Category Archives: Uncategorized

உலக மகளிர்தினம்:

பண்டிகைக்கு, நாட்டிற்கு, தலைவர்களுக்கென ஒதுக்கிய நாட்கள் போக, எஞ்சிய நாட்களில் ஒன்றிரண்டு சில நல்ல காரியங்களுக்கும் பயன்படுகின்றன. அவற்றுள் வருடம்தோறும் மார்ச் மாதத்தில் நினைவுகூரப்படும் உலகமகளிர் தினமும் ஒன்று. ஆனால் புள்ளிவிவரங்கள் தரும் ஏமாற்றத்தினால் அறைகூவல்கள்,  புதிய சபதங்கள். சமுதாயத்தில் அடையாளம்பெற்ற பெண்களை தலமையில் உரைகள், விவாதங்கள், தீர்மானங்கள். ஆனால் வரலாறு தரும் உண்மைகள் தெளிவாகவே இருக்கின்றன. தனிமனிதனோ, இனமோ, ஒரு சமூகமோ பாதிக்கப்படுகிறவர் எவராயினும் சுயமுயற்சியோ விழிப்புணர்வோ இல்லையென்றால் விமோசனங்களில்லை. சுதந்திரம், சமத்துவம் எனப் பெருமைகொள்ளும் பிரான்சுநாட்டின் இன்றைய நிலமை:

4மணி 1நிமிடம்: சராசரியாக நாளொன்றிர்க்கு பெண்ணொருத்தி வீட்டுப்பணிகளுக்கு செலவிடும் நேரமிது. ஓர் ஆண் குடும்பத்திற்கென்று வீட்டிலிருக்கிறபோது செலவிடும் நேரத்தைக்காட்டிலும் (2மணி 13 நிமிடம்) இருமடங்கு அதிகம். இது தவிர  பிள்ளைகளோடு குறைந்தது ஒரு மணி நேரம் செலவிடுகிறாள், மாறாக ஆண்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஒதுக்க முடிந்த நேரம் அரைமணிக்கும் குறைவு.

ஒரு நாளில் பெண், தமது விருப்பமானவைகளுக்காக செலவிடும் நேரம்: 4மணி.45. ஆண்கள் விருப்பமானவைகளுக்கு ஒதுக்கும் நேரம் 5மணி 30 நிமிடங்கள். வேலைவாய்ப்பும் ஆண்களுக்கே அதிகம். பெண்களில் 31  சதவீதத்தினர் வேலையின்றி முடங்கிக்கிடக்க ஆண்களில் வேலைவாய்ப்பு அமையாதவர்கள் 25 சதவீதத்தினர். வேலைக்கும் செல்லும் பெண்களிலும் 31சதவீதத்தினர் பகுதிநேரப் பணிகளைச் செய்தே காலத்தைத் தள்ளவேண்டியிருக்கிறது. ஆண்களில் சொற்ப சதவீதத்தினரே (அதாவது 7 விழுக்காட்டினர்) இந்நெருக்கடியைச் சந்திக்கின்றனர். தவிர வேலைக்குச்செல்லும் பெண்களில் 25 விழுக்காட்டினருக்கு ஆண்களுக்கு ஈடான ஊதியமோ, ஊதிய உயர்வோ வழங்கப்படுவதில்லையாம். இப்படி பலதுறைகளில் இருபத்தோராம் நூற்றாண்டிலும் பெண்கள் நிலைமை ஆண்களினும் பார்க்க தாழ்ந்தேயிருக்க, இயற்கை ஒரு விஷயத்தில் அவர்களுக்கு நீதியை வழங்கியிருக்கிறது. அது பெண்களுக்கான ஆயுட்காலம். மருத்துவத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தினால் பெண்கள் ஆயுட்காலம் 85 ஆண்டுகள் என்கிறார்கள். சராசரி ஆணுக்கு 78 வயதில் உயிர்வாழ்க்கை முடிந்துவிடுமாம். ஆணைக்காட்டிலும் 7 ஆண்டுகள் அதிகம். 78 ஆனடுகால இழப்பை இந்த எட்டு ஆண்டுகளில் தாய்க்குலத்தினர் ஈடுசெய்யமுடியுமாவெனத் தெரியவில்லை. ஆனால் பெண்களில் அநேகர் கணவனை இழந்தபிறகு நிம்மதியாக இருக்கிறார்ளென்றும் ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

——-

பதிப்புலகத்தின் எதிர்காலம்

இனி அச்சு வடிவ புத்தகங்களுக்கும் செய்திதாட்களுக்கும் வேலையில்லை என்கிறார்கள். ஜெனிவாவில் ஐக்கிய நாட்டு சபையின் ஒரு பிரிவான உலக அறிவு சார் சொத்துரிமை அமைப்பின் கருத்தின்படி 2040ல் மேற்கண்ட சங்கதிகள் இலக்கமயப்படுத்தப்பட்டு கணினிக்குள் கரைந்து போகும். எச்சரிப்பவர் இவ்வமைப்பின் பிரதிநிதி திருவாளர் கர்ரி (M. Gurry). La Tribune de Geneve’ என்ற சுவிஸ் நாட்டு தினசரி ஒன்றிர்க்கு அளித்துள்ள பேட்டியில் இதனைத் தெரிவித்திருக்கிறார். அவரது கருத்தின்படி இன்னும் ஒரு சில ஆண்டுகளில் இன்று நாம் வாசித்துக்கொண்டிருக்கும் தினசரிகள் அவ்வளவும் இல்லாதொழியும்.- இப்போதே நம்மில் பலர் குறிப்பாக வலைத்தள இணைப்புள்ள கணினி உபயோகிப்பாளர்கள் தினசரிகளை இணையதளங்களில்தான் வாசித்துக்கொண்டிருக்கிறோம். அதுபோலவே அச்சசு வடிவிலான புத்தகங்கள் 2040ல் முடிவுக்குவந்துவிடுமாம். அமெரிக்கா முந்திக்கொள்ளும் என்கிறார்கள்.அதாவது 2017லேயே அங்கு அச்சிட்ட புத்தகங்கள் சந்தைக்கு வராது. வளர்ச்சியென ஒன்றிருந்தால் இழப்புகளுக்கும் தயாராகத்தான் இருக்கவேண்டும். ஆனால் அவர் எழுப்பும் வேறொரு பிரச்சினை கவனத்திற்குரியது. பத்திரிகையாளரும் எழுத்தாளர்களும் திருவோடு ஏந்தவேண்டியிருக்குமென அஞ்சுகிறார். பதிப்பிக்க சாத்தியமில்லை என்கிறபோது பதிப்பாளர்களும் பத்திரிகை அதிபர்களும் ஊதியத்தை எங்கிருந்து வழங்குவார்கள் என்று கேட்கிறார்?   “குறைந்த பட்சம் அறிவுசார் சொத்துரிமைக்கேனும் உத்தரவாதம் வழங்கப்படவேண்டும் இல்லையேல் ஆபத்து”, என்கிறார் ஆசாமி. மேற்கத்திய நாடுகளிலும் அமெரிக்காவிலும் ஒருவேளை இக்குரலில் தொனிக்கும் குரலுக்குப் பொருளிருக்கலாம், தமிழ் எழுத்தாளர்கள் இதில் கவலைப்பட  என்ன இருக்கிறது, சொல்லுங்கள்?

—————————————————————.

இசைவானதொரு இந்தியப்பயணம் -10

பிப்ரவரி 10

திண்டுக்கல்லில் ஒன்பதாம் தேதி இரவு பார்சன்ஸ் கோர்ட் என்ற ஓட்டலில் தங்கியிருந்தோம். காலையில் ஆறரைமணிக்கெல்லாம் புறப்பட்டு, எங்கள் காலை உணவை முடித்துக்கொண்டு எட்டுமணிக்கெல்லாம் நாமக்கல் புறப்பட்டுவிட்டோம். ஹோசூர் கிருஷ்ணகிரி சாலையில் வடக்கே பயணம் செய்யவேண்டியிருந்தது. அண்மைக்காலங்களில் சாலைகளின் துரிதவளர்ச்சியை இந்தியாவில் பார்க்க முடிந்தது. திண்டுக்கல் நாமக்கல் சாலையும் எதிர்பார்த்ததைக்காட்டிலும் நன்றாக இருந்தது. கு. சின்னப்ப பாரதி காலையிலேயே ஒருமுறை தொடர்புகொண்டிருந்தார். வழிகளையெல்லாம் சரியாகச் சொல்லியிருந்தார். ஓரிடத்தில் எங்கள் வாகனஓட்டி சாலையைத் தவறவிட்டு கரூருக்குள் போய்விட்டார். பத்து நிமிடநேரம் கூடுதலாக செலவிட்டிருந்தோம். ஆனால் அதை பெரிதாகச் சொல்லிக்கொள்ள இல்லை. இடையில் ஒரு பெட்ரோல் பங்க்கில் சிறிது நேரம் வாகனத்தை நிறுத்த நேர்ந்தது. திண்டுக்கல் நாமக்கல் சாலை ஓரம் நன்றாகவே இருந்தன. ஒன்பது மணிக்கெல்லாம் நாமக்கல் அடைந்துவிட்டோம். நகரத்தின் உள்ளே சேலம் ரோட்டில் எழுத்தாளர் சின்னப்ப பாரதி அவரது நண்பருடன் காத்திருந்தார்.

