரின் ஆளுமையிற் புகுந்து அவரது அனுபவத்தை கற்பனையாக அனுபவித்தல்’ எனப்பொருள் கிடைக்கிறது. கற்பனையைப் போலவே அடுத்தவர் நிலைகண்டு பரிதாபப்படுவதற்கும் பயிற்சிவேண்டும், மன அளவில் எதிராளியாக நம்மை நிறுத்தி அவ்வுணர்வில் திளைக்கவேண்டும். சில நேரங்களில் அவ்வனுபவத்தை வார்த்தைகளிற் சொல்ல இடற்பாடுகள் நேர்ந்தாலும் கல்யாண்ஜி போலவும் எழுதலாம்:

“இப்படியா அப்படியா
எப்படி இருந்தது என்று
நாலைந்து சொற்களை
அவரே தந்து
வலியினைச் சொல்லுடன்
பொருத்தச் சொன்னார்
உச்ச மகிழ்ச்சிக்கும்
உச்ச வலிக்கும்
அனுபவிப்பவனிடம்
அடைமொழி இல்லை
மேலும்
எம் வலியும் ஆகாது
உம் வலி”

தலித் பிரச்சினைகளை ஒரு தலித் எழுத்தாளர்தான் எழுதமுடியும், பெண்ணியப்பிரச்சினைகளை பெண்கள் மட்டுமே சொல்லவேண்டும் என்பதுபோன்ற உதவாக்கரை கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை. ஜெயகாந்தனின் கோகிலா என்ன செய்துவிட்டாள் ஏற்படுத்திய பிரளயத்தைத் பெண் எழுத்தாளர்கள் இதுவரை ஏற்படுத்தித் தரவில்லை. சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை உட்பட. மதாம் பொவாரி நாவலின் நாயகி ‘எம்மா’வுடைய  பேரார்வமும், வாழ்க்கைமீதான எரிச்சலும், கோபமும், சலிப்பும், விரக்தியும், வேதனையும் பிரெஞ்சில் வேறொரு பெண்ணாற் சொல்லப்பட்டதில்லை என்பதுதான் உண்மை. நாவலாசிரியர் ·ப்ளோபெர் (Gustave Flaubert) தமது வாழ்க்கையில் எங்கேயோ சந்தித்த பெண்ணொருத்தியின் மீது ஏற்பட்ட பரிவு அவரை ‘எம்மா’ வாக உருக்கொள்ள வைத்தது. சென்ற அத்தியாயத்தில் உருமாற்றம் என கேல் காட்வின் கூறியதையே ஜாய் “மாற்றார் உணர்வை அறிதல்’ என்கிறார்.

3. எழுத்து நடை அல்லது பாணி:

B.J. Chute திறக்கும் மூன்றாவது நடைவாசல்  எழுத்துநடை. கதை சொல்லலில் இது மிகவும் முக்கியமானது. தொனி, சொற் தேர்வு வாக்கிய அமைப்பு என மூன்று பண்புகளையும் உள்ளடக்கியது நடை. கதை மாத்திரமே ஓர் படைப்பின் தலைவிதியைத் தீர்மானிப்பதல்ல. ஒரு நாவல் கவனிப்பைப்பெறுவது சொல்லப்படும் விதத்தைச் சார்ந்தது. கதை சொல்லலையும் புனைவையும் பிரித்துப்பார்க்கக்கூடாது. ஒரே கதையை பத்து எழுத்தாளர்கள் சொல்லமுடியும். ஆனால் சொல்லுகிறவிதம் ஒன்றுபோலவே இருக்க வாய்ப்பில்லை. கல்லூரியில் படிக்கிறபோது ஒரு வசனத்தை அவர் சொன்னால் எப்படியிருக்கும் இவர் சொன்னால் எப்படியிருக்குமென மிமிக்ரி செய்வதுபோல, ஒரு கதையை ஜெயகாந்தன், சுஜாதா, பாலகுமாரன், கல்கி, புஷ்பா தங்கதுரையென பல எழுத்தாளர்கள் மொழியில் எழுதிப்பார்த்து நண்பர்களிடம் வாசித்துக்காட்டுவேன். நல்ல நடை நிச்சயமாக உங்கள் கதையைத் திரும்பவும் வாசிக்கவைக்கும்.

கதை சொல்லலில் இந்த நடை அல்லது பாணி எப்படி பிறக்கிறது. ஜாயைப் பொறுத்தவரை கதையின் நடை என்பது, தெளிவான சிந்தனை. அதாவது பேனா பிடிக்கும் முன்பாக அல்லது விசைப்பலகையில் தட்டுவதற்கு முன்பாக உங்கள் தலைக்கு வேலைகொடுக்கவேண்டும். இரண்டொரு நிமிடங்கள் எதைச் சொல்லபோகிறேன் எப்படிச் சொல்லபோகிறேன் எங்கே தொடங்கப்போகிறேன் என்பதில் தெளிவு இருப்பின் நடையிலும் தெளிவு இருக்கும், ஓர் அழுத்தம் வரும். சிந்தனையிற் தெளிவு, அதற்குரிய சொற்கள் (இச்சொற்கள் தேர்விலேயே ஓர் எழுத்தாளனின் இடம் படைப்புலகில் தீர்மானிக்கப்படுகிறதென்பதை நாம் மறக்கக்கூடாது. மர்செல் ப்ரூஸ்டு என்ற பிரெஞ்சு எழுத்தாளருடையப் படைப்பை நண்பர்கள் வாசித்திருக்கலாம் அவர் நடையை சூ-ழஸாங்(Sous-Jacent) எனப்பிரெஞ்சில் சொல்வார்கள் (ஆங்கிலத்தில் – The underlying tune). அடக்கிவாசிப்பது, ஆழ்ந்து அல்லது கூர்ந்து கவனித்தாலன்றி வெளிப்படையாக உணரமுடியாதது, இலைமறைகாயாக ஒன்றை தெரிவிப்பது என்றெல்லாம் பொருள்கொள்ளலாம். அது அவருடைய பாணி. ஆனால் அதையே எல்லா எழுத்தாளரும் பின்பற்றவேண்டுமென நினைப்பது நமது தனித் தன்மைக்குக் கொள்ளிவைப்பதாகும். எனக்குப் பாத்திரங்களின் தன்மைக்கேற்ப மொழியைக் கையாளலாம்.
தமிழில் நடையில் சுஜாதாவுக்கென ஒரு தனித்தன்மையுண்டு. சாண்டியல்னைக்காட்டிலும் கதைசொல்லலில் கல்கி தேர்ந்தவர். ஆங்கிலத்தில் பிலிப் ரோத், நத்தானியெல் ஹாத்தோர்ன் இவர்களையெல்லாம் கதை சொல்லலிலுள்ள தொனிக்காகவே வாசித்திருக்கிறேன். கி மொப்பசான் கூட கதை சொல்லலில் அசகாயசூரர். கா·ப்காவும் ச¨ளைத்தவரல்ல.

4. இடையறா ஊக்கம்

ஜாய் திறக்கும் நான்காவது நடைவாசல் பொறுமை. கற்பனைகதவுகள் திறக்கின்றன. கதைமாந்தர்களின் மீது அனுதாபம்சுரந்து அவர்களிடத்தில் உங்களை வைத்து அவ்வனுபத்தில் திளைக்கமுடிகிறது, எழுத்து நடையைத் தீர்மானிக்கிறீர்கள். இப்பொழுது படைப்பில் மேற்கொண்ட மூன்றையும்  ஒன்றிணைப்பதில் தேவைப்படும் சோர்வற்ற உழைப்பே நான்காவதாகும். Joyce Cary, ‘to see the thing and throw the loop of creation around it” என்கிறார். இங்கே ‘the thing’ என்பது வேறொன்றுமல்ல கதைக்கரு  அல்லது கதைப்பொருள். இலையில் சாதத்தை வைத்தாகிவிட்டது. பருப்பு, கூட்டு, பொரியல், நெய் என எல்லாம் தயார் நிலையில்; எதை எப்படி ஆரம்பிப்பது, எப்போது சாம்பார், எப்போது ரசம் என வரிசைபடுத்திக்கொண்டு பிசைவதற்குத்தோதாக படைப்பை உருவாக்கமுடிந்தால், வாசகர்களும் திருப்தியாக சாப்பிட்டுவிட்டு எழுந்திருக்கலாம்.

மூன்றாம் திருமுறையிலுள்ள இப்பாடலை இனியொரு எழுத்தாளனாக வாசியுங்கள்.

படித்தேன்பொய் உலகியநூல் எந்தாய் நீயே
படிப்பித்தாய் அன்றியும்அப் படிப்பில் இச்சை
ஒடித்தேன்நான் ஒடித்தேனோ ஒடிப்பித் தாய்பின்
உன்னடியே துணையெனநான் உறுதி யாகப்
பிடித்தேன்மற் றதுவும்நீ பிடிப்பித் தாய்இப்
பேதையேன் நின்னருளைப் பெற்றோர் போல
நடித்தேனெம் பெருமான்ஈ தொன்றும் நானே
நடித்தேனோ அல்லது நீ நடிப்பித்தாயோ

—————————————————

மொழிவது சுகம் அக்டோபர் -20

1. புதுச்சேரி சுதந்திரம்

கடந்த ஆகஸ்டுமாதம் 16ந்தேதி -2012 அன்று, புதுச்சேரி பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து இந்திய அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டு 50 ஆண்டுகளாகின்றன.

