இலங்குநூல் செயல் வலர் – க.பஞ்சாங்கம்-11

panchuபேச்சும், பனுவல் வாசித்தலும்

 

உயிரியக்கம் ஓசையால் உறவாடுகிறது. புலன் உணர்வுகளின் வெளிப்பாடுகள் அனைத்துமே ஒருவகையில் பேச்சின் உட்பிரிவுகள்தாம். நமது பார்வைக்கும் உறவுக்கும் ஓசையும் மொழியும் தரும் உருமாற்றம் ‘பேச்சு’. மொழியைக் குழைத்தும் பிசைந்தும் கிடைக்கிற பேச்சுக்கு இலக்கியம் ஓர் நிரந்தர பிம்பத்தை ஏற்படுத்தித் தருகிறது பேச்சு செயல்பட சில அத்தியாவசியப் பொருட்கள் தேவை.ஓசை, உச்சரிப்பு, தொனி, கால பிரமாணம், பேசுபவர் கேட்பவர் இருவருக்குமிடையேயான உறவு, பேச்சில் தொடர்புடைய இரு மனிதர்களின் தகுதரம், இடங்கள் (உதாரணத்திற்கு நேருக்கு நேரா, ஆளுக்கொரு திசையில் இருந்துகொண்டா?) பேச்சுக்கு பேசுகின்ற நபரின் தேவை எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அள்விற்கு கேட்பவர் என்று ஒருவர் வேண்டும் இல்லையேல் அப்பேச்சால் எவ்வித பயனுமில்லை. நட்போ பகையோ இரண்டிற்கும் பேச்சு வேண்டும். எண்ணத்தை ஓசையுடன் பகிர்ந்து கொள்ள பேச்சு உதவும், அதே எண்ணத்தை மௌனமாக பகிர்ந்துகொள்ள எழுத்து உதவும். பேச்சு மொழி கேட்கும் தருணத்தில் மட்டுமே செயல்படமுடியும், மாறாக எழுத்து வடிவ பேச்சு எழுதிய தருணத்தைக் கடந்து நிற்கும். எடுத்துரைப்பில் பேச்சு தவிர்க்கமுடியாததொரு தனிமம். எடுத்துரைப்பு குறித்த பேராசிரியரின் திறனாய்வு கட்டுரைகளில் எட்டாவது அத்தியாயத்தில் பேச்சும், அதனைத் தொடர்ந்து பனுவல் வாசிப்பும் இடம்பெற்றுள்ளன

கிரேக்கத்ததுவாதிகள் பிளாட்டோ, அரிஸ்டாடில் இருவரின் பேச்சுக்களைபற்றிய சிந்தனைகளுடன் கட்டுரை தொடங்குகறது. பேச்சு, பாவனையான பேச்சு என்ற இருவகையான பேச்சுகள் அவற்றின் உட்கூறுகளைப்பற்றிய சிலவிளக்கங்களும் நமக்குக்கிடைக்கின்றன. எழுத்திலக்கியத்தை பொறுத்தவரை பாவனைபேச்சு முக்கியம் பெறுகிறது. பாவனைபேச்சே நாடகம் எனச் சொல்லப்படுகிறது. அரிஸ்டாட்டில் கருத்தின்படி பாவனையானப் பேச்சு, வார்த்தை சார்ந்தது மட்டுமல்ல, போலச் செய்தல் என்ற செயல்பாடும் அதற்குள் வருகிறது. ஆசிரியர் “போலச் செய்தலைப் பல்வேறுவகையில் பொருள்கொள்ள வாய்ப்பிருப்பினும், அதனில் நாடகமாந்தர்களின் உடலசைவு, பேச்சு, நடத்தல் போன்றவைகளை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்”, என்கிறார்.
காட்சிப்படுத்துதல் பனுவல் என்று வருகிறபோது அதன் பங்குதாரர்களின் நிலமை என்ன? முதலாவதாக எடுத்துரைப்பாளர், இவர் காட்சிபடுத்துதலில் நிகழ்ச்சிகள் அல்லது உரையாடல்கள் நேரடியாகக் காட்டப்பட்டதால் காணாமற்போய்விடுகிறார், வாசகர்கள் பனுவலில் தன் வாசிப்பின் மூலம் பார்த்ததையும் கேட்டதையும் குறித்து தானே ஒரு முடிவு மேற்கொள்ளும் உரிமை உடையவர்களாக இருக்கிறார்கள்.

இது தவிர இன்றைய நாவல் கலை என்ற ஒன்று உருவானதற்கு நாவலாசிரியர்கள் தங்கள் கதைக் காட்சிப்படுத்தவேண்டிய ஒன்று என்கிற சிந்தனைக்கு இடம்கொடுத்ததே காரணமென்ற தகவலையும் கட்டுரை ஆசிரியர் தருகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி, பிரெஞ்சு முடியாட்சி தமது செல்வாக்கை இழந்திருந்த காலம். பிரெஞ்சு நிர்வாசபையில் பிரபுக்களும், மதகுருமார்களும் பொருளாதார நெருக்கடிகாலத்திலும் பெற்றிருந்த சலுகைகள் பொதுமக்கள் பிரநிதித்துவசபையையும் அவர்களுக்கு ஆதரவாக இருந்த ஒரு சில பூர்ஷ்வாக்களையும், ஒன்றிரண்டு மதகுருமார்களையும் எரிச்சலைடையச் செய்தன. அதன் பின்னர் நடைபெற்ற பிரெஞ்சு புரட்சியையும் அதன் அரசியல் விளவுகளையும் அறிவோம். கலை இலக்கியத்தில் வேறொரு புரட்சிக்கு அது காரணமாயிற்று. படைப்பிலக்கியவாதிகள் முடியாட்சி, மதகுருமார்கள், பிரபுக்கள், அதீதக் கற்பனைகள், வியந்தோதல்கள் அதாவது கற்பனாவாதம் கூடாதென்று எதார்த்தவாதத்தின் பக்கம் ஒதுங்குகிறார்கள். சராசரி மாந்தர்களும் அவர்களுடைய பிரச்சினைகளும் புனைவுகளில் இடம்பெறத் துவங்கின. நேர்க்கூற்று முறை தவிர்க்கபட்டது. கதைமாந்தர்களூடாக பேசினார்கள். பேராசிரியர் குறிப்பிடுகிற காட்சிப்படுத்தும்போக்கு இக்காலகட்டத்தில்தான் புதினங்களில் அதிகம் காண முடிந்தது. பாவனையானப் பேச்சு என்பது வார்த்தைபேச்சு மற்றும் போலசெய்தல் என்று பார்த்தோம் – பொதுவில் இதனைக் காட்சிப்படுத்துதல் என வைத்துக்கொண்டு, இம்முறை கற்பனாவாத பேச்சுமுறையைக் காட்டிலும் சரியானதாவென்ற கேள்விக்கு, இரண்டிலும் சாதகப் பாதகப் பலன்கள் ஒரு பனுவலில் இருப்பதற்கு வாப்புகள் உண்டெனவும், எடுத்துரைப்பின் வெற்றி தோல்வி என்பது உத்திகளில் இல்லை அவற்றின் செயல்பாட்டிலேயே உள்ளன என்றும் தெரிய வருகிறது.

 

போலச் செய்தலில் ஏற்படும் சிக்கல்கள்

 

போலச்செய்தல் என்பது நாடகப் பேச்சு அல்லது காட்சிபடுத்துதல். இத்தலைப்பில் காட்சிப்படுத்தலிலுள்ள சிக்கல்களை பேராசிரியர் கூறியுள்ளார். ஒரு புனைகதை எடுத்துரைப்ப்பில் இடம்பெறும் நிகழ்வுகளை அப்படியே உள்ளது உள்ளவாறு (tel qu’il est) காட்சிப்படுத்தவியலாத சூழல் இருப்பதற்கு பனுவல் மொழியையும் குறியீட்டையும் நம்பியிருப்பதைக் காரணமாகச் சொல்கிறார். அதேவேளை மொழிகொண்டு ஏறக்குறைய ஒரு போலச்செய்தலை ( முழுமையானப் போலச்செய்தல் அல்ல) அதாவதொரு காட்சிபடுத்துதலை செய்யமுடியும் எனத் தெரியவருகிறது. அப்படி காட்சிபடுத்துகிறபோது எடுத்துரைப்பில் எடுத்துரைப்பாளர் தமது இடத்தைத் தொலைக்கிறார், விளைவாக அவர் கையிலுள்ள காட்சிப்படுத்த உதவுகிற மொழிக் கேமரா, நாவலில் முக்கித்துவம் பெறுகிறது. காட்சிக்குதவுகிற இப் பாவனைமொழி கால அளவு, தகவல் அளவு என்பதுபோன்ற பல்வேறு அளவீடுக் கருவிகளைக்கொண்டு வெவ்வேறுவிதமான செயல்பாட்டுதளத்தில் இயங்குகிறது. அவை நேரடிப்பேச்சு, சுருக்கம், மறைமுகச்சொல்லாடல், சுதந்திரமான மறைமுகச் சொல்லாடல், நேரடிச் சொல்லாடல், சுதந்திரமான நேரடிசொல்லாடல், சுதந்திரமான மறைமுகச்சொல்லாடல் என வகைப்படுத்தப் பட்டுள்ளன. புனைவில் அதிகம் இடம்பெறும் சுதந்திரமான மறைமுகச்சொல்லாடலின் மொழி இயல்கூறுகளுக்கு உதாரணமாக அறிவிப்பு சார்ந்த வினைச்சொற்கள், காலம் காட்டும் அமைப்பு, வினாக்கள், விவாத முறைக்கூறுகள் சொல்லப்பட்டுள்ளன. இதன் செயல்பாடுவகைகள் என நாம் அறியவருபவை:

1. பேசுபவர்களை அடையாளப்படுத்துவது மற்றும் என்னபேசவேண்டும் என்பதை வடிவமைப்பது

2. ஒரு பனுவலின் பன்முகத்தன்மையை (பேச்சாளர்கள் மற்றும் அவர்களின் அணுகுமுறைகளில்) பெருக்கிக்காட்டுதல்

3. மற்றொரு மாற்றமைப்பினை அதே பனுவலுக்குள் அடையாளங் காண உதவுவதால், பனுவலுக்குக் கூடுதலான அர்த்தச் செறிவை அளித்தல்.

4. சிந்தனையை மறுவுருவாக்கம் செய்துகொள்ள வழியமைத்துத் தருவதால் நனவோடை உத்திக்குப் பயனளிக்கிறது.

5. கதை மாந்தர்களின் தன்மைக்கேற்ப பனுவலுக்குள் ஒளிந்திருக்கும் படைப்பாளியின் நடவடிக்கைகளையும் மறுவுருவாக்கம் செய்ய துனைசெய்தல்.

 

பனுவல் வாசித்தல்:

 

எடுத்துரைப்பினை திறனாய்வுக்கு எடுத்துக்கொண்ட ஆசிரியர் இப்பகுதியில் வாசிப்பு அதன் தன்மைகள், இயங்கும் விதம், அதன் அடிப்படிப்படையில் கிடைக்கிற வாசகர்கர்களின் பன்முகத்தன்மை ஆகியவற்றை விளக்க முற்படுகிறார். ஒரு புனுவலைப் படைத்தலைப்போலவே, அப்பனுவலை வாசித்தலும் படைப்பிலக்கியத்தில் முக்கியத்துவம் பெறுகிறது என்பதனை மிகவும் தெளிவாகவும் விரிவாகவும் ஆசிரியர் இப்பகுதியில் சொல்லியிருக்கிறார். “ஒரு பனுவலை ஒரு பொருளில் இரண்டுதடவை வாசிக்க முடியாதென்பதின் அடிப்படையிலேயே” வாசித்தல் இயங்குதளத்தில் எடுத்துரைப்பு குறித்து திறனாய்வுசெய்தவர்கள் அக்கறை காட்ட காரணமாயிற்று. இங்கே, ” ஒரு பனுவல் வாசிக்கப்படுகிற தருணத்தில்மட்டுமே உயிர்ப்பினை பெறுகிறது எனவே ஒரு பனுவல் வாசகனின் பார்வையிலிருந்து பார்க்கப்படவேண்டும்” என்கிற ஐசர் என்பவர் கருத்தும் மிக முக்கியமானது. தனது சிந்தனையை, கற்பனையை தனக்குரிய மொழியில் நடையில் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒரு படைப்பாளி பனுவலில் கொண்டுவருகிறார். அப்பனுவலில் தான் சொன்னதாக படைப்பாளி நினைத்ததையெல்லாம் அதே கனத்துடனும், அடர்த்தியுடனும், மென்மையுடனும் வாசிப்பவர் உள்வாங்கியிருப்பாரா என்பது கேள்வி.

 

“பனுவலின் உருவாக்கத்தில் வாசகர் பங்கெடுப்பதுபோலவே வாசகரை வடிவமைப்பதில் பனுவல் பங்கெடுக்கிறது” என்ற கருத்தும் சிந்திக்கத்தக்கது. ஆக முழுக்க முழுக்க ஒரு படைப்பாளியால் அல்ல, ஒரு வாசகராலேயே பனுவலொன்றின் சிறுமையும் பெருமையும் தீர்மானிக்கப்படுகின்றன என்ற உண்மையை அண்மைக்காலத்தில் முன்வைக்கபட்ட எடுத்துரைப்பு சிந்தனைகள் தெரிவிக்கின்றன. வாசகரை முதன்மைப்படுத்தும் இந்த அணுகு முறையை பேராசிரியரின் கட்டுரை ‘நிகழ்தல்’ என்று சொல்கிறது. இருவகை நிகழ்வுகள் சுட்டிக்காட்டப்படுகின்றன.

 

1. தன்னிச்சையாய் சுயமாய் இயங்கும் நிகழ்வு
2. பலபடித்தாய் இயங்கும் நிகழ்வு
நிகழ்வை ஆற்றுகிற வாசகர்களை அவர்களின் அணுகுமுறையின் அடிப்படையில் வகைப்படுத்தியுள்ளார்கள்:

1. உண்மையான வாசகர்கள்
2. மேலான வாசகர்கள்
3. அறிவார்ந்த வாசகர்கள்
4. இலக்கிய வாசகர்கள்
5. மாதிரி வாசகர்கள்
6. உள்ளுணர்வு வாசகர்கள்
7. கொள்கைவாசகர்கள்

 

மேற்கண்ட ஏழுவகை வாசகர்கள் பல்வேறு திறனாய்வாளர்களால் சுட்டிக்காட்டபட்டவர்கள். சற்று ஆழ்ந்து பரிசீலித்தால் இன்னுங்கூட சில பெரும்பிரிவுகளையும், கிளைபிரிவுகளையும் அவற்றில் சேர்க்க முடியும். தொல்காப்பிய ஆசிரியர் காட்டுகிற வாசகர் ஓர் உதாரணம் : “கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும் உணர்வுடைய மாந்தர்” -பனுவலோடு இரண்டறக் கலந்து ஒட்டிக்கிடக்கிற ஒருவர்.

 

வாசித்தலின் இயங்கியல்

 

ஏற்கனவே நாம் பார்த்ததைப்போன்று பனுவலின் மொழி, அதன் குறியீடு, அதுசார்ந்த சிக்கல்கள், வாசகரின் அணுகுமுறைகள் ஆகியவற்றைப் பொருத்தது.. தொடக்கத்தில், வாசகரின் தனித்தன்மையை விரட்டிவிட்டு தனது போக்கிற்கேற்ப வாசகரை அது மாற்றுகிறதென்றும், சிறிது சிறிதாகத் தகவல்களைத் தருவதன்மூலம் எந்நேரமும் அவற்றை இணைத்துகொள்ளும்படியான சூழலை அமைத்துக் கொடுக்கிறதென்றும், அதனால் பல வாசிப்புப் படிநிலைகளுக்கு வாசகர்கள் போகமுடிகிறதென்றும், வாசித்தலின் இறுதிப்பகுதி பனுவல் குறித்த முடிவான ஒரு கருத்தினை எட்ட உதவுகிறதெனவும் தெரியவருகிறது.

