பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள் -10

 கொன்க்கூர் இலக்கிய பரிசு:

எட்மண்ட் டெ கொன்க்கூர் (Edmond Huot de Goncourt)  என்பவரின் மரணத்திற்கு பின்பு அவரது உயிலின் அடிப்படையில் அவரது சகோதரர் ழூய்ல் கொன்க்கூர் (Jules Huot de Goncourt) பெயரில் 1900 ம் ஆண்டில் ஏற்படுத்தபட்டதே கொன்க்கூர் இலக்கிய பரிசு. சகோதரர்கள் இருவருமே எழுத்தாளர்கள். இணைந்தும் தனித்தனியாகவும் இவர்களுடைய படைப்புகள் பிரெஞ்சில் உள்ளன. இவ்வமைப்பு கவிதைகள், கட்டுரைகள் என்று பிற படைப்புகளுக்கு பரிசுகளை வழங்குகிறபோதிலும் புனவுகளுக்கு வழங்கப்படும் பரிசே முக்கியத்துவம் வாய்ந்தது. பிரெஞ்சில் இன்றுவரை பல இலக்கிய பரிசுகள் இருப்பினும், கொன்க்கூர் இலக்கிய பரிசு என்பது ஓர் எழுத்தாளனை சிறந்த படைப்பாளியாகவும் பரிசுபெற்ற படைப்பின் விற்பனையை அதிகரிக்கவும் துணைநிற்கிறது. பிரெஞ்சு மொழியில் பரிசுக்கான ஆண்டில் வெளிவந்த நாவல்களைக் கணக்கிற்கொண்டு தேர்வு செய்கிறார்கள். போட்டியில் கலந்துகொள்வதற்கான நுழைவுத் தகுதி போட்டிக்கான ஆண்டில் ‘உரைநடையில் வெளிவந்த மிகச்சிறந்த புனைவு’ (‘le meilleur ouvrage d’imagination en prose, paru dans l’annளூe’). போட்டியை நடத்துபவர்களே – (l’Acadளூmie Goncourt) தேர்வுக்குரிய நூல்களைத் தேர்வு செய்கிறார்கள். படைப்பாளரோ, பதிப்பகமோ தங்கள் நூல்களை அனுப்பவேண்டியதில்லை, அனுப்பவுங்கூடாது. ஒருமுறை பரிசுபெற்றவரை மறுமுறை தேர்வுசெய்வதில்லை.

நான்கு கட்டமாக தேர்வுகள் நடைபெறுகின்றன. முதற் கட்டத் தேர்வில் (செப்டம்பர் முதல் வாரம்) 15 நூல்கள், இரண்டாம் கட்டத் தேர்வில் 8 நூல்கள் ( அக்டோபர் முதல்வாரம்) மூன்றாம் கட்டத் தேர்வில் நான்கு நூல்கள் (அக்டோபர் இறுதிவாரத்தில்) என முடிவு செய்கிறார்கள் ஆக நேற்று அறிவிக்கப்பட்ட முடிவில் (அக்.25) 2011 நவம்பர் மாதம் 2ந்தேதி அறிவிக்கப்படவுள்ள இறுதித் தேர்வுக்குத் தகுதியானவையென நான்கு படைப்புகளை தெரிவு செய்துள்ளனர்.

1. Sorj Chalandon –  Retour தூ Killybegs – Grasset
2. Alexis Jenni –  L’Art franவூais de la guerre – Gallimard
3. Carole Martinez –  Du Domaine des Murmures – Gallimard
4. Lyonel Trouillot – La belle amour humaine – Actes Sud

1. Retour à Killybegs – கில்லிபெக்கிற்கு திரும்புதல்  என்ற நூல் அயர்லாந்து விடுதலைப்படை (IRA)- என்ற தீவிர தேசிய அமைப்பில் பங்குபெற்று பின்னர் அந்த அமைப்புக்கு எதிராக அரசுடன் சேர்ந்து செயல்பட்ட  Tyrone Meehan என்பவரின் செயபாட்டில் உள்ள அரசியலையும், மனித குணபண்பையும் இந்த மனிதனின் ஊடாக  ஆசிரியர் சாற்பற்ற விவாதத்தை எழுப்புகிறார். இலங்கை நண்பர்கள் இப்படியொரு நாவலை கருணாவை மையமாகக்கொண்டு எழுதலாம் ஆனால் சார்பற்று சொல்லப்படவேண்டும். வெறும் அரசியல் சார்ந்து சொல்லாமல் மனித மனங்கள் முரண்களை பற்றுவதற்கான கணங்களில் எப்படிச் செயல்படுகின்றன என்பதைச் சொல்ல உளவியல் அடிப்படையிலான கண்ணோட்டம் அவசியம். Sorj Chalandon: நூலின் ஆசிரிரியர். Liberation தினசரியில் பத்திரிகையாளர். இவரது 4வது நாவலே மேலேகுறிப்பிடப்பட்டது. இதற்கு முன்பு  மூன்று நாவல்கள் வந்துள்ளன. மூன்றுமே இலக்கிய பரிசுகளை ஏற்கனவே பெற்றுள்ளன. இந்நாவல் கடந்த செப்டம்பர்மாதம் வெளிவந்தது.

2-L’Art français de la guerre -(பிரெஞ்சுக்காரர்களின் ராணுவக் கலை) என்ற இந்த புனைவு Alexis Jenni என்பவரால் எழுதப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவ தளபதி தனது அனுபவங்களை, நிரந்தர வேலையின்றி ஊர்ச்சுற்றிக்கொண்டு காதல், மரியுவானா இரவு விடுதிகளென அலையும் ஓர் இளஞனிடம் பகிர்ந்துகொள்வதாகப் புனையப்பட்டுள்லது. அலெக்ஸிஸ் ஜெனி என்கிற உயிரியல் ஆசிரியருக்கு இது முதல் புனைவு.

3.- முனகலின் வெளி (Du Domaine des Murmures). இடைக்காலத்தைப்பற்றி பேசும் புனைவில் உண்மை புனைவு இரண்டுமுண்டு. பன்னிரண்டாம் நூற்ராண்டுக்கு வாசகர்களை அழைத்துச்செல்கிறகதை. முழுக்க முழுக்க புனைவை வடிப்பதைக்காட்டிலும், உண்மை வரலாற்றை புனைவிற்கொண்டுவருவதற்கு உழைப்பு வேண்டும். உரிய சான்றுகள் வேண்டும் அதை உண்மையா என பலமுறை ஒப்பிட்டுப்பார்க்கவேண்டும், காலத்தை வரையறுப்பதிலும் வரிசையிடலிலும் கவனம் வேண்டும். செஞ்சியைப்பற்றி எனது நாவலில் சீர்காழியில் நடைபெறும் முலைப்பால் உற்சவத்தின் மாதமும், கொள்ளிடத்தில் ஆடிப்பெருக்கும் கால வரிசையில் பிறழ்ந்து இருப்பதைக் கவனித்து திரும்பவும் எழுதவேண்டியிருந்தது. ஒரு பெண்ணுக்கு இரட்டைசடை என எழுதி பின்னர் அதைத் தைத் திருத்த வேண்டியிருந்தது. இதுபோன்று சின்ன சின்ன அவதானிப்புகள் தேவையாகின்றன. அதற்கான மொழிகள் வேறு உடை, உணவுமூறை, வைத்திய மென்று இன்றுள்ள சித்த ஆயுர்வேதத்தை போகிற போக்கில் மறுபதிவுசெய்யலாமா? அவற்றை எவைகளெல்லாம் உண்மையிலிருந்தன. என்கிற கேள்விகள் வரலாம். பன்னிரண்டாம் நூற்றாண்டை முன்வைத்துசொல்லப்பட்டுள்ள இந்நாவல் இரண்டு நாட்களுக்கு முன் வாங்கினேன். இதற்குப் பரிசு கிடைக்கவேண்டும் என்பதென் விருப்பம்.

ஓர் இளம்பெண் – Esclarmonde- மானிடவர்க் கென்று பேச்சுப்படில் வாழ்கில்லேன்” என்கிற நமது ஆண்டாள் வழிவந்தவள். பெற்றோர் தீர்மானிக்கும் திருமணத்தை மறுக்கிறாள். ஆழ்வார் ஆண்டாளை அரங்கனோடு சேர்த்துவைக்கிறார். இங்கே Esclarmonde  கோட்டையொன்றில் சிறைவைக்கப்படுகிறாள். அவளுக்கு வெளியுலக்தொடர்பு என்பது ஒரு சிறிய சன்னல். அவளுடைய சிறை அவளுக்குக் கட்டப்படுள்ள சமாதியென்று தெரியாமலே அங்கிருக்கிறாள்;  இப்புதிய தனிமைக்கும் அவள் நேசித்த தனிமைக்கு பாரிய இடைவெளிகொண்டதென்கிற உணரத்தொடங்குகிறபோது, செத்த உயிர்களோடு கைகோர்க்க நேரிடுகிறது தான் உயிருள்ள ஜென்மமா, இறந்த ஜென்மமா எனத் தெரியாமல் தடுமாறுகிறாள். தந்தையின் அதிகாரம் கழுத்தை நெரிக்கிறபோது அவளுடைய சுதந்திரக்குரல் அல்லது ஈனஸ்வரம் அவளுடைய எம்பிரான் வாழும் புனிதஸ்தலத்தில் (இஸ்ரேல்)எதிரொலிக்கிறது. இநாவல் குறித்து தனிக்கட்டுரை எழுதவேண்டும். Carole Martinez என்ற பெண்நாவலாசிரியருக்கு இது இரண்டாவது நாவல். அவரது முதல் Le Cஞூur cousu, Paris, னditions Gallimard மூன்று பரிசுகளை வென்ற நாவல்.

4. ஓர் இனிய மானுடக் காதல் -( La belle amour humaine)  Lyonel TROUILLOT என்கிற ஹைத்திநாட்டைச்சேர்ந்த படைப்பாளியின் கதை. மேற்கிந்திய தீவு ஒன்றிர்க்கு தனது தந்தையைத் தேடிவரும் மேற்கத்திய இளைஞனின் உளவியல் தேடலை விவரிக்கும் புனைவில் இன்றைய உலகவாழ்க்கைக்கு மனிதனின் எந்த அவதாரம் உகந்ததென்கிற கேள்விக்கு விடைதேடுகிறது. நாவலாசிரியருக்கு இது மூன்றாவது நாவல். .

——————————————————

இரசனையில் நேர்ந்த தவறு – ஓர் இளம்பெண்ணின் முதல் நாவல்.

ஆயிரம்பேர் வலியுடன் வந்தால்  ஐந்துபேரைகூட அனுமதிப்பதில்லை என்கிற விதிமுறையைக் கறாராகப் பின்பற்றுகிறவர்கள் மேற்குலக பதிப்பகங்கள். எழுத்தாளர்கள் நல்ல செய்திவராதா என காத்திருக்கிறார்கள். அனுமதித்து சுகப்பிரசவம் என்ற செய்திக்கிடைக்கிறது. தாயும் சேயும் நலமென்கிறார்கள். அடுத்து வேறொருவர் வருகிறார். இவருக்கு விமர்சகர் என்று பெயர். பிறந்த குழந்தையின் எடை, உயரம், ஆரோக்கியம் ஆகியவற்றைப்பற்றிய பாரபட்சமற்ற குறிப்பை எழுதுகிறார். இவர்கள் கணிப்பு பெரும்பாலும் தவறுவதில்லை. ஆரோக்கியமான குழந்தை மரிப்பதில்லை. தாய்க்கும் சந்தோஷம். ஒரு புதிய எழுத்தாளனுக்கு இலக்கிய இதழ்தரும் ஆதரவென்பது அவனது முதல் நூலுக்கு விமர்சகர்கள் தரும் மதிப்பெண்களை பொறுத்தது. இந்த புண்ணியவன்கள் கொண்டாடவும் தெரிந்தவர்கள், காலில்போட்டு மிதிக்கவும் அறிந்தவர்கள்.  ஒரு புதிய எழுத்தாளனை, எந்த வரிசையில் நிறுத்தலாம், அவன் யாரைபோல எழுதுகிறான், எதிர்கால இலக்கிய உலகில் அவன் பங்கு என்ன? என்றெல்லாம் தீர்மானிப்பவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். பிரான்சை பொறுத்தவரை 99 விழுக்காடு விமர்சகர்கள் எழுத்தாளர்களல்ல. எனவே சார்பற்ற அவர்களின் மதிப்பீடுகளுக்கு மரியாதை இருக்கின்றன.

புதிய புத்தகங்கள் இங்கே செப்டம்பர் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் வெளிவருகின்றன. பிரசுர வாய்ப்பிற்கும் உழைத்து; இலக்கிய விமர்சகர்களின் நன்மதிப்பை பெற்றாகவேண்டிய நெருக்கடிக்கும் புதியவர்கள் உள்ளாவதால் இவ்விளைஞர்கள் கடுமையாக உழைக்கவேண்டியிருக்கிறது. தனித்தன்மையை நிறுவவேண்டியிருக்கிறது. இன்றைய பிரசினைகளை மையப்படுத்திய எழுத்துகளாகவே அவை இருக்குமென்ற எதிர்பார்ப்பும் வாசகர்களிடமிருக்கிறது. இணையதளம், சமூக உறவுகளில் வலைத்தலங்களின் பங்கு, பொருளாதார நெருக்கடி, அரபு நாடுகளில் எதேச்சதிகாரங்களுக்கெதிராக ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு போன்றவை உலகம் இதுவரை காணாத அளவில் அண்மையில் நடந்துள்ளன. எனவே புதிய இலக்கியங்கள் இக்கருப்பொருளை மையமாகக்கொண்டே எழுதப்பட்டிருக்குமென பரவலாக நம்பப்பட்டது. இதுபோன்றதொரு பொதுவான எதிர்பார்ப்பை நிராகரித்து, தீவிர படைப்பென்பது பொதுநீரோட்டத்தோடு கலப்பதல்ல என்கிற கருத்தாக்கத்தை வலியுறுத்துவதுபோல இந்நாவல்கள் உள்ளன. குடும்பம், இயற்கை, ஒப்பீட்டளவில் தமது மூதாதைகளிடமிருந்து நினைவுகள், அடையாளங்கள் ஆகியவற்றில் அவர்களுக்குள்ள விலகல் இடைவெளி ஆகியவற்றைபற்றி இப்புதியதலைமுறை படைப்புகள் பேசுகின்றன. சுயகதைகள், தன்முனைப்புடன் கூடிய பயணம் ஆகியவற்றை எழுதுபொருளாகக்கொண்டு கடந்த பத்தாண்டுகளில் நாவல்களின் பெயரைமட்டுமே நவீனப்படுத்திவந்த மூத்த பிரெஞ்சு எழுத்தாளர்களின் படைப்புகள் அவர்களுக்கு அலுப்பைத் தந்திருக்கலாம்.

La faute de goût (இரசனையில் நேர்ந்த தவறு) என்ற நாவல், பிரெஞ்சில் அண்மையில் வந்துள்ள ஒரு புனைவு. ஆசிரியர் ஓர் இளம் பெண்படைப்பாளி, முதல் நாவலுங்கூட. பெயர் கரோலின் லுனுவார். புனைவின் நாயகி மத்தில்து. அவள் மேட்டுக்குடியைச் சேர்ந்த இளம் வழக்கறிஞர். தற்கால இளம்பெண்ணுக்குரிய தேவைகளுக்கும் கடமைகளுக்கும் நேரத்தை ஒதுக்கியதுபோக அவ்வப்போது எப்படி போக்குவதென்று தெரியாமல் சில பொழுதுகளும் அவருக்குக் கிடைக்கின்றன – (எனக்குத் தெரிந்த பெண்மணி ஒருமுறை கொஞ்சம் நேரம் கிடைத்தது அண்ணா ஹஸாரே உண்ணாவிரதத்திற்காக மெழுகுத்திரியை ஏற்றினேன், என்றார்) இப்பெண்ணுக்கும் அதுபோல நேரம் கிடைக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்களேன். ஆகஸ்டுமாதம் 15ந்தேதி கிடைத்த வாரவிடுமுறையை குடும்பத்தினருடன் கழிப்பதென்று வந்திருக்கிறாள். செல்வாக்கான அக்குடும்பத்தைச்சேர்ந்த பலரும் கூடியிருந்த அம்மாளிகை குடுபத்தின் மூத்த உறுப்பினரான பாட்டி மற்றும் அவளுடைய சகோதரிகளின் அதிகாரத்தின் கீழ் இருக்கிறது. இடைக்கால பிரபுத்துவ மன நிலையில் இருபத்தோராம் நூற்றாண்டிலும் வாழ்வை நகர்த்தும் குடும்பம். கூப்பிட்ட குரலுக்கு ஓடிவர ஏவலாட்கள், பணிப்பெண்கள், பணியாட்கள், தோட்டக்காரர், சமையல்காரரென ஒரு பட்டாளமே வீட்டிலிருக்கிறது.

மாளிகையின் நீச்சல் குளத்தில் குளிக்க வருகிறவளுக்கு புத்தனுக்கு உதித்ததுபோல ஞானோதயம். புத்தியில் ஏதோ உரைக்கின்றது. உலக நடப்புகளில் அக்கறையின்றிருக்கும் தனது வாழ்க்கை குறித்து கேள்வி எழுகிறது. ஓய்வு கிடைக்கிறபொழுது இவளுக்கும் எதையாவது எதிர்த்துபோராடலாம், கலகக்குரல் கொடுக்கலாம் என்ற எண்ணம் துளிர்விடுகிறது. ஆனால் எதற்கு எதிராக பேராடுவதென்ற கேள்வி எழுகிறபோது பதிலின்றி தடுமாறுகிறாள். இன்றைய இளைஞர் அல்லது இளம்பெண்களின் போராட்டம் எதற்காக இருக்கக்கூடும்? உறங்கும் நம் உணர்வுகளை உசுப்பக்கூடிய பிரச்சினைகள் எவை? தனது குடும்பம் தனது சுற்றமென்று செல்லரித்த குறியீடுகளிலன்றி பிறவற்றில் நாட்டமின்றியிருக்கும் பெண்ணொருத்தியின் இலட்சியத்தை வளர்த்தெடுப்பது எப்படி? ‘பதினான்காம் லூயிகாலத்து ஒரு ஜோடி நாற்காலிகள் (அவற்றை சொந்தமாக்கிக்கொள்ள நடத்திய யுத்தங்கள்), ஒரு நிலைக்கடிகாராம், இளமைமாறாதிருக்கும் ஒரு நிழற்படமென்று உருமாறிப்போன பாட்டியின் வழித்தடத்தில் இவளும் பயணிக்கபோகிறாளா?  என்ற கேள்விகள் அடுக்கடுக்காக வருகின்றன. ஆசிரியர் குறிக்கோளின்றியும் உயிர்ப்பின்றியும் வாழ்க்கையை நகர்த்தும் சக வயதினரை அங்கதத்துடன் விளாசுகிறார். முதல் நூலென்றாலும் சுருங்கக்கூறி விளங்கவைப்பதென்கிற முடிவை எடுத்திருக்கவேண்டும். கதைக்களன்,  மாளிகையை விட்டு வெளியிவரவில்லை, எதைச்சொல்லவேண்டுமோ அதைசொல்லியிருக்கிறார். பொதுவாக முதல் நாவல் எழுதுகிறபோது படித்தனைத்தையும் சொல்லிவிடத் துடிப்போம். சொந்தத் தொழிலுக்காக சட்டம்பயின்றதை தவிர நாவலில் ஆசிரியரின் வேறு ஞானங்களை சந்தியில் நிறுத்தும் முயற்சிகளில்லை. எண்ணி நூறே நூறுபக்கங்கள். போதுமா? போதும். பக்கங்களில் என்ன இருக்கின்றது. சொல்வதில் இருக்கிறது சொல்லப்படும் பொருளில் இருக்கிறது. ஓடும் நீரில் துரும்புபோல மீள முடியாத தனதுவாழ்க்கைதேர்வுகுறித்த மத்தில்து பெண்ணின் கவலையை நாமும் புரிந்துகொள்கிறோம் அவள் கையாலாதத்தனத்தைக்குறித்து எரிச்சல் அடையவோ பரிதாபப் படவோ எந்தத் தகுதியும் நமக்கில்லையென்றுதான் சொல்லவேண்டும்.

