Category Archives: Uncategorized

கதையல்ல வரலாறு- 4

இட்லரின் பிணம் -(தொடர்ச்சி)

3. ஜெர்மனியை நான்குதிசைகளிலும் நேசப்படைகள் சூழ்ந்து கடுமையான தாக்குதல மேற்கொண்டிருந்தார்கள். சோவியத்படைகள் பெர்லிநுக்குள் நுழைந்திருந்தன. யுத்தத்தின் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதாக தீர்மானித்த நேசப்படைதலைவர்களின் கவனம் முழுக்க இப்போது இட்லரை குறிவைத்திருந்தது. பெர்லின் நகரில் கடுமையான பாதுகாப்பு வளையத்தின் உதவியுடன், எவ்விதத் தாக்குதலையும் தாக்குபிடிக்கக்கூடிய இரும்புப்பெட்டகம்போன்ற ரகசிய அறையொன்றில், சோவியத் படைகளின் தம்மை நெருங்கிக்கொண்டிருக்கும் செய்தியை காதில்வாங்கியவண்ணம் முகத்தில் தோல்வியில் நிழலைத் தவிர்த்து அமைதியாகக் கேட்டுக்கொண்டிருக்கிறார். ஏதோ ஒரு அதிசயம் நடந்து தாம் தப்பிக்கக்கூடும் என்ற நம்பிக்கையும் மனிதருக்கு இருந்திருக்கிறது. கடந்த காலத்தில் பிரஷ்ய நாட்டு மன்னர் பிரெடெரிக்கிற்கு இக்கட்டான நேரம் அவரது தலையெழுத்து அவ்வளவுதான் என நினைத்திருந்த நேரத்தில் அவரது எதிரியான ரஷ்ய பேரரசி எலிசபெத் இறப்பு அவரை மீட்டுத்தந்தது எனலாம். அதுபோன்றதொரு அதிட்டம் தமக்கும் வருமென இட்லர் நினைத்திருந்ததாகவும் அதை தமது நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டதாகவும் சொல்கிறார்கள். அவர் நினைத்ததுபோலவே கோயபெல்ஸ¤ம், போர்மெனும் கையில் ஒரு தந்தியுடன் பாதாள அறைக்கு வரவும் செய்தார்கள். அவர்கள் கையிலிருந்த தந்தி ரூஸ்வெல்ட் இறந்த செய்தியை தெரிவித்திருந்தது.

அவ நம்பிக்கைகொண்ட நண்பர்களே பார்த்தீர்களா? கிடைத்திருக்கும் செய்தி என்னவென்று தெரியுமா? ரூஸ்வெல்ட் இறந்து விட்டாராம்., என்ன நான் சொல்வது காதில் விழுந்ததா? எதிர்பார்த்ததுபோலவே ர்ருஸ்வெல்ட் இறந்திருக்கிறான்! – என மகிழ்ச்சியில் கூற, அங்கே உடனடியாக இறுக்கம் குறைந்து சந்தோஷத்தில் மிதக்க ஆரம்பித்தார்கள். ஷாம்பெய்ன் உடைக்கபட்டிருக்கிறது. அடுத்த வந்த நாட்களில் மனிதர் மீண்டும் பழைய தெம்புடன் மிச்சமிருந்த தளபதிகளுக்கும் அவரது படைகளுக்கும் ஆனை பிறப்பித்திருக்கிறார். முதலாவது தளபதி வென்க் (Wenck) படை. பிறபடைகளின் எஞ்சிய வீரர்களெல்லாம் இப்போது இவரது தலமையில் இருந்தனர். அது தவிர இட்லர்மீது இன்னமும் அபிமானம் வைத்திருந்த இளைஞர்கள், முதல் உலகப்போரில் பணியாற்றிய ஜெர்மானியர்களென பலருமிருந்தனர். பூஸ்ஸெ (Bousse)மற்றொரு தளபதியிடம் 40000பேர் வீரர்கள் இருந்ததாகச் சொல்லப்பட்டது. பின்னவர் நென்க் படையுடன் சேர்ந்துகொண்டார். தாக்குதலை கைவிடவேண்டாம் என்கிறார் இட்லர், ‘பழைய நெனைப்புடா பேராண்டிஎன்ற தொனியில் கட்டளையும் பிறப்பிக்கிறார். ஆனால் தளபதிகள் இருவருமே தங்கள் எஜமானர் கட்டளையை அலட்சியம் செய்கின்றனர். இருவருமே மோதுவதைத் தவிர்த்து குறைந்த பட்சம் இருக்கின்ற தங்கள் வீரர்கள் உயிருக்கு எதுவும் நேர்ந்துவிடக்கூடாதென நினைத்தவர்கள்போல அமெரிக்கர்வசமிருக்கும் ஜெர்மன் எல்லைக்குத் திரும்புகிறார்கள். ரஷ்யர்களிடம் தங்கள் உயிருக்கு உத்தரவாதமிருக்காதென்பதை ஊகித்திருந்தார்கள். பாதாள அறைக்குள்ளிருந்துகொண்டு தமது குரலுக்கு இன்னமும் செவிமடுக்கிறார்களென என நினைத்ததுபோல தொடர்ந்து இட்லரிடமிருந்து ஆணைகள் இவர்களுக்குக் கிடைத்தன. அவர்தான பிறப்பித்தாரா என்பது ஆய்வுக்குரிய விஷயம். ஏனெனில் பாதாள அறைக்குள் பதுங்கியிருந்ததாகசொல்லப்பட்ட இட்லர் உலகத்தையே நடுங்கவைத்த பழையவரல்ல. இவர் வேறு.

4. ஜூலை 20, 1944ம் ஆண்டு இட்லர் மீது அவரது கடந்தகால அபிமானிகளால் நடத்தப்பட்ட தாக்குதல் தோல்வியை அடைந்ததென்றாலும், அச்சம்பவம் அவரை அரைமனிதராக மாற்றியிருந்ததாகச் சொல்கிறார்கள். வலதுகாலை அசைக்கமுடியாத நிலை. வலது கரமோ எந்நேரமும் நடுங்கிக்கொண்டிருந்தது. முகத்தில் தசைநார்களோ சுருங்குவதும் விரிவதுமாக இருந்திருக்கிறது. தலைவேறு ஆட்டம்போட்டபடி இருந்திருக்கிறது. ஆகமொத்தத்தில் மிகப் பரிதாபமானதொரு நிலை. ஏப்ரல் மாதம் 28ந்தேதி (1945) பெர்லின் ஒரு சில பகுதிகளில் நாஜிப்படையினர் தாக்குப்பிடிக்க முடிந்த இடங்களைத் தவிர்த்து மற்றபகுதிகளில் ரஷ்யர்கள் முன்னேறிக்கொண்டிருந்தனர்.

பங்க்கர் என அழைக்கப்டும் மிகப்பாதுகாப்பான இட்லர் பதுங்கியிருந்த பாதாளை அறைஇருந்த இடமும் அதனைச்சுற்றியிருந்த ஏனைய பகுதிகளும் பெர்லின் நகரின் பிற பகுதிகளைப்போலவே கடுமையானத் தாக்குதலுக்கு உள்ளாயிற்று. அந்த நேரத்தில் அங்கே என்ன நடந்ததென சொல்ல நமக்குக் கிடைத்துள்ள ஒரே ஆதாரம், இட்லருடன் பங்க்கரில் இருக்க நேர்ந்த ராணுவ அதிகார் ஜெரார்ட் போல்ட் (Gerhard Boldt) என்பவர் அளித்துள்ள வாக்குமூலம். மிகத் தெளிவாக அப்பங்க்கரை விவரிக்கிறார் அவர். வெளியில் மனிதர் நடமாட்டங்களின்றி இருந்த அந்த பாதாள் அறைகளில்தான் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களும், அதிகாரிகளும், முக்கிய நிர்வாகிகளும் இருந்திருக்கின்றனர். உள்ளே நுழைய கடுமையான காவலுடன் ஒளித்துவைக்கப்பட்டதுபோல ஒரு கதவு. அதனைக்கடந்தால். இட்லரின் பிரத்தியேக பாதுகாப்பு படைப்பிரிவைச்சேர்ந்த (S.S. -Schutzstaffel) காவலர் ஒருவர் இருட்டிலிருந்து வெளியில் வருவார். பார்வையாளரில் அத்தாட்சிகளையும், அனுமதிப்பதற்கான உத்தரவையும் மிகக் கவனமாகப் பரிசீலிப்பார். அவருக்கு திருப்தியென்றால் உங்களை உள்ளே அழைத்துச் செல்வார். சுவரைஒட்டி நீள் வரிசையில் ஆயுதம் தாங்கிய காவலர்களைக் கடந்து செல்லவேண்டும். சிலர் புகைபிடித்துக்கொண்டு இருக்கலாம். வேறு சிலர் உரையாடியபடி இருக்கலாம். ஒரு சிலர் நீண்ட நடைகூடங்களில் உறங்குவதையும் பார்க்கலாம். வியக்கும் வைக்கும் விஷயம், அப்பாதாள அறைகளின் இன்னும் கட்டிமுடிக்காதன் அடையாளங்களும் ஆங்காங்கே இருந்தனவென்று போல்ட் தரும் சாட்சியம். இருப்பொனாலான சிறிய கதவுகளை தள்ளித் திறந்துகொண்டு ஐம்பது அல்லது அறுபது சிறிய அறைகளை கடந்து வந்தால் இறுதியாக பத்து வாயில்களைச் சந்திக்கலாம். அவற்றில் மூன்று மீண்டும் திரந்த வெளிக்கு அழைத்துசெல்ல மற்ற்வை பூமிக்குக்கீழே நம்மை வழி நடத்தி அழைத்துபோகுமாம். கீழே மறுபடியும் சிறு சிறு அறைகள். அவ்வறைகள் முழுக்க ரொட்டிகளும், பதனிடப்பட்ட உணவுக் குப்பிகளும் இருக்கும். மீண்டும் அங்கேயும் கூடங்களிலும், அறைகளிலும் ஏராளமான ராணுவவீரர்கள். இறுதியாக மிகக்குறுகிய வாயிலொன்று. அதைக்கடந்து செல்லும்போது கூடமெங்கும் தண்ணீர் தேங்கி நின்றிருந்ததாகச் சொல்கிறார். வெளிச்சமும் சொல்லிக்கொள்ளுபடி அங்கில்லையாம். இறுதியாக ·பூரரின் ஒளிந்திருந்த இடத்திற்குச் செல்ல 37 படிகள் கீழே இறங்கவேண்டுமாம். அங்கே மூன்று வாயில்கள் மூன்று கதவுகள். இங்கிலாந்து அரசால் அனுப்பட்ட ட்ரோவர் கூற்றின்படி முதல் கதவைத் தாண்டிசென்றால் இட்லரின் பிரத்தியேக பணியாளரின் அறை. இரண்டாவது அறை வெளிவிவகாரத்துறை அமைச்சருக்குச் சொந்தமானது. மூன்றாவது வாயில் இரண்டு குடியிருப்புகளுக்கு அழைத்து செல்லும். முதலாவது குடியிருப்பு பன்னிரண்டு மிகச்சிறிய அறைகள். இருபக்கமும் ஆறாறு அரைகளிருக்க இடையில் கூடம். வேண்டாத பொருட்களைவைக்க, இட்மரின் பிறபணியாளர்கள் தங்க, சைவை உணவு தயாரிக்க என்று அவை உபயோகிக்கப்பட்டிருக்கின்றன. இறுதியாக மத்திய கூடத்தை அடைந்தால் சாப்பிடுதவற்கான அறையாகவும், அனைவருக்கும் மிக ஆபத்தான வேளையில் அடைக்கலம் தரவவும் அது உபயோகத்திலிருந்திருக்கிறது. அங்கிருக்கும் சுழல்படிகளை உபயோகித்தால் இரண்டாவது குடியிருப்பினை நெருங்கியிருப்போம். மிகவும் அகலமாகவும் ஓரளவு வசதிகூடியதாகவும் இருந்த அக்குடியிருப்பில்தான் இட்லரின் இறுதிமூச்சு புழங்கிற்று. சிறியதும் பெரியதுமாக மொத்தம் பதினெட்டு அறைகள் அங்கு இட்லரின் உபயோகத்திலிருந்தன என்கிறார் பேராசிரியர் ட்ரோவர். ஒரு மிகப்பெரிய அறை இரண்டாகப்பிரிக்கபட்டு ஒரு பகுதி இட்லருக்கும் மற்றொன்று பார்வையாளர்களுக்கென்றும் இருந்திருக்கிறது. பிற அறைகள் அன்றாட உயிர் வாழ்க்கை தேவைகள் அவ்வளவையும் நிறைவேற்றும் வகையிலிருந்திருக்கின்றன. தவிர மருத்துவர், செவிலிகள், செல்ல நாய்க்கான அறை, தப்பிக்க வழி என எல்லாவற்றையும் கணக்கில் கொண்டு கட்டியிருந்திருக்கின்றனர்.

தளபதி வென்க்கும் அவரது படைகளும் எங்கே போய் தொலைந்தார்களென்ற எரிச்சலில் மீண்டும் ஆணைகள் பிறப்பிக்கபட்டன. கிடைத்த பதில் வென்க் என்ற தளபதியோ அவரின்கீழ் இன்னமும் செயல்படக்கூடுமென்று நம்பப்பட்ட படையோ இல்லை என்பதுதான். ஆக இட்லர் மிகுந்த ஏமாற்றமடைந்திருக்கிறார். வார்த்தைகளேதுமில்லை இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் இழந்திருந்த நிலையில் தளர்வுற்று அவரது அறைக்குள் திரும்பியதை மிகுந்த கவலையுடன் பார்த்துக்கொண்டிருந்தவர்கள்: கோயெபெல்ஸ், போர்மன், மூத்த ராணுவ தளபதிகலுள் ஒருவரான க்ரெப்ஸ் (Krebs). தவிர அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமானவ்ர்களென நம்பப்பட்ட முன்னாள் நண்பர்கள் ஒருவர் பின் ஒருவராக எதிரிகளிடம் சமரசம் பேச தொடங்கிவிட்டதகவல்களும் வந்து சேருகின்றன. அந்த நேரத்திலும் நம்பிக்கை துரோகிகள் என சந்தேகித்தவர்களை கொலைசெய்யுமாறு ஆனபிறப்பிக்க அவர் தயங்கவில்லை. அப்படி சுடப்பட்டவர்களில் இட்லர் மணந்துகொண்ட நடிகை ஏவா பிரவுன் சகோதரியின் கணவ்ரும் ஒருவர்.

இட்லரின் இறுதிக்காலம் வரை மிக நெருக்கமாக இருந்தவர்கள் என்ற பட்டியலில் இருவர் மிக முக்கியமானவர்கள் ஒருவர் ஏவா பிரவுன், மற்றவர் ¨?ன்ஸ் லின்ழ். இந்த ¨?ன்ஸ் ஒரு ராணுவ அதிகாரி. இட்லரின் அருகிலேயே இருந்தவர். ஏவா பிரவுனை மணப்பதற்கும் அவரே காரணமென்கிறார்கள். அவரது ஆலோசனையின் பேரில் திடீரென ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம். ஏபரல் 27ந்தேதி ஏவாவை மணக்குமாறு ¨?ன்ஸ் வழங்கிய யோசனையை இட்லர் உடனே ஏற்கவில்லை. ஆனால் மறுநாள் சம்மதித்தார். ஏவா சகோதரியின் கணவர் ·பெகலென் (Fegelein) நம்பிக்கை துரோகியென இட்லரால் குற்றம்சாட்டப்பட்டு அவரது பாதுகாப்புபடையினரால் கொல்லபட்ட மறுநாள் நள்ளிரவில் அதாவது 29ந்தேதி திருமணம். திருமணச் சடங்கினை நடத்த ஏற்பாடு செய்யபட்ட அதிகாரி நாஜிகளின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இட்லரையும், ஏவாவையும் நீங்கள் ஆரியர்கள்தானே என உறுதிபடுத்திக்கொள்ளவும் தவரவில்லை. மணமக்கள் இருவரும் தாங்கள் ஆரியர்களென உறுதிசெய்தார்கள். அடுத்து சில மணி நேரங்களில் தமது இறுதி விருப்பத்தையும் தமது பெண் செயலர் உதவியுடன் எழுதிகையொப்பமிடுகிறார். முகல் உலப்போருக்குப்பின்பு தமக்கு பிரிட்டனுடனோ அமெரிக்காவுடனோ யுத்தத்தில் இறங்க விருப்பமில்லையென்றும் முழுமுழுக்க யூதர்கள் செய்த சதியென்றும் அதில் குறிப்பிட்டார். இடையில் நடந்து முடிந்த திருமணத்திற்கு எளிமையாக ஒரு விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டது. அவருடைய நெருங்கிய சகாக்களான கோயெபெல்ஸ், போர்மன், இட்லரின் இளைஞர் பேரவைத் தலைவர் ஆர்தர் ஆக்ஸ்மன், இரண்டு பெண்செயலாளர்கள், ¨?ன்ஸ் ஆகியோர் கலந்துகொண்டிருக்கின்றனர். விருந்து முடிந்து நண்பர்கள் கலையும் தருவாயில், ” சோஷலிஸத்தைப் புதைத்தாயிற்று. இழக்கக்கூடாததை இழந்தாயிற்று. இனி நாம் செய்யவேண்டியது கௌரவமாக மரணத்தை தழுவுவதுதான்“, எனக்கூறியபோது நண்பர்கள் அமைதியாக கேட்டுக்கொண்டார்கள்; இட்லரின் பெண்செயலாளர் ப்ரௌ ஜங் மாத்திரம் வாய்விட்டு கதறியபடி அவளுடைய அறைக்குள்சென்று கதவடைத்துக்கொண்டாளாம்.