இந்தியாவின் பிறபகுதிகள் இந்தியக்குடியரசின் கீழ் வந்தபோதும். புதுச்சேரி காரைக்கால் போன்றவை இந்தியாவில் இணைய 15 ஆண்டுகள் காத்திருந்தன. புதுச்சேரியில் சுதந்திரப்போராட்டமென்பது நமத்துப்போனதொரு பட்டாசு.

1962ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16ந்தேதி பிரெஞ்சு அரசாங்கமும் நேரு தலமையிலான காங்கிரஸ் அரசாங்கமும் ‘De Jure’ ஒப்பந்தத்தில் கைச்சாற்றிட அதுவரை பிரெஞ்சுக்காரர்கள் வசமிருந்த புதுச்சேரி, காரைக்கால், மாஹி, ஏனாம் நான்கும் இந்திய ஆளுகைக்குட்பட்ட தனி மாநிலமாக (அல்லது யூனியன் பிரதேசமாக) உருப்பெற்றது. காங்கிரஸின் முக்கிய தலைவர்களும், அன்றைய ஊடகங்களும் இதனைக் கடுமையாக எதிர்த்தார்கள். அண்டை மாநிலமான தமிழகத்துடன் இணைப்பதுதான் முறையென்றார்கள். பிரெஞ்சு மொழியைக் கற்றிருந்த நேரு அம்மொழிமீதிருந்த காதலால் பிரத்தியேக சலுகைகள்கொண்ட இந்திய யூனியன் பிரதேசமாக புதுச்சேரியை அறிவித்தார். அவர் தயவில் புதுச்சேரி அத்தைக்கு மீசை முளைக்கிறது. கையளவு பிரதேசமான புதுச்சேரி தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்டிருந்தால் அநேகமாக ஒரு பிர்க்காவாகவோ அல்லது அதிகபட்சமாக ஒரு தாலுக்காகவோ வந்திருக்கலாம். இன்றைக்கு ஒரு ஆட்சியர், நான்கு துணை ஆட்சியர், டசன் கணக்கில் தாசில்தார்கள்.. போதாதற்கு ஒரு மந்திரிசபை. கோலி விளையாடியக் கையைத் துடைக்காமற்கூட மந்திரி ஆவதற்கான வாய்ப்புகள் புதுச்சேரியில் அதிகம்.

இந்தியா சுதந்திரம் பெற்றது 1947ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15ந்தேதி. ஆனாலும் புதுச்சேரியின் சுதந்திரம் பற்றிய கேள்விகள் அப்போதைக்கு எழவில்லை. பல காரணங்கள் இரண்டு தரப்பிலுமிருந்தன. இங்கே சுதந்திரம் வழங்கினால் பிரான்சு தமது பிறகாலனிகளையும் ஒப்படைத்துவிட்டு வெளியேறவேண்டும். அந்த ஒரு காரனத்திற்காகவே புதுச்சேரியைக் கட்டிக்கொண்டு அழுதது.  இந்தியாவிற்கும் புதுச்சேரி அப்படியொன்றும் முக்கியமானதாகத் தோன்றவில்லை. ஒரே ஒரு நூற்பாலை. அதை நம்பியே பெரும்பாலான மக்களின் வாழ்க்கை. தண்ணீர் மின்சாரமென புதுச்சேரியின் அத்தியாவசிய வாழ்க்கை அண்டை மாநிலங்களைச் சார்ந்திருந்தது. ஆங்கிலேயர்களிடம் சுந்தந்திரம் பெற்றபின், நாட்டின் ஒரு பகுதியை அந்நியர்களிடம் விட்டுவைப்பதா என்றதொரு கௌரவப்பிரச்சினையாக காங்கிரஸ் அரசாங்கம் புதுச்சேரியைப் பார்த்ததேயன்றி, மற்றபடி கொடுக்கும்போது கொடுக்கட்டும் என்றே காத்திருந்தார்கள். 1948ல் பிரெஞ்சு அரசாங்கம் ஒரு யோசனையை முன்வைத்தது. பொது வாக்கெடுப்பொன்றிற்கு ஏற்பாடு செய்து பெரும்பாலான மக்கள் விரும்புவதுபோல செய்துவிடலாமென்றது. நேரு அபத்தமாக இந்த யோசனையை ஏற்றுக் கொள்கிறார். சந்திரநாகூரில் நடந்த வாக்கெடுப்பில் பெரும்பாலான மக்கள் இந்தியாவோடு இணைவதை விரும்புகிறார்கள். விழித்துக்கொண்ட பிரெஞ்சு அரசாங்கம் பிற இடங்களில் வாக்கெடுப்பைத் தள்ளிவைப்பதாக அறிவித்து கடைசிவரை அதனை நடத்தவே இல்லை. இந்திய அரசாங்கமும் ஏன் நிறுத்தினாயென்று கேட்கவில்லை. புதுச்சேரியில் அப்படியொரு வாக்கெடுப்பை நடத்தினால் இந்தியாவிலும் நாளை குறிப்பாக காஷ்மீரில் அதுபோன்றதொரு பிரச்சினையைச் சந்திக்கக்கூடுமென்ற நிலை. ஆக இரு தரப்பிலும் பொது வாக்கெடுப்பிற்கு ஆதரவில்லை. இந்தியா இதையொரு கௌரவப்பிரச்சினையாகக் கருதி பிரெஞ்சு அரசாங்கத்தின் கீழிருந்த புதுச்சேரிக்கு நிர்வாக சிக்கல்களைக் கொடுத்து வந்தது. ஒரு கட்டத்தில் புதுச்சேரி நிர்வாகமே ஸ்தம்பித்து போகும் நிலை. அந்நிலையை எட்டியபோது ஏழாண்டுகள் கடந்திருந்தன.

இந்நிலையில்தான் 1954ம் ஆண்டு மே 7ந்தேதி  Dien Bien Phu யுத்தத்தில் வியட்நாமுடன் தோற்று ஜெனீவா ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட கையோடு இந்தோசீனாவிலிருந்து பிரெஞ்சுக்காரர்கள் வெளியேறுகிறார்கள் அதே வேளை அல்ஜீரியாவில் காலனிவாசிகள் பிரான்சுடன் ஆயுதப்போரில் இறங்குகிறார்கள். அதன் விளைவாக புதுச்சேரியைக் கைகழுவும் முகாந்திரமாக 1954 ஆண்டு நவம்பர் 1ந்தேதி ‘De Facto’ வில் இரு நாடுகளும் கையொப்பமிடுகின்றன. பிரெஞ்சு அரசாங்கத்தின் பொருளாதாரம், பண்பாட்டு அரசியலுக்கு குந்தகமிருக்கக்கூடாதென்றவகையில் தயாரிக்கப்பட்ட இவ்வொப்பந்தம் காரணமாக அப்போதுமுதலே புதுச்சேரி தாதாக்களின் அரசாங்கமாகிவிட்டது. குபேர் புதுச்சேரி நிர்வாகத்தின் முதல் தாதா. இவர்களுக்கெல்லாம் புதுச்சேரி இந்தியாவில் இணைவதில் துளியும் விருப்பமில்லை. பிரெஞ்சு அரசாங்கத்திற்குத் தலையும் இந்திய அரசாங்கத்திற்கு வாலும் காட்டிவந்த மனிதர்.

‘De Facto’ விலிருந்து ‘De Jour’ ஒப்பந்தத்திற் கைச்சாற்றிட மீண்டும் ஏழாண்டுகளுக்குமேலாக காந்திருந்தார்கள். அதற்கும் புதுச்சேரி தியாகிகளோ, இந்திய அரசாங்கமோ காரணமல்ல. அல்ஜீரியாவில் காலனிமக்களுடன் நடத்திய  யுத்தத்தில் மிகக்கடுமையாக  தோற்றிருந்த பிரெஞ்சு அரசாங்கம் 1962ம் ஆண்டு ஜூலைமாதம் 16ந்தேதி அல்ஜீரியாவிற்கு சுந்திரத்தை வழங்கவேண்டியதாயிற்று. அதற்கும் ஒரு மாதத்திற்குப் பிறகு பிரெஞ்சு அரசாங்கம் புதுச்சேரியை ஒட்டுமொத்தமாக இந்தியாவசம் ஒப்படைப்பதென தீர்மானித்து 1962ம் ஆண்டு ஆகஸ்டுமாதம் 16ந்தேதி, புதுச்சேரியை இந்தியாவிடம் தாரைவார்க்கிறார்கள். ஆக உண்மையில் புதுச்சேரி சுதந்திரம்பெற ஒரு வகையில்  அல்ஜீரிய மக்களே மூல காரணம். அங்கே இடி இடிக்க இங்கே மழைபெய்தது. புதுச்சேரி சுதந்திரத்திற்கு புதுச்சேரி மக்களோ, நேருவின் காங்கிரஸ் அரசோ காரணமேயல்ல என்பதுதான் உண்மை. அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தமென்று கேட்பார்கள் புதுச்சேரி சுதந்திரத்தைப் பொறுத்தவரை சம்பந்தமிருக்கிறது.

தனிமனிதனாகட்டும்  ஒரு நாடாகட்டும் அதன் சிறுமை பெருமைளை அறிய வரலாற்றை புரட்டிப் பார்ப்பது அவசியமாகிறது. கொடுக்கிற விலையைப் பொருத்ததே பண்டங்களின் பெறுமானம் அமைகிறது. புதுச்சேரியின் வரலாற்றின் அடிப்படையில் ஒரு நாவலை அதன் வரலாற்றை வியந்தோதும் வகைமையின்றி எழுதும் ஆவலிருக்கிறது.