இப்புனைகதைக்கு பிரான்சின் தெற்கு பகுதியில் செல்வந்தர்கள் வாழும் குடியிருப்பொன்றில் நிகழ்ந்த சம்பவமும் அதை தினசரியில் வாசிக்க நேர்ந்ததும் காரணமென ஒரு பேட்டியில் நாவலாசிரியர் தெரிவிக்கிறார்.  அச்செய்தியின் படி காலனிவாசியொருவர் குடியிருந்தவர்களுக்குப் பொதுவான நீச்சல் குளத்தில், காவல் பெண்மணியொருத்தியை குளிக்க அனுமதிக்கப்போக பிற காலனிவாசிகள் அதை எதிர்த்து உடனடியாக செயற்குழுவைக்கூட்டி கண்டிக்கிறார்கள். இச்சம்பவம் தன்னிடத்தில் ஏற்படுத்திய ஏன்? எதற்காக? என்ற கேள்விகளுக்கான விடை தேடலே நாவலுக்கு மூலமென்பது அவர் தரும் விளக்கம்.

பொதுவாக நடுத்தர ஏழைவர்க்கத்தைசேர்ந்த குடும்பங்களில் இளம்வயதினருக்குள்ள இடம் செல்வந்தர் குடும்பங்களில் இருப்பதில்லை. அபரிதமான செல்வமும் அதைச் சம்பாதித்த அல்லது கட்டிக்காத்த வகைமையும் பெற்றோர்களுக்கு அடங்கிய பிள்ளையாக பெண்ணாக இருப்பதே  உகந்தவாழ்க்கை என்ற அடிமைச்சிந்தனைக்கு செல்வந்தர் பிள்ளைகள் தங்களை ஒப்படைத்துவிடுகிறார்கள். இத்தகைய ஒரு குடும்பத்தின் தலைமுறையாக, கதாநாயகியை நிறுத்தி கலகக்குரல் எழுப்பப்பட்டிருக்கிறது.

இறந்தகாலத்திலிருந்து நிகழ்காலத்திற்கு ஒன்றை எடுத்துச்செல்வதில் நேர்கிற உணர்வு சிக்கல்களிலிருந்து விடுபடுவது எப்படி? இணங்கிப்போவதா முரண்படுவதா? மனிதம் எட்டிய உயர்வு இணங்கியதால் நேர்ந்ததல்ல முரண்களால் உற்றது. மரபு -நவீனம்; பழமை -புதுமை இவற்றினை எதிரெதிர் நிலையிலிருந்து ஆதரிப்பதைத்  தவிர்த்து, வெற்றி பெற்றவனாக உலாவர இவை இரண்டிற்குமிடையிலுள்ள தடத்தின் மேடுபள்ளங்களை அறிந்து நடக்கத்தெரிந்த சாதுர்யம் மட்டுமே போதுமா? இவற்றையெல்லாம் இயற்கை எழுதிய விதியென சொல்லிவிட்டு உண்பது, உறங்குவதென்று காலத்தைத் தள்ளலாமா? என்பதுபோன்ற வினாக்களுக்கு செக்குமாட்டின் வாழ்க்கையை பற்றிய உண்மைகளை கதைப்படுத்தி ஆசிரியர் விடைதேடுகிறார்.

——————————————————

மொழிவது சுகம்-Oct.15

லக அழகித் தேர்வும் ஓர் உண்மையும்..

அமெரிக்க தூதரகத்தின் சென்னைக்கிளையின் தூதுவர், பல்கலைகழகமொன்றில் ஆற்றிய உரையில், சுமார் இருபது ஆண்டுகளுக்குமுன்பு ஒரு மாணவியாக இந்தியா வந்திருந்தபோது தமது பயண அனுபவமொன்றை கோடிட்டுக் காட்டுகிறார். இந்தியர்களின் சினேகித மனப்பாங்கையும் பரிவையும் கண்டு வியந்தோதியவர் உரையின் எச்சமாக நெடிய இரயில்பயணத்தின் இறுதியில் தம்முடைய தோல் தமிழர்களைப்போல அழுக்காகவும் கருப்பாகவும் மாறிவிட்டதென குறிப்பிடுகிறார். மயிர் நீக்கின் வாழா கவரிமான் அன்னார் இனத்தினை சேர்ந்தவர்கள் என்பதால் உடனே நமக்கு கோபம் பிறந்து எதிர்ப்பைத் தெரிவித்தோம். தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழனை அழுக்கானவர் கருப்பானவர்களென்று தவறியுங்கூட உச்சரிப்பதென்றால்  அப்பெண்மணிக்கு வாய்க்கொழுப்பின்றி வேறில்லை. வெள்ளையர்களின் இத்தகு மனப்போக்கு கண்டனத்திகுரியதென்பதில் மாற்று கருத்தில்லை.

எனினும் எனக்கு சில சந்தேகங்கள் இருக்கின்றன. சில தெளிவுகள் தேவைப்படுகின்றன. அப்பெண்மணியை கண்டிக்கிறபோது தமிழர்கள் அழுக்கானவர்கள் என்றதற்காக கண்டிக்கிறோமா கறுப்பானவர்கள் என்றதற்காக கண்டிக்கிறோமா அல்லது இரண்டிற்குமேவா என்று யாரேனும் தெளிவு படுத்தினால் நல்லது. நாம் அழுக்கானவர்கள் எனக் கூறப்படுவதை எதிர்க்கலாம். ஆனால் நம்மை கறுப்பர்களென்று கூறுவதை எதற்காக கண்டிக்கவேண்டும்? என்பது எனக்குப் புரியவில்லை. நமது நிறம் கறுப்புத்தானே இதில் வெட்கப்பட என்ன இருக்கிறது? அமெரிக்க கறுப்பரினத்து மக்கள் தாங்கள் கறுப்பர்கள் என்பதைப் பெருமையாக கம்பீரத்தோடு சொல்லிக்கொள்கிறார்கள்.

நம்முடைய சான்றிதழ்களிலும் பிற அத்தாட்சிகளிலும் தோலின் நிறம் கறுப்பெனக் குறிப்பிடப்பட்டால் கூடாதென்போமா? எப்படி சொல்லலாமென்று  கொடி பிடிப்போமா?  அதையொரு அமெரிக்கர் கூறக்கூடாதெனில் இந்தியாவுக்குள் வரும் வெளிநாட்டினரை அமெரிக்கனென்றோ இத்தாலியனென்றோ, இங்கிலீஷ்காரனென்றோ சொல்லாமல் ‘வெள்ளையர்’ என நாம் உச்சரிக்கும்போது அதுவும்தானே நிறவெறியாகும்.   கறுப்பு நிறத்தின்மீது நம்மிடத்திலுள்ள துவேஷத்திற்கு யாரிடம் நியாயம் கேட்பது. பெண் சிவப்பாய் இல்லையென நிராகரிக்கிற தமிழன் தமக்குள்ள நிறவெறியை உணர்வதுண்டா? பதினாறு வயதினிலே மயிலு கூட வெள்ளைத்தோலுடன் இருக்கவேண்டும் என எதிர்பார்க்கும் பாரதிராஜாவும், திராவிடத்தை குஷ்புவிடம் அடகுவைத்திருக்கும் நமது இனமானமும் எதைச்சொல்கிறது?. சினிமாக்களிலிருந்து சீரியல்கள்வரை கறுப்பு தமிழச்சிகளை வேண்டாமென்கிறோமே, தன்மானத் தமிழர்கள் இவற்றையெல்லாம் யோசிப்பதுண்டா? ஒருவேளை அவர்கள் இலக்கணத்தில் தமிழன் வேறு தமிழச்சி வேறா?

உலகஅழகியாக அண்மையில் அங்கோலா நாட்டைச்சேர்ந்த ஒரு கறுப்பரினபெண்ணை தேர்வுசெய்திருக்கிறார்கள். உலக அழகிதேர்வுக்குழுவில் இடம்பெற்றிருந்த பலர் இவ்வளவிற்கும் கறுப்பர்களில்லை வெள்ளையர்கள். நம்மால் ஒரு கறுப்பு தமிழச்சியை குறைந்த பட்சம் தொலைகாட்சியில் செய்தி வாசிப்பவராகவாவது அனுமதிப்போமா?

——————

பிரெஞ்சு சினிமா:  குற்றமிழைத்ததாக நம்பப்படுபவர்களும் குற்றவாளிகளாக தீர்மானிக்கப்படுவர்களும்

அண்மையில் திரைக்கு வந்துள்ள ஒரு பிரெஞ்சு படம் L’Affaire Outreau – Présumé coupable – ஓர் உண்மைக் கதை. ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையில்  காவல் துறையும் நீதித்துறையும் விளைவித்த பெருஞ்சேதத்தை திரைப்படத் துறையின் அத்தனை உன்னதங்களையும் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு பிரெஞ்சு நீதித்துறையின் அவலங்களை இப்படத்தில் தோலுறுத்தி காட்டியிருக்கிறார்கள். அலென் மரேசோ  நீதித்துறையில் அமீனா வாக பணிபுரிந்தவர். 2001ம் ஆண்டு அவர் செய்யாத ஒரு குற்றத்துக்காக 23 மாதங்கள் சிறையில் இருந்தார். அவர் குடும்பவாழ்க்கை சிதறுகிறது. மனைவி பிரிந்துபோகிறாள். அவரது பிள்ளைகள் தங்கள் உறவைத் துண்டித்துகொள்கின்றனர். அவரது அலவலகம் மூடப்படுகின்றது. அதனைப்பின்னர் ஒரு நூலாக கொண்டுவருகிறார். அதுவே L’Affaire Outreau.

நடந்தது இதுதான். ஊத்ரோ என்ற ஊரைசேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்கள் பெற்றோர்களின் நண்பர்களில் சிலர் தங்களிடத்தில் பாலியியல் குற்றங்களை இழைத்ததாக குற்றம் சாட்டுகிறார்கள். அவர்களின் பெற்றோர்களும் சிறுவர்களின் குற்றச்சாட்டை உறுதிபடுத்துகிறார்கள் அதன் விளைவாக பலர் கைது செய்யப்படுகின்றனர். சிறுவர் மீது இழைக்கப்படும் பாலியல் வன்முறைகளை பிரெஞ்சு சட்டம் மிகக் கடுமையாகத் தண்டிக்கிறது. கைதுசெய்யப்பட்டவர்களில் சிறுவர்களின் பெற்றோர்களும் அடங்குவர். குற்றத்தின் தீவிரம் கருதி கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணையின் அடிப்படையில் விடுதலை மறுக்கப்படுகிறது. வழக்கு விசார¨ணைக்கு வருவதற்கு முன்பே மூன்றாண்டுகாலம் குற்றம்சாட்டப்பட்டவர்கள் சிறையில் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் சிறையிலேயே இறக்கிறார்.  2004ம் ஆண்டு முதல் தீர்ப்பு வழங்கப்பட்டது குற்றம் சாட்டப்பட்ட பதினேழுபேரில் பதின்மூன்றுபேர் தொடக்கத்திலிருந்தே தாங்கள் நிரபராதிகள் என்றார்கள். அரசு வழக்கறிஞர் தவறுதலாக சிலரை வழக்கில் சேர்த்தாகச்சொல்லி  தங்களை நிரபராதிகள் என்று சொல்லிவந்த அப்பதின்மூன்றுபேரில் ஏழுபேரை விடுதலைசெய்தார். நான்குபேர்கள், ஏற்கனவே சிறையிலிருந்த காலத்தை அவர்களுடைய தண்டனைக்காலமாகக் கணக்கிற்கொண்டு விடுதலை செய்யப்பட்டனர். இரண்டுபேர் தொடர்ந்து சிறைதண்டனை அனுபவிக்க நேர்ந்து பின்னர் விடுதலை செய்யப்படுகிறார்கள். தண்டிக்கப்பட்ட மேற்கண்ட ஆறுபேரும் மேல் முறையீடு செய்கிறார்கள்.

தொடக்கத்திலிருந்து தங்கள் குற்றத்தை ஒப்புகொண்டுவந்த நான்குபேருக்கும் அவர்களுடைய குற்றங்களின் அடிப்படையில் 15 – 20 -5- 6 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்படுகிறது. தங்களை நிரபராதிகளென வாதிட்டுவந்த ஆறுபேரின் மேல் முறையீடு பாரீஸ் நீதிமன்றத்தில் நடபெற்றது. முதல் நாளே ஓர் உண்மை தெரியவந்தது. குற்ற்வாளிகளென தீர்மானிக்கபட்டுத் தொடர்ந்து தண்டனைபெற்ற மேற்கண்ட நான்குபேரில் ஒரு பெண்மணி தாம் பொய்யாக மற்ற்வர்களை இவ்வழக்கில் சேர்த்தாக சொல்ல,  நிரபராதிகளென ஆரம்பம் முதல் கூறிவந்தவர்கள் உண்மையிலேயே நிரபராதிகள் எனக் கருதப்பட்டு விடுதலை செய்யப்படுகின்றனர்

குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபரின் குற்றங்கள் நிரூபணம் ஆகாதவரை அவர் குற்றவாளியல்ல. ஆனால் நடைமுறை உண்மை என்பது வேறு. காவல்துறையும், செய்தித் தாள்களும் கூட்டணி அமைத்துக்கொண்டு சமூகத்தின் முன்னால் ஒருவனை குற்றவாளியாக நிறுத்தமுடியும்.

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த பெண்மணியென தினசரியில் செய்தியாக ஒருவர் இடம்பெறுகிறாரென்று வைத்துக்கொள்வோம் அவர் மீதுள்ள குற்றங்கள் நீதிமன்றத்தில் உரிய சாட்சியங்களைக்கொண்டு நிரூபிக்கப்படாதவரை சட்டத்தின் முன் அவர் குற்றவாளியல்ல, அவர் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார் அவ்வளவுதான். ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது. நீதிபதி தண்டிப்பதற்கு முன்பே ஆளாளுக்கு ஒரு கொலைவாளினை வைத்துக்கொண்டு அவளை தேடி அலைகிறார்கள். பெண்மணியின் படத்தைபோட்டு  கீழே பெயரை எழுதி – அருகிலேயே ஒரு நடிகையின் திருமண செய்தி இருக்கலாம்- நீங்கள் அதையும் இதையும் சேர்த்து குழப்பிக்கொள்ள கூடாதுபாருங்கள் அதற்காக. அவள் ஏழையாகவோ, நடுத்தரகுடும்பத்தை சேர்ந்தவளாகவோ இருக்கும் தகுதியொன்று போதும். செய்தித்தாளில் ஆரம்பித்து வரிசையாக பலரும் ஈவிரக்கமின்றி தண்டிக்க தயார். அப்பெண்மணியின் பின்னே ஒரு குடும்பம், பிள்ளைகள், வாழ்க்கை, உறவுகள் இருக்கிறதென்ற பிரக்ஞையின்றி அவளை கால்வேறு கைவேறாக கிழித்துப்போடுவார்கள்.

செல்வாக்கு உடைவன் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டால் -குற்றம் தெளிவாக நிரூபிக்கப்பட்டாலுங்கூட –  அவனைத் தண்டிப்பதற்கு பலமுறை யோசிக்கிற சட்டம் சராசரி மனிதனென்றால் அவசரம் காட்டுகிறது.  குற்றவாளிகளை தாராளமாக தண்டிக்கட்டும் அல்லது ஏதோ காரணங்களால் விடுதலை கூட செய்யட்டும் ஆனால் நிரபராதி ஒருவனை தண்டிக்கிறபோது புலம்ப வேண்டியிருக்கிறது.

இந்திய எழுத்துகளுக்கான இடம்?

