குறுந்தொகை ‘நாயகர்’

அண்மைக்காலங்களில் பிரெஞ்சிலிருந்து தமிழில் மொழிபெயர்த்த சிறுகதைகளை சிற்றிதழ்களில் வாசிக்க நேர்ந்த வாசகர்களுக்கு வெங்கட சுப்ராய நாயக்கர் என்ற பெயர் அறிமுகமான பெயராக இருக்கக்கூடும். பெயரைப் படித்து நீங்கள் ஏதோ சுதந்திரப் போராட்ட தியாகி தமிழ் சிற்றிதழ்பக்கம் ஒதுங்கியிருக்கிறார் என்றெல்லாம் கற்பனை செய்யவேண்டாம். விஜய நகர பேரரசின் எச்ச சொச்ச நாயக்கர்களில் ஒருவராக இருக்குமோ என்ற சந்தேகத்தைக்கூட நீங்கள் தவிர்க்கலாம் ஏனெனில் புதுச்சேரியிலும் தமிழ் நாட்டின் வட மாவட்டங்களிலும் வன்னியர்களில், ஒரு பிரிவினருக்கு நாயக்கர் என்றே பெயர்.

மெலிந்த தேகம், ஒடுங்கலான முகம், போன்சாய் வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்போல நன்கு கத்தரித்த குட்டையான கேசம். பலத்த காற்றென்றாலும் படிந்த தலை மயிர் எழுந்திருக்காது, அத்தனை அடக்கம். ஆனாலும் மனிதரின் கைக்கு எப்போதும் அதன் மீது தனி கவனமுண்டு. பேண்டுக்குமேல் சட்டை, முழுக்கையை மணிகட்டு தெரிய மடித்திருப்பார். புதுச்சேரி என்றதும் எனது ஆழ் மனதில் நோஸ்த்தால்ஜியாவாக ஓர் பிம்பம் உயிர்த்தெழும், எழுபதுகள்வரை அந்த புதுச்சேரிவாசியை தினசரி வாழ்க்கையில் – நேருவீதியிலோ, மாத்ரு கபேயிலோ, இந்தியன் காபி ஹவுஸிலோ, காலை பதினோரு மணிக்கு பெரிய மார்க்கெட்டிலோ, மாலை ஆனால் ஒதியஞ்சாலை திடலில் பேத்தாங் ஆட்டத்தின் ‘பூல்’களுடனோ – சந்திக்காமலிருந்ததில்லை. கண்ணிற் பட்டோமோ இல்லையோ ‘போன்ழூர் ம்ஸே’ என்பார்கள். மதாம், புள்ளைங்க சௌக்கியமா? கேட்பார்கள். இந்த இரண்டாவது விசாரிப்பில் அவர்களைக் கடந்து செல்ல முடியாது. நிற்க வேண்டும். பேசவேண்டும். பேசவேண்டும் – பேசவேண்டும். வீட்டிற்குத் திரும்ப மீண்டும் உங்களுக்கு உங்கள் மதாம் (மேடம் இங்கே மனைவி) ஞாபகம் வரவேண்டும். ஆனாலும் பேச்சின் முடிவில் சலிப்பு தோன்றாது. மறுநாள் சந்திக்க நேர்ந்தால் நீங்கள் ‘போன்ழூர் ம்சே’ என்று வலிய சில நேரங்களில் உங்களுக்கு முன்னே நடப்பவர் அவர்தானா என்பதை உறுதிபடுத்த முடியாத நிலையிலுங்கூட தோளைத்தொட்டு பேசுவீர்கள், அப்படியொரு நெருக்கமான சினேகிதத்தை மனதில் வார்த்திருப்போம்.

நண்பர்களால் நாயகர் எனப்படும் வெங்கட சுப்ராய நாயக்கரும் எனக்கு அறிமுகமானவிதமும் ஒரு வகையில் அப்படி நிகழ்ந்ததுதான் – உபயம் எங்கள் இருவருக்கும் பொதுவான இனிய நண்பராக இருக்கிற தாகூர் கலைகல்லூரி முன்னாள் பேராசிரியர் திரு தேவ மைந்தன் என்கிற பசுபதி அவர்கள். நாயகரும் கடந்த 22 ஆண்டுகளுக்கு மேலாக பேராசிரியராக பணியாற்றிவருகிறார், அவர் முனைவருங்கூட. கற்பிக்கும் துறை பிரெஞ்சு இலக்கியம். அவருடைய வழிகாட்டுதலில் பல ஆய்வு மாணவர்கள் உள்ளனர் என்பது கூடுதல் செய்தி. தற்போது புதுவைப் பல்கலைகழகத்தைசேர்ந்த காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தில் பிரெஞ்சு மொழி பேராசிரியர்.