 

அதிகாலை நான்குமணி, கொஞ்சம் ஓய்வெடுக்க விரும்பியவர்போல இட்லர் தமது படுக்கைக்குத் திரும்பினார். இனி வாழ்ந்து ஆகப்போவதில்லை என்பதில் அவர் தீர்மானமாக இருந்தாரென்பதை சுற்றியிருந்தவர்கள் புரிந்துகொண்டார்கள். எதுவும் நடக்கலாம் என்கிற நிலமை. படுப்பதற்கு முன்பாக நண்பர்களிடத்தில் வேறொன்றையும் கூறியிருக்கிறார்? இரஷ்யர்களிடம் பிடிபட்டு ஒரு காட்சிப்பொருளாக என்னை அவர்கள் நடத்துவதை தாம் விரும்பவில்லை, என்றாராம். ஆனால் மறுநாள் அவர் நடந்துகொண்ட விதம்தான் வியப்புக்குரியது. அந்த மறுநாள் ஏப்ரல் 29 ந்தேதி. எதுவுமே நடக்காததுபோல வழக்கம்போல அதிகாலையிலேயெ விழித்துக்கொண்டிருக்கிறார். மதியம் வழக்கம்போல தமது நெருங்கிய சகாக்ககளுடன் யுத்த நிலவரம் விவாதிக்கப்பட்டிருக்கிறது. மற்றொரு கூட்டம் இரவு பத்துமணிக்கு நடைபெற்றிருக்கிறது. அக்கூட்டம் நடபெற்றபோது, சோவியத் படைகள் 300 மீட்டர் தூரத்தில் இவர்களை நெருங்கிகொண்டிருந்தார்கள். இரவு பங்கரிலிருந்த எல்லா பெண்களுக்கும் அழைப்பு விடுக்கும்படி தமது மெய்க்காவலரைக்கேட்டுக்கொண்டார். உணவு மண்டபத்தில் செயலர்கள், சமையல் பெண்கள், இதரப்பணிப்பெண்கள் என பெண்கள் அனைவரும் கூடினர். அவர்களோடு வெகுநேரம் உரையாடினார். உரையாடியபோது கண்கலங்கியதாவும் சொல்கிறார்கள்.

(தொடரும்)

இசைவானதொரு இந்தியப்பயணம்-6

பிப்ரவரி-6

காஞ்சிமாமுனிவர் பட்டமேற்படிப்பு கல்லூரி புதுச்சேரி இலாசுபேட்டையில் இருக்கிறது. புதுச்சேரிமக்களும் கல்விநிறுவனங்கள் புதுச்சேரி பல்கலைகழகம் எனத் தொடர்புவைத்துக்கொண்டு பணியாற்றும் நண்பர்களும் அதனை அறிவார்கள்.அங்குள்ள பிரெஞ்சு மொழித் துறையில் நண்பர் வெங்கட சுப்புராய நாயக்கர் என்கிற நாயகர் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். பிப்ரவரி ஆறாம் தேதி நண்பரும் அவரது துறைதலைவர் பேராசிரியர் தனியல் ஜெயராஜும் ஓர் ஹைக்கூ பயிற்றரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்து எங்களை அழைத்திருந்தார்கள். எங்கள் குழுவிலிருந்த ஆசிரியையான பிரான்சுவாஸ் என்பவருக்கு அவ்வழைப்பு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. காரணம் அவர் ஆசிரியை என்பது ஒன்று. மற்றொன்று அவருக்கு கவிதையில் ஹைக்கூ வடிவம் மிகவும் பிடித்தமானதென்பது மற்றொன்று. இதனை முதல் நாள் நாயகர் இது குறித்து அவர்களோடு எங்களோடு பேசவந்திருந்தபோதே அறிந்திருந்தேன். அதுவும் தவிர இதுபோன்ற எழுத்து பயிற்றரங்கங்களில் மிகவும் ஈடுபாட்டுடன் பணியாற்றிய முன் அனுபவங்கள் இவ்வழைப்பை ஓர் ஈடுபாட்டுடன் ஏற்றுக்கொள்ளும் மனநிலையை அவருக்குக் கொடுத்திருந்தன.

காலையிலேயே நண்பர் நந்திவர்மனின் உதவிஉயுடன் ஒரு சிறிய வாகனத்தை வாடகைக்கு எடுத்திருந்தோம். அதற்கு முன்னால் தமது வீட்டிற்கு வந்தால் அங்கிருந்து பக்கத்திலிருக்கும் அரவிந்தர் ஆஸ்மரத்தின் செயலரை சந்தித்துவிடலாம். அச்சந்திப்பு பிரெஞ்சு நண்பர்களின் பிற்பகல் ஆரோவில் பாரவையிடலுக்கு உதவியாக இருக்குமென்கிற யோசனையை முன்வைத்திருந்தார். எனக்கும் சரி பிரெஞ்சு நண்பர்களுக்கும் சரி வியப்பினை அளித்த விஷயம் அரவிந்தர் ஆஸ்ரமத்தின்மீது மிகக்கடுமையாக விமர்சனங்களை நந்திவர்மன் வைக்கிறபோதும், எவர்க்கும் அஞ்சாமல் தமது எண்ணங்களைத் உள்ளூர் தமிழ் தினசரிகளில் மட்டுமின்றி இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற ஆங்கிலத் தினசரிகளில் எழுதுகிறபோதும் அதையும் தவறாமல் அந்நிறுவனத்தைச் சேர்ந்த பிரமுகர்களும் காரியதரிசிகளும் வாசிக்கிற நேர்கிறபோதும் எப்படி இரு தரப்பினரும் சுமுகமாக காய்த்தல் உவத்தலின்றி உறவாடமுடிகிறதென்பதுதான். அதை எனது நண்பர்கள் ஆஸ்ரமத்தின் காரியதரிசியிடம் கேட்கவும் செய்தார்கள். அவர் ‘Lui, C’est un bon bandit’ என வேடிக்கையாகக் கூறினார். பின்னர் அதனை விளக்க முற்பட்டவர்போல “எங்களுக்குள் முரண்கள் இருந்தாலும் நாங்களிருவரும் நல்ல நண்பர்கள் என்றார். தமது எதிரிகள்கூட பாராட்டும் குணத்தை நந்திவர்மன் பெற்றிருந்தார் என்பதை இங்கே  கட்டாயம் பதிவு செய்யவேண்டும். ஆஸ்ரம செயலரிடம் அவர்கள் கல்வி முறை, அக்கல்விமுறையில் பிரெஞ்சு மொழிக்குள்ள பங்கு, அவர்கள் அமைப்புக்குள் வரவிரும்புகின்றவர்களிடம் அவர்களின் எதிர்பார்ப்புகளென பல்வகைப்பட்டப் பொருள்களில் நீண்ட எங்கள் உரையாடல் முடிவுக்குவந்தபோது காலை 9.30. பத்துமணிக்கு நாங்கள் நாயகர் கல்லூரியில் இருக்கவேண்டுமென்பதால் விடைபெற்றுக்கொள்ள் வேண்டியதிருந்தது. எங்கள் வாகனம் சரியான நேரத்திற்கு வந்ததும் எங்கள் உரையாடல் துண்டிக்கப்பட ஒருகாரணம்.

எங்கள் வாகன ஓட்டி நாங்கள் செல்லவேண்டியது புதுச்சேரி பல்கலைக் கழகமென தவறாக புரிந்துகொண்டிருந்தார். நாயக்கருடனான தொலைபேசி உரையாடல் காலாபட்டிற்கு என்றிருந்த எங்கள் திசையை இலாசுபேட்டைக்கு மாற்றஉதவியது. நாயக்கர் பத்துமணியென ஹைக்கூ பயிற்றரங்கத்திற்கான நேரத்தை ஒதுக்கியிருந்ததால் ஐந்து நிமிட தாமதத்தை பிரெஞ்சு நண்பர்களால் ஜீரணிக்க முடியவில்லை. ஆக பதற்றத்துடன் கல்லூரியில்நுழைந்தோம். நுழைவாயிலிலேயே மாணவர்கள் இருவர் எங்களை எதிர்பார்த்தவாறு இருந்ததால் கூடுதல் தாமதம் தவிர்க்கப்பட்டது. தங்கள் இயக்குனர் வந்தால் நிகழ்ச்சியை தொடங்கிவிடலாமெனக்கூறி திரு தனியல் ஜெயராஜ் சொன்னார். பிரெஞ்சு மொழித்துறையின் அலுவலகத்தில் காத்திருக்கவேண்டியிருந்தது. இந்த இடைபட்டநேரத்தில் எங்களுக்கு இனிப்பு, காரம், தேனிரென உபசரிப்பிற்கும் குறைவில்லை.

நிகழ்ச்சி தொடங்க 10.40 ஆகியிருந்தது. சுமார் முப்பது மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர் துறை தலைவர் வரவேற்புரை நிகழ்த்தினார். எங்களைஒருவர் பின் ஒருவராக அறிமுகப்படுத்தினார்கள். கல்லூரி இயக்குனரின் உரைக்குப்பிறகு பொன்னாடை, நினைவுப்பரிசுகளென இந்தியச்சடங்குகள் அரங்கேறின. பிரெஞ்சு நண்பர்களுக்கு இதுபோன்ற அனுபவங்கள் புதிது. அவர்கள் முகத்த்தில் இதுவரை கண்டிராத மகிழ்ச்சி. பயிற்றரங்கத்தின் பார்வையாளர்களாக உள்ளூர் இலக்கிய நண்பர்கள் சீனு தமிழ்மணி, பக்தவச்சலம் ஆகியோர் வந்திருந்தனர். நண்பர் சீனு தமிழ்மணி நாயகர்,தேவமந்தன் ஆகியோரால் எனக்கு அறிமுகமானவர். புதுச்சேரியில் தீவிர நவீன தமிழிலக்கிய வாதிகளுக்கு நன்கு பழக்கப்பட்ட பெயர். ‘இலக்கியம்’ என்ற பெயரில் ஒரு புத்தககடையை குயவர்பாளையத்தில் நடத்துகிறார். ஹைக்கூவின் தமிழ் வடிவமான துளிப்பா அபிமானி. அவரது குடும்பமே கவிஞர்கள் குடும்பமெனில் மிகையில்லை. மற்றொரு நண்பரான பக்தவச்சலம் அண்மைக்காலம்வரை பிரான்சு நாட்டில் வாழ்ந்துவிட்டு இப்பொழுது புதுச்சேரியில் வசிக்கிறார். தமிழ் பிரெஞ்சு இரண்டிலும் ஆழ்ந்த ஞானமுடையவர், சைவை சித்தாங்களின் தீவிர அபிமானி, அவற்றின் மொழிபெயர்ப்பில் தீவிரமாக இறங்கியுள்ளார். புதுச்சேரி அரசு இவர்களைப் போன்றவர்களுக்கு உதவலாம். இது குறித்துத் தனியாக எழுதவேண்டும்.. நிகழ்ச்சியின் மையக் கருவினைத் தொட்டிருந்தபோது பதினோருமணி ஆகியிருந்தது. பிரான்சுவாஸ் உற்சாகமடைந்து கையில் சாக்பீஸை எடுத்துக்கொண்டு மீண்டும் ஆசிரியபணிக்குத் திரும்பியிருந்தார். ஹைக்கூவின் இலக்கணத்தை விளக்கினார். மாணவர்களைக்காட்டிலும் அன்றைக்கு ஹைக்கூவின் உற்சாகத்தைக் காட்டியவர்கள் நால்வர் ஒருவர் பிரான்சுவாஸின் கணவர் பிரான்சிஸ் மனெ,மற்றொரு நண்பர் சவியெ தெபெல், பக்தவச்சலம், நான்காவதாக வகுப்பெடுத்த பிரான்சுவாஸ். எனக்கதில் ஆர்வமில்லை. பொதுவாக இலக்கியத்திற்கு பெரும்பலானாவர்களைப்போலவே வடிவம், விதிகள் இலக்கணங்களென்கிற தளைகள் கூடாதென்பதென் கட்சி. மாணவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பு Hiver – Winter – குளிர்காலம். Hiver என்ற பிரெஞ்சு சொல்லை குளிர்காலம் என்று மொழிபெயர்த்துவிடலாம். ஆனால் பண்பாடு, புவியியல் நோக்கில், உணர்வில் குளிரும் winterம் ஒன்றல்ல. வந்திருந்த மாணவர்கள் தமிழ்நிலப்பரப்பைச் சார்ந்தவர்கள் என்பதால அவர்கள் ஹைக்கூவில் மார்கழி இடம்பெறுமென்ற எனது நம்பிக்கை பொய்த்துபோனதில் எனக்கு ஏமாற்றம். ஒரு குழுவிற்கு ஐந்து மாணவ மாணவிகள் வீதம் ஆறுகுழுக்களாகப் பிரிக்கபட்டு, கவிதைகள் முயற்சிக்கப்பட்டன. பெரும்ம்பாலான மாணவர்கள் தொடக்கத்தில் குழம்பினாலும் பின்னர் ஆர்வத்துடன் எழுதினார்கள். ஒப்பேற்றிய புனைவுகள், பிறழ்வான சொற்கள் எனவிருந்தாலும் ஓரளவு ஹைக்கூ இலக்கணத்தை புரிந்துகொண்டவைகளாகவே அக்கவிதைகளிருந்தன. ஒரு சில மாணவர்களின் கவிதைகள் கூடுதலாகவே எங்களைக் கவர அனைவருக்கும் உண்மையில்மகிழ்ச்சி. இப்பயிற்சி அரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்த பிரெஞ்சு மொழித்துறையை எவ்வளவு பாராத்தினாலும் தகும்.