பாரீஸ் நகரிலுள்ள புகழ்பெற்ற நவீனகலை அருங்காட்சியகமான Centre Pompidou வில் ‘Paris-Bombay-Delhi’ என்ற பொருளுளில் கடந்த ஆறுமாதகாலமாக கண்காட்சியொன்று நடபெற்று வருகிறது. பிரான்சு மற்றும் இந்தியாவைச்சேர்ந்த நவீனக் கலைஞர்களின் கலைபடைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இக்கண்காட்சி செப்டம்பர் 19 அன்று முடிவுற்றது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கடந்த செப்டம்பர் 16 மற்றும் 17 தேதிகளில் எழுத்தாளர்கள் “மொழிபெயர்ப்பாளர்களின் பார்வையில் இந்தியா” என்கிற இரண்டுநாள் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

இதுபோன்ற நிகழ்ச்சிகளில் சந்தர்ப்பம் வாய்க்கிறபோது கலந்துகொள்வதுண்டு. ஆனால் இம்முறை கூடுதலான ஆர்வத்துடன் நிகழ்ச்சிக்கு செல்ல காரணமிருந்தது. கடந்த ஆறுமாதத்திற்கு முன்பு இங்கே “Echanges et Partages Franco-Indiens என்ற பெயரில் ஓர் அமைப்பை நிறுவினேன். என்னோடு சில பிரெஞ்சு நண்பர்கள் அமைப்பில் வேறு பொறுப்புகளில் இருக்கிறார்கள். எங்கள் அமைப்பில் முக்கிய நோக்கங்களென்று எடுத்துக்கொண்டால் ஆங்கிலத்திலல்லாத பிற இந்திய மொழி படைப்புகளை பிரெஞ்சில் கொண்டுவர முயற்சி எடுப்பது, இந்திய எழுத்தாளர்களையும் பிரெஞ்சு எழுத்தாளர்களையும் வருடத்திற்கொரு முறை இந்தியாவிலோ அல்லது பிரான்சிலோ சந்திக்க ஏற்பாடு செய்வது. எனது இக் கனவை நண்பர் இந்திரனிடம் தெரிவித்தபோது மிகுந்த உற்சாகத்தோடு வரவேற்றார், பல அரிய யோசனைகளை வழங்கினார், வழங்கியும் வருகிறார். எனவே பாரீஸில் செப்டம்பர் 16 -17 ஏற்பாடு செய்யப்பட்ட எழுத்தாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் பார்வையில் இந்தியா என்ற கருத்தரங்கு வழக்கத்திற்கு மாறாக கூடுதலாக எனது அக்கறையைப் பெற்றிருந்தது. தவிர நிகழ்ச்சிக்கான அறிவிப்பில் திருமதி  Dominique Vitalyos என்ற பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர் பெயரிருந்தது. நான் நேரடியாக சந்தித்ததில்லை. ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்பதில் கூடுதல் அக்கறையுடனும், மலையாளத்திருந்தும் மொழிபெயர்ப்பு செய்துவருகிறார். ஆக அவரை சந்திக்கவும் வாய்ப்பு என்று கலந்துகொண்டேன். கேரளத்திலிருந்து வைக்கம் முகம்மது பஷீருடன் இணைந்து அவர் மொழிபெயத்திருந்த பஷீரின் படைப்பினைத் தவிர்த்து அவர் அறிமுகப்படுத்தியுள்ள கேரள எழுத்துகள் ஆங்கிலத்திலிருந்தே வந்திருக்கவேண்டும். ஆக அப்பெண்மணி இந்திய திறமைசாலிகளை கண்டுபிடித்து அறிமுகப்படுத்தி வருவதாக தெரிவித்துக்கொண்டார். இந்தத் திறமைசாலிகளுக்கு அவரது பார்வையில் என்னபொருளென்று விளங்கிக்கொள்ளவும் ஆவல் இருந்தது.

முதல் நாள் நிகழ்ச்சியில் இந்திய எழுத்தாளர்களென்று நான்குபேரை அறிமுகப்படுத்தினார்கள்: Manil suri, Sudhir Kakar, Preeta Samarasan et Kunal Basu. இவர்கள் நால்வரையும் அறிமுகப்படுத்திய Dominique Vitalyos இந்தியாவில் பன்முகத் தன்மையை மேற்கண்ட எழுத்தாளர்கள் வெளிபடுத்துவதாகவும், இன்றைய இந்தியாவின் படைப்புலகை இவர்களூடாக விளங்கிக்கொள்ள முடியுமெனக் கூறி புளகாங்கிதமடைந்தார். இந் நால்வரின் படைப்புகளை இயலுமெனில் வாசித்துப்பாருங்கள். அவற்றின் தகுதரம் குறித்து விவாதிக்க ஒன்றுமில்லை. இதில் பிரீதா சமரசன் என்ற பெண் மலேசியாவைசேர்ந்தவர். தானொரு தமிழ்ப்பெண் என்பதைத் தவிர்த்து இந்தியாவுக்கும் தனக்கும் எந்தத் தொடர்புமில்லை என ஒத்துக்கொண்டார். மற்ற மூவரும் பிரீதா சமரசன் போலவே தாங்கள் தாய்மொழியை வீட்டில் கூட உபயோகிப்பதில்லையென்றும்  இந்தியாவுக்குபோவது கூட அரிதாக நிகழ்கிறதென்றும் ஆனால் இந்தியாவில் ஏற்படும் மாற்றங்களை அவதானித்துவருவதாகவும் தெரிவித்தார்கள். அவர்கள் கூற்றுப்படி இந்தியாவில் பிறந்ததைத் தவிர்த்து அவர்கள் மொழி அளவிலும் பண்பாட்டளவிலும் விலகி வெகு நாளாகின்றது என்பது புரிந்தது?  மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில் தங்கள் படைப்புகள் இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டத்தில்லை எனவும் ஆனால் ஆங்கிலத்தில் தங்கள் படைப்புகள் கிடைக்கிறபோது இந்தியவாசகனுக்கு பிறமொழிகளில் அவற்றைக் கொண்டுசெல்வது அவசியமில்லையெனவும் வாதிட்டார்கள்.

கேள்வி நேரத்தின்போது நான் அவர்களிடத்தில் கேட்டது இதுதான். வந்திருந்த பார்வையாளர்கள் இதுபோன்ற கேள்வியை நான் தவிர்த்திருக்கலாமென்று ‘உச்சு’கொட்டினார்கள். சிலர் எழுந்துவந்தபோது உங்கள் கேள்வி நியாயமானதென்றார்கள்.

” உங்கள் எழுத்தை நான் மதிக்கிறேன். என்னுடைய கேள்வி உங்கள் படைப்பு பற்றியதல்ல மாறாக நீங்களே உங்களை வெளிநாடு வாழ் இந்தியர்களென்று தெரிவித்திருந்திருந்தீர்கள். அப்படி இருக்கையில் உங்களை வெளிவாடுவாழ் இந்தியர்களை பிரதிநிதித்துவ படுத்தும் எழுத்தாளர்கள் (Indian diaspora writers) என்று சொல்வதுதானே நியாயம்? இந்திய எழுத்தாளர்களென்று (Indian writers) எப்படி  அழைத்துக்கொள்ளலாம் எனக்கேட்டேன், தொடர்ந்து அப்படிச்சொல்லிக்கொள்வதில் உங்களுக்கு கூச்சமிருப்பதில்லையா? ” – என்பது எனது கேள்வி.

அவர்கள் பதில் என்னவாக இருக்குமென்று உங்கள் ஊகத்திற்கு விட்டுவிடுகிறேன். உண்மைதான் அது அவர்கள் குற்றமல்ல. வந்திருந்த எழுத்தாளர்களில் ஒருவர் மட்டும் பிரதேசமொழிகளில் எங்களைபோல எழுதுகிறவர்கள் இருக்கிறார்கள் என பெருந்தன்மையுடன் (?) கூறினார்.  மற்றவர்கள் ஒரு படி மேலே போய் நல்ல எழுத்தாளர்கள் பிரதேசமொழிகளிலும் உண்டு என்றார். ஒருவர் இது பிரதேச மொழி எழுத்தாளர்களின் பொறாமைக் குரல் என்றார், பிறகு நக்கலாக நீங்களேகூட ஓர் இயக்கத்தைப் பிரான்சில் தொடங்கலாமென்றார். அவர்களுக்குள்ள உரிமையை ஏற்றுகொண்டாலுங்கூட, பிரதேசமொழிகளில் எழுதுகின்ற இந்திய எழுத்தாளர்களை அழைத்திருக்கவேண்டாமா? என்பதென் கேள்வி. இன்னமும் காலனிய சிந்தனையிலிருந்து விடுபடாமல் ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டிருக்கிற இந்த மேட்டுக்குடிமக்களின் எழுத்துமட்டுமே இந்திய எழுத்தாக கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக பிரச்சாரம் செய்யப்படுகிறதென்பது எனக்குள்ள வருத்தம். அவர்களைக்குற்றம் சொல்வதில் நியாயமில்லை. இந்திய அரசாங்கமும், இலக்கிய மைப்புகளும் என்னசெய்துகொண்டிருக்கின்றன என்ற கேள்விகள் இருக்கின்றன. உடனுக்குடன் ஆங்கிலத்திலிருந்து  தமிழுக்குப் படைப்புகள் வருகின்றன, ஆனால் அது ஒருவழிப்பாதையாக இருப்பதுதான் சோகம்.

மறு நாள் மொழி பெயர்ப்பென்ற தளத்தில் நடந்த விவாதத்தையும் நவீன தமிழிலக்கியத்தினை பிறமொழிகளிற் கொண்டுசெல்ல முனைகிறபோது எதிர்கொள்ளவிருக்கிற சிக்கல்களையும் அடுத்த இதழில் தெரிவிக்கிறேன்.

———-

கவனத்திற்கொள்ள வேண்டிய பதிவுகள் -அக்.11.

வளவு

திரு இராம.கி. எனும் திரு இராமகிருஷ்ணன் என்பவரது வலைத்தலம் ‘வளவு’. இராயர் காப்பி கிளப்பென்ற யாஹ¤ குழுமத்தில் பல தமிழ் ஆர்வலர்களின் பெயர்கள் அறிமுகமாயின. அவற்றுள் திரு இராம.கி பெயருமொன்று. இராயர் காப்பி கிளப் குறித்து தனியாக எழுதவேண்டும். திரு. இராம.கி. பொறியாளர். தமிழில் தீராத காதல்கொண்டு விளம்பரங்களின்றி ஓயாமல் எழுதிக்கொண்டிருப்பவர். தமிழ் வேர்சொற்களை அலசி ஆய்ந்து முன்நிறுத்துபவர். போகிறபோக்கில் தமிழ் என்ற சொல்லேகூட தமிழில்லை என சொல்லிவிடுவாரோ என்ற அச்சம் இடைக்கிடை வருவதுண்டு.  நான் எழுதியிருக்கிற  இந்த பத்து வரிகளில் எத்தனை சொற்கள் தமிழல்லாத சொற்கள் இருக்கிறதோ? அவர்தான் அறிவார். எனக்கு இருக்கின்ற தமிழையே குறையின்றி கொண்டு சேர்த்தால் போதும். எனினும் அவரது வலைத்தலம் நான் விரும்பி படிக்கும் தளம், காரணம் பல நேரங்களில் நல்ல தமிழ்ச் சொற்களின்றி அவதிப்படுகிறபோதேல்லாம் அவரது வலைத்தலம்தான் எனக்கு உதவுகிறது, தவிர அவரது தமிழ் தேசியமும் பாசாங்கற்றது, கட்டுரைகள் அவ்வளவும் போற்றிபாதுகாக்கப்படவேண்டியவை. கடந்த மூன்றுமாதமாக அவர் மாணிக்கவாசகர் காலம் என்ற தொடரை எழுதிவருகிறார். பொறுமையோடு படித்தால், தெரிந்துகொள்ள வழக்கம்போல செறிவான தகவல்கள்.

வலைத்தள முகவரி: http://valavu.blogspot.com/2011/09/1.html

தேவமைந்தன்

நண்பர் தேவமைந்தன் அவருடைய பெயரிலேயே உள்ள வலைத்தலத்தில், திண்ணையில் ஏற்கனவே வெளிவந்த அவரது கட்டுரை ஒன்றை மறுபதிவு செய்திருக்கிறார். திண்ணையில் வாசித்திருக்க சந்தர்ப்பம் இல்லாவர்கள், அமையாதவர்கள் வாசிக்கவேண்டிய ஒன்று. மறுபடியும் வாசித்தாலும் தவறில்லை. ரேங்கே (Ringuet -Philippe Panneton) என்ற கனடா எழுத்தாளரின் ‘முப்பது ஏக்கர்’ புதினம் குறித்தது கட்டுரை. நாவலாசிரியர், நாவல், கருப்பொருள், நாவலின் நாயகன் அவன் எழுச்சி, வீழ்ச்சி எனகட்டுரை ஆழமாக படைப்பட்டிருக்கிறது. தேவமைந்தன் எதை எழுதினாலுலும் மிக கவனமாக சிரத்தை எடுத்துக்கொண்டு எழுதுவார். கிட்டதட்ட எண்பது ஆண்டுகளுக்கு முன்புவந்த நாவலை தேடிப்பிடித்து நண்பர் பாராட்டுகிறபோது, படிக்கின்ற எவருக்கும் அப்படைப்பை ஒருமுறையாவது வாசிக்க வேண்டும் என்கிற உந்துதலைத் தரக்கூடும். வெகு நாட்களுக்கு திண்ணையில் படித்தது என்றாலும் தேவமைந்தன் எழுத்துக்காகவும் மறுவாசிப்புக்கு உட்படுத்த வேண்டிய கட்டுரை. மறக்காமல் சந்தர்ப்பம் அமைந்தால் ‘முப்பது ஏக்கர்களையும்’ தேடிப்படியுங்கள்.

தேவமைந்தன் வலைப்பூ: http://httpdevamaindhan.blogspot.com/:

அ.ராமசாமி

திரு அ.ராமசாமி வலைப்பூவில் இம்முறை ஹெப்ஸிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு நூலைப்பற்றி மதிப்புரை நோக்கில் ஒரு கட்டுரை. அ.ரமசாமியின் எழுத்துக்களுக்கு எப்போதும் என்னிடம் மரியாதை உண்டு. கட்டுரையில் ஆசிரியர் வணிக எழுத்து இலக்கிய எழுத்தென கட்டமைக்கபட்ட இருபிரிவினருக்கிடையே நடந்த சகோதரச்சண்டையை கோடிட்டு காட்டிவிட்டு கட்டுரை ஆசிரியர் இவ்விரண்டிற்கும் பொதுவானவராக அடையாளப்படுத்திக்கொண்ட  ஹெப்சிபாதாசன் படைப்புகள் பற்றிபேசுகிறார். புத்தம்வீடு என்ற நாவலும் அதன் தொடர்ச்சியாக வெளிவந்த பிற இரண்டு நாவல்களைக்குறித்தும் சொல்லப்பட்டிருக்கிறது. ஹெப்சிபா எப்படி தமது பாத்திரங்களூடாக பிற பழமைவாதிடகளிடமிருந்து வேறுபட்டிருக்கிறார் என்பதை வழக்கம்போல கறாரான தமது வாக்கியங்களின் துணைகொண்டு நிறுவ முயன்றிருக்கிறார். வாசிக்க வேண்டிய பதிவு

அ.ராமசாமி: http://ramasamywritings.blogspot.com/2011/10/blog-post_11.html#more

அசதா

இவரது வலைத்தலத்தில்  யுவான் ருல்போவின் எரியும் சமவெளி  அவலத்துயரின் அழகியல் என்றுள்ள – அண்மையில் இப்பதிவாளர் நாகர்கோவில் நிகழ்வின்றில் நிகழ்த்திய உரையின் – மறுபதிவுவை நண்பர்கள் வாசிக்க வேண்டும்:  தென் அமெரிக்க எழுத்தாளர் யுவான் ருல்·போவின் பதினைந்து சிறுகதைகள் அடங்கிய தொகுப்பை குறித்தது. சில கதைகளை ஆழமாகவும், சிலவற்றை போகிறபோக்கில் ஒன்றிரண்டு வரிகளிலும் சொல்லியிருக்கிறார். யுவான் ருல்போவின் கதைகள் எப்படியிருந்தாலும் இந்த நண்பரின் எழுத்துக்கள் அந்த எழுத்தாளருக்கு கூடுதல் மதிப்பீட்டத் தந்திருக்கின்றன என்பது வெளிப்படை.

அசதா: http://mugaiyurasadha.blogspot.com/

பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள் -9

பாகிஸ்தானையும் இந்தியாவையும் போலவே இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் அரசியல் மற்றும் பண்பாட்டு ரீதியாக இணக்கமிருப்பதில்லை. அவர்கள் இடம் போனால் இவர்கள் வலம் போவார்கள். அது உண்மையுங்கூட. இங்கிலாந்தில் வாகனங்கள் சாலையில் இடப்புறம் செல்லும் பிரான்சில் வலப்புறம் செல்லவேண்டும். உலகமெங்கும் இதுதான் நடைமுறை காமன்வெல்த் நாடுகளைத் தவிர்த்து. மெட்ரிக் முறையை பெரும்பான்மையான நாடுகள் ஏற்றுக்கொண்டாலும் ஆங்கிலேயருக்கு பவுண்டும், அவுன்சும் விடக்கூடாதவை. ருக்பி(Rugby)யை ஏற்றுக்கொண்ட பிரெஞ்சுக்கார்கள் கிரிக்கெட் எனில் முகம் சுளிப்பார்கள்.

இந்தியா பாகிஸ்தான் மனக்கசப்பென்பது 1947 பிரிவினைக்குப்பிறகு வலுப்பெற்றதெனில் இங்கிலாந்து பிரான்சு மனக்கசப்பென்பது பதினோறாம் நூற்றாண்டில் நொர்மாண்டி பிரதேச பிரெஞ்சுமக்கள் (The Normans) ஹேஸ்ட்டிங்ஸ் சண்டையில் (the Battle of Hastings-1066AD) ஆங்கிலேயர்களை தோற்கடித்ததில் தொடங்கி நூறாண்டுபோராக பின்னர் ஊதி பெருத்தது. ஹேஸ்ட்டிங்ஸ் சண்டையில் இழந்த மானத்தை ஆங்கிலேயர்கள் வாட்டர் லூ சண்டையில் மீட்டெடெடுக்க வேண்டியிருந்தது. இரு நாடுகளுக்கிடையேயான காலனி யுத்தங்களை வரலாறு தெரிவிக்கிறது. இருவரின் சண்டையில் காலனிநாடுகள் பாதித்த சரித்திரத்திற்கு நாமே சாட்சி. வரலாற்று சம்பவங்கள் இங்கிலாந்தின் கை ஓங்கி இருந்ததாகச் சொல்கின்றன. பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கும்(English East India Company,-1600) பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனிக்கும் (Compagnie des Indes orientales-1664 (France) இந்தியாவுக்குள் நுழைந்த வகையில் 64 ஆண்டுகள் வித்தியாசம், அன்றைய தாமதம் இன்றும் பிரெஞ்சுக்காரர்களிடம் எல்லாவற்றிலுமுண்டு.  இரண்டாம் உலகப்போரின்போது பிரெஞ்சு ராணுவத்தின் ஜெனரலாகயிருந்த தெகோல் (Charles de Gaulle) ஜெர்மன் ஆக்ரமிப்பின்போது, இங்கிலாந்திற்குத் தப்பியோடி அங்கிருந்து ஜெர்மன் ஆக்ரமிப்பிற்கு எதிராக சுதந்திரப்போரை தொடங்கவேண்டியிருந்தது. எந்த நொர்மாண்டி பிரதேசம் முதன்முதலாக ஆங்கிலேயர்களுக்கும் பிரெஞ்சுகாரர்களுக்கும் கசப்பினை ஏற்படுத்தித் தந்ததோ அதே நொர்மாண்டியில் வந்திறங்கிய அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து வீரர்கள்தான் பிரெஞ்சுக்காரகளை ஜெர்மனியரிடமிருந்து காப்பாற்ற வேண்டியிருந்தது நகை முரண்.