எனக்கும் நாயகருக்கும் நட்பு நீடிப்பதற்கான காரணம் இக்கட்டுரையின் முதல் வரியிலேயே இருக்கிறது. அதனை படித்தபோதே ஏன் அவரோடு ஒட்டிக்கொண்டிருக்கிறேன் என்பதை நண்பர்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள். அவரும் எனது எழுத்தை அவ்வப்போது பாராட்டி பேசுவார் நானும் அவரது முயற்சிகளை தொடர்ந்து விசுவாசித்து வந்திருக்கிறேன். பிரெஞ்சு படித்த புதுச்சேரி தமிழர்களில் மொழிக்கு விசுவாசமாக இருப்பவர்கள் குறைவு. நண்பர் பசுபதியும் சரி, நாயக்கரும் சரி தொன்ம இலக்கியத்தைபோலவே நவீன இலக்கியங்களிலும் ஆர்வம் காட்டுபவர்கள். இப்படி இரண்டிலும் ஆழ்ந்த ஞானமும் தீராத ஈடுபாடும் ஒருசேர அமைந்த பேராசிரியர்களை அரிதாகத்தான் பார்க்கமுடிகின்றது. நாயகர் பிரெஞ்சிலிருந்து தமிழில் சிறுகதைகளை மொழிபெயர்ப்பதோடு, தமிழ் சிறுகதைகளையும் பிரெஞ்சில் மொழி பெயர்த்துவருகிறார்.

நண்பரது அண்மைக்கால சாதனை மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்காக குறுந்தொகையை பிரெஞ்சில் மொழி பெயர்த்திருப்பது. பிரான்சைசேர்ந்த மற்றொரு நண்பர் கோபாலகிருஷ்ணன் பட்டினப்பாலையைத் பிரெஞ்சில் மொழிபெயர்த்திருப்பதாக செய்தி. இதுபோன்ற நல் உழைப்புகளை மனமுவந்து தமிழ் கூறும் நல்லுலகம் போற்றவேண்டும். குறுந்தொகையிலிருந்து சில பாடல்கள் பிரெஞ்சு மொழி பெயர்ப்புடன்:

3. குறிஞ்சிதலைவி கூற்று
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.
தேவகுலத்தார்.
 
 
Poème 3
Situation poétique – tiṇai : Région montagneuse – kuṟiñci
 
L’héroïne  proteste à son amie qui a fait des remarques sur le héros :
Plus vaste que la terre,
plus haut que le ciel,
plus profond que le vaste océan,
est  mon amour pour cet homme
venant des montagnes,
où les abeilles fabriquent
du miel des fleurs de kuṟiñci aux tiges noires.
                                                            -Tēvakulattār
Note: L’amour est comparé à la terre qui s’étend horizontalement, au ciel qui s’étend en hauteur,  à l’océan qui s’étend en profondeur. Les fleurs de  kuṟiñci   fleurissent dans les régions montagneuses tous les douze ans.  Les abeilles fabriquent du miel de ces fleurs.  Elles ne vont pas butiner ailleurs. La jeune femme est certaine que son bien-aimé n’ira pas vers une autre femme.
 
kuṟiñci – Phelophyllum kunthianum
……………………..
20. பாலைதலைவி கூற்று
அருளும் அன்பும் நீக்கித் துணைதுறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே.
கோப்பெருஞ்சோழன்.
 
 
Poème: 20
 
Situation poétique-  tiṇai : Région désertique –pālai
L’héroïne dit à son amie :
Cet homme
a oublié l’amour et la compassion.
Il a oublié aussi sa compagne
et s’en est allé chercher fortune.
S’il est intelligent qu’il le soit.
Nous, femmes, restons innocentes.
-Kōpperuñcōḻaṉ
 
Note : Innocente veut dire simple, sans complication; les quatre vertus de la femme indienne étaient la crainte, l’innocence, la timidité, la politesse. La logique de l’héroïne est fondée sur l’émotion contraire à celle de son homme qui préfère la quitter pour aller chercher fortune.
………………………..
40. குறிஞ்சிதலைவன் கூற்று
யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.
செம்புலப் பெயனீரார்.
 
 
Poème: 40
Situation poétique – tiṇai : Région montagneuse – kuṟiñci
Le héros s’adresse à sa bien-aimée :
Ta mère et ma mère,
se connaissent-elles?
Ton père et mon père
ont-ils des liens de parenté?
Toi et moi,
nous ne nous sommes jamais rencontrés.
Pourtant,
telle la pluie imprégnant la terre rouge
nos cœurs se mêlent et s’entremêlent.
-Cempulappeyanīrār
 
Note : Le héros observe que leur relation sera inséparable et éternelle comme  l’eau de pluie qui imprègne la terre rouge. Comme cette union est née spontanément, sans crier gare, le héros en est sûr. D’après Mani, cempulam se réfère à kuṟiñci – la région montagneuse.
 ………………….
 

1 responses to “குறுந்தொகை ‘நாயகர்’

  1. நாயகர் கடுமையாக உழைக்கும் இயல்புடையவர். அவருடைய ஆளுமை ( மொழி ஆளுமை, தன் ஆளுமைஇரண்டும்) போற்றுதலுக்குரியன. இதுபோன்ற ம்மொழிபெயர்ப்புக்கள் பல அவர் தரவேண்டும். அவை உங்களைப் போன்ற பொருத்தமுடையவர்களால் உலகுக்கு அறிம்முகம் செய்யப்ப்படவேண்டும். நல்லதொரு அறிமுகம் நன்று. வாழ்த்துக்கள்.

பின்னூட்டமொன்றை இடுக