பயிற்றரங்கத்தில் கலந்துகொண்ட அனைவரும் கும்பலாக நின்று நிழற்படமெடுத்த்துக்கொண்டோம். பிரெஞ்சு நண்பர்கள் ஆரோவில்லை பார்ப்பதற்காக காரில் விடைபெற்றார்கள். பயிற்றரங்கில் கலந்து கொண்ட மாணவமாணவிகளுக்குப் உள்ளூர் கட்சி அரசியல் நடத்துபவர்களின் பாணியில் பிரியானி பொட்டலங்களை வழங்கினார்கள். எங்களுக்கும் விநியோகிக்கப்பட்டன. நண்பர் நாயகர் அவரது வீட்டிற்கு அழைத்த்திருந்தார். திருவாளர் பக்தவச்சலம் நாயகர் மூவருமாக மதிய உணவை அங்கேதான் உண்டோம்.  நாயகருடன் எப்பொது பேசினாலும் நேரம் போதாது. வேடிக்கையாக உரையாடக்கூடியவர். அவரே என்னைபுதுச்சேரியில் உரிய இடத்தில் கொண்டுபோய் சேர்த்தார். எனது அறையில் உறவினர் மணிவண்ணன் எனக்காகக் காத்திருந்தார். பிரெஞ்சு நண்பரகள் ஆரோவில் பார்க்கப்போனது எனக்கு வசதியாகப்போயிற்று. எனது மனைவி தரப்பு உறவினர்கள் ‘வானவில்’ நகர் என்ற இடத்தில் இருக்கிறார்கள். தாம்பரத்திலிருந்த வந்திருந்த உறவினர் மணிவண்ணனுக்கும் அவர்கள் உறவினரென்பதால் இருவருமாக அங்கே சென்றோம். நண்பர்களின்றி இருந்ததால் இரவு உணவை அடையாறு ஆனந்தபவனில் நான்கு நாட்களுக்குப்பிறகு எனக்காகசாப்பிட்டேன்.
————————————————————————————————

இசைவானதொரு இந்தியப் பயணம் -5

பிப்ரவரி -5- தொடர்ச்சி

பிற்பகல் எனது உறவினர் நண்பர்  தாம்பரத்திலிருந்து வந்திருந்தார். அவரோடு எங்கள் குடும்பக் கதைகளைப் பேசிக்கொண்டிருந்ததால் நேர்ம் போனது தெரியவில்லை. பிரெஞ்சு நண்பர்கள் லப்போர்த் வீதியிலிருந்த ‘சொசியத்தே ரெவெய் சோசியால்’ என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்த இடத்திற்கு வந்துவிடுவதாக சொல்லியிருந்தார்கள். ஆனால்  மாலை 5மணிக்குத்தான் என்னால் அங்குபோக முடிந்தது.

பொதுவாக தமிழ்நாட்டில் விழா எடுக்கின்றவர்களை இருவகைப்படுத்தலாம். வரமளிக்கும் இடத்திலுள்ள மூர்த்த்திகளுக்கு எடுக்கும் விழாக்கள் முதல்வகை. பூசாரிகள் செலவில் உற்சவமும் அர்ச்சனையும், நடக்கின்றன. பிரார்த்தனையில் பலனடையும் பக்தர்களின் பங்களிப்பும் இதிலுண்டு. வேறுசிலருக்கோ தங்களை உற்சவமூர்த்தியாக பிறரை நம்பும்படிச்செய்ய வேண்டும் அதற்காக தங்கள் கைப்பணத்தை செலவு செய்யவும் அவர்கள் தயார். .தமிழ்நாட்டில் பாம்பே ஸ்வீட்ஸ்டாலுக்குப் பிறகு ஜாம் ஜாமென்று நடக்கும் வியாபாரம் அநேகமாக விருது வியாபாரமாகத்தான் இருக்கவேண்டும். புல்லுக்கு இறைக்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டிருப்பதால் சாமர்த்தியமாக ஒன்றிரண்டு நெல்லுக்கும் சேர்த்தே இறைக்கிறார்கள். உரையிலிட்டு தரும் ஒரு நூறுக்கோ இருநூறுக்கோ பத்திரிகைகளில் விளம்பரமும் கிடைக்கிறது. மேறகத்திய நாடுகளில் பொன்னாடைகள் மாலைகளின்றிதான் நான்பார்த்த வகையில் கவிதை வாசிப்புகள் நடக்கின்றன. அதையே எங்கள் விழாக்களிலும் கடைபிடிப்பதென தீர்மானித்தேன். ஐந்தாம் தேதி மாலை புதுச்சேரியில் நாங்கள் நடத்தியது ஒரு சந்திப்பு. அழைத்திருந்த பெருமக்களும் அதனை உணர்ந்திருந்தார்களென்பதால் பிரச்சினைகளில்லை. நிகழ்ச்சிக்கான இடத்தை தேர்வு செய்து வாடகைக்கு இடத்தினை பிடிக்கின்ற பொறுப்பினை எனது வேண்டுகோளுக்கிணங்க ஏற்பாடுசெய்தவர் நண்பர் நந்திவர்மன். நிகழ்ச்சிக்குத் தமிழ்க் கவிஞர்கள் தேர்வு நண்பர் இந்திரனுடையது. அழைப்பிதழ் பொறுப்பை நண்பர் நாயகர் ஏற்றுக்கொண்டிருந்தார். எல்லோரையும் காத்திருக்கவைத்து கொஞ்சம் தாமதமாகவே அந்நிகழ்ச்சிக்கான இடத்தை திறந்து விட்டிருக்கிறார்கள். சரியானமுறையில் இடத்துக்குடையவரை அழைக்கவில்லை என்று இரண்டு நாட்களுக்கு முன்னமேயே நந்திவர்மன் சொல்லிக்கொண்டிருந்தார். அதை நியாயப்படுத்தவே இந்த தாமதமென்று புரிந்தது.

நிகழ்ச்சிக்கு புதுச்சேரியில் இன்றைய தேதியில் பிரெஞ்சு இந்தியப்பண்பாட்டின் ஏக அடையாளமாகவும் பிரதிநிதியாகவுமுள்ள கல்விமானும் முன்னாள் நீதிபதியுமான திரு தாவிது அன்னுசாமி தலமை தாங்கினார்கள்; சிறப்பு விருந்தினர்களில்  திருவாளர்கள் இந்திரனும், எஸ் ராமகிருஷ்ணனும் கலந்துகொண்டனர். இது தவிர கீழைதேசத்து பண்பாட்டாய்வில் புதுச்சேரியிலிலிருந்து செயல்பட்டுவரும் நிறுவனத்தில் ஆய்வாளராக பணிபுரியும் பேராசியர் விஜெய வேணுகோபாலும், தமிழ் கவிஞர்களில் இந்திரன், மாலதி மைத்ரி, கடற்கரயும் கலந்துகொண்டார்கள். இங்கே ஒர் அதிசயத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும் கவிதை வாசிப்புக்கு மாலதிமைத்ரியின் கவிதை பூமித்தாய் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. இக்கவிதை அவருடைய நீலியென்ற தொகுப்பிலிருக்கிறது. அக்கவிதையினை வாசிப்புக்கு தேர்வு செய்த ஒரு வாரத்திற்குப்பிறகு, எங்கள் குழுவின் பிரெஞ்சு பெண்மணி எழுதியிருந்த கவிதையும் பூமியைப் பற்றியதாக இருந்தது. எந்த நாட்டில் இருந்தாலென்ன பெண்கள் அடிப்படையில் ஒரே குணம்கொண்டவர்கள் என்பதை மெய்ப்பிக்கின்ற வகையில் இது நடந்ததென சொல்லவேண்டும்.

இலக்கியவாதிகள் கூடினால் சர்ச்சை வரவேண்டுமில்லையா அன்றும் வந்தது. மீண்டும் அப்பிரச்சினையை இங்கே எழுப்புவது கூடாதுதான். எல்லாவற்றையும் எழுதுகிறபோது அதை எழுதாமல் விட்டால் எப்படி.? நீங்களே சொல்லுங்கள் உங்களை நண்பரொருவர் நிகழ்ச்சிக்கு அழைக்கிறார். அழைக்கிற நண்பர் நீங்கள் விரும்பாத ஒருவருக்கும் நண்பர் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவரையும் அழைத்திருக்கிறாரென தெரியவந்தால் ஒன்று அந்த நண்பரிடம் எனக்குக் கூடாதவர் ஒருவரை அழைத்துவிட்டீர்கள் எனவே வருவதற்கில்லையென மறுத்திருக்கலாம், அப்படி இல்லையா அடுத்த பந்தியிலோ முன் பந்தியிலோ உட்கார்ந்துவிட்டு எழுந்து போயிருக்கலாம். அதைவிடுத்து அன்றைக்கு கவிஞர் மாலதிமைத்ரியின் பேச்சு எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. எஸ். ராவிடம் நடந்தவற்றிர்க்கு மன்னிப்புகேட்டேன். இருவருமே எனது விருந்தினர்கள். நான் வருத்தப்படாவிட்டால் எப்படி? மீண்டும் எஸ்.ராவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன்.

திரு நந்திவர்மன் தமது வரவேற்புரையில்  பிரெஞ்சு தமிழ் மொழிபெயர்ப்பில் கடந்த காலத்தில் ஈடுபட்டவர்களை மறந்துவிடமுடியாதென்றார். தாவீது அன்னுச்சாமி மொழிபெயர்ப்புக்கு வேண்டிய மாணவர்களை உரியவகையில் தயார் செய்யவேண்டிய கடமையை வற்புறுத்தினார். நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன் எங்கள் முயற்சியை பாராட்டியதோடு வழங்கிய அரியயோசனை:மாதந்தோறும் ஒரு நல்ல தமிழ்ச்சிறுகதையை பிரெஞ்சில் வெளியிடுவது, பின்னர் அவற்றைத் தொகுத்துப் புத்தகமாகக் கொண்டுவருவதென்பதாகும். நண்பர் நாயகருடன் இத்திட்டத்தைச் செயல்படுத்த நினைத்திருக்கிறேன்

திருவாளர்கள் தாவீது, விஜெய வேணுகோபால், திருமதி மதனகல்யாணி, முருகேசன், பக்தவச்சல பாரதி, மு.இளங்கோ,சீனு தமிழ்மணி, வெங்கிடேசன் என பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பல பெயர்கள் விடுபட்டிருக்கலாம். இந்த நேரத்தில் ஐந்தாம் தேதி நிகழ்ச்சியின் வெற்றிக்கு மூவரது உழைப்பை என்றைக்கும் என்னால் மறக்கமுடியாத நண்பர்கள் நந்திவர்மன், நாயகர், கவிஞர் இந்திரன்.

நிலழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்த கவிஞர்கள் மாலதிமைத்ரி, கடற்கரய் இருவருக்கும் நன்றி.

siinu thamizmaNiபல்வேறு அழைப்புக்கிடையிலும், நெருக்கடிக்கிடையிலும் எனது அழைப்பை ஏற்று பெருமைபடுத்திய நண்பர்கள் இந்திரனையும்,  எஸ்.ராமகிருஷ்ணனனையும் நான் மறக்கவே முடியாது.
——————————————————————

இசைவானதொரு இந்தியப் பயணம் – 5

பிப்ரவரி -5

நேற்றையைபோலவே இன்றும் காலை உணவு நேரு வீதிக்கருகிலிருந்த ‘Hot Bread’ ல் என்றானது பிரான்சு நாட்டிற்கு வந்ததிலிருந்து ஐரோப்பிய உணவு முறையை வழக்கப்படுத்திக்கொண்டாயிற்று. பிரெஞ்சு நண்பர்களுக்கு இந்திய உணவுகளில் அதிக நாட்டமிருப்பதில்லை, குறிப்பாக தென்னிந்திய உணவுகளில். வட இந்தியர்களைப்போலவே தோசையை மட்டும் விரும்பிச்சாப்பிடுகிறார்கள். சில புதுச்சேரி நண்பர்கள் தங்கள் வீட்டிற்கு வரும் பிரெஞ்சு நண்பர்கள் விரும்பிச் சாப்பிடுகிறார்கள் என்பார்கள். அவர்கள் காசு கொடுத்து சாபிடும்போது எதைச் சாப்பிடுகிறார்களென்று பாருங்கள் அதுதான் அவர்களது விருப்பமாக இருக்குமென அவர்களிடம் சொல்வதென் வழக்கம். மனிதர் வாழ்க்கைப் பன்முகக் கலாசாரத்தை  ஏற்றுக்கொண்டிருக்கிறது. வரலாறு மட்டுமல்ல உலகின் பண்பாடும் வாகைசூடியவர்களுக்கும், எஜமானர் இருக்கையில் நீண்டகாலமாக அமர்ந்து கோலோச்சியவர்களுக்கும் சொந்தமானது. இந்திய முதுகுகள் வெகுகாலமாகவே மேற்குலக பண்பாட்டை சுமந்துகொண்டிருக்கின்றன. எனக்கும் காலை நேரத்தில் இட்டளி, தோசையென்று உண்டு இந்தியாவிற்கு வந்து போகும் நாட்களைத் தவிர்த்து வெகு காலமாயிற்று:

நாங்கள் தங்கியிருந்த குடியிருப்பு ஏனம் வெங்கிடாசலப்பிள்ளை வீதியில் இருந்தது. அங்கிருக்கும் பள்ளிவாசலைக் கடந்தால் முல்லா வீதி சந்திப்பு வருகிறது. முல்லா வீதி யில் இறங்கி வடக்கு நோக்கிநடந்தால் லால் பகதூர் சாஸ்திரி வீதி. அதற்குப்பிறகு எங்களது தேவைக்கான திசையில் கால்கள் பயணிக்கும். நாங்கள் தங்கியிருந்த கட்டிடத்து வாசலிலேயே எதிர்பட்டார் அவர். அதிகம்போனால் 25 வயதிருக்கலாம். பள்ளிக்கல்விவரை முடித்திருக்கலாமென்பது என் ஊகம், ஆனால் பிரெஞ்சில் தட்டுதடுமாறி பேசினார் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, எனது பிரெஞ்சு நண்பர்களை குறிவைத்து பேசத் தொடங்கினார். அவரது பெயரை தவிர்த்திருக்கிறேன். தாம் பிரெஞ்சு ஓரளவு கற்றிருப்பதாகவும், மொழியை மறந்துவிடக்கூடாதென்பதற்காக பிரெஞ்சு சுற்றுலாவாசிகளை தேடிப்படித்து அவர்களோடு பழகுதாகவும், நான் உங்களுடன் இருப்பதில் தயக்கமெதுவுமில்லையே என தடாலடியாக எங்களிடம் விண்ணப்பமும் போட்டார். எனக்கு இது வேண்டாத வேலையாக இருந்தது. வேறு சில ஐயங்களிருந்தன. கேட்டவர் ஒர் இளம்பெண் என்பதால் தயக்கங்கள். ஆனால் பிரெஞ்சு நண்பர்கள் அதற்கென்ன தராளமாக வாயேன் என்றார்கள்; அந்தப் பெண்ணும் ஓரளவு சமாளிக்ககூடிய பிரெஞ்சில் உரையாடியபடி எங்களைத் தொடர்ந்துவந்தார். சுஜாதா எழுதும்போது பல்லி சொன்னதென எழுதுவார். எனக்கும் அப்படி ஏதோவொன்று அவரைத் தவிர்க்க வேண்டுமென எச்சரிக்கை விடுத்தது. எனது பிரெஞ்சு நண்பர்களைத் தனியாக அழைத்து அப்பெண்ணிடம் பிரான்சுவாஸ் – அவர் எங்கள் குழுவிலிருந்த ஒரே பெண்மணி- வேண்டுமானால் அப்பெண்ணிடம் உரையாடட்டும் நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாகவே உரையாடுவது நல்லது, நாம் வந்திருப்பது இரண்டுவாரத்திற்கு, இதில் என்னால் போலீஸ் ஸ்டேஷனுக்கெல்லாம் அலைந்துகொண்டிருக்க முடியாது. கிளம்பிப் போய்க்கொண்டே இருப்பேன், என்றேன். அதற்குப் பிறகு பெண்ணுடனான அவர்கள் பேச்சு நிதானத்திற்கு வந்தது. தேவையற்ற உரையாடல்களைத் தவிர்த்தார்கள். தவிர நான் அறிவுறுத்தியதைப்போன்றே, பிரான்சுவாஸ் என்பவரை அப்பெண்ணிடம் உரையாடவிட்டு ஒதுங்கிக்கொண்டார்கள்.