 

ஒரு பனுவலுக்குள் படைப்பாளரைப் பொறுத்து பல்வேறு வாசிப்பு அணுகுமுறைகள் கிடைக்கின்றன. இது மிகவும் சிக்கலானது பனுவலில் படைத்தலுக்குத் தீர்மானமாக இவைதான் விதிகள், இலக்கனங்கள் என்றில்லை என்பதாலேயே வாசிப்பும் ஓர் திறந்த வெளியாக இருக்கிறது அங்கு புரிதலுக்குரிய முயற்சிகள் ஓயாமல் நிகழ்கின்றன. வாசிப்பும் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு வாசிப்பவரின் திறனுக்கொப்ப நிகழ்கிறது.

 

பனுவலை இயல்பானத் தன்மைக்குக்கொண்டுவருதல்:

 

புழக்கத்திலிருக்கிற சில சொல்லாடல்களோடு உறவுபடுத்திக்கொள்வதையே, ஒரு பனுவலை இயல்புத் தன்மைக்குக்கொண்டு வருதல் என்கிறார்கள், உதாரணம் ரொலா பார்த்தின் ‘சமிக்கை’.

சமிக்கை என்றால் என்ன? “ஏற்கனவே மன அமைப்பில் உறைந்துபோன தூரத் தோற்றம், ஏதோ ஒன்றின் பல்வேறுபட்ட சிதறல் கனவாகும். இவைகள் அனைத்தும் ஏற்கனவே வகுக்கப்பட்டவை, பார்க்கப்பட்டவை, செய்யப்பட்டவை, அனுபவிக்கப்பட்டவை. சுருக்கமாகச்சொல்வதெனில் ஏற்கனவே இருப்பவைகளை எழுப்பி விடுபவை (ந.இ.கோ பக்கம் 241)

 

எவ்வாறு ஒரு பனுவல் தொடர்ந்து வாசிக்கும்படி வாசகரைத் தூண்டுகிறது

 

“நான் இன்னும் முழுமையாக இந்தப்பனுவலை அறியவில்லை அல்லது உணரவில்லை’ என்று வாசகரைத் தவிக்க வைக்கிற பனுவல் தொடர்ந்து வாசிக்கும்படி செய்கிறதாம். இத்தவிப்பினை இருவகைகளில் பனுவல் உருவாக்குகிறதென்று அறிகிறோம்

 

1. காலம் தாழ்த்தல் 2. இடைவெளிகள்
1. காலம் தாழ்த்தல்

 

தகவல்களைச் சொல்லவேண்டிய இடத்தில் சொல்லாமல் தள்ளிப்போடுதலே காலம் தாழ்த்தல். தகவல்களை அதற்கு முக்கியத்துவத்திற்கேற்ப இருவகை கால அலகுகளால் பிரித்திருக்கிறார்கள்

அ. எதிர்காலம் சார்ந்தது ஆ. இறந்த காலம் சார்ந்தது

அ. எதிர்காலம் சார்ந்தது: அடுத்தது என்ன? என்ற வினாவை உயிர்ப்புடன் வைத்து, ஆர்வத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளும் பணியைப் பனுவல் செகிறது

ஆ. இறந்தகாலம் சார்ந்தது: முடிவைத் தெரிவித்துவிட்டு, முடிவின் காரணம், அதற்குப் பொறுப்பு யார்? புதிருக்கு விடைதேட இம்முறை உதவுகிறது.

 

2. இடைவெளிகள்

 

ஒரு பனுவலைத் தொடர்ந்து வாசிக்கும்படி செய்வதில் இடைவெளிகளுக்குப் பங்கிருக்கின்றன எனசொல்லப்படுகிறது. அதென்ன இடைவெளி? வாழ்க்கையை இயக்குகிற அனைத்திலும் இடைவெளிகள் இருக்கின்றனவென்றும் உதாரண்மாக இயறகைக்கும் மனிதனுக்குமான இடைவெளி, அறிவு இடைவெளி, உணர்வு இடைவெளி… போன்றவை. எனவே இவற்றைபற்றி பேசுகிற பனுவலிலும் இடைவெளிகள் தவிர்க்க முடியாதவை பேராசிரியர் ஐசர் கருத்தை மேற்கோள் காட்டுகிறார்:

 

“எந்தவொரு கதையும் முழுமையாகச் சொல்லப்படுவதில்லை. உண்மையில் தவிர்க்க முடியாத சில கூறுகளை நீக்கிவிட்டுச் சொல்வதன் மூலமாகத்தான் ஒரு கதை தனக்கான இயக்கத்தைத் தக்கவைத்துக் கொள்கிறது. கதையின் ஓட்டம் எப்பொழுது தடைபடுகிறதோ, கதை எப்பொழுது எதிர்பாராத திசையில் வாசகரை இழுத்துச் செல்லத் தொடங்குகிறதோ அப்பொழுது எல்லாம், தன் சொந்த காரண காரண-காரிய அறிவு பலத்தின்மூலம் தொடர்பினை நிறுவிப் பனுவல் விட்டுச்சென்ற இடைவெளிகளை நிரப்பிக்கொள்வதற்கான வாய்ப்புக் கிடைக்கிறது”

 

எனவே தகவல் இடைவெளி, காலம் தாழ்த்துதலினும்பார்க்க முக்கியத்துவம் வாய்ந்தது. தவிர இடைவெளியில் உள்ள கீழ்க்கண்ட பண்புகள் கவனத்திற்கொள்ளப்படவேண்டியவை.

– அது தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் இருக்கிறது

– தற்காலிக இடைவெளி ஏதோ ஒரு இடத்தில் நிரப்பக்கூடியதாகவும், நிரந்தர இடைவெளி இறுதிவரை நிரப்ப முடியாமலும் போய்விடுகிறது

– வாசிக்கிற கணத்தில் ஈர் இடைவெளி தற்காலிகமா அல்லது நிரந்தரமா என்ற முடிவுக்கு வர இயலாதது

– தற்காலிக இடைவெளிகள் காலத்தின் நேரத்திற்கும் பனுவலின் நேரத்திற்கும் இடையிலுள்ள முரண்களால் உருவானவை

– பனுவலில் இடைவெளிகள் அதற்குரிய வளத்தோடு சிறப்பாக அமைந்திருக்கும்போது வாசிப்பு செயல்பாடு இயல்பாகவே இடைவெளியை நிரப்புகிறது.

ஆகப் பொதுவில் காலம் தாழ்த்த்துதலும் இடைவெளியும் வாசகர் ஆர்வத்தைத் தூண்டித் தொடர்ந்து பனுவலை வாசிக்க வைக்கின்றன.

-முற்றும்
———————————————————————————-
பி.கு. ஏற்கனவே லூறியதுபோன்று இக்கடுரைகள், பேராசிரியரின் கட்டுரைகளுக்கான அறிமுகமேயன்றி முழுமையானவை அல்ல. அக்கடுரைகளின் முழுப்பயனையும் அடைய பேராசிரியர் நூலை வாசிக்கவேண்டும். நவீன இலக்கிய கோடுபாடுகள் தொகுப்பிலுள்ள் எடுத்துரைப்பு பற்றிய உண்மைகள் படைப்பிலக்கியத்தில் ஆர்வமுள்ள அனைவருக்கும் பயனுள்ள பகுதி, படைப்பாளிகள் வாசகர்கள் என்ற இரு தரப்பினருக்கும் உதவகூடியவை. படைப்பாளிகக்கு ஒரு பனுவலைத் தரமாக படைக்க உதவும் என்பதைப்போல வாசகர்களுக்கு ஓர் பனுவலை எப்படி வாசிக்க வேண்டும் என்பதற்கான வழிமுறையை அளிக்கும். பேராசிரியரின் கடல் போன்ற மொழிஞானத்தையும் உழைப்பின் பயனையும் முழுமையாகப் பெற அவரது நூல்களை வாங்கிப் பயனடையுங்கள் – நன்றி:

க.பஞ்சாங்கம் கட்டுரைகள்: நவீன இலக்கியகோட்பாடுகள்
காவ்யா பதிப்பகம்
சென்னை -24

—-

மொழிவது சுகம் டிசம்பர் 30 -2014

1. புது வருட வாழ்த்துகள்

1408393734-bonne-annee-2015-004
அன்பினிய நண்பர்களுக்கும் தோழியருக்கும் இனிய வாழ்த்துகள்.

பழையனக் கழிதலும் புதியனப் புகுதலும் இயற்கை நெறி. 2014ம் ஆண்டு கசப்பு இனிப்பு இர்ண்டையும் ஊட்டியிருக்கக்கூடும். இவற்றின் கலவையில் ஏற்றத்தாழ்வுகளும் இருந்திருக்கக்கூடும், இருந்தும் தனித்தோ கைகோர்த்தோ கடந்துவந்திருக்கிறோம். 20 15 ம் பல ஆச்சரியங்களை பொத்திவைத்திருக்கக்கூடும். நல்லதோ கெட்ட்தோ எதுவாயினும் துணிவுடன் எதிர்கொள்வோம், வாழ்த்துகள்!
அன்புடன்
நா. கிருஷ்ணா

2. வாசித்தவை
2014ம் ஆண்டில் தமிழில் வாசித்தவற்றில் புதியவை, பழையவை இரண்டும் உள்ளன. வண்ணதாசனின் ஒரு சிறு ஓசை, காலபைரவனின் கடக்க முடியாத இரவு, சந்திராவின் காட்டின்பெருங்கனவு ஆகியசிறுகதை தொகுப்புகளும் கவிஞர் சுகுமாரனின் வெலிங்டன், தமிழவனின் முஸல்பனி, குமார செல்வாவின் குன்னிமுத்து ஆகிய நாவல்களும் புதியவற்றுள் அடங்கும்.
பழையவற்றுள் யு.ஆர் அனந்தமூர்த்தியின் பாரதிபுரம், அசோகமித்திரனின் 18வது அட்சக்கோடு, கரிச்சான்குஞ்சுவின் பசித்தமானிடம், சா. கந்தசாமியின் சாயாவனம் ஆகியவற்றை இரண்டாவது முறையாக வாசித்தேன். சல்மாவின் இரண்டாம் சாமங்களின் கதையும் எனக்குத் திரும்ப வாசிக்க வேண்டுமென்று தோன்றியது, வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

 

3. எழுதியவை

 

இவ்வருடத்தில் எழுதிச் சாதித்தது பெரிதாகஒன்றுமில்லை. குறிப்பிட்டுசொல்லவேண்டியது பிராஹாவிற்கு சென்று காஃப்கா பிறந்த மனையில் ஒரு சில மணித்துளிகளைக் கழித்ததன் விளைவாக உருவான நாவல். காப்காவின் நாய்குட்டி என்ற பெயரை தற்காலிகமாக வைத்திருக்கிறேன். காலச்சுவடிடம் கொடுத்துள்ளேன். காலச்சுவடு தத்துவத்தின் சித்திரவடிவம் என்ற கட்டுரைத் தொகுப்பையும் கொண்டுவருகிறார்கள். நற்றிணை பதிப்பகம் பிர்சுரிக்கும் பயணக்கட்டுரை தொகுப்பும், சிறுகதைதொகுப்பும் இரண்டு வருடங்களாக அவ்வப்போது எழுதிவந்தவை.

 

4. பிரெஞ்சு மொழியில்

 

டொமினிக் வித்தாலியோ என்ற பிரெஞ்சு பெண் மணியுடன் சேர்ந்து மொழிபெயர்த்துள்ள அம்பையின் சிறுகதைத் தொகுப்பு வெளிவருகிறது.
http://www.zulma.fr/livre-de-haute-lutte-572109.html
ஆனால் எனக்கு மிகவும் மகிழ்வைத் தந்தது பிரெஞ்சு மொழி இலக்கிய இதழொன்று எனது சிறுகதையை வெளியிட்டது
http://www.cousinsdepersonne.com/2014/12/le-bananier-dandoni/
மேற்குறிப்பிட்ட இரண்டு நிகழ்வுகளும் பிரெஞ்சு மொழிபக்கமும் எனதுகவனத்தைச் செலுத்த வைத்திருக்கின்றன, நண்பர் நாயகர் தலையீட்டினால் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி பிரெஞ்சு மொழியில் மாத்தாஹரி நாவலை மொழிபெயர்க்கிறார். காலச் சுவடு வெளியிட உள்ள நாவலையு ம் பிரெஞ்சு மொழியில் கொண்டுவரவிருப்பம். இதனை என் விருப்பம் என்பதைதக் காட்டிலும், 25 ஆண்டுகால பிரெஞ்சு நண்பர் தெபெல் விருப்பம் என்று சொல்லவேண்டும்.

 

5. வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட 20 நூல்கள்

 

ஒரு சமூகத்தை மாற்றி அமைக்கும் வல்லமை நூலுக்கு உண்டா என்பதை நம்மால் உறுதிப் படுத்த முடியாது ஆனால் படித்த புத்தகங்களால் வரலாற்றை மாற்றி எழுதிய தனிமனிதர்களை அறிந்திருக்கிறோம். France 5 என்ற பிரெஞ்சு தொலைகாட்சி சேனல் தனது பார்வையாளர்களிடம் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டுவந்த நூல்எது ? என்றொரு கருத்துக் கணிப்பை கடந்த மூன்றுமாதங்களாக நடத்தி வந்தார்கள். அம்முடிவின்படி பிரெஞ்சு மக்களின் வாழ்க்கையை மாற்றிஅமைத்த 20 நூல்களை வரிசைப் படுத்தியிருக்கிறார்கள்.

நூல்கள் என்பதால் தவறானபாதைக்குக் கொண்டுசென்றிருக்காது என நம்பலாம்.
1. Le petit Prince (The Little Prince) –Antoine de Saint-Exupéry
2. L’Etranger – (The Stranger) – Albert Camus
3. Voyage au bout de la nuit (Journey to the end of the Night)- Louis Ferdinand Céline
4. L’écume des jours (Froth on the Daydream) – Boris Vian
5. A la recherche du temps perdu (In Search of Lost time) –Marcel Proust
6. Le Grand Meaulnes – Alain Fournier
7. L’alchimiste (The Alchemist) –Paulo Coelho
8. Belle du seigneur – Albert Cohen
9. Cent ans de solitude (One Hundred years of Solitude)-Gabriel Garcia Marquez
10. Les Fleurs du Mal – Charles Baudelaire
11. La Peste (The Plague) – Albert Camus
12. Harry Potter –J.K.Rowling
13. 1984 – George Orwell
14. Le monde selon Garp (The World According to Garp)-John Irving
15. Crime et Châtiment (Crime and Punishment) –Fiodor Dostoïevski
16. Le seigneur des Anneaux (The Lord of the Rings)- J.R.R. Tolkien
17. Le Parfum (Perfume) – Patrick Sûskind
18. Le journal d’Anne Frank (The Diary of a Young Girl)-Anne Frank
19. Madame Bovary – Gustave Faubert
20. Les Misérables – Victor Hugo
——–

மொழிவது சுகம் டிசம்பர் – 20 , 2014

1தமிழர்கள்

A. புதுச்சேரி நகரசபை

Collapse_THSSKumar_2227111g

B. உ.வே.சா. இல்லம்

U.V.SAMI House

நன்றி: தி இந்து

2. விகடன் எஸ். பாலசுப்பிரமணியத்தின் மறைவு

விகடன் குழுமத்தின் தலைவர் பாலசுப்பிரமணியத்தின் மறைவுச் செய்தியை ‘தி இந்து’ வில் வாசிக்க நேரந்தது. அவரின் பெருமைகளை பட்டியலிட அவசியமில்லை வெகுசன இதழ்கள் இன்றைக்கு நவீன இலக்கியத்தைபரவலாக அறியக் காரணமானவர். தமிழர்களின் பாமரத்தனமான கலை இலக்கிய இரசனையை உயர்த்தியதில் பெரும் பங்கு ஆற்றியிருக்கிறார். இலக்கிய வட்டம் மட்டுமே அறிந்திருந்த படைப்பாளிகளை வெகுசன மேடைக்கும் கொண்டு சென்றவர். தி இந்து தமிழ் தினசரி அவரைக் குறித்து எதைச் சொல்லவேண்டுமோ அதை நன்றாக எழுதியுள்ளது. ஆனால் அவரை சிறையில் அடைத்து பெருமைபெற்ற முதலமைச்சரையும் அவரது கட்சியையும் எழுதும் வேளையில் மறதி குறுக்கிட்டிருக்கிறது.
3. பாரீஸில் அம்பை