கிறித்துவ சகோதரி ஒருவரால் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருந்த தமது சங்கம் என்ற நாவலை பிரான்சு நாட்டில் எந்த பதிப்பகமாவது வெளியிட முன் வருமா எனக்கேட்டு எழுத்தாளர் கு. சின்னப்பபாரதி எழுதியிருந்தார். எனக்கும் தமிழ் படைப்புகளை எனது அமைப்பு மூலமாக பிரெஞ்சில் கொண்டுவரும் ஆர்வம் இருந்ததால் சம்மதித்தேன். எங்கள் அமைப்பு மூலம் கொண்டுவந்தால் பிரயோசனமில்லையென்பதும் தெரியவந்தது. காரணம் பிரெஞ்சு பதிப்பகங்கள் துணையின்றி அதனைப் பரவலாக பிரெஞ்சு வாசகர்களிடம் கொண்டு சேர்க்க முடியாதென்பது காலம் கடந்து தெரியவந்தது.  எனினும் பதிப்பகங்களுக்கு அனுப்பி வைப்பதென்று முடிவு செய்தேன். இதற்கிடையில் தமிழ்நாட்டிலிருந்த மூத்த எழுத்தாளர்களில் சிலர் பிரெஞ்சு பதிப்பகங்களுக்கு முதன் முதலாக அனுப்புகிறபொழுது தமிழில் நல்ல நூல்களை அனுப்பினால்தானே தொடர்ந்து ஆர்வம் காட்டுவார்கள் என்றார்கள். நான் பிரெஞ்சில் வெளிவந்த அந்த நூலை வாசித்தேன். எனக்கு நிறைவாக இருந்தது. தவிர கொல்லிமலை மக்களின் பிரச்சினையை பேசுவதாக இருந்தது. பிரெஞ்சு பதிப்பகங்கள் மூன்றாம் உலக நாடுகளிலிருந்து இதுபோன்ற நூல்களைத்தான் எதிபார்க்கிறார்கள் என்ற எனது நம்பிக்கை காரணமாக முதலில் ஒரு பதிப்பகத்திற்கு அனுப்பிவைத்தேன். அவர்கள் எழுதிய கடிதத்தில் தங்கள் பதிப்பகத்தின் மீது நம்பிக்கைவைத்து கையெழுத்து பிரதியை அனுப்பியதற்காக நன்றி தெரிவித்துவிட்டு, தாங்கள் பதிப்புக்கு இணங்கினால் ஒரு மாதத்தில் கடிதம் எழுதுவதாகவும் இல்லையெனில் உரிய தபால் கட்டணம் அனுப்பிவைத்தால் திருப்பி அனுப்புவதாகவும் தெரிவித்திருந்தார்கள். கு.சின்னப்பாரதி பிரெஞ்சு மொழி பெயர்ப்புவெளிவர மிகுந்த ஆர்வமும்காட்டினார்  அவசரமும்காட்டினார். எனவே வேறு இரண்டு பதிப்பகங்களுக்கு அனுப்பிவைத்தேன். மூத்த எழுத்தாளர்கள் கூறியதுபோல அதனை அப்படைப்பின் குற்றமாக ஏற்றுகொள்ள இயலாது. இக்காலத்தில் மொழிபெயர்ப்பினை பதிப்பிக்கிறபோது அம்மொழிபெயர்ப்பும் ஒழுங்காக வந்திருக்கவேண்டும். எனக்கு நன்றாக இருந்தது. படித்த பதிப்பாளர்களின் விருப்பம் வேறாக இருந்திருக்கிறது. தவிர பல நல்ல எழுத்துகள் பதிப்பாளர்களால் பல முறை நிராகரிக்கப்பட்டமைக்கு  முன்னுதாரணங்கள் இருக்கின்றன.

மாறாக எனது அமைப்பு நண்பர்களிடம் மொழிபெயர்ப்பு நாவலை அனுப்பிவைத்தபோது அதில் பிரான்சுவாஸ் மட்டும் மொழிபெயர்ப்பு திருப்தியில்லை என்றார். மற்ற இருவரும் நாவல் நன்றாக இருக்கிறதென்றார்கள். ஆக நாவலைப்படித்துவிட்டு அடித்தட்டு மக்களின் துயரில் அக்கறைகொண்டிருக்கிற  கு.சின்னப்ப பாரதியை  பார்க்க ஆர்வம் காட்டினார்கள். இந்தியாவுக்கு வருவதற்கு முன்பாக சின்னப்ப பாரதியிடம் இவ்விஷயத்தைக்கூறியிருந்தேன். அவர் மிகவும் சந்தோஷப்பட்டார். எந்த எழுத்தாளனும் எதிர்பார்ப்பது அதைத்தானே. விருதுகள், பரிசுகளைக்காட்டிலும் இதுபோன்ற பாராட்டுதல்கள்தான் எழுத்தாளனை உற்சாகப்படுத்துக்கின்றன. கு.சின்னப்பபாரதி சேலம் ரோட்டில் பிரெஞ்சு நண்பர்களைக் காரில் பார்த்ததும் கட்டி தழுவினார். சக எழுத்தாளனாக அந்த மகிழ்ச்சியை உள்வாங்கிக்கொண்டேன். அவரது வாகனத்தை பின்தொடர்ந்துவருமாறு எங்கள் வாகனஒட்டிக்கு கட்டளை பிறப்பித்துவிட்டு முன்னால் சென்றார்.  கொஞ்சதூரத்தில் ஒரு உணவு விடுதிமுன்னால், பலகாரம் சாப்பிடலாமே என்றார். நாங்கள் ஏற்கனவே திண்டுக்கல்லில் முடித்துவிட்டு வந்ததைக் கூறினோம். அவருடைய வீடு நகரத்தைவிட்டு தள்ளி, புற நகரில் அமைந்திருந்தது. பிரெஞ்சு நண்பர்களுக்கு ஆரத்தி எடுத்தார்கள். உள்ளே சென்றதும் தேநீர் வந்தது. சின்னப்பபாரதியின் துணைவியார் பாரதிக்கு வாய்த்த செல்லம்மாள் என நினைத்துக்கொண்டேன். வேறு சொற்கள்வேண்டாம். எழுத்தாள நண்பர் ஒரு குழந்தையைபோல தமது படைப்புகளையும் மொழிபெயர்ப்புகளையும் எடுத்துகாட்டி மகிழ்ந்தார். அந்தக் கண்களைப்பார்க்கவேண்டுமே!

எல்லோரும் செல்வம் காலேஜ் ஆவ் டெக்னாலஜிக்குச்சென்றோம். அங்கும் அனைவருக்கும் வரவேற்பு. பிறகு அறக்கட்டளை நண்பர்களின் அறிமுகம், செல்வம் கல்விஸ்தாபனத்தில் தலைவர் திருவாளர் முனைவர் செல்வராஜ் அறிமுகமென முடிந்து மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். கு; சின்னப்பபாரதி அறக்கட்டளை தலைவரும் சரி நிர்வாகிகளும் சரி கு.சின்னப்பாரதி மீது வைத்திருந்த மரியாதையை புரிந்துகொள்ள முடிந்தது. மாணவர்கள் ஆசிரியர்களென சுமார் இரு நூறுபேருக்கு மேல் கூடியிருந்தனர். எனது மாத்தாஹரி அண்மையில் சின்னப்பாரதி அறக்கட்டளையின் சார்பாக பரிசினை வென்றிருந்தது. என்னை அறிமுகப்படுத்துகிறபோது அதனை மறக்காமல் குறிப்பிட்டார்கள். இரண்டு மாணவர்கள் காலச்சுவடில் எனது படைப்புகளை தொடர்ந்து படிப்பதாக கூறியது எதிர்பாராத சந்தோஷம். நண்பர் இந்திரனும் பேசினார். பிரெஞ்சு நண்பர்கள் சின்னப்பபாரதியின் நூலை குறிப்பிட்டு பேசினார்கள். பங்கேற்ற அனைவருக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கினார்கள்.

மதியம் கேட்டரிங் மாணவர்கள் தயாரித்திருந்த இந்திய உணவு மேற்கத்திய பாணியில் பரிமாறப்பட்டது. இடையில் எழுத்தாளர் சின்னப்பபாரதி எ·ஸ்பிரஸ், இந்து பத்திரிகையாளர்களை பேட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார். பிரெஞ்சு நண்பர்களுக்கு நாமக்கல் மண்ணில் எழுத்தாளர் உத்தியோகம் கிடைத்திருந்தது. அந்த செய்தியை பின்னர் படிக்கவும் நேர்ந்தது. இந்தியாவில் ஆங்கிலதினசரிகளைக்கூட அத்தனை சுலபமாக நம்பக்கூடாதென்பதுபோல அடுத்த நாள் செய்திகளிருந்தன. பிரெஞ்சு நண்பர்கள் தங்களை எழுத்தாளர்களென்று சித்தரித்தும், சின்னப்பபாரதியைப் பார்க்கத்தான் இவ்வளவுதூரம் வந்தோமென்றும் நாங்கள் சொல்லவே இல்லையே என்றார்கள். இதெல்லாம் இந்திய தினசரிகளில் சகஜமென கூறி அவர்களை (பிரெஞ்சு நண்பர்களை) பிறகொருநாள் சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. மதியம் கொல்லிமலைக்கு பயணித்தோம். எழுத்தாளர் சின்னப் பாரதி நூலில் வரும் சந்தை நடக்குமிடத்தையெல்லாம் காண முடிந்தது. சின்னப்ப பாரதியின் தயவால் கொல்லிமலையின் தரிசனம். இன்னொரு முறை ஆற அமர குடும்பத்துடன் சென்று அங்கே தங்கிவிட்டு வரவேண்டும், என நினைத்துக்கொண்டிருக்கிறேன். சின்னப்பபாரதி கொல்லிமலைக்குத் துணையாக அனுப்பியிருந்த நண்பர் இருமுறை வழியைத் தவறவிட்டதும், நாமக்கல்லை நெருங்குகறபோது போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டதும் வழக்கம்போல நண்பர் சவியே தெபலுக்கு எரிச்சலூட்டியது. ஏதோ சொல்லப்போக நான் பதிலுக்கு ஏதோகூற விவாதம் விதண்டாவாதமாக நீண்டது. போதாதற்கு எங்களுக்கு முன்னால் காரில் சென்ற சின்னப்ப பாரதியின் நண்பர் நாங்கள் பின்னால் வருகிறோமா இல்லையா என்பதைக்கூட கவனியாமல் புறப்படுபோய்விட நாங்கள் வழியைத் தவறவிட்டு சில மணித் துளிகள் கூடுதலாக அலைந்தோம். பின்னர் சின்னப்பபாரதிக்கு போன்செய்து அவருடைய இளைய மருமகன் வந்து எங்களை அழைத்து சென்றார். இரவு எழுத்தாளர்வீட்டில் இலைபோட்டு குழிப்பணியாரம், இட்டலி, தோசை, பூரி யென வயிற்றை நிரப்பினார்கள். முதலில் பத்தாம்தேதி இரவு தங்கிவிட்டு பதினோறாம் தேதி காலை புதுச்சேரி செல்லலாமென்றுதான் யோசித்திருந்தோம். அதிகாலை எழுந்திருக்க தாமதித்துவிடும் பின்னர் புதுச்சேரிசெல்ல காலை பத்தும் ஆகலாம பதினொன்றும் ஆகலாமென்றுகூற அன்றிரவே புதுச்சேரிக்குப் புறப்பட்டாயிற்று.

————————

பிரான்சும் திரைப்பட விழாக்களும்

செசார் தேசிய திரைப்பட விருது-2012

இபோதெல்லாம் இந்தியத் திரைபடத்துரையினருக்கு ஆஸ்கார் விருதுகளில் அக்கறையிருக்கிறதோ இல்லையோ கான் (Cannes) திரைப்பிடவிழாவில் கலந்துகொள்ள ஆவலாய் இருக்கிறார்கள். ஆஸ்கார்போல அதுவுமொருநாள் அலுத்துபோகக்கூடும். கான் திரைப்படவிழாவைத் தவிர்த்து பிரான்சு நாட்டில் ஆப்ரிக்க  லத்தீன் அமெரிக்கா திரைபட விழா, ஐரோப்பிய திரைப்படங்களுக்கான விழா, கேலிச்சிந்திரங்களுக்கான திரைபடங்கள்விழா, இத்தாலிய படவிழா, அமெரிக்க திரைப்படவிழா, பெண்கலைஞர்களை மையமாகக்கொண்ட திரைப்படங்கள் விழா, சமூக விழிப்புணர்வு தரும் திரைப்படங்கள் விழா, குறும்படங்கள் விழா, நார்வே சுவீடன் திரைப்படங்கள் விழா, குற்றவியல் படங்கள், அதீதக் கற்பனைகளை கதைக்களனாகக் கொண்ட படங்களென ஆண்டுதோறும் பிரான்சுநாட்டில் 24 திரைப்படவிழாக்கள் நடைபெறுகின்றன. இது தவிர தேசிய திரைப்பட விருது விழாவும் பிப்ரவரிமாதத்தில் செசார் தேசிய திரைப்பட விருது விழாவென்ற (Cérémonie des César du cinéma) பெயரில் நடை பெறுவதுண்டு.