இன்றைக்கு சவியே காலையில் இந்திய உணவு விடுதிக்குச் செல்லலாமே என்றான். மனே (பிரான்சிஸ் பிரான்சுவா) தம்பதியினருக்குத் தங்கள் உணவுமுறையை மாற்றிக்கொள்ளும் உத்தேசங்களில்லை என்பது புரிந்தது. அவர்களுக்காக ‘ஹாட் பிரெட்”டுக்குள் நுழைந்து வேண்டியவற்றை எடுத்துக்கொண்டு அனைவருமாக இந்தியவிடுதியொன்றிர்க்குச்சென்று சாப்பிடுவதென தீர்மானித்தோம். நண்பர் பிரான்சிஸ¤ம், அவரது மனைவியாரும் பிறகு அங்கேயே சாப்பிடுவதென தீர்மானித்து சுயமாக பறிமாறிக்கொள்ளும், அந்த விடுதியின் வழக்கப்படி ஒரு தட்டில் காலை உணவுக்கான ரொட்டிகளை தேர்வு செய்து எடுத்துவந்தனர். அப்பெண்ணும் அவருக்குத் தேவையானவற்றை  எடுத்துவர அதற்குண்டான பணத்தை மனே தம்பதியினர் செலுத்தினர். மூவரும் சாப்பிட்டு முடித்ததும், இப்போது நானும் சவியேவும் சாப்பிடவேண்டும். இந்திய உணவு விடுதி அருகிலிருந்தது. மேசையை பிடித்து மனே தம்பதியினர், சவியே, காலையிலிருந்து எங்களை தொடர்ந்து வந்த இளம்பெண், பிறகு நான் என அனைவரும் அமர்ந்தோம். நாங்கள் சாப்பிடலாமென்று சர்வரைக்கூப்பிட்டு ஆர்டர் செய்ய நண்பர் சவியே ஏதாவது சாப்பிடுகிறாயா என்று அப்பெண்ணிடம் விசாரித்தார். நீங்களெல்லாம் ஏதாவது சாப்பிடுவதாக இருந்தால் நானும் சாப்பிடுகிறேன் எனக்கூற, பிறகு அவரவர்க்கு விருப்பமானதை கொண்டுவரசெய்து சாப்பிட்டோம்.  இடையில் நடைபெற்ற உரையாடலில் இளம்பெண் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிவதாகவும், பிரெஞ்சு நண்பர்கள் வேலை கடினமா எனக்கேட்க ஆம் ஒரு நாளைக்கு பத்திலிருந்து பன்னிரண்டு மணிநேரம் வேலை செய்ய வேண்டியிருக்கிறதென்றும், ஒரு குடிகார சகோதரனிருப்பதாகவும், அம்மாவுக்கு மகளை எப்படியாவது பிரான்சுக்கு அனுப்பிவைக்க வேண்டுமென்கிற கனவுகள் இருப்பதாகவும், அதற்காக மாப்பிள்ளைப் பார்த்துக்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வந்தன. அம்மா இப்படி பிரெஞ்சுக் காரர்களோடு இருக்கிறேன் எனக்கூறினால் மிகுந்த சந்தோஷப்படுவார்கள், என முடித்தார்.

சவியேவிற்கு எனது கிராமத்தையும் எங்கள் ஊர் மக்களையும் பார்க்கவேண்டுமென்று தெரிவித்திருந்தான். எனவே நண்பர் நந்தி வர்மனிடம் வாகனத்திற்கு சொல்லிவைத்திருந்தோம். முதல் நாள் சொல்லாததால், காலையில் அவரிடம் சொன்னபோது உடனே வாடகைக் கார்கிடைப்பது அரிதென்ற பதில் வந்தது. வாடகைக்கார் கிடைக்கவில்லையெனில் பேருந்து பிடித்து போவதென்று நினைத்திருந்தோம். இளம்பெண் எங்களை விடுவதாக இல்லை. எங்களோடு கிராமத்திற்கு வர விருப்பம் வரலாமலில்லையா? என்றார். பிரெஞ்சு நண்பர்கள் வருவதால் எந்த பாதிப்புமில்லை என்பதுபோல இருந்தார்கள்; எனக்கென்னவோ ஆரம்பத்திலிருந்தே அப்பெண்¨ணைக் கூட்டிக்கொண்டு அலைவதில் உடன்பாடில்லை. இதோ பாரம்மா நாங்கள் ஏற்கனவே நான்கு பேர் இருக்கிறோம் டிரைவரோடு சேர்த்து ஐந்துபேர் ஆகிறது என்னதான் வருவது பெரிய வண்டியென்றாலும் வேறொரு நண்பர் வருவதால் உன்னை அழைத்துச்செல்லமுடியாதென்று தெளிவாகக் கூறிவிட்டேன். புறப்பட்டுப்போனபோது அப்பெண் என்னைத் திட்டியிருப்பாளென தெரியும்.  ஆனாலும் அவள் புறப்பட்டுபோனபிறகே என்னால் நிம்மதியாய் மூச்சு விடமுடிந்தது.

காலை 9.30மணி அளவில் புறப்பட்டு புதுச்சேரியிலிருந்து 20.கி.மீட்டர் தொலைவிலிருந்த எங்கள் கிராமத்தை அடைந்திருந்தோம். காலை பத்து பதினைந்துக்கு,  சிதிலமடைந்திருந்த எனது பால்ய வயது வீட்டின் முன் வாகனம் நின்றது. எனது பிள்ளைத்தமிழ் இடிபாடுகளுக்கிடை சிக்கி முனகிக்கொண்டிருப்பதைக் காணச் சகியாமல் கண்களை இறுக மூடினேன். ஒரு துளி கண்ணீர். அதற்குமேல் சிந்த ஒன்றுமில்லையென்பதுபோன்ற பாலை வெக்கை எனக்குள் இருந்தது. செரிபடாத நினைவுகள் குமட்டிக்கொண்டு விடுபட கசப்புகள் வாய் நெஞ்சு இதயமென்று நிறைந்து வழிந்தன. மனம் பல்லியின் நாக்கிற்கு எட்டாத தூரத்தை தேடி பாச்சையாக அலைந்தது. இலை உதிர்த்த மரக் கிளையின் கூடுபோல உடல் கால் மாற்றி நின்று வெந்து தவித்தது. கடைசிப் பந்தியிலும் உனக்கு இடமில்லை எழுந்திரு என்பதுபோன்றதொரு மூர்க்கமானதொரு குரல் காதில் விழக் கேட்டேன்.

இளநீர்வந்தது, சிந்திய ஒரு துளிகண்ணீரை இட்டு நிரப்பவாக இருக்கலாம். நெஞ்சில் நிழலாய், நுணி மடிந்த பழுப்பேறிய, காலத்தின் வடுக்களை வயதுடன் சுமக்கமுடியாமல் சுமந்தமடி கைகளைப் பற்றும் மனிதர்கள். கண்களைத் தொட்டிருந்த அவர்கள் மூப்பு எனது இளமையைக் கசக்கி ஆசுவாசப்பட்டது. அந்தி வேளையில் வீடு திரும்பும் மாடுகள்போல, தெருவில் இறங்கி நடக்கிறோம். வயதையும் வாழ்க்கையையும் இழந்து திண்னைகளில் ஒருக்களித்து படுத்திருந்தவர்கள் எழுந்து உட்காருகிறார்கள்.

– யாரு சின்னத் தம்பியா?

– ம்…

– உள்ளே வாயேன். ம். நீதான் எங்களையெல்லாம் மறந்திட்ட .

என்னிடத்தில் பதிலில்லை. நெஞ்சு வெப்பத்தால் நிரைகிறது. மூச்சுமுட்டுகிறது. வார்த்தைகள் தொண்டையில் சிக்கிக்கொள்கின்றன. தலையாட்டுகிறேன். பற்றிய கைகளை விலக்கி நடக்கிறேன். வழியெங்கும் விசாரிப்புகள். அவர்கள் முந்திக்கொள்கிறார்கள்.  அவர்கள் விசாரிப்பு எனது அக வாழ்க்கைப்பற்றியதா புற வாழ்க்கைக்குறித்ததா?  வாழ்க்கை பண்டமாற்றுகளால் கொண்டுசெலுத்த முடியுமெனில் எவ்வளவு சௌகரியமாக இருக்கும். நாகரீகங்கருதி பல நேரங்களில் நட்டத்திற்கு விற்கவேண்டியிருக்கிறது. என்ரேனும் ஒருநாள் இலாப தரிசனத்திற்கு ஓடி வருகிறபோது நடைவாசல் மூடும் நேரம் என்கிறார்கள்.

சவியேவும் மனே தம்பதியினரும் புகைப்படக் கருவிகொண்டு தருணங்களை ஆவணப்படுத்துகிறார்கள். புதுச்சேரி திரும்பியபொழுது நண்பர் இந்திரன், அகவெளி நண்பர்களுடனும் கடற்கரையுடனும் வந்திருந்தார். இந்திரன் கொண்டு வந்திருந்த கவிதை வாசிப்புக்கென தாயாரிக்கபட்ட சிறிய புத்தகங்களை நந்தி வர்மன் வீட்டில் இறக்கிவைத்துவிட்டு நாங்கள் மதிய உணவிற்கு வந்தோம். வெகுநேரம் கழித்து நண்பர் எஸ். ராமகிருஷ்ணன் எங்களோடு இணைந்துகொண்டார். சாப்பிட்டு முடிந்ததும், நண்பர் எஸ். ஆரிடம் அவரிடம் தங்க ஏற்பாடு செய்திருப்பதைக்கூறினேன்.

– இல்லை கிருஷ்ணா நாளைக்கு வேறொரு நிகழ்ச்சி இருக்கிறது. அவர்கள் ஏற்கனவே அறை எடுத்திருக்கிறார்கள். எதற்காக வீண் செலவு என்றார்.

– கொஞ்சம் ஓய்வெடுக்கலாமே என்றேன். – பிரெஞ்சு நண்பர்கள் இருந்ததால், அவருடன் செல்ல முடியவில்லையே என்ற வருத்தம்

– இல்லை நண்பர்களுடன் பேசியிருந்துவிட்டு மாலை நிகழ்ச்சிக்கு வந்து விடுகிறேன் என்றார்

அன்று மாலை நடந்த கவிதை வாசிப்பு குறித்து தனியாக எழுதுகிறேன்.

(தொடரும்)

Vanakkam

அன்புடையீர்

இந்திய மொழி இலக்கியங்களை பிரெஞ்சு நண்பர்களுக்கு அறிமுகப் படுத்தும் வகையில் ஒர் வலைப்பூவை கூடிய விரைவில் எளிய வகையில் அறிமுகப்படுத்த உள்ளோம்.

உங்களுக்கு எங்கள் முயற்சியில் ஆர்வமும், பிரெஞ்சிந்திய மொழிகளில் ஞானமும், பிரதிபலன்களை எதிர்பார்க்காது உதவ முடியுமென்ற நம்பிக்கையுமிருப்பின் தங்கள் ஆதரவும் பங்களிப்பும் அவசியமாகின்றன
ஏப்ரலில் தொடங்கவிருக்கும் இவ்வலைத்தளம் குறித்து நண்பர்களுக்கு உரியகாலத்தில் தெரிவிப்பேன்.

கதையல்ல வரலாறு 3-3:ஸ்டாலின் மரணத்தின் பின்னே…

இலைய எரென்பர்க் (Ilya Ehrenbourg, புகழ்பெற்ற சோவியத் எழுத்தாளர்களில் ஒருவர். ஸ்டாலின் ஆட்சியின் கொடூரத்தை நேரில் கண்டவர். ‘மருத்துவர்கள் கூட்டு சதி’ என்கிற பிரச்சினையைத் தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டபோது குறிப்பாக யூதர்கள் பலர் கைதானபோது இவரும் பிறப்பால் யூதர் என்ற நிலையில் கைது செய்யப்படவேண்டியவர். ஸ்டாலின் மரணம் குறித்து இவரிடம் சில உண்மைகளிருந்தன. எரென்பர்க் மேற்கத்திய நாடுகளுக்கு அடிக்கடி பயணம் மேற்கொள்ளக்கூடியவராக இருந்தார். அவற்றில் பிரான்சுநாடும் ஒன்று. அவருடைய பாரீஸ் நண்பர்களில் ழான் போல் சார்த்துருவும் ஒருவர்.

இலைய எரென்பர்க் கூற்றின்படி:

« 1952ம் வருடம் அக்டோபர் மாதம் சோவியத் யூனியன்  பொதுவுடமைக் கட்சியின் 19வது காங்கிரஸ் மாநாட்டிற்குப் பின்னர் ஸ்டாலின் ஒரு வெறிபிடித்த மனிதர்போல ஆனது உண்மை.  சந்தேகப் பட்டவர்களையெல்லாம் அவர் கைது செய்ய விரும்பினார். அது தவிர தமது பழைய சகாக்களான மொலொட்டோவ், மிக்கோயான், ககனோவிச் ஆகியோர் கூட்டு சேர்ந்து தம்மை கொல்ல சதிசெய்வதாகக் கூறிக்கொண்டார். 1952ம் ஆண்டில் ‘மருத்துவர்கள் கூட்டு சதி’ என்ற விவகாரம் வெடித்த பொழுது ஸ்டாலினால் நாட்டிற்கு மிகப்பெரிய கேடு வர இருக்கிறதென புரிந்துகொண்டோம் ».

பதினெட்டாம் காங்கிரஸ் நடந்து முடிந்தபிறகு 19வது காங்கிரஸ¤க்குத் தேர்ந்தெடுப்பட்டிருந்த உறுப்பினர்களில் பலரை கொன்று குவித்தபோதே நடக்கவிருக்கும் விபரீதத்தின் பாரிய வீச்சு உணரப்பட்டது. 1934க்கும் 1938க்கும் இடையில் பதினேழாவது காங்கிரஸில் பொதுவுடமைக் கட்சியின் மத்திய கமிட்டிக்கு தேர்வுசெய்யப்பட்ட 130 அங்கத்தினர்களில் 48பேர்களும் 1966 பிரதிநிதிகளில் 1108 பேரும் கொல்லப்பட்டார்கள். இந்நிலையில் தலைமைக்குழு உறுப்பினர்கள் ஏதேனும் செய்தாகவேண்டும். உரிய தருணத்தில் பிரச்சினையை கையிலெடுக்கத் தவறினால் அவர்களுடைய உயிருக்கும் பிற தோழர்களுக்கும் ஏற்படவிருக்கும் ஆபத்தை புரிந்துகொண்டார்கள். கிரெம்ளினில் மத்திய குழு உறுப்பினர்களின் பிரத்தியேகக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டப்பட்ட காலம் 1953ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23ந்தேதி. இத்தேதியைக் குறித்து கொடுத்தவர் குருஷேவ். சோவியத் விவசாயத் துறையின் ஐந்தாவது ஆண்டுவிழா தொடர்பாக என  கூட்டத்திற்கு காரணம் சொல்லப்பட்டது. ஸ்டாலின் சந்தேகப்பட ஒன்றுமில்லை, எனவே அவரும் கலந்துகொண்டார். ஆனால் வழக்கமாக அவருடன் இருக்கிற செயலர் வரவில்லை. அதற்கு முன்பாகவே கிரெம்ளின் ஹாலில் அவரது நம்பிக்கைக்குரிய ராணுவ தளபதி ஜூக்கோவ்(Joukov) அனுப்பிய வீரர்கள் செயலரை கைது செய்திருந்தனர் என்ற உண்மையை ஸ்டாலின் அறியவில்லை.

கூட்டத்தின் தொடக்கத்திலேயே ஒலிவாங்கியை கையிலெடுத்த ககனோவிச்  ரகசிய காவற்படையின் தலைவரை உடனடியாக கைதுசெய்யவேண்டுமென்றும், ‘மருத்துவர்களின் கூட்டு சதி’ என்றபிரச்சினையை ஒதுக்கிவிட்டு உருப்படியான வேறு காரியங்களை பார்க்கும்படியும் கட்சியின் முதன்மைச் செயலரான ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறார். ஸ்டாலின் இதை எதிர்பார்க்கவில்லை. அதுநாள்வரை அவரது அரசியல் நடவடிக்கைகளை விமர்சிக்க ஒருவருக்கும் துணிச்சல் வந்ததில்லை, எனவே ஆத்திரம்கொண்டார். கடும் சொற்களால் ககனோவிச்சை விளாசுகிறார். தொடர்ந்து பேசினால் ஆபத்தை எதிர்நோக்கவேண்டியிருக்கும் என எச்சரிக்கிறார். ககனோவிச் விட்டுகொடுப்பதாக இல்லை. கோபத்தில் எழுந்தவர். தோழர் லெனின் உருவாக்கிய மிகப்பெரிய கட்சி உன்னால் இன்று மிகப்பெரிய அவமானத்தை அடைந்துள்ளது. நீ ஒரு கொலைகாரன், கட்சியில் இனி அடிப்படை உறுப்பினனாகக்கூட இருக்கப்போவதில்லை எனக்கூறி கட்சி உறுப்பினருக்கான தமது அடையாள அட்டையை ஸ்டாலின் முன்னே கிழித்தெறிகிறார்.