உயிர்நிழல் லட்சுமி நவம்பர் மாதத்தில் அம்பைக்கு ஒரு நிகழ்வை பாரீஸில் ஏற்பாடு செய்திருப்பதாகத் தெரிவித்தார். பின்னர் அந்நிகழ்வு டிசம்பர் 13 அன்று நடப்பதாக தகவல் வந்தது. புதுச்சேரி நண்பர்களுக்கும் தெரிவித்தேன். இதே பகுதியில் அந்நிகழ்வு பற்றி குறிப்பிட்டிருந்த அறிவிப்பில் தேதி உள்ளது, ஆனால் அதனை புதுச்சேரி நண்பர்களுக்குத் தெரிவித்தபோது தேதியைக் குறிப்பிட தவறி இருக்கிறேன். உண்மையில் அக்கறை இருப்பவர்கள் எழுதிக் கேட்பார்கள் என்று நினைத்தேன். அந்த நல்ல காரியத்தைச் செய்தவர்கள் ஒன்றிரண்டுபேர்தான். அவர்களிலும் கலந்துகொண்டவர் நண்பர் முத்துகுமரன் மட்டுமே. அவர்கூட அம்பை எழுத்துக்களைப் படித்திருக்க வாய்ப்பில்லை. முத்துக்குமரன் தவிர பிரெஞ்சில் சிறுகதைகள் எழுதிவரும் மத்மசல் ‘மிரெய் சாந்த்தோ’வும் காந்தியைக்குறித்து அண்மையில் புத்தகமொன்று எழுதியுள்ள திரு ஜோசெப் தம்பியும்  வந்திருந்தார்கள். ஏற்பாடு செய்திருந்த இடத்தைக் கண்டுபிடிப்பது பெரும்பாடாக இருந்தது. நண்பர்கள் மத்மசல் மிரெய் மற்றும் ஜோசெப் தம்பி இருவரும்  ‘தேடல்’ இக்கட்டிலிருந்து என்னைக் காப்பாற்றினார்கள். அவர்கள் உதவவில்லையெனில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமலேயே திரும்பியிருப்பேன். ஒருவழியாக அங்குபோய்ச்சேர்ந்தபோது நிகழ்ச்சி ஆரம்பித்திருந்தார்கள். அம்பை இன்னும் பேசத்தொடங்கவில்லை என்பது ஆறுதலாக இருந்தது. இங்கே ஒன்றை குறிப்பிட்டாகவேண்டும் அம்பையை வாசிக்காத முகங்களே இடத்தைப் பிடித்திருந்தன. வாசித்திருக்கக்கூடும் என்று நம்பிய இலங்கைத் தமிழ் எழுத்தாள நண்பர்களையும் காணமுடியவில்லை. அம்பையின் பேச்சு monotonous ஆக இருந்தது. பெண்ணியம் குறித்து புதிதாக ஏதேனும் அவருக்குச்சொல்ல இருக்கலாம் என்று சென்ற எனக்கு பெரும் ஏமாற்றம்.
4. நண்பர் பெஞ்சமின் லெபொவுடன் சந்திப்பு

அம்பையின் வரவு குறித்த செய்தியை பிற புதுச்சேரி நண்பர்களுக்குத் தெரிவித்ததுபோன்றே அவருக்கும் தெரிவித்தேன். ஒருவருடத்திற்கு முன்பு தான் இதயச்சிகிச்சை பெற்றதைக்குறிப்பிட்டு தற்போது அதிகம் வெளியிற் செல்வதில்லை என  மடலிட்டிருந்தார். எனவே அவரைப் பார்த்துவிட்டு வரலாம் எனச்சென்றேன். தெளிவாக முகவரியைக் குறிப்பிட்டிருந்தார், இடத்தைக் கண்டுபிடிப்பதில் எவ்விதச் சிக்கலுமில்லை. இந்த வயதில் எதிர்பார்க்கக்கூடிய பிரச்சினைகள்தான். உற்சாகமாக, எப்போதும்போல சுவாரஸ்யமான உரையாடலைத் தொடங்கினார். அறிவு ஜீவிதத்துடன் கூடிய தமிழ்த் தம்பதிகள் பிரான்சில் அபூர்வம். பெஞ்சமின் தம்பதிகள் விதிவிலக்கு. ஒரு மணிநேரம் இலக்கியம், தமிழ்நாடு, தமிழர்கள் என்று பேச்சு இருந்தது. அம்பை நிகழ்ச்சி இல்லையெனில் கூடுதலாக ஒருமணி நேரம் பேசிவிட்டு வந்திருக்கலாம். சகோதரிகள் திருமதி சிமோன் – திருமதி லூசியா லெபொ பொறுப்பேற்று நடத்தும் வலைத்தளத்தில் நண்பர் பெஞ்சமின் லெபொ (எழிலன்) எழுதியுள்ள பாரீஸ் பாதாளசாய்க்கடைகள் கட்டுரை அவசியம் வாசிக்க வேண்டியது:

http://francekambanemagalirani.blogspot.fr/
————————————————————

இலங்கு நூல் செயல்வலர் -க.பஞ்சாங்கம்-9 : எடுத்துரைப்பு படிநிலைகள்

panchuசிமூர் சாட்மன் ஓர் அமெரிக்க இலக்கியம் மற்றும் திரைப்பட விமர்ச்கர். வட அமெரிக்காவைச் சேர்ந்த மிக முக்கியமான எடுத்துரைப்பியல் நிபுணர். பேராசியரின் எடுத்துரைப்பு படிநிலைகளைப்பற்றிய இக்கட்டுரை, இந்த அமெரிக்கரின் உண்களை முன்வைத்து பேசுகிறது.

உள்ளுறை எழுத்தாளரும் – உள்ளுறை வாசகரும்

பொதுவாகவே எடுத்துரைப்பியல் என்றதும் அதனை இயக்கும் எதிரெதிர் துருவங்களாக செயல்படுவர்களில் ஒருவர் எழுத்தாளர் மற்றவர் வாசகர் என்பது பலரும் அறிந்த உண்மை. இந்த அத்தியாத்தில் பேராசிரியர் சாட்மன் முன்வைத்த கருத்தியத்தின் அடிப்படையில் வேறு சில உண்மைகளைத் தெரிவிக்கிறார். அதன்படி வெகுசன அறிவு நம்பிக்கொண்டிருக்கிற எழுத்தாளர்- வாசகர் என்கிற செயல்பாட்டாளர்களோடு வேறுசிலரும் எடுத்துரைப்பை முன்னெடுத்துச் செல்கிறார்கள். அவர்கள் மொத்தம் ஆறுபேர்: படைப்பை அளிப்பவர்கள் மூவர், படைப்பைப் பெறுபவர்கள் மூவர். அளிப்பவர் அணியில் முதலாமவர் உண்மையான எழுத்தாளர், அடுத்து வருபவர்கள் அல்லது முதல் நபருக்குத் துணைநிற்பவர்கள் உள்ளுறை எழுத்தாளர், எடுத்துரைப்பாளர். பெறுபவர் அணியில் முதலாமவர் உண்மையான வாசகர் அடுத்து இடம்பெறுபவர்கள் உள்ளுறை வாசகர், எடுத்துரைப்பைக் கேட்பவர்.

இவர்களில் எழுத்தாளர் அணியில் செயல்படுகிற ‘உள்ளுறை எழுத்தாளர் ‘ (எதிரணியில் சமன் படுத்த உள்ளுறை வாசகர்)மிக முக்கியமானவர். இந்த உள்ளுறை எழுத்தாளர், குறிப்பிட்ட படைப்புக்கென எழுத்தாளரிடமிருந்து பிறவி எடுப்பவர், பிரதான எழுத்தாளர் நிரந்தரமானவர், பல படைப்புகளிலும் தொடர்ந்து இடம்பெறுகிறார். மாறாக உள்ளுரை எழுத்தாளர் பிறப்பும் இறப்பும் குறிப்பிட்ட படைப்போடு முடிந்துவிடுகிறது. ‘மனிதப்பண்பு ஏற்றப்பட்டவ்ராகத் தோற்றமளிக்கிறார். எனவே இவர் எழுத்தாளரின் ‘இரண்டாவது சுயம்’ இன்னொரு விந்தையான கருத்தும் நமக்குக் கிடைக்கிறது. உள்ளுரை எழுத்தாளர் பிரதான எழுத்தாளரின் அல்லது உண்மையான எழுத்தாளரின் ஓர் அங்கமாக இருப்பினும் முழுப்படைப்பிற்கான மூளை மற்றும் ப¨ப்பின் விதிகளுக்கான மூல ஆதாரமாக இருப்பதால் சாட்மென் முடிவின்படி உள்துறை எழுத்தாளர் அறிவுதளத்திலும், ஒழுக்கத் தரத்திலும் உண்மையான எழுத்தாளரைக் காட்டிலும் மேம்பட்டவராக இருப்பாரென அறிகிறோம்.

இங்கே நமக்குத் தெரியவேண்டிய மிகப்பெரிய உண்மை, உளதுறை எழுத்தாளரும் உண்மையான எழுத்தாளரும் சமமானவர்கள் அல்ல என்பது முதலாவது. படைப்பை நடத்திச்செல்கிற உள்ளுறை எழுத்தாளரின் சிந்தனை, நம்பிக்கை, உணர்வு நிலை ஆகிவற்றிலெல்லாங்கூட நேரெதிரான நிலைப்பாட்டிற்குச் சொந்தக்காரராக உண்மையான எழுத்தாளர் இருப்பார் என்பது இரண்டாவது. இவை நிகழ்வதற்கு ஆசிரியரின் கட்டுரை சொல்லும் காரணம், உண்மையான எழுத்தாளரின் சுய அடையாளம் புறவாழ்வில் அவர் எதிர்கொள்ளுகிற வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கக்கூடியது. அதே நேரத்தில் உள்ளுறை எழுத்தாளரின் அடையாளம், எழுதப்படும் படைப்போடு இணைந்து இரண்டறக்கலந்து நிலைப்பெற்று இருக்கக்கூடியது ( ந.இ.கோ. பக்கம் 216). எதிரணியில் இருக்கிற உள்ளுறை வாசகர் இந்த உண்மையை அறிந்தே இருக்கிறார், ஆனால் பிரச்சினை விளிம்பில் இருக்கிற உண்மையான வாசகர் பல நேரங்களில் உள்ளுறை எழ்த்தாளரை உண்மை எழுத்தாளரிடம் தேடிக்களைப்பதைக் காண்கிறோம். சாட்மன் கூற்று “உள்ளுறை எழுத்தாளர், உண்மை எழுத்தாளரிடம் மட்டுமின்றி எடுத்துரப்பாளரிடமும் வேறுபட்டவர் எனக் கூறுகிறது. தவிர ஒரு படைப்பை முன்னெடுத்து செல்கிற உள்ளுறை எழுத்தாளர் படைப்பு முழுவதும் மௌனம் சாதிப்பதால் அவரை எடுத்துரைப்பவராகக் கருதக்கூடாதென்றும் அறிவுறுத்தப்படுகிறோம். “எடுத்துரைப்பாளர் என்பவர் பனுவலின் நேரடியான குரலாகவும் அல்லது பேசுபவராகவும் அமைய உள்ளுறை எழுத்தாளர் குரல் அற்றவராகவும் மௌனநிலையில் உறைந்து இருப்பவராகவும் கருதப்படுகிறார்”(ந.இ.கோ. பக்கம் 216)

அடுத்து நாம் புரிந்துகொள்ளவேண்டியவர் உள்ளுறை வாசகர். உள்ளுறை எழுத்தாளருக்கு எதிர்வரிசையில் இடம்பெறும் உள்ளுறை வாசகரின் இலக்கணங்கள் உள்ளுறை எழுத்தாளருக்குப் பொருந்தக்கூடியவை: 1.உள்ளுறை எழுத்தாளரைப்போலவே பனுவல் உருவாக்கும் நபர் 2. உண்மை எழுத்தாளரிடமிருந்து வேறுபடும் உள்ளுறை எழுத்தாளரைப்போலவே உண்மையான வாசகரிடமிருந்தும் எடுத்துரைப்பைக் கேட்பவரிடமிருந்தும் வேறுபடுவார். ஒவ்வொரு பனுவலுக்குள்ளும் உள்ளுறை எழுத்தாளரைப்போலவே உள்ளுறை வாசகரும் இருக்கிறாரென்றும், மாறாக ஒவ்வொரு பனுவலும் ‘எடுத்துரைப்பாளரையும் -கேட்பவரை’யும் கொண்டிருக்கவேண்டுமென்கிற நிர்ப்பந்தமில்லையென்றும், நாவலின் தேவை பொறுத்து அதனை பாவிக்கலாமென்றும் அறிகிறோம். ஒரு பனுவலில் எடுத்துரைப்பாளர் இருக்கிறபோது உள்ளூறை எழுத்தாளர்-எடுத்துரைப்பாளர் – கேட்பவர்-உள்ளுறைவாசகர் என்ற சங்கிலித்தொடரில் செய்தி பரிமாறப்படுகிறது என அறிகிறோம். எடுத்துரைப்பாளர்- கேட்பவர் இல்லாதபோது, செய்தி நேரடியாக உள்ளூறை எழுத்தாளரிடமிருந்து – உள்ளுறை வாசகருக்குப் போய்ச்சேருகிறது.

சாட்மன் கூற்றின் அடிப்படையில் சில சந்தேகங்களைக் கட்டுரை ஆசிரியர் எழுப்புகிறார்:

முதலாவதாக ஒரு பனுவலில் உள்ளூறை எழுத்தாளருடைய இடம் எது?
பனுவலைப் பகுத்தாராயவும், வாசகர்களின் நடத்தையினைப் பகுத்தாராயவும் பெரிதும் உதவுமென நம்பப்படும் உள்ளுறை எழுத்தாளர் கோட்பாடு தகவல் பரிமாற்றத்தில் உதவுவதில்லை ( உள்ளூறை எழுத்தாளரின் மௌனம், நேரடியாகத் தகவல் அறிவிப்பில் பங்கின்மை…) என்பதால் உருவாகும் குழப்பம்; அடுத்ததாக எடுத்துரைப்பாளர் குறித்தும் கேட்பவர் குறித்தும் கொடுக்கிற விளக்கங்களால் எழும் சிக்கல்.

இந்நிலையில் மேற்கண்ட சிக்கலிலிருந்து விடுபட இரண்டு வழிமுறைகளை பேராசிரியர் தெரிவிக்கிறார்:

1. உள்ளுறை எழுத்தாளர், உள்ளுறை வாசகர் ஆகிய இருவரையும் தகவல் பரிமாற்றம் நிகழ்கிற எடுத்துரைப்புச் சூழலிலிருந்து அப்புறப்படுத்துவது.
2. எடுத்துரைப்பவர் கேட்பவர் ஆகிய இருவரையும் எடுத்துரைப்புச் சூழலில் கட்டாயமாக இடம்பெறச்செய்வது

தவிர ஒரு கதையில் எப்போதும் கதைசொல்லி இருந்துகொண்டேதான் இருக்கிறார் என்பதால் எடுத்துரப்பின் நிகழ்வுக்கு சாட்மன் கூறுவதைப்போல ஆறுபேர் தேவையில்லை: உண்மையான எழுத்தாளர், உண்மையான வாசகர்; எடுத்துரைப்பாளர், கேட்பவர் என்ற நால்வர் கூட்டணியே போதுமானது.

ஆக மீண்டும் எழுத்தாளர் – வாசகர் என்ற எளிமையான சொல்லாடல்களை மறந்து கதைசொல்லலே ஓர் எடுத்துரைப்பு நிகழ்வாகப் கொள்ளப்படுவதால் மீண்டும் நாம் இப்பிரச்சினையை எடுத்துரைப்பவர் -கேட்பவர் பிரச்சினையாகக் கருதலாம். எடுத்துரைப்பு என்ற பொறுப்பில் அமருகிறபோது, வெற்றிகரமாக நிறைவேற்ற போர்த்திறம் சார்ந்த திட்டங்களையும் உபாயங்களையும் ஓர் எடுத்துரைப்பாளன் விரும்பியோ விரும்பாமலோ மேற்கொள்கிறான்.

