மொழிவது சுகம்: செப்.20

Paris-Delhi-Bombay

கடந்த 16-17 தேதிகளில் பாரீஸ¤க்கு சென்றிருந்தேன்.  நானிருக்கும் Strasbourg லிருந்து சுமார் 500 கி.மீட்டர் தூரத்தில் பாரீஸ் இருக்கிறது. தொடக்கத்தில் சிலகாலம் பாரீஸில் இருந்துவிட்டு இப்போதிருக்கிற நகரத்தில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறேன். எனக்கு பாரீஸ் வாழ்க்கை பிடிப்பதில்லை. உலகில் எல்லா பெருநகரங்களுக்கான வாழ்க்கை பாரீஸ¤க்கும் பொருந்தும். சென்னையில் எப்படி வடசென்னை தென் சென்னை இருக்கிறதோ அப்படியான பிரிவு பாரீஸிலும் உண்டு. பாரீஸின் வடபகுதியில் பிற பகுதிகளைக் காட்டிலும் மூன்றாவது உலகநாடுகளிலிருந்து வந்தவர்கள் இங்கு கூடுதலாக உள்ளனர். பொதுவாக உடலுழைப்பை நம்பி இருக்கிறவர்கள் வாழும் பகுதி, ஆப்ரிக்கர்களும் தமிழர்களும் பிற பகுதிகளைக் காட்டிலும் இங்கு அதிகம்.

கடந்த ஆறுமாதகாலமாக பாரீஸிலுள்ள நவீன கலையகமான Centtre Pompidou வில் Paris-Delhi-Bombay என்கிற கண்காட்சி நடைபெற்று  செப்டம்பர் பத்தொன்பதாம் தேதி முடிவுற்றது. பிரான்சு மற்றும் இந்திய நவீன ஓவியக்கலைஞர்களின் படைப்புகள் இடம்பெற்றிருந்தன. அதன் ஒரு பகுதியாக(?) மேலே நான் குறிப்பிட்ட தேதிகளில் “எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் பார்வையில் இந்தியா” என்ற கருத்தரங்கு இரண்டு நாட்கள் நடபெற்றது. பார்வையாளர்களில் ஒருவனாக நானும் கலந்துகொண்டேன். முதல் நாள் இந்தியாவின் வேதகால ஞானத்தைப் பற்றிய ஒரு கலந்துரையாடலில் மூன்று பிரெஞ்சு பல்கலைகழக பேராசிரியர்கள் கலந்துகொண்டார்கள். அவர்கள் மிகவும் அக்கறை எடுத்துக்கொண்டு கிரகஸ்தா, சம்சாரா, நிர்வாணா என்று விவரித்துக்கொண்டிருந்தது எரிச்சலூட்டியது. இன்று நேற்றல்ல வெகுகாலமாகவே இவர்களுக்கு இந்தியா என்றாலே வேதகால இந்தியா  அல்லது மக்களின் அவல நிலை. மேற்கண்ட கண்காட்சியில்கூட கலை படைப்புகள் என்ற பெயரில் வைத்திருந்தவைகள்: இந்தியாவின் சாதிப்பிரிவுகள், பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள், தலித்மக்கள், சேரிகள், தெருவில் அலையும் மாடுகள், மும்பை மூன்றாம் பாலினமக்கள்.   இந்திய எழுத்தாளர்கள் என்று அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் நால்வரும் ( Manil suri, Sudhir Kakar, Preeta Samarasan et Kunal Basu.) ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டிருப்பவர்கள். அவர்கள் இந்தியாவிலிருந்துகொண்டு ஆங்கிலத்தில் எழுதினால் கூட பரவாயில்லை வெளிநாடுகளில் இருந்துகொண்டு எழுதுபவர்கள். இந்தியாவில் பிறந்ததோடு சரி. இந்தியாவின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அறிமுகப்படுத்தபட்ட மூவரில் ஒருவர் மேற்கு வங்காளம், ஒருவர் மகாராஷ்டிரா, மூன்றாமவர் குஜராத். நான் நினைத்ததுபோலவே மூவரும் மேட்டுக்குடியினர். கல்லூரிபடிப்பை முடித்து மேலைநாடுகளில் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்கள்; வீட்டில்கூட அவர்களுடைய தாய்மொழியை பேசுவதில்லையாம். காரணம் சிறுவயதுமுதலே ஆங்கிலத்தில் படித்ததுதானாம், ஆக தாய்மொழியில் எழுதவோ படிக்கவோ தெரியாதென்பதை பெருமையாகச் சொல்லிக்கொண்டார்கள். நான்காவது பெண் மலேசியாவைச் சேர்ந்தவள், தமிழ்ப் பெண். அவளும் தம் பங்கிற்குத் தமிழ் தெரியாது என்பதை பெருமையாகச்சொல்லிகொண்டாள். நால்வரின் நூல்கள் இந்தியாவில் பிரதேச மொழியில் மொழிபெயர்க்கப்பட்டதா என்ற கேள்விக்கு இல்லை என்று கூறியதோடு அதற்கான அவசியமில்லை என்றார்கள்.

ஆங்கிலத்தில் எழுதினாலும் அமெரிக்காவிலிலோ இங்கிலாந்திலோ வசித்தாலும் இவர்கள் இந்திய எழுத்தாளர்களுமல்ல ஆங்கில எழுத்தாளர்களுமல்ல என்றொரு பார்வை மேற்கத்திய படைப்புலகில் இருப்பதை உணர்ந்திருப்பார்கள் எண்றே நம்புகிறேன். இந்த நால்வரின் எழுத்தையும் இதுவரை வாசித்ததில்லை. வாசிக்கும் உந்துதலை ஏற்படுத்தித்தருவதாக அவற்றின் பெயர்களுமில்லை. பொதுவாக இந்திய ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டிருக்கிறவர்களில் பெரும்பான்மையோர் காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுபடாதவர்கள் என்பதென் அவதானிப்பு.

—–

Echanges et Partages Franco-Indienne:

இது அண்மையில் நான் ஏற்படுத்தியுள்ள அமைப்பு. இதற்கு நான் தலைவராகவும், Xavier என்ர பிரெஞ்சு நண்பர் பொருளாளராகவும், Fraçoise என்ற பெண்மணி செயலாளராகவும் உள்ளனர்.  எங்கள் சங்கத்தின் நோக்கம் நவீன தமிழ் படைப்புகளை  பிரெஞ்சுக்குக் கொண்டுவருவது, பிரெஞ்சு மற்றும் தமிழ் எழுத்தாளர்கள் சத்திப்பிற்கு இந்தியாவிலும் பிரான்சிலும் ஏற்பாடு செவது ஆகியவை. தமிழிலிருந்து பிரெஞ்சுக்குக் கொண்டுவருவதென்பதில் பல சிக்கல்கள் இருக்கின்றன என்பது தெரியவந்துள்ளது. வங்காள மொழியிலிருந்து பிரெஞ்சுக்கு மொழிபெயர்க்கும் பிரெஞ்சு பெண்மணி தமது போராட்டத்தைப் பற்றி சுருக்கமாக தெரிவித்தார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக மூன்று நாவல்களை மொழிபெயர்த்துவைத்துக்கொண்டு பதிப்பாளர்களை தேடி ஓய்ந்துவிட்டாராம். வாழ்த்துக்கள் என்றார். மனதில் தைரியமிருக்கிறது, தமிழுக்குத் ஏதாவது செய்யவேண்டுமென்ற உந்துதலுமிருக்கிறது, முயன்று பார்ப்போம்.
————————————–

நந்திவர்மன் வலைத்தலம்.

நந்திவர்மன் புதுச்சேரியைச் சேர்ந்தவர். இன்றைய பல அரசியல் கட்சி தலைவர்கள் பலருடனும் வடக்குத் தெற்கு என பேதமின்றி நட்பு பாராட்டி வந்திருக்கிறார். திராவிடப் பேரவை செயலாளர். எனக்கு அவருடைய கொள்கைகளில் முரண்கள் இருப்பினும், அவரது உழைப்பை போற்றுகிறேன். புதுச்சேரி மாநிலத்தை  பொறுத்தவரை அம்மண்ணிற்கும் மக்களுக்கும் ஓயாமல் குரல்கொடுத்து வருபவர். காலத்திற்கேற்ப தம்மை மாற்றிக்கொண்டு அரசியலில் இலாபம் பார்க்கும் மனிதர்களில் இவரைப்போன்ற மனிதர்கள் அபூர்வம் என்பது எனது சொந்த அனுபவம்.

அனத்திற்கும் மேலாக அண்மையில் புதுச்சேரி அரசின் தமிழ் மாமணி விருதை பெற்ற்வர் என்பதையும் இங்கே நினவுகூர்தல் வேண்டும்.

உலகத் தமிழர்களுக்காகவும் வக்காலத்து வாங்குகிற நண்பரின் வலைப்பூ கீழ்க்கண்ட முகவரிகளில் வாசிக்கக் கிடைக்கின்றன.

http://nandhivarman.wordpress.com/
http://annaist.livejournal.com/
http://dravidaperavai.blog.co.uk/tags/nandhivarman/

பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்-5: Métro – Boulot -Dodo

« Au déboulé garçon pointe ton numéro
Pour gagner ainsi le salaire
D’un morne jour utilitaire
Métro, boulot, bistro, mégots, dodo, zéro ».

மே 1968 பிரெஞ்சு கலவரத்தின் போது பாரீஸ் சொர்போன் பல்கலைகழகச் சுவரில் முதன் முறையாக எழுதப்பட்டிருந்த வாசகம்.

நகரவாழ்க்கையை எந்திர வாழ்க்கையோடு ஒப்பிட்டு சலித்துக்கொள்வது இன்று நேற்று ஏற்பட்டதல்ல. பாரீஸ் நகர வாழ்க்கையை அங்குள்ள மக்கள் Métro – Boulot -Dodo – ஆங்கிலத்தில் subway – work- Sleep என நேரடியாக மொழிபெயர்க்கலாம். இது உரிய பொருளை தருவதாக இருந்தாலும் ஆங்கிலேயர் வழக்கில் the daily grind பொருத்தமான சொல் என்கிறார்கள். மொழிபெயர்ப்பில் உள்ள சிக்கல் இது. ஒரு சொல்லை மொழிபெயர்க்கிற பொழுது, அதற்குரிய சரியான பொருள்தரும் சொல்லை கண்டுபிடித்தால் மட்டும் போதாது அதற்கு ஈடான மரபான சொற்கள் வழக்கிலிருக்கிறதா என்பதைப் பார்க்கவேண்டும். இது குறித்து தனியாக ஒரு கட்டுரை எழுதவிரும்புகிறேன்.