கோபமுற்ற ஸ்டாலின் ககனோவிச்சை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்க விரும்பி அருகிலிருந்த தொலைபேசியைக் கையிலெடுத்தபோது மிக்கோயானும் மொலொட்டோவும் குறுக்கிடுகிறார்கள்.

– ஜெசெப் இது வீணான வேலை. வெளித் தொடர்புகளை நாங்கள் முன்பே துண்டித்துவிட்டோம்.  ஜூகோவ்வும் மோஸ்காலென்க்கோவும் இப்போது எங்கள் பக்கம். இதையும் மீறி எங்களுக்கு ஏதாவது நேர்ந்து அடுத்த கால்மணிநேரத்தில் நாங்கள் பத்திரமாக வெளியேறமுடியாத சூழ்நிலை உருவாகுமெனில் ஜூக்கோவ் தமது ஆட்களுடன் கிரெம்ளினுக்குள் நுழைவது உறுதி, என்கிறார்கள்(1).

நேற்றுவரை தன்முன்னே வாய்மூடிக்கிடந்த தோழர்கள் குரலுயர்த்தி பேசுவதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அடுத்த சில கணங்களில் ஸ்டாலின் சரிய ஆரம்பித்தார். வாயிலிருந்து இரத்தநுரை தள்ளுகிறது. முகம் வெளுக்க ஆரம்பிக்கிறது அவருடைய இரண்டுகைகளும் முன்னும் பின்னும் இழுபடுகின்றன. கடைசியாக தரையில் சுருண்டு விழுகிறார். சில நொடிகளில் மரணம் அவரை அழைத்துக்கொள்கிறது. மூளையில் இரத்தநாளங்கள் சிதைந்திருந்தன என்பது பின்னர் தெரியவந்தது. எந்த மருத்துவரையும் அங்கிருந்தவர்கள் அழைக்கவில்லை. ஆக கிரெம்ளினிலேயே அவருக்கு மரணம் ஏற்பட்டிருந்ததென்பதுதான் உண்மை.

ஸ்டாலின் மரணத்தோடு இணைந்த இரண்டாவது உண்மைக்குச் சொந்தக்காரர்1957ம் ஆண்டு வார்சோவியில் சோவியத் யூனியனின் தூதுவராக பணியாற்றிய பொனோமரேன்க்கோ (Ponomarenko). இவரது பேச்சை அவ்வளவு சுலபமாக அலட்சியப்படுத்திவிடமுடியாது. காரணம் பத்தொன்பதாவது காங்கிரஸ் மாநாட்டிற்கு பிறகு ஏற்படுத்தபட்ட மத்திய புரவலர் குழு செயலர்களில் இவருக்கு மூன்றாவது இடத்தை ஸ்டாலின் கொடுத்திருந்தார். ஆகக் கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவர். அவருடைய கூற்றின்படி:

1953ம் ஆண்டு பிப்ரவரிமாதம் 28ந்தேதி நடைபெற்ற செயற்குழுவின் பிரத்தியேகக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர் ஸ்டாலின். கிரெம்ளினிலிருந்த மத்திய குழுவின் அரங்கத்திலே இக்கூட்டம் நடந்தது. தகுந்த காரணமின்றி இதுபோன்ற கூட்டத்தை ஸ்டாலின் ஏற்பாடு செய்யமாட்டாரென சகாக்கள் நினைத்தார்கள். செயற்குழுவின் 25 உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். (அவர்களில் பொனோமரேன்க்கோவும் ஒருவர்). ஒலிவாங்கியைக் கையிலெடுத்த ஸ்டாலின், தாம் முன்னதாக தயாரித்திருந்த நான்கு பிரேரணைகளை வாசித்தார். அவற்றின் மைய நோக்கம் பெரும் எண்ணிக்கையில் சோவியத் யூதர்களை மத்திய ஆசியாவிலிருந்த பிரோபிட்ஜான் (Birobidjan) பிரதேசத்திற்கு குடியேற்றுவது தொடர்பானது. அங்கு ஏற்கனவே இருபத்தைந்து ஆண்டுகளாக பல்லாயிரக் கணக்கில் யூதர்கள் கடுங்குளிரிலும் கொடிய வறுமையிலும் போராடியபடி வாழ்ந்துவந்தனர். உண்மையில் இப்புதிய ஆணையின் உதவியின்றியே பல ஆயிரம் யூதர்களை கடுங்குளிர் நிலவும் அப்பிரதேசத்திற்கு வலுக்கட்டாயமாக அனுப்பி ஸ்டாலின் தண்டித்திருக்கிறார். சோவியத் யூதர்களைத் தாம் தண்டிப்பதற்கு அவர்களுடைய  தீவிர மதவாதமும், ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளாக அவர்கள் இருப்பதும் காரணமென்றார். வந்திருந்தவர்களில் இந்நடவடிக்கைகள் குறித்து எதிர்ப்புக்குரல் கொடுக்க விரும்பினார்கள். ஆனால் ஸ்டாலினை எதிர்த்து பேச அஞ்சி அமைதி காக்கிறார்கள். அந்த மௌனத்தை முதலில் உடைத்தவர் ககனோவிச். உறுப்பினர்களில் அவர் யூதர். “இந் நடவடிக்கை சோவியத் யூனியனிலுள்ள எல்லா யூதர்களுக்கும் எதிரானதா?” என்று கேட்கிறார். இல்லை தேர்ந்தெடுத்த சிலர்மேல் மட்டுமே இச்சட்டம் பாயும் என பதிலளிக்கிறார், ஸ்டாலின். ககனோவிச் அமைதியானார். அடுத்து எழுந்தவர் மொலோட்டோவ், காரணம் அவரது மனைவி யூதப்பெண்மணி. இப்பிரச்சினையால் இஸ்ரேலுக்கும் சோவியத் யூனியனுக்கும் பிரச்சினைகள் வரலாம், என்பது அவர் வாதம். அவருக்குப் பதில்சொல்ல ஸ்டாலின் முனைந்தபோது, தோழர் வொரோச்சிலோவ்(Vorochilov) என்பவர் குறுக்கிட்டார், “இச்சட்டம் பயன் பாட்டிற்குவருமெனில், பொதுவுடமைக் கட்சியில் தொடர்ந்து உறுப்பினராக இருக்கும் எண்ணம் தமக்கில்லை”,  என்று கூறிவிட்டு தம்மிடமிருந்த உறுப்பினர் அட்டையை எடுத்து மேசைமீது எறிந்தார். ஸ்டாலினுக்கு கோபம் வந்தது. முகம் சிவந்துபோனது

– தோழரே ஒன்றை புரிந்துகொள்ளுங்கள். அதை முடிவெடுப்பது நானே தவிர நீங்களல்ல,  என்கிறார்.

கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்களுள் பலர் எழுந்துநின்று ஒரே நேரத்தில் பேச அங்கே சில கணங்கள் கூச்சலும் குழப்பமும் நிலவின. பேரியா என்பவர் ஸ்டாலினை நோக்கி ஓடுகிறார், அடுத்த நொடி ஸ்டாலின் சுருண்டு விழுந்திருக்கிறார். வந்திருந்த உறுப்பினர்கள் மருத்துவர்களை அழைக்க விரும்பியதாகவும், முக்கியமான மருத்துவர்கள் அனைவருமே சிறையிலிருந்ததால் ஸ்டாலினைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டதாகவும் பொனோமரேன்க்கோ சொல்கிறார். பேரியா, “அரக்கன் ஒழிந்தான், இனி எல்லோருக்கும் விடுதலை!” என கூச்சலிட்டதாகவும், அங்கே ஸ்டாலின் மகள் ஸ்வெட்லானா வந்து சேர்ந்ததாகவும், அப்பா! அப்பா! என அரற்றியதாகவும் பொனோமரேன்க்கோ சொல்லும் கதைகள். அடுத்தடுத்து நடந்ததாக இவர்கூறும் தகவல்களில் பல குருஷ்சேவ் தகவல்களோடு ஒத்துபோகின்றன.

ஆக ஸ்டாலின் மரணம் தொடர்பான மேற்கண்ட தகவல்களில் எது உண்மை என்பது இன்றுவரை விளங்காத மர்மம். இவற்றுள்  இலைய எரென்பர்க், பொனோமரேன்க்கோ இருவர் தகவல்களிலும் சிலவற்றில் ஒற்றுமை இருப்பதை பார்க்கிறோம். தவிர பொனோமரேன்க்கோ தரப்பில் தெரிவிக்கப்பட்டத் தகவல் அவர் சோவியத் யூனியனின் தூதுவராக வார்சோவியில் பணியாற்றியபோது தெரிவித்தது. தவிர அவர் பொதுவுடமைகட்சியில் செயலர் இடத்தில் இருந்ததால் அவரது தகவலை  நம்பிக்கைக்குரிய தகவல் எனக் கருத இடமுண்டு. ஆனால் சிலர் ஸ்டாலின் மரணத்தை தயக்கமின்றி கொலையென எழுதுகிறார்கள். அவர்களில் ஒருவர் கப்பனாட்ஸ் என்பவர். இவர் மேற்குலகில் பணிபுரிந்த சோவியத் யூனியனின் உயர் அதிகாரி. ஸ்டாலின் கொலை பலருக்கும் அப்போது தவிர்க்கமுடியாததாக இருந்தது என்பது அவர் வாதம். ‘ஸ்டாலின் கொலையுண்டதை நிரூபிக்க சாட்சியங்கள் கிடையாது ஆனால் அவர் மரணம் இயற்கையானதல்ல என்பதை உறுதியாகச்சொல்ல முடியும்(2) என்ற அமெரிக்க பத்திரிகையாளர் சாலிஸ்பரி கூற்றும் கவனத்திற்கொள்ளதக்கது.

——————————————————————————-

1. Histoire pour tous mai 1965 Victor Alexandrov

2. Dossier secret de l’histoire page 371-Alain Decaux

இசைவானதொரு இந்தியப் பயணம்: 4

பிப்ரவரி -4.

அதிகாலை நான்கு மணி எங்கள் வாகனம் புதுச்சேரியை நெருங்கிக்கொண்டிருந்தது.  பிரெஞ்சு நண்பர்கள் மூவரும், உலக அளவில் பணியாற்றி வருகிற தொண்டு நிறுவனமொன்றின் சென்னைக் கிளையின் நிர்வாகி ‘ஆரோக்கி’ என்ற பெயரில் நண்பர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜான் ஆரோக்கிய ராஜும், என்னோடு வாகனத்தில் பயணித்தவர்கள். நண்பர் நந்திவர்மனை தொலைபேசியில் பிடித்தாகவேண்டும். அவர் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் விழித்திருப்பேனென உத்தரவாதமளித்தும் எனக்குள் அச்சமிருந்தது.

நண்பர் நந்தி வர்மன் குறித்து இரண்டொரு வார்த்தைகள் சொல்லவேண்டும். உங்களில் பலரையும் போன்று ‘அரசியல்’ செய்யும் எவரும் எனக்கு பூச்சாண்டிகள். அரசியலை தொழிற்படுத்துபவர்களை இருவகையாகப்பிரிக்கலாம் முதலாவது தரப்பினர் முழு நேர அரசியல்வாதிகள், இரண்டாவது தரப்பினர்  தொழில்முறை அரசியல்வாதிகளல்ல அப்படி கூறிகொள்ளவும் மாட்டார்கள் ஆனால் ஓர் தேர்ந்த அரசியல்வாதிக்குரிய அத்தனை இலக்கணங்களுக்கும் பொருந்தக்கூடியவர்கள். நண்பர் நந்திவர்மன் இந்த இலக்கணங்களுக்கு அப்பாற்பட்டவர். இன்றைய தேதியில் எனது அனுபவத்தில் வாழ்க்கையையும், வார்த்தைகளையும் செயல்பாட்டினையும் வைத்து ஒரு சிலரைக் கொண்டாடவேண்டுமெனில் திருவாளர்கள் தமிழருவி மணியன், நல்லக்கண்ணும் நமது கவனத்திற்குரியவர்கள். அவ்வரிசையிலே நண்பர் நந்திவர்மனையும்  வைக்கலாம்.

லால்பகதூர் சாஸ்திரி சாலையில் அவர் காத்திருந்தார். ஏனாம் வெங்கிடாசலபதி சாலையில் எண் 22ல் எங்களுக்கு அறைகள் ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தன. அறைக்கு 600ரூபாய் வாடகைக் கொடுத்தோம். நண்பர்கள் எதிர்காலத்தில் தவிர்க்கவேண்டிய இடம். பிரெஞ்சுக்காரர்கள் அங்கே அதிகமாக வந்து தங்குவதையும் பார்த்தேன். அவர்கள் தேர்வுக்கு வேறுகாரணங்கள் இருக்கலாம். எனக்கு நிறைவாக இல்லை.

காலையில் ஐந்து மணிக்கு படுக்கச்சென்றபோது பள்ளிவாசல் அழைப்பு. நண்பர் ஆபிதின் கதையிலா அல்லது நகைச்சுவையாக சொல்லப்பட்ட அவரது எழுத்துகளிலா அல்லது வேறு எங்கேயுமா என்று தெரியவில்லை. அக்கதையில் சொல்லப்படிருப்பதைபோன்றுதான் அந்தப் பாங்கு இருந்தது. அதன்பிறகு உறக்கம் வரவில்லை. குளித்துவிட்டு நண்பர்களுடன் காலை உணவிற்காக நேருவீதிக்கருகிலிருந்த ‘ஹாட் பிரெட்’டிற்குச் சென்றோம். ஐரோப்பிய காலை உணவிற்குப் பழக்கப்பட்டவர்களுக்கு உகந்த இடம். அது Brunch ஆக முடிந்தது. மதியம் அறைக்குச்சென்று ஓய்வு. இரண்டு அல்லது இரண்டரைக்கு நாயகர் எங்களை சந்திக்க வந்தார். மாலை நந்திவர்மனுடன் நாளைய நிகழ்ச்சி குறித்து விவாதிக்க இருந்து தவறி விட்டது. அவர் அவசரமாக சென்னைக்குச் செல்ல வேண்டியிருந்ததென்றார். மாலை நாயகர், பிரெஞ்சுநண்பர்கள் என நால்வருமாக கன்பத் ராம் சென்றோம். பிரெஞ்சு நண்பர்களுக்கு அந்தச்சூழல் பிடித்திருந்தது. காபி வடையெனச் சாப்பிட்டுவிட்டு திரு தாவீது அன்னுசாமியைப் பார்க்கச்சென்றோம். முன்னதாக அவருக்கு தொலைபேசியில் எங்கள் வருகையை நினைவூட்டியிருந்தோம்.