————————-

2.  மொ-யன் (Mo-Yan)

முராகாமிக்கு இவ்வருட இலக்கியத்திற்கான நோபெல் பரிசென்ற வதந்தி இருந்தது. சீனரான மொ-யன் என்பவருக்குக் கிடைத்திருக்கிறது. சீனர்கள் காட்டில் மழை பொழியும் நேரம். வல்லரசுக்கான அத்தனை இறக்கைகளையும் சிறகடித்து மேலே மேலே என்று பறந்துகொண்டிருக்கிறார்கள். அடுத்த தெரு ஆசாமி வீட்டில் உலை கொதிக்கலாம் ஆனால்  அண்டைவீட்டுக்காரன் அடுப்பில் பூனை தூங்கவேண்டுமென எதிர்ப்பார்க்கிற மனித மனத்திற்கு நாமும் விதிவிலக்கல்ல என்கிறபோதும் நலன் விசாரிக்கிறவர்களிடம் அவர்களுக்குக் கிடைத்தால் எங்களுக்குக் கிடைத்ததுபோல என பெருமூச்சுவிடவேண்டியிருக்கிறது. நமது சிற்றிதழ்களில் இப்போதெல்லாம்  இலக்கியத்திற்கென ஒதுக்குகிற பக்கங்களைப் பார்க்கிறபொழுது அப்பெருபெருமூச்சும் சிறுமூச்சாகிபோகிறது. அக்டோபர் பதினொன்றுவரை (அவரது பெயரை பத்துநாட்களுக்கு முன்பு நோபெல் குழுவினர் அறிவிக்கும்வரை) பிரெஞ்சு இலக்கிய இதழ்களில் எப்போதாவது ‘மொ-யன்’  பேரை படிக்கிறபோது அல்லது அவர் புகைப்படத்தை பார்க்கிறபோது அறுபதுகளில் சூ-என்-லாய் கொளுத்திப்போட்ட பகைமைக் கங்கு மனதில் விசிறிக்கொண்டு கனிய ஆரம்பித்துவிடும், அவசரமாய்ப் பக்கங்களை புரட்டிவிடுவேன். முந்தைய வரிகளில் சொன்னதுபோல அண்டைவீட்டுக்காரனென்ற பொறாமை காரணமாக இருக்கலாம். இன்னொரு காரணமும் இருக்கிறது, பெரும்பாலான காம்ப்ரேட் சீனர்களைப்போலவே கமுக்கமாகச்  சிரிக்கிறார். பஞ்ச சீலத்தில் கையெழுத்துபோட்ட போட்ட சூ-என்-லாயின் சிரிப்பு அது.

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் அதாவது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கி.பி. 2000 ஆண்டுக்கான நோபெல் பரிசுபெற்ற சீனரை ஞாபகம் நண்பர்களுக்கு நினைவிருக்கிறதா? அவர் கௌ-சிங்யங் (Gao- Xingjian). தமது எழுத்தைச் சீனக் காம்ரேட்டுகளுக்கு எதிராக உபயோகிக்கப்போக பிரான்சு நாட்டிற்கு 1988ம் ஆண்டு அரசியல் தஞ்சம் கேட்டு வரவேண்டியதாயிற்று. 1989ல் பிரெஞ்சுக் குடியுரிமையும் கிடைத்தது. சீனாவில் இருந்திருந்தால் முதல் நோபெல் பரிசுபெற்ற சீனர் என்ற பெருமை கிடைத்திருக்கும். மொ-யன் விஷயத்தில் சீனர்கள் கவனமாக இருந்தனர். இவரும் காம்ரேட்டுகளையும் அவர்கள் தலமையையும், அதிகார ஊழலையும் விமரிசிக்கத் தயங்கியவரல்ல. எனினும் சீன அரசாங்கம் இவரை வெளியேற்றவில்லை. ஏற்கனவே மனித உரிமையென்றால் கிலோ என்ன விலை எனக் கேட்கும் நிலையிலிருந்த சீனர்களுக்கு, பொருளாதாரம் மற்றும் ராணுவபலம் போன்றவற்றால் பெறும் கீர்த்தியை பூர்த்திசெய்யவும் சீனஅரசு விமரிசினங்களைச் சகித்துக்கொள்ள கூடிய அரசு என்பதைத் தெரிவிக்கவும் மொ-யன் என்ற சரக்குச் சந்தைக்குத் தேவைபட்டது.

பிரெஞ்சுப் புத்தககடைகாரர்கள், ‘மொ-யன்’ படைப்புகளை தூசுதட்டி, பர்·யூம் அடித்து கடை பரப்புகிறார்கள். சீன உற்பத்தியென்றாலே பொருளாதாரச்சந்தையில் போலிச்சரக்கு, விலை மலிவு எனப்பொருள் கொள்ளப்படுவதுண்டு. எதற்கும் அச்சு அசலாக மாற்றுபொருளை தயாரிப்பதில் சீனர்கள் கைதேர்ந்தவர்களென்ற தீர்க்கமான கருத்துண்டு. சீனர்களின் ஆயுத பலம் கண்டு பயமிருக்கிறதோ இல்லையோ, போலி சரக்குகளைப் பற்றிய பயத்தை அதிகமாகவே மேற்கத்தியர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறார்கள். ‘மார்க்ஸின்’ சரக்கிற்கே போலியைத் தயாரித்தவர்கள் ஆயிற்றே, பயமில்லாதுபோனால் எப்படி? மொ-யன் சரக்கை அசலான சரக்கென்று கடந்த சில தினங்களாக புத்தக விமரிசகர்கள் வானொலியிலும் தொலைகாட்சிலும் வற்புறுத்துகிறார்கள். ஏற்கனவே கூறியதுபோன்று இதுவரை மொ-யன் படைப்புகள் எதையும் வாசித்ததில்லை பிரெஞ்சு பத்திரிகையொன்றில் வந்தக்குறிப்பை அவரது படைப்புகளை வாசிக்க நினைக்கிறவர்களுக்காக சிபாரிசு செய்கிறேன்.

மொ-யன் பெற்றோர்கள் முன்பின்தெரியாதவர்களிடம் வாய் திறவாதே! – அதாவது பேசாதே!  என அடிக்கடி தங்கள் மகனை எச்சரிப்பதுண்டாம். பிற்காலத்தில் தமது எழுத்துக்கு ஒரு புனைபெயரை தேடியபொழுது, சிறுவயதில் காதில் விழுந்த ‘வாய் திறவாதே’ நினைவுக்கு வர அதனையே வைத்துக்கொண்டிருக்கிறார். ‘மொ-யன்’ என்ற புனைபெயருக்கு, அதுவே ரிஷிமூலம். ஆனால் ‘வாய் திறவாதே’ என்ற பெயரில் நிறைய எழுதுகிறார். எண்பதுக்கும் அதிகமாக சிறுகதைகள், புனைவுகள், அபுனைவுகளென எழுதிக்குவித்திருக்கிறார். நாவல்களில் புதிய உத்திகளை பயன்படுத்தியிருக்கிறாராம். கதைக்குள் கதை, நாவவலுக்குள் சிறுகதை, கடித இலக்கியம், சமூகம், ஆட்சியாளர்களெக்கெதிரான கலகக்குரல்கள், புதிய வரலாற்றுப்பார்வையென  இவரது எழுத்துப்பாதை தடங்கலின்றிச்செல்கிறது. முக்கிய நூல்கள் 1. Red Sorghom  2. The Rupublic of Wine. 3. Big breasts and Wide hips. பிரெஞ்சு மொழிபெயர்ப்பில் வந்திருக்கும் 4. La loi du Karma வாங்கி வைத்திருக்கிறேன், படித்துவிட்டு எழுதுகிறேன்.

 

நன்றி: C.I.D.F.  29-8-2012

————————————

 

 

 

 

 

எழுத்தாளன் முகவரி -6: உருமாற்றம்

“கடுமையாக உழைக்கவும் பொறுமைகாக்கவும் உள்ளுணர்வுகள்மீது நம்பிக்கைவைத்து பொய்யான அச்சங்களை தவிர்க்கவும் முடிந்தால் எவர் ஒருவரையும்போல கூடுபாய என்னால் முடியும்”- கேல் காட்வின்

கேல் காட்வின் ( Gail Godwin) எழுத்தாளர் அதாவது வெற்றிகரமான எழுத்தாளர் (சிறுகதைகள், நாவல்கள்). அவரது நாவல்கள் கவனத்திற்கொள்ளும் அளவிலும், விற்பனையில் சாதனைபடைத்தவைகளாகவும் இருக்கின்றன. கேல் காட்வினுடைய  ‘A mother and two daughters, The Odd woman, இரண்டு நூல்களையும் சந்தர்ப்பம் அமைந்தால் வாசியுங்கள். கருவறைக்குச்சென்று பெண்களை தரிசிப்பீர்கள். அம்முகங்களில் ஒளிரும் கருமையிலும், இறுக்கத்திலும், உதடுபூக்கும் பார்வையிலும், இருபுருவருங்களிக்கிடையில் நெளியும் கேள்விகளிலும் பார்வையைத் திருப்பாது அவதானித்தால் பெண்ணென்ற ஜீவனின் முழுதரிசனத்திற்கு வாய்ப்புண்டு. தமது எழுத்தில் உருப்பெறும் பாத்திரங்களாகக் கூடுபாயும் திறனை, பத்து பன்னிரண்டு வயதிலேயே தாம் பெற்றிருந்ததாக கேல் தெரிவிக்கிறார். இளம்வயதிலேயே எழுத்தில் உயிர்ப்பிக்க நினைக்கும் பெண்ணாகவோ ஆணாகவோ மாறும் மோடிவித்தை எளிதாகக் கூடிவந்திருக்கிறது: மனைவிக்குத் தலையாட்டும் கணவன், கவனிப்பாரற்ற பணக்கார சிறுவன், உல்லாசமாகச் சுற்றித் திரிந்த நாயொன்றின் சொந்த அனுபவமென்று எதையும் அதனதன் இடத்திலிருந்து சொல்ல அவருக்கு சாத்தியமாகிறது.