செசார் தேசிய திரைப்பட விருது விழா 1975ம் ஆண்டிலிருந்து வருடந்தோறும் சிறந்த நடிகர், நடிகை, இயக்குனர், இசை அமைப்பாளர், சிறந்த துணை நடிகர், நடிகை அறிமுகக் கலைஞரென பட்டியலிட்டுப் பரிசுகளை வழங்குகிறார்கள். விருது  குழுவினர், அரசாங்கத்தின் தலையீடின்றி செயல்படுகிறார்கள். அமைப்பு ஒரு தன்னாட்சி உரிமையுள்ள இயக்கம். அமெரிக்காவுக்கு ஆஸ்கார் விழா எப்படியோ அப்படி பிரான்சு நாட்டிற்கு செசார் தேசிய திரைப்பட விழா. இவ்வருடம் “L’Artiste (The Artist) என்ற ஊமைப்படம் பல பரிசுகளைத் தட்டிசென்றது. இப்படத்தைப் பற்றி இரண்டு மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் எழுதியிருந்தேன். சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகையென பரிசுகளைக் குவித்தபோதும் சிறந்த நடிகருக்கான செசார் விருது ‘Intouchables’ (‘தீண்டத் தகாதவர்கள்) படத்தில் நடித்திருந்த கறுப்பரான ஒமர் சி (Omar Sy)க்கு கிடைத்தது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், சில சினிமாக்களிலும் இதுவரை துணைபாத்திரங்களில் நடித்திருந்த ஒமர் சிக்கு தகுந்த பரிசென்றே சொல்லவேண்டும். L’Artiste படத்தின் கதா நாயகன் Jean Dujardin (ழான் துய்ழர்தென்)  ஏமாற்றத்துக்குள்ளானார். அவரது ஏமாற்றத்தை தவிர்க்கும் வகையில் எல்லோரும் எதிர்பார்த்ததுபோலவே அதற்கடுத்த வாரத்தில் லாஸ் ஏஞ்சலிஸில் நடைபெற்ற விழாவில் L’Artiste திரைப்படம் பலபரிசுகளை வென்றது. அதில் சிறந்த நடிகருக்கான பரிசும் அடங்கும்.

ஆசிய திரைப்படங்களுக்கான விழா

பிரான்சு நாட்டில் அண்மையில் நடந்து முடிந்த (மார்ச்-7-11) ஆசிய திரைப்படங்களுக்கான விழா’( Festival international des cinémas d’Asie –FICA)  நமக்கு முக்கியமானது. இந்தியத் திரைப்படத்துறையினர், இப்படியொரு திரைப்பட விழா பிரான்சுநாடைபெறுகிறதென்பதை அறிந்திருப்பார்களா எனத் தெரியவில்லை. சீனா, ஈரான், ஜப்பான், பிலிப்பைன், தென் கொரியா, தாய்லாந்து ஆகிய நாடுகள் பங்கேற்றன. வழக்கம்போல இந்தியாவின் பெயரை காணவில்லை. புதிய முயற்சிகளிலிறங்கும் நமது தமிழ்ப்பட இயக்குனர்கள் கவனத்திற்கொள்ளவேண்டிய விழா. விழாவுக்கு இஸ்ரேலிய பாலஸ்தீனியரான இயக்குனர் எலியா சுலைமான் (Elia Suleiman) தலமை வகித்தார், அவரொரு நல்ல நடிகருங்கூட. மொர்ட்டெஸா பாஷ்பாப் (Morteza Farshbab)என்ற ஈரானிய இயக்குனரின், துக்கம் (Mourning) தாமரை விருதைப் பெற்றது. விமர்சகர்களின் தங்கத் தாமரை விருதை ஜப்பானிய இயக்குனர் சொனோ சியொன் (Sono Sion) உழைப்பில் வெளிவந்திருந்த ‘Himlizu’ வென்றது. சீனாவின் புகழ்பெற்ற இயக்குனரான வாங் சியாஷ¤வாய் (Wang Xiashuai)யும், ஜப்பான் நாட்டின் இயயக்குனருமான கியோஷி குரொசொவா (Kiyoshi Kurosawa)வும் கௌரவிக்கப்பட்டனர்.

————————————–

 

உள்ளத்தில் ஒளியுண்டாயின்

எல்லோரும் எழுதுகிறார்கள். சில எழுத்துக்கள் ஈர்க்கின்றன. சிலவற்றை வாசிக்கிறபோது அருவருப்புடன முகத்தைச் சுளிக்க வேண்டியிருக்கிறது. தமிழில் நல்ல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். ஆற்றல்களுக்கும் குறைவில்லை. ஆனால் உள்ள சோகம் பெரும்பானமையான எழுத்துக்கள் Fabrication ஆக இருப்பது. அண்மைக்காலங்களில் சிற்றிதழ் படைப்புகள் குறிப்பாக கவிதைகளில் பல இந்தப் Fabrication சரக்குகுகளாக உள்ளன.

இம்மாதம் சிற்றிதழொன்றில் கட்டுரையொன்றை வாசிக்கநேர்ந்து இடையிலிருந்த ஒரு வரி என்னை அதிர்ச்சிக்குள்ளாகியது. இப்படிகூட படைப்பாளியொருவரால் கற்பனை செய்யமுடியுமா? என நினைத்துக்கொண்டேன். குடம் பாலில் ஒரு துளி விஷத்தைக் கலந்ததுபோலவிருந்த அவ் வரியைக் கொண்டு கட்டுரையாளரின் மனத்தை எடைபோடமுடிந்தது. தொடக்க காலத்தில் கசாப்பு கடை வைத்திருப்பாரோ என்ற சந்தேகம். ஆனால் அங்கே கூட நிச்சயம் மனித உயிர்களைப் பலிகொடுக்கும் சந்தர்ப்பம் அமைந்திருக்காதென நம்பலாம்.

தமது கட்டுரையில் காலத்தின் பாய்ச்சலை சொல்லவந்த கட்டுரையாளர்:

“குழந்தையின் அறுக்கப்பட்ட குரல்வளையிலிருந்து பெருகும் குருதியைப்போல் பாய்கிறது காலம்” என்று எழுதுகிறார். வளரும் எழுத்தாளர்கள் இதுபோன்ற விபரீதமான Avant -Guarde’ களைத் தவிர்ப்பது அவசியம். அவ்வரியை மீண்டும் எழுதுவதற்குக்கூட தயங்கினேன். கற்பனையென்றாலுங்கூட, இத்தனை பயங்கரமாகமாகாவா? தாதா -மற்றும் மீ எதார்த்த ஓவியக் கண்காட்சிக்குச் சமீபத்தில் சென்றிருந்தேன். படைப்பில் மட்டற்ற சுதந்திரத்தை சுவாசித்த அவர்களால்கூட குரல்வளையை அறுப்பதையெல்லாம் கற்பனை செய்ய காணாது.

பிரிட்டனிலுள்ள தொலைகாட்சியொன்று சிங்கள ராணுவ அட்டூழியங்களின் ஒரு பகுதியாக பன்னிரண்டு வயது சிறுவனின் மார்பில் குண்டுகள் துளைத்திருந்த காட்சியை ஓளிபரப்ப நாம் துடித்தோம். உலகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதென்று சொல்ல இயலாதென்றாலும் தமிழர்களிடத்தில் மிகப்பெரிய அதிர்வை அக்காட்சி உண்டாக்கியிருந்தது. இன்னாருடைய மகன் என்பது மட்டும் ஒரு காரணமல்ல, வேட்டை மிருகங்களின் கூரிய நகங்களினால் சிதையுண்டவன் ஒரு சிறுவன் என்பதால், அக்கொடூரக் காட்சி நம்முள் பாதிப்பைத் தந்தது. யுத்தமென்றாலும் கடைபிடிக்கவேண்டிய அறங்கள் தெளிவாக இருக்கின்றன. அறிவுஜீவிகளென சொல்லிக்கொள்கிறவர்களுக்கும் ஓர் அறம் வேண்டாமா? இப்படியா குழந்தையின் குரல்வளையை அறுத்தெடுத்து கற்பனைசெய்ய வேண்டும். காலத்தின் பாய்ச்சலை உவமைபடுத்த இவருக்கு வேறு உதாரணங்கள் இல்லையா அல்லது வறட்சியா? விரும்பியே எழுதினாரெனில் இவர்களுக்கும் ராஜ பக்ஷேக்களுக்கும் என்ன வேறுபாடு இருக்கமுடியும்?

1973ல் வட சென்னையில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபொழுது வேதாச்சலம் என்ற தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பேசவந்திருந்தார். தமது உரையைத் தொடங்கியவர், « கூட்டத்தில் அமர்வதற்கு முன்பு பசியோடிருந்தேன். தெம்பாக பேசமுடியுமா என்றிருந்தவேளை எனக்குச் சிற்றுண்டியும் சிறுநீரும் அளித்தீர்கள் », என அடுக்குமொழியில் பேசுவதாக நினைத்துக்கொண்டு உளற, அந்த உளரலை இதோ இன்றும் கூட மறக்காமல் எழுதிக்கொண்டிருக்கிறேன். தமிழில் வித்தியாசமாக சிந்திக்கிறேன் எழுதுகிறேனென சொல்லிக்கொள்கிற பலபேர்களின் எழுத்தில் இதுபோன்ற விபரீதங்களை வாசிக்க நேரிடுகிறது. பாரதி சொன்னதும் நினைவுக்கு வருகிறது “உள்ளத்தில் ஒளியுண்டாயின் வார்த்தையில் ஒளியுண்டாகும்

———————————————–

இசைவானதொரு இந்தியப் பயணம்

பிப்ரவரி -8 -9

பிரெஞ்சு நண்பர்களுடனான எனது இந்தியப் பயணத் திட்டத்தில் பிப்ரவரி எட்டு மற்றும் ஒன்பது தேதிகள் வேறுவகையானவை. இலக்கியம் சார்ந்திராதவை. ஆனாலும் மனித உயிர்கள் -சமூகம் – மானுடம் -பிரபஞ்சம் தவிர்த்ததொரு இலக்கியம் இருக்கமுடியுமா என்ன? இவற்றை பற்றிய பிரக்ஞையின்றி இலக்கியம் இயங்கமுடியாதென்கிற ஓர்மைக்கு உங்களைப் போலவே நானும் சொந்தக்காரன்.