இப்பகுதியில் அடுத்ததாகப் பேசப்படுவது எடுத்துரைப்பிற்கும் கதைக்கும் உள்ள உறவுகள்:

அ. காலம் சார்ந்த உறவுகள்

எடுத்துரைப்பு என்பது நிகழ்வுகளால் பின்னப்படுவதால் காலத்தின் பங்களிப்பு மிக முக்கியமானது. இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற மூன்றும் அதனதன் தன்மையில் சம்பவத்தைக் கேட்பவருக்கு நம்பிக்கைதரும்விதத்தில் சொல்ல உதவுகின்றன. பிறவற்றைக் காட்டிலும் இறந்தகாலம் கதைசொல்லல் தனித்தன்மையை பெற்றதாகிறது. நடக்கிற, நடக்கவிருக்கிற சம்பவத்தை ஆரூடமாகச் சொல்லவருகிற செய்திகளில் பொதுவாகவே நாம் ஆர்வம் காட்டுவதில்லை. இறந்த கால சம்பவங்கள் எண்பிக்க முடிந்தவையென்ற நம்பிக்கையைத் தரக்கூடியவை அல்லது அவ்வாறான தோற்றம் கொண்டவை என்பதாலேயே செய்தித் தாள்களில் ஆரம்பித்து, புனைகதைவரை அதிகம் இறந்தகாலத்தைப் பேசுபவையாக உள்ளன, இவ்வித எளிதான உளவியல் காரணத்தோடு, ஒரு சம்பவத்தை அது நடந்துமுடிந்தபின்னரே சொல்லமுடியும் என்ற பொதுவானப் புரிதலும் இறந்த காலத்தைப் பயன்படுத்த காரணமாகிறது. அடுத்ததாக அதிகமில்லையென்றாலும் ‘நிகழ இருப்பதாக’ சொல்ல உதவுகிற எடுத்துரைப்பும் இருக்கவே செய்கின்றன அவற்றைக்குறித்தும் கட்டுரை ஆசிரியர் சுருக்கமாக பேசுகிறார். நிகழ இருப்பதை எடுத்துரைப்பது எதிர்காலத்திலும் சொல்லலாம், நிகழ்காலத்திலும் கூறலாம் என்கிறார். காலம் சார்ந்த எடுத்துரப்பில் மூன்றாவதாக வருவது செயலும் எடுத்துரைப்பும் ஒரே தருணத்தில் நிகழ்வதுபோல தோற்றம் கொண்டிருப்பது. நாட்குறிப்பில் இடம்பெறும் பதிவுகள், செய்திதாள்களின் சம்பவத்தை நேரடிவர்ணணைபோல சொல்லும் விதம் ஆகியவற்றை இவற்றிர்க்கு உதாரனங்களாகக் காட்டுகிறார்கள். இப்பகுதியில் கால அளவை நிர்ணயித்து கதைசொல்லலில் ஏற்படும் சிக்கல்கள், நவீன கதையாடல்கள் பலவற்றுள் அவை தவிர்க்கப்படும் விதம் போன்றவற்றையும் ஆசிரியர் அலசுகிறார்.

ஆ. துணைமை உறவுகள் அல்லது எடுத்துரைப்பின் படிநிலைகள்:

இத்தலைப்பின் கீழ் எடுத்துரைப்பிலுள்ள படிநிலைகள் குறித்து விளக்கங்கள் கிடைக்கின்றன.

1. செயல்படும் நிலை:

இது பொதுவாக முதல் எடுத்துரைப்பை நீட்டிக்க அல்லது தொடர்ந்து நிலை நிறுத்திக்கொள்ள கையாளும் முறை. இங்கே எதை எடுத்துரைக்கவிருக்கிறோம் என்பது முக்கியமிழந்து எடுத்துரைப்பது தொடர்ந்து நடைபெறவேண்டியே எடுத்துரைப்பது ஆகும். உதாரனத்திற்கு ‘ஆயிரத்தோர் இரவுகள்’ கதையில் வரும் கதைசொல்லலை ஆசிரியர் நினைவு கூர்கிறார். இங்கே கதைசொல்லியான “ஷெஹெராசதா” வுக்கு தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள எடுத்துரைப்பு ஓர் தந்திரமாக பயன்படுகிறது

2. விளங்கவைக்கும் நிலை

எந்தேந்தச் சம்பவங்கள் தற்போதைய சூழலுக்கு காரணங்கள் என்ற கேள்விக்கு விளக்கமளிப்பதுபோல கதை சொல்வது அல்லது எடுத்துரைக்கும் முறை. இங்கும் கதைதான் முக்கியம், எடுத்துரைப்பது அல்ல என்கிறார் கட்டுரை ஆசிரியர்.

3. அடிக்கருத்து நிலை அல்லது கருத்தியத்தை அடிப்படையாகக் கொண்ட நிலை

இவ்வகையான எடுத்துரைப்பில் ஒப்புமை படுத்துதல் மற்றும் வேறுபடுத்திக் காட்டல் மூலமாக சொல்லவந்ததை அழுத்தம் திருத்தமாக உரைப்பது ஆகும்.

எடுத்துரைப்பாளர்கள் குறித்த ஒரு வகைமையாக்கம்

கதையில் எடுத்துரைப்பவரின் பங்களிப்பு, அவர் மீதான நம்பகத்தன்மை இவற்றின் மீதான அடிப்படையில் எடுத்துரைக்கும் தளம்பற்றி பேசும் பேராசிரியர் எடுத்துரைக்கப்படும் கதையைவிட உயர்ந்தவராக அல்லது மேலே இருப்பவராக ஒரு எடுத்துரைப்பாளர் தன்னைக் கருதிக்கொள்ளும்போது, அவரின் எடுத்துரைக்கும் தளம் புறநிலைவயப்பட்டதாக அமையுமென்றும்; அவ்வாறின்றி எடுத்துரைப்போடு தன்னையும் ஈடுபடுத்திக்கொள்பவராக எடுத்துரைப்பாளர் செயல்படும்போது அது இரண்டாவது தளத்தில் இயங்குவதாகக் கருதப்படுமென்றும்; இத்தளங்கள் பின்னர் மூன்று, நான்கென்று எடுத்துரைப்பவரின் பங்களிப்பைப் பொறுத்து மாறுமெனவும் தெரிவிக்கிறார்.

கதையில் பங்குபெறும் பரப்பளவு :

மேற்கண்ட வகையில் பல தளங்களில் இயங்குகிற எழுத்தாளர்களின் பங்களிப்பு படைப்பாளிகளின் உணர்ந்தறியும் ஆற்றலைபொறுத்ததனெனவும் பின்னர் அதன் அடிப்படையில் தன்னை முழுவதும் ஒளித்தோ அல்லது வெளிப்படையாகவோ எடுத்துரைப்புசார்ந்த உபாயங்களை கையிலெடுக்கிறார் என்றும் அற்கிறோம், அந்தவகையில் சுமார் எட்டுவிதமான ஆயுதங்கள் அவரது உதவிக்கு காத்திருக்கின்றன.

1. பின்புலம் குறித்த விவரிப்பு: இதில் எடுத்துரைப்பாளர் ஒப்பீட்டு அளவில் மிகக்குறைந்த அளவே வெளிப்படுவாரென்றும், நாடகம் அல்லது திரைப்படத்தினும் பார்க்க இங்கே மொழிகொண்டு பின்புலத்தை விவரிக்கவேண்டிய நெருக்கடி உள்ளதைச் சுட்டிக்காட்டும் பேராசிரியர் அதனாலேயே கதையாடல்மொழி எடுத்துரைப்பாளரின் மொழியாக அமைந்து, நாமும் சொல்லப்படும் பின்புலத்தைவைத்து எடுத்துரைப்பாளரின் உணர்ந்தறியும் ஆற்றலை அளவிட முடிகிறதென்கிறார்.

2. கதைமாந்தர்களை அடையாளப்படுத்துதல்: கதையில் வரும் கதை மாந்தர்களை எடுத்துரைப்பவர் நேரடியாகவும் அல்து மறைமுகமாகவும்; தானாக முன்வந்தோ அல்லது பிறபாத்திரங்களின் ஊடாகவோ கதைமாந்தரின் பண்பினை வாசகர்களுக்குக் கூறலாம். இவற்றைக்கொண்டும் எடுத்துரப்பவரின் உணர்ந்தறியும் ஆற்றலைக் கணிக்க முடியும்.

3. காலம் சார்ந்த சுருக்கம்; எடுத்துரைப்பாளர் தான் எடுத்துரைக்கும் கதையின் காலத்தை ஒழுங்குபடுத்திக்கொள்ள ஏற்கனவே சொல்லப்பட்டவைகளை சுருக்கமாக கதையின் நடுவே சொல்வது எடுத்துரைப்பின் ஒருவகை குணமென்றும் அவ்வாறா¡னசூழலில் அவர் எடுக்கும் பல்வேறுவகையான முடிவுகள் கதைசொல்லலுக்கு உதவுவதோடு, எடுத்துரைப்பாளரின் உணர்ந்தறியும் ஆற்றலை விளங்கிக்கொள்ளவும் உதவுகிறது.

4. கதைமாந்தரை வரையறைப்படுத்துதல்: இங்கே இரண்டுவகையான உணர்ந்தறியும் ஆற்றலை எடுத்துரைப்பாளரிடம் காண்கிறோம்; முதலாவதாக கதை மாந்தரை அடையாளப்படுத்துதல் என்ற விவரிப்பின்மூலம் அக்கதைமாந்தரைப்பற்றி ஏற்கனவே கதைசொல்லி அறிந்திருக்கிறார் என்ற உண்மையொன்று. அடுத்து கதைபற்றிய துல்லியமான பிம்பம், அக்கதைமாந்தரை பொதுமைபடுத்துவதோடு, அவரின் பண்புநலன் எடுத்துரைப்பாளரின் மூலம் அதிகாரமையப்படுத்தப்படுகிறது. ஆக இதனாலும் எடுத்துரப்பவரின் ஆற்றல் நமக்குத் தெரியவருகிறது.

5. கதைமாந்தர் எதைச் சொல்லகூடாது அல்லது எதை எண்ணிப்பார்க்கூடாது என்பது குறித்த அறிதல்: கதைமாந்தரின் செயல்பாட்டை அல்லது ஞானத்தை எடுத்துரைப்பவர் தீர்மானித்திருப்பதை அக்கதைமாந்தரின் செயல்களும், பேச்சும் நமக்குக் காட்டிக்கொடுத்துவிடும். அதன் அடிப்படையிலும் எடுத்துரைப்பவரின் உணரும் ஆற்றலை விளங்கிக்கொள்ளமுடியும்.

6. விளக்கிச்சொல்லுதல் அல்லது விளக்ககுறிப்பு என்பது பனுவலின் இடையில் சொல்லப்பட்டிருக்கும் குறிப்பு அல்லது முன்வைக்கப்படும் கருத்து. இவ்வாறு சொல்லப்படுவது கதைமாந்தரையோ நிகழ்ச்சியையோ, சூழலையோ அல்லாமல் ஒரு குழு அல்லது சமூகம் அல்லது ஒட்டுமொத்த மனித இனம் என்று பெரிய அளவில் அனைத்தையும் உள்ளடக்கியதாக அமையும்.

7 அடிக்குறிப்பு: ஒரு புனைகதை உருவாக்கத்தில் அடிக்குறிப்பு என்ற உத்தியைப் பயன்படுத்துதல் என்பது பொதுவாக வழக்கத்திற்கு மாறானது. மேலும் எடுத்துரைப்பவரின் இருப்பை பெரிதும் விளம்பரப்படுத்துவாதகும் என்ற கருத்து வைக்கப்படுகிறது. மொழிபெயர்ப்புக்கோ, கட்டுரைகளுக்கோதேவைபடுவதுபோல புனைகதைக்கு அடிக்குறிப்பு அவசியமில்லை. ஆனால் அதற்கான தேவை இருக்கிறபோது அடிக்குறிப்பை பயன்படுத்துதல் கட்டாயமாகிறது.

8. நம்பகத் தன்மை: ஓர் எடுத்துரைப்பவர் அவர் சொல்லும் கதையையும் விளக்கத்தையும் வாசகர்கள் ஆதாரபூர்வமானவை என்று நம்பிக்கைகொள்ளும்படியாகச் செய்யமுடிந்தால் அவர் நம்பகத்தன்மையை ஏற்படுத்திதரும் எழுத்தாளர். இன்னொரு பக்கம் நம்பகத்தன்மையை வாசகரிடத்தில் ஏற்படுத்தித் தரவியலாத எடுத்துரைப்பாளர்களும் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பனுவலில் வாசகரிடத்தில் சந்தேகத் தன்மையை ஏற்படுத்தித் தருபவர்கள், அதற்கான காரனங்களை அவர்களே உருவாக்குகிறார்கள். நம்பகத் தன்மைக்கு எடுத்துரைப்பவரின் அறிவாற்றல், அவரது தனிப்பட்ட ஈடுபாடு, அவருடையசிக்கலான மதிப்பீட்டுமுறை ஆகியவைக் காரணமாகின்றன.

நம்பகமின்மைக்கு:
அ. எடுத்துரைப்பாளர் பார்வையிலிருந்து உண்மைகள் விலகி முரண்படுதல்
ஆ. பனுவல் மூலமாக வெளிப்படும் செயல்கள், உதாரணமாக எடுத்துரப்பாளரின் தவறுகள் சுட்டிக்காட்டி நிறுவிவிடும்போது
இ. பனுவலில் இடம்பெறும் கதைமாந்தர்களின் பார்வை எடுத்துரைப்பாளரின் பார்வையோடு முரண்பட்டு தொடர்ந்து மோதலுக்கு உள்ளாகும்போது
ஈ. எடுத்துரைப்பாளரின் மொழியே நம்பகத் தன்மையற்று இருக்கிறபோது.

(தொடரும்)

மொழிவது சுகம் டிசம்பர் 5 -2014

1.அம்பை பாரீஸ் வருகிறார்.Ambai 2

தமது ஸ்பாரோ அமைப்பு ஊடாக கௌரவிக்கப்பட்டிருக்கிற அம்பை தமது ஐரோப்பிய வருகையின்போது பிரான்சில் உயிர் நிழல் லட்சுமி ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருகிறார். ‘தேடலும் பகிர்தலும்’ என்ற தலைப்பில் உரையாற்றவும் உள்ளார். பாரீஸில் உள்ள நண்பர்கள் தவறாமல் கலந்துகொள்ளவேண்டிய நிகழ்வு. அவரைக் காணும் ஆவல் உள்ளது. சந்தர்ப்பம் அமையுமாவென்று தெரியவில்லை. முதலில் நிகழ்ச்சி டிசம்பர் 14 என்று சொல்லபட்டது. அதற்கேற்ப எனது ப்யணத்தை ஒழுங்கு செய்திருந்தேன். தற்போது டிசம்பர் 13 மாலை 5 மணி என்பதால், சனிக்கிழமை காலையிலேயேயே ஸ்ட்ராஸ்பூரிலிருந்து கிளம்பவேண்டும், சாத்தியமாவென்று தெரியவில்லை.

“தேடலும் பகிர்தலும்”

நிகழ்ச்சி நேரம்: மாலை 4.40
5, Rue Pierre l’Ermite
Paris-18
Metro: La Chapelle

——————-

2. படித்த படிக்கிற நாவல்கள்

அண்மையில் அசோகமித்திரனின் 18வது அட்சக்கோடு நாவலையும், சா. கந்தசாமியின் சாயாவனம் நாவலயும் படித்தேன். சாயாவனம் கடந்த காலத்தினும்பார்க்க தற்போதைய சூழலில் கூடுதல் ஜொலிப்புடன் இருக்கிறது. முதல் வாசிப்பு காலத்தில், நாவலை ருசித்து வாசிக்க தவறி இருக்கிறேன் என்று புரிந்தது. சாயாவனத் தேவர் போன்ற்வர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கிறார்கள். மனிதர்கள் அனைவருமே தனித்தன்மையோடிருப்பவர்கள்தான், என்றாலும் தேவர் போன்றவர்கள் அத்தனித் தன்மையைத் சந்தர்ப்பம் வாய்க்கிறபோதெல்லாம் முன்னெடுத்து தங்கள் இருப்பை உயர்த்திக்கொள்கிறார்கள். சாயாவனம் மனதில் நிற்கிறது.