மேற்கொண்ட சொல்வழக்கிற்கு வருகிறேன். எழுபதுகளில் சென்னையில் கல்லூரியில் படித்தபொழுது குரோம்பேட்டையிலிருந்து தினசரி மின்சார ரயில் பிடித்து சென்னைக் கடற்கரைவரை செல்வது வழக்கம். அப்போதெல்லாம்(?) அரக்கோணம், காஞ்சிபுரம், விழுப்புரமென்று வசித்துக்கொண்டு சென்னைவரை தினசரி இரயிலில் பயணம் செய்து பணியாற்றுவர்களை அப்பகுதிகளிலிருந்து வரும் பாசஞ்சர் இரயில்களில் காண்பதுண்டு. அவர்கள் வாழ்க்கையை மேற்கண்ட Metro – Boulot -Dodo என ஒப்பிட தோன்றும். இன்றைய தேதியில் எல்லா பெரு நகரங்களிலும் பணிசெய்து வாழ்க்கையை நகர்த்துபவர்களின் தினசரிகளுக்கு இது பொருத்தமான சொல்லே.

பாரீஸில் Métro – Boulot -Dodo என்றால் பிரான்சு நாட்டில் பிறபகுதிகளில் தினசரி வாழ்க்கையை எப்படி காண்கிறார்கள் அல்லது அந்த வாழ்க்கையை எந்தச் சொற்றொடரால் அடையாளப்படுத்துகிறார்களெனில் “Les Français bouffent, se logent et roulent’ என்பார்கள். அதாவது சம்பாதிப்பது சாப்பாட்டிற்கும், வீட்டிற்கும், வாகனத்திற்கும் சரியாக இருக்கிறதென்கிற பொருளில்:

பிரெஞ்சுக்காரர் ஒருவர் 100 யூரோ சம்பாதிக்கிறார் என்று வைத்துக்கொண்டால் அவர்:

25,40 யூரோ உணவுப்பொருள்களுக்கும்
17,40 யூரோ வீட்டு வாடகை அல்லது வீடுவாங்கிய கடன், வீட்டு பராமரிப்பு செலவுக்கும்
14,30 யூரோ போக்குவரத்து செலவு இதி சொந்த வாகனசெலவுகளும் அடங்கும்
10,30 யூரோ துணிமணிகளுக்கும்
9,10 யூரோ வீட்டு உபயோகப்பொருட்களுக்கும்
7,90 யூரோ பொழுதுபோக்கு சமாசாரங்களுக்கும்
4,80 யூரோ உடல் நலத்திற்கும்
2,70 யூரோ விடுமுறைக்கும்
8,10 யூரோ பிறவற்றுக்கும் செல்விடுவதாக அண்மையில் தெரியவந்த செய்தி அதாவது சேமிப்பும் இதிலடங்கும்.

மேற்கண்ட தகவல் அசலான பிரெஞ்சுகாரருக்கு மட்டுமே பொருந்தும். வேண்டுமெனில் இங்குள்ள ஐரோப்பியருக்கு என்று கூடுதலாகப் பொருள்கொள்ளலாம்.

ஒரு கொசுறு செய்தி இந்த Métro – Boulot -Dodo என்கிற ஸ்லோகத்தை அறிமுகப்படுத்தியவர் பத்திரிகயாளரும், வானொலியில் கலைஞராகவும் திகழ்ந்த Pierre Béarn (Louis Gabriel Besnard). அவர் இயற்றிய பாடலொன்றில் இந்த ஸ்லோகம் வருகிறது. Pierre Béarn104 ஆண்டுகள் உயிர்வாழ்ந்து 2004ல்தான் இறந்தார்.

___________________________________

பிரெஞ்சு சினிமா -2: ஒளியும் நிழலும்

ஒரு பொருளின் மாற்று வடிவங்களில் நிழலுக்கென தனித்துவமுண்டு. சாயல், நகல், பிரதி, படிமம் எனவும் பொருள் கொள்ளலாம். உளப்பகுப்பாய்வியல் நிழலை மனசாட்சியென்கிறது. கருப்புவெள்ளைபடங்களில் கதை நாயகனோ நாயகியோ மனச்சிக்கலுக்கு உள்ளாகிறபோதெல்லாம் அவர்களினும் பார்க்க இருமடங்கு ஆகிருதியுடன் கலகலவென்று நகைப்பதுபோலவோ, இறுக்கமான முகத்துடன் எச்சரிப்பதுபோலவோ திரையில் தோன்றுகிற நிழல்களை நாம் அறிவோம். உள்மனமென்று நம்பப்படும் இந்நிழலுடைய குணத்தினை இணக்கமற்ற, முரண்படக்கூடிய, கலகக்குரலென்று சித்தரிக்கலாம். மனம் எரிமலையாகிறபோது வீசப்படும் எரிமலைக்குழம்பு இந்நிழல். எரிமலைகுழம்பால் அண்டை நிலங்களுக்குப் பிரச்சினை. உளப்பகுப்பாய்வு முன்னிருத்தும் நிழல் புறப்பட்ட இடத்தையே புல் பூண்டற்று போகச் செய்யும் தன்மையது. நிழலோடு கவனம் தேவை, உறவில் எச்சரிக்கை தேவை. உளப்பகுப்பாய்வியல் அறிஞர் கார்ல் யுங்கிற்கு இந்நிழல் நம்மினும் தாழ்ந்தது, பண்படாதது, செம்மையுறாதது, தொடக்க நிலை, முரண்பட்டது ஆனால் தப்பானதல்ல. அற்பாத்மாவுக்குரிய குணமும் சேர்ந்ததுதான் மகாத்மா. சுத்திகரிக்கபட்ட ஒழுகலென்று எதுவுமில்லை. வாழ்க்கையென்பது அப்பழுக்கதற்றதல்ல. ஒழுங்கின்மையும் சேர்ந்ததுதான் உயர்வும் முன்னேற்றமும், ஆக நிழலின்றி ஒளியில்லை என்பதுதான் விதி.

தருமிக்கு ghostwriter யாரென்று கேட்டால் சிவபெருமானைச் சொல்வோம். The Count of Monte Cristo, The Three Musketeers, Twenty Years After புகழ் அலெக்ஸாந்த்ரு துய்மாவிற்கும் ஒரு Ghostwriter உண்டு பெயர் மக்கே என அழைக்கபட்ட ஒகுய்ஸ்த் மக்கே(Auguste Maquet). எட்டுவருடங்களுக்கு முன்பு அலெக்ஸாந்த்ரு துய்மாவை பாந்த்தெயோன் தேவாலயத்தில் மறு அடக்கம் செய்வதென பிரான்சு நாடு தீர்மானித்தபோது இந்த நிழலுக்கு ஆதரவாக ஒலித்த ஒரே குரல் பொதுவுடமைக் கட்சியின் அதிகாரபூர்வ ஏடான ஹ¤மானித்தே தினசரியின் ஆசிரியர் குரல். அவர் தமது தலையங்கத்தில், “துய்மாவின் முக்கிய படைப்புகளுக்குப் பின்புலத்தில் உழைத்த ஒகுய்ஸ்த் மக்கேவை நண்பர் அருகில் மறு அடக்கம் செய்யக்கூடாதா? அதற்கு தேவாலயத்தில் கொஞ்சம் இடமில்லாமல் போய்விட்டதா?” என்று வருந்தினார். துய்மாவின் நிழலாகவிருந்த ஒகுய்ஸ்த் மக்கே 19ம் நூற்றாண்டைசேர்ந்தவர். பெரிய இடத்துப்பிள்ளை, கல்வி அறிவிலும் தேர்ந்தவர். இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்று பதினெட்டுவயதில் ஆசிரியப் பணியில் சேர்ந்தார். பணியிலிருந்துகொண்டு எழுதிய சில கவிதைகளும், கதைகளும் இலக்கிய இதழ்களில் பிரசுரமாகின்றன. பிடித்தது சனி. இலக்கிய வட்டாரத்தைச் சேர்ந்தவர்களின் சினேகிதம் வாய்க்கிறது. மனிதருக்கு இலக்கியத்தில் சபலமுண்டாக ஆசிரியப் பணியைத் துறக்கிறார். ஆசிரியப்பணியிலிருந்துகொண்டு இலக்கிய பணியை செய்யமுடியாதென நினைத்திருக்கிறார். ழெரார்ட் நெவால்(Gerard de Nerval) என்ற கவிஞரின் நட்புகிடைக்கிறது. இருவருமாக இணைந்து கட்டுரைகள் எழுதுகிறார்கள்.