பதின் வயதை எட்டியபோது வேறொரு அனுபவம். அது பொதுவாக சுயபுரிதலுக்கு உதவத்தொடங்கும் வயது. அன்றி தன் செயல்பாடுகளைப்பற்றிக் கேள்வியும் எழுப்பக்கூடியது.  கதைசொல்லலைக்குறித்து இவருக்கு வழிகாட்டியவர்கள் அந்நேரத்தில்’உனக்குத் தெரிந்ததை எழுது’ – எனக்கூறியிருக்கிறார்கள். விளைவாகத் தமது கற்பனைப்பரப்பை சுருக்கிக்கொண்டிருக்கிறார். இளம்வயது பெண்ணைக்குறித்து எழுதுவதென்றாலும், நடுத்தர வயது பெண்மணியைப்பற்றிய எழுத்தென்றாலும், முற்றுமுதலாக தம்மையே முன்நிறுத்தி அக்கதைமாந்தர்களைப் படைத்திருக்கிறார். இவ்வணுகு முறையில் அதுவரை அனுபவித்திராத உள்ளுணர்வுகளும், உத்தியும் வாய்த்தபோதிலும் அவருக்கு நாட்டமில்லை, இப்புதிய சிக்கலிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்வதெப்படி என்ற கவலை அவரை அரித்திருக்கிறது.

ஜெர்மன் சொல்லான ‘Zeitgeist’ (The Spirit of the Times) என்பதற்கு ஒரு கால கட்டத்தின் பண்பாடு, புத்திகூர்மை, அரசு, சமூகம் மற்றும் சமய நெறிமுறைகளின் கலவையென்று பொருள். விழிப்புணர்வு, தன்னை உணர்தல் மற்றும் அறிதல் ஆகியவற்றிற்கும், காலத்தின் பாற்பட்ட மேற்கண்ட கூறுகளுக்கும் அடிப்படையில் தொடர்புண்டு. இலக்கிய வரலாறுகளை அறிந்தவர்களுக்குக் கதைசொல்லலில் நிகழ்ந்துள்ள மாயத்திற்கும், அதன் வடிவமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்குங்கூட இக்கூறுகளே  காரணமென்பதை அறிவார்கள். மேற்கத்திய உலகில் விக்டோரிய காலத்து இலக்கியத்திற்கும் இன்றைய இலக்கியத்திற்கும் இடையில் நிகழ்ந்த இரசவாதம் இந்திய கதைசொல்லலிலும் நிகழ்ந்திருக்கிறது. பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதையையும் புதுமைப்பித்தன் கதையையும் ஒப்பீடு நோக்கில் வாசித்தாலே இந்த உண்மைத் தெளிவாகும்.

மகாபாரத்திற்குத் தேவைப்பட்ட நூற்றுக்கணக்கான கதைமாந்தர்களை இன்று எந்த இலக்கியவாதியும் அழைப்பதில்லை. சுந்தரராமசாமிக்கு ஒரு ஜோசப் ஜேம்ஸ் போதும். ஏக நாயகன் அல்லது ஏக நாயகி கதைக்கு அச்சாணி.  சக்கரத்தின் குடம்போல படைப்பும் அதன் ஆரங்களென பிறமாந்தரும், சம்பவங்களும் சுற்றிவருகிறார்கள். மைய நாயகன் ஏதோஒரு குணத்திற்கு ஏகபோக உரிமையாளன், கதையை முன் நகர்த்த பிறகுணங்களும் அவனிடம் தற்செயலாக எட்டிப்பார்ப்பதுண்டு. உதாரணமாக ஜே.ஜே. சிலகுறிப்புகளில் வரும் ஜோசப் ஜேம்ஸ் ஓர் அறிவுஜீவி சகமனிதனின்று வேறுபட்டவன். முளங்காடு கிருஷ்ணப்ப வைத்தியர் அய்யப்பனால் “அவனது உள்ளொளி இருளில் மிருகங்களின் கண்கள்போல பரவசம் ஊட்டக்கூடியது” என வியந்தோதப்பட்டவன். ஜே.ஜே. அறிவாளி மட்டுமல்ல, கூர் உணவிற்குச்சொந்தக்காரன், அடுத்து அவனை மொய்க்கும் கூட்டமிருக்கிறது: முதலாவதாக நம்மிடம் வளவளவென்று உரையாடுகிற கதைசொல்லி, (உண்மையில் தான் தேடி அலையும் ஜே.ஜேவைக் காட்டிலும் விஷயஞானமுள்ளவனென எனச் சொல்லாமல் சொல்கிற பாத்திரம், அடுத்து அய்யப்பன், டிமிட்ரி, திருமதி சாராம்மா என ஒவ்வொருவரையும் காலார நடக்கவிட்டு கதைசொல்கிறார் சு.ரா.

ஜே.ஜே., கதைசொல்லி, அய்யப்பன், டிமிட்ரி, திருமதி சாராம்மா எங்கிருந்து முளைத்தார்கள். இவர்களை சு.ரா. எப்படி கண்டுபிடித்தார். அம்மனிதர்களின் குணங்கள் எவ்வாறு தீர்மானிக்கப்பட்டன. அவர்களுக்குள்ளே ஆசிரியரா? அவர்களுக்கு வெளியே ஆசிரியரா? என்ற கேள்விகளுக்கு விடைகள் அறிய உங்களைப்போலவே எனக்கும் ஆர்வம். கேல் காட்வினிடம் இதற்குப் பதிலிருக்கிறது. A Mother and Two daughters நாவலில் தமக்கேற்பட்ட அனுபவங்களை அவர் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். நாவலின் கதை மூன்று வெவ்வேறு குணத்துடனான பெண்களுக்கிடையேயான பந்தத்தைச் சொல்வது. ஒவ்வொருத்திக்கும் பிரத்தியேக குணமிருக்கிறது அப்பிரத்தியேக குணம், பிற இருவரின் குணத்துடனும் செயல்பாடுடனும் உரசுகிறபோது ஏற்படுகிற சிக்கல்களால் எவ்வாறு மாற்றி கட்டமைக்கப்படுகிறதென்பதை கதையில் தெரிவிக்கவேண்டும்.

மூன்று பெண்களின் பிரத்தியேகக்குணத்தை காட்சிஊடகத்தில் பார்வையாளர்களுக்கு தெளிவுபடுத்துவது சுலபம். ஆனால் இலக்கியமென்று வருகிறபொழுது. அவள் முகம் தட்டையானது, பெரிய கண்கள், கோபக்காரி எனக்கூறி வர்ணனைபோல குணத்திற்கும் ஒரு சொல்லைப்போட்டு முடித்துக்கொள்ளலாமா? கூடாதென்கிறார் கேல் காட்வின். மூன்று பெண்களின் குணத்தை பிரித்தறிவதற்கான சூழலை நாவல்களில் வாசகனுக்கு ஏற்படுத்தித் தரவேண்டுமென்கிறார். நாவலின் ஏதாவதொரு பக்கத்தை புரட்டி அங்கு வாசிக்கிற சொற்களை, அதன் தொனியைவைத்து கதைமாந்தர் யார்? அவளுடைய குணம் என்ன? என்று கண்டுணர வேண்டுமாம். அதைச்செய்யமுடிந்தால் நாம் நல்ல எழுத்தாளன்.  அக்கதைமாந்தரை எப்படி உருவாக்குவது, எங்கே கண்டுபிடிப்பது?

A Mother and Two daughters நாவலை ஆரம்பித்தபோது அவரது மனதில் கீழ்க்கண்டவகையில் சிந்தனை ஓடியிருக்கிறது. நாவலில் இடம்பெறவிருக்கிற  மூன்று பெண்களில் ஒருத்திகூட இவரது குணத்தின் அடிப்படையில் உருவாக்கப்படபோவதில்லை என்கிறபோதும், தம் ஒருத்தியால் மூன்று பேர் இடத்தையும் இட்டு நிரப்பமுடியுமென தோன்றியிருக்கிறது. முதலில் நாவலில் தாயாக வருகிற ‘நெல்’ (Nell) என்ற பாத்திரத்தின் விதவை என்ற அடையாளமோ, இரண்டு பெண்களுக்கு அன்னையென்ற குடும்பத் தகுதியோ, அவளுக்கு வயது 63 ஆக இருக்கலாமென தீர்மானித்ததோ ஆகிய எதுவுமே கேல் காட்வினோடு தொடர்பு உடையதல்ல, பதிலாகச் சுதந்திரத்தின் பெயரால் தனிமை நம்மை அநாதையாக்கிவிடுமென்ற உண்மையை இவரைப்போலவே நாவலில் இடம்பெறும் வயதானப்பெண்மணியும் தெரிந்துவைத்திருப்பவளென்று  எழுத்தாளரால் காட்டமுடிந்தது. நாவலில் வரும் இரண்டாவது பாத்திரம் கேட், பெண்மணியின் மூத்த மகள். ஒரு கலகக்காரி, மரபுகளுக்கு எதிரானவள். வாழ்க்கையில் சிற்சில சமயங்களில்  இவரும் அவ்வாறு நடந்துகொண்டிருக்கிறாராம், அக்குணத்தைக் கொஞ்சம் அழுத்தமாகவும் விரிவுபடுத்தியும் சொல்லநினக்க, கேட் பெண்பாத்திரம் உருவாயிற்று என்கிறார். நாவலில் வரும் மூன்றாவது பெண்ணும் அவ்வாறே உருவானதுதானாம். ஆக எந்தவொரு பாத்திரத்திலும் நம்மை நுழைத்து அப்பாத்திரத்தின் வழியில் சிந்தித்து செயல்பட கதைமாந்தர்கள் உயிர்ப்பித்துவிடுகிறார்கள்.