காலனி ஆட்சியின்போது காலனிமக்களை இரு தரப்பினருமே சுரண்டினாலும், இந்தியாவை பொறுத்தவரை பிரிட்டிஷ் ஆட்சி கல்வி, தகவல் தொடர்பு ஆகியவற்றில் ஓரளவு அக்கறைகொண்டு செயல்பட்டதென்பதை மறுக்க முடியாது. ஆனால் பிரெஞ்சு காலனி நாடுகளில் சுரண்டியது அதிகம். அல்ஜீரியா நாட்டிற்கு சுதந்திரம் வழங்கியபொழுது அந்நாட்டை சேர்ந்தவரென்று ஒரு மருத்துவர்கூட இல்லையென்கிறார்கள். அவர்கள் அதிகபட்சமாக அங்கே உருவாக்கியது கல்விக்கூடமென்று ஒரு உயர்நிலைப்பள்ளி அவ்வளவுதான். பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சி செய்த எல்லா காலனிகளுக்கும் இது பொருந்தும். இருவருமே எஜமான வக்கிரத்தில் திளைப்பவர்களென்றாலும் பிரிட்டிஷ்காரர்கள் தங்கள் சேவகனுக்குள்ள கற்பூர அறிவைக் கண்டுபிடித்து கணக்கனாக உத்தியோக உயர்வு கொடுக்கத் தெரிந்தவர்கள். பிரெஞ்சுக்காரர்கள் தங்கள் காலனிமக்களை கடைசிவரை எடுபிடிகளாக மட்டுமே பார்ப்பவர்கள்.  இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவுகளில் சிலவற்றை தமது ஆதிக்கத்தின் கீழ் வைத்திருக்கும் பிரான்சு நாடு இன்றளவும் காலனியக்கொள்கையையே அம்மக்களுக்கு எதிராக கடைபிடித்து வருவதற்கு அண்மை உதாரணம் மய்யோத். கடந்த சில நாட்களாக கருப்பரின மக்கள் அங்கே போராடிவருகிறார்கள். சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வாய்கிழிய பேசும் பிரெஞ்சு அரசாங்கம் அதுபற்றி வாய் திறப்பதில்லை. தொலைகாட்சிகளும் பிரெஞ்சு இதழியல்களும் இருட்டடிப்பு செய்கின்றன. அவர்களுக்கு உள்ளூர் சோஷலிஸ்டு கட்சியின் அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் முதல் சுற்று முக்கியம்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, இங்குள்ள அரசு பிரெஞ்சு குடியுரிமை பெறும் வெளிநாட்டினர் இனி பிரெஞ்சு மொழியில் டிப்ளமா பெற்றிருக்கவேண்டுமென்று குடியுரிமைக்கான சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்திருக்கிறது. அது அவர்கள் உரிமை. ஆனால் மனித உரிமையாளர்கள் எழுப்பும் கேள்வி இரண்டாம் உலக யுத்தத்தில் காலனிய நாடுகளிலிருந்து யுத்தத்திற்கு ஆள்பிடித்தீர்களே அப்போது அவர்கள் டிப்ளோமா வைத்திருக்கிறார்களா என்று பார்த்தீர்களா? அல்லது உள்ளூரில் படிப்பறிவற்ற பிரெஞ்சுகாரர்களின் குடியுரிமையை பறித்து நாடுகடத்துவீர்களா என்பதாகும். உண்மையில் பிரெஞ்சு ராணுவ ஜெனரல் தெகோல் பிரிட்டிஷாரின் தயவில், வானொலியில் ஜெர்மனுக்கு எதிராக யுத்தத்திற்கு அழைப்பு விடுத்தபோது காலனிநாடுகளிலிருந்து – புதுச்சேரி உட்பட-  சமூகம் மற்று பொருளாதாரக் காரணங்களால் நலிந்திருந்த காலனிய மக்கள் பிரெஞ்சு ராணுவத்தில் சேர்ந்தார்கள். அவர்களில் 99 சதவீதம் எழுத்தறிவற்றவர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை, மிச்சமுள்ள ஒரு சதவீதத்தினர் பள்ளி இறுதிவகுப்புவரை படித்திருக்கலாம். அவர்கள் சொல்தாக்கள் அல்ல சரியாகசொல்வதெனில் எஜமான விசுவாசத்துடன் இடம்பெயர்ந்த கூலிப்படை.
——————————————————

மொழிவது சுகம் -Oct.12

தலைவர்களும் மனிதர்களும்

இப்போதெல்லாம் இந்தியாவில் குறிப்பாக தமிழத்திற்கு வந்தால் தலைவர் என்ற சொல் சர்வசாதாரணமாக காதில் விழுகிறது. குடும்பத்தில், வீதியில், பேருந்தில், நண்பர்கள் வட்டத்தில், அரசியலில், அலுவலகத்தில், இருவர் சந்தித்தால், நான்குபேர் கூடிப்பேசினால், பத்துபேர் திரண்டால் இப்படி அன்றாட வாழ்க்கையில் யாரோ, எவரையோ, செயற்கையாக, அழைப்புக்குறிய மனிதரிடமிருந்து பெறும் பலன்களின் அடிப்படையில்- அஞ்சலகத்தில் பேனாவை இரவல் கேட்பதில் ஆரம்பித்து – ‘ஐயம் இட்டு  ஊழலை உண்ணும்’ பெருச்சாளிகளைப் போற்றும் சங்கேதப் பொருளாக உபயோகிப்பதுவரை என எங்கும் ‘தலைவரே!’ என்ற குரலைக் கேட்க முடிகிறது. அதில் உள்ள போலித்தன்மையையும் புரிந்துகொள்ளவேண்டும். அரசியல்வாதிகள் அறிவார்கள், பிறர் குறைவாகவே அறிவார்கள். ‘தலைவர்’ என்று அழைக்கிற ஒன்றிரண்டு முகங்களை நினைவுபடுத்தி பார்க்கிறேன், கண்கள் இரண்டொருமுறை படபடக்கின்றன, மூக்கோடு கூடிய மேல்தாள் உயர்ந்துகொள்ள, முப்பது பாகைமானி அளவில் வாய்பிளந்து நிற்பார்கள், சம்பந்தப்பட்ட நபரால் கிடைக்கும் பலனுக்கு எடை அதிகமென்றால் கைகள் இயல்பாகக் கும்பிடு போடும் இல்லையெனில் உடலோடு ஒட்டி கிடக்கும், நுணி பற்களைத் நாக்கு ஒருமுறை தொட்டு அடங்கும். ‘தலைவர்’ என்ற சொல்லுக்கான பொருளை இதுதானென்று அகராதிபடுத்திவிட முடியாது. இடம், பொருள், காலம் எல்லாம் சார்ந்தது; அதற்குமேலாக அழைக்கிற நபரும் அழைக்கப்படும் நபரும் அறிந்த உண்மையென்று ஒன்றுண்டு. தலைவர் என்று அழைக்கப்படும்போது மகிழ்ச்சியாகவே இருக்கிறது. எனினும் அச்சொல்லை நெஞ்சத்திலிருந்து மேலே கொண்டுவரும் எண்ணமிருக்கிரதில்லையா அதில் சூதுண்டு. அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் என நான்கும் தலைவரென்று அழைக்கிற சூதுடன் கலந்தவை. அவை அவற்றுக்கான தருணங்களுக்கென காத்துக்கிடக்கின்றன. தலைமை பீடத்திற்கான கவர்ச்சிக்கு வரலாறுகள் பதிவு செய்திருக்கிற ‘அதிகாரம்’ மட்டும் காரணமல்ல, ‘எத்தனைபேர்கள் என்னைக்கொண்டாடுகிறார்கள்’, என்பதற்கான விடையையும் அது பொறுத்தது.  அதிகாரத்தின் பாய்ச்சலைக்காட்டிலும், புகழின் வீச்சுக்குக் கிடைக்கும் நிலப்பரப்பு அதிகமென்று சம்பந்தப்பட்டவர்கள் அறிவார்கள். தலைமை எடுக்கும் புகழ்ரூபம் வயிற்றெரிச்சலுக்கு காரணமாகின்றன. வரலாற்றில் திருப்பங்களாக நாம் வாசிப்பதனைத்தும், பிறர் புகழ் கண்டு காழ்ப்புறுவதால் உண்டகிற குடற்புண்களே. ஒரு தலைவர் மற்றொருவரை தலைவராக கனவில் பொய்தோற்றமாகக்கூட  கற்பனை செய்வதில்லை. ‘பெரியார்’ ‘அண்ணா’ என உரிமையோடு அழைத்ததெல்லாம் சம்பந்தப்பட்ட மனிதர்களின் தலைமையை மறுப்பதற்கு உபயோகித்த தந்திர வார்த்தைகளென்று நினைக்கிறேன். எனக்கு மேலே இன்னொரு தலைவனா என்ற அசூயையின் வெளிப்பாடுகளே அவைகள். தலைவர்கள் வானத்திலிருந்து குதித்துவிடுவதில்லை, நம்மிலிருந்து வருபவர்கள். அன்று நம்மிலும் மேன்மக்கள் தலைமையேற்றார்கள், இன்று நம்மிலும் கீழ்மக்கள் தலைமை ஏற்கிறார்கள் என்பது அடிப்படையில் காணும் வேறுபாடு, விளைவு காவிரி பிரச்சினை தொடங்கி, காஷ்மீர் பிரச்சினைவரை அரசியல்வாதிகளின் கையாலாகதக்தன்மைக்கு நிறைய உதாரணங்கள் இருக்கின்றன,

மூத்திரம் பேய்ந்தாலும் முழுபக்க விளம்பரம்கொடுக்கும் நமது அரசியல் தலைவர்களுக்கு மத்தியில், விளம்பரமின்றி ஓசையின்றி இந்தியாவிற்காக  நம்பிக்கை தரும் வகையில் உழைக்கும் மனிதர்களும் இல்லாமலில்லை. இந்தியப்பொருளாதாரமென்பது ரிலையன்ஸ், டாட்டா, இன்போசிஸ், விப்ரோ போன்ற அமெரிக்க முதலாளித்துவ சிந்தனையை அடிப்படையாகக்கொண்டவர்களை மட்டும் கொண்டதல்ல என்பது சற்று ஆறுதலானசெய்தி. அண்மையில் அமெரிக்காவின் மேலாண்மை இதாழான Academy of Management perspectives வெளியிட்டிருந்த “The Indian way: Lessons for the U.S.” என்கிற கட்டுரைபற்றிய செய்தியொன்றை பிரெஞ்சு தினசரியில் படிக்க நேர்ந்தது. இந்திய நிறுவனங்களில் மேற்கொண்ட ஆய்வொன்று தெரிவிக்கும் தகவலின்படி இந்தியாவிலுள்ள சிற்சில நிறுவனங்களின் அதிபர்களுக்கு, முதலீட்டாளர்களிடம் பொதுவில் காண்கிற ‘உபரி-மதிப்பு'(இலாப வீதம்) மீதான மோகம் குறைவு என்று தெரிவவந்திருக்கிறது. முதலீடு என்கிறபோது இலாபமின்றி இயங்குவது எப்படி? வேண்டும் எனினும் அவர்களுடைய தலையாய கவனம் இந்தியாவின் சமூக நலன் பற்றியதாக இருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவுவது, ஏழ்மைக்கு எதிராக வினையாற்றுவது, இந்தியத் தகவல் மற்றும் போக்குவரத்தின் வளர்ச்சிக்கு உதவுவது என்று அப்படியல் உள்ளது. இவை வெறும் வார்த்தை அலங்காரங்களல்ல. அடுத்த தேர்தலை குறிவைத்துவைத்து மக்கள் வரிபணத்தில் கொடைவள்ளல்களாக காட்டிகொள்ளும்  அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகளல்ல. தங்கள் சொந்தமுதலீட்டில் கிடைக்கும் உபரி-மதிப்பில் கணிசமான பகுதியை தொழிலார்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் வழங்கி வருகிறார்கள். இதனால் தங்கள் தொழிலாளர்களுடன் நெருக்கமான உறவை பேணமுடிவதாகக் கூறுகிறார்கள். ‘எங்களுக்குத் தொழிலாளர் நலனே முதலாவது, வாடிக்கையாளர் நலன் இரண்டாவது’ என்கிறார் HCL Tecnologies அதிபர். இக்குரலை  கடந்தகால முதலாளித்துவத்தில் கேட்டிருக்க சாத்தியமில்லை. தவிர இந்நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் கல்விக்காகாவும், பயிற்சிக்காகவும் காட்டுகின்ற அக்கறையினால், அவர்களுடைய உழைக்கும் திறன் அமெரிக்க நிறுவனங்களோடு ஒப்பீடு செய்கிறபோது ஏறக்குறைய மூன்றுமடங்காக இருக்கிறதெனவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நிறுவனங்களின் வெற்றிக்கு தாங்கள் மட்டுமே காரணமல்ல என்பதை வெளிப்படையாகவே இந்திய முதலீட்டார்கள் ஒப்புகொள்கிறார்களென அமெரிக்க மேலாண்மை சஞ்சிகை புகழ்கிறது. அமெரிக்க அதிபர்கள் போலன்றி இவர்கள் கட்டமைப்பு, ஒருமுகப்படுத்துதல், ஒத்துழைப்பு என ஒவ்வொரு கட்டத்திலும் தொழிலாளர்களோடு இணைந்து செயல்படுகிறார்கள். இந்திய முதலாளிகளிடம் பாடம் கற்கவேண்டுமென அமெரிக்க முதலாளிகளுக்கு அறிவுறுத்துகிற  ஆங்கிலக் கட்டுரை இறுதியாக பங்கு உரிமையாளர்களை அலட்சியம் செய்து முதலீட்டை வளர்ப்பது எப்படி? என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது.

முதலாளித்துவ நோக்கில்  அமெரிக்க மேலாண்மை இதழியல் கட்டுரையை வெளியிட்டிருப்பினும், இதுபோன்ற நல்ல விடயங்களும் இந்தியாவில் நடக்கின்றன எனகோடிட்டுக்காட்டத்தான் எழுதவேண்டியதாயிற்று. எந்திரனுக்கு கொடிபிடித்து ஊர்வலம்போகிற மந்தைகளுக்கிடையே, தெருகூத்தும், பொம்மலாட்டமும், பாரம்பர்யகலைகளும் உயிர்ப்பெறவேண்டுமென தங்களை வதைத்துக்கொள்கிற மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

——————————–

The Prague Cemetery

பொதுவாக பிரெஞ்சில் உள்ளூர் படைப்புகளை தவிர்த்து அந்நிய மொழிகளிலிருந்தும் வருடம் தோறும் விற்பனையில் சாதனை படைக்கும் எழுத்துக்களும், உலகமறிந்த எழுத்தாளர்களின் படைப்புகளும், உலகில் நன்கறியப்பட்ட பதிப்பகங்களின் வெளியீடுகளும் உடனுக்குடன் கிடைக்கின்றன. மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீட்டில் பிரெஞ்சு இலக்கிய உலகம் மிகக் கூடுதலாகவே அக்கறைகொண்டு செயல்படுகிறதெனலாம். அண்மையில் பிரான்சுநாட்டில் விற்பனையில் சாதனைப்படைத்தவர் பலரும் அறிந்த இத்தாலி படைப்பாளியான உம்பெர்ட்டோ எக்கோ. அவருடைய Cimetière de Prague (The Prague Cemetery) என்ற மொழிபெயர்ப்பு வெளிவந்த நான்குநாட்களில் 15000 பிரதிகள் விற்று தீர்ந்ததாக பிரெஞ்சு தினசரிகள் எழுதுகின்றன.

Cimetière de Prague (The Prague Cemetery) நாவலுக்கும் அவரது முதல் நாவலான The name of the Rose க்கும் இடையில் 30 ஆண்டுகள். அதாவது இத்தாலி மொழியில் அவரது முதல் நாவல் வந்த ஆண்டை 1980 என்று கணக்கிட்டால். இடையில் சராசரியாக ஐந்தாண்டுகளுக்கு ஒன்றென அவரது நாவல்கள் வந்துள்ளன. பொதுவாக எக்கோவின் நாவலை வாசிப்பவர்களுக்கு ஒவ்வொரு நாவலுக்கும் அவர் தந்திருக்கும் உழைப்பினை விளங்கிக்கொள்ளமுடியும். எழுதுவது வரலாற்றின் அடிப்படையிலென்பதால் மிகக் கவனமாக சான்றுகளில் கவனம் செலுத்தியிருப்பார், எடுத்தாளும் பொருளிலும் அவருக்குள்ள ஞானம் நம்மை வியப்பில் ஆழ்த்தும். உண்மையையும் புனைவையும் மிகச்சரியான அளவில் கலந்து,  வாசகனை அடுத்ததடுத்து பக்கங்களை புரட்டவைக்கும் அவரது ஆற்றல் பிரம்மிப்புகுரியது. வழக்கம்போல உம்பெர்ட்டோ எக்கோவின் இந்நாவலும் சமயம்- அதன் தகிடுதத்தங்கள், மெய்யியல், புதிர் – மர்மமென பின்னப்பட்டு வாசகனை வெருட்டும் கலையில் தேர்ந்துள்ளது.