ஒகுய்ஸ்த் மக்கேவும் தரித்திரமும் இரட்டையர்கள் என்றாலும் தரித்திர சகோதரர் இவரை முந்திக்கொண்டிருக்கவேண்டும். மூன்று அங்கங்கள் கொண்ட நாடகமொன்றினை எழுதி எடுத்துக்கொண்டு வாய்ப்புத்தேடி நாடக அரங்கு பொறுப்பாளர்களைப் பார்க்கச் சென்றிருக்கிறார். வியாபாரிகள் “கூட்டம் சேர்க்கிற பெயராக இல்லையே” எனப் பதில் கூறியிருக்கிறார்கள். ஏமாற்றத்துடன் வீட்டிற்குத் திருப்பிய மக்கே நான்கைந்து படிகளெடுத்து அக்காலத்தில் புகழ்பெற்றிருந்த சஞ்சிகைகளுக்கு அனுப்பிவைத்திருக்கிறார். படைப்பாளரின் பெயரைப் பார்த்துவிட்டு படைப்பை தெரிவு செய்யும் மகானுபாவர்கள் சரக்கு எங்களுக்கு முக்கியமில்லை ஐயா, செட்டியார் முடுக்காக இருக்கவேண்டுமென அருள்கூர்ந்திருக்கிறார்கள்: எங்களுக்கு வேண்டியதெல்லாம் எழுதியிருப்பவர் யார்? என்ன எழுதப்பட்டிருக்கிறதென்பது எங்களுக்கு முக்கியமல்ல என்று பதில் வந்திருக்கிறது. மனிதருக்குப் பொறுமையில்லை நண்பரும் கவிஞருமான ழெரார் நெவால் பெயரில் தமது படைப்பினை அனுப்பிவைக்க பிரசுரமாகிறது. படைப்பில் தமது பெயர் இல்லாவிட்டாலும் தமது படைப்பு பிரசுரமாகிறதே என்ற அற்ப சந்தோஷம். இந்த ழெரார் நெவாலுக்கு அலெக்ஸாந்த்ரு துய்மா சினேகிதர். 1838ம் ஆண்டு டிசம்பர் மாதத்து குளிர் நாளில் துய்மாவை ஒகுய்ஸ்த் மக்கேக்கு அறிமுகப்படுத்திவைக்கிறார். தம் கைவசமிருந்த படைப்பொன்றை திருத்தி எழுதிக்கொடுக்கும்படி துய்மா இப்புதிய நண்பரைக்கேட்கிறார். அவரும் திருத்திக்கொடுக்கிறார். அன்று தொடங்கிய இருவருக்குமான நட்பு 18 ஆண்டுகாலம் நீடிக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் புகழ்பெற்ற ‘நீக்ரோ’வாக மாறுகிறார். பிரெஞ்சு படைப்புலகில் ‘Gostwriter’ ஆக இருப்பவர்களுக்கு அதாவது நிழல்படைப்பாளிகளாக இருப்பவர்களுக்குப் பெயர் நீக்ரோ. இந்த நிழலை வெளிச்சத்திற்கு வந்திடாமல் கவனமாகப் பார்த்துக்கொண்டவர் அலெக்ஸாந்த்ரு துய்மா. ஒக்குய்ஸ்த் மக்கேக்குவுக்கு அவருக்குண்டான ஊதியத்தை கொடுக்க தொடக்கத்தில் ஒப்புக்கொண்ட துய்மா தவறியதால், பிரச்சினை நீதிமன்றத்திற்குபோகிறது. ஒகுய்ஸ்த் மக்கே தமது படைப்புக்கான ஊதியத்தை மட்டுமல்ல, படைப்புகளில் தமது பெயரும் இடம்பெறவேண்டுமென்று கோரிக்கை வைக்கிறார். நீதிமன்றம் துய்மா மக்கேவுக்குக் கொடுக்கவேண்டிய பணத்தை கடன்தொகையாக பார்த்ததே அன்றி படைப்பின் அடிப்படையில் செய்துகொண்ட ஒப்பந்த ஈட்டுத் தொகையாக பார்க்கத் தவறுகிறது. 145200 பிராங் மக்கேவுக்குத் துய்மா கொடுக்கவேண்டுமென தீர்ப்பு வழங்கியபோதிலும், படைப்புரிமைபற்றி நீதிமன்றம் கணக்கில் கொள்ளவில்லை என்பதைக் இங்கே குறிப்பிட்டாகவேண்டும். 1851ம் ஆண்டில் நடந்த வழக்கும் தீர்ப்பும் பிரெஞ்சு படைப்புலகிற்கு மிகப்பெரிய அவப்பெயரினை ஏற்படுத்தித் தந்ததென சொல்கிறார்கள்.

துய்மாவை விமர்சிப்பவர்கள் ஸ்க்ரீப்,லாபிஷ்(Scribe, Labiche)போன்ற படைப்பாளிகளை சுட்டிக்காட்டுகிறார்கள். ஸ்கிரிப் ஐநூறுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியவர். தாம் தனித்து எழுதியதில்லை என ஒத்துக்கொண்டவர் பிற்காலத்தில் தமக்காக எழுதியவர்கள் பெயர்களை சுவற்றில் பொறித்துவைத்தார். லாபிஷ் என்ற நாடக ஆசிரியரும், தமது படைப்புக்குக் காரணமான நண்பர் மார்க் மிஷெல் அருகிலேயே தம்மை அடக்கம் செய்யவேண்டுமெனக் கேட்டுக்கொண்டவர். துய்மா தமது நிழல் எழுத்தாளருக்கு அவ்வாறான நன்றிக்கடன் ஆற்றியதாக செய்திகளில்லை. மாறாக The Count of Monte Cristo, Twenty Years After என்ற இருநாவல்களையும் எழுதிய ஒகுய்ஸ்த் மக்கே என தமது கல்லறையில் எழுதிக்கொண்டு திருப்தி அடைந்ததுதான் அவர் கண்ட பலன்.

L’autre Dumas – வேறொரு துய்மா. அலெக்ஸாந்த்ரு துய்மாவின் மற்றொரு முகத்தை இத்திரைப்படம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. படத்தில் மேற்கண்ட பிரச்சினகளை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒருவகையில் இத்திரைப்படம் ஒகுய்ஸ்த் மக்கேவுக்கு செலுத்தப்படும் அஞ்சலியெனலாம். நடு நிலையாளர்களுக்கு ஆறுதலளிக்கும் வகையில் நேர்மையாக திரைக்கதை சொல்லப்பட்டிருக்கிறது. ஒகுய்ஸ்த் மக்கே பாத்திரம் துய்மாவுக்கு இணையாகச் சொல்லப்ட்டிருக்கிறது. இப்படத்தினை முன்வைத்து பிரான்சு நாட்டு கறுப்பரின தலைவர் பத்ரிக் வொசே என்பவர் சில கேள்விகளை முன்வைக்கிறார். அவருக்கு அலெக்ஸாந்த்ரு துய்மா பாத்திரத்தை ஒரு கறுப்பர் ஏற்று நடித்திருக்கவேண்டும், தலைமுடியை சுருள்சுருளாக மாற்றிக்கொள்வது மட்டும் போதாதென்பது அவர் கருத்து. காரணம் அலெக்ஸாந்த்ரு துய்மாவின் தந்தை கலப்பின ஆசாமி, ஹைத்தியைச் சேர்ந்த அடிமை. அவரது தாயாரும் ஒரு கறுப்பின பெண்மணி, ஹைத்திநாட்டில் அடிமையாக இருந்தவள். துய்மா தமது வாழ்நாளில் இனவெறியினால் பாதிக்கப்பட்டதையும் இவர் நினைவுகூர்கிறார். குறைந்தபட்சம் துய்மாவாக நடித்த நடிகருக்கு ஒப்பனையிலாவது அவர் கறுப்பரினத்தைச் சார்ந்தவரென்பதை காட்டியிருக்கவேண்டுமென்கிறார். பிரெஞ்சு திரையுலகம் கவனமானதுதான், எப்படி தவறியிருப்பார்களென தெரியவில்லை. அவர்களுக்கு துய்மாவாக நடித்த ழெரார் தெபார்தியே கச்சிதமாக பாத்திரத்துக்குபொருந்துவது காரணமாக இருக்கலாம். எதிர்காலத்தில் பராக் ஒபாமாவாகவோ, மார்ட்டின் லூதர் கிங்காகவோ ஒரு வெள்ளையரை நடிக்க வைப்பார்களா அல்லது ஜூலியர் சீசராக ஒரு கருப்பரை நடிக்க வைப்பார்களா என்ற கறுப்பரினத் தலைவர் எழுப்பும் கேள்விகளும் நியாயமானவையே.

எனக்குப் பிரச்சினை, துய்மாவாக யார் நடித்தார்கள் என்பதல்ல? மக்கேவை ஏமாற்றிப்பிழைத்த துய்மாவின் சாமர்த்தியம். இன்றைக்கு எழுத்து பணி அல்ல பிறவற்றைப்போல ஒரு தொழில். தொழில்களின் தலைவிதியை தொழிலாளர்கள் தீர்மானிப்பதல்ல பணமுதலீட்டார்கள் தீர்மானிக்கிறார்கள், பணம் தீர்மானிக்கிறது அது சார்ந்த கோட்பாடுகள் தீர்மானிக்கின்றன. முதலாளிய உற்பத்தி சமுதாயத்தில் இலாபத்தை அடைவதே குறிக்கோள் என்கிறபோது எல்லாதுறைகளையும் போலவே எழுத்துங்கூட தர்மம் அற்றுபோய்விட்டதென்கிற வருத்தம். புகழ் தரும் போதையும் சுகமும் எத்தனை பெரிய மனிதர்களையும் சிறுமைபடுத்தக்கூடியதுதான், துய்மாவும் மனிதர்தானே? இதுதான் எதார்த்தம் என்ற வியாக்கியானமும் வலுசேர்க்க துணையிருக்கிறபோது யாரை இங்கே குற்றஞ்சொல்ல முடியும்?

————————————————-

மொழிவது சுகம் -Sep 9

எழுத்தாளனும் சினிமாவின் கதா நாயகனும்

ஒரு சினிமாவைப் பார்த்து கதாநாயகனின் பிம்பத்தை மனதில் வரித்துகொள்ளும் கடைநிலை ரசிகனின் மனப்பான்மைக்கும், எழுத்தை வைத்து படைப்பாளியின் பிம்பத்தை கையிலெடுத்துக்கொண்டு ஒத்திட்டுப் பார்க்க வருகிற வாசகனுக்கும் அதிக பேதமில்லை என்பதென் எண்ணம்.