நண்பர் சவியே அவரிடம் சில எதிர்பார்ப்புகளை வைத்திருந்தார். சிலர் எதுபற்றியும் எவர் பற்றியும் சட்டென ஒரு முடிவுக்கு வந்துவிடுவார்கள். அதே வேகத்தில் அம்முடிவை எளிதாக மாற்றிக்கொள்ளவும் செய்வார்கள். நண்பர் சவியே என்றழைக்கப்படும் தெபெல் அந்த ரகம். அவரை இருபது ஆண்டுகளுக்கு முன் சந்திக்க நேர்ந்தது. அதாவது பிரான்சுக்கு வந்த புதிதில். புதுச்சேரியில் வருவாய்த் துறையில் அரசாங்க ஆவணங்களுடனும், கோப்புகளுடனும் சேவகம் செய்து மாமியார்வீட்டு நிழலில் சுகமாய் வண்டி ஓட்டிக்கொண்டிருந்த காலத்தில் மனைவிமூலம் கிடைத்த பிரெஞ்சு குடியுரிமை எனது தூக்கத்தைக்கெடுத்தது. அது துருபிடித்து இற்றுப்போகாமலிருக்க பிரான்சுக்குப்போயே ஆகவேண்டுமென்ற விண்ணப்பத்தை அவ்வப்போது போட்டுவந்தேன்.  ஜூலை ஆகஸ்டுமாதங்களில் உதட்டிலும் உடையிலும் ஜிகினா மினுப்புடன் புதுச்சேரி வெள்ளித் திரைக்குவரும் சொல்தா குடும்பங்களின் துர் நாற்றம் பிடித்த ·பர்ப்யூம் வாசனையை வளப்பமாக நினைத்து எனக்கும் பிரான்சு கனவுகள் வந்தன. இந்த சொல்தாக்களும் இன்னபிற புதுச்சேரி பிரான்சுவாசிகளில் பலரும் துபாய் வடிவேலுக்கள் என்பதை புரிந்துகொண்டபோது காலம் கடந்திருந்தது. எனது படிப்புக்கு உகந்த மாடுகளைப் மேய்க்க பிரெஞ்சுமண்ணில் ஆகாதென்பதை புரிந்துகொண்டு தொழில் தொடங்க எத்தனித்தபோது நம்ம ஊர்போல பிரெஞ்சு மண்ணிலும் சிலகாரியங்களை தெரிந்தவர்கள் உதவியால் சாதிக்க முடிந்தது, முடிகிறது. நண்பர் சவியே உதவி இன்று வரை தொடங்குகிறது.  வாடகைக்கு இடம்பிடித்து கடை வைப்பதைவிட சொந்தமாக இடத்தைவாங்கி அங்கே கடையைத் திறப்பதென்ற யோசனையையும் கூறி இடத்துக்குச்சொந்தக்காரரிடம் பேரம்பேசி அதை பதிவு செய்யும்வரை வரை உடனிருந்தான். கடந்த நவம்பரில் என்மகளுக்கு சுவிஸ் அருகில் பன்னாட்டு நிறுவனமொன்றில் வேலைகிடைத்தபொழுது அவள் தங்க ஒரு பெட் ரூம் கொண்ட இடத்தை வாடகைக்கு அவசரமாக பிடிக்கவேண்டியிருந்தது. அவனுடைய உதவியில்லையேல் கூடுதலாக ஒருவாரம் அலைந்திருப்போம். எனவே இந்த நன்றிக்கடனுக்காக அல்லது சுய நலத்திற்காக அவனோடு நட்பு பாராட்டவேண்டியிருக்கிறது.

திரு தாவீது அன்னுசாமிக்கு தம்மைப்பற்றிய சில விவரங்களை அளித்து அவரிடம் நட்பினை எதிர்பார்த்திருந்தான். அவ்விவரங்கள் அடங்கிய மடல் என்னிடம் வந்தபோது எனக்கென்னவோ அவை அதிகமாகத் தெரிந்தன. ஒருவரைப்பற்றிய அக்கறைகளை கசப்புகளை புரிந்துகொள்ளாமல் நம்மைப் பற்றிய தகவல்களை நானென்றால் அத்தனை எளிதாக பகிர்ந்துகொள்ளமாட்டேன். திரு தாவீது அன்னுசாமி அவர்களுடனான சந்திப்பு என் வரையில் ஒரு நீதிபதி, கல்விமான் என்ற தகுமைகளுக்கு பொருந்துபவர் எவ்வாறு நடந்துகொள்வாரோ அவ்வாறுதான் அவர் எங்களைவரவேற்றார். அளவளாவினார். செலவிட்ட மணித்துளிகளில் அவரது நுண்மான் நுழைபுலத்தை அறியமுடிந்தது. பிரான்சு நாட்டைப்பற்றிய பூகோள அறிவும், பிரான்சில் வாழும் புதுச்சேரி மனிதர்களைப்பற்றிய கேள்வி ஞானமும் தமிழிலக்கியத்தின் மீதும் குறிப்பாக மொழிபெயர்ப்புகள் விடயத்தில் அவருக்கிருந்த அக்கறையும் வியக்கவைத்தன.

இதற்கிடையில் நந்திவர்மனிடமிருந்து தொலைபேசி. எங்கள் அறை தண்ணீர் குழாயைத் திறந்துவைத்துவிட்டு போய்விட்டோம் என்ற குற்றச்சாட்டுடனான தொலைபேசி அழைப்பு. எனக்கென்னவோ அது நாங்கள் வாடகைக்குத் தங்கியிருந்த இடத்திற்கு உரிமையானவரின் அநாவசிய பதற்றமாகத் தெரிந்தது. நாங்கள் சாவாதானமாக திரும்புவதென தீர்மானித்தாலும், நெஞ்சத்தில் ஓர் ஓரத்தில் அந்த அழைப்பு பதற்றத்தை உட்காரவைத்திருந்தது. அதற்குப் பிறகு திரு தாவிது அன்னுசாமியுடனான உரையாடலில் ஒட்டுதலில்ல. விடை பெற்றுகொண்டு அறைக்குத் திரும்பியபொழுது நான் நினைத்ததுப்பொல அதொரு பொருளற்ற அழைப்பாக இருந்தது. மறுநாள் வீட்டுக்கு உடையவரை சந்தித்தபோது எப்போதோ ஒரு முறை அப்படி நடந்ததாம். வெளியில் தண்ணீர் ஒழுகவே எங்கள் அறையிலிருந்து வந்திருக்குமோவென சந்தேகித்தாராம். ‘நல்ல ஆசாமியென நினைத்துக்கொண்டேன்.’

இரவு சைவ விடுதியொன்றில் சப்பாதி பூரி யென்று சாப்பிட்டுவிட்டு, புதுச்சேரி கடற்கரையில் காலார நடந்தோம். எந்த மாற்றமுமின்றி புதுச்சேரி கடற்கரை இருந்தது. ஆதாவது ஆங்காங்கே தோண்டிவைத்திருந்தார்கள். கடற்கரைக்கு வந்தவர்கள் தின்று தீர்த்த பொட்டலங்கள் பொதிகள் காற்றில் பறந்தன. வழக்கம்போல நொறுக்குத் தீனிகளுக்கான கடைகள். அந்நியர்கள் மீது படையெடுக்கத்தெரிந்த தொண்டைமண்டல பிச்சைக்காரர்கள். மெர்க்குரி லைட்டுகள், விட்டில் பூச்சிகள், வாலை உயர்த்தி விசுக்கென ஓடும் நாய்கள். தொப்பைபோட்ட மனிதர்கள், கணவருடன் தலைவிதியே என்று நடக்கும் பெண்மணி, குழந்தையை முன்னால் நடக்கவிட்டு பூரிக்கும் பெற்றோர் etc.. etc..

தொடரும்…

கதையல்ல வரலாறு 3-2:ஸ்டாலின் மரணத்தின் பின்னே..

எதிர்பார்த்தைதைப்  போலவே சாலைமுழுவதும் பனிமூடியும் பனிஉறைந்தும் வாகனஓட்டத்தை கடுமையாக்கியிருந்தது. வாகன ஓட்டியின் சாமர்த்தியத்தாலேதான் விபத்தின்றி கடைசியில் ஸ்டாலின் இருப்பிடத்தை அடைய முடிந்தது. அங்கே போனபோதுதான் தெரிந்தது, கட்சியின் முக்கிய தலைவர்களின் வாகனங்கள் அனைத்தும் வரிசை கட்டி நின்றன. நிகிடா குருஷ்சேவ்க்கு புரிந்துகொண்டார். ஏதோ முக்கிய ஆலோசனைக்காகவே தலைவர்கள் அனைவரையும் கட்சியின் முதன்மைச் செயலர் அங்கே வரவழைத்திருக்கவேண்டுமென்பது அவரது ஊகம். அது நியாயமானதுங்கூட. தலைவர்கள் வரிசையில் குருஷ்சேவுக்கான அப்போதைய இடம் அநேகமாக ஏழோ எட்டோ, அப்படிப்பார்த்தால் இவருக்கு முன்பாக அழைக்கவேண்டியவர்களை அழைத்த பின்புதான் இவரைத் தேடியிருப்பார்கள். எனினும் முக்கிய தலைவர்களில் ஒருவர் என்கிற அடையாளம் இருக்கிறது, எனவே ஸ்டாலின் அழைத்திருக்கிறார். அவர் வா என்றால் வந்து அடிமைபோல நிற்கவேண்டிய தலைவர். அவ்வகையில் ஸ்டாலினிடத்தில் எல்லோருக்கும் ஒரே மரியாதைதான் என்பதும் குருஷ் சேவுக்குத்தெரியும். தனியே வந்திருந்தால் திரும்புவதற்கு வாய்ப்பு இருக்குமா என்ற சஞ்சலமிருக்கும், இப்போது இவருக்கு முன்னால் ஐந்தாறுதலைகள் இருக்கின்றன. நிம்மதியாக மூச்சுவிட முடிந்தது. ஓர்லோ·ப் மன்னர் (Orloff) பரம்பரைக்குச் சொந்தமான சிறியதொரு அரன்மணை அது. சுற்றிலும் உயர்ந்த மதிற்சுவர். மின்சாரம்பாய்ச்சிய இரட்டிப்பு முட்கம்பிகளின் பாதுகாப்பில் அச்சுவர்கள் இருந்தன. மிகப்பிரகாசமான ஒளிவெள்ளம் அவ்வப்போது சுவர்களைக் கண்காணித்தன. பல்லி ஊர்ந்தாலும் தெரிந்துவிடும். தப்ப முடியாது. காரிலிருந்து இறங்கியவுடனே யார் யாரெல்லாம் அழைக்கப்ட்டிருந்தார்கள் என்பதை குருஷ்சேவ் விளங்கிக்கொண்டார். பேரியா, மொல்ட்டோவ், வொர்ஷிலோவ், பூல்கானின், மாலென்க்கோவ், ககனோவிச் என்று சகாக்கள் வந்திருந்தனர். எந்திரதுப்பாக்கிகளுடன் கொக்காசிய (Caucasiens) வீரர்களின் சிறப்பு காவற்படை ஆங்காங்கே நடமாடிக்கொண்டிருந்தனர். உள்ளே நுழையும் தலைவர்கள்கூட அவர்கள் தலைவனின் சோதனைக்கு உட்பட்டே கோட்டைக்குள் நுழைய முடியும். ஸ்டாலின் தமது காவலுக்கு அவர்களைத்தவிர வேறு படையினரை நம்புவதில்லை.

” ஸ்டாலின் நண்பர்களைக்கூட சந்தேகப்படுவார். எங்களில் யாராவது ஒருவர் ஆயுதத்துடன் உள்ளே நுழைந்து அவரைக்கொல்லக்கூடும் என்ற சந்தேகம் அவரிடம்இருந்தது, எங்கே அவரால் என்ன ஆபத்தை சந்திக்கப்போகிறோமோ என நாங்கள் அச்சத்தில் வாழ்ந்ததுபோக வாழ்வின் கடைசிநாட்களில் அவரே அவரது வாழ்க்கைமுறைக்கு பலியானதுதான் விந்தையிலும் விந்தை…எங்கள் தோழர் ஸ்டாலின் பயமென்றால் என்னவென்று அறியாதவராகத்தான் இருந்தார், அதை அவருக்குக் கிடைத்த கொடை. எதையும் கூர்மையாகவும் துல்லியமாகவும் கணிக்கும் அவர் திறன் கண்டு மெச்சியுள்ளோம். ஐந்தாண்டு திட்டங்களைக்கொண்டு சோவியத் யூனியனை காப்பாற்றியதும், யுத்தங்களும் மக்களை அவர்மீது அளவுகடந்த நம்பிக்கை வைக்க காரணமாயின. ஆனால் மெல்ல மெல்ல மற்றவர்களை நம்ப மறுத்தார். இறுதியில் ஒருவருமே நம்பக்கூடியவர்களல்ல என்பது அவரது முடிவு. அவரது அரசியல் குருவாகக் கருதப்பட்ட கிரோவ் (Sergueஞ் Mironovitch Kostrikov) கொலையுண்டது ஸ்டாலின் மனநிலையை வெகுவாக பாதித்ததென்று அவர் மகள் ஸ்வெட்லானா எனக்கு எழுதினாள். எனக்கென்ன தெரியும், நானென்ன உளவியல் மருத்துவரா என்ன. ஆனால் மெல்ல மெல்ல தனித்து வாழப் பழகிக்கொண்டதும், அச்சமென்ற சிறையில் தம்மை அடைத்துக்கொண்டதும் உண்மை” என்கிறார் குருஷ்சேவ்.

ஸ்டாலின் இருந்த குடியிருப்பை பார்த்தவர்கள் வியக்கிறார்கள் அலங்காரங்கள் அற்றவை. ஒவ்வொன்றிலும்  ஒரே மாதிரியான மேசை நாற்காலியையும் கட்டிலையும் உபயோகித்திருக்கிறார். பிறகு பெரிய அறை, அந்த அறையில் சீருடைகள் சீருடைகள்.. நிறம், அளவு, பதக்கங்கள் என டஜன் கணக்கிலிருந்த அவற்றைத் தவிர வேறு உடைகளை அவர் வாழ் நாளில் அணிந்ததில்லை போன்றதொரு தோற்றம். ஓர்லோ·ப் அரன்மணையில் ஸ்டாலினுக்காக சில மாற்றங்களும் செய்யப்பட்டன. புதிதாக ஓர் அறை கட்டப்பட்டது. அக்கதவும் சன்னல்களும் மிகுந்த பாதுகாப்புகொண்டவையாக இருந்தன. அங்குதான் ஸ்டாலில் இரவுவேளைகளில் உறங்குவது வழக்கம். குட்டித்தூக்கம் போடுவதென்றாலும் அந்த அறைதான் வேண்டும். அந்த அறைக்குச் செல்ல இருப்பது நான்குமணிநேரமும் காவலில் இருக்கும் கொக்காசிய படைவீரர்களைக் கொண்ட மற்றொரு அறையைக் கடந்து செல்லவேண்டும். அவர் அங்கு தங்கும் நாட்களில் நான்கு முறை ஸ்டாலினிடமிருந்து காவற்படைதலைவனுக்கு அழைப்பு வரும். காலை ஒன்பது மணிக்கு தேநீர் அருந்தும் நேரம். பிற்பகல் ஒருமணிக்கு மதிய உணவு, இரவு ஏழுமணிக்கு இரவு உணவு, இரவு பத்துமணிக்கு மீண்டும் தேநீர்.

வந்திருந்த தலைவர்களை, காவற்படைதலைவன் முதற் தளத்திருந்த அலுவலக அறைக்குச் சென்றான். முதலிற் சொல்ல தயங்கினான். பிறகு கடகடவென்று வார்ந்த்தைகள் வெளிப்பட்டன.

– ஐயா சொல்லவில்லை. தொலைபேசியில் உங்களை அழைபதென்ற முடிவை எடுத்தது நான் தான். தோழர் ஸ்டாலின் அறைக்குள் இருக்கிறார். இரவு ஏழுமணிக்குப்பிறகு எவ்வித அழைப்பும் அவரிடமிருந்து வரவில்லை.

வழக்கம்போல ஏழுமணிக்கு இரவு உணவைக் கொண்டு வரும்படி பணித்தார். ஆனால் பத்து மணிக்கு தேநீருக்கான அழைப்பு வரவில்லை.. இரண்டு மணிநேரம் பொறுமையாக அந்தக் கொக்காசிய வீரர் காத்திருந்திருக்கிறார். எந்த அறிகுறிகளுமில்லை. இதற்கு முன்பு அவருக்கு இதுபோன்ற அனுவங்கள் ஏற்பட்டதில்லை. நள்ளிரவு நெருங்கியது. ஏதாவது செய்தாகவேண்டும் இப்படியே எவ்வளவு நிமிடங்கள் காத்திருப்பது? முதல் அழைப்பு பொதுச்சபை அலுவலகத்திற்குச் சென்றது. ஒருவரும் மறுமுனையிலில்லை. வேறு வழியில்லை என்ற கட்டத்தில் ஏழு தலைவர்களையும் அழைப்பதென்று முடிவு செய்து வரவழைத்திருக்கிறார்.