Philippeதமிழவன் பிலிப் சொலெர் (Philipe Sollers) எழுத்துவகைமையை தமது சிற்றேடு இதழில் உதாரணம்காட்ட அவரது படைப்பில் ஒரு சிலபக்கங்களை மொழிபெயர்த்து அனுப்ப முடியுமாவென கேட்டார். தமிழ் புனைகதை உலகை மேற்குலகோடு இணைத்து கொண்டுபோகவேண்டுமென வார்த்தை செயல் இரண்டின்மூலமும் தமிழவன் வற்புறுத்திவருபவர். பிலிப் சொலெர் எழுத்தை அதிகம் நேசிப்பதில்லை. கலைநேர்த்திக்குப்பதிலாக, அறிவியல் கூறுகள் அதிகம் தலைவிரித்தாடுவதுபோல உணர்வேன். தேன்கூட்டைக்கலைத்ததுபோல சொற்களை சிதறடித்து, புனைகதை என்பதைக்காட்டிலும், மொழிநூலொன்றை படிப்பதுபோல இருக்கும். நிறைய எழுதுவதிலும், எதையாவது சொல்லிவிட்டு பிறபடைப்பாளிகளிடம் வாங்க்கிக்ட்டிகொள்வதிலும் ஒருவகையில் பிரெஞ்சு ஜெயமோகன். தமிழவன் மீதுள்ள மரியாதை மற்றும் விசுவாசம் காரணமாக Eclaircie என்ற நாவலை பிடிப்பின்றி வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

3. மொழிபெயர்ப்’பு

காலச்சுவடிற்காக அல்பெர் கமுய் கட்டுரைத் தொகுப்பொன்றை மொழிபெயர்க்கிறேன். கடுமையான் சவால்தான் பல நேரங்களில் சரியாக த் தமிழ்சொற்கள் அமைவதில்லை. உதார ணமாக நூலின் பெயரிலேயே பிரச்சினை தொடங்குகிறது. ‘L’homme révolté’ என்ற பிரெஞ்சு சொல்  செய்திக்கும், ஆங்கில மொழிபெயர்ப்பில் அதனை ‘The Rebel’ எனக்கூறுவதற்கும் நிறைய வித்தியாசம். தவிர தமிழில் ‘புரட்சி’ என்ற சொல்லை முடிந்த அளவு கேவலப்படுத்தி இருக்கிறார்கள். தமிழர்களின் ‘புரட்சியை’ தத்தெடுத்தால் அல்பெர் கமுய் என்னை மன்னிக்கவேமாட்டார். புரட்சி என்ற சொல்லை சரியாககக்கையாண்டவர் பாரதிதாசன் மட்டுமே, இன்றைக்கு அது கட்டெறும்பாக இருக்கிறது . இரண்டாவது பிரச்சினை நூலில் ஆங்காங்கே வேற்று நூல்களில் அவர் படித்த செய்திகள் எடுத்தாளப்பட்டுள்ளன, குறிப்பாக அவருடையதும், பிற அறிஞர்களுடையதுமான பல மெய்யியல் கோட்பாடுகள். உதாரணம் Respirer, c’est juger. தமிழில் “சுவாசிப்பதே, தீர்ப்பளித்ததுபோலத்தான்” என்ற பொருளில். அல்பெர் கமுய் யின் அபத்தவாதத்தை படித்தறியாதவர்களுக்கு இது போன்ற வரிகள் குழப்பததை அளிக்கக்கூடும். அதை தெளிவுபடுத்தவேண்டிய கடமையும் மொழிபெயர்ப்பாளனுக்கு இருப்பதாக நினைக்கிறேன்.

4. Marché de Noël de Strasbourg

எங்கள் ஊரில் ( Strasbourg) கிறிஸ்துமஸ் அலங்காரம், கடைகள் என்று சூடுபிடித்துவிட்டன. கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் கிறிற்துமஸ்ஸ¤க்குத் தனியாக கடையொன்றை (இந்திய கலைப்பொருட்கள், ஆரோவில் ஊதுபத்திகள்) போடுவதுண்டு, ஒரு மாத காலம் நீடிக்கும். க்டந்த இரண்டுவருடங்களாக அதை நிறுத்திவிட்டேன். அலுத்துவிட்டது. பிரான்சுநாட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகையைமுன்னிட்டு அதிகம் உல்லாசChoucrouteப்பயணிகள் கூடும் நகரம் ஸ்ட்ராஸ்பூர். கிறிஸ்துமஸ் கடைகளை பார்க்கவென்றே, ஐரோப்பா அமெரிக்க சுற்றுலாவாசிகள் இந்நகருக்கு வருவார்கள். அக்காலங்களில் சூடான ஒயின், தார்த் •பிளாம்பே, வறுத்த மரோன், மசாலா சேர்த்த இனிப்பு ரொட்டி ஆகியவற்றை கிறிஸ்துமஸ் கடைகளைப் பார்க்கவருகிற பயணிகள் வாங்கத் தவறமாட்டார்கள், தவிர ரெஸ்டாரெண்ட்டில் ஷ¤க்ரூத் (Choucroute) சாப்பிடாத வெளியூர்வாசிகளைப் பார்க்கமுடியாது.


————————————-

எஸ். பொ. என்ற மாமனிதன்

S.P எஸ். பொ. என இலக்கிய நண்பர்களால் அன்புடன் அழைக்கப்ட்ட எஸ். பொன்னுதுரையை தமிழ் இழந்திருக்கிறது.. சில வருடங்களுக்கு முன்பாக யுகமாயினி சித்தன் முயற்சியில் நண்பர் திருப்பூர் கிருஷ்ணன் அமுதசுரபி இதழ் சார்பாக ஒரு நிகழ்ச்சியை சென்னையில் எனக்காக ஏற்பாடு செய்திருந்தார். அநிகழ்வுக்கு திரு எஸ்.பொ. தலமை தாங்கினார். அப்போதுதான் அவரை முதன்முதலாக நேரில் சந்தித்தேன். அதன் பின்னர் சென்ற ஆண்டு கோவையில் நடைபெற்ற தாயகம் கடந்த தமிழ் நிகழ்வில் அவரைக் காணும் வாய்ப்பு பெற்றேன். அவர் பேசும் தமிழும் சரி எழுதும் தமிழும் சரி காண்டாமணிபோல ஒலித்தபின்னும் ஓசையில் நீள்பவை, நெஞ்சில் வெகுநேரம் எதிரொலிப்பவை. ‘காப்பிக் குடிக்கபோனபோது மனிஷி பார்த்துவிடக்கூடாதென்றார். அந்த அம்மாவிற்குத்தெரியாமல் இனிப்பை அதிகம் சேர்த்தே உடம்பைக் கெடுத்துக்கொள்கிறாரென தெரியவந்தபோது கோபம் வந்தது. நண்பர் க.பஞ்சாங்கமும் நானும் கோவைக்கு விமானத்திற்காக சென்னை மீனம்பாக்கத்தில் காத்திருந்தபோது அவரது உரையாடியது இன்றும் மனதில் இருக்கிறது, குழு அரசியலில் சிக்காத இலக்கியவாதி. அவர் உழைப்பை தமிழ் புரிந்துகொண்டிருந்தது, தமிழர்கள்தான் உணரவில்லை; எதையும் விளம்பரங்களைக்கொண்டு எடைபோட்டு பழகிய தமிழர்கள் அவர் அருமையை விளங்கிக்கொள்ளாதில் வியப்புகளில்லை. எஸ்.பொ.வின் தமிழ்ப் பங்களிப்பும் அது சார்ந்த ஒளிவட்டமும் விலைகொடுத்து பெற்றதல்ல, தமிழ் உள்ளவரை இருப்பார்.

பத்ரிக் மொதியானொ: நினவுகளை கலை நுட்பத்துடன் எடுத்துரைக்கக் கூடியவர்

France Nobel Literature” நோபெல் பரிசும் பிரெஞ்சு இலக்கியமும் இணைபிரியாதவை, ஏனெனில் பிரெஞ்சு இலக்கியம், நோபெல் பரிசு என்கிற ஒளிப்பிரபைக்குள் வருகிறது” -என ‘பத்ரிக் மொதியானொ’வின் பெயரை 2014ம் ஆண்டு நோபெல் இலக்கிய பரிசுக்குத் தேர்வு செய்து முடிவை அறிவித்த தினத்தில் பிரான்சு நாட்டு வெளியுறவு அமைச்சர் கூறியிருந்தார். அவருடைய நாட்டின் இலக்கியபுகழ் குறித்து பெருமிதம்கொள்ள அமைச்சருக்குக் காரணங்கள் இருக்கின்றன. உலக நாடுகளில் நோபெல் பரிசை அதிகம் வென்ற நாடுகளில் பிரான்சு முதலாவது – இது நாள்வரை பதினைந்து பரிசுகள். அமெரிக்காவும் இங்கிலாந்தும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன. 1964 ஆம் ஆண்டு தமக்களிக்கப்பட்ட பரிசை ழான் போல் சார்த்துரு மறுக்கவில்லையெனில் பரிசுபெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்குமெனவும் பிரெஞ்சு மக்கள் தெரிவிக்கிறார்கள். ழான் போல் சார்த்ருவின் மறுப்பு நோபெல் பரிசுத் குழுவினரைச் சீண்டியதாகவும், கோபமுற்ற பரிசுக்குழுவினர் இருபது, ஆண்டுகள் பிரெஞ்சு இலக்கியவாதிகளைத் தண்டித்தத்தாகவும்(?) பேச்சு. 1985ம் ஆண்டு குளோது சிமோன் என்ற பிரெஞ்சு எழுத்தாளருக்குப் பரிசினை அளித்ததின் மூலம் பிணக்கு முடிவுக்கு வந்ததாகப் பிரெஞ்சு மக்களிடையே பரவலாக எண்ணமிருக்கிறது. 2008ல் கிளேசியோவுக்கு இலக்கியத்திற்கான நோபெல் பரிசு கிடைத்த ஆறாண்டுகள் இடைவெளியில் மற்றுமொரு பரிசு எந்பதால் பிரெஞ்சு இலக்கிய உலகம் மகிழ்ச்சியில் திளைக்கிறது, தங்கள் எதிர்காலம் ஆரோக்கியமானதென நம்பிக்கைக்கொண்டிருக்கிறது.

” நான் எழுதிய நூல்களைக் குறித்து குழப்பமே மிஞ்சுகிறது. ஓரே ஒரு புத்தகத்தைத்தான் கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளாக எழுதியிருக்கிறேன். ( 30ம்க்கு மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன). நடப்பது அனைத்துமே உண்மை அல்லாதது போலவும், கனவில் நிகழ்வதுபோலவும்; என்னைப்போன்ற பிறிதொருவருக்கே பரிசும், புகழும் வந்தடைந்திருப்பதுபோலவும். நினைக்கத் தோன்றுகிறது. எனது பெயர், பரிசுபெற வாய்ப்புள்ளவர்கள் பட்டியலில் இருக்கிறதென்று சொன்னார்கள், ஆனால் தேர்வு செய்யப்படுவேன் என நினைக்கவில்லை. நான் போற்றிய,வியந்த எழுத்தாளர்களுக்கு இணையாக நானும் வைக்கப்படுவேன் என நினைத்ததில்லை. ” -இவை, தேர்வுக்குழு தமது பெயரை அறிவித்த நாளில் பிரெஞ்சு பத்திரிகையாளர்களிடம் மொதியானொ கூறியவை, அவரை அறிந்தவர்களுக்கு இப்பதில் வியப்பினை அளித்திருக்க வாய்ப்பில்லை.

“பத்ரிக் மொதியானொவா, யார் அந்த ஆள்?” எனக் “தி கார்டியன்” இதழ் பத்திரிக்கையாளர் கேட்டதாக ஒரு செய்தி பிரெஞ்சு தினசரியொன்றில் வெளியாகி இருந்தது. அவர் கோபத்திற்குக் காரணம், அமெரிக்க எழுத்தாளர் ‘பிலிப் ரோத்’ திற்கு பரிசு கிடைக்காதது. இல்லை என்றானதும் கோபம் பத்ரிக் மொதியானொ மீது திரும்பியிருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் அறியப்பட்ட அளவிற்கு ஆங்கில மொழி பேசும் பகுதிகளில் மொதியானொ நன்கறியப்டாத பெயாராம். அமெரிக்காவில் இதுவரை மோதியானாவின் மூன்று நூல்களே வந்திருப்பதாகவும் அவையும் பிற பிரெஞ்சு எழுத்தாளர்களைக்காட்டிலும் விற்பனையில் தேக்க நிலையில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. நோபெல் பரிசு அக்குறையைக் களைந்து விடுமென பிரெஞ்சு இலக்கிய உலகம் எதிர்பார்க்கிறது.

பத்ரிக் மொதியானொ எப்படி? பிரான்சு நாட்டைப் பொறுத்தவரை, நோபெல் பரிசு அளிக்காமல் இருந்திருந்தாலுங்கூட ஓர் முக்கியமான எழுத்தாளர். என்றைக்குப் பிரெஞ்சு இலக்கிய உலகு தங்கள் நாட்டின் அதிமுக்கியம்வாய்ந்த “கொன்க்கூர் பரிசை” அளித்தார்களோ, அன்றிலிருந்தே அவர் ஓர் முக்கிய எழுத்தாளர். பிரான்சுக்கு வந்த புதிது, பிரெஞ்சு இலக்கியத்தில் அதிகம் அக்கறை கொள்ளாத தொடக்க காலம். ஒரு நாள் இரவு ‘ஆண்ட்டென் 2′ என்ற பிரெஞ்சு சேனலின் வாரம் ஒருமுறை நடபெறும் இலக்கிய நிகழ்விற்கு பத்ரிக் மொதியானொ’ வந்திருந்தார். நல்ல உயரம், அதற்கேற்ற உடல் வாகு. நிகழ்ச்சியை நடத்திய மொழிவிற்பன்னர் ‘பெர்னார் பீவோவும் கிட்டத்தட்ட அவரைப்போலவே இருந்தார். ‘பெர்னார் பீவோ’வின் கேள்விகள் சுருக்கமாக இருந்தபோதிலும் நிகழ்ச்சியைப் பார்த்த எனக்கு அவற்றைப் புரிந்துகொள்வதில் சங்கடங்கள் இருந்தன. மாறாக பத்ரிக் மோதியானோவின் பதில்கள் எளிதாகப் புரிந்தன. ஒவ்வொரு பதிலையும் நிறுத்தி நிதானமாகக்கூறினார். அவருடைய பதில் நீளமாக இருந்தபோதிலும் எளிமையான சொற்களைக் கையாண்டார். ஆனால் அதைக் கூறிய விதம், அவரை முன்பின் அறிந்திராத என்னை நகைக்கச் செய்தது. பாதி வாக்கியத்தை கூறுவார், பல நொடிகளை தயக்கத்துடன் கழித்த பிறகு, மீதி வாக்கியத்திற்கு வீட்டிற்கு சொல்லியனுப்பி இருப்பதுபோலக் காத்திருப்பார், வந்து சேர்ந்ததை உறுதிப்படுத்திக்கொண்டவர்போல மிச்சமிருக்கும் வாக்கியம் வெளிப்படும்.. அப்பதிலும் திரும்பத் திரும்பவரும், ‘கீறல் விழுந்த இசைத்தட்டு’ போல. நிகழ்ச்சியை நடத்தியவருக்கும் வந்திருந்த பார்வையாளர்களுக்கும் மொதியானொவின் பதில்கள் எப்படி இருந்தனவோ தெரியாது. எனக்கு அன்று இரண்டொரு பிரெஞ்சு சொற்கள் கற்க வாய்பாக அது அமைந்தது. தொண்ணூறுகளில் இருந்துதான் பிரெஞ்சு இலக்கியத்தில் ஆர்வம் பிறந்ததென்று சொல்லவேண்டும். உயர் நிலைப் பள்ளி மாணவர்களுக்கானப் பாடத் திட்டத்தில் நவீன இலக்கியங்களிலிருந்து சில பகுதிகளைப் பிரசுரித்து எளிமையான கேள்விகளுடன் விளக்கம் சொல்லப்பட்டிருக்கும். பல நவீன எழுத்தாளர்கள் அப்பாடநூல்கள் மூலமாக எனக்குத் தெரியவந்தார்கள். அவர்களில் பத்ரிக் மொதியானொ¡வும் ஒருவர். இவர்களுக்கெல்லாம் நோபெல் பரிசு கிடைக்குமென சில பெயர்கள் பிரெஞ்சு இலக்கிய உலகில் அவ்வப்போது வதந்திகளாக பரவும்: ஹூல்பெக், மரி தியய், பஸ்க்கால் கிஞ்ஞார் எனப் பெயர்கள் அடிபடும், மொதியானோவின் பெயரும் அதிலுண்டு, பட்டியலில் மூன்றாவதாகவோ நான்காவதாகவோ வருவார். ஒருவேளை மற்றவர்களை மொதியானொ முந்திக்கொண்டதற்கு வயது அல்லது அவரது சுவீடன் உறவு காரணமாக இருந்திருக்கலாம் என்ற வதந்தி தற்போது.