இருவருமே வெகுசன தளத்தில் இயங்குகிற ரசிகர்கள்தான். எழுத்தாளன் தமது புனைவுக்குள் கட்டமைக்கும் கதாநாயக விலாசத்திற்குள் நான் போகவிரும்பவில்லை. ஆனால் பொதுவாகவே எல்லாமனிதர்களுக்குள்ளும் அவரவர் அறிவின் வழிபட்டு -அந்த அறிவை எல்லாமுமாக – ஓர் absolu (முழுமை) இந்த முழுமையை ஓர் instant absolu எனவும் கொள்ளலாம், அத்தருணத்தில் ஒரு பொருள் பற்றிய வாய்த்திருக்கும் அறிவு அல்லது அனுபவம் பிறருக்கு தட்டையானதாக இருந்தாலும் – தான் அதில் முழுமைபெற்றிருப்பதாக உறுதிபடுத்திக்கொண்டே, அம்முழுமையின் நெகிழ்ச்சி த்தன்மைகள் (Elasticity) ) குறித்த பிரக்ஞையின்றியே அத்தருணத்தைத் தொடங்குகிறான். விவாதத்தில் இறங்கும்போதோ அல்லது எழுதிக்கொண்டு போகிறபோதுதான் நிஜவாழ்க்கையின் அவன் சந்தித்த மறுப்புகளுக்கு இடம் தேடவேண்டும், அவ்வகையில் அவனது போதாமைக்கு, இல்லாமைக்கு களிம்பு பூசவேண்டும், சஞ்சலத்திற்கு கற்பனையிலாவது விடுதலை வாங்கித் தரவேண்டுமென ஏங்குகிறான். இதைத்தான் தொடக்ககாலத்தில் நமது இதிகாசங்களும், புராணங்களும் செய்தன. திராவிடம் பேசிய எழுத்தாளர்களும், அடுத்துவந்த வெகு சன இலக்கியங்களும் இதைத்தான் செய்தன. தீவிர இலக்கியங்களில் அதன் விழுக்காடுகள் குறைவு எல்லோருமே ஏதோவொரு உன்னதத்தை கட்டமைக்க காய்கறி வியாபாரி தொடங்கி கா·ப்கா வரை அவரரவர் ஞானத்தின் வழி முயல்கிறார்கள். அறிவொளி இயக்கங்கள் பிரபஞ்ச நோக்குகள் பற்றி பேசியதும் இந்தப்பொருளில்தான். பின்னர் அவர்களிடையே பேதம் வந்தது. பிரெஞ்சு தத்துவவாதி பிளேஸ் பஸ்க்கால் (Blaise Pascale)கூறுவதை இங்கே நினைவு கூர்தல் தகும்: “மனிதர் கடமைத் தேர்வென்பது உண்மை சார்ந்ததல்ல, அவனது அகவயமான விருப்பத்தை பூர்த்திசெய்யும் தன்மை சார்ந்தது. அவனது அகவய தேர்வுக்கு எழுத்துவேறு வாழ்க்கை வேறு என்று இனம் பார்க்கத் தெரியும். தமது சொந்த கதையை சுயகதை –autofiction- என்ற பெயரில் எழுதுகிற்போதும் ஒளிவட்டத்தில் கூடுதல் கவனமெடுத்து எழுதும் எழுத்தாளர்கள் தான் மிக மிக அதிகம். எழுத்தினை வைத்து எழுத்தாளர்களின் அசலான பிம்பத்தை ஒருபோதும் நிறுவமுடியாதென்பதுதான் எனது கருத்தும். இப்படியெல்லாம் பிம்பத்தை வரித்துக்கொண்டு எழுத்தாளர்களை தேடிப்போகும் வாசகர்களைக் கண்டால் எனக்கு அனுதாபந்தான் பிறக்கிறது.

எழுத்தாளனும் ஒரு சராசாரி மனிதன் என்பதில் மாற்று கருத்திருக்க முடியாது. நீதிபதிகள் குற்றவாளிகளாக இருக்கமுடியாதென்பது விதியா என்ன?

உரையும் உரையாடலும்

உறவுக்கார நண்பரிடம் சென்னையில் ஒருமுறை பேசிக்கொண்டிருந்தபோது தெருவோர உணவகங்களைப்பற்றி பேச்சு வந்தது. அவர்கள் உபயோகிக்கும் எண்ணை மோட்டார் வாகனங்களில் உபயோகிக்கப்படும் lubricating oil என்றார். தெருவோர உணவகங்களில் கலப்பட எண்ணையை உபயோகிக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் மோட்டார் எந்திரங்களில் பிஸ்ட்டனின் உராய்வினை மட்டுப்படுத்துவதற்கென்று பயன்படும் எண்ணையை சமையலுக்குப் பயன்படுத்துவார்களா? அந்த எண்ணையின் அடர்த்தியென்ன சமையல் எண்ணையின் அடர்த்தியென்ன என்று யோசிக்க வேண்டியதில்லையா?

சிலர் இப்படித்தான் தடாலடியாக தங்கள் முடிவுகளைத் திணிப்பார்கள். அதை மற்றவர்கள் ஏற்கவேண்டுமென்றும் எதிர்பார்ப்பார்கள். இதுபோன்றதுதான் ‘செப்டம்பர் 11 இரட்டைக்கோபுர தாக்குதல் உண்மையல்ல’ என்று வாதிடுவதும்; ‘நிலவில் மனிதன் நடக்கவே இல்லை’, என்று வாதிடுவதும், இவர்களைக் கொஞ்சம் உட்காரவைத்து பேசிப்பாருங்கள், ‘இறைவனே அகத்தியரிடம் பேசினார்’, என்று சத்தியம் செய்வார்கள். இறைவன் அகத்தியரிடம் பேசினார் என்பதை நம்பத் தயாராயிருப்பவர் நிலவில் மனிதன் நடந்தான் என்பதை நம்பத் தயாரில்லை.

உண்மை, உண்டு, ஏற்பு, இணக்கம் போன்ற சொற்களை அறிந்த நமக்கு பொய், இல்லை மறுப்பு, முரண் போன்ற சொற்களை தெரியாமலிருக்க நியாயமில்லை. எதிரெதிர் அணியைச்சேர்ந்த இவ்விரு வார்த்தைக் குழுமத்தின் தயவுடனேயே நமது உரையாடல்களையும், கலந்துரையாடல்களையும், விவாதங்களையும் கட்டிஎழுப்புகிறோம். அவற்றின் அடிப்படையிலேயே ஒரு கருத்தியத்தை அல்லது முடிவை மிக ஆழமாகப் புரிந்துகொள்ளவும், வரையறுக்கவும், அதன் எதிர்காலத்தை தீர்மானிக்கவும் செய்கிறோம். அதேவேளை ஒரு கருத்தியத்தை அல்லது ஒரு முடிவை தீர்மானிக்கும் முன்பாக மேற்கண்ட உரையாடலோ, விவாதமோ இரு தரப்பினருக்கும் சமபலத்தையும், சமகாலத்தையும், சமவாய்ப்பினையும் வழங்கினாலன்றி உரையாடலின் முடிவில் ஒரு நேர்மையான முடிவினை எட்டுவது இயலாது. எங்கேனும் எதிர்வினை ஏதேனும் சில காரணங்களால் மறுக்கப்படுகிறதெனில் அங்கே வழங்கப்படும் நீதி, எடுக்கப்படும் முடிவு ஒரு பக்க சார்புடையதென்று பொருள்.

தகவல் தொழில் நுட்பம் பெருகியுள்ள இந்நாட்களில் திரும்பிய திசைகளிலெல்லாம் முடிவுகள் திணிக்கப்படுகின்றன. உரை (Discours) மட்டுமே நிகழ்த்தப்படுகின்றன, உரையாடல்களில்லை (Dialectique). நேருக்கு நேர் உரையாட இயலாதகட்டத்தில் ஒரு மூன்றாம் மனிதனை தேர்வு செய்து உங்கள் மறுப்பையோ, முரணையோ தெரிவியுங்கள்!என்றாவது எங்காவது ஒரு நேர்மையான முடிவினை அக்குறிப்பிட்ட கருத்தியம் ஒரு நாள் எட்டக்கூடும். இப்போதைக்கு அதுவொன்றுதான் வழி

——–

Annonce

Chers amis

Il y aura un évènement  culturel sur l’Inde pour deux jours  à Paris :

L’Inde vue par des écrivains, des traducteurs, des photographes et un cinéaste

les 16 et 17 septembre 2011
Centre Pompidou
Petite Salle, niveau-1 Paris

na. Krishna

http://www.centrepompidou.fr/Pompidou/Manifs.nsf/0/8FFDC63779BD8843C12578B00044C159?OpenDocument&sessionM=2.6.2&L=1&form=Actualite

 

பிரான்சை தெரிந்து கொள்ளுங்கள்-4

ஆணும் பெண்ணும் சமமென்பதை நாம் மறுப்பதில்லை. பிரான்சு நாட்டிலும் உலக மகளிர் தினம், பெண்ணுரிமை வாதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்; ஆனாலும்  அவரவர் அனுபவங்கள் வேறு:

ஓர் அலுவகத்தில் ஆணும் பெண்ணும் பதவியிலும், வாங்கு ஊதியத்திலும், பெறும் சலுகைகளிலும் சமமென்றே சட்டம் கருதினாலும், அதை முறைப்படுத்தினாலும் இருவேறு உலகங்களை அவர்கள் அலுவலக வாழ்க்கை ஏற்படுத்தித் தருவதாக ஒரு பிரெஞ்சு இதழ் தெரிவிக்கிறது:

எதிர்ப்படும் உங்களுக்கு அலுவலகத்தில் வணக்கம் தெரிவிக்க மறந்தால்:

ஆண் எனில்: அவனுக்கு இன்று ஏதோ பிரச்சினைகள்.

பெண் எனில்: அவளுக்குத் திமிறு

நிறுவனத்தின் இயக்குனரோடு ரெஸ்டாரெண்டில் சேர்ந்து சாப்பிடுகிறான் அல்லது சாப்பிடுகிறாள் என வைத்துக்கொள்ளுங்கள்

ஆணென்றால்: கூடிய சீக்கிரம் அவனுக்கு பதவி உயர்வு காத்திருக்கிறது

பெண்ணென்றால்: இயக்குனருக்கும் அவளுக்கும் ஏதோ கசமுசா

வேலையில் கறாராக இருப்பதாக வைத்துக்கொண்டால்

ஆணென்றால்: தனக்குள்ள அதிகாரத்தை பிரயோகித்தத் தெரிந்தவன்
பெண்ணென்றால்: என்ன இருந்தாலும் அந்தப்பொம்பிளைக்கு இத்தனை ஆர்பாட்டம் கூடாது

மேசை ஒழுங்கற்றிருந்தால்:

ஆணென்றால்: மேசையை ஒழுங்குபடுத்தக்கூட அவனுக்கு நேரமில்லை, ஓய்ச்சலின்றி வேலை

பெண்ணென்றால்: அவளுக்கு அலங்காரத்திற்கே நேரம் போதாது. மற்றதை எப்படி கவனிப்பது?