இங்கே ஓர் உண்மையை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும். கடந்த ஓராண்டிற்கு முன்பு பிரான்சு நாட்டில் நான் வசிக்கிற Strasbourg நகரில் தமிழ் விழா ஒன்றை ஏற்பாடு செய்தோம் அதனை சொல்புதிது என்ற அமைப்பின் பேராலேயே நடத்தினோம். தமிழர் குடியேறியுள்ள நாடுகளில்லெல்லாம் அவர்கள் எண்ணிக்கைக்கு ஈடாக தமிழ்ச் சங்கங்கள் இருக்கும். பிரான்சிலுமுண்டு. எனக்கு நவீன இலக்கியங்களில் கவனம். நவீன இலக்கியத்தில் ஆர்வமுள்ள தமிழர்கள் பிறபகுதிகளைப்போலவே பிரான்சிலும் குறைவு. எனக்கோ அதனைத் தவிர்த்து வேறு திசையில் தலைவைத்து படுக்க விருப்பமில்லை. பள்ளியில் கல்லூரியில் தொன்ம இலக்கியங்களை படித்தது, இப்போதும் அவ்வப்போது வாசிக்க நேருகிறது, அதுபோதும். எனது முழுக்கவனத்தையும் நவீன இலக்கியத்தில் செலுத்த விரும்புகிறேன்.  இந்திரன் பிரான்சுக்கு வருகிறாரே அவரைக்கொண்டு தமிழ் நிகழ்ச்சியொன்றை நான் இருக்கின்ற ஊரில் செய்யலாமென்று நடத்தவும் செய்தேன். பின்னர் தொடர்ந்து அதனை செயல்படுத்த முடியாமைக்கு இரண்டு காரணங்கள்:

1. நவீன தமிழ் இலக்கியமென்பதே குமுதம், ஆனந்தவிகடன், ராணி, குங்குமம் என்கிற வெகுசனபுரிதலுக்கு பாடமெடுக்க கையாலாகாதவனாக நான் இருந்தேன் என்பது முதற்காரணம்.

2. இலக்கியவாதிகள் என சொல்லிக்கொண்டிருப்பவர்களில் பெரும்பான்மையோர் தமிழிலக்கிய வரலாற்றை பதினெட்டாம் நூற்றாண்டுக்கு மேல் தெர்¢ந்திராதவர்கள் அல்லது தெரிந்திருந்தும் புரட்டிப்பார்க்க விருப்பமில்லாததாவர்கள் என்பது இரண்டாவது காரணம்.

ஆக அத்தி பூப்போல நடந்தேறிய எனது சொல்புதிது இலக்கிய அமர்விற்கு எனது நீண்டகால நண்பர்களான சவியெ, மனே தம்பதியினரையும் அழைத்திருந்தேன். நிகழ்வில் ஒரியக் கவிஞர் டாக்டர் மனோரமா பிஸ்வால் அவர்களின் கவிதைத்தொகுப்பொன்று பிரெஞ்சு மொழியில் பெயர்க்கப்பட்டு  “L’heure du retour” என்ற பெயரில் கவிதைத் தொகுப்பாக வெளிவந்தது – ஒரிய மொழியிலிருந்து பிரெஞ்சு மொழிக்குக் கொண்டுவந்திருந்தவர் சூரிய காந்த்த கயனென்கிற மொரீஷியர். இதில் என்பங்கு எதுவுமில்லை முழுக்கமுழுக்க நண்பர் இந்திரனின் முயற்சி. இந்திரன் உரையில் இந்திய இலக்கியங்கள் குறிப்பாக தமிழ் இலக்கியங்கள் பிரெஞ்சில் வரவேண்டுமென்கிற தமது உள்ளகிடக்கையை வெளிப்படுத்தினார். நானும் எனது உரையில் அதன் அவசியத்தை உணர்ந்தவன் போல பேசினேன். தொடர்ந்து மொழிபெயர்ப்பில் குறிப்பாக ஆங்கிலத்தில் அல்லாத மாநில மொழிகளில் வெளிவந்துள்ள இலக்கியங்களை பிரெஞ்சில் கொண்டுவருவதென்கிற கனவை நனவாக்க ஓர் அமைப்பை ஏற்படுத்துவதென்ற யோசனையை முன்வைத்தேன். நிகழ்ச்சிக்கு வந்திருந்த நண்பர்கள் பின்னர் சந்தித்தபோது அமைப்பினை உருவாக்க ஒத்துழைப்பதாக வாக்களித்தார்கள்; இத்துறையில் பிரான்சிலிருக்கும் புதுச்சேரி தமிழருக்கு அதிக நாட்டமினமையால் பிரெஞ்சு நண்பர்களோடு சேர்ந்து செயல்படுவது உத்தமமென தொடங்கினோம். இந்நண்பர்கள் தீவிர இலக்கியவாதிகளில்லை. அமெச்சூர் கவிஞர்கள். அவர்கள் கவிதைகளில் பல நன்றாகவுமிருந்தன. எனவே அவர்கள் துணையுடன் எனது அமைப்பைத் தொடங்குவதென தீர்மானித்தேன். இருபதாண்டுகளுக்கு மேலாக அவர்கள் மூவரும் எனக்கு நண்பர்கள். எனவே தெரியாத பலாக்காயைக் காட்டிலும் தெரிந்த கலாக்காய் மேலானதென்கிற பழமொழிக்கு ஏற்ப தொடங்கினேனென வைத்துக்கொள்ளுங்கள். நண்பர் சவியே என்னிடத்தில் கிறித்துவ மதத்தை பேசாவிடினும் இறைநம்பிக்கை அதிகமாக இருந்தது. மனே தம்பதியினரும் இறைநம்பிக்கை கொண்டவர்கள். அவர்களில் நண்பரான பிரான்சுவா மனே  கரித்தாஸ் (Caritas) என்கிற தொண்டு நிறுவனத்தில் இணைந்து பணியாற்றுகிறவர். ஆக நண்பர்கள் மூவரும் இந்தியாவில் கிராமப்பகுதிகளில் தொண்டு நிறுவனங்களின் பணியைப் பார்வையிடவேண்டுமென்று ஆசைபட்டனர்.  பிரான்சுவா மனேவுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் கரித்தாஸ் பொறுப்பாளராக இருக்கும் இயக்குனர் ஜான் ஆரோக்கியராஜ்  பழக்கமென்பதால் அவரைத் தொடர்புகொண்டு ஆவன செய்யப்பட்டது.

இந்த ஏற்பாடு முழுக்க முழுக்க மனே தம்பதினர் ஏற்பாடென்று சொல்லலாம். முதலில் இதனை நான் எதிர்த்தேன். இலக்கியப்பணி என்று  ஆரம்பித்துவிட்டு வேறு திசையில் பயணிக்க எனக்கு விருப்பமுமில்லை நேரமமுமில்லை. தவிர பொதுவாக ஐரோப்பியர்களுக்கு ஒரு விதமான ‘Voyeurism’ உண்டு. நமது அறிவைக்காட்டிலும் அறியாமையைத் தெரிந்துகொள்வதில் அவர்களுக்கு ஆர்வம் அதிகம். இந்தியாவில் தேனீக்கள் மொய்க்கும் மலர்களை படம் பிடிக்கமாட்டார்கள், ஆனால் ஈக்கள் மொய்க்கும் மனிதர்களையும் பண்டங்களையும் காட்சிப்படுத்துவார்கள். இந்த அலகினை  இலக்கியத்திற்கும் உபயோகிக்கிறார்கள் என்பதுதான் சோகம். இந்நிலமைக்கு இந்தியர்களான நாமும் ஒருவகையில் பொறுப்பு. அழும் பிள்ளைக்கு பால் கொடுக்கவிரும்பாத இயலாத தாய்மார்களாக நாம் இருக்கிறோம்.  எனினும் நண்பர்களால் இந்திய இலக்கியத்திற்கு நாலு நல்லது நடக்குமெனில் சகித்துக்கொள்வதென முடிவு எடுத்தேன்.

முதல்நாள் மாலை சென்னையிலிருந்து ஜான் ஆரோக்கியராஜ் நாங்கள் கேட்டுக்கொண்டபடி வாடகைக் காரை பிடித்து புதுச்சேரி வந்திருந்தார். அவருடைய வாகனத்தில் புறப்பட்டு புதுச்சேரி அண்ணா நகரிலிருந்த ‘Rural Education and Action for Liberation’ [REAL]. என்கிற தொண்டு நிறுவனத்திற்குச் சென்றோம். நிறுவனத்தின் ஸ்தாபகரும் தலைவருமான திருவாளர் எம்.ஏ லாரன்ஸ¤ம் அவரது அலுவலக ஊழியர்களும் வரவேற்றனர். எங்களுக்குச் சந்தணமாலைகள் போட்டார்கள். காப்பியும் பிஸ்கட்டும் கிடைத்தன. ஸ்தாபனத்தின் தொடக்கம் அதன் வளர்ச்சி, இயங்கும் விதம், களப்பணியாற்றும் ஊர்கள், பணி பற்றிய விவரங்கள் அனைத்தையும் சோர்வின்றி ஆர்வத்துடன் விளக்கினார்கள்.

1960ம் ஆண்டு திண்டிவனம் அருகே எண்ணாயிரமென்ற கிராமத்தை சேர்ந்த சில இளைஞர்கள் கிராமத்தின் விளிம்பு நிலைமக்களும், தலித் மக்களும் படும் துயரத்தைக் காணச்சகியாமல் இத் தொண்டு நிறுவனத்தைத் தொடங்கியதாக அறிந்தோம். ஆரம்பத்தில் ஏழு உறுப்பினர்கள் இன்றோ 132 அமைப்புகள் இருக்கின்றன.  பெண்கள் கல்வி, வங்கிக்கடன், முதியோர் கல்வி, சுற்றுப்புற சூழல் என இவர்கள் ஆற்றும் பணியினைக் கண்ணுற்ற ஆட்சியாளர்கள் ஓட்டுவங்கியின் மகத்துவத்தை அறிந்து உள்ளே நுழைந்திருக்கிறார்கள். எனினும் இன்றளவும் சுற்றுவட்டாரங்களில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு இவர்கள் முதுகெலும்பாக இருந்துவருகிறார்கள். REAL அமைப்பின் தலைவர், தமிழ்நாடு புதுச்சேரி மாநில கரித்தாஸ் நிர்வாகி, கள ஊழியோர்கள் ஆகியோரின் துணையுடன் கோட்டக்குப்பம், கூனிமேடு பின்னர் எண்ணாயிரமென்று சென்றோம்.