பத்ரிக் மொதியானொ¡விற்கு நோபல் பரிசினை வழங்கியிருப்பதன் மூலம் பிரெஞ்சு இலக்கிய உலகின் தனித்துவம் மீண்டும் உலகிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதென்றே நம்பவேண்டியிருக்கிறது. உலகிற்கு பிரெஞ்சு இலகியத்தின் பங்களிப்பைக் குறைத்து பதிப்பிடமுடியாது. எடுத்துரைப்ப்பிலும், கதைசொல்லலிலும் வடிவத்திலும் ஒரு மாபெரும் புரட்சியை நடத்திக் காட்டியவர்கள். கடந்த 30 ஆண்டுகளாக ஆண்டுகளாக ‘Ecriture de soi’ எனப்படுகிற ‘தன்னை எழுதுதல்’ பிரெஞ்சு இலக்கிய உலகை ஆளுமை செய்கிறது. கட்டுரை, சிறுகதை, புதினம் எனும் எடுத்துரைப்பின் அனைத்துவடிவங்களிலும் இது நிரூபணம் ஆகியுள்ளது. மொதியானொவின் எழுத்துக்கள் அனைத்துமே தன்னை எழுதுதல் வகைமை சார்ந்தவை. அவருடைய கதைகள், கட்டுரைகள் நாவல்கள் அனைத்துமே அவர் வாழ்க்கையை, அவர், குடும்பத்தை, அவர் நண்பர்களை, அவர் சந்தித்த மனிதர்களை, அவர் குடியிருந்த வீட்டை, அந்த வீடிருந்த கட்டிடத்தை, அக்கடிதம் இருந்த வீதியைத் திரும்பத் திருப்ப அலுக்காமல் பேசுபவை. அவருடைய தன்னை எழுதலில்: சுய வரலாறும் உண்டு, சுய புனைவும் உண்டு. அவருடைய சுயபுனைவுகள் வித்தியாசமானவை, எடுத்துரைப்பில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு அதிலின்று வெற்றியும் பெற்றிர்ருக்கின்றன. கதைக் களனை அவர் பயன்படுத்திக்கொள்ளும் விதமும், எளிமையான கதைசொல்லலும், தேடலும், மொதியானோவை தனித்து அடையாளப்படுத்துகின்றன.

Un pedigree என்பது அவருடைய சுயவரலாறு, 2005ல் வெளிவந்தது. இலக்கிய விமர்சகர்களின் கருத்துப்படி அதொரு hetro-biography, auro-biography அல்ல. அதாவது தன்னை பிறனாகப் பாவித்து எழுதப்பட்ட சுயவரலாறு. இங்கே நோபெல் பரிசு அறிவிக்கப்பட்டதும் பத்திரிகையாளர்களிடம் அவர் தெரிவித்த: “பரிசு அறிவிப்பும் அது சார்ந்த கொண்டாட்டங்களும் எனக்கல்ல, என்னைபோன்ற ஒருவருக்கு அளித்ததாகவே பார்க்கிறேன்” என்ற கூற்றை நினைவு கூர்தல் வேண்டும். பத்ரிக் மொதியானொவின் சுயவரலாறு இப்படித் தொடங்குகிறது; ” ஜூலை மாதம் 30ந்தேதி 1945ம் ஆண்டு பூலோஜ்ன் – பில்லியான்-கூர்- ல், எண்-11, மார்கரீத் சந்தில் பிறந்தேன்” காலச் சுவடு வெளிவந்திருக்கும் ‘உயிர்க்கொல்லி’ சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பத்ரிக் மொதியானொவின் சிறுகதை ‘சேன் நதியில்’ கதை சொல்லியும், மதாம் பிளாஷ் மகளான சோனியாவும் பிறந்தது பூலோஜ்ன் என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது, வீட்டு எண்ணை மட்டும் தவிர்த்திருக்கிறார். அவருடைய சுயவரலாற்றில், ” மொதியானோவின் தாய் நாடகபட்டறையில் பயிற்சிபெற சேர்ந்ததும், தன்னைச் (மொதியானோவை) சரியாகக் கவனிப்பதில்லை” – என்றும் வருகிறது. ‘சேன் நதி’க் கதையிலும் நாடகப் பட்டறையில் தொழில்முறை கலைஞராக பயிற்சி பெறும் சோனியா தனது மகளை கவனிப்பதில் அக்கறைகொள்வதில்லை. அதுபோலவே மொதியானொவின் சுயவரலாற்றில், நீதிமன்றத் தீர்ப்பின்படி வீட்டுத்தளவாடங்களை அபகரிக்க நீதிமன்ற உத்தரவுடன் அரசாங்க பிரதிநிதி வரப்போகிறார் என்றறிந்து, வீட்டுத் தளவாடங்களை இரவோடிரவாக எழுத்தாளரின் தந்தை வேறிடத்திற்கு அனுப்பியதாகக் கூறியிருப்பார், “வீடு வெறிச்சோடிக்கிடக்கும்”, என சொல்லப்பட்டிருக்கும். இக்காட்சியையும் “சேன்நதி” சிறுகதையில் அப்படியே பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். அதுபோலவே சுயவராற்றில், ” மூன்றாவது மாடியில் எந்நேரமும் விருந்தினர்களின் சிரிப்பும் கும்மாளமும் அமர்க்களப்படும், நாங்கள் ( மொதியானொவும் அவரது சகோதரரும்) அதைக் காதில் வாங்கியிருக்கிறோம். நாங்கள் கவனிப்பாரற்று இருக்க பக்கத்து அறையில் அவரது சினேகிதர் சினேகிதைகளுடன் அம்மா கொண்டாட்டத்தில் இருப்பார்கள்” என்பதெல்லாம் ‘உயிர்க்கொல்லித் தொகுப்பில் இடம்பெற்றுள்ள “சேன் நதி”க்கதையில் அப்படியே இடம் பெறுகின்றன. இவ்வுண்மை அவருடைய அனைத்துப் புனைவுகளுக்கும், எடுத்துரைப்பிற்கும் பொருந்தக்கூடியது. எனவே பத்ரிக் மொதியானொ பிரெஞ்சு எழுத்தாளர்களையும் பார்க்க ஒப்பீட்டு அளவில் கூடுதலாக ‘தன்னை எழுதுதலில்’ முழுமையாக ஒப்படைத்துக்கொண்டவர் எனத் தெரிவிக்கலாம். நோபெல் பரிசு பத்ரிக் மொதியானொவிற்குக் கிடைத்தது என்பதைவிட ‘தன்னை எழுதுதலுக்குக்’ கிடைத்தப் பரிசு எனக் கூறினால் மிகையில்லை.

1978ம் ஆண்டு மொதியானொ¡விற்குப் பிரெஞ்சு இலக்கிய உலகின் கொன்க்கூர் பரிசு (Prix Goncourt) அவருடய “Rue des boutiques obscures”( ரோமிலுள்ள தெருவின் பெயரை நாவலின் தலைப்புக்குப் பயன்படுத்திக்கொண்டார் ) மொதியானொவை நெருங்கக் காரணமாயிற்று. வாசிப்புத் தேர்வுக்கு இதுபோன்ற பரிசுகளும் நமக்கு உதவுகின்றன. கொன்க்கூர் பரிசுபெறும் நாவல்களை வாங்குவதென்ற முடிவின் அடிப்படையில், பழைய புத்தகக்கடையில் பாக்கெட் நாவல் தரத்தில் வீட்டிற்கு வந்தது. இந் நாவலும் சரி இதற்கு முன்பாக வாசித்திருந்த ஒன்றிரண்டு சிறுகதைகளும் சரி பலரும் கூறுவதைப்போல மொதியானொ கடந்த காலத்தைத் தேடும் மனிதரென்பதை தெரிவிக்கின்றன. எழுத்தாளருக்கு கடந்த காலம் என்பது அவருடைய கடந்த காலம் அல்ல, அவருடன் வாழ்ந்த சக மனிதர்களின் கடந்த காலம். “பிறருடைய கடந்த காலத்தை தன்னுடைய நினைவுகளிலிருந்து மீட்கிறார்”. “Rue des boutiques obscures” நாலை ஆங்கிலத்தில்” Missing person” என்று மொழிபெயர்த்திருந்தது வியப்பை அளித்தது. பிறவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் என்னபெயர் கொடுப்பார்கள் என்ற கேள்வி எழுந்ததால் இந்த வியப்பு. கிடைக்கிற தகவல்களை வைத்து பார்க்கிறபோது மோதியானோவின் எல்லா நாவல்களுமே தொலைந்த மனிதர்களைத் தேடுபவைதான் – ‘தொலைத்த காலத்தைத் தேடும்’ மர்செல் ப்ரூஸ்டு போல.

பத்ரிக் மொதியானொவை இன்னார் என்று புரிந்துகொள்ள தமிழில் வந்துள்ள உயிர்க்கொல்லி சிறுகதைத் தொகுப்பில் உள்ள ‘சேன் நதி ‘ என்ற ஒரு கதை போதுமானது. அவரது படைப்புகளின் பொதுப்பண்புகளாக: அவர் வாழ்க்கையிலும்அவருக்கு வேண்டியவர்களின் வாழ்க்கையிலும் குறுக்கிட்ட மனிதர்களின் பழைய நினைவுகளில் ஆழ்தல், அவற்றை மீட்டெடுத்தல், கையில் முகவரியை வைத்துக்கொண்டு அம் முகவரிக்குரிய நபர்களைத் தேடுதல், அவர்களின் அடையாளங்கள், மொதியானொவின் காலம் ( குறிப்பாக பாரீஸ் ஜெர்மன் ஆக்ரமிப்பிலிருந்த நாட்கள்) மொதியானொ காற்பதித்த இடங்கள் ( பாரீஸ் வீதிகள், சந்து பொந்துகள், நதிக்கரைகள், பூங்காக்கள்) இரண்டாம் உலகயுத்தம், ஜெர்மானியர் பிடியிலிருந்த பாரீஸ் நகர மக்களின் துயர வாழ்க்கை ஆகியவைத் திரும்பத் திரும்ப வருகின்றன. நோபெல் பரிசு தேர்வு முடிவை வெளியிட்ட அன்று “கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளாக ஒரு புத்தகத்தையே திரும்பத் திரும்ப எழுதிவருவதைப் போன்ற உணர்வும் இருக்கிறது” எனப் பத்திரிகையாளர்களிடம் மொதியானொ கருத்து தெரிவித்தமைக்குக் காரணம் இதுவே. எனினும் நினைவுகளை துல்லியமாகவும் கலை நுட்பத்துடனும் சொல்வதில் அவர் நிகரற்ரவர்.
——

மொழிவது சுகம் : நவம்பர் 15 -2014

அ.    இரண்டு லட்சுமிகள்

 

இக்கணத்தில் இரண்டு லட்சுமிகளை நினைவுகூரவேண்டியவாக இருக்கிறேன். எனது புதிய நாவலோடு சம்பந்தப்பட்ட லட்சுமி ஒருவர், மற்றவர் மொழிபெயர்ப்போடு சம்பந்தப்பட்டவர். இரண்டு நூல்களுமே விரைவில் வர இருக்கின்றன. இரண்டுமே காலச்சுவடு சம்பந்தப்பட்டவை. ஒன்றுகாலச்சுவடு க்காக நான் எழுதியுள்ள புதிய நாவல், மற்றது காலச்சுவடின் முயற்சியால் பிரெஞ்சு பெண்மணி ஒருவருடன் இணைந்து பணியாற்றிய மொழிபெயர்ப்பு. மூல நூலின் ஆசிரியர் அம்பை என்கிற மற்றொரு லட்சுமி.

 
உயிர்நிழல் லட்சுமி.

பிரான்சு என்றதும் பல இலக்கியவாதிகளுக்கு பாரீஸில் உள்ள லட்சுமி என்ற பெயர் நன்கு அறிமுகமான பெயர். ‘உயிர் நிழல் லட்சுமி விளம்பரமின்றி, தன்னை ஒளித்து இலக்கியபணி ஆற்றிக்கொண்டிருக்கும் பெண்மணி.  காலச்சுவடு வெளியிட உள்ள எனது நாவலுக்கு சில அத்தியாங்களில் பாத்திரங்களுக்கு ஈழத் தமிழ் சொற்கள் அவசியமாகப்பட்டன. லட்சுமி தகுதந்த ஈழத்தமிழ்ச் சொற்களை இட்டு உரையாடலுக்கு ஜீவனைக் கொடுத்திருக்கிறார் நாவல் பேசப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.  பேசப்படின் அவ்வெற்றியில் அவருக்குள்ள பங்கை மறுக்க முடியாது.

 

அம்பை லட்சுமி

வரும் ஜனவரியில் அம்பையின் சிறுகதைகள் De Haute lutte என்ற பெயரில் ZULMA பிரெஞ்சு பதிப்பகம் கொண்டுவருகிறது. Doiminique Vitalyos என்ற பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளருடன் நான் இணைந்து பணியாற்றியது. அம்பையின் சிறுகதைகள் மிக நன்றாக வந்திருக்கின்றன. நாளை இம்மொழி பெயர்ப்பு பேசப்படுமெனில் அம்பையின் கதைகளுக்காக மட்டுமல்ல டொமினிக் என்ற பெண்மனியின் உழைப்பிற்காவும் பேசப்படவேண்டும். டொமினிக் வித்தாலியோ மலையாளம் ஆங்கிலம் இரண்டிலிருந்தும் பல இந்திய நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார்.

 

ஆ. புதிய நூல்கள்
இவ்வருட தொடக்கத்தில் மொழிபெயர்ப்பைத் தவிர்த்து எனது நான்கு நூல்கள் வருகின்றன. நாவலொன்றையும் இலக்கிய கட்டுரைகளையும் காலச்சுவடு கொண்டுவருகிறது. சிறுகதைத் தொகுப்பையும் பயணக்கட்டுரைகள் தொகுப்பையும் நற்றிணை பதிப்பகம் கொண்டுவருகிறது.

நாவல் – எனது பிராஹா பயணத்தின் தாக்கம் என்று சொல்லவேண்டும், பெயர் முடிவாகவில்லை, முடிவானதும் அறிவிக்கிறேன். காலச்சுவடு வெளியிட உள்ள மற்றொரு நூலான கட்டுரை தொகுப்பின் பேயர் ‘தத்துவத்தின் சித்திர வடிவம்’. நற்றிணை வெளியிட உள்ள சிறுகதை தொகுப்பு: மகாசன்னிதானமும் மர்லின் மன்றோ ஸ்கர்ட்டும்’. பயணக்கடுரைகள் தொகுப்பிறகு ‘காப்காவின் பிராஹா – (பயணக்கட்டுரைகள்)’ எனப் பெயர் வைத்திருக்கிறோம்.

 
இ. தன்னைத் தானறிந்தால் தனக்கொரு கேடுமில்லை

தமிழ்நாட்டில் பொய்யான காவலதிகாரியாக, சுங்க அதிகாரியாக, இலஞ்ச ஒழிப்பு அதிகாரியாக நடித்து பின்னர் கைதான மனிதர்களைப்பற்றிய செய்திகளைப் படித்திருப்போம். இம்மனிதர்களின் தேர்வு தமிழ்நாட்டில் மேற்கண்ட சிலதுறைகளை மட்டுமே குறிவைக்கிற காரணத்தை, பத்திரிகைகளில் வரும் செய்திகளும், அவர்கள் தண்டிக்கபட்ட வழக்குகளும் தெரிவிக்கின்றன.  மனிதர்கள் இயல்பும் தேடும் பொருளின் குணமும் இவ்வினையை எழுதுகின்றன. இதற்கான ஆதாரங்களை மனித மனங்களில்தான் தேடவேண்டும். இரு பூதவியல் விஞானிகளில் ஒருவர் ஆக்கத்திற்கும் மற்றவர் அழிவிற்கும் உதவுகிறார். எனக்குத் தெரிந்த, பிரான்சில் வாழ்ந்த ஒரு தமிழர் நல்ல வேலையில் இருக்கவேண்டியவர், தமது தொழில் நுட்ப அறிவை தவறான காரியங்களில் முதலீடு செய்து சிறைதண்டனை பெற்றார். சிலர் கள்ள நோட்டு அடிப்பதில்லையா? மனித மனங்களை வளைப்பவை அவர்களுக்கமையும் சந்தர்ப்ப சூழல்கள்தான், அதனடிப்படையில் அவர்கள் விதியைத் தீர்மானிக்கறபொறுப்பை அவர்கள் சொந்த அறிவு எடுத்துக்கொள்கிறது.