தலைவர்கள் முகத்தில் குழப்பம். அவர்களுக்கும் இது முதல் அனுபவம் தவறான நடவடிக்கைகள் அவர்கள் தலைக்கே ஆபத்தாக முடியலாம். வரிசைப்படி மொலொத்தெவ்  முடிவினை எடுக்கவேண்டியவராக இருந்தார். கதவை உடைக்கலாமென்றார். துப்பாக்கிக்குண்டுகளும் துளைக்கக்கூடியடல்ல. வாகனங்கள் சக்கரங்களை கழற்ற உதவும் ஆயுதங்களும் பிற்வும் கொண்டுவரப்பட்டன. கொக்காசிய வீர்கள் தங்கள் பலம் முழுவதையும் உபயோகித்தார்கள். பல நிமிடப் போராட்டத்திற்குப் பிறகுஸ்டாலின் அறைக்கதவு நெக்குவிட்டது, திறக்க முடிந்தது. கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே ஒருவர்பபின் ஒருவராக நுழைந்தார்கள்.

அமைதி. பெரும் அமைதி. மீண்டுமொரு கதவை உடைக்கவேண்டியிருந்தது. மெல்ல அதையும் உடைத்துக்கொண்டு நுழைந்தார்கள். முதலில் பார்த்தவர் குருஷ்சேவ். சீருடையை அவிழ்க்காமல் தரையில் கிடந்த ஸ்டாலினை தலைவர்கூட்டம் நெருங்கியது. பேரியாவின் குரல்தான் முதலிற் கேட்டது.

– கொடுங்கோலன் இறந்தான்

அங்கிருந்த மற்றவர்கள் அமைதியாக அபிப்ராயங்களை சொல்லவிரும்பாதவர்கள்போல அமைதிகாக்க பேரியா மகிழ்ச்சியில் திளைப்பது வெளிப்படையாக தெரிந்தது; குருஷ்சேவ் குனிந்து தரையிற் கிடந்த உடலைப் பார்த்தார்.

பிற்காலத்தில் அச்சம்பவத்தை நினைவுகூர்ந்த குருஷ்சேவ் மறக்கமுடியாத அனுபவமென்றார். “எனது முதுகுத்தண்டில் அதன் சிலிர்ப்பை உணர்ந்தேன். பிறகு விலகிக்கொண்டேன். என் பின்னாலிருந்த மற்றவர்கள் அதை புருந்துகொண்டார்கள், பிறகு அவ்விடத்தைவிட்டு துரிதமாக நடந்து நடைகூடத்திற்கு வந்தோம்” என பின்னர் குருஷ் சேவ் எழுதினாராம். அவரது இந்த விவரிப்பில் முரண் இருக்கிறதென்று அவரது அனுபவத்தை வாசிக்க நேர்ந்தவ்ர்களின் கணிப்பு. ஸ்டாலின் உடல்நிலைகுறித்து அக்கறைக்கொள்ளாமல் தலைவர்கள் வெளியேறினர் என்றபொருளில் குருஷ் சேவின் முதல் விவரிப்பு இருக்க, மற்றொன்று மருத்துவரை அழைக்க நேர்ந்த சந்தர்ப்பத்தையும் மூளையில் ஏற்பட்டிருக்கும் இரத்த கசிவினை அறிந்துகொள்ள முடிந்ததையும் கூறுவதாக உள்ளது. இவ்விரண்டையும் தவிர்த்து புகழஞ்சலி போன்றதொரு வேறொரு தகவலும் உள்ளது. அது மூளையில் ஏற்பட்ட பாதிப்பு கை, கால், பேச்சு இவற்றை மட்டுமே பாதித்திருந்ததாக முதலில் அறிவிக்கப்பட்டதற்கும்,  குருஷ் சேவ் பின்னர் அளித்த விளக்கமும் வேறுபட்டிருந்தன: ” நினைவு திரும்பாமல் மூன்றுநாட்கள் இருந்தார், நாங்களும் அருகிலேயே இருந்தோம். ஒரு கட்டத்தில் அவருக்கு பிரக்ஞைவர அறைக்குள் சென்றோம். தாதியொருத்தி, தேநீரை ஒரு சிறுசிறுகரண்டிகளாகக் கொடுத்துக்கொண்டிருந்தார். அவர் எங்கள் கைகளைத் தொட்டு அங்கிருந்த ஆட்டுக்குட்டிக்கு கரண்டிகொண்டு பாலூட்டிக்கொண்டிருந்த சிறுமியின் படத்தைக்காட்டி புன்னகைக்க முயன்றார். அப்படத்தைச் சுட்டிக்காட்டியதன்மூலம் தான் ஆட்டுக்குட்டியைக் காட்டிலும் மோசமான நிலையில் இருப்பதைக் குறிப்பால் உணர்த்துவதாக இருந்தது. அடுத்த சில கணங்களில் அவர் இறந்தார்.. நான் அழுதேன்.  நாங்கள் அனைவரும் அவர் மாணவர்கள், அவருக்கு கடமைப்பட்டவர்கள். அவரும் மகா பீட்டருக்கு வேறுபாடுகளில்லை, அராஜகத்தை அராஜகத்தாலேயே வீழ்த்தினார் வேறென்ன சொல்வது.- ஆனால் மா மனிதர்”(1)

இதுபோன்ற பல முரண்பட்ட தகவல்கள் ஒருபுறமிருக்க, இறுதிக் காட்சியை குருஷ்சேவ் கீழ்க்கண்ட வகையில் விவரிக்கிறார்:

“மருத்துவர்கள் அதிகாலை 2மணி அளவில் ‘தாட்ச்சாவுக்கு’ வந்தார்கள். ஸ்டாலின் அறையைவிட்டு வெளியேறியதும் அவர்களில் மூத்தவர், “இரவும் இத்தனை கடுமையாக இல்லாமலிருந்து, தக்க தருணத்தில் தகவலும் கிடைத்து, நாங்களும் உரிய நேரத்தில் வந்திருப்போமெனில் ஒருவேளை தலைவர் ஸ்டாலினை காப்பாற்றியிருக்கலாம். செய்வதற்கு ஒன்றுமில்லை. அவர் கண்களிரண்டையும் சற்று முன்புதான் மூடினேன் என ஸ்டாலின் மரணத்தை உறுதிபடுத்தியதும், தானும், மொமொட்டோவ், மலென்க்கோவ் மற்றும் அங்கிருந்த பிற தலைவர்களும் தங்கள் மூத்த தலைவருக்காக அழுததாகவும் மாறாக பேரியா அழாததோடு, மூத்த  மருத்துவரிடம்:

– இறப்புக்கு என்ன காரணம்? என்று கேட்டதாகவும்

– மூளையில் இரத்தகசிவு, பக்கவாதம், மாரடைப்பு. என மருத்துவர் அதற்கு பதிலிறுத்ததாகவும் குருஷ் சேவ் குறிப்பிடுகிறார்.

1953ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தேதி இரவு சோவியத் பூமியில் நிகழ்ந்த பூகம்பத்தைப்பற்றி குருஷ் சேவ் மூலமாக நாம் அறிய வரும் தகவல்.

இதுதான் உண்மை. அன்றைய சோவியத் நாடு அதிகாரபூர்வமாக தெரிவித்தவை. ஆனால் இதுதான் உண்மையா? இந்த உண்மையில் உண்மையின் விழுக்காடுகள் எவ்வளவு என்கிற கேள்விகள் இருக்கின்றன.

(தொடரும்)

 

———————————————-

 

1. பிரான்சுநாட்டைச்சேர்ந்த பத்திரிகையாளரு இடசுசாரி சிந்தனையாளருமான இம்மானுவெல் அஸ்த்தியே என்பவருக்கு (Emmanuel d’Astier, op.citt – Dossier secrets page 364.) அளித்திருந்த பேட்டி.

மொழிவது சுகம்- பிப்ரவரி 2012

தனிமை:

அண்மையில் பிரான்சு நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வின்முடிவு ஏழு பிரெஞ்சுக்காரர்களுக்கு ஒருவர் தனிமையில் வாழ்வதாகத் தெரிவிக்கிறது. மேற்கத்திய நாடுகளில் இத்தனிமை வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் இன்னார்தான் எனக் குறிப்பிட்டுச் சொல்லமுடியாத நிலை. இந்நோய்க்கு இதுதான் உகந்த காலம், இவர்கள்தான் பொருத்தமானவர்கள், இப்பிரிவினரைக் இலக்குவைத்தே தாக்குகின்றது எனகணிக்கமுடியாத சூழலில் சமூக வியல் அறிஞர்களை குழப்பத்தில் இத்தனிமை நோய் வைத்திருக்கிறதென்று சொல்லவேண்டும். காரணம் கீழைநாடுகள்போலன்றி மாணவர்கள், மணவாழ்க்கையை விரும்பாதவர்கள், வாழ்க்கைத்துணையை இழந்தவர்கள் என பலரும் இந்நோயின் பாதிக்கப்பட்டோர் பட்டியலில் உள்ளனர்.

இப்போதும் எங்கள் கிராமத்தில் கூட்டுக்குடும்பங்கள் இருக்கத்தான் செய்கின்றன. நல்லது கெட்டது நடக்கின்றபோது பார்க்கவேண்டும் ஒருவர் வண்டியை பூட்டிக்கொண்டிருப்பார், இன்னொருவர் வெள்ளைவேட்டி சட்டை சகிதம் பக்கத்து டவுனுக்கு புறப்பட்டுப்போவார், கிழவி அதிகாரம் பண்ணிக்கொண்டிருக்கும், மருமகள் வாயிலிருந்து சலித்துக்கொண்டு பதில் வரும். அடுத்தமாதத்தில் விசேடமிருக்க அப்போதே கெட்டிமேளமும் நாதஸ்வரமும் அந்த வீட்டில் ஒலிக்க ஆரம்பிக்கும், வீட்டிற்கு போனால் யாரு மணியக்காரர் வீட்டு சின்னத்தம்பியா? உட்காருங்க, அடியே இரண்டு முறுக்கும் ஒரு லட்டும் வச்சு பிள்ளைகிட்டே கொடு என்று அன்புகலந்த உபசரிப்பு தவறாமல் வரவேற்கும்.  விவசாயக்குடும்பங்களைத் தவிர்த்து வியாபாரக் குடும்பங்களும் (இதில் அரசியலும் அடக்கம்) கூட்டுக்குடும்பங்களாக வாழும் பேற்றினை பெற்றிருக்கிறார்கள். இவ்விரண்டு பிரிவினரைத் தவிர்த்து நமது இந்தியச் சமூகத்தை அனுகினால் குறிப்பாக நடுத்தரவர்க்கத்தினருக்கு விரும்பியோ விரும்பாமலோ உயிர்வாழ்க்கையின் ஒரு பகுதி தனிமைக்கு என்றாகிவிடுகிறது. மேற்கத்திய நாடுகளைப்போன்றே இந்திய நகரங்களிலும் பிள்ளைகளை தொலைதூர நகரங்களுக்கும் நாடுகளுக்கும் அனுப்பிவிட்டு தனிமையில் வாழும் பெற்றோர்களை பார்க்கிறோம். ஈழத் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் இன்று புலம்பெயர்ந்துவாழ்கிறார்கள், அவர்களுடைய பெற்றோர்களுக்கும் சொந்தமண்ணில் தனிமைதான் துணை: நினைவுகளைத் தின்று , ஏக்கங்களைக் குடித்து அவர்கள் பசியாறவேண்டியிருக்கிறது. பிறர்பார்வாவையில் அவன் அல்லது அவள் தனிமையில் வாழ்வதில்லை, தனிமையில் வாடுகிறான் அல்லது வாடுகிறாள்

மனிதன் தனித்திருக்கப் படைக்கப்பட்டவல்ல தன் இனத்தைத் தேடி, (இங்கே -அவனை அடையாளப்படுத்தக்கூடிய எதுவும்) உரையாடவும், உறவாடவும் படைக்கபட்டவன். இயல்பிலே மனிதவாழ்க்கை பிறர் சார்ந்தது. ஒற்றைக்குரியதல்ல. அவன் இருப்பு பிறால் தீர்மானிக்கப்படுவது. தந்தை, தாய், அக்காள், தங்கை, முதலாளி, தொழிலாளியெனத் தனிமனிதனை அடையாளப்படுத்தும் எந்தச் சொல்லையும் எடுத்துக்கொள்ளுங்கள்: இன்னாரின் தந்தை, அவளுக்குத் தாய், அவனுக்குச் சகோதரன், அவர்களுக்கு முதலாளி என்ற உறவுகளால் உருவானவை. இந்த மற்றமைகளிடத்தில் வெறுமைகளையிட்டு நிரப்பினால் தனிமை. இன்றையச்சூழலில் தனிமையைத் தவிர்க்கமுடியுமா, விலக்குவதற்கான வாய்ப்புகள் எவ்வளவு? இந்த நூற்றாண்டின் கொடிய கொள்ளை நோயென்று சொன்னாலும் மிகையில்லை. இருந்தாலும் அதற்காக நாம் மனம் சோர்ந்துவிடமுடியாது. நாம்மை நாமே புரிந்து கொள்வதற்கு தனிமையைக்காட்டிலும் வேறு சந்தர்ப்பம் வாய்க்குமா சொல்லுங்கள் என்கிறவர்களும் இல்லாமலில்லை. அப்படியான சந்தர்ப்பம் அறுபதில் வாய்ப்பதால் என்ன இலாபமென்று அவர்கள் கொஞ்சம் விளக்கினால், தேவலாம். .

 ஜேன் ஏர்

ஜேன் ஏர் (Jane Eyre) என்ற நாவலை நம்மில் பலர் வாசித்திருக்ககூடும். நம்மில் பலர் என்ன இருந்தாலும் ஷேக்ஸ்பியர் போல் ஆகுமா என்பார்கள். எனக்கு ஜேன் ஏர் நாவலையும் அதன் ஆசிரியர் சார்லத் ப்ரோண்ட்ட (Charlotte Bronte) என்கிற பெண் எழுத்தாளரையும் கொண்டாடவேண்டும். நமது தமிழ் பேராசிரியர்கள் கம்பனைப்போல் ஆகுமா, சங்க இலக்கியங்களைப்போல ஆகுமா என குரல்கொடுப்பதுபோலவே ஆங்கிலபேராசிரியர்கள் ஷேக்ஸ்பியருக்கு ஈடாக ஒருவர் பிறக்கவில்லை என்கிறார்கள். எனக்கு முதலில் இலக்கியம் என்பதே ஒப்பிடுசெய்வதல்ல. நளவெண்பாவிற்கு ஒரு புகழேந்தியெனில் வானம் வசப்படும் நாவலுக்கு ஒரு பிரபஞ்சன். இருவரும் அவரவர் காலத்தில் சாதித்தவர்களே. கம்பனே இன்றிருந்தாலுங்கூட அவரது படைபாற்றல் ஒர் உரைநடை இலக்கியத்தை தருவதற்கே உதவியிருக்கும். கணினியின் உதவியால் நாம் ஆயிரம் பக்கங்களில் படைப்புகளை கொண்டுவருகிறபொழுது, எழுத்தாணிகொண்டு பழகியவரென்பதால் பத்தாயிரம் பக்களில் நாவல் எழுதியிருப்பார் அவ்வளவுதான்.  என்ன இருந்தாலும் இராமயணம்போல வருமா என்றெல்லாம்  அவரை விமர்சிக்க முடியாது. அந்தக் கம்பன் காலம் வேறு. இந்தக் கம்பன் காலம் வேறு. மீண்டும் ஜேன் ஏர் நாவலுக்கு வருகிறேன். சொந்த வாழ்க்கை முழுவதையும் படைப்பில் பேசிய முதல் நாவல் ஆசிரியர் அநேகமாக இவராகத்தான் இருக்கக்கூடும். 1847ம் ஆண்டு பதிப்பிக்கபட்ட இந்நாவல் பல பதிப்புகளை கண்டது. இதில் குறிப்பிடத்தக்க விடயம் ஆசியரின் முதல் நாவல்(The Professor) பல பதிப்பாளர்களால் திருப்பி அனுப்பப்பட்டது. நவலுக்குகிடைத்த வரவேற்பு திரைப்படத் துறையினரின் கவனத்தைப்பெற்றது 1915ம் ஆண்டிலிருந்து நாவல் பலரின் திரைக்கதைகளில் வெள்ளித் திரையை ஏற்கனவே கண்டிருக்கிறது. இந்நிலையில் பத்தாவது முறையாக நாவல் திரைப்படமாக அண்மையில் வெளிவந்துள்ளது. படத்தின் இயக்குனர் காரி ·புக்குனாகா (Cary Fukunaga).. தொலைக்காட்சியில் ஜோன்போன்ஸ்டெய்ன்(Joan Fontaine) ஜேர் ஏர் ஆக நடித்த பழைய திரப்படத்தைப் பார்த்திருக்கிறேன். புதுப்படம் எப்படி இருக்கிரதென்று பார்க்கவேண்டும். நாவலை படிக்கப் பொறுமையில்லாதவர்கள் அவசியம் பார்க்கவேண்டிய திரைப்படம். இளம்வயதில் தாயைப்பறிகொடுத்து பின்னர் தந்தையையும் இழந்து சித்தியின் ஆதரவில் வளரும் பெண்ணுக்கு ஏற்படும் சோதனைகளென்ற உலகமறிந்த கதை எப்படி அலுக்காமல் இத்தனை வருடங்களுக்குப்பிறகும் சினிமாவாக மீண்டும் மீண்டும் அவதாரமெடுத்து வெற்றிபெறுகிறதென்பதை அவசியம் இலக்கியத்தை முழம்போடுகிறவர்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.

