அவனோட கணக்கு
கதை பிறந்தகதை: இக்கதைக்கு காரணம் சொல்ல என்ன இருக்கிறது. உலக நடப்புகளை பார்த்துவருகிறோம். எத்தனை கூச்சமில்லாமல் பேசுகிறார்கள். இனத்திற்கு கொள்ளிவைத்துவிட்டு இனத்தலைவர்கள் எனச் சொல்லிக்கொள்கிறார்கள். கை இரத்தம் உலரும் முன்பாக காந்தி சிலைக்கு மாலை போடுகிறார்கள். நாத்திகனென்று சொல்லிக்கொள்பவன்கூட அவனவன் வழியில் பிராயசித்தம் தேடுகிறான். சலவைக்குத் துணிபோடும்போதுகூட சட்டைப்பயை ஆயிரம்முறை பரிசோதிக்கும் அரசியல் வாதி, இலவசத்தை வாரிவழங்குவதற்கு ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறான் என்பதை யோசித்ததால் பிறந்த கதை. காந்தி, காமராஜ், அண்ணா மன்னிப்பார்களாக! இக்கதை திண்ணை இணைய இதழில் மார்ச் 9 -2003ல் பிரசுரமானது.
அவனோட கணக்கு
அவர் நினைவிலிருந்து எல்லாம் துடைக்கப்பட்டிருந்தது. சுத்தமாக. அட்சரசுத்தமாக. ‘நான்’ என்ற மானுடப் பிறவியின் கடந்த கால கர்மாக்களைத் திரும்ப அழைக்க முயன்று களைத்துப் போயிருந்தார். இறுதிச் செயற்பாடுகள்மட்டும் அப்போதைக்கப்போது நினைவைத் தொட்டுக் கண்ணாமூச்சி ஆடின.
காலையில் காபியைக் குடித்துவிட்டு, காலில் விழுந்த கட்சித் தொண்டர்களை எழுப்பியது நிஜம். பின்னர் தலைமைச்செயலர், போலீஸ் கமிஷனர், மூணாறு வேணுகோபால் ஜோஸ்யர் என கலந்தாலோசித்துவிட்டுத் தலமைச் செயலகத்துக்குப் புறப்பட இருந்ததும் நிஜம். முதலும் கடைசியுமாக மார்புவலி அந்தச் சமயத்தில் அவருக்கு வந்ததும் நிஜம். ட்ராபி·கை ஸ்தம்பிக்கச் செய்து ஓடவைத்த ஆம்புலன்ஸ், தமிழ்நாட்டின் முதற்தர மருத்துவ மனை, நாட்டின் தலைசிறந்த டாக்டர்கள், மருத்துவ செலவுக்கு அரசு கஜானாவைத் திறந்துகொள்ள முடிந்த சாமர்த்தியம், மத வேற்றுமையின்றிப் பிரார்த்தனையென எல்லாமிருந்தும் அவரது ஆயுளைக் கூட்டமுடியவில்லை. அதற்குப்பிறகு நடக்க வேண்டியவை நடந்து முடிந்து, இங்கே வந்திருந்தார்.
பெரிய மாளிகையில் வண்ண ஓவியங்களால் நிரப்பப்பட்ட விதானம், சிற்பங்கள் நிறுத்திவைக்கப்பட்ட கூடம். தீபங்கள் குறைந்து பின்னர் வளர்ந்து, வரிசையில் முடிவின்றித் தொடர்கோடாய் எரிய, சாளரங்கள் வழியே ஊதற்காற்று ஆக்ரமித்துக் கொண்டிருக்க வரிசையாக இருக்கைகள். ஆயிரக்கணக்கில் காத்திருக்கின்ற மக்கள். கறுப்பு, வெள்ளை, மஞ்சள், பழுப்பு எனக் கதம்பச் சாயலில், முகம் சோர்ந்து தங்கள் முறைக்காகக் காத்திருக்கிறார்கள். சிறிது நேரத்திற்கு முன்னர்தான் 235767 எண்ணுள்ளவரை கூப்பிட்டிருந்தார்கள். இவரது அட்டையைப் பார்த்துக் கொண்டார். வரிசை எண்:4563980 என்றிருந்தது. இங்கே காத்திருப்பதில் நேரம்கழிவதை உணர்வது கடினமாக இருந்தது. எனினும் அறிமுகமற்ற அந்த இடத்தின் மீதும், மனிதர்கள் மீதும் எரிச்சல். பல்லைக் கடித்துக்கொண்டு காத்திருந்தார். திடீரென அவரது எண் அழைக்கப்பட எழுந்து சென்றார்.