பிப்ரவரி 9ந்தேதி காலை ஐந்து மணி அளவில் ஏனம் வெங்கிடாசலப்பிள்ளை வீதியிலிருந்த எங்கள் அறைகளைக் காலிபண்ணிவிட்டு பெரிய பெட்டிகளையெல்லாம் நண்பர் நந்திவர்மன் வீட்டில் போட்டுவிட்டு கைப்பைக்களுடன் திண்டுக்கல் புறப்பட்டோம்; அங்கே நண்பர் இந்திரன் எங்களுடன் சேர்ந்துகொண்டார்; விழுப்புரம் திருச்சி வழியாக திண்டுக்கல் பயணப்பட்டோம்.  அங்கும் நிர்வாகிகள், நிறுவனத்தின் ஊழியர்கள் தொண்டு நிறுவனத்தினர் வரவேற்பளித்தார்கள். அவர்களுடைய பணிகளை விளக்கினார்கள். பல்வேறு கிளை நிறுவனங்கள் அவர்களின் பிரத்தியேக பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அமைப்பின் பெண்தலைவிகள் பெருமிதத்துடன் பகிர்ந்துகொண்டார்கள். அன்று மதியம் திண்டுக்கல் அருகே இருபது கி.மீட்டர் அருகிலொரு கிராமத்தில் வரவேற்பு: கும்மியாட்டம் தேவராட்டம் என சிரத்தையோடு எல்லாவற்றையும் ஆடினார்கள். முதல் நாள் விழுப்புரம் மாவட்டத்தில் சந்தித்த சுய உதவி குழுக்களைக்காட்டினாலும் திண்டுக்கல் மகளிர் சுய உதவி குழு வசதி கூடியதாக இருந்தது. ஆனால் திண்டுக்கல் சுய உதவி குழுவும் சரி முதல் நாள் விழுப்புரம் மாவட்டத்தைசேர்ந்த சுய உதவி குழுக்களுக்கும் சரி மனப்பாடம் செய்ததுபோல ஒப்பித்தார்கள். முன்னெப்போதும் இல்லாத அளவில் தாங்கள் கிராமப்பஞ்சாயத்து தேர்தலில் உறுப்பினர் ஆகியிருப்பதாக தெரிவித்தார்கள். இவைகளெல்லாம் தொண்டு நிறுவனங்கள் கொடுத்த தைரியம் என்றார்கள். நண்பர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் அளித்தார்கள். நாங்கள் போனஇடங்களிலெல்லாம் மாலைகள், குளிர்பானங்கள் அல்லது தேனிர் என்றவகையில் ரூபாய் ஐம்பதிலிருந்து நூறுவரை செலவு செய்திருப்பார்கள். ஏழைப்பெண்களின் உழைப்பில் வந்த காசு. அப்பெண்கள் ஒவ்வொருவருக்கு  புண்ணியவான்கள் வரமளிக்கவந்திருக்கிறார்கள் என்ற நினைப்பிருந்தது. அவர்கள் செய்திருந்த மணிமாலைகள், பொம்மைகள் போன்றவற்றைக் காண்பித்தார்கள். பிற பெண்கள் அமைப்புடன் போட்டியிட்டு பரிசுகள் வென்ற சந்தோஷத்தையும் பகிர்ந்துகொண்டனர். பெண்களில் அநேகருக்கு வெள்ளைதோல்காரர்கள் இரட்சகர்களென்கிற நினைப்பு. எண்ணாயிரத்தில், ஒரு மில்  தொடங்கி வேலையில்லாதவர்களுக்கு வேலை கொடுத்தால் புண்ணியமாப்போகுமென்று பெண்ணொருத்தி கூறியது ஓயாமல் ஒலிக்கிறது.

———————————————

கவனம்பெற்ற பதிவுகள் – ஏப்ரல் 7

கூடங்குள அணுமின் உலையை மூடுவவதற்கான வழிமுறையும் அசதா என்பவரின் கவிதையும்:
http://mugaiyurasadha.blogspot.fr/”

அசதா என்பவரின் வலைப்பூவிலுள்ள “கூடங்குளத்து சாஸ்தா” வாசிக்கப்படவேண்டிய கவிதை. அண்மைக்காலங்களில் கவிதகள் மீது அதிகம் நாட்டமின்றி இருந்தவன், எந்திரத்தனமான உற்பத்திகளில் கலைஞனைக் காணாததால் ஏற்படும் சோகம் சகித்த முடியாதது. இக்கவிதை மனதிற்கு ஆறுதலாக இருந்தது.

அணுஉலை மின்சாரத்திற்கு ஆதரவானவன் நான்  ஆனால் எனக்கு ‘நாராயண்சாமி’களைக்காட்டிலும் ‘உதயகுமார்’ போன்றவர்களின் மீது மரியாதையுண்டு. ஆனால் அணு உலைக்கு ஏன் ஆதரவளிக்கிறேன் என்பதை நண்பர்களுக்குச் சொல்லியாகவேண்டும்.

1. உலகில் அணுஉலையை வேண்டாமென முடிவெடுத்துள்ள நாடுகள்  படிப்படியாக அதனைச் சார்ந்திருப்பதை குறைத்துக்கொண்டுவரவேண்டுமென்று சொல்கிறார்களேயன்றி நாளைக்கே மூடிவிடலாம் எனக்கூறுவதில்லை. இதில் பாதிப்படைந்த ஜப்பான், ரஷ்ய நாடுகளில்கூட அதுதான் உண்மை.

2. அணு உலையைக் காட்டிலும் மலிவான நம்பகமான மின்சார உற்பத்திமுறை தற்போதைக்கு இருக்கிறதா என்றால் இல்லை.

3. அணு உலையால் ஆபத்து என்ற கருத்தியம்: மறுக்கமுடியுமா என்ன? விபத்து நடந்தால் அப்பகுதியே புல் பூண்டற்று போய்விடும் என்கிறார்கள்.  யாரில்லை என்பது? ஆனால் இன்றைக்கு எங்கே ஆபத்தில்லை வாகனவிபத்தென்று பயணம் செய்யாமல் விடுகிறோமா? அல்லது விமான விபத்தென்று பறக்காமல் தவிர்ப்போமா? பத்திரமாக போய்ச்சேருவோம் என்ற நம்பிக்கையில்தான் காரில் ஏறுகிறோம். பாதுகாப்பான பயணமென்கிற உத்தரவாதத்தை நம்பியே விமானத்தில் பறக்கிறோம். அங்கொன்றும் இங்கொன்றுமாக விமான விபத்துகள் நடவாமலில்லை. பயணிக்காமல் இருக்கிறோமாவென்ன? அதுபோலத்தான் அணு உலை மின் தாயாரிப்பையும் எடுத்துக்கொள்ளவேண்டும்.

முதலில் அணுமின்சாரம் வேண்டாம் என்கிறவர்கள் அதன் பயபாட்டை முற்றாக நிராகரிக்க வேண்டும். பிறவகை (அனல், புனல், காற்று…) மின்சாரங்களை மட்டுமே உபயோகிப்போமென அவர்கள் தீர்மானமாக இருக்கவேண்டும். சாத்தியமில்லையா காவிளக்கு உபயோகத்திற்கு மீண்டும் திரும்புகிறோம் எனச்சொல்லி வாழ்ந்து காட்டவேண்டும். நாமும் அவர்கள் போராட்டத்தை ஆதரிக்கலாம்.

ஆனால் இவ்விஷயத்தில் மத்திய மாநில அரசுகள் தந்திரமாக நடந்துகொண்டன. அண்மைக்காலங்களில் தமிழ்நாட்டின் அண்டைமாநிலங்களும் சரி இந்திய மத்திய அரசும் தமிழர் விரோத போக்கைக் தங்கள் நெறியாக கடைபிடிக்கிறார்கள். இந்நிலையில் கூடங்குளத்தை அணுமின்னுலையை மூடுவதற்கு ஒரு வழி இருக்கிறது. போராட்டக்குழு கூடங்குளம் மின்சார உற்பத்திமுழுவதையும் தமிழ்நாட்டிற்கு மட்டுமே வழங்கச் சொல்லவேண்டும், அப்படிக்கூறினால் இந்திய அரசு  நாளைக்கே கூடங்குளத்தை மூடிவிடுவார்கள்.

————————–

கதையல்ல வரலாறு- 4

இட்லரின் பிணம் -(தொடர்ச்சி)

5.         ஏப்ரல் மாதம் 30ந்தேதி.

பங்க்கரிலிருந்த ஒரு அறையைக்கூட இட்லர் மறக்கவில்லையாம் ஒவ்வொரு அறையாக சென்று அங்கிருந்தவர்களிடம் நலன் விசாரித்தும் தைரியம் சொல்லியும் திரும்பியிருக்கிறார். ஒருவரும் அன்றிரவு உறங்கவில்லையாம். இட்லரின் மரணத்தை அறிவித்தபோது கோயபெல்ஸையும் அவரது மனைவியையும் தவிர்த்து உணவு விடுதியில் வெகு நேரம் மற்றவர்கள் நடனம் ஆடிக்கொண்டிருந்திருக்கிறார்கள். பின்னர் கோயபெல்ஸின் மனைவி அமெரிக்கர்கள் நடத்திய விசாரனையின் போது, இடலரின் தீவிர அபிமானிகளாக இருந்தவர்கள் கொஞ்சங்கூட நாகரீகமின்றி அப்படி நடந்துகொண்டதை வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார்.

ஹைன்ஸிடம் தமக்கு உறக்கம் வரவில்லையென சொல்லியிருக்கிறார். பின்னர் நிம்மதியாய் அனைவரும் உறங்கட்டும், என்றாராம். காலை ஆறுமணி அளவில் பொர்மானுடைய  செயலாளரை அழைத்து தம்முடைய செல்லப்பிராணியான நாய் புளொந்திக்கு விஷம் கொடுத்து கொல்லுமாறு கட்டளையிட, அதை நிறைவேற்றியிருக்கிறார்கள்.

காலை சுமார் பத்துமணிக்கு ஹைன்ஸிடம் என்ன நிலமையில் நாடு இருக்கிறதென விசாரித்திருக்கிறார். ஹைன்ஸ் விசாரித்துவிட்டு, “வெள்ளம் தலைக்குமேல் வந்தாயிற்று, ரஷ்யர்கள் எந்த நேரமும் நம்மை கைதுசெய்ய இங்குவரலாம் என்று பதில் கூறியிருக்கிறார். இட்லர் தலையை ஆட்டி அப்படியா என்று கேட்டுக்கொண்டாராம். அங்கே அமர்ந்திருந்த ஆக்ஸ்மான் சட்டென்று எழுந்து, “என்னிடம் தீரமிக்க 200 இளைஞர்களும், ஒரு டாங்கியும் உள்ளது. விரும்பினால் நீங்கள் தப்புவதற்கு ஏற்பாடு செய்வேன் என்றிருக்கிறார்..

“வேண்டாம் அது தேவையற்ற வேலை. நான் இறக்க விரும்புகிறேன்”, என்று இடலரிடமிருந்து பதில் வருகிறது.

சம்பவத்திற்குப் பிறகு ரஷ்யாவில் பதினோறு ஆண்டுகள் சிறைவைக்கப்பட்டிருந்த ஹைன்ஸ் விடுதலைக்குப்பிறகு அவரது நண்பர்களிடத்தில், ” உங்களோடு எங்களையும் இறக்க அனுமதிக்கவேண்டுமென்று இட்லரிடம் கேட்டுக்கொண்டதாகவும், தடுத்த இட்லர், “நீங்கள் உயிர்வாழ்வது அவசியம், என்றேனும் ஒருநாள் இன்னுமொரு எஜமானர் ஜெர்மனுக்குத் திரும்பக்கூடும்”, எனப் பதிலிறுத்ததாகவும் கூறியிருந்தார்.