தினசரி வாசிப்பது

ஆணென்றால்: பங்குச்சந்தைப் புள்ளிவிவரங்களை அலசுகிறான் அல்லது நாட்டு நடப்புகள் துல்லியமாக தெரிந்துகொள்ள ஆர்வம்

பெண்ணென்றால்: சமையல் பக்கங்களை வாசிக்கிறாள் அல்லது. சீரியல்கள், சினிமாக்கள் ஒளிபரப்பு நேரங்களை தெரிந்துகொள்ள ஆர்வம்.

விரைவில் திருமணம்

ஆணென்றால்: குடும்பம் வாழ்க்கையென்று செட்டில் ஆக விருப்பம், நல்லதுதானே

பெண்ணென்றால்: ஆறுமாதத்தில் பிரசவ விடுமுறை கேட்டு விண்ணப்பம் செய்வாள்

மாலையில் அலுவலகத்தில் கூடுதலாக சில மணி நேரம் இருக்கவேண்டி இருக்கிறது

ஆணென்றால்: அவனுக்கு வேலையிலே அவ்வளவு அக்கறை
பெண்ணென்றால்: என்னவோ நடக்குது கேமரா வைக்கணும்

சக நண்பர்களுடன் கலகலப்பாக பேசினால்

ஆணென்றால்: சக ஊழியர்களுக்கிடையே சுமுகமான உறவு
பெண்ணென்றால்: ஊர்க்கதை நடக்கிறது

அலுவலக கடிதத்தில் நிறைய பிழைகள்
ஆனென்றால்: அவனுடைய பெண்செயலாளருக்குப் போதவே போதாது
பெண்ணென்றால்: அவளுக்கு தப்பின்றி பிரெஞ்சு எழுதவராது.

கூடுதலாக ஊதியம் கேட்பது

ஆணென்றால்: அவனுக்கு வேறு எங்கோ நல்ல வேலை கிடைப்பதற்கு சாத்தியங்கள் இருக்கவேண்டும்.
பெண்ணென்றால்: இப்போது அவள் வாங்குகிற சம்பளமே அதிகம்

அலுவல் விஷயமாக வெளிநாடு செல்லவேண்டும்

ஆணென்றால்: மனைவி பிள்ளைகளை விட்டு இப்படி அடிக்கடி பிரயாணம் செய்வது சிரமம்தான்
பெண்ணெனில்: இப்படி அடிக்கடி ஊர்மேயறாளே புருஷன் கண்டுகொள்வதில்லையா?

_________________________________

வாசிப்பும் நிராகரிப்பும்

வாசிப்பு என்பது வேறு வாசிப்பு அனுபவம் வேறு. எதைசெய்தாலும் சூழ்நிலைகளின் நிர்ப்பந்தகளின்றி ஈடுபாடுகொள்கிறபோதுதான் அக்காரியத்திற்கும் கருப்பொருளுக்கும் பெருமை கர்த்தாவுக்கும் மகிழ்ச்சி. வாசிப்புக்கும் இது பொருந்தும். பள்ளி கல்லூரி நாட்களில் தேர்வுக்காக ஒன்றை பாடத்திட்டங்களில் இருந்து தொலைக்கிறதேயென்று வாசிக்கவேண்டிய நிர்ப்பந்தமுண்டு. அதை விடுத்து வெளியில் வருகிறபோது அதாவது வளர்ந்து பெரியவர்களாகிறபோதும் அவற்றை வாசிக்க நமக்கு ஆர்வம் இருக்கிறதா என்ற கேள்வி முக்கியம். பொதுவில் பலருக்கும் மீண்டும் அவற்றை வாசிப்பதென்பது நிகழ்வதில்லை. சங்க இலக்கியங்களாயினும் சரி காப்பியங்களாக இருந்தாலும் சரி, நவீன படைப்புகளாக இருந்தாலும் சரி, ஏனைய பிறவாக இருந்தாலும் சரி அவ்விலக்கியங்கள் ஓர் ஈர்ப்பினை கொண்டிருந்தாலன்றி மறுவாசிப்புக்கு உட்படுவதில்லை. தமிழில் இவ்வளவு இலக்கியங்கள் குவிந்துள்ளபோதும் ஏன் ஒரு சிலவற்றை திரும்பத் திரும்ப ஆராதிக்கிறோம் என்ற கேள்வி எழுகிறது. கம்ப இராமயணமும், திருக்குறளும், சிலப்பதிகாரமும் பிறவற்றிடமிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?  திருவெம்பாவையைக் காட்டிலும் திருப்பாவையை போற்றுவதேன்? யோசிக்க வேண்டியிருக்கிறது.

வாசிப்பனுவம் என்பது வேறு: வழக்கறிஞர்கள் சட்டப்புத்தகங்களை பிரித்து பார்ப்பதுடனோ, அறிவியலறிஞர்கள் துறைசார்ந்த இதழ்களைப் புரட்டிப்பார்ப்பதுடனோ; பேராசிரியர்கள் வகுப்பில் பாடமெடுப்பதற்காகவென்றே கல்விக்கூட நூலகத்திற்குள் நுழைவதுடனோ அதனை ஒப்பிடமுடியாது.  இவைகளெல்லாம் ஏற்கனவே கூறியதைப்போன்று, பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தேர்வுக்காக வாசிக்கும் மனநிலைக்கு உரியவை. தளைகளின்றி வாசிக்க வேண்டும். நிர்ப்பந்தகளின்றி பக்கங்களை புரட்டவேண்டும். புத்தகத்தை கையிலெடுத்தேன் வாசித்து முடித்தேன் என்ற உந்துதலுடன் வாசிப்பு நிகழ்த்தப்படவேண்டும். உலகில் இன்று ஓகோவென்று கொண்டாடப்படும் இலக்கியங்கள் இச்சூத்திரத்திற்குள் ஒடுங்குபவைதான்.

வாசிப்பனுவமென்பது வாசகன், வாசிக்கப்படும் படைப்பென்ற இருவர் கூட்டணியால் உருவாவாது. அவர் சொன்னாரென்றோ, நல்ல விமர்சகர் எழுதினாரென்றோ, விற்பனையில் சாதனை படைத்தது என்பதற்காகவும் ஒரு நூலை உடனடியாக வாங்கிவிடலாம், எடுத்து ஒரு நாள் படிக்கவும் தொடங்கலாம் ஆனால் அதனை முடிப்பதென்கிற மன உந்துதலுக்கு இவை மட்டுமே காரணிகளாகிவிடமுடியாது. கையிலெடுத்த நூலை தொடர்ந்து வாசிப்பதற்கான விருப்பத்தை ஏற்படுத்தித் தரவேண்டிய பொறுப்பு படைப்புக்கு உண்டு.

என்னிடத்திலும் வாசிக்க ஆரம்பித்து முடிக்காத புனைவுகள் பல இருக்கின்றன. இக்காரணங்கள் உங்களுக்குப் பொருந்துமாவென்று தெரியாது. என்னை தொடர்ந்து வாசிக்கத் தூண்ட ஒருபடைப்பிற்கு கீழ்க்கண்ட குணங்கள் இருக்கவேண்டுமென நினைக்கிறேன். அல்லாதவற்றை நிராகரித்திருக்கிறேன், அல்லது அதற்கான மனநிலை வருகிறபோது வாசிக்கலாமென தள்ளிப்போடுகிறேன்:

1. சொல்லப்படும் கதையில் உயிர்ப்பு ஒருக்கவேண்டும். அது இறப்பை பற்றியதாக இருந்தாலுங்கூட.

2. சொல்லப்படும் நடை புதியதாக அதாவது பிரத்தியேகமாக இருக்கவேண்டும்.

3. தேவைக்கதிகமாக  அல்லது தேவையின்றி சிலவற்ற சிலாகித்து எழுதிக்கொண்டிருப்பது. உதாரணம் மலத்தைக்குறித்து பக்கம் பக்கமாக பேசுவது.
—-
4. படைப்பில் அரும் அத்தனை பாத்திரங்களிலும் ஆசிரியர் கூடுபாய்வது தப்பில்லை. ஆனால் அவ்வளவுபேரின் பேச்சிலும் புத்திஜீவியென்கிற ஆசிரியனின் நினைப்பும் உடன் கூடுபாய்ந்திருக்குமானால் ஆபத்து.

5. நூலாசிரியர் தமது முடிவுகளையும் நம்பிக்கைகளையும் ஒற்றைக்குரலில் வாசகர்களிடம் திணிப்பது. காந்தியத்தின் மீது நம்பிக்கை இல்லை, கம்யூனிஸத்தின் மீது நம்பிக்கை இல்லை. தாராளமாக அவர் கட்டுரைகள் எழுதட்டும். பத்தி எழுதட்டும். ஆனால் ஒரு புனைவில் பக்கங்கள் தோறும் எழுதிக்கொண்டிருந்தால் தூக்கிப்போட்டுவிட்டு எழுந்திடுவேன்.

——

மோனாலிஸா திருட்டும் ஒரு கவிஞனின் கைதும்


காந்தி மட்டுமல்ல காந்தியை கொன்ற கோட்சேவும் வரலாறில் இடம் பெறுகிறான். பேசப்படுகிறான். சர்வாதிகாரிகளும் வரலாற்றில் வருகிறார்கள் ஜனநாயகவாதிகளும் வரலாற்றில் பேசப்படுகிறார்கள். திருடர்களும் பேசப்படுகிறார்கள் உத்தமர்களும் பேசப்படுகிறார்கள். யுகங்கள் தோறும் புழுக்கள்போல பூச்சிகள்போல விலங்குகள்போல பறவைகள் போல கண்டங்கள் தோறும் மனிதர்கள் பிறக்கிறார்கள் இறக்கிறார்கள். நூறு குடும்பங்கள் இருக்கிற கிராமத்தில் ஒன்றிரண்டு குடும்பங்களைச் சுற்றி அக் குடும்பங்களைச் சேர்ந்த ஒன்றிரண்டு ஆண்களைச்சுற்றி அவர்கள் வீட்டுப் பெண்களைச்சுற்றிய பேச்சாக கிராமத்து வாழ்க்கை ஒருகாலத்தில் இருந்தது: நல்லதும் கெட்டதும், அடிதடியும் பஞ்சாயத்தும், திருவிழாவும் தேரும் அப்பெரிய குடுபத்தின் பேச்சை- மறுபேச்சைக்கொண்டே இயங்கும்.  குடிப்பிள்ளைகளோடு மிராசுகள் வலம் வந்தார்கள். அக்கிராமத்தை பொறுத்தவரை மிராசுதான் நாயகன். ஊர்மக்களின் தினசரியில் அவர்களதுபேச்சில் அப்பெரிய மனிதரின் (அவர் நல்லவரென்ற பொருளுக்கு அக்காலத்திலும் உத்தரவாதமில்லை) இருப்பை விலக்கி அவர்கள் உரையாடமுடியாது.