விஸ்த்தாரமான பெரிய அறையில் ஏஸி முணுமுணுக்க, இன்டர் காம், கம்ப்யூட்டர் என ஒரு நவீன அலுவலகத்தின் சகல சம்பத்துகளும் சூழ நடுநாயகமாக அந் நபர். அவர் உட்கார்ந்திருந்த தோரணை இவரது ரத்தத்தில் உஷ்ணமேற்ற, எச்சிலைக்கூட்டி வெறுப்பினை விழுங்கிக் கொண்டார்.
– வா! உட்காரு, சிவசாமிதானே உன்பேரு? – எடுத்த எடுப்பில் ஏக வசனத்தில் பெயர் சொல்லி அழைக்கப்பட ஆடிப்போய்விட்டார்.
– இருக்கலாம், சரியா ஞாபகம் இல்லை. போகட்டும் நீ சித்திரகுப்தன் தானே ? தன் சந்தேகத்தைத் தெளிவு படுத்திக்கொள்ள விரும்பி, எதிர்க்கேள்வியை வைத்தார்.
– மிஸ்டர் சிவசாமி! இங்கே நான் உன்பேரைச் சொல்லலாம், நீ என் பேரைச் சொல்லி அழைக்கக் கூடாது. எங்களைப் பொறுத்தவரையில் மாரைடைப்புண்ணு சொல்லி வந்திருக்கிற உயிர்கள்ல நீ 705 வது ஆள். கொஞ்சம் இரு. உன்னைப் பற்றி என்ன பதிவாயிருக்குண்ணு பார்க்கிறேன்’, அவன் விரல்கள் கம்ப்யூட்டர் கீ போர்ட்ல ‘கட கட ‘ வென்றது. பிரிண்டரை ஆன் செய்து அச்சிட்ட காகித்தைக் கிழித்து எடுத்து கண்களின் நேர்கோட்டின்கீழ் சற்றுத்தள்ளி வைத்துப் படித்தவன், மெல்லிய சீழ்க்கையில் அதிருப்தியைத் தெரிவித்துக் கொண்டான்.
– பெயரைத் தெரிஞ்சுகிட்ட. மற்றத் தகவல்கள் வேண்டாமா ? கேளு! என்று சொல்லிவிட்டு, இவரது பதிலை எதிர்பார்க்காமலேயே கடகடவென ஒப்புவிக்க ஆரம்பித்தான்:’தொழில்: அரசியல்வாதி. குடும்பநிலை:பிரம்மச்சாரி. இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தை. ஊழல் செய்து சம்பாதித்த சொத்து உலகமெங்கும் பரவியிருக்கு, தொடர்ந்தான்.
– ஆனால் அதற்காக கடவுள்களுக்கு நிறைய செஞ்சிருக்கன். காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிவரை எந்தக் கோவிலையும் விட்டதில்லை. காணிக்கை, நாள் கிழமைகள்ல உபவாசம், முடிஞ்சப்பல்லாம் யாகம்’. இதெல்லாம் அதுல குறிப்பிட்டிருக்கணுமே ? ‘ இடையில் குறுக்கிட்டு சந்தேகத்தை எழுப்பினார்.
– ம்…அப்படி எதுவும் உன்னோட ‘பயோடட்டாவில’ இல்லையே! பற்களுக்கிடையில் பென்சிலை கொண்டுபோய்க் கடித்துத் துப்பிவிட்டுச் சொன்னான்.