ட்ரோவர்- ரோப்பர் கூறியிருந்ததற்கு மாறாக இறந்த அன்று ·பூயுரெர், ஏவா பிரௌனுடன் மதிய உணவருந்தியதாக லேன்ழ் கூறுகிறார். உணவருந்திய பிறகு நெருங்கிய நண்பர்களிடம் விடைபெற்றுக்கொள்ள வந்தாராம். டாங்கியொன்றினால் கொல்லப்படவிருந்த போர்மன், தமது ஆறு பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றபிறகு, தங்களையும் சாகடித்துக்கொண்ட கோயெபெல்ஸ் ஆகியோர் அந்த நெருங்கிய வட்டாரம். கோயெபெல்ஸிடம் மிகவும் மனம் திறந்து இட்லர் பேசியிருக்கிறார். தமது ஆடையிலிருந்த பொன்னாலான சிலுவையை நண்பரின் ஆடையில் குத்திவிட்டு நெகிழ்ந்திருக்கிறார். அடுத்ததாக லேன்ழிடம் வந்த இட்லர் 1935லிருந்து எனது நிழல்போல தொடர்ந்தவன், உன்னை மறக்க முடியுமா என்றாராம். ஏவா பிரௌனும் லேன்ழிடம் விடைபெற்றுக்கொண்டாராம். அவர், தமது சகோதரியைச் சந்திக்கநேர்ந்தால் அவளுடைய கணவரை என் கணவர் ஆணையின் பேரில் சுட நேர்ந்ததென்ற உண்மையை தெரிவிக்கவேண்டாமென்றும் அதனை சோவியத் ராணுவம் செய்ததாகச் தெரிவிக்கவேண்டுமென கேட்டுக்கொண்டார். லேன்ழ் அவ்வாறே செய்வதாக கூறினார்.

பிறகு இட்லரும் அவரது புதிய மனைவியுமாக தங்கள் படுக்கை அறைக்குத் திரும்பியுள்ளனர். அவர்களின் வேண்டுகோளின்படி இரு துப்பாக்கிகள் தோட்டாக்களிட்டு கொடுக்கப்பட்டன. “அதிகாலை 3.35க்கு வேட்டு சப்தம் கேட்டது, ஒரே ஒருமுறை. உடனே படுக்கை அரைக்குள் நுழைந்தேன். ·புயூரெர் இட்லர் திவானொன்றில் அமர்ந்திருந்தார். வலப்புறம் தலையில் சுட்டுக்கொண்டிருந்தார். எல்லோரும் சொல்வதுபோல வாயில் சுட்டுக்கொல்லவில்லை. கைத்துப்பாகிக் கீழே கிடந்தது. கீழே விரிப்பில் இரத்தம். அவரருகில் ஒரு சோபாவில் சற்று சாய்ந்து படுத்திருப்பதுபோன்ற நிலையில் ஏவா பிரௌன், அநேகமாக விஷம் குடித்து இறப்பதென்பது அவரது விருப்பமாக இருந்திருக்கவேண்டும்”, என்கிறார் லேன்ழ்.  அவரது கூற்றை வரி பிசகாமல் இறுதிக்காலத்தில் அங்கிருந்தவர்கள் உறுதிபடுத்துகிறார்கள். இட்லரும் அவரது புது மனைவியும் இறந்திருப்பதை நேரில் பார்த்த சாட்சியங்கள்: பொர்மான், கோயெபெல்ஸ், லேன்ழ், கென்ஷ், ஆக்ஸ்மான் ஆகியோர். பின்னர் இச்சம்பவத்தின் சாட்சியாக இருந்தவர்களில் பொர்மான் மற்றும் கோயெபெல்ஸ் தலையெழுத்தை அறிவோம். ஆக இட்லரின் இறப்பு பற்றிய மர்மப்புனைவுகளுக்கு எஞ்சிய மூவர்தான் பொறுப்பாகிறார்கள். அவர்களைத் தவிர வேறு சாட்சியங்களில்லை. ஆக தற்கொலை செய்துகொண்ட இரு உடல்கள் அந்த அரையிலிருந்தன. அடுத்து செய்யவேண்டியதென்ன. ரஷ்யர்களின் கைக்கு உடல்கள்போகக்கூடாது என்பது இட்லரின் கடைசி விருப்பம். அதனை நிறைவேற்றியாகவேண்டும். இரு உடல்களையும் எரிக்க போதுமான மண்ணெண்னெய் வேண்டும். 30ந்தேதி காலையிலேயே தேவையான எண்ணைக்காக முன்னேற்பாட்டுடன் நடந்துகொண்டிருக்கிறார்கள். இட்லரின் மெய்க்காவலர் கெனெஷ் போர்மனிடம், “இரு உடல்களை எரிக்கவேண்டிய வேலை தம்மிடம் ஒப்படைக்கபட்டதாக” , தெரிவித்திருக்கிறார். தொலைபேசியில் இட்லரின் வாகன ஓட்டியான எரிக் கெம்கா என்பவரை அவர் அழைத்து அப்பணியை ஒப்படைத்திருக்கிறார்.

மெய்க்காவலரின் தொலைபேசி வேண்டுகோளுக்கிணங்க 200 லிட்டர் மண்ணெண்னெயுடன்  இட்லரின் வாகன ஓட்டி வந்த போது பிற்பகல் ஆரம்பம். பிறகுதான் இறந்திருப்பது தம் எஜமானரும் அவரது புதிய மனைவியும் என்கிற உண்மையும் அவருக்குத் தெரியவருகிறது. நண்பர்கள் அனைவருமாக சேர்ந்து இரு உடல்களையும் துணியிற்சுற்றி பங்கருக்கு வெளியிலிருந்த தோட்டத்தை அடைந்தபொழுது பெர்லின் குண்டுமழையில் நனைந்துகொண்டிருக்கிறது. மிக மோசமான தாக்குதலுக்கு பெர்லின் உள்ளாகியிருந்தது. பங்க்கரில் அதன்பாதிப்புகள் எதிர்பார்த்ததைவிட கூடுதலாக இருந்தன. வாயிலுக்கு மிக அருகிலேயே கிடைத்த இடத்தில் உடல்களிரண்டையும் கிடத்தி எண்ணெயை ஊற்றி தீ வைக்கிறார்கள். இட்லர், ஏவா பிரௌன் உடல்களிரண்டும் கொழுந்துவிட்டு எரிந்தபோது, நாம் கூறியிருந்த ஆறுபேரைத்தவிர வேறு சிலரும் சாட்சிகளாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் இட்லரின் பாதுகாப்பு படையை சேர்ந்த காவலர்கள். எரிந்த தீ அடங்கியவுடன் பெரிதாய் எதுவும் உடல்களில் எதுவும் எஞ்சவில்லையென்கிறவர்கள் இவர்களில் உண்டு. லேன்ழ் மீண்டும் இட்லரின் அறைக்குத் திரும்பியிருக்கிறார். எஞ்சியிருந்த இட்லரின் ராணுவ உடைகள், ஏவா பிரௌனின் ஆடைகள் பிறகு தடயமென்று சந்தேகிக்கப்பட்டவை அனைத்தையும் மேலே கொண்டுவந்து எரித்திருக்கிறார்கள். லேன்ழ் உடல்கள் எரிந்ததுபோதாதென்று நினைக்கிறார், இட்லரின் தலை எரிந்திருக்கிறதே தவிர உடலின் பிறபாகங்கள் முழுமையாக எதிர்பார்த்த அளவு எரிக்கப்படவில்லை. Gleitcommando என்கிற படைபிரிவில் ஆறுபேரை அழைத்து இரு உடல்களையும் குண்டுகள் விழுந்துள்ள பள்ளத்தில் ஏதேனும் ஒன்றில் புதைத்துவிடுமாறு கட்டளை பிறப்பித்திருக்கிறார். லேன்ழ் வார்த்தைகளை நம்புவதெனில் இட்லர் உடல்களுக்கு நேர்ந்த இந்த இறுதி தலைவிதியை அவர் நேரில் பார்த்தவரல்ல. அவர் மட்டுமல்ல இறுதியாக இட்லரின் பிணத்தைப்பார்த்த ஆறு பேரில் ஒருவர்கூட இட்லர் உடலையும், ஏவா உடலையும் புதைத்தபோது இருக்கவில்லை.

6.         1946 ஆண்டுவாக்கில் இச்சம்பவம் குறித்து பல்வேறு வதந்திகள்; கெனெஷ் கூற்றின்படி எஞ்சியிருந்த எலும்புகளை ஒரு பெட்டியில்வைத்து சோவியத் வீரர்களின் கண்களிலிருந்து தப்பிக்க புதைக்கப்ட்டதாக கூறினார். இதுகுறித்து ஆய்வுகள் மேற்கொண்ட ட் ரோவர் – ரோப்பெர்¢ கருத்துகூற மறுத்துவிட்டார். இடல்ரின் பாதுகாப்பு படையைசேர்ந்தவர்களின் சாட்சியங்களை பதிவு செய்துவிட்டு ஒதுங்கிக்கொள்கிறார். அன்றையதினம் தொடர்ந்து குண்டுதாக்குதல் நிகழ்ந்ததாகவும் எரித்த உடல்களை புதைப்பதற்கென தேடியபோது மாயமாய் மறைந்துவிட்டன எனவும் அச்சாட்சியங்கள் தெரிவிக்கின்றன. மே மாதம் ஒன்றாம் தேதி நள்ளிரவு சோவியத் படைகள் பங்க்கருக்குள் நுழைந்து தேடுதல் வேட்டையைத் தொடங்கினார்கள். ஹாரி மங்கெர்ஹௌசென் (Harri Mangerhaussen) என்கிற காவலர் ஒருவரை கைது செய்கிறார்கள். பத்து நாள் விசாரணை. இட்லரோடு தமக்கு எவ்விதத் தொடர்புமில்லையென அவர் மறுக்கிறார். கடைசியில் அவன் தான் கென்ஷ் வாக்குமூலத்தின்படி இட்லர் மற்றும் ஏவா உடலை புதைத்தவனென தெரிய வருகிறது. அவனை  அழைத்துக்கொண்டு புதைத்த இடத்தில் தோண்டினார்கள் ஆனால் உடல்களிரண்டும் கிடைக்கவில்லை.