அழகான ராட்சசன்

பிராசுவாஸ் சகாங் (Françoise sagan) என்ற பிரெஞ்சு பெண் நாவலாசிரியைக்கு அழகான ராட்சசி என்ற பட்டப்பெயருண்டு. அவரது ‘வணக்கம் துயரமே’ நாவலைப்படித்துவிட்டு மொரியாக் என்கிற இலக்கிய விமர்சகர் அவருக்கு சூட்டிய பெயர். பெண்ணுக்கு சரி குழந்தைக்கு வைப்பார்களா? அதுவும் அக்குழந்தையின் பெற்றோர்கள்! பிரான்சு நாட்டின் வடபகுதி மாகாணமொன்றில் நடந்த அதிசயமிது. உள்ளூர் நகராட்சி அலுவலகத்துக்குச்சென்ற பெற்றோர்கள்  பிறப்பு இறப்பு அலுவலகத்தில் தங்கள் குழந்தையின் பிறப்பை பதிவு செய்யும்போது, ஊழியர் குழந்தையின் பெயரைக்கேட்க அவர்கள் ‘ராட்சசன் (Démon) எனக்கூறியிருக்கிறார்கள். ஊழியர் பெற்றோரிடம் இப்பெயர் நன்றாக இல்லையே, நாளை குழந்தையைப் பாதிக்காதா என்றிருக்கிறார். பெற்றோர்கள் உறுதியாக இருக்கவே வேறுவழியின்றி குழந்தையின் பெயரை ‘ராட்சசன்’ என்று பதிவு செய்துவிட்டார். ஆனாலும் அரசு ஆட்சேபனை தெரிவித்தது. தனது கடிதத்தில் “நாளை குழந்தையின் எதிர்காலத்தை பாதிக்கக்கூடும்” எனவே வேறு பெயரை தேர்வுசெய்யவேண்டுமென வற்புறுத்தியது. ஆனால் பெற்றோர்கள் விடுவதாக இல்லை. தற்போதைய சூழலில் பெற்றோர்கள் என்ற தகுதியில், குழந்தையைத் தவிர வேரெவரும் ஆட்சேபம் தெரிவிக்க முடியாதென்ற நிலையில் தங்களுக்கு எந்தப்பெயரையும் குழந்தைக்கிட உரிமையுண்டு என்று வழக்குபோட்டு குடும்ப நீதிமன்றத்தில் தங்களுக்கு ச் சாதமாகத் தீர்ப்பையும் பெற்றுள்ளனர்;கீழ் நீதிமன்றத்தில் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பை எதிர்த்து அரசாங்கம் மேல் முறையீடு செய்யப்போவதில்லையாம். ஆகப்பையன் வளர்ந்து ஆட்சேபம் தெரிவிக்கும்வரை ‘ராட்சசன்’. எனக்குள்ள சந்தேகம் ஒருவேளை இது குழந்தையின் தாய் செய்த தந்திரமாக இருக்கலாம். மகனைக் கொஞ்சும் சாக்கில் கணவனை திட்டுவதற்கு அவர் தீட்டிய தந்திரமோ என்னவோ?  இதுபோன்ற விஷயங்களில் பெண்கள்கெட்டிக்காரர்கள்.  ராட்சசன் என்ற பெயருக்கு ஆட்சேபம் தெரிவித்த பிரெஞ்சு அரசாங்கம்தான் இந்தோசீனா யுத்தத்தின்போதும் இரண்டாம் உலகப்போரின் போதும் பிரெஞ்சு ராணுவத்தில் சேரவந்த தமிழர்களின் பெயர்கள் நீளமாக இருக்க திங்கள், செவ்வாய், புதன் என்று வார நாட்கள் பெயர்வைத்தது.  தரை, வானம், திராட்சை, கறுப்பு வெள்ளை, பச்சை, நாய், கழுதை என்றெல்லாம் புதுச்சேரி தமிழர்களுக்குப் பெயர் விநோதங்களுண்டு. யாரேனும் புதுச்சேரிதமிழரை பெயரைக்கேட்க அவர் ‘இல்லை’ (Rien) எனலாம். உண்மையில் அது அவர் பெயர், கனவான் பிரெஞ்சுக்காரன் சூட்டியது.

இலக்கியமென்பது….

இலக்கியமென்பது சான்றோர் சொல் பின்னர் காலப்போக்கில் ஆன்றோர் நூல் அதாவது அறிவுடையோர் கூற்று என்றாயிற்று? இலக்கியமென்றாலே ஏதோ ஓர் அறத்தை வற்புறுத்துவது என்றகாலத்தில் அது சான்றோர்களால் சொல்லப்பட்டது. அதன்பின்னர் வால்மீகியில் ஆரம்பித்து ழான் ழெனேவரை இலக்கியம் பேச ஆன்றோர் –  நூலாயிற்று. கோட்பாடு மரபு அமரத்துவமான விழுமியங்களையும், உலகளாவிய பார்வையையும் வைத்து படைப்பொன்றின் இலக்கிய தராதரத்தை தீர்மானிக்கிறது. வரலாறு மரபு  இலக்கியமென்பது காலம், எல்லைகளென்ற தளைகளிலிருந்து விடுபட்டு நிலைத்திருப்பவை என்கின்றது மேற்கத்திய உலகில் synchrony, diachrony என்ற இரு பார்வைகள் உள்ளன.  இலக்கியம் எழுதப்பட்ட நேற்றைய காலத்திற்கு நம்மையும் அழைத்துச்சென்று ஓர் இணக்கத்தை தன்னுடன் ஏற்படுத்திக்கொள்வது அல்லது கடந்தகால படைப்புகளை நமது சமகாலத்தைவையாக நடத்துவதென்பது முதலாவது வகை. எவ்வகை வாசிப்புக்காக அல்லது எவ்வகை வாசகர்களை மனதிற்கொண்டு எழுதப்படுகின்றதென்பதைவைத்து தீர்மானிக்கபடுவது இரண்டாம் வகை.

ஆனால் எல்லாகாலத்திலுமே இலக்கியமென்பது வெகுசனப்புரிதலுக்கு அப்பாற்பட்டதாகவும், புதிர்களும் சூட்சமங்கள் கொண்டதாகவும் இருந்து வந்திருக்கிறது. சைகைகளை மட்டும் நம்பி வாழ்ந்த காலத்தில் முக்கல் முனகல்கூட இலக்கியம் தான், ஓசைகளை மொழியாக வடிவமைத்தபோது ஓசைகளை மட்டுமே கேட்கப் பழகிய உலகில் ஒன்றிரண்டு சொற்கள் இலக்கியங்களாக இருந்திருக்கலாம். பின்னர் சொற்களுக்கும், அச்சொற்கள் இடம்பெற்ற வாக்கியங்களுக்கும் நகாசுவேலைகள் நடைபெற்றன. ஒன்றிரண்டு வார்த்தைகளில் எதிரே இருப்பவர்களுடன்மட்டும் உரையாடியபோதும், பிறர் அனுபவித்திராத அல்லது பிறர் அறிந்திருந்தும் உரிய சொற்களால் அடையாளப்படுத்த முடியாத தகவல்கள் என்னிடம் உள்ளன என ஆரம்பித்தபோது நீண்ட உரைகளும் (Discours), அந்த உரைகள் நிரந்தரமாக அறியப்படவேண்டியவையென்ற நிலைவந்தபோது எழுத்துகளின் தயவால் உரைநடை இலக்கியங்களும் பிறந்தன. ஆக இலக்கியம் என்பதற்கு ஒரு நிரந்தரமான வெளித்தோற்றமும் அதன் உட்கட்டமைப்பில் தொடர்ந்து மாறுதல்களும் உள்ளாகிவருகிறது. இலக்கியம் தொடக்கமுதலே நிரந்தரமாற்றங்களை பெற்றுவருகிறது. நேற்றிருந்த இலக்கியவாதிகளின் இடத்தில் இன்று வேறு சிலரைப்பார்க்கிறோம். அந்த மாற்றம் படைப்புகளிலும் வெளிப்படையாக தெரிகிறது. எழுத்துகளில் கடந்தபத்தாண்டுகளாக நடந்துள்ள மாற்றங்களுக்கு கீழ்க்கண்ட நூல்கள் உதாரணம்

புதிய புத்தகங்கள் இங்கே செப்டம்பர் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் வெளிவருகின்றன. பிரசுர வாய்ப்பிற்கும் உழைத்து; இலக்கிய விமர்சகர்களின் நன்மதிப்பை பெற்றாகவேண்டிய நெருக்கடிக்கும் புதியவர்கள் உள்ளாவதால் இவ்விளைஞர்கள் கடுமையாக உழைக்கவேண்டியிருக்கிறது. தனித்தன்மையை நிறுவவேண்டியிருக்கிறது. இன்றைய பிரசினைகளை மையப்படுத்திய எழுத்துகளாகவே அவை இருக்குமென்ற எதிர்பார்ப்பும் வாசகர்களிடமிருக்கிறது. இணையதளம், சமூக உறவுகளில் வலைத்தலங்களின் பங்கு, பொருளாதார நெருக்கடி, அரபு நாடுகளில் எதேச்சதிகாரங்களுக்கெதிராக ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு போன்றவை உலகம் இதுவரை காணாத அளவில் அண்மையில் நடந்துள்ளன. எனவே புதிய இலக்கியங்கள் இக்கருப்பொருளை மையமாகக்கொண்டே எழுதப்பட்டிருக்குமென பரவலாக நம்பப்பட்டது. இதுபோன்றதொரு பொதுவான எதிர்பார்ப்பை நிராகரித்து, தீவிர படைப்பென்பது பொதுநீரோட்டத்தோடு கலப்பதல்ல என்கிற கருத்தாக்கத்தை வலியுறுத்துவதுபோல இந்நாவல்கள் உள்ளன. குடும்பம், இயற்கை, ஒப்பீட்டளவில் தமது மூதாதைகளிடமிருந்து நினைவுகள், அடையாளங்கள் ஆகியவற்றில் அவர்களுக்குள்ள விலகல் இடைவெளி ஆகியவற்றைபற்றி இப்புதியதலைமுறை படைப்புகள் பேசுகின்றன. சுயகதைகள், தன்முனைப்புடன் கூடிய பயணம் ஆகியவற்றை எழுதுபொருளாகக்கொண்டு கடந்த பத்தாண்டுகளில் நாவல்களின் பெயரைமட்டுமே நவீனப்படுத்திவந்த மூத்த பிரெஞ்சு எழுத்தாளர்களின் படைப்புகள் அவர்களுக்கு அலுப்பைத் தந்திருக்கலாம்.

இவ்வருடத்தில் நான் வாசித்த அளவில் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு நாவல்களை எனது இரசனைக்கு உன்படுத்தி வரிசைபடுத்தியுள்ளேன். பிரெஞ்சு:
1. La carte et le territoire – Michel Houellebecq -Flammarion
2. Hygiène de l’assassin -Amélie Nothomb – Albin Michel
3. Du Domaine des Murmures – Carole Martinez -Gallimard
4. Le Premier mot – Vassilis Alexakis -Stock
5. Le cimetière de Prague -Umberto Eco – Grasset
6. Pas son genre – Philippe Vilain – Grasset
7. La faute de goût -Caroline lunoir–  Actes Sud
8. Pondichéry – Thierry Ardisson -Albin Michel

ஆங்கிலம்:

1. The Ghost writer -Philip Roth -Vintage Books
2. Tinkers -Paul Harding -Bellevue Literary press
3. The Land of Green Plums -Herta Muller -Henry Holt and Company
4. The Laguna – Barbara Kingsolver-HArper Perennial
5. Death With Interruptions -José Saramago -Mariner Books
———————————————-

நன்றி: அம்ருதா பிப்ரவரி 2012

பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள் -15

Mademoiselle சொல் இனி இல்லை:

ஆங்கிலத்தில் Miss அல்லது My young lady என்ற பொருள்கொண்ட மத்மசல் (Mademoiselle )

என்ற பிரெஞ்சு சொல்  இளம்பெண்களையும், திருமணம் ஆகாத பெண்களையும் குறிப்பிடும் சொல்லாக வழக்கிலிருந்தது. நீங்கள் ஆண்களெனில் Bonjour Monsieur என்றோ, பெண்களெனில் உங்கள் தோற்றம் வயதைப்பொறுத்து Bonjour Mademoiselle என்றோ Bonjour Madame என்றோ பொதுவிடங்களிலும், அலுவலகங்களிலும் (பிரான்சு நாட்டில்) முகமன்கூற கேட்டிருப்பீர்கள்.

பல காரணங்களை முன்னிட்டு  Mademoiselle (Miss- குமரி அல்லது யுவதி) என்ற சொல் பெண்களைப் புண்படுத்துவதாகவும், அதன் தேவை பொருளற்றதெனவும் கொள்ளப்பட்டு ஜனவரி 1- 2012லிருந்து Cesson-Sévigné நகரசபை (Ille-et-Vilaine, Bretagne)  தமது அலுவலக நடவடிக்கைகளிலிருந்து நீக்கியுள்ளதாக அறிவித்தது. இம்மாதம் 21ந்தேதியிலிருந்து பிரான்சுநாட்டின் பிரதமர் பிரான்சுவா ·பிய்யோன்(François Fillon) இச்சொல்லை நாடு முழுவதும் அரசு அலுவலக உபயோகத்திலிருந்து அதிகாரபூர்வமாக  நீக்கியுள்ளதாக தெரிவித்திருக்கிறார். ஆக பிரான்சு நாட்டில் Mademoiselle என்ற சொல் உத்தியோகபூர்வமாக இனியில்லை. பெண்கள் அனைவரும் வயது வேறுபாடின்றி அவர்களுடைய மணவாழ்க்கையைக் கணக்கில் கொள்ளாது இனிமேல் Madame (மதாம்) என்றே அழைக்கப்படுவார்கள். அவ்வாறே இன்னார் மகள், இன்னார் மனைவி என்ற சொற்களும் அரசாங்க ஆவனங்களில் இனி தொடராது.

அண்மையில் பிரெஞ்சு பெண்ணுரிமை அமைப்புகள் எழுப்பிய உரிமைக்குரலுக்கு அரசு அளித்திருக்கும் அனுகூலமான பதிலிது. இரண்டொரு மாதங்களில் அதிபர் தேர்தல் நடக்க இருப்பது காரணமாக இருக்கலாம். இங்கே வேறொரு செய்தியையும் குறிப்பிட்டாகவேண்டும். தொடக்கத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு Mademoiselle, Madame என பெண்களுக்கு இருந்ததைப் போலவே ஆண்களுக்கும் Demoiselle என்ற சொல்லுக்கு ஈடான Damoiseau, Monsieur சொற்கள் இடைக்காலத்தில் இருந்திருக்கின்றன. காலப்போக்கில் Damoiseau என்ற சொல்லை வேண்டாமென்று ஒதுக்கிவிட்டு Monsieur என்ற சொல்லை மட்டும் உபயோகிப்பதென தீர்மானித்திருக்கிறார்கள். ஆக பெண்களுக்கு காலம் கடந்து நீதிவழங்கியிருக்கிறார்கள்.

——————————