– சிவசாமிக்குத் தைரியம் வந்தது. முதன் முறையாக நிமிர்ந்து உட்கார்ந்தார்.
– என்னோடக் கணக்குப்படி சொர்க்கந்தான் கொடுத்திருக்கணும். என்னோட காணிக்கைக்கும் செய்திருக்கின்ற யாகத்திற்கும், இக் கும்பலில் உட்கார வைத்திருக்கவே கூடாது. ஆரம்பத்திலேயே சொர்க்கத்துக்கு ஏற்பாடு செய்திருக்கணும்.
– இப்படி குறுக்கே பேசக்கூடாது. இங்கே நாந்தான் பேசணும். உனக்கு என்ன செய்யணும்னு எங்களுக்கு நல்லாத் தெரியும். இப்போதைக்கு நீ மறுபடியும் கீழே போகவேண்டியிருக்குது, – சித்திர குப்தன் தொடர்ந்தான்..
– கீழேன்னா?
– பூமிக்கு.
– அப்ப எனக்கு மறு பிறவின்னு சொல்லு.. ‘நேற்று ‘நான் எப்படி இருந்தங்கறத கவனத்துல வச்சுகிட்டு செஞ்சா சரி. – சிவசாமி முதன் முறையாக அடக்கி வாசித்தார்.
– ம்.. உன்னோட ‘நேற்று’ மட்டுமல்ல ‘இன்று’ ‘நாளை’ கூட நாங்க அறிஞ்சதுதான். பிறப்பு அதனையொட்டிய கர்மா, ஊழ் எல்லாமே நாங்க தீர்மானிக்கறதுதான். இதுல உன்னோட பங்கு நீ எப்படி அதனைச் சந்திக்கிறங்கிறது அல்லது செயல்படுத்தறங்கிறதுதான்.’
-என்னவோ சொல்லி குழப்புற. முடிவா என்ன சொல்ல வர?
– இன்றைய தேதியில உனக்கு சொர்க்கமும் இல்லை நரகமும் இல்லைன்னு சொல்லவந்தேன்.. கைலாயம் வைகுண்டம் இரண்டுமே உன்னை ஏத்துக்க முடியாதுண்ணு கையை விரிச்சுட்டாங்க. நீ கடவுளுக்குக் காணிக்கை கொடுத்தங்கற. நான் முன்னமே சொன்ன மாதிரி, உன்னோட புண்ணிய லிஸ்ட்ல அதனைப் பற்றிய எந்த அடையாளமும் இல்லை. அதற்கான காரணத்தைக் கடவுள்கள் கிட்டத்தான் கேட்கணும் ‘
இடையே இண்டர்காம் ஒலிக்க அவரை அமைதிப்படுத்திவிட்டு, சித்திரபுத்திரன் ரிசீவரைக் கையிலெடுத்தான்.
– சார் இங்கே, ஆப்ரிக்காவில் மனித மாமிசம் சாப்பிடும் ஒருவனைச் சிங்கம் அடித்துக் கொன்றதால், அவசர பிரிவுக்குக் அழைத்து வந்திருக்கிறார்கள், என்ன செய்யலாம் ?
– நல்ல மனிதன், அவனுக்கு வேண்டிய உதவிகள் செய்து சொர்க்கத்துக்கு அனுப்பி வை!
– என்ன இது அநியாயமாயிருக்குது. மனிதனை உயிரோடு சாப்பிடுபவனுக்கு சொர்க்கமா?
– ஆமாய்யா!.. அப்படித்தான் எங்க கம்ப்யூட்டர் சொல்லுது. உங்களை விட அவன் தேவலாமாம். உனக்கு மறு பிறவியான்னு கேட்ட, சொல்லப்போனா பூமிக்கு உன்னை மறுபடியும் அனுப்புவது, தண்டனைக்காகன்னு சொல்லலாம்.
– எப்படி ?
– அப்பாவி வாக்காளனா.
————————————————————————————————————————-
Like this:
Like ஏற்றப்படுகின்றது...