மேமாத இறுதியில் ஹாரி மங்கெர்ஹௌசென் சோவியத் காவலர்கள் சிறையிலிருந்து விடுவித்து வாகனமொன்றில் ஏற்றிக்கொண்டு பெர்லினுக்கு வெளியே பின்லோ (Finlow) காட்டுபகுதிக்கு அழைத்துச் சென்று ஒரு மரத்தலான ஒரு பெட்டியைத் திறந்து அதில் கரிக்கட்டையாகக்கிடந்த மூன்று உடல்களைக் காட்டி அடையாளம் தெரிகிரதா என்றார்கள். பார்க்கும் நிலையில் அங்கு உடல்களில்லை. இருந்தாலும் ஹாரி மங்கெர்ஹௌசென் அவ்வுடல்கள் கோயெபெல்ஸ், அவரது மனவி மக்தா கொயெபெல்ஸ், மற்றும் இட்லருக்குச் சொந்தமானவை என அடையாளப்படுத்துகிறார். மீண்டும் அவரை சிறையில் அடைக்கிறார்கள். பிறகு அவரையிம் சோவியத்திற்குக்கொண்டு சென்று 11 ஆண்டுகள் சிறையில் வைக்கின்றனர். விடுதலைபெற்று அவரால் அறியவந்தவைதான் மேற்கண்ட தகவல்கள். தகவலை நம்புவதா வேண்டாமா என்கிற சந்தேகம் வருகிறது. கடைசியாக அவ்வுடல்களை ரஷ்யர்களுக்கு அவர் அடையாளம் காட்டியதாகவும், உடல்கள் ரஷ்யர்கள் வசமே இருக்கவேண்டுமென்று அவர் சத்தியம் செய்கிறார். இதை வலுப்படுத்த அவரைத் தவிர வேறு சாட்சியங்களில்லை. காரணம் ஸ்டாலின், ஜூர்க்கோவ் போன்றவர்கள் ஹிட்லரின் எஞ்சிய உடலை காணவில்லையென பத்திரிகையாளர்களுக்கு பேட்டிகொடுத்தவர்கள்.

ஆனால் ஹாரி மங்கெர்ஹௌசென் கூற்றை ஏற்கத்தான் வேண்டுமென்று சிலர் சொல்கிறார்கள். காரணம் 1946ம் ஆண்டு ஜனவரி 17ந்தேதி சோவியத் நிர்வாகம் பிரெஞ்சு அரசாங்கத்தை ஒருமுக்கிய சம்பவத்தின் சாட்சியாக இருக்க மிக நம்பிக்கைக்குரிய ஒரு பிரதிநிதியை தங்கள் வசமிருக்கும் ஜெர்மனுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்கிறார்கள். அவர்களும் ஹாரி ரத்னௌ (Henri Rathnau) என்பவரை அனுப்பிவைக்கிறார்கள். ஹார் ரத்னௌவை பிரெஞ்சு அரசாங்கம் அனுப்பிவைத்தது தற்செயலாக நிகழ்ந்ததல்ல. அவரது பூர்வீகம் ஜெர்மன். இனவெறியினரால் தமது எதிர்காலம் பாதிக்கப்படலாமென்று கருதி பிரான்சுநாட்டுக்கு தமது மனவியுடன் வந்தவர் குடியுரிமைபெற்று நிரந்தரமாகவே தங்கிவிட்டார். சோவியத் யூனியன் அழைப்பின்பேரில் அவர்கள் வசமிருந்த ஜெர்மனுக்குசென்ற ஹாரி ரத்னௌ அப்படியென்ன கண்டார்.

7          1946ம் ஆண்டு ஜனவரி 17ந்தேதி நடந்ததென்ன?

கொடுத்திருந்த கெடுவின்படி சரியாக பகல் 12.30க்கு  இட்லர் பதுங்கியிருந்ததாக நம்பப்பட்ட Chancellery என்ற ஜெர்மன் சோஷலிஸ நிர்வாகத்தின் தலைமை கேந்திரமியங்கிய இடத்திற்கு ஹாரி ரத்னௌ வந்திருந்தார். இவரை எதிர்பார்த்து சோவியத் ராணுவ அதிகாரி ஸ்ட்ராகோவ் (Stragov). அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் பிரதிநிதிகளும் வருவார் என்கிறார் ஸ்ட்ராகோவ். அவர்கள் வர தாமத மாகிறது. பொறுமை இழந்தவர்களாக இவர்கள் மட்டும் பணியைக் கவனிப்பதென புறப்பட்டார்கள்.  பிறபகல் 1.15 மணிக்கு ஆரம்பமாயிற்று. அதிகாரிகளுடன் லூக் என்கிற இட்லரின் முன்னாள் காவலர், பிறகு இட்லரின் பல் மருத்துவர் இருவரும் இருந்தனர். மூன்றே கால் மணி அளவில் ஒரு மீட்டர் ஆழத்திற்கு பள்ளத்தை தோண்டியிருந்தார்கள், தோண்டிய இடத்தில் முதலில் ஒரு உடல் மிகவும் மோசமான நிலையில் கண்டெடுக்கப்பட்டது. மெண்மணியின் உடலென்பதில் அவர்களுக்குச் சந்தேகமில்லை. இரண்டாவது உடலைப் பரிசோதித்த சோவியத் மருத்துவர்கள் ஓர் ஆணுடல் என்கிறார்கள். பின்னர் இரு உடல்களையும் இடலர் மற்றும் ஏவா பிரௌன் உடல்களென முடிவுக்கு வருகிறார்கள். இச்செய்தியை Paris -Match என்கிற பிரெஞ்சு இதழுக்கு அளித்த பேட்டியில் ஹாரி ரத்னௌ பின்னர் தெரிவித்திருந்தார். ஆனாலும் இந்த உண்மையை 1964வ் ஆண்டுவரை வெளி உலகிற்கு சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கவிரும்பவில்லை. குறிப்பாக ஹாரி ரத்னௌ சோவ்யத் அரசாங்கத்தின் விருப்பத்தின் காரணமாக வாயடைத்திருந்தாலும், பிரான்சும் இந்த விடயத்தில் மௌனம் சாதித்திருந்தது அதிசயம். ரஷ்யர்களின் இசைவின்றி அமெரிக்காவும் பிரிட்டனும் இட்லர் பற்றிய விசாரணையை தொடங்கிய நிலையில் ரஷ்யா தன் இருத்தலையும் மரியாதையையும் காப்பாற்ற வேண்டியிருந்தது. தங்களிடமிருந்த முடிச்சுகளை அத்தனை சுலபமாக அவிழ்க்க அவர்கள் தயாரில்லை. தவிர இட்லரின் உடலை அடையாளப்படுத்துவதில் சிக்கல்களிருந்திருந்தன.  இட்லரின் பல் சிகிச்சை சம்பந்தமான ஆவணங்கள் அவர்களுக்குத் தேவைபட்டன. அச்சிகிச்சைத் தொடர்பானவர்களிடமிருந்து உருதிப்பாடான தகவல்கள் தேவையிருந்த காரணத்தாலும், ரஷ்யர்கள் இட்லரின் உடலை உறுதிப்படுத்த தயங்கியிருக்கிறார்கள்.

ஜூன்மாதம் 9ந்தேதி ஜூக்கோவ் இட்லரின் உடலை அடையாளப்படுத்த முடியவில்லை என்கிறார். ஜூலை 16ந்தேதி போட்சாமில் (Potsam) ஸ்டாலின், இட்லர் அர்ஜெண்ட்டைனாவிலோ ஸ்பெயினிலோ உயிரோடு இருக்கலாமென்கிறார், ஆனால் 1946ம் ஆண்டு 17ந்தேதி அவர்கள் ரத்னௌ என்கிற பிரெஞ்சு அரசாங்கத்தின் பிரதிநிதி முன்னால் இட்லர் உடலை உறுதிபடுத்த முனைகிறார்கள்.  சோவியத் யூனியனுக்குள்ள சங்கடத்தை சோவியத் வசமிருந்த ஜெர்மனை நிர்வகித்துவந்த ரஷ்ய படைத் தலைவர் மூலம் தெளிவாகவே  புரிந்துகொள்கிறோம். இட்லர் பதுங்கியிருந்த பாதாள கோட்டம் வீழ்ந்ததென்று அறியவந்தவுடன் உடனடியாக அவ்வ்விடத்திற்கு ரஷ்ய படைத் தளபதி இவான் க்ளிமான்க்கோ (Ivan Klimenko)  படையுடன் வந்திருக்கிறார். இட்லர் இல்லை. மிகக்கவனமாக தேடியிருக்கிறார்கள். அங்கிருந்த பலரை கைதும் செய்கின்றனர் ஆனால் இட்லரோ கோயபெல்ஸோ என்ன ஆனார்களென தெரியவில்லை. “பிறகு கூடம் வாசலென்று வந்து நிற்கிறார்கள். பங்க்கருக்கு வெகு அருகில் கோயெபெள்ஸ் அவருடைய மனைவி ஆகியோரின் இரு உடல்களும் கிடைக்கின்றன. மே.2 மற்றும் 3 தேதிகளில் க்ளிமான்க்கோ கைதிகளிடம் விசாரணை நடத்துகிறார். ஒரு கைதி மூலம்  முதல் நாள் திருமணம் செய்துகொண்ட மனைவி ஏவாவுடன் இட்லர் தற்கொலை செய்துகொண்ட செய்தி கிடைக்கிறது. அக்கைதியே கொயெபெல்ஸ் அவரது மனைவி , பிள்ளைகள் உடல்களையும் அடையாளம் காட்டுகிறார். தோட்டத்திற்குக் கைதியைக் கொண்டுவந்த இடத்தில் அங்கிருந்த பல பிணங்களுக்கிடையில் இட்லரை வெகுசுலபமாக சுட்டிக்காட்ட முடிகிறது. உடலை உள்ளே கொண்டுவந்தபார்த்தபோது இட்லர் உடலல்லவென்று அவர்களுக்கு புரிந்தது. காரணம் கொண்டுவந்த உடலின் மீசை நரைக்காமலிருந்தது. தேடுதல் வேட்டை தொடர்ந்தது கடுமையான முயற்சிகளுக்குப்பிறகு ஓரிடத்தில் இடிபாடுகளுக்கிடையில் இட்லர், ஏவா பிரௌன், சற்று தள்ளி இரண்டு நாய்களின் உடலையும் கண்டெடுத்ததாக முடிக்கிறார் க்ளிமான்க்கோ.

இவருடைய அறிக்கையோடு ஹாரி மங்கெர்ஹௌசென் கூற்றையும் சேர்த்தால் புதிர் அவிழ்ந்துவிடும்.  இவ்வளவு உண்மைகளையும் ஸ்டாலின் தொடக்கத்தில் மறைத்து அவர் உயிரோடிருக்கிறார் என அறிவித்தது ஏன்? உயிரோடு இருக்கிற விலங்கை வேட்டையாடுகிறேனென்றால் உலகம் நம்பும். ஆம் அவருக்கு எஞ்சியிருக்கிற நாஜிகளின் வேரை அறுத்தெடுக்க இட்லர் உயிரோடிருக்கிறார் என்கிற பொய் உதவிற்று. தவிர அமெரிக்காவும் பிரிட்டனும் மாத்திரம் நாஜிகள் விஷயத்தில் தலையிட்டால் எப்படி? அவர்களின் முடிவில் தமக்கு உடன்பாடில்லை என்பதை வெளி உலகிற்கு உணர்த்தவும் இட்லர் பற்றிய மர்மம் சோவியத் நிர்வாகத்திற்குத் தேவைபட்டது.