இனி கதையின் துணைமாந்தர்கள், படைப்பிற்குள் எப்படி நுழைகிறார்கள்?  உதாரணமாக கதையில் வரும் மூத்த பெண் கேட் என்பவள் எதிலும் முரண்பட்டவள், அவளொரு ஆணைச் சந்திக்கவேண்டும். சண்டைபிடிக்கும் குணத்தவளான கேட்டிற்கு இருவகையான ஆண்களைப் படைக்கலாம். கேல் காட்வின் தீர்மானித்தது அவளைச் சீண்டக்கூடிய ஆணை. அதிகம் பணம்படைத்த மனிதர்களை அவள் நம்புவதில்லை என்பதால், ஆணை ஒரு கோடீஸ்வரனாகப்படைக்கிறார். அவன் எப்படி கோடீஸ்வரனானான்? அவளுக்குப் பிடிக்காத இரசாயண பூச்சிக்கொல்லி வியாபாரம் செய்து பணம் சம்பாதித்தவனாக அவனை மாற்றுகிறார். தமது தொழிலை நியாயப்படுத்த அவனுக்கும் காரணங்கள் இருக்கின்றன. கதையில் வரும் கேட் என்பவளுக்குமட்டுமல்ல பொதுவாக நம்பகத்தனமைக்கொண்ட கதைமாந்தர்களை உருவாக்கவேண்டும். அப்பாத்திரம் என்ன பேசினால் எப்படி நடந்துகொண்டால் அதன் பண்பிற்கு நம்பகத்தனமையை ஏற்படுத்தித்தரமுடியுமென சிந்திக்கவேண்டுமாம்.

பாத்திரங்களின் தேர்வும், மொழியும்:

1 பாத்திரங்களின் தோற்றம்: பூனைக்கண்கள், சுருட்டைமுடி, அரும்புமீசை என்று எழுதிக்கொண்டிராமல்  அவர்கள் வாழ்க்கைமுறையைப் பிரதிபலிக்கிற உடல்மொழி சமிக்கைகளில் கவனம் செலுத்துவதென்பது முதலாவது.

2. பிறரைச் சந்திக்கிறபோதும், உரையாடுகிறபோதும் கதை மாந்தரின் மன நிலை, அவர்கள் கவனம் மற்றும் கவனமின்மை -இரண்டாவது

3. பாத்திரங்களின் உரையாடல் எப்படி அமையவேண்டும்: வளவளவென்று பேசுவதா? உளறுவதா? சுருக்கமாகவா? திணிக்கின்ற வகையிலா? – என்பது மூன்றாவது.

4. பேச்சும் பேச்சின் தொனியும்: கட்டளை, கிண்டல், வருத்தம்?  என எழுத்தில் நுண்ணுணர்வைப் பாய்ச்சுவது நான்காவதாகச் செய்யவேண்டியது

கதைமாந்தர்களையும், துணமாந்தர்களையும் அவர்களுடனான உறவுகளையும் தீர்மானிக்கமுடிந்தால் கதைசொல்லலில் பாதி கிணறு தாண்டிவிட்டோம். இனி மிச்சமுள்ள கிணறைத்தாண்ட நாம் செய்யவேண்டியது பாத்திரங்கள்தோறும் கூடுபாய்ந்து கதைமாந்தருடைய தனித்த அடையாளத்தை இறுதிவரைக் கட்டிக்காப்பது.

———————————————–

கவனத்தைப்பெற்ற பதிவுகள் அக்டோபர்-10:

1. வெடிக்கு மருந்தாகும் மக்கள் – முத்துகிருஷ்ணன்

அணமையில் சிவகாசியில் நடைபெற்ற கோரவிபத்தையும் அதற்கான நதிமூலங்களையும் கட்டுரை விவரிக்கிறது. பிரச்சினகளின் வேர் தேடி எழுதுகிற முத்துகிருஷ்ணன் காலங்காலமாக இத்தொழிலில் ஈடுபட்டுவரும் மக்களின் தள்ளாடும் உயிர்வாழ்க்கையையும், அவர்களின் இரத்தத்தை உறிஞ்சும்  கூட்டத்தையும், கண்டும் காணாததுபோல  இருக்கிற அரசாங்க எந்திரங்களின் கையாலாகாதத் தனத்தையும் பின்புலத்திலுள்ள அரசியலையும் பிட்டுவைத்திருக்கிறார். தமிழில் உருப்படியான படைப்புகள்  அபூர்வமாகவே வருகின்றன. ஆக்கபூர்வமான; சமூக அக்கறையுடன் எழுதப்பட்ட கட்டுரை. நண்பர்கள் கட்டாயம் வாசிக்கவேண்டும்.

http://amuthukrishnan.com/

2. இடிந்தகரைXகூடங்குளம்: நிரந்தரத்தைத் தற்காலிகமாக்கும் எத்தணிப்புகள்- அ.ராமசாமி

இடிந்தகரை கூடங்குளம் சிக்கல்களில் ஊடங்களின் பங்களிப்பை நுணுக்கமாக ஆய்கிறது கட்டுரை.  இரண்டுவிதமாக ஊடகங்கள் உண்டு. மக்கள் நலனில் அக்கறைகொண்டு இயங்கும் ஊடங்கங்கள், அதுபோல பாவலா செய்யும் ஊடகங்கள். உலக அளவில் ஊடக அறம், சுதந்திரமென்பது பெரும்பாலும் இதழின் உரிமையாளர்களுடைய நலனைக் கருத்திற்கொண்டது. கூடங்குளம் தொடர்பான செய்திகளை தினசரிகளில் வாசிக்கிறபோதே பத்திரிகைகளின் நிறமும் குணமும் சந்தி சிரிக்கின்றன. கட்டுரை ஆசிரியர் இடிந்தகரை போராட்டகாரர்ளை அரசாங்கத்திடம் மட்டுமல்ல நமது ஊடகங்களிடமுங்கூட. கவனத்துடன் இருக்கவேண்டுமென எச்சரிக்கிறார்: அரசியல்வாதிகளைப்போலவே பெரும்பான்மையான ஊடகங்கள் எப்போ மக்களின் உண்மையான நலன்களில் அக்கறைகொண்டவையல்ல என்பது அவரது வாதம்.

http://ramasamywritings.blogspot.fr/2012/10/x.html#more

3.காலச்சுவடு கண்ணன் பதில்கள்

தமிழ்நாடு படைப்புலகம் தமிழ்நாடு அரசியலுலகத்திற்கு நிகரானது. அரசியலிலுள்ள அவ்வளவு கயமைகளும்  போலிகளும், பசப்புகளும், பாசாங்குகளும், வியந்தோதும் கூட்டத்தை விலைக்கு வாங்கும் கூட்டமும் அங்குண்டு. பல நேரங்களில் சமூக அக்கறைகொண்டும், சிறுமை கண்டும் கொந்தளிப்பவர்கள், நடிப்பில் களைத்து அரிதாரத்தை வெகுசீக்கிரம் கலைத்துக்கொள்கிறார்கள். அசல் வாழ்க்கையில் வேறு மனிதர்கள் என்பதை புரியவைக்கிறார்கள். என் அனுபவத்தில் பத்தாண்டுகளில் கண்ணன் சொல்லுக்கும் செயலுக்கும் பேதமற்று இயங்குபவர். ‘எதுவரை’ இணைய தளத்தில் அவருடைய பதில்கள் என்று பிரசுரிக்கப்பட்டுள்ளவை ‘கேள்வியும் நானே பதிலும் நானே’ இரகமல்ல.  சு.ரா.வுக்கு பரிசளிக்கக்கூடாதென்ற அரசியல், பிள்ளைகொடுத்தாள்விளை சிறுகதை சர்ச்சையென பல பிரச்சினைகளைத் தொட்டிருக்கிறார். பதில்களில் கடுமையான வார்த்தைகளைத் தவிர்த்திருக்கலாம், அவர் எரிச்சலுற்றிருப்பது வெளிப்படை. செயல்பாடுகளில் நியாயமிருப்பின் உரத்த குரலைத் தவிர்ப்பது சாத்தியம்மல்ல. இப்பதில்களை முடிந்தால் தொகுத்து ஒரு நூலாக கொண்டுவரவேண்டுமென அவரிடம் சொல்லியிருக்கிறேன். வழக்கம்போல ஜெர்மன் புத்தகக் கண்காட்சியில் இவ்வருடமும் கண்ணனைச் சந்திக்கிறேன்.