கிராமத்தைக்கடந்த நகரத்திற்கும், நகரத்தை முன்வைத்து இயங்கிய அரசாங்கத்திற்கும் மைய உரையாடலாக முடியாட்சியில் மன்னர்கள் இருந்தார்கள். முடியாட்சியில் மனித குலத்தின் இயக்கம் இயற்கையைக் காட்டிலும் மன்னர்களைச் சார்ந்ததென்று கற்பிதம் செய்யப்பட்டதால் அரசர்களின் வரலாறே நமது அரசியல் வரலாறாகவும் மாறிற்று. அவர்களின் கமறலும் தும்மலுங்கூட இலக்கியங்களாயின. பரிசிலுக்காக எழுதப்பட்ட இலக்கியங்கள் வரலாறுகளாக திரிக்கப்பட்டன, மன்னர்கள் வரலாறானார்கள். காலம் மாறியது மக்களாட்சி என்றார்கள், தொழிலாளர் புரட்சி என்றார்கள். உலகில் பெரும்பாலான நாடுகளில் மன்னர் ஆட்சிமுறை இன்றில்லை. ஜனநாயகம் பிறந்தது. நீங்களும் நானும் நாளை கிரீடம் சூட்டிக்கொள்ளளாம் ஜனநாயகம் அப்படித்தான் சொல்கிறது. பரம்பரை வரலாற்றை எழுதிய மன்னர்களையும் சக்கரவர்த்திகளையும் ஜமீன்களையும், பிரபுக்களையும் குடியரசு அமைப்புமுறை புரட்டிபோட்டது. இங்கேயும் பேச்சுதான் தலைப்பொருள்: முடியாட்சியின் வரலாறு மன்னரைப் பற்றிய மற்றவர்கள் பேச்சால் தீர்மானிக்கப்பட்டதெனில் ஜனநாயகத்தின் வரலாறு ஆளுகின்றவனின் பேச்சால் தீர்மானிக்கப்படுகிறது. எவன் ஒருவன் பெரும் திரளான கூட்டத்தை தன்பக்கம் திருப்பும் வல்லமை பெற்றிருக்கிறானோ அவன் தலமை ஏற்கிறான். பிறகாரணிகளைக்காட்டிலும் இப்பேச்சு அவன் வரலாற்றையும் அரசியல் வரலாற்றையும் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுக்கிறது. இன்று ஜனநாயகத்திற்கும் சவால் விடும்வகையில் தகவல் தொழில் நுட்பங்கள் என்றதொரு சக்தி வரலாற்றில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. பேச்சினை தொடங்கிவைக்கவும் மறுபேச்சுக்கு வாய்ப்பளித்தும் முடிவற்ற உரையாடலை நடத்தியும் மனித குலத்தை வழிநடத்திகொண்டு இருக்கின்றன. நீங்களும் நானுங்கூட உலக நாயகனென்றோ சூப்பர் ஸ்டார் என்றோ, உலகத்தமிழர்களின் ஒரே தலைவனென்றோ நமது பேச்சை கொட்டாம் பட்டியிலிருந்தபடியும் பதிவு செய்யலாம், ஹ¥ஸ்டனிலிருந்தும் பதிவுசெய்யலாம். அது பற்றிய விவாதத்தைத் தொடங்கலாம் அல்லது தொடங்காமல் விடலாம். ஒரு கணப்பொழுதில் நீங்களும் நானுங்கூட மீடியாக்கள் மனது வைத்தால் வரலாற்றில் சில பக்கங்களை நிரப்பலாம் என்பதுதான் இன்றைய வரலாற்றில் ஏற்பட்டுள்ள திருப்பம்.

இச்சம்பவம் நடந்து ஒரு நூற்றாண்டு முடிந்திருக்கிறது. அச்சம்பவதைப்பற்றிய மறுபேச்சில் மும்முரமாக பிரெஞ்சு தினசரிகள் இறங்கியிருக்கின்றன. ஒரு சராசரி மனிதனின் அசாதாரண செயலை எப்படி வரலாறாக செய்திகள் கட்டமைக்கின்றன என்பதற்கு இதோர் நல்ல உதாரணம்.

1911ம் ஆண்டு ஆகஸ்டுமாதம் 21ந்தேதி. ஒரு திங்கட்கிழமை காலை 7 மணி. மோனாலிஸா பாரீஸ் லூவ்ரு அருங்காட்சியகத்தில் திருடுபோனது. அதாவது கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு. Vincenzo Perruggia பிறப்பால் இத்தாலி நாட்டைச்சேர்ந்தவன். வயது 30. பிரான்சு நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் ஒரு தொழிலாளி. சுவருக்கு வெள்ளை அடிப்பது தொழில். லூவ்ரு அருங்காட்சியகத்திற்குள் நுழைகிறான். அவன்   தேர்ந்தெடுத்த வாயில் பார்வையாளர்கள் நுழைவாயிலல்ல, சேன் நதி பக்கம் சுமைவாகனங்களின்   உபயோகத்திற்கென்றிருந்த வாயில். அவனுக்கு அவ்விடம் புதியதல்ல. எப்படி போகவேண்டும் எங்கே போகவேண்டும் என்று நன்குதெரியும். சம்பவம் நடப்பதற்கு முந்தைய வருடம் அப்புகழ்பெற்ற ஓவியத்திற்கு வெகு அண்மையில் அவன் வேலைசெய்யவேண்டியிருந்தது. அப்போதே ஓவியந்த்திற்காக வாய்பிளந்து நிற்கும் கூட்டத்தைக் கண்டு பிரம்மித்திருந்தான்.

‘Une Femme disparaît’ (ஒரு பெண்மணி காணாமற்போகிறாள்) என்ற நூலாசிரியரும் பிரெஞ்சு பத்திரிகையுலகத்தைச் சேர்ந்தவருமான ஜெரோம் குவாஞ்ஞார், “Perruggia ஓவியம் சுவரில் எவ்வாறு பொறுத்தப்பட்டுள்ளதென்பதை நன்றாகவே அறிவான்”, என்கிறார். ஆம்.. ஒரு சில நொடிகளில் அந்த ஓவியம் திருடப்பட்டது. நான்காண்டுகாலத்தை அதற்குத்தந்து (1502-1506) டாவின்சியென்ற இத்தாலியரால் எழுதப்பட்ட அப்புகழ்பெற்ற ஓவியத்தை திருடியவன், இறங்கும்போது படிகட்டுகளின் கீழ் ஒரு மறைவிடத்தைக் கண்டான். அங்கேயே ஓவியத்தை சுற்றியிருந்த சட்டங்களை கவனமாக அகற்றினான். பின்னர் அதனைச் சுருட்டி தனது மேலங்கியில் மறைத்து அதிகம் அலட்டிக்கொள்ளாமல் வெளியிற் கொண்டு வந்தான்.

மறுநாள்காலை இரண்டு ஓவியர்கள் அருங்காட்சியகத்திற்கு திருடுபோன ஓவியத்தைப் பார்த்து வரைவதற்கென வந்திருக்கிறார்கள். ஓவியமிருந்த இடத்தில் இருந்தற்கான சுவடுகள் மட்டுமே இருந்தன, நிர்வாகிகள் எதற்கேனும் கொண்டுபோயிருப்பார்களோ? என நினைத்தார்கள். காத்திருந்தார்கள். நேரங்கூடக் கூட பொறுமை இழந்தார்கள். நிர்வாகிகளிடம் முறையிட்டார்கள், இதற்கிடையில் ஓவியத்தின் சட்டங்களை கண்டெடுத்ததாக செய்தி. இப்போது நிர்வாகத்திற்கு பிரச்சினையின் விஸ்வரூபம் தெளிவாயிற்று. பாரீஸ் காவல்துறையின் தலமை அதிகாரி பிரச்சினையை நேரிடையாகக் கையாண்டார். உடனடியாக அருங்காட்சியகத்தின் வாயில்கள் அடைக்கப்பட்டு பார்வையாளர்கள் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பிரெஞ்சு பத்திரிகை உலகிற்கு  மெல்லுவதற்கு அவல் கிடைத்திருந்தது. அருங்காட்சியகத்தின் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுந்தன. பாராளுமன்றத்தில் கேள்வி- சம்பந்தப்பட்ட அமைச்சரின் வழக்கமான பதில். முடிவில் அருங்காட்சியகத்தின் இயக்குனரை பதவியிலிருந்து நீக்கினார்கள். இத்தனைக்கும்  அவர் ஒரு வருடத்திற்கு முன்பே அருங்காட்சியகத்தின் பாதுகாப்பை நவீனப்படுத்தவேண்டும், காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும் என்றெல்லாம் தமது துறைக்கு எழுதியிருந்தார். எல்லா நாட்டிலும் சிதம்பரங்கள் உண்டு. பிரான்சிலும் அன்றைக்கு ஒருவர் இருந்திருக்கிறார். அருங்காட்சியகத்தின் இயக்குனரை தண்டித்த கையோடு பாதுகாப்பு கோரிக்கையை தூசுதட்டி பரிசீலித்தார்கள்.

உலகின் முதல் தடவியல் துறை சோதனைக்கூடத்தை உருவாக்கிய அல்போன்ஸ் பெர்த்திய்யோன் என்பவரிடம் புலன்விசாரணை பொறுப்பை ஒப்படைத்தார்கள் அவர் ஓவியத்தின் சட்டத்திலிருந்து குற்றவாளியின் இடதுகை பெருவிரலை எடுத்திருந்தார். அப் பெருவிரல் ரேகையை அருங்காட்சியகத்திலிருந்த பதிவேடுகளில் ஒப்பிட்டுப்பார்க்க தவறினார். அங்கு வேலைசெய்யவரும் தொழி¡ளர்களின் கைவிரல்ரேகையையும் பதிவு செய்வது வழக்கம். இது வெளி ஆட்கள் வேலையாக இருக்கலாமென்ற கணிப்பில் அதனைச் செய்யத் தவறிவிட்டார். காவல் துறை ஓவியத்தை திருடினவன் தனியொருவனல்லவென்றும் பன்னாட்டு திருட்டுக்கூட்டமொன்று பின்னணியில் இருக்ககூடுமென்றும் நம்பியது.