அகஸ்ட்டின் பருவலென்ற பிரெஞ்சு சேசுசபையைசேர்ந்த மதகுருவிற்கு ஆகஸ்டு மாதம் 1806ம் ஆண்டு, இத்தாலி படைதளபதி ஜான் பப்திஸ்த் சிமோனினி என்பவனிடமிருந்து ஒரு கடிதம் வருகிறது. அக்கடிதத்தில் அவன் அகஸ்ட்டினின் நூல் (Memoires illustrating the history of Jacobinism) தமக்களித்த உத்வேகத்தை பாராட்டி எழுதுகிறான். – இந்நூல் உலகமனைத்தும் யூதர்களின் அதிகாரத்தின் கீழ் வரவேண்டுமென்ற யூதர்களின் சதிபற்றி பேசுகிறது. உம்பர்ட்டோ எக்கோவின் The Prague Cemetery இந்த உண்மையின் அடிப்படையில் எழுதப்பட்ட புனைவு.  19ம் நூற்றாண்டின் ஐரோப்பிய சம்பவங்களையும் இடைக்கிடை ஆசிரியர் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். The Name of the Rose நாவலில் அபெட் வலே என்பவரால் கையளிக்கப்பட்ட நூலினை நினைவுகூர்வதாக கதை தொடங்கும்  அந்த நூல் டாம் அட்சன் என்பவருடைய கையெழுத்து பிரதியின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு. இந் நாவலும் 1897-98 ம் ஆண்டில் மேலே குறிப்பிட்ட சிமோனினியின் நாட்குறிப்புடன் தொடங்குகிறது. இந்த சிமோனினி ஒரு எதிர் தலைவன் மட்டுமல்ல  ஒரு alter-Egoவுங்கூட, தனக்குள் வேறொரு மனிதனையும் உணருகிறான். அவனை புரிந்துகொண்டால் நாவலும் உங்களுக்கு வசமாகும். அதற்கு முன்பாக கொஞ்சமாக ஐரோப்பிய வரலாறு, கொஞ்சம் கூடுதலாக  பிரெஞ்சு வரலாறு குறிப்பாக பத்தொன்பதாம் நூற்றாண்டு, Masonic conspiracy theories, அகஸ்டின், சிமோனினி இவர்க¨ளை பற்றி தெரிந்துகொண்டு வாசிப்பது நல்லது.
———————————-

பிரான்சை தெரிந்து கொள்ளுங்கள் -8

அழகு

ஒருவர் மற்றவரை கடந்து செல்கிறபோது, இருவரில் ஒருவர்  தமது பார்வை நேரத்தில் கூடுதலாக ஓரிரு விநாடிகள் செலவிட நேரிடுகிறது. எதிராளிடமிருந்து பெறுகிற இக் கூடுதல் நேரத்தில்தான் அதைத் சாதுர்யமாக தமக்குச்சாதகமாக பயன்படுத்திகொள்வதில்தான் வெற்றி தோல்விகளிருக்கின்றன. உடை, தோற்றம், பேச்சு, உபயோகிக்கும் சொற்கள், கால நேரம் என்று அவற்றின் பட்டியலில் இதுபோன்ற பலவும் உண்டு. இது தவிர வீடு, நண்பர்கள், படிக்கும் புத்தகங்களென உங்களை சுற்றியுள்ளவையும் உங்கள் அழகைத் தீர்மானிக்க உதவுகின்றன.  அழகென்பது நம்மைப் பார்க்கின்றவர்களின் பார்வையைப் பொருத்தது மட்டுமல்ல அப் பார்வைக்கு உகந்தவர்களாய் நம்மை மாற்றிக்கொள்வதிலும் உள்ளது.

அழகென்பது அவரவர் பார்வையிலிருக்கிறதென்பது பொதுவாக சொல்லும் வார்த்தை. எனினும் பார்வைக்கு விருந்தாக்கிக் கொள்ளும் பொறுப்பு அப்பொருளுக்குமுண்டு. பிரான்சு நாட்டில் அதற்கான முயற்சிகள் அதிகம்.  அழகை உங்கள் பார்வை தீர்மானிப்பது  உண்மைதானென்றாலும் அந்த உண்மையைத் தீர்மானிப்பது பார்வையாளர்கள் அல்ல பார்க்கப்படும் பொருளென்பதில் பிடிவாதமாக இருப்பவர்கள் பிரெஞ்சுக்காரர்கள். பிரெஞ்சு கிராமங்களையோ நகரங்களையோ பார்க்கசெல்கிறபோது தங்கள் சொந்த நகரம் அல்லது கிராமத்தைப் பற்றிய பிரம்மிப்பை பார்வையாளர்கள் மத்தியில் ஏற்படுத்திதரவேண்டுமென்பதில் அவர்களுக்குள்ள அக்கறையைக் குறைத்துமதிப்பிட முடியாது.

அவ்வகையில் பிரான்சு நாட்டில் இருவகை போட்டிகள் நடைபெறுகின்றன.

முதலாவது நகரங்கள் மற்றும் பெருநகரங்களுகிடையிலான போட்டி:

1959 ஆம் ஆண்டிலிருந்து ‘நகரெங்கும்  மலர்கள்’ என்ற போட்டியை வசந்தகாலங்களில் பெருநகரங்கள் மற்றும் சிறுநகரங்களுக்கிடையில்  நடத்தி விடுதிகளுக்கு நட்சத்திர தகுதியை வழங்குவதுபோல இவற்றுக்கு – அதாவது நகரங்களுக்கும் பெரு நகரங்களுக்கும் ஒரு பூ, இரண்டுபூக்கள் என நான்கு பூக்கள் வரை வழங்கி அவற்றின் அழகு தகுதியை நிர்ணயம் செய்கிறார்கள். அந்நகரங்களில் பச்சைபசேலென்றிருக்கிற நிலவெளிகளின்  எண்ணிக்கைக் கூடுதலாகதாகவும், இயற்கையை போற்றுவதில் அவர்களிடத்தில் இருக்கும் அக்கறையையும்  பொறுத்ததென்பது ஒரு பக்க மெனில் மேம்பாடான உயிர்வாழ்க்கைக்கு உத்தரவாதமளிக்கக்கூடிய காரணிகளில் கவனம்கொண்டு நாகராட்சியும் மாநகராட்சியும் உழைத்திருக்கவேண்டும், பிற பகுதிமக்கள் அந்நகரின் அழகுக்கென வருவது அதிகரித்திருக்க வேண்டும். அவ்வகையில் பிரான்சு நாட்டில் ஒவ்வொருவருடமும் பன்னிரண்டாயிரம் நகரங்கள், பெருநகரங்கள் அத்தகுதிக்காக வருடா வருடம் போட்டியிடுகின்றன. http://www.cnvvf.fr/le_palmares-5.html.

இரண்டாவது போட்டி கிராமங்களுக்கிடையிலான போட்டி.

பிரான்சு நாட்டில் அழகான கிராமங்களென வெளியிடப்படும் பட்டியலில் இடம்பெற வருடாவருடம் 32000 கிராமங்கள் பங்குபெறுகின்றன. பிரான்சில் கிராமங்கள் என்பது அதிகபட்சமாக இரண்டாயிரம் பேர் வசிக்கின்ற பகுதி. இப்போட்டியில் கலந்துகொள்ளும் கிராமங்களிலிருந்து எதிர்பார்க்கப்படுபவை: கிராமத்தை பூச்செடிகளை வளர்த்து அழகுபடுத்துவது மாத்திரமல்ல அப்பகுதிக்கேயுரிய கட்டிடக்கலையைப் போற்றுதல், கிராமத்தின் சுற்றுசூழல், பாரம்பர்ய கலைப்பெருமை, பாரம்பர்ய உணவு பொருட்கள் என்பது போன்ற குணங்கள்.
———————-

இரவு- அகத்திணை – எமிலிஜோலா

‘J’aime la nuit avec passion’  ‘இரவு’ சிறுகதையில் கி மாப்பசான் -வாக்கியம். இரவை ஆராதிக்க இத்தனை பொருத்தமாக சொற்கள் அமையாது. இரவுவேளைகளில் ஆணோ பெண்ணோ மற்றவருக்காக காத்திருக்கின்ற தவிப்பும் மெல்லியப் பதற்றமும் விநோதமான உடல்மொழி. மாப்பசான் போலவே ஆர்வத்துடன் இரவைவெகுவாக நேசித்திருக்கிறேன், காத்திருந்திருக்கிறேன். திருமண வீட்டிற்குப் போன இடத்தில் இரண்டுநாள் பழக்கத்தில் ஒரு பெண்ணிடம் வைத்த கெஞ்சுதலுக்கு, அவள் தலையாட்டலையும், சமிக்கைகளையும் புரிந்துகொண்டதற்கு இலட்சணமாய் எனது சகோதரி வீட்டு, மோட்டர் ஷெட்டினைத் திறந்துவைத்துக்கொண்டு விடிய விடியகாத்திருந்ததும், நீர் இறைக்க அதிகாலையில், எந்திரத்தை இயக்கவந்த ஆசாமி கதவை திறந்துக்கிடப்பதைப் பார்த்து, நீர் இறைக்கும் எந்திரத்தை திருட வந்தவனென்று தப்பாக எண்ணி சத்தம்போட அவனைத் தடுத்து சமாதனப்படுத்த வேண்டியிருந்தது. பெண்ணிடம் என்ன நடந்ததென காலையில் விசாரித்தால், ‘உங்களை வெகு நேரம் தேடிபார்த்துட்டு நீங்கள் இல்லைண்ணு தெரிஞ்சதும் கொண்டுபோயிட்டேன், என்றாள். என்ன சொல்கிறாளென யோசித்துக்கொண்டிருக்க, உள்ளே சென்றவள் திரும்பவும் வந்தாள், பத்திரப்படுத்தி வைத்திருந்ததாகக்கூறி ‘ஒரு லட்டையும் இரண்டு மைசூர்பாகையும்’ கொண்டுவந்தாள். இனிப்பைக்கொடுத்து என்னை ஏளனம் செய்த இரவை இன்னமும் மறக்கவில்லை. மிக பொல்லாத இரவு அது.

இதே அனுபவம் முத்தொள்ளாயிர அப்பாவிக்கும் நேர்ந்திருக்கிறது இரவில் வருவதாகச் சொல்லியிருக்கிறான் தலைவன். அவ்வாறே பாவிப்பயல் வந்துமிருக்கிறான். வீட்டு நாய் குரைத்ததோ, அடைகாத்த கோழி இறக்கைகட்டி பறந்ததோ, ஏதோ நடந்தது. தலைவியும், தலைவி என்றொருத்தி உண்டென்றால் தோழியும் வேண்டுமில்லையா அவளுமாக அவன் வருகையை உணர மறந்திருக்கிறார்கள். மறுநாள் வந்த தலைவன் காத்திருந்து ஏமாற்றம் அடைந்ததைக்கூறி வருந்தியிருக்கிறான். தோழியும், “இங்கே பாரு எங்க தரப்பிலும் அதுதான் நடந்தது. ஊரே உறங்கியிருந்தது, உனக்காக இரவெல்லாம் காத்திருந்தோம். எங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் ஏழில் குன்றத்தின் மேல் உள்ள நொச்சியின் அழகு மிகுந்த மெல்லிய கிளைகள் உதிர்க்கும் பூக்கள் விழும் ஓசையையும் நன்றாகக் கேட்டு உறங்காமலிருந்தோமே, நீதான் வரவில்லை வீணாக எங்கள்மேலே பழிசொல்லாதே”, என்றாளாம். “கொன் ஊர்துஞ்சினும் யாம் துஞ் சலமே” என ஆரம்பிக்கிறது அக்குறுந்தொகை பாடல். பகற்பொழுதுகளில் வாய்கிழிய சாதிபேசும் நாட்டாமைகள், பின்னிரவில் சாதிமறந்த உடலின் எதார்த்தம் சார்ந்த தேவைக்கு  பனியில் நனைவார்கள், அவை சாதி இரண்டொழிய வேறில்லையென சாதிக்கும் இரவுகள்.

பேய் பிசாசுகளுக்கிடையிலும் இளைஞர்களுக்கென்றால் மோகினிப் பிசாசுவை இரவு சிபாரிசு செய்கிறது, ஆக இரவு துர்த்தேவதைகளுக்கானதல்ல என்பது வாலிபம் தந்த அனுபவம். இளமைகாலத்து  கிராமத்து இரவு ஒரு தேனடைபோல மனதிற் ஒட்டிக்கிடக்கிறது. திருமணக் காலங்களில் மணப்பெண் ஊர்வலமாகட்டும்,  திருவிழாக்காலங்களில் சுவாமி வீதி உலாவரும் நேரமாகட்டும், இருள் வெருட்டும் ஆகாச வாணமும்; முன்னூரும் தீப்பந்தமும், பெட்ரோமாக்ஸ் ஒளி வில்லைகளும்; உறக்கத்தை கலைக்கும் தவிலின் டமடமாவும் நாதசுவரத்தின் மல்லாரியும் பகலுக்கு வாய்க்காத ஒன்று. தீபாரதனைக்காக சுவாமி நிற்கிறபோது தீப்பந்த ஒளியில் கன்னமும் கண்களும் மினுங்க தெருவாசலில் இரவு பூத்ததுபோல நிற்கிற பெண்கள் தேவதைகள்! நாதஸ்வரம் வாசிக்கும் உள்ளூர் இளைஞன் எங்கள் விருப்பத்தை ‘ஆயிரம் கண்போதாது வண்ணக்கிளியே’ என பூர்த்திசெய்வான். இளமை வேகத்தில் எழுதிப் பகிர்ந்துகொண்ட வரிகள் இன்றும் நினைவில் அசைபோடுகின்றன. ஒவ்வொரு நிமிடமும் யுகமாய் கழியும்/ உறக்கம் பதுக்கி, உறவில் பதுங்கி இரவை விலக்கி எழுந்து வருவாய்/ ஒவ்வோர் அடியிலும் உனக்குள் அச்சம்/ காரணம் அறிவேன்/ நீ கால்களைப் பதிப்பது என் கண்களில் அல்லவா?… ஓ! எத்தனை ரம்மியமான இரவுகள் அவை!

எமிலி ஜோலாவின் ‘காதல் இரவொன்றிர்க்காக'(Pour une nuit d’amour)  என்ற நெடுங்கதை இரவின் மௌனத்தையும், தாபத்தையும், ஏமாற்றத்தையும், இருட்டோடுகூடிய காதல் வெக்கையுடன் விவரிக்கிறது.

P**** என்றொரு சிற்றூர், ஊருக்குள் நுழைய ஷான்கிளேர் என்ற சிற்றோடைமீது அமைந்த பாலத்தைக் கடந்துசெல்லவேண்டும். உள்ளூர் முதிய ஆசாமிகளுக்குப் பாலமே கதைபேசுமிடம். பாலத்தைத் தாண்டினால் ‘போ-சொலெய்’ வீதி. வீதியின் முடிவில், மிகப்பெரிய சதுக்கம். உறக்கத்திலிருப்பதுபோல குடியிருப்புகள். தோட்டக்கலைஞர் ஒருவருக்குச் சொந்தமான வீட்டின் மாடியில், மிகப்பெரிய அறையில் நமது கதைநாயகன் ஜூலியன் வாடகைக்குக் குடியிருக்கிறான் அல்லது  அடைந்துகிடக்கிறான். வயது 25. பெற்றோரை இளம்வயதிலேயே பறிகொடுத்திருந்த ஜூலியனுக்கு அஞ்சல் அலுவலகத்தில் ஊழியம்.  ஊதியம் சுமார் என்கிறபோதும், சிக்கன பேர்வழி. எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கைகளுமில்லை கனவுகளுமில்லை. நெடு நெடுவென்று நல்ல உயரம், எலும்புகள் துருத்திக்கொண்டு பார்க்க முரடன்போல தெரிவான் ஆனால் ரொம்ப ரொம்ப சாது. கதாநாயக இலட்சனங்களின்றி இருப்பது அவனுக்குப் பெருங்குறை. பெண்கள் தன்னைச் சீந்தமாட்டார்களென்று நம்பியதால் அவர்களைக் கண்டு ஓடி ஒளிவான். அவனது தினசரி அலுவல்கள் கடந்த ஐந்து வருடங்களாக மாற்றமின்றி, சீராக  நடந்துவந்தன. காலையில் அலுவலகம், முதல் நாள் முடிக்காதவேலையை மறுநாள் தொடரவேண்டும், பிறகு மதிய உணவென்று ஒரு துண்டு ரொட்டி, மீண்டும் அலுவலகம், மாலை வீடு, இரவு உணவு, பிறகு தூக்கம். என்றைக்காகவது கொஞ்சம் மகிழ்ச்சியை விரும்பினால் இரவு உணவுக்குப் பிறகு காலாரப் ‘போ-சொலெய்’ வீதியில் நடப்பான், பாலம் வரை செல்வான், கட்டை சுவரில் உட்காருவான். நீருக்கு மேலே கால்களை தொங்கவிட்டபடி ஓடும் நீரின் ஆழகை ரசிப்பான். ஒர் ஊமையன் சினேகிதமுமுண்டு. விடுமுறை நாட்களில் இருவரும் கைகோர்த்துகொண்டு உரையாடலின்றி நடந்து அலுத்து திரும்புவதுண்டு. பிரியமாக வளர்த்த நாய் வாகனத்தில் அடிபட்டு இறந்தது வெகுவாக அவனைப் பாதித்திருந்தது, அதுமுதல் வீட்டில் நாய் அல்லது பூனையை வளர்க்கும் ஆசைகளில்லை. ஜூலியனுக்கு அவனது அறையே சொர்க்கம். இவ்வுலகத்தில் அவனை ஆதரித்து அடைக்கலம்கொடுக்கிற ஒரே ஒரு போக்கிடம் அறையென்பதால் அதனை மிகவும் நேசித்தான். வாசிப்பதில் ஆர்வமில்லை, புத்தகங்களுக்கு நடமுறைவாழ்வைப்பற்றிய ஞானம் குறைவென்று நினைத்தான். எழுத்திலும் ஆர்வமில்லைஅலுவலகத்தில் எழுதுவதே போதுமானதாக இருந்தது. இப்படிப்பட்டவனுக்கு புல்லாங்குழல் வாசிப்பதில் மட்டும் மிகுந்த ஆர்வம். ஒருமுறை பழம்பொருட்கள் விற்கிற கடையில் புல்லாங்குழலொன்றைக் கண்டான், கையில் பணமிருந்தும் கடைக்குள் நுழையவோ, பேரம் பேசவோ வெட்கம். ஒரு நாள் துணிச்சலுடன் கடையில் நுழைந்து எவர்கண்ணிலும் படாமல் எப்படியோ அறைக்கும் புல்லாங்குழலைக் கொண்டுவந்தாயிற்று. அறைக்குள் நுழைந்ததும், கதவு சன்னல்களென்று அனைத்தையும் இறுக மூடினான், இருந்தும் வாசிப்பைக்கேட்டுப் பிறர் கேலி செய்யக்கூடுமென அஞ்சி முடிந்த அளவுக்கு அடக்கி வாசித்தான். மெல்ல மெல்ல பழகிக் கொண்டான். எல்லாமே எளிமையான, பழமையான இசைக்குறிப்புகள். நூலகமொன்றில் கிடைத்த இசை நூல்களும் அவனுக்கு உதவின. ஓரளவு வாசிக்கவந்ததும் சன்னற் கதவுகளை திறந்துவைத்து இசைத்தான். அப்போதுகூட ஊரெல்லாம் அடங்கியபிறகு, இரவில், வீட்டில் விளக்கைக்கூட அணைத்துவிட்டு இசைப்பது அவன் வழக்கம். சன்னல் அருகே வானத்தை பார்த்தவண்ணம் அமர்ந்துகொண்டு பொதுவாக வாசிப்பான். வீதியில் நடந்துபோகிறவர்கள் தலையை உயர்த்திமேலே பார்ப்பார்கள், அலைஅலையாய், இவ்வளவு இனிமையாய் இசை எங்கிருந்து மிதந்து வருகிறதென யோசிப்பார்கள், பிறகு குழப்பத்துடன் நடப்பார்கள். அண்டை அயலார்கள், இவனது வாசிப்பை தொல்லையாக நினைப்பார்களோ என்ற அச்சமும் இவனுக்குண்டு. அண்டை மனிதர்களில் ஒருவர் பத்திரம் எழுதுபவர், மற்றொருவர் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி. இருவருமே ஒன்பது மணிக்கெல்லாம், உறங்கப்போய்விடுவார்களென்பதால், அவர்களிடத்தில் இவனுக்கு பயமில்லை. மாறாக, நேரெதிரே இருந்த பங்களா வீட்டுக்காரர்களை நினைத்தால்தான் அச்சம். மர்சான் என்றபெயர்கொண்ட பிரபுக்கள் வம்சத்தைச் சேர்ந்த குடும்பமது. பங்களாவின் மாடியில் பத்து சன்னல்களிருந்தன, பத்து சன்னல்களும் திறப்பதும் மூடுவதும் ஒரே நேரத்தில் நடக்கும். சன்னல்களின் பின்னே யார் இருக்கிறார்கள், என்ன நடக்கிறது? ஒன்றையும் அறியாதபடி தடித்த சன்னல் திரைகள். பங்களா குடும்பத்தினரைப் பற்றியும், அங்கு வந்துபோகும் விருந்தினர்களைப் பற்றியும், அவர்கள் செல்வநிலை குறித்தும் ஊர்முழுக்க வதந்திகள் உலாவின. பங்களாவுக்குள் நுழைந்து அதன் மர்மங்களை விளங்கிக்கொள்ளும் ஆவல் இவனுக்கும் நிறைய இருந்தது. இவனுடைய குடியிருப்பு திசைக்காயிருந்த பெரிய நுழைவாயில் எந்நேரமும் மூடியபடியே இருந்தது. ஓர் ஆத்மாகூட அவ்வழியை உபயோகித்து இவன் பார்த்ததில்லை. மற்றொரு சந்தொன்றில் இன்னொரு வழியிருந்தது, அநேகமாக அதுதான் உபயோகத்திலிருக்கவேண்டும். மாளிகையைபார்க்க ஏதோ கவனிப்பாரற்ற கல்லரைபோல அவனுக்குத் தோற்றம்தந்தது. அநேகதடவை, உறங்கச்செல்வதற்கு முன்னால் மெழுகுத்திரியை அணைத்துவிட்டு சன்னலருகில் நின்று எதிரிலிருக்கும் மாளிகையில் ஏதேனும் நடமாட்டம் தெரிகிறதாவென பார்ப்பான், மாளிகையை அவதானித்தபடி குழலூதவும் செய்வான்.