 

இரண்டு நாட்களுக்கு முன்பு பிரெஞ்சு தினசரியில் வந்த செய்தியும் அப்படியொரு தேர்வை பற்றியதுதான். பிரெஞ்சு ஆசாமி குறிவைத்த துறைவேறு, நாட்டைப்பொறுத்து குற்றங்கள் தேர்வும் அமையும் போலிருக்கிறது. அவர் பாரீஸ் நகரசபையில் பணியாற்றுகிறவர், சாலை பராமரிப்பில் ஊழியம். சந்தர்ப்பங்கள் வாய்க்கிறபோது கலை இலக்கியங்கள், இசை பண்பாட்டிற்கென சேவைசெய்துவரும் அரசு வானொலியின் (France Culture) பத்திரிகையாளராக (பொய்யாக) தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு பிரபல பாடகர்கள், நாடக- திரைப்படக் கலைஞர்கள் ஆகியோரை பேட்டிக் கண்டிருக்கிறார். ஆனால் எழுத்தாளர்களை நெருங்கவில்லை. பேட்டி அளித்தவர்கள் தாங்கள் பேட்டி அளித்தபின் சம்பந்தப்பட்ட வானொலியில் அந்நிகழ்ச்சி ஒலிபரப்பப்பரப்பாகிறதா என்பதில் அக்கறை காட்டுவதில்லை. “என்னுடைய பேட்டி இதில் வருகிறது அதில் வருகிறது” என மெனக்கிட்டு கடிதம் எழுதிக்கொண்டிருக்கிற மனிதர்களும் இல்லை என்பதால் பேட்டிக்குப் பிறகு என்ன நடந்ததென்பது ஒருவருக்கும் தெரியாமலேயே போயிருக்கிறது. இது தவிர பிரான்செங்கும் கலை விழாக்கள், இசைவிழாக்கள், திரைப்படவிழாக்கள் நடக்கிறபொழுது பத்திரிகையாளராகக் கலந்துகொண்டிருக்கிறார். ஆனால் சாமர்த்தியமாக சில காரியங்களைச் செய்திருக்கிறார். மற்ற பத்திரிகையாளர்கள்போல நட்சத்திர ஓட்டல், முதல் வகுப்புப் பயணம் போன்ற சலுகைகளை விழா ஏற்பாட்டாளர்களிடம் கேட்பதில்லை, சாதாரண ஓட்டல்கள், இரண்டாம் வகுப்பு பயணம் என அடக்கிவாசித்திருக்கிறார். தவிர எந்த ஏற்பாட்டாளராவது இவருடைய பத்திரிகையாளர் அடையாள அட்டையின் ஒரிஜினலைக் கேட்டால் நழுவி விடுவாராம். ஒரு முடிவு இருக்குமில்லையா எத்தனை நாளைக்கு ஏமாற்ற முடியும், மற்றொரு பத்திரிகையாளர் சந்தேகப்பட்டு போட்டுக் கொடுத்துவிட்டார். ஆனால் இப்படியொரு தவறான தேடலைத் தொடங்கியது இன்று நேற்றல்ல சுமார் இருபத்தேழு ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1987ஆம் ஆண்டு. ஏன் அப்படி நடந்துகொண்டார்? நடச்சத்திர மனிதர்களை நெருங்குவதற்கும் அவர்களுடன் கூடுதலாக நேரத்தைச் செலவிடவும் வேறுகாரணங்கள் தனக்குக்கிடைக்கவில்லை என்கிறார்.

 
நேற்றுவரை நாம் எதைத் தேடினோமோ அதுதான் நம்மைக் கட்டமைத்திருக்கிறது. நமது ‘இன்று’ நேற்றைய தேடலால் கிடைத்தது. ஒரு கும்பலில் ஆறுமுகத்தைத் தேடினால் ஆறுமுகம்தான் கிடைப்பார், அங்கே ஆறுமுகம் இல்லையேன்றால் வெறும் கையோடு திரும்பவேண்டியதுதான். ஆறுமுகத்தைத் தேடிவிட்டு ராமசாமி கிடைக்கவில்லையே எனப்புலம்புவதால் எவ்வித பயனுமில்லை. தன்னைத் தானறிந்தால் தனக்கொரு கேடுமில்லை என்பதொரு சொலவடையுண்டு, தான் தேடியது எதை, அல்லது தேடுவது எதை என்பதில் தெளிவு வேண்டும். ஐம்பது வயதிலும் அறுபதுவயதிலும் உண்மையை விளங்கிக்கொள்ளாமல் அல்லது போதாமல் மிஷெல் ஒபாமா மாதிரி மனைவி அமைந்தால், அவர் பிள்ளைகள்போல எனக்குப் பிள்ளைகள் அமைந்தால், அந்தத் தேதியில் பிறந்திருந்தால் அமெரிக்க ஜானாதிபதியாகியிருப்பேன், சூப்பர் ஸ்டாராராகி இருப்பேன் என்பதெல்லாம் அபத்தம். ஒபாமாவும், ஏ. ஆர் ரஹ்மானும் ஜெயகாந்தனும் எதைத் தேடினார்களோ அதைப் பெற்றிருக்கிறார்கள். நாளோ, கோளோ, மனைவியோ, சுற்றமோ நட்போ அவர்களுக்கு உச்சத்தை கொடுப்பதில்லை.
—–

இலங்கு நூல் செயல்வலர் க.பஞ்சாங்கம்: 8: – நோக்கு நிலை (Focalisation)

panchuண்விழிப்பதுமுதல் கண்ணுறங்குவம்வரை மேற்கத்தியர் முதலீடு செய்த அறிவு நம்மை வழி நடத்திக்கொண்டிருக்கிறது. இன்றைய மனித வாழ்க்கை மேற்கத்தியர்களால் எழுதப்படுவது. கலை இலக்கியமும் அதற்கு விதிவிலக்கல்ல. “இன்றைய மனிதன் உண்மையில் செய்யவேண்டியது என்ன? என்ற கேள்வியைக் கேட்கிற அல்பெர் கமுய் ” அபத்த உலகில் பிறந்த மனிதனுக்குள்ள பங்கு, வாழ்க்கையை ஏற்பதும், அதனுடன் முரண்படுவதும், அதற்கு அடிமையாகாமலிருப்பதும்” என்கிறார்.  அல்பெர் காமுய் ஒத்த எழுத்தாளர்கள் நம்மிடையே இருக்கலாம், ஆனால் அவனையொத்த சுய சிந்தனைவாதிகள் நமிடம் இல்லை. படைப்பிலக்கியம் என்பது இட்டுக்கட்டுவதும், வார்த்தை விளையாட்டுகளுமல்ல, ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கி, வாசகனுக்கு இலைபோடுவது, வாசகனோடு விவாதிப்பது, தன்னைக்கடந்து செல்லவும் வெல்லவும் வாசகனை அனுமதிப்பது. நவீன இலக்கியத்தின் இன்றைய பரிணாமம் என்பது வாய்ச் சவடால்களால் கண்டதல்ல, சோர்வுறாத சிந்தனைச் சவடால்களால் உருப்பெற்ற்வை. சந்தைப்படுத்துதல் என்ற சொல்லுக்கு உளவியல் நோக்கில் பொருள்தேடவேண்டும், ஒவ்வொருமுறையும் நுகர்வோரிடத்தில் உபயோகிக்கும் பொருள் புதியது, கூடுதற் பயனை அளிக்கவல்லது என்ற நம்பிக்கையை அளிக்கவேண்டும். இதற்கு என்ன வழி? உற்பத்தியாளருக்குத் தனது பொருளைபற்றிய முழுமையான அறிவும் தெளிவும் வேண்டும், அதன் பின்னரே நுகர்வோரை நெருங்கவேண்டும். புரட்சியைத் தொழில்களில் மட்டுமல்லை சிந்தனைகளிலும் செய்துகாட்டுபவர்கள் மேற்குலகினர். நவீன இலக்கியத்தின் பல படிநிலைகள் இந்திய இலக்கிய மரபிற்குப் புதிதல்ல. அவற்றின் தடங்கள் இருக்கவே செய்கின்றன. ஆனால் இவற்றையெல்லாம் ஒப்பீடு அளவில் ஆய்வு செய்து கீழைத் தடத்தில் ஓர் இலக்கிய மரபைக் கட்டமைக்க தவறி இருக்கிறோம்.

 

நோக்கு நிலை என்றால் என்ன?

 

“ஒரு பனுவலில் கதையென ஒன்று கதைசொல்லியின் மூலமாய் ஒரு காட்சிகோணத்தின் ஊடாகசொற்களால் முன்வைக்கபடுகிறது” (பக்கம் 207 ந.இ.கோ.) என்று எளிமையாகக் கட்டுரை ஆசிரியர் நமக்கு நோக்குநிலையை விளக்குகிறார். ஆங்லேயர்களாலும் அமெரிக்கர்களாலும் ஒரு கோணத்தில் பார்த்தல் எனக்கூறியதையே ழெரார்ட் ழெனெத் (Gérard Genette) என்ற பிரெஞ்சு இலக்கிய கோட்ப்பாட்டாளர் நோக்குநிலை என அழைப்பதாக தெரிவிக்கிறார். இவ்விடத்தில் ழெரார் ழெனெத் ஒரு பிரெஞ்சுக்காரர் என்பதால் அவரைப்பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தைச் செய்வது நல்லதென நினைக்கிறேன். 1930ல் பிறந்த ழெனெத் அமைப்பியல்வாதிகளில் ஒருவர், இலக்கிய விமர்சகர் அனைத்துக்கும் மேலாக பல இலக்கிய கருத்துருவாக்கங்களை முன்வைத்த மொழிஅறிஞர். அவருடைய Palimpsestes. La Littérature au second degré ( Editions Seuil -1982) முக்கியமானதொரு நூல். ‘பாலம்செஸ்ட்’ ( Palimsests) என்பது என்ன? ஒரு பனுவலில் சில சொற்களை அல்லது சில வரிகளை மாற்றிச்சொல்ல நினைக்கிறோமென்று வைத்துக்கொள்ளுங்கள், என்ன செய்கிறோம், ஏற்கனவே எழுதிய சொற்களை அல்லது வாக்கியங்களைக் கலைத்துவிட்டு அதன் மீது புதிய சொற்களை அல்லது புதிய வரிகளை எழுதுகிறோம், அவ்வாறு எழுதுகிறபோதும் பழைய சொற்களின் அல்லது வாக்கியங்களின் தடம் சரியாக கலைபாடமல் இருக்கிறதில்லையா அதன் பெயரே பாலம்செஸ்ட். ழெனெத்திற்கு இந்த பாலம்செஸ்ட்போலவே ஒவ்வொரு பனுவலிலும் ஏதோவொரு பனுவல் ஒட்டிக்கிடக்கிறது. சென்ற நூற்றாண்டில் எண்பதுகளில் இக்கருத்துருவாக்கத்தை ஜெனெத் முன்வைத்தபோது மேற்குலக விமர்சனதளம் பெரும் அதிர்வைக்கண்டது. இலக்கிய விமர்சனங்ளை வைக்கிறபோது ழெனெத்தின் புதிய அனுகுமுறையுடன் பனுவலை நெருங்க வேண்டியிருந்தது.

 

ழெனெத்தின் நோக்கு நிலை கோட்பாட்டின் பொருள் என்ன, எவ்வகையில் எடுத்துரைப்பை மேம்படுத்துகிறது என்பதையெல்லாம் பேராசிரியர் விரிவாகப் பேசியிருக்கிறார். இரண்டு கேள்விகள் எழுப்பப்ட்டிருக்கின்றன. முதற் கேள்வி யார் பார்ப்பது? இரண்டாவது: யார் பேசுவது? உடனடியாகவும் வெளிப்படையாகவும் நமக்குக் கிடைக்கக்கூடிய பதில் இரண்டும் ஒருவரே – அந்த ஒருவரை கதைசொல்லியென்றோ அல்லது எடுத்துரைப்பவர் என்றோ நாம் அழைக்கலாம், கூடுதல் விளக்கங்களை அறிவதற்கு பேராசியரின் நவீன இலக்கியகோட்பாடுகள் நூல் உங்களுக்கு உதவும்.

 

ழெனெத்தின் நோக்கு நிலையைச் சற்று எளிமைபடுத்தி புரிந்துகொண்டு, அதன் பிரதான கூறுகளில் கவனத்தைச் செலுத்துவோம். கதைசொல்லல் அல்லது எடுத்துரைத்தல் என்ற சொற்களில் இடம்பெறும் சொல்லல், உரைத்தல் இரண்டும் ‘பேசுதல்’ என்ற வினைச்சொல் குடும்பத்தைச் சேர்ந்தவை.,  இதனை Dégès என்ற கிரேக்க சொல்லால் அழைக்கிறார்கள். நோக்கு நிலையில் இரண்டாவதாக இடம்பெறும் ‘பார்த்தல்’ என்ற சொல்லுக்கு கிரேக்க மொழியில் Mimèsis என்று பெயர். ஆக நோக்கு நிலை என்ற சொல்லை இருவகையில் பொருள் கொள்ளலாம். முதலாவது நோக்குநிலையை ஓர் அறிவியல் கலைச்சொல்லாக அணுகும் வழிமுறை. அதன் படி இங்கே எடுத்துரைப்பின் பணி, வாசகரின் கவனத்தை ஒரு பொருள் அல்லது கதைமாந்தர் அல்லது இப்படி ஏதோ ஒன்றைப்பற்றிய விபரத்தின்மீது திருப்புவது – இதுவே யார் பார்ப்பது ( Mimèsis) என்ற கேள்விக்கான பதில். நோக்குநிலை பற்றிய இரண்டாவது அணுகுமுறை காட்சிவெளி சார்ந்த எடுத்துரைப்பு (la perspective narrative) .

 

நோக்கு நிலையின் செயல்பாடுகள் எடுத்துரைப்பில் தன்னிலை மற்றும் படர்க்கை மொழியாடல்களில் நடைபெறுகின்றன. இவை அனைத்திலும் சூத்ரதாரியாக இருப்பவர் கதைசொல்லி என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. எடுத்துரைத்தல் பற்றிய ஆய்வு என்பது ஒரு கதைக்கும் -சொல்லலுக்கும் உள்ள உறவு முறைகளை விளங்கிக்கொள்வது. நோக்கு நிலைவழி இவற்றை வகைப்படுத்தியிருக்கிறார் கட்டுரை ஆசிரியர்:

 

1. கொள்கை அளவில் நோக்கு நிலையும் எடுத்துரைத்தலும் வேறு வேறு
2. படர்க்கை மாந்தரை எடுத்துரப்பவராக பயன்படுத்துதல்
3. எழுவாய் வழி கதைசொல்லல்
4. நோக்கு நிலையைப்பொறுத்தவரை தன்மையில் சொல்லப்பட்டாலும் படர்க்கை நிலையில் சொல்லப்பட்டாலும் வேறுபாடுகள் இல்லை. இரண்டுமுறையிலும் பனுவல் உலகில் நோக்கு நிலைஎன்பது ஒரு கதை மாந்தரின் பண்பாடாகசெயல்படுகிறது. இவ்விரண்டுக்கும் இடையிலுள்ள ஒரே வேறுபாடு எடுத்துரைப்பவரின் அடையாள வேற்றுமைதான்.