————————–

 

இசைவானதொரு இந்தியப் பயணம் -7

பிப்ரவரி 7

இன்றாவது சொந்த அலுவல்களைக் கவனிப்பதென்ற தீர்மானமாக இருந்தேன். வீட்டிற்குப் பதில் சொல்லவேண்டுமே. இரண்டு வார இந்தியப் பயணத்திற்காக வீட்டை மறந்துவிடமுடியுமா? பிரெஞ்சு நண்பர்களுக்கு முடிகிறது. நம்மால் ஆவதில்லை. வீட்டிற்குத் திரும்பினால், வெளியுலக பிழைப்பு பற்றிய கவலைகள் கொசுக்கள் போல சுற்றிவரும், ஏதோ வந்தோம் போனோமென்று கொசுக்கள் இருக்காது. நமக்கு அறுசுவை மன்னரே சமைத்தால் கூட ஆறு நாட்களுக்கு மேல் வேண்டாம் சாமி! கொஞ்சம் இரசஞ்சோறு இருந்தால் போடுங்கள் புண்ணியமாய்ப் போகுமென்று சொல்வோம். கொசுக்களுக்களுக்கு அலுக்காது போலிருக்கிறது, எப்படி தொடர்ந்து காரம், உப்பு சப்பற்ற இரத்தத்தை குடிக்கின்றனவோ? இந்தியர் கவலைகளும் கொசுக்கள் இரத்தம் குடிக்கும் வினைமுறை சார்ந்ததுதான். சொல்லப்போனால் அவைகளே தேவலாம். வங்கியில் ஒரு சின்ன வேலை இருந்தது. எனினும் சில நேரங்களில் ஆண்டுக்கு ஒரு முறை சந்திக்க நேர்ந்தாலும் அறிமுகமான வங்கி அலுவலர்கள் காணாமற் போய்விடுகிறார்கள். வரிசை இன்றி நீட்டப்படும் கைகளில் உங்கள் கை நீளமாகவோ, உயர்த்தப்படும் தலைகளில் உங்கள் முகம் வங்கி அலுவலரின் கடைக்கண்பார்வைக்கு திருப்திதரக்கூடியதாகவோ இருக்கவேண்டும், இல்லையென்றில் இப்படியொரு பிறவி எடுக்க நேர்ந்ததே என்று வருந்தி வியர்வையைத் துடைத்துக்கொண்டிருக்கவேண்டியதுதான். இந்த வம்பெல்லாம் வேண்டாமென்று நான் போகும்பாதெல்லாம் உள்ளூர் நண்பர்களை துணைக்கு வைத்துக்கொள்வதை வாடிக்கையாக்கிக் கொண்டிருக்கிறேன். இருந்தாலும் இருவராக நுழைகிறபோது சரி, மூன்று பேராக நுழைகிறபோது தமக்கு துப்பாக்கியும் ஒன்றுதான் மீசையுமொன்றுதான் சாதிபேதமெல்லாம் கிடையாது என்பது போல நின்றிருந்த காவலர் ஆசாமி எங்கள்மீது சந்தேகப் பார்வையை ஓடவிட்டபோது, பணியில் அவருக்குள்ள அக்கறையை புரிந்துகொள்ள முடிந்தது. நண்பர்கள் நாயகர், சுகுமாரன் நானென மூவருமாக மேலாளர் அறைக்குள் நுழைந்து அவர் இந்திச் சாயம் பூசிய ஆங்கிலத்தைப்புரிந்துகொண்டு எனது தேவையை பிரெஞ்சு சாயம் பூசிய ஆங்கிலத்தில் விளக்க, மேலாளர் தமக்குக் கீழ் பணிபுரியும் அலுவலரிடம் விடயத்தைச் சொல்ல அவர் தமக்குக்கீழ் பணிபுரியும் அலுவலரை ஏவ; மேலாளரின் அரைமணியில் காரியம் முடிந்துவிடுமென்ற அளவீடு ஒரு மணியைக் கடந்திருந்தது நாங்கள் வெளியில் வந்தபோது. மீண்டும் மூவருமாக நந்திவர்மன் வீட்டிற்குத் திரும்பினோம். புதுச்சேரி நண்பர்கள் இருவரும் விடைபெற்றுக்கொண்டார்கள்.

நண்பர் நந்திவர்மன் வழிகாட்டலின்பேரில் பிரெஞ்சு நண்பர்களுடன் ‘EFEO’ எனப்படும் L’Ecole française d’Extrême-Orient என்ற நிறுவனத்திற்குச் சென்றோம். பாரீஸ் நகரைத் தலைமைக்கேந்திரமாகக் கொண்டு செயல்படும் இவ் அமைப்பு ஆசிய நாடுகளின் கலை இலக்கியம் பாண்பாடுகள் குறித்து ஆய்வு செய்துவரும் நிறுவனமாகும். இந்தியாவில் புதுச்சேரி, பூனா ஆகிய இடங்களில் இதன் கிளைகள் உள்ளன. இது தவிர தனது பெயருக்கேற்ப ஆசிய நாடுகளெங்கும் கிளைகள் பரப்பியுள்ளது: சைகோன், ஆங்க்காங். கோலாலம்பூர், இரங்கூன்..  தூரக்கிழக்கு ஆசியநாடுகளைப் பற்றிய அபிமானிகளுக்கும் அத்துறை சார்ந்து செயல்படும் மூத்த கல்வியாளர்களுக்கும், ஆய்வு மாணவர்களுக்கும் நிறுவனத்தின் வழிகாட்டுதலும் துணையும் போற்றுதலுக்குரியது. தொல்பொருள், தொன்ம இலக்கியம் சார்ந்து அரிய நூல்களும் அவ்வப்போது பதிப்பிக்கப்பட்டு வெளிவருகின்றன. இங்குள்ள நூலகம் முக்கியமானது. ஆய்வு மையத்தின் வெளியீடுகளை இங்கே விலைக்கும் பெறலாம். எனது செஞ்சி நாவலுக்கு வேண்டிய சில நூல்களை இங்கிருந்தே பெற்றேன்.
அன்றைய தினம் நாங்கள் சந்தித்த பேராசிரியர்களில் மூவர் முக்கியமானவர்கள்:

1. பேராசிரியர் விஜெயவேணுகோபால்: கல்வெட்டுக்கள், வழிப்பாட்டுவடிவங்கள் சின்னங்கள், ஏடுகள் வாசிப்பு ஆகிய துறைகளில் ஈடுபட்டிருக்கும் அறிஞர். பல ஆய்வு நூல்களின் ஆசிரியர்.  Pondicherry inscriptions part I மற்றும் Pondicherry inscriptions part II  முக்கியமானவை. நூல்கள்.

2. பேராசிரியர் ஏவா வில்டென் (Eva Wilden), EFEO Pondichèry /Hamburg University – ஜெர்மன் நாட்டைசேர்ந்த சங்க நூல்களில் தேர்ச்சி பெற்றவர் குறுந்தொகையை பிரெஞ்சில் மொழிபெயர்த்திருக்கிறார்

3. பேராசிரியர் Jean Deloch ஐ இரண்டாவது முறையாகச் சந்தித்தேன். ஏற்கனவே எனது செஞ்சி நாவலுக்கான ஆதாரத் தேடலுக்கு அவரது உதவி தேவையாக இருந்தது. அவரைச்சந்திக்க காரணமாக இருந்தவர் திரு நந்திவர்மன். முதல் சந்திப்பில் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக புதுச்சேரியில் இருக்கிறேன் என்ற அந்தப் பிரெஞ்சு தமிழரின் கண்களை நேராகச் சந்திக்க கூசினேன். தமிழையும் தமிழர் பண்பாட்டையும் நேசிப்பவர்களெல்லாம் தமிழரெனில் இவருமொரு தமிழர். ஓய்வுக்குப் பிறகும் புதுச்சேரியின் மீதும் தென்னிந்திய அறிவுடமைகளின் மீது கொண்டிருந்த காதலாலும் புதுச்சேரியிலேயே தங்கிவிட்டார். செஞ்சியில் ஆறு ஆண்டுகள் தங்கியிருந்து ஆய்வுகள் மேற்கொண்டு செஞ்சி – தமிழர்களின் மிக பாதுகாப்பானதொரு நகரம் (Senji – Ville fortifளூe du pays tamoul) என்ற அரியதொரு நூலை கொண்டுவந்திருக்கிறார். (இந்நூலை EFEO நிறுவனத்தில் வாங்க இருந்தேன் – நாயக்கர் அவரது நூலை இரவலாகக் கொடுத்து என்னை காப்பாற்றினார் – பத்திரமாக ஒப்படைக்க வேண்டுமென்பது இப்போதைய கவலை). இவரது கடும் உழைப்பில் பத்து நூல்களுக்கு மேல் வந்துள்ளன. ஜான் தெலோஷ் உடனான உரையாடல் பிரான்சு -இந்தியாவென ஒப்பீடாக இருந்தது. இந்தியாவை விட்டுக்கொடுக்கவேயில்லை. ஓர் இந்தியர் இந்தியாவின் மீது கொண்டிருக்கிற அபிமானத்திற்கு இம்மியும் குறைந்தல்ல அவரது உணர்வெனச் சொல்லவேண்டும். மூன்று சந்திப்புகளுமே பல நல்ல தகவல் பரிமாற்றங்களுக்கு உதவியது.
கடற்கரை அருகில் இருந்த உணவு விடுதியில் மதிய உணவை முடித்துக்கொண்டு நண்பர்களுடன் பிற்பகல்
ஷாப்பிங். மலிவாக இருந்தனவென்று பருத்தி சட்டைகளை வாங்கினார்கள். இரவு நந்தி வர்மன் ஆனந்தா இன்னில் அவரது நண்பர் வைத்தியநாதனுடன் இணைந்து எங்கள் நால்வருக்கும் விருந்து கொடுத்தார். அறைக்குத் திருப்பியதும் அதுவரை ஆன செலவின் குறிப்பை நண்பர்களுக்கு ஆளுக்கொரு பிரதிகொடுத்த பின்னர் கா·காவின் வழக்கு ( Le Procès) என்ற நூலை மூன்றாவது முறையாக (?) படிக்க ஆரம்பித்தேன்.
—————————————————–

துருக்கி – (அண்ட்டல்யா-கப்படோஸ்-அண்ட்டல்யா) .

வணக்கம் நண்பர்களே,

கடந்த திங்கள் முதல் ஒரு வாரம் எனது மனவியுடன் துருக்கிக்கு வந்திருக்கிறேன். மத்தியதரை கடலிலுள்ள அண்ட்டால்யா(Antalya)வில் இரண்டு நாட்கள் இருந்துவிட்டு மூன்றுநாட்கள் ஏசியாமைனரிலுள்ள கப்படோஸில்(Cappadoce) இருந்துவிட்டு நேற்று(31மார்ச்) மீண்டும் அண்ட்டாலியா, 3ந்தேதி வரை இங்கிருந்துவிட்டு பாரீஸ் திரும்புகிறோம்சொல்ல நிறைய இருக்கின்றன விரைவில் எழுதுகிறேன்.