ஒரு ஞாயிற்றுகிழமை தேவாலயத்தின் எதிரே, அஞ்சலக சக ஊழியனொருவன் ஜூலியனுக்கு முதிய தம்பதிகளிருவரை அறிமுகப்படுத்தி இவன் வீட்டெதிரே குடியிருக்கிற மாளிகைவாசிகள், என்றான். அவர்கள் இருவருக்கும் மகளொருத்தி இருப்பதாகவும், விடுதியொன்றில் தங்கி படிப்பதாகவும், பெயர் தெரெஸா மர்சென் என்றும், பத்திர எழுத்தாளரிடம் உதவியாளராக இருக்கிற குள்ளன் கொலொம்பெல் அவளுக்கு வளர்ப்புச்சகோதரனென்றும் அடுத்தடுத்து ஜூலியனுக்குக் கிடைத்தக் கூடுதல் தகவல்கள். குள்ளன் கொலொம்பெலுக்கும் ஜூலியனுக்கும் ஆகாது. ஜூலியனை கொலம்பெல் ஒருமுறை கேலி செய்யப்போக இருவரும் கட்டிபுரண்டிருக்கிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை மாதத்தில் அது நிகழ்ந்தது. அன்றிரவு மிகவும் வெக்கையாக இருந்தது, நட்சத்திரங்கள் நிறைந்திருந்த வானம். வழக்கம்போல விளக்கை அணைத்துவிட்டு, இருட்டில் சன்னலருகே அமர்ந்தபடி புல்லாங்குழல் வாசித்தான், கண்ணிமைக்கும் நேரத்தில் அது நடந்தது. எதிரிலிருந்த மாளிகையின் சன்னலொன்று திறக்க இருட்டுக்கிடையில் குபீரென்று ஒளிவெள்ளம், இமைக்க மறந்தவனாய் ஜூலியன் பார்த்துக்கொண்டிருந்தான். இளம்பெண்ணொருத்தி நடந்துவந்தாள். கைகளை ஊன்றிக்கொண்டு பார்த்தாள். அவள் முகத்தை தனித்து அடையாளப்படுத்த இயலவில்லை, தலைமயிர் கற்றையாய் சரிந்து கழுத்தில் இறங்கி பிரிந்திருந்தது. அவள் கேட்பது இவன் காதில் விழுந்தது, ‘ஏதோ இசையென்று நினைக்கிறேன், உனக்குக் கேட்கிறதா? தனது வளர்ப்புத் தாயிடம் கேட்கிறாள். ‘அநேகமாக குயிலாக இருக்கும்!’ வளர்ப்புத்தாய் பிரான்சுவாவின் பதில். பங்களாவைச்சுற்றி அடர்த்தியாக மரங்களிருந்ததால் அப்படிச் சொல்லியிருக்கவேண்டும். வளர்ப்புத்தாய் இளம்பெண்ணிடம், “இராக்கால விலங்குகளிடத்தில் கவனமாக இருக்கவேண்டும்”, எனவும் எச்சரிக்கிறாள். தொடர்ந்து திறந்த சன்னல் மூடப்படுகிறது. அருகிலிருந்த மரங்களில் குயிலிருக்கவேண்டுமென நம்பும் பெண்ணின் மனது இவனுக்குள் சந்தோஷத்தை விதைக்கிறது.

மறுநாள் அஞ்சல் அலுவலகத்தில் மர்சான் குடுபத்தில் இளம்பெண் தெரெஸா விடுதியிலிருந்து திரும்பியிருந்ததைப் பற்றிய பேச்சு. ஜூலியன் சன்னல் வழியாக அவள் கூந்தலையும், கழுத்தையும் காண நேர்ந்ததை வாய் திறக்கவில்லை. அத்தரிசனம் அவனை பாதித்திருந்தது, அவளைத் திரும்பவும் பார்க்கநினைத்தான். அவன் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. இப்போது அவனது அறை கூட அந்நியமாகத் தோன்றியது. அவனுக்குப் பொதுவாகவே பெண்களென்றால் வெறுப்பு, ஆண்களைக் காட்டிலும் பெண்களிடத்திலேதான் அவனைக்கண்டதும் கேலியும் கிண்டலும் அதிகரிக்கிறது. வெகு நேர யோசனைக்குப்பிறகு எதிர்வீட்டுப்பெண்ணை அவன் வெறுப்பதாகப்பட்டது. ஒவ்வொரு நாளும் அறைவாழ்க்கை பதுங்கு வாழ்க்கைபோல கழிந்தது, இதற்கிடையில் சன்னல் திறக்காதாவென ஏங்கவும் ஆரம்பித்தான். இரவு பத்துமணி அளவில் எப்போதாவாது சன்னற் கதவுக்கூடாக அறையில் ஆள் நடமாட்டம் இருப்பதன் அறிகுறியாக வெளிச்சம் தெரியும், பின்னற் சட்டென்று அதுவும் அணைந்துவிடும். தனது அறையிலிருந்துகொண்டே கரிய இருளின் ஊடே சன்னலை அவதானிப்பான். ஒவ்வொரு நாளும் தவறாமல் வேவு பார்த்தான். சன்னல், வெளிச்சம், காலடிகள், இளம்பெண்ணின் முகமென சதா கனவுகளில் மிதந்தான். ஒரு நாள் காலை சன்னலை திறந்தபொழுது எதிர்வீட்டு பெண் நிற்கிறாள், வெகு நேரம் சிலைபோல நிற்கிறாள், யோசிப்பதுபோல தெரிந்தது, முகம் வெளுத்திருந்தது, கண்களில் ஒளியில்லை, உதடுகள் நன்கு சிவந்து, வீங்கியிருப்பதுபோல பட்டது. ஏதோ துயரத்தில் இருக்கிறாள். அவளுடைய கவலையை இவனுடையதாக கற்பனை செய்துகொண்டு வருந்தினான்.

பிரச்சினை என்னவெனில், இதுவரை எதிர்வீட்டு பெண் இவனைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. இவனை ஒருபொருட்டாகவே அவள் கருதவில்லை. அப்படித்தான் இருக்கவேண்டும், அவனை பார்த்தவுடன் பலரும் என்ன நினைப்பார்களென அவனுக்குத் தெரியாதா என்ன? எனினும் இவனுக்கு அவள் மீது தீரா காதல் இருந்தது. அவள் வேண்டும், இவனது சரீரம் அதற்கு உதவாது. இசை, இசை மட்டுமே அதைசெய்ய முடியும். எனவே நிலவில்லா இரவுகளை தேர்வுசெய்து நீண்ட நேரம் வழக்கம்போல மெழுகுத் திரியைக்கூட அணைத்துவிட்டு இருளில் திளைத்தபடி அவளுக்காக குழலிசைத்தான். ஒருநாள் இரவு மீண்டும் வெண்ணிற உடையில் சன்னல் அருகே தேவதைபோல வந்து நிற்கிறாள். இசையைகேட்டே வந்திருக்கவேண்டும், புரிந்ததும் வாசிப்பதை நிறுத்திவிட்டு, இருட்டுபோதாதென்று சன்னல் திரையில்  தன்னை முற்றாக மறைத்துக்கொண்டான்.

“பிரான்சுவாஸ்! நீ நினைப்பதுபோல எந்தப் பறவையின் குரலுமல்ல!”

“உண்மைதான் வெளியே யாரோ இசைக்கலைஞன் வாசிக்க வேண்டுமென நினைக்கிறேன்”

“சன்னற் கதவைத் சாத்து, மழைவரும்போலவிருக்கிறது

எதிர்வீட்டில் பேசுவது, இவனுக்கு நன்றாகக் கேட்கிறது. அன்றிலிருந்து மிகவும் அக்கறையெடுத்துக்கொண்டு வாசிக்கலானான். ஒவ்வொரு இரவும் இவனது அறையின் சன்னற்கதவுகளை விரிய திறந்துவைத்து இருளில் பதுங்கியபடி குழலை சளைக்காமல் ஊதினான். ஒருநாள் காலை ஆறுமணி. தனது புல்லாங்குழலை உறைக்குள் போட்டுக்கொண்டிருக்கிறான் எதிர்வீட்டு சன்னல் திடீரென்று திறக்கிறது. காலையில் இதுநாள்வரை எட்டு மணிக்கு முன்னால் எதிர்வீட்டு சன்னல் திறக்கப் பார்த்ததில்லை. ஜூலியனுக்கு அதிசயமாக இருந்தது. தெரெஸா குளித்துமுடித்த ஆடையில் இருந்தாள், வழக்கம்போல கூந்தல் கழுத்தை சுற்றிக்கொண்டிருந்து. ஜூலியன் கற்சிலையாக சமைந்து போனான். கைவசமிருந்த புல்லாங்குழலை அவள் பார்த்துவிடக்கூடாதென நினைத்து மறைக்க எடுத்துக்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. அவளுடையை பார்வையும் இவன்மீது ஒருமுகபடுத்தப்பட்டிருந்தது, ஒன்றிரண்டு நொடிகளில் முடிவுக்குவந்ததுபோல முதுகைத் திருப்பிக்கொண்டு போய்விட்டாள். இவனுக்குப் பெருத்த ஏமாற்றம், தமது தோற்றம் அவளுக்குக் கசந்திருக்கவேண்டுமென நினைத்தான். கால்கள் சோர்ந்துபோயின. நிலை தடுமாறி சோபாவில் விழுந்தான். தலையைப் பிடித்துக் கொண்டு கலங்கினான். காதல் முடிந்ததென்று நினைத்தான். அதற்குப் பிறகு பலமுறை சன்னலருகில் கையூன்றிகொண்டு அவள் நின்றபோதெல்லாம் இவனை வேண்டுமென்றே அலட்சியபடுத்துவதுபோலிருந்தது. ஒரு நாள் ” என்ன வாசிக்கிறான், தப்பு தப்பாய் கேட்கக் கொடுமையாக இருக்கிறது” என அவள் கூறுவது காதில் விழுந்தது. இனி புல்லாங்குழலைத் தொடுவதில்லையென ஜூலியன் தீர்மானித்தான்

ஒரு வருடம் கழிந்திருந்தது. தெரெஸாவுக்காகவே தனதுயிர் தரித்திருக்கிறதென்பதாக ஜூலியன் நினைத்தான். அவனுடைய இதயம் குளிரில் உறைந்துகிடந்த மாளிகையைச் சுற்றிவந்தது. திறந்திருக்கும் சன்னலை தரிசிக்க நேர்வதே அவனுடைய உயிருக்கு ஆதாரமாக இருந்தது. காலையில் சன்னற்கதவும் திறக்கப்படும்போதும், முன்னிரவில் சாத்தும்போதும் அவளைச் சந்திப்பது அவனது தினசரிகளின் முக்கிய தருணங்கள். இருமுறை பெண்ணின் திசைக்காய் முத்தங்களை காற்றில் அனுப்பிவைக்கவும் துணிந்தான். அவள் பார்வையை அகற்றவில்லை, சன்னலைவிட்டு அகலவுமில்லை. அன்றிலிருந்து தொடர்ந்து அந்திசாய்ந்ததும்  சன்னலைத் திறப்பதும், பின்னர் மூடுவதுமாக கழிந்தது. பிறகு வெகுநாட்கள் சன்னற்கதவுகள் திறக்கப்படவில்லை. கார்காலத்தில் ஒருநாள் எதிர் வீட்டு சன்னல் திடீரென்று திறக்க இவனுக்கு உயிர் வந்தது. கண்ணீர்விட்டான். அன்று காலை நல்ல மழை பெய்திருந்தது, பங்களாவுக்கு அருகிருலிருந்த செஸ்ட்நட் மரங்கள் இலைகளை உதிர்த்திருந்ததில் ஒருவித பிணவாடை எங்கு வீசியது. எப்படியும் எதிரிலிருக்கும் மாளிகையின் சன்னற் கதவுகள் திறக்குமென ஜூலியன் காத்திருந்தான். கதவுகள் திறந்துகொண்டன. தெரெஸா நிற்கிறாள், கண்கள் வழக்கத்தைக்காட்டிலும் பெரிதாக தெரிந்தன, தலைமயிர் கட்டவிழ்ந்து கழுத்தில் கிடந்தது. சன்னலை ஒட்டி நேராக நின்றாள். அவளுடையை பத்துவிரல்களையும் வாய்மீதுவைத்து ஜூலியன் திசைக்கு முத்தத்தை அனுப்பினாள். இவன் மயக்கமடையாதகுறை, இவன் தனது மார்பினை வலதுகையைக் குவித்துத் தொட்டுக்காட்டி, முத்தம் எனக்கா என்றுகேட்டான். இம்முறை சன்னல் விளிம்பில் மடிந்து சாய்ந்தவள் மீண்டும் பத்துவிரல்களையும் உதட்டில் தொட்டு உறுதிபடுத்துகிறாள். அவளனுப்பிய செய்தி அவனை எட்டிவிட்டதென்பதன் அடுத்தகட்டமாக, வாயேன் என்றாள். இவன் இறங்கிச் சென்றான். நெடுநாளாக திறக்கப்படாதப் பங்களாவின் கதவு இவனுக்காக ரகசியமாக திறக்கிறது. அவளைத் தொடர்ந்து மாடியில் தினமும் அவளை காண நேர்கிற அறைக்கு இருவருவருமாக வந்தார்கள். இவனெதிரே இதுநாள் வரை எவளுக்காக ஏங்கினானோ அவள் .

– என்னை காதலிக்கிறாய் இல்லையா?

– ம்ம்.. இவனுக்கு நா குழறுகிறது

– இப்போ என்னை உனக்கு கொடுத்தால், எனக்காக எதுவும் செய்வாயில்லையா? இவனிடத்தில் பதிலில்லை. ஆனால் அவள் தரப்பிலிருந்து ஒரே ஒரு முத்தமென்றாலும், தன்னையே இழக்க தாயாரென்ற நிலையில் அவன்.

– நல்லது எனக்காக ஒன்று செய்யவேண்டும்

இம்முறையும் அவன் பதிலின்றி இருந்தது அவளை எரிச்சலடைய செய்திருக்கவேண்டும்.

– இப்படி நின்றால் என்ன அர்த்தம். நீ எனக்காக எதையும் செய்வேனெனறு சத்தியம் பண்ணு -அவள்

– சத்தியம், சத்தியம். நீ எதை சொன்னாலும் செய்வேன்

அவள் கிடு கிடுவென்று நடந்தாள். அவள் அறையில் மெத்தையும், தலையணைகளும் சிதறிக்கிடந்தன, கட்டில் துணிகளோடு கலந்து ஒர் ஆணின் பிணம்.

” இவன் என்னுடைய காதலன், இரண்டுபேருக்குமிடையில் நடந்த விளையாட்டுச்சண்டையின் முடிவில், அவன் இறந்துட்டான். பிணத்தை நீதான் இங்கிருந்து அகற்றியாகணும். ” என்கிறாள்

இதற்குமேல் கதை அவ்வளவு முக்கியமல்ல, இருந்தாலும் இறந்திருந்த காதலன் அவளுடைய வளர்ப்பு சகோதரன் கொம்பெல் என்ற செய்தியும், இருவரும் பால்யவயதிலிருந்தே நண்பர்கள் என்பதும், இளம்பெண் தெரெஸா மனப்பிறழ்வு கொண்டவளென்பதும் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய செய்திகள். நம்முடைய ஜூலியன் என்ன ஆனானென தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருக்கிறதா? தனது காதலுக்காக  பிணத்தை சுமந்துகொண்டு ஓடையில் எறிவதற்குச் சென்றவன், பிணத்தை எறிகிறபோது இவனைச் சுற்றியிருந்த கைகளை பிரிக்க இயலாமல் உடன் விழுந்து சாகிறான். இளம்பெண் மூன்றுமாதத்திற்குப் பிறகு பிரபு ஒருவனை மணந்துகொள்கிறாள். மணக்கோலத்தில் அவளைப்பார்க்க தேவதைபோல இருந்தாளாம். ஆபத்தான இரவு தேவதை.