 

மேற்கண்ட அடையாள வேற்றுமையை அறிவது ழெனெத்தின் கோட்பாட்டைக் கூடுதலாக விளங்கிக்கொள்ள உதவுமென நினைக்கிறேன். ழெனெத் நான்குவகை கதை சொல்லிகளை அறிமுகப்படுத்துகிறார்

 

I. கதைசொல்லி இடம்பெறலாம் அல்லது இடம்பெறாமலும் போகலாம் என்கிற சூழலில்:

 

1. கதைக்கு வெளியே கதை சொல்லி

 

இக்கதைசொல்லியை ழெனெத் Le narrateur extra diégétique என அழைக்கிறார். இங்கே கதை சொல்லி கதைமாந்தரல்ல. கதைக்கு வெளியே இருப்பவர், வாசகனிடம் நேரடையாகப் பனுவலைப் படைத்தவர் பேசுதல். ஹோமரின் ஒடிஸ்ஸியஸ் ஓர் உதாரணம்.
எடுத்துக்காட்டு: “முன்பொருகாலத்தில் சிவப்பி என்றொரு பெண்ணிருந்தாள். பெற்றோர்கள் அப்பெயரிட்டு அழைக்கக் காரணம்…” எனத் தொடங்கி பாடம் எடுக்கும் முறை. பெருமாலான பழைய நூல்கள் இவகையிலேயே கதைசொல்லலை நிகழ்த்தியிருக்கின்றன.

 

2. கதைக்குள் இருந்து கதை சொல்லல்.

 

இக்கதை சொல்லியை ழெனெத் Le narrateur intra diégétique என அழைக்கிறார். கதைசொல்லி கதைக்குள் இடம்பெறும் கதை மாந்தர்களில் ஒருவர். பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதைகளில் வரும் சிம்மாசன பொம்மை பேசுவதுபோல கதைசொல்லப்படுவதை இங்கே உதராணமாகக் கொள்ளலாம்.

 

எடுத்துக்காடு: “என் பெயர் சிவப்பி, நான் பிறந்தபோது மிகவும் சிவப்பாக இருந்ததைவைத்து எனக்குப் பெற்றோர்கள்.. ” எனக் கதைமாந்தரே கதை கூறல் இவ்வகையில் அடங்கும்.

 

11 கதைக்குள் கதைசொல்லி என்றொரு கதைமாந்தர் இடம் பெற்றால்

 

1. பிறர்கதையைக்கூறும் கதைசொல்லி

 

ழெனெத் இக்கதைசொல்லியை Le narrateur hétéro diégétique என அழைக்கிறார். அவர் கதையில் வரும் பிறகதைமாந்தர்களைப் பற்றி பேசுபவராக இருக்கிறார். ஹரூகி முராகாமியின் ஸ்புட்னிக்கின் காதலர்கள் உதாரணம்.

எடுத்துக்காட்டு: “சிவப்பி என்ற எனது தோழியைப்பற்றி உங்களுக்குக் கூற வேண்டுமென நினைக்கிறேன்….”

 

2. தன்கதையைக்கூறும் கதை சொல்லி

 

ழெனெத் இவரை le narrateur homo diégétique என அழைக்கிறார். இவ்வகைக்கு உதாரணமாக யு.ஆர். அனந்தமூர்த்தியின் பாரதிபுரத்தைக் கூறலாம்.

 

எடுத்துக்காட்டு: “சிவப்பியாகிய எனது கதையைச் சொல்லப்போகிறேன்..” எனத் தொடங்குவது ஆகும்.

 

நோக்கு நிலை வகைபாடுகள்:
இதனை இரண்டு முக்கிய தலைப்பின்கீழ் கட்டுரை ஆசிரியர் விவரிக்கிறார்:

1. கதையோடு தொடர்புடைய நிலைப்பாடு
2. தொடர்ந்து நீடிக்கும் தன்மை

 

1. கதையோடு தொடர்புடைய நிலைப்பாடு

 

இத்தலைப்பின் கீழ் சிலவகை நோக்குநிலைகள் சொல்லப்படுகின்றன. அவற்றில் முக்கியமானது அகநிலைபட்ட நோக்கு நிலை மற்றது புற நிலைபட்ட நோக்குநிலை.

புறவயப்பட நோக்குநிலை: எடுத்துரைப்பு முகவரோடு இது மிகவும் அணுக்கமானதென்று அறிகிறோம். எடுத்துரைப்பாளருக்கும் கதைமாந்தருக்கும் உள்ள உளவியல் கலந்த இடைவெளி மிகவும் குறுகிய அளவில் இருக்கிறபோது இது எழுவாய் எடுத்துரைப்பாக நிகழ்கிறது..

அகவயப்பட்ட நோக்குநிலை: இது பனுவலுக்குள் இடம்பெறுவது, பொதுவில் கதை மாந்தர்களின் நோக்குநிலையாக இது அமையுமென்றும், அதே வேளை சில நேரங்களில் அக நிலைபட்ட நோக்கு நிலைபடுத்துதல் என்பது பனுவலின் நிலை அமைதியோடு இணைந்து ஒன்றாகிவிடும் எனவும் கதைமாந்தர்களின் பண்பு நலன்களை அடையாளப்படுத்த தவறிவிடுமென்றும் சொல்லப்படுகிறது.

 
2. தொடர்ந்து நீடிக்கும் தன்மை

 

எடுத்துரைப்பு முழுவதும் நோக்கு நிலைப்படுத்துவதென்பது தொடர்ந்து நீடிக்கிறதென்றும்; நோக்கு நிலையின் கோணத்தையும் தன்மையினையும் இடம், களம், பல்வேறு வகைக் கூறுகள் தீர்மானிக்கின்றன என்பதையும் இப்பகுதியில் ஆசிரியர்எடுத்திரைத்திருக்கிறார்.

அ. வெளி அல்லது இடம்: இங்கே நோக்கு நிலைபடுத்துபவர் எடுத்துரைக்கும் பொருளிலிருந்து வெகு தூரத்தில் ஒரு புள்ளியில் இருந்துகொண்டு சொல்வதென்றும், இந்நிலைப்பாடு தொன்ம இலக்கியங்களில் அதிகம் இடம் பெற்றிருக்கிறதென்ற செய்தி கிடைக்கிறது.

ஆ. காலம்: ஒரு கதை மாந்தர் தமது கடந்தகாலத்தைப் பின்நோக்கிப் பார்ப்பதற்குக் காலம் துணை நிற்கிறது. இங்கே கடந்தவைஅனைத்தும் ஒரு காலத்திற்கு உரியவையாக பார்க்கப்படுகிறது.

மேற்கண்ட வெளி காலம் ஆகியவற்றோடு உள்வியல் கூறுகள், அறிதல் கூறுகள் உணர்ச்சிக்கூறுகள் கருத்துநிலைக்க்கூறுகள் என்கிற பல்வேறு அம்சங்கள் கதைசொல்லியின் நோக்குநிலையில் சூழலுக்கு ஏற்ப இடம் பெற்று கதைசொல்லலுக்கு துணை நிற்கின்றன.

(தொடரும்)

நாம் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்!

 

நமது பெருமைகளெல்லாம் கடந்த காலத்துக்கு உரியவைகாளாகிவிட்டன. ‘தமிழ் பேசும் நிலப்பரப்பு’ கடந்தபகுதிகளில் தமிழர் பெருமைச் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. அதைக்குறித்த வெட்கமோ அவமானமோ நமக்கில்லை. எங்கள் ஊரில் ‘காந்தி ரெஸ்ட்டாரெண்ட்’ என்ற பெயரில் ஓர் உணவகம் இருக்கிறது அதை முதலில் நடத்திவர் ஒரு பாகிஸ்தானியர். தற்போது இலங்கையைச்சேர்ந்த தமிழ்ச் சகோதரர் ஒருவர் நடத்துகிறார். பாகிஸ்தானியர் நடத்தியபொழுது அந்த உணவு விடுதியில் மாமிச உணவு விற்கக்கூடாதென ஒருவர் எதிர்ப்புத் தெரிவித்தார். யாரென்று நினைக்கிறீர்கள்? எதிர்த்தது எந்த இந்தியரும் அல்ல (என்னையும் சேர்த்துத்தான்). நமக்கேன் வம்பு? என்ற நடுநிலையாளர்களின் குணம்தான் உங்களுக்குத் தெரிந்திருக்குமே, அதிலும் ‘பிழைக்க வந்த இடத்தில்’ எதற்கு வம்பு என்கிற புத்தி சாதுர்யத்துடன் நாங்கள் இருக்கிறபொழுது, இதுபோன்ற கூடாத காரியங்களை எப்படி செய்வது? இந்தியர்கள் எங்களைப் பற்றி ஐரோப்பியர்கள் என்ன நினைப்பார்கள்?. ஆக இந்த அறத்தின் பேரால் நாங்கள் வாய்மூடி இருந்தோம். எதிர்ப்புத் தெரித்தவர் ஒரு பிரெஞ்சுக்காரர், காந்திய அபிமானி. சட்டபடி அவரால் அதை ஒன்றும் செய்ய இயலாமல் போய்விட்டது. ( உங்களில் சிலரைப்போலவே, எங்களுக்குத் தெரியாதா? இதெல்லாம் வேலைக்கு ஆகுமா? என்று அந்த வெள்ளையரை விமர்சித்த இந்தியப் பெருந்தகைகள் உண்டு.) ஐரோப்பிய நாட்டர்வர்களும் அண்மைக்காலங்களில் சைவத்துக்கு மாறிவருவது உண்மையென்றாலும், இன்றளவும் 99 விழுக்காடு மக்கள் மாமிசப் பிரியர்கள்தான். உணவக உரிமையாளரான பாகிஸ்தானியருக்கு ஜின்னா என்ற பெயரைக்காட்டிலும் காந்தி என்ற பெயருக்கு வாடிக்கையாளரை ஈர்க்கும் சக்தி அதிகமென்ற ‘வணிக சாதுர்யத்தை தாண்டி வேறுகாரணங்கள் இருக்கமுடியாது.

 

கடந்த வாரத்தில் வேறொன்று நடந்தது. பிரெஞ்சு நண்பர் ஒருவர் இங்குள்ள பத்திரிகையொன்றில் வந்த செய்தியை மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். அவர் என்னுடன் இந்தியா வந்திருந்தார். அவர் பெயரிட்ட செய்தி ஆங்கில தினசரியொன்றில் அப்போது வந்தது. இந்தியாவில் பத்திரிகையாளர்களாக போடும் செய்திகள் ஒருபக்கம், கவர்கொடுத்து தனதுபெயரை பத்திரிகையில் போட்டுக்கொள்வது இன்னொரு பக்கம் என்பது நமக்குத் தெரியும். ஆனால் நிச்சயமாக ஆங்கில தினசரியில் வந்த செய்திக்கு அவர்காரணமல்ல. அவரைவைத்து தன்னை முன்னிருத்த முனைந்த ஓர் ஆசாமியின் யுக்தி அது. பிரெஞ்சு நண்பர் புதுதில்லியில் காந்தி அருங்காட்சியகத்தில் வைத்திருந்த படங்களில், காந்தியின் கண்களை மாத்திரம் (ஓர் இருபது இருபத்தைந்து படங்கள் )எடுத்துவந்திருந்தார். இந்தியாவிலிருந்து வந்ததுமுதல் அந்த ஆங்கில தினசரியை வாரத்தில் ஒன்றிரண்டு முறை வாசிக்கிறார், குறிப்பாக ஞாயிற்றுகிழமைகளில். அதிலும் காந்தியைப் பற்றிய செய்தியெனில் மிகவும் உன்னிப்போடு வாசிப்பார். அவர்தான் அண்மையில் வந்த செய்தியை மின்னஞ்சலில் அனுப்பிவைத்தார். நானும் வாசித்திருந்த செய்தி அது.

 

செய்தி தெளிவாகவே இருந்தது. இருந்தும் என்னிடம் கருத்தைக் கேட்டார். தண்டிக்கபட்டத் தங்கள் தலைவரை விடுவிக்கவேண்டுமென புது தில்லியில் காந்திசிலைக்கு முன்னால், செஞ்சோற்று கடனுக்காக போராடிய சம்பந்தப்பட்ட கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் படமும் செய்தியும் சம்பந்தப்பட்ட விஷயமது. நல்லவேளை அந்த பிரெஞ்சு நண்பர் தமிழர் என்ற வார்த்தையை உபயோகிக்கவில்லை. இந்தியர்கள் காந்தியை அவமதித்ததுபோல ஆகாதா? எனக்கேட்டார். அவருக்கு இப்படி சொன்னேன்:” இந்தியன் தனிநபராக இருக்கிறபோது உலகத்தில் எல்லோரையும்போல (சமாளிக்க வேறு வழி?) நல்லவன். எண்ணிக்கையில் கூடுகிறபோது தவறிழைக்கும் துணிச்சல் வந்துவிடுகிறது. காந்திபோன்ற தனி நபர்கள், தங்கள் தூய சிந்தனையை அழுக்கில்லாமல் பார்த்துகொண்டவர்கள். அழுக்கடைநேரும்போதும் அதை வெளுத்து உடுத்தும் பக்குவம் அவர்களுக்கு இருந்தது. தங்களை வேலியிட்டுக் காத்ததால், ஆடுமாடுகளின் மேய்ச்சலை தவிர்க்கமுடிந்தது. விலங்குகளின் அத்துமீறலைத் தடுத்து நீதியையும் தங்களையும் காப்பாற்ற முடிந்தது. அது மகாத்மாக்களுக்கு மட்டுமே சாத்தியம்” – என்றேன்.

 

பிற இனத்தைக் காட்டிலும் நம்மிடம் மந்தைகளாகத் திரண்டு கல்லெறியும் நாகரீகம் கூடுதலாக இருக்கிறது. தமிழ்த்துறையில் முனைவர் ஆய்வு செய்பவர்கள் இப்படியொரு தலைப்பை எடுத்துக்கொண்டு கொஞ்சம் சிங்கப்பூருக்கு, திருவனந்தபுரத்திற்கு, கல்கத்தாவிற்கு, மும்பைக்கு, ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று ஆய்வு செய்யவேண்டும்- இதில் வேறொரு உண்மையும் அடங்கியிருக்கிறது கல்லெறிவதில் கூட்டமாகவும், வளர்ச்சியில்- அதாவது இந்த நூற்றாண்டின் பிழைக்கத் தெரிந்த வளர்ச்சியில் தனித்தன்மையுடனும் இயங்கும் மனோபாவம் அது. வீழ்ச்சிக்கு, உண்மைக்கு மாறான, சிற்றில் சிதைத்தலில் ஆர்வமுள்ள சிறுபிள்ளைத்தன இனமாக நாம் இருப்பது காரணம். நமது தலைவர்கள் இறைவன் கொடுத்த வரமல்ல கையூட்டின் அடிப்படையில் வாக்களித்துப்பெற்ற தலையெழுத்து.

 

பிரான்சுக்கு வந்து 30 ஆண்டுகள் ஆகின்றன. ஒரே ஒரு யூரோ கையூட்டாக கொடுத்த அனுபவமில்லை. அதாவது சராசரி குடிமகனுக்கு இங்கே கையூட்டுக்கொடுக்கும் அனுபவங்களுக்கு வாய்ப்பில்லை. இங்கே தலைவர்களெல்லாம் யோக்கியமாவென்றால்? இல்லை இல்லையென நூறு தரம் சத்தியம் செய்யலாம். அவர்கள் வரி ஏய்ப்பு, அன்னியச்செலவாணி, பிறநாடுகளுடனான ஒப்பந்தத்தில் கமிஷன், தனக்கு அல்லது தன்னைச் சார்ந்தோருக்குச் சலுகைகள் என்பதுபோன்ற குற்றங்களுக்குசொந்தக்காரர்கள். Perfect crime என்று ஒன்று கிடையாது நீதிக்கு முனைப்புடன் செயல்படவேஎண்டும் அவ்வளவுதான். தமிழர்களை இருபெரும் பிரிவில் எளிதாக அடக்கிவிடலாம். தண்டிக்கபட்ட குற்றவாளிகள், தண்டிக்கப்டாத குற்றவாளிகள். ‘பிழைக்கு’ அஞ்சிய காலம்போக ‘பிழைக்கத் தெரிந்தவன்’ என பிறர்கூறக் கேட்க தேன் வந்து பாய்கிறது, நீதிகூட தமிழரல்லாத மண்ணில்தான் கிடைக்கும் என்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. இதற்குமேல் சொல்ல ஒன்றுமில்லை. “நாம் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்” என நம்மை நாமே கேட்டுக்கொள்ளதவறினால் இது தொடர்கதையாகும். . வாழ்கத் தமிழ்! வளர்க தமிழர் பெருமை!
————————