http://eathuvarai.net/

4.. வால் பசங்க வராங்க- ஞானி

பிரதமர் மன்மோகன்சிங் தலமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தின்மீது வேளைக்கு ஒன்று நாளைக்கு ஐந்து என ஊழல் குற்றசாட்டுகள். காங்கிரஸ்காரர்களுக்குப்பழகிவிட்டது. ”நல்லமாட்டுக்கு ஒரு அடி’ என்ற சொலவடை கிராமத்திலுண்டு. மழையில் எருமைமாடுகள் அதுபாட்டுக்கு நனைந்துகொண்டு அசைபோட்டபடி படுத்திருக்கும். தலைக்கு மேலே வெள்ளம், இதில் சாண் போனாலென்ன முழம்போனாலென்ன? எரிகின்ற வைக்கோல்போரில் பிடுங்கினமட்டும் இலாபம் என்பதுபோல அவசர அவசரமாக அரசின் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. கூட்டணிகள் எதிர்கட்சிகள் என்றிருக்கிறவர்களின் பலங்களையும் பலவீனங்களையும் தெரிந்துவைத்திருப்பதால் சாதுர்யமாக காய் நகர்த்த முடிகிறது.  குற்றத்தை மறுப்பதற்குப் பதிலாக, அவருக்கும் அதில் பங்குண்டு எனசொல்லவும் முடிகிறது. சில்லரைவணிகத்தின் பின்னிருக்கும் அரசியலை வழக்கமான பாணியில் விளாசியிருக்கிறார் ஞானி.

http://gnani.net/

—————————————-

நாகரத்தினம் கிருஷ்ணா சிறுகதைகள்-4

அவனோட கணக்கு

கதை பிறந்தகதை: இக்கதைக்கு காரணம் சொல்ல என்ன இருக்கிறது. உலக நடப்புகளை பார்த்துவருகிறோம். எத்தனை கூச்சமில்லாமல் பேசுகிறார்கள். இனத்திற்கு கொள்ளிவைத்துவிட்டு இனத்தலைவர்கள் எனச் சொல்லிக்கொள்கிறார்கள். கை இரத்தம் உலரும் முன்பாக காந்தி சிலைக்கு மாலை போடுகிறார்கள். நாத்திகனென்று சொல்லிக்கொள்பவன்கூட அவனவன் வழியில் பிராயசித்தம் தேடுகிறான். சலவைக்குத் துணிபோடும்போதுகூட சட்டைப்பயை ஆயிரம்முறை பரிசோதிக்கும் அரசியல் வாதி, இலவசத்தை வாரிவழங்குவதற்கு ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறான் என்பதை யோசித்ததால் பிறந்த கதை. காந்தி, காமராஜ், அண்ணா மன்னிப்பார்களாக! இக்கதை திண்ணை இணைய இதழில் மார்ச் 9 -2003ல் பிரசுரமானது.

அவனோட கணக்கு

அவர் நினைவிலிருந்து எல்லாம் துடைக்கப்பட்டிருந்தது. சுத்தமாக. அட்சரசுத்தமாக. ‘நான்’ என்ற  மானுடப் பிறவியின் கடந்த கால கர்மாக்களைத் திரும்ப அழைக்க முயன்று களைத்துப் போயிருந்தார். இறுதிச் செயற்பாடுகள்மட்டும் அப்போதைக்கப்போது நினைவைத் தொட்டுக் கண்ணாமூச்சி ஆடின.

காலையில் காபியைக் குடித்துவிட்டு, காலில் விழுந்த கட்சித் தொண்டர்களை எழுப்பியது நிஜம். பின்னர் தலைமைச்செயலர், போலீஸ் கமிஷனர், மூணாறு வேணுகோபால் ஜோஸ்யர் என கலந்தாலோசித்துவிட்டுத் தலமைச் செயலகத்துக்குப் புறப்பட இருந்ததும் நிஜம். முதலும் கடைசியுமாக மார்புவலி அந்தச் சமயத்தில் அவருக்கு வந்ததும் நிஜம். ட்ராபி·கை ஸ்தம்பிக்கச் செய்து ஓடவைத்த ஆம்புலன்ஸ், தமிழ்நாட்டின் முதற்தர மருத்துவ மனை, நாட்டின் தலைசிறந்த டாக்டர்கள், மருத்துவ செலவுக்கு அரசு கஜானாவைத் திறந்துகொள்ள முடிந்த சாமர்த்தியம், மத வேற்றுமையின்றிப் பிரார்த்தனையென எல்லாமிருந்தும் அவரது ஆயுளைக் கூட்டமுடியவில்லை. அதற்குப்பிறகு நடக்க வேண்டியவை நடந்து முடிந்து, இங்கே வந்திருந்தார்.

பெரிய மாளிகையில் வண்ண ஓவியங்களால் நிரப்பப்பட்ட விதானம், சிற்பங்கள் நிறுத்திவைக்கப்பட்ட கூடம். தீபங்கள் குறைந்து பின்னர் வளர்ந்து, வரிசையில் முடிவின்றித் தொடர்கோடாய் எரிய, சாளரங்கள் வழியே ஊதற்காற்று ஆக்ரமித்துக் கொண்டிருக்க வரிசையாக இருக்கைகள். ஆயிரக்கணக்கில் காத்திருக்கின்ற மக்கள். கறுப்பு, வெள்ளை, மஞ்சள், பழுப்பு எனக் கதம்பச் சாயலில், முகம் சோர்ந்து தங்கள் முறைக்காகக் காத்திருக்கிறார்கள். சிறிது நேரத்திற்கு முன்னர்தான் 235767 எண்ணுள்ளவரை கூப்பிட்டிருந்தார்கள். இவரது அட்டையைப் பார்த்துக் கொண்டார். வரிசை எண்:4563980 என்றிருந்தது. இங்கே காத்திருப்பதில் நேரம்கழிவதை உணர்வது கடினமாக இருந்தது. எனினும் அறிமுகமற்ற அந்த இடத்தின் மீதும், மனிதர்கள் மீதும் எரிச்சல். பல்லைக் கடித்துக்கொண்டு காத்திருந்தார். திடீரென அவரது எண் அழைக்கப்பட எழுந்து சென்றார்.

விஸ்த்தாரமான பெரிய அறையில் ஏஸி முணுமுணுக்க, இன்டர் காம், கம்ப்யூட்டர் என ஒரு நவீன அலுவலகத்தின் சகல சம்பத்துகளும் சூழ நடுநாயகமாக அந் நபர். அவர் உட்கார்ந்திருந்த தோரணை இவரது ரத்தத்தில் உஷ்ணமேற்ற, எச்சிலைக்கூட்டி வெறுப்பினை விழுங்கிக் கொண்டார்.

– வா! உட்காரு, சிவசாமிதானே உன்பேரு? – எடுத்த எடுப்பில் ஏக வசனத்தில் பெயர் சொல்லி அழைக்கப்பட  ஆடிப்போய்விட்டார்.

–  இருக்கலாம், சரியா ஞாபகம் இல்லை. போகட்டும் நீ சித்திரகுப்தன் தானே ? தன் சந்தேகத்தைத் தெளிவு படுத்திக்கொள்ள விரும்பி, எதிர்க்கேள்வியை வைத்தார்.

–  மிஸ்டர் சிவசாமி! இங்கே நான் உன்பேரைச் சொல்லலாம், நீ என் பேரைச் சொல்லி அழைக்கக் கூடாது. எங்களைப் பொறுத்தவரையில் மாரைடைப்புண்ணு சொல்லி வந்திருக்கிற உயிர்கள்ல நீ 705 வது ஆள். கொஞ்சம் இரு. உன்னைப் பற்றி என்ன பதிவாயிருக்குண்ணு பார்க்கிறேன்’, அவன் விரல்கள் கம்ப்யூட்டர் கீ போர்ட்ல ‘கட கட ‘ வென்றது. பிரிண்டரை ஆன் செய்து அச்சிட்ட காகித்தைக் கிழித்து எடுத்து கண்களின் நேர்கோட்டின்கீழ் சற்றுத்தள்ளி வைத்துப் படித்தவன், மெல்லிய சீழ்க்கையில் அதிருப்தியைத் தெரிவித்துக் கொண்டான்.

– பெயரைத் தெரிஞ்சுகிட்ட. மற்றத் தகவல்கள் வேண்டாமா ? கேளு! என்று சொல்லிவிட்டு, இவரது பதிலை எதிர்பார்க்காமலேயே கடகடவென ஒப்புவிக்க ஆரம்பித்தான்:’தொழில்: அரசியல்வாதி. குடும்பநிலை:பிரம்மச்சாரி. இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தை. ஊழல் செய்து சம்பாதித்த சொத்து உலகமெங்கும் பரவியிருக்கு, தொடர்ந்தான்.

– ஆனால் அதற்காக கடவுள்களுக்கு நிறைய செஞ்சிருக்கன். காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிவரை எந்தக் கோவிலையும் விட்டதில்லை. காணிக்கை, நாள் கிழமைகள்ல உபவாசம், முடிஞ்சப்பல்லாம் யாகம்’. இதெல்லாம் அதுல குறிப்பிட்டிருக்கணுமே ? ‘ இடையில் குறுக்கிட்டு சந்தேகத்தை எழுப்பினார்.