மனித குலம் தோன்றிய காலம் தொட்டே வாழ்வின் முழு பரிமாணத்தையும் எட்டிவிடுவதென்ற நோக்கத்தைக் பெற்றிருந்திருக்க வேண்டும். நமது புலன்களும் அறிவும் அதற்கான உபகரணங்கள். உணர்வில் வளர்ச்சி, அல்லது மோன நிலையை எட்ட மனம் நிறைவடைய வேண்டும். இரவு அவரவர் புலன்களின் தேடலுக்கொப்ப வழிநடத்துகிறது. பகல் அறிவை வளர்த்துக்கொண்டுபோக உதவலாம் அதனை நெறிபடுத்த உணர்வும் இரவும் தேவை:

சினம் இறக்கக் கற்றாலும்  சித்தியெல்லாம் பெற்றாலும்
மனம் இறக்க கல்லார்க்கு வாயேன் பராபரமே (தாயுமானவர்-பராபரக்கண்ணி)

பகற்பொழுது, காலத்துக்கு இணையாக ஓடிக் களைத்துபோகும் பொழுது. மூர்க்கத்துடன் நாளை முட்டித் தள்ள வேண்டியிருக்கிறது. புறவாழ்க்கையான பகல் இறைச்சலும் கூச்சலும், ஓட்டமும் நடையும், வெப்பமும் வேர்வையுமாக கழிகின்ற பொழுது. அந்திச் சாய்ந்ததும் அமைதியும் தொடர்ந்து வருகிறது, இரவென்ற பெயரில். இரவென்பது அகவாழ்வு. “ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம், அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவருக்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறு இருந்தது எனக் கூறப்படாததாய், யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்த இன்பம் உறுவதோர் பொருள் ஆகலின், அதனை அகம் என்றார்..இன்பமேயன்றித் துன்பமும் அகத்தே நிகழுமாவெனின், அதுவும் காமம் கண்ணிற்றேல் (கருதினால்) இன்பத்துள் அடங்கும்.” என்பது அகத்திணைக்கான விளக்கம். உறவு தரும் இன்பம் மாத்திரமல்ல, பிரிவும் தரும் துன்பமும் இரவுக்காலங்களில் பெரிதுதான். தலைவனைப் பிரிந்துவாழும் தலைவிக்கு,  இரவில் தலைவனின் நினைவு அதிகமென்று கூறாத இலக்கியங்கள் உலகில் எங்குமில்லை. அத் துன்பம் நெடியது. குறும்பொழுதுக்குரியதல்ல. தலைவனில்லாத தனிமையின் இரவு நத்தைபோல ஊர்வதை – அவள் உணர்கிற அத்துன்பத்தை வெளிப்படுத்தும்பொழுது, ‘நெடிய கழியும் இரா’ என்று இரவின் மேல் பழி சுமத்துகிறாள்.

கொடியார் கொடிமையின் தாம் கொடிய இந்நாள்
நெடிய கழியும் இரா (குறள்)

மேற்கத்திய நாடுகளில் ஆரம்பித்து, கீழைநாடுகளிலும் பரவியுள்ள ‘The night concept’ (கள்ளும் காமமும் பொய்யுமான) வியாதியை புரிந்துகொள்ள முடிகிறது. நெடிய இரவின் தனிமையில் வருந்தக்கூடிய நேற்றைய தலைவனோ தலைவியோ இன்றில்லை என்பதற்கான சாட்சியங்கள் அவை. இரவோடு இணைந்த சொற்களை வரிசைப்படுத்தினால்: பெண்ணில் ஆரம்பித்து நிலா, குளிர்ச்சி, கனவு, களவு, பதற்றம், அச்சம், புணர்ச்சி… சூன்யம் வரை இரவு சிமிழுக்குள் எதுவும் அடங்கும். உயிர்த்தெழும். பிரபஞ்சத்தின் மூச்சே இரவு. உலகம் இருமைப் பண்புகளாலானது. பகலென்று எழுத இரவு வேண்டும், ‘உண்டென்று’ சொல்வதற்கு ‘இல்லை’ வேண்டுமென்பதுபோல. இரவற்ற பகலை, உயிர் வாழ்க்கையை எண்ணிப்பார்க்கவே இயலாது. இந்தியாவின் மக்கள்பெருக்கத்தினை குறைப்பதற்குச் சாத்தியமற்ற யோசனையொன்றை வைத்திருந்தேன். ஆறுமாதம் பகல் ஆறுமாதம் இரவு என்பதுபோல ஓர் ஐம்பது ஆண்டுகள் இந்தியாவை இரவிலிருந்து விடுவித்தால் மக்கத்தொகையைக் கணிசமாக குறைத்துவிடலாமென்பது எனது கணக்கு. மனித உயிர் தொழிற்சாலையின் உற்பத்தி நேரமல்லவா இரவு. சரீரமும், புலன்களும், மூளையும் பகலில் பிறருக்காகவும் இரவில் தமக்காவும் ஜீவிக்கின்றன. இரவொன்று இல்லையேல் ஓய்வின்றி உழைத்து மூளையும் புலன்களும் வெடித்து சிதறிவிடும். இரவுபெண் பொதுவில் பலரும் நினப்பதுபோல துர்த்தேவதையே அல்ல அவள் ரொம்பச் சாது. அடக்கமானவள், அமைதியானவள், புதிரானவள் மர்மங்கள் சூழ்ந்தவள், சூட்சமங்கள்நிறைந்தவள். மீண்டும் மாப்பசான் நினைவுக்கு வருகிறான். அவனைப்போலவே கண்கள் அவளைத் தரிசிக்கின்றன, நாசி அவளை சுவாசிக்கிறது, காதுகள் அவள் இசைக்கும் ‘அமைதியைக் கேட்கின்றன, சரீரம் அவள் தழுவலில் சுகம் பெறுகிறது.

——————————————————————————————–

‘பதிவுகள்’ இணைய இதழுக்கு அளித்திருந்த பேட்டி. ‘

நீலக்கடல் நாவல் தமிழ்நாடு அரசின் பரிசினை பெற்றபின்பு ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு அளித்திருந்த பேட்டி. ‘

 (பதிவுகள்’ இணைய இதழ் ஆசிரியர் திரு. வ. கிரிதரன் அவர்களுக்கும், தமிழ் மீது தீராதுகாதல்கொண்டு அமெரிக்காவில் இயங்கிவரும் திரு. ஆல்பர்ட் பெர்னாண்டோ அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். )

பதிவுகள்:-  தங்கள் நாவலுக்கு விருது கிடைத்தமைக்கும் மென்மேலும் கிடைக்கவும் முதலில் வாழ்த்துக்கள். விருது கிடைத்த செய்தியறிந்தபோது உங்கள் உள்ளத்துணர்வுகள் குறித்து…?

மிக்க நன்றி. உண்மையில் மட்டற்ற மகிழ்ச்சியில் திளைத்தேன், மறுப்பதற்கில்லை. நீலக்கடல் நாவலை சிரத்தை எடுத்துக்கொண்டு  வித்தியாசமாக எழுதினேன். மூன்று காலத்திற்கும் மூன்றுவிதமான மொழிகளை பாவித்தேன். அம்மொழிகளும் பாத்திரங்களின் சமூகச் சூழல், அறிவுத் திறன், சம்பவ நெருக்கடிகள் என பலக் காரணிகளின் அடிப்படையில் உபயோகிக்கப்பட்டிருக்கின்றன. இது கதையல்ல  ஆண்டவர்களையும், அவர்களின் குடிகளையும் சமதளத்தில் வைத்து, வரலாறு என்பது வெற்றிபெற்றவர்களின் உண்மை மட்டுமல்ல, வாழ்ந்தவர்களின் உண்மை என தெரிவித்த முயற்சி. அந்த உண்மையையை நிறுத்த ஒரு சராசரி தமிழ் எழுத்தாளனைக்காட்டிலும் பொருட் செலவையும், புலம்பெயர்ந்தவர்களால் இயலாத காலச் செலவையும் தயக்கமின்றி செய்திருக்கிறேன். ஆக்ஸ்போர்ட் பல்கலைகழக வெளியீடுகளையும், பிரான்சில் நான் வசிக்கிற நகரத்து நூலகங்களில் கிடைக்காத புத்தகங்கள், இந்தியாவில் வாங்கிய நூல்களென சொந்தமாக வாங்கி வரவழைத்துப் படித்தேன், நீலகடலுக்கெனவே சிறிய நூலகம் வைக்கலாம். கதை நடக்கும் முக்கிய இடங்களுக்கெல்லாம் சென்று வந்தேன். பிறகு இணைய தளங்களின் உதவியையும் மறுப்பதற்கில்லை. பதினெட்டாம் நூற்றாண்டில் பிரெஞ்சுக் காரர்களின் உணவென்றால், பிரான்சின் எந்தப் பகுதியிலிருந்து அவர்கள் வந்தவர்கள், பதினெட்டாம் நூற்றாண்டில் அவர்களுடைய உணவுப் பழக்கவழக்கங்கள் என்னென்ன, ஒரு இசைக்கருவியின் பெயரைச் சொல்லவேண்டுமானால் கூட கதை நடந்த ஆண்டில், கதை நடக்கும் களத்தில் அதன் உபயோகத்திற்கான சான்றுகள் இப்படித் தேடித் தேடி எழுதியதுகூட பரிசுக்குக் காரணமாக இருக்கலாம். பிறகு எதையும் எனக்காகத்தான் செய்கிறேன். உண்பது, உடுப்பது, நேசிப்பது என எல்லாவற்றையும். எனது எழுத்தும் அப்படித்தான். ஒருவகை சுயநலம். சில சுயநலங்கள் பிறருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. நீலக்கடலுக்கு அப்படியான வெற்றியாகக்கூட இருக்கலாம், பரிசுக்காக எழுதப்படவில்லை. எனினும் தமிழக அரசுக்கு நன்றி. இன்னொரு உண்மையையும் சொல்லவேண்டும், அது நீங்களும் அறிந்ததுதான். பரிசுபெற்றவைமட்டுந்தான் உலகில் பெரிய படைப்புகளென்றோ, பரிசுவாங்கியவர்கள் மாத்திரந்தான் பெரிய எழுத்தாளர்களென்றோ சொல்வதற்கில்லை. பரிசேதும் இல்லை என்றாலும் சோர்ந்திருக்கமாட்டேன். உலகமெங்கும் பரிசுகள் பெற்றிராத தரம் வாய்ந்த படைப்புகள், மிகப்பெரிய படைப்பாளிகள் இருக்கத்தான் செய்கின்றனர். சமீபத்திய உதாரணம் சுந்தர ராமசாமி.

பதிவுகள்:- நீலக் கடல் நாவல் உருவானது குறித்து உங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்துகொள்ளமுடியுமா?

நீலக்கடல் நாவலை1973ஆம் ஆண்டிலிருந்து எனக்கு தொல்லைகொடுத்த, இரண்டு மன ஆக்ரமிப்புகளின் வடிகால் என்று சொல்லலாம். முதலாவது சென்னையில் சர் தியாகராயாக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நேரம். இராயபுரத்திலிருந்து கல்லூரிக்குத் நடந்து செல்வது வழக்கம். அப்போது ஒவ்வொரு நாளும் ஒன்பது நாற்பந்தைத்துக்கு, T.H. ரோடு எனப்படும், திருவொற்றியூர் சாலையில் ஒரு பள்ளிமாணவி எதிர்படுவாள். நான் அறிந்து, தோழியர் கூட்டத்தோடு அவளைப் பார்த்ததில்லை. சில நேரங்களில் எங்கள் பார்வைகள் சந்தித்திருக்கின்றன. மனதில் பதிந்திருந்தாள், நிறைய கவிதைகள், ஒன்றிரண்டு சிறுகதைகள் அவளை மையமாக வைத்து எழுதியிருக்கிறேன். இன்றுவரை சிறுகதைகள் ஒவ்வொன்றிலும் வர்ணணைகள் என்று எழுதுகிறபோதெல்லாம் அவள் குறுக்கிடுகிறாள். நீலக்கடல் தேவயானி அந்தப் பெண்ணாகக் கூட இருக்கலாம். இரண்டாவதாக அதே ஆண்டில் ஏதேச்சையாகக் கேட்ட புலவர் கீரனின் கந்தபுராண சொற்பொழிவு. நீலக்கடல் கதைக்கு ஆதாரமான கருமாறிப்பாய்தல் என்றால் என்ன? என்பதை, தமது உரைக்கு இடையில் குறிப்பிட்டார். ஆக நீலக்கடலுக்கான விதை 1973ம் ஆண்டிலேயே என் மனதில் ஊன்றப்பட்டுவிட்டது.

பதிவுகள்:- நீலக்கடல் நாவல் உருவாக வித்திட்டது ஆனந்தவிகடனில் வெளியான தங்கள் சிறுகதை.

முன்பே குறிப்பிட்டதுபோல 1973ம் ஆண்டு வித்திட்ட நீலக்கடல் ‘பார்த்திபேந்திரன் காதலி’ என்ற பெயரில் ‘கதை சூப்பர் ஸ்பீடு, கலக்கல் டர்னிங், நெஞ்சை தொட்டுட்டேம்மா’ என்ற குறிப்புடன் ஆனந்தவிகடன் இதழில் (09-05-2004) பிரசுரமானது.

பதிவுகள்:- நண்பர்களின் ஆலோசனையின் பெயரில் தமிழக அரசின் விருதுக்கு விண்ணப்பித்தீர்களா? அல்லது  தற்செயலாக நீங்கள் அனுப்ப எதிர்பாராமல் விருது கிடைத்ததா?

இதில் என்பங்கு எதுவுமில்லை. கடந்த ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதியன்று, சந்தியா பதிப்பகம் தெரிவித்த செய்தியை எனது இளைய மகள் மூலம் அறிந்தேன். மறுநாள் தொடர்புகொண்டு விசாரித்ததில் நீலக்கடலுக்கு தமிழக அரசின் விருது கிடைத்திருப்பதைத் தெரிவித்தார்கள். எல்லா பதிப்பாளர்களையும்போலவே, போட்டியில் கலந்துகொள்ள தாம் வெளியிட்ட நூல்களை அரசின் பார்வைக்கு சந்தியா பதிப்பகம் அனுப்பிவைத்திருக்கிறது. பரிசு கிடைத்தபிறகுதான் இதனை அறிந்தேன். உண்மையில் இந்த விருது 2005ல் வெளிவந்த நூல்களுக்கான விருது, 2006ம் ஆண்டு கூடிய தேர்வுக்குழுவினர் அதுபற்றி விவாதித்து  2007ல் விருதினைக் கொடுத்திருக்கிறார்கள்.

பதிவுகள்:- முதல் கதை, முதல் கவிதை எழுதி வெளிவந்தபோது உங்களுக்குள் பொங்கிவழிந்த மகரந்த நினைவுகளை கொஞ்சம் மலருங்களேன்….?

அதனைப் படைப்பென்று சொல்ல முடியாது, எனது உணர்வுகளை எழுத்தில் அளிக்க முடியுமென்கிற நம்பிக்கையை ஊட்டிய தருணமென்று சொல்லலாம். அப்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த வேளை,எனது தமிழாசிரியர் ‘நாகி’யென எங்களால் அன்புடன் அழைக்கப்பட்ட திரு நா.கிருஷ்ணசாமி யாப்பிலக்கணத்தின் ஒருபகுதியாக ஆசிரியப்பாவை முடித்துவிட்டு, ஆளுக்கொரு கவிதை எழுதச்சொன்னார் ‘காகமே காகமே கருநிறக் காகமே,வேகமாய்ச் சென்று நீ மேகமாய் மறைவதேன்’, என ஒருக் கவிதையை எழுதிப்போய் காட்ட, பிற மாணவர்களைக்காட்டிலும் எனக்குக் கொஞ்சம் எழுதவருகிறதென நினைத்தவர் பள்ளி ஆண்டுமலர் தயாரிக்கும் ஆசிரியர் குழுவில் என்னையும் சேர்த்துக்கொண்டார். அதற்கடுத்த ஆண்டு, பள்ளியில் தொடங்கப்பட்ட கையெழுத்துப் பிரதியான ‘மனம்’ இதழுக்கு ஆசிரியராக உத்தியோக உயர்வு. எனது முதற் கவிதை, முதற்கதை, முதற்கட்டுரை மூன்றும் அவ்விதழில் இடம்பெற நேர்ந்ததை வாய்ப்பென்றுதான் சொல்லவேண்டும். அக்கையெழுத்துப் பிரதியை எவர்கையில் கண்டாலும் என்னிடத்தில் ஒருவித பெருமிதம் தொற்றிக்கொள்ளூம். அந்த இதழை அநேகமாகப் பள்ளியில் அதிகமுறைவாசித்தவன் நானொருவனாகத்தான் இருக்கவேண்டும்.

பதிவுகள்:- எத்தனை மொழிகளில் பரிச்சயம் உண்டு? உங்கள் நூல் எதுவும் பிற மொழியில் மொழிபெயர்க்கப்படவுள்ளதா?

ஆங்கிலமும், பிரெஞ்சும் அறிவேன். இதுவரை எனது எந்தநூலும் மொழிபெயர்க்கபடவில்லை. பிரான்சில் உள்ள நண்பர்கள் சிலர் நீலக்கடலை மொழி பெயர்க்கவேண்டுமென்றனர். பிரான்சில் Act Sud பதிப்பகம் நீலக்கடல் மாதிரியான நூல்களில் அக்கறை காட்டும் நிறுவனம். அவர்களிடம் ஓராண்டிற்குமுன் எழுதி கேட்க மொழிபெயர்ப்பினை அனுப்பச் சொல்லிக் கேட்டிருந்தார்கள். ஒரு சில நண்பர்கள் மொழி பெயர்க்கிறேனென்று இணங்கி ஒரு பக்கங்கூட மொழிபெயர்க்கவில்லை. நானுங்கூட முதல் அத்தியாயத்தை மொழிபெயர்க்க உட்கார்ந்து சோர்ந்துவிட்டேன்.  நாவலின் பதினெட்டாம் நூற்றாண்டு மொழி சங்கடப்படுத்துகிறது. சிறுகதையொன்றை நேரடியாக பிரெஞ்சில் எழுதியிருக்கிறேன். தமிழ் அளவிற்கு மொழியை லாவகமாக பிரெஞ்சில் என்னால் கையாள இயலவில்லை. ஆனால் நீலக் கடலை எப்படியும் மொழி பெயர்த்து பிரெஞ்சில் வெளியிடுவது என்கிற கனவிலிருந்து இன்னும் விடுபடவில்லை.

பதிவுகள்:- இந்தப் பன்மொழிப் புலமை உங்கள் படைப்புகளை செழுமைப்படுத்த உதவுகிறதா?