இதில் வேடிக்கை என்னவெனில் புகழ் பெற்ற பிரெஞ்சுக்கவிஞரான கியோம் அப்போலினேரை அவ்வழக்கில் சந்தேகித்தார்கள். அதற்குக் காரணமுமிருந்தது. இத்திருட்டு நடப்பதற்கு இரண்டுவருடங்களுக்கு (1907) முன்பு அவருடைய பெல்ஜிய கூட்டாளியொருவன் லூவ்ரிலிருந்து சிலைகளைத் திருடிக்கொண்டுபோய் பிக்காஸோவிடம் கொடுத்திருக்கிறான், அவற்றினை ஆதாரமாக வைத்து சில ஓவியங்களையும் பிக்காஸோ வரைந்திருக்கிறார். போலீஸ் பிடி அப்போது இறுகவே, அப்போலினேர் பிக்காஸோவிடம், சிலைகளைத் திருப்பி கொடுத்தால் தண்னடனையிலிருந்து தாம் மீளமுடியுமென வற்புறுத்த பிக்காஸோ சிலைகளிரண்டையும் அப்போது பாரீஸில் புகழ்பெற்றிருந்த Le Petit journal என்ற தினசரியின் அலுவலகத்தில் ரகசியமாக ஒப்படைக்க பின்னர் காவல்துறை கைப்பற்றி  அருங்காட்சியகத்திடம் கொடுத்ததென்பது பழைய செய்தி. இதுபற்றிய தகவலை அப்போது தினசரி ரகசியமாக வைத்திருந்ததாம். எனவே மோனாலிசா திருட்டின்போதும் அப்போலினேர் கைது செய்யப்பட்டார். எட்டு நாட்கள் சிறையில் வைத்திருந்து பின்னர் விடுதலை செய்தனர்.

இரண்டு ஆண்டுகள் ஓவியத்தை Peruggia  பாரீஸிலுள்ள தமது குடியிருப்பில் மறைத்து வைத்திருந்தான், அதன் பின்னர் இத்தாலி நாட்டிலுள்ள அரும்பொருள் வியாபாரிகளுக்கு எழுதிய கடிதத்தில் ‘தம்மிடம் இத்தாலி நாட்டிற்குச் சொந்தமான தேசிய மதிப்புவாய்ந்த பொருளொன்று இருப்பதாகவும், தகுந்த விலைக்கு விற்க தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கிறான்.

1913ம் ஆண்டு டிசம்பர்மாதம்,  அல்பிரெடோ கெரி என்கிற இத்தாலிய வியாபாரி  Peruggia வை ஓவியத்துடன் பிளாரன்ஸ¤க்கு வரும்படி கேட்டுக்கொள்கிறார் வரும்போதே வியாபாரி இத்தாலி நாட்டு அருங்கலைத்துறை இயக்குனரையும் உடன் அழைத்து போகிறார்.  திருடப்பட்ட ஓவியத்தைப் பார்த்ததும் அவர்கள் நம்பிக்கை வீண்போகவில்லை பாரீஸில் திருடுபோன ஓவியமென்று புரிந்தது. Peruggia கைது செய்யப்படுகிறான். இத்தாலி நாட்டில் விசாரணை நடக்கிறது. தேசப்பற்றுகாரணமாக திருடினேன் என அவன் கூறியிருந்தான். அதாவது இத்தாலி நாட்டுக்குச் சொந்தமான பொருளை பிரான்சுநாட்டின் அருங்காட்சியகத்தில் பார்க்க அவனுக்கு விருப்பமில்லை. விசாரணையின் முடிவில்  குற்றவாளிக்கு ஓர் ஆண்டு பதினைந்து நாட்கள் சிறை விதித்து தீர்ப்பாகிறது பின்னர் அதுவும் ஏழுமாத சிறைதண்டனையாகக்குறைந்தது. ஆகத் தேசப்பற்றுடன் திருடலாம். குற்றவாளியை விசாரித்த உளவியல் அறிஞர்கள் அவனிடம் சராசரி மனிதனுக்குள்ள குணங்களே இருந்தன முரண்களில்லை என்றார்கள். இப்பிரச்சினையை அடிப்படையாகக்கொண்டு புலன் விசாரணை செய்து எழுதப்பட்ட நூல் சம்பவத்தின் பின்புலத்தில் அப்போது ஜெர்மன் இருந்ததாகக் குற்றம் சாட்டுகிறது.

மோனாலிஸா இத்தாலி நாட்டுக்குச் சொந்தமான ஓவியமென்றாலும். மறுமலர்ச்சி காலத்தில் முதலாம் பிரான்சுவா என்கிற பிரெஞ்சு மன்னனிடம் அதை வரைந்த டாவின்சி விற்றிருந்தார். எனவே மீண்டும் ஓவியம் உடையவர்களிடம் சேர்ப்பிக்கப்பட்டது.

—-

மனுநீதிச் சோழனும் மரண தண்டனையும்

சிரமறுத்தல் வேந்தருக்கு பொழுதுபோக்கு மற்றவர்க்கோ உயிரின் வாதை” என்பது பாரதிதாசனின் வரி. இன்றைக்கு வேந்தர்களில்லை, அவர்களிடத்தில் தலிபான்கள், பேட்டை ரவுடிகள் அவர்களின் புரவலர்களான அரசியல்வாதிகள் போக சிந்தனையிலும் பண்பாட்டிலும் வளர்ந்துள்ளதாக நம்பப்படும் நவீன உலகில் சில அரசாங்கங்களையும் சேர்த்துக்கொள்ளலாம். கொலைக்களத்திற்கு அழைத்துபோகப்படுபவர்கள் அனைவருமே குற்றவாளிகள் அல்ல. தவிர தண்டனையென்பது குற்றவாளிக்கான நீதிசார்ந்தது அல்ல தண்டனை வழங்குபவருக்கான நீதிசார்ந்தது. பல நேரங்களில் செய்த குற்றத்தைவிட செய்தவன் யார் என்ற அடிப்படையில் நீதி வழங்கப்படுகிறது. வாள்பிடித்தவன் நீதிபதி, எதிராளி ஆடு. நான்காண்டுகளுக்கொரு முறை மரண தண்டனை எதிர்ப்பாளர்கள் மாநாடு கூட்டப்படுகின்றது. முதல் மாநாடு 2001ல் பிரான்சு நாட்டில் ஸ்ட்றாஸ்பூர் நகரில் கூடியது. அடுத்த மாநாட்டினை கனடாவில் மோரியால் நகரில் கூட்டினர். மூன்றாவது மாநாடு மீண்டும் பிரான்சு நாட்டில் பாரீஸ் நகரில் கூடியது. இப்போது நான்காம் முறையாக இம்மாதம் (பிப்ரவரி 24,25,26) சுவிஸ் நாட்டில் ஜெனிவா நகரில் கூடியுள்ளது. கடந்த முறை பிரான்சு நாட்டின் அப்போதைய அதிபர் சிராக்கின் ஆதரவுடன் கூட்டப்பட்ட மாநாட்டில் உலகெங்குமிருந்து சுமார் ஆயிரம்பேர் அரசு மற்றும் அரசுசாரா அமைப்பு நிறுவனங்கள் சார்பில் கலந்து கொண்டதாகச் சொல்லப்படுகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நாட்டின் செயல்பாடுகளை, அரசியல்களை தீர்மானிக்கவல்ல சூத்ரதாரிகளை மாநாட்டில் பங்கெடுக்கச் சொல்வதன்மூலம் அந்நாடுகளின் அரசியற் சட்டங்களிலிருந்து மரணதண்டனையை ஒழிக்க இயலுமென சமூக ஆர்வலர்கள் நினைக்கிறார்கள்.