– ம்…அப்படி எதுவும் உன்னோட ‘பயோடட்டாவில’ இல்லையே! பற்களுக்கிடையில் பென்சிலை கொண்டுபோய்க் கடித்துத் துப்பிவிட்டுச் சொன்னான்.

– சிவசாமிக்குத் தைரியம் வந்தது. முதன் முறையாக நிமிர்ந்து உட்கார்ந்தார்.

– என்னோடக் கணக்குப்படி  சொர்க்கந்தான் கொடுத்திருக்கணும். என்னோட காணிக்கைக்கும் செய்திருக்கின்ற யாகத்திற்கும், இக் கும்பலில் உட்கார வைத்திருக்கவே கூடாது. ஆரம்பத்திலேயே சொர்க்கத்துக்கு ஏற்பாடு செய்திருக்கணும்.

– இப்படி குறுக்கே பேசக்கூடாது. இங்கே நாந்தான் பேசணும். உனக்கு என்ன செய்யணும்னு எங்களுக்கு நல்லாத் தெரியும். இப்போதைக்கு நீ மறுபடியும் கீழே போகவேண்டியிருக்குது, – சித்திர குப்தன் தொடர்ந்தான்..

– கீழேன்னா?

– பூமிக்கு.

– அப்ப எனக்கு மறு பிறவின்னு சொல்லு.. ‘நேற்று ‘நான் எப்படி இருந்தங்கறத கவனத்துல வச்சுகிட்டு செஞ்சா சரி. – சிவசாமி முதன் முறையாக அடக்கி வாசித்தார்.

– ம்.. உன்னோட ‘நேற்று’ மட்டுமல்ல ‘இன்று’ ‘நாளை’ கூட நாங்க அறிஞ்சதுதான். பிறப்பு அதனையொட்டிய கர்மா, ஊழ் எல்லாமே நாங்க தீர்மானிக்கறதுதான். இதுல உன்னோட பங்கு நீ எப்படி அதனைச் சந்திக்கிறங்கிறது அல்லது செயல்படுத்தறங்கிறதுதான்.’

-என்னவோ சொல்லி குழப்புற. முடிவா என்ன சொல்ல வர?

– இன்றைய தேதியில உனக்கு சொர்க்கமும் இல்லை நரகமும் இல்லைன்னு சொல்லவந்தேன்.. கைலாயம் வைகுண்டம் இரண்டுமே உன்னை ஏத்துக்க முடியாதுண்ணு கையை விரிச்சுட்டாங்க. நீ கடவுளுக்குக் காணிக்கை கொடுத்தங்கற. நான் முன்னமே சொன்ன மாதிரி, உன்னோட புண்ணிய லிஸ்ட்ல அதனைப் பற்றிய எந்த அடையாளமும் இல்லை. அதற்கான காரணத்தைக் கடவுள்கள் கிட்டத்தான் கேட்கணும் ‘

இடையே இண்டர்காம் ஒலிக்க அவரை அமைதிப்படுத்திவிட்டு, சித்திரபுத்திரன் ரிசீவரைக் கையிலெடுத்தான்.

– சார் இங்கே, ஆப்ரிக்காவில் மனித மாமிசம் சாப்பிடும் ஒருவனைச் சிங்கம் அடித்துக் கொன்றதால், அவசர பிரிவுக்குக் அழைத்து வந்திருக்கிறார்கள், என்ன செய்யலாம் ?

– நல்ல மனிதன், அவனுக்கு வேண்டிய உதவிகள் செய்து சொர்க்கத்துக்கு அனுப்பி வை!

– என்ன இது அநியாயமாயிருக்குது. மனிதனை உயிரோடு சாப்பிடுபவனுக்கு சொர்க்கமா?

– ஆமாய்யா!.. அப்படித்தான் எங்க கம்ப்யூட்டர் சொல்லுது. உங்களை விட அவன் தேவலாமாம். உனக்கு மறு பிறவியான்னு கேட்ட, சொல்லப்போனா பூமிக்கு உன்னை மறுபடியும் அனுப்புவது, தண்டனைக்காகன்னு சொல்லலாம்.

– எப்படி ?

– அப்பாவி வாக்காளனா.

————————————————————————————————————————-

மொழிவது சுகம்- அக்டோபர் 5 -2012

 1. Domaine de Courson

நீங்கள் இயற்கையை உபாசகராகவோ அல்லது தோட்டக் கலைஞராகவோ இருந்து பாரீஸ¤க்கும் வரநேர்ந்தால், பாரீஸ¤க்கருகில்  ‘எஸ்ஸோன்’ (Essonne) என்ற புறநகரிலிருக்கும் தாவரஇயற் பூங்கா ‘Domaine de Courson’ உங்கள் பயணத் திட்டத்தில் இடம்பெறவேண்டும். தோட்டக்கலைஞர்களும், தாவரஇயல் விற்பன்னர்கள் கடந்த நான்கு நூற்றாண்டுகளாக தங்கள் கைத்தூரிகைக்கொண்டு  விதைத்து, நட்டு, பதியமிட்டு வளர்த்துத் தீட்டிய பாரீஸின் சஞ்சீவி பர்வதம் அது. வேட்டுவப் பெண்களையும், காட்டுமறவர்களையும் எதிர்பார்க்கவேண்டாம். ஆனால் பாரதிதாசன் வர்ணிக்கிற அத்தனை காட்சிகளுக்கும் உத்தரவாதம் சொல்லலாம். இயற்கையின் எல்லா கோலத்தையும் காணலாம். பர்வதத்திற்குப் பதிலாக, பதினெட்டாம் நூற்றாண்டைச்சேர்ந்த நன்கு பராமரிக்கப்பட்டுவருகிற கோட்டை. வெர்சாய் மாளிகை¨க்கும் அதனை ஒட்டிய பூங்காவிற்கும் நீங்கள் இரசிகரென்றால், நீங்கள் மகிழ்ச்சி அடையக்கூடும். ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதத்தில் (19-21 தேதிகளில்) நடைபெறும் தாவரஇயற் கண்காட்சியில் ஐரோப்பாகண்டத்தைச் சேர்ந்த உலகின் மிகச்சிறந்த தோட்டக் கலைஞர்கள் பங்கேற்கிறார்கள்.  இவ்வருடத்திய நிகழ்ச்சி நிரலில் எனது பிரத்தியேக கவனம் பெற்ற செய்தி ·பபியன் டுஷெ (Fabien Ducher) என்ற தோட்டக் கலைஞர் தாம் உருவாக்கிய மஞ்சளும் ஊதாவுமான புதிய ரோஜாமலரொன்றுக்கு பிரான்சு நாட்டின் மூத்த எழுத்தாளரும் பெண்ணியல்வாதியுமான பெனுவாத் க்ரூ (Benoச்te Groult) பெயரைச் சூட்டுகிறார்.

2. பெனுவாத் க்ரூ (Benoîte Groult)

இருபதாம் நூற்றாண்டிற்கென்று அடையாளப்படுத்தவேண்டிய பெண்ணியப் போராளிகளுள் ஒருவர். முகத்தில் எப்போதும் தயார்நிலையில் இருக்கும் புன்சிரிப்பு, அருவிபோல சலசலத்தபோதும் பேச்சில் தெளிவு, அளந்து தீர்மானமாக வெளிப்படும் சொற்கள், எதிராளியை சிநேக வட்டத்திற்குள் எளிதில் ஈர்க்கும் வசீகரம், பெண்ணியத்தின் அத்தனை கூறுகளையும், அதன் உள்ளீடுகளையும் அறைகூவலுடன் வெளிப்படுத்தும் மனோபாவம் கொண்ட பெண்மணி. ஏனைய பிரெஞ்சு பெண்ணியல்வாதிகளைப் போலவே இடதுசாரி. நாவல்கள், மற்றும் கட்டுரைகள் வடிவத்தில் உள்ள இவரது படைப்புகள் அனைத்துமே பெண்ணியம் சார்ந்தவை.

1920ம் ஆண்டு பாரீஸில் பிறந்தார். தந்தை ஒரு புகழ்பெற்ற அலங்காரக் கலைஞர், தாயார் நிக்கோல் புகழ்பெற்ற ஆடை அலங்கார கலைஞர் போல் புவாரெவினுடைய சகோதரி, ஒரு கம்பீரமானப் பெண்மணி. Picasso, Picabia, Jouhandeau, Paul Morand போன்ற ஓவியர்கள், படைப்பாளிகள் வந்துபோகிற இல்லம். தாயாரின் வழிகாட்டுதலில் இளமை முதற்கொண்டே இலக்கியங்களில் ஆர்வம். பிரெஞ்சு இலக்கியத்தில் முதுகலை படிப்பு, கூடுதலாக இலத்தீன், கிரேக்கம் ஆங்கில மொழிகளில் தேர்ச்சி. ஆரம்பக்காலங்களில் பிரெஞ்சு இலக்கிய பேராசிரியராகப் பணியாற்றியவர், பின்னர் இதழியலுக்கு வருகிறார். பெண்கள் தொடர்பான Elle, Marie-Claire, Parent போன்ற சஞ்சிகைகளிலும் பணிபுரிந்திருக்கிறார். 1984 – 1986ம் ஆண்டுகளில், முக்கிய பணிகளிலும், அதிகாரமட்டத்திலும் பெண்பால் பெயர்களை ஏற்படுத்தவென்று மொழியியல் அறிஞர்கள், எழுத்தாளர்கள் கொண்டு இயங்கிய அரசு ஆலோசனை சபையினைத் தலமையேற்று நடத்தியவர். திருமண அனுபவங்கள் ‘பெண்ணியம்’ குறித்து பெரிதும் பேசவும் எழுதவும் இவருக்கு உதவின. தனது சகோதரி புளோரா’வுடன் (Flora) இணைந்து முதல் நாவல் JOURNAL A QUATRE MAINS 1958ம் ஆண்டில் வெளிவந்தது. தொடர்ந்து சகோதரிகள் இருவரும் கூட்டாக இரண்டு நாவல்களை எழுதினார்கள். பிரெஞ்சு பெண்களின் அவலநிலையைப் பேசுகின்ற LA PART DES CHOSES, ‘AINSI SOIT ELLE என்ற இருகட்டுரைத் தொகுப்பும் மிகப்பெரிய வெற்றியை அளித்தன. LES TROIS QUARTS DU TEMPS, LES VAISSEAUX DU COEUR முக்கிய நாவல்கள்.