பன்மொழிப் புலமை என்றெல்லாம் சொல்வது அதிகப்படியான அடைமொழி. மூன்று மொழிகளிலும் பேச எழுத முடியும், தமிழில் கொஞ்சம் கூடுதலாகக் கவனம் செலுத்துகிறேன் அவ்வளவுதான். நிறைய விஷயங்களில் எனக்குப் பற்றாக்குறை இருக்கிறது அதனை எழுதும்போது உணருகிறேன். எனக்கு வாசிப்பு போதாது. ஆங்கிலமும் பிரெஞ்சும் படைப்புலகில் முக்கியமான மொழிகள். சமீபகாலமாக ஆங்கிலத்தில் வெளிவரும் நூல்கள் சந்தை நோக்கோடு செயல்படுகின்றன. விற்பனைக்கான அத்தனை தந்திரங்களும் கையாளப்படுகின்றன. குறிப்பாக அமெரிக்கர்கள் கதைசொல்வதில் தேர்ந்தவர்கள். பிரெஞ்சுக் காரர்களுக்கு எழுத்து முக்கியம். ரஷ்ய எழுத்தாளர்களைப்போல. உயிர்ப்புள்ள இலக்கிய படைப்புகளில் ஆர்வம் கொண்டவர்கள்-பிரெஞ்சு படைப்புலகம் என்பது நிலைப்பாடுக்கு எதிரான கலகக்குரல்களால் வளர்ந்தது. தன்னுணர்வு, அகமனப் போராட்டம் இவைகள் பிரெஞ்சில் அதிகம். இரண்டு மொழி படைப்புகளையும் அந்தந்த மொழியில் படிக்கிறேன். இரு மொழி படைப்பும் என் எழுத்துக்கு உதவுகின்றன. இங்கேயுள்ள நூலகத்தில் Bi-Langue என்று ஒரு பிரிவு உண்டு. அப்பிரிவில் புகழ்பெற்ற ஆங்கில சிறுகதைகள், மூலமும் மொழிபெயர்ப்புமாக எதிரெதிர் பக்கங்களில் இருக்கும். அம்மாதிரியான நூல்களை மாதத்திற்கு ஒன்றேனும் வாசிக்கும் பழக்கமுண்டு. இந்த ஒப்புநோக்குவாசிப்பு புறநோக்கில், மொழியின் வல்லமையை புரிந்துகொள்ள உதவ, அகநோக்கில்(மொழி இரண்டையும் இரு கண்களெனக் கொண்டால்) ஒத்துணர்வில் துடிப்பது வலமா இடமா? என்பதைப் புரிய வைக்கிறது. இப்படியானப் புரிதல்கள், நமது எழுதும் திறனிற்கு நிச்சயம் உதவக் கூடும்.

பதிவுகள்:- விருது..வாசகனின் பாராட்டு…இதில் எதைப் பெருமையாகக் கருதுவீர்கள்?

பாராட்டும் விருதும் இருவேறு சொற்கள் என்றாலும் பொருள் ஒன்றுதான். இரண்டுமே ஒன்றோடொன்று தொடர்புடையவை, வாசிப்பில்லாமல் விருது ஏது. பாராட்டுவதற்கு முன்னால் வாசிப்பு, வாசிப்பு முக்கியம்.

பதிவுகள்:- புதுக்கவிதையின் திசை திருப்பப்பட்டு, அதன் பாதை இன்றைக்குச் சரியாக இல்லை என்ற கவிஞர் மேத்தாவின் கருத்து குறித்து என்ன சொல்கிறீர்கள்?

 இதில் சொல்வதற்கென்ன இருக்கிறது, அறுபதுகளில் எழுப்பி பாரதியைக் கேட்டிருந்தால் கூட அவருக்குப் பின்னால் கவிதை எழுதவந்தவர்களைப் பார்த்து இதைத்தான் சொல்லியிருப்பார். தம்மை அடையாளப்படுத்த பிறர் இருப்பை நிராகரிப்பதென்பது, அரசியல்வாதிகளிடமிருந்து படைப்பாளிகள் பெற்ற தாக்கம். கவிதையை ஓர் வீடென்று வைத்துக்கொண்டால், அதன் வடிவங்களில் ஒன்று புதுக்கவிதை. ஒரு வீட்டின் உட்பகுதி எந்த நாட்டிலும், எக்காலத்திலும் பொதுவானத் தன்மைகளுடன் நிரந்தரமாக இருக்கின்றன, வெளித்தோற்றங்கள் அதாவது வடிவங்கள் காலத்திற்கேற்ப, மக்களின் வளர்ச்சிக்கேற்ப, தேவைசார்ந்து மாற்றம் பெருகின்றன. கவிதை நிரந்தரமானது. அதன் உணர்வுகள் நிரந்தரமானவை. வடிவம் மாறும் தன்மையது, புதுக்கவிதையும் அதிலொன்று. கற்பனைத் திறனும், நாடகப் புலமையும் இணைந்த காப்பியங்களை அறிவோம், உரைநடை வடிவத்திற்கு மாற்றாக அவை எழுதபட்டன. பிறகு நாடகத் தன்மைகளை குறைத்துகொண்டு கவிஞன் தன் மனம்சார்ந்த உணர்வுகளில் அக்கறைகாட்டினான் எனினும் மரபுக் கவிதைகளாகத்தான் அவை இருந்தன. கவிதையென்பது இசையோடு தொடர்புகொண்டது, என்ற எண்ணத்தின் அடிப்படையில், தனிமனித உணர்வுகளை பேசும் போதுங்கூட யாப்பிலக்கணம்: சீர், அசை, தளை எதுகை மோனை விதிகள் அத்தியாவசியமாக இருந்தன. உலகமெங்கும் அதுதான் நடந்தது. பிரான்சில் மரபுக் கவிதைகளை அவர்கள் Poesie Classique என்று அழைத்தனர், பின்னர் Poesie Moderne (புதுக்கவிதை) அங்கு 1880ல் குறியீட்டாளர்களால்(Symbolists) அறிமுகப்படுத்தபட்டது. கட்டுபாடற்ற வரிகளில், ஓசை ஒழுங்குகளை ஒதுக்கிவிட்டு எழுதத் துணிந்த Gustave Kahnன் கவிதையான Palais Nomade அதற்கு முன் உதாரணமாகச் சொல்லப்படுகிறது. Vers Libres – Free verses என இலக்கியத்தில் பொருள்கொள்ளப்படும் அக்கவிதைகள் கவிதை வடிவத்தின் ஓர் அங்கம். உணர்வுகளுக்கு,  சுதந்திரமான எழுத்து உருவம் கொடுக்கப்படவேண்டும், என்பது புதுக்கவிதைகளின் எழுதப்படாத விதி. புதுக்கவிதையை கர்த்தாக்களான குறியீட்டாளர்கள் கவனமெல்லாம், அந்த நேரத்தில் அபௌதிகம், புதிர்நிலை என்றிருந்தது. டி.எஸ் எலியட் புதுக்கவிதையை “means too much to mean anything at all” என்றவர். புதுக்கவிதை என்பதே சுதந்திர எழுத்து என்கிறபோது அதற்கான திசை, குவிமையம் என்றெல்லாம் பேசுவது சரியல்ல. அதைவிட திசைகளைப் பற்றி அக்கறைகொள்ளாமல், கவிதை இருக்கிறதா, படைப்பு மனம் இருக்கிறதா என்று பார்ப்பது நல்லது.  நல்ல படைப்புகள் வலிகளைச் சொல்லவேண்டும், உண்மையைப் பேசவேண்டும். சமுதாயத்தின் எல்லா தரப்பினரும் எழுத்துலகில் தங்கள் உணர்வை பதிப்பிக்க முடியும் காலமிது. படைப்புலகம் அவ்வப்போது தடுமாறினாலும், நிமிர்ந்தே நிற்கும். திசைமாற்றமும் அதற்கு உதவலாம்.

பதிவுகள்:- உடலுறுப்புகளை கொச்சையாகப் பெயர் குறிப்பிட்டு கவிதையில் பெண்களே எழுதுவது இன்றைக்கு பரவலாக நடந்துவருகிறது. இது குறித்து தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?

எழுதினால் என்ன தப்பு? ஏன் பெண்கள் எழுதக்கூடாதா?  ஒரு படைப்பாளி அவர் ஆணோ, பெண்ணோ தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளவும், தானொரு புரட்சிகரமான சிந்தனாவாதி என்று காட்டிக்கொள்வதற்காகவும், தனது படைப்புப் பேசப்படவேண்டுமென்பதற்காகவும் உடலுறுப்புகளை நீங்கள் சொல்வதுபோல கொச்சையாக தமது எழுத்துக்களில் கொண்டுவருகிறாரென்றால் அது கண்டிக்கத் தக்கது.  ஆனால் தனது வலிகளையும், குமுறல்களையும் வெளிப்படுத்த, அல்லது ஒரு படைப்பின் தேவை சார்ந்து அதைப்பயன்படுத்த வேண்டியிருக்கிறது என்றால் தாராளமாக எழுதலாம். அந்த உரிமையைப் பெண்கள் விஷயத்தில்மட்டும் மறுப்பது என்ன நியாயம். சொல்லபோனால் ஆண்களைக்காட்டிலும் பெண்கள் தார்மீக உரிமை உடையவர்கள். அக்கவிதைகளில் தாக்குதல்களில்லை, தற்காப்பு நிலை. மூச்சுத் திணறிக் கிடந்தவன் சுவாசம் பெறும் முயற்சி. பொதுவாக இம்மாதிரியான கவிதைகளுக்கு புகலிடமாக இருப்பவை சிற்றிதழ்கள் சிற்றிதழ்வாசகர்களில் பெரும்பாலோர் அவர்களது கவிதைகளை ஏனைய கவிதைகளைப்போலவே எடுத்துக்கொள்கின்றனர், புரிந்துகொள்கின்றனர். முகஞ்சுளிப்பதில்லை. ஆபாசம் எங்கே இருக்கிறது தெரியுமா குடும்பபத்திரிகைகளில், வெகுசன இதழ்களில், தினசரிகளில், நமது சீரியல்களில், சினிமாக்களில்.

பதிவுகள்:- பிரான்சில் நீங்கள் நடத்திவந்த “நிலா” இதழைத் தொடர்ந்து நடத்த இயலாது போனதற்கு என்ன காரணம்?

எல்லாவற்றையும் தனி ஒருவனாக செய்ய வேண்டியிருந்தது. எனது எழுத்திற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. தவிர ‘நிலா’ இதழ், வெகுசன இதழ் சாயலில் வெளியிடவேண்டிய நிர்ப்பந்தம். எனக்கான இடம் அது இல்லை என்பதும், வாசகர்களுக்காக நான் என்ற மனநிலையில், சினிமா செய்திகள், துணுக்குகள், ஜோக்குகள் என்று எழுதி அலுத்துவிட்டது. எனினும் மூன்றாண்டுகள் தொடர்ந்து இருமாத இதழாக வெளிவந்தது.

எனது முதல் சிறுகதைத் தொகுப்பில் அடங்கிய கதைகளில் மூன்றில் ஒரு பங்கு அதில் பிரசுரமானவையே. எனது பாரீஸ் நண்பர்களில் திரு பாலகிருஷ்ணன் எழுதிய ‘நானொரு சங்கத்தமிழன்’, திரு. முத்துக்குமரன் எழுதிய ‘பிரான்சு தொழிற்சட்டங்கள்’ போன்ற தொடர்கட்டுரைகளுக்கு நல்ல வரவேற்பிருந்தது.

பதிவுகள்:- எழுத்தாளர், இதழ் ஆசிரியர் அனுபவங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?

எழுத்தாளராக இருந்துவிடலாம், இதழ் ஆசிரியராக இருப்பது கடினம். உங்களுக்குத் தெரியாததா என்ன? எழுத்தாளனுக்கு இரண்டே இரண்டு கவலைகள்தான். ஒன்று: தனது எழுத்து பிரசுரத்திற்கு ஏற்கப்படுமா? என்பது. இரண்டாவது பிரசுரமானபின் எத்தனை வாசகர்கள் படித்திருப்பார்கள் என்பது. அத்துடன் சரி. மாறாக இதழ் ஆசிரியர்களை எடுத்துக்கொண்டால் தலைவலிகள் நிறைய இருக்கின்றன. சொந்த எழுத்துக்களில் கவனம் செலுத்தமுடியாது. விரும்பியோ விரும்பாமலோ எல்லா எழுத்துக்களையும் படித்துப்பார்க்கவேண்டிய கட்டாயம். பிரசுரமாகும் ஆக்கங்களுக்குத் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டிய நிர்ப்பந்தம், இனம், மதம், நாடு என எல்லாவற்றையும் ஒளித்துக்கொண்டு, நடு நிலையாளராக அடையாளப்படுத்திக்கொள்ளவேண்டிய அவசியம்..என நிறைய  சொல்லலாம். எழுத்தாளனாக இருக்கவே விரும்புகிறேன்.

பதிவுகள்:- சிறுகதை, நாவல், கவிதை இந்த மூன்றிலுமே தடம்பதித்துள்ள தாங்கள் எதில் அதிகமாக முகம் காட்ட விரும்புகிறீர்கள்?.

உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் தரமானக் கவிதைகள் எழுத எனக்குப் போதாது. கவிதை உலகம் எனக்குப் பிடிபடாததுபோல இருக்கிறது.  கவிதை எழுதுவதென்பது உட்கார்ந்துகொண்டு  காய்களை நகர்த்தும் சதுரங்க விளையாட்டு, எனக்கு ஓடிப் பிடித்து விளையாடவேண்டும். அதற்கு உரைநடை வெளியே எனக்கு உகந்ததென தீர்மானித்திருக்கிறேன். குறிப்பாக சிறுகதைகள்:அன்றாட வாழ்க்கையில்,  சட்டென்று நமது கவனத்தில் இடம்பெறும் ஏதோ ஒன்று சிறுகதையாகக்கூடும். அமெரிக்க சிறுகதை எழுத்தாளர்கள் மீது எனக்குப் பொறாமைகள் நிறைய.

பதிவுகள்:- அச்சு இதழ்களில் உங்கள் ஆக்கம்….. இணைய இதழ்களில் உங்கள் ஆக்கம் வெளியாகும்போது எதில் அதிக மகிழ்ச்சி ஏற்படுவதாக கருதுகிறீர்கள்?

அச்சு இதழ்களில் வருகிறபோது கூடுதலாக மகிழ்ச்சிக் கிடைக்கிறது. எனினும் அச்சு இதழ்களில் படித்துவிட்டு என்னைத் தொடர்பு கொண்ட வாசகர்களைக் காட்டிலும் இணைய இதழ்களில் குறிப்பாக திண்ணை, பதிவுகள் இதழ்களில் படித்துவிட்டு தொடர்புகொண்டவர்கள் அதிகம். உண்மையைசொல்லபோனால் எனது வளர்ச்சியே இணைய இதழ்களினால் ஏற்பட்ட வளர்ச்சி.

பதிவுகள்:- புலம்பெயர்ந்து வாழும் தமிழ்க் குழந்தைகளுக்கு ஏற்ப கதை, பாட்டு எழுதி வெளியிடும் எண்ணம் உண்டா?

அப்படி ஏதும் எண்ணம், இதுவரை தோன்றவில்லை. உங்கள் கேள்வி அதற்கு வித்திட்டிருக்கிறது.  குழந்தைகளுக்குச் சொல்ல, நிறைய இருக்கிறது. வழக்கமான உத்திகளிலிருந்து மாறுபட்டு கதை பாட்டு எழுதலாம்.

பதிவுகள்:- நீங்கள் எழுதிய படைப்புக்களில் மன நிறைவைத் தந்த ஆக்கமாகக் கருதுவது எதை?

 சிறுகதைகள். துரதிஷ்டவசமாக அவை சரியாக அறியப்படவில்லை. அன்புள்ள அப்பா, அக்கினி காரியம், எமன் அக்காள் கழுதை, பிறகு, நாளை போவேன்..எனக்குப் பிடித்த என்னுடைய சிறுகதைகளில் முக்கியமானவை.

பதிவுகள்:- எழுத்தாளர் என்ற நிலையில் உங்களின் இலட்சியங்கள் என்று…..?

எல்லா எழுத்தாளர்களுக்குமுள்ள இலட்சியங்கள் எனக்கும் இருக்கின்றன. முதலாவதாக ஒரு நல்ல எழுத்தாளனென்று பேர்வாங்கவேண்டும். இரண்டாவது கனவு, Simone de Beauvoir எழுதிய Le Deuxieme Sex  நூலையும், Margurite Yourcenarடைய Memoire d’Adrien நூலையும் தமிழுக்குக் கொண்டுவரவேண்டும். இதைத் தவிர பெரிதாகச் சொல்ல ஒன்றுமில்லை

பதிவுகள்:- உங்களின் நாவல் வெற்றிக்கு மூவர்  காரணம் என்று சொல்லியிருக்கிறீர்கள். குறிப்பாக இணையத்தில் கதையைப் படித்து ஊக்கமூட்டும்வகையில் பின்னூட்டு கொடுத்தவர்கள் குறித்து…?

அவர்கள் எனது நாவல் வாசகர்கள் மட்டுமல்ல எனது சிறுகதைகளையும், கவிதைகளையுங்கூட வாசித்து விட்டு பாராட்டுபவர்கள் எனவே நாவல் எழுதியபோது அவ்வப்போது பாராட்டினாலும் புத்தகமாக வெளிவந்தபிறகுதான் முழுவதுமாக படித்துவிட்டுப் பாராட்டினார்கள். அப்படித்தான் கவிஞர் சதாரமாலதியின் நட்புக் கிடைத்தது. பிறகு மரியதாஸ் என்ற நண்பர்  தொடர்ந்து என்னை உற்சாகப்படுத்தியவர். இந்த நாவல் எனக்குப் புகழ் சேர்க்கும் என்று உறுதியாக நம்பியவர் அவர்.

பதிவுகள்:- உங்கள் குடும்பத்தைப்பற்றி….?

மனைவி கிரிஜா, சராசரி இந்தியப் பெண்மணி. வணிகம் தொடர்பான எனது பணிகளை அவள் பங்கீடு செய்துகொள்வதால் எழுத்தில் என்னால் கவனம் செலுத்த முடிகிறது. ஒரு மகன் இரண்டு பெண்கள்.மகன் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் விற்பனைத் துறையில் பாரீஸில் பணிபுரிறார். மூத்த மகள் தனது கணவருடன் அமெரிக்காவில் இருக்கிறாள். இளையவள் வேதியியில் துறையில் இருக்கிறாள்.

———–