அமெரிக்கா, சீனா, ஈரான் ஆகிய மூன்று நாடுகளுக்குள்ளும் அரசியல்சட்டத்தின் உதவியோடு நடத்தும் சிரமறுத்தலில் ஒற்றுமை இருக்கிறது. உலகில் குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் கீழ் 98 விழுக்காடு மரண தண்டனைகளை இம்மூன்று நாடுகளும் நிறைவேற்றுகின்றன. ஜனநாயகத்தைப் பேணுவதாக நம்பப்படும் அமெரிக்காவில் வெள்ளையரை காட்டிலும் பிறருக்கு(அவர் கறுப்பரோ ஆசியரோ) மரணத் தண்டனை விதிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம். அமெரிக்காவில் குற்றவாளிகளாகக் கருதி தீர்ப்பு வழங்கப்பட்டவர்களில் ஏழு சதவீதத்தினர் மறு விசாரணையில் அப்பாவிகளென தெரியவந்திருக்கிறது. மீதமுள்ள 93 சதவீதத்தினரில் 20 சதவீதத்தினரே மரண தண்டனைக்குறிய குற்றவிதிகளுக்குப் பொருந்துகிறார்கள் எனப்பார்க்கிறபோது இப்பிரச்சினையிலுள்ள விபரீதம் தெரியவரும். மனிதகுல பிரச்சினைகளுக்கு மார்க்ஸியமே தீர்வு என்று நம்பியகாலங்களிலும் சரி இன்றைக்குப் படுத்த படுக்கையிலிருக்கும் மார்க்ஸியத்தைத் தேற்ற, தனியுடமையை ஔடதமாக ஊட்டுகிற நவீன சோஷலிஸ சீனர்களுக்குஞ் சரி சுதந்திரம் என்ற சொல் கொடுங்கனவு. மார்க்ஸிய தோழர்களான சீனர்களின் சிந்தனையில் இன்று சிவப்பில்லை, மாறாக கைகள் என்றும்போல சிவப்பானவை. உயிரைக் குடித்து சிவந்தவை, மரண தண்டனை விதிப்பதில் ஆர்வம் அதிகம். அரசாங்கத் தரப்பில் வருடத்திற்கு ஆயிரமென்று நேர்த்திக்கடன் செலுத்துவதாகத் தெரிகிறது. இணைய தளங்களில் உள்ள தகவல்கள் வருடத்திற்கு 7000மென்று தெரிவிக்கின்றன. சீனர்களை அறிந்தவர்களுக்கு இந்த எண்ணிக்கை வேறுபாட்டில் வியப்புகளில்லை. ஈரான் நாட்டிலும் ஆண்டு தோறும் 300லிருந்தோ 400பேர்கள்வரை  கல்லால் அடித்தோ, தூக்கிலிடப்பட்டோ கொல்லப்படுகிறார்களெனச் சொல்லப்படுகிறது. பத்தொன்பது வயது, பதினாறு வயதென்றுள்ள பெண்கள்கூட பாலியல் குற்றச்சாட்டின்பேரில் கொல்லப்படுகிறார்கள். இங்கும் உத்தியோகபூர்வமாக தெரிவிக்கப்படும் எண்ணிக்கைக்கும் உலக மனிதர் ஆணையம் வெளியிடும் தகவல்களுக்கும் மலைக்கு மடுவுக்குமான பேதங்கள் உள்ளன. சிறுவயதினரின் தவறுகளுக்கு மரணதண்டனையை தீர்ப்பாக வழங்கிய பின்னர் தண்டனையை நிறைவேற்ற பதினெட்டுவயது ஆகவேண்டுமென மரனத்தின் வாசலில் அவர்களை நிறுத்திவைப்பது ஆகக் கொடுமை. அண்மையில் எதிர்கட்சி ஆதரவாளர்கள் பலருக்கு ஈரான அரசாங்கம் தூக்குத் தண்டனை வழங்கியது. பொதுவாக மரணதண்டனைக்கான குற்றச்சாட்டுகளில் நியாயமிருப்பதுபோல தோற்றம் உருவாக்கப்பட்டிருப்பினும், கணிசமான வழக்குகளில் உண்மைக்கு எவ்வித உத்தரவாதமுமில்லை. அமெரிக்க நாட்டில் மரணதண்டனைக்கான வாய்ப்பு கறுப்பரினத்திற்கு அதிகம் அவ்வாறே ஈரானிலும், சீனாவிலும் ஆட்சியாளர்களை விமர்சிப்பவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் அல்லது விஷ ஊசியால் சாகடிக்கப்படுவார்களென்பதும் உண்மை. ஈரானிலும் சீனாவிலும் குற்றவாளிகள் தங்கள் தரப்பு நியாயங்களைச் சொல்லக்கூட அனுமதிக்கபடுவதில்லை, வழக்கறிஞர்கள் உதவிக¨ளையெல்லாம் அவர்கள் கேட்டு பெறமுடியாது.

கடந்த காலங்களில் பிரெஞ்சுப் புரட்சி அரசியல் எதிரிகளின் தலைகளை கொய்திருக்கிறது. தொடர்கொலைகள் புரிந்தவர்கள் மாத்திரமல்ல குற்றமற்ற அப்பாவிகளையும் கொன்றிருக்கிறார்கள். இதை அடிப்படையாகக்கொண்டு பல நாவல்களும் புனைவுகளும் பிரெஞ்சு மொழியில் வந்திருக்கின்றன. அந்நியன் கதைநாயகன் தமது நண்பனுக்கு உதவப்போய், மரணத்தண்டனை பெறுவான். இன்றைக்குப் பிரான்சு நாட்டின் நிலைமை வேறு, மரண தண்டனையை 1981லிருந்து முற்றாக ஒழித்திருக்கிறார்கள். இந்தியாவில் மரண தண்டனைகள் அதிகம் விதிக்கப்படுவதில்லை மிக அரிதாகத்தான் நிறைவேற்றபடுகின்றன எனக்கூறியபோதிலும் அப்பணியைச் சமூக குற்றவாளிகளும் காவல் துறையினரும் செய்வது பலரும் அறிந்த செய்தி.ஒருமுறை இந்தியாவிற்கு பிரெஞ்சு நண்பர் ஒருவருடன் வந்திருந்தேன். வழக்கறிஞராக இருந்த ஒரு நண்பரைத் தேடி சென்னை உயர் நீதிமன்றத்திற்குச் சென்றோம். அங்கிருந்த மனுநீதிச் சோழன் சிலை குறித்து விசாரிக்க, நீதி விஷயத்தில் சோழனுக்கென்று புனைந்தோதப்பட்ட நேர்மையை விளக்கிக் கூறினேன். நண்பர் சிரித்தார். இருபது ஆண்டுகால நண்பர், நானிருக்கும் நகரில் ஒவ்வொரு மாதமும் கடைசி வியாழக்கிழமைகூடும் தத்துவவாதிகளின் உரையைக் கேட்க அவரும் வருவார், அப்படித்தான் எங்கள் நட்பு வளர்ந்தது. இப்போது மரணதண்டனை எதிர்ப்பாளர்கள் அணியில் தீவிர உறுப்பினர். கன்றிற்காக சோழன் தனது மகனைக் கொன்ற கதையின் தீர்ப்பில் உடன்பாடில்லை என்பதுபோல அல்பெர் கமுய் வார்த்தையில் அதை Absurdism என வர்ணித்தார். எங்கள் தமிழர் வாழ்க்கை இது போன்ற கற்பனை குறியீடுகளால் ஆனதென்ற உண்மையை சொல்ல வெட்கப்பட்டு எனக்கும் சிரித்து மழுப்பவேண்டியிருந்தது.

——————————————————–

மொழிவது சுகம் – கட்டுரை தொகுப்பிலிருந்து

அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் சென்னை -11 பதிப்பில் விரைவில் வெளிவர உள்ளது

பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்-3

ஷாம்பெய்ன்: ஆங்கிலத்தில் ஷாம்பெய்ன் எனசொல்லப்படும் வார்த்தை பிரெஞ்சிலிருந்து வந்தது ஆனால் அதை பிரெஞ்சில் ஷம்ப்பாஞ்ன் என்று சொல்லவேண்டும். பிறந்த நாள் கொண்டாட்டமா, பரிட்சையில் பாஸா? பெரும் பண்டிகையா? விளையாட்டில் வெற்றியா? தேர்தலில் டெப்பாசிட்டாவது தேறியதா? லாட்டரி சீட்டில் ஒரு மில்லியன் டாலர் விழுந்ததா? காதலித்த பெண் எனக்கு நல்ல மாபிள்ளை வாச்சிருக்கார், மறக்காம ரிசப்ஷனுக்கு வந்திடுங்கோ என்கிறாளா? தூங்கு தண்டனை தற்காலிகமாக ரத்தா? எல்லா சந்தோஷத்துக்கும் கொண்டாவென்று இருக்கும் ஒரே பானம் champagne.

இந்த champagne என்ற சொல்லை Champagne என்று எழுதினால் கவனியுங்கள்- ‘c’ க்குப் பதிலாக ‘C’ என்று எழுதியிருக்கிறேன். – அது பிரான்சு நாட்டின் வடகிழக்குப் பகுதியைச்சேர்ந்த பிரதேசம். அப்பிரதேசத்தின் முழுப்பெயர் Champagne-Ardenne. இந்த Champagne பிரதேசத்தில் தயாரிக்கப்படும் மதுபானமே champagne. பிரான்சுக்கு வந்தால் இப்பிரதேசத்திற்கு போய்வாருங்கள். அங்குள்ள vignoble எனப்படும் திராட்சைத் தோட்டங்களில் எப்படி ஒயினை ருசித்துப்பார்க்க அதன் தயாரிப்பாளர்கள் அனுமதிக்கிறார்களோ அதுபோலவே Champagne பிரதேசத்தில் அத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள் champagneஐ ருசித்துப்பார்க்க அனுமதி அளிக்கிறார்கள். அச்சடங்கிற்கு Dégustation என்று பெயர், நம்ம ஊரில் அல்வா கடைகளில் வாயில் போட்டுப்பாருங்கள் என்று கொடுப்பதில்லையா? அதுபோல.

ஷாம்பெய்னும் உண்மையில் ஒருவகை ஒயின் ஆகும். அதாவது Le Vin Péstillant என்பார்கள் ஆங்கிலத்தில் The Sparkling wine, தமிழில் காஸ் ஒயின் – சோடா ஒயினென்றும் சொல்லலாம். ஏற்கனவே கூறியபடி Champagne பிரதேச champagne தாயாரிப்பாளர்களுக்கு மட்டுமே அப்பெயரை வைத்துக்கொள்ள உரிமையுண்டு, பிரான்சிலே கூட வேறு பிரதேசங்களில் தயாரிக்கப்படும் அதே வகை தயாரிப்புகளுக்கு அப்பெயரை வைக்க உரிமையில்லை. எனவே மற்ற பிரதேசத்துக்கார்கள் உதாரணம் எங்கள் பகுதியில் (Alsace) Vin mousseaux எனக்கூறி விற்கவேண்டியிருக்கிறது. இதர ஐரோப்பிய நாடுகளிங்கூட இதுதான் நிலமை ஸ்பெயின் நாட்டினர் தங்கள் தயாரிப்பினை cave என்கின்றனர். இத்தாலி நாட்டினருக்கு Prosecco, ஜெர்மனுக்கு Sekt. ஐரோப்பியர்கள் என்றில்லை உலகில் எந்த நாடும் champagne என்ற பெயரில் விற்பனை செய்யக்கூடாது. ஆஸ்திரேலியாவில் Australian sparlking wine என விற்பனை செய்வதாக சொல்லப்படுகிறது. எத்தனை பெயர்கள் இருந்தபோதும் உலகில் ஷாம்பெய்ன் என்ற வார்த்தையின் வியாபார மகத்துவத்தை பலரும் அறிவர். எனவே அப்பெயரைத் திருட்டுத்தனமாக உபயோகிப்பதும் உலகில் நடக்கிறது அப்படி யாராவது வியாபாரம் செய்வதை தகுந்த ஆதாரங்களுடன் தெரிவித்தால் Champagne பிரதேச champagne தயாரிப்பாளர் கூட்டுறவு அமைப்பு உங்களுக்குத் தகுந்த வெகுமதியைத் தரும்.

கடைசியாக ஒரு புதிர்: பிரான்சிலுங்கூட ஒயின் இல்லாத வீடொன்று உண்டு, அது யார் வீடு தெரியுமா? விடைதெரியாதர்கள் நண்பர் காலச்சுவடு கண்ணனைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.