பெனுவாத் வாழ்க்கையும் எழுத்தும், இற்றை நாள்வரை பெண்ணினத்தினை முதன்மைப்படுத்துவதல்ல. ஆணுக்கு நிகரென்று பெண்ணைச் சொல்கிறார். எந்த ஜீவனையும்போலவே ‘அவள்’ முதலில் ‘தனக்கானவள்’ எனபதை வலியுறுத்கிறார்: கட்டுண்ட பெண்கள், சீரழிந்த பெண்கள், முதிர்ச்சியின் பலம் என ஓயாமல் எழுதுகிறார். தற்போது அதற்கான வயதில் (92) – முதுமையை விவாதத்திற்கு உட்படுத்துகிறார். இவரது ‘நட்சத்திர தீண்டல்’ நாவலில்  ‘மரணம் கண்ணியத்துடன் நிகழவேண்டும் என்றார். அறுபத்தைந்து வயதில் முதியவர்களாகப் பிறந்து எண்பத்தைந்து வயதுவரை முதுமையுடன் வளறுகிறோம், அதுமுதல் நட்சத்திர ஸ்பரிசத்திற்காக நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறோம், அத்தீண்டலுக்கான நாளை தேர்வு செய்வது நாமாகத்தான் இருக்கவேண்டுமென்பது இவரது வாதம். சிமோன் தெ பொவார் (Simone de Beauvoir) எழுத்தில் இருக்கக்கூடிய மெல்லிய நகையுணர்வு இவரது எழுத்திலும் ஊடாடுகிறது.

3. பிலிப் ரோத்

பிலிப் ரோத்த்திற்கும் விக்கி பீடியாவிற்குமான யுத்தம் ஒருவழியாக முடிவுக்கு வந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த செப்டம்பர்மாதம் 7ம் தேதி நியுயார்க்கர் இதழில் விக்கிபீடியாவிற்கு பிலிப் ரோத் திறந்த மடலொன்றை எழுதவேண்டியிருந்தது. http://www.newyorker.com/online/blogs/books/2012/09/an-open-letter-to-wikipedia.html – விக்கிபீடியாவுடன் தனிப்பட்ட அளவில் தாம் எடுத்த முயற்சிகள் நிராகரிக்கப்பட்ட பிறகு வெளியுலகம் அறியவந்தால் தமக்கு வேண்டுகோளுக்கு நியாயம் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பின் பேரில் விக்கிபீடியாவிற்கு எழுதிய பகிரங்க கடிதமது. தம்மைப்பற்றி என்னதான் விக்கிபீடியாவில் எழுதியிருக்கிறார்களென்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் ஒருநாள் நமது எழுத்தாளர் எட்டிபார்த்திருக்கிறார். பிறந்ததேதி, பெற்றோர்கள், பூர்வீகம், படிப்பு, பார்த்த உத்தியோகம், கைப்பிடித்த பெண்கள், எழுதிய நூல்கள், எழுத்தாளர் உருவாக்கிய பாத்திரங்களின் குலம் கோத்திரம்- முக்காலே மூணு வீசம் எல்லாம் சரி- என எழுந்திருக்கையில் ஏதோவொன்று கண்ணிற்பட்டிருக்கிறது, மனிதர் கொதித்துப்போய்விட்டார். எப்படி அபாண்டமாக தீர விசாரிக்காமல் அதை எழுதப்போயிற்று? என்ற கேள்வி. அவரைக் கோபமூட்டும் அளவிற்கு விக்கிபீடியாவில் வந்திருந்த தகவல் கொஞ்சம் சுவாரஸ்யமானது. அவரது ‘The human stain’ நாவல் பற்றிய தகவலது. “நாவலில் வரும் கதைநாயகன் பேராசிரியர் சில்க், உண்மையில் ‘அனத்தோல் ப்ரொயார்'(Anatole Broyard) என்றும், அவரது வாழ்க்கையை ஆதாரமாகக்கொண்டே நாவல் எழுதப்பட்டதென்றும்  விக்கிபீடியா தெரிவிக்கிறது. (தலவற்)களஞ்சியத்தில் நெல் மணிகளோடு, பதர்நெல்லும் கலந்திருக்க வாய்ப்புண்டென எழுத்தாளர் அறியாததது குற்றமல்ல; பதரை நெல்லென்று வாதித்த விக்கிபீடியாவின் பிடிவாதம் அவருக்கு எரிச்சலூட்டியிருக்கிறது. விக்கிபீடியாவை உடனே தொடர்புகொண்டிருக்கிறார். ‘நீங்கள் தெரிவித்துள்ள தகவல் அபத்தம், அதை உடனடியாக நீக்கவேண்டும் அல்லது திருத்தம் செய்யவேண்டும்’ என்றிருக்கிறார்.

விக்கிபீடியா தகவலுக்கு ரிஷிமூலம்: ‘The human Stain’ நூலை விமரிசனம் செய்த நியுயார்க் டைம்ஸ் இதழியலாளர், நாவலில் வரும் பேராசிரியர் சில்க் ஐயும், அக்கதையில் அவர் தம்மை வெளிக்காட்டிக்கொள்ளாத ‘ஆப்ரோ- அமெரிக்கர்’ என்ற உண்மையும் மறைந்த அமெரிக்க எழுத்தாளர் அனத்தோல்ப்ரொயார் என்பவரோடு தொடர்புடையன என்றொரு ஒரு முடிச்சைப் போட்டிருந்தார். இதன் அடிப்படையிலே விக்கிபீடியாவும் தகவலைச் சேர்த்திருக்கிறது. இத்தகவல் பொய்யானது என்ற ரோத் உடைய வாதத்தை விக்கிமீடியா நிர்வாகிகள் ஏற்க மறுத்துவிட்டார்கள். அவர்கள் கூறிய பதில் “உங்கள் தகவல் நம்பகமானதல்ல” பிலிப் ரோத் தமது திறந்த மடலில் பிரச்சினையை நமக்கு விரிவாகவே சொல்கிறார். எழுத்தாளர் அனத்தோல் ப்ரொய்யாரை இரண்டு மூன்றுதடவை சந்தித்ததை ஒப்புக்கொள்ளும் ரோத், நூலை எழுதியபோது தமது கதைநாயகன் சில்கிற்கும் எழுத்தாளர் அனத்தோலுக்கும் உள்ள ஒன்றிரண்டு ஒற்றுமைகளைத் தெரியாதென மறுக்கிறார்.

‘ரோத்’ஐ பொறுத்தவரை, சில்க் பாத்திரம் அவரது நெருங்கிய நண்பர் மெல்வின் டுமன் வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டது. சில்க்கைப்போலவே கல்லூரியில்  வகுப்புக்கு வராத இரு மாணவர்களை ‘Spooks’ (அவர்கள் கறுப்பரினத்தவர் என்ற உண்மை அறியாமலேயே) என்று சொல்லப்போக, நிறவெறியில் உதிர்த்த வார்த்தை என்ற குற்றச்சாட்டிற்கு ஆளாகி எதிர்ப்பு வலுக்க கல்லூரி நிர்வாகம் பேராசிரியர் மெல்வின் டுமனை பணி நீக்கம் செய்ததாகவும், நண்பர் நிறத்தில் வெள்ளைத்தோல் கொண்டவரென்றபோதும்  உண்மையில் ஒரு ஆப்ரோ- அமெரிக்கரென்றும், அவரதுவாழ்க்கை நெருக்கடிகளே நாவலில் சொல்லப்பட்டதென்கிறார், ரோத்.

நமக்கும் எழுத்தாளர் வாதத்தை ஏற்காத விக்கிபீடியாவின் பிடிவாதம் ஆச்சரியத்தை அளிக்கிறது. நான் இப்படித்தான் எழுதினேன் எனச் சொல்கிற எழுத்தாளரை நம்பாமல் ( பிள்ளைக்குத் தகப்பன் யாரென்று பெற்றவளையன்றி வேறொருவர் சொல்லமுடியுமாவென தெரியவில்லை) , ‘அவர் அப்படி எழுதியிருக்கலாம்’ என்கிற ஒரு விமரிசகரின் ஊகத்தை நம்பும் விக்கிபீடியாவின் தகவல்களை சந்தேகிக்கவேண்டியிருக்கிறது. The human Stain நாவல் பற்றிய பக்கத்தில் விக்கிபீடியா தற்போது எழுத்தாளர் மறுப்பையும் பதிவுசெய்திருக்கிறது.

———————————–